மலைபோல் துன்பமும் பனி போல் விலகும் அருணை கிரிவலத்தாலே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

மயிலே மயிலே மறைபாடு

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!  போற்றி!

- என்று போற்றப்படுகின்ற சர்வேஸ்வரன் தம் இன்னருளை பார்த்தசாரதியாக, முருகப் பெருமானாகப் பல வடிவுகளின் மூலம் வழங்குகின்றான். திருமாலின் மருகனே சுப்ரமண்யன் ஆதலின் அருணகிரி சுவாமிகளும் திருப்புகழில் பெருமாளே என்று கந்தவேளை விளிக்கின்றார். மாமனாம் ஸ்ரீவிஷ்ணுவும், நந்தகோப அவதாரிகையில், தனக்கு மயிற் பீலிகையைத் தரும் தெய்வ மயிலையே வேலவனுக்கு வாகனமாக அளித்திட்டார்!  குமரனும், கண்ணபிரானுக்குச் சிரசில் அணிய, நாளுமொரு மயிற் பீலிகையைத் தம் நித்யப் பூஜை வேதத் திரவியமாக இன்றளவும் அளித்து வருகின்றார்!

வண்ண மயிலின் நிறங்கள் பல தேவ லோகத்தன!  திருக்கயிலாயம், வைகுண்டம் மற்றும் பல இறை லோகங்களையும் தினமும் தரிசித்து வழிபடுகின்ற வேதமா மயூரமே கோவிந்தனுக்குப் பீலிகை தருவதாய் ஆறுமுகப் பெருமானுக்கும் வாகனமாகின்றது!

கலியுகத்தில் வேத சக்திகளைப் பரப்புவதில் மயில்களும், மயில் இறகுகளும் பெரும் பங்கு வகிக்கின்றன!  அவற்றில் சூரிய, சந்திர கிரணங்கள் பட்டுப் பிரதிபலிக்கையில் அவற்றில் உள்ள அரிய எண்ணற்ற வண்ணங்கள் மூலமாகப் பல அரிய வேத சக்திகள் பூமியில் நிரவுகின்றன!  பூமியில் சாந்தம் நிலவிடவே மயில்கள் தோகை விரித்தாடி வானெங்கும், பூமியெங்கும் தாம் பெற்ற, தம்மிடம் நிறைந்துள்ள, கிடைத்தற்கரிய வேத சக்திகளைப் பரப்புகின்றன!  தெய்வ மூர்த்திகளின் அவதாரங்களோடு இணைந்து நிற்கும் தேவ வேத சக்திகளைப் பெற்றவையே மயில்களாம்!

மயில் தரிசனம், தோகை விரித்தாடும் மயில் தரிசனம், பறக்கும் மயில் தரிசனம், ஜோடி மயில் தரிசனம் இவை யாவும் பல அரிய சுப சகுனங்களுடன் நல்வேத சக்திகளையும் குறிப்பன! இறைவனிடம் இருந்து எழுகின்ற வேத கிரணங்களை நேரடியாகவே கிரகிப்பதால் மயிற் பீலிகளின், மயில் தரிசனத்தின் வேத சக்தியைப் பெற தேவர்களும் பூமிக்கு ஓடோடி வருகின்றனர்.

சிகி (மயில்) வாகனனாக குன்றுதோறாடும் தண்டபாணி யாவர்க்குமாம், யாவைக்குமாய் வேத அருளைப் பொழிகின்றான்!  பிரம்மனுக்கு ஓங்காரஞ் செப்பியும், தந்தைக்கும் வேதப் பிரணவப் பொருள் தந்த சுவாமிநாதனன்றோ! தாமறிந்தும், தாமேயாவும் உள்ள மாமறை சக்திகளைப் பரப்பும், வடிவேலனின் ஆகாச வேதச் சந்திர அணியாய்ப் பொலிவதே மயிலாம்! வேத பூஷணியான சரஸ்வதியும் மயில் வாகனந்தானே தரிக்கின்றாள்! தினசரி மயில் தரிசனம் பெறுவோர் பாக்யசாலிகளாய் நிறைய வேத சக்திகளைப் பெறுகின்றனர்!

அனைத்து மூர்த்திகளும் பரம்பொருளை நறுமணப் பூக்களால் அர்ச்சித்து நிதமும் வழிபடுகின்றனர். ஸ்கந்த லோக மயில்களின் திருமேனியில் இருந்து தாமாக உதிரும் வேதமா இறகுகளை, அன்னப் பட்சிகளானவை வேத சக்திகள் நிறைந்த மந்தாரை இலையில் தாங்கிட, சித்தர்கள் அவற்றைக் கிரீடமாக்கிட, சரவணப் பெருமான் அவற்றைத் தாங்கிச் சென்று ஈஸ்வரனுக்கு அணிவித்துப் பூஜித்து, முராரியாம் வேய்ங்குழலோனுக்கும் சார்த்தியும் கார்த்திகேயனாய் வழிபடுகின்றார்!

எனவே ஒரு சிறிய மயில் பீலி கூட ஆயிரமாயிரம் தெய்வீக அற்புதங்களைப் பொழியும் வேத பொக்கிஷமாகும்!  தன்வந்த்ரீ லோகச் சித்தர்களும், அஸ்வினி தேவர்களும், மருத்துவ தேவதா மூர்த்திகளும் தீராத நோய்களைத் தீர்த்திடும் அற்புத காய கல்ப சஞ்சீவி மருந்து வகைகளையும் மயிற் பீலித் தண்டுகளிலும் பதிய வைத்துப் பலவிதமான நோய் நிவாரண அற்புதங்களை இன்றும் நிகழ்த்துகின்றனர்!

மயில்களின் உடலில் இருந்து இறகுகளைப் பிடுங்கக் கூடாது. இறகுகளுக்காக மயில்களைக் கொல்தல் மகா பாபகரமானது!  பசு வதை போல் கொடிய, பரிகாரம் இல்லாத பாவ வினை இது! தற்போது இறகு, இறைச்சி, அழகு சாதனம், விசிறி, தைலம், மருந்து போன்றவற்றிற்காக மயில்களை உயிரோடு வதைத்துக் கொல்வது நிறைய நிகழ்வதால் கண்ட கண்ட இடங்களில் மயில் பீலிகைகளையும் வாங்கி, மயில்களின் சோக அலைகளைப் பாவ மலையாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்!  மிகவும் கவனமாகச் செயல்படவும்!

தாமாக உதிர்ந்த இறகுகள், இயற்கையாக இறந்த மயிலிடமிருந்து பெற்றவை, மயூர மந்திரம், மயூரக் காப்பு மந்திரம் ஓதிப் பண்படுத்தப் பட்ட இறகுகள், பெரியோர்களின் ஆசியோடு கிட்டியவை, இறைவனுக்கு சார்த்தியவை போன்றவையே ஏற்புடையவை! மயிற்பீலி விசிறி நமக்கு விசிறிக் கொள்வதற்கு அல்ல! மயில் சாதனங்கள் இறைவனுக்கு மட்டுமே உரித்தானவை! இறைவனுக்குச் சாமரம் வீசுதல், சாம்பிராணி தூபக் காப்பிற்கு, ஹோமத்திற்கு விசிறுதல் போன்றவை தாம் ஏற்புடையவை!

தெய்வீகம் நிறைந்த பச்சிளங் குழந்தைகளுக்கும் தூபம் காட்டி விசிறி தோஷம், திருஷ்டி போக்குதலும் உண்டு!  மேலும் அஞ்சனம் (மை) வகை தோய்ந்த மருந்துகள் செறிந்த மூலிகைப் பூச்சு விசிறிகளால் ஆலயங்களில் தூபங்களை விசிறுவதும் சிறப்புடையதே! இத்தூபக் காற்று மயிற் பீலிகளில் பட்டு வரும் போது அவற்றின் வேத சக்திகளும் கூடி, நோய்களுக்கு வித்தாக உள்ள பல வித அசுத்தக் காற்று, தீய எண்ணப் படிவுகளையும் நீக்கி எல்லா இடங்களிலும் புனிதம் நிலவச் செய்யும். இதனால் பலவிதமான தீராத நோய்களுக்குத் தக்க நிவாரணம் கிட்டும். உடல் ஆரோக்யம், நல்வளம் பெருகும்!

சில மூலிகைகளும், சமூலங்களும் பல அரிய வேத சக்திகள் கூடினால் தான் பலன் தரும். மயிற் பீலிகைக்கு இயற்கையிலேயே அரிய வேத சக்திகளைக் கிரகிக்கும் சக்தி உண்டு! எனவே தாம் நவநீதக் கண்ணன் தம் சிரசில் மயில் பீலி அணிந்து பக்தர்களுடைய கஷ்டங்களையும், உடல் நோய்களையும் தீர்க்கின்ற வேத பரிபாலன தரிசனத்தை அளிக்கின்றார். இப்பீலி ஷண்முகனால் கிருஷ்ண பரமாத்மாவிற்கு நிதமும் பூஜைத் திரவியமாக அளிக்கப்படுவதாகும்!

அடிமை கண்ட ஆனந்தம்

(நம் குரு மங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்)

சற்குருவின் தெய்வீகப் பரிபாலனத்தில் வளர்தல் என்பது மிகவும் கவனத்துடன் ஒவ்வொரு விநாடியும் இருக்க வேண்டிய தேவ காலப் பரிமாணம் ஆகும். பெறுதற்கரியது மானுடப் பிறவி என்பதைச் சற்குருவின் முன்னிலையில் நடைபெறும் குருகுலவாசத்தில் தாம் பரிபூரணமாக உணர முடியும். ஏனென்றால் அருட்புனலாகக் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றையும் கடந்தவராக ஒளிர்கின்ற சற்குருதாமே, தம் சிஷ்யராக உள்ளவரின் ஆதியையும், அந்தத்தையும் இறையருளால் முழுமையாக அறிந்த இறை ஞானி!  யோகி, சித்தர், மகரிஷி, முமூட்சு, ஞானி இவ்வாறான அனைத்து இறைத் தூத அம்சங்களையும் அமிர்தமாய்த் திரட்டி உருவகப்படுத்திட ஒளிர்பவர்தாமே சற்குரு! இத்தொடரில் வரும் அனுபூதிகள் யாவும் உங்களில் ஒவ்வொருவரும் சற்குருவைப் பெற வேண்டும் என்ற இறைத் துடிப்பை எழுப்புவதாக!

ஒரு நாள்.....

ஒரு ஆங்கிலேயே துரை ஒருவர் தம் குடும்பத்துடன் பெரியவரைப் பார்க்க அங்காளி ஆலயத்திற்கு வந்தார். ஏதோ பெரிய வேலையில் இருந்திருப்பார் போலிருக்கிறது!  ஆலயம் வழியே அவர் நடந்தோ, காரிலோ போகும்போது பெரியவரைப் பார்த்து அவர் ஒரு கும்பிடு போடுவார். பெரியவரும் இருந்த இடத்தில் இருந்தே பதில் கும்பிடு போட்டிடுவார்! அதோடு சரி!

பொருள் ஆனந்தம்
இடையே புலன் ஆனந்தம் !

உலகெங்கும் தான தர்ம மொழியே!

அன்று.....கோயிலுக்கு அவசரம் அவசரமாகக் குடும்பத்துடன் வந்த துரை ஒரு பெரிய நமஸ்காரத்தை இட்டு விட்டுப் பெரியவரிடம் மழலைத் தமிழில் பேச ஆரம்பித்தார். மனதில் இருப்பதை வார்த்தைகளில் அப்படியே முழுமையாக வடிக்க இயலாது அவர் திணறுவதைக் கண்ட பெரியவர், அவரிடம் ஆங்கிலத்திலும், பிரெஞ்ச் மொழியிலும் சரளமாக உரையாடிடவே, அந்தக் குடும்பமே வியப்பில் ஆழ்ந்தது!  சிறுவனுக்கோ அவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்றே ஒன்றும் புரியவில்லை!

"சரி, சரி! எல்லாத்தையும் சரி செஞ்சுடலாம்! ஒரே ஒரு கண்டிஷன்!  நீ இந்தியாவை விட்டு மூணு மாசத்துல புறப்படப் போறதானே! புறப்படறதுக்கு முன்னாடி இங்க இருக்கற உன்னோட வீடு, வாசல், சொத்து, பத்து, கார், பங்களா எல்லாத்தையும் வித்துடு! இங்க தங்கின கர்ம பாக்கிக்கு இங்கேயே கொஞ்சமாச்சும் தான தர்மம் செய்! நீ கொஞ்ச வருஷம் பூர்வ ஜன்மத்துல தென் அமெரிக்காவுல சிலி நாட்டுல பொறந்து வாழ்ந்திருக்கறதுனால அங்க கொஞ்சம் தான, தர்மம் செய்! மிச்சப் பணத்தை எல்லாம் உங்க ஊருக்கு எடுத்துக்கிட்டுப் போய் அங்கேயும் முழுசுமா தான, தர்மம் செய்யணும். எல்லா நாடுகள்லேயும் சித்தர்கள் இருக்காங்க!"

"கொஞ்சம் கூடக் கையில் வச்சுக்கக் கூடாது, தெரிஞ்சுதா!  இத ஒழுங்கா செஞ்சா, உங்க குடும்பத்தை ஆவி சுத்தறத் தொந்தரவு போயிடும்....எந்த துர் ஆவியும் உன்னை தொடர்ந்து வராது!  நல்லா தைரியமா இரு!  யாரோ தற்கொலை செஞ்சுக்கிட்ட பெரிய பங்களாவை உன்னை எவன் மலிவா விலைக்கு வாங்கச் சொன்னான்!  எல்லாம் பேராசை! போ, போ, எனக்கு நேரம் கிடைக்கறப்போ ஆவி சுத்தற உன் வீட்டை வந்து பாக்கறேன்....!

நல்ல பக்தியுள்ள குடும்பம் போல் இருக்கிறது!  துரைக் குடும்பத்தினர் சாஷ்டாங்கமாக, ஆழ்ந்த நம்பிக்கையுடன் பெரியவர் முன் விழுந்து விழுந்து நமஸ்கரித்தது.

அவர்கள் எழுந்து பார்த்தால்..... (வழக்கம் போல்) பெரியவரைக் காணோம்! பெரியவர் அங்கிருந்தால்தானே!  பஞ்சாய்ப் பறந்து விட்டாரே!  அவரைத் தேடி வெளியில் சென்ற சிறுவன் திரும்பி வந்து பார்த்தால்.......

பெரியவர் உள்ளேயேதான் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவனைக் கண்டதும் சிரித்துக் கொண்டே எழுந்தார்!

"இந்தா, இந்த அட்ரஸுக்கு வர்ற சனிக்கிழமை காலையில ஆறு மணிக்கு வந்து சேர்!"

பெரியவர் ஒரு சிறு அட்டையை நீட்டியபின், வேறு ஒன்றும் பேசாது, வேக வேகமாக வெளியே நடந்தார்! அப்போதெல்லாம் அங்காளி ஆலயத்திலிருந்து பார்த்தால் கடற்கரை நன்றாகத் தெரியும்!  பெரியவர் கடற்கரையை நோக்கி விரைவாக நடக்கலானார்! அவருடைய உருவம் மறையும் வரை சிறுவன் பார்த்துக் கொண்டே இருந்தான்! எப்பொழுதும் திடீரென மறையும் அவர் நீள் நெடுங்காட்சி தருவது ஏனோ? பசுமையான சரயு நதி நினைவுகளைக் கிளப்பிடத் தானோ?

அயோத்யா புனித பூமிக்குப் பெரியவருடன் சென்றிருந்த போது, சரயு நதிக் கரையில் அமர்ந்தவாறு ஸ்ரீராமன், ராமாயண முத்தாய்ப்பாக, சரயு நதியினுள் நெடுந்தூரம் நடந்து சென்று இறங்கி மறைந்ததைப் பெரியவர் vivacious tone ல் விளக்கியது அவன் நினைவிற்கு வந்தது.

"இது தாண்டா ஸ்ரீமன் ராமச்சந்திர மூர்த்தி நதியில இறங்கி மறைஞ்ச இடம்!"

அந்நாட்கள் எல்லாம் என்று திரும்பி வரும்? காலக் கடிகாரத்தைத் திருப்பி வைப்பது காலத்தைக் கடந்தவர்களுக்கு எளிதுதானே!  ஆனால் இவ்வாறு செய்ய மாட்டார்கள் என்பதால்தானே அவர்கள் காலத்தைக் கடந்து வென்றவர்களும் ஆகின்றார்கள்!  What a gentle divine paradox? பெரியவர் எங்கிருந்தோ சிரிப்பது கேட்டிடவே சிறுவனும் உள் மனச் சிரிப்புடன் எழுந்தான்.

Not really dogmatic hours!

ஒரு வழியாய் அந்த சனிக்கிழமையும் வந்ததே!

சரியாக ஆறு மணிக்குக் குறிப்பிட்ட வீட்டிற்குச் சென்றான் சிறுவன்! பெரியவரும் திடீரென்று எங்கிருந்தோ வந்து குதித்தார்!

"எந்த லோகத்திற்குப் போகின்றார், எந்த லோகத்தில் தங்குகின்றார்? எங்கிருந்து தோன்றுகின்றார்? ம்....ம்...யாரறிவார் பராசக்தியே!"

பெரியவர் எதிரிலிருந்த ஒரு பெரிய பங்களாவின் உள்ளே நுழைந்து மாடியில் கிடுகிடுவென்று ஏறினார். கட்டவிழ்த்து விட்ட பெரிய பெரிய அல்சேஷியன், பாக்ஸர் வகை நாய்கள் அரை டஜனுக்கு மேல் அங்குமிங்குமாக கோபக் கணைகளுடன், மிளகாய்க் கண்களுடன் உலாத்திக் கொண்டிருந்தன!  சிறுவன் பயத்தால் அலறியே விட்டான்!

அப்பப்பா அவனை விட உயரமான எவ்வளவு பெரிய நாய்கள்! பெரியவரோ அந்த இடம் மிகவும் பழக்கமானது போல மிகவும் லாவகமாகப் படிகட்டுகளில் ஏறினார்! சரியாக விடியவில்லை ஆதலால் ஆங்காங்கே இருட்டுக் குமிழ்கள் வேறு! அங்கும் இங்குமாகக் கால் வைத்து பெரிய வீட்டில் அனைத்துக் கதவுகளும் தாமாகவே அவருக்கெனத் திறந்தாற்போல் இருந்தன!

ஆனால் சிறுவனின் கண்களோ ஆங்காங்கே இருந்த பெரிய நாய்களின் மீதே பதிந்திருந்தன!  கட்டிப் போடப்படாமல் அவை உலாத்திக் கொண்டிருந்தது அவனுக்கு பீதியை மேலும் கிளப்பியது! "இவரால் நாய் பயம் இல்லாமல் எப்படிச் சர்வ சாதாரணமாக இங்கு நடமாட முடிகிறது?" அப்பெரிய நாய்களோ பெரியவரையோ, சிறுவனையோ கண்டு கொண்டதாகவே தெரியவில்லை!  இதுதான் சிறுவனுக்கு ஒரே ஆச்சரியமோ ஆச்சரியம்!

இவன் நினைப்பதை அவர் உணராதவரா என்ன? உடனே விளக்கலானார்!

அடுத்தது அறிந்தால் நடுக்கமும் ஏனோ?

"இந்த நாய்ங்க எப்படிடா நம்மைக் கடிக்கும்? இன்னிக்கு இங்க ஒரு நல்ல காரியத்துக்காக நாம இங்கே வரோம்னு அவங்களோட சுவான தேவதைங்க பைரவ லோகத்துலேந்து இவங்களுக்கு மெஜெஸ் கொடுத்துடுவாங்கடா....அப்புறம் நமக்கு என்ன கவலை! ரொம்பப் போச்சுன்னா இவங்களோட நாய் பாஷையில மாட்லாட வேண்டியது தான்!" என்று சொல்லிக் குறும்புடன் சிரித்த பெரியவர், "லொள், லொள்" என்று குரைத்தும் காண்பித்தார்.

அவ்வளவு தான் ரத்தம் உறைந்தவனாய் சிறுவன் பெரியவரின் வாயைப் பொத்தினான்! சத்தங் கேட்டு நாய்கள் பாய்ந்துவிட்டால்.....

களுக் என்று யாரோ சிரிப்பது போல் தோன்றிட.....

அதற்குள் "லொள், லொள்" சப்தம் கேட்டு ரத்த சிவப்புக் கண்களுடன் மூன்று நாய்கள் அருகில் வந்திட.....

"சிவ சிவா!" என்று சிறுவன் கண்களை இறுக மூடிக் கொண்டான்! கண்களைத் திறந்து பார்த்தால்....பெரியவரைக் காணோம்! அவர் நூறடி தள்ளிப் போய்க் கொண்டிருந்தார்!

சிறுவன் திரும்பிப் பார்த்தான்!  ஒரு வேளை சிரிதது நாய்கள்தாமோ? அவை சாதுவாகத் தலையாட்டியது போல் தெரிந்திட்டது! அவ்வளவு தான் ஒரே பாய்ச்சலில்....பெரியவரிடம் ஓடித் தஞ்சம் அடைந்தான்! அவரோ...ஸ்திதப் ப்ரக்ஞராய்....எதுவும் நடவாதது போல் வெகு வேகமாக நடந்து கொண்டிருந்தார்!

"தானோ hyper tersionல் வெல வெலத்திருக்க இவரால் எப்படி, இப்படி அமைதியாக இருக்க முடிகிறது?” என்று சிறுவன் எண்ணிட வழக்கம் போல் அவன் "எண்ணத்தைப் பிடித்த" பெரியவர்,

"என்ன நடக்கப் போகுதுன்னு முன்னாடியே தெரிஞ்சா அங்க டென்ஷனுக்கு என்ன வேலை நயினா!"

சிறுவன் தலையைப் பிய்த்துக் கொண்டான்!

ஒரு வழியாய்ப் பெரியவர் மாடியில் ஒரு பெரிய சமையல் அறையை வந்தடைந்தார்! பின்னால் "சரசரவென்று" சப்தம்! திரும்பிப் பார்த்தால்....

ஆம்....அந்த துரையின் குடும்பம்தான் திரண்டு வந்து கொண்டிருந்தது! அவ்வளவு பேரும் தடாலென்று பெரியவரின் கால்களில் விழுந்தார்கள்! பின்னால் அவர்களுடைய அனைத்து நாய்களும் அழகாக வரிசையாக நின்றன. அவர்களுக்கும் ஒரே ஆச்சரியம்! பெரியவரையும் நாய்களையும் திரும்பித் திரும்பிப் பார்த்தார்கள்! பெரியவரைப் போலவே "அவையும்" அவர்களை "நோக்கி" புன்முறுவலித்தன!

"நாம் அட்ரஸே கொடுக்காமல் எப்படி இவர் இங்கே வந்தார்? இந்த ஆக்ரோஷமான நாய்கள் ஏன் இப்படிப் பணிவாக, அடக்க, ஒடுக்கமாக இவர் முன் கை கட்டி, வாய் பொத்தி நிற்கின்றன? நம் ஆயுளில் இவை இப்படி வரிசையாக அதுவும் இவ்வளவு தெய்வீக அமைதியுடன் நின்று ஒரு முறை கூடப் பார்த்தது இல்லையே!  நம் குறைகளைத் தீர்க்க வந்த great saint அல்லவோ இவர்!"

அக்குடும்பத்தினர் எண்ணி எண்ணிப் புளகாங்கிதம் அடைந்து கண்ணீர் உகுத்தனர்!

"நாய்ன்று நெனைச்சா நாய்தான், then there will only be canine brat! பைரவருடைய வாகனம்னு நெனைச்சா there will be divine chat!” என்று பெரியவர் துரையிடம் ஏதேதோ சொல்லிச் சிரித்தார்! சிறுவனுக்கோ ஒன்றும் புரியவில்லை!

உணவெங்கே போகிறது?

துரையில் மனைவி வந்து வேகமாக (மின்சார) அடுப்பை மூட்டி பிரட், பட்டர் என்று ஏதேதோ செய்தார். பெரியவர் ஒன்றும் சொல்லாமல் ஒரு ஓரத்தில் பலகையின் மேல் ஏறி அமர்ந்து கொண்டார். கொஞ்ச நேரத்தில் தட்டில் பிரட், பட்டர் வைத்துக் கொண்டு வந்தார்கள்.

"உம்...ம்... நீயே முதலில் சாப்பிடு!" என்றார் பெரியவர் அந்தக் குடும்பத்துத் தலைவரை நோக்கி!  அவரோ நடுங்கும் கரங்களுடன் அதைத் தொட்டிட....

அதுவரையில் பிரெட், பட்டருடன் நறுமணம் வீசிய உணவானது, அடுத்த வினாடி அழுகி, நாறி.....குப்பென்று அசிங்கமான மலவாடை வீசிற்று!

அக்குடும்பத்தினர் அனைவரும் ஓவென்று கதறி அழுதனர். அந்த வீட்டு வேலைக்காரனும் "இப்படித்தான் சாமி! ரொம்ப வருஷமா எது செஞ்சாலும் உடனே அழுகி, நாறி மலமாப் போயிடுது! இது நல்ல குடும்பம் சாமி! யாருக்கும் கெடுதல் செஞ்சது கிடையாது!" என்று சொல்லி அவனும் கதறிக் கதறி அழுதான்!

பெரியவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை! நெடுநேரம் மௌனம் கூட்டினார்.

"வீட்டுல பசு மாடு இருக்கா?"

"இருக்குங்க!" எல்லோரும் சேர்ந்து ஒன்றாய்க் குரல் கொடுத்தனர்!

“எல்லாரும் போய்ப் பசுவுக்கு நமஸ்காரம் பண்ணிட்டு கோமேயம் புடிச்சுக்கிட்டு வாங்க! எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்லை. கோமேயத்தோடதான் (பசுவின் புனிதமான மூத்திர நீர் ஆயுர்வேத சக்திகள் நிறைந்தது) இங்கே திரும்பி வரணும் தெரிஞ்சுதா!" என்று கூறிய பெரியவர் மிகச் சிறிய இரண்டு வரியிலான கோமாதா காயத்ரீ மந்திரத்தைச் சிறுவனிடம் கூறி அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து பசு கட்டி இருக்கும் இடத்தில் அமர்ந்து ஜபிக்கச் சொன்னார்! கூடவே சிறுவனையும் அனுப்பினார்! பெரியவர் மட்டும் சமையற்கட்டில் தங்கி விட்டார்!

அப்பப்பா! எவ்வளவு பெரிய தோட்டம்!  சுற்றிச் சுற்றிச் சென்று ஒரு வழியாய்ப் பசுத் தொழுவத்தை அவர்கள் அடைந்தனர். கூடவே அனைத்து நாய்களும் மிகவும் அமைதியாக வந்தன!

அங்கே நிறையப் பசுக்கள் இருந்தன!  பசுக் கொட்டிலில் அமர்ந்து கோமாதா காயத்ரீ ஜபித்த சில நிமிடங்களிலேயே ஆச்சரியகரமாக அவர்களுக்கு "கோமேயப் பரிசு" காத்திருந்தது! அதனை மிகவும் பவ்யமாக, பவித்ரமாக அவர்கள் ஒரு வெள்ளிக் கலயத்தில் பிடித்து வந்திட.... எதிரிலேயே பெரியவர் கீழிறங்கி வந்து விட்டார்!

பாவ வினை போக்கும் பவித்ர கோமேயம்!

கோமேயக் கலசத்தை வாங்கிப் பார்த்துக் கண்ணை மூடிச் சற்று மௌனித்துத் தியானித்த பெரியவர் சிறுவனிடம், "நீ மட்டும் மேலே போய் சமயலறை fullஆ இந்த மந்திரத்தைச் சொல்லிக்கிட்டே கோமேயத்தைத் தெளிச்சுட்டு வா! தைரியமாப் போய்ட்டு வாடா கண்ணு!" என்று கூறி ஏதோ மந்திரம் ஒன்றை அவன் காதினுள் ஓதினார்!

சிறுவன் அதிர்ந்து போனான்! அவனுக்கு நன்கு உதறலெடுத்து விட்டது!  ஏற்கனவே நாற்றம், அழுகல், மலக் கூடு என்ற வகையில் பில்லி, சூனியத்தோடு சமையலறையில் ஆவி சேஷ்டை வேறு!  இதில் தனியாக வேறு போக வேண்டுமாமே! போதாக் குறைக்கு அவன் உயரத்திற்கு மேல் ஏழெட்டு வெளிநாட்டு நாய்கள்!

அவனுக்குப் பெரியவரை ஏறெடுத்துப் பார்க்கவே பயமாக இருந்தது! எப்படியாவது "வேண்டாம்" அல்லது "நானும் வரேன்!" என்று சொல்ல மாட்டாரா என்று ஏங்கினான்!  ஆனால் அவருடைய கடுமையான கண்டிப்பினை உணர்ந்தவனாய்....தட்டுத் தடுமாறி நடுங்கிக் கொண்டே.....கோமேயக் கலயத்தை வாங்கிக் கொண்டு....எங்கெங்கோ, சுற்றிச் சுற்றி.....ஒரு வழியாய்ச் சமையலறையை அடைந்தான்!

சிறுவனுக்கு ஒரே ஆச்சரியம்! சமையலறையைச் சுற்றிலும் புதுச் சுண்ணாம்பு அடித்து விபூதி, மஞ்சள், குங்குமம் வைக்கப்பட்டிருந்தது! ஏதோ ஹோமம் செய்தாற்போல் நல்ல நெய்யுடன் ஹோம சமித்து வாசனை!  "வெட வெட" என்று உடல் நடுங்கிடச் சிறுவன் கோமேயத்தை சமையலறை முழுதும் தெளித்து விட்டுத் திரும்பினால்.....கதவருகே...

பெரியவருடன் அந்தக் குடும்பத்தினர் நின்று கொண்டிருந்தனர்!  அதற்குள் இங்கு எப்படி அனைவரும் வந்தார்கள்?

பெரியவர் ஏதோ சைகை காட்டிட....

அவர்கள் மெதுவாகச் சமையலறைக்குள் நுழைந்து அந்த அடுப்பில் பசும் பாலைக் காய்ச்சினர்! அடுப்பு, அடுப்பு மேடை அனைத்திலும் குங்குமம், மஞ்சள், சந்தனம், திருநீறு இடப்பட்டு இருந்தது!  மொத்தத்தில் அந்த இடத்தில் கும்பாபிஷேகமே நடந்தாற் போல் புனித புத்துணர்ச்சியுடன் இருந்தது!

பால் ஜம்மென்று கிழக்கே பொங்கி வழிந்திட ....கமகமவென்று பாலின் நறுமணம் கமழ்ந்தது!

"ரொம்ப வருஷம் கழிச்சு இந்த வீட்டுல பால் பொங்கி நல்ல வாசனை வருதுங்க!"

"எல்லாம் பைரவர் கருணை!"

அனைவரும் தட தடவென்றுப் பெரியவரின் காலில் வீழ்ந்திட...அதற்குள் அவர் சிட்டாய்ப் பறந்து விட்டார்! நாய்கள் அனைத்தும் வாசல் வரை வந்து வரிசையாக அமர்ந்து அவரை வழியனுப்பின!  சிறுவன் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றான்! அவைகளின் கண்களும் கலங்கி இருந்தன!  ஆனந்தக் கண்ணீர்தான்!

நன்றி தெரிவிக்க அந்த துரை குடும்பத்தினர் ஆலயத்திற்கு வந்த போது.....அங்காளி அம்மனை நோக்கி சைகை காண்பித்து விட்டு அடுத்த நொடியில் பெரியவர் காணாமற் போய் விட்டார்!

ஜாதி, மத, இன, குல, ஆண், பெண், மனிதன், விலங்கு, தாவரம் -என்ற பேதமின்றி அருள்பாலிக்கும் சித்தர்களைச் சரண் அடைந்துவிட்டால் உலகில் வேறெதுதான் தேவை!

பைரவா போற்றி!
பைரவ வாகனமே போற்றி! 
பைரவ சக்தியை உரைக்கும் சற்குருவே போற்றி!

மாசி அமாவாசை

* முழு முதல் முத்தான அமாவாசை!
* சித்த, அமிர்த யோகம் கலந்த சுப யோக அமாவாசை
* சிவராத்திரி, கிருஷ்ணாங்காரக சதுர்த்தசிப் பலாபலன்களுடன் கூடிவரும் மகத்தான அமாவாசை
* மூன்று தினங்களுக்குத் தொடர்ந்து நிரவி வருகின்ற அமாவாசை!
* பெருமாளுக்கு உரித்தான புதன் கிழமையுடன் கூடி வருகின்ற உத்தம அமாவாசை!

ஆம், வரும் 13.03.2002 புதன்கிழமை அமைகின்ற அமாவாசைத் திதியானது மூன்று தினங்களுக்குப் படர்ந்து, தொடர்ந்து, நிரவி நமக்கு அருள்பாலிக்க உள்ளது.

திருக்கணித முறைப்படி 12.3.2002 செவ்வாய் நாள் இரவுக்குப் பின், அதாவது 13.3.2002 புதன் விடியற்காலை 5.03 மணி முதல் 14.3.2002 வியாழன் காலை 7.33 மணி வரை மூன்று தினங்களுக்கு அமாவாசைத் திதி தொடர்கின்றது.

தமிழ்ப் பஞ்சாங்க முறைப்படி ஒவ்வொரு நாளும் அந்தந்த சூரிய உதயத்தின் போதுதான் நாள் பிறக்கும். ஆனால் ஆங்கில முறைப்படி நள்ளிரவு 12 மணிக்கு மேல் அடுத்த நாள் பிறந்து விடுகின்றது. 13.3.2002ம் தேதி புதன்கிழமை, தமிழ்ப் பஞ்சாங்க முறைப்படி காலை 6.23க்குச் சூரிய உதயம் துவங்குவதால் அதற்கு முன் வரை செவ்வாய்க் கிழமையாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இவ்வகையில் செவ்வாய் நள்ளிரவுக்குப் பின் பிரம்ம முகூர்த்தத்தை ஒட்டி 5.03 முதல் (29.03 hours) அமாவாசை தொடங்குகின்றது. அதாவது ஆங்கில நாள் முறையில் புதன் காலை 5.03 மணிக்கு அமாவாசை தொடங்குகிறது!

இவ்வகையில் தமிழ்ப் பஞ்சாங்க முறைப்படி செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று தினங்களுக்கும் அமாவாசை நிரவுவது நம் பாக்யமே! மேலும் 12.3.2002 செவ்வாய் மஹா சிவராத்திரி நாளாகவும் அமைவதால், அம்பிகையே இரவு முழுதும் பூலோக சிவத் தலங்களில் சிவபூஜை மேற்கொள்தலால், அம்பிகையின் பூஜா பலன்களுடன் அடுத்த திதியான அமாவாசைத் திதி உதயமாகின்றது!

இது மட்டுமல்லாது சிறப்புக்குச் சிறப்பு ரத்தினமாக 13.3.2002 நாள் முழுதும் ஒரு விநாடி கூட இடைவெளி இல்லாது முழு நாளுமே அமாவாசைத் திதி நிரவி உள்ளது! இன்னும் விசேஷமாக, 12.3.2002 நாளின் சதுர்த்தசி சிவராத்திரித் திதியானது கிருஷ்ணாங்காரக சதுர்த்தசி எனும் நாமம் பூண்டு ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் பேரருளையும் பெற்றுத் தருகின்றது. இதற்கு அடுத்த நாள் காரடையான் நோன்பு எனும் உத்தம சுமங்கலித்துவப் பூஜையும் சேருவதால், எத்துணையோ அவதார வைபவங்கள் கூடியதாக இந்த சர்வ அமாவாசை தினம் விளங்குகிறது. காரடையார் நோன்பு அன்று சுமங்கலி அம்மன் போன்ற எத்தனையோ பராசக்தி அம்ச மூர்த்திகள் தோன்றி உள்ளனர்!

13.3.2002 புதன் அமாவாசை பரிபூரணமாக முழுநாளும் பரிணமித்திருப்பதால், இன்று சித்த யோகமும், அமிர்த யோகமும் பரிணமித்திருப்பதாலும் மிகவும் உத்தமமான நாளாக இது விளங்குகிறது. மேலும் கலியுகம் பரிணமித்த கலியுகாதி தினமாயும் இது அமைகின்றது. கரிநாள் என்பது சனி பகவானுக்கு உரித்தான தினம்!  கரிநாளும் இத்தினத்தில் கூடுவதால் சனீஸ்வர பகவானின் அனுகிரகத்தைப் பெற்றுத் தருகின்ற மகத்தான நாளாயும் இது அமைகின்றது. இத்தகைய அபூர்வமான சக்திகளும் ஒன்று கூடியதாக வ்ருஷ வருஷ மகா சிவராத்திரிக்கு அடுத்த திதியாம் அமாவாசையானது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறையே இத்தகைய பல விசேஷ குணங்கள் கூடிய சர்வ அமாவாசையாகத் தற்போது அமைகின்றது.

அமாவாசைச் சித்தர் ஸ்தூல, சூட்சும வடிவுகளில் திருஅண்ணாமலையை, நெடுங்குடி போன்ற தலங்களில் கிரிவலம் வருகின்ற அற்புத நாளிது!

சூரிய, சந்திர கிரகங்கள் ஒரு ராசியில் ஒன்றாக அமைவது தானே அமாவாசை!  கிருஷ்ணாங்காரக சதுர்த்தசியும், மஹா சிவராத்திரியும் கூடி வருகின்ற இந்நாளில் மேலும் திரிதின அமாவாசை எனப்படும் மூன்று நாள் அமாவாசைத் திதி நிரவி அபூர்வமாக அமைவதால், சூரிய, சந்திர மூர்த்திகள் இணைந்து திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருகின்ற உத்தம நாளாகவும் அமைகின்றது.

விஷ்ணுபதி போன்று மிகவும் முக்கியமான புண்ய காலமிது! இப்புனிதத்தை நல்வழிபாடுகளுடன் நாம் கடைபிடித்தால் தானே இவை தரும் மகத்தான இறையருளைப் பெற முடியும்! எனவே இந்த சர்ம அமாவாசை தினத்தில் பஞ்சாங்கப் பூர்வமாகவும் பலவித புனிதமான கால அம்சங்கள் நிறைவதால், நம் வாழ்வில் பெறுதற்கரிய அமாவாசையாகவும் ஆகின்றது!

ஸ்ரீகைலாயநாதர் சிவாலயம்
சோழபுரம்

சனி தசை, சனி புக்தி கொண்டிருப்போர் இந்த சர்வ அமாவாசையில் கரிநாள் கூடுவதால் சனி பகவானுக்கான பரிபூரண வழிபாடுகள், பூஜைகள், தான தர்மங்களை மேற்கொள்வதால் பல ஆண்டுகளாகத் தடைபட்டுள்ள காரியங்களுக்கு நன்முறையில் தீர்வுகளைப் பெற்றிடலாம். கும்பகோணம் அருகே சோழபுரம் கயிலாயநாத சிவாலய ஸ்ரீசனீஸ்வரரே அமாவாசைக் கரிநாள் கூடும் விசேஷ நாளுக்குரித்தான வழிபாட்டு மூர்த்தி ஆவார். எனவே அமாவாசை என்றாலே தர்ப்பண நாள் மட்டுமே என்று தயவு செய்து எண்ணாதீர்கள்.

சூரிய, சந்திர மூர்த்திகள் இணையும் மகத்தான புண்ய தினமாக விளங்குவதாலும், சூரிய சந்திரன் இல்லாது நாம் ஒரு கண நேரம் கூட வாழ இயலாது என்பதாலும், சூரிய, சந்திர மூர்த்திகளின் அருளாசி பெறுதற்கும் இந்த சர்வ அமாவாசை தினம் பெரிதும் உதவுகின்றது. பெரும்பாலும் அமாவாசைத் திதி என்றாலே முதல் நாளும், மறு நாளும் இதிலும், அதிலுமாக அமாவாசை அம்சங்கள் நிரவி இருக்கும். நாம் பெற உள்ள இந்த சர்வ அமாவாசை தினமோ (13.3.2002) நாள் முழுதும் - சூரிய உதயம் முதல் மறுநாளுக்கும் மறுநாள் சூரிய உதயம் வரை - மூன்று நாளும் திருக்கணிதப்படி நிரவியிருப்பது இந்த மூன்று கிழமை தேவதா மூர்த்திகளின் ஆசியையும் பெற்றுத் தருகின்றது.

ஒரு நாளில் காலத்தின் பாகுபாடுகளாக - நாள், கிழமை, நட்சத்திரம், யோகம், கரணம், அதிதி யோகம், விவாகச் சக்கர‌ம், சிரார்த்த திதி, நேத்திரம், ஜீவன், தியாஜ்யம், யோகினி போன்ற பல அம்சங்கள் இருந்தாலும் அந்தந்தக் காலத்தைப் பொறுத்து ஏதேனும் ஒன்று (ராகு, எமகண்டம்) உச்சத்தில் இருக்கும். இந்த சர்வ அமாவாசைத் தினத்தில் திதி தேவதா மூர்த்திகள் உச்சம் பெற்றிருப்பதால், அனைத்துக் கால தேவதைகளும் அமாவாசைத் திதி தேவதைக்குத்தாம் தம் பூஜா பலன்களை அர்ப்பணிக்கின்றனர்.

இந்த சர்வ அமாவாசைத் தினத்தைக் கொண்டாட வேண்டிய நெடுங்குடி போன்ற சில விசேஷமான தலங்களும் உண்டு. இத்தகைய தெய்வீக விளக்கங்களைத் தக்க சற்குரு மூலம் அறிந்து கடைபிடித்தலால், அளப்பரிய பலன்களை நாம் எளிதில் பெற்றிடலாம்.

அதிராம்பட்டினம்

திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தலம்!
திருஆதிரைப் பட்டின (அதிராம்பட்டின) ஸ்ரீஅபயவரதீஸ்வரர்

27 நட்சத்திர லோகங்களுக்கும் பூமிக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே தான் ஜீவ வாழ்க்கையை "திரி கோண, முக்கோண யந்திரச் சக்கரமாக, நட்சத்திரங்கள் பூமி - ஜீவன்கள் ஆகிய மூன்றும் சம்பந்தப்பட்ட "த்ரிபாத ஜீவ யந்திரமாக" சித்தர்கள் விளக்குகின்றார்கள்.

27 நட்சத்திரங்களுக்கும் உரித்தான தலங்கள், விருட்சங்கள், தீர்த்தங்கள், மூல, இஷ்ட தெய்வ மூர்த்திகள் உண்டு. ஒரே நட்சத்திர தேவதா மூர்த்தியே பல்வேறு தலங்களில் வழிபடுவதுண்டு.

எனவே அந்தந்த நட்சத்திரத்தினர் தங்களுக்கெனக் குறித்த தலங்களில் தம் வாழ்நாளில் அடிக்கடி வழிபடுவதுடன், தம் நட்சத்திர மூர்த்திக்கு உரிய ஏனைய தலங்களையும் முதலில் அறிந்து கொள்தல் மிகவும் முக்கியமானதாகும். தம் நட்சத்திர மூர்த்தி வழிபட்ட மூல தெய்வம், நீராடிய தீர்த்தம், விருட்சம், புனித மலையை அறிந்து அங்கு சென்று விசேஷமாக வழிபட்டு எத்தகைய துன்பங்களுக்குமான தக்க பரிகாரங்களையும், நிவர்த்திகளையும் பெற்றிடலாம்.

அதிராம்பட்டினம்

திருவாதிரைக்கான ஆலயம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டினம் ஸ்ரீசுந்தரநாயகி சமேத ஸ்ரீஅபயவரதீஸ்வரர் ஆலயமாகும். ஒவ்வொரு ஆலயத்திற்கும் தெய்வ மூர்த்திகள், தேவர்கள், சித்தர்கள், மஹரிஷிகள், ஞானிகள் சம்பந்தப்பட்ட தல வரலாறுகள் நிறைய உண்டு. இவற்றைக் காலப்போக்கில் மனித குலம் மறந்து விடும். அவ்வப்போது சற்குருமார்களும், பெரியோர்களும் இவற்றை மீண்டும் எடுத்துரைப்பர்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த அதிவீரராமன் என்னும் பேரரசன், இங்கு வழிபட்டு, அரிய திருப்பணிகளை ஆற்றிய திருஆதிரையான் பட்டினமே, அதிவீரராமனின் வழிபாட்டிற்குரிய (திரு) ஆதிரைப் பட்டினமே, அதிராம்பட்டினமாயிற்று! திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தோர் தம் வாழ்நாளில் விசேஷமாக வழிபட வேண்டிய தலம்!

தனிச் சிறப்புற்றதே திருஆதிரை!

மகத்தான சிவப் பிரகாசம் கொண்டது திருஆதிரை நட்சத்திரமாகும். திரு என்ற சொல்லுக்கு லக்ஷ்மீகரமானது (ஸ்ரீ) என்ற பொருளும் உண்டு அல்லவா!  எனவே தான் 27 நட்சத்திரங்களில் சிவ, வைணவ பேதம் இன்றி சிவனுக்கு உரித்தான திருவாதிரையும், பெருமாளுக்கு உரித்தான திருவோணமும் மட்டுமே முதலில் "திரு" என்னும் அடைமொழியைத் தாங்கி உள்ளன.

முப்பத்து முக்கோடித் தேவர்களும் இராவணன், இரண்யன், இரண்யாட்சகன், சூரபதுமன் போன்ற அரக்கர்களால் துரத்தி அடிக்கப்பட்ட பொழுது, அவர்கள் தஞ்சம் புகுந்த உத்தம புனிதத் தலங்களுள் திருவாதிரை நட்சத்திர மண்டலமும் ஒன்றாகும். ஏனெனில் ஆதிசிவனுக்கு உரித்தான நித்யப் பிரதோஷ நேரத்திலும், திருவாதிரை நாளிலும், ஈஸ்வரன் அபய ஹஸ்தராகப் பெருங் கருணையுடன் உலா வருகின்ற உத்தம லோகங்களுள் திருவாதிரை நட்சத்திர மண்டலமும் ஒன்றாகையால் இந்த லோகத்தில் நுழைந்திடவே அசுரர்கள் அஞ்சுவர். எனவே தாம் இந்த விசேஷமான திருஆதிரைத் தலத்திலேயே, எத்தகைய பாவங்களைப் புரிந்தாலும், பக்திப் பூர்வமாக உணர்ந்து, திருந்திட விழைவோர்க்கு ஸ்ரீஅபயவரதீஸ்வரராக சுவாமி இங்கு அருள்பாலிக்கின்றார்.

அதிராம்பட்டினம்

சர்வேஸ்வரனின் ருத்ரப் பிரகாசங்களுள் மகத்தான சிறப்புடைய ஆருத்ரா ஒளிப் பிரகாசத்தைத் தாங்கவல்ல ஒரே நட்சத்திர மண்டலமாகத் திருவாதிரை நட்சத்திர மண்டலம் பொலிகின்றது!  வருடத்தில் ஒரு முறையே இது பூலோகத்தை அடையும். எனவே தாம் அந்நாளே மார்கழித் திருவாதிரை நாளாக, ஆருத்ரா தரிசன நாளாக மலர்கின்றது. பைரவ மஹரிஷி, ரைவத மஹரிஷி இருவரும் தினமும் தூலமாகவும், சூட்சுமமாகவும் வழிபடும் தலம். பூமியில் ஆருத்ரா தரிசன நாளில் தோன்றி ஆதிரை வதன மாமுனி என்றும் பெயர் கொண்டார். மஹரிஷிகள் இருவரும் சேர்ந்து வந்து மாதத் திருவாதிரை நாளில் தூல உருவில் வழிபடுகின்ற திவ்யமான சிவத் தலமிது!  கடற்கரைப் பட்டினமாகிய இங்கிருந்து திருவாதிரை தினத்திலும், ஏனைய தினங்களிலும் திருஆதிரை நட்சத்திரத்தை தரிசித்தல் மிகவும் சிறப்புடையதாகும்.

ரைவத சக்தியின் ஒளிப் பிரகாசம்!

ரைவத சக்தி என்பது இறைவனுடைய த்ரிநேத்ர சக்தியில் (முக்கண்) உறைகின்ற ஒருவகை ஒளிப் பிரகாசமாகும். இந்த ரைவத ஒளிப் பிரகாசத்தின் மூல பூமியாக, ஆதிரை(வத) ஜோதிப் பிரகாசத் தலமாகப் பொலிவதே திருஆதிரையான் பட்டினமாகிய தற்போதைய அதிராம்பட்டினமாம்.

திருஅண்ணாமலை கார்த்திகை தீப ஜோதிப் பிரகாச சக்தி மூலமாகவே சர்வேஸ்வரன் இப்பிரபஞ்சத்தை இயக்குகின்றார். இந்த ஈஸ்வர ஜோதியே பல கோடி அணுத்துகள்க் கமலங்களாக கடகடப்பை ஜோதி, ரைவத ஜோதி, மகர ஜோதி எனப் பலவாறாக விரிந்து, படர்ந்து யாங்கணும் நிறைகின்றது. இவ்வகையில் சிவபெருமானின் சிரசில் இருந்து பிரகாசிக்கும் மூன்றாம் பிறைக் கீற்றின் ஆக்னயேத் திக்கில் ஒளிப் பிரகாசம் கொண்டிருப்பதே ரைவத ஜோதியாம்!  இதுவே பூமிக்காகத் திருஆதிரை நட்சத்திர ஜோதியாக இறைவனால் அளிக்கப் பெற்றதாகும்.

பிரபஞ்சத்தில் மிக அதிக அளவில் மூன்றாம் பிறை தரிசனங்களைப் பெற்ற உத்தமர்களுள் ஒருவராகப் பொலிந்த தாயின் திருவயிற்றில் உதித்தமையால் இந்த ரைவத சக்தி ஒளிப் பிரகாச சக்தியே கருவியே பூண்ட திருவுடையாராய் ஸ்ரீரைவத மஹரிஷி என்றும் பிரகாசிக்கின்றார்!

ஸ்ரீசனீஸ்வர பகவான்
அதிராம்பட்டினம்

திருவாதிரைக் காப்புப் பண்!

ஆதிரை லிங்கமாய் ஆமறை ஜோதியன்
ஆதிரை தானத்தில் அபயமென் றருளுவன்
ஆதிரை வதனழல் ஆகிடும் ஆதியில்
ஆதிரு வாதிரை ஆலமர் ஆரணா!

(ரைவத அழல் - ரைவத மஹரிஷி பெற்ற ஜோதி தரிசனம்)

என்பது ஆதிரை ஆலயம் பற்றிய சித்தர்களின் பரிபாஷைப் பாடல்!  திருவாதிரை நட்சத்திரத்தவர்களும், ஏனையோரும் இவ்வரிய துதியை ஓதி அதிராமப்பட்டினம் ஸ்ரீஅபயவரதீஸ்வரரை வழிபட்டு வருதலால் திருவாதிரை நட்சத்திரத்திற்கான மாமுனியாம் ரைவத மஹரிஷியின் ஆசியுடன் நட்சத்திர நல்வரங்களைப் பெற்றிடலாம்.

இவ்வற்புத நட்சத்திரத் துதியே அதிராம்பட்டினம் ஆதிருவாதிரை ஈஸ்வரனாகிய ஸ்ரீஅபயவரதீஸ்வரருக்கான சித்தர்களின் போற்றித் துதியாம். இச்சித்த பரிபாஷை சுலோகத்தில் திருவாதிரை நட்சத்திரத்தின் பீஜக் கழல்கள் நிறைந்துள்ளன. இங்கு திருவாதிரை நட்சத்திரக்காரர்கள், திருவாதிரை நட்சத்திர நாளிலும், சிவனுக்கு உரிய திங்கட்கிழமையிலும் "ஹஸ்த ரேகா" சக்திகள் நிறைந்த உணவு திரவியங்களான பாதாம் பருப்பு, பறங்கி, பூசணி, விளாம்பழம், ஜீரகம், சோளம், சீதாப் பழம், பலாப்பழம் போன்றவற்றைப் படைத்துத் தானமாக அளித்து வந்திட, கோசார பலன்கள் நன்கு அமையும்.

உறக்கம் மரணம்

உறக்கம், மரணத்தின் ஒத்திகையே! மரணம் சரீர மாற்றமே!

* ஜாதி, மத, இன பேதமின்றி ஏழைகளின் ஈமக் கிரியைகளுக்கு (சடல தகனச் சடங்குகள்) உதவுதல் மகத்தான புண்ய காரியம் ஆகும்!

* மயானத்திற்குச் சடலத்தைச் சுமந்து செல்ல உதவுதல் உத்தமப் புண்ய காரியமென வேதங்களே போற்றுகின்றன!  இச்சேவையால் மரண பயத்தை அறவே அகற்றிடலாம்!

* தோளில் தூக்கிச் சுமந்த பெற்றோர்களின் திருமேனியை ஆம்புலன்ஸில் வைத்து அவமதித்திடாது தோள் வலிக்க மயானத்திற்குச் சுமந்து செல்தலே பித்ரு கடனைப் போக்கும்! அவர்கள்தம் ஆன்ம சாந்திக்கும் வழி வகுக்கும்.

இறப்பிற்குப் பின் சடலத்திற்கு எத்தகைய ஈமக் கிரியைக் காரியங்களை நடத்த வேண்டும் என்ற வழிமுறைகளைப் பற்றிப் பலரும் கேட்டுள்ளார்கள்.

இறப்புச் சடங்குகளின் முக்கியக் காரண அம்சங்களில் பிரேத தோஷங்களை நீக்குவதும், சடலத்தை நன்முறையில் அக்னியில் பஸ்மமாகச் செய்தலும், இறந்தவரின் ஆன்மா நன்முறையில் சாந்தி அடைவதற்கான இறை நியதி முறைகளை, அர்த்தம் உள்ள சடங்குகளைக் கடைபிடிப்பதும் முக்கியமானதாம்!

நம் பண்டைய முறையில் செய்ய வேண்டிய பல தகனச் சடங்குகளைத் தற்காலத்தில் பலரும் முறையாக செய்வது கிடையாது. ஏதோ கடனே என்று அரைகுறையாக மந்திரங்களை ஓதி விட்டுப் பலரும் ஈமக் கிரியைகளை கடனே என்று முடித்து விடுகின்றார்கள். இதிலும் பணத்தை ஈட்டுவது தான் பெரிதாகி விட்டமையால், தர்ப்பணம், திவசம் போன்றவற்றை முறையாகச் செய்வதும் மறைந்து வருவதால், தக்க ஆன்ம சாந்தி கிட்டாது கோடிக்கணக்கான ஆவிகள் திணறுகின்றன! அவற்றின் வேறு உலக, சரீரப் பயணங்களும், வடிவுகளும் தடையாகின்றன.

பெறுதற்கரிய மானிடப் பிறவியைப் பெற்று அந்த உடலை விடுக்கும் போது சடலமாய் ஆகின்ற அந்தப் புனிதமான உடலுக்குச் செய்ய வேண்டிய தகனக் காரியங்களை முறையாகச் செய்தால் தானே அந்த ஆன்மாவிற்குத் தேவ சாந்தம் கிட்டும்! வாழும் போதும் தீவினைகளைச் செய்து விட்டு, தகனச் சடங்குகளிலும் குறை என்றால் இதனால் விளையும் தோஷங்கள் சந்ததிகளைப் பாதிப்பதுடன் கோடிக் கணக்கில் பிறவிகள் தாமே சூழும்!

உடல் வலிமை, பொருள் வசதி இருந்தும் பிறருடைய ஈமக் கிரியைகளுக்கு முறையாக உதவி செய்யாவிட்டால் மரண பயத்திலிருந்து மீள்தல் கடினமே! இதனால் ம்ருத்யு தோஷங்களே பெருகி மரணமானது பலவிதமான உடற் சிதைவுகளுடன் கூடியதாகவும் கடுமையான நோய், நொடிப் போராட்டமாகவும், இறக்கும் போது அருகில் எவரும் இன்றியும், அநாதையாக இறக்கும்படியாகவும் துர்வினைகள் வலிய வந்துறுத்திடும். இதற்குப் பெருங்காரணமே வாய்ப்புக் கிட்டியபோது பிற குடும்பங்களில் ஈமச் சடங்கிற்கு உதவாததும் ஆகும்.

ஈமக் கிரியைகளுக்கு (தகனம் மற்றும் "பத்துச்" சடங்குகள்) உதவுவது என்பது மகத்தான தர்மக் காரியமாகும். அசுவமேத யாகத்திற்கு ஈடான பலன்களை ஈமக் கிரியைகளுக்கு உதவுவதின் மூலம் மிக மிக எளிதில் பெற்று விடலாம் என்ற சத்தியமான வேத வாக்கினை இனிமேலாவது உணர்ந்து கொள்ளுங்கள்.

பண்டையச் சிறப்பு வாய்ந்த நம்முடைய ஈமக் கிரியைச் சடங்குகள் யாவுமே மிக மிக அர்த்தம் பொதிந்தவை. ஆனால் அவற்றைச் சுயநலமில்லாது ஆழ்ந்த நம்பிக்கையோடு இன்று நன்முறையிலே நடத்தித் தருபவர்கள் ஒரு சிலர் தாம். எனவே அனைவருக்கும் உதவும் பொருட்டுச் சித்புருஷர்கள் அளிக்கின்ற வகையிலே மிக மிக எளிமையான ஈமக்கிரியை, தகனச் சடங்குகள் பற்றிய விளக்கங்களை இங்கு நாம் அளிக்கின்றோம்.

சடலத்திற்குப் பஞ்ச பூதக் கட்டு!

கால வர்தமான சூழ்நிலைகளுக்கு ஏற்ப இறப்பினை முதலில் மருத்துவ ரீதியாக நன்முறையில் உறுதிப்படுத்திக் கொள்தல் மிகவும் முக்கியமானது. வீட்டுத் திண்ணையிலோ அல்லது பலரும் இறுதி மரியாதை செலுத்தும் வண்ணம் ஹாலிலோ சடலத்தை வைத்திடுதல் வேண்டும்.

நல்ல பெரிதான வெள்ளைத் துணியை விரித்து அதில் சடலத்தைக் கிடத்தி சுக்கிரத் தம்பங்களாக உள்ள கால் கட்டை விரல்கள் இரண்டையும் "ஆன்ம உய்விற்காக சுக்கிரப் படல்களை ஒன்றாகப் பிணைக்கின்றோம்" என்று பிரார்த்தித்து ஒரு சுத்தமான வெள்ளைத் துணியால் சடலத்தின் இரண்டு கால் விரல்களையும் ஒன்று சேர்த்துக் கட்டி விட வேண்டும். பிறகு இரண்டு கைகளையும் ஒன்றாக வைத்து உடலின் முன்புறம் நாபிக்கு (தொப்புள்) மேல் வைத்து இரு கட்டை விரல்களையும் ஒன்றாக கட்டி,

"சுக்கிரத் தம்ப சக்திகள் நிறைந்த இந்த இரண்டு கை கட்டை விரல்களையும் வாயுத் தம்பன ஒடுக்கத்திற்காக ஒன்றாக இணைக்கின்றோம்" என்று பிரார்த்தித்து இரண்டு கை கட்டை விரல்களையும் வெள்ளைத் துணி கொண்டு கட்டுதல் வேண்டும். சணல், கயிறு, பிளாஸ்டிக் கயிறு போன்றவை கூடவே கூடாது. இறந்தவர் சுமங்கலி எனில் பருத்தியால் ஆன வண்ணத் துணிகளைப் பயன்படுத்திடுக! சுமங்கலிக்கு வெள்ளைத் துணியைத் தவிர்த்திடுக!

பிறகு சடலத்தை நல்ல துணியால் நன்கு துடைத்து நெற்றிக்கு விபூதி இடுதல் வேண்டும். இறந்தவர் சுமங்கலியாக இருந்தால் குங்குமத்தை இட்டிட வேண்டும். உடனடியாக ஆபரணங்களைக் கழட்டி விடாதீர்கள். கடுக்கண், கழுத்துச் சங்கிலி, காதுத் தோடுகள், மூக்குத்தி, கை வளையல்கள் போன்றவை இருக்கட்டும். பாதுகாப்பிற்காக வேண்டுமானால் அருகிலேயே எவரையேனும் காவலுக்கு வைத்திடுக! ஆபரணங்கள் சற்று நேரம் உடலில் இருக்கட்டும். மயானப் பயணத்திற்கு முன் கவனமாக எடுத்திட வேண்டும்!

இறப்பிற்கான அறிகுறிகள் ஏற்படுமேயானால் அல்லது இல்லத்திலேயே இறப்பு நிகழுமேயானால், திருவாசகம், தேவாரம், திவ்யப்ரபந்தம், திருப்புகழ் மற்றும் தமிழ் மறை வடமொழி வேத மந்திரங்களை ஓதிக் கொண்டே இருத்தல் வேண்டும். நவச்சிவாய மந்திரம், ஓம் நமோ நாராயணா என்ற அஷ்டாட்சரம் ஒலித்துக் கொண்டு இருப்பது சிறப்புடையது. வீட்டில் எப்போதும் கங்கா ஜலம் இருக்க வேண்டும்! ஒருவர் இறந்து விட்டார் என்ற முடிவு செய்யப்பட்டாலும், இறப்பிற்கு முன்னும் உடனடியாக கங்கா, காவிரி, துங்கபத்திரை, தாமிரபரணி போன்ற சப்த நதிப் புண்ணியத் தீர்த்தங்களை வாயில் ஊற்றிட வேண்டும்! ஈமக் கிரியைகள் முடியும் வரை தேவாரத் திருப்பதிகங்களை, தமிழ், தேவ மொழி வேத மந்திரங்களை ஒலித்துக் கொண்டே இருக்கும்படி செய்ய வேண்டும்.

கண், காது, மூக்கு ஆகியவற்றில் பஞ்சை வைத்து அடைக்கும் போது "தச வாயுக்களும் நன்கு கர்ம பரிபால முறையில் இவ்வூனுடம்பை விட்டு நன்முறையில் அகல யோக பந்தன மூடியாகப் பஞ்ச பூதப் பருத்திச் சம்புடம் வைக்கின்றோம்!" என்று பிரார்த்தனை செய்து பஞ்சை வைத்து அடைத்திட வேண்டும். சடலத்திற்கு ஒரு வெள்ளைத் துணியை வைத்துப் போர்த்தி "ஆத்ம போதனம் நிகழ்ந்த இச்சரீரத்திற்கு பஞ்ச பூத சக்தி நிறைந்த ஆடைக்காப்பு நன்மை புரிவதாக!"   என்று பிரார்த்தித்தல் வேண்டும்.

இறந்தவர் சுமங்கலியாக இருந்தால் வண்ணப் புதுப் புடவை குறிப்பாக மஞ்சள் அல்லது சிகப்பு நிறத்தில் பருத்தி நூலாடைகளை மட்டும் சார்த்திடலாம். பாலியஸ்டர், நைலான் போன்றவை கூடாது. மனைவியை இழந்தவர், கணவனை இழந்தவர், ஏனையோர்க்கு வெள்ளைத் துணியைச் (பருத்தி நூலாடை) சார்த்திட வேண்டும்.

தீய சக்திகள், தோஷங்கள் சடலத்தை அண்டாது காத்திடுக...

இறந்தவரின் தலைப் பகுதியைத் தெற்கில் வைத்துத் தெற்குத் திசையில் எம தீபம் (நல்லெண்ணெய் விளக்கு) எப்போதும் ஒளிர வேண்டும். சடலத்தை ஈமக் கிரியைக்காகச் சுடுகாட்டிற்கு அனுப்பிப் பின் சுடுகாட்டிற்குச் சென்றவர்கள் திரும்பி வரும் வரையிலும் இந்த எம தீபம் ஒளிர்ந்து கொண்டே இருக்க வேண்டும். தீய சக்திகள் மற்றும் தோஷங்கள் தீண்டாது இது இல்லத்தைப் பாதுகாக்கும்!  சடலத்தினுள் துர் ஆவி புகாமலும் இது காத்திடும்.

சடலத்திலே தீய சக்திகள் புகுவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. இதற்கு ஒரு போதும் இடமளிக்கக் கூடாது. இறந்தவருடைய நெற்றியிலே விபூதி, குங்குமம் இருப்பதும், அருகில் எப்போதும் வேத மந்திரங்களை ஓதிக் கொண்டேயிருப்பதும், எம தீபம் ஒளிர்வதும் மேற்கண்ட வகையில் பஞ்ச பூதக் காப்பு இடுவதும் தீய சக்திகள் அந்த சடலத்தினுள் புகாத வண்ணம் காத்திடும்.

மூன்று, ஐந்து, பத்து, பதின்மூன்று நாட்களுக்கு என மோட்ச தீபச் சடங்குகள் அவரவர் குல வழக்கப்படி நடைபெறும் போது இந்த எம தீபம் தொடர்ந்து ஒளிர்வது ஆன்ம சாந்திக்குப் பெரிதும் துணை புரியும். நரக வழியின்றி நல்ல ஆத்ம வழி யாத்திரைக்கும் இது வழி வகுக்கும்.

இறந்தவர் பொதுவாக நல்ல பக்திமானாக இல்லாவிடில், மாயையால், இறந்தவருடைய ஆவி ரூபமானது பற்று, பாசத்தால் சடலத்தைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கும். அபரிமிதப் பற்றால் சடல உடலுக்குள் அது மீண்டும் நுழைய முயற்சிக்கும். ஆசாபாசத்தை அறுத்து இறை நிலையோடு மரணத்தை எதிர்நோக்குபவர்கள் ஒரு கோடிக்கு சில பேர்கள் கூடத் தேற மாட்டார்கள். எனவே தன் மனைவி, பிள்ளை, வீடு, செல்வம், பதவி என்ற எண்ணத்துடன் தான் அந்த ஆவி ரூபம் சடலத்தை, வீட்டைச் சுற்றி வரும்.

ஆவி என்றாலே அஞ்சி விடாதீர்கள்!  பேய், பிசாசை இது குறிப்பதல்ல!  ஆவி என்பது பொதுவான தமிழ்ப் பதமாகி விட்டதால் எல்லோரும் இச்சொல்லைக் கண்டு அஞ்சுகின்றார்கள். ஆவிகளில் ஆயிரமாயிரம் வகைகள் உண்டு. இறந்தவருடைய இறைநிலைகளைப் பொறுத்து ஆவியின் பெயர், தன்மைகள், குணப்பாடுகள் மாறும்.

தகன நேய நியதி!

இயன்ற வரையில் ஆறு மணி நேரத்திற்குள் சடலத்திற்கு அக்னியூட்டுவது தான் சிறப்புடையது. ஐஸ் வைத்துப் பாதுகாத்தல் போன்றதெல்லாம் ஆன்மீகத்திற்கு ஏற்புடையது அல்ல. பலவித சந்தர்ப்பங்களால் சடலத்தை நெடுநேரம் வைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் "களரிக் கட்டு" என்ற வகையில் நிறைய ஊதுபத்தி தீபம் இட்டு கண்டங்கத்திரி, வெற்றிலை, புரசு இலை மற்றும் பல ருத்ர திரவியங்கள் கூடிய சமூலக் கலவைக் கட்டினை அருகில் வைக்க வேண்டும். தக்கப் பெரியோர்களிடம் இதனை அறிக!

பிள்ளை, உறவினர்கள் வரவில்லை என்றெல்லாம் அனாவசியமாகச் சடலத்தை வெறுமனே வைத்தல் கூடாது. ஏனென்றால் இறந்தவர்களின் ஆவி முதலில் சடலத்தில் புகும் படலத்தை எத்தனித்தாலும் அது இயலாது எனத் தெரிய வந்தவுடன் சூட்சும ரீதியாகத் "தம்முடைய சடலம் எப்போதும் அக்னிக்கு இரையாகும், தான் சடல் சரீரக் கட்டிலிலிருந்து எப்போது விடுதலை ஆவோம்" என்று தான் ஆவி ரூபத்தில் எதிர்நோக்கிக் கொண்டிருப்பர். சடல உரிமத்தில் இருந்து நன்முறையில் மீண்டால் தான் இறுதி யாத்திரையைப் பேண முடியும் என்பதால் அக்னிச் சம்பவத்தை ஆவி ரூபத்தில் எதிர்பார்த்து இருப்பர்.

தகனத்தில் சில நெறிமுறைகள்...

சுடுகாட்டிற்குப் புறப்படும் முன்னால் சடலத்தை நீராட்டுவார்கள். உறவினர்களும், குறிப்பாக இல்லப் பெண்மணிகளும் குட நீரால் சடலத்திற்கு நீராட்டுவதும் உண்டு. நீராட்டிய பின் புது ஆடைகளைப் போர்த்தி மீண்டும் விபூதி, குங்குமம் இடுதல் வேண்டும். பூணூல் இருப்பின் கழற்றக் கூடாது.

இறந்தவர் சுமங்கலியாக இருந்தால் தாலிச் சரடு அப்படியே இருக்க வேண்டும். பொன் மாங்கல்யத்தையும் எடுத்தலாகாது! ஆனால் நடைமுறையில் முதலில் மாங்கல்யத்தைக் கழற்றி விடுவார்கள்! அப்படிக் கழற்றுவது ஏற்புடையது அல்ல என்றாலும் பொன் மாங்கல்யத்தை எடுக்கும் போது மங்கல நாண் சரடையும் சேர்த்து எடுத்திடாது புதிதாக மாங்கல்யச் சரடு கட்டியோ அல்லது பழைய மாங்கல்யச் சரடினை பின்னப்படுத்தாது அப்படியே வைத்திட்டே பொன் மாங்கல்யத்தை எடுக்க வேண்டும். ஏனென்றால் இறுதி வரையிலே சுமங்கலியாக வாழ்ந்தவர்க்கு, இறந்த பின்னும் சுமங்கலித்வம் நிலை பெறுவதால் மாங்கல்யச் சரடு ஒன்று எப்போதும் கழுத்தில் இருந்தாக வேண்டும்.

இறந்தவர் சுமங்கலியாக இருந்தால், கண்ணாடி வளையல்களோடு அனைத்து சுமங்கலிச் சின்னங்களும் உடலில் இருப்பதே புனிதமானது! வெள்ளி மெட்டிகளும் இருந்திடலாம். வெள்ளி மெட்டிகளைச் சுடுகாட்டில் எவரும் எடுத்து விடுவார்களே என்று அஞ்சாதீர்கள். நம் கண்ணுக்குத் தெரிந்த வரையில் சுமங்கலியாக இறப்பவர்கள் ஓரளவு பொன், வெள்ளி ஆபரணங்களோடு தகனம் பெறுவது தான் சிறப்புடையது. அதற்குப் பிறகு எவரும் எடுத்தால் அது தான, தர்மமாகி, புண்ய சக்திகள் பெருகி ஆத்ம சாந்திக்கும் அவர்கள் குடும்பம் தழைப்பதற்கும் உதவும். அக்காலத்தில் பக்தி, நேர்மை பிரகாசித்தமையால் பொன்னோடு தகனம் செய்தாலும் எவரும் சடலத்தில் இருந்து திருட மாட்டார்கள்.

பித்ரு கடன் தீர்ப்பீர்....

வாடகைக் கார், வேன் இல்லாது சடலத்தைச் சுடுகாட்டிற்கு சுமந்து செல்வது தான் சிறப்புடையதாகும். நம்மைத் தோளில் தாங்கி வளர்த்த தாய், தந்தையரை நம் தோளிலேயே சுமந்தால் தான் பெற்றோர்க்கு உரித்தான பித்ரு கடன்கள் தீரும். ஆம்புலன்ஸ் வைத்துக் கொள்வது, கறுப்பு வண்டியில் ஏற்றிச் செல்வது போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். எவ்வளவு தூரமாக இருந்தாலும் உறவினர்கள் பலரும் சேர்ந்து மாறி மாறிச் சடலத்தைச் சுமந்து செல்வதே சிறப்புடையது. இதற்காகத்தான் இறந்த வீட்டில் உற்றமும், சுற்றமும் கூடும். வெறும் மாலை போட்டு விட்டு அரட்டை அடித்து நகர்வதற்கல்ல!

"பிணம் சுமத்தல்" என்பது மகத்தான புண்ணிய காரியமாகும். எனவே உறவினர்கள் சடலத்தைச் சுமப்பதில் பெரும் ஆர்வம் காட்டி நல்ல புண்ணியத்தைச் சம்பாதித்துக் கொண்டிடட்டும்! இந்த புண்ணிய சக்தி மரண பயத்திலிருந்து பலரையும் காத்திடும், பெரும் விபத்திலிருந்து கூட ஒருவரைத் தற்காத்திடும்.

சடலத்தைத் தூக்கிச் செல்கின்ற போது வீதியெங்கும் மலர்களை இறைப்பதும் தவறான வழக்கம் ஆகும். மலர் என்பது ஜீவன்களையும், மனிதனையும், மலர்களையும் படைத்த இறைவனுக்கு அளிப்பதாகும். எனவே சடல இறுதி ஊர்வலம் செல்கையில் வீதியெங்கும் பூக்களைக் கண்டிப்பாக இறைக்கக் கூடாது. இத்தகைய பூக்களை மிதிப்பதனால் பலருக்கும் பிண தோஷங்கள் உண்டாகி வீட்டில் காரண, காரியமின்றிப் பலரும் நோய் வாய்ப்படுவர். இத்தகைய பிணப் பூ மிதித்தல் தோஷங்களை அகற்றுவது மிக மிகக் கடினம்

மகா சிவராத்திரி

வாழ்வில் பொதுவாக ஒரே ஒரு முறையே பூஜிப்பதான வ்ருஷ வருட மஹா சிவராத்திரி!

60 வருடங்களுக்கு ஒரு முறையே வருகின்ற ஸ்ரீம்ருத்யுஞ்ஜய பூஷண மஹா சிவராத்திரி அருணாசல கிரிவலம்!

(ம்ருத்யு தோஷங்களைப் போக்கி, மரண பயத்தை நிவர்த்தி செய்வது).

மாசி மாதத்தில் வரும் மஹா சிவராத்திரியே பலரும் நன்கு அறிந்ததாம். ஆனால், ஒவ்வொரு மாதமும் வருகின்ற மாத சிவராத்திரியும் உண்டு என்பதை அறிவீர்களா? தேய்பிறையில் (கிருஷ்ண பட்சம்) அதாவது பௌர்ணமியை அடுத்து வருகின்ற பதினான்காவது திதியான சதுர்த்தசித் திதியில் வருவதே மாத சிவராத்திரி என்பதைப் பலரும் அறியார். திருஅண்ணாமலையில் ஜோதி ஸ்வரூபத்தில், ஈஸ்வரன் காட்சி கொடுத்த மாசி மாதச் சிவராத்திரியையே மஹா சிவராத்திரியாகச் சிறப்புடன் நாம் கொண்டாடுகின்றோம்!  ஏனைய மாத சிவராத்திரிகளை மனித குலம் மறந்து விட்டமையால் மனித குலத்திற்கு மாத சிவராத்திரி பூஜா பலன்கள் கிட்டாமல் போவதுடன் இவ்வழிபாட்டுப் பலன்களால் கழிபட வேண்டிய வினைகளும் கரையாது நின்று துன்பங்கள் மிகுகின்றன!

பிரபஞ்சத்தின் ஆன்மீக மையமான திருஅண்ணாமலையில், தினந்தோறுமே, ஒவ்வொரு நிமிடத்திலும் எண்ணற்ற சித்புருஷர்கள், மகரிஷிகள், யோகியர், ஞானியர் கிரிவலம் வந்தவாறு உள்ளனர்! பிரதோஷம், மாத சிவராத்திரி மற்றும் மஹா சிவராத்திரி தினங்களில் கோடிக் கணக்கான சித்தர்களும், யோகிகளும் தூல சூட்சும வடிவுகளில் கிரிவலம் வருகின்றார்கள்தாமே!

மாசி மாத ருத்ர அமாவாசை!

நாம் மாசி மஹா சிவராத்திரியைப் பெரும் விழாவாகக் கொண்டாடுவது போல் மனித குலம் மறந்து விட்ட மாத சிவராத்திரித் திதியையே தேவர்கள் பிரம்மாண்டப் பிரபஞ்சப் பெருவிழாவாக மாதந்தோறும் அனைத்து திருக்கயிலாயத்திலும், சிவ லோகங்களிலும், சிவ ஆலயங்களிலும், மலைத் தலங்களிலும் சூட்சுமமாகக் கடைபிடித்து அனைத்துப் பலாபலன்களையும் நமக்கு அர்ப்பணிக்கின்றார்கள். இவற்றைப் பெற்றிட இந்நாளில் ஆலய வழிபாடு, கிரிவலம் அத்யாவசியமானவையே!

மேலும் மஹா சிவராத்திரியில் அம்பிகையே பூமிக்கு வந்து பூஜிப்பதால், வித்யா லலித சக்தி பூஜா பலன்களுடன் உதிக்கின்ற (மறுநாள்) அமாவாசையன்று மஹாருத்ர அமாவாசையாகப் பூலோக ஜீவன்களுக்கு அளப்பரியப் பேரருளை அருள்வதாகும்!

இவ்வாறு மாசி மாத மஹா சிவராத்திரியை அடுத்து வரும் மஹாருத்ர அமாவாசையானது, அம்பாளின் பூஜா சக்திகள் நிறைவதால் சிவசக்தி ஐக்ய சக்திகளைப் பூண்டதாகப் பிரகாசிக்கின்றது! மேலும் பித்ரு தேவ மூர்த்திகள், பித்ருக்கள், பித்ரு பத்னீகள், பித்ரு தேவர்கள், பித்ரு கணங்கள் ஆக அனைவரும் அம்பிகையின் பூஜைகளில் பங்கு கொண்டு அபரிமிதமான தேவ சூரிய சக்திகளுடன் சூரிய, சந்திர (கிரகங்களின்) சங்கமத்திற்கு ஒளியூட்டி, மஹா சிவராத்திரிக்கு மறுநாள் வரும் அமாவாசையை மஹா ருத்ர அமாவாசையாக உதிக்க வைக்கின்றனர்!

மாதாந்திர சிவராத்திரியின் மகாத்மியம் என்ன?

திருஅண்ணாமலையில் பிரம்ம மூர்த்திக்கும், திருமாலுக்கும் ஜோதி ரூபத்தில் ஈஸ்வரன் அருட்காட்சி அளித்த வைபவமே மஹா சிவராத்திரி என்று மட்டுமே பலரும் அறிவர். ஆனால் மஹா சிவராத்திரி தோன்றியதின் பின்னணியில் கோடானு கோடி இறை ரகசியங்கள், தத்வார்த்தங்கள், மறையிறை அனுபூதிகள் பொங்கிப் பொலிகின்றன!

தேவர்களின் மஹேஸ்வர மஹா சிவராத்திரி!

தினசரிப் பிரதோஷ நேரமாக மாலை 4.30 முதல் 6.30 நேரக் காலம் அமைகின்றதல்லவா!  நம் பூமி போல எண்ணற்ற பூமிக் கோளங்கள் இருப்பதால், ஏதேனும் ஒரு பூமியில் (15 நாளுக்கு ஒரு முறை வருவதான) பட்சப் பிரதோஷம் நடந்து கொண்டு தானே இருக்கும்!  எனவே பிரபஞ்சத்திற்கு ஒவ்வொரு நாளும் நித்யப் பிரதோஷம்தானே! மாத சிவராத்திரியைப் போல் நித்யப் பிரதோஷ பூஜையை மனித குலம் கொண்டாட மறந்திட்டாலும், தேவாதி தேவர்கள் தினசரிப் பிரதோஷம்தனை அனைத்து ஆலயங்களிலும் நிச்சயம் சூட்சுமமாக நடத்துகின்றார்கள்!

எனவே தான் தினமும் ஆலயத்தில் மாலை நேரத்தில் முறையாக இடைவிடாது வழிபடுவதானது (தேவர்கள் நடத்தும்) நித்யப் பிரதோஷ வழிபாட்டுப் பலன்களின் ஒரு பங்கை நமக்குப் பெற்றுத் தருகின்றது! இவ்வகையில் பூமியின் மாதாந்திர சிவராத்திரி என்பது (தேவ கால கணக்குப்படி) தேவர்களுக்கு மகத்தான மஹா சிவராத்திரியாகும். அதிலும் மாசி மாதம் வருகின்ற மஹா சிவராத்திரி தேவர்களுக்கு மஹேஸ்வர மஹா சிவராத்திரியாகும்! எவ்வாறு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகின்ற மாசி மகமானது நமக்கு மகாமகம் ஆகின்றதோ, இதே போல 12 மாதங்களுக்கு ஒரு முறையான நம் மனிதகுல காலக் கணக்கிலான மாசி மாத மஹா சிவராத்திரியைத் தேவாதி தேவர்களும் மஹேஸ்வர மஹா சிவராத்திரியாகப் பெருஞ் சிறப்புடன் கொண்டாடுகின்றார்கள்.

வருகின்ற மாசி மாத மஹா சிவராத்திரியானது ), மகத்தான அருட் பிரவாகத்தைத் தன்னுள் கொண்டுள்ளது. இதனை (நடப்பு வ்ருஷ வருட) ம்ருத்யுஞ்ஜய பூஷண சிவராத்திரியாக அனைத்துக் கோடி தேவ மூர்த்திகளும் கொண்டாடுகின்றனர்.

12 ஆதித்ய தேவ மூர்த்திகள், 11 ருத்திர தேவ மூர்த்திகள், 8 அஷ்ட வசுக்கள், 2 அஸ்வினி தேவர்கள் ஆகிய முப்பத்து மூவரும் தம் ஒரு கோடிக் குழாத்துடன் (33 கோடி) முப்பத்து முக்கோடி தேவர்களாகின்றனர்!  இவர்கள் இவ்வாறு மாதந்தோறும் ஏற்று நடத்துவதே (நம் பூலோக) மாதாந்திர சிவராத்திரிப் பண்டிகையாம்!

ம்ருத்யுஞ்ஜய பூஷண சிவராத்திரியின் சிறப்பென்ன? இச்சிவராத்திரியின் போது கிரிவலம் வரும் வகை, கிரிவல பலாபலன்கள் போன்ற அரிய தெய்வீக விஷயங்களைச் சித்புருஷர்களின் ஞானபத்ர கிரந்த குருவாய்மொழிகள் மூலம் அறிவோமாக!

ம்ருத்யுஞ்ஜய மூர்த்தி என்பது சிறப்பான சிவ அவதாரமாம்! ம்ருத்யு தோஷங்களை ஜயிக்கின்ற சிவ மூர்த்தியாக, ம்ருத்யு தோஷங்களை நிவர்த்திக்கப் பெருந் துணைபுரிவதாக கலியுகத்திற்கு மிகவும் அத்யாவசியமான சிவ அவதாரங்களில் ஒன்றாம்!  "இவ்வழிபாடு தென்னகத்தில் சரபேஸ்வர பூஜை, பிரதோஷ பூஜை, சந்தோஷி மாதா பூஜை போல எதிர்காலத்தில் ம்ருத்யுஞ்ஜய பூஜை மிகவும் பிரசித்தி அடையும்" என்பது சித்தர்களின் திருவாக்காம்!

ம்ருத்யு தோஷங்கள் என்றால்.....

ம்ருத்யு என்பது ஒரு வகை ஆயுள் பங்க தோஷமாகும்!  மது, சூது, வாது, முறையற்ற காமம், கேளிக்கை, தீய வழிகள், தீய எண்ணங்கள் போன்றவற்றில் நேரத்தைக் கழித்தால் பாவ வினைகளே மிஞ்சும்!  பெறுதற்கு அரிய மானுடப் பிறவி எடுத்து இம்மானுட வாழ்வில் காலத்தைச் சரிவரப் பராமரிக்காது, பாதுகாக்காது வீணடிப்பதாலும், அதர்மம் செய்வதாலும், பெரும்பாவச் செயல்களில் ஈடுபடுவதாலும், சதாசர்வ காலமும் தீவினைகளையே எண்ணுவதாலும் ம்ருத்யு தோஷம் என்ற மரணத்தை விரைவில் அடையும் தோஷம் உருவாகிப் பெருகுகின்றது. அதாவது ம்ருத்யு தோஷம் விஞ்சிடில் எதிர்பாராத நோய், விபத்து, பகை, விரோதம் போன்றவை மூலமாக மரணம் விரைவில் வந்திடும். மரணத் துன்பங்களும், மரண பயத்தை நிகர்த்த வினைகளும் வேறு வகையில் மலை போல் பெருகிடும்!

மரண காலம் அறியலாகுமா?

மரண நேரத்தை ஒரு மனிதன் தானாக ஆன்மப் பூர்வமாக உணர முடியுமா? ஆம், நிச்சயமாக!  எப்போது?  ஒருவர் தன் மரணம் பற்றி அறிவது எந்நிலையில்? மரண நேரத்தை அறிந்தால் அதனை மனமாரத் தன் தலைவிதியாக ஏற்கும் உயர்ந்த தெய்வீக மனப் பக்குவமும் வரும் போது தான் எம்மனிதனுக்கும் மரணம் பற்றிய முன் அறிவிப்புக் கிட்டும். ஆனால் தற்காலத்தில் இந்த உத்தம நிலையில் இருப்போர் எத்தனை பேர்கள்? மரணம் வருகின்றது என்றாலே, எல்.ஐ,சி. பாலிசி, உயில், சொத்துப் பரிமாற்றம் சட்டத்தை ஏய்க்கும் ஏமாற்று வேலைகள் போன்று லௌகீக விஷயங்களில் மனிதன் இறங்கி விடுவானே! ஆத்ம விசாரப் பூர்வமாக மரணம் பற்றி அறியவோ, தெய்வீகச் சிந்தனையுடன் மரணத்தைத் தழுவமோ எவர் ஆயத்தமாக உள்ளனர்?

"மரண நேரம் அறிந்தால் அதனை ஒத்தி வைக்க மனிதன் முற்படுவான்" என்பதால் தாம் இறப்பின் ரகசியம் எவருக்கும் உணர்த்தப்படுவது கிடையாது! சற்குருவை அடைந்தால் தான் இத்தகைய இறப்பின் ரகசியங்களை உணர்ந்து, பிறப்புகளை வெல்வதான உத்தம நிலைகளை அடைய முடியும்! இந்நிலையை அடைந்தோரும் எதனையும் வெளிக்காட்டார்!

எனவே ம்ருத்யு தோஷத்தைக் களையும் நல்வழிகளை நாம் பெற்றிடவே, வரும் மஹா சிவராத்திரியன்று ம்ருத்யுஞ்ஜய லோகத்தைச் சார்ந்த ஸ்ரீமார்கண்டேய மஹரிஷி, ஸ்ரீகண்ணப்ப நாயனார் போன்ற மகான்கள், சித்தர்கள், யோகிகள், திருஅண்ணாமலையில் கிரிவலமாக வந்து இறைவனை வழிபடுகின்றனர்!

புராண காலங்களில் தாம் மகரிஷிகளும், சித்தர்களும் வருவர் என்று எண்ணாதீர்கள்!  இப்போதும் அவர்கள் நடமாட்டம் நிச்சயமாக நம் பூமியில், அனைத்து நாடுகளிலும் உண்டு! நாம் தான் அவர்களுடைய தெய்வீகப் பிரசன்னத்தை உணர்வதில்லை!  அதுவும் திருஅண்ணாமலையில் சித்தர்கள், மகரிஷிகள் இன்றும் எப்போதும், எந்நேரமும் கூட்டம் கூட்டமாகத் திரள்கின்றார்கள்! இவற்றை அறிவதற்குக் குருவருள் பூணுவீர்!

மருத்துவத்தை நாடுதல் மனித கடமையாம்!

நோய் நொடிகளைத் தீர்ப்பதற்காக மருத்துவத்தை நாடுவது மரணத்தை எதிர்ப்பதாகுமா? மருந்துகளை உட்கொள்வது மரணத்துடன் போரிடுவது ஆகுமா?

பெறுதற்கரிய இவ்வுடலைப் பேணிட, மருத்துவத்தைக் கண்டிப்பாக நாட வேண்டும்! தான் எடுத்த மானுட உடலை நன்முறையில் ரட்சித்திட, லௌகீகமாயும், ஆன்மீகமாயும், மருத்துவ ரீதியாகவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டாக வேண்டியது மிகவும் முக்கியமான மனிதக் கடமையாகும்! மரணத்தை அடைதல் வேறு, மரணத்தை வெல்தல் வேறு! சிரஞ்சீவியாதல் வேறு! எவராலும் தவிர்க்க முடியாத மரணத்தை ஆன்மீக ரீதியாக, பக்தி சிரத்தையுடன் எளிதில் வென்றிடலாம்!

முடிவை அறிவீர்! முடிவிலாதானை என்று அறிவீர்?

அனைத்து மனிதர்களுக்கும் ஒரு வாரம் முன்னரேயே மரணம் பற்றிய ஆன்ம அறிவிப்பு உணர்த்தப்படுகின்றது. இதனை இறப்பின் இரகசிய அம்சங்களுள் ஒன்றெனப் பன்முறை ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் விளக்கி வந்துள்ளோம்.

ஒரு வாரத்திற்கு முன்னரேயே மரண அறிவிப்பு ஆன்மீக ரீதியாக வந்தால் கூட இன்னும் ஏழுநாள் தானே வாழப் போகின்றோம், அதற்குள்ளாவது தெய்வீகச் சிந்தனையுடன் இருந்து மரணத்தை, ஒரு சரீரச் சட்டை உரிப்பாக எதிர்நோக்க வேண்டும் எனும் எண்ணம் பலருக்கும் தோன்றுவது கிடையாது. மாறாக, தன் மரண நேரத்தைப் பிறருக்கு வெளிப்படுத்த முயற்சிக்கும் போது தான், மாரடைப்பு, மறதி, மயக்கம், வாய் குளறுதல், வாய்ப்பேச்சு அடைத்தல் போன்ற பல இயற்கைத் தடங்கல்கள் தானாக ஏற்பட்டு மரணம் பற்றி பிறருக்கு அறிவிக்க முயல்வதைத் தடுத்து விடுகின்றது. ஆன்ம ரீதியாய் இறப்பு ரகசியமாய் உணர்த்தப் பெறும் இந்த ஏழு நாட்களிலாவது தன்னைத் தானே ஆத்ம ரீதியாக உணர்ந்து திருந்திட, தன் ஆத்ம நிலை அறிய பெரும்பான்மையாக எந்த நாட்டவரும் பெரும்பாலும் ஒரு சிறிதும் ஆன்ம ரீதியாக முயல்வது கிடையாது.

எனவே இனியேனும் மரண சஞ்சிகை எனும் இத்தகைய தேவ அறிவிப்பின் தாத்பர்யத்தை ஒவ்வொருவரும் ஆன்மப் பூர்வமாக அறிதல் வேண்டும்! மரணத்தை வெல்வதற்கான தெய்வீகப் பணிகளை இப்போதே தொடங்கி ஆற்றி வருதல் வேண்டும். அரிய உத்தம இறை நிலைகளையும் அடைதல் வேண்டும். மரணம் பற்றிய இந்த இரகசியத்தை உணர்ந்த பின்னரேனும் ம்ருத்யு தோஷங்களைத் தவிர்க்கும் வண்ணம் தக்க வழிபாடுகளை மேற்கொண்டு, தக்கப் புண்ய சக்திகளையும், இறையருளையும் பெற்று இறப்பை வெல்லும் உத்தம ஆன்ம நிலையை அடைவோமாக!  இதற்குப் பெரிதும் உதவுவதே 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகின்ற ஸ்ரீம்ருத்யுஞ்ஜய பூஷண மஹா சிவராத்திரியாகும்!

நிச்சயமாக, மரணத்திற்கு அப்பால், அவரவர் கர்ம வினைகளுக்கு ஏற்பப் பின்வாழ்வு உண்டு. எனவே ம்ருத்யு தோஷத்தை வென்றவர்களே மரணத்தை வென்றவராய், அடுத்த சரீரப் பயணத்தை மன அமைதி, ஆத்ம சந்தோஷத்துடன் துவக்குகின்றார்கள். இதற்குப் பெரிதும் உதவுவதே ம்ருத்யுஞ்ஜய வழிபாடாகும்.

ம்ருத்யுவிற்குப் பல அர்த்தங்கள் உண்டு!  மரணம் பற்றிய அனைத்து தோஷங்கள், பிரேத தோஷங்கள், பித்ரு சாபங்கள், ஆயுளைக் குறுக்கும் வினைகள், சுமங்கலித்வத்தைப் பாதிக்கும் பாவச் சுழல்கள், பிரம்மஹத்தி வல்வினைகள் என ம்ருத்யு தோஷங்கள் பல வகைகளில் வந்திடும். இந்த ஜன்மத்தில் நல்லோராக வாழ்ந்தாலும் முந்தைய கர்ம பாக்கிகள் தொடரலாம் அல்லவா! மரண பீதியை, மரண தோஷத்தை, மரணம் பற்றிய அச்சத்தை, மரண வினைகளை வென்று தீர்க ஆயுளைத் தருவதும் ம்ருத்யுஞ்ஜய மூர்த்தியின் அவதாரத் தத்துவங்களுள் ஒன்றாகும். அதாவது மரணத்தைத் தவிர்க்க முடியாது, ஆனால் மரணத்தை வென்றிடலாம்! எனவே மரணமிலாப் பெருவாழ்வு தருவதும் ம்ருத்யுஞ்ஜய வழிபாட்டுத் தத்துவங்களுள் ஒன்றாம்.

"மரணத்தை அனைத்து மனிதர்களும் எதிர்கொண்டாக வேண்டும்" என்று எண்ணுவதை விட, மரணம், சரீர வாழ்வின் பிறிதொரு சரீரத் தொடர்ச்சி என்பதை நன்கு உணர்ந்து, ம்ருத்யு தோஷங்களைக் களைந்து தன் கர்ம வினைகளுக்கு ஏற்ப அடுத்த வாழ்விற்குத் தயாராவதும் இறப்பை வெல்லும் நெறிமுறைகளுள் ஒன்றாம்.

சஞ்சிதம் எனும் கடந்த காலக் கர்ம வினைகள், பிராரப்தமாகிய நடப்புக் காலக் கர்ம வினைகள், "ஆகாமி" எனப்படும் எதிர்காலத்தில் கழிக்கப்பட வேண்டிய கர்ம வினைகள் என்ற மூன்றையும் தெளிய வைத்து, சற்குருவின் மகத்துவத்தால் தாம் இவற்றைக் கடக்க முடியும் என்பதை உணர வைப்பதும் ம்ருத்யுஞ்ஜய வழிபாட்டு அம்சங்களுள் சிலவாம்.

ம்ருத்யுஞ்ஜய தீர்க தரிசனம்

ம்ருத்யுவை வென்றிட அருளிடும் தலங்களுள் முதன்மையானது அருணாசலமாம் திருஅண்ணாமலைத் திருத்தலமாகும். இங்கு கிரிவலப் பாதையில் எம லிங்கப் பகுதியில் ம்ருத்யுஞ்ஜய தீர்க தரிசனம் என்ற அற்புதத் தரிசனம் உண்டு. இதனை தரிசித்து ஆனந்தம் உற்றோர் ஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீகண்ணப்ப நாயனார், ஸ்ரீமார்கண்டேய மகரிஷி, ஸ்ரீஅப்பர் சுவாமிகள், ஸ்ரீசத்யவான்-சாவித்ரி, ஸ்ரீநசிகேதன், ஸ்ரீபூம்பாவை அம்மையார், ஸ்ரீஅப்பூதியடிகள் போன்றோர் ஆவர்.

ஸ்ரீமார்கண்டேய மஹரிஷியானவர் ஸ்ரீஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீநீலகண்ட சித்தரிடமிருந்து ரச மணி மாலையைப் புனையும் இறைஞானத்தை அடைந்ததுடன் அதன் சக்தியால் ம்ருத்யுஞ்ஜய தீர்க தரிசனத்தை இப்பகுதியில் தான் பெற்றார். சிவத் தொண்டராம் ஸ்ரீமார்கண்டேயரை எதிர்த்தமையால் தன் பேரொளியையும், தண்டத்தையும், சரீரத்தையும் இழந்த எம பகவான், இவற்றைப் பெறுதற்காக ம்ருத்யுஞ்ஜய வழிபாட்டை மேற்கொண்டு, தாமிழந்த பதவியை, தெய்வீக சக்திகளை அடைதற்கு வழிவகுத்த தரிசனமே (திருஅண்ணாமலை) ம்ருத்யுஞ்ஜய தீர்க தரிசனமாகும்.

கலியுகத்தில் சாதாரண மனிதனால் தரிசிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான தரிசனங்களாக நிறைய இருப்பினும் வரும் ம்ருத்யுஞ்ஜய பூஷண மஹா சிவராத்திரியில் காண வேண்டிய முக்கியமான 12 வகை ம்ருத்யுஞ்ஜய பூஷண தரிசனங்கள் கிரிவலப் பாதையில் உள்ளன. இவை யாவும் ம்ருத்யுஞ்ஜயரின் பல தெய்வீக நல்வரங்களைப் பெற்றுத் தந்து ம்ருத்யு தோஷத்தைப் போக்குபவையாம்! குருவருளால் இவற்றைத் தரிசித்த வண்ணம் வரும் மாசி மாத மஹா சிவராத்திரி அன்று திருஅண்ணாமலையில் கிரிவலத்தைக் கைக் கொள்ள வேண்டும்.

ம்ருத்யுஞ்ஜய பூஷண மஹா சிவராத்திரி கிரிவலப் பலன்கள்

இச்சிவராத்திரி கிரிவல பலன்களைச் சொல்லாலும், பொருளாலும் ஓதியுரைக்க இயலா வண்ணம் மிக மிகப் பெரியதாம்! குருவருளால் மட்டுமே அவரவருடைய தெய்வீக நிலைகளுக்கு ஏற்ப உணரப் பெறுவதேயாம்!  ம்ருத்யு தோஷ நிவர்த்தியாகக் கடுமையான நோய்களுக்கான தக்க நிவாரண வழிமுறைகளைத் தருவது! நிரந்தரமற்ற உத்யோகம், சரியான வருமானமற்ற வியாபாரம், வியாபார நஷ்டம், வளர்ச்சியில் மந்தம், வளர்ந்த குழந்தைகளை வைத்துக் கொண்டு குறைந்த வருமானத்தில் நாம் அவர்களுக்கு என்ன எதிர்காலம் அமைத்துத் தரப் போகிறோம் என்னும் அச்சத்தில் வாழ்வோர், வீடு, நிலம், வாசல் என்ற ஒன்றுமில்லாது, தங்கள் பிள்ளைகளுக்கும் சரியான சேமிப்பு வைத்திடாது, வாடுகின்ற நடுத்தர வர்க மக்கள் இவர்களுக்கெல்லாம் ம்ருத்யு தோஷங்களை நீக்கி, மரண பயம் தவிர்த்து, கிடைத்துள்ள பெறுதற்கரிய மானுடப் பிறவியில் நன்முறையில் தெய்வீகமாக வாழ்ந்து, சந்ததிகளுக்கும் தக்க புண்ய சக்தி கிட்டும் வண்ணம் நல்வாழ்வு பெற ம்ருத்யுஞ்ஜய பூஷண மஹா சிவராத்திரிப் பலன்கள் சிறப்பாக அமைந்துள்ளன.

கிரிவல யாத்திரை முதுவதும் ம்ருத்யுஞ்ஜயத் துதிகளை ஓதியவாறு நடந்திடுக! அருணாசலத்தில் கிரிவலம் வருதலே, பிள்ளையாரப்பன் வகுத்த நெறியாக அம்மையப்பனே மலையாக அமைந்துள்ள வடிவை வலம் வருதலாக, ஒரு பெரிய ஆலயத்தை வலம் வரும் பெரும் பூஜைதானே!

வரும் ஆண்டுகளில் ம்ருத்யு தோஷங்கள் பெருகி, எளிதில் மரணத்தைக் கொள்ளும் வகையில் இம்ம்ருத்யு தோஷங்கள் பெருத்து விபத்து, வன்முறை, இனம்புரியாத நோய்கள் போன்றவைகளாக மனித குலத்தை வெகுவாகப் பாதிக்கும். இவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் ம்ருத்யுஞ்ஜய சக்தியை வீட்டளவில், வீதி அளவில், கிராம, நகர, மாநில, தேசிய அளவில், உலக அளவில், படிப்படியாக நிலை நிறுத்த வேண்டிய தலையாய கடைமை ஒவ்வொரு பாரதக் குடிமகனுக்கும் நிச்சயம் உண்டு.

எனவே தமக்கென சுயநல வழிபாடு மேற்கொள்ளாது அனைத்து மக்களுக்கும், உலக ஜீவன்களுக்கும், வாயற்ற உயிரினங்களுக்கும், அசையும், அசையாப் பொருள்களுக்கும், ஏனைய ஜீவன்களுக்கும் ம்ருத்யுஞ்ஜய சக்தியைப் பெற்றுத் தரவே மகத்தான மானுட குலக் கடமையாக இச்சிவராத்திரி கிரிவலம் அமைந்துள்ளது.

உலகின் ஆன்மீகப் பீடமாக உள்ள புனிதமான பாரதத்தில் மானுடப் பிறவி கொள்வதென்பது பல யுக கிரிவலப் பலாபலன்களாக‌த் திரளும் பாக்யமே என்பதை இனியேனும் உணர்க!

அஷ்ட பைரவ, கங்காள நாத, சட்ட நாத, அகோரேஸ்வர சிவ சக்திகள் கூடியதாக ம்ருத்யுஞ்ஜய அவதாரிகை விளங்குவதால் வரும் ம்ருத்யுஞ்ஜய பூஷண சிவராத்திரி அருணாசல கிரிவலம் அளப்பரிய பலாபலன்களைத் தருவதாகும். மிகவும் முக்கியமான 12 தரிசனங்களை இங்கு அளிக்கின்றோம்.

பைரவர் சந்நிதியில் ம்ருத்யுஞ்ஜய பூஷண சிவராத்திரி கிரிவலத் துவக்கம்!

பைரவாம்ருத ம்ருத்யுஞ்ஜய தரிசனம்

(ம்ருத்யுஞ்ஜய பூஷண தரிசனம்-1)

வருகின்ற மஹா சிவராத்திரி கிரிவலத்தை அருணாசல ஆலயத்திலுள்ள பைரவ சந்நிதியிலிருந்து துவங்குதல் வேண்டும். உக்ர சக்தி நிறைந்த பைரவ மூர்த்தி ஆதலின் கருவறைக்குள் செல்லாமல், அர்த்த மண்டபத்தில் இருந்தவாறு அகத் தூய்மை, புறத் தூய்மையுடன் வெளியில் இருந்து வழிபடுவதே உத்தமமானதாம்!

அமிர்த ம்ருத்யுஞ்ஜய மூர்த்தியின் சிறப்பான திசையாக மேற்கு விளங்குவதால், மேற்கு நோக்கிய இப்பைரவர் சன்னதியில் ம்ருத்யுஞ்ஜய மூர்த்தியின் அருள் வேண்டிப் பிரார்த்தித்துக் கிரிவலத்தைத் தொடங்கிடுக!  இங்கிருந்து பெறும் மலை தரிசனமே ம்ருத்யுஞ்ஜய பூஷண சிவராத்திரி கிரிவலத்தின் முதல் தரிசனமாக பைரவாம்ருத ம்ருத்யுஞ்ஜய தரிசனமாக அருள் பொழிகின்றது!

அஷ்ட பைரவ தூபம் என்ற விசேஷமான ஊதுபத்தியும், சாம்பிராணி தூப வகையும் உண்டு. இதில் நாயுருவி, குரைவற்றி, சுவானக் கீரை, நாப்பட்டி போன்ற பல அரிய பைரவ சக்திகள் நிறைந்த மூலிகைச் சமூலச் சத்து இருப்பதால், இவை ம்ருத்யு தோஷங்களைப் போக்கவல்லவை. இந்த விசேஷமான ஊதுபத்தியை, ஆலயத்தின் பைரவ சந்நிதியில் ஏற்றிக் கிரிவலத்தைத் தொடங்கிட வேண்டும்.

பின்னர் பிரம்ம தீர்த்தம் அருகில் உள்ள சனி பகவான் தரிசனம் பெற நள மகராஜா பூஜித்த நள லிங்கத்தை வழிபட்டு இதே வரிசையில், தெற்கு கோபுரத்திற்கு முன் அமைந்துள்ள பிரம்ம லிங்கத்தைச் சுற்றி வந்து வழிபடுக!

அஷ்ட பைரவ தூப சக்தி நிரவட்டும்!

பிரம்ம லிங்க சந்நிதியின் எதிரே, பிரம்ம தீர்த்தத்தை ஒட்டியவாறு, மலையைத் தரிசிக்கும் போது உங்களுக்கு கோபுர தரிசனங்களும் நன்கு கிட்டும். மாத சிவராத்திரி அன்று இங்கிருந்து பெறும் மலை மற்றும் கோபுர தரிசன பலன்கள் யாவுமே எண்ணற்ற ம்ருத்யு தோஷங்களைப் போக்குவதாகும். இவ்விடத்திலிருந்து தான் ஸ்ரீநளச் சக்கரவர்த்தி ஒரு யுகத்தின் வ்ருஷ ஆண்டின் மாசி ம்ருத்யுஞ்ஜய பூஷண சிவராத்திரி நாளில் பிரம்ம தீர்த்தத்தில் இருந்து அருணாசல மலையோடு, கோபுர தரிசனங்களையும் பெற்றுக் கலி தோஷம் நீங்கிடச் சனி பகவானின் தரிசனத்திற்கான நல்வரங்களைப் பெற்றார்.

ஸ்ரீபிரம்ம மூர்த்தி தம் படைப்புத் தொழிலை மீண்டும் முருகப் பெருமானிடம் இருந்து பெற்றிடத் தத்பரா அக்னிக் காவடியைச் சுமந்து திருக்கயிலாயத்தையும், திருஅண்ணாமலையையும் கிரிவலம் வந்திட்டார்!  சாம்பிராணி தூபம் இட்டவாறு கிரிவலம் வருதலானது சோணமுக அக்னிக் காவடிப் பலன்களைத் தரும்!  ஸ்ரீஅம்பரீஷ மகாராஜா ஏகாதசி விரதம், துவாதசி பாரணை, பிரதோஷ திரயோதசி, சதுர்த்தசி மாத சிவராத்திரி, அமாவாசை அதிதி பலன்கள் ஆகியவற்றை ஒட்டு மொத்தமாக எவ்வாறு பெற்றார் தெரியுமா?

இவர் அந்த யுகத்தின் ம்ருத்யுஞ்ஜய மஹா சிவராத்திரி நாளில் திருஅண்ணாமலையில் "சோணமுக அக்னிக்" காவடி தாங்கி வந்து மகத்தான கிரிவலப் பலன்களை அடைந்து தூர்வாச மகரிஷியின் சாபமானது தன்னை அண்டாது தற்காத்துக் கொண்டதோடு, ஸ்ரீவைகுண்ட தரிசனமும் பெற்றார்!  இதனைக் கண்டு வியந்த தூர்வாச மகரிஷியின் ஆசிகளையும் கூடுதலாகப் பெற்றார்!

மேலும் ஹோம ஆகமங்களில் தலை சிறந்தவரும், அக்னி லோகத்தின் சிறப்பான மாமுனியுமான ஸ்ரீஆங்கிரஸ மஹரிஷி பிறிதொரு யுக வ்ருஷ ஆண்டின் ம்ருத்யுஞ்ஜய பூஷண மஹா சிவராத்திரி நாளில் இத்தரிசனம் பெற்று, சாம்பிராணி தூபத்துடன் கிரிவலம் வந்து மலையின் ஆக்னேய மூலையில் சந்தன மரச் சமித்துக்களால் ஹோமம் நடத்திப் பலன்கள் யாவையும் ஸ்ரீநாரத மகரிஷிக்கு அர்ப்பணித்தார். ஏனோ?

பிரம்மாவின் புத்திரராக ஜீவ விருத்திக் கடைமைக்கு ஆட்பட மறுத்தமையால், "சிரசு சிதறுவதாக!" என்று நாரதருக்கு இடப்பட்ட சாபத்தின் ம்ருத்யு தோஷத்தைக் களைந்து அவருக்கு சிரஞ்சீவித்வ தீர்க ஆயுள் தருவதாகவும், "ஒரு நாழிகைக்கு மேல் எங்கும் தங்கலாகாது!" என்ற சாபம் மாறி அவர் சிரஞ்சீவி மாமுனியாய் அமைந்திடவும் தம் தபோபலன்களை ஸ்ரீஆங்கிரஸ மகரிஷி இங்குச் சங்கல்பித்து அர்ப்பணித்தார்!

இதற்கு நன்றியாக ஸ்ரீநாரத மகரிஷியானவர் இன்றும் அக்னி பகவானுக்கும், அக்னி கிரகமான செவ்வாய் கிரகத்திற்கும் உரித்தான பரணி, கார்த்திகை, உத்திரம், சித்திரை, நட்சத்திர நாட்களிலும் / வேளைகளிலும் அக்னி நட்சத்திரம், செவ்வாயில், செவ்வாய் ஹோரை போன்ற அக்னி சம்பந்தமான நேர காலங்களில் அருணாசலத்தில் ஸ்ரீஆங்கிரஸ மகரிஷி ஆக்னேய திசைப் பகுதியில் இயற்றும் ஹோமத்திற்கு ஸ்ரீவாஞ்சியம் மற்றும் தேரழுந்தூர் போன்ற திருத்தல (தல விருட்சச்) சந்தனச் சமித்துக்களைக் கொணர்ந்து இங்கு வந்து ஹோம ஆஹூதியாக அர்ப்பணிக்கின்றார்!  எனவே இந்நாட்களில் முறையாகப் பெறப்பட்ட சந்தனச் சமித்துக்கள் கொண்டு கிரிவலத்தின் தென்கிழக்கு திசையில் (அக்னி திசை) ஹோமம் ஆற்றுவோர்க்கு அக்னி சம்பந்தமான தோஷங்களும், ம்ருத்யு தோஷங்கள் யாவும் நீங்கிடும்! புகைபிடிப்போர் திருந்துவர்.

இவ்வாறாக நாம் அறியாத வகையில் திருஅண்ணாமலையில் ஒவ்வொரு விநாடியும் பல அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டுதாம் இருக்கின்றன! அறிதற்கு அரிய சற்குருவைப் பெற்றால் அனைத்தும் மறையறிவாய்ச் செறிவாகும்! எம் குரு மங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராம சற்குரு அவர்கள் தம் சற்குருநாதராம் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளின் குருகருணைக் கடாட்சத்தால் பொழிகின்ற ஞானபத்ர கிரந்த குருவாய்மொழி அருட்செல்வப் பொழிவுச் சாரல்கள் தாமே நீங்கள் இங்கு திளைத்துத் துய்த்துக் கொண்டிருப்பது! இதுவே சற்குருவின் ஞானக் கடாட்சத்திற்குச் சான்றாம்!

பிரம்மாவின் நான்காவது முக தரிசனம்!

அடுத்ததாக, ம்ருத்யுஞ்ஜய பூஷண மஹா சிவராத்திரியின் கிரிவல முறையில் பிரம்ம லிங்க தரிசனத்தில் மிகவும் முக்கியமானது பிரம்மாவின் நான்காவது முகமாகிய சதுர்பல அபம்ருத்யாகார முக தரிசனமாகும். இன்றைக்கும் பலரும் பிரம்ம லிங்கத்தின் மூன்று முகங்களை மட்டுமே தரிசித்து வருகின்றனர். நான்காவது பிரம்ம முகம் காண்பதும் அரிதாம்! பிரம்ம மூர்த்திக்குக் கோயில் அரிது என்பதாலும், பெரும்பாலும் சிவாலய கோமுகத்தின் மேல் அமையும் பிரம்மரின் நான்காவது முகம் மறைபொருளாக இருப்பதாலும் நான்காவது முகத்தை தரிசிப்பதும் கிடையாது!  நான்காம் முகம் மறைவாகவே இருக்கும்! எனவே தாம் திருஅண்ணாமலை ஆலயத்தின் பிரம்ம லிங்கத்தின் நான்காவது சிரசு தரிசனம் மிகவும் விசேஷமானதாகும்!

இங்கு அபூர்வமான பிரம்ம லிங்க சன்னிதியின் பின்னால் சாளரம் வழியே பிரம்மாவின் நான்காவது முகமாகிய சதுர்பல அபம்ருத்யாகார முக தரிசனத்தைப் பெறுதல் வேண்டும்!  இதனால் பிறருடைய வாக்குறுதிகளை நம்பித் தடைபட்டுப் போன நற்காரியங்கள் சுமூகமாக முடியும்!  ஐம்முகபிரம்மாவாக இருந்த போது அகங்காரம் பெருகிட, ம்ருத்யு தோஷம் கூடித் தன் சிரசிழந்து தவித்த ஸ்ரீபிரம்மா அருந்தவம் பூண்டு மிஞ்சிய தன் நான்முகத்தால் தரிசித்த சிவனின் ஐம்முக தரிசன லிங்கம் (சிவபெருமானின் ஐந்தாவது மேல் பார்த்த அதோமுகம்) என்றும் இதனைப் போற்றுகின்றனர்.

தனது அகங்காரத்தால் பிரம்மாவிற்கு ம்ருத்யு தோஷம் ஏற்பட்டு ஐந்தாவது சிரத்தை இழந்த போது ஸ்ரீஅகஸ்தியர்பிரான் அவருக்கு ம்ருத்யுஞ்ஜய பூஷண மஹா சிவராத்திரி கிரிவல மகிமையை உணர்த்திடவே பிரம்மாவும் இங்கு ம்ருத்யுஞ்ஜய பூஷண சிவராத்திரி அன்று கிரிவலம் மேற்கொண்டு தம் நான்காவது சிரத்திலேயே ஐந்தாம் சிரத்தின் தேஜசைப் பதித்துப் பரிணமிக்கும் அருளினை ஸ்ரீமகேஸ்வரனிடம் இருந்து பெற்றிட்டார்!

கோபுரக் கலசங்களுடன் மலை தரிசனம் பிரம்மாம்ருத ம்ருத்யுஞ்ஜய தரிசனம்

(ம்ருத்யுஞ்ஜய பூஷண தரிசனம் - 2)

ம்ருத்யுஞ்ஜய பூஷண சிவராத்திரி தினமான இன்று ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி, ஸ்ரீகாளாங்கிச் சித்தர், ஸ்ரீகாலவ மகரிஷி, ஸ்ரீகண்வ மஹரிஷி, ஸ்ரீமார்க்கண்டேய மகரிஷி மேலும் பல சித்புருஷர்களும், யோகியரும் மற்றும் உத்தம பக்திமானாகிய ஸ்ரீநளச் சக்கரவர்த்தியும் அருணாசலத்தைக் கிரிவலம் வந்து தம் தபோ பலன்களை ஜீவன்களின் நன்மைக்காக அர்ப்பணித்து ம்ருத்யுஞ்ஜய பூஷண தீர்க தரிசனத்தை நமக்குப் பெற்றுத் தருகின்றனர்!

இவ்வாறாக பிரம்ம லிங்கத்தையும் வலம் வந்து சந்நிதியின் பின்புறமுள்ள நான்காம் பிரம்ம முகத்தையும் தரிசித்த உடனேயே இதே நேத்ர சக்திகளோடு பிரம்ம தீர்த்தத்தை ஒட்டியவாறு நின்று மலையை தரிசித்திட, கோபுர தரிசனங்களோடு கிட்டுகின்ற மலை தரிசனமே பிரம்மாம்ருத ம்ருத்யுஞ்ஜய தரிசனமாகும்!

மயக்கம் அடைதல், நினைவிழத்தல், மன நோய்கள், மன வளர்ச்சியின்மை போன்றவற்றிற்குத் தக்க நிவாரண வழிகள் இத்தரிசனப் பலன்களாகக் கிட்டும்! மன வளர்ச்சி குன்றியவர்களைத் தக்க கவனத்துடன், பெற்றோரும், உற்றோரும் அழைத்து வந்த இந்த முக்கியமான தரிசனத்தைப் பெற வைத்து ம்ருத்யுஞ்ஜய பூஷண சிவராத்திரி அன்று அருணாசல கிரிவலம் வரச் செய்திடுதல் மிகவும் முக்கியமானதாகும்!

தெற்குக் கோபுரத்தில் இருந்து கிரிவலத்தைத் தொடர்ந்திட்டு, திருமஞ்சன வீதியில் குடிகொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீகற்பக விநாயகரைத் தரிசிக்க வேண்டும்! திரௌபதி அட்சய பாத்திரம் பெற அருளிய கணபதி!  வறுமையை நீக்கும் விநாயகர்! அசுரர்களுக்கு அஞ்சி தேவர்கள் புற்களாய் பூமியில் வாழுங்கால் அவர்கள் விரும்பியபடி அன்னச்சாரம் அளித்துக் காத்தவர்! இந்த அன்னச்சார சக்தியே அவர்கள் அமிர்தச் சாரம் பெறத் துணைபுரிந்தது!

கற்பகத் தூபம் என்ற தேவலோகச் சாம்பிராணி உண்டு. குங்கிலியக் கற்பம் என்ற தேவ மரத்தில் இருந்து பெறப்படும் தூபமிது!  ஸ்ரீகற்பக விநாயகரின் கற்ப(க)ச் சுவாசத்தின் ஓரணு வாயு பந்தனத்தில் இருந்தே இப்பூவுலகிற்கான வாயு மண்டலம் எழுவதால், இங்கு ஏற்றப்படும் ஊதுபத்தி, சாம்பிராணிக்குக் கணபதி லோகத்தின் காணாபத்ய கற்பக சக்தி இயற்கையாகவே உண்டாகி கிரிவலப் பலன்களைப் பெருக்கும்! அக்னி பகவான் செவ்வாய் ஹோரையில் தினமும் வழிபடுகின்ற மூர்த்தி! எனவே தான் கிரிவலத்தின் போது இங்கிருந்து ஊதுபத்தி, சாம்பிராணி ஏற்றுவது சிறப்புடையதாம்!

அஷ்ட பைரவ தூப ஊதுபத்தியை இங்கும் ஏற்றிடலாம். அக்னிக் காவடி போலக் கைகளில் ஊதுபத்தியைத் தாங்கிய வண்ணம் கிரிவலம் வருதல் வேண்டும்!  சாம்பிராணி தூபத்தில், புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி, ஜாதிக்காய், ஏலக்காய் ஆகிய பஞ்ச பைரவ திரவியங்களைச் சமூலச் சூரணமாக்கிச் சாம்பிராணியுடன் கலந்து இட்டுச் சாம்பிராணி தூபத்துடன் கிரிவலம் வருதல் அளப்பரிய பலன்களைத் தருவதாகும். ஒளிரும் ஊதுபத்தியுடன் அக்னிக் காவடி போல் தாங்கி கிரிவலம் வருதலால் "தத்பரா என்னும் அற்புதமான அக்னிக் காவடி" தாங்கிய பலன்கள் கிட்டும்!

இந்திர தீர்த்தம் திருஅண்ணாமலை

இந்திரத் தீர்த்தம் அமிர்த தீர்த்தமே!

இங்கு திருமஞ்சன வீதி வழியே தொடரும் கிரிவலத்தில் வலப்புறம் செங்கம் சாலையில் திரும்பிச் சற்று நடந்து அடைவதே இந்திரத் தீர்த்தமாகும்! அக்னி லிங்கத்திற்குச் சற்று முன்னரேயே வருவதாம்! இந்திரத் தீர்த்தத்தில் நீரைச் சிரசில் தெளித்துக் கொண்டு மீன்களுக்குப் பிடித்த பொரியை அன்னதானமாக இட்டு மச்ச தேவதா மூர்த்திகளின் கோசராதி வர சக்திகளைப் பெற வேண்டும். இங்கிருந்து காட்சி தரும் மலைப் பகுதியின் உள்ளே உள்ள நுண்புல தேவ நாளங்கள் மற்றும் பாதாளப் பிரமாணங்கள் யாவும் பிரபஞ்சம் எங்கும் உள்ள கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மற்றும் ஆழ்நிலைத் தீர்த்தங்கள், புனித நதிகளுடன் தேவப் பரிமாணமும், தெய்வீகப் பிணைப்பும் கொண்டவை! எனவே இந்திரத் தீர்த்த மீன்களும் பல லோக அமிர்த தீர்த்த வாச சக்தி கொண்ட புனிதமுடையவையாம்!

கலங்கலான நீராயினும், மீனானது நீருக்குள் வாழ்ந்து எவ்வளவு தூரமாயினும் நன்கு காண இயலும் தன்மை உடையது. கீழ், மேல், பக்கவாட்டு, நெடுந்தூரம் என அனைத்துப் பக்கமும் பார்க்கவல்ல சில அரிய ஆதித்ய லோக வகை மீன்களுக்கு த்ரிபுவன அக்னி நேத்ரப் பிரவாள சக்தி அபரிமிதமாக உண்டு. அதாவது இந்திரத் தீர்த்தத்தின் உள் இருந்து கொண்டே இவை யாவும் சகல லோகங்களையும் காண வல்லவை!  திரிபுரத்தைப் பகவான் நெற்றிக் கண்ணால் பஸ்மம் செய்த போது அச்சுடரின் ஓரணுத் துளிப் பிரமாணத்தைச் சற்றே தீர்த்தப் பிரதிபலிப்பாகத் தரிசித்தமையால் மஹரிஷிகளாய்ப் பொலியும் இம்மீன்கள் அதியற்புத அமிர்த வர்ஷித சக்தியைக் கொண்டுள்ளன!

இவற்றிற்குப் பொரியளித்துப் பெறுகின்ற அரிய பிப்பிலிய சக்தியால், தவப் பயன்களால், தனக்கு வருகின்ற ம்ருத்யு தோஷத்தை யாவரும் தீர்க்க தரிசனமாக முன்னரேயே அறிந்து, ம்ருத்யுஞ்ஜய வழிபாடு மூலம் தற்காத்துக் கொள்ளத் தேவையான அமிர்த வர்ஷித சக்திகள் நிறைந்த இந்திர தீர்த்தமிது!  தற்போது பார்ப்பதற்கு அழுக்கடைந்து காணப்படினும் தேவ மாயையால் இத்தீர்த்த மகிமையை நாம் உணராது இருக்கின்றோம். சற்குருவே இத்தகைய இறைப் பண்புகளை உணர்த்த வல்லார்.

சந்தர்ப்பச் சூழ்நிலைகளால், பெற்றோர்களுடைய ஈமச் சடங்குகளில் வாய்க்கரிசி இடும் பாக்யத்தை இழந்தோர், தம் பெற்றோர்களின் சடலத்திற்கு அக்னி ஊட்டுகின்ற வாய்ப்பை இழந்த பிள்ளைகள் இந்த ம்ருத்யுஞ்ஜய பூஷண சிவராத்திரி கிரிவலத்தில் இங்குத் தர்ப்பணமிட்டு மீன்களுக்குப் பொரியிட்டால் தம் மூதாதையருடய ஆன்ம சாந்திக்கும் இது உதவும்!

இந்திர தீர்த்தக் கரையில் பசுக்களும், குதிரைகளும் நிறைய உண்டு. குதிரைகளுக்கு அவித்த கொள் தான்யத்தையும், புல்லையும், பசுக்களுக்கு வேண்டியனவற்றையும் அளித்துக் கிரிவலத்தைத் தொடர வேண்டும்.

அருணையிலும் மணக்குள விநாயகர்!

விசிறி சுவாமிகளின் ஆஸ்ரமம் செல்லும் சாலை முனையில் அருள்பாலிக்கும் சக்தி வாய்ந்த ஸ்ரீமணக்குள விநாயகரை மறவாமல் தரிசித்திடுக! மணக்குளம் என்பதற்கு நிறைய வேதாந்த அர்த்தங்கள் உண்டு. பிருத்வி வேத சக்திகள் நிறைந்தவர், குளம் போல் கலங்கிய எண்ணங்கள் நிறைந்த மனதைச் சுத்திகரித்துப் புனிதமாக்கி அருள்பவர், குளமாகிய மானுட வயிறை, கர்மக் குளக்கலக்கலாக விளங்கும் சரீரத்தை, இறையன்பால் மணக்கச் செய்பவர்! கணக்கிலாக் கர்ம வினைகளைக் களையும் கனிந்த கடவுளே ஸ்ரீமணக்குள கணபதி!

ஸ்ரீமணக்குள விநாயகர்
திருஅண்ணாமலை

மேலும் பாற்கடலில் அமிர்தம் கிட்டிய வைபவத்தின் போது திரண்ட அமிர்தத்தை முப்பத்து முக்கோடி தேவர்களும் இறைப் பரம்பொருளுக்குப் படைத்த போது சர்வேஸ்வரன் அந்த அமிர்தப் பிரசாதத்தை முதலில் விநாயகருக்கு அர்ப்பணித்துத் தாமும் ஏற்று, பார்வதி தேவிக்கும் பிறகு அனைத்து அவதார மூர்த்திகளுக்கும் அளித்திட்டார்! இவ்வாறு முதல் பிரசாதமாய் அமிர்தம் பெற்ற கணபதியே அமிர்த மணத்தை நிரவச் செய்து, நெய் போல மணற்பாங்காய்ப் பாற்கடலில் உறைந்திருந்த அமிர்த க்ருதத்தைக் குளமாய்ப் பெருக்கி அம்மையப்பனிடம் ஈந்தார்! இவரே அமிர்த மணம் நிறைக் குளக்கரையில் எழுந்தருளி மணக்குள விநாயகரானார்!  இதிலிருந்தே குளக்கரையில் எளிமையாக எழுந்தருளும் பாங்கைப் பிள்ளையாரப்பன் கொண்டார்! எனவே தாம் ஸ்ரீமணக்குள விநாயகருக்கு (பூலோக அமிர்தமான) தேனாபிஷேகம் மிகவும் ப்ரீதியானதாகும்! அதிலும் மூங்கில் குவலை கொண்டு தேனால் அபிஷேகித்தல் காரிய சித்திகளைத் தருவதாம்.

இறப்பிற்குப் பின் ஒவ்வொருவரும் மேலுலகில் விரஜா நதியில் முழுகி எழுகையில் ஆங்கே ஸ்ரீமணக்குள விநாயகர் தரிசனம் பெற்றால் மிகவும் சிறப்பானதாகும். ஆம் விரஜா நதிக் கரையில் அருள்புரியும் விநாயகரே இப்பெயரைப் பூண்டவர்!  பாண்டிச்சேரி மணக்குள விநாயக மூர்த்தத்துடன் ஆழ்பிருத்வி தேவ இயக்கங் கொண்டவர்! இருவருமே பாதாள, வைகுண்ட விரஜ கங்காச் சுனைப் பிணைப்பு மூலம் இணைந்து அருள்பாலிக்கும் அரிய மூர்த்திகள்! கர்ம வினை களையும் விரஜா நதி தேவதைகள் ஸ்ரீமணக்குள விநாயகர் காட்டும் தேவ நறுமண மிக்கப் புனிதத் தீர்த்தத்தில் தாம் நீராடித் தமக்கு உரிய விரஜா சக்திகளைப் பெறுகின்றனர்! எதிரே உள்ள தீர்த்தம் ஒரு யுகத்தில் விரஜா தீர்த்தமெனப் பிரசித்திப் பெற்று விளங்கியது! சிவபெருமான் தனது ம்ருத்யுஞ்ஜய அவதாரத்தைத் துவக்கும் முன்னர் மணக்குள விநாயக அம்சரைத் துதித்தே தம் அவதாரிகையைத் துவக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுக்கிரமேட்டில் துர்க்கை சக்தி!

இதன் பின் ருத்ர பூமியாகிய மயானத்தைக் கடந்து செல்கையில் தற்போதைய கலைக் கல்லூரி எதிரே சாலையில் இருந்து மலையை நோக்கி சற்று உள்ளடக்கியதாக ஸ்ரீதிரௌபதி ஆலயம் உள்ளது!  இதனைச் சுக்ர மேட்டுக் கோயில் எனச் சித்புருஷர்கள் விளிக்கின்றனர்! ஸ்ரீசுக்கிர பகவான் சிவனை வழிபட்டு ஜோதி தரிசனம் பெற்ற மலை தரிசனத் தலம்!  கார்த்திகைத் தீபத்தின் போது இங்கிருந்துதாம் இன்றும் ஸ்ரீசுக்ர பகவான் தூலமாகவும், சூட்சுமமாகவும் ஜோதி தரிசனம் பெறுகின்றார்!  சுக்ர தசை, சுக்ர புக்தி இருப்போர் இவ்வாலயத்தில் 21 அகல்களில் விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி வருதலால் கோசார பலன்கள் நன்கு அமையும்!  அடுக்கடுக்காய் வியாபார நஷ்டங்களை அடைவோர் இங்கு வெள்ளி மற்றும் மாதாந்திர சிவராத்திரி தினங்களில் முழு வாழை இலையில் அன்னதானம் இட்டு வர திரௌபதியின் அருளால், சுக்ர கிரகக் கருணையால் நன்னிலை பெறுவர்!

சதாசிவ ம்ருத்யுஞ்ஜய தரிசனம்

ம்ருத்யுஞ்ஜய பூஷண தரிசனம் - 3

இங்கிருந்து சுக்ர மேட்டு ஸ்ரீதிரௌபதி ஆலயப் பகுதியில் இருந்து பெறுகின்ற கிரி (மலை) தரிசனமே சதாசிவ ம்ருத்யுஞ்ஜய பூஷண சிவராத்திரி தரிசனமாகும்.

ஸ்ரீசுக்ராச்சாரியார் இறந்தவரைப் பிழைக்க வைக்கும் ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தில் தேர்ச்சி பெற்றவர். மிகவும் அபூர்வமான மந்திரம் அது. அமிர்த சக்தி உடையவர்களுக்கே இது கிட்டுவதாம்! இதனை பல கோடி யுகங்கள் ஓதி உணர்ந்தவரே ஸ்ரீசுக்கிராச்சாரியார்! பலவிதமான ம்ருத்யு தோஷங்களால் தன் உடல் மறைய இருப்பதை இவர் அறிந்து தீர்க தரிசனமாக உணர்ந்து, ம்ருத்யுவை வென்றிட இவ்விடத்தினின்று சிவபெருமானை தரிசித்து, சதாசிவ ம்ருத்யுஞ்ஜய மந்திர ஹோமத்தை இப்பகுதியில் பல யுகங்கள் கடைபிடித்துத் தவம் பூண்டு சதாசிவ ம்ருத்யுஞ்ஜய தரிசனம் பெற்று, ம்ருத்யுஞ்ஜய சஞ்சீவி மந்திரம் ஓதுவதற்கான நல்வேத சக்திகளைப் பெற்றார்.

தற்போது இச்சிறு ஆலயமானது. பலரும் அறியாத நிலையில் கிரிவலப் பாதையில் இருந்து சற்று உள்ளே அமைந்திருக்கிறது. இதன் மகத்துவத்தை இனியேனும் உணர்ந்து இவ்வாலயத்தில் வழிபட்டு மறைபோற்றும் இறையருள் பெற வேண்டும்.

சங்கடஹர ம்ருத்யுஞ்ஜய தரிசனம்

(ம்ருத்யுஞ்ஜய பூஷண சிவராத்திரி தரிசனம் - 4)

ம்ருத்யுஞ்ஜய பூஷண சிவராத்திரி கிரிவலத்தில் இதற்கடுத்து அமைவது யமலிங்க வழிபாடு! இங்கு 12 அகல் தீபங்களை ஏற்றி, லிங்கத்தைக் கண்களை மூடிய நிலையில் தரிசித்த பின், கண் உள்நிறை ஒளிப் பாங்குடன் உடனே மலையை நோக்கித் திரும்பி, துர்க்கா கரண சாரண யோக முறையில் (படம் காண்க) இடது காலை மடித்து வலது முழங்காலில் பக்கவாட்டில் மடித்துக் குத்தூன்றி வைத்து வலது காலில் மட்டும் நின்று மனக் கண்களுடனும், கண்களைத் திறந்தும் மலையை வணங்கிடக் கிட்டும் சிறப்பான தரிசனத்திற்கு சங்கடஹர ம்ருத்யுஞ்ஜய தரிசனம் என்று பெயர். இவ்வாறு செய்ய இயலாதோர் இரு பின் கால் பாதங்களையும் உயர்த்தி குதிகால் பாதங்களில் மட்டும் நின்று பாதாம்புய நடன யோக முறையில் மலையை தரிசிக்க வேண்டும்.

இவையெல்லாம் ம்ருத்யுஞ்ஜய பூஷண சிவராத்திரி நாளன்று மட்டும் கிட்டும் தரிசனப் பலன்களாம். மற்ற தினங்களில் தரிசனப் பெயரும், பலன்களும் மாறும். குறிப்பாக சங்கடஹர சதுர்த்தித் தினங்களில் யம லிங்கத்திலிருந்து ம்ருத்யுஞ்ஜய தரிசனம் பெறுதலால் புற்று நோய் போன்ற கடும் நோய்களால் வாடுவோர், அஞ்சி அஞ்சி வாழாது, ம்ருத்யு தோஷம்தனை நீக்கவல்ல அருள் மந்திர சக்திகளால் தக்க தீர்வுகளைப் பெறுவர்.

நோய்க்கான நிவர்த்தியைப் பெறும் முன்னர் நோய்க்கான காரணங்களை உணர்தல் மிகவும் முக்கியமானதாம். இத்தகைய கர்ம சாங்க்ய நியதிகளை உணர்த்துவதுடன் ம்ருத்யு தோஷங்களை நிவர்த்திக்கவும் உதவுவதே ம்ருத்யுஞ்ஜய பூஷண தரிசன வகைகளாம்!

அடுத்துத் தொடர்கின்ற கிரிவலப் பாதையின் (மயான பூமியின்) இருமருங்கிலும் அரிய தீர்த்தங்கள் உண்டு!  கலியுகத்தில் இவற்றில் பெரும்பான்மையானவை மறைந்துள்ளன! சிலருக்குச் சில தினங்களில் சில தீர்த்தங்கள் தரிசனமாகும்! கலியுக நியதிக்கு ஏற்ப மகத்தான சக்திகள் நிறைந்த தீர்த்தங்கள் கலங்கிக் காணப்படும்! நம்பியோர்க்கு நல்ல தீர்த்தம்! நம்பாதோர்க்கும், அரைகுறை நம்பிக்கையாளர்க்கும் குட்டை நீர், அல்லது தேங்கிய நீராகவே இவை தோன்றும்!

நடனசேகர ம்ருத்யுஞ்ஜய தரிசனம்

(ம்ருத்யுஞ்ஜய பூஷண சிவராத்திரி தரிசனம் - 5)

எமலிங்கத்தை அடுத்து வரும் தற்போதைய நந்தி நகரில் ஒரு யுகத்தில் ஹம்ஸா நந்தி எனப் பெயர் பெற்ற நந்திக்குப் பின்புறம் ஓர் அபூர்வ தீர்த்தமுண்டு. பலரும் இதனை அறிந்திடார். சில சமயங்களில் வெளிப் பார்வைக்கு நீரற்று இருப்பினும் சூட்சுமமாக, மறைபொருளாக அரிய நீர்ச் சுனையை உடையது. பாக்யம் உள்ளோருக்கும், ஜல தேவதா உபாசகர்களுக்கும் இது நன்கு தரிசனமாகும்.  நீரிருப்பின் இத்தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக் கொண்டு ஹம்ஸா நந்தியின் இரு கொம்புகள் வழியே மலையைத் தரிசிப்பதற்கு ம்ருத்யுஞ்ஜய நடன தரிசனம் என்று பெயர். மிக மிக சக்தி வாய்ந்த தரிசனம்! நீரில்லையேல் மானசீகமாக தீர்த்த தேவதையைப் பிரார்த்தித்து வணங்கிடுக!  ஆனால் பெரும்பாலும் மரங்களிடையே இங்கு மறைபொருளாக மலை தரிசனம் மறைந்து இருக்கும். பாக்யம் உள்ளோருக்கு இலைகளின் ஊடே அரிய மலை தரிசனம் கிட்டும். இங்கு ஹம்ஸா நந்தி ராகத்தில் இறைப் பாடல்களைப் பாடுவதால் ஸ்ரீநாரதரின் ஆசி கிட்டி இசைத் துறையில் மேன்மை பெறலாம்.

மாத சிவராத்திரி, பிரதோஷ காலங்களில் ஸ்ரீநந்தி காயத்ரீ ஓதியவாறு நந்தியை 18 முறை வலம் வந்து மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, காரட், புடலை போன்ற நாத நாள சக்திக் காய்கறிகள் கலந்த உணவினை அன்னதானமாகத் தாமரை இலையில் வைத்து அளித்து வருதலால் முடிவு எடுக்க இயலா காரியங்களில் நல்லோர் எவர் மூலமேனும் தக்க நல்முடிவு கண்டிட இறைவன் அருள்புரிவார்.

ஸ்ரீநந்தி காயத்ரீ மந்திரம்:

ஓம் தத்புருஷாய வித்மஹே ஈஸ்வர வாகனாய தீமஹி
தந்நோ நந்தி:  ப்ரசோதயாத்

பிரதோஷ காலத்தில் நந்தியெம்பெருமானின் திருக்கொம்பிற்கு இடையே நடனமாடிய ஸ்ரீமஹேஸ்வரரை ஸ்ரீஅமிர்த லிங்க நீலகண்ட மூர்த்தியாக ஸ்ரீம்ருத்யுஞ்ஜயர் சனிப் பிரதோஷ காலத்தில் தரிசித்த இடம் இதுவே!

வ்ருஷ ஆண்டின் மாசி மாத சிவராத்திரியை ம்ருத்யுஞ்ஜய பூஷண சிவராத்திரி என்றல்லவா சித்தர்கள் அழைக்கின்றனர்! ஒரு யுக வ்ருஷ ஆண்டின் இச்சதுர்த்தசிச் சிவராத்திரித் திதியில் தான் ஸ்ரீம்ருத்யுஞ்ஜயருக்கு ஸ்ரீஅமிர்த லிங்க நீலகண்டப் பெருமானின் தரிசனம் இங்கு கிட்டியது. மிருத்யு தோஷங்களால் விஷ வாயு, ரசாயனம், வியாதிக்கான மருந்துகளில் உள்ள ரசாயனம், பாம்புக்கடி, பூச்சி மருந்து போன்றவற்றால் துன்பங்கள் ஏற்படாதிருக்க இத்தரிசனப் பலன்கள் துணை புரியும்! இவற்றால் மரணம் அடைந்தோரின் ஆன்ம சாந்திக்கும் இது வழி வகுக்கும். இவ்வகையில் இறந்தோருக்கும் இத்தீர்த்தத்தில் தர்ப்பணம் அளிக்க வேண்டும். குளத்தில் நீர் இல்லை எனில் நீர் கொணர்ந்து இக்குளக் கரையில் தர்ப்பணம் அளித்திடுக!

ஊர்த்வ தாண்டவ ம்ருத்யுஞ்ஜய தரிசனம்

(ம்ருத்யுஞ்ஜய பூஷண சிவராத்திரி தரிசனம் - 6)

அருகம்புல்லுக்கு ம்ருத்யு தோஷங்களைப் போக்கும் அதியற்புத சக்தி உண்டு!  ஸ்ரீதூர்வாசர் மஹரிஷியானவர் எப்போதும் அருகம்புல்லையே உண்டு வாழ்ந்து இன்றும் நித்திய சிரஞ்சீவியாக விளங்குகின்றார்.  எனவே அடுத்து வரும் ஸ்ரீதூர்வாசர் சந்நிதியின் முன் உள்ள அவர்தம் திருப்பாதங்களுக்கு அருகு மாலையிட்டு, ஸ்ரீதூர்வாசரின் ஆசிகளை வேண்டிடுக! அருகம்புல் மாமுனியாதலின் இப்பாத தரிசனமே பல மிருத்யு தோஷங்களைப் போக்குவதாம்!  விரதம் பூண்டு கிரிவலம் வருவோர் இங்கு அருகம்புல் கஷாயத்தைச் சிறிதே அருந்தி இங்கிருந்து மலையைத் தரிசிப்பதற்கு ஊர்த்வ தாண்டவ மிருத்யுஞ்ஜய தரிசனம் என்று பெயர்.

இங்கு அருகம்புல் கஷாயம், அருகு ரசம் அருந்துகையில் ஓத வேண்டிய மந்திரம்

அருகுச் சருகில் கருகும் கழிவாம்
உருகும் மருகும் குறுகும் வினையாம்
எருகன் முருகன் அருகன் வருவர்
அருகே! அருகே! அருகே வருக!
அருவாய் அரனின் அருளைத் தருக!

(எருகன் - எருக்கன் பூ பூண்ட ருத்ரன்
அருகன்- அருகம்புல்லை உண்டு வாழும் தூர்வாசர்
அருகு - அருகம்புல், அரன் - சிவன்)

ஸ்ரீம்ருத்யுஞ்ஜய மூர்த்தி தன் அவதார குணங்களுக்கான சிவசக்தி மருத்துவ சக்திகள், அபம்ருத்யு சக்திகளைப் பெறுதற்காக அமிர்த யோக, சித்த யோக காலங்களில் இறைவனுடைய பலவிதமான நடன தரிசனங்களைப் பெற்றார். இவ்வாறாக இறைவனின் பல விதமான அமிர்த கலா நாட்டிய தரிசனங்களாக ஸ்ரீம்ருத்யுஞ்ஜய மூர்த்தி பெற்றவையே இங்கு நோய்களைத் தீர்க்கும் அரிய மலை தரிசனங்களாகப் பொலிகின்றன.

இதற்கடுத்து நிருதி லிங்கத்தினின்று மலையைத் தரிசித்திட மலையில் நந்தி வடிவம் தென்படும். இதுவே விடை மூல நந்தி தரிசனம்! (விடை-நந்தி).  ஸ்ரீம்ருத்யுஞ்ஜயருக்கு உரித்தான அமிர்தோபுய கலச நந்தி வாகனம் கிடைக்கப்பெற்றத் தரிசன இடமிது!

சுவாச நோய்களால் ம்ருத்யு தோஷ சம்பவ மரணம் ஏற்படாதிருக்க இத்தரிசனம் பெரிதும் உதவுகிறது. விடையேறு விடங்கராய்ச் சிவபெருமான் ஸ்ரீம்ருத்யுஞ்ஜயருக்குத் தரிசனம் அளித்த இடமாதலால் நிருதி லிங்கத்தினின்று மலையைத் தரிசித்தல் பல வகை ம்ருத்யு தோஷங்களுக்கான நல்பரிகார சக்தியைப் பெற்றுத் தருகின்றது. இங்கு தர்ப்பணத் தட்டில் மல்லிகை மலர்களைப் பரப்பி அதன் மேல் தர்ப்பைச் சட்டம் இட்டு இத்தீர்த்த நீரால் தர்ப்பணம் அளிப்பதால் சுவாச சம்பந்த நோய்களாலும், மூச்சுத் திணறியும் இறந்தோர்க்கு ஏற்படும் சுவாச பந்தன ம்ருத்யு தோஷங்கள் நீங்கி ஆன்ம சாந்தி பெறுவதற்கான நல்வழிகள் கிட்டும்!

இவையெல்லாம் ம்ருத்யுஞ்ஜய பூஷண சிவராத்திரி கிரிவலத்தில் மட்டுமே பெறக் கூடிய கூடுதல் பலன்களாம்!

சக்தி தாண்டவ "ம்ருத்யுஞ்ஜய தரிசனம்"

(ம்ருத்யுஞ்ஜய பூஷண தரிசனம் - 7)

அடுத்ததாக உண்ணாமுலை மண்டபத்தினின்று ஸ்ரீம்ருத்யுஞ்ஜய மந்திரம் ஓதியவாறு மலையைத் தரிசிப்பதற்கு சக்தி தாண்டவ "ம்ருத்யுஞ்ஜய தரிசனம்" என்று பெயர். முறையற்ற காம வினைகள், தீயொழுக்கங்களால் விளைகின்ற கொடும் நோய்களுக்கும், கர்ம வினைகளுக்கு ஆட்பட்டு விடாமல் தற்காத்துக் கொள்ளவும், சந்ததியரும் தீவினைக் காமத்தின்பால் சிக்கி வாழ்வை நாசமாக்கிக் கொள்ளாது இருப்பதற்கும் இத்தரிசனப் பலன்கள் பெரிதும் உதவும்.

மேலும் தம்பதியினரிடையே உண்மையான அன்புப் பரிமாற்றம் ஏற்பட்டால் தான் பலவிதமான மனத் துன்பங்களையும், இல்லறப் பிரச்னைகளையும், மன நோயையும் எளிதில் தீர்த்திடலாம். இதற்கும் இத்தரிசனப் பலன்கள் பெரிதும் துணை புரிகின்றன! இவ்வாறாக ம்ருத்யுஞ்ஜய பூஷண சிவராத்திரியன்று திரளும் கிரிவலப் பலன்களை இங்கு கிரிவலம் வந்து அள்ளி வாரிடுங்களேன்!

திரிபாத மூர்த்தி ம்ருத்யுஞ்ஜய தரிசனம்

(ம்ருத்யுஞ்ஜய பூஷண தரிசனம் - 8)

அடுத்து உண்ணாமுலை மண்டபத்தினின்று சற்று தூரம் நடந்து செல்லும் போது மூன்று மலை முகடுகளாக ஸ்ரீகாயத்ரீ தரிசனமாக அண்ணாமலை திருக்காட்சி தரும். இவ்விடத்தில் தரையில் வீழ்ந்து வணங்கி, ம்ருத்யுஞ்ஜய மந்திரம் ஓதித் தரிசிப்பதற்குத் திரிபாத மூர்த்தி ம்ருத்யுஞ்ஜய தரிசனம் என்று பெயர்.

உடல், மனம், உள்ளம் மூன்றும் பக்குவம் அடைந்தால் தான் தெய்வீகத்தில் முன்னேற இயலும். மன அமைதியும், சாந்தமும், யோக சக்தியும் நன்கு கூடி வரும்!  இதற்குப் பெரிதும் உதவுவதே மூன்று ப(பா)தங்களை உடைய ஸ்ரீகாயத்ரீ மந்திரமாகும்.

"தத் சவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்"

என்ற மூன்று பதங்களே ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் மூன்று பாதங்களாகும். மூவுலகும் போற்றும் உத்தம ஸ்ரீகாயத்ரீ மந்திரமும் இதுவே!  எனவே தான் இந்த காயத்ரீ தரிசனப் பகுதியில் மூன்று காயத்ரீ பாதங்களுடன் த்ரிபாத மூர்த்தியாக இங்கு சிவபெருமான் காட்சி தந்திட்டார்!

இவற்றுடன் ஓம் எனும் ஓம்காரப் பிரணவத்தையும், பூர், புவஹ, சுவஹ என்ற மூன்று வகை வியாஹ்ருதிகள் எனப்படும் (பூலோகம், புவர் லோகம், சுவர் லோகம்) மூவுலகச் சார மொழிப் பதங்களோடு சேர்த்து

ஓம்
பூர்புவஸ்ஸுவ:
தத்ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்

என்று ஐந்து பதங்களாக ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை நாம் ஜபிக்கின்றோம்.

ஸ்ரீம்ருத்யுஞ்ஜய மூர்த்தி, ஸ்ரீகாயத்ரீ தேவியுடன் வேதபுரீஸ்வரரைத் தரிசனம் பெற்ற இடமாதலால், ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஓதியவாறு மூன்று மலைகளையும் தரிசிப்பதற்கு "காயத்ரீ த்ரிபாத தரிசனம்" என்று பெயர். இங்கு முக்கனிகளை (மா, பலா, வாழை) மலையை நோக்கிப் படைத்து முப்பதடி தூரமேனும் அங்கப் பிரதட்சிணம், அடிப்பிரதட்சிணம் செய்து வர எத்தகைய கெட்ட பழக்கங்களும் அகல்வதற்கும் காயத்ரீ தரிசனப் பலன்கள் துணை புரியும். இங்கு கனிகளைப் பசுக்களுக்கு அளித்திடுக!

பாஸ்கர மார்த்தாண்ட ம்ருத்யுஞ்ஜய தரிசனம்

ஸ்ரீசூரியலிங்கம் திருஅண்ணாமலை

(ம்ருத்யுஞ்ஜய பூஷண தரிசனம் - 9)

அடுத்ததாக வரும் சூரிய லிங்கத்தை வழிபட்டு மலையைத் தரிசிப்பதற்கு பாஸ்கர மார்த்தாண்ட ம்ருத்யுஞ்ஜய தரிசனம் என்று பெயர். மனிதனின் ஆரோக்யத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது சூரியக் கதிர்கள் தாமே!  ம்ருத்யுஞ்ஜய மூர்த்தியானவர் ஜீவன்கட்கு ஆரோக்யம் அளிக்கவும், ம்ருத்யு தோஷம் தீர்த்து, ஆரோக்யத்தையும், தெய்வ பக்தியையும் ஜீவன்கட்குப் பெற்றுத் தருவதற்காகவும் பாஸ்கர சக்திகளை, சிவபெருமானின் பாஸ்கர மார்த்தாண்டக் கோலத்தில் இங்கு ம்ருத்யுஞ்ஜய பூஷண சிவராத்திரி கிரிவலத்தில் பெற்றிட்டு நமக்கு அளிக்கின்றார்.

பொதுவாக உறவு, சுற்றம், பணியாட்கள், சக அலுவலர்களின் பகைமையால் வேதனையுறுவோர் இவ்விதமான குரோத, விரோதப் பகைமைகளில் இருந்து விடுதலை பெற உதவும் தரிசனம்!  சூரிய லிங்கத்திற்கு ஆரஞ்சு வண்ணப்பட்டு சார்த்தி சூரிய காந்தி எண்ணெயால் ஆன பண்டங்களை இங்கு தானமாக அளித்து வர தோல் சம்பந்தமான வியாதிகளுக்கும் நிவாரணமும் கிட்டும்!

பிரம்ம ஞான ம்ருத்யுஞ்ஜய தரிசனம்

(ம்ருத்யுஞ்ஜய பூஷண தரிசனம் - 10)

அடுத்து அடிஅண்ணாமலையார் ஆலய வளாகத்தில் பத்மாசனமிட்டுக் கண்களை மூடிய நிலையில் ஸ்ரீம்ருத்யுஞ்ஜய மந்திரத்தை ஓதி ஜபித்து ருத்ர உள் ஒளிப் பிரவாகத்துடன் கண்களைத் திறந்து மலையைத் தரிசிப்பதற்கு பிரம்ம ஞான ம்ருத்யுஞ்ஜய தரிசனம் என்று பெயர்.

ஸ்ரீபிரம்ம மூர்த்தியே எழுப்பிய ஆலயம் ஆதலால் இங்கு "பிரம்ம ஞானம்" எப்போதும் பொலி(ழி)கின்றது!  பிரம்ம ஞானம் சேரும் முன் மாயையும், மாயா சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கவும், ம்ருத்யு தோஷங்கள் அகல்தலும் வேண்டுமல்லவா!  இதற்கு உதவுவதாகவே இங்கிருந்து ஸ்ரீம்ருத்யுஞ்ஜய மந்திரம் ஓதியவாறு பிரம்ம ஞான ம்ருத்யுஞ்ஜய தரிசனம் கண்டு வழிபட வேண்டும்!

அருணாசல மலை தரிசனத்தின் தன்மைகளும், தேவ குணங்களும், பலன்களும், பெயர்களும் ஆதி சிவனின் நாட்டிய பாவனைகளுக்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கும். 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை வ்ருஷ ஆண்டில் மகாசிவராத்திரியில் மட்டும் பெறுவதான மிக மிக அரிய தரிசனங்களே இவை யாவும்!

"தசமுக தரிசனம்"

அடுத்ததாக காஞ்சி சாலையுடன் கிரிவலப் பாதை சேரும் இடத்தில் மலையின் பத்து முகடுகளையும் ஒரு சேரத் தரிசிக்கலாம்! மஹா சிவராத்திரியின் போது சிவபெருமானின் பேரொளியைத் தரிசித்த ஸ்ரீமஹாவிஷ்ணு தன் தசாவதார நிலைகளிலும் இறைவனின் பேரொளியைத் துய்க்க வேண்டும் என்பதற்காகத் தசாவதார மூர்த்திகள் ஒருங்கே இணைந்து இறைப் பரம்பொருளை ம்ருத்யுஞ்ஜய பூஷண சிவராத்திரியன்று ஒளிப் பிழம்பாக, ஜோதியாகத் தரிசித்து இவ்விடத்தில் பேறு பெற்றமையால் இவ்விட மலை தரிசனத்திற்கு "தசமுக தரிசனம்" என்று பெயர். இச்சிவராத்திரி நன்னாளில், பத்து கரங்களுடன் தசாவதார சக்திகளைத் தாங்கியவராய் அருள்பாலிக்கும் ஸ்ரீஅமிர்த தன்வந்த்ரீயின் தேவ தரிசனப் பலன்களாகச் சிறப்புறுகின்றது!

பத்து வித வாயுக்களால் (தச வாயுக்கள்) கொண்டதே ஜீவன்களின் உடலமைப்பு அல்லவா? தச வாயுக்களும் நன்முறையில் இயங்கினால் தான் மனிதனின் உடல் ஆரோக்யமாக இருக்கும். மேலும் இறப்பின் போது தச வாயுக்களும் நன்முறையில் உடலினின்று பிரிந்தால் தான் அத்தேகத்திற்குத் தக்க ஆன்ம சாந்தி கிட்டும்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி கலயநல்லூர்

அமிர்த தன்வந்த்ரீ வரகுண தரிசனம்!

"இருந்தும் இல்லாதிரு" என்பது ஒரு உன்னத ஆத்ம நிலை!  இதோடு கூடிய உத்தம இறைவரங்களைப் பெற்றுத் தரும் வண்ணம் அமைவதே இங்கிருந்து மலையின் அனைத்து முகடுகளையும் தரிசிப்பதாகும். மேலும் பாற்கடலில் தோன்றிய அமிர்தமானது மிகவும் முக்கியமான கலியுகத்திற்குத் தேவையான பத்து வகை அமிர்தங்களைக் கொண்டதாம். இவற்றில் தேவர்கள் பெற்றது ஒரு வித அமிர்தமே! இன்னும் பலவிதமான அமிர்தங்கள் உத்தம தெய்வீக நிலையில் பெறக் கூடியதாக உள்ளன.

ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தி பல அமிர்தக் கலயங்களை உள்ளடக்கி ஆதிமகா அமிர்தக் கலயத்தைத் தாங்கித் தசாவதார சக்திகளுடன் இந்நாளில் அருள்பாலிக்கின்றார். கலியுகத்திற்கான பத்து வித அமிர்தங்கள் சேர்ந்த கூட்டு அமிர்த கலசத்தை ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தி தாங்கி வந்து ம்ருத்யுஞ்ஜய பூஷண சிவராத்திரி அன்று ஸ்ரீஅமிர்த தன்வந்த்ரீ மூர்த்தியாகத் தோற்றம் தந்த அபூர்வ மலை தரிசனப் பகுதியே இதுவாம். இங்கு தாம் ஆதி சிவனின் தச புஜ தரிசனம் பெற்ற ஆஞ்சநேயர் பெறுதற்கரிய "அனந்த மங்கள சக்தி"  பெற்று "த்ரி நேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயராக" அவதாரம் பெற்றார்!

ஸ்ரீஅமிர்த விநாயகர், ஸ்ரீஅமிர்த நாயகி, ஸ்ரீஅமிர்த ஸ்ரீம்ருத்யுஞ்ஜய மூர்த்தி, ஸ்ரீஅமிர்த தன்வந்த்ரீ, ஸ்ரீஅமிர்த பைரவ மூர்த்தியாயும்.....இவ்வாறான அமிர்தமயக் கடவுளர் காட்சியளித்த சக்தி வாய்ந்த தரிசனப் பகுதி!

இவ்வாறாக ஒரே இடத்தின் மலை தரிசனத்தில் எத்தனையோ அவதார லீலைகள் நிகழ்ந்துள்ளன!

அஸ்வினி மற்றும் பெருமாளுக்குரிய திருவோண நட்சத்திர நாள் மற்றும் புதன், சனிக்கிழமைகளில் புத ஹோரை நேரத்தில் இங்கு பெறுவதே அமிர்த தன்வந்த்ரீ வரகுண தரிசனமாகும். பொதுவாக அமிர்த யோக நேரத்தில் அபய மண்டபப் பகுதியில் தக்க முறையில், குருவருளுடன் ஹோமங்கள், தர்ப்பணம் நிகழ்த்துவதால் மூதாதையர்களுக்கு அமிர்த நிலை கிட்டுவதோடு, பலவிதமான கடும் வியாதிகளால் இறந்தோருக்கு அமிர்த அருகுக் கஷாய சக்தியும் கிட்டி நின்னிலை பெறுவர். அமிர்த ம்ருத்யுஞ்ஜய தரிசனத்தின் அமிர்த சக்தித் திரள்கின்ற புனித தரிசனமாவதுடன் பிறவிப் பிணி தீர்க்க உதவும் திவ்ய தரிசனங்களுள் ஒன்றாம்.

"அமிர்த சாகர பூமி"

அடுத்ததாக ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தின் அருகிலிருந்து பெறுவதே "சிவசக்தி ஐக்ய ஸ்வரூப தரிசனம்" என்பதைத் தற்போது லட்சக்கணக்கான கிரிவல அடியார்கள் நன்கு அறிவர். இங்கிருந்தே ஸ்ரீம்ருத்யுஞ்ஜய மூர்த்திக்கும் அர்த்த நாரீஸ்வர தரிசனம் கிட்டியது.

ஜீவனின் ஆத்ம ஐக்கியத்திற்கு மிகவும் முக்கியமான, உடல், மனம், உள்ளம் ஆகிய மூன்றும் முக்குண இறைவளத்தைப் பெற உதவும் தரிசனம்! இவற்றைப் பெற இயலாது தடுக்கும் ம்ருத்யு தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் தரிசனம்! சுமங்கலித்வம் மற்றும் மங்களம் கூடிய ஆரோக்ய ஐக்ய சக்திகளையும் ஜீவன்களுக்கு அருள்கின்ற தரிசனமாகும்.

இதனால் இவ்விடத்தில் எத்தனையோ மஹான்களும், யோகியரும் பல யோகங்களில் ஜோதி தரிசனம் பெற்று இப்புனித பூமிக்கு வளம் சேர்த்துள்ளார்கள். அக்காலத்தில் இப்பகுதியில் தான் மஹரிஷிகளின் மாபெரும் பர்ண சாலைகள் இருந்தன. இன்று நாம் காண்கின்ற அருணாசல கிரிவலப் பாதையெங்குமே ஸ்ரீதூர்வாசர், ஸ்ரீகௌதமர், ஸ்ரீபரத்வாஜர், ஸ்ரீசாண்டில்யர் போன்றோரும், ஸ்ரீவேப்பிலைக் கட்டிச் சித்தர், ஸ்ரீநமசிவாய ஏடு தூக்கிச் சித்தர், ஸ்ரீதோடக மணி ஒலி எழுப்பித் திபத்தியான், ஸ்ரீசர்க்கரைத் தேனி சித்தர், ஸ்ரீமனம் சுமந்தான் சித்தர் போன்ற கலியுகத்தின் பல அற்புதமான சித்தர்களும் மகத்தான குருகுலப் பர்ணசாலைகளை அமைத்தும், ஹோமங்களை நிகழ்த்தியும், வழிபாடுகளை மேற்கொண்டும், கிரிவலம் வரும் அடியார்க்கு உத்தம சேவைகளை அளித்தும் நல்வரங்களை இறையருளால் அளித்தனர். ஆழ்ந்த நம்பிக்கை கொண்டோர்க்கு இன்றும் இவை அருளப் பெறுகின்றன!

அபய மண்டபத்திலிருந்து குபேர லிங்கம் வரையுள்ள புனிதமான அடிவாரங்களில் பல மஹரிஷிகளின் பிரம்மாண்டமான பர்ணசாலைகள், அறச்சாலைகள், அன்னதான மண்டபங்கள் பல யுகங்களிலும் பொலிந்தன. ஸ்ரீஅகஸ்தியர் பெருமான், ஸ்ரீபரத்வாஜர், ஸ்ரீவசிஷ்டர், ஸ்ரீஔர்வர், ஸ்ரீசூதமாமுனி, ஸ்ரீசுகமுனி, ஸ்ரீஅஷ்டவக்ரர் போன்ற அரும்பெரும் மஹரிஷிகள் தங்கி அருள்மொழிகளைப் பொழிந்த இடம்! எண்ணற்ற யோகிகள், ஞானிகள், மகரிஷிகள் யாவரும் இவ்விடத்திலிருந்து ஸ்ரீஅமிர்த ம்ருத்யுஞ்ஜய மூர்த்தியையும் தரிசனம் செய்துள்ளனர்.

அபய மண்டப, பித்ரு மோட்ச தீர்த்தப் பகுதியில் இருந்து நம் ஸ்ரீஅகஸ்தியர் ஆஸ்ரமம், குபேர லிங்கம் வரையிலான கிரிவலப் பாதை வளாகத்திற்கு "அமிர்த சாகர பூமி" எனப் பெயர் பூண்டதை சித்புருஷர்களின் கிரந்தங்களிலிருந்து காண்கின்றோம்!  எனவே தான் சித்தர்களின் கலியுக அமிர்த ஞானாமிர்தப் பிரசாத ஆத்ம அனுபூதி இறைவளாகமாக ஸ்ரீஅகஸ்தியர் ஆஸ்ரமம் கலியுகத்தில் பூத்துப் பூரிக்கின்றது!

கோணலிங்க முக தரிசனம் கோணிப்பட்டைக் கோவணச் சித்தர்

அடுத்து......குபேர லிங்கம், இடுக்குப் பிள்ளையார், பஞ்சமுக லிங்கம்....வழியே......போளூர் செல்லும் சாலைக்கு அருகிலிருந்து மலையைத் தரிசிப்பதே "கோணலிங்க முக தரிசனம்" என்று நீங்கள் அறிவீர்கள். கோணிப் பட்டைக் கோவணச் சித்தர் பல கோடி யுகங்களாய்த் தவம் பூண்ட இடம்! கோணிப் பட்டையைக் கோவணமாக அணிந்து கோணல் மனதைச் சீராக்குபவராய் தரணியெங்கும் அன்றும், இன்றும், என்றும் அருள்பாலிப்பவர்! தற்போது இங்கு இவர்தம் ஜீவாலயம் ருத்ர மயான பூமியில் மறைபொருளாய் உள்ளது!  மயான பூமியாக இப்போது விரிந்திருக்கும் இவ்விடத்தில் தான் அவரவர் கர்ம வினைகளின் நியதிக்கேற்ப மலைகளின் கோணப் பகுதிகள் தென்படும்.

ஸ்ரீவசிஷ்டர் தன் 10000 சீடர்களுடன் இவ்விடம் வந்து கோணலிங்க தரிசனமுகப் பகுதியை சீடர்களுக்குக் காட்டியபோது 10,000 சீடர்களும் ஒரே மாதிரியான கோண லிங்கத்தைத் தரிசிக்காமல், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணத்தில் லிங்க தரிசனம் கிட்டியது. இதற்குப் (பல) கோணலிங்க தரிசனம் என்று பெயர். ஸ்ரீவசிஷ்டர் போன்ற மகத்தான மகரிஷியே சற்குருவாக அருகில் இருக்கும் போது 10000 சீடர்கட்கும் ஒருமித்த தரிசனமாக இல்லாது விதவிதமாக 10000 கோணங்களில் சீடர்களுக்கு மலை தரிசனம் கிட்டியது ஏனோ?

சற்குருவானவர், தன் சீடர்களின் கர்ம வினைகளைத் தன்னுள் ஏற்று அனுபவிக்கச் சித்தமாய் இருந்தாலும், ஒவ்வொரு சீடரும் தன் கர்ம வினைகளைத் தாமே துய்த்தால் தான் கர்ம பரிபாலனம் நன்னிலை பெற்று உத்தம இறைநிலைகளைப் பெற இயலும். ஒவ்வொருவரும் இன்னமும் எத்தகைய இறை நிலைகளை அடைய முடியும், அடைய வேண்டும் என்பதை அவரவரே உணர வேண்டும் என்பதற்காகவே ஸ்ரீவசிஷ்ட மாமுனி, அனைத்து சீடர்களுக்கும் தன்னைத் தானே உணர்விக்கும் கோணலிங்க முக தரிசனம் செய்வித்தார்.

பலருக்கும் perverted thinking என்ற வகையில் குறுக்கு வகை, கோணல் புத்தியுடன் அருவருக்கத்தக்க எண்ணங்கள் தாமாகவே ஆங்காங்கே உண்டாகிடும்! உதாரணமாக, பாலத்தின் அடியில் செல்லும் போது "இப்பாலம் இடிந்து விழுந்தால் எப்படியிருக்கும்" போன்ற negative thoughts, முறையற்ற காமக் கொந்தளிப்புகள் மனதைப் பேய் போல் படுத்தும். இத்தகைய எண்ண அலைச்சல்கள் தணிய, இத்தரிசனப் பகுதியில் ருத்ர சக்தி நிறைந்த இஞ்சி, மிளகாய், மாகாளி, கோதுமை, முருங்கை போன்ற உணவு வகைகள் மற்றும் மர ஆசனப் பலகைகளையும் தானமாக அளித்து வந்திட எண்ணங்கள் சுத்தமாகும்!

ருத்ராமிர்த தரிசனம்!

ஸ்ரீஅகஸ்தியர் பெருமானுக்கு மஹாருத்ர சக்தியை அளித்த ருத்ர பூமி தரிசனப் பகுதி இதுவே!  ஸ்ரீஅகஸ்தியர் அவதார சுலோகத்தை இங்கு ஓதுவது மிகவும் சிறப்புடையதாம்! இது மனதை சுத்திகரிக்கும் மகத்தான இறைத் துதி! மேலும் பாற்கடலில் விளைந்த விடத்தின் உக்ரமானது அமிர்தத்தைப் பற்றா வண்ணம் ருத்ர அட்ச(ர) மணிகள் திரண்ட தரிசனப் பகுதியாகும்! இம்மணிகளையே ஸ்ரீநீலகண்ட சித்தர் பந்தனம் செய்தார்! எனவே ம்ருத்யுஞ்ஜய பூஷண சிவராத்திரி நாளில் இங்கிருந்து மலையை தரிசித்திடப் பெறுவதே ருத்ராமிர்த தரிசனம் ஆகும்!

இப்போதும் இவ்விடத்தினின்று மலை முகப்பைத் தரிசிக்கையில், எடுத்த எடுப்பிலேயே மலையைப் பார்க்கையில் ஏதாவது ஒவ்வொரு கோணத்திலும் ஒவ்வொருவரின் கண்களும், மனமும் லயித்திருக்கும். அனைவரும் ஒரே கோணமுகத்தைத் தரிசிப்பார்கள் எனக் கூற முடியாது. எனவே அவரவர் தம்முடைய கர்ம வினைகளை நன்கு உணர அமைக்கப்பட்டுள்ளதே அருணாசலத்தின் இந்த "ருத்ர மயான பூமி" என்பதை நாம் உணர வேண்டும். பல சித்தர்களின் குருமூர்த்தங்கள், ஜீவாலயங்கள், ஜீவ சமாதிகள் இங்கு இடித்து அழிக்கப்பட்டுள்ளன என்பது வேதனைக்கு உரியதாகும்.

மஹாருத்ரா ம்ருத்யுஞ்ஜய தரிசனம்

(ம்ருத்யுஞ்ஜய பூஷண தரிசனம் - 11)

பொதுவாக மயானம் என்றாலே அனைத்து மனிதர்களுக்கும் உள்ளூற ஓர் அச்சம் தோன்றினாலும் புனிதமான ருத்ர பூமியே மயானமாகும். அருணாசல கிரிவல யாத்ரா வழியைச் சுற்றி நிறைய ருத்ர (மயான) பூமிகள் உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். மயானவாசராகிய ருத்ர மூர்த்தியும் அருணாசல மூர்த்தியின் சிவாவதார திவ்ய மூர்த்திதானே! இங்கு தான் ஸ்ரீம்ருத்யுஞ்ஜய மூர்த்தி தம் கிரிவலத்தில் அருணாசலப் பெருமானின் அறுபத்து நான்கு கோணங்களான 64 நாட்டிய மூர்த்தங்களை ஒரு சேரத் தரிசித்தமையால், மஹா சிவராத்திரி நன்னாளில் நாம் இங்கிருந்து பெறும் தரிசனத்திற்கு மஹாருத்ரா ம்ருத்யுஞ்ஜய தரிசனம் என்று இதற்குப் பெயர். உன்னத பக்தி கூடிடில் 64 ஆருத்ரா தரிசனப் பலன்களைத் தர வல்ல மிகவும் சக்தி வாய்ந்த தரிசனம்!

"சிவபதிஸ்ரீபதி ம்ருத்யுஞ்ஜய தரிசனம்"

(ம்ருத்யுஞ்ஜய பூஷண சிவராத்திரி தரிசனம் - 12)

கிரிவலத்தைத் தொடர்ந்திட.....பூத நாராயனப் பெருமாள் சந்நிதியில் கிரிவலத்தை நிறைவு செய்து இங்கிருந்து மலையைத் தரிசித்திட வேண்டும். ஒரு யுகத்தின் வ்ருஷ ஆண்டின் ம்ருத்யுஞ்ஜய பூஷண மஹா சிவராத்திரியன்று ஸ்ரீதன்வந்த்ரீப் பெருமாள் மூர்த்தியும், ஸ்ரீஅமிர்த ம்ருத்யுஞ்ஜயரும் ஒரு சேர ஜோதி ஸ்வரூப ஈசனைக் கண்டு மகிழ்ந்தமையால் இவ்விடத்தினின்று நாம் பெறும் தரிசனத்திற்கு "சிவபதிஸ்ரீபதி ம்ருத்யுஞ்ஜய பூஷண தரிசனம்" என்று பெயர்.

அமிர்த கலயத்தைத் தாங்கிய ஸ்ரீஅமிர்த தன்வந்த்ரீ, அமிர்தச் சாரல் தாங்கிய ஸ்ரீம்ருத்யுஞ்ஜய மூர்த்தியுடன் இணைந்து மஹேசனைத் தரிசித்த இடமாதலால் வரும் ம்ருத்யுஞ்ஜய பூஷண மஹா சிவராத்திரியன்று மேற்கண்ட வகையில் கிரிவலத்தை மேற்கொண்டு இவ்விடத்தில் நிறைவு செய்வதால் மகத்தான நல்வரங்கள் கிட்டுவதுடன், ம்ருத்யு தோஷங்கள் நீங்கிடவும், கடுமையான நோய்கள் தீரவும், மரண பயம் நீங்கிடவும் இறையருள் கை கூடும்.

நல்ஆரோக்யத்துடன், நன்முறையில் இறைவழியில் இப்பிறவியைச் செலுத்தி இறைவனின் திருவடிகளை அடைய இந்நாள் கிரிவலம் பெரிதும் உதவும். மானுட வாழ்வில் பெறுதற்கரிய பேறே அறுபது ஆண்டுக்கொரு முறை வரும் வ்ருஷ வருட ம்ருத்யுஞ்ஜய பூஷண சிவராத்திரி கிரிவலமாகும்.

மாத சிவராத்திரி தோறும் திருஅண்ணாமலையில் கிரிவலம் வருவதை பௌர்ணமி போல ஓர் அற்புத கிரிவல உற்சவமாக இறையருளால் ஆக்கிடுக.

ம்ருத்யுஞ்ஜய மஹா ருத்ர மந்திரம்

(ஜாதி, இன, குல, மத, பேதமின்றி, ம்ருத்யுஞ்ஜய பூஷண சிவராத்திரி கிரிவலத்திலும் எப்போதும் யாவரும் ஓத வேண்டிய மிகவும் சக்தி வாய்ந்த மகா ருத்ர மந்திரம்)

"த்ர்யம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்"

(மரண பயத்தை நீக்கி இறைச் சிந்தனையைப் பெருக்கும்)

ம்ருத்யுஞ்ஜய ருத்ர மந்திரம் (வேதத் தமிழில்)

(ம்ருத்யுஞ்ஜய பூஷண சிவராத்திரி கிரிவலத்தில் ஓத வேண்டிய மிகவும் சக்தி வாய்ந்த மகா ருத்ர மந்திரம்)

மறையொளி மலர் மணம் பற்றி மகிழ்வுறு இரையும் பற்றி
மாநிலை காட்டும் முக்கண் முச்சிவ நாமம் பற்றி
மறைவழி பிசகாதாகி மறைவெள் அரிகனி பற்றி
மாட்டி நின் பாதக் காம்பு பற்றிடப் பற்றி பற்றி!

கடகடப்பை

ஸ்ரீராஜராஜேஸ்வரர் ஸ்ரீவைத்யராஜேஸ்வரர்

ராஜா, ராஜன், ராஜேஸ்வரி, ராஜப்பா, ராஜசேகர்.....போன்ற "ராஜ" நாமம்
ரவி, ஆதித்யன், சூர்யா, பாஸ்கர் போன்ற சூரிய நாமம் உடையவர்களுக்கு உரித்தான ஆலயம்

தஞ்சாவூர் அருகே உள்ளது கடகடப்பை கிராமம். ஒவ்வொருவருக்கும் பிறந்த நாள், நட்சத்திரம் இருப்பது போல ஒவ்வொரு ஊருக்கும் நட்சத்திரமும், எண்ணும் உண்டு. அந்தந்த ஊருக்கான பஞ்சபூத சக்திகள், சூரிய, சந்திரப் பாதக் கணக்கு கொண்டு அந்தந்த ஊரின் எண் நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கேற்ற வகையில் சிவ, வைணவ ஆலயங்கள் நிர்மாணிக்கப்பட்டு ராஜகோபுர அடுக்குகள், மாடங்கள், கோபுர மற்றும் கலச எண்ணிக்கைகளும் அமையும்.

கடபயாதி சாங்க்ய முறைப்படி கடகடப்பைச் சிவத் தலத்திற்கான எண் ஒன்று ஆகும். சூரிய எண்ணே ஒன்று ஆதலின் சூரிய சக்தி பொங்கிப் பொழிந்து அரிய மருத்தவ சக்திகள் நிறைந்த தலமாக விளங்குகின்றது! ஒரு யுகத்தில் சூரிய பூஜைகளுடன் மகத்தான சிவத் தலமாக விளங்கி, மற்றொரு சப்த ஸ்தான வகைக் கோயிலாக திருக்கடனப்பதம் எனப்பெயர் கொண்டு பிரம்மாண்டமாக விளங்கிய கடகடப்பைச் சிவத்தலமானது இன்று இரண்டு சென்ட் அளவில் மிகமிகச் சிறியதாகக் காட்சி அளிப்பது கலியுகக் கோலத்தைத் காட்டுகிறது.

சூரியத் தலமாகையால் இங்கு ஒற்றைப் படையில் 1, 10, 19, 28 என்ற எண்ணிக்கையில் பூக்கள், பழங்கள், பிரசாத உணவு வகைகள், ஹோம சமித்துகள் கொண்டு பூஜித்தலால் சூரிய சக்தி விருத்தியாகி நல்வளம் கிட்டும்!  கண் பார்வை விருத்தியாகும்!

உத்தம சிவ பக்தனாகிய ராஜராஜ சோழன் திருப்பணி ஆற்றிய ஆலயமாதலால் ஸ்ரீராஜராஜேஸ்வரர் ஆனார் என்றே பெயர்க் காரண வரலாறு மருவி நின்றாலும் இவருடைய ஆதிமூலப் பெயரே ஸ்ரீவைத்யராஜேஸ்வரர்! இவ்வுலக ஜீவன்களின் கர்ம பரிபாலன்களை ஆள்கின்ற ஒன்பது நவகிரக ராஜாக்களின் ராஜாவாக ஆகுதற்கு ஸ்ரீசூரிய பகவான் தவம் புரிந்து நவகிரக ராஜா ஆன தலமாகி, ஸ்ரீசூரிய மூர்த்தியே இறைவனை "ராஜராஜேஸ்வரா" என விளித்து வழிபட்ட தலம்! எனவே தாம் இன்றும் "நவகிரக ராஜா ஆயினும் உனக்கு அடிமையே" என்ற வேத மந்திரம் ஓதி வழிபடுகின்றவராய் மூலவர் முன் ராஜதேவ யோகத்தில் ஸ்ரீசூரிய மூர்த்தி என்றும் வழிபட்டு நிற்கின்றார்!  ஸ்ரீசூரிய மூர்த்தி நவகிரக ராஜா ஆவதற்குத் தவம் பூண்டு சிறப்புப் பெற்ற தலமாதலின் ஸ்ரீசூரிய மூர்த்தியே நவகிரக பலன்களை அளிப்பதால் இங்கு நவகிரகங்கள் தனியாக இல்லை!

சோழ மன்னனும் தாம் பூர்வ ஜன்மத்தில் இவ்வாலயத்தில் பூஜித்தமையால் தாம் பூவுலகே போற்றும் ராஜாவாகத் திகழ்கின்றோம் என்று அடக்கமாக உணர்ந்து தினமும் பூஜை செய்த தலம். தனக்கு ஏற்பட்ட சரும நோயைத் தீர்த்த ஸ்ரீவைத்யராஜேஸ்வர சுவாமிக்கு இங்கு, கடகடப்பையில் பேராலயம் எழுப்பினான் ராஜ ராஜ சோழன்!  ஆனால் இன்றோ கடகடப்பை ஸ்ரீஆனந்தவல்லி சமேத ஸ்ரீவைத்ய ராஜேஸ்வரர் (தற்போது ராஜராஜேஸ்வரர்) ஆலயமானது தற்போது மிக மிகச் சிறிய ஆலயமாகக் குறுகி விட்டது!  மூர்த்தியும், ஆலயமும் சிறியதாயினும் கீர்த்தி மிகப் பெரிதாம்.

சூரியனின் யோக வழிபாடு!

மூலவருக்கு எதிரே தனித்த சிறு மேடைச் சந்நிதியில் சூரிய பகவான் கடராஜ பாவனம் என்ற யோக சூத்திர நெறியில் இறைவனை வழிபடுகின்றார். சூரிய சக்தி மிகுந்த தலம். தட்சனுடைய யாகத்தில் சிவனின் ஆணையை மீறிப் பங்கு கொண்டதால் ஒளி மங்கிய ஸ்ரீசூரியன், இறைவனுடைய வலக் கண்ணாகத் திகழும் பாக்யத்தையும், கோள்களின் ராஜாவாகப் பிரகாசிக்கும் பாக்யத்தையும், ் இழக்க நேரிட்டது. இதற்கான பிராயச்சித்தம் தேடி வருகையில் "கடம்பை ஜோதியில் உடம்பொளி தேறும்" என்ற அசரீரி வாக்கியம் வெண்ணாற்றங்கரையில் கேட்டிடவே, ஸ்ரீசூரிய மூர்த்தி அப்போது கடம்ப வனமாக இருந்த இத்தலத்தை அடைந்தார். இங்கு தவம் பூண்டிருந்த ஸ்ரீயாக்ஞவல்கியரும், "வேதமே ஒளிக்கு மூலாதாரம், எனவே தாங்கள் இழந்த வேத சக்திகளைப் பெற்றால்தாம், பாஸ்கர ஜோதிப் பிரகாசம் மீளும்!" என்று அருளிடவே, ஸ்ரீசூரிய மூர்த்தியும் மானுட வடிவம் பூண்டு முனிவரே அளித்த வேத ராஜ சூரியன் என்ற நாமத்துடன், இங்கு சங்கல்பம் செய்து கொண்டு பூஜித்து இங்கு வேதம் ஓதி வரத் தாமிழந்த வேத சக்தியை முதலில் பெற்றிட்டார். இழந்த ஒளியையும் பெற்றாக வேண்டுமே! இதற்கான தவம் யாதோ?

ஸ்ரீசூரியனை மணந்த ஸ்ரீஸம்க்ஞா தேவி, சூரிய மண்டலத்தின் வெம்மையைத் தாங்க இயலாது தன் நிழலாம் சாயா தேவியைப் படைத்துச் சூரிய மண்டலத்தில் இருத்திட்டு நல்லொளியைப் பெறத் தவம் புரியப் புறப்பட்டு விட்டாள். தட்சனின் வேள்வியில் கலந்து கொண்டதால் ஏற்பட்ட விபரீதங்களுக்கும், பூவுலகில் மானுட வடிவில் மீண்டும் பூஜித்தாக வேண்டும் என்பதை உணர்ந்த ஸ்ரீசூரிய மூர்த்தி, முதிய வேதியர் வடிவில் பல தலங்களையும் தரிசித்து வந்தார். தெய்வ மூர்த்திகளே இவ்வகையில் மனிதப் பிறவியின் மகத்துவத்தை உணர்வித்து உள்ளமையால் இனியேனும் நாம் பெற்றுள்ள மனிதப் பிறவியின் மகத்துவத்தை உணர்வோமாக!

"கடம்ப வேள்வி ஆற்றி
விடங்க வீரொளி பெறுவாய்"

- என்ற அசரீரிக்கு இணங்கி ஸ்ரீசூரிய மூர்த்தி ஓரிடத்தில் வேள்வி ஆற்ற முற்பட்டபோது "பூலோகத்தில், பத்தினி அனுமதியின்றி ஹோமம் செய்யலாகாது" என்ற நியதியால் சூரிய மண்டலத்தில் இருந்த தன் பத்தினியை அழைத்தார். ஸ்ரீஸம்க்ஞா தேவி இருந்த இடத்தில் தம் நிழலாக அங்கு இட்டுச் சென்ற ஸ்ரீசாயா தேவியும் பூலோகம் வந்தடைந்தாள். இதனை ஸ்ரீசூரிய மூர்த்தி அறியாததாலும் ஏற்கனவே ஒளி இழந்து, வேத சக்திகள் குறைந்து வாடி இருந்தமையாலும் சாயா தேவியின் நிழல்பட்ட இடங்களில் முதிய வேதியரின் மானுட வடிவத்தில் இருந்த ஸ்ரீசூரியனுக்கு ராஜ பிளவை என்னும் நோயும், பிற சர்ம நோய்களும் பற்றின. அனைத்தும் சர்வேஸ்வரனை மீறி தட்ச யாகத்தில் கலந்து கொண்டதன் விளைவென உணர்ந்து ஸ்ரீசாயா தேவியுடன் ஸ்ரீசூரிய மூர்த்தி தொடர்ந்து தல யாத்திரை புரிந்து வருகையில் கடம்ப மரங்கள் நிறைந்த இப்பகுதியை அடைந்தார்.

கடகட பீஜாட்சரம் கனிந்திடும் சிவத்தலம்!

இந்த அற்புதமான தலத்தின் கடம்ப மர நிழலும், காற்றும் படப்பட சூரியனுக்கு நோய்க் கொடுமை கொஞ்சம் கொஞ்சமாகத் தணிந்ததுடன் தானிழந்த பேரொளியும் மீள்வது கண்டு ஆனந்தம் அடைந்தார். ஸ்ரீசாயா தேவியின் சாயா நிழல் ரூபமும் மறைந்து சூர்ய பிரகாசம் அடைந்து அவள் மீண்டும் ஸ்ரீஸமக்ஞா தேவி, சூரிய மூர்த்தியின் அக்னிக் கிரக வெம்மையைத் தாங்கும் வல்லமையையும் பெற்றிட...

ஸ்ரீபிரம்ம மூர்த்தியின் "கட கட" வென்ற மத்தள பீஜாட்சர ஒலி முழங்கிட....

கடம்ப வனத்திடையே ஸ்ரீவைத்யராஜேஸ்வர "லிங்க தரிசனம்" பெற்று மகிழ்ந்திட்டார்.

இவ்வகையில் "கடகட" என்ற பிரம்ம தாள சக்தி நிறைந்த பூமியாகவும், ஒரு யுகத்தில் கடம்ப வனமாகவும் துலங்கிய சிவத் தலமே நாளடைவில் கடகடப்பை ஆயிற்று. சூரிய மூர்த்திக்கு வந்த நோய்களைத் தீர்த்த லிங்க மூர்த்தியே கடகடப்பை ஸ்ரீவைத்யராஜேஸ்வரர் ஆவார். இவரே தற்போது ஸ்ரீராஜராஜேஸ்வரர் ஆகியுள்ளார். நோய்களுக்கெல்லாம் ராஜாவாக, கொடியதாக விளங்கும் ராஜ பிளவையைத் தீர்த்த லிங்க மூர்த்தியே ஸ்ரீவைத்யராஜேஸ்வரராக, ஸ்ரீராஜராஜேஸ்வரராக இன்று அருள்பாலிக்கின்றார்.

ராஜன், ராஜசேகர், ராஜன், ராஜ, ராஜசேகர், ராஜரத்தினம், ராஜப்பா, தன்ராஜ், ராஜராஜன், ராஜூ, ராஜகோபால், தங்கராஜ், ராஜவேல், ராஜலிங்கம், ரங்கராஜன், வரதராஜன், ராஜம், ராஜம்மாள், ராஜாமணி போன்ற "ராஜ" நாமம் உடையவர்களும் பாஸ்கர், ரவி, ஆதித்யம், சூரியா, சூரிய மூர்த்தி போன்ற சூரியப் பெயருடையோரும் வழிபட வேண்டிய திருத்தலம்.

தஞ்சாவூர்-பள்ளி அக்ரஹாரம்-களஞ்சேரி வழியே குருங்காலூர் சென்று இறங்கி கடகடப்பை சிவாலயத்தை அடைய வேண்டும். பக்தர்கள் ஒன்று கூடிடில் இத்தலத்தின் புராதன மேன்மையைத் தருவித்து நோய்களைத் தீர்க்கும் இத்தலத்தின் சிறப்பினை உலகிற்கு உணரச் செய்திடலாம்.

இச்சிவ மூர்த்திக்கு நேர்த்தி வைத்து வணங்கிட கடுமையான நோய்களும் நீங்கிடும்!

வேப்பிலைக்கட்டிச் சித்தர்

வேப்பிலைக் கட்டிச் சித்தா! காப்பிலைக் கட்டித் தா!

திருஅண்ணாமலையில் உறையும் சித்தர்களுக்குத் திருக்கயிலாயம், வைகுண்டம் மற்றும் அனைத்து சிவ, வைணவ லோகங்கள், குரு மங்கள கந்தர்வ லோகம் போன்ற குரு லோகங்கள், சூரிய, சந்திர, நவகிரக, நட்சத்திர மண்டலங்கள் யாவற்றிலும் எப்போது வேண்டுமானாலும் இறை தரிசனத்திற்கும், இறைப் பணிகளுக்கும் வந்து செல்லலாம் என்ற விசேஷமான தெய்வீக அனுமதிகளும், அனுபூதிகளும் உண்டு. இப்புவியின் ஆன்மீகப் பீடமாக விளங்கும் புனிதமான பாரதத்தில், அதுவும் தென்னாடுடைய தமிழ்நாட்டில், இப்பூவுலகிற்கு மட்டுமன்றிப் பிரபஞ்சத்தின் தெய்வீக மையமாகவே திருஅண்ணாமலைத் திருத்தலம் அன்றும், இன்றும், என்றும் மகத்தான தெய்வீக ஒளியுடன் பிரகாசிக்கின்றது.

திருஅண்ணாம‌லைச் சித்தர்கள் என்றால் இங்கு மானுட ரூபம் கொண்டு வாழ்ந்து குரு மூர்த்தம், ஜீவாலயம், ஜீவ சமாதி பூண்டோரும் அடங்குவர். ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த சுவாமிகள், மஹா அவதூது பாபா, ஹரிக்கேன் விளக்கு சித்தர் போன்று தோன்றித் தோன்றாமலும், தோன்றி மறைந்தும், தோன்றாமையுடன் தோன்றுகின்ற அபூர்வமான அற்புதமான சித்தர்களும் உண்டு. இப்போது 1850ம் வருடத்திற்குப் பிறகு திருஅண்ணாமலை வாழ் மாமுனிகளையே, மகரிஷிகளையே நாம் அறிந்துள்ளோம். இதற்கு முன்னர் பல்லாயிரமாண்டுகள் திருஅண்ணாமலையில் வாழ்ந்து, உறைந்த எண்ணற்ற சித்தர்கள், யோகியர்கள், மகரிஷிகள் பலரையும் பற்றிய அரிய அனுபூதி விளக்கங்களை இவ்வரிய தொடரில் குருவருளால் அளிக்கின்றோம்.

தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரின் குருவருட் கடாட்சத்தில் பூரிக்கும் நம் குரு மங்கள கந்தர்வா எம் சற்குருநாதராம் ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் குருவருளால் தம் சற்குருநாதருடன் அருணாசலத்தை கிரிவலம் வந்திட்ட போது எண்ணற்ற சித்தர்களைத் தரிசிக்கும் பாக்யம் பெற்றிட்டார். அவர்தம் குருவாய்மொழிகளே நாமறியா திருஅண்ணாமலைச் சித்தர்களின் அனுபூதிகளாய் இத்தொடரில் மலர்கின்றன.

மகரிஷிகள், யோகிகள், ஞானிகள் என்றாலே புராணங்களில் வருபவர்கள் மட்டுமென எண்ணாதீர்கள்!  இப்பூவுலகானது சிருஷ்டி முதல், லெமூரியாக் கண்ட வாழ்வு முதல் இன்னும் பிற கற்ப யுகங்கள் ஆகும் வரை இத்தகைய இறைத் தூதுவர்கள் பல வடிவுகளிலும் பூமியில் உலா வந்த வண்ணமுள்ளனர். இறையாணையாகப் பல ரூபங்களிலும் சித்தர்கள், யோகியர், ஞானிகள் வருகின்றனர்.

நமக்கென நல்வடிவில் சித்தர்கள்!

கண்ணால் கண்டு, காதால் கேட்டு, மனதால் ஆராயும் மனப்பான்மை கலியுகத்தில் பெருகி விட்டமையால், கலியுகத்தில் பரிவுடன் பக்தர்களுக்கு நல்வரங்களை அருளிட மானுட உலகிற்குப் புரியும் வகையில் பல வடிவங்களில், சாதாரண மனிதர்கள் போலும், குடும்ப வாழ்க்கை கொண்டவர்களாகவும், அலுவலகத்தில் பணிபுரிபவர்களாகவும் இன்னோரன்ன வடிவுகளிலும் இறைத் தூதுவர்கள் வருகின்றனர். ஒரு மனிதர் மற்றவரிடம் இருந்து வேறுபடுவது போல, கலியுக மனித மனோ நிலைக்காகவே, ஒரு மகான் இன்னொரு மகானைப் போலன்றி வேறு வடிவு கொள்கிறார். இவ்வகையில் திருஅண்ணாமலைச் சித்தர்கள் பரம்பொருளின் திருவடிகளில் என்றும் உறைபவர்கள் ஆவர். இவர்களுள் ஒருவரே வேப்பிலைக் கட்டிச் சித்தர் ஆவார்.

சதாசிவ பிரமேந்திரர் போல் முதலில் அவதூதராக, பிறந்த மேனியாக, முற்றும் துறந்த மகா ஞானியாய் அருணையில் கிரிவலம் வருவதையே பெரும் தவமாகப் பூண்ட பெயரில்லாப் பெரும் சித்தர்பிரானே கால, வர்தமான சூழ்நிலைகளுக்கு ஏற்ப வேப்பிலைக் கட்டிச் சித்தர் ஆனார்.

ஒருமுறை குறுநில மன்னர் ஒருவர் தம் ராணி, குடும்பம் மற்றும் பரிவாரங்களோடு திருஅண்ணாமலைக்குப் பல்லக்கில் வந்த போது அனைவரும் "ராணி, தோழிகளுடன் மன்னன் பல்லக்கில் வருவதால் தாங்கள் அவதூதராக அவர் முன் சென்றால் மன்னர் கோபம் கொண்டு வாளை வீசி விடுவார்!" என எச்சரித்தனர்.

சித்தரைக் காத்த சிவமயி!

ஆனால் சித்தர்பிரானோ ஸ்திதப் பிரக்ஞராய் சிவச் சிந்தனையில் லயித்தவராய் அவர்மட்டில் தன் வழியே சென்றிட்டார். இடையில் வழிபாட்டிற்காக ஸ்ரீபச்சையம்மன் ஆலயத்திற்கு வந்தார். அக்காலத்தில் இப்போதைய அளவில் கடைகள் கிடையாது! கிரிவலப் பாதையும் ஊரைத் தாண்டிப் பெரு வட்டமாக இருபது மைலுக்கு மேலாக விரிந்திருந்தது! ஆலயச் சந்நிதியை வலம் வந்து வெளி வந்த சித்தர்பிரானின் இடையில்.....

திடீரென்று....சித்தரின் இடையில் ஜோதிப் பிரகாசம் நிறைந்த வேப்பிலை ஆடை ஒன்று பரிமளித்தது!  ஆம், அம்பிகையே தன் பக்தனுக்கு அருளிய வேப்பிலை ஆடை! இதிலிருந்து தான் வேப்பிலை ஆடை கட்டி வரும் பிரார்த்தனை நடைமுறைக்கு வந்தது.

மன்னர், ராணி, பரிவாரங்களுடன் பல்லக்கில் பவனி வருகையில், பிற மதத்தவராயினும் மன்னர் வேப்பிலை ஆடையுடன் ஒளிப் பிரகாசம் பூண்டவராய்ச் செல்லும் சித்தர்பிரானைக் கண்டு வியந்து, பணிந்தார். தம் பரிவாரங்களுடன், குதிரைகள், பல்லக்கில் இருந்து கீழ் இறங்கி அனைவரும் சித்தரை வணங்கினர். ஆனால் சித்தர்பிரானோ, நடப்பது ஏதும் அறியாதவராய், உலகப் பற்று இன்றி, ஞானப் பிரகாசராய்த் தன் வழி நடந்தார். அன்றிலிருந்து "வேப்பிலைக் கட்டிச் சித்தர்" என்ற காரணப் பெயரையும் பூண்டார்.

அம்பிகையே அளித்த வேப்பிலை ஆடை ஆதலின் அவர் சரீரத்தை உதிர்த்து ஜீவாலயம் பூணும் வரை அதே பசுமையுடன், ஒரு வேப்பிலை கூட உதிராது அவ்வேப்பிலை ஆடை ஜோதிப் பிரகாசமான பசுமையுடன் பரிமளித்தது.

எங்கேனும் வேப்ப மரத்தைக் கண்டால் அதனைப் பரிவுடன் ஸ்பரிசித்து, மஞ்சள் பூசி வழிபட்டு அதன் கீழ் அமர்ந்து தியானிப்பார்!  இன்று திருஅண்ணாமலை கிரிவலப் பாதையெங்கும் நீங்கள் காண்கின்ற இல்லங்கள், தோட்டங்கள், நந்தவனங்கள் எங்கும் காண்கின்ற பழமையான வேப்ப மரங்கள் யாவும் சித்தரின் திருக்கரங்கள் பட்டவையே!  ஸ்ரீபச்சையம்மனை இஷ்ட தெய்வமாகப் பூசித்து அம்பிகையின் தரிசனமும் கண்டு பராசக்தியின், பேரருளையும் பெற்றவர்.

அவரிடம் பிரசாதமாகப் பெற்ற வேப்பங் கன்றுகள் தாம் இன்று பல ஆலயங்களிலும், தோட்டங்களிலும், நந்தவனங்களிலும் பல நூற்றாண்டுகளான வேப்ப விருட்சங்களாகத் துலங்குகின்றன. இச்சித்தர்பிரான், தாம் அண்ணாமலையில் தோன்றியது முதல் தானெடுத்த மானுட சரீரத்தை உகுக்கும் வரை அருணாசல பூமியை விட்டு ஒரு நிமிடமும் எங்கும் அகலாதவர். நோய் நிவராணங்களுக்காக அவர்தம் ஆசியை வேண்டுவோர் அவர் சுட்டிக் காட்டும் வேப்ப மரத்தைச் சுற்றி விட்டுக் கிரிவலம் வந்திடில் நோய் பரிபூரணமாகக் குணமாகிடும்!

எனவே இன்றும் நீங்கள் கிரிவலம் வரும் போது நிறைய மஞ்சளை அரைத்து எடுத்து வந்து வழியில் கண்ணில் படுகின்ற வேப்ப மரங்களுக்கு

வேப்பிலைக் கட்டிச் சித்தா!
காப்பிலைக் கட்டித் தா!

(காப்பு இலை - ரட்சை மந்திரங்கள்)
கட்டித்தா - உபதேசித்து அருள்வீர் என்றும்

ஓம் தத்புருஷாய வித்மஹே,
நிம்ப‌ பூர்ணேஸ்வராய தீமஹி
தந்நோ சித்குணேஸ்வர ப்ரசோதயாத்

- என்று ஓதி மஞ்சள் பூசி வழிபடுக!

தேய்பிறையில் வரும் அஸ்வினி நட்சத்திர நாளில் விருட்சங்களுக்கு மருத்துவ சக்தி பெருகும். எனவேதாம் வேம்பு சம்பந்தப்பட்ட சித்த, ஆயுர்வேத மருந்துகளை, இந்நாளில் தாம் தொடங்குவர்.  குறிப்பாக வேப்பிலைக் கொழுந்தினை வைத்யப் பூர்வமாக தேய்பிறைச் செவ்வாய்க் கிழமையிலும், தேய்பிறை ஆயில்யம், அஸ்வினி நாட்களிலும் உட்கொள்பவர்களுக்கு வயிற்றுப் புண், வாய்ப் புண், வயிறு ரணங்களுக்கு தீர்வைத் தருவதாகும்.

வேப்பிலைக் கட்டிச் சித்தா!
காப்பிலைக் கட்டித் தா!

- என்ற சித்த வைத்ய ஸூக்த மந்திரத்தை ஓதியவாறு தேய்பிறையில் வரும் செவ்வாய், அஸ்வினி, ஆயில்ய நட்சத்திர நாட்களில் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து வேப்ப மரங்களுக்கு மஞ்சள் பூசி வழிபட்டு வந்தால் கர்பம் நழுவுதல், கர்பாயசக் கோளாறுகள், கர்பம் தரிக்க இயலாமை போன்றவற்றிற்கு நல்ல நிவர்த்திகள் கிட்டும். வயிறு ரணங்களும் குணமாகும்!

வயிற்று வலி, பிரசவ வலி, பிரசவ வேதனைகளில் அவதியுறும் நிலையில் பெண்களும், கடுமையான ஜுரத்தால் அவதியுறும் குழந்தைகளும், பெரியோர்களும் திருஅண்ணாமலை ஸ்ரீபச்சையம்மனுக்கு வேண்டி,

வேப்பிலைக் கட்டிச் சித்தா!
காப்பிலைக் கட்டித் தா!

என்ற பீஜாட்சரச் சித்தவேத வாக்கியத்தை ஆழ்ந்த நம்பிக்கையுடன் ஓதி வந்தால் நல்ல நிவாரணம் கிட்டும்.

பைரவ மூர்த்தி

மதூளித முராரி - பைரவ வாகன மூர்த்தி!
(அட்டைப் பட விளக்கம்)

எமபகவான், எம தூதர்களைக் காண்கின்ற தேவ சக்திகள் அனைத்து நாய்களுக்கும் உண்டு! பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள ஓர் எறும்புடன் மனோ ரீதியாகப் (telepathy) பேச வல்லவையே எறும்புகளாம்! மண்ணில் நிறைந்துள்ள வேத சக்திகளை கிரகித்துத் தன் உடலில் உள்ள வேத ப்ரவர்த்த நாளங்கள் மூலமாக மண்ணில் நிரவிடும் சக்தி ஒரு மண் புழுவிற்கு உண்டு. குறித்த பல விண்ணுலகங்களுக்கும் பறந்து சென்று வரும் தேவ வன்மை பல புறாக்களுக்கும் உண்டு.

இவ்வாறு ஆறாம் அறிவாம் பகுத்தறிவுடைய மனிதன் ஆத்ம விசாரத்தால் உணரும் வண்ணம் அனைத்து உயிரினங்களும் பல அரிய தெய்வீக சக்தி பெற்றுள்ளன. இருந்தும் அவை அடக்க ஒடுக்கமாக, நிறைந்த கடவுள் நம்பிக்கையுடன் வாழ்கின்றன!  மனிதனைத் தவிர வேறு உயிரனங்களில் நாத்திகம் என்பதே கிடையாது. ஆனால் பெறுதற்கரிய மானுடப் பிறவி என்பதால் அனைத்து உயிரினங்களுமே எந்த மனிதனைக் கண்டாலும் வணங்கிப் போற்றுகின்றன. இப்பேருண்மையை என்று மனித குலம் பகுத்தறிந்து உணரப் போகின்றது?

ஸ்ரீமாயம்மா

பைரவ மூர்த்தியின் வாகனமாகத் துலங்குவதே சுவானன் எனப்படும் நாய் ஆகும். நாய் என்று சொல்லாது "பைரவர்" என்றே நாய்களை உரைப்போரும் உண்டு. ஆலயத்திலேயே கிடந்து முக்தி நிலை பெறுகின்ற நாய்களும், செல்வந்தர்கள் இல்லத்தில் சுகபோக வசதிகளுடன் திளைக்கும் நாய்களும் உண்டு. தெருவில், வீடுகளில், சாலைகளில் நீங்கள் காண்கின்ற ஒவ்வொரு நாய்க்கும் உங்களுக்கும் சம்பந்தம் உண்டு. தினமும் பார்க்கின்ற நாய்தானே, வீதியில் திரியும் நாய் தானே என்று நாய்களைச் சர்வ சாதாரணமாக எடை போடாதீர்கள்!

ஆலயங்களிலும் இல்லங்களிலும் நிகழ்கின்ற ஹோமத்தின் புகைபட்டும், பூஜைப் பிரசாதம் உண்டும், தெய்வ மூர்த்திகளின் பவனி தரிசனம் கண்டும் உத்தம தெய்வீக நிலைகளை அடையும் நாய்களும் உண்டு. வீட்டில் வளர்க்கப்படும் நாயும் அந்தக் குடும்பத்துடன் பூர்வ ஜன்மத் தொடர்பு உடையதே. நாய்களில் பல வகைகள் உண்டு. நாயினம் யாவும் சுவான லோகத்திலிருந்து தாம் ஜனிக்கின்ற. ஒவ்வொரு நாய் வகைக்கும் உரித்தான குரு உண்டு. பைரவ லோகத்தைச் சேர்ந்தவர்களே நாய்களுக்கு குரு ஆவர். எறும்புகள், வண்டுகள், பாம்புகள் அனைத்து உயிரினங்களுக்கும் குருமார்கள் நிச்சயமாக உண்டு!

கலியுகத்தில் ம்ருத்யுஞ்ஜயர், சரபேஸ்வரர், பைரவ வழிபாடுகள் மிகவும் முக்கியமானவை! எதிர்காலத்தில் பைரவ பூஜை, சரபேஸ்வர பூஜை போல மிகவும் பிரசித்தி பெறும். பைரவ உபாசனை சற்றுக் கடினம் எனினும் பலவிதமான சித்திகளையும், உத்தம தெய்வீக நிலைகளையும் துரிதமாக அளிக்கக் கூடியதாம்.

அட்டைப் படத்தில் நாம் காண்பது "மதூளித முராரி" என்னும் வகையைச் சார்ந்த பைரவ வாஹன மூர்த்தி ஆவார்.  டெரியார், பொமரேனியன், ராஜபாளையம், பாக்ஸர் என்று நாய்களை வகை பிரித்தாலும் ஒவ்வொன்றின் ஆதிபீட சற்குருவே பல உத்தம தெய்வீக நிலைகளைப் பெற்று ஒவ்வொரு பைரவ மூர்த்திக்கு வாகனம் ஆகின்றார். பைரவ மகரிஷி, பத்ரகிரியார், ரைவத மகரிஷி, பாடகச்சேரி சுவாமிகள் போன்றோர் ஜீவன்களிடையே எவ்விதப் பாகுபாடும் காட்டாது அனைத்து ஜீவன்களுக்கும் அருள்வர வழிகளை அளிக்கின்றனர். இவர்கள் யாவரும் எண்ணற்ற நாய்களுக்கு பக்தி நிலையை அளித்தவர்களாம்!

பைரவ மகரிஷி அறவழி காட்டிட அதிற் பிரகாசிப்பவர்களே பைரவரின் வாகனமாகின்றன!  இதில் அட்டைப் படத்தில் நாம் காண்பது ஏதோ வெளி வகை நாய் போலத் தோன்றினாலும் பைரவ மூர்த்தி பிரபஞ்சமெங்கும் அனைத்து பூமிகளிலும், நாடுகளிலும் தோன்றி அருள்பவர் ஆதலின் வடுக மூர்த்தியின் அவதார அம்சங்களைக் கொண்ட அப்பு பைரவ மூர்த்தியின் பைரவரின் வாகன மூர்த்தியே இவர் ஆவார்.

கொடிய ஆணவ பாணம்!

கிருதயுகம் முதல் கலியுகம் வரை "ஆணவமே" ஜீவன்களைக் குறிப்பாக மனிதர்களை ஆட்கொள்ளும் ஆணவமே கண்ணுக்குத் தெரியாத, அறிவிற்குப் புரியாத மாயை ஆகும். இது பதவி, செல்வம், வலிமை, புகழ் போன்ற பல மாயாக் கருவிகள் மூலம் உடல், மனம், உள்ளத்தில் புகுந்து விடும், பதவி மூலம் புகும் ஆணவத்திற்கு "மிருக துகம்" என்று பெயர். மிருக துர்குணங்கள் உள்ளே புகுந்தால் மனிதனைப் பாடாய்ப் படுத்திவிடும்.

இந்த ஆணவ இழையானது மிருக துகமாக வெண்மையான நூலிழை ஒளி போல உட்புகும். இப்பதவி அகந்தையே பல குற்றங்கள், தீவினைகள், பாவங்களுக்குக் காரணமாகின்றது. இந்த ஆணவத் தீயை மாய்க்க வல்லவரே ஜல பரிபாலன தேவசக்திகள் நிறைந்த அப்பு பைரவ மூர்த்தி ஆவார்.

அப்பு பைரவ மூர்த்தி!

ஆணவம், அகந்தையால் திரிந்த துரியோதனன் மாய அரண்மனையில் நீரைத் தரையென மிதித்து ஏமாந்ததும், நீரற்ற நிலையென எண்ணி நீர்த் தரையில் சறுக்கி விழுந்ததும் மிருக துகம் அகந்தையால் தானே! இங்கு நீர் தானே துரியோதனின் ஆணவத்தை மாய்த்தது! எனவே புனித நீரால் ஆணவத்தை ஓரளவு அறுத்த சம்பவம் மகாபாரதத்தில் உண்டே! ஆகையால் நீர் சம்பந்தப்பட்டதே ஆணவத் தீயை அணைக்கும். இதற்கும் "அப்பு பைரவ மூர்த்தி" உற்பவித்தார்!

பஞ்ச பாண்டவர்கள்; சிபிச் சக்கரவர்த்தி, விஸ்வாமித்திரர், கார்கி போன்றோர் அப்பு பைரவ மூர்த்தியை உபாசித்து அளப்பரிய பலன்களைப் பெற்றனர். சமீப காலம் வரை கன்யாகுமரித் திருமண்ணில் வலம் வந்த மா அம்மையார் "அப்பு பைரவ மூர்த்தி" உபாசனையில் மிகச் சிறந்து பொலிந்தவர்! பைரவ சக்தி நிறைந்தவர்! இன்றும், என்றும் ஸ்ரீபைரவ பக்தராய், பைரவ லோக மஹரிஷினியாய்ப் பிரகாசிப்பவர். பல்லாயிரக் கணக்கானோரின் அகந்தை, ஆணவ மாயங்களை பஸ்மம் செய்து இன்றும் அடியார்களைக் காப்பவர்.

பெரும் பதவி, செல்வம், பெரிய படிப்பு, அழகு, வலிமை போன்றவற்றால் ஆணவந் தெரிக்கக் கூத்தாடுவோர் அப்பு பைரவ மூர்த்தியை வழிபட்டால் தான் ஆணவப் பேயிடமிருந்து விடுதலை பெற முடியும்!  இல்லையெனில் அகந்தையாற் பெரும் பாவங்கள் புரிந்து பெரும் பாவ மூட்டைகள் ஆகி விடுவர்.

அப்புத் தலத்தில் இருக்கின்ற பைரவ மூர்த்திகளின் வாகன மூர்த்திகள் யாவரும் "மதூளித முராரி" வகையைச் சார்ந்தவையாம். மூர்த்தி, தீர்த்தம், தலம் இவற்றுள் ஒவ்வொன்றாலும், பலவாறாலும் அனைத்தாலும் பிரசித்தி பெறும் தலங்கள் உண்டு. இவற்றுள் தீர்த்த மகிமையால் சிறப்புப் பெறுபவை அப்புத் தலங்களாகின்றன.

எட்டாம் தேதி; அஷ்டமி திதி,  மிருகசீரிஷம், ஆயில்யம், சுவாதி போன்ற நாட்கள் அப்பு பைரவ மூர்த்திக்கு உகந்தவை ஆதலின் இந்நாட்களில் அப்புத் தல பைரவ மூர்த்திக்கும், அவர்தம் "மதூளித முராரி" வாகனத்திற்கும் பலவிதக் காப்புகளும், அபிஷேக ஆராதனைகளைச் செய்து வழிபடுவதால்,  எம்.டி, ஜி.எம், கலெக்டர், சேர்மன், மந்திரி போன்ற பெரும் பதவிகளில் இருப்போர் ஆணவத்தில் அகப்படாது காக்கப் பெறுவர்.

முன் அட்டைப் படத்தில் காணப்படும் வகை நாய்களுக்கு சிசிர ருதுக் காலத்தில் (மாசி, பங்குனி) மருத்துவ உதவி செய்து நீராட்டி நாய்களுக்கு உரிய உணவுகள் அளித்து, புத்தாடைகள், தொப்பி இட்டு அலங்காரம் செய்திடுக! அவற்றை நல்ல வாகனங்களில் ஏற்றி கடற்கரை போன்ற இயற்கைக் காட்சிகள் மிளிரும், இயற்கை திளைக்கும் இடங்களுக்கு அழைத்துச் சென்று ஆனந்தப்படுத்திடுக! செல்லக் குழந்தைகளோடு அன்புடன் விளையாட வைத்து மகிழ்வடையச் செய்திடுக!

வைரவன்பட்டி

இதனால் பைரவ வாகன ப்ரீதி சக்திகளை மதூளித முராரி வழிவகை பித்ருக்கள், சற்குருமார்கள், ஆன்றோர்களை அடைந்து அகங்கார, ஆணவங்கள் களையப் பெற்று கோர்ட் வழக்கு, சொத்து, தாவாக்கள் நன்முறையில் தீரும் மற்றும் இழந்த பதவிகள் தார்மீக ரீதியாகக் கிட்டப் பெறும்!

அப்பு பைரவத் தலங்களில் பைரவ மூர்த்திக்கும், மதூளித முராரி வாகனத்திற்கும் வெண்ணெய்க் காப்பு இட்டு, அஷ்ட பைரவ தூபம் ஏற்றி வழிபடுக! நாய்களுக்குரிய பெயரில் அர்ச்சனை செய்து, வாசனையுள்ள உணவுப் பண்டங்களை (புதினா துவையல், பருப்புப் பொடித் துவையல், பிரிஞ்சி சாதம்) அன்னதானமாக அளித்து வர அப்பு பைரவ மூர்த்தியின் அனுகிரகம் கிட்டுவதோடு ஆடை சம்பந்தமான தொழில்களில் ஜவுளி, தறி, நெசவு, ஏற்றுமதி, இறக்குமதி, தையல், ஏம்பராய்டரி போன்ற தொழிலில் உள்ளோரும், உயர் பதவிகளில் உள்ளோரும், முதலாளிகளாக இருப்போரும் நலம் பெறுவர். பொதுவாக ஜீவ காருண்ய ரீதியாக ஆனந்தப்படுத்தும் பூஜை!  பைரவ சக்தியைப் பெற்றுத் தருவது!

இது பைரவ பூஜையின் ஓர் அங்கமாகும் இது படிப்பதற்கு முதலில் ஆச்சரியமாகத் தோன்றினாலும் நம் முன்னோர்களும் நாய்களாகப் பிறப்பு எடுத்திருக்கக் கூடும் என்று உணர்ந்திட்டால் இப்பூஜை விளக்கங்கள் நன்கு புரிய வரும். ஆணவ மாயையை அகற்றிட உதவும். பொதுவாக நாம் பெருமளவில் உதவி செய்து நன்றி மறந்தவர்களாய் ஏமாற்றிய‌வர்கள் நன்கு உணர்ந்து, திருந்தி தாம் ஏமாற்றிய பணத்தை, சொத்தை, பொருளை மனமாரத் திரும்பித் தர உதவும் பூஜையிது!  மதூளித முராரி லோகத்தைச் சேர்ந்த பித்ருக்கள், அஷ்டமி திதி தோறும் அப்பு பைரவ மூர்த்தி வழிபாட்டிற்காக பூலோகத்திற்கு வருகின்றார்கள்.

கும்பகோணம் அருகே சோழவிளாகம், திருவானைக்காவல், தலைச்சங்காடு, திருவிடைமருதூர், திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டி, பொன்னமராவதி, கோனேரிராஜபுரம், திருஏடகம் போன்ற தீர்த்தத் தலங்கள் அப்பு பைரவ மூர்த்தித் தலங்களாகும். இங்கு அஷ்டமியில் பைரவ பூஜைகளை நிகழ்த்திடுக.

மாசி அமாவாசை

மாசி அமாவாசைத் தலமே பித்ரு முக்தி நெடுங்குடியாம்

மகத்தான சிறப்புகள் கூடிய மாசி மாத அமாவாசைக்கு உரிய தலமாக விளங்குவதே நெடுங்குடிஸ்ரீகைலாசநாதர் சிவாலயத் திருத்தலமாம்! பித்ருக்களுக்கு உரிய முக்தி நிலைகளை அளிக்கக் கூடியது. ஆம், மனிதர்கள், தேவர்கள், பித்ருக்களுக்கென விசேஷமான முக்தி நிலைகள் பல உண்டு! காரைக்குடி அறந்தாங்கி மார்கத்தில், கீழாநெல்லிக் கோட்டையில் இறங்கி,  இங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் இருப்பதே அபூர்வமான அங்காரக ப்ருத்வி சக்திகளுடன் கூடிய நெடுங்குடித் திருத்தலம்! சிறு குழந்தைகள், வயதான பெரியோர்கள்; நோயுற்றோர், இருதய நோயுள்ளோர், சர்க்கரை நோயுள்ளோர், ஊனமுற்றோர் என அனைத்து வகையினரும் எளிதாக மேலே ஏறி வழிபடும் வண்ணம் இறைவனே தனிப் பெருங்கருணையுடன் (பிறவிப்) பிணி தீர்க்கும் அருஞ்சிவனாய்க் குனிந்து அளித்துள்ள சிறு மண் குன்றுத் தலம்! பணிந்து போற்றுவது நம் கடமை! ஏனைய விளக்கங்களை ஸ்ரீஅகஸ்திய விஜயம் (நவம்பர் 2001 டிசம்பர் 2001) இதழ்களில் காண்க! ஆலயத்தின் நாக தீர்த்தமும், அருகில் உள்ள சர்ப நதிக்கரையும் தர்ப்பணச் சிறப்புடையவை! சர்ப நதியில் நீரில்லை எனில் நீர் கொண்டு நதிக் கரையில் தர்ப்பணம் அளித்திடுக! தற்போது நெடுங்குடியில் கிரிவலப் பாதை சீர் அமைக்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம்! திருஅண்ணாமலை போல் அமாவாசை, பௌர்ணமி இரண்டுக்குமான மகத்தான கிரிவலத் தலமாகிட பக்தர்கள் கிரிவல சத்சங்கக் குழுக்கள் அமைத்து அருட் பணி ஆற்றிட வேண்டும்!  நெடுங்குடி போல் ஒரே தலம் பௌர்ணமிக்கு, அமாவாசைக்குமாகச் சிறப்படைவது அதுவும் மலைத் தலமாக, அதிலும் சிறப்பான கிரிவலத்தலமாக அமைதல் மிகவும் அரிதே! பைரவ மகரிஷி, மண் சுமந்தான் சித்தர், தன்வந்த்ரீ சித்தர், காலவ மஹரிஷி, அமாவாசைச் சித்தர் போன்றோர் அமாவாசை தோறும் தூலமாகவும், சூட்சுமமாகவும், அமாவாசையில், குறிப்பாக மகா சிவராதிரியில் கிரிவலம் வரும் அதியற்புதத் தலம்!

உத்தம தெய்வீக நிலைகளில் ஒரு அமாவாசைக்கும் அடுத்த பௌர்ணமிக்கும் இடையே உள்ள காலத்தைப் பிரளய கற்பம் என்றும் சொல்வர். இதில் பல வகைகள் உண்டெனினும் கலியுகத்திற்கு உரித்தானதாக பிராணப் பிரளய கற்பம் அமைகின்றது. இதனால் தாம் சித்தர்கள் தம் பரிபாஷையில் இத்தலத்தை நீள்நெடுங்குடி நிலைத்திடப் பிரளயமே என்று உரைக்கின்றனர்! அதாவது பிரளய முடிவையும் கடந்து, பிரளய கற்ப காலத்தையும் கடந்து, இத்தலத்தில் நிறைந்திருக்கும் கைலாய சக்திகளால் ஜீவன்கள் (குடிகள்) இத்தலத்தில் நெடுங்காலம் வாழும் தன்மை உடையன என்பதால் நெடுங்குடி ஆயிற்று. கலியுகத்தில் மூச்சை ஒட்டி உயிர் வாழ்க்கை அமைவதால் நாம் வாழும் கலியுகத்திற்கான இந்தப் பிராண பிரளய கற்பத்தின் முதற்காலம் (பிராணன் - மூச்சு) மாசி சிவராத்திரியை அடுத்த அமாவாசையன்று நெடுங்குடி போன்ற கைலாய கால சாங்க்யத் திருத்தலங்களில் தொடங்கி அடுத்த மகா சிவராத்திரிக்கு முன் நிறைவுறும்! பிறகு வருடா வருடம் வேறு வகை பிராணப் பிரளய கற்பங்கள் அதாவது பிராண சக்திகள் தொடங்கும். இவ்வாறு பூமி ஜீவன்களின் பிராண (மூச்சு) வகைகள் மாறுவதால்தான் வயதாகும் அம்சம் ஏற்படுகின்றது. பிராண கற்ப நிலையைக் கடந்தோர் நெடுங்குடியினர் (தீர்க தரிசிகள், சிரஞ்சீவிகள்) ஆகின்றனர். இவ்வரிய தேவ நிலையைத் தரவல்லதே நெடுங்குடியாம்! எனவே தாம் ஆஞ்சநேயர், பதஞ்சலி, நாரதர், மார்கண்டேயர் போன்ற மூர்த்திகளும், சிரஞ்சீவிகளும், மகரிஷிகளும், யோகியரும் மகா சிவராத்திரியில் இங்கு திரண்டு சூக்குமமாகவும், தூலமாகவும் பிரளய கற்பப் பூஜையை நிகழ்த்துகின்றனர்.

எனவே மாசி சிவராத்திரியை அடுத்த அமாவாசை, அடுத்த பௌர்ணமி.....இவ்வாறாக பன்னிரெண்டு (தொடர்ந்து வரும்) அமாவாசை, பௌர்ணமித் திதிகளில் நெடுங்குடியில் இறைவனைத் தரிசித்து, அமாவாசைத் தர்ப்பண பூஜையுடன், குறித்த ஆலய கோபுர தரிசனங்களுடன் உத்தம பக்தியுடன் கிரிவலம் வருவோர் பிராணப் பிரளயத்தைக் கடந்த தீர்க சக்திகளையும் மகத்தான நல்வரங்களையும் பெறுகின்றனர்! மற்ற இடங்களில் கிரிவல மலைக் கோண தரிசனங்கள் சிறப்புறும். இங்கோ கிரிவலத்தில் பல்வகை கோபுர தரிசனங்கள் பிரதானமாவதும் தனிச்சிறப்பாம். லௌகீகமாக கோர்ட் வழக்குகள், உறவுப் பகைமை, நிதி நெருக்கடி, தாம்பத்ய வாழ்க்கை விரிசல்கள் போன்ற நீண்ட காலத் துன்பங்களுக்குத் துரித நிவாரணம் தருவதாகும். குறைந்தது மூன்று அமாவாசை, பௌர்ணமிகளில் தொடர்ந்து கிரிவலம் வருதலால் நற்பலன்கள் கைகூடுவதைக் கண்கூடாகக் காணலாம்!

பின்னமான பழைய சுவாமிப் படங்களை விஸர்ஜனம் செய்யும் முறை!

சீர் செய்ய முடியாத அளவு பின்னமான பழைய சுவாமி படங்கள், கிழிந்து போன படங்களைச் சேர்த்து வைத்து மாசி மாத மஹா சிவராத்திரியின் போது ஸ்ரீசித்ர கணபதி ஹோமத்தில் அக்னியில் குறித்த மந்திரங்களை ஓதி இட்டிட வேண்டும். இறைவன் சிலா ரூப, கல் வடிவ, ஸ்படிக, மரச் சிலை இவ்வாறான பல வடிவங்களில் இருந்து மஹா சிவராத்திரி அன்று ஜோதி ரூபமாகத் தோன்றுவதால் பத்ர வடிவில் (ஓவிய, வண்ணக் காகித வடிவம்) உள்ள தேவ உருவும் அக்னியில் இணைகின்ற ஐதீகத்தையே இது குறிக்கின்றது.

ஓம் சித்ர ரூபேஸ்வராய வித்மஹே பஸ்மாக்னி க்ருபாய தீமஹி
தந்நோ விஸர்ஜன சாந்தி ப்ரசோதயாத்

- என்று ஓதி பின்னமான சுவாமிப் படங்களை ஹோம ஆஹூதியாக அக்னியில் பசு நெய்யுடன் சேர்த்து இட வேண்டும்!

பின்னமான சுவாமிப் படங்களை அக்னியில் இடுவது என்பது மாசி மாத மஹா சிவராத்திரியின் போது குறித்த மந்திரத்தை ஓதி இடுதலாக மட்டுமே அனுமதிக்கப்படுகின்றது. இந்த அக்னி பஸ்ம அனுபூதியாகவே சிவலோகச் சித்திரா பூஷண தேவிகள் இவ்வாறான (பின்னமான) சுவாமிப் படங்களை அக்னி மூலமாக ஏற்கின்றனர்.

மற்ற நாட்களில் கண்டிப்பாக இதைச் செய்யக் கூடாது!

கண்ணீர் அஞ்சலி காகிதத்தில் வேண்டாம்....!

தற்காலத்தில், எவரேனும் இறந்தால் அவர் பெயரில் ஒரு "கண்ணீர் அஞ்சலி" என்று ஒரு போஸ்டர் அடித்து, ஊரெங்கும் இறந்தவரின் விவரங்களை அறிவிக்கின்றனர். இது ஊருக்கும் உலகிற்கும் ஒரு அறிவிப்பாகவும், விளம்பரமாகவும் தோன்றினாலும் இதனால் ஏற்படும் பின்விளைவுகளை, தீமைகளைப் பலரும் அறிவது கிடையாது. நம் மூதாதையர்கள் இத்தகைய அறிவிப்பு, விளம்பரத்தைச் செய்ய விரும்பவில்லை. காரணம் என்னவெனில், இந்த அறிவிப்பைப் பார்த்து நள்ளிரவில் பல தீய மந்திரவாதிகள் மயானத்திற்குத் திருட்டுத்தனமாக வந்து பிரேதத்தை வைத்துச் சில வாமன தாந்த்ரீக மந்திரங்களைப் பிரயோகம் செய்து, பிரேத உறுப்புகளைப் பயன்படுத்தி, கபால ஓடு, பாத எலும்பு போன்றவற்றை வெட்டி எடுத்துப் பல சொற்ப சித்திகளைக் கையாண்டு தீய வழிகளில் பயன்படுத்தி விடுவார்கள். இதனால் இறந்தவரின் குடும்பத்திற்கு பலத்த பிரேத சம்பவங்கள் சேர்ந்து விடும்.

எனவே உற்றம், சுற்றம் தவிர அறியாதோர் எவருக்கும் இறப்புப் பற்றிப் போஸ்டர் மூலம் அறிவித்தல் நல்லதல்ல!  ஏனெனில் சடலத்தை மயானத்தில் கிடத்திவிட்டுச் சுற்றமும், உற்றமும் அகன்ற பின்னர்தான் அப்பிரேதத்தைத் தவறான முறையில் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் நிறைய ஏற்படுகின்றன. மேலும் சடலம் இல்லத்தில் கிடக்கும் போதே தவறாகப் பயன்படுத்த நிறைய வாய்ப்புண்டு. எவ்வாறெனில், இறந்தவர் மீது படுத்துக் கொண்டு துக்கத்தால் அழுது கதறி அழுவது போல் நடித்து, பிரேதம் மேல் வீழ்ந்து மந்திரப் பிரயோகம் செய்து பல எளிய வழியில் அற்பமான பல சித்திகளை அடைந்து விடுகின்றனர். பிரேதத்தின் மீது அமர்ந்து ஜபிக்கப்படும் பல சக்தி வாய்ந்த வாமன மந்திர தந்திரங்கள் உண்டு. இவை உடனேயே அபரிமிதமான பலன்கள், சித்திகளை அளிக்கக் கூடியவை.

எனவே, இத்தகைய தீய மந்திரவாதிகளுக்கு, பில்லி, சூனியம், வைப்போர்க்கு இடம் கொடாமல் இனியேனும் கண்ணீர் அஞ்சலி எனும் தலைப்பில் இறப்பு பற்றிய விளம்பரம் செய்யும் தவறான வழக்கத்தைக் கைவிடல் வேண்டும். இத்தகைய தேவையற்ற முறைகளே பிண தோஷங்களுக்கு வழிவகுக்கின்றன. தீய வழியில் செல்கின்ற மந்திரவாதிகளுக்கும் தேவையற்ற சித்திகளை அளித்துச் சமுதாயத்தையும் பாதிக்கின்றன என்பதை இனியேனும் உணருங்கள். இதே போல் பிணத்தைச் சுமந்து செல்லும் போது மலர்களை வாரித் தூவி இறைக்கவும் கூடாது. இப்பூக்களை மிதிப்பவர்களுடைய தீவினைகளும் பிரேதத்தைத் தாக்கி, சந்ததிகளையும் பாதிக்கும். இத்தகைய பிண தோஷப் பூக்கள் மிதிப்பதால் இறந்தவரின் தீய கர்மங்களும் இப்பூக்களை மிதிப்பவரையும் அவர் குடும்பத்தவரையும் பாதிக்கும்.

தவறான வழக்கம் சந்ததிகளைத் துன்பத்தில் ஆழ்த்தி விடும்....!

எவரேனும் இறந்து விட்டால் அக்குடும்பத்தினர் ஒரு வருடத்திற்குக் கோலம் போடக் கூடாது. எந்தக் கோயிலுக்கும், மலைத் தலத்திற்கும் போகக் கூடாது. பண்டிகைகள் கொண்டாடக் கூடாது என்ற தவறான வழக்கங்கள் தற்போது நிலவி வருகின்றது. இறப்பு நேரிட்ட நாளிலேயே கூட அக்குடும்பத்தினர் கோயிலுக்குச் சென்று வழிபடுவதிலும், வீட்டில் கோலம் இடுவதிலும் எவ்விதத் தவறும், சாஸ்திர முரண்பாடும் கிடையாது. இடைச் செருகலாக வந்த இத்தவறான வழக்கமே பல குடும்பத்தவர்களை ஒரு வருட காலம் கோயிலுக்குச் செல்ல விடாமல் தடுப்பதோடு, அக்குடும்பத்தினருக்கு எவ்வித ஆலய வழிபாட்டுப் பலாபலன்களையும் வரவிடாது ஓராண்டிற்குத் தடுப்பதால் அக்குடும்பத்தனரின் பல துன்பங்களுக்கு நிவர்த்தி கிட்டாமல் போவதுடன் ஆன்மீகத் தற்காப்பு சக்தியும் குறைந்து பலத்த பிரச்னைகளும் தோன்றி சந்ததிகளை அலைக்கழித்து விடும்!  இந்த ஒரு வருடத்திலும் பண்டிகைகள் கொண்டாடுவதிலும் எவ்விதத் தவறும் இல்லை. பண்டிகைகளினால் வரும் புண்ய சக்தி சேகரிப்பையும் இழத்தலும் தவிர்க்கப்படும்.

அவ்வாறு துக்கத்தை ஒரு வருட காலம் அனுஷ்டிப்பதானால் டீவி, சினிமா, செய்தித்தாள் படித்தல், புது ஆடைகள், ஸ்வீட்டுகள், காபி, டீ, ருசிகர உணவுகள், கேளிக்கைகளை ஒரு வருட காலம் எவரேனும் ஒத்தி வைக்கின்றார்களா? இறைவனா ஓராண்டு தன்னைக் காணலாகாது என்று விதிப்பார்? இறைப் பகுத்தறிவுடன் சிந்தியுங்கள்! துன்பங்கள் மலை மலையாய்ப் பெருகும் கலியுகத்தில் அதுவும் பல பூஜைகளும், வேத சக்திகளும் வெகு வேகமாக மறைந்து வரும் கலியுகத்தில், "ஓராண்டு கோயிலுக்குச் செல்லலாகாது"  என்ற அறியாமையினால் தோன்றிய தவறான எண்ணத்தைக் கட்டாயம் சமுதாயத்தில் இருந்து அகற்றியே ஆக வேண்டும்.

"மாயைச் சாயை" விளக்கங்கள்

ஒருவர் இறந்தவுடன் "சரீரச் சட்டையை மாறுதலுக்குத்" தயாராகிறார். சடலத்தில் இருந்து வெளி வந்து சூட்சுமமான, சாதாரணமாகக் கண்ணுக்குத் தெரியாத "மாயைச் சாயை" என்னும் உடலைத் தரிக்கின்றார். மாயைச் சாயையிலும் பல சரீரங்கத் தோற்றங்கள், வடிவுகள் உண்டு. எவ்வாறு ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு உருவில் இருக்கின்றாரோ, இதே போல இறப்பிற்குப் பின் மாயைச் சாயையில் ஒவ்வொருவரும் அவரவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு வடிவை அடைகின்றார்.

"மாயைச் சாயை" நிலையிலும் நெடு நேரம் ஆவியுடலம் இருத்தல் கூடாது. "மாயைச் சாயை" நிலையும் மாறிக் கொண்டே இருக்கும். உடலை விட்டு உயிர் பிரிந்த உடனேயே தட்ப வெப்பம், நேரம், காலம் எல்லாமே மாறுபடும். எனவே சடலத்தைக் கூடிய சீக்கிரத்தில் தகனம் செய்து விட வேண்டும். இறந்த நேரத்திலிருந்து ஆறு மணி நேரத்திற்குள் தகனம் நடைபெறுதல் நல்லது.

* இறந்த நேரத்தில் இருந்து மூன்று மணி நேரம் வரை உள்ள மாயைச் சாயை ஆவி உடலுக்கு துரிதாதிகா (தமிழில் பூமராட்டி) என்றும்
* மூன்று மணி நேரம் முதல் ஆறு மணி நேரம் வரை கடிகத்துரா (கனலோட்டி) என்றும்
* ஆறு மணி நேரம் முதல் 9 மணி நேரம் வரை ரியாம்பி (ரணமாட்டி) என்றும்
* 9 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை புலமது (புரட்டிமா) என்றும் பெயர்.

இவ்வாறு சடலமாகக் கிடக்கின்ற நேரத்திற்கு ஏற்றாற்போல் சிதையில் சேர்க்க வேண்டிய பொருட்களும் தகனச் சடங்குகளும், பத்து காரிய சடங்கு முறைகளும் மாறுபடும். இத்தகைய இறப்பின் ரகசியங்கள், மரணத்திற்கு அப்பாற்பட்ட வாழ்வு, சரீர இலக்கணங்கள், பத்துச் சடங்கு முறை விளக்கங்களைத் தக்க சற்குரு, பெரியோர்களிடம் கேட்டு அறிந்து கடைபிடித்திடுக!

சிதையில் தகனம் செய்யும் போது வானில் தோன்றும் மேக மண்டல அமைப்பைக் கொண்டு இறந்தவரின் "மாயைச் சாயை" வகையையும் கர்ம வினைகளின் தன்மையையும் நன்கு அறிந்திடலாம்.

மரணத்திற்குப் பின் மாட்டும் மாயைச் சாயைச் சட்டை!

ஒருவர் இறந்த நேரத்தில் இருந்து ஆறு மணி நேரத்திற்குள் தகனம் செய்து விடுதலே தக்க ஆன்ம சாந்திக்கு வழி வகுக்கும். ஒருவர் இறந்தபின் அவருடைய உயிர்க் கலயமானது "மாயைச் சாயை" என்ற கண்ணுக்குத் தெரியா உடலைப் பெறுகின்றது. இது சற்று நேரமே நீடிக்கும். இது ஒரு வித ஆவி நிலை போல் ஆனதாகும். மது, தீய மங்கை வாசம், புகைபிடித்தல், கொடிய பாவச் செயல்களைப் புரிவோர் இந்த மாயைச் சாயை நிலைகளை அடையும் முன்னரேயே, இறந்த உடனேயே ஒரறிவு, ஈரறிவு போன்ற ஜீவன்களாய் ஒரு அடி உயரத்திலான விண் பயணம் கூட இல்லாது இறந்த உடனேயே மீண்டும் பிறவிச் சூழலில் சிக்கிக் கொள்கின்றார்கள் அல்லது கொடிய ஆவி ரூபத்தில் அலைந்து தக்க மாயைச்சாயை ரூபம் கிட்டாது துன்புறுவார்கள்.

இறந்தவுடன் பொதுவாகக் கிட்டுகின்ற "மாயைச் சாயை" உடலுக்கு இரண்டு வித அவஸ்தைகள் உண்டு. முதலாவதாக தானெடுத்த மனித உடலின் சரீரம் அக்னிக்கு இரையாகும் வரை, சடலக் காட்டில் உள்ள தச வாயு பந்தங்கள் அக்னியில் கரையும் வரை இந்த அவஸ்தை நீடிக்கும். எனவே தான் தகனக் கிரியை துரிதமாக நடைபெறுவது வலியுறுத்தப்படுகின்றது.

இரண்டாவது அவஸ்தையாக "மாயைச் சாயை" உடலத்தில் இருந்து விடுபட்டு அவரவர்க்கு உரித்தான ஆவி யாத்திரை, ஆவி சங்கமம் போன்ற நிலைகளுக்குச் சென்றாக வேண்டும். உண்மையில் 10, 13 நாள் இறப்புச் சடங்குகளும் இறந்தவருடைய மாயைச் சாயை உடலிற்காக, உத்தம நிலைகளை அடைவதற்காக ஏற்படுத்தப்பட்டிருப்பவை ஆகும்.  இவற்றில் அசிரத்தையாக இருந்தால் பித்ரு லோகத்திற்குச் செல்கின்ற மூதாதையர்களே இல்லாது அனைவரும் பிறவித் தளைகளில் சிக்கிக் கொண்டு பரிதவிப்பர்.

தகனக் கிரியைக்கான முழு மந்திரங்கள், அரிய பிரயோகங்களை ஒழுங்காக நிறைவேற்றுவோர் அருகி விட்டதால், கலியுகத்தில் அன்னதானம், ஆடைதானம், எண்ணெய் தானம், கிரிவலம், தர்ப்பணம் போன்ற தான தர்மங்களும், பூஜைகளும் செய்வதால் தான் மூதாதையர் கரை சேர்வதோடு சந்ததிகளுக்கும் நல்வாழ்வு அமைந்திடும்.

நகைகளோடு நல்தகனம்!

தகனச் சடங்கு முறைகள் காலத்திற்கு ஏற்றபடி மாறுபாடு அடையும். இறக்கும் போது உடலில் எவை இருந்தனவோ அவற்றோடு தகனமாக வேண்டும் என்பதே நியதியாகும். ஏனென்றால் "சிவம்" பிரிந்தவுடன் உடல் "சவம்" ஆகின்றது. அந்த வளையக் கொக்கிதாம் ஆன்மச் சின்னத் தத்துவமாகும். மேலும் சவமானவுடன் அந்த சடலத்தில் இருப்பவை "பிண தோஷங்களைப்" பெறுவதால் நகைகள், ஆடைகளை தக்க முறையில் "பந்தனம், பஸ்மம், பாடகம்" செய்திட வேண்டும். அக்காலத்தில் பெரியோர்கள் தங்கள் "இறுதியை" இறையருளால் முன்னரேயே உணர்ந்து நகைகள் போன்றவற்றை உடலில் இருந்து எடுத்து விட்டு பற்றற்று இருந்திட்டனர். சுமங்கலியாக இறப்பவர்களுக்கு அவர்கள் உடலில் உள்ள அனைத்து ஆபரணங்களோடு தகனம் ஆவது தான் சிறப்புடையது. ஆனால் கலியுகத்தில் யாருக்கு இந்த தார்மீக உள்ளம் இருக்கின்றது?  தான, தர்மமாகட்டும் என்று துணிந்து இறந்த நிலையில் ஒருவர் கொண்ட நகைகளுடன் அப்படியே தகனம் செய்வதும் நல்வழியே!

சுமங்கலியாக இறந்த பெண்களின் மாங்கல்யத்தை அப்படியே விட்டுவிட வேண்டும் என்று நியதி என்றாலும் கலியுகத்தில் யார் இதனை பின்பற்றுவார்கள்?  "சுமங்கலியின் மாங்கல்யத்தை எடுத்து வைத்து உருக்கி மேலும் மாங்கல்யங்கள் செய்வது புனிதமானது" என்றும் "கணவனுக்கு 70, 80 வயது ஆகி இறந்தால், ரிஷி பத்னி என்ற முறையில் அவர்களுடைய மனைவிகள் திகழ்கின்றனர்" என்றவாறு நடைமுறை வழக்கங்கள் நிலவுகின்றன. இவற்றில் பல சாங்கியங்கள் உண்டு. அனைத்தையும் எழுத்துப் பூர்வமாக விளக்க இயலாது. பொதுவாக இவை பற்றித் தக்க பெரியோர்களிடம் விளக்கங்கள் பெற வேண்டும். கணவனை இழந்தவர்களுடைய பொன் மாங்கல்யத்தை மீண்டும் பயன்படுத்தாது, தக்க முறையில் "விஸர்ஜனம்" செய்யும் முறையைப் பெரியோர்களிடம் முறையாகக் கேட்டு அறிக.

சுமங்கலிகளாக இறந்து அவர்கள் உடலில் இருந்து எடுத்த மாங்கல்யம், நகைகளை என்ன செய்வது கணவனை இழந்தோரிடம் பெற்ற மாங்கல்யம், நகைகளை என்ன செய்வது என்பதற்கான விளக்கங்களை அவரவருடைய கர்ம பரிபாலன நியதிகளுக்கு ஏற்ப தக்க சான்றோர்களிடம் அறிந்து வழிமுறைகளைப் பெறுதல் வேண்டும். குந்தி தேவியும் சில அறவழி முறைகளை அளித்துள்ளனள்.

சடலத்திற்கு மாலை இடுதல் தவறு!

சடலத்திற்கு இறுதி மரியாதை என்றால் மாலைகளை மாட்டி விட்டுப் பிறகு தூக்கி எறிந்து விடுவது அல்ல!  அருகில் நின்று பிரார்த்தனை செய்து ஈமக் கிரியைகளுக்கு உதவுவதாகும். இறுதி மரியாதை செலுத்துவது என்றாலே மாலைகளை அணிவித்தல் என்ற தவறான வழக்கம் நடைமுறையில் தொற்றிக் கொண்டு வந்து விட்டது. திருமணத்தின் போது மட்டுமே மானுடர்கள் சுபமங்கள காரியமாக இறைவனுக்கு அணிவித்த மாலைகளை அணியலாம். ஆனால் சவத்திற்கு மாலையிடுதல் என்பது சற்றும் ஒவ்வாதது. இந்தத் தவறான வழக்கம் மரண தோஷங்களையே வளர்க்கும்! இனிய மலர்கள் எப்போதும் இறைவனுக்கே!

அபூர்வமான வேத சக்திகள் கொண்ட திருக்கோயில்

திருவேற்காடு சிவாலயம் ஓர் அபூர்வமான வேத சக்திகள் ஒளிர்விடும் திருக்கோயிலாகும். ஸ்ரீவேதபுரீஸ்வரரின் குமாரனாகப் பிரகாசித்த ஸ்ரீமுருகன், அம்மையப்பனுக்கே ஓங்காரப் பொருளுரைக்கும் வண்ணம் தனக்கு வேத சக்திகளை அளித்த அம்மையையும், அப்பனையும் சூரபத்மனை வென்றவுடன், வழிபட்ட இடமே சென்னை-திருவேற்காடு ஸ்ரீவேதபுரீஸ்வரர் ஆலயம் ஆகும்.

ஸ்ரீமுருகனே நேரில் வந்து வழிபட்ட தலமாதலின் ஞானமயப் பிரகாசம் பூரிக்கும் பிரகாரத்தை உடையது!  இங்கு பிள்ளைகள் திங்கள், பிரதோஷம், மாத சிவராத்திரி தினங்களில் காலில் திருவெண்டயம் அணிந்து அடிப் பிரதட்சிணம் செய்திடலாம் பாத ரேகைகள் மூலமாக வேத சக்திகள் உடல் நாளங்களில் நிரவி நல்ல ஞாபக சக்தி ஏற்படும். சூரபதுமனுடன் வெம்போர் புரிந்து, வென்று, வேத சக்திகள் பூரித்திட வந்து நின்ற ஸ்ரீபால முருகனுக்கு இங்கு தாம் (சென்னை-திருவேற்காடு) சிவபெருமானாகிய ஸ்ரீவேதபுரீஸ்வரர் அசல் குருபுனித சுப்பிரமண்ய சுவாமியாய் விளங்கிட அருள்பாலித்தார்.

பௌர்ணமியின் அமிர்த சக்திகள் பெற....

தேவர்களுக்கு மட்டுமே அமிர்தம் கிடைத்ததா? நமக்கும் அமிர்த சக்தி கிட்டாதா? ஒவ்வொரு பௌர்ணமியிலும் பூலோக ஜீவன்களுக்காக ஸ்ரீஅமிர்த தன்வந்த்ரீ மூர்த்தி அமிர்தக் கலயத்துடன் சந்திர மண்டலத்தில் தோன்றி நிலவொளி மூலம் அமிர்தத்தை வர்ஷிக்கின்றார். பூலோகமெங்கும் அமிர்தக் கிரணங்கள் மழை போல் பொழிந்தாலும் அவற்றைப் பெறுதற்கான ஆன்ம சாதனங்களை, ஆன்ம சக்தியை மனிதன் பெற்றிருக்க வேண்டுமே! குடிதண்ணீர்ப் பஞ்சம் என்றால் குழாயில் நீர் வருகையிலோ, தண்ணீர் லாரி வரும்போதோ நீரைப் பிடித்து வைக்கப் பாத்திரங்கள் வேண்டுமல்லவா? இல்லத்திலாவது அமிர்த சக்தியைத் தாங்கும் இறைச் சாதனங்களை வைத்திருக்க வேண்டுமல்லவா? எனவே இறைவனே அருளியவாறு, திருஅண்ணாமலை, திருவக்கரை, தேனிமலை போன்ற இடங்களில் மலைப் பாறைகளில் தீர்த்தங்களில், கோபுரக் கலசங்களில் பௌர்ணமிக் கிரணங்கள் பிரதிபலித்து ஜீவன்களை அடைகின்றன. இருப்பினும் அனைத்துப் பௌர்ணமிகளிலுமா அனைவரும் இத்தகைய இடங்களுக்குச் செல்ல முடிகின்றது?

பட்டுக்கோட்டை அருகே மதுக்கூரில் உள்ள ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் இத்தகைய அமிர்த கிரணங்களை கிரகிக்கும் சக்திகளை, இறைச் சாதனங்களில் பதித்து அளிக்கின்றார். இங்கு பௌர்ணமி நாளில் ஸ்ரீஅமிர்தகடேஸ்வர லிங்கத் திருவடிகளில் சசிமுத்து, பஞ்ச முக ருத்ராட்சம், ஸ்படிக குருபாதம், மாலை மணிகள் போன்றவற்றை அர்ப்பணித்து அமிர்த சக்தி நிறைந்த தேன் கூடிய பால், பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றைத் தானமாக அளித்துவர, இத்தான தர்ம சக்திகளும் இறைச் சாதனங்களில் கூடிடும். பிறகு இவற்றை இல்லத்தில் வைத்துப் பூஜித்து வர, குறித்த அமிர்த சக்திகளைப் பெற்று தீர்க சுமங்கலித்வம், நீண்ட ஆயுள், நல்ஆரோக்யம் பெற்றிடலாம். மதுக்கூர் அமிர்தகடேஸ்வரர் நம் இல்லத்தில் அமிர்தப் பொழிவை அள்ளித் தரும் அற்புத லிங்க மூர்த்தி ஆவார்!

இறைத் திருமணக் கோலம் காண்பீர்!
திருமண வாழ்வின் இன்னல்கள் தீர்ப்பீர்!

"தென்புலம் ஏகிடுவாய்!" என்று இறைவன் உரைத்து, அகஸ்தியர் பெருமானைத் தமிழ்நாட்டிற்கு அனுப்பி எண்ணற்ற தலங்களில் அவருக்குத் தம் திருமணக் கோலத்தினைக் காட்டி அருளினார். ஸ்ரீஅகஸ்தியருக்கு மட்டும்தானா இத்திருமணக் காட்சி? ஸ்ரீஅகஸ்தியர் மூலமாக நமக்கும் இறைவன் பல அரிய திருமணக் கோல தரிசனங்களைத் தந்து திருமணத் தடங்கல்களையும், திருமண வாழ்க்கையில் நிறைந்திருக்கும் தோஷங்களையும் தீர்க்கின்றார்.

அவசரக் கோலத்தில் நடந்தது, பெற்றோர் சம்மதமின்றி நடந்தது, கல்யாணச் சத்திர அசம்பாவிதங்கள், மந்திரக் குறைபாடுகள், கடுமையான நோய்களில் வாடும் குடும்பத்தில் சம்பந்தம் கொள்தல், ருது கால தோஷங்கள் போன்றவற்றின் காரணமாக திருமண வாழ்வில் எண்ணற்ற துன்பங்கள் ஏற்படும். இவை ஒவ்வொன்றையும் தீர்த்திடவே பல ஆலயங்களிலும் இறைவன் திருமணக் கோலத்தோடு காட்சி தருகின்றார்.

திருமணம் நிகழ்ந்த கல்யாணச் சத்திரத்தில் எத்தனையோ அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்கக் கூடும். இவையும் தம்பதிகளைப் பாதிக்கும். இதனால் குடும்பத்தில் நற்காரியங்களை நல்ல நேரத்தில் நிகழ்த்த முடியாமல் பொங்கல், வரலட்சுமி விரதம் போன்ற விரதங்களைக் கடைபிடிக்க முடியாமல் போய்விடும். இவற்றிற்குப் பரிகாரம் அளிப்பதாக கும்பகோணம் திருநாகேஸ்வரம் அருகில் உள்ள தண்டந்தோட்டம் ஸ்ரீநடனபுரீஸ்வரர் ஆலயம் திகழ்கின்றது. ஸ்ரீஅகத்தியருக்குத் திருமணக் கோலம் தந்து இறைவன் ஆட்கொண்ட அற்புதத் தலம். இத்தலத்தின் சிறப்பே திருமணத் தடங்கல்கள் தீர்வதுடன் திருமண வாழ்வின் தடங்கல்களையும் தீர்ப்பதாகும். இங்கு சந்தனம், புனுகு, ஜவ்வாது கலந்த அரசு, ஆல், வேம்பு சமித்துக்களைக் கொண்டு வெள்ளி, அனுஷம், சுவாதி நட்சத்திர நாட்களில் ஹோமம் வளர்ப்பதாலும் குங்குமச் சிமிழ்களில் முழுவதுமாக குங்குமம் நிரப்பி ஜாதி, இன, பேதமின்றி 21 சுமங்கலிகளுக்குத் தானம் அளிப்பதாலும் மேற்கண்ட வகையில் திருமண வாழ்வில் ஏற்படுகிற பிரச்னைகள் தீர்வு பெறும்.

ஸ்ரீமுருகப் பெருமாள் திருக்கழுக்குன்றம்

நோய்க்கான மருந்துகள் நன்முறையில் செயல்பட.....

நோயால் வரும் துன்பங்களை விட நோயோடு கூடிவரும் துன்பங்களைத் தாங்க முடியாது பலரும் தவிப்பர், உணவு சமைத்தல், பண நெருக்கடி, மருந்துகள், தக்க மருத்துவர்கள் கிட்டாமை, மருந்துகளின் பக்க விளைவுகள் (side effects), தட்ப வெப்பநிலை, உறவினர்களின் பொறாமை இவ்வாறாக நோயையும், நோய் தரும் நிலைகளையும் சமாளித்திடவே வாழ்க்கை முழுதும் கழிந்து விடும். நோய் நீக்கும் மருந்துகள் நன்முறையில் செயல்படவும், பக்க விளைவுகளால் மேலும் பல நோய்களையும் பெற்றிடாமல் காத்திடவும் தக்க மருந்துகளுடன் ஸ்ரீஇந்திராக்ஷீ கவசம், சம்பந்தரின் திருநீற்றுப் பதிகம், ஸ்ரீவைத்ய நாதாஷ்டகம், ஸ்ரீதன்வந்த்ரீ காயத்ரீ மந்திரம் ஓதியவாறு திருச்சி அருகே தேவதானம் ஸ்ரீவைத்யநாதர் ஆலயத்தில் செவ்வாய் மற்றும் அஸ்வினி, ஆயில்ய நட்சத்திர நாட்களில் அங்கப் பிரதட்சிணம், அடிப் பிரதட்சிணம் செய்பவர்கள் அதி அற்புதமான வகையில் நிவாரணம் பெற்றிடலாம். ஏழைக் கர்ப்பிணிகளுக்கு உரிய உணவு, உடை மற்றும் தேவையானவற்றை அளித்தல் தரிசனப் பலன்களை மேம்படுத்தும்.

உமையவளுக்கு சர்வேஸ்வரன் ஓங்காரப் பொருளை உணர்த்திய போது, அருகிருந்த முருகன் உபதேசமின்றி ஓங்கார உபதேச மொழிகளை ஒளிந்திருந்து கேட்டமைக்குப் பிராயச்சித்தமாக மயிலுடன் உலகை வலம் வந்து ஓம்கார சக்திகளைப் பரவெளியில் நிரவிய போதுதான் அனைத்து வேதங்களும், வேத சக்திகளும், வேத வாக்கியங்களும், வேத ஒளியும் பிரணவத்தில் அடங்கி இருப்பதை உணர்ந்தார். இதை உணர்த்திய தலமாகிய நான்கு வேதங்களும் மலையாக உள்ள திருக்கழுக்குன்றத்தில் நாலும் ஒன்றாம் நற்கல் வடிவில் ஒரே கல் வடிவத் திருவாசியோடு வேதமுணர்ந்த வடித்திரு உருவாக ஸ்ரீமுருகன் திருக்கழுக்குன்றச் சிவாலயத்தில் வந்து அமர்ந்தார். எனவே பௌர்ணமி, புதன், ஹஸ்த மற்றும் புனர்பூச நட்சத்திர நாட்களில் திருக்கழுக்குன்றத்தில் முருகனை வணங்கி நால்வேத வடிவாய் விளங்குகின்ற வேத மலையைக் கிரிவலம் வந்திட்டால் பிள்ளைகளுக்கு நல்ல ஞானமும், தீர்கமான அறிவும் உண்டாகும். ஸ்ரீவேதகிரீஸ்வரராய் இறைவன் அருளும் பதி.

ஸ்ரீஅகஸ்தியர் அவதார சுலோகம்

அகத்தினுள் இருந்து அழகாய் ஆர்பவித்து
எழுந்து நின்ற எண்ணிலா ஈசருக்கும் பட்டம் சூட்டி
எண்ணத்தில் கலந்து எண்ணத்தைச் சுத்தமாக்கி
அத்தனை சுத்தமும் அற்புதமாய்த் தேர்ந்தெடுத்த
என் மகனே, அகத்தியா!  வா!

(இறைவனே அகத்தியரைத் தோற்றுவித்து அருளியது)

பௌர்ணமி நாள்: 27.3.2002 புதன்கிழமை பின்னிரவு 3.51 முதல் 28.3.2002 வியாழக்கிழமை இரவு 11.55 மணி வரை திருக்கணித பஞ்சாங்கப்படி பௌர்ணமி திதி அமைகிறது.

கிரிவல நாள்: 28.3.2002 வியாழக்கிழமை

நித்ய கர்ம நிவாரணம்

1.3.2002 - பழைய பல்செட் வைத்திருப்பவர்கள் புதிய பல்செட் மாற்றுவதற்கு உகந்த நாள்.

2.3.2002 - தமிழரசி, தமிழரசன் போன்று "த" வை முதல் எழுத்துப் பெயராக உடையவர்கள் இன்று குழந்தைகளுக்குப் புத்தாடை தந்து வயிறார உணவு இட்டிடில் தடுக்கி விழும் ஆபத்திலிருந்து மீளலாம்.

3.3.2002 - ஸ்வாதி நட்சத்திரத்தில் பிறந்தோர் ஸ்வாதி நட்சத்திர ஊதுபத்தி தூபம் ஏற்றிப் பரிபூரணமாக தூபம் முடியும் வரை சிவன் கோயிலை வலம் வந்து பஞ்சாட்சரம் / நட்சத்திர மந்திரம் ஜெபித்திடில் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு.

4.3.2002 - இன்று நாள் முழுதும் விரதம் இருந்து முருகன் கோயிலில் அன்னதானம் செய்திடில் வயதான பெற்றோர்களின் ஆசி கிட்டும்.

5.3.2002 - அனுஷ நட்சத்திர தூபம் ஏற்றி மஹாலட்சுமியின் மந்திரத்தை ஜெபித்துத் தூபம் முடியும் வரை பெருமாள் கோயிலை வலம் வந்திடில் பெயருக்கு ஏற்ற நலம் வரம் கிட்டும்.

6.3.2002 - இன்று பாடல் பெற்ற சிவன் கோயில்களில் நட்சத்திர தீபம் ஏற்றித் தீபம் சாந்தி அடையும் வரை கோயிலை வலம் வந்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்திடில் சரியான சகவாச தோஷம் இன்றித் திரியும் பிள்ளைகள் திருந்த வழி பிறக்கும்.

7.3.2002 - மூல நட்சத்திரப் பெண்கள் இன்று ஸ்ரீதட்சிணா மூர்த்திக்கு எலுமிச்சை மாலை சாற்றிச் சர்க்கரைப் பொங்கலை ஏழைகளுக்குத் தானமாக அளித்திடில் நல்ல வழியில் சொந்த வீடு அமைய வழி பிறக்கும்.

8.3.2002 - இன்று பூராட நட்சத்திர ஊதுபத்தி தூபம் ஏற்றிச் சிவன் கோயிலில் தூபம் முடியும் வரை வலம் வந்திடில் ஊதாரித்தனத்தால் ஏற்பட்ட கடன் தீர்ந்து நலம் பெற வழியுண்டு.

9.3.2002 - "மா" என்ற முதல் எழுத்துப் பெயர் கொண்டோர் இன்று மயில்களுக்கு உணவு அளித்து அன்னதானம் செய்திடில் கனவுக் கன்னிகை நிலை மறைந்து நினைவில் நல்ல திருமண வாழ்வு அடைய வாய்ப்பு கிட்டும்.

10.3.2002 - அஷ்ட பைரவ மூர்த்திக்கு அஷ்ட பைரவ ஊதுபத்தித் தூபம் ஏற்றித் தூபம் முடியும் வரை ஸ்ரீபைரவ காயத்ரீ மந்திரம் ஜெபித்திடில் பிரயாண சுகம், நீண்ட தூர பிரயாணத்தால் நல்லதொரு திருப்பம், வெளிநாட்டு நற்செய்திகள் கிடைக்கும்.

11.3.2002 - அந்தர்முகத் தியான பயிற்சி செய்வோருக்கு வஸ்திரங்களைத் தானமாகக் கொடுத்து அன்னதானம் செய்திடில் பெற்றோரின் தாய் வழியினர் (பாட்டிமார்கள், ஆச்சிகள்) பகையினால் இட்ட சாபங்கள் விலகும்.

12.3.2002 - சதய நட்சத்திர ஊதுபத்தி தூபம் ஏற்றி மேற்குப் பார்த்த ஸ்ரீசனீஸ்வர பகவான் கோயிலில் தூபம் முடியும் வரை வலம் வந்து அன்னதானம் செய்திடில் வணிக வரித்துறை / வருமான வரித் துறைகளினால் வருகின்ற பிரச்னைகள் தீர வழியுண்டு.

13.3.2002 - 13, 31, 4 இந்தத் தேதிகளில் பிறந்தவர்களும், ஐயனார், ஆவுடையப்பன், அன்பு என்ற பெயர் உடையவர்களும் அமாவாசைத் திதி எண்ணையால் தீபம் ஏற்றி அன்னதானம், தர்ப்பணம், திவசம் செய்திடில் எதிர்பாராத பண வரவு ஏற்படும்.

14.3.2002 - இன்று அஷ்டலக்ஷ்மி அனுகிரக தூபம் ஏற்றி லக்ஷ்மித் துதிகளை ஓதி, நோன்பு இருந்து, கார அடை செய்து ஏழைச் சுமங்கலிகளுக்கு மாங்கல்ய தானம் செய்திடில் இல்லத்தில் செல்வம் பெருகும்.

15.3.2002 - ராம பாணம், பிச்சிப் பூ, நித்திய மல்லி ஏதாவது ஒரு புஷ்பத்தைத் தன் கையாலேயே தொடுத்து ஜுரஹரேஸ்வரருக்கு அல்லது ஸ்ரீவைத்யநாத சிவனுக்கு மாலை அணிவித்து அன்னதானம் செய்திடில் குடும்பத்தினருக்குக் கடுமையான நோய்கள் தாக்காமல் தவிர்க்கலாம்.

16.3.2002 - ரேவதி நட்சத்திர தூபம் ஏற்றி தூபம் முடியும் வரை ஸ்ரீமாதவப் பெருமாள், ஸ்ரீகேசவப் பெருமாள், ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் வலம் வந்து அன்னதானம் செய்திடில் ரேவதி நட்சத்திரக்காரர்களை ஏமாற்றுகின்றவர்கள் பிடிபடுவார்கள்.

17.3.2002 - அஸ்வினி நட்சத்திர தூபம் ஏற்றி சூரியன் வழிபட்ட கோயிலில் தூபம் முடியும் வரை வலம் வந்து சர்க்கரைப் பொங்கல் அன்னதானம் செய்திடில் 2 அல்லது 3 பேர் செய்கின்ற வேலை பளுவை தனி மனிதனாகச் செய்பவர்களின் வேலைப் பளு குறைய வழி பிறக்கும்.

18.3.2002 - இன்று குழந்தைகளுக்கு சர்க்கரைப் பஞ்சு மிட்டாய்த் தானம் செய்திடில் சிட்டாகப் பறந்து வேலை செய்யும் உதவியாளர் கிடைப்பர்.

19.3.2002 - இன்று கடோத்கஜன் பூஜை செய்வது மிக விசேஷம். இப்பூஜையின் பலன்களாகத் தேவையில்லாமல் துன்பம் தரும் எதிரிகள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார்கள். இன்று 8 யானைகளுக்கு, 108 பசுக்களுக்கு, 300 குதிரைகளுக்கும், 200 நாய்களுக்கு வயிறார உணவு இட்டு 125 பவுண்டிலிருந்து 200 பவுண்ட் எடை உள்ள ஆண்களுக்கு வயிறார உணவு இட்டு அவர்களை வணங்கி அவர்கள் கையால் திருநீறு இட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது கடோத்கஜ பூஜையில் ஒரு முறையாகும்.

ஸ்ரீஅஷ்டலட்சுமிகள் கருப்பத்தூர்

20.3.2002 இன்று ரோகிணி நட்சத்திரத் தூபம் ஏற்றி ஆறுமுகன் கோயில்களில் தூபம் முடியும் வரை வலம் வந்து அன்னதானம் செய்ய வேண்டும். இதனால் தொலை தூரத் தொடர்பு, சாடிலைட் எலெக்ட்ரானிக்ஸ் துறை, இன்பர்மேஷன் டெக்னாலஜித் துறைகளில் இருப்பவர்கள் பெருத்த மாற்றங்களைக் காணலாம்.

21.3.2002 - இன்று ஸ்ரீசரபேஸ்வரர் தூபம் ஏற்றி ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தி உள்ள ஏழு கோயில்களில் வலம் வந்து அன்னதானம் செய்திடில் ஒலிபெருக்கி, சவுண்ட் டெக்னாலஜி, டிஜிடெல் டெக்னாலஜி, சவுண்ட் சிஸ்டம் துறைகளில் இசை அமைப்பாளர்கள் புதிய அமைப்புகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

22.3.2002 - இன்று அஷ்டலட்சுமி தூபம் ஏற்றி அஷ்டலட்சுமிக்கு உரிய துதிகளை ஓதி முடிந்தால் அஷ்டலட்சுமி கோயில்களைத் தரிசனம் செய்து அன்னதானம் செய்திடில் உத்தியோகத் துறையில் வருமானம் அதிகரிக்கும். அஷ்டலட்சுமி தேவியர் இல்லாத இடங்களில் எட்டு ஆலயங்களில் திருமகளைத் தரிசிக்க வேண்டும்.

23.3.2002 - திருவாதிரை நட்சத்திரத் தூபம் ஏற்றித் தூபம் முடியும் வரை ஸ்ரீநடராஜ மூர்த்தியை வலம் வந்து அன்னதானம் செய்திடில் விமானம் மூலமாகப் பிரயாணம் செய்வோர், விமானம் மூலமாக வியாபாரம் செய்வோர் பெருத்த லாபம் அடைவர்.

24.3.2002 - இன்று ஏழைகளுக்குக் கல்யாணப் பூசணிக்காய் இட்ட சாம்பார் கலப்புச் சாதத்தை அன்னதானமாக விநியோகித்திடில் சர்க்கரை மற்றும் கரும்பு வியாபாரிகள் நலம் பெறுவர்.

25.3.2002 - ஏகாதசித் திதி எண்ணையால் எட்டுப் பெருமாள் கோயில்களில் தீபம் ஏற்றி வெண்பொங்கல், கொத்சுவுடன் தானம் செய்திடில் அண்ணன், தம்பிகளிடையே கலகம் செய்வோர் விலகிச் செல்வர்.

26.3.2002 - இன்று குறைந்தது 108 எருமைகளுக்கு அகத்திக் கீரை அளித்துத் தர்மராஜா கோயில்களில் அன்னதானம் செய்திடில் மரண பயம் விலகும். தீய வழிப் பெண் தொடர்பும் விலகும்.

27.3.2002 - பூராட நட்சத்திர தூபம் ஏற்றி ஐந்து பிள்ளையார் கோயில்களை வலம் வந்து அன்னதானம் செய்திடில் கடன் தொல்லை விலகும்.

28.3.2002 - உத்திராட நட்சத்திரத் தூபம் ஏற்றி மலைத் தலங்களை கிரிவலம் வந்திடில் நிரந்தரமற்ற உத்தியோகம் நிரந்தரமாவதற்கு வழி உண்டு.

29.3.2002 - ஐந்து பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் அரிசிப் புட்டு செய்து, அருணாசலேஸ்வரருக்கு நிவேதித்து, புட்டு தானம் செய்திடில் பட்டுப் போன குடும்பம் துளிர் விட்டுத் தழைக்க ஆரம்பிக்கும்.

30.3.2002 - தூய வலம்புரிச் சங்கினால் பாலை மொண்டு பால் தானம் செய்திடில் பணத்தால் வந்த துன்பங்கள் எல்லாம் விலகும்.

31.3.2002 - விசாக நட்சத்திரத் தூபம் ஏற்றி, சிவன் கோயிலை வலம் வந்து அன்னதானம் செய்திடில் மலை போல் வந்த விதி மண்ணாகத் தொட்டு விலகும்.

இறைவனைப் போல் அன்பும் எல்லையற்றது !
இறைவனைப் போல் அன்பும் நிலையானது ! இறைவனைப் போல் அன்பும் மாறுபாடில்லாதது !

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam