மண் மலையா மண்ணும் மாலையா ?

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

யுகயுகமாய் ஒளிர்கின்ற குருபாத பூஜை! ஜகம் முழுதும் மிளிராதோ குருபாத சேவை! ஸ்ரீஅகஸ்திய விஜயம்தான் அவர் காட்டு பாதை! நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்.!

கலியுகத்தில் சற்குரு பரிபாலனம் உண்டா? நமக்கு உரித்தான சற்குருவை நாம் கலியுகத்தில் பெற்றிட முடியுமா என்றெல்லாம் ஏங்குவோரும், கேள்வி கேட்போரும் தற்போது நிறைய உண்டு.. கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்பவை தவிர நாம் அறியா வகையில் சித்த யுகம், சீர்ஷ யுகம், குந்தள யுகம், பாவன யுகம் என்று பலவித யுகங்கள் பல பூமிகளில் அமைகின்றன. இவை அனைத்திலுமே சற்குரு சிஷ்ய பரிவர்த்தனமாக, நிறைய இறையனுபூதிகள், கடவுள் லீலைகள் என்றும் நிகழ்ந்து வருகின்றன... சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீஇடியாப்ப சித்த ஈச ஸ்வாமிகளின் குரு கடாட்சத்தில் பரிணமித்த பள்ளிச் சிறுவனாம் வெங்கடராமனுடைய குருகுலவாசம், நாம் அறிந்த மேற்கண்ட நான்கு யுகங்கள் மட்டுமல்லாது, நாம் அறியா ஆயிரமாயிரம் நல்யுகங்களிலும் பரிணமிக்கின்ற குரு-சிஷ்ய இறைப் பிணைப்பு அனுபூதிகள் ஒவ்வொரு வார்த்தையும், குருவாய் மொழிப் பிரகாசமாய்ப் பூரிப்பதுடன், சற்குருவின் அனுகிரகமும் நிரம்பப் பொதிந்தவை! எனவே, இவ்வனுபூதிச் சாரத்தின் ஒவ்வொரு வாக்கியமும் ஒவ்வொருவருக்கும் பல விதங்களில் மன சாந்தி அளிக்கும் தூய மாமணி வாக்காகவும், தெய்வீக ஆக்கம் தரும் ஆன்ம் மாமருந்தாயும் துலங்குவதை நிச்சயமாக உணர்ந்திடலாம்.!

வண்டி வண்டியாய் ஆசைகள்! ... ஆசிகள் எங்கே?

அன்று.. வழக்கம்போல் காலையில் ஆயிரத்தெட்டு பிரதட்சிணத்திற்காக இராயபுரம் அங்காளி ஆலயத்திற்கு வந்த சிறுவன், அன்று முக்கால் கட்டத்திலேயே பெரிதும் களைப்படைந்து விட்டான்! முந்தைய நாள் குருவருட் பேரொளியைக் கண்டு துய்த்த ஆயாசமா? அதற்குள் பெரியவர் திடுதிடுப்பென்று உள்ளே நுழைந்திட, அப்போதுதான் களைப்புடன் அமர்ந்த சிறுவன் ஏதோ சப்தம் கேட்டு விடுவிடுவென்று எழுந்து விட்டான்!

“வாடா, அர்ஜண்டா ஒரு இடத்துக்குப் போகணும்! நிறைய சித்தர்களும், மகரிஷிகளும் அந்த இடத்திற்கு வராங்கன்னு மேல் லோகத்துலேந்து குரல் கொடுத்திருக்காங்க!” என்று கூறிக் கொண்டே உள்ளே நுழைந்த பெரியவர், அங்காளியை வணங்கி விட்டு ஓடோடி வந்தார்.. கோயிலின் வாயிலைச் சற்றேதான் அவர்கள் கடந்திருப்பார்கள்.. திடீரென்று அங்கே வந்த ஒரு மூதாட்டி இடைமறித்து அவரைக் கண்டு வணங்கினாள்..!

“ஏதோ கேட்கிறதை எல்லாம் தர்றேன்னு ஒருவாட்டி சொன்னியே சாமி! இன்னிக்கு அதுக்கு வேளை வந்துடுச்சு!” என்று கூறிய அந்த மூதாட்டி, பெரியவரின் பாதங்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விட்டாள்.. பெரியவர் சிறுவனைப் பார்த்து விழித்தார்!... கடந்த சில வருடங்களாகவே, பெரியவர் சொல்கின்ற இறைப் பணிகளை எல்லாம் அந்த மூதாட்டி செவ்வனே செய்து வருவதைச் சிறுவன் கண்டிருக்கின்றான்.. அப்போதெல்லாம் பெரியவர் “என்ன வேண்டுமென்று” கேட்ட போது அவள் எதையும் கேட்டுப் பெற்றது கிடையாது! அவளுடைய ஆழ்ந்த நம்பிக்கையைக் கண்டு வியந்த பெரியவரிடமிருந்து “உனக்கு எப்போ எது வேணும்னாலும் வந்து கேளு! அங்காளி கருணை பண்ணிடுவா!” என்ற வாக்கையும் சாமர்த்தியமாக எப்படியோ அந்த மூதாட்டி பெற்று விட்டாள்.. அதை இப்போது கெட்டியாகப் பிடித்துக் கொண்டும் விட்டாள்! அவளுடன் எப்போதும் கூடவே வரும் பேத்தியாம் ஒரு சிறுமி, பெரியவர் சொல்கின்ற அனைத்து இறைப் பணிகளையும் செய்து முடித்து, இப்போது வளர்ந்து பெரிய பெண்ணாகி அவளுக்குத் திருமணமும் இறையருளால் நிச்சயமாகி இருந்தது!

மூதாட்டியோ தன் பேத்தியின் திருமணத்துக்குக் கூட எந்த உதவியையும் பெரியவரிடம் எதிர்பார்க்கவில்லை. மிகவும் சமயோசிதமாக அனைத்துக் கல்யாணக் காரியங்களையும் சிக்கனமாயும் இருந்து முடித்த மூதாட்டிதான் தன் பேத்தியுடன் இப்போது பெரியவர் முன் வந்து நின்றாள்.. கல்யாணத் தேதியும் நெருங்கிக் கொண்டு இருந்தது..!  சிறுவனிடம் மெதுவாகக் காதில் பெரியவர் சொன்னார்.. “என்னடா இது, என்ன கேட்கப் போறாங்களோ தெரியலையே, இந்தக் கிழவி அங்காளிக்கு அம்பாளுக்குச் செஞ்சிருக்கின்ற புண்ணியத் தொண்டுக்குப் பெரிய கோடீஸ்வரியா ஆகற பாக்கியம் கூட நிறைய இருக்கு! ஆனா இவ மேல் லோகத்துல போய் கடவுள் கிட்ட என்ன கேட்கப் போறான்னு தெரியலையே! இவ பேத்தியோ அம்பது வருஷத்துல அவளோட பாட்டி சாதிச்ச திருப்பணிகளை எல்லாம் ஒரு பத்து, இருபது வருஷத்திலேயே முடிச்சுட்டுப் பெரிய புண்ணிய சக்தியுடன் வந்து நிக்கறாளே!”

இப்போது அந்த மூதாட்டியும் மிகவும் சாதுர்யமாக, “சாமி! என் பேத்தி என்ன ஆசைப் பட்டுக் கேட்கிறாளோ, அதை அப்படியே செஞ்சு கொடுத்துடு சாமி!” எனறு ஸ்பஷ்டமாகவே நேரிடையாகவே சொல்லி விட்டாள்.. பெரியவர் திகைத்தபடி நின்றிட,

“சாமி! எனக்கு ஒரு நல்ல கார்தான் வேணும்!” ஆம், அந்தக் கல்யாணப் பெண்தான் சிறிதும் சங்கோஜமின்றிக் கேட்டே விட்டாள்! அவ்வளவுதான் அதிர்ச்சியில் கல்லாய்ச் சமைந்தான் சிறுவன்! ஆச்சரியம் கலந்த திகைப்பில், வீதியென்றும் பாராமல் பொத்தென்று அங்கேயே அமர்ந்தும் விட்டான்! ... பெரியவர் கலகலவென்று சிரித்தார்..!

“ஏம்மா, ஏதோ கேளுன்னு சொன்னா, இப்படியா கேட்கிறது!? முக்தி வேணும், மோட்சம் வேணும், நற்கதி வேணும்னுதானே எல்லாரும் கேட்பாங்க இப்படியா ஒரேயடியாக் கேப்பாங்க! ஊஹும், அவர்கள் சற்றும் அசரவில்லையே! அவர்களிடம் வெற்றிக்கான மௌனம் கூடிடவே.. பார்த்தார் பெரியவர், ஒரே நிமிடத்தில் அவர்களுக்கு ஒரு solutionஐக் கொடுத்து அனுப்பி விட்டார்.! என்னதான் அது?

“கார்தானே வேணும் தாயே! அவ்வளவுதானே! அங்காளி ஆத்தா உனக்கு வேணுங்கறதைத் தருவா! நீங்க அம்பாளுக்கு செஞ்ச திருப்பணிக்குத் தகுந்தபடி அம்பாளோட அனுகிரகம் நிச்சயமாகக் கை கூடும்!” என்று சற்றே தத்வார்த்தமாகவும் சொல்லி விட்டார்!... “சரி” என்று சொல்லிச் சென்ற அந்தப் பெண் ஒரு சில நிமிடங்களில் திரும்பி வந்தாள்..! “சாமி! எனக்குக் கெடிலாக் கார் மாதிரி பெருசா வேணும்! சும்மா மாப்பிள்ளை அழைப்புக் கார் மாதிரி சின்னச் சின்ன பொம்மைக் காரெல்லாம் வேண்டாம்!”

“அடி சக்கை! Oh yes, Sanctioned!” ,  பெரியவர் சந்தோஷமாய்ச் சொல்லிப் பெரிதாய் சிரிதிட்டார்..!

சிறுவனோ அதிர்ச்சியில் ஆடியே போய் விட்டான்! அம்பிகைதாம் எத்தகைய இறை லீலைகளைப் புனைகின்றாள்! ஒருபுறம் இறைப் பணிகள், மறுபுறம் மகா படா ஆசைகள்! ஒன்றும் புரியாமல் சிறுவன் தலையைப் பிய்த்துக் கொண்டான்!

Driving home the divine point! பல முறை பெரியவர் கார் ஓட்டுவதைப் பார்த்து ரசித்திருக்கின்ற சிறுவன், அவர் கெடிலாக், பிளிமௌத், பென்ஸ் போன்ற பெரிய பெரிய கார்களை அநாயசமா ஓட்டிச் சாலை ஓரத்தில் அப்படியே விட்டு விடுவதைக் கண்டும் ஆச்சரியமும் அடைந்திருக்கின்றான்! கலியுகச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, அந்தந்த யுகங்களுக்கு ஏற்ப, சித்தர்கள் தம்மை மாற்றிக் கொண்டு அருளிடும் தெய்வீகப் பாங்குதான் என்னே, என்னே! சோதனையாக, ஏதேனும் ஒரு சாக்கில், அவர் காரை நிறுத்தி வைத்து விட்டு வந்த இடங்களில் அப்போதோ, மறு நாளோ சென்று பார்த்தால் அவை காணாமல் போயிருக்கும் அல்லது எத்தனை நாட்களானாலும் எவரும் சீண்டாது அப்படியே கிடக்கும்.! அவர்தான் நம்முடைய பூலோகத்தைப் போல நிறைய பூமிகள் உண்டு என்று சொல்லி இருக்கின்றாரே! தேவ லோகங்களுக்கு எல்லாம் அடிக்கடி போய் வரும் தேவ சக்தியைப் பெற்றவராயிற்றே! அனைத்தையும் துறந்த கோவணாண்டியாய் உலா வரும் அவருக்கு கோடானு கோடி ஐஸ்வர்யங்கள் கொட்டிக் கிடக்கும் எத்தனையோ லோகங்களுக்கு நொடிப் பொழுதில் சென்று வர வல்ல மகத்தான சித்தருக்கு காரெல்லாம் ஒரு பொருட்டா என்ன?

Again the divine (karmic) calculus! :- “ஏன் வாத்தியாரே!.. நீ ஓட்டிக்கிட்டு வந்த காரு யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல், ரோட்டு மேல அப்படியே கிடக்குதே! யாருக்காச்சும் வண்டி தானம் செஞ்சாப் புண்யம்தானே!” சிறுவன் ஒரு நாள் அப்பாவித் தனமாகக் கேட்டும் விட்டான்! தங்கம், வைரம், வைடூரியங்களையே கருத்தில் கொள்ளாதவர்கள் தாமே சித்தர்கள்!

“ஓகோ! புண்யக் கணக்கு வேற போட ஆரம்பிச்சிட்டியா? எப்ப ஒரு காரியத்தைப் புண்யம்னு நினைக்க ஆரம்பிச்சிட்டியோ, அப்பவே அது சுயநலமா – எதையோ வேண்டிச் செய்யற – ஒரு லௌகீகமான காரியமாத்தானே மாறும்! அப்புறம் அது தானம், தர்மம் ஆகாதே ராஜா! உன்னை எவன் அந்தக் கார் அங்கே இருக்குதா, இல்லையான்னு சோதனை செஞ்சு பார்க்கச் சொன்னான்? இது தேவையில்லாத சோதனைதானே! எங்கேந்து எது வந்துச்சோ, அங்கேயே அது போயிடும், இப்பவாவது எங்க தெய்வக் கணக்கு புரியுதா! ஆனா இது சித்தர்களோட divine karmic calculusடா! அவ்வளவு ஈஸியாப் புரிஞ்சுடுமா, என்ன? எல்லாத்துக்கும் குருவருள்னு ஒண்ணு கூடணும்!”

ஒரு முறை ... துறைமுகத்தில்... ரஷ்ய மாலுமி ஒருவரிடம் மிகவும் நட்புடன் பேசி கப்பலில் மாலுமியின் cockpit கண்டரோல் ரூமிற்கே சென்று நிறைய டெக்னிகல் விஷயங்களை விவாதித்து விட்டுப் பெரியவர் வெளி வந்ததைக் கண்டு அசந்து விட்டான் சிறுவன்! ஏதேதோ மொழிகள் (பறவைகள், விலங்குகளின் மொழி உட்பட), கோளங்கள், கப்பல் முதல் கனோபஸ் (அகஸ்திய நட்சத்திரம்), அர்த்த சாஸ்திரம், சாந்தோக்ய உபநிஷத் வரை.. இதற்கும் மேலாக. விரிந்து பரந்த.. அவருடைய ஈடு, இணை, எல்லையற்ற ஞானத்தைப் பற்றி யாரிடம்தான் எடுத்துச் சொல்ல முடியும்? சொன்னால் யார்தான் நம்புவார்கள்?

அந்த ரஷ்ய மாலுமியும் ஒரு பெரிய வரை படத்தை வைத்துக் கொண்டு, பெரியவரிடம் மிக மிக டெக்னிக்கலாக ஆங்கிலத்திலும், ரஷ்ய மொழியிலும் விவரித்து, விளக்கங்கள் வேண்டிட, அதற்குப் பெரியவரும் சில கணக்குகளைப் போட்டு, “இந்த பார்முலா, அந்த பார்முலா...” என்று ஓர் இனம் புரியாத மொழியில், வகையில் அந்த மாலுமிக்கு பதில் தந்ததைக் கண்ட சிறுவன், பெரியவரின் ஞான சாம்ராஜ்யத்தில் உலா வந்து, பிரமித்து ஞான அதிர்ச்சியும், யோக முதிர்ச்சியும் பூண்டவனான்!

வண்டி வண்டியாய் ஞானம்! அடைவார் எங்கே!

.... பாட்டியும், பேத்தியும் “கார்” கேட்ட அதிர்ச்சியில் இருந்து மீண்ட சிறுவன் இப்போது நன்கு விழித்துக் கொண்டான்! எந்தச் சமயத்தில் பெரியவர் எதைச் சொல்வார், எதைச் செய்வார் என்பதைக் காண பெரியவரால் புதிதாகத் திறக்கப்பட்ட அவனுடைய யோக முதிர்ச்சி பூரித்த “ஞானக் கண்கள்” தயாராகின!  மூதாட்டியின் பேத்தியின் கல்யாண நாளுக்கு முதல் நாளே, சென்னையில் பிராட்வேயில் ஒரு பிரபலமான ஆட்டோ மிகவும் விவரம் தெரிந்தவர் போல் நாலைந்து வகைக் கார்களைப் பற்றி விலாவாரியாக விவரித்துக் கொண்டிருந்ததைக் கேட்டு சிறுவனுக்கே மிகவும் ஆச்சரியமாகி விட்டது!

ஆங்கே கராஜில் பெரியவர் அனைத்துக் கார்களைப் பற்றியும் குடைந்தெடுத்ததோடு, அங்கிருந்த நாலைந்து கார்களையும் ஓட்டிப் பார்த்தார்! “அதில் இது நொட்டை, இதில் இந்தப் பிராப்ளம்” என்று அனைத்தையும் reject செய்த பெரியவர், கடைசியில் அந்த டீலர் “பிரமாதம்” என்று சொல்லி எங்கிருந்தோ கொண்டு வந்த ஒரு காரை எடுத்தார்!  “இந்த பாருப்பா, இது ஒரு நல்ல இடத்துக்குப் போவுது! நான் ரொம்ப சாதாரண மனுஷன்! யானை விலை சொல்லாம, ஏதோ அடக்கத்துக்கு கொஞ்சம் மேல விலையைப் போட்டுக் கொடுத்துடு! இன்னைக்கு சாயந்திரம் இந்தக் கல்யாணச் சத்திரத்துக்கு இந்தக் கார் போயாகணும்!” என்று சொல்லி ஒரு சிறு முகவரிக் காகிதத்தை நீட்டினார்.. மறு பேச்சு பேசாது, அந்த டீலர், கார் சாவியை எடுத்துப் பெரியவரிடம் கொடுத்து விட்டார்!”

“கார் மேல உங்க கை பட்டாலே போதும் அந்தக் கார் ஓனருக்கு அதிர்ஷ்டம்கற பரம ரகசியம் எனக்கு மட்டும்தான் தெரியும்! உங்க கால், கியர்ல பட்டாலோ, அது அதிர்ஷ்டமோ மகா அதிர்ஷ்டம்தான்!” என்று கூறி அவர் பாதங்களைத் தொட்டுக் கும்பிட்டார்..

காத்திடுவார் புனிதத் தாத்தா!

 “ஏதோ பூர்வ ஜென்மப் புண்யம் இந்த ஆளுக்கு நெறைஞ்சிருக்கு! அதுதான் நம்ப வாத்யாரோட பாதங்களைத் தொடும் பாக்கியம் கிடைச்சிருக்கு” என்று ஒருவாறாகச் சிறுவன் ஒரு முடிவுக்கு வந்தான்! அந்தக் காரை எடுத்துக் கொண்டு கிளம்பிய பெரியவர், சிறுவனை அங்கேயே நிற்கச் செய்து விட்டார்.. சிறுவனுக்குப் பயம் வந்து விட்டது!

“இவர் பாட்டுக்குக் காரில் கிளம்பி நெடுந் தூரம் போய் விட்டு, நம்மை நடக்கச் செய்து விட்டால்.... என்ன செய்வது?” என்ற பயம்தான் காரணம்! ஆனால் ஒரு சில நிமிடங்களில் “புர்ரென்று” என்று காரைக் கிளப்பிக் கொண்டு திரும்பி வந்து விட்ட பெரியவர், மிகுந்த கோபத்துடன் கீழே இறங்கி, அந்தக் கார் டீலரை நன்றாகச் சாடி விட்டார்!

“என்னையா நினைச்சுக் கிட்டிருக்கீங்க? ஒண்ணுத்துக்கும் பிரயோஜனம் இல்லாத காரை என் தலையில கட்டலாம்னு பார்க்கறீங்களா?” என்று பட பட வென்று பொரிந்து அந்தக் காரின் உள்ள குறைகளை எல்லாம் வரிசையாக ஒப்புவித்தார்! “போய் லோன்ஸ்கொயர்ல, உங்களோட ரெண்டாவது கோடெளன்ல இருக்கற, சிகப்பு கெடில்லாக் காரை எடுத்துட்டு வா, போ, போ!” என்று சொல்லி அவரைத் துரத்திட்டார்.. The dealer became spell bound!  “அது ஓட்டறதுக்கே கஷ்டமான கார் ஆச்சேன்னு யாருக்கும் கொடுக்கலை! இந்த விஷயம் இவருக்கு எப்படித் தெரியும்?” அந்த டீலர் ஏதேதோ மனக் கணக்குப் போட்டிட, இதைப் பெரியவர் அறியாரா என்ன?

“இதப் பாரு ராஜா! உன் தலைலேந்து, கால் வரைக்கும் அக்கு வேரா, ஆணி வேராக் கழட்டிப் போட்டு கர்ம பரிபாலனம் செய்யற ஆளுங்க நாங்க! யார் யாருக்கு எது போய்ச் சேரணும்கற விதிக் கணக்கு தெரிஞ்சவங்க நாங்க! ஏதோ உன்னோட தாத்தா, பித்ரு லோகத்துல ரொம்ப powerfulஆ இருக்கிறதுனால, நீ பல வண்டிகளை ரிபேர் பண்ணினாலும் உன் வாழ்க்கை வண்டியும் ஏதோ ரிப்பேர் இல்லாம ஓடுது! உன் தாத்தாதான் உன் திறமையை ஆட்டி வைக்கற உண்மையான DIVINE MECHANIC! இன்னிக்காவது இந்த உண்மையைத் தெரிஞ்சுக்க! அந்தத் தாத்தாக்கு இனிமேலாச்சும் ஒழுங்கா தெவசம், தர்ப்பணம், படையல் பண்ணுங்க! இந்தக் காரு யாருக்குப் போகுது தெரியுமா? இதுக்குன்னு ஆசைப்பட்ட ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்துக்குப் போகுது! ஏதோ விலையைக் குறைச்சா அதுக்கான வண்டி தானம் பண்ணின புண்யம் உங்க குடும்பத்துக்குப் போய்ச் சேரும்! தாத்தாவும் ரொம்ப சந்தோஷப் படுவாரு!”

அந்த டீலரும் திகிலடைந்து, திகைப்படைந்து வாழ்வின் நல்ல திருப்பு முனையையும் அடைந்தார்! பெரியவரின் கால்களில் மீண்டும் சாஷ்டாங்கமாக வீழ்ந்து நமஸ்கரித்தார்!.. “அப்பப்பா...! சித்தர்களுடைய கர்ம பரிபாலன முறையே அலாதியானதுதான்!” சிறுவன் இனம் புரியாத ஆனந்தம் அடைந்தான்! அன்றைய சாயந்திர நேரம்... சிறுவனை நேரே கல்யாண மண்டபத்திற்கு வரச் செய்த பெரியவர், நினைத்ததற்கு மாறாக, அந்த சிகப்பு நிறக் கெடில்லாக் காரை ஜம்மென்று தானே ஓட்டியவாறு வந்திறங்கினார்.. வந்தவர்கள் எல்லாம் வேடிக்கை பார்த்திட, கல்யாணப் பெண், அவளுடைய பாடி, பெற்றோர்களோடு காரில் அமர வைத்துச் சிறுவனையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு காரில் ஒரு ரவுண்டு சுற்றிய பெரியவர், கடைசியில் கார் சாவியை மிகவும் எளிமையாக, சர்வ சாதாரணமாகப் பாட்டியிடம் ஒப்படைத்து விட்டு எவ்வித படாடோபமும் இல்லாமல் பளிச்சென்று கிளம்பி விட்டார்!

“வாடா போகலாம், நாம வந்த கடமை முடிஞ்சது!”  .. பெரியவர் சிறுவனை அழைத்துக் கொண்டு லொங்கு, லொங்கு என்று பிறாட்வேயில் இருந்து ராயபுரம் வரை நடையோ நடையாய் நடந்தனர்.!!

பாருக்குக் காரும் தரும் பாடம்!

.... பெரியவருடைய வேக நடையைத் துரத்தியவாறு தொடர்ந்த சிறுவன், கோயில் வந்ததும் முணுமுணுத்தான்..! “அந்த மாதிரிக் காரில் பறப்பானேன், இந்த மாதிரி மாங்கு மாங்குனு நடப்பானேன், சித்தர்கள் என்றாலே இப்படித்தான்..!”

மெதுவாகச் சற்றே குரலை உயர்த்திய சிறுவன், “வாத்யாரே, நீ இப்ப செஞ்சது எல்லாம் கொஞ்சம் கூடத் தெய்வீகமாத் தெரியலையே? ஏதோ ரொம்ப ரொம்ப லௌகீகமாத்தானே இருக்கு!” சிறுவன் மகா தைரியமாகக் கேட்டு விட்டான்..!

பெரியவர் கடகடவென்று சிரித்தார்!

வண்டி, வண்டியாய்க் கர்மம் வண்டியிலே தீர்ந்தது!

“எது மாயை, எது மாயா ஜாலம், எது லௌகீகம், எது தெய்வீகம், எது உண்மை, எது சத்தியம், எது நிரந்தரம்னு தெரிஞ்சுக்கணும்னா, குரு பின்னாடி நடையோ நடைன்னு நம்பிக்கையோட சுத்தணும்! அவரைச் சரணடையணும்! இதுதான் இன்னைக்கு பரம்பொருளாம் கார்மேகப் பெருமாளே புகட்டும் கார் பாடம்னு நல்லாத் தெரிஞ்சுக்கோ!”

“அந்தப் பாட்டி குடும்பத்துல ரொம்ப நாணயத்தோட, அந்தக் கார் டீலரோட தாத்தாவோட சந்ததிகிட்ட அதே கடையில கிட்டத் தட்ட நாப்பது வருஷம் வேலை பார்த்தாரு! மாங்கு மாங்குனு ரொம்ப வருஷம் உழைச்சும் சரியா சம்பளம் வரலை! நாப்பது வருஷ பாக்கிக்கு வட்டியும் முதலுமா நிறைய கர்ம பாக்கி சேர்ந்து போச்சு! இன்னிக்கு அந்தத் தாத்தா பித்ரு லோகத்துலேந்து தன் குடும்பத்துலேந்தே ஒரு காரை வாங்க வச்சு, இது மூலமா அந்தப் பாட்டி குடும்பத்தோட கர்ம பாக்கியை ஒட்டு மொத்தமா முடிச்சுட்டாரு! இல்லாட்டி அது பெருசா வளர்ந்து தீர்க்க முடியாதபடி புரையோடிப் போன கர்ம வினையா ஆயிருக்கும்!”

“உழைச்சதுக்கு சரியா ஊதியம் கொடுக்காததுக்கு அந்த தாத்தா பித்ருவே ரொம்பக் குறைச்ச விலைக்குத் தர வச்சு பெரிய கர்ம வினைகளையே தடுத்துட்டாரு! இந்த இறை லீலைக்கு நம்ப ஒரு கருவியா செயல்பட்டோம் அவ்வளவுதான்! இதையெல்லாம் நாங்க உனக்கு விவரமா எடுத்துச் சொல்லணும்னு அவசியம் கிடையாதுடா! ஆனா, எதிர்காலத்துல இதையெல்லாம் நீ எழுத்து வடிவுல கொண்டு வந்து, நெறயப் பேருக்கு குருவின் மகிமையை, கர்ம பரிபாலனத்தோட மகத்துவத்தை நல்லா எடுத்துச் சொல்லி உணர்த்தணும்!”

“இன்னிக்கு நடந்தது கார் டீலருக்கு மட்டும் நடந்த பாடம் இல்லை ராஜா! உனக்கும், பல வருஷங்களுக்குப் பிறகு நீ இந்த குருகுல வாச அனுபூதியை எழுதறப்போ இதைப் படிக்கறவங்களுக்குமா, இப்பவேயே இறைவன் நிகழ்த்தும் இறைலீலை இது! எவ்வளவு தீர்க தரிசனமா எத்தனையோ வருஷத்துக்குப் பின்னால நடக்கப் போறதை வித்து விதைக்கறாங்கன்னு நல்லாப் புரிஞ்சுக்கங்க! இதுக்குமேல நான் எதுவும் சொன்னால், உன்னால் இந்தப் பூலோக அறிவைக் கொண்டு புரிஞ்சுக்க முடியாது!”

பெரியவர் திடீரென்று இருட்டில் மறைந்தார்.. எப்போது வருவார், எப்போது போவார் என்று சொல்ல முடியாதபடி மாபெரும் இறைப் புதிராகவே அவர் கூட்டிய சிறுவனுடைய கலியுக குருகுல வாச அனுபூதிகள் அமைந்து விட்டன!

ஸ்ரீஇடைக்காடர் சித்தர்

ஜீவ சிருஷ்டியை ஒட்டிய புனிதமான காலத்தின் போது, ஸ்ரீஇடைக்காடரின் சித்த சாம்ராஜ்யத்தில் எத்தகைய இறைப் பேரன்பை விலங்கின, ஜீவன்கள் பூண்டிருந்தன என்பதைக் கோடிட்டுக் காட்டுவதே இவ்விதழ் அட்டைப் படமாம்! திருஅண்ணாமலைத் திருத்தலத்தில், சித்த மா யுகத்தில், பல வன விலங்குகள், ஜீவ காருண்யத்துடன் பெற்றிருந்த, புனிதமான சாந்தம் பயக்கும் வாழ்க்கையின் தேவாம்சத்தை இந்த இதழின் அட்டைப் படம் சித்தரிக்கின்றது! கிருத யுகத்திற்கு முந்தையதே அதாவது ஸ்ரீராமர் தோன்றிய திரேதா யுகத்திற்கு முந்தைய ஸ்ரீஆயுர்தேவி போன்ற பராசக்தி அம்சங்கள் தோன்றியதே கிருத யுகமாம்! இதற்கும் முந்தைய யுகம் என்றால் அத்தகைய தர்ம சீலம் முழுமையாகத் துலங்கிய யுகத்தில் எத்தகைய தர்மம் செறிந்ததாக, தார்மீக ரீதியாக உலகம் விளங்கியிருக்கும் என்பதை உங்களால் உணரத்தான் முடிகின்றதா? நம்பத்தான் முடியுமா?

உதாரணமாக, கிருத யுகத்திற்கு முந்தைய யுகமொன்றே சித்த மா யுகமாம்!  மகா சிருஷ்டியை ஒட்டிய மிகமிகப் பழமையான ஆனால் ஸ்புடம் போட்டது போலான புனிதமான காலம்! இக்காலத்தில் திருஅண்ணாமலையில் புல்வெளிக்கும், அடர்ந்த காடுகளும், சுனைகளும் நிறைந்து இருந்தன! நிறைய வன விலங்குகள் சாந்தத்துடனும், பரிபூரண அஹிம்சா தத்துவத்துடனும் இல்லறத் துறவிகள் போல் வாழ்ந்தன.. இவை மக்களுக்கோ, பிற விலங்குகளுக்கோ, பட்சிகளுக்கோ எத்தகைய துன்பத்தையும் தருவது கிடையாது. ஈடு இணையற்ற தெய்வீக சாந்தத்துடன் மக்களோடு, மக்களாய் அன்புடன் குலாவி, ஆனந்தத்துடன் வசித்து வந்தன. அப்போது மக்கட் சமுதாயம் மலையிலிருந்து நல்ல தொலைவில் இருந்தது.. கிரிவலச் சுற்றளவும் பர்வத மலை போல் பரந்திருந்தது!

ஈடு இடை(ண)யில்லா கால மார்த்தாண்ட சித்தரே இடைக்காடர் சித்தர்!

இத்தகைய தர்ம பரிபாலன பூரித்த சித்த மா யுகத்தில்தாம், நாடு, காடு, மலை, பாலை, கடல், வானம், கோளம், நட்சத்திரம் என அண்ட சராசரங்களுக்கும் சித்தமா குருவாய் அறவழிகளைப் பேணியவராய், அன்றும், இன்றும், என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாய்த் திகழ்பவர்தாம் ஸ்ரீஇடைக்காடர் சித்தராவார்.. இவரை இடைக்காட்டு சித்தர், இடக்காட்டு சித்தர் என்றும் பலவிதமாய்க் கூறுவதுண்டு...  காடர் என்றால் தலைவராவார்... இடம் என்றால் பரிபூரணமாய் நிறைந்து எப்போதும் நிரந்தரமாய் நிலைத்திருப்பது என்று பொருள்.. இதுதானே திருஅண்ணாமலை! எப்போதும் நிலைத்து இருக்கின்ற அருணாசல புனித பூமியில்தாம், எப்போதும் தர்மம் கொழிப்பதான அருணைத் திருபூமியில்தாம், சித்தா மா யுக ஜீவன்களுக்குத் தலைவராக, சற்குருவாக, பீடாதிபதியாக விளங்குபவரே இடைக்காடர் சித்தராவார்..!

எனவே தாம் இன்றைக்கும் அருணாசலத்தில் இடைக்காடர் சித்தருடைய குரு மூர்த்தத்தின்பால்தாம். ஆதி மூலக் கருவாய், அருவாய், உருவாய், மறையா மறையாய் ஸ்ரீஅருணாசல லிங்கத்தின் மூலக் கருவறையானது இறையாணையாய்த் தோற்றம் பெற்றுள்ளது! இறை ஒளியில் ஒளிந்த, ஒளிர்ந்த, ஒளிரும் ஜீவ கர்ம பரிபாலன சித்தராஜ பீடாதிபதியே, இறைமறைக் காடரே இடைக்காடர் சித்தராம்! இடைக்காடர் என்றால் ஜீவ வாழ்வின் சம்சார, சாகரம், சன்யாச சாகரம், இல்லறம், துறவறம் ஆகியவற்றிற்கு இடையில் இடைப்பாங்காக இருப்பவர்.. மறையாத இறைக்கும், இவற்றில் ஜீவ வாழ்க்கை கொண்டு மறையும் மறையலுக்கும் இடையேயிருந்து குருவருட் பொழிவினை ஆக்குபவர்... பரம்பொருளுக்கும், ஜீவத்திற்கும் இடைப் பாங்காக இருப்பவர் என்றும் பல பொருளுண்டு! இடைக்காடர் காட்டும் தர்மம் மூலமாக, இல்லறத்தில் இருந்து கொண்டே எளிதில் தெயீகத்தை அடைந்திடலாம்!

இடைக்காடம் என்றால் என்ன? இந்த ஜீவ வாழ்விற்கான பூமியில் எங்கு வந்து நம் உடலை இறைவன் சேவைக்காக நம்மை இட்டால், அதாவது அர்ப்பணித்தால், எந்த இடத்தில் பரிபூரணமான, ஆழ்நம்பிக்கையுடன் இறைத் திருப்பணிகளைச் செய்தால் தலைவனாம், அதிலும் இடரில்லாத் தலைவனாம் இறைவனை அடையலாமோ அந்த இடமே இடரில்லாக் காடமாம் அருணாசல புனித பூமியாம்! முதலும் முடிவிற்கும் நடுவில் இருப்பதுதானே இந்த ஜீவ வாழ்க்கை! இந்த இடைப் பாடமாம் ஜீவ வாழ்விற்குத் தலைவராக இருந்து இடைக்காடத் தலமாக விளங்கும் அருணாசலத்தை உணர வைப்பவரே இடைக்காடர் சித்தர்! இது வெறும் மடை திறந்த வார்த்தை ஜாலமன்று, ஆனால் ஆன்மப் பசி நேரத்தில், உங்கள் வாழ்க்கையைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது என இடையே ஊட்டப்படும் ஞான உணவேயாம்!

பிரபஞ்சம் அனைத்தும் அண்ணாமலைக்குள்!

திருஅண்ணாமலையில் தாம் எல்லா உலக, கோள, அண்ட சராசர தேவ இரகசியங்களும் அடங்கி உள்ளன! அருணாசல மலையின் பருப் பொருளில் இவையாவும், யாவையும் அடக்கமாம்! அருணாசலத்தில் இல்லாதது பிரபஞ்சத்தில் எங்குமே இராது! பிரபஞ்சத்தில் இருப்பதெல்லாம் இதில் அடக்கம்! எல்லா விதமான மூலிகைத் தத்துவங்களும், வேத மந்திர சக்திகளும், பூஜை முறைகளும், அருணைக்குள், இந்த திவ்யமான மலையின் பருப்பொருளாய் அடங்கி இருக்கின்றன..! திருஅண்ணாமலையைப் பற்றிப் பரிபூரணமாக அறிந்து, அனைத்து தேவ இரகசியங்களையும் உணர்ந்து, உய்த்து உரைத்தவரே இடைக்காடர் சித்தர்! திருஅண்ணாமலைச் சுயம்பு லிங்கத்திலும், சுயம்பு மலையிலும் கலந்தவர், கரைந்தவர்! இறைவனே சங்கல்ப ஜோதியாய், மலையாய்த் தோன்றிய போது ஜோதியிலும் இறை ஆணையால் ஐக்கியமானவரே இடைக்காடர்! இன்றும் இந்தச் சுயம்பு லிங்கத்தில் இருந்து வெளியில் வருகின்றார்.. அந்தச் சுயம்பு லிங்கத்திற்குள்ளேயே அடங்குகின்றார்.. இவ்வாறு இறைமைக்கும், பிரபஞ்சத்திற்கும் இடையே உத்தம சித்தராய்த் திளைப்பதால்தான் இடைக்காடரானார்! இவருடைய காலத்தில் திருஅண்ணாமலையில் சிங்கங்கள், பசுக்கள், மான்கள் எல்லாம் ஒன்றாக நீர் அருந்தி, சாத்வீகத் தத்துவத்தைத் தெய்வீக ரீதியாகக் கடைபிடித்தன! அருணாசலத்தின் சாந்தம் பொங்கிய சுனை நீரை அருந்தினாலே போதும், விலங்குகளுக்குப் பசியாறிடும்! பின் எங்கு பகைமை தோன்றும்? விலங்குகளும் நல்லற இல்லறம் பூண்டமையால், தர்ம சீலமானது அறப்பேரரசாய் அருணாசலத்தில் பூ(ரி)த்தது! ஒரு யுகத்தில் இத்தகைய தேவ வனமாகப் பொலிந்ததே திருஅண்ணாமலையாம்! பெருஞ் சிங்கங்கள் நீர் பருகி வலம் வந்த இடமாக இருந்தமையால் சிம்ம ஆட்சி ஸ்தானத்திற்கான அனுகிரகங்களை பக்தர்களுக்குத் தரக் கூடிய முக்கியத் தலம்! காட்டுக்கு ராஜாவாகிய சிங்கமானது, வேத வாழ்வு பூண்டமையால் அதற்குச் சுனை நீர் தந்து பசி தீர்த்து, ஆன்மப்பசி வளர்த்த சாந்தங் கூட்டிய பெம்மானே அதனை ராஜ ரிஷி நிலைக்கும் உயர்த்தினார்! இதே போல், இடைக்காடர் காட்டும் இல்லற தர்மங்களைப் பேணுவோரை, ஜனகர் போல் காட்டுக்கும் அரசனாக்குவார், நாட்டுக்கும் மன்னனாக்குவார், வீட்டுக்கும் ராஜா ஆக்குவார், ஜீவ வாழ்வுக்கும், சிறப்புடைய தெய்வீக சாம்ராஜ்யத்தின் பேரரசனாகவும் ஆக்குவார்..!

இத்தகைய அரச பதவிகள் அனைத்துமே காட்டுகின்ற இறைத் தகுதியை அளக்கும் ஒரே உத்தம இடம் திருஅண்ணாமலை ஒன்றுதான் என்று இடைக்காடர் கிரிதேவ காஷ்ட விளக்கமாகச் சொல்கின்றார்.. திருஅண்ணாமலையில் உலகத்தில் உள்ள அனைத்து தேவ இரகசியங்களையும், ஆலய தரிசனங்களையும் பெற்றிடலாம்! அண்ணாமலையிலேயே அனைத்துக் கோடி லோகங்களின் இறை அனுபவங்களையும் பெற்றிடலாம்! அண்ணாமலை தருகின்ற இறைஅனுபவத்தை வேறு எங்கும் பெற முடியாது! கிடைக்கவும் கிடைக்காது! அருணையை கிரிவலம் வந்து திருஅண்ணாமலையின் அனைத்துக் கோடி யுக ஆண்டுகளின் கார்த்திகை தீபத்தைத் தரிசித்த மாமுனிச் சித்தரை, இடைக்காடர் சித்தரை சரணடைவோம்!

நெடுங்குடி ஸ்ரீகைலாசநாதர்

பணக் கஷ்டம் தீர்க்கும் பரம்பொருளே நெடுங்குடி ஸ்ரீபடிக்காசுநாதர்! நோய் தீர்க்கும் நிமலனே ஸ்ரீகைலாசநாதர்! சக்தி வாய்ந்த கிரிவலத் தலமே நெடுங்குடி! பாமரர்க்கும் படியளக்கும் நெடுங்குடி நாதனே ஸ்ரீபிரசன்ன நாயகி சமேத கைலாசநாத மூர்த்தி! மண்மலையில் அருமருந்து கூட்டி, பெருநோய்கள் தீர்ப்பவரே படிக்காசுநாதராம் நெடுங்குடி ஸ்ரீகைலாசநாதர்!

தேனிமலை, குன்றக்குடி போன்று கல் மலைகளைப் பார்த்திருப்பீர்கள்! முற்றிலும் மண்ணாலாகிய நெடுங்குடிப் புனிதச் சிறு மலையில்தான் ஸ்ரீபடிக்காசுநாதர் எனப்படும் ஸ்ரீகைலாசநாதப் பெருமான், ஸ்ரீப்ரசன்ன நாயகியுடன் உறைந்து நமக்குப் பேரருள் புரிகின்றார்.. பலரும் அறியாது, தேசத்தின் ஒரு மூலையில் அருமருந்தாய்ப் பொலியும் ஓரரிய மண் மலையின் மேல் வாசங் கொண்டு, மூன்று வயதுச் சிறுமி முதல் 80-90 வயதாகிய முதியோர்களும், ஊனமுற்றோரும், கடுமையான நோய்களால் வாடுவோரும் என அனைவருமே மலையேறிச் சென்று தரிசிக்கும் வண்ணம் அமைந்துள்ள மிக மிகச் சிறிதான மண்மலையே, பெரிதான இறைப் பெரும் கீர்த்தியைப் பூண்டு, அரிதான அருமருந்து சக்தி கூடிய லிங்க வடிவம் தாங்கி ஆதிசிவன் அருள்கின்ற அற்புதத் தலமே, நெடுங்குடிச் சிற்றூராம்.

நாக தீர்த்தம் நெடுங்குடி

நெடுங்குடியின் நீள் நடையில் நிறையும் சித்தர்கள்!

சித்தர்கள் நிறைந்த புனித பூமி இது! வேத சக்தி, பூஜை சக்தி, யோக சக்தி, ரேகை சக்தி, போன்ற பல அரிய சக்தி மூலங்களைக் கலியுக மனிதன் மிக விரைவாக இழந்து வருகின்றான். ஆனால் தாவரங்களும், விலங்கினங்களும் வேத சக்தியின் மகாத்மியத்தைப் புரிந்து கொண்டு எப்போதும் பூஜை நிலையில் பரிணமித்து மகத்தான வேத, யோக சக்திகளுடன் இன்றும் நிலைத்து நின்று தம்முடைய வேர்கள், தண்டுகள், இலைகள், கிளைகள், பூக்கள், கனிகள் மூலமாகப் பிரபஞ்சத்திற்கு அரிதினும் அரிதாம் வேத சக்திகளைப் பரப்பி வருகின்றன..! சுயம்பு லிங்கம் எப்போதும் பூமியின் அடியில் ஒளிர்ந்து கொண்டு தக்க சமயத்தில் இறை ஆணையாக சித்தர்கள், மகரிஷிகள் மூலமாக வெளி வருவதாம்.. தற்காலத்தில் “இது சுயம்பு லிங்கம், இது பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்தி” என்று பலவாறாக அறியாமையால் வகை பிரித்துச் சொல்வார்கள்.. இறைச் சங்கல்பத்துடன் தான் எந்த இடத்திலும் நவீனப் பிரதிஷ்டையாகவோ அல்லது காலம் அறியா வகைச் சுயம்பு மூர்த்தியாகவோ (எங்குமாக) சுவாமி சந்நிதி எழும்பிடும்.

நாம் இங்கு காணும் நெடுங்குடி குக்கிராமத்தில் என்று தோன்றினார் என்ற காலமறியா மூர்த்தியாக ஸ்ரீபிரசன்ன நாயகி சமேத ஸ்ரீகைலாசநாதர் அருள்பாலிக்கின்றார். ஒவ்வொரு ஆலயமும் பலகோடி யுகங்களாகப் பல வடிவங்களில் மாறி மாறி அமைந்து நிலை பெறுவதால், எத்தனையோ கோடி யுகங்களில் நிகழ்ந்த இறை லீலைகள் மற்றும் அனுபூதிகள் தாம் அந்தந்த தலப் புராணங்களாகப் பிரகாசிக்கின்றன..! எனவே இந்தத் தலத்திற்கு இது மட்டுமேதான் தலபுராணம் என்று நிச்சயமாக அறுதியிட்டுக் கூற முடியாது... மகான்களும், சித்தர்களும், சற்குருமார்களும் மறைந்திட்ட, மறந்து போன பண்டைய தல புராணங்களை அவ்வப்போது எடுத்துரைப்பர்! மனிதனுடைய பகுத்தறிவுக்கு எட்டாத வகையில் எத்தனையோ இறை ரகசியங்கள் இன்றைக்கும் அனைத்து ஆலயங்களிலும் திகழ்கின்றன..!

பிருத்வி மாள சாங்கிகள் :- திருக்கயிலாயத்தில்  பிருத்வி மாள சாங்கிகள் என்ற பிருத்வி லோக தேவ மூர்த்திகள் உண்டு.. இவர்கள்தாம் பிரபஞ்சத்தின் அனைத்துக் கோளங்கள், லோகங்களின் பிருத்வி (அதாவது நில) சம்பந்தமான அமைப்புகளை உருவாக்குகின்றனர்... இவர்களை Geographical Structural Engineering  துறைகளுக்கு அருள்பாலிக்கும் மூர்த்திகள் என்றும் விளித்திடலாம்... மதுரை ஆலயத்தை அமைத்த மயன் மற்றும் விஸ்வகர்ம மூர்த்திகள் யாவரும் திருக்கயிலாயத்தின் மிகவும் புனிதமான மாள சாங்கிய லோகத்தைச் சார்ந்தவர்களே! மாள சாங்கி மூர்த்திகளுடைய தெய்வீக சக்தி நிறைந்த இடங்குகளுள் ஒன்றே நெடுங்குடியாகும்.. கல்லால விருட்சத்தோடு தோன்றிய பல தெய்வீக ஆலமரங்கள் இன்றைக்கும் திருஅண்ணாமலை மலைச் சாரல், வாரணாசி (காசி), பிரயாக் (அலகாபாத்), கயா, பத்ரிநாத் போன்ற இடங்களில் உள்ள தெய்வீக ஆலமரங்கள் கல்லால பூமியைச் சேர்ந்தவை நெடுங்குடியும் இவ்வகையே! இவ்வாறு சிருஷ்டி முதல் பூலோகத்தின் பல இடங்களிலும் பல கோடி யுகங்களாகப் பிரபஞ்ச சிருஷ்டி காலத்திலிருந்து வருகின்ற ஆல மரங்களின் வேர்த் திரட்சிகள் யாவும் மிருத்திகா ஸ்வேதப் பிரகாச லோகத்தைச் சென்றடைகின்றன.. பலவிதமான யோக நிலைகளைப் பூண்கின்ற ஆதி சிவமூர்த்தி, யோகத்திலிருந்து மீண்டு, தம் கால் கட்டை விரலால் மிருத்திகா பூமியை அழுத்தி எழுகையில் கைலாயத் திருமண்ணானது அமிழ்ந்து பூலோகத்தில் சில இடங்களில் மண்மலையாய்த் தோன்றுகின்றது.. இத்தகைய கைலாய மிருத்திகா சக்தியைக் கொண்டதுள் ஒன்றே நெடுங்குடித் திருமண் மலையாகும்..! இது மகத்தான கிரிவலத் தலமாகும்..!

அமாவாசை, பௌர்ணமி கிரிவலத்திற்கு உன்னதமான பித்ரு முக்தித் திருத்தலம்! நெடுங்குடி ஸ்ரீபிரசன்ன நாயகி சமேத ஸ்ரீகைலாச மூர்த்தி! வாசி தீரக் காசு நல்கும் நெடுங்குடிப் பெம்மான்! வறுமையை, தரித்திர நிலைமையை நீக்கும் நெடுங்குடி “வாறுக” லிங்கம்! ஏழ்மையைப் போக்கும் நெடுங்குடி படிக்காசு நாதச் சிவமூர்த்தி! தாங்கொணா உடற்பிணி தீர்க்கும் ஸ்ரீகைலாசநாதர்! தீராத நோய்களையும் தீர்க்கும் காந்த சக்தியும் மூலிகா சக்திகளும் நிறைந்த நெடுங்குடி மண்மலை கிரிவலம்!

அறந்தாங்கி காரைக்குடி பஸ் மார்க்கத்தில் கீழாநெல்லிக் கோட்டையில் இறங்கிட, இங்கிருந்து மூன்று கி.மீ தொலைவில் இருப்பதே மருத்துவ காந்த சக்திகள் நிறைந்த நெடுங்குடி (மண்மலைத்) திருத்தலமாகும்.. புதுக்கோட்டையிலிருந்து தேனிப்பட்டி புதுப்பட்டி சென்று அங்கிருந்து கீழாநெல்லிக் கோட்டை வழியாகவும் நெடுங்குடி சென்றிடலாம்... திருமயம், கானாடுகாத்தான் வழியாகவும் நெடுங்குடிக்குக் குறுக்குச் சாலைகள் உண்டு.. நெடுங்குடிக்கு, பஸ் போக்குவரத்து தற்போதைக்கு அதிகமில்லை, கீழாநெல்லிக் கோட்டையில் இருந்து ஆட்டோ போன்ற வாகனங்களில் சென்றிடலாம்..!

மருத்துவ ரீதியான வாறுக சக்தி பெருக்கெடுக்கும் நெடுங்குடி!

நெடுங்குடி

குற்றாலம் அருகே உள்ள முருகன் தலமான இலஞ்சியில் பிருத்வி மற்றும் மிருத்திகா சக்தி நிறைந்த ஸ்ரீவாறுக சிவலிங்கம் போல வாறுக (மண்) சக்திகள், காந்த சக்திகள், மருத்துவ மூலிகா சக்திகள் நிறைந்த சுயம்பு மலையே நெடுங்குடி மண்மலை! காந்த சக்திகளுடன், சுற்றிலும் வாறுக வகை மூலிகா சக்திகளைக் கொண்ட நெடுங்குடியைக் கிரிவலம் வருதலால் பல கடுமையான நோய்களுக்கும் தக்க நிவாரணங்கள் கிட்டும்!

பித்ரு முக்தித் தலம்! பித்ருக்குளுக்கும் முக்தி நிலையைப் பெற்றுத் தரும் நெடுங்குடி சர்ப நதி தீரத்தில் உள்ளது..  சர்ப ஆறு மிகவும் சக்தி வாய்ந்தது! கோடையில் காய்ந்து இருப்பினும் ஆங்காங்கே நீர் காணப்படும்! சூட்சுமமாக எப்போதும் வற்றாத தீர்த்தமுண்டு! பெறுதற்கரிய சர்ப தீர்த்தத்துடன் பித்ரு முக்தித் தலமாகவும் விளங்குவதால் அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கும் உரித்தான மகத்தான கிரிவலத் தலமாக நெடுங்குடி விளங்குகின்றது! சித்தர்களின் நடமாட்டம் எப்போதும் பூரிக்கும் தலம்! அமாவாசை தோறும் லட்சக் கணக்கான வசு, ருத்ர, ஆதித்ய பித்ருக்கள் சூட்சும, தூல வடிவுகளில் ஸ்ரீகைலாச நாதரை வழிபட்டுக் கிரிவலம் மேற்கொள்ளும் தலம்! மகரிஷிகள் தங்கள் தவத்திற்காகக் காந்த சக்தியைப் பெற்றிட எப்போதும் பூஜிக்கும் திருத்தலம்! தற்போதைக்கு கிரிவலப் பாதை சற்றே கல், முள்ளுடன் காணப்படுவதால் வசதி உள்ளோரும், பக்தர்களும், சத்சங்கம் கொண்டோரும் தக்க அனுமதியுடன் உழவாரத் திருப்பணிகள், இறைப் பணிகள் மூலமாகவும் கிரிவலப் பாதையைச் செப்பனிட்டுத் தருதலும் ஐஸ்வர்ய கடாட்சத்தை அளிப்பதுடன், சந்ததிகளுக்கும் மகத்தான புண்ய சக்திகளை ஈட்டித் தரும்.!

அனைவரும் ஏற இயலும் அற்புத மலை!

நெடுங்குடி

இத்தலத்தின் மகிமையே, மூன்று வயதுச் சிறுமி முதல் 80-90 வயதான கிழவர்கள் வரை அனைவரும் மலையேறும் வண்ணம் இறைவன் மிகமிகச் சிறிய மண் குன்றில் (சுமார் 50 அடி) தன்னை அருளாக்கம் கொண்டிருப்பதேயாம்! ஊனமுற்றோரும், கொடிய நோய்களால், அவதியுறுவோரும் கூட எளிதில் நெடுங்குடி மலையேறிச் சென்று வழிபட்டிடலாம்! கும்பகோணம், சாக்கோட்டை அருகில் சிவபுரத் திருத்தலத்தின் அடியில் ஊரெங்கும் சூட்சுமமாக கோடானுகோடி சிவலிங்கங்கள் பூமியினுள் மறைந்து ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன.. இங்கிருந்துதான் பல கோளங்களுக்கும் இறைச் சங்கல்பமாக சுயம்பு மூர்த்திகள் எழுப்பப் பெறுகின்றன.. திருக்கயிலையில் சுயம்புவாகத் தோன்றும் மிருத்திகையே நெடுங்குடித் திருமண் மலையாய் ஜ்வலிக்கின்றது!

கல்லால விருட்சத்தின் வேர்ப் பகுதியைத் தாங்கிய மண் ஆதலின் நெடுங்குடி மண்மலைக்கு நோய்களைத் தீர்க்கும் அதியற்புத சக்தி உண்டு.. இதனால்தான் பெருநோய்கள் கொண்டோரும், கடுமையான இருதய நோய்களால் பாதிக்கப்பட்டோரும் கூட மலை மீது சென்று சுவாமியை வழிபடும் வகையில் மிக எளிமையான சிறிய மலையாக இறைவனே நெடுங்குடி மண்மலையை நமக்கு ஆக்கித் தந்துள்ளான்..! சுற்றிலும் பல அரிய காந்த சக்தி மூலிகைகள் தூல வடிவிலும், சூட்சும வடிவிலும் நிறைந்திருக்கின்ற புனித பூமி... இங்கு கிரிவலம் வருவதால் மண் மலையிலிருந்து எழுகின்ற அதியற்புத காந்த சக்திக் காற்றானது சுற்றிலும் உள்ள மூலிகைத் தாவரங்களில் உராய்ந்து, நம் சுவாச நாளங்களுக்கும் 72000 உடல் நாடிகளுக்கும் இறைச் சக்தியைக் கூட்டுகின்றது.. தற்போதைய கிரிவலப் பாதை சற்றுக் கடினமாக இருப்பதுபோல் தோன்றினாலும் இறையடியார்கள் ஆழ்ந்த பக்தியுடன் ஒன்று கூடித் தீவிர மனோ வைராக்யத்துடன் அமாவாசை, பௌர்ணமி மற்றும் செவ்வாய், ஞாயிறு, அஸ்வினி நட்சத்திர நாட்களில் இங்கு கிரிவல வழிபாட்டினை நோய் தீர்க்கும் நிவாரணியாகவும், படிக்காசு தந்து பணக்கஷ்டம் தீர்க்கும் நல்வழிபாடாகவும் மேற்கொண்டிடில் கிரிவலப் பாதை தாமாகவே இறையருளால் நன்கு அமைந்து விடும்..!

நோய் தீர்க்கும் நெடுங்குடித் தலம்! :- எவ்வாறு (புதுக்கோட்டை – பொன்னமராவதி இடையில் உள்ள) தேனிமலையானது மாதப் பௌர்ணமியில் ஆயிரம்பேர் கிரிவலம் வருவதாகத் தற்போது பல யுகங்களுக்குப் பின்னர் மகத்தான கிரிவலத் தலமாக மீண்டும் இறையாக்கம் பெற்றுள்ளதோ, இதே போன்று நோய் தீர்க்கும் நெடுங்குடித் தலம் என எதிர்காலத்தில் பிரசித்தி பெற்ற கிரிவலத் தலங்களுள் ஒன்றாக நெடுங்குடி ஆகிடும் என்பதே சித்தர்களின் திருவாக்கு! அரிய மாமருந்து சக்திகள் நிறைந்த மண் பூமியுடன் கோயிலைச் சுற்றி அடிப் பிரதட்சிணமும், அங்கப் பிரதட்சிணமும் செய்திடில் நம் பாதரேகைகள் மூலமாகவும், அங்க நாளங்கள் மூலமாகவும் அதி அற்புத மருந்து சக்திகள் உடலில் நிரவி நோய் நிவாரண வழிகள் கைகூடுகின்றன! முந்தைய ஒரு யுகத்தில் பக்தி மிகுதியால் வறுமையிலும் கூடபக்தர்கள் எவ்வித எதிர்ப்பார்ப்பும் இன்றி அபிஷேகப் பாலை அள்ளித் தந்த போது ஆண்டவன் தம் திருப்படியில் அற்புதப் படிக்காசு தந்து வளம் கூட்டிய புனிதமான பூமி! இவ்வாறாக வாசி (வறுமை) தீர காசு நல்கும் பெருமானே நெடுங்குடி ஸ்ரீபிரசன்ன நாயகி கைலாசநாதர் லிங்க மூர்த்தியாவார்..!

சித்தர்கள் அருமருந்து சக்திகளைப் பெருக்கிக் கொள்ளவும் நமக்கு நல்வரந் தந்திடவும் அடிக்கடி அருந்தவ யோகங்களையும், சூட்சுமமாக அடிப் பிரதட்சிண, அங்கப் பிரதட்சிணங்களை மேற்கொள்ளும் தலம். பணக் கஷ்டத்தால் வாடுவோர், மா மலைபோல் கடன்களைப் பெருக்கிக் கொண்டு அவதிப்படுவோர் படிக்காசு நாதராகிய நெடுங்குடி ஸ்ரீகைலாசநாதர் சுவாமியை வேண்டி, சம்பந்தர் சுவாமிகளின் வறுமை தீர்க்கும் வாறுக காந்த சக்திப் பதிகமான, அற்புதமான தேவராத் திருப்பண்ணாகிய ...

நெடுங்குடி

வாசி தீரவே காசு நல்குவீர்
மாசில் மிழலையீர் ஏசல் இல்லையே

இறைவர் ஆயினீர் மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை முறைமை நல்குமே

செய்ய மேனியீர் மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர் உய்ய நல்குமே

நீறுபூசினீர் ஏறதேறினீர்
கூறுமிழலையீர் பேறும் அருளுமே

காமன்வேவஓர் தூமக்கண்ணினீர்
நாம மிழலியீர் சேம நல்குமே

பிணிகொள் சடையினீர் மணிகொள்மிடறினீர்
அணிகொள் மிழலையீர் பணிகொண்டருளுமே

மங்கை பங்கினீர் துங்க மிழலையீர்
கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே

அரக்கன் நெரிதர இரக்கம் எய்தினீர்
பரக்கு மிழலையீர் கரக்கை தவிர்மினே

அயனு மாலுமாய் முயலு முடியினீர்
இயலு மிழலையீர் பயனும் அருளுமே

பறிகொள் தலையினார் அறிவதறிகிலார்
வெறிகொள் மிழலையீர் பிறிவதரியதே

காழிமாநகர் வாழி சம்பந்தன்
வீழிமிழலைமேல் தாழும் மொழிகளே

என்ற திருப்பதிகத்தை ஓதியவாறு அடிப்பிரதட்சிணமும் அல்லது இயன்றால் அங்கப் பிரதட்சிணமும், பெருமாளுக்கு உகந்த லட்சுமி கடாட்சந் தரும் புதன்கிழமை தோறும் புத ஹோரை நேரத்தில் செய்தல் சிறப்பான பலன்களைத் தரும்... (புதன் கிழமை புத ஹோரை நேரம் – காலை – 6-7, மதியம் 1-2, இரவு 8-9). இரவில்  தற்போது போதிய வெளிச்சம் இல்லாமையின் ஒளி வசதிகள் செய்து தருவதும்.. பக்த கோடிகள் நன்கு கிரிவலம் வரும் வண்ணம், நல்ல மின் வசதிகள் செய்து தருவதும் மிகமிகக் கீர்த்தியும், லக்ஷ்மி கடாட்சமும் தரும் மகா அற்புதத் தெய்வத் திருப்பணிகளாகும்!

ஸ்ரீகாசி விஸ்வநாதர் நெடுங்குடி

நல் கிரிவலப் பாதை நல்கிடுவீர்! கீழாநெல்லிக் கோட்டையிலிருந்து காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளில் மட்டும் பஸ் செல்வதால், கீழாநெல்லிக் கோட்டையிலிருந்து ஆட்டோ அல்லது வேறு வண்டி மூலமாகச் செல்ல வேண்டியிருப்பதால் பக்தர்களுக்கு இலவச வாகன வசதி அளிப்பதும் அரிய திருப்பணியே! வசதி உள்ளோர் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் வேன்களில் பக்தர்களை இலவசமாக கீழாநெல்லிக் கோட்டையில் இருந்து நெடுங்குடிக்கு அழைத்துச் செல்வதும் மகத்தான இறைப்பணியாகும்! இப்புண்ய சக்தி ஆண்டாண்டு காலமாக இருந்து நம்மை உய்விப்பதாகும்!

மிகுந்த பரந்த மண் மலை மேல் கோயிலைச் சுற்றி மிகப் பரந்த பிரதட்சிணச் சுற்றளவு இருப்பதால் அடிப்பிரதட்சிணமே கடினமாக இருக்கக் கூடும்.. எனவே அங்கப் பிரதட்சிணத்தையும் வெயிலைப் பொறுத்து ஆங்காங்கே இளைப்பாறியபடி செய்வதில் தவறு கிடையாது... இறையடியார்கள் சத்சங்கம் மூலமாக அடிக்கடி கோயில் பிரதட்சிண வழியையும், கிரிவலப் பாதையையும் கல், முள் அகற்றிச் சுத்தம் செய்வது மிகவும் பெறுதற்கரிய பாக்யமாகும்.. நல்ல புண்ய சக்தி கொண்ட திருப்பணி!

மண்மலை மேல் பரப்பு வரை வண்டியிலோ காரிலோ செல்வதற்கு அபூர்வமாகச் சாலை வசதி இருந்த போதும், காலணிகள் அணியாது மேலே நடந்து செல்வதுதான் சிறப்புடையதாம்.! ஸ்ரீகாயத்ரீப் படிகள் என்று சொல்லப்படுகின்ற மிகவும் நீளமான 18 படிகளை ஐந்து நிமிடங்களில் ஏறிச் சென்றிடலாம்... அந்த அளவிற்குத் தன் மலை உயரத்தைக் குறைத்துக் கொண்டு குழந்தைகள், முதியோர்கள், கடும் நோயாளிகள் போன்றோருக்கு அருள்புரியும் வண்ணம் படிக்காசுநாதர் அருள்புரிகின்றார் என்பதை மீண்டும் மீண்டும் நினைவு கொள்க!

சூட்சும மற்றும் தூலவடிவில் சித்தர்கள் கூடி வழிபடும் அற்புதத் தலமாகையால் தேவாதி தேவர்களும் சித்தர்களைக் காண இங்கு ஓடோடி வருகின்றனர்! தற்போது பஸ் வசதி அவ்வளவாக இல்லாமையால் பக்தர்கள் மாலைக்குள் வழிபாட்டை முடித்துக் கொள்கின்றார்கள்.. தார் ரோடு வசதி இருப்பினும் பக்தர்கள் பெருமளவில் இவ்வாலயத்திற்கு வந்திட வசதிகளைப் பெருக்குவதற்கு ஆவன செய்வதும் மகத்தான சிவசேவையாகும்.! கலியுகத்தில் பெரும்பாலும் அனைத்து மனிதர்களும் கோபம், சூது, வாது, பொய்மை, ஏமாற்றுதல், அதிகார துஷ்பிரயோகம், லஞ்சம், நாணயமின்மை, அதர்மம், வாங்கும் சம்பளத்திற்கு முறையாக பணிபுரியாது ஏமாற்றுதல், கர்வம், பகைமை போன்ற ராட்சச குணங்களைக் கொண்டிருக்கின்றார்கள்.. இவை அகன்றால்தான் தெய்வீகத்தில் தெளிவு பெற முடியும்... இவற்றில் ஒன்று கூட இல்லாத மனிதரைக் காண்பது அரிது... எனவேதாம் மானிடர்களின் ராட்சச குணங்களை அகற்றும் மாமருந்து இறை மேனியாய் நெடுங்குடி ஆலயம் திகழ்கின்றது!

ஸ்ரீதட்சிணாமூர்த்தி நெடுங்குடி

சிவ லிங்கங்களை மானுடப் பிரதிஷ்டை, தேவ பிரதிஷ்டை, ஆகமப் பிரதிஷ்டை, சுயம்புப் பிரதிஷ்டை, ராட்சச கணப் பிரதிஷ்டை எனப் பல்வகையில் விளக்குவார்கள்.. கலியுகம் என்றாலே ராட்சச குணங்கள் நிறைந்த மனிதர்களே அதிகம்! ரஜோ குணம், சாத்வீக குணம், தமோ குணம் ஆகிய மூன்று குணங்கள் சேர்ந்ததே ஒரு மனிதப் பிறவியாகும். இதில் எந்த விகிதாசாரம் அதிகமாக உள்ளதோ அதைப் பொறுத்துத்தான் அவருடைய குணாதிசயங்கள் அமையும்.. தமோ குணங்கள் நிரம்பப் பெற்றவர்கள் சோம்பேறிகளாகவும், எதிலுமே அக்கறை இல்லாதவர்களாகவும், தீயொழுக்க சுகபோகத்தை நாடுபவர்களாகவும் இருப்பார்கள்... ஒருவர் எவ்வளவுதான் நல்லவராக இருந்தாலும் பொடி போடுதல், சிகரெட் பிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய வழக்கங்கள் ஒரு சிறிதேனும் இருந்தால் கூட அந்த அளவிற்கு ராட்சச குணங்கள் பெருகி இருக்கின்றன என்பது பொருளாம்... இதற்காகத்தான் அந்தந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களை தேவ கணம், மனுஷ கணம், ராட்சச கணம் என்று பிரிக்கின்றார்கள்... இதற்காக அவர்கள் அந்தந்த குணங்களை நிரம்பக் கொண்டிருப்பார்கள் என்பது பொருளல்ல, கணம் வேறு, குணம் வேறு!

கர்மபரிபாலனத்தின் போது பிராயச்சித்த வழி முறைகளுக்கு இந்த கண வகைகள் பெரிதும் துணைபுரியும்.. திருமணப் பொருத்தங்கள், நாடிப் பரிகாரங்கள், ஆத்ம சுய சோதனைகளுக்கு இந்த நட்சத்திர கண வகைத் தாத்பர்யங்களே துணைபுரிகின்றன...!

முக்குண மாமணி நெடுங்குடி மலை! நோய் தீர்க்கும் மாமருந்து மிருத்திகா மலையாகவும், பணக் கஷ்டத்தை, வறுமையை நீக்கும் வாலைச் சுடர் யோக மலையாகவும் மட்டுமல்லாது மனிதரிடம் உள்ள ராட்சச குணங்களாகிய தீய வழக்கங்களைத் தீர்ப்பதற்கும் தேவ சக்தி நிறைந்த துர்க்க செந்தூர மலையாகவும் நெடுங்குடி விளங்குகின்றது.. இங்கு திங்கள் தோறும் ஆலயத்தை அடிப்பிரதட்சிணம் செய்து கிரிவலம் வந்து சந்திர பகவானுக்கு உரித்தான வெள்ளை நிற ஆடைகள், உணவு வகைகள் (தயிர் சாதம், இடியாப்பம்) ஆகியவற்றைத் தானமாக அளிப்பதால் மதி மயக்கும் தீய பழக்கங்களிலிருந்து மதிகாரகனாகிய சந்திரபகவான் நம்மைக் காத்து அருள்பாலிக்கின்றார்.!

பொதுவாக மூன்றாம் பிறைச் சந்திரனை முடியில் சூட்டிய மகேஸ்வரராக கைலாச நாதர் இறை லோகங்களில் பரிமளிப்பதால் மதி மயங்காது நல்மதி அமைந்திட, திங்கட் கிழமை வழிபாடு அமைந்திடும்... கடும் நோய்களால் அவதியுறுவோர் நோய்களைத் தீர்க்கும் சக்தியுடைய அங்காரக பகவானாகிய செவ்வாய் பகவானுக்கு உரித்தான செவ்வாய்க் கிழமையில் அதிகாலையில் இங்கு ஆலயத்தை அடிப் பிரதட்சிணம் செய்து கிரிவலம் வந்து ஏழைக் குழந்தைகளுக்கு அன்னதானம் அளித்தலாலும் ஸ்ரீவைத்யநாத அஷ்டகம் அல்லது திருஞான சம்பந்தரின் திருநீற்றுப் பதிகத்தை ஓதியவாறு ஆலயத்தையும், மலையையும் கிரிவலம் வருவதாலும் நோய்கள் நிவர்த்தியாகும்.. ஆழ்ந்த இறை நம்பிக்கை எதையும் சாதிக்க வல்லதாம்!

மிகுந்த நம்பிக்கை பூண்டு இங்கு வழிபடுவோர்க்கு அம்பிகையே இறைவன் அருகில் பிரசன்னமாகி அடியார்களின் குறைகளை எடுத்துச் சொல்லி நிவாரண வழிமுறைகளைப் பெற்றுத் தருவதால் ஸ்ரீபிரசன்ன நாயகியாக இங்கு பார்வதி தேவி அருள்பாலிக்கின்றாள்.. காருண்யம் மிக்க தேவி! கலியுகத்தில் பிரத்யட்சமாகக் காட்சி தந்து அடைக்கலம் நாடுவோர்க்கு அருள்புரியும் அற்புத அம்பிகை! கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும், கருப்பையில் இருக்கும் உயிர்க்கும் இறைவன் படியளக்கின்றான் என்பதைச் சோதித்தவளாக அம்பிகை இருந்தபோது அனைத்துள்ளும் உய்யும் திருக்கயிலை நாதனாக இறைவன் காட்சி தந்து... சாதாரணப் பெண்ணாய்ப் பிறந்து மானுடன்போல் வாழ்ந்து அனைத்துள்ளும் எம்மைக் காணும் பரிபக்குவத்தை அடைவாயாக! என்று இறைவனே அருள்வரம் தந்திட்டார்! தாம் எங்கும் பிரசன்னமாகி அமைத்து உயிர்களுக்கும் உணவு ஊட்டுவதை இறைவியையே இறைப் பேருவகையுடன் உணரச் செய்து, அவ்வாறு உணர்ந்த இறைவியின் அர்ச்சாவதார மூர்த்தமே ஸ்ரீபிரசன்ன நாயகி ஆயிற்று!

சர்ப்பநதி நெடுங்குடி

தர்ப்பண சக்தி கூட்டும் சர்ப ஆறு! இத்திருத்தலத்தில் சர்ப தீர்த்தம் என்ற ஆறு ஒன்றுண்டு.. ஆதிகாலக் கல்லால மரங்கள், பூமியினுள் அமிழ்ந்திருக்கும் சுயம்பு லிங்கங்களை ஸ்பர்சித்து, ஆழ்கங்கை நீரோட்டங்கள் மூலமாக இறைச் சக்தியைப் பெற்றன! அப்போது பித்ரு மூர்த்திகள் பூலோகம் போல் தங்களுடைய லோகத்திற்கும் கங்கையைப் பாய்ச்சிடுமாறு இறைவனை வேண்டினர்... இம்மண்ணின் இறை மகத்துவத்தை உணர்ந்த வசு, ருத்ர, ஆதித்ய பித்ரு மூர்த்திகள் பல மிருத்திகா லிங்கங்களை இங்கே வடிவமைத்துப் பூஜித்தனர்... அந்த மிருத்திகா லிங்கங்களை விரிசடை நாதராய்த் தம் கங்கைப் பிரவாகத்தில் ஏற்றார் ஆதி சிவனாம் திருக்கைலாசநாதர்! இந்த அர்க்ய கங்கைப் பிரவாகத்தையே இப்பகுதியில் .. ஆழ்நீரோட்டமாகவும், நதிப் பிரவாகமாவும் ஆக்கினார். எனவே இந்த மண்மலையில் பொதிந்திருக்கும் ஆன்ம காந்த மாமருந்துச்  சக்திகளை ஈர்த்துக் கல்லால மரத்தின் வேர் வடிவில் வளைந்து, நெளிந்து சர்ப நதி உருவாயிற்று..

கோடையில் இதில் நீர் வற்றினாலும், எங்கெல்லாம் வசு, ருத்ர, ஆதித்ய பித்ரு மூர்த்திகள், மிருத்திகா லிங்கங்களைத் ஸ்தாபித்தார்களோ, அங்கு பித்ரு அர்க்யம் விரிசடை நாதனின் கங்கைப் பிரவாகத் தீர்த்தமும் கூடி நீராடும்.. தீர்த்தமாய் சிறிய சர்ப தீர்த்தமாய் ஆங்காங்கே தர்ப்பணத்திற்காக இன்றும் பரிமளிக்கின்றது... மிருகண்டு மகரிஷியானவர் தம்முடைய அற்புதமான யாகங்களில் பட்டு வஸ்திரங்களை ஆஹூதியாக்கி அவற்றின் அக்னி ஜ்வாலைகளில் எழுகின்ற நற்புகையின் தெய்வீக சக்தியைக் கொண்டு பலகோடி அண்டங்களில் எழுகின்ற துன்பங்களுக்குப் பிராயச்சித்தங்களைத் தர வல்லவராவார்.. இதனால், மானுடர்களுக்காகத் தம்மை உயிர்த் தியாகம் செய்து பட்டு நூலாக மாறிய அநேக கோடிப் பட்டுப் புழுக்களுக்கும் அன்றும், இன்றும், என்றும் முக்தி நிலைகளைத் தரவல்லவரே ஸ்ரீமிருகண்டு மகரிஷியாம்!

ஸ்ரீதுர்காதேவி நெடுங்குடி

சந்ததியர்கள் முறையாகத் தர்ப்பணம் அளிக்காமையால் பித்ரு லோகங்களிலும் எழுகின்ற பலவிதமானப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண ஸ்ரீமிருகண்டு முனிவர் நெடுங்குடிச் சர்ப நதிக் கரையில் பல யாகங்களை வளர்த்து அவர்களுக்கு மட்டுமன்றி பூலோக ஜீவன்களுடைய துயரங்களுக்கும் இன்றும் சூட்சுமமாக பலதேவ பரிகாரங்களைப் பெற்றுத் தருகின்றார்! இன்றைக்கும் இந்த சர்ப நதித் தீரத்தில் நீராடுவோர், தாம் நீராடிய உடைகளை ஆற்றின் கரையிலேயே விட்டு விடுகின்ற வழக்கமும் நிலவுகின்றது... இது வஸ்திர தானத்தின் ஒரு வகையாக அமைகின்றது.. இவ்வாறு நிறைய ஆடைகள் ஆற்று மண்ணில் சிக்கலாகாது என்பதற்காக ஆடைகளை ஆற்றில் விடுதல் ஆகாது என்ற அறிவிப்புப் பலகையும் இங்கு காணப்படுகின்றது... உண்மையில், நீராடியவுடன் நீருக்குள் ஆடைகளைப் போடாது, இங்கு ஈர வஸ்திரங்களைக் கரை ஓரத்தில் வைத்து விடுவதுதான் நெடுங்குடிப் புனிதத் தல வஸ்திர தானத்தின் மரபாகும்.. இதன் பலாபலன்களாக குடும்பத்தில் நிலவும் பித்ரு தோஷங்கள் தீர்வு பெறும்..!

சர்ப நதிக் கரையில் சரத் தர்ப்பணம்! :- எனவே இங்கு நீருக்குள் ஆடையை விட்டு விடுதல் கூடாது. கயை, அலகாபாத், ராமேஸ்வரம் போன்ற புனித நீராடல் தலங்களில் நீராடிய கையோடு, வேறு ஆடைகளை அணிந்து ஈர ஆடைகளை உடனேயே தானமாக அளிக்கின்ற தர்மப் பண்பாடு இன்றும் உண்டு. இந்த வஸ்திர தான சக்திக்கு நோய்களைத் தீர்க்கின்ற தேவ சக்தி அபரிமிதமாக உண்டு... ஆனால் ஈர ஆடைகளை ஆற்றிலோ, தீர்த்தத்திலோ, கடலிலோ விட்டுவிடாமல் வெளியில் வந்து பிறருக்குத் தானமாக அளித்தோ அல்லது கரையில் ஓரத்தில் வைத்து விட்டு வருவதுதான் வஸ்திர தானத்தின் மரபாகும்..!

ஸ்ரீகைலாசநாதர் நெடுங்குடி

எனவே நெடுங்குடியின் இந்த சர்ப நதி நீரத்தில் மூதாதையர்களுக்கு உரித்தான திதிகளிலும், அமாவாசை திதியன்றும், எள், தர்பை கொண்டு தர்ப்பணம் இடுதலும், ஏழைகளுக்குத் தானமாக நல் ஆடைகளை அளித்தலும் பித்ருக்களின் ஆசிகளைப் பெற்றுத் தரும்.. ஆடைகள் என்றால் பழைய கிழிந்த ஆடைகள் அல்ல., நல்ல புது ஆடைகளைத் தானமாக அளிப்பதுதான் சிறப்பானதுடன், தான தர்ம சக்திகளையும் மேம்படுத்தும்.. ஆற்றில் நீர் இல்லாவிடினும் கயைத் திருத்தலம் போலக் கையில் செம்பில் நீர் கொணர்ந்து நெடுங்குடி சர்ப நதிக் கரையில் பித்ரு காரியங்களை நிகழ்த்திட வேண்டும்..!

இவ்வாறாக ஸ்ரீதட்சிணாமூர்த்தியே மரநிழல் கீழ் ஞான யோகம் பூண்டிருக்கின்ற கல்லால மரத்தின் வேர் குண மிருத்திகா சக்தியும் திருக்கயிலையின் காந்தா மருத்துவ சக்திகளும் நிறைந்த புனிதமான மண்மலையே நெடுங்குடியாகும்.. இங்கு கிரிவலம் வருதல் புனிதமான  காந்த சக்திக் காற்றுடன் மூலிகா சக்திகளையும் பெற்றுத் தருகின்றது! குருவருள் கூடிடில் பெறுதற்கு அரிய சித்தர்களுடைய தரிசனத்தையும் பெற்றுத் தருவதாகும்.. தற்போது பஸ் வசதி இல்லாமையாலும், கல், முள் புதராக இருப்பதாலும், ஒரு சிலரே கிரிவலத்திற்கு முயற்சித்தாலும், சத்சங்கமாகப் பல அடியார்கள் ஒன்று கூடி, மூலிகைகளுக்குப் பாதகமின்றிக் கிரிவலப் பாதையைச் செப்பனிட்டுத் தந்தால், எத்தனையோ கோடி பக்தர்களுக்கு நெடுங்குடி திருமலையின் தெய்வீகச் சக்தியை வரும் சந்ததியினருக்குப் பெற்றுத் தந்திடலாம் அல்லவா?

இச்சிறிய மலையின் மேல் வருடத்திற்கு ஒருமுறை வைகாசி விசாகத்தில் தேரோட்டம் நடைபெறுதல் காணுதற்கு அரிய காட்சியாகும்... மாசி மாத மகா சிவராத்திரி அன்றும் ஆயிரக் கணக்கான மக்கள் இங்கு சிவனருளைப் பெற்றுச் செல்கின்றனர் என்பது தேனினும் இனிய நற்செய்தியாம்.. பக்த கோடிகள் ஒன்று திரண்டிடில், மலை மீது தேரோட்டம் என்பது அடிக்கடி நிகழ்கின்ற தெய்வீக வைபவமாக ஆக்கிடலாம் அன்றோ? பெரிய மலைத் தலங்களில் கூட தங்கத் தேர் பவனி வருவதை நாம் அறிவோம்.. ஆனால் மண்மலை மீதே மகத்தான பெரிய தேரோட்டமே நிகழ்வது நெடுங்குடி மண்மலைத் தலத்தின் அரிய தேவ மகிமையைப் புலப்படுத்துகின்றது..  குடிநீராக மட்டுமே பயன்படுத்தப்படும் இங்குள்ள ஆலய நாக தீர்த்தமானது நாக தோஷங்களை நீக்கும் தெய்வீகத் தன்மை வாய்ந்ததால் நீரை அசுத்தப்படுத்தாது, குவளையில் ஏந்தி, சிரசில் தெளித்து அரிய தீர்த்த ஸ்பரிச பலாபலன்களைப் பெற்றிடுக.. தீர்த்தத்திற்காக ஆலயத்தில் தக்க காணிக்கையைச் செலுத்திடுக!

நெடுந் தொலைவு, பண வசதி, உடல் நோய் காரணமாக, திருஅண்ணாமலை, தேனிமலை போன்ற மலைத் தலங்களில் பௌர்ணமி கிரிவலத்திற்கு அனைவராலும் மாதந்தோறும் வர இயலாதன்றோ? இதற்காகத்தான் இறைவன் நெடுங்குடி போன்று மலைத் தலங்களை உருவாக்கித் தம்மை யாங்கணும் நிரவிக் கொண்டுள்ளார்.! எனவே வரும் அமாவாசை, பௌர்ணமி முதல் நெடுங்குடியும் கிரிவலப் பிரார்த்தனைத் தலங்களுள் ஒன்றாக அமைவதற்கு அடியார்கள் செவ்வனே இறைப் பணிகளை ஆற்றிட வேண்டும்..!

அருணாசல கிரிவலம்

அருணாசலத் திருக்கார்த்திகைச் சிறப்பு கிரிவலம்

கலியுகத்தில் பூமியிலும், பரவெளியிலும் அதர்ம சூழ்நிலைகள், தீய சக்திகள் நாளுக்கு நாள், நொடிக்கு நொடி பெருகி வருவதால் இதன் மூலம் பாதிக்கப்படுகின்ற நில, நீர், வாயு, அக்னி கோட்டங்களை மேற்கண்ட துர்சக்திகளின் வசமிருந்து விடுவிப்பதற்கான, நல்ல அறநெறிப் புண்ய சக்தியை நாம் பெற்றிடும் வண்ணம் தெய்வ மூர்த்திகளே பல ரூபங்களில் பூலோகத்திற்கு வந்தும், தம் இறைத் தூதுவர்களாக சித்தர்கள், மகரிஷிகளை அனுப்பியும் நம்மால் மறக்கப்பட்டுள்ள, மற்றும் காலத்தால் மறைந்துள்ள விஷ்ணுபதி போன்ற பல தேவ உற்சவங்களை நிகழ்த்தி, பண்டிகைகளை, வழிபாட்டு முறைகளை ஆக்கியும், மீட்டும் தந்து நம்மைக் காப்பாற்றுகின்றார்கள்...!

இவ்வகையில் வ்ருஷ வருடத்திய மஹா கார்த்திகை தீபப் பெருவிழாவின் முக்கியமான பத்து தினங்களிலும், தசவ்யாபக (பத்து) பிரம்ம மூர்த்திகளில் ஒவ்வொரு பிரம்ம மூர்த்தியும், தினந்தோறும் தம்முடைய பத்னியாம் சரஸ்வதி தேவியுடன் அருணாசலத்தைக் கிரிவலம் வந்து, பல யோக தவநிலைத் தரிசனங்களை, வழிபாடுகளை மேற்கொண்டு நமக்கு அருள்பாலிக்கின்றார்கள்.. இந்த பத்து நாட்களிலும் திருஅண்ணாமலையில் தங்கியிருந்து, நிதந்தோறும் ஆழ்ந்த நம்பிக்கையுடன், குருவருளுடன் கிரிவலத்தைக் கடைபிடிக்கின்ற பேறு பெற்றவர்கள் வாழ்க்கையில் உத்தம இறைநிலைகளை எளிதில் அடைகின்றனர்.. உடல், மனம், உள்ளம் மூன்றும் ஒன்றிட, மகத்தான நம்பிக்கையுடன் இதனைக் கடைபிடிக்கையில், சற்குருவின் அருள் தாமாகவே சுரந்து அவர்களைப் பேணிடும்!

ஒவ்வொரு நாள் கிரிவலத்திலும், உத்தராணி மரத் தாம்பாளம் போன்ற நல்ல புனிதமான மரத் தாம்பாளம், வெண்கல, பித்தளைத் தாம்பாளங்களில், பூஜை கூடைகளில் குறித்த பூக்கள், பூஜைப் பொருட்களைத் தாங்கியும், மூங்கில் குவளை அல்லது புனித மரச் செம்புகளில் குறித்த தீர்த்தத்தையும் தாங்கி கிரிவலம் வருதல் கிரிவலப் பலன்களை மேம்படுத்தும்! உத்தராணி மரத் தாம்பாளத்தில் பூக்களைச் சுமந்து வரும்போது பூக்கள் சிதறாதிருக்க, அவற்றை ஒரு மஞ்சள் துணியால் சுற்றித் தாங்கி தலையிலோ, தோளிலோ காவடிபோல் சுமந்து வருவது மிகவும் சிறப்பானதாம்..!

குமார பிரம்ம பாவன கிரிவலம் – முதல்நாள் கிரிவலம் (20.11.2001)

இன்றைய வ்ருஷ வருடத்திற்கான மகா கார்த்திகை தீப கிரிவல உற்சவ முறைப்படி இன்றைய முதல் நாள் கிரிவலத்தைத் திருஅண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் ஆலயக் கிழக்கு கோபுரத்தின் நிலை வாசற்படியின் இடது புறத்தில் உள்ள ஸ்ரீலட்சண விநாயகரைத் தொழுது கிரிவலத்தைத் துவங்குதல் வேண்டும்... எத்தகைய சங்கல்பத்துடன்?

நெடுங்குடி

“ஸ்ரீஆதிமஹா பிரம்ம மூர்த்தி பகவானே! தங்களுடைய பேரருளால், பூலோகத்தில் பெறுதற்கரிய மானுடப் பிறப்பை அடியேன் பெற்றுள்ளேன். இறைவனுடைய திருக்கரங்களில் எப்போதும் ஒரு சிறு கருவியாக இருந்து நன்முறையிலே இந்தப் பிரபஞ்சத்திற்கு அறப்பணிகளை ஆற்றுதற்கு இறுதிவரை இறைப் பரம்பொருள் அடியேனைப் பயன்படுத்திடும் பாக்யத்தைப் பெற்றிட வேண்டும்!” என்று மனதார வேண்டிப் பிரார்த்தித்து இங்கிருந்து திருஅண்ணாமலையைத் தரிசித்தல் வேண்டும்.. இந்தப் பிரார்த்தனையோடு இங்கிருந்து அண்ணாமலையைத் தரிசிப்பதற்கு பிரம்ம சோபித தரிசனம் என்று பெயர்.. இவ்விடத்தில் தான் ஆதிமஹா பிரம்ம மூர்த்தியானவர் ஸ்ரீலக்ஷண விநாயகரை வேண்டி சங்கல்பம் செய்து கொண்டு, சிருஷ்டி பரிபாலனத்தைத் தொடங்கலானார். பிறகு வடக்குக் கோபுரத்தை தரிசித்து இங்கிருந்து கிரிவலத்தைத் தொடர்தல் வேண்டும்..!

இன்றைய கிரிவலத்தில் மூங்கில் குவளையில் துளசி அல்லது வில்வம் கலந்த நீர் வைத்துச் சுமந்து வருதல் சிறப்புடையதாகும்.. உத்தராணி மரத் தாம்பாளம், வெண்கலத் தட்டு அல்லது தாம்பாளத்தில் நந்தியாவட்டை அல்லது மல்லிகைப் பூவைக் கொணர்ந்து ஆங்காங்கே உங்களுக்குத் தென்படுகின்ற சமித்து விருட்சங்களான அரசு, ஆல், புரசு, புன்னை, கொங்கு, கொன்றை, வில்வம், துளசி போன்ற புனிதமான மரங்களுக்கும், செடிகளுக்கும் புஷ்பத்தை இட்டு மூங்கில் குவளைத் தீர்த்தத்தால் தீர்த்தம் வார்த்து வணங்கிக் கிரிவலம் வருதல் வேண்டும்.. அர்க்ய ஆராதனைக்காக மற்றொரு பித்தளைக் குடத்தில் தேவையான தீர்த்தத்தையும் கிரிவலத்தில் சுமந்து வருதல் சிறப்புடையது.. பலரும் ஒன்று சேர்ந்து சத்சங்க வழிபாடாக கிரிவலம் வந்திடில் ஒவ்வொருவராக புஷ்பம், தீர்த்தம், மிண்டு ரங்க மூங்கில் குவளை, அன்னதானப் பொருட்கள், திரவியங்கள் போன்ற பலவற்றையும் சுமந்து புனிதத் தாவரங்களுக்கும் பூஜை செய்தும் கிரிவலத்தைச் சிறக்கச் செய்திடலாம் அல்லவா!

கிரிவல பலாபலன்கள்! :-  இந்த கிரிவலத்தின் பலாபலன்களாக நன்முறையில் சந்ததி தழைப்பதற்கு இறைவன் ஸ்ரீஆதி மஹா பிரம்ம மூர்த்தியின் அருட்பரல்களாக அருள்பாலிக்கின்றார்.. பீடி, சிகரெட், சுருட்டு, புகையிலை, மது முறையற்ற மங்கை வாசம் போன்ற பல தீய ஒழுக்கங்களினால் உடலும், மனமும் கேடுற்று வாழ்கின்ற பலரும் உண்டு..! இதனைக் கண்டு  வருந்துகின்ற பெற்றோர்களும், பிள்ளைகளும், மனைவிமார்களும் கலியுகத்தில் நிறையவே உள்ளனர்... பிள்ளைகளோ, கணவனோ நன்முறையில் திருந்தி வாழ்வதற்கு இன்றைய கிரிவலம் பெரிதும் உதவுகின்றது..!

கிரிவலம் வருகின்ற பகுதிகளில் ஆங்காங்கே கண்ணில் தென்படுகின்ற மலை தரிசனங்களையெல்லாம் நன்கு உன்னிப்பாகக் கண்டு தரிசித்து வழிபட்டு, புனித விருட்சங்கள் தென்படுகின்றனவா என்று மிகவும் கவனித்து வாருங்கள்... ஏனென்றால் எங்கும் அருணாசல ஒளிச் சுடர் தரிசனம் கிட்டிடும்... கோடானு கோடி ஆண்டுகளாகத் தவமிருந்து திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் புனித விருட்சமாக அமைதல் வேண்டும் என்று வரம் பெற்ற மஹரிஷிகளையும், யோகியர்களையும் தாம் திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் நீங்கள் புனித விருட்சங்களாக தரிசித்துக் கொண்டிருக்கின்றீர்கள்! இத்தகைய கிரிவலத்தில், உண்ணாமுலை மண்டபத்திற்கு அருகே குறைந்தது 12 முதல் 21 அடி வரையேனும் அங்கப் பிரதட்சிணம் செய்தல் சிறப்புடையதாம்.. உடலும், ஆடைகளும் அழுக்காகின்றனவே என்று யோசிக்காதீர்கள். உடலிலும், மனதிலும் தோய்ந்திருக்கின்ற அழுக்குப் பாறைகளை என்று சுத்தமாக்குவது? எத்தனையோ கோடிக் கணக்கான கிரிவல அடியார்கள், மகரிஷிகள், சித்புருஷர்களின் திருப்பாதங்கள் பட்ட கிரிவல மண் துகள்கள் ஒவ்வொன்றும் ஸ்வயம்பு லிங்க ஜோதியாய்ப் பிரகாசிப்பதால் அவற்றை உங்கள் உடல் ஸ்பரிசிப்பது பெறுதற்கரிய பாக்கியமாகும்..!

இத்தகைய அங்கப் பிரதட்சிணம் அல்லது அடிப் பிரதட்சிணப் பலன்களாக உடல் அங்கங்களால் செய்த பல தீங்குகளுக்கும் முறையற்ற காமக் குற்றங்களுக்கும் தக்க பிராயச்சித்தம் தந்திடப் பித்ருக்கள் உடனே முன் வருவர்... சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து கிரிவலம் வந்து, இந்நாளில் தேங்காய் அன்னத்தைத் தானமாக அளித்து வருவதால் பலவித தீய பழக்க வழக்கங்களுக்கு ஆட்பட்டு அல்லல்படுகின்ற பிள்ளைகள், கணவன்மார்கள் நன்முறையில் சீர்திருந்துவர்.! அடி அண்ணாமலையில் அமைந்துள்ள ஸ்ரீபிரம்ம மூர்த்தியால் சிருஷ்டிக்கப்பட்டுள்ள அடிஅண்ணாமலை சிவாலயத்தை இந்தப் பத்து நாட்களிலுமே அடிப் பிரதட்சிணமாக வலம் வந்து வணங்குதல் சிறப்புடையதாகும்.. நந்தியாவட்டை அல்லது மல்லிகைப் பூக்களை உத்தராணி தாம்பாளத்தில் சுமந்து வந்து இவ்வாலயத்தில் அர்ச்சனைப் பூக்களாக அல்லது தொடுத்த சரமாக, மாலையாக அளித்து அல்லது அர்த்த மண்டபத்திலோ, மூலக் கருவறையிலோ வைத்து வணங்கி, “இறைவா, ஆதி மூல பிரம்ம மூர்த்தியால் கட்டப்பட்ட இச்சிவாலயத்தின் மூல மூர்த்தியாய்ப் பொலியும் (அடி) அணி அண்ணாமலைச் சிவபெருமானே, அடியேன் எடுத்த பிறவி நன்முறையில் இறைப் பணிகளோடு ஆவதற்கும், எம் தீவினைகள் அகல்வதற்கும் அருள்புரிவாயாக!” என்று மனதார வேண்டிக் கிரிவலத்தைத் தொடர்தல் வேண்டும்..!

இன்றைய கிரிவலத்தை கிழக்கு வாசற்படியில் ஸ்ரீலட்சண விநாயகரிடமே நன்றித் துதியுடன் முடித்தல் வேண்டும்.. இன்றைய கிரிவலத்தில் பங்கு பெறுகின்ற முக்கியமான மகரிஷிகள் ஸ்ரீஅப்நவானர், ஸ்ரீபுலிப்பாணி சித்தர், ஸ்ரீகுதம்பைச் சித்தர், ஸ்ரீவசிஷ்ட மாமுனி போன்றோராம்! இவர்கள் யாவரும் சூட்சும ரூபத்திலோ, தூல வடிவங்களிலோ திருஅண்ணாமலை மகா கார்த்திகை தீபத்தின் முதல் நாள் கிரிவல வழிபாடுகளை இன்று மேற்கொள்கின்றனர்.. பாக்யம் உள்ளோர்க்கு அவர்களுடைய தரிசனம் நிச்சயமாகக் கிட்டும்!

அர்க்க வாத்ஸல்ய பிரம்ம சோபன கிரிவலம் இரண்டாம் நாள் கிரிவலம் (21.11.2001)

இன்றைய கிரிவலத்தில் பங்கு கொள்கின்ற பிரம்ம மூர்த்தி ஸ்ரீஅர்க்க பிரம்ம மூர்த்தி ஆவார்.. இன்று சூரிய அல்லது சந்திர ஹோரையில் கிரிவலத்தைத் துவங்குதல் சிறப்புடையதாகும். அண்ணாமலைச் சிவாலயக் கருவறையில் ஸ்ரீஅருணாசல பெருமானைப் பிரார்த்தித்து, “இறைவா! ஸ்ரீஅர்க்க பிரம்ம மூர்த்திக்கு அவதாரத் தத்துவத்தைத் தந்த ஆண்டவனே! கடந்த பல பிறவிகளிலும் அடியேன் முறையற்ற காமக் குற்றங்களினால் இழைத்த தீங்குகளால் எண்ணற்ற ஊழ்வினைப் பிறப்புகள் ஏற்பட்டு விட்டன.! அவற்றையெல்லாம் களைவதற்கான தக்க அறப்பணிகளை ஆற்றுதற்கு அருள்புரிவாயாக!” என்று மனதார வேண்டி இன்றைய கிரிவலத்தைத் தொடங்கிட வேண்டும்! திருஅண்ணாமலைச் சிவாலயக் கருவறையை வலம் வந்து, கிழக்கு கோயில் கோபுரம் வழியாகவே வெளிவந்து தெற்கு கோபுரத்தை அடைந்து கோபுர தரிசனம் செய்து கொண்டு பிறகு எப்போதும் போல் கிரிவலத்தைத் தொடர்தல் வேண்டும்..

இன்று அக்னி லிங்கத்திற்கு அருகே உள்ள இந்திர தீர்த்தத்தில் தர்ப்பணம் அளித்தல் சிறப்புடையதாகும். குறிப்பாக, தந்தை வழியில் ஆண் வர்க்கத்தினருக்கு இங்குத் தர்ப்பணம் அளித்து எள் உருண்டைகளைத் தானமாக அளித்தலால் வசு, ருத்ர பித்ருக்கள் இங்கு பிரசன்னமாகி ஆசீர்வதிக்கின்றனர்... ஆதித்ய பித்ருக்கள் ஆசீர்வதிக்கின்றனர். ஆதித்ய பித்ருக்கள் ஆசிர்வதிக்கும் இடம் வேறு ஆகும்... இன்று உத்தராணி மரத் தாம்பாளத்தில் பூஜைக்கு உகந்த சிகப்பு நிறப் பூக்களைச் சுமந்து மிண்டு ரங்கக் குவளையில் அல்லது மரச் செம்பில் ஜாதிக்காய், பச்சைக் கற்பூரம் கலந்த தீர்த்தத்தைத் தாங்கி வழியில் தென்படுகின்ற பசுக்களின் மேல் தெளித்துச் சுற்றி வந்து வணங்குதலும் பசுக்களுக்குப் பழங்களை அளித்தலும் உத்தமமான பலன்களைத் தரும் இன்றைக்குக் கிரிவலத்தில் பசு தரிசனமே மகத்தான மகரிஷிகளின் தரிசனம் எனச் சித்புருஷர்கள் வர்ணிக்கின்றார்கள்..!

கோமாதா லோகத்திலிருந்து அருட்கடல்களாய்ப் பொலியும் உத்தம மகரிஷிகள் இன்று பூலோகத்தில் கிரிவலம் வருகின்றனர்... அருந்ததி சமேதராய் வசிஷ்ட மாமுனி இன்றைக்கு மீண்டும் கிரிவலம் வந்து அருள்பாலிக்கின்றார்.. ஏனென்றால் காமதேனு பசுவைப் பெறுவதற்காக ஸ்ரீஅருந்ததி சமேத வசிஷ்ட தம்பதி மகரிஷிகள் கிரிவலம் வந்து காதேனுவை அடைந்த விசேஷ நாள் இது. ! இன்று ஸ்ரீஅர்க்க பிரம்ம மூர்த்தியானவர் முருகப் பெருமானுக்குப் உரித்தான பால் காவடிகளை எடுத்து கிரிவலம் வருவதால் இன்றைக்கு, பால் சம்பந்தப்பட்ட பொருட்களைத் தானமாக அளித்திடல் சிறப்புடையது! இதனால் முறையற்ற காமச் செயல்களால் ஏற்பட்ட பாவ வினைகளுக்குத் தக்க நற்பரிகார வழிகள் காட்டப் பெறும் கரு கலைத்தல், இரண்டு, மூன்று தாரங்களுடன் வாழ்க்கை நடத்துதல், பிறருடைய மண வாழ்வைக் குலைத்தல் போன்ற பெருந் தீவினைகளுக்காக வருந்தித் துடித்துக் கதறிப் பிராயசித்தம் பெற விழைவோர் பிராயச்சித்த நல்வழிகள் காட்டப் பெறுதற்கு இன்றைய கிரிவலம் பெரிதும் துணை புரியும்..! வழியில் தென்படுகின்ற பசுக்கள், காளைகளுக்கும், நந்தி மூர்த்திகளுக்கு சிவப்பு நிறப் பூக்களைச் சாற்றி வழிபட்டு அடிஅண்ணாமாலியில் பச்சரிசி மாக்கோலம் இட்டு வழிபட்டு இன்றைய கிரிவலத்தை ஸ்ரீஅருணாசல சிவாலயத்திற்கு எதிரே உள்ள இந்திர லிங்கத்தில் முடித்தல் சிறப்புடையதாகும்.. ஏனென்றால் இந்திர பகவானே பிரம்ம மூர்த்தியைத் தொடர்ந்து கிரிவலம் வருகின்ற அருட்பெருந் திருநாளிது..!

திருஅண்ணாமலை

ஸ்ரீவீரமூல்ய குண கிரிவலம் மூன்றாம் நாள் கிரிவலம் (22.11.2001)

ஸ்ரீவீர பிரம்ம மூர்த்தி தம்முடைய பத்னியுடன் கிரிவலம் வருகின்ற மகத்தான திருநாளாகும்... உத்தராணி மரத் தாம்பாளத்தில் அக்னி பகவானுக்கு ப்ரீதியான பன்னீர் புஷ்பம் அல்லது சம்பங்கிப் பூக்களைச் சுமந்து கிரிவலம் வருதல் வேண்டும். மிண்டு ரங்கக் குவளை அல்லது மரச் செம்பில் சர்க்கரை இல்லாத பசும் பாலைக் கொணர்ந்திடுக! இந்நாளுக்குரிய கிரிவலத்தை வடக்குக் கோபுரத்தின் மேல் பல சிரசுகளுடன் தரிசனம் தருகின்ற சர்வ சர்வேஸ்வர மூர்த்தியைத் தரிசித்து “ஸ்ரீவீர பிரம்ம மூர்த்தியே! தங்களுடைய சிருஷ்டித் தத்துவத்தால் அடியேனுக்கு மானுடப் பிறவி கிட்டியது. கடந்த பல பிறவிகளிலும் அடியேன் நன்முறையில் இல்லற வாழ்க்கையை நடத்தாமையால் அடியேன் சேர்த்துக் கொண்டுள்ள கர்ம வினைகளுக்கும் தக்க பிராயச்சித்த நல்வழியைக் காட்டுமாறு வேண்டுகின்றேன்” எனப் பிரார்த்தனை செய்து வடக்குக் கோபுர தரிசனத்துடன் கிரிவலத்தைத் தொடர்தல் வேண்டும். இன்றைக்கு அக்னி லிங்கம் மூர்த்தியைத் தரிசித்தல் சிறப்பானதாகும். இயன்றால் இங்கு பாலபிஷேகம் செய்திடவும்..!

ஆங்காங்கே வழியில் தென்படுகின்ற பாம்புப் புற்றுக்களை வணங்கிடுங்கள்... அச்சம் இல்லை எனில் புற்றிற்குள் பாலை ஊற்றிவிடாமல் புற்றிற்கு வெளியே நன்கு தள்ளி வெளி நிலத்தில் ஊற்றிட வேண்டும்.. பாம்புப் புற்றுக்கு வெளியே பாலை ஊற்றுவதால், பாம்பு பாலைக் குடிக்குமா என்று எண்ணாதீர்கள்.. நாக வடிவில் இருக்கின்ற நாக தேவதைகளுக்காகத்தான் பாலை ஊற்றுகின்றோம்.. நாக தேவதைகள் சூட்சும வடிவில் வந்து நிலத்திலிருந்து உறிஞ்சி பாலின் சாராம்சங்களை ஏற்றுக் கொள்ளும்.. எனவே புற்றின் அருகில் செல்லாமல் சற்றுத் தள்ளியே நின்று வணங்கித் தரிசித்து ஓரத்தில் பாலை ஊற்றிடுங்கள்.. மிகவும் கவனமாக இருந்திடவும்.. இது அண்ணாமலைக்கு உரித்தான இன்றைய நாளுக்கான புற்று தரிசன முறை.. வேறிடங்களில் புற்று தரிசன முறைகள் மாறும்...!

ஸ்ரீசிவராஜசிங்க தீர்த்த நந்தீஸ்வரர்
திருஅண்ணாமலை

நாகப் புற்று தரிசனம் கிட்டாதோர் மூங்கில் குவளைப் பாலினை வழியில் தென்படுகின்ற (இராம) பாதங்களுக்கு அபிஷேகம் செய்திடலாம்! இன்று சூரிய லிங்க சந்நிதியில் பச்சரிசி மாக்கோலமிட்டு செம்மண் பூசி ஸ்ரீசூர்ய மந்திரங்களை ஓதிடல் சிறப்பானது! அடி அண்ணாமலையில் நிலைப் படிகளுக்குக் கோலம் இட்டு, மஞ்சள் பூசி வழிபடுதல் பலாபலன்களைப் பெருக்கிடும்! இன்றைய கிரிவலத்தில், கிரிவலப் பாதையில் எருக்கஞ் செடி தரிசனம் மிகவும் விசேஷமானதாகும்.. எருக்கஞ் செடியின் வேரானது, சூட்சும ரீதியாக காணாபத்ய லோகம் எனப்படும் ஸ்ரீகணபதி லோகத்துடன் தொடர்பு கொண்டதாகும்.. ஊர்த்வ தாண்டவம், பர தாண்டவக் கோலம் போன்ற காலை உயரத் தூக்கி ஆடும் இறை நடனங்களின் போது எருக்கு, துளசி போன்றவற்றின் வேர்க் கிரணங்கள் இறைப் பாத ரேகைகளில் உள்ள சாகம்பர்யக் கிரணங்களைத் துய்த்து இதன் பலன்களாகக் காணாபத்ய லோகத்தை அடைகின்றன.. எனவே, எருக்கன் வேர் பிள்ளையாருக்கு, குறிப்பாக எருக்கஞ் செடியின் வடக்கு திசை வேராலான பிள்ளையாருக்கு, கார்ய சித்தி அனுகிரக சக்திகள் அபரிமிதமாக இருக்கும்..! எனவே இன்று கிரிவலப் பாதையில் நிறைய பிள்ளையார் மூர்த்திகளின் தரிசனமும் மிகவும் விசேஷமானதாம்.. எருக்கஞ் செடி தரிசனமும் அதற்கு அர்க்யம் அளிப்பதும் மிகவும் சிறப்புடையது.! இன்று ஸ்ரீகிருஷ்ணர் ஆலயத்தருகே உள்ள சிவராஜ சிங்க தீர்த்தம் அருகே உள்ள ஸ்ரீவிநாயக மூர்த்தியைத் தரிசித்து இச்சந்நிதியில் மலையை நோக்கி அமர்ந்து விநாயகரை வணங்கி “தூர்வா ஸுக்த மந்திரத்தை” 12 முறை ஓதி ஜபித்து, அண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இங்கு குளக்கரையிலுள்ள நந்தியின் கொம்புகளின் ஊடே அண்ணாமலையைத் தரிசிப்பதால் நித்ய பிரதோஷ வழிபாட்டு பலன்களை அடைய நல் அறவழிகள் கிடைக்கப் பெறுவர்..!

அணி அண்ணாமலை முன், இரண்டு அரிய புனிதமான இலுப்பை மரங்கள் உள்ள “வானளா நீள் நெடுமர” தரிசனப் பகுதியில் அண்ணாமலையாரை தரிசித்து இவ்வரிய விருட்சங்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் இட்டு வலம் வந்திட செய்வினைகள், உறவினர், நண்பர் பகைமையால் வரும் துன்பங்கள் தீரும்.. அடிஅண்ணாமலை ஆலயத்தில் விநாயகருக்கு மகிழம் பூ, எருக்கம் பூ மாலையை இட்டு “ககார” நாமாவளிகளை ஓதி வணங்குதலால் பித்ருக்களுக்கு முறையாகத் தர்ப்பணம் அளிக்காததால் ஏற்படுகின்ற தோஷங்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்... ககார நாமாவளி என்பது “க” வகை எழுத்தில் மட்டும் தொடங்கும் 108 போற்றித் துதிகளாகும்! இன்று இடுக்குப் பிள்ளையார் சந்நிதியில் வஸ்திர தானம் விசேஷமானதாகும். பண்டைய முறையிலான கோவணத்தைத் தக்கவர்க்குத் தானமாக அளித்தலால் வீண் பழியால் அவமானம் அடைந்து மற்றும் கோர்ட் வழக்குகளால் பாதிக்கப்பட்டுள்ளோர் நல்ல தீர்வுகளைப் பெறுவர்..! இன்றைய கிரிவலத்தை இரட்டைப் பிள்ளையார் சந்நிதியில் முடித்தல் சிறப்புடையதாகும். இன்றைய கிரிவல பலன்களாக பொதுவாக இல்லத்தில் உறவு, நட்பு முறைகளில் ஏற்படுகின்ற பிரச்னைகளுக்குத் தீர்வு கிட்டும்.!

ஸ்ரீகற்பக விநாயகர் திருஅண்ணாமலை

ஸ்ரீபத்ம லாவண்ய பிரம்ம கிரிவலம் நான்காம் நாள் கிரிவலம் (23.11.2001)

இன்றைய கிரிவல மூர்த்தியே ஸ்ரீபத்ம பிரம்ம மூர்த்தியாவார்.! வாழ்க்கையின் துன்பங்களுக்கெல்லாம் காரணம் அவரவர் செய்த கர்ம வினைகளே என்ற எண்ணம் பலருக்கும் ஏற்படுவதில்லை.. இதற்குக் காரணம் எவரும் தினந்தோறும் ஆத்ம விசாரம் செய்வது கிடையாது.. ஆனால் பிறரால்தாம் துன்பங்கள் வருகின்றன என்று குறை சொல்வார்கள்! அவரவர் செய்த தீவினைகளை உணர்வதற்கு இறைவன் நிறைய வாய்ப்புகளை அளிக்கின்றான்.. கஷ்டம் வரும்போது தன் தீவினைகளை நொந்து கொள்ளும் மனிதன் வசதியாய் வாழும்போது ஓரளவே இறை வழிபாட்டை மேற்கொள்கின்றான்.., இவ்வாறின்றி இன்பமோ, துன்பமோ, கஷ்டமோ, நஷ்டமோ இறைவழிபாட்டில் எவ்விதக் குறையுமின்றி வாழ்வதுதான் உண்மையான மனித வாழ்க்கையின் இறை லட்சியங்களுள் ஒன்றாம்... இந்த உத்தம நிலை மனக் கோட்டத்தை அவ்வப்போது நினைவுபடுத்துவதான் ஆத்ம விசார தியானமாகும்.! தாமரை போல் உள்ளத்தை விரித்து ஆத்ம உணர்வை மனிதனுக்குத் தினந்தோறும் ஊட்டிப் பெற்றுத் தருவதற்குத்தான் ஸ்ரீபத்ம பிரம்ம மூர்த்தி இன்றைக்குக் கிரிவலம்தனை மேற்கொண்டு தாமே நேரிலும், சூட்சும ரூபத்திலும், பித்ரு மூர்த்திகள் மூலமாகவும் தக்க ஞானத்தை அளிக்கின்றார். இன்றைய கிரிவலத்தைத் துவக்க வேண்டிய அஷ்ட பைரவ சக்திகள் நிறைந்த திருஅண்ணாமலை ஆலயத்தின் ஸ்ரீபைரவர் சந்நிதியாகும்.!

“அஷ்ட பைரவ மூர்த்தங்களே! தங்கள் அருளால் சிருஷ்டி ஆட்சி புரியும் ஸ்ரீபத்ம பிரம்ம மூர்த்தியின் அனுகிரகத்தை எமக்குப் பெற்றுத் தந்து வாழ்க்கையின் இன்ப துன்பங்களை உணர்வதற்கு பரிபூரண ஆத்ம அறிவைத் தந்தருள்வீர்களாக!” என்று வேண்டிச் சங்கல்பம் செய்து கிரிவலத்தைத் தொடங்க வேண்டும்.. சிவாலயத்தை வலம் வந்து எட்டுத் திக்குகளிலும் உள்ள பலி பீடங்களை நமஸ்காரம் செய்வது விசேஷமான அருளைத் தந்து எட்டுத் திக்குகளிலிருந்தும் நமக்குத் தினந்தோறும் ஏற்படுகின்ற கவலைப் பெருவெள்ளத்தைத் தணிப்பதற்கான மன வைராக்கியத்தையும், தெம்பையும் தருகின்றது..!

இந்திர தீர்த்தம்
திருஅண்ணாமலை

குறிப்பாக வியாபாரம், அலுவலகம், விவசாயம் போன்ற தினசரி பணிக் கட்டங்களில் சிக்கித் தவிப்போருக்கு ஆன்மீக மாமருந்தைத் தருவதாக இன்றைய கிரிவலம் அமைகின்றது.. கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்குக் கோபுரத் தரிசனங்களுடன் கிழக்குக் கோபுரத்திற்கு எதிரே உள்ள இந்திர லிங்கத்தைத் தரிசித்து ஆங்காங்கே தென்படுகின்ற கோபுர தரிசனத்துடன் கிரிவலத்தைத் தொடர வேண்டும்.. இன்றைய கிரிவலத்தின் முக்கிய அம்சமானது எட்டுத் திக்குகளிலும் எவ்வளவு மலை தரிசனங்களைப் பெற முடியுமோ, அவற்றைப் பெற்று கிரிவலத்தின் மகாத்மியத்தைப் பரிபூரணமாக உணரப் பிரார்த்தனை செய்வதாகும்.! தெற்குக் கோபுரம் எதிரே உள்ள திருமஞ்சன வீதியில் உள்ள ஸ்ரீகற்பக விநாயகர் ஆலயத்தை வலம் வந்து இங்கிருந்து மலையைத் தரிசித்துத் தொடர்ந்து சென்று முக்கூட்டுச் சாலையிலிருந்து மலையில் கிட்டுகின்ற கோண தரிசனம், கும்பகோண தரிசனம், மகாமகத் தரிசனம் ஆகியவற்றைப் பெற்று அஷ்ட லிங்கங்கள், அஷ்ட நந்திகளைத் தரிசித்து ஆங்காங்கே நிறைய மலை தரிசனங்களைப் பெற்றிட வேண்டும்.!

உத்தராணி மரத் தாம்பாளத்தில் எட்டு எண் வடிவில் எருக்கம் பூ, தும்பை, மகிழம் பூக்களைத் தொடுத்து மாலையாக்கிச் சுமந்து கிரிவலம் வந்து, கிரிவல இறுதியில் இரட்டைப் பிள்ளையார் சந்நிதியில் சமர்பிக்க வேண்டும்.. இன்று கிரிவலப் பாதையெங்கும் பைரவ சக்திகள் நிறைந்த நாய்களுக்குப் பொறை ரொட்டிகள் போன்றவற்றை இட்டு வருதலால் பிறருடைய ஏசுதல், திட்டுதல், வசைகள், பழிகளால் ஏற்படும் வார்த்தை தோஷங்களிலிருந்து நிவாரணம் கிட்டும்!

இன்று மிண்டு ரங்கக் குவளையாகிய மூங்கில் குவளையில் சந்தனம், புனுகு, ஜவ்வாது, ஜாதிக்காய், பச்சைக் கற்பூரம், குங்குமப் பூ, அத்தர், ஏலக்காய், வெட்டிவேர் ஆகிய பொருட்களைத் தீர்த்தத்தில் இட்டு ஆங்காங்கே ஸ்ரீபாதங்களுக்கும் வில்வம், துளசி, அரளி போன்ற பூச்செடிகளுக்கும் அர்க்யமாக இட்டும் (நீர் வார்த்தும்) துதித்திட வேண்டும்! கிரிவலத்தின் பல இடங்களிலும் நீங்கள் காண்கின்ற பசுக்களின் மேல் குறிப்பாகப் பசுப் பாதமான குளம்புகளுக்கும் மிகுந்த கவனத்துடன் தீர்த்தத்தை அர்க்யமாக வார்த்துப் பசுவின் குளம்படியில் இருந்து தெளிக்கும் மண் துகளைப் பிரசாதமாக நெற்றி, மாங்கல்யத்தில் இட்டும் நல்தேவதைகளின் ஆசிகளைப் பெற வேண்டிடுக! இதனால் சம்பந்திகளிடையே உள்ள பிணக்குகள், வியாபாரக் கூட்டில் பெருகும் பகைமை நீங்கும்! பணத் தட்டுப்பாடு அறவழியில் நீங்கிட இது உதவும்! ஆங்காங்கே உள்ள தீர்த்தங்களில் முட்டைப் பொரி இட்டு மீன் தேவதைகளின் ஆசிகளையும் பெற வேண்டும்.!

கிரிவலப் பாதையின் இடையில் ஸ்ரீஉண்ணாமுலை அம்பிகையின் மண்டபத்தின் அருகில் சற்று தூரம் (குறைந்தது 21 அடிகள்) அங்கப் பிரதட்சிணம் அல்லது 102 அடிகள் அடிப் பிரதட்சிணம் செய்து கிரிவலத்தைத் தொடர்ந்திடுக! சூரிய லிங்கத்திற்கு முன் பத்மாசனம் பூண்டு தாம் அறிந்த எளிய யோக முறைகளை அல்லது யோக முத்திரகளைக் கடைபிடித்து யோக வணக்கமாக திருஅண்ணாமலையை நோக்கி வணங்கிட, திருமண வாழ்வில் பெண் பிள்ளைகளுக்கு ஏற்பட்டுள்ள துன்பங்கள் நீங்கும்! யோகம், முத்திரை அறியாதோர் பத்மாசனமிட்டு வழிபட்டிடலாம்! அடி அண்ணாமலைக்கு முன் உள்ள இரு பெரிய நீள்நெடு விருட்ச மரங்களைச் சுற்றி வலம் வந்து கிரிவலத்தைத் தொடர்ந்திட வேண்டும்!!

அடிஅண்ணாமலை திருஅண்ணாமலை

அடி அண்ணாமலை ஆலயத்தில் எட்டுத் திக்குகளிலும் அகல் விளக்குகள் ஏற்றி வழிபடுக! ஏழைகளுக்கு எண்ணெய் தானம் அளித்தல் விசேஷமானது! இதன் பலன்களாக குழந்தைகளை அடிக்கடி பீடிக்கும் நோய்கள் அகலும்! இன்றைய கிரிவலத்தில் அங்கப் பிரதட்சிணம் ஸ்ரீஅண்ணாமலை ஸ்வாமிகளின் மண்டபம் அருகில் உள்ள ஸ்ரீதுர்க்கை (அறுபத்துமூவர் மடம் அருகில்), ஸ்ரீபூதநாராயணர், ஸ்ரீஇரட்டைப் பிள்ளையாரைத் தரிசித்து கிரிவலத்தை நிறைவு செய்திடல் வேண்டும்.. இன்றைய கிரிவல பலாபலன்களாக பிள்ளைகளுடைய ஆரோக்யம், கல்வி, வேலை, திருமணம் பற்றிய மனக் கவலைகளுக்கு நல்தீர்வுகள் கிட்டும்!

ஸ்வர்க பர்வத பிரம்ம கிரிவலம் ஐந்தாம் நாள் கிரிவலம் (24.11.2001)

இறைவனுடைய தெய்வீக சக்தியை அனைத்து சிருஷ்டிகளும் என்றேனும் எப்பிறவியிலேனும் உய்த்து உணர்தல் வேண்டும் என்பதை நல்வரமாக கேட்டுப் பெறுவதற்காக ஸ்ரீஸ்வர்க பிரம்ம மூர்த்தி இன்று கிரிவலம் வருகின்றார்.. எனவே இன்றைக்கு திருஅண்ணாமலை கிரிவலம் வருகின்றவர்களுக்கு தெய்வீக சக்திகள் நிறைந்துள்ள இடங்களைப் பற்றி உணரும் ஆத்ம சக்தியை இன்றைய கிரிவலப் பலன்களாக இறைவன் நமக்கு அளிக்கின்றான்.. இதற்குப் பின் நிறைய தெய்வ யாத்திரைப் பயணங்கள் நன்கு கூடி வரும்!

முழுமையான தோப்புக் கரணமிடுவீர்!

இன்றைய கிரிவலத்தைத் தொடங்க வேண்டிய இடம் திருஅண்ணாமலை ஆலயத்தின் அருகிலுள்ள இரட்டைப் பிள்ளையார் ஆலயமாகும்.. இரட்டைப் பிள்ளையாரை வேண்டித்தான் ஸ்ரீஸ்வர்க பிரம்ம மூர்த்தியானவர் தெய்வீக சக்தி மிகுந்துள்ள இறைத் தலங்களை சிருஷ்டி ஜீவன்களுக்கு உணர்த்துகின்ற சக்தியைப் பெற்றார்.. இங்கு குறைந்தது 12 முறை நன்றாக நெடிது உயர்ந்து, குனிந்து, நீட்டி ஒடுங்கி தோப்புக் கரணம் இடுதல் வேண்டும்..! பலரும் ஏனோதானோ என்று கன்னத்தில் தட்டிக்கொண்டும், சற்றே குனிந்து எழுவதுமாக தற்காலத்தில் தோப்புக் கரணத்தை எளிதில் சோம்பேறித்தனத்தால் முடித்து விடுகின்றார்கள். இதெல்லாம் தோப்புக் கரணமாகாது! இவ்வாறு இல்லாது இங்கு நன்றாக முட்டி மடிந்து 12 முறை தோப்புக் கரணம் இட்டு இரட்டைப் பிள்ளையாரைத் துதித்து வணங்கி, ஸ்ரீஸ்வர்க பிரம்ம மூர்த்தி வழிபட்ட விநாயக மூர்த்தியே! அடியேனுக்கு பெறுதற்கு அரிய இம்மானிடப் பிறவியைத் தந்தது மட்டுமல்லாது தெய்வீக சக்தி நிறைந்த தலங்களையெல்லாம் உணர்த்தி அதன் மகா சக்திகளையும் உய்த்து உணருமாறு செய்திடல் வேண்டுமென்று மனமார வேண்டியே கிரிவலத்தைத் தொடங்குதல் வேண்டும்...!

இங்கிருந்து கிழக்கு கோபுரம் மற்றும், தெற்கு கோபுரங்களைத் தரிசித்துக் கிரிவலத்தை தொடர்தல் வேண்டும்.. உத்தராணி மரத் தாம்பாளத் தட்டில் பிள்ளையாருக்கு ப்ரீதியான மகிழம் பூ, எருக்கம் பூக்களைச் சுமந்து மிண்டு ரங்கக் குவளை எனப்படும் மூங்கில் குவளை அல்லது மரச் செம்பில் தேன் கலந்த காவிரி அல்லது புண்ய நதி, ஆலயத் தீர்த்தத்தைச் சுமந்து கிரிவலம் வருதல் வேண்டும்.. இன்று வழியெங்கும் காணக் கிடைக்கின்ற தீர்த்தங்களில் மிகவும் ஜாக்கிரதையுடன், கவனமாக நீரைத் தலையில் தெளித்துக் கொண்டு தேன் கலந்த நீரை ஆங்காங்கே பெரிய அகல்களில் சற்றே உயரமாக அல்லது நல்ல இடங்களில் வைத்து பக்ஷி தீர்த்தமாக அதாவது பறவைகளுக்குத் தேவையான தீர்த்த தானமாக வைத்து வருதல் வேண்டும்.!

இன்று அடி அண்ணாமலையில் ஸ்ரீபிரம்ம மூர்த்தி ஸ்தாபித்துள்ள சிவாலயத்தில் கலச கோபுரங்களைத் தரிசித்து பறவைகளுக்குத் தேவையான நவதான்ய மணிகள், நவதான்ய மாவு, பழங்கள் போன்றவற்றை ஆங்காங்கே ஆலயத்தில் வைத்திட்டு இறைவனுக்கு வெண் பட்டாடை சார்த்தி அதனை ஏழைகளுக்குத் தானமாக அளித்தாலும் சிறப்புடையதாகும்..! இந்த ஆலயத்திலுள்ள புறாக்கள் யாவும் தேவலோகம் சென்று வரும் புறாக்களாகும்.. இவை யாவும் உலகத்தில் பல்வேறு இடங்களிலுள்ள ஆலயங்களைத் தரிசித்த பெருமையும், தெய்வீக சக்தியையும் கொண்டவையாம். இங்கு நவதான்யமும் சர்க்கரையும் கலந்து அல்லது தான்ய மணிகளை பக்ஷிகளுக்கு உணவாக அளித்தால் அது பக்ஷிகளுக்கே உரித்தான மகத்தான அன்னதானமாகப் பொலிகின்றது.. இன்றைக்கு ஸ்ரீகுபேர லிங்கத்திலிருந்து திருஅண்ணாமலையை நோக்கி நீங்கள் பெறுகின்ற தரிசனமே பிரம்ம லட்சண தரிசனமாகும். அதாவது பிரம்ம பத்தினியாம் ஸ்ரீசரஸ்வதிக்கு, ஸ்ரீலக்ஷ்மி கடாட்சத்தை அளித்த மகத்தான மலை லிங்க தரிசனமாம், இங்கு மலையை நோக்கி வீழ்ந்து வணங்கி ஏழைகளுக்கு நிறைய முந்திரி, பாதாம் பருப்பு கலந்த சர்க்கரைப் பொங்கலைத் தானமாக அளித்தலால் பணக் கஷ்டங்களுக்குத் தக்க நிவர்த்தி கிட்டும்..!

இவ்வாறாக சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து திருஅண்ணாமலையை கிரிவலம் வரும்போது பலவிதமான தான தர்மங்கள், பஜனைகள், ஹோமம், தர்ப்பணம், நாம சங்கீர்த்தனம் போன்ற பல்வேறு பூஜை வழிபாட்டு முறைகளைக் கடைபிடித்து கிரிவலத்தின் பலாபலன்களைப் பன்மடங்காகப் பெருக்கிடலாம்.. இன்றைய கிரிவலத்தை ஸ்ரீபூதநாராயணன் சந்நிதியில் முடித்தல் விசேஷமானதாகும். ஏனென்றால் ஸ்ரீபிரம்மாவும், ஸ்ரீவிஷ்ணு மூர்த்தியும் சிவஜோதியை தரிசனம் செய்திடினும் அவற்றின் பரிபூரணத்தை  உணரச் செய்தவரே பரப்பிரம்ம மூர்த்தியான ஸ்ரீபூதநாராயணப் பெருமாள் ஆவார்... எனவே உலகத்தின் பல இடங்களிலும் உள்ள தெய்வீகத் திருத்தலங்களின் மகிமையை உணர்வதற்கு இன்றைய கிரிவலம் பெரிதும் துணைபுரியும்..!

சரயு பித்ருக்கள் :- கிரிவலம் எங்கும் பெரிய மண் அகல்களில் ஊற்றி வைக்கின்ற தேன் கலந்த தீர்த்தத்தைப் பறவைகள் பருகும்போது உங்களுக்கு சர பூஜித யோக சக்தி என்ற புண்ணிய சக்தியை பிரம்ம மூர்த்தியே நல்குகின்றார்..! ஏனென்றால் பித்ரு லோகங்களிலே சரயு பித்ருக்கள் என்ற ஒருவகையினர் உண்டு. ஸ்ரீராமபிரான், இராமாயணத்தின் இறுதி கட்டத்திலே சரயு நதியில் இறங்கி மறைந்தார் அல்லவா! அப்போது சரயு நதிக் கரையில் நீராடிக் கொண்டிருந்த பித்ரு மூர்த்திகள் யாவருமே இராம ஸ்பரிச ஞானம் பெற்று சரயு பித்ருக்களாக உத்தம நிலைகளை அடைந்தனர். இவர்கள்தாம் பூலோகத்தில் தங்கள் சந்ததியினர் எந்தத் திருத்தலத்தில் தான தர்மங்களைச் செய்தாலும் திருத்தணியோ, கேதார்நாத், பத்ரிநாத்தோ, திருஅண்ணாமலையிலோ அவ்விடத்தில் எல்லாம் இவர்கள் தான தர்ம சக்திகலைத் திரட்டித் தந்து தெய்வீக சக்திகளின் தன்மையை உணர்விக்கின்றார்கள்..! உதாரணமாக நீங்கள் திரைலோக்கி, அலவந்திபுரம், ராமேஸ்வரம், காசி போன்ற திருத்தலங்களுக்குச் செல்லும்போது இந்த சரயு பித்ருக்கள்தாம் பிரசன்னமாகி உங்களுக்குத் தேவையான தெய்வீக அனுகிரகத்தையும், ஆலய மற்றும் தெய்வ மூர்த்திகளின் மகிமையையும் புலப்படுத்துகின்றார்கள்...! எனவே இன்றைய கிரிவலம் (24.11.2001) வாழ்க்கையில் பெறுதற்கரிய பாக்யமாகும்..!

கருடத்வஜ பிரம்ம கிரிவலம் ஆறாம் நாள் கிரிவலம் (25.11.2001)

இன்றைய கிரிவலம் வருகின்ற பிரம்ம மூர்த்தியே ஸ்ரீகருட பிரம்ம மூர்த்தியாவார். உலகத்திலுள்ள சப்தங்களை சிருஷ்டிக்கும் போது இறைவனுக்கு சாட்சியாக நின்ற பிரம்மா இவரே! ஆதலால் நன்முறையிலே காது கேட்பதற்கும், நல்வார்த்தைகளைக் கேட்பதற்கும், நம்முடைய சந்ததியினர் தீயவழிகளுக்குச் செல்லாமல் இனிய தேவ நல்வார்த்தைகளுடன் மந்திரங்களை ஓதி, நல்வாழ்க்கை வாழ்வதற்கும் இன்றைக்கு பிரம்ம மூர்த்தி தம்முடைய கிரிவல பலாபலன்களை அர்ப்பணிக்கின்றார்.!
துவாபர யுகத்திலிருந்தே கலியுகத்தின் ஆரம்பம் தொடங்கி விடுவதால் துவாபர யுகத்தின் இறுதியிலும் கலியுகத்திலும், பூலோகத்திலும் பல அக்கிரமங்கள் நடக்கும்... அதர்மம் தலைவிரித்து ஆடும் என்பதை தீர்க தரிசனமாக உணர்ந்த பிரம்ம மூர்த்தியே பக்தர்களைக் காத்திட, இன்றைக்குத் தன் பத்னியாம் கலைவாணியுடன் அடிப் பிரதட்சிணமாக கிரிவலம் வந்து தம்முடைய கிரிவல பலாபலன்களை ஆழ்ந்த இறை நம்பிக்கையுடன் வழிபடுவோர்க்கும், கிரிவலம் வருவோர்க்கும் பித்ருக்கள் மற்றும் சற்குருமார்கள் மூலமாகத் தாரை வார்த்துத் தருகின்றார்..! இன்றைய கிரிவலத்தைத் தொடங்க வேண்டிய இடம் மேற்கு கோபுரம் இங்கு ராஜ கோபுரத்தையும், கலசத்தையும் தரிசித்து ஸ்ரீகருட பிரம்ம மூர்த்தியை மானசீகமாகச் சேவித்து அப்பிரதட்சிணமாக மேற்கு கோபுரம், வடக்கு கோபுரம், கிழக்கு கோபுரம், மற்றும் தெற்கு கோபுரததை வலம் வந்து தரிசித்து கிரிவலத்தை எப்போதும்போல் தொடர்தல் வேண்டும்!

இன்று உத்தராணி மரத் தாம்பாளத்தில் நாகலிங்க புஷ்பத்தைத் தாங்கி மிண்டு ரங்கக் குவளை எனப்படும் மூங்கில் குவளையில் ஒன்று அல்லது இரண்டு ஆழாக்கு நவ தான்யங்களுடன் புண்ய காவிரி, கங்கை தீர்த்தத்தைத் நிரப்பித் தாங்கி வருதல் வேண்டும்..! நாகலிங்க புஷ்பம் கிட்டாவிடில் தும்பைப் பூக்களை உத்தராணி மரத் தாம்பாளத்தில் வைத்துக் கிரிவலம் வருதல் வேண்டும்!

மாமுனிகளுக்கு மகா அர்க்யம்!  :- இன்று ஸ்ரீரமண ஆஸ்ரமத்தை தாண்டியவுடன் வலப் பக்கம் வருகின்ற சிங்க முகப்புடன் கூடிய தீர்த்தத்தில் (நீர் இருந்தாலும் இல்லாவிட்டாலும்) ஸ்ரீவியாக்ர பாத மஹரிஷிக்கு “ஸ்ரீவியாக்ரபாத மகரிஷிம் தர்ப்பயாமி” என்று மூன்று முறை தீர்த்தத்தால் அல்லது மூங்கில் குவளை தீர்த்தத்தால் பூமியில் அர்க்யம் அளித்தல் சிறப்புடையதாம்..! இன்றைக்கு கிரிவலப் பாதையில் ஆங்காங்கே குறைந்தது 12 மஹரிஷிகளுக்கேனும் அர்க்யம் அளித்திடுதல் வேண்டும். மூங்கில் குவளை தீர்த்தம் போதாவிடில் கூடுதலாகத் தீர்த்தத்தை ஒரு பித்தளைத் தோண்டி அல்லது குடத்தில் சுமந்து வருக! ஆங்காங்கே மலையை நோக்கி நின்று “ஸ்ரீஅகஸ்திய மஹரிஷிம் தர்ப்பயாமி” ., “ஸ்ரீஅப்நவானர் மஹரிஷிம் தர்ப்பயாமி” , ஸ்ரீகண்வர் மஹரிஷிம் தர்ப்பயாமி” .., “ஸ்ரீபரத்வாஜர் மஹரிஷிம் தர்ப்பயாமி” என்று மூன்று முறை என்று உங்களுக்கு எங்கெல்லாம் தோன்றுகின்றதோ அந்த இடங்களில் மலையை நோக்கி பிறருடைய கால்களில் தீர்த்தம் படாவண்ணம் சற்று ஒதுங்கி நின்று பூமியில் குதி கால்களை உயர்த்தி அர்க்யம் அளித்திடுக! உங்கள் மனதில் எந்தெந்த மஹரிஷிகள், சித்தர்களுடைய பெயர்கள் எல்லாம் தோன்றுகின்றனவோ அவர்களுக்கெல்லாம் நீங்கள் அர்க்யம் அளித்து வரலாம்! கிரிவலமெங்கும் 1008 மகரிஷிகளுக்கு அர்க்யம் அளித்து வருபவர்கள் இன்றும் உண்டு!

இதற்காகவே சத்சங்கமாக நீங்கள் பலரும் ஒன்றாக கிரிவலம் வந்து சிலர் உத்தராணி மரத் தாம்பாளத்தில் குறிப்பிட்ட புஷ்பங்களை காவடியாகவோ/ தோளிலோ சுமந்தும், மற்ற சிலர் மிண்டு ரங்கக் குவளை / மரச் செம்புகளில் குறிப்பிட்ட தீர்த்தங்களைச் சுமந்தும், ஓரிருவர் குடம் நிறையத் தீர்த்தத்தைச் சுமந்தும் கிரிவலப் பாதையெங்கும் மஹரிஷிகளுக்கு அர்க்யம் அளித்து பூலோகத்தில் மிகவும் குறைந்து விட்ட அர்க்ய சக்தியைப் பெருக்குங்கள்! ஏனென்றால் அர்க்யத்திற்கு உரித்தான நாளாக தேவலோகத்திலேயே இதனைக் குறிப்பிடுகின்றார்கள்! இவ்வாறு விசேஷ தினம் அமைவது மிகமிக அபூர்வமானதாகும்..!

அர்க்யத்திற்குத் தேவையான தீர்த்தத்தை ஆலயங்களிலிருந்து பெறுவதானால் குறித்த காணிக்கையைச் செலுத்தி ஆலயக் குளத்திலிருந்து சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள்..! ஸ்ரீவாயு லிங்கச் சந்நிதியில் பச்சரிசி மாவு நீர்க் கோலம், செங்காவி இட்டுப் பூக்களால் அலங்கரித்து இங்கு வாயு பகவானுக்குப் பல சமயங்களில் உதவி புரிந்த ஸ்ரீசுப மங்கள மஹரிஷியின் பெயரைச் சொல்லி அர்க்யம் அளித்தல் வேண்டும்..! ஸ்ரீஎமலிங்க சன்னதியில் ஸ்ரீமார்க்கண்டேய மஹரிஷிக்கு அர்க்யம் அளித்தல் வேண்டும்.!

துர்வாச முனிவர் சந்நிதியில் ஸ்ரீதுர்வாச முனிவருக்கும், ஸ்ரீநிருதி லிங்கம் சந்நிதியில் ஸ்ரீதிருணந்துபி மகரிஷிக்கும், ஸ்ரீசூரிய லிங்கம் சந்நிதியில் ஸ்ரீயாக்ஞ்வல்யர் மஹரிஷிக்கும், ஸ்ரீவருண லிங்கத்தில் பராசர மஹரிஷிக்கும், ஸ்ரீகௌதமர் ஆஸ்ரமம் அருகே ஸ்ரீகௌதமருக்கும், அடிஅண்ணாமலையில் ஸ்ரீவியாசர் மற்றும் ஸ்ரீசுக மஹரிஷிக்கும், அபய மண்டபம் எதிரே உள்ள புண்ய தீர்த்தத்தில் ஸ்ரீரிஷ்ய சிருங்க மஹரிஷிக்கும் ஸ்ரீஅகஸ்தியர் ஆஸ்ரமம் அருகே ஸ்ரீஅகஸ்தியர், போகர், புலிப்பாணி, மற்றும் அனைத்து சித்தர்களுக்கும், ஸ்ரீகுபேர லிங்கத்தில் ஸ்ரீதிரிநேத்ராக்னி மஹரிஷிக்கும் (குபேர லிங்கத்லிருந்து திருஅண்ணாமலையை இந்நாளில் பிறிதொரு யுகத்தில் தரிசனம் செய்த பின்னர் அச்சரப் பாக்கத்தில் இவர் சிவதரிசனம் பெற்றார்.) ஸ்ரீஈசான்ய லிங்கத்தில் ஸ்ரீகுகை நமசிவாயர், ஸ்ரீகுரு நமசிவாயருக்கும், ஸ்ரீஇந்திர லிங்கத்தில் ஸ்ரீமாண்டவி மஹரிஷிக்கும் அர்க்யம் அளித்தல் வேண்டும்..!

அச்சிறுபாக்கம்

ஸ்ரீசனீஸ்வர பகவானை வேண்டித் திருஅண்ணாமலை திருக்கோயிலில் பிரம்ம லிங்கத்தின் அருகில் உள்ள நள லிங்கத்தை வணங்கி கிரிவலத்தை நிறைவு பெறச் செய்திடல் வேண்டும்..!

ஸ்ரீவிஸ்வ பூரண பிரம்ம கிரிவலம் ஏழாம் நாள் கிரிவல முறை (26.11.2001)

இன்றைய கிரிவலத்திற்குரித்தான மூர்த்தி ஸ்ரீவிஸ்வ பிரம்ம மூர்த்தியாவார்... உலகம் என்ன, இந்தப் பிரபஞ்சமே இயங்குவது ஒலியாலு, ஒளியாலும் தான்! ஒலிகளை ஒளியாகவும், சில ஒளிகளை ஒலியாகவும் மாற்றிடலாம். இந்த மாற்று இறைக் கலங்களுக்குத் துணை புரிபவைதாம் புண்ய ஜோதியாகும்.. நற்காரியங்களிலும் விளையும் புண்யமானது காரிய சித்திக் கதிர்கள், வர மாங்கல்யக் கதிர்கள், பித்ரு ஆசிக் கதிர்கள், புண்ய ஜோதிக் கதிர்கள் போன்ற பரல்களாக மாறுகின்றன! இறையருள் மற்றும் பித்ருக்கள், மகரிஷிகள், சித்புருஷர்களின் ஆசிகள் ஆகியவற்றில் பொதிந்துள்ள ஒலியொளி, ஒளியொலிக் கிரணங்களால் பூஜை, ஹோமம், வழிபாடுகள், கிரிவலம், அன்னதானம் போன்றவற்றில் திரள்கின்ற புண்ய சக்திகள் யாவும் இறைக் கலங்களாக மாறுகின்றன! ஆலயங்களில் கற்பூரம் அல்லது நெய் தீபம் காட்டி கண்டாமணி ஒலிக்கும்போது எழும் ஒலியொளிப் பரலும், ஒளியொலிப் பரலும் சேர்ந்து நமக்கு ஆசி அளிக்கின்றன...!

அதாவது நம் மனதில் எழுகின்ற நல்பிரார்த்தனைகளின் ஒலிகள் துவார பாலகர்களின் மூலமாக மூல லிங்க வடிவின் வெளியொளிப் பரிமாணத்தை அடைகின்றன... மூலஸ்தானத்தில் எப்போதும் எழும்பிக் கொண்டிருக்கின்ற பரம ஒலி, பரம ஒளிச் சுடர்களோடு இவை ஐக்கியமாகி, காரிய சித்திக் கதிர்களாக உருவெடுத்து கண்களின் தரிசனப் பலன்களாகவும், புஷ்பம், விபூதி, குங்குமம், தீர்த்தம், துளசி, பிரசாதம் போன்றவை மூலமாகவும் காரிய சித்திக் கதிர்களாகவும் நம்மை அடைகின்றன...!

இவ்வாறாக ஒலி, ஒளிப் பரிமாணங்கள் கூடிய நம் உடலுக்கு ஒலி, ஒளிப் பரம தத்துவத்தை உணர்த்துவதற்காகவே இன்றைய ஸ்ரீவிஸ்வ பிரம்ம மூர்த்தி நமக்குக் கிரிவலப் பலன்களைத் தந்து அருள்பாலிகின்றார்.. இன்றைய கிரிவலத்தை ஆலயத்தின் பிரம்ம தீர்த்தத்தின் அருகில் உள்ள பிரம்ம லிங்கத்தின் எதிரே கிட்டும் கோபுரம் மற்றும் மலை தரிசனத்தைத் தரிசித்துத் தொடங்கி வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு ஆகிய நான்கு இராஜ கோபுரங்களின் (வேத) கலசங்களைத் தரிசித்து கிரிவலத்தைத் தொடர வேண்டும்...!

இன்றைக்கு உத்தராணி மரத் தாம்பாளத்தில் ஏழு நிறங்களில் உள்ள பூக்களை வெள்ளை, மஞ்சள், சிகப்பு (செம்பருத்தி), நீலம், பச்சை (துளசி அல்லது வில்வம்), ரோஸ் (ரோஜா) வயலெட் (எருக்கு, சங்குப் பூ), இளஞ் சிவப்பு (பாரிஜாதம்) அல்லது ஏழு வகைப் பூக்களை உத்தராணி மரத் தாம்பாளத்தில் தாங்கிக் கிரிவலம் வந்திடுக! கனகாம்பரம் பூஜைக்கு ஏற்புடையது அல்ல!

கிரிவலத்தின் பலன் கூட்டும் இன்னிசை!

மூங்கில் குவளை அல்லது மரச் செம்பில் ஏழு வகை அபிஷேக வாசனைத் திரவியங்கள் கலந்த தீர்த்தத்தைச் சுமந்து கிரிவலம் வந்திடுக! பஜனைப் பாடல்கள், தமிழ் இறைப்பாடல்கள், தமிழ் மற்றும் வடமொழி வேதத் துதிகளை ஓதி கிரிவலம் வருதல் சிறப்பானது. அதாவது இறை ஒலி நிரவும் சப்த த்வனிகளுடன் கிரிவலம் வருதலால் உடலில் சப்த வடிவில் உள்ள நாளங்கள் இறைச் சீர்மை பெறும்..! சத்சங்கமாகப் பல அடியார்களும் கிரிவலம் வந்திடில் நாதஸ்வரம், தவில், மிருதங்கம், வயலின், கஞ்சிரா, கடம், பிடில் போன்ற ஏழு வகை இசைக் கருவிகளை முழங்கியவாறு கிரிவலம் வருதலால் பரவெளியில் நிறைந்திருக்கும் வேத பிரம்ம சக்திகள் ஜீவ கலைகளாக மாறி கிரிவல அடியார்களின் நல்பிரார்த்தனைகளைக் காரிய சித்தியாக்கும் ஒலி ஒளிக் கதிர்களாக மாற்றி அருள்பாலிக்கின்றன..!

இன்றைய கிரிவலத்தில், குறிப்பாக தெற்கு கோபுரப் பகுதியில் சப்த சாகம்பரிய நளபாகம் என்ற வகையில் திருவாதிரைக் களி, கூட்டு போல ஏழு காய்கறிகள் கலந்த அன்னதானம் செய்தல் வேத பிரம்ம சக்தி தேவதைகளுக்கு மிகுந்த ப்ரீதியைத் தருவதாகும்.. இன்று அன்னதானம், வஸ்திர தானம், காலணிகள் தானம், எண்ணெய் தானம், குடை தானம், பாத்திரங்கள் தானம், பேனா, நோட்டுப் புத்தகங்கள் தானம் போன்ற ஏழு வகை தானங்களை அவரவர் சக்திக்கு ஏற்ப நிகழ்த்துவதால் பலராலும் வேதங்களை ஓதிப் பெற முடியாத வேத சக்திகளுக்கு ஈடான புண்ய சக்திகளை நால் வேத மூர்த்திகளே பெற்றுத் தருகின்றார்கள்.. இரண்டு வாழைப் பழங்களை அளிப்பதும் ஒரு சிறு அன்னதானமே! உண்மையில் நான்கு வேதங்களுக்கு மேல் ஏழு வேதங்கள் வரை பித்ரு லோகங்களில் உண்டு. பன்னிரண்டு வேதங்கள் வரை கந்தர்வ லோகங்களில் உண்டு..!

நற்றமிழில் நல்வேதம்! :- இவ்வாறாக நாம் அறியாத வேத சக்திகள் நிறைய இருப்பதால் தினசரி ஆலய தரிசனத்தால் ஆங்கே நிறைந்திருக்கின்ற வேத சக்திகளை நம் உடல் நாளங்கள் ஈர்த்து நாம் பெற முடியாத வேத சக்திகளைப் பெற்றுத் தருகின்றன.. தேவ மொழி வேதங்களுக்கு ஈடான நாலாயிர திவ்ய பிரபந்தம், தேவாரம், திருப்புகழ், திருவாசகம் போன்ற எண்ணற்ற தமிழ் வேத மறைத் துதிகள் நிறைய உள்ளன.. இத்தகைய வேத சக்திகளை நமக்குப் பெற்றுத் தருவதற்காகவே தெய்வ மூர்த்திகளுக்கு உரித்தான சாஸ்திர தேவ மூர்த்திகயாக விளங்குகின்ற நான்முக நான்மறை ஸ்ரீவிஸ்வ பிரம்ம மூர்த்தி இன்று கிரிவலம் வந்து கிரிவலப் பலாபலன்களை பக்தர்கட்கு அருள்கின்றார்...

ஒவ்வொரு முக்கியமான மலை தரிசனத்திலும் கீர்த்தனைகள், தேவாரப் பண்கள் பாடி வீழ்ந்து வணங்குதலால் மேலதிகாரிகளின் கொடுமையால் வாடுவோர் நல்ல தீர்வு பெறுவர்.. அனைத்து நந்திகளுக்கும் இன்று வஸ்திரம் சார்த்தி வழிபடுதலால் கணவன் ஒரு புறம், குடும்பம் ஒரு புறம் என அலுவல், கல்வி வியாபாரம் காரணமாகப் பிரிந்திருக்கும் குடும்பம் ஒன்று சேரும்! இன்று அடி அண்ணாமலையில் அனைத்து தெய்வ மூர்த்திகளுக்கும் வஸ்திரம் சார்த்தி வழிபட்டிட, வாக்கு நாணயம் தவறுதல், கோர்ட் வழக்குகளால் கட்டிட, அலுவலகப் பணிகள் தடைப்படுதல், தீய வார்த்தைகளால் உறவும், நட்பும் முறிதல் போன்றவற்றிற்கெல்லாம் தக்க தீர்வுகள் ஏற்பட்டுப் பிரிந்த நட்பும் முறிந்த உறவும் நல்முறையில் மீண்டும் இணைவதற்கு இன்றைய கிரிவலம் பெரிதும் துணை புரியும்...!

ஸ்ரீஅஷ்டபைரவர் ஆலயம்
திருஅண்ணாமலை

கிரிவலத்தில் காணும் விநாயக மூர்த்திகளுக்கெல்லாம் வஸ்திரம் சார்த்தி வணங்கிடுக! இடுக்குப் பிள்ளையார் அருகே பஞ்ச லிங்கங்களுக்கு ஐந்து விதமான வஸ்திரங்களைச் சார்த்தி சிவபுராணம், ருத்ரம், சமகம் மந்திரங்களை ஓதுதலால் அடுத்த வீடு, சக அலுவலர், வியாபாரத்தில் அடுத்து உள்ளவார்களால் வரும், பகைமை தீரும்! இன்றைய கிரிவலத்தை நான்முகனாம் பிரம்ம மூர்த்திக்கே ஓம்காரப் பொருள் உணர்வித்த முருகப் பெருமானின் திருச்சந்நிதியில் முடித்தல் சிறப்புடையதாம்..!!

பாலாகர்ஷண பூஷண கிரிவலம் எட்டாம் நாள் கிரிவலம் (27.11.2001)

கலியுகத்தில் பூலோக ஜீவன்கள் ஆத்ம விசாரம், ஆத்ம விபூதிகள், ஆத்ம அனுபவங்கள் மூலமாக ஆத்ம ஜோதியை உணரும் பாங்கைப் பெறாமையால் அல்லது பயன்படுத்தாமையால், ஸ்ரீஆதி பிரம்ம மூர்த்தியே பெரும் கருணை கொண்டு, ஆதி சிருஷ்டியின் தன்மையை உணர்விக்கும் வண்ணம் ஸ்ரீபால பிரம்ம மூர்த்தியாக இன்று கிரிவலத்தை மேற்கொள்கின்றார்... இறைவன் அடிமுடி காணா ஜோதியாக பரிணமிக்கும் முன்னரேயே சித்த யுகத்திலும், அதற்கு முந்தைய கோடானுகோடி யுகங்களிலும் எப்போதும் பிரளயத்தையும் விஞ்சிய இறைத் திருத்தலமாகத் துலங்கும் சிவபுரம், தோணிபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி திருத்தலம்.. திருஅண்ணாமலை திருத்தலம் போல இன்றைக்கும் சிரஞ்சீவித்வத்துடன் திளைக்கின்ற தலங்களில் இன்று ஸ்ரீபிரம்ம மூர்த்தி தூல, சூட்சும வடிவங்களில் பல வழிபாடுகளை மேற்கொள்கின்றார்! ஆதலால் இன்றைக்கு கிரிவலம் வரவிருக்கின்ற ஸ்ரீபால பிரம்ம மூர்த்தி போல இன்றைய கிரிவலத்தை ஆலயத்தினுள் பிரம்ம தீர்த்தம் அருகே ஸ்ரீபிரம்ம லிங்க மூர்த்தியிடமிருந்து தொடங்குதல் வேண்டும்.!

பிரம்மாண்டமான சங்கல்பம்! கிரிவல சங்கல்பமாக ஸ்ரீபிரம்ம லிங்கத்திலிருந்து புறப்படும் போது. “இறைவா, ஆதி சிருஷ்டியின்போது சாந்தத்துடனும் இறை அமைதியுடனும் திகழ்ந்த பூவுலகமானது பலகோடி யுகங்களைக் கடந்து இன்று கலியுகத்திலே பல துன்பகரமான சூழ்நிலைகளுடன் நடந்து கொண்டிருக்கின்றது.. இதற்குப் பூவுலகம் பொறுப்பல்ல! கர்ம வினைகளைப் பெருக்கிக்கொண்ட மக்களே பொறுப்பு! இறையருளால் ஆதிமூல சிருஷ்டியில் மானுடப் பிறவி பெற்றதே பெரும் பாக்யமாகும்! அடியேனும் பெருங் கர்ம வினைகளின் சுழல்களால் பல கோடிப் பிறவிகளைக் கடந்து தற்போது பெறுதற்கரிய இம்மானிடப் பிறவியை மீண்டும் பெற்றுத் தங்களை லிங்க வடிவில் தரிசிக்கும் பாக்கியமும் பெற்றுள்ளேன். எனவே ஆதிமூல சிருஷ்டியில் திகழ்ந்த இறை அமைதியும், சாந்தமும் பெரும் விலங்குகளும், சாதாரண மனிதர்களும் கூட அமைதியுடன் ஒன்று கூட வேண்டும்.. சாந்த வாழ்க்கை உலகில் மீண்டும் நிறைவதற்கான புண்ய சக்திகளைப் பெறுவதற்கான நற்காரியங்களை நிறைவேற்ற நல்வரங்களைத் தருவீர்களாக!” என்று மனதார வேண்டிடுதல் வேண்டும். இங்குதான் ஸ்ரீஆதி பிரம்ம மூர்த்திக்கு ஸ்ரீஅருணாசல பெருமானுடைய லிங்க வடிவ தரிசனமும் கிட்டியது.. ஸ்ரீபிரம்ம லிங்கத்தில் இருந்து தெற்கு கோபுர வாயில் வழியே கிரிவலத்தைத் தொடங்குதல் வேண்டும்.

இன்றைய கிரிவல முறையாக உத்தராணி மரத் தாம்பாளத்தில் அல்லது மா, பலா போன்ற புனித விருட்சங்களில் செய்யப்பட்ட மரத் தாம்பாளத்தில் பாரிஜாத புஷ்பங்கள் அல்லது செவ்வரளி புஷ்பங்களைத் தாங்கி கிரிவலம் வருதல் வேண்டும். மிண்டு ரங்க மூங்கில் குவளை அல்லது மரச் செம்பில் கங்கை அல்லது காவிரி புண்ணிய தீர்த்தத்தில் ஏலக்காயும் இட்டுச் சுமந்து கிரிவலம் வருதல் வேண்டும்.! எம லிங்க சன்னதியில் பச்சரிசி மாக் கோலமிட்டுப் பன்னிரெண்டு முறை அடிப்பிரதட்சிணம் செய்து கிரிவலத்தைத் தொடர்தல் வேண்டும். இன்றைக்கு கிரிவலப் பாதையில் ஆங்காங்கே பித்ருக்களுக்கு ப்ரீதியான எள் உருண்டை, பிரண்டைத் துவையல் கூடிய அன்னம் போன்றவற்றைத் தானமாக அளித்தலால் கணவனுடைய அசிரத்தையான குணங்கள் தீர்வு பெறும்! எதிர்த்துப் பேசி வாழ்வின் அமைதியைக் குலைக்கும் மனைவியும் சீரடைவாள்..!

இன்று அடிஅண்ணாமலைத் திருத்தலத்தில் இறைவனுக்குச சாற்றுவதற்காக நல்ல பூணூல்களை அளித்து, பாக்கியமிருப்பின் புதுப் பூணூல் தரித்த மூர்த்தியையும் தரிசித்து ஆலயத்தை வலம் வந்து கிரிவலத்தை தொடர்தல் வேண்டும்.! இதனால் காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்கள் தெரிய வரும்.. (தினந்தோறும் ஆறு கால பூஜைகளிலும் சுவாமிக்குப் பூணூல் சார்த்த வேண்டும்.. அவிட்ட நட்சத்திரம் தோறும் சுவாமிக்கு ஜவ்வாது தோய்த்த பூணூல் சார்த்துதல் விசேஷமானது..) அபயமண்டபம் அருகே உள்ள பித்ரு தர்ப்பண தீர்த்தத்தில் ஸ்ரீஆபஸ்தம்ப மஹரிஷிக்கு “ஸ்ரீஆபஸ்தம்ப மஹரிஷிம் தர்ப்பயாமி” என்று ஓதிக் குதிகால்களை உயர்த்திக் கால்களின் நுனி விரல்களில் மலையை நோக்கி உயர் நின்று மூன்று முறை அர்க்யம் விடுதல் வேண்டும். அர்க்யம் என்றால் மிண்டு ரங்க மூங்கில் குவளையால் இரண்டு கைகளிலும் நீர் ஊற்றி விரல் நுனிகளின் வழியாக நீரைத் தாரையாக பூமியில் அர்ப்பணித்தல் ஆகும்.. இத்தகைய கார்த்திகைத் தீபப் பெருவிழாவில்தாம் இன்றைய கிரிவலத்தின் மூலமாக ஸ்ரீஆபஸ்தம்ப மகரிஷிக்கும், ஸ்ரீமார்க்கண்டேய மஹரிஷிக்கும் பல அற்புதமான கிரிவல தரிசனங்கள் கிட்டின., இன்று இரட்டைப் பிள்ளையார் கோயிலில் மூன்று சிதறு காய்களை உடைத்தலால் இத்தகைய அரிய கிரிவலப் பலன்கள் தீய வழக்கங்களில் சிதறாது கட்டிக் காக்கப்படும்! இந்த மூன்று சிதறுக் காய்களையும் கிரிவலத்தில் சுமந்து வருதல் வேண்டும்..! இன்றைய கிரிவலத்தை வல்லாள மகாராஜா கோபுரத்தின் முன் உள்ள நந்தி மூர்த்தியிடம் முடிப்பது சிறப்புடையதாம்.!

தாரக சுந்தர பிரம்ம கிரிவலம் ஒன்பதாம் நாள் கிரிவலம் 28.11.2001

இன்றைய கிரிவலத்திற்குரித்தான பிரம்ம மூர்த்தியே ஸ்ரீதாரக பிரம்ம மூர்த்தியாவார்..! நவகிரகங்களுடைய பரிபூர்ண அருளுடன் தான் நம் வாழ்க்கைக் கர்ம வினைகள் நன்முறையில் தீர்வு பெறும்.. ‘நாம் தான் முறையாக ஒரு பூஜையையும் செய்வது கிடையாதே, எவ்வாறு பகவான் ஒவ்வொரு வினாடியும் எவ்வித ஆபத்துகளும் இல்லாமல் நம்மைக் காக்கின்றார்’ என்று நீங்கள் ஆச்சரியத்துடன் எண்ணிடலாம்.. ஆனால் நாம் ஒன்றுமே செய்யாத போது நம் மூதாதையர்களுடைய பூர்வ ஜென்ம புண்ய சக்தியால்தான் நம் காலச் சக்கரம் ஓடிக் கொண்டிருக்கின்றது என்பதை இனியேனும் நீங்கள் உணர்ந்தாக வேண்டும்..!

நமக்காக ஒவ்வொரு வினாடியும் நம் பித்ரு மூர்த்திகள் நவகிரக தேவாதி தேவ மூர்த்திகளை வேண்டிப் பிரார்த்தனை செய்து வருகின்றார்கள்.. ஆனால் இதை நாம் சற்றும் உணர்வது கிடையாது... நம் வாழ்க்கை மிகுந்த கஷ்டங்கள் இல்லாமல் ஏதோ சுகபோகத்துடன் கழிந்தால் சரி என்ற சராசரி எண்ணத்தில்தான் மிகவும் லௌகீகமாகத் தெய்வச் சிந்தனையின்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்..! நம்முடைய கர்ம வினைகளைக் கழிப்பதற்காக இறைவன் பெறுதற்கரிய இந்த மானுட உடலை அளித்துக் கர்ம வினைக் கழிப்பிற்கான பல இறைவழி முறைகளையும், தான தர்ம அறநெறிகளையும் தந்துள்ள போதும் அவற்றில் மனிதனின் மனம் நாட்டம் கொள்வது கிடையாது... ஸ்ரீதாரக பிரம்ம மூர்த்தி கலியுகத்தில் சராசரி மனிதனும் வாழ்க்கையின் தெய்வீக அம்சங்களை உணர்ந்து நற்கதியைப் பெற்றிட தம்முடைய இன்றைய தேவ கிரிவலப் பலன்களையெல்லாம் அர்ப்பணிக்கின்றார்..!

இன்றைய கிரிவலத்தை திருஅண்ணாமலை ஆலயத்தில் நவக்கிரகங்களை வலம் வந்து, ஸ்ரீஅபீதகுஜாம்பாள் (உண்ணாமுலை அம்பிகை) சந்நிதிக்கெதிரே அம்பிகையையும், கிரியையும் ஒரு சேர வணங்கி ஆரம்பிக்க வேண்டும்.. இத்தரிசனத்திற்கு நவசாம்பவி வித்யா தரிசனம் என்று பெயர்.. ஏனென்றால் இங்கிருந்துதான் அருணாசலத்தைக் கிரிவலம் வந்த நவக்கிரக மூர்த்திகளும், பத்னி தேவ மூர்த்திகளும் திருஅண்ணாமலையில் பார்வதி பரமேஸ்வர தரிசனத்தைப் பெற்றனர்.. இதன் பிறகு கிளி கோபுரத்திலிருந்து ஸ்ரீஅண்ணாமலையாரைத் தரிசித்து வடக்குக் கோபுரம் வழியே வெளி வந்து, கிழக்கு கோபுரம், தெற்கு கோபுரங்களைத் தரிசித்தவாறு வலம் வருதல் வேண்டும்..!

இன்றைக்கு உத்தராணி மரத் தாம்பாளத்தில் ஒன்பது வகையான பூக்களைத் தாங்கியும், மூங்கில் குவளையில் அல்லது மரச் செம்பில் நவதான்யங்களைப் புண்ய நதி தீர்த்தங்களுடன் சேர்த்துச் சுமந்தும் வருதல் வேண்டும்! அஷ்ட லிங்க மூர்த்திகள், அஷ்ட நந்திகள் சந்நிதிகளில் ஒன்பது அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுதலால் பிரேத தோஷங்களால் ஏற்படும் விளைவுகள் நிவர்த்தியாகும் (பிரேத தோஷங்களால் வயிறு, கால், முகம் உப்பும் வியாதிகள் ஏற்படும்.) இறந்தவர்களுடைய கை விரல்களைப் பதித்து அதர்மமான முறையில் கையொப்பம் எடுத்தல், இறந்தவர்களுடைய உடலிலிருந்து ஆபரணங்கள், பணம் போன்றவற்றை எடுத்து உரியவர்களிடம் சேர்க்காமல் அபகரித்தல், இறந்தவருக்கு வருகின்ற ஈட்டுத் தொகை, பென்ஷன், PF, ஆயுள் காப்பீட்டுத் தொகை போன்றவற்றை முறையானவர்களுக்கு அளிக்காது தவறாகப் பயன்படுத்துதல், இறந்தவர்களுக்குப் பல வாக்குறுதிகளை அளித்து விட்டு அவற்றை நிறைவேற்றாது அவர் குடும்பத்தினரை நிர்கதியாக்குதல் போன்றவற்றிற்குத் தக்க பிராயச்சித்த வழிமுறைகளைத் தருவதாக இன்றைய கிரிவலம் அமைகின்றது. இவை கொடிய தீவினைகளாதலால் கிரிவலத்தில் பெறும் இறையருளின்றி எளிதில் பிராயசித்தம் பெற முடியாது!

அடிஅண்ணாமலையில் ஸ்ரீபிரம்ம மூர்த்தி ஸ்தாபித்த சிவாலயத்தில் லிங்கத்திற்கு நார்ப் பட்டு ஆடைகளைச் சார்த்தி அதனைத் தானமாக ஏழைகளுக்கு அளித்தலால் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்குத் தக்க நிவாரணம் கிட்டும்.. அபய மண்டபம் அருகே மலையினுடைய ஒன்பது முகடுகளும் நன்றாகத் தெரியும் இடத்தில் அமர்ந்து நவக்கிரகத் துதிகளை ஓதி, ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது ஆகிய ஒன்பது கால தேவதா மூர்த்திகளுக்கும் அர்க்யம் அளித்திடுதல் வேண்டும்!  

சூலகங்கை ஆண்டான்கோவில்

நவக்ரஹ அர்க்யம்

ஞாயிறு வார தேவதா மூர்த்தி தர்ப்பயாமி
திங்கள் (சந்திர) வார தேவதா மூர்த்தி தர்ப்பயாமி
செவ்வாய் (அங்காரக) வார தேவதா மூர்த்தி தர்ப்பயாமி
புதன் வார தேவதா மூர்த்தி தர்ப்பயாமி
வியாழன் (குரு) வார தேவதா மூர்த்தி தர்ப்பயாமி
வெள்ளி (சுக்கிர) வார தேவதா மூர்த்தி தர்ப்பயாமி
சனி வார தேவதா மூர்த்தி தர்ப்பயாமி
ராகு தேவதா மூர்த்தி தர்ப்பயாமி
கேது தேவதா மூர்த்தி தர்ப்பயாமி

அர்க்ய முறை : - அர்க்யம் வேறு, தர்ப்பணம் வேறு, அர்க்யம் என்றால் இரு உள்ளங்கைகளிலும் நன்றாக நீரை ஏந்தி நிமிர்ந்து நின்று குதிகால்களை உயர்த்தி விரல்களைச் சாய்த்து விரல் நுனிகளின் வழியே தீர்த்தம் பூமியில் படுமாறு அந்தந்த தேவதா மூர்த்தியின் பெயருடன் “தர்ப்பயாமி” என்று ஓதி வழிபடுவதாகும்..! குதிகால்களை உயர்த்தும்போது பூமியிலிருந்து பாத ரேகைகள் மூலமாக கபாலத்திற்கு எழுகின்ற பிருத்வீ தீப த்வீப ஒளிக் கிரணங்கள் சஹஸ்ராரத்தை அடைந்து வடிப்புரி பெற்றுக் கீழிறங்கி சாங்கிரக நாடிகள் மூலமாக உள்ளங்கை ரேகைகளை அடைந்து ஒளிப் பரிமாணம் பெற்று 72,000 நாடிகளையும் சுத்திகரித்து கர்ம வினைத் திரட்சிகளைக் கரைத்து விரிசடைநாதனின் ஆசிகளைத் தாங்கி வரும் கங்கை போல அர்க்ய கங்கைப் பிரவாகமாக பூமியை அடைகின்றன. இதுவே அர்க்யத்தின் இறை அம்சங்களுள் ஒன்றாம். இன்னும் பல உண்டு.. ஒரு முறை அர்க்யம் அளிப்பதால் கண்ணுக்குத் தெரியாத சூட்சுமமாக நிகழ்கின்ற தெய்வ அனுபூதிகள் கோடானு கோடியாகும்.! இத்தகைய அர்க்யங்களுடன் இங்கிருந்து திருஅண்ணாமலையைத் தரிசிப்பதால் கிட்டுவதே அர்க்யப் பிரதான தரிசனம் ஆகும். இதன் பலன்களாக வீடு, நில பாக்யங்கள் கிட்டும்! திருமணமாகி வறுமையில் உள்ள புதல்வி நல்ல தீர்வுகளைப் பெறுவாள்!

பாக்கியம் உள்ளோர் குடவாசல் வலங்கைமான் அருகே உள்ள ஆண்டார்கோயில் எனப்படும் கடுவாய்க்கரைப் புத்தூர் சிவாலயத்தின் திரிசூல கங்கைத் தீர்த்தத்தில் அலயத்திற்குத் தக்கக் காணிக்கை செலுத்தி சிறிது தீர்த்தம் கொணர்ந்து இன்று இவ்விடத்தில் அர்க்யம் அளித்து பத்தாவது அர்க்யமாக “ஸ்ரீகாஸ்யப மகரிஷிம் தர்ப்பயாமி” என்று அர்க்யம் அளித்தலால், குடும்பத்தில் குடுவாய்த் தோஷத்தால் ஏற்படும் கருத்தரிக்காமை, பில்லி சூன்யத்தால் ஏற்படும் மலதோஷம், குழந்தைகளுக்கு உள்ள பேச்சுத் தன்மை குறைவு போன்றவற்றிற்குத் தக்க நிவாரணம் கிட்டும்.. இன்றைய கிரிவலத்தை ஆலயத்தில் உள்ள சிவகங்கைத் தீர்த்தத்தில் நிறைவு செய்வது சிறப்புடையதாகும்.!

ஞான வ்யாபக பிரம்ம கிரிவலம் – பத்தாம் நாள் கிரிவலம் – 29.11.2001

இன்றைய கிரிவலத்திற்குரிய மூர்த்தி ஸ்ரீஞான பிரம்ம மூர்த்தியாவார்.. ஆதி காலத்தில் ஐந்து தலைகளுடன் விளங்கிய மகா பிரம்ம மூர்த்தி! ஒருவன் எத்தகைய கொடியவனாக வாழ்ந்தாலும், பலகோடி ஜென்மங்களில் தன்னுடைய தீவினைக் கர்ம வினைகளை அனுபவித்து என்றேனும் ஒரு நாள் சற்குருவைத் தேடித்தான் ஆகுதல் வேண்டும்.. குறைகள் இல்லாத மனிதன் இல்லை.. குறையொன்றும் இல்லையெனில் நிறைந்த நல்மகரிஷியாய் ஒருவர் உருவகம் கொள்கின்றார்தானே? நான்மறைக் குரவர்கள் போன்றோர்தாம் குறையொன்றும் இல்லா நிறை ஜோதியினர் ஆவார்..!

சற்குருவைப் பெறுதல் வேண்டும் என்ற உத்வேகம் தோன்றினால்தான் தெய்வீகம் பரிபூரணமடைதற்கான ஆரம்பப் பாடம் ஆகும். என்னதான் பூஜை, புனஸ்கார, விரத வழிபாடுகளில் திளைத்தாலும் இவற்றோடு சற்குருவை நாடி நல்வழி காணுதல்தான் இறைவாழ்க்கையைப் பரிபூரணமடையச் செய்யும்.. ஆனால் இப்பூவுலகில் ஒரு வருடத்தில் ஏழே ஏழு உயிரினங்கள் தாம் சற்குருவின் பாதக் கமலத்தைச் சரணடைந்து உத்தம இறை நிலைகளை நோக்கிச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கதாம்! இன்றைய தினத்தில் கிரிவலம் வருகின்ற ஸ்ரீஞான பிரம்ம மூர்த்திதாம் சற்குருவைப் பற்றிய இறை உள்ளுணர்வை ஏற்படுத்துகின்ற ஏகாந்த இறைமூர்த்தியாவார்..!

திருஅண்ணாமலை

கிரிவல சாங்கியங்கள்! இன்றைய கிரிவலத்தை, சிவாலயப் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீஅகஸ்திய லிங்க மூர்த்தியைப் பிரார்த்தனை செய்து, ஸ்ரீஞான பிரம்ம மூர்த்திக்கு அருள்பாலிக்கின்ற அகஸ்திய லிங்கப் பெருமானே! சற்குருவை நாடுவதற்கு நல்லருள் புரிவாயாக! யாம் மட்டுமின்றி பூலோக ஜீவன்கள் யாவுமே, யாவையுமே சற்குருவின் பரிபாலனத்தை உய்த்துணர்வதற்கு அடியேனுடைய கிரிவலப் பலாபலன்களை அர்ப்பணிக்கின்றேன்! என்று இருதய பூர்வமாகச் சங்கல்பம் செய்து கிரிவலத்தைத் தொடங்குதல், வேண்டும், வடக்கு கோபுரம், கிழக்கு கோபுரக் கலசங்களைத் தரிசித்து மீண்டும் தெற்கு வாசலுக்கு வந்து கிரிவலத்தைத் தொடர்தல் வேண்டும்..!

இன்று உத்தராணி மரத் தாம்பாளத்தில் குருவிற்கு ப்ரீதியான மஞ்சள் நிறப் புஷ்பங்களை (சாமந்தி, மஞ்சள் அரளி, தங்க அரளி போன்றவை) நிரப்பி மூங்கில் குவளையில் மஞ்சள் கலந்த தீர்த்தத்தைச் சுமந்து கிரிவலம் வருதல் வேண்டும்.. குரு கடாட்சம் நிறைந்த அரச மரங்கள் கிரிவலப் பாதையில் தென்பட்டிடில் அவற்றிற்கு மஞ்சள் நீரைத் தெளித்து, வீழ்ந்து வணங்கிக் கிரிவலத்தைத் தொடர்தல் வேண்டும்..! அஷ்ட லிங்கம், அஷ்ட நந்தி சந்நிதிகளில் குருவிரலாகிய வலது ஆள்காட்டி விரலால் ஓம் குருப்யோ நம: ஓம் சற்குருவே போற்றி என்று மூன்று முறை எழுதி அந்த சூட்சும எழுத்து ஒளிப் பிரவாகத்தினூடே திருஅண்ணாமலையைத் தரிசிக்க வேண்டும்! இன்று கன்றுடன் கூடிய பசு, குழந்தைகளுடன் கூடிய தாய்மார்களைக் கண்டிடில் அவர்களுக்கு உரித்தான பழங்கள், ஆடைகள், உணவு போன்றவற்றை அளித்து கை கூப்பி வணங்கிக் கிரிவலத்தைத் தொடர வேண்டும்.. ஸ்ரீதுர்வாசர் பாதம் உள்ள இடத்தில் ஸ்ரீதுர்வாச மூர்த்தியின் குருகடாட்சத்தை வேண்டியும், இங்கு தரையில் முழந்தாளிட்டுக் குனிந்து திருஅண்ணாமலையை நோக்கி வணங்கி கிரிவலத்தைத் தொடர வேண்டும்.!

இன்று மலையை நோக்கி சின்முத்திரை தரித்தவாறு பெற்றோர்கள் ஒருமித்த மௌனத்துடன் கிரிவலம் வருதலால் பேச்சு சரியாக வராத பிள்ளைகளுக்கு தக்க நல்வழிகள் காட்டப் பெறும்! அடிஅண்ணாமலை சிவாலயத்தில் இறைவனுக்கு மஞ்சள் நிற ஆடைகளை அணிவித்து அவற்றை ஏழைகளுக்குத் தானமாக அளித்து கிரிவலத்தைத் தொடர்ந்திடுக! ஸ்ரீஅகஸ்தியர் ஆஸ்ரமத்திற்கு அருகே சிவசக்தி ஐக்கிய ஸ்வரூப தரிசனத்தைப் பெற்று சற்குருவின் திருவருளை வேண்டி, பன்னிரண்டு முறை வீழ்ந்து வணங்கி வசு, ருத்ர, ஆதித்ய, ஸ்கந்த, சாண்டில்ய பித்ரு தேவ மூர்த்திகளின் ஆசிகளை வேண்டி கிரிவலத்தைத் தொடர்தல் வேண்டும்.. இன்றைய கிரிவலத்தில் ஈசான்ய சித்தருடைய ஜீவ சமாதியில் குருவின் திருவருளை வேண்டி அன்னதானம் அளித்து ஆலயத்தில் தட்சிணாமூர்த்தி சந்நிதியில் கிரிவலத்தை நிறைவு செய்தல் வேண்டும்..!

உலகின் பல பாகங்களிலும் உள்ள சற்குருமார்கள் ஸ்தூல மற்றும் சூட்சும ரூபங்களில் கிரிவலம் வரும் நாளிது! குரு துரோகம் செய்தோர்க்குச் சிவபெருமானிடம் கூட மன்னிப்பு கிடையாது... குருவே ஏதேனும் பரிகாரம் அளித்தால்தான் உண்டு! தாம் குரு துரோகம் இழைத்ததை மனப் பூர்வமாக உணர்வோர் இன்று கண்டிப்பாகக் கிரிவலம் வந்தால்தான் என்றேனும் குருவே விரும்பினால் கடுமையான பரிகார, பிராயசித்தங்களை நல்கிட கருணைக் கண் திறக்கக் கூடும்! ஆனால் இதுவும் எளிதல்ல! குரு துரோகத்திற்கு எந்த இறை லோகத்திலும் மன்னிப்பு அளிப்பதில்லை! பொதுவாக, பெரியோர்களின் துணையோ, ஆதரவோ அல்லது ஆண்களின் துணையோ இல்லாமல் தத்தளிக்கும் குடும்பங்களுக்கு இன்றைய கிரிவலம் தக்க நிவர்த்தி வழிகளைப் பெற்றுத் தரும்..!

திருபுவனை விஷ்ணுபதி

சற்குருவைப் பெற்றுத் தந்திட, இடக்கைச் சின்மய முத்திரையுடன் அபூர்வமான அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கும் திருபுவனைத் திருமால்! குடும்ப பிரச்னைகளுக்குக் “குதூகலத் தீர்வு” தரும் குவலயப் பெருமாளே திருபுவனை ஸ்ரீதோத்தாத்ரி மூர்த்தி! திருமண தோஷங்களுக்குத் தீர்வு தரும் திவ்ய மூர்த்தியே திருபுவனை “தெய்வ நாயகமாகிய” ஸ்ரீதோத்தாத்ரிப் பெருமாள்! அனைத்துத் தடங்கல்களைத் தீர்த்து காரிய சித்தி தரும் தரணிப் பெருமானே திருபுவனை ஸ்ரீதோத்தாத்ரித் திருமால் மூர்த்தி! பரம்பொருளின் சாமீப, சாரூப, சாலோக்ய அருட் சுடர்களை மிகமிக அருகிலேயே போஷிக்கும் பரந்தாமன் திருத்தலமே, திருபுவனை ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஆலயம்! ஆம் மிகவும் அபூர்வமான மூலத்தானத்தை மிக, மிக நெருங்கிய, கருவறையை ஒட்டிய பிரதட்சிணப் பிரகாரம் கொண்டதே திருபுவனைத் திருத்தலம்! திருபுவனையில் திவ்யமான விஷ்ணுபதி புண்ய காலம் -16.11.2001

பாண்டிச்சேரி விழுப்புரம் சாலையில், பாண்டிச்சேரியில் இருந்து 23 கி.மீ தொலைவில் வில்லியனூர், வடுகூரை (திருவாண்டார் கோயில்) அடுத்துள்ள திவ்யமான க்ஷேத்திரமே திருபுவனை ஆகும்! பைரவ மூர்த்தியே சிவனைப் பூஜித்த தலமான வடுகூரிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் திருபுவனை உள்ளது! திருபுவனைப் பெருமாள் மூர்த்தி பல யுகங்களாய்ப் பிரகாசிக்கும் பழமையான ஆலயத்தில் குடிகொண்டுப் பிரபஞ்சத்திற்கு அருள்பாலித்து வரும் திருமால் மூர்த்தி! தண்டமிழில் “ஸ்ரீதெய்வநாயகப் பெருமானாக” நாமம் பூண்டு பொலியும் மூலவராம் ஸ்ரீதோத்தாத்ரிப் பெருமாள், ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவியருடன் சேவை சாதிக்கின்றார்..! உற்சவ மூர்த்திகளாக ஸ்ரீவரதராஜப் பெருமாளுடன் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவியரும் சேர்ந்து அருள் பாலிக்கின்ற அதியற்புதத் தலமே திருபுவனைத் திருமால் தலமாம்!

ஒவ்வொரு திருத்தலத்திற்கு இது மட்டுமே தலபுராணம் என்று ஒன்றை மட்டும் கொள்ளலாகுமா? ஏனென்றால் கோடானு கோடி யுகங்களில், ஸ்ரீராமர், ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீபரசுராமர், ஸ்ரீகிருஷ்ணர் போன்ற தெய்வ மூர்த்திகள் மற்றும் மகரிஷிகள், சித்தர்கள் யாவரும் சம்பந்தப்பட்ட எத்தனையோ இறை லீலைகள், புராண லீலைகள் நிச்சயமாக ஒவ்வொரு தலத்திலும் நிகழ்ந்துள்ளன! அக்காலத்தில் காகித நூல் முறையானது நல்வடிவு பெறாமையின், தல புராணங்கள், செவி வழிச் செப்புரைகளாக எழுதாக் கிளவியாகப் பொலிந்து நாளடைவில் பெரும்பாலானவை மறைந்தும், மக்களால் மறக்கப் பட்டும் விட்டன.!

கலியுகத்தில், மகரிஷிகள், சித்தர்களின் மகா அனுகிரகத்தைப் பூண்ட சற்குருமார்கள்தாம், மறைந்து போன அந்தந்தத் திருத்தலத்தின் மஹிமைகளை, பண்டிகைகளின் மகத்துவத்தை அவ்வவ்ப்போது எடுத்துரைத்து வருகின்றனர். இவ்வகையில் பிரதோஷம், ராகு காலபூஜை போன்று ஸ்ரீவிஷ்ணுபதி பூஜையின் மகாத்மியமும் பலகோடி யுகங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் புத்துணர்ச்சி பெற்று நடைமுறைப் பூஜையாகி வருவது போற்றத் தக்கதாம்!

மூன்று மாதத்திற்கு ஒருமுறை, தமிழ் மாதப் பிறப்பை ஒட்டியதாக வருகின்ற ஸ்ரீவிஷ்ணுபதி பூஜையின் மகத்துவத்தை நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் கடந்த பலவருடங்களாக அரிய ஆன்மீகக் கட்டுரைகள், உபந்யாசங்கள், தெய்வீக நூல்கள், சத்சங்க சம்பாஷணைகள் மூலமாகப் பரப்பி வருகின்றார்கள், தற்போது திரைலோக்கி, சேலம், திட்டக்குடி, சென்னை போன்ற இடங்களில் பரம்பொருளாம் ஸ்ரீபெருமாள் ஆலயங்களில், விஷ்ணுபதி புண்ய காலந்தோறும் விசேஷ பூஜைகள் நன்கு நடைபெறுவது கண்டு பெருமகிழ்ச்சி அடைகின்றோம்..!

வரப் பிரசாதியே வரதராஜர்! :- ஸ்ரீதோத்தாத்ரிப் பெருமாளின் அருட்பிரசாதத்தைத் தாங்கி நின்று, எத்தகைய திருமண தோஷங்களையும் களைகின்ற திவ்யமான திருமால் தலமாகவும், பலத்த குடும்பப் பிரச்னைகளுக்குத் தக்க தீர்வுகளைத் தரும் அற்புதத் தலமாகவும், அலுவலகம், வியாபாரம், கல்வி போன்ற பலதுறைகளில் எழும் பலவிதமான தடங்கல்களையும் பவித்ரமாக நீக்கிடும் பரம்பொருளின் திருத்தலமாகவும், கலியுகத்தின் மகத்தான காரிய சித்தித் தலங்களுள் ஒன்றாகவும் சுடர்விடும் திருபுவனைத் திருத்தலம் பக்த கோடிகளுக்கு மாபெரும் இறை வரப்பிரசாதமாய்ப் பரிணமிக்கின்றது! பெருமாளும் கலியுக வரப் பிரசாதீ! பிரசித்தி பெற்ற காரிய சித்தித் தலம்! திருவக்கரையில் நின்ற கோலத்தில் வக்ராசுரனை வென்ற ஸ்ரீவரதராஜரை, சாந்தம் தவழும் கோலத்தில் தரிசிக்கத் தேவர்கள் வேண்டிய போது,

“அத்திரை புவனையில் வரதிற்கு மூத்து
முத்திரைச் சின்மய மடித் தலங் காண்பீர்!”

 என்று பெருமாளே தம் மூத்த அவதாரிகையை, மடி மீது இடக் கரச் சின்மய முத்திரை கூடிய அரிய அமர் நிலையிலான திருபுவனை ஸ்ரீதோத்தாத்ரிக் கோலத்தை உணர்த்துகின்றார்! அனைத்து வரத மூர்த்திகளுக்கும் மூத்தவரெனில் இவ்வாலயத்தின் தொன்மையை எவரால் தாம் வரையறுக்க இயலும்?

 திருபுவனைத் திருத்தலத்தையே வ்ருஷ ஆண்டின் கார்த்திகை மாத விஷ்ணுபதி புண்யகால பூஜைக்கான (16.11.2001) திருத்தலமாக தேவாதி தேவர்களும், தேவ மூர்த்திகளும், சித்புருஷர்கள், மகரிஷிகளும் கொண்டாடுகின்றனர்..! வேறு எங்கும் காண இயலாத வகையில் இடம்புரி இன்சிரிப்புக் கடாட்சத்துடன், அமர்ந்த கோலத்தில் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவியுடன் ஸ்ரீதோத்தாத்ரிப் பெருமாள் இடக்கையில் சின்முத்திரையுடன் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்... இடப் புறம் நின்று தரிசித்திடில் நல்வரங்கள் தரும் பெருமாளின் தெய்வீகப் புன்னகையைத் தரிசித்திடலாம்! மனக் குழப்பங்களுக்கு இது மாமருந்தாம்!

யாவர்க்கும் யாவைக்குமே சற்குரு உண்டு! :- புழு, பூச்சி முதல், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள், தேவர்கள், அசுரர்கள் என அனைவருக்குமே சற்குருமார்கள் உண்டு..! குருவே இல்லாத எந்த உயிரினமும் இந்த பிரபஞ்சத்தில் கிடையாது, ஆனால் தனக்கு உரித்தான சற்குருவைப்  பலரும் தீவிர பக்தியுடன், ஆழ்ந்த நம்பிக்கையுடன் நாடாமையால்தான் சற்குருவைப் பற்றிய உணர்வே கலியுகத்தில் பெரிதும் மங்கிவிட்டது. சற்குரு இல்லாமல் முக்தி நிலையோ மோட்ச நிலையோ, எதுவும், எவருக்கும் கிட்டாது, இதனைத்தாம் சித்புருஷர்கள், மகரிஷிகள், யோகியர்கள், ஞானியர்கள், அருளாளர்களுடைய சரிதங்கள் நமக்குப் புகட்டுகின்றன!

தேவர்களுக்கு உரித்தான குரு பிரகஸ்பதி, அசுரர்களுக்கு உரித்தான குரு சுக்ராச்சாரியார் என நாம் அறிவோம்! எவ்வளவு கொடியவர்களாக அரக்கர்கள் விளங்கினாலும், அவர்களுக்கும் சுக்ராச்சாரியாரை சற்குருவாகப் படைத்து அசுரர்களும் நல்வழியில் மீண்டிட இறைப் பரம்பொருள் அறவழிகளை வகுத்துத் தந்தார்.. கோடிக்கணக்கான அசுரர்களில் ஒரு சிலரே, நல்வழிக்கு மீண்டு மஹரிஷிகளுடைய உத்தம் நிலைகளைப் பெற்றார்கள்.. நல்லவர் ஒருவர் இருந்தாலும், பல லட்சக் கணக்கான பகைவர்களின் ஆற்றலை வென்றிடும் மகத்தான வேத சக்தியை அவர் கொண்டிருப்பார் அல்லவா!

அசுரர்களை நல்வழிப்படுத்துவதற்கு எத்தனையோ அறநெறி முறைகலைச் சுக்ராச்சாரியார் எளிமையாக வகுத்துத் தந்தாலும், அரக்கர்கள் ராட்சச குணத்திலேயே மிதந்து கிடந்தார்கள். தேவர்களை விட மிகவும் சிரத்தையுடன் கடுமையான தவங்களையும் யோகங்களையும் மேற்கொள்ள வல்ல அசுரர்கள், தாங்கம் மிகவும் உழைத்துக் கஷ்டப்பட்டு அடைந்த தவயோகப் பலன்களை எல்லாம் தெய்வ மூர்த்திகளிடமே ஏவி, பல லட்ச ஆண்டுத் தபோ பலன்களை க்ஷண நேரத்தில் இழந்துவிட்டமை கண்டு சுக்ராச்சாரியார் மனம் வெதும்பினார்.!

அருட்கடை விரித்தும் அருள்வாருவோர் இல்லையே!  :- எவரிடமும் உள்ள அசுர குணங்களையும் குருபக்தியால் வென்று, தேவ குணங்களாக்கி, எவரையும் நல்ல குருவருளால் பரிசுத்த ஆத்மாவாகப் பரிமளிக்கச் செய்ய முடியும் என்பதைப் பூலோகத்திற்கு உணர்த்திடவே ஸ்ரீசுக்ராச்சாரியாரை இறைவன் அசுரர்களுக்கு குருவாக வைத்துப் பிரபஞ்சத்திற்கே நற்பாடம் போதித்தார்! சுக்ராச்சாரியார் எத்தனையோ அறவழிமுறைகளை எடுத்துரைத்தும் ஒரு சில அசுரர்களைத் தவிர, பெரும்பாலான அசுரர்கள் வெகு விரைவில் அனைத்துப் புண்ய சக்திகளையும் இழந்து பழைய ராட்சச குணங்களுக்கே மீண்டும் திரும்பி விட்டனர்..! கலியுகத்திலும் இதே நிலைதாம்! அன்னதானம், கோயில் திருப்பணிகள், ஹோமம் போன்ற இறைத் திருப்பணிகள் மூலமாக சற்குரு நிறையப் புண்ய சக்திகளைப் பெற்றுத் தந்தும் அதர்மம், அசத்யம், நாணயமின்மை, கையாடல்,, பொய்மை, முறையற்ற காமம், அகங்காரம் போன்றவற்றில் அவற்றைக் கரைத்து விடுகின்ற அசுர குணங்கள்தாமே பெருத்துக் கிடக்கின்றன! இதனால்தாம் சற்குருமார்கள் (அருட்)கடை விரித்தோம், வாருவாரில்லை என்று மனம் நொந்து தங்களுடைய இறை லோகங்களுக்கே மீண்டும் சென்று விடுகின்றனர்.!

அசுரர்களுடைய இத்தகைய போக்கைக் கண்டு மனம் வருத்தம் அடைந்த சுக்ராச்சாரியார் “சற்குருவின் மகிமையை அசுரர்கள் உணர வேண்டும் என்றால் தாம் சிறிது காலம் எவரும் அறியா வண்ணம் மறைந்து இருத்தலே சிறப்புடையது. சற்குரு என்ற ஸ்தானத்தில் இவர்கள் கண் பார்வையிலேயே எப்போதும் இருப்பதால்தான் தேவைப்படும் போது எப்போதும் பார்த்துக் கொள்ளலாம், காண வேண்டிய நேரத்தில் எல்லாம் கண்டிடலாம்.. கண்டவற்றைச் செய்து விட்டு எல்லாவற்றிற்கும் தேவையான பரிகாரத்தை வேண்டுகின்ற நேரத்தில் நேரடியாகவே எளிதில் பெற்றிடலாம்.. என்ற நிலை இருப்பதால்தானே அசுரர்கள் தலைவிரித்து ஆடுகின்றார்கள்... நாம் ஒருவரும் அறியா இடத்தில் சிறிது காலம் மறைந்து இருந்தால் அசுரர்கள் தாமே நல்வழிக்குத் திருந்தி குருவின் மேன்மையை உணர்வர்”, என்று கருதி ஸ்ரீசுக்ராச்சாரியார் தன் உடலை ஒடுக்கிக் கொண்டு பூலோகத்தில் எவரும் அறியாவண்ணம் ஓரிடத்தில் மறைந்திருந்தார்.!

குரு இல்லா வாழ்க்கை, குருட்டு வாழ்க்கை! தம் குருவைக் காணாது அதிர்ச்சியுற்ற அசுரர்கள் பாரெங்கும் அவரைத் தேடினர்... தேவர்களும், அசுரர்கள் கண்ணிற்படாது சுக்ராச்சாரியார் மறைந்து விட்டார் என்ற செய்தியைக் கேட்டதுமே அசுரர்கள் மீது ஆங்காங்கு பாயத் தொடங்கினர்.. எங்கு நோக்கினும் தேவர்களின் தாக்குதலைக் கண்ட அசுரர்கள் அஞ்சி ஆங்காங்கே ஓடலாயினர்... நமக்கென சற்குரு இருந்தபோது அவரை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ளவில்லையே என்ற அச்சமும் அவர்களை வருத்தியது.. ஒரு வழியாக அசுரர்கள் எல்லாம் ஒன்று கூடி நம்முடைய சற்குருவைத் தேடி சரணடைந்து அவர்தம் திருவடிகளைப் பணிந்து இனியேனும் நல்வழி காண முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனர். ஆனால் குரு இல்லாமையால் குருவழி காணாத சில அசுரர்களும் அராஜகமாகச் செயல் படலாயினர். இந்நிலையில் தேவர்கள் ஒன்று கூடி சற்குருவைத் தேடி அலைகின்ற அசுரர்களிடையே பிரகஸ்பதியானவர் சுக்ராச்சாரியரின் வேடம் புனைந்து தாம் அசுரர்களை வென்றிட துணை புரிய வேண்டும் என்று வேண்டிடவே பிரகஸ்பதியும் இசைந்தார். அவரும் சுக்ராச்சாரியாரின் உருவத்தை ஏற்று அசுரர்களுக்கு உரித்தான நல்வழிகளை அறிவிக்கலானார்! இதுவும் இறைலீலையே! ஏனெனில் அளவுக்கு மீறி அராஜகமாக அரக்கர்கள் செயல்பட்டால் உலகில் விபரீதங்கள் தாமே பெருக்கெடுக்கும்!

எனினும், சிறிது காலத்திற்குப் பிறகு தங்களுடைய சற்குருவின் செயல்களின் நிறைய மாற்றங்கள் இருப்பதைக் கண்டு ஒரு சில அசுரர்களுக்கு சந்தேகம் எழுந்தது.. இவர் நம்முடைய சற்குருதானா, இவர் யாவையுமே தேவர்களுக்கு உரித்தானது போல், அவர்களுக்குச் சாதகமானது போல் தோன்றுகின்றனவே என்று எண்ணினர்.. எனினும் பிரகஸ்பதியோ நாம் நல்வழிகளைத் தாமே சொல்லித் தருகின்றோம்.. கெடுதலான வழிகளை எடுத்துரைக்க வில்லையே என்று மனம் தேறி அவர்களுக்குரிய தர்ம வழிகளை வகுக்கலானார்!

மாயையும் மாற்றமும்!  ஒரு புறத்தில் தேவர்கள் அசுரர்களிடையே போர் முறைகள் ஆங்காங்கே தொடர்ந்திட்டாலும், பிரகஸ்பதி அசுரருடைய சற்குருவாகப் பல அறவழி முறைகளைக் கடைபிடிக்கச் செய்தார்.. நாளுக்கு நாள் சந்தேகம் வலுத்திடவே பல அசுரர்கள் ஒன்றுகூடி பிரகஸ்பதியை நேரிடையாகவே கேட்டு விடுவது என்ற ஒரு முடிவிற்கு வந்தனர். இவர் சுக்ராச்சாரியார் போல் இல்லை ஆதலின் இவர்தாம் சுக்ராச்சாரியாரின் இடத்தை நிச்சயமாக அறிந்திருப்பார் என்ற முடிவிற்கு வந்து அவரைப் பார்த்து நேரடியாகவே விளக்கம் கேட்டிடப் பெருந்திரளாய் அசுரர்கள் வந்தனர்!

இதனை அறிந்த பிரகஸ்பதியும் தாமும் மறைய விரும்பினார். ஆனால் அசுரர்கள் பிரகஸ்பதியைத் துரத்திடவே அவரும் ஆங்காங்கே மறைந்து மறைந்து சுக்ராச்சாரியார் இருக்குமிடத்தை நோக்கி விரைந்தார். ஆனாலும் அசுரர்கள் விட்டபாடில்லை. அவர்கள் பிரகஸ்பதியை யாங்கணும் துரத்தியே வந்தனர்.. அசுரர்களுக்கு நற்பாடம் புகட்டும் வழியாக பூலோகத்தில் மறைந்திருந்த சுக்ராச்சாரியார் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா? இரவு நேரம் முழுவதும் பரம்பொருளாம் திருமாலின் வழிபாடுகளைத் திருபுவனையிலும் பகல் நேரத்தில் சர்வேஸ்வரனாம் ஸ்ரீசிவபெருமானுக்கு உரித்த பூஜைகளை வடுகூரிலும் மேற்கொண்டு அசுரர்கள் மனம் திருந்தி நல்வழியைப் பெற்றிடக் கடும் தபோ யோகத்தில் திளைத்துக் கொண்டு இருந்தார்..!

பல அசுரர்களும் தங்களுடைய பலகோடி ஆண்டு தவங்களைச் செலவழித்து பிரகஸ்பதியைத் துரத்திக் கொண்டு வந்திடவே அவரும் இனிமேல் நம் வேடம் கலைந்து விடும்.. நாம் நேரே சுக்ராச்சாரியாரிடம் சென்று உண்மையை எடுத்துரைத்து விட வேண்டியது தான் என்று எண்ணிப் பல தேவ வாகனங்களிலும் ஆங்காங்கே விரைந்து வந்து இறுதியில் சுக்ராச்சாரியார் தவம் பூண்ட இடத்தை வந்தடைந்தார்..! அவ்விடம் வந்ததும் பிரகஸ்பதியின் உருவமும் முற்றிலும் மறைந்து விட்டது! அவ்விடத்தின் புனிதம் கண்டு பேரானந்தம் கொண்ட பிரகஸ்பதி தாமும் சுக்கிரருடன்ன் இணைந்து பெருமாளைப் பூஜித்து யோக தவம் பூண்டிட்டார்! குரு மூலத்தை குருதாமே அறிவார்!

பரந்தாமன் முன் பகைமை பறந்தது! :- அசுரர்களும் திகைத்து நின்றனர்! அசுரர்களைப் போல் தம் குருவான் பிரகஸ்பதியும் மறைந்து விட்டார் என்பதை அறிந்த முப்பத்து முக்கோடி தேவர்களும் ஆங்கே ஓடோடி வந்தனர்! ஒருபுறம் அசுரர்கள்.. மறுபுறம் தேவர்கள்... அதுவரையில் இவ்வாறு அவர்கள் ஒன்று கூடியது போர் முனையில்தாம்! ஆனால் இன்றோ இரு சாராரும் எவ்வித ஆயுதங்களின்றி நிற்கின்றனர்! சற்குருவைத் தேடும் புனிதப் பணியில் அவர்கள் நின்றமையால் உட்பகைமையும் தானாகவே அதுவாகவே ஆங்கே மறைந்து விட்டது! அதுமட்டுமா, ஆங்கே பாம்புகளும், தவளைகளும் ஒன்றாய் விளையாடிப் பரம்பொருளைத் துதித்தன! வேங்கையும், பசுக்களும், மான்களும், ஒன்றாய் நீரருந்திச் சாந்தம் கூட்டின!

சிங்கமும், யானையும் ஒன்றுக்கொன்று அன்புடன் விளையாடின! இந்தப் புண்ய பூமியின் அருள்வளம், சாந்தம் அறவளம் கண்டு பார் போற்றும் தர்ம பூமியே இதுவெனக் களித்து, அஷ்ட திக்கு பாலகர்களும், சப்த ரிஷிகளும், எண்ணற்ற மகரிஷிகளும், சித்தர்களும், யோகியரும், ஜீவன்  முக்தர்களும் ஆங்கே கூடிட...! ஆம்! அரும்பெரும் இரு குருமார்களின் அதியற்புதச் சங்கமத்தைக் கூட்டுவித்து பகைமையிற் பொங்கிய அசுரர்களையும், தேவர்களையும் சாந்தக் கடலில் நீராடச் செய்தவராய், அமர்ந்த கோலத்தில், இரு சாராரையும் புன்முறுவலுடன் நோக்கியவராய் ஸ்ரீதோத்தாத்ரிப் பெருமாளாகப் பரபிரம்மம் ஆங்கே அருட் காட்சி தந்தார்! இவ்வாறு இரு பெரும் சற்குருமார்கள் கூடிய திவ்ய க்ஷேத்ரமாதலின் ஸ்ரீதோத்தாத்ரிப் பெருமாள் குருஅவதாரங்களுக்கு உரித்தான சின்மய முத்திரையையே இடக் கரத்தில் பூண்ட கோலத்தில் காட்சி தர மறைந்த சுக்ராச்சாரியாரும், பிரகஸ்பதியும் அச்சின்முத்திரா வளாகத்தில் இருந்து கொண்டு தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் மீண்டும் குரு தரிசனம் தந்தனர்!

கோவிந்தன் தந்த கோள மூர்த்தம்! ஸ்ரீதோத்தாத்ரிப் பெருமானும் “நீவிர் இருவரும் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் குருவாக மட்டுமின்றி அண்ட சராசரங்களிலும் உள்ள மானுடர்கள், தாவரங்கள், விலங்குகள் யாவற்றிற்கும் ஜீவ வாழ்க்கை நன்கு பொலிந்திட நவகிரக கோள மூர்த்திகளாகும் இறை பாக்யத்துடன் பொலிவீர்களாக என்று நல்வரந் தந்தார்! இதைக் கண்டு ஆனந்தித்த வருண பகவானும் அமிர்த மழை பெய்வித்தார்!  ஸ்ரீதோத்தாத்ரிப் பெருமாளின் அனுக்ரகத்தால் கோள நல்மூர்த்திகளாக, நவகிரக மூர்த்திகளாக நல்வரங்கள் பெற்ற அந்த யுகத்தின் நல்ல நேரமே அந்த யுகத்தின் வ்ருஷ ஆண்டின் விஷ்ணுபதிப் புண்ய காலமாகும்! இந்த இறை லீலை நிகழ்ந்த புனிதத் தலமே திருபுவனையாம்! இவ்வாறு சுக்ர பகவானும், குரு பகவானும் ஒன்று கூடி வழிபட்ட திருமாலின் சின்முத்ரா அவதார மூர்த்தமே திருபுவனைப் பெருமாள் ஆலயமாம்!

ஆம் இங்குதாம் தேவர்கள் அசுரர்கள் பேதமின்றி நல்லோர் யாவர்க்கும் அருள்பாலிக்கின்ற பரம்பொருளாக, கோடானு கோடி யுகங்களாக அருள் பாலித்துக் கொண்டிருந்த திருபுவனை ஸ்ரீதோத்தாத்ரி பெருமாளின் திருவடிகளை சுக்ராச்சாரியார் வேண்டி அவருடைய ஆலயத்தில் பூஜைகளை நிகழ்த்திக் கொண்டிருந்த போதுதான் ஆங்கே பிரகஸ்பதியும் வந்திட்டார்..! வடுக பைரவரே தக்கப் பிராயச்சித்தம் பெறுவதற்காக இங்கே அருகில் வடுகூர் ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீபஞ்சநதீஸ்வர சிவபெருமானை வேண்டித் துதித்த சிவத் தலத்திலும் சுக்ராச்சாரியார் வழிபட்டார்! எனவே உத்தம மகரிஷிகளிடம், சற்குருமார்களிடம் எவ்வித சிவ, வைணவ துவேஷமும் கிடையாது.. அனைத்தும் பரம்பொருளின் அம்சமாய் பாவித்து எவ்வித பேதமுமின்றி இறைபக்தியில் அவர்கள் திளைக்கின்றனர் என்பதும் இதனால் புலப்படும்!

திருபுவனையில் பிரகஸ்பதியும், சுக்ராச்சாரியாரும் பூஜைகளில் இணைந்து பங்கேற்றிட, அமர்ந்த கோலத்தில் அருள் கூட்டிக் கொண்டிருந்த ஸ்ரீதோத்தாத்ரிப் பெருமாள் பிரபஞ்சத்தின் இரண்டு மகத்தான சற்குருமார்களுக்கும் நவக்கிரக தெய்வ மூர்த்திகளாக ஆகும் வண்ணம் பெரும் பேறுகளை அளித்துத் தம் சின்முத்திரையால் இருவருக்கும் ஞானம் பாலித்தார்.. ஆம் பிரகஸ்பதியும் குருபகவானாகவும் சுக்ராச்சாரியார் சுக்ரபகவானாகவும் ஆதற்கு வடுகூர், திருபுவனை ஹரிஹர பூஜைகளும் துணை நின்றன! பெருமாள் சின்முத்திரை பூண்டு அமர்கோலம் காண்பது அரிதினும் அரிதே!

சின்முத்ராதாரி ஸ்ரீதோத்தாத்ரி ஆலய சின்மயப் பிரகாரம்!

சின்மய முத்திரையின் தாத்பர்யம் என்னவென்றால் இறைவனிடம் மிக நெருங்கிப் பேரருள் கிரணங்களைத் துய்த்துப் பரமானந்தம் அடையத் துணை புரிவதாம்! இதனால்தான் வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத வகையில், இங்கு மூலஸ்தானக் கருவறையை ஒட்டிய மிக நெருக்கமான முதல் பிரதட்சிணப் பிரகாரம் மிகவும் அரிதாக இந்தப் பெருமாள் ஆலயத்திலே அமைந்திருக்கின்றது.. ஆம்! பெருமாளுடைய திருவடிகளைப் பற்றிச் சுக்ர பகவானும், குரு பகவானும் வழிபட்டு நின்றமையால் இறைவனிடம் மிகவும் நெங்கிய நிலையைத் தருவதே சற்குருவின்  குருகுலவாசம் என்பதை உணர்த்திடும் வண்ணம் இருவரும் பெற்ற சின்மய தரிசன பலாபலன்களை அனைவரும் பெறும் வண்ணம் ஸ்ரீதோத்தாத்ரிப் பெருமாளாகிய, ஸ்ரீவரதராஜ மூர்த்தியே தம் மூலக் கருவறையை ஒட்டிய பிரதட்சிணப் பாதையை வகுத்துத் தமக்கு மிக நெருங்கிய பிரகாரத்தை இவ்வாலயத்தில் நமக்கு இன்று தந்துள்ளார்.. ஆம், இந்தப் பிரகாரத்திற்குத்தான் சின்மயப் பிரகாரம், சின்மயத் திருவுண்ணாழி என்று பெயர்..!

கோள்வினை தீர்க்கும் சின்மயப் பிரகாரம்!

இங்கு கூப்பிய கரங்களுடன் நான்கு சிறிய பிரதட்சிணப் பிரகாரங்களிலும் 12 முறை அடிப் பிரதட்சிணம் செய்து வந்திட குரு, சுக்ர தசா, புக்தி, அந்தரக் காலங்களில் கோள் பூர்வமாகக் கர்ம வினைகளின்படி ஏற்படுகின்ற பலவிதமான துன்பங்களுக்குத் தக்க நிவாரணங்களைப் பெற இத்தல வழிபாடு துணை புரியும்! மேலும் குரு புக்தி, குரு தசை, சுக்ர, புக்தி, சுக்ர தசையில் மட்டுமே பெறக் கூடிய எண்ணற்ற அருள் நல்வரங்களையும் இத்தல வழிபாட்டால் பெற்றிடலாம்..! குருபகவான் வேறு, சுக்ரபகவான் வேறு என்று எண்ணாதீர்கள்! நம்மிடன் உள்ள நல்ல குணங்களை மேலும் புனிதப் படுத்தி நம்மை இறைவனிடம் இட்டுச் செல்பவரே குருபகவானாவார்... நம்மிடம் உள்ள தீய குணங்களை நீக்கி, நற்குணங்களை நிரப்பி இறைவனுடைய திருவடிகளுக்கு இட்டுச் செல்பவர்தான் சுக்ர பகவான் ஆவார். வலவடியாகிய நற்குணங்களும், இடவடியாக நம்மிடம் நிறைந்திருக்கின்ற தமோ குணங்களும் இரண்டும் சேர்ந்து இருப்பது தான் ஒரு மனிதப் பிறவி! இவற்றில் நல்ல குணங்களைப் பெருக்கிக் கொண்டு, தீய குணங்களையும், நற்குணங்களாக மாற்றி இறைமையை அடைவதுதான் நம்முடைய மனித வாழ்க்கை! இதற்குத் துணைபுரியும் இறைக்கலமே சற்குரு!  சற்குருவை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும், நாட விழைவோர்க்கும் ஆழ்ந்த நம்பிக்கையோடு இங்கு வழிபட்டிடில் சற்குருவின் தரிசனத்தை பெற்றுத் தரக் கூடிய அருட்பெரும் திருத்தலமே திருபுவனையாம்! சற்குருவைப் பெற்றோரும் அவரை விட்டுப் பிரியாது குருவின் திருவடிகளில் நிலைத்து நிற்பதற்கு அருள்புரிகின்ற அற்புதத் தலம்!  

குருவருள் கூட்டும் குருஹரி!

வியாழனன்று சின்மய முத்திரை தாங்கிய பெருமாளைத் தரிசிப்பது சிறப்புடையது! குரு பகவானுக்கும், சுக்ர பகவானுக்கும் சின்முத்திரையின் ஞானப் பேரொளியைத் தந்த பெருமாள் ஆகையால் நவகிரக சக்திகள் நிறைந்த தலம்.. பெரும்பாலும் பெருமாள் ஆலயத்தில் நவகிரக சந்நதிகள் இருப்பது இல்லை.. இதற்குக் காரணம் ராஜ கோபுரங்களும், தசாவதார தரிசனங்களுமே நவக்கிரக சக்திகளைப் பெற்றுத் தந்துவிடுகின்றன என்ற ஐதீகமேயாம்! நவகிரக மூர்த்திகளில் குருபகவானும், சுக்ர பகவானுமே பெருமாளைப் போற்றிப் பணிந்த தலமாதலால் நவகிரக சக்திகள் நிறைந்த அற்புதப் பெருமாள் தலமே திருபுவனையாம்! வியாழன் தோறும் மற்றும் தினமும் புத ஹோரை நேரத்தில் இங்கு வழிபடுவோர்க்கு சற்குருவின் அனுகூலத்தையும் கார்ய சித்திகளையும் பெற்றுத் தருபவரே திருபுவனைப் பெருமாள்!

ஸ்ரீவிஷ்ணுபதி பூஜா பலன்கள் !

பிள்ளைகள் தீய வழிகளில் சென்று குடும்பத்திற்கு அவமானத்தைத் தேடித் தரக்கூடிய நிலைகள் பல குடும்பங்களில் இன்றும் நிலவுகின்றன.. இத்தலத்தில் பெருமாளுக்குத் தைலக் காப்பு சாற்றித் தக்க அனுமதியுடன் புளியோதரை படைத்து ஏழைகளுக்கு புளியோதரையுடன் அப்பளம், பப்படம், வடாம் போன்ற எண்ணையில் பொரிக்கின்ற உணவுப் பொருட்களைத் தானமாக அளித்து வந்தால் தீய குணங்கள் காய்ந்து பிள்ளைகள் நல்வழிக்கு மாறுவர்..! பல வருடமாகத் திருமணத் தடங்கல்கள் தோன்றுவதற்கான காரணமே குறிப்பிட்ட சில தீவினைகள் தோய்ந்து பெருகிக் கிடப்பதேயாம். ஆதலால் சுக்ர பகவானும், குரு பகவானும் வழிபட்ட இத்தலத்தில் சற்குருவின் உபதேச அருட்தன்மை கூடியிருப்பதால் இங்கு புதன் மற்றும் சனிக் கிழமைகளில் திருமாலுக்கு வெண்பட்டு வஸ்திரங்களைச் சார்த்தி ஏழைச் சுமங்கலிகளுக்கு மங்களப் பொருட்களைத் தானமாக அளித்து வந்தால் திருமணத் தடங்கல்கள் தீர்ந்து திருமணமும் கைகூடும்..!

விஷ்ணுபதி புண்ய காலத்தன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் அளித்தல் தர்ப்பண சக்தியைப் பெருக்கும்! அமர்நிலைக் காய்கறிகள் சமைத்து அன்னத்துடன் தானமாக அளித்தல் அன்னதான சக்தியைப் பெருக்கிடும்! அமர்நிலைக் காய்கள் சுரைக்காய், தக்காளி, உருளை , பூசனிக்காய், பறங்கி போன்றவையாம்..! 16.11.2001 அன்று விஷ்ணுபதி புண்ய காலத்தில் திருபுவனையில் அபிஷேக ஆராதனைகள், சந்தனக் காப்பு, ஜவ்வாதுக் காப்பு, அன்னதானம், வஸ்திர தானம், காலணி தானம், வித்யா தானம், மாங்கல்ய தானம், போன்ற தான தர்மங்களுடன் தர்ப்பணம், ஹோமம் போன்ற இறைவழிபாடுகளையும் ஆழ்ந்த நம்பிக்கை, பரிபூரண பக்தியுடன் கடைபிடிப்பதால் பலன்கள் பல்கிப் பெருகுவதுடன் இதுவரை தர்ப்பணம், பூஜைகள் போன்றவற்றை முறையாகச் செய்யாமையால் ஏற்பட்டிருக்கும் பித்ரு தோஷங்கள், பித்ரு சாபங்களுக்கான நிவர்த்தியையும் பெற்றிடலாம். சுக்ர, குரு க்ஷேத்திரமாக விளங்குவதால், மஞ்சள் மற்றும் நீல நிற ஆடைகள், பழங்கள் தானமும் எலுமிச்சை சாத அன்னதானமும் மிகவும் விசேஷமானதாகும். விஷ்ணுபதி இப்புனித காலத்தில் ஒரு ஏழைக் குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு அல்லது அவரவர் வசதிக்கேற்ப  தேவையான மளிகைப் பொருட்களைத் தானமாக அளித்தலால் காணாமல் போன பொருட்கள், பத்திரங்கள் போன்றவை மீண்டும் கிட்டிட நல்வழி பிறக்கும்..!

மனைவியிடம் நல்ல அன்பு கொள்ளாது, தள்ளி வைத்து, தனியாக வாழ வைத்துப் பெரும் பாவம் சேர்த்துக் கொள்வோர் இங்கு பூஜைகளைச் செய்திட பிராயசித்த நல்வழிகள் கிட்டும்.. தம்பதியர் இணைவர், இல்லறம் நல்லறமாகும்.. மனக் கசப்புகளுடன் வாழும் தம்பதியினர், பெற்றோர்களுடன், குடும்ப சகிதம் இங்கு நான்கு பிரகார அடிப் பிரதட்சிணம் செய்து வழிபட்டிட, இல்லறம் இனிமையாகும்! தக்க வயதில் பெண்கள், பிள்ளைகளுக்குத் திருமணம் முடிக்காது சுயநலத்தால் அவர்களுடன் ஒட்டிக்கொண்டு வாழ்கின்ற பெற்றோர்கள் இங்கு வந்து பூஜித்து அவர்களுடைய திருமணத்திற்கு ஆவன செய்ய வேண்டும்.. இல்லையேல் பெருந் தீங்குகள், கர்ம வினைகள் அவர்களைச் சூழ்ந்து மீள முடியாமல் போய்விடும்..! கணவன்/ மனைவியை இழந்தோர் “எங்கே நம்மை கவனிக்காது விட்டு விடுவார்களோ” என்ற அச்சத்தால் தம் சகோதர, சகோதரிகளுக்குச் சுயநலத்தால் தக்க வயதில் திருமணம் செய்யாதிருத்தல் பெரும் பாவமாகும்.. இவர்கள் இதற்காக இங்கு வந்து பூஜித்துத் தக்க நல்ல ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்.. இல்லையேல் துன்பக் குழியில் வீழ்ந்து நரக வேதனைகளை அனுபவிப்பார்கள்.!

நாம் நினைப்பது போல் வாழ்க்கை இல்லை, வாழ்க்கையில் நாம் நினைப்பதெல்லாம் நடந்திடாது, வாழ்க்கையின் “இறை லட்சியமே புனிதமானது!” என்ற ஆன்ம நெறியை உணர்த்திடும் தலமிது! வாழ்க்கையில் வெறுப்புற்று இருப்போர் இங்கு பூஜித்திடில் நல்ல திருப்பம் பெறுவர்..! நன்கு படித்தும் வேலை இன்றி வாடுவோர் அவர்களோ, அவர்கள் சார்பாகப் பெற்றோர்களோ இங்கு பூஜித்து சப்தரிஷிகளின் ஆசியைப் பெற ஒரு ஏழைக் குடும்பத்திற்கு ஒரு பட்சத்திற்குத் (15 நாட்கள்) தேவையான உணவுப் பொருட்களை அவரவர் வசதிக்கு ஏற்ப தானமாக அளித்து இங்கு பூஜித்திட காரிய சித்திப் பெருமாள் நல்வழி காட்டிடுவார்! பரம்பொருளாம் திருமாலின் திருவடிகளை உய்த்திட விஷ்ணுபதி புண்யகாலப் பூஜையினை சகல விஷ்ணுத் தலங்களிலும் கொண்டாடுதற்கு இறையடியார்களும், வைணவப் பெரியோர்களும், வைணவப் பீடாதிபதிகளும், மடத் தலைவர்களும், பக்த கோடிகளும் பெரியோர்களும் ஆவன செய்யுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.! 15.11.2001 நள்ளிரவு 1.30மணி முதல் 16.11.2001 காலை 10.30 மணி வரை மகத்தான விஷ்ணுபதி பூஜை நேரம் அமைவதால் திருபுவனையில் பூஜைகளை மேற்கொண்டு அன்னதானம், ஆடைதானம், மாங்கல்ய தானம் போன்ற பலவிதமான தான தர்மங்களுடன் விஷ்ணுபதி புண்ய கால வழிபாட்டினைச் சிறப்பாகக் கொண்டாடிடுக.!

குருகடாட்சத்தைத் தருகின்ற பெருமாள் ஆதலால் இங்கு ஸ்படிக பாதத்தைப் பெருமாளின் திருவடிகளில் வைத்து இல்லத்தில் பூஜித்து வந்தால் பித்ருக்கள் இதனைப் பாத பூஜையாக ஏற்று நன்கு ஆசிர்வதிப்பர்... ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயாவில் ஸ்ரீஸ்படிக பாதம் கிடைக்கும்.

ஸ்ரீஅகஸ்தியர் ஆஸ்ரமத்தின் பிரம்மோத்ஸ்வம்!

விஷூ வருட கார்த்திகை தீப ஆஸ்ரம அன்னதான பிரம்மோத்ஸ்வம் (27.11.2001 முதல் 30.11.2001வரை) ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் திருஅண்ணாமலை , திருக்கார்த்திகை தீப உற்சவமே ஸ்ரீஅகஸ்தியர் ஆஸ்ரமத்தின் பிரம்மோத்ஸ்வம்! சித்தர்கள் பீட நெறிகளின்படி, அலங்கார ஜோதி பீடாதிபதியாய், திருக்கயிலாய பொதிய முனி பரம்பரை 1001-வது குருமகா சந்நிதானமாகப் பரிமளித்து, சற்குருவாய்ப் பரிணமிக்கும் அங்காள பரமேஸ்வரி அடிமை, சக்திஸ்ரீ ஆர்.வி. வெங்கடராமன் அவர்கள், குருமங்கள கந்தர்வா என அடியார்களால் போற்றப்பட்டு, தம் சற்குருநாதராம் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஈச ஸ்வாமிகளின் குருவருள் ஆணையின்படி திருஅண்ணாமலைத் திருத்தலத்தில் ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம்தனை நிறுவி, பௌர்ணமி தோறும் இங்கு ஆயிரக்கணக்கான கிரிவல அடியார்களுக்கு அன்னப் பிரசாதம் பாலித்து வருவதுடன், ஆண்டு தோறும் திருக்கார்த்திகை தீப உற்சவத்தின்போது அருணாசலமாம் திருஅண்ணாமலைத் திருத்தலத்தில் மகத்தான அளவில், இறையருளால் அன்னதானக் கைங்கர்யத்தையும் நிகழ்த்தி வருகின்றார்கள். என்பதும் அனைவரும் அறிந்ததேயாம்.!

ஒவ்வொரு மகானும், சித்புருஷரும் தமக்கென இறைவனால் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஜீவ பரிபாலன நெறிமுறைகளின்படி, இறையடியார்களை நன்னெறியிலிட்டிட, நடமாடும் இறைப் பெருந் தூதராய் சற்குருமார்களாயும் இப்பூவுலகில் நம்மிடையே உலவி நிறைகின்றனர்.! சித்த நெறிமுறைகளின்படி, பிரபஞ்சத்தின் அனைத்து ஜீவன்களின் மேன்மைக்கான கர்ம பரிபாலனத் துறையை ஏற்று நடத்துவதற்காகவே, சித்தர்களிடையே கர்ம பரிபாலன பரஞ் ஜோதிப் பரல்களாக முகிழ்க்கின்ற சித்தர் பெருமான்களுள் ஒருவராக நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் எவ்வித படோடோபமுமின்றி, அடக்கம், விளம்பரமின்மை, பணிவு, எளிமை போன்ற இறைப் பண்புகளுடன் லோக க்ஷேமத்திற்காகப் பல நற்காரியங்களை நிகழ்த்தி வருகின்றார்கள்.!

திருஅண்ணாமலை கிரிவல மகாத்மியம்தனைப் பல அற நூல்கள், ஸ்ரீஅகஸ்திய விஜயம் ஆன்மீக இதழ்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலப் பதிப்புகள்), எந்த யுகத்திற்கும், தேவையான சித்தர்களுடைய நெறிகலை உணர்விக்கும். (தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கில மொழிகளில்) உத்தம இறை நூல்கள், மாளய அமாவாசை, நவராத்திரி போன்ற விசேஷமான பண்டிகை தினங்களில் பல இடங்களில் ஜாதி, மத பேதமின்றி தான தர்மங்கள், அன்னதான சேவைகள் மற்றும் ஆண்டு முழுதும், ஏழை எளியோர்க்கான இலவச மருத்துவ சேவை, திருமணத்திற்கான மாங்கல்யச் சரடுகள் அளித்தல், கல்வி வசதிகள் போன்ற மகத்தான தான, தர்ம சேவைகளைக் கலியுகத்தில் சத்சங்க ரீதியாக ஆற்றி வருகின்ற சித்த மாமுனி யோகியே நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள்! இவ்வகையில் சித்தர்களின் இறைச் சாலையாய்த் திருஅண்ணாமலையில் ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் பொலிகின்றது..!

நடப்பு விஷு ஆண்டில், அருணாசல கார்த்திகை தீபப் பெருவிழாவின்போது ஸ்ரீஅகஸ்தியர் ஆஸ்ரமம் சார்பில் 27.11.2001 முதல் 30.11.2001வரை திருஅண்ணாமலையில் ஆஸ்ரமத்தின் சார்பாக, ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் சபா அறக்கட்டளை மூலமாக அன்னதானக் கைங்கர்ய சேவை நடைபெற உள்ளமையால் பக்த கோடிகள் இவ்வரிய இறைச் சேவைக்குப் பொருளுதவி தந்து சித்புருஷர்களுடைய பெறுதற்கரிய இறைநல்வரங்களைப் பெற்று உய்யும்படி மிகவும் பணிவன்புடன் வேண்டுகின்றோம். தங்களுடைய பொருளுதவியை சென்னை ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயாவிலோ அல்லது திருஅண்ணாமலை ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்திலோ ரொக்கமாக அளித்தும் அல்லது Sri  La Sri Lobha Matha Agasthiar Sabha Charitable Trust, Chennai என்ற பெயரில் காசோலை அல்லது வங்கி டிமாண்ட் டிராப்ட் எடுத்து Sri Agasthia Vijayam, Chamber NO:7 Sagas Complex, PB No: 4South Mada Street, Mylapore, Chennai – 600004 . Note : Donations to  Sri  La Sri Lobha Matha Agasthiar Sabha Charitable Trust, enjoy INCOME TAX  consessions under section 80G of Indian. I.T Act.

நிலநடுக்கம்

நிலநடுக்கக் காப்பு வழிபாடு!

நிலநடுக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான காப்பு ரட்சா மந்திரங்கள் இவை! பூமிக்கு நாம் இழைக்கும் அநீதிகளான ஆலய நிலங்கள், கட்டடங்களை அபகரித்தல், கோயில் இடங்களுக்கு மிகவும் குறைந்த வாடகை கொடுத்து ஏமாற்றுதல், பேராசையால் கோயில் கோபுரத்தை விட உயரமாகக் கட்டடங்களை எழுப்புதல், கோயிலருகே கழிப்பிடம் அமைத்து துர்நாற்றம் கூட்டி புனிதத்தை வதை செய்து ஆலயத் தீர்த்தங்களையும் பாழ்படுத்துதல், வாஸ்து பூஜைகளைத் தவறவிடுதல், இறைவன் யாவர்க்கும், யாவைக்குமாய் அளித்த நீரை விற்றல், முறையற்ற காமத் தீவினைகள், தகாத கருக்கலைப்பு, பாலில் நீர் கலத்தல், ஆன்மீகப் பெரியோர்களை அவமதித்தல் போன்றவை பூமா தேவிக்குச் சொல்லொணா வேதனைகளைத் தந்து தார்மீக ரீதியாகவும் நிலநடுக்கங்களுக்குக் காரணமாகின்றன! அனைவரும் குறிப்பாக உயரமான இடங்களில் குடியிருப்போரும், பணிபுரிவோரும் சத்சங்கமாக ஒன்று கூடி தினமும் இவற்றை ஓதுதல் வராஹ மற்றும் பூ சக்திகளைப் பெருக்கி நம்மைக் காக்கும் செவ்வாய் பகவானே நில அம்சங்களுக்கான கிரக மூர்த்தி ஆதலின் எப்போதும், குறிப்பாக தினமும் செவ்வாய் ஹோரை நேரத்திலும் இம்மந்திரங்களை ஓதி வருதல் ஸ்ரீவராஹ மூர்த்தியின் அனுகிரகத்தைப் பெற்றுத் தந்து நம்மை ரட்சிக்கும்.. சென்னை அருகே திருவிடந்தை ஸ்ரீவராஹ மூர்த்தி, ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீபூவராக ஸ்வாமியையும் வழிபடுக!

ஸ்ரீபூலோகநாதர் சிவாலயம் திருச்சி

குடமுழுக்கு வேண்டி இருக்கும்.. புதுக்கோட்டை – குழிபிறை – செவலூர் – பொன்னமராவதி மார்கத்தில் உள்ள பலரும் அறியாத பழமையான, தரிசிப்பதற்கு அரிதான செவலூர் ஸ்ரீபூமீஸ்வரர் ஆலயத்தின் (பூகம்பங்களில் இருந்து நம்மைக் காக்கும்) மிகவும் சக்தி வாய்ந்த ஸ்வயம்பு சிவலிங்கத்தையும் வழிபட்டு பூமியைக் காத்திட வேண்டுவோமாக! பூவுலகையே காத்திடும் மகா சக்தி வாய்ந்த பட்டை லிங்க மூர்த்தி! ஒவ்வொரு பட்டையும் பலகோடி பூமிகளின் ஆழ் உள் ரேகைகளைக் குறிப்பதாம்! நெல்லிக்குப்பம் ஸ்ரீபூலோகநாதர், திண்டிவனம் அருகே பெரமணந்தூர் ஸ்ரீபுவனேஸ்வரர், திருச்சி காந்தி மார்க்கெட் அருகேயும் மற்றும் திருச்சி அருகே மணச்சநல்லூரிலும் ஸ்ரீபூலோக நாதர், புவனேஸ்வரி, புவனநாதர், பூமீஸ்வரர், பூமிநாதர், வாராஹி போன்ற பூமி புவன நாமங்களை உடைய தெய்வ மூர்த்திகளையும் வழிபடுதல் நம்மை பூகம்பங்களிலிருந்து காத்திடும்!
ஸ்ரீவராஹ காயத்ரீ மந்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே வேத பூமி ரட்சகாய தீமஹி
தந்நோ லக்ஷ்மீ வராஹ ப்ரசோதயாத்

காப்புச் சக்கரப் பண்
பூமி குடைந்து புவனங் காப்பானாம்
ஆழி வந்துறுத்த அருமறை காத்தானை
புவி ஏழும் சுழன்று கருவறை காப்போனே!
வாழி வராஹா! வழுத்துவாம் நின் பாதம்!

ஸ்ரீபூமிநாதர் சிவாலயம்
மண்ணச்சநல்லூர் திருச்சி

ரட்சா மந்திரம்
கோபாயேத் அநிசம் ஜஹந்தி குஹநா போத்ரீ பவித்ரீ க்ருத
ப்ரம்ஹாண்ட ப்ரளயோர்மி கோஷ குருபி கோணா ரவைர் குர்க்குரை
யத் தம்ஷ்ட்ராங்குரா கோடி காட கடநா நிஷ்கம்ப நித்ய ஸ்திதி
ப்ரம்ஹ ஸ்தம்பம் அஸொத் அஸெள பகவதீ முஸ்தேவ விஸ்வம்பரா

பௌர்ணமி நாள் : 29.11.2001 வியாழக்கிழமை பின்னிரவு 2.46மணி முதல் 30.11.2001 வெள்ளிக் கிழமை பின்னிரவு 2.19 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பௌர்ணமி திதி அமைகிறது கிரிவல நாள் :- 30.11.2001 வெள்ளிக்கிழமை

ஆஸ்ரம பொருட்கள்

1. அவரவர் நட்சத்திரத்திற்கு உரித்தான மூலிகா சக்திகள் நிறைந்த ஊதுபத்திகள், இல்லத்தில் படர்ந்து இருக்கும் தீய எண்ணங்களைப் போக்கிடவும், எதிரிகளின் பகைமை, பொறாமைத் தீயை விரட்டிடவும், தீர்க சுமங்கலித்வம் தரும் மங்கள கிரணங்களை விருத்தி செய்திடவும், குழந்தைகளின் க்ஷேம நலம் காக்கவும் மற்றும் சங்கல்பம் செய்வித்து புத்ர புத்ரிகள் சுகமாக பிரயாணம் செய்ய அனுக்ரகிக்கும் பிரகாசச் சந்திர த்வீப நறுமணக் கிரணங்கள் நிறைந்த விஜய் அத்ரி ஊதுபத்திகள், ஜல சம்பந்தமான நோய்கள் நீங்கவும் ஞானப் பூர்வமான மூளைச் செல்களுக்கு ஆக்கம் தந்து பக்தி ஒழுக்கம் தரும் பலாதி பல மூல காயத்ரீ மந்திர சக்திகள் நிறைந்த விஜய் ஆத்ரேயா ஊதுபத்திகள் – நற்காரிய சித்திகளுக்கான சித்தி கணபதியின் அருளைக் கூட்டும் காணாபத்ய சக்தி கூடிய விஜய் அகஸ்த்யா ஊதுபத்திகள் – பகைமை, விரோதிகளிடமிருந்து நம்மைக் காத்து ரட்சித்திடும் ஸ்ரீசரபேஸ்வரர் ஊதுபத்திகள் – ஹோம கோமள சக்திகளைத் தந்து அலைபாயும் மனதை அடக்கும் ஸ்ரீஆங்கரீஸ்வர் ஊதுபத்திகள் – பாவவினை போக்கும் விஜய் ஸ்ரீபரத்வாஜ ஊதுபத்திகள் – அக இருள் போக்கும் சிவாநீ ஊதுபத்திகளும் சத்சங்க பக்தியை வளர்த்து குரு அருளை உணர்விக்கும் ஸ்ரீவட்ஸ ஊதுபத்திகளும் ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயாவில் கிடைக்கும். அற்புத மூலிகைப் பூச்சுகள் கூடியவை! ஆன்மீக சக்திகள் நிறைந்தவை!

ஸ்ரீலட்சுமி வராகர் சிங்காவரம்

2. கணவனுக்கு நீண்ட ஆயுள் தந்து சுமங்கலித்வ சக்தியைக் கூட்டும் தேவ வட்டச் சிற்பக் குங்குமச் சிமிழ் சந்திராஷ்டம நாட்களின் தோஷங்களை நீக்கிடும் நல்முத்து பூரண வண்ண குங்குமச் சிமிழ், நாகதோஷம் நீக்கும் பூநாகப் புறவளர் குங்குமச் சிமிழ்., மற்றும் சசிமுத்துக் கல் , ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயாவில் கிடைக்கும்.

3. தூய ஸ்படிகத்தாலான பூஜைக்குரிய விக்ரங்கள், பாதங்கள், சங்கு வகைகள் நல் அனுக்ரகங்களை அள்ளித் தருபவை, ஸ்படிக பொட்டு விநாயகர் பூஜை செய்வதால் வித்யா அனுக்ரகம், புத கிரக அனுக்ரகம் கிட்டும், ஞாபக மறதியை அகற்றும்..! ஸ்படிக சிவலிங்க பூஜை செய்வதால் இறக்குமதி, ஏற்றுமதி தொழில் அபிவிருத்தி, கம்ப்யூட்டர் சிப் (chip) பில் இரகசிய காப்பு, அற்புதமான நற்காரிய சித்தி கிட்டும். தீய சக்திகள் தீண்டாது..! ஸ்படிக சூர்யன் பூஜை செய்வதால் தீர்கமான சிந்தனை கிட்டும். ஸ்படிகத்தாலான ஸ்படிக பாதம் பூஜை செய்வதால் நல்வியாபார சித்தி, குழந்தைகளுக்கு கல்வி கிரஹிக்கும் சக்தி, மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சையில் வெற்றி கிட்டும். ஸ்பரிஸகாய ப்ரீதி ஸ்படிக சங்கு பூஜை செய்வதால் செல்வம் கொழிக்கும்.! ரிதி ருசிரேவ ஸ்படிக சங்கு பூஜை செய்வதால் கண் மருத்துவர், கண் அறுவை சிகிச்சை நிபுணர், கண் கண்ணாடிக் கடை வைத்திருப்போர் தொழிலில் முன்னேற்றம் அடைவர்.!

4. விசேட சக்தி, வாய்ந்த திரவியங்களை ஹோமங்கள் வளர்க்கும்போது ஆஹுதியாக இட்டு அளர்ப்பரிய பயன் பெறுவீர்! பூஜை செய்யப்பட்ட அரிய திரவியங்கள் :- சதுர்கரத்தான் சமூலம் – இதை ஹோமத்தில் ஆஹூதியாகக் கொடுப்பதால் நற்காரியசித்தி கிட்டும், நோய் நொடிகள் வராமலிருக்கும்.! அடக்குவாதன அங்க சமூலம் – இதனை ஹோமத்தில் ஆஹூதியாக அளித்திடுதலால் உத்தியோகம் கிடைக்கவும்., உத்தியோகம் பிரச்னையில்லாமல் இருக்கவும், உத்தியோகம் வாங்கிக் கொடுக்கின்ற ஏஜண்டுகள் போன்றவர்க்கும் நலமளிக்கும். கன்னி இலை சமூலம் – இதனை ஹோமத்தில்  ஆஹுதியாக அளித்திடுதலால் கன்னியருக்கு ருதுக் கோளாறுகள் ஏற்படாமலும், கன்னியர் இளம் வயதில் வேலை இல்லாதவர்களைக் காதலித்து அவதிப்படாமல் தற்காத்துக் கொள்வதற்கும் உதவும்.! திருமால் தாள பொடி சமூலம் – கணவன் அமாவாசை தர்ப்பணமோ, திதிப் படையலோ கொண்டாடாமலிருந்தால் பெண்கள் இச்சமூகப் பொடிகளை ஆஹூதியாக இட்டு ஹோமம் வளர்க்கலாம். இந்த ஆஹுதியை ஏற்று பித்ருக்கள் ஆசிகள் வழங்குகின்றனர்..! பர மேக சமன சமூலம் – இளம் வயதுப் பையன்கள் தவறானவர்களுடன் சேர்ந்து குடும்பம் அவமானத்துக்கு ஆளாகமலிருக்க இதனை ஆஹூதியாக கொடுக்க வேண்டும். மேலும் இதை ஹோம ஆஹுதியாகப் பயன்படுத்த சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நோயின் வேகம் மட்டுப்படும்.

5. வாம தேவ சமூலம் – இதனை ஹோமத்தில் ஆஹுதியாக அளித்திடுதலால் கடன் கேட்கச் சென்றால் கையில், பணம் கிடைக்க வழி செய்யும்.. முக சஞ்ஜா சமூலம் – இதனை ஹோமத்தில் ஆஹுதியாக அளித்திடுதலால் குழந்தை, பெரியவர், ஆசிரியர், ஆசிரியை இவர்களுடைய ஆசி அபிவிருத்தி ஆகும்..! ஜால நீர் சங்கு சமூலம் – இதனை ஹோமத்தில் ஆஹுதியாக அளித்திடுதலால் மருத்துவர்கள் முன்னேற்றமடைய உதவி செய்யும்!  கொட்டுவாய் கந்த சமூலம் – இதனை ஹோமத்தில் ஆஹுதியாக அளித்திடுதலால் இரவில் பிரயாணம் செய்யும்போது ஆபத்துக்கள் ஏற்படாமலிருக்க வழி செய்யும்.! கதி சூடு முளை சமுலம் – இதனை ஹோமத்தில் ஆஹூதியாக அளித்திடுதலால் விந்து வீணாகாமல் பாதுக்க அனுக்ரகிக்கும் அடுப்படி சித்து சமூலம் – இதனை ஹோமத்தில் ஆஹூதியாக அளித்திடுதலால் சமையல் செய்பவர்களுக்கு ஆபத்து ஏற்படாமலிருக்க உதவும்..!

6. மணாள மாசி சமூலம் – இதனை ஹோமத்தில் ஆஹுதியாக அளித்திடுதலால் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகவும், திருமணம் ஆனவர்களுக்குக் கணவன் நன்முறையில் வாழவும் உதவும்.! ஆடிப் பார்த்தான் சமூலம் – இதனை ஹோமத்தில் ஆஹுதியாக அளித்திடுதலால் பில்லி, ஏவல், சூனியம், இவற்றால் வரும் பாதிப்பு விலக வழி செய்யும்.! செங்கல் சமூலம் – இதனை ஹோமத்தில் ஆஹுதியாக அளித்திடுதலால் மாமியார், மாமனாரால் வருகின்ற துன்பத்திலிருந்து தப்பிக்க வழி செய்யும். தூக்கியெறிந்தான் சமூலம் – இதனை ஹோமத்தில் ஆஹுதியாக அளித்திடுதலால் உறவினர்களால் வருகின்ற கலகமும் ஆபத்தும் விலகும்..! மோதகப் பூ சமூலம் – இதனை ஹோமத்தில் ஆஹூதியாக அளித்திடுதலால் வைத்தியர்களில் நிபுணர்களாக மாற உதவும் – மேலும் தன்வந்த்ரீ சக்கர பூஜை இதனைத் துரிதப்படுத்தும்.! தான்தோன்றி வல்லோட்டுச் சமூலம் – இதனை ஹோமத்தில் ஆஹூதியாக அளித்திடுதலால் கப்பல் வணிகத்தில் வாழ்கின்றவர்கள் நன்மை பெற உதவும்... மேலும் மச்சேந்திர சக்கர பூஜையும் பலன்களைத் துரிதப்படுத்தும்..! ஸ்திரம் காசி சமூலம் – நூல், பஞ்சு சம்பந்தமான வியாபாரிகள் நலம் பெற உதவும் ஹோம ஆஹூதியாகும்.. ஸ்ரீசாகம்பரி அம்மன் பூஜையும் பலன்களைத் துரிதப்படுத்தும்.! புத்தி மீட்டான் சமூலம் – கடினமான பரீட்சைகளில் நலம் பெற உதவும்.. இலக்குமி திருவடி மூல சமூலம் – தங்கம், வைரம் வியாபாரிகள் நலம் பெற வழி வகுக்கும்! ஸ்ரீஅஷ்ட லக்ஷ்மி சக்கர பூஜையும் பலன்களைத் துரிதப்படுத்தும்.! நவப்பூ ஐக்ய சமூலம் – நவக்ரகங்களின் அனுக்ரகம் பெற உதவும். மேலும் சசிமுத்து பூஜையும் செய்யவும்.!

7. தொந்தியப்பன் சமூலம் – உடனடி நற்காரியங்கள் சித்தி பெற கணபதி அருள் கூட்டும்.. மேலும் ஸ்ரீஹேரம்ப கணபதி பூஜையும் பலன்களைத் துரிதப்படுத்தும்... சர்ப்படங்கச் சமூலம் – விஷ சம்பந்தமான அனைத்துப் பொருள்களில் வேலை செய்பவர்கள் – படிக்கின்றவர்கள் நலம் பெற உதவும் ஸ்ரீஅமிர்த ம்ருத்யுஞ்சயர் பூஜையும் பலன்களைத் துரிதப்படுத்தும்.! பகைமையைத் தீர்க்கும் ஸ்ரீசரபேஸ்வர சக்தி நிறைந்த ஸ்ரீசரபேஸ்வரர் ஊதுபத்திகள், அற்புத சக்தி தரும் சங்கு வகைகளைப் பயன்படுத்தியும் அளப்பரிய அருட்சக்தி பெறுவீர்.  பிரயாணம் செய்யும் போது கடக்காட்டுக் குங்குமச் சிமிழுடன் பிரயாணம் செய்து ரட்சை சக்திகளைப் பெற்றிடுங்கள்.! பித்ரு தர்ப்பண சக்தி நிறைந்த பசு மடிக் காம்புச் சங்கு பயன்படுத்தி பித்ருக்களின் அசி பெற்றிடுங்கள். வடக்கு முள்ளீஸ்வரர் சங்கு பயன்படுத்தி கடுமையான நோய்களிலிருந்து நிவர்த்தி பெறுங்கள்...! நாக தோஷங்களிலிருந்து நிவர்த்தி பெற பூநாகப் புறவளர் குங்குமச் சிமிழைப் பூஜை செய்து பயன்படுத்துங்கள்.! கன்னி வாழைப்பூ குங்குமச் சிமிழ் உபயோகியுங்கள் திருமணத் தோஷங்களை நீக்குக.!

அமுத தரைகள்

1. மனதைத் தூய்மைப் படுத்துவீர்! உடலில் உள்ள 72000 நாடிகளுக்கும் ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயர் உண்டு.. ஒவ்வொன்றிலும் ஒரு அங்க தேவதை குடிகொண்டுள்ளது.. ஒவ்வொரு நொடியும் உங்கள் உடலில் இருந்து பல தேவதைகள் வெளியே செல்வதும் உள்ளே வருவதுமாக எத்தனையோ இறை நிகழ்ச்சிகள்.. இறை விநோதங்கள், இறை லீலைகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. உடலும், மனதும் புனிதமாக இல்லாவிடில் அவை வெளியேறிவிடும். இச்சமயங்களில்தான் மனக் குழப்பம், மனப் போராட்டங்கள் உண்டாகும்.. வலுக்கும்! நீங்கள் புனிதம் பெற உங்களுடைய வலது மணிக் கட்டில் எப்போதும் காசிக் கயிறு, “ம்ருதுள கங்கண்” எனப்படும் கறுப்புக் கயிறு மற்றும் துளசி மணி மாலை அணிந்திருத்தல் வேண்டும். மேலும் உங்களுடைய இடது கை நாடிகளை உங்களுடைய வலது கை ஆள்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரலால் மூன்று இவ்வித நாடிகளை வைத்தியர் போல் தொட்டுப் பார்த்துக் கொண்டு தினமும் பிரார்த்தனை செய்திடுங்கள்!

“72000 நாடி தேவதைகளையும் அடியேன் போற்றி வணங்குகின்றேன்! அடியேனுடைய உடலில் அமர்ந்திருந்து ஆத்ம ஜோதியாக விளங்குகின்ற இறைவனுக்குக் கோயிலாகிய இந்த சரீரத்தைக் கட்டித் தந்த தேவ சிற்ப ஜோதிகளாகிய நாடி தேவதைகளுக்கு அடியேனுடைய நன்றிப் பிரார்த்தனைகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்”, என்று இந்த மூன்று மணிக் கட்டு நாடி ஸ்பரிசங்களைத் தொட்டு வழிபட வேண்டும்.. இது உங்கள் மனதைத் தூய்மைப் படுத்துவதற்கான யோக நீரோட்டப் பயிற்சியாகும்..!

2. தேவ சக்திகளைச் சேர்த்து வையுங்கள்! காலையில் எழுந்த உடன், செய்தித் தாளைப் படிக்கின்ற போது தற்காலத்தில் அனைத்து செய்தித் தாள்களிலும் போர், கொலை, கொள்ளை, குத்து, வெட்டு போன்ற சம்பவங்கள்தான் முதல் பக்கத்தில் போட்டு விடுகின்றார்கள்.. மிகமிகப் பெரிய பத்திரிக்கைகளிலும் கூட, இறைவனுக்கென்று ஒரு இரண்டு அங்குல சிறிய பத்தியை ஒதுக்கி விட்டு பயங்கரமான செய்திகளையே பக்கம் பக்கமாக எழுதும் மனநிலையை நாம் என்னென்று சொல்வது? நீங்கள் உறங்குகின்ற போது பலவிதமான தேவலோகங்களுக்கும் உங்கள் சூட்சும அவயங்களுடன் நீங்கள் சென்று வருவதால் உறங்கி எழும்போது உங்கள் உடலில் பலதேவ லோக சக்திகள் நிறைந்து இருக்கும். இவற்றை நீங்கள் உங்கள் உடலில் நிறைத்துக் கொள்ள வேண்டுமானால் காலையில் எழுந்தவுடன் உள்ளங்கை ரேகை தரிசனம், ஸ்வாமி படங்களின் தரிசனம், சூரிய தரிசனம், வான் நட்சத்திர தரிசனம்,  வான தரிசனம், பசு, கிளிகள், பறவைகள், சுமங்கலிகள் , குழந்தைகள், ஆலய கோபுரங்கள், ஆலய கலச தரிசனம், தென்னை மரம், வாழை மரம், பனை மரம் போன்ற கிட்டத்தட்ட 32 விதமான நல்தரிசனங்களைப் பெற்றால்தான் உங்கள் உடலில் உறக்கத்தில் நீங்கள் தேவ லோகங்களுக்குச் சென்று வந்த தேவசக்திகளை நிலை நிறுத்திக் கொள்ள முடியும்.. ஆனால் நீங்கள் உறங்கி எழுந்தவுடனேயே செய்தித் தாளை எடுத்து வைத்துக் கொண்டு பயங்கரமான சம்பவங்களை படித்துக் கொண்டிருந்தால், உறக்கத்தில் பெற்ற அனைத்து தேவ சக்திகளுமே வீணாகி விடுகின்றன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்..!

3. 32 பல் தேவதைகளுடைய அருள் இல்லையென்றால் எந்த உணவையும் உங்களால் நன்கு சுவைத்து உண்ண முடியாது. பொக்கை வாய் வந்து விட்டால் என்ன செய்வது? சிந்தித்துப் பார்த்து இளமையிலேயே 32 பற்களையும் தினந்தோறும் துதித்துப் போற்றி வருகின்ற நற்பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.. “தந்த(பல்) தேவதைகளே! தாங்கள் அடியேனுடைய திருவாயில் அமர்ந்து உடலுக்கு ஜீவித சக்தியை அளித்துப் பல அனைத்து இறைப் பணிகளையும் ஆற்றிக் கொண்டிருக்கிறீர்கள். இதற்கு நன்றிக் கடனாக பல ஏழை மக்களும் நன்முறையில் உணவை நன்கு கடித்து உண்ணும் வண்ணம் அன்னதானம், மளிகைப் பொருள் தானம் செய்வதற்கு அடியேனுக்கு நல்அருளைத் தந்திடுக!” என்று வேண்டிடுக! கரும்பு, முறுக்கு, போன்ற பற்களால் நன்கு மென்று கடித்துத் தின்னக் கூடிய பொருட்களை நீங்கள் ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்தால் பல் சம்பந்தமான எந்த வியாதியும் தோன்றிடாது. சென்னை அருகிலுள்ள ஞாயிறு ஸ்தலத்தில் சிவன், சூரியன் வழிபாடு மற்றும் அங்கே கோதுமைப் பண்டங்கள் தானம் பல் சம்பந்தமான நோய்களைத் தீர்க்க வழிவகுக்கும்.. பல் டாக்டர்கள் மேன்மை உதவும் தலம்.

4.  பஞ்சாங்கத்தைத் தினந்தோறும் தொட்டு வணங்கி உங்கள் பணிகளைத் தொடருங்கள். நீங்கள் எந்த நாளில் அண்ணாமலையை கிரிவலம் வருகின்றீர்களோ அந்நாளுக்குரிய கிழமை, நட்சத்திர, திதி, கரண, யோக தேவதா மூர்த்திகள் அந்நாளில் அண்ணாமலையை கிரிவலம் வருகின்றார்கள்.. அவர்கள் எந்த ரூபத்திலும் கிரிவலம் வந்திடலாம்... நீங்கள் கிரிவலத்தில் காண்பவர்களும் உங்களுக்கு முன்னும் பின்னும் வருபவர்களும் நீங்கள் காண்கின்ற பசு, பறவைகள், எறும்புகள் யாவும் மகரிஷிகள், சித்தர்கள் மற்றும் கால தேவதா மூர்த்திகளின் வடிவங்களாக இருக்கக் கூடும். எனவே கிரிவலத்தில் ஓரிருவரே கண்களில் தென்படுவது போல் உங்களுக்குத் தோன்றினாலும் உண்மையில் எண்ணற்ற மகரிஷிகளும் சித்புருஷர்களும் மாமுனிகளும் தினமும் கிரிவலம் வந்தவாறு உள்ளனர்..

திருஅண்ணாமலையில் நாலு லட்சத்திற்கும் மேல் கிரிவலம் வருகின்ற பௌர்ணமி திதியில் கிட்டத்தட்ட ஆறாயிரம் பஸ்கள் இருந்தால்தாமே பக்த ஜனங்கள் நன்முறையில் வந்திட முடியும். ஆனால் அவ்வளவு வண்டிகள் இல்லாதபோது நாலு லட்சம் பேரும் நன்முறையில் கிரிவலம் வந்திட ஆயிரக்கணக்கான தேவதைகள் துணைபுரிகின்றனர்.. பல்லாயிரக்கணக்கில் தேவர்களும், மாமுனிகளும், ஜீவன் முக்தர்களும், சித்தர்களும், ரிஷிகளும், யதிகளும், மஹரிஷிகளும், யோகியரும், பித்ரு தேவர்களும் முமூட்சுக்களும், மக்களோடு மக்களாக கிரிவலம் வருகின்றனர் என்பதுதானே சத்தியமாக நடைபெறும்  மாதாந்திர தேவ நிகழ்ச்சி! எனவே உங்கள் முன்னும் பின்னும் ஆயிரக் கணக்கில் உத்தம இறை நிலை கூடிய தேவ தூதர்கள் கிரிவலம் வருகின்றார்கள் என்றால் என்னே பெரும் பாக்யம்! ஏன் நீங்கள் தேடிக் கொண்டிருக்கின்ற, நாட விழைகின்ற சற்குரு உங்களூடன் கூடவே திருஅண்ணாமலை கிரிவலத்தை மேற்கொண்டிருக்கலாமே! எனவே மஹரிஷியை, சித்தர்களை, யோகியர்களை, ஜீவன் முக்தர்களை தரிசித்திருக்கிறாயா, என்று எவரேனும் கேட்டிடில், “நிச்சயமாக அண்ணாமலை கிரிவலத்தில் தரிசித்தேன்” என்று நீங்கள் அறுதியிட்டுக் கூறலாம்..!

5. திருஅண்ணாமலையில் “அரிச்சந்திர பாண லிங்க தரிசனம்” என்ற ஒன்று உண்டு.. வாழ்க்கையில் பேசித் தீர்த்த பொய்களுக்குப் பிராயச்சித்தம் தருவதாகும்.. எங்கிருக்கின்றது என்று உடனே கேட்டு, பார்த்து தரிசித்து விட்டால் உடனேயே பிராயச்சித்தம் பெற்றிடலாம் என்று “Shortcut” மனித புத்திதானே தொற்றிக் கொள்ளும்! இந்த தரிசனத்தைப் பெற்றுவிட்டால் அதன் பிறகு வாழ்க்கையில் எவ்விதப் பொய்யும் கூறலாகாது, அதர்மமாக நடக்கலாகாது! மீறினால் அந்த பொய்யே, அதர்மமே “பாணமாக” (ஆயுதமாக) மாறிப் பதம் பார்த்துவிடும், சரிதானா? இப்போது அந்த தரிசனத்தைக் காணத் தயாராக இருக்கின்றீர்களா அல்லது தயக்கமாக இருக்கிறதா? உங்கள் மனசாட்சியைத் தொட்டுப் பார்த்திட இதற்கு நல்வாய்ப்பு., அல்லது நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்க விரும்புகின்றீர்களா? சனிப் பிரதோஷ நேரத்தில் அமிர்த யோகத்தில் கார்த்திகை நட்சத்திர நாளில் சந்திர ஹோரையில் கிரிவலம் ஹோரையில் கிரிவலம் வந்து இந்த சத்திய தரிசனத்தைப் பெற்றிடுங்கள்.!

ஆழ்வார் திருநகரி

6. திருஅண்ணாமலை கிரிவலம் வருகின்றபோது உங்கள் உடலில், மனதில், உள்ளத்தில் எண்ணற்ற இறைச் சாதனைகள் கூடுகின்றன.. உங்களுடைய ஆத்ம ஜோதியை கர்ம வினைகள்தாம் சூழ்ந்து இருக்கின்றன.. கர்ம வினைகளின் பிரதி பிம்ப “த்வனி” தான் உங்களுடைய உடல், மனம், உள்ளமாக உருவெடுத்து இருக்கின்றது. இப்பின்னல்களில் இருந்து ஆத்ம ஜோதியை விடுவிப்பதுதான் ஒவ்வொருவருடைய வாழ்க்கையின் லட்சியமாகும்.. பஞ்சபூதங்களில் அக்னி லிங்கமான அருணாசல பூமியில்தான் பஞ்ச பூதங்கள் எழுவதும், சாதனைகள் புரிவதும், அடங்குவதும் நிகழ்கின்றன.. எனவே உங்கள் கர்ம வினைகளுள் மாணிக்கமாகப் பொலியும் ஆத்ம ஜோதியின் ஆதிமூலத் தோன்றலும் ஆவதும் ஆனதும் அருணாசல மலையில்தான்! நீங்கள் கிரிவலம் வரும்போதெல்லாம் உங்கள் உள்ளிருக்கும் ஆத்ம ஜோதி அருணாசல மலையில், தான் தோன்றிய இடத்தை அடையாளங் கண்டு பரிபூரண ஆனந்தம் கொள்ளும். இந்த பரமானந்த முகிழ்வுப் பரலே உங்களுக்கு கிரிவலத்தின் போது இனம் தெரியாத மன அமைதியைத் தருகின்றது.. எனவே உங்கள் ஆத்ம ஜோதி தன் ஆதிமூல ஜோதியை அருணாசல மலை தரிசனத்தில் கண்டு களித்திடவும் ஆன்ம பூர்வமாக நீங்கள் கிரிவலத்தை மேற்கொள்கின்றீர்கள், நிச்சயமாக மேற்கொண்டாக வேண்டும் என்பதையும் உணர்ந்திடுக..!

7. எந்நாளிலும், எந்நேரத்திலும், எப்போதும் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்திடலாம். ராகு காலம், எமகண்டம் நேரத்தில் கிரிவலம் வந்திட்டாலும் இதுவரையில் வாழ்க்கையில் ராகு கால, எமகண்ட நேரங் கணிக்காது செய்த காரியங்களில் எழுந்துள்ள தோஷங்களுக்கு நிவர்த்தியாகவும் இந்நேரங்களில் எழுச்சியுறுகின்ற தீவினை சக்திகளிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளவும் இந்நேர கிரிவல பலாபலன்கள் துணைபுரிகின்றன.. அக்காலத்திய ரயில், பஸ் செல்லும் நேரங்களை ராகு காலம், எம கண்டமின்றி அமைத்திருப்பார்கள். அவ்வாறே செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும் ஆங்காங்கே உள்ள எல்லை தேவதைகள், சக்தி வாய்ந்த கணபதி மூர்த்திகளுக்குத் தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி வழிபட்டு கால தோஷங்களுக்கு நிவர்த்தி கண்டார்கள்.! தற்காலத்தில் ராகு காலம், எம கண்டத்தில் புறப்படுகின்ற பஸ்கள், ரயில்கள், விமானங்கள், கப்பல்கள் அதிகமோ அதிகம். இதை எல்லாம் இந்த விஞ்ஞானமய உலகத்தில் பார்த்துக் கொண்டிருந்தால் காரியங்கள் நடக்குமா என்று கேட்பார்கள்.. ஆனால் தன்னையுமறியாது ராகு கால, எம கண்ட நேரங்களில், திருஅண்ணாமலையை ஒருவர் கிரிவலம் வருகின்ற போது, அதன் கிரிவல பலாபலன்கள் தாம் இன்றைக்கு உலகின் பல பகுதிகளிலும் ராகு கால, எமகண்ட நேரங்களில் காரியங்களை நிறைவேற்றுபவர்களையும் பயணம் செய்பவர்களையும் காக்கின்றன என்பதை இனியேனும் உணர்ந்திடுங்கள்! எனவே அண்ணாமலை கிரிவலப் பலாபல்ன்கள் பூலோகம் முழுவதற்கும் பயன்படுகின்றது.

8. எந்த கிழமையில், நட்சத்திரத்தில் யோக, கரண வேளையில் கிரிவலம் வருகின்றோமோ அதனதற்கு உரித்தான விசேஷமான கிரிவலப் பலன்கள் உண்டு. திருஅண்ணாமலையில் பௌர்ணமியில் கிரிவலம் வருதல் மகத்தான பலன்களை அள்ளித் தருவதேன்? எவ்வாறு ஒரே சூரிய ஒளியில் கோடிக்கணக்கான ஜீவன்கள் எத்தனையோ பணிகளை ஆற்றினாலும் அதன் சுடரொளி குன்றுவது இல்லையோ அதேபோல அனைத்து ஜீவன்களின் உள்ளும் ஒளிரும் ஆத்ம ஜோதிகள் யாவும் திருஅண்ணாமலை ஜோதியிலிருந்து தோன்றியவைதாம்! கர்மவினைகளான இருளால் சூழப்பட்டு இருப்பதால்தான் நம் ஆத்ம ஜோதியை நம்மால் காண இயலவில்லை! சந்திரன் என்பது ஆன்மக் கண்ணாடி! இருளில் நாம் கிரிவலம் வருகையில் நம் ஆத்ம ஜோதி தன்னுடைய ஆதிமூல ஜோதியைத் திருஅண்ணாமலை தரிசனத்தில் கண்டு தரிசித்து அந்த ஆனந்தப் பேரொளியையே சந்திர பகவன் திருஅண்ணாமலை விசேஷமாகப் பிரதிபலித்துக்கு காட்டுகின்றார்! தன் பதினாறு கலைகளையும் இழந்து சந்திர பகவான் வருந்திய போது ஆதிசிவனும், “நீயும் பௌர்ணமி திதியன்று அருணாசலத்தைக் கிரிவலம் வந்து ஜீவன்களுடைய ஆத்ம ஜோதியைப் பிரதிபலித்துக் காட்டுகின்ற அற்புத இறைச் சேவையை மேற்கொண்டு சிறப்புறுவாயாக!” என்று நல்வரம் அருளினார்.

நித்திய கர்ம நிவாரணம்

1.11.2001 – கன்றோடு இருக்கும் பசுவிற்கு அரைத்த மஞ்சள் பூசி, குங்குமமிட்டு, வயிராற உணவிட எதிர்பாராத வகையில் வரும் பணக் கஷ்டங்களுக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும்!
2.11.2001 – 12-18 வயதுக்குள் உள்ள பையன்கள் பெற்றோர் சொல் கேளாமல், தான்தோன்றித் தனமாய்ச் செயல்பட்டால், திருந்தி வாழ ஸ்ரீபால கணபதிக்கு நேர்த்தி வைத்து வழிபடுதலால் அவர்கள் திருந்தி வாழ்வர்.!
3.11.2001 – இன்று செட் பல் வைத்திருப்போர் அதைக் கடுக்காய்த் தண்ணீரில் ஊறவைத்து, சுத்தம் செய்து, முறையாகச் செய்யப்பட்ட மூலிகைப் பற்பொடியால் வாயை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை சுத்தமாகக் கழுவி இறை நாமம் ஜெபித்தால் அவர்கள் பல், வாய் சம்பந்தமான துன்பங்களில் இருந்து மீளலாம்.
4.11.2001 – தென்னை, பனை இரண்டும் ஒட்டியுள்ள இடத்தில் தென்னைக்கு வேஷ்டியும், பனைக்கு புடவை பாவாடையும் சார்த்தி, இரண்டையும் பூஜித்து வலம் வந்து வணங்கிடில் உடல் ஊனம் உள்ள பெண்களுக்கு நல்வரன் அமைய வழியுண்டு.. விடாமல் தொடர்ந்து ஒரு மண்டலம் இதைச் செய்ய வேண்டும்..
5.11.2001 – கணபதியின் பாதத்தில் 108 நாமாவளிகளை பத்து முறை எழுதி அவர் பாதத்தில் மாலையாக அணிவித்து வணங்கிடில் பல காரியங்களில் நன்மை அடையலாம்.
6.11.2001 – இன்று கிளிகளுக்குக் கொய்யாப் பழம் அளித்தால் குறைப் பிரசவத்திலிருந்து மீளலாம். நமக்கு இது சம்பந்தமில்லையே என்று எண்ணாதீர்கள்! பிறருக்கும், நம் சந்ததியினருக்கும் இக்கோளாறு வராது இந்த தர்ம சக்தி பயன்படும் என்பதை நினைவில் கொள்க!
7.11.2001 – இன்று மயில்களுக்குத் தானியம் அளித்து முருகனை வேண்டிடில் மனைவியின் நெடுநாள் நோய்களுக்குத் தக்க தீர்வுகளைப் பெறலாம்.
8.11.2001 – இன்று முழுதும் விரதம் இருந்து ஸ்ரீபிரளய காளேஸ்வரர் சுவாமிக்கு வஸ்திரம் சார்த்துவதால் நீண்ட நாட்களாய்த் தடைபட்ட பணம் வர வழி ஏற்படும்.
9.11.2001 – இன்று இலவசமாக ஆசிரியர் பணி புரிவோர்க்கு இரு சக்கர வாகனம் தானமாக அளிப்பதால் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணலாம்.
10.11.2001 – கணவனை இழந்து கைம்பெண்ணாய் இருப்போர் தம் பெண் குழந்தைகளை இன்று கவனமாய்ப் பாதுகாக்க வேண்டும்.
11.11.2001 – ரமா, ரமாதேவி, ரமணி, ராதா, ரஞ்ஜிதா, ராணி போன்ற ர, ரா என்ற முதல் எழுத்துக் கொண்ட பெண்மணிகள் இன்று அரைத்த மஞ்சளை வெற்றிலையில் வைத்து குங்குமத்துடன் சுமங்கலிக்கு அளிப்பதால் நல்லதொரு திருப்பத்தை வாழ்வில் காணலாம்.

12.11.2001 – இன்று அகத்திக் கீரை, நல்ல பழவகைகளை கன்றுடன் கூடிய 21 பசுக்களுக்கு அளித்து நமஸ்கரித்தால், நமஸ்கரிக்கும் போது பாக்யம் இருப்பின் தெளிக்கும் கோமேயத்தால் பீடைகள் விலகும்.!
13.11.2001 – இன்று ஏழைகளுக்கு இனிப்பு, தீப தானம், புத்தாடை, நல்லாடை, அணிகலன்கள் தானம் செய்து அவர்களை மகிழ்விப்பதால், சிக்கலான விஷயங்கள் விரைவில் தீர்வு பெறும்.
14.11.2001 – ஆல மர, அரச மரப் பிள்ளையாருக்குத் திருநீறிட்டு, சந்தனக் காப்பிட்டு வணங்கிட நல்ல புது வியாபாரங்கள் கிட்டும்.
15.11.2001 – இன்று கோயில்களுக்கு, ஆஸ்ரமங்களுக்கு, குளங்களுக்கு வண்ணப் பூச்சு பல வண்ணங்களை (பெயிண்ட்) தானமாக அளித்தலால் எதிர்பாராத நன்மைகள் கிட்டும்.
16.11.2001 – உறங்காப்புளி எனும் ஸ்தல விருட்சப் புளிய மரத்திற்கு (ஆழ்வார் திருநகரி – திருக்குருகூர்) அரைத்த மஞ்சள், சந்தனம் சாற்றி, ஆடை சாற்றி, தூப, தீபம் காட்டி, அன்னதானம் செய்தலால், மூடி மறைத்த விஷயங்களால் வரும் துன்பங்கள் தீரும்.
17.11.2001 – இன்று வயதானவர்களுக்கு கைத்தடி தானம் செய்வதால் தடுக்கி விழும் ஆபத்திலிருந்து மீளலாம்.
18.11.2001 – குழாய், கிணறு, பிளம்பிங் வேலை, செய்வோர், தாங்கள் நீண்ட நாட்களாய் பயன்படுத்திய ஆயுதங்களை வேறு ஒருவருக்குத் தானமாக அளித்து, புதிய ஆயுதங்கள் வாங்குதலால் வருமானம் விருத்தியாகும்..!

19.11.2001 – கௌரி, கௌரி சங்கர், கௌரி மனோகர் போன்ற நாமம் கொண்டோர் இன்று கண்டிப்பாகப் பெருமளவில் அன்னதானம் செய்ய வேண்டும்.. அமைதியற்ற மனதிற்கு ஆறுதல் கிட்டும்.!
20.11.2001 – குறைந்தது ஐந்து நாகலிங்க மூர்த்திகளை தாமே அரைத்த மஞ்சளால் நீராட்டி, அரைத்த சந்தனமிட்டு, வஸ்திரம் சாற்றி, படையல் செய்து அன்னதானம் செய்வதால் நகை வியாபாரிகள் நலம் பெறுவர்.
21.11.2001 – இன்று வேல் விருத்தம், மயில் விருத்தம் போன்ற ஸ்தோத்திரங்களை ஓதி வேலவனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வேல் தானம் செய்து, அன்னதானம் செய்தலால் நடுங்கிக் கொண்டு இருக்கும் அல்லது பயந்த விஷயங்களால் துன்பம் இல்லாமல் ஆறுதல் அடையலாம்.
22.11.2001 – இன்று பெருமாள் கோயிலில் புளியோதரை தானம் – புரியாத புதிர்களுக்கு விளக்கம் கிட்டும்..
23.11.2001 – இன்று மாமரத்தில், அல்லது பலா மரத்தில் செய்த இரண்டு உண்டிவில், வாங்கி அதை ராதா கிருஷ்ணனாய் பாவித்து, அர்ச்சனைகள் செய்து, நைவேத்தியம் படைத்து அனனதானம் அளிக்க வேண்டும். உண்டி வில் தோஷத்திலிருந்து மீளலாம்.!
24.11.2001 – சில காலம் அசுர கூட்டத்தைப் பலவிதம் நடத்திச் சென்று, அசுரர்கள் தலை தெறிக்க ஆடியதால், மனம் வருந்தி தான் இருக்கும் இடம் யாருக்கும் தெரியக் கூடாதென, குருவை மறைத்த நாளிது... அருவமாய் பல இடங்களில் மறைந்து அசுரர்கள் குருவைத் தேடி, குருவருளால்தான் நாம் இனி எதையும் பெற இயலும் என உணர்ந்து அவரை வேண்ட, சுக்கிராச்சாரியார் மனம் கனிந்தார்... அதனால் சுக்கிரனுக்கு உரித்த தலங்களில் (ஸ்ரீவெள்ளீஸ்வரர் ஆலயங்கள் உட்பட) முறையான அன்னதானம் செய்தலால் சுக்கிர பகவானின் ஆசியால் சுபமங்களம் பெறலாம்.
25.11.2001 – உடல் பாதிப்புடன், பீஷ்மர் மனது வேதனை அடையாமல் இருப்பதற்காக, இன்று சசிமுத்து என்ற முத்தாபரணம் பாண்டவர்களால் அணிவிக்கப்பட்டு, அதன் தெய்வீக சக்தியால் பீஷ்மரின் மதியை நிலை நிறுத்திப் பல அற்புத தெய்வீக நிலைகள் பெற உதவியது.. இன்று சசிமுத்து அணிந்து மனத்தை நிலைப்படுத்துவதால் தெய்வீக அமைதியைப் பெறலாம்.
26.11.2001 – இன்று ஒரேயொரு விளக்குள்ள குடிசைக்கு மாற்று விளக்குகளைத் தானம் அளித்தலால், கைக்கு எட்டி வாய்க்கு எட்டாத பொருட்களாக இருந்தவை, வாய்க்கு எட்டும் வாய்ப்பு கிட்டும்.
27.11.2001 – பிரசவித்தவர்களுக்கும், ஏழைப் பெண் நோயாளிகளுக்கும் இன்று ஒழுக்கழித் துணி (sanitary napkin) தானமாக அளித்திடில் உதிர சம்பந்தமான நோய்களுக்கு நிவாரணம் கிட்டும்.
28.11.2001 – இன்று காஞ்சனா ஸ்படிகம் அணிந்து சிவ பூஜை செய்திடில், ஊர்ப் பகைமையால் வரும் துன்பங்கள் தணிந்து நல்வழி தெளிவாகும்.
29.11.2001 – இன்று பழுதடைந்த ஆலயங்களுக்கு மாற்றுக் கலசங்கள் அளித்தல் அல்லது மாற்று வர்ணப் பூச்சுக்கு ஆவன செய்தலால், கூட இருந்து கொண்டு குழி பறிப்போர்களால் வரும் ஆபத்துக்கள் தணியும்.
30.11.2001 – வாகன உதிரிபாகங்களை விற்போர் இன்று ஏழை வாகன ஓட்டிகளுக்கு இயன்ற அளவு, உதவி செய்து இலவசமாக உதிரிப் பாகங்களை அளிப்பதால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணலாம். செவ்வாய் லோக தேவதைகள் பூலோகத்தில் பரிணமிக்கும் நாள் – தேனி மலை போன்ற செவ்வாய் கிரக மலைத் தலங்களில் கிரிவலம் வருதல், வாகன சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குத்  தக்க தீர்வைத் தரும்.

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam