சதி முற்றமா சக்தி முற்றமா, எது உண்மை ?

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

யுகயுகமாய் ஒளிர்கின்ற குருபாத பூஜை! ஜகம் முழுதும் மிளிராதோ குருபாத சேவை! ஸ்ரீஅகஸ்திய விஜயம்தான் அவர் காட்டும் பாதை! (நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்..!)

திருநெல்வேலி அருகே... பொதிய மலைச் சாரலில்... அந்தப் “பேன் குடும்பத்திற்கான” பெரிய பரிகார மூலிகை ஒன்றைப் பெறுகையில், தனக்கு அளிக்கப்பட்ட கடுமையான பல இறைச் சோதனைகளைப் பெரியவர் கண் கலங்கப் பரமானந்தத்துடன் எடுத்துரைத்த போது, சிறுவனும் கண் கலங்கிட்டானே! பிரபஞ்சமே போற்றும் மாபெரும் சித்புருஷரான தம் சற்குருநாதருக்கே இத்தகைய பலத்த இறைச் சோதனைகள் என்றால்..

சிறுவன் பெரிதும் பிரமித்து அதிர்ந்தும், கலங்கியும் விட்டான்! “எந்நேரமும் இறைநெறியில் துய்த்துத் திளைத்து சகலமும், சர்வமும் அறிந்த அவருக்கா நம் சற்குருவிற்கா இறைவன் இத்தகைய சோதனைகளைத் தருவான்? நிச்சயமாக இல்லை... அவர் மூலமாக நமக்குப் பாடம் புகட்டத் தோன்றிய குருவனுபூதிகள் தாம் இவை!” எனச் சிறுவன் தெளிந்தான்!  

தெய்வீகம் உங்களைப் புனிதமாக்கும்!

“தெய்வீகம்கறது சாதாரணமானது இல்லை அப்பனே! நிக்க வெச்ச கத்தி மேல நடக்கற மாதிரி தெய்வீகத்துல ரொம்ப ரொம்ப உஷாரா இருந்தாத்தான் ஒரு சின்ன தூசி அளவு கர்மா கூடச் சேராம ரொம்ப ரொம்பப் புனிதமா இருக்க முடியும்! அதுக்காக, தெய்வீகம்னாலே பயந்து ஓடிடக் கூடாது! எத்தனை ஆன்ம சோதனைகள் வந்தாலும் ஆழ்ந்த குரு நம்பிக்கையோட சமாளிச்சு, முடிவுல ஜெயம் கிடைக்கறப்போ கடவுள் கொடுக்கற அந்தப் பரமானந்த சந்தோஷம் இருக்கே அதை எப்படி வர்ணிக்க முடியும்? வேற எது மூலமாவும், கோடி கோடியாக் கொடுத்தாலும் அந்த சந்தோஷத்தைப் பெற முடியாது”, என்று சொல்லிச் சிறு குழந்தை போல கண்ணைச் சிமிட்டி சிமிட்டிப் பலமாகச் சிரித்தார் பெரியவர்!

அவருடைய பொதிய மலை மூலிகை தேடும் படல அனுபூதியை மேலும் தொடர்ந்தார்! “என்னாலதான் எந்த மூலிகையையும் கண்டு பிடிச்சு எடுத்திட முடியுமேன்னு சர்வ சாதாரணமா நினைச்சதுக்கு அந்த கர்வத்துக்கு, அகங்காரத்துக்கு, ஆணவத்துக்கு ஒரு சரியான பாடமும், அடியும் அங்கேதான் அடியேனுக்குக் கிடைச்சுது!”

“மூலிகைக்குன்னு அடியேனுக்கு ஒரு குருவை அனுப்பினாங்களே, அவரோட ஆசியில்லாம ஒரு அருகம்புல்லைக் கூட என்னால பார்க்க முடியாது, எதையும் தெரிஞ்சுக்கவும் முடியாதுன்னு அப்பத்தான் எனக்குப் புரிஞ்சது! குருவோட அனுகிரகம் மூலமாத்தான் அந்த அற்புதமான மூலிகையே அடியேனின் கண்களில் பட்டது! அந்த “மூலிகை குரு” நறுக்குனு என் தலையில குட்டி, நாலே வார்த்தைல உபதேசம் பண்ணி, நாலாயிரங் கோடி லோகங்களிலேயும் இருக்கற எல்லா மூலிகையையும் பத்திய “ஞானத்தைக்”  கொடுத்தாரே, அவருடைய கருணையை என்னன்னு சொல்றது?”

“ஒரு வெங்காய பஜ்ஜிக்காக இன்னமும் அலையற இந்தக் கேவலமான ஜீவனுக்கு அவ்வளவு பரந்த “மூலிகை ஞானம்” கொடுக்கிறாரே, அவருக்கு நான் எப்படிக் கைமாறோ, கைங்கர்யமோ செய்யப் போறேனோ, தெரியலையே, கடவுளே!” பெரியவருடைய கண்களில் பெருவெள்ளமாய்க் கண்ணீர் பொங்கியது. சிறுவன் தலையைக் குனிந்து கொண்டான்! ஏனோ?? பெரியவரின் அருட் பெரு வெள்ளக் கண்ணீரில் பொங்கிய பேரொளியை, பல்லாயிரச் சூரிய கோளங்களின் மகத்தான கூட்டொளியை நிகர்த்த ஒளிப் பிரகாசத்தை, ஆங்கே பெருக்கெடுத்த ஸ்ரீகாயத்ரீ தேஜஸையெல்லாம் காணும் சக்தி அவனுக்கு இல்லாமல் போயிற்றோ?

தான் எப்படி ஆணவ, அகங்காரமின்றி தெய்வீகத்தில் முதிர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகத் தானே இந்த அனுபூதிகள் யாவும் தோன்றின! புத்தம் புது மனத் தெளிவுடன், சிறுவன் சற்றே தைர்யம் கொண்டு அவரை நோக்கினான்.! அங்கே கோவணாண்டிப் பெரியவரா தெரிந்தார்? சுத்தமான ஸ்புடம் போட்ட தங்கத்தை வார்த்து வானெங்கும், பூமியெங்கும் வாரி இறைத்தாற் போல், சர்வ தீப குருவொளி மண்டலமாய் யாவுமே பிரகாசித்தனவே!

பெரியவருடன் எத்தனையோ ஆலயங்களில் உழவாரத் திருப்பணிகள் செய்யும் அரிய வாய்ப்பு சிறுவனுக்குக் கிட்டியது! ஒட்டடை அடித்தல், கோமுகத்தைச் சுத்தமாக்குதல், ஆலய நீர்த் தாரைகளின் அடைப்புகளை அகற்றித் தூய்மை செய்தல், நீர் விட்டுக் கழுவுதல், தூண்களிலும் ஆலய மேற்பரப்புகளிலும் பல ஆண்டுகளாக மண்டிக் கிடக்கும் அழுக்கு, எண்ணெய்ப் பசை, கற்பூரத்தின் புகைப் படிவினை அகற்றுதல் என்றால் எளிதான காரியமா என்ன? இதற்கு இறை அடியார் கூட்டமே தேவைதானே!

அதுவரையில் தான் மட்டுமே பெரியவரின் ஒரே சிஷ்யச் செல்லப் பிள்ளை என்று எண்ணி வந்த சிறுவனுக்கு ஆங்கே திபுதிபுவென்று பல சிறுவர்களும், பெரிய பிள்ளைகளும், இளைஞர்களும், எங்கிருந்தோ ஓடோடி வந்து ஆலயத் திருப்பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டது கண்டு சிறுவன் ஆச்சரியப்பட்டான்.. அவர்கள் மேல் கோபமும், கடுப்பும், பொறாமையும் கூட வந்துவிட்டது. இதனைப் பெரியவர் உணர மாட்டாரா என்ன?

பகலில் நட்சத்திரம் காட்டிய பகலவ சற்குரு!

“இதப் பாரு ராஜா! அடியேன் எல்லோருக்கும் பொதுவானவன்! இவர் வேண்டும், அவர்தான் வேண்டும் என்ற ஓரவஞ்சனை கிடையாது! எல்லோரும் தெய்வீகத்துக்கு வந்தால் தானேயப்பா சமுதாயமே சாந்தமாயிருக்கும், ஸ்திரமாயிருக்கும்!” இவ்வாறு பெரியவர் அவனுக்கு நன்கு இடித்து எடுத்து உரைத்த பின்தான் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரியவரைப் பற்றிய அவனுடைய ‘தனக்கே உரித்தானவர்’ என்ற “possessive nature” தொலைந்து மறைந்தது, தனக்கு ஏதோ தெய்வீகத்தைப் பற்றி எடுத்துச் சொல்வார், பசி நேரத்திற்கு பக்கோடாவும், பரோட்டாவும், கோலி மிட்டாயும் வாங்கித் தருபவர். என்ற எண்ணமே அதுவரையில் சிறுவனின் மனதில் மேலோங்கி இருந்தது..

“அஷ்டவக்ரர், வியாச மாமுனி, த்ரைலிங்க சுவாமி, ஹரிக்கேன் விளக்கு சித்தர், அவதூத மகா பாபா, தம்பிக் கலையான் சித்தர், காளாங்கிநாதர், அமாவாசை சித்தர் முதலான பற்பல சித்த புருஷர்கள் மற்றும் எண்ணற்ற பித்ரு மூர்த்திகளையும் தரிசனம் காட்டி அவர்களின் ஆசியையும் பெற்றுத் தந்த போது கூட சிறுவன் – “தான் அண்டி இருப்பது சாதாரணக் கோவணாண்டிக் கிழவரல்லர், பிரபஞ்சமே போற்றும் மகத்தான இடியாப்ப சித்த ஈசர்”, என்பதை அறிந்தானில்லை, புரிந்து கொண்டானில்லை, உணர்ந்து கொண்டானும் இல்லை, சுவாமி! ஸ்ரீஅகஸ்தியர் விறகு வெட்டி வேடத்தில் கொல்லி மலையில் எதிர்பாராத விதமாக வந்து சிறுவனை ஆசீர்வதித்துச் சென்ற போது, ‘முன்னரே ஏன் சொல்லவில்லை?” என்று பெரியவரிடம் கோபித்துக் கொண்டான்.. அவரோ  “தனக்கே அது தெரியாது!” என்று ஓங்கியடித்துச் சொல்லி விட்டார்! பகல் நேரத்திலேயே கேதார்நாத் செல்லும் வழியில் திரிபங்கி மலை அருகே அகஸ்தியர் கிராமம் என்ற ஊரருகே பகலிலேயே அருந்ததி நட்சத்திரத்தைச் சுட்டிக் காட்டியபோதும் கூட அகஸ்தியருடைய திருக்கயிலாயப் பொதியமுனிப் பாரம்பரியத்தில் வந்து உதித்தவரே பெரியவர் என்பதையும் அறிந்தானில்லை! தாம் ஒரு அரிய சித்புருஷரிடம் குருகுல வாசம் பூண்டுள்ளோம் என்ற எண்ணமே சிறுவனுக்குத் தோன்றாதவாறு பெரியவர் செம்மையாக நடந்து கொண்டார்! தோன்றினாலும் பெரியவரே ‘டக்கென்று’ அதற்கு ‘break’ போட்டு விடுவார்!

‘ஒண்ணுமில்லைடா, கிருஷ்ண பரமாத்மா தான் யாருன்னு காண்பிக்க விஸ்வரூபம் எடுத்தப்போ, அர்ஜுனன் அலறிப் போய்ட்டான் அதனால நாங்க, யாரு, எங்கேந்து வந்தோம், எதுக்கு வந்தோம்னு ரிஷிமூலம், நதி மூலம் தெரிஞ்சுக்க முயற்சி செஞ்சா, எங்க நிழலைக் கூட நீ புடிக்க முடியாது தெரிஞ்சுக்கோ!’ என்று ராஜயோகியாய் பேசிட்டார் பெரியவர்!

இந்த ‘body’ய விட்டுக் கிளம்பினாத் தாண்டா நாங்க யாருன்னு தெரிய வரும்.. ஆனா அப்ப அது too late! ஏன்னா கிடைக்கறதுக்கே அரிதான இந்த மனுஷப் பிறவியிலேயே எங்களைப் புடிக்க முடியலைன்னா, மேல போயா எங்களை நீ பார்க்க முடியும்?” இவ்வாறு அவர் பேசும்போதெல்லாம் தன்னை விட்டுப் பெரியவர் மிகவும் ‘தள்ளிச் சென்றதாகச் சிறுவன் உணர்ந்தான்.. ஆனால் என்ன செய்ய முடியும்? யாரிடம் சொல்ல முடியும்?

“என்ன வாத்யாரே உன்னைப் பத்தித் தெரிஞ்சுக்கவும் விட மாட்டேங்கற! தெரிய வந்தா பேச்சையே மாத்தி ‘புஸ்ஸுனு’ அமக்கிடறியே!” பெரியவர் இதை மிகவும் ரசித்துச் சிரித்தார்! “எங்களைச் சிக்கெனப் பிடிச்சா எல்லாம் டக்குனு புரியும்!”

ஒருநாள்....  ஏதோ ஒரு பழைய ஆலயத்திற்குச் சிறுவனை இட்டுச் சென்ற பெரியவர் பழமையின் சிகரமாய் விளங்கிய அதன் மூலைமுடுக்குகளை எல்லாம் துணி, கொம்பு கொண்டு சுற்றிச் சுத்திகரித்தார்... ஒட்டகைக் குவியல்களுடன் விளங்கிய அந்த விசாலமான ஆலயத்தை ஓரளவு சுத்தம் செய்து முடிப்பதற்குள் இருட்டிடவே, அரைகுறையாக எப்படி வேலையை முடிப்பது?

அமாவாசையில் பௌர்ணமி!  மின்சார இணைப்பு இருந்தாலும் ஏதோ காரணமாகத் துண்டிக்கப்பட்டுக் கிடந்தது. குறுக்கும் நெடுக்குமாக மேலே மின்சார வயர்கள் தொங்கிக் கிடந்தன! வெளிப் பிரகாரத்தைச் சுத்தம் செய்ய ஆரம்பித்து இப்போது கிட்டத்தட்ட அர்த்த மண்டபம் வரை வந்து விட்டனர்..! உள்ளே ஒரே கும்மிருட்டாக இருந்தது.. ‘ஆயிற்று, இன்னும் சில நாட்களில் சிவராத்திரியும் வந்து விடும்...!’

நள்ளிரவு ஆனாற்போல் என்ன ஒரே கும்மிருட்டு! என்ன ஏதென்றே புரியவில்லை! மின் கட்டணம் செலுத்தி ஆண்டுக் கணக்கு ஆகிவிட்டதால் ஆலயத்திற்கு மின் சப்ளை துண்டிக்கப்பட்டு ஆங்காங்கே வயர்கள் பரிதாபகரமாகத் தொங்கிக் கொண்டிருந்தன.. “ஏண்டா, கொஞ்சம் லைட் இருந்தால் நல்லா இருக்குமில்ல...!”

பெரியவர் சிறுபிள்ளையாய்க் கேட்டிட., “லைட்டுக்கு எங்க போறது வாத்யாரே?” 

“உனக்கு லைட் வேணுமா, சொல்லு?“ ..

சிறுவனுக்கு பயம் பற்றியது.. பழைய காலத்துக் கோயில் வேறு! பழைய மண்டபம் போல் இடிபாட்டுத் தோற்றம்! என்னதான் கோயில் என்றாலும் இருட்டு பயம் மட்டும் சிறுவனை விட்டு அகலவில்லை... ‘லைட் எடுத்துக் கொண்டு வருகிறேன்..’ என்று பெரியவர் பாட்டுக்கு வெளியே கிளம்பி விட்டால் இவனல்லவோ இருட்டில் வெலவெலத்துக் கொண்டிருக்க வேண்டும்! இப்போதெல்லாம் பெரியவரைக் கண்டாலே சிறுவனுக்கு ‘பயம்’தான் அதிகமாகிக் கொண்டு வருகின்றது! என்னதான் அன்பு, கருணை, பரிவினைச் சிறுவன்பால் பெரியவர் பொழிந்தாலும், ‘தண்டனை’ என்று வரும்போது அதையும் மிதமிஞ்சிய அன்பாகவே கொடுத்து விடுவார்!

ஸ்ரீவிளக்கொளி பெருமாள் ஆலயம்
காஞ்சிபுரம்

‘அப்பப்பா குருகுலவாசத்தில் “tension மேல் tension” ஆக, உச்ச ஸ்தாயில் அல்லவா ஒவ்வொரு வினாடியையும் கழிக்க வேண்டியிருக்கிறது!’

“என்னடா யோசிக்கறே?” பெரியவரின் அதட்டலான குரல் அவனை இவ்வுலகிற்கு மீட்டது.! “கொஞ்சம் கண்ணை மூடிக்கோ!” சிறுவன் கண்ணை இறுக மூடிக் கொண்டான்..

“ம்..ம்..ம்.. போய் வேலையைப் பாரு!” சிறுவன் விழித்து பார்த்தான்! ஏதோ மகாஜோதிப் பிரகாசமாக இருந்தது.. இருட்டில் இருந்து வெளிவந்து வெளிச்சத்தைக் கண்டு கூசுவது போல்... சிறுவனின் கண்கள் திறக்க மறுத்தன. சற்று நேரத்தில் கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக தெரியத் தெரியத்தான்..

‘ஆங்... என்ன இது? மின்சார பல்ப் எரிகின்றது போலிருக்கிறதே! என்ன இது? எப்படி? “வாத்யாரே..” ஓங்கிக் கூவி விட்டான் சிறுவன்! ஆம், அவன் கூவுவதற்கான காரணம் என்னவோ? அப்படி என்னதான் அங்கு நிகழ்ந்து விட்டது? ஆம், பெரியவர் தான் தன் வலது கையை மேலே உயர்த்தி, விரல்களை மின்சாரக் கம்பிக் குப்பிக்குள் வைத்துக் கொண்டிருந்தார்.! ‘பளிச்’சென்று லைட் போட்டாற்போல் வெளிச்சம் அங்கே கூடியது.. இதனை சிறுவனால் கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை!

குரு விரல் மீட்டிய அருள் மின்சக்தி!

‘இவரிடமிருந்து மின்சக்தி பிறந்ததா, அல்லது வெளியிலிருந்து மின்சக்தியை இவர் தன்னுள் தாங்கிக் கொண்டிருக்கின்றாரா? சூரிய மண்டலத்திற்கே சென்று வரும் வல்லமை கொண்ட அருட்பெரும் சித்தராயிற்றே!” வெளிச்சத்தில் அனைத்துப் பொருட்களையும் சிறுவன் அவன் பூலோகத்தில் பார்க்காத பல பொருட்களை அங்கு கண்டான்...! “கிடுகிடுன்னு வெளிச்சத்துல வேலையை முடி!

பெரியவர் பெருங் குரல் கொடுத்திடவே சிறுவன் ‘பரபரவென்று’ வேலைகளை முடித்தான். பம்பரமாய்ப் பையன் சுழன்று பணி புரிந்திடவே எவ்வளவு நேரம் பெரியவர் அவ்வாறு நின்றாரோ, அவனுக்கே தெரியவில்லை! “டேய் எவ்வளவு நேரம்டா அக்னி பகவான் நமக்காக விளக்கு ஏத்துவாரு, போதும், வா போகலாம்!” பெரியவர் டக்கென்று கையை எடுத்திட மீண்டும் கும்மிருட்டு சூழவே பெரியவரே சிறுவனின் கைகளைப் பிடித்துக் கொண்டு ‘விறுவிறு’ வென்று வெளியே வந்தார்..!

விடையில்லா வினாக்கள்! சிறுவனின் இரண்டு முக்கிய கேள்விகள் குடிகொண்டன..

1. ‘ஆலயத் திருப்பணிக்குப் பெரியவர் கூட்டி வந்தவர்கள் யார் யார்? அவர்களை அவன் இதுவரை முன்பின் கண்டதில்லை ஒரு முகம் கூட ஏற்கனவே பார்த்தது போல் இல்லையே!
2. ‘ஆலயத்தில் எவ்வாறு விளக்கு எரிந்தது?’

பெரியவரின் “பெரும் அற்புதங்களாக” சிறுவன் இவற்றைக் கருதவில்லை! ஏனென்றால் சூரிய லோகத்திற்குள்ளேயே நேரடியாக நுழையும் அதியற்புத சித்புருஷராயிற்றே! ஆனால் அவர் அளிக்கின்ற அற்புதமான விளக்கங்கள் அவனுக்கு ஞானப் பிரகாசம் தருவதை அவன் பன்முறை உணர்ந்துள்ளமையால் அவற்றிற்காகச் சிறுவன் தற்போது ஏங்கினான்! இருட்டில் எங்கெங்கோ நடத்திச் சென்ற பெரியவர் எங்கோ ஓரிடத்தில் மரத்தடியில் அமர வைத்தார்.

“இதப் பாரு ராஜா! உன் மனசுல என்ன மாதிரி கேள்வி அடைச்சுக்கிட்டு இருக்கின்றது.. எனக்கு நல்லாவே தெரியும்! ஆனால் அதுக்கான தெய்வீக விளக்கத்தை நீயே ஏன் தெரிஞ்சுக்கக் கூடாது? ஆத்ம விசாரம் பண்ணு! இல்ல, இந்த இருட்டுல இவ்வளவு தூரம் நான் நடத்தி கூட்டியாந்ததுக்குக் கூடக் காரணம் இருக்குடா..! அதற்க்கெல்லாம் எப்படிக் காரணம் தெரிஞ்சுக்கப் போற?”

பளிச்சென்று சிறுவன் சொல்லிவிட்டான்..!

“ஆமாம் வாத்யாரே, ஆ, ஊன்னு சொன்னாக் கூட அதுக்கும் ஆயிரம் அர்த்தம் இருக்குன்றது நல்லாத் தெரியுது வாத்யாரே... !
அந்த நம்பிக்கை இருக்கே தவிர ஆனா அந்த ஆயிரம் அர்த்தங்களை என்னிக்குத்தான் தெரிஞ்சுக்கறது?”

“சற்குரு ஆ, ஊன்னு சொன்னாக் கூட நிச்சயமா அது வேத வாக்குதாண்டா.. ஏன்னா துர்கா சஹஸ்ரநாமத்தில் ஆஹா ஊஹு கந்தர்வர்கள்னு ஒரு நாமாவளி வரும்.. ஆமாம், அந்த மாதிரி சப்தபாவன கந்தர்வர்கள் உண்டு.. இந்த மாதிரி வேத சக்திகள்தாம் சற்குருவோட ஒவ்வொரு வாக்யத்திற்கும் வேத சத்யத்தை ஊட்டித் தரும்!

“ஒரு சற்குரு தானாகவே வந்து ஒரு வார்த்தை சொன்னாக் கூட அதை வேதசத்யமா ஆக்கறதுக்குன்னு ஆயிரம் கோடி தேவதைகள் பிரபஞ்சத்திலிருக்கு... ஏன்னா, சற்குருவே கீழே வந்து இறைவனோட மெய்த்தூதுவரா பூலோகத்துல இறங்கறாரு.. அதனால அவரை நம்பி வாழ்ந்து அவருக்கு எந்த இம்சையும், துன்பமும் கொடுக்காம ஆதரிக்கிறதுதான் பூலோக வாசிகளின் கடமை, சற்குரு சொர்க்கம், கைலாசம், வைகுண்டம் எல்லாம் தரிசனம் கண்டவர்! அப்படிப்பட்ட உத்தம நிலையில் இருக்கும் ஒருத்தர் பூலோகத்துக்கு வரவேண்டிய அவசியமேயில்லை! ஆனா அவங்க ஏன் பூலோகத்துக்கு வராங்க...? பூலோகத்தில் இருக்கறவங்களக் கரையேத்தவே அவங்களை ஆண்டவன் அனுப்பறார்.. இதை நல்லாப் புரிஞ்சுக்கணும்..!”

பிற லோகவாசிகளுக்கும் அருமறைத் தெய்வீகம்!

“உன்னோட மனசுல இருக்குற முதல் கேள்வி என்னன்னா, இன்னிக்கிக் கோயில் திருப்பணில வந்தவங்க யாரு? எங்கேந்து வந்தாங்க? எதுக்கு வந்தாங்க?”

“ஒண்ணு தெரிஞ்சுக்க, இங்கே நீ பாத்தவங்க யாருமே இந்த பூலோக வாசிகள் கிடையாது... எத்துணையோ கோடி பூலோகம் இருக்குன்னு நான் உனக்கு அடிக்கடி சொல்லிருக்கேன், வேறபல பூலோகம், தேவ லோகம், பித்ரு லோகம் எல்லாத்துலேந்தும் எத்துணையோ பேர் கோயில் திருப்பணி வாய்ப்பு கிடைக்காதான்னு ஏங்குறாங்க..”

“அவங்களை இறைத்தூதுவர்களானச் சித்தர்களும் மஹரிஷிகளும் பூமியில் வரவச்சுக் கோயில் திருப்பணி பண்ண வச்சி அது மூலம் புண்ணிய சக்தியை அவங்களுக்குக் கொடுத்து முக்தி, மோட்ச நிலைகள் எல்லாம் வாங்கித் தர்றாங்க..”

“இப்படிப் பெரிய உத்தம நிலையில் இருக்கறவங்களே கோயில் திருப்பணிக்கு ஏங்கினா, பெறுதற்கரிய மனுஷப் பிறவி வச்சிக்கிட்டுத் தினந்தோறும் கோயில் திருப்பணி பண்ணனுமில்லையா? இதை ஏன் பூலோக மனுஷங்க புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க!”

“நீ பாத்தவங்க எல்லாரும் மத்த லோகத்து வாசிங்க.. செவ்வாய், சனி லோகத்துலேந்து கூட இன்னிக்கி நிறையபேர் வந்து திருப்பணி செஞ்சாங்க..”

தேவலோகத்தின் மண் பூலோகத்தின் தூண்!

“உனக்குள உண்டாற இரண்டாவது கேள்வி என்னன்னா?” மின்விளக்கு வசதி இல்லாத இடத்துல எப்படி லைட் எரியுது?”“

“ஒண்ணு தெரிஞ்சுக்க, அக்னி லோகத்துலேந்தும் சூரிய மண்டலம், சந்திர மண்டலத்திலேந்து கூட பூலோகத் திருப்பணிக்கு நிறைய பேர் வறாங்க... நீ பூமியில பாக்கற மின் சக்தியெல்லாம் தேவ லோகத்துல ஒரு சிறு மின்மினிப் பூச்சிப் பிரகாசத்துக்குக் கூட ஈடாகாது. அவங்க ஒரு சுண்டு விரலைத் தூக்கினாக் கூடப் போதும்...! அதோட ஆகர்ஷண சக்தியால இந்த பூலோகத்துல எல்லா பல்புகளும், விளக்குகளும் எரியும்...

“இன்னும் சொல்லப்போனா சூரிய பகவானோட ஏழே ஏழு கதிர்களோட ஒளிதான் பூலோகத்துக்கு வந்துட்டு இருக்கு... சூரியனோட மிச்சக் கதிர்களின் ஒளியை நாம இன்னமும் பாத்ததுகூட கிடையாது...அந்த லைட் எப்படி வந்துச்சுன்னு நீ அர்த்தமில்லாமப் போட்டுக் குழப்பிக்காதே...நல்ல காரியம் நடக்கணும்னா அக்னி தேவதைகளோ, பாஸ்கர தேவதைகளோ எப்பவுமே நமக்குத் துணை புரிவாங்க! இதை சித்தி, அற்புதம்னு நினைச்சு மனசக் குழப்பிக்காதே..! சிறுவன் ஞானரசம் பருகி ஆனந்தம் கொண்டான்..! நீங்களும் தானே!

தியானத்தின் ஆரம்பக் கட்டம்

தற்காலத்தில் தியானத்தையே ஒரு விஞ்ஞானப் பாடம் போலாக்கி மாலை ஒரு மாதம், 3 மாதம் யோக வகுப்புகள், தியான வகுப்புகள் என நடத்துகிறார்கள். இவற்றில் யோக, தியானப் பாடங்களை வாய்மொழியாக எடுத்துரைக்கின்றார்கள்! என்றாலும், தக்க சற்குரு மூலம் கிட்டும் ஆன்மப் பயிற்சியே உண்மையான உத்தமமான தியானம், மற்றும் யோக நிலைகளுக்கு வழிவகுக்கும்..!

கர்ம, ராஜ, ஞான, தியான யோகியே சற்குரு!

எல்லாவற்றிற்கும் சற்குரு, சற்குரு என்று சொன்னால், சற்குரு பலருக்கும் இல்லாமைதானே இன்று உலகில் நிலவுகிறது, என்ன செய்வது என வினா எழும், எவருக்கும் சற்குரு உண்டு.. புழு, பூச்சி, ஈ, எறும்பு முதல் யானை, பூனை போன்ற மிருகங்கள் வரை மனிதன் அனைவருக்கும் தக்க சற்குரு உண்டு.. ஏன் தாவரங்களுக்கும் கூடச் சற்குரு உண்டு.. ஆனால் நம் வாழ்வின் லட்சியமே தக்க சற்குருவை நாடித் தேடிச் சரணடைவதே! இதை குறிக்கோளாகக் கொள்வீர்களேயானால், நிச்சயம் நீங்கள் சற்குருவை அடைய முடியும்.. சற்குருவை அடையும் வரை மஹான்களின் ஜீவ சமாதிகளிலும், ஜீவாலயங்களிலும், மஹான்களாகப் போற்றப்படும் பெரியோரையும் சென்று வழிபடுங்கள்! திருஅண்ணாமலையில் கிரிவலம் வந்திடுங்கள்.. சற்குருவை இதுவரை நாடாதோர்க்கு எளிமையான தியான முறையை இங்கு விளக்குகின்றோம்..

தியானம் என, கிழக்கு அல்லது வடக்கு நோக்கி தர்ப்பைப் பாயில் பத்மாசனம் கூட்டி அமரும்போது கேவலமான எண்ணங்கள் மனதிற்கு வருவது போலிருப்பின் அச்சமுறாதீர்கள்! உங்களைப் பற்றித் தாழ்வு எண்ணமும் கொள்ளாதீர்கள்! 20, 30, 40 ஆண்டுகளாக நம் மனதில் தேக்கப்பட்டுள்ள முறையற்றக் காம எண்ணங்கள், அருவருக்கத்தக்க எண்ணங்கள் எல்லாம் பாறையாக இறுகிக் கிடக்குமல்லவா? அவற்றை வெளிப்படுத்துவதற்கான ஒரு மனவெளிப் பாதையே தியானத்தின் முதல் கட்டமாகும்.. எனவே எடுத்த உடனேயே தியானத்தில் யோக அமைதி வந்துவிடாது. முதலில் தியானப் பாதையில் உள்ள கழிவுகளை நீக்க வேண்டும்.!

எனவே முதலில் தியானம் என அமரும்போது தீய எண்ணங்களே மனதில் தோன்றும்.. இதனால் கவலையுறாதீர்கள்! மண்பாறைகளாக இறுகி இருந்த கெட்ட எண்ணங்கள் உங்களை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக அகல்வதாக நீங்கள் உணர்வீர்கள்! மேலும் உங்கள் மனதினின்று வெளிப்படும் தீய எண்ணங்கள் புறவெளியைப் பாதிக்காமல் இருக்க வேண்டுமல்லவா? இதற்காகத்தான் நீங்கள் தியானம் செய்யும் இடத்தில் ஊதுபத்தி, சாம்பிராணி, தீப ஒளி போன்றவற்றின் பிரகாசமும், நறுமணமும் இருக்க வேண்டும்..! இவையே தீய எண்ணங்களைப் பஸ்மம் செய்து உங்கள் வாழ்வை மேம்படுத்தும்..!

மனத்  தூய்மை தரும் மகத்தான இறைச் சாதனங்கள்!

நீங்கள் ஒரு தர்ப்பைப் பாயில் அமரும்போது, தர்ப்பை பாயில் எழுகின்ற பிருத்வி சக்தியும், பிருஹத் சக்தியும் உங்கள் 72,000 நாடி, நாள நரம்புகளிலும் தேவ மின் காந்த சக்தியை உருவாக்கும்.. இச்சக்தியே பலகோடி தேவ லோகங்களிலுள்ள பீஜாட்சர மந்திரங்களைக் கிரஹிக்கும் சக்தியை உங்கள் தேகத்திற்கு அளிக்கின்றது. கையில் மணி கங்கண் அணிதல், மரப் பலகையில் கால் கீழே படாமல் பத்மாசனத்தில் அமர்தல், கழுத்தில் சசிமுத்து, ருத்ராட்சம் போன்றவற்றைத் தரித்தல், குடுமி வைத்தல், பூணூல் அணிதல், மணிக்கட்டில் காசிக் கயிறு கட்டுதல், இடுப்பில்  அரை ஞாண் கயிறு கட்டுதல் நெற்றியில் திருமண், திருநீறு, சந்தனம், குங்குமம் போன்ற இறைச் சின்னங்கள் தரித்தலால் உங்களின் மனத் தூய்மைக்குப் பெரிதும் உதவுகின்றன.. இவை நாடி நாளங்களை சுத்தப்படுத்தும்.!

REPLAY THE GOOD DEEDS! தியானம் எனும்போது தியானம் செய்யும் முன் ஒரு நற்காரியம் செய்துவிட்டு, அந்த தான தர்மம் செய்கின்ற நிகழ்ச்சியை உங்கள் மனக் கண் முன் வீடியோ படம் போல் ஓட்டிப் பாருங்கள். உதாரணமாக சாம்பார் சாதத்தை மூன்று பொட்டலங்களாக்கி அவற்றை எடுத்துக் கொண்டு ஆலயத்தில் இருக்கும் ஏழைகளுக்கு அளிக்கும் நற்காரியம் செய்து விட்டு நீங்கள் தியானத்தில் அமர்வீர்களானால் வீட்டில் சாதம் சமைக்கப்படுவது முதல் சாம்பாருடன் சாதத்தைக் கலந்து பொட்டலம் கட்டி எடுத்துச் சென்று அதைத் தானம் அளிக்கும் வரை நிகழ்கின்ற நிகழ்ச்சியை அதே நேரத்திற்கு 20 நிமிடமோ, 30 நிமிடமோ அணு, அணுவாக உங்கள் மனதினுள் திரையிடுங்கள்! இவ்வாறு செய்யும்போது நாள, நரம்புகள் அனைத்துமே அத்தர்ம நிகழ்வின்பால் செலுத்தப்படுவதால் ஒவ்வொரு நாளமாக உடலில் தூய்மையடைகிறது! எனவே தியானத்தின் முதல் பாடத்தில் நீங்கள் ஒரு நற்காரியம் செய்து அந்த நற்காரியத்தை உங்கள் மனத்தளவில் மீண்டும் ஒரு முறை ஒத்திகை பார்க்கின்றீர்கள்... இதுவே அடிப்படைத் தியானத்தின் முதற் பாடமாகும்.. இதனை இன்று முதல் செய்து பாருங்கள்...! உங்கள் மனம் அமைதியுறக் காணலாம்!

இறைவன் அளித்த இனிய தேகத்தை இறுதி வரை இறைவழியில் பேணுவீர்! பெறுதற்கரிய இம்மானுட உடலை இறைவன் நமக்கு அளித்துள்ளமையால் நம் வாழ்வின் இறுதி வரை அங்க பங்கம் இல்லாமல் இனிதே நம் இறைத் திருமேனியைப் பேணுவதில் தர்ப்பண சக்திகளும், தான தர்மங்களும் பெரும் பங்கு வகிக்கின்றன.! இறைவன் நமக்களித்த உடலில் எவ்வித பின்னமும் இன்றி நன்னிலையில் மறைதல் மிகவும் சிறப்பானதாம்..! குறித்த நாளில், குறித்த தலங்களில் குறித்த உணவுப் பொருளை அன்னதானமாக இடுவதால் கிட்டும் அன்னதானப் புண்ய சக்தியால் எவ்வித சிறிய அங்க பின்னமுமின்றி நாம் இறுதி வரையில் இறைவன் நமக்களித்த தேகத்தோடு நன்கு பக்தி நிலையுடன் வாழ்ந்திடலாம்.. இதற்காகவே கலியுகத்தில் எளிமையான முறைகளில் பல தெய்வீக அனுகிரகங்களைத் தருவதாக அன்னதானம் விளங்குகின்றது.. எனவேதான் அனைத்து தானங்களிலும் மகத்தானதாக விளங்குவதாக அன்னதானமானது மகரிஷிகளாலும், சித்தர்களாலும் பெரிதும் போற்றப்படுகின்றது..

தான தர்ம, தர்ப்பண சக்தி தலை காத்துப் பிறவித் தளை நீக்கும்!

காடராக்ட், கருப்பை நீக்கம், அப்பெண்டிசிடிஸ் போன்றவற்றிலும் கூட மருத்துவ ஆலோசனையின் பேரில்தான் இந்த அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதாக நமக்குத் தோன்றினாலும் இவற்றிலும் தேகத்தின் சில உள் அங்கங்கள் நீக்கப்படுகின்றன என்பது உண்மைதானே! அறுவை சிகிச்சை ஒன்று கூட இல்லாமல் எவ்வளவோ நோய் நொடிகள் வந்திடினும் எவ்வித அங்கச் சிதைவுமின்றி உயிர் வாழ்தலுக்கு நிச்சயமாக மகத்தான புண்ணிய சக்தி தேவைதாம்! இதற்காகத்தான் சிறு வயதிலேயே உங்கள் குழந்தைகளையும், சிறு சிறு அளவில் தினந்தோறும் அன்னதானம் செய்யப் பழக்கி விட்டீர்களேயானால், இது அவர்கள் நல்ல முறையிலே எவ்வித அங்க பின்னமுமின்றி வாழ்ந்திடத் துணை புரியும்..! சந்ததிகளுக்கும் நல்ல அங்க வளத்தையும் மகத்தான அன்னதானப் புண்ணிய சக்தியையும் பெற்றுத் தந்திடும்..

பிரேத காந்த தோஷங்கள்! எனினும் அங்கச் சிதைவுகளோ, அறுவை சிகிச்சையிலோ விபத்துகளினாலோ மரணம் ஏற்பட்டு விட்டால் அந்தப் பிரேதமானது சில அங்க தோஷங்களோடுதான் ஆன்ம சாந்தி அடையாமல் சுற்றிக் கொண்டிருக்கும்.. இத்தகைய தோஷங்களைத்தான் பிரேத காந்த தோஷங்கள் என்பார்கள். இவற்றை நீக்கக் கூடிய பித்ரு முக்தித் தலங்கள் ஒரு சில மட்டுமே! இவற்றுள் ஒன்றாக நெடுங்குடி அமைந்திருப்பது நம்முடைய பெரும் பாக்யமேயாம்! இந்தத் தலங்களில் இறந்தவருடைய நட்சத்திரம் மற்றும் திதிகளுக்கு ஏற்ப தக்க அன்ன தானங்களையும், வேறு பூஜைகளையும் முறையாகச் செய்து வந்தால் இவ்வாறு இறந்தவர்களுக்குத் தக்க ஆன்ம சாந்தி கிட்டும். இத்தகைய பிரேத தோஷங்களினால் சந்ததிகளுக்கு எத்தகைய இன்னல்கள் ஏற்படும் என்றால், இவர்களுக்கு எந்த அங்கச் சிதைவு உண்டாயிற்றோ, அவற்றிலேயே இவர்களுடைய சந்ததிகளுக்கும், பலவிதமான நோய்கள் வந்து துன்புறுத்தும், எவ்வளவுதான் வசதிகள் இருந்தாலும், நல்ல குடும்பமாக இருந்தாலும் ஏதோ ஒரு தீராத மனக் குழப்பமோ, மனப் பிரச்னையோ இருந்து கொண்டே இருக்கும்... இவற்றிற்குத் தக்க தீர்வுகளைத் தருவதாக அமைவதுதான் நெடுங்குடி போன்ற பித்ரு முக்தித் தலங்களில் செய்யப்படுகின்ற திதித் தர்ப்பண, தான தர்மப் பரிகார நல்வழி முறைகளாகும்.

இவ்வாறாகப் பலவிதமான அறுவை சிகிச்சைகளுடன் இறந்தோர் அல்லது வீட்டில் மரணமடையாது, மருத்துவ மனையில் மரணமுற்றோர், விபத்துகளில் முழுமையான உடலும் கிடைக்காது தகனம் செய்யப்பட்டோருக்காக நெடுங்குடித் திருத்தலத்தில், குறிப்பாக மண்மலையின் தேரோட்டப் பாதையிலும், மலையின் கீழ்ப் பகுதியில் நாக தீர்த்தத்திலும், இங்கு சர்ப நதி தீரத்திலும், மரத் தட்டு, மரத் தாம்பாளம், மரச் செம்பில் கங்கை, காவிரி நீரில் இடஞ்சுழிக் காய், வலஞ்சுழிக் காய் இட்டு நீர் வார்த்து விசேஷமான முறையில் தர்ப்பணம் செய்திடல் வேண்டும்.. தங்க, வெள்ளி, வெண்கலத் தாம்பாளமும் சிறப்புடையதே! எவர்சில்வர் வேண்டாம்! ஆனால் உலோகத்தைவிட மரத்திற்குப் பல தெய்வீக சக்திகள் அதிகமோ அதிகம், எனவேதான், மரத் தாம்பாளம், மரச் செம்பு கொண்டு செய்யப்படுகின்ற தர்ப்பணாதிகள்தாம் விபத்துக்களிலும், வேறு பல காரணங்களினாலும் அங்கங்கள் சிதைந்து இறந்தோருக்குத் தக்க ஆன்ம சாந்தியைத் தந்திடும்..!

அறிவீர் பித்ரு சாந்தியை! இந்த மரத் தாம்பாளத்தில் ஒன்றுதான் உத்தராணி மரத் தாம்பாளமாம், உத்தராணி மர வகைகள் யாவுமே பித்ரு லோகத்திலும், பூலோகத்திலும் மட்டுமே காணப்படுபவை.. ஆதலால்தாம் இத்தகைய தெய்வீக விருட்சங்களைப் பித்ருக்கள் மிகவும் விரும்புகின்றார்கள்.. தேவ லோகங்கள், பித்ரு லோகங்கள், பூலோகங்கள் ஆகிய மூன்றிலுமே பொதுவாகக் காணப்படுகின்ற தேவ செடிகள், தேவ மரங்களில் துளஸி, வில்வம், உத்தராணி, எள்ளுச் செடி, பிரண்டைக் கொடி, புடலைக் கொடி போன்றவை அடங்கும்... இதனால் தான் பித்ரு லோகத்தில் எத்தகைய தாவரங்கள், நீர் வகைகள் காணப்படுகின்றனவோ, அவற்றையே நாம் பித்ரு காரியங்கள் என்று சொல்லப் படுகின்ற சிரார்த்தம், திவசம், தர்ப்பணம், படையல் போன்றவற்றில் பயன்படுத்துகின்றோம்..!

தங்களுடைய லோகத்தில் காணப்படுகின்ற திரவியங்கள், வஸ்துக்கள் என்பதனால் பித்ருக்களும் அவற்றை எளிதில் அடையாளம் கண்டு கொண்டு அவற்றில் ஆவாஹனம் ஆகின்றனர்.. இதனால்தான் எவர்சில்வர், பிளாஸ்டிக், அலுமினியம் போன்றவறை நாம் பித்ருக் காரியங்களில் ஒரு போதும் சேர்ப்பது கிடையாது. தேவர்கள், பித்ரு தேவர்கள், கந்தர்வர்கள், பல்வகை தேவதைகள், தேவ மூர்த்திகள், தெய்வ மூர்த்திகள் அளிக்கின்ற சக்திகள் யாவுமே கோடானு கோடியாம்! ஒவ்வொன்றும் விதவிதமான கர்ம வினைகளைக் கழிப்பதுடன், பல்வகை தேவ சக்திகளையும் தர வல்லவை!

இவர்கள் தங்குகின்ற அல்லது தாங்குகின்ற பொருட்களும் வித்தியாசப்படும்.. உதாரணமாக, வெண்கல மணி, வெண்கலத் தாம்பாளம், பசு வறட்டி, மண் வகையாலான செங்கல், ஹோம குண்டங்கள், ஊதுபத்தி, அத்தர், நறுமணம் பொருந்திய பூக்கள் போன்றவாறாக பூஜைப் பொருட்களின் வகைகள் தேவ பூஜை, தேவதை பூஜை, கந்தர்வ பூஜை, பித்ரு பூஜைகளுக்கென மாறுபடும்! இவற்றை நாம் முறையாக அறிந்து கொண்டால், எந்தப் பொருளை நாம் பூஜையில் பயன்படுத்துகின்றோமோ அதற்குரிய தேவதைகள், தேவாதி தேவர்கள், தெய்வ மூர்த்திகள், கந்தர்வர்கள் தாமாகவே எளிதில் வந்து அருள்பாலிக்கின்றனர்.. ஹோமத்தில் ஆஹூதியாக இடப்படுகின்ற பசு நெய், பழங்கள், மூலிகைத் திரவியங்கள், மூலிகைச் சமித்துகள், அவல், பொரி, நவதானியங்கள் இவற்றிற்கேற்ப அந்தந்த லோகத்திலிருந்து தேவதைகளும், தேவதா மூர்த்திகளும் வந்து வேள்விக் குண்டத்தில் ஆவாஹனம் ஆகி நமக்கு அருள்தருகின்றனர்.. எனவே, எந்தக் கஷ்டங்களால் பூலோக சமுதாய்ம் துன்பப்படுகின்றதோ, அந்தக் கஷ்டங்களை நிவர்த்தி செய்யக் கூடிய தேவ மூர்த்திகளுக்கான தேவ பூஜை முறைகளை சற்குருமார்களே அறிவார்கள்! ஆதலின் சற்குருவின் பரிபாலனமே கலியுகத்தில் முக்தி, மோட்ச நிலைகளைத் தருவதாகும்...!

மழையை வர்ஷிக்கும் வருண ‘தாதுக்கள்‘! உதாரணமாக, மழைப் பொழிவு இல்லை என்றால் இதற்கு அருள்பாலிக்கக் கூடிய வருண தேவதைகளையும், வருண மூர்த்தியையும் பிரார்த்தனை செய்வதற்காக விசேஷமன வருண ஜப ஹோம குண்டம் நிர்மாணிக்கப்பட வேண்டும். இவற்றில் உள்ள ஹோமச் செங்கற்களில் வருண பகவானுக்கு மிகவும் ப்ரீதியான ஜவ்வாது கலந்த விபூதி, குங்குமப்பூ கலந்த குங்குமத்தைப் பூசி வருண ஹோமத்தை நடத்துதல் மிகவும் சிறப்புடையதாம்.. மேலும் வருண பகவானுக்கு மிகவும் ப்ரீதியான பொருட்களான தேன், தேன் சுவை கொண்ட பழங்கள் (பலா, திராட்சை) அமிர்த சக்திகள் நிறைந்த திரவியங்கள் (மாசிக்காய்) ஆகியவற்றை ஆஹூதிகளாக இடும்போது, வருண தேவதைகள் மிகவும் ஆனந்தித்து மேகங்களைத் தருவித்து மழையைப் பொழிவிக்கின்றன..!

அங்கம் சிதைந்து இறந்தோர்க்கும் ஆன்மசாந்தி அளியுங்கள்!

விபத்துகளில் அங்கச் சிதைவுடனும் இறந்தோருக்கு ஆன்ம சாந்தி நிலையைத் தந்திட, உத்தராணி மரத் தாம்பாளத்தில் முல்லை, மல்லிகை போன்ற வெண்ணிற நறுமணப் பூக்களைப் பரப்பி அதன் மேல் தர்ப்பைச் சட்டம் இட்டுத் தர்ப்பணம் அளித்திடுதல் வேண்டும்.. அமாவாசையன்று சித்த யோகத்திலோ, அமிர்த லோகத்திலோ இத்தகைய தர்ப்பணத்தை அளித்து அங்க பூஷண சக்திகள் நிறைந்த காய்கறிகளை, பண்டங்கள் கூடிய உணவு வகைகளை அன்னதானமாக அளித்தால் மேற்கொண்டோருக்குத் தக்க ஆன்ம சாந்தி கிட்டும்..!

அங்க பூஷண சக்திகள் நிறைந்த காய்கறிகள், திரவியங்கள் யாவை தெரியுமா? புடலங்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய், மிளகு, ஜீரகம் போன்றவை ஆகும்.. கலியுகத்தில் அங்கச் சிதைவுகள் ஏற்படுகின்ற வகைகளில் எலும்பு முறிவும் ஒன்று தானே! மேற்கண்ட காய்கறிகள் யாவும் எலும்புக்கு உரிய தேவதைகளுடைய ஆகர்ஷண சக்திகளைப் பெற்றமையால் இவற்றைக் கொண்டு அன்னதானம் செய்வித்தால் அங்கங்கள் பின்னமாகி இறந்தோருக்குத் தக்க ஆன்ம சாந்தி கிட்டும்..!

கர்பம் நழுவுதல், இயற்கையான முறையில் சிசுக்கள், குழந்தைகள் இறத்தல் போன்றவை நிகழ்வதும் உண்டு.. இவை அங்க பின்ன வகையில் சேர்ந்திரா விட்டாலும் இவர்கள் பரிபூரணமான ஆயுளைப் பெறாமல் அல்ப ஆயுசு என்று சொல்லப்படுகின்ற இள வயதிலேயே இறந்து விடுகின்ற தன்மையால் இதனால் அவர்களுடைய மானிட தேக வாழ்வு பரிபூரணம் பெறாமல் சற்றே தொக்கி நிற்கும் அல்லவா? இவையாவும் தேக கிரந்திகள் அதாவது, அவய நாள முடிச்சுக்கள் என்ற வகையில் ஆன்ம சாந்தி பெறாது தொக்கி நிற்கும்..!

வஸ்த்ர காய விபூதித் தர்ப்பண முறை! சிறுவயதிலேயே, அல்லது நடுத்தர வயதிலேயே இறந்தவர்களுடைய ஆன்ம சாந்திக்காக நெடுங்குடித் திருத்தலத்தில் உள்ள நாக தீர்த்தத்திலோ அல்லது சர்ப தீர்த்தக் கரையிலோ வஸ்த்ர காய விபூதித் தர்ப்பண முறையைப் பின்பற்றிட வேண்டும்.. அதாவது பசுஞ் சாணம் கொண்டு தட்டிய வறட்டியை நன்கு ஸ்புடம் போட்டுத் தயாரிக்கப்பட்ட விபூதியைப் பருத்தித் துணியால் சலித்துப் பெறுவதே வஸ்த்ர காய விபூதி ஆகும்.. மிகவும் சக்தி வாய்ந்தது, நன்கு முறையாகச் செய்யப்பட்ட ஹோமத்தில் இருந்து ஹோம குண்டம் நங்கு குளிர்ந்த பின் கிடைக்கின்ற ஹோம பஸ்மத்தையும் வஸ்த்ர காய விபூதியாக ஏற்கலாம்..!

சிசுக்களையும் சிந்தையிலிருத்துவீர்! பித்ருக்களுக்கு ப்ரீதியான வண்ணங்களில் கறுப்பு அல்லது கருநீல நிறமும் அடங்கும், கறுப்பு வண்ணத்தில் அல்லது கருநீல வண்ணத்தில் ஒரு புதுத் துணியைத் தரையில் விரித்திடுக! அதன்மேல் உத்தராணித் தாம்பாளத்தை வைத்து இதில் தர்ப்பணச் சட்டம் அமைத்து மேற்கண்ட வகையில் வஸ்த்ர காயம் செய்யப்பட்ட விபூதியையோ, ஹோம பஸ்மத்தையோ நீரில் கரைத்து வைத்துக் கொண்டு இளவயதிலேயே இறந்தரவர்களின் பெயரைச் சொல்லித் தர்ப்பணம் அளிக்க வேண்டும்.. சிசுக்களுக்கும், பூணூல் போடும் வயது வருவதற்குள் இறந்தவர்களுக்கும் சிரார்த்தம், தர்ப்பணம் கிடையாது என்று சிலர் எண்ணுகின்றனர்.. இது தவறானதாகும். இறந்த அனைவருக்குமே தர்ப்பணம் உண்டு.. நமக்கு உறவினர்களாக இல்லாதவர்களுக்கும் கூட காருண்யத் தர்ப்பண முறையிலே மகத்தான சமுதாய பூஜையாக யாவருக்குமே தர்ப்பணம் அளித்திடலாம்..!

மேற்கண்ட இந்த வஸ்த்ர காயத் தர்ப்பணத்திற்குப் பின் சூர்ய காஷ்ட சக்திகள் நிறைந்த காய்கறிகளையோ, திரவியங்களையோ, உணவையோ (அன்ன) தானமாக அளித்தல் வேண்டும். இந்தச் சக்தியின் அம்சம் என்னவென்றால் நன்கு காய்ந்த பின்னரும் பயன்படுகின்ற பொருட்களாக பலாச சக்தி கூடிய பொருள் வகைகள் உண்டு. வெங்காயம், பூண்டு, கிழங்கு வகைகள், மிளகு, சீரகம், சோம்பு இவ்வகையைச் சார்ந்தவையாம்..!

பித்ரு தர்ப்பணத்தில் வெங்காய, கிழங்கு வகைகள்! படையல், சிராத்த, திவச காரியங்களில் வெங்காயத்தைப் பயன்படுத்தலாமா என்ற கேள்வி எழும்.. இறந்தவருடைய ஆன்ம நிலையைப் பொறுத்தும், இறந்த சந்தர்ப்ப சமயங்களைப் பொறுத்தும் திவசக் காரியங்களில் வெங்காயத்தை சில இடத்தில் பயன்படுத்தியே ஆக வேண்டும்! ஆசார அனுஷ்டானமாக வாழ்ந்தோருக்கும், கயாவில் இவற்றைத் தியாகம் செய்தோர்க்கும் பொதுவாக வெங்காயம், பூண்டு சேர்ப்பது கிடையாது. ஆனால், கலியுகத்தில் கிட்டத்தட்ட அனைவருமே மாமிச உணவு, ஏற்போராகவும், மசாலாப் பிரியர்களாகவும் இருக்கின்றபோது, இறந்த பின்னரும் இதே விருப்பு வெறுப்புகளோடுதான் அவர்களுடைய சஞ்சார உடல்களும் தவிக்கின்றன.!

ஒருவர் இறக்கும்போது தன்னுடைய ஆசைகள் அனைத்தையும் தவிர்த்து இறந்தால்தான் அவருக்கு ஏனைய பிறவிகள் தோன்றிடாது! ஆனால், மசால் வடைமீதும், மணமுள்ள பிரியாணி, பிரிஞ்சி சாதத்தின் மேலும், வகை வகையான இனிப்புக்களின் மீதும் நிறைய ஆசைகளைப் பதுக்கிப் பெருக்கிக் கொண்டு தனக்குச் சர்க்கரை வியாதி வந்து விட்டதே, இனிப்பைச் சிறிதளவு கூட உண்ண முடியவில்லையே, தனக்கு ப்ளட் பிரஷர் வந்து விட்டதே, வெண்ணெய், நெய், கிழங்கு வகைகளைச் சேர்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்துடன் இறந்துவிட்டால் அவற்றை ஆசை தீரத் தின்று தீர்ப்பதற்காகவே நிறைய பிறவிகள் தோன்றும்.. எனவே பித்ரு திவச உணவு வகைகளில் கிழங்கு வகைகளைச் சேர்ப்பதில் தவறில்லை.!

அருமை ஆசையை அறுங்கள்! எனவே இந்தப் பிறவியில் உங்களுக்கு ஏதேனும் ஒரு உணவுப் பண்டத்தின்மேல் அலாதியான ஆசை ஏற்பட்டிருந்தால் இதற்கு முந்தைய ஜன்மத்திலோ, ஜன்மங்களிலோ உங்களால் தேவையான அளவு தின்று திருப்தி அடையாமல் இ(ரு)றந்திருக்கின்றீர்கள் என்று பொருள்.. எனவே அந்த ஆசைதான் தற்போது அல்வா, மைசூர்பாகு, பலாப்பழ ஆசைகளாகத் துளிர் விட்டிருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.! உங்களுடைய வாழ்நாளினுள் ஒன்று நியாயமான தார்மீகமான முறையிலே தான் விரும்புகின்ற உணவுப் பொருட்களை எல்லாம் அனுபவித்துத் தின்று தீர்த்து ஆசையை அறுப்பது அல்லது கயா போன்ற திருத்தலங்களுக்குச் சென்று அந்த ஆசையினை விலக்கிடுங்கள்! இரண்டாவதைக் கடைபிடிப்பது மிகமிகக் கடினம், ஆனால் மிகவும் தேவசக்தி நிறைந்த வைராக்யமிது!

உங்களுக்கு ஒரு பொருளின் மீது அளவற்ற ஆடை ஏற்பட்டு, உங்கள் உடல் நோய் காரணமாக அதனைத் தின்ன முடியாது என்ற நிலை ஏற்படும்போது, எவ்வாறு ஆசையைத் தீர்த்துக் கொள்வது? உதாரணமாக, உங்களுக்கு உயர்ந்த இரத்த அழுத்தம் இருந்தால் வெண்ணெய், நெய், கிழங்கு வகைகள் போன்ற கொழுப்புச் சத்துக்கள் நிறைந்த வடை, போண்டா, இனிப்பு, வகையறாக்கள் எதுவுமே சாப்பிட முடியாது.. ஆனால் ஆசை உள்ளூர இருந்திடும்! இதனை எவ்வாறு நிவர்த்தி செய்வது? இந்தப் பிறப்பிற்குள் இத்தகைய ஆசைகளுக்கு எவ்வாறு முற்றுப் புள்ளி வைப்பது?

தானம் தரும் நோய் நிவாரணம்! ஆன்மீகத்தில் இதற்கும் மிகமிக எளிமையான தீர்வைத் தந்திருக்கின்றார்கள்.., உடல் நோய் காரணமாக எந்த உணவுப் பண்டங்களை உங்களால் நிறைய உண்ண முடியவில்லையோ, எந்த உணவுப் பொருளின்மீது உங்களுக்கு அபரிமிதமான ஆசையும் மோகமும் பெருகிவிட்டதோ, அந்த உணவுப் பண்டத்தையே பிறர் நன்கு திருப்தியுடன் சாப்பிடும் வண்ணம் நிறைய அன்னதானம் செய்திடுங்கள். உதாரணமாக, உயர்ந்த இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் வெண்ணெய், நெய் கலந்த உணவுப் பண்டங்களை (நெய் தோசை, வெண்ணெய் ஆடை போன்றவை) நிறைய அளவில் தானம் செய்திடுங்கள், அதேபோன்று சர்க்கரை வியாதியஸ்தர்கள் மைசூர்பாகு, லட்டு, அல்வா போன்ற இனிப்புப் பொருட்களை நிறைய தானம் செய்ய வேண்டும்.. இத்தகைய அன்னதானத்தில் எழுகின்ற புண்ணிய சக்தியானது உங்களுடைய ஆசைகளைத் தாமாகவே தணித்துவிடும்..!

உங்களுக்கு உண்மையிலேயே இறைவன்மீது ஆழ்ந்த நம்பிக்கை இருக்குமேயானால் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கூட (லௌகீக நியதிக்காக ஏதோ ஓரளவு சித்த, ஆயுர்வேத மருந்துகளை ஏற்றுக்கொண்டு) நிறைய இனிப்புக்களை தானமாகத் தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயமாக சர்க்கரை நோயின் கடுமைகளைத் தவிர்த்திட முடியும்.. நீங்கள் ஒரு சற்குருவின் பரிபாலனத்தில் ஆட்படும்போது தக்க சற்குருவே உங்களுடைய நோயானது ஆன்மப் பணிகளுக்கு இடையூறாக இருக்குமேயானால் அத்தகைய நோய்களைத் தம் உடலில் ஏற்றுக் கொண்டு உங்களுக்கு இறை ஆக்கமும், ஊக்கமும் தந்து நற்பணிகளைச் செய்ய வைத்திடுவார்கள்..! தனக்கு இத்தனை நாள்வரை இத்தகைய நோய்கள் இருந்தன, சற்குரு பரிபாலனத்தில் இறைப்பணிகளைச் செய்ய ஆரம்பித்தவுடன் நோயின் கடுமை தணிந்து விட்டது. நோயும் தீர்ந்து விட்டது என்று சத்சங்க அடியார்கள் சொல்வதற்குக் காரணமே, அந்த சற்குருவானவர் தன்னுடைய உடலில் அத்தகைய நோயின் கடுமைகளை ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதேயாம்!

கேளாமலேயே கோடிப் பரிகாரம் தரும் சற்குரு! நிறைய தலைமுறைகள் இருந்தாலும் ஒவ்வொருவரும் குறைந்தது 24 தலைமுறைகளுக்காவது தர்ப்பணம் அளித்திடல் வேண்டும்.. ஒரு தலைமுறை என்று சொல்லும்போது 24 முந்தைய மூதாதையர்களையே நாம் குறிப்பிடுகின்றோம்.. ஆனால் தர்ப்பணம் இடும்போது இந்த 24 தலைமுறைகளின் பெயர்களை நம்மால் நினைவுகொள்ள முடிகின்றதா? ஆனால் 24 தலைமுறைகளுக்கும் பரிபூரணமாகத் தர்ப்பணம் அளித்தால்தான் நம்முடைய மூதாதையர்கள் நல்ல பித்ருக்கள் நிலைக்கு உயர்த்தப்படுவார்கள். இதற்காகத்தான் ஒருவர் சற்குருவின் அருளாணைக்குத் தம்மை ஆட்படுத்திக்கொண்டால் அந்த சற்குருவே பலவிதமான இறைப்பணிகள், ஹோம வழிபாடுகள், அன்னதானம், வஸ்திர தானம், காலணி தானம், மாங்கல்ய தானம் போன்ற பலவிதமான தான தர்மங்களின் மூலம் 24 தலைமுறைகளுக்குத் தர்ப்பணம் அளிக்காத குறைகளைப் போக்கி, பலவிதமான புண்ய சக்திகளின் மூலம் அக்குறைகளை நிவர்த்தி செய்து விடுகின்றார்!

தற்போது கடந்த மூன்று தலைமுறைகளுக்கு மட்டுமே தர்ப்பணம் அளிக்கின்ற பழக்கம் நிலவி வருகின்றது.. தர்ப்பண மந்திரங்களை, பூஜைகளை முறையாகச் செய்யாதோர் கூட படையல் என்ற பெயரில் வருடம் தோறும் குறித்த நாளில் பலருக்கும் அன்னதானம் செய்து விடுகின்றார்கள்.. இந்த அன்னதானப் புண்ணியச் சக்திதான் முறையாக நிறைவேற்றிடாத பல தர்ப்பண பூஜைகளுக்கு மாமருந்தாக, ஆன்ம நிவாரணியாக அமைகின்றது என்பதை இனியேனும் புரிந்துகொண்டு அன்னதானத்தை தினந்தோறும் அவரவர் வசதிக்கேற்ப செய்து வாருங்கள்..

அனுதினமும் அன்னதானம்! ஒவ்வொரு நாள் இரவு படுக்கும்போது இன்று குறைந்தது ஒருவருக்காவது அன்னதானம் செய்தோம் என்ற் மன நிறைவோடு உறங்குங்கள்..! இதற்காகத்தான் அக்காலத்தில் அதிதி போஜனம் என்ற ஒன்றை ஏற்படுத்தி இரவுப் பொழுதில் 7 மணிக்கு ‘அதிதி போஜனம், அதிதி போஜனம், அதிதி போஜனம்’ யாராவது சாப்பிட இருக்கின்றார்களா என்று வீதி முனைக்கு வந்து குரல் கொடுப்பார்கள் அப்போது யாத்ரீகர்கள் பல திருத்தலங்களுக்கும் நடைவழியாகச் சென்ற காலம். ஆதலால் அக்காலத்தில் பல வீடுகளில் திண்டுத் திண்ணைகள் இருக்கும்.. அத்தகைய யாத்ரீகளுக்குத் தினந்தோறும் அதிதி போஜனம் அளித்து, வீட்டுத் திண்ணையிலேயே படுக்க வசதியும் அளித்த காலம் அது. ஆனால் தற்காலத்தில் இது நடைமுறையில் சாத்தியமா?

எவர் நல்லவர், எவர் கெட்டவர் என்று இனம் பிரிகின்ற நிலையிலா தற்காலம் உள்ளது? இதற்காகத்தான் நீங்கள் வேத சக்திகள் நிறைந்த மந்தார இலையில் கட்டப்பட்ட ஒரு உணவுப் பொட்டலத்தையாவது தினந்தோறும் அன்னதானமாகப் பிறருக்கு அளியுங்கள்.. இதற்காகவே, நிறைய மந்தார இலைகளை வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். காலை, மதியம், மாலை அல்லது இரவு எந்த நேரத்திலும் அலுவலகத்திற்கோ, கடைக்கோ செல்லும்போது ஒரு உணவுப் பொட்டலத்தையாவது எடுத்துச் சென்று பிறருக்கு அளியுங்கள்.. உங்களிடமிருந்து அன்னம் பெறுபவர் ஏழையாகவோ, நடுத்தரக் குடும்பத்தினராகவோ அல்லது ஏன், பெரும் பணக்காரராகவோ கூட இருந்திடலாம்..பசியால் வாடும் எவருக்கும் நீங்கள் அந்த உணவுப் பொட்டலத்தை அளித்திடலாம்..!

சமய சந்தர்ப்பத்திற்குப் பணமோ, வசதிகளோ வந்து உதவிடாது.. ஏனென்றால் பெரிய பெரிய காரில் கிரிவலம் வருகின்ற லட்சாதிபதிகள் கூட கார் நின்று போனால் ஒரு வாய்த் தண்ணீருக்காக அருகில் உள்ள ஓலைக் குடிசை வீடுகளை நாடுவதை நாம் காண்கின்றோம் அல்லவா? எனவே, எலுமிச்சைப் பழ ரசம் போன்று ஏதேனும் பழ ரசத்தைக் கலந்து அளித்தால் கூட அதுவும் அன்னதானத்தின் ஒரு வகைதான், ஏன் உங்களால் ஒரு டம்ளர் மோர் கூடக் கொடுக்க முடியாதா? சற்றே சிந்தித்துப் பாருங்கள்! இறைவனுடைய மெய்ஞ்ஞான விஞ்ஞானம்தான் பழுதில்லாதது, பரிசுத்தமானது, ஜீவ பரிபாலனத்துக்குப் பெரிதும் உதவுவது, என்றும் நிலைத்து நிற்பது, எத்தகைய பக்க விளைவுகளும் இல்லாதது என்பதை இனியேனும் புரிந்து கொள்ளுங்கள்..

இவ்வாறாக பித்ரு முக்தித் தலமாக விளங்குகின்ற நெடுங்குடியில் அதிஅற்புதமான விசேஷமான தர்ப்பணங்களின் மூலமாகப் பலவிதமான பித்ரு சாபங்களுக்கும், பித்ரு தோஷங்களுக்கும் எளிதில் பரிகாரங்களைப் பெற்றிடலாம்.. இத்தகைய தர்ப்பணங்களை முடித்தவுடன் நெடுங்குடி திருமண்மலையை கிரிவலம் வந்து, ஆலயத்தின் வெளிப் பிரகாரத்திலும் வலம் வந்து ஸ்ரீபிரசன்ன நாயகி சமேத ஸ்ரீகைலாச நாதரைத் தரிசிக்க வேண்டும்..! இதுவே தர்ப்பண சக்திகளின் பரிபூரண பலன்களைப் பெற்றுத் தரும்.. இது அமாவாசை தினத்திற்கு உரித்தானத் தர்ப்பண கிரிவல முறையாகும். நெடுங்குடியில் கடைபிடிக்க வேண்டிய மேலும் பலவிதமான தர்ப்பண முறைகளைத் தக்க சற்குருவை நாடி அறியவும்.

நெடுங்குடி

நெடுங்குடி ஸ்ரீபிரசன்ன நாயகி சமேத ஸ்ரீகைலாச மூர்த்தி

அமாவாசை, பௌர்ணமி கிரிவலத்திற்கு உன்னதமான பித்ரு முக்தித் திருத்தலம்! கடந்த இதழில் காரைக்குடி – அறந்தாங்கி இடையே கீழாநெல்லிக் கோட்டையில் இறங்கி, இங்கிருந்து மூன்று கி.மீ தொலைவில் உள்ள நெடுங்குடி மண்மலைத் தலத்தின் சிறப்புகளைப் பற்றிச் சித்புருஷர்களின் ஞானபத்ர கிரந்த வேத வாக்கிய சாராம்சத்தை ஒரு சிறு துளியாய் சற்குருவின் திருவருளால் விளக்கியுள்ளோம் அல்லவா! இதைப் பற்றி நமக்கு நிறைய கடிதங்கள் வந்துள்ளமையோடு பலரும் நெடுங்குடியில் கிரிவலத்தை மேற்கொண்டு வருவதாகவும் நற்செய்திகள் வந்துள்ளன..!

அசுவினி தேவர்களும், மருத்துவ தேவதா மூர்த்திகளும் கிரிவலம் வருகின்ற பித்ருத் தலமே நெடுங்குடியாம்! அமாவாசை, பௌர்ணமியில் கிரிவலம் வர வேண்டிய பித்ரு முக்திச் சிவத் தலமே நெடுங்குடியாம்! அமாவாசைத் தர்ப்பண பூஜைக்கு உகந்த ஆதிகாலத் தலமே சர்ப்ப நதிக் கரைத் தலமாம் நெடுங்குடியாம்!

நெடுங்குடி

நமஸ்கரிப்பீர், நலம் பெருக்குவீர்! மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய முச்சிறப்புகள் உடையதே நெடுங்குடியாம்.. மண் மலை மேல் ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தைச் சுற்றி மிகப் பெரிய பிரகாரத்தில் அமாவாசையன்று நமஸ்காரப் பிரதட்சிணம் செய்வது மிகவும் சிறப்புடையதாம்.. திருக்கயிலாய மலையில் திபெத்திய லாமாக்கள் இவ்வகையில்தாம் சுமார் 43 கி.மீ சுற்றளவுள்ள கயிலாய மலையை கிரிவலம் வருகின்றனர்! ஸ்ரீஅக்ரூரர் என்பார் மகாபாரத்தில் அனைவருக்கும் நமஸ்காரம் செய்கின்ற தெய்வீகப் பண்பைக் கொண்டு பெறுதற்கரிய முக்தியை அடைந்தார்.. இவர் பிரபஞ்சத்தில் அனைத்து அவதார மூர்த்திகளின் அற்புதத் தரிசனம் பெற்று அனைவருக்கும் நமஸ்காரப் பிரதட்சிணம் செய்கின்ற மிகமிக அரிதான தெய்வீக பாக்கியம் பெற்றவராவார். எண்ணற்ற மகரிஷிகள், யோகியர்கள், சித்தர்களையும் நமஸ்கரிக்கும் பாக்யம் பெற்று நமஸ்கார பூஜையால் முக்தி, மோட்ச நிலைகளைப் பெற்றவர்!

ஸ்ரீஅக்ரூரர் போன்று அருணாசலமாம் திருஅண்ணாமலையிலும் நமஸ்காரப் பிரதட்சிணம் செய்வது ஏகாதச கிரிவலப் பலன்களைத் தருவதாகும்.. அதாவது அண்ணாமலையை ஒரு முறை நமஸ்காரப் பிரதட்சிணம் செய்திடில் பதினொரு முறை நடந்து ஏகாதசி கிரிவலம் வந்த பலன்களைப் பெற்றிடலாம்! மயூர கவி என்பார் அருணாசலத்தை நமஸ்காரப் பிரதட்சிணம் செய்து தம்மை அண்டிய பெரும் காம, மோகத் தீவினைகளுக்குப் பெரும் பிராயச்சித்தம் பெற்று மயூர சதகம் என்னும் சக்தி வாய்ந்த துதிகளை இயற்றினார்!

நெடுஞ்சாண் கிடைப் படித் துதி! நமஸ்காரப் பிரதட்சிணத்தைத் தமிழில் நெடுஞ்சாண் கிடைப் படித் துதி என்று விளிக்கின்றார்கள்.. அதாவது நெடுஞ்சாண் கிடையாகத் தரையில் வீழ்ந்து ஒருமுறை வணங்கி எங்கு தரையில் தலை பட்டதோ அவ்விடத்திலிருந்து மீண்டும் கீழே வீழ்ந்து நமஸ்கரிக்க வேண்டும். இவ்வாறு ஒரு பிரகாரம் அல்லது மலைப் பாதை முழுவதும் வீழ்ந்து வீழ்ந்து நமஸ்கரித்து பிரதட்சிணம் செய்வதே நமஸ்காரப் பிரதட்சிணம் ஆகும்.! நெடுங்குடியில் மண் மலை மீது ஆலயத்தைச் சுற்றிய பிரகாரத்தில் தேரோடும் பாதையில் நமஸ்காரப் பிரதட்சிணம் செய்வது மகத்தான பலன்களைத் தருவதாகும்... குறிப்பாக பல நாட்களாக, வருடங்களாகத் தடைபட்டிருக்கும் நற்காரியங்கள் காரிய சித்தி ஆவதற்கு இந்த நமஸ்காரப் பிரதட்சிணம் மிகவும் சிறப்புடையதாகும்! இதனால் உடலும், ஆடைகளும், தலைமுடியும் அழுக்காகி விடுமே என்று எண்ணாதீர்கள். அழுகிய தீய கர்ம வினைகளால் பழுதாகிக் கொண்டிருக்கும் இவ்வுடலுக்கு நமஸ்காரப் பிரதட்சிணமே அருமருந்தாகும்!

நெடுங்குடி

நல்வரம் தரும் நமஸ்கார வஸ்திரம்!

இதற்காகவே அக்காலத்தில் ஒரு பெரிய துண்டையோ, வேஷ்டியையோ தரையில் விரித்து அதில் நமஸ்காரம் செய்து, பிறகு எழுந்து தலை வைத்த இடத்தில் மீண்டும் துணியை விரித்து அங்கே நின்று மறுபடியும் நமஸ்காரம் செய்வார்கள் இதற்காகவே நமஸ்கார வஸ்திரம், நமஸ்கார வேஷ்டி, நமஸ்காரத் துண்டு ஆகியவற்றை ஆலயங்களில் தானமாகத் தருவதை நம் பெரியோர்கள் பெரும் பாக்கியமாக கொண்டிருந்தார்கள்.. அதாவது நெடுங்குடி போன்ற மிகப் பெரிய பிரதட்சிணப் பாதை உள்ள ஆலயங்களில் பக்தர்கள் நமஸ்காரப் பிரதட்சிணம் செய்வதற்கு வஸ்திரங்களைத் தானமாக அளித்தல் பெரும் புண்ணியம் தரும் காரியமாகும்..!

இவ்வாறு நூற்றுக் கணக்கான அடியார்கள் நமஸ்காரப் பிரதட்சிணம் செய்த நமஸ்கார சக்திகள் நிறைந்த வஸ்திரத்தை – மண் சேர்ந்து எவ்வளவு மண் படிவு பட்டு இந்நெடுங்குடி மண்ணிற்கான மகத்தான குங்குமச் சிகப்பு நிறம் அடைந்தாலும் சரி, அந்த வஸ்திரத்தை ஆலயப் பிரசாதமாகப் பெற்று உடலில் அணிந்திடில் பலவிதமான நோய்கள் தீர்வதைக் கண்கூடாக உணர்ந்திடலாம்.. இதிலும் குறிப்பாக சோம வார அமாவாசை பிரதட்சிணம் என்று அழைக்கப்படுகின்ற திங்கட்கிழமையில் அமாவாசை கூடுகின்ற நாளிலும், சிவனுக்குரிய திங்கட்கிழமை, திருவாதிரை, வியாழன், பிரதோஷம், பௌர்ணமி மற்றும் நோய் தீர்க்கும் மருந்து உட்கொள்ளும் நாட்களிலும், அஸ்வினி, ஆயில்யம், போன்ற நாட்களிலும் நெடுங்குடியில் நமஸ்காரப் பிரதட்சிணம் செய்வதால் பல கடுமையான நோய்களுக்கும் தக்க துரித நிவாரணம் கிட்டும்..!

நெடுங்குடியானது ஆதி, காலந் தொட்டே இத்தகைய நமஸ்காரப் பிரதட்சிணத்திற்கு மிகவும் சிறப்பான புனிதத் தலமாகும்.. அகஸ்திய மகரிஷி, நாரதர், ஞானியாம் ஜனக மகாராஜா, குபேர பகவான், அஸ்திர தேவர், நள மகாராஜா, விதுரன், பஞ்ச பாண்டவர்கள் , முசுகுந்த சக்கரவர்த்தி போன்றோர் நமஸ்காரப் பிரதட்சிணம் செய்திட்ட அதியற்புதத் தலமே நெடுங்குடியாகும்..! நெடுங்குடி என்ற தலப் பெயர் வந்த காரணமே எத்தகைய ஜீவன்களையும் இறைமையில் குடிமைப்படுத்துகின்ற குடியோனே நெடுங்குடியானாம் படிக்காசுநாதப் பெம்மானாம் ஸ்ரீகைலாசப் பெருமான் ஆவார்..

நெடுங்குடி

குருவார பூஜை கூட்டும் அருமருந்து :- அகங்காரம், ஆணவம், கர்வம் ஆகியவற்றை அறுத்து நெடுஞ்சாண்கிடையாய்த் தன் திருச்சந்நிதியில் வீழ வைத்துத் தன் திருப்பாதங்களில் பணிவோரை ஆட்குடிமைப் படுத்துபவரே நெடுங்குடிப் படிக்காசு நாதர், முப்பத்து முக்கோடி தேவர்களும் அமிர்தம் உண்டு அகங்கார ஆணவத்தால் ஆடி ஆர்ப்பரித்தபோது அவர்கள் அகங்காரத் தீயில் மாய்ந்திடாது இருக்க, குருபகவானாகிய பிரகஸ்பதி அவர்களை குரு வாரமாகிய வியாழனன்று குருஹோரையில் இங்கு நமஸ்காரப் பிரதட்சிணம் செய்ய வைத்து அவர்களுடைய ஆணவத்தைப் பஸ்மம் செய்து அமிர்த சஞ்சீவித்வத்தை அவர்களிடம் நெறிப்படுத்தினார்! இதே போன்று அசுரர்களும் கர்வத்தால் குதித்துக் கும்மாளமிட்ட போது சுக்கிர பகவானாகிய சுக்கிராச்சாரியார் அவர்களைத் திங்கட்கிழமை சந்திர ஹோரையில் இங்கு நமஸ்காரம் செய்ய வைத்து அவர்களின் ஆணவ மாயைகளைக் களைந்தார். எனவே தான் பதவி, செல்வம், புகழ், கீர்த்தி, வலிமை, ஆள்பலம், பணபலம், அரசியல், செல்வாக்கு, அதிகாரம், கல்வி, ஞானம், பெரும் பதவி போன்றவற்றால் பிறரைத் துச்சமாக மதித்து ஆட்டம் ஆடியோர் என்றேனும் ஒருநாள் துவண்டு தான் ஆக வேண்டும்.. ஆனால் துவண்டபின் நோய்களும், வாதனைகளும், மனவேதனைகளும் சூழும்போது இறைவனையா எண்ண முடியும்? எனவே மேற்கண்டவற்றால் சேர்த்துக் கொண்ட பலத்த தீவினைகளுக்கும் நமஸ்காரப் பிரதட்சிணம் மூலமாகத் தீர்வளிக்கும் தலமாக விளங்குவதே நெடுங்குடியாம்.!

அமாவாசைத் தர்ப்பணத்திற்கு அற்புத நெடுங்குடி!

அமாவாசையன்று இங்கு ஆலயத்திலிருந்து ஒரு பர்லாங் தொலைவில் உள்ள சர்ப நதி தீரத்தில் தர்ப்பணம் செய்த பிறகு ஆலயத்தில் அடிப் பிரதட்சிணமும், சிவந்த மண் பாதை உள்ள நீண்ட வெளிப் பிரகாரத்திலும் அடிப்பிரதட்சிணமும், நடைப் பிரதட்சிணமும், நமஸ்காரப் பிரதட்சிணமும் செய்திடில், எதிர்பாராத முறையில் வியக்கத் தக்க நற்காரிய சித்திகளைத் தரும். மலையின் கீழே உள்ளது நாக தீர்த்தமாகும். இது குடிநீராகப் பயன்படுவதால் தற்போது இதனை அனைவரும் மிகவும் பத்திரமகவும், ஊர்க் கட்டுப்பாடுடனும் காக்கின்றனர்.. குளத்து நீருக்குப் பங்கமின்றி நீரைச் சிறிய மரக் குவளையிலோ அல்லது மிண்டு ரங்கக் குவளை எனப்படும் மூங்கில் குவளையிலோ நீரெடுத்து குளக்கரையில் தரையில் தர்ப்பணம் செய்திடலாம். வசதியுள்ளோர் இங்கு தர்ப்பண மண்டபம் அமைத்துத் தந்து, காசி, கயா, ராமேஸ்வரம் போல் ஜாதி, மத, இன, குல பேதமின்றி, யாவரும் இந்த பித்ரு முக்தி தலத்தின் தர்ப்பண சக்தியைப் பெறும் வகையில் இறைப் பணிகளை ஆற்றினால் இது மகத்தான பாக்கியங்களைச் சந்ததிகளுக்குப் பெற்றுத் தரும்.! நற்சந்ததி தழைக்கும்!

குறிப்பாக சந்ததி இல்லாமலோ அல்லது ஆண் சந்ததி இல்லாமலோ வேதனைப் படுவோர் அமாவாசைதோறும் இந்தப் பித்ருத் தலத்தில் பல ஏழை எளியோரும் தர்ப்பணப் பூஜை செய்யும் வகையில் கங்கை, காவிரி போன்ற புண்ய நதித் தீர்த்தங்கள், புனிதமான மூங்கில் குவளைக்ள், மரச் செம்புகள், தர்பைகள், பவித்திரம் ஆகிய தர்பையினாலான மோதிரங்கள், உத்தராணி மரத் தாம்பாளம் அல்லது வெண்கலத் தாம்பாளம், எள் போன்றவற்றை இங்கு கொண்டு வந்து தக்க பெரியோர்கள் மூலமாகப் பலருக்கும் இலவசமாகத் தர்ப்பண பூஜைகளைச் செய்து தருதலானது சந்ததிகளுக்கான நல்வழிமுறைகளைப் பெற்றுத் தரும்.. காசி, திருவிடைமருதூர், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பத்ரிநாத், கோடிக்கரை, கயா, திரிவேணி சங்கமம் (அலாகாபாத்) போன்ற பித்ரு முக்தித் தலங்களின் சிறப்பான பல பலன்களையும் பெற்றுத் தரும்!

ஸ்ரீகோடீஸ்வர மூர்த்தி
கொட்டையூர்

ஜெயக்ஷீராஸ் பித்ருக்களை அறிவீரே! :- ஜெயக்ஷீராஸ் எனப்படும் பித்ரு வகையினர் உண்டு.. இவர்கள் தாம் வாறுக லிங்கம், பிருதிவி லிங்கம், சுயம்பு மணல் லிங்கம், புற்று லிங்கம் போன்ற மண் வகை லிங்கத் தலங்களில் (கும்பகோணம் ஸ்ரீகும்பேஸ்வரர், சென்னை திருவொற்றியூர் படம்பக்க நாதர், சென்னை அருகே கூவம் மற்றும் தக்கோலம் லிங்க மூர்த்திகள், காஞ்சீபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர், திருவெறும்பூர் ஸ்ரீஎறும்பீஸ்வரர், குற்றாலம் இலஞ்சி ஸ்ரீவாறுக லிங்கம், கும்பகோணம் அருகே கொட்டையூர் ஸ்ரீகோடீஸ்வரர்) நமஸ்காரப் பிரதட்சிணம் செய்து சந்ததிகளுக்கு ஆசிகளைப் பெற்றுத் தருகின்றனர். இத்தகைய ஜெயக்ஷியராஸ் பித்ரு தேவர்கள் வந்து அடிக்கடி வழிபடுகின்ற பித்ரு முக்தித் தலமே நெடுங்குடியாம்.. இவர்கள் சூட்சும மற்றும் தூல வடிவங்களில் நெடுங்குடியில் சர்ப நதித் தீர்த்தத்தில் அர்க்ய பூஜைகளைச் செய்து ஆலயத்தில் நமஸ்காரப் பிரதட்சிணம் செய்து இறைவனை வழிபட்டு பித்ரு முக்தி நிலைகளைப் பெறுகின்றனர்.!

எனவே ஜெயக்ஷீராஸ் பித்ரு மூர்த்திக வசு, ருத்ர, ஆதித்ய பித்ரு மூர்த்திகளுடன் அமாவாசை தோறும் இறைவனை வழிபடுகின்ற பித்ரு முக்தித் தலமே நெடுங்குடியாம்.. கோடிக் கணக்கான மகரிஷிகளின், சித்தர்களின் திருப்பாதங்கள் பட்ட நெடுங்குடி ஆலயத் தேரோடும் பாதையான வெளிப் பிரதட்சிண வளாகத்திலும், ஆல மரத்தின் அடியிலும், மலையின் கீழ் இருக்கின்ற நாக தீர்த்தக் கரையிலும் தர்ப்பணம் இட்டிடலாம். ஆலயத்திற்குச் சற்றுத் தள்ளியுள்ள சர்ப நதிக் கரையிலும் தர்ப்பணம், சிரார்த்தம், படையல் போன்றவற்றை பக்த கோடிகள் யாவரும் நன்முறையில் இங்கு நிறைவேற்றுவதற்கு நகரத்தார்கள் போன்ற சிவ நெறிச்செல்வர்களும், பெரியோர்களும், அருளாளர்களும் இங்கு ஆவன செய்தலும் மகத்தான இறைத் திருப்பணிகளாகும்.. காசி, கயை இறைத் திருப்பணிப் பலாபலன்களைப் பெற்றுத் தருவதாகும்!

தர்ப்பணம் செய்யாமைக்கு அர்ப்பணப் பரிகாரம்!

அமாவாசை தோறும் வேன், கார், வண்டியில் மேற்கண்ட தர்ப்பண பூஜைப் பொருட்களைக் கொணர்ந்து அடியார்களுக்கும் வாகன வசதி தந்து பலரும் இங்கு தர்ப்பணப் பூஜைகளை இலவசமாகச் செய்வித்தல் வாழ்க்கையில் பெறுதற்கரிய பாக்கியமாகும்.. இதுவரையில் வாழ்க்கையில் முறையாகத் தர்ப்பணத்தைச் செய்யாதோர், இவற்றைச் செய்தும் முறையாகச் செய்யவில்லையே என்று ஏங்குவோரும் இவ்வாறு பிறரும் தர்ப்பணாதிகளைச் செய்வதற்கு ஆவன செய்திடில் பித்ரு மற்றும் நாக தோஷங்கள் போன்றவற்றை இச்சேவா பலன்கள் நிவர்த்தி செய்திடும். பூலோகமெங்கும் அன்னதானம் போல் இங்கு தர்ப்பணச் சாலைகள் பெருகிட அனைவரும் நன்முறையில் பாடுபட வேண்டும்..!

எதிர்காலத்தில் கயா, வாரணாசி, இராமேஸ்வரம், தென்னிந்திய கயா என்று அழைக்கப்படும் லால்குடி அருகே பூவாளூர் போன்று நெடுங்குடியும் மிகவும் பிரசித்தி பெற்ற பித்ரு முக்தித் தலமாகப் பண்டைய காலத்தில் சிறப்புடன் விளங்கியதுபோல மீண்டும் பிரகாசித்திட இறை அடியார்கள் ஆவன செய்திடல் வேண்டும்..! நெடுங்குடி பித்ரு முக்தித் தலமாக விளங்குவதால் அமாவாசை, பௌர்ணமி மட்டுமின்றி கயா, காசி, திருவேணி சங்கமம் போல் தினந்தோறுமே இங்கு தர்ப்பணமோ, திவசமோ அனைத்தையும் அன்னதானத்துடன் சேர்த்துச் செய்திடலாம்.. மூதாதையர்களுக்கு அந்தந்த பட்சத்தில், திதியில் இங்கு நாக தீர்த்தக் குளக் கரையிலோ, சர்ப நதிக்கரையிலோ தர்ப்பணம், திவசம், சிரார்த்தம், படையல் ஆகியவற்றை வஸ்திர தானத்துடன் (ஆடைகள்), அன்னதானத்துடன் சிறப்பாகச் செய்து வருவதால் பித்ரு சாபங்கள், பித்ரு, தோஷங்களும், குறிப்பாக பிரேத தோஷங்களும் நீங்கிடும்..!

நெடுங்குடி

தர்ப்பணம், திவசம் முடித்தவுடன் குளக் கரையிலும், சர்ப நதிக்கரையிலும் அனைத்தையும் போட்டது போட்டபடியே விட்டு விடாமல், தர்பை மற்றும் இதர தர்ப்பணப் பொருட்களைச் சுத்தப்படுத்தி பூமியில் அடியில் இட்டோ அல்லது மரம் செடி கொடிகளின் கீழ் எவருடைய காலிலும் மிதிபடாமலோ இட்டிட வேண்டும்..!

பிரேத தோஷங்களுக்கும் பரிகாரம் பெறுங்கள்! பிரேத நீராட்டு, பிரேத முழுக்கு, பிரேத வஸ்திராயம் என்ற மூன்றுமே இறுதிச் சடங்கில் மிகவும் முக்கியமானதாகும் அதாவது சம்பந்தப்பட்ட உறவினர்கள், தாயாதிகள், பங்காளிகள் தத்தம் பங்கிற்கு சடலத்தின் மேல் ஒரு குடமாவது நீரை ஊற்றி விபூதி, குங்குமம் இட்டுப் புது வஸ்திரத்தால் மூடுவார்கள்... இது பிரேதத்திற்கான இறுதிச் சடங்குகளில் ஒன்றாகும். மயானத்திற்குப் பெண்கள் வரும் பழக்கம் கிடையாது.. ஆகையால் பங்காளி அல்லது தாயாதி முறையிலான பெண்களும் பிரேதத்திற்கு இறுதி மரியாதையாக ஒரு குடம் நீரை ஊற்றுவார்கள்.! 

ஆனால் தற்காலத்தில் அடுக்குமாடிக் குடித்தனம், நீர்ப் பஞ்சம், தொலை தூர உறவுகள், மயான கெடுபிடிகள் போன்றவை காரணமாகவும், குறிப்பாக கோர விபத்துகள், இறந்து பிரேதம் கிடைக்காமல் போகுதல், போர், வன்முறை, அயல்நாட்டில் இறப்பு, வெளி மாநிலத்தில் மரணமடைதல் போன்றவற்றால் மேற்கண்டவற்றை பலரும் நிறைவேற்ற இயலாமல் போய்விடுகிறது.. குறிப்பாக இப்பிரேத நீராட்டைச் செய்யாவிடில் அந்த ஆவி நன்முறையில் தேக ஜீரணம் ஆவது கிடையாது.. இதுவே பிரேத தோஷமாகத் தொற்றிக் கொள்ளும்.. இதன் காரணமாக இனம் புரியாத கிலி, வம்ச விருத்திகளில் கோளாறுகள், அடிக்கடி கர்பம் நழுவுதல், அடிக்கடி ஏதேனும் விபத்துகள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்று மாற்றி ஒன்றாக சம்பவங்கள் குறித்தவருடைய மரணத்திற்குப் பின் குடும்பத்தில் வந்து கொண்டேயிருக்கும்.!

இவற்றிற்கெல்லாம் பரிகாரம் தரக் கூடிய ஸ்தலங்கள் வெகு சிலவே! அவற்றில் ஒன்றே நெடுங்குடி சிவ ஸ்தலமாகும் பாரத பூமியின் ஏதோ ஒரு மூலையில் குடத்திலிட்ட ஒரு சிறு அகல் விளக்காய் ஒளிர்ந்து கொண்டிருக்கும் நெடுங்குடித் திருத்தலம் அகண்ட ஜோதியாய்ப் பிராகாசித்திட தற்போது சித்புருஷர்கள் நெடுங்குடி வழிபாட்டிற்குப் புத்துணர்ச்சி தருகின்றார்கள்! இதனைப் பயன்படுத்திக் கொண்டு நாம் நல்வரங்களைப் பெற்றிட வேண்டும்!

அன்னதான மகிமை

அன்னதானத்தில் நிகழும் ஆயிரமாயிரம் தெய்வீக அற்புதங்கள், இறைலீலைகள்!

நீங்கள் மிகச் சாதாரணமாக எண்ணுவதுபோல அன்னதானம் என்பது ஏதோ நல்ல விதமாகச் சமைத்து, பிறர் பசியை ஆற்றுவதற்காக அல்லது கிரிவலம், தல யாத்திரை போன்றவற்றுக்காக வந்துள்ள யாத்ரீகர்களின் களைப்பு, பசியைப் போக்குவது மட்டும் அல்ல! உண்மையில் ‘ஒருவேளை உணவால் ஏழைகளுடைய வறுமைப் போராட்டத்தைத் தீர்க்கத்தான் முடியுமா’ என்றெல்லாம் கேள்விகள் எழும்.. “அன்னதானத்தால் சோம்பேறித்தனமே பெருகுகின்றது!” என்று மடமையுடன் அறியாமையால் எண்ணுவோரும் உண்டு..!

ஒருவர் கொடுத்திட, மற்றொருவர் பெறுகின்றார் என்ற சாதாரணமான வெளி இயல்பு நிகழ்ச்சியாக மட்டுமே ஒருவர் அன்னதானத்தைப் பார்ப்பதால்தான் எவராலும் அன்னதானத்தில் பதிந்துள்ள தெய்வீக மகாத்மியங்களை உணர முடியவில்லை.. இறைவன் மனித குலத்திற்கு என்று பரிசாக அளித்துள்ள ஆறாவது அறிவாம் பகுத்தறிவுடன் அன்னதானத்தைப் பற்றிய ஆத்ம விசாரம் செய்தால்தான் இதன் தெய்வீகச் சக்திகள் புரியும்..

காலத்தில் செய்யும் உதவி...!  எத்தகைய பெரும் பணக்காரராய் இருந்தாலும் சரி, கேதார்நாத், பத்ரிநாத், சபரிமலை தரிசனத்திற்கு விரதம் பூண்டுள்ள ஒருவர் கால்நடையாக யாத்திரை செல்லும்போது ஏற்படுகின்ற பசிக்கும், களைப்பிற்கும் அங்கே ஒருவர் அன்னதானமளித்து அதை அவர் உண்ணும்போது எழுகின்ர ஆனந்தமே அங்கு திரள்கின்ற தர்ம தேவதைகள் அளிக்கின்ற ஆசியாகும்.. எனவே என்னதான் வசதிகள் இருந்தாலும் தக்க நேரத்தில் அளிப்பதால் தான தர்ம சக்திகள் பெருகுவதுடன் அந்தந்த இடத்தின் தெய்வீகத் தன்மைக்கு ஏற்பவும் அன்னதானப் புண்ணிய சக்தியும் விளைந்து பல்கிப் பெருகுகின்றது.. பையில் காசு நிறைய இருந்தாலும் உணவுக்கே வழியில்லாத இடத்தில் சிறிதாயினும் உணவு கொடுத்துப் பசியைத் தீர்த்தார்கள் என்று ஒருவர் மனதார எண்ணும்போது அவருடைய 72,000 நாடி நரம்புகளிலும் உள்ள தேவ சக்திகள் ஒன்று கூடி திருப்திகரமான ஆசிக் கிரணங்களை எழுப்புவதால் அந்த இடமே பரிசுத்தமாகின்றது..!

அன்னதானம் அளிப்பவர் சிறு பிரசாதமோ, பெருவகை உணவோ, நீரோ, நீர் மோரோ எதுவாயினும் சரி அதனதற்குரிய விசேஷமான பலாபலன்கள் உண்டு! எத்தனையோ தீவினைக் கர்மவினைகளை ஒருவருடைய உடல், மனம், உள்ளம் சுமந்து கொண்டிருந்தாலும், தன் சுயநலத்தை விட்டு வெளிவந்து மனிதாபிமானம், கருணை, அன்பு மூன்றையும் பூண்டவராய் சற்று நேரமேனும் திகழ்கின்றாரன்றோ! இவைதாமே புனிதமான அன்பினை இறைமையாகக் காட்டும்! உள்ளே ஒளிர்ந்திருக்கும் ஆத்ம ஜோதியின் வெளிப்பாட்டிற்குப் பெரிதும் துணை புரியும்! இதற்கென யோகம், தாரணை, பூஜை, தவம், பிராணாயாமம் போன்று பல இருந்தாலும் இவற்றை அனைவராலும் கடைபிடிக்க இயல்வதில்லை! சற்குருவையும் எவரும் நாடுவதும் இல்லை!

அற்புத வேத, மந்த்ர, யந்த்ர சக்திகள் தரும் அன்னதானம்! இந்நிலையில் கலியுகத்தில் அன்னதானமே மிக எளிய வகையில் பலவிதமான இறைச் சக்திகளை பெற்றுத் தருவதாகும்! தொடர்ந்து தினமும் அவரவர் வசதிக்கேற்ப அன்னதானம் செய்து வந்தால் இந்த அன்னதான சக்தியே சற்குருவையும் பெற்றுத் தந்திடும்! இதற்குக் காரணம் அன்னதானத்தில் ஆத்ம ஜோதி பிரகாசிப்பதால் அந்த இடமே புனிதமடைகின்றது. எங்கெல்லாம் எந்த நேரத்திலெல்லாம் புனிதம் கூடுகின்றதோ, அவ்விடத்தில் தர்ம தேவதைகள், தர்ம மூர்த்திகள் தாமாகவே பிரசன்னமாகி அப்புனிதத்திற்கு மேலும் புனிதம் கூட்டுகின்றனர்..! அன்னதானப் புனித காரியத்தில் பிறந்து பூரிக்கும் அந்த ஆத்ம ஜோதிப் பிரகாசத்தை தரிசிப்பதற்காகவே, எண்ணற்ற மகரிஷிகளும், சித்தர்களும், பித்ரு மூர்த்திகளும் ஓடோடி வருகின்றனர்..!

இவ்வகையில் ஒருபடி அன்னம் தானமாக அளிக்கப்பட்டால் கூட அங்கு ஒரு புனித ஜோதி வளாகமே உருவாகி விடுகின்றது.. நம் ஸ்ரீஅகஸ்தியர் ஆஸ்ரமம் போன்ற அன்ன சாலையில் தினமுமே ஏதேனும் ஒருவகையில் அன்னதானமும் நிகழ்ந்து வருவதால் இத்தகைய தெய்வீகமான இடங்களில் எப்போதுமே ஆத்மஜோதிப் பிரகாசம் பூத்துப் பரிணமித்துக் கொண்டிருக்கும்! இங்கு நம் காலடிபடுவதும், இறைக் காரியங்களை ஆற்றும் வாய்ப்புகளைப் பெறுவதும் பெரும் பாக்யமே! நம்முடைய மூதாதையர்கள் எல்லோருமே பித்ருக்கள் ஆவதில்லை.. அனைவரும் மீண்டும் மானுடர்களாகப் பிறப்பதும் இல்லை.. அவரவருடைய கர்ம வினைகளுக்கு ஏற்ப ஏதேதோ பிறவிச் சுழல்களில் சிக்கி அவஸ்தைப் பட்டுக் கொண்டிருப்பார்கள். பிறரை ஏமாற்றுதல், வஞ்சித்தல், கொள்ளை, அதிகார துஷ்பிரயோகம், காமத் தீவினைகள், அதர்மச் செயல்கள், பிறர் சொத்துக்களை அபகரித்தல், புகை, மது போன்ற தீய வழ்க்கங்கள் போன்று எத்தனையோ தீய கர்ம வினைகளை அவர் உடல், மனம், உள்ளம் சுமந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு கர்ம வினைக்கும் தக்க பிராயச்சித்தங்களைச் செய்தால்தான் அவர்கள் அப்பிறவிச் சிக்கல்களில் இருந்து மீள முடியும்.!

கர்மவினையைக் கழிக்கும் அன்னம் பாலிப்பு! உதாரணமாக, எவருடைய சொத்துக்களை அபகரித்தார்களோ, வட்டியும் முதலுமாக அதனை அவர்களுக்குத் திருப்பிச் செலுத்தும் வரை இந்த ஒரு கர்ம வினைக்காகவே அவர்கள் எத்தனையோ பிறவிகளை எடுத்தாக வேண்டும்.. ஒரு கர்ம வினைக்கே இவ்வளவு பிறவித் தளைகள் என்றால் 70, 80 வருட மனித வாழ்வில் ஒவ்வொரு நாளிலும் அவர்கள் சேர்த்த தீவினைக் கர்மங்களுக்கு என்றுதான் எப்படித்தான் தீர்வுகளைப் பெற முடியும்? இதற்காகத்தான் கலியுகத்தில் அனைத்து விதமான கர்ம வினைகளுக்கும் பரிகாரம் தருவதாக அன்னதானப் புண்ணிய சக்தியை இறைவன் வகுத்துள்ளான்! எனவே ஒரு சிறிய உணவுப் பொட்டலத்தை அன்னதானமாக அளித்தால் கூட அதில் எழுகின்ற புண்ணிய சக்தி, சுயநலமில்லா மனிதாபிமானம், கருணைக் கதிர்கள் இவற்றிற்காகவும், இவை ஆங்கே துலங்குவதால் ஏற்படும் ஆத்ம ஜோதிப் பிரகாச தரிசனத்திற்காகவும் எப்போதும் இறைசாட்சியாகத் துலங்கும் சூரிய, சந்திரர்கள், நட்சத்திராதி தேவர்கள் அனைவரும் தங்கள் ஆசிகளைப் பொழிகின்றார்கள்..!

அன்னதானம் ஆக்கிடும் புனிதக் களஞ்சியம்!

இவ்வாறு திரளும் புண்ணிய சக்திதான் அன்னதானத்தில் பெருக்கெடுத்து மனிதனுக்குக் கர்ம வினைகளைக் களைந்து, காரிய சித்திகளைப் பெருக்கி, சீர்மிகு வாழ்வினைத் தருகின்றது.. இவ்வாறு அன்னதானம் நடக்கின்ற ஒரு சிறு இடமே சிறிதேனும் புண்ணிய வளாகமாக மாறிடில் திருஅண்ணாமலை, காஞ்சிபுரம் போன்ற எப்போதும் புனிதம் பொங்கி வழியும் திருத்தலங்களில் அன்னதானம் நிகழுமேயானால் அவற்றின் மகிமைதான் என்னே! இத்தகைய புண்ணியத் தலங்களில் காணுதற்கரிய அப்நவானர், ஔர்வர், நவநாத சித்தர்கள், பதினெண் சித்தர்கள், சதேந்திரர்கள் (புண்ணிய நூற்று தேவமார்கள்) எப்போதும் பிரசன்னமாகி இருப்பதால் இங்கு எழுகின்ற புண்ணிய வளாகமே, புனிதச் சுடர்களே காணுதற்கு அரியதாகும்.. இறைவனே மலைத் திருமேனியாய் அமர்ந்திருக்கின்ற திருஅண்ணாமலையில் சதாசிவப் பரம்பொருளின் நேத்திர கடாட்சத்துக்கு முன் அன்னதானம் நிகழ்வதென்றால் இதனை விளக்க ஸ்ரீஅகஸ்திய மகாபிரபுதான் வந்திட வேண்டும் ஆனால், இன்றளவும் தோன்றிய, இன்னமும் தோன்றும் காலம் தொட்டு ஸ்ரீநந்தீஸ்வரப் பொருமாள் (அருணாசலத்தில் இடும் அன்னதானத்தின் மகிமையைத்) திருவாய் மொழிகளாகப் பொழிந்து கொண்டிருக்க ஸ்ரீஅகஸ்தியரோ இன்னமும் எழுதிக் கொண்டிருக்கின்றார் என்றால் திருஅண்ணாமலையில் நிகழும் அன்னதான வைபவம், அதை நிகழ்த்துகின்றவர்கள், பெறுபவர்கள், ஆகியோருக்காக இறைவன் நிகழ்த்தும் லீலைகள் ஏராளம், ஏராளம்! எந்த யுகத்தில், மன்வந்தரத்தில், ருதுக் காலத்தில், மாதத்தில், தேதியில், கிழமையில், நட்சத்திரத்தில், லக்னத்தில், நேரத்தில், யோகத்தில், கரணத்தில் எதனை எவருக்கு அன்னதானமாக அளித்தால் எத்தகைய நற்பலன்கள் கிட்டும்.. எத்தகைய கர்ம வினைகள் தீரும். எவ்வினைகளில் இருந்து அவர்கள் காக்கப்படுவார்கள். என்பவைதான் அன்னபுரீஸ்வரப் படலமாக அருணாசல காண்டத்தில் ஸ்ரீஅகஸ்தியப் பெருமான் இன்றைக்கும் எழுதி வருகின்றார்!

எதிர்வரும் யுகத்தையும் எடுத்துரைக்கும் அருணாசல மகாத்மியம்!

இதுமட்டுமா, கலியுகத்தில். வரும் சித்திரபானு ஆண்டு கார்த்திகை தீப நாளில் திருஅண்ணாமலையில் நிகழ்த்த இருக்கின்ற, திருஅண்ணாமலையில் அதில் பங்கு பெற இருக்கின்ற பலகோடிப் பேர்களின் எந்த யுகத்திற்கான கர்ம வினைகள் தீர்க்கப் பெறும் என்பதையும் ஸ்ரீஅகஸ்தியப் பெருமான் நந்தி பகவானின் திருச்செப்பு மொழிகளாக எடுத்துரைக்கின்றார். இவற்றின்படிதான் பிரம்ம தேவதைகள், சிருஷ்டி, தேவதைகள், நவகிரக தேவதா மூர்த்திகள், விதி தேவதைகள், நவகிரக தேவதா மூர்த்திகள் செயல்படுகின்றார்கள் என்றால் ஒரு சிறு அன்னதானத்தில் கூட கர்ம பரிபாலன சாம்ராஜ்யமே ஒட்டு மொத்தமாக, தேவரீதியாக எவ்வகையில் செயல்படுகின்றது என்பதை நம்முடைய ஆறறிவால் உணரத்தான் முடியுமா? இவ்வாறாக, அன்னதானக் கைங்கர்யத்தில் நாம் காணும் வானத்தையும் விடப் பெரிதான தேவயந்திரமே, யந்திரக் கர்த்தாக்களே மகத்தான அளவில் செயல்படுகின்றனர்!

ஒரு பசுவிற்கு நான்கு வாழைப் பழங்களை அளித்தால்கூட அங்கு பிரம்மாண்டமான தேவ தர்ம யந்திரக் குழுவே வந்து செயலாற்றுகின்றது என்றால் அன்னதானத்தின் பின்னணியில் நிகழும் தேவசக்திகளை ஓரளவேனும் இனியேனும் தெரிந்து கொள்ள முயலுங்கள்!

அன்னப் பிரசாதம், அன்னதானத்தைப் பெறுவோர்க்கான ஆத்ம உணர்வுகள்

அன்னப் பிரசாதமோ அல்லது அதிக அளவிலான அன்னதானமோ திருஅண்ணாமலையில் எதைப் பெற்றாலும் அது சக்தி வாய்ந்த சிவமய அன்னப் பிரசாதமே, எனவே திருஅண்ணாமலையில் அன்னதானம் புரிவோர் மிகவும் சுத்தமான உணவை பக்தியுடன் அளித்தல் மிகமிக விசேஷமானது.. நீரோ, நீர் மோரோ, உணவோ எதுவாயினும் பக்தி கூடிடில் திருஅண்ணாமலையில் சிவசக்தி சக்தி மிகுந்த அன்னதானமே ஆகும்,!

பொதுவாக பிரார்த்தனையாகவும் சமயப் பணியாகவும், சத்சங்க ரீதியாகவும், சமுதாயப் பணியாகவும் அளிக்கப்படுகின்ற அன்னதான உணவும் உண்டு. சற்குருமார்களின் மகத்தான இறையாணையுடன் அன்னதானம் அளிக்கின்ற ஆஸ்ரமங்களும் உண்டு.. உதாரணமாக திருஅண்ணாமலையில் ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தின் சார்பில் அளிக்கப்படுகின்ற அன்னமானது பிரபஞ்சத்தின் உன்னத சித்புருஷர்களில் ஒருவராம் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த சுவாமிகளின் அருள்வழியில் அவர்தம் அருள்வழித் தோன்றலாம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களின் நேரடி மேற்பார்வையில் சத்சங்க ரீதியாக, பல இறை அடியார்களுடைய தியாகமய இறைப்பணிகளின் மூலமாக அளிக்கப்படுவதுதான்!

இறையருளால் கடந்த பல வருடங்களாக பல லட்சம் இறை அடியார்களுக்கும் மேலாக மாதாந்திரப் பௌர்ணமிதோறும், திருக்கார்த்திகை உற்சவத்தின் பல நாட்களிலும் அன்னதானம் அளித்து இத்திருப்பணியில் நன்கு திளைக்கின்ற கலியுக பர்ண சாலையாகும்.. ஆஸ்ரமத்தின் திருப்படிகளில் ஒரு கோடிக்கும் மேலான கிரிவல அடியார்கள் வந்து நின்று அன்னதானம் பெற்றுச் செல்கின்ற பாக்கியத்தைத் தன்னுள் கொண்டதாம். சபரிமலையின் 18 படிகள், திருப்பதி, பழநி, திருத்தணி, தேனி மலை, கேதார்நாத், பத்திரிநாத், அய்யர்மலை போன்ற தல மலைப்படிகள் யாவும் மகரிஷிகள், யோகியர்களுடைய ரூபங்களே! படியாய்க் கிடக்க வேண்டும், இறை அடியார்களுடைய திருப்பாதங்களைத் தாங்க வேண்டும் என்று வரம் வேண்டி, உத்தமர்கள் திருப்படிகள் ஆகின்றனர்! இறைவனைத் தரிசிக்க வருபவர்களுடைய திருப்பாதங்கள் புனிதமானவை என்பதால்தான் அவர்கள் படிகளாய், மண் துகள்களாய் அமையும் பாக்கியம் பெற்றிட வேண்டுகின்றார்கள்.. இதேபோல்தான், திருஅண்ணாமலையில் கிரிவலம் வருகின்ற லட்சக்கணக்கான அடியார்களின் திருப்பாதங்கள் படிந்தவை ஆதலின் கிரிவலப் பாதையே புனிதம் பெறுகின்றது.!

உங்கள் பித்ருக்களோடு அன்னம் பாலிப்பீர்!

ஸ்ரீஅகஸ்தியர் ஆஸ்ரமப் படிக்கட்டுகளில் பித்ரு சக்கரங்களும், ஜெயக்ஷீராஸ் பித்ரு குண யந்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.. இவற்றில் நின்று அன்னப் பிரசாதம் பெறுவதே பெறுதற்கரிய பாக்யமாகும்..! இதனால்தான் மாதாந்திரப் பௌர்ணமி அன்னப் பிரசாத வைபவத்தில் ஆயிரக்கணக்கான இறை அடியார்களும் பொறுமை, பணிவு, பக்தியுடன் படிக்கட்டுக்களைத் தொட்டு வணங்கிப் பிரசாதம் பெறுகின்ற அரிய காட்சியைக் காண்கின்றோம்..! ஒருவர் அன்னப் பிரசாதம் பெறும்போது இங்கு என்ன நிகழ்கின்றது? நாம் சாதாரணமாக நினைப்பது போல, ஏதோ வரிசையில் வருகின்றார்கள், பிராசாதத்தைப் பெறுகின்றார்கள் என்பது அல்ல., ஒருவர் கைப்பட எவர் எந்த நேரத்தில், எந்தப் பிரசாதத்தைப் (புளியோதரையோ, சர்க்கரைப் பொங்கலோ, பிரிஞ்சி அன்னமோ) பெற வேண்டும் என்பதெல்லாம் இறை நியதியாக முன்னரே தீர்க தரிசனமாக நிர்ணயிக்கப்பட்டதே!

இறைவன் வகுத்தது வகுத்ததுதான், இன்னருக்கு இந்த எலுமிச்சை அன்னம் அளிக்கப்பட வேண்டும்.. இவருக்கு வெண்பொங்கல்தான் அமைய வேண்டும், இதில் இத்தனை பருக்கைகள் கீழே சிதறும் என்பதும் இறைவன் வகுத்த விதிமுறைகளே! எனவே முகம் சுளிக்காது, தனக்குப் பிடித்த பண்டம்தான் அன்னப் பிரசாதமாக வருகின்றதா என்று பார்க்காது பிரசாதத்தைப் பெறுதலே உத்தமமானது..ஆகும்! ஏனென்றால், உங்களுக்கு உரித்தான பித்ரு மூர்த்திகளுடைய விருப்பங்கள் வேறாக இருக்கும் அல்லவா? அவர்களுடைய ஆசியால்தாமே நீங்கள் கிரிவலம் வருகின்றீர்கள்!

பித்ருக்களும், தர்ம தேவதைகளும் எந்த அன்னப் பிரசாதம் மூலமாக அருள்பாலிக்க விரும்புகின்றார்களோ, அது மூலமாகத்தான் நீங்கள் ஆசியைப் பெற முடியும்! இது கூட உங்களுக்கு ஓர் ஆத்ம சோதனையாக, போதனையாக அமைகின்றது. வாழ்வில் விருப்பு, வெறுப்பற்ற நிலையை அடைய வேண்டும் என்பதையும் உணர்த்துகின்றது.. எனவே, அன்னப் பிரசாதத்தைப் பிடிக்கவில்லை என்று எங்கேனும் வைத்துவிட்டு நழுவுவதால் நீங்கள்தான் பித்ரு சக்திகளை இழக்கின்றீர்கள்! வேண்டுமளவு பிரசாதத்தை ஏற்று, மிஞ்சியதைப் பொட்டலமாக எடுத்துச் சென்று பிறருக்கும் அளிப்பதில் தவறில்லை.. ஆனால் வீணாக எறிவதோ, குப்பைத் தொட்டியில் போடுவதோ, நைஸாக விட்டு நழுவுவதோ அன்னதான மற்றும் பித்ரு ஆசிகளைப் பரிபூரணமாக்காது.!

வருவதை எதிர்கொள்வீர்! நல்வரமாக!  ஒரு சிலரோ, தனக்குப் பிரிஞ்சி அன்னமோ, வடையோ கிடைக்கவில்லை.. தனக்குப் பிடிக்காத எலுமிச்சை, தயிர் அன்னம் வந்துவிட்டதே என்று உள்ளுக்குள் எண்ணி ஏதோ தானும் அன்னதானம் செய்வதுபோல் பிறருக்குக் கொடுத்து விட்டுச் சென்று விடுவார்கள்.. வரிசையில் நிற்கும்போதே ‘எது வந்தாலும் ஏற்போம்’ என்ற வைராக்ய சித்தி இருப்பதே கிரிவலப் புண்யம், அன்னப் பிரசாதப் புண்யத்தை நிறைவாக்கும்! இல்லையெனில் எதுவும் அரைகுறையாகிக் கிட்டாமலேயே போய்விடும்! அன்ன பிரசாதத்தின் மகிமையை உணர்ந்தால்தான் உங்களுக்கும், குடும்பத்தினருக்கும், சந்ததியினருக்கும் அன்னதான நல்லெண்ணங்கள் ஏற்படும். அதைச் செய்வதற்கான வசதிகளும், வாய்ப்பும் கிட்டிடும்.! சநததியினருக்கும் அன்னதான புண்ணிய சக்திகளும் உண்டாகும்!

எனவே வாழ்க்கையில் ‘எது வரினும் ஏற்போம்’ என்ற வைராக்கிய சித்தியைப் பெற்றுத் தருவதே அன்னதானப் புண்ணிய சக்தியின் ஓர் பலனாகும்.. இரவு பகலாக சத்சங்க அடியார்கள் உழைத்து, சக்தி வாய்ந்த தேவ, வேத மந்திரங்களை ஓதி ஒரு சற்குருவின் மேற்பார்வையில் அக்னி பூஜை, அருணாசல பூஜை, நாம சங்கீர்த்தனம், ஸ்ரீகாயத்ரீ மந்திர சக்திகளுடன் உருவாகின்ற அன்னப் பிரசாதத்தை அசட்டை செய்தல் கூடாது... விருப்பம் இல்லை என்றால் வரிசையில் வந்திடாது கிரிவலத்தைத் தொடர்வதிலும் தவறில்லை..!

ஆனால் அன்னப் பிரசாதத்தைப் பெறும்போது இறைவன் வைராக்கிய சித்தி, பித்ருக்களின் ஆசீர்வாதம், லட்சக்கணக்கான இறையடியார்களின் திருப்பாதங்கள் பட்ட பித்ருப் படிக்கட்டுகளில் நிற்கும் பாக்யம், வேத மந்திர நாமாவளி சக்திகள், தமிழ் மறை சக்திகள், அக்னி பூஜை, அருணாசல பூஜா சக்திகள் நிறைந்த அன்னப் பிரசாதத்தை நீங்கள் இங்கு பெறுகின்றீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் என்றேனும் அக்னி பகவானுக்கான பூஜையைச் செய்தது உண்டா? பலரும் புகை பிடித்தல், டயர் போன்ற ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களைக் கொளுத்துதல் போன்றவற்றால் அக்னி சாபங்களைப் பெற்றிருக்கின்றார்கள்.. கிரிவலம் வருவோர்களில் பலரும் புகை பிடித்துப் பாவத்துக்கும், புகை பிடித்து அக்னி பகவானை இழிவு செய்கின்ற தோஷங்களுக்கும் ஆளாகி உள்ளனர்!

பிராயச்சித்தம் தரும் அருட் பிரசாதம்! இத்தகைய அக்னிக் குற்றங்களுக்குமான நிவர்த்தியை அக்னி லிங்கமாக ஒளிரும் திருஅண்ணாமலையில்தானே பெற முடியும்? அதிலும் அக்னி பூஜையோடு செய்யப்பட்ட அன்னப் பிரசாதத்தைக் கைகளில் பெற்றால்தானே அதே கைகளில் புகை பிடித்தலால் சேர்த்துக் கொண்ட அக்னி தோஷங்களுக்கும், அக்னி சாபங்களுக்கும் ஓரளவேனும் பிராயச்சித்தம் பெற முடியும்? மேலும் ஒவ்வொருவரும் தம் கைகளால் செய்கின்ற பாவங்கள் எத்தனை எத்தனை? வேத மந்திர, தமிழ்மறை, ஸ்ரீகாயத்ரீ சக்திகள் நிறைந்த அன்னப் பிரசாதத்தை மந்தார இலை மூலமாகப் பெறும்போது இதுவரை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அறிந்திடாத, ஓதிடாத பல அரிய மந்திரங்களின் சக்தி உடைய அன்னப் பிரசாதத்தை அல்லவா நீங்கள் பெறுகின்றீர்கள்.. ஆயிரம் பேருக்கு அன்னமிட்டால் அங்கே ஒரு மகரிஷியோ, சித்தரோ நேரில் வந்து அன்னம் பெற்று ஆசி அளிக்க வேண்டும் என்பது இறைநியதி ஆகும். இவ்வகையில் லட்சக்கணக்கானோருக்கு அன்னம் பாலித்த ஸ்ரீஅகஸ்தியர் ஆஸ்ரமப் படிகள் எத்தனை சித்தர்கள், மகரிஷிகளின் புனித ஸ்பரிசத்தைப் பெற்றிருக்கும் என்பதை உணர்ந்து பாருங்கள்.. அப்போதுதான் அன்னப் பிரசாதத்தின் மகிமை உணரப் பெறும்! எனவே இனியேனும் விருப்பு, வெறுப்பு கொள்ளாது அன்னப் பிரசாதத்தை எங்கும் ஏற்றிடுங்கள்.. பிரசாதம், அன்னம் அதிகமாக உள்ளது எனில் பொட்டலமாக ஏற்று உறவினர், நண்பர்களுக்கோ அல்லது வேறு எவருக்குமோ அளித்திடுங்கள்.. அப்படியே இலையில் வைத்துவிட்டு அதை இழிவு செய்யாதீர்கள்.! இதனால் உங்களுக்கும், உங்கள் சந்ததிகளுக்கும்தான் பேரிழப்பு!

குறுக்கே புகுந்தால் வாழ்வில் குறுக்கே புகுவர்!

வரிசையாக வந்து அன்னம் பெறுவதே சிறப்பானது, உங்களுக்கு முன்னும், பின்னும் இருப்பவரே மகரிஷியோ, சித்தராகவோ இருக்கலாம் அல்லவா! அவர்களும் நீங்கள் முறையாக வரிசையில் நின்று பிரசாதம் பெறுவதையே விரும்புவர்.. குறுக்கே புகுந்து பெறுவதால் பலருடைய வசவுகளுக்கும், கோபத்துக்கும் ஆட்பட்டு சாபங்களைச் சேர்த்துக் கொள்கின்றீர்கள்... திருஅண்ணாமலையில் அனைத்துமே ஆயிரம் மடங்காகப் பெருகும்போது வரிசையில் குறுக்கே புகுவதால் எழுகின்ற சாபங்களும் ஆயிரம் மடங்காகப் பெருகும் அல்லவா? இதனால் கிரிவலப் புண்ணிய சக்தியையும் குறுக்கே புகுபவர்கள் இழப்பார்கள்.. அன்னதான கிரிவல வரிசையில் குறுக்கே புகுபவர்களுக்கு வாழ்க்கையில் பெரும் வாய்ப்பு, அதிர்ஷ்டம், பாக்கியம் கிட்டும்போது வேறு யாரேனும் குறுக்கே புகுந்து தட்டிச் சென்று விடுவார்கள்..!

மந்தார இலைக்கு மந்திரங்களை கிரகிக்கும் சக்தி உண்டு. பட்டுக்கோட்டையின் அருகே திருவுசாத்தானத்தில் ஸ்ரீமந்திரபுரீஸ்வரராக அருள்பாலிக்கின்ற சிவபெருமானின் திருக்கோயிலில் (இதுவும் ஒரு பித்ரு  முக்தி ஸ்தலம்) மந்தார இலையில் பித்ருக்களுக்கு ப்ரீதியான எள்ளுச் சாதம் (எள்ளோதரை), பிரண்டைத் துவையல், புடலங்காய்ப் பொரியல், எள்ளுருண்டை, வாழைக்காய் பொரியல் போன்ற பித்ரு சக்தி நிறைந்தவற்றை தானமாக அளித்திட பித்ரு ஆசிகள் பெருகி குடும்பத்தில் அடிக்கடி பலரும் நோய்வாய்ப்படுவது தீர்வடையும்.. இதற்குக் காரணம் ஸ்ரீராமருக்கே மகா மந்திரங்களை உபதேசித்தவராக ஸ்ரீமந்திரபுரீஸ்வரர் அருள்புரிவதாலும், மந்தார இலைக்கு வேத மந்திர சக்திகளை கிரகிக்கும் சக்தி உண்டு என்பதுமாம்.! எனவே மந்தார இலையில் பிரசாதம் என்பது பெறுதற்கரிய பாக்யம், இதை வேண்டாமென்று ஒதுக்கிடில் வேத மந்திர சக்தியையே ஒதுக்கி வைத்ததாகும் அல்லவா? நம்மால் இல்லத்தில் வேத மந்திர சக்திகளையே பெற இயலாதபோது இறைப் பரிசாக வருகின்ற மந்தார இலைப் பிரசாதத்தை துச்சமாக மதித்திடலாமா?

அன்னதானம் இடுவோர்க்கான ஆன்ம உணர்வுகள்!   அன்னதானம் அளிப்போரும் ‘தாம் அளிக்கின்ற உணவை ஒரு சிலர் உண்ணாது, எறிந்து விடுகின்றார்களே, இதனால் விரயமாகின்றதே, இத்தகைய அன்னதானத்துக்கு நாம் ஏன் உதவி செய்ய வேண்டும்?’ என்று அறியாமையால் எண்ணிடலாம்.. பலருடைய சத்சங்க இறைப்பணிகளால் உருவாகின்ற அன்னத்தை பக்திப் பூர்வமாக, விருப்பு வெறுப்பின்றி, குவிந்த ஒருமித்த மனதுடன் அளிப்பதே சிறப்பானது, ஏனென்றால் அன்னப் பிரசாதத்தைப் பெறுபவர் ஒரு மகரிஷியாகவோ, சித்தராகவோ இருக்கலாம் அல்லவா? அன்னம் இடுவார்க்கும் பல சோதனைகள் ஏற்பட்டிடலாம்... எனவே அன்னதானப் பணியில் பங்கு பெறுதலே மகத்தான தெய்வீகப் பணியாகும்! அன்னப் பிரசாதம் பெறுவோரின் வாழ்க்கையில் இது மகத்தான பலன்களைத் தர வல்லது... இதற்கு நாம் ஒரு இறைக் கருவியாகச் செயல்படுகின்றோம் என்ற உத்தம எண்ணமே அன்னதானம் இடுவோரின் மனதில் திகழ வேண்டும்..

எனவே ‘பிரசாதத்தை மீதம் வைத்து விடுகின்றார்களே, வேஸ்ட் ஆகின்றதே’ என்ற எண்ணத்தையெல்லாம் தவிர்த்து விட வேண்டும்.., இதற்காக வாங்குபவர்கள் பிரசாதத்தை வைத்து விட்டுச் செல்வதை நியாயப்படுத்த முடியாது.. கீழே சிந்துகின்ற அன்னப் பிரசாதத் துகள்கள் கூட மண்ணோடு மண்ணாகி எறும்பு, புழு போன்ற ஜீவன்களுக்கும் உணவாகின்றது என்பதை மறந்து விடாதீர்கள்.. மறுநாள் எத்தணையோ பறவைகள், நாய்கள் போன்றவை கூட இறைப் பிரசாதத்தை உண்டு உத்தம இறைநிலைகளை, அடைவதை நம்மால் பகுத்துணர முடிவதில்லை... மேலும் மறுநாள் இலைகள் ஒன்று சேர்க்கப்பட்டு அக்னியில் பஸ்மமாகும் போது அன்னசக்தியும் மந்தார இலைகளின் வேத சக்தியும் விண்ணில் கலந்து பரவெளியைப் புனிதமாக்குகின்றன..!

உண்மையில், அடியார்கள் உண்ட இலைகளில் உருள்கின்ற தெய்வீக காரியம் புதுக்கோட்டைப் பகுதியில் இன்றும் நிகழ்கின்ற காரியமாகும்.. அன்னதானம் என்பதால் எந்த இலையிலும் மகானோ, சித்புருஷரோ அமர்ந்து உண்டிருக்கலாம்.. அல்லவா! அவர்கள் உண்டு மீந்த பிரசாதம் நம் உடலை ஸ்பரிசிப்பது மிகப் பெரிய பாக்யம் என்பதால்தான் அதுவும் மீந்திலைப் பிரசாதம் என்று அழைக்கப்படுவதால்ல் உண்ட இலையில் உருள்வது அங்கப் பிரதட்சிணப் பலன்களைத் தருகின்றது! கிரிவல அடியார்கள் அன்னப் பிரசாதத்தை உண்டு மீந்த இலைகளை எடுத்துத் தொட்டிக்குள் போடுவதும் மகத்தான இறைப் பணியாகும்.. ஏனென்றால் எச்சில் இலை என்று நீங்கள் கருதுவது ஒரு மகானோ, சித்தரோ, பித்ரு மூர்த்தியோ அன்னம் ஏற்றதாக இருக்கலாம் அல்லவா?

வித்யாநிதிப் பண்டிகை

பெண்களுக்கே உரித்தான மகத்தான பண்டிகை வித்யாநிதிப் பண்டிகை வழங்கும் வித்தியாசமான நற்பலன்கள், இயற்கைக் காரணங்களால் தவறவிட்ட பூஜைகளுக்குப் பிராயசித்தமாக பெண்களுக்கென அளிக்கப்பட்டுள்ள முக்கியமான வித்யாநிதிப் பண்டிகை!

இயந்திர மயமாகிவிட்ட கலியுக வாழ்க்கையில் தினந்தோறும் எந்த நேரத்திலும் பணம், உடல்நிலை, கல்வி, குழந்தைகள், அலுவலக நிலைமை, இயற்கைச் சீற்றங்கள் போன்ற எந்தக் கோணத்தில் இருந்தும் துன்பங்கள் குவிந்திடலாம் என்ற ஓர் அச்ச நிலையில்தானே வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த அச்சம் ஏற்படக் காரணம் என்ன?

தீவினைகள் புண்ய சக்தியைக் குறைக்கும்! மது, பீடி, சிகரெட் போன்ற தீய வழக்கங்களைத் தடை செய்ய எந்த சமுதாயமுமே முன் வராமையால்தான் இவற்றில் மனிதன் தன்னையே இழந்து தன் பகுத்தறிவையே பறிகொடுத்து தன்னுடைய நடமாட்டம், பண்பு, உடல்நிலை பற்றிய அச்சங்களைத் தன் குடும்பத்தினருக்கும், பிறருக்கும், அளித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.. நம் மூதாதையர்கள் வகுத்துத் தந்த பூஜைகளையும் அனைத்தையும் கிட்டத்தட்ட நாம் கைவிட்டாகி விட்டது! கலியுகத்தில் குடும்ப, இல்லற பூஜைகள் அருகி வரும் என்பதால்தான் இறைவன் ஆலயங்களைப் படைத்து யாவர்க்கும், யாவைக்குமாய் சமுதாய பூஜைகளை நடத்துகின்ற இறைச் சாலைகளை அமைத்துத் தந்துள்ளான். ஆனால் ஆலயங்களுக்கு மூன்று வேளையும் சென்று தரிசித்து வந்தால்தானே இழந்த பூஜா பலன்களை ஓரளவேனும் பெற முடியும்?

பஞ்சாங்கத்தை எடுத்துப் பார்த்தால் வருடத்தின் 365 நாட்களிலும் தினந்தோறும் அங்காரகக் சதுர்த்தி, வித்யாநிதி, சத்ய நிதி, அசூன்ய சயன விரதம், தூர்வா கணபதி விரதம், கோ பத்ம விரதம், கஜ்லி த்ரிதியை, அட்சய திருதியை என்றெல்லாம் போட்டிருப்பதைக் கண்டு நமக்கெல்லாம் இது தெரியாத விஷயம் என்று ஒதுங்கி விடாதீர்கள். மேலும் உங்களுக்கு வருகின்ற துன்பங்கள் எல்லாம் வெளியில் இருந்து வருகின்றன என்றும் எண்ணாதீர்கள்.. உங்களுடைய முன் ஜென்ம, நடப்பு ஜென்ம தீவினைகள்தான் உங்களுடைய கஷ்டங்களாக உருப்பெற்று வருகின்றன என்ற எண்ணம் உருவானால்தான், இன்றைய பொழுதில் எந்தப் பிரச்னை வருமோ என்ற அச்சத்தில் வாழ வேண்டிய நிலைமை உருவாகாது. ஆலயங்களில் மட்டும் அனைத்துப் பண்டிகைகளையுமா கொண்டாடுகின்றார்கள்? கும்பகோணம், தஞ்சைப் பகுதிகளில் ஒருவேளை பூஜையுள்ள எத்தனையோ கோயில்கள் எப்போதும் மூடித்தானே இருக்கின்றன.. ஜன நடமாட்டம் உள்ள பகுதிகளில் உள்ள கோயில்கள் மட்டும்தானே  திறந்துள்ளன என்று எண்ணாதீர்கள்.. கலியுகத்தில் மானிடர்கள் தெய்வமே நல்வரமாகத் தந்த மானிடப் பிறவியின் மகிமையை உணராது லௌகீகமாக, சுகபோகங்களையே நாடி இறை பூஜைகளைக் கைவிட்டு விடுவார்கள் என்பதை தீர்க்க தரிசனமாக அறிந்துதான் மகரிஷிகளும், சித்தர்களும் நீங்கள் மூடியிருப்பதாக எண்ணுகின்ற ஆலயங்களில் தங்கள் தேவ பூஜையை நிகழ்த்துகின்றனர்.. பஞ்சாங்கத்தில் நீங்கள் காண்கின்ற அனைத்து பூஜைகளையும் அனைத்து ஆலயங்களிலும் விஷேசமாக நிகழ்த்துகின்றனர். எனவே, தினந்தோறும் கோயிலுக்குச் செல்வது என்ற மனோ வைராக்கியத்தைத் திடமாகக் கடைபிடித்திடுங்கள்!

வித்யாநிதிப் பண்டிகை என்பது தற்போது சமுதாயத்தால் கிட்டத்தட்ட மறக்கப்பட்டுவிட்ட விசேஷப் பண்டிகையாகும்! பெண்களுக்கே உரித்தானது... நிதி என்றால் பணம் என்று மட்டும் பொருளல்ல.. பிறக்கும்போது ஒவ்வொரு மனிதனும் வித்ய நிதி, சத்ய நிதி, சந்தான நிதி, தான்ய நிதி, தைர்ய நிதி, பக்தி நிதி போன்ற பல ஐஸ்வர்யங்களுடன் தான் பிறக்கின்றான்.. ஆனால் கர்ம வினைச் சுழல்களால் மதி மயக்கத்தால் நிதிச் செல்வங்களை இழந்து விடுகின்றான்.. இழந்தவை இழந்தவைதாமா? எப்படி மீண்டும் பெறுவது?

ஆண்களுக்கான பிதாபந்த புண்ய சக்தி!

தக்க பூஜைகள் மூலமாக நிச்சயமாக இழந்த செல்வங்களை நியாயமான வகையில் நாம் பெற்றிடலாம்.. ஆண்கள் பலத்த குடும்பப் பொறுப்புடன் கலியுகத்தில் மிகவும் எளிமையான ஆலய தரிசனம், மந்திர உச்சரிப்பு, சந்தியா வந்தனம், நித்ய இல்லப் பூஜைகள் போன்றவற்றை சரிவரக் கடைபிடிக்காது சம்பாத்தியத்திற்கே நேரத்தைக் கழித்து விடுவதால் இல்லப் பெண்களுக்குத்தான் தெய்வீக ரீதியிலான பொறுப்பு உணர்ச்சி மிகுந்து விடுகின்றது. ஆனால் அவர்களாலும் மாத விலக்கு போன்ற இயற்கைக் காரணங்களால் வரலட்சுமி விரதம், சரஸ்வதி பூஜை, போன்றவற்றைப் பல சமயங்களில் கடைபிடிக்க இயலாமல் போய்விடும்.!

ஆனால் உண்மையில் இதற்குக் காரணம் நாம்தான். ஏனென்றால் நம் மூதாதையர்கள் நிறைய பிள்ளைகளோடு பெருங் குடும்பமாய் ஒற்றுமையாகச் சாந்தமாக வாழ்ந்தமையால், மாத விலக்கு காரணமாக ஓரிரண்டு குடும்பப் பெண்கள் முக்கியமான பூஜைகளைக் கடைபிடிக்க இயலாவிட்டாலும் மற்ற பெண்கள் பூஜைகளை ஏற்று நடத்தி விடுவார்கள்..! அக்காலத்தில் மாத விலக்கு நேரத்தில் ஆண்களே பொறுப்புணர்ச்சியுடன் சமையலைச் செய்து குடும்பத்தைக் கவனித்துக் கொள்வார்கள்.. தற்காலம் போல் ஹோட்டலில் வாங்கி, சோம்பேறித்தனத்துடன் சாப்பாட்டினை முடித்து விட மாட்டார்கள்... பெண்களுடைய மாதவிலக்கின் போது ஆண்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் சமைப்பதால் ஓர் அரிய பிதாபந்த புண்ணிய சக்தி அவர்களுக்குக் கிட்டுகின்றது.. இதனால் மனைவிக்கும், பெண் குழந்தைகளுக்கும் வருகின்ற பல நோய்கள் தவிர்க்கப்படுகின்றன. பலவிதமான மாதவிடாய்க் கோளாறுகள், உதிரப்போக்கு நோய்களையும் இந்தப் புண்ணிய சக்தியால் எளிதில் களைந்து விடலாம்.. மேற்கண்ட வகையில் சரஸ்வதி  பூஜை, வரலட்சுமி விரதம் போன்ற பண்டிகைகளை மாத விலக்கு போன்ற இயற்கைக் காரணங்களால் தவற விட்டவர்களுக்கு உதவிபுரிவதற்காகவும் வித்யா நிதி என்ற பூஜை துணை புரிகின்றது..!

அதாவது, உங்களுடைய மூதாதையர்கள் செய்த பூஜைகளின் புண்ணிய சக்தியின் ஒரு பகுதியை வித்யா நிதியாக, குபேர லோகத்தில் சேமித்து வைக்கின்றார்கள்... இதற்கு உரித்தான வித்யாதர தேவதைகள், வித்யா தாரண்ய தேவதா மூர்த்திகள் உண்டு. தான் பெரு முயற்சிகள் எடுத்தும் மாத விலக்கு போன்ற இயற்கைக் காரணங்களால் பூஜைகளைச் செய்ய முடியாதவர்கள், வித்யா நிதி பூஜையின் போது பிராயசித்தம் வேண்டி இந்நாளுக்கு உரிய பூஜைகளை மேற்கொண்டால் குபேர லோகத்தில் உள்ள வித்யாநிதி கும்பக் கலசத்தில் இருந்து புண்ய சக்திகள் வெளி வந்து இழந்த பூஜா பலன்களுக்கு நிவர்த்தியைப் பெற்றுத் தரும்.!

இன்று கோபுர தரிசனம் செய்வீர்! வித்யா நிதிப் பண்டிகை நாளன்று (3.12.2001) அனைவரும் அதிகாலை சூரிய உதயம் முதல் மாலை அஸ்தமனம் வரை உண்ணா நோன்பிருந்து, குறைந்தது 36 கோயில் கோபுரக் கலசங்களை தரிசித்தல் வேண்டும்.. நம்முடைய ஊரில் அவ்வளவு கலசங்களை தரிசிக்கக் கோயில்கள் இல்லையே என்று எண்ணாதீர்கள்! பாடல் பெற்ற தலங்களில் 7, 9, 11, 13 போன்ற கலசங்களைக் கொண்ட கோபுரங்களை தரிசித்தால் போதுமானது..!

வித்யாநிதி பூஜை முறை :- இல்லத்தில் அல்லது ஆலயத்தில் ஒரு வெண்கலத் தாம்பாளத்தில் குறைந்தது ஒரு படி பச்சரிசியைப் பரப்பி அதில் ஸ்ரீராம ஜயம் போல ‘ஸ்ரீலலிதாம்பிகாய திரிபுர சுந்தர்ய ராஜராஜேஸ்வர்யை நமஹ’ என்று 21 முறை எழுதி அதனைக் கலச பீடமாக வைத்திட வேண்டும். 21 முறை மந்திரத்தை எழுத வேண்டும் என்பதால் ஏற்கனவே எழுதிய அட்சங்களின் மீதே மறுபடி, மறுபடி எழுதுவது ஏற்யுடையதே. மண் பாத்திரம், மூங்கில் குவளை, வெண்கலச் சொம்பினைக் கலசமாக பாவித்து, நூல் சுற்றி, மஞ்சள், குங்குமம், சந்தனம் இட்டு மாவிலை, தேங்காயுடன் பூரண கும்பமாக ஆக்கி பூஜையில் வைத்திடுங்கள்..!

கலசச் செம்பினுள் ஜாதிக்காய்த் தூள், பச்சைக் கற்பூரம், ஏலக்காய், துளஸி, வில்வம் இட்டு கங்கை, காவேரி போன்ற புண்ணிய தீர்த்தத்தால் முக்கால் செம்பு நிரப்பிட வேண்டும்.. கலசச் செம்மைச் சுற்றி மஞ்சள், சிவப்பு நிறக் கனிகளை (மாதுளை, ஆப்பிள், சாத்துக்குடி போன்றவை) வட்ட வடிவில் வைத்திட வேண்டும்.. தேங்காய்க்கு முழுமையாக மஞ்சள் பூசி குங்குமம், பூ இட்டு மாங்கல்யம் அல்லது மஞ்சள் சரடு சார்த்தி, வெற்றிலையில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்துக் கலச பூஜை செய்ய வேண்டும்... எந்தப் பண்டிகை மாத விலக்கு போன்ற இயற்கைக் காரணங்களால் விடுபட்டுப் போனதோ அவற்றின் பலாபலன்களைப் பெற்றுத் தருவதற்காகக் கலசத்தில் ஸ்ரீவித்யா நிதி அம்பிகையை ஆவாஹனம் ஆகுமாறு வேண்டிடுக! கலசத்தைக் குபேர திக்காகிய வடக்கில் வைத்திட வேண்டும். திசை பற்றிய குழப்பம் ஏற்பட்டால் ஒரு சதுரக் கோலத்தை வரைந்து திசை காட்டிக் கருவி போல் திசை அறிந்து கொண்டு வைக்கவும்.. கலச முகம் உங்களை நோக்கி இருக்குமாறு வைத்து, பூஜை செய்பவர் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர வேண்டும்..! இன்று தங்களிடம் உள்ள அனைத்துப் பணத்தையும் (கணவனிடம் உள்ளதையும் சேர்த்து) வித்யா நிதி அம்பிகை ஆவாஹனம் ஆக வேண்டி கலசச் செம்பின் முன்னால் வைத்திடுக! பொதுவாக, பணத்தைக் கர்ம வினைகள் சேர்ந்த தோலால் ஆன பர்ஸினுள் வைக்காது, பருத்தித் துணியால் ஆன பை, தன கர்ப்பச் சுருள், பனை ஓலையால் ஆன பணப்பை போன்றவற்றில்தான் வைக்க வேண்டும்.!

மேற்கூறிய வகையில் கலசத்தை அலங்கரித்து ஸ்ரீமங்களாம்பிகை போற்றித் துதிகளை ஓதி பூஜித்தல் வேண்டும்.
ஓம் ஸ்ரீமங்களாம்பிகாயை நமஹ
ஓம் ஸ்ரீமங்கள தேவ்யை நமஹ
ஓம் ஸ்ரீமங்கள சௌந்தர்யை நமஹ
ஓம் ஸ்ரீமங்கள சுந்தர்யை நமஹ
ஓம் ஸ்ரீமங்கள குங்குமாம்பிகாயை நமஹ
ஓம் ஸ்ரீமங்கள குங்கும சௌந்தர்யை நமஹ
ஓம் ஸ்ரீமங்கள குங்கும சுந்தர்யை நமஹ
ஓம் ஸ்ரீமாங்கல்யாம்பிகாயை நமஹ
ஓம் ஸ்ரீமாங்கல்ய தேவ்யை நமஹ
ஓம் ஸ்ரீமங்கள மாங்கல்ய சுந்தர்யை நமஹ
ஓம் ஸ்ரீமங்கள மாங்கல்ய சௌந்தர்யை நமஹ
ஓம் ஸ்ரீமங்கள வித்யாநிதி தேவ்யை நமஹ
என்று இருபத்தோரு முறை ஓதி முறையாக மஞ்சள், குங்குமம், மலர்களால் கலசத்தை அர்ச்சனை செய்து பூஜித்திடுதல் வேண்டும். வசதியுள்ளோர் கலசச் செம்பிற்கு ஆபரணங்களைச் சூட்டிப் பூஜித்திடலாம். இன்று குறைந்தது 12 பேருக்காவது முழு அளவு உணவாக, வயிராற அன்னதானம் செய்தல் வேண்டும்., அவரவர் வசதிக்கேற்ப ஆனால் உணவேற்போர் முழுத் திருப்தி அடையும் விதத்தில் அன்னதானம் செய்ய வேண்டும். இதையே அதிதி போஜனம் என்று அக்காலத்தில் சொல்வதுண்டு.!

12 ஜோதிர் லிங்கத் தலங்களில் இருந்து வித்யா நிதி விசேஷ தினத்தில் தோன்றுகின்ற துவாதச வித்யாரிணி மூர்த்திகள் எங்கெல்லாம் அன்றைய தினத்தில் கலச பூஜைகள் நிகழ்கின்றனவோ, அங்கெல்லாம் பிரசன்னமாகி கலச பூஜைகளுக்கான அற்புத நல்வரங்களைத் தந்தருள்கின்றார்கள். இவர்களோடு எப்போதும் இணைந்திருப்பவர்களே அதிதி தேவ மூர்த்திகளாவர்.. இவர்கள்தாம் அதிதி போஜனம் அன்று சொல்லப்படுகின்ற தினந்தோறும், குறைந்தது மூன்று பேருக்காவது அன்னம் அளிக்கின்றபோது இங்கே அதிதி தேவதைகளாகப் பிரசன்னமாகி பித்ருலோக அன்னதான சக்திகளைப் பெற்றுத் தருகின்றார்கள்.. இது மட்டுமா? இன்று எங்கெல்லாம் வித்யாநிதி கலச பூஜை நிகழ்கின்றதோ அங்கெல்லாம் ஸ்ரீமாங்கல்ய மகரிஷி தம் பத்னியுடன் ஸ்தூலமாகவோ, சூட்சுமமாகவோ இருந்து பூஜித்துத் தம் மாங்கல்ய பூஜா பலன்களைத் தருகின்றனர்..!

ஸ்ரீமாங்கல்ய மகரிஷி
இடையாற்றுமங்கலம்

மங்களம் தரும் ஸ்ரீமாங்கல்ய மஹரிஷி!

இறை அருளால் நாங்கள் எந்த பூஜையையும் தவற விடவில்லையே, நாங்கள் என்ன செய்வது என்று பலர் கூறலாமல்லவா, இருந்தாலும் அவர்கள் வருங்காலத்தில் மாத விடாய் போன்ற தவிர்க்க இயலாத இயற்கைக் காரணங்களா பூஜைகளைத் தவற விடாமல் தற்காத்துக் கொள்வதற்கும் இந்த வித்யாநிதி பூஜை வழிபாடு பெரிதும் உதவுகின்றது.. இன்றைக்கு மாங்கல்ய மகரிஷியும், அவரது பத்னியும் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து மங்கள தீர்த்தங்களிலும், மங்களாம்பிகை, மங்கள நாயகி என்று நாமம் பூண்ட அம்பிகை அருள் பாலிக்கும் தலங்களிலும், பூஜித்துத் தம்முடைய தரிசன பூஜா பலன்களையெல்லாம் சுமங்கலித்துவத்திற்காக இன்று வித்யாநிதி கலசபூஜை நிகழும் இடங்களில் அர்ப்பணிக்கின்றார்கள்...! அனைவருக்கும் பயன்படும் பொருட்டு வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் இந்த வித்யா நிதி பூஜையை ஓர் சமுதாய மாங்கல்ய பூஜையாக மாங்கல்ய மகரிஷி சிலை வடிவில் எழுந்தருளியுள்ள இடையாற்று மங்கலம் ஸ்ரீமாங்கல்யேஸ்வரர் திருச்சன்னதியில் நிகழ்த்துதல் மிகச் சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும்.!

இடையாற்று மங்கலம் திருச்சி மாவட்டத்தில் லால்குடி செல்லும் வழியில் மாந்துறைக்கு அருகில் உள்ள திருத்தலம்.. இங்கு செல்ல பேருந்து வசதிகள் மிகக் குறைவாகவே உள்ளதால், முன்னரே நன்கு விசாரித்துக் கொண்டு முதல் தினமே அங்கு சென்று தங்கி வித்யாநிதி பூஜையைச் செய்வது நல்லது, லால்குடியில் உள்ள அருள்மிகு ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் திருக்கோயிலில் கூட மாங்கல்ய மகரிஷியின் திருஉருவச் சிலை உள்ளது. ஸ்ரீமாங்கல்யேஸ்வரர் என்ற பெயரில் லிங்கமும் உள்ளது.. வித்யாநிதி பூஜையை இங்கு நிகழ்த்துவதுகூட சிறப்பானது.! இன்று இத்திருத்தலங்களில் நீங்கள் மட்டுமே சுயநலமாகக் கலச பூஜை கொண்டாடாது, சமுதாயத்தின் பலதரப்பட்ட மக்களை அழைத்து வந்து அவர்களிடமும் மஞ்சள், குங்குமம், மலர்களை அளித்து ஸ்ரீமங்களாம்பிகை திருநாமங்களை ஓதச் செய்து, வித்யாநிதிப் பண்டிகையை ஓர் சமுதாய பூஜையாக்கி மாங்கல்ய சக்தி, மங்கள சக்தி, சுமங்கலித்துவ சக்தி ஆகியவற்றை உலகெங்கும் நிலவச் செய்யுங்கள்..!

அடுத்த அறுபது ஆண்டுகளுக்குப் பகைக் கோள்களின் ‘அசுப ப்ருஹத்’ சக்திகள் பெருகிடும்! அவரவர் தம் தேசத்திற்கு நிரந்தரமாகத் திரும்பி வந்து தாய்நாட்டிலிருந்து உலக சுபிட்சத்திற்காக நிறைய ‘ப்ருத்வி’ பூஜைகளைச் செய்திட வேண்டும்! அயல்நாட்டுப் பணி மீதான மோகம் தவிர்க்கவும்! நடப்பு வ்ருஷ (விஷு) ஆண்டின் இறுதி முதல், அடுத்த 60 ஆண்டுகளுக்குப் பின் வர இருக்கின்ற வ்ருஷ (விஷு) ஆண்டு வரை கிரகங்களின் சஞ்சார நிலையை நோக்கும்போது ‘அசுப ப்ருஹத்’ சக்திகைன் பெருக்கத்தால் உலக சமுதாயத்திற்கு, ‘பகைமை’ காரணமாகப் பெரும் துன்பங்கள் ஏற்படும் என சித்தர்களின் ‘ஞானபத்ர கிரந்தங்கள்’ சூசகமாக அறிவிக்கின்றன..!

சக(ல) ஜீவன்களையும் காக்கும், பூஜை சக்திகள்! இறைவன் ஒருவனே! நாம் இறைவனை நன்கு உணரவே பல வடிவுகளில் இறைவன் திளைக்கின்றார்! உலக மக்கள் யாவரும் மகா சிருஷ்ஷியின்போது ஒரே நாட்டினராய்ச் சாந்தமுடன் வாழ்ந்தவர்களே! அக்காலத்தில் கடல் தாண்டக் கூடாது என்ற ஒரு நியதி வைத்திருந்தனர்.. இதற்குக் காரணம் என்ன? பிரபஞ்சத்தின் மகா சிருஷ்டியின்போது அனைத்து மக்களும் ஒரே நாடாக சனாதன தர்ம நாடாக, பல சனாதன தர்ம முறைகளுடன் உத்தம இறை பக்தியுடன் வாழ்ந்தனர்.. கிருத யுக காலத்தில் தெய்வ மூர்த்திகள் மக்களுடன் மக்களாய் உலாவுவர். வீதியில் பணம், நவரத்தின மணிகளை பரப்பி இருந்தால் கூட தர்ம ரீதியாக எவரும் அவற்றைத் தீண்ட மாட்டார்கள்.. உண்மை, சத்தியம், நேர்மை, நாணயம், அன்பு, கருணை, சாந்தம் போன்ற சந்நித்யங்கள் நிறைந்த தர்ம யுகம் அது.. காலப் போக்கில் அதர்மங்கள் தலை தூக்க ஆரம்பித்தன.. திரேதா யுகத்தில் அதர்மம் சற்றே தலை தூக்கிட நாட்டுப் பிரிவனைகள் ஏற்படலாயின! துவாபர யுகத்தில் அதர்மம் பரவ ஆரம்பித்து, கலி யுகத்திலோ தர்மம் மிகமிக விரைவாக மறைந்து வருகின்றது.

தற்போதைய கலியுக வாழ்வில் உலக சமுதாயமும் முற்றிலும் மாறிவிட்டது.. இன்னும் எத்தனையோ மாற்றங்கள் ஏற்படும்.. சமார் 17,28,000 ஆண்டுகள் உள்ள கிருத யுகத்தில் தர்மம் ஓங்கி இருந்தது., சுமார் 12,96,000 ஆண்டுகள் கொண்ட திரேதா யுகத்தில் தர்மத்தின் பார்வை சற்றே குறைந்து அதர்மம் சற்றே தலை தூக்கத் துவங்கியது.. 8,64,000 ஆண்டுகள் நிறைந்த துவாபர யுகத்தில் அதர்மங்கள் பெருக ஆரம்பித்தன.. 4,32,000 கொண்ட கலியுகத்தில் தற்போது சுமார் 5000 ஆண்டுகளே ஆகியுள்ளன.. இப்போதே அதர்மம் தலைவிரித்து ஆடுகின்றது..! எஞ்சியுள்ள 4,27,000 ஆண்டுகளில் எந்நிலையில் அதர்மம் தலை விஞ்சிடும் என்பதை நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.!

பணம், சொத்து, நிலபுலன்களைச் சேர்ப்பதில் மகத்தான ஆர்வமுள்ள மனிதன் தன்னையும், தன் குடும்பத்தையும், தன் சந்ததியையும், தான் சார்ந்துள்ள சமுதாயத்தையும், நாட்டையும், பிற நாட்டுச் சகோதர ஜீவன்களையும், காப்பதற்கான புண்ய சக்தியைப் பெறுவதற்கான பூஜைகள், ஹோம வழிபாடுகள், தெய்வ தரிசனங்கள், ஆலய வழிபாடுகள், பிரதோஷ பூஜை, ஸ்ரீவிஷ்ணுபதி பூஜை, ஸ்ரீகாயத்ரீ பூஜை, சத்சங்கக் கூட்டு வழிபாடு போன்ற பலவற்றையும் முறையாக மேற்கொள்வதில்லை..! ஒருவர் எம்மதத்தைச் சார்ந்தவராயினும் அந்தந்த மதத்திற்குரித்தான வழிபாட்டு முறைகளை முறையாகக் கடைபிடித்துத் தக்க புண்ய சக்திகளைக் காப்பு சக்தியாகப் பெற்றால்தான் தன்னையும் தன்னைச் சார்ந்துள்ள சமுதாயத்தையும் பகைமை உணர்வுகளில் இருந்து தற்காத்துக் கொள்ள இயலும்.!

இறைவன் மனிதனைக் காக்கின்றார்! மனிதன் தன் பகைமை உணர்வுகளினால், தீயொழுக்கங்களினால் அக்காப்பு சக்தியை மாசுபடுத்துகின்றான்! ஒருவர் நல்ல மன நிம்மதியுடன் தன்னைச் சூழ்ந்துள்ள எதிர்வினைகளினின்று தற்காத்துக் கொள்ள  வேண்டுமானால் அவர் தன் இல்லத்தையும் தன்னைச் சார்ந்துள்ள இடத்தையும் தான் பணிபுரிகின்ற அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் ஆன்ம பூர்வமாக, தெய்வீக சக்தி நிறைந்ததாக அமைத்துக் கொள்ள வேண்டும்.. இவ்வாறு உலகில் ஒவ்வொரு மனிதனும் ஆத்ம பூர்வமாகச் செயல்படத் துவங்கினால் உலகமே புனிதம் நிறைந்ததாக எவ்வித சாதி, சமய, சண்டைகளற்றதாக, போர், வன்முறை இல்லாததாக ஒரு பரிசுத்தமான சமுதாயத்தைப் பெறலாம்.. ஆனால் இது தற்போது பகற் கனவாய்த்தான் உள்ளது.. காரணம் சற்குருவின் மகத்துவத்தை எவரும் உணராததே!

கூட்டு வழிபாடு குவலயத்தைக் காக்கும்! கூட்டு வழிபாடு என அழைக்கப்படுகின்ற சத்சங்க ரீதியான சாதி, சமய, இன வேறுபாடு இன்றி ஒன்று கூடி ஆலய வழிபாடு போன்ற சத்சங்கப் பூஜைகள், தான தர்ம சக்திகளே மிகுந்த ஆன்ம வலிமை கொண்டவை.. இவற்றால் அடுத்த 60 ஆண்டுகளில் நம் பூவுலகில் எழ உள்ள பலவிதமான ‘அசுப ப்ருஹத்‘ எனப்படும் பூமி சம்பந்தமான பகைமை பொங்கும் துன்பங்களை வென்று சாந்தமான இறை நடையில் நடந்து செல்ல முடியும். எத்தனை தான்ய வளம், கனி வளம் இருப்பினும் ‘அசுப ப்ருஹத்‘ எனப்படும் ‘பூமிப்’ பகைமை உணர்வு வந்திடில் அனைத்தும் வீணாகி விடும்!

தீர்க தரிசனங் காட்டும் நவ கோள்கள்! பகைக் கோள்கள் அல்லது சுபக் கோள்களின் கோசார சஞ்சார நிலைகள் காட்டுபவை யாதோ? நம் தீய கர்ம வினைகளால் ஏற்படும் விபரீதமான போக்கையே இவற்றால் அறிகிறோம்.. உதாரணமாக சூரிய கிரகம் காய்ச்சல் மற்றும் கண், சூடு சம்பந்தப்பட்ட நோய்களையும், சந்திரன் இரத்த ஓட்ட நோய்களையும், செவ்வாய் உடல் ரணம், புண் மற்றும் இரத்த சம்பந்தப்பட்ட நோய்களையும், புதன் மூளை பற்றிய நோய்களையும், குரு சேத்துமாரி நோய்களையும், சுக்கிரன் ஜன்னி, சீதளம் மற்றும் பித்தம் சம்பந்தப்பட்ட நோய்களையும், சனி வாத நோய்களையும், கேது பகைமை, நச்சுத் தன்மை நோய்களையும் குறிப்பதால் அவரவர் நாடு மற்றும் அவரவருடைய ஜாதகத்தில் அந்தந்த காலத்திற்கான கோள் நிலைகளைக் கொண்டு எந்த நோய்கள், பகைமைப் போர்கள் ஏற்படும் என்பதை நன்கு உணர்ந்திடலாம்! ஒவ்வொருவருக்கும் ஏற்பட இருக்கின்ற அல்லது சமுதாயத்தில் பரவியிருக்கும் நோய்களையும் முன்னரே தீர்க தரிசனமாகவும் கூறிவிடலாம்..!

இவையன்றி சூரியன் – தலை, சந்திரன் – முகம், செவ்வாய் – நெஞ்சு, புதன் – இடுப்பு, முதுகு வியாழன் – வயிறு, சுக்கிரன் – அரைப் பகுதி, சனி – தொடை, ராகு, கேது – கை, கால்கள் போன்றவற்றைக் குறிப்பதாலும் கிரக சஞ்சாரங்களினால் அந்தந்த அங்கத்திற்கான நோய்க் குறிகளையும் முன்னரேயே நன்கு உணர்ந்திடலாம்! அந்தந்த கிரகத்தின் இருப்பிடம் கொண்டு எவ்விடத்தில் நோய் ஏற்படும் என்றும் கண்டிடலாம்..! அந்தந்த கிரகத்தின் அமைப்பைப் பொறுத்து மனிதன் மற்றும் தாவர உலகிற்கும் ஏற்படக் கூடிய துன்பங்களை எளிதில் அறிந்திடலாம்.. இவற்றை எல்லாம் ஒட்டு மொத்தமாக உற்று நோக்குகின்றபோதுதான் அடுத்த 60 ஆண்டுகளிலே கடுமையான தொற்று நோய்களும், உலகப் போர் ஏற்படும் சூழ்நிலைகளும் அதிகமாகப் பெருகுகின்றன என்பதை அறிகின்றோம்.. இதிலிருந்து மக்கள் தம்மையும், தம் சமுதாயத்தையும் தற்காத்துக் கொள்ள வேண்டுமெனில் அவரவர், நாட்டினின்று, தாய் மண்ணினின்றுதாம் பூஜைகளை நிச்சயமாக மேற்கொள்ள வேண்டும். இதுவே அபரிமிதமான பலன்களைத் தரும்..!

தான தர்மம் தரும் தற்காப்பு! இறையருளால், எதிர்வரும் கடுமை நிறைந்த காலத்தை நாம் மீண்டும் எப்பிறவியும் எடுத்திடாது நம் சந்ததியும் இவற்றில் சிக்கி அவதியுறாது நன்முறையில் நல்ல லோகங்களில் நாம் சாந்தமுடன் ஆத்ம சாந்தம் பெறுவதற்கு நாம் இப்போதே தக்க இறைவழிபாடுகளை, தான தர்மங்களை நாடிட வேண்டும்.. சற்குருவின் கருணைக் கடாட்சமே கலியுகத்தில் நமக்கு எப்போதும் சாசுவதமாக நன்மை பயக்கும் என்பதை நன்கு இனியேனும் உணருங்கள்.. மீண்டும் உலகளாவிய போர் ஏற்படவிருப்பதாக ஜோதிட ரீதியாக பல குறியீடுகள் தோன்றுவதால் எந்த நாடு, எந்த நாட்டுடன் சேர்ந்து போரிடும் என்பது மனிதனின் பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட விஷயமாகும்!

ஆன்மீகச் செல்வம் மிகுந்ததாக, பிரபஞ்சத்தின் ஆத்மத் தலைநாடாக விளங்கும் புனிதமான பாரத நாட்டைச் சேர்ந்த நாம், உலகில் சாந்தம் நிலவுவதற்கான ஹோம, தான, தர்ம, பூஜை, இறைவழிபாடுகள், ஆலய வழிபாடுகள் போன்ற உலக சமுதாய வழிபாட்டுக் கடமையாக மேற்கொள்ள வேண்டும். எனவே உத்தராயணம் பிறக்கும் வரும் தை மாதத்திலிருந்து (ஜனவரி 2002) வெளிநாடுகளில் வாழ்கின்ற யாவருமே அவரவர் தம்முடைய தாய் நாட்டிற்கு நிரந்தரமாகத் திரும்பி தக்க இறை வழிபாட்டு முறைகளை தீவிரமாக பூஜை, தான தர்மங்களை மேற்கொண்டு சமுதாயத் தற்காப்பு சக்திகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்..!

தாய்நாட்டுப் பூஜையால் தரணியின் பகைமையைச் சாந்தப்படுத்துங்கள்!

ஏன் வெளிநாட்டில் இருந்து கொண்டே பூஜைகளை மேற்கொள்ளக் கூடாதா என வினவலாம்! உலகப் பொது நாடாக, சனாதன தர்ம நாடாக விளங்கும் இப்புண்ணிய பூமியே மனிதனின் சுயநலம், பேராசைகளால் பல நாடுகளாக வெடித்துப் பிரிந்து இன்றைக்கு அடுத்தடுத்த நாடு கூட தெய்வீக சகோதரத்துவமின்றி, பகைமைத்தனமே உலகெங்கும் பெருகியுள்ளது.. இதனை ஆன்மீக ரீதியாகவே சாந்தப்படுத்த முடியும்.. எனினும் அனைத்து மக்களும் ஒருமித்து சத்சங்கமாக இறைவழிகளில் செயற்பட்டால் தானே நாடுகள் ஒற்றுமையாய்த் திகழ முடியும்! இந்த ஒருமைப்பாடு தற்போதைக்கு அவரவர் நாட்டில்தானே சிறப்பாக அமைய முடியும்... எத்துணை மதப் பிரிவுகள் இருப்பினும் பெரும்பாலான மதங்கள் சத்தியமான, சாசுவதமான கடவுட் பரம்பொருளைப் போற்றுவதால் சுயநலமற்று, பகைமை உணர்வின்றி அனைவரும் ஒன்று கூடி சத்சங்க ரீதியாகப் பிரார்த்தனைகள், பூஜைகள், தான தர்மங்கள் செய்வதால் உலகம் நிச்சயமாக ஒற்றுமையுடன் திகழும்.. ஆனால் பகைமை சக்திகள் பெருகும்படியான கோள் சஞ்சார நிலைகள் கூடியதாக அடுத்த 60 ஆண்டுகள் திகழ்வதால் உலகளாவிய சத்சங்க பூஜைகள் அமைவதற்கு மிகவும் குறைந்த வாய்ப்பே காணப்படுகிறது..!

எனவே “East or West, Home is Best” என்னும் மொழிக்கேற்ப அடுத்த ஆண்டிலிருந்து அவரவர் தமது தாய் நாட்டிற்குத் திரும்பி மகத்தான பூஜைகளை மேற்கொண்டு உலக சாந்திக்காக ஆன்மீக ரீதியில் பணிபுரிய வேண்டும்.. ஒவ்வொருவரும் தத்தம் தாயகத்தில் இருந்தால்தான் சாந்தத்தைப் பெருக்க முடியும்..! மகத்தான பூஜைகளையும் மேற்கொள்ள இயலும்.. ஏனெனில் எந்நாட்டில் பிறந்தாரோ அப்புனித மண்ணிற்கும் அவர்தம் தேகத்தில் உள்ள 72000 நாடி நரம்பு, நாளங்களுக்கும் நெங்கிய பிருஹத் காரண்ய பூமி சக்தி பூண்டு... இப்பிருத்வி சக்தியை, ப்ருஹத் சக்தியே விருத்தி செய்தால் தான் பகைமை தணியும்..!

தலையானது தாய் நாடே! பூமி தேவ சக்தியையும், மகத்தான வேத வலிமை உடைய பிருத்வி மற்றும் ப்ருஹத் சக்திகளை உலகில் நிரவிடவே அவரவர் தத்தம் தாய் நாட்டிற்கு திரும்புவது உசிதமானது என்று ஜோதிட ரீதியாக அளிக்கப்படுகின்ற ஆன்மீக அறிவுரையாகும். உதாரணமாக ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆப்பிரிக்காவில் பணிபுரிந்தால் அவர் தம் தாயகமான ஆஸ்திரேலியாவிற்கே திரும்பி நன்முறையில் தெய்வீக பூஜைகளைப் பெருமளவில் கடைபிடித்திடல் வேண்டும்..! வரும் ஆண்டிலிருந்து அடுத்த 60 ஆண்டுகளுக்குள் தீவினை சக்திகள் அசுப ப்ருஹத் சக்திகளாக, பகைமையைப் பெருக்கும் விரோத சக்திகளாக, போரை வலிக்கும் தீய சக்திகளாகப் பெருத்த மலைபோன்று பெருகி உலகைச் சூழ இருப்பதால் ஒவ்வொருவரும் உலக அமைதிக்காக தம்முடைய ஆன்ம சக்தியைப் பெருக்க அவரவருடைய தாய் நாட்டிற்குத் திரும்பி தக்க பூஜைகளை மேற்கொள்ள வேண்டுமென ஜோதிட ரீதியாகவும், ஆன்மீக வழிமுறையாகவும் அறிவுறுத்தப்படுகின்றது.!

எனவே இவ்வான்மீக அறவழியானது உலக நாடுகள் யாவற்றுக்குமே பொருந்துமாதலால் அயல் நாட்டில் வசிக்கும் நண்பர்கள், உறவினர்கள், சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இதனை உலகப் பொது இறைவழி முறையாக எடுத்துரைத்து சாந்தமயமான உலகச் சமுதாயத்தைப் பேணிடத் தத்தம் தாய்நாட்டில் இயன்ற இறைப் பணிகளை மேற்கொள்ளத் துவங்க வேண்டும்.. இதற்காக அவரவர் நாட்டில் செவ்வாய் மற்றும் சனி கிரக வழிபாடுகள் விரிவு பெறுதல் வேண்டும்...! எனவே ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதை உணர்ந்து உலக சமுதாயத்திற்குப் பாடுபடத் தம் தாய் மண்ணிலிருந்து இறை வழிபாடு மேற்கொள்வதுதான் அடுத்த அறுபது ஆண்டுகளுக்கான சித்தர்கள் அருள்கின்ற இறைநெறிமுறையாகும்.!

சந்திர சாந்த சந்ததி பூஜை! 

அடுத்த 60 வருடங்களுக்கான சந்திர சாந்த சந்ததி பூஜை!  பகை சக்திகள் பெருக்கம்!

அடுத்த 60 ஆண்டுகளுக்கு கோள்களாகிய கிரகங்களின்று எழுகின்ற பகைக் கோள் சக்திகள் பெருக இருப்பதால் வரும் தலைமுறையினர் சாந்தமுடன் வாழ இப்போதே சந்திர சாந்த சந்ததி பூஜைகளை அனைவரும் மேற்கொள்ள வேண்டும்.. இச்சூழ்நிலை உலகளாவியப் பொது நிலையாதலால் அனைத்து நாடுகளிலுமே குறித்த சில பூஜைகளை அவரவர் மத, கலாச்சார பாரம்பரியப்படி அனைத்து நாட்டு மக்களும் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும். .

இவ்வுலகின் ஆன்மீகத் தலை நாடாக, இப்பிரபஞ்சத்தின் ஆத்மத் தலைநாடாக நம் புனித பாரத பூமி இலங்குவதால் அடுத்த 60 ஆண்டுகளில் எழக் கூடிய கடுமையான பிரச்னைகளுக்கும், துன்பங்களுக்கும் தக்க ஆன்மத் தீர்வு அளிப்பதற்கான வழிபாட்டு முறைகளை மேற்கொள்ள வேண்டிய கடைமை ஒவ்வொரு பாரதப் பிரஜைக்கும் உண்டு! உலகளாவிய இத்தகைய மாபெரும் துன்பங்களுக்கு பாரத பூமியில்தாம் மகத்தான பரிகார வழிமுறைகள் நிறைந்துள்ளன! கிரகங்களின் பகைமை சக்தி என்பதைவிட கிரகங்களில் நட்பு கிரகங்கள், பகை கிரகங்கள் என நமக்குப் புரிவதற்காகச் சில கிரகப் பாகுபாடுகளை நம் முன்றோர்கள் ஜோதிட ரீதியாக அளித்துள்ளார்கள்.. இதற்காகக் கோள்களையே நட்புக் கிரகங்கள் அல்லது பகைமைக் கிரகங்கள் என்று மனித அறிவு பாவனையில் அளிப்பதால் கோள்களைப் பற்றித் தவறான முடிவுகளுக்கு ஒரு போதும் வந்து விடாதீர்கள்.!

(தீவினைக்) கர்ம வினைகளே தீமைகளாக மாறும்! பலகோடிப் பிறவிகளில் நாம் சேர்த்துக் கொண்டுள்ள நம் கர்ம வினைகளினை வரைபடமாகக் காட்டுவதே நம் ஜாதகக் கட்டமைப்பு ஆகும்.. அந்தந்த நாளுக்கு உரிய கிரக அமைப்பைக் கொண்டும் தினசரி கோள கோசார ஜாதகக் கட்டத்தையும் வகுத்து நம் கர்ம வினைகளால் நமக்கு வர இருக்கின்ற இன்ப, துன்பங்களை நாம் அறிந்திடலாம். உதாரணமாக வளர்பிறைச் சந்திரன், புதன், குரு, சுக்ரன், ஆகிய நான்கு கிரகங்களையும் சுபர்கள் என்றும் சூரியன், தேய்பிறைச் சந்திரன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களை அசுபர்கள் (பகைமைக் கோள்கள்) என்றும் குறிப்பிடுவதுண்டு.!

அதாவது அசுபர்கள் எனப் பிரித்திருப்பதால் இந்த அடைமொழிகொண்டு அந்த கிரகங்களை கெட்ட கிரகங்கள் என ஒரு முடிவுக்கு வராதீர்கள். ஏனெனில், சூரியன் செவ்வாய், சனி, ராகு, கேது, தேய்பிறைச் சந்திர மூர்த்திகளுடைய கருணை, ஆசியின்றி நாம் விநாடி கூட வாழ இயலாது! ஆனால் நாம் சேர்த்த கர்மங்களின் விளைவுகளை நாம் தானே அனுபவிக்க வேண்டும்! இவற்றையும் கோள்களின் அசைவுகளாகிய கோசார நிலைகள் குறிக்கின்றன.. மேலும் சுபர் என்று ஜோதிட ரீதியாகப் பகுக்கப்படுகின்ற குருபகவான் கூட லக்னத்தின் எட்டாம் இடத்தில் இருந்தால் தீங்குகள் விளையும் என்பதையும் அறிய வேண்டும்.. எனவே நம் வாழ்க்கையின் இன்ப, துன்ப கால கட்டங்களைக் குறிப்பதாகவே சுப, அசுப கிரகங்களின் அமைப்புகள் நமக்கு அளிக்கப்பட்டுள்ளன! எனவே, தீதும் நன்றும் பிறர்தர வாரா, முற்பிறவியின்/ இப்பிறவியின் தீய கர்ம வினைகளுக்கான தண்டனைகளையே நாம் துன்பங்களையும், நோயாகவும், வறுமையாகவும், விபத்தாகவும் சந்திக்கும்போது அவற்றைக் குறிப்பதே அசுப கிரஹங்களின் வானியல் நிலைகள், ஜாதக, ராசி, கிரக நிலைகள் என்பதை உணருங்கள்! சந்திர சாந்த சந்ததி பூஜை விளக்கங்களை வரும் உத்தராயண இதழில் (ஜனவரி 2002) காண்போமாக!

தழுவக் குழைந்த நாயகன்

சிவபெருமானுடைய தழுவக் குழைந்த நாத அவதாரத்துவம் (அட்டைப் பட விளக்கம்)

இன்றைக்குப் பூலோகமெங்கும் நாம் காண்கின்ற சுயம்பு லிங்க சிவமூர்த்திகள் யாவுமே இறைவனுடைய பல வடிவுகளுக்கு, அவதாரத் தத்துவங்களுக்கு, அவதார மூர்த்திகளுக்கு அடிப்படையாய் இருந்து, ‘இறைவன் ஒருவனே’ என்பதை உணர்விப்பதாம்! நம் இறைவளத்திற்காகவே அரிதான லிங்க வடிவை இறைவனே நமக்கு மனமுவந்து அளித்துள்ளான். கலியுகத்தில் எதையுமே கண்ணால் கண்டால்தான் நம்பிக்கை ஏற்படுவதால் பூலோக ஜீவன்கள் இறைமையை ‘வடிவுப் பாங்கில்’, உணர்ந்து உய்யும் பொருட்டு இறைவனே பல வடிவுகளில் ஸ்ரீபெருமாளாகவும், ஸ்ரீமுருகனாகவும், இறைவனாகவும், ஸ்ரீவிநாயக மூர்த்தியாயும், ஸ்ரீசாஸ்தாவாகவும், ஸ்ரீசந்தோஷி மாதாவாகவும் தன்னைப் பலவாறாக வி(ரி)ளித்துக் கொண்டுள்ளான்..

தட்சன் தன் 27 புதல்விகளையும் சந்திரனுக்குத் திருமணம் செய்வித்த பிறகு, ஸ்ரீசந்திரன் ரோஹிணியின்பால் மிக்க அன்பு செலுத்தியதாகத் தவறாக எண்ணி, தட்சன் சினமடைந்து சாபமளித்திட, ஸ்ரீசந்திர பகவானுடைய பதினாறு கலைகளும் மறையலாயின, காரண காரியமின்றி எதுவும் பிரபஞ்சத்தில் நிகழ்வதில்லையே! மூன்றாம் பிறைச் சந்திரனைச் சிவபெருமான் தன் சிரத்தில் சூட்டிய படலமே, இதனால்தாமே உருவாகி வேறு எவருக்கும் கிட்டாத வகையில் ஸ்ரீசந்திர பகவானுக்கு இவ்வரிய பாக்கியமும் கிட்டிற்று! ஸ்ரீசந்திர பகவான் மதிகாரகனாக பூலோக ஜீவன்களை ஆட்சி செய்பவர் அல்லவா! எனவே சந்திரனுடைய 16 கலைகளும் ஒவ்வொன்றும் கோடானு கோடி தேவ அம்சங்களைக் கொண்டு ஜீவ சக்திக்கு மிகவும் இன்றியமையாதவையாம்! தட்சனின் சாபத்தால், சந்திரனின் கலைகள் மறைந்தமையால், நம் பூமிக்கு மட்டுமல்லாது நாம் அறியாத பல பூலோகங்களையும் எண்ணற்ற கோள்களையும் சந்திர ஒளி அடையாது, ஒளித் தத்துவத்தில் பல குழப்பங்களும், பிரச்னைகளும் ஏற்பட்டன.!

ஸ்ரீதழுவக் குழைந்தீசர்
பழையாறை

பாற்கடலிலிருந்து அமிர்தத்தைக் கடைந்து எடுத்த பொழுது, இவ்வமிர்த கடாட்சத்தைத் தேவர்கள் மட்டுமன்றி எதிர்வரும் யுகங்களின் அனைத்து ஜீவன்களும் பெற்றும் உய்ய வேண்டும் என்பதற்கான நல்வழி முறையை தெய்வ மூர்த்திகள் சிவபெருமானிடம் கேட்டுப் பெற்றனர். மகா சிருஷ்டி துவங்கி, மகா பிரளயத்தில் முடியும் வரை இப்பிரபஞ்சத்தில் வாழும் அனைத்து ஜீவன்களுமே பாற்கடலின் அமிர்த கடாட்சத்தைப் பெறுவதற்காகவே ஸ்ரீசந்திர பகவானும் அமிர்த அவதார சக்தியாய்ப் பாற்கடலில் இருந்து உற்பவிக்கப் பெற்று அமிர்த சக்தியுடன் அன்றும், இன்றும், என்றும் பரிமளிப்பவராகின்றார்! அமிர்தத்திற்கும் 64 விதமான தெய்வீகக் கலைகள் உண்டு! அவற்றுள், இப்பிரபஞ்சத்தில் அமிர்த சக்தி பரிபூரணமாக ஒளிப் பிரகாசத்துடன் பரிணமித்திடத் தேவையான பதினாறினை ஸ்ரீசந்திர பகவான் அளிக்கின்றார்! எனவே பாற்கடலில் சந்திரன் தோன்றியதற்கும் இறைவன் பல காரண, காரியங்களை ஊட்டி வைத்தார்!

சந்திர அமிர்த ரசம்! தட்சனின் சாபத்தால் சந்திரனின் கலைகள் மறையத் துவங்கிய உடனேயே பூலோகத்தில் உள்ள ஜீவன்களின் மதிப் பிரகாசமும், அறிவொளியும் ம(ய)ங்கலாயிற்று, ஏனென்றால் சூரிய ஜீவ சக்தியோடு, தினமும் பூலோக ஜீவன்கள் ஸ்ரீசந்திர பகவானின் அமிர்தத்தைப் பருகியே, பல அரிய ஜீவகளை(கலை)களையும், ஜீவ சக்தியையும் பெறுகின்றனர்.. ஆனால், சந்திரனின் 16 கலைகள் மறைந்தவுடன் பிரபஞ்சத்தில் ஜீவகளைகளும் ஜீவ சக்திகளும், மங்கலாயிற்று, மறையலாயிற்று! அனைவரின் மதி மயங்கிய இக்காலத்தில்தான் எண்ணற்ற அசுர குணங்கள் பெருகிப் பல்வகை அசுரர்கள் உருவாயினர்! தம் தந்தையாம் தட்சனிடம் ஸ்ரீசந்திரனைப் பற்றி முறையிட்டமையால்தானே அவர் சாபமளித்திட, 16 கலைகளையும் சந்திரன் இழந்தார் என வருத்தமுற்று ஸ்ரீசந்திர பகவானின் பத்னியராம் 27 நட்சத்திர மூர்த்திகளும் இதற்கான பிராயச்சித்தம் தேடிப் பல ஆலயங்களில் வழிபடத் துவங்கினர்.. இவர்கள் இவ்வாறு வழிபட்ட லிங்கங்களே நட்சத்திர லிங்கங்கள் ஆயினர்! திருவொற்றியூர் மற்றும் திருவிடைமருதூர் ஆலயங்களில் அவரவருக்குரிய நட்சத்திர லிங்கங்களை இன்றும் தரிசித்திடலாம்! இவர்கள் ஸ்ரீசந்திர பகவானுடைன் சேர்ந்து வழிபட்ட தலங்களிலுள்ள சுயம்பு மூர்த்திகளே சோமநாதர், சோமேஸ்வரர், சந்திரா மௌளீஸ்வரர் போன்ற நாமங்களைப் பெற்றனர்.. லிங்க வடிவு என்பது சிவபெருமானின் பரம்பொருள் தன்மையோடு அம்பிகை, தேவாதி தேவர்கள், தெய்வ மூர்த்திகள், பிரபஞ்சத்தின் உள்ளும், புறமும் அனைத்தும் அடங்கிய மூர்த்தமே சிவலிங்கமாகும்,!

சிவசக்தி ஐக்கியத்தால் சந்திரனுக்குச் சாப விமோசனம்!

தட்சனின் சாபமான இந்த ஒரு இறை லீலை மூலம்தானே நவகிரக மூர்த்தியாகப் பரிமளிக்கின்ற பாக்யமும் ஸ்ரீசந்திர பகவானுக்குக் கிட்டியது! இதற்கும் தட்சனின் தபோ பலன்கள்தாமே காரணம்! எனவே பூஜா பலன்கள், தபோ பலன்கள் நன்மைகளைத் தாம் எப்போதும் செய்யும்! தாமிழந்த கலைகளைப் பெறவும், தம் பத்னியருடன் மறுபடி உரிய முறையில் சேர்ந்திடவும் ஸ்ரீசந்திர பகவான் பல இடங்களிலும் வழிபாட்டை மேற்கொண்டார்..!

அப்போது சகலத்தையும் தன்னுள் அடக்கியவராக உள்ள லிங்க மூர்த்தியைத் தழுவி “இறைவனும் இறைவியும் ஒன்றே” என்னும் தத்துவத்தை உணர்விக்கும் லிங்க மூர்த்திகளை வழிபடும்போதுதான் தமக்கு 16 கலைகளையும் மீண்டும் பெறுவதற்கான நல்வரம் கிட்டும் என்பதை ஞானப் பிரகாசப் பாடமாக ஸ்ரீஅகஸ்திய மகரிஷியிடமிருந்து ஸ்ரீசந்திர பகவான் உணர்ந்து, பிறகு தழுவக் குழைந்த நாத தத்துவக் கோல இறைவனைத் தரிசித்து நல்லருள் பெற்றார்..! அக்னித் தலமாக விளங்குகின்ற திருஅண்ணாமலையில் இருந்துதான் அனைத்துக் கோள்களும், நட்சத்திரங்களும், ஒளியைப் பெறுகின்றன.. எனவே சூரியனிடமிருந்து சந்திரன் ஒளிக் கிரணங்களைப் பெறுவதாக நாம் எண்ணினாலும் அக்னிச் சக்திகளை ஸ்ரீசந்திர பகவான் திருஅண்ணாமலையிலிருந்தே சூரியனைப் போல் பெறுகின்றார் என்பதே வேத வாக்காகும்..!

ஸ்ரீநடராஜப் பெருமாள்
சத்திமுற்றம்

ஸ்ரீசந்திர பகவானுடன் சேர்ந்து அவரது பத்னியரும் பல திருத்தலங்களிலும் சோமநாத பூஜைகளைக் கிடைபிடித்து தழுவக் குழைந்தீஸரராக, இறைவனும், இறைவியும் இணைந்து இருக்கின்ற தலங்களில் சிவபூஜை செய்திட்டனர்! இதனால் ‘கலைகள் மறையட்டும்’ என்ற சாபமானது ‘ஒரு பட்ச காலத்திற்குத் தேய்ந்து, ஒரு பட்சம் வளரட்டும்’ என்பதாய் சிவனருளால் மாறியது! இவ்வாறு ஒவ்வொரு கலையாகத் தன்வசம் திரும்பப் பெற்றார் சந்திரன்.. கோடானு கோடிச் சிவலிங்களைத் தரிசித்துப் பெற்றமையால் சந்திரபகவானின் ஒவ்வொரு கலையும் பலகோடி அம்சங்களைக் கொண்டதாம்..!

மனக் குழப்பம் அகற்றி, மன அமைதி பெருக்கும் ஸ்ரீதழுவக் குழைந்தீசர்!

பல திருத்தலங்களில் ஈசனருளால் ஸ்ரீசந்திர பகவானுக்கு ஒவ்வொரு கலையாகத் திரும்பக் கிடைக்கப் பெற்றாலும் அவை அனைத்தையும் ஒன்றாக இணைத்து மீண்டும் முழுநிலவாகப் பரிமளிக்க அருள்பாலிக்கும் உரிய தலத்தைச் சந்திர பகவான் தேடி வரலானார்..
கும்பகோணம் பட்டீஸ்வரம் அருகிலுள்ள சக்தி முற்றம் திருத்தலத்தில் தான் சிவக்கொழுந்தீசராக பெரிய நாயகி அம்பிகையின் தழுவ தத்துவராகச் சிவபெருமான் காட்சியளித்துத் தம்முடைய திருமுடியில் மூன்றாம் பிறைச் சந்திரானய்ப் பரிமளிக்கவும் 16 கலைகளையும் ஐக்கியமாக்கியும் நல்வரம் அருளினார்..!

மனத் திருப்தி தரும் மாதனம்! எனவே இறைவனே தம் சிரசில் எடுத்துச் சூட்டிய மூன்றாம் பிறையில் 16 கலைகளும் மறைபொருளாக உள்ளன.. சந்திர பகவான் தன் 16 கலைகளையும் முழுமையாகப் பெறுதற்கு அருள்பாலித்த பரம்பொருளே பரம்பொருளே ஸ்ரீபெரிய நாயகி உடனுறை ஸ்ரீசிவக்கொழுந்தீசராவார்! பட்டீஸ்வரம் அருகில் சக்திமுற்றம் திருத்தலத்தில் இறைவன், இறைவி அருள்பாலிக்கின்றனர்,, இவ்வாறாக ஸ்ரீசந்திர பகவானுக்கு தழுவக் குழைந்தீசராகப் பல இடங்களில் பரம்பொருள் அருளிய காட்சியையே இவ்விதழின் அட்டைப் படத்தில் அளித்துள்ளோம்..! பதினாறு வகைச் செல்வங்களையும் முழுமையாகப் பெற்றாலும் அவற்றோடு சாந்தமாக வாழ்வதென்பது பெறுதற்கரிய பாக்கியமாகும்.! ஏனெனில் வறுமையில் பலரும் வாடிடினும், அவர்கள் பசியுடன் நன்கு உறங்கிட, செல்வத்துடன் இருப்போரோ ஒரு நிமிடம் கூட நிம்மதியின்றி, துன்பம் அடைந்தவராய், ஒரு விநாடி கூட உறங்க இயலாதவராய் வதங்குவதும் உண்டு! எனவே செல்வம் பெறுதல் பெரிதன்று! லக்ஷ்மி கடாட்சம் என்பது பணத்தில் திளைத்திருப்பது மட்டுமல்ல! குறைந்த சம்பளமாக இருந்தாலும் மனத் திருப்தியுடன் வாழ்வதே லக்ஷ்மி சம்பத்களில் ஒன்றாம்..!

மதியை மதியுங்கள்! பொதுவாக வ்ருஷ ஆண்டின் இறுதி வாக்கில் பகைக் கோள்களின் ஆதிக்கத்தால் தீவினை சக்திகள் பெருகி, மனோதைரியம் குறைந்து கோழைத்தனம் மிகுவதாக ஜோதிட ரீதியாக சந்திர லக்னப் பலாபலன்கள் குறிப்பிடுவதால், வரும் உத்தராயணக் காலமான தை மாதத்திலிருந்து (ஜனவரி 2002) விரிவான சந்திர பூஜைகளைத் தினமும் சந்திர ஹோரை மற்றும் திங்கட்கிழமைகளில் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும்.. அடுத்த அறுபது ஆண்டுகளில் மனக் குழப்பம், கோழைத் தனத்தால், மிகவும் பாபகரமான தற்கொலை உணர்ச்சிகள் உலகில் மிகும் ஆதலால் சந்திர பகவானைத் தினமும் தரிசித்தலும் சசிமுத்து எனப்படும் ‘கல்’ அணிதலும் மன சுத்தியைப் பெருக்குவதாகும்.

பௌர்ணமி தினங்களில் திருஅண்ணாமலை, தேனிமலை, நெடுங்குடி (இது அமாவாசை மற்றும் பௌர்ணமி கிரிவலத் தலமாகும்).. திருப்பரங்குன்றம், பழநி, அய்யர்மலை, திருத்தணி போன்ற மலைத் தலங்கலில் கிரிவலம் வருதலும் பௌர்ணமி நாட்களிலும் குறிப்பாக, ஆவுடை இல்லாது திகழும் பாண லிங்க மூர்த்திகளுக்கும், தழுவக் குழைந்த நாதராக அருள்பாலிக்கும், தலங்களிலும் (சக்தி முற்றம், சென்னை திருவள்ளூர் அருகே பாக்கம், தாம்பரம் அருகே படப்பை, திருநெல்வேலி அருகே பலவூர்) அன்னாபிஷேகமும் அன்னதானமும் செய்தலும் நல்ல ஆன்ம மனோ தைரியமும், தெய்வீக வைராக்யத் துணிச்சலும் கூட்டும், மனக் குழப்பங்களில் இருந்து மீளலாம்.. இல்லாவிடில் மதுப் பழக்கம், சூதாட்டம், தீயொழுக்கம் போன்றவை எளிதில் தொற்றிக் கொள்ளும்..!

ஸ்ரீமுருகப் பெருமாள்
சத்திமுற்றம்

அட்டைப்படத்தில் நீங்கள் காண்கின்ற ஸ்ரீதழுவக் குழைந்தீசர் தரிசனமானது ஸ்ரீசந்திர பகவான் வழிபடும் கோலத்தையும் இணைத்துத் தருதலால், மதிகாரகனாகிய ஸ்ரீசந்திர பகவானின் பரிபூரண அனுக்கிரகம் பெறுதற்கும், 16 பேறுகள், சாந்தம், மனநிம்மதி போன்ற மனச் செல்வங்களை அடையவும் ஸ்ரீதழுவக் குழைந்தீசர் தரிசனம் மகத்தான முறையில் துணை புரியும்..!

தரிசனம் பெறுவீர்! தத்தளிப்பிலிருந்து விடுபடுவீர்!

ஸ்ரீதழுவக் குழைந்தீஸ்வரராகப் பல தலங்களிலும் சிவபெருமான் அருள்பாலிக்கின்றார். மன நோய்களுடன் உள்ள குழந்தைகளைப் பெற்றோர், மது, சூது போன்றவற்றிற்கும் அடிமைப்பட்டு மனத்தத்தளிப்பு கொண்டிருப்போர், மன அமைதியின்றி வாழ்வோர், தன் பிள்ளையோ பெண்களோ திருமண வாழ்வில் நன்முறையில் நிலை பெறாமை கண்டு மன அமைதியின்றி வாழ்வோர், VRS மற்றும் ஓய்வு பெற்றும் வாழ்வில் நிம்மதியின்றி இருப்போர், நிறைந்த பணமிருந்தும் சொல்லொணா மனத் துயரால் வாடுவோர், எப்போதும் பணக் கஷ்டத்தால் மனக் கவலையுடன் இருப்போர் இவர்கள் யாவரும் ஸ்ரீசந்திர பகவான் தரிசித்த ஸ்ரீதழுவக் குழைந்தீசரைத் திங்கள்தோறும் சந்திர ஹோரையிலும், ஏனைய நாட்களில் சந்திர ஹோரை நேரத்திலும் சக்தி முற்றத்திலும், ஸ்ரீதழுவக் குழைந்தீசர் எனும் நாமம் பூண்ட சிவத் தலங்களிலும் வழிபட்டுச் சிவபெருமானுக்குப் பாலபிஷேகம், வெண்ணெய்க் காப்பு, அன்னக் காப்பு,  போன்ற மூன்று காப்புகளையும் இட்டுப் போற்றிடுக.. வெண்ணிற வெண்பட்டு வஸ்திரம் சாற்றி, வெண்ணிற உணவுப் பண்டம் படைத்து ஏழைகளுக்கு வெண்ணிற வஸ்திரங்கள், வெண்ணெய், தேங்காய் சாதம் வெண்பொங்கல், தேங்காய் பர்பி போன்ற வெண்ணிற உணவுப் பொருட்களைத் தானமாக அளித்து வந்தால் மேற்கண்ட குறைகளுக்குத் தக்க தீர்வு கிட்டும்.. மேலும் மனக்குழப்பம் ஏற்படுவதற்கான காரணங்களுள் ஒன்றே மனத் தூய்மையின்மை ஆகும்..மனம் சுத்தமாக இருந்தாலும் எதிர்வரும் துன்பங்களை எதிர் நோக்கும் துணிவு, தைரியம், மன வைராக்கியம் இல்லாவிடில் என் செய்வது? குழந்தைகள் மட்டுமன்றிப் பலரும் இருட்டு காரணமாகத் தனித்துச் செல்ல பயம் கொண்டு வாழ்வில் தைரியமின்றிக் கோழைகளாக இருப்பர்.. இவர்கள் நன்முறையில் துணிச்சல் பெற்று வாழ்க்கையில் இறைநெறியில் பீடுநடை போட்டிட (ஸ்ரீசந்திர பகவான் வழிபடும்) ஸ்ரீதழுவக் குழைந்தீசர் இறை தரிசனம் பெரிதும் துணை புரியும்..!

இறைமயத் தியாகம்

என்றைக்கு வருமோ இறைமயத் தியாகம்!

உலகில் நடக்கும் தீவினைகளிலிருந்து ஜீவன்களைக் காப்பாற்றுவதற்கான வழிபாடுகளை அவ்வப்போது ஏற்றுக் கடைபிடிக்க வேண்டிய கடமை ஒவ்வொரு இந்தியப் பிரஜைக்கும் உண்டு! உண்மையில் தினந்தோறும் ஒவ்வொருவரும் உலக ஜீவன்களின் நன்மைக்காக ஏதேனும் ஒரு நற்காரியம் செய்து அதன் புண்ணியத்தை அந்த இடத்து மூல எல்லைத் தெய்வங்களுக்கு பொது நலச் சங்கல்பம் செய்து அர்ப்பணித்திட வேண்டும்! தினமும் ஒரு பசுவிற்கு இரண்டு வாழைப் பழங்கள் அளிப்பது கூட ஓர் அற்புத அறப் பணியே! ஏதோ நம் வாழ்க்கை எப்படியோ ஓடுகிறது அல்லது முடிந்து விட்டது என எண்ணாதீர்கள்! VRS (சுய ஓய்வு) பெறுதல் என்பது சினிமா TV பார்த்துக் கொண்டு நேரத்தை வீணாக்குவதற்காக அல்ல! ஜீவன்களின் நன்மைக்காக வாழ்வின் ஒரு கால கட்டத்திலாவது இத்தகைய பொது நலப் பிராயச்சித்த முறைகளை ஏற்று நடத்துவது ஒவ்வொருவருடைய கடமையாகும்!

ஸ்ரீசிவலோகநாதர்
திருவிசைநல்லூர்

விடுமுறைகளில் என்ன செய்வது என்று விழிப்போர் இப்பூவுலகிற்கு ஆற்ற வேண்டிய கடமைகள் நிறைய உண்டு! காலத்தை விரயம் செய்தல் பெறுதற்கரிய இந்த அரிய மானுட வாழ்வை அளித்த இறைவனையே பழிப்பது போலாகும்! எதற்காக இந்த மானுடனைப் படைத்து ஜீவ அணுக்களை நஷ்டமாக்கினோம் என்று ஸ்ரீபிரம்ம மூர்த்தியே சினந்து சாபம் தருமளவிற்கு நடந்து கொள்ளாதீர்கள்! பலராலும் தனித்துச் செய்திட இயலாது என்பதற்காகவே ஆங்காங்கு சத்சங்களை அமைத்து அரிய பிராயச்சித்த முறைகளை, கூட்டு வழிபாடுகளை வாரத்திற்கு ஒரு முறையேனும் செய்தலை ஓர் இறைப் பெரும் கடைமையாக்கிக் கொள்ளுங்கள். நமக்குத்தான் எவ்விதமான பிரச்னையும் இல்லையே, வாழ்க்கை சுமுகமாகத்தானே ஓடிக் கொண்டிருக்கிறது. நாம் ஏன் இவற்றைச் செய்ய வேண்டும் என்று சுயநல ஜடப் பிராணியாக எண்ணாதீர்கள்! உங்களுக்கு எவ்விதப் பெரும் பிரச்னைகள் இல்லை என்றாலும் உங்கள் குடும்பத்தினருக்கோ, நண்பருக்கோ, உறவினருக்கோ அல்லது எதிர்கால சந்ததிக்கோ இவ்வகையிலான இன்னல்கள் இருக்கலாம் அல்லவா! அல்லது வராமல் தடுக்கலாம் தானே!

மேலும் உங்களுடைய பாரம்பரியத்தில் உங்கள் முன்னோருக்கும் இத்தகைய துன்பங்கள் இருந்திருந்தால் இவற்றிற்குத் தீர்வுகளைப் பெறாமலேயே இன்றைக்கும் பலவிதப் பிறப்புகளை எடுத்து அவதியுற்றுக் கொண்டிருப்பார்கள் அல்லவா? எனவே அனைவருக்கும் தக்க பிராயச்சித்தம் அளிப்பதற்காக உங்கள் ஊரிலேயே ஜாதி, மத, இன, குல பேதமின்றி பலரும் கூடும் சங்கம் அமைத்து இத்தகைய பிராயச்சித்த வழிபாடுகளை அனைத்துக் குடும்பங்களுக்கும் பலன்களைத் தருவதாக முறையாக மேற்கொண்டு வாருங்கள்! பிறருக்கெனத் தியாகமயமாக உழைத்தால்தான் அல்லது இறைவழிபாடுகளை மேற்கொள்ளும் போதுதான் உங்கள் மனதில், உள்ளத்தில் ஒருவித தெய்வீக சாந்தம் ஏற்படுவதை நீங்கள் உணர்வீர்கள்! இதுதான் உண்மையான ஆனந்தம்!

உதாரணமாக, விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் வழிபட வேண்டிய பல பெருமாள் திருத்தலங்கள் பற்றி எழுதி வருகிறோம் அல்லவா? அவ்விடத்தில் ஆயிரக் கணக்கான பக்த கோடிகள் ஒன்று சேர்ந்து அவ்வழிபாட்டை மேற்கொள்ளும்போது அவர்கள் பெரும் மனமகிழ்வையும் உள்ளக் கிளர்ச்சியையும், ஆத்மப் புத்துணர்ச்சியையும் எத்துணையோ கோடி ஜென்மங்களுக்குத் தேவையான புண்ய சக்தியையும், மன சாந்தியையும் பெறுகிறார்கள் என்றால் ஸ்ரீஅகஸ்திய விஜயம் மூலம் தரப்படும் அனைத்துமே அரிய பொக்கிஷங்களான குருவாய்மொழித் திரட்டு என்பதை உணர்ந்து அனைத்து புத்தகங்களையும் உங்கள் எதிர்கால சந்ததிக்கு பாதுகாத்துத் தரவேண்டுகிறோம்.. இறைத் தியாக உணர்வைப் பெறுவதற்கு கும்பகோணம் திருவிசைநல்லூரிலிருந்து திருந்துதேவன்குடி செல்லும் வழியிலுள்ள ஸ்ரீசிவலோக தியாகேசப் பெருமானைத் தோள் கொடுத்துச் சுமந்து பிரதோஷ வழிபாட்டினைச் செய்து வருதல் வேண்டும்..! VRS பெற்றோர் வாழ்வில் ஒருமுறையேனும் இதைச் செய்தல் வேண்டும்.!

நிலநடுக்கம்

விஞ்ஞானப் பூர்வமாக எத்தனையோ விளக்கங்கள் அளிக்கப்பட்டாலும், மெய்ங்ஞான ரீதியானவைதாம் நிலநடுக்கங்களுக்குத் தக்க தீர்வுகளை முழுமையாகத் தருபவையாம்..! தமிழ்நாட்டில் நாம் உணர்ந்த சமீபத்திய நிலநடுக்கமானது நிலம், கட்டிடங்கள், விவசாயம் போன்றவற்றிற்கு அருள்பாலிக்கும் செவ்வாய் பகவானுக்கு உரிய செவ்வாய்க் கிழமையன்று இரவு செவ்வாய் ஹோரை நேரத்திலேயே நிகழ்ந்திருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.. எந்த ஸ்ரீசெவ்வாய் பகவானும், ஸ்ரீபூமா தேவியும், செவ்வாய் கிரகத்திற்கு உரித்தான ஸ்ரீமுருகப் பெருமானும் நமக்கு அனுகிரகம் செய்திடல் வேண்டுமோ, அம்மூர்த்திகளே சினம் கொள்ளும் வண்ணம் பலவிதமான அநீதிகளை இந்த மனித சமுதாயம் ஸ்ரீபூமாதேவிக்கு விளைவித்து வருவதையே இது குறிக்கின்றது! மனித சமுதாயம் இழைக்கின்ற பல அநீதிகளின் பெரு விளைவுகளும் நிலநடுக்கங்களுக்குக் காரணங்கள் ஆகின்றன!

வாஸ்து பூஜைகளோடுதான் எந்த ஒரு சிறு கட்டிடமும் எழுப்பப்பட வேண்டும்.. ஆனால் நடைமுறையில் வாஸ்து சாஸ்திரத்திற்குப் புறம்பான கட்டிடங்களை எழுப்புவதால் அந்தந்த இடங்களில் உள்ள பிருத்வி கண நீரோட்டங்கள், ஜல நீரோட்டங்கள் பாதிக்கப்பட்டு பூமியையும் பாதிக்கின்றது..! மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் கோயில், திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் ஆலயம், திருவாரூர் ஸ்ரீதியாகராஜ ஸ்வாமி திருக்கோயில் போன்ற இன்னும் எத்தனையோ பிரும்மாண்டமான ஆலயங்களைக் கட்டிய நம் மூதாதையர்களுக்குத் தற்போதைய கட்டிடங்களைப் போல பல மாடிக் கட்டிடங்களை அக்காலத்தில் எழுப்பத் தெரியாதா என்ன? நிச்சயமாக அவர்கள் அறிந்திருந்தார்கள்.. ஆனால் இரண்டு அல்லது மூன்று அடுக்குகளுக்கு மேல் கட்டிடங்களை எழுப்புதல் தகாது என்ற வாஸ்து சாஸ்திரத்தை ஒட்டித்தான் அவர்கள் அவற்றுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை..!

ஆனால் தற்காலத்திலோ அனைத்து நகரங்களிலும் குறைந்த சுற்றளவிலேயே எத்தனையோ Flats களை எழுப்பி 20 பேர் வசிக்கக் கூடிய இடத்தில் 2000 பேர்களை கட்டாயப்படுத்தி வாழ வைத்து பூமியின் பாரத்தைப் பெருக்கி, நீரோட்டங்களின் தன்மையை மாற்றி, கழிவு நீரோட்டங்களின் தன்மையை மாற்றி, கழிவு நீரோட்டங்களை அவ்விடத்தில் பெருக்கி பூமியின் அருள்வளத் தன்மையையும், பூமியின் மென்தன்மையையும், புனிதத்தையும் சிதைத்து விடுகின்றார்கள். மனிதன் தன் சுக போகங்களுக்காக, லௌகீகமாக, வாழ்வதற்காக, வியாபாரத்திற்காக அடுக்கு மாடிக் கட்டிடங்களை எழுப்புவது அதர்மமானதே! பூஜையறை, சமையலறை, குளியலறை, கழிவறை, தோட்டம் என்பவை எந்தெந்த இடத்தில் அமைய வேண்டும் என்பதான தெய்வீகமான வாஸ்து சாஸ்திரத்தை மீறிய யாவுமே பிருத்வி சக்தியை பாதிக்கும்! பிருத்வி சக்தி குறைந்தால் ஏற்படும் விளைவுகளில் ஒன்றே நிலநடுக்கமாம்!

ஒவ்வொரு இடத்திற்குமான பிருத்வி சக்தி உண்டு! அந்தந்த ஊருக்கான பூமியின் பிருத்வி சக்தியானது அங்கிருக்கின்ற ஆலயம், அதில் நடக்கின்ற வழிபாடு, அதில் பங்கு பெறுகின்றவர்களுடைய பக்தி, காவல் தெய்வ வழிபாடு போன்றவற்றைப் பொறுத்துத்தான் அமைகின்றன.. மனித சமுதாயம் தனக்கு இழைக்கின்ற அநீதிகளைத் தாங்க இயலாது பொறுமையின் தெய்வீகச் சின்னமான பூமாதேவியே மிக்க வேதனையுடன் முகம் சுளிக்கின்ற போது ஏற்படுவதும் ஒருவகை நிலநடுக்கமே..! ஓரிடத்தில் எந்தெந்த தாவரங்களும், விலங்குகளும் எந்த அளவில் நிறைந்து இருக்க வேண்டும் போன்ற சில முக்கியமான பிருத்வி தேவ வாஸ்து இலக்கணங்கள் நிறைய உண்டு.. பலரும் இதை அறிவதில்லை! உதாரணமாக, சென்னைக்கு உரித்தான பிருத்வி சக்தியே கபால காரணீய சக்தியாகும்.. இதற்காக சென்னைப் பகுதிகளில் தென்னை, பனை மரங்கள், தரையில் படரக் கூடிய பறங்கி, பூசனி போன்ற கொடி வகைகள், அல்லி, தாமரை குறிப்பாக வெண் தாமரை போன்றவை நிறைந்திருந்தால்தான் பூம்ய சக்தி மிகவும் குறைந்துள்ள சென்னைப் பகுதியின் பிருத்வி சக்தியும் சமநிலைக்கு வரும்... தாவரங்களுக்கும் பூகம்பத்திற்கும் என்ன சம்பந்தம்? தாவரங்களும் அந்தந்த இடங்களுக்குத் தேவையான பிருத்வி சக்திகளை அளிக்கின்றன.!

பிருத்வி சக்தி என்றால் என்ன? தேவ மண் சக்தி, நீரோட்ட கணங்கள், அக்னி வ்யாபக சக்தி, வாயுக் கட்டப் பரிமாணம், ஆகாயத்தில் பரிணமிக்கும் ஒலி, ஒளி வட்டங்கள் ஆகிய ஐந்தும் அந்தந்த இடத்திற்கு ஏற்றவாறு குறித்த அளவில் நிறைவு செய்வதே பிருத்வி சக்தி ஆகும்.. இவற்றை இயற்கையாகவே பராமரிப்பவர்களே ஆலய மற்றும் வாஸ்து, பூம்ய தேவதைகள் ஆவர்.. ஆலயத்தில் எழுகின்ற அபிஷேக நீரானது பூமியை நனைத்து, ஆழ்நிலையை அடைந்து அதனுடைய புண்ய சக்தியால் பிருத்வி சக்தியைக் கூட்டுகின்றது.. ஆனால் பல இடங்களிலும் ஆலய தீர்த்தங்களில் கழிவு நீர் கலக்கின்ற பாவகரமான செயல்களைத்தாம் இன்று நாம் பார்க்கின்றோம்.. ஆலயத்தின் அபிஷேக நீருக்கு மகத்தான பிருத்வி சக்திகள் உண்டு. எனவே தாம் கோமுகம் வழியாக வெளிவருகின்ற அபிஷேக நீர் ஆலயக் குளத்தை அடையும்படி நீர்த்தாரை அமைந்திருக்கும்! எங்கெல்லாம் ஆலயத்தின் கோமுக அபிஷேக நீரானது பூமியில் தோய்கின்றதோ அவ்விடத்தில் நீர்வளம், பெருக்கெடுக்கும்.. ஆலய அபிஷேக, கும்பாபிஷேக, கலச தீர்த்தங்கள் பூமியில் நனைந்து படியப் படியத்தான் பிருத்வி சக்தி பெருகிடும்.. இதற்காகத்தான் அக்காலத்தில் அபிஷேக நீர் பூமியில் எப்போதும் தழைத்து பூமி வளத்தைப் பெருக்குவதற்காகத் தினந்தோறும் ஆறுவேளை அபிஷேக ஆராதனைகளை நடத்தினர்! இப்போது ஒருவேளையே ஆலய பூஜை என்றால் அபிஷேக நீர்த் தாரையே நனைந்திடாதே! பிறகு எவ்வாறு பிருத்வி சக்தியை நிறைவு செய்ய முடியும்?

மேலும் ஒவ்வொரு இடத்திலும் தேவாதி தேவ, தெய்வ மூர்த்திகளுக்கும், மகரிஷிகளுக்கும், சித்த புருஷர்களுக்கும் அர்க்யம் அளிக்கப்பட வேண்டும்., பொதுவாக ஸ்ரீகாயத்ரீ மந்திரம் மற்றும் அந்தந்த தெய்வ மூர்த்திகள், மகரிஷிகள், சித்புருஷர்களின் நாமங்களை ஓதி பூமியில் நீரை வார்த்தல் அர்க்யம் ஆகும்.. இந்த அர்க்ய சக்தியும் பூமிக்குப் பிருத்வி சக்தியைக் கூட்டுகின்றன.. பிருத்வி சக்தி குறையும் போது நிலநடுக்கம் ஏற்பட்டு அக்குறைகளைச் சுட்டிக் காட்டும்!

அமுத தாரைகள்

1. 27 நட்சத்திரங்களுக்கான ஸ்ரீசந்த்ர பிலாகாச சக்கரம் – நட்சத்திர லிங்க மூர்த்திகளைத் தரிசிக்க இயலாதோரும் வானில் தம்முடைய நட்சத்திரத்தை அறிந்து தரிசிக்க இயலாதோரும் அறந்தாங்கி அருகே ஆவுடையார் கோயிலில் மேல் விதானத்தில் உள்ள 27 நட்சத்திரச் சக்கரங்களை தரிசித்திடுக! அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களை உடைய அபூர்வ தரிசனமிது! மாதம் தோறும் தம்முடைய நட்சத்திர நாளில் இதனைத் தரிசித்து 27 பேருக்காவது அன்னமளித்திடில் இருதயம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்குத் தக்க நிவாரணம் கிட்டும்.. பிரிந்து வாழ்கின்ற தம்பதியினர் இச்சக்கரத்தைச் சந்திர ஹோரையில் தரிசித்து வந்தால் நல்முறையிலான இல்லற வாழ்வு தொடரும்.. மேலும் ரோஹிணி சந்திர சக்கரத்திற்கு இல்லத்தில் தினந்தோறும் 27 நட்சத்திர (கையால் அரைத்த) சந்தனப் பொட்டுகள் இட்டு வழிபட்டு வந்தால் திருமண தோஷங்கள் நிவர்த்தியாகித் திருமணம் கைகூடும்.!

2. அனைத்து விதமான தெய்வீக ரகசியங்களையெல்லாம் அறிந்தவர்கள் சற்குருமார்களே, எனவே, கலியுகத்தில் உலகளவில் சமுதாய அளவில் நாம் காண்கின்ற துன்பங்கள் அனைத்திற்குமே தக்க தெய்வீகத் தீர்வுகளைத் தரவல்லவர்களாக சற்குருமார்கள் விளங்குகின்றார்கள், ஆனால், இப்போதைக்கு இருக்கின்ற பொருளாதார, சமுதாய, அரசியல் முறைகள் சற்குருவின் பரிபாலனத்தை ஏற்குமா? என்பதுதான் கேள்விக் குறியாகும்! இதனால் தான் கலியுகத்தில் மகரிஷிகளும், சித்தர்களும் சற்குருமார்களும் பூலோகத்தில் இருந்தாலும் தாங்கள் இருக்கும் இடத்திலேயே இலைமறை கனியாகவே நின்று தங்களுடைய மகத்தான இறைவள சக்தியை வெளிக்காட்டாது அருள்புரிந்து வருகின்றார்கள்.. இறைவனே சில சற்குருமார்களின் சக்தியை வெளிக்காட்டினாலும் சிலரும் தேவையில்லாத அவமதிப்புகளை ஏற்படுத்தி விடுவதால்தான் குருமார்கள் கலியுகத்தில் பிரசித்தி பெற்று வெளிவர விரும்புவதில்லை...! இன்றைக்கும் உலகத்தின் அனைத்து நாடுகளிலும் (ஜாதி, மத, இன, குல பேதமின்றி) சற்குருமார்கள் நிறைந்திருக்கத்தான் செய்கின்றார்கள்.. ஆழ்ந்த நம்பிக்கையும், குருவைச் சரண்டைய வேண்டுமென்ற ஆக்கப் பூர்வமான மன வைராக்கியமும்தான் சற்குருவைக் காட்டுமே தவிர சந்தேகம், அவநம்பிக்கை, அரைகுறை நம்பிக்கை போன்றவை இருக்குமேயானால் எவராலும் சற்குருவை நிச்சயமாக அடைய இயலாது..!

3. ஸ்ரீசந்திர பகவானின் பல்வேறு அவதார இறைப் பணிகள்! ஸ்ரீசந்திரனின் 16 கலைகளின் தாத்பர்யங்களையும் உணர்ந்தால்தான் சந்திர கிரண மகிமை பற்றி நாம் உணர இயலும்.., நவகிரக மூர்த்திகளில் ஒருவராக ஸ்ரீசந்திர பகவான் விளங்குவதற்கு முன்னும், பின்னும் அவருக்குரித்தான அவதார அம்சங்கள் அவதார இறைப் பணிகள், அவதாரத் தத்துவங்கள், அவதாரத் தாத்பர்யங்கள் நிறைய உண்டு. புழு, பூச்சி, புல் பூண்டு முதல் யானை, மனிதன் வரை அனைத்து ஜீவன்களுடைய மனம்தனைக் காத்து இரட்சிக்கும் மதிகாரக மூர்த்தியாக விளங்குபவரே சந்திர பகவான் ஆவார்.. மேலும் வானில் ஆன்மீக ரீதியாக எத்தனையோ சூரியன்கள் விளங்குவது போல, சந்திரன்களும் நிறைய உண்டு.. பூமிக்கு இரவில் ஒளியளிக்கும் சந்திரன், புல் பூண்டுகளுக்கு மற்றும் அனைத்து ஜீவன்களுக்கும் அமிர்த கிரணம் அளிக்கும் சந்திரன், நவகிரக மூர்த்தி சந்திரன், அமாவாசை அன்று இரவில் சூட்சுமமாய்ப் பரிணமிக்கும் சந்திரன், ருத்ர சக்திச் சந்திரன், மாத்ருகாரக சந்திரன், பௌர்ணமியில் ஒளிரும் சந்திரன் எனப் பல சந்திர மூர்த்திகள் உண்டு! ஆனால் ஸ்ரீசந்திர பகவான் பற்றிய பல தெய்வீக இரகசியங்களையும் இங்கு அளித்திடில் இது விஞ்ஞான உலகையே ஆட்டி விடும்! உதாரணமாக பூலோகம் முழுவதும் நாம் எண்ணுவதுபோல ஒரே சந்திரன் ஒளிப் பிரகாசம் தருவதில்லை.. பூமிக்குப் பல சந்திரன்கள் உண்டு! திருஅண்ணாமலையில் பௌர்ணமி அன்று தோன்றும் சந்திரன், ஏனைய இடங்களில் ஒளி கூட்டும் ஸ்ரீசந்திர மூர்த்திகளிடமிருந்து மாறுபட்டவர்! இவை வேத சத்திய வாக்குகளாகும்..!

4. மலப்புழுச் சித்தர் என்பார் எப்போதும் மலத்தில் உள்ள புழுக்களை உண்டு பல சின்னஞ் சிறு ஜீவன்களுக்கும் அன்றும் இன்றும் என்றும் உய்வு தந்து சித்த மாஜோதியாய் உறைகின்றார்! சிறுநீர், மலம் மூலமாகக் கழிய வேண்டிய தீவினைக் கர்மங்கள் தீர்தற்கு மலப் புழுச் சித்தரின் அருள் தேவையானதாம்! குப்பைச் சித்தர் குப்பைகளின் ஊடே அமர்ந்து மகத்தான கர்ம பரிபாலனம் செய்து வருகின்றார்! சமுதாயத்தின் ஒட்டு மொத்தத் தீவினைகளையே ‘குப்பை’ குறிக்கின்றது! ஒவ்வொரு நாளும் அந்தந்த வீதியில் சேர்கின்ற குப்பையைக் கொண்டு அன்று சமுதாயத்தில் எத்தகைய தீவினைகள் (தீய காமம், கொலை, கொள்ளை உணர்ச்சிகள், லஞ்சம், அதர்மம், பொய்மை போன்றவை) சேர்ந்துள்ளன என்பது தெரியவரும்! நோய் பரப்புவதாக நாம் எண்ணும் குப்பையை மொய்க்கும் ஈக்கள், கொசுக்கள் கூட குப்பையில் உள்ள கொடுமையான கர்மவினைகளை உறிஞ்சி நம்மைக் காக்கின்றன! பசுக்கள் குப்பையைக் கிண்டி தனக்கான உணவை உண்பது போல் தோன்றினாலும் பல கோடி தேவதா சக்தி நிறைந்துள்ளமையால் பசுக்கள் தேவ பூர்வமாகக் குப்பையை சுத்திகரித்துப் பல கொடிய தீவினைகளை பஸ்மமாக்கி சமுதாயத்தைக் காப்பாற்றுகின்றது என்பது தேவ ரகசியமே!

5. இப்பிறவியிலோ, முப்பிறவியிலோ எத்தனையோ மனிதருடைய மனத்தை, உள்ளத்தைப் புண்படுத்தும் வகையிலே நடந்து கொண்டோர்க்கே மார்வலி உண்டாகும்.. தேன், இனிப்புகள் போன்ற வகைகளைத் தானமாக அளித்து வந்தால் இருதய நோய்களின் கடுமை தாமாகவே தணியும்.. உண்மையில் ஆன்மீகத்தில் மாரடைப்பு, இருதய நோய்கள் போன்றவற்றை ஏற்பதே கிடையாது.. சுத்தமான ஆத்மாவாகிய இறைமை உறைகின்ற இடத்திலா நோய்கள் ஏற்படும்.. நிச்சயமாகக் கிடையாது! எந்த அளவிற்குப் பிறருடைய உணர்வுகளை ஊனப்படுத்தினார்களோ, உள்ளத்தை வருத்தினார்களோ, இதயத்தைச் சுடுகின்ற அளவிற்கு வார்த்தைகளால், செயல்களால் நடந்து கொண்டார்களோ அந்த அளவிற்கு இதயத்திலேயே வேதனைகள் ஏற்படுவது போல ஒரு பாவனையை தண்டனையாக இறைவன் அளிக்கின்றான்..!

 எந்த உறுப்பு எந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றதோ அந்த உறுப்பினால் தேவையற்ற கர்ம வினைகளை நீங்கள் சேர்த்துக் கொண்டிருக்கின்றீர்கள்.. அவை தீர்க்கப்பட்டால்தான் அந்த நோய்க்குத் தீர்வு கிட்டும் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்., இரத்த அழுத்தத்தால் அவதிப்படுவோர் தங்களால் உண்ண முடியாத நெய், வெண்ணெய் போன்ற கொழுப்புச் சத்து கூடிய உணவுப் பண்டங்களை தானமாக அளித்து வந்தால் அதி அற்புதமான வகையிலே தெய்வீக இரகசிய சங்கல்பமாக அத்தகைய நோய்களின் கடுமை தணிவதை நீங்களே மனப்பூர்வமாக உணரலாம்.!

எனவே உடல்வாகு சம்பந்தப்பட்ட யாவுமே கர்மவினைகளின் அமைப்பே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.. இறைவனுக்காகச் சந்தனம் நிறைய அறைத்துப் பூக்களைத் தொடுத்து சார்த்தி அலங்கரித்து அபிஷேக ஆராதனைகள் செய்தோர் தற்போது மிகவும் அழகானவர்களாகப் பிறப்பெடுக்கின்றார்கள். ஆனால் அழகாகப் பிறந்த பலரும் தீய ஒழுக்கங்களில் பலரை ஈடுபடுத்தியும், ஆபாசமாக நடித்தும் லட்சக்கணக்கான மக்களின் உள்ளத்தில் காமத் தீயொழுக்கத்தை, காமத் தீயைப் புகுத்தி விட்டால் அது சொல்லொணாத் தீவினைகளாகப் பெருகிக் கடுமையான பிறவி நோய்கள் கூடி வாழ்நாள்  முழுதும் கொடுமையான பிணிகளால் வாடுவதான வினைகளைத்தானே கூட்டித் தந்திடும்!

6. இல்லறத்தை வளமையாக்கும் தெய்வ தரிசனம்! இறைவி ஈசனின் லிங்க வடிவத்தை பக்தியுடன் அரவணைத்து வழிபடும் கோலமே ‘தழுவக் குழைந்த இறை தரிசனமாகும்!’ பல கோடி அவதாரத் தத்துவங்களை உள்ளடக்கியதாய் இறைவன் ‘தழுவக் குழைந்த நாதராய்ப்’ பல இடங்களில் தன்னைப் பரிணமித்துக் கொண்டு அருள்பாலிக்கின்றார்! தழுவக் குழைந்த இறைதரிசனம், கலியுகத்திற்கு மிகவும் முக்கியமானதாம்.. இதுவே சிவசக்தி ஐக்ய தெய்வ பாவனையை இல்லற தர்மத்திற்கு வளமையுடன் அளித்து அருள்பாலிப்பதாகும்! சந்திர பகவான் தரிசிக்கின்ற சிவசக்தி ஐக்ய ஸ்வரூப தரிசனமாக தழுவக் குழைந்த நாத சிவ தத்துவம் பரிமளிக்கின்றது.. சந்திராஷ்டம நாட்களின் விளைவுகளிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கும் இத்தரிசனம் உதவும்.

7. மறையும் கலைகள்! மறையா சந்திர நிலைகள்! பாற்கடலில் இருந்து ஸ்ரீசந்திர பகவான் அவதிர்த்த போது முழுநிலவாகவே, நித்ய பௌர்ணமிச் சசிதரனாகவே பரிணமித்தார்! எனவே ஆரம்பத்தில் உலகில் நித்ய பௌர்ணமியாகவே விளங்கியது! அமாவாசை, பௌர்ணமி வகைகள், வளர்பிறை, தேய்பிறை போன்றவை வேறு விதமாக பிற கோள்களின் சங்கமமாக அமைந்தன.. பிற்பாடே சந்திர அமாவாசை, சந்திர பௌர்ணமி உருவாயின! அமாவாசையின் போது சந்திரனின் கலைகள்தாம் தேய்கின்றனவே தவிர, சந்திரன் முழுவதுமாக மறைவது கிடையாது.. அவருடைய தெய்வ வடிவம் பாற்கடலில் அவதரித்தமையால் சிரஞ்சீவித்வ அமிர்த சக்தியால், அவர் எப்போதும் பரிமளிக்கின்றார்! ஆனால் நம் சாதாரணக் கண்களுக்குப் புலனாவதில்லை! ஒளியைத் தருவது மட்டும்தானா ஸ்ரீசந்திர பகவானின் தெய்வத் திருப்பணி? அமிர்த சக்தி மற்றும் சிரஞ்சீவித்வம் அளித்தல், மதிப் பிரகாசம், மாத்ரு சக்தி, சந்திர ஞானம் போன்ற பலவற்றையும் அளிப்பவர்தாமே ஸ்ரீசந்திர பகவான், எனவே தேய்பிறையில், நம் கண்களுக்குச் சந்திரன் காட்சி அளிக்காவிடினும் அவர் தம்முடைய இதர தெய்வீகப் பணிகளை நவகிரக அவதாரம் மற்றும் பல வடிவுகளில் ஆற்றிக் கொண்டுதான் உள்ளார்.!

8. பிரபஞ்சமெங்கும் ஸ்ரீசந்திர பகவானின் அமிர்த அருட் திவலைகள்! ஒரே ஒரு லிங்க மூர்த்தியின் வழிபாட்டால் ஸ்ரீசந்திர பகவான் தான் இழந்த கலைகளை மீண்டும் பெற்றிருக்கலாமே, அவர் ஏன் பிரபஞ்சமெங்கும் பல லிங்க வடிவுகளை வழிபட்டார்? ஸ்ரீசந்திரனுக்கு சாபமிட்ட தட்சன் என்பார் யார்? சிருஷ்டிக்காக ஏற்பட்ட பிரம்மாவினுடைய படைப்பான கர்த்தமப் பிரஜாபதிகளுள் ஒருவரே தட்சன்! மகத்தான தபோ பலன்களுடன் விளங்கியவர். எனவே தட்சன் அளித்த சாபத்திற்கு நிவர்த்தி பெற வேண்டுமென்றால் எந்த தபோ பலன்களால், யோக சக்தியால், பூஜா பலன்களால் அந்த சாபம் அவரிடமிருந்து எழும்பியதோ அச்சக்திகள் எல்லாம் கரைந்தால்தாமே பரிகாரம் கிட்டும்! அவற்றை மிஞ்சும் இறை சக்தியை அளிக்கக் கூடிய பூஜா முறைகளை ஸ்ரீசந்திர பகவான் கடைபிடித்து வழிபட்டால்தானே ஸ்ரீசந்திர பகவான் அச்சாபத்தில் இருந்து விடுபடலாம்.. எனவே தட்சன் வழிபட்ட இடத்தில் எல்லாம் ஸ்ரீசந்திர பகவானும் வழிபட்டு, எங்கெல்லாம் தட்சன் தன் தபோ பலன்களைப் பெருக்கிக் கொண்டாரோ அங்கெல்லாமும் ஸ்ரீசந்திர பகவான் வழிபட்டு அச்சாபம் தோன்றியதற்கான தேவ சக்திகளை எல்லாம் மீட்டுச் சீர்படுத்தித் தரும்படி இறைவனிடம் வேண்டினார்..!

9. மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிகள் நம்முடைய ஆயுளின் 12 பாகங்களில் ஏற்படவுள்ள நன்மை தீமைகளை நமக்குக் காட்டும் காலக் கண்ணாடியாகும்.. எனவே இது நன்மை செய்யும் கிரகம், தீமை செய்யும் கிரகம் என ஒரு போதும் எண்ணாதீர்கள்! ஆனால் ஜோதிட ரீதியாக நம்முடைய வாழ்வின் இன்ப, துன்பங்களை விவரிக்கவும், விளக்கவுமே பல கிரகங்களின் சஞ்சார நிலைகள் நமக்குக் குறிப்பிடப்படுகின்றன. இவ்வகையில் வ்ருஷ ஆண்டின் இறுதியிலிருந்து அதாவது 2002 முதல் அடுத்த வ்ருஷ ஆண்டு வரும் வரை சுமார் 60 ஆண்டுகட்குப் பகைமைக் கோள்களின் சக்தி பெருகி உலகளாவிய துன்பங்கள் பெருகும் என்று சித்புருஷர்கள் ஞானப்பத்ரக் கிரந்தங்கள் குறிப்பிடுகின்றன.. எனவே அவரவர் தம்முடைய தாய்நாட்டிற்குத் திரும்பி தீவிர இறை வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்..!

10. வாக் சுத்திக்காகவே கூட்டு நாம சங்கீர்த்தனம் என்ற முறையிலே வாரந்தோறும் ஒரு முறையாவது இறைப் பாடல்களையும், நாம சங்கீர்த்தனையும் மேற்கொண்டால் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு மணி நேரமாவது இறை மொழிகளை ஓதினோம் என்ற மனச் சாந்தி ஏற்படும் அல்லவா? தனித்து ஒருவர் பாடுவதை விட, பூஜிப்பதை விட, பலருடன் ஒன்று சேர்ந்து நாம சங்கீர்த்தனம், சத்சங்க வழிபாடுகளை மேற்கொள்கின்றபோது இறைமொழிச் சக்திகள் பன்மடங்காகப் பெருகுகின்றன. இதே போன்று பல்லாயிரக் கணக்கான மக்கள் கும்பாபிஷேகம், தேர்த் திருவிழா போன்றவற்றில் பங்கு கொள்ளும் போது அனைவரும் இராமா, கிருஷ்ணா, சிவா, முருகா என்று ஒருமுறை ஓதினாலே அங்கு கூடியிருக்கின்றோர் பல்லாயிரக் கணக்கான முறை இறைத் துதியை ஓதியதாக இறைக் கணக்கில் சித்ர குப்த பகவான் பக்திக் கணக்கு எழுதுகின்றார். எனவேதான் கூட்டமாக இருக்கின்றதே, திருஅண்ணாமலை கிரிவலமா, லட்சக்கணக்கான மக்கள் வருகின்றார்கள்.. தேர், திருவிழாவா என்று கூட்டத்தைக் கண்டு ஒதுங்காதீர்கள்.. திருஅண்ணாமலையில் கிரிவலம் வருகின்ற போது அருணாசல சிவ! திருஅண்ணாமலையானுக்கு அரோகரா! என்று ஒவ்வொரு முறையும் ஓதும்போது எத்தனை லட்சம் மக்கள் வருகின்றார்களோ அத்தனை லட்சம் மக்கள் ஓதியதாக இத்திருத்தலத்தின் மகிமை காரணமாகவும், சத்சங்க கிரிவல சக்திகள் காரணமாகவும் சத்ய சங்கல்பமாகி நீங்கள் அளப்பரிய புண்ய சக்திகளைப் பெறுகின்றீர்கள்..! இவ்வகையில் தான் திருஅண்ணாமலையை ஒருமுறை மிகவும் பக்தியுடன் கிரிவலம் வந்தால் அதனுடைய பலாபலன்கள் பலகோடி ஜென்மங்களுக்கு விரிந்து பலகோடி தலை முறைகளுக்கும் நன்மை பயப்பதாக இருக்கின்றது என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்..!

11. திருவெறும்பூர் திருத்தலத்தை முழங்கால் இட்டபடியே வலம் வந்து வணங்குவதால் கம்ப்யூட்டர் அறிவு விருத்தியாவது மட்டுமன்றி குரு நம்பிக்கையும் பல்கிப் பெருகும் என்பது உண்மையே. ஆனால், முழங்காலிட்டு வலம்வர முடியாத நிலையில் உடல் வியாதிகளோ, சூழ்நிலைகளோ அமைந்து விட்டால் அத்தகையோர் என் செய்வது என்று ஒரு முறை நம் சற்குருவை வினவியபோது நம் சற்குரு அளித்த பதிலோ, “உண்மையாகவே உன்னால் அவ்வாறு முழங்கால் பிரதட்சிணம் வர முடியாவிட்டால் இங்கு அளித்துள்ள பொருட்களை வறுத்து நன்றாக அரைத்து பொடி செய்து அவற்றை எறும்புகளுக்குத் தீனியாக திருவெறும்பூர் திருத்தலத்தில் இட்டு வருவதும் முழங்கால் பிரதட்சிணத்திற்கு இணையான பலனை அளிக்கக் கூடியதே,” என்று மனமுவந்து அருளினார்கள்.
1. கேழ்வரகு 2. கோதுமை 3. உளுந்தம்பருப்பு 4. துவரம்பருப்பு 5. பொட்டுக்கடலை 6. நிலக்கடலை அல்லது வேர்க்கடலை (நெய்யில் வறுத்து பொடி செய்து சேர்க்கவும்) 7. உப்பு (தேவையான அளவு) 8. சோன்பப்டி என்ற இனிப்பு வகை 9. பால்கோவா (பசும்பாலில் செய்வது சிறப்பே)

பௌர்ணமி நாள் : 29.12.2001 சனிக்கிழமை மாலை 6.03 மணி முதல் 30.12.2001 ஞாயிற்றுக் கிழமை மாலை 4.10 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பௌர்ணமி திதி அமைகிறது.. கிரிவல நாள் : 29.12.2001 சனிக் கிழமை...

நித்ய கர்ம நிவாரணம்

1.12.2001 -  இன்று நாய்களுக்கு பிஸ்கட், ரஸ்க் அளித்திடில் நண்பர்களின் மனைவியால் வரும் துன்பம் விலகும்.
2.12.2001 – இன்று கழுதைகளுக்கு உணவு அளித்தலால் பழைய வீடுகளில் வசிப்போர் இடமாற்றம் பெறுவர்.
3.12.2001 – பழைய மூக்குக் கண்ணாடிகளை மாற்றி கண் பரிசோதனை செய்து புதிய கண்ணாடிகள் இன்று போடுதல் நலம் தரும்..
4.12.2001 – வெளிநாடுகளில் இருந்து வரும் உறவினர்களுக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றித் தாய்நாட்டில் தங்க உரித்தான ஏற்பாடுகளைச் செய்து வைப்பது நெருங்கிய உறவினர்களின் கடமையாகும்.. இது ஓரளவு அதிதி போஜன பலன்களைத் தரும்..!
5.12.2001 – கர்ப்பம் தாங்கியுள்ளவர்கள் சந்தான கோபால மந்திரத்தை இன்றிலிருந்து விடாமல் படிப்பது நலம் தரும்.

ஸ்ரீவராகமூர்த்தி பெருமாள்மலை

6.12.2001 – கட்டிட வரைபடங்கள் வரைபவர் இன்று கவனமாக இருத்தல் நலம்
7.12.2001 – A.G.S Office-ல் வேலை செய்பவர்கள் தேவையில்லாத கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நிலை வரும், முடிந்த மட்டும் பொறுமையைக் கையாளவும்.!
8.12.2001 – பொதுப்பணித் துறையில் வேலை செய்பவர்கள் சிக்கலான காரியங்களில் ஈடுபடும் நாளிது, அமைதியுடன் இருப்பது நலம் தரும்..
9.12.2001 – மன நடுக்கம் தரும் நாளிது.. ஸ்ரீசரபேஸ்வரருக்கு தூபம் இட்டு ஸ்ரீசரபேஸ்வர காயத்ரீ மந்திரத்தை 1008 முறைக்கு குறையாமல் ஜபிப்பது நலம் தரும்.
10.12.2001 – பழங்கள் தானம் செய்ய வேண்டிய நாளிது.. இதனால் மனைவியின் உறவினரால் வரும் தொல்லைகள் குறையும்.
11.12.2001 – தானே வலியச் சென்று பிரச்னைகளை உருவாக்கும் நாளிது. ஸ்ரீஅஷ்ட பைரவ சாந்தி தூபமிட்டு ஸ்ரீபைரவ காயத்ரியை 1008 முறைக்குக் குறையாமல் ஜபிப்பது நலம் தரும்.
12.12.2001 – அருகில் இருப்பவர்கள் தேவையில்லாத செய்திகளைச் சொல்லி அண்ணன் தம்பிகளிடையே மன சஞ்சலம் உருவாக்கும் நாளிது. ஸ்ரீபாதுகா ஸ்தோத்திரம் ஜபித்தல் நலம் தரும்.
13.12.2001 – அரும்பு மீசைக்காரர்களால் கலகங்கள் ஏற்படும் நாளிது.. யாரிடமும் பேசாமல் மௌனம் கடைபிடிப்பது நலம் தரும்.. ஸ்ரீஅனுமார் மந்திரம் ஜெபித்தல் நலம்.
14.12.2001 – H என்ற எழுத்துடைய மோட்டார் சைக்கிள், சைக்கிள் வாகனம் ஓட்டுவோர் வழுக்கி விழும் நாளிது.. ஸ்ரீசுப்பிரமணிய காயத்ரீ மந்திரத்தை ஜபிப்பது நலம் தரும்.
15.12.2001 – வெளிநாட்டில் இருப்பவர் புதுப்புதுச் சட்டங்களினால் பாதிப்படைவர்... தாய்நாட்டோடு தொடர்பு கொண்டு ஏற்றபடி மாற்றல்களுக்கான நல்வழியைத் தேடிக் கொள்ள முயற்சிக்க வேண்டிய நாளிது.
16.12.2001 – பெண்களின் சம்பாத்தியத்தில் வாழும் தாய், தந்தையர் தம் பெண்களின் திருமணத்தைத் தள்ளிப் போடுவதால் மாங்கல்ய தோஷம் வரும் நாளிது. அவரவர் நட்சத்திர வகை தூபம் இட்டு ஸ்ரீபங்காரு காமாட்சிக்கு விரதம் இருந்து தான தருமம் செய்ய வேண்டிய நாளிது..
17.12.2001 – வெளியூர்களில் திருமணம் ஆகாமல் தனியாக இருக்கும் பெண்களுக்கு பலவிதமான வாழ்க்கை நிர்பந்தங்கள் வளரும் காலமிது. ஸ்ரீஅஷ்ட பைரவ சாந்தி தூபமிட்டு சிவன் கோயில்களில் அன்னதானம் செய்வது நலம் தரும்.
18.12.2001 – இன்று ஸ்ரீவராக மூர்த்தி எழுந்தருளியுள்ள கோயில்களில் அன்னதானமும் பூஜைகளும் செய்து ஸ்ரீவராக மூர்த்தி காயத்ரியை 1008 முறைக்குக் குறையாமல் ஜபிக்கவும்.
19.12.2001 – தங்கை திருமணம் பற்றி இன்று வரை எந்த முயற்சியும் செய்யாத அண்ணன், அக்கா இன்று முதல் தீவிர முயற்சி செய்து சுப காரியத்தை நலமுடன் முடிக்கத் தீவிர முயற்சிகளைத் துவக்கும் நாளிது. ஸ்ரீதிருவிடந்தை பெருமாளை வேண்டி தான தர்மம் செய்தல் நலம் தரும்.
20.12.2001 – காதலில், திருமணத்தை உடனே புரிந்திடாமல் ஒத்திப் போட காதலன் சாக்குப் போக்கு சொன்னால் (உ.ம்: தங்கை திருமணம் முதலில் முடியட்டும்/ அண்ணன் திருமணம் முதலில் முடியட்டும்) உடனே (மறைமுகமாக) தெரிந்து கொள்ளுங்கள் அவன் காதலித்தவரை மணக்க விரும்பவில்லையென்று! திருமண ரகசியங்கள் வெளிப்படும் நாளிது..
21.12.2001 – காதலன், காதலியைச் சேர்த்து வைக்கிறேன் என்று முன்னே வரும் நண்பர்கள், சிநேகிதிகளை நம்பி யாரும் திருமணத்தில் இறங்கி விடாதீர்கள்! நண்பர்கள் துரோகம் செய்யும் நாளிது. கவனம் தேவை.
22.12.2001 - +2 படிக்கும் பெண்கள் தவறான வழியில் செல்ல சந்தர்ப்பங்கள் ஏற்படும் நாளிது.. தாய், தந்தையர் மிகுந்த கவனத்துடன் இன்றிலிருந்து ஓராண்டு தங்கள் பெண்களைத் தொடர்ந்து கண்காணித்தல் நலம் தரும்...
23.12.2001 – வேலைக்குச் செல்லும் தம்பதியர் தங்கள் குழந்தைகளை, குழந்தைகள் கவனிப்பு இல்லங்களில் (crèche) விடாமல் தாங்களே கவனிப்பது நல்லது.. இது குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படுவதைத் தடுக்கும்.. இன்று முதல் இதனைச் செய்வது நலம்..
24.12.2001 – அழைத்த திருமணங்களுக்குத் தவறாமல் சென்று மொய் எழுதாமல் பல்வகையான உணவு உண்ட பாக்கியைத் தீர்க்கும் நாளிது.. இன்று முதல் ஒரு மாத காலத்திற்குள் குறைந்தது 1000 பேருக்கு உணவளித்தல் நலம்.
25.12.2001 – பழைய சமையல் பாத்திரங்களை ஏழைகளுக்கு அளித்து புதிய பாத்திரங்கள் வாங்கும் நாளிது.
26.12.2001 – இரட்டை குழந்தைகளுக்குத் தான தருமம் செய்ய வேண்டிய நாளிது.. அவ்வாறு செய்திடில் கொடுக்கல் வாங்கலில் வரும் துன்பம் தீரும்..
27.12.2001 – திருமணம் நடந்து பல ஆண்டுகள் கழித்து கர்பம் தாங்கி இருக்கும் தாய்மார்கள் தினமும் ஸ்படிக சங்கை உள்ளங்கையில் வைத்துப் பூஜித்து, அன்னதானம் தொடர்ந்து செய்து வந்திடில் நலம் பெறுவர்.
28.12.2001 – மதனி மதன புறா பூசை செய்து புறாக்களுக்குக் கோயில் மாடங்களில் கேழ்வரகு அளித்திடில் நற்செய்திகளும் பணமும் வந்து சேரும்.
29.12.2001- சகுன சாஸ்திர கிளிகளுக்கு பூசை செய்து கிளி மூக்கு உடைய ஆண் பெண்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் செய்திடில் வாக்கு சித்தி பெருகும் நாள் இது.
30.12.2001 – இன்று தேய்ந்து போன வெள்ளி மெட்டிகளைக் களைந்து விட்டு புதிய வெள்ளி மெட்டிகள் அணிவது சுமங்கலிகளாய் இருந்து இறைவனடி சேர்ந்த பாட்டிகளின் ஆசி கிட்டும்.
31.12.2001 – நான்கு வித மணமுள்ள பூக்களைக் கோர்த்து வினாயகருக்குச் சூட்டி கொழுக்கட்டை தானம், உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும்.

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam