தேன் இனிப்பு குரு இனிப்பு !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்!

முதல் நாள்தான் பெரியவருடன் கொல்லி மலைக்குச் சென்று திரும்பி இருந்தான் சிறுவன்! பள்ளிக்கு நெடுநாள் வராமையால், பல பூகம்பங்களை அவன் எதிர்பார்த்தான்! தற்போதெல்லாம் ‘அவனைப் போல் ஒருவன்’ வந்து செல்வதுதான் அவனுக்குச் சற்று சகஜமாகி விட்டதே! ஆனால் பெரியவரோ கடைசி வரையில் இதைப் பற்றி எதையும் சொன்னாரில்லை!

ஏதிர்பார்த்தது போல், அன்று வீட்டிலும் பல பிரச்னைகள் எழுந்தாலும், அவற்றையெல்லாம் ஒரு வழியாய்ச் சமாளித்துப் பள்ளிக்குச் சென்றான் சிறுவன்! காலையில் அங்காளி ஆலயத்தில் நித்தியக் கோயில் பிரகார வலத்திற்குப் பிறகு, நேரம் இருந்தால் வீட்டிற்கு வந்து விட்டுப் பின் பள்ளிக்கு ஓட வேண்டும்!

நேற்றுத்தான் கொல்லி மலையிலிருந்து திரும்பி இருந்தமையால், இன்று பெரியவர் நிச்சயமாக அங்காளி ஆலயத்திற்கு வர மாட்டார் என்று எண்ணியவாறே அங்கு சென்றான் சிறுவன்.

கண்டதைக் காணவில்லை!

ஆனால் அங்கோ….

“ஏண்டா தம்பி, எப்பவுமே பெரியவரோடத் தானே சேர்ந்து இருப்பே! ஒரு பத்துப் பதினைஞ்சு நாளா உன்னை மட்டும் காணோமே! பெரியவர் மட்டும் இங்க கோயிலுக்கு வந்துட்டுப் போறாரு! கூடவே கொஞ்சம் பசங்க இருந்தாங்களே!”

பொருள் ஆனந்தம்
இடையே புலன் ஆனந்தம் !

“தன்னோடு கொல்லிமலைக்கு வந்தவர், அங்கிருந்த நாட்களில் இங்கு அங்காளி கோயிலுக்கும் நிதமும் வந்து விட்டுப் போயிருக்கிறாராமே? இது மட்டுமா, கூடவே யார் யாரோ இருந்தாங்களாமே!”

“என்ன இது, இதுவரைக்கும் அவனுக்கு மட்டுமேதான் ‘பெரியவர்’ என்று அவன் எண்ணி இருந்தானே?”

சிறுவன் திடுக்கிட்டுப் போனான்! வாழ்வில் இது அவனுக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சிகரமான விஷயம்?

ஒரே சமயத்தில், பல இடங்களில், பல வடிவங்களை எடுப்பது அவருக்கு மிகவும் சர்வ சாதாரணமானதுதான்! ஆனால் முதன் முதலாக அவனுடைய குருகுல வாசத்தில்,

“அவர் இருந்தாரே நீ ஏன் கூட வரலை?”

என்ற கேள்வி அவன் முன் உலா வந்து குவிந்திடும் என்பதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லைதான்! ஆனால் அவனுடைய உள்மனதுள் ஏதோ ஒன்று குறுகுறுத்தது! என்னதான் அது?

சற்குரு ஒரு பொதுமறையார்!

“பெரியவர் மட்டும்தான் இருந்தாரா? வேறு யாரும் கூட இருந்தாங்களா?” என்று யாரையாவது பார்த்து அவனுக்குக் கேட்கணும் போலான உள்உணர்வு உறுத்திக் கொண்டே இருந்தது உண்மைதான்!

“அப்படின்னா நான், உனக்கு மட்டும்தான் சொந்தமாடா கண்ணு? உன்னை மாதிரி பலரையும் தெய்வீகத்துல டெவலப் பண்ணனும்னு எனக்கு மெத்தையில (குருமண்டல லோகம்) target போட்டு அனுப்பி இருக்காங்களே ராஜா!” என்று என்னதான் பெரியவர் பன்முறை சாந்தமான வார்த்தைகளைச் சொன்னாலும், சிறுவனுக்கு, ‘பெரியவர் இப்பூவுலகிலே தனக்குத்தான் சொந்தமானவர்!’ என்ற எண்ணமே அதுவரையில் ஓங்கி இருந்தது!

ஆனால் இதற்கும் இப்படி ஒரு கடுமையான சோதனை வந்து விட்டதே!

“அப்பனே! பெரியவரோட யாரும் இருந்தாங்களான்னு கேட்டு உன்னோட சுயநலத்தை வெளியில காண்பிச்சுடாதே! அண்டசராசரத்துக்கும், எல்லா நாடுகளுக்கும், எல்லா ஜீவன்களுக்கும் பெரியவர் சொந்தம்! பெரியவரு மகாசித்தரு! உனக்குத்தான் அவர் சொந்தம்கற சுயநல எண்ணத்தை அடியோட எடுத்துடு!”

ஆம், சிறுவனின் மனசாட்சிதான், உள்மனம்தான் அவனுக்கு இந்த மந்திராலோசனையைத் தந்து நின்றது.

யாரங்கே! யாரவர்கள்?

ஆனால்… ஆனால்….

சிறுவன், அவனுடைய மனசாட்சியிடம் இப்போது தோற்றுத்தான் போய் விட்டான்., ஏனோ?

“ஏங்க, இந்தப் பத்து நாளா பெரியவரோட வேறு யாரும் பசங்க எப்பவும் கூடவே இருந்தாங்களா?”

“ஆமாம் தம்பி! இந்த பத்து நாள் பூரா அவரோட எப்பவும் நாலஞ்சு பசங்க கூடவே இருந்தாங்க! நீ கூட அப்பப்ப ஸ்கூலுக்குப் போயிடுவதானே! ஆனா இந்தப் பத்து நாளும், பெரியவரு அந்தப் பசங்களோட நாள் பூரா கோயில்லதான் இருந்தாரு! ராத்திரி, பகலா இங்கதான் அவங்க இருந்தாங்க! அவங்களை வைச்சு இங்கே கோயில்ல ஒரு ஹோமம் கூடப் பண்ணினாரே!

வந்தவர் பதிலை அடுக்கிக் கொண்டே போகப் போக..

சிறுவனுக்கு கண்களில் நீர் மல்லுக் கட்டிக் கொண்டு வந்தது! அவர் சொல்லச் சொல்ல, அவனுள் ‘திக்கு திக்கும்’ அதிகமாகியது.

நானின்றி அவர்களா?

“ஒரு வேளை நம்மைப் போல் இன்னொருவன் இந்தப் பத்து நாளில் பெரியவரோடு இருந்திருக்கக் கூடும் அல்லவா!” என்று அவன் தனக்குத் தானே தன்னுள் சற்றே சமாதானம் செய்து கொண்டான். அதாவது கொல்லிமலையில் இருந்த பெரியவர். இங்கு பிறிதொரு வடிவில் வந்தது போல், அவனும், அவருடன் இங்கு இந்த பத்து நாளில் ஏதேனும் ஒரு வடிவில் வந்திருக்கலாம் அல்லவா!

“ஏங்க, அந்தப் பசங்கள்ல யாராவது என்னை மாதிரி இருந்தாங்களா?” சிறுவன் பொறுக்க மாட்டாதவனாய், இதனையும் கேட்டும் விட்டான்.

“ஊஹும்… உன்னோட உருவத்துக்கும் அவங்களுக்கும் சம்பந்தமே இல்லை! நல்லா உயரமா இருந்தாங்க! இன்னாலே, வாலே, போலேன்னு திருநெல்வேலிக்காரங்க மாதிரி பேசினாங்க!

அவ்வளவுதான் சிறுவனுக்குப் பொசுக்கென்று ஆகி விட்டது!

வந்தவர் சென்று (உ)வந்தார்!

“வாத்யார் மட்டும் வரட்டும், ரெண்டில் ஒன்று கேட்டு விடுவோம்! எப்படியும் ரெண்டு மூன்று நாளில் இங்கு வந்து விடுவார் அல்லவா! நிச்சயமாகக் கேட்டுத்தான் ஆக வேண்டும்!”

ஆனால் இங்கும் பெரியவர் தம் லீலா விநோதங்களை வைத்து விளையாடுகின்றாரே!

“ஏன் தம்பி, பெரியவருக்கா இவ்வளவு நேரமா காத்துக்கிட்டு இருக்கே, அவருதான் இன்னிக்குக் காலையிலேயே அந்தப் பசங்களோட இங்க வந்துட்டுப் போயிட்டாரே!”

அடுத்த ஷாக் சிறுவனுக்கு! அடி மேல் அடி!

அடுத்த நாள்…

“அது என்னமோ தெரியலை தம்பி! இந்த நிமிஷம் வரைக்கும் இங்கேயே சுத்திக்கிட்டு இருந்தவரு… இப்ப நீ வர்றதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடித் தான் கீழ்வாசல் வழியாப் போனாரே, நீ வழியில அவரைப் பார்க்கலையா?”

சிறுவனுக்குப் பலத்த அழுகையே வந்து விட்டது! தலையிலிருந்து கால் வரை ஓவென்று கதறி அழ வேண்டும் போலிருந்தது அவனுக்கு!

ஒரு வழியாய் மனதைத் தேற்றிக் கொண்டு பள்ளிக்குக் கிளம்பினான். அதுவரையில் தெய்வீகத்தில் பரமானந்தத்தை அனுபவித்தவனுக்கு எல்லாமே திடீரென்று ‘சல்லென்று’, “டல்” ஆனது போலாயிற்று!

விலகினால் விலகிப் போகும்!

“சுயநலமா உன்னைப் பத்தியே எப்போதெல்லாம் நினைக்கிறியோ, அப்ப அடியேன் உன்னை விட்டுத் தள்ளியே நிற்பேன்! தெய்வீகமும் உன்னை விட்டு சற்றுத் தள்ளியே நிக்கற மாதிரித்தான் தோணும்! சுயநலத்தை விட்டு வா, அடியேன் எப்போதும் உன்னோடேயே இருப்பேன்!”

பெரியவரின் பழமையான குருவாய் மொழி அவனுக்கு நினைவுக்கு வந்தது! ஆனால் இப்போதோ ஆத்ம விசாரம் செய்யும் நிலையிலா அவன் இருந்தான்!

மிகுந்த விரக்தியுடன் பள்ளிக்குச் சென்றான்., சற்றுத் தள்ளி உட்கார்ந்து வகுப்பைக் கவனிக்கலானான்!

“பழுத்த” அனுபவம்!

“ஏண்டா வெங்கடராமா! பத்து நாளா ஸ்கூலுக்கே வரலை! இன்னிக்கு யாருக்கும் தெரியாம நைஸா வந்து உட்கார்ந்துட்டியே! ஒரு வாரம் வரலைன்னா ஹெட்மாஸ்டர்கிட்ட பர்மிஷன் வாங்கிட்டுத் தானே உள்ளே வரணும்! இல்லாட்டி என்னையாவது வந்து பார்க்கணும்! இப்படி ஒண்ணும் தெரியாதவனாட்டம் வந்து உட்கார்ந்துட்டா … அதுவும் நானு பெஞ்சு தள்ளி உட்காந்துட்டா எங்களுக்குத் தெரியாதா?”

அன்று நல்ல ‘பிரம்புப் பழம்’ கிடைத்தது சிறுவனுக்கு! ஆம், அக்காலத்தில் ஆசிரியர்கள் பிரம்பை வைத்துப் ‘பழம்’ போல் வீங்கும்படி நன்கு புடைத்து விடுவார்கள். அதுவும் பெற்றோர்களின் உளமார்ந்த சம்மதத்துடன்தான்!

அது மட்டுமா, அன்று சப்ஜெக்டுக்கு சப்ஜெக்ட் சிறுவனுக்கு நல்ல அடிஉதைதான்!

குருகுல அனுபூதி மறையலாகுமோ?

“அடக் கடவுளே! என்ன சோதனை இது! அற்புதமான கொல்லிமலை நீர்வீழ்ச்சி நீராடல் அனுபவம், கோரக்கர் சித்தர் தவம் பண்ணின குகைக்குப் போன சந்தோஷமெல்லாம், இங்க நடக்கறதைப் பார்த்தா, ஒரு நாளைக்குக் கூட நிக்காது போலிருக்கே!”

பெஞ்சு மேல் ஏறி நின்ற சிறுவனைச் சக மாணவர்களும் பரிகசித்திட … கொல்லிமலை அனுபூதிகளும்.. அனைத்துமே பனியாய் உருகிறது போல் ஆகி விட்டது!

போகின்ற போக்கைப் பார்த்தால் பெரியவர் இம்முறை நம்மைப் போட்டுப் புரட்டி எடுத்திடுவார் போலிருக்கிறதே!

“ஒரு வேளை காலையில்  ‘எனக்கே பெரியவர் சொந்தம், இதில் பிறர் எங்கே குறுக்கே புகுந்தார்கள்’ என்று சற்றுப் பொறாமையுடன் நினைத்தற்காகப் பெரியவர் தம்மை இப்படித் தண்டிக்கின்றாரோ என்னவோ?”

உலக மகாக் குழப்பத்துடன் சிறுவன் வீடு திரும்பினான். பெஞ்சு மேல் ஏறி நின்றது, அடி உதை வாங்கியது எல்லாம் அவனுக்கு நினைவுக்கு வந்து, தூக்கத்தையும் தள்ளி வைத்து, அவனைத் தத்தளிக்கச் செய்தது!

அன்றும் ஒரு வழியாய் வீட்டில் சமாளித்துவிட்டு, மறுநாள் அங்காளி ஆலயத்திற்குச் சென்றான் சிறுவன்! ஊஹும், அன்றும் பெரியவரைக் காணோம்!  இவ்வாறு நாட்கள் ஓடின! எப்போது அங்காளி கோயிலுக்குச் சென்றாலும் “இப்பத்தான் பெரியவரு வந்து போனாரு!” என்று வந்த “Stock answer” அவனைத் திகில் திகிலாக்கியது!

சிறுவனுக்கு ஒரே குழப்பம்! ஆனால் ஒன்று மட்டும்ப் புரிந்து விட்டது.

கண்டேன் (குரு) கீதையை!

“தனக்குத்தான் பெரியவர் சொந்தம் என்ற எண்ணம் இருக்கும் வரையில் அவர் தரிசனம் கிட்டப் போவதில்லை! தனக்கு ஏதோ பாடம் புகட்டுவதற்காகவே இவ்வாறு நடக்கிறது” என்று ஒரு முடிவிற்கு வந்தான். ஆனால் தினமும் பெரியவர் தனக்கு அளித்த பணிகளைச் செம்மையாக நிறைவேற்றினான்! அதில் ஒரு குறையையும் வைத்திடவில்லை!

நாளாக, நாளாக, வழக்கம் போல் யாரிடமாவது கேள்வி கேட்பானே, அவ்வாறு கேட்பதையும் விட்டு விட்டான்!

தனக்குத் தானே அவன் ஆத்ம விசாரம் செய்யலானான்.

“தான் ஒருவனே பெரியவரின் சீடன்! தானில்லாது அவர் எங்கும் செல்ல மாட்டார், எதுவும் செய்யமாட்டார்!” என்ற சுயநல எண்ணத்தைத் தகர்க்கவே இத்தகைய லீலைகளைப் பெரியவர் உருவாக்கிப் பாடமாகப் புகட்டுகின்றார் என்று அவன் நன்கு தெளிவடைந்தான்!

அன்று காலையில் அங்காளி ஆலயத்திற்குச் சென்ற சிறுவன்..

பெரியவர் இருப்பதைக் கண்டான்! ஆனால் அவனுள் எந்த உணர்ச்சியும் ஏற்படவில்லை! அவர் யாரிடமோ உரையாடிக் கொண்டிருக்க, அவன் பாட்டுக்கு ஆலயத்தை வலம் வந்து பெரியவரின் முன் நின்று வணங்கிட, “அப்ப போய்ட்டு வர்றியா ராஜா!” என்று அவர் மிகவும் சாதாரணமாகக் கூறிடவே, அவனும் உடனேயே வெளியே வந்து விட்டான்!

கோயிலின் வெளியே வந்ததும், யாரோ அவனிடம் வந்து “ஏம்ப்பா பெரியவரைப் பார்க்கலையா?” என்று கேட்டிடவே,

தேடிய பாதமோ?

தினமும் யாரையோ கேட்டவன் இப்போது தன்னையே கேட்கும் ‘நிலை’ வந்தது கண்டு அவன் கண்கள் குளமாயின! தலையைக் குனிந்து கொண்டான்! அவன் கண்ணீர் அவன் பாதத்தைச் சுட்டது!

“என்னப்பா பேசமாட்டேங்கறே! பெரியவரு இங்க வர்றப்போ எல்லாம் உன்னைப் பத்தியே கேட்பாராம்! ‘இப்பத்தான் அந்தப் பையன் கோயிலைச் சுத்திட்டுப் போறான்னு’ இங்க இருக்கறவங்க பதில் சொல்வாங்க! இன்னைக்குக் காலையிலேந்து இதையே சொல்லிச் சொல்லிப் பெரியவரு வருத்தப்படறாரு! பத்து நாளா பையனைப் பார்க்காம இருக்க முடியலையேன்னு சொல்லிப் புலம்பறாராம்!”

சிறுவன் அசறுவதாய் இல்லை! ‘பெரியவரோட நாடகமா இது! இந்த மாதிரி அவர் நடிப்பதை அவன்தான் பல முறை பார்த்து இருக்கின்றானே!” விரக்தியுடன், அதேசமயத்தில் முதிர்ந்த ஞானி போல், தலையை உயர்த்தினான் சிறுவன்!

பேசியவரைக் காணோம்! “பேசப்பட்டவர்தான்” இருந்தார் !

ஈடில்லா வீடு பேறு!

ஆம், அங்கே….         பெரியவர் நின்று கொண்டிருந்தார்…!

வழக்கமான புன்னகை!

அந்த தெய்வீகப் புன்னகையின் சக்தியைத் தாங்க இயலாதவனாய் அவர் பாதங்களில் தடாலென்று வீழ்ந்தான் சிறுவன்! பெரியவர் தன் காலைத் தூக்கி அவன் தலை மேல் வைத்தார்!

பளீரென்று ‘தேஜோமய ஒளி’ ஒன்று அவனுள் புகுந்தது போலிருந்தது!

சற்குருவின் பாதங்களுக்கு இடையில் “உள்ளுள் ஒளிரும் உள்ளொளியாக” அவருடைய ஜோதி ஸ்வரூப உருவத்தைத் தன்னுள்ளேயே கண்டான்!

“தம் இருதய வீட்டில் குடியிருக்கும் இவரையா நாம் இந்தப் பத்து நாளும் வெளியில் தேடினோம்?”

‘இது மாதிரித்தான் அப்பர் சுவாமிகள் திருநல்லூரில் சிவபெருமானிடம் திருவடி தீட்சை பெற்றாரோ!’

பத்து நாட்களும் அவரைப் பார்க்காததற்குமாகச் சேர்த்தும், வரும் பல கோடி யுகங்களுக்குமாகச் சேர்த்தும் சற்குருவின் அந்த ஜோதி ஸ்வரூபத்தைத் தன்னுள் புகுந்த ஒளியில் தரிசித்துக் கொண்டான்!

எழுந்து பார்த்தால்… சிறுவன் வீட்டில்… இருந்தான்!

வீடு பேறு என்பது இதுதானோ! அவனுக்கே தன் நகைச்சுவையை எண்ணிச் சிரிப்புத் தாளவில்லை..!

ஆலய தரிசனம்

ஆலய தரிசனத்தில் அடங்கும் யோகப் பயிற்சிகள்

ஒவ்வொரு பழமையான ஆலயத்திலும் பல்லாயிரம் கோடி இறை ரகசியங்கள் பொதிந்துள்ளன. கோயிலில் மூல மூர்த்தி, அம்பிகை, கோஷ்ட மூர்த்திகள், நவகிரகங்களை வழிபடுவதுடன் ஆலய ராஜ கோபுரம், விமானம், தூண்கள், தல விருட்சம், தலத் தீர்த்தம், கொடிமரம் முதல் பலிபீடம், பசுமடம் வரை அனைத்தையும் நன்கு கவனித்துத் தரிசித்து வருதல் வேண்டும்.

பலரும் ஆலய விமானங்களின் தெய்வீக மகத்துவத்தை உணர்வதில்லை! இனியேனும் அண்ணாந்து பார்த்து, ஆலய ராஜ கோபுர, விமானச் சிற்பங்களை, ஆலயக் கோணங்களை நன்கு கவனித்துத் தரிசித்து வர வேண்டும். அதாவது இவ்வாறு, பொறுமையாக வழிபட்டு வர, ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகக் கூடும்! ஆனால் ஆலயத்தில் இருக்கும் நேரம் யாதும் வாழ்வில் உண்மையாக வாழ்ந்த புனிதமான காலக் கணக்கில் அடங்கும் என்பதைக் கருத்தில் கொள்க! பிறவிகளைக் குறைக்கும் நல்வழி இது! பக்தி கூடிடில், பிறவித் தளையை வென்றிடலாம் அன்றோ!

பொதுவாக, தினந்தோறும் நாம் கழுத்து, கண்களை உயர்த்தி அவ்வளவாக வானத்தை அண்ணாந்து பார்ப்பதில்லை. இதனாலேயே ஆயிரக் கணக்கான மூளை நாளங்கள் நம் உடலில் பயன்படுத்தப் படாமலேயே அப்படியே இருக்கின்றன. நம் உடலில் உள்ள 72000 நாளங்களில் பலவற்றையும் ஓரளவேனும் தினமும் ஆக்கப்படுத்திடவே தோப்புக் கரணம், அங்கப் பிரதட்சிணம், அடிப் பிரதட்சிணம், நட்சத்திர தரிசனம், தலவிருட்ச தரிசனம், கொடி மர தரிசனம், பலி பீட தரிசனம் போன்ற பலவும் அமைந்துள்ளன! பலிபீட வழிபாடு வயிற்றுக் கோளாறுகளைப் போக்கும் அன்னதுவேஷம் எனப்படும் அன்னம் வெறுத்தல் நோய் தீரும். இவற்றைக் கடைபிடித்தாலே போதும் நோய், நொடியின்றி ஆரோக்யமாக வாழ்ந்திடலாம். மன அமைதியும் கிட்டும்.

குடும்பத்தினர் அனைவரும் சென்று இவ்வாறு தினமும் வழிபட்டு வந்தால் பல வழிகளில், குடும்பத்திற்கு அளப்பரிய நல்வரங்கள் கிட்டும் அல்லவா!

அக்காலத்தில் நம் முன்னோர்கள் வீட்டில், தோப்பு, குளம், ஆற்றங்கரைகளில், ஆற்ற வேண்டிய பல யோகாசனங்களை, பிராணாயாமப் பயிற்சிகளை முறையாகச் செய்து வந்ததுடன், தினமும் காலையிலும், மாலையிலும் நன்கு விசாலமான மனதுடன் ஆலய வழிபாடுகளைக் கொண்டமையால், தினமும் கண், தலை, கரங்கள், இடுப்பு அனைத்து அங்கங்களுக்குமான தேகப் பயிற்சிகள், மனோயோகப் பயிற்சிகள் நன்கு அமைந்தன.

தற்போது பலவிதமான வழிபாடுகள், விரதங்கள், பண்டிகைகளைக் கடைபிடிக்கும் தன்மைகள் மறைந்து விட்டமையால், ஆலயத்தில் உள்ள பல அபூர்வ தரிசனங்கள், அன்னதான முறைகளால் தான் விட்டுப் போன விரத பலன்களை ஓரளவு ஈடு செய்ய முடியும்.! சமுதாய அமைதிக்கும் இது எளிதில் வழிவகுக்கும்.

ஸ்ரீகொன்றையடி விநாயகர்

அரண்மனைப்பட்டி ஸ்ரீகொன்றையடி விநாயகர் மஹிமை

 (புதுக்கோட்டை – திருமயம் – அரண்மனைப்பட்டி – கோட்டையூர் – காரைக்குடி பஸ் மார்க்கம்)

பெறுதற்கரிய மனிதப் பிறவி எடுத்தது ஏன்? இந்த ஒரு வினாவிற்கான உண்மையான விடை காணவும் ஒவ்வொருவருக்கும் பெறுதற்கரிய மனிதப் பிறவி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு சத்தியமான, சாசுவதமான விடைகள் பல உண்டு.

அனைத்தும் உண்மையான விடைகளே! ஆனால் மனிதப் பிறவியாக ஆத்மம் உள்ளுறைந்து உருவகம் கொள்கின்ற வாழ்க்கையில்தான் எத்தனை, எத்தனை இடர்பாடுகள், தடைகள், துன்பங்களை மனிதன் ஏற்படுத்திக் கொள்கின்றான்? வேதம், பக்தி, தியானம், யோகம், இறைப்பணிகள் போன்ற பல இறைவழி முறைகளில் சற்குரு மூலமாக, மனிதப் பிறவி எடுத்ததன் காரண காரியத்தை அறிந்திடலாம்..

ஸ்ரீசித்தி விநாயகர்
திருப்பாச்சேத்தி

அப்படியானால் முக்தி, மோட்ச நிலை என்றால் என்ன? மனிதப் பிறவி எடுத்ததன் காரண காரியங்களை அறிந்தவுடன் கிட்டும் உத்தம தெய்வீக நிலையே முக்தியும், மோட்சமும் ஆகும். இறைவனின் திருவடிகளை அடைதல் என்றால் என்ன? முக்தி, மோட்ச நிலைகளைத் தர வல்லது குருவருள் ஒன்றே என்று தெரிந்து குருவருளில் பரிபூரணித்தலே இறைவனின் திருவடிகளை அடைதல் ஆகும். இவையெல்லாம் படிப்பதற்கு நல்ல தத்வார்த்தங்களாவே இருக்கும். ஆனால் படித்து முடிந்தவுடன் மறைந்து விடும். இதற்காகத்தான் இளவயதிலேயே உடல்பூர்வமாகத் திருப்பணிகளைச் செய்து, வயதான பின் தியான, யோக நிலைகளில் ஈடுபட்டால் மனமும், உடலும் ஒத்து வரும்.

வேதத்தின் உடல் வடிவாய்க் கொன்றை மரம் விளங்குவதால், மேற்கண்ட உத்தம நிலைகளுக்கு, இல்லறத்தை ஒட்டிய வழிமுறைகளில் அனுகிரகம் தரும் மூர்த்தியாகச் சிறந்து விளங்குபவரான கொன்றை மரத்தடியில் வேதசாட்சியாக அமர்ந்திருக்கும் அரண்மனைப்பட்டி ஸ்ரீகொன்றையடி விநாயகரின் திருவருளே மேற்கண்ட நிலைகள் அனைத்தையும் ஒருமித்துக் கணபதி அருளாக ஒன்று திரட்டி அளிக்கக் கூடியதாகும்.

கொன்றை மரம் வேத வடிவானது! கொன்றைமரத்தின் ஒவ்வொரு இலையும் ஒரு வேத சாகை ஆகும். சாகை என்றால் வேதத்தின் உட்பிரிவு, தற்போதைய வழக்கில் கொஞ்சம் வேத சாகைகளே உள்ளன. பிரம்ம ஞானத்தில்தாம் வேதங்களின் அனைத்து சாகைகளையும் அறிந்திட முடியும்.

பரவெளியிலும் நிறைய வேத மந்திரங்கள் உள்ளன. இவற்றை கிரகித்தே சமயக் குரவர்கள் நால்வரும், ஆழ்வார்களும், திருமூலரும், அருணகிரியாரும் தேவார, திருவாசக, திவ்யப் பிரபந்த, திருமந்திர, திருப்புகழ்ப் பாக்களாக நமக்கு வடித்துத் தந்துள்ளனர்.

அரண்மனைப்பட்டி ஸ்ரீகொன்றையடி விநாயகரின் திருச்சந்நதியில் வேதக் கிரணங்கள் பொங்கிப் பரிணமிப்பதால் இங்கு விநாயகப் பெருமானின் திருவருளே வேத சாகை சக்திகளாகக் கொன்றை மர இலைகளில் நிரவி உள்ளன.

நம் வாழ்நாளில், வழக்கில் உள்ள அனைத்து வேத மொழி வேத சாகை மந்திரங்கள், தேவாரம், திருவாசகம், திவ்யபிரபந்தம், திருப்புகழ், திருமந்திரப் பாக்களை ஓதுதல் கைகூடுமா? ஆனால் தேவாரப் பாடல்கள் என்றாலே மக்கள் புறக்கணித்து, புனிதமற்ற சினிமாப் பாடல்களை நோக்கியே ஓடும் அவல நிலை வந்துவிட்டதே!

குருந்தமரம் அரண்மனைப்பட்டி

இதற்காகவே சமுதாய பூஜையாக, அனைவருக்கும் வேதங்களில் பொலியும் திருவருள் சென்றடைய ஆலயங்களில் திருமுறைகளை ஓதும் சப்தவழி பூஜைகள் அமைந்தன. ஆனால் இவற்றிலும் மக்கள் கேட்டுப் பங்கு கொள்வதும் கிடையாது. எனினும் இறைப் பெருங்கருணையாக, மக்கள் மறைசக்திகளைப் பெறும் பொருட்டு, இறைவன் படைத்துள்ள வேதங்களின் திரட்சியாக அமையும் வேதக் கொன்றை மரங்கள் அரண்மனைப்பட்டி ஸ்ரீகொன்றையடி விநாயகர் தலத்தில் தோன்றியிருக்க, இங்கு பிள்ளையார் தரிசனமும், வழிபடுவதும் அபூர்வமான கொன்றை மரங்களை வலம் வருதலும், அங்கப் பிரதட்சிணம் செய்தலும் கலியுகத்தில் மகத்தான வேத பலன்களைத் தந்திடும்!

சித்தர்கள் குருந்தை மரத்தை வேதக்குடை என்று விளிக்கின்றனர். ஸ்ரீதட்சிணாமூர்த்தி பித்ருக்களுக்கு ஒளி வடிவில் அமர்ந்து வேத ஞானம் அளிக்கும் அபூர்வ விருட்சமிதுவே! குருந்த மரக் காய்கள் அக்னி சாந்த வேத சக்திகளைக் கொண்டவை ஆதலால் விண்ணுலகில் அக்னி விருட்ச மண்டலத்தில் இருந்து நோக்கினால் குருந்த மரக் காய்கள் அனைத்தும் ஒளிக்குடை போல் பிரகாசிக்கும் அற்புதமான காட்சியைக் காணலாம். வேத சக்திகள் நிறைந்ததே கொன்றைமரம்! வேதப் பிரகாசம் உடையதே குருந்த மரம்.

ஒரு இருள் சார்ந்த அறையில் ஒரு சிறு அகல் விளக்கை ஏற்றி வைத்தால் அத்தனை இருளும் மருளை நீக்கி வெளிச்சம் தருவது போல் பூலோகத்தில் ஓரிடத்தில் குருந்த மரம் இருந்திட்டால் அதனைச் சுற்றிக் குறித்த தூரம் வரை பூமியிலும், விண்ணிலும் சுற்றுப்புறமுமாக வேத ஞானப்ரகாசத்தைப் பரப்புவதாகும். இதிலும் வேத ஞான சக்திகள் நிறைந்த கொன்றை மரமும், வேதப் பிரகாச  ஞான சக்திகளை உடைய குருந்தை மரமும் அருகருகில் ஸ்ரீகொன்றை மரத்தடி விநாயகர் அருட்தலத்தில் துலங்குவது நம் மனித சமுதாயத்திற்குப் பெரும் பாக்யம் தருவதாகும். காணுதற்கரிய தெய்வீகக் காட்சி.!

இங்கு தர்ப்பைப் பாயில் அமர்ந்து தியானம், யோகம் புரிந்து வர, அற்புதப் பலன்களைக் கண்கூடாகக் காணலாம். ஸ்ரீகொன்றையடி விநாயகரையும், குருந்தையும், கொன்றையும் இணைந்து வலம் வருகின்ற எளிய பிரகாரம் கலியுகத்தில் அமைவது மாபெரும் இறையற்புதம் அன்றோ!

திருப்பாச்சேத்தி

பிரிந்த குடும்பத்தினரை ஒன்று சேர்க்கும் திருப்பாச்சேத்தி ஸ்ரீதிருமாற்றகலீஸ்வர பைரவர்! (இரு நாய் வாகனங்களுடன்!)

மதுரை – திருப்பூவணம் – திருப்பாச்சேத்தி – ராமநாதபுரம் வழித்தடத்தில், மதுரையில் இருந்து 30 கி.மீ தொலைவில் திருப்பாச்சேத்தி உள்ளது.!

ஆதி நவநாத சித்தர்களில் ஒருவரான ஸ்ரீவடுக சித்தர் நிதமும் தூல, சூக்கும வடிவுகளில் வழிபட்டு வரும் திருப்பாச்சேத்தி ஸ்ரீதிருமாற்றகலீஸ்வர பைரவ மூர்த்தியின் திருவுருவையே இவ்விதழின் அட்டைப்படமாக நீங்கள் காண்கின்றீர்கள்! அரிதான இரண்டு நாய் வாகனங்களுடன் அருளும் கலியுகத்தின் பிரத்யட்ச தெய்வம்! அஷ்ட பைரவ மூர்த்தி வழிபாடுகளின் பலன்களை ஒருங்கே தரும் பைரவ மூர்த்தம்!

சித்தர்களும், மகரிஷிகளும், இங்கு திருப்பாச்சேத்தி சிவத்தலத்தில் தான், சிருஷ்டி காலத்தில்தான், ஸ்ரீஆதிமூல பைரவ மூர்த்தியை உபாசனா மூர்த்தியாகக் கொண்டு அனைத்துப் பைரவ பூஜைகளையும், துவங்கி, தொடர்ந்து பல யுகங்களிலும் கடைபிடித்து, பூமியில் அஷ்ட பைரவ மூர்த்தங்களின் வியாபகத்திற்குக் காரணமானார்கள்.

பிரிந்த குடும்பத்தை ஒன்று
சேர்க்கும் திருப்பாச்சேத்தி

ஸ்ரீஜோதிப் பரலக பைரவ மண்டலம் (திருமாற்றகல்)

ஆதிமூல பைரவர் முதல், அனைத்து பைரவ மூர்த்திகளும் தோன்றிய இடமே விண்ணுலக பைரவ மண்டலமாகும். பைரவ மண்டல சக்திகள், அண்ட சராசரத்திலும், குறிப்பாக, பூமியில் பல இடங்களிலும் நிறைந்து நிரவி உள்ளன. இந்த பைரவ மண்டலத்தில் உள்ள ஜோதிக் கோட்டத்தில், ஸ்ரீஜோதி (திருமாற்றகல்) எனும் அரிய பைரவ ஜோதி மிகவும் தேஜோமயப் பிரகாசத்துடன் விளங்குகின்றது. இவ்வாறு வடுக பைரவ மண்டல சக்திகளுள் ஒன்றான ஸ்ரீஜோதி (திருமாற்றகல்) நிறைந்த தலங்களுள் ஒன்றே திருப்பாச்சேத்தி புனித பூமியாகும்.

இந்த பைரவ ஜோதி மண்டலத்தின் தெய்வ நாயகரே திருமாற்றகலீஸ்வர பைரவர் ஆவார். சித்தர்கள் அளிக்கும் பூலோகத் திருநாமமிது! இவரே திருப்பாச்சேத்தி ஸ்ரீமருநோக்கும் பூங்குழலி அம்பாள் சமதே ஸ்ரீதிருநோக்கும் அழகியநாதர் சிவாலயத்தில் அர்ச்சாவதார ரூபத்தில் எழுந்தருளி நமக்கு அருள்பாலிக்கின்றார்.

பைரவருக்கு இரு வாகனங்கள்!

ஸ்ரீதிருமாற்றகலீஸ்வர பைரவரின் விசேஷத் தன்மை என்னவெனில், இவருக்கு இரண்டு நாய் வாகனங்கள் உண்டு. இந்த இரண்டு நாய் வாகனங்களுமே கணபதி லோகத்தில் உள்ள இரட்டைப் பிள்ளையாரை தரிசித்தே பைரவருக்கு வாகனமாகின!

எனவே இரட்டைப் பிள்ளையார் (இரண்டு கணபதி மூர்த்திகள் சேர்ந்து அருள்வது) தரிசனத்தோடு எந்த ஆலயத்திலும் ஸ்ரீபைரவரைத் தரிசித்தலால், ஸ்ரீவடுக பைரவரின் அருளால் எப்போதும் முடிவெடுக்க இயலாத குழப்பங்கட்கு நல்ல தீர்கமான முடிவுகளைப் பெற்றிடலாம்.

நாய் என்றாலே துரதிருஷ்டவசமாக, கலியுகத்தில் மனிதனுக்குக் கிள்ளுக் கீரைதான். மனிதன் மிகவும் அலட்சியப்படுத்தி, வழக்கில் கொச்சைப்படுத்தும் பிராணியாகவே இன்றும் நாய் விளங்குகின்றது. நாயை பைரவ அம்சமாக, பசுபோல் மதிக்கின்ற ஆன்மீகப் பண்பாடும் ப(ம)றந்து போய் விட்டது. இதனால்தான் கலியுகம் தற்போது பலத்த பைரவ தோஷங்களுக்கு ஆளாகிக் காமத் தீயொழுக்கம், ஆபாசம், வன்முறை போன்றவற்றில் சிக்கி, அதிபயங்கரக் காம நோய்களும் தோன்றியுள்ளன. இத்தகைய சமுதாயப் பிணிகளுக்குத் தக்க தீர்வுகளைப் பெற்றிட, திருப்பாச்சேத்தி சிவாலயத்தில், குளிகை நேரத்தில் சமுதாய வழிபாடாக, பால், சுக்கு எனும் மூலிகைத் திரவியம் சேர்ந்த பசும் பாலால் ஸ்ரீதிருமாற்றகலீஸ்வர பைரவருக்கு அபிஷேகம் செய்து, தக்க பூஜைகளையும், கீரை வகை உணவுகளைத் தானமாக அளித்து வர, முறையான நிவாரண வழிகள் கிட்டும். சமுதாயத்தில் ஒற்றுமை நிலவ உதவும் புண்ணிய பூமி!

இருவாகன ஸ்ரீமாற்றகலீஸ்வரர்
திருப்பாச்சேத்தி

மரண நேரம் அறியும் மகத்துவம் கொண்ட நாய்!

பைரவ சக்திகள் நிறைந்த ஒரு நாயிடத்தில் உள்ள பல அபூர்வமான ஆன்ம சக்திகளில் ஒன்றைக் கூட மனிதனால் எவ்வகையிலும் பெற இயலாமல், மனித குலத்தின் ஆன்ம சக்தி தற்போது மிகவும் மங்கி, பின் தங்கி உள்ளது. நாய்க்கு எம பகவானின், எம கிங்கரர்களின், எம தூதர்களின் தரிசனங்கள் நன்கு கிட்டும். எந்த இடத்தில், எவருக்கு, எப்போது இறப்பு நிகழவுள்ளது என்பதையும் நன்கு உணர்ந்ததே நாய் ஆகும்.

இத்தலத்தில் புதன் தோறும் குளிகை நேரத்தில் பைரவருக்குப் பச்சை நிறப்பட்டு சார்த்தி, பச்சை வண்ண ஆடைகளைத் தானமாக அளித்து வந்தால், ஜோதிடர்கள் நல்ல வாக்கு சக்தி பெறுவர். பிள்ளைகள் நன்கு படிப்பார்கள்.  உயர் கல்வி பெறுவோர் இங்கு அடிப் பிரதட்சிணம் செய்து வழிபடுதல் சிறப்பானது.

தீர்க்காத நன்றிக் கடன் பணக் கடனாகும்!

நாயை போன்ற மிகவும் நன்றியுள்ள பிராணியைக் காண்பதரிது. ஆனால் கலியுகத்தில் நன்றி மறத்தலே மிகவும் மோசமான பாவங்களுள் ஒன்றாகத் தர்ம சாஸ்திரங்கள் பகர்கின்றன. எனவே தனக்கு ஒருவர் செய்த ஒரு சிறு உதவியைக் கூட நன்றிப் பூர்வமாக உணர்ந்து, அவருக்கு எவ்வகையிலேலும் நன்றியைத் தெரிவிக்காமையால்தான், நன்றிக் கடனே பணக் கடனாக விரிந்து, பணமுடையாகிப் பலரும் அல்லலுற்று வாழ்கின்றனர். இதற்குப் பரிகாரம் தரும் பைரவத் தலமாகவும் திருப்பாச்சேத்தி விளங்குகின்றது.

இங்கு சனிக்கிழமை தோறும் குளிகை நேரத்தில் ஸ்ரீபைரவரை முழு மலர்களால் கனிகளால் அலங்கரித்து, புடலங்காய் கலந்த உணவு வகைகளைத் தானமாக அளித்திடக் கடன் தொல்லைகள் தணியும்.

நாயறியும் நயமான டெலிபதி!

மிகவும் நன்முறையில் நன்றியுடன் பழகும் சுபாவம் கொண்டது நாயாகும். தொலை தூரத்தில் உள்ள மற்றொரு நாயிடம் கூட மனோலயமாகத் தொடர்பு கொள்ளும் சக்தி நாய்க்கு உண்டு. அதாவது சென்னையில் உள்ள ஒரு நாய், திருச்சியிலுள்ள ஒரு நாயுடன் மிக எளிதில் மனோ ரீதியாகத் (telepathy) தொடர்பு கொள்ளும். நாயை, பைரவராகப் பாவித்து, நன்கு பழ(க்)கிடில், பல்வகை ஆன்ம சக்திகளை நாயே மனிதனுக்கு நன்கு உணர்த்த வல்லதாம். சில சமயங்களில் பக்கத்து வீட்டிலோ, தெருவிலோ நாய் அடிக்கடிக் குரைப்பது போல் தோன்றும். ஆனால் அது வெறுமனே குரைக்கின்றது என்று மற்றவர்கள் போல் எண்ணாது, அந்த நாய் எதையோ சொல்ல முயல்கின்றது என உண்மையாக உணர்ந்து, அதனுடன் மனோரீதியாகப் (telepathy) பேச முயற்சி செய்து பாருங்களேன்! இதன் பிறகு இறைவனின் படைப்பு அற்புதங்களை நீங்களே சிறிது, சிறிதாக உணரலாவீர்கள்! இந்த கால தீர்க தரிசனமும் பைரவ வழிபாட்டுப் பலனேயாம்!

ஸ்ரீதிருநோக்கும் அழகியநாதர்
திருப்பாச்சேத்தி

சில வகை நாய்களுக்குப் பகலிலேயே நட்சத்திரங்களைக் காணும் அதியற்புத சக்தியுண்டு. நம்மால் காண இயலாத நிறங்களைக் கூட ஒரு நாயால் நன்கு காண இயலும். விஞ்ஞானப் பூர்வமாக, நாய்களுக்குச் சில நிறங்கள் தெரிவதில்லை என்று கூறினாலும் மனித இனத்தால் வகை பிரித்து அறிய இயலாத பல வண்ணங்களை, உருவங்களை, வடிவங்களை நாய் மிக எளிதில் அறிந்து கொள்ளும் என்பதே உண்மையாகும். பல கஜங்கள் தூரத்தில் உள்ள எப்பொருளையும் தன் சுவாசத் திறனால் அறியும் தன்மையை உடையதே நாய் ஆகும்.

கண் நோய் தீர்க்கும் கவின்மிகு திருத்தலம்!

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய சூரிய நட்சத்திர நாட்களில் இங்கு, ஸ்ரீதிருமாற்றகலீஸ்வர பைரவருக்கு, சூரிய கிரக தானியமான கோதுமை அல்வாவைப் பிரசாதமாகப் படைத்து, அகத்திக் கீரை, காரட் வகை உணவு வகைகளையும், தேனில் ஊறிய அத்திப் பழங்களையும் ஏழைகளுக்குத் தானமாக அளித்து வர கண் நோய்களுக்குத் தக்க நிவாரணம் கிட்டும். கண் மருத்துவர்களும், கண் வைத்தியத் துறையினரும் வழிபட வேண்டிய தலமிது! இதனால்தாம், இச்சிவத்தலத்தில் ‘நோக்கு’ தீர்க சக்தி கொண்டவர்களாயும், ஸ்ரீமருநோக்கும் பூங்குழலி அம்பாள், ஸ்ரீதிருநோக்கும் அழகியநாத மூர்த்திகள் அருள்கின்றனர்.

நாய் (பைரவ) சாபம் சேர்தல் கூடாது!

நாயை மறந்து போய் அறையிலோ, காரிலோ பூட்டி வைத்துச் செல்வதால் உணவின்றி, நீரின்றி, மூச்சு விடக் காற்றின்றி நாய் இறக்க ஒருவர் காரணமானால், அல்லது கடும் பசியால், நாய் வாடிட்டால், சம்பந்தப் பட்டவர்களுக்கு, குடும்பத்திற்கு, பலத்த பைரவ தோஷங்கள் ஏற்படும். இதனால் தீர்ப்பதற்கு மிகவும் கடினமான பைரவ சாபங்கள் ஏற்பட்டு, சந்ததி, சந்ததியாய்த் தொடர்ந்து வந்து பாதிக்கும். இதற்கான நிவாரணப் பரிகாரங்களைத் தக்க சற்குரு மூலமாகப் பெற்றிட இத்தலத்தில் அடிக்கடி வழிபட்டு வர வேண்டும்.

நன்கு அன்புடன் வளர்த்த நாய் இறந்தால் பலரும் அதிர்ச்சிக்கு ஆளாவர். இவர்கள் அமாவாசையன்று இறந்த நாய்க்குக் காருண்யத் தர்ப்பணம் இட்டு, இத்தலத்தில் ஸ்ரீதிருமாற்றகலீஸ்வர பைரவருக்குக் வெண்பட்டு வஸ்திரம் சார்த்தி, வழிபட்டு, கருநீல அல்லது மயில் கழுத்து நீல வண்ண ஆடைகளை ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்தால், இப்பலாபலன்கள், இறந்த நாயின் நன்னிலைக்கு உதவி, துக்கமும் தணியும்.

ஸ்ரீமருநோக்கும் பூங்குழலாள்
திருப்பாச்சேத்தி

நஷ்டம், பகைமைகளைத் தீர்க்கும் பைரவ பூஜைகள்!

கூடப் பழகினவர்கள் துரோகம் செய்ததால் வெகுவாகப் பாதிக்கப்பட்டு இருப்போர், அஷ்டமி திதி, மக நட்சத்திரம், ஞாயிறு, கேட்டை, சனிக்கிழமை, தினசரி குளிகை நேரங்களில் திருப்பாச்சேத்தி ஸ்ரீதிருமாற்றகலீஸ்வரருக்கு ஐந்து வகைத் தைலங்களால் காப்பிட்டு, ஆலயம் முழுதும் அடர்த்தியாக சாம்பிராணி தூபம் இட்டு பைரவ மூர்த்தியை வழிபட்டு வர, அதிர்ச்சிகள் நீங்கி, திடீர் நஷ்டங்களில் இருந்து நன்கு மீள நல்வழி பிறக்கும்.

இக்குறித்த நாட்களில் சென்னை திருவொற்றியூரில் உள்ள பாடகச்சேரி ஸ்ரீராமலிங்க சுவாமிகளின் ஜீவசமாதியில் வழிபட்டிட, தீராத அலுவலக, வியாபார, உறவுப் பகைமையையும் தீர்த்து மனசாந்தி பெறலாம்.

பாடகச்சேரி ஸ்ரீராமலிங்க சுவாமிகள்   பைரவரோடு நல்விருந்து கொண்ட அற்புதப் பைரவ உபாசகர்!

பாடகச்சேரி ஸ்ரீராமலிங்க சுவாமிகள் மகத்தான பைரவ உபாசகர். இவர் தன் இளவயதிலேயே திருப்பாச்சேத்தி ஸ்ரீதிருமாற்றகலீஸ்வர பைரவ மூர்த்தியை உபாசித்து, பெறுதற்கரிய அரிய பைரவ சக்திகளைப் பெற்றவர். வெல்ல முடியாத ம்ருத்யு தோஷங்களைத் தீர்க்க வல்ல அற்புத பைரவ லோகச் சித்தர்! இவருடைய ஜீவசமாதி சென்னை திருவொற்றியூரில் உள்ளது.

பாடகச்சேரி ஸ்ரீராமலிங்க சுவாமிகள் எந்த ஊருக்குச் சென்றாலும் அங்குள்ள நாய்கள் அனைத்தும் இவரைச் சுற்றி அமர்ந்து கொள்ளும். இவர் நாய்களுக்கென முழு வாழை இலையில், உணவுப் பண்டங்களை, மனிதர்களுக்குப் பரிமாறுவது போல் வைத்திடுவார், தானும் அவற்றுடன் அமர்ந்து உண்பார்.

இவர் அழைக்கும் நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிடாது. அவை அழகாகப் பந்தியில் இலையின் முன் அமர்ந்து, நன்முறையில் உணவு உண்ட பின் அமைதியாக, வரிசையாகச் செல்லும். நாய்ச் சண்டையையே காண இயலாது. நாய்களை, இவர் பைரவ ரூபமாகப் போற்றி பக்தி கொண்டமையால், நாய்கள் உண்ட இலைகளில், இவர் பக்திப் பெருக்குடன் படுத்துருண்டு அங்கப் பிரதட்சிணம் செய்வார். அடியார்களும் இவரைப் பின்பற்றி அரிய பைரவ சக்திகளைப் பெற்றிட்டனர்.

ஸ்ரீபாடகச்சேரி ராமலிங்க
சுவாமிகள் ஜீவாலயம்

பழக்கப்பட்ட நாய்களெனில் அமைதியாக உட்கார்ந்து உண்ணும் எனச் சொல்லலாம். ஆனால் இவர் எங்கு சென்றாலும், பட்டி தொட்டியில் உள்ள நாய்களும் கூட நன்றாக அமர்ந்து உணவு உண்கின்ற காட்சி இவர்தம் பைரவ உபாசனா சக்தியையே காட்டுகின்றது.

பைரவச் சித்தர்கள், பைரவ மகரிஷிகள் கூடும் பைரவ வளாகம்!

ஆதிமூல நவநாத சித்தர்களுள் ஒருவரான ஸ்ரீவடுகச் சித்தர், பைரவ மகரிஷி, சுவானன தேவர், ஸ்ரீபாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் போன்ற ஸ்ரீபைரவ உபாசனைச் சித்தர்கள் மற்றும் எண்ணற்ற பைரவச் சித்தர்கள், பைரவ மகரிஷிகளால் வழிபடப் பெற்ற தெய்வ மூர்த்தமே திருப்பாச்சேத்தியில் உள்ள ஸ்ரீதிருமாற்றகலீஸ்வர பைரவ மூர்த்தி ஆவார். எளிமையான பூஜையிலேயே அனுகிரகங்களைப் பொழியும் அற்புத பைரவ மூர்த்தி!

இவரைக் குளிகை நேரத்தில் வழிபடுவது விசேஷமானதாகும். அஷ்டமித் திதி, இதிலும் தேய்பிறை அஷ்டமித் திதி மற்றும் குளிகை நேரத்தில், இவருக்கு ஆற்றப்படும் பூஜைகளின் பலன்கள், பிரதோஷம், விஷ்ணுபதி போல் பல்கிப் பெருகும்.

இப்பைரவ பூஜா பலன்கள் அண்டசராசரத்திற்கும், அனைத்து நாடுகளுக்கும் நல்வழிகளை, நல்வரங்களை அளிக்கவல்லவை.

ஸ்ரீதிருநோக்கும் அழகியநாதர்
திருப்பாச்சேத்தி

காளிதேவியர்க்கு அருளும் பைரவப் பெம்மான்!

ஸ்மசான காளி, மாகாளி, பத்ரகாளி, ரௌத்ர காளி, ருத்ர காளி, நடன காளி, எல்லைக் காளி, வனக்காளி, தோட்டக்காளி போன்ற பல காளி, பராசக்தி மற்றும் எல்லை மூர்த்திகளும் தமக்குரிய தெய்வ சக்திகளைப் பெறும் திவ்ய பைரவ மூர்த்தியே திருப்பாச்சேத்தி ஸ்ரீதிருமாற்றகலீஸ்வர பைரவர்!

உதிரக் கோளாறுகள், பில்லி சூன்ய தோஷங்கள், வெப்ப நோய்கள், புள்ளிக் கோளாறுகள் போன்ற நோய்களாலும், சந்ததிக் குறைவு தோஷங்கள், பித்ரு கடன்கள், பித்ரு சாபங்கள் மற்றும் பலவிதக் காரியத் தடங்கல்களாலும், இன்னல்களாலும் வாடுவோர் இங்கு வழிபட்டு நல்ல தீர்வுகளைப் பெற உதவும் பைரவ மூர்த்தி!

வியாழனன்று குளிகை நேரத்தில் திருப்பாச்சேத்தி ஸ்ரீதிருமாற்றகலீஸ்வர பைரவ மூர்த்திக்குப் புனுகுக் காப்பிட்டு பால்பாயசம் நைவேத்யம் வைத்துத் தானம் அளித்தலால் பலவிதமான தடங்கல்கள் தீர்வதைக் கண்கூடாகக் காணலாம்.

கொடுத்த கடன்கள், வியாபார நிலுவைகள், பணச் சொத்து வழக்கு பாக்கிகளில் வர வேண்டிய தொகை நன்கு வசூலாகிட, வெள்ளிக்கிழமைக் குளிகை நேரத்தில் இங்கு ஸ்ரீதிருமாற்றகலீஸ்வர பைரவ மூர்த்திக்குப் புனுகும், ஜவ்வாதும் கலந்த (கைகளால் அரைத்த) சந்தனக் காப்பு இட்டு, மாதுளை முத்துக்களால் அலங்கரித்து வழிபட்டு, பால் வகை இனிப்பு உணவுகளைப் படைத்து ஏழைகட்குத் தானம் தருதல் வேண்டும்.

ஸ்ரீவடுக நவநாதர் வலம் வரும் ஆவணி மாத சிவராத்திரி!

வரும் ஆவணி மாத சிவராத்திரி 26.8.2003 தேய்பிறைச் சதுர்த்தசி நன்னாளில், முதலில் திருப்பாச்சேத்தி ஸ்ரீதிருமாற்றகலீஸ்வர பைரவரை ஆராதித்த பின்னரே, ஸ்ரீவடுக நவநாத சித்தர் திருஅண்ணாமலையில் கிரிவலம் வந்து, பைரவ பூஜா பலா பலன்களை இன்று (மாதசிவராத்திரி) கிரிவலமாக வருவோர்க்கு, நேரடியாகவே அருள்கின்றார்.

திருப்பாச்சேத்தி

இதே போன்று, முதலில் திருப்பாச்சேத்தியில் ஸ்ரீதிருமாற்றகலீஸ்வர பைரவரை தரிசித்து அன்றிரவே திருஅண்ணாமலையில் (மாத) சிவராத்திரி கிரிவலம் வருவோர்க்கு மகத்தான பலன்கள் கிட்டும்.

இதனால் நெடுங்காலமாகப் பல தடங்கல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் திருமணம், பதவி, பதவி உயர்வு, கட்டட வேலைகளில் உள்ள இன்னல்கள் நீங்கி நல்ல செய்திகள் கிட்டும்.

ஒரு யுகத்தின் ஆருத்ரா தரிசனத்தின் போது, சிவபெருமான் அனைத்து தேவாதி தேவர்கட்கும், முனிவர்கள், மஹரிஷிகள், சித்தர்களுக்கும் ஜோதியாகக் காட்சி அளித்தபோது, அவர்கள் அந்த ஆதிமூல ஜோதியின் பொருளை நன்கு உணர, அனைத்து புராண வைபவங்களுக்கும் காலாதீதராகத் துலங்கும் ஆதிமூல ஈஸ்வர தரிசன வடிவைக் காண விரும்பினர். அஷ்ட பைரவ மூர்த்திகளுக்கும் முந்தைய ஆதிமூலக் காலபைரவராக சர்வேஸ்வரன் அப்போது அவர்கட்குக் காட்சி தந்து, பலவிதமான அசுரத் தீய சக்திகளை வெல்வதற்கான ஆருத்ர பைரவ சக்திகளுடன் திருப்பாச்சேத்தியில் ஸ்ரீதிருமாற்றகலீஸ்வர பைரவ மூர்த்தியை உற்பவித்தார். கிருத யுகத்திலேயே, எதிர்வரும் கோடானு கோடி யுகங்களுக்கு அப்பால் நிகழவுள்ள புராண வைபவங்களை உணர்த்திடவும் இவ்வாறு காலாதீரதராய்த் தோன்றியவரே ஸ்ரீதிருமாற்றகலீஸ்வர பைரவ மூர்த்தி.! எத்தகைய தீய வழக்கங்களும் அகன்றிட அருள வல்லவரே இப்பைரவ மூர்த்தியாவார்!

இருவாகனத் திருபைரவர்! : இந்த பைரவ மூர்த்திக்கு இரண்டு நாய் வாகனங்கள் இருப்பதற்கானப் பல தெய்வீக காரணங்கள் உண்டு. ஒன்று பக்தர்களை நோக்கியும் மற்றொன்று சக்தி மார்கத்தையும் நோக்கி இருப்பதாகும்.! உலகில் எந்தக் காரியம் நடந்தாலும் அது நிகழ்வதற்கான இரண்டு காரணங்களைப் பெறலாம்.

ஸ்ரீதட்சிணா மூர்த்தி
திருப்பாச்சேத்தி

இந்த இரண்டையும் நன்கு பகுத்து அறிபவர்களே தெய்வீகத்தில் உத்தம நிலைகளை அடைகின்றனர்.

உதாரணமாக, ஓரிடத்தில் நன்கு மழை பெய்தால், சித்தர்கள், மகான்களின் வருகை, அங்கு தர்மச் செயல்கள் நன்கு நடத்தல், வருண ஜபம், ஹோமம், பூஜைகள் நிகழ்தல் என்று பல ஆன்மீகக் காரணங்கள் ஆங்கே செறியும்.

ஆனால், நடைமுறை லௌகீகமாக, பருவக் காற்று, காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தினால் மழை என விஞ்ஞானப் பூர்வமான காரணமும் வந்து சேரும். இது நிலையற்ற விளக்கமாகும். ஏனெனில் பருவக் காற்று பருவத்தில் வராமல் போவதுண்டு. திடீரெனக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஏற்படுவது ஏன் என்பதற்குத் தக்க விளக்கமும் கிட்டுவதில்லை! எனவே அனைத்து நிகழ்வுகளுக்குமான தெய்வீகக் காரணங்களை உணர்தலே உண்மையான, சாசுவதமான உத்தம இறைப் பகுத்தறிவாகும்.

முடிவிலாக் குழப்பத்திற்கு முற்றிய நல்முடிவு!

கலியுகத்தில் உலகின் எந்த மூலையிலும் இருவிதமான குழப்பங்களுக்கு மனிதன் ஆளாவது உண்டு! செய்வதா? செய்ய வேண்டாமா? செல்வதா? செல்ல வேண்டாமா? முடிப்பதா? முடிக்க வேண்டாமா? இது சிறந்ததா, அது சிறந்ததா? போன்ற இருவகை வினாக்களுக்கு இடையில் கலியுகத்தில் மனிதன் குழம்பித் தவிக்கின்றான். இத்தகைய நிலையில் அவரவர் விதிக்கேற்ப நல்லபடியான முடிவை அருள, கலியுகச் சமுதாயத்தில் ஆன்மீகமாகவும், லௌகீகமாகவும் தக்க முறையில் அருளிடவே திருப்பாச்சேத்தியில் ஸ்ரீதிருமாற்றகலீஸ்வர பைரவ தரிசன பலன்கள் காத்துக் கிடக்கின்றன!

ஆன்மீக வழியிலே எண்ண இயலாத அளவில் அளப்பரிய தியான, யோக, ஞானப் பலன்களை அளிக்க வல்ல பைரவ மூர்த்தி!

பூலோக வாழ்வில் லௌகீக நடைமுறை வாழ்வு என ஒருபுறம் இருக்க, மறுபுறம் உத்தம ஆன்மீக நிலைகளை அடைய வேண்டும் என்ற வகையில் இல்லறமாம் நல்லறத்தில் பக்தியுடன் சிறந்து விளங்க உதவுபவரே திருப்பாச்சேத்தி ஸ்ரீதிருமாற்றகலீஸ்வர பைரவ மூர்த்தி, அதியற்புத சப்தாகர்ஷணத் திருத்தலம்! ஏழு விதமான மனித நற்குணங்களைத் தந்து, எத்தகைய தீய வழக்கங்களையும் போக்க வல்ல தலம்.

ஸ்ரீமகாவிஷ்ணு
திருப்பாச்சேத்தி

பைரவ சக்திப் பரிணமிக்கும் நேரமறிவீர்!

காலத்தை ஒட்டியே நம் ஆயுள் அமைவதால், காலபைரவரைத் தினந்தோறும் வழிபட வேண்டும். தேய்பிறை அஷ்டமி, ஏனைய அஷ்டமித் திதிகள், குளிகை நேரம் போன்றவை காலபைரவ சக்திகள் நன்கு பரிணமிக்கும் நேரமாகும். ஏனெனில் இந்நேரங்களில்தாம் பல பைரவ மூர்த்தங்களும் பூவுலகில் தோன்றின!

ஓம் ஆகமமாத்மாய வித்மஹே
ஆம நாசனாய தீமஹி
தந்நோ சியாமள பைரவ ப்ரசோதயாத்

என்பதே திருப்பாச்சேத்தி ஸ்ரீதிருமாற்றகலீஸ்வர காலபைரவ மூர்த்திக்கு உரித்தான ஸ்ரீகாயத்ரீ பைரவ மந்திரமாகும். இதனை ஓதியவாறு தேய்பிறை அஷ்டமி, ஏனைய அஷ்டமித் திதி நாட்கள், குளிகை நேரங்களில் திருப்பாச்சேத்தியில் அடிப்பிரதட்சிணமாக வலம் வருதல் நற்பலன்களைத் தரும்.

ஒற்றுமையை உருவகிக்கும்
திருப்பாச்சேத்தி

திருமண வாழ்வுச் சோகங்களைத் துடைக்கும் பைரவத் தலம்!

பொதுவாக கணவனை, மனைவியை இழந்தவர்கள், குழந்தைகளை இழந்து துயருறுவோர் நல்வழி பெற உதவுவதே திருப்பாச்சேத்தியில் ஸ்ரீதிருமாற்றகலீஸ்வர பைரவமூர்த்தி வழிபாடு ஆகும்.

விவாகரத்து, தம்பதியர் பிரிதல் போன்ற பலவிதமான கஷ்டங்களுக்கு ஆட்பட்டோர் நன்னிலை பெற உதவும் பைரவ பூஜைத் தலமிது. மறுதிருமணம் செய்தும் வாழ்க்கையில் துன்பங்கள் தொடர்ந்தால், இருக்கின்ற குழந்தைகள், சொத்து பதவியுடன் நல்வாழ்வைப் பெற உதவும், நல்வரங்களை அளிப்பவரும் திருப்பாச்சேத்தியில் ஸ்ரீதிருமாற்றகலீஸ்வர பைரவ மூர்த்தியே ஆவார்.!

வார பூஜை முறைகள்!

பொதுவாக, ஸ்ரீபைரவருக்குக் குளிகை நேர பூஜைகள் மிகவும் சிறப்புடையவை!

திங்கட்கிழமையன்று இங்கு பைரவருக்கு வெண்ணெய்க் காப்பிட்டு வழிபட்டு வெண்ணெய், நெய் வகை உணவுகளைத் தானமாக அளித்துவர, இல்லத்தில், அலுவலகத்தில் சச்சரவுகள் குறைந்து வாழ்வில் மன நிம்மதி ஏற்படும். மதிகாரகராகிய சந்திர பகவானே வழிபட்டு மனசாந்தி பெற்ற தலமாதலால் மனஅமைதி தரும் மகத்தான தலமிது!

செவ்வாய்க் கிழமையன்று குளிகை நேரத்தில் இங்கு பைரவருக்குச் சிந்தூரம் கலந்த வெண்ணெய்க் காப்பிட்டு இரண்டு பைரவ வாகனங்களுக்கும் மஞ்சள் காப்பிட்டு வழிபடுதலால், பெண்களுக்கு ஏற்படும் உதிரம், தசை, மூட்டு வலி, மூட்டு எலும்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் தீர தக்க நிவாரண வழிகள் கிட்டும்.

ஸ்ரீநடராஜப் பெருமான்
திருப்பாச்சேத்தி

புதனன்று ஸ்ரீபைரவ மூர்த்திக்கும், இரண்டு (நாய்) வாகனங்கட்கும் நிறைய முழு முந்திரிகள் கலந்த சர்க்கரைப் பொங்கலால் காப்பிட்டு வழிபடுவதால் பிள்ளைகள் நன்முறையில் கல்வி அறிவு பெறுவர்.

வியாழனன்று வெண்ணெய்க் காப்பிட்டு இதில் மாதுளை முத்துகளைப் பதித்து அலங்கரித்து, வழிபடுதலால் திருமணத் தடங்கல்களும், திருமண வாழ்வின் தோஷங்களும் நீங்க பைரவர் அருள்புரிவார்.

சனிக்கிழமையன்று பைரவருக்கு நவதான்யங்களை ரவையாக்கி கெட்டியானத் தயிரில் குழைத்துத் தயிர்க் காப்பாக வழிபடுதலால் நிலம், வீடு, சம்பந்தப்பட்டப் பிரச்னைகள் தீரும்.

திருப்பாச்சேத்தியில் அருளும் ஸ்ரீநடராஜப் பெருமான் வியாக்ரபாதர், பதஞ்சலி மகரிஷிகள் சம்பு நடன நடராஜ துதியை ஓதும் கோலத்தில் சிவகாமி அம்பிகையுடன் எழுந்தருளி உள்ளார். பதஞ்சலி முனிவர் தன் சுயஉருவத்தில் வழிபட்ட திருத்தலங்களுள் இதுவும் ஒன்று. பதஞ்சலி மகரிஷி என்றோ சம்பு நடன துதியால் ஓதி வழிபட்ட மூர்த்தியாக இருந்தாலும் இன்றும் இந்த துதியைக் காதால் கேட்கும் தெய்வீக அருள் பெற்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீமார்கண்டேய மகரிஷி, நம் சற்குரு போன்றோர் இத்தகைய துதிகளை காதால் கேட்கும் பாக்கியம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய்க் கிழமைகளில் இணையும் குரு ஹோரையில் இத்தல நடராஜ மூர்த்தியை சம்பு நடன துதியை ஓதி வழிபடுதல் மிகவும் சிறப்பானதாகும். பாக்கியம் உள்ளோருக்கு சுவாமியின் சதங்கை ஒலியை கேட்கும் அனுகிரகம் சித்தியாகும். இத்தகைய சதங்கை ஒலிகளையே நடராஜ ஒலி, சம்பு ஒலி, சதங்கை ஒலி, ஒலிக்கும் நடராஜர் என்றெல்லாம் பக்தர்கள் புகழ்கின்றனர். நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் பிரபஞ்சத்தில் ஒலி திவலைகளாக மிதந்து கொண்டேயிருக்கும் என்பதால் நம்முடைய ஒவ்வொரு வார்த்தையையும் மிக மிக கவனமாக, நல்ல பயனுள்ள வார்த்தைகளையே பேச வேண்டும் என்று நம் சற்குரு வலியுறுத்துவதன் காரணம் இப்போது புலனாகின்றது அல்லவா ?

திருவதிகை விஷ்ணுபதி

நல்ல பண்பாடு, மரியாதை, கௌரவத்துடன் வாழ்ந்த குடும்பத்தில், குடும்பத்தினர் ஓரிருவரின் தகாத நடத்தையால் பலத்த சேதங்கள், தீய வீளைவுகள் ஏற்பட்டுத் தத்தளிக்கின்ற நிலை மாறி, குடும்பக் கௌரவத்தைக் காப்பாற்ற உதவும் திருவதிகைப் பெருமாள் ஆலய விஷ்ணுபதிப் புண்ய கால பூஜை!

பிறரை நம்பிப் பெரும் பொறுப்பை ஒப்படைத்திட அல்லது வாழ்க்கையில் வியாபாரத்தில் தூணாக நின்று உதவியவர்கள் திடீரென்று காலை வாரி விட்டிட, இத்தகைய நம்பிக்கைத் துரோகிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுத் திகைத்து நிற்போர், அதிர்ச்சியில் இருந்து மீண்டு நல்வாழ்வு பெற உதவும் திருவதிகை ஸ்ரீசரநாராயணப் பெருமாள் ஆலய விஷ்ணுபதிப் புண்ய கால பூஜை!

வயதான காலத்தில் தம் வாழ்க்கை எவ்வாறு அமையுமோ என்று கவலைப்படுவோர் நன்முறையில் எதிர்கால வாழ்க்கையைப் பெற்றிட உதவும் விஷ்ணுபதிப் புண்யகாலத் தலமே திருவதிகை!

லட்சுமி தீர்த்தத்தில்
ஸ்ரீலட்சுமி திருப்பாச்சேத்தி

கொந்தளிப்பான குடும்பச் சுழ்நிலைகளில் வாழ்வோர் குடும்பக் குழப்பம் அடங்கி, சாந்தமான வாழ்வு பெற உதவும் திருவதிகை ஸ்ரீவிஷ்ணுபதிப் புண்யகால பூஜை!

திருவதிகை ஸ்ரீசரநாராயணப் பெருமாள் ஆலய சயனக்கோல ஸ்ரீநரசிம்ம மூர்த்தி மகிமை! (பண்ருட்டியில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ளதே  திருவதிகைத் திருத்தலம்!)

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் போல் சயனக் கோலத்தில் அதாவது படுத்த கோலத்தில் ஸ்ரீநரசிம்மப் பெருமாள் உறைகின்ற தலமே திருவதிகை! ஹிரண்யகசிபுவை, ஸ்ரீநரசிம்மர் சம்காரம் செய்கையில், அசுரனின் ஒரு துளி ரத்தம் பூமியில் சிந்தினால் கூட அதிலிருந்து ஆயிரமாயிரம் அசுரர்கள் தோன்றுவர் என்பதால் அசுர உதிரத்தை ரக்தசாந்தி செய்து குருதிநஹக் கோசம் என்ற வகையில் பூமி, வானத்திற்கு இடைப்பட்ட பரவெளியில், அக்னாந்த்ரீய பஸ்மம் செய்திட்ட ஸ்ரீநரசிம்மர் சற்று சாந்தமாகச் சயனக் கோலம் பூண்ட திவ்யத் தலமே திருவதிகை!

அசுர சக்திகள் பெருகாது காத்த பெம்மான்!

ஹிரண்யாசுர அசுரனின் பிரம்மாண்டமான உடலைக் கீழே பட விடாது, தன் தொடைகளில் தாங்கி வைத்து சம்கரித்தமையால், ஸ்ரீநரசிம்மப் பெருமாளுக்கு உக்ர சக்தி பல்கிப் பெருகியது. கொடிய அரக்கனான ஹிரண்யகசிபுவை ஸ்ரீநரசிம்மப் பெருமாளே நேரில் வந்து சம்கரித்து, அசுரனுக்கான முடிவை தெய்வக் கரங்களால் ஆனதாக, ஓர் “அனுகிரகமாகத்” தந்தது ஏன் எனப் பலருக்கும் எண்ணத் தோன்றும்,

ஆனால் ஹிரண்யகசிபு என்பான் யார்? பெருமாள் பரம்பொருளாக உறையும் வைகுண்டத்தின் இருதுவார பாலகர்களான ஜெயவிஜயர்கள் தாம் செய்த பிழை ஒன்றினால் சாபம் பெற்று, அரக்கர்களாகி, மூன்று பிறப்புகளை எடுத்து அனைத்திலும் பெருமாளே அவர்களைச் சம்காரித்து ஆட்கொள்வார் என்ற புராண வைபவங்களை ஆக்கிடவே இந்த லீலைகள் நிகழ்ந்தன என்பதை மனதில் கொள்ள வேண்டும். மேலும் எத்தகைய உத்தமத் தெய்வீக நிலைகளைப் பெற்றாலும், அகங்காரமின்றிப் பணிவுடன் நடந்து கொள்ளாவிடில் உத்தம நிலைகளில் இருந்து தலைகீழாகப் பிறழ்ந்து, மீண்டும் பிறவித் தளைவில் சிக்கலாகும் என்ற பெரும் பாபத்தை உணர்த்தவும் இந்த அவதார லீலைகள் தோன்றின!

ஸ்ரீநரசிம்மப் பெருமாள் திருவதிகையில் சயனக் கோலம் கொள்ளக் காரணங்கள் பல உண்டு. இவற்றுள் பலவும் விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் நிகழ்ந்தவையாம் ஆயினும் இத்தகைய தெய்வானுபூதிகள் நிகழ்ந்தமையாலும் இவை விஷ்ணுபதிப் புண்யகாலமாகின என்பதும் சாலப் பொருந்தும்!

வைகுண்டத்தில் எவரும் எச்சிறுதவறுக்கும் ஆளாகலாகாது! ஆங்கே ஒரு சிறுதவறு செய்திடினும் பெரும் சாபங்களைத் தந்திடும். எனவே ஹிரண்யனின் அசுர வாழ்வுச் சம்பவங்கள் அனைத்தும் வைகுண்டத்தில் அவனுடைய பூர்வஜன்மத்தில் இழைத்த ஒரு குற்றத்தின் விளைவுகளே என உணர்க! மேலும் எத்தகைய பாவங்களைச் செய்திட்டாலும், மனதார வருந்தி, வாழ்வின் எப்பகுதியிலும் எவ்வயதிலும் தன் தவறுகளுக்கான பிராயச்சித்தங்களைத் தேடி அடைந்து கடைபிடித்திடில், இதுவும் உத்தம நிலைகளுக்கு வழிவகுக்கும் என்பதை யாவர்க்கும் உணர்த்திடவும் ஸ்ரீநரசிம்ம அவதாரத்தின் பல திருவிளையாடல்களும் நிகழ்ந்தன.!

ஸ்ரீநடராஜ மூர்த்தி
திருப்பாச்சேத்தி

சரபூஷணி மூலிகா சக்தி நிறைந்த திருவதிகை!

சரபூஷணி என்ற அரிய வேர்வகை மூலிகை ஒன்று உண்டு.. இது வேர்ப்பூர்வமாக பூமியடியில் பரவி, பலவிதமான அக்னி சக்திகளைத் தன்னுள் தாங்கும் சக்தி கொண்ட சீதள வேர் மூலிகை ஆகும்! இதனைச் சந்திர ஒளியில்தாம் நாம் சாதாரணமாகக் காண இயலும். ஏனெனில் பௌர்ணமி பூரணச் சந்திரனில் அமிர்தமய சீதள சக்திகளைப் பெற்றே இவை சீதள மூலிகைகள் ஆகின்றன..!

குளுமியான், வெட்டிவேர், சரசப்பரில்லா போன்ற குளுமைவகை வேர் மூலிகைகளுள், சரபூஷணித் தாவரமும் ஒன்றாகும். சிவபெருமான் சமயக் குரவர்களுக்கு முத்துப் பந்தர் அளித்து அருளியது “சரபூஷண” மூலிகா சக்தி நிறைந்த தலங்களில்தாம்.!

நரசிம்மப் பெருமாளின் உக்ரம் அதிகரித்துக் கொண்டே இருப்பதைக் கண்ட சித்தர்களும், மகரிஷிகளும் பலவிதமான இறைவழிகள் மூலமாகத்தான் பெருமானின் அதிஉக்ரத்தை மாற்ற இயலும் என்றறிந்து தக்க வழிகளைத் தந்தருளுமாறு திருமாலையே வேண்டினர்.

வானில் ஸ்ரீநரசிம்மர் உக்ரத்தோடு பறந்தபோது ஸ்ரீமகாலக்ஷ்மியும் அவருடைய நிழல் தன் திருமேனி மீது படும்படி (புளியங்குடி, திருவதிகை போன்ற தலங்களில்) தரைமார்கமாய் உடன் சென்று நரசிம்மரின் உக்ரத்தை ஓரளவு தணித்திட்டாள்.

நரசிம்ம உக்ரம் தணிப்பதில் சித்தர்கள், மகரிஷிகள் அளப்பரிய பங்கு!

சூரிய மண்டலத்தில் உறையும் கட்டை விரல் அளவே உள்ள வாலகில்லிய மகரிஷிகளும் ஸ்ரீநரசிம்மர் சென்ற இடமெல்லாம் ஆயிரத்தெட்டு சாகைகளுக்கான வேதமந்திரங்களை ஓதி, ஸ்ரீநரசிம்மப் பெருமாளின் உக்ரத்தை ஓரளவு தணித்தனர். ஹோம நுணுக்கங்களில் தலைசிறந்தவரான ஆங்கீரஸ மகரிஷியும், ஸ்ரீநரசிம்மரின் திருவடிகள் பட்ட இடங்களில் ஜலகாந்த தீப வகை ஹோமப் பூஜைகளை நிகழ்த்தி, ஸ்ரீநரசிம்மரின் பல உக்ர சக்திகளையும் ஹோமாக்னி  பலாதிபலா சக்திகளாக மாற்றி ஜீவன்களுக்கு அளித்ததுடன், ஸ்ரீநரசிம்மரின் உக்ரத்தையும் தணித்திடத் தன்னாலான இறைத் தொண்டுகளை ஆற்றிட்டார்.

நரசிம்மர் சயனக் கோலம் பூண்டாரே!

சித்தர்களும், மகரிஷிகளும் தம் பங்கிற்கு மூலிகா பந்தனங்கள், ரசமணி அம்சங்கள், வில்வ பந்தனம், துளசி காஷ்டம் போன்ற பல மூலிகா சக்திகள் நிறைந்த கோளங்களைச் சயனப் படுக்கையாக்கி எல்லாம் வல்ல பரம்பொருளாம் ஸ்ரீநரசிம்மரைச் சயனிக்கச் செய்து ஆசுவாசப் படுத்துவதற்காக அரிய வேதாகம விஷ்ணுத் துதிகளை ஓதினர்.

மேலும் சயனக் கோலம் பூண்ட ஸ்ரீநரசிம்மருக்கு 108 வகைத் தைலங்களால் ஆன பஞ்ச சதத் தைலக் காப்பிட்டு, 12 நாழிகைகளுக்கு நறுமண தூபம் இட்டு, அபிஷேக ஆராதனைகள் ஆற்றிட, இதனால் ஆனந்தமுற்ற ஸ்ரீநரசிம்ம மூர்த்தியும் நல்வரங்களையும் திருவதிகைத் திருத்தல மகிமையாகப் பொழிந்திட்டார். அப்போது ஸ்ரீமகாலக்ஷ்மி தேவியும் அருகிருந்து “சுவாமி! தங்களுடைய உக்ர நிலையிலும் நான்கு யுகங்களுக்கும் தேவையான நல்வரங்களை அளித்தல் தங்களுடைய பெருங்கருணையைக் காட்டுகின்றது. இதே சயனக் கோலத்தில் தாங்கள் இங்கு உறைந்து எக்காலத்தும் அருள் புரிய வேண்டும்!” என வேண்டிடவே, ஸ்ரீநரசிம்மரும் இங்கே சயனக் கோலம் பூண்டு அருள் புரியலானார்., இது நிகழ்ந்ததும் ஒரு பண்டைய யுகத்தின் விஷ்ணுபதிப் புண்யகாலத்தில் தாம்!

இவ்வாறு பல புராண அனுபூதிகள் நிகழ்ந்தத் திருத்தலமே திருவதிகையாம். உத்தம விஷ்ணு பக்தரான ஸ்ரீநாரத மகரிஷி, ஸ்ரீஅகஸ்திய மகரிஷி போல் தினமும் வைகுண்டத்தில் சிவனையும் வழிபடும் பாக்யம் பெற்றவராவார். ஓரிடத்தில் ஒரு நாழிகைக்கு நாழிகை பல லோகங்கட்கும் சென்று, பல மூர்த்திகளைத் தரிசித்து, யாங்கனும் சஞ்சரித்து இறைமணத்தைப் பரப்பி வருபவர்.

ஸ்ரீமன்நாராயணனின் உத்தம அடிமை! மனிதவடிவிலும், ஏனைய ரூபங்களிலும் வந்து, தாம் பெற்ற திருமாலின் தரிசனப் பலாபல சக்திகளைப் பல்வேறு ஆலயங்களில் இன்றும் நிரப்பிச் செல்பவர்.

சயனக்கோல ஸ்ரீராமர்
திருப்புல்லாணி

சயனக்கோல ஸ்ரீராமர்
புள்ளபூதங்குடி

நாரத மகரிஷி பெற்ற சயனக் கோல தரிசனங்கள்!

தினந்தோறும் ஸ்ரீநாரத மகரிஷி மானுட வடிவில் மலையேறித் தரிசனம் செய்யும் அற்புதத் தலங்களுள் ஒன்றே திருச்சி அருகிலுள்ள விராலிமலை ஆலயமாகும். ஸ்ரீநாரத மகரிஷி பல தெய்வ மூர்த்திகளின்  சயனக் கோலங்களைத் தரிசிக்கும் பாக்யம் பெற்றவர். ஊத்துக்கோட்டை அருகில் (ஆந்திர மாநிலத்தில் உள்ள) சுருட்டப் பள்ளியில் சிவபெருமானின் சயனக் கோலம், கும்பகோணம் அருகே புள்ளபூதங்கடியில் ஸ்ரீராமரின் சயன தரிசனம், ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கனின் சயனக் கோலம் போன்ற பல இறைமூர்த்திகளின் சயனக் கோலங்களைத் தரிசித்து இதன் பலாபலன்களை ஜீவன்களின் நல்வாழ்விற்காக அந்தந்தத் தலங்களில் தாரைவார்க்கும் உத்தமத் தியாகியே ஸ்ரீநாரத மகரிஷி!

பலரும் சரிவர அறியா சர மகிமை!

ஸ்ரீநாரத மாமுனி, ஸ்ரீநரசிம்மரின் சயனக் கோலம் காண வேண்டி நெடுங்காலமாகத் திருமாலிடம் விண்ணப்பித்திருந்தார். தனுர் வேதத்தில் ஹஸ்தவாடகம் என்ற பகுதி உண்டு. இக்காண்டத்தில் பலவிதமான சரங்கள் அதாவது அம்புகளைப் பற்றிய விளக்கங்கள் நிறைய இருக்கும். எந்த மந்திரத்தை, எந்தத் திக்கில் ஓதி ஏவினால், எத்தகைய பலன்கள் விளையும் போன்ற பலவித விளக்கங்களை இதில் காணலாம். தனுர் வேத சாஸ்திரத்தில் சிறந்து விளங்கிய பரசுராமர், துரோணர், கிருபர், அர்ஜுனன் போன்றோர் யாவரும் ஸ்ரீசரநாராயணப் பெருமாளின் அருளைப் பெற்று இச்சரக் கலையில் வல்லவர்கள் ஆகினர்.

சரமாகிய அம்பு என்றாலே அது அழிவிற்குத்தான் என்று எண்ணல் வேண்டாம். மன்மதன் கூடச் சரப சாஸ்திரத்தில் வல்லவர்தாம். ஆனால் மன்மதன் எய்வதோ மலர்ச் சரங்கள்! மலர் பாணங்களால் எங்கும் நன்மையே விளையும். மேலும் தெய்வ மூர்த்திகள் ஏற்று அனுப்பும் சரங்கள் யாவும் அனைத்து அண்ட சராசரத்துக்கும் நன்மை பயப்பதாம்.

ஸ்ரீநரசிம்ம மூர்த்தி, ஹிரண்யனுடன் போரிடுகையில் அசுரனின் அனைத்து விதமான ஆயுதங்களையும் தம் திருமேனியிலும், கவசத்திலும் தாங்கியதால் அவரது உக்கிர சக்தியும் அதிகரித்தது. எனவே சரங்களால் வந்த வெப்பத்தைத் தாங்க வல்ல அரிய வைணவ பூமியாகிய திருவதிகையில் ஸ்ரீநரசிம்மர் வந்தணைந்த நேரமும் விஷ்ணுபதிப் புண்யகாலமாகும். இந்த சரப சாஸ்திரத்தின் பல அம்சங்களைப் பலருக்கும் நல்வரங்களாக அளித்தவரான ஸ்ரீசரநாராயண பெருமாள் தலத்தில் தாமே ஸ்ரீநரசிம்மர் அத்தகைய சரங்களால் வந்த உக்ரங்களக் களைதல் இயலும்!

ஹிரண்ய கசிபு நல்ல தவங்களால் பெற்ற சரங்கள் தாமே இவை யாவும்! ஆனால் தகாத முறையில் பயன்படுத்தியமையால் சரங்களும் உக்ரமாயின!

சரநாராயணர் தாங்கிய சரப சக்திகள்!

இத்தகைய சரப சக்திகள் யாவையும் பஸ்மமாக்கி, அவற்றிலுள்ள தீமைகளைக் களைந்து, இறைவனின் திருமேனி ஸ்பரிசம் பெற்றமையால் இச்சரங்களில் உள்ள உத்தம யோகத் தவ சக்திகளை ஜீவ நல்வாழ்விற்கு அளிக்கும் பொருட்டு, ஸ்ரீநரசிம்ம மூர்த்தி சயனக் கோலம் பூண்டு, ஸ்ரீமன்நாராயணனை, ஸ்ரீவிஷ்ணுபதிப் புண்யகாலத்தில் வந்தணைந்த திருத்தலம் இதுவேயாகும்.

சரநாராயணப் பெருமாள் என்ற பெருமாளே நரசிம்மரின் அனைத்துச் சரபமாலா உக்ர சக்திகளையும், சரபாயுத சக்திகளையும் தம்முள் மீண்டும் ஏற்றுக் கொண்டு ஸ்ரீநரசிம்மரின் பலவகை சரப உக்ரங்களைத் தணித்தார். இத்தகைய புராண வைபவம் நிகழ்ந்த காலமே விஷ்ணுபதிப் புண்யகாலமாகும்.

பெருமாளின் நின்று, இருந்து, கிடந்து, நடந்த கோல மகிமை!

பொதுவாக, பெருமாலின் நின்ற கோலமும், கிடந்த கோலமும் இருக்கின்ற வைணவத் தலங்கட்கு அபரிமிதமான தெய்வீக சக்தியுண்டு. மனிதன் தன் பேராசையால், பலவகையில் உயர்நிலை அடைந்து, அகங்கார, ஆணவத்தால் செருக்கடைந்து கீழிறங்கி விடுகிறானல்லவா? உயர்வும், தாழ்வும் மனித வாழ்வில் மாறி,மாறி வரும். எனவே தாழ்வைக் கண்டு தளராதும், உயர்வைக் கண்டு உவகையுறாதும், நடுநிலை கொண்டு, என்றும் உயர்ந்ததாக, உத்தமமானதாக, சாசுவதமாகவும் இருக்கும் இறைவனைச் சரணடைந்தால் அத்திருவடி காட்டும் அமர்வுநிலை, சயனநிலை, நடந்த நிலை, கிடந்த நிலை ஆகிய அனைத்து நிலைகளிலும் உள்ள ஆனந்தத்தை அடையும் பொருட்டு இங்கு நின்ற நிலைச் சரநாராயணயராகவும், கிடந்த நிலையில் நரசிம்மப் பெருமாளாகவும் அருள் புரிகின்றார். இந்த வைபவம் நிகழ்ந்த நேரமே ஸ்ரீவிஷ்ணுபதிப் புண்யகாலமாகும்.

விஷ்ணுபதிப் பூஜா பலன்கள்

16.8.2003 நள்ளிரவு முதல் 17.8.2003 ஞாயிறன்று பகல் 10.30 மணி வரை அமைகின்ற விஷ்ணுபதிப் புண்யகால நேர பூஜைகளைத் திருவதிகை ஸ்ரீசரநாராயணப் பெருமாள் ஆலயத்தில் கொண்டாடுவதால் அதியற்புதப் பலாபலன்கள் கிடைக்கக் காத்திருக்கின்றன. சித்தர்களும், மகரிஷிகளும், தேவர்களும் மனமுவந்து கொண்டாடுகின்ற மிக மிகப் புனிதமான நேரமெனில் என்னே இதன் மகிமை!

விஷ்ணுபதிப் புண்யகாலமான இன்று, இங்கு, மூதாதையருக்கு, கங்கை, காவிரி, போன்ற புனிதத் தீர்த்தங்களோடு வில்வம், துளசி, தும்பைப்பூ மூன்றையும் இட்டுத் தர்ப்பணம் அளித்து, அரிவாள்மனையால் அரியப்படாது முழுமையாகப் பயன்படும் காய்கறிகளால் ஆன உணவு வகைகள், கனிகளைத் தானமாக அளித்திடுதல் மிகவும் விசேஷமானதாம்!

(உதாரணம் : தக்காளி, சிறு உருளை, சிறு மாம்பழம், ஜவ்வரிசி, சிறு திராட்சை போன்றவை)

இதனால் பல்லாண்டுகளாக முறையாகத் தர்ப்பணம் அளிக்கப்படாத மூதாதையருக்குப் பரிபாலயப் பித்ருக்களால் தக்க நற்கதி கிட்டும். குறிப்பாக, போர், ஆயுத வெட்டுக்கள், விபத்துகளால் இறந்தோர் நன்னிலை பெற உதவும் தர்ப்பணப் பூஜை!

ஆண் பெண் குழந்தைகளைப் பெற்றும் அல்லது ஆண் வாரிசு இல்லாமலும் இருந்து, இறக்கும் தருவாயில் தக்க ஆண் சந்ததி அருகில் இல்லையே என ஏக்கங்களுடன் இறந்தோர்க்கும், இங்கு விஷ்ணுபதி நேரத்தில் பசு நெய்யில் தோய்த்த 12 தர்ப்பைகளால் அமையும் தர்பைச் சட்டத்தில், ஜவ்வாது, கோரோஜனை மற்றும் மஞ்சள் கலந்த நீரால் தர்ப்பணம் அளித்து 12 முறை பித்ருக்கள் வந்து உறையும் தர்ப்பைச் சட்டத்தின் முன் வீழ்ந்து வணங்க வேண்டும்.

பெற்றோர் இறந்த பிறகு  தாயாதி, பங்காளி உறவு வகைகளால் சந்ததிகளுக்குப் பலவிதச் சொத்து, நில வழக்குப் பிரச்னைகள் ஏற்படுவதுண்டு. இவ்வகையில் பாதிக்கப்பட்டு இருப்போர் நன்முறையில் தீர்வு பெற, இங்கு திருவதிகையில் விஷ்ணுபதிப் புண்ய காலத்தில், ஸ்ரீநரசிம்மருக்கு ஆரஞ்சு நிறப் பட்டாடைகளைச் சார்த்தி, மஞ்சள், நீலம், ஆரஞ்சு நிற ஆடைகளை, இன்று, இங்கு ஏழைகளுக்குத் தானமளிக்க வேண்டும்.

உடல் ஊனமுற்றோர், மனநிலை பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகளுடன் வாழ்வோர், பலவிதமான துன்பங்களை வாழ்வில் சந்திக்க வேண்டியதிருக்கும். ஒருபுறம் அவர்களை இல்லத்தில் வைத்துக் காப்பாற்ற வேண்டிய தார்மீகக் கடமைகள் பல இருந்திட, மறுபுறம் தினசரிப் பிரச்னைகளால் குடும்பத்தில் மனஸ்தாபமும் ஏற்படுவதும் உண்டு. இதனால் உண்மையான அமைதி நிறைந்த வாழ்க்கை பலருக்கும் அமையாது போய்விடும்!

மனநிலை பாதிக்கப்பட்டோருக்கென நிறையச் செலவு செய்ய இயலாமை அல்லது சமுதாயப் பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் இத்தகைய இன்னல்கள் வாழ்வில் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆனால், எது நடப்பினும் அனைத்தும் பூர்வ ஜென்ம வினைகளின் விளைவே என்பதை உணர வேண்டும். இத்தகைய தினசரிப் பிரச்னைகளுடன் வாழ்வோர் இங்கு விஷ்ணுபதி நாளில், துளி நீர் கூட அருந்தாது நிர்ஜல விரதமிருந்து, தர்ப்பண பூஜைகளைச் செய்து, ஸ்ரீநரசிம்மருக்கான அபிஷேக ஆராதனைகளைச் செய்து, குறைந்தது 12 பேருக்கு உணவு அளித்து, அவர்கள் வாயாலேயே ‘போதும், திருப்தி அடைந்தேன்!’ என்று சொல்லிக் கேட்ட பின் விரதத்தை முடித்து, உணவருந்துதல் எனும் விரதத்தைக் கடைபிடித்தல் மிகவும் விசேஷமானதாகும். இதனால் பிறரை வைத்துக் காப்பாற்ற வேண்டி, தியாகமய வாழ்க்கையைப் பெற்று மன அமைதி இன்றி இருப்போர் தக்க தீர்வுகளைப் பெறுவர்.

வேறு நல்ல வேலை கிட்டும் எனும் எண்ணத்தால், நல்ல வேலையைப் பல காரணங்களால் இழந்து அல்லல்படுவோர் இன்று இங்கு விஷ்ணுபதி புண்ய காலத்தில் ஸ்ரீநரசிம்மப் பெருமாளிடம் தான் அறிந்தோ, அறியாமலோ செய்த தீவினைகட்குப் பிராயச்சித்தம் வேண்டி, கண்ணீர் விட்டு, மனதார அழுது, ‘இனிமேல் இத்தகைய தவறுகளை எக்காலத்தும் செய்யேன்!’ என சத்திய ஆணையிட்டு இன்று குறைந்தது மூன்று பசுக்களுக்கு நன்கு நீராட்டி வயிறு நிறைய உணவளித்துப் பசுதர்ம சேவை ஆற்ற வேண்டும். இதன் பின் பிரதோஷம் தோறும் இத்தலத்தில் வழிபாடு செய்ய ஆவன செய்து வந்தால் நல்ல வேலை வாய்ப்புக் கிட்டும். இங்கு தொடர்ந்து பிரதோஷ பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதால் வாழ்வில் பலரும் நல்மாற்றங்களைக் கண்கூடாகக் காணலாம்.

தூப தீப கண்டி

திருஷ்டி தோஷம் நிவாரணம்

அகல் விளக்குபோல, மண் சுதையால் ஆனதும், திருஷ்டி தோஷங்களை நீக்க வல்லதுமான திருஷ்டி தோஷ நிவாரண தூபதீப கண்டி விளக்கின் சிறப்பான ஆன்ம அம்சங்களைப் பற்றி நம்முடைய ஆஸ்ரம வெளியீடுகளிலும், ஸ்ரீஅகஸ்திய விஜயத்திலும் பன்முறை விளக்கி வந்துள்ளோம்.

கர்மதூலக் கரி தோஷம்

மனிதன், கலியுகத்தில் புண்ய சக்திக் குறைவால் மிகவும் அவதிப்படுகின்றான். பெரும்பாலும், மூதாதையர்கள் சேர்த்து வைத்த புண்ய சக்தியாலேயே வசதிகளும், நல்வாழ்வும் பெற்றுக் கலியுக மனிதன் வாழ்ந்த போதிலும் இத்தகைய பூர்வப் புண்ய சக்தியையும் வெகு வேகமாகக் கரைத்துக் கொண்டு வருகின்றான். நற்காரியங்களும் குறைவு பட்டு விட்டமையால் நற்காரியங்களினால் இப்பிறவியில் புண்யம் சேர்வதும் மங்கி விட்டது. இவ்வாறு கரிதோஷம் என்ற ஒரு வகை தோஷம் ஏற்படுகின்றது. இதனால் மரணத் தருணத்தில் எவரும் அருகில் இல்லா வண்ணம் விபத்து, மாரடைப்பு போன்றதாக அமைந்து விடும்.!

தாமஸ தோஷம்

கலியுக மனிதன் தன் வாழ்க்கைக்கோ அல்லது தன் சந்ததிகளுக்கோ தேவையான புண்ய சக்தியையும் விருத்தி செய்வதற்கான நற்காரியங்களில் ஈடுபடுவதும் கிடையாது. மிகவும் முக்கியமான விரதங்கள், பண்டிகைகளை முறையாகக் கடைபிடிக்காவிட்டாலும் தாமஸ தோஷம் ஏற்படும். இதனால் நல்ல வாய்ப்புகள் கிட்ட வந்தும் இழத்தல், பிறருடைய தலையீட்டால், குறுக்கீட்டால் எதுவும் கிட்டாமல் போதல் போன்றவை ஏற்படும்.

எனவே கலியுக மனிதன் முதலில் தன்னுடைய எதிர்காலச் சந்ததிகளின் பாதுகாப்பிற்காகத் தேவையான புண்ய சக்தியைப் பெற வேண்டிய தார்மீகக் கடமைக்கு ஆட்பட்டிருக்கின்றான். மேலும் புண்ய சக்தியைச் சேர்க்க விடாமல் தடுக்கின்ற பலவிதமான தோஷங்களையும் அவன் அடக்கி வெற்றி கொண்டாக வேண்டும்.

தூபதீப கண்டி

அக்னித்வேஷ தோஷங்கள்

பீடி, சிகரெட் புகைப்பதால் பலவிதமான நச்சு வாயுக்களும், நச்சு தோஷங்களும் ஏற்படுகின்றன. எனவே பீடி, சிகரெட் பிடிப்பவர்கள் தம்முடைய இருதயத்திற்குச் சூடு ஏற்றி ஹிருதயாதி கரிதோஷத்தைப் பெறுவது மட்டுமல்லாது, விஷக் காற்றைப் பாய்ச்சிப் பரவெளியில் உள்ள கோடிக்கணக்கான நுணுக்கமான ஜீவிகளையும், உயிர் அணுக்களையும் கொன்று, பூமிவாழ் ஜீவன்கள் சுவாசித்து வாழ வேண்டிய நல்காற்றையும் மாசு படுத்துகின்றனர்.

எத்தகைய கொடிய பாவமிது! இதனை இடித்துரைத்தால் தெய்வீக நூல்களைப் படிப்பதையே நிறுத்தி மனிதன் அவற்றின் மேல் சுயநலமாக வெறுப்பைக் கொள்கின்றான்.!

விஷ்ஜ்வால தோஷம்

மேலும் புகை பிடிப்பதன் மூலம் அக்னி சக்திகளையும் எச்சிலாக்கி அக்னி சாபத்திற்கும் ஆளாகின்றார்கள். பீடி, சிகரெட் பிடிப்பவர்கள் விடுகின்ற நச்சுப் புகையைப் பிறரும் சுவாசிப்பதால் புகை பிடிக்கும் விஷஜ்வால தோஷம் ஏற்படுகின்றது. இதனைப் பலரும் உணர்வது கிடையாது.  இதனால் பிறரால் வாழ்வில் அடிக்கடி பழிவாங்கும் நிலைகள் உருவாகும்.

சமுதாயத்தில் பீடி, சிகரெட் பிடிப்பவர்கள் பெருகப் பெருக, இத்தீய வழக்கத்தைத் தவிர்ப்பதற்கான ஆன்மீக வழிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு. ‘யாரோ பீடி, சிகரெட் பிடிக்கின்றார்கள் நமக்கென்ன வந்தது? என்றும் ‘பசுவை யாரேனும் அடித்தால் நமக்கென்ன?’ என்று ஒதுங்குவதும் தெய்வீகக் கடமைகளில் தவறுவது ஆகும். இவ்வாறு பலரும் ஒதுங்குவதால் ஆபத்து நேரங்களில் எவரும் உதவாமல் பெரும் நஷ்டங்கள் வாழ்வில் ஏற்படும்.

இச்சமுதாயக் கடமைகளை நேரடியாகத் தனியே செய்ய முடியாவிட்டாலும், அடிக்கடி சத்சங்கமாகப் பலரும் ஒன்று கூடி, ஹோமங்கள் ஆற்றி, சாம்பிராணி தூபமிட்டுப் பரவெளியைத் தம்மால் இயன்ற அளவு தூய்மை செய்து வர வேண்டும். கிரிவலத்திலும், ஆலயங்களிலும் சாம்பிராணி தூபம் இட்டு வருதலே புகைப் பிடித்துச் சேர்த்தக் கொடிய தீவினைகளுக்குத் தக்கப் பரிகார வழிகளைப் பெற்றுத் தரும்.

நீதித்வேஷ தோஷம்

சமுதாய நீதியை வலியுறுத்தும் இத்தகைய கடமைகளில் இருந்து தவறுவதாலும் நீதித்வேஷ தோஷம் உண்டாகின்றது.. அதாவது பிறருக்கு நீதியைப் போதிக்க வேண்டிய கடமைகளில் இருந்து தவறுவதால் அநீதியை ஆற்றிய தோஷமும் உண்டாகின்றது. இதனையும் ஒருவர் தம் வாழ்நாளில் நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் அநாவசியமான கோர்ட் வழக்குகளில் சிக்கிக் காலம் சிதறலாகும்.!

பிரேத, பிண தோஷங்கள்

தற்காலத்தில் பலரும் பிணத்தை இயற்கையான முறையிலே அக்னிக்கு இரையாக்கி முறையாகத் தகனம் செய்வது கிடையாது..! மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல் போன்றவற்றை வைத்து எரிப்பதும், அரைகுறையாக எரித்து விடுதலும் சர்வ சாதாரணமாகி விட்டதால் பலத்தப் பிரேத தோஷங்களும் சேர்கின்றன. இதனால் ஆவி சம்பந்தமான மறைமுகத் தொல்லைகள் வாழ்வில் வந்து கொண்டே இருக்கும்.

இறைவனுக்கு மட்டுமே சூட வேண்டிய பூக்களைப் பிணங்களின் மேல் வைத்துப் பிணப்பூக்களைச் சிதற வைத்தல், இப்பிணப் பூக்களின் மீது நடந்து செல்லுதல் அல்லது மிதித்தல், வண்டிகளை ஏற்றுதலாலும் பல்வகைப் பிணதோஷங்கள் உண்டாகின்றன. இவற்றை நிவர்த்தி செய்யாமலேயே மனிதன் வாழ்க்கையைக் கழிப்பதால் பிணதோஷங்கள் இல்லத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் பரவி, நிரவி பலவிதமான பிரேத தோஷங்களையும் தந்து விடுகின்றன. இதனால் இல்லத்தில் சண்டை, சச்சரவுகள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

இதற்காகத்தான் அக்காலத்தில் இல்லத்தில் நித்தியத் (தினசரித்) தர்ப்பணம், திதித் தர்ப்பணம், அமாவாசைத் தர்ப்பணம், மாதப் பிறப்புத் தர்ப்பணம், விஷ்ணுபதித் தர்ப்பணம், கிரகணத் தர்ப்பணம் என்று 96 விதமான தர்ப்பண நியதிகளை இல்லறப் பித்ரு பூஜைகளாக விதித்திருந்தார்கள். இத்தகைய பித்ரு பூஜைகள் முறையாக நிறைவேறாதபோது பிண தோஷங்கள் அப்படியே இல்லத்திலும், அலுவலத்திலும், வீதியிலும் தங்கிப் போய் மக்கள் சமுதாயத்தைப் பெரிதும் பாதிக்கின்றது. இதனால் சந்ததிகளில் பல குறைபாடுகள் உண்டாகும்.

தீன தோஷங்கள்

தூபதீப கண்டி

மனித சமுதாயத்தை மிகவும் பாதிக்கின்ற விஷயம் என்னவெனில், மீன், ஆமை, கோழி போன்ற பிராணிகளையும் கதறக் கதற வதைத்து மாமிசமாக்கி உண்கின்ற நிலையாகும். இவ்வாறு ஒரு பிராணி, உணவிற்காகவும், தோல் வகைப் பொருட்களுக்காகவும் வதைக்கப்பட்டுக் கொல்லப்படும் போது ஏற்படுகின்ற கதறல் சத்தங்கள், தீன தோஷங்களை உருவாக்குகின்றன.. இவையாவும் புலால் நாற்றம் மூலம் பரவெளியில் பரவுகின்றது. இதற்கு “தீன தோஷம்” என்று பெயர். இதனால் பல தீய வழக்கங்களுக்கு வாழ்க்கையில் அடிமையாக நேரிடும். மரணத்தறுவாயில் அருகில் எவரும் இல்லாமல் கஷ்டங்கள் நேரும்.

தனிய தோஷம்

பலரும் காய்கறிகளைத் தற்காலத்தில் தொட்டியிலோ, வாளியிலோ வைத்து, கால்களால் தேய்த்துக் கழுவும் அவலத்தை நாம் பார்க்கின்றோம். ஸ்ரீசாகம்பரி தேவியால் படைக்கப் பெற்று நமக்கு ஜீவ சக்தியைத் தருகின்ற காய்கறிகள் அரிசி, கோதுமை போன்றவை ஜீவிதஜோதி ஆன்ம சக்திகளைக் கொண்டவை ஆகும்.

இயற்கையாக தெய்வீக சக்திகளைக் கொண்ட பிரசாதம் போல் விளங்குகின்ற காய்கறிகளையே மனிதக் கால்களால் மிதித்து கழுவுகின்ற அவலத்தை இன்றும் காண்கின்றோம். இவ்வாறு காய்கறிகளை மிதிப்பவர்களுக்குப் பலவிதமான சாபங்கள் வந்து விடுகின்றன. அந்த சாபத்தோடு வருகின்ற காய்கறிகளை நாம் உண்பதால் “தனிய தோஷம்” என்ற தோஷமும் நம்மைத் தீண்டுகின்றது. இதனால் பலரும் வாழ்வில் நம்மை ஏமாற்றுகின்ற சூழ்நிலைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும்.

இதைத் தவிர்ப்பதற்காக, காய்கறி மார்க்கட்டுகளில் துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து விநியோகித்து மக்களுக்கு உணர்விப்பதும் நற்காரியமே!

கழி தோஷம்

அடுத்ததாக, வீதியில் நிறைய குப்பைகள் சேருதல் கூடாது. நம் மூதாதையர்கள், வசித்த அக்காலத்தில் ஒரு வீதி நிறைய ஜனங்கள் இருந்தாலும் இந்த அளவு குப்பைகள் சேருவதில்லை. காரணம் அளவுக்கு மீறிய பொருட்களை அவர்கள் சேர்த்துக் கொள்ளவில்லை. தேவையான அளவு பொருட்களை மட்டுமே வைத்துக் கொண்டு மிகவும் சுத்தமாகவும், சிக்கனமாகவும், பேராசையின்றியும் வாழ்ந்தமையால் பொருட்கள் அநாவசியமாக வீணாகும் நிலை ஏற்பட்டது கிடையாது!

ஆனால் தற்காலத்திலோ ஒரு சிறு single bedroom வீட்டிலும் கூட நிறையக் குப்பைகள் சேர்ந்து விடுகின்றன. இவ்வாறு குப்பைத் தொட்டியில் உள்ள வீணான, அழுகிய பொருட்களில் நிறைய தோஷங்கள் உண்டாகின்றன. இத்தகைய தோஷங்களும், குப்பை நாற்றம் மூலமாகப் பல வீடுகளுக்கும் சென்று, வீதியில் நடக்கும் மனிதர்களையும் அடைந்து, காற்றிலும் பரவிச் சென்று பலரையும் பாதிக்கின்றன. இத்தகைய தோஷங்களுக்குக் “கழி தோஷம்” என்று பெயர். இதனால் மன சஞ்சலங்கள் ஏற்பட்டு ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்படுவர்!

எந்த அளவிற்கு வீதியில் குப்பைகள் சேருகின்றனவோ, அந்த அளவிற்கு மக்களுடைய தீய கர்மங்களின் தேக்க வினைகள் சேர்ந்துவிட்டன என்பது பொருளாகும்.

தேகக் கழி தோஷங்கள்

பலரும் தினந்தோறும் குளித்து நெற்றிக்கு இறைச் சின்னமிட்டு ஆலயத்திற்கு சென்று வழிபடுவது கிடையாது. நீர்ப் பற்றாக்குறை ஒரு காரணமாக இருந்தாலும், பலரும் சோம்பேறித்தனத்தாலும் தினசரி நீராடுவது கிடையாது. இதனால் உடலிலும் ஆடைகளிலும் சேருகின்ற பலவிதமான அழுக்குகளும் “தேகக் கழி தோஷங்களைப்” பரப்புவதால், அருவறுப்பான நாற்றத்துடன் வெளியில் செல்லும்போது, வானத்திலும் இதனைப் பரப்பி வினைகளை தேகக் கழி தோஷங்களைச் சேர்த்துக் கொள்கின்றார்கள். இதனால் தோல் சம்பந்தமான வியாதிகள் உண்டாகும்.

காலபாச தோஷம்

பஞ்சாங்கத்தில் தினந்தோறும் பார்த்தீர்களேயானால் பலவிதமான பண்டிகைகள் குறிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பண்டிகையும் மனித சமுதாயத்தில் உள்ள பலவிதமான தீய கர்மவினைகளையும், தோஷங்களையும் போக்குவதற்குத் தேவையான பூஜை சக்திகளை அளிப்பவையாகும். ஆனால் பலரும் இவற்றைப் படிப்பதும், அறிவதும் கடைபிடிப்பதும் கிடையாது.!

எனவே இறைவனே கலியுகத்தில் பலவிதமான  எளிய நல்வழிகளை வகுத்துத் தந்திருக்கும்போது மனிதன் அவற்றையும் அலட்சியம் செய்வதால், இறையருளாகக் கிட்டியுள்ள நல்சக்திகளையும் முறையாகப் பயன்படுத்தாமைக்காக கால பாச தோஷம் என்ற ஒருவகை தோஷம் ஏற்படுகின்றது!

உதாரணமாக, சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், ராகு கால துர்க்கை பூஜை, குளிகை கால பைரவ பூஜை, மாத சிவராத்திரி போன்ற பலவிதமான பண்டிகைகள் வரும் போது இவற்றில் எதிலுமே மனிதன் பங்கு கொள்ளாததோடு, இவற்றை ஓரளவேனும் மக்கள் சார்பாக, சமுதாயப் பூஜையாக நிகழ்த்தும் ஆலய வழிபாடுகளிலும் பங்கு கொள்ளாது வெறுமனே பொழுதைப் போக்கினால், தேவ சக்திகள் நிறைந்த நாட்களை சரியாகப் பயன்படுத்தாமைக்கான கால பாச தோஷம் ஏற்படுகின்றது!

கிட்டத்தட்ட மனித சமுதாயம் முழுவதுமே இந்தத் தோஷத்திற்கு தற்போது ஆட்பட்டிருக்கின்றது. இத்தகைய தோஷங்களில் இருந்து மீண்டு வெளிவருதல் மிகவும் கடினமானது ஆகும். இதனால் பெண் பிள்ளைகள் பீதியுடன் வாழ்வர். இதனை நிவர்த்தி செய்யவே குளிகை கால பைரவ பூஜைகள் முக்கியத்வம் பெறுகின்றன.!

சுக்கில ஆமதோஷங்கள்

எனினும் ஒவ்வொரு மனிதனும் அலுவலகத்தில் பல பொருட்களையும், டெலிபோன், பேப்பர், குண்டூசி, அலுவலக வசதிகள், சுகபோகங்கள் போன்றவற்றைப் பல வகைகளிலும் தவறாகப் பயன்படுத்துவதால் தினந்தோறும் நூற்றுக்கணக்கான தோஷங்களைச் சேர்த்துக் கொள்கின்றான். இதனால் ஒவ்வொரு நாளும் அலுவலகத்திற்குச் செல்கின்ற ஒருவர், மாலையில் திரும்பி வரும்போது எக்கச்சக்கமான தீய கர்ம வினைகளுடன் திரும்பி வருகின்றார். இது குடும்பத்தைத் தானே பாதிக்கச் செய்யும். இத்தகைய தோஷங்களுக்கு சுக்கில ஆம தோஷங்கள் என்று பெயர்.

இதைத் தவிர பொறாமை, பகைமை, குரோதம், விரோதத்தால் மனிதனுக்கு ஏற்படுகின்ற திருஷ்டிகளும் நிறைய உண்டு. இவ்வாறாக ஒவ்வொரு மனிதனும் தினசரி வாழ்வில் எக்கச்சக்கமான தோஷங்களைச் சேர்த்துக் கொள்வதால் இவற்றிலிருந்து ஓரளவேனும் வெளி வருவதற்காக சித்தர்களால் மிகவும் எளிமைப்படுத்தித் தரப்பட்டுள்ள பூஜை முறையே “திருஷ்டி தோஷ நிவாரண தூபதீப கண்டி” முறையாகும்.

ஜோதிகளில் மிக சிறந்த ஜோதி மண்ணால் செய்யப்பட்ட அகல் ஜோதியாகும். மண் அகல் போல் மண்ணால் ஆக்கப்பட்ட இத்தகைய “திருஷ்டி தோஷ நிவாரண தூப தீப கண்டிக்கு” தங்க, வெள்ளி, உலோக விளக்குகளை விட, தேவானுகிரக சக்திகள் நிறைய உண்டு.

தூபதீப கண்டி

இவ்விளக்கில் உள்ள ஒன்பது துவாரங்களும், ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய உடலில் உள்ள ஒன்பது துவாரங்களால் ஈர்க்கின்ற, சேர்க்கின்ற தீய வினைகள், தீய சக்திகள், தீய தோஷங்களைத் தடுத்து நிறுத்தி ரட்சையாகப் பாதுகாக்கின்றன. மேலும் நவ துவராங்களுடன் துலங்குகின்ற, நம் உடலுக்குத் தேவையான திருஷ்டி நிவாரண தோஷ சக்திகளையும் இந்த விளக்கின் ஜோதி அளிக்கின்றது. இதன் ஜோதியை நவதுவாரங்களின் மூலமாகப் பார்ப்பதினால் கிட்டும் பலாபலன்களை எழுத்தில் வடிக்க இயலாது. கண்களின் ஆன்ம நாளநாடிகளுக்கு ஆன்ம வலியூட்டுவதும் “திருஷ்டி தோஷ நிவாரண தூப தீப கண்டியே” ஆகும்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன் நம் சமுதாயத்தில் துலங்கிய இத்தகைய திருஷ்டி தோஷ நிவாரண தூப தீப கண்டி வகைகளை, நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தற்போது புத்துணர்ச்சி ஊட்டி மீண்டும் நமக்கு தந்திருக்கின்றார்கள். மேற்கண்ட முறையில் நாம் அறிந்தும், அறியாத வகையிலும் தினசரி சேர்த்துக் கொள்கின்ற பலவிதமான தோஷங்களுக்குமே எளிய முறையிலே நிவாரணம் காண உதவுவதே திருஷ்டி தோஷ நிவாரண தூப தீப கண்டி.

நவசாளர ஜோதியே திருஷ்டி தோஷ நிவாரண தூப தீப கண்டி

இந்த திருஷ்டி தோஷ நிவாரண தூப தீப கண்டியில் இருக்கின்ற ஒன்பது துவாரங்களுக்கும் நவஜோதிச் சாளரங்கள் என்று பெயர். அதாவது நவசாளரங்கள் கொண்ட ஜோதிக் குடிலாக இந்தத் தீபகண்டி விளங்குகின்றது!

பெருநகர்

(நவ) சாளரக் கோயில் என்றால் இறைவனுக்கு முன்னால் 9, 12, 21 என்ற வகையில் சாளர ஜன்னல்கள் அமைந்து இருக்கும். இதன் விளக்கங்களை நாம் பன்முறை அளித்துள்ளோம். திருவேற்காடு சிவாலயம், திருவலஞ்சுழிப் பிள்ளையார் சன்னதி, ராமகிரி, மப்பேடு, தக்கோலம், திருவானைக் கோயில், காஞ்சிபுரம் அருகே பெருநகர் சிவாலயம் போன்ற ஆலயங்க்ளில் மூலவரின் சன்னதிக்கு முன்னால் சாளர ஜன்னல்கள் அமைந்துள்ளதைப் பார்த்திருப்பீர்கள்! இறைவனை வழிபடுவதற்குப் பக்கவாட்டு வழியாகவே செல்ல வேண்டும். இத்தகைய கோயில்கள்தான் சாளரக் கோயில்கள் என்று பெயர் பெறுகின்றன.

சாளர ஆலய மகிமை!

இத்தகைய சாளர ஆலயச் சுயம்பு மூர்த்திகளிடம் எழுகின்ற அதி அற்புத ஜோதிப்  பிரவாகத்தை நேரிடையாகத் தரிசிக்கின்ற அளவிற்கு நேத்ர யோக சக்தியை நாம் பெறவில்லை ஆதலால், இவை தீபகண்டியின் நவதுர்க்கா சாளரங்கள் வழியாக நவச்சக்கர சக்திகளாக மாற்றப்பட்டு நமக்குத் தேவையான அளவிலே அளிக்கப்படுகின்றன. இத்தகைய நவதுர்க்கா சாளர சக்திகள் நிறைந்த ஆலயங்கள் பல அபூர்வமான தெய்வ சக்திகளையும், நல்வரங்களையும், காரிய சித்திகளையும் அளிக்க வல்லவையாகும்!

ஆண், அல்லது பெண் சந்ததி இல்லாது இருப்போர் அல்லது சந்ததியே இல்லாமல் குடும்ப வாரிசுத் தடை ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சி வாழ்வோர், இத்தகைய சாளரத் தலங்களில் பிரதோஷ வழிபாடுகளையும், மாத சிவராத்திரி வழிபாடுகளையும் முன் நின்று நடத்தி 12, 21, 36, 108 என்ற வகையில் திருஷ்டி தோஷ நிவாரண தூப தீப கண்டி விளக்குப் பூஜைகளையும் நிகழ்த்தி வந்தால் இறையருளால் தக்க நல்வழி காட்டப் பெறுவர்.

மேலும் சாளரக் கோயில்களில் கடைபிடிக்க வேண்டிய பூஜை விதிமுறைகளும் உண்டு. இத்தகைய ஆலயங்களில் நிறைய சாம்பிராணி தூபத்தைக் குறைந்தது மூன்று மணி நேரத்திற்காவது இட்டு, சாளரத் துவாரங்கள் வழியே சாம்பிராணி நறுமணப் புகை நன்கு வெளிவருமாறு செய்தலும், நிறைய விளக்குகளை, குறிப்பாக நவசாளர விளக்கான திருஷ்டி தோஷ நிவாரண தூப தீப கண்டி தீபங்களை ஆலயம் முழுதும் ஏற்றி வழிபடுதலும் சிறப்பான பலன்களைத் தருவதாகும்.

இதுவே சாளரச் சுயம்பு லிங்க மூர்த்திகளுடைய தெய்வீக சக்திகளை பரவெளிக்குப் பரப்புகின்ற அதிஅற்புத  முறை ஆகும். மேலும் இத்தகைய சாளர ஆலயங்களில் எப்போதும் விளக்கு ஜோதி (அணையாமல் இருக்கும் வண்ணம்) அமைகின்ற வகையிலே “தூண்டா விளக்கு” “தூங்கா விளக்கு” என்று அழைக்கப்படுகின்ற விளக்கு வகைகளை ஏற்றி எப்போதும்  எண்ணெயும், திரியும், ஜோதியும் இருக்கும்படி செய்வதும் சிறப்பான நவசாளர ஜோதிப் பூஜை முறை ஆகும். சாசுவத ஜோதி விளக்குப் பூஜையில் இதுவும் ஒரு வகையே!

கனபாட வேத முறையில் பெருகும் அற்புத பலாபலன்கள்!

மேலும் ருத்ரம், சமகம் போன்ற தேவ மொழி மந்திரங்களில் கனபாடம் ஒன்று உண்டு. ஒரு சொற்றொடரில் உள்ள வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப நான்கு முறை உச்சரிக்கின்ற இந்தக் கனபாட முறை தற்போது வழக்கில் மறைந்து வருவது வேதனைக்குரியது. இத்தகைய கனபாட முறையால் மிகச் சிறந்த நினைவாற்றலும், மந்திர சக்திகளும் கிட்டுவதோடு பரவெளியில் மிக எளிதில் வேத சக்திகளைப் பரப்பக் கூடிய நன்முறையாகவும் இந்தக் கனபாடமுறை விளங்குகின்றது.

ஒருமுறை ருத்ரம், சமக வேத மந்திரங்களைக் கனபாட முறையில் ஓதினால் பல உள்ளடங்கிய வேத மந்திரங்களை நான்காயிரம் முறை ஓதியதற்குச் சமமாக விளங்குவதால் இத்தகைய கனபாட முறையில் வேத மந்திரங்களைச் சாளர ஆலயங்களில் ஓதுதற்கு ஏற்பாடு செய்தல் மிகவும் முக்கியமானதாகும். இதனால் காது சமபந்தமான நோய்கள் தீரும். பிரிந்துள்ள குடும்பங்கள் ஒன்று சேரும்.

சமயக் குரவர்கள் நால்வரும், ஆழ்வார்களும் ஓதிய தேவாரத் தமிழ் மறைகள், திவ்ய பிரபந்தப் பாடல்களையும் கூட கனபாட முறையில் அமைத்து ஓதுதல் மிகச் சிறப்புடையதாகும். இத்தகைய கனபாடத் தமிழ் வேத முறையை நடைமுறையில் கொணர்வதற்கு உத்தம பக்தர்கள் முன் வருதல் வேண்டும்.

இறைவனுடைய இருகண்களாக தேவ மொழியும் (சமஸ்க்ருதம்), தமிழ் மொழியும் துலங்குவதால் தேவ மொழி மற்றும் தமிழ் மொழி வேதங்களைக் கனபாட முறையில் இத்தகைய சாளர ஆலயங்களில் ஓதி வருதலால் வம்சம் நன்கு விருத்தி பெறும். மேலும் சமுதாயப் பூஜா பலன்களாக இதனால் பீதிகள், வன்முறைகள், பஞ்சம் போன்ற சமுதாயப் பிணிகளையும் ஆன்மீக ரீதியாகத் தணித்திடலாம்.

நவசாளர தூப சக்தியைப் பெருக்குவீர்!

மேலும் சாளர ஆலயங்களிலும், பிற ஆலயங்களிலும், நவகிரக சன்னதிகளிலும் இத்தகைய திருஷ்டி தோஷ நிவாரண தூப தீப கண்டியை வைத்திடத் தானமாக அளித்து இந்த ஆலயங்களில் கண்டி தீப முறையில் விளக்கு ஏற்றி வருதலும் மகத்தான விஸ்வ ஜோதி பூஜா பலன்களைத் தருவதாகும்.

சனிக்கிழமை தோறும் ஆலயங்களில் திருஷ்டி தோஷ நிவாரண தூப தீப கண்டிகளை நிறைய வைத்து வர பலரும் இதில் அகல் தீபங்களை ஏற்ற வைத்தல் மகத்தான இறைப்பணி ஆகின்றது!

கலியுகத்தில் நவதுர்க்கா வழிபாடு பெரிதும் மறைந்து வருவதால் இத்தகைய நவசாளர கண்டி தீப வழிபாடுகள் தாம் நவதுர்க்கா பூஜை முறைகளை மீண்டும் கொணர்வதற்கான வழிமுறைகளைப் பெற்றுத் தரும். செவ்வாய்க் கிழமை, வியாழக் கிழமை மற்றும் சனிக்கிழமை ராகுகால நேரங்களில் ஸ்ரீதுர்க்கை சன்னதியில் இத்தகைய தூபதீப கண்டியை ஏற்றி வழிபட்டு வருதலால் இதுவரை காரியத் தடங்கல்களால் அவதியுறுகின்ற பலரும் காரிய சித்திகளைப் பெறுவார்கள்.

மேலும் சூரிய பகவானும் தம்முடைய ஏழுவிதமான வண்ணக் கதிர்களை நவதுர்க்கா சாளரம் எனப்படும் ஒன்பது விதமான துவாரங்கள் பொருந்திய ஏழு குதிரைகள் பூட்டியத் தேர் மூலமாகத்தான் பூலோகத்திற்கு தன்னுடைய சூரிய ஒளியை பாய்ச்சுவதால் அதியற்புத சூரிய ஒளிவழிபாடாகவும் கண்டி தீபம் துலங்குகின்றது!

சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமன நேரத்திலும் அபிஜித் முகூர்த்தம் எனப்படும் நடுப்பகலிலும் இத்தகைய சாளர ஜோதி தீபத்தை ஏற்றி வழிபடுவதால் கண் நோய்களால் அவதியுறுவோரும், ஆண் சந்ததி இல்லாமல் வேதனையுறுவோரும், தக்க நல்வழி முறைகளைப் பெறுவார்கள் .ஒவ்வொரு ஆலயத்திலும் மூலத்தானத்திலும், சன்னதிகளிலும் ஏற்றுதற்குத் திருஷ்டி தோஷ நிவாரண தூப தீப கண்டிகளைத் தானமாக அளித்தல் விளக்கு தான பலன்களை அளித்து சந்ததி தழைத்திட அருள்பாலிக்கும்!

நவநாத சித்தர்கள் மகிமை

ஸ்ரீவடுகச் சித்தர் கிரிவலம் வரும் ஆவணி மாத சிவராத்திரி

காலத்தைக் கடந்த திருஅண்ணாமலையில், நாமறியாத வகையில், மானுட சரீரத்தில் வாழ்ந்து சர்வ லோகங்களுக்கும் அருட்பணி ஆற்றிய சித்புருஷர்கள் ஏராளம், ஏராளம்! இவ்வரிய தொடர் மூலம், பல அற்புதமான சித்தர்களை நீங்கள் அறிந்திட, உங்களைப் பல நூற்றாண்டுக்கு முன்னான, சித்தர்களின் இறைப்பாசறையான அருணாசலப் புனித பூமிக்கு இட்டுச் செல்கின்றோம்!

பௌர்ணமி கிரிவலத்தைப் போன்று மாத சிவராத்திரி கிரிவலமும் சிறப்புடையதே! அபரிமிதமான அருள்நல்வரங்களைப் பொழிவதே! திருஅண்ணாமலை மாத சிவராத்திரி கிரிவலம்

நவநாத சித்தர்களின் மகிமையை விளக்கும் இத்தொடரில், இதுவரையில் ஸ்ரீகோரைக்கால் சித்தர், ஸ்ரீகோட்டைக்கால் சித்தர் ஆகிய இரு சித்தர்களைப் பற்றிய விளக்கங்களை ஓரளவு அளித்துள்ளோம். சித்தர்களுக்கு எல்லாம் ஆதிமூலச் சித்தர்களே நவநாதச் சித்தர்கள் ஆவர்.

ஒவ்வொரு மகாசிருஷ்டியிலும் இறைவனிடமிருந்து தோன்றி, மகாப்பிரளய முடிவில் இறைவனுடன் ஒன்றுகின்ற உத்தமச் சித்தர்களே நவநாதச் சித்தர்கள் ஆவர். ஆதிசிருஷ்டி முதல் கலியுக முடிவு வரை பல புராண சம்பவங்களிலும் சாட்சிப் பூர்வமாக இருப்பவர்கள் சித்தர்களும், மகரிஷிகளுமே! இதில் பிரபஞ்சத்தில் நிகழும் அனைத்து யுகங்களிலும், அனைத்துப் புராணங்களையும், சாட்சியாகக் கண்டவர்களே நவநாத சித்தர்கள்! சகல புராண வைபவங்கள் அனைத்திற்குமான நல்விளக்கங்களுக்குச் சித்தர்களும், மகரிஷிகளு, யோகிகளும், அன்றும், இன்றும், என்றுமாய்ப் பிரபஞ்சத்தில் இறையருளால்  சாட்சி நேத்திரர்களாக உலா வரும் நவநாத சித்தர்களையே நாடுகின்றனர்.

இப்பிரபஞ்சத்தில் எந்த விஷயத்திற்கும், எந்தக் காரியத்திற்கும், பொருளுக்குமான ஆன்ம விளக்கத்திற்கும் இறுதி வடிவினை பரிபூரண இறையருளுடன் அளிக்க வல்லவர்களே நவநாதச் சித்தர்கள் ஒன்பதின்மரும் ஆவர்.

தற்போது வழக்கில் சப்தரிஷிகளின் பெயர் வரிசைகள் பல உள்ளன போல நவநாத சித்தர்களின் பெயர்கள் பலவாறு வழங்கி வருகின்றன. நாம் இங்கு குறிப்பிடுவது ஆதிமூல நவநாத சித்தர்கள்! அனைத்துச் சித்தர்களுக்கும் மூத்த காலத்து மூத்தவர்கள்!

ஸ்ரீகோரைக்கால் சித்தர், ஸ்ரீகோட்டைக்கால் சித்தர்களை அடுத்து, மூன்றாவது நவநாதச் சித்தரான ஸ்ரீவடுக நவநாதச் சித்தர் ஆதிமூல வடுக பைரவரின் திருவடிகளில் தோன்றியவர்! அனைத்து யுகங்களிலும், வடுக ருத்ர பைரவ சந்நதிகளில் பைரவ பூஜைகளை இயற்றிப் பகுத்து, இதன் பலாபலன்களைப் பூலோக ஜீவன்களுக்கு அளிக்கின்ற ஸ்ரீவடுக நவநாதச் சித்தர், அருணாசலமாகிய திருஅண்ணாமலையில் கிரிவலம் வரும் நாளே (சுபானு ஆண்டின்) வரும் ஆவணி மாத சிவராத்திரி தினமாகும். பைரவ உபாசனையில் சிறந்தவர். ருத்ர பூஜைகளில் வல்லவர். பூவுலகில் பல தலங்களில் காலாக்னி ருத்ரரைப் பிரதிஷ்டை செய்தவர்!

நானில மறை நான்கின் நடுவில் நமசிவாய!

நான்கு வேதங்களில் மத்தியில் அமைந்துள்ள ருத்ர வேத மந்திரங்களில் ‘நமசிவாய’ எனும் சிவபதம் நடுவில் அமைந்திருப்பதால் ருத்ர மறைக்கு அதியற்புதப் பலாபலன்கள் உண்டு. ருத்ர மந்திரங்களை ஓத இயலாதோர் மேற்கண்ட மகாசிவ ருத்ர மந்திர சுலோகத்தை ஓதி வருக!

இன்று ஆவணி மாதசிவராத்திரியில் அருணாசலத்தைக் கிரிவலம் வருபவர்கள் மேற்கண்ட மந்திரத்தைக் குறைந்தது 1008 முறையாவது சத்சங்கமாய்ப் பலருடன் கூடி ஓதி கிரிவலம் வந்து வழிபட்டிட பல்துறை நல்வரங்களாய் அனுகிரகங்கள் கிட்டுகின்றன!

புராண, சாத்திர நேத்திரரே வடுகர்!

இவ்வுலகில் தோன்றியுள்ள ஒவ்வொரு அணுவின் உற்பத்தியிலும் ஸ்ரீவடுக நாதச் சித்தர் சாட்சிப் பூர்வமாகக் கண்டவர் ஆவார். இன்று உங்களைச் சுற்றி உள்ள கோடிக்கணக்கான  அணுக்களின், ஜீவன்களின், பொருட்களின், திரவியங்களின் படைப்பிலும் ஸ்ரீவடுக நாதச் சித்தர் சாட்சியாகக் கண்டவர் எனில் அவர்தம் ஆசியைப் பெற்றால் வாழ்க்கையின் காரண, காரிய அம்சங்களையும், பிறப்பு, இறப்பின் ரகசியங்களை அறிந்திடும் பரிபக்குவ வழிகள் கிட்டிடும்.

மரண பயம், விபத்துக்களால் குடும்பம் பாதிக்கப் பெற்றமையால் ஏற்பட்டுள்ள கடும் மன பீதிகள், மரண பயத்தை உருவாக்கும் மிருத்யு தோஷங்கள் நீங்குவதற்கும் இம்மாதக் கிரிவல பலன்கள் மிகவும் உதவும்.!

மார்க்கண்டேய மகரிஷி, கயாசுர மகரிஷி, ஆகியோர் இன்று ஸ்ரீவடுகநாதச் சித்தருடன் கிரிவலம் வருவதால் மரணத்தை விளைவிக்கும் மிருத்யு தோஷங்களை நீக்க உதவும் அதியற்புத கிரிவல நாளும் இதுவேயாம்! இருதய நோய்கள், புற்று நோய்கள், விபத்து போன்றவை காரணமாக மரணத்தின் எல்லையைத் தொட்டு மீண்டவர்கள், குடும்பத்தில் அடிக்கடி துர்மரணங்கள் ஏற்பட்டு அவதிப்படுவோர் இன்று மாத சிவராத்திரிக் கிரிவலம் வருதலால் நல்ல நன்மைகளைப் பெறுவர்.

ஸ்ரீஇரட்டைப் பிள்ளையார்
திருஅண்ணாமலை

உலக சிருஷ்டியின் ரகசியத் தன்மைகளை அறிய விரும்புவோரும், மகப்பேறுத் துறை மருத்துவர்களும், நர்ஸ்களும் கண்டிப்பாக இம்மாத சிவராத்திரியில் கிரிவலம் வருதல் வேண்டும். இதனால் இவர்களுக்குத் தம் துறையில் சிறப்புக் கிட்டுவதோடு, தம் தொழிலில் உள்ள இன்னல்களும் தீர வழி பிறக்கும்.

முடிச்சிற்கு ஒரு நல்முடிவு!

திருமண வாழ்வில் விவாகரத்து நிலையில் இருப்போர், இம்மாதக் கிரிவலத்தைத் திருஅண்ணாமலையில் மேற்கொண்டு அஷ்டமி தினங்களிலும் மற்ற தினங்களில் குளிகை நேரத்திலும் வழிபட்டு வருதலால் தக்க எதிர்கால முடிவைப் பெற்றிடலாம். எந்த முடிவை எடுப்பது என்று தெரியாமல் இருவகை வினாக்களுக்கு இடையில் தவிப்போர் இம்மாத சிவராத்திரியை முறையாகக் கடைபிடித்திட, தீர்க்கமான முடிவை இறையருளால் பெறுவர்.

இந்த மாதசிவராத்திரி கிரிவலத்தைத் திருஅண்ணாமலையில் ஸ்ரீபைரவர் சன்னதியில் துவங்கி, பைரவ சன்னதியிலேயே முடித்தல் சிறப்பானதாகும். மாத கிரிவலம் வரும் நேரத்தில் ஆலய பூஜை நேரம் முடிந்து நடை சார்த்தப் பெற்றிருந்தால் இந்நாளில் இரட்டைப் பிள்ளையார் சன்னதியில் கிரிவலத்தைத் துவங்கி, இரட்டைப் பிள்ளையார் சன்னதியில் முடித்தல் வேண்டும்.

இன்று மாத சிவராத்திரியில் கிரிவலம் வரும் குருமண்டல மஹரிஷிகளும், சித்தர்களுமே இரட்டைப் பிள்ளையாரை வணங்கி கிரிவலப் பூஜைகளைத் துவங்குகின்றனர். பைரவ லோகச் சித்தர்களும், மகரிஷிகளும் தற்போதைய பைரவர் சன்னதியை ஸ்ரீகாலாக்னி ருத்ரர் சன்னதியில் இருந்து கிரிவலத்தைத் தொடங்குகின்றனர்!

மாத சிவராத்திரி கிரிவல பலாபலன்கள்

  1. பிறர் தரும் மன இம்சைகளால் எப்போதும் அவதியுற்று வாழ்வோர் நிம்மதி பெற வழி பிறக்கும்.
  2. கணவனின் உடல் ஆரோக்கியம் பற்றிய கவலைகளுடன் வாழும் இல்லறப் பெண்களுக்குத் தக்க மன சாந்தி கிட்டும்.
  3. எப்போதும் பணத் தட்டுப்பாட்டுடன் நடுத்தரக் குடும்பமாக வாழ்வோர் நியாயமான வசதிகளைப் பெறுவர்.
  4. உறவினர்களின், நண்பர்களின், அதிகாரிகளின் அநியாயமான நடத்தையால் அவமானப்பட்டோ, நீதி வேண்டிக் கிரிவலம் வந்திட அவர்களே பணிந்து நன்மை செய்யும் நன்னிலை உண்டாகும்.
  5. பெற்றோர், மூத்தோரைச் சரியாகப் பேணாது தவிக்க விட்டோர் எண்ணற்ற பாவ வினைகளை அனுபவித்தாக வேண்டும். எனினும் இப்பாவங்களுக்கும் ஓரளவு தீர்வுகளையும், தக்கப் பரிகாரங்களையும் பெற இம்மாத கிரிவலம் உதவும்.

அஷ்ட பைரவ மூர்த்திகளைப் போல எண்ணற்ற பைரவ வடிவினர் உண்டு. அனைத்து பைரவத் தோற்ற வடிவிற்கான விளக்கங்களை நன்கு அறிந்தவரே ஸ்ரீவடுகச் சித்தர்! பல ஆலயங்களிலும் தடைபட்டுள்ள கும்பாபிஷேகத் திருப்பணிகள் மீண்டும் மலர்ந்திட, சம்பந்தப்பட்ட ஆலய, ஊர் அடியார்கள் திருவாசகப் பாடல்களை ஓதி இன்று சிவராத்திரி கிரிவலம் வந்திடல் வேண்டும். இதற்காக ஸ்ரீவடுகச் சித்தரின் ஆசியை வேண்டி, கிரிவலம் வந்திடுதலால் கும்பாபிஷேகம் நன்கு நடைபெற இறையருள் கைகூடும்.

காலம்

காலம் என்பது என்ன ?

ஆத்ம விசாரமே காலத்தை உணர்விக்கும் எளிய சாதனம்!

காலம் என்றால் என்ன? வெறும் விநாடி, நிமிடம், மணிக் கணக்கு மட்டும் தானா காலம் என்பது? இந்த மணிக் கணக்கானது மனித சமுதாயம் விஞ்ஞானப் பூர்வமாகத் தனக்காகத் தேடிக் கொண்ட காலக் கணக்கு முறை தானே! நம் மூதாதையர்கள் கடிகாரமின்றிப் பல யுகங்கள் வாழ்ந்துள்ளனரே! நமக்கே, உறங்கும் போது கடிகாரக் கணக்கா தெரிகின்றது? அப்படியானால் கால நினைவின்றியோ, காலங் கடந்தோவா உறக்க நிலையில் நாம் வாழ்கின்றோமா?

தாவர, பிராணி இனங்களின் ஆயுளும் காலத்தின்பால் அமைகையில் அவைகளுக்குக் கடிகாரக் கணக்கு கிடையாதே! மேலுலகங்களில் நம் 24 மணி நேரக் கடிகாரக் கணக்குச் செல்லுபடி ஆகாதே!

காலம் என்பதை எப்படித்தான் சரியாக அறிவது? நன்கு ஆத்ம விசாரம் செய்து பாருங்கள்!

ஸ்ரீகாலபைரவ வழிபாடுதான் காலத்தை நமக்கு நன்கு உணர்விப்பதாம்.

திருமணம், ஓய்வு (retirement), வங்கி, அலுவலகம், பஸ், ரயில், ரெகார்டுகள் என மனித வாழ்க்கையில் பெயர், காலம்தான் (பிறந்த தேதி, வயது போன்று) மிகவும் முக்கியமானதாக ஆகின்றன. அனைத்திற்கும் அடிப்படையான ஆயுளும் காலத்தைச் சார்ந்ததுதானே! ஆனால் இவ்வளவு மகத்துவமும், முக்கியத்துவமும் கொண்ட காலத்தின் தெய்வீக சக்தியை மனிதன் அறிந்து கொள்ளாது, கேளிக்கைகள், ஆபாசத் திரைப்படம், சோம்பேறித்தனம், பொழுது போக்கு, அரட்டை, மது, புகை தேவையற்ற புத்தகப் படிப்பு, பணத்தை, காலத்தை வெறுமனே கரைக்கும் கேளிக்கை பயணம், ஆடம்பரங்கள் போன்றவற்றில் காலத்தை விரயம் செய்து கொண்டிருக்கின்றானே, என் செய்வது?

காலத்தை அறிய உதவும் இறைசாதனங்கள்!

ஆனால் காலத்தின் தெய்வீக மகத்துவத்தை மனிதன் அறிந்து கொள்வதற்கான சாதனங்களான பூஜை, தியானம், இன்னிசை, நாதம், யோகம், பிராணாயாமம் போன்றவற்றை நம் பெரியோர்கள் அளித்திருந்தும், மனித குலம் இவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ளவில்லையே, காரணமென்ன? தக்க இறைப் பாதையைக் காட்ட வல்ல சற்குருவை நாடாததுதான் முக்கியமான காரணம் ஆகும்.

காலம் என்பது யோகப்ப் பூர்வமாகவே அதுவும் குரு மூலமாகவே நன்கு அறியவல்லதாகும். ஏதோ சூரியன் காலையில் அதுவாக வருகிறது. மாலையில் மறைகிறது.. இரவு வருகிறது.. என்ற வகையில் தான் நாம் காலத்தைப் பற்றி எண்ணுகின்றோம். காலத்தின் பாதையில் தான், நம் வாழ்க்கையானது , விதிப்படி சென்று கொண்டிருக்கிறது என்று உலக மனித சமுதாயம் அறிவதில்லை!

காலத்தின் பாதையை அறிவீர்!

காலத்தின் பாதை என்ற ஒன்றுண்டா? நிச்சயமாக உண்டு! காலத்திற்கு எண்ணற்ற பாதைகள் இருப்பினும் முக்கியமான மூன்று உண்டு. அவரவர் விரும்பும் காலப் பாதையில் அவரவர் வாழ்க்கை செல்கின்றது.. ஆனால் பெரும்பாலானோர் காலப் பாதையில் வழி தெரியாமல் சிக்கி, திணறி அதே இடத்திலேயே சுற்றிச் சுற்றி வருகின்றனர்.!

காலப் பாதை எங்கு ஆரம்பிக்கிறது, எங்கு முடிகின்றது? ஆரம்பிப்பதும், முடிவதும் கால பைரவ லோகத்தில்தான்! எனவே தான் ஆலயங்களில் முதலில் ஸ்ரீகாலபைரவருக்குப் பூஜையைத் தொடங்கி, அர்த்தஜாம இரவுப் பூஜையும் ஸ்ரீகாலபைரவ பூஜையாகவே நிறைவு பெறுகின்றது!

ஒவ்வொருவரும் தன் பிறவி முடிவில் தனக்கு அளிக்கப்பட்டுள்ள (ஆயுள்) காலத்துக்கு, சித்ர குப்தனிடம் கணக்குக் காண்பிக்க வேண்டும். சித்ர குப்தரின் சன்னதியில் தான் “உண்மையாக, தெய்வீகமாக, பூலோகத்தில் வாழ்ந்த“ நாட்கள் புலப்பட வரும்! இழந்த காலத்தை ஈடு செய்யவே கோடிக்கணக்கான பிறவிகள் அளிக்கப்பட்டுப் பிறவித்தளை பெருகி விரிகின்றது.

மிகவும் முக்கியமான மூன்று வகை காலப் பாதைகள் உண்டு என்று கண்டோமல்லவா! காலபோகப் பாதை, காலயோகப் பாதை, காலஞானப் பாதை ஆகிய மூன்றுமே இவையாம்!

காலஞானப் பாதையையே பிறவித் தளையை முடிக்க அனைவரும் அடைந்தாக வேண்டும். ஆனால் குருவருளின்றி இது எளிதல்லவே!

காலயோகப் பாதையானது நல்வழியில் மட்டுமே காலஞானப் பாதையை நோக்கி இட்டுச் செல்வதாகும். அனைத்து ஆலய வழிபாடுகளும், பூஜைகளும் கால யோகப் பாதைகளே!

காலபோகப் பாதை என்பது காலத்தை இழக்கும், நஷ்டப்படுத்தும் காரியங்களில் ஈடுபடும், சுகபோகங்களையே நாடும், சோம்பேறித்தனமான, மெத்தனமான, தாமஸ வாழ்க்கையாகும். அதர்மம், பாவம், அநீதி, தீயொழுக்கம், நாணயமின்மை, பிறரை ஏமாற்றுதல், அசத்தியம் போன்றவைதாம் காலபோகப் பாதையில் நிறைந்திருக்கும்.

எனினும் கலியுக நடைமுறை வாழ்க்கையில் காலபோகப் பாதையில், காலயோகப் பாதைக்கான வழிகளும் ஆங்காங்கே காட்டப் பெறும். இந்த நல்ல வழியில் செல்வதும், செல்லாததும் அவரவர் விருப்பப்படி, கர்ம வினைப்படியானதாக ஆகின்றது. இங்குதான் விதி விளையாடும், மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

சுகபோகம், பேராசை, பொறாமை, பகைமைக்கு ஆட்பட்டு, ஆடை அலங்கோலங்கள், தீய வழக்கங்கள், கேளிக்கைகளை நாடி, காலபோகப் பாதையிலேயே பெரும்பாலான மனிதர்கள் தற்காலத்தில் செல்கின்றார்கள்.. இது தர்ம வழியிலிருந்து பிறழ்ந்து செல்லும் பாதை! மனிதன் தனக்குத் தானாகவே ஏற்படுத்திக் கொண்டு சிக்கித் திணறுவது!

நல்லவர்களாக வாழ்பவர்களும் அவ்வப்போது காலபோகப் பாதை, காலயோகப் பாதை, காலஞானப் பாதை என மூன்றிலும் மாறி மாறி வாழ்கின்றனர். நல்லவர்கள் நல்ல பாதையிலேயே நடப்பதும் பெரிதும் கடினமான யோகமே! இதற்கான வழிகளை பிரம்ம ரிஷியாய் விளங்கிய ஜனக மகாராஜவிடம் சுகபிரம்ம மகரிஷி கற்று நமக்கு பைரவ பூஜா பலன்களாக அளித்துள்ளார்!

புனிதமான இல்லறம் மிகச் சிறந்த காலயோகப் பாதையை அமைத்துத் தருவதாகும். காலபோகப் பாதையில் மனிதன் தவறாகச் செல்லும் போது, வழியில் கிளைத்து இருக்கும் காலயோகப் பாதை மார்கம் காரணமாக பூஜை, ஆலய தரிசனம், புனித நீராடல், தானதர்மம் போன்ற நற்பாதைக்கு மீண்டும் மனிதன் ஈர்க்கப்படுகின்றான். அதாவது காலபோகப் பாதையிலிருந்து மீண்டும் காலயோகப் பாதைக்கு இட்டு வருவதே புண்ணியத்தின் ஆத்மசக்தி ஆகும்.

ஸ்ரீயோகபாத பைரவர் தவசிமடை

எல்லாப் புண்ணிய காரியத்திலும் ஆத்ம சக்தி வளம் கொள்வதில்லை! புண்ணியம் வேறு! புண்ணியத்தின் ஆத்ம சக்தி வேறு! சற்குரு அளிக்கும் தான, தர்ம, பூஜை முறைகளில் கிட்டும் புண்ணியத்தில் ஆத்ம சக்தி தானாகவே கிளைத்து இருக்கும்.

மக நட்சத்திரம் காலசக்திகளை உணர்த்தும்!

27 நட்சத்திரங்களில் மக நட்சத்திரமும், குளிகை காலமும், அஷ்டமித் திதியும், காலயோக சக்திகளைக் கொண்டவையாம். மக நட்சத்திர தேவி இத்தகைய காலயோக நல்வரங்களைத் தரவல்லவர்! ஆதலின் மக நட்சத்திர நாளில், குறிப்பாக, திண்டுக்கல் அருகே தவசிமடை ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தக்க பூஜைகள், தீர்த்த நீராடல்கள், தானதர்மங்கள், கிரிவலங்களை ஆற்றினால், மக நட்சத்திர தேவியே மனங் கனிந்து காலயோகப் பாதையில் இட்டுச் செல்கின்றாள்!

மக நட்சத்திரத் தலமான திண்டுக்கல் அருகே தவசிமடையில் அருள்பாலிக்கும் மூலவரை நோக்கி இருக்கும் ஸ்ரீகாலபைரவரே ஸ்ரீயோகபாத பைரவ மூர்த்தி ஆவார். மிகவும் சக்தி வாய்ந்தவர். தினமும் குளிகை நேரத்தில் இவருக்குக் கஸ்தூரி, கோரோசனை, புனுகு, ஜவ்வாது கலந்த சந்தனம் இட்டு காப்பு அல்லது சந்தனாபிஷேகம் செய்து நிறைய முழு முந்திரிகள் கலந்த வெண்பொங்கல் படைத்துத் தானமளித்து வர மது, புகை, புகையிலை, காமத் தீயொழுக்கத்தில் காலத்தை விரயமாக்கியதற்குத் தக்க பிராயச்சித்தம் கிட்டும். தீய பழக்கத்தில் இருந்தும் விடுபடலாம்.

மேலும் இறுதி வாழ்க்கையும் நன்முறையில் சாந்தமாக அமைய (VRS, retired personeel போன்றோர்) தவசிமடைத் தலத்தில், குளிகை நேரத்தில் அஷ்டமி தினங்களில் பைரவரை வழிபட்டு வர வேண்டும். விவாகரத்து நிலையில் வாழும் ஆண்களும், பெண்களும் இங்கு பைரவரை வழிபட்டு வர நல்வாழ்க்கை, சாந்தமய வாழ்க்கை அமைய நல்வழிகள் காட்டப் பெறுவர்.

இப்பிரபஞ்சத்தின், இப்பூவுலகின் தெய்வீகமயப் பரிபூரண காலயோகப் பாதையும், கால ஞானப் பாதையுமே அருணாசல கிரிவலப் பாதை ஆகும். எளிமையான யோகம் முதல் துரீய யோகமார்கங்கள் வரை பல்வகைகள் உண்டு. அந்தந்த சற்குருவானவர் அவரவர் கர்மவினை அழுத்தங்களுக்கு ஏற்ப கால யோகப் பாதையை அருணாசல கிரிவல தரிசனப் பலன்களாக அமைத்துத் தருகின்றார்.

சற்குரு என்பார் ஆன்மீக நல்வழிகாட்டியே! இதுவே காலபோகப் பாதை, இதுவே கால ஞானப் பாதை, இதுவே கால யோகப் பாதை எனச் சுட்டும் தெய்வீக கை காட்டி மரமே சற்குரு ஆவார். சற்குருவே காலயோகப் பாதையில் முன் நடத்திச் செல்ல வேண்டும் என்று விரும்பினால் சற்குருவை முழுமையாகச் சரணடைதல் வேண்டும். கலியுகத்தில் இது எளிதல்லவே! அதுவரையில் சற்குரு சாதாரண ஆன்மீக வழிகாட்டியாகவே கைகாட்டி போல் செயல்படுவார். ஆன்மீக வழிகாட்டி அற்புதச் சற்குருவாக ஆகுதல் வேண்டுமெனில் முழுமையான நம்பிக்கையுடன் அற்புதச் சிஷ்யனாக மாறி அவரைச் சரணடைதல் வேண்டும்.

எனவே வாழ்வின் அனைத்துக் கால அம்சங்களிலும் ஒவ்வொரு வினாடியிலும் சற்குருவின் காலயோக இறைப்பணி மிகவும் தேவையே! இதனைப் பெற்றுத் தருவதும் அருணாசல கிரிவலப் பலன்களுள் ஒன்றாகும்.

சயனக் கோல தரிசனங்கள்

பிரிந்த பெற்றோர்கள் – பிள்ளைகள், கணவன் – மனைவி ஒன்று சேர உதவும் அருணாசல தரிசனம் மற்றும் பெருமாளின் சயனக் கோல தரிசனங்கள்!

சினத்தால் சிவந்து, பலருக்கும் நன்மை பொலியும் சாபங்களையே நல்வரங்களாகத் தந்திடும் துர்வாச மகரிஷிதாம், தம்முடைய 1008 சுக்ல பட்ச ஏகாதசி விரத, துவாதசி பாரணைப் பலா பலன்களைப் பல திருமால் தலங்களில், தெய்வ சக்தி நிறைந்த இடங்களில், அர்ப்பணித்து, திருமாலின் நின்ற, இருந்த, கிடந்த, நடந்த கோலங்களை நமக்கு அரிய தரிசனங்களாகப் பெற்றுத் தந்து, இத்தரிசன பலன்களால் சிலவிதமான அபராத மிருத்யு தோஷங்களை நீக்கிட, நல்வரங்களையும் நாம் அடையுமாறு செய்துள்ளார்!

ஸ்ரீதுர்வாசர் ஆலயம்
திருஅண்ணாமலை

துர்வாசர் தம்முடைய தபோ பலன்களை, தாம் பெற்ற நல்வரங்களை, ஜீவன்களின் மேன்மைக்காகப் பதித்துள்ள ஆலயங்களுள் ஒன்றே பெருமாளின் நின்று, கிடந்த கோலங்களைக் கொண்ட திருவதிகை ஸ்ரீசரநாராயணப் பெருமாள் ஆலயமாகும்.

திருஅண்ணாமலையிலும் ஸ்ரீதுர்வாச மாமுனியின் நல்வர சக்திகள் அபராத ம்ருத்யுஹர தரிசனம் என்ற மலை தரிசனப் பகுதியில் நிறைந்துள்ளன! இவ்வாறு அருணாசலக் கிரிவலப் பகுதியில் நிறைந்திருக்கும் பல்லாயிரக் கணக்கான மலை தரிசனங்கள் ஒவ்வொன்றிலும் பல மகரிஷிகளும் ஜீவன்களுடைய குறித்த கர்ம வினைகள் நீங்கவும்., குறித்த பிரார்த்தனைகள் தீரவும் சங்கல்பித்துத் தம் தபோ பலன்களை நிரவி உள்ளமையால், திருஅண்ணாமலையை வலம் வருகையில், அண்ணாமலை மலை முகடுகளை (உண்மையில் இவை யாவும் சுயம்பு லிங்க மூர்த்திகளே!) தரிசித்துவர, கிரிவலப் பலன்களைக் கண்கூடாகக் காணலாம்.!

கோபம், மனஸ்தாபம் காரணமாகப் பிரிந்த பெற்றோர் - பிள்ளைகள், கணவன் – மனைவி ஒன்று சேர உதவும் அருணாசல கிரிவல தரிசனம் ஒன்றுள்ளது. திருஅண்ணாமலையில் செவ்வாயன்று கிரிவலம் வந்து, கிரிவலப் பாதையில், பிருத்வி நந்தியை அடுத்து, செங்கம் சாலையில் இருந்து வலப்புறம் பிரியும் கிரிவலக் கிளைப் பாதையில், பிள்ளையார் சன்னதியை அடுத்துச் சிறிது தூரத்தில் ஸ்ரீதுர்வாச சன்னதி அமைந்துள்ளது. இங்குள்ள ஸ்ரீதுர்வாசருடைய பாதங்களுக்குத் தைலக் காப்பு இட்டு (தேங்காய் எண்ணெய் + இலுப்பை எண்ணெய்), மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம், செந்தூரம் ஆகிய ஐந்து திருச்சின்னங்களையும் இட்டு வழிபட வேண்டும். அருகம்புல்லை மட்டுமே உண்டு தவம் புரிந்ததால் தூர்வாசர் எனப்பட்டார். (தூர்- அருகம்புல்)

கிரிவலப் பகுதியில் உள்ள ஸ்ரீதுர்வாசர் சன்னதியில் அவரை வணங்கி, இங்கிருந்து கிட்டும் அபராத மிருத்யுஹர அண்ணாமலை தரிசனத்தைப் பெற்று, 12 முறை சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கிட வேண்டும். இன்று பட்டு வஸ்திரத்தை ஏழைகளுக்குக் கிரிவலத்திலேயே தானமாக அளித்திட, கோபித்துச் சென்ற கணவன், மனைவி நன்முறையில் வீடு திரும்பி நல்வாழ்க்கை தொடரும்.!

இதன் பிறகு கணவன், மனைவி குழந்தைகளுடன் நன்றி சார்ந்த கிரிவலம் வந்து, மேற்கண்ட முறையில் தொழுது, அபராத ம்ருத்யுஹர தரிசன தேவ மூர்த்திகளுக்கும் ஸ்ரீதுர்வாச மாமுனிக்கும் நன்றி தெரிவித்து வணங்கி, கிரிவலத்தில் மீண்டும் பட்டு வஸ்திரங்களைத் தானமாக அளித்திட்டால் குடும்பத்தில் சச்சரவுகள் மீண்டும் ஏற்படா வண்ணம், அனைவரிடையேயும் நல்ல மன ஒற்றுமை உறுதியாக ஏற்படும்.

சயன நரசிம்மர்

பண்ணுருட்டி நகரின் பகுதியான திருவதிகையில் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி சயனக் கோலம் கொள்ளப் பல புராண லீலைகள் உண்டு. இவை பல யுகங்களில் விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் நிகழ்ந்து, சித்தர்களால், மகரிஷிகளால், சற்குருமார்கள் மூலமாக அளிக்கப்படுபவையாம்!

ஸ்ரீமகாலக்ஷ்மி ஆற்றிய பூஜைகள்!

ஸ்ரீநரசிம்மரின் உக்ரத்தைத் தணிப்பதற்காகத் திருமகளும் பலவிதமான பூஜை முறைகளை மேற்கொண்டாள். ஸ்ரீநரசிம்மப் பெருமாள் பலவித நடனக் கோலங்களைக் காட்டி ஜீவன்களுக்கு அருள்புரிய வேண்டும் என வேண்டி, ஸ்ரீநரசிம்மர் உக்ரக் கோலத்தோடு நடனமாடும் இடங்களில், ஸ்ரீசீதளா லக்ஷ்மி தேவியாக, குளுமையான மலர்ப்பந்தல் இட்டு, வழி நெடுகத் தாமரைப் புஷ்பங்களைப் பெய்து, ஸ்ரீநரசிம்மரின் திருப்பாதங்களுக்குக் குளுமை தந்து வர்தந்தம் என்ற நரசிம்ம உக்ர வகையைத் தணித்தனள்!

பரம்பொருளாம் ஸ்ரீமன் நாராயணரின் திருமேனியில் இருந்தே அனைத்துத் திருமால் அவதாரங்களும் உற்பவித்தன! திருமகளும் ஸ்ரீநரசிம்மப் பெருமாளிடம், ரங்கநாதர் போல் சயனக் கோல நடன வைபவத்தை அர்ச்சாவதாரக் கோலமாகக் காட்டியருள வேண்டினாள். ஸ்ரீரங்கநாதப்பிரான் போல், ஸ்ரீநரசிம்மரும் யோக சயனம் பூண்டிட்டால், ஸ்ரீநரசிம்மரின் பல உக்ர சக்திகள் தணியும் என்பதாலும், எல்லாவற்றிற்கும் மேலாக, பரம்பொருளின் ஓர் அர்ச்சாவதாரம் மற்றொன்றை உருவகித்துக் காட்டுகின்ற அற்புதம் இப்பூவுலகில் நிகழ்ந்தாக வேண்டும் என்பதாலும் ஸ்ரீமகாலக்ஷ்மி இவ்வாறு ஸ்ரீநரசிம்மரிடமே வேண்டுதல் கொண்டனள். எந்த ஸ்ரீமன்நாராயண மூர்த்தியிடம் இருந்து நரசிம்மக் கோலம் உற்பவித்ததோ, அவருடைய திருப்பார்வையிலேயே ஸ்ரீநரசிம்மரும் ஒரு யுகத்தில் சயனக் கோலம் பூண்டிட, இதுவே திருவதிகை ஸ்ரீசரநாராயணப் பெருமாள் ஆலய வளாகமாக யுகக் கால சஞ்சாரங்களில் மலர்ந்தது!

ஸ்ரீபூமா தேவி கடைபிடித்த பூஜை!

ஸ்ரீநரசிம்மர் தம் உக்ரக் கோலத்திலும் யோகானந்த பாவன அனுகிரக நிலை கொண்டு, மகிழ்வுண்டு, ஸ்ரீரங்கநாத சயனக் கோலத்தை அபிநயம் பிடித்த காலை, பூமா தேவியும் பூமியடியில் நரசிம்மரின் ஜ்வலந்தி வகை உக்ர சக்திகளைத் தாங்கி, பிருத்விப் பூர்வமாக, பூமியடியில் பல புண்ணிய நதிகளின் நீரோட்டங்களையும் செறிந்தனள். இதனால், இதுவரையில் ஸ்ரீநரசிம்மரின் கடுமையான உக்ரம் காரணமாக அவர் அருகில் செல்ல இயலாத திருமகளும், சித்தர்களும், மாமுனிகளும், ஸ்ரீநரசிம்மரின் சயன யோக நிலையில் அவருடைய பேரனுமதியுடன் உக்ரத்தைப் பெரிதும் தணித்ததுடன், பூவுலகிற்கும் அபரிமிதமான அற்புதமான பாதபூஜை வழிமுறைகளுக்கும் வழிகாட்டி, பல அரிய அனுகிரகங்களைப் பெற்றுத் தந்தனர்.

ஸ்ரீமார்கண்டய மகரிஷியும் நரசிம்மரின் சயனக் கோலம் இறை ரகசியங்களைப் பரிபூரணமாக அறிந்தவர் ஆவார். இவர் சுவாமிக்கு தைலக்காப்பிட்டு, நரசிம்மரின் தேக வகை உஷ்ணத்தைத் தணித்தார்.

பிரகலாதனை சம்பாசுரனிடம் இருந்து காத்த ஸ்ரீநரசிம்மர்!

ஹிரண்யகசிபு தன் புதல்வனான பிரகலாதனை அடக்குவதற்காகவும், கொல்வதற்காகவும் சம்பாசுரன் என்ற அசுரனை உருவாக்கினான். இந்த அரக்கன் அஷ்டமாசித்து, ஷோடச சித்து, சகஸ்ர சித்து, மாலைக் குத்து, மிருணாளினி சித்து போன்ற பல்லாயிரம் சித்துக்களில் வல்லவன். மிருணாளினி சித்து என்றால் ஒரே சமயத்தில் ஐயாயிரம் வித்தைகளைச் செய்வதாகும். அதாவது ஒரே சமயத்தில் ஐயாயிரம் உருவங்களை எடுத்துப் போரிடும் வல்லமை பெற்றவனே சம்பாரசுரன்!

அவனுடைய ஒரே சமயத்திலான ஐயாயிரம் கோர உருவ வன்முறையில் இருந்து பிரஹலாதனைக் காத்தருளியது இரவு பகலாய் அவன் ஓதி வந்த “ஓம் நமோ நாராயணா!” என்ற பெருமாளின் திருநாமமே ஆகும். அவனை இரவு பகலாக எந்நேரமும் காத்தவரே ஸ்ரீநரசிம்மப் பெருமாள் ஆவார்.

நிமிடத்திற்கு, நிமிடம் ஐயாயிரம் உருவங்கள் எடுத்த சம்பாசுரனை அடக்கியதாலும், ஹிரண்யகசிபுவின் ஒரு துளி உதிரம் சிந்தினால் அதில் ஆயிரமாயிரம் அரக்கர்கள் தோன்றுவார்கள் என்பதால் அவனுடைய குருதியைத் தம் திருமேனியில் ஏற்றமையாலும், நரசிம்மருடைய கோபாக்னி உக்ரம் பலத்துப் பெருகி அண்ட சராசரத்தையே ஆட்டுவித்தது. அனைத்தும் இறைலீலைகள் தாமே! ஸ்ரீசரபேஸ்வரரும், ஸ்ரீநரசிம்மரை ‘சாந்தாம்ருதகுண பாவனையில்’ அரவணைத்து அவருடைய கோபாக்னி உக்ரத்தையும், உதிரபஸ்ம அக்னியையும், ‘அசுர உதிர வேகப் பிரவேசக் கிரியையும்’ பாவன சாந்தி செய்தார். இது நிகழ்ந்ததும் ஒரு விஷ்ணுபதிப் புண்யகாலத்தில் தாம்!

இவ்வாறு அனைத்து உக்ரங்களும் தணிந்து, ஸ்ரீநரசிம்மப் பெருமாள் சயன யோக தவனத்தில் சிறிது நேரம் சாய்ந்து இளைப்பாறி அருள் கூட்டும் அதியற்புதக் கோலம்தான் நாம் இன்று திருவதிகையில் காணும் நரசிம்மப் பெருமாளின் சயனக் கோலம் ஆகும். இந்த வைபவம் நிகழ்ந்த காலமே விஷ்ணுபதிப் புண்ய காலமாகும்.

வெம்மையில் (உஷ்ணம்) பல வகைகள் உண்டு. நாம் நினைப்பது போல நெருப்பில் மட்டும்தான் உஷ்ணம் என்பது கிடையாது. திடப் பொருட்களின் உரசல் இயக்கத்திலும் சூடு ஏற்படுவது உண்டு. ஆனால் பலரும் அறியாத ஆன்மீக ரகசியம் என்னவெனில் அசத்தியம், பொய், புரட்டல், அதர்மம், அநீதி, பகைமை, பக்தியின்மை, சற்குருமார்களை மதியாமை போன்றவை சமுதாயத்தில் பெருகும் போதும் பரவெளியில் வெம்மை ஏற்படுகின்றது. இதனால்தான் பூகம்பம், நிலச்சரிவு, விமான, ரயில், வாகன, விபத்துக்கள், சூறாவளி, புயல் போன்றவை உண்டாகின்றன.!

மழையால், நீரால், காற்றால் சேதங்கள் உண்டாகின்ற போது அங்கு வெப்பத்திற்கு இடமில்லையே என்று நீங்கள் எண்ணிடலாம். தண்ணீர் நன்கு கொதிக்கும்போது தானே நீராவி ஏற்பட்டு அது மீண்டும் குளுமையான தண்ணீராகின்றது.. எனவே வன்முறைகள், பஞ்சம், மழையின்மை, சூறாவளி, புயல் ஏற்படுவதற்குக் காரணம் சமுதாயத்தில் அதர்ம, அநீதி, உஷ்ணம் பெருகுவதால் தான்!

எனவே நடப்புக் கலியுலகில் சமுதாயத்தில் மனிதர்களின் தீவினைக் கர்ம உஷ்ணத்தால் ஏற்படும் வன்முறைகள், இனக் கலவரங்கள், விபத்துக்களைத் தார்மீக ரீதியாகக் களைந்திட, திருவதிகை ஸ்ரீசரநாராயணப் பெருமாள் ஆலயத்தில் விஷ்ணுபதி மற்றும் பிரதோஷ பூஜைகளைச் சத்சங்கமாக மக்கள் ஒன்று கூடி நிகழ்த்தி வர வேண்டும்.

எலெக்ட்ரிகல்ஸ், Godown, செங்கல், தயாரிப்பு, பாய்லர் போன்ற நெருப்பு சம்பந்தமான துறை, Nuclear சம்பந்தமான துறையில் இருப்பவர்கள் நன்னிலை பெற வழிபட வேண்டிய ஆலயம்.!

கோமல் சிவாலயம்

ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தோர் தம் ஆயுள் காலத்தில் வழிபட வேண்டிய திருத்தலம் கோமல் ஸ்ரீகிருபா கூபாரேச்வரர் கோயில்!

கும்பகோணம் – மாயூரம் இடையிலுள்ள குத்தாலம் எனும் ஊரிலிருந்து 10.கி.மீ தொலைவில் (தேரழுந்தூர் அருகே) உள்ளதே கோமல் எனும் கிராமமாகும்.

“தயாகரோ!
க்ருபாகரோ!
ரட்சாகரோ!
என்று வேண்டி, “கருணை தா! அன்பு தா! காப்பாற்று!” என்று கை கூப்பிய, தேவாதி தேவ மூர்த்திகளும், சித்தர்களும், மகரிஷிகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், மனிதர்களும் கடவுளை வணங்குகின்றனர் அல்லவா!

இவ்வாறு கூப்பிய கரத்தார்க்கு பெரும் கிருபையுடன் அருள் சொரியும் காருண்ய மூர்த்தியாகச் சிவபெருமான் ஹஸ்தம்ய கற்பக அம்சங்களுடன், ஸ்ரீகிருபாகூபாரேச்வர லிங்க மூர்த்தியாகவும், அம்பிகை ஸ்ரீஅன்னபூரணியாகவும் அருள்புரியும் சிவத்தலமே கோமல் கிராமம் ஆகும்.

கைகளால் பல தெவ வழிபாடுகள்!

ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தோர் தம் ஆயுள் முழுதும் அடிக்கடி வழிபட வேண்டிய முக்கியமான சிவத்தலம்! ஹஸ்தாலம்ப நடனம், ஹஸ்தார்க்யம், ஹஸ்தபுலத் தர்ப்பணம், ஹஸ்தாப்யாச முத்திரை, ஹஸ்தாம்ருத பூஜை, ஹஸ்தசுர அர்க்யம் என்ற வகையில் கரங்களை வைத்து ஆற்றக் கூடிய, மங்கள சௌபாக்யங்களைப் பொழியும் பூஜை, தியான, யோக, முத்திரை முறைகள் நிறைய உண்டு.

தர்ப்பணம் அளிக்கும் போது உள்ளங்கை ரேகைகள் வழியாக நீராலான அர்க்யமானது பித்ருக்களுக்கு வார்க்கப்படுகின்றதன் காரணம், கை ரேகைகள், நம் ஆத்ம நாளங்களை முன்னோர்களின் ஆன்ம சரீரத்தோடு தொடர்பு கொள்ளும் சக்திகளைத் தருபவை! வயதாக, வயதாக உடலில் பல மாற்றங்கள், தேய்வுகள் ஏற்பட்டாலும் கை ரேகைகள் மட்டும் இறக்கும் வரை உடலில் சிரஞ்சீவித்வத்துடன் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளங்கை ஒரு வான்வெளியே!

மேலும் உள்ளங்கை என்பது வானவெளி மண்டலத்தைக் குறிப்பதாகும். முதலில் “உள்ளங்கை தரிசனம்” என்பதையே ஒரு பூஜையாக நம் முன்னோர்கள் ஆண், பெண் இருபாலார்க்கும் முதன்மையாக வைத்துள்ளனர். நம் கரங்களில், சுண்டு விரல் புத கிரகத்தையும், மோதிர விரல் சூரிய கிரகத்தையும், நடுவிரல் சனி கிரகத்தையும், ஆள்காட்டி விரல் குரு கிரகத்தையும், கட்டை விரல் சுக்ர கிரகத்தையும் குறிக்கின்றன, இவை தவிர, உள்ளங்கையில் செவ்வாய் மேடு, சந்திர மேடு, ராகு, கேது கோலப் புள்ளிகளும்  (nodal points) உண்டு. மேலும் வேத தேவதைகள், பித்ரு சாகை அம்சங்களும் கரங்களில் உறைவதால், காலையில் கரதரிசனம் பார்ப்பது மிகவும் சுபதரிசனமாக, மங்களகரமானதாக, விசேஷமாகப் போற்றப்படுகின்றது.!

கரங்களே ஆசிகளின் மூலகாரணம்

ஒருவருக்கு ஆசி வழங்கும் போது உள்ளங்கையை வெளிக் காட்டித்தானே ஆசீர்வதிக்கின்றர்கள். எனவே ஆசீர்வாத சக்திகள், கைகளிலுள்ள கிரணங்கள் மூலமே வருகின்றன. பல ஆலயங்களிலும் உள்ளங்கையை கொண்டு இறைவன் ஆசி வழங்கும் கோலத்தில் இருப்பதைக் காணலாம்!

எனவே ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தோர் ஆசீர்வாத மந்திரங்களில் சிறப்புற வேண்டும். எங்கெல்லாம் இறைமூர்த்தி ஆசி வழங்கும் கோலத்தில் உள்ளாரோ, அங்கெல்லாம் நிச்சயமாக வழிபட வேண்டும். அடிக்கடி, சித்தர்களின், மகரிஷிகளின் சிலா வடிவ தரிசனம், நற்பெரியோர்களின் தரிசனம் பெறுதல் வேண்டும். சித்தர்கள், மஹான்களின் ஜீவசமாதி, குருமூர்த்தங்களுக்கு அடிக்கடி சென்று, வழிபட வேண்டும். ஏனெனில் ஆசீர்வாத சக்தி மிக்கவர்களாகப் பிறந்தவர்கள்தாம் ஹஸ்த நட்சத்திரக்காரர்களாக விளங்குகின்றனர்.

பேரியக்கத்தை அறியலாகுமோ!

அம்பிகை ஒரு முறை இறைவன் திருவாயாலேயே அவர் அவ்வாறு பிரபஞ்சத்தின் அனைத்து இயக்கங்களையும் இயக்குகின்றார் என்று கேட்டு அறிய முற்பட்டாள்!  இது சம்பந்தமான உரையாடலின் போது, அம்பிகைக்கும் தன் பிரபஞ்ச இயக்க சக்தியை உணர்த்திட, ஈஸ்வரன் ஒரு திருவிளையாடலைப் புனைந்தார். உமையவள் அறியாத பரம்பொருட்தன்மை உண்டா என்ன? எனினும் உலகத்தார்க்கு உணர்த்திட பராசக்தியும் அனைத்து இறைலீலைகளிலும் பல பாத்திரங்களாகப் பங்கேற்கின்றாள்.

அம்பிகை ஆனந்த நிலையில், தன் திருக்கரங்களால் சிவபெருமானின் திருக்கண்ணைப் பொத்தியபோது, அக்கண நேரத்தில் பிரபஞ்சமே இருண்டு ஸ்தம்பித்தது. கிரகங்கள் கூட அசைவற்றனதாயின! அலைகள் ஓய்ந்தன. புண்ணிய நதிகள் ஓடாது நின்று போயின. இவ்வாறு சர்வ இயக்கங்களும் நின்று போனது கண்டு அதிர்ந்த அம்பிகை, தன்னால்தான் இக்கடும் விளைவுகள் என்று எண்ணினாள். உலகத்தாய் இறைவனை வீழ்ந்து வணனங்கி மன்னிப்புக் கோரிய போது, “அறிய வேண்டியதை அறியாத காரணத்தாலும், பிரபஞ்சத்திற்கு மருளைத் தந்ததாலும், உன் கரங்களால் கண்ணைப் பொத்தி இருள் கூட்டியமையால், இப்போதே எம் கரங்களில் இருந்து தோன்ற இருக்கும் ஹஸ்தாவர்ண ஜோதியில் யாம் மறைவோம். நீ பசுவாய் மாறி, அவ்வொளி ரூபத்தைத் தேடி அறிவாய்!” என்று கூறிட்டார்.

ஸ்தம்பித்து இருந்த பிரபஞ்ச இயக்கத்தை சர்வேஸ்வரன் மீண்டும் கொணர்ந்தாலும், இறைவனைக் காண இயலாது தேவி தவித்தனள். எனினும் இறையாணைப்படி பசு வடிவு கொண்டு, சிவஜோதியை நாடி, தன் சகோதரராம் திருமால், ஸ்ரீராஜகோபால (கிருஷ்ணனாக) பசுக் கூட்டத்தை ஆயம் செய்திட, இருவரும் பூமியெங்கும் வலம் வந்தனர்.

இவ்வாறு பார்வதியும், கிருஷ்ணனும் பூலோகத்தை வலம் வந்து இறைவனைத் தேடி வருகையில், ஒரு ஹஸ்த நட்சத்திர நாளில் இப்பகுதியில் ஈஸ்வரனின் திருக்கரத்தில் எழுந்த ஹஸ்தாவர்ண ஜோதியைத் தொடர்ந்து வந்திட, அக்கோமளீய ஜோதி சுயம்பு லிங்கமாய் இங்கு ஜ்வலித்திட… ஈஸ்வரனும் ஸ்ரீகிருபா கூபாரேச்வரராகத் தரிசனம் தந்திட்டார்.

கோமளீய ஜோதி

இத்தலத்தில் ஹஸ்தாவர்ண கோமளீய ஜோதியோடு பல அரிய நட்சத்திரங்களும் பூமியில் இறங்கிட்டமையால், தற்போதும் கூட சிலவித அரிய ஹஸ்தங்குண முத்திரைகள் மூலம் வேறிடத்தில் காணக் கிட்டாத சில கோமளீய நட்சத்திர தரிசனங்களைச் சூட்சுமமாக இங்கு காணலாம். இவ்விடத்தில்தான் ஸ்ரீகிருஷ்ணனாம் ராஜகோபால சுவாமியுடனும், ஸ்ரீபார்வதி தேவியுடனும் எண்ணற்ற சித்தர்களும், மகரிஷிகளும் பகலிலேயே பல சிவஜோதி நட்சத்திரங்களைத் தரிசித்தனர்.

எனவே சிலவிதமான காயத்ரீ மந்திர அனுஷ்டான முத்திரைகளை முறையாகப் பயின்று வந்தால் கோமளீய நேத்ர ஜோதி சக்தி பெற்று, கோமள யோக சக்திகளின் துணையால் பகலில் நட்சத்திரங்களைக் காணும் பேறு பெற வல்ல சிறப்புத் தலமாகும்.

சூரியனைக் காண உதவும் பாசாங்குலி முத்திரை!

சந்தியா வந்தனப் பூஜையில் கூட, கண்களுக்குப் பாதுகாப்பு தந்து சூரியனைத் தரிசிப்பதற்கான பாசாங்குலி என்ற முத்திரை முறை ஒன்று உண்டு. இது பற்றி நாம் ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் பன்முறை விளக்கி உள்ளோம். எனவே முத்திரை முறைகளுடன் வணங்கிட அரிய பல நல்வரங்களைப் பெறக் கூடிய திருத்தலமே கோமல் ஆகும்.

கூப்பிய கரவழிபாடு கிருபாகரருக்கு!

ஸ்ரீகிருபா கூபாரேச்வரர் என்ற பெயரில் விளங்கும் சிவப் பரம்பொருள் எத்தகைய தவறுக்கும் பிராயச்சித்தம் தர வல்லவர். ஆனால் செய்த தவற்றை மீண்டும் செய்யக் கூடாது. பித்ருக்களும், யோகியரும், ஞானியரும், மஹான்களும், மும்மூட்சுக்களும் அனைவரும் ஒருமுகமாகக் கை கூப்பி வணங்கி ஹஸ்த முத்திரைகளை இட்டு வணங்குகின்ற தலமே கோமல் ஆகும். இங்கு உயரே கூப்பிய கரங்களுடன் வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும்.

எனவே ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தோர் மாதந்தோறும் தம் நட்சத்திர நாளிலும், அடிக்கடியும் தரிசிக்க வேண்டிய தலமே கோமல் ஸ்ரீகிருபாகூபாரேச்வரர் ஆலயமாகும். இங்கு சிவனை வழிபடுவது மட்டுமின்றி, சிவனைக் காண உமையவளுக்குத் துணை புரிந்த ஸ்ரீராஜகோலாபால சுவாமியையும் இங்குள்ள பெருமாள் ஆலயத்தில் வணங்குதல் வேண்டும்.

இந்நட்சத்திரத்தில் பிறந்தோர் தம் உள்ளங்கையில் வைத்துத் தயாரிக்கப்படும் உணவு வகைகளைத் (கொழுக்கட்டை, வடை, லட்டு, ரவா லட்டு, போளி) தானமளித்தலால் நன்கு இங்கு கிருபாநிதி திரளும், கைகளில் மருதாணி இட்டுப் பூஜித்தால் தயா நிதியைப் பெற்றிடலாம். கலங்கிய மனமுள்ளவர்களும், நல்வாழ்க்கையை நினைத்து ஏங்குபவர்களும், பிரதோஷம் தோறும், திங்கள் மற்றும் புதன்கிழமையில் கோமல் ஸ்ரீகிருபாகூபாரேச்வரரை வழிபடுதல் விசேஷமானதாகும். திருமணம் ஆகாதோர் ஆலயத்தை, பசு, கன்றுடன் வலம் வந்து வழிபடுதலால் திருமணத் தடங்கல்கள் நீங்கும்.

ஆத்ம விசாரம்

அடியார் : குருவே! கலியுகத்தில் மகான்களும், சித்தர்களும், மகரிஷிகளும் இருந்தாலும் நீர்ப் பஞ்சம், வன்முறைகள், பூகம்பம், வெள்ளம் போன்றவை நிகழ்வது ஏனோ?

சற்குரு: எந்த யுகத்திலும் மகான்கள் சித்தர்கள் நிறைந்தே உள்ளனர். ஆனால் பிற யுகங்களில் துன்பங்கள் ஏற்படும்போது, மக்கள் ஆழ்ந்த நம்பிக்கையுடன் சற்குருமார்களை , மாமுனிகளை நாடி விளக்கங்களையும், பரிகாரங்களையும் பெற்று அவற்றைக் கடைபிடித்து நன்னிலைகளை அடைந்தனர். ஆனால் கலியுகத்தில் சற்குருமார்களை மதித்து நடக்கும் ஆன்மீகப் பண்பாடு வளரவில்லையே!  மாறாக, சற்குருமார்களை இகழ்கின்ற சூழ்நிலையே வளர்ந்து இருப்பதால், இதைக் கண்டு இயற்கையே கோபம் கொண்டு விடுகின்றது. இறைத்துறையில் இருப்பவர்களை இகழ, இகழ இயற்கையும் சீற்றம் கொண்டு மழையின்மை, தான்ய வளக்குறைவு, பூகம்பம் போன்றவை ஏற்படுகின்றன.

அடியார்: குருவே! அப்படியானால் மழைவளம் நிறைந்த ஆண்டுகளில் மக்கள் சற்குருமார்களை மதித்து நடக்கின்றார்கள் என்று பொருள் கொள்ளலாகுமா?

சற்குரு: (சிரித்துக் கொண்டே) வார்த்தை ஜாலத்தால் கலியுலகில் உட்பொருள் கொள்வது, பிறரை மடக்குவது என்று ஆகிவிட்டது. வெறும் வார்த்தைச் செறிவால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. ஆயிரம் நல்ல எண்ணங்களை அடுக்குவதை விட, சில நற்காரியங்களை ஆற்றுவது சிறப்பானது. நல்லோர் ஒருவர் இருந்தால் எல்லோருக்குமாக மழை பொழியும் அல்லவா! இதற்காக நல்லவர் யார், கெட்டவர் யார் என்று பகுத்தல் கைகூடுமா? உலக ஜீவன்களுக்காகச் சுயநலமின்றி இறைப்பணிகளை ஆற்றுபவர்தாம் புனிதமான நல்லவர். இத்தகைய நல்ல உத்தம நிலைகளை நோக்கி நல்லவர்கள் மென்மேலும் முன்னேற வேண்டும். நன்கு மழை பெய்வதற்கும், மழை பெய்யாமைக்கும் நிறைய ஆன்மீகக் காரணங்கள் உண்டு. ஒரே ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு,  இப்படியும் அப்படியுமாக அர்த்தங்களை, வார்த்தை ஜாலங்களைக் கொள்ளக் கூடாது.

ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஜாதகக் கட்டம் இருப்பது போல் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் ஜாதகக் கட்டம் உண்டு. அந்தந்தப் பகுதிக்கான ஜாதகக் கட்டம் வரைந்து அந்தந்த மனித சமுதாயத்தில் ஏற்பட இருக்கும் குறை, குற்றங்களை முன்னரேயே தீர்க தரிசனமாக, அறிந்து தக்க பரிகாரங்களை, பூஜைகளை, தான, தர்மங்களை நிகழ்த்திச் செயல்படுவதுதான் இறைப் பகுத்தறிவாகும். உதாரணமாக உதகமண்டல மாவட்டத்தின்  (Ooty) ஜீவ சமுதாய ஜாதக அம்சங்கள், சென்னை மாவட்ட ஜீவ சமுதாய ஜாதக அம்சங்களை விட மாறுபட்டதாக இருக்கும். சென்னையில் வருண ஜப பூஜைகள் தேவை எனில் ஊட்டியில் வனதேவதா பூஜைகள் தேவையாக இருக்கும்.

இந்த வருடம் மழை பெய்யவில்லையே, வறட்சியாக இருக்கிறதே என்று ஏங்கி அவசரம் அவசரமாக வழிபட்டு, உடனடிப் பலன்களைத் தேடுவதைவிட, சென்ற ஆண்டே மாவட்ட, பிராந்திய ஜாதகக் கணிப்பினால் இத்தகைய நிலைகளை நன்கு உணர்ந்து ஜாதி, மத, குல, இன, பேதமின்றிப் பலரும் ஒன்று சேர்ந்து சமுதாயப் பூஜைகளை ஆங்காங்கே ஒருங்கே ஆற்றினால்தாம் இத்தகைய இயற்கைச் சீற்றங்களைத் தணிக்க முடியும். மிகவும் தர்மசீலராக இருந்த தசரதர் ஆட்சியிலும் வற்கடம் எனும் கொடும் பஞ்சம் ஏற்பட இருந்ததை தசரதர் முன்னரேயே உணர்ந்து ஸ்ரீசனீஸ்வரனிடம் பக்தியுடன் வாதிட்டுப் பரிகாரங்களைப் பெற்றார்.

தர்மம், நாணயம், நேர்மை, சத்தியத்துடன் பொலிந்த ராமராஜ்யத்தில் வற்கடம் பஞ்சம் ஏற்படக் காரணமே பிராந்திய ஜாதகப்படி சனிப்பார்வை அம்சங்கள் கூடியதும் ஒரு காரணமாகும். எத்தனையோ வழிபாடுகள் தசரதர் ராஜ்யத்தில் செழித்திருந்தாலும் கிரக வழிபாடுகளை மேம்படுத்துவதற்கும் வற்கடம் எனும் பஞ்சம் ஒரு காரணமாக இருந்தது. இவ்வாறு தீர்க தரிசனமாக, சற்குருமார்கள் மூலம் அந்தந்த மாநில, வட்டார ஜாதகக் கட்டங்களை நுண்ணறிவுடன் கணித்து எந்தெந்தப் பகுதியில் அதிக மழை, மழைக் குறைவு, மிக மழை என அறிந்து பூஜைகளை ஆற்றுதலே இயற்கைச் சீற்றங்களைத் தணிக்கும்.

அடியார்: குருவே!  மழை வேண்டி மக்கள் நடத்தும் மிருக விவாஹம், வருண ஜபம் சத்சங்கக் கூட்டுத் தியானம் போன்றவை பற்றிக் கூற வேண்டுகிறேன்!

சற்குரு: இறையருளை வேண்டி ஆழ்ந்த நம்பிக்கையுடன் நிகழ்த்தப் பெறும் இவை அனைத்திற்கும் நிச்சயமாகப் பலாபலன்கள் உண்டு. ஆனால் இவை யாவும் வருடந்தோறும் நிகழ்த்தப் பெற்றால்தான் வருண ப்ரீதி ஏற்பட்டு எதிர்வரும் ஆண்டுகளில் வரும் துன்பங்களை, பஞ்சத்தைத் தணிக்கும். இத்தகைய நீர்வள வர பூஜைகள் விண்ணில் வருண வித்துக்களைப் பதித்து அவை மழை மேகங்களாக வளர்ந்து நீராய் வளம் பெற காலம் கனிய வேண்டுமல்லவா! கடந்த ஆண்டு நன்மழை இருந்ததே என மக்கள் நாட்டில் ஜலதேவதைகளை அப்போதே வணங்க மறந்தனர். இதுவே தற்போதைய நீர்ப் பஞ்சத்திற்கும் ஒரு காரணமாகிறது. எனவே ஆண்டுதோறும் இத்தகைய நீர்வள வரப் பூஜைகள் தொடர்ந்து நிகழ்ந்தால்தாம் எதிர்வரும் ஆண்டுகளில் ஏற்படும் குறைகளை ஆன்மீக ரீதியாகத் தணித்திட முடியும். ஏனெனில் கலியுலகில் ஒவ்வொரு இடத்திலும் நடக்கும் மழை, புயல் போன்ற ஒவ்வொரு இயற்கைக் காரியமும் பல்லாண்டுகளுக்கு முன்னரேயே நிர்ணயிக்கப்பட்டவை! நடந்தவை, நடப்பனவாய் நடந்து கொண்டிருக்கின்றன என்ற சித்தவேத சூக்த மாமாந்திரத்தில் கோடிக்கணக்கான அர்த்தங்கள் பதிந்துள்ளன. இவற்றைச் சற்குருவின் ஞானப் பார்வை மூலமாகவே அறிதல் கூடும். ஏனெனில் மேற்கண்ட சித்த வேத சூக்த மாமந்திரம் சுட்டும் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்றையும் கடந்தவரே சற்குரு ஆவார்!

பௌர்ணமி நாள் : 11.8.2003 திங்கள் கிழமை காலை 11.39மணி முதல் 12.8.2003 செவ்வாய்க் கிழமை காலை 10.18மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பௌர்ணமி திதி அமைகிறது. கிரிவல நாள் :11.8.2003 திங்கள் கிழமை இரவு

25.8.2003 திங்கட் கிழமை நள்ளிரவு 1.17மணி முதல் 26.8.2003 செவ்வாய்க் கிழமை நள்ளிரவு இரவு 12.23மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி ஆவணி மாத சிவராத்திரி திதி அமைகின்றது. மாத சிவராத்திரி கிரிவல நாள் : 26.8.2003 செவ்வாய்க் கிழமை இரவு.

அமுத தாரைகள்

ஸ்ரீஆதிவிநாயகர் அல்லது நரமுக விநாயகர் எனப்படும் யானை முகமல்லாது அருள்முகம் கொண்டு அருள்பாலிக்கும் விநாயக மூர்த்தியை ஹஸ்த நட்சத்திர நாட்களில் மாம்பழம், சர்க்கரை, தேன் கலந்து காப்பிட்டு ஔவையாரின் “சீதக் களபச் செந்தாமரைபூ” எனும் பாடலை 36 முறை ஓதி வழிபட்டு தர்பைப் பாயைத் தானமாக அளித்து வந்தால் ஆடம்பரமாக, ஆணவமாக வாழும் மனைவி மனம் திருந்தி நல்வாழ்க்கை பெறுவாள். (ஆதி விநாயகர் அருளும் தலங்கள் கும்பகோணம், கூத்தனூர் அருகே திலதைப்பதி எனும் செதலைப்பதி , திருச்சியில் நன்றுடையார் ஆலயம்.)

ஸ்ரீஆதிவிநாயகர் திலதைப்பதி

தென்னை தணிக்கும் கோபத் தணல்

கோபம் என்றால் அனைவரும் துர்வாச மாமுனிவரைக் குறிப்பிடுவார்கள். ஆனால் துர்வாசரின் கோபம் அனைத்தும் நன்மையில் தான் முடிந்தன. கோபம் என்றால் உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டுதல் அவசர கோலமாகக் காரியங்களில் இறங்குதல் என்றே கலியுகத்தில் ஆகி விடுகின்றது. கோபம் என்பது புண்ணியத்தைச் சரிக்கக் கூடிய குணக் குறைபாடு. ஆனால் கோபத்தையும் நல்ல விளைவுகளாக ஆக்கி விடலாம். குழந்தைகளிடம் கோபமாக இருப்பது போல் நடித்து அவர்களை நன்கு படிக்க வைப்பது நல்ல பண்பாட்டில் இருக்கச் செய்வதும் நம் வாழ்வில் நடப்பது தானே!

கோபம் வராது நம்மால் வாழ இயலாது என்பது உண்மையே! ஆனால் கோபத்தால் குடும்பத்தில், அலுவலகத்தில், மேலதிகாரிகளிடத்தில், தன் கீழ் பணிபுரிவோரிடம், எவ்விதத் தீங்குகளும் ஏற்படக் கூடாது. கோபத் தீவினைகள் தணிந்திட, செவ்வாய், அஸ்வினி, பரணி, கார்த்திகை, விசாகம், சஷ்டி போன்ற அக்னி வகை நாட்களில் வெயில், மழை எனப் பாராது வெட்ட வெளியில் இருக்கும் பாணலிங்கம், பிள்ளையார், அய்யனார் போன்ற மூர்த்திகளுக்கு “எவர் கண்படாஹ் தீர்த்தமான” இளநீரால் அபிஷேகம் செய்து தென்னை மரத்திற்கு குறைந்தது 12 குடம் நீரை ஊற்றி வர வேண்டும்.

கோபம், குரோதம், விரோதம், பகைமை போன்றவற்றில் எழும் வெப்ப உணர்ச்சிகள் வானில் கரையும் போது தென்னை மரங்களே வானில் அவற்றை ஈர்த்து சுத்திகரிக்கின்றன. ஒரு தென்னை மரம் கூடத் தன் பங்கிற்கு அற்புதமான தெய்வீகப் பணிகள் ஆற்றுகின்றது என்றால் ஆறறிவுள்ள மனிதன் கோபம், பகைமை விரோதத்தால் ஏன் குணச் சரிவுடன் வாழ வேண்டும்.

துர்வாசர் தினமும் விழித்து எழுகையில் முதலில் தென்னை மரத்தையே தரிசிப்பார்! எனவே தென்னை மர தரிசனமும், இளநீர் தானமும் துர்வாச மகரிஷியின் தரிசன பலன்களையும், கோபாக்னியையும் தணித்து கோபத்தால் வந்த விளைவுகளையும் தணிக்கும்.

அத்தி மரத்தடிப் பிள்ளையாருக்குச் சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம், செந்தூரம், புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி ஆகிய எட்டுப் பொருட்களை இட்டு அடிப் பிரதட்சிணம் செய்து வந்தால் படிப்பிலும், குணத்திலும் மிகவும் மந்தமாக இருக்கும் பிள்ளைகள் திருந்துவர். ஸ்ரீசரஸ்வதி தேவி புத ஹோரையில் அத்திமரப் பிள்ளையாரை வலம் வந்து மென்மேலும் ஞான சக்திகளைப் பெறுகின்றார்.

புது பிளாட் வீடு வாங்கியும் அதில் பல பிரச்னைகளுடன் வாழ்பவர்கள் உண்டு. அங்காரக சக்தி, வாஸ்து சக்தி, மங்கள சக்தி, பித்ருக்களுடைய புண்ய சக்தி ஆகிய இந்நான்கும் சேர்ந்தால் வீடு அமைந்து விடுகின்றது. ஆனால் பித்ருக்களுக்கு என்றுதான் ஈடு செய்வது? அவர்கள் தங்கள் தேவ சக்திகளைத் தந்து கொண்டே இருந்தால் அவர்கள் என்றுதான் முக்தி, மோட்ச நிலைகளை அடைவது! நெடுங்குடி, ராமேஸ்வரம், பூவாளூர், திருவிடைமருதூர் போன்ற பித்ரு மோட்சத் தலங்களில் செவ்வாய்க் கிழமை அன்று பித்ருத் தர்ப்பணம், பித்ரு ஹோமம் செய்து புடலை, பீர்க்கங்காய், பிரண்டை ஆகிய பித்ரு சக்திக் காய்கறி வகைகளைப் பசுக்களுக்கும் ஏழைகளுக்கும் அளித்து வர மேற்கண்ட அனைத்து சக்திகளும் ஒன்றாகத் திரண்டு வந்து அருள் புரியும்.

ஆத்ம விசாரம் ஒரு மன பூஜையே!

கடவுளின் அற்புதமான படைப்புகளைப் பற்றி அடிக்கடி ஆத்ம விசாரம் செய்து வாருங்கள். ஆத்ம விசாரமும், ஒரு வகை வழிபாடே! ஆத்ம விசாரம் என்பது மானசீக பூஜைகளில் ஒரு வகையாகும். ஆத்ம விசாரம் என்றால் என்ன? சாதாரண மனித முயற்சியால் பெற இயலாது ஞானத்தை, மனோசக்தியின் மூலமாகப் பெறும் இறைநெறி முறையே ஆத்ம விசாரமாகும். இதனை எப்படித் தொடங்குவது? ஒரு மாம்பழத்தை நினைத்துப் பாருங்கள். அழகான உருவம், வண்ணத்துடன் அற்புதமான இனிப்புக் கலவையை உள்ளடக்கி அதற்கு ஓர் அழகிய தீர்கமான தோலை ஆடையாக்கி அமைத்திருக்கின்ற இறையருளை எண்ணிப் பாருங்கள்! மாம்பழமானது இத்தகைய தெய்வீகப் படைப்பான கனிகளைத் தானே எடுத்துக் கொள்ளாது பிற ஜீவன்களின் நன்மைக்காக அளிக்கின்ற தியாக மனப்பான்மையை எண்ணிப் பாருங்கள்! இவ்வாறாக ஒரு மாம்பழத்தின் படைப்புப் பற்றிய ஆத்ம விசாரமானது உங்களுக்குள் கருத்தாழம் மிக்க எத்தனையோ ஞான நல்வரங்களை உங்களுக்கு ஊட்டி விடும். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் தன்னம்பிக்கை, நல்ல மனோசக்தி, மனோதிடம், ஆழ்ந்த வலுவுள்ள இறை நம்பிக்கை நன்கு விருத்தியாகும். எனவே ஆத்மவிசாரம் என்பது தினந்தோறும் பயில வேண்டிய மனப் பயிற்சி மன வழிபாடு மனயோகமாகும்.

அருணாசலத்தில் சங்கல்ப சித்த தரிசனம்

பௌர்ணமி என்றல்லாது எந்நாளும் அருணாசலமாம் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்திடலாம். அந்தந்த நாள், நட்சத்திர, திதிகளுக்கு ஏற்ப பலாபலன்கள் கிட்டுகின்றன என்பதை நாம் நன்கறிவோம். பலன்களை வேண்டிக் கிரிவலம் வருவதை விட எதையும் வேண்டாது கிரிவலம் வருதலால் சங்கல்ப சித்தம் என்ற அரிய பலன்கள் தாமாகவே நல்வரமாகக் கிட்டுகின்றன. ஆனால் பிரச்னைகள் நிறைந்த கலியுலகில் வேண்டுதலின்றி அருணாசலக் கிரிவலம் வருதல் எளிதல்லவே!

அருணாசலக் கிரிவலப் பகுதியில் இடுக்குப் பிள்ளையாரை அடுத்து சங்கல்ப சாகர தரிசனப் பகுதி ஒன்றுண்டு. ஒருவர் கிரிவலத்தைத் தொடங்குகையில் எத்தனையோ பிராத்தனை வேண்டுதல்களுடன் தொடங்கிட்டாலும், கிரிவலம் வருகையில் அந்த வேண்டுதலும் பல மாறுதல்களுக்கு உள்ளாகக் கூடும். உதாரணமாக, பதவி உயர்வு வேண்டி ஒருவர் கிரிவலம் வரும்போது பதவி உயர்வால் இடமாற்றம், குடும்பத்தைப் பிரிதல், பிள்ளைகளின் கல்வி, சம்பள உயர்வால் வரும் பிரச்னைகள், வருமான வரி, புது இடத்தில் உடல் நிலை எனப் பல பிரச்னைகள் உடன் தோன்றும் அல்லவா! இந்நிலையில் பதவி உயர்வு வேண்டுமா, இல்லையா என மனிதப் பகுத்தறிவால் அறிவது எளிதெனினும் பகுத்தறிவு கலியுலகில் இறைப் பகுத்தறிவாக மலரவில்லையே! இத்தகையக் குழப்பங்களுடன் எதை வேண்டுவது என்று தெரியாமல் கிரிவலம் வருவோர் நிறைய உண்டு. இதற்காகவே மனோவாக்யர் என்ற பெரும் மகரிஷி சங்கல்ப சித்தம் எனும் அருணாசல மலை தரிசனப் பகுதியில் பல யுகங்கள் தவம் புரிந்து ஜீவன்களுடைய பிரார்த்தனைகளில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்த்து “இறைவா எனக்கு எது நன்மையோ அதைச் செய்! நான் அறியாக் குழந்தையாக எதையெதையோ வேண்டி இருக்கலாம். மாயை ஏற்படுத்தும் குழப்பத்தால் மனம் சஞ்சலப்பட்டு எதையாவது வேண்டி இருக்கக் கூடும். இவற்றை எல்லாம் மன்னித்து எனக்கு உரியதை அளித்திடுவாயாக!” என்று வேண்டி வழிபட வேண்டிய இடம் இதுவே! அதாவது மனக் குழப்பங்களுக்கு மாமருந்தாக விளங்குமிடம் இதுவே!

ஆலய விமான தரிசன பலன்கள்

ஒவ்வொரு பழமையான ஆலயத்திலும் பல்லாயிரம் கோடி இறை ரகசியங்கள் பொதிந்துள்ளன. ஆலய ராஜ கோபுரம், ஆலய விமானம் முதல் பலிபீடம் வரை எத்தனையோ தரிசனங்கள் உண்டு. கோயிலில் மூலமூர்த்தி, அம்பிகை, கோஷ்ட மூர்த்திகள், நவகிரகங்களை வழிபடுவதுடன் ஆலய விமானம், தூண்கள், பலிபீடம் அனைத்தையும் நன்கு கவனித்துத்  தரிசித்து வருதல் வேண்டும். பலரும் ஆலய விமானங்களின் தெய்வீக மகத்துவத்தை உணர்வதில்லை! இனியேனும் அண்ணாந்து பார்த்து ஆலய ராஜ கோபுர, விமானச் சிற்பங்களை, ஆலயக் கோணங்களை நன்கு கவனித்துத் தரிசித்து வழிபட்டு வாருங்கள். உதாரணமாக சென்னை மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் ஆலய ஸ்ரீமுருகன் சன்னதி விமானத்தில் ஸ்ரீஅக்னி பகவானை எவ்வளவு பேர் அறிந்து தரிசித்திருப்பீர்கள்?

பொதுவாக நாம் கழுத்து, கண்களை உயர்த்தி அண்ணாந்து பார்ப்பதில்லை. அக்காலத்தில் வீட்டினுள் செய்ய வேண்டிய பல ஆசனங்களைப் பலரும் முறையாகச் செய்து வந்தமையால் தினமும் கண், தலை, கரங்கள், இடுப்பு அனைத்திற்குமான தேகப் பயிற்சிகள், மனோ யோகப் பயிற்சிகள் நன்கு அமைந்தன. தற்போது பலவிதமான வழிபாடுகள், விரதங்கள், பண்டிகைகளைக் கடைபிடிக்கும் தன்மைகள் மறைந்து விட்டமையால் ஆலயத்தில் உள்ள பல அபூர்வ தரிசனங்களும், அன்னதானமுமே விட்டுப் போன விரத பலன்கள் ஓரளவு ஈடு செய்யும்.

ஸ்ரீகாலாக்னி ருத்ர மூர்த்திக்கான மகாசிவ ருத்ர மந்திரம்

திருஅண்ணாமலை ஆலயத்தில் தற்போது பைரவராக வழிபடப் பெறும் மூர்த்தியான ஸ்ரீகாலாக்னிருத்ர மூர்த்தி ருத்ர அம்சங்களைப் பூண்டவராய் உக்ரம் நிறைந்தவர். எனவே பக்தர்கள் நன்கு நியமத்துடன் இவரை வழிபட வேண்டும். குளிகை நேரத்திலும், அஸ்வினி, பரணி, கார்த்திகை, உத்திரம், விசாகம், செவ்வாய்க் கிழமை நாட்களிலும்,

ஓம் நமஸ்தே அஸ்து பகவான் விச்வேஸ்வராய மகாதேவாய த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாலாக்னி காலாய காலாக்னி ருத்ராய நீலகண்டாய மிருத்யுஞ்ஜயாய சர்வேஸ்வராய சதாசிவாய ஸ்ரீமன்மகாதேவாய நம

என்று ஓதி வழிபட்டு வர அற்புதமான முறையில் காரிய சித்திகளைப் பெற்றிடலாம். இதனால் தீய வழக்கங்கள் அகலும். தீய சக்திகளான உறவுப் பகைமை, விரோதம், குரோதத்தால் விளையும் சச்சரவுகள் நீங்கி இல்லறத்தில் அமைதி உண்டாகும். காலாக்னி ருத்ர மூர்த்தி எழுந்தருளியுள்ள தலங்களிலும், ஸ்ரீவடுக பைரவ மூர்த்தி உள்ள தலங்களிலும் ஸ்ரீவடுக நவநாதச் சித்தர் இன்றும் குறித்த நாட்களில், குறித்த ஹோரையில் வழிபட்டு வருகின்றார்.

பொதுவாக, பல ஆலயங்களிலும் ஸ்ரீரங்கநாதரை மட்டும் தான் சயனக் கோல மூர்த்தியாகத் தரிசித்திருப்பீர்கள்! பொள்ளாச்சி அருகே மாசாணியம்மன், (ஊத்துக்கோட்டை அருகே) சுருட்டப்பள்ளி ஸ்ரீபள்ளி சயனேஸ்வரர், கும்பகோணம் அருகே புள்ளபூதங்குடி ஸ்ரீராமர் போன்ற யோக சயனக் (படுத்த நிலையிலான) கோல மூர்த்திகளைக் குறித்த திதி, நட்சத்திரத்தில், குறித்த முறையில் தரிசித்து வந்தால் பலவகையான குடும்ப ஒற்றுமையின்மைக் குறைபாடுகளை எளிதில் களைந்திடலாம்.

நோயில் படுக்கும் நிலைமை மாறிட…

வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவர் நோயால் படுத்து அல்லல்படுகின்ற துன்பங்கள் பல குடும்பங்களில் உள்ளன. அடிக்கடிக் குடும்பத்தில் இத்தகைய துன்பங்கள் வரக் காரணம் அபராத மிருத்யு எனும் ஒருவகை கடுமையான தோஷமாகும். நான்கு வகையான – நின்று, இருந்து, கிடந்து, நடந்த கோலத் திருமால் மூர்த்திகளைத் தினந்தோறும் (திருநீர் மலை, ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் ஆலயங்கள்) ஒரு மண்டலத்திற்குத் தரிசித்து, நான்கு வகைக் கனிகளை ஏழைகளுக்கும், பசுவிற்கும் அளித்து வந்தால் மேற்கண்ட சில வகையான அபராதமிருத்யு தோஷங்கள் தீர வழி பிறக்கும்.

தொடரும் ஆனந்தம் ...

கம்ப்யூட்டரில் ஒரு யானை படமோ, ஒரு தாமரை மலரையோ வரைவதாக வைத்துக் கொள்வோம். மனிதக் கண்களுக்கு இவ்விரண்டும் வெவ்வெறு குணாதிசயங்களைக் கொண்ட பொருளாகத் தோன்றினாலும் கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை இந்த இரண்டு படங்களுமே கம்ப்யூட்டரின் அடிப்படை குறிகளான 0, 1 என்றவாறுதானே இருக்கும். இவை கம்ப்யூட்டர் அறிவிற்கு மட்டும் அடிப்படையான கருத்துக்கள் அல்ல, இவ்வுலகத்திற்கே இப்பிரம்மாண்டத்திற்கே அடிப்படையான சிவ சக்தி ஐக்ய தத்துவ விளக்கமாகும்.

ஆண்டான்கோயில்

இந்த சிவ சக்தி ஐக்ய சொரூப தரிசனத்தின் எதிரேதான் ஸ்ரீலோபாமாதா அகஸ்திய ஆஸ்ரமத்தை அமைத்து கோடிக்கணக்கான பக்தர்களுக்கு, பக்த தம்பதிகளுக்கு ஒற்றுமையை ஊட்டி வந்தார் நம் சற்குரு. திருஅண்ணாமலை மட்டும் அல்ல நமது தமிழ்நாடு மட்டுமல்ல, இமயமலை, ஆல்ப்ஸ்மலை, சஹாரா பாலைவனம், ஆஸ்திரேலிய ஆர்டீசியன் ஊற்று என உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் இந்த சிவ சக்தி ஐக்ய கருத்துக்களையே மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தார் நம் சற்குரு. பொதுவாக, ஊஞ்சல் என்பது பூமியின் இயக்கத்தை ஒட்டி கிழக்கு மேற்காகவே ஆட வேண்டும் என்ற இறை நியதி இருந்தாலும் இந்த இறை நியதியை மீறி தெற்கு வடக்காக ஆடும் ஊஞ்சலில் தாமே தம்பதி சகிதமாக ஆடி அந்த ஊஞ்சலில் சிவ சக்தி ஐக்ய சக்திகளைத் தோற்றுவித்தார் என்பதே நம்மை மெய்சிலிர்க்க வைக்க வைக்கும் ஒரு ஆனந்த அனுபவமாகும்.

இன்றும் நம் ஆஸ்ரம அடியார்கள் பலரும் இந்த ஊஞ்சலில் அமர்ந்து ஆடி தங்கள் குடும்பங்களில் தோன்றும் மன வேற்றுமைகளைக் களைந்து சமுதாயத்திலும் அமைதியை ஏற்படுத்தும் அரும்பணியை மேற்கொள்கின்றனர். நம் சற்குரு இந்த ஊஞ்சலில் தம்பதி சகிதமாய் பொன்னூசல் ஆடியபோது மாணிக்கவாசகப் பெருமானின் சீரார் பவளங்கால் ... என்று தொடங்கும் திருவாசகப் பாடல் அடியார்களால் இசைக்கப்பட்டது. இந்தப் பாடலில் இடம் பெறும் பவளம், முத்து, பொன் போன்றவை மேலோட்டமாக அனைத்து பொருள் வளங்களைக் குறித்தாலும் இவை குறிக்கும் நவகிரக அம்சங்களான செவ்வாய், சந்திரன், குரு என்பவையே தம்பதிகளின் ஒற்றுமைக்கும், ஆரோக்கியமான சந்தான பாக்கியத்திற்கும் வழிவகுக்கும் தெய்வீக அம்சங்கள் அல்லவா ? கிழக்கு மேற்காக ஆடும்படி ஊஞ்சல் அமைக்கப்பட வேண்டும் என்ற வாஸ்து நியதியையும் மீறி சற்குருவின் வழிகாட்டுதல் இங்கு அனுகிரகமாகப் பொலிகின்றது. அதோடுமட்டுமல்லாமல் தம்பதிகளின் ஜாதகங்களில் ஏழாமிடம் என்னும் களத்திர தானத்தில் சுக்ரன் இருந்தால் அது உபயகளத்திரம் என்ற தோஷத்தை உருவாக்கும் என்பது விதி. இத்தகைய ஜோதிட விதியையும் மீறி தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமையை உருவாக்குவதும் இந்த ஊஞ்சல் அமைப்பின் உள்ளார்ந்த குரு தத்துவமாகும். இவை அனைத்திற்கும் அடிப்படையாக அமைவது தேன் என்ற இனிமையா அல்லது தேனாய்ச் சுவைக்கும் சற்குருவின் தியாகமா ?

ஸ்ரீநரவிநாயகர் திலதைப்பதி

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam