முக்காலமும் உணர வல்லவர் சற்குரு ஒருவரே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

விமல லிங்கத்திற்கு விமல பூஜை

கலியுகத்தில், தினமுமே மாறுபடும் வாழ்க்கை நிலைகளால் வேறுபடும் பல்வேறு மனநிலைகளினாலும், பலவிதங்களில் மனம் அலைக் கழிக்கப்படுவதினாலும், சராசரி   கலியில் பலவற்றிலும் மனம் சிதறுண்டு போகாமல் தடுக்கவே, ஒவ்வொருவரும் அவரவர் மனதுக்குப் பிடித்த ஒரு தெய்வ மூர்த்தியிடம் பக்தி வைத்து இஷ்டத் தெய்வமாக ஏற்று வாழ்நாள் முழுதும் மனம் ஒன்றி ஆராதித்தால், அத்தெய்வத்தின் அருள் என்றும் கூடவே வரும் என்பதை அனைவரும் நன்கு உணர வேண்டும்.
இவ்வாறு நீங்கள் தேர்ந்தெடுக்கும் மூர்த்தி சனீஸ்வர மூர்த்தியாகக் கூட இருக்கலாம். கரிகாலன், கருப்பண்ணன், கருப்பையா, கரியபெருமாள் போன்ற கரி வகைப் பெயரை உடையவர்களுக்கு சனீஸ்வரப் பூஜை நன்கு ஏற்று வரும். சனீஸ்வரரை வழிபடும் முன், அனைவரும் சனிப் பரணிச் சித்தரை வழிபடுதல் வேண்டும். இவர்தாம் சனீஸ்வரரைப் பன்னெடுங் காலம் வழிபட்டு வந்தவர். காக்கைகளின் கூட்டத்தில் சூட்சுமமாகப் பொலிபவர். கரி பூஜையாகிய கஜ பூஜை எங்கு நடந்தாலும், கருமை வண்ண உடையில் பிரசன்னம் ஆகி அருள்பவர்.

விமல லிங்கம் ஆதிகுடி

விதர்பகாலச் சித்தரும் சனீஸ்வரப் பூஜையில் வல்லவர். கரிநாள் மற்றும் சனிக் கிழமைகளில் உடல் ஊனமுற்றோர் நலன்களுக்காக ஆவன செய்வதும் சனீஸ்வரப் பூஜையின் அங்கமேயாகும். உடல் ஊனமுற்றோர் அவர்கள் குணமடைவதற்காக விதர்பகாலச் சித்தர் தம் தபோ பலன்களை அர்ப்பணித்த இடமே திருச்சி லால்குடி அருகே ஆதிகுடி கிராமத்தில் ஸ்ரீஅங்குரேஸ்வரர் ஆலயத்தில் அருளும் விமல லிங்க தரிசனமாகும்.
கரிநாள் மற்றும் சனிக் கிழமைகளில் இங்கு ஊனமுற்றோரை அழைத்துச் சென்று, விமல லிங்கத்திற்கு கறுப்பு, கருநீல வண்ணப் பட்டாடைகளைச் சார்த்தியும், கருவேப்பிலை அன்னம், நாவற் பழம், நீல நிற திராட்சை போன்று நீல வண்ண உணவுப் படைப்பும், அன்னதானமும் நற்பலன்களைப் பெற்றுத் தரும்.
வாலை மனோன்மணி யோக சக்திகள் நிறைந்த தலம். வாகன விபத்துக்களில் எலும்பு முறிவிற்காகச் சிகிச்சை பெற்றவர்கள், பெற்றுக் கொண்டிருப்பவர்கள் கண்டிப்பாக வழிபட வேண்டிய தலம்.
மன ஊனம், உள்ளத்தில் ஊனம் ஏற்படாது காக்கும் விமல லிங்கம். அஷ்ட லிங்க சக்திகள் நிறைந்தமையால் சனிக் கிழமை தோறும் கண், காது, கை, கால் போன்று அங்க ஊனம் அடைந்தவர்களும், பில்லி, சூன்யம் போன்றவற்றால் மன ஊனம் அடைந்தவர்களும், இங்கு தசரதர் அருளிய சனீஸ்வரத் துதியையும், காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதியையும் ஓதி வழிபட்டு அரிய பலன்களை அற்புதமான முறையில் அடைய வல்ல தலம்.

கண்ணொளி சிறக்க

ஞாயிறு, மூல நட்சத்திரம், பஞ்சமி சேர்ந்து வரும் ஆதிமூலப் பஞ்சமித் திருநாளில்தாம், அனுமார் தம் குழந்தைப் பருவத்தில் சூரியனைப் பழம் என எண்ணிப் பிடித்தார். ஆஞ்சநேய ஸ்பரிசம் பெற்றமையால் தட்ச யாகத்தில் தவறாகப் பங்கு பெற்று சூரிய மூர்த்தி இழந்த நேத்திர சக்திகள் பலவும் மீண்டும் ஆதவ மூர்த்திக்குக் கிட்டின!
எனவே, நேத்ர பல சக்திகள் நிறைந்த இந்நாளில் சூரிய நாராயண சுவாமியைப் போற்றித் துதிக்க வேண்டும். காடராக்ட் நோய் மற்றும் பார்வைக் குறைவு உள்ளவர்கள் தக்க நிவர்த்திகளைப் பெற்றிட, அகஸ்திய மாமுனி ஸ்ரீராமருக்கு ஓதுவித்தஆதித்ய ஹ்ருதயத் தோத்திரங்களை சூரிய நாராயண சுவாமி, சூர்யேஸ்வரர், பாஸ்கரேஸ்வரர் என்ற பெயரில் இறைவன் அருளும் ஆலயங்களில், ஞாயிறு தோறும் 108 முறை ஓதியும் அல்லது பிறர் உரைக்கத் தாமும் ஓதியும் வழிபட்டு வருதல் வேண்டும்.

ஸ்ரீஅங்குரேஸ்வரர் ஆதிகுடி

கலியுகத்தில் 24 மணி நேர தெய்வீகப் பணி சாத்யமில்லை எனச் சித்தர்களும் மஹரிஷிகளும் தீர்க்க தரிசனமாக நன்கே அறிவர். எனினும், ஒரு நாளின் பெரும்பான்மையான நேரத்தைத் தெய்வீகத்தில் நிலை நிறுத்திக் கொள்ள வல்லவர்களும் பூவுலகில் இருக்கத் தான் செய்கின்றார்கள். ஆனால், ஒரு கோடிக்கு ஒருவரே இவ்வாறு இருப்பார்கள். இவர்களால்தான் பூவுலகில் ஓரளவேனும் தர்மம் தழைக்கிறது.
எத்தகைய கொடுமையான துன்பங்களுக்கு இடையேயும், குடும்பப் பிரசனைகளுக்கு நடுலும், பணக் கஷ்டங்களுக்கு ஊடேயும் மேற்கண்ட வகை உத்தமர்கள் தெய்வீகத்தில் நிலைத்திருப்பார்கள். அவர்களுடைய சத்சங்கக் காரியங்களுக்கு நாம் உறுதுணையாக இருத்தலே மனித சமுதாயத்தின் முதற் கடமையாகும்.
தெய்வீகத்தில் இருத்தல் என்றால் என்ன பொருள்? தனக்காக, தன் குடும்பத்திற்காக மட்டும் எப்போதும் பூஜித்துக் கொண்டு, நல்ல மனிதராக வாழ்வது மட்டுமே தெய்வீகமாகாது. பிற ஜீவன்களின் நல்வாழ்விற்காக, சத்சங்கப் பூர்வமாக இல்லறப் பணிகளோடு தெய்வீகப் பணிகளையும் இயன்ற அளவு ஆற்றுதலையே முழுதான தெய்வீகத்தில் இருப்பதாகும். எனவே, எப்போதும் நெற்றியில் விபூதி, நாமம், குங்குமம், செந்தூரம், சந்தனம் தரித்து, எப்போதும் பூஜித்துக் கொண்டிருப்பது மட்டும் தெய்வீகம் என்று எண்ணி விடாதீர்கள்.

ஸ்ரீபிரேமாம்பிகை ஆதிகுடி

பிற ஜீவன்களின் நலன்களுக்காகப் பூஜிப்பதும், அன்னதானம், வஸ்திர தானம், மாங்கல்ய தானம் என்று பலவிதங்களில் பிற ஜீவன்களின் நலத்திற்காக அருட்பணிகளைத் தினமும் ஆற்றி வருதலே உண்மையாகவே பரிபூரணத் தெய்வீகத்தில் திளைப்பதாகும். பொதுவாக, கலியுகத்தில் தக்க சத்குரு மூலமாக, சத்சங்கப் பூர்வமாக இவை அனைத்துமே ஆற்றுதல் முடியும். ஏனெனில், தனித்துச் செயலாற்றும் போது புண்ய சக்திகள் சேர்ந்து அகங்காரம், ஆணவத்தில், கர்வத்தில் ஆட்பட்டு விடுவீர்கள். எனவே, சத்சங்கம் மூலம் செய்யும் காரியமே முறையான, பாதுகாப்பானத் தெய்வீகக் காரியமாகும். இதனைப் பற்றி நன்கு சிந்தனை செய்து உங்கள் வாழ்க்கையை இல்லறத்தோடு ஒட்டியதாக எவ்வாறு அமைத்துக் கொள்ள முடியும் என்று - சிந்தனா சக்தி நாளான - ஞாயிறு தோறும் யோசித்துப் பாருங்கள்.
கம்ப்யூட்டர், டீவி, சினிமா போன்று நல்வகையான பொழுது போக்கு இடையேயும் இறைச் சிந்தனைகளைத் தொடரலாமே! இதில் தவறில்லை! பொழுது போக்கு அம்சங்கள் நல்லனவாக இருக்க வேண்டும். ஞாயிறு, பஞ்சமி, மூலம் கூடும் தினத்தில் மனச் சிந்தனைகள் நன்கு விருத்தியாகும். இந்நாளில் மூல நட்சத்திர தேவிக்கான மந்திரங்களை ஓதியும் பஞ்ச கன்யா தேவிகளையும் (அகல்யா, திரெளபதி, சீதா, தாரா, மண்டோதரீ) துதித்தும், சூரிய நாராயண சுவாமியைப் பூஜித்தும் ஆத்மவிசாரம் செய்க! பிறகு பிரார்த்தனை செய்க.
சென்னை அருகே உள்ள ஞாயிறு திருத்தலத்தில், ஞாயிறு தோறும் சுயம்பு மூர்த்திக்கு அத்திப் பழ மாலை சார்த்தி, சாக்ஷுஷோபநிஷத் மந்திரங்களை ஓதிப் பூஜித்துத் தேனில் ஊறிய அத்திப் பழங்களைத் தானமளித்து வருதலால் கண் பார்வை மேம்பட உதவும்.

அக்னியும் அக்னியும் இணைந்தால் ?

சஷ்டித் திதியில் ஒரு வேளை விரதம் இருந்தாலே, அகப் பையும் (இருதயம்), புறப் பையும் சுத்திகரிக்கலாகி முத்தான முருகப் பையன் வந்து குடி கொள்ள (இருதய) வீடு (பை) பரிசுத்தப்படுமெனில், முழு விரதப் பலன்களின் மகத்துவத்தை என்னென்பது?
பையெனப் பைந்தமிழ்ச் சிவப் பையன் பையல் கொள்ளவே
பைந்தணை கொள்ளா பையுணவிரா அபய விரதம் காத்திடுவீர் மாந்தர்காள்
(பைந்தமிழ்ச் சிவப் பையன் = தமிழ்க் கடவுள் முருகன்)
சஷ்டித் திதி என்பது அக்னி சக்தித் திதியாகும். விரதத்தில் வயிறு வெறுமையாக இருக்கும்போது சஷ்டித் திதி நாளில், புருஷ சூக்தம், சஷ்டிக் கவசம் மற்றும் வேதத் துதிகளை ஓதுகையில் விசேஷமான வேதாக்னி சக்திகள் உடல் நாளங்களில் உண்டாகும். மேலும், விரதமிருக்கையில் இயற்கையான பசியாலும் வயிற்றில் ஒருவிதமான அக்னி சக்தி உண்டாகும். மூன்றாவதாக, அக்னி வகைத் திதியான சஷ்டி அன்று வானில், விண்ணில், மண்ணிலும் ஸ்கந்தாக்னி சக்திகள் எழுகின்றன. இம்மூன்றும் சேர்கையில், விசேஷமான சீதள (குளுமையான) சக்திகள் தோன்றுகின்றன.
ஆம், அக்னியும், அக்னியும் இணைகையில் தெய்வீக ரீதியான குளுமை உண்டாகும் என்பது கேட்பதற்கே ஆச்சரியமாக உள்ளதல்லவா! இதில் தோன்றி அருளும் அம்பிகையே ஸ்ரீசீதளா தேவி ஆவாள். எனவே, சஷ்டித் திதியில் தன் தெய்வப் புதல்வனாம் முருகப் பெருமானுடன் இணைந்து ஆதி பராசக்தி சீதளா தேவியாக அருள்கின்றாள்.
சூரபதுமன் சம்ஹாரத்தின் போது, முருகப் பிரானின் திருமேனியானது வெப்பத்தால் தகித்ததால் தம் தாயாராம் ஆதிபராசக்தி, ஸ்ரீ சீதளாதேவியைத் துதித்துப் பூஜித்து வெப்பத்தைத் தணித்துக் கொண்டார் முருகப் பெருமாள். ஆம் (திரு)மால் மருகனாம் முருகனையே, அருணகிரிநாதர் பெருமாள் எனப் போற்றுகின்றார் அல்லவா! எனவே, சஷ்டி அன்று சீதளா தேவி வழிபாடும் மிகவும் முக்கியமானதாகும்.

மயில்ரங்கம் லால்குடி

ஸ்ரீசீதளா தேவி எழுந்தருளும் ஆலயத்தில் குடி கொண்டுள்ள முருகனை வழிபடுவது மனக் கொதிப்பு, மூளைக் கொதிப்பை அடக்க வல்ல மருத்துவ அக்னி சக்திகளைத் தர வல்லதாகும். ஒரு சில தலங்களில்தாம் (சென்னை திருமழிசை குளிர்ந்த நாயகி) சீதளா தேவியைத் தரிசிக்க முடியும். சீதளா தேவி எழுந்தருளியுள்ள தலத்தில் உள்ள முருகப் பெருமானைத் தரிசித்தல் மிக மிக விசேஷமானதாகும்.
பூராடம் அக்னி வகை நட்சத்திரம், உத்திராடம் சீதள (குளிர்ந்த) நட்சத்திரம். பூராட, உத்திராட நட்சத்திர தேவிகள் இணைந்து பூஜிக்கும் தலங்களில்தாம் வென்னீர் ஊற்று உண்டாகிறது. இத்துடன் சஷ்டி இணையும் நாட்களில் ஆதிசங்கரரின் சுப்ரமண்ய புஜங்கம், ஒளவையாரின் விநாயக கவசத்தை, குறைந்தது 36 முறையேனும் ஓதிடுக!  மயில்களுக்குக் கடலை போன்ற தானியங்கள் நிறைய அளிப்பது மிகவும் விசேஷமாகும்.
இந்நாளில் மண் அல்லது கரி அடுப்பில் நன்னீரைக் கொதிக்க வைத்து, இதில் சிறிது சுக்குப் பொடி, மிளகுப் பொடி, பனங் கற்கண்டுத் தூள் சேர்த்து, நன்கு குளிர வைக்க வேண்டும். இதனை நன்கு ஆற வைத்து முருகப் பெருமானுக்கு அபிஷேகித்து, இரவு  பிரசாதமாக அருந்தி, கந்தர் சஷ்டி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.
இந்நாள் மயில் பூஜித்தத் தலங்களில் வழிபடுவது (மயிலாப்பூர், மயிலாடுதுறை, மயில்ரங்கம்) சிறப்புடையதாகும். பழநி, தண்டபாணி, முத்துக் குமார சுவாமி, செந்தில், சுப்ரமண்யன், முருகன் போன்று ஒன்பது வகை முருக மூர்த்திகளைத் தரிசித்தல் மிகவும் விசேஷமாகும். அருணகிரிநாதரின் திருப்புகழ்ப்பாடல்களில் 36 பாக்களையேனும் ஓதிடுக! இவற்றை அறிந்த வித்வான்களை ஆலயங்களில் ஓத வைத்துத் தக்க சன்மானம் அளித்திடுக!
இரவில் விரதத்தை நிறைவு செய்த பின் உறங்கும் முன் கண் மூடி உங்களைப் பற்றி நன்கு ஆத்ம விசாரம் செய்திடுக.

விதியை அறிய முடியுமா ?

கல்பாதி என்பது யுகம், ஆண்டு போல பண்டைய முறையிலான காலப் பகுதியாகும். தற்போது எவ்வாறு ஆண்டுகளை, எண் வரிசையாக (1947, 1956, 1979) இட்டுக் குறிக்கின்றோமோ, இவ்வாறு எண் குறியீடாக அன்றி, எழுத்தளவில் அட்சர சக்திகளுடன், யுகம், கல்பம் இவற்றுக்குத் தனிப் பெயர்கள் உண்டு. எனவே, காலம் என்பது தெய்வீக ரீதியாகச் சுழன்று வருவதே! இதனை நீட்டுதலோ, குறுக்குதலோ கூடாது. இதனால்தான் பிரபஞ்ச வாழ்வை ஒட்டு மொத்தமாக காலச் சக்கரம் என உரைக்கின்றோம்.
கல்பங்கள் என்பவை ருதுக்கள், மாதங்கள் போலக் காலப் பகுதிகள். பல்லாயிரம் ஆண்டுகள் கூடுவது கல்பம். வருடப் பிறப்பு போல, அந்தந்தக் கல்பாதிக் காலம் தோன்றிய நாள் வருகையில், என்ன செய்ய வேண்டும்?
கல்பாதி நாளில், பிரபஞ்சத்திற்கே காலத்தைப் பகுத்துத் தரும் மஹா காலபைரவருக்கும், ஜீவ வாழ்க்கையைக் காலத்திற்குள் ஸ்ரீகாலபைரவரின் கருணையால் சிருஷ்டிக்கும் ஸ்ரீபிரம்ம மூர்த்திக்கும், 64 விதமான திரவியங்கள் கூடிய அபிஷேகங்களை நிகழ்த்தி, 64 முறை ஆத்மப் பிரதட்சிணம் செய்து (இறைவன் முன் தன்னைச் சுற்றுதல்) வழிபடுதல் வேண்டும். இறைவன் தன்னையே வழிபடும் ஆத்ம (ஸ்படிக) லிங்கத் தலமான திருவையாறு போன்ற தலங்களிலும் ஆத்மநாதராக இறைவன் அருளும் தலங்களிலும் (ஆவுடையார் கோயில்) வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும்.

மயில்ரங்கம் லால்குடி

64 காலத் தத்துவங்கள் மனித குலத்திற்கு மிகவும் உரித்தானவை. இந்த 64 காலங்களிலும், உலகில் அனைத்து மனிதர்களிடமும் பல மாற்றங்கள் தென்படும். ஒவ்வொரு மனிதனின் ஆயுளிலும், இந்த 64 கால கட்டங்கள் வந்தமையும். சிலருக்குக் கூடுதலாகவும் அமைவதுண்டு. அவரவருக்குப் பூர்வ ஜன்மக் கர்ம விளைவுகள் இந்த 64 கால கட்டங்களிலும் உணர்த்தப் பெறும். இதே பிறவிச் சம்பவ விளைவுகளும் சில சமயங்களில் பலருக்கும் உணர்த்தப் பெறலாகும். இதனால்தான் 64 தலைமுறைத் தர்ப்பணம் விசேஷமாகின்றது.
தற்போதைய வாழ்வில், முந்தைய பிறவி வாழ்க்கைகள் அனைத்தும் ஒருவருக்குத் தெரிய வந்தால், அவரால் அமைதியாக வாழ முடியாது. முன் பிறவியில் சகோதரராக இருந்தவர், தற்போது அதே வீட்டில் சித்தப்பாவாக, மரமாக, மாடாகப் பிறந்திருக்கலாம். அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்ற சொல் வழக்கின் அர்த்தம் (மீசை = மிசை = பிறப்பு) இதுவேயாம். எனவே, முந்தைய பிறவிகளின் சம்பவ விளைவுகளே, சற்றே அவ்வப்போது, இந்த 64 கால கட்டங்களிலும் அவரவருடைய வாழ்வில் நன்கு உணர்த்தப் பெறும்.
தற்போதைய கலியுக வாழ்வில், பலருக்கும் உள்ள பெரிய மனக் குறைபாடு யாதெனில், அதர்மக்காரர்கள் அக்ரமங்கள் செய்தும் சுகபோகமாக வாழ்கின்றார்களே, நன்கு கஷ்டப்பட்டு உழைத்து நல்லவராக வாழ்பவர்கள், பல துன்பங்களை அனுபவிக்க வேண்டி உள்ளதே என்பதுதான். இதில் அனைவருமே பணம் என்பதையே சுக போக மூலமாக எண்ணுகின்றனர்.
அதர்மக்காரர்கள் செல்வத்துடன் நல்ல வசதிகளுடன் வாழ்கிறார்களே என்று எண்ணுவதும், நாம் நல்லபடியாக வாழ்ந்தும் கஷ்டப்படுதாக எண்ணுவதும், இரண்டுமே முறையற்ற எண்ணங்களே! அவரவருடைய பூர்வ ஜன்ம விளைவுகளுக்கு ஏற்பவே அனைத்தும் கிட்டுகின்றன, நிகழ்கின்றன. ஒருவர் பிறக்கும் போது, தான் எதையும் சம்பாதிக்காதபோது, பிறந்து வளர்ந்த போது வந்த வீடு, வாசல், நிலம், வாகனம், கல்வி, சுகங்கள் போன்றவை எவ்வாறு வந்தன? பிறக்கும் போதே வருவதென்றால், இவை பூர்வ ஜன்ம விளைவுகளால்தாமே வந்தன! நன்கு ஆத்ம விசாரம் செய்திடுக!
அவரவர் செய்யும் அக்கிரமத்திற்குக் கலியுகத்தில் உடனே பலன்கள் கிட்ட வேண்டும், தண்டனை பெற வேண்டும் என்ற நியதி, கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், நடைமுறையில் இது சாத்தியமாகுமா? உடனடித் தண்டனையால் எந்த ஒருவரையும் முழுமையாகத் திருத்திட முடியாது. திருந்துதல் என்றால் மீண்டும் அந்தத் தவறைச் செய்யக் கூடாத வகையில் மனப் பக்குவம் வருதல் வேண்டும். பெரும்பாலான சிறைக் கைதிகள் தண்டனை முடிந்ததும் வெளி வந்து, மீண்டும் மீண்டும் குற்றங்களைச் செய்கின்றார்களே! எனவே, உடனடித் தண்டனை எவரையும் முழுமையாகத் திருத்தும் வாய்ப்பு மிகவும் குறைவே!
மேலும், தவறுக்கு உடனே தண்டனை எனில், இந்த நியதியை எவர்தான் நிர்ணயிப்பது? எவர்தான் நீதியை நிலை நாட்டுவது? இதனை இயற்கைக்கு விட்டு விடலாமா? செய்த தவறுக்கு உடனே தண்டனை என்பது எந்த அளவிற்குச் சாத்தியமாகும்? இயற்கையை வைத்து அந்தந்த தண்டனையை வழங்கச் செய்வதா? இவற்றைப் பற்றி நன்கு ஆத்மவிசாரம் செய்திடுக! அக்கிரமக்காரர்கள் ஏன் வசதிகளுடன் வாழ்கின்றார்கள் என்ற புலம்பலுக்கு இது நல்ல பதிலைத் தரும். கல்ப சக்திகள் ஆன்மச் சிந்தனையை வளர்த்து, நல்ல மனோ வைராக்யத்தையும் கொடுக்கும்.
தண்டனையைப் பற்றி ஒரு சிறு சிந்தனை! உதாரணமாக, ஒரு சிறு பொய்யைச் சொன்னாலும், உடனேயே அவருக்கு இயற்கையாகவே ஒரு பல் கழன்று விழ வேண்டும் என்பது உடனடித் தண்டனை எனக் கொள்க! இது இயற்கைத் தர்ம நியதியாக இருப்பின், இன்றைய உலக மக்களில் கிட்டத் தட்ட அனைவருக்குமே ஒரு பல் இருக்காது அல்லவா! தினமுமே பற்கள் கழன்று கொண்டே வரும்! நிரந்து பரந்து விரியும் இயற்கைத் தர்மத்தையா இந்த ஒரு சிறு நியதிக்குக் கட்டுப்படுத்துவது?

சாவித்திரி தேவி

தவறுகளை உணர்ந்து சீர் திருந்தி வாழ்தல், உத்தமர்களை மதித்துப் போற்றி வாழும் வகை அறிதல், மனித சமுதாயத்தின் நல்லிணக்க ஒற்றுமை போன்றவற்றின் மூலமாகவே குற்றங்களைத் தணிக்க முடியுமே தவிர, வெறும் தண்டனைகளால் அல்ல!
மேலும், ஒருவர் செய்த தவறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவரே, எவ்வளவு காலமானாலும் நன்முறையில் முழுமையாக நிவாரணம் தந்தாக வேண்டும். இதுவே தண்டனையையே முழுமையாக அனுபவிப்பதாகவும், மீண்டும் அதே தவறைச் செய்யாத வகையிலும் சீர் திருத்துவதுமாகவும் அமையும். மாறாக, அவர் பெறும் வெறும் தண்டனையே அவரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிவாரணமாக ஆகி விடுமா என்ன? நன்கு ஆத்ம விசாரம் செய்து பாருங்கள்! இவை எல்லாம் ஆன்மீக ரீதியான, மனதைப் பக்குவப்படுத்தும் சிந்தனைகளே!

சாவித்திரி நதி லால்குடி

மேலும் ஓர் உதாரணமாக, அ என்பவர் ஆ என்பவருக்கு அநீதிகள் இழைத்து, அக்கிரமமாக அவர் சொத்துக்கள் அனைத்தையும் பிடுங்கிக் கொண்டு இப்பிறவியில் அனுபவித்தால், மறுபிறவியில் அக்கு ஆ மகனாகப் பிறந்து, முந்தைய பிறவியில் பெற வேண்டியதை எல்லாம் வட்டியும், முதலுமாகப் பெற்று விடுவார். ஆனால் சாதாரணமாக வெளிப் பார்வைக்கு, இது வெறும் தந்தை - மகன் சொத்துப் பங்கீடு போலவே தோன்றும். ஆனால் இங்கு இயற்கை நீதி வழங்குகிறதே! எனவே, பிறவி ரகசியங்களை மனித அறிவால் ஒரு போதும் அறிய முடியாது. அந்தந்தப் பிறவியில் வந்தமையும் எதையுமே வைத்து, எந்த முடிவிற்கும் வந்திடுதல் கூடாது என்பதே ஆத்ம விசாரப் பாடமாகும். தக்க உத்தமர்களே குறித்த வேத, தியான யோக சக்திகள் மூலம், குருவருட் பூரணமாகப் பிறவிக்கான விளக்கங்களையும், வாழ்வில் எது நிகழ்ந்தாலும் அதற்கான காரணங்களையும் அளிக்க வல்லார்.
நல்ல சம்பவங்கள், விபத்துக்கள், வசதிகள், தரித்திர நிலை, நோய்கள், இவ்வாறாக அவரவர் வாழ்வில் எத்தனையோ நிகழ்ந்து வருகின்றன. இவை அனைத்தும் பூர்வ ஜன்ம சம்பவ விளைவுகளால் வருவதே! தற்போதைய பிறவிக் காலத்தில், முந்தைய பிறப்புச் சம்பவங்களையும் இணைத்துப் பாடங்களைப் புகட்டும் அறநியதி முறைக்கு கல்ப ஜீவ சாஸ்திரம் என்று பெயர். இது அவரவருக்குரிய ஆகாசப் பத்திரங்களில் பொறிக்கப் பட்டிருக்கும். இதனையே விதிப்படி நிகழ்தல் என்கிறோம்!
பூவுலகில் கல்பனா மூர்த்தி, கல்பனா தேவி போன்ற கல்ப மூர்த்திகளின் தரிசனம் மிகவும் அரிதாகையால் இந்நாளில் கற்பக விநாயகர், கற்பகாம்பாள், கற்பகவல்லி போன்று கற்பம் எனப் பெயர் கொண்ட மூர்த்திகளுக்குக் கற்ப சக்திகள் நிறைந்த முழு முந்திரி மாலை சார்த்தி வழிபடுதல் விசேஷமானதாகும். சாவித்ரீ தேவி தரிசனமும் (திருவெள்ளறை) மிகவும் சிறப்புடையதாகும். இதனால்நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று எழும் உள்மன வினாவிற்குத் தக்க விளக்கங்கள் கிடைக்கும். பிள்ளைகள் மற்றும் புதல்விகள் மேல் ஏற்படும் (தேவையில்லாத) எரிச்சல் உணர்வுகள் அடங்க உதவும்.

வற்றாத வேதநிதி

வேதநிதி பலம் என்பது உலக மக்கள் அனைவருக்கும் மிகவும் இன்றியமையாததாகும். வேதம் என்பது ஏதோ வேத மந்திரங்களால் ஆவது மட்டுமே என எண்ணாதீர்கள்! வேத பீஜாட்சர சக்திகளால் மட்டும் வரும் நிதியன்று வேதநிதி. அருள் நிதியமும், அருட்குண நிதியமும், அருள் மனமதி நிதியமுமாக எட்டு வகை குணநிதியங்கள் நிறைந்தது.
வேதம் எனில் எப்போதும் சாசுவதாக இருந்து உதவுவது எனப் பொருளாகும். எது நிரந்தரமாகவே, நிலையானது? தலைமுறை தலைமுறையாக, திரேதா யுக ஸ்ரீராமரின் தலைமுறையினருக்கும் முந்தைய தலை முறையினரும் வழிபட்டதாக, ஸ்ரீராமரே தேர் செய்து தந்து வழிபட்ட மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரரின் அருளம்சங்களே, இது போன்ற சுயம்பு மூர்த்தி அம்சங்களும் கூடியதே வேதநிதியாகும். சுயம்பு மூர்த்தி அம்சங்கள் உலகெங்கும் உண்டு. ஸ்வீடன் நாட்டின் ஆல்ப்ஸ் மலையில் உள்ள அற்புதமான குகைளிலும், எகிப்தியப் பிரமிடுகளின் அருகேயும் சுயம்புப் பிரகாச வடிவுகள் உண்டு.
வேதநிதி மனிதனை மனிதனுக்குரிய ஆறு முழுப் பகுத்தறிவுடன் செயல்பட வைத்துதவும். மது, புகை, தீய பழக்கங்கள், அதிகார வெறி, லஞ்சம் போன்ற பேராசை அரக்க குணம், முறையற்ற காம உணர்வுகளுக்கு ஆளாகும் மனிதன், பகுத்தறிவை இழந்து மிருக அறிவில்தான் கீழ் நிலைகளில் தன் வாழ்வின் பல நாட்களில் வாழ்கின்றான். இவனை மீட்டிட வேதநிதி, குணநிதி போன்றவை உதவுகின்றன.
நிதி என்றால் பணம் என்ற பொருளில் மட்டும் வருவதல்ல. ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் முக்கியமான எட்டு விதமான நிதிகள் கலியுகத்தில் தேவையாகின்றன. இவைதாம் அட்டமா ஆதி நிதிகள் ஆகும். வைரம், தங்கம் போன்று வருபவை எட்டு ஐஸ்வர்ய வகைகளாகும். இவ்வாறு எட்டு எட்டு வகை நிதிகளாக 64 வகை நிதிகள், மனித வாழ்க்கையில் பெற வேண்டியதாக உண்டு. இவ்வகையான அஷ்டாஷ்ட நிதிகளைப் பெறுபவர்கள்தாம் உத்தம மனிதர்களாய் ஆறறிவுப் பகுத்தறிவுடன் முழுமையாய் வாழ்கின்றனர். இதற்காகவே 64 தலைமுறைகளுக்கும் தர்ப்பணம் அளிக்கும் உத்தம நித்தியப் பூஜை வந்தமைகிறது.

ஸ்ரீகைலாசநாதர் சிவாலயம் காரைக்கால்

உலகில் எந்த நாட்டின் மொழியிலும் வேத பீஜாட்சரங்கள் நிறைந்த சப்தத் துதிகள் உண்டு. இன்றும் பல தாந்த்ரீக மந்திரங்கள் திபெத், எகிப்து, லத்தீன் மொழிகளிலும் உண்டு.   வேதம் என்பது சத்தியமானதாக, சாசுவதமானதாக, உலக ஜீவன்கள் அனைத்திற்கும் எக்காலத்தும், எந்நேரத்தும் பலனளிக்கும் இறைசக்திகளின் சப்தவடிவங்கள் ஆகும்.
வேத சப்தங்கள் பலவும் அனைத்து மொழிகளிலும் உண்டு. கலைமகளின் திருவடியில் திளைப்பவை தாமே உலக மொழிகள் யாவையும். பிற மொழிகளின் தாயாகத் துலங்கும் ஆதித் தமிழ் மொழியும், தந்தை மொழியான தேவமொழி (சமஸ்க்ருதம்) இரண்டும் பொழியும் உலகின் தெய்வீக மையமான பாரதத் திருநாட்டின் வழக்கில் உள்ள மொழிகளில் வேத சப்தங்கள், பிற மொழிகளை விட அபரிமிதமான வகையில் துலங்குகின்றன. இதில், குறிப்பாக, தமிழ் மற்றும் தேவ மொழிகளில், பிற எல்லா மொழிகளை விட, வேத பீஜாட்சர சப்தங்கள் சிறப்புடையதாகவே இருக்கும்.
முப்பத்து முக்கோடித் தேவர்களால் உரைக்கப் பெறுவதால் தேவ மொழி ஆயிற்று. முருகப் பெருமானே தீந்தமிழில் உரைப்பதால் தெய்வத் தமிழ் ஆயிற்று. தமிழும், தேவமொழியும் இரண்டுமே உலகியல் மொழிகளின் அம்மையும், அப்பனுமாகின்றன. வேதநிதியங்கள் பூரிக்கும் மொழிகள்!
தேவ மொழியில் உள்ள மந்திர சக்திகள் யாவும் திருமந்திரம், திருவாசகம், தேவாரம், திருப்புகழ், திருஅருட்பா, திவ்யப் பிரபந்தம் போன்ற தமிழ் மறைகள் அனைத்திலும் நிறையவே உண்டு.
தேவாரத் திருமறைகளை ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக மட்டுமே எண்ணாதீர்கள். சம்பந்தர், அப்பர், சுந்தரர், அருணகிரிநாதர், ஆழ்வாராதியர்கள், திருமூலர், ராமலிங்க சுவாமிகள் யாவரும், அவர்கள் காலத்துக்கும் முன்னிருந்த ஆதிகாலத் தமிழ் மறைகளை, இறைவாய் மொழியாக, வேதநிதியங்களாக நமக்கு அருளி உள்ளனர்.
எனவே வேதநிதி நாட்களில் தமிழ் வேதங்களை, தேவ மொழித் துதிகளை ஓதியவாறு உணவைச் சமைத்து, இறைவனுக்குப் படைத்து, வேத சக்திகள் யாவும் ஏழைகளுக்கும் சென்றடையும் வண்ணமாக, அன்னதானம் அளித்தல் வேண்டும்.
வேதபுரீஸ்வரர் என நாமம் பூண்டு இறைவன் அருளும் ஆலயங்களில் (திருவேற்காடு, பாண்டிச்சேரி, வில்லியனூர்) குறைந்தது மூன்று மணி நேரமேனும் வேதம் ஓதுதல் மிகவும் விசேஷமானது. ஏழ்மை நிலையில் உள்ள ஓதுவார்கள், பண்டிதர்களை கொண்டு வேத மந்திரங்களை ஓதுவித்துப் பலரும் வேதசக்திகளைக் கேட்டுப் பயனடையும்படி நற்பணிகளை ஆற்றிடுக!
வேத சக்திகள் நிறைந்த முழு முந்திரி கலந்த பாயசம், உணவு வகைகளைத் தானம் செய்தல் மிகவும் விசேஷமானதாகும்.
கை கால்கள், விரல்கள் எதுவுமே தரையில் படாது, தர்பைப் பாயில் பத்மாசனம் பூண்டு ஒரு நாழிகையேனும் அமர்ந்து மறைகளை ஓதி வழிபடுக.
பீஷ்மர் போன்று சத்யப் பூரணமான பிரம்மசாரிகளைக் காணுதல் அரிது. வாழ்வில் ஒரு விநாடி கூடக் காமத்திற்கு அடிமையாகாதவர். தவறான எண்ணங்கள் ஒரு போதும் தன் மனதில் எழாது உத்தமமாக வாழ்ந்தவர்.  
பீஷ்ம பஞ்சக விரத நாட்களில் ஒரு வேளை மட்டும் கீரை வகை உணவுகளை மட்டும் உண்டும்,
சுயம்பு மூர்த்தி, பல யுகங்களாக நிலவும் தீர்த்தம், பல புராணங்களிலும் பங்கு பெற்றத் தலம், நெடுயுகங்களாக உள்ள தல விருட்சம், புனிதமான நதிக்கரைத் தலம் ஆகிய ஐந்து சக்திகளை உடைய ஆலயங்களில், ஐந்து நாட்களும் தரிசித்தல் மிகவும் விசேஷமானது.
ஒழுக்கம் கெட்டு, தறி கெட்டு, நெறி கெட்டு, புத்தி கெட்டு, குணம் கெட்டு ஐந்து குணத் திரிபுகளுடன் அவலமாக வாழும் தன் பிள்ளைகளைப் பற்றி மிகவும் கவலை கொண்டு உள்ள பெற்றோர்கள், மேற்கண்ட வகையில் ஐந்து தலங்களிலும், ஸ்ரீவேதபுரீஸ்வரர் என இறைவன் அருளும் தலங்களிலும் பீஷ்ம பஞ்சக நாட்களில் வழிபட்டு, வேத சக்திகள் நிறைந்த முழு முந்திரி கலந்த உணவு வகைகளைத் தானமாக அளிப்பது நல்ல பலன்களைத் தரும்.
வேதநிதிய சக்திகள் நிறைந்த பீஷ்ம சக்திப் பொருட்கள் உண்டு.
1. எவர் கண்ணும் படாது வேதம் போல் மறைந்தருளும் இளநீர்,
2. பழத்திலிருந்து அபூர்வமாக வெளியே வந்து வேத வான தரிசனம் பெறும் முழு முந்திரி,
3. பிற பழங்கள் போல் பழுத்தும் அழுகாது நெடுங்காலம் வேத காரணத்தால் ஜீவிக்கும் சிறு திராட்சை (கிஸ்முஸ்)
4. பசுமையாகவே, பச்சையாக பூஜிக்கப் பெறுவதும், பூக்களின் அருளைத் தாங்கி இலை வகையாகவே அர்ச்சிக்கப் பெறுவதும், மாலையாக்கப் பெறுவதும், உண்ணப் பெறுவதுமான துளசி,
5. தேனிப் பூச்சிகளின் வாய்ப் பூர்வமாகச் சேகரிப்பு ஆகி, பல காலமாகவும் இனித்து வந்து, எக்காலமும் புனிதமாக இருந்து, எந்த விதமான தோஷங்களும் அண்டாது தினமுமே இறைவனை அபிஷேகிக்க வல்ல தேன்
- ஆகிய அபூர்வமான வேதநிதிய, பீஷ்ம பஞ்சக வஸ்துக்களை வைத்துப் பூஜித்தும் இவற்றைப் பிரசாதமாகச் சிறிதே உண்டு ஐந்து நாள் விரதம் இருத்தலும், இந்த ஐந்தையும் ஏழைகளுக்குத் தானமாக வழங்குதலும், வேதநிதி சக்திகளைப் பெற்றுத் தருவதாகும். வேதநிதி என்பது வேத சக்திகளை, வேத மந்திரங்களைப் பாமரரும் கேட்கும் வண்ணம் ஆலயங்களிலும் பலரால் ஓதவைத்துக் கேட்கச் செய்வதாலும் கிட்டுவதாகும்.

துளசி மகிமை

ஸ்ரீதுளசி தேவி ஸ்ரீமஹாவிஷ்ணுவை மணந்து கொண்ட உத்தம புராண அனுபூதிகள் நிறையவே உண்டு. தல புராணங்களாகவும், புராண அனுபூதிகளாகவும் அமைந்துள்ள இவற்றுள் பலவும் தக்க சித்தர்கள், மஹரிஷிகள் மூலமாகப் பூவுலகிற்கு அளிக்கப் பெறும்.
ஸ்ரீஆதிமூலத் துளசி தேவி, பன்னெடுங் காலமாக, கடுமையான பல விரதங்களை மேற்கொண்டு, இறையருளால் திருமாலை மணந்தாள். துளசி என்ற திருநாமமானது ஆதிசிவனும், துளசிங்கப் பெருமாளும், பிரம்ம சக்திகளும் பரிபூரணமாக நிறைந்துள்ள பரிணமிப்புடையது ஆகும். எனவே, துளசிச் செடிப் பூஜையானது, முப்பெரும் தெய்வானுகிரகங்கள் நிறைந்தவை. ஆக்கல், காத்தல், மறைத்தல் ஆகிய மூன்று தேவ சக்திகளும் நிறைந்த மும்மூர்த்தி லோகங்களிலும், தெய்வ மூர்த்திகள் முதல் தேவாதி தேவராதிகளாலும், சித்புருஷர்கள், மஹரிஷிகள், மானுடராலும் அனைவராலும் அர்ச்சித்து, ஆராதனை செய்யப் பயன்படுவதே துளசி தளமாகும்.

ராமநந்தி ஸ்ரீவில்லிபுத்தூர்

ஒவ்வொரு துளசி இலையிலும், பெருமாள் மற்றும் துளசி தேவியின் அருட்கடாட்ச சக்திகள் நன்கு நிறைந்துள்ளன. வீட்டில் துளசிச் செடி வைத்திருந்தால் மட்டும் போதாது. தினமுமே மஞ்சள், குங்குமிட்டு வலம் வந்து வழிபடுதல் வேண்டும். பெண்களால் வழிபட இயலாத போது, பிள்ளைகளும், ஆண்களும் பூஜித்தல் வேண்டும்.
ஒவ்வொருவரும் துளசிச் செடியைத் தினமும் காலை, மதியம், மாலையில் 36 முறை வலம் வந்து வணங்குதல் வேண்டும். துளசி இலையில் உள்ள காரம் மிளகாய் வகைக் காரம் அல்ல, தொண்டையில் உள்ள பந்தள நாளங்களுக்கு ஆக்கமும், புத்துணர்ச்சியையும் தந்து ஆக்கப்படுத்தும் சித்சக்திகளை உடையதாகும். சிறந்த மூலிகா சக்திகளை உடையது. பூஜைகள் மற்றும் மருத்துவத்திற்கு மட்டுமல்லாது, வேறு எதற்குமாகச் சாதாரண வகையில் துளசியைப் பறித்தல் கூடாது.
துளசி அதியற்புத மூலிகையாகவும் துலங்குவதால், இருதயவள நாள ஆரோக்ய சக்திகள் நிறைந்ததாகவும் பிரகாசிக்கின்றது. இதனால், காலையில் (பூஜித்த அல்லது பிரசாதமாகப் பெற்ற) மூன்று துளசி இலைகளை உண்டு, துளசித் தீர்த்தத்தையும் சிறிது அருந்தி வருதல், ரத்த அழுத்த நோய்கள், இருதய நோய்கள், சுவாச நோய்கள் வாராதவாறு தற்காப்பு சக்திகளைத் தரும்.
துளசிச் செடியைப் பூஜித்து வருதலால், காலத் தடங்கல்கள் ஏற்படாதவாறு தற்காத்துக் கொள்ளலாம்.
ஒவ்வொரு துளசி தளத்திற்கும் கீழ்க்கண்ட மந்திரங்களை ஓதித் தொடுத்து, பிரதோஷ நேரத்தில் சிவனுக்கும், பெருமாளுக்கும் சார்த்தி வழிபடுக!
கல்யாண நாம விகல நிதி: கா(அ)பி காருண்ய ஸீமா
நித்யாமோதா நிகம வசஸாம் மெளலி மந்தார மாலா
ஸம்பத் திவ்யா மது விஜயிந: ஸந்நிதத்தாம் ஸதா மே
ஸைஷா தேவீ ஸகல புவந ப்ரார்த்தநா காமதேநு:
சத்குணப் பாத்திரதாரீ! காருண்ய நிதி ப்ரவாளம்!
நறுமண நாச்சாள் தேவீ! நல்வரக் காமதேனூ!
பரந்தாமன் நெஞ்சுடைப் பாங்கு! பரவேத மந்தார மாலை!
நித்திய வாசம் எம்முள்! நிறைவாய் உறைவாய் மாதே!

நிறையத் துளசிகளை வைத்துப் பசுக்களுக்குத் துளசி மாலை சார்த்தி, நிறையத் துளசித் தீர்த்தத்தை, கஞ்சி நீர், புண்ணாக்கு நீரில் சேர்த்துப் பசுக்களுக்கும் அளித்தல் சிறப்புடையதாகும். துளசிங்கப் பெருமாள் அருளும் ஆலய வழிபாடு விசேஷமானது. வீட்டில் பெரியோர்களுடன் மனத்தாங்கல்கள் கொண்டு ஒருவருக்கொருவர் பேசாமல் இருக்கும் அசாதாரண நிலை மாறிட, இவ்வகைப் பூஜா பலன்கள் நன்கு உதவும்.

நாட்டியத் துறையினர் நாட வேண்டிய தலம்

மதுரை - வாடிப்பட்டி - திண்டுக்கல் மார்கத்தில், வாடிப்பட்டி அருகே ஊருதட்டு எனும் அற்புதச் சிவத்தலத்தில், நரசிங்கப் பெருமாளுக்கு முன் சுயம்பு லிங்கம் துலங்குகின்றது. ஸ்ரீரங்கத்தில் காட்டழகிய சிங்கப் பெருமாளுக்குப் பிரதோஷ உற்சவம் நிகழ்வது போல, ஊருதட்டு தலத்தில் ஸ்ரீநரசிங்கப் பெருமாளுக்கு பிரதோஷ உற்சவம் நிகழ்த்தி வரத் தக்க ஏற்பாடுகளைச் செய்து தந்து ஆற்றி வருதல், சந்ததிகள் நன்கு தழைக்க உதவும்.

ஸ்ரீஔர்வ தட்சிணாமூர்த்தி
தக்கோலம்

இரட்டைக் குழந்தைகளைப் பெற்றோரும், இரட்டையாய்ப் பிறந்தவர்களும், ஊருதட்டுத் தலத்தில், சனிக் கிழமைகளிலும், பிரதோஷ காலத்திலும் இங்கு தென்னை, வில்வ மரங்களைப் பூஜித்தல் மிகவும் விசேஷமானதாகும். அக்காலத்தில் ஒரே தாம்பாளத்தில் இரு பாதங்களையும் வைத்து, நகர்ந்து பரத நாட்டியமாடும் நிகழ்ச்சி நிகழ்ந்த அற்புத நடன யோக சக்திகள் நிறைந்த தலம். நாட்டியத் துறையினர் கண்டிப்பாக வழிபட வேண்டிய தலம்.
தம் தாயின் துடை (ஊரு = துடை) மூலமாகப் பிறந்த ஒளர்வ மஹரிஷி, முதலில் தாம்பாளத்தில் பூமியில் தவழ்ந்து ஜனித்தத் தலம் ஆதலாலும், தினமும் ஒளர்வ மஹரிஷி, தூல, சூக்கும சரீரங்களில் வழிபடும் தலமாதலாலும், ஊருதட்டு என இத்தலம் பிரசித்தி பெற்றது. ஒளர்வ மஹரிஷியைக் கோத்ராதிபதியாக, குலமாமுனியாகக் கொண்டவர்கள், பிரதோஷ நாளிலும் வருடந் தோறுமாக, அடிக்கடியும் குடும்பத்தோடு வந்து வழிபட வேண்டிய தலம்.
ஊரு தட்டுத் தலத்தில் ஸ்ரீநரசிம்மருக்கு, ஸ்ரீரங்கம் காட்டழகிய நரசிம்மப் பெருமாள் போல, பிரதோஷ உற்சவத்தை நிகழ்த்தி, கடன் துன்பங்களை நீக்க வல்ல ஸ்ரீநரசிம்மருக்கு உரிய ருண ஹரத் தோத்திரத்தை 36 முறை ஓதி, ஆலயத்தை 36 முறை வலம் வந்து, பிரதோஷ நேரத்தில் பானக தானம் அளித்து வழிபடுவோர்க்குக் கடன் பிரச்னைகள் தீர, நல்வழி பிறக்கும். சனிக் கிழமையிலும் மற்றும் பிரதோஷ நேரத்திலும் ஆழ்ந்த நம்பிகையுடன் தொடர்ந்து இதனை ஆற்றி வருதல் வேண்டும்.

காரியத் தடங்கல்கள் அகல ...

திங்கட் கிழமை அன்று வரும் சதுர்த்தசித் திதிக்கு யோக வலிமை சக்திகள் நிறைய உண்டு. சதுர்த்தசியை அடுத்த திதி நாளாக, பூரணத் திதியான அமாவாசையோ, பெளர்ணமியோ வந்தமைவதால், சதுர்த்தசித் திதிக்குப் பூரணக் காரணத் திதி என்ற பெயர் உண்டு. எந்த வைபவம், சம்பவம், அனுபவம், அனுபூதிக்கும் அது அது நடந்ததற்கான, நடப்பதற்கான காரணங்களை உணர்த்த வல்ல காரண சக்திகளைக் கொண்டதே சதுர்த்தசித் திதியாகும். இதனால்தாம், நாடி ஜோதிடக்காரர்கள் சதுர்த்தசித் திதி தோறும் காரண மஹரிஷி வழிபட்ட தலங்களில் பூஜைகளை மேற்கொள்வதும், நாடிகளின் காரண காரிய கால தீர்க சக்திகளை நன்கு மேம்படுத்தித் தரும்.

ஸ்ரீராமர் வழிபட்ட மூர்த்திகள்
சாக்கோட்டை

யோகத்தின் அம்சமான ஆசனங்கள் தியான, யோக சக்திகளைத் தாங்கி தீர்க ஆயுளையும், நல்ல மன ஆற்றலையும் தர வல்லவையாகும். ஒவ்வொருவரும் தினமும் நான்கு வகை ஆசனங்களையேனும் தினமும் கண்டிப்பாகச் செய்து வர வேண்டும். இவை தாம் உடலில் உள்ள மிகவும் முக்கியமான தச (பத்து வகை) நாடிகளையும் சீர்படுத்த வல்லவையாம். தினமும், ஒரு நாழிகையாவது (24 நிமிடங்கள்) பத்மாசனத்தில் அமர்ந்து பழகி வருதலானது, பத்து வகை ஆரோக்ய நாளங்களையும், நாடிகளையும் மேம்படுத்தி, சுவாச நோய்கள், மூல (குத) நோய்கள், முழங்கால் மூட்டு நோய்கள், ரத்த அழுத்த நோய்கள், இருதய நோய்கள் வராமல் தற்காத்துக் கொள்ளப் பெரிதும் உதவும்.
சதுர்த்தப் பலம் என்பது நான்கு சக்திகளின் வலிமையை, நல்வகையில் பயன்படுத்திக் கொள்வதாகும். சதுர்த்தி, சதுர்த்தசித் திதிகள் வாழ்வில் பல துறைகளிலும் ஸ்திரத் தன்மைகளைப் பெறுவதற்கான பூஜா பலன்களைக் கொண்டுள்ளன. பிற எண்களை விட, நாலாம் எண்ணிற்கு ஸ்திர சக்திகள் நிறைய உண்டு. பத்தும் நாலும் பரவலிபாதம் என்பது பதினான்காம் திதியான சதுர்த்தசியின் மேன்மையை உணர்த்துவதே! நான்கு காலில் நிற்பதுதானே நாற்காலிக்கும், நான்கு கால் மண்டபங்களுக்கும் நல்ல ஸ்திரத் தன்மை அளிக்கின்றது அல்லவா! சனிக் கிழமைக்கும் ஸ்திர வாரம் என்ற பெயர் உண்டு என்பதால் சனிக் கிழமையன்று கூடி வரும் சதுர்த்தசியிலும், மனோசக்தி வாரமாகியத் திங்களன்றும் பதினான்கு வகை மனுக்களுக்குத் அர்க்யங்களை அளிப்பதும், 14 வகை ஆலயக் கலசங்கள், பலி பீடங்களைத் தரிசிப்பதும் மிகவும் விசேஷமானதாகும்.
பல ஆலயங்களில் கும்பாபிஷேகப் பணிகளும், பலருக்கும் கட்டட வேலைகளும் பூர்த்தி பெறாது, ஏதேதோ காரணங்களால் பாதியிலேயே நின்று போய் மன வருத்தத்தைத் தரும். இத்தகைய இடங்களில் சதுர்த்தசித் திதியில் கணபதி ஹோமத்தை நிகழ்த்தி, மறுநாள் பெளர்ணமி அல்லாது அமாவாசையன்று ககார கணபதி சஹஸ்ரநாமத் துதிகளால் மஹாகணபதியை அர்ச்சித்து, அதே இடத்தில் 14 வகை உணவுப் பண்டங்களை அன்னதானம் செய்து வந்தால், ஹோம பூஜை சக்திகளும், அன்னதான சக்திகளும் சதுர்த்த பலம் பெற்றுத் தடங்கல்களை நீக்கிட உதவும்.  
கட்டட வேலைகள் நன்கு பூர்த்தி பெறவும், நெடுங்காலமாகக் கோர்ட் வழக்கில் இருக்கும் நிலம், சொத்துப் பிரச்னைகளும் தீர்வு பெறவும், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் - பொன்னமராவதி மார்கத்தில், கடியாபட்டி - ராங்கியம் அருகே உள்ள துர்வாசபுரத்தில் உள்ள ஸ்ரீபாதாளீஸ்வரர் ஆலயத்தின் முன் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த கணபதியைச் சதுர்த்தசித் திதி நாட்களில், மேற்கண்ட வகையிலான சதுர்த்தசி ஹோமம், 1008 ககார கணபதி சஹஸ்ரநாமத் துதிப் பூஜை, 14 உணவு வகைகள் அன்னதானத்துடன் வழிபட்டு வர நல்வழிகள் கை கூடி நற்காரியத் தடங்கல்கள் அகல உதவும்.
சதுர்த்தசித் திதி தோறும் 1008 ஹோம குண்டங்களுடன் விண்ணளாவ ஹோம நறுமணப் புகை மணக்க, மணக்க துர்வாச மகரிஷி ஆற்றிய அகண்டகார ஹோம பூஜைகளை ஸ்ரீராமர் தம் பரிவாரங்களுடன் நன்கு தரிசித்த,பலரும் அறியாத, மகத்தான சிவத்தலம். ஸ்ரீராமர் பூஜித்த சிவத் தலங்களுள் துர்வாசபுரமும் ஒன்றாகும்.

முடவன் முழுக்கு

உண்மையாகவே, கலியுகத்தில் நிகழ்ந்த அற்புத நிகழ்ச்சியே முடவன் முழுக்கு அனுபூதியாகும். ஒரு பக்திமிகு முடவருக்கு இறைவன் விசேஷமாகக் காட்சி தந்து ஆட்கொண்டருளிய நன்னாள்! மயிலாடுதுறையில் காவேரிக் கட்டத்தில் துலா மாதத்தில் நீராடுதலால் எத்தகைய கொடிய கர்ம வினைகளையும் களைய வல்ல தீர்த்த நீராடல் பலாபலன்களை அடையலாம் என்பதை நன்கு பக்திப் பூர்வமாக உணர்ந்திருந்த ஒரு முடவர், அக்காலத்தில் வாகன வகதிகள் இல்லாத சமயத்தில், தரையில் ஊர்ந்து, ஊர்ந்து வந்து, துலா மாதமாகிய ஐப்பசி மாத நீராடலுக்காக, மயிலாடுதுறையை அடைந்தார். இதற்குள் ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை பிறந்துவிட்டது.

ஸ்ரீகாவிரி அம்மன்
மங்கலக்குடி

இதனால், மிகவும் வேதனையுற்ற அந்த முடவர், சிவபெருமானை நோக்கித் தவமிருந்து அழுது, புரண்டு துதித்தார். அவருடைய பக்தியை மெச்சிய ஈஸ்வரன், கார்த்திகை முதல் தேதியானாலும், இன்றைய நீராடல் துலா மாத நீராடலின் முழு பலனையும் தரும் என்று வரம் தந்ததுடன், அவருக்கு வேறு எது வேண்டுமென கேட்க, நாமெல்லாம் நினைப்பது போல, அந்த முடவர் தன்னுடைய உடல் ஊனமானது சரியாக வேண்டும் என்று வேண்டிடவில்லை. தன் உடல் ஊனத்தால்தான் இறைவனின் மேன்மையை உணர்ந்து தனக்கு இறை தரிசனமே கிட்டியது என்று அவர் உணர்ந்தமையால், பூர்வ ஜன்ம விளைவுகளால் வந்த இந்த முடத்தை அனுபவித்தே கழித்திட வேண்டும், என்ற எண்ணம் அவருள் உயர்ந்தோங்கியது. இதனால், தனக்கு இறைவன் அளித்த விசேஷமான முடவன் முழுக்கு நீராடல் பலன்கள், யாவும் பிறருக்கும் சென்றடைய வேண்டும் என்ற தியாக உள்ளத்துடன் நல்வரம் வேண்டினார். இறைவனும் அவருடைய அன்புடைய உள்ளத்தைக் கண்டு ஆனந்தித்து அவரைத் தடுத்தாட்கொண்டு அருளினார்.
மன ஊனம், உடல் ஊனம், உள்ளம் ஊனம் உடையவர்கள் - இவற்றை இனியேனும் பெறாமல் இருக்கவும், நல்ல புண்ணிய சக்திகளை அடையவும் கார்த்திகை மாத மாதப் பிறப்பன்று காவேரி நீராடலை மேற்கொள்தலும், காவேரி அம்மன் அல்லது கங்கை அம்மனுக்கு 12 விதமாக அபிஷேகம் ஆற்றுதலும் சிறப்புடையதாகும்.
பொறாமை, பேராசை, கயமை, பிறரை ஏமாற்றுதல், பிறர் பொருள், சொத்துக்களை அனுபோகம் செய்து வாழ்தல், பிறன் மனை நோக்குதல் போன்றவை மன ஊனங்களாகும். நம்முடைய இன்ப துன்பங்களுக்கு நம்முடைய கர்ம வினைகளே காரணம் என்று உணராதிருத்தலும், இறையருளால்தான் ஒவ்வொரு விநாடி வாழ்க்கையும் நிகழ்கின்றது என்று அறியாதிருத்தலும் உள்ளத்தில் நிலவும் ஊனமாகும். புனித தீர்த்த நீராடலில்தான் தலை முதல் அடிப்பாதம் வரை அனைத்து உறுப்புகளுமே ஜல ஸ்பரிசம் பெறுவதால், மேற்கண்ட மூன்று வகை ஊனங்களுக்கும் காரணமான கர்ம வினை மாசை அகற்றுவதற்கு புனிதத் தீர்த்த நீராடலை அடிக்கடி மேற்கொண்டு வருதல் வேண்டும்.
சனி நீராடல் என்பது சனிக் கிழமை அன்று எண்ணெய் தேய்த்து நீராடல் என்ற அர்த்தத்தோடு மட்டும் அல்லாது, சனிக் கிழமை தோறும் புனித தீர்த்தங்களில் நீராட வேண்டும் என்பதும் இதில் புலரும் அர்த்தமாகும்.
ஒவ்வொருவர் வீட்டிலும் குறைந்தது ஒரு பானை காவேரி அல்லது கங்கை நீரை எப்போதும் கை வசம் வைத்திருக்க வேண்டும். அவ்வப்போது ஆலயத்திற்கும், நல்ல பூஜைகள் நடக்கும் பிற வீடுகளுக்கும் புனித நதி தீர்த்தத்தைத் தானமாக அளித்தல் மிகவும் விசேஷமானது.
தினமும் காவேரி அல்லது கங்கை தீர்த்தத்தில் சந்தனத்தை அரைத்து, விநாயகருக்கும் சரஸ்வதிக்கும் குழந்தைகளைக் கொண்டு இட்டு வரச் செய்வது ஸ்திர புத்தியையும், நல்ல புத்தியையும் தரும்.  

மௌனம் போக்கும் மரண பயம்

ஒரு நாள் முழுதும் மரண யோகமாக வந்தமைந்தால் என்ன செய்வது? என்னதான் செய்ய முடியும்? என்னதான் செய்ய வேண்டும்? கலியுகத்தில் அனைத்துமே இயந்திர கதியாக, வாழ்க்கையே வேகமாக ஓடும் இயந்திரமாக பலருக்கும் தோன்றுகிறது. உண்மை இதுவல்ல. காலத்தை எப்படி நன்கு பயன்படுத்திக் கொள்வது என்ற தீர்க்கமான முடிவை வாழ்க்கையில் மேற்கொள்ளாமையால்தான், இயந்திர கதியான வாழ்க்கை, இயந்திர கதியான ஆபீஸ் என்று பலரும் புலம்புகின்றனர்.
மரண பயம், மரண நோய்த் தன்மை என்று மரண பய அம்சங்களிலும் பல வகைகள் உண்டு. சராசரி மனிதனுக்கு யம பயம், மரண பயம் ஏற்படுவது உண்டு. சிறு பிராயத்தில் இவை ஏற்படுவது கிடையாது என்றாலும் பேய் பயம், பிசாசு பயம் என்ற வகையில் பிறிதொரு விதமாக மரண பயம் ஏற்பட்டு விடுகின்றது.
பொதுவாக, மூன்று வயதிற்கு உட்பட்ட தெய்வீகம் நிறைந்த குழந்தைப் பருவத்தில்தான் மரண பயம் அகன்று இருக்கும். காரணம், இப்பருவத்தில்தான் கடந்த ஜென்மங்களின் நினைவுகள் பதிந்து இருக்கும். ஆனால், இவற்றை வெளியிட இயலாது, வெளியிடவும் கூடாது, அத்தனையும் தேவ இரகசியங்கள் ஆகும். எனவேதான், இறைவனே பேச்சுப் பருவம் தொடங்கும் வரை மட்டுமே பூர்வ ஜன்ம நினைவுகளைக் குழந்தைப் பருவத்தில் இருத்தி வைக்கின்றான். பேச்சு வந்தவுடன் சிறிது, சிறிதாக பூர்வ ஜன்ம நினைவுகள் மறைந்து விடும். இதன் மூலம் என்ன தெரிகின்றது?
மெளனமே யம பயம், மரண பயத்தின் தன்மைகளை உணர்விக்கும் அற்புதமான ஆன்மீகச் சாதனமாகும். மெளனம் என்றால் வாய்ப் பேச்சு அடங்குவது மட்டும் அல்ல. மனமும் உள்ளமும் எவ்வாறு ஆழ்ந்த உறக்கத்தில் அடங்குகின்றனவோ, இதே போல மெளன விரதத்திலும் நிகழ்வதே உண்மையான தியான யோகமாகும்.
மரண யோக நாளில் மிருத்யுஞ்ஜயத் தோத்திர ஜபம் அவரவருக்கு ஜாதகப் பூர்வமாக மாரக ஸ்தானாதிபதி, மாரகத்தைக் கொடுக்கக் கூடிய தசாநாதர்கள், புக்தி நாதர்கள், அந்தர நாதர்கள் இவர்களையும் முறையாக மரண யோக நாளில் வழிபடுதல் வேண்டும். தர்ம ராஜ மூர்த்தியாகிய எமதர்மராஜரின் வழிபாடும், எமவந்தனமும் மரண யோக நாளில் முக்கியத்துவம் பெறுகின்றன.
த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்த்தனம்
உர்வாருக மிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்
என்பது மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம் என்பதை நாம் அறிவோம். இதனை மரண யோக நாளில் நாள் முழுதும் ஓதி வருதலும் மிருத்யுஞ்ஜய ஹோமத்தை நிகழ்த்தி வருதலும், மரண பயத்தைச் சிறிது சிறிதாக அகற்ற இயலும். மரண பயம் இல்லாத வாழ்வுதான் உண்மையான ஆரோக்யம் தருவதாகும். மரண பயம் அகல்வதற்கான ஆலய வழிபாட்டை எமனேஸ்வரத்தில் சதய நட்சத்திரம், திரிதியைத் திதி நாட்களில் மேற்கொண்டு வருதல் நன்று.

இன்னல்கள் தணிக்கும் இனிய பூஜை

பலரும் சங்கடங்களாகிய, துன்பங்கள் தினமும் ஏன் வருகின்றன என்று ஒரு முறை கூட சற்று ஆழ்ந்து சிந்தித்து அறிந்து கொள்ள முயல்வதில்லை. முதலில் ஒவ்வொருவரும், தானே, தாமே தன் சங்கடங்களுக்கு, துன்பங்களுக்குக் காரணம் என முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இது மிகவும் கசப்பான உண்மையே, என் செய்வது, சத்யப் பூர்வமானதை பன்முறையும் சொல்லித் தானே ஆக வேண்டும்.
நான்கு புறங்களில் இருந்தும் துன்பங்கள் வருவதாகவே பலரும் எண்ணி, பிறரே தம் துன்பங்களுக்குக் காரணம் எனவும் கருதி, நியாயமற்ற முடிவுக்கு விடுகின்றார்கள். வெளியில் இருந்து துன்பங்கள் - பொறாமை, பகைமை, விரோதம் போன்றவை மூலமாக வருவது போல் தோன்றினாலும், பூர்வ ஜன்ம ரீதியாகத் தொடர்பு கொண்டவர்கள் மூலமாகவே இவை வந்தமையும் எனவும் அறிக!

ராமநந்தி தம்பிக்கோட்டை

எனவே, தானே தம் இன்ப, துன்பங்களுக்குக் காரணம் என ஒவ்வொருவரும் முதலில் நன்கு தெளிவாக உணருதல் வேண்டும். இதனைத் தாம், தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற நல்வாக்கியமாக உத்தமர்கள் உரைத்துள்ளனர். அதாவது, பூர்வ ஜன்மங்களிலும், நடப்புப் பிறவி வாழ்க்கையிலும், செய்தவற்றின் விளைவுகளே, ஒருவர் செல்லும் வாழ்க்கைப் பாதையில், நல்லது கெட்டது தாம், வாழ்க்கைச் சம்பவங்களாக அமைந்து வருகின்றனவே தவிர, வெளியாரால், வெளிச் சம்பவத்தால் எந்த இன்பமும், துன்பமும் விளைவது கிடையாது.
உலகில் தினமும் எத்தனையோ சம்பவங்கள் நடக்கின்றன, அவற்றுக்கும், ஒரு தனி மனிதனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லைதானே என்பது போல்தான் தோன்றும்! எவரோ விபத்தில் சிக்கினார்கள், எங்கோ மரம் விழுந்தது என்று தனக்குச் சம்பந்தம் இல்லாது பலவும் நிகழ்வது போல் தோன்றும். உலகில் நிகழும் பலவற்றுக்கும் தனக்குச் சம்பந்தம் இல்லையெனில், பின் எவ்வாறு தீடீரென்று தலைவலி, உடல்வலி, காய்ச்சல், நோய்கள், திடீர் நஷ்டங்கள், மனத்தாங்கல்கள், குடும்பத்தில் சச்சரவுகள், அலுவலகத்தில் பிரச்சனைகள் என்றவாறாக ஏற்படுகின்றன? இதற்காக ஏற்கும் மருந்துகள், வாங்கும் பொருட்கள் பல்லாயிரம் இடங்களில் சம்பந்தப்பட்டுத் தானே வருகின்றன.

எனவே, உலகத்தில் அனைவருடைய தினசரி வாழ்வின் நிகழ்வுகளிலும், ஏனைய சம்பவங்களிலும் சிலந்தி வலை போல, கோடிக் கணக்கான உலக மக்களின் ஒவ்வொரு செயலும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன.
ஒவ்வொரு மனிதனும் தன் நிலை, தன் குடும்பம், தன் அலுவலகம், தன் வாழ்க்கை என்று தன்னைப் பற்றியச் சிந்தனையிலேயே தன் வாழ்க்கையை ஓட்டுவதால்தான் உள்ளமும், மனமும், அறிவும், மேற்கண்டவற்றைப் பற்றி ஒரு சிறிதேனும் அறியமுடிவதில்லை. இதனால்தாம் உலகியல் நிகழ்வுகளுக்கும், நமக்கும் என்ன சம்பந்தம் எனத் தோன்றுகின்றது! அரசியல், சினிமா, விளையாட்டு போன்றவற்றை மக்கள் மிகவும் ஆவலுடன் பார்க்கும், அறியும் பாங்கில் கிடக்கும் ஆர்வத்தில் இருந்து உலகியல் நிகழ்வுகளுக்கும் சராசரி மனிதனுக்கும் பூர்வ ஜன்மப் பூர்வமாகத் தொடர்பு உண்டு என்பது தெரிகின்றது அல்லவா!
சதுர்த்தி நாளில் நாலாபுறத்தில் இருந்து நற்கதிர்ப் பரிமாணங்கள் உள்ளும், வெளியும் நிகழ்வதால்தான், சங்கட ஹர சதுர்த்தியாகப் பொலிகின்றது. சதுர்த்தி நாளில் நான்கு திசைகளிலும் நின்றும், சாஷ்டாங்கமாக வீழ்ந்தும் வணங்கிட வேண்டும். அத்தி மர விநாயகர் தரிசனம் மிகவும் விசேஷமானதாகும்.

ராம நந்திகளின் ஆசி

புனர் பூஜை என்றால் புனரமைத்துத் தரும் வழிபாடு என்று பொருள். ஆலயம் அமைந்துள்ள வீதியில் எவரேனும் இறத்தல், ஆலயத்தினுள் எவருக்கேனும் மரணம் ஏற்படுதல் போன்றவற்றால், ஆலய வழிபாடுகளுக்குத் தடங்கல்கள், தோஷங்கள் ஏற்படுகையில், தீர்த்தக் கலசத்தில் தர்பைச் சுற்றிப் பூஜித்து, மாவிலைகளால் ஆலயமெங்கும் புனர் தீர்த்தத்தைத் தெளித்துப் புனர் பூஜை செய்வர். இறப்பு நிகழ்ந்த வீட்டிலும், இவ்வாறு புனர்பூஜை செய்வது உண்டு. எனவே, தோஷங்களை, பிழைகளைத் திருத்திட உதவும் எந்த நல்முறைக்கும் புனர் பூஜை என்று பெயர்.
உண்மையில், ஒவ்வொருவரும் தினமும் இரவு படுக்கப் போகும் முன் புனரமைப்பு யோக வகுப்பை ஆத்ம தியானப் பூர்வமாக ஆற்றிட வேண்டும். தற்காலத்தில் பலரும், களைப்படைந்த நிலையிலேயோ அல்லது உறக்கம் வந்த உடனேயோ, படுக்கையில் தொப்பென்று விழுந்து உடனேயே உறங்கி விடுவர், இது சரியல்ல. உறங்குவதற்கு முன், குறைந்தது ஒரு நாழிகையேனும் (24 நிமிடங்கள்) அன்றைய நாளில் நடந்தவற்றை மனதில் அலசி ஆராய்ந்து, எவ்வகையில் தன்னைப் புனரமைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆத்ம விசாரம் செய்திட்ட பின், இரவுக்கான பிரார்த்தனைகளைச் செய்து உறங்கிட வேண்டும். இவ்வாறு உறங்கும் முன் அமையும் ஒரு நாழிகை விழிப்பு நிலைக்கு புனர்த் துறைக் காலம் என்று பெயர்.

வில்லூண்டி தீர்த்தம் ராமேஸ்வரம்

இவ்வாறு தூக்கத்திற்கு முன் உடலில் விழிப்பு நிலை உணர்வுகள் இருக்கும் போதே, மனதை நன்கு பண்பட உழுவதற்குப் புலத்தியம் என்று பெயர். இதனால் களைப்பு, அசதி அகல்வதுடன், நல்ல மனசாந்தத்துடன் உறங்கிட முடியும். தேவையற்ற, விபரீதமான, பீதி தரும் கனவுகளைத் தவிர்த்திட முடியும். நான்கு மணி நேர உறக்கம் கூட எட்டு மணி நேர ஓய்வைத் தந்திடும்.
புலன்களை, அதாவது உடல் அங்கங்கள் பெரும்பாலும் ஒடுங்கிடும் நிலையில், மன உடலைச் சுமந்து செல்லும் யாத்திரையும் புலத்தியத்தின் அங்கமாகும். இந்த புலத்தியத்தில்தான், புலப்புல அருவியில்தாம், மனப் புல ஆகர்ஷண சக்திகள் எழுந்திட, இதில் கிளைக்கும் மனோமிர்த ஓடையால், அருவியில் நீராடிட, மனத் தூசுகள் அகலும். இதற்குப் புனர்பூசம் நிறைந்த நாள் நன்கு உதவும். பூசம் என்பதற்கு, பரிணமிப்பு, பரிபூரணித்வம், பரிபூரணிப்பு, அவயப் புலாம்ச நிறைவு என்ற வகையில் நிறைவான அர்த்தங்கள் பல உண்டு.
புனர்பூச நட்சத்திர நாளில், தீர்த்த நீராடல் மிகவும் விசேஷமானதாகும். குறிப்பாக, அருவி நீராடல் மிகுந்த பலன்களைத் தர வல்லதாம். எனவே புனர்பூச நாளில் தீர்த்தம், மந்திரம், ஒளஷத முறைகளில் உள்ளம், மனம், உடலைத் தூய்மை செய்து கொள்ள நல்வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
புனர் பூச நட்சத்திரம் ராமருக்கு உரித்தானதாகும். எனவே புனர்பூச நட்சத்திர நாளில், ஆதித்ய ஹ்ருதய மந்திரங்களை ஓதி, ஸ்ரீராமரால் உருவாக்கப் பெற்றத் தீர்த்தம் (தனுஷ்கோடி, கோடிக்கரை ராமேஸ்வரம், பட்டீஸ்வரம் போன்றவை) உள்ள தலங்களில் நீராடுவது மனசுத்திக்கும் நன்கு உதவும்.
இவ்வாறு ராமர் தம் திருக்கரங்களால், வில்லால் உருவாக்கிய ராமாமிர்த சக்தித் தீர்த்தங்களில், அமிர்த சித்சுத்தி சக்திகள் நிறைந்ததாய், மனசுத்திக்கு நல்வழி தரும் பிரண்டைத் துவையலுடன் சேர்த்து அன்னதானமளித்திட, தீர்த்த நீராடற் பலன்கள் பன்மடங்காய்ப் பெருகும். இதன் மூலம் மனதை நெடுங் காலமாக அரித்துக் கொண்டு வரும் பெரும் பாரச் சுமையும் தணிய உதவும்.
ஸ்ரீராமர் பூஜித்த ஆலயங்களில் உள்ள நந்திகளுக்கு ராமநந்திகள் என்று பெயர். மனைவி, பெற்றோர்கள், பிள்ளைகளிடமும் உங்களால் சொல்ல முடியாத, மனதால் பரிமாற முடியாதவற்றை ராமநந்தி மூர்த்திகளிடம் சொல்லி மனப் பூர்வமாகத் திருந்தித் தக்கத் தீர்வை நாட உதவும் நன்னாள்.

பூசத் துறையின் புனரமைப்பு

பூசத் துறையார் என சனீஸ்வரருக்கு ஒரு நாமம் உண்டு. பூசத்துறை என்பதாக, ஆயுள்காரகரான சனி கிரக மூர்த்தி, சனி தசா புக்தி, அந்தரக் காலங்களில் ஜீவ வாழ்வு அம்சங்களில் பரிபாலன மூர்த்தியாக உறைந்து கர்ம பரிபாலனத்தை இயக்குவதை இது குறிப்பதாகும்.
ஆயுள்காரகராகக் கலியுகத்தில் சனி கிரகம் பொலிவதாலும், பூசச் சோறு என்பது மனித உடலைக் குறிப்பதாலும், பூச நட்சத்திர நாள் எந்த கிரக நாளில் வருகின்றதோ அதற்கேற்ப உடலைப் பாவித்திட வேண்டும். உதாரணமாக, பூசம் திங்கட் கிழமையோடு சேர்ந்து வந்தால் அது மனோசக்திகளை நன்கு விருத்தி செய்து தரும். மனதிடம் இருந்தால்தானே ஆயுள் விருத்தியாகும். இந்நாளில் சோமநாதர், சந்த்ர மெளளீஸ்வரர், சந்த்ரசேகரர், சோமேஸ்வரர் போன்ற சந்திர சக்தித் தலங்களிலும், திருநள்ளாறு, விளங்குளம், குச்சனூர் போன்ற சனீஸ்வரர் தனித்துச் சன்னிதி கொண்டு அருளும் தலங்களிலும் பூஜித்தல் அமிர்தகால சக்திகளைப் பயன்படுத்தும் முறையாகும்.

விளங்குளம் பூசதீர்த்தம்

தைப் பூசம் என்பதாக முருகப் பெருமானே பரிந்து உவந்து மேன்மை தருகிற பூச நட்சத்திர நாளில், பூசத் தீர்த்தத் துறைகளில் வழிபடுதல் மிகவும் நன்றே!
பூசத் துறைகள் என்பது மனம், உடல், வெளிப் பகுதிகளிலும் உண்டு. உதாரணமாக, பட்டுக்கோட்டை - பேராவூரணிஅருகே உள்ள விளங்குளம் ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர் ஆலயத்தில் உள்ள பூசத் தீர்த்தம், பூசத் துறைத் தலங்களுள் ஒன்றாகும். கரிநாளில் அனைவர் மனதிலும், பூசத் துறை நன்கு மேல் வந்து புலப்படும். ஆலயங்களில் சூக்குமமாக அமைவது போல, கபாலத்தில் 64 வகை உள்திக்குகள் உண்டு. இவை 64 சித்புலத் துறைகள் ஆகும்.
குறித்த நாளில் நிலவும் வார, நட்சத்திர, யோக, கரணப் புலங்களைக் கொண்டு, இந்த 64 சித்புலங்களில் ஒவ்வொன்றாயும், கூட்டாயும் ஆக்கம் பெறும். இதனால்தாம் ஏகாதசி, பிரதோஷ, சஷ்டி போன்ற நாட்கள் குறித்த சக்திகளுடன் விளங்குகின்றன. இந்த நாட்களில் திரண்டு மேல் வரும் அமிர்த கால சக்திகளை நன்கு பயன்படுத்த உதவும் சாதனங்களே இந்நாளுக்கான குறித்த வழிபாடுகளாகும். அதாவது குறித்த திதியில், நாட்களில் குறித்த மனத் துறைகள் ஆக்கப் பூர்வமாக மேல்நிலைக்கு வருவதால், இந்நாட்களில் அந்தந்தத் துறையில் வளம் தரும் பூஜைகளை ஆற்றிட வேண்டும்.
சனிக் கிழமை, கரிநாள், பூச நட்சத்திர நாள் போன்ற சனீஸ்வர சக்தி நாட்களில், கரிசலாங்கண்ணி, கருவேப்பிலை, ஜம்பு நாவற் பழம், பீட்ரூட், கருந் திராட்சை, ராஜ்மா தானிய வகை உணவுகளைப் படைத்துத் தானமளித்தல் குடும்ப ஒற்றுமைக்காக உதவுவதாகவும் மிகவும் சிறப்புடையது. தன் கணவன் விபரீதமான முறையிலோ, அல்லது எந்தச் சமயத்தில் எது செய்வாரோ என்று மன பீதியுடன் வாழும் பெண்களின் பீதிகள் தணிந்து, கணவனோ, மனைவியோ நன்கு திருந்தி நல்ல மன ஒற்றுமையுடன் வாழ உதவும் பூசத் திருநாள்.

ஊனமுற்றோர்க்கு உற்ற பூஜை

ஒரு மனிதன், தன்னுடைய ஆத்ம ஜோதிப் பாதையில் கடவுளை நோக்கி முன்னேறிச் செல்கையில், கர்மவினைத் தடங்கல்கள் காரணமாக, தான் சென்ற பாதையில் இருந்து மாறி, மீண்டும் அதே பாதையில் வந்து, பிறப்பெடுத்து அவதிக்கும் உள்ளாகின்றான். எனவே ஒரு விதத்தில் மீண்டும் பிறப்பெடுப்பதும் வக்ரத்தினால்தான்! ஆனால், ஒரு புறம், பெறுதற்கரிய மானுடப் பிறவி என்று மனிதப் பிறவியைச் சிறப்பித்துப் போற்றுகின்றோம், மறுபுறமோ, பிறவி என்பது பிணியே! பிறவிக் கடலைக் கடந்தாக வேண்டும் என்றும் உரைக்கின்றோம். இவ்விரண்டையும் எவ்வாறு பொருத்துவது! இரண்டுமே சத்தியமான உண்மை நிலைகள் தாம். இதனை நன்கு புரிந்து செயலாற்றி வாழ்ந்திட, தக்க சத்குருவின் வழிகாட்டுதல் தேவை! இவ்வாறாக, தக்க ஆன்மீக வழிகாட்டுதல் இன்றி, எதனையுமே சரியாகப் புரிந்து கொள்ளாத நிலையைத் தான் வக்ர புத்தி என்று சொல்கின்றோம்.

ராமநந்தி காருகுடி

எந்த கிரகம் வக்ர திசையில் உள்ளதோ, அது சம்பந்தப்பட்ட வாழ்க்கைத் துறைகளில், உடல் பகுதிகளில் பல மாற்றங்கள் ஏற்படும். உதாரணமாக, புத கிரகம் வக்ர திசை கொண்டால், புதன் புத்தியை ஆள்வதால், புதனின் வக்ரத் கதியால் புத்தி மாற்றங்கள் ஏற்படும்.
எந்தக் கிரகம், எந்த நேரத்தில் வக்ர நிலை கொள்கிறதோ, அதற்கு முன்னும் பின்னும் ஒரு நாழிகையேனும், அந்த கிரகத்தை ஆழ்ந்த நம்பிக்கையுடன் சிந்தனையில் இருத்தி, கிரகவாரிப் பூஜைகளை நிகழ்த்துதல் பூஜித்தல் வேண்டும்.
இவ்வாறு சனி வக்ர கதி அடையும் நேரத்தில் ஒரு (பெரிய) படியேனும் எள் தானிய மணிகள் கொண்டும், கரிய பாசி மணிகள், கருஞ்சங்குகள், ஜம்பு நாவல் பழம், கருந்திராட்சை போன்ற (சனி கிரகத்திற்கு மிகவும் ப்ரீதியான) கருமை வண்ண, கரு நீல வண்ணத் திரவியங்களால், பொருட்களை வைத்துக் கொண்டு, தசரதர் ஓதிய சனீஸ்வரத் துதிகளையும், சனி கிரக அஷ்டோத்திரம், சஹஸ்ர நாமத் துதிகளைக் (1008 போற்றித் துதிகள்) கொண்டு, மேற்கூறிய சனீஸ்வர வக்ர நிலை வந்தமையும் காலத்திற்கு முன்னும், பின்னும் சற்றும் எழுந்திராமல் நன்கு தர்பைப் பாயில், பலகையில் அமர்ந்து சனீஸ்வரரைப் பூஜித்திட வேண்டும். பிறகு இவை அனைத்தையும் பிற தானிய உணவுகளோடு கலந்து, காக்கைக்கு, எறும்புகளுக்கு அளித்திட வேண்டும்.
இந்நாளில் 108 காகங்களுக்கு மேல் தரிசித்தல் விசேஷமானது. காக்கைகள் நீராடுமாறு, உங்கள் வீடு, தொழிற்சாலை மாடியில், அகல மரச் சட்டத்தில் நீரைத் தினமும் ஊற்றி வைக்கவும். காக்கைகள் நீரருந்தும் வண்ணம் வட்டிலில் தினமும் காலையும், மாலையும் நீரை நிரப்பி வைத்திடுக! ஊனமுற்றோருக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்திடுக. இது வக்ர புத்தி அகல உதவும்.. அவரவருடைய மனசாட்சிக்கே நன்கு தெரியும், அவரவருக்குள் எத்தகைய வக்ர புத்தி குடி கொண்டிருக்கிறது என்று! எனவே, வக்ர புத்தி என்பது தகாத முறையில், வெளியில் சொல்ல முடியாத வகையில் கேவலமான எண்ணங்கள் எழுதல் விபரீதமான. பீதி கலந்த எண்ணங்கள் தோன்றுதல் போன்றவை ஆகும். இவை அகல, தினமும் காகங்களைப் பூஜித்து வர வேண்டும்.

ஓம் குருவே சரணம்

தொடரும் நிவாரணம் ...


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam