முக்காலமும் உணர வல்லவர் சற்குரு ஒருவரே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஸ்திர வாழ்க்கை வாழ ...

ஞாயிற்றுக் கிழமை என்றாலே முடி, நகங்களை வெட்டுதல் என்ற பலரும் இறங்கி விடுகின்றார்கள். சூரிய ஒளிச் சக்தி அளிக்கும் ஜீவசக்தியே நம்மை ஒவ்வொரு விநாடியும் வாழ்விக்கிறது என்பதால் ஞாயிறன்று வளரும் எதையும் வெட்டுதல் கூடாது.
நகங்களைத் தேவையில்லாது வளர்த்து, அவற்றில் அழுக்குப் படிந்தால், இதில் தீய எண்ணங்கள் வந்து அமர்ந்து கொண்டு தினசரி வாழ்க்கையையே பாடாய்ப் படுத்தும். இயன்ற வரை வாழ்க்கையில் பல கட்டங்களிலும் மரம், இலை, பருத்தித் துணி, ரப்பர் போன்ற இயற்கையான திரவியப் பொருட்களை, சாமான்களைப் பயன்படுத்துவதன் மூலம் நல்எண்ணங்களை விருத்தி செய்து கொள்ளலாம்.
ஒரு நாளைக்கு 36 ஆலயக் கோபுரம் கலசங்களைத் தரிசித்தல் என்ற வைராக்யத்தைக் கடைபிடித்து வந்தால், அவலமான, அருவருப்பான எண்ணங்கள் தோன்றும் அவல நிலை மாறும். எண்ண சுத்திக்கு மிகவும் உதவும்.
நம் முன்னோர்கள் மரத்தாலான பாதணிகளை அணிந்தனர். மேலும் அக்காலத்தில் இறைச்சி, தோலுக்காக, செருப்புகளை அணிவதற்காக, ஒரு போதும் அவர்கள் விலங்குகளைக் கொன்றது கிடையாது. இயற்கையாக இறந்த விலங்குகளின் தோலாலான பாதணிகளை, அதுவும் அந்தந்த ஜீவன்கள் தம் தோலைச் செருப்பிற்காக ஈந்தமையால், அவற்றின் ஜன்ம நலன்களுக்காக வேண்டி அவற்றை அணியும் தியாகமய மாண்பு முன்னோர்களிடம் இருந்தது.
தற்காலத்தில் மூன்று வயது முதலேயே காலணிகளை அணியும் வழக்கம் தொற்றி விடுகிறது. வெறுங் கால்களால் பூமியில் நடக்கும் யோக நடைப் பயிற்சி அனைவருக்கும் தேவையே! தினமும் ஒரு மணி நேரமாவது காலில் செருப்புகள் இன்றி நடந்து பழக வேண்டும்.
அக்காலப் பள்ளிகளில் பிள்ளைகள் பாதணிகளை வெளியே வைத்து விட்டுத்தான் வகுப்பில் இருப்பார்கள். தற்போது மூன்று வயதிலிருந்தே காலில் செருப்பு போடத் தொடங்கி, ஒரு நாளில் தொடர்ந்து ஆறு, ஏழு மணி நேரம், சற்றும் வெளிக் காற்று கால்களில் படாது பள்ளியில், ஷூக்களை அணியும் பழக்கம் தொடங்கி, உயர்நிலைப் பள்ளி, கல்லூரி பிறகு அலுவலகம் என நாளின் பெரும்பாலான நேரத்தில் காலணிகளை மாட்டிக் கொண்டு இருக்கும் நிலை தோன்றி விட்டமையால் கால்கள், விரல்கள், கணுக்கால், முழங்கால் அனைத்துமே பலவீனம் அடைந்து நெடுந்தூரம் நடக்க இயலாத சூழ்நிலை ஏற்படுகின்றது.
மேலும், சற்றே சைக்கிளிலோ, தடுமாறி விழுந்தாலோ மயிரிழை எலும்பு முறிவாகி நட்டு, போல்ட் என்று வெளி உலோக /பிளாஸ்டிப் பொருட்களை உடலுக்குள் மாட்டி விடுகின்ற அளவிற்குக் கால்கள், கால் எலும்புகள், கால் தசைகள் எப்போதும் ஷூ அணிவதால் பலவீனம் அடைகின்றன.
இதற்காகவே நம் பண்டைய பாரதக் கலாசாரப்படி உள்ள எளிமையான பள்ளிச் சீருடை, எளிய பாதணி முறைகள், கல்விக் கூட அமைப்பு பின்பற்றப்பட வேண்டும்.
பாதணிகளை அணிந்து செல்கையில் திருஷ்டிக் கழிவு, நெருப்பு, பிணப் பூ, திருஷ்டிக் கழிவு மீதிகள், தலைமுடி, நகம் மிதித்தல் போன்ற வகையில் கால்கள் மிதிபடா வண்ணம் பாதணிகள் காக்கின்றன. திதிகளில் நவமித் திதி பாதசக்திகளை அளிக்க வல்லவை! நவமித் திதி தோறும் குதிரைகளுக்குக் கொள் உணவு அளித்தலும், பாதணிகள் தானமும் நன்மை பயக்கும். வாழ்வில் ஸ்திரமாக இருக்க உதவும்.

உத்தம குழந்தைகளை உருவாக்க ...

சர்வ புத்ர ஏகாதசி என்பது, தசரதர் அனுஷ்டித்த சர்வ ஏகாதசி விரதங்களின் முழுப் பலனாய், பாயசம்ருத அனுகிரக சக்திகள் மூலம், புத்ர பாக்யம் பெறுவதற்கான நல்வரங்கள் பரிணமித்த நாளாகும். இந்நாளில் பால் பாயசம் வைத்து, ஏக தசப் பெருமாள், அதாவது 11 பெருமாள் மூர்த்திகளைத் தரிசித்தல் மிகவும் விசேஷமானதாகும்.
தசரதர் 3600 ஏகாதசி திதிகளை முறையாக அனுஷ்டித்து, ஏகாதசப் பெருமாள் தரிசனங்களைப் பெற்றவர் ஆவார். தசரதர் பிள்ளையாம் ஸ்ரீராமருக்குப் பிறகுதானே, துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் தோன்றினார்தாமே! இப்படியானால், தசரதர் எவ்வகையில் 11 பெருமாள் அவதாரங்களைத் தரிசித்திருப்பார் எனச் சிலர் எண்ணிடலாம். பரசுராமர், சூரிய நாராயண சுவாமி, ஸ்ரீரங்கநாதர் போன்ற திருமால் அவதார மூர்த்திகள், ராமாவதாரத்திற்கு முந்தியவையர்தாமே! ஸ்ரீராமர் வழிபட்ட ரங்கநாதர் தாமே ஸ்ரீரங்கத்தில் அருள்கின்றார்.

தசரதர் சிவனை வழிபடுதல்
ஆவூர் சிவாலயம்

பால் பாயசத்தில் முந்திரி, தேன், ஏலக்காய் கலந்து தானமாக அளிக்கையில், குழந்தைகள் அவற்றைச் சுவைத்து சந்தோஷப் படுகையில், இத்தகைய ஆனந்தக் கதிர்கள்தாம் மிக எளிமையாகப் பரவெளியை அடைந்து, பரவெளியில் மண்டிக் கிடக்கும் வேதனைச் சூழல்கள், வருத்தக் கதிர்களைச் சீர்படுத்தும்.
நாள் முழுதும், வயிறார உண்ண வழி வகையின்றி, வறுமையில் உழலும் பிள்ளைகள் கூட, பாயசத்தைக் கண்டால் முகம் மலருவதைக் காண்கின்றீர்கள் அல்லவா. இந்த ஆனந்தம், வெளிப் பொருளிலிருந்து வருவதா? அல்ல, அல்ல! ஏனெனில், வெளிப் பொருளில் இருந்து வரும் எந்த ஆனந்தமும், தற்காலிகமானதே. இங்கு நீங்கள் அளிப்பதோ, பெருமாள் பிரசாதமான பாயசமாக ஆவதால், இது வெளிப்பொருள் கிடையாது. இதுவும் உட்பொருளே!
அதாவது அவரவருக்குள்ளேயே பேரானந்தம் நிறைய உண்டு. கஷ்ட, நஷ்டங்கள், இன்ப, துன்பங்களுக்கு எல்லாம் இது அப்பாற்பட்டது. இதனை வெளிக் கொணர உதவுவம் ஆன்ம சாதனங்களுள், தான தர்மப் புண்ய சக்திகளும் அடங்கும். எந்தெந்த நாளில் எதனைத் தானமாக அளித்திட வேண்டும் என்ற நியதிகளை அறிந்து அவற்றைச் செயல்படுத்தும்போது, இதன் பலாபலன்கள் நன்கு உறைந்து விருத்தியாகும்.
பூர்வ ஜன்மங்களில் சர்வ புத்ரா ஏகாதசி விரதத்தை நீங்கள் நன்கு அனுஷ்டித்து உள்ளமையால்தான் நீங்கள் இப்பிறவியில் குழந்தைகளைப் பெற்றுள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்க.
இத்தகைய ஏகாதசித் திதி வழிபாட்டிற்கு உகந்த தலம் அமிர்த கலசத்தை ஏந்தி கருடாழ்வார் அருளும் தலமாகும். ஏகாதசி விரதம் பூண இயலாதோர், இத்தகைய தலத்தில், மூவகைப் பாயச தானமாவது செய்திடல், பல்வகை அம்ருத சக்திகளைப் பெற உதவும்.

பரம்பரை நோய்களும் விலகும்

விஷ்ணுபதிப் புண்ய காலம் என்பதற்குச் சித்தர்கள் எத்தனையோ விளக்கங்களை அளிக்கிறார்கள். விஷ்ணு மண்டலங்கள் அனைத்திலும் ஸ்ரீமஹா விஷ்ணுவிற்குப் பிரம்மோற்சவம் நிகழும் காலம். பித்ரு மண்டலங்களில் ஸ்ரீமன் சூரிய நாராயண மூர்த்திக்குப் புரட்டாசியில் மாளயபட்சம் பிரமோற்சவமாகத் திகழ்ந்திடும் எனவும் நாமறிவோம்.
பித்ரு மண்டலக் கால அமைப்பு வேறு வகையானது. நம் அறிவுத் திறனுக்கு அப்பாற்பட்டது. விஷ்ணுபதிப் புண்ய காலத்தைப் பித்ருக்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை த்ரிவிக்ரம பிரமோற்சவத் திருநாளாகக் கொண்டாடுகின்றார்கள். ஒவ்வொரு விஷ்ணுபதிப் புண்ய காலத்திலும், பித்ரு மண்டலங்கள் சிலவற்றில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை, ஜீவன்களின் கர்ம பரிபாலனக் கணக்குகளைச் சித்திரகுப்த மூர்த்தி, காக்கும் கடவுளாகிய ஸ்ரீமன் மஹா விஷ்ணுவிடம் அளித்துப் பரிபாலன ஆக்ஞைகளைப் பெறுகின்றார். இதனால், விசார பாவன மனோ பல சக்திகள் பூலோக ஜீவன்களுக்குள் பூரிக்கும் தினமாகவும் விஷ்ணுபதி நாள் பூரணிக்கின்றது.
தினந்தோறும் ஆத்ம விசாரம் மூலம் பூலோக மக்கள் தம் காரியங்களைத் தாமே பரிபாலித்துக் கொள்ள வேண்டும். இதனைப் பெரும்பாலோர் தற்போது ஆற்றுவதில்லை! இதனால்தாம் தீய வழக்கங்கள் பெருகி, சமுதாயக் குற்றங்கள் நாளுக்கு நாள் வலுக்கின்றன.

ஸ்ரீவரதராஜபெருமாள் தலம்
ஹரிதுவாரமங்கலம்

இதை விட்டால், வாரந்தோறும் வரும் சந்திர சக்தி நாளான திங்களன்று மெளன விரதம் பூண்டும், அல்லது வாரத்தில் அமையும் பண்டிகை ஏதேனும் ஒன்றில் ஆத்ம விசாரம் கொள்ள வேண்டும்.
இதையும் விட்டால் அமாவாசை, பெளர்ணமி போன்ற பாஸ்கரச் சந்த்ர சக்தி நாட்கள் கிரிவலப் பலாபல சக்திகளுடன் ஆத்ம விசாரத்திற்காக வந்தமைகின்றன.
இதையும் விட்டு விட்டால், ஒவ்வொரு விஷ்ணுபதிப் புண்ய கால நாளிலும், ஒவ்வொரு மனிதனும், தன் உடலில் மூன்று மாதங்களில் ஏற்படும் நரை, திரை, மூப்பு எனப் பலவற்றிலும் ஏற்படும் மாற்றங்கள் பற்றி ஆத்ம விசாரம் புனைதல் வேண்டும்.
பொதுவாக 18 - 20 வயதிற்குள் உயரம் முழு வளர்ச்சியை அடைந்து நிறையும். இதே போல் அறிவு வளர்ச்சி, எலும்பு வளர்ச்சி என ஒவ்வொரு வளர்ச்சிக்கும் அங்க வளர்ச்சிக்கான முற்றுதல் நிலைகள் உண்டு. பல்வகை ஆத்ம விசார சக்திகளும் விசார பாவன மனோ பல சக்திகளுடன், பூஜா பலன்களாகத் திரளும் காலமே விஷ்ணுபதிப் புண்ய காலமாகும்.
இத்தகைய திருமால் சக்தி நிறைந்த நாட்களில், மிகவும் பழமையான பெருமாள் ஆலயங்களில் 108, 1008, 10008 தீபங்களை ஏற்றி வழிபடுவது விசேஷமானது. ஒரு பழமையான ஆலயத்தில் வருடத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் நிறைய தீபங்களை ஏற்றி வைத்துவிட்டால் போதுமா என எண்ணிடலாம்.
ஆனால் மனிதர்களால் பராமரிக்கப் பெறாத மிகவும் ஜீரணமடைந்த, சிதலமடைந்த மிகவும் சக்தி வாய்ந்த தெய்வீக மகத்துவங்கள் நிறைந்த பழமையான ஆலயங்களில் தேவர்கள் வழிபாடு நிதமுமே நிகழ்கிறது எனப் பலரும் அறியார்! இத்தகைய விளக்கு ஏற்ற வசதி இல்லா ஆலயங்களில் ஒரே நாளில் கூட, நீங்கள் ஏற்றும் 108, 1008, 10008 விளக்குகள் கூடிய ஒளிப் பிரகாசத்தைக் கண்டு மகிழும் தேவதா மூர்த்திகள் அளிக்கும் ஆசிகள் இதன் பிறகு அக்கோயில் பூலோக ரீதியாக வழிபாட்டிற்கு மேன்மை பெற்று விசேஷமான பலன்களைத் தரும்,
உங்கள் குடும்பத்தில் வம்சவாரியாக, பல தலைமுறைகளாக இருந்து வரும் தலைமுறைப் பகைமை, சொத்துத் தகராறு, நோய்களுக்கும் நிவாரணம் பெற்றுத் தரவும் உதவும்.
எனவே, மிகவும் பழமையான, வசதியற்ற பெருமாள் ஆலயங்களில் நிறைய விளக்கேற்றி வழிபடுக!

கண்ணீர் தோஷத்தை களைந்திடுக

அட்டக் கரிதோஷம் என்பதான வகையில் பெண்களின் கண்ணீருக்குக் காரணமாகும் வகையில் பலத்த கர்ம வினைகளைச் செய்தல் - இது கண்ணீர்க் கரி காட்ட தோஷம்
பெற்றோர்கள் வெளிப்பட அழுதும், உள்ளூர அழும் நிலைக்கும் காரணமாகும் வகையில் - தாய், தந்தையரை மதியாது உதாசீனம் செய்தல், மனைவியின் பேச்சைக் கேட்டு அவர்களை வருத்துதல், துன்புறுத்துதல், இம்சித்தல், கடமைகளை ஆற்றாது இருத்தல் - இது கரிநீர் வாட்ட தோஷம்
போன்றவாறாக - எட்டு வகையான அட்டக் கரிதோஷங்களுக்குக் கலியுக மனிதன் எளிதில் ஆளாகி விடுகின்றான். இவற்றைப் போக்குதல் மிகவும் கடினம். இவற்றில் இருந்து ஓரளவேனும் மீள்வதற்கானத் தக்கப் பரிகார வழிகளைப் பெற – அந்தந்தக் கிழமையில் வரும் கரிநாளுக்கான பூஜை முறைகளைத் தக்க குரு மூலம் அறிதல் வேண்டும்.
இந்த எட்டு வகை பலத்தக் கரிதோஷங்களை கலியுக மனிதனும் அறிந்தோ அறியாமலோ இப்பிறவியிலும், பூர்வ ஜன்மக் காரியங்கள் மூலமாகவும் தன் வாழ்வில் பூசிக் கொண்டு வந்து நின்று அவதியுறுவதை எடுத்து உணர்த்தினாலோ மேலும் கோபமடைவான்! ஆனால் என்ன செய்ய முடியும், வாழ்வின் ஏதேனும் ஒரு நிலையிலாவது இதனை இவ்வாறு அறிந்தாக வேண்டுமே!

நல்லதே நடக்கட்டும் !

முகத்தில் கரி பூசிக் கொள்தல் என்ற சொல் வழக்கும் கரி தோஷம் சம்பந்தப்பட்டதே! இதற்கு இழிவடைந்து கொள்தல் எனப் பொதுப் பொருளாகும் அல்லவா. அதாவது வாழ்வில் சிறிது, சிறிதாக ஆங்காங்கே பிறரை இழிபடுத்தி, தன்னையும் இழிவடையும் வகையில் கரி தோஷங்களை அப்பிக் கொண்டு கலியில் மனித சமுதாயத்தில் பலவும் கரிக் கர்ம வினைகள் வாழ்வில் எத்தனை எத்தனை?
இப்படி எல்லாம் தினமும் கர்மக் கணக்குப் பார்த்தால் தினசரி வாழ்வு சுமுகமாக நடக்குமா? இதற்காக ஒதுங்கி விடத்தான் முடியுமா? என்னதான் செய்வது?
அவ்வப்போது ஏற்படும் தீச்சூடு, வாகன பாகச் சூடு (silencer) போன்றவையும் கரி தோஷங்கள் முற்றி இருப்பதைக் காட்டும்.
ஒரு சிறு விஷயம், அலுவலகத்தில் பயன்படுத்திய ஓசி போன் கால்கள் மற்றும் தனது சொந்த விஷயங்களுக்காகப் பேப்பர், குண்டூசி, பேனா, ரப்பர் பாண்ட், வாகனம், பென்சில்கள் ..... அப்பப்பா இவற்றில் பல ஆண்டுகளில் - தினசரி சிறிது சிறிதாக, மலை போல் வாழ்வில் சேர்ந்திருக்கும் கரி தோஷங்களுக்கு எப்படித்தான் தீர்வு காண்பது?
இதற்காகவே, கரிநாளிலும், சதுர்த்தசி, சதுர்த்தி நாட்களிலும், கரி எனப்படும் யானைக்கான பூஜைகளையும் சனிப் பரணிச் சித்தர் எனும் பெருமானார் அளித்துள்ளார். கரிநாட்களில் யானைகளுக்கான கஜபூஜையும், யானைகளுக்கு வயிறு நிறைய உணவும் அளித்து வர வேண்டும்.
கரிநாட்களில் ஏழைப் பிள்ளைகளுக்கு, வசதியற்ற பள்ளிகளுக்கு - மேற்கண்ட பொருட்களைத் தானமாக அளித்தல் மூலம் இவ்வாறு ஓசியில் ஒட்டி வந்த கர்ம கரிவினைகள் தீர ஓரளவு வழி பிறக்கும்.
இவ்வாறாகக் கரிநாளில் நீங்கள் உங்கள் மனசாட்சிக்கு விரோதமாகப் பிறர் பொருளை - சிறு குண்டூசியானாலும் சரி - அபகரித்த, தவறாகப் பயன்படுத்திய விஷயங்களைச் சற்றே எண்ணிப் பாருங்கள். வாங்கும் சம்பாத்யத்திற்கு உழைக்காது இருப்பதும் அலுவலகப் பொருளை ஏமாற்றிப் பெற்றதற்குச் சமமான கரிதோஷமே!
எனவே, நன்றாக வாழ்ந்து நல்லவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என எண்ணி வாழ்க்கையில் எவ்வகையில் எல்லா கரிதோஷங்களைப் பூசிக் கொண்டு பலத்த அட்டக் கரி தோஷக் கர்ம வினைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என நன்கு புரிந்து கொண்டு, இனியேனும் மனம் திருந்தி வாழ முயற்சி செய்திடுக!
கரிநாள் தோறும் சனிஸ்வர மூர்த்தியை வழிபட்டு, 32 வகை தான தர்மங்களைப் பட்டியல் போட்டுக் கொண்டு சத்சங்கமாக இயன்றவற்றை அவ்வப்போது ஆற்றி வாருங்கள்.
உங்கள் வசதிக்கு ஏற்ப எத்தகைய பொருளைத் தானமாக அளித்திட முடியும் எனப் பட்டியலிட்டு கொள்ளுங்கள். பென்சில், ரப்பர், குண்டூசி, சட்டை, பேனா என மிகச் சிறிதானதைக் கூடப் பட்டியலிட்டு கரிநாள் தோறும் சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து இவற்றைத் தானமாக அளித்து வர வேண்டும்.
யானையைக் கடவுள் அழகான கறுப்பு நிறத்தில் படைத்து அதே சமயத்தில் தெய்வ வாகனமாகவும், மனித சமுதாயத்தின் அட்டக் கரிதோஷங்களுக்கான நிவர்த்திகளை அளிப்பனவாகவும் படைத்துள்ளார் என்பது பலரும் அறியாததாகும். கரிநாளன்று யானைகளுக்கு வயிறு நிறையப் பழங்கள், காய்கறிகள், புல், தழை, இலை அளித்திடுக! இதில் மனம் பெரிதும் சாந்தமடைவதை உணர்வீர்கள்! காரணம், கரிமாசு சற்றே அகல்வதே!

சர்ப்பப் பலி

பலி என்பதற்கு நிறைய அர்த்தங்கள் உண்டு. ஆடு பலி, கோழி பலி என்ற பொருளில் மட்டுமே பலி என்பதற்கு அர்த்தம் கொள்ளாதீர்கள்! மனப் பூர்வமாக அளித்தல், தன்னைச் சரணடைவித்தல் என்ற பொருளிலும் இது வரும்.
கும்பாபிஷேக வைபவப் பூஜைகளில், அனுக்ஞை விக்னேஸ்வரப் பூஜை, பிரவேச பலி என்று வரிசையாகத் தெய்வீக வழிபாடுகள் வரும். பலித்த பலி என்பது, தான் பக்திப் பூர்வமாகச் சமைத்துப் படைத்து அளித்ததைத் தேவதைகள், பித்ருக்கள், தேவாதி தேவ தெய்வ மூர்த்திகள் ஒப்பி இனிதே ஏற்றல் எனப் பொருளாகும். இறைவன் மனமுவந்து ஏற்பதை, பிரார்த்தனா பலிதத்தை, இறைஉருவின் கண் பூமிபால் விழும் புஷ்பத்தைக் கண்டுத் தரிசிப்பதை வைத்தமையும் புஷ்பப் பலி சகுன சாத்திர முறையும் உண்டு.
சர்ப்பப் பலி என்றால் சர்ப்பத்தைப் பலி இடுவது என்று தவறாகப் பொருள் கொள்ளலாகாது. சித்தர்களுடைய அற்புதமான நாக கிரந்தங்களில் நாகங்கள் (சர்ப்பங்கள்) பற்றிய ஆன்மீக விளக்கங்கள் நிறையவே காணப் படுகின்றன. தக்க சித்த சத்குருமார்களே இவற்றை எடுத்துரைக்க வல்லார். இப்பூவுலகில் சர்ப்பங்களின் புழக்கத்தால்தான் யோகாக்னி சக்திகள் பலவும் நிரவுகின்றன. பாம்புகள் இவ்வுலகில் இல்லையெனில், உலகம் இயங்குவதற்கான யோகாக்னி சக்திகள் பலவும் மறைந்து போயிருக்கும். உலகம் இயங்குவதே நடராஜப் பெருமானின் திருநடன அசைவுகளால்தாமே! நடராஜப் பெம்மானோ தம் திருமேனியங்கும் நாகாபரணங்களையும், கோடானு கோடி நாகங்களையும் தரித்தவர் தாமே!

திருப்பாம்புரம்

ஒவ்வொரு பாம்புப் புற்றில் இருந்தும் எப்போதும் யோகாக்னிப் புஷ்ப சக்திகள் பூரித்து வான் வழியாகவும், தரை நீரோட்டங்கள் மூலமாகவும் நிறைந்து ஜீவன்களை அடைகின்றன. இதனால்தான் பாம்புகளுக்கு நன்றி பூஜை ஆற்றுவதற்காகவே நாகபஞ்சமி போன்ற சர்ப்ப வழிபாட்டு தினங்கள் தோன்றின. ஆனால் இத்தகைய நாகவழிபாடுகளையும் மனித குலம் சரியாக ஆற்றுவது கிடையாது. மாறாக, பாம்புகளை வதைத்துக் கொன்று அவற்றின் தோலாலான பேக், பர்ஸ், பெல்ட், ஆடம்பர சாதனங்களை அணிந்து, இவற்றில் பதிந்து இருக்கும் - வதை பட்ட நாகங்களின் ஈனக் குரல்கள், வேதனைக் கண்ணீர்களைச் சுமந்து, இவற்றால் கிளப்பப் பெறும் நாக சாபங்களையுமே கலியுக மனிதர்கள் பெருக்கி வருகின்றார்கள்.
இவற்றுக்கெல்லாம் ஓரளவு பரிகாரம் பெறவே, சர்ப்ப்பலி, நாகபஞ்சமி போன்ற வழிபாடுகள் அமைகின்றன. நாக பஞ்சமி அன்று நாகேஸ்வரர், நாகநாதர், நாகாத்தம்மன், நாகலக்ஷ்மீ, நாகவல்லி, பாம்புரேஸ்வரர், சர்ப்பநாதர் போன்ற நாகநாமம் தாங்கி இறைவன் அருளும் தலங்களில் சுயம்பு மூர்த்திகளுக்குச் சர்ப்பாங்கி சார்த்துதல் வேண்டும். அதாவது நாகாபரணங்களைச் சார்த்தி, அபிஷேக, ஆராதனைகளுடன் வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும்.
பாண லிங்கங்களுக்கு (ஆவுடை இல்லாத அமைப்பு) பச்சை அரிசி மாவு அல்லது கோதுமை மாவால் (நீரில் கலந்து) சர்ப்ப வளையங்கள் போல் ஆக்கி லிங்கத்தைச் சுற்றி வட்ட, வட்டமாக வைத்துக் காப்பிட்டு வழிபடுவதும் சர்ப்பப் பலி வகை பூஜைகளுள் ஒன்றாகும். வட பாரதத்தில் இவ்வகைப் பூஜை இன்றும் வழக்கத்தில் நிலவுகின்றது. பூஜை முடிந்தபின் சர்க்கரை சேர்த்து மாவைப் பிரசாதமாகவோ அல்லது உணவுப் பண்டங்களாகவோ ஆக்கித் தானம் செய்வதால் பல்வகை நாக தோஷங்களுக்கு எளிதில் நிவர்த்தி காணலாம்.
தம் தந்தையாம் பரீக்ஷித் மகாராஜாவிற்குப் பாம்பு வசத்தால் மரணம் கிட்டியதாக எண்ணி வருந்திய அவருடைய புதல்வரான ஜனமேஜயன் மகாராஜா ஒரு மாபெரும் சர்ப்பப்பலி யாகத்தை நிகழ்த்தி, தட்ச சர்ப்பத்தால் தன் குலத்திற்கு ஏற்பட்ட இழப்பிற்குத் தக்க பழி, பலியும் வாங்குவதற்காக அந்த யாகத்தில் அனைத்து லோகங்களிலும் உள்ள பாம்புகளையும் மாந்த்ரீகத்தால் ஹோம குண்டத்திற்குள் இழுத்துச் சினம் தணிந்தபோது அஸ்தீக சித்தரே பாம்புக் குலத்தைக் காக்கும் பொருட்டு ஜனமேஜயனுக்கு நல்ல புத்திமதிகளைக் கூறி யாகத்தில் அக்னிக்குப் பலியான அனைத்துச் சர்ப்பங்களுக்கும் ஜீவ சக்தியையும், உயிரையும் மீட்டுத் தந்ததோடு நாக குலம் வருங்காலத்தில் என்றும் அழியாது காக்கப் பெறுவதற்கான பூஜை முறைகளையும் ஜனமேஜயன் மூலமாகவே பூவுலகிற்கு நல்கினார்.  
நாக பஞ்சமி அன்று புற்று வடிவில் உள்ள லிங்க மூர்த்திகளுக்குக் குவளைக் காப்புச் சார்த்தி நறுமணச் சந்தன சாம்பிராணி தூபம் இட்டு வழிபடுதலும், புற்று வழிபாட்டுத் தலங்களில் பாம்புப் புற்றுக்கு மஞ்சள் குங்குமம் சாற்றுதல் கோலம், புஷ்பம் இட்டு அலங்கரித்தல், பால் பாயசம் போன்ற உணவு வகைகளைப் படைத்தல், தானமளித்தல் போன்றவற்றை நிகழ்த்துதல் வேண்டும். இவை யாவும் சர்ப்பப் பலி பூஜைகளின் அங்கங்களாக திகழ்ந்து குடும்பத்தை எப்போதும் காக்க வல்லவை ஆகும்.  

என்று கடன் வாங்குவது ?

ஆன்மீகப் பிரசாரம் என்பது, பெரிய பெரிய ஆன்மீகப் பேருரையாளர்கள் மட்டுமே மக்களிடம் பேச வேண்டியது என்று எண்ணுதலும் வேண்டாம். உங்கள் தினசரி வாழ்க்கையில் சந்திக்கின்ற ஒவ்வொருவரிடமும், அகஸ்திய விஜயத்திலும், அக்னி சிக்ஷா வளாகத்திலும் நீங்கள் காண்கின்ற ஒரு நல்ல செய்தியையாவது சொல்லிப் பேச்சை நிறைவு செய்வது என்ற ஒரு நல்ல சங்கல்பத்தை, மன வைராக்யத்தை, பகுள சக்திகள் என்பதான விசேஷமான தேவசக்திகள் பூரிக்கும் பிரதமை நாளில் கைக் கொள்ளுங்கள்.
பிரதமைத் திதி கடன் வாங்குவதற்கு சிறப்பான திதி நாள் என்பதைப் பலரும் அறியார். கடன்படாத வாழ்க்கையே சிறப்புடையது எனும் போது, அது எப்படி, ஒரு திதியானது கடன் வாங்குவதற்கு ஏற்றதாக அமையப் பெறும்? கலியில் கடன் என்பதைப் பல சமயங்களில் தவிர்க்க முடியாததாக மனிதன் ஆக்கிக் கொண்டு விட்டமையால், இத்துறைக்கும் தீர்வுகளை அளிக்க வேண்டியதாகி உள்ளது.
பூரண தினங்களாக விளங்கும் பெளர்ணமி, அமாவாசை இரண்டிலும், பல வகைகளிலும் உடலும், மனமும் பல்வளக் காலச் சக்திகளுடன் பூரித்திருக்கும். இதனால்தான் இவ்வரிய வளமான மனயோக சக்தி நிலைகள் நிறைந்த இப்பூரண நாட்களை அடுத்து வரும் பிரதமைத் திதியில் தேவையான விஷயங்களுக்கு மட்டுமே கடன் வாங்குகின்ற நல்குண சக்திகளும் அமைந்திருக்கும்.
உண்மையில் உங்களிடம் வருகின்ற ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் எண்ணற்றக் கர்ம வினை ரேகைப் படிவுகள் பதிந்திருக்கும். ரூபாய் நோட்டுக்கான காகிதத் தயாரிப்பு, வண்ணங்கள், வண்ணப் பட வரைவு, அச்சடிக்கப்பட்ட நாள், நேரம் முதல் பலவிதமான இட, நேர, காலப் படிவுகளும், அந்தந்த ரூபாய் நோட்டு எத்தனை ஆயிரம் கைகளில் மாறி வந்தனவோ, நல்லது, தீயது என எதற்கெல்லாம் பயன்படுத்தப்பட்டதோ, நன்கு உழைத்து வந்த சம்பளப் பணம், ஒழுங்காக உழைக்காது பெற்ற பணம் - என்ற வகையிலான
- கோடிக் கணக்கான வினை ரேகைப் படிவுகள் ஒவ்வொரு சிறு நாணயத்திலும், ரூபாய் நோட்டிலும் படிந்திருக்கும் என்றால்
- ஒவ்வொரு பைசாவையும், ரூபாவையும் வாங்கும்போதும் செலவழிக்கும் போதும் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை இனிமேலாவது வாழ்க்கையில் தெரிந்து கொள்ளுங்கள்.
* சிவ சிவ, ராம் ராம், ஓம் முருகா, ஸ்ரீ காயத்ரீ மந்திரம் , சிவபுராணம், அபிராமி அந்தாதி, லட்சுமித் துதிகள் போன்றவாறாக
- நீங்கள் அறிந்த துதிகளை ஓதி ஒவ்வொரு ரூபாயையும் கொடுப்பது, வாங்குவது என்ற எளிமையான காரியத்தை நீங்கள் செய்யப் பழகிக் கொண்டு, பிறரையும் இந்த நற்பழக்கத்தில் ஈடுபடுத்துவீர்களேயானால் அந்த ரூபாய் நோட்டு செல்லும் இடமெங்கும் நன்முறையில் செலவாகும்.

ஸ்ரீகுபேர பகவான் செட்டிக்குளம்

எனவே, வருகின்ற பணத்தில், முதலில் பண சுத்தி வழிபாடுகளை ஆற்றித்தான் வாங்குவதோ, கொடுப்பதோ வேண்டும். இதற்காகவே சம்பளப் பணத்தை முதலில் ஒரு சந்தனப் பெட்டியில் வைத்துப் பூஜித்துப் பெற்ற தாயிடமும், மனைவியிடமும் அளிக்கும் நற்பழக்கம் இன்றும் கலிகாலத்தில் நம்மிடையே உண்டு.
சம்பளப் பணத்தில் வாங்கும் முதல் பொருள் புஷ்பம், உப்பு, பால் போன்ற விருத்தி அடையும் பொருளாக இருத்தலும், நன்முறையில் பண விருத்திக்கு உதவிடும். மேலும், பணத்தைக் கொண்டு நீங்கள் செய்யும் தான தர்மங்களில் விளையும் புண்ய சக்திகளும்தாம்
-பணத்தை, பணம் வரும் வழியை, பணம் செலவாகும் மார்கத்தையும் நன்கு சுத்திகரித்துத் தரும்.
முறையான பண வரவிற்காகத் தன சக்திகள் நிறைந்த வெள்ளிக் கிழமை பூஜை, அனுஷ நட்சத்திர நாள் பூஜை போன்றவைச் செய்து வந்தாலும், வாழ்வில் பலவற்றிற்காகத் திடீரென்று கடன் வாங்க வேண்டிய நிலை வரும்போது என்ன செய்வது?
இதற்காகவே, கடன் வாங்கும் நிலை ஏற்படாதிருக்கவும், அவ்வாறு அவசியமான சமயங்களில் கடன் வாங்கும் நிலை ஏற்பட்டால் முறையாகக் கடனைத் திருப்பி அடைக்கவும்,
இப்போதிருந்தே பிரதமைத் திதியில் குபேர மூர்த்தியைத் தரிசித்து வழிபட்டு, தங்கம், வெள்ளி, பிற உலோக நாணயங்களால், ஓம் குபேராய நமஹ என்று 1008 முறை ஓதி அர்ச்சித்து வழிபட்டு வந்தால், இந்தப் புண்ணிய சக்திகளால், நீங்கள் மாதத்தில் எங்கேயாவது கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அக்காலத்தில் நன்கு உதவி புரியும். மேலும், கடன் வாங்குவதைப் பிரதமைத் திதி நாளில் வைத்துக் கொள்ளுமாறு அமையவும் உதவிடும். கடனற்ற வாழ்க்கையைப் பெறவும் பிரதமைத் திதியில் ஆற்றும் குபேர மந்திர வழிபாடுகள் துணை புரியும்.
பிரதமை அன்று குபேர தரிசனம், குபேர யந்திரத் தரிசனம், குபேர ஆகர்ஷண மந்திரங்களை ஓதுதல், குபேரன் என்ற பெயரை உடையவர்களுக்கு உதவுதல், குபேரன் ஆண்ட அளகாபுரி போன்ற அளகு, அழகு போன்ற பெயர்களை உடைய உள்ள ஊர்களில் உள்ள சிவாலயங்களில் வழிபடுதல் விசேஷமானது. விசேஷமான குபேர பூஜைகளை ஆற்றியவரே கர்ணன் ஆவார். கர்ணன் வழிபட்டத் தலங்களுள் ஒன்றே காரைக்குடி கோட்டையூர் அருகில் உள்ள அளகாபுரி அருகே உள்ள சிவாலயமாகும். மிகவும் அபூர்வமான சிவாலயம். அளகாபுரியிலும் ஒரு சிவாலயம் உள்ளது. இங்கு நாம் குறிப்பிடுவது அளகாபுரி அருகாமையில் ஸ்ரீயோகாம்பாள் அருளும் மிகவும் பழமையான சிவாலயம் ஆகும்.
* தஞ்சாவூர் தஞ்சபுரீஸ்வரர் ஆலயத்திலும், குபேரர் சிவலிங்கப் பூஜையை ஆற்றும் குபேர தரிசனத்தைப் பெற்றிடலாம்.  
* குபேர சக்திகள் நிறைந்ததே பாதாம் பருப்பு ஆகும். பாதாம் பருப்பு கலந்த பொங்கலைத் தானமாக அளிப்பதும், முறையான தன சக்திகளைப் பெறவும், கடனை நிவர்த்தி செய்வதற்கானதுமான தான, தர்ம வழிபாடுகளில் ஒன்றாகும்.
* வாங்கிய கடன் தொகையை ஒரு சிறிதும் அடைக்காமல் நிவாரணம் பெற வேண்டும் என எண்ணுவதும் பலத்த பேராசையே.
* குபேர மூர்த்தியிடம், அடியேன் வாங்கிய கடனை முறையாக அடைக்க நல்வழி அருள்வீர்களாக! - என வேண்டுவதே உண்மையான பிரார்த்தனை.

யானைகள் தரும் நினைவாற்றல்

கணக்கு சம்பந்தமான துறைக்கு, பூரட்டாதி நட்சத்திரத் தின வழிபாடு மிகவும் சிறப்புடையது. கலியுகக் குடும்பத்தில் பெற்றோர்களின் முதல் கவலையே, தங்கள் பிள்ளைகள், பெண்கள் கணிதப் பாடத்தில் மக்காக இருக்கின்றார்கள் என்பதே ஆகும். கணிதம் என்பது நினைவாற்றலை ஒட்டிய கல்வி ஆவதால், கணக்குப் பாடங்கள் சரியாக வரவில்லை என்றால், ஞாபக மறதி குறைவு என்றும் பொருளாகி விடுகிறது அல்லவா!
ஆன்மீகத்தில் நினைவாற்றலை நன்முறையில் நல்ல துறைகளில் பயன்படுத்துவதே நினைவு வளத்தை நன்கு மேம்படுத்தும் என நியதிக்கின்றனர். மேலும், மனோசக்தி, கபாலப் புல சக்தி, பிராணயாம சக்தி போன்றவற்றின் சங்கமமாக உரைத்து, இவை நிலவும் சாதனங்களுடன் பரிபாலிப்பதை சிந்தனா வளத்துறையின் மேன்மைக்காக உரைக்கின்றனர்.
ஒரு யானைக்கு, ஓராயிரம் மனிதர்களின் ஒரு சர்வ ஆயுளின் (120 ஆண்டுகள்) நினைவாற்றலை, இறைப் படைப்புத் (சிருஷ்டித்) துறையில், மகத்தான பரிசாக தேவரீதியாக அளித்துள்ளனர். எனவே, யானையின் தரிசனமே பேரானந்தத்தைத் தருவதற்குக் காரணம், அதனுடைய ஞான, ஞால, ஞாபக சக்திகளும் ஆகும். யானையின் வடிவமே ஞானத்தின் உருவகம். மேலும், யானையின் வடிவமே பிற ஜீவன்களின் அற்புதமான ஆத்ம விசாரத்திற்கும், யோக தியான நிலைகளுக்கும் வழி வகுக்கின்றது. இதனால்தான் யானையைப் பார்க்கும் போதெல்லாம், வேறு எந்த எண்ண அலைகளும் குறுக்கே ஏற்படாது, யானையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆனந்த நிலை உண்டாகின்றது.

ரெங்கநாதபுரம் ஸ்ரீஆனேஸ்வரர் ஆலயம்

நல்லவர்கள், அலை பாயும் மனதுடையவர்கள், கோபக்காரர்கள், மன நிலை சரியில்லாதவர்கள், தீயவர்கள் என யாவருமே யானையைக் கண்டதும் மகிழ்வு கொண்டு, அவர்களுடைய எண்ணங்கள் தாமாகவே அடங்கி, யானையின் வடிவத்தில் நிலைப்பதால், சித்தர்கள் யானையின் வடிவை, ஆனேஸ்வர வடிவாக, ஞான தீப வடிவாகச் சிறப்புடன் விளக்குகின்றார்கள்.
பூரட்டாதி நட்சத்திரத் தலமான தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள ரெங்கநாதபுரம் திருஆனேஸ்வரர் ஆலயத்தில், பூரட்டாதி நட்சத்திர நாளில் அபிஷேக ஆராதனைகளுடன் பூஜித்தலால், நல்ல அறிவு விருத்திக்கான பலாபலன்கள் கிட்டும். பரமாச்சார்யாள் சுவாமிகள் ஆனேஸ்வர யோக நிலை பூண்டு தியானித்தத் திருத்தலமே ரெங்கநாதபுரம் ஆகும்.
குறிப்பாக, ஞாபக சக்தி நன்கு துலங்க வேண்டிய மருத்துவத் துறை, நீதித் துறை, கணக்குக் கல்வித் துறை போன்றவற்றில் சிறப்பாக விளங்க விரும்புவோர், ரெங்கநாதபுரம் ஸ்ரீஆனேஸ்வரர் ஆலயத் தலத்தில் பூரட்டாதி நட்சத்திர நாளில் வழிபட்டு வருதல் மிகவும் விசேஷமானது.
மனிதர்களுடைய கபாலத்தில் ஆனேஸ்வரப் புலம் என்ற பகுதி உண்டு. யானை தன் துதிக்கையால் மனிதர்களை ஆசிர்வதிக்கையில், இந்த ஆனேஸ்வரப் புலப் பகுதியில்தான் கபாலத்தைத் தொட்டு ஆசிர்வதிக்கும். மனிதக் கபாலத்தில் இதில்தான் ஞாபக ஞானப் புலன் இழைகள் அமைந்துள்ளன. சதுர்த்தி, சதுர்த்தசித் திதி நாட்களில், யானைகளுக்குத் தேவையான அளவு நிறைய உணவளித்துக் கஜ பூஜை ஆற்றி வழிபடுவது போல, பூரட்டாதி நட்சத்திர நாளிலும் கஜபூஜைகளை ஆற்றுவது மிகவும் விசேஷமானது. பிள்ளைகளின் நினைவாற்றல் நன்முறையில் சீர்மை பெற இவ்வழிபாடு மிகவும் உதவும்.
பொதுவாக, இயற்கையாக இறந்த யானையின் தந்தங்களால் ஆன ஆன்மீகச் சாதனங்கள் வழிபாட்டிற்கு மிகவும் சிறப்புடையவை! தந்தத்திற்காக வதைத்துக் கொல்லப்பட்ட யானையின் தந்தத்தில் செய்யப்படும் சாதனங்கள் பலத்த மாரக தோஷங்களைப் பூண்டு வரும்.
பிள்ளைகளை பூரட்டாதி நட்சத்திர நாளில் யானைகள் இருக்கும் ஆலயங்களுக்கு இட்டுச் சென்று, அவர்களுடைய கரங்களால் யானைக்கு உணவளிப்பது மிகவும் விசேஷமானதாகும். இந்நட்சத்திர நாளில், தந்தங்களினால் ஆக்கப் பெற்ற இறை வடிவங்களுக்கு இல்லத்தில் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டு வருதலால்,
- ஞாபக மறதி காரணமாகக் காணாமல் போன முக்கியமான பொருட்களோ, ரெகார்டுகளோ கிடைப்பதற்கும், இதனால் ஏற்பட்ட நஷ்டங்கள் நிவர்த்தியாகவும் பூரட்டாதி நட்சத்திர வழிபாடுகள் மிகவும் உதவும்.

காது கேளாதவர்கள் கவனிக்க

ஸ்ரீவாஸ்து மூர்த்தி யோக சயனத்திலிருந்து மீண்டு, முதலில் தொழுவது ஸ்ரீலட்சண விநாயக மூர்த்தியையே ஆகும். ஸ்ரீவாஸ்து மூர்த்தி தொழும் லட்சண விநாயகரின் வடிவைப் பல ஆலயங்களிலும் கண்டு தரிசித்து ஆனத்தித்திடலாம். திருஅண்ணாமலையில் கிழக்குக் கோபுர வாயிற் படிகளைக் கடக்கையில், இடப் புறம் கோயில் நிலை வாசல்படித் துணில் எழுந்தருளும் திவ்யமான மூர்த்தியே ஸ்ரீலட்சண விநாயக மூர்த்தி ஆவார்.
மனிதனுக்கு 32 விதமான சாமுத்ரிகா லட்சணங்கள் என்ற வகையிலான அங்க லட்சண இலக்கண சாஸ்திர நியதிகள் உண்டு. சாமுத்ரிகம் என்பது பிரம்ம மூர்த்தி மனித சிருஷ்டிக்காக, இறைவனிடம் வரமாகப் பெற்று வைக்கும் சிருஷ்டிச் சாதனப் பரல்களாகும். சாமுகம் + ஐந்த்ரிகம் என்பது சாமுத்ரிகத்தின் விரிவுப் பொருளில் ஒன்றாகும்.
27 வகை யோகங்களில், ஐந்த்ரிய யோகம் என்ற ஒன்று உண்டு. இது மாகேந்திரம் என்று சில வகைப் பஞ்சாங்கங்களில் குறிக்கப் பெறும். இந்த ஐந்திரிய யோக நாளானது, பல்வகை உடல் லட்சணங்களை பிரம்மாதி பிரம்ம தேவ அருட்பாங்காகத் திரட்டித் தருவதாகும்.
பலருக்கும் தாங்கள் அழகாக இல்லையே என்ற ஏக்கம் ஏற்படுவது உண்டு. பலரும் அழகுபடுத்திக் கொள்வதில் முனைந்த ஆர்வம் காட்டுகின்றனர். அழகு என்பது தற்காலத்தில் வெளி அங்க அழகு என்றே எண்ணுகின்றார்கள். இது நிலையானது அல்ல, மாறிக் கொண்டே இருப்பதாகும்.

நற்குணமும், நற்பண்பும், நல்வார்த்தைகளுமே அழகிற்கான லட்சணங்களாகும். பூக்கள் நிறைந்த அழகுடையவை. அழகிற்கு உரிமை கொண்டவன் அழகனான முருகப் பெருமானே. எனவேதான், அனைத்துப் புஷ்பங்களையும் முதலில் இறைவனுக்குச் சார்த்திய பிறகே, புஷ்பப் பிரசாதமாகப் பெண்கள் தலையில் அணிந்து கொள்ள வேண்டும்.
காதிற்கழகு நந்தியாவட்டைப் புட்பம் என்பது முதுமொழி! (அடுக்கு) நந்தியாவட்டைப் பூக்கள் சார்த்தி, ஸ்ரீகர்ண விநாயகரை வணங்கி, காதின் மேல் பகுதியில் நந்தியாவட்டைப் புஷ்பத்தை வைத்து, சில வகைக் கர்ணசக்தி யோகங்களைப் பயின்று வருதலால், காது கேட்கும் சக்தி நன்கு விருத்தியாகும்.
ஒவ்வொரு மனிதனும் முதலில் தன்னைப் பற்றி முதலில் புரிந்து கொள்ள வேண்டியது யாதெனில், தன்னுடைய ஒவ்வொரு உடல் அங்கமும், ரோமமும், நகமும் பூர்வ ஜன்மக் காரியங்களின் விளைவுகளாகவே வந்தமைகின்றன என்பதாகும்.
எனவே, அழகாகவோ, ஒல்லியாகவோ, குண்டாகவோ, உயரமாகவோ, குட்டையாகவோ - எனப் பல வகைகளிலும், ஒவ்வொரு மனிதனும் விதவிதமாகத் தோன்றுவதற்குக் காரணமே பூர்வ ஜன்ம வினைகளின் விளைவுகளாலேயே ஆகும். இந்த விளக்கங்களை முழுமையாக மனம் நன்கு ஏற்றிட, நிறைய அனுபவங்கள் தேவை, ஏனெனில் தெய்வசாரம் நிறைந்த எதனையும் கலியுக மனமானது உடனடியாக ஏற்றிடாது.

மப்பேடு சிவத்தலம்

ஆனால், என்றேனும் வாழ்வில் ஒரு நாள், மனிதன் இவற்றை அறிந்து ஏற்க வேண்டிய நியதிகள் உண்டாகும். ஒவ்வொரு மனிதனின் உடலினுள்ளும் ஆத்ம சக்தி குடிகொண்டு இருப்பதால், உடலே ஆத்மம் உறையும் கோயிலாக விளங்குவதால்,
உள்ளம் திருக்கோயில், ஊனுடம்பு ஆலயமே, என்று திருமந்திரம் ஓதுதற்கு ஏற்ப ஒவ்வொரு உடலும் பல வகை வாஸ்து சாமுத்ரீகா சாஸ்திர லட்சண நியதிகளுக்கு ஏற்பவே அமைந்து வருதல் உண்டு. ஆம், சாமுத்ரிகா லட்சணங்களிலும் வாஸ்து இலக்கண நியதிகள் நிறையவே அளிக்கப்பட்டுள்ளன. சித்த மருத்துவ அங்க லட்சண விளக்கங்களிலும் இவை உண்டு.
வாஸ்து மூர்த்தியின் வருகை, தரிசனம் என்றால் அவருடைய தீர்கமான பார்வையின் தீட்சண்யம் படுதல் என்றும் பொருளாகும். வாஸ்து லோகத்திற்கு எட்டு வாயில்கள் உண்டு. ஒன்பதாவது வாசல் சொர்க்க வாசலாகும். இந்த சொர்கவாசல் தரிசன வைபவங்கள்தாம் வாஸ்து நாட்களாக அமைகின்றன.
கிணறு, முற்றம், திண்ணை, தாழ்வாரம் வாயிற்படி, நிலைப்படி, வாயிற்படி மேல் கஜலட்சுமி மண்டபம், தாழ்வாரத்தில் மற்றும் கொல்லைப் புறங்களில் துளசி மாடங்கள், வாசலின் இருபுறமும் ஹோம சமித்து மரங்கள், மர உத்திரங்கள், ஜன்னல்களில் மர நிலைச் சட்டங்கள் போன்ற பலவும் முற்காலத்தில் வாஸ்து சக்திகளை ஆகர்ஷித்து அளிப்பனவாய் இருந்து, தற்போது மேற்கண்டனவும் மற்றும் மர வேலைப்பாடுகளும் வீட்டமைப்பில் இல்லாது பெரும்பாலான இடங்களில் மறைந்து விட்டன.
இரும்பினால் ஆன கதவு, நிலைகள் தற்போது பல இடங்களிலும் அமுலுக்கு வந்து விட்டமையால், பல இல்லங்களிலும் வாஸ்து சக்திகள் பெருக வழியின்றி, பெரிதும் குறுகி, பல வீடுகளும், பிளாட்டுக்களும் சோபை இன்றி இருக்கின்றன. இவற்றை ஓரளவேனும் நிறைவு செய்யத்தான், நிலை வாசற்படியில் ஒரு துவாரம் இட்டு அதன் வழியே நவரத்னம், நவகிரகத் திரவியங்கள், போன்றவற்றை வைத்தும், வாஸ்து நாட்களை இல்லப் பெருவிழாவாகக் கொண்டாடுதலும் நிலை பெற்றாக வேண்டும்.
இவ்வாறாக வாஸ்து சக்திகளை கிரகித்துத் தொடர்ந்து அளிக்க வல்ல கட்டிட நலவளப் பூஜைகளும், மர வேலைப்பாடுடைய சாதனப் பொருட்களும் மறைந்தமையால்தான், இவற்றை ஓரளவேனும் நிவர்த்தி செய்யும் வண்ணம், பண்டைய வாஸ்து பூஜைகள் தற்போது மீண்டும் மலர்கின்றன. எனவே வாஸ்து பூஜை என்பது மிகவும் தொன்மையான சக்தி வாய்ந்த பூஜை முறையே ஆகும்.

பிள்ளைகளின் முரட்டுத் தனம் நீங்க

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அவதரித்த நன்னாளே ரோஹிணி நட்சத்திரம் கூடிய அஷ்டமி அல்லவா! இதில் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி என்று ரோஹிணி நட்சத்திர நாளிலும், கிருஷ்ண பட்சமாகிய தேய்பிறை அஷ்டமியை, கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடுகின்றோம். இந்நாள் தேய்பிறை அஷ்டமியாக, பைரவர் அவதரித்தத் திருநாளுமாகின்றதே!
அஷ்டமித் திதி நாளில் எண் கோணக் கிணறு, எட்டுக் கோபுர வாயில்கள், அஷ்டாங்க விமானங்கள் உள்ள தலங்கள் மற்றும் எண்கள், எட்டுக்குடி போன்ற தலங்களில் வழிபடுவது மிகவும் சிறப்புடையதாகும். தேய்பிறை அஷ்டமித் திதியில் தாம் எண்ணாயிரம் வகையான நேத்ர (கண்) சக்திகள் பிறந்தன. பகலில் நட்சத்திரங்களைக் காணுதல், சில தேவதைகளின் தரிசனம், கிரகத் தரிசனங்கள், சுவற்றுக்கு அப்பால் மற்றும் தொலைவில் உள்ள நிகழ்ச்சிகளை, பொருட்களைக் காணுதல் என எண்ணாயிரம் வகையான கண் பார்வை சித்சக்திகள் உண்டு.
இதனால்தான் எட்டுக் கண்களும் விட்டெறியும் பார்வை என்ற சொல் வழக்குப் பிறந்தது. சமயபுரம் மாரியம்மன் எட்டுத் திசைகளிலும் எட்டுக் கண்களும் பிரகாசிக்க அருளும் தெய்வத் தன்மைகளைக் கண்டவள் ஆதலின் சமயபுரத்திற்குக் கண்ணனூர் என்ற அருட் பெயரும் உண்டு.
கண்ணபிரான் இளஞ்சிறுவனாய், கோபியர்கள் வீடுகளில் வெண்ணையை எடுத்துப் பிற சிறுவர்களுடன் பகிர்ந்து உண்டு வந்தான். இதனைக் கண்ணன் வெண்ணெயைத் திருடினான் என்று சொல்வதானால், வெண்ணெயின் அளவு குறைதல் வேண்டுமல்லவா! எவர் வீட்டில் கண்ணன் வெண்ணெயை உண்டானோ, அன்று அவ்வீட்டுப் பசுக்கள் பன்மடங்கு பாலைத் தாமாகவே சுரந்தன எனில் இது திருடு ஆகுமா? திருகண்ண லீலைதாமே! இவ்வாறு நிகழக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே அய்யா!
பரம்பொருளே ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவாக, கடவுளே கண்ணனாக பிறந்து வந்திருக்கும் போது, கண்ணனையா வெண்ணையைத் திருடினான் என உரைப்பீர்? என்னே அறியாமை! கண்ணன் வெண்ணெயைத் திருடி உண்டான் எனில் வெண்ணெயின் அளவும் வெண்ணெய்த் தாழியில் சற்றும் குறையவே இல்லையே ! எடுக்க எடுக்க வெண்ணெயின் அளவு அதிகமாக ஆனதே! இந்த இறைலீலையில் கோடானு கோடித் தத்துவார்த்தங்கள் செறிந்துள்ளன!
வெண்ணெய் என்பது பல பசுக்களின் பாலைக் கலந்து, காய்ச்சி, ஆற வைத்து மோர் ஊற்றி உறைய வைத்து வருவதல்லவா! மோர் என்பது காலம் காலமாக இடைவிடாது வீட்டில் தொடர்ந்து இருந்து வரும் தொன்மைப் பொருளும் ஆகின்றது அல்லவா! இதனால்தான் புதுமணத் தம்பதிகள் புதிதாக வீடு குடி போகையிலும், கிரகப் பிரவேசம் செய்பவர்களும், நன்கு ஆகி வந்த பழுத்த சுமங்கலிகள் உள்ள வீட்டில் இருந்து, ஜாதி பேதமின்றி மோர் பெற்றுக் குடித்தனத்தை மங்களகரமாக ஆரம்பிப்பர்.
மோர் என்பது வீட்டில் தயிருக்காக உறைய வைத்து அதில் வெண்ணெயைத் தினமுமே கடைந்து எடுக்கும் பொருள் அல்லவா! எனவே மோர் என்பது காலம் காலமாக ஆண்டாண்டு வீட்டில் இருந்து வருவது தானே! எனவேதான் மோரால் உறையும் தயிரில் இருந்து திரளும் வெண்ணெய் என்பது தாத்தா, பாட்டிமார்களின் ஆசிகளைப் பல தலைமுறைகளில் இருந்து திரட்டி வருவதாகும். எனவே கண்ணன் வெணணெயை உண்டது பல கோடித் தலைமுறைகளை உய்வு பெறச் செய்யும் இறைலீலை மார்கமே!
எனவே, இல்லத்தில் கண்ணன் வந்தது திருடி உண்டு நம் தலைமுறைகளைக் கடைத்தேற்றிட, வீட்டில் ஒரு சிறு பானையிலாவது, எப்போதும் எந்நேரமும் பாலும், மோரும், தயிரும் தலைமுறைச் சின்னங்களாக இருந்து வர வேண்டும்.

கண்ணா கண்ணா வா வா !
கோகுல கண்ணா வா வா !

பலரும் தற்போது வெண்ணெயைக் கடையில் வாங்குவதால், வீட்டில் இயற்கையாக மத்தில் கடைந்து தயாரிக்கும் வெண்ணெய் இல்லாமல் போவதால் மத்துக் கடையோகம் எனும் அரிய தெய்வீக சக்திகளைப் பலரும் இல்லத்தில் பெற முடியாது இழந்து வருகின்றனர். தினமும் வீட்டில் வெண்ணெய் ஒரு சிறிதேனும் கடைவது செல்வ வள சக்திகளைப் பெருக்குவதாகும்.
மேலும் நன்கு சந்ததிகளை விருத்தி செய்ய வல்ல மத்துக் கடை சப்தவேத பதம் எனப்படும் தயிரில் வெண்ணெய், மோர் எடுப்பதற்கான மத்தைக் கடையும் சப்தமும் தினமுமே இல்லத்தில் ஒலித்தால்தான், இல்லத்தில் தம்பதிகள், குழந்தைகள் இடையே தூய அன்புப் பரிபாலனம் நிறையும். இல்லையேல் இயந்திர கதியாய் வாழ்க்கை நன்கு மனதார, உளமாற அனுபவிக்காமலே ஓடி விடும்.
மேலும், வீட்டிலேயே கடைந்து தயாரிக்கப்பட்ட வெண்ணெயில் உள்ள மழுமழுப்பான தெய்வீக ஸபரிசமானது ஸ்ரீகிருஷ்ண திவ்ய ஆசிர்வாத ஸ்பரிசமாய்க் கைவிரல்களில் உள்ள மெல்லிய நாளங்களுக்கு நல்ல தேவ சக்திகளை அளிப்பதாகும். இதனோடு பிள்ளைகளைப் பரிவுடன் தலையில் கோதுகையில் நல்ல அன்புப் பரிமாற்றம் உண்டாகும். எனவே, ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி அன்ற எவ்வகையிலேனும் இல்லத்தில் மத்து வைத்துத் தயிரைக் கடைந்து, ஒரு சிறிதேனும் வெண்ணெயைத் திரள வைத்து, வெண்ணெய் நாழியில் வைத்து, துளசிச் செடிக்கும் ஸ்ரீகிருஷ்ணனுக்கும் அர்ப்பணித்து, ஏழைச் சிறு குழந்தைகளுக்கு நிறைய வெண்ணெயைத் தானமாக அளித்திடுக!
..... இதோ கோகுலத்தில் ஒரு கோபியின் வீட்டுக் கூடத்தில் ஒரு உரியின் மேல் பானைகளை அடுக்கு அவற்றில்வெண்ணெய் வைக்கப்பட்டு இருக்கிறது. கண்ணன் வருகிறான், உரி எட்டவில்லை ... அருகிலிருந்த சிறு பானைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைத்து மேலே ஏறுகிறான். இதோ... இதோ... உயரத்தில் உரியில் இருந்த வெண்ணெய் பானையைத் தொட்டாகி விட்டது, இதற்குள் காலுக்குக் கீழுருந்த பானை சற்று ஆட்டங் கொடுத்து நகரவே ... டமாரென்று உரியைப் பிடித்தவாறே கீழே விழுகிறான் கண்ணன்.
உரியிலிருந்து நான்கைந்து பானைகளும் சரிந்து விழுந்து வெண்ணெய் சிதறிக் கூடமெங்கும் தெரிக்கின்றது. சப்தம் கேட்டு யாரும் வருவதற்குள், வேக வேகமாய்த் திருட்டுக் கண்ணன் திருட்டுத்தனமாய் வெண்ணெயை வேகம் வேகமாக அள்ளி, அப்பிக் கொண்டு உண்டு விட்டான்.
எப்படியும் மாட்டிக் கொள்ளப் போகிறோம், அதற்குள் திருடிய வெண்ணெயை வாயார, வயிறார உண்டு விட்டு மாட்டிக் கொண்டு உதை வாங்குவோம், என்று எண்ணி, வாயெல்லாம் வழிய, வழிய நிறைய வெண்ணெயைத் தின்று விட்டான்.
கோபியர்களுக்கு வந்ததே கோபம், யசோதையிடம் கோழி மூட்டி விட்டார்கள். பானைகள் உடைந்தன, வெண்ணெய் காலியாகி விட்டது, என்று கண்ணனைப் பற்றி ஒரே புகார் மயம்! யசோதாவிற்குக் கோபம் கோபமாக வந்தது. கண்ணனை நன்கு வைது, நாலு சார்த்து சார்த்தி விட்டாள். மாயக் கண்ணனோ சிரித்தான்!
வெண்ணெயைத் திருடித் தின்று விட்டு இதில் சிரிப்பு வேறா! மேலும் வெண்ணெயையே தின்னவில்லை என்று பொய் சொல்கிறாயே! இது உனக்கு அடுக்குமா? உன் வாய்க்குள் கையை விட்டு, அத்தனை வெண்ணெயையும் எடுக்கிறேன் பார்! வாயைத் திற!'' என்று யசோதா படபடவென்று பொரிந்தாள்.
கண்ணன் வாயைத் திறந்தான்! உள்ளே ........... சர்வ லோகங்களும் தெரிந்தன!
ஆம் கண்ணன் காட்டிய அபூர்வமான விஸ்வ ரூபக் காட்சி அது! விஸ்வ ரூபத்தில் விண்ணளாவ உயர்ந்து பெரிதாய் விரிவது அன்று வாயிற் சிரிதாய்ச் சிரித்துச் சிங்காரித்துப் புலர்ந்தது!
.... இவ்வாறாக பரமானந்தத்தோடு கண்ணன் புராணம்தனைப் படியுங்கள். இன்றிலிருந்தாவது தினமும் உங்கள் வீட்டில் தயிரில் மத்தைக் கடையும் தெய்வீக ஒலி நிரவட்டும். இது சந்ததி தழைப்பிற்கு ஆண்டாண்டு காலமாய் நன்கு உதவும்.
மத்துக் கடை யோக நற்சக்திகள் இல்லத்திலும், நாட்டிலும், உலகெங்கும் நிரவட்டும்.
ஸ்ரீகிருஷ்ணனுக்கு மிகவும் ப்ரீதியான கோ சூக்த மந்திரங்களை ஓதிப் பசு, கன்றுகளை வலம் வாருங்கள்!
புல்லாங்குழலை ஊதி, இசைத்து வாழும் ஏழைகளுக்கு உதவுங்கள்! நிறைய புல்லாங்குழல்களை விலைக்கு வாங்கி, அந்த ஏழை வியாபாரிக்கும் உதவியதாகி, ஏழைக் குழந்தைகளுக்கும் புல்லாங்குழல்களைத் தானமாக அளியுங்கள்! முரட்டுத்தனமாக வளரும் தங்கள் பிள்ளைகளைப் பற்றிய கவலைகள் தணிய, இந்தப் புல்லாங்குழல் தான தர்மப் புண்யம் மிகவும் உதவும்.
இன்று முதல் உங்கள் வீட்டில் புல்லாங்குழல் ஓதி ஒரு அரை மணி நேரமேனும் பலரும் மாறி, மாறி ஊதி, இல்லத்தில் அமைதி அமையும் வண்ணம் வேய்ங்குழல் நாதம்தனை எழுப்புங்கள்!  

அன்பே சாசுவதமானது

ரோஹிணி நட்சத்திரம் எத்தகைய பீடைகளையும் போக்க வல்ல ஸ்ரீகிருஷ்ண செல்வப் பீட சக்திகளைப் பெற்றுள்ளது. குசேலர், ரோஹிணி கூடிய சனிவாரத்தில் தம் பெரிய குடும்பப் பரிவாரத்தோடு, ஸ்ரீகிருஷ்ண விரத பூஜைகளைப் பூண்டு வழிபட்டு வர, கண்ணனே கனிந்து உவந்து வந்து குசேலருக்கு உயரிய செல்வ கடாட்சத்தை அருளினார். எனவே, வறுமைப் பீடையையும், மனப் பீடையையும் போக்க வல்லதே ரோஹிணி கூடும் சனிவார நாளில் ஏற்று ஆற்றும் நோன்புடைக் கண்ணபிரான் வழிபாடும் குடும்பத்தோடு கூடிய ஸ்ரீகிருஷ்ண தரிசனமும் ஆகும்.
சனிக்கிழமை வரும் ரோஹிணி நாளின் அம்சங்களை வைத்து,ரோஹிணித்த சனி, சனித்த ரோஹிணி என்ற வகையிலான சனிவார வகைகள் உண்டு. ரோஹிணி நட்சத்திரம், எத்தகைய பீடைகளையும் போக்க வல்ல ஸ்ரீகிருஷ்ண செல்வச் சக்திகளைப் பெற்றுள்ளது. ஏனெனில், ஸ்ரீகிருஷ்ண அவதாரம் தோன்றியதைக் குறிக்கும் ஸ்ரீஜயந்தி என்பதில், ஸ்ரீ என்பதில் ஸ்ரீகிருஷ்ணனும், திருமகளும் இணைந்துள்ளனர் அன்றோ!
சனிக்கிழமை அன்று சூரியோதயத்திற்கு முன்னரேயே ரோஹிணி நட்சத்திரம் நிறைந்தால் அது ரோஹிணித்த சனியாகும்'.
சனிக் கிழமை சூரியோதயத்திற்குப் பின் ரோஹிணி நட்சத்திரம் ஏற்பட்டிடில், சனித்த ரோஹிணி ஆகும். சனிக்கிழமை, பெருமாளுக்கு மிகவும் ப்ரீதியான தினம் அல்லவா ! இதோடு ரோஹிணி நட்சத்திரம் சேர்தல் ஸ்ரீகரிகிருஷ்ணப் பெருமாள் வழிபாட்டிற்கு மிகவும் சிறப்புடையதாகும். பணம் வந்தவுடன் கரைவதற்குக் காரணமான பலத்த கரிதோஷங்களை நீக்க வல்லதே "சனித்த ரோஹிணி' தின பூஜைப் பலனாகும்.

ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் ஆலயம்
திருவல்லிக்கேணி

இவ்வாறுசனித்த ரோஹிணி நாளில் ஸ்ரீகிருஷ்ண பகவான், ஜீவ வாழ்க்கையின் பல்துறைகளிலும் வளம் தரும் ஆயுட் சேம மூர்த்தியாக அருள்கின்றார்.
ஆயுள் எப்போது தீர்க்காயுள் ஆகிறது? எவருக்கும் பயனின்றிச் சுயநலமாக நெடுங் காலம் வாழ்ந்து யாது பயன்? பிற ஜீவன்களுக்குப் பயன் தரும் வகையிலான நெடுவாழ்க்கையே தீர்க்காயுள் நிறை வாழ்க்கை!
ரோஹிணித்த சனிவாரம் ஸ்ரீகிருஷ்ண பரிவார வழிபாட்டிற்கு மிகவும் சிறப்புடையது.
ஸ்ரீகிருஷ்ண பரிவார வழிபாடு என்பது, பரமாத்வாமாம் ஸ்ரீகிருஷ்ண பகவான் தம் பத்னியர்கள், பிள்ளைகள், பேரன்களோடு - குடும்பத்தோடு - திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்தில் அருள்வது போலானதாகும். மதுரை அருகே திருத்தங்கல் ஆலயத்தில் பெருமாளப்பர், ஜாம்பவதி தேவியோடு மிகவும் அபூர்வமாகப் அருள்கின்றார்.
தற்காலத்தில் சனியன் என்று தவறான முறையில் திட்டும் வழக்கம் நிலவுகிறது. மேலும், ஜாதகக் கணிதத்திலும் சனி மூர்த்தியை ஒருமையாய்ப் பேசும் தவறான பழக்கமும் உள்ளது. இவ்வாறான பலத்த வாக்குத் தோஷங்களுக்கும் சனித்த ரோஹிணி நாளில்தாம் ஒரளவு பரிகாரம் பெற முடியும். மேலும், ஆயுள்காரக மூர்த்தியாக சனீஸ்வரர் கலியுகத்தில் பொலிவதால், சனி கிரக அமைப்பு நன்றாக இருந்தால்தான் தீர்க்க சுமங்கலித்வமும், நல்வாழ்க்கை நிறைந்த நீண்ட ஆயுளும் செறியும்.
பலருக்கும் நன்கு உதவும்படியாக நீண்டு வாழ்வதே சிறப்பான, உத்தம நிலைவாழ்வு! இது அனைவருக்கும் வந்தமைவதில்லை! ஸ்ரீகிருஷ்ணரின் அருள் நிறைந்தவர்க்கே இது நல்பாக்யமாய் வந்மையும்.
ரோஹிணி நட்சத்திரம் சார்ந்திருக்கும் ரிஷப ராசியானது, சுக்கிர கிரக ஆட்சித் தல ராசியாகும். ரோஹிணி நட்சத்திரத் தலமான - அபூர்வமாக ஸ்ரீகிருஷ்“ணன் அமர்ந்த கோலத்தில் அருளும் - காஞ்சிபுரம் ஸ்ரீபாண்டவதூதப் பெருமாள் ஆலயத்தில், குடும்ப சகிதம் வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும். பிள்ளைகள், பெண்கள், பேரன்,பேத்தி, சகல பிள்ளைகள், உற்றம், சுற்றத்துடன், காஞ்சிபுரம் ஸ்ரீபாண்டவதூதப் பெருமாள் ஆலயத்திலும்,
சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி ஆலயம் போன்று ஸ்ரீகிருஷ்ண பரிவாரத் தரிசன ஆலயங்களிலும், தம் குடும்பத்தோடு தரிசித்து, அன்னம், ஆடைகள், பழங்கள், பாதணிகள் போன்ற எட்டு விதமான தான தர்மங்களையும் அவரவர் குடும்ப வசதிக்கு ஏற்ப நிகழ்த்துதலால், குடும்பத்தில் நல்ல மன அமைதி உண்டாகும்.
சனிக் கிழமை கூடும் ரோஹிணி நாளில், அல்லது கார்த்திகை மற்றும் ரோஹிணி நட்சத்திர நாட்களில் இத்தகைய தலங்களில் பால் பாயச நைவேத்யத்துடன் சந்திர மூர்த்தியையும், கார்த்திகை தேவி, ரோஹிணி தேவியையும் வழிபடுதலால் உறவுப் பகைமையால் ஏற்பட்டுள்ள வெம்மை தணிந்து, நல்உறவு சுமுகமாக மலர மிகவும் உதவும்.
கிருத்திகை நட்சத்திரத் தொடக்கத்தில் விரதம் தொடங்கி, ரோஹிணி நட்சத்திரம் முடியும் வரை, இரு நாட்களிலும் கடுமையான முறையில் நல்விரதமும், நோன்பும் நோற்று, காலை, பகல், மாலை, இரவு நான்கு வேளைகளிலும் ஸ்ரீகிருஷ்ண தரிசனம் பெறுவோரின் குடும்பத்தில் கணவன், மனைவி இடையே இணை பிரியா தருமநேசமும், தூய்மையான அன்பும் விசேஷமாக மலரும். இது பெறுதற்கரிய பாக்யமாகும்.
பிரியாவிடை ஈசன் என்ற பெயரிலேயே இறைவன் அருளும் சில அபூர்வமான தலங்களும் உண்டு. தேடிக் கண்டுபிடியுங்கள், அப்போதுதான் இதன் மகத்துவம் நன்கு புலனாகும். புதன் மற்றும் சனிக் கிழமை, ரோஹிணி நட்சத்திர நாட்களில், இத்தலங்களில் தம்பதி சகிதம் வழிபடுதல், குடும்பத்தில் - மாயையான பாசமின்றி - தெய்வீக ரீதியான நல்ல அன்புப் பிணைப்பிற்குத் துணை புரியும். புனிதமான அன்பே சாசுவதமானது, இறை தரிசனத்தைப் பெற்றுத் தர வல்லது.

நற்காரியத்திற்கு பணம் தடையல்ல

தசமியும், ஏகாதசியும் பெருமாள் வழிபாட்டிற்கு உரிய தினங்களாகும் என நாமறிவோம். ஏகாதசியும், தசமியும் பெருமாளுக்கு உரித்தான திருவோண நட்சத்திர நாளில் அமைந்து வருவது மிகவும் விசேஷமானதாகும். திருவாதிரையில் இவ்வாறு வந்தமைவது, சங்கரனாராம் ஈஸ்வரனுக்கும், சங்கர அம்சங்கள் கூடிய சங்கர நாராயணப் பெருமாளுக்கும் உகந்ததாகும்.
மனக் கொந்தளிப்புகள் அடங்க திருவோண நட்சத்திரத் தின விரதம் நன்கு உதவும். மன வேதனைகள் தணிய திருவாதிரை கூடிய ஏகாதசி விரதம் உதவும். நட்சத்திரங்களிலேயே திரு எனும் அடைமொழியைத் தாங்கி திருவோணமும், திருவாதிரையும் அமைவதாலும், ஸ்ரீ என்பது திருமொழி ஆவதாலும், இவை முறையே திருமாலுக்கும், சங்கர அம்சங்கள் நிறைந்த ஈஸ்வரனுக்கும், சங்கர நாராயணப் பெருமாளுக்கும் ப்ரீதியானதாகும்.
தசமியில் திருவோணம் நிறைந்து வருகையில், உப்பு சேர்க்காமல் விரதம் இருந்து, ஸ்ரீஉப்பிலியப்பன் பெருமாளை நினைந்து வழிபடுவதானது, தம்பதியர் இடையே இருந்து வரும் சொல்லொணா மனக்கசப்புகளை அகற்ற உதவும்.
தசமித் திதியில் திருவாதிரை வருகையில் பானகம், இளநீர், மோர் என நீர் வகை உணவருந்தி விரதமிருத்தலால் பெற்றோர்கள் - பிள்ளைகள் இடையே நல்ஒற்றுமையைப் பேண உதவும்.
ஏகாதசியில் வரும் திருவோணத்தில் நீர் மட்டும் அருந்தி விரதமிருந்து, கல்கி மூர்த்தியை வழிபடுவது கூட இருந்தே துரோகிகளின் தீச்செயல்களில் இருந்து நம்மைக் காக்க உதவும்.
கல்கிப் பெருமாள் மூர்த்தியைப் பலரும் வழிபடுவதில்லை. இனிமேல்தானே, அதாவது கலியுக முடிவில் அதர்மங்கள் முற்றுகையில், கல்கி மூர்த்தி தோன்றுவார் என எண்ணாதீர்கள்! கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என யுகங்கள் மாறி, மாறி வருவதால், நடந்ததே நடப்பனவாக நடந்து வருகின்றன என்ற சித்த சூக்த மாமந்திர வேத வாக்கியத்திற்கு ஏற்ப, பிரகலாத அனுபூதிக்கு முன்னரேயே நரசிம்ம அவதாரம் தோன்றி, ஜீவன்களின் தரிசனத்திற்காக, பிரகலாத சரித்திரத்தில் திண்மை பெற்றது போல, கல்கி அவதாரமானது, தற்போது, ஏற்கனவே தோன்றி பிற பூமிகளில் வழிபாடுகளுக்காக உள்ள பெருமாள் அவதாரமே என அறிக!
திருவாதிரையில் ஏகாதசி இணைகையில் சிவாலயத்தில் உள்ள பெருமாளை வழிபடுதல் விசேஷமானதாகும். விரதம் என்பது மனோசக்திகளை, மனோ வைராக்யத்தைப் பெருக்கும் ஆன்ம சாதனமும் ஆகும்.
* ஒரு வேளை மட்டும் உணவு,
* கஞ்சி, மோர், இளநீர் போன்ற நீர் வகை உணவு,
* அன்ன (சோறு) வகை இன்றி, வெறும் பலகாரம் அல்லது பழங்கள், வெறும் கீரை உணவு
- என்றவாறாகப் பலவகைகளில் விரதங்களை ஏற்றுக் கடைபிடித்து வாருங்கள்.
விரத முறை எல்லாம் ஆரம்ப நிலைகளில் மிகவும் கடினமாகவே இருக்கும், பிறகு மனோவைராக்யச் சித்தம் புலப்பட புலப்பட அனைத்தும் நன்கு பழக்கத்தில் வரும். எனவே, திருவோணம், சஷ்டி, ஏகாதசி போன்ற விரத சக்தி நாட்களில் மேற்கண்ட வகையில், ஏதேனும் ஒருவகையிலாவது விரதம் இருக்கப் பழக்கிக் கொண்டு நல்ல வைராக்ய சித்தியைப் பெற்றிடுக.
தற்போதைய இயந்திர கதியான வாழ்க்கையில், உண்ணா நோன்பு நமக்குச் சற்றும் ஏற்று வருமா என்று சற்றும் எண்ணாதீர்கள்! வாழ்வின் நடுக் கட்டத்தில், இறுதியில் நோய்கள், தள்ளாமை மொய்க்கையில்,இவ்வாறு ஆரம்பத்தில் இருந்தே விரதம் இருந்து செய்திருக்கலாமே' என்ற எண்ணம் வருகையில், ஒன்றும் செய்ய முடியாமல் போய் விடும்.
விரத நாளன்று ஹோட்டலில் சாப்பிடுவதில்லை, காபி, டீ அருந்துவதில்லை, நீர் ஆகாரம் மட்டுமே, மோர் சாதம் மட்டுமே அல்லது வெறும் கீரை சாதம் மட்டுமே என்று ஏதேனும் ஒருவகையிலாவது விரதம் இருக்கப் பழகுங்கள். செவ்வாய், சனி, ஏகாதசி, சஷ்டி, திருவோணம் போன்ற விரத சக்தி நாட்களில் எவ்வகையிலேனும் பூண்டு, நல்ல மனோதிடம், மனோசக்தி, மனோ வைராக்யத்தைப் பெற்றிடுங்கள்.
தசமி + திருவாதிரை கூடிய நாளில், சங்கர நாராயணப் பெருமாள் தரிசனமும்,
தசமி + திருவோணம் கூடிய நாளில், அமர்ந்த நிலைப் பெருமாள் தரிசனமும் விசேஷமானது.
* ஏகாதசி இணைந்த திருவோண நேரத்தில் சயனக் கோலப் பெருமாள் தரிசனமும் மிகவும் சிறப்புடையவையாகும்.
காய்கறிகளிலும், பூக்களிலும் நின்ற நிலை, அமர்ந்த நிலை எனப் பல வகைகள் உண்டு. பீர்க்கங்காய், புடலங்காய் போன்றவை நின்ற நிலை சக்திகளைக் கொண்டவை. பறங்கி, பூசனி போன்றவை அமர்ந்த நிலை யோக சக்திகளைக் கொண்டவை. தக்காளி, பீட்ரூட் போன்ற உருண்டை வகைக் காய்கறிகள், நடந்த நிலை யோக சக்திகளைக் கொண்டவை.
திருவோண நட்சத்திரம் எந்தத் திதியில் வருகின்றதோ அந்த நாளுக்கு ஏற்ப காய்கறிகளைச் சமைத்து, படைத்து, அன்னதானமளித்து உண்ணுதல் நன்று.
திருவோண விரத நாளில் பீர்க்கங்காய், புடலங்காய் போன்றவை நின்ற நிலை சக்திகளைக் கொண்ட காய்கறிகளைச் சமைத்து, படைத்து, அன்னதானமளித்து, தசாவதார தரிசனங்களைப் பெற்றுப் பத்து வகை ஜீவன்களுக்கு (ஏழைகள், தாவரங்கள், பறவைகள், பசு) எவ்வகையிலேனும் உதவிய பின் உண்ணுதல் நன்று. பணக் கஷ்டத்தால் தேங்கி நிற்கும் நற்காரியம் நிறைவேற இது நல்ல மனோதிடத்தைத் தரும்.
திருவாதிரை கூடிய இந்நாளில், சங்கர நாராயணப் பெருமாள் தரிசனமும், சிவாலயத்தில் அருளும் பெருமாள் தரிசனமும் சிறப்புடையதாகும்.

பிள்ளைகளின் புத்தி மேம்பாடு

வித்யா எனப் போற்றுகையில், வித்யா எனப்படும் ஞானக் கல்வியையும் ஒரு செல்வமாக சித்தர்கள் எடுத்துரைக்கின்றனர். வித்யாபலச் சித்தர் என்பவர் இறைவனும், இறைவியும் ஞானபுரீஸ்வரர், ஞானேஸ்வரி எனப் பெயர் கொண்டு அருளும் தலங்களிலும் திருமகளின் அஷ்ட சக்தி லோகங்களிலும் உபாசனை கொண்டு, திருமகளின் வசிப்பு லோகங்களின் ஓர் பாங்கான வித்யா லக்ஷ்மி வழிபாட்டிலும் தலைசிறந்தவர் ஆவார்.
அனுஷம், துவாதசி, வெள்ளி போன்ற லக்ஷ்மீகரமான நாட்களில் இச்சித்தர்பிரான் வித்யாரண்யச் சித்தருடன் வித்யா சக்தித் தலங்களில் வழிபட்டு இதன் பலாபலன்களை பாயசம், முழுத் தாமரை போன்ற பல வித்யா சக்தித் திரவியங்களில் பதிக்கின்றார். இந்நாட்களில் இவற்றைத் தெய்வ வழிபாடுகளுக்குப் பயன்படுத்துபவர்களுக்கு எந்தக் கல்வி, அனுபவ அறிவால் வருமானம் கிட்டுகின்றதோ, அத்தகைய கல்வி அறிவும், அனுபவமும் மென்மேலும் கனிந்திடத் திருமகளின் அருள் சுரக்கும்.
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது புதனுடைய சுபமங்கள வித்யா சக்திகளைக் குறிப்பதாகும். புதன் கிழமைகளில் பூரிக்கும் வித்யா சக்திகளைப் பரிபூரணித்து நன்கு பயன்படுத்திட, பிள்ளைகள், புதன் கிழமை தோறும் சரஸ்வதியும், ஹயக்ரீவரையும் முழுத் தாமரை மலர்கள் கொண்டு வழிபட்டு வருதல் வேண்டும்.
புதன் கிழமையில் நிறைந்து வரும் துவாதசி, லக்ஷ்மி தேவியின் அனுகிரகத்தை நிறைந்து பெற்றுத் தருவதாகும். லக்ஷ்மீ கடாட்சம் என்பது வெறும் பண வரவு மட்டும் அல்ல. தன லக்ஷ்மீ, தான்ய லக்ஷ்மீ, தைர்ய லக்ஷ்மீ, சந்தான லக்ஷ்மீ, வித்யா லக்ஷ்மீ, வீர லக்ஷ்மீ, மஹாலக்ஷ்மீ, வைபவ லக்ஷ்மீ, கிருக லக்ஷ்மீ - போன்றவாறாகத் திருமகளின் அருள் திரளும் வகைகளும் பல உண்டு.
வெறுமனே பணம் வந்து குவிவதும், பணம் புழங்கும் இடத்தில் பணி புரிவதும் லக்ஷ்மீ கடாட்சம் ஆகி விடுமா? உதாரணமாக, வங்கியில் காஷியராகப் பணி புரிபவர் கோடிக் கணக்களான பணத்தாட்களைப் புரட்டுகின்றார். இது பூர்வப் புண்ய சக்தியால் வந்தமைவது. ஆனால் முறையாக வந்த பணம் முதல் பல கெடுதல் வழிகளிலும் வந்த பணம் வரை அனைத்தையும் ஓரளவு கணக்கு அறிவு கொண்டு கையாள்கையில்வித்யா லக்ஷ்மீயின் அருட்கடாட்சமும் தேவைப்படுகின்றது.
வித்யா லக்ஷ்மி கடாட்சம் என்பது கல்வி அறிவு கொண்டு கவினுறக் கற்றுப் பொருள் ஈட்டும் தன்மைகளைக் குறிப்பதாகும். பாண்டவச் சகோதரர்களில் சகாதேவன் தரித்திருந்த ஜப மாலைகள், சாளகிராம மாலைகள், சசிவர்ண மணி மாலைகள் போன்ற பலவும் விலை மதிப்பற்றவை. ஒரு முறை அரிய மந்திரம் எதனையும் ஓதினாலேயே, கோடானு கோடி மடங்குப் பலாபலன்களை இம்மணி மாலைகள் அளிப்பனவாகும். இறுதி வரை சகாதேவன், இம்மணி மந்திர சக்திகளை ஒரு போதும் தவறாகப் பயன்படுத்தியது கிடையாது. தினமும் புத ஹோரை நேரத்தில் லட்சுமி தேவிக்கானப் பூஜைகளைத் திறம்பட ஆற்றிய சகாதேவன், வித்யா லக்ஷ்மியின் பரிபூரண அனுகிரகத்தை பெற்றுத் துலங்கிய ஓர் உத்தம அடியார் ஆவார்.
சகாதேவனின் ஜப, தபோ பலன்களைப் பெற புதன் தோறும் மணிகளால் (தற்காலத்தில் தங்க, வெள்ளி நாணயங்களாலும்) ஸ்ரீவித்யா லக்ஷ்மீ தேவியை அர்ச்சித்து வருதல் வேண்டும்.
வியாழனும், துவாதசியும் கூடு வரும் நாளில் ஞான வாசிஷ்டம் எனும் புனித நூலைப் படித்தலும், வித்யா லக்ஷ்மீ கடாட்சம் நிறைந்தவரான பட்டினத்தார் சுவாமிகளின் இறைப் பாடல்களையும் ஓதுதல் மிகவும் விசேஷமானது.
மேலும் துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதி மூவரும் சேர்ந்து எழுந்தருளும் தலத்தில் புதன் கிழமை அன்று லக்ஷ்மி, வித்யா லக்ஷ்மியாகவும், சரஸ்வதி வேத சரஸ்வதியாகவும், துர்க்கை தேவி ஞான துர்க்கையாகவும் அருள்கின்றனர். எனவே புதன் கிழமை தோறும் துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதி மூவரும் இணைந்தருளும் தலத்தில், ஸ்ரீவித்யா லக்ஷ்மீக்கு வில்வ மாலை, மாம்பழ மாலை, முழுத் தாமரை மாலைகளைச் சார்த்தி வழிபட்டு வருதலால் கல்வியில் உள்ள தேக்க நிலைகள் நீங்கிடவும், கல்வியில் சிறக்கவும், கல்வியோடு இணைந்த ஏனைய கலைகளிலும் பொலிவு பெறவும் நன்கு உதவும்.
புதன் கூடிய  துவாதசியில், ஸ்ரீவித்யா லக்ஷ்மீ தேவி தரிசனம் விசேஷமானது. வீட்டில் பூஜையில் பனை ஓலைச் சுவடிகளை வைத்திருப்பதும் வித்யா லட்சுமி கடாட்சம் நிறைந்ததே! புதன் தோறும் ஓலைச் சுவடிகளில் - கிடைத்தால் பழங்கால எழுத்தாணி கொண்டும் - அல்லது பச்சை மையாலும் இறைமந்திரங்களை எழுதிடுக.
சுதபுதமஹரிஷி புதன் தோறும் ஸ்ரீவித்யா லக்ஷ்மி தேவியின் தரிசனம் பெற்று இதன் பலன்களை சிவாலயக் கோஷ்டத்தில் அருளும் பெருமாளின் திருவடிகளில் அர்ப்பணிக்கின்றார்.
சென்னை அருகே மப்பேடு ஸ்ரீசிங்கீஸ்வரர் சிவாலயத்தில், மூலவருக்குப் பின்புறம் கோஷ்டத்தில் - பொதுவாக லிங்கோத்பவர் அருளும் இடத்தில் – இவ்வாலயத்தில் ஸ்ரீமஹாவிஷ்ணு எழுந்தருள்கின்றார். இங்கு தாம் ஆலய ராஜ கோபுரத்தின் முன்புறம் வலது கீழ்ப் பகுதியில் சுதபுத மஹரிஷியின் சிலா வடிவம் கிட்டுகின்றது. வித்யா சக்திகளை அளிக்க வல்லவர்.
புதன் தோறும் சிவாலயக் கோஷ்ட மூர்த்தியாக அருளும் ஸ்ரீமஹா விஷ்ணுவையும், ஸ்ரீவித்யா லக்ஷ்மியையும் முதலில் சுதபுத மஹரிஷியின் ஆசிகளை வேண்டி வழிபடுதல் பிள்ளைகளுக்கு நல்ல வித்யா கடாட்சத்தைத் தரும்.
சுதபுத அருளுடை சுமதிட மனவளம்
புதமுத சுதமதி புவனக புலமதில்
முதகுண புலவள பரசுர அரியருள்
புததுதி சுதகுண வளமருள் வாயே'
என்ற சுதபுதப் பதியை ஸ்ரீசுதபுத மஹரிஷியின் சிந்தனையுடன் புதன் தோறும் ஓதி வருதல் பிள்ளைகளுக்கு நன்கு உதவும்.

அருகு தினையும் ஆயுள் காப்பும்

தான்யங்களில் அருகு தினை என்ற ஒருவகை தினை உண்டு. அரிசி தோன்றுவதற்கு முன் தோன்றிய ஆதி தாவரம் இதுவாகும். முருகனை மணப்பதற்கு முன் வள்ளி தினை வனம் காத்தாள் என்பது அனைவரும் அறிந்ததே. அப்போது வள்ளி வலம் வந்த தினை வனமே அருகு என்பதாகும். காலம் செல்லச் செல்ல அருகு அரிதாகி தற்போது மறைந்தும் விட்டது.
கண்ணப்ப நாயனார் சிவபெருமானுக்குப் படைப்பதற்காக காட்டில் பல குருவிகளை வேட்டையாடி அவைகளை நெருப்பில் இட்டு இறைவனுக்கு நைவேத்யாகப் படைத்தார். சாட்சாத் சிவபெருமானுக்கே உணவாக அளிக்கப்பட்டதால் அந்த குருவி இனங்கள் அனைத்தும் முக்தி அடைந்து திருக்கைலாயம் போன்ற பல உயர்ந்த லோகங்களுக்குச் சென்று விட்டன.
அதுபோல முருகப் பெருமானின் அனுகிரகத்தாலும் வள்ளியின் நேத்ர தீட்சண்யாத்தாலும் அருகு தினை உயர்நிலை அடைந்து அன்னபூரணி லோகத்திற்குச் சென்று விட்டது. அருகு தினையின் தரிசனமே பல திருமணத் தடங்கல்களை நீக்கவல்லது. அருகு தினையின் ஒரே ஒரு சோற்றுப் பருக்கை கூட எத்தனையோ நோய்களைத் தீர்க்க வல்லது. குறிப்பாக சர்க்கரை வியாதிக்கு அருமருந்தாக அமைவதே அருகு தினையாகும்.

குருவாய் தென்திசை நோக்கி அருளும்
குகன் லால்குடி

அருகு தினை என்பது ஒரு மிருகத்தையும் குறிக்கும். வராக அவதாரத்திற்கும் முந்தைய அவதாரமே அருகு தினை என்பதாகும். எப்படி பாற்கடலை தேவர்கள் அமிர்தத்திற்காக கடையும் முன்னரே பாற்கடலில் ஆமை வடிவத்தில் ஒரு சித்தர் தோற்றம் கொண்டிருந்தாரோ அது போல மகாவிஷ்ணுவின் வராக அவதாரத்திற்கு முன் தோன்றியதே அருகு தினை என்னும் மிருக வடிவமாகும். இதுவும் வராக வடிவத்தில் அமைந்ததே. அருகு தினை என்ற வராக வடிவத்திற்கு யானையைப் போல இரு தந்தங்கள் உண்டு. இன்றும் சில குறிப்பிட்ட கோயில்களில் இத்தகைய இரு தந்தங்கள் உடைய வராக மூர்த்திகளை தரிசித்திடலாம். இவர்களே அருகுதினை வராக அவதார மூர்த்திகள்.
அருகு தினை தான்யத்தைப் போல அருகுதினை வராக தரிசனமும் எண்ணற்ற கடுமையான நோய்களைத் தீர்க்கக் கூடியது. தற்போது எங்குமே காண இயலாத அருகு தினை தான்யத்தையும் அருகு தினை வராக மூர்த்தியையும் ஏன் இந்த அளவிற்கு சித்தர்கள் விவரிக்கிறார்கள் என்றால் இத்தகைய தரிசன பாக்கியத்தை அளிக்கக் கூடிய அற்புத திருத்தலங்கள் இன்றும் உண்டு என்பதே. பெருமாளின் தசாவதார கோலங்கள் எழுந்தருளிய தலங்களிலும், முருகப் பெருமான் ஒரே தலத்தில் வள்ளியுடன் எழுந்தருளிய திருமணக் கோலங்கள் ஒன்றுக்கு மேல் திகழும் தலங்களிலும் முருகப் பெருமானுக்கு உரிய வளர்பிறை சஷ்டி தினங்களிலும், பெருமாளுக்கு உரிய திருவோண நட்சத்திர தினங்களிலும் தினைமாவுடன் தேன் சேர்த்து தானம் அளித்தலால் எத்தகைய திருமணத் தடங்கல்கள் நீங்குவதுடன் அற்புத சந்தான பாக்கியமும் கிட்டும். ஆயுள் விருத்தியையும் அளிக்கும் அற்புத வழிபாடு இது.
குளித்தலையில் உள்ள கடம்பர் கோயில், லால்குடி ஸ்ரீசப்தரிஷீஸ்வர்ர் திருத்தலங்களில் முருகப் பெருமானின் இரண்டு திருமணக் கோலங்களும், கும்பகோணம் நாச்சியார் கோயில், துறையூர் பெருமாள் மலை போன்ற தலங்களில் தசாவதார மூர்த்திகளும் எழுந்தருளி உள்ளனர்.
ஆன்மீக அன்பர்கள் இந்த பெறுதற்கரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

ஓம் குருவே சரணம்

தொடரும் நிவாரணம் ...


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam