முக்காலமும் உணர வல்லவர் சற்குரு ஒருவரே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

பாப நாசினி சக்திகள்

மிருகசீரிஷ நட்சத்திரம், துவாதசி இரண்டுமே பாவங்களை நசிக்கக் கூடிய பூஜாபல தேவசக்திகளைப் பூண்டுள்ளன. அதாவது பாவ வினைகளைப் போக்கும் குறித்த பூஜைகளை, துவாதசித் திதி நாளில், மிருகசீரிஷ நட்சத்திர நாளில் ஆற்றுதலால், பாவங்கள் பெரிதும் நசிக்கும்.
இவை இரண்டும் சேர்ந்து மனசுத்திக்கான சந்திர மூர்த்திக்கு உரிய திங்களில் வரும்போது  அது அபூர்வமான சித்சுத்தி நாளாக அமையும். இது வாழ்வில் பெறுதற்கரிய நாளாகும். ஆனால், தற்காலத்தில் பாவ வினைகளைச் செய்து விட்டு, கூடவே பரிகாரங்களை நாடும் மனப்பான்மையே பெருகி வருகிறது. ஒருவரை விட்டு எப்போது பாவ வினைகள் முழுமையாக அகலும் எனத் தெரிந்தால்தானே, பரிகாரங்களை முழுப் பயன்கள் தருமாறு, முழு மனதுடன் நன்கு ஆற்ற முடியும்.
பலரும் பெரிய பாவச் செயல்களைச் செய்து விட்டு, லட்சக் கணக்கில் அறத் திருப்பணிகளையும், அன்னதானம் மற்றும் பல்வகைத் தான தர்மங்களையும் செயல்படுத்திடில், இவற்றால் பாவம் நசித்து விடும், தாம் செய்த பாவ வினைகள் தம் சந்ததிகளைப் பற்றாது என எண்ணுவதுண்டு. வெறும் பரிகாரங்களையும், பிராயச்சித்தங்களையும் மட்டும் செய்து வந்து விட்டால், பாவ வினைகள் கரைந்திடா. பரிகாரப் பிராயச்சித்தங்கள் யாவும் பாவத்தை நசிக்க வல்ல நல்வழிகளுக்கான மார்கத்தையே அளிக்கும். அப்படியானால், பாவத்தை முழுமையாக நசித்திட என்னதான் செய்தல் வேண்டும்?
எவராயினும் சரி, முதலில், தாம் செய்த பாவங்களுக்கான விளைவுகளை, தான் அனுபவித்தாக வேண்டும் என்று மனதார ஒப்புக் கொண்டு, அவற்றை மனதார ஏற்று, நன்கு எத்தகைய துன்பங்களையும் அனுபவிக்கச் சித்தமாய் இருக்க வேண்டும்.
இரண்டாவதாக, தாம் செய்த பாவச் செயல்களால், எவரேனும் பாதிக்கப்பட்டு இருந்தால், அவர்களுக்குரிய நிவாரணங்களைத் தந்தாக வேண்டும்.
தன்னால் பாதிக்கப்பட்டவர்கள், மனதார நிவாரணங்களை ஏற்றால்தான், பாவங்களுக்குக் கழிவு கிட்டும். பாதிக்கப்பட்டவர்களுடைய வேதனைகளைக் களையாது ஒரு போதும் எத்தகைய பாவத்தை நசிக்க இயலாது. பாதிக்கப்பட்டவர்கள் மனம் ஆறிச் சாந்தமடைந்தால்தான் பரிகாரம் பயனளிக்கும். பெரும் பணத்தை அள்ளித் தந்து விட்டால், அவர்கள் மனம் சாந்தமடைந்து விடுமா?
அடுத்ததாக, பாவச் செயலுக்கான பரிகாரங்களை ஆற்றிய பின், வாழ்வில் ஒரு போதும் அத்தகைய தவறுகளை மீண்டும் செய்திடேன், என்ற சங்கல்பம் எடுத்து, அவ்வகையில் மனம் திருந்தி வாழ்தல் வேண்டும். மீண்டும், மீண்டும் அதே தவறுகளைச் செய்தால், கிட்டிய சிறு பரிகாரங்களும் கழிந்து, பரிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய கூடுதல் வினைகளும் சேர்ந்து, அதே பாவ வினைகள் பூதாகாரமாய் விரிந்து தலை தூக்கி நிற்கும்.

மிருகசீரிஷம் நிறைந்த துவாதசித் திதி, பாவங்களை நசிக்க வல்ல பூஜா பலன்களைத் தர வல்லதாம். இந்நாளில் பன்னிரெண்டு விதமான பெருமாள் மூர்த்திகளைத் தரிசித்து, ஏகாதசி விரதம் பூண்ட உத்தமர்களின் கால்களில் வீழ்ந்து நமஸ்கரித்தல் வேண்டும். இதனால் தனக்குத் தவறான மார்கங்களில் பணம் வருவது தவிர்க்கப்படும். குடும்பத்தினரால், அதர்ம வழிகளில் பணம் கரைவதும் மட்டுப்படும்.
பொதுவாக புத கிரக ஆட்சி வீடான மிதுனத்தில் சந்திரன் இருக்கும் நாளில், புத்தியில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு, திடீரென்று ஊருக்குச் செல்லலாமா ? ஹோட்டல் போய்ச் சாப்பிடலாமா? போன்ற வகைகளில் புத்தியில் சலனங்களும், புத்தி மாற்றங்களும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும். இதற்கு ஆட்படாது தற்காத்துக் கொள்ள, இந்நாளில் செலவழிக்கும் பணம், வரும் வருமானம், பெறும் சில்லறை பாக்கிகள், பாங்கிலிருந்து எடுக்கும் பணம் அனைத்திலும் குறைந்தது 36 முறை ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஜபித்து, புத்திச் சலனங்கள் ஏற்படாத வகையில் பணத்தைச் சுத்திகரிக்க வேண்டும்.
வருகின்ற, கொடுக்கின்ற பணம் அனைத்திலும் ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஓதி, அளிக்கின்ற /பெறுகின்ற நல்வழிபாட்டுப் பழக்கத்தை மேற்கொண்டால், அப்பணம் செல்லுமிடமெங்கும், பாமரர்களுக்கும், அனைவருக்குமாய் ஸ்ரீகாயத்ரீ மந்திர சக்திகள் சென்றடைந்து, பணத்தை நல்வழியில் சேமிப்பதற்கான, நன்முறையில் செலவழிப்பதற்கான நல்புத்திக் கிரணங்கள் பலருக்கும் வந்தமைய, ஒரு தெய்வீகக் கருவியாகப் பயன் ஆகின்றீர்கள் அல்லவா!
முறையாகச் சம்பாதிக்கும் பணமே உடலில் ஒட்டும். தவறான வழிகளில் வந்த பணம் கர்ம வினைகளை, ருண பாக்கியாகக் கூட்டி விடும். ருண வினைகள் எளிதில் தீரா.
துவாதசி, திருமகளுக்கு உரிய வழிபாட்டுத் தினமாதலாலும், ஸ்ரீலக்ஷ்மீ கராவலம்பத் துதிகளை ஓதி, நெல்லி மரம் உள்ள பெருமாள் ஆலயத்தில் திருமகளை வழிபடுதலும், நெல்லிக் காய் துவையல் / ஊறுகாய் கூடி அன்னதானமும், பசுக்களுக்குப் பழங்களை அளித்தலும் மிகவும் விசேஷமானதாகும்.
அலுவலகத்தில் பொய்க் காரணங்களைக் காட்டிப் பெறும் கடனும், பணமும் மாசுள்ளதே! இதில் ஒரு பங்கையேனும் தக்க இறைப் பணிகளில் செலுத்தி, ஓரளவேனும் பணக் கர்மச் சுமையில் இருந்து மீள்க! கர்மச் சுமையை விட, பணக் கர்மச் சுமை பளுவானது. சித்சுத்தியால்தான் தீர்க்க முடியும்.

தூக்கணாங் குருவியின் வாஸ்து சக்திகள்

மனிதனைத் தவிர அனைத்து ஜீவன்களுமே வாஸ்து சாஸ்திர நியதிகளை நன்கு கடைபிடிக்கின்றன. குளவிகளும், எறும்புகளும் கூடத் தங்கள் கூட்டை, புற்றைத் தக்க வாஸ்து சாஸ்திர நியதிகளுக்கு ஏற்பக் கட்டுவதால்தான், நிலத்தில் அஸ்திவாரம் தோண்டும் போது கிட்டும் ஜீவன்களின் கூடுகளை, பாம்புப் புற்று, எறும்புப் புற்று, தேன் கூடு, குளவிக் கூடுகளை வைத்து, அந்தந்த நிலத்தின் தன்மைகளை, சகுனங்களை அறிகின்றனர்.
உண்மையில் மிகச் சிறப்புடன் வாஸ்து இலக்கணங்களை இப்பூவுலகில் கடைபிடிக்கின்ற ஜீவன் யார் / எது தெரியுமா? நிச்சயமாக மனித குலத்தார் அல்லர்! ஆம், சிறப்பான பட்சியான தூக்கணாங் குருவியே, எந்த மரத்தில், எந்தத் திசையில், எவ்வாறு கூட்டைக் கட்டுவது என்பது முதலாக, தன் கூட்டைக் கட்டுவதில் ஓர் இம்மி கூடப் பிசகாமல், வாஸ்து லட்சணங்களைப் பரிபூரணமாக ஒட்டியவாறு தன் வீட்டுக் கூட்டைக் கட்டிக் கொள்கின்றது என்பது பலரும் அறியாப் பொருளாகும்.

18கர துர்கை அன்னை
ஒன்பத்துவேலி

அருணாசல கிரிவலத்திலோ, ஆலய வழிபாட்டிற்குச் செல்லும் போதோ, தம்பதியர் தூக்கணாங் குருவியின் கூடு தரிசனத்தை பெறுதல் உண்மையில் மிகவும் சுபசகுன, மங்களகரமானதாகும். எந்த மரக் கூடு, கூடு தொங்கும் திசை போன்ற நிலைகளைப் பொறுத்துப் பலாபலன்கள் அமையும். எனவே, புது வீட்டிற்கு அஸ்திவாரம் போடுபவர்கள், தூக்கணாங் குருவிக் கூடு உள்ள மரத்திற்குத் தக்க விருட்ச பூஜைகளை ஆற்றி, பதினெட்டு முறை வலம் வந்து வணங்கிய பின் பூஜையை தொடங்குதல் சிறப்பான வாஸ்துப் பலன்களைத் தரும். இதற்காகவே, அக்காலத்தில் புது வீடு கட்டுபவர்கள், விருட்ச பூஜைக்கான திரவியங்களை, ஒரு மஞ்சள் பையில் வைத்தவாறு, தூக்கணாங்குருவி கூடு உள்ள மரத்தைத் தேடிச் செல்வார்கள்.

வாஸ்து ராஜன்

ஒரு கூட்டைக் கட்ட, தூக்கணாங்குருவிக்கு சுத்தமாகப் பதினெட்டு நாட்களாகும். அதாவது, பதினெட்டாம் நாளில் இது தன் கூட்டிற்குக் கிரகப் பிரவேசம் கொண்டாடும். எண் பதினெட்டு என்பது, வாஸ்து சாஸ்திரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த எண்ணாக முக்கியத்துவம் பெறுகின்றது. பதினேழு, பத்தொன்பது என்ற இரண்டு ஒற்றைச் சாளர (எதனாலும் வகுக்க முடியாத) எண்களுக்கு இடையில் உள்ள பதினெட்டிற்குக் கோடானு கோடி எண் சக்தி மகத்துவங்கள் உண்டு. இதனைச் சித்தர்கள் மிகவும் வேகம் உடைய எண்ணாகக் கொண்டு உரைக்கின்றார்கள்.
இதனால்தான் எண் 18 ஆனது, அதிசாரம், அதிவேகம், அதிவாரம் போன்ற 18 முக்கியமான சாரங்களை உடைய எண்ணாக விசேஷமாக வழங்கப்படுகின்றது. மூல ஸ்தானத்திற்கு முன் பலகணி துவாரங்கள் கூடிய சுவர் உள்ள சாளரக் கோயில்களிலும், ஒன்பது, பதினெட்டு என்ற வகைகளில் சாளரங்கள் அமைந்திருக்கும். அக்காலத்தில் குளத்தின் படிக்கட்டுகள், ஆற்றுப் படிக்கட்டுகளைக் கூட, வாஸ்து இலக்கணங்களுக்கு ஏற்ப மன்னர்கள் அமைத்தமையால்தாம், ஆறுகளிலும், குளங்களிலும் வற்றாத நீர்வளம் பூரித்தது.
தற்காலத்தில் குளத்தைச் சீரமைப்பவர்கள், உத்தமப் பெரியோர்களை, சற்குருமார்களை நாடி, குளம், ஆறு, ஏரிக்கான வாஸ்து இலக்கணங்களை அறிந்து, அதற்கேற்பச் செயல்படுதல் வேண்டும். குளம், ஆற்றின் படிக்கட்டுகள் 18 எண் என்ற வகையில் இருத்தலே சிறப்புடையது.
சபரி மலையிலும் பதினெட்டுப் படிகள் தாமே உள்ளன. பதனம்திட்டா என்ற மலைப் பகுதியில் அமையும் சபரிமலையானது, பதினெட்டுத் திட்டுக்களால் ஆக்கப் பெற்றதாகும். சபரி ஆற்றில் 18 + 28 தலைமுறைகளுக்குத் தர்ப்பணம் அளித்தல் மிகவும் விசேஷமானதாகும். சபரி ஐயப்ப சுவாமி புலிப் பால் கொணர்ந்த வேங்கை 18 அடி நீளமுடையுதாகும்.

பம்பை ஆறு

மூன்று (3 x 6) ஆறு சக்திகள் நிறைந்த எண் சக்தித் தலமே மூவாற்றுப் புழா ஆகும். இங்குள்ள ஆலயங்கள் ஷண்மத சக்திகளைக் கொண்டவை. ஒழுகு வகை நோய்களுக்கான நிவர்த்திக்கு (நீர், ரத்தம், சீழ் ஒழுகு(ம்) நோய்கள்) மூவாற்றுப் புழாவில் உள்ள புற்றுத் தலங்களில், 18 விதமான அபிஷேகங்களுடன் பூஜித்து வழிபட்டு வருதல் வேண்டும்.
ஆடி பதினெட்டாம் பெருக்கு என்பது மஹா விருத்தி நாளாகச் சித்தர்களால் போற்றப்படுகின்றது. தொட்டதைத் துலங்கி விருத்தி செய்து தரும் நன்னாள். வறண்ட ஆற்றில் புதிதாக நீர் வரும் போது, இவ்வரிய காட்சியை, அதாவது முதன் முதலாக ஆற்றில் நீர் புரண்டு ஓடிவரும் வரும் காட்சிதனைக் காண்பது வாழ்வில் மிகச் சிறந்த பாக்யங்களுள் ஒன்றாகும். அனைவருக்கும் வாழ்வில் இது கிட்டி விடாது. இதற்கான முறையான பூஜைகளும் உண்டு.
வாழ்வில் எது பெருகுதல் வேண்டும், எது மறைதல் வேண்டும், எது மறைந்து தோன்றுதல் வேண்டும், எது முழுமையாகக் களையப் பெற வேண்டும் - என்று பதினெட்டு விதமான தாத்பர்ய விளக்கங்கள் ஒவ்வொரு பொருளுக்கும் உண்டு. உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களையும், இந்தப் பதினெட்டு உட்சாரப் பாங்கில் அமைத்து விடலாம்.
இவற்றின் விளக்கங்கள்தாம், தற்போதைய விஞ்ஞானத்தில் எலக்ட்ரான், நியூட்ரான், புரோட்டான் என்ற மூன்று விதமான அணுக்களாக (தொகுதிகளாக) வகுக்கப்பட்டுள்ளன. இவை எதிர்காலத்தில் 18ஆக விரிவு பெறும். இவ்வாறு ஒவ்வொரு பொருளின் அணு விளக்கத்தையே ஆ(ற்)றுப் புலம் என்று மெய்ஞ்ஞானத்தில் உரைக்கின்றார்கள். இத்தகைய ஷட்புல சக்திகள் ஆடி பதினெட்டாம் நாளில் விருத்தி ஆகின்றன.
ஜோதிடக் கலையில் எண் சாஸ்திரமும் ஒரு முக்கியமான அங்கமே என்பதையே பிற பண்டிகைகளைப் போல், நாள், திதி, நட்சத்திர வகையில் அல்லாது தேதி எண்ணை ஒட்டிய இப்பண்டிகை சிறப்புடன் குறிக்கின்றது. இதே போல, தேதி மழை என்ற நாளும் வரும்.

பதினெட்டாம் பெருக்கு நாளன்று, ஓடுகின்ற புண்ணிய நதியைத் தரிசனம் செய்து, இயன்றால் ஓடும் ஆற்று நீரில் நீராடி, பதினெட்டு விதமான பொருட்களை, (எத்தகைய ஏழ்மையில் இருப்பவர்களும்) தானம் செய்து, பெருமாளை வழிபாட்டால், பதினெட்டு விதங்களில் பொருட்கள், திரவியங்கள், ஆஸ்திகள் நன்கு விருத்தியாக, த்ரய ஷட்காரப் பித்ரு மண்டல தேவதைகள் உதவுவர்.

ஒரு மனிதன் உயிர் வாழ, காற்று, உணவு, ஆடை போன்று பதினெட்டு விதமான மூலதாரப் பொருட்கள் தேவை. இவற்றில் சில விருத்தியாகும், சில குறித்த அளவில் போதுமானது. சிலவற்றில் ஒன்றே ஒன்று இருந்தால் போதும். இவ்வாறு பதினெட்டு வகை மூல ஜீவ சக்திகள் விருத்தியாகும் நாளில், தான்யம், தங்கம், வெள்ளி, பழம், அன்னம், காய், காலணி என்று பதினெட்டு விதமான தானங்களைச் செய்து பயன்பெறுக! ஏழையாக, வசதியற்று இருப்போரும் கூட, தன்னிடம் இருப்பனவற்றில் சிலவற்றையாவது தானம் செய்திட வேண்டும். பல்வகைப் பூக்கள், தான்யங்கள், பொரி என 18 வகைகளைச் சிறிதளவிலாவது தானமளித்தல் கடினமானது அல்லவே!
18ஆம் படிக் கருப்பர், 18 படிகளுடன் அருளும் சாஸ்தா / ஐயப்பன், 18 கரங்கள் கூடிய தெய்வ மூர்த்திகள், 18 கோயில் கலசத் தரிசனம், 18 படிகள் உள்ள ஆறு, திருக்குளம் என்றவாறாக - 18 சம்பந்தப்பட்ட வழிபாடுகளை ஆற்றுதலால், குடும்பத்தில் முதியோர்களைப் பேணாது, வயதானோர், முதியவர்களின் சாபங்கள் அகல நல்வழிகள் பிறக்கும்.

பிரிந்த உறவுகள் சேரும்

ஒரு திதியானது, நாள் முழுதும் நிரவிப் பரவும் தினத்தில், சில குறித்த வகை புத்தி சக்திப் பூஜைகளை ஒருமித்து ஆற்றுதலால் உள்ளூர வருத்தும் மன வேதனைகள், மன சஞ்சலங்கள், வருத்தமான வடுக்கள், கொதிப்புகள் அடங்கப் பெரிதும் உதவும்.  
தினமுமே வானில் நிலவொளி இல்லையே என எண்ணாதீர்கள். தினமும் சந்திரக் கோள் வானில் இருக்கத் தானே செய்கிறது, மனிதக் கண்களுக்குத் தெரியவில்லை! சந்திர கிரகத்திற்குச் சுய(ம் பிரகாச) ஒளி உண்டு! இதனைத் தரிசிக்க வல்லவர்கள் சுயம்பிரகாச யோகியரே!
நல்மனதுக்கு அதிபதியே மனகாரகத்துவராகிய சந்திர மூர்த்தி. உயிர் வாழத் தேவையான ஜீவ சக்திகளை அளிப்பவரே பித்ருகாரகத்துவராகிய சூரிய மூர்த்தி! மேலும், தந்தை வழி பித்ரு சக்திகளை போஷிப்பவர் சூரிய மூர்த்தி! தாய்வழிப் பித்ரு சக்திகளை போஷிப்பவர் சந்திர மூர்த்தி! தந்தை மற்றும் தாய்வழிப் பித்ருக்களின் ஆசி, தினமுமே ஒவ்வொரு மனிதனுக்கும் தேவைதானே! வலது கண்ணில் சூரிய சக்தியும், இடது கண்ணில் சந்திர சக்தியும் பொலிகின்றன. மேலும் நீங்கள் உங்கள் தினசரி வாழ்வில் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும், தான்யமும், அரிசி மணியும், காய்கறியும், பழமும், ஒவ்வொரு சொட்டு நீரும் சூரிய, சந்திர ஒளி சக்திப் பூர்வமாக ஆகி, அனைத்துமாக சூரிய, சந்திரக் கோள்களின் சக்திகள் சம்பந்தப்பட்டதே!
எனவே, இப்போதாவது, இனிமேலாவது தெரிந்து கொள்ளுங்கள், நீங்களே சூரிய, சந்திரத் திதிமாள்யத்தை உங்களுக்குள் நீங்களே தினமும் நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கின்றீர்கள் என்பதை! இவற்றின் ஒட்டு மொத்த விளைவுகளே, புரட்டாசி மாத அமாவாசையான (சூரிய, சந்திரத் திதிகளின் சமஷ்டிப் பூர்வ) மாளயபட்சத்தில் பொலிகின்றன.

ஸ்ரீசண்டேஸ்வர மூர்த்திகள்
சாத்தமங்கலம் லால்குடி

எனவே, உங்களுடைய மனதளமானது வருத்தங்கள், வேதனைகள், சஞ்சலங்கள், கொதிப்புகளில் இருந்து வெளி வந்து, நல்ல அமைதியான மனவளத்தோடு சிறந்தோங்க சூரியனும், சந்திரனும் ஒரே தளத்தில் நெருங்கி வரும் (தேய்பிறைச்) சதுர்த்தசித் திதியில் சூரிய, சந்திரப் பூஜைகளை முனைந்து ஆற்றுக! சதுர்த்தசித் திதி தோறும் சித்தி புத்தி கணபதியை வணங்கி, சதாசர்வ காலமும் சிவ தியானத்தில் ஒன்றும் சண்டேஸ்வரரையும் வழிபட்டு வருக!
சதுர்த்த சாதுர்ய சக்திகளை அளிக்க வல்லவரே சண்டேஸ்வர மூர்த்தி. நான்கு முகங்களுடன் அருளும் சதுர்முக சண்டேஸ்வரரை (சென்னை அருகே திருக்கச்சூர்), அமாவாசைக்கு முந்தைய சதுர்த்தசித் திதி தோறும் அபிஷேக, ஆராதனைகளுடன் வழிபட்டு, நான்கு வகை தான, தர்மங்களை ஆற்றி வருதலால் (அன்னதானம், ஆடைதானம், ஆபரண தானம், வித்யாதானம் - ஏழைகளுக்கான புத்தகங்கள், கல்விக்கு உதவி),
குடும்பப் பிரிவு, உறவுப் பிரிவுக்குக் காரணமாகி, மனவருத்தங்கள், வேதனைகள், சஞ்சலங்கள், மனக் கொதிப்புகளால் வாடுவோர், தக்க நிவாரணங்களைப் பெறுவர். பிரிந்த உறவில் சுமுகம் கிட்டும்.
சண்டேஸ்வர மூர்த்தியே வாழ்வில் நல்வகை தியானத்திற்கு அருள்கின்றார். ஆனால், பெரும்பாலான ஆலயங்களில் சண்டேஸ்வர மூர்த்தியைச் சரிவரப் பூஜிப்பதும் இல்லை, வழிபடுவதும் இல்லை, இதனால்தான் கலியுகத்தில் பெரும்பாலானோர்குத் தியானமும் சித்திப்பதும் இல்லை!
தியானம் என்பது உங்கள் உடலில் சூரிய, சந்திர சக்திகளை (ஜீவசக்தி + மனோ சக்தி) ஒரே தளத்தில் கொண்டு வருவதேயாம்! உங்கள் மனம், உங்கள் உடலை விட்டுப் பிய்த்துக் கொண்டு, எங்கெங்கோ திரிகையில், விட்டுப் பிரிந்த நல்மனதைத் தேடும் மார்கமே தியானத்தின் ஆரம்ப நிலை! இதற்கு சூரிய, சந்திர சக்திகள் மிகவும் தேவை!  
கண்களைத் திறந்த நிலையில் வைத்துத் தியானம் பயில்வது உத்தம நிலையாகும். இதில் மனம், புத்தி, வலது நேத்ர பாஸ்கர யோக சக்திகள், இடது நேத்ர சந்திர சக்திகள் ஆகிய நான்கும் உடலின் தச (பத்து விதமான வாயுநாள) சக்திகளுடன் இணைந்து பூரிப்பதால்தான், (10 + 4 = 14 சக்திகள்), பதினான்காம் திதியாகிய சதுர்த்தசித் திதியானது கண் திறந்த யோக நிலைப் பதங்களுக்கு மிகவும் உதவி புரியும்.
சதுர்த்தி, சதுர்த்தசி இரண்டுமே விநாயக சக்திகள் நிறைந்த திதிகள் ஆகும். பலன்களை ஒட்டியதாகவே கலியுக மனித குலம் வழிபாடுகளை, பூஜைகளை அமைத்துக் கொண்டு விட்டமையால், சுயநலம் கூடியதாகவே மனித மனம் கூடிக் குறுகியதாகி வருகிறது. இந்நிலையில் சதுர்த்தசித் திதி நாளில் சண்டேஸ்வரரை அபிஷேக, ஆராதனைகளுடன் பூஜித்துத் தியானத்தில் அமர்ந்திடில் நல்ல மனோசக்திகள் பூரிக்கும், பிரிந்த உறவுகள் நன்முறையில் சுமுகமாகச் சேரும்.

அட்சய சக்திகளை
எப்படிப் பெறுவது ?

பொதுவாக அமாவாசை நாளில் பகல் 11 மணிக்குள் தர்ப்பணம் அளிப்பது நன்று
சதுர்த்தசித் திதித் தர்ப்பணத்திற்கான உத்தமப் பலன்கள் நிறையவே உள்ளன. இதில் மிகவும் முக்கியமானதாக, சதுர்த்தசித் திதித் தர்ப்பணப் பலன்களாக, குடும்பத்தில் சரியாகப் படிப்பறிவு இல்லாது, சுமாரான வருமானத்துடன் வாழ்க்கை முழுதும் கஷ்டப்பட்டு வாழ்ந்து, நிறைவேறாத பல்வகை ஏக்கங்களுடன் வாழ்ந்து இறந்தார் நன்னிலை பெற உதவுவதாகும். இவ்வாறாக, ஒவ்வொரு திதிக்குமே விசேஷமான தர்ப்பணப் பலன்கள் உண்டு.
உதாரணமாக, காது சரிவரக் கேளாது இறந்தோர்க்கு, சப்தமித் திதியில், தமிழ் மறைகள், தேவமொழி ஓதியவாறு இருக்க, இந்த வேதசாரத்தின் ஊடே அளிக்கும் தர்ப்பணத்தால், செவிடாக இருந்து மறைந்தவர்கள், தம் வாழ்வில், காதுகளால் நன்கு கேட்டுப் பெற இயலாது இழந்த இறையொலிகளுக்கு நல்ல மாற்று சக்திகள் கிட்டி, அவர்கள் நற்கதி அடைய வழி பிறக்கும்.
பொதுவாக, தர்ப்பணப் பலன்கள் திதிகளை ஒட்டியவை எனினும், நட்சத்திர + திதி சங்கமப் பலாபலன்களும் தனியே உண்டு. உதாரணமாக, கேட்டை நட்சத்திரத்தில், குடும்பத்தில் எவரேனும் பிறந்திருந்தால், தந்தையார், கேட்டை நட்சத்திர நாளில், தாமரை இலை மேல் துவரம் பருப்பு தான்யத்தின் மேல் தர்ப்பைச் சட்டம் வைத்துத் தர்ப்பணம் அளித்து, தர்ப்பணம் முடிந்த பின் துவரையுடன் மேலும் தான்யங்கள், சர்க்கரை சேர்த்து ரவையாக்கி, எறும்புகளுக்கும், பறவைகளுக்கும் இட்டு வருவதால், ஆயில்யம், பூரம், கேட்டை நட்சத்திரக்காரர்களைப் பற்றிய தேவையில்லாத, தவறான வகையிலான கவலைகள், பீதிகள் தணியும். அனைத்து நட்சத்திரங்களும் சிறந்தவையே!
ஒவ்வொருவரும் தனக்கு அவ்வப்போது என்ன தசா, புக்தி அந்தரம் நடக்கிறது எனக் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். தசா, புக்தி அந்தரங்கள்தாம் கடந்த கால வினைகள், நடப்பு வினைகள், எதிர்கால வினைகள் மூன்றையும் பரிபாலித்துத் தருபவை.



விளங்குளம் திருத்தலம்

உண்மையாகவே, புனிதமான நாடி ஜோதிடம் மூலமும் ஓரளவு கடந்த கால வினைகளை அறியலாம். ஆனால், நாடி ஜோதிடத்தை மிகவும் புனிதமானதாக மதித்து, வியாபார நோக்கு இல்லாது, பணம் சம்பாதிக்கும் எண்ணமே சற்றும் இல்லாது நாடி பார்ப்பவர்கள் மூலமாகவே, ஓரளவு கடந்த காலவினைகளைச் சரியாக அறியலாம். இவ்வாறு புனிதமான முறையில் நிறைப் பூஜைகளை ஆற்றி, நாடி ஜோதிட உலகில் இருப்பவர்கள் கலியுகத்தில் மிக மிகக் குறைவே!
பலரும் தன் பெயர், தன் தாத்தா, பாட்டி, பெற்றோர்கள், மனைவியின் பெயர்கள் சரியாக நாடியில் வந்தால், ஒரேயடியாக அதில் குதித்து விடுகின்றார்கள். சில விதமான யட்சணி தேவதா வழிபாட்டுகள் மூலம் உலகில் எவருடைய ஆறு தலைமுறைப் பெயர்களையும் உடனேயே அறியலாம். ஆனால் வெறும் பெயர்களை அறிந்து என் செய்வது ?

ஸ்ரீகிருஷ்ண பகவான்
திருவெள்ளியான்குடி

பரிகாரப் பிராயச்சித்தங்களை முழுமையாகச் செய்யத் தயாராக இருப்பவர்கள்தாம் நாடி ஜோதிடம் அருகே செல்லலாம். அடிக்கடி நாடி ஜோதிடம் பார்த்தலாகாது. தானே காலப் பக்குவத்தில் அறிய வேண்டியதை, அறியக் கூடாத வினை மார்கத்தை, வாழ்வில் துன்பங்களின் மிகுதி காரணமாக, உடனே அறியத் துடிப்பதால், நாடி பார்த்தவுடன் கனத்த பரிகாரங்களை முறையாகச் செய்தாக வேண்டும். நாடி பார்ப்பதில் இறங்கி விட்டுப் பரிகாரங்களைப் பார்த்து பயந்து ஒன்றும் செய்யாமல் ஒதுங்கினால், புனிதமான நாடி வாக்கியங்களை அவமதித்த தோஷங்கள் வரும்.
மேலும், நாடி ஜோஸ்யத்திற்குச் செல்பவர் உரிய பரிகாரங்களைச் செய்யத் தவறினால், வினை மார்கத்தைத் தக்கோருக்கு உரையாமைக்காக, அனைத்துப் பரிகாரங்களையும் நாடி ஜோஸ்யத்தை அளிப்பவரே, அதாவது நாடி ஜோதிடரே செய்தாக வேண்டும் என்ற நியதியும் உண்டு. எனவே இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தசா, புக்தி, அந்தரங்கள் அனைத்தும் கால நாடிகள் ஆகின்றன. தனக்கு எந்த தசை, புக்தி அந்தரம் நடக்கிறதோ, அந்த தசா புக்தி அந்தர கிரக நாதர்களைத் தினமும் வழிபட்டு வந்தால், நல்ல மன அமைதி கிட்டும், நாடி ஜோதிடம் பார்க்க வேண்டிய அவசியமும் மனதில் தோன்றாது. குரு தசை, சூரிய புக்தி, சனி அந்தரம் என அவரவருடைய தசாபுக்தி அந்தர நாத மூர்த்திகளை அந்தந்த ஹோரை நேரத்தில் தினமும் வழிபடுதலும், சிறப்பான தினசரி நவகிரக வழிபாடுகளுள் ஒன்றாகிறது.
ஸ்ரீகிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் என்று போற்றுவது போல, ஜகத் குருமார்கள் எல்லோரும் ஸ்ரீகிருஷ்ணரை குரு ஸ்தானத்தில் வைத்துப் போற்றுகின்றனர். பட்டுக்கோட்டை - பேராவூரணி அருகில் உள்ள விளங்குளம் ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர் ஆலயத்தில், பத்னியுடன் அருளும் சனீஸ்வர மூர்த்தியை பூச நட்சத்திரம் தோறும் வழிபடுதல் வேண்டும். கரிநாள் கூடும் பூசம் சனைஸ்சர மூர்த்திக்கான பிரம்மோற்சவ பூஜா சக்திகளை அளிக்கும். இதனால் சனி புக்தி, சனி தசை, சனி அந்தரக் காலங்களில் இருப்போர் நன்மை பெறுவர். விளங்குளம் பலரும் அறியாத பழமையான சுயம்பு மூர்த்தித் தலம், சனீஸ்வர வழிபாட்டுத் தலமும் ஆகும்.
அமாவாசைக்கு, அட்சய சக்தி அதாவது பல்கிப் பெருகும் சக்திகளை நல்கும் வரசக்திகள் உண்டு. பல விதமான அமாவாசைத் திருத்தலங்களை தோற்றுவித்தவரும் ஸ்ரீகிருஷ்ணர் ஆதலால், ஸ்ரீகிருஷ்ணர் அருளும் பெருமாள் ஆலயத் தீர்த்தங்களில் தசாவதார மூர்த்திகளுக்கும் தர்ப்பணம் அளித்து,
நெடுங்காலம் நின்று, காலதோஷம் பாரிக்காத தோஷமற்ற பொருட்களில் சிறப்பிடம் பெறும் உலர்ந்த கனிகளான திராட்சை, முந்திரி, பாதாம் பருப்பு, பேரீட்சம் பழம் போன்றவை கலந்த பண்டங்களை, 12 பேருக்கேனும் தானமாக அளிக்க வேண்டும்.  

விவாகரத்து தம்பதிகள் நலம் பெற ...

குடும்பத்தில் நிலவும் எத்தகைய மனப் பூசல்களையும் நிவர்த்தி செய்ய உதவுவதே மூன்றாம் பிறைச் சந்திர தரிசனப் பூஜைப் பலன்கள் ஆகும். சாட்சாத் சிவபெருமானே தன் சிரசில் பிறை சூடியத் திருக்கோல சந்திர மெளளீஸ்வர லிங்கமுக தரிசனமே மூன்றாம் பிறைச் சந்திர தரிசனமெனப் பலரும் அறியார். இதனை வானலிங்க தரிசனம், வான்முக லிங்கம், மானச லிங்கம் எனப் பல்வகைளிலும் சித்தர்கள் போற்றுகின்றனர். 27 நட்சத்திரத் தேவியரும் ஒருங்கிணைந்து மூனறாம் பிறைப் பூஜையை ஆற்றுவதால், இந்நேரத்தில் அதாவது மூன்றாம் பிறை தரிசன நேரத்தில்,
ஸ்ரீசந்திரசேகரர், ஸ்ரீசந்திர மெளளீஸ்வரர், ஸ்ரீசோமசேகரர், ஸ்ரீசோமநாதர், ஸ்ரீசோமேஸ்வரர் போன்ற சந்த்ர சக்தி லிங்க மூர்த்திகளை அபிஷேக, ஆராதனைகளுடனும்,
வெண்ணிறப் பூக்கள், ஆடைகள், பால் பாயசம், திராட்சை, முந்திரி இட்ட பசும்பால் போன்றவற்றைத் தானமாக அளித்தும்,
தம்பதி சகிதமாக வழிபடுதல் குடும்பத்தில் நல்ல ஒற்றுமையையும், கணவன் - மனைவி இடையே நல்ல அன்யோன்யத்தையும் பெற்றுத் தருவதாகும்.

ஸ்ரீசோமநாதேஸ்வரர்
மானாமதுரை

மானாமதுரை, பேராவூரணி அருகே பெருமகளூர், கும்பகோணம் அருகே பழையாறை, சந்திரசேகரபுரம் போன்ற குறித்த சந்திர சக்தித் தலத்தில், தம்பதியர் தொடர்ந்து மூன்று முறை ஒரே தலத்தில் மூன்றாம் பிறைத் தரிசனத்தைப் பெற்றுப் பூஜைகளை ஆற்றி வர,
பல்வகைப் பூசல்கள் அகன்று நலமடைந்து சாந்தம் வந்தமையும் அற்புத நிகழ்ச்சிகளும் பல குடும்பங்களில் நிகழ்ந்துள்ளன.
மூன்றாம் பிறை என்பது ஜோதி, வேதம், ஆத்மம் ஆகிய மூன்று சக்திகளைக் கொண்டதாகும். மனகாரகராக சந்திர மூர்த்தி துலங்குவதால் குடும்பம் என்று மட்டுமல்லாது தொழில், அலுவலகம் போன்ற அனைத்திலும் நிலவும் உட்பூசல்கள் அகன்று நல்ல அமைதியான சூழ்நிலைகள் ஏற்படவும்,

ஸ்ரீசோமநாதர் பெருமகளூர்

அந்தந்தத் தொழிற்சாலைகளில் முதலாளிகள், டைரக்டர்கள், தொழிலாளிகள், ஊழியர்கள், அலுவலகர்கள் ஒன்று சேர்ந்து மைதானத்தில் திரண்டு, ஜாதி, மத பேதமின்றி, சத்சங்கமாக வானில் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனங் கண்டு தக்க வழிபாடுகளை ஆற்றி வருதலால், அனைவரும் வியக்கும்படியான மிகவும் அமைதியான, சாந்தமயமாகத் தொழில் வளாகம் துலங்கும்.
மேலும், மூன்றாம் பிறை நன்கு தெரிகின்ற சிவத் தலங்கள், பெருமாள் தலங்கள் நிறையவே உண்டு. தொடர்ந்து 10, 19, 28 மூன்றாம் பிறைச் சந்திரத் தரிசனங்களைப் பெறுதல் என சங்கல்ப நேர்த்தி கொண்டு இத்தலங்களில் ஆற்றி வந்தால், விவாகரத்து நிலை வரை சென்றுள்ள மனத் தாங்கல்கள் கூட மறைந்து இல்லறத்தில் சுமுகம் உண்டாக வழி பிறக்கும்.
விவாக ரத்தாகி மறுமணம் புரிந்து கொண்டவர்கள், கடுமையான தம் முன் வினைக் கர்மங்கள் தொற்றாது, தொடராது முழுமையாகத் தீர்வு பெற,
வாழ்நாள் முழுதும் தொடர்ந்து மூன்றாம் பிறை தரிசனத்தைப் பெற்று வருதல் நலம். மன அமைதிக்கும், ரத்த அழுத்த நோய்கள் தணியவும் சந்திர தரிசனம் மிகவும் துணை புரியும்.
கடை, தொழிற்சாலைகளில் பணி புரிவோரை மூன்றாம் பிறை தோன்றும் தருணத்தில், வெளியே அழைத்து வந்து, அவர்களையும் மூன்றாம் பிறைச் சந்திரனைத் தரிசிக்க வைத்து, கல்கண்டு, முந்திரி, திராட்சை, குங்குமப் பூ, பிஸ்தா பருப்பு ஐந்தும் கலந்த பசும்பாலை அவர்கள் கையாலேயே ஏழைகளுக்குத் தானமளிக்க வைத்தலால் அவர்களுடைய குடும்பத்திற்கும் சாந்தமய நல்வரங்களைப் பெற்றுத் தரும் அரிய அறப்பணி அன்றோ!
தம்பதியர்கள் மெளன விரதம் பூண்டு, மாலையில் சந்திரத் தரிசனம் பெற்ற பின்னர் தம்பதியர், ஓம் சந்திரசேகராய நம என 1008 முறை ஓதி, அசுவினி முதல் ரேவதி வரை இருக்கும் 27 நட்சத்திரப் பெயர்களையும் ஓதி, 27 நட்சத்திர தேவிகள் சமேத சந்திர மூர்த்தியே போற்றி
- எனத் துதித்து, வெள்ளிக் கிண்ணத்தில் பசும் பால் வைத்து நைவேத்யம் செய்து படைத்து, ஏழைக் குழந்தைகளுக்கு அளித்திட்டால், குடும்பத்தில் சொத்துப் பிரிவுகள் காரணமாக ஏற்பட்ட உறவு முறிவுகள் தீர்ந்து - நல்அமைதி ஏற்படும்.
சசிமணி மாலை, ஸ்படிக மாலை போன்ற வெண்ணிற மணி மாலைகளை அணிந்து, மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத்தின் முன்னும், பின்னும் ஒரு நாழிகை நேரம் சந்திர சக்கரத் துதிகளை ஓதி, ரோஹிணி சந்திரச் சக்கரத்தை வைத்து வழிபடுதல், பிள்ளைகளுக்கு நல்ல ஞாபக சக்திகளை அளிப்பதாகும்.

வயதானவர்களும் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம் பெற்று வணங்குதலால், ஞாபக மறதியால் உண்டாகும் கஷ்டங்கள் தீர உதவும்.
மூன்றாம் பிறையும் சிவஜோதித் தரிசனமே! அரஜோதி, அறவேதம், பரஆத்மம் ஆகிய மூன்று சக்திகளைக் கொண்டதாகும். எனவே, மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத்தின் போது, விளக்கின் முன், வேத சக்திகள் நிறைந்த மந்தாரை இலையை வைத்துக் கொண்டு, மூன்றாம் பிறை தரிசனம் முடியும் வரை வெண்ணிறப் புஷ்பங்களால் சந்திர மூர்த்தியைப் பூஜித்துக் கொண்டே இருப்பதும் சிறப்புடையதாம்.
வெள்ளை நிற ஆடைகளை ஆண்கள் அணிந்தும், பெண்கள் வெண்ணிறப் பூக்களை அணிந்தும், மூன்றாம் பிறைச் சந்திரனைத் தரிசிக்க வேண்டும்.

வளையல் வழிபாடு

ஆடிப் பூர நாளில், அம்பிகை நிறை வளையாம்பிகையாகப் பூவுலகில் தரிசனம் தந்தமையாலும், கையில் தேவ கங்கணங்களுடன் ஆண்டாள் தோன்றியமையாலும், ஆலயங்களில் இறைவிக்கு வளையல் சார்த்தி ஆற்றும் பூஜை அதியற்புத வழிபாடாகக் குடும்பத்திற்குப் பல விதங்களிலும் நல்வரங்களை அளிக்கும் அன்றோ! அன்னை பராசக்தியே நிறைவளையாம்பிகை எனப் பெயர் பூண்டு அருள்கின்றாளெனில் என்னே இதன் மஹிமை!
கடவுள் தரிசனங்களைப் பெற்றோர் பாடிய இறைத் துதிகள் வேத மாமறைகளைப் போல் மிகவும் சக்தி வாய்ந்தவை! இதனால்தாம் தேவாரம், திருவாசகம், திருப்புகழ், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், அருட்பா, திருமந்திரம் அனைத்துமே தமிழ்மாமறைகளாகப் போற்றப் பெறுகின்றன. திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சிப் பாக்களை மார்கழியில் மட்டும்தான் பாட வேண்டும் என்பதில்லை! தினமுமே சூரிய உதயத்திற்கு முன் இவற்றை ஓதி வந்தால் தம் பெண் பிள்ளைகளைப் பற்றிப் பெருங் கவலையுடன் இருக்கும் தாய்மார்களின் மனச்சுமை தணிய உதவுவதை துரிதமான பலன்களாக நன்கு கண்டிடலாம்.
கன்னிப் பெண்களுக்கு, தினசரியே ஆற்றும் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சித் துதிப் பாராயணம் நல்ல பலன்களை அளித்துக் காக்கும். குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவியர், பணிக்குச் செல்லும் இளம் பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான ரட்சா சக்திகளைப் பெற, தினமும் விடியற் காலையில் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சிப் பாக்களை ஓதி வழிபட்டு வர வேண்டும்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

கன்னிப் பெண்கள், உரிய பருவத்தில் திருமண நல்பாக்யத்தைப் பெறவும், நல்ல கணவனைப் பெற்றிடவும், தினமும் ஆண்டாள் சன்னதியில் ஸ்ரீவாதிராஜரின் மங்களாஷ்டகத் துதிகளை ஓதி, அடிப் பிரதட்சிணம் செய்து வழிபட்டு வர வேண்டும்.
வளையல்கள் ஒலிப் பூர்வமாக இறை சக்திகளை நிறையச் செய்பவை ஆதலின், அம்பிகைக்கு ஆயிரக் கணக்கில் வளையல்கள் சார்த்தி, வருடம் முழுதும் வளையல்களைப் பிரசாதமாக பக்தர்களுக்கு ஆலயங்களில், இல்லங்களிலும் அளித்து வரும் திவ்யமான சேவை, முற்காலத்தில் நிலவியமையால், அனைத்து இல்லங்களிலும், அம்பிகைக்குச் சார்த்திய வளையல் பிரசாதம் மங்கள சாதனமாகவே இல்லத்தில் எப்போதும் பொலியும்.

வளையல்களில் சூரிய, சந்திர சப்தாமிர்த சக்திகள் உண்டு. மோஹினி அவதாரத்தின்போது பெருமாளின் கங்கண வளையல்களில் அமிர்தம் வழிந்து திவ்யமான சுமங்கலித்வ சக்திகளை வளையல்களுக்குப் பெற்றுத் தந்தது.
தற்காலத்தில் கைக்கு ஒன்றாகத் தங்க வளையலோடு பெண்கள் நிறுத்திக் கொண்டு விடுகின்றார்கள். இது தவறு. கைகளில் வளையல்கள் நிறைந்திருந்தால்தான் குடும்பத்தில் சாந்தம் பூரிக்கும். பாஷன் என்று நினைத்துக் கொண்டும், அநாகரீகம் என்றும் விபரீதமாக, அவலமாக நினைத்துக் கொண்டும், வெற்றுக் கைகளுடன் பெண்கள் இருந்தால், குடும்பத்தில் தரித்திரச் சூன்யமே பீடிக்கும்.
ஆடிப் பூரம் மட்டுமல்லாது, மாதாந்திரப் பூரம் தோறும் அம்பிகைக்கு வளையல் சார்த்துவதும், வளையல்களைத் தானமளிப்பதும் விசேஷமானதாகும்.
ஆடிப் பூரம் என்பது ஆண்டாள் அவதரித்த நாளாகும். தூய மானுடராகப் பிறந்து, வளர்ந்து, அடியார்களுக்கு அருள்பாலித்து, இறைதரிசனம் பெற்ற பெண் ஞானிகளுள் ஆண்டாளும் ஒருவர். பக்தி யோகத்தில் திளைத்து ஸ்ரீரங்கநாதரை மணந்த ஆண்டாளை, தாயார் எனப் போற்றித் தினமும் வழிபட்டு வந்தால், பெற்றத் தாயிடம், தந்தையிடம் உண்மையான அன்பு மலரும், பாசம் தணியும். பாசத்திற்குக் கட்டுபட்டால் மீள முடியாது. அன்பு கொண்டால் சாசுவதமாக இருக்கும். பெற்றோர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றிட உதவும்.
ஆடிப் பூர நாளில் சென்னை - காவேரிப்பாக்கம் - வேலூர் மார்கத்தில் சென்னையில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள காவேரிப்பாக்கத்தில் இறங்கிக் கொண்டு, இங்கிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ள திருப்பாற்கடல் கிராமத்தில் அருளும் ஸ்ரீவாலீஸ்வரர் சமேத ஸ்ரீநிறைவளையாம்பிகைக்கு வளையல் சார்த்தி வழிபடுதல் வாழ்வில் பெறுதற்கரிய பாக்யமாகும்.
உலகில் கணவன், மனைவி இடையே தூய அன்பு நிலவ உதவிடுவதே நிறைவளையாம்பிகை வழிபாடு. உலகத்தில் உள்ள அனைத்துக் குடும்பப் பெண்களின் நலன்களுக்காகச் சுமங்கலிகள் பலரும் இங்கு வழிபடுதல் மிகவும் விசேஷமானது. இங்கு அம்பிகைக்குச் சார்த்திய வளையல்களைச் சீமந்தத்தில் கர்பிணிப் பெண்களின் கைகளுக்குச் சார்த்துதல் மிகவும் சிறப்புடையதாகும்.
பல அம்பாள் மூர்த்திகளுக்கும் வளையல்களைச் சார்த்தி, ஏழைப் பெண்களுக்கும் வளையல்களைத் தானமாக அளித்திடுக!

தங்க தோஷங்கள் தணிய ...

மாசற்ற பக்தியையே அணிகலானாக்கிட அம்பிகை ஸ்வர்ண கெளரீயாக, ஸ்வர்ணவல்லியாகத் தோன்றி அருளிய நன்னாளே ஸ்வர்ண கௌரி விரத நாளாகும். தங்க சக்திகளைத் தூய்மைப் படுத்தி, உலகெங்கும் அனைத்து நாடுகளிலும் நிலவும் தங்க மாயையில் இருந்து, மக்களை விடுவித்திட உதவுவதற்காக உலகக் குடும்பப் பெண்கள் ஒன்றிணைந்து விரதம் ஆற்ற வேண்டிய அகண்டகார விரத நாள்.
தற்காலத்தில் தங்கத்தைக் கண்டால் பைத்தியம் பிடிக்கும் அளவிற்கு, சகல நாடுகளிலும் தங்க மாயை பெரும் நோயாகப் பீடித்திருக்கிறது. பரமஹம்சப் பெருமான் உரைப்பது போல, (முறையற்ற) காமமும், காஞ்சனமும்தாமே (தங்கம், பொருள், ஆஸ்தி மீது பேராசை கொள்தல்) கலியுகத்தின் இரு பெரும் கலியுக நோய்கள்!
ஆனால், தங்கம் எவ்வழியில் வருகிறதோ - தர்மமோ, அதர்மமோ - அவ்வழியில் பலன்களை நல்கும். நல்விதமாகப் பெற்ற தங்கத்தை ஆபரணமாக அணிகையில் உள்ளம், மனம், உடலில் நல்மாற்றங்கள் ஏற்படும். தங்க பஸ்மம் உடலுக்கு மிகவும் நல்லது.
ஆயுள் முழுதும், ஆபரண உராய்வுகள் மூலமாக உடலில் சிறிது சிறிதாகத் தங்கம் சேர்ந்து ஆயுளை விருத்தி செய்யும், மங்கள சக்திகளும் நல்வரமாக வந்து சேரும்.

ஸ்ரீஸ்வர்ணாம்பிகை சமேத ஸ்ரீபடிக்காசு நாதர்
அளகாபுத்தூர்

தங்கத்தினுள் தோஷம் இல்லையாயினும், அது முறையாக வராவிடில் அது தோஷத்தைத் தழுவி வந்து விடும். இதனைக் களைதல் மிகவும் கடினமே! பொன் தானம்தான் தங்கத்தின் மாசைக் களைய உதவும். உதாரணமாக,
* திருட்டு நகை, லஞ்சம், சூது, சீட்டு, குதிரைப் பந்தய வருமானம் போன்று அதர்ம வழிகளில் வந்த பணத்தில் வாங்கிய நகை,
* வரதட்சிணையாகப் பலருடைய வயிற்றெரிச்சலில் வாங்கி வந்தது
-எனப் பலவகைகளில் சாபங்கள், தோஷங்கள் தங்கத்தில் ஒட்டி வரும். இவற்றை அவ்வப்போது நீக்கும் வழிமுறைகளை நன்கு அறிதல் வேண்டும்.
சுவர்ண கெளரி விரத நாளன்று,
* வீட்டில் இருக்கின்ற தங்க நகைகளில் உள்ள தோஷங்களும், மாங்கல்யத்தில் படிந்துள்ள தோஷங்கள் அகலவும்,
* பொன் போன்று தூய்மையாக இருக்க வேண்டிய மனதில் மாசுகள் படிந்து இருப்பதை அகற்றவும் உதவும் வண்ணம் உண்ணா விரதமிருந்து,
* ஸ்வர்ண வல்லி, ஸ்வர்ணாம்பிகை, ஸ்வர்ண லக்ஷ்மீ போன்ற ஸ்வர்ண வகை மூர்த்திகளை வழிபடுதல் வேண்டும்.
* உங்கள் இல்லத்தில் பூஜையில் சுவாமிகளுக்கான சிறு சிறு நகைகள் இருந்தால் அவற்றைச் சுத்தம் செய்திடுக, அம்பாளுக்கு மாங்கல்யம் சார்த்தியிருந்தால் கழற்றலாகாது, அவ்வாறு அம்பாளின் மாங்கல்யத்தைச் சுத்திகரிக்க வேண்டி இருந்தால் ஒரு மஞ்சள் சரடைச் சார்த்திப் பிறகு சுத்திகரிக்க வேண்டும். இயன்ற வரை அம்பாளின் மாங்கல்யத்தை எடுத்திடாது அப்படியே வைத்திட்டு சுத்திகரித்தலே சிறப்புடையது..
* இந்நாளில் ஆலயங்களில் ஆலய மூர்த்திகளின் ஆபரணங்களை நன்கு தரிசித்திடுக! உலகின் அனைத்துத் தங்கப் பொருட்களும் இறைவனுக்கே சொந்தம்! பொதுவாக, சித்தர்களும், மஹரிஷிகளுமே தெய்வமூர்த்திகளின் ஆயுதங்களாக, ஆடைகளாக, ஆபரணங்களாகத் தோன்றுதலால், தெய்வங்களின் ஆபரணங்களில் சித்தர்களின், மஹரிஷிகளின் தரிசனங்களையும் நினைந்து கண்டிடுக.
* இந்நாளில் ஸ்வர்ண பைரவி, ஸ்வர்ண லக்ஷ்மி, ஸ்வர்ண ஜோதி, ஸ்வர்ண வல்லி போன்ற பெயர்களுடைய அம்பிகைகளையும், ஸ்வர்ண பைரவரையும், ஸ்வர்ணாகர்ஷண பைரவரையும் தரிசித்து வழிபடுதல் வேண்டும்.
கோமுகத் தாரை வழியாக இத்தீர்த்தத்தைச் சிறிது எடுத்து வந்து, தம் மாங்கல்யம் மற்றும் நகைகளில் இல்லத்தில் தெளித்திட, இது பொன் தோஷங்களை நீக்கவும், குடும்பத்தில் நன்முறையில் தங்கம் விருத்தியாகவும் உதவும்.
* இந்நாளில் ஒரு குண்டு மணி அளவு தங்கமேனும் தானம் செய்தல் வேண்டும் அல்லது தங்க முலாம் பூசிய நாணயங்களையாவது தானம் செய்திடுக! நமக்கு வசதி இல்லையே என எண்ணாது ஒரு சிறு மூக்குத்தியாவது தானம் செய்திடுக. இது தங்கத்தில் உள்ள தோஷங்களைத் தணிக்கவும், தங்கம் விருத்தியாகவும் உதவும். கடன்கள் தணிய உதவும் வழிபாடுகளில் இதுவும் ஒன்றாகும்.

நாக தேவதைகளின் அருள் பெற ...

கருட பஞ்சமி, நாக பஞ்சமி என ஒரு வருடத்தில் வரும் ஒன்பது வகைப் பஞ்சமிப் பண்டிகைத் தினங்களை, ஒவ்வொரு இல்லப் பெண்மணியும் வாழ்க்கையில் குடும்பத்துடன் நன்கு விசேஷமாகக் கொண்டாடுதல் வேண்டும். ஏனெனில், ஒருவருக்கு நாக தோஷங்கள் பூர்வ ஜன்மமாகவோ, வாழ்வின் இடையிலோ எப்போது வேண்டுமானாலும் தோன்றிடலாம். அவரவரே அறியா வண்ணமும் வாழ்வில் நாக தோஷங்கள் புகுவதும் உண்டு. எவ்வாறு?
நீங்கள் குடியிருக்கும் வீடு, ப்ளாட் அல்லது பணி புரியும் அலுவலகமானது, அதர்மமான முறையில், நாகப் புற்றை இடித்துக் கட்டப்பட்டு இருந்தால், இவையும் பலத்த நாகத் தோஷங்களாக வந்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும், மொத்த பிளாட்டுக் குடித்தனக்காரர்களையும் பாதிக்கும். எனவே, இவ்கையில் அறிந்தோ, அறியாமலோ சேர்ந்துள்ள நாக தோஷங்களை நீக்கிடவும், இனியும் நாக தோஷங்கள் குடும்பத்திலும், சந்ததிகளிலும் வாராது தற்காத்துக் கொள்ளவும், வெள்ளி, பஞ்சமித் திதி தோறும், நாக பஞ்சமி நாளிலும் நாகப்புற்று வழிபாடு, நாகாத்தம்மன் வழிபாடு, நாகேஸ்வரர் பூஜைகளை ஆற்றுதல் வேண்டும்.
பிறரை விஷமான வார்த்தைகளால் குத்திப் பேசுதல், தரங் கெட்ட வார்த்தைகளால், காரியங்களால் பிறர் மனதைச் சுட்டு வதைத்தலும், நாக தோஷங்களையே தருவிக்கும். இவற்றுக்கெல்லாம் பரிகாரமாக, புற்று மண்ணாலாகிய லிங்க மூர்த்திகளை வழிபட்டு வருதல் வேண்டும். புற்று வகை லிங்க மூர்த்திகளுக்கு அபிஷேக, ஆராதனைகள் இல்லாது குவளை சார்த்தியே பூஜிக்கப் பெறும். (சென்னை - திருவொற்றியூர் படம்பக்க நாதர் ஆலயம்)

திருநாகேஸ்வரம்

நாக தோஷங்களுக்கு அவ்வளவு எளிதில் பரிகாரம் கிட்டுவதில்லை. கருடனும், பாம்பும் மானுட பூமி இயல் ஜீவ தோரணையில்தாம் ஒன்றக்கொன்று பகைமையே தவிர, இவை இரண்டும், பெருமாளுடைய வைகுண்ட லோகத்தில் உத்தமத் திருமாலின் திருவடிகளில் அடியார்களின் மேன்மைக்காக உறைவதால், நாக பஞ்சமி, கருட பஞ்சமிப் பூஜைகள் அனைவருக்கும் மிகவும் அத்யாவசியமானவையே.
விஷம் என்பது நாகத்திடம் மட்டும் இருப்பதல்ல, மேலும் ஊமத்தங் கொட்டை, பாதரசம் போன்ற பல திரவியங்களிலும் இடங்களிலும் விஷம் நிறைந்துள்ளது. இறைவன் படைப்பில் உயிரைக் கொல்லும் சக்தியுடைய விஷம் வந்தமைவது ஏனோ? விஷம் ஏன் படைக்கப்பட வேண்டும்? எதை எவ்வகையில் பயன்படுத்த வேண்டும் என்பதே உண்மையான விஞ்ஞானம் எனப் பகுத்துணர, விடப் பாடம் மிகவும் உதவும். அமிர்தம் பிறந்த போது நஞ்சும் வந்து, நஞ்சுண்டேஸ்வரராக அன்றோ இறைவன் தோன்றிக் காத்தருளினார்.
நாகங்களுள் பெரும்பாலானவே சத்திய லோகங்களில் இருந்து வருபவை. மனிதனைப் போலன்றி, நாகங்கள் சத்திய நெறிகளுக்கு மிகவும் கட்டுப்பட்டவை. விதியிருந்தால் ஒழிய, நாகங்கள் எவரையும் தீண்டுவதில்லை. நாக தோஷங்கள் பலத்து, வலுத்து இருப்பவர்கள் தினசரி நாக வழிபாடுகளுடன் வாழ்க்கையை நிகழ்த்துதல் வேண்டும். விதி வலுத்தவர்களையே நாகம் தீண்டும். நாகம் தீண்டுவதற்கு மேலும் பல எண்ணற்ற காரணங்களும் உண்டு, அவற்றை விளக்கினால் பலரும் அச்சத்திற்கு உள்ளாவர்.
நாகம் தீண்டி இறப்பதும், பல தலைமுறைக் கர்ம வினைகள் குடும்பத்தைச் சூழுவதைக் குறிப்பதால், நாகம் தீண்டி இறந்தவர்களின் குடும்பத்தினர், நாக சக்தித் தலங்களில் வெள்ளி, பஞ்சமி தோறும் வழிபட்டு வருதல் வேண்டும்.
நாகம் தீண்டியும், விஷமற்ற நாகம் கடித்தும் உயிர் பிழைத்தவர்களும் நாக கண்டத்தில் இருந்து பிழைத்தவர்கள் ஆதலின், இவர்கள் ஆயுள் முழுதும்,
- நாகர்கோயில், கும்பகோணம் நாகேஸ்வரர், திருநாகேஸ்வரர், நாகூர், நாகப்பட்டினம் போன்ற நாக சக்தித் தலங்களிலும் வழிபடுதல், நாக ப்ரீதி வழிபாடுகளை ஆற்றுதல், பால் வகை உணவுப் பண்டங்களைத் தானமாக அளித்தல் போன்ற வழிபாடுகளை ஆற்றி வருதல் வேண்டும்.
ஜாதகத்தின் மூலமும் நாக தோஷங்களையும், கால சர்ப தோஷங்களையும் எளிதில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு ஜாதகப் பூர்வமாக நாக தோஷம் இருந்தால், இவர்கள் வெள்ளிக் கிழமை தோறும் புற்று வழிபாடுகளை ஆற்றுவதுடன், பஞ்சமி, மிருகசீரிஷம் நாளிலும், நாகாத்தம்மன், நாகலக்ஷ்மி போன்ற நாகசக்தி ஆலயங்களில் வழிபட்டு வருதலுடன், தேனபிஷேகம், தேனில் ஊறிய நெல்லிக் காய்களைத் தானமாக அளித்து வர வேண்டும்.
தனலட்சுமி போல் நாகலக்ஷ்மி தேவியும் உண்டு. பாம்பணையில் பள்ளி கொள்ளும் பரந்தாமனை கருட பஞ்சமி, நாக பஞ்சமி நாட்களில் வழிபடுக! புற்றருகே, நல்ல புதிய தேங்காய்க் கொட்டாங்கச்சியில் பால் வார்த்து வைத்து, புற்றுக்கு மஞ்சள், குங்குமம், புஷ்பங்கள் தூவி, 12 முறை அடிப் பிரதட்சிணமாக வலம் வந்து வழிபடுக! நாக குல குருவான அஸ்தீக சித்தரை எண்ணித் தியானம் புரிதல் வேண்டும். அஸ்தீக சித்தருக்கு 36 முறை அர்க்யம் அளித்திடுக!
நாகலிங்கப் புஷ்பம் சார்த்தி, பாண லிங்கம், புற்று லிங்க மூர்த்திகளை வழிபடுதலும், நாகலிங்க புஷ்ப மரத்தை வலம் வருதலும் விசேஷமானது. ஒவ்வொரு நாகலிங்கப் புஷ்பத்திற்கும் ஒரு உணவுப் பொட்டலமாகக் கணக்கிட்டு அன்னதானம் அளிக்க வேண்டும். இதனால் நாகசக்திகள் நல்வரங்களாகக் கிட்ட நாக லோக தேவதைகள் அருள்வர். கடுத்த பாவ வினைகள் என்பதான - விஷமான சொற்களால் வதைத்த பாவ வகைளுக்குப் பரிகாரம் பெற இவை உதவும்.

சூரிய மூர்த்தி பெற்ற நேத்ர சக்தி

கந்த புராணத்தில், சூரிய மூர்த்தி முருகப் பெருமானை வழிபடும் அனுபூதிகள் நிறைய உண்டு. சூரபதுமன் தேவர்களை வதைத்து, அவர்கள் கண்களுக்குச் சூரியன் தெரியாதபடி அவர்களை இருளில் மறைத்து, அவர்கள் முக்காலச் சந்தியா கால வழிபாடுகளை ஆற்ற விடாது தடுத்தமையால், தேவர்களுக்கு காயத்ரீ ஜப, அர்க்ய சக்திகள் கிட்டாது தவித்தார்கள்.
பிறகு சூரிய மூர்த்தி, முருகப் பெருமானை வேண்டி, சஷ்டி நாளில் விரதம் இருந்து, முருகப் பெருமானின் திருக் கரங்களில் கையில் இருந்து, ஒரு அகப்பையில் ஸ்கந்தத் தீர்த்தம் பெற்று அருந்தி, விரத நிறைவாற்றி, சூரபத்மனுடைய தவ சக்திகளுக்கும் புலப்படா வகையில், சூரியக் கிரணங்களைப் பிரவேசம் செய்யும் ஆற்றலைப் பெற்றிட்டார். இதுவே சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பதாயிற்று.
இதனால் தேவர்களுடைய பல குறைகளும் தீர்ந்து, சூரிய பூஜை, காயத்ரீ அர்க்ய பூஜைகளை மீண்டும் ஆற்றலாயினர். ஆனால் அத்தனை காலமும் அவர்கள் இழந்த பூஜை, அர்க்யப் பலன்களை எவ்வாறு மீண்டும் பெற முடியும்?

ஸ்ரீஆண்டாள் திருப்பாற்கடல்

இத்தகைய சமயங்களில்தாம் பூவுலகில் மக்களுக்கு, ஆபத்பாந்தவனாய்ச் சித்தர்கள் தக்கத் தருணத்தில் வந்து உதவுவது போல, முப்பத்து முக்கோடித் தேவர்களுக்கும் அவர்களுடைய அகங்காரத்தால், சூரிய ஒளி மறைக்கப்பெற்றுத் தேவர்களுக்கும் காயத்ரீ அர்க்ய பூஜையை நிகழ்த்த இயலாத இந்நிலை வரலாகும் எனத் தீர்கத் தரிசனமாக அறிந்தே,
காளாங்கி நாதச் சித்தர் எனும் சூரிய மண்டலச் சித்தர்பிரான், சூரியப் பாறை எனும் அரிய சுப்ர சக்திப் பாறையில் பன்னெடுங் காலம் தவம் புரிந்து, தினமும் மூன்று வேளையும், மூன்று கோடித் தீர்த்தங்களால் அகப்பையில் தீர்த்தமெடுத்து கைகளில் ஏந்தி, அர்க்யம் வார்த்திட, இந்த நீரோட்டம், வானுலகையும் பூமியில் தேவர்கள் சூரபதுமனால் சிறை வைக்கப்பட்டிருந்த பகுதிகளையும் அடைந்திட்டு அவர்களுக்கு நல்வழிகளைப் பெற்றுத் தந்தன.
எனவே, நீங்கள் அளிக்கும் அர்க்யப் பூஜை பலருக்கும் துணை புரியும் மகத்தான சமுதாயப் பூஜை ஆகும். காலை, பகல், மாலை மூன்று வேளைகளிலும் ஒவ்வொருவரும் அர்க்யம் வார்த்தல் வேண்டும். இவ்வாறு நீங்கள் மூன்று வேளைகளிலும் அர்க்யப் பூஜைகளை ஆற்ற முடியாமல் போவதற்குக் காரணம், உங்களுடைய கர்ம வினைகளின் அழுத்தங்களே என உணர்ந்து, இவற்றுக்கு நிவாரணம் பெற காளாங்கி நாதச் சித்தரை வேண்டிடுக! அலுவலகத்தில் இருந்தால் கூட, மரத்தடியில் அர்க்யம் வார்த்திடலாமே! மனமிருந்தால் மார்கமுண்டு.
காயத்ரீ அர்க்யப் பூஜைப் பலன்களால் கழிவு பட வேண்டிய கர்ம வினைகள், காயத்ரீ அர்க்யப் பூஜை மூலமாகவே தீரும். காயத்ரீ அர்க்யப் பூஜைகளை ஆற்றாவிடில் அவை கழிவு பெறாமல் தங்கி விடும். பல துன்பங்களும், நோய்களும் தீராமல் நெடுங் காலம் இருக்கக் காரணமே, அவை கழிவு பெறுவதற்கான பூஜைகளை, தர்ப்பணங்களை, அர்க்ய வழிபாடுகளை ஆற்றாமையே ஆகும்.

ஸ்ரீகாயத்ரீ தேவி மானாமதுரை

ஜாம்ஷெட்பூர் மலையிலும், மானாமதுரைச் சிவாலயத்திலும், மணாலி - கூலு அருகே உள்ள காயத்ரீ ஸ்தூபி உள்ள காயத்ரீ மந்திர் தலத்திலும் உள்ள ஸ்ரீகாயத்ரீ தேவிகள் மிகவும் சக்தி வாய்ந்த மூர்த்திகள். அற்புதமான மஹான்கள் இத்தேவியர் முன் காயத்ரீ அர்க்யப் பூஜைகளை ஆற்றி உள்ளனர். தட்சனுடைய யாகத்தில் பங்கு கொண்டமையால், சூரியனின் கண் சக்திகள் மங்கியபோது அவர் சூரிய சஷ்டி நாளில் விரதமிருந்து, இத்தலங்களில் உள்ள சூரியப் பாறையில் ஆற்றிய அர்க்ய பூஜைகளே, சூரிய மூர்த்திக்கு நேத்ர சக்திகளை மீட்டுத் தந்தது.
சூரிய சஷ்டித் திருநாளில் சூரிய ஸ்கந்த சக்திகள் பூரிக்கின்றன. மூலத்தானத்தில் சுவாமிக்கு மேல் வளைவாக, சூரியப் பிறை உள்ள தலங்களில் இந்நாளில் அர்க்யப் பூஜைகளுடன் வழிபடுவது மிகவும் சிறப்புடையதாகும். சூரிய ஸ்கந்த சக்திகளும், சூரியப் பாறையின் அம்சங்களும் பரிணமிக்கும் தலங்கள் தேனிமலை, குன்றக்குடி, குன்றத்தூர் போன்ற முருகன் தலங்களாகும்.
முருகப் பெருமானைச் சூரியன் வழிபட்ட எண்கண், தேனிமலை, குன்றக்குடி போன்ற தலங்களிலும், இல்லத்திலும், சஷ்டி நாட்களில் விரதமிருந்து சாக்ஷுஷோபநிஷத் மந்திரங்களையும் ஸ்ரீஆதித்ய ஹிருதய மந்திரங்களுடனும் ஓதி வழிபடுதல், நல்ல கண் பார்வையைப் பெற்றுத் தரும். காடராக்ட் போன்ற நோய்களுக்கு ஆட்படாமல் காக்கும்.
சிவனாருக்கு ஆஹூதி தராது, தட்சன் நிகழ்த்திய யாகத்தில் பங்கு பெற்றதால், சூரியனின் வலது கண் ஒளியை இழந்திடவே, ஸ்ரீமன் சூரிய நாராயணப் பெருமாளின் திருவடியை நாடி, சூரிய மூர்த்தி பூஜித்து, ஈஸ்வரனின் ஆணைப்படி சூரியத் தீர்த்தம் அமைத்துத் திருமாலை அதில் நீராட வேண்டிப் பிரார்த்தித்து, விஷ்ணுத் தீர்த்த பலாதி பலா மந்திரங்களை ஓதி, இதில் தினமும் நீராடிப் பெருமாளையும், சிவனையும் பூஜித்து வந்தார். இவ்வாறு சூரிய மூர்த்தி வழிபட்ட சூரியநாராயணப் பெருமாளே "கண்கொடுத்த பெருமாள்' ஆவார். கண் துறை மருத்துவர்கள் நிச்சயமாக ஞாயிறு தோறும் வழிபட வேண்டிய மூர்த்தி!
கண் கொடுத்த பெருமாளைத் தேடிக் கண்டு பிடித்துப் பூஜியுங்கள்! அர்க்ய பூஜைகளை ஆற்றி வழிபட வேண்டிய அதியற்புதத் தலம். பலரும் அறியாத தலம். இத்தலத்தில் பூஜைகள் நன்கு நடைபெற ஆவன செய்து அரிய நேத்ரவள சக்திகளையும், சந்ததி வளத்தையும் பெற்றிடுக! இங்கு சூரிய மூர்த்திக்குத் தனி சன்னதி உண்டு. ஆன்மீகத்தில் பல தேவ ரகசியங்களையும் அறிந்து பலன் பெற, நல்ல முயற்சிகளை எடுத்துத் தேடிக் கண்டு பிடித்து முறையாக வழிபடுதலே, கூடுதல் பலன்களையும், பேரானந்தத்தையும் தரும்.

தீயவர்கள் திருந்தி வாழ ...

ஆண்களுக்கு சனிக் கிழமை நீராடலும், பெண்களுக்கு மன நீராடல் ஆகிய சனிக் கிழமைக்கான விடியற் நீராடலும், காலைப் பூஜைகளும், பெருமாள் வழிபாடுகளும் உரைக்கப் பெறுகின்றன.
உள்ளம், புத்தி, மனம் போன்று, மனிதனின் உள்அங்கப் பிரிவுகளும் பல்வகை உண்டு. ஓர் எண்ணம் உருவாக இவை அனைத்தும் காரணமாகின்றன. அப்படியானால், விநாடிக்கு விநாடி மனித எண்ணங்கள் அலை பாய்ந்து கொண்டே இருப்பதால், இந்த உள்அங்கப் பிரிவுகள், இடைவிடாது, ஓய்வில்லாது செயல்படுகின்றன என்பதும் பொருளாகும். ஆத்ம விசாரமே இவற்றைச் சுத்திகரிக்க வல்ல தெய்வீகச் சாதனமாகும். தியானம் சிறக்க, ஆத்மவிசாரமே அடித் தளமாகிய தர்பைப் பாய் போலாகிறது.
நல்லெண்ணெய்த் தீபத்திற்குப் பரவெளியைச் சுத்திகரிக்கும் சக்தி உண்டு. மனசுத்திக்கும், கலியுக மனிதர்களின் விபரீதமான எண்ணங்களால் மாசுபடும் பரவெளியைச் சுத்திகரிக்கவும் சனிக் கிழமை அன்று ஆலயங்களில் நிறைய நல்லெண்ணெய்த் தீபங்கள் ஏற்றுவது, மகத்தான இறைச்சமுதாய வழிபாடாகின்றது.
சித்த, ஆயுர்வேத மருத்துவ முறையாகக் கூட வாய்ப் புண், வயிற்றுப் புண் சிகிச்சையாக, வாயில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றிச் சற்று நேரம் வைத்து, நன்கு கொப்புளிக்கும் மருத்துவ வழக்கமும் உண்டு.
எள் தானியமும் பெருமாளின் திருமேனியில் இருந்தே சனியாஷ்டமி வாரத்தில் தோன்றியமையால், உடல், மன சுத்திக்கான எட்டு விதமான ஆன்ம சாதனங்கள் பூரிப்பதும், சனிக் கிழமையில் அஷ்டமி கூடி வரும் நாளின் விசேஷத் தன்மைகள் ஆகும்.

எப்போதும் சிவச் சித்தத்தில் உறையும் சித்தர்கள், அனைத்து எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட புனிதத்துடன் துலங்குவதால், மலஜல நிலையைக் கடந்தவர்களே சித்தர்கள் ஆகின்றனர்! மலப் புழுச் சித்தர், குப்பைச் சித்தர், பூண்டிச் சித்தர் போன்றோரின் மலத்தில் பூக்களின் நறுமணம் நிலவும். எனவே, புனிதப் பெட்டகங்களே இவர்களுடையத் திருஉடல்கள்.
ஆகையால், மனிதனுக்கு நிதமுமே மலஜலம் கழிக்கும் நிலை இருக்கும் வரை, அவனுக்குக் கழிபட வேண்டிய கர்ம வினைகள் உண்டு என அறிக! அதாவது, மனிதனுடைய மலஜலம் என்பது தினமும் கழிய வேண்டிய கர்மங்களின் தன்மைகளையும், மலஜலத்தின் நாற்றம், கெட்ட நிலையிலான, விஷ எண்ணங்களையுமே குறிப்பவையாகும்.
நான் உண்டு என் வேலை உண்டு எனத் தினமுமே இருக்கிறேன், பிறருடைய எந்த விதமான வம்பு, தும்பிற்கும் போவதில்லை, எனப் பலரும் பெருமையாகப் பேசுவர். இது சுயநலத்தின் வடிவேயாம். இவ்வாறு ஒன்றும் செய்யாது காலத்தை விரயம் செய்த வகையிலான பாவதோஷங்களைப் பெருக்கிக் கொள்ளாது,
இதற்கு மாமருந்தாக, தினமும் 1000 போற்றித் துதிகளை (சஹஸ்ரநாமத் துதிகள்) ஓதி, இதன் பலாபலன்களை ஏழைகளின் நலன்களுக்காகச் சங்கல்பம் செய்து தினமும் அர்ப்பணிக்கலாம் அன்றோ!
எனவே, நல்ல எண்ணங்களைப் பேணாததும் கெட்ட எண்ண நிலையே! இது மனதைத் துருப்பிடிக்கச் செய்து அழுக்காக்கி விடும். மனச் சுத்திகரிப்புக்கு தினமும் என்ன செய்ய வேண்டும்? தினசரியே பூஜைப் பலன்களால் மனஉருவை நீராட்டி, ஆலய வழிபாடுகளால் சுத்திகரித்து வர வேண்டும்!
மனிதனுடைய எந்தப் பிரச்னைக்கும் உடலாலும், மனதாலும் இரு வகை நிவர்த்திகளையும் பெற்றாக வேண்டும். தெய்வ வழிபாடுகள், இவ்விரண்டையும் நன்கு இணைத்துத் தருவதால், இவை தினமுமே ஆற்ற வேண்டிய கடமைகள் ஆகின்றன.
சுத்தமான எண்ணங்களை எப்போதும் தரித்திருப்பவை பசுக்களே! இதனால்தான் பசுவின் கழிவை மலம் எனச் சொல்லாது பசுஞ் சாணி என்றே உரைக்கின்றோம்! பசுவின் மலமாயினும், பசுஞ் சாணியால் தயாராகும் திருநீறே சுவாமிக்குச் சார்த்தும் விபூதியாவதால், இது மலமாக உரைக்கப்படுவதில்லை! மேலும் மனிதனின் கர்ம மலங்களைச் சுத்திகரிக்க வல்லதே பசுஞ் சாணியால் ஆகும் திருநீறாகும். நெற்றிக்கான இறை அணிகலனாகவும், ஹோமத்தில் விராட்டியாக இடுவதற்கும், இறைவனை அபிஷேகிப்பதற்கான பஞ்சகவ்யத் திரவமாகவும் பசுஞ் சாணி பயனாவது, எப்போதும் புனிதமான எண்ணங்களுடன் பசு துலங்குவதையே குறிக்கிறது.
பசுஞ் சாணம், கோமேயம் (பசுவின் சிறு நீர்), பசும்பால், பசு நெய், பசுந் தயிர் ஆகிய ஐந்து திரவியங்களால் ஆகும் பஞ்ச கவ்யம், சித்த, ஆயுர் வேத மருந்துகள் எண்ணற்ற நோய்களைத் தீர்க்கும் அருமருந்தும் ஆகிறது. குறிப்பாக, பலத்த கர்ம வினைகளைக் காட்டும் மிகவும் கடுமையான தோல் வகை நோய்களுக்குப் பஞ்சகவ்யம் அரும் பெரும் மாமருந்தாகிறது.
நல்வகையான பூஜைகளை ஆற்றி, தார்மீக ரீதியாகப் பலருக்கும் பயன்படும்படி வாழும் மனிதனின் சிறுநீரின் எட்டுப் பகுதிகளில் இடைமருதப் பகுதியும் பல மருத்துவ குணங்களைப் பூண்டிருக்கும். இதனை ஒட்டி அமைவதே சிறுநீர் மருத்துவ முறையாகும் (Urine therapy).
ஆனால் இதில் மிகவும் ரகசியமான, கடுமையான விதிமுறைகள் இருப்பதாலும், அவரவர் சிறுநீர் அவருக்கு மட்டுமே ஏற்று வரும் என்பதாலும், ஒவ்வொருவரும் கடைபிடிக்கக் கூடிய இதன் முறைகள் மாறுபடும் மற்றும் தீயவர்களாயின் அவர்களுக்கு இது ஏற்று வராது என்பதாலும், இந்த உத்தமப் பண்டைய மருத்துவச் சித்தாந்தங்களைச் சிறப்பாக அறிந்தவர்களிடம் நன்கு பயிற்சி பெற்றே இதனைக் கடைபிடித்தல் வேண்டும். மிகவும் கடினமான நியதிகள் இம்மருத்துவ முறையில் உள்ளன. மிகவும் கவனமாகக் கையாள வேண்டிய மருத்துவத் துறை இது. வருங் காலத்தில் இத்துறை மீண்டும் வளம் பெறும்.
தினமும் இரு முறையேனும் மலஜலங் கழித்தல் சிறப்பான ஆரோக்யச் சின்னமாக இருப்பதைக் குறிப்பது போல, தினமுமே உடல், உள்ளம், மனம் மூன்றையும் சுத்திகரிக்க வேண்டிய கட்டாயத் தன்மையையும் குறிக்கின்றது. இதில் வயிற்று பேதி என்பது குறித்த நீர் வகைக் கர்ம வினைகள் உடலில் பெருத்துள்ளன, உடனடியாக அவற்றைக் களைதல் வேண்டும் என்பதையும் குறிப்பதாகும்.
மலப் பரிசோதனைகள் மூலம் மலத்தின் தன்மையை அறிந்து நோய்களை அறிதலும் கர்ம வினைகளை வகைபடுத்தும் முறையை ஒட்டியதே ஆகும்.
மேலும், தினசரிப் பூஜா பலன்கள், ஆலய தரிசனப் பலன்கள் பலவும் அவரவருடைய மனதைச் சுத்திகரித்துக் கொள்ளவே செலவாகி விடுகின்றனவே, இதன் பிறகு கஷ்டங்களை நிவர்த்தி செய்ய என்னதான் மிஞ்சி இருக்கும்? எனவே, நிறைய நேரம் பூஜித்தேன், தினமும் கோயிலுக்குப் போகிறேன். என்று சொல்வது எவ்வளவு தூரம் பயனளிக்கும் என அறிக! ஆகையால், இறையருளால் பூஜித்தல், ஆலய தரிசனம் செய்தல் எனச் சொல்லிப் பழகி வாருங்கள்!
பல்வகை இலைகளும், கீரை வகைகளும், பூக்களும், காய்கறிகளும், பழங்களும், தானியங்களும், ஆலயத்திலும், இல்லங்களிலும் பூஜைகளிலும், பிரசாதத்திலும், உணவிலும் பயனாகின்றன. எனவே, பூவுலகில் இறைவன் தாவரங்களைப் படைத்ததற்கான மூலக் காரணங்களுள் ஒன்றே நல்எண்ணங்களைப் பரப்பும் சாதனா ஜீவ சாதனங்களாகவே!
மனிதனை விட, ஒவ்வொரு காய்கறியும் விதவிதமான நல்எண்ணங்களைப் பரவெளியிலும், மனிதர்கள், விலங்குகல், பறவைகளின் உடல்களிலும் நிரவிப் பரப்புகின்றன.
உதாரணமாக, வெண்டைக்காயில் உள்ள பட்டைகளும் வித்யா கிரந்தி சக்திகளை அதாவது நல்அறிவு சக்திகளைக் கொண்டவை. படிப்பதெல்லாம் அறிவு ஆகாது. வெண்டைக்காயினுள் இருக்கும் சிறு சிறு விதை அறைகள் பலவும், மனித மூளைச் செல்களின் அமைப்பை உணர்த்துவதாகும்.
இவ்வாறு பூக்கள், காய்கறிகள், கனிகள் போன்ற யாவும், தம்முடைய லாவண்யமான அமைப்புகளிலும் அவற்றின் பலாபலன்களை அதாவது மனிதன் எந்த அங்க வளத்திற்கும், ஆரோக்யத்திற்கும், நோய் நிவர்த்திக்கும், கர்மப் பிணி அகற்றுதலுக்கும் உதவ வல்ல தேவ சக்திகளைப் பூண்டு உள்ளன என்பதை நன்கு விளக்குகின்றன.
தாவரங்களும், கனி மரங்களும் தமக்கென எதையும் வைத்துக் கொள்வதில்லை. எனவே, தியாகத் தன்மைகள் கொண்டவையாக விளங்குவதாலும், தாவர வகை உணவு, சாத்வீக குணங்களைப் பெருக்குகின்றன.
எனவே சனிக் கிழமைகளில் பல்வகைக் கீரைகள், காய்கறிகள், பழங்களைப் பசுக்களுக்கு அளித்தும், ஏழைகளால் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் உள்ள எட்டு வகை உயர்வகைக் காய்கறிகள், பழங்கள், திரவியங்களை முழு முந்திரி, பாதாம் பருப்பு, அக்ரூட் ஒரு புதிய நீல வண்ண அல்லது கருப்பு வண்ணத் துணியில் முடிந்து வைத்துத் தானமாக அளித்திடுக!
எண்ணத் தூய்மைக்கும் இதன் பலாபலன்கள் உதவும். மேலும், தீய பழக்கங்களுக்கு ஆட்பட்ட கணவன், மனைவி, பிள்ளை திருந்திட, இவ்வகையில் தினந்தோறும், சனி ஹோரை நேரத்தில் தானமளித்து வந்தால் நல்ல மாற்றங்களைக் கண்ணாரக் கண்டிடலாம்.
பட்டுக்கோட்டை - பேராவூரணி இடையில் உள்ள விளங்குளம் ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர் சிவாலயத்தில் தம் பத்னிகளுடன் எழுந்தருளும் சனீஸ்வர மூர்த்தி வழிபாட்டுப் பலன்கள் தீய வழக்கங்கள் அகலப் பெரிதும் துணை புரியும்.
பலரும் அறியாத, தொன்மையான சுயம்பு மூர்த்தித் திருத்தலம். இங்கு ஆத்ம சுத்தி, மனசுத்தி, தேக சுத்தி ஆகிய மூன்று சக்திகளையும் தர வல்ல த்ரயப்புல சக்திகள் நிறைந்த தீர்த்தமான பூசத் தீர்த்தக் குளம் உள்ள தலம். சனி தசை, புக்தி, அந்தரக் காலத்தில் இருப்பவர்களுக்கும், ஏனையோர்க்கும் இவ்வாலயச் சனிவார வழிபாடும், தினமும் சனி ஹோரை நேரத்திலான வழிபாடுகளும் மிகவும் விசேஷமானவை.

ஓம் குருவே சரணம்

தொடரும் நிவாரணம் ...


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam