கொடியது கொடியது பிறவிப்பிணி கொடியதே !

ஓம் ஸ்ரீ வல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம்ஸ்ரீகுருவே சரணம்

குறைவற்ற செல்வம் அருளும் குணக்குன்று

ஆயுர்வேத வைத்தியத்தில் சிறுநீரை ஒரு துளி நல்லெண்ணெயில் விட்டு நோயின் தன்மையை அறிந்து கொள்ளும் முறை ஒன்று உண்டு. ஈடு இணையில்லாத சிறப்பை உடைய இந்த நோய் அறியும் முறையானது தொன்று தொட்டு நம் சித்த வைத்தியர்களால் பின்பற்றப் பட்டு வந்த வைத்திய முறையே. தற்போதோ இதனால் கிட்டும் முடிவுகள் தவறான விளக்கத்தைத் தருவதால் பலரும் இம்முறையைக் கையாளுவதில்லை. காரணம் இந்த நோய் காணும் முறைக்கு அடிப்படையான சுத்தமான நல்லெண்ணையே நல்ல எண்ணையாக இல்லாததுதான். நோயை இனங் காணும் முறையிலேயே தவறு நேர்ந்தால் அந்த நோய்க்கு எவ்வாறு வைத்தியம் பெறுவது ? சரி போகட்டும், நாடி பார்த்து நோயின் தன்மையை உணரலாம் என்றால் தற்காலத்தில் பல வைத்தியர்களுக்கும் நாடி பார்க்கும் முறையே தெரிவதில்லை. அதனால் பலரும் ஆங்கில வைத்திய முறையில் பயன்படுத்தப்படும் ஸ்கேன், lab test போன்றவை மூலமாக ஓரளவு நோயின் தன்மையை கண்டறிந்து அதற்கேற்றாற்போல் ஆயுர்வேத மருந்துகளை அளிப்பது சகஜமாகி விட்டது. இதனால் எல்லாம் திருப்தி அடையாத நோயாளிகள் இறைவனை நம்பி திருத்தலங்களில் வழிபாடுகளை இயற்றி தங்கள் நோய்க்கு நிவாரணம் பெறலாம் என்றால் அந்த வழிபாட்டு முறைகளிலும் பலவித குழப்பமான சூழ்நிலைகளை நோயாளிகள் சந்திக்க வேண்டி வருவதால் அந்தக் குழப்பங்களுக்கு ஒரு தீர்வாக இந்தக் கட்டுரை பயன்படும் என்று நம்புகிறோம்.

சகஸ்ரலிங்கம் குற்றாலம்

ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கும் அதிகாரி ஒருவர் கம்பெனி நமக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தை அளிக்கிறது என்பதற்காக பல் கூட தேய்க்காமல் ஆடைகளை சரியாக அணியாமல் அலுவலகத்திற்குச் செல்வாரா என்ன ? அதுபோல் நம்முடைய கர்ம வினைகளை ஆலய வழிபாடுகள் நிச்சயம் தீர்க்கும் என்றாலும் அந்த ஆலயத்தில் உள்ள இறைவனை அணுகுவதற்கு முன்னால் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய உடல், மன சுத்தி வழிபாடுகள் காலை துயில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குப் போகுமுன் ஆயிரம் ஆயிரம் உண்டு அல்லவா ?

ஸ்ரீபடேசாகிப் சுவாமிகள் ஜீவாலயம்
சின்னபாபு சமுத்திரம்

இவ்வாறு மனிதப் பிறவி எடுத்த மனிதன் நிறைவேற்ற வழிபாடுகள் ஆயிரமாய் விரியும் என்றால் இவ்வாறு நல்ல மனிதப் பிறவிக்கு வழிகோலுவது நல்ல தாய் தந்தையர்களின் சீரான நல்ல பழக்க வழக்கங்கள் என்பதால் அந்த வழிபாட்டிலிருந்தே நம் மனிதப் பிறவி தொடங்குகிறது என்பதே உண்மை. மனிதனின் முதல் சுத்தி வழிபாடாக அமைவதே ஆசமனம் அல்லது ஆசமணீயமாகும். குத்துக்காலிட்டு அமர்ந்து உள்ளங்கையில் சுத்தமான நீரை மூன்று முறை ஊற்றி அச்சுதாய நமஹ, அனந்தாய நமஹ, கோவிந்தாய நமஹ என்று கூறி மூன்று முறை நீரை அருந்துவதே அனைவரும் நிறைவேற்றக் கூடிய ஆசமன வழிபாடாகும். மிக மிகச் சாதாரணமான இந்த வழிபாடே உத்தம சந்தானங்கள் உருவகிக்க உதவும் நித்திய பூஜை முறை என்றால் இதை நிறைவேற்ற மக்கள் தயங்குவது ஏனோ ? கிழக்கு நோக்கி குத்துக்காலிட்டு காளி ஆசனத்தில் அமர்ந்து இரு கால்களுக்கிடையில் வலது உள்ளங்கையில் விடும் தீர்த்தமானது உடல் சுத்தி, மன சுத்தி, பஞ்சபூத சுத்தி என்றவாறாக உடல், மனம் மட்டுமல்லாது நம்மைச் சுற்றியுள்ள நமது உள்ளும் புறமும் திகழும் பஞ்சபூதங்களையும் சுத்தி செய்யவல்லதாக அமைகிறது என்றால் இதை வழிபாட்டிற்கு அமைத்த நம் மூதாதையர்களின் அறிவுத் திறன்தான் என்னே ? குளிக்கும் முன், நீராடிய பின், உணவருந்தும் முன், உணவேற்ற பின்னர், பூஜைக்கு முன், பூசை நிறைவில் என எல்லா சமயங்களிலும் நிறைவேற்றக் கூடிய ஒரு வழிபாட்டு முறையே ஆசமனம் ஆகும். உங்களுக்கு ஏதாவது ஒரு காரியத்திற்கு முன் ஆசமனம் செய்யலாமா கூடாதா என்ற சந்தேகம் எழுந்தால் ஆசமனம் செய்து அந்தக் காரியத்தை நிறைவேற்றுங்கள், ஆசமனம் செய்யாமல் அந்த காரியத்தில் ஈடுபடுவதை விட அது சாலவும் நன்று. பாண்டிச்சேரி அருகே உள்ள சின்னபாபு சமுத்திரத்தில் அருள்புரியும் ஸ்ரீபடேசாகிப் சுவாமிகளின் ஜீவசமாதி மனித கற்பனைக்கு எட்டாத எத்தனையோ வியாதிகளைத் தீர்க்கும் குணமுடையது, சக்தி பெற்றது. பலரும் இந்த ஜீவ சமாதியை தற்போது அப்பிரதட்சிணமாக வலம் வந்து வணங்குகின்றனர். இது சம்பந்தமாக பல பக்தர்கள் எது சரியான முறை என்று அறிந்து கொள்வதற்காக திருஅண்ணாமலையில் நமது ஆஸ்ரமத்தையும் மற்ற அடியார்களையும் அணுகுவதால் இது பற்றிய விளக்கத்தை இங்கு அளிக்கிறோம். ஸ்ரீபடேசாகிப் அருள்புரியும் ஜீவ சமாதி மட்டும் அன்று எத்திருத்தலத்தையும் பிரதட்சிணமாக அதாவது சுவாமிக்கு வலமாக ஆரம்பித்து சுவாமிக்கு இடமாக வலத்தை பூர்ணம் செய்தலே பிரதட்சிணம் எனப்படும். இது விதி என்று இருந்தாலே விலக்கு என்ற ஒன்று வந்து விடும் அல்லவா ? இந்த விதிக்கு விலக்காக இதுவரை செயல்பட்டவன் சூரபத்மன் ஒருவனே.

ஸ்ரீமுருகப்பெருமான் பின்னவாசல்

முருகப் பெருமான் சூரபத்மனுடன் போர் செய்ய ஆயத்தமாக நின்றபோது சூரபத்மனின் சிவ பக்தியை மெச்சிய முருகப் பெருமான் அவனுக்கு அருள்புரிய நினைத்து தன்னுடைய விஸ்வரூபக் கோலத்தைக் காட்டினார். அதுவரை எவரும் பெற்றிராத அந்த திவ்ய கோலகலக் காட்சியில் தன்னை மறந்தான் சூரபத்மன். சூரபத்மனுடைய பரம்பரையைச் சேர்ந்த கோடி கோடி மூதாதையர்களும் முருகப் பெருமானின் ஒரு ரோமத்தின் நுனியில் தொங்கியதைக் கண்டு முருகப் பெருமானின் பராகிரமத்தையும் காலங்கடந்த கோலத்தையும் எண்ணி வியந்தான் சூரபத்மன். செய்வதறியாது திகைத்து முருகப் பெருமானை அப்பிரதட்சிணமாக வலம் வந்தான். இதனால் சூரபத்மனிடமிருந்த அனைத்து பராகிரம சக்திகளும், வீரமும், புண்ணிய சக்திகளும் முருகப் பெருமானை சென்றடைந்தது. அவனிடம் எஞ்சி நின்றது தான் என்ற அகந்தை மாத்திரமே. அதன் விளைவாக ஆஹா ஒரு பொடியனையா நாம் வணங்குவது என்று எண்ணி முருகப் பெருமானை அழிக்க தன்னுடைய வாளை ஓங்கினான் சூரபத்மன். அத்துடன் அவனின் அகங்காரத்தை அழித்து முழுமையடைந்த பக்தனாக தன்னகத்தே ஏற்றுக் கொண்டார் முருகப் பெருமான். இரண்டாவது விதி விலக்காக நவகிரக வழிபாட்டின்போது சூரியாதி கிரகங்களை வலம் வருவதற்காக அவைகளை ஏழு முறை பிரதட்சிண வலமாகவும் ராகு கேது கிரக மூர்த்திகளுக்கு உரியதாக இருமுறை மட்டுமே அப்பிரதட்சிணமாக வலம் வரலாம். அரிதாக, சற்குரு குறித்த சில பக்தர்களின் வினைகளைத் தீர்ப்பதற்காக அப்பிரதட்சிணமாக திருஅண்ணமாலையையோ, குறித்த சில திருத்தலங்களை குறித்த நேரங்களில் ஹோரைகளில் அப்பிரதட்சிணமாக வலம் வரக் கூறுவதுண்டு. இந்த விதி விலக்குகளைத் தவிர மற்ற எல்லா தெய்வ மூர்த்திகளையும், மகான்களின் ஜீவ சமாதிகளையும், தாய் தந்தையர் போன்ற பெரியோர்களையும் பிரதட்சிணமாக வலம் வந்து வணங்குவதே முறை என்று சித்தர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். இதுவரை தெரியாமல் எத்தனையோ பக்தர்கள் திருத்தலங்களிலும், படேசாகிப் ஜீவ சமாதியிலும் அப்பிரதட்சிணமாக வலம் வந்து இருப்பதுண்டு. அதற்கு எந்த விதமான பரிகார முறைகளை மேற்கொள்வது என்ற சந்தேகம் வரலாம். நடந்ததைப் பற்றிய கவலையை விடுங்கள், இனி நடப்பது நல்லதாக இருக்கட்டும், சுபமான பிரதட்சிணங்களாக இருக்கட்டுமே.

நீர் அருளும் நிமல பாக்கியம்

இந்தப் பூமி மட்டும் அல்லாது நம் மனித உடலின் பெரும் பகுதியும் நீரால் அமைந்துள்ளதால் நீரை முறையாகப் பயன்படுத்தி வந்தாலே நாம் இம்மையிலும் மறுமையிலும் அனைத்தையும் பெற முடியும் என்பதை நீரின்றி அமையாது உலகம் என்றார் வள்ளுவப் பெருந்தகை. விபூதி, எலுமிச்சை, நீர் என்ற மூன்றும் எளிதில் மந்திரங்களை கிரகிக்கும் என்பதோடு மட்டுமல்லாமல் இவற்றை முழுவதுமாக செறியச் செய்ய முடியாது என்பதே இம்மூன்றின் இயல்பாகும். You cannot fully saturate. நம் உள்ளங்கையில் வார்க்கும் ஒரு சொட்டு நீருக்கும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கையில் விடும் ஒரு துளி தீர்த்தத்திற்கும், நம் சற்குரு உள்ளங்கையில் பள்ளி கொள்ளும் தீர்த்தத்திற்கும் மலையளவு வேறுபாடு இருப்பது இக்காரணம் பற்றியேதான். நம் உடல் முழுவதும் வியாபித்துள்ள தீர்த்த சக்திகளை தூய்மைப்படுத்தும் எத்தனையோ வழிபாடுகள் இருந்தாலும் இவை அனைத்திலும் மிக மிக எளிமையாக நிறைவேற்றக் கூடியதே இந்த ஆசமனம் என்பதால்தான் இதற்கு இத்தகைய முக்கியத்துவத்தை நம் முன்னோர்கள் அளித்து வந்துள்ளனர்.

ஸ்ரீஎச்சில் பொறுக்கி ஆறுமுக சித்தர்
ஜீவசமாதி கண்டனூர்

அதோடு மட்டுமல்லாமல் நம்பிக்கை, மந்திரம் என்ற இரண்டை மட்டுமே சாதனமாகக் கொண்டு நீரை தூய்மைப்படுத்த முடியும் என்பதும் நீரின் இயல்பாகும். நம் பரமகுரு ஸ்ரீஇடியாப்ப சித்தர் எங்கு சென்றாலும் நம்மைப் போல் தண்ணீர் புட்டியை கக்கத்தில் வைத்துக் கொண்டு செல்வது கிடையாது. அவர் நீர் அருந்துவதே கிடையாது, நீர் அருந்த வேண்டிய அவசியமே இல்லை என்றாலும் ஒரு வழிகாட்டியாக செயல்படுவதற்காக நீர் அருந்தும்போது வழியில் தேங்கிக் கிடக்கும் எந்த நீரையும் அச்சுதாய நமஹ, அனந்தாய நமஹ, கோவிந்தாய நமஹ என்று மூன்று முறை நீரை அள்ளி அந்த நீரிலேயே வார்த்து விட்டுப் பின்னர் அந்த நீரை அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தாவும் கங்கைக் கரையிலேயே ஒரு சிறு இல்லத்தில் வசித்து வந்தார். மறுகரையில் சிவானந்தா ஆஸ்ரமம் பெரிதாக வளர்ந்து நூற்றுக் கணக்கான பக்தர்களுக்கு அடைக்கலம் அளித்த போதிலும் தன்னுடைய இருப்பிடத்தை மாற்ற விரும்பவில்லை. மழைக் காலங்களில் கங்கை பெருக்கெடுத்து செல்வதால் அவருடைய சிறு இல்லமெங்கும் கங்கை தீர்த்தம் நிரம்பி அவருடைய கையேடுகள் கூட மிதக்க ஆரம்பித்து விடும். ஆனால், அவர் உறுதியாக அங்கேயே தங்கியதுடன் மண் கலந்த அந்த கங்காஜலத்தையே அருந்தவும் செய்தார். அதனால் அவருக்கு பல சமயங்களில் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு துன்பம் அடைந்தபோது கூட தன் இருப்பிடத்தை அவர் மாற்றவில்லை. “இமயம் என் தந்தை, கங்கை என் தாய். தாய் தன்னுடைய தனயனுக்குத் துன்பம் விளைவிப்பாளா ?” என்பது அவருடைய கேள்வி. நம் பரமகுருவிற்கோ, சுவாமி சிவானந்தாவிற்கோ உள்ள நம்பிக்கையை நாம் பெறா விட்டாலும் முறையாக நீரைக் காய்ச்சி முடிந்தால் அதில் சிறிது சுக்கைப் போட்டு காய்ச்சி அருந்தி வந்தாலே போதும் அது உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி நம் உடலை இறைவன் குடி கொள்ளும் கோயிலாக மாற்றி விடும். ஊன் உடம்பை ஆலயமாக மாற்றும் முறைதான் இது. நாம் நன்கு யோசித்து, ஆத்ம விசாரம் செய்து அறிந்து கொள்ள வேண்டிய பொருட்களுள் நீர், நீர் சக்தியும் அடங்கும். நீர் சக்திகள் மிகுந்தது எச்சில் மட்டுமல்ல கோழை என்னும் சளியுமாகும். கோழையில் அக்னி சக்திகளும் மிகுந்திருக்கும். அக்னி சக்திகள் மிகுந்த 2007ம் ஆண்டில் திருஅண்ணாமலை தீப சக்திகளை இந்த பிரபஞ்சத்திற்கு தாரை வார்த்து அளித்தார் நம் சற்குரு என்பது நாம் பல முறை விளக்கிய வரலாறே. இவ்வாறு தீப சக்திகள் அளிக்கப்பட்ட திருத்தலங்களில் எச்சில் பொறுக்கி ஸ்ரீஆறுமுக சித்தர் ஜீவ சமாதி கொண்டு எழுந்தருளிய காரைக்குடி அருகிலுள்ள கண்டனூர் திருத்தலமும் ஒன்றாகும். எச்சில், எச்சம் என்பதற்கு சந்ததி, தீராத கர்மங்கள், பாக்கி வினைகள் என்றெல்லாம் பொருளுண்டு.

இவ்வாறு தீராத பல கர்ம வினைகளைக் களைந்தருளும் வல்லமை உடையதே திருஅண்ணாமலை கார்த்திகை தீபம் என்பதால் அக்னி சக்திகளுக்கு உரித்தான 2007ம் ஆண்டில் தான் இத்தனை ஆண்டுகள் ஒன்று சேர்த்த அக்னி சக்திகளை எல்லாம் ருத்ராக்னி சக்திகளாக உருவகித்து அந்த சக்திகளை எல்லாம் திருஅண்ணாமலையாரிடம் அர்ப்பணித்து அதை திருஉண்ணாமுலையம்மன் திருஅண்ணாமலையார் பிரசாதமாகப் பெற்று அதை இந்த பூலோகம் மட்டுமல்லாது இந்த பிரபஞ்சம் முழுவதும் தன் பூதஉடல் என்ற அஸ்தி மூலம் அர்ப்பணித்தவரே நம் சற்குரு என்ற பெருமையை உணர்ந்தோர் ஒரு சிலரே. இந்த ஒரே ஒரு சித்த மகாத்மியத்தை உணர்ந்து கொண்டாலே போதும் அவர்கள் எச்சம், சந்ததி மிச்சமின்றி வாழும், அதாவது எந்த கர்ம வினையும் அண்டாது வாழ்வர் என்பது உறுதி. திருஅண்ணாமலை கார்த்திகை தீபத்தை அந்த அக்னி ஆண்டில் தரிசிக்க முடியாவிட்டாலும் இந்த குரு ஆண்டிலாவது இத்தகைய குரு சக்திகள், அக்னி சக்திகள் பொங்கிப் பொலியும் ஸ்ரீஎச்சில் பொறுக்கி ஆறுமுக சித்தர் போன்ற ஜீவ சமாதிகளை தரிசனம் செய்து பசு நெய் தீபங்களை ஏற்றி வழிபடுதல் நல்ல ஆரோக்யமான வாழ்வையும் சந்ததிகளையும் பெற்றுத் தரும்.

ஸ்ரீஎச்சில் பொறுக்கி ஆறுமுக சித்தர்
ஜீவசமாதி கண்டனூர்

சந்ததி என்னும் குழந்தை பாக்கியத்தை பெறாதோர் எவ்வளவோ பேர் இருக்க அவ்வாறு குழந்தைச் செல்வங்களைப் பெற்றவர்களும் தங்கள் குழந்தைகள் முறையான கல்வி, ஆரோக்யம், மன வளர்ச்சியைப் பெறாமல் போவது கண்டு மனம் வருத்தம் கொள்வது இயற்கையே. அத்தகையோருக்கு சோலை வனமாகத் திகழ்வதே ஸ்ரீஎச்சில் பொறுக்கி சித்தரின் ஜீவ சமாதி வழிபாடாகும். நோய் நிவர்த்திக்கான செவ்வாய்க் கிழமைகளிலும், குரு நம்பிக்கை வளர்க்கும் வியாழக் கிழமைகளிலும் சிறப்பான வழிபாடு மேற்கொண்டு அவரவரால் இயன்ற அன்னதான சேவைகளை நிறைவேற்றுவது எச்சில் கர்மங்களைத் தீர்க்கும் இனிய வழிபாடாக அமையும். தற்காலத்தில் பலரும் திருமண வைபவங்களில் மணமக்களை ஆசீர்வதிக்க அளிக்கும் அட்சதைகளை தூரத்தில் இருந்தே விசிறிப் போடுவதால் அந்த ஆசீர்வாதப் பரல்கள் தம்பதிகளை அடையாமல் போவதுடன் கீழே விழுந்து மற்றவர்கள் காலில் மிதிபடும் அவல நிலையை அடைகிறது. இதனால் தம்பதிகள் மட்டும் பலத்தை தோஷங்களை அடைவதில்லை. இவ்வாறு அட்சதை மணிகளை அள்ளி வீசுவோர் இல்லத்திலும் திடீர் நோய்கள், பொருள் விரயம், கண்ணேறு கோளாறுகள் ஏற்படும். இதற்கு தீர்வாக அமைவதே ஸ்ரீஆறுமுக சித்தர் ஜீவ சமாதியில் நிறைவேற்றும் வழிபாடு. முனை முறியாத முழு பாசுமதி அரிசியில் மஞ்சள் சேர்த்து பழுத்த 80, 60 வயது நிறைந்த சுமங்கலிகளால் உருவான அட்சதையை பருத்தி நூல் அல்லது வாழை நாரால் தொடுக்கப்பட்ட பூச்சரங்களுடன் ஸ்ரீஆறுமுக சித்தர் ஜீவ சமாதியில் அளிப்பது அற்புதமான ஆயுள் விருத்தி, ஐஸ்வர்ய வழிபாடாக அமையும். அவரவர் இல்லங்களில் துளசி மாடத்தின் முன்னால் அமர்ந்து இத்தகைய அட்சதைகளால் வழிபடுவதும் அற்புத ஆயுள் விருத்தி ஐஸ்வர்ய கடாட்ச வழிபாடாக மலரும் என்பதில் ஐயமில்லை. “எச்சில் பொறுக்கி ஆறுமுக சித்தர்” என்ற 16 எழுத்து நாமத்தை 108 முறை ஓதி மேற்கூறிய வழிபாட்டை நிறைவேற்றுவது பதினாறும் பெற்று பெருவாழ்வு பெறும் சித்த முறையே.
ஆறுமுகமும் பதினெட்டாக மலரும்
பதினெட்டும் தீவினையைப் பொசுக்கும் கருநாக்காய்த் தீண்டுமே
என்பது ஸ்ரீஆறுமுக சித்தரின் ஜீவ சமாதி வழிபாடு இவ்வாண்டில் அருளும் அனுகிரகம் குறித்த குருவாக்கிய நாடிப் பாடலாகும். திருமண முறிவு, விவாகரத்து பிரச்னைகளால் அவதியுறுவோரும் மேற்கூறிய வழிபாட்டால் நற்பலன் பெறுவர்.

ஷோடச நித்யா துளசி மாடம் நம் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் விநியோகிக்கப்பட்ட அற்புத வழிபாட்டுச் சாதனமாகும். இதை பயன்படுத்தும் பக்தர்கள் இன்றும் உண்டு. மங்கள சக்திகளை, பதினாறு தெய்வீக சக்திகளை பக்தர்களுக்கு நிரந்தரமாக அளிக்கும் வழிபாடே ஷோடச நித்யா துளசி மாடமாகும். இதில் நான்கு திசைகளில் துலங்கும் விளக்கு மாடங்களும் எட்டு திசைகளில் துலங்கும் பீட தானங்களும் உண்டு. இந்த அமைப்பின் பின்னால் உள்ள தெய்வீக இரகசியங்களை ஓரளவு உணர்ந்து கொள்ள உதவி செய்வதே திருப்பாற்றுரை மகிமை குறித்த எல்லையில்லா எண் சூத்திரம் என்ற கட்டுரைப் பகுதியாகும். இந்த விளக்கு மாடம் குறிக்கும் எட்டு திசைகளில் மிருகி முத்திரையுடன் இணைந்த ஸ்வஸ்தி நமஸ்காரம் அல்லது சாஷ்டாங்க நமஸ்கார முறையில் ஜீவ சமாதிகளை வணங்குவதால் நான்கு திசைகளில் உள்ள சக்திகள் மட்டும் பெருகுதோடு மட்டுமல்லாமல் இந்த அஷ்ட நமஸ்கார பத்ததியால் எட்டு விதமான அனுகிரகங்களும் பதினாறு நித்ய மங்கள, மாங்கல்ய சக்திகளாக விருத்தியாகின்றன என்பதே இந்த வழிபாட்டின் பின்னணியில் அமைந்த சித்த இரகசியமாகும். தங்கள் ஜாதகங்களில் ஆயுள்காரகனான எட்டாம் அதிபதியோ, ஆயுளை வழங்கும் சனி பகவானோ பகைவர்களால் பார்க்கப்பட்டோ, கூடி இருந்தாலோ, பகை அம்சங்களால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அத்தகையோர் மேற்கூறிய வழிபாடுகளால் நற்பலன் பெறுவார்கள். இவ்வாறு ஒரு துளசி மாடத்தைக் கூட வாங்க முடியாத ஏழ்மை நிலையில் இருந்த ஒரு அடியாருக்கு மேற்கண்ட துளசி மாடம் ஒன்றை தம் அன்புக் காணிக்கையாக அளித்து ஜாதக ரீதியான குறைந்த அவருடைய ஆயுளை தீர்க்கமாக நீட்டித்து அருள்புரிந்தார் நம் சற்குரு என்பதை ஒரு சில அடியார்களே அறிவர். இவ்வாறு நான்கு மாடங்களிலும் தீபங்களை ஏற்றி ஒன்பதின் மடங்காக இந்த துளசி மாடத்தை வலம் வந்து வணங்குவது அகால மரணங்களைக் களையும் ஒரு சமுதாய சேவையாகவும் அமையும். இந்த துளசி மாடத்தின் முன் தர்ப்பணத்தை நிறைவேற்றும் முறை குறித்து ஏற்கனவே விவரித்துள்ளோம். இதுவும் சமுதாயத்தைக் காக்கும் ஒரு அகால மரண சேவையே.

ஸ்ரீஆரணநாதர் செவலூர்

ஆரோக்யம் அல்லது நோய் என்பது ஒரு மனிதன் ஆரம்பமாகும்போதே அவனைத் தொடரும் வைபவமாக அமைவதால் மனிதன் ஆரம்பமாகும் நிகழ்ச்சியான கருத் தரித்தல் என்ற நிலையையும் கரு தரிக்கும் நிலையமான கர்ப்பப்பை குறித்த இரகசியங்களையும் அறிந்து கொண்டால்தானே அவன் ஆரோக்யத்தைப் பற்றியும் அவனை எதிர்கொள்ளும் நோயைப் பற்றியும் அறிந்தவன் ஆகிறான் ? இதற்கு ஆரம்ப தலமாக அமைவதே உங்களை ஆச்சரியப்படுத்தும் செவலூர் திருத்தலமாகும். புதுக்கோட்டை அருகில் அமைந்துள்ள செவலூர் திருத்தலம் வாஸ்து சக்திகள் பொலியும் தலம் என்பதைப் பலரும் அறிந்திருந்தாலும் அது மனிதனின் ஜனன காலத்துடன் தொடர்புடையதே என்பதை அறிந்தோர் ஒரு சிலரே. மூன்று மையங்கள் உண்டு. அதாவது ஒரு பொருளின் இடைப் பகுதி, நடுப் பகுதி, ஆரணம் என்ற மூன்று மையப் புள்ளிகள் எல்லாப் பொருட்களுக்கும் பொதுவானவை. முற்காலத்தில் சிற்பிகள் ஒரு சிலையை செதுக்கும்போது சிறப்பாக இறை விக்ரஹங்களை அமைக்கும்போது அந்த விக்ரஹத்தின் ஆரணப் பகுதியையே முதலில் தேர்ந்தெடுத்து அங்கிருந்து தங்கள் தொழிலை மேற்கொள்வர். காரணம் ஆரணம் சிறப்பாக அமைந்தால்தான் அனைத்தும் சிறப்பாக அமையும் என்பதே இதற்குக் காரணம். நம் உடலின் ஆரண மையப் பகுதியாக அமைவதே நாம் உருவான கர்ப்பப்பை என்றால் நாம் அறிந்து கொள்ள வேண்டிய வாஸ்து சாஸ்திரம் இங்கிருந்துதானே, இந்த ஆரம்ப இல்லத்திலிருந்துதானே தொடங்க வேண்டும் ? பொதுவாக கர்பப்பையின் அளவுகள் 3 அங்குலம் நீளம், 1.2 அங்குலம் தடிமானம், 1.8 அங்குலம் அகலம் என்றவாறாக இருக்கும் என்பது நீங்கள் அறிந்ததே. இந்த அளவுகள் குரு மங்கள அளவுகளாக இருப்பதால் குரு மங்கள கந்தர்வாவான நம் சற்குருவைத் தவிர வேறு யாரும் நம்மைக் கரையேற்ற முடியாது என்பதற்கு இந்த அளவுகோல்களைத் தவிர வேறொரு சான்று உங்களுக்கு வேண்டுமா என்ன ? காலம் கடந்து 20, 50 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் நாம் உருவான காலத்தை மாற்ற முடியாதே என்ற எண்ணம் அனைவருக்கும் தோன்றுவது இயற்கையே என்றாலும் காலம் கடந்து நிற்பவர் ஈசன் ஒருவனே என்பதால் இறைவனுக்குச் செய்யும் சேவை நிச்சயமாக காலம் கடந்து நின்று நம்மைக் கரை சேர்க்கும் என்பதால் நம் தோற்றத்திற்குக் காரணமான சக்திகள் செறிந்த பசுவின் பாலை அதன் இளம் சூடு ஆறும் முன் இத்தல ஸ்ரீபூமிநாதருக்கும் நந்தி மூர்த்திக்கும் அபிஷேகித்தலால் எத்தகைய ஜனன கால தோஷத்தையும் நிவர்த்தி செய்யும் வழிபாடாக இது அமையும் என்பதில் ஐயமில்லை.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி செவலூர்

ஒரு நாட்டு பசு மாட்டை வாகனத்தில் ஏற்றி செவலூர் கொண்டு வருவதற்கு எவ்வளவோ பொருள் செலவாகுமே என்று நீங்கள் எண்ணலாம். தற்காலத்தில் இதயம், கர்ப்பப்பை, நுரையீரல் இவைகளில் தோன்றும் தீர்க்க முடியாத நோய்களுக்கு ஆகும் செலவைப் பார்க்கும்போது இவை எல்லாம் ஒரு பொருட்டல்லவே. தேவை நம்பிக்கை மாத்திரமே. இடை, நடு மையம் என்ற இலக்கணங்களைக் கொண்டு செவலூர் அமைந்திருந்தாலும் ஆரண மையம் என்பது பூமியின் உள்பகுதியில்தானே அமைய முடியும் என்ற சந்தேகம் பலருக்கும் தோன்றலாம். உடலில் தலையில் அடிபட்டிருந்தாலும் காலில் அடிபட்டிருந்தாலும் வாய் வழியாக கொடுக்கும் மருந்துகளோ அல்லது தற்காலத்தில் கையில் போடும் ஊசிதானே வலி நிவாரணமாக அமைகிறது. இதே முறையில்தான் பூமியின் உட்பறத்தில் எங்கோ ஒரு இடத்தில் இந்த ஆரண மையம் அமைந்திருந்தாலும் நாம் ஸ்ரீபூமிநாதருக்கும் ஸ்ரீஆரணநாதர் என்ற நந்திமூர்த்திக்கும் நிறைவேற்றப்படும் மேற்கூறிய பசும்பால் அபிஷேகம் ஆரண மைய சக்திகளுடன் துலங்கும் இறைவனுக்கு அளிக்கப்படுகிறது என்பதே உண்மை. ஸ்ரீஆரணவல்லி அம்பிகைக்கு தாமே அரைத்த மஞ்சளால் அபிஷேகம் நிறைவேற்றுவதும் ஆரண சக்திகளைப் பெறும் வழிபாட்டு முறைகளுள் ஒன்றாகும். மூன்று மூன்றாக 18 கொம்பு மஞ்சள் அல்லது குண்டு மஞ்சள் கிழங்குகளை வட்டமாக வைத்து அதன் நடுவில் மூன்று மஞ்சள் கிழங்குகளை வைத்து அதை ஆரண சக்தியாக பாவித்து ஸ்ரீஅகத்தியர் அருளிய திருமகள் துதியை பல சுமங்கலிகள், கன்னிப் பெண்கள் ஒன்று சேர்ந்து 21 முறை ஓதி இந்த மஞ்சள் கிழங்குகளை கையால் அரைத்து அம்பிகைக்கு அபிஷேகம் அளிப்பது அனைத்து விதமான மாங்கல்ய தோஷங்களையும் திருமண தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் மஞ்சள் காப்பு வழிபாடாக அமையும். வெள்ளிக் கிழமை, வளர் பஞ்சமி திதி, ரோகிணி, உத்திர நட்சத்திர நாட்கள் அல்லது இவை சேர்ந்து வரும் நன்னாட்களில் இத்தகைய வழிபாடுகளை இயற்றுதல் சிறப்பானதே. கர்ப்பப்பை கோளாறுகளையும், மாதவிடாய்த் துன்பங்களையும் நீக்கும் அற்புத வழிபாடு இது. அனைத்து மருத்துவர்களும் சிறப்பாக பெண்ணியல் மருத்துவர்கள், வாஸ்து நிபுணர்கள், ஜோதிடர்கள், கட்டிட வல்லுநர்கள் இத்தகைய வழிபாடுகளால் நற்பலன் பெறுவார்கள். கட்டிட வல்லுநர்களுக்கு சுமைப் பகிர்வு (load sharing) என்ற நுண்ணறிவு பெருகும் தலமே செவலூர் என்பது இத்தல வழிபாடு உணர்த்தும் மகிமைகளில் ஒன்று. நடுவே தூண்களே இல்லாது ஒரு லட்சம் மக்கள் விளையாட்டுகளை கண்டு களிக்க அமைக்கப்பட்ட இந்திரபிரஸ்தம் போன்ற அரங்குகளைக் கட்ட உதவி செய்வதே இத்தலத்தில் பெறும் கட்டிடக் கலை அறிவாகும். வாஸ்து சாஸ்திரம் என்பது இந்த உடலாகிய கட்டிடம் நன்முறையில் எழுவதோடு மட்டுமல்லாமல் அதை முறையாகப் பராமரிக்க உதவுவதே என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய இரகசியமாகும். மனித உடல் தோன்றுவதற்கு ஆதாரமாக இருப்பதும் செவலூர் திருத்தலமாகும். மனித உடல் தோன்றும் கர்ப்பப்பை மனித உடலின் ஆரணப் பகுதியில் அமைந்திருப்பது மட்டுமல்லாமல் ஆண் பெண் இணைப்பில் தோன்றும் குழந்தை நன்முறையில் தோன்றுவதற்கு ஆதாரமான மன்மதக் கணைகளை சீர்படுத்துவதும் செவலூரே என்பதே நம்மை பிரமிக்க வைக்க இரகசியம் ஆகும். மன்மதன் தாமரை, அசோகம் போன்ற மலர்க் கனைகளை பெண்களின் மேல், குறிப்பாக உத்தம பத்தினிகளின் மேல் செலுத்துகிறான் என்பதை நாம் கேள்விப்பட்டுள்ளோம். இது உண்மையே.

ஸ்ரீஸ்வர்ணாகர்ஷன பைரவர் செவலூர்

இந்த மலர் அம்புகள் அந்தந்த பத்தினிகளுக்கு ராஜாவாக அமைந்த கணவன்மார்களால் செலுத்தப்படுவதால் இந்த மன்மத பாணங்களின் தெய்வீகத் தன்மை மாறாமல் பத்தினி தெய்வங்கள் பெறுவதற்காகவே முகத்திற்கு மஞ்சள் பூசி, சுத்தமான குங்குமமிட்டு, மங்கள தாலியை நூலில் கோர்த்து, கண்களுக்கு சுத்தமான மையைப் பூசி, இடுப்பிற்கு கருப்புக் கயிறு, மேகலை (ஒட்டியாணம்) போன்ற பாதுகாப்புக் கருவிகளை அணிந்து கொள்ள வேண்டும் என்று பெரியோர்கள் காலம் காலமாக சிபாரிசு செய்து வந்துள்ளனர். இந்த விதி முறைகளை தம்பதிகள் தவறாது கடை பிடித்து வந்தாலே போதும் பிறக்கும் குழந்தைகள் எந்த வித அங்கக் குறைபாடும், மனக் கோளாறுகள் இன்றியும் தோன்றும். மன்மத பாணங்களுக்கும் செவலூர் திருத்தலத்திற்கும் உத்தம சந்தான பாக்கியத்திற்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் தாமரை மலர்களால் மாலை கட்டி இத்தல தட்சிணாமூர்த்திக்கு அணிவித்து மௌனமாக அடிப் பிரதட்சிணம் நிறைவேற்றி வருதல் நலம். தம்பதிகள் இடையே அமையும் உடற்கூறு பிரச்னைகளுக்கு தக்க தீர்வை உரியோர் மூலம் அளிப்பதும் இத்தகைய வழிபாடுகளாகும். நம் சற்குருவிடம் ஒரு அடியார் தன் மனைவியைப் பற்றி புகார் செய்தார். அவர் ஒரு சிறு வார்த்தை சொன்னாலே போதும் அந்தப் பெண்மணி தன் கையில் வைத்திருக்கும் தட்டு, கரண்டி, டம்ளர் என்று எந்தப் பொருளையும் அந்த பாத்திரங்களில் என்ன சூடான பொருள் இருந்தாலும் அதைப் பற்றி சிறிதும் கவலை இல்லாமல் அந்த அடியார் மீது வீசி விடுவாள். சற்குரு அந்த அடியார் சொன்ன புகார்களை எல்லாம் அமைதியாகக் கேட்டு விட்டு சிரித்துக் கொண்டே, “அவள் உத்தமி, அவள் மீது எந்தத் தவறும் கிடையாது. தவறு உன்னுடையதுதான், கண்ணு,” என்று அன்புடன் அரவணைத்து மேற்கூறிய செவலூர் திருத்தல வழிபாட்டைத் தெரிவித்தார். அந்த அடியார் மட்டுமல்ல அந்த அடியாரைத் தொடர்ந்து பலரும் தங்கள் இல்லற வாழ்வில் நலமடைந்தனர் என்று கூறவும் வேண்டுமோ ?! நட்சத்திரம் என்பது என்ன ? ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திர கிரகத்துடன் தொடர்பு கொள்ளும் ஒரு நட்சத்திர மண்டலப் பகுதியைத்தானே அந்த குறிப்பிட்ட நாளுக்கான நட்சத்திரம் என்று அழைக்கிறோம். இதனுடன் தொடர்பு கொள்வதே பெண்களின் உடலில் குறித்த பகுதியில் தோன்றும் அமிர்த சக்திகள். இந்த அமிர்த சக்திகளை இனங்கண்டு நடைமுறை வாழ்க்கையோடு இணைக்க முடிந்தால் அவர்கள் இல்லற வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள். தற்காலத்தில் இத்தகைய அறிவு பெற்றவர்கள் மிகவும் அருகி விட்டதால் நம் சற்குரு ஸ்ரீஅஸ்தீக சித்தர் வழிபாட்டின் மூலம் பெண்கள் இத்தகைய அமிர்த சக்திகளைப் பெற்று அதைக் குடும்ப வாழ்வில் அர்ப்பணிக்கும் இனிய வாழ்க்கை முறையை அருளியுள்ளார்கள். இந்த இரகசியங்களை மனதிற் கொண்டு நாகப் புற்றுகளுக்கு பால் வார்த்து வழிபட்டு வந்தால் அடியார்கள் தங்கள் இல்லற வாழ்வில் சுகம் அடைவதுடன், உத்தம சந்தானங்கள் தோன்றவும் இவை வழி வகுக்கும்.

ஆண்களும் பெண்களும் அவரவர் பிறந்த ஜன்ம நட்சத்திர தினத்தன்று முசிறி, திருவக்கரை போன்ற திருத்தலங்களில் ஸ்ரீசந்திர மௌலீஸ்வரரையும் அல்லது திருத்தலங்களில் அமைந்த சந்திர மூர்த்திகளையும், பிறந்த திதி நாட்களில் ஸ்ரீபைரவர், ஸ்ரீகாலபைரவர் போன்ற இறை மூர்த்திகளையும் வழிபட்டு வருதலும் சிறப்புடையதே. இத்தகைய வழிபாடுகளால் அமிர்த சக்தி ஞானம் பெருகுவதால் தங்கள் குடும்ப அங்கத்தினர்கள் நல்வாழ்வு பெற இந்த தெய்வீக ஞானம் பெரிதும் துணை புரியும். ஒல்லி, பருமன், உயரம், குள்ளம் போன்ற பிரச்னைகள் மட்டுமல்லாது வெளியில் சொல்ல முடியாத பல பிரச்னைகளால் விவாகாரத்து வரை சென்ற தம்பதிகள் ஏராளம். இவை அனைத்திற்கும் அடிப்படையான காரணம் தம்பதிகள் இடையே அன்யோன்ய வசியம் இல்லாததுதான். குறைந்தது 21 நீலோத்பல மலர்களால் மாலை கட்டி இத்தல அம்பிகைக்கு அளித்து, பைரவ மூர்த்திக்கு காய்ச்சின பசும்பாலில் டைமண்ட் கல்கண்டு கலந்து நைவேத்யமாக வைத்து தானமளித்தலால் எத்தகைய தாம்பத்ய பிரச்னைகளும் சுமுகமாகத் தீர்வுடையும். வசதி படைத்தோர் குங்குமப்பூ, முந்திரி, பாதம், பிஸ்தா போன்ற பருப்புகளையும் வறுத்து பாலுடன் சேர்த்து தானம் அளிப்பதும் சிறப்பாகும். சிறப்பாக மார்கழி மாதம் சூரிய உதயத்திற்கு முன் இயற்றும் இத்தகைய வழிபாடுகளால் தீராத குடும்பப் பிரச்னையே கிடையாது என்று உறுதி அளிப்பவரே நம் சற்குரு.

இதயக் கமலம்

மனிதன் பிறக்கும்போதே எத்தகைய நோய்களுக்கும் இடங்கொடுக்காத வகையில் உத்தம பிறவி எடுத்து விட்டால் அதை விடச் சிறந்த பாக்கியம் எதுவும் கிடையாதுதான். ஆனால் நடைமுறையில் இது சாத்தியமா ? பெரும்பாலான மக்கள் ஏதாவது ஒரு வியாதியின் பிடியில் தவிப்பதுதான் கலியுக மனிதனின் நிலையாக மாறி விட்டதால் மனிதனைத் தாக்கும் முதல் வியாதியாக இருக்கும் இதயக் கோளாறுகள் சிலவற்றைப் பற்றி இங்கு விவரிக்கிறோம். மனிதனின் இதயத்தை இதயக் கமலம் என்று தாமரை மலருடன் ஒப்பிடுவார்கள் பெரியோர்கள். தாமரையில் யார் குடியிருப்பார்கள் ? இறைவன்தான், இதில் எவ்வித ஐயப்பாடும் கிடையாதே. இன்றைய மனிதனோ இதயத்தில் இறைவனை குடி வைக்காமல் அதாவது இதயத்தில் இறைவனை எழுந்தருளச் செய்யாது எது எதையோ மனத்தில் குடியேற்றுவதால்தான் மனிதன் நிம்மதியின்றி தவிப்பதுடன் மட்டுமல்லாமல் பலவிதமான நோய்களுக்கும் ஆட்பட்டு அல்லல்படுகின்றான்.

திருஆனைக்கா அஷ்டதிக்கு கொடிமரம்

இல்லறப் பெண்கள் முறையாக தங்கள் கடமைகளைச் செய்து வந்தாலே போதும் தங்களுக்கு மட்டுமல்ல தங்கள் குடும்பத்தில் எவருக்குமே நோய் நொடிகள் அண்டாது என்று உறுதியளிக்கிறார்கள் சித்தர்கள். இதயக் கமல கோலமானது அடியார்களுக்கு மட்டும்தான் நன்மை பயப்பது என்று கிடையாது. இதய மருத்துவர்களும் இந்த இதயக் கமல கோலத்தை தங்கள் இல்லங்களில் வரைந்து தினந்தோறும் பூசித்து வருதால் இதயம் பற்றிய அறிவு பெருக்கெடுக்கும். இந்தக் கோலத்தில் குறித்த 16 இதய நாளங்களில் ஏற்படும் வீக்கம், அடைப்பு, இரத்தக் கசிவு போன்ற வேதனைகளே இதய நோய்களாக உருவெடுக்கின்றன. இதயக் கமல கோலத்தை பச்சரிசி மாவால் திருத்தலங்கல் வரைந்து இந்தக் கோலத்தைச் சுற்றி எட்டு திசைகளிலும் எட்டு நல்லெண்ணெய் தீபங்களை ஏற்றி இடை இடையே தேங்காய் எண்ணெய் தீபங்கள் எட்டு ஏற்றி இதயக் காப்பு துதியை ஓதி வந்தால் எத்தகைய இதய நோய்களும் அண்டாது. இது அற்புத சமுதாய வழிபாடும் கூட. எட்டின் மடங்காக அடியார்கள் இந்தக் கோலத்தைச் சுற்றி அமர்ந்து வழிபாடு இயற்றுவதும் சிறப்புடையதே. திருவானைக்கோவிலில் எட்டு திக்குகளில் பொலியும் கொடி மரங்களை முறையாக வழிபட்டு வந்தாலே போதும் கணவன் மனைவிமார்கள் தங்கள் குடும்ப வாழ்வில் ஒற்றுமையையும் அமைதியையும் காண்பதுடன் இருதய கோளாறுகள் அவர்களை அண்டாது. வேறு எத்திருத்தலத்திலும் அமையாத இந்த கொடி மரங்களின் திசை ஞானம் குறித்து அறிந்த எட்டு கால் பூச்சிகள் என்னும் சிலந்திப் பூச்சிகளே இத்தலத்தில் வழிபட்டு முக்தி அடைந்தன. ஆனால், ஆறறிவு கொண்ட மனிதனோ இன்னும் காந்தத்தை வைத்துத்தான் திசை அறியும் நிலையில் உள்ளான். இந்த அஷ்ட திக்கு கொடி மரங்கள் உள்ள பிரகாரத்தை தம்பதிகள் ஒன்று சேர்ந்து வலம் வருதல், இந்த கொடி மரங்களைச் சுற்றிலும் எட்டு தீபங்களை ஏற்றி வழிபடுதல், தேய்பிறை வளர்பிறை அஷ்டமி திதிகளில் குறைந்தது எட்டு பேருக்கு தேங்காய் சாதம் தானம் அளித்தல் போன்ற வழிபாடுகள் இருதய நோய்களுக்கு நிவாரணமாக அமையும். வருமுன் காப்பாக இத்தகைய வழிபாடுகளை நிறைவேற்றுதலே சிறப்பாகும். இந்த கொடி மரங்களைச் சுற்றி எட்டு வெண் தாமரைகளை வைத்து எட்டு முறை வலம் வந்து வணங்கி அந்தத் தாமரைகளை இல்லத்திற்கு எடுத்துச் சென்று அதில் உள்ள இதழ்களால் தாமரை டீ தயாரித்து அருந்துவதால் இருதயம் பலமாகும். பள்ளி மாணவர்களுக்கு அறிவு விருத்தியாகும். இத்துடன் கைகளுக்கு மருதாணி இட்டு இந்த கொடிமரங்களை வலம் வந்து வணங்குவதால் பெண்களுக்கு ஏற்படும் பூப்பு பிரச்னைகளும், மாதவிடாய்க் கோளாறுகளும் அகலும். சிறப்பாக பிரதோஷ வேளையில் இந்த கொடி மரங்கள் ஒவ்வொன்றையும் எட்டு முறை வலம் வந்து வணங்குவதால் எம்பெருமானின் 64 நர்த்தனக் கோலங்களையே வலம் வந்து வணங்கிய பலனை வர்ஷிக்க தாண்டவ ரிஷிகள் என்ற அற்புத ரிஷிகள் காத்துள்ளனர். நாம்தான் இந்த அபூர்வ வழிபாட்டு முறையைப் பயன்படுத்துவது கிடையாது. இனியாவது இந்த வழிபாட்டு முறையை கைக்கொண்டு இருதய வியாதிகளிலிருந்து விடுபட்டு குடும்ப ஒற்றுமையைப் பெருக்கி வாழ்வாங்கு வாழ்ந்து இறைவன் உறையும் இதயத்தில் இறைவனைத் தரிசித்து மகிழும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.

திருஅதிகை நாட்டியக் கோலம்

அனைவரும் திருஆனைக்கா அண்ணலை தரிசனம் செய்து தங்கள் இருதய நோயைக் குணப்படுத்திக் கொள்ள முடியாது என்பது உண்மையாக இருந்தாலும் இதையும் தீர்ப்பதற்காக பெருங்கருணையுடன் எழுந்தருளியிருப்பதே இறைவனின் அனுகிரக சக்தியாகும். திருநின்றவூர் ஸ்ரீஇருதயாலீஸ்வரர் திருத்தலம் என்று இருதய பெயரிலேயே இறைவன் எழுந்தருளி உள்ளார் என்றால் இதைவிட இறைவனின் கருணைக்குச் சான்றாக ஒன்றைக் கூற முடியுமா ? பூசல் நாயனார் என்னும் சிவனடியார் பொருள் வசதி இல்லாததால் தன் இதயத்தில் கோயில் கட்டி அதில் எல்லையில்லா எம்பெருமானை எழுந்தருளச் செய்த பெருமை உடைய திருத்தலமே இதுவாகும். தன்னை இதயத்தில் சிறை வைத்த அடியாரை இறைவன் மட்டும் சும்மா விடுவானா என்ன ? வேறெங்கும் இல்லாத சிறப்பாக, கருணையாக திருநின்றவூர் மூலத்தான சன்னதியிலேயே பூசல் நாயனாரின் திருவுருவம் என்றும் சதாசர்வ காலமும் சிவ தரிசனத்தைப் பெற்று மகிழும்படி எழுந்தருளி உள்ளது இறைவனின் கருணையா இல்லை பக்தியின் சிறப்பா ? இருதய ஆல் ஈஸ்வரர் என்று இறைவனே பக்தர்களின் உள்ளத்தில் ஆலமரம் போல் பரந்து விரிந்து நிலை கொள்ளும் இத்திருத்தலத்தில் அடியார்கள் அடிப் பிரதட்சணம் இயற்றி பசு நெய் தீபங்கள் ஏற்றி இறைவனை வழிபடுதலால் இருதய நோய்கள் மட்டுமல்ல, மனைவி மேல் சந்தேகம், கணவன் மேல் புகார், வேலையாட்கள் மீது அவநம்பிக்கை என்று மனதில் எழும் அனைத்துப் பிரச்னைகளும் தீர்வு பெறும் தலம் என்பதே இத்தலத்தின் சிறப்பாகும். இறைவனை மனதில் எழுந்தருளச் செய்தால் மனம் அமைதி கொள்ளும் என்பது உண்மை. மனம் அமைதி கொண்டால்தான் இறைவனை உள்ளத்தில் எழுந்தருளச் செய்ய முடியும் என்பதும் உண்மையே. இவ்வாறு மன அமைதிக்கு வழிகாட்டும் உத்தம அண்ணலே நம் சற்குரு எழுந்தருளிய மயிலை திருத்தலமாகும். இங்கு தோன்றிய வாயிலார் நாயனாரை வழிபட்டு வருதலாலும் மனம் தெளிவு பெறும், மனம் அமைதி கொள்ளும். அமைதி அடைந்த மனத்தை எந்த வியாதியுமே அண்டாது என்பது உண்மையே. இறை வழிபாட்டிற்கு அத்தியாவசியமான மன அமைதியைக் கற்பிக்கும் இடமே மயிலை திருத்தலமாகும். பலரும் அமைதியாக இருப்பது போல் வெளிப் பார்வைக்கு தோற்றமளித்தாலும் அவர்கள் மனமோ அரிக்கேன் என்ற புயல் காற்று வேகத்தில் சுழன்று கொண்டு இருக்கும். அத்தகையோரின் மனத்தில் வீசும் புயலை அவர்கள் கண் பார்வை காட்டிக் கொடுத்து விடும். மனம் சாந்தம் கொள்ளும்போதுதான் இறை மூர்த்திகளின் மீது கண் பார்வை நிலை கொள்ளும், உண்மை நிலை புரியும். இவ்வாறு மனதில் சாந்தத்தை உருவாக்கவல்ல திருத்தலமே சென்னை மயிலை திருத்தலமாகும். இங்கு அமைதி கொள்ளாத மனம் எங்கும் தூங்காது, அமைதி பெறாது. மனம் அமைதி பெறாததற்கு மனதில் எழும் காட்சிகளே முக்கிய காரணம் என்பதால் குருடர் சேவை இருதய நோய்களைத் தீர்க்கும் வல்லமை பெற்றதாக அமைகிறது. திருஆனைக்கா, திருநின்றவூர், மயிலை ஆகிய தலங்களில் வழிபாடுகளை இயற்ற முடியாதவர்கள் 63 நாயன்மார்கள் விளங்கும் சிவத்தலங்களில் கண்ணப்ப நாயனார், வாயிலார் நாயனார், பூசல் நாயனார் என்ற நாயன்மார் மூர்த்திகள் முன்னால் பச்சரிசி மாவால் இருதய கமலக் கோலமோ அல்லது தங்களுக்குத் தெரிந்த கோலமோ இட்டு அதன் மேல் நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்த முக்கூட்டு எண்ணெயால் தீபம் ஏற்றி அந்த தீபங்கள் குளிரும் வரை பிரகாரங்களை பிரதட்சிணம் வருதல் நலம்.

ஸ்ரீகண்ணப்ப நாயனார் பட்டமங்கலம்

தாங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய நாயன்மார்களின் முன்பு தீபம் ஏற்றுவதும் சிறப்புடையதாகும். உதாரணமாக ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருநாளைப்போவார், மங்கையர்க்கரசியார் போன்ற நாயன்மார்கள் முன்பு மாக்கோலம் இட்டு தீபம் ஏற்றி வழிபடுதலால் இருதய நோய்கள் மட்டுமல்லாது தங்கள் வாழ்க்கைக்கு உரிய தக்க வழிகாட்டுதலையும் பெற முடியும். கண்ணப்ப நாயனார், கண் அப்பிய நாயனார் என்றும் போற்றப்படுகிறார். அப்புதல் என்றால் நன்றாகப் பதியும்படி பூசுதல் என்று பொருள் அல்லவா ? தன்னுடைய கண் இறைவனின் நேத்திரக் கோளத்தில் நன்றாகப் பதியும்படி ஆர்வத்துடன் பூசியதால் கண்ணப்ப நாயனார் கண் அப்பிய நாயனாராகப் புகழப்படுவதில் ஆச்சரியம் அல்லவே. பார்வை இழந்தவர்களுக்கு அல்லது பார்வை குறைந்தவர்களுக்கு பாடம் கற்பித்தல், எழுதிக் கொடுத்தல், படித்துக் காட்டுதல், கதை சொல்லுதல் போன்ற இலவச சேவைகளும் இறைவன் மேல் பக்தியை வளர்க்கும் அற்புத சாதனங்களே. கண் இழந்தவர்களுக்கு தங்களுடன் இணையாக விளையாடும் தோழர்கள் இல்லை என்பது ஒரு பெரிய மனக் குறை. இந்தக் குறையை நிவர்த்தி செய்தாலே ஆயிரக் கணக்கில் அவர்களுக்கு கொடுத்து உதவியது போன்ற சந்தோஷம் கிடைக்குமே. இது அனைவரும் நிறைவேற்றக் கூடிய பணிதானே. கண் இழந்தவர்களை திருஅண்ணாமலை, காளஹஸ்தி, மேற்கூறிய தலங்களுக்கு அழைத்துச் செல்வதும் இருதய நோய்களைத் தீர்க்கும் அற்புத சேவையே. தற்காலத்தில் பல திருத்தலங்களிலும் இறை மூர்த்திகளுக்கு அமைக்கும் திருவாசியில் யாழி உருவங்களை பதித்து வைக்கின்றனர். இது எதிர்மறை சக்திகளைத் தோற்றுவிப்பதால் இத்தகைய யாழி உருவங்களைத் தவிர்த்து திருஅதிகை திருத்தலத்தில் உள்ளது போன்ற விழித் தாமரையை திருவாசியில் பதித்தலோ அல்லது ஓம் என்னும் பிரணவ சக்கரத்தையோ பதிக்கும்படி சித்தர்கள் சிபாரிசு செய்கிறார்கள். ஏற்கனவே இவ்வாறு அமைந்த யாழி உருவங்களை மாற்ற முடியாது என்ற நிலையில் உள்ளபோது அந்த யாழி உருவங்களுக்கு மேல் ஓம் என்னும் பிரணவ யந்திரத்தை நம் ஆஸ்ரமத்தில் உள்ளது போல் அமைத்து வழிபடுதல் நலம். சாதாரணமாக தியானத்திற்காக அமர்ந்து பக்தர்கள் கண்களை மூடும்போது ஒரு இருண்ட சூழ்நிலையை அதாவது இருட்டைத்தான் சந்திக்கிறார்கள். எப்போது அவர்கள் இமையை மூடும்போது இங்குள்ள சித்திரத்தில் உள்ளது போன்ற விழித் தாமரையை அவர்கள் தரிசிக்கிறார்களோ அப்போதே அவர்கள் தியான நிலையில் சரியாக முன்னேறுகிறார்கள் என்பது பொருள். எனவே திருத்தலங்களில் தூணில் உள்ள ஒவ்வொரு சித்திரமும் சிலையும் ஆயிரம் பொருள் பொதிந்த அர்த்தங்களுடன் கூடியதாக இருக்கும் என்பதே நாம் திருத்தலங்களைப் பற்றிக் கொள்ள வேண்டிய சரியான கண்ணோட்டமாகும். கண்ணப்ப நாயனார் இறைவனின் பசியைத் தீர்ப்பதற்காக பறவை இனங்களில் மிகச் சிறந்த குருவிகளைச் சமைத்து அந்தக் கறி உணவுகளை இறைவனுக்கு நைவேத்தியாக பரிமாறியதால் அந்த குருவி இனங்கள் அனைத்தும் முக்தி பெற்று விட்டன என்பது சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியமாகும். அந்தக் குருவிக் கறிகளின் மாமிச சக்திக்கு இணையான வல்லாரை, அஸ்வகந்தா, சிறுநெருஞ்சி லேகியம் என்ற லேகியங்களை தானமாக அளிப்பதால் இருதய நோய்களிலிருந்து விரைவில் நிவாரணம் கிட்டும். இதயத்தில் குடியிருக்கும் இறைவனுக்கு இதை விடச் சிறந்த நைவேத்யம் ஒன்று உண்டா ?

ஸ்ரீகிருஷ்ண பகவான் பெருமாள்மலை

ஊர்த்துவரேதஸ் என்ற எட்டெழுத்து சக்தி ஒன்று உண்டு. பூமியின் ஆகர்ஷண சக்தியால் பாதிக்கப்படாமல் மனிதனின் முதுகுத் தண்டில் சகஸ்ராரத்தை நோக்கி எழும் குண்டலினி சக்தியே இது. மூலாதாரத்தின் சக்தியை காலால் எழுப்பும் சக்தி பெற்றவர்கள் அதாவது பிராணாயாம சக்தியில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த படியாக இந்த குண்டலினி யோகத்தை குருவருளால் மேற்கொள்ள முடியும். பிராண வித்யா என்னும் பிராண சக்தியை பிரபஞ்சத்திலிருந்து ஈர்த்து அதை மற்றவர்களின் உடல் நோய்களைத் தீர்க்க பயன்படுத்தும் வித்தையில் தலை சிறந்தவரே ரிஷிகேஷ் சிவானந்தா சுவாமிகள் ஆவார். இந்த ஊர்த்துவரேதஸ் சக்தியை அனைவரும் பெறும் மார்கமாக “ஊர்த்துவமூலம் ... ” என்று தொடங்கும் பகவத் கீதையின் பதினைந்தாவது பகுதியை தினமும் உணவு வேளையின்போது ஓதும் பழக்கம் சிவானந்தா ஆஸ்ரமத்தில் மட்டுமல்லாது இரை தேடும்போது இறையையும் தேடு என்ற ஞானானந்தா கிரியின் உபதேசத்தை ஒட்டி இந்தியாவின் பல ஆஸ்ரமங்களிலும் இந்த கீதை பாராயண முறை பின்பற்றப்படுவது சிறப்பே. இவ்வாறு ஊர்த்துவரேதஸ் சக்திகளை மனிதர்கள் பெறுவது கடினம் என்றாலும் இதை அனைவருக்கும் குரு பிரசாதமாக தாரை வார்த்து அளித்தவரே, இன்றும் பக்தர்களுக்கெல்லாம் இந்த சக்திகளை அனுகிரக சக்திகளாக அளித்துக் கொண்டிருப்பவரே ஸ்ரீகிருஷ்ண பகவான் ஆவார். திருஅண்ணாமலையை கிரிவலம் வரும்போது முன்கால்களை அழுத்தி தரையில் வைத்து பின்னங்கால்களை, குதிகால்களை உயர்த்தி நடக்கும்போது இத்தகைய ஊர்த்துவரேதஸ் சக்திகள் உடலில் தோன்றுகின்றன என்றாலும் இதை மற்றவர்களின் நலனுக்காக தாரை வார்த்து அளிக்கும் சக்தி பெற்றவர் கிருஷ்ண பகவான் ஒருவரே. அஷ்டமி திதி ஜனனம் என்ற ஒரு சிறப்பே இத்தகைய சக்திகளை மற்றவர்களுக்கு அளிக்கவல்லது என்றால் பகவானின் மற்ற சிறப்புகளைப் பற்றி பக்தர்கள் என்று அறிந்து கொள்வது. அஷ்ட வக்ர மகரிஷியும் இவ்வாறு தன் உடலில் எட்டு இடங்களில் ஏற்பட்ட கோண சக்திகளால் இந்த ஊர்த்துவரேதஸ் சக்திகளை திருஅண்ணாமலை கிரிவலப் பாதையிலிருந்து ஈர்த்து அதை மக்களுக்கெல்லாம் அளிக்கும் அற்புத நோய் நிவாரண சேவைகளை மேற்கொண்டு வருகிறார் என்பது சித்தர்கள் மட்டுமே அறிந்த இரகசியம் ஆகும்.

ஸ்ரீகிருஷ்ண பகவான் ரெட்டைவயல்

இவ்வாறு ஸ்ரீகிருஷ்ண பகவான் ஈர்த்த ஊர்த்துவரேதஸ் சக்திகளை நேரிடையாக பக்தர்கள் பெறும் சக்தி பெறாததால் பசுக்களின் பாலை கறந்த சூடு ஆறும் முன் இறை மூர்த்திகளுக்கு அர்ப்பணித்து அந்தப் பால் அபிஷேக திருக்காட்சியைப் பெறும் பக்தர்களும், பால் பிரசாதத்தை கோமுகம் வழியாக பெறும் பக்தர்களும் பெருமளவில் இத்தகைய ஊர்த்துவரேதஸ் சக்திகளைப் பெறுகின்றார்கள் என்பதை இப்போது நீங்கள் அறிந்து கொண்டு விட்டீர்கள் அல்லவா ? பல திருத்தலங்களிலும் ஸ்ரீகிருஷ்ண பகவானின் காலை பசு மாடுகள் நக்குவது போன்ற காட்சியை நீங்கள் காணலாம். ஸ்ரீகிருஷ்ண பகவான் திருஅண்ணாமலையை வலம் வந்து பெற்ற ஊர்த்துவரேதஸ் சக்திகளையே இவ்வாறு க்ஷீர சக்திகளாக பசுக்களுக்கு அளிக்கிறார் என்பதே இங்கு நாம் அறிந்து கொள்ள வேண்டிய இரகசியம். ஒரு சாதாரண பால் அபிஷேகம் என்று நாம் நினைக்கும் நிகழ்ச்சிக்குப் பின்னால் எத்தகைய நோய் நிவாரண சக்திகள் மறைந்துள்ளன பார்த்தீர்களா. மடிப்பால் தானம் என்னும் கன்று குட்டிகளுக்கு பாலை நாள் முழுவதும் அளிக்கும் தான முறையை கிரக பிரவேச நாட்கள் மட்டுமல்லாது மற்ற தினங்களிலும் மேற்கொள்வதால் இத்தகைய ஊர்த்துவரேதஸ் சக்தியால் இல்லங்களில் நோய் நிவாரண சக்திகள் பெருகும். திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து ஸ்ரீஅருணகிரி நாதரின் ஜீவ சமாதியை தரிசிப்பதால் இந்த ஊர்த்துவரேதஸ் சக்திகளைப் பெறலாம். திருஅண்ணாமலை கிரிவலத்தில் எவ்வளவு தூரம் இவ்வாறு முன்கால்களால் பிரதட்சிணம் செய்கிறோமோ அந்த அளவிற்கு ஊர்த்துவரேதஸ் சக்திகள் பெருகும், உடலில் நிறையும். மற்ற மகான்களின் ஜீவ சமாதிகளைத் தரிசிக்கும்போதும் இவ்வாறு அஷ்ட நமஸ்கார பத்ததி முறையில் தரிசனம் செய்வதால் இத்தகைய நோய் நிவாரண சக்திகள் பெருகும். கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு என்றவாறாக எட்டு திசைகளில் நமஸ்கரிப்பதே அஷ்ட நமஸ்கார பத்ததி ஆகும். சக்தி வாய்ந்த சித்த வழிபாட்டு முறை இது. இருதயத்துடன், இதயத்துடன் நேரிடை தொடர்பு கொள்ளும் முத்திரை இது. அறந்தாங்கி பேராவூரணி சாலையில் உள்ளதே சின்னரெட்டைவயல் ஸ்ரீமாயம் பெருமாள் திருத்தலமாகும். விஷ்ணுபதி திருத்தலம். உடல் மன நோய்களுக்கு மையமாக உள்ளதே மாயை அல்லது மாயம் என்பதை உணர்த்தும் உன்னத திருத்தலம். இத்தல ஸ்ரீமாயம் பெருமாளைத் தரிசனம் செய்து பால் இனிப்புகளை தானமாக அளித்து வருதலால் உடலை வருத்தும் மாயையிலிருந்து விடுபட்டு இறை பக்தியை வளர்க்க இத்தல வழிபாடு துணை புரியும். மடிப்பால் தானம் என்பதாக விடியற்காலையிலிருந்து மாலை வரை கன்று குட்டிகள் தங்கள் தாய்ப் பசுவிடம் பாலை அருந்தும் தான முறையே மடிப்பால் தானம் என்பதாகும். கிரகப் பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகளில் நிறைவேற்றப்படும் இத்தகைய தான முறைகள் குடும்ப அங்கத்தினர்கள் அனைவருக்கும் நோய் நிவாரணம் பெற வழிவகுக்கும். மடிப்பால் தானத்திற்கு சிறப்பான திருத்தலமே ரெட்டைவயல் ஸ்ரீமாயம் பெருமான் ஆலயமாகும். தீராத வியாதிகளுக்கும் தீர்வு அளிக்கும் தான முறை இது.

ஏகாதச ருத்ர லிங்கங்கள் ராமேஸ்வரம்

நாள், நட்சத்திரம் என்று காலத்தின் ஐந்து பகுதிகளையும் குறிப்பதே பஞ்சாங்கம் என்பதாகும். இந்த பஞ்சாங்கத்தில் திதியை முறையாகப் பயன்படுத்தினால் செல்வம் பெருகும் என்பது விதி. உடல் ஆரோக்கியம் என்பதே மனிதர்கள் பெற வேண்டிய முக்கிய செல்வமாக விளங்குவதால் இந்த திதி வழிபாடே அனைத்து ஆரோக்யங்களையும் நல்கி வியாதிகள் அற்ற சிறப்பான ஆரோக்யத்தை அளிக்கவல்லதாகும். மக்களுக்கு சிறப்பான ஆரோக்யத்தை அளிக்கவல்லதே ஏகாதசி திதியாகும். முறையாக ஏகாதசி விரதம் இருந்தாலே அதாவது நிர்ஜலம் என்றவாறாக நீர் கூட அருந்தாது இறை நினைவில் முழுவதுமாக மூழ்கி இருத்தலே ஏகாதசி விரதத்தை முறையாகக் கொண்டாடும் முறையாகும். இத்தகைய விரதத்தில் மட்டுமே ஏககங்கா என்ற அற்புத நோய் நிவாரண சக்தியை அளிக்கும் அமிர்த சுரப்பு உடலில் ஏற்படும். இந்த அமிர்த சுரப்பை உடல் எங்கும் பரிமாற்றம் செய்யவே நீர் அருந்தாது இறை நினைவுடன் ஏகாதசி திதியைக் கொண்டாட வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர். நடைமுறையில் இது பலருக்கும் சாத்தியம் ஆவதில்லை என்பதால் ராமேஸ்வர அக்னி தீர்த்தத்தில் நீராடி இத்திருத்தலத்தில் அபூர்வமாக எழுந்தருளி உள்ள ஏகாதச ருத்ர லிங்கங்களை தரிசனம் செய்வதால் நாம் முறையான ஆரோக்ய வாழ்வைப் பெற முடியும் என்பதே நம் சற்குருவின் அருளுரை. நெருப்பில் சுட்ட சப்பாத்தி, ரொட்டி போன்ற உணவுப் பொருட்களை தானமளிப்பது இந்த வழிபாட்டிற்கு துணை செய்யும் தான முறையாகும். ஏகாதசி என்ற விரத நாளில் உணவு தானம் செய்யலாமா என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்படலாம். இதைப் பற்றி தெளிவாக நம் சற்குரு ஏற்கனவே அருளியுள்ளார். ஒருவர் சாப்பாடு கிடைத்தால் சாப்பிடுவேன் என்ற ஆரோக்ய நிலையிலோ அல்லது வறுமை நிலையிலோ இருக்கும்போது திதியைக் காரணம் காட்டி அவருக்கு அன்னதானத்தை நிராகரிப்பது எவ்விதத்திலும் சரியாகாது. அதனால் ஏகாதசி மட்டுமல்ல கிரகண காலங்களிலும் தாராளமாக அன்னதானம் நிறைவேற்றலாம் என்பதே சித்தர்களின் அருளுரை, தெளிவுரை. திருஅண்ணாமலையில் கிரிவலம் வந்து ஏகாதச ருத்ர மூர்த்தி தரிசனம் கண்டு அன்னதானம் நிறைவேற்றுவதும் ஆரோக்ய வாழ்வை அளிக்கக் கூடியதே. இங்கு நீங்கள் தரிசனம் செய்வதே சற்குருவின் பெருங் கருணையால் ஐப்பசி மாதம் வளர் ஏகாதசி திதி அன்று ஏகாதச ருத்ர மூர்த்திகள் நல்கும் திருக்காட்சியாகும்.

வாழ்வித்த மருந்து

என்னதான் ஒரு திருத்தலம் எத்தனையோ வியாதிகளையும் தீர்க்கக் கூடியதாக இருந்தாலும் ஒரே திருத்தலத்திலேயே மனிதனுடைய நோய்கள் அனைத்தையும் தீர்த்து நோயில்லா பெருவாழ்வைப் பெற முடியாதா என்ற கேள்வி மனிதர்கள் மனதில் தோன்றுவது இயற்கையே. திருவெறும்பூர் திருத்தலம் தோல் நோய்களைத் தீர்க்கும், திருமுல்லைவாயில் நரம்புத் தளர்ச்சி நோய்களைக் குணமாக்கும், திருப்பைஞ்ஞீலி திருத்தலமோ பைத்தியத்தையும் நீக்கும் சக்தி பெற்றது, கபால நோய்களைத் தீர்ப்பார் மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் என்றாலும் அனைத்து நோய்களையும் தீர்த்து அருள்புரிபவரே வாழ்வற வாழ்வித்த மருந்தாக இறைவன் அருள்புரியும் உத்தரகோசமங்கை திருத்தலமாகும். “மூன்று காட்சியும் ஒன்பதே” என்ற சிறப்புடையதாக அமைந்ததே உத்தரகோசமங்கை திருத்தலமாகும். பொதுவாக அம்பாளும் இறைவனும் ராஜ கோபுரங்களுடன் திகழ்வது என்பது அரிதான காட்சியாக இருந்தாலும் இவ்வாறு அரிய கோபுரங்களுடன் திகழ்ந்தாலும் அந்த கோபுரங்களில் உள்ள கலசங்கள் சுவாமி கோபுரத்தில் அதிகமாகவும் அம்பாள் கோபுரத்தில் அதை விடச் சற்று குறைவாகவே இருத்தலே நாம் காணும் கோபுரக் காட்சிகளின் சிறப்பாகும். இதற்கு விதிவிலக்காக அமைந்ததே உத்தரகோசமங்கையில் அம்பாள் ராஜ கோபுரமும் சுவாமியின் திருக்கோபுரமும் நோய் தீர்க்கும் ஒன்பது கலசங்களுடன் திகழ்வதாகும். இத்தலத்தின் திருநாமமும் ஒன்பது எழுத்துக்களுடன் திகழ்வதும் இந்த நோய் தீர்க்கும் சிறப்பிற்கு அணி சேர்ப்பதாகும்.

உத்தரகோசமங்கை

உத்தரகோசமங்கை என்ற சொல்லிற்கு ஆயிரமாயிரம் அர்த்தங்கள் உண்டு என்றாலும் உத்தரம் என்றால் பதில் கோசம் என்றால் தொகுப்பு என்ற பொருளும் உண்டு. மக்கள் மனதில் எழும் அனைத்து வினாக்களுக்கும் பதில் அளிக்கக் கூடிய ஒரே திருத்தலமே உத்தரகோசமங்கை ஆகும். போகர், புலிப்பாணி போன்ற உத்தம சீடர்கள் மக்களின் மனதில் அவ்வப்போது முளைக்கும் கேள்விகளுக்கு உரிய சரியான பதிலை தங்கள் சற்குருவான ஸ்ரீஅகத்திய மகரிஷியிடமிருந்து பெற்று மக்கள் நல்வாழ்விற்காக அர்ப்பணித்ததைப் போல மக்களின் சார்பில் பார்வதி மங்கை கேள்விக் கணைகளைத் தொடுக்க அதற்கு எம்பெருமான் அளித்த தெய்வீக பதில்களின் சாகரமே உத்தரகோசமங்கை ஆகும். இந்த கண்ணோட்டத்தை மனதில் கொண்டு இங்குள்ள மங்கை கோபுரத்தையும் மணாளன் கோபுரத்தையும் தரிசனம் செய்தால் உங்கள் மனதில் எழும் வினாக்கள் அனைத்திற்கும் உள்ளங்கை நெல்லிக் கனியாக பதில்கள் மிளிரும் என்பதே உத்தரகோசமங்கையின் சிறப்பாகும். இறைவி பார்வதி தேவி மங்கள நாயகியாக பல திருத்தலங்களில் எழுந்தருளி இருந்தாலும் இறைவனும் ஸ்ரீமங்களேஸ்வரராக இத்தலத்தில் எழுந்தருளி இருப்பதே இத்தகைய அர்த்தநாரீஸ்வர கோலத்தை மேலும் சிறப்பிப்பதாகும். இறைவி எழுப்பும் வினாக்களுக்கு இறைவன் அளிக்கும் செம்மையான பதில்கள் இறைவியின் மனதில் அதாவது கேட்பவரின் மனதில் மங்களத்தன்மையை, இனி கேள்விகளே மனதில் எழாத பூரண நிலையை ஏற்படுத்தி விடும் என்றால் உத்தரகோசமங்கையின் சிறப்புதான் என்னே. இத்தலத்தின் பெருமையைப் பற்றி ஒரே வார்த்தையில் கூறுவதானால் ஒரு முறை சற்குரு அவர்கள் ஒரு அடியார் இல்லத்தில் எழுந்தருளினார். சற்குருவை வரவேற்று தங்கள் இல்லத்தில் உள்ள ஊஞ்சலில் அமர வைத்து “சீரார் பவளங்கால் ...”, என்று மாணிக்க வாசகர் உத்தரகோசமங்கையில் அருளிச் செய்த திருப்பொன்னூசல் பதிகத்தைப் பாடி வரவேற்பு அளித்தார். கடுகளவு இந்தச் சிறிய சேவைக்கே அந்த அடியார் இன்றளவும் பக்தர்கள் மனதில் எழும் வினாக்களுக்கு உரிய தெய்வீக பதிலை அளிக்க முடிகிறது என்றால் உத்தரகோசமங்கை திருத்தல வழிபாடு எந்த அளவிற்கு பக்தர்கள் மனதில் எழும் கேள்விகளுக்கு எல்லாம் உரிய விடைகளை கருணா மூர்த்தி அம்பாள் மூலம் பெற்றுத் தரும்.

ஸ்ரீமரகத நடராஜர் உத்தரகோசமங்கை

கைலாயக் காட்சி உத்தரகோசமங்கை

ஆன்மீக வினாக்கள் என்று கிடையாது தங்கள் மனதில் எழும் அனைத்து வினாக்களுக்கும் பதில் பெற விரும்புவோர் இத்தல சகஸ்ர லிங்க மூர்த்தியை தரிசனம் செய்து சகஸ்ர லிங்கத்தின் அருகில் உள்ள துவாரம் வழியாக கைலாயக் காட்சி என்னும் இத்தலத்தில் கிடைக்கும் அரிய காட்சியை தரிசனம் செய்வதால் தங்கள் மனதில் அனைத்து வினாக்களுக்கும் உரிய பதிலைப் பெறுவார்கள். உத்தரகோசமங்கையின் தல விருட்சமான இலந்தை மரத்தடியில் சகஸ்ரலிங்கம் அமைந்துள்ளதால் இந்த தல மர நிழலில் தீரா வியாதிகளே இல்லை என்று சொல்லலாம். உண்மையில் இத்தல இலந்தை மரத்தை அர்த்தநாரி இலந்தை என்றே கூறலாம். இப்பூவுலகில் தோன்றிய முதல் இலந்தை மரம் இதுவே. இந்த இலந்தை மரம் தோன்றிய பின்பே மாணிக்க வாசகரால் இந்த சகஸ்ர லிங்கமே இத்தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்றால் இத்தலவிருட்சம் காலம் கடந்து நிற்பது அல்லவா ? இலந்தைப் பழத்தில் புளிப்பும் இனிப்பும் சம அளவில் கலந்து இருப்பதும் இதை அர்த்தநாரீஸ்வர தத்துவ மரமாக புகழ்வதற்கான காரணங்களில் ஒன்றாகும். குறிப்பாக இலந்தை தல விருட்ச நிழல் இருதய வியாதிகளுக்கு ஓர் அற்புத வரப் பிரசாதமாகும். தொடர்ந்து இத்தல விருட்ச நிழலில் அமர்ந்து கைலாயக் காட்சி தரிசனத்துடன் சகஸ்ர லிங்க தரிசனத்தையும் மேற்கொண்டு வந்தால் மருத்துவர்கள் துணையின்றி தாங்களே தங்கள் இருதய நோய்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற நோய்களுக்குமான காரணத்தை அறிந்து கொள்ளலாம். நோய்க்கான காரணத்தை, மூலத்தை அறிந்து கொண்டால் மற்றதெல்லாம் ஒரு நொடியில் நிகழ்வதுதானே. வதரி, பத்ரி என்ற சொற்களும் இலந்தை மரத்தைக் குறிப்பவையே. பத்ரி நாராயண அம்சமாக, சிவ சக்தி ஐக்ய சொரூபமாக விளங்கும் இலந்தை மரத்தின் அடியில் அமர்ந்து சகஸ்ர லிங்க தரிசனத்தையும் கைலாயக் காட்சியையும் சுக்ர பீட துவாரம் வழியாகப் பெறுவது என்றால் இதை விடச் சிறந்த பாக்கியத்தை பூலோக மக்கள் பெற முடியும் ? சுக்ர பீட முத்திரையைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். இரு சுக்ர விரல்கள் எனப்படும் கட்டை விரல்கள் மேல் குருவிரல்கள் என்னும் ஆள்காட்டி விரல்கள் பள்ளி கொள்வதையே சுக்ர பீட முத்திரை என்று அழைக்கிறோம். உத்தரகோசமங்கையில் குருவருடமான இவ்வருடம் சுக்ரபீட முத்திரை வழியாக கைலாய காட்சியைக் கண்டு தரிசனம் பெறுவது என்பது எத்தகைய பேறு ? இதன் பலன்களை விவரிக்க வார்த்தைகளே கிடையாது. கோசார ரீதியாக தனுசு ராசியில் குரு பகவான் எழுந்தருளி உள்ளதால் உத்தரகோசமங்கையில் ஒரு வருட காலத்திற்கு இத்தகைய சுக்ரபீட முத்திரை வழியாக கைலாய காட்சி பெறுதல் என்பது எத்தனையோ வியாதிகளுக்கும், அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளுக்கும் விடை அளிக்கும் உத்தம வழிபாடாக அமைகிறது.

ஸ்ரீசகஸ்ரலிங்கம் உத்தரகோசமங்கை

திருஅண்ணாமலையை எங்கு தொட்டாலும் குரு அருள் சுரக்கும் என்பது போல் உத்தரகோசமங்கையை எங்கு தொட்டாலும் உடல் நோய்களும் மன நோய்களும் விலகும் என்பதே இத்தலத்தின் சிறப்பாகும். காக்கைகள் அடிக்கடி நீரில் மூழ்கி அந்த நீர்த் திவலைகளைத் தங்களைச் சுற்றி தெளிப்பதை பலரும் கண்டிருக்கலாம். இது ஏதோ பறவைகளின் விளையாட்டு என்று மக்கள் நினைப்பதுண்டு. உண்மையில் இது பரவெளியில் அக்னி சக்திகளை நிரவும் வழிபாடு ஆகும். இந்தக் காட்சியே, சிறப்பாக தேய்பிறை செவ்வாய்க் கிழமைகளில் கிட்டும் இத்தகைய நோய் நிவாரண காட்சிகள் பல வியாதிகளுக்கும் மருந்தாக அமையும். காக்கைகள் தெளிக்கும் நீருக்கே இத்தகைய நோய் நிவாரண சக்தி உண்டென்றால் ஸ்ரீகாகபுஜண்ட மகரிஷி உத்தரகோசமங்கை அக்னி தீர்த்தத்தில் நீராடி நோய் நிவாரண சக்திகளை இன்றளவும் பூலோகத்தில் வர்ஷிக்கிறார் என்றால் இத்தலத்தில், அக்னி தீர்த்தத்தில் விளையும் நோய் நிவாரண சக்திகளை வார்த்தைகளால் வர்ணிக்கத்தான் இயலுமா ? இங்கு நீங்கள் தரிசனம் செய்வது இத்தகைய நோய் நிவாரண சக்திகள் நிரம்பிய அக்னி தீர்த்தம் மட்டும் அல்ல அத்தீர்த்தத்தில் பொலியும் ஒன்பது கலசங்கள் கொண்ட கோபுர நிழலுமாகும். செவ்வாய் என்பது ஒன்பதைக் குறிக்கும் எண் ஆதலால் ஒன்பது கலசங்கள் உடைய கோபுர நிழலை புதன் கிழமைகளில் அதிலும் சிறப்பாக இவ்வாறு புத பகவானுக்கு உரித்தான மரகத நடராஜர் ஆலயத்தில் தரிசனம் செய்வதால் கிட்டும் நோய் நிவாரண சக்திகள் கோடி கோடியே. குசா சக்திகள் பொலியும் புதன் கிழமையில் நீங்கள் மரகத நடராஜர் தரிசனம் பெறுதல் என்பது உங்கள் மூதாதையர் செய்த யுகக் கணக்கான புண்ணியமே என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஸ்ரீகாகபுஜண்ட மகரிஷி அக்னி தீர்த்தத்தில் நீராடி நோய் நிவாரண அக்னி சக்திகளை வர்ஷித்தது எத்தனையோ யுகங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி போல் உங்களுக்குத் தோன்றினாலும் இன்றளவும் உத்தரகோசமங்கை அக்னி தீர்த்தத்தில் நீராடி இந்த புண்ணிய சக்திகளை மக்களும் மற்ற உயிரினங்களும் பெறுமளவிற்கு இந்த தீர்த்தத்தில் வர்ஷிக்கிறார் என்பதே இலந்தை மர நிழலில் பள்ளி கொண்ட அவருடை திருப்பாதுகைகள் உறுதி செய்கின்றன. இங்கு நீங்கள் தரிசனம் செய்யும் பாதுகைகளே எத்தனையோ வியாதிகளைத் தீர்க்கும் அருமருந்தாக அமைவதுடன் எத்தனையோ வியாதிகளுக்கு நோய் நிவாரண சக்தியையும் அளிக்கிறது. எதிர்காலத்தில் மக்கள் எதிர்நோக்கும் 2000 புதிய வியாதிகளுக்கு அருமருந்து அளிக்கக் கூடிய ஒரே தீர்த்தம் இங்கு விளங்கும் அக்னி தீர்த்தமே என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம்.

ஸ்ரீவராகி அம்மன் திருக்கோயில்
உத்தரகோசமங்கை

குடும்ப அங்கத்தினர்கள், சத்சங்க அடியார்கள், மருத்துவர்கள் போன்றோர் இங்கு அக்னி தீர்த்தத்தில் நீராடி சகஸ்ர லிங்க மூர்த்தியை தரிசனம் செய்து ஒருவர் கையை ஒருவர் கோர்த்தவாறு அமர்ந்து ஸ்ரீகாகபுஜண்டரின் மனைவியான நற்பவி தேவியின் திருநாமத்தை வாய்விட்டு ஓதுவதால் கிட்டும் பலன்கள் ஏராளம், ஏராளம். சற்குரு அவர்கள் அருளிய இந்த நற்பவி நாம உச்சாடனத்தில், நற்பவி தியானத்தில் மலரும் நோய் நிவாரண சக்திகள் கோடி கோடியே. அனுபவித்தவர்கள் பலன் உணர்வர். பிறவிப் பிணியையே தீர்க்கவல்ல அற்புத வழிபாடு இது என்றால் வேறு எந்த நோய்தான் மக்களை நாடும் ? இங்கு நீங்கள் தரிசனம் செய்யும் சகஸ்ர லிங்கத்தின் புகைப்படமே நோய் நிவாரண சக்திகளை வர்ஷிப்பதை உணர முடியும் என்றால் இத்தகைய சக்திகளை நேரடியாக நீங்கள் உத்தரகோசமங்கையில் பெற்றால் அது எத்தகைய சிறப்புடையதாக இருக்கும். எதையும் சாதிக்கவல்லவர் நம் சற்குரு என்பதற்கு இந்த புகைப்படமும் ஒரு சான்றாகும். ஸ்ரீவராகி அம்மன் உபாசனையில் வல்லவரே ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள். தான் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்தபோது முதல் 20000 கிரிவலப் பலனை தன்னுடைய தாய் முக்தி அடைவதற்கும், அடுத்த 20000 கிரிவலப் பலனை தன்னுடைய தந்தையார் முக்தி அடைவதற்கும், பாக்கி கிரிவலப் பலன்களை எல்லாம் இந்த உலக மக்கள் அனைவரும் முக்தி அடைவதற்காகவும் அர்ப்பணித்தார் என்பதே ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் பற்றி சித்தர்கள் உரைக்கும் இரகசியம் ஆகும். ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் போன்ற உத்தமர்களே தங்கள் திருஅண்ணாமலை கிரிவலப் பலனை அர்ப்பணிக்க வேண்டியுள்ளது என்றால் முக்தி என்பது எத்தகைய உயர்ந்த நிலை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த முக்திப் பதவியையே எளிதாக அளிக்கக் கூடியதே உத்தரகோசமங்கையில் பக்தர்கள் இயற்றும் ஸ்ரீவராகி அம்மன் வழிபாடாகும். அரிதிலும் அரிதாக ஸ்ரீவராகி அம்மன் தனிக் கோயில் கொண்டு இத்தலத்தில் பொலிவதால் நோய் நிவாரண சக்திகள் மட்டுமல்லாமல் தாங்கள் விரும்பும் எந்த சக்தியையும் பெற இத்தல அம்பிகை அருள் புரிகிறாள். ஸ்ரீவராகி அம்மன் இத்தலத்தில் சுயம்புவாய்த் தோன்றி அருள்பாலிப்பதால் குடும்ப ஒற்றுமைக்கும், பெண்களின் பாதுகாப்பிற்கும் அருளும் தேவி இவளே. ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஸ்ரீவராகி தேவியைப் போல் அமர்வதில் பெருவிருப்பம் கொண்டவர். அவர் அமரும் நிலையே ஸ்ரீவராகி அனுகிரகத்தை அளிக்கக் கூடியதுதான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மற்ற விஷயங்களை நீங்களே தெளிவுபடுத்திக் கொள்ளலாம். ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஒவ்வொரு திருஅண்ணாமலை கிரிவலத்தை முடித்தவுடன் ஒரு முறை மூன்று நிமிட வராகி முகூர்த்த நேரத்தில் அமர்ந்து அவ்வாறு கிட்டும் நோய் நிவாரண சக்திகளை எல்லாம் இந்த உலகிற்கு அர்ப்பணித்த பெருந்தகை ஆவார்.

ஸ்ரீமங்கள நாயகி சமேத ஸ்ரீமங்களேஸ்வரர் உத்தரகோசமங்கை

மங்களம் என்ற வார்த்தைக்கு பல சுபமான அர்த்தங்கள் உண்டு அல்லவா ? மங்கள நீராடல் என்று திருமணத்தின்போது மணப் பெண்ணிற்கும் மணமகனுக்கும் நிகழ்த்துவாரகள். மணமக்களின் பிரம்மச்சர்ய வாழ்வின் மங்களமாக திருமண வாழ்வின் ஆரம்பமாகத் திகழ்வதே இந்த மங்கள நீராடல். அது போல நோய்வாய்ப்பட்டு துன்பத்தில் வாடும் நோயாளிகள் தங்கள் துன்பம் மறைந்து சுக வாழ்வைப் பெற, ஆரோக்ய வாழ்வைப் பெற உறுதுணையாக நிற்கும் தெய்வ மூர்த்திகளே உத்தரகோசமங்கையில் அருள் புரியும் ஸ்ரீமங்கள நாயகி சமேத ஸ்ரீமங்களேஸ்வரர் இறை மூர்த்திகள் ஆவர். அபூர்வமாக ஸ்ரீமங்களேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி இருப்பதுடன் சதுர ஆவுடையில் எழுந்தருளி இருப்பது எத்தகைய கொடிய நோய்களிலிருந்தும் பக்தர்களுக்கு நிவாரணம் அளித்து அவர்கள் ஆரோக்ய வாழ்வைப் பெற வழிகாட்டும் உத்தம மூர்த்தி ஆவார். ஸ்ரீமங்கள நாயகி பெண் அடியார்களுக்கு வரும் நோய்களைத் தீர்ப்பதுடன் அவர்களுக்கு பிரத்யேகமாக ஏற்படும் மாதவிடாய்த் துன்பங்கள், பிரசவ வேதனைகள் போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கும் சகாயதேவியாக அருள்புரிகிறாள். மூலமூர்த்தி சதுர ஆவுடையுடன் திகழ்வதால் போலீஸ், ராணுவம், உளவுத் துறை போன்ற ஆபத்து துறைகளில் பணிபுரிவோருக்கு தக்க பாதுகாப்பையும் தைரியத்தையும் அளிக்கும் ஆபத்சகாய ரட்சகராக அருள்புரிகிறார். பிரம்மா விஷ்ணு இறைவனின் அடி முடி தேடிய வைபவத்திற்கு முன் தோன்றிய தலமாதலால் இங்கு தாழம்பூ மலர் இறைவனுக்குச் சூட்டப்படுகின்றது. இங்குள்ள தல விருட்சமும் இந்த வைபவத்திற்கு முன் தோன்றிய சிறப்புடையதே. குரு தத்துவமாக பொலியும் மூன்று இதழ்களுடன் பொலியுடம் பத்ரி பத்ரங்களுடன் இந்த தலவிருட்சம் பொலிவதும் இக்காரணம் பற்றியே. உத்தரம் என்பது வடக்கு திசையையும் குறிப்பதால் இங்கு தல விருட்ச நிழலில் சகஸ்ர லிங்கத் திருவடியில் அமர்வது சாட்சாத் குருநிழலில் அமர்ந்த புண்ணிய சக்திகளைத் தரவல்லது என்றால் உத்தசகோசமங்ககைக்கு நிகர் உத்தரகோசமங்கையே.

ஸ்ரீமுருகப் பெருமான் உத்தரகோசமங்கை

ஸ்ரீவிநாயகப் பெருமான் உத்தரகோசமங்கை

அபூர்வமாக உத்தரகோசமங்கையில் சுவாமிக்கு வலது புறம் ஸ்ரீமுருகப் பெருமானும் இடதுபுறம் ஸ்ரீபிள்ளையார் மூர்த்தியும் எழுந்தருளி உள்ளனர். அதோடு ஸ்ரீமுருகப் பெருமான் பட்டீஸ்வரம் திருத்தலத்தில் உள்ளது போல் யானையை வாகனமாகவும் பெற்றிருக்கிறார். இது குறித்த வரலாறு சுவையானதே. தியாகத்தின் உச்சகட்டமாகத் திகழ்வதே. முருகப் பெருமான் தெய்வானையை மணந்த பின்னர் வள்ளியையும் திருமணம் கொள்ள விழைந்தபோது வள்ளி அறியாமையால் வயோதிக வடிவில் வந்த சுப்ரமண்ய சுவாமியை நிராகரித்தார். இந்த காதல் ஜோடியை இணைக்க தூதுவராக யானை வடிவில் வந்து அருள்புரிந்தவரே ஸ்ரீவிநாயகப் பெருமான் ஆவார். அண்ணனின் தியாகத்தை மெச்சி யானை வாகனத்தைப் பெற்றதுடன் ஸ்ரீவிநாயகப் பெருமான் உவந்தளித்த இறைவனின் வலது பக்கத்தில் எழுந்தருளும் பாக்கியத்தையும் சகோதரப் பரிசாகப் பெற்றவரே, அண்ணனின் அன்புக் காணிக்கையாகப் பெற்ற மணாளனே ஸ்ரீமுருகப் பெருமான் ஆவார். சிறு வயது முதலே தீராத வறுமையில் உழல்வோரும், அண்ணன் இருக்க மணம் புரிந்து கொண்ட தம்பிமார்களும் இத்தல முருகன் பிள்ளையார் மூர்த்திகளை வணங்கி யானைகளுக்கு வயிறார உணவளித்து வந்தால் சுகமடைவர். தங்களுக்கிடையே சொத்துத் தகராறு, குடும்பப் பிரிவினை போன்ற தோஷங்களால் வருந்துவோரும் இத்தலத்தில் வழிபாடுகள் இயற்றி இந்த உன்னத சகோதரர்களுக்கு ஆடைகள் சார்த்தி வழிபடுதலால் அவர்கள் இடையே, அவர்கள் சந்ததிகள் இடையேயும் குடும்ப ஒற்றுமை ஓங்கும். பாகப் பிரிவினை தகராறுகள் சுமுகமாகத் தீர்வுடையும். சிலருக்கு சிறுவயதிலேயே தோல் சுருங்குதல், தலை நரைத்தல், முதுகு கூன் விழுதல், பற்கள் விழுந்து விடுதல் போன்ற துன்பங்களால் வருந்துவதுண்டு. இத்தகையோர் இத்தல முருகன் பிள்ளையார் மூர்த்திகளை கரிசலாங்கண்ணி, செம்பருத்தி, மருதாணி தைலங்களால் காப்பிட்டு, சர்க்கரை பொங்கல் நைவேத்யம் வைத்து வழிபடுதலால் வயதுக்கு மீறிய வியாதிகளால் விளையும் துன்பங்கள் குறையும். சிறு வயதிலேயே படிக்கும் மாணவர்கள் கண்களுக்கு கண்ணாடி போட்டுக் கொண்டு திரியும் அவல நிலையும் மறையும். வயதாகி திருமணமாகாமல் வருந்துவோர் இத்தகைய வழிபாடுகளால் திருமண பாக்கியத்தையோ, தகுந்த பாதுகாப்பையோ பெறுவார்கள். பொதுவாக, வயதாகி விட்டது என்பதால் விவாகரத்து ஆன பெண்களையோ, கணவனை இழந்த பெண்களையோ, கணவனால் நிராகரிக்கப்பட்ட பெண்களையோ திருமணம் செய்து கொள்வதை சித்தர்கள் அங்கீகரிப்பதில்லை. ஆனால், ஏற்கனவே மணமானவர்கள் முறையான விவாகரத்தைப் பெற்ற பின் இத்தகைய பெண்களை ஏற்றுக் கொள்வதோ, திருமணம் செய்து கொள்வதோ அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது என்பதால் இத்தகைய குழப்பங்களுக்குத் தீர்வு அளிப்பதும் இந்த தானம் மாறிய சகோதரர்களின் அனுகிரகங்களில் ஒன்றாகும்.

உத்தரகோசமங்கை

திருமணமான புதிதில் சற்குரு தன் மனைவியுடன் பெருமாள் நாமம் கொண்ட அடியாருடன் மதுரை அருகில் உள்ள சதுரகிரி மலைக்கு சென்று அங்கு மூன்று இரவுகள் மூன்று பகல் நேரங்களில் தங்கி தவமியற்றிய வரலாற்றை ஒரு சிலர் அறிந்திருக்கலாம். விளக்கே இல்லாமல் சூரிய நட்சத்திர ஒளி பிரகாசத்தில் திகழ்ந்த அந்த குகையில் சற்குரு பெற்ற அனுகிரகத்தை குறித்த சில அடியார்கள் பல வருடங்களுக்குப் பின் சதுரகிரி மலையில் பகிர்ந்து கொண்ட நிகழ்ச்சியாக அப்போது அவர்கள் காலபைரவரின் தரிசனத்தை நேரே பெற்ற வரலாற்றையும் முன்னரே தெரிவித்துள்ளோம். இவ்வாறு சதுர்வேத சக்திகள் பெற்ற தலமே சதுரகிரி மங்கலம் என்று அழைக்கப்படும் உத்தரகோசமங்கை ஆகும். சூரியன் இல்லாத இரவு வேளையில் சந்திரன் ஒளி வழங்குவான், சந்திரனும் இல்லாமல் இருள் சூழ்ந்து இருக்கும்போது நட்சத்திரங்கள் ஒளி வழங்கும், நட்சத்திரங்களும் மறைந்த வேளையில் வேதங்கள் தங்கள் வேத சக்தியால் பொருட்களைக் காணும் தன்மையை அளிக்கும். அந்த வேத சக்திகளையும் மனிதன் பெற முடியாமல் போகும்போது தன் சற்குருவின் அனுகிரகமே ஒளி மயமாக விளங்கும் என்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்கும் தலமே உத்தரகோசமங்கை ஆகும். இந்த வரிகளில் ஆழ்ந்த பல கருத்துக்கள் பொதிந்துள்ளதால் பக்தர்கள் இந்த வரிகளை பல முறை படித்து தங்கள் வாழ்க்கைக்கு ஒளி வீசும் கலங்கரை விளக்கமாக, தெளிவூட்டும் குரு ஜோதியாக உணர்ந்து பயன்பெறும்படி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு நம் சற்குரு, குறித்த சில அடியார்கள் சதுரகிரியில் பெற்ற காலம் கடந்த அனுபவங்களை இந்த காலம் கடந்த நேரத்திலும் பெற உதவி செய்வதே உத்தரகோசமங்கையில் இலந்தை நிழலில் வீற்றிருக்கும் சகஸ்ரலிங்க வழிபாடு ஆகும். சாதாரணமாக சகஸ்ர லிங்கத்தை ஒரு முறை சுற்றி வந்தாலே ஆயிரம் சிவலிங்கங்களைச் சுற்றி வந்த பலன் பெருகும் என்பதால் பெரும்பாலான சகஸ்ரலிங்கங்கள் அடியார்கள் சுற்றி வலம் வந்து வணங்கும் முறையில் எழுந்தருள்வது கிடையாது. அபூர்வமாக ஒரு சில திருத்தலங்களில் மட்டுமே (லால்குடி நகர், காளையார்கோவில், திருச்செங்கோடு) வலம் வரும் வகையில் சகஸ்ரலிங்க மூர்த்திகள் எழுந்தருளி இருந்தாலும் இவ்வாறு காலம் கடந்த தலவிருட்சத்தின் நிழலில் இத்தகைய அபூர்வ மூர்த்தி எழுந்தருளி இருப்பது சதுர்வேதமங்களமாகத் திகழும் உத்தரகோசமங்கையில் மாத்திரமே. இந்த சகஸ்ரலிங்கம் முன் அமர்ந்து தொடர்ந்து வழிபாடு இயற்றுபவர்கள் “நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனின்” தரிசனத்தையும் பெற முடியும் என்றால் என்னே அரிய பாக்கியம் இது் ?! இவ்வாறு வேதம் கடந்த வேத நாயகனின் தரிசனத்தை ஒளி வடிவில், மரகத ஒளி வடிவில் ஸ்ரீவியாசர் பெற்ற திருத்தலமே உத்தரகோசமங்கை ஆகும். அன்று பெருமான் அளித்த ஒளிப் பரல்கள் இன்றும் ஒளி வீசுகின்றன என்றால் இந்த இறை கருணைக்கு ஈடு இணை ஏது ? ஸ்ரீஇடியாப்ப சித்தருடன் சிறுவன் வெங்கடராமன் இத்தலத்திற்கு வந்து இந்த மரகதப் பரல்களின் தரிசனம் பெற்ற போது அப்படியே திகைத்து நின்று விட்டானாம். சிறுவன் வெங்கடராமன் மீண்டும் இவ்வுலக நினைவைப் பெற ஒரு வார காலத்திற்கு மேல் ஆகி விட்டதாம். இங்கு நீங்கள் காணும் வலைக் கம்பிகளின் நிழல், சந்தனக் காப்பு, மரகத ஒளி வடிவம் இவற்றைத் தாண்டி நீங்கள் காண்பதே நித்திய மங்கள மதுர நடராஜர் தரிசனம்.

ஸ்ரீராமானுஜர்

ஸ்ரீவெங்கடராம சித்தர் என்றோ பெற்ற ஸ்ரீநடராஜர் தரிசனத்தால் என்ன பலன் என்று ஒரு சிலருக்கு கேட்கத் தோன்றலாம். ஒலி நாடி ஒலியாகி ஒலிக்குள் ஒளிந்தவனே சிதம்பரத்தான் என்று தில்லைக்கூத்தை வர்ணிப்பவரே நம் சற்குரு. இவ்வாறு ஆதியில் நடனம் பொலிந்த நடராஜப் பெருமானின் தரிசனத்தை பெற்றே அந்த தரிசன பலனை பூலோக மக்களுக்கெல்லாம் வாரி வழங்கினார் நம் சற்குரு என்பதே இந்த நடராஜ தரிசனத்திற்குப் பின் அமைந்த தெய்வீக இரகசியம். நம் சற்குரு திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் இருந்தபோது அங்கு நிலை கொண்ட ஸ்ரீராமர் சீதை லட்சுமணன் என்ற தெய்வ மூர்த்திகளுக்கு ஊஞ்சல் சேவை சாதித்தவாறே அவர்களுடன் சாதாரண மனிதரைப் போல உரையாடிக் கொண்டிருப்பதை தரிசனம் செய்து, இரசித்த ஆஸ்ரம அடியார்கள் அநேகர். நம் சற்குரு கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் மதுரமான பதில்களை அளித்து வந்தவரே ரகுநாதன் ஆவார். அதே போல் திருஅண்ணாமலையாருடன் தசமுக சிவசக்தி ஐத்ய தரிசனம் எதிரே அமர்ந்து தன்னுடை விரல் அசைவுகளைப் பல கோணங்களில் காட்டி திருஉண்ணாமுலை சமேத திருஅண்ணாமலையாருடன் நம் சற்குரு உரையாடிய விநோதத்தைக் கண்டு இரசித்த ஆஸ்ரம அடியார்களும் அநேகர். இது ஏதோ ஆண்டானுக்கும் அடியவர்க்கும் நடந்த உரையாடல் கிடையாது என்பதை ஸ்ரீராமானுஜரின் வரலாற்றை அறிந்தோர் அறிவர். ஸ்ரீஉடையவர் அன்றாடம் தன்னிடம் அடியார்கள் கேட்கும் கேள்விகளை எல்லாம் தொகுத்து ஸ்ரீவரதராஜ பெருமாளிடம் சமர்ப்பிக்க அப்பெருமான் தேனினும் இனிய தன் குரலால் அந்த கேள்விகளுக்கெல்லாம் விடையளித்து வந்தார் என்பதை நாம் ஏற்கனவே விளக்கியுள்ளோம். இதே ஒலியாகி ஒளியாகி அதற்கப்பாலும் மிளிர்ந்த திருஅண்ணாமலையான் உத்தம அடியாரான நம் சற்குருவிற்கு தன்னை நம்பி வந்த சீடர்களுக்கு எல்லாம் பதில் அளித்து வந்தார் என்று அறியும் போது நம் மெய் சிலிர்க்கிறது அல்லவா ? இதுவே கேட்காமல் கேட்ட கேள்விகளுக்கு சொல்லாமல் சொல்லும் பதில்கள். இது நிகழும் அரங்கமே ஒரு காலத்தில் திருஅண்ணாமலை ஆஸ்ரமம், இன்று உத்தரகோசமங்கை நடராஜ சன்னதி. உண்மையில் இறைவனிடம், சற்குருவிடம் கேள்விக் கணைகளைத் தொடுக்க வேண்டும் என்ற அவசியமே கிடையாது. மௌனமாக இருந்தால் கூட நம் மனதில் தோன்றும் கேள்விகள் அனைத்தையும் உரிய பதில்கள் மூலம் தீர்த்து வைப்பார்கள். சற்குருவிடம் கேள்விகள் கேட்கும்போது ஒருவர்தானே கேள்வியைக் கேட்பார். ஆனால் சற்குரு கூறும் பதிலைக் கேட்டு அது சரியே என்று தலையாட்டுபவர்கள் நாலைந்து பேர் அக்கூட்டத்தில் இருப்பார்கள். இது எதைக் குறிக்கிறது. சற்குரு ஒருவருக்கு மட்டும் பதில் அளிப்பதில்லை. பலர் மனதில் தோன்றும் கேள்விகளுக்கு ஒட்டு மொத்தமாக பதிலை அளிக்கிறார் என்பதே இதன் பின்னணியில் அமைந்த சுவையான, தெய்வீக இரகசியம். சற்குருவின் மேல் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டோர் திருஅண்ணாமலை ஆஸ்ரமம், தசமுக தரிசனம், சிவசக்தி ஐக்ய சொரூப தரிசனம் என்று கூட கிடையாது தங்கள் இல்லத்தில் அமர்ந்தபடியே, தங்கள் படுக்கையில் படுத்தபடியே தங்கள் மனதில் தோன்றும் கேள்விகளுக்கு நிச்சயமாக உரிய விடைகளைப் பெறலாம். நீங்கள் இங்கு தரிசனம் செய்யும் ஸ்ரீஉடையவரின் சித்திரத்தை அளிக்க ஒரு அடியார் வந்து போது அவருக்கு உடையவர் வர்ஷம் என்ற நவ அட்சர மழைப் பொழிவை உருவாக்கி வருண பகவான் கௌரவித்தார் என்றால் சற்குருமார்களின் கருணைக்கு, நவஅட்சர திருத்தலமான உத்தரகோசமங்கைக்கு இதை விடச் சிறந்த உதாரணத்தைக் காட்ட முடியுமா ?

ஸ்ரீதுர்கை அம்மன் உத்தரகோசமங்கை

ஆடையின்றி பல ஆண்கள் நடுத் தெருவில் திரியும் நிலைபற்றிக் குறிப்பிட்டு நம் சற்குருவிடம் கேட்டபோது, “உடலில் நல்ல இரத்தம் இருக்கும் திமிறில் பெண்களை அலங்கோலப்படுத்தி விரட்டி அடிப்பதால் எதிர்காலத்தில் ஆண்கள் சந்திக்கும் நிலையே இது. அனுபவித்துத்தான் இதை சரி செய்ய முடியும்,” என்றார். அதே போல மன நிலை சரியில்லாத பெண்களுடன் கூடி இன்பம் அனுபவித்தவர்கள் இதன் விளைவாக பைத்தியம், மூளையில் கட்டி, புற்று நோய் போன்ற வியாதிகளை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதால் தற்காலிக சுகத்திற்கு அடிமைப்பட்டு எதிர்காலத்தை இழக்க வேண்டாம் என்று சித்தர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். இவ்வாறு முற்பிறவிகளில் பெண்களுக்கு இழைத்த கொடுவினைகளே இப்பிறவியில் பல வியாதிகளாக வந்து மிரட்டுகின்றன என்பதே உண்மை. முற்பிறவிகளைப் பற்றி அறியா விட்டாலும் இப்பிறவியில் பெண்களுக்கு செய்த கொடுமைகளை நினைவு கூர்ந்து அவைகளுக்கு தக்க பிராயசித்தம் பெற வழிகாட்டும் திருத்தலமே உத்தரகோசமங்கை ஆகும். உத்தரம் என்றால் மேற்கூரை, அதாவது இல்லத்திற்கு மேற்கூரை போன்ற பாதுகாப்பை அளிப்பவளே உத்தம மனைவி என்பவள் ஆவாள். இத்தகைய மனைவிக்கு இழைக்கும் துன்பங்களே தீராத வியாதிகளாக வந்து மக்களுக்குத் துன்பம் விளைவிக்கின்றன என்ற உண்மையை உணர்ந்து கொள்ள உதவும் தலமே உத்தரகோசமங்கை ஆகும். நவமி திதிகளில் இத்தலத்தில் ஒன்பது முறை வலம் வந்து இத்தல துர்கை அம்மனை வணங்கி வழிபடுவதால் தாங்கள் செய்த தவறுகளின் தன்மை தங்கள் மனத்தின் மூலமாகவோ, தக்க பெரியோர் மூலமாகவோ உணர்த்தப்படுவார்கள் என்பதே இத்தல துர்கை வழிபாட்டின் மகிமை ஆகும். பருத்தியாலான ஒன்பது கஜ புடவைகளை அம்மனுக்கு சார்த்தி வழிபடுவதும், பெண்களுக்கு தானமாக அளித்தலும் பிராயசித்த முறைகளை உணர வழிகாட்டும். இதுவே பிராயசித்தமாகாது என்பதை நினைவில் கொள்ளவும். தீக்கொழுந்து அல்லது தீவாலை சக்தியை அனுகிரகமாக அளிக்கும் ஒரே தேவியே உத்தரகோசமங்கை துர்கா தேவி ஆவாள். சமீப காலத்தில் தன்னுடைய முற்பிறவி ஒன்றில் இத்தகைய அனுகிரகத்தைப் பெற்றவளே கண்ணகி ஆவாள். இச்சக்தியைப் பற்றி புரிந்து கொள்வது கடினம் என்றாலும் சூரியனிடமிருந்து தோன்றும் அக்னி சக்தியால் பூமியிலுள்ள பொருட்கள் வெப்பமடைந்தாலும் நடுவிலுள்ள வானப் பகுதியோ பனிக் கட்டியை விடக் குறைந்த குளிர் சக்தியுடன்தானே துலங்குகிறது. கண்ணகி பெற்ற இத்தகைய தீக்கொழுந்து சக்தியால்தான் மதுரையில் குழந்தைகள், வயோதிகர்கள், பெண்கள், பசுக்கள், வேதம் ஓதும் அந்தணர் போன்றோரைத் தவிர்த்து தன்னுடைய கற்புக் கனல் வீசும்படிச் செய்தாள். உத்தம பெண்களை எந்தச் சூழ்நிலையிலும் காக்கும் சக்தி பெற்றதே இந்தத் தீக்கொழுந்து சக்தி ஆகும். பல ஆண்களிடையே பணி புரிய வேண்டிய நிலையில் உள்ள இளம் பெண்கள், தனித்து வாழும் பெண்கள், தங்கள் கற்பிற்குக் களங்கம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சும் சூழ்நிலையில் உள்ள அனைத்துப் பெண்களும் உத்தரகோசமங்கை துர்கா தேவியை வணங்கி வருவதால் நல்லருள் பெறுவார்கள். அவதார மூர்த்திகளே இத்தகைய தீக்கொழுந்து சக்திகளுக்கு அஞ்சுவர், தெய்வங்களே இத்தகைய கற்புக் கனலுக்கு எதிரிடையாக செயல்படுவது கிடையாது என்றால் இந்தக் கற்புக் கனல் எத்தகைய சக்தி உடையதாக இருக்கும் ? இத்தகைய தீக்கொழுந்து சக்திகளை மற்றவர்களுக்கு அனுகிரக சக்தியாக அளிப்பதற்காக அமிர்தானந்த மயி அன்னை ஒன்பது ஆடைகளுடன் திகழ்கிறார் என்பதையும் இத்தகைய பாதுகாப்பு கவச சக்திகளை மற்ற பெண்களுக்கு அளிக்க விரும்பும் பக்தர்கள் ஒன்பது விதமான ஆடைகளை பெண்களுக்கு தானமாக அளித்தல் நலம் என்று ஏற்கனவே சற்குரு அருளியுள்ளதை இங்கு நினைவு கூர்க.

திருக்கோஷ்டியூர்

அடியார்களின் வேண்டுகோளின்படி நவாட்சர மழை குறித்த சில அதிகப்படியான விளக்கங்களை இப்போது அளிக்கிறோம். மாதம் மும்மாரி பெய்த புண்ணிய பூமி நம்முடைய தமிழகம் என்பது நீங்கள் அறிந்ததே. உத்தம மன்னர்களுக்காகவும், பத்தினி தெய்வங்களுக்காகவும், வேதம் ஓதம் அந்தணர்க்காகவும் என மாதம் மூன்று முறை மழைப் பொழிவு ஏற்பட்டது அல்லவா ? இது இன்றும் நடக்கும் அற்புதச் செயலே. இவ்வகையில் நவாட்சர மழை என்பது வேதம் ஓதம் அந்தணர்க்காக அதாவது ஸ்ரீராமானுஜருக்காக தோன்றிய அமுத மழை என்பதில் ஐயமில்லை. தனக்காக ஒன்றும் வைத்துக் கொள்ளாது அனைத்தையும் இறைவனுக்காக தியாகம் செய்தவர்களே துறவி எனப்படுபவர்கள். இவ்வகையில் முதலிடம் பெற்றவரே ஸ்ரீஉடையவர் ஆவார். தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல் அனைத்தையும் இறைவனுக்காக அர்ப்பணித்ததால் அவர் அனைத்தையும் பெற்ற உடையவர் ஆனார். ஒரு சீடனுக்கு உண்மையான உடைமை, பொக்கிஷம் என்பது தன் சற்குரு அளிக்கும் உபதேச மந்திரமே. ஆனால் அந்த ஒரே ஒரு செல்வத்தையும் மக்களுக்காக தாரை வார்த்து அளித்ததோடு மட்டுமல்லாமல் தன்னுடைய தியாகத்தால் தான் நரகவாழ்வை ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருந்தார் உண்மையான துறவி ராமானுஜர். துறவிக்கு அடையாளமான காவி வேட்டியையும் அவர் துறந்து வெள்ளை வேட்டியுடனே திரிந்ததே ராமானுஜர் குழல் உறவு தியாகி என்ற நிலைக்கு உயர்ந்ததை சுட்டிக் காட்டுகிறது. தான் தியாகி என்று அறியாத தியாகசீலரே குழல் உறவு தியாகி. இவ்வாறு எட்டெழுத்தை (ஓம் நமோ நாராயணாய) மக்களுக்காக வழங்கிய (உடையவர் என்ற ராமானுஜர்) ஐந்தெழுத்தாக திகழ்ந்ததால் அவர் ஒன்பது எழுத்து (உடையவர் வர்ஷம்) மழையை உருவாக்கி ஒன்பது எழுத்திற்கு உடையவராகவும் (குழல் உறவு தியாகி) விளங்கினார். ராமானுஜர் மனிதனின் பூரண ஆயுளான 120 வருடங்கள் வாழ்ந்ததோடு மட்டுமன்றி அவர் நடக்கும்போது விழும் மழைத்துளிகள் அவர் இரண்டு பாதங்களைச் சேர்த்தால் சூழும் பகுதியில் நவாட்சரங்களுடன் அதாவது ஒன்பது மழைத் துளிகளுடன் பரிணமிக்கும் அளவிற்கு இருந்ததால் ஸ்ரீராமானுஜர் நவாட்சர நாயகர் என்று சித்தர்களால் போற்றப்படுகிறார். சாதாரண மனிதர்களைப் போல் அல்லாமல் வருண பகவானின், வாயு பகவானின் உத்தரவைப் பெற்றே மகான்கள் விரும்பும் வண்ணம் அவர்கள் மேல் வசந்தம் வீசும், மாரி பெய்யும் என்பதே இயற்கையின் வழிமுறை.

தெவிட்டாத இனிப்பு

குழந்தைகளை சர்க்கரைக் கட்டி, வெல்லக் கட்டி, சீனா கற்கண்டு என்றெல்லாம் கொஞ்சுவதுண்டு. காரணம் தன் பெற்றோர்களுக்கு என்றும் தெவிட்டாத தேன் பாகாய் இனிக்கும் செல்வங்களே மழலைச் செல்வங்கள். அத்தகைய குழந்தைச் செல்வங்களே தற்காலத்தில் உண்மையான சர்க்கரைக் கட்டிகளாய், சர்க்கரை நோயுடன் பிறப்பதே காலத்தின் கோலமாக விளங்குகிறது. சித்தர்கள் கூறும் உணவுப் பழக்கங்களை சிறு வயது முதலே கைக்கொண்டு வந்தால் சர்க்கரை நோய் அண்டாது. வாரம் இரு முறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தல், தினமும் இரு முறை மலம் கழித்தல், வருடம் இரு முறையாவது பேதி மருந்து குடித்தல் போன்ற வழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டாலே சர்க்கரை நோய் அண்டாது. 35 வயது வரை எந்த விதமான உணவுப் பழக்கங்களையும் மேற்கொள்ளலாம் என்பதும் 35 வயதிற்குப் பின் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டு சர்க்கரையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டே வந்து 40, 50 வயது வந்த பின் சர்க்கரையை சுத்தமாக விட்டு விட வேண்டும் என்பதே சித்தர்களின் அறிவுரை. 50 வயதிற்குப் பின் நெய் சேர்த்துக் கொள்வதும் தவறே. கீரை உணவுகளை தினமுமே அல்லது வாரம் இருமுறையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஸ்ரீசந்திர பகவான் திருந்துதேவன்குடி

இத்தகைய உணவுக் கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்தாலும் பூர்வ ஜன்ம வினைகளால் அபூர்வமாக சிலருக்கு சர்க்கரை நோய் ஏற்படுவதுண்டு. அத்தகையோர் பழைய சாதத்தைப் பிழிந்து தண்ணீரைக் கொட்டி விட்டு அந்த சாதத்தில் குழம்பு, ரசம், காய் கறி எதை வேண்டுமானாலும் சேர்த்து உண்ணலாம். காலையில் ஆராக் கீரையை சமைத்து உண்ணவும். அருகம்புல்லை சோற்றுக் கஞ்சியுடன் சேர்த்து அரைத்து அம்மியில் வைத்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக்கி வெயிலில் உலர்த்தி காய வைத்து எடுத்து வைத்துக் கொண்டு இந்த உருண்டையில் ஒன்றை காலையில் வெறும் வயிற்றில் போட்டு சிறிது நீர் அருந்தவும். இரவில் சப்பாத்தி அல்லது கோதுமை சோறு உண்ணலாம். இந்த உணவு முறைகளை நடைமுறைப்படுத்தி வந்தால் நிச்சயமாக எவரும் நீரிழிவு என்னும் சர்க்கரை நோயால் வருந்த மாட்டார்கள். நீரிழிவு நோய் ஒரு வேளை அவர்களைத் தாக்கினாலும் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்படாது, அனைத்தும் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் என்பதே சித்தர்கள் அளிக்கும் உறுதிப்பாடு. திருந்துதேவன்குடி என்ற ஒன்பது அட்சரங்கள் கொண்ட திருத்தலம் சர்க்கரை வியாதியைத் தீர்க்கும் சர்க்கரைத் தலம் மட்டுமல்லாமல் நண்டாங்கோவில் என்று மக்களால் அழைக்கப்படும் இத்திருத்தலம் கடக ராசியில் ஆட்சி பெறும் சந்திர பகவான் சிறப்பு பெற்ற தலமாக அமைந்துள்ளதால் மன வியாதிகளையும் தீர்க்கும் அருமருந்து தலம் என்பதை உணர்ந்தோர் ஒரு சிலரே. பாதிக்கப்பட்டவர்களோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுடன் இரத்த சம்பந்தம் உடையவர்களோ இத்தல தீர்த்தத்தில் நீராடி இறை மூர்த்திகளைத் தரிசனம் செய்து கொம்புத் தேன் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் இயற்றுதலால் எத்தகைய மனோ வியாதிகளுக்கும் நிவாரணம் கிட்டும். சரியான கொம்புத் தேனைப் பெற ஒரு ஆண்டோ பத்து ஆண்டுகளோ லட்சக் கணக்கில் பொருள் செலவும் ஆகும் என்றாலும் தங்கள் தவறான செய்கையால் பாதிக்கப்பட்டவர்களே இத்தகைய தேடுதலில் பயன் அடைவதால் இத்தகைய பொருள் விரயங்களும் அலைச்சல்களும் ஏற்படுகின்றன என்பதே இந்த நோய் நிவாரண வழிபாட்டிற்குப் பின் அமைந்த தெய்வீக சித்த விளக்கமாகும். சட்டை, புடவையைக் கிழித்துக் கொண்டு நிர்வாணமாக நடுரோட்டில் தன் மனைவி அலைந்த நிலையில் உள்ள ஒரு ஆஸ்ரம அடியார் நம் சற்குருவின் சரியான வழிகாட்டுதலால் இம்முறையில் காப்பாற்றப்பட்டார் என்பதே திருந்துதேவன்குடி திருத்தலம் அளிக்கும் நோய் நிவாரண சக்திகள் குறித்த இரகசியம் ஆகும். “நீ என்ன பெரிய கொம்பனா ?” என்று பலரும் வினவுவதைக் கேட்டிருப்பீர்கள். கொம்பு என்பது சாதாரணமாக உயர்ந்த நிலையில் உள்ள பொருட்களைக் குறித்தாலும் குருவின் உபதேசம் என்ற மூன்றெழுத்தைக் குறிப்பதால் கொம்பு தேன் என்ற குருமருந்தால் நிவாரணம் பெறாத வியாதி எந்த மருத்துவத்திற்கும் கட்டுப்படாது, அனுபவித்தே கழிக்க வேண்டும் என்பதும் கொம்புத் தேன் உணர்த்தும் மகத்துவமாகும். அதனால் ஒரு முறை குரு கூறிய முறையில் வழிபாட்டை இயற்றி விட்டேன், பலன் எதுவும் தெரியவில்லை என்று கருதாது பலன் கண்ணுக்குத் தெரியும் வரை வழிபாடுகளைத் தொடர்ந்து இயற்ற வேண்டும் என்ற மன உறுதியை அளிப்பதும் திருந்துதேவன்குடி சந்திர பகவான் அளிக்கும் மன வைராக்யம் ஆகும். நீ திருந்தி வாழ் பிறரைத் திருத்த முயற்சிக்காதே என்ற குரு வாக்கியத்தை சிரமேற்கொண்டு தெய்வீகத்தில் முன்னேற விரும்பும் பக்தர்களுக்கு உறுதுணையாக நிற்கும் குருத்தலமே திருந்துதேவன்குடி. தமிழ்நாட்டின் பிரபலமான சன்னிதானம் ஒருவர் கணபதி அக்ரஹாரம் என்ற கும்பகோணம் அருகில் உள்ள ஊரின் பெயரே தெரியாமல் அங்குள்ள பக்தரிடம் விசாரித்து தன்னுடைய உரையில் அந்த ஊரின் தெய்வீக மகத்துவம் குறித்து தெரிவித்தார். இது குறித்து நம் சற்குருவிடம் வினவியபோது குருவருள் பெற்றால்தான் எந்த அருளும் சித்தியாகும் என்று சுருக்கமாகக் கூறி விட்டார்.

திருந்துதேவன்குடி

சில வருடங்களுக்குப் பின் அந்த சன்னிதானத்திற்கு சர்க்கரை வியாதி தோன்றியதால் அதை சரி செய்ய திருந்துதேவன்குடி திருத்தலத்தில் பூர்வ ஜன்ம புண்ணியத்தால் உரியவர்களால் கொம்பு தேன் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் நிறைவேற்றப்பட்டது. அதன் மகத்துவத்தால் இன்னும் சில வருடங்கள் கழித்து அந்த சன்னிதானத்தைப் பார்க்க பல அடியார்கள் வந்திருந்தபோது அவர்களில் கணவனை இழந்த ஒரே ஒரு அடியார் இருந்தபோது அவர் குங்கும நிறத்தில் ஒரு ஸ்டிக்கரை அணிந்திருந்தாலும் அந்த அடியாரை விடுத்து மற்ற அடியார்களுக்கு குங்கும பிரசாதம் அளிக்கும் அளவிற்கு உயர்ந்த ஞான நிலையைப் பெற்றார் என்பதை இந்த நிகழ்ச்சியை நேரே கண்டு மகிழ்ந்த உத்தமர்கள் உணர்வர். குருவருள் எதைத்தான் சாதிக்காது ? மக்களின் நல்வாழ்வையே தன் உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த நம் சற்குரு குருவருள் பொலியும் 2001ம் வருடம் நிகழ்ந்த கார்த்திகை தீப அன்னதானத்தில் மேற்கூறிய கொம்புத்தேனை கலந்து திருஅண்ணாமலையார் தீபப் பிரசாதமாக அளித்து லட்சக் கணக்கான மக்களுக்கு நோய் நிவாரண சக்திகளை, குறிப்பாக சர்க்கரை நோய் நிவாரண சக்திகளை அளித்ததோடு மட்டுமல்லாமல் பல எதிர்கால வியாதிகளிலிருந்தும் அந்த தேன் பிரசாதம் பெற்ற அடியார்களையும் அவர்களின் எத்தனையோ சந்ததிகளையும் காத்து ரட்சித்தார் என்பதே இந்த கொம்புத் தேன் சுட்டிக் காட்டும் மகிமை ஆகும். இவ்வாறு ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு ராமபிரானுக்கு ஊஞ்சல் சேவை சாதிக்கும் நம் சற்குருவோ, தனியாக அமர்ந்து வரதராஜ பெருமாளுக்கு கவரி சேவை புரியும் ராமானுஜரோ ஆற்றும் சேவையில் ஒரு துளியே WhatsApp என்ற ஒன்பது எழுத்து சேவை சாதிக்கும் மகத்துவமாகும். நாம் உண்ணும் உணவுப் பொருள் எதுவாக இருந்தாலும் அது இறுதியில் சர்க்கரை என்ற சத்துப் பொருளாகவே உடலை அடைகிறது, அந்த சக்தியை எடுத்துச் செல்ல நீரே பயன்படுகிறது. இந்த நிலை இழி நிலையை அடையும்போது நீரிழிவு நோய் உண்டாகிறது. அதே போல இழிந்த நிலையில் உள்ள நீர் சாக்கடை என்று இகழப்பட்டாலும் கங்கை நீர் எம்பெருமான் சிரசில் பொலியும் உயர்ந்த நீர்த் தத்துவமாக மதிக்கப்படுகிறது அல்லவா ? இந்த தத்துவத்தைக் கருத்தில் கொண்டு நன்கு ஆத்மவிசாரம் செய்து திருந்துதேவன்குடி அருகில் உள்ள திருவிசைநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் இல்ல கங்கையில் பொங்கும் பிரசாதத்தை சிறிது உட்கொண்டு பெரும்பகுதியை பிரசாதமாக சர்க்கரைப் பொங்கலுடன் விநியோகிப்பதால் கடுமையான சர்க்கரை நோய்களும் நிவாரணம் பெறும் என்பதே சற்குரு அளிக்கும் அருமருந்தாகும்.

புதுக்கோட்டை பொன்னமராவதி மார்க்கத்தில் உள்ள தேனிமலை முருகத் தலம் எத்தகைய கொடிய நோய்களையும் தீர்க்கும் திருத்தலம். ஆனால், இத்தலத்தின் நோய் நிவாரண சக்திகளை ஒரு சிலரே உணர்ந்துள்ளதே கலியுகத்தின் குணப்பாடாகும். இங்குள்ள கொப்புப் பாறைகளில் வீசும் காற்று, இந்தப் பாறைகளின் மேல் குறிப்பிட்ட கோணத்தில் படிந்து பக்தர்களின் மேல் பரவும் சூரிய ஒளிக் கிரணங்கள், செவ்வாய் கிரக, சனிக் கிரக சாசுவத கிரணங்கள் மகிமையைப் பற்றி கோணமாணி பகீரதம் என்ற ஸ்ரீஅகஸ்திய கிரந்தம் பல்லாயிரம் சுவடிப் பாடல்களாக வர்ணிக்கிறது. வெறும் வியாதிகளையோ நோய்களையோ தீர்ப்பது முருகப் பெருமானின் அருஞ்செயல் ஆகாது அல்லவா ? இத்தலத்தில் கிரிவலம், இறை தரிசனம், பாறை தரிசனம், தீர்த்த தரிசனம், ஔஷத விருட்ச தரிசனம், மேக தரிசனம், நம்மை அறியாமல் ஏற்படும் மகான்களின் தூல வடிவ தரிசனங்களால் நிவாரணம் ஆகும் வியாதிகள் மட்டுமல்லாது நிரந்தர இன்பத்தை நல்கும் இறைவனுடன் ஒன்றும் வைபவத்தையும் இத்தலம் பெற்றுத் தரும் என்பதே தேனிமலையின் சிறப்பம்சமாகும். இத்தகைய அபூர்வ யோக சக்திகளை மக்களுக்கு, பக்தர்களுக்கு பெற்றுத் தருவதற்காகவும் ஸ்ரீபெருமானந்த சித்தர் சுவாமிகள் இத்தலத்தில் ஜீவ சமாதி கொண்டு அருள்பாலித்து வருகிறார் என்பதே உவட்டாமல் திகட்டாமல் சித்தர்கள் அளிக்கும் இனிப்பு சுவையாகும். தேனி சக்திகள் என்ற அபூர்வ சக்திகள் முருகப் பெருமானின் ஆறுமுகங்களால் அளிக்கப்படுகின்றன. இந்த முகங்களில் முருகப் பெருமான் அளிக்கும் பெருமானந்த தேனி என்ற ஒரே ஒரு வகை சக்தியை மட்டும் மக்களுக்கு அளிக்கும் அரும்பணியை மேற்கொண்டு வருபவரே இங்கு ஜீவ சமாதி கொண்டு அருள்புரியும் ஸ்ரீபெருமானந்த சித்தர் பெருமான் ஆவார். இப்பெருமானை அடைக்கலம் கொண்டு வழிபட்டால் அவரே நம் தகுதிக்கு ஏற்ப அனைத்து தேனி சக்திகளையும் அனுகிரகமாக அளிக்கும் வல்லமை பெற்றவர் என்ற மகிமையையும் பக்தர்கள் நாளடைவில் உணர்வார்கள்.

கொப்பு தரிசனம் திருஅண்ணாமலை

கொப்பு என்பது காது, காதில் ஒரு பகுதியைக் குறிப்பதாகும். காரைக்குடியில் அருள்புரியும் ஸ்ரீகொப்புடை அம்மன் இவ்வாறு பக்தர்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து அவர்களின் குறைகளைத் தீர்க்கும் துரித நாயகியாகச் செயல்படுவதால் பக்தர்களால் இவ்வாறு புகழப்படுகிறாள். கொப்புப் பகுதியில் காது தோடுகள், மணிகள் போன்ற அணிகலன்களை பண்டைய மகளிர் அணிந்து வந்தனர். அதனால்தான் அக்காலத்தில் பெண்களுக்கு கண் வியாதிகள் போன்ற எவ்வித நோய்களும் அண்டுவதில்லை. மேலும் கொப்புப் பகுதியில் அதிகமாகும் இரத்த ஓட்டம் தங்கள் கணவன்மார்களின் மேல் அன்பை, நாட்டத்தை அதிகரிப்பதால் திருமணமான பெண்கள் ஒவ்வொரு காதிலும் குறைந்தது மூன்று கொப்புத் தோடுகளை அணிந்து கொள்தலால் குடும்ப ஒற்றுமை பெருகும். இவ்வாறு கொப்புத் தோடுகள் அணிய முடியாமல் போனாலும் திருமணமான பெண்கள் அவ்வப்போது தேனிமலையில் கிரிவலம் இயற்றி ஸ்ரீமுருகப் பெருமானை வழிபடுவதால் கொப்பு சக்திகள் நிரம்பப் பெற்று உத்தமமான குடும்ப வாழ்வைப் பெறுவர். தகுதி உடையவர்களுக்கு இத்தகைய கொப்புத் தோடுகளை அளிப்பதும் உத்தம தான முறையே. இதனால் முரட்டுத் தனம் உடைய குழந்தைகள் திருந்தி வாழ்வர். சர்க்கரை வியாதிகளைத் தீர்ப்பதும், அண்ட விடாமல் காப்பதும் இத்தகைய கொப்புத் தோடுகளின் தன்மையாகும். பலரும் முரட்டுக் காளைகளை தங்களால் பராமரிக்க முடியாது என்று அவைகளை விற்று விடுவதோ அல்லது பசுக் காப்பகங்களில் விட்டு விடுவதோ உண்டு. உண்மையில் இத்தகைய காளைகள் அருளும் காப்புச் சக்திகளை சமுதாயம் உணர்வதில்லை. இவ்வாறு பராமரிக்க முடியாத அளவிற்கு முரட்டுத் தன்மை உடைய காளைகளால் துன்புறுவோர் தேனிமலை முருகத் தலத்தை கிரிவலம் வந்து கொப்புத் தோடுகளை தானம் அளிப்பதால் அந்தக் காளைகள் அடங்கி நடக்கும். இதன் பின்னால் அமைந்த தெய்வீக விளக்கங்களை தக்க குருவை நாடி அறிந்து கொள்ளவும்.

ஸ்ரீநர்த்தன கணபதி லால்குடி

இரு காதுகளையும் பிடித்துக் கொண்டு, இரு கால்களையும் குறுக்கே வைத்து குசா தோப்புக் கரணம் இட்டு வந்தால் காதில் கொப்புப் பகுதிகள் சீரான இரத்த ஓட்டத்தைப் பெறுவதாலும் உடலில் சர்க்கரையை நெறிப்படுத்தும் நரம்புகள் பலமடைவதாலும் சர்க்கரை நோய்கள் தீர்வு பெறும். குசாவும் கையில், கொப்பு சக்திகளும் உள்ளங்கையில், தயங்குவானேன் ? திருஅண்ணாமலையில் ஸ்ரீபச்சையம்மன் கோவில் செல்லும் வழியில் நமக்குக் கிடைப்பதே கொப்பு தரிசனம் ஆகும். காது நோய்களைத் தீர்க்கும் அரிய தரிசனம். கொப்பு என்றால் கோர்த்தல் என்ற பொருளும் உண்டு. மகான்கள் எதை எதனுடன் எப்படி கோர்ப்பார்கள் என்று அறிவது கடினமே. ஆனால் எத்தகைய “கொப்பும்” மக்களுக்கு, தன்னை அண்டியவர்களுக்கு நன்மை பயப்பதே என்னும் உண்மையை உணர்விக்கும் தரிசனமே திருஅண்ணாமலை கொப்பு தரிசனம் ஆகும். கொப்பு தரிசனம் பெற்று ஸ்ரீபச்சையம்மன் திருவடிகளில் காதணிகளை சமர்ப்பித்து அதை தானமாக வயதுக்கு வராத பெண் குழந்தைகளுக்கு தானமாக எத்திருத்தலத்திலும் அளிப்பதால் அத்தகைய பெண்கள் திருமணமாகி குழந்தைப் பேறு கொள்ளும் நிலையை அடையும்போது இத்தகைய தான தர்மங்கள் அவர்களுக்கு நல்ல குழந்தைகளைப் பெற்றுத் தரும் என்பதே கொப்பு தரிசன மகிமை ஆகும். குறைந்தது ஆறு காதணிகளை தானமாக அளித்தல் சிறப்பாகும். தற்காலத்தில் மகப்பேறு சமயத்தில் கர்ப்பந்தாங்கும் பெண்களுக்கு சர்க்கரை மிகுதியாவதால் இதனால் பலதரப்பட்ட பிரச்னைகள் உருவாகின்றன. இத்தகைய சர்க்கரை நோய்களுக்கு வருமுன் காப்பாக அமைவதே இந்த கொப்பு தானங்களாகும். இவ்வாறு ஆறு காதணிகளைத் தானமாக அளிக்கும் வசதி இல்லாதோர் ஸ்ரீபச்சையம்மன் முன்பு தங்கள் இயலாமையைத் தெரிவித்து பிரார்த்தனை செய்வதாலும் இத்தகைய தான தர்மங்களை நிறைவேற்றிய பலனை அடைவார்கள் என்பதே இறைவனின் பெருங்கருணையாகும். லால்குடி திருத்தலம் போன்று வலம் வந்து வணங்கும் வகையில் அரிதாக அமைந்த கன்னி மூலை கணபதி மூர்த்திகளை 9, 18, 27 என்றவாறாக ஒன்பதின் மடங்கில் பிரதட்சிணம் வந்து குசா தோப்புக் கரணம் இடுவதால் கிட்டும் கொப்பு சக்திகள் அபரிமிதமே. லால்குடி திருத்தலத்தில் சுவாமி சன்னதியில் அருள்புரியும் ஸ்ரீகன்னிமூலை கணபதி பிரதட்சிணம் வரும் வகையில் அமைந்திருக்க அம்பாள் சன்னதியில் உள்ள ஸ்ரீகன்னிமூலை கணபதியோ பிரதட்சிணம் வர முடியாத வகையில் எழுந்தருளி உள்ளார். இதுவே விரிந்தகை அமிர்தம் என்னும் தத்துவமாகும். உலக அழகியாக விளங்கும் கவர்ச்சிக் கன்னியும் தன் கணவனுக்குச் சுவையை அளிப்பதில்லை. இதை உணர்ந்து கொண்டால் சர்க்கரை நோய் என்றுமே மக்களை அண்டாது. இந்தச் சுவையை அளிப்பதே லால்குடி திருத்தவத்துறை கன்னி மூலை கணபதிகளின் வழிபாடாகும். பொதுவாக, 12 அல்லது அதற்கு மேற்பட்ட கணபதி மூர்த்திகள் அருளும் தலங்களை குருவாரம் அல்லது குணவாரத் தலங்கள் என்று அழைப்பதுண்டு. லால்குடி தலத்தில் 21க்கும் மேற்பட்ட கணபதி மூர்த்திகள் எழுந்தருளி உள்ளதால் இத்தகைய குருவார மூர்த்திகளுக்கு செவ்வாய், வியாழன், சனிக் கிழமைகளில் மருதாணி, செம்பருத்தி அல்லது கரிசலாங்கண்ணி போன்ற தைலங்களில் ஏதாவது ஒன்றால் காப்பிட்டு புது வஸ்திரங்களை அணிவித்து வணங்கி முக்கனிகளில் அல்லது மூன்று விதமான கனிகளுடன் தேன் கலந்து ஏழைகளுக்கு அளித்தலால் ஆயுள் பெருகும். கண்ட நிவர்த்தி தரும் இத்தகைய வழிபாடுகளை எத்தகைய குருவார, குணவாரத் தலங்களிலும் இயற்றி பயன் பெறலாம். இவ்வாறு குருவாரத் தலமான திருத்தவத்துறையில் ஒரு அடியார் வீட்டில் நெல் மூட்டைகளை வைத்து தாமே அவற்றிற்கு தான்ய பூஜைகளை இயற்றி அந்த நெல் மணிகளை அரிசியாக்கி திருஅண்ணாமலை கார்த்திகை தீபத்தில் அன்னதானம் நிறைவேற்றி அனைவருக்கும் இவ்வாறு கண்ட நிவர்த்தி சக்திகளை அளித்து ஆயுளை பெருக்கிய நம் சற்குருவின் கருணைக்கு நன்றி சொல்ல வார்த்தைகள்தான் ஏது ?

புற்றிடம் கொண்டாய் போற்றி

புற்று நோய் ஏற்படுவதற்கான காரணங்களை ஆயிரம் ஆயிரமாக நவீன விஞ்ஞானம் விவரித்தாலும் பழிக்குப் பழி என்ற எண்ணமே புற்று நோயாக வளர்கிறது என்பதே சித்தர்கள் விவரிக்கும் மெய்ஞானம் ஆதலால் பழி வாங்கும் எண்ணத்தை வளர்க்கா விட்டால் நிச்சயம் புற்று நோயும் தோன்ற வழியில்லைதானே ? பூ விற்கும் ஒரு மூதாட்டியை ஒருவர் தெரியாமல் இடித்து விட்டபோது, “உன் பெண்டாட்டி தாலி அறுக்க ...”, என்று அந்த மூதாட்டி வசை பாடினாள் என்றால் பழி வாங்க வேண்டும் என்ற உணர்ச்சி எந்த அளவிற்கு சமுதாயத்தில் வேரூன்றி வளர்ந்துள்ளது என்பது தெரிகிறது அல்லவா ? இதைப் பார்க்கும்போது புற்று நோயால் வாடும் மக்கள் எண்ணிக்கை குறைவுதானே ? நமக்கு வரும் துன்பங்கள் அனைத்தும் நம் பூர்வ ஜன்ம விளைவே அல்லது இந்த ஜன்ம வினைகளின் விளைவே என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டால் நிச்சயம் மனித சமுதாயம் புற்று நோயின் விளைவுகளால் சிறிதும் பாதிக்கப்படாது. ஆனால் சொல்வதற்கு இவை எளிதாக இருந்தாலும் நடைமுறைப் படுத்துவது என்பது மிக மிக கடினமான செயல் என்பதால் நம்மிடையே மகான்களும், ஞானிகளும் தோன்றி துன்பங்களை அனுபவித்து அந்த துன்பங்களை அனுபவிக்கும்போதெல்லாம், “இது அடியேன் தவற்றிற்கு இறைவன் கொடுக்கும் தண்டனையே ...”, என்று சதா சர்வ காலமும் தங்கள் மீதே குறைகளை ஏற்று அனுபவித்து சமுதாயத்தில் தம்மை நம்பி, அண்டி வாழும் மக்களை சீடர்களை கரையேற்றி வந்துள்ளனர். விதி விலக்கு இல்லாமல் எல்லா மகான்களும் தங்கள் இறுதி காலத்தில் மன வேதனைகளையோ உடல் வேதனைகளையோ, நோய் நொடிகளையோ, உடல் குறைபாடுகளையோ, தகுதி இல்லாத சிறை தண்டனைகளோ ஏற்று அனுபவித்து வந்தது இக்காரணம் பொருட்டே ஆகும். நாய் தான் உண்டதையே வெளியே கக்கி மீண்டும் அதை உண்பதைப் போல என்னதான் தவறு என்று தெரிந்தாலும் மீண்டும் அதே தவற்றைச் செய்யும் மனித மனத்தின் இயல்பைக் குறித்து கடிந்து கொண்டு அந்தத் தவறுக்கு தண்டனையாய் தானே தன்னை நாய் என்று பல முறை, பல முறை அழைக்கும் மாணிக்கவாசகர் போன்ற பல மகான்களை இன்றும் கண்டு கொண்டிருக்கும் சமுதாயம்தான் இது. ராமகிருஷ்ண பரமஹம்சரும் தொண்டையில் புற்று நோய் ஏற்பட்டு பரிசோதிப்பதற்காக பலரும் அவர் நாக்கை இழுத்து வேதனை அளித்தபோது, “என்னுடைய சகோதரன் ஒரு நல்ல ஆத்மா, அந்த நல்ல ஆத்மாவிற்கு நான் கொடுத்த வேதனையின் விளைவுதான் தொண்டையில் ஏற்பட்ட இந்த இரணம்,” என்று தன்னைத்தானே நொந்து கொண்டார் பரமஹம்சர் என்பது நீங்கள் அறிந்ததுதானே.

திருவாரூர்

புற்று என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலைகொள்ளும் சக்தியே. இந்த சக்தி எல்லை மீறும்போதே அது புற்று நோயாக உருவெடுக்கிறது. இவ்வாறு புற்று மணலால் உருவான சுயம்பு மூர்த்தி எழுந்தருளிய தலமே திருவாரூர் என்பதால் இத்தலத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இறை மூர்த்திகளை தரிசனம் செய்து திருத்தலத்தில் ஏதாவது ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து தங்கள் உடல் நோய் குறித்து ஆத்ம விசாரம் செய்து வந்தால் நிச்சயம் அதற்குரிய பூர்வ ஜன்ம, நடப்பு வினைகளை இறைவன் அறிவிப்பார். மேற்கண்ட திருவாரூர் போன்று ஒரே இடத்தில் 32 கலசங்களோ அல்லது மேற்பட்ட எண்ணிக்கையிலோ தரிசனம் செய்யும் வகையில் கலசங்கள் அமைந்த திருத்தலங்கள் அனைத்திலும் தங்கள் நோய் நிவாரணம் குறித்த தியான பூஜைகளை மேற்கொள்ளலாம். திருவெறும்பூர், திருப்புன்கூர் போன்ற புற்று சுயம்பு மூர்த்திகள் அருளும் சிவத்தலங்களும், மேல்மருவத்தூர் போன்ற சித்த பீடங்களும் இத்தகைய தியானத்திற்கு உகந்தவையே. தங்கள் ரோகத்திற்கான மூல காரணத்தை அறியாமல் தங்கள் வியாதிக்கு உரிய சரியான தீர்வை உணரவே முடியாது. இங்கு நீங்கள் கேட்கும் ஆலயமணி ஓசை மெதுவே மெதுவே ரீங்காரமிட்டு மறைவதைத் தொடர்ந்து கேட்டு வருவதும் உங்கள் துன்பங்களிலிருந்து மீளும் வழியைப் புகட்டும். முயற்சி உடையார் நிச்சயம் இகழ்ச்சி அடையார். புற்று நோயைப் பற்றிக் குறிப்பிடும்போது, “ஏன் என்று ஒவ்வொரு செயலையும் நிறைவேற்றும் முன் ஒருவன் கேட்க ஆரம்பித்தால், புற்றுநோய் என்பதை அவன் வாழ்வில் சந்திக்கவே மாட்டான்,” என்பதே சற்குரு அருளும் இனிய உபதேசம்.

மேற்கண்ட திருவாரூர் திருத்தலத்தில் சுந்தர மூர்த்தி நாயனார் பாடிய பதிகம் தன் கண் பார்வையைப் பெறுவதற்குப் பாடிய பாடல் போன்று தோன்றினாலும் உண்மையில் புற்று நோய் போன்ற விடிவு காணாத் துன்பங்களிலிருந்து அடியார்களை விடுவிப்பதற்காக அப்பெருமான் எழுப்பிய குரல் என்பது தெரியும். இப்பாடலில் பெருமான் சிவபெருமானைச் சாடுவது போன்ற சைகைகள் எல்லாம் போடா சுவாமிகளைப் போல் புற்று நோய் துன்பங்களைச் சாடுவதற்காகத்தான் என்று உணரும்போது உங்கள் மெய் சிலிர்ப்பது அதிசயம் அல்லவே.

கூற்றாயினவாறு விலக்கி அருள்வீர்

சர்க்கரை, புற்று நோய் போன்ற நோய்கள் சிறிது சிறிதாக மக்களுக்கு வேதனையளித்து துன்பம் ஏற்படுத்தும் என்றாலும் வயிற்று வலி, தலைவலி போன்ற நோய்கள் திடீரென மின்னல் வேகத்தில் தோன்றி மக்களை நிலைகுலையச் செய்து விடும் என்பது உண்மையே. தோத்தாபுரி, அப்பர் பெருமான் போன்று தெய்வீகத்தில் மிக உயர்ந்த நிலைக்குச் சென்றவர்கள் கூட இத்தகைய வேதனைகளால் நிலை குலைந்து போனார்கள் என்பதே நோய்களின் வலிமையைக் குறிக்கும். கலியுகத்தில் நோய், வறுமை என்ற இரண்டுமே கர்ம வினைகளை விரைவில் கழிக்கும் மார்கமாகத் திகழ்வதால்தான் நோய்களுக்கு இத்தகைய மகத்துவம் ஏற்பட்டுள்னன. இறையடியார்கள் இவ்விஷயத்தில் ஜாக்கிரதையாக இருந்து சிறு வயது முதலே தங்கள் உடலைப் பேணி நற்பழக்கங்களை மேற்கொண்டு வந்தால் நோய்களின் திடீர் தாக்குதலில் இருந்து மீண்டு இறை நெறியில் நிலைத்து நிற்க முடியும்.

இந்த வழிபாட்டின் மூலம் நோய் நொடியிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொண்டு தெளிவாக இறைநெறியில் முன்னேறிச் செல்ல முடியும் என்று உறுதியாக எந்த வழிபாட்டையும் கூற முடியாது என்றாலும் மறையுடையாய், மந்திரமாவது நீறு, மற்றுப் பற்றெனக்கு என்று தொடங்கும் தேவாரப் பதிகங்களை தொடர்ந்து ஓதி வந்தால் நோய்களின் திடீர் தாக்குதலால் அடியார்கள் நிலைகுலைந்து போக மாட்டார்கள் என்று சித்தர்கள் உறுதி அளிக்கிறார்கள். காய்ச்சல், தலைவலி என்று இனங் கண்டு கொள்ள முடியாத பல நோய்களும் மக்களை பீடிப்பதுண்டு. எது எப்படியிருந்தாலும் மேற்குறித்த மூன்று பதிகங்களை மட்டுமாவது தினமும் ஓதுவதை வழக்கமாகக் கொண்டு வந்தால் நோயின் தாக்குதலிலிருந்து எளிதில் மீளலாம் என்பது உண்மையே. நம் சற்குரு அருளிய 32 தேவாரப் பதிகங்களையும் தினமும் ஓதி வந்தால் எத்தகைய நோய் நொடிகளும் அண்டாது என்பது உண்மையே. அப்படியே விதி வசத்தால் சில நோய்கள் நம்மைத் தீண்டினாலும் மனம் உடைந்து போகாமல், உள்ளம் சோர்ந்து போகாமல் விரைவில் சகஜ நிலைக்குத் திரும்பலாம் என்பதே இந்த பதிகங்கள் அருளும் வாய்மையாகும். காட்டூர்க் கடலே கடம்பூர் மலையே என்று தொடங்கும் சுந்தர மூர்த்தி நாயனார் அருளிய பதிகத்தை சற்றே கூர்ந்து நோக்கினால் மிகவும் சுவையுடைதாக இருக்கும். இப்பதிகத்தில் குறித்த காட்டூரில் கடல் கிடையாது கடம்பூரில் மலை கிடையாது, நாம் இத்தலப் பெயர்கள் திருக்காட்டுப்பள்ளி, தென்கடம்பூர் என்ற திருத்தலங்களின் பெயர்களைக் குறிப்பதாகக் கொண்டாலும் கூட. இறைவனின் மேல் கொள்ளும் பக்தி கடலை விட ஆழமானது, மலையை விட உயரமானது என்பதே இதன் பொருளாகும்.

ஸ்ரீஅக்னிபுரீஸ்வரர் திருக்காட்டுப்பள்ளி

அதிலும் மலை கூட தள்ளி இருந்து பார்த்தால் ஓரளவு அதன் உயரத்தைத் தெரிவிக்கும் ஆனால் கடலின் ஆழமோ யாராலும் அளக்க முடியாதது அல்லவா ? அதனால்தான் பக்தியைக் கடலுக்கு ஒப்பிட்டு அதை முன் வைத்தார் போலும் சுந்தரர். இவ்வாறு தன் பக்தியின் ஆழத்தைக் குறிப்பதாகவே குகன் ராமபிரானைச் சந்தித்தபோது கடலில் வாழும் மீனையும் மலையில் திகழும் தேனையும் காணிக்கையாக அளித்தான் என்று இராமாயணம் குகனின் பக்தியைச் சிறப்பிக்கிறது. எம்பெருமான் எழுந்தருளிய சுமார் 39 திருத்தலங்களையே இந்த பதிகம் குறிப்பதாகக் கொண்டாலும் உண்மையில் இந்த பதிகத்திற்குப் பின்னால் எம்பெருமான் எழுந்தருளிய (3 x 39) 117 திருத்தலங்களும் அடக்கம் என்பதே சித்தர்கள் அருளும் விளக்கமாகும். சங்கிலி நாச்சியார், பரவை நாச்சியார் என்ற சுந்தரரின் இரு மனைவிகளும் அவரின் இரு கண்களாகத் திகழ்ந்ததால் அவர்கள் மூலம் கண்ட இறை தரிசனங்களையும் சுந்தரர் தன்னுயை பதிகங்களில் இணைத்துள்ளார் என்பதே சுந்தரர் அருளிய பதிகங்களின் சிறப்பாகும். திருத்தலங்களில் எம்பெருமான் அருளும் காட்சி மனம், மெய் என்ற லௌகீக நிலைகளுக்கு அப்பாற்பட்டு இருந்தாலும் அவற்றை மனிதர்களின் மிகச் சிறிய புலனம்சமான கண் பார்வைக்கு உகந்தவாறு அளித்த சுந்தரரின் கருணைக்கு மனிதர்கள் என்றாவது நன்றிக் கடன் செலுத்த முடியுமா ? இவ்வாறு அருளியதே நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனாரின் அரிய சேவையுமாகும். தன்னுடைய மனைவியை உயிருக்கு உயிராக நேசித்த இயற்பகை நாயனார் தன்னுடைய மனைவியின் தமக்கை தன்னை மனமார காதலித்து அவரை மணம் புரிய தன் விருப்பத்தையும் தெரிவித்தபோது தான் இப்பிறவியில் ஏக பத்தினி விரதனாக இறைவனை மட்டுமே காதலிக்கும் பக்தனாக இருப்பதால் தன் மனைவியின் தமக்கையை தன் கண் சக்தியாக ஏற்றுக் கொண்டார் என்பதே நம் சற்குரு தெரிவிக்கும் இரகசியமாகும். இயற்பகை நாயனாரும் தான் தரிசனம் செய்த இறை மூர்த்திகளையெல்லாம் தரிசிக்கும் பக்தர்களும் அந்த இறை தரிசனத்தையே பெறும் வண்ணம் அருளினார் என்றால் இந்த நாயன்மார்களின் பக்திக்கு ஈடு இணைதான் உண்டோ ? இந்த 63 நாயன்மார்களின் பக்தி குறித்த திருத்தொண்டத்தொகை என்ற ஒன்றே அனைத்து மன நோய்களுக்கும் உடல் வியாதிகளுக்கும் ஒரு காப்பு என்பதில் இனியும் சந்தேகம் உண்டா என்ன ?

அக்னி தீர்த்தம் வயலூர்

பாயும் ஒளி நீ எனக்கு பார்க்கும் விழி நானுக்கு என்று இறை சக்தியுடன் இரண்டறக் கலந்து நின்ற மகாகவி பாரதியாரின் மேன்மையும் இங்கு நினைவு கூறத் தக்கதே. மேலோட்டமாகப் பார்த்தால் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானையால் தள்ளப்பட்டு பாரதியார் இறைவனுடன் ஒன்று சேர்ந்தார் என்று சொல்லப்பட்டாலும் பஞ்சபூதங்களில் முதலாவதான பூமி தத்துவத்தில் எழுந்த பூமா தேவிக்கு மனம் குளிர்விப்பதான வழிபாடே யானை பூமியின் மீது நடந்து வருவது என்பதால் பூமி பற்று என்று மண்ணாசையைக் களைவதற்காக பாரதியார் மேற்கொண்ட தியாகமே இது என்பது தெரிய வரும். ஆசைகளில் கொடியது மண்ணாசை, பெண்ணாசை. அதிலும் மண்ணாசை முதலில் வருதால் அந்த ஆசையால் தூண்டப்பட்டு பாரத மக்களை அடிமைப்படுத்திய அயல்நாட்டினரை நன்னெறிப்படுத்த புரிந்த பாரதியாரின் தியாகமே இது. பூமி பாரத்தைக் குறைக்க வந்த பார்த்தசாரதியின் கோயில் யானையும் பாரதியாருடன் சேர்ந்து கொண்டு, தன்னிடம் இருந்தது அனைத்தையும் பகிர்ந்தளித்த பாரதி யார் என்று உலகிற்கு அறிவித்தது என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய செய்தியாகும். இது எதிர்பாராத விபத்துதான். வயிற்று வலி, தலைவலி போன்று விபத்து என்பதும் விதி வசத்தால் நம்மை எதிர்பாராத விதமாக வந்து தாக்குவதே. ஒரு அரசன், புலவர், ஆண்டி எப்படி இந்த விபத்தை எதிர்கொள்கிறார்கள் என்று அறிவதும் நாம் வியாதிகளை எதிர்கொள்ளும் சரியான அணுகு முறையைத் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும் அல்லவா ? ஒரு அரசனுக்கு காலில் முள் தைத்து விட்டது. அரண்மனை வைத்தியர்கள் உடனே விரைந்து வந்து அரசனுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை அளித்தனர். இதைக் கேள்விப்பட்ட சபை புலவர் அரசனைக் காண வந்தார். “அரசே, தாங்கள் முட்டாளாய் இருப்பதைக் கேள்விப்பட்டேன் ...”, என்றார் புலவர். அரசருக்கு வந்ததே கோபம். அந்தப் புலவரின் தலையைக் கொய்ய வாளை உருவினான். புலவர் பணிந்து, “அரசே, தாங்கள் முள் தைத்த கால் உடைவராய் இருப்பதையே தங்கள் வேதனயை மறந்து இருக்க இவ்வாறு கூறினேன் ...”, என்று கூறவே அரசரும் தன் வேதனையை மறந்து அந்தப் புலவரின் திறமையில் மெய்மறந்தார்.

ஸ்ரீதிருமுருக கிருபானந்த வாரியார்
குமாரவயலூர் திருச்சி

ஒரு முறை பாம்பன் சுவாமிகள் ஒரு தென்னந்தோப்பின் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது அவர் காலில் நீளமான முள் தைத்து அதைப் பிடுங்கவும் முடியாமல் மிகவும் வேதனயுற்று கதறி அழுதார். அவர் கதறி அழுததற்குக் காரணம் தான் இவ்வளவு நாள் பக்தியில் திளைத்தும் உடலை மறக்காத தாழ்ந்த நிலையில் இருக்கிறோமே என்பதுதான். முள் என்பதை மூன்று முறை ஒலித்தால் அது சரவணபவ மந்திரத்தைப் போல் ஆறு அட்சரங்களுடன் ஒலிக்கும். அதைப் போல் 6666 முருகப் பாடல்களை இயற்றி முருகனுடன் கலந்தவரே ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள். உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என்பது பக்தன் மட்டும் அல்ல அந்த பக்தனுக்காக ஏங்கும் இறைவனின் நிலையும் இதே என்பதை உணர்த்துவதாக ஸ்ரீபாம்பன் சுவாமிகள் முள் குத்தி வேதனை அடைந்தபோது மறுநாள் ஒரு பக்தர் மூலமாக ஒரு கட்டை செருப்பை அவருக்கு அனுப்பி தன் அன்பைப் பகிர்ந்து கொண்டவரே வடிவேலன். பாம்பன் சுவாமிகளின் இயற்பெயர் அப்பாவு என்பதாகும். இவருடைய நாமத்திற்கும் இவர் பிறந்த ஊரான பாம்பனுக்கும் சுவாமிகள் இயற்றிய 6666 பாடல்களுக்கும் உள்ள சம்பந்தமே ஆறுமுக சுவாமியின் குரு சம்பந்தமாகும். நான்கு ஆறுகள் சேர்ந்தால் அது ஆறு முகமாக பொலிவதும் இந்த சம்பந்தங்களில் ஒன்றாகும். செச்சி என்பது தங்கள் ஆத்ம லிங்கத்தையே ஒரு வெள்ளி அல்லது தங்கச் சிமிழில் வைத்து மாலை போல் அணிந்து கொள்வதாகும். திருமுருக கிருபானந்த வாரியார், நம் சற்குரு போன்றோர் இந்த செச்சியை அணிந்து கொண்டு ஆத்ம லிங்கத்திற்கு தினமும் தாங்கள் உணவருந்தும் முன் நைவேத்யம் அளிப்பதுண்டு. இன்றும் திருச்சி வயலூர் முருகன் திருத்தலங்கள் போன்று செச்சி மாலை அணிந்த திருமுருக கிருபானந்த வாரியாரை வணங்கி அக்னி தீர்த்தத்தை வலம் வந்து முருகப் பெருமானை தரிசனம் செய்து சப்பாத்தி, ரொட்டி போன்றவற்றுடன் உருளைக் கிழங்கு பொரியல் சேர்த்து தானமாக அளித்து வருதலால் இனந்தெரியாத நோய்கள், குறிப்பாக காரணம் தெரியாத காய்ச்சல் நோய்கள் நிவாரணம் பெறும். நம் சற்குரு இத்தலத்தில் திருப்பணி மேற்கொண்டபோது சுட்ட செங்கற்கள் கொண்டு உழவாரப் பணி இயற்றி நோய் நிவாரண சக்திகளை புனருத்தாரணம் செய்தார் என்பது ஒரு சில அடியார்களே அறிந்த இரகசியம் என்றாலும் இன்றும் இத்தலத்தை வணங்கி வழிபடும் பக்தர்கள் அந்த நோய் நிவாரண சக்திகளைப் பெறுவர் என்பது திண்ணமே. பொதுவாக, காரணம் தெரியாத நோய்களால் வருந்துவோர் அக்னி தீர்த்தம் விளங்கும் கோயில்களில் தீர்த்தத்தில் நீராடி அல்லது தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டு இறைவனை வணங்கி சோளம், நெல் பொரி போன்ற அக்னியில் சுட்ட உணவுப் பொருட்களை பக்தர்களுக்கும் பறவைகளுக்கும் தானம் அளித்து வருதலால் நோய் நிவாரணமோ அல்லது நோய்க்கான காரணங்களோ அறியப் பெறுவர். ஆதித்ய ஹிருதயம் என்னும் ஸ்ரீஅகஸ்திய மகரிஷியால் ராமபிரானுக்கு உபதேசிக்கப்பட்ட அற்புத துதி இராவணனை வெல்ல பயன்பட்டது என்றில்லாமல் ஒரு மனிதனை பலவீனப்படுத்தும் எல்லா சந்தர்ப்பங்களிலும் அவனுக்கு உதவுவதே உடல், மன தைரியத்தை அளிக்கவல்ல ஆதித்ய ஹிருதயம் என்னும் மந்திரம் ஆதலால் இந்த துதியை ஓதுவதால் இனந் தெரியாத எல்லா நோய்களுக்கும் இது நிவாரணமாக அமையும் என்பதே சித்தர்களின் பரிந்துரை. சூரியனின் இதயமான அக்னி சக்தியை மிஞ்சும் நோய் என்பது எவ்வுலகிலும் காண இயலாததுதானே ?

மனிதர்களைப் போலவே பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் உடல் வலி, தலைவலி, வயிற்று வலி போன்றவை தோன்றுவது இயற்கையே என்பதால் இந்த நோய்களைத் தீர்க்கும் மாத்திரைகளை, வைட்டமின் மாத்திரைகளை ஒன்றிரண்டாக உடைத்து பறவைகள், விலங்குகள், ஈ, எறும்புகள் போன்றவை உண்ணும்படியாக அளித்தல் நோய் தீர்க்கும் நிவாரண முறைகளில் ஒன்றாகும்.
ஓம் தத் புருஷாய வித்மஹே
லாலீலாய தீமஹி
தந்நோ அக்னி ப்ரசோதயாத்
என்ற அக்னி காயத்ரீ மந்திரத்தை 9, 18, 27 முறைக்குக் குறையாமல் ஓதி மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் தீனியாக அளித்தல் ஓர் அற்புத சமுதாய சேவையே. எறும்புகளுக்கும் வைத்தியம் பார்க்கும் மருத்துவர்கள் உண்டு. இந்த மருத்துவர்களுடன் மனோ ரீதியாக தொடர்பு கொள்ள முடிந்தவர்களே புது புது மாத்திரை மருந்துகளை கண்டு பிடிக்கின்றனர் என்பதும் சித்தர்கள் தெரிவிக்கும் சுவையான இரகசியமாகும். எனவே புது மருந்துகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் ஆர்வம் கொண்ட விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் எறும்புகள் வழிபடும் திருவெறும்பூர் திருத்தலத்தில் வழிபாடுகளை இயற்றி வருதல் நலமே.

வாகனமில்லா ஸ்ரீமுருகப் பெருமான்
லால்குடி

பல தம்பதிகள் உத்தமர்களாக இருந்தாலும் அவர்களும் சந்ததியின்றி வாடுவதைக் காண்கிறோம். இது உண்மையில் ஒரு குறைபாடே இல்லை எனினும் கலியுக மனமானது சமாதானம் கொள்வதில்லை என்பதால் இந்த மனக் குறையைத் தீர்க்கும் ஒரு வழிபாட்டை சித்தர்கள் அளிக்கிறார்கள். ஐந்து குழந்தைகளைப் பெற்ற ஒரு தந்தையின் செல்வன் முருகன் நாமம் கொண்ட அடியாராக நம் சற்குருவின் ஆஸ்ரமத்தில் இருந்து பணியாற்றினார். ஒரு முறை அவருடைய தந்தை வெகுதூரத்தில் உள்ள ஒரு ஆஸ்ரமத்திற்குச் சென்றிருந்தபோது அங்கேயே மரணம் அடைய நேரிட்டது. அவருடைய அன்புக் குழந்தைகளோ மனைவியோ கூட அவர் உயிர் பிரியும் தருணத்தில் அவர் அருகில் இல்லை என்றாலும் அவருடைய இறுதிக் காரியங்கள் அந்த ஆஸ்ரம அடியார்களால் சிறப்பாக நிறைவேற்றப்பட்டு அவர் குடும்ப அங்கத்தினர்களும் அந்த இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடிந்தது என்பதும் அவருடைய சந்தனச் சிதை தகனத்தை கிட்டத்தட்ட பத்தாயிரம் அடியார்கள் கண்டு அவர் ஆத்மா சாந்தியடைய மனதார பிரார்த்தித்தனர் என்பதே சற்குரு நமக்குப் புகட்டும் பாடமாகும். இவ்வாறு தனக்கு சந்ததி இல்லையே என்று வாடுபவர்கள், தங்கள் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற பயத்திலேயே வெளியே சொல்ல முடியாமல் தவிப்பவர்கள் கீழே கொடுத்துள்ள காயத்ரீ மந்திரத்தை 21 முறைக்குக் குறையாமல் ஓதி தசமி திதிகளில் அல்லது வியாழக் கிழமைகளில் முந்திரி கலந்த எலுமிச்சை சாதம் தானமாக அளித்து வருதலால் அவர்கள் நன்னிலை அடைவர் என்பது திண்ணமே. அபூர்வமாக தட்சிண முகமாக திருத்தவத்துறையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமுருகப் பெருமானை வணங்கிய கோலத்தில் ஸ்ரீஅருணகிரிநாதர் பச்சை வேட்டி தரித்து காட்சியளிப்பது ஏதோ தற்செயலான காரியமில்லை என்று உணர்வதும் நம் சற்குருவின் மேன்மையை உணர்த்தும் ஆத்மவிசாரமாகும்.
ஓம் யக்ஞ ரூபாய வித்மஹே
அகத்திய புத்ராய தீமஹி தந்நோ ஸ்ரீஸ்ரீஸ்ரீஇத்மாலக ப்ரசோதயாத்
என்ற காயத்ரீ மந்திரம் சந்ததி இல்லாமல் வருந்துவோர் அனைவருக்கும் நற்கதி அளிக்கும் சற்குரு கடாட்சமாகும். சந்ததிகள் வாய்க்கப் பெற்றோரும் தங்கள் குழந்தைகள் பெண் குழந்தைகளாகவே இருப்பது கண்டோ அல்லது போதிய மன வளர்ச்சி இல்லாமல் இருப்பது குறித்தோ மனம் வருந்துவதுண்டு. அத்தகையோரும் மேற்கூறிய வழிபாடுகளால் பயனடைவர். ஸ்ரீஅகத்திய பிரானின் அருந்தவ செல்வனான ஸ்ரீஇத்மாலக மகாபிரபு அண்டமி திருத்தலத்தில் முதன் முறை தோன்றிய நந்தீஸ்வரராக செவ்வனே பணியாற்றி அனைத்து நந்தி மூர்த்திகளுக்குமே ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தார் என்ற சிறப்பை ஒரு சில அடியார்கள் உணர்ந்திருக்கலாம்.திருத்தவத்துறையில் இயற்றும் ஸ்ரீஅருணகிரி நாதரின் வழிபாடு மிகவும் சிறப்பு மிக்கதாகும். பொதுவாக, தட்சிணா மூர்த்தியை வழிபடுவதால் தென் திசையில் உள்ள நமது மூதாதையர்கள் மகிழ்ந்து நல்ல அறிவுள்ள குழந்தைச் செல்வத்தை அளிப்பார்கள் என்பது உண்மையே ஆயினும் ஸ்ரீஅருணகிரிநாதர் போன்ற மகான்கள் தங்கள் தபோபலனால் தமது மூதாதையர்களே நன்னிலை அடைவதற்காக இவ்வாறு தென்திசை நோக்கி அருள்புரியும் ஸ்ரீமுருகப் பெருமானை வாழ்த்தி வணங்குகிறார்கள் என்பதும் சுவையான உண்மையே.

திருத்தவத்துறை லால்குடி

ஸ்ரீஅருணகிரி நாதரை வழிகாட்டியாகக் கொள்வோர் தங்களிடம் உள்ள அனைத்து செல்வத்தையும் இறை அடியார்களுக்காக, இறை சேவைக்காக பயன்படுத்துவதும் உத்தமமே. லால்குடி ஸ்ரீஸ்ரீமதி அம்பாள் பிரகாரத்தில் எழுந்தருளிய முருகப் பெருமானோ இதற்கு மாறாக வடக்கு திக்கான குபேர திக்கை நோக்கிய மயில்வாகனத்துடன் எழுந்தருளி இருக்கிறார். பொதுவாக, கணவன்மார்களை விட உயர்ந்த அந்தஸ்து உடையவராக மனைவி இருப்பதோடு அல்லாமல் செல்வம், கல்வி போன்றவற்றிலும் சிறந்தவளாக மனைவி இருப்பவர்கள் இத்தகைய மூரத்திகளை வணங்குவதால் பெரும் பலன்களை அடைவார்கள் என்பதையே இது குறிக்கும். இத்தலத்தில் கிட்டத்தட்ட 32 பிள்ளையார் மூர்த்திகள் நான்கு திக்கையும் நோக்கி எழுந்தருளி இருந்தாலும் ஒரு சில முருகப் பெருமான் மூர்த்தங்களே நம் வழிபாட்டிற்கு உரியவர்களாக விளங்குவதால் முருகப் பெருமானின் தவ சக்தி பெருகும் மறைத் தலமாக திருத்தவத்துறை விளங்குகிறது என்பதே இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். ஆறு படை வீடுகள் மட்டுமல்லாமல் திருத்தவத்துறையும் முருகனுக்குரிய “படை வீடு” என்னும் சக்திகளுடன் திகழ்வதால் தங்கள் குடும்பத்துடன் இத்தலத்தில் எழுந்தருளி உள்ள அம்பாள் சிவச் சன்னதி முருக தெய்வங்களை வழிபட்டு வருதலால் தங்கள் சந்தானங்கள் நல்ல பேறும் புகழும் பெற இத்தகைய வழிபாடுகள் உறுதுணையாக அமையும். மற்ற எந்த தலத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பாக திருத்தவத்துறையில் 32 பிள்ளையார் மூர்த்திகள் எழுந்தருளி இருப்பதால் ஸ்ரீஅகத்திய தேவாரத் திரட்டு 32 பதிகங்களையும் பாடும்போது அவை ஒவ்வொன்றையும் இங்குள்ள கணபதி மூரத்திகளின் பாதக் கமலங்களில் அர்ப்பணித்தல் என்பது அது மானசீகமாக இருந்தாலும் வாழ்வில் கிடைத்தற்கரிய பேறே. அரிதிலும் அரிதாக சித்தர்களே இத்தலத்தில் கணபதி மூர்த்திகளாக எழுந்தருளி இருப்பதால் 32 தேவாரப் பதிகங்களையும் 32 சித்தர்களின் பாதங்களில் சமர்ப்பிப்பது என்றால் இதை விடச் சிறந்த பாக்கியம் ஒரு மனிதனுக்குக் கிட்டுமா என்ன ?

சிவகங்கையில் பொங்கும்
ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் லால்குடி

குஷ்ட ரோகத்தின் ஆயுள் 600 வருடங்கள். ஆனால் இத்தனை வருடங்கள் ஒரு மனிதனால் வாழ முடியாது என்பதால் பல பிறவிகளில் மனிதனைத் தாக்குவதே, தொடர்ந்து வருவதே குஷ்ட ரோகம் என்னும் கொடிய வியாதியாகும். அதாவது ஒருவர் இப்பிறவியில் குஷ்ட ரோகத்தால் 40 வருடங்கள் பாதிக்கப்பட்டார் என்றால், அடுத்த பிறவியில் 30 வருடங்கள், வேறொரு பிறவியில் 50 வருடங்கள் என பிறவி தோறும் தொடர்ந்து வந்து துன்புறுத்துவதே இவ்வியாதியின் இயல்பாகும். கேட்பதற்கே கொடுமையாக இவ்வியாதி இருந்தாலும் கொடுமையான தவறுகளைச் செய்தவர்களையே இவ்வியாதி துன்புறுத்தும் என்பது உண்மையே. அதாவது கர்ப்பிணிகளை வதைத்தல், பசு வதை, கோயில் உண்டியல்களைத் திருடுதல் போன்ற கடுமையான தவறுகளைச் செய்தவர்களையே இவ்வியாதி துரத்தும் துன்புறுத்தும். ஒரு முறை இவ்வியாதியால் பீடிக்கப்பட்ட மன்னன் ஒருவன் வெகுதூரம் வந்த களைப்பால் குதிரையிலிருந்து இறங்கி அருகிலிருந்த ஒரு தாமரைத் தடாகத்தில் இருந்த தெளிந்த நீரினால் தன்னுடைய தாகத்தைத் தீர்த்துக் கொண்ட மறுவிநாடியே அவன் உடலைப் பீடித்த குஷ்ட வியாதி இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது கண்டு அதிசயித்தான். நன்றாக அவ்விடத்தைத் தேடிப் பார்த்தபோது சற்று அருகிலேயே ஒரு சுயம்பு மூர்த்தியைக் கண்டு நெடுஞ்சாண் கிடையாக அம்மூர்த்தியை வணங்கி தான் பெற்ற பேற்றிற்கு நன்றி தெரிவித்தான். அந்த சுயம்பு மூர்த்தி எழுந்தருளிய தலமே இன்றைய தவத்துறை. அவன் நீர் அருந்திய சுவையான பொய்கையே இங்குள்ள சிவகங்கை தீர்த்தமாகும். பதினாறு இதழ்கள் உடைய மகா வில்வம் அலங்கரிக்கும் தலமே சென்னை கோவூர் திருத்தலமாகும். குஷ்ட வியாதியைத் தீர்க்கும் அற்புத குளிகை இதுவே. சுவாமி பிரசாதமாகப் பெற்ற சிறிதளவே வில்வத்தை ஒருவர் உட்கொண்டால் அவருடைய குஷ்ட வியாதி மறைந்து விடும். அவர் எத்தனை ஆண்டுகள் அந்த வியாதியை அனுபவித்திருந்தாலும் எதிர்காலத்தில் அவர் இவ்வியாதியினால் துன்பம் அடைய மாட்டார் என்பதே கோவூர் சிவத்தல மகாவில்வ பிரசாதத்தின் தெய்வீக சக்தியாகும். திருத்தவத்துறையில் பொலியும் ஐந்து சக்திகளையும் இணைத்து அத்துடன் ஆறாவது சக்தியாக மகாவில்வத்தை சேர்த்து ஆறு எழுத்துக்கள் கொண்ட லால்குடி வாசியான தன்னடியார் ஒருவர் மூலம் திருச்சி அருகே உள்ள தொழுநோய் காப்பகத்தில் உள்ள நோயாளிகளின் கடுமையான வியாதியைத் தீர்த்தார் நம் சற்குரு என்றால் இந்த அரிதிலும் அரிய நோய் நிவாரண சேவைக்கு நாம் இப்பிறவியில் நன்றி செலுத்த முடியுமா ?

ஸ்ரீநடராஜ பெருமான் லால்குடி

குஷ்டரோகிகள் காப்பகத்தில் சற்குரு கூறிய முறையில் மகாவில்வ பிரசாதத்தை அளித்து அடியார்கள் வழிபாடுகள் இயற்றிய மறுநாள் அந்த காப்பகத்து அதிகாரி நம் அடியார் ஒருவரை சந்திக்கும்படி நேர்ந்தது. கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு மேல் அந்த காப்பகத்தில் பணி புரிபவர், சிறைச்சாலை கைதிகளுடன் 30 ஆண்டுகள் வாழ்ந்தவர். அந்த அதிகாரி நடுரோடு என்று கூட பார்க்காமல் நம் அடியாரைக் கட்டித் தழுவி, “சார், என்னுடைய ஜெயில் வாழ்க்கையில் இப்படியொரு அதிசயத்தை நான் கண்டதே இல்லை. சதா சண்டை சச்சரவுடன் இருக்கும் இந்த நோயாளிகள் அனைவரும் நீங்கள் வழிபாடு இயற்றிச் சென்றவுடன் வாழ்நாளில் அனுபவித்திராத ஒரு பேரமைதியுடன் திகழ்ந்தார்கள். இது நான் மட்டும் அனுபவித்தது அல்ல, அந்த நோயாளிகள் அனைவரும் நிம்மதியாக நேற்றுதான் தூங்கினார்கள் என்பதை அறியும்போது கண்கள் குளமாகின்றன,” என்று கூறி மனதார நம் ஆஸ்ரமத்தைப் பாராட்டினார். இதுவே நம் சற்குருவின் தொட்டுக் காட்டிய வித்தை பாடமாகும். லால்குடி திருத்தலத்தில் இவ்வுலகில் என்ன இப்பிரபஞ்சத்திலேயே எங்கும் காணா நோய் நிவாரண சக்தியாக வலம் வரும் வகையில் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரரும் ஸ்ரீதட்சிணா மூர்த்தியும் எழுந்தருளி இருக்க அருகே ஸ்ரீஜுரஹரேஸ்வரரும் ஸ்ரீவீணாதர தட்சிணா மூர்த்தியும் எழுந்தருளி உள்ளனர் என்றால் இத்தகைய சிறப்புக்கு ஈடு இணையேது ? ஸ்ரீஜுரஹரேஸ்வரர் அபூர்வமாக இத்தலத்தில் யந்திர ரூபத்தில் எழுந்தருளி உள்ளார். சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்று 60, 80 வயது பூர்த்தி அடைந்த நாட்களில் மட்டுமே ஆயுஷ் ஹோமம் போன்ற வழிபாடுகளை நிகழ்த்துவது என்றில்லாது ஒவ்வொரு பிறந்த நாளிலுமே சிவகங்கை தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீஅமிர்தகடேஸ்வரரை தரிசித்தலால் நோய் நொடிகளற்ற ஆரோக்கிய வாழ்வைப் பெறலாம். ஆயுஷ்ஹோமம் போன்ற ஹோமங்களை நிகழ்த்த வசதியில்லாதவர்கள் ஔவைப் பிராட்டி அருளிய சீதக் களபம் ... என்ற துதியை ஓதி அவரவர் சக்திக்கு ஏற்ற வகையில் அன்னதானத்தை குறைந்தது 30 பேருக்கு நிகழ்த்துவதும் ஆயுளை வளர்க்கும் அற்புத வழிபாடே. பலரும் ஜோதிட ரீதியாக, ஜாதக ரீதியாக நல்ல வசதிகளை, பதவிகளைப் பெற்று வாழ்வார்கள் என்று பலன்கள் இருந்தாலும் விபத்து, வியாதி போன்ற அம்சங்களால் துர்மரணங்களைச் சந்தித்து கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதாக வாடுவதுண்டு. இத்தகைய அகால மரணங்களைத் தவிர்ப்பவரும் இத்தல ஸ்ரீஅமிர்தகடேஸ்வரரே ஆவார்.

தாமே அரைத்த மஞ்சள், சந்தனத்தை கலந்து அத்துடன் கங்கை, காவிரி போன்ற புனித தீர்த்தங்களுடன் தவறாமல் லால்குடி சிவகங்கை திருக்குள தீர்த்தத்தையும் கலந்து சுவாமிக்கு அபிஷேகித்தால் எத்தகைய துர்மரணங்களையும் தவிர்க்கலாம், வெல்லலாம். குறிப்பாக 60, 70, 80 என்ற பிறந்த நாட்களைக் கொண்டாடுபவர்கள் கட்டாயமாக இவ்வாறு மேற்கு நோக்கி அருளும் அமிர்த சக்திகளை வர்ஷிக்கும் மூர்த்திகளுக்கு அபிஷேகங்களை நிறைவேற்றி தங்கள் ஆயுளை ஆரோக்கியமாக பெருக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேற்கு திசை ஆயுளை வளர்க்கும் ஸ்திரமாக்கும் சனீஸ்வர பகவானுக்கு உரிய திசை என்பது நீங்கள் அறிந்ததே. மனிதர்களைப் போல் அல்லாமல் தெய்வ மூர்த்திகளின், சற்குருமார்களின் ஒவ்வொரு விரல் அசைவிற்கும் ஆயிரமாயிரம் காரணங்கள் உண்டு. அதே போல் சூரிய பகவான் இங்குள்ள ஸ்ரீநடராஜ மூர்த்தியின் மேல் தன் அமுத கிரணங்களைப் பொழிகின்றார் என்றால் அதற்கும் ஆயிரமாயிரம் காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதில் ஒன்றே இந்த கிரணங்கள் தீர்க்கும் நோய் நொடிகளாகும். காரணம் தெரியாமல் காய்ச்சல், உடல் வேதனைகள், உடம்பு இளைத்தல் பருத்தல், வாந்தி, மயக்கம், இரத்தப் போக்கு போன்ற பல்வேறு காரணங்களால் வருந்துவோர் இவ்வாறு பாதி சூரிய கிரணங்கள் பொழியுமாறு உள்ள இறை மூர்த்திகளை வணங்கி செம்பருத்தி தைலத்தால் காப்பிட்டு பஞ்சாமிர்தம் வாழை இலையில் வைத்து தானமாக அளித்து வருதலால் தங்கள் இனந் தெரியாத நோய்க்கு காரணம் தெரிகின்றதோ இல்லையோ அவர்கள் நோய் நிச்சயம் நீங்கும் என்பது உண்மையே. தொடர்ந்த வழிபாடு அவசியம்.

உண்ணாமுலையம்மன்
திருஅண்ணாமலையானுக்கு அரோகரா

நாம் அனைவரும் வடஇந்தியா பித்ரு மூர்த்தித் தலமான கயாவைப் பற்றி அறிவோம். நம் சற்குருவின் கருணை கடாட்சம் பெற்றவர்கள் தென்னிந்தியா கயாவான பூவாளூர் திருத்தல மகிமை பற்றி ஓரளவு அறிவோம். ஆனால், இந்த தலங்களுக்கு எல்லாம் மூத்த பித்ரு தலமான திருத்தவத்துறையைப் பற்றி அறிந்தோர் ஒரு சிலரே. கயாசுர மகரிஷி தன்னுடைய உடலையே கயா திருத்தலமாக அர்ப்பணித்து தன்னுடைய திருமேனியின் மேல் பித்ரு வழிபாடு இயற்றுவோர்க்கெல்லாம் இன்றும்நற்கதி அளித்து வருகிறார். ஸ்ரீஆயுர்தேவி அன்னையின் முதல் கர பீடம் பெற்ற ஸ்ரீகயாசுர மகரிஷியின் தந்தையே ஸ்ரீதேவவிரஜன் என்பார் ஆவார். ஸ்ரீதேவவிரஜன் மகிமை குறித்து முழுமையாக அறிந்தவர்கள் சித்தர்களே என்பதால் சித்தர்களின் வழித்தோன்றலான நம் சற்குரு தெரிவித்த இரகசியங்களை இங்கு வெளியிடுகிறோம். ஸ்ரீதேவவிரஜன் இப்பூமியை விட்டு மறைந்தபோது அவருக்கு பித்ரு தர்ப்பணங்கள் அளித்து அவர் இறைவனுடன் கலந்து இவ்வுலகிற்கு உத்தம வாரிசான ஸ்ரீகயாசுர மகரிஷியை அளிக்க உதவிய தலமே திருத்தவத்துறை என்றால் இத்தல மகிமையைப் பற்றி வார்த்தைகளால் வர்ணிக்க இயலுமா ? சிவகங்கை என்னும் லால்குடி திருக்குள மகிமை பற்றி நம் சற்குரு மூலம் அறிவதை விட இத்திருக்குளத்தில் நீராடி அவரவர் தம் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதன் மூலமே இத்திருக்குள மகிமையைப் பற்றித் தாங்களே அறிந்து கொள்ளும் உபாயமாகும். மேலே விவரித்த தொழுநோய் நீங்கிய மன்னன் அன்று முதல் இத்திருக்குளத்தில் நீராடி நித்திய தர்ப்பணம் என்றவாறாக ஷன்னாவதி தர்ப்பணம் என்ற குறித்த நாட்களுக்கு மட்டும் அல்லாது தினமுமே தம் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் அளித்து அதன் பலனாய் இந்த லால்குடி திருத்தவத்துறை திருத்தலத்தை சீரமைத்து மேலுலகில் நீங்கா இடம் பெற்றான் என்பதே உண்மையே. சமீப காலம் வரை சீரும் சிறப்புமாய் மிகச் சிறந்த தர்ப்பணத் தலமாய் லால்குடி சிவகங்கை பொலிந்தது என்றாலும் தற்போது இதன் பெருமை மீண்டும் பரவ பக்தர்கள் துணை நிற்க வேண்டுகிறோம். குறிப்பாக திருவாதிரை, மூலம் நட்சத்திர தினங்களில் இத்தீர்த்தத்தில் நீராடி தர்ப்பணம் அளித்து ஆண்களும் பெண்களும் தங்கள் ஆரோக்கிய சக்திகளை பெருக்கிக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறோம். வியாழக் கிழமை ரேவதி நட்சத்திரம் அமையும் நன்னாளில் (28.5.1992) நோய் சக்திகள் நிவர்த்தி ஆகும் தீர்த்த சக்திகள் பெருகும் புனித முகூர்த்த நேரத்தில் திருத்தவத்துறையில் உழவாரப் பணி என்னும் பெயர் தாங்கிய கும்பாபிஷேகத் திருவிழா நம் சற்குருவால் நிறைவேற்றப்பட்டது என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய சிறப்பாகும்.

அத்திருப்பணியின்போது இந்த சிவகங்கை திருக்குளத்திலிருந்தே தீர்த்தம் பெறப்பட்டு அனைத்து மூர்த்திகளுக்கும் வாசனை நன்னீராக (perfumed holy water) அபிஷேகிக்கப்பட்டது என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் உண்மையாகும். இது 27 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த திருப்பணியாக இருந்தாலும் அன்று விரவிய புனித சக்திகள் என்றும் நிறையுமாறு அருள் கூட்ட திருத்தவத்துறை ஈசனுக்கு பிரதோஷ வழிபாடுகளைத் தம் அடியார்கள் மூலம் நிறைவேற்றினார் நம் சற்குரு என்பதே இன்றும் மலரும் இனிய காவியமாகும். 28.5.1992 என்ற நாளும் அற்புத நோய் நிவர்த்தி அருளும் ஒன்பது எண்ணுக்கு உரியதாக விளங்குவதும் நோய் நிவர்த்தி தரும் செவ்வாய் பகவான் குருவிற்கு உகந்த மீன ராசியில் தேய்பிறைச் சந்திரனுடன் இணைந்து எழுந்தருளி இருப்பதும் இங்கு குறிப்பிடத் தக்கதாகும். தற்காலத்தில் பலரும் கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களைக் காட்டி மிரட்டி மக்கள் உடைமைகளைப் பறிப்பதைக் காண்கிறோம். ஆனால் கனவில் கொடிய மிருகங்களும், பயங்கர மனிதர்களும் தோன்றி கொடிய ஆயுதங்களைக் காட்டி மிரட்டினால் இதற்கு பாதுகாப்பு எவரிடம் சென்று எப்படிப் பெறுவது ? ஆன்மீகத்தில்தான் எல்லா பிரச்னைகளுக்குமே தீர்வு உண்டே. இவ்வாறு கொடிய கனவுகளாலோ, கற்பனைகளாலோ பாதிக்கப்படுபவர்கள் லால்குடி திருத்தல சிவகங்கை தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டு இறை தரிசனம் செய்தலால் அமைதியான தூக்கம் பெறுவதுடன் கொடியவர்களிடமிருந்து பாதுகாப்பும் பெறுவார்கள். தேவலோகத்தில் மட்டுமே திகழ்ந்த கங்கையை பூமிக்குக் கொண்டு வந்தவனே பகீரதன் என்ற சிவ பக்தன் ஆவான். அவ்வாறு பூமிக்கு வந்த கங்கையின் வேகத்தைத் தாங்க பூமா தேவியால் முடியாது என்பதால் அந்த அதிவேக கங்கையை தம் ஜடாமுடியில் தாங்கி பூமியைக் காத்தவரே சிவபெருமான் என்ற உண்மையை நீங்கள் உணர்வீர்கள். அவ்வாறு சிவபெருமானின் ஜடாமுடியில் அடைக்கலம் கொண்ட கங்கை பிரவாகத்தில் இருந்து இறையருளால் தெளித்து விழுந்த சில தீர்த்தத் துளிகளே இன்று சிவகங்கை தீர்த்தமாக திருஅண்ணாமலை, திருத்தவத்துறை, மதுரையில் நூபுர கங்கையாகத் திகழ்கின்றன என்பதே சற்குரு தெரிவிக்கும் இரகசியமாகும். இத்தீர்த்தங்களிலிருந்து சிறிதளவு தலையில் தெளித்துக் கொண்டு அருந்துவதால் நோய்களாலோ வேறு பல காரணங்களாலோ தலை முடி உதிர்ந்து தலை சொட்டையாகி வருந்தும் ஆண்களும் பெண்களும் நலமடைவர்.

ராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட தன் மனைவியை மீட்ட ராமபிரான் ராமேஸ்வரக் கடற்கரையில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து இறைவனின் பெருங்கருணைக்கு நன்றி கூறினார் என்பது மேலோட்டமான இறை லீலையாக இருந்தாலும் அடுத்து வரும் யுகங்களில் மனிதன் ஏகபத்னி விரதனாக வாழ்வது என்பது மனத்தளவில் இயலாத காரியமே என்பதால் மக்களின் இந்த இயலாமைக்கு பிராயசித்தம் பெறும் முறையாக இறை சக்தியை, காமேஸ்வர சக்தியை பிரதிஷ்டை செய்தார் என்தே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியமாகும். காமம் என்ற ஆசையே அனைத்து நோய்களுக்கும் மூலக் காரணமாக அமைவதால் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராடி இறை தரிசனம் பெற்று அக்னியில் சுட்ட சப்பாத்தி, ரொட்டி போன்ற பொருட்களை உருளைக் கிழங்கு போன்ற அக்னி பெருகும் கிழங்கு வகைகளுடன் சேர்த்து தானமளிப்பது எத்தகைய நோய்களையும் தீர்க்கும் அக்னி நிவாரண வழிபாடாக அமைகிறது. ராமேஸ்வரத்தில் திகழ்ந்த விபீஷணாழ்வார் பட்டாபிஷேகம் ஏதோ ஒரு யுகத்தில் ராமபிரானால் நிகழ்த்தப்பட்ட ஒரு வைபவம் கிடையாது. இன்றும் ராமபிரான் பிரதிஷ்டை செய்த கருட சக்திகள் என்னும் நோய் நிவாரண சக்திகள் இங்கு பெருமளவில் பொலிகின்றன என்பதற்கு நீங்கள் இங்கு தரிசனம் செய்யும் கருட மூர்த்திகளே சாட்சிகளாய், சான்றாய் அமைகின்றன. இத்தலத்தில் கருட காயத்ரீ மந்திரம் ஜபிப்பதை ஆரம்பித்து தொடர்ந்து நிறைவேற்றி வருதலால் வைத்தியர்கள் மட்டுமன்றி அனைத்து நோயாளிகளுமே நன்னிலை பெறுவர் என்பது உறுதி.

ஸ்ரீராமர் பட்டாபிஷேகத் திருக்காட்சி
திருஅண்ணாமலை

மனித உடலைத் தாண்டிய நிலையில் தங்கள் ஆத்மாவைப் பற்றிய அறிவைப் பெருக்கிக் கொள்ள உதவும் திருத்தலமே விபீஷணர் பட்டாபிஷேகத் திருத்தலமாகும். இங்கு உலவும் கருடன்கள் பத்து மைல்கள் சுற்றளவில் நகரும் ஜீவன்களின் அசைவைப் பற்றி அறிவது மட்டும் அல்லாமல் அவை இறந்து விட்டனவா அல்லது உயிரோடு இருக்கின்றனவா என்பதையும் அறிந்து கொள்ளும் வல்லமை உடையவையே. மனிதர்களைப் பொறுத்தவரையில் இன்பமும் துன்பமும் கலந்து செறிவதே மனித வாழ்வு என்ற அறிவை ஆத்ம விசாரத்தின் மூலம் பெறக் கூடிய இடமாகத் இத்தலம் திகழ்கின்றது. ஒரு முறை புதிதாகத் திருமணம் புரிந்து நம் சற்குருவைக் காண வந்த ஒரு அடியாரிடம், “சார், இன்பம் என்று நாம் நினைக்கும் ஒரு விஷயத்திலும் துன்பம் என்பது ஒரு துளி இருக்கத்தானே செய்கிறது, அதை அறிந்து கொண்டால் தெய்வீகம் என்றும் புதிர் அல்ல,” என்று தெய்வீகத்தைப் பற்றிய அற்புத இரகசியத்தை எளிமையாக விளக்கினார் நம் சற்குரு. அதே போல நோய் என்பதும் ஒரு சுவையே என்று உணர்ந்து கொள்ள உதவும் தலமே விபீஷண பட்டாபிஷேகத் திருத்தலமாகும். சக்கரவர்த்தித் திருமகனான ராமபிரான் கையால் பட்டாபிஷேகம் நிகழ்த்தப் பெறுவது என்றால் இதை விட பாக்கியம் பெற்ற ஒருவன் ஈரேழுலகத்திலும் இருக்க முடியாது என்பது உண்மையே என்றாலும் அந்த சந்தோஷம் பொங்கும் தருணத்திலும் தன் ஆருயிர் சகோதரர்களான ராவணன், கும்பகர்ணன் போன்றோர் இந்த வைபத்தில் பங்கு கொள்ள முடியவில்லையே என்று நினைப்பதும் ஒரு சிறிய வேதனைதானே. ஸ்ரீராமர் தான் அகில உலக சக்கரவர்த்தியாக பட்டாபிஷேகம் நிறைவேற்றிக் கொள்ளப்போகும் தருணத்தில் காட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற உத்தரவை ஏற்றபோது தான் ஒருவனாகவே தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யத் தயாராக இருந்தார். ஆனால் இறைவனோ மென்மையும் வன்மையும் உடைய சீதைப் பிராட்டியையும் லட்சுமண சுவாமியையும் உடனனுப்பி கருணை புரிந்தார் என்பதே நாம் தெரிந்து கொள்ள வேண்டியதாகும். இறைவனின் இந்தக் கருணையை நாம் நன்றாக உணர்ந்து கொண்டால் எந்த வியாதியையும் ஏற்கத் தயாராக, தயாராகவே இருப்போம் அல்லவா ?

பராய்த்துறை மேவிய பரன்

புற்று நோய் மட்டுமல்லாது தோல் கர்மங்கள் போன்ற பல கொடிய வினைகளால் ஏற்படும் விளைவுகளையும் தீர்க்கும் அபூர்வமான தலமே திருப்பராய்த்துறை ஆகும். பராய் என்னும் நோய் நிவர்த்தி சக்திகள் மிகுந்த அரிய மரத்தை தல விருட்சமாக உடைய திருத்தலமே திருப்பராய்த்துறை. வெள்ளி பஸ்மம், பவள பஸ்மம், தங்க பஸ்மம் போன்ற பஸ்மங்கள் தீராத பல நோய்களையும் தீர்க்கும் வல்லமை உடையவை. பஸ்மங்கள் என்பவை ஒரு பச்சிலையின் வீரிய சக்தியைப் போல் ஆயிரம் மடங்கு சக்தி உடையது ஆகும். பஸ்மங்களைப் போல் பல மடங்கு நோய் நிவாரண சக்தி உடையதே பாஷாணம் என்பது ஆகும். ஸ்ரீஐயப்பன் அருளும் சபரிமலை, நவபாஷாணத்தால் உருவான பழநி தண்டாயுதபாணி போன்ற தெய்வ மூர்த்திகள் அருளும் நோய் நிவாரண சக்திகள் பற்றி பலரும் அறிந்திருக்கலாம். இத்தகைய நவபாஷாணம் போன்ற நோய் நிவர்த்தி சக்திகள் போன்று பல மடங்கு சக்தி உள்ளதே பசும்பொன் என்ற நோய் நிவர்த்தி சக்தி ஆகும்.

திருப்பராய்த்துறை

பசும்பொன் என்ற நோய் நிவர்த்தி சக்தி பற்றி முழுமையாக அறிந்தவர்கள் சித்தர்கள் மட்டுமே. அதனால் சித்தர்கள் குலத் தோன்றலான நம் சற்குரு இத்தலத்தில் நோய் நிவாரண நாளில் (27ந் தேதி) திருப்பணிகள் இயற்றி நோய் நிவர்த்தி சக்திகளை புனருத்தாரணம் செய்தார் என்பதை அறிந்தோர் ஒரு சிலரே. வித்யா சக்தி, தாரண சக்தி, தாரணி போன்று சக்தி லோகங்கள் கோடி கோடியே. இவற்றில் பசும்பொன் சக்தி லோகம் தோன்றுவதற்கு காரணமாக அமைந்ததே திருப்பராய்த்துறை திருத்தலம் என்றால் இது ஒன்றே இத்தலத்தின் மகிமைக்கு உதாரணமாகத் திகழும் அல்லவா ? ஆதியில் இத்தலத்தில் சுயம்புமூர்த்தியான ஸ்ரீதாருகாவனேஸ்வரர் மட்டும் எழுந்தருளி இருந்தார். அன்னையை எழுந்தருளச் செய்வதற்கு பக்தர்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது அவர்கள் ஒரு சிக்கலை சந்திக்க நேர்ந்தது. இறைவன் ஆணைப்படி பசும்பொன் என்ற நோய் நிவர்த்தி உலோகத்தில் அம்மனை எழுந்தருளச் செய்ய வேண்டும். ஆனால் இந்த பசும்பொன்னை வார்த்தெடுக்கும் அச்சு சாதாரணமான களிமண்ணில் உருவாகாது. அதை ஒரு மனித அச்சில் அதாவது உயிருடன் இருக்கும் ஒரு மனிதனின் வாயைத் திறந்து ஊற்றித்தான் உருவாக்க முடியும். என்னதான் ஒரு இறை உருவத்தை வார்த்தெடுப்பதாக இருந்தாலும் தங்கள் உயிரை அதற்காக அர்ப்பணிக்க எவரும் தயாராக வர மாட்டார்கள் அல்லவா ? அப்படியே தங்கள் உயிரை தியாகம் செய்வதற்கு தயாராக இறை அடியார்கள் இருந்தாலும் கொதிக்கும் உலோகத்தை வாய்க்குள் ஊற்றிய பின் அது இறை விக்ரமாக உருப் பெற்று உறையும் காலம் வரை அந்த உஷ்ணத்தைத் தாங்கி இறை விக்ரஹம் தயாராகும் வரை தங்கள் உயிரை உடலில் நிறுத்தும் வல்லமை பெற்றவர்கள் யார் ? எல்லா தியாகங்களையும் ஏற்பவர்கள் சித்தர்களே என்பதால், எவரும் இந்த திருப்பணிக்கு முன் வராதபோது பசும்பொன் உலோகக் கலவையை தன் உடலில் தாங்கத் தயாராக இருந்தார் அந்த சித்தர். அவர் விருப்பப்படி அவர் வாய்க்குள் கொதிக்கும் உலோகக் கலவை ஊற்றப்பட்டு ஸ்ரீபசும்பொன் மயிலாம்பிகை தயாரானாள் என்பதே சித்தர்கள் அளிக்கும் அரிய சுவை. இவ்வாறு தன் உயிரைத் தியாகம் செய்ததால் இறைவன் பசும்பொன் லோகம் என்ற ஒரு லோகத்தை உருவாக்கி அந்த லோகத்தின் நிரந்தர மன்னனாக அவரை நியமித்தான் இறைவன். எனவே அதிக உஷ்ணத்தால், மருந்துகளின் ஆதிக்கத்தால் வயிற்றுப் புண், வாயில் ரணங்கள் போன்ற துன்பங்களால் வாடுவோர் இத்தலத்தில் ஸ்ரீபசும்பொன் சித்தரையும் ஸ்ரீபசும்பொன் மயிலாம்பிகையையும் வணங்கி பசு வெண்ணெய், சர்க்கரை கலந்து ஏழைக் குழந்தைகளுக்கு அளித்து வருதலால் நன்னிலை பெறுவர்.

ஸ்ரீதண்டாயுதபாணி திருப்பராய்த்துறை

ஸ்ரீபசும்பொன் சித்தருக்கு சுத்தமான விளக்கெண்ணெய் காப்பிட்டு தாமே அரைத்த சந்தனம், மஞ்சளால் பொட்டிட்டு வணங்குதல் சிறந்த வழிபாடாகும். திருப்பராய்த்துறை பிரகாரத்தை அடிப்பிரதட்சிணமாகவோ அல்லது மெதுவாகவோ பிரதட்சிணம் வருதல் என்பது அனைத்து விதமான நோய்களுக்கும் ஒரு பரிகாரமாக அமையும் என்பது உண்மையே. தாருகாவனம் என்னும் திருப்பராய்த்துறையில் இறைவன் ஆடைகளற்ற கோலத்தில் பவனி வந்தபோது அவன் பேரழகில் மயங்கி ரிஷி பத்னிகள் எல்லாம் இறைவன் பின்னால் சென்றார்கள் என்பது நாமறிந்த காவியமே. இறைவன் பின் செல்லுதல் என்பது வரவேற்கக் கூடியதே என்றாலும் அது காமத்தின் பொருட்டாக அமைந்ததால் இத்திருவிளையாடல் எதிர்காலத்தில் காமத்தால் மயங்கும் அடியார்களுக்கு ஒரு நிவர்த்தியாக அமையும் என்பதற்காக இறைவனால் வகுக்கப்பட்டதே ஆகும். தற்காலத்தில் அரைகுறை ஆடையுடன் திகழும் ஆபாசக் காட்சிகளால் மனம் தடுமாறும் இளைய சமுதாயத்திற்கு அவர்களுடைய தவறுகளுக்கு ஒரு பிராயசித்தமாக அமைவதுடன் அவர்களைத் திருத்தும் ஒரு திருத்தலமாக அமைவதும் திருப்பராய்த்துறை என்பதில் சந்தேகமில்லை. பசும்பொன் என்பது ஐந்து விதமான சக்திகளைத் தன்னுள் விரவிய தெய்வீக சக்தியாகும். பொன் என்பது தங்கத்தைக் குறிப்பதால் பசும்பொன் சற்குருவைப் பெற்றுத் தரும் வல்லமை உடையது. தற்காலத்தில் திருமண உறவுகளில் தங்கமே முதலிடம் பெறுவதால் திருமண நிகழ்ச்சிகளில் தங்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இத்திருத்தல அம்பிகையை நம்புவோர் நல்ல வரனைப் பெறுவர். தங்க பஸ்மம் போன்ற பலவகை பஸ்ம சக்திகளை நோய் நிவர்த்தி சக்திகளாக அளிக்கக் கூடியதே பசும்பொன். எத்தகைய கொடிய மனம் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் இத்தல மூர்த்திகளை தொடர்ந்து வழிபடுதலால் பொன் மனம் உடையவர்களாக மாறுவர். தியாகம் என்பதை ஆணி வேராக உடைய ஆணிப் பொன்னம்பலம் நடமிடும் இதயத்தை உடையவர்களாக அவர்கள் துலங்குவர். இத்தலத்தில் இறைவன் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரக் கோலத்தில் அருளாட்சி புரிகிறார். பொதுவாக, அர்த்தநாரீஸ்வரக் கோலம் என்பது பாதி ஆண், பாதி பெண் என்ற கோலத்தைக் கொண்டதாக மேலோட்டமாகப் புரிந்து கொண்டாலும் உண்மையில் ஆணும் பெண்ணும் கலந்து ஈருடல் ஓருயிராய்த் திகழ்வதே அர்த்தநாரீஸ்வரக் கோலமாகும். இது உண்மைதான் என்று உணர்த்துவதும் பசும்பொன்னின் திறமாகும். மேற்கூறிய ஐந்து சக்திகளையும் அனுகிரகமாக அளிக்கக் கூடிய அம்பிகையே ஸ்ரீபசும்பொன் மயிலாம்பிகை ஆவாள். இத்தகைய பசும்பொன் சக்திகளை புனருத்தாரணம் செய்வதற்காகவே பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று பெயர் கொண்ட புதன் கிழமை அன்று செவ்வாய் சந்திர சங்மத்தில் மூன்றாம் வீடான ரிஷபத்தில் மேற்கொண்ட புத ஆதித்ய சக்திகளை நிலைநாட்டினார் நம் சற்குரு என்பது மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம்தானே. இத்துடன் நிகழ்ந்த அற்புத நோய் நிவர்த்தி சக்தி பிரவாகமும் சுவையானதே. அன்று மாலை அகண்ட காவிரி என்று பெயர் கொண்ட, துலா நீராடல் உதிக்கும் திருப்பராய்த்துறை படித்துறையில் நீராடி நோய் நிவர்த்தி சக்திகளை இத்திருத்தலத்தைச் சுற்றிப் பதித்தார் நம் சற்குரு. எப்படி ?

ஸ்ரீபசும்பொன் சித்தர் திருப்பராய்த்துறை

ஸ்ரீபசும்பொன் மயிலாம்பிகை
திருப்பராய்த்துறை

நம் சற்குரு நீராடியபின் அவர் முதுகில் ஒரு பெரிய ஈ கடித்துக் கொண்டிருந்தது. தன் உடம்பில் கொசு, ஈ போன்ற எந்த ஜீவன் கடித்தாலும் அதற்கு விசிறி சேவை செய்வதையே தன் இயல்பாகக் கொண்ட சற்குரு அன்று ஆறு எழுத்துக்கள் கொண்ட ஒரு அடியாரை அழைத்து அந்த ஈயை விரட்டும்படி சொன்னார். அந்த அடியார் திகைத்து விட்டார். காரணம் அந்த ஈ நம் சற்குருவை கடித்து அவர் உடம்பிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு சாதாரண விஷயமாக இருந்தாலும் இதன் பின்னால் அமைந்த தெய்வீகக் கருத்தை சற்று விளக்கினால்தான் புரியும். மனிதர்கள்போல் அல்லாமல் மகான்கள், சித்தர்கள் போன்றோரை ஈ, கொசு போன்றவை கடிப்பது கிடையாது. மற்ற லோகங்களிலிருந்து வரும் தேவர்கள், கந்தவர்கள் போன்றோர் தங்கள் வாகனத்தை எங்காவது நிறுத்தி வைத்து விட்டு ஸ்ரீபோடா சித்தர், ஸ்ரீமாயம்மா போன்றோரை ஈ, கொசு, நாய் வடிவில் வந்து தரிசிப்பது உண்டு. அவர்கள் தங்கள் சுய உருவில் வந்தால் சுற்றி உள்ள மனிதர்கள், விலங்குகள் போன்றோரின் கண்கள் அவர்களுடைய தெய்வீக ஒளியைக் காண முடியாமல் குருடாகி விடும் என்பதால் அவர்கள் மேற்கொள்ளும் முன்னேற்பாடே இது. அவ்வாறு வரும் நோய் நிவாரண கந்தவர்கள் சிலரை மகான்கள் அழைத்து தங்கள் உடம்பில் குறித்த அளவு இரத்தத்தை உறிஞ்சி எடுத்து அதை நோய் தீர்க்கும் தலங்கள், மரங்கள், தீர்த்தங்கள், தரிசனங்கள் இவற்றில் கலந்து விடச் சொல்வது உண்டு. இவ்வாறு நம் சற்குரு நோய் நிவாரண சக்திகளை புனருத்தாரணம் செய்ய நினைத்ததால் காவிரி, பொன்னி என்ற மூன்று எழுத்து நதியில் நீராடி மூன்றெழுத்திற்கு குசாவான ஆறிற்கு உரிய சுக்ர பகவான் ரிஷப ராசியில் ஆட்சி கொள்ளும் தினத்தில் ஆறு எழுத்து சக்தி உடைய பராய்த்துறை திருத்தலத்தில் திருப்பணிகள் இயற்றி, ஆறு எழுத்து ஜீவியான ஈயால் அதாவது பசும்பொன் ரிஷியால் அந்த சக்திகள் அத்திருத்தலத்தைச் சுற்றி விரவப்பட்டன என்பதே நாம் அறிய வேண்டிய சித்த சுவையாகும். நம் சற்குரு அன்று புனருத்தாரணம் செய்த நோய் நிவாரண சக்திகள் குறைந்தது ஆயிரம் வருடங்களுக்கு திருப்பராய்த்துறை சிவத்தலத்தில் நிலவும் என்பது சந்தேகமில்லை. வெளிநாட்டில் ஒரு இளைஞர் சர்ச் ஒன்றில் மணி அடிக்கும் வேலை பார்த்து வந்தார். அந்த மாதாகோவில் பொறுப்பில் இருந்த பாதிரியார் அந்த இளைஞன் ஆங்கிலம் கற்றுக் கொண்டால்தான் வேலை நிரந்தரமாகும் என்று கூறவே அது முடியாமல் அவர் வேலையை விட்டு விலகி விட்டார். பின்னர் ஒரு சிகரெட் கடையை ஆரம்பித்து சிறிது சிறிதாக முன்னேறி உலகப் பணக்காரர்களில் ஒருவரானார்.

பராய்மரம் திருப்பராய்த்துறை

ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் திருப்பராய்த்துறை

இது கேட்பதற்கு ஒரு புத்திசாலித்தனமான முன்னேற்றம் போல் தோன்றினாலும் நம் முன்னோர்கள் இதை ஆதரிப்பதில்லை. இதே விஷயத்தை நம் சற்குரு எப்படி அணுகினார் என்று அறிவோமா ? ஒரு முறை தோல் பதனிடும் தொழிற்சாலை ஒன்றில் பணி புரிந்த ஒரு இளைஞன் நம் சற்குருவிடம் அடைக்கலம் புகுந்தார். அவர் சிறுவயது முதலே திருச்சி குளுமியானந்தா ஜீவ சமாதியில் பணியாற்றியதால் தெய்வீகத்தில் ருசி உடையவராக இருந்தார். துரதிர்ஷ்டவசமாக தோல் கம்பெனியில் பணியாற்றினாலும் நல்லிணக்கம் காரணமாக அவர் நம் சற்குருவின் வழிகாட்டுதலைப் பெற்றார். திருச்சியிலிருந்து நடந்தே திருப்பராய்த்துறைக்கு சென்று அங்குள்ள ஆலய மணியை தரிசனம் செய்து வர வேண்டும் என்பதே அந்த ஆறெழுத்து அடியாருக்கு சற்குரு இட்ட திருப்பணி. ஒரே ஒரு முறைதான் இந்த பரிகாரத்தைச் செய்தார், ஒரு அயல்நாட்டுக் கம்பெனியில் அவருக்குப் பணி கிடைக்கவே தன்னுடைய தோல் கர்மத்திலிருந்து நிரந்தர விடுதலை பெற்றார் அந்த அடியார். ஆலயமணியின் தரிசனமே ஒரு அடியாரின் கடுமையான தோல் கர்மாவை நிவர்த்தி செய்யும் சக்தியை உடையது என்றால் அந்த மணி ஓசையைக் கேட்டு அத்திருத்தல மூர்த்திகளை முறையாக தரிசனம் செய்வதால் நமக்குக் கிட்டும் பலன்களை வார்த்தைகளால் வர்ணிக்க இயலுமா ? எச்சில், திருஷ்டி கழிப்பு, தீட்டு போன்ற பலவிதமான கர்ம வினைகளால் நம் உடலில் எதிர்மறை சக்திகள் சேர்வதால் நாம் அடிக்கடி நோய் வாய்ப்படுகிறோம் என்பதால் வீட்டை விட்டு வெளியே போகும்போதெல்லாம் காலில் செருப்புப் போட்டுக் கொள்ளும் பழக்கத்தை நாம் கைக்கொண்டாலும் இதையும் மீறி பல தீய வினைகள் நம்மைத் தொற்றிக் கொள்ளத்தானே செய்கின்றன. இதற்கு நிவாரணமாக அமைவதே கட்டை செருப்பை அணிந்து கொண்டு திருத்தலங்களை தரிசனம் செய்வதும், மரச் செருப்புகள் என்னும் பாதக் குறடுகளை அவற்றைப் பயன்படுத்துவோர்களுக்கு தானமாக அளிப்பதும் ஆகும். அபூர்வமாக திருப்பராய்த்துறையில் அருள்புரியும் ஸ்ரீதண்டாயுதபாணி இத்தகைய குறடுகளுடன் தரிசனம் அளிப்பதால் மரச் செருப்புகளை இத்தலத்தில் தானமாக அளிப்பது அரிய நோய் நிவாரண சக்திகளை அளித்து, குறிப்பாக இனந் தெரியாத காய்ச்சல், தோல் வியாதிகள் போன்றவற்றிற்குப் பரிகாரமாக அமைகிறது. திருப்பராய்த்துறை திருத்தலத்தில் பாதணிகளை ஸ்ரீதண்டாயுதபாணிக்கு சமர்ப்பித்து அவற்றைக் குருபிரசாதமாகப் பாவித்து தங்கள் இல்லங்களில் தொடர்ந்து பூஜிப்பதால் கிட்டும் பலன்கள் அளப்பரியன. நோய் நிவாரண சக்திகளை அளிப்பதோடு பெண்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் ஒரு கவசமாக இவ்வழிபாடு அமையும் என்பதில் சந்தேகமில்லை.

கிரகமண்டலம் திருப்பராய்த்துறை

ஸ்ரீபரளி விநாயகர் திருப்பராய்த்துறை

நவகிரகங்களை நட்சத்திரப் பூக்கள் என்று சித்தர்கள் அழைப்பர். நட்சத்திரங்களும் அவ்வாறு அழைக்கப்படுவது உண்மையே. மனிதர்களைப் போலவே நட்சத்திரங்களுக்கும், நவகிரகங்களுக்கும் ஒளியும் மணமும் உண்டு. இதைப் பற்றிக் குறிப்பிடும்போது சாதாரண மனிதர்களில் உத்தம பெண்களுக்கே இயற்கையான மணம் வீசும்போது நவகிரகங்களுக்கு மணம் வீசாதா என்ன என்று கேட்பார் நம் சற்குரு. இவ்வாறு கிரகங்கள் தங்களுக்குரிய மணத்தைப் பெற்ற இடமே திருப்பராய்த்துறை ஆகும். இந்த கிரக மண்டலங்களுக்கு அடியிலோ அல்லது திருத்தலத்தில் ஏதாவது ஒரு இடத்தில் இந்த நவகிரக மண்டலத்தை பச்சரிசி மாவினால் வரைந்து அதைச் சுற்றி ரோஜா, மல்லிகை அல்லது முல்லை, செம்பருத்தி பூக்கள் ஒவ்வொன்றும் 36ன் மடங்காக இருக்கும்படி வைத்து வேயுறு தோளி பங்கன் போன்ற நவகிரக துதிகளை ஓதி வழிபடுவது அற்புத நோய் நிவாரண சக்திகளை சமுதாயத்தில் வர்ஷிக்கும். இது அற்புத நோய் நிவர்த்தி வழிபாடாக அமைவதால் இறை அடியார்கள் ஒன்று சேர்ந்து கூட்டாகவோ அல்லது குறைந்த பட்சம் தங்கள் குடும்ப அங்கத்தினர்கள் அனைவருடனும் சேர்ந்து வழிபடுவதே சிறப்பாகும். திருப்பராய்த்துரைக்கு எதிரே உள்ள காவிரி அகண்ட காவிரி என்று பெயர் பெற்றுள்ளதால் தற்போது ஒவ்வொரு ஐப்பசி மாதம் நிகழும் துலா நீராடிலில் முதல் நாளை இங்கு நீராடுவதற்காக பக்தர்கள் அனுஷ்டித்து நோய் நிவாரண சக்திகளைப் பெற்று வருகிறார்கள். அகண்ட என்றால் அகலாமானது என்று மட்டுமல்லாமல் இடைவெளி இல்லாதது என்ற பொருளும் உண்டு அல்லவா ? இறைவனின் நாமத்தையோ, வழிபாட்டையோ, விரதத்தையோ இடைவெளி இல்லாமல் தொடர்ந்து முறையாக அனுஷ்டிக்க வேண்டும் என்ற விருப்பத்தை உடையவர்கள் அத்தகைய நியாயமான பிரார்த்தனைகளை இத்திருத்தலத்தில் ஏற்று வருதல் சிறப்பாகும். ஸ்ரீஅகண்டநாம மகரிஷி என்ற மகரிஷி ஸ்ரீபரளி விநாயகர் திருவடிகளில் ஜீவ சமாதி கொண்டு அருள்பாலிப்பதால் பக்தர்களின் அனைத்து “அகண்ட” பிரார்த்தனைகளும் நல்முறையில் நிறைவேற இவர் திருவருள் பெருந்துணை புரியும். தனக்குப் பின் தன்னுடைய சொத்து, நிலபுலன்கள் வீணாகாமல், திருடப்படாமல் நன்முறையில் தம் சந்ததிகளுக்குப் போய்ச் சேர வேண்டும் என்று நினைப்பதும் ஓர் அகண்ட பிரார்த்தனைதானே.

ஊர்த்துவ தாண்டவம் திருப்பராய்த்துறை

ஸ்ரீகாளி தேவி திருப்பராய்த்துறை

தன்னைப்போல் தன்னுடைய சந்ததிகள் அனைவரும் ஒருவர் கூட பாக்கியில்லாமல் இறைவன் திருவடிகளை அண்டி நிரந்தரமாக வாழ வேண்டும் என்ற நினைப்பதும் ஒர் அகண்ட பிரார்த்தனைதான். இவ்வாறு அகண்ட இறை நினைவு கூடும்போதுதான் அது தியானமாக மலர்ந்து சமாதி கூடி இறை தரிசனம் பூர்ணம் அடைகின்றது. அவ்வாறு பக்தன் பெறும் இறைத் துறையே பராய்த் துறை. பக்தன் பெறும் முதல் இறை தரிசனமே ஜோதி வடிவில்தான் அமைகிறது. இதைக் குறிப்பதே ஜார்கண்ட் மாநிலத்தில் அமையும் வைத்தியநாத லிங்க தரிசனமாகும். இந்த ஜோதி லிங்கம் முழுவதுமே பரளி ஜோதியாகத் திகழ்வதே சிறப்பாகும். இவ்வாறு திருஅண்ணாமலையை லட்சக் கணக்கான நட்சரத்திரங்கள் சூழும் ஒளிப் பிழம்பாக தரிசனம் பெற்றவரே ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஆவார். ஸ்ரீபரளி விநாயகர் வழிபாடு இத்தகைய ஜோதி வழிபாடுகளுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்வதால் குறைந்தது 12 ஜோதிகளை, அகல் தீபங்களை ஏற்றி ஸ்ரீபரளி விநாயகர் மூர்த்தியை வழிபடுவது சிறப்பாகும். பராய் என்பதும் பரளி போன்ற ஒரு ஒளி தரிசனமே. திருப்பராய்த்துறையை வலம் வந்து பராய் மரத்திற்கு தாமே அரைத்த மஞ்சள், சந்தனம், குங்குமம் பொட்டிட்டு வணங்குதல் எளிய முறையில் இந்த பராய் ஜோதி தரிசனத்தைப் பெறும் முறையாகும். திருத்தலங்களில் எல்லாம் இறைவழிபாட்டின் போது,
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
என்று முழங்குவது இத்தகைய பராய் ஒளி சக்தியை அனைவரும் பெறுவதற்காகவே என்பது இப்போது தெளிவாகின்றது அல்லவா ? சிவலிங்கம், அம்பாள், முருகன், கோபுரம், ஆண், பெண் என்று திருத்தலங்களில் நாம் காணும் காட்சிகள் அனைத்தும் தத்துவத்தின் வெளிப்பாடுகளே, மாயத் தோற்றங்களே. தத்துவங்களைப் புரிந்து கொண்டால்தான் நாம் உண்மையான இறை தரிசனத்தைப் பெற முடியும். அதுவரையில் பராய், பரளி, இறை தரிசனம் என்பவை எல்லாம் வெறும் வார்த்தைகளே. இந்த வார்த்தைகள் வெறுமனே மறைந்து விடாமல், அர்த்தமற்றுப் போய் விடாமல் இருப்பதற்காக தன் இரத்தத்தையே சிந்தினார் பராய்த்துறை மண்ணில் நம் சற்குரு. இந்த வரிகளைப் படிக்கும் நீங்கள் ஒரே ஒருவர் முயன்றால் போதும் இந்த வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்து விடலாம் !!

ஒரு முறை நம் சற்குருவின் பிறந்த நாள் வைபவத்தின்போது ஒரு அடியார் இத்தலத்தில் மாங்கல்ய தானம் அளிப்பதற்காக இரண்டு மாங்கல்யங்களுடன் வந்தார். அப்போது அங்கிருந்த ஒரு கணவன் மனைவிக்கு ஒரு மாங்கல்யத்தை அளித்த பின் மற்றொரு பெண்மணியும் மாங்கல்யத்தை கேட்கவே தம்பதிகளுக்கே அத்தகைய தானங்கள் அளிக்கப்படும் என்று கூறவே அந்தப் பெண்மணியும் சற்று நேரத்தில் தன்னுடைய கணவனுடன் அங்கு வருவதாகக் கூறி அந்த இடைவேளையில் வேறு யாருக்கும் மாங்கல்யத்தை கொடுத்து விட வேண்டாம் என்ற வாக்குறுதியையும் பெற்றுக் கொண்டு வேகமாக அங்கிருந்து புறப்பட்டாள். சுமார் பதினைந்து நிமிடங்கள் கழித்த பின்னர் தன்னுடைய கணவனுடன் அந்தப் பெண் திரும்பி வந்து அந்த மாங்கல்ய தானத்தை அளிக்கும்படிக் கேட்டுக் கொண்டாள். அந்த அடியாருக்கோ இக்கட்டான சூழ்நிலை. காரணம் அந்தப் பெண்மணியின் கணவர் சராராயம் அருந்திய போதையில் இருந்ததுதான். சற்று நேரம் யோசித்த அடியார் அனைத்தும் கடவுள் விருப்பமே என்று தெளிந்து அந்தக் கணவனிடம் மாங்கல்யத்தை அளிக்க அவனும் போதையிலேயே அந்த அடியார் சக அடியார்களுடன் ஸ்ரீராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம் என்ற சுக்ர சக்திகள் மிகுந்த மந்திரத்தை ஓத மாங்கல்ய தானம் இனிது நிறைவேறியது. சுமார் மூன்று வருடங்கள் கழிந்தன. மீண்டும் அந்த அடியார் ஒருவரின் புற்று நோய் நிவாரணத்திற்காக திருப்பராய்த்துறை தலத்திற்கு செல்ல நேர்ந்தபோது அதே பெண்மணி கண்களில் நீர் மல்க அந்த அடியாரின் காலில் வீழ்ந்து வணங்கினாள்.

பிறர் நம் காலில் விழுந்து வணங்குவதை மனத்தளவில் அந்த அடியார் ஏற்கா விட்டாலும் வேறு வழியின்றி அந்த மரியாதையை ஏற்றுக் கொண்டு அந்த பெண்மணியின் இந்த எதிர்பாராத செய்கைக்கு காரணத்தை கேட்கவே அந்தப் பெண்மணியும் தான் அந்த தலத்தில் மூன்று வருடங்களுக்கு முன் மாங்கல்யத்தை தானமாகப் பெற்றதாகவும், மொடாக் குடியனாக இருந்த தன் கணவன் அந்த மாங்கல்ய தானத்தால் திருந்தி விட்டதாகவும் அன்று முதல் குடிப்பழக்கத்திற்கே முற்றுப் புள்ளி இட்டு இன்று வரை திருந்திய நல்ல மனிதனாக, பொறுப்புள்ள கணவனாக மாறி விட்டதாகவும் தெரிவித்தாள். இதுவே பரளி ஜோதியின், பரளி விநாயகர் வழிபாட்டின் மகிமையாகும். கனவிலும் நினைக்க முடியாத இந்த தாம்பத்ய உறவை ஏற்படுத்திக் கொடுத்தது அந்த அடியாருக்கு குரு மேல் உள்ள நம்பிக்கையா, இல்லை அந்தப் பெண்மணிக்கு இறைவன் மேலுள்ள நம்பிக்கையா, இல்லை சற்குருவின் பிறந்த நாளில் கூடிய பரளி ஜோதியின் மகிமையா, இல்லை இவை அனைத்தும் திருப்பராய்த்துறை திருத்தலத்தில் பொலிந்த பரன் மகிமையா, அதை அந்த பரனே அறிவார்.

மாயைகளும் மாற்றங்களும்
திருப்பராய்த்துறை

இறைவனை தரிசனம் செய்ய உதவும் பல சாஸ்திரங்களில் தந்திர சாஸ்திரம் என்ற ஒரு சாஸ்திரம் உண்டு. மக்களால், அதுவும் கலியுக மக்களால் பெரிதும் குழப்பிக் கொள்ளப்பட்ட சாஸ்திரம் இதுவாகும். இந்த சாஸ்திரத்தில் கைதேர்ந்தவரே ஜனக மகாராஜா ஆவார். அக்காலத்தில் தான் என்ற அகந்தையை அழிக்க சாராயத்தையும், தந்திர சாஸ்திரத்தில் வரும் ஆண் பெண் உறவை இளம் பெண்கள் மூலமாகவும் ஏற்படுத்தி தந்திர சாஸ்திரத்தை முறையாக மக்களுக்கு போதித்து வந்தவரே ஜனக மகாராஜா. யுகங்கள் செல்லச் செல்ல தந்திர கோட்பாடுகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற மகான்கள் சாராயம், பெண்கள் சம்பந்தம் இல்லாமலே தந்திர சாஸ்திரம் கூறும் தத்துவங்களை நடைமுறைப்படுத்த முடியும் என்று நிரூபித்துக் காட்டினர். ஸ்ரீராமகிருஷ்ணர் பரமஹம்சர் என்ற பட்டத்தைப் பெறுவதற்கே இந்த அணுகு முறையே முக்கிய காரணமாக இருந்தது என்பதைப் பலரும் அறிவர். அதே சமயம் தந்திர சாஸ்திரம் என்பது பொய்யாகாது என்று தற்காலத்தில் முயன்றால் கலியுக நியதியாக அந்த அணுகு முறையில் தோல்வியைத்தான் சந்திக்க நேரிடும் என்பதை தன் வாழ்க்கை மூலம் மற்றவர்களுக்கு ஒரு பாடம் புகட்டியவரே பகவான் ரஜனீஷ் ஆவார். ஆண் பெண் என்பது அனைவர் மனதிலும் உடலிலும் வியாபித்துள்ள ஒரு தத்துவமே. இந்த தத்துவத்தை நடைமுறைப்படுத்தி மக்கள் சமுதாயம் இனிது வாழ, வழிகாட்ட சித்திரங்களாக, சிலைகளாக வடித்துத் தந்தவர்களே நம் முன்னோர்கள். காஜுராஹோவில் உள்ள சிற்பங்கள் எல்லாம் இந்த பொதுப்படையான நல்வாழ்வை அடிப்படையாகக் கொண்ட தியாகச் சின்னங்களே. நம் திருத்தலங்களில் உள்ள புணர்ச்சி சிற்பங்கள் எல்லாம் இந்த அடிப்படை கருத்தை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டவையே. ஆனால், இந்த மையக் கருத்தை மனித மனம் ஏற்காது என்பதை உணர்ந்த சித்தர்கள் நமக்கு அளித்த அற்புத வழிபாடே ஸ்ரீஅகத்தியர் அருளிய 32 தேவாரப் பதிகங்களாகும். இல்லறத்தில் திகழும் ஒரு ஆணும் பெண்ணும் ஒருவர் கையை ஒருவர் கோர்த்துக் கொண்டு இந்த 32 பதிகங்களையும் ஓதும்போது அது 64 பதிகங்களாக மாறும் அல்லவா ? இதுவே பெண் உடலில் 30 கலைப் பரல்களாக, சந்திர அமுத சக்திகளாக உள்ள ஒளிக் கிரணங்களை, சக்தி கூறுகளை ஆண் சக்தியுடன் சேர்த்து பிரபஞ்சத்திற்கு அளிக்கும் அற்புத வழிபாட்டு முறையாகும். இந்த வழிபாட்டின் பூரணமாகத் திகழ்வதே பரளி ஒளி தரிசனம் ஆகும். இதை அளிக்கக் கூடியதே ஸ்ரீபரளி விநாயகர் வழிபாடு. தினமும் காலையோ மாலையோ குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் வீட்டில் விளக்கேற்றி ஒருவர் கையை ஒருவர் கோர்த்துக் கொண்டு ஸ்ரீஅகத்தியர் தேவாரத் திரட்டுப் பாக்களை குறைந்தது அரை மணி நேரம் ஓதி வருவதால் அவர்களால் பரளி ஜோதி தரிசனத்தைப் பெற முடிகிறதோ இல்லையோ நிச்சயம் குடும்பத்தில் சாந்தம் தவழும், அமைதி குடி கொள்ளும். பல பிறவிகளில் தந்திர சாதனை அளிக்கும் வழிபாட்டுப் பலனை ஒரு சில மாதங்களிலேயே ஒரு சாதாரண மனிதன் பெற முடியும் என்றால் இதற்கு வழிகாட்டிய நம் சற்குருவிற்கு நாம் எப்படித்தான் நன்றி கூற இயலும் ?!

இவ்வளவு சிரமப்பட்டு பரளி ஜோதி தரிசனம் பெறுவதால் என்ன பலன் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா ? நம் பரமகுரு ஸ்ரீஇடியாப்ப சித்தர் பிரான், “ஒரு அணுகுண்டு போட்டு அதில் லட்சம் பேர் உயிரிழப்பது சாதனை அல்ல, ஒரு அணுகுண்டு போட்டு அதன் பலனாய் ஆயிரம் நெல் மூட்டை விழுந்தால், அதுதான் சாதனை,” என்பார். அது போல பரளி சக்தியை ஆக்கப்படுத்தத் தெரிந்தவர்கள் ஒரு விநாடியில் ஆயிரம் மூட்டை என்ன லட்சம் மூட்டை நெல்லை கூட குவிக்க முடியும். ஆனால் இத்தகைய சக்தி பெற்றவர்கள் இறை ஆணையின்றி இத்தகைய காரியங்களை நிறைவேற்ற முயற்சிப்பது கிடையாது. பரளி ஜோதியின் விளைவாகவே திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார் போன்ற அடியார்கள் எல்லாம் தங்க நாணயங்களை சிவ பரிசாகப் பெற்று பஞ்சத்தில் வாடிய மக்களின் கடும்பசியை தீர்த்தார்கள் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம். எப்படி குரு இல்லாமல் குண்டலினி போன்ற யோகங்களை கற்கும் அடியார்கள் பலவித உடல் வேதனைகளால் அவதிப்படுகிறார்களோ அது போல அவர்கள் இப்பிறவியில் அதீத உஷ்ணத்தால் அனுபவிக்கும் வேதனைகளில் ஒன்றே பரளி அல்லது பிரளி வயிற்று வலி என்பதாகும். பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் தாக்கும் வேதனையாக இது இருப்பதால் காரணமில்லாமல் தொடர்ந்து குழந்தைகள் அழும்போது திருப்பராய்த்துறை ஸ்ரீபரளி விநாயகருக்கு நல்லெண்ணெய் காப்பிட்டு 108 பூரணக் கொழுக்கட்டைகளைப் படைத்து சிறுவர்களுக்கு தானம் அளித்தலால் வயிற்று வலியால் வாடும் குழந்தைகள் நலமடைவர்.

கமார் வெற்றிலை மாலையில்
ஜொலிக்கும் ஆஞ்சநேயர்

சனிக் கிழமைகளில் ஆஞ்சநேயர் குறிப்பாக உய்யக்கொண்டான்மலை ஆஞ்சநேயர், அர்த்தநாரீஸ்வரர் குறிப்பாக பராய்த்துறை ஈசன், விநாயகர் குறிப்பாக பரளி விநாயகர் போன்ற இறை மூர்த்திகளுக்கு கமார் வெற்றிலையில் ராம ராம என்று சந்தனக் குழம்பால், சந்தனக் குச்சி கொண்டு அல்லது வெள்ளி, தங்க மோதிரங்கள், வெற்றிலை காம்பு கொண்டு எழுதி சாற்றுவதால் குடும்ப ஒற்றுமை ஏற்படுவதுடன் முரட்டுத்தனமுள்ள உள்ள குழந்தைகள் திருந்தி வாழ உதவும் வழிபாடும் இதுவாகும். சிவ சக்தி தத்துவங்களை இணைப்பதாகவும், ஆண் பெண் தத்துவங்களை இணைக்கும் ஈர்ப்பு சக்தியாகவும், அத்வைத தத்துவத்தில் பர தத்துவம் என்ற வெற்று இலை தத்துவமாகவும் மலர்வதே கமார் வெற்றிலையாகும். வெள்ளிக் கிழமைகளில் கை நிறைய கமார் வெற்றிலைகளை எருமை மாடுகளுக்குத் தானமாக அளித்தலால் வாகன விபத்துகள் தவிர்க்கப்படும். சதா சண்டை சச்சரவுடன் திகழும் தம்பதியர் இவ்வாறு கமார் வெற்றிலையுடன் கொட்டைப் பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து தானமளித்தலால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்க்கைப் படகைச் சீராக செலுத்த இத்தகைய தானங்கள் சாதகமாய் அமையும். குறைந்தது ஐந்து வெற்றிலைகளையும் நான்கு கொட்டைப் பாக்குத் துண்டையும் சேர்த்து தானமளித்தல் சிறப்பு. பலரும் தற்போது தூள் பாக்கை இறை வழிபாட்டிற்கும் தான தர்மங்களுக்கும் பயன்படுத்துகின்றனர். குடும்பங்கள் சிதறிப் போவதற்கு இத்தகைய வழிபாடுகளும் ஒரு காரணமே என்பதை உணர்ந்து கொள்ளவும். பீம ரத சாந்தி என்ற வைபவத்தை, அதாவது 70 வயது பூர்த்தி நிறைவை தனியாகவே கொண்டாடியதாக ஒருவர் தெரிவித்தபோதுதான் சற்குரு இவ்வாறு தூள் பாக்கை இறை வழிபாட்டிற்கு பயன்படுத்துவதால் வரும் இத்தகைய துன்பங்களை எடுத்துரைத்தார். பக்தர்கள் இவ்விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கும்படிக் கேட்டுக் கொள்கிறோம். வாழை இலையில் சூடான காலிபிளவர் பஜ்ஜி, ரோஜா மொக்கு சேர்ந்த சூடான தேநீர், வெற்றிலை பாக்கு தானம் ஒரு இனிய வரப் பிரசாதமே. இல்லற வாழ்வு ருசிக்கும். முயன்று பாருங்களேன். தற்காலத்தில் பலரும் பிறந்த நாள் வாழ்த்து கூறும்போது மலர்க் கொத்து அன்பளிப்பு (flower bouquet gift) என்பதாக வாசனை உள்ள மலர்களையும் வாசனை இல்லாத மலர்களையும் சேர்த்து அளிக்கிறார்கள். இதனால் எந்த அளவு அந்த அன்பளிப்பில் வாசனை இல்லாத மலர்கள் சேர்கின்றனவோ அந்த அளவிற்கு அவர்களுடைய வாழ்க்கையும் பயனற்றுப் போய்விடும் என்பது உண்மையே. இதைத் தவிர்க்க மேற்கண்ட முறையில் நவகிரக மண்டலத்தையோ, நவகிரக சஞ்சார கோலத்தையோ தங்கள் இல்லங்களிலோ சிறப்பாக திருப்பராய்த்துறை திருத்தலத்தில் வரைந்து மேற்கூறிய வழிபாட்டில் பயன்படுத்திய ரோஜா, செம்பருத்தி போன்ற மலர்களை தேநீரில் போட்டு அளித்தலால் அது இத்தகைய “தங்கத் தானம்” வாழ்த்துரை பெறும் அன்பர்கள் வாழ்வை மலரச் செய்யும்.

இடையினத்தில் இடையினம்

குழந்தை பிறந்தவுடன் மருத்துவர் உட்பட அனைவரும் குழந்தையின் இடைப்பகுதியைப் பார்த்தே அது ஆண் அல்லது பெண் குழந்தை என்று கூறுகின்றனர். முற்காலத்தில் பெரியோர்கள், பாட்மொர்கள் கர்ப்பிணிப் பெண்கள் எந்தப் பக்கம் சாய்ந்த நடக்கிறார்களோ, எந்தக் கையை தரையில் ஊன்றி அமர்கிறார்களோ அல்லது எழுந்திருக்கிறார்களோ அதை வைத்து பிறக்கும் குந்தையைப் பற்றி தெரிவிப்பர். இதுவும் குழந்தைகளின் இடைப் பகுதியின் சஞ்சார சக்தியின் வியாகமே. இவ்வாறு தாருகா என்று சக்தியின் வெளிப்பாடாக தோன்றிய திருத்தலமே தாருகாவனம் என்று பெயர் பெற்ற திருப்பராய்த்துறை திருத்தலமாகும். பராய் சக்தி, பரளி சக்தி, தாருகா சக்தி என்ற மூன்று சக்திகள் பொலியும் திருத்தலத்தில் பராய் சக்தி நடு சக்தியாய்த் துலங்க, பரளி சக்தி இடை சக்தியாய் மிளிர தாருகா சக்தி ஆரண சக்தியாகத் திகழ்வதே திருப்பராய்த்துறை தலத்தின் சிறப்பாகும். விகாரி என்ற மூன்று எழுத்து வருடத்தில் இந்த மூன்று சக்திகளின் நடுமையமாகத் திகழும் ‘ர’ அட்சரத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பது பெரியோர்களின் விருப்பம் போலும். விகாரி இடையினத்தில் வல்லினம் நடுநாயகமாகத் திகழ ரகரம் இடையினத்தில் இடையினம் நடுநாயகமாகத் திகழ்வதே அதன் சிறப்பாகும்.

ஸ்ரீமுருகப் பெருமான் திருப்பராய்த்துறை

தாருகா சக்திகளைப் பற்றி ஓரளவாவது தெரிந்து கொண்டால்தான் சிவபெருமான் காளிக்கும் இடையே நடந்த நர்த்தன போட்டியைப் பற்றி நாம் அறிந்து கொள்ள முடியும். சிவபெருமான், காளி இவர்களில் யார் பெரியவர் அதாவது நடனத் திறமை உள்ளவர் என்று நிருபிப்பதற்காக இருவருக்கும் இடையே போட்டி நடந்தது அல்லவா ? அனைத்து அண்டங்களிலும் தூள் பறக்க, நெருப்புக் கோளங்கள் மின்ன, இடிகள் முழங்க பரனும் காளியும் நடனம் புரியத் தொடங்கினர். சிவனும் சக்தியுமே நடனமிடத் தொடங்கினால் அதில் எவர் சிறந்தவர் என்று எவரால் முடிவு கூற இயலும் ? திருப்பராய்த்துறையில் அருள்புரியும் அனல் பறக்கும் கோலத்தில் பொலியும் சிவபெருமான் காளி இவர்களின் முக பாவமே இதற்குச் சான்றாய் அமையும். யுகங்கள் கணக்கில் இருவர் நாட்டியமும் தொடர இதற்கு ஒரு முடிவைக் கொண்டு வர வேண்டும் என்ற காரணத்திற்காக சிவபெருமான் தன் வலது காலைத் தூக்கி ஊர்த்துவ தாண்டவம் என்ற தாண்டவத்தை ஆடத் தொடங்கவே பெண்ணாகிய காளி தேவி தான் அவ்வாறு நடனமாட முடியாது என்பதால் வெட்கித் தலை குனிந்து தன் தோல்வியை ஒப்புக் கொண்டாள். இது பொதுவாக நாம் புராணங்கள், தல புராணங்கள் வழியாக அறியும் செய்தி. ஆனால் சித்தர்களின் முடிவுதானே எதிலும் இறுதி முடிவைத் தெரிவிக்க வல்லது. சித்தர்களோ போட்டி என்று வந்து விட்டால் அதில் ஆண் என்ன பெண் என்ன, காலைத் தூக்கி ஆடுவதும் நடனத்தின் ஒரு கோலமாக இருப்பதால் இதை ஒதுக்கி, காளி தன் தோல்வியை ஒப்புக் கொண்டாள் என்பது கிடையாது. சிவபெருமான் தாருகா சக்தி என்ற சக்தியை பிரயோகம் செய்து விண்ணுக்கும் மண்ணிற்குமாக நிற்க அத்தகைய விஸ்வரூபத்தை சக்தியால் சிவனருளின்றி எடுக்க முடியாது என்பதால் காளி தேவி தன் தோல்வியை ஒப்புக் கொண்டாள் என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஊர்த்துவ தாண்டவக் கோல இரகசியமாகும். இதுவே பிற்காலத்தில் ஆணிற்கு அடங்கியவள் பெண் என்றவாறாக சமுதாயத்தில் பரிமளித்தது. பெண் தத்துவத்தை உள்ளடக்கியதே ஆண் தத்துவம், ஆணுக்கு பெண் அடங்கியவள் என்ற தவறான பொருள் அறியாமையால் ஏற்பட்டதே. ஓங்காரம் என்னும் பிரணவத்தில் 1008 பீஜாட்சர சக்திகள் மறைந்துள்ளன. இவற்றில் அ, ஆ, உ என்ற மூன்று முக்கிய பீஜாட்சர சக்திகள் திருப்பராய்த்துறையில் மட்டுமே தோன்றின என்றால் இத்தலத்தின் மகிமையைப் பற்றி எப்படி மேலும் சிறப்பிக்க முடியும் ? பரளி, பராய், தாருகா என்ற வார்த்தைகளில் இடையில் இடையினமாய் தோன்றிய சக்திகளே இவையாகும். இந்த பீஜாட்சர சக்திகளை ஈர்க்கும் ஆயிரமாயிரம் வழிபாட்டு முறைகள் இருந்தாலும் இதில் சித்தர்கள் அளிக்கும் பராய் முருகனின் பாந்தவ வழிபாடே அனைத்திலும் எளிய முறை திகழ்கிறது.

தாருகா ஜோதி திருப்பராய்த்துறை

பிறை வடிவில் மருதாணி, தேங்காய் எண்ணெய், செம்பருத்தி என்ற மூன்று தைலங்களில் ஏதாவது ஒரு தைலத்தால் ஒன்பது தீபங்களை ஏற்றி அல்லது இந்த மூன்று தைலங்களில் ஒவ்வொரு தைலத்திற்கும் மூன்று தீபங்களை ஏற்றி கோபுர வடிவிலோ அல்லது பிறை வடிவிலோ அகல் தீபங்களை அமைத்து இத்தலத்திற்கு உரிய திருப்புகழ் பாடலை அல்லது ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத வடிவேலா போற்றி என்று ஓதி வழிபடுதல் நன்று. இந்த வழிபாட்டை திருப்பராய்த்துறை திருத்தலம் என்றில்லாது வள்ளி தேவயானை முருகப் பெருமானுடன் எழுந்தருளியிருக்கும் எல்லா திருத்தலங்களிலும் இயற்றி பயன்பெறலாம்.
கிர்லியன் படங்கள் மூலமாக மனித உடலில் பல வருடங்களுக்குப் பின் தோன்றக் கூடிய கட்டிகள், புற்று நோய் பற்றி தெளிவாக அறியலாம் என்று விஞ்ஞானம் கூறினாலும் இவற்றைத் தடுக்கும் முறைகளைப் பற்றி ஆன்மீகத்தில் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். இதற்கு உதவி செய்வதே திருத்தலங்களில் இறை மூர்த்திகளைக் கண்ணாடியில் தரிசனம் செய்யும் காட்சிகளாகும். இத்தகைய தரிசனங்களைப் பக்தர்கள் பெறுமளவிற்கு அவர்களுடைய சூட்சும தேகத்தைப் பற்றிய அறிவு விருத்தியாகும். வியாதிகள் அனைத்தும் முதலில் சூட்சும தேகத்தில் தோன்றுவதால் ஆரம்பத்திலேயே இந்த வியாதிகளைக் குணமாக்கவும் முடிந்தால் தடுத்து நிறுத்தவும் முடியும் அல்லவா ? திருப்பராய்த்துறையில் அபூர்வமாகப் பொலியும் பராய், பரளி, தாருகா என்ற மூன்று சக்திகளை இணைக்கும் வழிபாடாகவும் பிரணவ ஒலி என்ற ஓங்கார ஒலியின் சக்தியைப் பெறும் முறையாகவும் ஒரு வழிபாட்டை சித்தர்கள் அருளியுள்ளனர். மூவிதழ்ஜோதி வழிபாடு என்ற இந்த பிரார்த்தனையில் முதலில் ஸ்ரீபரளி விநாயகரை வணங்கி, திருக்கோயிலுக்குள் சென்று பராய் மரத்தை வணங்கி, பின்னர் முருகப் பெருமானையும் கோபுரங்களையும் தரிசனம் செய்து, பின்னர் திருக்கோவிலுக்குள் சென்று காளி தேவியையும் நர்த்தன சிவபெருமானையும் தரிசனம் செய்து, கண்ணாடியில் தெரியும் ஸ்ரீபசும்பொன் மயிலாம்பிகை தரிசனத்தைப் பெற்று பின்னர் அவரவர் விருப்பம் போல் மற்ற இறை மூர்த்திகளை தரிசனம் செய்து நிறைவாக இந்த தரிசனப் பலன்களை எல்லாம் ஸ்ரீதாருகாவனேஸ்வரரிடமோ அல்லது மூவிதழ் தாருகா ஜோதியிடமோ அர்ப்பணித்தலே மேற்கூறிய மூன்று இறை சக்திகளின் ஒலி ஒளிப் பரல்களை நம்முடைய தூல, சூட்சும, காரண சரீரங்கள் ஏற்கும் வழிபாட்டு முறையாகும்.

ஸ்ரீதிரைலிங்க மகாத்மியம்

ஸ்ரீதிரைலிங்க சுவாமிகள் அல்லது பெருவாரியான மக்களால் ஸ்ரீத்ரைலிங்க சுவாமிகள் என்று அழைக்கப்பட்ட பெருந்தகை பராய், பரளி, தாருகா என்ற ஜோதி ஐக்யத்தில் பொலிந்த மகான் ஆவார். தற்போது இந்த மகானை நாம் நம் தூலக் கண்ணால் காணும் சக்தி பெறாவிட்டாலும் இப்பெருமானின் அனுகிரகத்தைப் பெறும் தான முறையை சித்தர்கள் வகுத்துத் தந்துள்ளனர். உய்யக்கொண்டான் மலையில் அருள்புரியும் ஸ்ரீஉஜ்ஜீவநாதர் இத்தகைய மூன்று ஜீவ சக்திகளால் உருவான மூர்த்தியே என்பதால் ஸ்ரீஉஜ்ஜீவநாதருக்கு ஆவின்பால், ஆட்டின் பால், ஒட்டகப்பால் அல்லது கழுதைப் பால் என்ற இந்த மூன்று பாலும் கலந்த உஜ்ஜீவ க்ஷீர கலவையால் அபிஷேகித்தல் என்பது எந்த கொடுமையான வியாதிக்கும் ஒரு பரிகாரமாக அமைகிறது.

ஸ்ரீஉஜ்ஜீவநாதர் உய்யக்கொண்டான்மலை

கழுதைப் பால் அல்லது ஒட்டகப் பாலை அதன் சூடு ஆறும் முன் பெற முடியாத சந்தர்ப்பங்களில் அந்தப் பால் பவுடரை மற்ற இரண்டு பாலுடன் கலந்து அபிஷேகம் இயற்றுவதும் ஏற்புடையதே. ஸ்ரீதிரைலிங்க சுவாமிகள் தன்னுடைய உடல் மூன்று சிவலிங்கங்கள் மீது தவழும்படியாக அமைத்துக் கொண்டு தவம் புரிவதை அக்காலத்தில் பல பக்தர்களும் பார்த்து இரசித்திருக்கின்றனர். இவ்வாறு தன் தூல, சூக்கும, காரண சரீரங்களால் இறைவனுடன் ஒன்றிப் பிரார்த்தனை செய்யும் காட்சியே இது. அது மட்டுமல்லாமல் ஸ்ரீதிரைலிங்க சுவாமிகள் இயற்றிய பூஜை மற்றவர்களுடைய தூலக் கண்களால் பார்க்க முடியாதபடி அந்த திவ்ய காட்சி திரை போட்டு மறைந்தது போல், மறைத்ததுபோல் பலருக்கும் தோன்றியதால் சுவாமிகளுடைய 300 வருடத்திற்கும் மேற்பட்ட ஆன்மீக பூஜைகள் அவரை திரை லிங்க சுவாமிகளாக மாற்றின. வியாதிகள் என்பவை இந்த மூன்று சரீரங்களில் ஏதாவது ஒன்றில்தானே முதலில் நிலைகொள்ள முடியும். இந்த மூன்று சரீரங்களும் இந்த பால் அபிஷேகத்தால் தூய்மை அடையும் என்பதால் ஸ்ரீஉஜ்ஜீவநாதருக்கு நிறைவேற்றும் அபிஷேகம் அனைத்து வியாதிகளையும் தீர்க்கும் நோய் நிவாரண சக்தியுடன் அமைகிறது. எதிர்காலத்தில் தோன்றப் போகும் பல வியாதிகளுக்கு இத்தகைய நிகழ்கால த்ரிக்ஷீர அமிர்த அபிஷேகம் மருந்தாய் அமைந்து வியாதி என்பது ஒரு கடந்த கால நினைவாக மாறும் என்பது இந்த அபிஷேகத்தின் மகிமையே. இவ்வாறு த்ரிக்ஷீர அபிஷேகத்தை நிறைவேற்ற முடியாதவர்கள் பசும்பாலில் மூன்று துத்திப் பூக்களைப் போட்டுக் காய்ச்சி அதில் டைமண்ட் கற்கண்டு சேர்த்து தானமளித்தலும் பல தீராத வியாதிகளுக்கு மருந்தாய் அமையும். மலைக் குன்றின் மேல் அமைந்துள்ளதால் சுவாமி, அம்பாள், முருகன் என எல்லா சன்னதிகளும் பல படித்தரங்களில், உயரத்தில் அமைந்துள்ளதாக பலரும் எண்ணுவர். உண்மையில் மனிதனுக்கு உள்ள ஒன்பது சரீரங்களின் பிரிவே இவ்வாறு ஒன்பது நிலைகளாக மாறி நிலைபெற்றுள்னன என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியமாகும். இத்தகைய திருத்தலம் பிரபஞ்சத்தில் இது ஒன்றே என்பதும் இதன் மகிமையை பலப் படித்தரங்களில் உணர்த்துவதாகும். கற்குடி என்பது இத்தலத்தின் தேவாரப் பெயராக அமைந்துள்ளது. கற்குடி என்பது இறைவன் குன்றின் மேல் எழுந்தருளி உள்ளான் என்ற மேலோட்டமான பொருளைக் கொண்டாலும் பாறையில் எழுதிய அட்சரம் போல் பக்தன் இதயத்தில் நிரந்தரமாக பொறிக்கப்பட வேண்டியவரே ஸ்ரீகற்குடிநாத சுயம்பு மூர்த்தி என்று பறைசாற்றுவதே உஜ்ஜீவ நாதர் திருத்தலமாகும். இது மூன்று ஜீவ சக்திகள் ஐக்கியமாகி பொலியும் தலம் என்பதாலும் நம் சற்குரு மூன்று எண் சக்திகள் கொண்ட 30ந் தேதி இத்தலத்தில் உழவாரப் பணி நிறைவேற்றி ஜீவ சக்திகளை, நவ ஜீவ சக்திகளை புனருத்தாரணம் செய்தார் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய குரு மகாத்மியமாகும். இவ்வாறு மனிதனுக்கு அமைந்துள்ள ஒன்பது சரீரங்களின் தன்மையை அறிந்து கொண்டு அந்த சரீரங்களை வியாதிகளிலிருந்து காத்துக் கொள்ள நினைக்கும் மனிதன் குரு வாரமாகிய வியாழக் கிழமையில் குரு ஹோரை நேரத்தில் குரு காயத்ரீ அல்லது பிரஹஸ்பதி காயத்ரீயை வாய் விட்டோ மனதிற்குள்ளோ ஓதுவதை இத்தலத்தில் ஆரம்பித்து அதை தொடர்ந்து கடைப்பிடித்தல் நலமே. இதனால் தங்களுடைய வியாதிகளுக்கு நிவாரணம் காண்பதுடன் அத்தகையோர் பிறர் நோய்களைத் தீர்க்கும் ஔஷத சக்தியையும் பெறுவர் என்பது திண்ணமே.

பக்தர்கள் அவரவருக்குப் பிடித்த, பரிச்சயமான காயத்ரீ மந்திரங்களை ஓதி பயன்பெறலாம் என்றாலும் ரோக நிவர்த்திக்காக சற்குருவால் அளிக்கப்பட்ட கீழ்க்கண்ட காயத்ரீ மந்திரங்களை ஓதுவதும் சிறப்புடையதே.
ஓம் தத் புருஷாய வித்மஹே
ஔஷத புருஷாய தீமஹி
தந்நோ பாஸ்கர ப்ரசோதயாத்
ஓம் தத் புருஷாய வித்மஹே
சீதள ரூபாய தீமஹி
தந்நோ சந்திர தேவி ப்ரசோதயாத்

அரிதிலும் அரிய
கற்குடி உஜ்ஜீவ துத்தி

ஓம் தத் புருஷாய வித்மஹே
ரோகநிவர்த்திகராய தீமஹி
தந்நோ மங்கள தேவ ப்ரசோதயாத்
ஓம் தத் புருஷாய வித்மஹே
குசாஜோதி பிரசாதாய தீமஹி
தந்நோ புதபகவான் ப்ரசோதயாத்
ஓம் தத் புருஷாய வித்மஹே
குருமங்கள குரு தேவாய தீமஹி
தந்நோ ப்ரஹஸ்பதி ப்ரசோதயாத்
ஓம் தத் புருஷாய வித்மஹே
சுக்ராத்மனே தீமஹி
தந்நோ பார்கவ ப்ரசோதயாத்
ஓம் தத் புருஷாய வித்மஹே
ஆயுள் ஔஷத பிரசாதாய தீமஹி
தந்நோ சனீஸ்வர ப்ரசோதயாத்
ஓம் தத் புருஷாய வித்மஹே
மகா தேவாய தீமஹி
தந்நோ ராகுகணபதி ப்ரசோதயாத்
ஓம் தத் புருஷாய வித்மஹே
மகாதேவாய தீமஹி
தந்நோ கேதுகணபதி ப்ரசோதயாத்
ஞாபக சக்தி என்பது விலை மதிப்பில்லாத பொக்கிஷமே. இத்தகைய பொக்கிஷத்தின் அருமை முக்கியமான சமயத்தில்தான் தெரியவரும். உதாரணமாக திருமணத்தின்போது மாங்கல்ய தாரணத்திற்காக உள்ள மாங்கல்யத்தை மறந்து விட்டால் அது எப்படி இருக்கும் ? இது ஏதோ கற்பனை அல்ல. உண்மையாக நடந்த ஒரு நிகழ்ச்சியே. சதாபிஷேகம் நிறைவேற்றும் தம்பதிகள் இவ்வாறு உய்யக்கொண்டான் மலையை அடைந்தபோது அவர்கள் திருமாங்கல்யத்தையே மறந்து விட்டு வந்து விட்டார்கள் என்பது தெரிய வந்தது. மீண்டும் திருமண மண்டபத்திற்கு சென்று மாங்கல்யத்தை எடுத்து வருவதற்குள் சற்குரு குறித்துக் கொடுத்த முகூர்த்த நேரம் தவறி விடும் என்பதால் அங்கிருந்த ஒரு மஞ்சள் கிழங்கையே மாங்கல்யமாக பாவித்து மாங்கல்ய தாரண வைபவத்தை நிறைவேற்றினர் அத்தம்பதிகள். இவ்வாறு பல முக்கியமான தருணங்களில் ஞாபக மறதியால் விளையும் பல கொடிய விளைவுகளைக் களைவதற்காக அன்று மார்க்கண்டேய துத்தி என்ற ஞாபக சக்திகளை நம் சற்குரு நிரவிய இடமும் உஜ்ஜீவ நாதர் திருத்தலமாகும். இவ்வாறு ஞாபக சக்தியால் அவதியுறும் பக்தர்கள், ஞாபக சக்தியால் தங்கள் இல்லத்தில் அலுவலகத்தில் துன்பம் அடையாமல் இருக்க விரும்புபவர்கள் இவ்வாறு துத்தி மலர், டைமண்ட் கல்கண்டு சேர்த்த பசும்பாலை உஜ்ஜீவ நாதர் திருத்தலத்தில் தானமளித்தல் சிறப்பாகும். கற்குடியில் பொலியும் துத்தி மலர்களை தரிசனம் செய்து தங்கள் ஞாபக சக்தியை விருத்தி செய்து கொள்ளலாமே தவிர இம்மலர்களை வேறு இடங்களிலிருந்தோ கடைகளிலிருந்தோ பெற வேண்டும் என்பதை பக்தர்கள் கவனத்தில் கொள்ளவும்.

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam