ஆத்ம ஞானம் அதுவே ஞானம் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

(நம் குரு மங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்!)

எப்போ வருவாரோ?

வெள்ளியங்கிரி மலைப் பயணத்தைப் பற்றி ஏங்கி ஏங்கிச் சிறுவன் களைத்துப் போனான். பெரியவருடனான பல பாரதப் புனித யாத்திரைகளில் எண்ணற்ற தெய்வீக அனுபூதிகளைப் பரமானந்தமாக அவன் அனுபவித்து இருந்தமையால், அந்த ஒப்பில்லா இறைச் சுவையே பெரியவருடன் புனித யாத்திரை என்றால் அவனை உற்சாகத்தில் துள்ளிக் குதிக்க வைத்தது.

அவர் “வெள்ளியங்கிரி செல்லலாம் வா!” என்று கூறிய ஒரு வாரத்திற்கு உள்ளேயே அவன் மென்மேலும் பல குருகுலவாசச் சம்பவங்களைக் கண்டு அளப்பரிய ஆனந்தம் கொண்டு விட்டான். ஆனால் குருகுல வாச அனுபூதிகள் தெவிட்டாத தேனன்றோ!

ஸ்ரீகைலாசநாதர்
திடியன்மலை

ஒருநாள்...

“நாளைக்குச் சென்டரல் ஸ்டேஷன் வந்துடுடா!” என்று பெரியவர் உறுதியாகக் கூறியவுடன்தான் சிறுவனுக்கு வெள்ளியங்கிரிப் பயணம் தொடங்குவதாக உறுதியாக நம்பினான். ஆனால் பெரியவரோடதோ சித்தம் போக்கு சிவன் போக்கு அன்றோ! கடைசி நிமிடம் வரை என்ன, கடைசி நொடி வரை என்ன நடக்கலாகும் என எதையும் சொல்லி விட முடியாதே!

சின்ன சின்ன பதம் வைத்து
கண்ணா நீ வா வா வா!

மறுநாள்... சென்டரல் ஸ்டேஷனுக்கு வந்த சிறுவனைப் பெரியவரே முன்னின்று வரவேற்று கோயம்புத்தூருக்குச் செல்லும் ரயிலை நோக்கி விரைந்தார். அவர் டிக்கட் வாங்கினாரா, வாங்கவில்லையா? யாருக்குத் தெரியும்? அவரிடம் “அடுத்தது என்ன?” என்று கேட்டிட யாருக்குத் தான் தைரியம் இருக்கிறது?

பொதுவாக ரயில் பிரயாணம் என்றால் கமுக்கென்று ரெயிலில் அமுக்கமாய் அமர்ந்திருப்பவர் டிக்கெட் கலெக்டர் வந்தால் டக்கென்று இரண்டு டிக்கட்டுகளை எடுத்து நீட்டுவார்! எப்போது ரிசர்வ் செய்தார்? யாருக்குத் தெரியும் சிவாபரமே! இதையெல்லாம் பார்க்க, பார்க்க அவனுக்கு ரொம்பவும் ஆச்சரியமாக இருக்கும்!

ரயிலில் ஏறுவதற்கு முன் ரிசர்வேஷன் சார்ட்டில் அவர் பெயரும், தன் பெயரும் இருக்கின்றதா என்று சந்தடிச் சாக்கில் நைஸாக அவருக்குத் தெரியாமல் பார்க்க முயற்சிப்பான். உள்ளூர, குறும்புத் தனமாக அவர் எந்தப் பெயரில் டிக்கட் புக் பண்ணினார் என்பதை அறியவே அவனுக்கு மனமார ஆவல்தான்!

ஸ்ரீபெரியநாயகி அம்பாள்
திடியன்மலை

“..டேய் நேரமாயிடுச்சுடா, நம்ம உள்ளே போய் உக்கார்ந்துக்கலாம்டா!” என்று டிக்கெட் சார்ட்டைப் பார்க்க விடாமல் அழுத்தி அவரே அவனைத் தள்ளிக் கொண்டு மூன்றாம் சீட்டு எண்ணில் (குரு எண்!) போய் ஜம்மென்று அமர்ந்து கொள்வார். அப்போதும் குறும்புத் தனமாக சிறுவன் டிக்கெட் கலெக்டரிடம் உள்ள சார்ட்டில் அவர் என்ன பெயரில் இருக்கின்றார் என்பதை அறிய, எட்டி எட்டிப் பார்ப்பான். எல்லா சீட்டுக்களுக்கும் நேரே பெயர் இருக்க, இவர்களுடைய சீட்டு எண்களுக்கு நேரே ஒன்றும் எழுதாது பிளாங்க் ஆகவே இருக்கும்!

டிக்கெட் கலெக்டரிடம் இருந்த சார்ட்டை மீண்டும் எட்டி எட்டிப் பார்க்க சிறுவன் முயற்சிக்கவே, “ஏண்டா எங்களோட (ஆதி) மூலத்தை உன்னால் ஒரு கடுகளவு கூடப் புடிக்க முடியாதுன்னு எத்தனையோ வாட்டி சொல்லிருக்கேனே. மேலே வந்து மெத்தைல (Upper Worlds) பாருடா, நாங்க யாருன்னு தெரியும், எங்களோட மகிமையும் புரியும், பூமியில அதுவும் பக்கத்துலேயே இருந்தா எங்க அருமை புரியாதுடா!” என்ற பெரியவரின் வியாக்யானம் அவனை அடி பணிய வைத்து விடும்.

அள்ளி அள்ளியே!

ரயிலில் ஒவ்வொரு ஸ்டேஷனையும் கடக்கும் போதும் அங்குள்ள சிவன் கோயில், பெருமாள் கோயில் மகிமைகளை எல்லாம் சொல்லிக் கொண்டே வருவார்.

“ஏண்டா எத்தனை வருஷமா இப்படித் தெய்வீக விஷயங்களைக் கொட்டிக் கிட்டே இருக்கேனே, எல்லாத்தையும் “புடிச்சு” வச்சிருக்கியா?” அப்போது கையளவு டேப் ரெகார்டர் புழக்கத்திற்கு வராத காலம்! சிறுவனால் என்னதான் செய்ய முடியும்?

இதற்கு பதிலாகச் சிறுவன் உதடுகளை வெளிப் புறமாகப் பிரித்தான். கண்களையும் பெரிதாக விரித்தான், அவ்வளவுதான்! “ஏண்டா நானும் ரொம்ப ரொம்ப சீரியஸா எதையாச்சும் கேட்டா, ரொம்ப காஷுவலா உதட்டைப் பிதுக்கறியே!”

“இப்போது எது சொன்னாலும் உதைக்கும்” என்ற வாக்கிய விதிக்குக் கட்டுப்பட்டுத் தற்போதைக்குச் சிறுவன் கப்சிப்பென்று அடங்கிக் கொண்டான்.

தலவிருட்சம் நெய்க்கொட்டாமரம்
திடியன்மலை

நாடி நாடியே!

“ஆனா ஒண்ணு தெரிஞ்சுக்கடா, உனக்கு மட்டுமாச்சும் நாங்க இவ்வளவு தெய்வீக விஷயங்களைக் கொட்டலை! எங்களைச் சுத்தி எத்தனையோ அண்டங்களிலேந்து எத்தனையோ உயிர்கள், தேவதைகள், தேவர்கள், பித்ருக்கள் – அவங்கவங்க பிரச்னைக்கு நிவாரணம் கேட்டு சுத்தி சுத்தி வராங்கடா! உன்னை மாதிரி ரயில் பிரயாணம்னா நாங்க உடனே கண்ணை மூடிக்கிட்டுத் தூங்கிட முடியாதுடா! எப்ப எந்தத் திசையிலிலேந்து யார் கான்டாக்ட் பண்ணுவாங்கன்னு தெரியாது. எல்லாத்துக்கும் தெய்வீக வழிகாட்டிங்க தயாரா இருக்கணும், அதுக்குத்தான் உன்னை நாங்க தயார் பண்றோம்.”

இடையில் தடக் தடக்கென்று ஒரு ஆற்றுப் பாலத்தை ரயில் கடந்தது.

“இதோ பாரு, இந்த ஆத்தங்கரையோரம் ஒரு செட்டுப் பித்ருக்கள் காத்துக் கிடக்காங்க! அவங்க இந்த ஆத்தங்கரையில் நிறைய பூஜை பண்ணி அவங்க சந்ததிகளைக் கரையேத்தணும், அதுக்காக யாராச்சும் தெய்வீக வழிகாட்டிங்க இந்த வழியா வருவாங்களான்னு காத்துக் கிடக்காங்க!”

“அப்படீன்னா வாத்யாரே! நீ இன்னிக்கி இது வழியாப் போவேன்னு அவங்களுக்குத் தெரியுமா?”

“அவங்களுக்கும் மேலே தரணிப் பித்ருக்கள் இருக்காங்க தானே! அவங்களுக்கு இத்தனாந் தேதி இந்த நிமிஷத்துல இது வழியா ஒரு மகான் வருவாரு, ஒரு சித்தர் வருவாரு, ஒரு தெய்வீக வழிகாட்டி வருவாரு, அவங்க இந்தந்த அடையாளத்தோட வருவாங்கன்னு நல்லாவே தெரியும்.”

“அப்படீன்னா ரொம்ப நாளா பிளான் பண்ணின தபோ பலத்துல தானே இதைத் தெரிஞ்சுக்க முடியும்!”

“அதனாலத் தாண்டா நீ ரிசர்வேஷன் சார்ட்டுல என் பெயருக்காக எட்டி எட்டிப் பார்க்கும் போது எனக்குச் சிரிப்புத் தாண்டா வருது! எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாடிலேந்தே இந்த குரு, இந்த மஹான் இந்த வழியா இத்தனை மணி, இந்த நிமிஷத்துல போவாங்கங்கறதைப் பித்ரு லோகத்துல தெரிஞ்சு வச்சுக்கிட்டு வேலை செய்யறாங்கன்னா எப்படிப்பட்டது கம்ப்யூடர் மூளைடா அவங்களோடது! இதைப் பாக்கறப்போ பூலோக விஞ்ஞானம் எந்த மூலைக்குடா?”

சிறுவன் அசந்து போய்விட்டான்!

“இதுக்கே இப்படி மலைச்சுப் போய்ட்டா, அத்தனை தெய்வீக விஷயங்களையும் நான் கொட்டினா கலியுக மனுஷ சமுதாயத்துனால ஜீர்ணம் பண்ண முடியாதுடா. அதுக்குத்தான் நீயும் பிற்காலத்துல கொஞ்சம் கொஞ்சமா தெய்வீகப் பத்திரிகை மூலமா இதை எல்லாம் மனுஷங்களுக்கு உணர்த்தணும். ஒரே சமயத்துல ரொம்ப விஷயத்தைக் கொட்டிடாதே! கலியுக மனுஷனோட குருவி மூளையால எல்லாத்தையும் ஒரே சமயத்துல ஜீரணம் பண்ண முடியாது, கிரகிக்கவும் முடியாது!”

சிறுவன் தனக்குள் சிரித்துக் கொண்டான். தன்னுடைய டிராயரில் உள்ள ஓட்டைப் பையில் ஒரு காலணா கூடக் கிடையாது! நாமாவது பத்திரிகையில் எழுதிப் பிரசுரிப்பதாவது! ஆனால் இன்று சற்குருவின் திரண்ட குருவருளால் ஸ்ரீஅகஸ்திய விஜயம் மூலமாகக் கடந்த பதினோரு ஆண்டுகளுக்கும் மேலாகப் பெரியவர் மொழிந்த சற்குரு வாக்கியங்கள் தாமே இன்று எண்ணற்றோர் வாழ்வில் தெய்வீகமாக மறுமலர்ச்சியைத் தந்து கொண்டிருக்கின்றது!

கோயம்புத்தூருக்கு டிக்கட் வாங்கினாலும் நடுவில் ஓரிடத்தில் ரயில் சிக்னல் கிடைக்காததால் எங்கோ ரயில் சற்றே நின்றிட, பெரியவர் விருட்டென்று இறங்கி முன்னிரவு இருட்டில் ஏதோ திக்குத் தெரியாத பாதையில் வெகு வேகமாக நடக்கலானார்.

“ஏன் வாத்யாரே! கோயம்புத்தூர் வரைக்கும் டிக்கட் வாங்கிக் கிட்டு இப்படி இருட்டுல துடுதுப்புன்னு இறங்கி இப்படியா வேகமா நடக்கறது? சிக்னல் கிளியராகி டிரெயின் இங்கே இப்படி நிக்காம போனா என்ன பண்ணியிருப்பே!”

“ஏண்டா மடையா, ரயில் புல்லா படிச்சுப் படிச்சுச் சொன்னாலும் உன் மண்டையில் கொஞ்சம் கூட தெய்வீக விஷயம் ஏறலையே, என்ன பண்றது? சிக்னல் கிடைக்கலைங்கற சாக்குல ரயிலை இங்கே நிக்க வைக்கறது, நாம இறங்கறது... நாம இது வழியாப் போறது. இதெல்லாம் விதிப்பூர்வமா ஏற்கனவே முடிவானது தாண்டா! இதை யாராலும் மாத்த முடியாது! இதுவரைக்கும் தான் நாம ரயில்ல போகணும், அதுக்கப்புறம் நடைதான்னு கால நியதி இருக்கறப்போ நாம எக்ஸ்ட்ராவா ஒரு நிமிஷம் கூட ரயிலுக்குள்ள இருக்க முடியாதுடா!”

சிறுவன் மலைத்து நின்று ஸ்தம்பித்துப் போய் இருட்டில் அவருடைய கைகளை விட்டு விட்டு, இருளில் பெரியவரையும் விட்டு விடவே...

சுதாரித்துக் கொண்டு அந்தப் பாதையில் ஓடி அவரைச் “சிக்கெனப்” பிடித்திட, “இவ்வளவு தூரம் நீ ஓடி வரணும்னு எழுதி இருக்கறப்போ, எப்படிடா நீ நடந்து வரமுடியும்? ரயில்ல போகமுடியும்?” எனப் பெரியவர் விளக்கிட, இருவரும் கலகலவென்று சிரித்தார்கள்!

திரயம்பகச் சித்தர்கள்

தைப் பூசம், மாசி மகம், வைகாசி விசாகம், கார்த்திகை பௌர்ணமி, பங்குனி உத்திரம் என்றவாறாக அந்தந்தத் தமிழ் மாதத்தில் அந்தந்த நட்சத்திரத்தில் பௌர்ணமி சக்திகள் பூரிப்பதைப் பலரும் அறிவர். இதில் வைகாசி விசாகத்தில் ஸ்கந்த சக்திகள் திருமுருகத் தலங்களில் பரிமளிப்பதுடன், ஸ்ரீபிரம்ம மூர்த்திக்கு முருகப் பெருமான் அருளிய ஓங்கார உபதேச சக்திகளும், ஸ்ரீபிரம்ம, ஸ்ரீசரஸ்வதி திருக்கல்யாண உற்சவத்தோடு இணைந்து அகார, உகார, சிகாரம் (அஉசி அட்சர சக்திகள்) என்ற மூன்று அற்புத முச்சுடர் ஜோதிகளாகப் பரிணமிக்கின்றன.

அஉசிவ பீஜ சக்திகள்

வைகாசி விசாகத்தில் இறைவனுடைய நெற்றிக் கண் நேத்திரத்தில் ஒளிர்ந்த அகார, உகார, சிகார ஜோதிப் பிரவாகத்தில், அங், உங், சிங் ஆகிய மூன்று பீஜாட்சரப் பரல்களில் இருந்து மூன்று சித்தர் பிரான்கள் தோன்றினார்கள். இவர்களே ஸ்ரீபிரம்ம மூர்த்திக்கு, ஆதியும் அந்தமுமாய், அன்றும், இன்றும், என்றுமாய் ஜீவ சிருஷ்டியில் ஆத்மசக்தி இணைப்புத் துறையில் துணைபுரிந்து நிற்பவர்கள். இவர்கள் மூன்று கோடி பிரம்ம முத்திரைகளையும் நன்கு பயின்று, சிருஷ்டி தத்துவத்தில் தலை சிறந்தவர்களாக விளங்குகின்றனர். இவர்களே மூன்று கோடி பிரம்ம முத்திரைகளைக் கரபூஷண சக்திகளாக எளிமைப்படுத்தி, கலியுகத்தில் யாவருக்கும் கடைபிடிக்க உரியதாய், எளியதாய் ஸ்ரீகாயத்ரீ மந்திர முத்திரைகளாக அளித்துள்ளனர்.

அங், உங், சிங் என்பதில் “ங” வகைக் கடை (இறுதி வர்க சப்தம்) பீஜாட்சர சக்தி வளங்கள் பலவும் – ஒவ்வொருவருடைய கோடானு கோடிப் பிறவிகளிலும் தொக்கித் தொடர்ந்து வரும் கர்ம வினை முடிச்சுகளைத் தீர்க்க வல்லவையாகும்.

ஐந்து சீடர்களுடன்
ஸ்ரீதட்சிணாமூர்த்தி மலைக்கோட்டை

14 (1+4=5) சீடர்களுடன்
ஸ்ரீதட்சிணாமூர்த்தி திடியன்மலை

“அந்தணர் என்போர் அறவோர்!” என்பதற்கேற்ப உடல், மனம், உள்ளம் ஆகிய மூன்றிலும் பரிசுத்தமான, புனிதமான நல் ஒழுக்கம் பேணி, நல்பக்தியில் சிறப்போர் யாவரும் அந்தணரே! எனவே அந்தணர் என்பது குல, ஜாதிக் குறிப்புச் சொல்லன்று! இவ்வாறு, பக்தியில் சிறக்க வேண்டியவர்கள் உடல், உள்ளம், மனம் ஒழுக்கம் தவறினால் கடுமையான விளைவுகள் ஏற்படும்.

அருகில் இருந்தால் அருமை தெரியாது!

இறைவனை அருகிருந்து பூஜிக்கும் பாக்யம் பெற உளப் பூர்வமாக வழிபடுவோர்க்கே அடுத்த ஜன்மங்களில் மூலத்தானத்தில் மூலவர் அருகிலிருந்து இறைவனைப் பூஜிக்கும் பாக்யம் கிட்டும். ஆனால், இறைவனை அருகிலிருந்து பூஜிக்கும் பாக்யம் பெற்ற பின், பலவிதமான மாயைகளினால் அருகிலிருந்தும் இறையருமை தெரியாததால், இந்த பாக்யத்தையும் அசிரத்தையால், அகங்காரத்தால், ஆசைகளால் சரிவரப் பயன்படுத்தாமையால், இதுவே கடுமையான தோஷங்களாகி, அடுத்த ஜன்மத்தில் ஆலயத்திற்கே வர இயலாதவாறு கடுமையான நோய்ப் பிறவிகள் ஏற்பட்டு விடும்.

பூஜிக்கும் பாக்யம் புனிதமானது

எனவே ஆலயத்தில் இறைவன் அருகே நின்று பூஜிக்கும் பாக்யம் பெற்றோர், உடல், உள்ளம், மனம் ஒழுக்கத்தில் நன்கு சிறந்து, சுயநலம் உகுத்து, தியாக மனப்பான்மைகளை விருத்தி செய்து, பக்திப் பூர்வமாகப் பிரகாசிக்க வேண்டும். ஆனால், இதில் பங்கங்கள் ஏற்பட்டால், இவ்வாறு தவறான ஒழுக்க நிலைகளுடன் பூஜிப்பவரையும், குடும்பத்தையும் அவர்களுடைய சந்ததிகளையும், அதி பயங்கரமாகப் பாதிக்கும்.

இத்தகைய அந்தண தோஷங்களுக்கும் நிவர்த்திகளை அளிப்பவர்களே அங், உங், சிங் எனும் மூன்று பீஜாட்சர சக்திகளில் வல்லவர்களான திரயம்பகச் சித்தர்கள் ஆவர். இவர்கள் கட்டை விரல் அளவில், மானுட வடிவில், நீண்ட தாடியுடன் மகரிஷிகள் போலக் காணப்படுவர்.

காணுதல் இயலும், கனிந்த இறை உள்ளம் பூண்டால்!

மனம், உடல், உள்ள ஒழுக்கத்தில் சிறந்தவர்களாய், அருணாசலக் கிரிவலம் வருவோர், இத்திரயம்பகச் சித்தர்கள், மூன்று அங்குல உயர மானுடத் தோற்றத்தோடு திருஅண்ணாமலையை கிரிவலம் வரும் காட்சியைக் கண்டிடலாம். அண்ட சராசரத்திலும் ஜீவன்களைப் படைப்பதற்கு ஸ்ரீபிரம்ம மூர்த்திக்கே துணை நிற்கின்ற மகத்தான தெய்வீக சக்திகளைப் பூண்டவர்களாய் பிறப்பு, இறப்பு, தோற்றம், மறைவு ஆகிய அனைத்து தெய்வீக இரகசியங்களையும் அறிந்த சித்தர் பிரான்களைக் கண்டால் மனித மனம் சும்மாவா இருக்கும்? எதையாவது லௌகீகமாக, “இது வேண்டும், அது வேண்டும்!” என்று கேட்கத் தோன்றும் அல்லவா! முக்தியையே தர வல்லவர்களிடம் சொத்துத் தா என்று கேட்டால் எப்படி இருக்கும்?

இதனால்தான் திருஅண்ணாமலையில் தினந்தோறும் எண்ணற்ற சித்தர்களும், மகரிஷிகளும், ஞானியரும், யோகியரும் எப்போதும் கிரிவலம் வந்தாலும், அவர்களை மானுட வடிவிலேயே தரிசிக்கும் பாங்கினைப் பெரும்பாலானோர் பெறவில்லை. பூர்வ ஜன்ம புண்ய வசத்தால் அவர்களைத் தரிசித்தாலும் அவர்களைச் சித்தர், மகரிஷி என அறியும் இறைப் பகுத்தறிவும் செழுமை பெறுவதில்லை.

அகங்காரத்தால் பேரிழப்பே!

ஐம்முக பிரம்மா, சிருஷ்டியின் ஓங்காரத் தத்துவத்தைத் திருமுருகப் பெருமானிடம் பெறுவதற்கு முன்னால், ஒரு சிறு அணுத் துளி அளவான அகங்காரத்தால் சில பிழைகள் சிருஷ்டியில் ஏற்பட்டிடவே, கோடிக் கணக்கான அசுரர்கள் பூமியில் தோன்றலாயினர். ஓர் அசுரருடைய உடலில் இருந்து ஒரு சொட்டுத் துளி இரத்தம் பூமியில் சிந்தினால் கூட அதிலிருந்து ஆயிரமாயிரம் அசுரர்கள் தோன்றலாகி, பிரபஞ்சமே ஸ்தம்பித்து விட்டது. “தன்னால் முடியும்!” என்று அகங்காரம் தோன்றியமையால், திரயம்பகச் சித்தர்களிடம் ஸ்ரீபிரம்மா, சிருஷ்டி முறைகளைப் பெற்றிட மறந்தார். எனவே மறதி ஏற்பட மூல முதல் காரணம் அகங்கார, ஆணவ எண்ணங்களே!

ஸ்ரீவாஸ்து மூர்த்திக்கு உதவும் திரயம்பகச் சித்தர்கள்

ஸ்ரீவாஸ்து மூர்த்தியும் பிரபஞ்சத்தின் வடிவை அமைப்பதில் அங், உங், சிங் என்ற திரயம்பகச் சித்தர்களின் துணையைப் பெற்றே பிரபஞ்ச வடிவமைப்பை ஆக்குகின்றனர். நாம் காணும் இந்த பிரபஞ்சத்திற்குள் உள்ள அனைத்துக் கோடி நட்சத்திரங்கள், கிரகங்கள், பூமிகள், பாதாள அண்டங்கள் அனைத்தின் படைப்புப் பற்றிய ஞானத்தை உடையவர்களே, கட்டை விரல் அளவே உயரமான வடிவுடைய அங், உங், சிங் திரயம்பகச் சித்தர்களாவர்.

சென்னை அருகே மப்பேடு ஸ்ரீசிங்கீஸ்வரர் ஆலயத்தில் மூல நட்சத்திர நாளில் திரயம்பகச் சித்தர்கள் ஸ்ரீசிங்கீஸ்வரரை மானுட வடிவில் சூக்குமமாகப் பூஜித்து, மூன்று கோடி பிரம்ம முத்திரைகளை இட்டு வழிபட்டு, இங்குள்ள அபூர்வமான நவ வியாகரண பலி பீடத்தில் நவ வியாகரண பண்டிதரான ஸ்ரீஆஞ்சநேயர் இங்கு பிரசன்னமாகிட அவருடைய ஞான சாட்சியின் கண் தம் தபோ பலன்களை, பூஜா பலன்களைப் பிரபஞ்ச ஜீவன்களின் நலன்களுக்காகப் பதித்துச் செல்கின்றார்கள். எனவே இங்கு மப்பேடு சிவாலயத்தில் வெண்பட்டு சார்த்தி, பலிபீட பூஜை ஆற்றுவது மிகவும் விசேஷமானது.

என் மனதில்
ஒரு மௌனம் !

குருமங்கள கந்தர்வ மண்டலத்தில் தெய்வீகத் தோன்றல்கள்

அகஸ்தியருடைய தலையாய சீடர்களுள் ஒருவரான போகர் மகரிஷி தாம் இத்திரயம்பகச் சித்தர்களின் மகத்துவத்தைப் பூவுலகிற்கு உணர்த்தியவர் ஆவார். இவர்கள் தோன்றிய குருமண்டலமே குருமங்கள கந்தர்வ மண்டலமாகும். நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களும் அங், உங், சிங் என்ற திரயம்பகச் சித்தர்களின் குரு பாரம்பரியத்தில் தோன்றிய தெய்வீக பேறு உடையவராவார்.

தினமும் சூரிய மூர்த்தியின் தேரை ஓட்டியவாறு சூரியத் தேரின் அதிவிரைவு வேகத்திற்கு ஏற்ப, விரைந்து வந்து அனைத்து வகை வேத மந்திரங்களையும் ஓதி வருகின்ற, கட்டைவிரல் அளவே உள்ள வாலகில்ய மகரிஷிகள், திரயம்பகச் சித்தர்களிடம் உபதேசம் பெறுகின்றவர்களே!

வைகாசி விசாகத்தில் மட்டுமல்லாது வைசாக சுத்த சித்சக்திகள் பூவுலகில் பரிணமிக்கின்ற அமிர்தக் கடிகை நேரங்களும் உண்டு. இவற்றைச் சித்புருஷர்களே அறிவார்கள். எனவே, அமிர்த நேரப் பகுப்புகளை நிர்ணயித்துத் தருபவர்களே அங், உங், சிங் திரயம்பகச் சித்தர்களாவர். ஒரு நிமிட அமிர்த நேரத்தைத் கணிக்கவே அனைத்துக் கோடி நட்சத்திரங்கள், கோள்கள், பூமிகளின் அசைவைக் கணக்கிட வேண்டியிருப்பதால், இதற்குப் பல்லாண்டுகள் ஆகும்.

பித்ரு தோஷங்கள், குல தோஷங்கள், வம்ச தோஷங்கள், வாரி தோஷங்கள் போன்ற பல ஜன்மங்களிலும் தொடர்ந்து வருகின்ற தோஷங்களைப் பரிபூரணமாக நிவர்த்தி செய்து தருபவர்களே இச்சித்தர்கள்.

பங்குனி உத்திரம், சித்திரை உத்திரம், வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், ஆடிப் பூரம், ஆவணி மூலம், புரட்டாசி அமாவாசை, ஐப்பசி துலா விஷு புண்ய லக்னம், கார்த்திகைத் தீபம், மார்கழித் திருவாதிரை, தைப் பூசம், மாசி மகம் போன்ற புனிதமான நாட்களில் அனைத்துத் தீர்த்தங்களிலும், கட்டை விரல் உயரத் தோற்ற மானுட வடிவில் பொலியும் இவர்களைக் குருவருளுடன் திளைப்போர், நன்கு தரிசித்திடலாம்.

பொதுவாக, 108 முறை பக்திப் பூர்வமாக அருணாசலப் பௌர்ணமி கிரிவலத்தைத் தொடர்ந்து கடைபிடித்து வருபவர்களுக்குக் கட்டை விரல் அளவில் உள்ள இச்சித்தர்களின் தரிசனம் திருஅண்ணாமலையில் கிட்டும், இவர்களை இவ்வகையில் அருணாசலப் புனித பூமியில் தரிசித்தவர்கள் இன்றும் உண்டு.

ஸ்ரீஞாயிற்றம்பலச் சித்தர்

பௌர்ணமி கிரிவலத்தைப் போன்று மாத சிவராத்திரி கிரிவலமும் சிறப்புடையதே! அபரிமிதமான நல்வரங்களைப் பொழிவதே! திருஅண்ணாமலை மாத சிவராத்திரி கிரிவலம் ஸ்ரீஞாயிற்றம்பலச் சித்தர்!

காலத்தைக் கடந்த திருஅண்ணாமலையில், நாமறியாத வகையில், மானுட சரீரத்தில் வாழ்ந்து சர்வ லோகங்களுக்கும் அருட்பணி ஆற்றிய சித்புருஷர்கள் ஏராளம், ஏராளம்!  இவ்வரிய தொடர் மூலம், பல அற்புதமான திருஅண்ணாமலை வாழ் சித்தர்களை நீங்கள் அறிந்திட, உங்களைப் பல நூற்றாண்டுக்கு முன்னான, சித்தர்களின் இறைப் பாசறையான அருணாசலப் புனித பூமிக்கு இட்டுச் செல்கின்றோம்!

ஸ்ரீஞாயிற்றம்பல சித்தர் ஜீவாலயம்
ஞாயிற்றம்பலம்

ஸ்ரீஞாயிற்றம்பல பகவதி, அம்பிகையின் உத்தம பக்தர்களில் ஒருவரே ஸ்ரீஞாயிற்றம்பலச் சித்தர், அம்பலம் என்றால் பரவெளியில் துலங்கும் ஞானம் என்று பொருள். உலகில் வெற்றிடமே எங்கும் கிடையாது. அனைத்துமே சிதம்பரகாசமாக, ஸ்ரீநடராஜப் பெருமானின் நாட்டியப் பேரொளி பரவியுள்ள இடமாகும். இருளிலும் துலங்கும் உள்ஒளியே அம்பலப் பேரொளி!

“ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்!”

ஞாயிறு என்பது சூரிய மூர்த்தியின் பெயர் என்றல்லாது, ஞாயிறு எனப்படும் அம்பலப் பேரொளியில் இருந்து ஒளிப்புனலைக் கதிரவன் நல்வரமாய்ப் பெற்றதால், சூரியனுக்கு ஞாயிறு எனப் பெயர் வந்தது. “ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்!” என்பதும், ஞாயிறாம் ரவி (சூர்ய) மூர்த்தியே கனக சபேச நடராஜரைப் போற்றுவதாகும்.

ஸ்ரீநடராஜப் பெருமானின் நாட்டியப் பேரொளியைக் கண்ட மாமுனிகளான பதஞ்சலி, வியாக்ரபாத மகரிஷி போன்று சிற்சபேசனாம் ஸ்ரீநடராஜ மூர்த்தியின் மானுடக் கண்களால் காண இயலாப் பேரொளியைத் தரிசித்தவரே ஞாயிற்றம்பலச் சித்தர். அதாவது சூரிய மூர்த்தி, இறைவன், உலகை வலம் வரும் பணிக்கான ஒளிப் பிரகாசத்தை அளிக்கும், முன்னரேயே, நடராஜ தரிசன அனுபூதியைப் பெற்றவர். இவ்வாறாக சித்தர்கள் காரணப் பெயர் பூணுவர் என்பது உலகியல்புதானே!

ஸ்ரீமிளகாய்சித்தர் ஜீவாலயம்
கீழப்பூங்குடி

ஆதிபராசக்தி அம்சமாம் ஸ்ரீஞாயிற்றம்பல பகவதி, கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் வைபீன் தீவு அருகே அருள்பாலிக்கின்றாள். சிதம்பரேசனாம் ஸ்ரீநடராஜப் பெருமானின் திவ்யப் பேரொளி துலங்கும் தலங்களில், சிதம்பரம், உத்தரகோசமங்கை, கோனேரிராஜபுரம், சிவபுரம், மதுரை, குற்றாலம், திருநெல்வேலி, திருவாலங்காடு போன்று ஞாயிற்றம்பலமும் இதில் அடங்கும். ஞாயிற்றம்பலச் சித்தர் என்பதால் கேரளாவைச் சார்ந்த சித்தர் என்று எண்ணலாகாது, உடுப்பியில் பூ(ரி)ஜித்த நைஷ்டிக பிரம்மச்சாரி மகானாகிய ஸ்ரீரகூத்தமர், இப்புவியில் சரீரம் தரித்த பச்சைப் பிள்ளையாய், தாயமுதம் இன்றி, ஸ்ரீராமர் பிரசாதப் பாலையே உண்டு, திருமால் பேறாகவே பரிபூரணித்து வளர்ந்து, சைவ, வைணவ பேதங்களைக் கடந்தவராக, திருஅண்ணாமலை திருக்கோயிலூர் அருகே மணம்பூண்டியில் ஜீவாலயம் பூண்டு, அன்றும், இன்றும், என்றுமாய்ப் பக்தர்களின் துன்பங்களைப் போக்கி, குறிப்பாக நற்சந்ததி தழைத்திட, சந்தான பாக்கிய நல்வரங்களை அருள்கின்றார். இதே போல ஞாயிற்றம்பலச் சித்தர் உலகெங்கும் சூரிய மூர்த்தி போல் உலா வந்து, இறைமையைப் புகட்டுபவர். இவரிடம் பல துறைகளில், தெய்வீக ஞானப் பாடங்களைப் பெற்றவரே கீழப்பூங்குடி ஸ்ரீமிளகாய் சுவாமி சித்தராவார்.

பல யுகங்களையும் தம் தபோ பலத்தால் கடந்தவரான ஞாயிற்றம்பலச் சித்தர், தோற்றமும் முடிவும் இல்லாதவராய், எப்போதும் அருள்புரியும் ஏகாந்தச் சித்தர். தாரண வருடம், ஆனி மாதம் வரும் சிவராத்திரியில் ஞாயிற்றம்பலச் சித்தர், திருஅண்ணாமலையில் மானுட வடிவில் ஏகாந்தமாய்க் கிரிவலம் வருகின்றார்.

சூரிய தசா, புக்தி சம்பந்தம் உடையவர்களுக்கு...

மேஷ, சிம்ம ராசிக்காரர்களும், சூரிய தசை, சூரிய புக்தி, சூரிய அந்தரக் காலத்தில் உள்ளவர்களும், சூரியன் ஆட்சியாக, உச்சமாக, நீச்சமாக இருக்கின்ற ராசிக்காரர்களும்,
பாஸ்கரன், கதிரவன், ஆதித்யன், சூரிய நாராயணன், ரவி, ரவிச்சந்திரன், ரவிக்குமார் போன்ற சூரியப் பெயர் உடையவர்களும், IAS, IPS, MD, GM போன்ற மிக உயர்ந்த பதவி வகிப்பவர்களும், வியாபாரிகளும் இம்மாத சிவராத்திரியில் அருணாசல கிரிவலம் வருவது மிகவும் நன்மை பயக்கும்.

பல எதிர்பாராத காரணங்கள், பகைமை காரணமாக, நொடித்துப் போன குடும்பங்கள் நன்கு முன்னேறி அபிவிருத்தி அடைவதற்கும் இம்மாத சிவராத்திரி கிரிவலப் பலன்கள் உதவும்.

பெரும் தனவந்தர்கள், நிலக்கிழார்கள், எஸ்டேட் முதலாளிகளும் தம் துறையில் சிறப்புறவும், அவரவர் தம் தொழிலில் உள்ள கஷ்டங்கள் தீரவும் இம்மாத சிவராத்திரியில் அருணாசல கிரிவலம் வருதல் வேண்டும்.

ஞாயிற்றம்பலம்

கிராமத்திற்கு, சமுதாயத்திற்கு, நாட்டிற்கு வழிகாட்ட வேண்டிய நிலையில் இருக்கின்ற உயர் அதிகாரிகள், அரசியல் துறையினர், அமைச்சர்கள், கிராமத்து மணியக்காரர்கள், முன்சீப்புகள், கிராமப் பெருந்தலைவர்கள் போன்றோர் கிரிவலம் வந்து, தம் துறைகளில் உள்ள தடங்கல்களுக்கு நிவர்த்தியும், தொழில் ரீதியாக முன்னேற்றமும் பெற, சூரிய சக்திகள் திளைக்கும் மாத சிவராத்திரி நன்னாள்!

தலைமைப் பதவிக்குத் தேவையான சூரிய சக்திகள்

பொதுவாக, ஜாதகத்தில் சூரிய பலம் நிறைந்தவர்கள் தலைமையில் ஆலயத் திருப்பணிகள் நடைபெறுவதே மிகவும் சிறப்படையது. ஏனென்றால், இவ்வாறு ஜாதக ரீதியாக சூரிய பலம் வாய்ந்தவர்கள் அவ்வளவாகத் தவறுகள் செய்ய மாட்டார்கள். அப்படிச் செய்தாலும் உடனடியாகத் தண்டனைகளைத் தாமே பெற்று, அனுபவித்துத் திருந்தி விடுவார்கள். இதற்காகத்தான் அக்காலத்தில் சூரிய பலம் நிறைந்தவர்களையே கிராமத் தலைவர்களாக, ஜமீன்தார்களாக, நிலக்கிழார்களாக வைத்தார்கள்.

சூரிய சக்திகள் மிகுந்த இவர்களுடைய ஜாதக பலப்படி, இவர்கள் சொற்படி பிறர் நன்கு கேட்பார்கள். இவ்வாறு ஜாதி, மத, குல பேதமின்றி அவரவர் ஜாதக சூரிய, சந்திர, அக்னி பலாம்சங்களுக்கு ஏற்ப மணியக்காரர்கள், கணக்குப் பிள்ளைகள், முன்சீப்புகள் நியமனமாகி, அக்காலத்தில் சமுதாயத்திற்கு நல்வழி காட்டினர்.

ஆலயத் திருப்பணிகள் நன்கு நிறைவேறிட...

இவ்வாறு சமுதாய நலப் பணிகளை ஏற்று நடத்தும் பெரும் பொறுப்பில் உள்ளவர்கள், இம்மாதச் சிவராத்திரியில் அருணாசல கிரிவலம் வந்து பொறுப்பை நன்முறையில் நிறைவேற்றிட அனுகிரகங்களைப் பெற வேண்டும். இனியேனும், “கோயில் திருப்பணி ஆரம்பித்து இடையில் நின்று விட்ட்து”, என்று சொல்லாமல், அரசியல் செல்வாக்கு, ஜாதி, அந்தஸ்து பார்க்காமல், ஜாதக ரீதியாக, சூரிய பலம் உள்ளவர்களையே ஜாதி, குல பேதமின்றி, திருப்பணிக் கமிட்டியில் நன்கு பங்கு பெற வைத்து, ஆன்மீக ரீதியாக இந்த நியதிகளைக் கடைபிடித்தல், கோயில் திருப்பணிகளை நன்கு நிறைவு பெறச் செய்து, உலக சமுதாயத்திற்கே நன்மை பயப்பதாகும்.

இதனை நன்கு அறிந்தே, தமிழக மாமன்னர்கள், ராஜீயத் தலைவர்களை நியமித்து, ஆட்சி வளம்தனை, தார்மீக ரீதியாகப் பெற்றமையால்தான், இறைவனுடன் ஆலயத்திலேயே நேருக்கு நேர் பேசும் பக்தி வளத்தைப் பெற்றனர்.

இரட்டைப் பனைமரம் ஞாயிற்றம்பலம்

மணியான கிரிவலம்!

இம்மாத சிவராத்திரி அருணாசல கிரிவலத்தில், கோதுமை, ரவை மற்றும் தானிய மணி ரவைகளுடன், சர்க்கரை கலந்து, மஞ்சள் பையில்/துணியில் சுமந்து வந்து,

“ஜபாகுஸும சங்காஸம்
காஸ்யபேயம் மகத்யுதிம்
தமோரிம் ஸர்வ பாபக்னம்
ப்ரணதோஸ்மி திவாகரம்”

என்ற சூரியத் துதியை ஓதியும்,

“நடராஜா நடராஜா
பேரம்பலத்தாய் நடராஜா!
சிவராஜா சிவராஜா
சிற்றம்பலத்தாய் சிவராஜா!”
-என்றும் ஓதியவாறு கிரிவலம் வந்திடல் சிறப்பானது.

ஆதவ அருட் கிணறு
ஞாயிற்றம்பலம்

நீங்கள் மட்டும் தனித்து வருதல் என்றில்லாது, இவ்வாறு நீங்களறியும் அருணாசல மஹிமையைப் பலருக்கும் உரைத்து, கிரிவலத்திற்கு அழைத்து வந்து, பலருக்கும் திருஅண்ணாமலையார் அருள்திரள நல்வழி காட்டியாய் அருட்பணி ஆற்றுங்கள்! இவ்வாறு சிறுகச் சிறுகப் பெருகியதே, இன்றைய நாலு லட்சம் இறையடியார்களுக்குக் குறையாமல் வலம் வந்து மலரும் மாதாந்திரப் பௌர்ணமியின் திருஅண்ணாமலை கிரிவலம்! மாத சிவராத்திரியிலும் சிறிது, சிறிதாக தற்போது ஆயிரம் பேருக்குக் குறையாமல் அருணாசலத்தில் மாதசிவராத்திரி கிரிவலம் வருகின்றனர் என்பது ஆனந்தகரமான நற்செய்தி!

கிரிவலம் வந்த பின், கிரிவல அனுகிரக சக்திகளைப் பூண்ட தானிய ரவையைப் பசுக்களுக்கு அரிசித் தவிட்டில் கலந்தும், பறவைகளுக்கும், எறும்புகளுக்கும் இடுதல் மிகவும் விசேஷமானது. இன்றைய கிரிவலத்தில், சூரிய லிங்கத்தைப் பன்னிரெண்டு முறை வலம் வந்து நன்கு குனிந்து, ஐந்து விரல் நுனிகளையும் பூமியில் தொட்டுப் பிறகு நன்கு நிமிர்ந்து நின்று கூப்பிய கரங்களுடன், விண்ணுக்கும் புவிக்கும் இடையே உள்ள திவாகர சக்திக் கிரணங்கள் விரல் நுனி வளையங்கள் மூலமாகவும், பாத ரேகைகள் மூலமாகவும் ஆக்கப்படுத்தப் பெற்று காரிய சித்தி கனியும்.

காரிய சித்தி கனிவதற்கும் பிள்ளையாரப்பனின் திருவருள் முதல் சூரிய, சந்திர அனைத்து கிரகாதிபதிகளின் கனிந்த அருள் பெற்று, அனைத்துத் துறைகளிலும் இவ்வாறு தெய்வீகச் சக்திகளைப் பெற்றிட உகந்ததே ஆனி மாத சிவராத்திர்க்கான அருணாசல கிரிவலமாகும்.

பொதுவாக, உயர் பதவியில் வகிப்பவர்கள், சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள், பரந்த செல்வம் உடையவர்கள், எந்நிலையிலும் நல் ஒழுக்கத்தில் இருந்து பிறழாமல் இருக்க, ஞாயிற்றுக் கிழமை நல்ல பரந்த அன்னதானத்துடன் அருணாசலக் கிரிவலம் வருதல் நன்று.

MCA, M.Phil. Ph.D போன்ற பெரிய துறை படிப்புகளை எடுத்துக் கொண்டு, பல காரணங்களால், பல ஆண்டுகள் ஆகியும் முடிக்க முடியாமல் திணறுவோர், இந்த மாத சிவராத்திரியில் ஞாயிற்றம்பலச் சித்தரின் கருணையை வேண்டி, அருணாசல அனுகிரகத்தை நாடி, கிரிவலம் வருதல் வேண்டும். இதனால் சூரிய சக்திகள் மேம்பட்டு, வித்யா சக்திகள் மேம்படும்.

ஒரே நாளில் இத்தகைய நல்வரங்கள் கிட்டிடுமா என்று எண்ணுவதை விட, சில சூரிய நாளங்கள் நன்கு திறக்கப் பெறுவதற்கான சூரிய சக்திகள் புலரும் மாத சிவராத்திரி நாளாதலின், வினைக் கழிவுகள் அகல்வது துரிதாகி, நல்வரப் பாதையும் நன்கு அமையும் என்பதையும் அறிக!

இரும்பு, இரும்பு வார்ப்படம், பாய்லர்கள், பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலிய வாயுத் துறையினர், துப்பாக்கி போன்ற கனரகத் தயாரிப்பில் உள்ளோருக்கும் உதவும் கிரிவலம்.

சஹாரா போன்ற வெப்பம் மிகுந்த மத்தியக் கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகளில் பணிபுரிவோர், தமக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களில் இருந்து விடுபட்டு, நன்னிலையில் பணிபுரிய இம்மாத சிவராத்திரி கிரிவலம் உதவும். காரணம், இவையாவும் சூரியாக்னி சம்பந்தப்பட்ட துறைகள் ஆகும். மேலும், அந்தந்தப் பிரதேசத்தின் தட்ப வெப்ப நிலைகளுக்கேற்ப அக்னி சக்திகள் இம்மாத சிவராத்திரியில் பரிமாணம் கொள்வதாலும், சூரிய லோகத்தைச் சேர்ந்த ஞாயிற்றம்பலச் சித்தர் கிரிவலம் வருவதலாலும், இவை நன்முறையில் நல்வரங்களைப் பெற்றுத் தருகின்றன.

ஸ்ரீவித்தாண்டவ பிரம்மா

ஸ்ரீவித்தாண்டவ பிரம்மரும் ஸ்ரீவித்தாண்டவ சரஸ்வதி நாயகியும்

ஆதியுகத்தில் ஐந்து சிரசுகளுடன் ஸ்ரீபிரம்மா பொலிந்தார். ஸ்ரீபிரம்ம மூர்த்தியின் ஐந்தாம் சிரசு மறைந்தமையை விளக்கும் பல புராண சம்பவங்கள் உண்டு. நமக்குக் கிட்டி உள்ள எழுத்து வடிவிலான ராமாயண, மகாபாரத இதிகாச காவியங்கள், உண்மையாக நிகழ்ந்த ராமாயண, மகாபாரத புராணச் சம்பவங்களில் ஒரு சில பகுதிகளையே உரைக்கின்றன. எழுதாக் கிளவியாய், பரவெளியில் பதிந்துள்ள ஏனைய மகாபாரத, ராமாயண வைபவங்கள் எண்ணற்றவை!  வேதம் போல் விரிந்ததாக, மகாபாரதம் துலங்குவதால்தான் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களுடன், ஐந்தாவதாக மகாபாரதம் சிறப்பித்துப் போற்றப்படுகின்றது.

ஐந்து சிரசுகளுடன் ஸ்ரீபிரம்ம மூர்த்தி பொலிந்தபோது, தூய உலகப் பரிமாணம் துலங்கியது. ஜீவ சிருஷ்டித் தோற்றத் துறையானது, ஸ்ரீபிரம்ம மூர்த்தியிடம் அருளப் பெற்றபோது, பிரம்ம லோக சிருஷ்டியில் எழுந்த சில மாற்றங்களால், ஸ்ரீபிரம்மாவின் ஐந்தாம் சிரசின் பல அம்சங்களும், ஏனைய நான்கில் பதிந்திட, ஐந்தாம் சிரசு மறைவு கொண்டது. அதுவரையில் பதினாறு திசைகளுடன் துலங்கிய உலகமானது, எண்திசை உலகமாக ஆகிய பின், ஜீவ சிருஷ்டியிலும் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்பட்டன.

ஆதியுகத்தில், இவ்வாறு தொன்மையாகத் துலங்கிய புனிதத் தலங்கள்தாம், பதினாறு துறை தீர்த்தக் கரைகளுடன் விளங்கிய (சென்னை அருகே) திருவள்ளூர்ப் பெருமாள் தலம், அஷ்ட தீர்த்த சக்திகளுடன், எட்டுத் துறைகளுடன் இருக்கின்ற திடியன் மலை, எண்கோணக் கிணறு, எண் திசைக் குளம் உள்ள திருமயம், திருச்சி உய்யக் கொண்டான் மலை ஆகியவையாகும். இவற்றைத் தரிசிப்பதும், சுண்ணாம்பு காவி தீட்டி அலங்கரித்துப் பூஜிப்பதும் சந்ததிகள் நன்கு நல்ஒழுக்கத்துடன் தழைக்க மிகவும் உதவும்.

முதன் முதலில் சத்திய லோகத்தில்தாம், நான்கு சிரசுகளுடன் கூடிய ஸ்ரீபிரசண்ட சதா பாண்ட பிரம்ம மூர்த்தி மூலம் சிருஷ்டிக்கான மூலசக்தி இறையருளால் பதிந்தது. இவருடைய பிரம்ம மூலப் பீடத்தில் இருந்துதாம் ஸ்ரீபிரம்ம சரஸ்வதி திருக்கல்யாணம் அமைந்தது. ஸ்ரீபிரம்மத் திருக்கல்யாண உற்சவம் நிகழ்ந்த நாளே வைகாசி விசாகமாகும். திருமுருகன் உதித்த நாளுமன்றோ வைகாசி விசாகம்!

ஸ்ரீபிரம்ம மூர்த்தியும் தெய்வீகமாக கிருத்தியங்களைச் சிருஷ்டிக்கத் தொடங்கிய நாளும் இதுவேயாகும். பிரம்ம மூர்த்திகளிலும் பலர் உண்டு. ஒவ்வொரு ஸ்ரீபிரம்ம மூர்த்தியும் தம் இறைத் திருப்பணிகள் முடிந்தவுடன் ஈஸ்வரனின் மார்பில் உள்ள ருத்ர கபால மாலையில் ஒரு பிரம்ம ருத்ராட்ச மணியாக இணைகின்றார். இவரே தானியமூல வித்துக்களைத் தோற்றுவித்து, ஸ்ரீசாகம்பரி தேவியிடம் ருத்ரப் பிரசாதமாக அளித்திட, ஸ்ரீசாகம்பரி தேவியும் இதிலிருந்தே தாவர ஜங்கமங்களைத் தோற்றுவிக்கின்றாள்.

ஸ்ரீபிரம்ம மூர்த்தி
திருக்கண்டியூர்

சிருஷ்டியை இயக்கும் வித்தாண்டவ சக்திகள்

இந்த ஸ்ரீபிரம்ம மூர்த்திக்குத் தாம், சிவபெருமானே பலவிதமான சிவரகசியங்களைப் போதித்து, “வித்தாண்டவர்” என்று போற்றி அழைத்திட்டார். ஸ்ரீபிரம்ம கல்யாண உற்சவத்தில் ஸ்ரீவித்தாண்டகியாகப் பொலிந்திட்ட கலைமகளை வித்தாண்டக பிரம்ம மூர்த்தி மணந்தார். இவரே தசமூலத் திதிகளைத் தோற்றுவித்தவர். ஏகாதச ருத்ர அப்யாசங்களைப் படைத்தவர். நவவியாகரண மூலங்களுக்கு விளக்கங்களை அளித்தவர். ஸ்ரீமஹாவிஷ்ணுவிற்கான ஸ்ரீஸ்ரீஅஷ்டபதிப் பந்ததிகளை உணர்வித்தவர். பஞ்சாட்சர ஸ்ரீபாஷ்யங்களை எடுத்துரைத்தவர். நான்கு வேதங்களுக்கான ஸ்வரங்களைப் போதித்தவர்.

ஸ்ரீபிரம்ம திருமணத்தில் பல்லாயிரக்கணக்கான, புனிதமான அக்னி ஹோத்ரிகள் பங்கு கொண்டார்கள். அக்னி ஹோத்ர குண்டம் என்று பண்டைய பாரதத்திலிருந்து அன்றும், இன்றும், என்றுமாய், காஞ்சி, நைமிசாரண்யம், முசிறி, உடுப்பி, காசி, பிரயாக் போன்ற தலங்களில், ஒரு நாள் கூடத் தவறாது, பல நூறு ஆண்டுகளாக, தினமுமே அக்னி வளர்த்து ஹோம பூஜை செய்து, உலக ஜீவன்களின் மேன்மைக்காக வழிபட்டு வரும் புனிதமான அக்னி ஹோத்ரக் குடும்பங்களே அக்னி ஹோத்ரிகள் ஆவர்.

அக்னி ஹோத்ர வழிபாட்டு ஹோமத்திலும் ஐந்து வகைப் புனிதமான அக்னிகள் உண்டு. இவற்றில் பூமியில், ஜீவன்கள் நடத்தும் பூஜைக்கான ஒரு வகை உண்டு. இரண்டை நாம் கண்டு தரிசித்திடலாம். ஒன்று எப்போதும் மறை பொருளாகவே இருந்து, வேத முடிச்சுகளுடன் அக்னிக்கும் அக்னியாக தரிசிக்கப் பெறுவது. இவ்வாறு பல நூறு ஆண்டுகளாக போஷிக்கப்பட்டு வரும் அக்னியைத் தரிசிப்பதே குடும்பத்திற்குப் பல சௌபாக்யங்களைத் தருவதாகும். உத்தம குலம் தழைக்கவும், தோஷங்களை நிவர்த்தி செய்யவும் ஐந்து வகை சௌபாக்ய சக்திகளைக் குடும்பத்திற்குப் பெற்றுத் தரவும், இப்பன்னெடுங்கால அக்னித் தரிசனம் உதவும்.

திரியுகி நாராயண் மலையில் மூன்று யுக கால அக்னி!

கேதார்நாத் செல்லும் வழியில், குப்தகாசி ருத்ர பிரயாகை அருகே, திரியுகி நாராயண் என்ற மலைக் கோயிலில் மூன்று யுகங்களாகத் தொடர்ந்து அணையாமல் இருந்து வரும் அக்னிக் குண்டம் ஒன்று உண்டு. இங்குதாம் சிவபார்வதிக் கல்யாண உற்சவம் நிகழ்ந்த காலத்தில் இருந்து, திரியுக அக்னி, அதாவது மூன்று யுக கால அக்னி நன்கு போஷிக்கப்பட்டுப் பரிமளித்து வருகின்றது. இயன்றால் நீங்களே நேரில் சென்றோ அல்லது அங்கு செல்பவர்களிடம் நிறைய சமித்துகள், புனித மரக் குச்சிகள், விறகுகளை அனுப்பி வைத்து இந்த புனிதமான அக்னிக் குண்டத்தில் சேர்க்க வைத்து, இந்த அக்னி மென்மேலும் பன்னெடுங்காலம் தழைத்து, எதிர்காலச் சந்ததிகளுக்கும் அருளிட, உங்களால் ஆன உதவியைச் செய்து, உங்கள் சந்ததிகளும் நன்கு விருத்தியுற வழி செய்து கொள்ளுங்கள்.

கலியுக உத்தம யோகப் பூர்வ மஹானுபாவரான ஸ்ரீஷீரடி சாய்பாபா ஜீவாலயம் பூண்டிருக்கும் ஷீரடியிலும், பன்னெடுங்காலமாக அக்னி போஷிக்கப்பட்டு வருகின்றது. சென்னை மயிலாப்பூர் ஸ்ரீஷீரடி சாய்பாபா ஆலயத்திலும் இவ்வகை அக்னி உண்டு. இவற்றை எல்லாம் உங்கள் பிள்ளைகளுக்குத் தரிசனம் செய்வித்து, அவர்களுடைய இரத்தத்தில், நல்ல தீபாக்னி சக்திகளை ஏற்றித் தாருங்கள்.

சந்ததி விருத்தி அடைய உதவும் வெண்பட்டை காவி இடும் திருப்பணி!

பிரம்ம திருக்கல்யாணத்தில் உலகத்தில் உள்ள அனைத்து ஜீவன்களுக்கும், அனைத்து மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், புழு பூச்சிகள் அனைத்திற்குமே அன்னம் வழங்கப் பெற்றது. மனிதர்களுக்கு அன்னம் எனில் தாவரங்களுக்குப் உரச் சத்தாகவும், விலங்குகளுக்கு அதனதற்கான உணவாகவும் அளிக்கப்பட்டது. அப்படியானால் மலை, கல், மண் போன்ற ஜடப் பொருட்களுக்கு ஸ்ரீபிரம்ம கல்யாணப் பிரசாதமாக எதை அளிப்பது?

அப்போதுதான் பிரம்ம மூர்த்தி தன் பிரம்மஞான சடாட்சரக் கழியால், காவி வண்ணத்தில் ஒரு பட்டையைக் கீற்றுபோல் வார்த்திட, அதன் அருகில் கலைவாணியாம் ஸ்ரீசரஸ்வதியும் தன் வெள்ளைத் தாமரையால் வெண்பட்டைக் கீற்று அமைத்திட, இவை அனைத்து ஜடப் பொருட்களின் மேலும் பதிந்து, அவற்றிற்குத் தேவையான அன்ன சக்தியை அளித்தன. இதிலிருந்துதாம் ஆலயங்களுக்கு வெண் காவிப் பட்டையும், இல்லத்தில் கோலமிட்டுச் செங்காவி இடுவதும் நடைமுறைக்கு வந்தது.

ஒவ்வொரு குடும்பமும் வாழ்வில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது கிராமத்துச் சிறு கோயில்களில் முழுவதுமாக சுண்ணாம்பு, வெண்பட்டைக் காவி பூசுகின்ற திருப்பணியை ஏற்று நடத்துதலால் சந்ததி நன்கு தழைக்கும்.

இதற்காகத்தான் கிராமப் புறங்களில் வறட்சியால், கோடை வெயிலால், நீர் அன்ன, ஆகாரமின்றி மக்கள் அவதியுறும் போது, கிராமத்து ஆலயங்களுக்கு ஐயனார், மாடன் போன்ற மூர்த்திகள் தோன்றும் வெட்ட வெளி மண்டபங்களுக்கு அல்லது மண் சுவர்களுக்கு வெண்காவிப் பட்டை தீட்டி மாரியம்மன் திருவிழா போன்ற கிராமீய இறை விழாக்களை ஏற்று நடத்திட, அன்னசார சக்தி, நல்லருளாய் கிராம மக்களை அடைகின்றது.

இவ்வாறாக, பிரம்ம கல்யாண உற்சவம் நிகழ்ந்த தினமே வைகாசி விசாகமாகும். இனியேனும் பக்த கோடிகள் வைகாசி விசாகம் தோறும் ஸ்ரீபிரம்ம சரஸ்வதி திருக்கல்யாண வைபவத்தை நிகழ்த்தி, பக்தி சாரம், அக்னி சாரம், ஆத்ம சாரம், ஞான சாரம், அருள் சாரம் போன்ற பல தெய்வீக சக்திகளைப் பெற்றிடுவீர்களாக!

வைகாசி விசாகம்

ஸ்ரீபிரம்ம ஸ்ரீசரஸ்வதி கல்யாணத் திருநாள் – சென்ற இதழ் தொடர்ச்சி

ஸ்ரீபிரம்ம திருக்கல்யாண உற்சவம் நிகழ்த்தி, பிள்ளைகள், பெண்களுக்குச் சாந்தமான திருமண வாழ்வைப் பெற்றுத் தாருங்கள்!

வைகாசி விசாகத்தில் ஸ்ரீபிரம்மா ஸ்ரீசரஸ்வதி கல்யாண பிரம்ம உற்சவம் தனை ஏற்று நடத்தி குடும்பத்தில் ஒற்றுமையைப் பேணிடுங்கள்!

ஆம், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீசரஸ்வதி திருக்கல்யாண உற்சவம் வைகாசி விசாகத்தில் தான் நிகழ்ந்தது. பண்டைய யுகங்களில் இருந்தே, பங்குனி நட்சத்திரம், சிவபெருமான், பெருமாள், முருகனின் திருமண உற்சவ நாளாகவும், சித்திரை உத்திரம் மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மனின் திருமண உற்சவத் திருநாளாகவும், வைகாசி விசாகம் ஸ்ரீபிரம்ம மூர்த்தியின் திருமண உற்சவ நாளாகவும் மிகச் சிறப்புடன் ஆலயங்களில் கொண்டாடப் பெற்று வந்தன. இதில் தற்போது வழக்கில் மறைந்துள்ள ஸ்ரீபிரம்ம கல்யாண உற்சவத்தை, நடப்பு தாரண ஆண்டு முதல் மீண்டும் புத்துணர்வுடன் பொலிய வைப்பது பக்தர்களின் கடமையாகும். குறிப்பாக, ஸ்ரீசரஸ்வதி எழுந்தருளும் தலங்களில், பிரம்ம கல்யாண உற்சவம் மிகுந்த மகத்துவம் வாய்ந்ததாகும்.

பிரம்மஞான சடாட்சரக் கழி

பிரம்ம ஞான சடாட்சரக் கழி என்ற ஒன்று உண்டு. சந்தனம், வில்வம், மூங்கில் போன்ற ஒன்பது தேவ மூலிகைக் கணங்களால் பிணைத்து ஆக்கப்படுவது சடாட்சரக் கழி ஆகும். இதன் நுனியில் அபராஜிதப் பொன்னாலான ஓங்கார முத்திரை பதிக்கப்பட்டிருக்கும். இதன் மூலமாகவே, ஒவ்வொரு ஜீவனின் தலைவிதியும், தலைச் சுழியாக பிரம்மஞான சடாட்சரக் கழியால் ஜீவன்களின் கபாலத்தில் உரசப் பெற்று, நிர்ணயம் ஆகின்றது.

அனைத்து ஜீவன்களுக்கும் பிரம்ம கபாலம் உண்டு. தலைவிதி என்பது computer chip போல, அவரவர் கபாலத்தின் தாய நாளத்தில் (mother board போலப்) பதிக்கப்படுவதாகும். விண்ணுலக லோகங்களில் வழக்கில் நிலவும் விஞ்ஞானத்தை ஒப்பிடுகையில், நம் பூமியில் காணும் கம்ப்யூட்டர் விஞ்ஞானமானது மிக, மிகப் பழமையானது (much obsolete!)

அரிது, அரிது விதியை அறிதல் அரிது! அதனினும் அரிது விதியை மாற்றல்!

தலைச்சுழி, நாபி, கை மற்றும் கால் ரேகைகள் விதியை உரைக்க வல்ல அம்சங்களைக் கொண்டுள்ளன எனினும், எந்த ஜீவனின் தலைவிதியையும் கடுமையான தவத்தாலேயே குருவருளால் பரிபூரணமாக அறிதல் கை கூடும். ஆனால் விதியை மாற்றுதல் மிக மிகக் கடினம். இறை ஆணை இருப்பின்தான், பூம்பாவையைத் திருஞான சம்பந்தரும், முதலைவாய்ப் பிள்ளையைச் சுந்தரரும், அப்பூதியார் சிவச்செல்வன் சீராளனை அப்பர் சுவாமிகளும் மாண்ட நிலையிலிருந்து, மீட்டு ஜீவசக்தி தந்தது போல சற்குருமார்களும் விதியை மாற்றுவர்.

ஆனால் விஞ்ஞானத்துக்கு அடிமைப்பட்டு விட்ட மனித மனமானது, விதிப் பூர்வமானதாக இருக்கின்ற எதனையுமே மாற்ற முயற்சிக்கும் என்பதால்தான், விதி என்பது (இறைப்) பகுத்தறிவால் தான், மிகவும் கடினமான யோக, தியான, பூஜை முறைகளால் அறிய வல்லதாக, மறைபொருளாகவே உள்ளது.

பரிகாரம், பிராயச்சித்தம் என்பவை எல்லாம் விதியை மாற்றிடா! இவையாவும் பிரம்ம கபாலத்தில், மேம்பட வேண்டிய சிலவகை நாள சக்திகளை ஆக்கப்படுத்தி, விதியின், வினைகளின் தன்மைகளைத் தணிக்கச் செய்யுமே அன்றி, விதியை மாற்றிடா!

தலைவலியும் கபாலவளியும்!

வளி என்றால் மலைத் தலங்களில் இயற்கையாக ஓடும் நீரோட்டம் அருகே கிட்டும் விமல சேதனம் எனும் மூலிகையால் ஆக்கப் பெறும் கபாலவடித் தைலம் கபால நாளங்களை மேம்படுத்த வல்லதாகும். சில அரிய மூலிகைகளின் சுவாசமும், பிரம்ம வாயு மண்டலத்தில் கலந்து குறித்த பிரம்ம கபால நாள வள சக்திகளைத் தருகின்றன. இதற்காகத்தான் தலைவலி நிவாரணத் தைலங்களில், குறிப்பிட்ட கபால சேதன சக்தித் தைலங்களும் சேர்க்கப் பெறுவதால்தான் கபால சக்திக்காக நெற்றிப் பட்டைகளில் இத்தைலங்கள் தேய்க்கப் பெறுகின்றன. சில வகை மூலிகைக் குச்சிப் புகைகளும் குறித்த சில வகைப் பிராண வாயு சக்திகளை உருவாக்குவதால், தலைவலியை நீக்கிட விரளி மஞ்சள், வசம்பு மூலம் எழும் புகையை சுவாசிக்கும் வழக்கமும் உண்டு. ஏனைய வகைத் தலைவலிகள் ஏற்படுகையில், சில பிரம்ம சூத்திரங்களை ஓதி வருதல் மிகவும் விசேஷமானதாகும்.

பண்டைய கால நாள நாடி வகை வர்ம மருத்துவக் கலையில், கபால நாடிகளை ஆக்கப் பூர்வமாகப் பயன்படுத்துவதற்காக, சில வகை பிரம்ம கபால யோக ஆசன முறைகளைக் கடைபிடிப்பர். இவற்றைத் தலைவலி ஏற்படும் நேரங்களில் செய்து வர, கபாலம் சம்பந்தப்பட்ட நோய் நிவாரணத்திற்காக அபரிமிதமான பலன்களைத் தருவதாகும்.

எனவே, பிரம்ம கபாலச் சக்திகளைப் பெறவும் பல அரிய பிரம்ம கலாம்ருத யோகங்களைப் பயில வேண்டும். சிரசாசனம் இவ்வகையைச் சார்ந்ததே!

ஸ்ரீபிரம்ம கல்யாண உற்சவாதிகள் நிகழ்ந்த திருத்தலங்கள்!

பிரம்ம கல்யாண உற்சவங்கள் நிகழ்வதற்கான திருத்தலங்களை சிவபெருமானே நிர்ணயித்து அளித்திட்டார். இதில் காஞ்சீபுரத்தில் ஸ்ரீபிரம்ம கல்யாணத்திற்கான பூர்வாங்க வேள்விகள் நிகழ்ந்தன. இங்கு ஸ்ரீஅகஸ்திய மகரிஷி தலைமையில் பல மண்டபங்களில் இடைவிடாது, பல மாதங்களுக்கு வேள்விகள் ஆற்றப் பெற்றன. ஸ்ரீவிளக்கொளிப் பெருமாளின் திருவருளால், கொட்டும் மழையிலும், வேள்வியின் அக்னி நனையாத வகையில், அற்புதமான பக்தி முறைகளில் வேள்விகள் நிகழ்த்தப் பெற்றன.

திரியுகி நாராயண் மலைத் தலத்தி(ல்)ன் பல யுகங் கண்ட அக்னி!

இத்தகைய அக்னி அணையா வேள்விகளுள் ஒன்றாக விளங்குவதே திரியுகி நாராயண் மலைத் தலத்தில் எப்போதும் ஒளிரும் அக்னியாகும். வட இந்தியாவில், கேதார்நாத் செல்லும் வழியில், சோன்பிரயாக் அருகே திரியுகி நாராயண் மலைத் தலத்தில் பார்வதி கல்யாணம் நடந்த யுகத்திலிருந்து இன்றளவும் தொடர்ந்து பிரம்ம (வேள்வி) தளத்தில் அக்னி (நெருப்பு) அணையாமல் காத்துப் போற்றி வழிபடப் பெற்று வருகின்றது. இந்த புனிதமான நெருப்பினை இத்தலத்தில் தொடர்வதற்கான பசுநெய், நல்விறகு, சமித்துக்களைத் தானமாக அளிப்பது மிகவும் விசேஷமானதாகும். குறிப்பாக, நற்சந்ததிகள் தழைக்கவும், குடும்பத்தில் ஏற்பட்ட விபத்துகளுக்குக் காரணமான அக்னி தோஷங்கள் தீரவும் இந்த சமித்து, பசு நெய் தானம் பெரிதும் உதவும்.

திருமாந்துறையில் ஸ்ரீபிரம்ம கல்யாண உற்சவம்!

திருச்சி – லால்குடி இடையிலுள்ள திருமாந்துறைத் தலத்தில்தாம் ஸ்ரீபிரம்ம கல்யாணத்திற்கான சங்கல்ப பூஜைகள் நடைபெற்றன. (தேவ) திருமணம் ஆ(ன)ந்துறை (ஆந்துறை – ஆவதற்கான சங்கல்பத் துறை) என்பதே திருமாந்துறை ஆயிற்று! இதனால்தான் இது ஸ்ரீகாயத்ரீ நதிக் கரைத் தலமாகவும் பண்டைய காலத்தில் பொலிந்தது!

ஸ்ரீமிருகண்டு மகரிஷியே, ஸ்ரீபிரம்ம திருமணத்திற்கானச் சங்கல்ப பூஜைகளை ஆக்கி வைத்தார். மேலும் அருகிலுள்ள தலமான திருமண மேட்டில், மேடை கட்டிப் பாலிகைகள் வைக்கப் பெற்றுப் பூஜிக்கப் பெற்றமையால், இத்தலம் திருமண மேடு எனப் பிரசித்தி பெற்றது.

ஸ்ரீபிரம்ம கல்யாணப் பாலிகை பூஜைகள் நடந்த மேடையே திருமண மேடு ஸ்ரீதர்மசம்வர்த்தினி சமேத ஸ்ரீபஞ்சநதீஸ்வரர் சிவத்தலமாகும். எனவே, இங்கு நவதான்யங்களைப் பாலிகைகளில் (மண் பாத்திரங்கள்) நேர்த்தியாகச் சுமந்து வந்து, திருமண மேட்டில் வைத்து இங்கு சிவனை பூஜிப்பதால், எத்தனையோ திருமணத் தடங்கல்களுக்கு மிக எளிதில் நிவர்த்தி காணலாம்.

திருமண தோஷங்களை நிவர்த்திக்கும் மயில்ரங்கம்

திருமணமேடு கிராமத்தை ஒட்டியுள்ள மயில்ரங்கம் ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீமயூரநாதர் சிவத்தலமும், ஸ்ரீபிரம்ம கல்யாண உற்சவச் சடங்குகள் பலவும் நிகழ்ந்த தலமாகும். மயில் ரங்கம் என்பது ஆலகால விடம் உண்டு, அவனியைக் காத்த சிவபெருமான், விடத்தூல நீலந்தரித்துக் காட்சி அளித்த தலமாகும். கருநீல ரங்கனாய் ஸ்ரீகிருஷ்ணனும் இங்கு இந்த தரிசனத்தைப் பெற்றிட்டார். ரங்கம் என்றால் எப்போதும் பிரகாசமான சிறப்பைக் கொண்டது என்று பொருள். பிரதோஷ கால வழிபாட்டிற்கு மிகவும் சிறப்பான தலம். கோயம்பேடு, சுரட்டப்பள்ளி போன்று மகத்தான சனிப் பிரதோஷத் தலம்.

ஸ்ரீஅதிகாரநந்தி மூர்த்தி
திருமழபாடி

திருமழபாடியில் திருமண உற்சவம் கொண்ட ஸ்ரீஅதிகார நந்தி மூர்த்தி, இங்கு மயில் ரங்கத்தில் பல்லாயிரம் ஆண்டுகள் சனிப் பிரதோஷ வழிபாடுகளை மேற்கொண்டு, திருவையாற்றில் சப்த ஸ்தல உற்சவாதிகளைப் பெற்று, சுயாம்பிகையை மணந்து, தம்பதி சகிதம் அன்றும் இன்றுமாய்ச் சூக்கும வடிவுகளில் பிரதோஷ பூஜை நிகழ்த்தும் தலமே மயில்ரங்கம். திருமணத்திற்குத் தடங்கலாய் இருக்கும் தோஷங்களை நிவர்த்தி செய்ய வல்ல தலங்கள் இவ்வாறாக நிறைய உண்டு.

மயில்ரங்கம், மயில்ரங்கம் என்றே ஓதி
மாதவத்தான் மகிமை தன்னை மேதானுபூதி
அயித்திறத்தால் அறிவோம் தாமே
ஆதவா! அருஞ்சுடரே! அருணா வண்ணா!
அருமணமாம் திருமணச் சாரம்
அருளிடுவாய் ஆகமநாதா!

- என்று சித்தர்களுடைய மாமந்திரத் துதியை ஓதி வலம் வர வேண்டிய தலம். அருட் பழம் கனிந்து கிட்டும் தலம். அதாவது காரிய சித்தி ஆவதற்கான கனிந்த வழிபாடு நிகழும் தலமாகச் சித்தர்கள் இதனைப் பெரிதும் போற்றுகின்றனர். ஸ்ரீபிரம்ம மூர்த்தி தினந்தோறும் நித்தியப் பிரதோஷம் நிகழ்த்தி வழிபடுகின்ற தலங்களுள் இதுவும் ஒன்று.

திருமண மேடு, மயில்ரங்கம் அருகில் உள்ள இடையாற்று மங்கலத்தில், ஸ்ரீமாங்கல்ய மஹரிஷி தினமும் பூஜிக்கும் இறைவன் ஸ்ரீமாங்கல்யபுரீஸ்வரராக வீற்றிருக்கின்றார். ஸ்ரீபிரம்ம கல்யாண உற்சவத்தில் மாங்கல்ய பூஜை நிகழ்ந்த தலம் இதுவே.

திருமாந்துறையை அடுத்து வரும் கிளைப் பாதை, நகர் என்னும் ஸ்ரீஅத்துல்யசுந்தரி சமேத ஸ்ரீஅப்ரதீஸ்வரர் சிவத்தலத்திற்கு இட்டுச் செல்கின்றது. மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு நகர் வலமாகப் பொலிந்த தலம். ஸ்ரீபிரம்ம கல்யாண உற்சவச் சடங்குகளில் மாப்பிள்ளை நகர் வலச் சடங்குகள் இங்கு நிகழ்ந்த அருட்தலம்.

லால்குடி – அன்பில் மார்கத்தில் உள்ள மணக்கால் கிராமத்தில் ஸ்ரீசிவகாம சுந்தரி சமேத ஸ்ரீகைலாச நாதர் ஆலயம் அமைந்துள்ளது. மனைக்கால் பூண்டு, அதாவது, ஸ்ரீபிரம்ம கல்யாண உற்சவத்தில், பலா மரப் பலகையில் (மனைக்கால்) ஸ்ரீபிரம்மாவும், ஸ்ரீசரஸ்வதியும் அமர்ந்து சிவனிடம் ஆசி பெற்றத் தலம்.

லால்குடி அருகே உள்ள சாத்தமங்கலத்தில் மரகத லிங்க தரிசனம் மிகவும் விசேஷமானதாகும். இங்கு பிரம்ம கல்யாண உற்சவத்தின் போது புஷ்பதாரண பூஜை நடைபெற்றது. லால்குடி  எனப்படும் திருத்தவத்துறையில், பிரம்ம கல்யாண உற்சவத்தின் சப்தபதி தவச் சடங்கு நிகழ்வுற்றது.

கும்பகோணம் ஸ்ரீபிரம்மர் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீவேதநாராயண பெருமாள் ஆலயத்தில், ஸ்ரீபிரம்மரின் மூல உருவத்தைத் தரிசித்திடலாம். இங்கும் ஸ்ரீபிரம்ம திருக்கல்யாண உற்சவத்தை ஏற்று நடத்துதல் மிகவும் விசேஷமானது.

இவ்வாறு, இறைத் திருமண உற்சவங்கள் நிகழ்ந்த தலங்களில், வரிசையாக வழிபட்டு வந்திட, வரிசையாகக் குவிந்து நிற்கும் திருமண தோஷங்களும் ஒன்றன் பின் ஒன்றாக நிவர்த்தி பெறும். திருமாந்துறை, திருமண மேடு, மயில்ரங்கம், இடையாற்று மங்கலம், நகர், மணக்கால், லால்குடி, சாத்தமங்கலம் போன்ற தலங்களில் வழிபாடுகள், தான தர்மங்களை மேற்கொண்டு வர எத்தகைய திருமணத் தடங்கல்களுக்கும் தீர்வுகளைப் பெறலாம். திருமண வாழ்க்கையிலும் கணவன் மனைவி இடையிலுள்ள மனக் கசப்புகள், மன வேறுபாடுகளைக் களையவும் இவ்வழிபாடுகள் துணை புரியும்.

எனவே, பிரம்ம திருக்கல்யாண உற்சவத்தை வரும் தாரண வருட வைகாசி விசாகத் திருநாளில் கடைபிடித்து திருமண வாழ்கையைச் சீரமைத்து நல் வாழ்வைப் பெறுவீர்களாக!

மாமருந்து பூஜை

மருந்தோடு, மாமருந்து பூஜை சேர்!

மருந்திற்கும் மாமருந்து சக்திகளைத் தரும் பூஜைகள்!

தற்போது ரத்த அழுத்த நோய் மற்றும் சர்க்கரை வியாதிகள், நாற்பது வயதைத் தாண்டிய உடனேயே பலருக்கும் வந்து விடுகின்றன. மருத்துவப் பூர்வமாகப் பல காரணங்களை இதற்கு விஞ்ஞான உலகம் அளித்தாலும், நோய் நிவர்த்திக்கான பரிபூரண மருந்துகளை விஞ்ஞான மருத்துவத் துறையான அல்லோபதியால் (ஆங்கில மருத்துவம்) அளிக்க முடியவில்லையே!

உண்ணும் போதே இறைத் துதிகளை ஓதி வரும் வழக்கமும் கலியுகத்தில் மறைந்து விட்டது. இதற்குப் பரிகாரமாகவே, சிறிய அளவில் அன்னதானம் செய்தாலும், மந்திரங்களை, இறைத் துதிகளை ஓதி சமைத்துத் தானம் செய்கையில் பல அன்னசுத்தி சக்திகள் கிட்டுகின்றன. எந்தத் திதியில் எவ்வகைப் பூஜைகளைச் செய்து வந்தால் எத்தகைய வியாதிகள் தீரும் என்பதற்கான திதி நித்யாப் பூஜைகளும் உண்டு. திதி, நட்சத்திரத்தைத் ஒட்டி வரும் சில பண்டிகைகளில் திருவாதிரைக் களி, காரஅடை(யான் நோன்பு), பொங்கல் போன்றவை அந்தந்த நாளில் உற்பவிக்கும் சில திரவிய சக்திகளைக் குறிப்பதாகும்.

சித்த மருத்துவம், ஆயுர்வேதம், இயற்கை மருத்துவத்தில் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்த நோய்களுக்கான நல்மருந்துகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், ஆழ்ந்த நம்பிக்கையுடன் இவற்றைக் கடைபிடிப்பார் இல்லை! வாரம் ஒரு முறையேனும் மூலிகை செறிந்த உணவு வகைகளைத் தற்காலத்தில் பலரும் தினமும் ஏற்பதில்லை. இதனால்தான் நோய் நிவாரணமும் சரியாக அமைவதில்லை.

மருந்தோடு மாமருந்தாய்ப் பூஜை சேர்!

கர்ம வினைகளே நோய்களுக்குக் காரணம் என்பதில், பரிபூரண நம்பிக்கை வரும் வரை, மருந்துகளோடு, மாமந்திர சக்திகளும், மற்றைய வழிபாடுகளும் கூ(ட்)டியே நோய் நிவாரணம் பெறுதல் வேண்டும். கர்ம வினைகளே நோய்களுக்குக் காரணம் என்று வெறுமனே மனத்தளவில் எண்ணுவதில் பயனில்லை! உளப்பூர்வமாகத் தானே அமைய வேண்டும். ஒருவருடைய ஜாதகத்தில் சனீஸ்வரர், செவ்வாய் மூர்த்திகளின் அமர்வுகளைக் கொண்டு அவருக்கு ஏற்பட இருக்கின்ற நோய்த் தன்மைகளை நன்கு அறிந்து கொள்ள முடியும்.

மூன்று “திரு”முறைகள்!
ஸ்ரீவள்ளலார் சுவாமிகளின், “பசித்திரு, தனித்திரு, விழித்திரு!” என்ற மூன்று திருத்தேவ வாக்கியங்களுக்கான அர்த்தங்கள், தெய்வீக ரீதியாகவும் லௌகீகமாகவும் பற்பல உண்டு. ஆழ்ந்த தெய்வீக நிலையில், (இறை அருளுக்காக ஏங்கிப்) பசித்திரு!
(எவ்வகையிலும் ஞானம் பெற) விழித்திரு! (இவற்றுக்காக எங்கிருப்பினும் உள்ளத்தளவில் இருதயப் பூர்வமாகத் தியானித்துத்) தனித்திரு! என்று பொருள் கொண்டாலும், லௌகீகமான வாழ்விற்கு உரிய அறவழி அர்த்தங்களும் இதில் நிறைய உண்டு.

ஆனால் பசிக்கும் போது நன்கு உண்பது என்பது வேறு, வயிறு புடைக்க உண்பது என்பது வேறு! நன்கு உண்பதில் தவறில்லை! முக்கால் பங்கு உணவும், கால் பங்கு நீருமாக உண்பதே ஆரோக்யமான உணவீட்டு முறை! எப்போதும் வயிறு முட்டி நிரம்பிடும் வகையில், தொண்டை அடைக்க நிறைய உண்டு விடாது, 70 சதவீதம் உணவு, 20 சதவீதம் நீராக, முக்கால் வயிறு உண்டு, அடுத்த வேளையில் பசித்து உண்டால்தான் செரித்தலுக்கு உதவும். எனவே, சிறிது பசி மீந்து இருக்க உண்பதுதான் உடலுக்கு ஆரோக்கியமானது, இதுவே, மனதையும் தீய வழிகளின் பால் நாடாது, இறைச் சிந்தனைகளின் பால் செலுத்த உதவும். மேலும் ஏழைகளை வாட்டும் பசியின் கொடுமையையும் உணரவும் உதவி, தான தர்மச் சிந்தனையும் செறிவடையும்.

எனவே, பசியைப் போக்கிட, வயிறு புடைக்க உண்ணுதல் என்பதைவிட, சிறிது இடம் விட்டு உண்ணுதலே ஆன்மீகத்தில் நல்ல உத்தம நிலைகளைத் தருவதாகும். மூலிகை செறிந்த உணவு வகைகள் தாமாகவே வயிற்றளவைக் குறிக்க வல்லன. இவ்வாறாக பசித்துப் புசி என்பதில் முக்கால் வயிறுக்கு உண்பதே சித்த வைத்திய ஆரோக்கிய மருத்துவ முறையாகும்.

சர்க்கரை வியாதிக்கு ஆன்மீக ரீதியாகத் தீர்வு கண்டிட, ஆழ்ந்த நம்பிக்கையும் பக்க விளைவுகளை அளிக்கும் ஆங்கில மருந்துகளையும் நாடாத தீவிர மனோ வைராக்ய தன்மையும் ஆரம்ப முதலே தேவையானதாம். ஆனால், கலியுகத்தில் இத்தகைய மனோநிலைகளை அடைவது மிக மிகக் கடினம். சிறு தலைவலி என்றாலே பல மாத்திரைகளை விழுங்கும் மனப்பான்மை உள்ள கலியுகத்தில், சகிப்புத் தன்மை, பொறுமை இவற்றுடன் தனக்குள்ள நோய்கள் தன் வினைகளின் விளைவுகளே என்று உணரும் பாங்கும் வருதல், அமைதல் மிகவும் கடினமானதே!

கலியுகத்தில் மருந்துகளின் நற்குணத் தன்மைகளை ஆன்மீக ரீதியாக நன்கு விருத்தி செய்ய வழி முறைகள் நிறைய உண்டு. ஒரே மாத்திரை வகையைப் பல மருத்துவர்கள் தந்தாலும், ஒரே வகை நோய் உள்ளவர்கள் அதே வகை மருந்துகளை உட்கொண்டாலும், நோய் நிவாரண முறையும், காலமும் மாறுபடுகின்றது அல்லவா! எனவே, மருந்தோடு மாமருந்தாய்த் திகழ்வது கூடுதல் வழிபாட்டு முறைகளும், அவரவர் கொண்டுள்ள புண்ய சக்திகளுமே ஆகும்.

ஸ்ரீவைத்யநாதர் ஆலயம்
ஸ்ரீவில்லிபுத்தூர்

வைத்ய சக்தி நாட்கள்

செவ்வாய்க்கிழமை, அஸ்வினி, ஆயில்யம், பிரதமை போன்ற நாட்கள் மருத்துவ குண சக்திகளைக் கொண்டவை. இதிலும், தேய்பிறைச் செவ்வாய் அற்புத மருத்துவ குண சக்திகளைக் கொண்டது. பௌர்ணமியை அடுத்து வரும் தேய்பிறைச் செவ்வாயில், மருத்துவரைப் பார்ப்பது, மருந்துகளை உட்கொள்ளத் துவங்குவது மிகவும் சிறந்த பலன்களைத் தரும்.

இந்நாட்களிலும், வைசாக சுத்த சித்சக்திகள் நிரம்பிய நாட்களிலும், செவ்வாய் மூர்த்தி, வைசாகத் தீர்த்தத் தலங்களில் நீராடி, ஸ்ரீவைத்யநாத சுவாமி, ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தியைப் பூஜித்து, விண்ணிலும், மண்ணிலும், நீரிலும், நெருப்பிலும், காற்றிலும், வைத்ய சக்திகளை தீர்த்தப் பூர்வமாக நிரவுகின்றார். மருத்துவர்கள் நன்கு சிரத்தையுடன் தினமும் அரசு, வேம்பு, வில்வ மரங்களுக்குச் சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம், செந்தூரம் இட்டுப் பூஜித்து, மருத்துவ குண சக்திகளை மேம்படுத்திக் கொண்டிடுதல் கைராசியை விருத்தி செய்யும்.

குறைந்தது 300 ஆண்டுகள் பழமையான அரசு, ஆல், புரசு, வேம்பு, வன்னி, வில்வம் போன்ற புண்ணிய விருட்சங்களைப் பன்முறை வலம் வந்து வணங்குதல் நல்ல பலன்களைத் தரும்.

அஸ்வினி, செவ்வாய் ஹோரை, தேய்பிறைச் செவ்வாய், பிரதமைத் திதி போன்றவை நோய் நிவர்த்தி சக்திகளைக் கொண்ட காலமாகும். இந்நாட்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைத்யநாத சுவாமி, சென்னை பூந்தமல்லி ஸ்ரீவைத்யநாதர், ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைப்பாக்கம் ஸ்ரீவைத்யநாத சுவாமி, சென்னை திருவான்மியூர் ஸ்ரீமருந்தீஸ்வரர், கும்பகோணம் அருகே திருக்கற்குடி ஸ்ரீஅருமருந்து நாயகி, திருத்துறைப்பூண்டி ஸ்ரீஔஷதபுரீஸ்வரர், வைதீஸ்வரன் கோயில் போன்ற தலங்களில் வழிபடுதல் நோய் நிவாரண சக்திகளைப் பெற்றுத் தருவதாகும்.

ஏழ்மையாக, நடுத்தர வர்கத்தில் உள்ள சித்த வைத்யம், ஆயுர்வேதம், இயற்கை வைத்யர்களுக்குத் தேவையான திரவியங்கள், மூலிகைகளைப் பெற உதவுவதும் நோய் நிவாரண சக்திகளைத் தரும். ஆலயங்களில் நலிந்திருக்கும் (மூலிகை) விருட்சங்கள், தென்னை, பனை, வேம்பு, அரசு போன்ற மரங்களுக்கு உரமிட்டு, நல்மண் சார்த்தி, நீர் ஊற்றி நில சக்திகளைப் பெருக்குதலும் ஒரு வைத்ய சேவையே.

திருந்துதேவன்குடி (கற்குடி) சிவாலயம்

அமிர்த நேர பூஜைகளும் அருமருந்தேயாம்!

சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும், வந்த வியாதியின் கடுமையைத் தணிக்கவும் வல்ல திதி வாரி உணவு வகை முறைகளும் உண்டு. ஸ்ரீஆயுர்தேவி மஹிமை நூலில் விளக்கங்களைக் காண்க! உதாரணமாக, கையை விரித்தாலும் அதில் அடங்காத அளவிற்கு, மிகப் பெரிய லட்டுகளை நிறைய முந்திரிப் பருப்புகள், திராட்சை சேர்த்துத் தயாரித்தும், அவரவருக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு வகைகளை அமிர்த யோக நேரத்தில் தானமாகவும் அளித்து வருதல்,

ஸ்ரீஅமிர்தலிங்கம், ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர், ஸ்ரீஅமிர்தநாயகி, ஸ்ரீஅமிர்தவல்லி போன்ற அமிர்த வகை நாம மூர்த்திகளை அமிர்த யோக நேரத்தில் தேனபிஷேகம் செய்து வழிபடல், சென்னை திருக்கச்சூர் மலைக் கோயிலில் (ஸ்ரீமருந்தீஸ்வரர் மலை ஆலயம்) நந்திப்பீடம் அருகே உள்ள அருமருந்து மண் பிரசாதம் தினமும் கடுகினும் சிறிதளவு உண்டு வருதல், பட்டுக்கோட்டை அருகே மருங்கப்பள்ளம் ஸ்ரீஔஷதபுரீஸ்வர வழிபாடு, ஆயில்யம் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் கும்பகோணம் – திருவிசநல்லூர் அருகே உள்ள திருந்துதேவன்குடி ஸ்ரீஅருமருந்து நாயகி பூஜை போன்றவை சர்க்கரை வியாதிக்கு அருமருந்து தருவதாகும். தக்க தற்காப்பு சக்திகளையும் அளிக்கும்.

திடியன்மலை

ஸ்ரீபெரியநாயகி சமேத ஸ்ரீகைலாசநாதர் ஆலயம் (மதுரை – உசிலம்பட்டி மார்கத்தில், உள்ளதே திடியன் மலை ஆகும்.

ஞானகுரு கிரகத் தலங்களுள் சிறப்புடைய, பதினான்கு சித்தர்கள் தம் திருவடியில் பொலிய, குருபகவான் அருளும் குருத்தலம்! பதினான்கு சித்தர்கள், ஈரேழு பதினான்கு லோகங்களிலும் ஞானச்சின்மயா யோக சக்திகளை நிரவிட வேண்டிய விசேஷமான திருவருளை, ஸ்ரீஞானகுரு தட்சிணா மூர்த்தியிடம் இருந்து நேரடியாகப் பெற்று அளிக்கும் அற்புதமான குருமூர்த்தித் தலம்! ஔகார பீஜாட்சரங்கள் அவதரிக்கும் விசேஷமான குருபகவான் தலம்! ஔகார அட்சரங்கள் யாவும், பதினான்கு வகை அட்சர பீஜாட்சர அட்சய சக்திகளைப் பெறும் தலம்! பௌர்ணமி கிரிவலத்திற்கான வேறெங்கும் காண இயலா தாரக மந்திர மலைத் தலம்!

ஸ்ரீஞானகுரு தட்சிணாமூர்த்தி
திடியன்மலை

நான்கு வேதங்களோடு அறிய வேண்டிய பத்து தசமூல வேதபூதிகளும் உண்டு, இந்த பதினான்கிலும் வேதானுபூதிகளை ஞானமாகப் பெற்ற பதினான்கு சித்தர்களும் திடியன் மலைச் சிவாலயத்தில் ஸ்ரீதட்சிணா மூர்த்தியின் திருவடிகளில் சேவிக்கின்ற திருக்காட்சியுடன் பொலியும் குரு ஸ்தலமே திடியன் மலை!

சிவம் என்பது இறைவனின் அட்சர வடிவு, திவ்யாட்சர ஒலி! மானுட வடிவில் இறைவனைக் காண, தரிசிக்க, உணர உதவுவது!

ஔசிவம் என்பது இறைவனை நாம் ஞானப் பூர்வமாக அறியும் ஆத்ம சாட்சாத்கார வடிவு! அதாவது, அட்சரம் எனும் எழுத்தானது, வெளிப்பூர்வமாக, ஒலியாக, உடலால், மனதால், காதுகளால், கண்களால் மட்டும் அறிவது ஆகும்.

ஆத்மாட்சரம் என்பது (இறைப்) பகுத்தறிவால், (இறை) உள்ளத்தால் கடவுளை அறிவது, ஆத்மாட்சர அனுபூதியை அடைதல் மிகவும் கடினம். குருகுல வாசம் மூலமாகவே இதனைப் பெறுதல் கூடும். ஆத்மாட்சர சக்திகளைப் பெற ஔகார பீஜாட்சர சக்திகள் பெரிதும் உதவும்.

ஔகாரக் காற்றொலி

“ஔ” எனும் அட்சரத்தை உச்சரிக்கையில், உள் உள்ளேயே சில வகையான கிரகிக்கும் ஒலி, ஒளித் தன்மைகளை நாம் நன்கு உணரலாம். ஔகாரத்திற்கு கிரகிக்கும் யோகத் தன்மைகள் உண்டு. “ஔ” என்று உச்சரிக்கையில். உள் மூடியாய் உதடுகள் குவிந்திடினும், உள்காற்று வெளியே சற்றே வருவது தெரியும். சாதாரண மனித நிலையில் “ஔ” எழுத்தை உச்சரிக்கையில் அனைவர்க்கும் நிகழ்வது இது! ஆனால்,

ஔசிவயசிவ
ஔசிவசிவ
ஔநமசிவாய
ஔசிவாயநம

என ஔ ஔகார முதற்பருவ மந்திரங்களை ஒலிப் பூர்வமாக ஜபித்து, ஔகார சிவாட்சர யோகந்தனை முறையாகப் பயின்று வந்தால், எப்போது “ஔ” என்று சொல்கையில், உட்காற்று வெளித் தள்ளப்படாது, உள்ளே ஈர்க்கப்படுகின்றதோ அதுவே முற்றிய ஔசிவயோக நிலை ஆகின்றது. அ, உ, சி ஆகிய மூன்று அட்சரக் கூட்டு யோக த்வனிகளில் மட்டுமே இது யோகப் பூர்வமாக மலர்வதாகும்.

திடியன்மலை

ஔசிவயோகம்

ஏனாதி நாயனார் இந்த ஔசிவயோகத்தில் தலை சிறந்தவராவார். அ உ சிவம் என்பது சிவயோகத் தத்வார்த்தங்களில் கலியுகத்திற்கென அருளப் பெற்றது. ஔபமர்கடர், ஔவையார், ஔர்வர் போன்ற மகரிஷிகள் இதில் வல்லவராவர். ஔதரேயர் என்ற மகரிஷி துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணனிடமிருந்து புல்லாங்குழல் வாத்ய சங்கீதம் மூலம் இந்த அரிய ஔசிவ யோகக் கலையைப் பயின்றார்.

அஉசி யோக சக்திகள் பொழியும் மலை!

அகார உகார சிகார யோக சக்திகளை அறிந்தால்தாம் ஓங்காரத் தத்துவம் நன்கு பரிபூரணமாக, புலப்படலாகும். இவற்றை அறியாமையால்தான் ஓங்காரத்திற்குப் பொருளுரைக்க இயலாது ஸ்ரீமுருகப் பெருமானிடம் ஒரு புராண லீலையாக ஸ்ரீபிரம்மா இதனைப் பெற்றார். இவற்றுள் பல பிரம்ம முத்திரைத் துறைகள் உள்ளன. இவற்றுள் ஒரு துறைதான் ஸ்ரீகாயத்ரீ முத்திரைகள் ஆகும்.

1. ஓம்
2. பூர் புவஸ்ஸுவ:
3. தத் சவிதுர் வரேண்யம்
4. பர்கோ தேவஸ்ய தீமஹி
5. தியோ யோந: ப்ரசோதயாத்

என்றவாறாக ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தில் ஐந்து பா(ப)தங்கள் உண்டு.

ஓங்கார ஐம்பாத சக்திகள்!

 இதில் ஓம் என்பது பிரணவம், பூர், புவ, சுவஹ என்பது பொதுவாக மூன்று லோகங்களைக் குறிக்கும். இந்த மூன்றிலும் பிரபஞ்சத்தின் சகல லோகங்களும் சூக்குமமாக அடங்கும். இதனால்தான் ஸ்ரீகாயத்ரீ மந்திரம் அண்டசராசரத்திலும், அனைத்து லோகங்களிலும் பொருந்தியதாக, அரியதாக, ஜாதி, மத, குல, இன பேதமின்றியும், ஆண், பெண், மானுடர், விலங்கு, தாவரம் என எவ்வித பேதமுமின்றி யாவர்க்கும் உரித்தானதாகவும் விளங்குகின்றது.

திடியன்மலை

ஏனைய மூன்று பதங்களுக்கும் உரித்தான விளக்கங்களை ஸ்ரீவிஸ்வாமித்ர மகரிஷி இந்த பதினான்கு சித்தர்களிடமிருந்து கிரகித்துப் பெற்றார். ஸ்ரீவிஸ்வாமித்ரர் பெற்றது ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் source code என்பது போலான மூலாதார வடிவம் ஆகும். ஸ்ரீவிஸ்வாமித்ர மகரிஷி வேண்டிக் கொண்டதின் பேரில், சகல ஜீவன்களுக்கும் உரித்தான வகையில், ஒளிப் பூர்வமாகவும், பிறகு ஒலிப் பூர்வமாகவும், பாமரர்களும் உணரும் வண்ணம் பிற்காலத்தில் அட்சர வரிவடிவாகவும் ஸ்ரீகாயத்ரீ மந்திரம் வடித்துத் தரப் பெற்றது.

அட்சரக் கலசக் கும்ப மலையே திடியன் மலை!

திடியன் மலை என்பது அட்சரக் கலசங்களால் ஆக்கப் பெற்ற மலை, கலசம் என்றால் குடம், செம்பு போன்ற வடிவு மட்டும் என எண்ணாதீர்கள். அந்தந்த மந்திர சக்திகளுக்கு ஏற்ப சதுரம், செவ்வகம், சாய்சதுரம், படி, மரக்கால், தம்ளர் வடிவு என எவ்வகையிலும் கலச வடிவு இருக்கும். உதாரணமாக, ஸ்ரீசூலினி, ஸ்ரீதுர்க்கை பூஜைக்கான கலசம் அறுகோண வடிவில், (பலா) மரக் கலசமாக இருப்பது நன்று.

திடியன் மலை இவ்வாறு பல (மந்திர) அட்சரக் கலசங்களால் ஆனதால், சுற்றிலும் (நமக்கு விநோதமாகத் தோன்றும்) பல அற்புதமான கோண வடிவுகளைக் கொண்டிருக்கின்றது.

ஸ்ரீராமபிரான் திடியன்மலை

“பிடியது மறையுமோத பிஞ்ஞகன் பெருந்தோய்த்தான்
தடியக மாமலையாரம் தணிவினை தாளத்தாயம்
மடிந்துர மாவினையாவும் மந்திர மாமறை ஆரம்
படிந்தன பரநாளங்கள் பராட்சர அஉசிப் பரமாய்!”

என்பது திடியன் மலைத் தோற்றம் பற்றிய சித்தர்களின் பரிபாஷைத் துதி. இதில் ஆயிரமாயிரம் சூக்கும அர்த்தங்கள் பொதிந்துள்ளன.

ஸ்ரீபிரம்ம மூர்த்தி, பத்து மானச புத்திரர்களை உருவாக்கி சிருஷ்டியை மேற்கொள்ளப் பணித்தார். ஆனால், மானச புத்திரர்கள் இறைமையிலேயே லயித்தமையால், சிருஷ்டித் துவக்கம் பற்றி அவர்கள் எண்ணினாரில்லை! எனவே பிரம்மா அவரகளை மேற்கண்ட சதுராதிபத்யச் (பதினான்கு) சித்தர்களிடம், பரஞானமாகிய இறைஜோதிப் பூரண சக்தியைக் குருகுலவாசப் பூர்வமாக அடையச் செய்தார். சிருஷ்டியைச் சிறப்புறச் செய்திட, பத்து மானச புத்திரர்களிடமிருந்தும் பத்து சித்சக்திகளை உருவாக்கி, பதினான்கு சித்தர்கள் மூலமாக, ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் தாள் பணிந்து, மானசப் புத்திரர்களிடம் சிருஷ்டிக்கான ஞான பூஷண சக்திகள் பரிபூரணமாகப் பரிமளிக்கச் செய்திட வேண்டி வரமும் பெற்றார்.

ஜனகாதி முனிவர்கள் நால்வரும் இங்கு பிரம்ம வித்தையால் சதுர்த்தசத் திடியைகளை உருவாக்கினர். திடியை என்றால் நன்கு கரைப்பது, ஐக்கியமாவது என்று பொருள். இதுவே சிருஷ்டிக்கான ஔகார பீஜ வித்துக்களைத் தந்தது.

மௌளீக சக்தித் தலம்

மௌன மூர்த்தியாக, ஔகார சக்திகளை, ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் சகாயமாகப் பதினான்கு சித்தர்களும் சகல உலகங்களுக்கும் நிரவும் திருத்தலம். ஔகார அட்சரம் உருவாகிய தலம் ஆதலால் இதற்கு மௌளீக சக்தித் தலம் என்றும் பெயர். தாழமங்கை போன்று ஸ்ரீசந்த்ரமௌளீஸ்வர அவதாரிகை தோன்றிய தலங்களுள் இதுவும் ஒன்று. இவ்வாறு ஜாதி, மத, குல, இன, ஆண், பெண், மானுட, தாவர, விலங்கின பேதமின்றி யாவர்க்கும் அருளும் குரு சாட்சாத்கார இறைமலையே திடியன் மலை!

ஸ்ரீவாரணநாதர் திடியன்மலை

பௌருஷர்கள் எனப்படும் ஸ்வேதகார மகரிஷிகள் அரிய பூஜைகளை நிகழ்த்தும் தலம். கௌர பூஷண மகரிஷி சித்தியான அருட்பெருந் தலம்.

கோண யந்திர சக்திகள் நிரவும் தலம்

சௌபாக்ய சக்திகள் எப்போதும் முக்கோண யந்திரங்களில் நிறையவே பரிமளிக்கும். எனவேதான், ஸ்ரீவித்யா சக்கர பூஜையில் அனைத்து விதமான சக்கரங்களும் முக்கோண வடிவில் துலங்குகின்றன. திடியன் மலை அமைப்பும் திரியோகக் கோண சக்திகளைக் கொண்டதாகும். ஔ அட்சரம் தோன்றிய தலமாதலின், கௌ, பௌ, சௌ என்று மூன்று அட்சர எழுத்துக்களில் உள்ள ஔகார வார்த்தைகள், பீஜாட்சர சக்திகள் இங்கு நன்கு பரிமளிக்கின்றன.

பௌருஷம் கௌலவ தாரம்
கௌஸ்துபம் சௌபாக்ய பூரம்
மௌதிகம் வௌவிதாட்சரம்
ரௌத்ர மார்க்கம் கௌசலாம் போதி

என்பது திடியன் மலைக்கான ஔகார மந்திரத் துதி.

(ம)ராம ஸ்தூபி சக்தித் தலம்

முக்கோண யந்திர, மந்திர சக்திகள் பரிமளிக்கும் தலமாதலின், சபரி மலை ஸ்ரீஐயப்ப சுவாமி போல திரிகோணப் பட்டை யோகம் பூண்டு தியானித்து யோகிக்கச் சிறந்த தலமாக விளங்குகின்றது.

கோடி கோடி மந்திரங்கள் பரவெளியில் பரிமளித்தாலும் கலியுக ஜீவன்களுக்குப் பயன்படும் வகையில் அவற்றை வடித்துத் தர வேண்டும். அதுவும், ஜீவன்களுக்குப் புரியும் வகையில் மிக மிக எளிமையாக இருக்க வேண்டும் அல்லவா! இதனால்தான் படிப்பறிவு இல்லாது வேடராய் வந்த ஸ்ரீவால்மீகி மகரிஷிக்கு அளிக்கப்பட்ட (ம)ராம மந்திரமே, எளிமையான ராம நாம தாரக மந்திரம் ஆயிற்று! மரா என்பது இரண்டே எழுத்துக்களால் (அட்சரங்கள்) ஆனதாயினும் மூன்று ஒலிப் பிணைப்புகளைக் கொண்டது. இம்மூன்றையும் திடியன் மலையில் ஞானம் பாலிக்கும் பதினான்கு சித்தர்களுமே பதினான்கு லோகங்களுக்கும் நிரவுவதாக பதினான்கு கோண சக்திகளுடன் ராமநாம தாரகப் பரவெளி ஸ்தூபமாக இங்கு மலை உச்சியில் தோற்றுவித்தனர்.

ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி
திடியன்மலை

இவ்வாறு ராம நாம தாரண மந்திர சக்திகளையும் முக்கோணத் திரியோக மலையாக, த்ரடின சக்தி மலையாக இதனைப் போற்றினர். இவ்வாறு திரிஅடினம் எனும் மூன்று அடிப்படை அட்சர சக்திகளே, வழக்கில் திரியன் மலையாகி திடியன் மலையும் ஆயிற்று. இதன் தாரண ராமசக்திப் பிரவாகத்தால் நடப்புத் தாரண ஆண்டில் இதன் மகத்துவம் மீண்டும் சற்குருமார்களால், 14 சித்தர்களின் ஆசியுடன் மீண்டும் மலர வைக்கப் பெறுகின்றது.

மந்திரப் பாத்திர மலையே திடியன் மலை!

அடினம் அல்லது ஆ(ஏ)னம் என்றால் அனைத்து (மந்திர) சக்திகளையும் தாங்கும் பாத்திரம் என்று பெயர். அனகாபுத்தூர் அனத்தூர் போன்றவை மந்திர சக்திகளைத் தாங்கும் பாத்திரத் தலங்கள் என்று பொருள்.

திடியன் மலை பற்றி எழுதாக் கிளவியாய், சித்தர்களின் ஞான பத்ர விளக்கங்களாய் அமைந்துள்ள புராண அனுபூதிகள் நிறைய உண்டு. வேத மந்திரங்களைச் சுயநலமாகத் தவறாகப் பயன்படுத்தியதாலும், நிந்தித்தமையாலும், “எப்போதும் உண்டு பெருத்து உழல்வீர்களாக!” என்று சாபம் பெற்ற அசுரர்கள், தினமும் பெருத்து வந்த தம் உடல் தசை நோய்க்கு இங்கு கிரிவலம் வந்து, தீர்வு பெற்றமையாலும், தடியன்கள் என்ற அசுர வகையினர் சாப நிவர்த்தி பெற்ற தலமுமாக ஆயிற்று! இதுவே திடியன் மலையானதாகவும் வரலாறு உண்டு.

எனவே “தடியன்” என்று எவரையும் ஏசாதீர்கள். குண்டாய் இருப்பவர்களைத் “தடியன்” என்று திட்டுவதும் வழக்கில் பெருகி வருகின்றது. இது மிகவும் தவறு. தடி என்பதற்குப் பல அர்த்தங்கள் உண்டு.

தீ மொழிக்குப் பரிகாரம் இங்கேதாம்!

தடியன் திடியனாய்ப் படிந்த படி மலையே தற்போதைய திடியன் மலை, எனவே, வார்த்தைக் குற்றங்கள், பிறரை ஏசுதல், பிறரைப் பழித்தல், கெட்ட வார்த்தைகளைப் பேசுதல் இவற்றிற்கு எங்குதாம், என்றுதாம் பிராயசித்தம் பெறுவது?

உள்பகை வெளிபகை மறையும்
திடியன்மலை

தற்போதைய கலியுலகில் அனைத்து மொழிகளிலும் மிகவும் கேவலமான, ஆபாசமான வார்த்தைகளை எதற்கெடுத்தாலும் பேசுவது வழக்கில் வந்துவிட்டது. நூற்றுக்கு 99.999 சதவீதம் இவ்வாறு எதற்கெடுத்தாலும் தீய வார்த்தைகளைப் பேசுவோரும், தடியன், எருமை, எருமை மாடு என்று ஏசுவோரும் பெருகி வருகின்றதாகக் கலியுகக் காலக் கோலம் தவறான வழியில், வாக்கு தோஷங்களைப் பெருக்கிக் கொள்வதாகவே இருக்கின்றது.

“சொன்ன வார்த்தைக்கு அது எஜமானன்
சொல்லாத வார்த்தைக்கு நீ எஜமானன்”

என்பது மொழி வழக்கு. எந்தச் சிறு கடுசொல் சொன்னாலும் அது பரவெளியில் மிதந்து நின்று அவரவரையே தாக்கும் என்பது இதன் பொருள்! இதனால் பரவெளியை அசுத்தம் செய்த பாவமும் தொக்கி நிற்கும். இதனால்தான் வாழ்வின் இறுதியில் வாய் குழறுதல், பிறரால் கடன் வாங்கப் பெற்று கடன் திரும்பி வராது ஏமாறுதல், கடனைத் திருப்பி அடைக்காது மானம் தவறிய வாழ்க்கை போன்றவை நிகழ்கின்றன.

எனவே, வாழ்வில் கடுஞ் சொற்களைப் பேசியோர் தக்க பிராயச்சித்தம் பெறுவதற்காக, பௌர்ணமி, அமாவாசை, நவமி, புனர்பூசம், செவ்வாய், புதன், சனிக்கிழமைகளில் இங்கு கிரிவலம் வருதல் விசேஷமானது.

பேச்சு வள சக்திக்கு அருளும் ஸ்ரீபேச்சாயி அம்மன்

இங்கு சொற் குற்றங்களைப் பொறுத்தருளிடவே, இதற்காகவே ஸ்ரீபேச்சாயி அம்மனும் கிரிவலப் பாதையில் கோயில் கொண்டு அருள்கின்றாள். ஊமை, திக்குவாயாக உள்ளவர்கள், பேச்சு சரியாக வராதவர்கள் இங்கு திடியன் மலையை அடிக்கடி கிரிவலம் வந்து ஸ்ரீபேச்சாயி அம்மனையும், சிவமூர்த்தியையும் வழிபட வேண்டும்.

ஸ்ரீமுருகப் பெருமான்
திடியன்மலை

பூர்வ ஜன்ம வினைகளினால், தடித்த நாக்கு நாளங்களால் திக்கு வாய் ஏற்படுகின்றது. திக்குவாயைச் சரிப்படுத்த அக்காலத்தில் ஏழு கூழாங்கற்களை வாயில் வைத்து நாவை அசைக்கப் பயிற்சி கொடுப்பார்கள். இதற்கான முதற்பயிற்சியை திடியன் மலையை வலம் வந்து இங்குதான் தொடங்குவார்கள். திடியன் மலைக் கூழாங்கற்களையே அக்காலத்தில் திக்குவாய் தீர்வதற்கான நாவசை யோகப் பயிற்சிக்காக அளிப்பார்கள். ஒவ்வொன்றும், ஒவ்வொரு கோணத்திலுமாக வட்டமாக வழவழவென்று ஏழு கூழாங்கற்கள் இருக்கும். இதற்குத் திடியங்கல் என்று பெயர்.

சப்தமித் திதியிலும் சனிக்கிழமையிலும், ஏழாம், பதினாலாம், இருபத்தி ஒன்றாம் (என ஏழின் மடங்கு) நட்சத்திரங்களான புனர்பூசம், சித்திரை, உத்திராடம் ஆகிய நட்சத்திர நாட்களிலும் இங்கு

ஓம் ஓம் ஓமோ போ ஜ்யோதீரஸ
ஔம், வௌஷட், க்லௌம்
ஔஷதீய சப்த சாகர பரதீபம்”

என்றும்,

“ஔவும் பௌவும் மௌவென ஓதி
ரௌவும் சௌவும் ஓதுதல் கடனே!
கௌளவ கானம், பௌருஷ வேதம்
அத்தனை ஔவும் சலமிதில் உரமே!”
(சலம் – மலை)
என்றும் ஓதி கிரிவலம் வருதல் மிகவும் விசேஷமானது.

ஸ்ரீபைரவப் பெருமான்
திடியன்மலை

தம் பிள்ளைகளுக்குச் சரியாகப் பேச்சு வரவில்லையே என்று வேதனையுறும் பெற்றோர்கள், தம் பிள்ளைகளுடன் இங்கு கிரிவலம் வந்து ஸ்ரீபேச்சியம்மனையும் ஸ்ரீகைலாசநாதச் சிவமூர்த்தியையும் வழிபட வேண்டும்.

பொய்வழக்கு, பிறரை ஏசிப் பேசுதல் போன்ற வாக்குக் குற்றங்கள் அகல உதவும் தலம். எனவே வக்கீல்கள், பேச்சாளர்கள், அரசியல் துறையைச் சார்ந்தவர்கள் இங்கு கிரிவலம் வருதலால், தமக்கு ஏற்பட்டுள்ள வாக்கு தோஷங்கள் நீங்கி, நல்ல வாக்சக்தியைப் பெறுவர்.

மாரடைப்பு, தலையில் அடிபடுதல் போன்ற காரணங்களால் பேச்சு சக்தியை இழந்தவர்கள் இங்கு வழிபடுவதும், இயன்றால் அவர்களும் கிரிவலம் வருவதும் மிகவும் விசேஷமானது.

திடியன் மலை சிவாலயம்

கலியுகத்தின் ஞான குரு ஸ்தலங்களுள் முதன்மையானது! ஸ்ரீதட்சிணா மூர்த்தியின் திருவடிகளில் பதினான்கு சித்தர்கள் ஞானச்சின்மய யோகம் பூணும் உத்தமத் தலம், தெய்வத் தமிழுக்குரிய “ஔ” எழுத்து பிறந்த “அஉசிவாயத்” தலம், ஔம், க்லௌம், வௌஷட் போன்ற ஔகார பீஜாட்சர சக்திகள் திளைக்கும் தலம், பௌர்ணமி கிரிவலத்திற்கு உரிய ராமநாம சக்தி பூரிக்கும் ராமநாம தாரக மந்திர சக்தி கிரிவல மலைத் தலம்!

ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் (“அ” வகை அமிர்தாட்சரங்கள்), ஸ்ரீஉரகநாதர் (ஸ்ரீநாகேஸ்வரர் “உ” வகை உத்தம அட்சரங்கள்), ஸ்ரீசிங்கீஸ்வரர் (“சி” வகை சிவாட்சரங்கள் – மப்பேடு) போன்ற மூன்று ஔசிவ சிதம்பரச் சுயம்பு மூர்த்திகளை உபாசனை செய்து, அரிய உத்தம இறை நிலைகளை அடைந்த சித்தர்களே ஔசிவாயச் சித்தர்கள் ஆவர். மேற்கண்ட நாம வகைகளைப் பூண்ட அனைத்துச் சுயம்புமூர்த்தித் தலங்களிலும் தினமும் வழிபடும் ஔசிவாயச் சித்தர்கள், சிருஷ்டித் தத்துவ உபதேசங்களை ஈஸ்வரன், முருகப் பெருமான், அம்பிகையிடம் இருந்து நேரடியாகப் பெறும் பாக்யங்களைக் கொண்டவர்கள் ஆவர்.

ஸ்ரீநந்தி மூர்த்தி
திடியன்மலை

அஉசி(வய சிவம்)
அஉசி(வம்)
அஉசி(வச்சிவம்)
அஉசி(தம்பரம்)

-ஆகிய சதுராதிபத சிவத் தத்துவங்களை, சாட்சாத் ஸ்ரீசதுர்த்தச ஞானபூஷண தட்சிணா மூர்த்தியிடம் இருந்தே நேரடியாக அருணாசலமாம் திருஅண்ணாமலையில் உபதேசமாகப் பெற்றவர்கள். இந்நான்கில் தசமூல வேதபூதிகளும் உண்டு. சதுர்த்தச ஞானமூர்த்தி எனப் பெயர் கொண்ட ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் திருவடிகளில், திடியன் மலை சிவாலயத்தில் குரு மூர்த்தி சந்நிதியில், 14 வகை ஞானம் பெற்ற 14 சித்தர்களையும் தரிசித்திடலாம்.

“ஔ” என்பது தெய்வத் தமிழுக்கு ழகரம் போன்று தனிச் சிறப்புடைய அட்சரமாகும். “அ”வும் சேர்ந்ததே ஔ ஆயிற்று. ஔவில் தொடங்கும் வார்த்தைகள் மிகவும் சக்தி வாய்ந்தவையாகும். ஔபமர்கடர், ஔர்வர், ஔவையார் போன்ற நாமங்கள் அனைத்துமே மகத்தான தெய்வீகச் சக்திகள் நிறைந்தவையாகும்.

செந்தமிழுக்கு உரித்தான ஔ எனும் அட்சரம் பிறந்த தலமே திடியன் மலை குரு ஸ்தலம் ஆகும். ஒரு யுகத்தில், முக்கோண வடிவில் அ, உ, சி பீஜாட்சர சக்திகளுடன் துலங்கிய மலை! ஔவைப் பிராட்டி இம்மலையில் வாசம் புரிந்து, செந்தமிழில் பொதிந்துள்ள தெய்வீக சக்திகளைப் பரமானந்தத்துடன் பெற்றுத் துய்த்தார். ஔபமர்கடர், ஔர்வர் போன்ற மகரிஷிகள் தினமும், பல வடிவுகளில் கிரிவலம் வரும் அற்புத மலைத் தலம்.

ஸ்ரீராமர் தோன்றிய திரேதா யுகத்திலிருந்து சுயம்பு மலையாய்த் திகழ்கின்றது. ஸ்ரீராம நாம சக்திகள் ஸ்தூபிச் சக்கரச் சக்திகளாகத் துலங்கும் தலம். ஸ்ரீராமருடைய புஷ்ப(க) விமானம் தங்கிய தலங்களுள் திடியன் மலையும் ஒன்று. சித்தர்களும் மகரிஷிகளும் இன்றும் தம்முடைய விண்வெளி வாகனங்களை (UFO), பூமியில் தங்க வைக்கும் வானவீதி யந்திரத் தலங்களான தேரழுந்தூர், திருக்கச்சூர், சித்தர்மலை, பர்வதமலை போன்றவற்றுள் திடியன் மலையும் ஒன்றாகும்.

பாவ வினைகளைச் சேர்த்துக் கொள்வதில், “உண்டு கொழுத்தார், உண்ணாமல் கொழுத்தார்” என்று இரு விதங்கள் உண்டு. அதாவது, தீவினைகள் என அறிந்தும் அவற்றைச் செய்து, பாவங்களைச் சேர்த்துக் கொள்தல், தீவினைகள் என அறியாது, தீவினைகளில் நேரடியாகப் பங்கு கொள்ளாது, தீவினைகள் நிகழக் காரணமாக இருந்து பாவங்களைச் சேர்த்துக் கொள்தல் – இவ்விரண்டும் கலியுகத்தில் பெரிதும் பாவ வினைகள் சேரும் வழிகளாகும். இவ்விரண்டையும் கழிக்க வல்ல கிரிவல சக்திகளைப் பூண்ட மலைத் தலமே திடியன் மலை!

இவ்விரண்டு வகைப் பாவங்களுமே திண்டி கொழுத்தல், திண்டாமல் கொழுத்தல் ஆகின, இவற்றைத் தீர்க்க வல்லதே திடியன் மலை கிரிவல மகத்துவமாகும். அதாவது அறிந்தும், அறியாமலும் செய்த பாவ வினைகளைக் கழிக்கும் மார்கத்தைத் தருகின்ற திடியன் மலை இதுவே.

அக்காலத்தில் மிகுந்த பாவ வினைகளைச் சேர்த்துக் கொண்டவர்களை இத்தலத்தில் எப்போதும் கிரிவலம் வந்து கொண்டிருக்கும்படி செய்தமையால், பாவ வினைகளைக் கரைக்கும் ஔசிவப் பர்வத மலைகளுள் ஒன்றாகவும் இது துலங்குகின்றது.

துடையூர்

ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீவிஷமங்களேஸ்வரர் (திருச்சி – திருவாசி அருகில் துடையூர் உள்ளது.) திருமண தோஷங்களை, நாக தோஷங்களை நிவர்த்திக்கும் நாகப் புற்றுப் பூஜைத் தலம்! மது, முறையற்ற சகவாசங்களுக்கு ஆளானோர் திருந்திட உதவும் உத்தமத் தலம்! உறவில், தொழிலில் பகைமை விஷத்தை அகற்றும் தலம்!

ஸ்ரீவீணா தட்சிணாமூர்த்தி
துடையூர்

துடையூர்ப் பெருமானைத்
துதிப்பாரின் வளமேறும்
புடைத்தப் பெருந் துன்பம்
புல்லாய்ப் போகுமே!
படைத்த திருபிரம்மனொடு,
பகலவனும் போற்றேத்தும்,
விடைத்த விடையப்பா!
துடையக விடமங்களீசா!

என்பது சித்தர்கள் துடையூர் ஸ்ரீவிஷமங்களேஸ்வரர் சிவலிங்க மகிமையாக உரைக்கும் பரிபாஷைப் பாடலாகும்.

கொடிய தீயவழி சென்றார் மீள உதவும் தலம்...

விடத்தையும் மங்களகரமாக ஆக்கி அருள்புரியும் ஈசனிவரே! ஆம், கலியுகத்தில் நாக விஷத்தையும் விடக் கொடியதாய் இருக்கும் பகைமை, குரோதம், விரோதம், பொறாமை, முறையற்ற காமம், பிறன் மனை நோக்குதல், பேராசை, வன்முறை போன்ற கொடிய தீயசக்திகளைப் பண்படுத்தி, நல்வழிப்படுத்த வல்ல மிகவும் சக்தி வாய்ந்த மூர்த்தி!

“கொடிய இயக்கங்களில் மகன் சேர்ந்து விட்டானே!” என்று வேதனையுற்றுப் புலம்பும் தாய்மார்கள், தன் பிள்ளைகள் நல்வழி அடைய இங்கு துடையூர் சிவத்தலத்தில் திங்கள் மற்றும் வியாழன் தோறும் ஸ்ரீவிஷமங்களேஸ்வரரையும், ஸ்ரீவீணாதட்சிணாமூர்த்தியையும், ஸ்ரீசூரிய மூர்த்தியையும் வழிபட்டு வருதல் வேண்டும்.

தொன்று தொட்டு, ராமாயணத்திற்கும் முந்தைய காலம் முதல், கலியுகத்து ஸ்ரீகிருஷ்ணனும், மகாபாரத மகா சக்கரவர்த்திகளான பஞ்ச பாண்டவர்களும், பண்டைய தமிழ் நாட்டு மூவேந்தர்களும், தமிழ் மாமன்னர்களும் தேடி வந்து வழிபட்ட சுயம்பு மூர்த்தியே துடையூர் ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீவிஷமங்களேஸ்வரர் ஆவார்.

“சலன மனம்” அசலனமாகும் அற்புதத் தலம்! மதுப் பழக்கம் நீங்க உதவும் தலம்!

ஸ்ரீசூரிய பகவான்
துடையூர்

விஷம் என்றால் நஞ்சு என்று பொருள் கொண்டாலும் முறிக்கப்பட வேண்டியது, அமிர்தத்தால் அணைத்துத் தணிக்கப் பட வேண்டியது, மங்கள சக்திகளால் மறைந்து மாற்றப்பட வேண்டியது என்றெல்லாம் அர்த்தங்கள் உண்டு. சலனத்தை அளிப்பது விடம். இதனால்தான் விடம் உண்டவர்களின் உடல் அவயங்களில், நரம்புகளில் சலனங்களாகிய ஆட்டங்கள் ஏற்பட்டுக் கொண்டு இருக்கும். இதனால்தான், உடலை ஆட்டும் போதைப் பொருட்கள் மற்றும் மதுவையும் நஞ்சுடையது என்பர். சலனமாகிய ஆட்டத்தை நிறுத்தி, தணித்து, நிவர்த்தி செய்வதுதான் “அசலம்”! மன ஆட்டங்களை, மன ஓட்டங்களைத் தடுத்து மன சாந்தத்தை அளிக்க வல்லவர்களே துடையூர் ஸ்ரீவிஷமங்களேஸ்வரரும் கரூர் அருகே உள்ள மோகனூர் ஸ்ரீஅசலதீபேஸ்வரரும் ஆவர். மதுப் பழக்கத்திற்கு ஆட்பட்டுப் பெரும் தீயவினைகளையும், கடுமையான நோய்களையும் சேர்த்துக் கொண்டவர்கள் நல்வழி பெற இங்கு திங்கள் மற்றும் வியாழன் தோறும் அனைத்து மூர்த்திகளுக்கும் தேனபிஷேகம் செய்து வழிபட்டு வருதல் வேண்டும்.

கணவனின், குடும்பத் தலைவரின், பிள்ளைகளின் தீய வழக்கங்கள் அகன்றிட குடும்பத்தார் இங்கு ஒரு தாம்பாளத்தில் சீந்தில் கொடி இலைகளின் மேல் குறைந்தது 12 தீபங்களை வைத்து, வலம் வந்து இந்த ஆலயத்தில் ஏற்றி வழிபடுதல் வேண்டும்.

அசலநிசுமித்திரர் மகரிஷி தினமும் வழிபடும் துடையூர்ச் சிவத்தலம்!

உலகில் உள்ள அனைத்துப் பெண்களும் தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய மூர்த்தியே சென்னை அருகே உள்ள நேமம் ஸ்ரீஅமிர்தாம்பிகை ஆவாள். மோகனூர் செல்ல இயலாதவர்களும், உலகில் உள்ள அனைத்து அம்பிகைகளின் திருச்சன்னதிகளிலும் விளக்கேற்றிய புண்ணிய சக்தியைப் பெறவும், நேமம் ஸ்ரீஅமிர்தாம்பிகை சமேத ஸ்ரீஆவுண்டீஸ்வரர் ஆலயத்தில் குறித்த அமிர்தயோக, அமிர்தக் கடிகை நேரத்தில் விளக்கேற்றி வழிபடுதல் வேண்டும்.

ஸ்ரீகல்யாண சுந்தரேசுவரர்
துடையூர்

இவ்வாறு பூவுலகில் உள்ள அனைத்து வித்யா சக்தித் தலங்களிலும் அகல் விளக்கு, தேங்காய் ஓட்டு விளக்கு, எலுமிச்சைக் கனி உறை விளக்கு, பித்தளை விளக்கு, வெள்ளி விளக்கு, தங்க விளக்கு, திருஷ்டி தோஷ நிவாரண (சுதை மண்) விளக்கு, பிருங்கி விளக்கு – என அனைத்து வகை விளக்குப் பூஜைகளை நிகழ்த்தி, விளக்கு மகாத்மியங்களில் தலை சிறந்தவரே அசலநிசுமித்திரர் மகரிஷி ஆவார். இவர் தினந்தோறும் தூல சூக்கும வடிவுகளில் வழிபடும் தலமே துடையூர் சிவத்தலமாகும். பல அபூர்வமான, வேறெங்கும் காண இயலா பல சக்தி வாய்ந்த மூர்த்திகளைக் கொண்ட தலம்.

பகைமை, அச்சம், பீதியைப் போக்கும் தலம்!

பண்டையத் தமிழ் மன்னர்களுக்கு எதிரிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்ட போது, பஞ்சதூல சக்திகள் நிறைந்த இத்தலத்தில் வழிபட்டு, தங்களுக்கு ஏற்பட்ட அதர்மமான பகைமை விஷசக்திகளைப் போக்கிக் கொண்டார்கள். அதாவது பிறருடைய செயல்களால் ஏற்படுகின்ற பகைமை, குரோதம், விரோதம் போன்றவற்றை நிவர்த்திக்க வல்லதே துடையூர் சிவாலய வழிபாடாகும். குருவிற்குத் துரோகம் இழைத்தவர்கள் அந்த குருவே மனம் கனிந்தாலன்றி, தங்களைப் பெரும் சாபங்களில் இருந்து மீட்டுக் கொள்ள இயலாது. இத்தகைய குரு துரோகிகளும் இங்கு கண்டிப்பாக வழிபட்டால்தான், குரு துரோகத்தால் பெருகி உள்ள கோடானு கோடிப் பிறவிகளில், ஏதாவது ஓரணுத் துளி அளவேனும் பரிகாரம் பெற இங்கு கோடிட்டுக் காண்பிக்கப் பெறக் கூடும். ஆனால் இதுவும் மிக, மிகக் கடினமே.

சங்கமபாதத் தைல ஜோதி தரிசனத் தலம்!

அசலநிசுமித்திர மகரிஷி தினமும் குறித்த ஹோரை நேரத்தில் சங்கம பாதம் என்ற அரிய மானுட கண்களுக்குப் புலப்படாத ஜீவாக்னி தைலத்தால் தீபத்தை ஏற்றி வழிபடும் தலமே துடையூர். இத்தைலமானது அனைத்து தெய்வ மூர்த்திகளின் திருப்பாதக் காப்பில் இருந்து பெறப்படுவது.

பதிவிரதையான காந்தாரி தேவி, விளக்கு பூஜையில் சிறந்தவள். பல விஷ்ணுபதிப் பூஜைகளைக் கொண்டாடி மகத்தான தீபப் பூஜை புண்ய சக்திகளைப் பெற்றவள். முதலில் கௌரவர்கள், பாண்டவர்கள் என்ற பாகுபாட்டு எண்ணமே இல்லாதபோது, காந்தாரி பல விளக்கு வழிபாடுகளை மேற்கொண்டு, விளக்குப் பூஜைகளின் பலன்களால் ஸ்ரீஅசலநிசுமித்திர மகரிஷியைத் தரிசிக்கும் பாக்கியத்தைப் பெற்றாள். அவரும் தாம் நடத்திய விளக்குப் பூஜைத் திரியையும், சிறிது மிருத்யுஞ்ஜயத் தைலத்தையும் பிரசாதமாக அளித்து, இதனை எந்தச் சிறு குழந்தைக்கும் 48 வாரங்கள் தொடர்ந்து தேய்த்து நீராடி வந்திடில், அப்பிள்ளைக்கு ஆயுள் பங்கம் ஏற்படாது காத்திடும் என்று அருளினார். இதில்தான் காந்தாரிக்குச் சோதனை வந்தது!

இருடிகள் ராமாயண, இருடிகள் மஹாபாரதக் காவிய சக்திகள்!

ஸ்ரீவரதராஜ பெருமாள்
துடையூர்

ஆனால், காந்தாரியோ சுயநலமாகத் தன் பிள்ளைக்கு இந்த நல்வரத்தைப் பெற்றுத் தர எண்ணி, தன்னையும் அறியாது, பிள்ளைப் பாசத்தில் சிக்கியவளானாள், இங்குதான் விதி விளையாடியது. இத்தகைய நுணுக்கமான ராமாயண, மஹாபாரத சம்பவங்களைச் சித்தர்களின் இருடிகள் ராமாயணம், இருடிகள் மஹாபாரதத்தில்தாம் காண முடியும். எழுதாக் கிளவியாக மாமறை போல் பொலியும் இவற்றைச் சற்குருமார்கள் மூலமாகவே பெற முடியும்.

மகரிஷி தந்த எண்ணெயைக் கொண்டு, குழந்தைக்கு எண்ணெய் தேய்க்கும்போது, எங்கும் எண்ணெய் தேய்த்தல் தடைபடுதல் ஆகாது. எங்கு கைவிரல்கள் சிக்கி எண்ணெய் தடைபடுகின்றதோ அங்கு ஜீவசக்தியும் தடைபட்டு ஆங்கே ஆயுள் சக்தி மறைந்திருப்பதைக் குறிக்கும். இதுவே கைதலக் கிரந்தி எனும் ஆயுள் முடிச்சுப் பொறி என்பதையும் காந்தாரி உணர்ந்தாள். இதற்காகத்தான் புத்திப் பிரகாசம் உள்ளோர் பூஜைகளில் தமக்குக் கிட்டும் நல்வரங்களை, இறைவனிடமே அல்லது தக்க சற்குருவிடம் அர்ப்பணித்து விடுவர்.

காந்தாரி, பதிவிரதையாக, கண்களைக் கட்டிக் கொண்டு வாழ்ந்தமையால், சிறு குழந்தையான துரியோதனனுக்குத் தீர்க ஆயுள் கிட்டுவதற்காக இத்தைலத்தைப் பயன்படுத்த மிகவும் சுயநலமாகத் தன்னையும் அறியாமல் பிள்ளைப் பாசத்தால் எண்ணி விட்டாள் அல்லவா!

ஸ்ரீகிருஷ்ண பகவான் லீலை’!

ஆனால், மகாபாரதத்தின் போக்கை இயக்கிய மாயவண்ணனாகிய ஸ்ரீகிருஷ்ண பகவான், ஒருநாள் திருதராஷ்டிரரின் அரண்மனைக்கு வந்து, நாகங்களால் பீமன் கடிபடுவான் என்பதால் பெறுதற்கரிய மலைப்பவளச் சீந்தில் (மூலிகை) இலைக் கொடியைப் பீமனுக்கு இடுப்பில் கட்டி விட்டார். மலைப்பவளச் சீந்தில் (மூலிகை) இலைக் கொடி எத்தகைய நச்சுத் தன்மையையும் போக்குவதாகும். இதை அறிந்த காந்தாரி, இத்தகைய நாகக் காப்பு ரட்சை தன் பிள்ளைக்கும் வேண்டும் என்று கேட்டிடவே, ஸ்ரீகிருஷ்ணன் துரியோதனனுக்கு மலைப்பவளச் சீந்தில் (மூலிகை) இலைக் கொடியைக் கட்டி விட்டார்.

அடுத்த சனிக்கிழமையாக 48 வார இறுதியில் அன்று குழந்தையான துரியோதனனுக்கு எண்ணெய் தேய்த்து விடும்போது, சிறுவனான துரியோதனனுக்கு இடுப்பில் சீந்தில் இலைக் கொடிக் கட்டு இருப்பதைத் கண்கள் கட்டப்பட்டு இருந்தமையால் மறந்து விட்டாள் காந்தாரி!

ஸ்ரீமங்களாம்பிகை
துடையூர்

சிக்கலோ சிக்கல்!

சிறுவனாம் துரியோதனனுக்குத் தைலத்தைத் தேய்க்கையில், சீந்தில் கொடி, எண்ணெய் வசத்தால் இளகிக் கீழிறங்கிட, தன் பிள்ளையின் தொடையில் கை விரல்கள் கொடியில் சிக்கி இடறுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள் காந்தாரி. இதன் பிறகு தைல ஆயுள் வர சக்திகள் மறைந்து விடுமே! இது முதல் துரியோதனனுக்கு ஆயுள் ஜீவ சக்தி தொடையில் இருப்பதை அறிந்து, மிகவும் கவனமாக வளர்த்தாள்.

ஆனால் இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தவளாய், இதனை எவருக்கும் உரைக்காது, அதே சமயத்தில் விளக்கு பூஜைகளையும் நன்கு விருத்தி செய்து கொண்டு வரவே, மீண்டும் அசலநிசுமித்திர மகரிஷியின் தரிசனம் கிட்டியது. அவரிடம் நடந்ததை அறிவித்து, இதற்குப் பிராயசித்தம் வேண்டிடவே, மகரிஷியும் அவளுடைய விளக்குப் பூஜையின் புண்ணிய சக்தியால் துரியோதனனின் உயிரைக் காக்க வல்ல தலமானது ஊருகம் (ஊரு = தொடை) சுயம்புச் சிவத்தலமே என்று உரைத்தார். ஊரு என்று மட்டும் அக்காலத்தில் பெயர் பெற்றிருந்த தற்போதைய துடையூர் சிவத்தலத்தில் ஸ்ரீவிஷமங்களேஸ்வரரை வழிபட்டு வரும்படி நல்வழி தந்தார்.

ஆனால், அகங்கார ஆணவத்தால், கர்ணன் தன் துணையாக இருப்பதால், தன் படைகளையும் தன்னையும் எவரும் வென்றிட இயலாது என்ற மமதையால் மகரிஷி தந்த பரிகாரப் பலன்களை துரியோதனன் அலட்சியம் செய்தமையால் காந்தாரியால் ஒன்றும் செய்ய இயலாமற் போயிற்று! ஆனால், குருக்ஷேத்திர யுத்தத்தின் துவக்கத்தில் காந்தாரி துரியோதனனுக்கு இதை நினைவூட்டிய போது, ஆயிரக்கணக்கான மைல்கள், கடந்து வர வேண்டி இருந்தமையால் துரியோதனனால் இறுதிவரை இத்தலத்திற்கு வர இயலாமலேயே போயிற்று.

ஔர்வர் மகரிஷி அவதரித்த தலம்

ஒரு யுகத்தில் அரக்கர்கள் மகரிஷிகளின் குடும்பங்களில், சந்ததிகளை வளர விடாமல் வதம் செய்து வந்தனர். அரக்கர்களும் கர்பிணிகளை வதைப்பதில்லை என்ற நியதியைக் கொண்டிருந்தாலும், குழந்தை பிறந்தவுடன் அதனைக் கொன்று விடுவோம் என்று அச்சுறுத்தியமையாலும், ஔர்வர் மகரிஷியின் தாய், தன் கர்பத்தை நிறையத் துணிகளால் நெடுங்காலம் மறைத்து, எங்கெங்கோ மறைந்து வாழ்ந்து, தசைநாள வலி தாங்க இயலாது, கர்பம் தொடைக்கு இறங்கிடவே, வேறு வழியின்றி, இது தெய்வ சங்கல்பம் என எண்ணி, இங்கு துடையூரில் தொடை மூலம் மகரிஷியைப் புத்திரனாகப் பெற்றிட்டாள்.

யோனியில் பிறவாது ஏனைய வழி பிறந்த பிள்ளையை மானுடராக அரக்கர்கள் மதிக்காமையால், இத்தொடை வழிப் பிள்ளை சக்தி வாய்ந்ததாக இராது என்றும் எண்ணியதால் மகரிஷியாகியப் புத்திரனைக் கொல்லாது அரக்கர்கள் விட்டு விட்டனர்.

துடையூர்

பன்னெடுங்காலம் தாயின் கர்பத்தில், வாழ்ந்த ஔர்வர் மகரிஷி, இவ்வாறு தொடை மூலம் ஜனித்தத் தலமே துடையூர் ஆகும். தொடை மூலமாகப் பிறந்தமையால் ஔர்வர் மகரிஷி எனப் பெயரும் (ஊரு = ஔர் = தொடை) கொண்டார்.

எனவே, ஔர்வர் மகரிஷியைக் கோத்ராதிபதியாக (குல மாமுனி), பிரவர மகரிஷியாகக் கொண்டவர்களும் இத்தலத்தில் கண்டிப்பாக வழிபட்டு வர வேண்டும். தான் ஜனித்த இடமாதலால், ஔர்வர் மகரிஷி தினந்தோறும் வழிபட்டு வருகின்ற தலமே துடையூர் ஆகும்.

விடமுண்டகண்ட அவதாரங்கள்

பாற்கடல் வைபவத்தில் விடமுண்டகண்டராக, சிவபெருமான் பல ரூபங்களில் காட்சி தந்தார். ஆந்திர மாநிலத்தில் ஊத்துக் கோட்டையை அடுத்த சுரட்டப்பள்ளி சிவாலயத்தில் விடமுண்ட மயக்கத்தில் சயனேஸ்வரராக, பள்ளி கொண்ட பெருமானாக சிவபெருமான் மிகவும் அபூர்வமாக ஸ்ரீரங்கநாதர் போல் சயனக் கோலத்தில் காட்சி தருகின்றார். விடமுண்டகண்டராக, ஈஸ்வரனுடைய கண்டத்தில் (கண்டம் = கழுத்து), விடத்தை ஈஸ்வரி விடத்தைக் கண்ட சிவ கோலத் தலமே காரைக்குடி அருகே உள்ள மானகிரியில் உள்ள ஸ்ரீகண்டீஸ்வரர் ஆலயமாகும். இங்கு சங்கு வடிவில் உள்ள தீர்த்தக் குளத்தைத் துப்புரவு செய்து, திருப்பணி ஆற்றி, தொடர்ந்து பிரதோஷ பூஜையை ஆற்றி வருவோர்க்கு, எத்தகைய மலை போன்ற கடன் சுமைகளும், கடன் கண்டத்தால் ஏற்படும் துன்பங்களும் தீர வழி பிறக்கும். 

ஸ்ரீஞானசரஸ்வதி தேவி
துடையூர்

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயமே!

துடையூரில் விடமுண்ட கண்டராய் ஸ்ரீவிஷமங்களேஸ்வரராய், சிவன் காட்சி அளித்து, கண்ட நிவர்த்தித் தலமாக, எத்தகைய கண்டங்களையும் நிவர்த்தி செய்ய வல்ல காலகண்ட நிவர்த்தித் தலமாகத் துடையூரை அருளி இங்கு யுகம், யுகமாகச் சுயம்பு மூர்த்தியாய்க் குடிகொண்டுள்ளார்.

ஆலய அமைப்பு போன்றதே மானுடச் சரீரம். இதுவே திருமூலரின் வாக்காக, உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயமாக ஆயிற்று! மூலத்தானமாகிய கருவறை நம்முடைய இருதயத்தில் ஆத்மா குடியிருக்கும் இடமாகும். இங்கு இருதயம் என்பது மருத்துவ ரீதியான heart என்பதல்ல! கட்டை விரல் அளவுள்ளதே ஆத்மபாவனம்!

இரண்டு செவிகளும், துவார பாலகச் சக்திகளையும், மூக்குத் துவாரங்கள் கோபுர வாசல்களையும் குறிப்பவை. ஆலய அமைப்பு முறைகள் மாறுவது போல் உடலின் ஆலய அம்சங்களும் மாறுபடும்.

இதில் துடை என்பது ஊர்ந்து செல்லும் தன்மையை அளிப்பதால், ஆலயப் பிரகாரப் பாதையையும் குறிப்பதாகும். தேவ கன்னிகை தேவதையான ஊர்வசியும், தொடை மூலம் ஜனித்தமையால் ஊர்வசி எனப் பெயர் பெற்றாள். தற்காலத்தில் சிசேரியன் முறை போல, அக்காலத்தில் தேவ வாக்கினால் பிறப்புத் தோன்றல் நியதி விதிகளும் ஏற்பட்டன.

பொதுவாக, தொடையில் தட்டுவது நல்ல சகுனமன்று என்றாலும், இறைமய சங்கீதத்திற்காக மட்டும் கை, தாள பாவனைகளுக்காகத் தொடையில் தட்டுவது சிறப்புடைய இலக்கணம் என்று தெய்வீக ரீதியாக ஏற்கப்பட்டுள்ளது. இதனை முதன் முதலில் சிவபெருமான் தன்னுடைய நாட்டியத்தின் மூலம் தொடையைத் தட்டி உலகிற்கு, உன்னத சங்கீத இலக்கியமாக, இலக்கண நலவரமாக அளித்தத் தலமே ஊருதட்டு எனும் அற்புதத் தலம் ஆகும்.

நிலக்கோட்டை அருகே ஊருதட்டு என்ற கிராம சிவ ஆலயத்தில் தாம் தாளவாத்ய சக்திகள் உற்பவித்தன. இந்த ஊருதட்டு கிராமத்தில், சங்கீதப் பூர்வமாக ரசிக்கக் கூடிய நட்டுவாங்கம், மிருதங்கம், கடம், தவில் போன்ற தாள வாத்தியக் கச்சேரிகளை நிகழ்த்தி வந்தால் சந்ததி அபிவிருத்திக்கு சங்கீதப் பூர்வமான தெய்வ வரங்கள் கிட்டும்.

எனவே, தாள வாத்திய வல்லுனர்கள் யாவருமே துடையூர், மப்பேடு, செட்டிகுளம், ஊருதட்டு போன்ற சங்கீத சக்தி மிகுந்த ஆலயங்களில், இசைக்கு உரித்தான புதன், சப்தமி, சதுர்த்தி, ரேவதி, நவமி, ஹஸ்தம் சுவாதி, அனுஷம், மூலம் போன்ற நாட்களில் வழிபட்டு, இறைப் பாடல்களுடன் இலவசக் கச்சேரிகள் செய்து வர வேண்டும். இதனை ஏற்று நடத்துவதும் மகத்தான இறைத் திருப்பணி ஆவதுடன் நல்ல ஆண் சந்ததி விருத்திக்கும் ஜாதகப் பூர்வமாகத் துணை இருப்பின் நன்கு உதவும். ஸ்ரீஆதிசங்கரர் வானியல் வழியாக, வழிபட்டத் தலங்களுள் துடையூரும் ஒன்று.

ஸ்ரீபைரவர் துடையூர்

திருமண தோஷ நிவர்த்தித் தலம்

பலவிதமான திருமணத் தடங்கல்களாலும், வசதி இல்லாமை, வேலை இல்லாமை, அழகின்மை, பெற்றோர்களை இழந்திருத்தல், தக்க வயதில் பருவம் அடையாமை, குண்டாக அல்லது ஒல்லியாக இருத்தல், மிகவும் கருப்பாக இருத்தல் போன்ற பல காரணங்களாலும், செவ்வாய் தோஷங்களாலும், திருமணம் ஆகாது நடுத்தர வயதில் இருக்கின்ற ஆண்களும், பெண்களும் நன்முறையில் திருமண வாழ்வைப் பெறுவதற்கு, இங்கு துடையூர்ச் சிவாலயத்தில், நடைப் பிரதட்சிணம், அடிப் பிரதட்சிணம், அங்கப் பிரதட்சிணம் ஆகியவற்றுடன் தலையில் தைலக் குடம் தாங்கி, குட நடைப் பிரதட்சிணமும் வந்து ஆலயத்தில் தீபம் ஏற்றுவதற்கு வசதி செய்து தருதல் வேண்டும்.

மேலும் சீந்தில் கொடி இலைகளுடன், துளசி, வில்வம், பன்னீர் இலைகள் சேர்த்து, சுவாமிக்கு மாலை சார்த்தி, வடை, போடை, தேன்குழல், முறுக்கு, பஜ்ஜி, ஓமப்பொடி, தட்டை போன்ற எண்ணெய் வகை உணவுகளை ஏழைகளுக்குத் தானமாக அளித்துவர வேண்டும்.

விளக்குப் பூஜைத் தலமே துடையூர்!

இங்கு கூட்டு விளக்குப் பூஜை நிகத்துதல் விசேஷமானது. எங்கு 1008 விளக்குகளுடன், ஜாதி, மத, குல பேதமின்றிச் சத்சங்கமாகக் கூட்டு விளக்குப் பூஜை நிகழ்கின்றதோ, அங்கு ஸ்ரீஅசலநிசுமித்திர மகரிஷி மானுட, தூல வடிவில் வந்து ஆசீர்வதிக்க வேண்டும் என்பது சித்தர்களின் நியதி. இதனைக் கலியுகத்தில் நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பிள்ளைகளால், பெண்களால், உறவினர்களால் நிராகரிக்கப்பட்டு, ஒதுக்கப் பெற்று, தனித்தும், அநாதை இல்லங்களிலும் வாழ்கின்ற பெற்றோர்கள், பெரியோர்கள் நல்ல பாதுகாப்பு பெறவும், நன்முறையில் குடும்பத்துடன் இணைந்திடவும், இங்கு வழிபட்டு வருதல் வேண்டும்.

திதிகளில், திரயோதசித் திதிக்கு துடைத் திதி என்று பெயர். இதனால்தான் ஆலயங்களுக்குப் பஞ்சுத் திரி மற்றும் தறிகளுக்குப் பஞ்சு வகைகளை, திரயோதசித் திதி நாளில், துடை மேல் துணி வைத்து உருட்டி, திரட்டித் தருவது சமுதாயத்தில், நாட்டில் நூல் வளத்தை, துணி வளத்தைப் பெருக்கி, சந்ததிக்கும் விருத்தி தருவதாகும்.

எவ்வாறு மணிக்கட்டில் அணியும் காசிக்கயிற்றை காசி ஸ்ரீதண்டபாணி ஆலயத்தில் பெற்று அணிவது விசேஷமானதோ, இதே போல சிறு பிள்ளைகளுக்கும், ஏனையோருக்கும் இடுப்புக் கயிறு எனப்படும் அரைஞாண் கயிறு சார்த்த வேண்டிய அற்புதத் திருத்தலமே இடமே துடையூர் ஆகும்.

ஸ்ரீவிஷமங்களேஸ்வரர்
துடையூர்

அக்காலத்தில் இங்கு நீராடியோர் புது வஸ்திரங்களோடு நீராடி, வேறு புத்தாடைகள் அணிந்து, இடுப்பில் கட்டிய புது வஸ்திரங்களை அப்படியே தானமாக அளித்து, இத்தலத்தின் மகத்தான வஸ்திர தான சக்தியை இப்பூவுலகிற்கு உணர்த்தினர். எனவே, ஆடைகளைத் தானமாக அளிக்கக் கூடிய வஸ்திரத் தானத்திற்கு உரிய தலமே துடையூர் ஆகும். வாழ்க்கையில் வெளியில் சொல்ல முடியாத வகையில் இழைத்த பெரும் பாவச் செயல்களுக்கு ஆடைகள் தானத்தில் தாம் தக்க பரிகார வழிகள் கிட்டும்.

எதிர்பாராத விபத்துகள், துன்பங்கள் வாழ்க்கையில் ஏற்படும் போது
“விடமங்களா விடமங்களா
மங்களச் சுடரேற்றிப் படி படிவேண்
குடகக் கடவழி காட்டியருள் கடவுளே!“

என்று ஆபத்சகாயராகத் துலங்கும் துடையூர் ஸ்ரீவிஷமங்களேஸ்வரரை எண்ணி வேண்டித் துதித்திடில், எத்தகைய விஷமான ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்ற வல்லவர்.

இத்தலத்தில் வீணையைத் தாங்கிய வடிவில் அருளும் ஸ்ரீவீணாதர தட்சிணா மூர்த்தி, எத்தகைய வாத நோய்களையும் போக்குகின்ற முனிக் கல் தெய்வம், நாகத் தோஷங்களை தீர்க்க வல்ல ஸ்ரீசங்கம வல்லி நாக தேவதா மூர்த்தி (நாகப் புற்று) ஆகிய மூர்த்திகளின் பெருமைகளையும், பெரிய விளக்கங்களையும் பிறகு காண்போம்.

ஐந்துறை ஐந்துணைப் பூஜைத் தலம்

பஞ்ச தூல பூஜைகள் என்னும் ஐந்து வகை விசேஷமான பூஜைகளைக் கொண்டதாய், துடையூர் சிவத்தலம் பஞ்சபூத சக்தித் தலமாகவும் பொங்கிப் பூரிக்கின்றது.

1. விஷக்கடித் துன்பங்கள், பிறருடைய விஷமத்தனமான எண்ணங்கள், தீய காரியங்களால் பாதிக்கப்பட்டோரையும் காத்து அருளும் ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீவிஷமங்களேஸ்வரர் பூஜை.

ஸ்ரீமுருகப்பெருமான்
துடையூர்

2. கல்வி, அறிவில் மிகவும் மந்தமாக இருப்போர் நல்ல புத்திப் பிரகாசம் பெறவும், மக்காக இருப்போரும் தேவையான கல்வி அறிவு பெற்றிடவும், நல்ல புத்தி இல்லாது தீய புத்தியுடன் கெட்டவழியில் செல்வோரும் திருந்திடவும் உதவும் ஸ்ரீவீணா தட்சிணா மூர்த்தி வழிபாடு.

3. திருமண தோஷங்கள், திருமணத் தடங்கல்களுக்குக் காரணமான நாக தோஷங்களை நீக்கும் ஸ்ரீசங்கம வல்லி நாகதேவதா மூர்த்தி பூஜை (நாகப் புற்றுப் பூஜை).

4. மைக்ரெய்ன் போன்ற ஒற்றைத் தலைவலி மற்றும் கபாலம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நிவாரணம் தருவதாகவும், எத்தகைய வாத நோய்களையும் தீர்க்க வல்லதாகவும், தலை மற்றும் கபாலத்தில் அடிபடுதல், ஹார்ட் அட்டாக் போன்றவற்றால் அங்கங்களில் ஒரு பகுதி செயலற்றுப் போதல் போன்ற குறைகளைத் தீர்க்கவும் வல்ல, அற்புத மருத்துவ சக்திகள் நிறைந்த முனிக்கல் தெய்வ வழிபாடு.

5. கண் நோய்த் துன்பங்களால் அவதியுறுவோர், தம்பதியரிடையே பலத்த மன வேறுபாடுகள், படிக்கின்ற பிள்ளைகள் படிப்பிலும், செயலிலும், வாழ்க்கையிலும் மிகவும் மந்தமாக இருத்தல், வியாபார நெருக்கடிகள் போன்றவற்றைத் தீர்க்க வல்ல ஸ்ரீசாயா, ஸ்ரீஸ்வர்ச்சலாம்பா சமேத ஸ்ரீசூரிய மூர்த்தி – தம் இரு பத்தினிகளுடன் அருள்கின்ற ஆதவ மூர்த்தி வழிபாடு.
- ஆகிய ஐந்தையும் கொண்டதாய் பஞ்ச தூல – ஐந்துறை ஐந்துணை பூஜைத் தலமாக, குரு, சூரிய, நாக வழிபாட்டுத் தலமாகத் துடையூர் விளங்குகின்றது.

இதன் மகாத்மியங்களைப் பலருக்கும் உணர்த்தி, உய்வித்து, கடைபிடித்து வழிபடச் செய்து பலருக்கும் இறைப் பெரும் திருவருளைப் பெற்றுத் தர நல்ல இறைப் பாத்திரமாகச் செயல்படுவீர்களாக!

ஸ்ரீசூலினி துர்கை

சந்திரசேகரபுரம் (கும்பகோணம் – வலங்கைமான் அருகே சந்திரசேகரபுரம் உள்ளது)

ஆதிபராசக்தியின் அம்சங்கள் பல உண்டு. அம்பிகையர்களில், ஸ்ரீகாளி, ஸ்ரீரௌத்ர துர்க்கை, ஸ்ரீமனோன்மணி போன்று, இரண்டு, மூன்று அம்பிகையர் ஒரே கோயிலில் அபூர்வமாக எழுந்தருள்வதானது, அத்தலத்தில் ஸ்ரீவித்யாம்பிகை மகிமைகள் அபரிமிதமாக நிறைந்திருப்பதையும், ஸ்ரீவித்யா லோகத்து அரிய சித்தர்கள், மகரிஷிகள் அடிக்கடி வந்து பூஜிக்கும் தலமாகவும் துலங்குவதையும் உணர்விக்கின்றது.

ஸ்ரீரௌத்ர துர்க்கை, ஸ்ரீசூலினி துர்க்கை, ஸ்ரீஅஷ்டபுஜ துர்க்கை, ஸ்ரீபால துர்க்கை, ஸ்ரீவீர துர்க்கை, ஸ்ரீகனக துர்க்கை, ஸ்ரீவன துர்க்கை, ஸ்ரீவிஷ்ணு துர்க்கை என்று சிறப்பான ஸ்ரீதுர்க்கை வழிபாடுகள் கலியுகத்தில் மனித சமுதாயத்திற்கு அமைவது மக்களுக்குப் பெரும் பாக்யமே! இதிலும், கும்பகோணம் அருகே ஸ்ரீசந்திரசேகரபுரம் திருத்தலத்தில், ஸ்ரீசூலினி துர்க்கையாக அம்பிகை அருள்வது பலரும் அறியாததாகும்.

ஸ்ரீசூலினி துர்கை
சந்திரசேகரபுரம்

பொதுவாக ஸ்ரீகாளி, ஸ்ரீமாரியம்மன் மற்றும் ஸ்ரீதுர்க்கை வழிபாட்டு அம்சங்கள், அக்னி சக்திகளைக் கொண்டவை. இதனால்தாம் ஸ்ரீதுர்க்கை மற்றும் ஸ்ரீகாளி வழிபாடுகளில் விளக்குப் பூஜை போன்ற அக்னி வகைப் பூஜைகள் அதிபலாதி பலன்களைத் தர வல்லவையாக விளங்குகின்றன.

கலியுக வழிபாட்டிற்காக ஸ்ரீதுர்க்கை அம்சங்களில் 96 வகையினையும், 32 விதமாக ஸ்ரீகாளி பூஜைகளையும், கலியுக மக்கள் சமுதாயத்திற்கென, சிறப்பாகச் சித்தர்கள் அருள்கின்றனர்.

மதி மயக்கம், மன மயக்கம், மந்திர மயக்கம், மது, முறையற்ற இச்சைகள் காரணமாகத் தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்படுதல்,

தன்னை விட அந்தஸ்து, பதவி, செல்வம், கௌரவம் போன்றவற்றில் உயர்ந்தவர்களைக் கண்டு அஞ்சி, பயந்து வாழ்தல்,

வறுமை மற்றும் பணக் கஷ்டங்கள், பண நஷ்டங்கள் காரணமாகப் பிறருக்கு அடி பணிந்து வாழ வேண்டிய நிர்பந்தம்,

கணவனுடைய பலவிதமான குணக் குறைபாடுகளால் பிறரை நாடி நம்பி, அடிமை போல் வாழ்தல்

- போன்ற வகைத் துன்பங்களை நீக்கவல்ல அம்பிகை வழிபாடே ஸ்ரீசூலினி துர்க்கை வழிபாடாகும்.

அச்சம், மன பீதிகள் நீங்கிட ...

தமக்கு வரும் பல துன்பங்களுக்கும் மூல காரணமாக, பிறர் ஏதேனும் சூது, வாது, பில்லி, சூன்ய, மந்திர ஏவல்களை வைத்திருப்பார்களோ என்று தினமும் எப்போதும் ஒரு விதமான அச்சத்தோடு வாழ்வோரும் உண்டு.  இத்தகைய மந்திர உச்சாடன ஏவல்கள் உண்மையிலேயே அவர்களுக்கு நடந்திரா விட்டாலும், இவ்வாறு எண்ணி, எண்ணியே பயந்து வாழ்க்கையைப் பலரும் ஓட்டுவர். இவர்கள் என்றுதான், எப்படித்தான் இத்தகையான அச்சம், மன பீதிகளில் இருந்து மீள்வது?

இத்தகைய மன பீதிகள், மன அச்சங்கள், மன பயங்களை நிவர்த்தி செய்வதும் ஸ்ரீசூலினி துர்க்கை வழிபாடே! பிறரால் அதிகப்படியான துன்பங்கள் வந்து, வேதனையில் வெந்து, நொந்து, வாழும் படியான நிலைகள் உருவாகினாலும், அனைத்துமே அவரவர் கர்ம வினைகளின் விளைவுகளின்படியே நிகழ்கின்றன என்ற சத்திய நெறியையும் மறந்து விடுதல் கூடாது.

ஸ்ரீசந்திரசேகர சுவாமி
சந்திரசேகரபுரம்

எனவேதான் தமக்குப் பகைமையாக இருப்பவர்களைக் கூட ஏசுவதற்கோ, அவர்களை அழிக்க எண்ணுவதற்கோ, எவருக்கும் எவ்வித உரிமையும் ஒரு சிறிதும் கிடையாது. ஆனால், பகைமையை மாய்த்து, பகைமையுடன் இருப்பவர்களையும் பண்படச் செய்கின்ற பாங்குடையதே ஸ்ரீசூலினி துர்க்கை வழிபாட்டின் சிறப்பம்சங்கள்!

எனவே, சந்திரசேகரபுரம் ஸ்ரீசூலினி துர்க்கையை, வாரத்தின் ஒவ்வொரு நாளிலும், குறிப்பாக அந்தந்த நாளுக்கான ராகு கால நேரத்தில் வழிபடுவதால், அற்புதமான நற்பலன்களைப் பெறுவதுடன் பலவிதமான வேதனைகளும், துன்பங்களும் மாய்ந்து, வாழ்வில் மறுமலர்ச்சியும் உண்டாகும்.

இன்முகமும் இனிய இறை சேவையே!

நமக்கு எத்தகையத் துன்பங்கள் வந்தாலும், முகத்தில் வேதனைகளைத் தேக்கி, “உனக்கு என்ன ஆயிற்று?” என்று பலரும் கேட்கும்படி வைத்துக் கொள்ளக் கூடாது. ஒருவருக்கு வீட்டில், பல விதங்களிலுமாக, எத்தகைய பிரச்னைகள் இருந்தாலும், பிறரிடம் முக மலர்ச்சியுடன் நல்ல சத்விஷயங்களைப் பேசி வருதல் சக்தி வாய்ந்த நல்ல ஆன்மீகப் பணியாகும். எனவே உடலில் எத்தகைய நோய், துன்பங்கள் இருந்தாலும், மலர்ந்த முகத்துடன் பிறருக்கு மனத்தளவில் சந்தோஷம் அளித்திட முயற்சி செய்வதும், தினசரி தெய்வீகப் பயிற்சிகளில், ஆன்மீகப் பணிகளில் ஒன்றாகும்.

தினமும் தெய்வீக விஷயங்களைப் பலருக்கும் உரைப்பீர்களாக!

ஸ்ரீசௌந்தர நாயகி
சந்திரசேகரபுரம்

“எனக்கு அவ்வளவாகத் தெய்வீக விஷயங்கள் தெரியாதே!” என்று எண்ணாதீர்கள்! அவ்வப்போது..பெரிய புராண, ராமாயணம், மஹாபாரதம் போன்ற புராண அனுபூதிகள் .. இதுவரையில் மலர்ந்துள்ள பதினான்கு ஆண்டுகளின் ஸ்ரீஅகஸ்திய விஜயம் ஆன்மீக இதழ்களையும் நன்கு படித்து, தெய்வீக விஷயங்களை கிரகித்து, அல்லது சட்டைப் பையில் குறிப்புகளாக எழுதி வைத்துக் கொள்தல்,

ஒரு நாளில் இத்தனை பேருக்கு, இத்தகைய ஆன்மீகச் செய்திகளை எடுத்துரைப்பது என்று சங்கல்பம் செய்து பணி ஆற்றுதல்,

ஆலயங்களில், பொது மண்டபங்களில் அலுவலகங்களில் நித்ய கர்ம நிவாரணிகள் போன்ற தெய்வீக விஷயங்களைப் பலரும் காணும்படி தினமும் எழுதி வைத்தல் அல்லது கம்ப்யூட்டரில் அச்சிட்டு ஒட்டுதல்,

- என்பதாக, உங்களால் தினந்தோறும் எத்தனையோ ஆன்மீகப் பணிகளை நிச்சயமாகச் செய்திட முடியும், நல்மார்கமும், மனமும் கொண்டால்!

ஓர் ஆலயத்தில், நீங்கள் எழுதியோ, அச்சிட்டோ, கம்ப்யூட்டரில் பிரிண்ட் செய்தோ வைக்கின்ற ஆன்மீகச் செய்திகளை, நூற்றுக் கணக்கானோர் படித்திட, அதில் பலருக்கும் மனதில் சந்தோஷமும், உள்ளத்தில் உவப்பும், பல பிரச்னைகளுக்குத் தீர்வுகளும் கிட்டிடும் எனில் எத்தகைய அரிய இறைப் பணி இது!

ஸ்ரீசந்திர பகவான்
சந்திரசேகரபுரம்

இதில் திரளும் மகத்தான தெய்வீகப் புண்ணிய சக்திகளும், உங்களையும் அறியாமல் உங்கள் குடும்பத்திற்கும், தொழிலுக்கும், அலுவலகப் பணிக்கும், குடும்பச் சந்ததிகளுக்கும், நீ ண்ட நெடிய ஆல மரமாய்த் தழைத்துச் செழித்து வளர்ந்து, பல்லாண்டுகளுக்கும் பல சந்ததிகளுக்கும் நிரந்து, பரவும் அல்லவா!

இவ்வாறு, அவரவர் வசதிக்கேற்ற வகையில், மிக எளிமையான தெய்வீகப் பணிகளை ஆற்றுவதற்கான குல போதன சக்திகளை அளித்து அருள்பாலிப்பதும் ஸ்ரீசூலினி துர்க்கை வழிபாடு ஆகும்.

மூன்றாம் பிறை சந்திரத் தரிசனத் தலமாகவும், மூன்றாம் பிறையைத் தன் சிரசில் சூடி ஈஸ்வரன் காட்சியளித்தத் தலங்களுள் ஒன்றாகவும் துலங்கும் சந்திரசேகரபுர சிவாலயத்தில், ஸ்ரீமனோன்மணியாய் அம்பிகை மன, யோக, வாக் சக்திகளைப் பொழியும் அருட்தலத்தில், ஸ்ரீசூலினி துர்க்கையும் எழுந்தருள்வது நமக்குப் பெரும் பாக்யமே!

“ஊ” அட்சரம் தோன்றிய உத்தமத் தலம்

ஔகார பீஜாட்சரச் சக்திகளுக்கு மிகவும் பிரசித்தி பெற்றதே மதுரை அருகே உள்ள திடியன் மலை என்பதை தற்போது இவ்விதழ் மூலம் நன்கு அறிவீர்கள் அன்றோ! இவ்வகையில் “ஊ” என்ற எழுத்தின் ஊங்காரப் பீஜாட்சர சக்திகள் தோற்றுவிக்கப் பெற்று, ஊங்கார பீஜாட்சர அருள் பொழியும் தலமே சந்திரசேகரபுரம் ஆகும்.

ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தில் வருவது போல “பூர்” வகை யோக சக்திகள், மூப்பாரப்ப சக்திகள், யூதிகா சிவசக்திகள், ரூப்சாகர் ஐஸ்வர்ய சக்திகள், க்லூம் எனும் பீஜாட்சர சக்தி, மழுவதீயம் எனும் சிவாயுத சக்திகள் போன்ற ஊங்கார, ஓங்கார சக்திகள் பரிணமிக்கின்ற தலமே சந்திரசேகரபுரம் என சந்திரலோகச் சித்தர்கள் அருள்கின்றனர்.

ஸ்ரீமுருகப் பெருமான்
சந்திரசேகரபுரம்

மதிவாணச் சித்தர் என்பார் இத்தலத்தில் சிவச்சந்திர பூஜையில் பரிமளித்து உத்தமச் சித்தரானவர். சிந்தூரப் பொட்டுச் சித்தர் எனும் அதியற்புதச் சித்தர் இத்தலத்தில் மதிவாணச் சித்தருக்கு, உத்தூளனம் எனும் வெண்பட்டு ஹோமாஹூதி பஸ்மதூளித் திருநீறு மூலம் உத்தம சித்த நிலைகளை அருளித் தந்தார்.

ஷீர்டி சாய் பாபா ஆலயத்தில் உள்ளது போல “ஊதி” என்பது விபூதி வகை ஆன்ம சாதனமாகும். புனிதமான அக்னி வழிபாட்டில், நல்ல தெய்வீகத் திரவியங்கள் நன்கு அக்னியில் கனிந்து, ஐக்கியமாகி இருக்கும் உத்தூளனம் என்பதும் திருநீறாகிய விபூதியைக் குறிப்பதாகும். விபூதி என்பதற்கே பஸ்மதூளி தாரங்கராகிய ஈஸ்வரன், தூளன சக்திகளை அளிக்கும் ஈஸ்வரன், மயான வாசியாய் அருள் புரியும் ருத்ர தாண்டவச் சிவபெருமான், பரமானந்த அனுபூதி, தெய்வீக வைபவம் என்றெல்லாம் பலவிதமான தெய்வீக அர்த்தங்கள் உண்டு. இவையாவும் உத்தூளனம், மூலிகம், ஊர்மிளம், தூளிபாலனம், ஹுங்காரம், முப்பூரம், பூசுவம் போன்ற சக்திகளைக் கொண்டவையாகும். இவ்வாறாக “ஊ” எனும் பீஜாட்சர ஒலி உதித்த திருத்தலமே சந்திரசேகரபுரம் ஆகும். இதற்காகவே பண்டையக் காலங்களில், “ஊ” வகை நாமங்களைச் (ஊர்மிளா, பூமா, சூரிய நாராயணன்) சூடிட இத்தலத்திற்கு வந்து வழிபடுவர்.

“உம்மேல் ளகரமே”

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
சந்திரசேகரபுரம்

“ஊ” என்பது பிள்ளையார் சுழியாகி “உ” மேல் “ள”கரத்தைப் பொருத்துதல் தாமே! ஊழி எனப்படும் பிரளயத்தின் போது, அனைத்து ஜீவன்களின் ஜீவபிந்து சாட்சாத்காரத்தை, ஸ்ரீபிரம்ம மூர்த்தி ஊங்காரத்தில் பதிக்கும் தலம் இதுவேயாகும். இவ்வாறு மன ஒடுக்கக் கும்ப இறை லீலைக்கு “உம்மேல் ளகரம்” என்று பெயர். இதைத்தான் கரகாட்ட யோகம் குறிக்கின்றது. கரகக் கும்பத்தின் மேல் உள்ளதே ளகர பீஜாட்சர சக்திகள் நிறைந்த தேங்காய் ஆகும். “நாளிகேர” ளகர சக்திகள் நிறைந்ததே தேங்காய். (நாளி – தேங்காய்). தெங்கங்காய், தெங்கம் பழம் எனப்படும் தேங்காயில் “அங்” பீஜாட்சர் பொலிவுகள் அதிகமாய் உள்ளன.

“உம்மேல் ளகரம்” என்றால் உ என்ற அட்சரத்தின் மேல், ளகரத்தை எழுப்புதல் என்று பொருள், உ அட்சரத்திற்கு அதிபதி பிள்ளையார் ஆதலால் இது பிள்ளையார் சுழியுமாக ஆயிற்று.

தமிழ் அட்சரங்களில் “எழுத்தேறிய எம்பூர சக்தி கொண்டதே” உ எனும் அட்சரமாகும். எம்பூரம் என்றால் படிமேல் ஏறுதல் என்று பொருள். இவ்வாறு உ எனும் உட்பரப் படியில் ள எனும் ளகராட்சரம் ஏறி நிற்பதே “ஊ” எனும் எழுத்தாகும். இவ்வாறு உலக மொழிகள் பிறவற்றிலும் ஒரு அட்சரத்தின் கீழும், மேலும் தெலுங்கு, உருது, அரபிக் போன்றவற்றில், எழுத்தேறி, எம்பூர அட்சரங்களுக்கு சப்தவளம் தரும் தலங்களில் சந்திரசேகரபுரமும் ஒன்றாகும்.

ஸ்ரீசூலினி துர்க்கையின் பல அருளம்சங்களும் காளியின் ஊர்த்வ தாண்டவ சக்திகளில் தோன்றியவையாகும். எனவே, இத்தலத்தில் ஊங்கார சக்தி அம்சங்கள் நிறையப் பொழிகின்றன. ஸ்ரீமனோன்மணியாய் அம்பிகையின் ஓங்கார சக்திகளும், சூலினியாய் அம்பிகையின் ஊங்கார அனுகிரக சக்திகளும் திளைக்கும் தலம். இத்தகைய தலத்தின் அருமை, பெருமைகளை மகத்துவத்தை, மகிமையை, சித்தர்கள் தக்க சற்குரு மூலமாக, தாரண ஆண்டில் உணர்த்துவது நமக்குப் பெரும் பாக்கியமே!

ஒற்றற்ற, ஒப்பற்ற தாரண ஒற்றுமை

ஸ்ரீகாசிவிஸ்வநாதர்
சந்திரசேகரபுரம்

தாரண ஆண்டின் மகத்தான அட்சரச் சக்திகளால், ஆலயங்கள், பாசுரங்கள் பற்றிய அரிய தெய்வீக விஷயங்கள் பூவுலகிற்குக் கிட்டுகின்ற அற்புத ஆண்டாகும். இதிலும் ஒற்றெழுத்தின்றி அமையும் இறைவன், இறைவியின் நாமங்களில் (சூலினி, காளி) மனதைச் சுத்திகரிக்கும் மதிகாரக சக்திகள் பூரித்திருக்கும். இதில் ஸ்ரீசூலினி என்ற நாமம் பகைமை, அச்சத்தைத் தவிர்த்து, ரட்சையாய்க் காக்கும் அட்சரங்களைக் கொண்டதாகும்.

ராகு கால ஸ்ரீசூலினி துர்க்கை பூஜை

ஸ்ரீசூலினி துர்க்கைக்கு அந்தந்தக் கிழமையில், ராகு காலத்தில் பூஜிப்பது மிகவும் விசேஷமானது. ஞாயிறன்று ராகு கால நேரத்தில் (மாலை 4½ - 6 மணி) ஸ்ரீசூலினி துர்க்கைக்கு ஆரஞ்சு வண்ணக் கேசரிப் காப்பு (Kesari sweet) இட்டு, முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, கிஸ்முஸ் திராட்சை பதித்து அலங்கரித்து, ஆரஞ்சு வண்ண ஆடைகள் சார்த்தி, அடிப் பிரதட்சிணம் வந்து வழிபடுதலால், தன் பெண் பிள்ளைகளின் திருமண வாழ்வில் ஏற்பட்டுள்ள துன்பங்களைப் பற்றி பெற்றோர்களுக்கு ஏற்படும் மனத் துன்பங்கள் தணியும்.

ஞாயிறு ராகு காலத்தில் பூபாலன ஊங்காரச் சக்திகள் தோன்றும் நேரமாதலின், பெண்களுக்கு இல்லறத் துன்பங்களைக் களைய வல்ல நல்வரங்களைத் தரும் பூஜை நேரம் இதுவேயாம்.

வியாழக் கிழமை (மதியம் 1½ - 3) ராகு காலத்தில் ஸ்ரீசூலினி துர்கைக்கு, மஞ்சள் நிற கேசரிக் காப்பு இட்டு அல்லது கைகளால் அரைத்த மஞ்சள் காப்பு சார்த்தி, வில்வம், துளசி, ரோஜா புஷ்ப இதழ்கள், முந்திரிப் பருப்பு, பாதம் பருப்பு, கிஸ்முஸ் திராட்சைகளால் அலங்கரித்து, எலுமிச்சை அன்னம் படைத்துத் தானம் அளித்தலால், திருமணமாகி பல்லாண்டுகள் ஆகியும் வாழ்க்கையில் நன்கு கால் ஊன்றவில்லையே என்று வருந்துகின்ற இல்லறப் பெண்களுக்கு, நல்ல குடும்ப நலன்களைத் தருகின்ற ஊங்காரக் கூரமால்ய சக்திகள் தோன்றும் பூஜை நேரமிது!

செவ்வாய்க் கிழமையன்று (மாலை 3 - 4 ½) ராகு கால நேரத்தில் ஸ்ரீசூலினி துர்க்கைக்கு சிவப்பு நிறக் கேசரி அல்லது நல்ல கோதுமையாலான அல்வா காப்பு இட்டு முந்திரிப் பருப்பு, பாதம்பருப்பு, கிஸ்முஸ் திராட்சை பதித்து அலங்கரித்து, அல்லது குங்குமக் காப்பு சார்த்தி...

சூலினியின் திருப்பாதங்களுக்கு அத்தர், ஜவ்வாது, புனுகு, குங்குமப் பூ, கஸ்தூரி, கோரோஜனை சேர்த்துக் கைகளால் அரைத்த சந்தனத்தால் பாதக் காப்பு இட்டு,

நிறையச் சாம்பிராணி தூபம் குறைந்தது ஒரு மணி நேரமாவது இட்டு வழிபடுவதால் பணமுடை, உறவுப் பகைமை, வேலையின்மை, அழகின்மை, கருப்பு நிறம், குடும்பத்தில் முறையான அந்தஸ்து இல்லாமை, தாய் அல்லது தந்தை இல்லாமை, உயரமின்மை, வசதியில்லாமை போன்ற பல காரணங்களால் தடைபட்டுள்ள திருமணங்களுக்கு, தக்க உதவிகள் கிட்டி, திருமணம் நன்கு நடைபெற்றிட, சூல மங்கள சக்திகள் தழைக்கும் பூஜை நேரம் இதுவே.

எனவே, ஸ்ரீமனோன்மணி மற்றும் ஸ்ரீசூலினி துர்க்கை இரு தேவியரும் இணைந்து அருளும் மனோசக்திகள் நிறைந்த சந்திரசேகரபுரம் ஆலய வழிபாடு வாழ்வில் பல மகத்தான நல்ல மாற்றங்களைப் பெற்றுத் தருவதாகும்.

சந்தனம் அரைத்தல்

சந்தனம் அரைத்தல் ஒரு கரபூஷண யோகமே! பவுடராகக் கரைக்காது சந்தனத்தைக் கைகளால் அரைத்து இறைவனுக்குச் சார்த்திட அளிக்கையில்

1. நீங்கள் அளிக்கும் சந்தனத்தில் அமையும் இறை மூர்த்திக்கான சந்தனக் காப்பைப் பலரும் தரிசித்து அனுகிரகம் பெறுவதால் இது மகத்தான இறைச் சமுதாயப் பணியாகவும் அமைகின்றது. தனக்கென்று இல்லாது பிற ஜீவன்களின் நல்வாழ்விற்கென அமையும் இத்தகைய எளிய சேவைகளில் தியாகம் பதிவதால் இதில் கிட்டும் புண்ய சக்தியும் மகத்தானதாகும், விரைவில் பல்கிப் பெருகும்.

2. நன்றாகத் தரையில் அமர்ந்து சந்தனம் அரைப்பது என்பது சிறப்பான சுகாசன யோக நிலையாகும். பத்மாசனம் இட்டுச் சந்தனம் அரைத்தல் மிகவும் கடினம் எனினும் இதில் மகத்தான யோக சக்திகள் விளைந்து அபூர்வமான மனஅமைதியைத் தரும்.

ஸ்ரீஜுரஹரேஸ்வரர்
திருமழபாடி

உடல் நாளங்களை ஆக்கப்படுத்த யோகாசனம் உதவுவது போல, கர முத்திரைகளும், இரண்டு கரங்களையும் உள்ரேகைகள், கங்கணங்கள், உள் விரல் ரேகைகள் நன்கு சந்தனக் கட்டையில் பதியும்படிச் சந்தனம் அரைத்தலிலும் கைரேகைகள் யாவும், சந்தனாமிர்தக் கிரண சக்திகளைப் பெற்று யோகப் பூர்வமாக ஆக்கம் பெறுகின்றன.

ஆம், சந்தன நறுமணத்தில் சந்தனாமிர்தம் எனும் அமிர்தச் சுரப்பு வான்வழியாக, காற்று மண்டலப் பூர்வமாக ஏற்படுகின்றது. எனவே நீங்கள் அரைக்கும் சந்தனத்தில் ஏற்படும் நறுமணம் சமுதாயப் பரவெளியையும் சுத்திகரிப்பதால் தினமும் சந்தனம் அரைப்பதும் ஓர் அற்புதமான சமுதாய வள இறைத் திருப்பணியே!

பாற்கடலில் தோன்றிய திவ்யத் தெய்வப் பிரகாசத் திரவியங்களுள் பிரதீபச் சந்தன மரமும் ஒன்றாகும். இதனைச் சித்தர்கள் பெற்றுக் கொண்டனர். சந்தனத்தைக் கைகளால் அரைக்க அரைக்கத்தான் சந்தனாமிர்தச் சுரப்பு உண்டாகும். அமிர்தச் சுரப்பு எனில் அமிர்த நீர்ப் பெருக்கு என்று மட்டும் எண்ணாதீர்கள். சந்தனாமிர்தச் சுரப்பு விண்ணிலும், காற்றிலும், பூமியிலும், நீரிலும், நெருப்பிலும் தோன்றுவதாகும். ஹோமத்தில் சந்தனக் கட்டையை ஆஹூதியாக (நெருப்பில் சமர்ப்பணமாக) அளிக்கையில் சுவர்ணச் சந்தனாக்னி சக்தி பரவெளியில் நிரவி, பேரளவில் விண்வெளிச் சுற்றளவைச் சுத்திகரிக்கின்றது.

ஸ்ரீநடராஜப் பெருமான்
உத்தரகோசமங்கை

3. சந்தனம் அரைக்கையில் எழும் நறுமணம் பல மைல் அளவிற்கு நற்கிரணங்களைத் தோற்றுவிக்க வல்லது. பலரும் தினமும் இல்லத்தில் பூஜைகளுக்காகச் சந்தனம் முறையாக அரைக்கின்ற நல்ல ஆன்மீக வழிமுறையை மறந்தமையால்தாம், திருஅண்ணாமலை ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் மற்றும் ஸ்ரீஅகஸ்திய விஜயம் மூலமாக, ஸ்ரீராம நவமி, சித்திரை சதயம் நாட்களில் பக்தர்களை நிறையச் சந்தனம் அரைத்திட வைத்து,  பல நாட்களுக்குச் சந்தனம் அரைத்துப் பூஜித்த பலன்களை, குருவருளால் பெற்றுத் தரலாகிறது. இதுவே கலியுக குருகுலவாசம் அளிக்கும் அதியற்புத இறைப்பணிச் சேவைகள்.

4. உத்தர கோசமங்கை ஸ்ரீநடராஜர், சென்னை திருமுல்லைவாயில் ஸ்ரீமாசில்லா மணீஸ்வரர், வேதாரண்யம் கல்யாணக் கோல மூர்த்திகள் எப்போதும் வருடம் முழுதும் சந்தனக் காப்பில் திளைப்பவர்கள், திருமுல்லை வாயிலில் வருடந்தோறும் சித்திரைச் சதயத்திலும், உத்தரகோச மங்கையில் ஆருத்ரா தரிசன நாளிலும் சந்தனம் களையைப் பெற்று, சுயம்பு மேனியைப் பூஜித்து, பிறகு இறைத் திருமேனிக்குப் புதுச் சந்தனம் சார்த்தப் பெறும்.

சந்தனக் காப்பிற்கு ஏற்ற உத்தம நாள் சதய நட்சத்திர நாளாகும். இந்நாளில் சந்தனாதித் தைலக் காப்பிட்டு வழிபடுதலும், இந்நாளில் ஆடவர், பெண்டிர் இருவரும் சந்தனாதித் தைல நீராடியும் சப்த கன்னியர்களை வழிபடுதலால், குடும்பத்தில் கண் திருஷ்டி தோஷங்கள் நீங்கும். வாக்கு தோஷங்களை அகற்றவும் உதவும்.

5. தலையில், கபாலத்தில் அடிபட்டிருந்தால் தினமும் ஒரு ஏழைக் குடும்பத்திற்கு எண்ணெய் நீராடலுக்குச் சந்தனாதி தைலமும் சீயக்காய்ப் பொடியும் தானமாக அளித்து வர, தலைப் புண் விரைவில் ஆறும். ஆண்டு முழுதும் தினமும் சந்தனாதித் தைலமும் சீயக்காப் பொடியும் ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்திடில் கபாலத்தில் அடிபட்டு பெரும் பாதிப்புகளுக்கு ஆளானோர் நன்னிலை பெற வழி பிறக்கும்.

6. கடுமையான ஆஸ்த்மா நோயில் அவதியுறுவோர், ஸ்ரீஜுரஹரேஸ்வரருக்கு அடிக்கடி சந்தனாதி தைலக் காப்பும், இயன்ற அளவு சந்தனம் அரைத்து ஸ்ரீஜுரஹரேஸ்வரரின் திருமார்பு, திருப்பாதங்களுக்குச் சந்தனக் காப்புமாக இட்டு வழிபட்டு வருவதுடன் ஏழைகளுக்குச் சந்தனாதித் தைலம், சீயக்காய்ப் பொடித் தானம் செய்து வருதலால் அதிசயத் தக்க வரையில் குணம் ஏற்படுவதைக் கண்டிடலாம்.

அமுத தாரைகள்

அசைவ உணவைத் தவிர்த்தலே நன்று என்று தெரிந்தாலும் உலகில் பெரும்பான்மையான மக்களின் முதல் ஆசையே சுவையான அசைவ உணவுகளை நாடுவதுதான். என்னதான் கண்டிப்புச் செய்தாலும் உள்மனம் ஏங்கிக் கொண்டிருப்பதால் அசைவப் பிரியர்கள் மறைமுகமாக எதையேனும் உண்டு கொண்டுதான் இருப்பார்கள். நோய்கள், தள்ளாமை, இயலாமை என்று வரும்போதுதான் அசைவம் தானாக விலகும் என்ற நிலைக்குத் தற்போதைய மனித சமுதாயம் உள்ளது. எந்த உயிரினம் அசைவ உணவாக ஆகின்றதோ அதனுடைய குணங்கள் அவரவருக்கு நிச்சயமாக வந்து சேரும். இத்தகைய குணங்களைப் பிறகு மாற்றுவது மிகவும் கடினம். ஆன்மீக ரீதியாக அசைவ உணவிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் மனவடக்கம் நிறையத் தேவை, இது எளிதில் வராது. ஆனால் பத்மாசனம், குக்குடாசனம், மயூராசனம் போன்றவற்றைத் தினமும் காலையும், மாலையும் பயின்று சூரிய நமஸ்கார மந்திரங்களை ஓதியும் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம், பௌர்ணமி, அமாவாசை தோறும் ஸ்ரீமனோன்மணி தேவி வழிபாடுகளையும் மேற்கொண்டும் வந்தால் மனமானது தானாகவே அசைவ உணவு இச்சையை விடுவிக்கும்.

ஸ்ரீமனோன்மணி தேவி
திருநாவலூர்

பல குடும்பங்களிலும் உள்ள பொதுவான பிரச்னை என்னவென்றால் பெரும்பாலான வீட்டில் குழந்தைகள் விளையாட்டில் காட்டுகின்ற ஆர்வத்தைப் படிப்பில் காட்டுவது கிடையாது என்பது தான், நகரங்களில் விளையாடுவதற்கும் இடமின்றி சந்து பொந்துகளில் வெயிலில், நிழலில் நின்று கொண்டு பிள்ளைகள் விளையாட்டு விருப்பத்தைத் தணித்துக் கொள்கின்றார்கள். ஆன்மீகப் பூர்வமாக விளையாட்டினையும், விளையாட்டு ஆர்வத்தையும் நன்கு கட்டிக் காக்க முடியும். சிறு சிறு ஆசனங்களை, யோகப் பயிற்சிகளைப் பெற்றோர்கள் புகட்டித் தாமும் பயின்று வந்தால் பிள்ளைகளுக்கு உடல் ஆரோக்யம், மன ஒடுக்கம், மன ஒழுக்கம் ஏற்பட்டு நன்கு பண்பட்டு வளர்வர். யோகம், ஆசனங்களில் எவ்வித ஆபத்துமின்றி, நிறைய இடமும் தேவையின்றி அதே சமயத்தில் உடலின் 72000 நாடி நாளங்களுக்கு நல்ல ஊக்கம், ஆக்கம், புத்துணர்ச்சி ஏற்படுவதால் களைப்பின்றி நெடுநேரம் விளையாடிய மனத்திருப்தியும் உண்டாகும். விரல்களால் ஆக்கப்படும் முத்திரைப் பயிற்சிகள் கண்கள், கைகள், நரம்புகள், இரத்த நாளங்களுக்கு நல்ல சக்திகளையும் பெற்றுத் தரும். ஏழு முறை அடிப்பிரதட்சிணம் வருதல், கொடிமரம், ராஜகோபுரத் தெய்வ உருவங்கள், கோபுரக் கலசங்களை அண்ணாந்து பார்த்துத் தியானித்தல் இவற்றால் கழுத்து, கபாலம், கண்கள், பாதங்களுக்கு யோக ஆக்க சக்திகளைத் தருவதோடு ஆன்மீக ரீதியாகவும் முன்னேறிடவும் யோகப் பூர்வமாக உதவும்.

60 வயதிற்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக உடல், மன ஒழுக்கத்தைப் போற்றியாக வேண்டும். 60 வயதுக்கும் மேலும் பஜ்ஜி, போண்டா, பக்கோடா போன்றவற்றில் மனம் லயித்தல் கூடாது. இவற்றை ஓரளவு உண்பதில் தவறு கிடையாது. ஆனால் இவற்றிற்காக மனம் அலைதல் கூடாது. இத்தகைய நன்னிலையைப் பெற ஆரம்பத்தில் இருந்தே தனக்கு மிகவும் பிடித்தமாக உள்ள உணவுப் பண்டங்களை அவ்வப்போது தானம் செய்துவர வேண்டும்., இது கடைசி கால விருப்பத்தை நன்கு தணிக்க உதவும்.

முடிந்தவரை தலைவலி ஏற்படுகையில், உடனே டபக்கென்று ஆங்கில மருத்துவ வகை மாத்திரைகளை விழுங்குதல், காபி அருந்துதல் என்றில்லாது, குறைந்தது மூன்று மணி நேரமாவது, தலைவலியோடு இருந்து பழகுதல் வேண்டும். இதனால் பொறுமை, சகிப்புத் தன்மை, பணிவு ஏற்படுவதுடன், ரத்த நாள நோய்கள் தணிவதற்கும் இயற்கை ரீதியாகவும் நோய் நிவாரண சக்திகள் ஏற்படும்.

அக்னி ஹோத்ர வழிபாட்டுக் குடும்பங்களை போஷிப்பீர்!

பன்னெடுங் காலமாக, உலக ஜீவன்களின் நலன்களை வேண்டி, ஒரு நாள் கூட இடைவிடாது, தினமும் ஹோம, வேள்விகள் நடத்துகின்ற குடும்பங்கள் வாரணாசி, நைமிசாரண்யம், உடுப்பி, சிருங்கேரி, முசிறி, காஞ்சீபுரம் போன்ற தலங்களில் உள்ளன. மிகவும் புனிதமான இத்தகைய காலாதீத நெருப்பினை தரிசிப்பதே வாழ்வில் பெரும் பாக்கியமாகும். பன்னெடுங்காலம் இடைவிடாமல் பிரகாசிக்கும் இத்தகைய காலாதீத அக்னியான, சர்வாக்னி நெருப்பு தரிசனத்தைக் குடும்பத்தோடு பெற்று அரிய புண்ணிய சக்திகளை அடைந்திடுக!

ஜுரஹரேஸ்வரர் வழிபாட்டைப் பலரும் ஆற்றுவதில்லை. ஜலதோஷம், காய்ச்சல் போன்றவை அடிக்கடி வருவதால், “ஏதோ வரும், போகும் அவ்வப்போது ஏதேனும் மாத்திரைகளை விழுங்கிக் காலத்தை ஓட்டிட வேண்டியதுதான், நாலைந்து நாட்களில் சரிப்பட்டு வரவில்லை என்றால் டாக்டரிடம் போக வேண்டியது தான்!” என்ற மனப்பன்மையே உலகில் பெருகி வருகின்றது. பெரும்பாலானோர் பல அல்லோபதி (ஆங்கில மருத்துவம்) மருந்துகளை அறிந்து வைத்திருப்பதால் ஜலதோஷம், தலைவலி, காய்ச்சல், உடல்வலி போன்றவற்றைச் சுய வைத்யமாகவே ஓட்டி விடுகின்றார்கள். ஆன்மீக ரீதியாக, எந்த நோயும் சிறிதோ, பெரிதோ, கர்ம வினைகளின் விளைவுகளே  என்று உணர்விப்பதால் குறித்த கர்ம வினைகள் தீர்ந்தால்தான் நோய்கள் தீரும். டாக்டருக்கு, மருந்திற்கு, வண்டிக்கு, ஆட்டோவிற்கு இவ்வளவு நேரம், பணம் செலவழிதல் வேண்டும் என்றிருந்தால் அது நிகழ்ந்தே தீரும். இதைத்தான் நம் மூதாதையர்கள் நேர்த்தி வைத்தல் என்று சங்கல்பம் செய்து குறித்தத் தொகையை எடுத்து வைத்து கோவிலுக்குச் சேர்த்து விடுவதால் கர்ம வினைக் கழிப்பும் முழுமையாகின்றது. எனவே இதனைத் தொடர்தல்தான் கலியுகத்தில் நன்மை பயக்கும்.

ஸ்ரீஅகோரவீரபத்திரர்
நாகப்பட்டினம்

நோய்            நோய் நிவர்த்திச் சிறப்பு வழிபாடுகள்
ஜலதோஷம் -          ஸ்ரீசீதளநாயகி (திருமழிசை) ஸ்ரீஜுரஹரேஸ்வரர்
காய்ச்சல்         -       ஸ்ரீஜுரஹரேஸ்வரர்
உடல்வலி       -       ஸ்ரீசண்டிகேஸ்வரர், ஸ்ரீபிட்சாடனர்
முதுகுவலி       -       ஸ்ரீநந்தீஸ்வரர், ஸ்ரீசண்டிகேஸ்வரி
காதுவலி         -       ஸ்ரீபிள்ளையார், இரட்டைப் பிள்ளையார், ஸ்ரீகங்கா தேவி
தலைவலி        -       ஸ்ரீகபாலீஸ்வரர், ஸ்ரீகால பைரவர், ஸ்ரீசூரிய மூர்த்தி
வயிற்றுபேதி -         ஸ்ரீசூரிய மூர்த்தி
வயிற்றுவலி  -         ஸ்ரீஅக்னீஸ்வரர், ஸ்ரீவீரபத்ரர்

இவ்வாறாக அந்தந்த மூர்த்திக்கு நேர்த்தி அல்லது பணத்தை முடிந்து வைத்து அபிஷேக, ஆராதனைகள், வஸ்திரம் சார்த்துதல் போன்றவற்றை நிறைவேற்றுதலால், நோய்க்கான கர்ம வினைகளும் தீர்வு பெற உதவும். அந்தந்த மூர்த்தியின் வழிபாட்டுத் துதிகளையும் ஓதி அந்தந்த மருந்துகளை உட்கொள்ள வேண்டும். இயன்றவரை சித்த, ஆயுர்வேத மருந்துகளை உட்கொள்ளவும்.

எப்போதும் கண்ணாடி அணிந்திருப்பவர்கள் சில விஷயங்களை ஆன்மீக ரீதியாகச் சிந்திப்பதுடன் சில பூஜைகளையும் ஆற்றி வர வேண்டும்.

1. உலகில் பலரும் கண்ணாடியின்றி உலவிட, தான் மட்டும் அணிய வேண்டியதன் காரணம், சூரிய சக்திகள் போதுமானதாக இல்லாமையும், கண்ணும் கருத்துமாய்ப் பொறுப்புடன் ஆற்ற வேண்டிய கடமைகளை அலட்சியப் படுத்திய பூர்வ ஜன்ம கர்ம வினைகளும் முதன்மையான காரணங்கள் ஆகின்றன.

2. கண்ணாடி அணிந்திருப்பவர்கள் ஞாயிறு தோறும் சூரியன் வழிபட்ட தலங்களில் பூஜித்து வருதல், தினமும் சூரிய ஹோரை நேரத்தில் சூரிய மந்திரங்களை ஓதி வருதல், ஞாயிறு, சூரியனார் கோயில், பாஸ்கரராயபுரம், கொனார்க் போன்ற சூரிய சக்தி மிகுந்த தலங்களிலும் திருநெடுங்களம், வாங்கல் ஸ்ரீரவீஸ்வரர், போன்ற சூரிய பூஜைத் தலங்களில் (சூரிய கிரணங்கள் மூலமூர்த்தியின் மேல் படியும் அற்புதம்) ஆழ்ந்த நம்பிக்கையுடன் வழிபட்டு வருதலால் அற்புதமான பலன்களைக் கண்டிடலாம்.

3. கண் சம்பந்தமான வியாதிகளால் அவதியுறும் ஏழைகளுக்கு உதவுதல்.

4. வயதானவர்களை கைபிடித்துக் கூட நடந்து உதவி ஆலயப் பிரதட்சிணம், கிரிவலம் வர வைத்தல், இவ்வாறு சூரிய (புண்ய) சக்திகளைப் பெற்றுத் தரும் நற்காரியங்களை ஆற்றி வருதல் வேண்டும். திருச்சி திருவாசி அருகே உள்ள துடையூர் ஆலயத்தில் இருபத்னிகளுடன் அருளும் ஸ்ரீசூரிய மூர்த்தி வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்தது.

ஔசிவ யோக சக்திகளை உணர வைத்து அளிக்க வல்ல திடியன் மலையில் அமாவாசை, பௌர்ணமி தோறும் கிரிவலம் வருதல் மிகவும் விசேஷமானதாகும். இரண்டு மைல் சுற்றளவுக்குள் அமைந்த, சிறிய மலைச் சுற்றுப் பாதையே திடியன் மலை கிரிவலப் பாதை! ஒரு மணி நேரத்திற்குள் கிரிவலம் வந்திடலாம்.

ஸ்ரீசண்டிகேஸ்வரி லால்குடி

பொதுவாக அவரவருடைய கர்ம வினைகளின் விளைவுகளைப் பொறுத்து அடுத்த பிறவி அமைகின்றது. ஆனால் கலியுகத்தின் தற்போதைய பிறவியில் கிடைத்த கர்ம வினைகளின் பலன்களாக அடுத்தப் பிறப்பு அமையுமா அல்லது கடந்த கால பிறவிகளின் வினைகளையும் சேர்த்து பிறவிக் கூடு அடையுமா என்பது பிறப்பு, இறப்பு ரகசிய நியதிகளில் அமைந்து வருவதாகும். இதை எவ்வளவுதான் எளிமையாக, பக்கம் பக்கமாக விரித்துச் சொன்னாலும் புரிந்து கொள்வது மிக மிகக் கடினமே. குருவருள் மூலமாகத்தான் எவருமே பிறப்பு, இறப்பு இரகசியங்களை ஓரளவு அறிந்து கொள்ள முடியும். கலியுகத்தில் தற்போது நிகழ்கின்ற கர்ம வினைகளின் கடுமையைக் கண்டால் பெரும்பாலான உயிர்கள் day of judgement எனப்படும் பிறவி நிர்ணய எல்லைக் கோடாகிய விரஜா விதான லோகத்தையே அடைவது கிடையாது. ஒரு உடலை விட்டு பிரிந்த உயிர், சாயை சரீரம் எனும் ஒரு வகை உடலைப் பெறும். இந்தச் சாயை சரீரத்தில் இருந்து விதான லோகத்தை அடைவதற்கு ஆகும் காலமும் தூரமுமே ஜீவ விதான அளவு ஆகும். ஆனால் இந்த ஜீவ விதான நிலையைக் கூட தற்போதைய கலியுகத்தில் பெரும்பாலான உயிர்கள் அடைவதில்லை. இது மிகவும் கேவலமான நிலையாக ஆன்மீகத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. அதாவது, ஒருவர் இறந்தபின் அடுத்தப் பிறவியை நிர்ணயம் செய்வதற்கான விதான லோகத்தைக் கூட அடையாது, இறந்த ஒரு சில நிமிடங்களுக்குள்ளேயே, சாயை சரீரம், பூமியிலிருந்து, ஒரு சில அடிகளை கடக்கும் முன்னரேயே ஈ, கொசு போன்ற பிறவிகளுக்கு ஆளாகி விடுகின்றனர்.

தொடரும் ஆனந்தம்...

திருச்சி உய்யக்கொண்டான்மலை சிவலிங்கத்தைப் போல் அங் உங் சிங் சித்தர்கள் என்போர் மூவரும் ஒரே உருவத்தில் இணைந்த சிவசக்தி மூர்த்திகளே. குருமங்களகந்தர்வ லோக வாசிகளான இவர்களை நம் சற்குரு தொடர்ந்து அல்லும் பகலும் பூஜித்து வந்தார் என்பதை உணர்ந்தோர் ஒரு சிலரே. இவர்கள் அவ்வப்போது பூலோக வாசிகளைப் போல் உருவம் தரித்து வருவதும் உண்டு. மாவீரன் அலெக்சாண்டர் உலகம் அனைத்தையும் வென்று இந்தியாவிலும் தன் வெற்றிக் கொடியை நாட்ட முனைந்தபோது அந்த அரசனை எதிர்த்து நின்ற ஒரே வீரன் புருஷோத்தமன் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அவ்வாறு புருஷோத்தமன் தோல்வி அடைந்தாலும் அவனிடம் மங்காமல் பிரகாசித்து நின்ற வீரத்தைக் கண்டு வியந்த அலெக்சாண்டர் அதன் காரணத்தைக் கேட்க தான் தொடர்ந்து வழிபட்டு வந்த அங் உங் சிங் சித்தர்களே அவனுடைய வீரத்திற்குக் காரணம் என்று கூறவே அந்த மூன்று சித்தர்களும் அலெக்சாண்டரின் பூர்வ ஜன்ம புண்யத்தால் அங்கே பிரசன்னமாகி அலெக்சாண்டருக்கு அருள் வழங்கினர். கட்டைவிரல் உயரமே இருந்த அவர்களை தரிசனம் செய்து அவர்கள் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான் அலெக்சாண்டர்.

ஸ்ரீபாலாம்பிகை அஞ்சனாட்சி சமேத உஜ்ஜீவநாதர் உய்யக்கொண்டான்மலை

சித்தர்கள் புன்முறுவல் பூத்து, “கிட்டத்தட்ட உலகம் அனைத்தையுமே வென்ற உன்னால் அடுத்து உன்னை தாக்க இருக்கும் கடுங்காய்ச்சலை எதிர் கொள்ள முடியுமா? இன்னும் மூன்று வார காலத்தில் நீ உயிர் விடப் போகிறாயே...” என்று கூற, அதிர்ந்தான் மாவீரன். சித்தர்கள் கூற்று உண்மை என்பதை உணர்ந்த அலெக்சாண்டர், “சுவாமி, நீங்கள் சொல்வதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை ... இந்த குறுகிய காலத்தில் நான் மக்களுக்கு என்ன சேவை செய்ய முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. உங்களை சந்தித்து விட்டதால் மரணத்தைக் கண்டு நான் சற்றும் அஞ்சவில்லை. ஆனால் உங்கள் கருணையால் நான் ஏதாவது மக்கள் சேவை ஆற்ற பெரிதும் விரும்புகிறேன்,” என்று வினயத்துடன் கூறினான்.

ஸ்ரீவாரணநாதர்
திடியன்மலை

மாமன்னன் கூற்றில் உண்மை இருந்ததால் அந்தத் திரயம்பக சித்தர்கள், “நீ விரைவில் உன்னுடைய தலை நகருக்கு திரும்பி விடு, உயிர் பிரிந்த பின் உன்னுடைய கைகளை சவப் பெட்டிக்கு வெளியில் விரித்து வைத்து, உலகம் அனைத்தையும் ஒரு குடைக் கீழ் கொண்டு வந்த அலெக்சாண்டர் உயிர் துறந்தபின் கொண்டு போவது எதுவும் இல்லை, நீ வெறும் கையுடன்தான் இறைவனை நோக்கிச் செல்கிறாய் என்பதை உலகத்தவர் அனைவரும் அறிந்து கொள்ளட்டும்,” என்று கூறி மறைந்தனர் அந்த முத்தாள சித்தர்கள்.

முத்தாள சித்தர்கள் என்போர் உண்மையில் நம் ஆத்மாவில் உறையும் இறைவனே என்பதில் சிறிதும் சந்தேகம் இருக்க முடியாது? எப்படி? ஒருமுறை திருஅண்ணாமலை பௌர்ணமி அன்னதானத்தின்போது தன் சூட்கேசில் வைத்திருந்த அந்த அங் உங் சிங் என்ற சித்தர்களின் பொன் விக்ரஹத்தை அங்கிருந்த ஒரு அடியாரிடம் காட்டி, “இவர்கள்தான், ஐயா, அங் உங் சிங் சித்தர்கள் என்போர். இவரை (இவர்களை) அடியேன் வழிபட்டு வருவது யாருக்கும் தெரியாது, உன்னுடைய பூர்வ ஜன்ம புண்ணியத்தால் நீ இவர்களை இன்று தரிசனம் செய்கிறாய்...” என்று கூறி தன்னுடைய சூட்கேசில் மீண்டும் “வைத்துக் கொண்டார்”, இல்லை “பூட்டிக் கொண்டாரோ ?!”

அங் உங் சிங் சித்தர்களை தரிசனம் செய்த ஒரு சில நிமிடங்களிலேயே உலகம் அனைத்திற்கும் ஒரு நிரந்தர நற்செய்தியை வழங்கும் அனுகிரகத்தை ஒரு மாமன்னன் பெற்றான் என்றால் அந்த முத்தாள சித்தர்களை வாழ்நாள் முழுவதும் வழிபட்டு வந்த நம் சற்குரு என்னவெல்லாம் சாதித்திருப்பார் ? இதை நம் சற்குரு தன் பூதஉடலைத் துறந்த பின் அருகிலிருந்த அடியார்கள் உணர்வர். கொழுந்து விட்டு எரியும் சிதையில் மறைந்து கொண்டிருந்த அவருடைய பூத உடலின் வலது கரம் சிதையிலிருந்து வெளிவந்து அனைவருக்கும் ஆறுதல் செய்தியை வழங்கியது என்பதே அங்கிருந்த அடியார்கள் யாவரும் தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு தெய்வீக அனுபவம் ஆகும்.

ஸ்ரீவாரணநாதர் திடியன்மலை

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam