அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமனின் பால பருவ குருகுலவாச அனுபூதிகள்...
ஆமாம், பள்ளிக் கூடத்திற்கும் லீவு விட்டாகி விட்டது என்று பெரியவரிடமும் சொல்லியாகி விட்டது.. “கீரபாண சித்தரோ, அக்னி கச்ச சித்தரோ எந்தக் கோயிலில் இருக்கின்றாரோ அங்கு தரிசித்து விட்டு .. நாளை காலைல சுருக்க (விடியற் காலையில்..) வந்துடு..” என்பதல்லவா பெரியவரின் ஆணை! சிறுவன் மூளையைக் கசக்கிப் பார்த்தான்! அக்னி கச்ச சித்தரோ, கீரபாண சித்தரோ, இருக்குமிடம் .... ஊஹும் ... ஒன்றும் நினைவிற்கு வரவில்லை! சிறுவனுக்கு பயம் வந்துவிட்டது.. சொல்வதைச் செய்யாவிட்டால் எத்தகைய தண்டனை காத்திருக்கும் என்பது அவனுக்குத் தெரியுமல்லவா! இப்போதெல்லாம்.. அவர் செய்வதெல்லாம்... “அனைத்தும் தன் நன்மைக்குத் தான்” என்பதை சிறுவன் உணரத் தொடங்கி விட்டானே!
அப்போதெல்லாம் கோயில்களை பிரம்ம முகூர்த்த பூஜைக்காக விடியற்காலை 3 மணிக்குத் திறந்து வைத்திடுவார்கள்.. அதுவும் மார்கழி மாத தனுர் பூஜையென்றால் பிரம்ம முகூர்த்தத்திற்கு முன்னரேயே கோயில்களில் களை கட்டி விடும்.! பெரியவரிடம் “தானே ஒரே சிஷ்யன்” என்று எண்ணம் சிறுவனுக்கு நெடுநாட்களாக இருந்தது. ஆனால் கோயில் திருப்பணி என்றால் பல சிறுவர்களும், இளைஞர்களும் திடீரென்று வந்து நிற்பதைக் கண்டு சிறுவனே அசந்திருக்கின்றான்.. எப்படி இத்தனை பேர் வந்தார்கள் ?  அனைவரும் வாத்யாரே ... வாத்யாரே..... என்று அன்புடன் அழைத்துப் பம்பரமாய்ச் சுற்றி இறைப்பணி செய்வார்கள்... எங்கிருந்து இவர்கள் வந்தார்கள்?
சிறுவனுக்கு இதெல்லாம் விந்தையாகவே இருக்கும்! பள்ளிக்கூடம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவன் காலையிலோ, மாலையிலோ அங்காளியை 1008 முறை சுற்றியாக வேண்டும். பெரும்பாலும், 1001, 1002வது சுற்றில் தான் முன் மண்டபத் தூணருகே பெரியவரின் உருவம் தென்படும். எங்கிருந்து வருகிறார், எங்கே போகிறார், யாரறிவார்., அந்த பரம ரகசியத்தை! “நாளைக்குக் காலைல மூணு மணிக்கு அந்த சிவன் கோயில்ல திருப்பணிக்கு வந்துடுடா!”
.. பெரியவர் Crisp ஆகச் சொல்லி விட்டுக் கிளம்பி விடுவார்.. One Line Communication  தான் சில சமயங்களில்! விடியற்காலை மூணு மணி என்றால்.. அதுவும் பூந்தமல்லி, சித்துக்காடு, மேலூர் (மீஞ்சூர் வழி....)... என்று சென்னைக்கு அப்பால்.. அதுவும் பொடி நடை.. யோசித்துப் பாருங்கள்! இப்படியானால் .. விடியற்காலையில் ஒரு மணி, ரெண்டு மணிக்குப் புறப்பட வேண்டுமல்லவா! தன்னந் தனியனாய்! .. அதுவும் சில கோயில்களுக்கு அவனுக்கு வழியே தெரியாது! முதல் நாளே சென்று பார்த்து வருவோமென்றால், ஒன்றிரண்டு பஸ்கள் தான் இருக்கும்! அதற்கும் பஸ் செலவுக்கு என் செய்வது! பெரியவர் கொடுத்தால் தான் உண்டு!
ஒரு முறை..... “ஏண்டா அங்காளிய தெனமும் ஒழுங்கா 1008 தடவை சுத்தறியா? தூணுக்கு தூணு தேவதைங்க உக்காந்துகிட்டு பாத்துக்கிட்டு இருக்காங்க, ஞாபகம் வச்சுக்கோ” ... ஒண்ணு ரெண்டு கொறஞ்சாக் கூட எங்கிட்ட கோழி மூட்டிடுவாங்க!...   பெரியவர் சிரித்தார்..
Perhaps divine bureau of Investigations!  “அது சரி இப்ப ஒரு நாலஞ்சு சுத்து சுத்திட்டு வா பார்க்கலாம்.. ஒரு நிமிஷத்துக்கு எவ்வளவு சுத்துன்னு தெரிஞ்சுக்கலாம்..!” திடீரென்று ஏனிந்தக் கணக்கு..? சிறுவன் அங்காளியை வலம் வந்தான். ஒரு நிமிஷத்துக்கு தோராயமாக நாலஞ்சுதான் வந்தது. அப்படி கணக்குப் பார்த்தால் 1008 சுற்றுக்கு கிட்டத்தட்ட நாலரை மணி நேரத்துக்கு மேலேயே அதுவும் போகப் போக களைப்படைந்தால் ஐந்து நேரம் கூட ஆகும்.. “ஏண்டா அஞ்சு மணி நேரம் சுத்தணுமே! ஆனா நீ அவ்வளவு நேரம் சுத்தற மாதிரி தெரியலையே ”
பெரியவர் சிறுவனின் கைகளைப் பிடித்துக் கொண்டார்... சிறுவனுக்குத் தலை சுற்றியது! பொதுவாக இரண்டு மணி நேரத்திற்குள் ஆயிரத்தெட்டையும் முடித்து விடுவான்... இது எப்படி சாத்தியமாகும்? அப்படியானால் ராட்சச இயந்திரம் போலா சுற்றினான்? ஆனால்.. “ஓடாதே, வாகிங் ரேஸ் மாதிரி கூட வேகமாகப் போகக் கூடாத . ரெண்டு காலும் நல்லா தரைல பாவணும், மூலைத் தூண்ல குறுக்க பாயக் கூடாது! காயத்ரீ மந்திரமோ, சிவ புராணமோ ஐபிச்சு கிட்டே இருக்கணும்” – இதுபோல இன்னும் எத்தனை, எத்தனையோ (பெரியவரின்) Commandments! இந்த நிபந்தனைகளுடன் எப்படி அவன் இரண்டு மணி நேரத்திற்குள்ளாக முடிக்க முடிகிறது? 1008ல் ஒரு சுற்று கூடக் குறையவில்லை.. வேண்டுமானால் பத்து, பதினைந்து சுற்று கூடத்தான் இருக்கும், அப்படிக் குறைந்தாலும் அடுத்த நாள் பெரியவர் “சிக்கெனப் பிடித்து” விடுவாரே!
சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை! ஏதேனும் தப்புத் தண்டா செய்து விட்டோமோ? வாத்யார் நல்லா வச்சு, “தீட்டி” விடுவாரே! சிறுவனுக்கு பயம் நெஞ்சைக் கவ்வியது! இருதயம் படபடத்தது!  “வாத்யாரே...” என்ற பெருங்குரலுடன் அவர் கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விழுந்தான்.. தாரை தாரையாகக் கண்ணீர் பெருகி பெரியவரின் பாதங்களை நனைத்தது!
“எந்திரிடா ராஜா ... ஏண்டா ஒடம்பு இப்படி நடுங்குது! ஒண்ணு தெரிஞ்சுக்கடா. நீ ஒண்ணும் 1008 சுத்து சுத்தலை! உன்னோட ஒடம்புல பித்ருங்க புகுந்து உன்ன சுத்த வக்கறாங்க! நீயா சுத்தினா 300 சுத்துலேயே கை, காலு பெண்டு எடுத்துடும்! பித்ருங்க தான்.. (மூதாதையர்கள்.) ஒனக்கு சத்திய கொடுத்து எலும்பு, நரம்புன்னு உடம்புல மூல முடுக்கெல்லாம் உக்காந்துகிட்டு இந்த நல்ல காரியத்துக்கு உதவி செய்யறாங்க...! திருஅண்ணாமலை கிரிவலத்துல கூட அவங்கவங்க பித்ருங்க உடம்புல. “ஆவாஹனம்” ஆறதுனாலத்தான் நெறயப் பேரு சுலபமா கிரிவலத்த முடிச்சுடறாங்க! சக்கர வியாதி, ஹார்ட் அட்டாக் வந்தவங்க கூட ஏதோ கிரிவலம் வரதுக்குக் காரணமே பித்ருங்க நம்ப உடம்புல வந்து புகுந்துக்கறதுனாலத்தான் .. பித்ருக்கள்.. எல்லாம் காலவரையறைக்கு .. (Time Dimension) அப்பாற்பட்டவங்க! அதனாலத்தான் அவங்க உன்னோட அஞ்சு மணி நேரம் சுத்த வேண்டியதை நீ ரெண்டு மணி நேரத்துல முடிச்சுட்டு நேர நீயும் ஸ்கூலுக்கு போயிடறே! நம்பதான் கோயிலைச் சுத்தினோம்கற எண்ணம், கிரிவலம் வந்தோம்னு எண்ணம் வரக் கூடாதுங்குறதுக்குத்தாண்டா, இது அங்காளியோட, அருணாசலத்தோட திருவிளையாடலாட்டம் நடக்குது! திருஅண்ணாமலைலயும் இப்படித்தான் பித்ருங்க நம்ப உடம்புல சேர்ந்து வர்றதுனாலத்தான் நெறயப் பேரு கிரிவலத்தை ஜம்முனு முடிச்சுடறாங்க”
... சிறுவன் புத்துணர்ச்சியுடன் எழுந்தான்!
“பெரியவரே நீ சொன்னியேன்னு எங்க ஊரு மாரியாத்தா கோயில்ல . ஃப்ரீயா காசு வாங்காம எலக்ட்டிரிக் வேலை, ரிபேரெல்லாம் செஞ்சுட்டேன்...”
யாரோ ஒரு ஏழை கோயில் வாசலில் குரல் கொடுக்க.... “அதுக்கு என்னா இப்போ!” – என்று பெரியவர் பதிலளித்திட, “நீ தானே சொன்னே, ஏதாச்சும் கோயிலுக்கு காசு வாங்காம வேல செஞ்சாக்க எங்க வீட்டுக்குத் தானா கரண்ட் வரும்னியே! இப்ப கரண்ட் கனெக்ஷ்னுக்கு ஏரநூறு ரூபா EBல கேக்கறாங்க, என்ன செய்யறது? நேத்திதான் மாரியாத்தா கோயிலுக்குப் போய் வேல செஞ்சுட்டு வந்தேன்” 
“நல்லா இருக்கே கூத்து! EBல கரெக்டா பணம் கட்டினாலே கனெக்ஷன் வர்றதுக்கு மூணு மாசம் ஆகும்... நேத்தி மாரியாத்தா அம்பாளுக்கு செஞ்சுட்டு இன்னிக்கி கனெக்ஷன் கொடுன்னா எப்படி? சரி, சரி போய்ட்டு அடுத்த வெள்ளிக் கிழமை என்ன வந்து பாரு!! மாரியாத்தா ஏதாச்சும் செய்யறாளான்னு பாக்கலாம்!”  அடுத்த வெள்ளியும் வந்தது!
“பெரியவரே, உனக்கு நூறு ஆயுசு! உன்னோட ஆசில எங்க ஊட்ல கரெண்ட் லைட் நல்லா பெருசா எரியுது” – அந்த ஏழை ஆசை ஆசையாய்ப் பேசிட,, “எப்படிடா கண்ணு கெடச்சுது?” – அன்புடன் பெரியவர் வினவினார்...
“எங்க ஊட்டு ரைட்ல ஒரு பெரிய மச்சு வீடு. லெஃப்ட்ல ஒரு சின்ன வீடு, ரெண்டையும் ஒரே ஆளு வாங்கிட்டான், ரெண்டு வீட்டுக்கு கரெண்ட் கனெக்ஷன் ஒண்ணா ஆக்கறதுக்கு வெளில ரெண்டு போஸ்ட் நட்டா நெறய செலவாகும். .எங்க வீட்டு வழியா ஒயரை இழுக்கட்டுமான்னு கேட்டான்.. எனக்கு ஒரு முப்பது வாட்ஸ் பல்பு போட்டுத் தரியான்னு கேடேன்.. சரின்னுட்டான்... வேல சுலபமா முடிஞ்சுடிச்சு, இந்தா பெரியவரே இதுதான் என்னால்ல முடிஞ்சது!” .. அந்த ஏழை எதையோ நீட்டிட,
ஒரு தாமரை இலையில் காயந்த வெற்றிலைகள், கருகிய பாக்குச் சுருள்.. கோணல் மாணலாய் ஒரு தேங்காய், ஒரு ஓட்டைக் காலணா செப்பு நாணயம் .. (அந்த காலத்திய நாணயம்.) இதுவே இந்த ஏழையின் அன்பு தட்சணை! இவைதான் ஓர் ஏழையின் உத்தமமான தெய்வீகக் கருணையில் பிறக்கும், பரிசுத்தமான அன்பும் நிறைந்த “பொன்னான பரிசுகள்..”! அவற்றை மிகுந்த மரியாதையுடன் பயபக்தியுடனும் பெற்றுக் கொண்ட பெரியவர் சிறுவனை நோக்கித் திரும்பி, “எத்தனையோ பேரு இந்த கிழவனுக்குத் தட்டு நெறய ஜவுளி, பழம், பணம் கொடுத்தாக் கூட இதுக்கு ஈடாகுமாடா அதெல்லாம்...!” – என்று குரல் தழுதழுக்கக் கூறினார். ஏழையின் உண்மையான அன்பை உருக்கினால்,, ஆயிரமாயிரம் பவுனாய்த் தங்கம் .. கி(கொ)ட்டும்!

தென்காசி மகாத்மியம்

தென்காசி தேவா போற்றி! போற்றி!! – தென்காசி மகாத்மியத் தொடர் – 1
நம்முடைய மூதாதையர்கள் தம்முடைய இறுதிக் காலத்திற்குள் ஒரு முறையேனும் காசியை தரிசித்து, கங்கையில் புனித நீராட வேண்டும் என்பதை வாழ்க்கையின் முக்கியமான புனித இறைக் கடன்களுள் ஒன்றாகக் கருதி வந்துள்ளனர். அக்காலத்தில் போக்குவரத்து வசதிகள் இல்லாமையால் காசிக்குச் சென்று வருவதென்றால் பல மாதங்கள், ஏன் ஒரு வருட காலத்துக்கு மேல் கூட ஆகிவிடும். எனவே, “வாழ்வோ, முடிவோ எது வந்தாலும் இறை நியதியென ஏற்போம்”, என்ற மன உறுதியுடன் தான் அவர்கள் காசி யாத்திரையை மேற்கொண்டனர்.. ஆகவேதான் வாழ்நாளில் ஒருமுறை காசி யாத்திரை என்பதே பிரம்மப் பிரயத்தனமாக அக்காலத்தில் விளங்கி வந்தது. ஆனால் எல்லாருக்குமா காசி சென்று வரும் பாக்கியம் கிட்டுகின்றது?

ஸ்ரீசோமநாதர் நீடூர்

ஸ்ரீவேயுறுதோளியம்மை நீடூர்

இதனால்தான், தென்னாடுடைய சிவப் பரம்பொருள் தமிழ் நாட்டில், தென்காசியிலே, வடநாட்டில் உள்ள காசித் திருத்தலத்துக்கு இணையானதொரு தலத்தைத் தோற்றுவித்துக் கொண்டுள்ளான். அத்தகைய சிறப்பு வாய்ந்த தென்காசித் திருக்கோயிலை வழிபடுவதற்கென சித்புருஷர்கள் அருளிய விதிமுறைகளை இத்தொடர் கட்டுரையில் அளிக்க இருக்கின்றோம். காசியின் மகத்துவம் தனி! தென்காசியின் சிறப்பும் தனித்தன்மையுடையதே! தென்காசி ஸ்ரீவிஸ்வநாதரை தரிசிப்பதற்கு முன்னர் ஒவ்வொருவரும் பன்னிரண்டு சுயம்பு சிவமூர்த்திகளை தரிசித்தாக வேண்டும் அப்போது தான் அவர்களுடைய வாழ்க்கை வெற்றிகரமானதாகவும் காசி தரிசனம் பரிபூரணமானதாகவும் அமையும்.. காசிப் பயணம் என்பதே வாழ்க்கையை வெற்றிகரமாக முடிப்பதற்காகத்தான்.. மனிதப் பிறவி எடுத்து, வளர்ந்து ஆளாகி, திருமண வாழ்வு நடத்தி, சந்ததியினரை உருவாக்கி அவர்களை வளர்ப்பது மட்டும்தானா மனித வாழ்க்கை? நம் வாழ்வில் வெற்றிகரமாக வாழ்ந்து இறைத் திருப்பணிகளுடன் மக்களுக்கு நற்பணி ஆற்றிச் சிறப்பாக வாழ்வினை முடிப்பதற்கு அருள்புரிபவரே தென்காசி ஸ்ரீவிச்வநாத மூர்த்தி ஆவார்.. இறைப் பெருங்கருணையால் கிடைத்த இந்த மானிடப் பிறவி முழுதையும் இறைநினைவோடும். இறைக் காரியங்களைச் செய்வதிலுமே செலவிட்டு இந்த பூத உடலை இறைவனின் திருப்பாதங்களில் இறைநினைவோடு சமர்ப்பிப்பதே வாழ்வில் வெற்றி பெற்றதன் அறிகுறி. இவ்வாறு பிறர் சேவைக்காகவே நம் வாழ்வு முழுவதையும் செலவிட அருள் செய்யும் கருணாமூர்த்தியே தென்காசி நாதர் ஆவார்.. தென்காசி நாதரை தரிசிக்குமுன்..
1. நாம் வழிபட வேண்டிய பன்னிரண்டு சுயம்பு லிங்க மூர்த்திகளின் தரிசன, வழிபாடு முறைகளும் உண்டு.
2. இவற்றிற்குப் பின் நிறைவாக அமையும் தென்காசி நாதரின் தரிசனமும், ஆங்கே, குறித்த பூஜைகளும் தான் ஒன்றாகச் சேர்ந்து நம் வாழ்வை வெற்றிப் பாதையில் நடத்திச் செல்லப் பெரிதும் துணை புரிகின்றன.. 
முதன்மைப் பெருந்தலம்! முக்தி தரும் [திரு] நீடுராம்! : இந்தப் பன்னிரண்டு சிவத்தலங்களில் முதன்மையாக அமைவது தஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறை அருகே உள்ள நீடுர் சிவாலயம் ஆகும். இங்குதான் ஸ்ரீசோமநாதராக சர்வேஸ்வரன் அருள்பாலிக்கின்றார்.. உங்களுடைய வாழ்வில் எத்தனையோ காரியங்களை வெற்றிகரமாக நிறைவேற விழைகின்றீர்கள். தொழில், திருமண வாழ்க்கை, நற்சந்ததியினரைப் பெற்று வளர்த்து படிக்க வைத்து, அவர்களுக்கு நல்ல திருமண வாழ்வை அமைத்துத் தருதல், பேரன், பேத்திகளை வளர்த்தல், திருத்தல யாத்திரை, ஆலய தரிசனம், தீர்த்த நீராடுதல் போன்ற எத்தனையோ நற்காரியங்களை வாழ்வில் நிறைவேற்றி வருகின்றீர்கள்.. எந்த நற்காரியமாயினும் சரி, அக்காரியத்தில் முழுமையான ஆர்வம் இருந்தால் தான் நாம் அதில் வெற்றி காண இயலும், அத்தகைய ஆர்வத்தை அளிப்பவரே நீடுர் ஸ்ரீசோமநாதர்.

ஆர்வம் நிலைத்திட : பொதுவாக காரியங்களைத் துவங்குகையில் உள்ள ஆர்வம் இறுதிவரை நிலைத்து நிற்பதில்லை. சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டே போய்விடுகின்றது.. இறுதிவரை ஆர்வம் குறையாமல் இருந்தால் தான் காரியத்தில் வெற்றி கைகூடும். இல்லையெனில் எடுத்த முயற்சிகள், உழைப்பு அனைத்தும் வீண்தான்.. ஸ்ரீஆங்கீரஸ மஹரிஷி மாமுனி நல்லார்வத்துடன் பல தவங்களை நிறைவேற்ற அருள்பெற்ற தலமே நீடுர் சிவத்தலமாகும்... சந்திர பகவான் தன்னுடைய பரிபூரண சக்தியுடன் விளங்குகின்ற திருத்தலங்களில் இதுவும் ஒன்று நாம் எடுத்த காரியத்தில் நம் மதியானது ஆக்கமும், ஊக்கமும் குறையாது செவ்வனே ஈடுபட உதவி புரிகின்ற சகஸ்ர சந்திர கிரணங்கள் இத்திருத்தலத்தில் எப்போதும் பரிணமிக்கின்றன...
அக்கறை பெருகிட :- அடுத்தபடியாக எடுத்த காரியத்தில் உண்மையான அக்கறை கொள்ள வேண்டும். “நாம் இந்தக் காரியத்தை செய்யத் துவங்கினோம். பொறுப்புடன் சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டும்,” என்ற நினைவு மாறாது காரியத்தை சிறப்பாகச் செய்வதிலேயே முழுமையாக நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.. “ஏதோ செய்கின்றோம், எப்படியோ நடந்தால்..சரி” என்று ஏனோ தானோவென்று ஒரு காரியத்தைச் செய்தால் அது வெற்றியினைத் தராது. பெருந்தவ முனிவரான வியாச மகரிஷி அக்கறையுடன் ஒரு காரியத்தை முடித்து, அதனை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதில் பிரசித்தி பெற்று விளங்கினார்.. அவர் இன்றைக்கும் கூட ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்று இத்திருத்தலத்துக்கு வந்து ஸ்ரீசோமநாதரை வலம் வந்து வணங்கிச் செல்வதால், நீடுர் ஸ்ரீசோமநாதர் நாம் எடுத்த காரியத்தின்பால் முழுமையான அக்கறை கொண்டு வெற்றியைக் காணப் பெரிதும் அருள்புரிகின்றார்.
விடாமுயற்சி கூடிட : ஆர்வமும், அக்கறையும் இருந்தால் மட்டும் போதாது. காரியத்தை நிறைவேற்றுகின்ற போது எதிர்ப்படும் இன்னல்களையும், தடைகளையும் சமாளித்து காரியத்தைத் தொடர்ந்து நிறைவேற்றி வெற்றி காண விடாமுயற்சி தேவை.. மேலும் இடர்களைச் சந்திக்கையில் மனம் தளராது தெளிவான முடிவுகளை எடுக்க மனத் திண்ணம் தேவை.. அத்தகைய திடமான மனதினையும், விடா முயற்சி குணத்தினையும் அருள்பவரே நீடுர் ஸ்ரீசோமநாதர் ஆவார். விடாமுயற்சியில் வியத்தகு சாதனைகளைப் புரிந்தவரே ஸ்ரீகற்கட மாமுனி : திங்கட்கிழமை தோறும் சூட்சும ரூபத்தில் ஸ்ரீகற்கட மஹரிஷி வழிபடும் திருத்தலமே நீடுர் சிவத்தலம்! எனவே, தென்காசி திருத்தல யாத்திரை மேற்கொள்ள விழைவோர் முதலில் தாம் எடுத்த நற்காரியங்களில் வெற்றியை அருளவல்ல நீடுர் ஸ்ரீசோமநாதர் பெருமானை முதலில் தரிசித்து, முறையான பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

ஜெயா பார்வதி விரதம்

இந்த விரதத்தை ஏற்பதற்கு முன்னால் முதல் நாளன்று.. ஐந்து இல்லறப் பெண்மணிகள் ஒன்று கூடி ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீமஹாலட்சுமி சன்னதியில் ஜயா பார்வதி விரதத்தை ஏற்பதற்கான அனுமதியை கோரிப் பெற்று, விரத பலாபலன்களை ஸ்ரீபார்வதி தேவிக்கும், ஸ்ரீபத்மாவதித் தாயாரான ஸ்ரீமஹாலட்சுமிக்கும் அர்ப்பணிப்பதாக சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தாமே அரைத்த மஞ்சள், சந்தனத்தை ஒவ்வொரு தேங்காய்க்கு இட்டு வலது கை மோதிர விரலால் குங்குமமும் வைத்து ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீமஹாலட்சுமியின் பாதங்களில் விரதபூஜைக்குரியதாக சமர்ப்பித்து இல்லத்திற்கு எடுத்து வந்து சுவாமி அறையில் வைத்து பூஜிக்க வேண்டும்.. மறுநாள் அதாவது ஜய பார்வதி விரதத்தன்று காலையில் சூரிய உதயத்தின் போது உண்ணாவிரதத்தைத் தொடங்குவது சிறப்புடையதாகும்.. இதனுடன் சூரியன் மறையும் வரையில் மௌன விரதமும் கூடுமாயின் உத்தமமான பலன்களைத் தரும்.
“ஓம் ஜெய் துர்க்கா பத்ம நிவாஸினி” | “ஓம் ஜெய் லக்ஷ்மி பத்ம நிவாஸினி” .. என்ற எளிய மந்திரத்தை இன்று நாள் முழுவதும் ஜெபித்து வருதல் வேண்டும்.. மௌன விரதம் பூண்டோர் இதனை மனதினுள் ஜபித்திடலாம்.. இந்த ஜபத்துடன் உங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபடலாம்.. இன்று விடியற்காலையில் நீராடி அவரவர் குல மரபிற்கேற்ப பருத்தி நூலாடை தரித்து (நைலக்ஸ், பாலியஸ்டர், பட்டு போன்றவை கூடாது..)  தேங்காயைத் தொட்டு வணங்கி விரதத்தைத் தொடங்கிடுதல் வேண்டும்.
மாலையில் சூரியன் மறையும் போது ஐந்து பெண்மணிகளும் ஆலயத்திலோ அல்லது இல்லத்திலோ ஒன்று கூடி வட்டமாக பத்மாசனத்திலோ, சாதாரணமான சுகாசன நிலையிலோ அமர்ந்து ஒவ்வொருவரும் அவரவருடைய சேலை நுனியில் தேங்காயை முடிந்து கட்டி மடியில் வைத்துக் கொள்ள வேண்டும். நடுவில் விளக்கெண்ணெயில் ஐந்து முக விளக்கை ஏற்றிட வேண்டும். மௌன விரதம் பூண்டோர் “ஓம், ஓம், ஓம்” என்று மூன்று முறை ஓதி மௌன விரதத்தை முடித்திடுக! அனைவரும் சிவப் பிரதோஷ ஸ்தோத்திரம் என்ற தோத்திரத்தைக் குறைந்தது ஐந்து முறையேனும் ஓதுதல் வேண்டும், பிறகு ஸ்ரீமஹாலட்சுமிக்குரிய  நீங்கள் அறிந்த எந்த துதியையும் ஐந்து முறை துதித்திடுக! பிறகு ஒருவர் தேங்காயை மற்றொருவர் மடிக்கு மாற்றிக் கொண்டு மேற்கூறிய துதிகளை ஒவ்வொன்றையும் ஐந்து முறை ஓதிடுக! இவ்வாறாக தேங்காயை ஒருவருக்கொருவர் மாற்றி மொத்தம் 25 முறை இரண்டு துதிகளையும் ஓதிடுக..! 
பூஜையின் நிறைவில் வட்டமாக அமர்ந்த நிலையில் ஐந்து தேங்காய்களையும் உடைத்து, துருவி சர்க்கரை, சேர்த்து ஏழைக் குழந்தைகளுக்குத் தானமாக அளித்திட பூஜை பரிபூரணம் பெறுகிறது.. தேங்காய்+சர்க்கரை பிரசாதம் சிறிது அருந்த உண்ணாவிரதமும் நிறைவு பெறும்.. ஒவ்வொருவரும் தம்முடைய தேங்காயின் (துருவிய) இரு மூடிகள் நிறைய துவரம் பருப்பினை நிரப்பி ஏழைச் சுமங்கலிகளுக்குத் தானமாக அளித்திட வேண்டும்.. நவதானியங்களில் செவ்வாய்க்கு உரித்தான தானியமாக துவரை விளங்குவதாலும், செவ்வாய்க்குரிய ராகு கால பூஜா தேவி ஸ்ரீதுர்க்கை ஆதலாலும் இல்லத்தில் பகைமை, சண்டைகள், வாக்குவாதம், மன வேற்றுமைகள் தீர்ந்திடும் வகையில் இவ்விரதத்தின் பருப்பு தானம் பெரிதும் உதவும்.
விரதநாள் அன்றோ, மறுநாள் காலையோ ஆலயத்திற்குச் சென்று ஸ்ரீதுர்க்கா தேவியிடமும், ஸ்ரீமஹா லட்சுமியிடமும் தங்கள் பூஜாபலன்களைச் சமர்ப்பித்து, தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திகளையும் செலுத்தி உத்தமமான பலன்களுடன் ஜயா பார்வதி விரத வழிபாட்டினை பரிபூர்ணமடையச் செய்திடுக! இது மிகவும் எளிமையான பூஜை, நீங்கள் துதிக்கின்ற.. “ஓம் ஜெய் துர்க்கா பத்ம நிவாஸினி ; ஓம் ஜெய் லக்ஷ்மி பத்ம நிவாஸினி.” என்ற பீஜாட்சர மந்திரத் துதிகள் தேங்காயின் உட்புறமுள்ள, யாவருமே காண இயலாத முத்கமலப் பரவெளியில் ஐக்கியமாகி காரிய சித்தி கிரணங்களாக மாறுகின்றன. உண்ணா விரதத்துடன் மௌன விரதமும் சேர்கின்ற போது மனதிற்குள்ளாகவே உச்சரிக்கப்படுகின்ற மந்திரச் சொற்களின் சக்தி மேம்படுகின்றது. நியாயமான காரணங்களால் மௌனவிரதம் கடைபிடிக்க இயலாதோர் குறைந்தபட்சம் உண்ணாவிரதத்தையாவது மேற்கொள்ள வேண்டும். தேங்காயை உடைக்கையில் அதனுள் வட்டமான வடிவில் உள்ளுறை ஜோதி பரிணமிக்கும் முக்தகமலப் பரவெளியில் ஐக்கியமாகி இருந்த ஸ்ரீதுர்க்கா மற்றும் ஸ்ரீமஹாலட்சுமி தேவியின் பீஜாட்சர மந்திரங்கள் வெளிவந்து வாயுப் பரிமாணத்தில் கலந்து வட்டவடிவில் அமர்ந்து பூஜை செய்யும் பெண்மணிகளுக்கு அனுகிரக சக்தியாக மாறுகின்றது.. இந்த வட்ட வடிவ பீஜாட்சர சக்கர அமைப்பிற்கு ஜாதவேதாக்னி பரிஸ்ருதச் சக்கரம் என்று பெயர்..
இதன் ஐந்து உள் ஆரங்களின் வெளிப்புற வர்ண கமல யந்திரச் சக்கரங்களாகவே இந்த ஐந்து தேங்காய்களும் உள்ளன.. அற்புத சக்திகளைத் தரவல்ல தாந்த்ரீகக் கோண பூஜ முறையிது! நித்ய பிரதோஷ நேரமாக விளங்குகின்றது.. இதில் சிவப்பிரதோஷ ஸ்தோத்திரமும், ஸ்ரீலக்ஷ்மி துதிகளும் சேர்ந்திடுவதால் இவற்றுடன் பர்வத, பத்மபூஷணி சக்தியும் இணைந்து காரிய சித்தியை மேம்படுத்துகின்றன.
பொதுவாக, வெளி ஊர்களில்/வெளி மாநிலங்களிலும், அயல் நாடுகளிலும் பணி புரிகின்ற கணவன்மார்கள் நல்ல முறையில் திரும்பி வந்து இல்லறத்தில் இணைவதற்கு இந்த பூஜை பெரிதும் உதவுகின்றது. பணிப் பெண், சக அலுவலகர், மைத்துனி மற்றும் பிற மாதர்களுடன் தகாத உறவு கொண்டு பெரும் பாவங்களைச் சேர்த்துக் குடும்பத்தைச் சூறாவளியாக்கும் கணவன்மார்களும் உண்டு.. இவர்கள் தீய ஒழுக்கங்களிலிருந்து விடுபட்டுத் திருந்தி மீண்டும் நல்வாழ்வு  வாழவும் இந்த பூஜை உதவுகிறது. இல்லறப் பெண்மணிகளுக்கு ஒரு நல்ல வரப்ரசாதி விரதமாக அமைகின்றது.. வயிறு, மனம், பிந்து மூன்றையும் சுத்தம் செய்யும் மூலிகை தெய்வீக சக்தியைப் பெற்றுள்ள விளக்கெண்ணெய் தீபத்தின் கதிர்கள் மனத் தூய்மையைத் தருகின்றன.. மேலும் அக்கா, தங்கையை மணம் புரிந்த ஆண்களுக்குள் ஏற்பட்டுள்ள பங்காளிச் சண்டைகள் தீர்ந்து சுமுகமான உறவு மலர இந்த ஜயா பார்வதி விரத பூஜையானது நன்முறையில் வழிவகை செய்கின்றது.. இது மட்டுமல்லாது, தங்களுடைய பெண் சந்ததியினர் நல்லொழுக்கத்துடன் நல்ல முறையில் வளர்ந்து ஆளாகி நன்முறையில் திருமண வாழ்வு பெறவும் இந்த ஜயாபார்வதி பூஜை பெரிதும் உதவுகின்றது.

ஆஷா தசமி விரதம்

பலரும் தங்களுடைய தொழிலையும், அலுவலகப் பணியையும் பல்வேறு காரணங்களுக்காக இழந்து அல்லல்படுகின்றனர். மேலும் சொத்துக்களை இழந்தோர் அவற்றை மீண்டும் பெற இயலாவண்ணம் கோர்ட்டிற்கும், வீட்டிற்குமாகப் பல வருடங்களாக அலைந்து வேதனைப்படுகின்றனர்.. உறவினர்கள், நண்பர்களின் சூழ்ச்சி, சதி வேலை, பில்லி, சூன்யம், ஏவல் காரணமாகவும் சொத்து, சுகம், பதவி, அந்தஸ்து, வியாபாரம், கௌரவம் போன்ற அனைத்தையும் இழந்து வெளியில் தலைகாட்டவே முடியாத வண்ணம் வேதனைப்படுவோரும் பலர் உண்டு.. இதற்கு என் செய்வது? எப்படி நிவர்த்தி பெறுவது? ஆசா தசமி விரத பூஜை இதற்குரிய நல்ல வழியைத் தரும்..
ஸ்ரீகருட பகவான் ஒரு முறை சிறிதே கர்வம் கொண்ட போது, அவர் மூலமாக பிரபஞ்சத்திற்கே பாடம் புகட்டும் வண்ணம் கருட வாகனமின்றி திருமால் தன்னந்தனியாகவே லோக சஞ்சாரம் செய்யலானார். இதனால் ஸ்ரீகருடபகவான் தனது தவறினை உணர்ந்து மனம் வருந்தி, பிராயசித்தமாகப் பல்வேறு பூஜைகளையும், இறை தரிசனங்களையும், விரதங்களையும் தீர்த்த நீராடல்களையும் மேற்கொண்டு இறுதியில் பரம்பொருளாம் ஸ்ரீபெருமாளுக்கே வாகனமாய் அமையும் பெரும் பேற்றினை மீண்டும் பெற்றார்.. இதற்காக ஸ்ரீகருடபகவான் கடைபிடித்த விரதங்களுள் ஒன்றே ஆசாதசமி விரதமாகும்..
ஆசாதசமி விரதமென்பது மிகவும் சிறப்பான தசமி தினத்தின் மஹிமையை உணர்த்துகின்றது.. எத்தனையோ இறை லீலைகளும், பல மகான்களுக்கான உத்தம நிலைகளும் இத்தினத்தில் தான் கூடியுள்ளன. ஸ்ரீகருட பகவான் தமக்குரிய எட்டுவிதமான நாகாபரணங்களை ஸ்ரீஜகன்னாதப் பெருமாளிடமிருந்து பெற்ற திருநாளே ஆசாதசமி விரதத் திருநாளாம்.. விரத பூஜைகள் யாவும் மனித இனத்திற்கு மட்டுமே என்று எண்ணி விடாதீர்கள்! முப்பத்து முக்கோடி தேவர்களும், கந்தர்வர்களும், ஏன் தெய்வாவதார மூர்த்திகளும் விரத பூஜை தெறிகளைக் கடைபிடித்து நமக்கு எடுத்துக் காட்டாக விளங்கியுள்ளனர்.
ஸ்ரீசீதா பிராட்டி  ஸ்ரீபார்வதி தேவி, ஸ்ரீஅனுசூயா தேவி போன்ற பலரும் கடைபிடித்த – இது போன்ற தேவாதி தேவ மஹரிஷியரும் செய்கின்ற பூஜைகள் தாம் நமக்கு அருள்புரிய இன்றைக்கும் பல்வேறு பண்டிகை தினங்களாகப் பஞ்சாங்கம் முழுவதும் நிறைந்து கிடக்கின்றன.. அக்காலத்தில் சற்குருமார்கள் குருகுல வாசம் மூலம் அனைத்து விசேஷ தினங்களின் மகத்துவத்தையும் எடுத்துரைத்து அவற்றை முறையாகக் கடைபிடிக்கச் செய்து வந்தமையால் தான் நம் முன்னோர்கள் சாந்தமான மனநிலையைப் பெற்று ஆனந்தத்துடனும், இறை அனுபூதிகளுடனும் கூடிய வாழ்வைப் பெற்றனர்..
ஆனால், தற்காலத்தில் இது போன்ற பண்டிகைகளின் சிறப்பை எடுத்துரைப்போர் ஒரு சிலரே, அவ்வாறு எடுத்துரைத்தாலும், முறையாகக் கடைபிடிப்போர் வெகுசிலரே. மிகவும் எளிமையான முறையில் புண்ணிய சக்தியையும், தெய்வ அனுக்கிரகத்தையும் பெற்றுத் தரவல்ல இப்பண்டிகைகளின் மகத்துவத்தை நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீ வெங்கடராமன் அவர்கள், மக்களுடைய ஆன்மீகப் புத்துணர்வுக்காகவும் தெய்வீக மறுமலர்ச்சிக்காகவும், இறைநெறியில் திளைப்பதற்காகவும் மீண்டும் குரு தேவ வழியாய் எடுத்துரைத்து வருகின்றார்கள்...
பத்து நாள் எளிய பூஜை : ஆசா தசமி விரதமானது பிரதமை திதியில் துவங்கி தசமி திதியில் முடிவடையும் பத்து நாட்களில் அமைகின்ற எளிமையான விரதமாகும். ஸ்ரீகருட பகவான் இவ்விரதத்தினை முறையாகக் கடைபிடித்து முதல் எட்டு திதிகளிலும் எட்டு வகையான நாகாபரணங்களை இறைப் பரிசாகப் பெற்று நவமி திதியன்று தீர்த்த நீராடல்களையும், பத்தாம் நாள் தசமியன்று பல மலைத்தலங்களிலும் கிரி பிரதட்சிணம் வந்து ஸ்ரீபெருமாள் தரிசனம் பெற்று மீண்டும் வாகன மூர்த்தியாகும் பாக்யத்தைப் பெற்றார். பகைமை, விரோதம், குரோதம் போன்றவற்றைக் களைந்து நன்னிலையை மீட்டுத் தருகின்ற மிக முக்கியமான விரதமாகுமிது! இந்த பத்து திதிகளையும் கருட பகவானே ஸ்ரீமந் நாராயணப் பெருமாளை வழிபடுகின்ற பாவனையிலே சந்தனம் அரைத்துத் தினமும் பெருமாளுக்குச் சாற்றுவது மிகவும் சிறப்புடையதாகும்...
1. உங்கள் ஊரில் உள்ள பெருமாள் ஆலயத்தையோ அல்லது நீங்கள் பத்து நாட்கள் தங்குகின்ற இடத்தில் உள்ள பெருமாள் ஆலயத்தையோ பூஜைக்காகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.. வசதியில்லாதோர் தங்கள் இல்லத்தில் உள்ள பெருமாள் படத்திற்கோ, விக்ரகத்திற்கோ இந்த பூஜையைச் செய்திடலாம்..
பிரதமை திதி அன்று பெருமாளுடைய திருவடிகளுக்குச் சந்தனத்தைச் சார்த்தி 21 முறை மூர்த்தியையோ, ஆலயத்தையோ வலம் வருதல் வேண்டும். இல்லத்தில் 21 முறை ஆத்மப் பிரதட்சிணமாகத் தன்னைத் தானே சுற்றி வலம் வந்து 21 முறை வீழ்ந்து வணங்குதல் வேண்டும். “பரம்பொருளே, ஸ்ரீமன் நாராயண மூர்த்தியே, நான் இழந்த பதவி, செல்வம், சுற்றம், சொத்து ஆகியவற்றை நியாயமான முறையில் மீண்டும் பெறுதற்காக இந்த விரதத்தை மேற்கொள்கின்றேன். எனக்கு எது நல்லதென்று நீதானே அறிவாய். எனவே உன் திருவடிகளைச் சரணடைந்து இந்த தசமி விரதத்தைத் தொடங்குகின்றேன்..” என்று சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்... இன்று ஸ்ரீகருடாழ்வாருக்கும் சந்தனக் காப்பு சார்த்தி நாகமுத்திரைகளைப் பதித்தல் விசேஷமானதாகும். அதாவது முதலில் கருடாழ்வாருக்கு சந்தனக் காப்பு சார்த்தி, மரத்தாலோ அல்லது உலோகத்தாலோ ஆன நாகஇலச்சினை (முத்திரை) கொண்டு ஸ்ரீகருடாழ்வரின் திருமேனி முழுவதும் நாகமுத்திரைகளைப் பதித்திட வேண்டும்..
2. இரண்டாம் நாளாகிய துவிதியை திதியன்று ஸ்ரீபிரம்மமூர்த்தி உதித்த பெருமாளின் திருநாபியிலே (தொப்புள்) சந்தனத்தைச் சார்த்தி வழிபட வேண்டும். ஆயுள் ஆரோக்கியத்தைத் தரவல்ல பூஜையிது.
3. மூன்றாம் நாளாகிய திரிதியை அன்று சுவாமியின் இருதயத்திற்கு சந்தனத்தைச் சார்த்தி வழிபட ஸ்ரீமகாலட்சுமி வாசம் செய்யும் இடமாக இது அமைவதால் கடன் தொல்லைகளை நீக்கி லட்சுமி கடாட்சத்தை, ஐஸ்வர்யத்தை தரவல்லதாக இப்பூஜை அமைகின்றது.
4. நான்காம் நாளாகிய சதுர்த்தி திதியன்று பெருமாளின் சிரசிற்கு (தலைக்கு) சந்தனத்தைச் சார்த்திப் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.. பொதுவாக விதியின் விளையாட்டாகப் பலவித துன்பங்கள் சங்கிலித் தொடர் போல் அமைகின்ற போது அவற்றிலிருந்து நிவர்த்தி பெறுவதற்கு இந்த வழிபாடு உதவுகின்றது..
5. ஐந்தாம் நாளாகிய பஞ்சமி திதியன்று .. பெருமாளின் இரு திருச்செவிகளுக்கு சந்தனத்தைச் சார்த்தி துதித்திட வேண்டும்.. நீங்கள் இதுவரை சென்றிடாத பல புண்ணிய தீர்த்தங்களின் நீராடலுக்கான நல்வரங்களைப் பெற்றுத் தரக்கூடிய பூஜையிது.
6. ஆறாம் நாளாகிய சஷ்டி திதியன்று பெருமாளுடைய திருஉதடுகளுக்கு சந்தனத்தைச் சார்த்திப் போற்றித் துதித்து வழிபடுங்கள்.. கோபத்தினால் நீங்கள் செய்கின்ற பாவங்களுக்கும் பிராயச்சித்தம் தருவதாக அமைவதோடன்றி கோபம் தணிவதற்கும் இது பெரிதும் உதவும். கோபத்தால் முறிந்த உறவுகளும் ஏற்பட்ட நஷ்டங்களும் நிறைய உண்டு.. இதற்கு நிவர்த்தி தருவதாக சஷ்டி பூஜை அமைகிறது.
7. ஏழாம் நாளாகிய சப்தமி அன்று பெருமாளுடைய வயிற்றுப் பகுதிக்குச் சந்தனம் சார்த்திப் பூஜிக்க வேண்டும்.. இன்று அன்னதானம் செய்து வழிபடுதலால் வயிறு சம்பந்தமான நோய்களுக்கும், பிறருடைய வயிற்றெரிச்சலால் வந்த தோஷங்களுக்கும் நிவாரணம் கிட்டும்.. மேலும் உங்களுடைய சந்ததியினர் அன்னத்திற்குத் தட்டுப்பாடின்றி நன்முறையில் வாழ்க்கையை நடத்துவதற்கு இந்த வழிபாடு உதவுகின்றது.
8 எட்டாம் நாளாகிய அஷ்டமி திதியன்று பெருமாளுடைய தொப்புள் பகுதியிலிருந்து திருப்பாதம் வரையிலான திருமேனிக்கும் சந்தனம் சார்த்தி வழிபட வேண்டும். இதனால் எந்தவிதமான தீயொழுக்கங்களுக்கும் ஆட்படாமல் நல்லொழுக்கத்தில் நல்வாழ்வு அமைந்திட இப்பூஜை தக்க மன உறுதியைத் தந்து உதவிடும்.
9. ஒன்பதாம் நாளான நவமி திதியன்று பெருமாளுடைய நெற்றிப் பகுதிக்குச் சந்தனம் சார்த்தி வழிபடுதல் வேண்டும். இன்று விளக்குகளை, தீபங்களை தானமாக அளித்தல் சிறப்புடையதாகும். இதனால் பலவிதமான துயரச் சூழ் நிலைகளிடையே அமைகின்ற வாழ்க்கைக்கு விடிவெள்ளியாக நல்ல காலம் பிறக்கும்..
10. பத்தாம் நாளாகிய தசமி திதியன்று சுவர்ண தானம் எனப்படும் பொன் தானத்தை மேற்கொள்ள வேண்டும் அவரவர் வசதிக்கு ஏற்ப குறைந்தது மூன்று கிராம் எடையுள்ள பொன் மாங்கல்யத்தையேனும் ஏழை தம்பதிகளுக்கு தானமாக அளித்திடல் வேண்டும்.

ஸ்ரீவரதராஜ பெருமாள்
திருநெடுங்களம்

ஐயர்மலை குளித்தலை

மலைத் தலத்தில் அடி, கிரி பிரதட்சிணம் :- பிரதமை திதி முதல் தசமி திதி வரை பத்து தினங்களுக்கு ஸ்ரீபெருமாளுக்குரிய சந்தனக் காப்புடன் அமைகின்ற ஆசா தசமி விரதத்தின் பரிபூரணமாக ஆசா தசமி தினத்தன்று திருப்பதி திருமலையில் ஸ்ரீகருடபகவானின் தரிசனமும், அடிப்பிரதட்சணமும் சிறப்புடையதாம். மலைத் தலங்களாக விளங்குகின்ற வைணவத் தலங்கள் மட்டுமல்லாது திருஅண்ணாமலை, அத்திகிரி எனப்படும் ஸ்ரீவரதராஜர்ர் பெருமாள் ஆலயம், திருப்பரங்குன்றம், பர்வதமலை, அய்யர்மலை, திருச்சி மலைக்கோட்டை, திருக்கழுக்குன்றம் போன்ற அனைத்து ஆலங்களிலும், எல்லா வைணவத் தலங்களிலும் ஸ்ரீபெருமான் எழுந்தருளியுள்ள சிவத்தலங்களிலு.. (காஞ்சிபுரம் அருகே திருமால்பூர், திருச்சி அருகே உள்ள திருநெடுங்களம், காஞ்சீபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் ஆலயம், திருஅண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் ஆலயம், ஸ்ரீசங்கர நாயணன் கோயில், சுசீந்திரம், திருச்சி அருகே உத்தமர் கோயில், சென்னை அருகே திருமழிசை) போன்ற பல்வேறு திருத்தலங்களில் அடிப்பிரதட்சிணம் செய்து வழிபடுதல் வேண்டும்.. பிரதமை திதியன்று ஸ்ரீகருடபகவானுக்கு சந்தனக் காப்பு இட்டது போல் இந்த ஆசாதசமி தசமி விரதம் பரிபூரணமடைகின்ற தசமி திதியன்றும், ஸ்ரீகருடபகவானுக்கு சந்தனக் காப்பு இட்டு நாக முத்திரைகள் பதிப்பது மிகவும் விசேஷமானதாகும்... கருடனும், நாகமும் ஒன்றுக்கொன்று பகைமை என்பதை நீங்கள் அறிவீர்கள்.. ஆனால் அதுவும் இறைவனின் லீலையாக எங்கெல்லாம் தவளைக்கு நாகமானது நிழலாக படம் விரித்து நிற்கின்றதோ, அத்திருத்தலங்களை எல்லாம் மிகவும் தெய்வீக சக்தி வாய்ந்த தலங்களென மகரிஷிகள் அக்காலத்தில் தேர்ந்தெடுத்து... (உ-ம் : கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்தலா) அவற்றைப் பெரும் தவத்திற்குரிய இடங்களாகக் கொண்டு மகிழ்ந்தனர்.

நாகதேவதைகள்
கச்சபேஸ்வரர் சிவாலயம்

குடும்பம், தொழில், அலுவலகத்தில் உள்ள திருஷ்டி தோஷம், பகைமை, குரோதம், விரோதம், பொறாமை, எதிர்பாராத நஷ்டம் சண்டை/சச்சரவு/பிணக்குகள்/மனவேறுபாடுகள் நீங்கிட இவ்விரதம் அருள்புரிகின்றது. இன்று எட்டு நாக தேவதைகளை ஒன்றாக தரிசிப்பது விசேஷமானதாகும்... (உ-ம்.: சென்னை வடபழனி ஸ்ரீவேங்கீஸ்வரர் ஆலயம், காஞ்சி ஸ்ரீகச்சபேஸ்வரர் ஆலயம்...) ஸ்ரீகருட பகவானின் எட்டு வகையான நாகாபரணங்கள் பின்வருமாறு.. :

இடக்கை வளையல் – ஆதிசேஷன், முப்புரி நூல் – வாசுகி, மாலை – கார்கோடகன், வலது காது – பத்மன், இடது காது – மகா பத்மன் ; திருமுடி - சங்க சூடன் ; இடது தோள் – தட்சகன் ; வலது தோள் – குளிகன்
இவ்வாறாக ஆதிசேஷன் முதல் குளிகன் ஈறாக எட்டு நாகங்களையும் எட்டுவித ஆபரணங்களாக ஸ்ரீஜகன்னாதப் பெருமாளிடம் இருந்து பெற்று பலமலைத் தலங்களிலும் வழிபட்டு கருடவாகனப் பெருமான் தாம் பல உத்தம தெய்வ நிலைகளைப் பெற்ற தினமே ஆசாதசமி விரத நாளாகும்.. எனவே, இந்நாளில் மேற்கண்ட எளிமையான விரதத்தைக் கடைபிடிப்போருக்குத் தாங்கள் இழந்த பதவி, செல்வம் சொத்து போன்றவற்றைத் தார்மீகமான முறையில் மீண்டும் பெறுவதற்கு ஸ்ரீகருட பகவானின் அருளும், ஸ்ரீபரமபத நாதனாகிய ஸ்ரீமன்நாராயணப் பெருமாளின் திருவருளும் நன்கு கூடி வரும். இந்த பத்து நாட்களிலும் வைராக்கியத்துடன் மேற்குறித்த மலைத் தலங்களில் தினந்தோறும் கிரிவலம் வருவோருக்குக் காரிய சித்தி கைகூடுவதுடன் கை மேல் பலனும் வரப் பெறுவர். ஆசாதசமி விரதம் நிறைவு பெறும் அன்றாவது நிச்சயமாக கிரிவலம் வருதல் சிறப்புடையதாகும்..

நீங்களும் உங்கள் குடும்பமும்

நீங்களும் உங்கள் குடும்பமும் – சில தெய்வீக விளக்கங்கள்
Day of Judgement எனப்படும் பிறவித் தீர்வு நாளை ஒவ்வொரு உயிரும் இறப்பிற்குப் பின் சந்தித்தாக வேண்டும்.. இதுதான் அடுத்த பிறவியின் பாங்கை நிர்ணயிக்கும். உங்களுடைய கணவன்/மனைவி/ குழந்தைகள் யாவரும் பூர்வ ஜென்ம விதியாக உங்களால் தேர்தெடுக்கப்பட்டவர்களே! எனவே வெறுப்போ, விரக்தியோ கொள்ளாது அனைத்தும் இறைவன் செயல் என்று உங்களுக்கு அமைந்துள்ள குடும்பப் பாங்கை இறை நியதியாக பூர்வ ஜென்ம பாவ, புண்ணிய கர்ம வினைகளுக்கேற்பவே அமைந்ததென ஏற்றுக் கொள்ளுங்கள்.. உங்களுடைய கணவன்/ மனைவி / குழந்தைகள் எவ்வாறு விதிப் பூர்வமாக நிர்ணயிக்கப்படுகின்றனர் தெரியுமா?
ஒவ்வொரு உயிரும், இவ்வுலக வாழ்வை நீத்த பின்னர் பலவிதமான பரவெளிப் புனர்ச் சடங்குகட்டு (Life After Death) பிறகு Day of Judgement  எனப்படும் நாளை அடைகிறது.. இன்று விரஜா நதி என்னும் மிகவும் புனிதமான தேவலோக நதியின் தீரத்தில் உள்ள ஜன்ம வாருண தீர்த்தம் எனும் புண்ணிய தீர்த்தத்தில் அவ்வுயிரின் பரிணாம உடல் மூழ்கி எழும் போது, தன்னுடைய பழைய, பூர்வ ஜென்மங்களின், தராதரங்களையும், புண்ணியச் பாவச் செயல்களின் விளைவுகளையும், தனக்குத் தானே, நன்கு உணர்கின்றது. இங்கு சத்தியம் தான் பரிமளிக்கும், பொய்மை, அதர்மம், அநீதிக்கு இங்கு இடமில்லை. இறைவனின் திருச்சபையில் நிகழ்கின்ற இப்பிறவித் தீர்ப்பு நாளில் (Day of Judgement)  ஒவ்வொரு உயிரும் ஆத்ம பரிணாம வளர்ச்சிக்காகத் தன்னுடைய தன்மையை நன்கு உணர்ந்து கொண்டு அதற்கேற்ப அதனுடைய அடுத்த பிறவியையும் தானே நிர்ணயம் செய்து கொள்கின்றது.. விரஜா நதியின் புனிதத் தன்மையால், அதன் தெய்வீக சக்தியைத் தாங்கிப் பெருகும் தெய்வீகமான ஜென்ம வாருண தீர்த்தத்தில் ஒருவர் மூழ்கி எழுகையில், அந்தந்த உயிரின் ஜென்ம பலாபலன்கள் யாவும் அதற்கே நன்முறையில் பட்டவர்த்தனமாகத் தெரிய வருகின்றது. எனவே, உண்மையான சுய ஆத்மப் பரிசோதனைத் தலமிது.

எனவே, ஜென்ம வாருண தீர்த்த நீராடலின் பலனாக, எவ்வுயிருமே தன்னுடைய கர்ம வினைகளின் தன்மைகளை, விளைவுகளைத் தாமே, சோதித்து, உண்மை நெறியில் நின்று நீதியை உணர்ந்து தமக்குரிய அடுத்த பிறவியையும் தானே தேர்வு செய்கிறது. அதாவது, “இத்தகைய புண்ணியங்களைச் செய்துள்ளோம், பாவச் செயல்களைப் புரிந்துள்ளோம்., எனவே அடுத்ததாக இத்தகைய கர்மக் கூட்டுடன் மனிதப் பிறவி/ விலங்குப் பிறவி/ தாவரப் பிறவிதான் தனக்கு உரித்தானது என்று அந்தந்த உயிரே தன்னுடைய அடுத்த பிறவியை அறிந்து கொள்கின்றது . அது மட்டுமா? எதிர்வரும் பிறவியில் தனக்கு யார் மனைவியாக/கணவனாக/ குழந்தைகளாக இருக்க வேண்டும் என்பதையும், அதுவே உணர்ந்து செய்து படைக்கும் கடவுளிடம் அதனை எடுத்துரைக்கின்றது... இறைவன் அப்போது அவ்வுயிரின் சுய ஆத்ம சோதனையை (Self Judgement) நன்கு ஆராய்ந்து அதன் முடிவுகளைத் திருத்தியோ, வடிவமைத்தோ, சில மாறுதல்களைச் செய்தோ, அடுத்த ஜென்மந்த்தை முடிவு செய்து அளிக்கிறார்... இவ்வாறாகத்தான் ஒவ்வொருவரும், தன்னுடைய அடுத்த பிறவியைப் பெறுகின்றார்கள். இதுவும் பிறவி ரகசியங்களுள் ஒன்றே! இப்படித்தான் உங்களுடைய தற்போதைய மனிதப் பிறவியும் குடும்பமும் ஏற்பட்டுள்ளது!
இந்த விரஜா நதி என்பது வைகுண்டத்திலே விளங்குகின்ற புனிதமான நதியாகும். இதன் கிளைகள், உபநதிகளாக பல தெய்வீக லோகங்களிலும் இயங்குகின்றன. எனவே, புனிதமான விரஜா நதியின் தரிசனமும், அதன் பாங்காக விளங்குகின்ற, ஜென்ம வாருண தீர்த்தத்தின் மஹிமையாலுந் தான், ஒவ்வொரு உயிரும் தன்னுடைய பிறவித் தளையின் சுமையை உணர்ந்து தன்னுடைய அடுத்த பிறவியை இறை நீதியாக அமைத்துக் கொள்கிறது. இது தவிர, வேறு பல முறைகளிலும் பிறவி நிர்ணயம் ஏற்படுதுண்டு.  “இந்த ஆணை/ பெண்ணை, கணவனாக/ மனைவியாக அடைந்து அதற்குரித்தான குடும்ப வாழ்க்கையைப் பெற இருக்கின்றோம்” என்று ஒவ்வொரு உயிரும் முன்னரே முடிவு செய்வதாக இருப்பதால் தான் இப்பிறவியில் நமக்கு கிட்டியுள்ள குடும்ப அமைப்பானது, நம்மால் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டது என்பதை இனியேனும் நன்கு உணர்ந்து கொள்க!
இத்தகைய ஜென்ம வாருண தீர்த்த நீராடாலைத் தான் இறைவன் நமக்கு வரமாக அளிப்பதால் தான், “கணவன், மனைவி அமைவதெல்லாம், இறைவன் கொடுத்த வரம்”.. என்ற நல்வாக்கும் நிலவுகிறது... ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் இந்த மானுட ஜென்மத்தை எடுப்பதற்கு முன்னால், உங்களுடைய கர்மச் சூழலைத் தானே நன்கு பரிசோதித்துத்தான் இப்பிறவியைப் பெற்றுள்ளீர்கள்! மேலும் ஜென்ம வாருண தீர்த்தமானது ஒருவருக்கு அவரவருடைய பிறவித் தளை அல்லது பிறவிச் சுமை பற்றிய அறிவைத் தருவது மட்டுமின்றி, அதனைக் கழிப்பதற்கான வாய்ப்புகளை நல்கும் வண்ணமாகவே அடுத்த பிறவியையும் அமைத்துத் தருகின்றது.. இதனை உணர்வதே பிறவியைக் களைவதற்கான முக்கியமான தெய்வீகப் பாடமாகும்... உங்களுடைய குழந்தைகள் கூட, உங்களால் பூர்வஜென்ம பலன்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே என்பது இப்போது நன்கு புரிகின்றது அல்லவா! எனவே, உங்கள் கணவன்/ மனைவி/ குழந்தைகள் மீது எவ்வித விரக்தியோ, வெறுப்போ, கொள்ளாது, அனைத்தும் இறைவனின் அன்புப் பரிசாக இவற்றையெல்லாம் நாமே தேர்ந்தெடுத்தோம்! எனவே, நமக்கு வந்ததை நமக்குரிய பூர்வ ஜென்ம, விளைவுகளாக ஏற்றுக் கொண்டு, புனிதமான வாழ்வை நடத்திக் கொள்வோம் என்ற வைராக்கியத்தை ஒவ்வொருவரும் பெறுதல் வேண்டும்...
தீதும் நன்றும் பிறர் தர வாரா! 
நாம் நினைத்தப்படியெல்லாம், குடும்ப வாழ்க்கை அமையாத போது, குடும்பத்தினர் மீதுதானே முதல் வெறுப்பு ஏற்படும். வறுமையோ, வளப்பமோ, செழிப்போ, சீரற்ற நிலையோ, எதனைக் கண்டும், வெறுப்பும், விருப்பும் கொள்ளாது, நமக்குரியதைத்தான் நாம் ஜென்ம வாருண தீர்த்தத்தின் மூலமாகப் பெற்றுள்ளோம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நமக்கு வருகின்ற துன்பங்கள் பிறரால் வருவதில்லை! அனைத்தும் நம் முற்பிறவிகளின் கர்ம வினைகளின் விளைவுகளேயாகும்..

ஸ்ரீஉய்யவந்த அம்பாள்
சாக்கோட்டை காரைக்குடி

வெறுத்தல் வேண்டா!
பலரும் சந்தோஷமான குடும்ப வாழ்க்கை அமையவில்லையே என்று வருந்துகின்றனர். சிலரோ தான்தோன்றித்தனமாய் நினைத்தபடி வாழ விழைகின்றனர். சிலர் தம் குறைகளை எண்ணி ஏங்கி, “இது கிட்டவில்லையே, அது அவ்வாறு இருந்திருக்கலாமே”, என்று மனித அறிவிற்கெட்டாத பிரம்ம கணக்கைப் போட்டு, மனதைக் குழப்பிக் கொள்கின்றனர்.. பலரும்., “நாம் நல்லபடியாகத் தானே வாழ்கின்றோம், நமக்கு ஏன் இத்தகைய சோதனைகள்..”, என்று புலம்பியவாறே வாழ்கின்றனர். எனவே, “நாம் வேண்டியதை நாமாக விரும்பித் தானே நாம் பெற்றுள்ளோம், நமக்கு அமைந்துள்ளவை யாவும் நம்முடைய பூர்வ ஜென்ம பாவ, புண்ணிய சக்திக்கு ஏற்றவாறு தான் நமக்கு இறைவனால் வரமாக அளிக்கப் பெற்றுள்ளன..”, என்பதை நன்கு உணர்ந்து, இனியேனும் சீரிய வாழ்வை பெற இம்மாமந்திர வார்த்தைகளை அடிக்கடி நமக்கு நாமே இதைச் சொல்லிப் பழக வேண்டும்.

பலருக்கும் வாழ்வின் மீது வெறுப்போ, அல்லது ஈடுபாடற்ற தன்மையோ, விரக்தியோ ஏற்பட்டிருந்தால், இதனைத் திருத்திச் செம்மைப் படுத்திக் கொள்வதற்காக அருள்புரியும் ஒரு திருக்கோயிலும் உண்டு... “அழைத்தால் போதும் அருள் மழை பெய்யும் உய்ய வந்த அம்பாள்.”   உங்களுக்கு வாழ்வின் மீதே வெறுப்பு ஏற்பட்டு விட்டாலோ, குடும்பத்தினரைக் கண்டாலே வெறுப்பும், கோபமும் உண்டாகுமாயின் என் செய்வது? அல்லது வறுமை, சந்தர்ப்ப சூழ்நிலைகள்,. செல்வம் இருப்பினும் சீரற்ற நிலை, ஒழுக்க மற்ற வாழ்க்கை, அழகின்மை, மன நோய்கள், உடல் ஊனங்கள் போன்ற பொதுவான காரணங்களால் உங்கள் மீதோ, உங்கள் குடும்பத்தினர் மீதோ உங்களுக்கு வெறுப்பும், மகிழ்ச்சியற்ற நிலையும் ஏற்படக் கூடும்.  இவ்வாறாக் இருப்பின் நீங்கள் திருஅண்ணாமலையில் மாதந்தோறும், உங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று, கிரிவலம் மேற்கொள்வீர்களாயின், உங்களுக்கு உங்கள் வாழ்வின் மீதே ஒரு பிடிப்பு ஏற்படு, “இது நாமாக, நம்முடைய பூர்வஜென்ம விளைவுக்கேற்ப பெற்ற வாழ்க்கையே, இறைவனால். நமக்கு அமைத்துத் தரப்பட்டதே!” என்ற உணர்வு உங்கள் உள்ளத்தில் பொங்கி எழுந்து, பெறுதற்கரிய இம்மானுட உடலில் நன்முறையில் வாழ இக்கிரிவல பலன்கள் உங்களுக்கு நல்ஆக்கத்தைத் தரும்.
இதற்கு உதவத்தான் சாணக்கிய தரிசனம், கிரிவல முடிவில், திருஅண்ணாமலையார் ஆலயமருகே உள்ள இரட்டைப் பிள்ளையார் ஆலயத்தின் பிரகாரத்தின் பின்புறத்திலிருந்து மலையை தரிசித்தால் இதுவே சாணக்கிய தரிசனமாகும்... திருஅண்ணாமலை ஆலயத்தில், ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் சிவபெருமான் அருள்பாலிக்கும் அற்புதத் திருச்சன்னதி ஒன்று உண்டு. கோபுரத்து இளையனார் சன்னிதி எதிரே இடப்புறம் அமைந்துள்ள இச்சன்னிதியை பலரும் அறியாது உள்ளனர்.. உங்களுடைய பிறந்த நட்சத்திரத்தன்று,, ஸ்ரீகல்யாணா சுந்தேரஸ்வர மூர்த்திக்கு  மங்களகரமான சித்திரான்னம் எனப்படும் ஐவகை அன்னங்களைப் (சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை அன்னம், சாம்பார் சாதம், தயிர் அன்னம்) படைத்து 12/21 என்ற எண்ணிக்கையில் தாம்பூலப் பைகளை வைத்து ( வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, இரண்டு வாழைப் பழங்கள்) சமர்ப்பித்து, “என்னுடையக் குடும்ப வாழ்க்கையை நீ அமைத்துத் தந்ததாகவே, என்னுடைய பூர்வ ஜென்ம வாழ்க்கைப் பயனால் அமைந்ததாகவே உணர்ந்து, என்றும் உன் நினைவுடன் நன்முறையில் குடும்பத்தில் வாழ அருள்புரிய வேண்டும்”, என்று மனதார வேண்டிப் பிரார்த்திடுக..!

ஸ்ரீசாமுண்டேஸ்வரி
திருஅண்ணாமலை

அன்னதானத்துடன் அந்த 12/21 தாம்பூலப் பைகளை இத்திருக்கோயிலிலோ அல்லது கோயிலை அண்டி வாழ்பவர்கட்கோ, ஏழைச் சுமங்கலிகட்கோ திருஅண்ணாமலைத் தலத்திலேயே தாம்பூல தானமாக அளித்து, கிரிவலத்தை இச்சந்நிதியில் துவங்கி, இறுதியில் கிரிவல கிழக்கு கோபுரத்தில் நுழைந்தவுடன் உடனே வலப்புறம் திரும்பினால், அங்கு அருள்பாலிக்கும், ஸ்ரீசாமுண்டி தேவியிடம் உங்கள் கிரிவலப் பலாபலன்களை அர்ப்பணித்து மனநிறைவுடன் வேண்டி கிரிவலத்தைப் பூர்த்தி செய்யுங்கள். இதுவே, குடும்பத்தின் மேல் ஏற்பட்டுள்ள வெறுப்பை நீக்குதற்குத் தம்பதியர்களிடையே உள்ள பிணக்கு தீரவும் தெய்வீக ரீதியாக உதவும். இதனை மாதந்தோறும் உங்களுடைய ஜன்ம நட்சத்திரத்தன்று செய்து வருக..!
நட்சத்திர கிரிவலம் தரும் நற்குடும்ப வாழ்க்கை
மீண்டும் விளக்குகின்றோம் – அதாவது, உங்கள் குடும்ப வாழ்க்கை நன்முறையில், அமைவதற்காக, உங்கள் பிறந்த ஜென்ம நட்சத்திர கிரிவலத்தை, ஸ்ரீஅண்ணாமலை ஆலயத்திலுள்ள ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வர சிவமூர்த்தியின் சன்னதியில் துவங்கி, அன்னதானம், தாம்பூல தானம் செய்து ஸ்ரீசாமுண்டி தேவியின் சன்னதியில் பூர்த்தி செய்வீர்களாயின், உங்கள் குடும்ப வாழ்க்கை உங்களுக்கு மன நிறைவைத் தருவதுடன், எத்தகைய கடுமையான சூழ்நிலைகள் ஏற்பட்டாலும், அவற்றை வென்று சாந்தமான குடும்ப வாழ்வைப் பெறலாம்.. நன்முறையிலே வாழ்க்கையை மேற்கொள்வது என்பது கலியுகத்தில் எவருக்கும் கிட்டாத அரிய அனுக்கிரகமாக விளங்குகின்றது அல்லவா!

கோ பத்ம விரதம்

கோ பத்ம விரதமானது பெண்களுடைய தீரா நோய்களைத் தீர்க்கின்ற, பலாபலன்களைத் தரவல்லதாகும்... தீட்டு, தோஷங்களை நீக்குவதற்கான தேவ ரகசிய வழிபாடுகள் பல உண்டு. இதனைத் தக்க சற்குரு மூலமாகப் பெற்றால் பலவிதமான அனுகிரகங்களை எளிதில் பெறலாம். பல துன்பங்களையும் எளிதில் நீக்கிடலாம். மாதவிலக்கு போன்ற உடல் சம்பந்தமான தீட்டுகள், தோஷங்கள், பலவிதமான துன்பங்களை ஏற்படுத்துகின்றன. இவற்றை நிவர்த்தி செய்வதாக அமைகின்ற கோ பத்ம விரத பூஜையை ஜாதி, இன, பேதமின்றி யாவரும் கடைபிடித்திடலாம்..

ஸ்ரீவசிஷ்டர் அருந்ததி
தென்குடித் திட்டை

ஸ்ரீசீதாபிராட்டி, ஸ்ரீமஹாலட்சுமி, ஸ்ரீபார்வதி தேவி, ஸ்ரீருக்மணி தேவி, ஸ்ரீஅருந்ததி தேவி போன்ற தெய்வமூர்த்திகளாலும், அருந்தவ ரிஷிபத்னியராலும் சிறப்புடன் மேற்கொள்ளப்பட்டு அற்புத பலாபலன்களையும் தெய்வ மூர்த்திகளுக்கே தந்தருளிய, சிறப்பான விரதங்களுள் ஒன்றே கோ பத்ம விரதம்..  “கோ” என்றால் பசு என்றும், ‘பத்மம்’ என்றால் தாமரை என்றும் பொருள் உண்டு அல்லவா? ஸ்ரீபார்வதி தேவிக்குத் தம்முடைய அவதார வைபவங்களில் பன்முறை பூலோக மக்களின் நன்மைக்காக தவம் புரிந்திட சிவபெருமானைப் பிரிய வேண்டிய கட்டங்கள் ஏற்பட்டன. மேலும், ஈஸ்வரனுடைய ஒவ்வொரு அவதாரத்தின் போதும், பத்னி தேவியாக ஆவதற்கான தவமுறைகளிலும், யோகங்களிலும் அம்பிகை ஈடுபட்ட போது பலவித இடையூறுகளைச் சந்திக்க வேண்டியதாயிற்று.
எனவே, இத்தகைய இடர்களைக் களையும் முகமாகத்தான் ஆண்டுதோறும் ஸ்ரீபார்வதி தேவி இன்றளவும் கோபத்ம விரதத்தை மேற்கொண்டு வருகிறாள் என்பது ஒரு தேவ இரகசியமாகும். ஸ்ரீமஹாலட்சுமி தேவியும், சர்வேஸ்வரனாம் திருமாலைப் பிரிய வேண்டிய கால நிலைகளும் ஏற்பட்டன. என்றைக்கும் சாசுவதமாகத் திருமாலின் இட நெஞ்சு ஒளிச் சுருதியாகப் பரிணமிக்கவும், இன்றும் பூலோகத்தில் மட்டுமன்றி, கோடானு கோடி லோகங்களிலும், அனைத்து தேவ, தேவாதி, தெய்வ மூர்த்திகளும் ஒன்றாக உறைகின்ற/ குடியிருக்கின்ற ஒரே நடமாடும் தெய்வீக ஆலயமாக விளங்குகின்ற பசுவின் உடலில் இடம் பெற வேண்டித் திருமகள் மேற்கொண்ட விரதங்களுள் ஒன்றே கோ பத்ம விரதமாகும்.
இதே போல், ஸ்ரீபிரம்ம மூர்த்தியுடன் ஏற்பட்ட பலவித மனத் தாங்கல்களால், கலைவாணியாம் ஸ்ரீசரஸ்வதி தேவியும், ஸ்ரீபிரம்மனைப் பிரிய வேண்டிய பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. இவ்வாறன்றி எங்கும், என்றும் தம் தெய்வத் துணை மூர்த்தியாம் ஸ்ரீபிரம்ம மூர்த்தியிடம், இணைந்து அருள்பாலிப்பதற்காக ஸ்ரீசரஸ்வதி மேற்கொண்ட முதன்மையான விரதங்களுள் ஒன்றே கோபத்ம விரதமாகும். ஸ்ரீருக்மணி தேவியும், ஸ்ரீகிருஷ்ண பரமாதமாவின் தெய்வத் தன்மையை உணராது, பலவித பிணக்குகட்கு ஆட்பட்டு அல்லலுற்ற போது, ஸ்ரீஅகஸ்திய மாமுனியின் உபதேசத்தால் கோ பத்ம விரதத்தை மேற்கொண்டு, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவுடன் என்றும் ஒளிச் சுடராய்ப் பிரகாசிக்கின்ற இறைத் தன்மையைப் பெற்றனள்.  இவ்வாறாக மனித குலத்திற்குப் பல தெய்வீகப் பாடங்களைப் புகட்டுவதற்காகவே எல்லாம் வல்ல அம்பிகையரும் இத்தகைய புராணப் பாத்திரங்களை ஏற்கின்றனர்.
திருமணத் தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழ அனைவருக்கும் உதாரணமாக எடுத்துக் காட்டும் வகையில், பரிணமிப்பவர்களே ஸ்ரீவசிஷ்டரும் ஸ்ரீஅருந்ததி தேவியும் ஆவர். எனினும், இம்மாமுனித் தம்பதியரும் கூட பல பொறாமைக் கண்களுக்கு ஆளாகினர் அப்போது ஸ்ரீஅருந்ததி தேவியார் இத்தகைய இடையூறுகளைக் களைய இவ்விரதத்தை மேற்கொண்டு இன்றும் விண்ணில் அருந்தாரையாக திருமணச் சடங்கின் போது தம்பதிகள் கண்டு, ஆனந்தித்துத் தரிசிக்க வேண்டிய அற்புத நட்சத்திரமாக அருந்ததி நட்சத்திரமாய்ப் பிரகாசிக்கின்றார்.. இவ்வாறாக, கோ பத்ம விரதமானது, பெண்கள் புனிதமாக மேற்கொள்ள வேண்டிய, முக்கிய விரதங்களுள் ஒன்றாக விளங்குகிறது.

தேவர்மலை ஸ்ரீநரசிம்மர்

ஆனால், இது தேவ விரதமாகவே பலகோடி  யுகங்களாக விளங்கியமையால், இதன் அருமையை பூலோகத்தினர் உணராது விட்டுவிட்டனர். “யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்..” என்பதற்கேற்ப ஸ்ரீபார்வதி, ஸ்ரீலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி ஆகிய மூன்று அம்பிகையரும், ஸ்ரீயாக்ஞ் வல்கிய மாமுனிவரை நாடி, “மாமுனியே! தேவ ரகசிய வழிபாடாக விளங்குகின்ற கோ பத்ம விரதத்தின் மஹிமையை பூலோகத்திலுள்ள பெண்மணிகளும் உணர்ந்து, அனைவரும் இதனைக் கடைப்பிடித்து நல்வரங்களையும், பலாபலன்களையும் பெறுவதற்குத் தாங்களே இதன் மஹாத்மியத்தை எடுத்துரைத்து அருள்புரிய வேண்டும்”, என்று மனமுருகிக் கேட்டுக் கொண்டனர். ஆனால் குரு யாக்ஞவல்கியரோ, “ஈஸ்வரிகாள்! தேவரகசியத்தை வெளியிடுவதற்கான தகுதி எனக்குக் கிடையாது. மேலும், இத்தகைய தெய்வீக இரகசியங்களை எல்லாம் பூலோக மக்களுக்கு உணர்த்துவதற்காகப் பல சித்த புருஷர்களை இறைவனே அனுப்பி உள்ளான். தாங்கள் குறிப்பிடுகின்ற கோ பத்ம விரதமானது பெறுதற்கரிய மேன்மை பொருந்திய தேவ ரகசிய இறை விரதங்களுள் ஒன்றாகும். எனவே, தாங்கள் அனைவரும் பூலோகத்திற்குச் சென்று, எங்கு அந்தர் வாஹினியாக கோமுக தீர்த்தம் நல்ல ஊற்றாகப் பெருகுகின்றதோ, அத்திருத்தலத் துறையிலே தவம் புரிகின்ற சித்புருஷரை நாடி, இத்தேவ வழிபாட்டின் இரகசியங்களை, பூலோக மக்களுக்கு உணர்த்துவதற்கான அனுமதியை பெற்று, அதற்கேற்றவாறு நற்பணியை இறைத் திருப்பணியாக ஆற்றுவீர்களாக”, என்று நல்விளக்கந் தந்தார்..
அம்பிகையர் மூவரும் ஊற்றாய்ப் பல்கிப் பெருகுங் கோமுகத் தீர்த்தத் துறையைத் தேடி பூலோகமெங்கும் வரலாயினர்.. ஆயினும், அது அவ்வளவு எளிதிலா கிட்டும்? தேவாதி, தெய்வ மூர்த்திகளாக விளங்கிடினும், அவர்கள் மானுட ரூபத்தில் பூலோகத்திற்கு வந்தமையால், ஒரு சாதாரண இல்லறப் பெண்மணி போலத் தான் தங்கள் பூலோக பூஜைகளைத் தொடர்ந்தனர். அந்தர்வாஹினியாக அதாவது எங்கிருந்து ஊற்று பெருகுகின்றது என்று சொல்ல முடியா வண்ணம் விளங்குகின்ற கோமுக தேவ தீர்த்தத்தைத் தேடுகின்ற பாங்குடன் பல தலங்களையும், புண்ய தீர்த்தங்களையும் தரிசித்து வந்தனர்.. புனிதமான நதி தீரங்களில், விளக்குப் பூஜைகளையும் கோல வழிபாடுகளையும், கடைபிடித்து மூன்று தேவியரும் காவிரி நதி தீரத்திலும், பல அற்புதமான பூஜைகளைச் செய்து வருகையில், ஒருநாள் காவிரி நதிப்படுகையிலே அதன் கரையை ஒட்டியவாறு அவர்கள் அடிப்பிரதட்சிணம் செய்து வந்த போது ஓரிடத்தில்,  தாமரை மலரின் வாசனை அவர்களை ஈர்த்தது. ஓடுகின்ற வாசனை அவர்களை ஈர்த்தது.
ஓடுகின்ற நதியிலே எவ்வாறு தாமரை மலர்கள் இருக்கக் கூடும், இந்தத் தாமரையின் வாசனை எங்கிருந்து வருகிறது என்று எண்ணி வியந்தவாறே மூவரும், தாமரை மலரின் நறுமணம் வந்த திக்கை நோக்கி நடந்து சென்றனர். பத்ம (தாமரை) வாசனையானது அவர்களை ஒரு ஆலயத்தினுள் இட்டுச் சென்றது. அங்கு அந்த ஆலயத்தினுள்... அந்தர் வாஹினியாக தீர்த்தம் பாயும் ஆங்கே கோமுகம் ஒன்றிருந்தது, அந்த கோமுகத்தின் அருகிலேயே ஒரு சித்புருஷர் ஆழ்ந்த யோக நிலையில் அமர்ந்திருந்தார். அவருடைய இரு கரங்களிலும் தாமரை மலர்களைத் தாங்கிய நிலையில் அவர் யோகம் பூண்டிருந்த காட்சியைக் கண்டு மூன்று அம்பிகையரும் அதிசயித்தனர், ஆனந்தமுமடைந்தனர்!
பத்ம பாத யோக தரிசனம் எனப்படும் இந்த அற்புதமான யோகமானது, காணக் கிட்டாதது. பொதுவாக அனைவரும் பத்மாசனத்தில் அமர்ந்துதான் இரு கைகளையும் முழங்காலில் வைத்து யோகம் புரிவர். ஆனால் இச்சித்புருஷரோ, மத்வாசாரியார் போல, ஒவ்வொரு கரத்திலும், ஒரு மலர்ந்த தாமரையை உயர்த்திப் பிடித்த நிலையில், ஆடாது, அசங்காது, அனுயோகத்தில் திளைத்திருந்தார். அருகிலிருந்த்த கோமுகத்திலிருந்து நீர் அருவி போல கொட்டிக் கொண்டிருந்தது. அந்தர் வாஹினியாய் எங்கிருந்து அந்த நீர் ஊற்று வருகிறதோ! யார் அறிவார்? இதுதான் தாம் தேடிவந்த அந்தர்வாஹினி கோமுகத் தீர்த்தம் என்பதை தேவியர் மூவரும் உணர்ந்தனர்.. இவ்விடத்தில் அனைத்துமே பத்மம் எனப்படும் தாமரையுடன் ஒன்றி இருப்பதை அவர்க்ள் உணர்ந்தனர்.. இந்த பத்ம பாதாந்த யோகத்தில் திளைத்திருந்தவரே ஸ்ரீபத்மம் தாங்கிப் பெருமான். பத்மாசன யோக நிலையில், பத்ம பாதாந்திர யோக வாசிக்கலையில், பத்ம யோகம் பூண்ட, பத்மம் தாங்கிப் பெருமான் என்னே காரணப் பெயர்ப் பொருத்தம்!
ஒவ்வொரு சித்புருஷருமே ஒவ்வொரு வகையில் அற்புதமான தவ முறைகளைக் கையாண்டு., நவீன முறையில் தங்கள் திருப்பணிகளைச் செய்து, உலக ஜீவன்கட்குத் தொண்டாற்றி வருகின்றனர். குப்பைச் சித்தர், கடுவெளிச் சித்தர், அரிக்கேன் விளக்குச் சித்தர் எனப் பலக் காரணப் பெயர்கள் பூண்டு, சித்புருஷர்கள் ஆற்றுகின்ற திருப்பணிகள் தாம் எத்துணை எத்துணை! கோடானு கோடி யுகங்களாக திரேதாயுகம் முதல் கலியுகம் ஈறாக அனைத்துக் கோடி லோகங்களிலும் என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாய், சிரஞ்சீவியாய் வாழ்ந்து நமக்கு அருள்புரிகின்ற சித்புருஷர்கள் தான் எத்தனை எத்தனை! அண்ணாமலை, பர்வத மலை, பொதிய மலை, அய்யர் மலை, சென்னை திருக்கச்சூர் மலை போன்ற தலங்களிலும் இன்றும் சித்தர்கள் நடமாட்டம் கொண்டு நமக்கு அருள்பாலிக்க காத்துக் கிடக்கின்றனர். இதனால் தான் பௌர்ணமி தோறும் இத்தகைய மலைத் திருத்தலங்களின் கிரிவலமானது ஒரு முக்கிய வழிபாடாக எளிதில் காரிய சித்திகளைத் தருவதாக சித்புருஷர்களால் விளக்கப்பட்டுள்ளது.
அதனால் தானே இன்று லட்சோப லட்சம் மக்கள் மாதந்தோறும் திருஅண்ணாமலையை கிரிவலம் வருகின்றனர். இது உலக அற்புதமல்லவா? உலக அதிசயம் என்று எதை எதையோ குறிக்கின்றோமே! ஆனால் மாதந்தோறும் இறைவனே மலைத் திருமேனியாய் நின்று அருள்புரிகின்ற திருஅண்ணாமலையை மாதந்தோறும் லட்சோப, லட்சம் மக்கள் கிரிவலம் வருகின்றனர் எனில் இதைவிட உலக அதிசயம், அற்புதம் வேறு என்ன இருக்க முடியும்?
பத்மம் தாங்கிப் பெருமானைக் கண்ட சக்தி தேவியர் மூவரும் அவர் யோகத்தினின்று மீண்டு வரும் வரை ஆலயத்தின் பகுதிகளெங்கும், கோமுகத்தைச் சுற்றிலும், கோமுக நீர்த் தீர்த்தம், பொங்கி வழிந்து, தீர்த்தக் குளமாக இருக்கும் இடத்தைச் சுற்றிலும், பலவிதமான மா, நீர்க் கோலங்களை இட்டு, மஞ்சள், அரிசி, தூவி, எறும்புகட்கு (அன்னதானமாக) இட்டனர். ஆம் அனைத்துமே அன்னதானத்தில் துவங்கி அதில்தான் முடிவும் பெறுதல் வேண்டும். அன்னதானத்திற்கு ஈடான, பூஜை வழிபாடு எதுவும் தான் உண்டோ, அதுவும் கலியுகத்தில்?
பத்மம் தாங்கிப் பெருமாள் யோகத்தினின்று மீண்டார். இத்திருநாள் தான் இன்றும் “கோ பத்ம விரத நாளாகும்”. பத்ம பாத யோகத்தினின்று எழுந்த பத்மம் தாங்கிப் பெருமான் சித்தர். முதன் முதலில் செய்தது, என்ன தெரியுமா? ஆங்கே ஒரு பசுவை வரவழைத்து, அதற்கு கோ பூஜை செய்வித்தார். மூன்று தேவியரும் தினந்தோறும் கோ பூஜை செய்து வந்தாலும், பத்மம் தாங்கிப் பெருமான் செய்கின்ற கோ பூஜையின் குணாதிசயங்களையும், சிறப்பியல்பையும், தெய்வீக அம்சங்களையும் கண்டு பேரானந்தம் அடைந்தனர். கோ பூஜை எனில் இதுவன்றோ, கோ பூஜை என்று பெருமிதம் கொண்டனர் தேவியர் மூவரும். இத்தகைய கோ பூஜை விளக்கங்களைப் பின்னர் காண்போம். இதன் பின்னர், பத்மம் தாங்கிப் பெருமான் தேவியரின் திருப்பாதங்களில் வீழ்ந்து வணங்கி, “ஈஸ்வரிகாள்! தங்களைத் தேடி நானன்றோ வந்து தரிசித்தல் வேண்டும். தாங்கள் இந்த ஏழையின் குடிலைத் தேடி வந்துவிட்டீர்களே! யான் ஏதேனும் அபசாரம் செய்து விட்டேனா?” எனக் கூறி துடி துடித்துப் பதை பதைத்தார்.
அவருடைய எளிமையையும், ஆழ்ந்த பக்தியையும் கண்டு உளம் உருகிய அம்பிகையர் சித்தர் பெருமானை வணங்கினர். “மாமுனியே! சித்தர் பெருந்தகையே! என்னே வார்த்தைகளைக் கூறி விட்டீர்கள்! தாங்கள் இருக்கும் இடம் தேடி அல்லவா நாங்கள் அலைந்து கொண்டிருக்கிறோம். ஸ்ரீயாக்ஞவல்கிய மாமுனியே தங்களுடைய தெய்வீகத் தன்மையை எங்களுக்கு எடுத்துரைத்தார். தேவ ரகசியங்களை எடுத்துரைக்கும் தகுதி தமக்கு இல்லை என்றும், அதற்கு உரித்தான இறைத் தகுதி பூண்டவர் தாங்களே என்றும், அவரே தம் திருவாய் மொழிகளால், உங்களுடைய பெருந்தன்மையையும், பேரன்பையும், இறை பக்தியையும், எங்களுக்கு உணர்த்தினார்கள். தாங்கள் தாம் எங்களுக்குத் “கோ பத்ம” விரத மஹிமையை விளக்கி, அதனை நாங்கள் பூலோக மக்களுக்கும் பயன்படும் வகையில், யாவருக்கும் எடுத்துரைக்கும் வண்ணம், தாங்களே உபதேசம் செய்தருள வேண்டும்”, என்றும் வேண்டினர்.
அதன் பின்னர், பத்மம் தாங்கிப் பெருமான் சித்தர், கோ பத்ம விரதத்தின் மஹிமையை அவர்களுக்கு எடுத்துரைத்தார்.. இவ்வாறாக , காரடையார் நோன்பு, மஹா சிவராத்திரி பூஜை, பிரதோஷ வழிபாடு, சஷ்டி விரதம் போன்ற பலவிதமான பண்டிகைகட்கும், ஒவ்வொரு யுகத்திலும், ஒவ்வொரு மஹானும், மஹரிஷியும் , சித்புருஷரும், பலவித விளக்கங்களைத் தந்துள்ளனர். எனவே, ஒரே விரதத்திற்கே பலவிதமான புராண விளக்கங்கள் அமைவதும் உண்டு. உதாரணமாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் பல உண்டு. முதன் முதலாக தீப லட்சுமியாகத் திருமகள் அவதாரம் பூண்ட போது, தீப பூஜையை உலகிற்கு உணர்த்திய நாளே தீபாவளி என்றும் நரகாசுரனை வதம் செய்து ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா உலக மக்களை துன்பத்தினின்று மீட்ட மகிழ்வைக் குறிக்கும் நாளே தீபாவளி என்றும் தீபாவளிக்குப் பல புராண சம்பங்கள் இருப்பது போல், ஒவ்வொரு விரதமும், பண்டிகையும் தம்முள் பலவிதமான காரணங்களையும் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பத்மம் தாங்கிப் பெருமான், மூன்று தேவியருக்கும் கோ பத்ம விரதத்தின் மஹிமையை எடுத்துரைத்ததோடு மட்டுமின்றி அதுவரையில் தேவ ரகசியமாக இருந்து வந்த இவ்விரதத்தை பூலோக மக்களும் மிக எளிய முறையில் கடைபிடிக்கும் வண்ணம், வகைப்படுத்தித் தந்தார். அதனையே நாம் இங்கு காண்கிறோம். இவையெல்லாம் சித்புருஷர்களின் கிரந்தங்களில் வடிக்கப்பட்டுள்ளவையாம்..

பத்மயோக கோமுகம்
தேவர்மலை

இவ்வாறாகப் பத்மம் தாங்கிப் பெருமான் பத்ம பாத யோகத் தவம் புரிந்த தலமே திருச்சி மாவட்டம் கரூர் அருகே, குருணிகுளத்துப் பட்டியில் உள்ள தேவர் மலை எனப்படும் திருத்தலமாகும்.. இங்குதான் புராதனமான ஸ்ரீநரசிம்மர் ஆலயம் விளங்குகிறது. இத்தலமானது தற்போது பலரும் அறியாவண்ணம் ஒதுங்கிக் கிடப்பினும், பல அற்புத தெய்வீக இரகசியங்களைத் தன்னகத்தே கொண்டு பல யுகங்களாக இருந்து வருகின்றது. இங்குள்ள கோமுக நீர்த்தாரையில் எப்போதும் நீர் சுரந்து வருகின்றது! பெறற்கரிய தெய்வ தீர்த்தம்! இன்றைக்கும் சூட்சும ரூபத்தில் இக்கோமுகத்தின் அருகே, பத்மம் தாங்கிப் பெருமானாகிய சித்புருஷர், அன்றும், இன்றும் , என்றும் தவம் புரிந்து வருகிறார். தோஷங்கள், தீட்டு, மாதவிலக்குத் தீட்டு, போன்ற குற்றங்கள் ஏற்படின் இந்த நீர் ஊற்று நின்று விடும். பின்னர் இதற்குரிய புனருத்தாரணம் செய்யப்பட்டால் தான் நீர் சுரப்பு மீண்டும் ஏற்படும். எனவே தோஷ/ தீட்டுக் குற்றங்கள் உலகில் பெருகுகின்ற போது, அதனைக் குறிக்கும் வண்ணம், இந்த நீர்த் தாரை ஒரு அலகாக, அளவுகோலாக எடுத்துக் காட்டாய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஸ்ரீநரசிம்மர் ஆலயம்
தேவர்மலை

கோ பத்ம விரத நாளன்று இத்திருத்தலத்திற்கு வந்து இக்கோமுக பிரம்ம தீர்த்தத்தை வழிபடுதல் விசேஷமானது ஆகும். இங்குள்ள ஸ்ரீநரசிம்ம பெருமாள் மிகவும் சக்தி வாய்ந்தவர். காமிராக்களில் ஏற்படும் Flash ஒளிக் கதிர்கட்கு அப்பாற்பட்டவர்.. எனவே இப்பெருமானை Flash அடித்து காமிரா மூலம் போட்டோ எடுத்தல் கூடவே கூடாது. இது தெய்வீகத்திற்குப் புறம்பானதாகும். புராதன மூர்த்தியாக விளங்கும் இந்நரசிம்ம மூர்த்தி பல சதுர்யுகங்களாக இங்கு அருள்பாலித்தாலும், இன்று இதன் பெருமையைப் பலரும் அறியாமல் உள்ளனர் என்பது மிகவும் வருந்துதற்குரியதாகும். இனியேனும் அறிந்து உணர்ந்து பலன் பெறுவீர்!
தீட்டு, தோஷங்கள் தீர..... கோ பத்ம விரதநாள் அன்று சூரிய உதயத்திற்கு முன் பிரம்ம முகூர்த்த நேரத்தில் (காலை 3 to 5) நீராடி உலர்ந்த ஆடைதரித்து எவ்விதத் தீட்டு தோஷமுமற்று இருக்கும் வண்ணம், இந்நாளை விரதத்தில் கழித்திட வேண்டும். அதாவது, மாதவிலக்கு போன்ற எவையும் சேர்தல் கூடாது. அதற்காக மிகவும் கடுமையான விரதமா என்று அஞ்சுதல் வேண்டாம். ஏனைய கோயில்களில் உள்ளது போல மாதவிலக்கு போன்ற தீட்டுத் தோஷங்கள் இருப்பது கூடாது என்பதே முக்கியம். விரத நாளில் நன்முறையில் இந்த கோமுகத்தை சுத்தம் செய்து, பச்சரிசி மாக்கோலமிட்டு மலர்களால் அலங்கரித்து மஞ்சள், சந்தனம் பூசி, குங்குமமிட்டுத் தாமரை மலர்களால் அலங்கரித்தல் வேண்டும்.. இந்த கோமுகத்தில் வலப்புறத்தில் ஒரு தேக்கு/சந்தன/மா/பலா மரப்பலகையை வைத்து, அதன் மேல் கோலமிட்டு, அதன் இருபுறங்களிலும், பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு தாமரை மலர்களைப் பசுஞ்சாணத்தின் மேல் வைத்திடல் வேண்டும்.. இதன் மூலமாக சூட்சுமமாக ஸ்ரீபத்மம் தாங்கிப் பெருமானை பிரார்த்தனை செய்து இப்பலகையில் அமர்ந்து பத்மயோகம் புரியும் வண்ணம் நாம் பிரார்த்திக்கின்றோம்.. கோமுகம் மற்றும், கோயிலைச் சுற்றியும், கோயில் வெளிப்புறங்களிலும், மஞ்சள், அரிசி மணிகளைத் தூவி எறும்புகட்கு அன்னதானமாக இடுதல் வேண்டும். கோமுகத்தை வழிபடும் போது, ஸ்ரீநரசிம்மருக்கும் பூஜை மேற்கொள்ளப்பட வேண்டுமல்லவா?
இங்கு வீற்றிருக்கும் மூல மூர்த்தியல்லவா ஸ்ரீநரசிம்மர்! ஸ்ரீமஹாலட்சுமியின் நிழலைத் தன்னுடலில் ஏற்று தம் உக்ரத்தைத் தணித்துக் கொண்ட மூர்த்தியாகையால் ஸ்ரீநரசிம்ம மூர்த்தியையும் தாமரை மலர்களால் அலங்கரித்து, அபிஷேக ஆராதனை செய்து வழிபடுதல் வேண்டும். இந்த ஆலயத்தில் எப்போதும் நீர் ஊற்று வந்து கொண்டுள்ள கோமுகத்துடன் கர்ப்பக் கிரஹத்தினின்று அபிஷேக நீர் வரும் கோமுகமும் ஒன்றுண்டு. எங்கிருந்தோ தேவ ரகசியமாக நீருற்று வருகின்ற கோமுகத்திற்கு பத்ம பத்ம யோக நீர்த்தாரை (பிரம்ம தீர்த்தக் குளம்) or பத்ம யோக கோமுகம் என்று பெயர்.
ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் மூலஸ்தானத்தினின்று அபிஷேக நீர் வெளிவரும் நீர்த்தாரைக்கு சிம்மேந்திர கோமுகம் என்று பெயர் இன்று இரண்டு கோமுகங்களையும் வழிபடுதலே சிறப்பானதாகும்.. பத்மயோக கோமுகத்தில் எப்போதும் தேவ பிரம்ம தீர்த்தம் சுரந்து கொண்டிருப்பதாலும், இதில் நம் காலடி படுதல் கூடாது.. எனவே, ஸ்ரீபத்ம யோக கோமுக நீர்குண்டத்தின் (பிரம்ம தீர்த்தக் குளம்) வெளிப்புறமாக, சுற்றுக் கற்சுவருக்குச் சுண்ணாம்பு காவிப் பட்டையிட்டு, கோல மிட்டு, அலங்கரித்து வழிபடுதல் வேண்டும். இந்த தீர்த்தக் குளம் இருபுறமும், சுத்தம் செய்து, வலப்புறத்தில் மேற்கூறியது போல் மரப் பலகைகளில் ஏதேனும் ஒன்றை வைத்து, பலகையின் இருபுறமும், பக்கத்திற்கு ஒன்றாக, தாமரை மலரை வைத்து வழிபடுதல் வேண்டும்.
தேவர் மலை ஆலயத்தில் கோ பூஜை எனப்படும், பசு வழிபாடு மிகச் சிறப்புடையதாகும். எனவே, பக்த கோடிகள் முன்கூட்டியே இக்கோயிலுக்குச் சென்று, இங்கு பசு பூஜை நிகழ்வதற்கான முன்னேற்பாட்டைச் செய்து கொள்தல் வேண்டும்.
மேலும், இந்த விரத நாளன்று, திடீரென்று முதன் முறையாக இத்திருத்தலத்திற்குச் செல்வதை விட முன்னரேயே சென்று, இவ்வாலயத்தில் உழவாரத் திருப்பணியாக, ஆலயம் சுத்தம் செய்தலை மேற்கொண்டு கோ பத்ம விரத நாளன்று இங்கு வரும் அடியார்க்கு உதவும் வகையில் தேவையான உதவிகளைச் செய்து, வாழ்க்கையில் பெறுவதற்கரிய பாக்யத்தையும், புண்ய சக்திகளையும், பலாபலன்களையும் பெற வேண்டுகிறோம். ஏனெனில் நாம் அகஸ்திய விஜயத்தில் குறிப்பிடுகின்ற சில ஆலயங்கட்கு பல அடியார்களும் அந்த குறிப்பிட்ட நாளில் தான் திடீரென்று செல்வதால், அதற்குரித்தான முன்னேற்பாட்டைச் செய்ய முடியவில்லை என ஆலயத்தினரும், நிர்வாகத்தினரும் பூஜை செய்வோரும் நமக்குக் கடிதம் எழுதுகின்றனர்.. இம்முறையேனும் கோ பத்ம விரத நாள் வரும் முன்னரேயே பக்த கோடிகள், இத்திருத்தலத்திற்குச் சென்று, இத்திருக்கோயிலைச் சீரமைத்து நன்முறையில் தக்க அனுமதியுடன் உழவாரத் திருப்பணிகளைச் செய்து, கோ பத்ம விரதத்திற்கு வருகின்ற அடியார்கட்கு உதவும் வகையில் பலவித இறைத் திருப்பணிகளைச் செய்வீர்களாயின் இதுவே நிச்சயமாக கோ பத்ம விரதத்திற்கான முக்கியமான விரதப் பணிகளாக அமைகிறது என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

அக்னி சாவர்ணி மனு

அக்னி சாவர்ணி மனு தர்ப்பண நாள்
தர்ப்பண பூஜை என்பது நமக்கு வாழ்வைத் தந்த நம் மூதாதையர்கட்கு நாம் செலுத்துகின்ற நன்றி பூஜையாகும். தர்ப்பண வழிபாடானது ஜாதி, இன, குல பேதமின்றி யாவருக்கும் உரித்தானது, நம் சந்ததி நன்முறையில் நல்லொழுக்கத்தில் தழைத்து விருத்தியடைய தர்ப்பண பூஜையே உதவுகிறது. அமாவாசையோ, அல்லது ஒருவருடைய இறந்த திதி, நாள் மட்டுமே தர்ப்பணம்/திவசம் அளிக்க வேண்டிய நாளாக எண்ணாதீர்கள். மாதப்பிறப்பு, மனுவாதி நாள், யுகாதி நாட்கள் போன்றவையும் தர்ப்பண பூஜைக்கான நாட்களாகும். “எளிய தர்ப்பண முறை” என்ற நம் ஆஸ்ரம நூலில் யாவரும் தர்ப்பண பூஜையை அளிக்கும் வண்ணம் மிகவும் எளிமையான முறையில் தர்ப்பண விளக்கங்களை அளித்துள்ளோம்.

ஸ்ரீநரமுக விநாயகர்
திலதைப்பதி, கோயில்பத்து

பொதுவாக நம் முன்னோர்கள் இறந்த திதியிலும், அமாவாசையிலும் மட்டுந்தானே தர்ப்பணம் அளிக்கும் வழக்கம் நிலவி வருகிறது. முறகாலத்தில் தினசரி பூஜை, சூரிய வழிபாடு போல, நம் மூதாதையர்கட்கும் நாள்தோறும் தர்ப்பணம் அளிக்கின்ற வழக்கம் நிலவி வந்து, தற்போது மறைந்தும் விட்டது. இதனால் தான் கலியுகத்தில் நாம் பலவிதத் துன்பங்கட்கு ஆளாகின்றோம். எந்த மூதாதையர்களின் சொத்தைக் கொண்டு அவர்கள் அளித்த நிலபுலன்கள், இல்லம், பதவி இவற்றையெல்லாம் அனுபவித்துக் கொண்டுள்ளோமோ, ஏன் நாம் தாங்கி இருக்கின்ற இந்த பூத உடல் கூட அவர்கள் இரத்த சம்பந்தத் தொடர்புடைய மனிதப் பிறவிதானே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான், இதற்கு நன்றி வழிபாடாக, அவர்கட்குத் தெய்வீக பூஜையாக நாம் தர்ப்பணத்தை அளிக்கின்றோம்.
தர்ப்பணம் பூஜை ஏனோ? நாம் தர்ப்பணம் என்ற முறையிலே வெறும் எள்ளையும், நீரையும் வார்த்து விட்டால்? அது நம் மூதாதையர்களைத் திருப்திப்படுத்துமா? இதனால் என்ன பிரயோஜனம் என்றெல்லாம் கேட்கத் தோன்றும். இதற்குக் காரணம் அறியாமையே! கண்ணால் கண்டதையே நம்புகின்ற வழக்கத்திற்கு ஆட்பட்டுவிட்ட விஞ்ஞானமயமான இக்கலியுக மனித சமுதாயத்திற்கு அங்கும், இங்கும், எங்கும் பரந்து கிடக்கும், இறைப் பெருங்கருணையினைத் தானே பகுத்தறிந்து உணர்கின்ற தன்மை குறைந்து கொண்டுதான் வருகிறது.
காலம் காலமாக கோடானு கோடி யுகங்களாக ஸ்வயம்பு மூர்த்திகளாக என்றும் விளங்குகின்ற, லிங்க மூர்த்திகளும் அர்ச்சாவதார தெய்வ மூர்த்திகளும் எத்தனை? எத்தனை? இம்மூர்த்திகளெல்லாம் நம் முன்னோர்களால் வழிபடப் பெற்ற சாசுவதமான மூர்த்திகள் தாமே! எனவே, என்றும் நிரந்தரமாக விளங்குகின்ற இறைவன் தம்மைப் பூஜிப்போருக்கும் நிரந்தரத்துவம் அளிப்பதைத்தானே வழிபடப்பட்ட மூர்த்திகளாக விளங்குகின்ற திருத்தல மஹாத்மியங்கள் யாவும் என்றைக்கும் நிரந்தரமானவையாகத்தானே விளங்குகின்றன. நம் முன்னோர்கள் புனித நீராடிய நதிகளைத் தாமே நாமும் இன்று புண்ணிய தீர்த்த நீராடலாக ஏற்றுக் கொண்டிருக்கின்றோம்! எனவே, நம் மூதாதையர்கள் தம் பூத உடலை உகுத்த போதும் அவர்கள் எங்கும் சென்று மறைந்திடவில்லை. பலவிதமான பித்ரு லோகங்களிலும் இன்னமும் கோடானு கோடி லோகங்களிலும் உறைந்து நமக்கு அருள்பாலித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இதனை நாம் உணரும் முகமாகத்தான் தர்ப்பண பூஜை ஒரு பரிபூரண தெய்வ அறிவை ஊட்டுகின்றது.
நம்முடைய மூதாதையர்கள் அனைவருமே பித்ருக்களான இறைப் பெருநிலையை அடைந்து விடுகின்றனரா? நல்லொழுக்கம், சக மக்களிடம் மட்டுமல்லாது விலங்குகள் / தாவரங்கள் என அனைத்து உயிரினங்களிடமுமே அன்பு பாராட்டுதல் போன்ற தெய்வீக குணங்களைக் கொண்டவர்கள் தாம், சுயநலமின்றித் தியாக உள்ளம் கொண்டவர்கள் தாம் பித்ருகளுக்கு உரித்தான நிலையை அடைகின்றனர். ஆனால் நம்முடைய முன்னோர்கள் பெரும்பாலும் சத்குருவின் மேன்மையை  உணர்ந்திருந்தமையால் ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு சத்குருவைத் தேர்ந்தெடுத்து அவர் காட்டுகின்ற நல்வழியிலே தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டமையால் தான் அவர்கள் இன்று உத்தம பித்ரு தேவர்களாக விளங்குகின்றனர் என்பது நிதர்சனமான உண்மையாகும்.
தடம் மாறிச் சென்றவர்கள் தாம் மீண்டும் பிறவிச் சக்கரத்தில் சிக்கி உழல்கின்றனர். முக்கியமான தர்ப்பண நாட்கள் மொத்தம் 96 நாட்களாக ஒரு வருடத்தில் அமைந்துள்ளன. உண்மையில் தினசரித் தர்ப்பண வழிபாடு சிறப்புடையது என்றாலும் கலியுகத்தின் இயந்திர கதியான வாழ்க்கையில் இது சாத்தியமானதா? குறைந்தது 96 தினங்களிலேனும் நன்முறையில் தர்ப்பண பூஜையை மேற்கொண்டாக வேண்டும் என்று நம் பெரியோர்கள் நிர்ணயித்துள்ளனர். ஆனால் இதுவும் சந்திரப் பிறை போல் தேய்ந்து மாதந்தோறும் அமாவாசை தினத்தில் மட்டுமே தர்ப்பணம் என்றே குறுகி விட்டது மிகவும் வேதனைக்குரியது ஆகும்.. எனவே தான், நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் கலியுகத்தில் மறைந்து அல்லது மறக்கப்பட்டு இருக்கின்ற தர்ப்பண பூஜைகளின் மேன்மையை மீண்டும் அனைத்து மக்களுக்கும் எடுத்துரைத்து பிரதோஷம், ஸ்ரீவிஷ்ணுபதி பண்டிகைகளைப் போல தர்ப்பண பூஜைகளின் மேன்மையை ஒவ்வொரு இல்லத்திலும் ஏழை, எளியோர் பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி யாவரும் உய்த்து உணர்ந்து இதன் பலா பலன்களைப் பெறவேண்டுமென்று அரும்பாடுபட்டு வருகின்றார்கள்..
அக்னி சாவர்ணி மனு தினமானது தர்ப்பண நாட்களில் மிகச் சிறந்ததாகும். ஒவ்வொருவருக்கும் ஒரு ஆதி மனு  மூர்த்தியும் மற்றும் கோத்ராதிபதியும் நிச்சயமாக உண்டு. நாம் அனைவருமே ஒவ்வொரு மனு மூர்த்தியின், ஒவ்வொரு மஹரிஷியின், ஒவ்வொரு கோத்ராதிபதியின் வழி வந்தவர்களே. இதில் எவ்வித ஐயமும் கிடையாது. எவ்விதப் பாகுபாடும் கிடையாது. இறைவனின் சாம்ராஜ்யத்தில் அனைத்து உயிர்களும் ஒன்றே!
அக்னி சாவர்ணி மனு என்பார் யார்? 14 மனுக்களுமே ஸ்ரீபிரம்மாவிடம் தோன்றியவர்களே! உலகத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும், ஒரு சிறு துரும்பு முதல் மாமலை வரை, ஒரு சிறு புழுவினம் முதல் விலங்கு, தாவரம், மனிதன், பெரிய யானை வரை அனைவருமே நிலம், நீர், காற்று, அக்னி, ஆகாயம் ஆகிய ஐந்து பஞ்சபூத சக்திகளினால் உருவாக்கப்பட்டவர்கள் தாம். இதில் அக்னி தான் முதன்மை பெறுகிறது. எனவே தான், பஞ்சபூதத் தலங்களுள் அக்னித்தலமாக விளங்குகின்ற அருணாசலமாம் திருஅண்ணாமலையானது இன்றைக்கும் பிரபஞ்சத்தின் தெய்வீக மையமாக (Spiritual  Epicenter)  விளங்கி வருகின்ற பெருமையைப் பெற்று விளங்குகின்றது. இதற்குக் காரணம் என்னவெனில் இன்று பிரபஞ்சத்தில் இருக்கின்ற சூரிய சந்திர கிரஹங்கள், கோடானு கோடி நட்சத்திரங்கள், விளக்கு ஒளி, தீப ஒளி, அடுப்பில் உள்ள அக்னி, மின்மினிப் பூச்சியின் ஒளி, சந்திரனின் சக்திக்கும், ஒளிக்கும் மூல காரணமாக இருப்பது அருணாசல லிங்க மூர்த்தியே!
நீரும் நெருப்பும், சீரும் சிறப்பும் – உண்மையில், அக்னிக்கு ஆறுதலாக, அரவணைப்பாக இருப்பது நீர் ஆகும். நீரும், அக்னியும் நாம் நினைப்பதைப் போல ஒன்றுக்கொன்று முரண்பாடு உடையது அல்ல. நீரின்றி நெருப்பில்லை, நெருப்பின்றி நீரில்லை. எனவே தான், இறைவனை தண்டழல் ஜோதி என்று குறிப்பிடுகின்றார்கள். அழல் போன்று அக்னி ஸ்வரூபமாக விளங்கினாலும் குளிர்ச்சியைத் தருகின்றவனாக, ஜோதிப்ரகாசமாக விளங்குபவன் இறைவன் என்று பொருள். நீங்கள் உண்மையிலேயே அக்னியின் சக்தியை உணர வேண்டுமென்றால், மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திர நாளன்றும், ஞாயிற்றுக் கிழமையன்று ஞாயிறு ஹோரையிலும், திங்கட்கிழமையன்று திங்கள் ஹோரை நேரத்திலும், ஸ்ரீகாளஹஸ்தி, சிதம்பரம், (நாமக்கல் அருகே மோகனூர்) போன்ற இடங்களில் கருவறையின் உள் விளங்குகின்ற எண்ணெய் தீபத்தினை தரிசித்து சற்றே நின்று தீப ஒளியை தியானித்துப் பாருங்கள்! பிறகு புரியும் உங்களுக்கு அக்னியின் மேன்மை யாவும்!
எனவே, அக்னி சாவர்ணி தினமான இன்று தர்ப்பணம் அளிப்பதன் மகத்துவம் என்னவென்றால் இன்று பௌர்ணமி திதியும் கூடுவது ஆகும். என்ன இது?! அமாவாசை தினம் தானே பித்ருக்களுக்கு உரிய தர்ப்பண நாளாக விளங்குகின்றது! பௌர்ணமியில் தர்ப்பண பூஜை எவ்வாறு அமைய முடியும்? ஆம் இந்த பௌர்ணமி திதியில் தான் அக்னி சாவர்ணி யுகாந்திரம் தொடங்கிற்று. இதனைக் குறிக்கும் வகையில்தான், சிறப்பிக்கும் வகையில் தான், இன்றைக்கு அபூர்வமாக, அற்புதமாக அக்னி சாவர்ணி மனு தினமாக அமைகின்ற ஆடி மாதப் பௌர்ணமி தினத்தன்று தர்ப்பண வழிபாட்டினை அர்க்கய பூஜையாக நாம் அளிக்கின்றோம். ஏனென்றால், அக்னி சாவர்ணி மனு மூர்த்தி நீரையும், நெருப்பையும் கொண்டு நல்வாழ்க்கை நடத்துகின்றோம். இவ்விரண்டும் இன்றி நம் வாழ்க்கையின் காரியங்கள் நடைபெறுமா? சற்றே யோசித்துப் பாருங்கள். எனவே, நீரும், நெருப்பும் நமக்குப் பயன்படும் வகையிலும், அவைகளுக்கு நாம் பயன்படும் வகையிலும், நல்விதமான தெய்வீக வாழ்க்கை அமைவதற்கு அக்னி சாவர்ணி மனு மூர்த்தி தான் நமக்கு அருள்பாலிக்கின்றார். இன்றைக்கு நீரும், நெருப்பும் தேவாதி தேவ மூர்த்திகளாக ஆராதிக்கப்பட்டு அவர்களுடைய சாட்சியாக ஸ்ரீஅக்னி சாவர்ணி மூர்த்திக்கு நாம் தர்ப்பண வழிபாட்டினை அர்க்ய பூஜையாக அளித்து நிறைவேற்றுகின்றோம். இந்த தர்ப்பண அர்க்ய நாள் பௌர்ணமி திதியன்று மலர்வதால் இன்று வெள்ளை நிற மணமுள்ள பூக்களை நிலத்தில் அதாவது தரையில் பரப்பி அதன்மேல் தர்ப்பைச் சட்டத்தை வைத்து அர்க்யமாக மூவகை அக்னி மூர்த்திகளுக்கான மந்திரங்களை ஓதி அர்க்யத்தை நிகழ்த்திட வேண்டும்.

ஸ்ரீஆதிவிநாயகர்
திருச்சி நன்றுடையான் கோவில்

அக்னி சாவர்ணி தர்ப்பண முறை
1. முதலில் பிள்ளையாரப்பனைத் துதித்துக் கொள்ளுங்கள். தர்ப்பண அர்க்ய வழிபாட்டிற்கு உரியவருள் பிள்ளையார் மூர்த்தியும் ஒருவரே! அவர்தாம் துதிக்கை இல்லாத ஆதி விநாயக மூர்த்தி ஆவார். நரமுகப் பிள்ளையார் மூர்த்தி என்றும் இவரை அழைப்பர். குறித்த சில தலங்களில் மட்டும்தான் இவருடைய தரிசனத்தைப் பெறமுடியும் (திருச்சி மலைக்கோட்டை அருகே உள்ள நன்றுடையார் ஆலயம், தஞ்சை மாவட்டம் பூந்தோட்டம் அருகே உள்ள கோயில்பத்து எனப்படும் தில தர்ப்பண ஆலயத்தில் உள்ள ஸ்ரீஆதி விநாயகர்)
2. உங்களுடைய குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் துதித்துப் பிரார்த்தனை செய்து கொள்க.
3. அக்னிக்கு உரித்தான அக்னி சாவர்ணி மனுவின் தர்ப்பண நாள் ஆதலின் மூன்று வழியான அக்னி மூர்த்திகளுக்கும் இன்று நாம் அர்க்யம் அளிக்கின்றோம். பொதுவாக இந்த மூன்று வகையான அக்னி மூர்த்திகளுக்கும் அர்க்யம் அளிக்கின்ற பாக்யத்தை நீங்கள் பெறுகின்றீர்கள் என்றால் அது நிச்சயமாக உங்களுடைய பூர்வ ஜென்ம புண்ணிய சக்தியின் ஆற்றலேயாகும். பொதுவாக, ஸ்ரீஅக்னி மூர்த்தியின் சிலாரூபத்தைக் காணுதல் மிகவும் அரிதாம். திருக்கழுக்குன்ற சிவாலயத்தில் நவக்ரஹ மண்டபத் தூண் ஒன்றில் ஸ்ரீஅக்னி மூர்த்தியின் சிலாரூபம் வடிக்கப் பெற்றுள்ளது. இங்கு இம்மூர்த்திக்கு வழிபாடு செய்து அருகில் உள்ள தீர்த்தக் கரையில் அக்னி மூர்த்திக்கு அர்க்ய வழிபாடு அளிப்பது மிகவும் சிறப்புடையதாகும். இதே போன்று, தஞ்சை மாவட்டம், நன்னிலம் அருகே திருப்புகலூரிலும் அக்னி பகவானுக்குரித்தான சிலாரூபத்தைக் கண்டு தரிசித்து ஆனந்தித்திடலாம்.
தர்ப்பண அர்க்ய பூஜை
4. அக்னி சாவர்ணி மனுவிற்கு அர்க்ய பூஜை அளிப்பதற்கு முன்னால் நம்முடைய மூன்று வகை மூதாதையர்களான :-
அ). வசுதேவ பித்ருக்கள் : ஆ) ருத்ர தேவ பித்ருக்கள் இ) ஆதித்ய தேவ பித்ருக்கள் ஆகிய மூன்று வகையினருக்கும் உரித்தான தர்ப்பண அர்க்யத்தை அளித்திட வேண்டும். இன்று பௌர்ணமி தினம் சேர்ந்திருப்பதால், அமாவாசையில் அளிப்பதைப் போல தர்ப்பயாமி என்று தர்ப்பணத் தாரையாக அளித்திடாமல் இன்று மட்டும் பௌர்ணமிக்கு உரித்தான விசேஷமான முறையில், “அர்க்யம் தர்ப்பயாமி” என்று அர்க்ய பூஜை அளிக்கின்றோம். இன்று மல்லிகை மலர்களின் மேல் அமைக்கப்பட்டுள்ள தர்ப்பணச் சட்டத்தில் முதலில்
வசுதேவ மூர்த்திம் தர்ப்பயாமி!
ருத்ரதேவ மூர்த்திம் தர்ப்பயாமி!
ஆதித்ய தேவ மூர்த்திம் தர்ப்பயாமி!
என்று ஒவ்வொரு துதியையும் மூன்று முறை சொல்லி விரல் நுனிகளின் வழியாக நீரை வழியச் செய்து அர்க்ய பூஜை செய்திடுதல் வேண்டும். அமாவாசையின் போது தர்ப்பணமாக இது அமைவதால், பொதுவாக பித்ருக்களுக்கு வலது கட்டை விரலும், ஆள்காட்டி விரலுக்கும் இடையேயுள்ள பகுதியில் நீரை வழியச் செய்து
வசுதேவ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி!
ருத்ர தேவ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி!
ஆதித்ய தேவ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி!
என்று அமாவாசையன்று தர்ப்பண தாரை அளிக்கின்றோமல்லவா? ஆனால், இந்த அக்னி சாவர்ண மனு தினத்தன்று பௌர்ணமியும் சேர்வதால் தர்ப்பணத் தாரையாக அல்லாமல் தர்ப்பண அர்க்ய தாரையாக நாம் அளிக்கின்றோம்.  தர்ப்பண அர்க்யம் என்றால்.... தர்ப்பணத் தாரைக்கும், தர்ப்பண அர்க்யத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், பொதுவாக, பித்ருக்களுக்கு மட்டும்தான் தர்ப்பணத் தாரை அளிக்கப்படுகின்றது. அதாவது நம் கையில் எவ்வாறு ஒன்பது நவக்ரஹ மூர்த்திகளுக்கும் உரித்தான லோகங்கள் அமைந்துள்ளனவோ,  எவ்வாறு ஒவ்வொரு விரலும் ஒவ்வொரு கிரஹத்தைக் குறிக்கின்றதோ, எவ்வாறு உள்ளங்கையில் சந்திர மேடு, செவ்வாய் மேடு, குரு மேடு என்று நவக்ரஹத்தின் மேடுகளும் அமைந்துள்ளனவோ, அதே போல, கட்டை விரலுக்கும் (வலது), ஆள்காட்டி விரலுக்கும் இடைப்பட்ட பகுதிதான் பித்ருலோகப் பகுதியாக விளங்குகின்றது.

ஸ்ரீநடராஜர் திருப்புகலூர்

இதன் வழியே நாம் நீரைத் தாரையாக ஊற்றி, தர்ப்பையின் மீது விழச் செய்யும் போது, இது தர்ப்பணத் தாரையாக  மாறுகின்றது. பித்ரு லோகமானது நீர் சூழப்பட்டு இருப்பதால் எப்போதுமே பித்ருக்கள் நீர்ப் பாசத்தையே மீன்களைப் போல விரும்புகின்றார்கள். எனவே தான் சீதளத் தன்மையை அளிப்பதாக நாம் தர்ப்பண நீர்த் தாரையாக அளிக்கின்றோம். அமாவாசையன்று சூரிய/சந்திர மூர்த்திகள் ஒன்று சேர்கின்றனர் அல்லவா! இறைவனுடைய வலது கண் சூரியனாகவும், இடது கண் சந்திரனாகவும் இருப்பதால் இறைவன் இரு விழிகளையும் ஒன்று சேர்த்து, இறைப் பரம்பொருள் மூர்த்தியானவர் ஆதவ அமுத யோகம் பூணும் போது இருவிழிகளின் சங்கமத்தில் ஏற்பட்ட அருள் ப்ரவாகத்திற்கே – அதாவது சூரிய விழியும் சந்திர விழியும் சேருகின்ற சங்கமத்தில் தான் – அமாவாசை பிறக்கின்றது  இதனை ஒட்டித் தான் “இறைவனுடைய புருவ நெற்றியில் அமாவாசை பிறக்கின்றது” என சித்புருஷர்களின் காண்டங்கள் நன்முறையில் விளக்குகின்றன. அப்படியானால் இதே முறையில் பௌர்ணமிக்கான விளக்கம் என்ன?
அக்னி சாவர்ணி மனு – தர்ப்பண நாள் – இறைவன் ஆக்கல், காத்தல், அழித்தல், என்ற மூன்று தொழில்களையும் நிறைவேற்றுவதற்காக எப்போதும், அசைந்தும், அசையாமலும் அசலதீபேஸ்வரனாகவும், ஆடல் வல்லானாகவும் பலவித ரூபங்களில் நாட்டியம் ஆடிக் கொண்டுள்ளான். இதுவே நடராஜ தத்துவம் ஆகும். இறைவன் தன்னுடைய தெய்வீகத் திருநடனத்தை நிறுத்துவதே கிடையாது. இன்றைக்கும் சென்னை அருகிலுள்ள திருவாலாங்காட்டில் காரைக்காலம்மையாருக்காக இறைவன் திருநடனம் ஆடிக் கொண்டுள்ள திருவிளையாடலை உணர்த்தி இதனை நிரூபித்துக் கொண்டிருக்கின்றார். இங்கு நாற்புறமும் மூடப்பெற்ற திருச்சுவரினுள், காரைக் காலம்மையார் இறைவனுடைய திருநாட்டிய ஒலியை கேட்டுக் கொண்டுள்ள ஐதீகத்தை இன்றும் நாம் இத் திருக்கோயிலில் காணலாம்.
இறைவனுடைய நாட்டியங்களில், கோடிக்கணக்கான அபிநயங்களும், வகைகளும் உண்டு. இதில் ஒன்றுதான் அர்த்த நேத்திர நடனமாகும். இந்த நடனத்தின் போது இறைவனுடைய வலது விழிக் கோளமானது வலக் கண் ஓரத்திற்கும், இடது விழிக் கோளமானது இடக்கண் ஓரத்திற்கும் செல்வதால், இரண்டு விழிகளுக்கிடையே உள்ள நேத்ர பிரபஞ்ச அயனாம்சம் பெருகுகிறது. இந்த அற்புதமான நேத்ர நிலை நடனமே அர்த்த நேத்ர நடனமாகும். அதாவது இரண்டு விழிப் பார்வைகளையும், இரு ஓரங்கட்கும் நகர்த்திச் செல்லுதலாகும். இந்த நடன பாவமானது, அபிநயமானது மிகவும் கடினமான தொன்றாகும். இந்நிலையில் இறைவன் அர்த்த நேத்திர நடனத்தை இயக்கும் போது ஏற்படுகின்ற பேரொளித் துகளில், சிறு அணுத்துகளே பௌர்ணமி கிரண ஒளி. ஏனென்றால், இரு விழியோரம் காட்டிய பாவனையில் எழுகின்ற ஒளிக் கதிர்களை, இறைவன் சிரசில் பொலியும் சந்திர பகவான் கிரஹித்து அதனைப் பௌர்ணமிச் சந்திரனாக நமக்கு அளிக்கின்றான். அதாவது பௌர்ணமி திதியன்று தான் சர்வேஸ்வரன் மேற்கண்ட அர்த்த நேத்திர நாட்டிய பாவனையில் நாட்டிய சாங்கியத்தை மேற்கொள்கின்றார் என்று சொல்வதும் சாலப் பொருத்தமே!
5. இன்று அக்னி சாவர்ணி மனு தர்ப்பண நாளில் பௌர்ணமியும் சேர்வதால் மூன்று வகையான அக்னி மூர்த்திகட்கும் இன்று அர்க்யம் அளித்து வழிபடுதல் வேண்டும். ஆம் அக்னியில் பல வகையுண்டு. நம்மை ஆள்கின்ற, நமக்கு அருள்பாலிக்கின்ற 14 மனு மூர்த்திகட்கும் இன்று தர்ப்பண அர்க்யம் அளித்திட வேண்டும் ., அவர்தம் சந்ததிகளான நாமனைவரும் ஒவ்வொரு மனுவின் கீழ் வந்தவர்களே! இதில் எவ்விதப் பாகுபாடும் கிடையாது. புழுவோ, பூச்சியோ, வண்டோ, தாவரமோ, விலங்கோ, பறவைகளோ, மனிதனோ, ஆணோ, பெண்ணோ –அனைவரும் ஒவ்வொரு மனு மூர்த்தியின் கீழ் ஜீவவாழ்க்கை பெற்றவர்கள் தாம்! எனவே, உள்ளங்கையில் நீரை ஏந்தி, விரல் நுனிகளின் வழியே நீரைத் தாரையாக வார்த்து, ஒவ்வொரு மனுவினுடைய நாமத்தை ஓதி தர்ப்பையின் மேல் நீர்த் தாரையை வார்த்து இன்று அர்க்யம் அளித்திடுதல் வேண்டும்.
ஓம் ஸ்வாயம்பு மனு தர்ப்பயாமி:
ஓம் சுவாரோஷின் மனு தர்ப்பயாமி:
ஓம் உத்தம மனு தர்ப்பயாமி:
ஓம் தாமஸா மனு தர்ப்பயாமி:
ஓம் ரைவத மனு தர்ப்பயாமி:
ஓம் சாட்சுஷ மனு தர்ப்பயாமி:
ஓம் வைவஸ்வத மனு தர்ப்பயாமி:
ஓம் அக்னிசாவர்ணி மனு தர்ப்பயாமி:
ஓம் தட்ச சாவர்ணி மனு தர்ப்பயாமி:
ஓம் பிரம்மசாவர்ணி மனு தர்ப்பயாமி:
ஓம் தர்மசாவர்ணி மனு தர்ப்பயாமி:
ஓம் ருத்ரசாவர்ணி மனு தர்ப்பயாமி:
ஓம் ரௌச்யன் மனு தர்ப்பயாமி:
ஓம் பௌத்யன் மனு தர்ப்பயாமி:
என இவ்வாறாக நாம் ஆதி முதலிலிருந்து தோன்றியபடி அனைத்து மனு தேவ மூர்த்திகட்கும் தர்ப்பண அர்க்ய பூஜை நிகழ்த்திடுக!
6. இதன் பின்னரே முக்கியமான மூன்று அக்னி தேவதா மூர்த்திகளுக்கானத் தர்ப்பண பூஜை தொடங்குகிறது.
ஸ்ரீஆகவநீய அக்னி மூர்த்தி தர்ப்பயாமி
ஸ்ரீதக்னாக்நீய அக்னி மூர்த்தி தர்ப்பயாமி
ஸ்ரீகார்கபத்ய அக்னி மூர்த்தி தர்ப்பயாமி
என்று உள்ளங்கை நீரை மோதிர விரல் வழியே நீர்த்தாரையாக நிலத்தில் தாரையாக ஊற்றுதல் வேண்டும். அக்னி அம்சம் நிறைந்ததே சூரிய விரலாகிய மோதிர விரல், எனவேதான் விபூதி, குங்குமத்தை இடுகையில் மோதிர விரலில் தொட்டு நெற்றிக்கு இட்டுக் கொள்கின்றோம். பலவகையான அக்னிகளுள் மேற்கண்ட இம்மூன்றும் மிகவும் முக்கியமானவையாகும்.

ரிஷபாயன கோமுகம் ரிஷிவந்தியம்

ஸ்ரீமகாவிஷ்ணு ரிஷிவந்தியம்

நேரடி அக்னி ஸ்பரிச உணவு .... இன்று அக்னி மூர்த்திக்குப் ப்ரீதியான பொருட்களை இறைவனுக்கு நைவேத்தியம் செய்து தானமாக அளித்தல் தான் அக்னி சாவர்ணி மனு தர்ப்பண பூஜையைப் பரிபூரணம் அடையச் செய்யும் நெருப்பில் நேரடியாக சமைக்கப்படுகின்ற பொருட்களை இன்று அன்னதானமாக அளித்தல் மிகவும் விசேஷமானதாகும். ஸ்ரீஅக்னி சாவர்ணி மனுவிற்கு மிகவும் ப்ரீதியான பொருளாக அமைவது பெரிய கத்திரிக்காயை நேரடியாக நெருப்பில் சுட்டு அதனைத் தயிர்ப்பச்சடியாக மாற்றுவது ஆகும்.
நாம் முன்பே கூறியது போல, நீரும், நெருப்பும் நிறைந்த தெய்வீக சக்தியைக் கொண்டவரே “ஸ்ரீஅக்னி சாவர்ணி மனு மூர்த்தியாவார்” எனவே, சீதளத் தன்மை, (நீர்த்தன்மை) நிறைந்த தயிருடன், நீர்த் தன்மை சேர்ந்த கத்தரிக்காயை நேரடியாகவே தணலில் (பாத்திரம் ஏதும் இல்லாமல்) சுட்டு தயிர்ப் பச்சடி செய்தல் வேண்டும். முற்காலத்தில் இது, மிகச் சிறப்பான அர்க்ய நைவேத்தியப் பொருளாக விளங்கியது. சூடும், குளிர் தன்மையும் சேரும் அபூர்வ உணவு இது! சோளத் தண்டை நெருப்பில் வாட்டி சோளப் பொரிதானம், அப்பளத்தை நெருப்பில் சுட்டு அளித்தல்.. (எண்ணெயில் பொரிக்காமல், அக்னியில் சுடுதல்), சர்க்கரை வள்ளி, பனங்கிழங்குகளைச் சுட்டு தானம், கோதுமைச் சப்பாத்தியை நேரடியாகத் தணலில் சுக்கா ரொட்டியாக சுட்டு அன்னதானம் செய்தல், பலாக் கொட்டையை நெருப்பில் சுட்டு கூட்டுப் பொரியலாக தானம், வாழைக்காயை அனலில் சுட்டுப் பின் கறிசமைத்தல், பனம்பழத்தையும் அனலில் சுட்டும் தானமளிக்கலாம். அதாவது பொதுவாக இன்று அக்னியில் நேரடியாக சுட்டு செய்யப்படும் அனைத்து உணவு வகைகளையும் தானமாக அளித்தல் மிகவும் விசேஷமானதாகும்.

ஸ்ரீஅக்னிபுரீஸ்வரர்
திருக்காட்டுப்பள்ளி

தர்ப்பணத்திற்கான தலங்கள் :- அக்னி சாவர்ணி மனு தர்ப்பண பூஜையைச் செய்ய வேண்டிய சிறப்பான திருத்தலங்களும் உண்டு. எங்கெல்லாம் ஈஸ்வரன் ஸ்ரீஅக்னிஸ்வரனாக எழுந்தருளியுள்ளானோ, அத்திருக்கோயில்களின் தீர்த்தக்கரையில், குளங்களில் இத்தர்ப்பண அர்க்யப் பூஜையைச் செய்தல் சிறப்பானதாகும். (தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கஞ்சனூர், திருக்காட்டுப்பள்ளி, சூரியகோடிமூலை (கஞ்சனூர் அருகிலேயுள்ளது..) வயலூர் போன்ற திருத்தலங்களும், அக்னி தீர்த்தம் உள்ள ராமேஸ்வரம், திருவிடைமருதூர், கும்பகோணம் சக்கரப்படித்துறை மற்றும் அக்னி தீர்த்தம் உள்ள இடங்களும், திருஅண்ணாமலையும் இத்தர்ப்பணத்திற்குரித்தான சிறப்பானத் தலங்களாகும்..) பொதுவாக, தம்முடைய பெற்றோர்களை ஏசி, திட்டி, துன்புறுத்தி சாபத்திற்குள்ளானோர் பலர் உண்டு.
இவ்வாறாக அதர்மமான முறையில், தம் உறவினர்களை வதைத்து விரட்டியோருக்குப் பரிகாரம் தருவதாக அமைவதே இந்த அக்னி சாவர்ணி மனுத் தர்ப்பண அர்க்ய வழிபாடு ஆகும். இவ்வாறு தன்னால் பாதிக்கப்பட்டவர்கட்குத் தக்க உதவி செய்து, அவர்கட்கு மறுவாழ்வு அளிப்பது மிகவும் முக்கியமானதாகும். கணவன், மனைவியரிடையே பல தகாத வார்த்தைகளால் பிரிவு ஏற்படுவதும் உண்டு. இதனை இன்று உணர்ந்து ஸ்ரீஅக்னீஸ்வர லிங்க மூர்த்தி இருக்கும் இடங்களில் அடிப்பிரதட்சிணம் செய்து அக்னி சாவர்ணி மனு தர்ப்பண அர்க்யப் பூஜையையும் நிறைவேற்றி மேற்கண்ட முறையில் அன்னதானமும், செய்திடில் இருவரும் இணைந்து மீண்டும் நன்முறையில் வாழ்வதற்கான நன்னிலை ஏற்படும் சுமுகமான குடும்ப வாழ்வு மலரும்.
பதவி, அதிகாரம், கர்வம் காரணமாகப் பலரை ஏசி மனதிற்குத் துன்பத்தை விளைத்தோர் ஏராளம் – உடல் துன்பத்தை விட உள்ளத்தைக் குத்துவதால் ஏற்படும் பாவங்கட்கு விளைவுகள் அதிகமோ அதிகம், எனவே, இத்தகைய குற்றங்கட்கு ஆளானோர் இப்பிறவியிலேயே தக்க பிராயசித்தம் பெற்றாக வேண்டும். இல்லாவிடில் மறுபிறவியில் தம்மால் துன்புறத்தப்பட்டவர்களே தமக்கு மேல் அதிகாரிகளாக வந்து, அதே கொடிய நிலை இவர்களுக்கும் தொடரும். எனவே, இத்தகையோர் தங்களுடைய குற்றங்கட்கு இன்று மனதார வருந்தி அக்னி சாவர்ணி மனுத் தர்ப்பணம் செய்து பாதிக்கப்பட்டோருக்கு, நிதி உதவியும் ஏனைய சேவைகளையும் அளித்தும் பிராயச்சித்தம் தேடி ஆக வேண்டும். இது பிரமாதி வருடத்தில் ஒரேயொரு முறை மட்டும் கிட்டும் தெய்வீக வாய்ப்பு ஆகும்.
நில தோஷங்களை நீக்கும் தர்ப்பண அர்க்யம் – பலரும் நிலபுலன்களையும், வீடுகளையும் வாங்கும் பொழுது, அதிலுள்ள நிலதோஷங்களைப் பற்றி அறியாமல் வாங்கி விடுகின்றனர். நிலத்தில் சிறு எலும்புத் துண்டு இருக்குமாயின் கூடவே அது பெருந்தோஷமாக மாறி குடும்பத்தையே பாதிக்கும். கோழி, பாம்பு, முதலை, ஆடு, மாடு , பன்றி, நாய் என பலவித விலங்குகளைப் புதைத்த பூமியில் வீடோ, கட்டிடமோ, அலுவலகமோ நிலமோ அமையுமானால், அதற்குக் தக்க பிராயசித்தத்தைச் செய்தாக வேண்டும். இல்லாவிடில் இது சந்ததியினரை பாதித்துவிடும். மேலும் பல துன்பங்களும், பெரும் நஷ்டங்களும் ஏற்படும். இதற்குப் பிராயசித்தமாகவும் இன்று உங்களுடைய இல்லத்தில் நிலத்திலேயே இந்த அக்னி சாவர்ணி மனு தர்ப்பண அர்க்யப் பூஜையைச் செய்யுங்கள். ஏனெனில், இந்த தர்ப்பண நீர்த்தாரை உங்கள் நிலத்தில் படும்பொழுது அது பலவிதமான தோஷங்களைப் போக்குகிறது. இன்று மேற்குறித்த வகைகளான அக்னியில் நேரே செய்யப்படுகின்ற உணவுப் பொருட்களை அன்னதானம் செய்தலால் மேற்கண்ட நில தோஷங்கட்கும் பிராயசித்தம் கிட்டும். ஏனென்றால் பூமியில் விளைகின்ற பொருட்களை அக்னியிலிட்டு அன்னதானம் செய்கின்ற போது அது பூமாதேவிக்கும் ப்ரீதி தருவதால் நில தோஷங்கள் நீங்கும்.
ஈச பாத்திர தேவதா முற்றமே கோயில் கோமுகம்!

கோமுகம் திருநல்லூர்

கோமுகத்தை சுத்தம் செய்வீர்! கோடானு கோடி தேவதா சக்தி பெறுவீர்!  கோயில்களின் மூலஸ்தானத்திலிருந்தோ, கருவறையிலிருந்தோ அல்லது ஏதேனும் இறைச் சன்னதியிலிருந்தோ அபிஷேக நீர் வெளிவருகின்ற நீர்த்தாரைக்கே “கோமுகம் (ஈச பாத்திர தேவதா முற்றம்)” என்று பெயர். பெரும்பாலும் கோமுகத்தின் மேற்புறத்தில் ஸ்ரீபிரம்மா மூர்த்தி கோஷ்ட மூர்த்தியாக எழுந்தருளியிப்பார் பெரும்பாலான சிவாலயங்களில்! திருப்பதி ஆலய மூலத்தான கோமுகம் ஆதிசேஷனின் சக்தியைக் கொண்டதாகும்.. கோமுகத்தில் எப்போதும் கோடானு கோடி தேவதா மூர்த்திகள் உறைகின்றனர்.. கோமுகத்திலே பல வகைகள் உண்டு.
திருச்சி அருகே திருமழபாடி, திருஅண்ணாமலை அருகே உள்ள ரிஷிவந்தியம் போன்ற திருத்தலங்களில் நான்கு நந்திகளுடன் கூடிய அதியற்புதமான மிகவும் சக்தி வாய்ந்த கோமுக அமைப்பு காணப்படுகின்றது. பொதுவாகவே தற்போது ஆலயங்களில் பால் அபிஷேகம், தேன் அபிஷேகம் போன்றவற்றிற்குப் பிறகு கோமுகத் தாரையினை சரிவரச் சுத்தம் செய்யாத காரணத்தினால் கசடுகள் நிறைந்ததாகவும், துர்நாற்றம் உள்ளதாகவும் கோமுகம் விளங்குகின்றது. ஆலயத்திற்குச் செல்கின்ற பக்த கோடிகள் கைகூப்பி வணங்கி வலம் வந்து இறைவனை வணங்குவது மட்டும் அல்லாது ஏதேனும் சரீர சேவையைச் செய்தால் தான் அவர்களுக்குக் காரிய சித்தி எளிதில் கிட்டும். கோமுகத் திருப்பணி பணக் கஷ்டத்தைப் போக்கும். பலரும் ஒன்று சேர்ந்து தினமும் நான்கைந்து வாளிகளில் நல்ல சுத்தமான நீரைக் கொணர்ந்து தக்க அனுமதியுடன் கோமுக நீர்த் தாரையை தினந்தோறும் சுத்தம் செய்து வருவார்களேயானால் இது மிகச் சிறந்த இறைப்பணியாக விளங்குவது மட்டும் அல்லாது பெறுதற்கரிய புண்ணிய சக்தியைத் தந்தருள்வதாகும். எனவே, கோமுகத்தை சுத்தம் செய்கின்ற தெய்வீக வாய்ப்பு கிட்டுமேயானால் அதனை நழுவ விடாதீர்கள். கோடானு கோடி கோமுக தேவதைகளின் அனுகிரகத்தைப் பெறுதல் என்றால் எளிதானதொன்றா!
ஒவ்வொரு நட்சத்திரத்திலும், திதியிலும், கிழமையிலும் கோமுக நீர்த் தாரையிலிருந்து பெறப்படுகின்ற விசேஷமான அபிஷேக தீர்த்தத்திற்கு விதவிதமான பலன்கள் உண்டு. எம் ஆஸ்ரம வெளியீடான கோமுக மஹிமை என்னும் நூலில், கோமுகத்தின் தெய்வீக ரகசியங்களையும், கோமுகத்தை வழிபட வேண்டிய விசேஷமான முறைகளையும் காணலாம்.  மனக் கசடுகளையும் அகற்றி முறையற்ற காரியங்களினால் பெரும் பாவத்தைச் சுமந்து கொண்டிருக்கும் இந்த உடலுக்குத் தக்க பாவநிவர்த்தியைத் தருவதே கோமுக சுத்தித் திருப்பணியாகும்.. எனவே கோமுக பூஜையையும், கோமுகத்தை சுத்திகரிக்கும் சிறப்பான இறைப்பணியையும் மேற்கொண்டிட அன்பர்களை வேண்டுகின்றோம்.

உய்யவந்த அம்பாள்

அழைத்தால் போதும் அருள் மழை பெய்யும் உய்ய வந்த அம்பாள்
வாழ்க்கையின் மீதுள்ள வெறுப்பு நீங்கிடவும் வாழ்க்கையின் மீது ஏற்படுகின்ற விரக்தி நிலையை நிவர்த்தி செய்வதற்குமான விசேஷமான திருக்கோயில் ஒன்று உண்டு என்று நாம் அறிந்தோம் அல்லவா, அது எங்கு இருக்கின்றது? மனித வாழ்வின் முதன்மையான இலட்சியமே இறைநினைவுடன் இறை நெறியில் இறைத் திருப்பணியைச் செய்து இறைவனுடைய அடிமையாக வாழ்வதேயாகும். ஆனால் இதனை விடுத்து மனிதன் தன் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காகவும், பேராசைகளையும், நிராசைகளையும் பூர்த்தி செய்வதற்காகவும், அதர்மம், அநீதி, அசத்யமான செயல்களில் ஈடுபட்டுப் பாவங்களைச் சேர்த்துக் கொள்கின்றான். பக்தியைப் பெருக்குவதைத் விடுத்து அதர்மமான வசதிகளையும், ஆசைகளையும் பெருக்கி, பிறவிகளையும் அல்லவா மனிதன் விருத்தி செய்து கொள்கின்றான்! என்னே கேவலமான வாழ்க்கை!
 இது பெறுதற்கரிய மானுடப்பிறவி அன்றோ! நடந்தது நடந்தவையாகவே இருக்கட்டும். கடந்த கால வாழ்வை மறந்து விடுங்கள்! இனியேனும் இந்நாளிலிருந்து, இந்த விநாடியிலிருந்து புனிதமான வாழ்க்கையை வாழத் தலைப்படுங்கள்! நீங்கள் விலைமதிப்பற்ற மனிதப் பிறவியை பெற்றிருப்பதற்குக் காரணமே இந்த பூத உடலால் பிறருக்கு எந்த அளவிற்குச் சேவை செய்ய முடியுமோ அதனையே இறைப்பணியாக ஆற்றுவதற்காகத்தான். இவ்வாறு இம்மனித வாழ்வைப் புனிதமாக்குவதே வாழ்வின் இலட்சியமாகும். இதற்கான முதற்படியான இறைநெறியை உங்கள் உள்ளத்தில் புகுத்துவதற்காக அமைந்திருப்பதுதான் நாம் குறிப்பிடுகின்ற இந்த அரிய இறைத்தலமாகும்.. காரைக்குடி அருகே புதுவயல் என்னும் சிறுநகரத்தின் எல்லையில் சாக்கோட்டை என்னும் பகுதியில் ஸ்ரீஉய்யவந்த அம்மன் என்ற அற்புதமான சக்தி வாய்ந்த அம்பாள் அருள்பாலிக்கின்றாள். கலியுகத்திலே மிகவும் சக்தி வாய்ந்த, பிரத்யட்சமான பலன்களை நல்குகின்ற பராசக்தி! இச்சிறு கோயிலின் அருகே உள்ள தீர்த்தம் மிகுந்த தெய்வீக சக்தி உடையது ஆகும். குன்ம நோய் போன்ற பலவித கொடிய நோய்களையும் போக்கவல்ல அருமருந்தே இத்தீர்த்தமாகும். ஸ்ரீஉய்ய வந்த அம்மன். அதாவது நம் வாழ்க்கையை உய்விப்பதற்காக, நமக்காக உய்ய வந்த அம்பிகை இந்த தெய்வமூர்த்தியே! பெறுதற்கரிய இந்த மனிதப்பிறவியை எடுத்துவிட்டு இந்த வாழ்க்கையின் மீது விரக்தி கொள்ளலாகுமா! வீணே கழிக்கலாகுமோ! இது மாபெரும் தவறுதான். எனவே, உங்கள் வாழ்க்கையை உய்விப்பதற்காக வந்த ஸ்ரீஉய்ய வந்த அம்பிகையை செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களிலும்,

சாக்கோட்டை காரைக்குடி

ஸ்ரீமுருகப் பெருமான் குமாரவயலூர்

1. செவ்வாய் அன்று இராகு காலத்திலும்,
2. வெள்ளிக் கிழமையன்று சுக்கிர ஹோரை நேரத்திலும் (காலை 6-7 பகல் 1-2 இரவு 8-9 மணி)
3. ஞாயிறன்று அபிஜித் முகூர்த்தம் எனப்படும் பகல் உச்சிக் காலத்திலும் அம்பிகைக்கு மஞ்சள் நிறப் பட்டாடை சார்த்தி, அலங்கரித்து, ஆராதித்து பட்டாடைகளை ஏழைகளுக்கு தானமாக அளித்து வருதலாலும்,
4. இந்த மூன்று தினங்களிலும் மேற்குறித்த  நேரங்களில் அம்பிகையை அடிப்பிரதட்சிணம் செய்து வருதலாலும்
5. கிழக்கு, மேற்கு, வடக்கு ஆகிய மூன்று திசைகளிலும் சந்தனம், மஞ்சள், குங்குமம் இடப் பெற்ற ஆறு அல்லது ஒன்பது புதிய செங்கற்களை வைத்து பசுநெய் தீபத்தால் அடுப்பை ஏற்றி சூரிய சாட்சியாக வெண்பொங்கலோ, சர்க்கரைப் பொங்கலோ ஆக்கி ஸ்ரீஉய்ய வந்த அம்பிகைக்குப் படைத்து அன்னதானமாகத் தொடர்ந்து அளித்து வந்தால் வாழ்க்கையின் மீதுள்ள விரக்தி அறவே நீங்கிவிடும். கணவன், மனைவியரிடையேயுள்ள சச்சரவுகளும், ஒற்றுமையின்மையும் தீர்ந்து குடும்ப வாழ்க்கை சாந்தமாக அமைய உதவும் அம்பிகை! மிகவும் சக்தி வாய்ந்த ஸ்ரீஉய்யவந்தம்பாள்! உங்களை நல்வழியில் உய்ய வைக்கக் கூடிய அம்மனே உய்யவந்த அம்பாள்! துன்பங்களிலிருந்து நம்மை விடுவித்து நம்மை உய்விப்பதற்கென்றே ஓர் அம்பிகையாக சர்வேஸ்வரி அவதாரம் எடுத்து இருக்கையில் வாழ்வதற்கு பயமேன்? வாழ்க்கையில் வெறுப்பு ஏன்? ஸ்ரீஉய்யவந்த அம்மனின் மஹிமையை அறிந்து விட்டோமல்லவா? அவள்தம் திருப்பாதங்களைச் சரணடைவது தானே நம்முடைய முதல் வேலை!

தேவர்மலை

அந்தர் வாஹினியின் அற்புதம்! – தேவர் மலை பிரம்ம தீர்த்தம்
திருச்சி மாவட்டம் குளித்தலை அருகே குருணி குளத்துப்பட்டியில் உள்ள தேவர்மலையில் விளங்குகின்ற புராதனமான ஸ்ரீநரசிம்மர் ஆலயத்தைப் பற்றி இப்போது தெரிந்து கொண்டுவிட்டீர்கள் அல்லவா! எங்கிருந்து ஊற்று நீர் பெருகுகின்றது என்று எவரும் கூறயிலாதபடி தேவரகசியமாக அந்தர் வாஹினியாக நின்று இங்கு கோமுகத்திலிருந்து சுரந்து கொண்டிருக்கிற நீருற்றானது பல்கிப் பெருகி ஒரு சிறு பிரம்ம தீர்த்தக் குளமாய் இன்று மக்களுக்கு அருள் பாலிக்கக் காத்துக் கிடக்கின்றது. மிகவும் புனிதமான இத்திருகுளத்து நீரில் எவ்வித தீட்டும் தோஷமும் இல்லாது ஆண், பெண் இருபாலாரும் தரிசித்து வழிபடுக! மாதவிலக்குத் தீட்டு உள்ள பெண்கள் அந்நாட்களில் இத் தீர்த்த பூஜையைத் தவிர்த்திட வேண்டும். இக்குளத்து நீரை நல்ல காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்திட வேண்டும். தற்காலத்தில் தவறான அசூயையான காரியங்களுக்குத் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதாக அறிந்து நாம் வேதனை அடைகின்றோம். இத்தகைய தவறுகள் இனியேனும் நேரா வண்ணம் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திடுதல் வேண்டும். ஏனெனில் கலியுகத்தில் கிடைத்தற்கரிய தீர்த்தம் இது!

ஊத்துக் கோட்டை அருகே சிவபெருமான் ஸ்ரீரெங்கநாதரைப் போல சயனித்த நிலையில் அருள்பாலிக்கின்ற் சுரட்டப்பள்ளி என்ற சிவத்தலத்திற்கு அப்பால் ராமகிரியில் சிவன் கோயில் உள்ளது.., தேவர் மலையில் உள்ளது போன்று இங்குள்ள குளத்திலும் ஒரு நந்தி வாய் கோமுகத்தின் வழியே எப்போதும் 24மணி நேரமும் நீர் சுரந்து ஊற்றிக் கொண்டிருக்கின்றது. இதனுடைய ஆதியும், மூலமும் கூட முப்பத்து முக்கோடி தேவரும் அறியமுடியாத தேவ இரகசியமாக விளங்குகின்றது. தேவர் மலையில் உள்ள அந்தர் வாஹினி கோமுகத்தைத்தான் நீங்கள் இவ்விழதின் பின்புற அட்டைப் படத்தில் காண்கின்றீர்கள். இக்கோமுகத்திற்கு உரிய வழிபாடுகளைத் தொடர்ந்து செய்து வந்தால் பலவிதமான அற்புதமான பலன்களைப் பெற்றிடலாம். பல கடுமையான நோய்களையும் தீர்க்கக்கூடிய ஒரு மாமருந்தாக விளங்குகின்றது இத்தீர்த்தம். மேலும் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் மாதவிலக்குத் தீட்டுடன் அறிந்தோ, அறியாமலோ பலவிதமான தோஷமுள்ள காரியங்களைச் செய்திருக்கக்கூடும். இதற்குப் பிராயச்சித்தமாக இவர்கள் புனிதமான இத்தீர்த்த வழிபாட்டை தேகசுத்தியுள்ள நாட்களில் மேற்கொள்ள வேண்டும். மாதவிலக்குத் தீட்டு போன்றவற்றுடன் பெண்கள் இத்தீர்த்தத்தை அணுகுதல் கூடாது. உடல் சுத்தி உள்ள பெண்மணிகளே இத்தீர்த்த வழிபாட்டினை மேற்கொண்டிடலாம்.

தேவர்மலை பிரம்ம தீர்த்தம்

பிரம்ம தீர்த்தத்தின் மஹாத்மியம் – பின் அட்டைப் பட விளக்கம்
தேவர் மலை (பத்ம) பிரம்ம தீர்த்தமானது தன்னகத்தே எத்தனையோ அருள்பாலிக்கும் தன்மைகளைக் கொண்டு உள்ளது. இங்கு உடல், மன, தேக சுத்தியுடன் நீராடி கோமுகத்திற்கு பூஜை செய்து வலம் வந்து ஸ்ரீநரசிம்ம பெருமாளைத் தரிசிப்போருக்கு அறிந்தோ, அறியாமலோ மாதவிலக்கு போன்ற தீட்டு தோஷங்களுடன் செய்த காரியங்களுக்கு பிராயச்சித்தங்கள் கிட்டும். பலவிதமான குடும்பப் பிரச்னைகளாலும், சண்டைகளாலும் கணவனை விட்டுப் பிரிந்து வாழ வேண்டிய துர்பாக்ய நிலைக்கு ஆளானோரும், கணவருடைய மூர்க்கத்தனத்தாலும் கெட்ட பழக்கங்களாலும், அடிக்கடி புகுந்த வீட்டுக்குச் செல்ல வேண்டிய துன்பச் சூழ்நிலைகளுக்கு ஆட்பட்ட இல்லறப் பெண்மணிகளும் இத்திருத்தலத்திற்கு வந்து நன்முறையில் கோமுக பூஜை செய்து இந்த பிரம்ம தீர்த்தத்தைத் தினந்தோறும் பிரசாதமாக அருந்தினால் நல்ல முறையில் குடும்ப வாழ்க்கை சாந்தமாக அமைய பத்ம பிரம்ம தீர்த்த தேவதைகள் அருள்பாலிக்கின்றனர். பல இல்லறப் பெண்மணிகளும் எத்தனையோ பூஜைகளை மாதவிலக்குத் தீட்டுகள் காரணமாகக் கடைபிடிக்க முடியாமல் போய்விடுகின்றது.. குறிப்பாக நவராத்திரி பூஜை, ஸ்ரீவரலக்ஷ்மி பூஜை, புத்தாண்டு தினம், தைப்பொங்கல், போன்ற முக்கியமான விசேஷ தினங்களைக் குடும்பத்தாருடன் நன்முறையில் கொண்டாடிட முடியாமல் இயற்கை ரீதியாக மாதவிலக்கு ஒரு தடையாக இருப்பதாகப் பல பெண்மணிகள் உணர்கின்றார்கள். அவர்கள் தேகசுத்தியுடன் இருக்கின்ற நாட்களில் இத்திருத்தலத்திற்கு வந்து கோமுகத்திற்குப் பூஜை செய்து வந்தால், விட்டுப் போன பூஜைகளுக்குகான உரிய பலன்களைப் பெறுவதற்கும் மேலும் முக்கியமான பண்டிகைகளின் போது தீட்டு காரணமாக விடுபடாது இல்லத்தில் இருந்து நன்முறையில் கொண்டாடுவதற்குமான அனுக்ரஹத்தை விசேஷமாகப் பெறுகின்றார்கள்.
தீட்டு, தோஷங்கள் என்றால் என்ன?
தீட்டு, தோஷங்கள் பற்றிய விளக்கங்களை நாம் ஏற்கனவே ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் அளித்துள்ளோம். மாதவிலக்கு என்பது பெண்களுக்கு இறைவனால் அளிக்கப்பட்டுள்ள ஒரு தேக, மன சுத்திக்காக மானசீக இறைப்பணிக்கான அற்புதமான காலமாகும். எங்கள் ஆஸ்ரம வெளியீடாக “சித்தர்கள் அருளியுள்ள பெண்களுக்கான வழிபாடு” என்ற நூலில் மாதவிலக்கு நேரங்களில் பெண்கள் மானசீகமாக மேற்கொள்ள வேண்டிய வழிபாட்டு முறைகளைப் பற்றி நாம் விளக்கியுள்ளோம். மாதவிலக்கு நேரங்களில் பெண்களுக்கு தேக அசுத்தி ஏற்படுவதால் இக்காலத்தில் அங்க பூஜையை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். ஆனால் மானசீகமாக துதிக்க வேண்டிய சில மந்திரங்கள் விசேஷமாக உண்டு.

சூரிய அஸ்தமனம் உண்டு
ஆனால் மறைவதில்லை தேவர்மலை

மேலும், இறப்புத் தீட்டு, பிறப்புத் தீட்டு போன்ற பலவகை தீட்டு தோஷங்களும் உண்டு. இறப்புத் தீட்டு என்றால் பிரேத தோஷங்களினால் ஏற்படுவதேயாகும். அதாவது பலவிதமான தொற்று நோய்களால் ஒருவர் மரணம் அடையும் போது அந்தப் பிரேதத்தில் கொடிய கிருமிகள் இருக்குமல்லவா? இதைக் கருத்தில் கொண்டுதான் வியாதிகள் பரவிடா வண்ணம் தடுப்பதற்காக இத்தகைய இறப்புத் தீட்டு தோஷ முறையை நம் முன்னோர்கள் அமைத்தார்கள். மேலும், பல ஆன்மீகக் காரணங்களும் உண்டு. தீட்டு என்றால் ஒருவரையொருவர்  தொட்டுக் கொள்ளாது இருத்தல் என்பது பொருளல்ல. பலவிதமான உடல் அசுத்தங்களுக்காகவும், அவற்றைப் போக்குவதற்காகவும், உடல் சுத்திக்காகவுமே நம் முன்னோர்கள் இதை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால், இவை காலப்போக்கில் அனர்த்தமாக மாறி பல தவறுகளை உருவாக்கியுள்ளன. எனவே, தீட்டு, தோஷங்கள் என்றால் உடல் சுத்தத்திற்காக ஏற்பட்ட நடைமுறை நல்வழக்கங்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஆத்ம சுத்திக்காகவும், தேக சுத்திக்காகவும் தான் இவை உள்ளனவே தவிர மனிதனை மனிதன் வெறுப்பதற்காக இவை ஏற்படுத்தப்பட்டவையல்ல. இறைவன் படைப்பில் யாவரும் ஒன்றே! அனைத்து உயிர்களிடமும் அன்புநேயம் கொண்டால் தான் ஆண்டவனை அடைய முடியும்!
மன பலவீனமே இறப்புத் தீட்டு!
பொதுவாக ஒரு வீட்டில் மரணம் சம்பவித்திடில், அதனுடைய துக்கத்தைத் தாளாமல் பலரும் மனவலிமையற்றவர்களாக (weak minded) இருப்பர். இச்சமயத்தில் தான் துர்சக்திகளும் அத்தகைய வலுவற்ற மனதை ஆக்கிரமித்துக் கொண்டு பலவிபரீதமான காரியங்களை, தீச்செயல்களை செய்வதற்கு வழிவகை செய்யும். இதனால் தான் துக்கம் பீறிட்டுக் கொண்டிருக்கும் போது தலை, கை, கால்களை தரையில் மோதிக் கொண்டும் பலரும் கதறி அழுவதைப் பார்த்திருப்பீர்கள். துக்கந்தாளாது பலவீனமான மனநிலையில் பலரும் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்குக் கூடச் சென்று விடுவார்கள்.

எனவே மனவலிமை அற்றிருக்கும் போது தான் இத்தகைய பிரேத தோஷங்கள் நிறைந்த இறப்புத் தீட்டுக்கள் உடல், மனதை மாசுபடுத்தி வலிமையை இழக்கச் செய்து தோஷங்களாக மாறுகின்றன. இந்நிலையில் துக்கமாக உள்ளோர் பலருடன் பழகுகையில் அவர்களுக்கும் மனோசக்தி பாதிக்கப்படும். இதனையும் இறப்புத் தீட்டு, தோஷம் என்கிறோம். இவ்வாறு மனவலிமை அற்றோருக்கு மீண்டும் மனவலிமையைத் தருவதற்காகவும், ஆத்மசுத்தி, தேகசுத்தியைத் தருவதற்காகவும் தோஷ நிவர்த்திக்கான சில பரிகாரங்கள் தரப்பட்டுள்ளன. இவைதாம் மரணச் சடங்குகளாகவும், பத்துநாள் பித்ரு வழிபாடாகவும் அனைவருக்கும் அமைகின்றன. எவ்வாறு திருஷ்டி கழிக்கப்பட்ட நெருப்பையோ, உப்பு, மிளகாய், விரட்டி போன்றவற்றையோ மிதித்தால் கழிப்பு தோஷங்கள் ஏற்படுகின்றனவோ அதே போல பிரேதத்தில் குடிகொள்கின்ற துர்சக்திகளின் ஆக்கிரமிப்பால் பலவிதமான கெடுதலான தோஷங்கள் ஏற்படும். இவற்றையும் இறப்புத் தீட்டு தோஷங்கள் என்கின்றோம்.
தனிஷ்டா பஞ்சமி நாட்கள் :- பொதுவாக அனைத்து தீப ஜோதிக்கும், அதிலும் குறிப்பாக நல்லெண்ணெயால் ஏற்றப்படும் தீபத்திறு இறப்புத் தீட்டு தோஷங்களை அறவே நீக்குகின்ற தெய்வீக சக்தி உண்டு. இதனால் தான் வீடுகளில் மரணம் சம்பவித்த இடத்தில் தீபத்தை ஏழு நாட்களுக்கு ஏற்றி வைப்பார்கள். பஞ்சாங்கத்தில், தனிஷ்டா பஞ்சமி அதாவது “இறந்தால் வீடு மூட வேண்டிய நட்சத்திர நாட்கள்” என்று போட்டிருப்பதை கவனித்திருப்பீர்கள் எந்தெந்த நட்சத்திரத்தில் இறப்பு ஏற்பட்டால் அந்த குறிப்பிட்ட வீட்டினை எத்தனை நாட்களுக்கு மூடி வைக்க வேண்டும் அல்லது புழங்குவதற்குத் தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஸ்ரீஆதிநாதர் வயலூர்

ஸ்ரீஆதிநாயகி வயலூர்

குறிப்பாக ரேவதி நட்சத்திரத்தில் மரணம் சம்பவித்தால் அந்த வீட்டினை ஆறுமாதங்களுக்கு மூடி வைத்திருக்க வேண்டும் என்று குறித்திருப்பார்கள். இவற்றின் பின்னணியில் தெய்வீக இரகசியங்கள் பல உண்டு. தனிஷ்டா பஞ்சமி என்பது குறிப்பிட்ட நட்சத்திரங்களில் (அவிட்டம், சதயம், பூரம், உத்திரட்டாதி, ரேவதி etc.. ) மரணம் ஏற்படுகின்ற போது குறித்த நாட்களுக்கு அந்த வீட்டைப் பயன்படுத்தலாகாது அல்லது பூட்டி வைத்திருக்க வேண்டும் என்ற நம் முன்னோர்களின் நியதியாம். இவையெல்லாம் இறப்புத் தீட்டு சம்பந்தமான சில தேவ ரகசியங்கள் ஆகும். தற்காலத்தில் ஆறு மாதம் வீட்டை மூடி வைக்க இயலாது. அதற்கான மாற்று முறைகள் அறிய தக்க குருவை நாடவும்.
ஆனால் கலியுகத்தில் நடைமுறையில் இது சாத்தியமானதா? இதற்குப் பரிகாரம் என்ன? இதற்காகத்தான் தேவர் மலை, ராமகிரி மலை போன்ற தலங்களில் உள்ள அந்தர்வாஹினி கோமுக தெய்வீக நீர் ஊற்றுகள் பலவிதமான பரிகாரங்களைத் தருகின்றன. தீட்டு சம்பந்த தோஷங்களை நிவர்த்தி செய்பவை இவை. ஆதலின் இந்த கோமுகங்களை வழிபடும் போது எவ்வித தீட்டு தோஷங்களும் ஆகாது என்பதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விதி ஆகும். அதாவது எந்த அபூர்வமான தெய்வீகத் தலங்கள் மாதவிலக்கு, இறப்பு தோஷ தீட்டுகளை நிவர்த்தி செய்கின்றனவோ அவ்விடத்தில் மாதவிலக்கு போன்ற தீட்டு இல்லாத சுத்த தேகத்துடன் பூஜையை மேற்கொள்ள வேண்டும் என்பதே நியதியாகும்.

அன்னையின் ஆத்ம சாந்திக்கு
பெற்ற தாயின் பூத உடலைத் தோளில் தாங்குதல் பெறுதற்கரிய பாக்யமாகும். பல குடும்பங்களிலும், மனைவி, மாமியார், மாமனாரின் பேச்சைக் கேட்டு கணவன்மார்கள் தன்னைப் பெற்ற அன்னையைத் துன்புறுத்தியும், உதைத்தும் வசைச் சொற்கள் பாடியும், மிகவும் வருத்தத்திற்குள்ளாக்குகின்றனர். இதனால் வேதனையுற்று வாழ்ந்து மடிந்த அன்னையர்கள் ஏராளம்! ஏராளம்! அனைவரும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். என்ன தான் இருந்தாலும் பெற்ற அன்னை தெய்வமே! பத்து மாதம் சுமந்து பல இன்னல்கட்கிடையிலும், வறுமை, கஷ்டங்கட்கு ஊடேயும் பாலூட்டி சீராட்டித் தன் உதிரத்தை உணவாக்கி, தனக்கு வாழ்வளித்த அன்னையை ஏதோ திருமண வாழ்வு கிட்டியவுடன் ஒதுக்கி வைத்து விடலாமா?
தந்தைக்கும், அன்னைக்கும் ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டிய கடமைகள் பல உண்டு. தன்னைத் தோளில் சுமந்த தந்தைக்கும், அன்னைக்கும் ஆற்ற வேண்டிய கடன்களுள் முக்கியக் கடனாகத்தான் தாய், தந்தையரின் பூத உடலை (தற்காலத்தில் உள்ளது போல நாகரீகமாக எண்ணி ஆம்புலன்ஸ் காரில் மயானத்திற்கு எடுத்துச் செல்லாமல்) பிள்ளைகளும், சுற்றத்தாரும் தம்முடைய தோள்களில் தாங்கி மயானத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். தன்னை வயிற்றிலும், தோளிலும் சுமந்த பெற்றோர்க்கு தீர்க்க வேண்டிய இறைப் பணிக் கடன்களில் இதுவும் ஒன்றாகும். 
மேலும் எவ்வித ஜாதி, இன வேறுபாடின்றி ஒரு மயான பூமிக்கு பூத உடலைத் தாங்கிச் செல்கின்ற காரியமானது, மிகச் சிறந்த தானங்களுள் ஒன்றாக விளங்குகிறது. அதாவது சரீர சேவை எனப்படும் சேவா தர்மத்தின் பால் அடங்குகிறது இது. அளப்பரிய பலன்களை அளிக்கவல்லதாகும். முற்காலத்தில் 100, 200 என பூத உடல்களைத் தாங்கிச் செல்கின்ற பாக்கியம் பெற்றோர் பலர் உண்டு. இவர்கட்கு மரண பயமின்றி நன்முறையில் நிம்மதியான இறுதி வாழ்வு கிட்டும். எனவே, ஒவ்வொருவரும் தம் தாய், தந்தையரின் இறுதிச் சடங்கின் போது தம் தோள்களில் அவர்களுடைய புனிதமான பூத உடலைத் தாங்கிச் செல்கின்ற பாக்கியத்தை விட்டு விடாது, இதனை வாழ்க்கையின் முக்கியச் சேவையாகக் கருதி செயல்பட வேண்டும். ஆனால், எல்லோருக்கும் இப்பாக்கியம் கிட்டுகிறதா?
அயல்நாட்டில் / வெளி மாநிலங்களில் வாழ்கின்ற பிள்ளைகளைக் காணாமலேயே பெற்றோர்களின் உயிர் பிரிவதும், அவர்கள் வரும் முன்னரேயே தகனக் கிரியைகள் நடப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டது. பெற்றோர்களின் தகனக் கிரியைகளைச் செய்யாத பிள்ளைகளுக்குக் கடும் சாபங்கள் உண்டு. இது சந்ததிகளை நிச்சயமாக பாதிக்கும். ஆனால் என்றேனும் ஒரு நாள் இதனை சாபமென உணரவேண்டுமல்லவா? இவ்வாறு உணர்ந்தபின் என் செய்வது? இத்தகையோர் தம் தவற்றிற்கு மனதார வருந்தி, திருச்சி அருகிலுள்ள திருப்பழுவூர் சிவாலயத்தில் அம்பிகைக்கு மகநட்சத்திரத்தன்று சந்தனக் காப்பிட்டு, இத்திருக்கோயில் தீர்த்தத்திலோ, தடாகத்திலோ, வளாகத்திலோ தன்னை ஈன்ற அன்னைக்குத் தர்ப்பணமிட்டு சர்க்கரை வள்ளி, மரவள்ளிக் கிழங்கு கலந்த உணவினை அன்னதானமாக இடுதல் வேண்டும். ஸ்ரீபரசுராமர் தன் தாய்க்கு இழைத்த தீங்கிற்காக சாபநிவர்த்தி பெற்ற திருத்தலம் ஆகும் இது.. மேற்கண்ட குற்றங்களை இழைத்தோர் திருப்பழுவூர் சிவாலயத்தில் மக நட்சத்திரந்தோறும் பூஜையை மேற்கொண்டு எங்கெங்கோ அநாதை இல்லங்களில் ஆதரவற்று வாழ்கின்ற வயதான தாய்மார்களுக்குச் சரீர சேவைகளையும், மற்ற உதவிகளையும் செய்து வருதல் வேண்டும். (வெந்நீர், மருந்து, ஆடை அளித்தல் etc.. )

ரத்தின லிங்கம்

ஸ்ரீஉய்ய வந்த அம்பாள் மஹிமை
புதுவயல் அருகே உள்ள சாக்கோட்டை திருத்தல மகிமை .. வாழ்க்கையில் பலரும் எத்தனையோ துன்பங்களை எதிர்நோக்குகின்றனர். நேற்றுவரை பணத்தில் புரண்டவர்கள் இன்று நடுத் தெருவில் நிற்கின்றனர். லட்ச லட்சமாய் வியாபாரம் செய்தவர்கள் வரி மற்றும் இடப் பிரச்சினைகளாலும் பலருடைய ஏமாற்று வேலைகளாலும் என் செய்வது என்று புரியாது திகைக்கின்றனர். திடீர் மரணம், விபத்துகள், தொழிற்சாலைப் பிரச்னைகள், வியாபார நெருக்கடிகள், பெண் பிள்ளைகளுடைய போக்கில் ஏற்படும் அதிர்ச்சி தரும் மாற்றங்கள், கணவன், மனைவியின் அதர்மமான செயல்கள் இவ்வாறாக வாழ்க்கையில் இடி போன்று வருகின்ற துன்பங்கள் ஏராளம் ஏராளம்.
மிகவும் நேர்மையாக இருப்பவர்கள் கூட பலவிதமான திடீர் துன்பங்களுக்கு ஆளாகி விடுகின்றனர். என் செய்வது, ஏது செய்வது என்று திணறுவதும் உண்டு! தலைக்கு மேல் துன்பங்கள் தாண்டிச் சென்று விட்டனவே, வாழ்வோமா, வேண்டாமா என்று எண்ணுகின்ற அளவுக்குப் பல சந்தர்ப்பங்கள் ஏற்படுவதும் உண்டு. பலருக்கு ஏற்பட்டும் இருக்கின்றன. இந்நிலையில் இவர்கள் வாழ்க்கையின் எல்லைக்கே சென்று, தற்கொலையால் தன்னை மாய்த்துக் கொண்டு விடுவோமோ என்று மிகக் கேவலமாக எண்ணுவதும் உண்டு. இதற்கெல்லாம் தெய்வீகத்தில் தீர்வு இல்லையா என்ன? இருக்கின்றது. நிச்சயமாக இருக்கின்றது.
இதுமட்டுமல்லாது எத்தகைய இமாலயம் போன்ற துன்பங்களுக்கும் கூட ஆன்மீகத்தில் தீர்வுகள் உண்டு. ஆனால் இவற்றை அளிக்கவல்ல சத்குருவை நாடினால் தானே அவற்றை நாம் பெற முடியும்.  தியானத்தின் சிகரமாக, பிம்பமாக விளங்குகின்ற சத்குருவானவர் தன்னுடைய சிந்தனை, உள்ளம், உடல் மூலம் செய்கின்ற தியானம், யோகம், பூஜைகள் அனைத்தையுமே பிறருடைய நல்வாழ்விற்காக அர்ப்பணிக்கின்ற தெய்வீக தியாகச் சின்னமாக விளங்குவதால் தான் அவருக்கு அனைத்துத் துன்பங்களுக்கான காரணங்களும் அவற்றைக் களைகின்ற முறையும் நன்கு தெரிய வருகின்றது.
ரத்தின லிங்கம் – ஒவ்வொரு சித்தரும் ஒவ்வொரு வகையிலே உலக ஜீவன்களின் நன்மைக்காகத் தம்மை இறைவன்பால் அர்ப்பணித்துக் கொண்டுப் பலவிதமான இறைப்பணிகளைச் செய்து வருகின்றார் அல்லவா! இவ்வகையிலே ஸ்ரீரத்னகிரீஸ்வர சித்தர் என்பார் செய்தத் தியாகத்தின் பெருமையை நாம் உணர்வோமா! இச்சித்புருஷர் தம் கழுத்திலே ஒரு கருப்புக் கயிற்றை எப்போதும் அணிந்திருப்பார். அதிலே ஒரு சிறு இரத்தினலிங்கம் தொங்கிக் கொண்டிருக்கும் அவருடைய யோக, தவ, தியான முறை என்ன தெரியுமா?
காடு, மலை, நிலம் என யாங்கணும் இறைநாமத்தை ஓதியவண்ணம் வலம் வந்தார் இச்சித்புருஷர். வேப்பமரம், ஆலமரம், அரசமரம், மகிழமரம் போன்ற தெய்வீக மரங்களையும், ஹோம சமித்துக்குரித்தான விருட்சங்களையும் காணும் போதெல்லாம் தம்முடைய இரத்தின லிங்கத்தை அம்மரத்தின் கீழ் வைத்து இரத்தின லிங்கத்தையும் அந்த தெய்வீக விருட்சத்தையும் அடிப் பிரதட்சிணமாகச் சுற்றி சுற்றி வருவார். இவ்வாறு அவர் அந்த இரத்தின லிங்கத்தைக் கோடானு கோடி முறை அடிப்பிரதட்சிண செய்து வலம் வந்திருப்பார். அவருக்கு அந்த இரத்தினலிங்கமே திருஅண்ணாமலையாகத் தோன்றியமையால் இரத்தினகிரீஸ்வர (கிரி = மலை) சித்தராகப் பெயர் பெற்றார். ரத்தின மலைச் சித்தரிவர்!
மஹா தேஜஸுடன் விளங்கிய இவரைக் கண்ட மக்கள் தங்களுடைய துன்பங்களையெல்லாம் அவரிடம் தெரிவித்த போது இச்சித்புருஷர் தம்முடைய இரத்தின லிங்கத்தை அவ்வூரில் உள்ள ஸ்தல விருட்சத்தின் பாலோ அல்லது ஏதேனும் தெய்வ விருட்சத்தின் அடியிலோ வைத்து விட்டு மக்களை அதனை அடிப்பிரதட்சிணமாகச் சுற்றி வரச் செய்வார். மிகவும் எளிமையான வழிபாடுதான்! ஆனால் அந்த இரத்தின லிங்கமோ எந்த அளவிற்கு அடிப்பிரதட்சிணம் செய்கின்றார்களோ ஒவ்வொரு சுற்றிற்கும் சிறு அணு அளவாக சிறிது சிறிதாகப் பெரிதாகிக் கொண்டே வரும். அவ்வூரில் அவருடைய இருக்கைக்கான கால நியதி முடிந்தவுடன் பெரிதான இரத்தினலிங்கம் பழையபடி சிறுலிங்கமாக மாறிவிடும்.

ஸ்ரீரத்தினகிரி ஐயர்மலை

ஆனால் அவர் வருவதோ, போவதோ எவரும் அறியார். எங்கே இருப்பார், எங்கிருந்து வருகிறார் எவரும் அறிந்தது கிடையாது. இன்று மதுரை என்றால், நாளை திருவான்மியூரில் இருப்பார். எனவே அடுத்தடுத்த கிராமமாகத்தான் செல்வார் என்று எவரும் சொல்ல முடியாத அளவில் கீர்த்தி பெற்ற அவர், மிகவும் சிறிய சாதாரண மனித உருவில்தான் அன்றும், இன்றும், என்றும் விளங்குகின்றார். இரத்தினலிங்க வழிபாட்டில் பிரசித்தி பெற்றவர் ஆவார். இவர் இன்றும் தினசரி வழிபடுகின்ற தலங்களுள் குளித்தலை அருகில் உள்ள அய்யர்மலை ஸ்ரீரத்தினகிரீஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும்.. எனவே தான் இவருடைய அருமையை உணர்ந்த சித்தர்களின் அடிமைகள் இன்றைக்கும் தாம் புதிதாக வாங்குகின்ற பவழம், இரத்தின் ஆபரணங்களையும் அய்யர் மலையை கிரிவலம் வந்து ஸ்ரீரத்னகிரீஸ்வரருக்குச் சமர்ப்பித்து எடுத்துச் செல்வர். இரத்தின லோகம் என்ற மேலுலகம் ஒன்று உண்டு. இதில் உற்பவித்தவர்தான் இந்த இரத்தினகிரீஸ்வர சித்தர் ஆவார். அய்யர் மலை ஸ்ரீரத்னகிரீஸ்வர லிங்க புனித பூமியில் தம் கால்கள் படலாகாது என்பதற்காக இன்றைக்கும் சூட்சுமமாக இங்கு அங்கபிரதட்சிணம் செய்தவாறுதான் மலையை வலம் வந்து படிகளிலும் ஏறி, ஆலயத்தையும் வலம் வந்து ஸ்ரீரத்னகிரீஸ்வரருடைய தரிசனத்தைப் பெற்றுச் செல்கின்றார்.. ஸ்ரீரத்னகிரீஸ்வர சித்தர் தம்முடைய தபோபலன்களையெல்லாம் தினந்தோறும் தேனில் கரைத்து அதனை இரத்தினலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து அதற்கே அர்ப்பணித்து விடுவார். இவ்வாறு கோடானு கோடி யுகங்களாக நிகழ்ந்து வருகின்றது என்றால் அவருடைய கழுத்தில் மாமணியாக விளங்குகின்ற இரத்தின லிங்கத்திற்குரித்தான தெய்வீக சக்திதான் என்னே!
ஒரு காலத்தில் இரத்தின வியாபாரம் சிறப்புற்றிருந்த நாட்டுக் கோட்டைப் பகுதியில் தான் இவருடைய நடமாட்டம் அன்றும், இன்றும், சிறப்புற்று விளங்குகின்றது. பிரான் மலை, திருவாடானை, திருமயம், சிவகங்கை, திருப்பத்தூர் போன்ற இடங்களில் இன்றும் நடமாடுகின்ற சித்புருஷர். இரத்தினகிரீஸ்வர சித்தருடைய ரத்தினலிங்கத்தின் மேன்மையைப் பற்றி அறியலுற்ற அம்பிகை அந்த இரத்தின லிங்கத்தைத் தரிசிக்க / சேவிக்க விரும்பினாள். ஆனால் என்ன ஆச்சரியம்!

ஸ்ரீஆக்ஞா கணபதி
பட்டீஸ்வரம்

ஒன்று, இரத்தினகிரீஸ்வர சித்தர் அந்த ரத்தின லிங்கத்தை அடிப்பிரதட்சிணம் செய்வதவாறு இருப்பார். அல்லது அவரை நாடி வந்த நூற்றுக்கணக்கான மக்கள் அந்த இரத்தின லிங்கத்தை அடிப்பிரதட்சிணம் செய்தவாறு இருப்பர். இடையில் அம்பிகைக்கு இரத்தின லிங்கத்தைத்  தரிசிப்பதற்கு ஒரு நிமிட நேரம் கூட கிட்டுவது இல்லை.. இந்த சித்புருஷரோ இன்றைக்கு ஓரிடம் நாளைக்கு வேறு ஓரிடம் என்று சித்தம் போக்கு, சிவம் போக்காகத் திரிந்து கொண்டிருப்பவர் என் செய்வது! அன்னையின் விருப்பத்தை உணர்ந்த விநாயகர், தம் அன்னையாகிய உமையவளின், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய விழைந்தார். விநாயக மூர்த்திகளுள் பல வகை உண்டு. ஆக்ஞா விநாயகர், ஆதி விநாயகர், நரமுக விநாயகர், ஹேரம்ப கணபதி, சித்தி கணபதி, வர கணபதி, வலஞ்சுழி விநாயகர் என எத்தனையோ மூர்த்தியகள் உண்டு. இவற்றுள் முதன்மையானவர்களுள் ஒருவராக விளங்குபவரே ஸ்ரீகைலாச விநாயகர் ஆவார்.. எப்போதும் கைலாயத்தில் வீற்றிருப்பவர். பார்வதி, பரமேஸ்வர மூர்த்திகள் கூட பலவித தெய்வத் திருவிளையாடல்களுக்காகப் பலவிதத் திருத்தலங்களுக்குச் சென்றாலும் திருக்கைலாயத்தில் என்றும் எப்போதும் நாம் காண்கின்ற கைலாச பீடாதிபதியாக விளங்குகின்றவரே ஸ்ரீகைலாச விநாயகர் ஆவார் ( Residential deity of Kailasam! )
அம்மா என்று அழைத்தால் போதும் உடனே வந்து உதவும் அருள்மிகு உய்யவந்த அம்பாள்! 
பலருக்கும் திடீரென்று தங்களுடைய வாழ்க்கையிலே எதிர் பாராத விதமான நஷ்டங்கள், விபத்துகள், திடீர் மரணங்கள், சொத்து நாசம் காரணமாக கிட்டத்தட்ட வாழ்க்கையே முடிவிற்கு வந்தாற்போல் அதிர்ச்சியுற்று, வெலவெலத்து நின்று விடுகின்றார்கள்.. நாளைக்குக் காலையில் எழுந்தவுடன் எப்படி கடன்காரர்களை சந்திப்பது, அலுவலகத்திற்குச் செல்வது, குடும்பத்தைக் காப்பாற்றுவது, பிறர் முகத்தில் விழிப்பது என்று எண்ணித் திகைக்கும் அளவிற்குத் தலைக்கு மேல் துன்பங்களும், துயரங்களும் பெருகி விடுகின்றன. இது பிறருடைய பொறாமை மற்றும் பகைமையின் விளைவாக ஏற்பட்ட கொந்தளிப்பாகவோ அல்லது எதிர்பாராத சம்பவங்களினாலோ ஏற்பட்டிருக்கக் கூடும். எதுவாக இருந்தாலும் சரி, ஆயிரம் இடிகள் சேர்ந்து வந்தாற் போலப் பிரச்னைகள் எழுந்து விட்டால் என்ன செய்ய முடியும்? இதற்குத் தெய்வீகத்தில் விடிவே கிடையாதா! ஏன் கிடையாது! தெய்வீகத்தில் தான் உலகத்தில், ஏன் இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பிரச்னைக்கும் நன்முறையில் தீர்வு வழங்கப்பட்டிருக்கின்றது. காரணம் என்னவென்றால் எந்த பிரச்னையும் பூர்வ ஜென்ம கர்ம வினைகளின் பிரதிபலிப்பாகவே ஏற்படுவதால் இவற்றை தீர்க்க தரிசனமாக அறிந்துள்ள சற்குருமார்கள், மஹரிஷிகள், யோகிகள் மூலமாக இவற்றிற்கு எளிதான தீர்வைப் பெறலாம் அன்றோ! ஆனால் சற்குரு தான் தம்மைக் கரையேற்றுவார் என்ற ஆழ்ந்த நம்பிக்கை வந்தால் தானே இந்தத் தீர்வைப் பெற முடியும்! சற்றே சிந்தித்துப் பாருங்கள்! மேற்கண்ட இக்கட்டான சூழ்நிலைகளில் என்ன செய்வது?
இதற்காகத்தான் சர்வேஸ்வரியே, உமையவளே, அகிலாண்டேஸ்வரியே ஸ்ரீஉய்ய வந்த அம்பாளாக, காரைக்குடி அருகே புதுவயல் சாக்கோட்டை கிராமத்திலே எழுந்தருளியிருக்கின்றாள்.. உங்களுக்கு இத்தகைய பெரும் துன்பச் சூழ்நிலைகள் ஏற்படும்போது உண்மையிலேயே மனதால் அழுது வருந்தி ஸ்ரீஉய்ய வந்த அம்மனைக் கூப்பிடுங்கள். “அம்மா, தாயே! அம்பிகையே! சர்வேஸ்வரியே! உய்ய வந்த அம்மனே! எங்களை உய்விக்க வந்தவளே! நான் இத்தகைய துன்பங்களில் சிக்கிக் கொண்டிருக்கின்றேன், என்னைக் கரையேற்றுவாயாக! உந்தன் பாதார விந்தங்களில் நான் எப்போதும் சரணடைகின்றேன்!” என்று மனமாறப் பிரார்த்தனை செய்யுங்கள், வழிபாட்டில் உங்கள் குடும்பத்தினரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். தலைக்கு மேல் வெள்ளம் போல் துன்பங்கள் பெருகும் போது என்ன செய்ய முடியும்?

சாக்கோட்டை காரைக்குடி

நீயே கதியம்மா !
இவற்றைத் தீர்க்க பூவுலகில் அவதாரம் கொண்டுள்ள ஸ்ரீஉய்ய வந்த அம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். “தாயே, உந்தன் பாதங்களே எனக்கு விடிவெள்ளியாகத் தெரிகின்றது.. அறிந்தோ, அறியாமலோ தெரிந்தோ, தெரியாமலோ, வேண்டும் என்றோ, அல்லது என்னுடைய கர்ம வினைகளின் பயனாகவோ நான் பல தவறுகளைச் செய்துவிட்டு இப்போது தலைக்கு மேல் வெள்ளம் போவதாகத் துன்பச் சூறாவளியில் சிக்கிக் கொண்டு தவிக்கின்றேன். வாழ்வை முடித்துக் கொள்வது தான் ஒரே வழி போல் தோன்றுகின்றது.. ஆனால் பெறற்கரிய இந்த மனிதப் பிறவியை  எடுத்துவிட்டு என்னை நம்பி, எத்தனையோ ஜீவன்கள் என் குடும்பத்தில், வியாபாரத்தில் வாழ்கின்ற போது, இது ஒரு சுயநலமான முடிவாகி விடுமல்லவா! எனவே எப்படியாவது என்னைக் கரையேற்றிவிடு! இந்த இக்கட்டான நிலையிலிருந்து நான் மீண்டுவிட்டால் நிச்சயமாக நான் நல்ல வாழ்வை வாழ்ந்து காண்பிக்கின்றேன், உன்னுடைய திருவடிகளை நான் என்றும் மறக்க மாட்டேன்...”, என்று அழுது, புலம்பி கதறி ஸ்ரீஉய்யவந்த அம்பாளிடம் மன்றாடுங்கள்.
உங்களுடைய மனமாற்றம் உண்மையாக இருக்க வேண்டும். உங்களுடைய பிரார்த்தனைகளும் சத்தியமாக இருக்க வேண்டும். உங்களுடைய வேண்டுதல்களும் உங்கள் உள்ளத்தில் இருந்து வர வேண்டும். உங்களுடைய வழிபாடும் நெஞ்சிலிருந்து பீறிட்டுக் கிளம்ப வேண்டும். இத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளிலிருந்து ஜீவன்களைக் காப்பாற்றுவதற்காகத்தான் ஸ்ரீஉய்ய வந்த அம்மன் வடிவெடுத்து வந்திருக்கின்றாள். இது எக்காலத்திலும் சத்தியமான வாக்காகும். இவ்வாறு உய்ய வந்த அம்மன் அவதாரங் கொண்டு நம்மை மலை போன்ற பிரச்னைகளிலிருந்து விடுவித்து பெருங்கருணைப் புரிய காரணமாக இருந்தவர் தாம் ஸ்ரீரத்னகிரீஸ்வர சித்தர் ஆவார். இன்றைக்கும் சூட்சும்மாக இத்தலத்தில் வழிபட்டு வருபவர். எனவே இப்பரம்பொருள் தெய்வ மூர்த்தி அம்பிகையை யாரென்று உணர்ந்து விட்டீர்கள் அல்லவா? எத்தகைய துன்பங்களிலிருந்தும் நம்மை மீட்டும் புனர் ஜன்மத்தை அளிப்பவள் யாரென்று தெரிந்து விட்டதல்லவா? தலைக்கு மேலே வெள்ளம் போலத் துன்பங்களும், துயரங்களும் சென்றாலும் கூட புனர் வாழ்வைத் தந்து புத்துயிர் ஊட்டி நமக்கு அருள்பாலிப்பவளே ஸ்ரீஉய்ய வந்த அம்மன் என்பதை உணர்ந்து விட்டீர்கள் அல்லவா! வேறென்ன வேண்டும் உங்களுக்கு! நடைபோடுங்கள் ஸ்ரீஉய்ய வந்த அம்மனின் ஆலயத்தை நோக்கி! சாக்கோட்டை உங்கள் தெய்வீகக் கோட்டையாகட்டும். இத்திருத்தலமே உங்களுடைய துன்பங்களுக்கு ஒரு நல்ல முடிவைத் தந்து நல்வாழ்வை மீட்டுத் தந்து இறையருளுடன் இனிதே வாழ்க்கையில் பொலிந்திட அருள்புரிவதாக இருக்கட்டும்!
ஓம் ஸ்ரீரத்னகிரீஸ்வர சித்தரே போற்றி!
ஓம் ஸ்ரீஉய்யவந்த அம்பிகையே போற்றி! போற்றி! போற்றி!!  
(கும்பகோணம் அருகில் இருக்கும் சாக்கோட்டை வேறு, இங்கு நாம் குறிப்பிடுவது காரைக்குடி அருகே புதுவயலின் எல்லை கிராமமான சாக்கோட்டை ஆகும்..)

திருஷ்டி நிவாரண கண்டி

திருஷ்டி தோஷ நிவாரண கண்டி (விளக்கு) மகிமை
அனைத்து விதமான கண் திருஷ்டிகளையும் நிவர்த்தி செய்யும் இந்த திருஷ்டி தோஷ நிவாரண கண்டி (விளக்கு) நம் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் கிடைக்கும். சென்ற இதழில் சித்புருஷர்களின் சாங்கியப்படி திருஷ்டி தோஷங்களை நிவர்த்தி செய்யக் கூடிய வகையில் பூர்வ தந்திர நியதிகளின்படி நம் குருமங்கள் கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களால் நேத்ர பூஷணா தாந்த்ரீக விதிகளின்படி பிருத்வி அம்சங்கள் நிறைந்ததாக வடிக்கப்பட்டுள்ள திருஷ்டி தோஷ நிவாரண கண்டி (தீப விளக்கு) பற்றி விளக்கியிருந்தோம். இத்தகைய திருஷ்டி விளக்குகள் திருஅண்ணாமலையில் நம் ஆஸ்ரமத்தில் கிடைக்கும்.
மேலும் சென்ற இதழில் அமிர்த தாரைகளின் மூலமாகப் பலவகையான கண் திருஷ்டி தோஷங்களைப் பற்றியும் விளக்கியிருந்தோம். இவை தவிர இன்னும் எத்தனை எத்தனையோ விதமான திருஷ்டி தோஷங்கள் உள்ளன.  பலவற்றைப் பற்றி அதிகமாக அறிந்து கொண்டாலும் மனதில் பீதியும் ஏற்பட்டு விடும். ஏனெனில் அந்த அளவுக்கு பிறருடைய பொறாமைக் கண்களில் ஏற்படும் தோஷங்கள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. நீங்கள் அணிகின்ற புது ஆடைகளைப் பிறர் சற்றே பொறாமையுடன் நோக்கினாலும் கூட அந்த ஆடைகளில் தீய வினைகள் ஒட்டிக் கொண்டு விடுகின்றன. எனவே தான் புத்தாடைகள் ஆணியில், கதவில், வண்டியில் மாட்டி கிழிபடுதல், சேறு, இங்க் படிந்து கறையாகுதல், தீப்பிடித்தல், புதிய ஆடைகளில் கூட பித்தான்கள் அறுந்து விழுதல், நெருப்புப் பொறிவிழுதல் போன்றவை ஏற்படுகின்றன. இத்தகைய சாதாரண பின்னணியிலும் கூட ஆயிரமாயிரம் அர்த்தங்கள் புதைந்துள்ளன. இதனை உணராது இயந்திர கதியிலே வேகவேகமாக அல்லவோ நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் ஓட்டிக் கொண்டிருக்கிறோம். இல்லை, இல்லை, விரட்டிக் கொண்டிருக்கின்றோம் வீணாகவே!
இழந்த புண்யத்தை மீட்பீர்! எனவே இவ்வாறாக நல்இல்லற வாழ்க்கையில், அலுவலகத்தில், வெளிப்புற வாழ்க்கையில் நம்மை பாதிக்கின்ற தோஷங்கள் ஏராளமாக உள்ளன. இவற்றில் அடிபட்டு, மிதிபட்டு, உதைப்பட்டுத்தான் நம் வாழ்க்கையும் ஓடிக்கொண்டிருக்கிறது. இறைவழிபாடு பெரிதும் குறைந்து விட்டபோது நம் வாழ்க்கை நடப்பதே நம் மூதாதையர்கள் விட்டுச் சென்றுள்ள புண்ய சக்தியாலும் நம்முடைய பூர்வ ஜென்மத்தில் கிடைத்துள்ள ஓரளவு புண்ணிய சக்தியாலும் தான்.. இப்புண்யத்தையும் விரைவாகக் கழித்து விட்டால் பிறகு எந்தப் புண்ணிய சக்தியைக் கொண்டுதான் நாம் துன்பங்களை எதிர் நோக்க முடியும்? வெறும் கையால் முழம் போட முடியுமா? இதற்காகத்தான் பலவிதமான விசேஷமான பண்டிகைகளின் மகாத்மியத்தைப் பற்றி நாம் ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் விளக்கி வருகின்றோம். அவ்வப்போது இத்தகைய எளிய விரதங்களையும், பண்டிகைகளையும் சத்குரு அருளியது போல் கடைபிடித்து வருவீர்களேயானால் நாம் இழந்து விட்ட பூஜைகளுக்கும், புண்ணிய சக்திகளுக்கும் ஓரளவு நிவர்த்தியாக புதிய தெய்வீக சக்தியைப் பெற்றுத் துன்பங்களைச் சமாளித்து நாம் வாழ முடியும்..,
நீங்கள் பணத்தை எண்ணும் போது மற்றவர் சற்றே பார்த்து விட்டால் கூட, “என்ன இது நமக்கோ ஐந்து ரூபாய்க்குக் கூட வழியில்லை. இவரோ சுளை சுளையாகப் பணத்தை எண்ணிக் கொண்டிருக்கின்றாரே” என்று சற்றே மனதில் சிறிது நினைத்தால் கூட போதும், அது உங்களை பாதித்து விடும். இதனால் நீங்கள் பணத்தைத் தொலைத்து விட்டு நிற்பீர்கள் / அது விரைய மாகக் கழிந்து விடும் / எதிர்பார்த்ததை விட அதிகமாகவே செலவாகும் / வாங்கிய பொருள் நிலைத்து நிற்காது. இவையனைத்தும் பார்வை எண்ண திருஷ்டி தோஷங்களின் விளைவுகளேயாகும்.
எனவே, இந்த திருஷ்டி தோஷங்களால் நாம் பாதிக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை அறிவது பிரம்மப் பிரயத்தனமான பணியாகும்.. இதை அறிந்து கொள்வதற்கான தக்க சற்குருவை நீங்கள் நாடவில்லை அல்லது இவற்றை நீக்குவதற்கான விசேஷ பூஜைகளையும் நீங்கள் மேற்கொள்ளவும் இல்லை என்பதையும் உணருங்கள்.. எனவே உங்களை இத்தகைய தோஷங்களிலிருந்து காப்பதற்காகவே கலியுகத்திற்கு உரித்தான மிக எளிய பூஜையாக கடந்த பலயுகங்களில் சிறப்பாக விளங்கி வந்து தற்போது மறைந்து விட்ட தோஷ நிவர்த்தி கண்டி பூஜையை நம் குருமங்கள கந்தர்வா வெங்கடராமன் அவர்கள் நமக்கு இறைப் புத்துணர்வோடு அளித்துள்ளார்கள். இந்த திருஷ்டி தோஷ நிவாரண தீபகண்டியானது அனைத்து வகையான கண் திருஷ்டிகளையும், தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் தெய்வீக சக்தியைப் பெற்றுள்ளது. இது பற்றிய விளக்கங்களை தீப கண்டியுடன் இலவசமாக அளிக்கப்படும் சிறுநூலில் காணலாம்.. இதில் தீபா வழிபாட்டு முறையும் பூஜை முறையும் விளக்கபட்டுள்ளது.. இந்த தீப கண்டியைச் சுற்றிலும் 3, 12 அல்லது 21 எலுமிச்சை கனிகளை வைத்து வழிபடுவீர்களேயானால் பூஜைக்குப் பின், எலுமிச்சைக் கனிகளை இரண்டாக நறுக்கி பூமியிலோ, நிலத்திலோ, கடலிலோ, ஆற்றிலோ, ஓடும் நீரிலோ விட்டு விட வேண்டும். இதனால் திருஷ்டி தோஷங்கள் பூமி தேவதைகளால் ஏற்கப்பட்டு பஸ்மம் செய்யப்படுகின்றன...!
உங்கள் குழந்தைகளுக்கு நல்ல புத்தாடைகள் அணிவித்தோ, புது சைக்கிள் அல்லது விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுத்தால் கூட அது பிறருடைய பொறாமைக் கண்களுக்கு ஆட்படுமேயானால், அக்குழந்தை அடிக்கடி நோய்வாய்ப்பட்டு மந்த புத்தியுடன் நன்கு படிக்காமல் சோம்பித் திரியும், காயம் பட்டுக் கொள்ளும், இதுவும் கண்திருஷ்டி தோஷங்களின் விளைவேயாகும். ஏன், நீங்கள் காய்கறிகளை, பையிலோ, கூடையிலோ வாங்கிச் செல்லும் போது கூட பலர் பார்த்து விட்டால்., “நமக்கு சோற்றுக்கே வழியில்லை, இவ்வளவு காய்கறிகளை அள்ளிச் செல்கின்றார்களே..” என்று எண்ணினால் கூட அந்தக் காய் கறிகளில் பூச்சியும், புழுவும் சேர்ந்தோ  அல்லது நறுக்குகையில் கையில் அடிபடுதலோ, செய்த உணவு கெட்டு வீணாகுதலோ ஏற்படக் கூடும்..

அர்ச்சனை செய்த/ செய்வதற்காக வாங்கிய தேங்காய் அழுகுதலும் கூட சிலவிதமான கண் திருஷ்டி தோஷங்களைக் காட்டுகின்றது.. தேங்காயில் எந்தக் கண் பகுதி அழுகியிருக்கிறது என்பதைக் கொண்டு அந்த தோஷம் எதனால், எவரால் ஏற்பட்டது என்பதையும் அறியலாம். இவையெல்லாம் திருஷ்டி நிவாரண வழிபாட்டு முறை இரகசியங்களாகும். திருஷ்டி எவரால் வந்தது என்று தெரிந்தால் அவர்மீது விரோதமும், குரோதமும் கொந்தளிக்கும். இவற்றைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பதே நன்மையானதாகும்.. எதையும் தெரிந்தும், தெரியாமலும், புரிந்தும் புரியாமலும் அறிந்தும் அறியாமலும் இருக்கின்ற ஞான நிலையை மகான்களும், ரிஷிகளும், சித்புருஷர்களும் மட்டுமே பெற்றுள்ளனர். ஏனென்றால் அவர்கள் தாம் எத்தகைய வெறுப்பு, தோஷம், குரோதம், பகைமை இன்றி அனைத்து உயிர்களிடமும் அன்பு பாராட்டும் காருண்யத்தைப் பெற்றுள்ளார்கள்..
திருஷ்டி தோஷங்கள் கூட நமக்குப் புகட்டுகின்ற மிகவும் முக்கியமான தெய்வீகப் பாடம் என்னவென்றால், எவர் எத்தகைய துன்பங்களை நமக்கு அளித்தாலும்,
1. அது பிறரால் வந்தது மட்டுமே என்று எண்ணாதீர்கள்..
2. நமக்கு வருபவையெல்லாம் நம்முடைய முன்வினைப் பயன்களே என்று உணர்க!
3. எந்தத் துன்பத்தையும் தெய்வீக ரீதியாக நிவர்த்தி செய்ய உரிய வழிவகைகளை மனித முயற்சியாகத் தேடுதல் வேண்டும். இங்கு பகைமைக்கோ, விரோதத்திற்கோ இடம் கிடையாது, எவரையும் வெறுத்தலும் கூடாது..
4. தோஷ விளைவுகளெல்லாம் தீய சக்தியின் பெருக்கத்தைக் காண்பிக்கின்றது. இறை வழிபாடுகள் குறையும் போதுதான் புண்ணிய சக்தியும் மங்குகின்றது.. எனவே பக்தி பெருகினால், புண்ணிய சக்தியும் பெருகும், புண்ணிய சக்தியை நன்முறையில் பயன்படுத்தினால் தான் அது தெய்வீக சக்தியாக மலரும். ஒருவர் பெரும் பணக்காரராக இருக்கின்றார் என்றால் அது புண்ய சக்தியின் விளைவுதான்... ஆனால் அந்தப் பணக்காரத்தனத்தைக் கொண்டு கெட்ட வழிகளில் அவர் வாழ்க்கைப் பாதை அமையுமேயானால் அப்புண்ய சக்தியை அவர் தெய்வீக சக்தியாக மாற்றாமல் வீணே அதனை விரயம் செய்து கொண்டிருக்கிறார் என்பது தான் பொருளாகும்..
5. எனவே புண்ய சக்தியைப் பெறுதலை விட அதனை நன்முறையில் பயன்படுத்துகின்ற பாங்கினையும் அறிதல் வேண்டும். இதற்குரிய ஒரே வழி தியாக மனப்பான்மையுடன் எந்த பூஜையையும் இறைவழி பாட்டையும் செய்தல் வேண்டும். ஏனென்றால் எங்கு தனக்கென வேண்டுதலோ பிரார்த்தனையோ இல்லையோ அதுதான் தியாக மனப்பான்மை நிறைந்த வழிபாடாக மலர்கின்றது... இதனால் கிட்டுகின்ற புண்ய சக்தி தியாக மனப்பான்மையுடன் சேர்ந்த தெய்வீக சக்தியாக மாறுவதால் இப்புண்ய சக்தி எப்போதும் நன்மை தான் பயக்கும்...
6. சுயநலத்துடன் கூடிய பிரார்த்தனை என்றால் அதில் கிட்டுகின்ற புண்யசக்தி மனம்போன போக்கில்தான் செலவழியும்.
இவையெல்லாம் திருஷ்டி தோஷங்களின் மூலம் நாம் பெறுகின்ற தெய்வீகப் பாடங்களாகும்.. எனவே, ஒரு சிறிய திருஷ்டி நிவாரணமானது எத்தகைய அரிய இறை விளக்கங்களைத் தருகின்றது பார்த்தீர்களா? இதற்குக் காரணம் சத்குருவின் அருள் மொழிகள் தான். அவரே அனைத்தையும் அறிந்தவர். முக்காலத்தையும் உணர்ந்தவர். தீர்க்க தரிசனமாக எதையும் புரிந்து கொள்ள வல்லவர். ஆனால் இத்தகைய தெய்வீக சக்திகளுடன் எளிமையாக அடக்கமாக பக்தியுடன் பணிந்து கிடப்பவர். இதுதான் சத்குருவிற்கான இலக்கணம்..
திருஷ்டி தோஷ நிவாரணம் – பலவிதமான முறைகளில் திருஷ்டி தோஷங்களை நீக்கிவிடலாம்.. எனினும் தீப ஜோதிக்குத்தான் பலவிதமான கர்மவினைகளை தோஷங்களை, தீட்டுகளை, பஸ்பம் செய்கின்ற தெய்வீக சக்தி உண்டு. எனினும் கலியுகத்திற்கு உரித்தான முக்கியமான இறைவழிபாடுகளுள் இறைதரிசனங்களுள் தீபஜோதித் தத்துவம் சிறப்பிடத்தைப் பெறுகின்றது. இதனால் தான் ஜோதி ஸ்வரூபமாக விளங்குகின்ற இறைவன் அக்னிப் பிழம்பு மலையாகத் திருஅண்ணாமலையில் வீற்றிருக்கின்றான். இதனால் தான் லட்சக்கணக்கான மக்கள் மாதந்தோறும் அக்னி மலையைச் சுற்றி வலம் வருகின்றார்கள்..
இந்த அக்னி ஸ்வரூப திருமாமலையில் பதிந்துள்ள கிரணங்கள் கிரிவலம் வருவோருடைய உடல், உள்ளம், மனதில் உள்ள தோஷங்களை ஈர்த்து கிரஹித்து பஸ்பம் செய்து அவர்களைப் புனிதமாக்குகின்றன. எனவே ஒரு முறை திருஅண்ணாமலையை கிரிவலம் வருவீர்களேயானால் அதில் கழிகின்ற கர்மவினைகளோ ஏராளம்! ஏராளம்! நீங்குகின்ற தோஷங்களோ பலப்பல! அதிலும் இந்த தோஷ நிவர்த்தி தீப கண்டியை திருஅண்ணமலையாரின் சாட்சியாக நீங்கள் பெறுகின்றபோது பஞ்சபூதத் தலங்களில் அக்னிக்குரியத் தலமாக திருஅண்ணாமலை விளங்குவதால் ஸ்ரீஅருணாசலேஸ்வரரின் அக்னிச் சக்திகளைத் தாங்கி இத்தீப கண்டி வெளிவருகின்றது.. எனவே தான் நம் ஆஸ்ரமத்தில் இத்தீபகண்டிகள் முதன் முதலாக அருணாசல சாட்சியாக வைக்கப்பட்டு அக்னி பூஜை செய்யப்பட்டு, ஸ்ரீருத்ர காயத்ரீ, ஸ்ரீஅக்னி காயத்ரீ மற்றும் அக்னி பகவானுக்குரித்தான பலவிதமான மந்திரங்களும் ஓதப்பட்டு அக்னி தெய்வ லிங்கமாக விளங்குகின்ற அருணாசலேஸ்வர்ரின் திருப்பார்வையில் வைக்கப் பெற்று அடியார்களுக்கு சத்குருவின் ஆசிகளாக அளிக்கப்படுகின்றது. எனவே, திருஷ்டி தோஷ நிவாரண கண்டி தீபவழிபாட்டை மேற்கொண்டு பலவிதமான கண் திருஷ்டி தோஷங்களுக்குமான நிவர்த்தியைப் பெற்று துன்பச் சுமைகளைக் களைந்து சாந்தமான வாழ்வைப் பெறுவீர்களாக!

வாஸ்து மகிமை

ஸ்ரீவாஸ்து புருஷ தேவமூர்த்தி மஹிமை
சென்ற இதழ் தொடர்ச்சி திருச்சி E.B. சாலையில் உள்ள ஸ்ரீபூலோகநாதர் ஆலயம் ஸ்ரீவாஸ்து பூஜைக்கு ஏற்ற திவ்யத் தலமாகும்..  ஸ்ரீபூலோகநாதரின் அவதாரம் எவ்வாறு ஏற்பட்டதோ? ஸ்ரீபூமிநாதர் எனவும் ஸ்ரீபூலோகநாதர் எனவும் போற்றப்படுகின்ற சர்வேஸ்வரனின்  கிரந்தங்கள் மிகவும் சிறப்பாக விளக்குகின்றன. மஹாபிரளயத்திற்குப் பின்னர் ஈஸ்வரியானவள் பிரபஞ்சத்தின் தோற்றம், அதன் ரகசியத்தையும் அறிய விரும்பினாள். ஆனால் இது சர்வேஸ்வரனுடைய தேவரகசிய லீலைகளுள் ஒன்றல்லவா! எனவே ஈஸ்வரனும், “நீ இதனை அறிய வேண்டுமென்றால் இதற்குரிய வராஹ யோக மாயா தத்துவத்தை, யோக புவனேஸ்வரி மாயா தேவியாக வடிவம் கொண்டு, உன் சகோதரனாம் திருமாலின் அவதாரமான ஸ்ரீவராஹ மூர்த்தியிடம் உபதேசம் பெற்று அறிந்து வருவாயாக!” என்று அறிவுரை கூறினார். உமையவளும் சிவபெருமானின் வாக்குக்கேற்ப தன் சகோதரனாம் திருமாலின் அற்புத அவதார வடிவமாகிய ஸ்ரீவராஹ மூர்த்தியிடம் சென்று பயின்று தவமிருந்து பலகோடி யுகங்கள் யோகம் பூண்டு புவனயோக மாயா தத்துவத்தை  உணர்ந்தனள்.. அது வரையிலும் ஸ்ரீவராஹ மூர்த்தியாகவே பாதாள லோகங்களுள் வீற்றிருந்த நிலையில் ஸ்ரீவராஹ மூர்த்தி இந்த யோக மாயாதத்துவத்தை உணர்த்தி நின்றார்.

ஸ்ரீவராகமூர்த்தி
பெருமாள்மலை துறையூர்

வெறும் தத்துவ உபதேசம் மட்டும் நிறைவைத் தந்து விடுமா? அதனை யோகத்திலும், தவத்திலும் வடிவமைத்தால் தானே அதனுடைய பரிபூரணமான பலன்களை உணர்தல் இயலும்! எனவே, திருமாலின் அறிவுரைப்படி அம்பிகை புவன யோக மாயா தத்துவத்திற்குரிய தாண்டவங்களை, நடராஜ நடன தத்துவங்களின் மூலமாக உணர்வதற்காக எங்கெல்லாம் ஸ்ரீநடராஜப் பெருமானின் திருநடனங்கள் நிகழ்கின்றனவோ அங்கெல்லாம் தன் யோக தவத்தைத் தொடர்ந்தனள்.. ஆனால் ஓரிடத்திலா சபாபதி நிலை கொண்டு நிற்கின்றார்? விநாடிக்கு விநாடி அவர் கோடிக்கணக்கான லோகங்களில், ஆனந்த தாண்டவம், அற்புத தாண்டவம், நிருத்த தாண்டவம் என்று எத்தனையோ கோடி தாண்டவங்களை ஆடிக் கொண்டல்லவா திகழ்கின்றார் நடராஜப் பெருமான்! அதற்குள் எத்தனையோ கோடி பிரளயங்கள் தோன்றி மறைந்தனவே!
 சிவபிந்து கடாட்சம் ! ஒரு பிரளயத்தின் முடிவில்... படைப்பதைத் துவங்குவதற்காக நடராஜப் பெருமான் சிருஷ்டி தாண்டவத்தை நிகழ்த்துவதற்காக ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். அம்பிகையும் அங்கு வந்து சேர்ந்தனள்... யோக மாயை வடிவம் கொண்டு தேவி இயங்கியமையால், எந்த ஒரு ஸ்தூல தேகத்தைக் கொண்டு சிருஷ்டி தாண்டவ கோல இறைவனை தரிசிப்பது என்று அம்பிகையே திகைத்துக் கொண்டிருக்க, இதற்குரிய தீர்வைத் தர வேண்டியதும் ஈஸ்வரன் தானே!  யார் யோகமாய வடிவைத் தந்தாரோ அவரேதானே மாய வடிவையும் மீட்டுத் தருதல் வேண்டும்! அம்பிகை, நடராஜப் பெருமானின் திருப்பாதங்களைச் சரண் அடைந்தனள்.
கோடானு கோடி யுகங்கள் வராஹ யோக நிலையைப் பயின்றமையால் இதன் காரணமாக அம்பிகையிடம் எழுந்த புவன யோக ஸ்பரிசம் பெற்றமையால் ஸ்ரீநடராஜப் பெருமான் அட்சய குண்டலினி சக்திகள் நிறைந்த பிந்து கமல நாட்டியத்தைத் தொடங்கினார்.. சிவ குண்டலினி சக்தியைத் தம் ஸஹஸ்ராரத்திற்குள் செலுத்துகின்ற பாவனையில் அவர்தம் சிவப்பிரகாசப் பிந்துக் கதிர்கள் யாங்கனும் ஜோதிப் பொறிகளாய் ஆங்காங்கே தெளி(ரி)த்திட, அதிலிருந்து தாவரங்களும், நீரினங்களும், உயிர் வகைகளும், விலங்கினங்களும், புழு, பூச்சிகளும், வண்டினங்களும் தோன்றலாயின. இவையனைத்தையும் தாங்குவதற்கு ஓர் அண்டப் பொருள் தேவை அல்லவா! அதனையே இறைவன் அம்பிகையின் யோக புவன சக்திலிருந்து திரட்டி பூகோளமாக, பூலோகமாக அளித்தார். அதனைக் கண்டு பிரபஞ்ச சிருஷ்டியின் தத்துவத்தையும் க்ஷணப் பொழுதில் உணர்ந்து கொண்ட அம்பிகையானவள், “சர்வேஸ்வரா, தங்களுடைய திருவருளால் பிறந்தமையால் இந்த பூலோகத்திற்கு அதிபதியாக பூமிக்கு ஈஸ்வரியாக தங்களுடைய இந்த சிருஷ்டி கோல அவதாரத்திற்குரிய சிவபத்னி தேவியாக அடியேன் ஆகுதற்குத் தாங்கள் தான் அருள்புரிய வேண்டும்”, என்று வேண்டிடவே, சிவபெருமானும் புவன யோக மாய வடிவிலிருந்து ஆங்கே ஸ்ரீபுவனேஸ்வரியைத் தோற்றுவித்தார். ஆம், இவ்வாறாகவே பூமிக்கு மாதாவாக ஆனவளே ஸ்ரீபுவனேஸ்வரி அம்பிகை ஆவாள். 

தமக்கென ஒரு உலகத்தை இரட்சிபதற்காகத் தந்த அந்த நடராஜ வடிவை, நடனசுந்தரனின் திரு உருவை அம்பிகை வீழ்ந்து வணங்கிடவே அதிலிருந்து சுயம்பிரகாசமாய் ஒரு லிங்க மூர்த்தி எழுந்தருளினார். அவர்தாம் ஸ்ரீபூலோக நாதராவார்.. இதன் பிறகே புவனேஸ்வரித் தாயானவள் பூலோகநாதரின் இடப்பாகம் பெறவேண்டுமென்பதற்காக பூலோகத்தினுள்ளே அச்சுயம்பு லிங்கம் தோன்றிய இட்த்திலேயே மீண்டும் புவன யோகம் பூண்டு ஸ்ரீஜகதா அம்பிகையாக இங்கு ஸ்ரீபூலோகநாதர் ஆலயத்தில் தெய்வ நாயகியானாள். நடராஜப் பெருமானின் பிந்து யோக சக்தியிலிருந்துத் தோன்றிய முதல் உயிரின்ங்களுள் முக்கியமானவை நாக மூர்த்திகள் ஆகும். ஆனந்தப் பெருக்கால் இந்நாகங்கள் அனைத்தும் பூலோகநாத சுயம்பு லிங்கத் திருமேனியின் மேல் சஞ்சாரம் செய்து மகிழ்ந்தன. இவையெல்லாம் ஆதிமுல நாக தேவதைகள் ஆகும். இவ்வாறு சுயம்புவாகத் தோன்றியவ தாம் இன்றைக்கு திருச்சியிலே கீழ் அரண் சாலையில் (E.B Road = East Boulevard Road, Gandhi Market அருகில்) ஸ்ரீபூலோகநாதராக அருள் பொழிகின்றார். புவன வடிவமும், புவன யோக சக்தியும் கொண்டவளாய் அம்பிகை ஸ்ரீஜகதாம்பிகை இத்திருக்கோயிலில் அருள்பாலிக்கின்றாள். ஆதிமூல நாக தேவதைகள் வழிபட்ட இடமாதலின் இங்கு இன்றும் தெய்வீக அரவ சஞ்சாரங்களும் உண்டு.. இது மட்டுமல்லாது சிதம்பர சபாபதி நாதனின் பிந்து யோக சக்தியிலிருந்து உற்பவித்த ஆதிமூல தெய்வீக  விருட்சஹ்களில் முக்கியமான குருந்த மரம், அத்தி மரம், வில்வ மரம், வன்னி மரம் மற்றும் மகிழ மரம் ஆகிய 5 முக்கிய தெய்வீக மரங்களையும் இத் திருக்கோயிலில் ஒன்றாக கண்டு தரிசித்திடலாம்.. இவ்வைந்து மரங்களையும் ஒரு சேர தரிசித்தல் என்பதே வாழ்க்கையில் பெறுதற்கரிய பாக்கியம் அல்லவா! அதிலும் குருந்த மரம் என்பது மிக மிக விசேஷமானதாகும்..
திருப்பெருந்துறையான ஆவுடையார் கோயிலில் குருந்த மரத்தடியில் தானே சிவபெருமான், மாணிக்கவாசகப் பெருமானுக்கு உபதேசித்தார்! எனவே தெய்வீக மஹிமைகள் நிறைந்த புவன சக்திகளை உடைய இச்சிவத்தலத்தில் வருடத்தில் 8 முறை வருகின்ற வாஸ்து நாட்களையும் விசேஷமாக கொண்டாடுதல் மிகவும் சிறப்புடையதாகும்... ஏனென்றால் புவன சக்திகளை உடைய ஸ்ரீபூமிநாதர், பூவுலகில் ஸ்ரீபூலோகநாதர் ஆலயங்கள் ஒருசிலவே அமைந்துள்ளன. சென்ற இதழில் விளக்கப்பட்டுள்ளவாறு குறிப்பிட்ட எட்டு வாஸ்து தினங்களின் போது இத்திருத்தலத்தில் ஸ்ரீபூலோகநாதருக்கு உரித்தான குறித்த அபிஷேக ஆராதனைகளையும், தான, தர்மங்களையும் முறையாக நிறைவேற்றி வந்தால் பூமி சம்பந்தமான தோஷங்களுக்கு நிவர்த்தி கிட்டும்.
1. இல்லத்தில், அலுவலக வியாபார இடங்களில், நிலங்களில் உள்ள நிலதோஷங்கள், சூன்ய தோஷங்கள் நிவர்த்தி ஆகும்.
2. வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படுவதற்கு முக்கியமான காரணங்களுள் ஒன்றாக இருப்பது வாடகை இடமோ அல்லது சொந்த இடமோ எதுவாயினும் சரி, வியாபாரத் தலத்திலுள்ள பூமி தோஷங்கள் ஆகும். இதற்கான பரிகாரத்தைத் தரவல்லவையே வாஸ்து பூஜா பலன்களாகும். வாஸ்து நாட்கள் என்றால் புதிதாக அஸ்திவாரம் போடுவதற்கான பூஜை என்று மட்டும் எண்ணாதீர்கள். நீங்கள் குடியிருக்கின்ற வீடு, வேலை பார்க்கின்ற அலுவலகம், வியாபாரம் செய்கின்ற இடம் இவை எதுவாயினும் சரி, வாடகைப் பகுதியோ, சொந்த நிலமோ, சொந்தக் கட்டிடமோ, எதுவாயினும் சரி, அனைவருமே ஸ்ரீவாஸ்து பூஜையை முறையாகத் தம்முடைய இடத்தில் கடைபிடித்தாக வேண்டும்.

திருச்சி மலைக்கோட்டை

ஸ்ரீவாஸ்து நாள்
ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் எட்டு தினங்களுக்கு அமையும் ஸ்ரீவாஸ்து தினங்களில் ஆடிமாதம் 11ஆம் தேதி அமைகின்ற “திரிபாத பவிஷ்ய” வாஸ்து நாளிது. ஏற்கனவே நாம் பன்முறை விளக்கி வந்துள்ளது போல ஸ்ரீவாஸ்து நாளென்பது புது அஸ்திரவாரத்திற்கான பூஜை மட்டுமல்ல, வீடு, அலுவலகம், தொழில், பாக்டரி, கடை சொந்த இடமோ, வாடகையோ எப்படியிருந்தாலும் சரி அனைத்து நிலங்களிலும், கட்டிடங்களிலும், வீடுகளிலும், பாக்டரிகளிலும் ஸ்ரீவாஸ்து பூஜையைக் கட்டாயமாகக் கடைபிடித்தாக வேண்டும். அனைவரும் ஸ்ரீவாஸ்து ஹோமத்தைச் செய்யும் வகையில் ஸ்ரீவாஸ்து ஹோம முறையை ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் இனிமேல் அளிக்க இருக்கின்றோம். பூமிகாரகனாக விளங்கும் ஸ்ரீசெவ்வாய் மூர்த்தி எப்போதும் ஸ்ரீவாஸ்து பகவானை பூஜித்து, தியானித்து வருகின்ற கிரஹ மூர்த்தியாவார். பலவித பூம்ய பீஜாட்சரங்கள் கூடிய, சித்தர்களின் பரிபாஷை பீஜ அட்சரக் கொத்து மந்திரங்கள் கொண்டதாக ஸ்ரீசெவ்வாய் கிரஹ மூர்த்தியின் அனுகிரஹ அம்சம் நிறைந்த “ஸ்ரீபூமி அந்தர வாஸ்து சுந்தர சக்கரம்” எம் ஆஸ்ரமத்தில் கிடைக்கும்.
இதனை இல்லங்களிலும், அலுவலகங்களிலும், பாக்டரிகளிலும் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி பார்க்குமாறு வைத்து தினந்தோறும் அரைத்த சந்தனம், குங்குமம்  இட்டு “ஓம் ஸ்ரீவாஸ்து மூர்த்தியே போற்றி!” என்று 108 முறை ஓதி சிவப்பு நிற செம்பருத்திப் பூ, சிவப்பு நிற அரளி, சிவப்பு நிற இருவாட்சி மலர்களால் அர்ச்சித்து இயன்ற போதெல்லாம் கிழங்கு வகை உணவைப் படைத்து அன்னதானமாக அளித்து வழிபட்டு வந்தால் பூமி, இல்லம், வியாபார இடங்களில் உள்ள நில தோஷங்கள், கபாலவடி தோஷங்கள் (நிலத்தில் எலும்பு காணப்படுதல்.) பிறருடைய பொறாமையால் ஏற்படும் தோஷங்கள் போன்றவை நிவர்த்தியாகி இந்த தோஷங்களால் ஏற்படும் இல்லறச் சண்டைகள், தொழில் மந்தம், அசாதாரண நஷ்டங்கள், தொழில் முறிவு, நிலச் சரிவு போன்றவற்றிற்கும் நிவாரணம் கிட்டும். இன்று ஸ்ரீவாஸ்து நாளில் E.B சாலையில் உள்ள ஸ்ரீபூலோக நாதர் ஆலயத்தில் ஸ்ரீபூலோகநாதருக்கு கீழ்க்கண்ட முறையில் அபிஷேக ஆராதனைகளும் தான, தர்ம பூஜைகளும் செய்து வந்திடில் மேற்கண்ட பூமி, கட்டிட தோஷங்களுக்கு நிவாரணம் கிட்டும்.
ஸ்ரீவாஸ்து மூர்த்தி போற்றித் துதி (தமிழில்) – சென்ற இதழ் தொடர்ச்சி

13. ஓம் பூ புவ சுவர்க பூநாத கான புவனனே போற்றி!
14. ஓம் பூ புவ சுவர்க அந்தரப் பரம் பொருள் அமுதா போற்றி!
15. ஓம் பூ புவ சுவர்க கீழ்திசை காக்கும் கிரணனே போற்றி!
16. ஓம் பூ புவ சுவர்க மண் உறை மறைவடி மகேசா போற்றி!
17. ஓம் பூ புவ சுவர்க மூலத் தினகரன் முதலுரு போற்றி!
18. ஓம் பூ புவ சுவர்க மறைநில மறைபுலன் மறையே போற்றி!
19. ஓம் பூ புவ சுவர்க வேள்வி முதலாய் விளக்கொளி போற்றி!
20. ஓம் பூ புவ சுவர்க புண்ணிய திருமால் புறத்துரு போற்றி!
21. ஓம் பூ புவ சுவர்க ஆயிரங் கண் மலர்ப் பரவொளி போற்றி!
22. ஓம் பூ புவ சுவர்க நெய்யுறை சத்திய அழகா போற்றி!
23. ஓம் பூ புவ சுவர்க தர்மத் தலைக் கரு தகையே போற்றி!
24. ஓம் பூ புவ சுவர்க அனைத்துள பருப்பொருள் அருள்மறை போற்றி! 

                    ஸ்ரீவாஸ்து நாள் பூஜை

காலை 6.48 முதல் 7.06 மணி வரை ஸ்ரீவாஸ்து யோக நித்திரை மீண்டு தந்த சுத்தி

 கங்கை, காவிரி போன்ற புனித நீர் அபிஷேகம்.

காலை 7.06 முதல் 7.24 மணி வரை ஸ்ரீவாஸ்து பகவான் நீராடும் நேரம்

மஞ்சள், சந்தன, வாசனை திரவியங்களை – புனித நதி நீரில் கரைத்து அபிஷேகம் – வெட்டிவேர் தைலக் காப்பு, சிவப்பு நிற வஸ்திரம் சார்த்துதல்.

காலை 7.24 முதல் 7.42 வரை ஸ்ரீவாஸது பகவான் பூஜை செய்யும் நேரம்

சென்ற இதழில்.. (ஜுன் 1999 மாத ஸ்ரீஅகஸ்திய விஜயம்) அளிக்கப்பட்ட 12துதிகளை 9முறை ஓதி (9x12 = 108) சந்தன, வெண்ணெய் உருண்டைகளால் அர்ச்சனை.

காலை 7.42 முதல் 8.00 வரை ஸ்ரீவாஸ்து பகவான் பிரசாதம் ஏற்கும் (போஜனம்) நேரம்

கிழங்கு வகை உணவு படைத்தல் (சர்க்கரை, மரவள்ளிக் கிழங்கு, உருவளைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு போன்ற கிழங்கு வகைப் பொரியல் கூட்டு + அன்னம்)

காலை 8.00 முதல் 8.18 மணி வரை ஸ்ரீவாஸ்து பகவான் தாம்பூலம் தரிக்கும் நேரம்.

நாணயம், வெற்றிலை, பாக்கு, பழத்துடன் – 103 தாம்பூலங்களை வைத்து சுவாமிக்குப் படைத்தல்

இதன் பிறகு கிழங்கு வகை உணவினை சோற்றுடன் அன்னதானமாக அளித்தல் – 103 தாம்பூலங்களை நாணயத்துடன் ஏழைகளுக்கு அளித்தல்.

அமுத தாரைகள்
1. குழந்தைகள் நன்முறையில் வளர :-
குழந்தை பிறப்பது முதல் 3, 4 வயது வரை அதனைப் பேணி வளர்ப்பது என்பது கண்ணும் கருத்துமாய் ஆற்ற வேண்டிய பெரும் பணியாகும். எத்தனையோ அசுப நேரங்கள், ஆபத்துகள் , கண் திருஷ்டி போன்றவற்றைக் கடந்து தொட்டில் பிள்ளையை வளர்த்தல் என்பது பெரும் பணியாகும். முருகப் பெருமானே தொட்டில் பிள்ளையாய் வளர்ந்த திருத்தலமே மாயூரம் அருகே குத்தாலம் அருகிலுள்ள விலத்தொட்டித் திருத்தலமாகும். இங்கு முருகப் பெருமானுக்கு, சிவப்பு நிற பட்டு வஸ்திரங்களைச் சார்த்தி ஏழைக் குழந்தைகளுக்கு நன்கு தைக்கப்பட்டப் புதிய பட்டாடைகளைத் தானமாக அளித்து வந்தால், குழந்தைகள் எவ்விதத் தோஷமுமின்றி நன்கு வளர்வதோடு அடிக்கடி நோய்வாய்ப்படுகின்ற நிலைமையும் மாறி குழந்தைகள் ஆரோக்கியத்துடன் வளர்வர்.
2. பிள்ளைகள் திருந்திட

ஸ்ரீசூரியகோடீஸ்வர சுவாமி
கீழ்சூரியமூலை

தந்தை பெரிய வியாபாரியாகவோ, நல்ல பேராசிரியராகவோ/ நன்கு படித்து, கலெக்டர், G.M போன்ற பதவிகளில் பிரகாசித்திட, பிள்ளைகளோ மந்த புத்தியுடன் “கழிசடை” எனப் பலரும் ஏசும் அளவிற்கு புத்தி கூர்மையின்றி தவறான வழிகளில் சென்று குடும்பத்தின் நற்பெயருக்குக் கேடு விளைவிக்கும் வண்ணம் நடந்து கொள்வர். இன்னும் புரியுமாறு சொல்வோமாயின் “பூர்விக சொத்தைக் கரைத்துச் செல்வத்தைச் சீர்குலைக்க வந்த பிள்ளைகளோ” எனப் பலரும் பழிகூறும் வண்ணம் தன் பிள்ளைகள் இருப்பதை எண்ணி தாய், தந்தையர் மிகவும் வேதனை அடைகின்றனர். என்னதான் செல்வம், பதவி, அந்தஸ்து இருந்தாலும் தினசரி எந்தப் பிள்ளையால் எந்தத் தெருச்சண்டை வருமோ என எண்ணி அஞ்சி வாழும் பெற்றோர் ஏராளம். இவர்கள் தஞ்சை மாவட்டம் கஞ்சனூருக்கு அருகே சூரியமலை அல்லது சூரியமூலை எனும் கிராமத்திலுள்ள சூரிய கோடீஸ்வர மூர்த்திக்கு இயன்ற போதெல்லாம், இளநீர் அபிஷேகமும், வெண்ணெய்க் காப்பும் இட்டு, பால்பாயச தானம் செய்து வந்தால் தவறான வழியில் செல்லும் பிள்ளைகட்குத் திருந்தி வாழ நல்வழி கிட்டும். சந்திர பகவானுக்குரித்தான வெண்மை நிற பால்பாயச தானமானது மதியை அறவழியில் பிரகாசிக்கச் செய்யும் தெய்வீக சக்தியைத் தன்னுள் கொண்டுள்ளது.

3. மனநோய்க்கான நிவாரணம்
பல குடும்பங்களிலும், மனநிலை சரியில்லாத பிள்ளைகளைக் கண்டு பெற்றோர்கள் மிகவும் மனம் வருந்துகின்றனர். இதற்கான ஆயிரம், ஆயிரம் விதிநிலை காரண, காரியங்கள் உண்டு. இத்தகைய குழந்தைகளுடன் / பிள்ளைகளுடன் திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள தண்டலைச்சேரி எனும் இடத்திற்குச் சென்று இங்கு அருள்பாலிக்கின்ற சிவலிங்க மூர்த்திக்கு அடிக்கடி பால் அபிஷேகம் செய்து, கீரை கலந்த சாதம், ஓடு உள்ள காய்கறிகள் (பூசணி, பறங்கி, தேங்காய், முருங்கை, etc..) போன்ற காய்கறிகள் கலந்த உணவினைப் படைத்து அன்னதானம் செய்து வந்தால் இறைவன் தக்க நல்வழி காட்டுவான். எதையும் தம் ஊழ்வினையாக ஏற்கின்ற மனப்பான்மையுடன் நம்பிக்கையைக் கைவிடாது இவ்வரிய பரிகாரத்தைத் தொடர்ந்து செய்து வர வேண்டும். ஸ்ரீ ஸ்திர புத்தீஸ்வரராக இங்கு அருள்பாலிக்கும் ஈஸ்வரன், மனநிலைக் கோளாறுகட்குத் தக்க நிவாரணத்தை அளிப்பதோடு, இல்லறத்திலும், வியாபாரத்திலும் பலவித குழப்பங்களுடன் எந்த முடிவை எடுத்தல் வேண்டும் என்று திணறும் போது மேற்கண்ட பால் அபிஷேகமும், அன்னதானமும் செய்திட நல்ல முடிவையும் பெற்றுத் தருகிறார். மாயூரம் அருகே ஸ்ரீவைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள சித்தாமிர்த தீர்த்தக் குளத்தில் மனவளர்ச்சி குன்றியோர் பெற்றோரின் துணையோடு அடிக்கடி நீராடி வருவதுடன், கோயில் உண்டியலில் தக்கக் காணிக்கையைச் செலுத்தி சித்தாமிர்த தீர்த்தத்தையும், இங்கு பிரசாதமாக அளிக்கப்படும் விபூதி மருந்து உருண்டைகளையும் இல்லத்திற்கு கொண்டு வந்து தினந்தோறும் மூன்று வேளையும் இறைப் பிரசாதமாக ஆழ்ந்த நம்பிக்கையுடன் சிறிதே அருமருந்தாக அருந்தி/உண்டு வந்தால் தக்க நல்வழிகள் கிட்டும்.

ஸ்ரீபாதாள ஈஸ்வரர்
ஹரித்துவாரமங்கலம்

4. பூமி சம்பந்தமான வியாபாரம் விருத்தியடைய எத்தையோ வியாபார வகைகள் உண்டு. பூமிக்கடியிலுள்ள பொருட்களைக் கொண்டு வியாபாரம் செய்வோர் கிழங்கு வகைகள், மணல், செங்கல் வியாபாரம், கட்டிட அஸ்திவாரம், கிணறு தோண்டுதல், குடிநீர் மற்றும் கழிவு நீர்த்துறை, etc..,  தங்களுடைய வியாபாரம் நன்முறையில் நடைபெறவும், வியாபாரத்தில் ஏற்படும் நஷ்டங்கள் நீங்கவும் தஞ்சை – நாகை சாலையிலுள்ள ஹரித்துவாரமங்கலம் சிவாலயத்தில் அபிஷேக, ஆராதனைகளுடன் புதன் தோறும் வழிபட்டு ஏழை, சுமங்கலிகட்கு, ஜாதி, இன பேதமின்றி வெள்ளி மெட்டியைத் தானமாக அளித்து வர வேண்டும். “ரஜத பாலயம்” என்ற அற்புத தெய்வீக சக்தி பெற்றுள்ள வெள்ளிக்கு பூமி தோஷங்களைக் களையும் சக்தி உண்டு. இங்கு வெள்ளி ஆபரண தானம் விசேஷமான பலன்களைத் தருகின்றது.
5. திருமணத் தடங்கல் தீர
திருமணத் தடங்கலுக்கு முக்கிய காரணமாக இருப்பது ஆண்கள் பலரும் தனக்கு மனைவியாக வரக்கூடிய பெண்கள் அழகாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை முன் வைப்பதுதான். இதனால் பல கன்னிப் பெண்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. பல பெண்களும் தாங்கள் அழகாக இல்லையே என்ற மனத்தாங்கல்களுடனும், ஏக்கங்களுடனும் தங்கள் வாழ்வைக் கழிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது . ஒரு திருமுகத்துடனும், ஆறு கைகளுடனும் உள்ள முருகப் பெருமானுக்குத் தங்களால் இயன்ற நேர்த்தியை வைத்து செவ்வாய், கார்த்திகை, சஷ்டியில் பெண்கள் வழிபடுவார்களேயானால் அவர்கட்கு நல்ல திருமண வாழ்வு அமையும் (வேதாரண்யம் அருகிலுள்ள கோடிக்கரை ஆலய முருகன்.)
6. திருச்சி மலைக்கோட்டை கிரிவலம்
ஒவ்வொரு மாதமும் சதுர்த்தி, சதுர்த்தசி, சங்கடஹர சதுர்த்தி நாட்களில் திருச்சி மலைக்கோட்டையை கிரிவலம் வந்து கஜபூஜையாக யானைக்கு அரிசி/சோளம்/கவள உணவு உருண்டைகளையும், கரும்பையும் அளித்து வர காரியத் தடங்கல்கள் நீங்கும். எந்த நற்காரியத்தையும் தொடங்குமுன் எந்நாளிலும் இங்கு மலைக்கோட்டையை கிரிவலம் வந்து தொடங்குதல் சிறப்புடையதாகும்.
7. புற்று நோய் – சில ஆன்மீக விளக்கங்கள்
எத்துணையோ லட்சம் பேருக்கு ஒருவராகத்தான் புற்றுநோய் ஏற்படுகிறது. தமக்கு ஏன் இப்புற்று நோய் வந்தது என எண்ணி வேதனையுறுவதை விட தன்னுடைய பூர்வ ஜென்ம வினைகளின் காரணமாகவே இந்நோய் வந்துள்ளது என்பதை உணர்வதே உண்மையான பரிகார வழியாகும். மனித முயற்சியால் புற்றுநோய் நிவாரணத்திற்காக அனைத்துவித மருத்துவழி முறைகளையும் மேற்கொள்ள வேண்டும். பொதுவாக பராய் எனப்படும் தெய்வீக மரத்திற்கு புற்று நோய்க்கான நிவர்த்தியைத் தரவல்ல பல தெய்வீக குணங்கள் உண்டு. திருச்சி அருகே திருப்பராய்த்துறை சிவாலயத்தில் ஸ்தல விருட்சமாயுள்ள பராய் மரம் ஒரு தெய்வீக மரமாகும். சிவ சொத்து ஆதலின், இதன் இலைகளையோ, பட்டைகளையோ பறித்தல் கூடாது. செவ்வாய் தோறும் செவ்வாய் ஹோரை நேரத்தில் (காலை 6 to 7, பகல் 1 to 2)  புற்று நோய் உள்ளவர்களோ அல்லது அத்தகையோர்க்கு உதவ விரும்புபவரோ இவ்வாலயத்தை அடிப்பிரதட்சிணம் செய்து, பராய் மரத்தைச் சுற்றிலும் சுத்தம் செய்து நீர் ஊற்றி, அரைத்த மஞ்சள், சந்தனம், குங்குமமிட்டு நல்ல மஞ்சள் நிற வஸ்திரம் சார்த்தி வலம் வந்து வழிபட இறைவனருளால் நல்வழி கிட்டும்.

திருப்பராய்த்துறை பராய்

பொதுவாக, முன் ஜென்மத்தில் “இறைவா என்னுடைய பாவங்களுக்கு எத்தனையோ கோடி ஜென்மங்களை எடுப்பதை விட அனைத்துத் துன்பங்களாய்யும் ஒரு சில ஜென்மங்களில் நிரப்பிக் கொடுத்து விடு” என்று வேண்டுவதின் பலனாகவும் அல்லது பல குடும்பங்களையும் வேரோடு துன்புறுத்திய காரணங்களுக்காகவும் தன்னுடைய உயிரைத் தானே பன்முறை வதைத்துக் கொண்டமைக்காவும் புற்றுநோய் ஏற்படுவதுண்டு. இதற்கான காரண, காரியங்கள் இன்னும் எத்தனையோ உண்டு. தக்க சற்குருவை நாடி உணர்ந்திடுக!
நித்ய கர்ம நிவாரணி
அந்தந்த நாளில் வலுவான ஆட்சியைப் பெற்றிருக்கும் தீர்க்கமான பார்வையை உடைய திதி, நட்சத்திரம், யோகம், கரணம், லக்னம், கிரகங்களின் தன்மைக்கேற்ப அந்நாளுக்குரிய விசேஷ பூஜை / வழிபாட்டு முறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை முறையாக ஆழ்ந்த நம்பிக்கையுடன் கடை பிடித்திடில், குருவருளால் ஒவ்வொரு நாளையும் தீய கர்ம வினைகளின் கழிப்போடு மேலும் எவ்விதமான புதிய தீவினைகளும் சேரா வண்ணந் தடுத்து சாந்தமான நித்ய வாழ்வைப் பெற்றிடலாம்.
1.7.1999 - வில்வ இலைகளில் சந்தனத்தில் “சிவ சிவ” என்று எழுதி வில்வ சந்தன நாம மாலையை ஸ்ரீஅகோரேஸ்வரருக்கு (திருவெண்காடு) சார்த்தி வழிபட்டிடில் – கொடுக்கல் வாங்கலில் வந்த பிரச்னைகள் தீரும்.
2.7.1999 - வேக வைத்த வேர்க்கடலையும், ஆட்டுப்பாலும் தானம் – வயிறு சம்பந்தமான் நோய்கள் தீரும்.
3.7.1999 - பாதாள சாக்கடையைச் சுத்தம் செய்கின்றவர்களுக்கு வயிறார உணவிட்டு வஸ்திர தானம் செய்திட – தேவையற்ற மனபயம், மனபிராந்தி விலகும்.
4.7.1999 - மலைவாழைப் பழத்தைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் தேன் விட்டு ஸ்ரீதன்வந்த்ரீ பகவானுக்கு நைவேத்தியம் செய்து ஜாதி, மத இன பேதமின்றி ஒரு வயது ஏழைக் குழந்தைகளுக்கு உண்ண அளித்திடில் – மூதாதையர்களின் அருளைப் பெறலாம்.
5.7.1999 -   ஏழைக் கைத்தறி நெசவுத் தொழிலாளர்களுக்குப் பாவுநூல் வாங்கித் தந்திடில் – தனக்கு வந்து சேர வேண்டிய சம்பள (arrears) பாக்கி வந்து சேரும்.
6.7.1999 - ஒட்டகங்களுக்கு வயிறார உணவு இட்டிடில் – பதவி உயர்வில் (Promotion) வரும் தடங்கல்கள் தீரும்.
7.7.1999 - குதிரைக்கு புல்/கொள் வைத்து ஸ்ரீஹயவதனப் பெருமாளை வேண்டிடில் – தேடிய பணம் ஓடி வரும்.
8.7.1999 - துளசி இலைகளில் சந்தனத்தால் “ராம்” என்று எழுதி மாலை தொடுத்து ராமரும், சீதையும் கரம் பற்றியிருக்கும் சிலா ரூப மூர்த்திக்கு (மதுராந்தகம் ஸ்ரீராமர் கோயில்) அணிவித்து வர – விவாகரத்து  (Divorce)  வழக்குகள் தீர்ந்து நலமுடன் முடியும்.
9.7.1999 - வலம்புரி சங்கில் புனித கங்கை, காவிரி நீரை ஊற்றிப் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்து அச்சங்கில் அபிஷேக நீரைப் பிரசாதமாகப் பருகிடில் – கணவன் – மனைவியின் சிறு பூசல்கள் பெரிதாக ஆகாமல் அடங்கி விடும்.

ஸ்ரீவிஷ்ணுதுர்கை
திருக்குறுக்கை

10.7.1999 - வாத்து வளர்க்கின்ற ஏழை ஜனங்களுக்கு உணவிட்டு வஸ்திர தானம் செய்திடில் – ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் வரும் பிரச்சனைகள் தீரும்.
11.7.1999 -   புதிதாக கன்று ஈன்ற பசுமாட்டிற்கு புண்ணாக்கு, கோதுமைத் தவிடு கொண்டு வயிறார உணவாக அளித்திடில் – தனவந்தர் மூலமாக எதிர்பாராத பண உதவி கிடைக்கும்.
12.7.1999 -  கோயில் பூந்தோட்டங்களில் வில்வ மரக் கன்றுகளை நட்டுப் பராமரிக்கத் தகுந்த ஏற்பாடு செய்திடில் – மூட்டு வாத நோய் (Rheumatic disease ) குணமாக வழியுண்டு.
13.7.1999 – வயதான, ஏழையான தட்டெழுத்து (Typists) தொழிலைச் செய்கின்றவர்களுக்கு அன்னதானம்/வஸ்திர தானம் செய்திடில் – நோய் பயம் மற்றும் மரண பயம் விலகும்.
14.7.1999 – இன்று வெற்றிலைகளில் “ஸ்ரீராம் ஜெயராம்” என்று சந்தனத்தால் எழுதி சுருட்டி, முடிந்து மாலைகளாக்கி ஆஞ்சநேய சுவாமிக்கு அணிவித்திடில் – நல்ல செய்தி வரும்.
15.7.1999 – இன்று ஏழைப் பெண் குழந்தைகளுக்கு இலவச காதணி அளித்துக் காதணி விழா கொண்டாடினால் – இளம் பெண்கள் வஞ்சகம் நிறைந்த காதலில் சிக்கி ஆண்களிடம் ஏமாற மாட்டார்கள்., காதணி தானம் ரட்சை போல் அவர்களைக் காக்கும்.
16.7.1999 – சுவாமிக்கு முடி பிரார்த்தனை செய்து மொட்டை அடித்துக் கொள்ளும் பெரியவர்களுக்கும், சிறு பிள்ளைகளுக்கும் தலையில் பூசிக் கொள்ள அரைத்த சந்தன தானம் செய்திடில் – அதிகாரம், பதவி, அந்தஸ்து போன்ற பெரிய மனிதத் தோரணையில் இருப்பவர்களால் வரும் துன்பம் தீரும்.
17.7.1999 – சிம்னி, அரிக்கேன் விளக்குகளைத் தெருத் தெருவாக விற்கும் ஏழை வியாபாரிகளுக்கு உணவு ஆடைதானம் செய்திடில் – வேலையில் நல்ல புதிய இடமாற்றம் ஏற்படும்.
18.7.1999 – வேப்பிலையைக் கொத்தாக எடுத்து அதில் சந்தனம், குங்குமம் இட்டு அம்மனுக்கு சார்த்தி அன்னதானம் செய்திடில் – அடிவயிறு சம்பந்தமான நோய்கள் தீரும்.
19.7.1999 – வெற்றிலைத் தோட்டத்தில் வெற்றிலை பறிக்கும் வேலை செய்பவர்களுக்கு வயிறு நிறைய உணவும், உடுக்க ஆடையும் தானம் செய்திடில் – கைக்கு எட்டி வாய்க்கு எட்டாமல் இருக்கின்ற பிரச்னைகள் தீரும்.
20.7.1999 – மின்விசிறி இல்லாத பள்ளிக் கூடங்களுக்கு மின் விசிறிகள் (Fans) தானம் – தலைச் சுற்றல் நோய்களுக்கு நிவாரணம்.
21.7.1999 – 12, 21, 30 நாகலிங்கப் பூக்களால் சுயம்பு மூர்த்தியாகிய சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்து 30 பொட்டலத்திற்குக் குறையாமல் அன்னதானம் செய்திடில் – புதுத் தொழில் தேடி வரும்.
22.7.1999 – சந்தனம் அரைத்து 27 நட்சத்திர லிங்க மூர்த்திகளுக்குப் பொட்டிட்டு, குங்குமம் வைத்து வழிபட்டு பிரமாதி வருடத்திற்கான நட்சத்திரத் திரட்டுத் துதிகளை ஓதி (ஏப்ரல் 1999 ஸ்ரீஅகஸ்திய விஜயம்) சுமங்கலிகள் ஒருவருக்கொருவர் மஞ்சள் பூசி மகிழ்ந்திடில் – குடும்பத்தில் மன அமைதி பெறுவர்.
23.7.1999 – அரைத்த சந்தனத்தால் வன்னி இலைகளில் பொட்டிட்டு, குங்குமமிட்டு வன்னி மரத்தின் கீழிருக்கும் பிள்ளையாருக்கு மாலையாய் அணிவித்திடில் – மறந்து போன, தொலைந்து போன பணம் திரும்பக் கிடைக்கும்.
24.7.1999 – சைக்கிள் ரிப்பேர் செய்யும் ஏழைத் தொழிலாளிகளுக்கு புதிய காற்றடிக்கும் பம்ப் தானம் செய்திட – ஆஸ்துமா (Asthma, Wheezing) நோயாளிகள் நல்ஆரோக்கியம் காண வழியுண்டு.
25.7.1999 – கோயிலில் சுவாமியின் நிர்மால்யப் பூக்களைப் (வாடியவை) போடுவதற்கு நிர்மால்ய புஷ்ப கிணறுகள் அமைத்துக் கொடுத்திடில் – வசதியான, நல்ல சுகம் தரும் வாடகை வீடு/ அலுவலகம் /வியாபார இடம் அமையும்.
26.7.1999 – காகித மரக்கூழ் செய்யும் தொழிலாளிகளுக்கு மரக்கூழ் அரைக்கும் எந்திரம் தானமாக அளித்திடில் – இருதய பலவீனத்தால் வருகின்ற நோயின் வேகம் குறையும்.
27.7.1999 – கோயில்களுக்கு பெரிய பூட்டு செய்யும் கைவினைக் கலைஞர்களுக்கு பழங்களுடன் அன்னதானம், வஸ்திர தானம் அளித்திடில் – வாழ்க்கையில் மறைக்கப்பட்ட ரகசியங்கள் தெரியவரும்.
28.7.1999 – இன்று ஒரு நாள் பூராவும் (24 மணி நேரம்) உறங்காமல், பொய் பேசாமல் இருந்திடில் நல்லோர் நட்பால் எதிர்பாராத பல அரிய உதவிகளைப் பெறுவர்.
29.7.1999 – இன்று ஏழைச் சுமங்கலிக்கு (தாலியில் கோர்க்கும்) தங்கக் காசு தானம் – கணவனுக்கு வேலையில் ஏற்படும் அலைச்சல், நஷ்டம் குறையும்.
30.7.1999 – இன்று ஸ்ரீவைபவ லட்சுமியின் படம் வைத்து பூஜித்து சர்க்கரைப் பொங்கல் தானம் செய்து சுமங்கலிகளுக்கு மஞ்சள், தாலி சரடு, தேங்காய் பழம், வெற்றிலைப் பாக்கு, வஸ்திரம் அளித்திடில் – குடும்பத்தில் உள்ள பிணக்குகள், மனத் தாங்கல்கள் தீர்ந்து நல்ல மறுமலர்ச்சி ஏற்படும்.
31.7.1999 – இன்று விஷ்ணு துர்கை சந்நதியில் 21 பசு நெய் தீபமிட்டு தக்காளி சாதம் தானமாக அளித்திடில் – சகோதரர்களுக்கு வருகின்ற துன்பம் தீரும்.

 

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam