அன்யோன்யப் பண்பே தெய்வீக அன்பை வளர்க்கும் முதல் படி !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

(நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்)

ஒரு முறை … இச்சம்பவம் நிகழ்ந்தது சதுரகிரியா… தங்கால் தலமா… திருமயமா… சிறுவனுக்குச் சரியாக நினைவில்லை!

“மனசுல புடி!” – எதையும் மறக்காமல் இருக்க, பெரியவர் சொல்வதை ஏதேனும் பழைய டைரியில் எழுதி வைத்துக் கொள்ளலாம் என்றாலோ, “மனசுல புடிடா… எழுத்துல புடிச்சுப் பழகினா அப்புறம் எல்லாமே., எதுவுமே படிச்சாத்தான் மனசுல நிக்கற மாதிரி ஆயிடும்! சற்குரு மொழிந்தது ஒரு சிறு வாக்கியம் தான், ஆனால் அதில்தான் எவ்வளவு ஆழமான அர்த்தங்கள்! யுக யுகமாய் நிற்கக் கூடியது ஆயிற்றே!

பெரியவரும், சிறுவனும் அப்போது ஒரு பஸ்ஸில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள். நல்ல இருட்டு.. இரவு பத்து மணி இருக்கும்! இருபுறமும் அடர்த்தியான மரங்கள் .. குத்துச் செடிகள், முந்திரிச் செடிகள் நன்கு பரந்து .. மண் சாலை வரை சடைபோல் விரிந்து இருந்தன! நிலவொளியில் அதற்கு மேல் சிறுவனுக்குச் சரியாகத் தெரியவில்லை!

பொருள் ஆனந்தம்
இடையே புலன் ஆனந்தம் !

பொதுவாக, பெரியவர் இரவில் பயணம் செய்வது கிடையாது. ஆனால் அன்று பஸ் டிரைவர் குறித்த இடத்தை இரவு ஏழு மணிக்குள் அடைந்திடலாம் என்று சொன்னமையால் ஏதோ ஒரு வேகத்தில் அந்த பஸ்ஸில் ஏறி விட்டார் பெரியவர்!

அடர்ந்த கும்பிருட்டு.. அக்காலத்தில் வழியில் மின்சார லைட் வேறு கிடையாது! எங்கும் செம்மண் புழுதிப் பாதை! ஆங்காங்கே நடுவில் ஒரிரு கிராமங்கள் வரும். “ஏண்டா, நம்ப தேடற இடம் இந்த ரூட்ல இல்லை போல இருக்கே! நான் எப்பவோ இங்கே வந்ததா ஞாபகம்! அப்ப நான் பார்த்த மரங்கள், மண்டபம் எல்லாமே இப்ப எதுவுமே வரலையே! பெரிசு பெரிசா அரண்மனை மாதிரி நாட்டுக் கோட்டைச் செடியார்ங்களோட வீடுங்க வருமே! அதுங்க ஒண்ணத்தையும் காணோமே! இப்ப என்னடா பண்றது?” என்று கூறிடவே,

அக்னியிடமா அந்தக் கோபம்?

சிறுவனுக்குக் கோபம் பிய்த்துக் கொண்டு வந்தது! பசியைப் போக்கிட சவுக்குக் கட்டைப் புகை நாறும்படி ஒரு அழுக்கு டீயோடு மசமசவென்று இருந்த இரண்டு ‘பன்’னோடு சாப்பாட்டை ஓட்டி விட்டாரே என்ற வெறுப்பும் வேறு இப்போது சேர்ந்து கொண்டது! சிறுவன் வெங்கடராமன், பெரியவருடைய அரிய கலியுகக் குருகுலவாசத்தில் அதிஅற்புதச் சிஷ்யனாகப் பரிமளிக்க வேண்டிய இடத்தில் “சாப்பாட்டு ராமனாகிய” குணங்கள்தான் பெருகின! ஆனால் அவர் யாரென உணரத் தொடங்கிய நாள் முதல் திடீரென்று மறைந்து விட்டார்! இதனால்தான், அந்த உத்தம நிலை வரும் வரை “இப்படியே நான் யாரெனத் தெரியாமல் ஒன்றும் புரியாத மண்டூகமாகவே இரு! என்று சொல்லாமல் சொல்கின்றாரோ!”

“பஸ் ரூட்டைப் பத்தி இப்ப என்னைக் கேட்டால் நான் என்ன பண்றதாம்? எனக்கென்ன தெரியும்?” சிறுவனும் சற்றுச் சூடாகவே பதில் சொன்னான்!

ஸ்ரீமுனீஸ்வரர் குற்றாலம்

தான் அண்டி இருப்பது பிரபஞ்சமே போற்றும் சித்புருஷரென அவன் அறிந்தானில்லையே! அறிந்தால் கதையே வேறு மாதிரி ஆகிவிடுமே!  பஸ்ஸில் பயணிகள் நிறைய இல்லாததால் ஆங்காங்கே நிறுத்தி, நிறுத்திப் பயணிகளை ஏற்றிடவே, மிகவும் காலதாமதமாகி நேரமும் பறந்து கொண்டிருந்தது!

நின்றதும் நிகழ்வதும்!

ஓரிடத்தில்…. ஒரு பெரிய குலுக்கலுடன் பஸ் நின்றே போய் விட்டது! .. அனைத்துப் பிரயாணிகளும் இறங்கித் தள்ளிப் பார்த்தும் பஸ் நகரவில்லை! பஸ்ஸை வேடிக்கை பார்ப்பதில் சிறுவன் கவனத்தைச் செலுத்தியதால், பெரியவரையே முற்றிலுமாக மறந்து விட்டான்!

அப்படி இப்படி என்று ஒரு வழியாய் பஸ் புறப்படும் போல் இருந்தது. அப்போதுதான் சிறுவன் தான் தணித்து விடப்பட்டதை உணர்ந்து, பயந்து, அலறிப் போய்ப் பெரியவரை அங்கும், இங்குமாகத் தேடினான்! ஒரு வேளை பஸ் மட்டும் புறப்பட்டிருந்தால்… “பெரியவரை எங்கு தேடுவது? அவர் பஸ்ஸில் உட்கார்ந்து இருக்கிறாரா? அல்லது வெளியில் இறங்கிப் போய் விட்டாரா? பஸ் புறப்பட்டுப் போய்… ஒரு வேளை நள்ளிரவில் நடுக் காட்டில் அவன் வசமாய் மாட்டிக் கொண்டால் என்ன ஆகியிருக்கும்? ஓட்டைப் பை டிராயரில் ஒருபைசா கூட இல்லையே!”

எண்ணிப் பார்த்தாலே சிறுவனுக்குச் சில்லிட்டு உடல் விறைத்தது! நல்ல வேளை … பஸ்ஸில் மீண்டும் கோளாறு என்பதால் புர்புர் என்ற பஸ் மீண்டும் நின்றிட.. சுற்றும் முற்றும் பார்த்து இங்கும் அங்குமாக ஓடிப் பெரியவரைத் தேடினான் சிறுவன்!

தனித்த த்வனி!

அவன் அதிர்ஷ்டம், அவனைப் பெரியவர் பெரிதும் சோதிக்க விரும்பவில்லை போலும்! சற்றுத் தள்ளி ஓரிடத்தில் குத்துக் கல்லாக அமர்ந்திருந்தார் பெரியவர்! அருகில் கிராமத்துக் கோயில் போல ஒரு வெட்ட வெளிச் சதுரம்! பொங்கலுக்கு வண்ணம் அடித்தது போல வெள்ளை, காவியுடன் நிலவொளியில் நன்கு பளபளத்தது! அருகில் ஒரு வேல் கம்பி.. அகல் விளக்கு மாடம்!

மௌனமாகப் பெரியவரி அருகில் சென்றமர்ந்தான் சிறுவன்! திடீரென்று.. …”கிறீச்”…..

பஸ் பின்னால்…  வேகமாக வந்த ஒரு கார்… சடன் பிரேக் அடித்து நின்றது! ஒரு சில விநாடிகள் தாம்.. பிறகு கார் நேரே செல்லாமல் மீண்டும் வந்த வழியிலேயே திரும்பிச் சென்று விட்டது. இதையெல்லாம் கண்டு கொள்ளாதவராய்ப் பெரியவர் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தார்!

சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை!

“கார், பஸ் எல்லாம் இங்க வந்து மாட்டிக்கிடுச்சுன்னா… இங்க ஏதோ நிழல் ஓட்டம் இருக்கும்னு அர்த்தம்!” கிராமத்து ஜனங்கள் ஏதேதோ பேசிட… பெரியவர் மெதுவாக எழுந்தார்! பஸ் அருகே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பயணிகளிடம் சென்றார்.!

சொல்வீர்காள்..!

“ஏம்பா சும்மா வளவளன்னு பேசிக்கிட்டே இருக்கீங்க! இவ்வளவு நேரம் வெட்டிப் பேச்சு பேசினதுக்கு கிருஷ்ணா, ராமான்னு சொல்லி ஜபம் பண்ணினாக்க ஏதாச்சும் பிரயோஜனம் உண்டே! உம்… உம்.. உம்.. எல்லாரும் என் பின்னாடி வாங்க!”

நிசப்தமான அமைதி நிலவியது.. வனாந்திரத்தில் பெரியவர் குரல் தான் ஓங்கி நின்றது!

சொல்லில் செல்லும் பஸ்!

பஸ் டிரைவர், கண்டக்டர் உட்பட அனைத்துப் பிரயாணிகளும் பெரியவரின் ஆணைக்குக் கட்டுப்பட்டாற் போல் அவர் பின்னால் சென்றனர். பஸ் முன்னால் பெரியவர் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கி பஸ்ஸை மூன்று முறை வலம் வந்தார். அனைவரும் பெரியவரின் பின்னால் சென்று பஸ்ஸைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டு, கீழே வீழ்ந்து வணங்கி வலம் வந்தனர். மூன்று முறை வலம் வந்த பெரியவர் இடுப்பில் இருந்து எதையோ எடுத்தார். வெள்ளை வெளேரென்று கற்பூரம்!

கற்பூரத்தை ஏற்றி எட்டுத் திக்கெங்கும் காண்பித்து வணங்கி பஸ்ஸுக்கு கற்பூர தீபம் காட்டிய பெரியவர் வனத்தை நோக்கிச் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கினார்.

ஸ்ரீவனதுர்கை கிள்ளுக்கோட்டை திருச்சி

“எல்லாரும் அடியேன் சொல்றதைத் திருப்பிச் சொல்லுங்க! வனதேவதைகளே! உங்களோட யாத்திரை நேரத்துல நாங்க குறுக்கிட்டதுக்கு மன்னிக்கணும்! நீங்க காட்டுப் பாதையைக் கடந்தப்புறம் நாங்க புறப்படறதுக்கு அனுமதி தரணும்! வனமாலீ கதீ சாங்க்ரீ…” என்ற ஓரிரண்டு சுலோகங்களைப் பெரியவர் சொல்ல, அனைவரும் திரும்பச் சொல்லிட.. கிராமத்து ஜனங்கள் அல்லவா! படிப்பின்மையால் புனிதமான பக்தி ரசம் பொங்கி வழிந்தது! பிறகு நிசப்தம் நிலவியது! எல்லோரும் பெரியவரின் வாயைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!

சிறிது நேரங் கழித்து, “வாங்க, வாங்க! எல்லாரும் பஸ்ஸுக்குள்ளாற ஏறுங்க! டிரைவர் பஸ்ஸை எடுப்பா! ஸ்டீயரிங்கைத் தொட்டுக் கும்புடு!” என்று பெரியவர் குரல் கொடுத்திடவே… பயணிகள் எல்லோரும் உள்ளே அமைதியாக ஏறிட.. மிகுந்த பயபக்தியுடன், கூப்பிய கரங்களுடன் டிரைவர் உள்ளே ஏறிட.. பஸ் சல்லென்று புறப்பட்டது! அடுத்த பஸ் ஸ்டாப் வரும் வரை பயணிகள் ஒருவருக்கொருவர் வியப்புடன் பார்த்துக் கொண்டு பின் சீட்டில் கடைசியாக இருந்த பெரியவரையும் எட்டி, எட்டிப் பார்த்தார்கள்!

நானிலமறியா நற்செயலே போற்றி!

நடுவில் ஏதோ ஒரு இடம் வந்திடவே… டிரைவர் வண்டியை நிதானப்படுத்திச் சற்றே நிறுத்திட… பெரியவர் வெகு வேகமாகச் சிறுவனின் கரங்களைப் பற்றி இழுத்துக் கொண்டு எவரும் அறியாமல் நைஸாகக் கீழே இறங்கி விட்டார்!

“வாடா நம்ப வேலை முடிஞ்சது, போகலாம்!”

சற்றுப் பெரிய கிராமம் அது! கோயிலருகே ஒரு சத்திரத்தின் திண்ணையில் அமர்ந்த பெரியவர் உடனேயே படுத்து உறங்கிட.., சிறுவன் திகைத்திட்டான். காட்டில் நடந்தது பற்றி ஏதேதோ விளக்கங்கள் கிடைக்கும் என்று எண்ணியவன்… பெரியவர் இப்படித் திடீரென்று படுத்து உறங்கிடுவார் என்று சற்றும் எண்ணவில்லையே! ஏனென்றால் பஸ்ஸை விட்டு இறங்கியவுடன், பகலிலேயே ‘பன்னுக்காக காயந்தவனை’ இரவு உணவிற்காக எங்காவது அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்த்தவனுக்குப் பலத்த ஏமாற்றம் தான்!

ஆனால் “astralல போகணும், மேலேந்து பேசணும்னா (communication with upper divine worlds) நாங்க படுக்கறதாச் சொல்லி மறைஞ்சுடுவோம்” – என்று பெரியவர் அடிக்கடி சொல்வதுண்டு! ஒரு வேளை இவ்வாறு ‘மெத்தையில்’ (upper worlds) இருந்து அழைப்பு வந்து விட்டதால் பெரியவர் தூங்குவது போல் பாவனையில் மறை(ந்)த்துக் கொண்டு விட்டாரோ! ஏதேதோ எண்ணங்களில் உழன்ற சிறுவன்.. திடீரென்று திரும்பிப் பார்த்தால்..

பெரியவர் எழுந்து உட்கார்ந்திருந்தார்! அதற்குள் காலை மணி நான்காகி விட்டது!

“இப்படியா பொழுது விரைவாக ஓடும்!”- சிறுவன் ஆச்சரியப்பட்டுப் போனான்! அருகிலிருந்த உள்ளூர்க் கிணற்றில் இருவரும் நீராடித் திரும்பினர். கோயில் வாசலில் நின்ற பெரியவர் சிறுவனை அணைத்துக் கொண்டு சொல்லலானார்.

“முடிஞ்ச வரைக்கும் நடு இரவுல காட்டுப்ப் பக்கம் போகாம இருக்கறது நல்லதுடா! பஸ் பிரயாணமும் நடு ராத்திரியில செய்யக் கூடாது. தீய சக்திகள் தலை தூக்கற நேரம் அது! அதே சமயத்துல காடுகள்ல நல்ல வன தேவதைங்களும் உலா வர நேரமும் கூட! ரொம்ப நல்ல தேவதைங்க, வன தேவதைங்க! அவங்க அசீர்வாதம் நமக்கு சமுதாயத்துக்கு ரொம்ப ரொம்பத் தேவை! அவங்கதான் மரங்களை ஆளாக்கி, வருண பகவானை வேண்டி மழை தர வைக்கறவங்க! ஆனா அதே சமயத்துல அவங்க பாதையில் குறுக்கிட்டா நம்மை சபிச்சுடுவாங்க!”

ஹே! வனதுர்க்கா தேவி!

“நேத்தி ராத்திரி பஸ்ஸு நின்னுச்சே அதுக்குக் காரணமே நிறைய வனதேவதைங்க அந்த இடத்துல அணி வகுத்துப் போனதுதான்! அவங்களோட தலைமை தேவதை கை நீட்டினாப் போதும், எவ்வளவு பெரிய பஸ்ஸோ, லாரியோ எல்லாம் அப்படியே நின்னுடும்! அவங்க பாதையைக் கடந்தப்புறம்தான் திரும்பவும் அவங்க சமிக்ஞை கொடுத்தாத்தான் எந்த வண்டியுமே நகரும். நேத்திக்கு நான்தான் கண்ணால பார்த்தேனே, சும்மா ஆயிரம் வன தேவதைங்களுக்கு மேலேயே வரிசையா போய்கிட்டு இருக்காங்க.. கண்ணுக்குத் தெரியாத உருவம்தான்! ஆனா பஸ்ஸு குறுக்கே புகுந்தா அவங்க மேல பட்டுடுமே! அவங்களுக்கு இருக்கற ஸ்ட்ரெங்க்த்துக்கு அவங்க சூட்சும சரீரம் மேல பட்டா பஸ்ஸே கவுந்துடும்.. அவங்க சபிச்சுட்டா மீள்றதே கஷ்டம்!”

“அதனாலத்தான் அவங்க கிராஸ் பண்ற வரைக்கும் வனதுர்க்கா தேவியை வேண்டிக்கிட்டு ‘அம்மா தாயே! ஒண்ணும் செஞ்சுடாதே தாயே! எல்லாம் கிராமத்து ஜனங்க! ஒண்ணும் தெரியாதவங்க! நீதான் காப்பாத்தணும்னு’ வேண்டிக்கிட்டு இருந்தேன்! அம்பாளுக்குத் தெரியாதது எதுவுமே கிடையாதுடா, இருந்தாலும் நம்ப பூஜைகளைக் குறைக்கக் கூடாதே! என்னோட சேர்ந்து பூஜை பண்ணாம, நீ என்னடான்னா சும்மா வேடிக்கை பார்த்துக்கிட்டு நின்னா என்ன அர்த்தம்?”

“நீ என்னோட வந்திருந்தா வன தேவதைங்களை தரிசனம் பண்ணியிருக்கலாமே! நான் கூட அவங்களோட நேத்திக்கு பேசிக்கிட்டு இருந்தேனே!” சிறுவன் தலையைக் குனிந்து கொண்டான்! எவ்வளவு அரிய வாய்ப்பை “வேடிக்கை பார்த்து” இழந்து விட்டோம்?

குரு அருகிருந்தும் குறையேனோ பையா?

“இப்படித்தாண்டா குருகிட்ட இருந்தாக் கூட ஒழுங்கா குருவருளைப் பயன்படுத்திக்கறது கிடையாது!” சிறுவனுக்குப் பொல பொலவென்று கண்ணீர் பெருகிறது! “அதனால.. வன தேவதைங்க வராங்கன்னா அதுக்குன்னு சில அறிகுறிகள் தெரியும் அதை நல்லாப் புரிஞ்சுக்கிட்டு, அவங்க யாத்திரைக்கு இடையூறு செய்யாம.. வன துர்க்கையைப் பிரார்த்தனை பண்ணும்! அவங்க மட்டும் நல்லா ஆசீர்வாதம் பண்றாங்கன்னு வச்சுக்கோ அதுக்கப்புறம் நாட்டுக்கு சுபிட்சமோ சுபிட்சம்தான்! நல்லா .. செல்வ வளம் கொழிக்கும்”! ஒரு finance ministerனா முதல்ல வனதேவதைங்களுக்கு ப்ரீதி பண்ணனும்! அப்புறம்தான் எல்லாம்!”

“இதோ பாரு நேத்திக்கு நடந்த கூத்தை!” பெரியவர் தன் உள்ளங்கையைத் திறந்து PALM TVயைக் காட்டிடவே.. அதில் வரிசையாக மிகவும் அழகாக, பணிவுடன் வன தேவதா மூர்த்திகளும், வனதேவதைகளும் செல்வதைக் கண்டான்., பஸ் நிற்பது, அனைவரும் வலம் வருது.. எல்லாம் தெரிந்தன!

பெயரது கேட்கின் …

“சிறுவன் சும்மா இருக்கக் கூடாதோ, தன் “லொடா, லொடா” வாயைத் திறந்தும் விட்டான்! “இந்த தேவதைகளுக்கு எல்லாம் தனித் தனியாப் பெயர் உண்டா வாத்யாரே” அவ்வளவுதான் பெரியவர் உஷ்ணமானார்!

“… இது சாகரவனமாலினி, இது விருட்சவதி, இது புஷ்பகேசரி, இது சங்கவேணி…” பெரியவர் வரிசையாக ஐநூறு, அறுநூறு பெயர்களைச் சில நிமிஷங்களில் பொ(ம)ழிந்து கொண்டே போனார்! சிறுவன் ஆடிப் போய் விட்டான்!

“சற்குருவை அநாவசியமாகச் சோதனை செய்தோமே!” வனதேவதைகளின் பெயர்களை அவர் சொல்லும் வேகத்தைக் கண்டு அசந்தாலும், சிறுவனுக்கு அச்சம் வந்து விட்டது! பயத்தால் கண்களில் நீர் பெருகிட… அவன், ஆங்கே நின்று கொண்டிருந்த பெரியவரின் முழந்தாளைப் பிடித்துக் கொண்டு அழுது விட்டான்!

“இது விசாலினி, கராவலம்பிணி!...” – என்று சற்றே நிறுத்திய பெரியவர், “பயப்படாதேடா கண்ணு! உனக்கு எவ்வளவு பெயர் தெரியணும்னு உன் தலையில எழுதியிருக்கோ அதுவரைக்கும்தான் சொல்வேன்! இதெல்லாம் தெய்வீகத்துல கத்துக்க வேண்டிய பாடம்! நான்தான் உன் கூடவே இருக்கேனே, அப்புறம் என்ன பயம்?” பெரியவர் பரிவுடன் சிறுவனின் தலையைக் கோதினார்!

“தெய்வீகத்துக்குன்னு வந்துட்டா சித்தர்கள் வழியில நம்ப சேவையே ரொம்ப ரொம்ப விசேஷமானதுடா! எங்கேயும், எதிலும் தெய்வீகம்! இதுதாண்டா நம்ப இறைலட்சியம்! இதுக்காக உன்கிட்ட நான் தெய்வீகமா ரொம்ப, ரொம்ப, எதிர்பார்க்கிறேண்டா!

“அருகில் அருள்மழை  பொழியும் சற்குருவை வைத்துக் கொண்டு ‘காய்ந்து’ கிடக்கிறோமே! இது நம் தவறுதானே!” – சிறுவன் பெரியவரின் முழந்தாளைப் பிடித்துக் கொண்டு சிந்தித்து ஆத்ம விசாரம் செய்யலானான்! அதற்குள் முழங்காலை விடுவித்துக் கொண்டு பெரியவர் எங்கேயோ நடக்கலானார், சித்தன் போக்குச் சிவன் போக்காக!

அங்கப் பிரதட்சிணம்

சாருடல் திவ்ய வலம் (அங்கப் பிரதட்சிணம்)

இருதய (உள்ளம்), மன, உடல் சுத்திக்கு ஒருமித்து உதவும் யோக, தியான சக்திகள் உடலில் கூடும் அதியற்புத வழிபாடே அங்கப் பிரதட்சிணமாகும். மது, சிகரெட், போன்ற தீய வழக்கங்கள் அகன்றிடத் திங்கள் கிழமை மற்றும் பிரதோஷம் தோறும் இயன்ற தூரம் வரை திருஅண்ணாமலையிலும் மற்றும் பாண லிங்கம் உள்ள ஆலயங்களில் (கோயம்பேடு, திருவிடைமருதூர்) முழுவதுமாகவும் அங்கப் பிரதட்சிணம் செய்து வர வேண்டும்.

நேர்த்தி வைத்துத்தான் அங்கப் பிரதட்சிணம் செய்ய வேண்டும் என்பதில்லை. எப்போதும், எங்கும் அங்கப் பிரதட்சிணம் செய்திடலாம். விடியற் காலையில் , பிரம்ம முகூர்த்த நேரத்தில் அங்கப் பிரதட்சிணம் செய்தல் அபரிமிதமான பலன்களைத் தரவல்லதாம். அடிப்பிரதட்சிணம், நடைப் பிரதட்சிணம் போன்று நமஸ்காரப் பிரதட்சிணம் என்பதான அங்கப் பிரதட்சிணம் என்ற ஒன்றும் உண்டு. திருஅண்ணாமலை, குன்றக்குடி, தீயத்தூர், திருப்பதி, சமயபுரம், திருவிடைமருதூர் ஓங்காரப் பிரதட்சிணம், திருச்சி உய்யக்கொண்டான் மலை ஓங்கார வடிப் பிரதட்சிணம், பன்னாரி அம்மன் போன்ற “ஸ்ரீபாதசக்தி” சக்தி நிறைந்த ஆலயங்களில், மலைத் தலங்களில் பக்தர்களுடைய அங்கப் பிரதட்சிணம் நிகழ்வது யாவரும் அறிந்ததே! இவை யாவும் சாட்சாத் ஸ்ரீநடராஜப் பெருமானின், ஸ்ரீவாமன மூர்த்தியின் திருப்பாதங்கள் படிந்த புனித பூமியாகும். பொன் மெட்டியணிந்து பொன்பேத்தியாய் திருமகளும், அம்பிகையும், மானுட வடிவில் நடந்த தெய்வீக வயலே தீயத்தூர் திருத்தலமாகும்! ஆவுடையார் கோயில் – பொன்பேத்தி கிராமம் அருகில் உள்ளதே தீயத்தூர் திருத்தலமாகும்.

திருஅண்ணாமலை போன்ற பெரிய மலைவலப் பகுதியில் 300 அடி, 400 அடி, அரை மணி நேரம், ஒரு மணி நேரம் எனச் சங்கல்பம் எடுத்துக் கொண்டு இயன்ற வரையில் அவரவர் உடல் வாகுக்கு ஏற்ப, சிறிது தூரம் அங்கப் பிரதட்சிணம் செய்து விட்டுப் பிறகு நடைப் பிரதட்சிணமாகத் தொடர்ந்திடலாம். அங்கப் பிரதட்சிணம் துரிதமாக நற்காரிய சித்தியைத் தரவல்லதாம். அனைவரையும் பணிந்து நமஸ்கரித்தே பணிவின் சிகரமாய் உயர்ந்து நின்று முக்தி நிலைகளை அடையப் பெற்றவரே அக்ரூர ரிஷியாவார்.

சாதாரணமாக நடந்து ஆலயத்தை, மலையை கிரிவலம் வருதல் நடைப் பிரதட்சிணமாகும். ஒரு காலடியை எடுத்து வைத்து, அந்த அடியை ஒட்டியவாறு அடுத்த அடியை எடுத்து வைத்துப் ப்ரதட்சிணம் வருதல் அடிப் பிரதட்சிணமாகும். ஒவ்வொன்றிற்கும் விதவிதமான பலன்கள் உண்டு. நமஸ்காரப் பிரதட்சிணம் அல்லது அங்கப் பிரதட்சிணம் என்பது சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கி, தலை உள்ள இடத்தில் நின்று மீண்டும் வீழ்ந்து வணங்கி இவ்வாறு ஆலயத்தை, மலையை முழுவதுமாக நமஸ்காரப் பிரதட்சிணமாக (சாருடல் வலம் என்பது சித்தர் மொழி) கிரிவலம் வருதலானது மிகவும் துரிதமாக எளிதில் உடல் சுத்தியை, மன சுத்தியை, காரிய சித்தியைத் தருவதாகும்.

நற்காரிய சித்திக்கு அங்கப் பிரதட்சிணம்! பாவம் களைவதும் அங்கப் பிரதட்சிணமே!

பிரதட்சிணங்களுள் சிறந்தது அங்கப் பிரதட்சிணமே! சோம்பேறித்தனத்துடன், கடுமையாக உழைக்க மனமிராது சுகபோகங்களையே மனிதர்கள் நாடும் கலியுலகில் உடலை வருத்திச் செய்யும் வழிபாடுகளுக்கு ஆன்ம சக்திகளும், நல்வர மேன்மைகளும் மிக அதிக அளவில் வர்ஷிக்கப்படுகின்றன. இதுவும் இறைசங்கல்பமே!

மனத்தால், உடல் அவயங்களால் பல சொல்லொணாக் குற்றங்களைப் புரிந்தவர்கள், தாமிழைத்த பலத்த தீவினைகளின் விளைவுகளைச் சந்தித்தே ஆக வேண்டும். ஆனால் தாம் செய்த பாவங்களுக்கு உண்மையாகவே மனம் வருந்தி அண்ணாமலை, தேனிமலை, நெடுங்குடி, திருக்கோளக்குடி, தீயத்தூர் போன்ற தலங்களில் அங்கப் (நமஸ்காரப்) பிரதட்சிணம் செய்திட்டு வந்தால் தீவினைகளின் கொடுமையும், வன்மையும் இப்பிறவியிலேயே தணிக்கப் பெறும்.

தன் கணவன், மனைவி, குழந்தைகள் தீய வழக்கங்களுக்கு ஆளாகாது நல்லவர்களாகப் புனிதமாக வாழ்ந்திடவும் அங்கப் பிரதட்சிண நேர்த்திப் பலன்கள் பெரிதும் துணை புரியும். சிறுவயதிலேயே உங்கள் குழந்தைகளை அனுஷம், மிருகசீரிஷம், மற்றும் புதன் நாட்களில் கும்பகோணம் அருகே கொறுக்கை, சென்னை கோயம்பேடு சிவாலங்கள், மதுரை அரசரடி தீர்த்த ரேகைச் சக்தித் தலங்களில் அங்கப் பிரதட்சிண வழிபாட்டு முறைக்குப் பழக்கி வந்திடில் பக்தி, அடக்கம், பணிவு இவற்றோடு அவர்கள் நல்ஒழுக்கத்துடன் தூய வாழ்வில் பிரகாசிப்பர் என்பது திண்ணம்.

தீய வழக்கங்களைப் போக்கும் அங்கப் பிரதட்சிணம்!

புகை பிடித்தல், மது, முறையற்ற காமச்செய்கைகள் போன்ற தீவினைகளுக்கு அகப்பட்டுத் துன்புறுவோர் தினமும், நித்யப் பிரதோஷ நேரத்தில் (மாலை மணி 4.30 – 6.30) முருகப்பெருமானுக்கு முன் அபூர்வமாக ஸ்ரீசனீஸ்வரர் அருள்பாலிக்கும் கூந்தலூர் (கும்பகோணம்) சிவாலயத்தில் அங்கப் பிரதட்சிணம் செய்திட்டால் விரைவிலேயே நல்மாறுதல்களையும், தக்க தீர்வுகளையும் காணப் பெறுவர், கலியுகத்தில் ஆழ்ந்த நம்பிக்கையே பக்திக்கு மூலாதாரமாதலின் உறுதியான வைராக்ய நம்பிக்கையே எதையும் சாதிக்க வல்லதாம்.

அங்கப் பிரதட்சிணத்திற்கு இத்தகைய தேவ வலிமையும், ஆன்ம சக்தியும் நிறைந்திடக் காரணம் என்ன? ஆலயங்களிலும், கிரிவலப் பாதைகளிலும் எண்ணற்ற சித்தர்களும் மகரிஷிகளும் தூல, சூக்கும வடிவுகளில் வலம் வந்து பூஜித்துக் கொண்டிருப்பதால் ஆலயப் பிரதட்சிண வளாகமே ஆன்ம பூமியாகப் பொலிகின்றது. எனவே அங்கப் பிரதட்சிணத்தில் அனைத்து அவயங்களும் பூமியிற் பதிந்து ஆங்கே வலம் வரும் சித்தர்களின், யோகியரன், மகரிஷிகளின் புனிதப் பாதவடிகள் மனித உடல் நாளங்களில் செறிந்து அருள் வளம் கூட்டுகின்றன.

ஸ்ரீபாதசக்தி பூரிக்கும் தலங்களில் அங்கப் பிரதட்சிணம் செய்திடுவீர்!

திருஅண்ணாமலை, நெடுங்குடி, சமயபுரம், தேனிமலை, தீயத்தூர், திருப்பதி, திருக்கோளக்குடி, திருவெள்ளறை போன்ற ஸ்ரீபாதசக்தி பூரிக்கும் புனிதமான இடங்களில் வாழ்வில் ஒரு முறையேனும் அங்கப் பிரதட்சிணம் செய்திடலால் எண்ணற்ற பல காம வினைகளை எளிதில் மாய்த்திடலாம். உண்மையில் அங்கப் பிரதட்சிண வழிபாட்டு முறையும் ஒரு பூஜையே! இதில்தாம் வேறு எவ்வித எண்ணங்களும் புகாது உடலின் 72000 நாள நாடிகளும் கலியுகத்தில் ஒருமித்துச் செயல்படும் யோக, தியான வல்லமை கூடுவதாகின்றது. மேலும் கோயில் பிரகாரங்களில் கண்ணுக்குத் தெரியா வகையிலும், தூல வடிவிலும் எப்போதும் வலம் வரும் உத்தமர்களின் திருவடிப் பூஜா சக்திகளும் இதன் மூலம் உடலில் நிரவிடும்.

பெண்கள், ஆண்கள், குழந்தைகள் அனைவருமாக, குடும்ப சகிதம் அங்கப் பிரதட்சிணம் செய்தலால் குடும்பத்திற்கே பல தலைமுறைகளுக்கான அளவற்ற அருட்சக்தி பொழிந்திடும். இதுவே சாசுவதமான பரம்பரைச் சொத்தாகிறது.

மணக்காலில் நல்மணவாழ்வு தரும் சிவாலய அங்கப் பிரதட்சிணம்!

சிறுமிகளும் சிறு வயதில் இருந்தே திருச்சி லால்குடி அருகே உள்ள மணக்கால் சிவாலயத்தில் அங்கப் பிரதட்சிணம் செய்து வர, இதன் அரிதான பலாபலன்கள் நல்ல மணவாழ்வு சீரும், சிறப்புடன் அமையைப் பெரிதும் உதவிடும். அம்பிகையே அங்கப் பிரதட்சிணம் செய்து இறைவனுடன் மனைப் பலகையில் ஒருசேர அமரும்பேறு பெற்ற திவ்யமான பலரும் அறியாத பழமையான சிவத்தலமே மணக்கால் ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயமாகும்! இறை மனைக்காலே மணக்கால் ஆயிற்று!

மணக்கால் சிவாலயம்

அனைத்துப் பெண்களும் வாழ்வில் ஒருமுறையாவது மணக்காலில் அங்கப் பிரதட்சிணம் செய்தலால் (இல்ல) மனைவாழ்வாகிய மணவாழ்வு மனைவாசற்கால் போல நீடித்து நின்று சாந்தமாக அமைய மணக்கால் பூமியின் அங்கப் பிரதட்சிண சக்திகள் வழிவகுக்கும். இதனால் பெண் பிள்ளைகளுக்கும் கற்புக் காப்புச் சக்திகள் விருத்தியாகி சுமங்கலித்வம் அருட்பரிசாய்க் கிட்டும்.

திபெத்திய லாமாக்களின் திவ்யமான திருக்கயிலாய அங்கப் பிரதட்சிணம்

மிகுந்த குளிர்ப் பிரதேசமான திருக்கயிலாயத்தில் அங்கப் பிரதட்சிணம் செய்யும் திபேத்திய லாமா இனத்தவர்கள் பக்தி நெறியில் சிறந்தவர்கள். ஜில் என்றிருக்கும் ஐஸ் வழிப் பாதையான கயிலாய மலைப் பாதையில் மனத் திண்மையுடன் அங்கப் பிரதட்சிணம் செய்கின்ற பக்த கோடிகளான லாமாக்கள் ஆழ்ந்த இறைநம்பிக்கையில் வித்தகர்கள் ஆவர். ஐஸ் தரையில் புரண்டு அங்கப் பிரதட்சிணமாகத் திருக்கயிலாயத்தை வலம் வருதல் என்றால் என்னே சிவபக்தி, என்னே பாக்கியம்! மிகுந்த பக்தியுடன் இந்த பரிக்ரமாவை இன்றும் லாமாக்கள் கடைபிடிக்கின்றார்கள். இதை ஒட்டியே லாமாஸ்ய கிரி தரிசனம் என்ற ஓர் அற்புத மலை தரிசனம் திருஅண்ணாமலையின் வடகிழக்குப் பகுதியில் கயிலாய மலையைப் பார்த்தவாறு திருக்கயிலாயம் போலவே காட்சி தரும் வகையில் அமைந்துள்ளது.

சுமார் 43 கி.மீ சுற்றளவு கொண்ட திருக்கயிலாயப் பரிக்ரமப் பாதையில் இரவு வந்துவிட்டால் எந்த இடத்தில் அங்கப் பிரதட்சிணம் செய்தார்களோ அதே இடத்திலேயே ஒரு அங்குலம் கூட நகராது லாமாக்கள் தங்கி ஓய்வெடுத்து மறுநாள் காலை அங்கிருந்தே அங்கப் பிரதட்சிணத்தைத் தொடர்வர். இனியேனும் உங்கள் குழந்தைகளை அருகில் உள்ள ஆலயத்தில் அடிக்கடி அங்கப் பிரதட்சிணம் செய்ய வைத்து அவர்களுடைய உத்தம ஒழுக்கம் பக்தி, நிறைந்த வாழ்க்கைக்கு வழிவகை செய்திடுக! பேரளம் சிவாலயம், தீயத்தூர் ஸ்ரீசஹஸ்ர லக்ஷ்மீஸ்வரர் போன்ற அங்கப் பிரதட்சிணப் பலன்கள் பல்லாயிரம் மடங்காகப் பெருகும் அரிய தலங்களும் பல உண்டு.

நேமம் சிவாலயம்

நேமம் ஸ்ரீஅமிர்தாம்பிகை சமேத ஸ்ரீஆவுண்டீஸ்வரர் சிவாலயம். சென்னை பூந்தமல்லியில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளதே நேமம். சென்னை மற்றும் பூந்தமல்லி பஸ் நிலையங்களில் இருந்து நேமத்திற்கு நேரடி பஸ் உள்ளது. பூந்தமல்லி – திருவள்ளூர் சாலையில் உள்ள வெள்ளவேடு வழியாகவும் நேமம் செல்லலாம்.

கோபால், கோவிந்தராஜ், கோகுல், கோஸ்வாமி, கோவிந்தன், கோபால கிருஷ்ணன், கோகுல கிருஷ்ணன், கோவிந்தசாமி, கோவர்தன், கோமதி, கோமதி நாயகம் போன்ற “கோ” வகைப் பெயர் உடையவர்கள் வழிபட வேண்டிய ஆயுட்கால வழிபாட்டுத் தலம்!

குழந்தை பாக்யத்திற்கான நல்லருளைத் தரும் தலம்! பெண்ணாய்ப் பிறந்தோர், தெய்வீகப் பெண்மைப் பிறவியை உணர்ந்திட உதவும் தலம்! குழந்தை பாக்யம் இல்லாதோர்க்கு மனசாந்தி அளிக்கும் தலம்! பெண்களாய்ப் பிறந்த அனைவரும் தம் வாழ்நாளில் ஒரு முறையேனும் வழிபட வேண்டிய உன்னதத் தலம்!

அனைத்துப் பெண்களும் தம் வாழ்நாளில் ஒரு முறையேனும் பூஜிக்க வேண்டிய தலமே நேமம் சிவாலயமாகும். மேலும் “கோ” எனத் தொடங்கும் பெயருடையோரும் ஆயுட்காலம் முழுதும் வழிபட வேண்டிய அற்புதத் தலமான நேமம் சிவாலயம் மிகவும் பழமையானது. தற்போது சிதிலமடைந்துள்ளது. உலக மகளிர் யாவரும் வழிபடும்படியாக, இங்கு ஆலயத் திருப்பணிகளை ஏற்று நடத்த வேண்டிய கடமை யாவர்க்கும், குறிப்பாக, “கோ” எனத் தொடங்கும் பெயருடையோர்க்கு முக்கியமாக உண்டு.

மாதவம் செய்திட்டால் பெறுதற்கரிய மானுடப் பிறவியை, இதிலும் பெண்ணாகிய புனிதப் பிறவியை பெற முடியும். இல்லறம் என்பது அம்மையப்பனை உணர்விக்கும் ஆரம்பப் பள்ளிக் கூடமென உணர்ந்தால்தான் முறையற்ற ஆண், பெண் பேதங்கள், அதர்மமான காம எண்ணங்கள் அகலும். கலியுகத்தில் இல்லற தர்மமே கடவுளை அடையக் கலியுகத்தில் எளிமையான வழியாகும். இதிலும் இல்லறப் பெண்ணின் தார்மீகக் கடமைகள் பலப் பல! சமுதாயக் குணப்பாடுகள் சீரடைந்து ஆன்ம நலம் பெற, நற்சந்ததிகளை அளித்து ஆளாக்குவது தாய்மார்களின் கடமை ஆன்மீகச் சிறப்புடையதாகும்.

குழந்தை இல்லையே, என்று புலம்பி வேதனையுறுதல், உற்றம், சுற்றத்தின் இடிப் பேச்சுகளுக்கு ஆளாகி வருத்தம் அடைதல் – பல குடும்பங்களில் இவை இன்றும் இருந்துதான் வருகின்றன. உறவினர்களும் குழந்தை இல்லாதவர்களைக் குத்திக் காட்டிப் பேசுகின்ற இழிச்செயலை நிறுத்திட வேண்டும். இல்லையெனில் இதே நிலையை அவர்களும் எதிர்வரும் பிறவிகளில் அடைய நேரிடும்.

நடப்பதை நற்செயலாக ஏற்போம் என்ற பரிபக்குவத்தை குழந்தை பாக்யம் இல்லாதோர் பெறுதல் வேண்டும். சொல்வது எளிது! கடைபிடிப்பது மிகவும் கடினமானதே! “குழந்தைச் செல்வம் நமக்கு உண்டோ, இல்லையோ நாமறியோம்! நல்ல பிள்ளைச் செல்வம் தா என வேண்டுதல் நம் கடமை! எல்லாம் இறைவன் அருளென ஏற்போம்!” என்று சாந்தமயமாக, பரிபக்குவத்துடன் இறைவனை வேண்ட வல்ல அரிய தலம் ஒன்று உண்டு. சந்தான பாக்யத்தைத் தரவல்ல அதியற்புதச் சிவத்தலமிது! வாரிசு இல்லையெனில் கர்ம ரீதியாக எதனையும் ஏற்கும் தக்க மனப் பக்குவத்தையும் பெற்றுத் தரும் தலம்! குழந்தைப் பேறு மட்டுமன்றி வேறு பல காரணங்களால் வாழ்வில் அமைதி இன்றி இருப்போர்க்கு, அனைத்து மூர்த்திகளின் நல்லருளையும் திரட்டித் தரும் அற்புத தெய்வீகத் தலம்! இதுவே நேமம் சிவாலயமாம்.

உலகில் மூன்று வகை அமிர்த சக்திகள், தேவ சக்தி கூடியதாய் சாசுவதமானவை. அவை பாற்கடலின் அமிர்தம், தாய்ப் பால், ஆவின்பால் (பசும்பால்) ஆகும். தாய்ப்பால் என்று பாற்கடலில் உள்ள அபீதச் சக்கர மேரு சக்கரப் பூஜா பலன்களாகச் சுரப்பதாகும். பெண் ஜீவ அணுக்கள் நிறைந்த கலசத்தை ஸ்ரீபிரம்ம மூர்த்தி சீருஷ சிருஷ்டிச் சக்கரத்தில் வைத்து பாற்கடலில் உள்ள க்ஷீராம்ருதத்தால் அபிஷேகிக்கின்றார். பாற்கடல் என்பது வற்றாத, மணம் மிக்க, தேவ சக்தி நிறைந்த பால் நிறைந்த கடல் ஆகும். இதில் பிறக்கும் காமதேனு, ஸ்வர்ண அஸ்வம், கற்பதரு போன்ற தெய்வீகத் திரவியங்கள் நிறையவே உண்டு.

ஸ்ரீபிரம்மா சீருஷ சிருஷ்டிச் சக்கரத்தின் திருவடிகளில் (பெண்) ஜீவ அணுக் கலசத்தை வைத்துப் பூஜிக்கையில், பெண் சிருஷ்டிகளுக்கு ஆசி தர ஆங்கே விசேஷமாக எழுந்தருளும் ஸ்ரீபசுபதிநாதர், ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர், ஸ்ரீக்ஷீரபாலீஸ்வரர் ஆகிய மூன்று சிவாம்சங்களும் ஸ்ரீஆவுண்டீஸ்வரராகப் பொலிந்து ஸ்ரீஅமிர்தாம்பிகை சமேதராய் ஒன்றாகச் சேர்ந்து காட்சி தந்து பெண் வகை ஜீவ அணுக்களை விசேஷமாக ஆசீர்வதிக்கின்றார். வேத சக்திகளைப் பெண்களும் அடைவதற்காக அம்பிகை காஞ்சித் தலத்தில் மாமரத்தின் அடியில் தவம் பூண்டு இதற்கான அருளைப் பெற்றனள். மேலும் ஸ்ரீசாகம்பரீ தேவி வேதசக்தி நிறைந்த தாவரக்கனிப் படைப்பில் முதலில் மாங்கனியையே படைத்தனள். பொதுவாக, பலவிதமான சிருஷ்டிக் காரணங்களில் மாமரத்தின் கீழ் ஆற்றும் அரிய தவப் பலன்களாலும் பெண் பிறவி கிட்டுவதால் ஈஸ்வரன், ஸ்ரீசாகம்பரீ தேவி அளித்த மாங்கனியையே ஒரு கிண்ணமாகக் கொண்டு அதில், தம் சிரசின் கங்கை தீர்த்தத்தைப் பிரசாதமாக வார்த்து, இதனால் ஸ்ரீபிரம்மா படைத்த ஜீவ அணுக் கலசத்தை ஆசீர்வதித்திடுமாறு அம்பிகையிடம் தந்திட்டார். உமையவளாம் உலகம்மையும் அதில் பாற்கடலின் வடப்புற க்ஷீர தீர்த்தத்தையும் திவ்யப் பிரசாதமாகச் சேர்த்து, கலசத்திற்கு மாவிலைத் தோரணம் கட்டி, சிவானரளித்த கங்கை நீர், க்ஷீர தீர்த்தத்தைத் திவ்யப் பிரசாதமாகக் கலசத்தில் சேர்த்துப் பெண்ணாய் வடிவு பெறும் ஜீவ அணுக் கலசத்தின் மீது தெளித்து ஆசீர்வதித்திட.. இவ்வகையிலும் பெண்ணாய்ப் பிறக்கும் தேவ கைங்கர்யம் நிகழ்கின்றது.

இவ்வாறாக, தாய்ப்பால் என்பது அபீத மேருச் சக்கரத் திரவியமாதலின் மகத்தான தேவ, சித்த, ஆயுர்வேத சக்திகளைக் கொண்டதாம். ஒரு குழந்தை நன்கு வளர்வதற்கான ஓராண்டுச் சத்துப் பொருளைத் தாய்ப் பால் கொண்டுள்ளதென்றால் என்னே அதன் பூம்ய ஜீவித சக்தி! எனவே ஜீவ சக்தி, தேவ சக்தி, அமிர்த சக்தி மூன்றும் திரண்டதாக மற்றும் அபீதச் சக்கர மேரு சக்கர பூஜா பலன்களாகக் கிட்டுவதே புனிதமான தாய்ப் பாலாகும்.

இதே போல பசும்பாலுக்கும் உரிய தெய்வீகத் தாத்பர்யங்கள் நிறைய உண்டு. “அன்னைக்கு ஈடு ஆவினந்தாமே” என்ற மூதுரையின்படி பசும் பாலைத் தாய்ப்பாலுக்கு ஈடாகத் தெய்வ லோகங்களிலும், பூமியிலும் போற்றுகின்றனர் அல்லவா! பசுவின் பால் ஆதிமூலமாகத் தோன்றுமிடம் பாற்கடலில் உள்ள ஆசுரநேமச் சக்கரமாகும். பூவுலகில் ஆசுரநேம சக்திகள் நிறைந்த தலங்கள் யாவும் “நேமம்” எனப் பெயர் பெறும். பிரபஞ்சத்தின் பசுக்களுக்கு எல்லாம் அதிதேவதையே காமதேனு! காமதேனுவின் புத்திரிகளான நந்தனி, சபளி, விமலை, பட்டி தம் தெய்வத் தாயாம் காமதேனுவுடன் ஐவராகத் தினமும் பால் சொரிந்து பூஜிக்கின்ற அதியற்புதச் சக்கரமே ஆசுரநேமச் சக்கரமாகும். நேமம் தலங்கள் யாவும் இவ்வைந்து கோ மூர்த்திகளால் மடிப்பால் பொழிந்து வழிபடப் பெற்றவையே!

உலகத்தில் உள்ள அனைத்துப் பசுப் பிறப்பிற்கான ஜீவ அணுக் கலசமும் இங்குதாம் வைக்கப் பெற்று ஸ்ரீபிரம்மாவால் பூஜிக்கப்படுகின்றது. சந்தான பாக்யத்தைத் தடை செய்பவை நாக தோஷங்களும், பித்ரு சாபங்களும் ஆகும். இவைகட்கு நிவர்த்தி தருவதாக நேமத்தில் உள்ள தீர்த்தமே ஒரு யுகத்தில் தெற்குப் புற ஒரு பாதி பித்ரு சாந்தித் தீர்த்தமாகவும், வடபுற மறுபாதி தேவநாக சாந்தித் தீர்த்தமாகவும் அருள்கூட்டியது. இன்றும் ஆழ்ந்த நம்பிக்கையுடன் வேண்டி நீராடிடில் அருள் புரிய வல்லதே! தென்புற பித்ரு சாந்தித் தீர்த்தத்தில் அமாவாசை, புதன் கிழமை, சனிக் கிழமைகளில் தர்ப்பண பூஜைகளை நிகழ்த்துவது சிறப்புடையது. மிகச் சிறந்த அமாவாசைத் தீர்த்தத் தலங்களுள் இதுவும் ஒன்றாகும். வடபுற நாகத் தீர்த்தத்தில், பஞ்சமி, பௌர்ணமி, சதுர்த்தி நாட்களில் நீராடுதல் நாகதோஷங்களைப் போக்கும். நல்ல துறைகள் அமையும் வரை எத்துறையிலும் வேண்டி நீராடிடுக!

ஸ்ரீஅமிர்தகடேஸ்வரரான சிவன், ஸ்ரீஅமிர்தாம்பிகை முதல் மாமுனிகள் வரை அனைத்து தேவாதி தேவ தெய்வ மூர்த்திகளும், மகரிஷிகளும் உறைகின்ற திருத்திருமேனியாக பசுவின் திருஉடல் பொலிவதால் பசுவின் பாலில் பகவத் சக்திகள் நிரம்பி வழிகின்றன. ஒரு பசுமாட்டுப் பாலையே தினமும் உட்கொள்வது மகத்தான யோக நிலையைத் தருவதாகும். குழந்தை பாக்யம் வேண்டுவோர் முறையாக உண்ணா நோன்பிருந்து இங்கு கோ சூக்தம், காஸ்யபரின் “வளர்சிகை” எனத் தொடங்கும் சஷ்டிக் கவசம் ஓதி, பசு, கன்றிற்கு வயிறு நிறைய உணவளித்து ஆலயத்தில் கோ (பசுவிற்கான) பூஜை செய்திட வேண்டும். பசு, கன்றுடன் ஆலயத்தைப் பன்னிரெண்டு முறை வலம் வந்து, கறந்த பாலின் இளஞ்சூடு ஆறு முன் (பால் கறந்த மூன்று நிமிடங்களுக்குள்) சுவாமிக்கும், அம்பிகைக்கும் பசும்பால் அபிஷேகம் செய்து, கோமுகத்தில் வரும் அபிஷேகத் தீர்த்தத்தை அருந்தி விரதத்தைத் தம்பதியினர் குருவருளுடன் ஆழ்ந்த நம்பிக்கையுடன் நிறைவு செய்து வர, சந்தான பாக்யத்தை அருளவல்ல ருத்ர தரணி பந்து பித்ருக்களின் ஆசி கனியும்.

பெண்களாய்ப் பிறந்து குழந்தைச் செல்வம் பெற்று, தாய்ப்பால் ஊட்டி சிசுவை வளர்க்கும் பாக்யம் பெற்றமைக்காக அனைத்துப் பெண்களும் ஆயுளில் ஒரு முறையேனும் கண்டிப்பாக அமிர்தாம்பிகைக்கு நன்றிப் பிரார்த்தனை செலுத்த வேண்டிய தலம்.

பல காலமாக அமாவாசைத் தர்ப்பணம் அளித்து வந்தும் தான் சரியாகத் தர்ப்பணம் அளித்து வரவில்லை என்று எண்ணுவோர் இத்தலத்தில் முறையான, சிரத்தையான அமாவாசைத் தர்ப்பணத்துடன் அன்னதானம் செய்து வந்தால் “குறையொன்றுமில்லை” எனப் பித்ரு மூர்த்திகளே போற்றுமளவு பித்ரு சாந்தி சக்திகளை அளிப்பதே இத்தலத் தீர்த்தமாகும்.. எங்கு சென்றாலும் காரியத் தடங்கல், எதைத் தொட்டாலும் துலங்கவில்லை, நஷ்டத்திற்கு மேல் நஷ்டம் என எண்ணி வருந்துவோர் இத்தலத்தில் நீராடி தினசரித் தர்ப்பணம் அளித்து வந்தால் இருள் சூழ்ந்த வாழ்க்கை ஒளி பெற “ஸ்ரீவாரிலோகப் பித்ருக்கள்” துணைபுரிவர்.

தீயத்தூர் விஷ்ணுபதி

நம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச ஸ்வாமிகள் அருளாணையின்படி அவர்தம் அருட்சீடர் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் சித்தர்குலத் தமிழ்ச் சுடராம் ஸ்ரீஅகஸ்திய விஜயம் மற்றும் உபந்யாசங்கள், ஆன்மீக நூல்கள் மூலமாகவும் விஷ்ணுபதிப் புண்ய கால மஹிமை பற்றிக் கடந்த பல ஆண்டுகளாக எடுத்துரைத்து வருகின்றார்கள்.

வைணவ பெரியோர்கள், வைணவ ஆச்சாரியர்கள், வைணவ பீடாதிபதிகள், வைணவத் தொண்டர்கள், பக்த கோடிகள் யாவரும் (மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாதப் பிறப்பை ஒட்டி வருகின்ற) ஸ்ரீவிஷ்ணுபதி புண்ய கால வைபவத்தை, மகத்தான ஆலயத் திருமஞ்சனப் பெருவிழாவாகக் கொண்டாடிட வேண்டுமாய்ச் சிரம் தாழ்த்திப் பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

வழிபாட்டுப் பலன்கள் ஆயிரங் கோடியாய்ப் பெருகும் ஸ்ரீவிஷ்ணுபதி புண்ய கால மகிமை! அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறையே சித்ரபானுவில் வரும் – ஸ்ரீமகாலக்ஷ்மியே தூல, சூக்கும, காரண வடிவுகளில் தீயத்தூர் ஸ்ரீசகஸ்ர லக்ஷ்மீஸ்வரரை வழிபடும் விஷ்ணுபதித் திருநாள்!

தீயத்தூர் ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் ஆலயம் (ஆவுடையார் கோயிலில் இருந்து திருப்புனவாசல் செல்லும் வழியில், 15 கி.மீ தொலைவில் உள்ளதே தீயத்தூர் ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் ஆலயமாகும். அறந்தாங்கி, காரைக்குடி, மீமிசல், பேராவூரணி, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டையில் இருந்தும் ஆவுடையார் கோயிலுக்கான பஸ் வசதிகள் உண்டு.)

ஸ்ரீமுருகப் பெருமான்
தீயத்தூர்

விஷ்ணுபதி புண்யகாலம் என்பது பல தெய்வ மூர்த்திகளின் அவதாரங்களும், இறைலீலைகளும், புராண சம்பவங்களும் நிகழ்ந்த மிகவும் புனிதமான காலமாகும். பிரதோஷ கால வழிபாடு போல பூஜா, தரிசன, ஹோம தர்ப்பண, அபிஷேக ஆராதனைப் பலன்கள் பல்கிப் பெருகும் புண்ணிய காலமிதுவே!

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாதப் பிறப்பை ஒட்டி வரும் விஷ்ணுபதிப் புண்ய கால நேரமானது சூரிய ராசிப் பிரவேசம் மற்றும் கிரக சஞ்சாரங்களுக்கு ஏற்ப மாறுபடும். இதில் பல கடினமான பஞ்சாங்கக் கணக்குகள் இருப்பதால் பொதுவான விஷ்ணுபதி வழிபாட்டு நேரத்தை இங்கு அளிக்கின்றோம். நடப்பு சித்ரபானு ஆண்டின், மாசி மாத விஷ்ணுபதிப் புண்ய காலத் திருத்தலமாகச் சித்தர்கள் அளிப்பது தீயத்தூர் ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் ஆலயமாகும். ஆவுடையார் கோயிலில் இருந்து திருப்புனவாசல் செல்லும் வழியில் பொன்பேத்தி கிராமத்திற்கு அருகில் உள்ளதே தீயத்தூர். ஸ்ரீராமனின் திருவடிகள் பட்ட புனிதத் தலம்! ஸ்ரீமகாலக்ஷ்மியே பெறுதற்கரிய 1008 அக்னித் தாமரைகளால் சிவபெருமானை அர்ச்சித்து ஸ்ரீசுந்தரராஜப் பெருமாளின் திருமார்பில் நீங்கா இடம் பெற்ற அற்புதத் திருத்தலம்.

திருமகள் பூஜித்த திருச்சிவமூர்த்தி!

தீயத்தூருக்கு நிறைய ஆன்மீக விளக்கங்கள் உண்டு. தீ+அயத்தூர் என்பதும் தீயத்தூர் ஆயிற்று. தீ என்றால் சிவாக்னி, ஹரித்ராக்னி, பிரம்மாக்னி ஆகிய மூன்றும் கூடிய பரமாக்னி ஆகும். இம்மூன்று அக்னிப் பிழம்புகளும் இறைவனுடைய, சிருஷ்டிக்கு முன்னான, சீருஷபத யோகப்பூர்வ நிலையில் தோன்றியவை. பிரபஞ்சம் இயங்கத் தேவையான வேதாக்னி, பூம்யாக்னி, பூதாக்னி, பிராணாக்னி, பஸ்மாக்னி ஆகிய ஐந்து வகை அக்னிகளும், ஜீவ வாழ்விற்குத் தேவையான ஐந்து வகை பஞ்ச ருத்ர பூம்யாக்னிகளும் இந்த பரமாக்னியில் இருந்துதாம் தோன்றின. சர்வேஸ்வரன் தீயத்தூர்ப் புனித பூமியில்தாம் சிருஷ்டிக்கு முன்னான ஏகாந்த சீருஷபத யோகம் பூண்டார். திருமகளே சகஸ்ரநாமம் ஓதி 1008 அக்னித் தாமரைகளால் அர்ச்சித்தமையால் சிவபெருமான் ஸ்ரீசகஸ்ர லக்ஷ்மீஸ்வரர் எனப் பெயர் பூண்டார்.

குருவார ஏகாதசி வழிபாடு தரும் தீர்க்கமான கண் பார்வை!

நிலமகள், திருமகள், அலைமகள் மூவரும் கண் பார்வை இல்லாத ஒரு மூத்த வேதியக் கிழவருக்கு அருள்புரியும் பொருட்டுப் பாதங்களில் பொன் மெட்டிகளும், வெள்ளி மெட்டிகளும், அணிந்து “பொன் பேத்தியராய்ப்” பாதயாத்திரை வந்திட, வேதியரும் மெட்டி ஒலியைக் கேட்டுத் தொடர்ந்து வந்து 1000 திருமுகங்களுடன் சுந்தரக் காட்சி தந்த ஸ்ரீசுந்தரராஜப் பெருமாளைத் தரிசித்த திருத்தலமே தீயத்தூர் ஆகும். பொன் மெட்டியொலி கேட்கத் தொடங்கிய இடமே தற்போதைய “பொன்பேத்தி” கிராமமாகும். எனவே கண் பார்வைக் குறைவால் அவதியுறுவோர் ஏகாதசி விரதமிருந்து பொன் பேத்தி கிராமக் கோயிலில் இருந்து பாதயாத்திரையாக தீயத்தூர் வந்து ஸ்ரீசுந்தரராஜப் பெருமாளைத் தரிசித்து வரக் கண் பார்வைக் குறைகளுக்குத் தக்க தீர்வுகளைப் பெற்றிடலாம்.

பல அந்தகக் கவிகள் (கண்பார்வை அற்றவர்கள்) வியாழன் கூடிய குருவார ஏகாதசி நாளில் தீயத்தூர் ஸ்ரீசுந்தரராஜப் பெருமாளைத் தரிசித்து அகக்கண் தரிசனங்களைப் பெற்ற அதியற்புதத் தலம். சுக்ராச்சார்யார் தாம் ஒரு கண் பார்வையை இழந்தபோது காலில் வெள்ளித் திருவெண்டயம் அணிந்தும், தம் பத்னி வெள்ளி மெட்டிகளை அணிந்தும் இங்கு பாதயாத்திரை வந்து பார்வையற்ற கண்ணில் சுந்தர தரிசனம் பெற்று ஆனந்தித்தார். “ஸ்ரீவெள்ளீஸ்வரர் அருளால் திருமயிலையில் கண் பார்வை மலர்ந்திடும்” என்று ஆயிரத் திருஉரு ஸ்ரீசுந்தரராஜப் பெருமாளே நல்உரை நல்கிய திருத்தலம் தீயத்தூராகும். இவை யாவும் பல விஷ்ணுபதி யுகக் காலங்களில் இத்தலத்தில் நிகழ்ந்ததாம்.

ஸ்ரீவாஞ்சா கணபதி தீயத்தூர்

ஸ்ரீபுராக்னி என்பது திருமகளின் லக்ஷ்மி லோகத்திலிருந்து தோன்றுகின்ற சிறப்பான அக்னியாகும். ஜீவ வாழ்விற்கு ஸ்ரீபுராக்னியும் தேவையானதே! பூலோகத்தில் இதை நிலை நிறுத்தும் ஸ்ரீபுர பூமியாகவும் தீயத்தூர் பொலிகின்றது..!

ஹோமாதிபதி ஆங்கீரசர் தீயத்தூரில் ஆற்றும் தினசரி ஹோம வழிபாடு!

ஸ்ரீவிநாயகரின் திருமணத்தின் போது ஹோம வேள்விக்கான முத்தீயைப் (பிரம்மாக்னி, சிவாக்னி, ஹரித்ராக்னி) பெறுவதற்காக விநாயகப் பெருமானே இத்தலத்திற்கு வந்து சிவலிங்கத்திடம் இருந்து தோன்றிய ஜோதியைப் பெற்று மூவாக்னியை உருவாக்கினார். எனவே இத்தலத்தில் தக்க சத்குருவின் சீரிய தலைமையில் ஸ்ரீவாஞ்சா கணபதிக்கு முறையாக ஹோம வழிபாடு செய்வதானது சகஸ்ர கோடிப் பலன்களை, அதாவது ஆயிரங் கோடி மடங்கு (10000000000) பலன்களைத் தருவதாக இங்கு பிரபஞ்சத்திலேயே முதன் முதலாக மூவாக்னி கொண்டு ஹோமம் செய்திட்ட ஸ்ரீஆங்கீரஸ மகரிஷி அருளியுள்ளார்.

உலகத்தில் அனைத்து வகை அக்னி ஹோமங்களுக்கும் அதிபதியாக விளங்கும் ஸ்ரீஆங்கீரஸ மகரிஷி இப்பிரபஞ்சத்தில் முதன் முதலாக சுயம்பாக வரும் மூவாக்னி கொண்டு ஹோமம் ஆற்றிய முதல் தலமே தீயத்தூர் ஆகும். ஸ்ரீஆங்கீரஸ மகரிஷி இன்றும் வைகுண்டம், கைலாசம் ஆகியவற்றில் நிகழ்த்துகின்ற தம் நித்ய ஹோமத்திற்கான நித்யாக்னியைப் பெற்றுச் செல்லும் திருத்தலமே தீயத்தூர் ஆகும். முற்காலத்தில் சித்தர்களும், மகரிஷிகளும் இங்கு தீயத்தூரின் பரந்த ஏரிக் கரையில் பர்ணசாலை அமைத்து எப்போதும் 1008 ஹோம குண்டங்களில் இரவு பகலாக ஹோம நிகழ்த்தி வர, விண்ணளாவ ஹோம நறுமணப் புகை சூழ்ந்திருக்கும் திருத்தலமாகத் தீயத்தூர் பிரசித்தி பெற்றிருந்தது. தற்போதோ சிவன் சந்நிதிக்குக் கூடக் கதவின்றி இருக்கின்றது.

அனைத்து வகை அக்னித் தலங்களிலும் அன்றும், இன்றும் சாம்பிராணி தூபம் இட்டு வழிபடும் ஸ்ரீஅக்னிபுராந்தக மகரிஷி மகத்தான ஜோதி வகைத் தரிசனங்களைப் பெற்ற தலமும் இதுவேயாம். தன் தந்தையின் அஸ்தியைத் தலையில் சுமந்து வந்த அக்னிபுராந்தக மகரிஷி குடந்தைக் காவிரி ஆற்றங் கரையில் அஸ்தியைக் கரைத்த போது அவை தாமரை மலர்களாக ஆவது மட்டுமல்லாது அத்தாமரைகளின் நடுவில் அணையா முச்சுடர் ஜோதி தோன்றுவது கண்டு வியந்து அந்த ஜோதியின் தோற்றம் யாது என ஒவ்வொரு தலமாக ஆய்ந்து ஜோதியைத் தொடர்ந்து வருகையில் தீயத்தூரில் அப்போதிருந்த தாமரைத் தடாகத்தில் திருமகள் தாமரை புஷ்பங்களைப் பெற்றுப் பூஜிப்பதையும் அத்தாமரைகளில் முச்சுடர் ஜோதிகள் பரிணமிப்பதையும் கண்டு ஞான ஜோதியையே சிவஹரி தரிசனமாகப் பெற்றார்.

சிவனுக்கு ஆஹுதி தர மறுத்த தக்கனின் வேள்விக்கு அக்னியை அளித்தமையால் அக்னி பகவானுக்குப் பலத்த சாபங்கள் ஏற்பட்டுப் பல அக்னிக் கோளங்களையும் அக்னி சக்திகளையும், தமக்கென இறைவனே அளித்த அக்னிப் பூக்களையும், பல அக்னி வகைகளையும் ஜோதித் தாத்பர்யங்களையும் இழந்தார். இதன் பிறகு பல பிராயச்சித்தப் பரிகாரங்களைப் பெற்று ஓரளவு அக்னி சக்திகளை அக்னி பகவான் மீண்டும் பெற்றாலும் தாமிழந்த அனைத்து சக்திகளையும், அக்னி வகைத் தாமரைகளையும், அக்னிப் பூக்களையும் மீண்டும் ஒரு சேரப் பெற உதவிய தலமாக தீயத்தூர் விளங்குகின்றது.

பிரபஞ்சத்தில் முதன் முதலாக சாம்பிராணி தூபாக்னியால் இறைவனை வழிபடும் முறை தோன்றிய தலம் இதுவேயாம். எனவே இங்கு ஸ்ரீசஹஸ்ர லக்ஷ்மீஸ்வர லிங்கத்திற்கும், ஸ்ரீசுந்தரராஜப் பெருமாளுக்கும், தொடர்ந்து மூன்று மணி நேரம் சாம்பிராணி தூபம் இட்டு ஆழ்ந்த நம்பிக்கையுடன் வழிபட்டு வர, பலவிதமான பணக் கஷ்டங்களுக்கும் நியாயமான முறையில் தீர்வுகள் கிட்டும்.

ஹரிஹர சக்தித் தலம்!

சீதாதேவி அக்னிப் பிரவேசம் செய்கையில் சீதையின் கற்புக் கனலைத் தாங்க இயலாது ஸ்ரீராமரிடமே சீதையைப் புனித மூர்த்தியாக ஒப்படைந்த அக்னி பகவான், சீதையின் புனிதத் திருமேனியைக் காக்கும் ராமநாமாக்னி வளையத்தைச் சுற்றி உஷ்ணம் வந்ததற்காக மன்னிப்புக் கோரி இங்குதாம் பிராயச்சித்தம் பெற்றார். அருகில் உள்ள திருப்புனவாசல், தீர்த்தாண்டதானம் போன்ற இடங்களில் பித்ரு ஹோமங்களை ஆற்றிய ஸ்ரீராமர், வேள்விக்கான அக்னியை அரணைக் கட்டையில் பெற்ற இடமும் தீயத்தூரே! இவ்வாறாகப் பல புராண அனுபூதிகள் விஷ்ணுபதி நாளில் நிகழ்ந்த ஹரிஹர சக்தித் தலமே தீயத்தூராகும்.

தீ + அயத்தூர் (அயன் = பிரம்மா) என்பதால் சிருஷ்டி கர்த்தாவாகிய ஸ்ரீபிரம்மாவும் தம் ருத்ர ஹோமத்திற்குத் தேவையான பிரம்மாக்னியை, இங்கிருந்துதாம் எப்போதும் பெறுகின்றார். ஸ்ரீமகாலக்ஷ்மியும் பிருகு முனிவரின் சாபத்தால் பெருமாளை விட்டுப் பிரிய நேரிட்ட போது மீண்டும் பெருமாளின் நெஞ்சில் நீங்கா இடம் பெறுவதற்கான வழிமுறைகளை அளித்திடுமாறு மகரிஷியை நாடினள்.

நவகிரகங்கள் தீயத்தூர்

மஹரிஷிப் பெம்மானும் திருமகளிடம், “தாயே! நீ நீளா தேவியின் அம்சங்களைப் பூண்டிருப்பதால் நீளாக்னி, நிலைத்த அக்னி, நித்யாக்னி ஆகிய மூன்று ஜோதித் தன்மைகளைக் கொண்டதும், பிரம்மாக்னி, ருத்ராக்னி, ஹரித்ராக்னி ஆகிய மூன்று மூல அக்னிகளைக் கொண்டதும், பஞ்ச பூதாக்னிகளின் வித்துமான ஒரு சுயம்பு லிங்கப் பூமியில் பொற்றாமரைகளின் நடுவில் மூன்று வகை த்ரயம்பக ஜோதி தோன்றும். பிரபஞ்சத்தில் அங்கு மட்டுமே பூக்கின்ற மிகவும் அரிதான 1008 ஸ்வர்ணாக்னித் தாமரைப் பூக்களால் ஆங்கேயுள்ள லிங்கத்தை அர்ச்சித்து வர சுந்தராக்னி ஜோதியில் திளைக்கும் ஆயிரம் முகப் பெருமாளை அடையும் வழிமுறைகளைப் பெற்றிடலாம்!” என்று உரைத்திடவே, மகாலக்ஷ்மியும் அவ்விடந் தேடி பூமியெங்கும் உலா வந்தனள்.

ஓரிடத்தில் … அத்தாமரை மலர்கள் நிறைந்த பெருந் தடாகத்தில் பூத்திருந்த பொன்மயத் தாமரைப் பூக்களின் நடுவே சுயம்புவாய் மூன்று வண்ண அக்னி தோன்றுவது கண்டு அதிசயித்திட.. .. ஆங்கே வந்திட்ட நாமகளும், அலைமகளும் சகஸ்ரநாமத் துதிகளை ஓதிட … திருமகள் ஆங்கே எழுந்தருளி இருந்த சுயம்பு லிங்கத்தைத் தாமரை மலர்களால் அர்ச்சிக்கலானாள்! இவ்வரிய தலமே தீயத்தூர் ஆகும். ஸ்ரீலக்ஷ்மீ தேவியால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்விக்கப் பெற்ற சுயம்பு லிங்க மூர்த்தியே ஸ்ரீசஹஸ்ர லக்ஷ்மீஸ்வரர் (சஹஸ்ரம் = ஆயிரம்) ஆனார்.

ஆயிரத்தின் இறைப் பாயி(சு)ரம் கண்ட இனிய மஹரிஷி!

ஸ்ரீகார்ஜனீய மகரிஷி சகஸ்ரநாமத் துதியில் வல்லவர். இறைவனின் அனைத்து அவதாரங்களின் திருவடிகளிலும் சகஸ்ரநாமம் ஓதித் தாமரைப் புஷ்பங்களால் அர்ச்சிக்கும் பாக்யம் பெற்றவர். இத்தகைய மாமுனிவருக்குத் தான் இறைவன் பேரளம் எனும் சிவத்தலத்தில் ஒவ்வொரு சகஸ்ர நாம பீஜாட்சர வடிவையும் தம் சுயம்பு லிங்க மேனியில் காண்பித்து அருள்புரிந்தார். எனவே பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து இறை நாமங்களின் உட்பொருள் உணர்ந்த மகரிஷிகளுள் சிறப்பிடம் பெறுபவரே ஸ்ரீகார்ஜனீய மகரிஷி ஆவார். ஆனால் இந்த மகரிஷிக்கே ஒரு சோதனை ஏற்பட்டது. என்ன அது?

சகஸ்ர லிங்கம் பேரளம்

சர்வ தீர்த்தங்களிலும் நீராடி வந்த ஸ்ரீகார்ஜனீய மகரிஷியிடம் நாரதப் பெருமான், ஸ்ரீசகஸ்ரமீஸ்வரர், ஸ்ரீசஹஸ்ர லக்ஷ்மீஸ்வரர், ஸ்ரீலக்ஷ்மி சஹஸ்ரேஸ்வரர் ஆகிய மூன்று நாமங்களின் உட்பொருளை உணர்த்திட வேண்டினார். பன்மொழிப் புலமை உடையவரான ஸ்ரீகார்ஜனீய மகரிஷிக்கு இவற்றின் அர்த்தம் உரைப்பது எளிதான காரியமே! ஸ்ரீலக்ஷ்மியால் 1008 முறை அர்ச்சிக்கப்பட்ட சிவலிங்கத்தை யாம் இதுவரையில் தரிசித்தது கிடையாதே! இம்மூன்று நாமங்களுக்கு உரிய இறை தரிசனங்களைப் பெறாது அவற்றின் பொருளைத் தன்னால் உரைக்கலாகாது என்று பணிவன்புடன் உரைத்த மகரிஷி தாமறியாத இந்த அவதாரங்களில் உறையும் இறைதரிசனங்களைப் பெற விழைந்தார், பேரளத்திற்கு!

ஆங்கே பேரளத்தில் இறைவனும், “கார்ஜனீயா! இது வரையில் பல சுயம்பு லிங்க அட்சர சக்திகளை உமக்கு யாம் அளித்தோம்! அதுவும் நீ கேட்டவாறே! ஆனால் நீ உரைக்கும் மூன்று திருநாமங்களின் பீஜாட்சர ஞான சக்தியும் சுயம்பு லிங்க சக்திகளுக்கு அப்பாற்பட்டதாய் ஆதி மூல அக்னியில் இருந்து எம் மூன்றாம் நேத்ரத்தில் மூவாக்னியாய் எழுவதாகும்! எனவே பிரபஞ்ச சிருஷ்டிக்கு எல்லாம் முன்னதாக, சுயம்புகளுக்கு எல்லாம் மூத்ததான, மிகப் பழமையான சிவலிங்கமாக ஜோதி அ(க)த்தில் வாழுமிடம் அறிந்து ஞானமடைக!” என்று கூறிடவே கார்ஜனீஸ்வர மகரிஷி மீண்டும் சர்வ தீர்த்தாண்டத் தானத்திற்கு வருகையில், இடையில் பொன் பேத்தித் தலம் அருகே…

மெட்டியுடனான திருமகளின் யாத்திரை!

கால்களில் மெட்டிகளுடன் பாத யாத்திரை புரிந்து தீயத்தூருக்கு வந்த ஸ்ரீமகாலக்ஷ்மி 1008 நாமங்களை ஓதி வழிபடும் அற்புதக் காட்சி கண்டு லயித்து நிற்க… அந்த 1008 சகஸ்ர நாமங்களில் மேற்கண்ட மூன்று நாமங்களும் இறுதியில் ஒலிப்பதையும்.. இம்மூன்று நாமங்களின் சப்த சாகரத்தில் இருந்து 1008 வண்ண ஜோதிகள் நிறைந்த சகஸ்ராக்னி எழுந்து திருமகள் நடத்தும் யாகத்தில் ஐக்யமாவதையும், ஹோம குண்டத்தில் 1000 திருமுகங்களுடன் ஸ்ரீசுந்தரராஜராகப் பெருமாள் தோன்றி அருளுவதைக் கண்டும் பேரானந்தமடைந்து நாரதருக்கும் இவற்றை உணர்வித்தார். இந்த வைபவம் நிகழ்ந்ததும் ஒரு யுகத்தின் சித்ரபானு ஆண்டின் மாசி மாத விஷ்ணுபதிப் புண்ய காலத்தில்தாம்!

இத்தகைய தெய்வீகச் சிறப்புகள் நிறைந்த தீயத்தூரில், தக்க சற்குருவின் மேற்பார்வையில் ஆயிரம் தாமரை மலர்களை ஆஹூதிகளாக அளித்து ஹோம வழிபாடு ஆற்றுதல் ஆயிரம் கோடி மடங்கு பலா பலன்களைத் தருவதாகும். பிரபஞ்சத்தில் வேறு எந்தத் தலத்திலும் பெறமுடியாத பெரும் பாக்யம் இதுவே!

விஷ்ணுபதிப் புண்ய கால பூஜா பலன்கள்

அமாவாசை, மாத சிவராத்திரி மற்றும் அக்னி நாட்களாகிய செவ்வாய், சனிக்கிழமை, பரணி, கார்த்திகை, உத்திரம், சித்திரை போன்ற நாட்களில் பொன்பேத்தி ஆலயத்தில் இருந்து திருவெண்டயம், சலங்கை, மெட்டிகள் அணிந்து பாத யாத்திரை வந்து தீயத்தூரில் சாம்பிராணி, ஊதுபத்தி, தூபங்கள், விளக்கு பூஜை போன்ற அக்னி வகை பூஜைகளை மேற்கொண்டு ஹோமம் வளர்த்து ஸ்ரீசகஸ்ர லக்ஷ்மீஸ்வரரையும், ஸ்ரீசுந்தரராஜப் பெருமாளையும் வழிபட்டு வர வேண்டும்.

தன் மீது கணவன் அன்புடன் இல்லையே என்று ஏங்கும் பெண்கள், இங்கு விஷ்ணுபதிப் பூஜையில் பங்கு கொள்தலால் அதியற்புத முறையில் குடும்பத்தில் அன்புப் பரிமாற்றங்கள் உண்டாவதைக் காணலாம். பல நியாயமான காரணங்களால் இங்கு வர இயலாதோர் தம் இல்லத்தில் இரவு முழுதும் வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி போல் விழித்திருந்து குடும்ப சகிதம் ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள், ஸ்ரீமகாலக்ஷ்மி, ஸ்ரீபிரஹந் நாயகி சமேத ஸ்ரீசகஸ்ர லக்ஷ்மீஸ்வரரின் திருநாமங்களை இடைவிடாது ஓதிப் பூஜிக்க வேண்டும்.

ஆயிரம் திருமுக தரிசனம் தந்து ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் ஸ்ரீமகாலக்ஷ்மியைத் தன் திருமார்பில் ஏற்ற தலமாதலால் தீயத்தூரில் பூக்கள், திரவியங்கள், வில்வம், துளசி போன்றவற்றை 1000 எண்ணிக்கையில் அர்ச்சித்தலும், ஹோமங்களை நிகழ்த்துதலும் மிகவும் விசேஷமானது. ஜாதி, குல, இன பேதமின்றி, சத்சங்கமாகப் பலரும்  ஒன்று சேர்ந்திடில் மகத்தான பெருவிழாவாக, பண்டைய யுகங்களில் நிகழ்ந்தது போல இங்கு ஸ்ரீவிஷ்ணுபதிப் புண்ய கால பூஜையை நிகழ்த்திடலாம். இரும்பு சம்பந்தப்பட்ட பணியில், தொழிலில் உள்ளோர் கட்டாயமாக வழிபடவேண்டிய விஷ்ணுபதி புண்யகால பூஜை இது.

60 ஆண்டுகளுக்கு ஒரு முறை சித்ரபானு ஆண்டின் மாசி மாத விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் ஸ்ரீமகாலக்ஷ்மியே தூல, சூக்கும வடிவில் வந்து 1008 பொற்றாமரைகளால் ஸ்ரீசஹஸ்ர லக்ஷ்மிஸ்வரரை வழிபட்டு, ஆயிரம் திருமுகத் திருமாலை, ஸ்ரீசுந்தரராஜப் பெருமாளாகத் தரிசிக்கும் பொன்னாள் இது! பக்தியுடன் வழிபடுவோர்க்கு சற்குருவின் திருவருளால் தெய்வப் பூர்வமாக உணர்விக்கப்படும்.
ஸ்ரீமகாலக்ஷ்மியே சிவபெருமானைப் பூஜித்தத் திருநாளில் சகஸ்ரவதனத்துடன் ஸ்ரீசுந்தரராஜப் பெருமாளே ஸ்ரீமகாலக்ஷ்மியைத் தம்மிடம் ஏற்றுப் பணக் கஷ்டம் நீங்கிட நல்வரங்களைத் தந்திடும் அற்புதத் திருநாள்!
இப்பகுதியில் இரும்பு, பொன் போன்ற கனிம வளங்கள் பூரிப்பதாக பூமியடி சாஸ்திரக் கூறுகள் விளக்குவதும் குறிப்பிடத்தக்கது. பல காலச் சண்டை சச்சரவுகளால் பிரிந்து மீண்டும் ஒன்று சேர்ந்துள்ள தம்பதிகள் மீண்டும் பிரியாது நன்முறையில் ஒற்றுமையுடன் வாழ ஸ்ரீவிஷ்ணுபதிப் புண்ய காலத்தில் இங்கு கண்டிப்பாக வழிபட்டிட வேண்டும்.
இன்னாளில் ஸ்ரீபார்வதி தேவியும், ஸ்ரீமகாலக்ஷ்மி தேவியும், ஸ்ரீபூமாதேவியும் பொன், வெள்ளி, மெட்டிகள் அணிந்து பொற்றாமரை மலர்களைச் சுமந்து நடந்து வந்து சிவனையும், பெருமாளையும் பூஜித்தமையால் இந்நாளில் வெள்ளி மெட்டிகளை ஏழைகளுக்குத் தானமாக அளித்திடுதலால் வாழ்வில் வீடு, தொழில் சரியாக அமையாது திணறுவோர் வாழ்வில் ஸ்திரம் பெற உதவும் வழிபாடு இதுவேயாம். சற்குருவைப் பெற்றும், தெய்வீகத்தில் அரிய வாய்ப்புகளைப் பயன்படுத்தாது இழந்திட்டோர் ஏகாதசி குருவாரத்தோடு விஷ்ணுபதிப் புண்ய காலம் ஐக்யமாகும் இந்நன்னாளில் தக்க பிராயச்சித்த, பரிகாரங்களை வேண்டி வழிபடுதல் வேண்டும்.

சூரிய ராசிப் பிரவேசத்தை ஒட்டி விஷ்ணுபதிப் புண்ய காலம் அமைகிறது. 12.2.2003 புதன் கிழமை இரவு 1.30 மணி முதல் 13.2.2003 வியாழக்கிழமை காலை 10.30 வரை பொதுவாக விஷ்ணுபதிப் புண்ய கால நேரம் அமைவதால் முன்கூட்டியே தீயத்தூருக்கு விஜயம் செய்து இத்தலத்தில் தக்க ஏற்பாடுகளைச் செய்வதுடன் பூஜைக்கு வருகின்ற அன்பர்கள் தங்கவதற்கும் வசதி செய்து அளித்தலானது மகத்தான திருப்பணியாக அமைந்து இதிலும் விஷ்ணுபதி பூஜா பலன்கள் நன்கு நிரவிடும். அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறையே வரும் வாய்ப்பு இது! மீண்டும் நம் வாழ்வில் சித்ரபானு ஆண்டு வருமோ ஐயா! ஆழ்ந்து சிந்தித்துச் செயல்படுவீர்!  

உறக்கத்தின் உட்பொருள்

நாமறியா வகையில் நாம் வாழும் உலகத்தைத் தவிர, எண்ணற்ற பூமிகள் உண்டு. முன்னோர்கள் பிற பூமிகளில் வாழ்ந்திட, விதியிருப்பின், உறக்க நிலையில், பலரும் அங்கு சென்று பந்த வினைகளைத் தீர்த்து வருகின்றனர். ஆங்காங்கே பல பூமிகளில் ராமாயணமும், மகாபாரதமும் இன்றும் நடந்து கொண்டு தாம் இருக்கின்றன. இதுவும் காலச் சக்கரத் தாத்பர்ய மகிமையே! உறக்க நிலை என்பது வெறும் ஓய்வுக்காக மட்டுமன்று! உறக்கத்தில் மனிதர்கள் பல லோகங்களுக்கும் சென்று கர்ம பரிணாமங்களைப் பெற்றும், புரிந்தும் வருகின்றனர்!

பூமியில் எப்போதும் மனிதன் நிலையாக இருப்பதில்லை! தினமும் உறக்கத்தில் பிற லோகங்களுக்கும் சென்று, வந்தே வாழ்கின்றான்! இப்புவியில் வாழ்கின்ற மனிதன், பூமியிலே எப்போதும் இருந்து கொண்டு வாழ்வது போல் நமக்குத் தோன்றினாலும், அவரவருடைய ஆன்மீக நிலைகள், கர்ம வினைகளைப் பொறுத்து அவரவர் தினமும் பூமியில் தங்குகின்ற காலமும் மாறுபடும்! இடையில் ஒவ்வொருவரும் பல விண்வெளி உலகங்களுக்கும் சென்று வருகின்றார்கள். கேட்பதற்கே வியப்பாக இருக்கின்றது அல்லவா!

உறக்கத்தில் நிகழும் பல லோகப் பயணங்கள்!

ஆம், உறக்கத்தில், பெரும்பாலும் அனைத்து மனிதர்களும் பல பூமிகளுக்கும் பல லோகங்களுக்கும் சென்று, அங்கு வாழும் தம் முன்னோர்களைத் தூல, காரண, சரீரங்களில் கண்டு வினைப் பரிணாமம் பெற்று வருகின்றனர். வேறு பல காரணங்களுக்காகவும் வினைச் சுழிப் பூர்வமாகவும் செல்வதும் உண்டு. எனவே மனிதர்களாகிய நாம் இப்புவியில் பெற்றிருப்பது பல லோக வாழ்வே, ஒரே பூமி வாழ்வல்ல! மேலும் நாம் வாழ்வது மட்டும் ஒரே பூமியல்ல, பல பூமிகள் உண்டு என்பதும் இனியேனும் உங்கள் நினைவில் என்றும் இருக்கட்டும்! இந்த சித்த சத்திய வேத வாக்கியத்தைப் பற்றித் தற்போதைய விஞ்ஞானம் மூட நம்பிக்கை எனப் பரிகசிக்கும். ஆனால் எதிர்காலத்தில் விஞ்ஞானமே இதனை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். காரணம் சித்தர்களின் மெய்ஞ்ஞான விஞ்ஞானம் நெடுங்காலத்தை உணரும் தீர்க தரிசனம் வாய்ந்தது!

அவரவரரும் தாம் பெற்றுள்ள இந்த மானுடப் பிறவியில், பல உடல் வடிவுகளிலும், சில சமயங்களில் இதே சரீரத்திலும் பல உலகங்களில் பல வாழ்க்கை நிலைகளை அவரவர் கர்ம நிலைகளுக்கு ஏற்பப் பெறுகின்றனர் என்பதே உண்மை! ஆம், உறக்க நிலையிலும் ஒவ்வொரு மனிதனும் இப்பூவுலகில் மட்டுமல்லாது பல லோகங்களில், பல சூக்கும, காரண வடிவுகளில், தாமறியா வகையில் வாழவே செய்கின்றனர். உறக்க நிலையைப் பற்றி நன்கு ஆத்ம விசாரம் செய்திடலால் பல அரிய தேவ ரகசியங்கள், ஆத்ம உண்மைகள் புலப்பட வரும்.

சித்தர்கள், மகரிஷிகள் என்றும் வாழும் ஏகாந்த ஜோதிகளே!

உத்தம நிலைகளில் புனிதம் பூத்து மலர்ந்து தெய்வீக நிலைகளில் திளைப்பவர்களே சித்தர்கள், மகான்கள், யோகியர், நற்பெரியோர்கள் ஆவர். இவர்கள் இறையாணையாய் மனித வடிவு கொண்டு பூமிக்கு வந்து பல நற்காரியங்களை ஆற்றி, மேலும் பல தெய்வ லோகங்களுக்குச் சென்று பலவிதமான போதனைகளை, அனுபூதிகளை ஆங்காங்கே பல தேவ மூர்த்த லோகங்களில் பெற்று வந்து பூலோக ஜீவன்களுக்கு அளிக்கின்றனர். இங்கிருந்தவாறே மனோபல ரீதியாகவும் (telepathy) இவற்றைப் பெறுவதும் உண்டு. இத்தகைய உத்தமர்களும் பூமியில் தூலவடிவில் இருக்கின்ற நேரமும் மாறுபடும். எனவே நாம் கொண்டிருக்கின்ற 24 மணி நேரக் கணக்கும் ஆன்மீக நிலைகளில் மாறுபாடு அடைகின்றது.

பக்தி நிறை உத்தம சித்தர்கள், மகான்கள், சற்குருமார்கள் யாவரும் எப்போது எந்த உலகத்திற்குச் சென்று வரலாகும் என்ற துரீய சரீர தெய்வ இலக்கண விதியில் செறிந்து சிறக்கின்றவர்கள். மனித சரீர இலக்கணங்கள் அவர்களுக்குப் பொருந்தா! காரணம், உத்தமர்கள் நம்மைப் போல் கர்ம வினைகளின் விளைவாக பூத உடலைப் பெறவில்லை அல்லவா! நம்மைப் போல் வினைப் பிறவிச் சக்கரத்தில் உழலாது இறை ஆணையாய்ப் பிறரைக் கரையேற்றப் பூமிக்கு வந்தவர்கள்தாமே உத்தம மகான்கள் ஆகின்றனர்!

உடலைப் பெற்றது இறைவழியில் வினை கழிக்கவே!

தம் வினைகளின் விடையாய்ப் பிறவிகளைப் பெற்ற மனிதர்கள், கட்டாயமாக அந்தந்த உடலில்தான் பல வினைப் பரிமாற்றங்களைப் பெற்றாக வேண்டும். எந்த உலகங்களில் எத்தகைய வினை எச்சங்களைச் சேர்த்துக் கொண்டார்களோ ஆங்காங்கேதாம் பல தேக வடிவுகளில் அந்தந்த வினைகளுக்கான கழிவுகள் நிகழ்த்தப் பெறுகின்றன. எனினும் சற்குருவின் அருள் திரண்டிட்டால், அவர்வருக்குத் தாய்நாடு லௌகீகமாக அமைவது போல், அவரவர் பிறப்பைப் பெற்றுள்ள லோகங்களிலேயே பிற லோக வினைக் கடன்களை சற்குருவின் மேற்பார்வையில் எளிதில் தெய்வீக ரீதியாக அடைந்திட முடியும். சற்குருவின் மீது கொள்ளும் ஆழ்ந்த நம்பிக்கையே இதனைச் சாதித்துக் காட்ட வல்லதாம்.

எனவே ஒவ்வொருவரும் இரவு உறக்கத்தில் பல வினைகளுக்கான கழிவுகளைத் தேடித்தான் செல்கின்றார்கள். உறக்கத்தில் பல தேக வடிவுகளைச் சுமந்து வினைப் படிவங்களைத் தீர்த்து வருகின்றனர். உறக்கம் என்றால் பொதுவான ஓய்வுப் பொழுது என்று இதுவரை எண்ணும் மனித சமுதாயத்திற்கு இவை இரண்டும் உறக்கத்திற்கான அதியற்புத ஆன்ம விளக்கங்களுமாக அமைகின்றன. உறக்கம் பற்றிய ஏனைய பல விளக்கங்களையும் நாம் ஸ்ரீஅகஸ்திய விஜய முந்தைய இதழ்களில் அளித்து வந்துள்ளோம்.

சித்துக்காடு

யோக சக்திகள் பொங்கும் சித்துக்காடு ஸ்ரீதாந்த்ரீஸ்வரர் ஆலயம்

படைப்பில் அவரவர் வினைக்கேற்ப மனிதப் பிறவிக்கான உடலைப் பெறும் போது ‘இயற்கைப் படல விதிவழி’ என்ற ஒரு ஆன்மீக சங்கவிதிப் பலகை ஒன்று கபாலத்தில் chip போல அனைவருக்கும் பொருத்தப்படுகின்றது. இதன் பிலாகாச துவாரமே தலைச் சுழியாகும். சனி விரலாகிய நடு விரலால் தலைச் சுழியைத் தொட்டவாறு, இரண்டு நுனிக் கால்களிலும் உயரே எழும்பி நின்று, ஆயுள்காரகராகிய சனி பகவானுக்கு உரிய சனிக்கிழமை ராகு கால நேரத்தில் (காலை மணி 9.00 -10.30), சென்னை பூந்தமல்லி அருகே உள்ள சித்துக்காடு ஸ்ரீதாந்த்ரீஸ்வரர் சிவாலயத்தில் முறையாக யோகம் பயின்று வர அபூர்வமான யோக பலன்கள் சித்திக்கும். ஆஸ்த்மா, புற்று நோய், தலைமுறை நோய்கள் மற்றும் பல கடினமான நோய்களையும் யோக பூர்வமாகத் தீர்க்க வல்லதே சித்துக்காடு ஸ்ரீதாந்த்ரீஸ்வரர் சிவாலயமாம். பலரும் அறியாத அபூர்வமான தலம். தலைமுறை தலைமுறையாய்ப் பல பிணிகளால் தொடர்ந்து வாடுவோர் திங்கட் கிழமை சூரிய ஹோரை நேரம், சனிக்கிழமை ராகு காலம், பிரதோஷ நேரங்களில் இங்கு சித்துக்காடு ஸ்ரீதாந்த்ரீஸ்வரர் சிவாலயத்தில் வழிபட்டு, இவ்வாலயத்திற்கு உரிய இறைத் திருப்பணிகளைச் செய்து வந்தால் தக்க நிவர்த்திகள் கிட்டும்.

எத்தகைய கடுமையான நோய்களையும் தீர்க்க வல்ல ஸ்ரீகருடக் கொடிச் சித்தர் இன்றும் என்றும் சித்துக்காடு ஸ்ரீதாந்த்ரீஸ்வரர் ஆலயத்திலும், இதன் அருகில் உள்ள சித்துக்காடு பெருமாள் ஆலயத்திலும் சனிக்கிழமை தோறும் சூக்குமமாகத் தோன்றி, இங்கு பூஜித்து வருவோர்க்கு அருள்புரிகின்றார். கருடக் கொடிச் சித்தரின் திருஉருவைச் சித்துக்காடு பெருமாள் ஆலய ஆண்டாள் சந்நிதி அருகே தூணில் காணலாம்.

அனைவரும் ஈசனை நம்புவோரே! இறைவனை நம்பாதோர் எவரும் பூமியில் இல்லை!

மனிதன் தன்னைத் தானே உணரவே 70, 80, 90 எனப் பல வருட ஆயுள் தரப்படுகின்றது. மேலும் வாழ்வின் ஒவ்வொரு விநாடியிலும் மாயைகளும், மாற்றங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. பக்தியுடைய உத்தமராலன்றி வேறு எவராலும் எவரைப் பற்றியும் சரியாக முடிவெடுக்க முடியாது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்று ஒருவரும் உலகத்தில் கிடையாது. எனவே இவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்றவாறாக ஒருவரின் இன்றைய மன நிலையை வைத்து எவரையும் எடை போடக் கூடாது. தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் அனைவருமே, அனைத்துமே இறைவனை நம்பியே வாழ்கின்றனர். அகங்காரம், செருக்கு, ஆணவத்தால் மனிதனே தன் இறைப் பகுத்தறிவை இழந்து கடவுள் நம்பிக்கையை மங்கச் செய்து கொள்கின்றான். மரண பயம் வரும் போது கடவுளைத் தேடுகின்றான்.

ஒவ்வொருவருக்கும் உள்மன வாழ்வு என்ற ஒன்றும் நிச்சயமாக உண்டு. அதாவது பலருடைய வெளி வாழ்க்கைக்கும், உள்மன வாழ்க்கைக்கும் பலத்த வேறுபாடுகள் இருக்கும். இதனால்தான் தியானம் கை கூடுவதில்லை! மனக் குழப்பங்களும் பொங்கி வழியும். எண்ணத்திற்கும், செயலுக்கும் வேறுபாடுகள் கிளைக்கும். மனச் சரீரம், சதைச் சரீரம் (உடல்) இந்த இரண்டும் ஒன்றாக இணைவதுதான் உத்தம வாழ்க்கையின் சிறந்த இறைலட்சியமாகும். மன ஒற்றுமைக்காக இறைவன் அளிக்கும் ஆரம்பப் பள்ளியே குடும்பமாகிய இல்லறமாம் நல்லறமாகும்..

அனைத்து மானுடர்களுக்கும் வாழ்வின் இறை இலக்கணம் புரியாத நிலையில் வாழும்போது, அவர்களுக்கே நம்பிக்கை இல்லாத நிலையில் எப்படி உறக்க நிலைப் பிரயாணமாக நிகழும்? இவ்வகையினருக்கும் விதி-வினைச் சக்கர நியதிப்படி, சூரிய, சந்திரத் தோற்றம் போல, அனைத்தும் தானாகவே இயற்கையாகவே நடக்கின்றது. ஒருவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவரோ அல்லது வினைகழி முறை அறியாதவரோ எதுவாயினும், எப்படியாயினும் சரி தாமாகவே விதி வழியில் வினை தீர்க்கும் வழிமுறையில் அவர் மூதாதையர்களின் புண்ய சக்தியால் செல்லலாகின்றார்.

இறைப் பகுத்தறிவு மங்கலாகுமோ!

ஆனால் மனிதனுக்கு உரிய விசேஷமான பகுத்தறிவால் ஆலய வழிபாடு, ஹோமம், கிரிவலம், நேர்த்தி, பூஜைகள், தான தர்மங்களைக் கடைபிடிக்கும்போது சில விசேஷமான வினைகழி வகைகள் பரிகாரங்களாக, பிராயச்சித்தங்களாக அவனுக்கு உணர்த்தப் பெறுகின்றன. எனவே அனைவருமே தம்மையும் அறியாது வினையறுக்கும் நல்வழிகளில்தான் முயற்சித்து வாழ்கின்றனர்.

இதில் பகுத்தறிவு கூடிய ஆன்ம வழிகளில் வினையறு முறைகள் துரிதமாக சித்திக்கும். இதிலும் உத்தம இறைப் பகுத்தறிவுடன் சற்குருவை நாடி, எக்காலத்தும் நம்பிக்கைக் குறைவின்றி அவர் வழி நடப்போர்க்கு தெய்வீக நல்வாழ்வு சி(தி)த்திக்கும். எனவே நாத்திகம் என்பது கடவுள் நம்பிக்கை இல்லாது இருப்பதல்ல! நாத்திகமும், இறைவனை, ஆய்வின்பால் உணர்த்துவதேயாம்! இதுவும் இறைவனின் பெரு லீலையே! பலருக்கும் கிட்டிடாப் பேரனுபவமாக இறைவனின் அருகில் இருந்து பல பிறவிகளில் ஆலயங்களில் பணிபுரியும் அனுகிரகத்தைப் பெற்றும் இறைவளம் அறியாது அதர்மமாக, அசத்திய வழியில் வாழ்ந்து சம்பாதித்த வினைக் கர்ம விளைவுகளே – “அருகிருந்தும் அரனையறியா அறியாமைக்காக” – மீண்டும் பிறப்புக் கொண்டு சில காலம் நாத்திக மாயையில் உழல வைக்கின்றது.

இறைவனை எண்ண மறுப்போர் எவராயினும் மரண பயம் வரும் போது ஆடிவிடுகையில் தான் பல அரிய தெய்வீக உண்மைகள் புலப்பட்டுப் பெறுதற்கரிய மானுடப் பிறவியில் உபயோகமற்று வீணே அழைக்கழிந்தோமே என்பது புலப்படலாகும். எனவே அவரவர் தீவினைகளை அவரவர் அனுபவித்தாக வேண்டுமாதலால் எவரையும் வெறுக்காதீர்கள்! எவரைக் கண்டும் அஞ்சுதலும் வேண்டாம், தீயோரைக் கண்டால் அவர்  திண்மையான வைராக்யமான மனம் கொண்டு வசப்படாது அவர்களும் திருந்தி வாழ இறைவனை வேண்டுங்கள்.

எதிர்காலத்தை உணர்த்தும் விலங்குகள்!

பல சமயங்களில் தேவையின்றிப் பசுக்கள் கத்துவது, நாய்கள் குரைப்பது, பறவைகள் சப்தம் போடுவது போல் நமக்குத் தோன்றும். காரணம் புரியாது இவ்வாறு தவறாக எண்ணுவதும் இறைப் பகுத்தறிவு மங்கிய நாத்திக எண்ணமே! மனிதனைத் தவிர அனைத்துத் தாவரங்களும், விலங்குகளும் பிற ஜீவன்களின் மேன்மைக்காக இறைவனை வேண்டி மன்றாடுகின்றன. தாவரங்கள் தமக்குரிய சாகம்பர்ய காயத்ரீ மந்திரம் ஓதியும், விலங்கினங்கள் தமக்குரிய ம்ருகசீரிஷ காயத்ரீ மந்திரம் ஓதியும் இம்மந்திரப் பலாபலன்களைப் பிற ஜீவன்களின் நல்வாழ்விற்காக, குறிப்பாக, மனித குல ஆன்ம வளத்திற்காக அர்ப்பணிக்கின்றன. தன் வயிறு, தன் குடும்ப வளத்திற்காகச் சுயநலப் பிண்டமாக வாழும் மனிதன் என்றுதான் பிறருடைய நல்வாழ்விற்காகத் தன் சேவைகளை அர்ப்பணிக்கின்றானோ அன்றுதான் அவன் உண்மையான இறைப் பகுத்தறிவைப் பயன்படுத்த ஆரம்பிகின்றான்.

மிருகங்கள், பறவைகள் தம் விதவிதமான குரல்களால், நடக்க இருப்பதைத் தீர்க தரிசனமாக உலகிற்கு உணர்த்துவதை அறியும் (இறைப்) பகுத்தறிவும் மனித குலத்துக்கு மங்கி விட்டது. எனவே கடவுள் நம்பிக்கை பூண்டவராக இருந்தும் அறியாமையாலும் பலருக்கும் (இறைப் பகுத்தறிவு மங்கும்) நாத்திக எண்ணங்கள் தோன்றலாகும் என்பது இறைமறுப்பன்று! இறைமையை உணரும் இறைப் பகுத்தறிவு மங்கும் காலம் யாவும் நாத்திக மாயையே! இது கடவுளை நம்பி வாழ்வோர்க்கும் அவ்வப்போது தோன்றக் கூடியதே! எவ்வாறு?

இறைவனால் அனைத்தும் ஆகுதென உணரும் காலம் பெருகட்டும்!

நாரதாதீத நாரதீயம் எனும் தாத்பர்யமானது கலியுகத்தில் “எல்லாம் தன்னாலாகுமென” மாயையில் ஆட்படும் நாத்திகச் சோதனை வலையில் இருந்து  விடுபடும் இறைநெறி முறைகளை உணர்விக்கின்றது. அதாவது எங்கெல்லாம் எப்போதெல்லாம் “இறையருளால் அனைத்தும் இயங்குகின்றன” என்ற எண்ணம் மங்கி, “தன்னால் அனைத்தும் இயங்குவதாக” அகங்கார, ஆணவ எண்ணங்கள் ஓங்குகின்றனவோ அங்கு மனிதனுக்கென இறைவனால் அளிக்கப்பட்டுள்ள பகுத்தறிவும் மங்குகின்றது! எனவே எந்த ஆத்திகருமே “இறைவனால் ஆவதே அனைத்தும்” என உணராத நேரமெல்லாம் அறியாமையாகிய நாத்திகக் காலமே! தன்னால் ஆவதாக எண்ணும் காலத்தில் எல்லாம் இறைப் பகுத்தறிவு மங்கும் நாத்திக மாயையில் மனிதன் மிதக்கலாகின்றான்.

பல உலகங்களில் மனிதன் வாழும் நிலைகளைப் பற்றி இங்கு விளக்கத் தொடங்கினாம் அல்லவா! கலியுகத்தில் செய்த குற்றங்களுக்கும் உடனேயே தண்டனை கிட்டாதது ஏன் என்ற எண்ணம் பலருக்கும் எழுகின்றது. மிகவும் கேவலமாகப் பல தீய கர்ம வினைகளைச் சேர்த்துக் கொண்டு பூமியில் வாழ்பவர்களும் பூமியில் எப்போதும் தோன்றினாலும் அவர்களும் பல நரக லோகங்களுக்கும் சென்று தங்களுடைய தீவினைகளுக்கான தண்டனைகளை அனுபவித்துக் கொண்டே வருகின்றார்கள்.. இது அவரவர் அறிய வேண்டியதே!

நன்றும் தீதும் அவர்வர் வினைப் பயன்களே!

எனவே அக்கிரமம் செய்பவர்கள் கலியுகத்தில் நன்கு வசதியுடன் வாழ்கின்றார்களே என்று எண்ணுதல் வேண்டாம். வசதியும், இன்னல்களும் அவரவர் வினைத் தொகுப்பே! அதர்மமாக வாழ்பவன் தன் புண்யவசத்தால் சில வசதிகளை அடைகின்றான். புண்யம் மங்கும் போது மாயா வினைகளே மீண்டும் சூழும். அதர்ம வழியில் வரும் செல்வத்தால் சுகபோகங்கள் நிறையக் கிட்டிப் பலரும் நன்கு அனுபவிப்பது போல் தோன்றினாலும் இறைவனுடைய கணக்கில் இருந்து எவரும் தப்ப முடியாது. இறைநீதியைச் சந்தித்தே ஆக வேண்டும்.

பல கிரகங்களில் இருந்து வருகின்ற தீய சக்திகளும் பூலோக மனிதர்களின் உடலில் புகுந்து தீய காரியங்களை அவ்வப்போது நிகழ்த்திக் கொள்வதும் உண்டு! எனவே, பஸ்ஸில், ரயிலில் அநாவசியமாக உறங்குவது கூடாது! அப்படி உறங்க நேரிட்டால் அருகில் அறிந்தோர் விழித்திருந்து பூஜிக்க வேண்டும். நிறைய ஆன்ம சாதனங்களை அணிந்து கொள்ள வேண்டும். வெட்ட வெளியில், மொட்டை மாடியில் தக்க இறைப் பாதுகாப்பின்றி இரவில் படுத்து உறங்கி வெளி லோகத் தீய சக்திகளும் புகும் பாத்திரமாக உங்கள் தேகம் ஆகிவிடக்கூடாது. நள்ளிரவில் பிரயாணம் செய்து தீய சக்திகளுக்கும், வெளி லோக பயங்கர ஆவிகளுக்கும் ஆட்படக் கூடாது.

முறையாக அவ்வப்போது பூஜித்து அணியப்படும் மாங்கல்யம், மூக்குத்தி, கடுக்கன், மோதிரம், மர வளையல், மணிக்கட்டுக் கருப்புக் கயிறு, பூணூல், மணிகங்கண், குங்குமம், விபூதி, சந்தனம், ருத்ராட்சம், மெட்டி, திருவெண்டயம் போன்றவை தீய சக்திகளை உட்புக விடாது தடுக்கும் ஆன்ம சக்தி நிறைந்த சாதனங்களாகும்! எனவே உங்கள் உடலில் எப்போதும் இவை நிரம்பிப் பரிணமிப்பதாக!

ஒவ்வொருவருக்கும் ஒன்பது விதமான சரீரங்கள் இருப்பதால் இவற்றைக் கொண்டு ஒவ்வொருவரும் தினமும் உறக்கத்தில் அவரவர் கர்ம வினைப்படிப் பல லோகங்களுக்கும் பல விதங்களில் சென்று வாழ்ந்து வருகின்றனர். எனவே எந்த ஒரு மனிதனும் இருபத்தி நான்கு மணி நேரமும் நிரந்தரமாகப் பூமியில் இருப்பதில்லை. ஒன்பதில் ஒரு சில தேகங்களே இந்த பூமியில் வாழும். ஏனைய பலவும் பல உலகங்களில் வாழவும் கூடும். எனவேதான் “ஒன்பதில் ஒருமித்தல் ஒப்பிலா ஓருடல்” எனச் சித்தர்கள் பிறப்பில்லா உத்தமப் பெருநிலையை விளக்குகின்றார்கள். சற்குரு தரும் இவ்வரிய விளக்கங்களைப் பற்றி நன்கு சிந்தித்து ஆத்ம விசாரம் செய்திடுக!

காசி லிங்கம்

ஸ்ரீகாசி லிங்க மகிமை

இறையருளால் காசியின் புனிதமான கங்கைச் சமவெளியில் உற்பவிக்கும், தோன்றும், ஜனிக்கும் அனைத்து லிங்கங்களும் மகத்தான சக்திகளுடன் துலங்கி அருள்பாலிக்கின்றன. இவற்றில் சுயம்பு லிங்கம், பாண லிங்கம், உளிபடா லிங்கம், கை படா லிங்கம் எனத் தானாக உதித்தவை. உளியால் பொழியப் பெறாதவை. கைகளால் தீண்டப் பெறாதவை எனப் பல வகைகள் உண்டு.

அனைத்துப் புராதன ஆலயங்களிலும் உள்ள ஸ்ரீகாசி விஸ்வநாத மூர்த்தங்கள் காசி கங்கையில் உற்பவித்தவையாகும். காசியில் இருந்து தலையிற் சுமந்து வந்து பிரதிஷ்டையாகும் ஸ்ரீகாசி லிங்க மூர்த்திகள் பித்ரு க்ஷேம நல்வர சக்திகளை அருள்மழையாய்ப் பொலிந்து நாகதோஷங்களை நீக்குகின்றனர். காரைக்குடி- சாக்கோட்டை அருகே மித்ராவயலில் உள்ள ஸ்ரீவிஸ்வேஸ்வரர் இவ்வகையில் காசியில் இருந்து தலையாற் சுமந்து வந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த மூர்த்தி! அருகில் உள்ள ஸ்ரீகாசி விநாயகர் கேட்கும் நல்வரங்களை ஆசியாய்த் தரும் கலியுக பிரத்யட்ச மூர்த்தி! ஆங்காங்கே ஸ்ரீகாசி விஸ்வநாதர் எழுந்தருள, அந்தந்தத் தலத்தில் ஆதி காலந்தொட்டுத் தவம்புரியும் ஆதி விநாயகரே காசி ஸ்ரீடுண்டி விநாயக அம்சங்களைப் பூண்ட ஸ்ரீகாசி விநாயகர்!

பெரும் பாவங் கரைக்கும் கங்கையின் புனிதத்தை நம்பிக்கையின்றிச் சந்தேகப்படுதலே நீக்க முடியாப் பெரும் பாவமாம்!

எவனொருவன் கங்கை நீராடலில் ஒரே முழுக்கில் தன் பாவங்கள் தொலைகின்றதாக உளமாற உணர்கின்றானோ, அவன் நிச்சயமாக, உணமையாகவே மனம் திருந்தி, தன்னால் பாதிக்கப்பட்டவர்கட்கு நிவாரணம் அளித்து, “இனி தன் வாழ்வில் எத்தகைய பாவமும் செய்வதில்லை” என மனதாரச் சங்கல்பித்துத் திருந்திடுவான். இத்தகைய மனப்பாங்கு அனைவருக்குமா வரும்? சிந்தனையை எழுப்பிப் பாருங்கள்! கங்கையில் மூழ்கி எழுந்த பிறகு வாழ்வில், தான் செய்த கர்ம வினைகள்யாவும் தன்னை உறுத்துதலால் நிச்சயமாகத் தெரிந்து கொள்ளலம், அவன் முழு நம்பிக்கையுடன் நீராடவில்லை, முழுமையாகத் திருந்தவில்லையென! எனவே தன்னிடம் ஆழ்ந்த நம்பிக்கை பூண்டோரை கங்கை உடனடியாகப் புனிதப் படுத்திக் கரையேற்ற வல்லதே! ஆனால் கங்கையில் நீராடிய பின் வாழ்க்கையில், மீண்டும், மீண்டும் பாவச் சேற்றைப் பூசிக் கொள்வோரை என்னென்பது? பாவம் அண்டாமல் இருக்கவே தினமும் ஸ்ரீகாசி லிங்கநாதரைத் தரிசித்து வர வேண்டும்.

சிவனாரிடம் உதித்து, இமயத்தில் பிறக்கும் கங்கை நதி, பல மலைகளைத் தாண்டி, பூமியில் தவழ்ந்து வரும்போது, அதன் அருட்பிரவாகத்தால், கங்கைப் பரலில் புரண்டெழும் ஒவ்வொரு மண் துகளும் அளப்பரிய தெய்வீக சக்திகளைப் பெறுகின்றது.

கங்கையின் நீண்ட நெடும் திருப்பயணம்!

சர்வேஸ்வரனே காசியாகிய வாரணாசியில், ராமநாமம் ஓதுவதால், காசி கங்கை பூமியின் ஒவ்வொரு மண்துகளும் சிவராம லிங்க வடிவே ஆகும்! சிவபெருமானின் திருச்சடையினின்று தோன்றுகின்ற புண்யத் திருநதியே கங்கை ஆதலால் இதன் மகாத்மியம் சொல், பொருளுக்கு அப்பால் வியாபிப்பதன்றோ! கங்கையின் பாதையில் ஆங்காங்கே ஸ்பரிசம் பெறும் மண், பாறை, செடி, கொடி, ஜீவன்கள், புழு, பூச்சிகள் என அனைத்திற்கும் தேவ, தெய்வீக, மூலிகா சக்திகள் அளப்பரியதாய் நிரவுகின்றனவே! வழியெங்கும் ஆயிரக்கணக்கான மூலிகைகளைத் தழுவி வரும் கங்கை நீரின் புனிதத்தை எவ்வகையில்தான் விளக்க இயலும்? இவையாவும் கங்கை நதிக்கு உத்தம நிலைகளைக் கூட்டி, மனிதனின் எத்தகைய கொடிய பாவங்களையும் நீக்கும் புனித சக்தியையும் மேலும் திரட்டித் தருகின்றன என்பதும் மகத்தான சத்திய வேத வாக்கே!

புனிதத்தைச் சந்தேகித்தால் முளைக்கும் தீவினைகள்!

அதெப்படி, பெரும் பாவம் செய்து விட்டு ஒரே ஒரு முறை கங்கை நதியில் மூழ்கி விட்டால் மலையளவுப் பெரும் பாவமும் உடனேயே கரைந்திடுமா என்ன என்ற சந்தேகமும் குரங்காய்த் திரியும் கலியுக மனித மனத்திற்குள் முகிழ்ப்பதுண்டு. எப்போது கலியுக மனிதன் புனித நதிகளின் தெய்வீகத்தைச் சந்தேகித்து அரைகுறை நம்பிக்கையாக்கிக் கொண்டு விட்டானோ, அவற்றின் புனிதத் தன்மையைச் சந்தேகிக்கத் தொடங்கினானோ, அப்போதே மனித குலத்தின் உத்தம குணங்கள் மாசுபடுதலும் ஆரம்பித்து விட்டது.

பாவப் பூச்சான உடலைப் புனிதப்படுத்தும் புண்ய நதியையே சந்தேகம் தழுவிய எண்ணப் பூச்சால் மாசுபடுத்திய தோஷத்திற்கான விளைவுகளையே தற்போதைய மனித சமுதாயம் வன்முறை, காமத் தீயொழுக்கங்கள், ஜாதி, மத, இனச் சண்டைகள், நாடுகளிடையே பகைமை போன்ற கேவலமான தீவினை, போர்கள் விளைவுகளாக அனுபவித்துக் கொண்டு வருகின்றது. என்னே இழி நிலை மனித குலத்திற்கு?

இவையாவும் மனித சமுதாயமானது தெய்வ மூர்த்திகளை, சத்ருமார்களை, வேத மந்திரங்களை, புனித நதிகளை அவமதித்துத் தனக்குத் தானே வருத்திக் கொண்டு வர வைத்தலாயிற்றே! சத்குருக்களே தற்போதைய கலியுகத்தை எத்தகைய தீவினைகளில் இருந்தும் மீட்க வல்லார்! ஆனால் சத்குருவை நாடும் பரிபக்குவமும் கலியில் வெகு வேகமாக மறைந்து வருகின்றதே!

காசியில் இருந்து லிங்கத்தைத் தலையில் சுமந்து வருதல்

மலை, சமவெளியென யாங்கணும் புரண்டோடி வரும் கங்கை நதியின் சிறு சிறு மண் துகளுக்கும், அளப்பரிய, விசேஷமான தெய்வீக சக்திகள் உண்டு. இவையே ஒன்று திரண்டு கூழாங்கற்களாகி, லிங்க வடிவுகளாக, பல்வண்ண பாணச் சிவலிங்கங்களாகவும் ஆகின்றன. இதில் தாமாக எழுகின்ற சுயம்புக் கற்களும் உண்டு. இவற்றையே தலையில் பக்திப்பூர்வமாகச் சுமந்து வந்து ஸ்ரீகாசி விஸ்வநாதராகப் பல இடங்களில் பிரதிஷ்டை செய்வர்.

இவ்வாறு வைராக்யச் சித்தமாக, காசி லிங்கத்தை எங்கும் தரையில் வைக்காது காசியில் இருந்து தலையிற் சுமந்து வந்து ஆங்காங்கே பிரதிஷ்டையாகும் (காசி) விஸ்வேஸ்வர லிங்கங்கள் அபரிமிதமான பித்ரு க்ஷேம சக்திகளுடன் பூரிப்பதால் நற்காரிய சித்திகளைத் தர வல்லவையாம்! அக்காலத்தில் இப்பெரும் இறைப்பணிக்காகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்ட நற்குடும்பங்கள் பல உண்டு. காசிச் செட்டியார்கள், காசிக் கடையினர், காசிநாதர்கள் போன்ற பல குடும்பத்தினரும் இத்திருப்பணிகளில் ஈடுபாடு கொண்ட உத்தமர்கள் ஆவர்.

இவ்வகையில் காசியில் இருந்து தலையிற் சுமந்து வந்து காசி லிங்கம் பிரதிஷ்டை ஆகும் இடத்தில் ஆதி காலந்தொட்டு அருள்புரியும் ஒரு விநாயகரும் அமர்ந்திருப்பார். இவருக்கு ஸ்ரீகாசி விநாயகர் என்று பெயர். வேறு நாமங்களைப் பூண்டிருந்தாலும் ஸ்ரீகாசி விநாயகர் என்றழைத்திட இவர் பரிபூரண ஆனந்தம் கொள்வார். மேலும் தலையிற் சுமந்து பிரதிஷ்டையாகும். லிங்கத்தை அரவணைத்து அருள்பாலித்திடச் செய்திடவே ஆங்காங்கே ஸ்ரீகாசி விநாயகர் நீண்ட நெடுங் காலம் தவம் பூண்டிருக்கின்றார்.

மித்ராவயல் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் – நாகதோஷங்களை நீக்கும் பித்ருத் தர்ப்பண பூஜை¡!

காசியில் இருந்து தலையிற் சுமந்து வந்து பிரதிஷ்டையான சிறப்பான லிங்க மூர்த்தித் தலங்களுள் ஒன்றே காரைக்குடி – சாக்கோட்டை அருகில் உள்ள மித்ராவயல் ஸ்ரீகாசி விஸ்வேஸ்வரர் ஆலயமாகும். மிகவும் சக்தி வாய்ந்த மூர்த்தி! அமாவாசை, சூரிய, சந்திர கிரண நாட்கள், சனிக் கிழமைகளில் வழிபட வேண்டிய மூர்த்தி! சிறப்பான தர்ப்பணத் தலங்களுள் ஒன்று! அருகில் அருள்பாலிப்பவரே மிகவும் சக்தி வாய்ந்த ஸ்ரீகாசி விநாயகர்!

காசியில் ஸ்ரீவிஸ்வநாதர் ஆலயத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீடுண்டி விநாயகரின் அம்சங்களைப் பூண்டவரே மித்ராவயல் ஸ்ரீகாசி விநாயகர் ஆவார். மகா நல்வர சக்திகள் நிறைந்தவர். குறிப்பாக, பித்ரு காரியங்களை முறையாக நிறைவேற்றாதோர் பல பிதுரார்ஜித சொத்துக்கள் கைக்கு வராது கோர்ட் வழக்குகளில் சிக்கிப் பரிதவிப்பர். வாய்தா மாற்றி வாய்தாவாக வாழ்க்கையே கோர்ட் வளாகத்தில் கழிந்து வக்கீல் செலவுகளில் உழன்று வெறுத்திருப்போர் பலரும் உண்டு. இவ்வகைக் கர்ம வினைகளுக்கு ருணகதி வினைகள் என்று பெயர். கலியுகத்தில் சற்குரு ஒருவரால்தாம் இத்தகைய வினைகளுக்கான தீர்வுகளைத் தர முடியும்.

மேலும் ஆண், சந்ததி இல்லாதும், குழந்தை பாக்யம் இல்லாதும் வேதனையுறுவோரும் உண்டு. இவர்கள் மித்ராவயல் ஸ்ரீகாசி விநாயகரின் முன்னால் தர்ப்பணம் போன்ற படையல்களை நிகழ்த்திப்  பிறகு ஸ்ரீகாசி விஸ்வேஸ்வரரைத் தரிசித்து வர, நல்வரங்களையும், நற்பலன்களையும், நற்தீர்வுகளையும் துரிதமாகப் பெறுவதைக் கண்கூடாகக் காணலாம்.

மித்ராவயல் போன்ற ஸ்ரீகாசி விஸ்வநாதத் தலங்களில் அமாவாசை, இறந்தவருடைய திதி நாட்கள், பித்ருக்களுக்கு உரிய சனிக்கிழமை, மாதப் பிறப்பு, சூரிய, சந்திர கிரஹண நாட்கள், மகம் நட்சத்திர நாட்களில் ஸ்ரீகாசி விநாயகரை வழிபட்டு வர, பித்ரு சாபங்கள் தணிந்து பல கஷ்டங்களும் ஒட்டுமொத்தமாய் விலகுவதற்கானத் தக்க பரிகாரங்கள் கிட்டும்.

மூலிகா சக்தி நிறைந்த கங்கை!

இத்தகைய பழம் பெருமை வாய்ந்த காசிபூமியில் விளையும் கல்லினின்று சிவவடிவைச் செதுக்கி, மானுடப் பிரதிஷ்டையாகவும், அப்படியே சுயம்புவாகவும், ஆவுடையின்றிப் பாணலிங்கமாகவும், ஆவுடையுடனும் அமையும் லிங்கங்களாகவும் ஆவாஹனம் செய்திட இவை அனைத்துமே காசி லிங்கங்கள், ஸ்ரீகாசி விஸ்வநாதர், ஸ்ரீவிஸ்வேஸ்வரர், ஸ்ரீவிஸ்வநாதர் என்று பெயர் பெற்றுப் பல ஆலயங்களிலும் துலங்குகின்றன.

கேதார்நாத் செல்லும் வழியில் ருத்ரப் பிரயாகை, தேவப் பிரயாகை, கர்ணப் பிரயாகை போன்ற பல புண்ய நதித் திருத்தலங்களிலும், அலக்நந்தா, மந்தாகினி என்றவாறாக பல நதிப் பிரவாகங்களிலும் இமயமலையினின்று பல இடங்களிலும் பல்வேறு புனிதப் பெயர்களைப் புனைந்திருப்பினும் அனைத்து நதிகளும், குறிப்பாக கங்கை நதியும், கலியுகத்திற்கு மிகவும் முக்கியமான 108 மூலிகைகளை ஸ்பரிசித்தே வருகின்றன. இவற்றுள் பொன்னாளம் பாறை மூலிகை, பொன் கட்டி மூலிகை, கருந்துவாரப்பட்டி மூலிகை, பஸ்சினாம் சுருட்டி மூலிகை, லூலூர் தூர்வா மூலிகை போன்ற பஞ்ச ருத்ர மூலிகைகள் மிகவும் சிறப்புடையவை ஆகும்.

அறிவீரோ லூலூர் தூர்வா மூலிகைதனை!                                           

பஞ்ச ருத்ர மூலிகைகளுள் திபெத்தியப் புனித பூமி மூலிகை வகையான ஐந்தாவதான லூலூர் தூர்வா மூலிகை பல யுகங்களிலும் அஸ்திரப் பிரயோகத்தில் பயன்படுகின்ற தர்ப்பை வகை மூலிகையிலான அஸ்திர சக்திகள் நிறைந்த மூலிகை! இன்றும் கங்கோத்ரி, யமுனோத்ரிப் பகுதிகளில் இது அபரிமிதமாகக் காணப்படுகின்றது. இதனை முறையாக, குருவருளால் தொகுத்து எடுத்து பஞ்சாட்சர மந்திரம் ஓதி நற்காரியங்களுக்காக அஸ்திரப் பிரயோகம் செய்தால் atom bomb, ICBM போன்ற எந்த ஆயுதத்தையும் முறியடித்து தர்மத்தை நிலைநிறுத்தச் செய்யலாம். ஆனால் அதர்மத்திற்குப் பயன்படுத்தினால் தன் மீதே பாய்ந்து விடும். எனவே கலியுகத்தில் இதனைத் தவறாகப் பயன்படுத்துவர் என்பதால் தான், குருமூலம் உணரப் பெறுவதாகவே இத்தகைய மூலிகைகள் இறைநியதியாக மறைத்து வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய அற்புதமான மூலிகைச் சாரல்களுடன் பொலியும் கங்கை நதிப்ரவாக மண் துகள்கள் கல்லாகி, கூழாகி, பாண லிங்கமாகி, பலவடிவச் சிவலிங்க மூர்த்தங்களாகி இமயம் முதல் காசி, வாரணாசி, கயா, கல்கத்தா போன்று பாரதமெங்கும் காசி லிங்கத் திருமேனிகளாக விரவி அருள்பாலிக்கின்றன. இன்றும் பல தலங்களில் காணப்படும் காசி சிவலிங்க மூர்த்தங்கள் யாவுமே இவ்வாறு கங்கைப் புனித பூமியினின்று பெறப்பட்டவையாகும்.

மிகவும் சக்தி வாய்ந்த இத்தகைய காசி லிங்கங்கள் வெண்மை, பழுப்பு, மற்றும் கறுப்பு வண்ணங்களில் திகழ்கின்றன. ஒவ்வொரு வண்ணத்திற்கும் விதவிதமான பல முக்கிய தேவ சக்திகள் உண்டு. இவ்வாறு கங்கா ஸ்பரிசம் பெற்ற சிலாக்கற்கள் ஆலயங்களில் பூரணமாக லிங்கமாக உருப் பெறுவதும் மாபெரும் இறை லீலையன்றோ!

ப்ராணாக்னி ஜ்வாலை ரேகைக் கிரணங்கள்!

காலை நேரத்தில் சூரியக் கதிர்கள் இமய மலையினின்று தோன்றும் போது பளிச்சென்று பல்வகை ரேகைக் கிரணங்களாகப் பல கோணங்களிலும் பிரதிபலிக்கின்றன. சில சமயங்களில் இருதய வடிவை ஒத்துள்ள ஒரு வட்ட துவாரத்தில் சுற்றிலும் பீறிட்டடிக்கும் ஒளிப்பிரகாசக் கதிர்களாக இவை தோன்றிப் பிரகாசிக்கும். இவையே ப்ராணாக்னிக் கிரணங்களாகும். இவ்வாறு இவை மலை அல்லது மலைத் தாவரங்களிலுள்ள ஒரு சிறு துவாரத்தினின்று பிரதிபலித்து ப்ராணாக்னி ஜ்வாலைகளாகத் தோற்றம் பெறுகின்றன. இத்தகைய ப்ராணாக்னி ரேகைகளைத் தரிசித்தலும், அவை நம் மீது படுதலும், ஸ்பரிசித்தலும் மிகவும் விசேஷமான தெய்வீக சக்திகளை அளித்திடும். இதற்காகவே இமயமலைச் சாரலில் பல தவச் சாலைகளும் ஆஸ்ரமங்களும் பிறந்துள்ளன.

இத்தகைய கோடானு கோடி சதுர் கோடி திரக் கோடிக்கணக்கானப் ப்ராணாக்னி ஜ்வாலைகள் ஸ்பரிசித்து உற்பவிக்கப்பட்டதே இன்று வாரணாசியில் (காசி) உள்ள ஸ்ரீகாசி விஸ்வநாத மூர்த்த லிங்கமாகும். இதனையே நாம் இவ்விதழின் அட்டைப் படத்தில் கண்டு ஆனந்திக்கின்றோம். மிகவும் பரிபூரணமாக சிவசக்தி வியாபிக்கின்ற, பிரபஞ்சத்தின் அற்புத லிங்க மூர்த்திகளில் காசி விசுவநாத லிங்க மூர்த்தியும் ஒருவராவார். பல கோடிப் பிராணாக்னி ஜ்வாலைகளால், பாஸ்கரேஸ்வர ஜோதிக் கிரணங்களால் சர்வேஸ்வரனின் ராமநாம ஜப வ்யாக்ருதியாகச் சுயமாகத்  தோற்றுவிக்கப்பட்டதே ஸ்ரீகாசி விஸ்வநாதர் சுயம்பு லிங்க மூர்த்தியாகும்.

மனித குலத்திற்கு யோக சக்திகளைத் தாரை வார்த்துத் தரும் நாகங்கள்!

நாகங்கள் என்றாலே விஷம் பூண்டவை, அவை மனிதர்களின் எதிரிகள் எனும் தவறான எண்ணங்களே கலியுகத்தில் பெருகி விட்டன. உண்மையில் நாகங்கள் மனித உலகிற்கு உதவவே படைக்கப்பட்டுள்ளன. ஜீவ வாழ்வுப் பரிமாற்றங்களுக்கானப் பலவகை மரணங்களில், நாக விஷத்தால் தீண்டப்பட்டு மரணமடைதலும் ஒருவகை மரணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது அல்லவா! ஆனால் ஒரு நாகமானது போவோர், வருவோரையெல்லாம் தீண்டித் துன்புறுத்துவதானால் இன்றைக்கு மனிதகுலமே பூலோகத்தில் மிஞ்சாது அழிந்து போயிருக்கும். எனவே ஒவ்வொரு நாகமும் தன்னால் எவர் தீண்டப் பட வேண்டும் என்று விதிப் பூர்வமாக எழுதப்பட்டுள்ளதோ, அவர்களை மட்டும் தீண்டுமே தவிர வேறு எவரையும், எவ்விதத்திலும் துன்புறுத்தாது, மனித அகங்காரத்தை அடக்குவதே நாக சக்திகள்!

நாக தேவதைகள், நாக மூர்த்திகள், நாக தேவ மூர்த்திகள், நாகப் பித்ரு மூர்த்திகள் என நாக வகைகளில் பல வகைகளுண்டு. இந்நாகங்களில் பலவும் மூச்சை யோகத்தால் அடக்கி மேற்கண்ட ப்ராணாக்னியில் பல்லாண்டுகள் ஸ்புடம் செய்து தாம் கொண்டுள்ள விஷத்தை, ரத்னமணிக் கற்களாக மாற்றி ஈஸ்வரனிடம் அர்ப்பணிக்கின்றன. இத்தகைய மூர்த்திகளே ஸ்ரீரத்னகிரீஸ்வரராக (அய்யர் மலை, ரத்னகிரி – சென்னை) அருள்பாலிக்கின்றனர். நாக ரேகைகள் பதிந்துள்ள இம்மூர்த்திகள் எத்தகைய நாக தோஷங்களுக்கும் நிவர்த்தி அளிக்கின்றனர். அலுவலக, வியாபார, உறவுப் பகைமை, விரோத, குரோதத்தால் அஞ்சி, அஞ்சி வாழ்வோர் ஸ்ரீரத்னகிரீஸ்வரருக்கு செவ்வாய்க் கிழமை, செவ்வாய் ஹோரை நேரத்தில் பாலில் குங்குமம், குங்குமப் பூ, சிந்தூரம் கலந்து அபிஷேகித்து நாகலிங்கப் புஷ்பத்தால் அர்ச்சித்து வர எத்தகைய பகைமையும் அஞ்சி விலகும்.

எவ்வாறு ஒரு மனிதன் தன் விந்து சக்திகளை தேஜோமயமாக மூலாதாரத்திற்குள் செலுத்தி யோகத்தில் உத்தம நிலை அடைகின்றானோ இதே போல நாகங்களும், வாழ்நாள் முழுதும் எத்துன்பம் வரினும் எவரையும் தீண்டேன் என்ற தீவிர வைராக்யத்துடன் நாகதந்த யோக பாவனை பூண்டு, தம் விடத்தைத் துன்னுள்ளேயே அடக்கி குண்டலினி யோகமாக மூலாதாரத்தில் செலுத்தி பல உத்தம நிலைகளை அடைகின்றன. எனவே எவ்வளவு சீறினாலும் அவ்வளவு எளிதில் எந்த நாகமும் தன் விஷத்தை வெளிவிடாது.

காசி விஸ்வநாதருக்குத் தொண்டு புரியும் ரத்னமணி நாக மூர்த்திகள்!

இவ்வகையில் நாகங்களின் விஷத்தை அக்னியில் ஸ்புடம் செய்து அவற்றை ரத்னமணிக் கற்களாக மாற்றக் கூடிய உத்தமப் புருட யோக நிலை பூண்டவையே உத்தரப் பூர்ண நாகங்களாகும். தம் விடத்தை பிரபஞ்சத்திற்கு அருட் கிரணங்களை வர்ஷிக்கும் ரத்னமணிக் கற்களாக மாற்றி ஸ்ரீரத்னகிரீஸ்வரரின் திருப்பாதங்களில் வர்ஷிக்கும் இந்த நாகங்கள் நாக தோஷங்கள், பித்ரு சாபங்கள், ருணக் கடன்களை நீக்கும் நாக மூர்த்திகளாக உத்தம நிலைகளைப் பெற்று எப்போதும் காசி லிங்கத்தின் முன்னே நேர் பார்த்து அமரவும், லிங்கத்தின் தலைக் குடையாகுதற்குமான பாக்கியங்களையும் பெறும்.

இவ்வாறு உத்தரப் பூரண யோக நாகங்கள் அமர்ந்துள்ள சுயம்பு மூர்த்திகளில் சிவசக்தி ஐக்ய சக்தி அபரிமிதமாக வியாபித்திருக்கும். இன்று பாரதமெங்கும் ஸ்ரீகாசி விஸ்வநாதர் என்ற பெயருடன் விளங்குகின்ற மூர்த்தங்கள்யாவுமே காசியில் இருந்து பெறப்பட்ட ப்ராணாக்னி சுயம்புப் பிரகாச சிலாவடிவுகளேயாம்.

இதேபோன்று பல ஆலயங்களிலும் மூலவராக மட்டும் அன்றி, சன்னிதி மூர்த்திகளாகவும் ஸ்ரீகாசி விசுவநாதர் அருள்கின்றாரன்றோ! இவ்வகை லிங்கங்களும் காசி கங்கா வளாகத்தில் இருந்து பெறப்பட்ட சுயம்பு லிங்கங்களே ஆகும். பொதுவாக செய்த பாவத்தையே அறிந்தே மீண்டும் செய்தால் அது தீர்க்க இயலாப் பெரும் பாவமாகின்றது. காசிக்குச் சென்று வந்தவர்கள், தாம் செய்த பாவங்களை மீண்டும் செய்யாதிருக்கவும், காசி தீர்த்த நீராடலின் முழுப் பலன்களைப் பெறவும், தாம் செய்த தவறுகளுக்கு முழுமையான பிராயச்சித்தம் பெறவும், மீண்டும் எத்தகைய தீவினைகளும் தம் வாழ்வில் சேராதிருக்கவும், தினமும் ஸ்ரீகாசி விஸ்வநாதரைத் தரிசித்து வர வேண்டும்.

தாரா பாத்திர அருட் சேவை!

தாரா பாத்திரம் என அழைக்கப்படுகின்றத் தாமிரப் பாத்திரத்தை ஸ்ரீகாசி விஸ்வநாத மூர்த்தி லிங்கத்தின் மேல் குடம் போல் வைத்து எப்போதும், குறிப்பாகக் கோடை காலத்தில், காசி விசுவநாதரின் திருமேனியில், எப்போதும், நீர் சொரிந்து கொண்டிருப்பது போல் அறப்பணி செய்தல் மிகவும் சிறப்பான இறைப்பணியாகும். தூண்டா விளக்கு, தூங்கா விளக்கு போல, குறித்த சில விளக்குகள் எப்போதும் ஜோதிச் சுடரொளியுடன் மிளிர்வது போல, தூங்கா நீர்த்தாரையாகக் காசி விஸ்வநாதருக்கும் அமைப்பது நாக தோஷங்களை நீக்கிக் குழந்தை பாக்யம் பெற்றிட அருள் தருவதாகும். இவ்வாறு நேர்த்தி செய்து பிறந்த குழந்தைகளுக்கு காசி, காசி விஸ்வநாதன், விஸ்வநாதன், தாரா, தாரா சந்த் என்று பெயரிடுவர். இத்தகைய பெயருடையோர் ஸ்ரீகாசி விஸ்வநாதரை இஷ்ட தெய்வமாகப் போற்றித் தினமும் வழிபட்டு வந்தால் எளிதில் மன, உடல் சுத்தியைப் பெற்றிடலாம்.

மேலும் திருமணமாகி வெகு காலம் கழித்துப் பிறந்த குழந்தைகள் நன்முறையில் வளரவும் இத்தகைய தாரா பாத்திரக் கைங்கர்யம் பெரிதும் துணைபுரியும். வெறுமனே தாரா பாத்திரத்தை மாட்டி வைத்து வந்திடாமல் இதில் எப்போதும் நீர் நிறைந்து சொரிவதற்கான சகல வசதிகளையும் செய்தால்தான் இறைப் பணி முழுமையாகும். பலன்களும் பரிபூரணமாகும்.

ஸ்ரீகாசி விஸ்வநாதர் நெடுங்குடி

வறுமை, உடல் கோளாறு மற்றும் பல பிரச்னைகளால் காசிக்குச் செல்ல இயலாதோர், தினந்தோறும் ஸ்ரீகாசி விசுவநாதரைத் தரிசித்து வந்தால் காசிக்குச் சென்று வந்த பலன்களைத் தம் தபோபலத்திலிருந்து தந்திடவே ஸ்ரீத்ரைலிங்க சுவாமி எனும் அதியற்புதச் சித்தர் பெருமான் காசி கங்கையடியில் தவம் பூண்டு காத்திருக்கின்றார். காசியில் மூழ்கி ராமேஸ்வரம் கடற்கரை அக்னித் தீர்த்தத்தில் எழும் யோகச் சித்தரிவர்!

மக நட்சத்திர ஸ்ரீகாசி விஸ்வநாதர் வழிபாடு!

தொடர்ந்து 12, 21 வருடங்கள் தினந்தோறும் ஸ்ரீகாசி விசுவநாதரைத் தரிசித்து வருவோர் மரண பயம் அகன்று பித்ரு தோஷங்கள் இல்லாது சாந்தமான முடிவைப் பெறுவர். ஒவ்வொரு சனிக்கிழமை, ஒவ்வொரு மாத மக நட்சத்திர நாள், சதுர்த்தசி திதியில் அவரவர் ஊரிலுள்ள ஸ்ரீகாசி விசுவநாத லிங்கத்திற்குக் குறைந்தது 12 வகைப் புண்ணிய தீர்த்தங்களால் சுவாமிக்கு மூன்று மணி நேரம் தொடர்ந்து அபிஷேகம் செய்தலால், தோல், நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதிகள் தீர நல்வழி கிட்டும். மக நட்சத்திரத்தன்று ஸ்ரீகாசி விசுவநாதருக்கு பெரிய லட்டு படைத்துத் தானம் அளித்தலால், வாழ்விலும், தொழிலிலும் ஸ்திரத் தன்மை கிட்டும்.

வியாபாரத்தில் பலவிதமான கஷ்ட, நஷ்டங்களையே வாழ்வில் சந்தித்துக் கொண்டிருப்போர், தம் வாழ்வில் சொந்தமான வீடு, வாசல் இல்லாதோரும், வியாபாரத்தில் பலவிதமான கஷ்ட, நஷ்டங்களையே வாழ்வில் சந்தித்துக் கொண்டிருப்போரும் பெரிதும் கவலை அடைந்த நிலையிலேயே வாழ்கின்றனர். இவர்கள் தம் வாழ்வில் ஸ்திரத் தன்மையும், நிரந்தரமான தொழிலையும் பெற கும்பகோணம் மகாமகக் கரையில் உள்ள ஸ்ரீகாசி விஸ்வநாத மூர்த்திக்கு மாதம் தோறும் மகம் நட்சத்திர நாளில் பல புண்ய தீர்த்தங்கள், குங்குமப்பூ, கஸ்தூரி, மஞ்சள் கலந்த தீர்த்த அபிஷேகத்தைப் பலரும் காணும் வண்ணம் மூன்று மணி நேரமாவது தொடர்ந்து நிகழ்த்தி வழிபட்டு, பெரிய அளவிலான (ஒரு குடும்பத்திற்குப் போதுமான வகையில்) லட்டுகளைத் தானமாகவும் அளித்து வர வேண்டும்.

ஒவ்வொரு மாத மக நட்சத்திரத்திலும் காசி கங்கையில் மூழ்கும் த்ரைலிங்க சுவாமிகள் மகாமகக் குளத்தில் சூக்கும, தூல வடிவங்களில் எழுந்து ஸ்ரீகாசி விஸ்வநாதரைத் தரிசித்து தம் வழிபாட்டுப் பலன்களை மக நட்சத்திரத்தில் மகாமகக் குளத்தில் நீராடுவோருக்கென அர்ப்பணிக்கின்றார். எனவே மாதந்தோறும் மக நட்சத்திர தினத்தில் இங்கு மகாமகக் குளத்தில் நீராடுவது சிறப்பான பலன்களைத் தரும்..

கும்பகோணம் மகாமகக் குளக்கரையிலுள்ள ஸ்ரீகாசி விஸ்வநாத மூர்த்தி, கங்கைச் சுயம்பு மூர்த்தியாகத் தோன்றியவர். மிகவும் சக்தி வாய்ந்த மூர்த்தி! ஒன்பது புண்ணிய நதி தேவதா மூர்த்திகளின் சிலா ரூபங்களை இந்த ஆலயத்தில் தான் ஒன்றாகத் தரிசித்திடலாம். ஒன்பது புண்ய நதி மூர்த்திகளும் தினமும் வழிபடுவதால் ஸ்ரீகாசி விஸ்வநாத மூர்த்தி இங்கு சர்வ அனுக்ரக மூர்த்தியாகப் பொலிகின்றார்.

பலருக்கும் வேலை வாய்ப்புகள் தந்து பெரும் பதவி, பெரிய தொழிற்சாலை, செல்வம், கீர்த்தியுடன் வாழ்ந்து தற்போது நொடித்து மனம் நொந்திருப்போர் மாதம் தோறும் மக நட்சத்திர நாளில் இங்கு நீராடி, பெரிய லட்டுகளை இயன்ற அளவில் தானமளித்து வந்தால் வியத்தகு நல்மாற்றங்களை வாழ்வில் காணலாம்.

ஸ்ரீகாசி விஸ்வநாதருக்குப் ப்ரீதியான (பெரிய) லட்டு தானம்

லட்டு தானத்தில் காசியின் கங்கையருள் திரள்கின்றது. இதிலும் குறைந்த பட்சம் ஒரு கிரிக்கெட் பந்து அளவிலான பெரிய லட்டு தானத்திற்குத் தனி மகத்துவம் உண்டு. லட்டு என்பது பிரபஞ்சம்! இதில் உள்ள பூந்திகளே பூமிகளும், கிரகங்களும், லோகங்களும்! பிரபஞ்ச வாழ்வைக் குறிப்பதால் இதன் தான சக்தி மகத்துவமோ மகா விசேஷமானதாம். ஒரு பெரிய லட்டைத் தனித்து ஒருவர் தின்ன இயலுமா என எண்ணாதீர்கள். நீங்கள் அளிக்கும் ஒரு பெரிய லட்டானது ஒரு குடும்பத்திலுள்ள 4,5 பேர்களுக்கும் வருமாறு செய்தலே பெரிய லட்டு அளிப்பதின் சிறப்பாகும். மேலும், லட்டு தான தர்ம சக்திகள் பரந்த எண்ணத்தையும், துய மனதையும் நற்காரிய சித்தியையும் தரவல்லன.

காசிக்குச் செல்லும் முன் அவரவர் ஊரிலுள்ள ஸ்ரீகாசி விஸ்வநாதருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, காசி யாத்திரை முடிந்த பின்னும் அதே காசி லிங்கத்திற்கு நன்றிப் பிரார்த்தனையும் செய்திடல் வேண்டும்.

கும்பகோணத்தில் காணுதற்கரிய ஒன்பது நதி தேவதா தரிசனம்!

காசிக்குச் செல்ல இயலாதோர் அடிக்கடி மித்ராவயல் ஸ்ரீவிஸ்வேஸ்வரர், மாளாபுரம் ஸ்ரீகாசி விசுவநாதர், கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீகாசி விசுவநாதர் போன்ற மூர்த்திகளைத் தரிசித்து வர வேண்டும். தம் பிறந்த நட்சத்திர நாளில் குடந்தை ஸ்ரீகாசி விசுவநாதர் ஆலயத்தின் ஒன்பது புண்ணிய நதி தெய்வ மூர்த்தங்களுக்கும் தீர்த்த வாரி அபிஷேகம் செய்து, வஸ்திரம் சார்த்தி வழிபடுவதால் பெண் பிள்ளைகள் தக்கத் தருணத்தில் பருவம் (ருது) அடைவதுடன், தக்க சமயத்தில் திருமண நல்வாழ்வு கிட்டவும் அருள்பாலித்திடும்.

தக்க வயதில் ருது அடையாத பெண்கள் (கும்பகோணம் – திருநல்லூர் அருகே உள்ள) மாளாபுரம் ஸ்ரீகாசி விஸ்வநாதர் ஆலயத்தில் கங்கை அல்லது காவிரி அல்லது புண்ணிய நீர் சுமந்து 12 முறை அடிப் பிரதட்சிணம் செய்து வலம் வந்து அபிஷேக நீராக அளித்து வழிபட்டு வந்தால் பித்ரு பத்னி சாபங்களும் நீங்கிப் பருவமடைவர். இவ்வாறாக ஸ்ரீகாசி விஸ்வநாத மூர்த்தி, கலியுகத்தின் நடப்பு வாழ்க்கையின் கஷ்டங்கள் தீர அபரிமிதமாக நல்வரங்களை அருள்கின்றார்.

மாத சிவராத்திரி

மாத சிவராத்திரி கிரிவல மஹிமை

திருஅண்ணாமலை கொடிக் கம்ப நிழலடிச் சித்தர்

பல ஆலயங்களிலும் பாலாலயம் செய்து கொடிமரம் மற்றும் கோயில் குடமுழுக்குத் திருப்பணிகள் அரைகுறையாக நின்றிருக்கும். ஸ்ரீஉமாபதி சிவாச்சாரியாரின் பிரசித்தி பெற்ற “கொடிக் கவித் துதியை” ஓதியவாறு மாத சிவராத்திரியில் திருஅண்ணாமலையில் கிரிவலம் வந்திட, துவஜஸ்தம்பம் (கொடிமரம்) இல்லாத ஆலயங்களில் கொடிமரம் அமையவும், குடமுழுக்குப் பணிகள் தொடர்ந்து நிகழ்ந்து நிறைவு பெறவும் இறைச்சித்தம் துரிதமாகக் கைகூடும்.

ஒவ்வொருவரும் தம் வாழ்க்கையில் ஒரு இறைலட்சியத்தைப் பெற உதவும் சித்ரபானு ஆண்டின் தை மாத சிவராத்திரி கிரிவலம், நிலையான உத்தியோகம், தொழில் அமைந்திட உதவும் மாத சிவராத்திரி கிரிவலம், திருஅண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் போல் சிறப்புடையதே அமாவாசைக்கு முந்தைய சதுர்த்தசித் திதியிலான மாத சிவராத்திரி கிரிவலம்.

இறைலட்சியம் ஒன்று உங்கள் வாழ்க்கைக்குத் தேவையே!

ளௌகீகமாக, வாழ்வில் பெரு நிலைகளை அடைய எவ்வளவுதான் பேராசைகளை, மனப்போராட்டங்களை ஒரு மனிதன் வளர்த்து வந்தாலும், ஒவ்வொருவருக்கும் ஒரு இறைலட்சியம் கண்டிப்பாக இருத்தல் வேண்டும். இதுவும் இறைப் பணியைச் சார்வதாக அமைவதே சிறப்புடையதாம். “நான் G.M, MD ஆக வேண்டும்; பல கம்பெனிகளுக்கு அதிபதியாக வேண்டும், அயல்நாடு செல்ல வேண்டும்” – இவையெல்லாம் சாசுவதமான பலன்களைத் தரும் இலட்சியமாகாது, ஏனெனில் இந்த இலட்சியங்கள் எல்லாம் உடல் ஆரோக்யம், செல்வ நிலை, வயது, குடும்பச் சூழ்நிலை, பழக்க வழக்கங்கள், தொழில், உத்தியோகம் இவற்றுக்கேற்ப மாறுபடும். இப்படியாக நிரந்தரம் இல்லாத ஒன்று எப்படி வாழ்க்கையின் இறைலட்சியமாக ஆக முடியும்?

ஆனால் இறை லட்சியத்தை அனைவரும் பெற்றுக் கடைபிடித்தாக வேண்டும் என்பதை உணர்த்திடவே, இறை ஆணையாய்ப் பூவுலகிற்கு வந்த திருஅண்ணாமலைச் சித்தரே கொடிக்கம்ப நிழலடிச் சித்தர் ஆவார். சாதாரணக் குடும்பத்தில் பிறப்பு கொண்டு, தம் யோகத் திறன்களை வெளிக்காட்டாது, மக்களோடு மக்களாய் வாழ்ந்து எண்ணற்றோருக்கு அருள்வழி காட்டிய அருட்பெரும் சித்தர்களில் ஒருவராவார்.

சத்குருவாம் கருடக் கொடிச் சித்தரின் அரவணைப்பு!

கொடிக்கம்ப நிழலடிச் சித்தர் திருஅண்ணாமலையில் ஒரு சாதாரண விவசாயியாகத் தோன்றியவர். அவருடைய காலத்தில் திருஅண்ணாமலைத் திருக்கார்த்திகைத் தீப ஜோதியைத் தரிசிக்க வந்த பல சித்தர்கள், பலரும் அறிந்துணரும் வண்ணம் மானுட வடிவில் வந்த போது, அதில் கருடக் கொடிச் சித்தரானவர் இந்த விவசாயியை அழைத்து,

“ஏனப்பா, உன் வாழ்வின் இறைலட்சியம் என்ன?” எனக் கேட்டார்.

“இதுவரையில் அடியேன் வாழ்க்கையின் லட்சியமாக எதையும் எடுத்துக் கொள்ளாது இருந்து விட்டேன்! இப்பெருங்குறையைச் சுட்டிக் காட்டிய நற்பெரியவரான தங்களுடைய திருவடி நிழலில் அடியேன் சாசுவதமாக நிலைக்க வேண்டும் என்பதே அடியேனுடைய இறை இலட்சியமாகட்டும்!” என அந்த விவசாயி கூறி வேண்டிடவே,

“நான் இந்தக் கொடிக் கம்பத்தின் கீழ் நின்று உனக்கு அளிக்கும் அபூர்வமான இறைலட்சியம் யாதெனில் இக்கொடி மர நிழலில் யாமளிக்கும் சாயாம்ருதுள யோகபாவன சக்தியைப் பெற்று எப்போதும் அருணாசல ஆலயக் கொடிக் கம்ப நிழலிலேயே உறைந்து பிரபஞ்ச ஜீவன்களின் நலன்களுக்காகப் பஞ்சாட்சரம் ஓதுவேன் என இறைலட்சியம் பூண்டு அடிமுடி காணாதோனை அறிவாய்!” என ஞானச் சித்த குருவாய் மலர்ந்து உபதேசித்தார். அன்றைய சூரிய உதயம் முதல் திருஅண்ணாமலை ஆலயக் கொடி மர நிழலிலேயே அமர்ந்து தம் குருநாதராம் கருடக் கொடி சித்தர் உபதேசித்த ருத்ராம்ருத பஞ்சாட்சர மந்திரப் பீஜாட்சரங்களை ஓதி கொடிமர நிழலடிச் சித்தர் எனக் காரணப் பெயர் பூண்டார்.

கொடிமர நிழலே சரணம், சரணம்!

சூரிய அயன கதிக்கேற்ப, வெயிலின் ஓட்டத்திற்கு ஏற்ப, கொடிமர நிழல் எந்தத் திசையில் நகர்கின்றதோ, இவரும் அதன்படி திரும்பி, பத்மாசனத்தில் அமர்ந்து, தியானித்து, நிழலும், நிஜமும் பற்றி ஆத்ம விசாரம் செய்து கொடிமர நிழலிலேயே பல்லாண்டுகள் உறைந்து எப்போதும் பஞ்சாட்சர பீஜாட்சரங்களை ஜபித்தமையால் பலவித யோக நிலைகள் அவருக்குத் தாமாகவே கிட்டின!

ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே தம் சிறு சுரைக் குடுவையில் அவர் உணவு ஏற்பார். அதுவும் எவரேனும் அவருக்குத் தானாக முன் வந்து உணவு அளித்தால்தான் அவ்வுணவையும் ஏற்பார். எவரும் பிட்சை அளிக்காவிடில் அந்நாள் விரத நாளாய் அமைந்து விடும். அவரைச் சோதனை செய்வதற்காகப் பலரும் வறண்ட சோறு, முந்தா நாள் மீந்த சோறு, வடிகஞ்சி நீர், அழுகிய பழங்கள் எனப் பலவற்றை அளித்தாலும் எதையும் இன்முகத்துடன் ஏற்றிடுவார். ஆனால் அவருடைய மிகச் சிறிய சுரைக் குடுவை ஒரு முறை பிட்சையில் நிரம்பி விட்டால் அதற்கு மேல் அவர் பிட்சை கொள்வது கிடையாது. கொடி மர யோக சக்திகள் அவரிடம் பரிபூரணமாக வியாபித்தமையால் அவருடைய தேகத்திற்கு நிழல் ஏற்படுவது கூட மறைந்து அவர் மலம், மூத்ராதிகளையும் கடந்த அருட்பெரும் சித்தராகவும் பிரகாசித்தார்.

அமாவாசை மற்றும் முதற் பகுதித் தேய்பிறை இரவுகளில் கூட, பல சமயங்களில் ஸ்ரீசந்திர பகவான் அவருக்குக் கொடிமர நிழல் தந்து அற்புதங்களைப் புனைந்தார். இவ்வாறு 21 ஆண்டுகளுக்கும் மேலாகத் திருஅண்ணாமலை ஆலயக் கொடிமர நிழலிலேயே வாசம் பூண்ட சித்தர்பிரானே கொடிமர நிழலடிச் சித்தர் எனக் காரணப் பெயரும் பூண்டு மக்களுக்கு அருணாசல கிரிவல மகிமையை உரைத்து, நல்வழிகளைப் போதித்து, மாத சிவராத்திரி கிரிவல மகிமைகளையும் உணர்த்தினார். ஒவ்வொரு மாத சிவராத்திரியிலும் அவர் மேற்கொள்ளும் அருணாசல கிரிவலத்தில் பல கிராமங்கள், நகரங்களில் இருந்து திரளும் பல்லாயிரக்கணக்கானோர் பங்கு கொண்டு அபூர்வமான பலாபலன்களைப் பெற்றனர்.

நிழலில் சித்தர் கண்ட நிஜங்கள்!

தம் குறைகளைத் தன்னிடம் ஒப்புவிக்க வருவோரை முதலில் திருஅண்ணாமலைக் கிரிவலம் வர வைத்து, அவர்களுடைய நிழலின் தன்மைகளைப் பொறுத்துத் தக்க பிராயச்சித்தப் பரிகாரங்களை அருளினார் சித்தர்பிரான். பகல் பொழுது போக, அமாவாசை ஒட்டிய திதிகளில் வெளிச்சம் இராது கொடிக் கம்ப நிழல் அமையாத போது இரவெல்லாம் தொடர்ந்து மணிக்கணக்கில் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து அமாவாசை கிரிவலம், மற்றும் மாத சிவராத்திரி கிரிவலத் தாத்பர்யங்களைப் பற்றி நன்கு எடுத்துரைத்தார்.

விசேஷமாகச் சில நாட்களில், குறிப்பாக அமாவாசையன்று வரும் பல சூரிய கிரண நாட்களிலும், மழை, பனிக்கால மேக மூட்ட நாட்களிலும் அவருக்கென விசேஷமாகக் கொடிக் கம்ப நிழல் அமைவது கண்டு பலரும் அதிசயித்தனர்.

விண்வெளியில் பரந்திருக்கும் எண்ணற்ற வேத மந்திர சக்திகளில் பொலியும் திருவருட் சக்தியைத் தன் தண்டு ரேகா கிரணங்கள் மூலமாகப் பூமிக்கு இறக்கி பக்தர்கட்கு அருள்பாலிக்கும் முறையே கொடிக் கம்ப இறைச் சூத்திர இலக்கணமாகும். எந்த மரத்தால் கொடி மரம் கட்டப்பட வேண்டும். அதில் எத்துணை வளையங்கள், தர்ப்பைச் சுற்றுகள் அமைய வேண்டும் என்பதற்கான கொடிக் கம்பக் கும்பாபிஷேக இறை நியதியில் வல்லவராய் கொடிக் கம்ப நிழலடிச் சித்தர்  திகழ்ந்தார்.

பல ஆலயங்களிலும் கொடி மரமில்லாத போது சாஸ்திரரோக்தமாய்க் கொடிக்கம்பம் நிறுவிடப் பல அரிய இறைப் பணிகளை ஆற்றினார். பழைய கொடி மரங்களை எவ்வாறு விஸ்ர்ஜனம் செய்தல் வேண்டும் என்பதற்கு இறைநியதிகளை வகுத்துத் தந்தவரும் இவரே! இன்றும் பல ஆலயங்களில் கொடிக்கம்பம் இல்லாது சோபையற்று இருப்பது மிகவும் வேதனைக்குரியதே! இவ்வாலயங்களில் தக்க முறையில் கொடிக்கம்பம் அமைய வேண்டுமெனில் அனைவரும் மாத சிவராத்திரி நாளில் “கொடிக்கம்ப நிழலடிச் சித்தர் பிரானே போற்றி!” எனத் துதித்து அவரை எண்ணி ஸ்ரீஉமாபதி சிவாச்சாரியார் அருளிய “ஒளிக்கும் இருளுக்கும்” என்று தொடங்கும் மிகவும் சக்தி வாய்ந்த “கொடிக் கவித் துதியை” ஓதியவாறு கிரிவலம் வந்தால் கொடிமரம் அமைவதற்கான நல்வரங்கள் கிட்டும். வாழ்வில் நாட்டம் இல்லாது ஏனோதானோ என்று வாழ்வோருக்கும் ஆன்மீக ரீதியாக சிரத்தை கிட்டும்.

நிழல் காணா நித்தியச் சித்தர்!

அருணாசல ஆலயக் கொடிக் கம்ப நிழலில் உறைந்திருந்த இச்சித்தர் பிரான் நடக்கும் போது இவருக்கு நிழலே ஏற்படாததற்குக் காரணம் இவருள் பூத்த காந்தவட ஜோதியாகும்! நிழலே ஏற்படாத சித்புருஷர்களுக்கும், மஹான்களுக்கும் “ஜோதிவடச் சித்தர்கள்” என்று பெயர். ஜோதிவடச் சித்தர்களில் தலைசிறந்து விளங்கிய கொடிமர நிழலடிச் சித்தர்பிரான் 1623ஆம் ஆண்டு வாக்கில் திருஅண்ணாமலையில் மானுட ரூபத்தில் வாழ்ந்தவராவார்.

அக்காலச் சித்திரபானு ஆண்டின் மாத சிவராத்திரியின் போது கொடிமர நிழலில் தோன்றிய அருணை ஜோதி ஒன்றால் ஈர்க்கப் பெற்று கிரிவலப் பகுதியில் ஸ்ரீகாயத்ரீ தரிசனப் பகுதியில் ஜீவ சமாதி பூண்டு இவர் ஐக்கியமானார். இவர் பூமியில் மறைந்து ஜீவசமாதி அடைந்தபோது அவ்விடத்தில் ஒரு கொடிமரம் தானாகவே தோன்றி நெடுங்காலம் இருந்து வந்தது. இக்கொடிக் கம்பத்தைத் தரிசிக்கும் பாக்யம் பெற்றோர் ஒரு சிலரே!

ஸ்ரீஉமாபதி சிவாச்சாரியாரின் கொடிக்கவித் துதி

ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று மேலிடிலொன்
றொளிக்கு மெனினு மிருளட ராதுள் ளுயிர்க் குயிராய்த்
தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே
குளிக்கு முயிரருள் கூடும் படிக் கொடி கட்டினனே

பொருளாம் பொருளேது போதேது கண்ணே
திருளாம் வெளியே திரவே – தருளாளா
நீபுரவா வையமெலா நீயறியக் கட்டினேன்
கோபுர வாசற் கொடி

வாக்காலு மிக்க மனத்தாலு மெக்காலுந்
தாக்கா துணர்வரிய தன்மையனை – நோக்கிப்
பிறித்தறிவு தம்மிற் பிரியாமை தானே
குறிக்குமரு ணல்கக் கொடி.

அஞ்செழுத்து மெட்டெழுத்து மாறெத்து நாலெழுத்தும்
பிஞ்செழுத்து மேலைப் பெருவெழுத்தும் நெஞ்சழுத்திப்
பேசு மெழுத்துடனே பேசா வெழுத்தினையுங்
கூசாமற் காட்டக் கொடி

அந்த மலமறுத்திங் கான்மாவைக் காட்டியதற்
கந்த அறிவை அறிவித்தங் – கிந்தறிவை
மாறாமல் மாற்றி மருவு சிவப் பேறென்றுங்
கூறாமல் கூறக் கொடி.

ஆழ்ந்த பக்தியுடன் அண்ணாமலையைக் கிரிவலம் வந்து “கொடிமர நிழலடிச் சித்தரே போற்றி!” எனத் துதித்து சத்சங்கமாக ‘கொடிக்கவித் துதியை’ ஓதி வர, கொடி மரம் இல்லாத கோயில்களில் கொடிமரம் அமையும் வண்ணமும், ஏனைய இறைப் பணிகள் பூர்த்தியாதலும் இறையருளால் வந்தமையும்.

‘கொடிக்கம்ப நிழலடிச் சித்தரே போற்றி’

தொழில், அலுவலகம், வீட்டில் எனப் பலவாறாக தேக சக்திக்கு மீறி ஓவராக உழைத்து வாழ்வில் இயந்திரமாக ஓடியாடி மனசாந்தமின்றி வாழ்தல், சம்பந்திகளுடன் சச்சரவு கொண்டு திருமண வாழ்வில் அமைதி இழத்தல், கணவன் அல்லது மனைவிக்கு உள்ள நெடுங்கால நோயால் மனஅமைதி இல்லாது இருத்தல், வீடு நிலபுலன்கள் பிறர் கையில் அகப்பட்டுத் திண்டாடுதல், பிறர் சொல்வதைக் கேட்டு நல்வாய்ப்புகளை இழத்தல் போன்றவற்றிற்குத் தீர்வுகளைப் பெற, தைமாத கிரிவலத்தில் திருஅண்ணாமலை கொடிமர நிழலடிச் சித்தரே தூல, சூக்கும, காரண வடிவுகளில் கிரிவலம் வரும் நன்னாளில் “கொடிமர நிழலடிச் சித்தா போற்றி” எனச் சித்தர் பிரானின் சிந்தனையுடனும் “கொடிக்கவி” ஓதியும் திருஅருணாசலத்தைக் கிரிவலம் வர வேண்டும்.

இந்நாளில் சிவராத்திரி தூபம், ஸ்ரீம்ருத்யுஞ்சயர் தூபம் ஏற்றி பஞ்சாட்சர நாமம் ஓதி கிரிவலம் வருதலால் நெடுங்காலமாகத் தீர்வடையாதிருக்கும் அபிலாக்ஷைகள், நல் விருப்பங்கள் மலர்ச்சி பெறும்.

கடல் சங்கு மகிமை

பலவிதமான சங்குகளுக்குள் எப்போதும் ஓங்கார நாதம் மற்றும் பல பீஜாட்சர நாதங்கள் ஒலித்து உறைகின்றன. விண்ணுலக வேத மந்திர சப்தங்களைக் கிரகித்துத் தருபவையே சங்குகள்!

சங்குகள், சிப்பிகளை இல்லத்தில் ஆன்மீக ரீதியாகப் பயன்படுத்துவதினால் இல்லத்துள் துலங்கும் பரவெளியை எளிதில் புனிதப்படுத்திடலாம்.

பூவுலகின் ஆன்மீக மையமே புனித பாரதம்!

விண்ணுலகங்களில் நம் பாரதப் புனித பூமியை தெய்வீக வளம் பொருந்தியதாகப் பொறித்திருக்கின்றார்கள். நம் புராணங்களிலும், இதிகாசங்களிலும் கூட, பாரத பூமியின் தெய்வீக மேன்மையைப் பெரிதும் போற்றுகின்றனர். காரணம் என்ன?

சுயம்பு மூர்த்திகள், விக்ரகங்கள், தல விருட்சங்கள், மூலிகை விருட்சங்கள், புனித நதிகள், கோபுரங்கள், கலசங்கள், கஸ்தூரி, மஞ்சள், குங்குமம் போன்ற தெய்வீகத்  திரவியங்கள், சங்குகள் எனப் பல்லாயிரக் கோடிக் கணக்கான தெய்வீக பொக்கிஷங்கள் நிறைந்ததே நம் பாரத நாடாகும். ஏன், மற்ற நாடுகளில் இவை இல்லையா என்று கேட்டிடலாம். நம் பாரத பூமியில் இவற்றின் மஹிமையை உணர்ந்து, இத்தகைய தேவ சக்திகளை அடையும் வண்ணம் பல வழிபாட்டு முறைகளையும் நம் பெரியோர்கள் அளித்துள்ளமையால் ஆன்மீக பொக்கிஷங்களைத் தக்க முறையில் பயன்படுத்தும் நல்வழிமுறைகளை உலக நாடுகளுக்கே உணர்விக்கும் தர்ம பூமியாகவும் நம் பாரதம் விளங்குவது என்பதும் நமக்குப் பெரும் பாக்யம் தானே!

நாடுகள் என சமுதாயப் பிரிவுகள் ஏற்பட்டதே மனித சமுதாயத்தின் பேராசையால் தானே! சனாதன தர்ம நாடாக, பாரத மையத்துடன் பல யுகங்களுக்கு முன் பூமியே ஒரே உலகமாய்ப் பொலிந்திட்டதுதானே! எனவேதான் அன்றும், இன்றும், என்றும் பாரத பூமியே உலகின் ஆன்மீக மையமாய்த் துலங்குகின்றது. அனைத்துச் சமயங்களும், தத்துவங்களும், தாத்பர்யங்களும் பாரதத்தையே மையமாகக் கொண்டுள்ளன.

சங்குகள் சத்யவதிகளே! பாரதத் திருமண்ணில் உள்ள ஆன்மீக பொக்கிஷங்களில் பக்தியைப் போற்றிப் பாதுகாப்பதில் ஆன்மீகத்தில் சங்குகள் முன்னணியில் நிற்கின்றன. சத்தியசீலன், சத்தியவதி, சத்தியவல்லி போன்ற சத்திய வகைப் பெயர் பூண்டோர் தினமும் சங்கால் பூஜை செய்து வரவேண்டும். நமக்குக் கிடைக்கின்ற பூஜைச் சங்குகள், வலம்புரி, இடம்புரிச் சங்குகள் யாவும் தியாகமயமாய் வாழ்ந்து உத்தம நிலைமைகளை அடைந்த கடல்வாழ் ஜீவன்களின் சரீர மண்டலமாகும். சாதாரண மனிதனின் உடல் மண்ணுக்கும், தீக்கும் இரையாகும் போது சங்குப் பூச்சிகளின் புண்ணியக் கூடுகள் சிரஞ்சீவியாக, பூஜைகளில் பங்கு பெறுவது அவற்றின் தெய்வீகத் தன்மைகளைக் குறிக்கின்றன அல்லவா!

இறைவளம் பொதிந்த ஆன்மீக பொக்கிஷங்களுள் சங்குகளின் மகிமை பற்றி, சித்தர்கள் அளித்துள்ளவற்றுள் ஓரணுவை இங்கு காண்போம். சற்குரு மூலமாகவே பெற வேண்டிய கலியுகத்திற்கான நல்இறைவழி முறைகள் இவை! ஏனெனில் இறைவழியில் கிட்டும் நன்மைகளையும் சுயநலமாகத் தவறாகப் பயன்படுத்தும் போக்கு கலியுகத்தில் பெருகி வருவதால் இறைத் தூதுவர்களாம் சற்குருமார்கள் மூலமாகப் பெறுவதாகவே இத்தகைய பல ஆன்மீக சக்திகளின் அணுகுமுறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இறைவனுடைய படைப்பில் மனிதன், விலங்குகள் போன்ற ஜீவன்களுடைய தூல வடிவு, மரணத்திற்குப் பிறகு அழிவடைகின்றது. புதையுண்டால் அவற்றின் எலும்புகளும் நசிந்து மாற்றம் பெறுகின்றன. ஆனால் சரீரத்திலிருந்து உயிர் மாற்றமடைந்த பிறகும் சாதன சரீரங்களைக் கொண்டு சிரஞ்சீவித்வம் பெறுபவையே சங்குப் பூச்சிகள் ஆகும். இவற்றைச் சங்குப் பூச்சிகள் என்று சொல்வதே தவறு! சங்குவதிகள் என்பதே சரியானதாம்! ஆத்ம சக்தி பிரிந்தும், தேகத்தில் கடாத்ம சக்திகள் நிறைந்த இவ்வகை ஜீவன்களை சங்க பதஸ்வினிகள் என்றே தேவர்களும், பெரியோர்களும் அழைக்கின்றனர்.

அனைத்து நாடுகளிலும் கிட்டும் ஆன்மீக பொக்கிஷங்களுள் கடற்சங்குகளும் ஒன்றாகும். ஆனால் பாரதக் கடல் வளாகங்களில் மிகவும் விசேஷமான யோக வடிச் சங்குகள் நிறையக் கிடைக்கின்றன. கடல் சங்குகளின் மகிமையைப் பற்றி சித்தர்களுடைய ஞானபத்ர கிரந்தங்களில் நன்கு விளக்கப்பட்டுள்ளன.

சங்கு தீர்த்தம் திருக்கழுக்குன்றம்

நீருள் விளக்கொளி தரும் ஜலதள யோகஜோதி!

சங்குகள், சிப்பிகளைக் கடல்வாழ்ப் பூச்சிகளின் கூடுகளாக மட்டுமே விஞ்ஞானப் பூர்வமாக நாமறிவோம். ஆனால் நீரடியில் எப்போதும் துலங்கி வாழும் குறித்த சில வட நட்சத்திர மீன், தேவ சங்கவதிகள், தேவ ஆமை போன்ற உயிரினங்களுக்கு மனிதனுக்கு இல்லாத “ஜலதள யோகஜோதி சக்திகள்” நிறைய உண்டு.

பூலோகத்தில் மானுடருக்கு ஜோதி வடிவ விளக்குப் பூஜை அமைந்திருப்பது போல், எண்ணெய் இல்லாது நீரில் எரியும் தீபத்திற்கு “ஜலதள யோகஜோதி” என்று பெயர். ஸ்ரீவள்ளலார், கலிக்காம நாயனார் போன்ற உத்தம மகான்கள் ஜலதள யோகஜோதித் தாத்பர்யங்களில் தலை சிறந்தவர்கள்.

நீரில் தீபத்தை எரிய வைக்கும் சக்தியைப் பெற்றால் கலியுகத்தில் இந்த யோக சித்திகளைத் தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதால் தான் இந்த யோகப் பயிற்சியை குருபூர்வமாக உணர்ந்து நல்ல இறைச் சேவைகளுக்கு மட்டும் அர்ப்பணிக்க வேண்டியதாக மகான்களும், சித்தர்களும் மறைத்து வைத்துள்ளனர். ஜலதள யோகஜோதி சக்திகளைச் சமுதாயத்தில் நல்ல இறைப்பணிகள் நடைபெற நன்முறையில் அர்ப்பணம் செய்வித்தால்தான் அதன் பலன்கள் புலப்பட்டுப் பரிபூர்ணமாகும்.

கடல்வாழ் சங்கு தேவ ஜீவன்களில் பலவும் பல்லாண்டுகள் உள்யோகப் பூர்வமாக மூச்சடக்கி, சூரிய, சந்திர, நட்சத்திர மண்டலங்களில் இருந்து ஜோதியைக் கிரகித்து, பரணி, கார்த்திகை, பௌர்ணமி நாட்களில் நீருக்குள் ஜலதள யோகஜோதியை ஏற்றி அனைத்துக் கடல் வாழ் ஜீவன்களையும் “ஜலதள யோகஜோதியை” வலம் வரச் செய்து வழிபட வைக்கும் அபூர்வ சங்குகளுக்குச் சங்கவதிகள் என்று பெயர். இந்த ஜலதள யோகஜோதி தீப வழிபாட்டால் அவை கூடுகளை உதிர்த்தும் சாகாவரம் பெற்று சிரஞ்சீவியாய்ச் சங்குகளின் வடிவில் அன்றும் இன்றும் என்றும் ஆலயங்களில், பூஜைகளில் பங்கு பெறுகின்றன.

பிறர் நலன் போற்றுதல் மனித குலக் கடனே!

கடவுளுடைய அதியற்புத இறைத் தத்துவத்தில் மனிதனை விடத் தெய்வீகத்தில் பல உத்தம நிலைகளை அடைந்துள்ள மயில், சங்கவதிகள் போன்ற பல உயிரினங்கள் நிறையவே படைக்கப்பட்டுள்ளன. மற்ற உயிரினங்களிடம் நிறைந்திராப் பகுத்தறிவாகிய ஆறாம் அறிவு மனிதனிடம் விசேஷமாகப் படைக்கப்பட்டு இருப்பதால், மனிதப் பகுத்தறிவு எவ்விதத்தில் பயன்படுத்தப்பட வேண்டும் என தற்போது மனித குலம் நன்கு உணரவில்லையே! உணர்ந்திருந்தால் நாடுகளிடையே இப்போது இருப்பது போல பகைமைப் போர்கள், ஜாதி, இன, மதச் சச்சரவுகள், வெடிகுண்டு வன்முறைகள் இவ்வகையில் பெருகாதே!

அனைத்து ஜீவன்களின் நலனைக் காத்து, பிற ஜீவன்களிடம் உள்ள தெய்வீக சக்திகளைச் சமுதாயத்திற்குப் பயன்படும் வகையில் அவற்றைப் போஷித்துப் பராமரித்துப் பாதுகாக்கவும் மனிதனுடைய இறைப் பகுத்தறிவு பயனாக வேண்டும். சக ஜீவன்களிடம் எவ்வித பேதமும் இன்றி பக்தி, அன்பு, நேயம் போற்றி இறைமையில் நிலை நிற்க உதவுவதே இறைப் பகுத்தறிவாகும். இதற்காகக் கலியுகத்தில் பெருந்துணை புரிபவரே சற்குரு ஆவார்.

சங்கினுள் திளைக்கும் இறையொலி பீஜாட்சரங்கள்!

சங்க தரண்யர் என்பது சிவபெருமானுடைய அரிய அவதார மூர்த்தங்களுள் ஒன்று. சங்கு வடிவில் உள்ள மேலுலகத்தில் இருந்து தோன்றுகின்ற சங்கபதஸ்வினிகள், சங்குவதிகள், சங்கு குல ஜீவன்கள் யாவும் சங்கதரண்யச் சிவபெருமானை வழிபடுகின்றனர். எப்போதும் ஜலத்வீபிகா யோகத்தில் திளைக்கின்ற அரிய வகைச் சங்கு ஜீவன்களின் திவ்யமான கடபத திட வஜ்ர தேகமே ஆலயங்களில் பூஜைகளில் பயன்படும் சங்குகள் ஆகின்றன. மகான்களின், சித்தர்களின் ஜீவாலயங்களை நாம் வழிபடுவது போல யோக நிலையிலேயே ஜீவத்துறவம் பூணும் சங்கபதஸ்வினிகளின் திவ்யக் கூடே உத்தமச் சங்குகளாக ஆகின்றன.

சங்கும் புஷ்பமும் இறைவனுக்கே!

சங்குகளுக்குள்ளும் ஓம், ராம், ஹூம் எனப் பலவகை பிரணவ, பீஜாட்சர நாதங்கள் உறைகின்றன. இதற்கேற்றபடி சங்குகளின் தெய்வீகப் பலாபலன்களும் அமைகின்றன. எனவே தினமும் இல்லத்தில் ஒரு முறையேனும் சங்கொலி கேட்டிட வேண்டும்.

இறைவனுக்கும், இறை நற்காரியங்களுக்கும் சங்குகள் பயனாவதே சிறப்புடையது. தற்காலத்தில் சவ ஊர்வலத்தில் பூக்களை இறைத்தல் மற்றும் சங்கு ஊதுகின்ற தவறான வழக்கங்கள் நடைமுறைக்கு வந்து விட்டன. சவ ஊர்வலத்தில் சங்கு ஊதப் படக் கூடாது. பூக்களையும் வாரி இறைத்தல் கூடாது. இத்தகாத காரியங்களினால் சமுதாயத்திற்கு சப்த தேவதைகளின் சாபங்களும், புஷ்ப தேவதைகளின் சாபங்களும் நிறைய ஏற்பட்டு, முறையற்ற காமக் குற்றங்கள் பெருகிச் சமுதாயத்தைச் சூழும்.

பூக்களும், சங்குகளும் இறைவனுக்கும், இறைக் காரியங்களுக்கும் மட்டுமே பயனாக வேண்டும். இறைவனுக்குச் சார்த்திய பிறகு பிரசாதமாகப் பூக்களைப் பெண்கள் அணிந்திடலாம். கடலின் அடியில் உள்ள சங்கு லோகங்களும் நிறைய உண்டு. இவற்றில் இருந்து தாம் நம் உண்மையில் பல அரிய தெய்வீகச் சங்குகளைப் பெறுகின்றோம். பல நல்தேவதைகளும் பூஜைச் சங்குகளாய் மாறுவதுண்டு. இவை விண்ணில் உள்ள சங்கபத லோகங்களோடு தொடர்புடையவை. மேலும் அனைத்து சங்கவதிகளும் (சங்குப் பூச்சிகள்) விண்ணில் உள்ள நட்சத்திரங்களோடு தொடர்பு கொண்டுள்ளவை ஆகும். எனவே பூஜையில் சங்கு வைத்துப் பூஜிப்பதும், சங்குத் தீர்த்தத்தால், அபிஷேகிப்பதும் விசேஷமான கண் பார்வையையும், தீர்க தரிசன சக்தியையும் தரவல்லதாகும். பல விதமான தோஷங்களையும் சங்கின் தேவ ஒலி சக்தியால் எளிதில் தீர்த்திட முடியும். எனவே தினமும், ஒரு முறையாவது இல்லத்தில் பூஜைச் சங்கொலி கேட்கப்பட வேண்டும். சங்கொலி வீட்டைப் புனிதமாக்கும். சங்கினால் அபிஷேக தீர்த்தமும் வார்க்கப் பட வேண்டும்.

மங்களமும், அறிவு சக்திகளும் பொங்கிடும் சங்குகள்!

சங்கு வகைக் கூட்டில் எப்போதும் விபூதி, குங்குமம் வைத்திருப்பதால் சுபமங்கல்ய சக்தி விருத்தியாகி, மங்கள சக்திகள் இல்லத்தில் நிறையும், கணவனுக்குத் தீர்க ஆயுளும் கிட்டும். சங்காலான எழுதுபொருளுறையில் (pen stand) பிள்ளைகளுடைய பேனா, பென்சில் போன்ற எழுது பொருட்களை வைத்திருப்பதால் இவற்றினுள் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் தேவ ஒலி சக்தியால் பிள்ளைகளுக்கு நல்ல ஞாபக சக்தி உண்டாகும். இவற்றில் வைத்த பேனாக்களால் கையெழுத்திடுவதால் நல்ல செல்வ வளம் உண்டாகும். காரியத் தடங்கல்கள் மறையும். நீதிபதிகளும், வக்கீல்களும் உண்மையும், பொய்மையும் புரளும் துறையில் நீதியை நிலை நிறுத்த வேண்டிய கடமையைப் பெற்று இருப்பதால் இவர்கள் மரப் பேனாக்களையும், பேனாக்களை வைப்பதற்குச் சங்கு உறைகளையும் பயன்படுத்தி வந்தால் எதிர் சக்திகள் (negative vibrations) ஊடுருவுவது தணியும். மனம் பேதலிக்காது.

சங்குகளையும், கடலடிப் பொருட்களையும் நன்முறையில் சுத்திகரித்து ஸ்ரீசங்க தரண்யருக்கும், சமுத்திர ராஜ தேவருக்கும், சமுத்திர தேவதைகளுக்கும் பூஜை செய்து, சங்குப் புஷ்பத்தால் குறித்த மந்திரங்களை ஓதி வழிபட்டுக் கிரகண காலங்களில் சற்குரு அளிக்கின்ற பூஜைகளைக் கடைபிடித்த பின் பயன்படுத்துதலே சிறப்புடையதாகும்.

அன்யோன்ய உறவு

தீயத்தூர் ஸ்ரீசகஸ்ர லக்ஷ்மீஸ்வரர்

தலைக்கு மேல் கடன் சுமையால் வாடுவோர்க்கு நன்னிலை தந்து, லக்ஷ்மி கடாட்சத்திற்கு அருள்வழி காட்டும் ஸ்ரீசகஸ்ர லக்ஷ்மீஸ்வரர் தலம். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தோர் தம் ஆயுட்காலத்தில் வழிபட வேண்டிய அற்புதத் தலம்! நம் வாழ்வில் ஒரு முறையே வருவதான, பல் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறையே வருகின்ற திரிதின உத்திரட்டாதித் திருநாளும், திலகுந்தச் சதுர்த்தியும் கூடும் திருநாளில் நிதிவளம் தரும் லக்ஷ்மீ கடாட்ச ஹோம பூஜைக்கான திருத்தலம்.

திருமகளால் பூஜிக்கப் பெற்று ஸ்ரீலக்ஷ்மீஸ்வரராக (சீர்காழி அருகே) திருநின்றியூரில் சிவபெருமான் அருள்கின்றாரன்றோ! திருமகளால் 1008 ஸ்வர்ண அக்னித் தாமரை மலர்களால் அர்ச்சிக்கப்பட்ட சிவனே, ஸ்ரீசகஸ்ர லக்ஷ்மீஸ்வரராகவும் (சகஸ்ரம் -1000) அதியற்புத லிங்க வடிவில் தீயத்தூரில் அருள்பாலிக்கின்றார்!

சூரியனால் வழிபடப் பெற்றமையால் ஸ்ரீசகஸ்ர ரஸ்மீஸ்வரராகவும் (ரஸ்மீ – சூரியக் கிரணங்கள்) ஒருயுகத்தில் போற்றப்பட்டவர். 1008 திருமுகங் கொண்ட ஸ்ரீசுந்தரராஜப் பெருமாளின் திருமார்பில் நிலை நின்ற திருமகளும், பெருமாளின் நேத்ர சக்தியால் 1000 சிவலிங்க மூர்த்திகளாகத் தரிசித்திட, ஸ்ரீலக்ஷ்மி சகஸ்ரேஸ்வரராகவும் பிறிதொரு யுகத்தில் சிவபெருமான் அருளிய தலமும் இதுவே!

அற்புத நேத்ர சக்தி தரும் சிவ பூஜை!

ஸ்ரீசகஸ்ர லக்ஷ்மீஸ்வரர் என்பது ஆயிரமாயிரம் பொருள் கொண்ட பீஜாட்சர நாமப் பதியாகும். திருமகளால் பூஜிக்கப்பட்டு சகஸ்ர அர்ச்சானதிகளைப் பூண்ட சிவலிங்கமான தீயத்தூர் ஸ்ரீசகஸ்ர லக்ஷ்மீஸ்வர சிவலிங்கத்தை, குருவருடன், ஒருமுறை ஆழ்ந்த பக்தியுடன் தரிசித்தலால் மிக எளிதில் மகாலக்ஷ்மி தரிசனத்தையும், லக்ஷ்மி கடாட்சத்தையும் பெற்றிடலாம் என்பதை உலகிற்கு உணர்த்திய சித்தர்கள், மகரிஷிகள் பலரும் உண்டு.

ஸ்ரீசகஸ்ர லக்ஷ்மீஸ்வர சிவலிங்கத் தரிசனத்தால் ஆயிரமாயிரம் புராணங்களில் கூட விவரிக்க இயலாப் பலன்களை, திருமகள் தரிசன கல்யாண குணங்களை நல்வரங்களை நாம் எவ்வளவு எளிதில் பெறுகின்றோம் என்று சற்றே சிந்தித்துப் பாருங்கள்! ஆழ்ந்த நம்பிக்கை ஒன்றுதாமே உலகில் அனைத்தையும் ஆன்மீக ரீதியாகச் சாதிக்க வல்லதாம்! ஆழ்ந்த நம்பிக்கையின் திருஉருவன்றோ சற்குருநாதர்!

திருமால் கண்டதைத் திருமகள் காண விழைதல்!

திருமாலுடைய சிவபூஜையின் போது, திருவீழிமிழலையில், அர்ச்சனைக்கான 1000 எண்ணிக்கையில் ஒரு பூ குறைந்த போது தன் திருக்கண்ணையே கண் மலராக பாவித்து, ஆங்கே சிவனைப் பூஜித்தார் அல்லவா திருமாலப்பர்! இவ்வாறு பெருமாளே தன் கண் மலர்களால் பூஜித்த சிவலிங்க தரிசனத்தைத் திருமகளும் பெற விரும்பினாள். ஆனால் இது அவ்வளவு எளிதல்லவே! இதற்காக ஸ்ரீலக்ஷ்மி கடுந்தவம் பூண்டிடத் தகுந்த திருத்தலத்தைத் தேடிய போது, சிவசகஸ்ர நாம பீஜாட்சர தரிசன பூஜையில் ஒப்பற்றவரான கார்ஜனீய மஹரிஷியைத் தீயத்தூர் அருகே உள்ள தீர்த்தாண்டதானம் (ஸ்ரீராமர் பித்ரு பூஜைகளை நிகழ்த்திய இடம்) எனும் தலத்தில் கண்டு விளக்கம் கேட்டனள். இம்மஹரிஷிதாம் சிவனுடைய சகஸ்ரநாம தரிசன கடாட்சங்களைப் பெறும் முறைகளில் வல்லவராயிற்றே!

அகஸ்தியர் அளித்த தீயத்தூர்த் தல மகிமை

கார்ஜனீய மஹரிஷியும், ஸ்ரீமஹாவிஷ்ணு தன் திருக்கண் மலரால் அர்ச்சித்த சிவலிங்க தரிசனத்தைப் பெற்றுத் தரவல்ல பூஜை முறைகளைத் தானும் நாடி வருவதாகக் கூறிடவே, திருமகள் இதைக் கேட்டு அதிசயித்தனள். இருவரும் அப்போது ஆங்கே அமாவாசைத் தீர்த்தவாரிக்கு வந்திருந்த ஸ்ரீஅகஸ்திய மகரிஷியையும் தரிசித்திட, அவரும் தீயத்தூரின் மகிமைகளை விவரித்தார்.

“மகாலக்ஷ்மித் தாயே! திருமாலின் சர்வ அவதார மூர்த்தங்களின் ஜோதி குணத் திருப்பாதங்கள் படிந்த தீயத்தூர் அக்னி பூமியில்தாம், அக்னி பகவான் (தீ), பிரம்ம மூர்த்தி (அயன்), சூரிய பகவான் (ஊர்) மூவரும். இன்றும் என்றுமாக அக்னி பூஜைகளை தீயத்தூர் அக்னி லிங்க பூமியில்தான் நிகழ்த்துகின்றனர். திருமாலின் திருமார்பில் உறையும் பாக்யத்தைத் தாங்கள் நேரடியாகவே பெற்று விட்டால் பெருமாளின் அவதார மூர்த்த லீலைகள், சிவலிங்கத் தரிசனங்கள் யாவையும் தரிசித்துப் பரிபூரணித்ததாக ஆகும் அன்றோ! இதையே பிருகு முனிவரும் தங்களிடம் கூறியுள்ளார். இதனால் சர்வேஸ்வர தரிசனங்கள் யாவும் எளிதில் கிட்டிடும்!” என்று திருமகளிடம் உரைத்தார். பிருகு முனிவர் இட்ட சாபத்திற்கான பிராயச்சித்தமும் இதில் அடங்கலாயிற்றே! அனைத்தும் இறைலீலைதானே!

என்னே அகஸ்தியர் போன்ற மகரிஷிகளின் பரந்த மனம்! பல்லாயிரங் கோடி தேவாதி, தேவ தெய்வீக ரகசியங்களை நன்கு அறிந்தும் தனக்கெனச் சுயநலமாக வைத்திராது பிறருக்கு அளிக்கும் பெருந்தன்மைதான் என்னே!

ஆயிரம் அக்னித் தாமரையால் அற்புத அர்ச்சனை!

பலகோடி யுகங்களுக்கு ஒரு முறையே ஒரே ஒரு அக்னித் தாமரை (தீக்கமலம், அக்னிக் கமலம்) பூக்கக் கூடிய கமலாலய அக்னித் தீர்த்தம் அப்போது தீயத்தூரில் பொலிந்தது! அதன் அக்னி சக்தியை எவராலும் ஸ்பரிசிக்க இயலாததால், ஆயிரம் கோடி யுகங்களாக அத்தடாகத்தில் நிறையத் தாமரைகள் பூத்துப் பொலிந்து வாடாது அன்று மலர்ந்தவை போல் பூரித்துக் கிடந்தன.

தீயத்தூரில் புராதனக் காலத்தில் உறைந்த அரிய அக்னித் தீர்த்தம் சிவபெருமானுடைய நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியதே! (இந்தத் தடாகம், ஏரியாய் மாறிப் பிற்காலத்தில் மறைந்துள்ளது!). இவ்வாறாக 1000 தீக்கமலங்கள் பூக்கும் தடாகத்தில் திருமகள் கடுந்தவம் புரிந்து அதில் உற்பவித்த அக்னித் தாமரைகளால் அர்ச்சித்திட, சிவபெருமான் ஸ்ரீசகஸ்ர லக்ஷ்மீஸ்வரராகக் காட்சி தந்திட்டு, இதே தலத்தில் இதன் அருட்சுடராய் 1000 திருமுகங்கள் பூண்ட ஸ்ரீசுந்தரராஜப் பெருமாளும் திருமகளைத் திருமார்பில் ஏற்றிட்டார்.

வீழிக்கு மூத்தவர்!

பெருமாளின் சகஸ்ர நேத்ர தரிசன சக்தியால் திருமாலே தன் திருக்கண்ணை ஆயிரமாவது மலராகப் போற்றி அர்ச்சித்த சிவலிங்க தரிசனத்தையும் திருமகள் இங்கு பெற்றாள். எனவே திருவீழிமிழலைத் திருத்தலத்திற்கும் மூத்த தலமிது! இங்குதாம் ஸ்ரீசகஸ்ர லக்ஷ்மீஸ்வரராக, பூலோகத்தில் வேறு எங்கும் காணக் கிடைக்காத நாமம் கொண்டு, சிவபெருமான் அருள்பாலிக்கின்றார். கார்ஹபத்னீ, ஆவஹனீயம், தக்ஷீணாக்னி ஆகிய மூவகை அக்னி ஸ்வரூபராக, த்ரயம்பக ஜோதி அட்சர ரூபத்தைக் கொண்டவரே ஸ்ரீசகஸ்ர லக்ஷ்மீஸ்வரர் ஆவார்.

சம்க்ஞா தேவி பெற்ற அக்னி தேஜஸ்!

மேலும் சம்க்ஞா தேவியை சூரிய பகவான் மணந்த போது, சூரிய மண்டலத்தின் உஷ்ணம் தாங்காது சம்க்ஞா தேவி, சாயாதேவி எனும் ரூபத்தை நிலை நிறுத்தித் தான் அக்னி யோகத் தவம் பூணச் சென்று விட்டாள். பல இடங்களிலும் அக்னி யாகங்களை ஆற்றி, சம்க்ஞா தேவி, சூரிய மண்டலத்தில் உள்ள அக்னியைத் தாங்குவதற்கான பல சக்திகளைப் பெற்றிட்டாள்.

பூலோகத்தின் பல இடங்களிலும் தவம் புரிந்து இறுதியில் மூவாக்னி சக்தியைப் பெற தீயத்தூர் வந்தடைந்த சம்க்ஞா தேவி இங்கு கமலாலய அக்னித் தீர்த்தப் படுகையில் கடுந்தவம் புரிந்தனள். சூரிய பகவானும் தக்கனுடைய யாகத்தில் இழந்த சக்திகளைப் பெறவும், சம்க்ஞா தேவியால் தம் உஷ்ணத்தைத் தாங்க இயலாமையால் சூரியனார் தம் உஷ்ணத்தைத் தணித்திட விஸ்வ கர்மாவின் துணையுடன் தன் சூரியச் சக்கரங்களை அக்னிப் பட்டறையில் சீர் திருத்திக் கொண்டார்.

சூரிய பகவான் அடைந்த ருத்ர மகா தேஜஸ்!

ஆனால் இதற்கிடையில் தீயத்தூர் ஈஸ்வரனை வேண்டி சூரிய உஷ்ண மண்டலத்தின் அக்னியைத் தாங்கும் வல்லமையை சம்க்ஞா தேவியின் தேஜஸையும், அக்னிப் பிரகாசத்தைத் தாங்க இயலாது, ஸ்ரீஅகஸ்திய மகரிஷி அருளியபடி மீண்டும் தீயத்தூர் வந்து தம் இருதயத்தில் சந்தன லிங்கத்தை ஸ்தாபித்து, ஸ்ரீசகஸ்ர லக்ஷ்மீஸ்வரரை வேண்டி ருத்ர மகா தேஜஸைப் பெற்றார். மேலும் இந்த சந்தன ஹ்ருதயாக்னி பூஜா பலன்களால் இத்திருப்பூமியில் விசேஷமான சூரியக் கிரணங்களைப் பொழிகின்ற அருட்பணியையும் ஏற்றார். எனவே தீயத்தூர்ப் புனித பூமியில் பொழியும் கதிரவனின் கிரணங்கள் ஆன்ம ரீதியாக, ஏனைய சூரிய ஒளிக் கிரணங்களை விட வித்யாசமானவையாம்.

அக்னி பகவானுக்கு மீண்ட அக்னி சக்திகள்!

தட்சனுடைய யாகத்தில் தம் அக்னி சக்திகளை இழந்த அக்னி மூர்த்தி பல தலங்களிலும் தவம் புரிந்து கமலாலய அக்னித் தீர்த்தம் உள்ள இத்தலத்தை வந்தடைந்தார். இங்கு அகஸ்திய மாமுனி அருளியபடி சந்தனக் குழம்பின் நடுவே அக்னி ஹோமம் வளர்த்து பல அக்னி யாகங்களை நிகழ்த்தித் தாமிழந்த அக்னி சக்திகளை மீண்டும் பெற்றார்.

இவ்வாறு பல புராண அனுபூதிகளைக் கொண்டதே தீயத்தூர் ஸ்ரீசகஸ்ர லக்ஷ்மீஸ்வரர் சிவாலயம் ஆகும். இங்கு சிவலிங்கத்திற்கு (கரங்களால் அரைத்த) சந்தனம் சார்த்தி வழிபடுதல் நற்காரிய சித்திகளைத் தரும்.

உத்திரட்டாதி நட்சத்திர மண்டலம்

அக்னி வகைகளில் பல உண்டு, உத்தராக்னி, அஷ்டாக்னி, ஆதிஅக்னி ஆகிய மூன்று வகை அரிய அக்னித் தீர்த்தங்களால் ஆனதே உத்திரட்டாதி நட்சத்திர மண்டலம், இத்தீர்த்த நீரால் தீபம் ஏற்றிடலாம். இந்த அளவிற்கு அற்புதமான ஜோதி சக்தியைக் கொண்டதே உத்திரட்டாதி நட்சத்திரத் தீர்த்தமாகும்.

அபிஜித் முகூர்த்தம் எனப்படும் பகல் உச்சிப் பொழுதில் தினமும் சூரிய பகவான் தங்கி பூஜித்து இளைப்பாறும் நட்சத்திர மண்டலமும் உத்திரட்டாதியே! திருமகள் தம் நித்ய பூஜைக்கு அக்னிக் கமலத் தாமரைகளைப் பெறும் நட்சத்திர மண்டலமும் உத்திரட்டாதியே! எனவே உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தோர் மாத நட்சத்திர நாள், பிறந்த நாள், திருமண நாள் என அவ்வப்போது தம் ஆயுள் முழுதும் வழிபட்டு வர வேண்டிய மிகவும் முக்கியமான தலம்!

உத்திரட்டாதி நட்சத்திர நாளில் தோன்றிய ஸ்ரீஅஹிர்புத்ன்ய மகரிஷி, ஸ்ரீவிஸ்வ கர்மா, ஸ்ரீஅக்னிபுராந்தக மகரிஷி, ஸ்ரீஆங்கீரஸ மகரிஷிகள் மாதந்தோறும் தூல சூக்கும சரீரங்களில் வந்து வழிபடும் திவ்யமான தலம்!

மூலம் (piles), புற்று நோய் (cancer), அமிலக் காரம் (acidity), அறுவை சிகிச்சை ரணங்கள் (surgeries) போன்ற உஷ்ண நோய்களால் அவதியுறுவோர் அக்னி நட்சத்திர வகைகளான அஸ்வினி, பரணி, கார்த்திகை, உத்திரம், உத்திரட்டாதி நட்சத்திர நாட்களில், தீயத்தூர் ஸ்ரீசகஸ்ர லக்ஷ்மீஸ்வரருக்கு (கைகளால் அரைத்த) சந்தனக் காப்பு இட்டு, பழரசச் சாறு, பழங்களையும், பால் கோவா மற்றும் பால் வகை இனிப்புகளையும் ஏழைகளுக்குத் தானமாக அளித்துவர, நிலங்கள், நகைகளை அடமானம் வைத்து மீட்க இயலாமல் திணறுவோர் தக்க நிவர்த்திகளைப் பெறுவர்.

தீயத்தூரில் திரிதின உத்திரட்டாதியுடன் கூடிய திலகுந்தச் சதுர்த்தி விசேஷ நாளில் ஸ்ரீவிநாயகப் பெருமான் நடத்திய த்ரயம்பக வல்லப ஹோமம்!

தமிழ்த் திருக்கணிதப் பஞ்சாங்க முறைப்படி, மூன்று தினங்களுக்கு ஒரு நட்சத்திரம் நிரவி வந்தால், அது திரிதின நட்சத்திர தினமாகிறது . இந்த உத்திரட்டாதி திரிதினத்துடன் கூடும் திலகுந்தச் சதுர்த்தி நாளில்தாம் ஸ்ரீவிநாயகப் பெருமான் தம் திருமண வைபவத்திற்கான த்ரயம்பக வல்லப ஹோம பூஜையைத் தீயத்தூரில் நிகழ்த்திட்டார். இதற்கான ஹோமாக்னியை தீயத்தூர் ஸ்ரீசகஸ்ர லக்ஷ்மீஸ்வரரிடம் பெற்ற தினமே உத்திரட்டாதி திரிதினம் கூடிய திலகுந்தச் சதுர்த்தி நாளாகும். இவ்வாறு சேர்வது பல நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறையே ஆகும்.

நம் வாழ்நாளில் பெரும்பாலும் ஒரு முறையே வருவது! எனவே வரும் திலகுந்தச் சதுர்த்தி நாளில் இவ்வாலயத்தில் ஹோம பூஜை நிகழ்த்தி, உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு உரிய பிராணியான பசு, கன்றுடன் ஹோம குண்டத்தை வலம் வரச் செய்து சிவலிங்கத்திற்கு ஏற்றப்பட்ட நல்லெண்ணெய் விளக்கு தீபத்தில் இருந்து அக்னியைப் பெற்று ஸ்ரீவாஞ்சா கணபதி ஹோமம், ஸ்ரீசிவசகஸ்ர நாம ஹோமம், ஸ்ரீமகாலக்ஷ்மி ஹோமம் ஆகிய மூன்றையும் நிகழ்த்திப் பாமர மக்களையும் ஹோமத்தில் ஆஹூதிகளை அளிக்க வைத்து நெய், பாதாம் பருப்பு, முழு முந்திரி, திராட்சை, தேன் கலந்த சர்க்கரைப் பொங்கல் படைத்து ஏழைகளுக்கு அன்னதானம் அளிப்பதால் பணமுடையால் தடைபட்டுள்ள நற்காரியங்கள் நிறைவேறும். அளவுக்கு மீறிய பண நஷ்டங்களுக்குத் தக்கத் தீர்வுகள் கிட்டும். பலரும் ஒன்று கூடி சத்சங்கமாக 1000 தாமரைகளை, குருவருளுடன் முறையாக ஹோமத்தில் சமூலங்களுடன் ஆஹூதியாக அளித்தல் லக்ஷ்மி கடாட்ச அனுகிரகத்திற்கு வழிவகுக்கும்.

இத்தலம் உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு உரித்தான தலமாக விளங்குவதால் இவர்கள் தம் வாழ்வில் பெறுதற்கரிய இந்நன்னாளில் இங்கு ஹோம வழிபாடு செய்து உத்திரட்டாதி தூபம் ஏற்றி பூஜித்தல் சகல நல்வரங்களையும் தருவதாகும் ! மிகவும் சிறப்பான நாள்!

பல திருமணத் தம்பதிகளைப் பார்த்து பலரும் இவர்கள் மிகவும் அன்யோன்யமாக இருக்கிறார்கள் என்று கூறுவது உண்டு. நம்முடைய கணக்கில் ஒருவர் உடலை விட்டு மற்றொருவர் பிரியாமல் இருந்தால் அதைத் தெய்வீக அன்பாக ஏற்றுக் கொள்கிறோம். அவர்கள் இருவருக்கிடையில் மனமோ, உள்ளமோ எந்த அளவிற்கு ஒத்துப் போகிறது என்றும் அறியும் அளவிற்கு நம்முடைய தெய்வீகக் கண்ணோட்டம் பெருகவில்லை என்பதையே இது காட்டுகிறது. காரணம் சித்தர்கள் கணக்கில் அன்யோன்யம் என்பது அ+யோனியம் என்பதே அன்யோன்யத்தைக் குறிக்கும். அதாவது ஒருவர் தான் ஆண் என்றோ பெண் என்றோ கொள்ளும் உணர்வைக் கடந்த நிலையே அன்யோன்ய நிலையாகும். இந்த அன்யோன்ய நிலையை அடைவதே இல்லறத்தின் ஆரம்ப கட்டப் பயிற்சியாகும். இதையே ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், பகவான் ரஜனீஷ் போன்ற மகான்களும் வலியுறுத்தி வந்துள்ளனர். ஓரிரு குழந்தைகள் பிறக்கும் வரையில்தான் கணவன் மனைவி என்ற உறவு இருக்க வேண்டும். அதற்குப் பின் இருவரும் சகோதர சகோதரிகள் என்ற உறவைக் கொண்டு கடவுளை வழிபடுதலில் எஞ்சிய காலத்தைக் கழித்தலே உண்மையான அன்யோன்யம் என்று பறை சாற்றியவரே ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் ஆவார். இத்தகைய உயர்ந்த நிலைக்கு பக்தர்கள் செல்ல வழிகாட்டுவதே தீயத்தூர் திருத்தல வழிபாடாகும், சிறப்பாக விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் தீயத்தூர் திருத்தலத்தில் இயற்றும் வழிபாடுகள் இத்தகைய அன்யோன்யத்தை தம்பதிகள் இடையே ஆரம்பித்து பின்னர் படிப்படியாக ஆண்கள், பெண்கள் இடையே சமூகத்தில் அனைத்து தரப்பினர் இடையேயும் வளர்க்க வல்லதாகும். இத்தகைய உயர்ந்த நிலையை இன்றும் கண் கூடாக பக்தர்கள் அனுபவிக்கக் கூடியதே மாதா அமிர்தானந்தாவின் அரவணைப்பாகும்.

அமுத தாரைகள்

பாலகர்கள் சமுதாயம், இளைய சமுதாயம் இவ்விரண்டும் தான் நம் பாரதத்தில் தெய்வீகத்தை எதிர்காலத்தில் போற்றிப் பாதுக்க வேண்டும். எனவே நீங்கள் செல்லும் வழியில் உள்ள பள்ளி, கல்லூரிகளைப் பார்க்கும்போது கண்ணில் தென்படும் ஒவ்வொரு மாணவன், மாணவிக்குமாக ஒரு காயத்ரீ மந்திரம் அல்லது அறிந்த இறைமந்திரம்தனை ஓதி அதன் பலாபலன்களை உளப் பூர்வமாக அவர்களுக்கு அர்ப்பணிப்பீர்களாக!

நீங்கள் செல்லும் வழியில் கோயில் குளமோ, தீர்த்தமோ, ஆறோ, ஏரியோ வறண்டிருந்தால் கை கூப்பி வணங்கி வருண பகவானே! தீர்த்த தேவதைகளே! கருணை புரிந்து தீர்த்தத்தை நிரப்பித் தாருங்கள் என மனதார வேண்டுங்கள்.

ஒவ்வொரு முறையும் வெளியில் சென்று திரும்பியவுடன் கை, கால்களை நன்கு கழுவி, உடைகளைக் களைந்து நன்கு உதறுங்கள். தீய எண்ணங்கள், தீய சக்திகள் பலவும் (negative forces, negative vibrations) ஆடைகள், காலணிகள், உடல் மேல் ஒட்டி வந்து வீட்டிலும் பரவி விடக் கூடாது. வாரம் மூன்று முறை சாம்பிராணி தூபமிட்டு கோட் ஸ்டாண்ட், பீரோவில் உள்ள துணிகள், வாஷிங் மெஷின் என வீட்டில் ஒரு அங்குலம் விடாது அன்னைத்திலும் சாம்பிராணி தூபக் காப்புப் பட்டால்தான் திருஷ்டி தோஷங்கள், சாபங்கள், பிணப் பூ மிதி தோஷங்கள் போன்றவை ஓரளவேனும் நிவர்த்தியாகும்.

அடிக்கடி கடிகாரத்தையோ சுவர் கடிகாரத்தையோ (wallclock) பார்க்கும் வழக்கம் உள்ளவர்கள் “ஓம் ஸ்ரீகாலபைரவா போற்றி, உன்னருளால் காலம் தெய்வீகமாகக் கனியட்டும்” என்று பிரார்த்தித்து மணி பார்க்கும் நல்ல வழக்கத்தை மேற்கொண்டிடுக!

இறைவனுக்கு அழகாகப் பூக்களைக் கோர்த்துத் தந்து, அபிஷேக ஆராதனை செய்பவர்களே நல்ல அழகுடன் பிறக்கின்றார்கள். எனவே அழகானவர்களைக் கண்டிடில் இறைவனுக்குப் பூத்தொடுத்த தொண்டரின் ஆத்ம சக்தியை வழிபடுகின்றோம் என்று பிராரத்தித்தால் வேறு எந்த விதமான தவறான எண்ணங்களும் தோன்றாது முதலிலேயே தடுத்திடலாம்.

முக்தி நிலையை அடைய இருப்பவர்களுடைய கடைசிப் பிறவி புனிதமான பாரதத்தில், அதுவும், கோயில் வளம் பொதிந்த தமிழ் நாட்டில்தான் என்ற வேத சத்தியத்தை உணரத் தொடங்கினால்தான் பாரதத்தில் மானுடராகப் பிறப்பது எத்தகைய பாக்யம் என்பது புலப்படலாகும்.

விவசாயம், ஆசிரியப் பணி, என்ஜீனியர், மளிகைக் கடை என அவரவருக்கு எனத் தொழிலும், பணியும் விதவிதமாய் அமைந்து பல்லாயிரக்கணக்கான வாழ்க்கை முறைகள் இருப்பதால்தான் உலக சிருஷ்டி வாழ்க்கை இயங்குகிறது. இறைவன் ஒருவனே! ஆனால் அவரவர் தம் தொழிலில் சிறந்திடவே இறைவனும் பலவிதங்களில் அருள் புரியப் பல வடிவங்களைக் கொள்கின்றார். நிலையற்ற மனத்தில் கடவுளின் பல வடிவ வழிபாடே நன்கு ஒன்றி நிலைபெற்றுச் சிறப்படைகின்றது.

உங்கள் மனம் மிகவும் கேவலமான எண்ணங்களில் உழல்வதாக நீங்கள் எண்ணினால் தினமும் காலையும், மாலையும் அம்பாளின் சந்நிதியில் கால் மணி நேரம் நின்று கதறி அழுது வழிபடுக! கண்களில் தானாகவே நீர் வழிய ஆரம்பித்தால் நீங்கள் திருந்தத் தொடங்கி விட்டீர்கள் என்பது பொருள்!

கட்டணம் வாங்காது மிகச் சிறந்த இலவச இறைப் பணியாக நன்முறையில் புனிதமான வழிமுறைகளில் அடக்கம், பணிவுடன் அகங்காரமின்றி அருள்வாக்கு, நாடி வாசித்தல், ஜோதிடம் சொல்வோர்க்குப் பிற லோகத்துப் பித்ரு லோக மற்றும் நல்தேவதைகள் துணை புரிகின்றனர். ஆனால் புனிதமான இத்துறைகளைப் பேராசையால், துர் ஆசையால் வியாபாரமாக்கினால் துர்தேவதைகள் உள்ளே புகுந்து பலத்த சாபங்களே கிட்டும். இத்துறைகளில் கிட்டும் தொகையை இறைவழிபாடுகளுக்கும், தான, தர்மங்களுக்கு மட்டுமே பயன்படுத்திட வேண்டும்.

உலக ஜீவன்கள் யாவும், யாவரும் இறைவனை நம்புபவர்களே! புல், பூச்சி முதல் மனிதர் வரை எவரும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் எவருமில்லை! ஆனால் மரண பயம் வருகையில்தான் பலருக்கும் இறைவழிபாடுகள், தான தர்மமின்றி வாழ்க்கையை வெறுமனே கழித்த பாவ நிலைகள் புரிய வருகின்றது!

உங்கள் வீட்டிற்கு அருகில் நாயோ, பசுக்களோ, வேறு பிராணிகளோ அடிக்கடி கத்திக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தால் ஏதோ கத்துகின்றது என்றில்லாமல் அக்குரல் த்வனிகளை உற்றுக் கவனியுங்கள். பல மிருகங்களுக்கும் குறிப்பாகப் பசுக்களுக்கும், நாய்களுக்கும் எதிர்காலத்தைப் பற்றிய செய்திகளை அறிந்து உணர்விக்கும் பகுத்தறிவு உண்டு. இவ்வாறு கவனித்து கேட்டு வந்தால் அவை அளிக்கும் செய்திகளை அறியும் பகுத்தறிவும் உங்களுக்கு உண்டாகும்.

ஒரு நாளைக்கு குறைந்தது 21 கோபுரக் கலசங்களை தரிசிப்பது என்று வைராக்யம் எடுத்துக் கொள்ளுங்கள். சிறு, ஊர்களில் இருப்போர் தெய்வ மூர்த்திகள் கோபுரங்கள், கலசங்கள், அரசு, ஆல், போன்ற தேவ விருட்சங்கள் போன்ற 21ஐத் தரிசித்திட வேண்டும்.

தினமும் பசுவிற்கு ஏதேனும் உண்ண அளித்து 12 இடங்களில் குங்குமம் இட்டு மூன்று முறையேனும் வலம் வந்து வணங்கிடில் ஞாபக சக்தி பெருகிடும்.

ஸ்ரீபைரவருக்குச் சார்த்தப்பட்ட கறுப்பு அரைஞாண் கயிறுகளை (இடுப்புக் கயிறு) அல்லது மணிக் கட்டுக் கயிறுகளை எப்போதும் கைவசம் வைத்திருந்து ஏழைக் குழந்தைகளுக்குத் தானமாக அளித்து வாருங்கள். இது உங்கள் வீட்டுப் பெண்களுக்குக் காப்பு சக்தியை அளிக்கும்.

ஆலயத்திற்குச் செல்லும்போது ஒரு பையை எடுத்துச் சென்று ஆங்காங்கே பக்தர்களின் கால்களில் மிதிப்படும் தளங்கள், இலைகள், பூக்கள், குப்பைகளைப் பொறுக்கி சுத்தம் செய்யுங்கள். இதில் எவ்விதக் கேவலமும் கிடையாது. இத்திருப்பணியின் பலனானது கேவலமான எண்ணங்களுடன் வாழாது மனசுத்தியுடன் வாழ உதவும்.

உங்களுக்கென்று தனிப்பட்ட ஒரு (மரப்) பேனாவை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எவருக்கும் இரவல் தராதீர்கள்! அதில் positive energies சேருமாறு நன்கு பூஜித்து சங்கு உறையில் வைத்து, சந்தனம், குங்குமம் இட்டு வழிபட்டு வாருங்கள்.

ஒரு நாளைக்கு ஒருவரிடமாவது நல்ல இறை விஷயங்களைப் பேசிடுக! குறைந்தது 51 முறை ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஓதி ஒரு வாழைப் பழத்தையாவது ஓர் ஏழைக்கோ, பசுவிற்கோ அளித்திடுக! “அப்பாடா! ஒரு நல்ல காரியமாவது செய்தோம்” என்று திருப்தியுடன் தினமும் உறங்கிடலாம்.

நெற்றி நிறைய முழுத் திருநீறு, மூன்று நாமங்களுடன் தைரியமாக, கூச்சப்படாமல் அலுவலகத்திற்கோ, வெளியிலோ சென்று வருக! குறைந்தது ஆயிரம் பேராவது உங்கள் நெற்றிச் சின்னத்தைத் தரிசித்து ஒரு, விநாடியாவது அதைக் கண்டு மானசீகமாக வழிபடுவார்கள். தங்கள் கஷ்டங்களை ஒரு விநாடி நேரமாவது மறக்க இது துணை புரியும். இது ஒரு மகத்தான சமுதாயத் தொண்டு.

தெய்வ மூர்த்திகளை வெறும் காட்சிப் பொருளாகக் கண்ணாடிக் கேஸில் வைக்காதீர்கள். வைத்திருப்பின் தினமும் புஷ்பம் சார்த்தி கற்பூர ஆரத்தி எடுத்து பிரசாதம் படையுங்கள். தெய்வமாக மதித்தால்தான் பிறரால் மிதிபடாமல் சாந்த வாழ்க்கையை பெற்றிடலாம்.

தினமும் நெற்றிக்கு விபூதி, குங்குமம், சந்தனம், சிந்தூரம் இடும் முன் முதலில் ஏதேனும் தெய்வ மூர்த்திக்கு இட்ட பிறகே தான் இட்டுக் கொள்வது என்று வைராக்யம் கொண்டிடுங்கள்!

பிணத்தின் மேல் பட்ட பூக்களை மிதித்தாலோ, அவற்றின் மேல் வண்டி ஏறிச் சென்றாலோ, வீடு திரும்பிய பின் உடனடியாகக் கை, கால்களைக் கழுவி வண்டியின் டயர், சக்கரங்களையும் நன்னீரால் கழுவி தூபம் காட்ட வேண்டும். பிண தோஷங்கள் ஒட்டினால் அவ்வளவு எளிதில் அகலாது. ஆலயங்களில் வழிபடும் போது எப்போதும் கூப்பிய கரங்களோடு இருங்கள்! கைகளைப் பிரித்து வீசி நடக்காது கைகள் சேர்ந்தே இருக்கட்டும்! இறைசக்திகள் வெளிச் சிதறாது தேகத்தில் ஐக்யமாக இது உதவும்.

கற்பூர தீபாராதனையைத் தரிசிக்கும் போது கண்ணாடியைக் கழற்றி விட்டுக் கண்களால் நேரே தரிசிப்பதே நேரடியாக தீபகிரணங்களின் சக்திகளைப் பெற்றுத் தரும். கண்ணாடியைக் கழற்றினால் தீப தரிசனம் சரியாக தெரியாதே என்று எண்ணல் வேண்டாம். கிட்டிய தரிசனம் வரை போதுமானது என்று திருப்தி கொண்டால் தான் உள்முக ஆத்மானுபவம் ஆரம்பிக்கும்.

கடன் வாங்கும் போதும், கொடுக்கும் போதும், ராகு காலம், எம கண்டம், சூன்ய திதி, சந்திராஷ்டம நாள் இல்லாது, அமிர்த யோகம், சித்தயோகமாக இருப்பதுடன் குறித்த திதி, நட்சத்திரங்களையும் கணித்துச் செயலாற்றினால் அநாவசியமாகக் கடன் சேராது! கொடுத்த கடனும் ஒழுங்காகத் திரும்பி வரும்.

வீரபத்ரர், குபேரன், கங்காளேஸ்வரர், ஜேஷ்டா தேவி, ஜுரஹரேஸ்வரர், பிட்சாடனர் என நாம் அடிக்கடி தரிசிக்காத பல தெய்வீக மூர்த்திகள் நிறைய உண்டு. இதனால் இத்தெய்வ வழிபாடுகளினால் கழிய வேண்டிய கர்மவினைகள் அப்படியே தங்கிப் போய் இத்துன்பங்கள் தொடர்ந்து வரும். பிரதோஷம், விஷ்ணுபதி, மாத சிவராத்திரி, பௌர்ணமி கிரிவலம் போன்ற விசேஷ தினப் பூஜைகள்தாம் இக்குறைகளை நீக்க வல்லவையாம்.

ஸ்ரீஅகோரவீரபத்திரர் காருகுடி முசிறி

ஒவ்வொருவரும் வருடத்திற்கு ஒரு முறையாவது 48 நாட்கள் கொண்ட ஒரு மண்டல பூஜையை எவ்விதமாவது அனுசரிக்க வேண்டும். முதலில் எளிமையாகச் செய்து பழகுங்கள். உதாரணமாக 48 நாட்கள் தொடர்ந்து ஆலயக் குளத்தில் மீனுக்குப் பொரி இடுதல், 48 நாட்களுக்குத் தினமும் சண்டிகேஸ்வரருக்குச் சந்தனம் சார்த்துதல் போன்றவையும் எளிய மண்டல பூஜைகளே. இதனால் வைராக்யச் சித்தம் உண்டாகும்.

மாதமொரு முறை தேனிமலை, நெடுங்குடி, திருஅண்ணாமலை போன்ற கிரிவலம், மலைத் தலவழிபாடு, அடிப்பிரதட்சிண வழிபாடு, தீர்த்த நீராடல், சுய நாம ஜபம் ஆகிய ஐந்தையும் மேற்கொண்டால் குடும்பத்தில் தேவையில்லாத சண்டைகள் ஏற்படாது.

பிள்ளைகளைத் திட்ட வேண்டிய, அடித்துத் திருத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் அந்நாளில் மாலையில் ஸ்ரீவீரபத்ரர் சந்நிதியில் பெற்றோர்களும், பிள்ளைகளும் இவ்வாறு நிகழ்ந்தமைக்கு மன்னிப்புக் கேட்டு வழிபடுங்கள். இது பெற்றோர்களையும், பிள்ளைகளையும் திருத்தும் நல்வழியாகும்.

கால் தடுக்கி விழுந்து அடிபட்டால் காலணிகளைத் தானம் செய்து வர வேண்டிய புண்ய சக்தியால் கழிய வேண்டிய கர்ம வினைகள் அதிகமாகச் சேர்ந்து விட்டன என்று பொருள். எனவே உடனடியாக அதே நாளில் நல்ல காலணிகளைத் தானமாக அளித்திடுங்கள்.

விபூதி, சந்தனம், குங்குமம் தலையில் மூலிகைத் தைலம், கடுக்கன், மூக்குத்தி, ருத்ராட்சம், மணிக்கட்டுக் கயிறு, இடுப்புக் கயிறு, கால் மெட்டிகள், பூணூல் இவற்றை எப்போதும் அணிந்திருப்பதால் பல தேவதைகளின் காப்பு சக்தி உங்களைத் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

தீயத்தூரும் ஓமியோபதியும்

ஆதியில் ஐந்து சிரங்களுடன் பொலிந்த ஸ்ரீபிரம்ம மூர்த்தி “தாமே பிரபஞ்சத்தில் அனைத்தையும் சிருஷ்டிக்க வல்லவர்” என்ற அகந்தை பூண்டமையால், சிவபெருமான் அவருடைய ஐந்தாம் சிரசை எடுத்திடவே, பிரமருக்கு ஐந்தாம் சிரசு பதிந்த இடத்தில் தாங்கொணாத அக்னிக் குழம்பு ஜுவாலை ஏற்பட்டிட, ஸ்ரீஅகஸ்தியர் பிரான் அருளியபடி, ஸ்ரீபிரம்ம மூர்த்தி தீயத்தூரில் அக்னி ஹோமங்களை நிகழ்த்தி தம் அக்னிக் குழம்பு ஜுவாலைக்குத் தீர்வு கண்டார்.

உஷ்ண நோய்க்கு உஷ்ண மருந்தே தீர்வாயிற்று! இது ஹோமியோபதித் தத்துவம்! (அக்னி) ஹோமத்திற்கு (அக்னி) ஹோமமே அடைக்கலம் என்ற வகையில் ஹோமியோபதித் தத்துவம் பிறந்தது இந்தப் புனித பூமியில்தாம்! ஓமத்திற்கு ஓமமே ஒக்கும் என்ற ஹோமியோபதித் தத்துவம் ஜெர்மனியில் வளர்ந்ததாகக் கருதினாலும் இந்த தீயத்தூர் புனித பூமிக்கும் ஜெர்மனி நாட்டிற்கும் ஆன்மீகத் தொடர்புகள் நிறைய உண்டு. எனவே ஜெர்மனியில் பிறந்தோர் அல்லது ஜெர்மனியில் வாழ்வோர் தம் வாழ்நாளில் ஒரு முறையேனும் தீயத்தூர் சிவலிங்கத்தைத் தரிசித்தல் பெரும் பாக்யமாகும். ஜெர்மனியில் பணி புரியச் செல்வோர் இத்தலத்தில் வழிபட்டுச் செல்தல் விசேஷமானதாகும்.

நேர் குணத்திற்கு நேர் குணப்பாடே சத்யம் எனப்படுவதே ஹோமியோபதி மருத்துவத் தத்துவம். சித்த மருத்துவத்தில் சில வகை நோய்களுக்கான மூலிகை வைத்தியங்கள் பலவும் ஹோமியோ முறையில்தாம் செயல்படுகின்றது. அதாவது சித்த வைத்தியத்தில் பிறந்ததே ஹோமியோ மருத்துவம், எனவே ஹோமியோபதி மருத்துவர்கள் தீயத்தூர் சிவத்தலத்தில் வழிபட்டு வந்தால் தம் மருத்துவத் துறைகளில் நன்கு சிறப்படைவர். நவக்கிரக ஹோமங்களில் அந்தந்த கிரகத்திற்குரிய சமித்து வகைகள் ஓமையக் கற்பம் முறையில்தான் அமைந்துள்ளன.

சித்துக்காடு சிவாலயம்

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam