ராமபாணம் மாய்ப்பது எதை ?

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஸ்ரீராமபாணம் மகத்துவம்

ஸ்ரீராமபிரான் பிரயோகம் செய்த ராம பாணங்கள் எத்தனையோ உயிர்கள் நன்னெறி அடைய உதவின. எத்தனையோ லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ராமபாணத்தால் இன்றைய மக்களுக்கு விளையும் நன்மைகள் யாதோ என்று உங்களுடைய மனம் அறியத் துடிக்கலாம். காலையோ மாலையோ சூரிய ஒளி நீர்த் திவலைகளில் பட்டுப் பிரகாசிப்பதே வானவில் என்று அனைவரும் அழைக்கும் ராம பாணமாகும். ராமபாணம் என்னும் வானவில்லைப் பார்த்தால் பல விஷயங்கள் மறந்து விடும் என்று பெரியோர்கள் கூறக் கேட்டிருக்கலாம்.இது உண்மையே. உலகப் பொருட்களின் மேல் உள்ள பற்று மறைந்து இறைப் பற்று அதிகரிப்பதையே இந்தக் கூற்று தெளிவுபடுத்துகிறது. இங்கு நீங்கள் காணும் வீடியோ படத்தில் காணும் ராமபாணம் அரிதிலும் அரிதாக ஆடி அமாவாசை அன்று திங்கட் கிழமை அதிகாலையில் தோன்றியதாகும். அமாவாசை என்பது பித்ரு நாயகர்களுக்கு உரியதே. அதிலும் சிறப்பாக இத்தகைய ஞாயிற்றுக் கிழமையும் திங்கட் கிழமையும் இணையும் சங்கமத்தில் திகழும் அமாவாசை சோமாதித்யம் என்னும் பித்ரு மண்டலத்தில் உறையும் பித்ருக்களுக்கு அதீதமான சக்திகளை அளிப்பதாகும்.

சோமாதித்யம் என்றால் திங்களும் ஞாயிறும், சந்திரன் சூரிய சக்திகள் சங்கமிக்கும் தினம் என்றுதானே பொருள். இத்தகைய சங்கமத்துடன் ராம பாணமும் இணைவது என்றால் இந்த தரிசன பாக்கியத்தை அளிக்கும் உங்கள் பித்ரு தேவர்கள் சோமாதித்ய மண்டலத்தில் குடி கொண்டுள்ளார்கள் என்பதே இதன் மேலோட்டமாக பொருள். உங்களுடைய பித்ருக்கள் இத்தகைய ஒரு சிறந்த பித்ரு மண்டலத்தில் திகழ்ந்தாலும் அந்த பித்ருக்களின் ஆசியை எப்படிப் பெறுவது என்பதை நீங்கள் உணர்ந்து செயல்பட்டால்தான் அவர்களுடைய பிதுர் மண்டல வாசம் உங்களுக்குப் பயனுடையதாக இருக்கும். ஒருவருடைய தந்தையோ சகோதரரோ ஒரு வங்கியல் பணிபுரிவதால் மட்டும் ஒருவருக்கு இலவசமாகப் பணம் கிடைக்குமா என்ன ? ஆனால், அவர் வைத்திருக்கும் பழைய ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புது நோட்டுகளை, நாணயங்களை அவர் எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்பதே அவருக்கு கிடைக்கக் கூடிய ஒரு சலுகை. அதுபோல மற்றவர்களைவிட ராமர், ராமநாதன், ராமகிருஷ்ணன் என்ற ராம நாமம் உடைய பித்ருக்கள் இத்தகைய சோமாதித்ய பித்ரு மண்டல சக்திகளை எளிதில் பெற அவர்களுக்குத் துணை நிற்பதே நீங்கள் இங்கு காணும் வீடியோ படமாகும். ஒரு முறை ராமச்சந்திர லோகத்தில் ஒரு சர்ச்சை எழுந்தது. தசரதர் என்ற நாமம் உயர்ந்ததா இல்லை தாசரதன் என்ற நாமம் உயர்ந்ததா என்பதே அந்த விவாதத்திற்குரிய பொருள். தசரத சக்கரவர்த்தியின் திருமகன் என்பதே தாசரதன் என்ற நாமத்தின் பொருள். அவ்வாறிருக்க இந்த இரண்டு நாமங்களில் எது உயர்ந்தது என்று எப்படிச் சொல்வது ? இது பற்றி வேதநாயகனான பரம்பொருளை அணுகலாம் என்றால் பரம்பொருளோ ராம நாமமே அனைத்திலும் உயர்ந்தது என்று சொல்லக் கூடியவர். முடிவில் அவர்கள் அனைவரும் எல்லா தெய்வீக வினாக்களுக்கும் விடை அளிக்கும் நவநாத சித்தர்களை அணுகினர். தசரத குழுவின் வாதங்களையும், தாசரத குழுவின் பிரதிவாதங்களையும் கவனமாகக் கேட்ட நவநாத சித்தர்களோ ... ... ... என்ற நாமமே உயர்ந்தது என்று தெளிவுபடுத்தினர். நவநாத சித்தர்களின் இந்த அற்புதமான பதிலைக் கேட்டு அனைவரும் பிரமிப்பு அடைந்தனர். நவநாத சித்தர்கள் அளித்த தீர்ப்பு எவராலும் அங்கீகரிக்கக் கூடிய இறுதி தீர்ப்பே என்றாலும் உங்கள் மனது இந்த தீர்ப்பிற்கான விளக்கங்களை அறிந்து கொண்டால்தானே சிறப்பாக இருக்கும் ? அதற்கு வழிகோலுவதே இத்தகைய சோமாதித்ய மண்டல தரிசன நாள் அன்று நீங்கள் இயற்றும் வழிபாடுகளாகும்.

சிகண்டிபூர்ணம் சிதம்பரம்

ஒரு அடியார் சிகண்டிபூர்ணம் என்றால் என்ன என்று விளக்க முடியுமா என்று கேட்டுள்ளார். சிகண்டிபூர்ணம் என்பது சிதம்பர ஆலய மணிக்கு சித்தர்கள் வழங்கியுள்ள நாமம் என்பது நீங்கள் அறிந்ததே. இது சம்பந்தமாக பல வருடங்களுக்கு முன் நம் சற்குரு அருளிய பதிலை இங்கு அளிக்கிறோம். “சிகண்டிபூர்ணம் என்ற வித்தியாசமான ஒரு பெயரை ஏன் சிதம்பர ஆலய மணி பூண்டுள்ளது என்பது பலரின் இதயத்தில் ஒலிக்கும் கேள்வி என்றாலும் இது பற்றி எதுவும் தெரிவிக்க சித்தர்கள் முன்வரவில்லை. காரணம் இந்தப் பெயர் விளக்கம் மனித அறிவிற்கு அப்பாற்பட்டு ‘ஒலிப்பதே’ ஆகும். ஆனால், கேள்வி என்று அடியேனிடம் வந்து விட்டால் அதற்கு பதில் சொல்ல வேண்டியது குரு என்ற முறையில் அடியேனுடைய கடமை ஆகிவிடுகின்றது அல்லவா ? சிகண்டி என்றால் குரு கிரகம் என்று பொருள், சுருக்கமாக குரு என்று கூறுலாம். குரு என்று ஒருவர் இருந்து விட்டால் நிச்சயம் அவருக்கு சீடன் என்ற ஒருவன் இருக்க வேண்டியது அவசியம் அல்லவா ? இந்த குரு சீடன் என்று தத்துவத்தையே சிதம்பரம் ஆலயத்திலுள்ள ஆலயமணி குறிக்கின்றது. சற்குருவானவர் தன்னலமற்ற தியாகத்தின் பிரதிபலிப்பு. திருக்கோயில்களில் நாம் இறைவனுக்கு நைவேத்யம் செய்யும்போது ஆலயமணி ஓசையை எழுப்புகிறோம். இறைவனுக்கு நைவேத்யம் அளித்தல் என்ற தன்னலமற்ற செய்கையால் இறைவன் பரமானந்தம் கொள்கிறான். இந்த பரமானந்த சக்திகள் உலகம் முழுவதும் வியாபித்து கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் கருப்பையில் இருக்கும் உயிர்க்கும் ஆனந்தம் என்னும் சக்தியை ஊட்ட வேண்டும் என்பதே ஆலய மணியின் நோக்கம். இத்தகைய சக்தி வாய்ந்த ஒலியை எழுப்பக் கூடியது ஒரு ஆலய மணி என்றால் அந்த ஆலயமணி எத்தகைய தெய்வீக சக்திகளுடன் துலங்க வேண்டும். பூரணம் என்றால் இறைவன் ஒருவனே. பூரணமான இறைவன் உறையும் தலங்களுள் முதன்மையானது சிதம்பரம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சித் அம்பரம் என்றால் அறிவை உடைய ஆத்மாக்கள் அனைத்தும் உறையும் திருத்தலம் என்று பொருள். அதாவது சிதம்பர ஆலய மணி ஓசையானது வெறும் மனிதர்களுக்கு மட்டுமோ, விலங்குகளுக்கு மட்டுமோ, தாவரங்களுக்கு மட்டுமோ கேட்கும் ஒலி என்று பொருள் அல்ல. அசைவன அசையாதவன, உயிர் உள்ளன, உயிர் பிரகாசம் இல்லாது துலங்குவன அனைத்திற்கும் ஆனந்தம் அளிப்பதே சிகண்டி பூர்ணம் என்ற ஆலயமணி ஓசை. சிகண்டி என்றால் மயில் என்ற ஓர் அர்த்தமும் உண்டல்லவா ? இதன் பொருளை நீங்களே விரைவில் அறிந்து கொள்ள முடியுமே ? ஆம், சிவபெருமானுக்கு உண்மையான சீடனாகத் திகழும் தகுதியுள்ளவன் மயில் வாகனன் முருகப் பெருமான் ஒருவனே. இந்த குரு சீட தத்துவத்தை முருகப் பெருமானும் சிவபெருமானும் உலகிற்கு உணர்த்திய திருவிளையாடலே அலாதி சுவை வாய்ந்ததாகும். முருகப் பெருமான் ஓர் உயர்ந்த ஆசனத்தின் மேல் அமர்ந்திருக்க சுவாமிநாதனின் திருவடிகளில் பிரம்மாண்ட நாயகனான சிவபெருமான் கை கட்டி வாய் மூடி மண்டியிட்டு அமர்ந்தவாறு ஓங்காரத்தின் பொருளை வினவுகின்றார். ஓங்காரத்தின் பொருளை ஞானபண்டிதன் கீதோபதேசமாக அருள்கின்றான். எப்படி ? “அப்பா, அப்பா, அப்பா,” என்று மும்முறை அழைத்து குரு தத்துவத்தை உலகில் நிலைநாட்டினானே ஞானப்பழம் என்று நவநாத சித்தர்கள் ஓங்கார உபசேதத்தின் அழகை வர்ணிக்கிறார்கள். ”

பேரூர் ஜெயவில்

ராமபாணமோ ஒளியின் மகிமையை விளக்குவது, சிகண்டிபூர்ணமோ ஒலியின் பெருமையை உணர்த்துவது, இரண்டும் இணையும் அம்பலம் யாதோ என்பதே உங்கள் வினா அல்லவா ? ஒலியின் மூலமாக ஒளியின் மகிமையை உணர வைக்கவோ அல்லது ஒளி பிரகாசத்தின் மூலம் ஒலியை இரசிக்கவோ உங்களுக்கு உதவ சித்தர்கள் என்ற பிரபஞ்சத்திலேயே மிகவும் உயர்ந்த இறை ஆத்மாக்கள் இருக்கும்போது நீங்கள் எதை குறித்து கவலை கொள்ள வேண்டும் ? மேற்கூறிய பேரூர் சிவாலயத்தில் திகழ்ந்த வானவில்லோ சில நிமிடங்களே நிலைத்திருக்கக் கூடியது, சிதம்பர ஆலய மணி ஓசையோ நீங்கள் நினைக்கும்போது எல்லாம் கேட்க முடியாதது. ஆனால், ஒளியும் ஒலியும் இணையும் அமாவாசை தினங்களில் இவ்வாறு ஒலி ஒளி இரகசியங்களை உணர முயற்சி செய்பவர்கள் ஆற்ற வேண்டிய வழிபாடே இத்தகைய அனுகிரகத்தை அளிக்க வல்ல சோமாதித்ய பித்ரு மூர்த்திகளை வழிபடும் தர்ப்பணமாகும். புனித நதிக்கரைகளில், திருத்தலங்களில் இத்தகைய வழிபாடுகளை நிறைவேற்றுதல் ஏற்புடையவை என்றாலும் அவரவர் வசதி வாய்ப்பைப் பொறுத்து தூய்மையான எந்த இடத்திலும் மனத் தூய்மையுடன் எவரும் இத்தகைய தர்ப்பண பூஜைகளை நிறைவேற்றலாம். இங்கு மனத் தூய்மை என்பது நம் முன்னோர்கள் இடத்தில், நம் சற்குருவின்பால் நமக்கு உள்ள நம்பிக்கையே ஆகும். ஒரு பித்தளை அல்லது மரத் தாம்பாளத்தில் 12 செவ்வாழை பழங்களுக்குக் குறையாமல் வைத்து அதன் மேல் தர்ப்பை சட்டத்தை அமைத்து நம் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் அளித்தலே சோமாதித்ய பித்ரு மூர்த்திகளின் ஆசிகளை பெற்றுத் தரும் வழிபாடாக மலரும் என்பதே சித்தர்களின் அருள் வாக்கு. தர்ப்பணத்திற்குப் பின் இந்த வாழைப்பழங்களை பசுக்களுக்கு அளித்தல் வேண்டும். உலகம் முழுவதும் சிவபெருமான் எழுந்தருளி இருந்தாலும் காசி விஸ்வநாதருக்கு என வாரணாசியில் எழுந்தருளி உள்ள சிவசக்திக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கத்தானே செய்கிறது ? அதுபோல உலகம் முழுவதும் வானவில் தோன்றினாலும் பேரூரில் தோன்றும் ஸ்ரீராமபாணத்திற்கு ஒரு தனிப்பட்ட முக்கியத்துவம் இருக்கத்தான் இருக்கிறது. அதுவே ஆடக மின்னல் என்ற பொன் சக்தியாகும்.

ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் ஆலயம்
முசிறி

ஆடக மின்னல் என்ற பதம் ராமபாணத்தில் அதிலும் சிறப்பாக பேரூர் திருத்தலத்தில் துலங்கும் ஏழு வண்ண நிறமாலையில் மிளிரும் பீஜாட்சர சக்திகளுடன் திகழ்வது. தங்கங்களில் எத்தனையோ வகைகள் உண்டு என்பதை நாம் அறிவோம். இதில் ஆடக தங்கம் என்ற ஒருவகை தங்க சக்திகள் துலங்கும் இடமே பேரூர் திருத்தலம் ஆகும். நீங்கள் தரிசிக்கும் மேற்கண்ட ஸ்ரீராமபாணத்தில் மட்டுமே இத்தகைய ஆடக சக்திகள் மிளிர்கின்றன என்பதே வேறு எங்கும் தரிசிக்க முடியாத ஆடகச் சிறப்பாகும். இதை அறியாதவர்களா சித்தர்கள் ? சித்தர்கள் இந்த ஆடக சக்திகளை பயன்படுத்தும் விதமே அலாதியானதுதானே ? ஆடக தங்க சக்திகள் பெருகும் பேரூரில் சுமார் 3000 மாங்கல்யங்களை நம் அடியார்கள் மூலம் தயார் செய்து அதை ஆடக நாயகன் எழுந்தருளி உள்ள திருஅண்ணாமலையில் ஆடக தங்க சக்திகள் துலங்கும் ஒரு முகூர்த்த நாளில் ஹோமம் இயற்றி இந்த மாங்கல்யங்களை வைத்து திருஅண்ணாமலையாரின் அனுகிரகத்துடன் தமிழ்நாடு முழுவதும் உள்ள தம்பதிகளுக்கு இந்த அரிதிலும் அரிய ஆடக தங்க சக்திகளை விநியோகித்ததே நம் சற்குருவின் பெருமை ஆகும். இந்த 3000 மாங்கல்யங்களில் 1000 மாங்கல்யங்கள் தங்க முலாம் பூசிய வெள்ளி மாங்கல்யங்களாகும். ஸ்ரீராமர் ஜாதகத்தில் குரு சந்திர யோகம் பலம் அடைந்துள்ளதைப் போல் வேறு எந்த மானிடனின் ஜாதகத்திலும் இத்தகைய சக்தி வாய்ந்த கஜகேசரி யோக அமைப்பு கிடையாது எனலாம். குருவின் அனுகிரகத்தைப் பெற்றுத் தருவது தங்கம், வெள்ளியின் வெண்மை நிறம் சந்திர பகவானுக்கு உரியது. இப்போது சொல்லுங்கள் பேரூர் திருத்தலத்திற்கு இணையான ஆடக சக்திகள் பொலியும் தலம் ஒன்று உண்டா ? இங்கு பொலியும் ராமபாணத்திற்கு இணையான ஒரு அஸ்திரம் ஏதாவது உண்டா ?

ஸ்ரீகாலபைரவர் மங்களம்

பேரூரில் பொலியும் ஆடக சக்திகளை மக்களுக்கு விநியோகம் செய்யும் எளிய முறையே இவ்வாறு தங்க முலாம் பூசிய மாங்கல்யங்களை தானம் அளிப்பதே என்பது இப்போது புலனாகின்றது அல்லவா ? ஆனால், மண் தாலியைப் போல் இந்த வெள்ளி மாங்கல்யங்களையும் பராமரித்தல் கடினமே. எப்படி மண் தாலியை சுமங்கலி சக்திகள் குறையாமல் கவனமாகக் கையாள வேண்டுமோ அவ்வாறு இந்த ராம பாண ஆடக சக்திகள் மிளிரும் மாங்கல்யங்களையும் சுமங்கலித்துவ சக்திகள் குறையாமல், பழுதுபடாமல் காக்க வேண்டும் என்பது முக்கியம். நடைமுறையில் இது எத்தனை பேருக்கு சாத்தியம் என்பதால் இந்த வெள்ளி மாங்கல்யத்தை அளிக்கும் முன் இது தங்க முலாம் பூசிய வெள்ளி மாங்கல்யம்தான் என்பதை அந்த மாங்கல்ய தானத்தை வாங்கும் தம்பதிகளிடம் தெளிவாக எடுத்துக் கூற வேண்டியது தானம் அளிப்பவர்களின் கடமை ஆகும். பேரூர் திருத்தலம் மட்டும் அல்லாது நவமி திதி, புனர்பூசம் நட்சத்திர நாட்களிலும் இத்தகைய மாங்கல்ய தானங்களை எந்த திருத்தலத்திலும் நிறைவேற்றலாம். இத்தகைய தானங்களுக்கு சுவை கூட்டுவதே அப்பளப்பூ சேர்ந்த புளியோதரை தானமாகும். அந்த அப்பளப்பூவில் சீரகம், பிரண்டை சாற்றைக் கலந்து தயாரித்தல் சிறப்பாகும். இதுவே ஆடக வற்றல் என்றும் அழைக்கப்படும். இதன் பின்னணியின் மகத்துவத்தை அறிந்து கொள்ளுதல் சற்றே கடினமாகும். ஸ்ரீதொண்டரடிப் பொடியாழ்வார் திருமாலையில் 45 பாடல்களை அருளியிருந்தாலும் பச்சை மாமலை போல் மேனி என்ற பாடல்தானே அனைவர் அதரங்களிலும் தவழ்கிறது. இதுவே ராமபாணத்தின் நடுவில் திகழும் பச்சை நிறத்தின் மகிமையுமாகும். பேரூர் திருத்தலத்தில் அருளும் ஸ்ரீவரதராஜ பெருமாளை தரிசனம் செய்து பச்சை மாமலை போல் மேனி என்ற பாடலை குறைந்தது 108 முறை ஓதி ஆலயத்தை வலம் வந்து வணங்குதலால் அரிதிலும் அரிய ஆடக மின்னல் பீஜாட்சர சக்திகளை பக்தர்கள் பெருமாள் அனுகிரக சக்திகளாகப் பெற்று மகிழலாம். எப்படி நீல வானம் ஒரு வானவில்லால் சிறப்பு பெறுகிறதோ அவ்விதமே மனைவி என்ற வானவில் பக்தர்கள் வாழ்வில் சிறப்பை ஊட்டும் என்பதே இந்த வழிபாடு உணர்த்தும் மகிமையாகும்.

நவகிரக தாரை
சந்திர தரிசனம்

சென்ற 22.7.2020 புதன் கிழமை அன்று முசிறி ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் அனுகிரகமாக கனிந்த மங்கைபாக சந்திரமௌலீஸ்வர தரிசனத்தையே இங்கு அடியார்கள் தரிசனம் செய்கிறீர்கள். இது நவகிரக தாரை சந்திர தரிசனம் என்றும் வழங்கப்படும். ஆடிப் பிறையைத் தேடிப் பார் என்ற ஒரு பழமொழி உண்டு. பொதுவாக, சந்திர தரிசனம் என்பது சாதி, மத, இன பேதமின்றி அனைவரும் பெற வேண்டிய சுப சக்திகள் பூரிக்கும் ஒரு தரிசனம் என்றாலும் ஆடி மாதத்தில் பெறும் சந்திர தரிசனம், அதுவும் இந்த சார்வரி வருடத்தில் முசிறி ஸ்ரீசந்திமௌலீஸ்வரர் ஆலயத்தில் பெறும் சந்திர தரினத்தின் மகிமையை விளக்க யுகங்கள் போதாது என்பர் சித்தர். நவகிரகங்கள் அனைத்தின் சக்தியுமே பொங்கிப் பொலிவதே இந்த தரிசனத்தின் கற்பனைக்கு எட்டாத மகிமையாகும். ஆடி மாதம் என்பது சந்திரனுக்குரிய கடக ராசியில் சூரிய பகவான் பிரகாசிக்கும் மாதம்தானே. மூன்றாம் பிறை என்பது குருவின் அனுகிரகத்தை அளிப்பது.

ஸ்ரீமங்கைபாகர் மங்களம்

ஸ்ரீமரகதாம்பிகை மங்களம்

குருவின் ஆட்சி வீடான மீனராசியில் செவ்வாய் எழுந்தருளி உள்ளார். தரிசனம் பெறும் தினம் புதன் கிழமை. தரிசனம் பெறும் தினம் (2+2+7+2+0+2+0 = 6) ஆட்சி பெற்ற சுக்ர பகவானின் எண் கணித சக்திகளுடன், சுக்ர ஹோரை நேரத்தில் திகழ்கிறது. ஆட்சி பெற்ற சனீஸ்வரபகவானோ லக்னாதிபதியுடன் சேர்ந்து மகர ராசியிலிருந்து இந்த தரிசனத்தைப் பெரும் பாக்யமாகவே பெறுகிறார். இந்த வருடம் மட்டுமல்லாது நாளும் ராகு பகவானுக்கு உகந்ததாகவே மலர்ந்துள்ளது. சுவாமிநாதனான முருகப் பெருமானோ ஏதோ ஒரு யுகத்தில் இறைவனுக்கே பிரணவத்தின் பொருளை விளக்கும் திருவிளையாடலைப் புனைந்தார் என்று அல்லாது யுகங்கள் தோறும், கணங்கள் தோறுமே இவ்வாறு இறைவனின் திருவிளையாடலில் பங்கு கொண்டு பிரணவ சக்திகளை உலகிற்கு அளித்து வருகிறார் என்று உறுதி செய்வதே இங்கு சந்திர பிறை காணும் மயிலின் தரிசனமும் தொடரும் மயிலின் அகவலுமாகும். சுவாமிநாதன் என்ற நாமத்திற்கே ஒரு அலாதி மகிமை உண்டு. கனிந்த கனியான பரமாச்சாரியார் சுவாமிநாதன் என்ற நாமத்தை இயற்பெயராக பெற்றிருந்தார் என்று மட்டுமல்லாது அவர் ஸ்ரீசந்திரசேகரானந்த சரஸ்வதியாகக் கனிந்ததும் முசிறி ஸ்ரீசந்திரமௌலீஸ்வர மூன்றாம் பிறை தரிசனத்தை அலங்கரிக்கிறது எனலாம். பரமாச்சாரியார் இத்தலத்தை தரிசனம் செய்ததும் ஒரு சுவையான வரலாறே. முசிறி அருகே உள்ள மங்களம் சிவத்தலம் மிகவும் புராதன சிவத்தலமாகும். இறைவன் ஸ்ரீமங்கைபாகர் இறைவி ஸ்ரீமரகதாம்பாள். கிழக்கு நோக்கிய திருத்தலம். அம்பாள் தெற்கு நோக்கி குரு தட்சிணாமூர்த்தியாக எழுந்தருளிய அபூர்வ தலம். இந்த திவ்ய தலத்திற்கு எழுந்தருளிய காஞ்சி ஸ்ரீபரமாச்சாரியார் நடந்தே மங்களம் திருத்தலத்திலிருந்து முசிறிக்கு வருகை தந்து ஸ்ரீஇரத்தினகிரீஸ்வரரை காவிரிக் கரையிலிருந்தே தரிசித்து சந்தியாவந்தன பூஜைகளை காவிரிக் கரையில் நிறைவேற்றிய பின்னர் மூன்றாம் பிறை தரிசனத்தை ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் பெற்றார் என்பதே சித்தர்கள் அறிவிக்கும் சித்த சுவை. ஸ்ரீபரமாச்சாரியார் சுவாமிகள் ஸ்ரீசந்திரமௌலீஸ்வரரை உண்மையில் பிறை சூடிய நாயகனாகவே தரிசனம் செய்தார் என்பதே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் உண்மையாகும். காரணம் அப்போது சுவாமிக்கு ராஜகோபுரமே எழுந்தருளவில்லை. இதே முறையில் ஸ்ரீமரகதவல்லி சமேத ஸ்ரீமங்கைபாகரை தரிசித்த பின்னர் கிடைத்த ஸ்ரீசந்திரமௌலீஸ்வர தரிசனத்தையே இங்கு நீங்கள் பெறுகிறீர்கள் என்றால் இதைவிட ஒரு சிறந்த பாக்கியத்தை உங்கள் மூதாதையர்கள் உங்களுக்கு அளிக்க முடியுமா என்ன ? இத்தகைய சிறப்பிற்கு எல்லாம் மேலும் மெருகூட்டுவதாக ஆயில்யம், மகம் நட்சத்திரங்களின் சங்கமத்தில் சிம்மாயன புனித நேரத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு இந்த சந்திரமௌலீஸ்வர தரிசனம் அருளை வாரி வழங்கியது என்பதே சித்தர்கள் வழங்கும் அனுகிரக சோலையாகும்.

மங்களம் மங்கலம்

மங்கலம் என்பது தெய்வீகம், சுபம், மங்களம் என்பது இறுதி, முடிவு என்று பொருள். ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால் இரண்டும் ஒன்றே என்று விளக்குவதே மங்களம் திருத்தலத்தின் மகாத்மியமாகும். பிரம்மசர்யம் என்பது முடிந்து திருமணம் என்ற ஒளி வீசும் பாதையில் தொடர்வதுதானே மனித வாழ்க்கை. அந்த வாழ்க்கை மங்கலமாக பிரகாசிக்க அருள் வழங்கும் தலமே மங்களமாகும். எட்டு மங்கலப் பொருட்களை நம் முன்னோர்கள் தெரிவித்தார்கள்.

ஸ்ரீசகஸ்ரலிங்கம் மங்களம்

1. சாமரம்
2. நிறைகுடம்
3. கண்ணாடி
4. அங்குசம்
5. முரசு
6. ஒளி விளக்கு
7. கொடி
8. இணை கயல்
சற்றே ஆத்ம விசாரம் செய்து பார்த்தாலும் கோயில்களில் சுவாமியின் ஆராதனையாக நடக்கும் உபசாரங்கள் யாவுமே இந்த மங்கல சக்திகளை உலகிற்கு அளிப்பதற்காகவே ஏற்பட்டுள்ளன என்ற உண்மை புரிய வரும். எனவே மேற்கூறிய எட்டு உபசாரங்களை இறை மூர்த்திகளுக்கு இயற்றி வந்தாலே நம்முடைய சமுதாயம் அமைதி நிறைந்த பூஞ்சோலையாக பூத்துக் குலுங்கும் என்பதில் ஐயமில்லை. வசதி படைத்தோர் இத்தகைய உபசாரங்கள் திருக்கோயில்களில் நிறைவேறுவதற்கு வேண்டிய உதவிகளைச் செய்யலாம். பொருள் வசதி குறைவாக உள்ளவர்கள் இறைமூர்த்திகளுக்கு இத்தகைய உபசாரங்கள் நிறைவேறுவதை கண்ணாரக் கண்டு களிக்கலாம் அல்லவா ? இறை தரிசனத்தைப் பெற முடியாத சமயங்களில் இத்தகைய உபசாரங்களை கண் முன் கொண்டு வந்து தரிசிப்பதும் ஒரு அற்புத வழிபாடாக அமையும். இதுவே visualisation என்னும் அனைவரும் நிறைவேற்றக் கூடிய தியான முறையாகும். உங்கள் தியானத்தின் சக்தியைப் பொறுத்து இறைவனுக்கு உபசாரங்களே நடைபெறாத கோயில்களில் கூட இத்தகைய ஷோடச உபசாரங்கள் நிச்சயமாக நிறைவேறும். அவரவர் வசதியைப் பொறுத்து மேற்கண்ட உபசாரப் பொருட்களை திருத்தலங்களுக்கு அளித்தலும் திருமணத் தடங்கல்களை நிவர்த்தி செய்யும் தான முறையாகும். இத்தகைய உபசாரங்கள் அனைத்தையுமே தன் வாழ்நாள் முழுவதும் நம் சற்குரு நிறைவேற்றி அனைவருக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்தார் என்றாலும் நிறைகுடம், ஒளி விளக்கு என்ற இரண்டு மங்கலப் பொருட்களில் விளைந்த மூன்று பொருட்களின் தானமே நம் சற்குருவை என்றென்றும் திருஅண்ணாமலையாரின் உள்ளத்தில் நிறைத்தது எனலாம். பிரசாதம், சுவையான நீர், தீபம் என்ற இந்த மூன்று சக்திகளை குரு அனுகிரகமாக அளித்துக் கொண்டிருந்தவரே, இன்றும் உலகெங்கும் நிறைத்துக் கொண்டிருப்பவரே நம் சற்குரு.

பிரிவினை அறியா நிழலது போல ...
சாக்கோட்டை

இல்லறமே நல்லறம் எனும்போது இறைவனுக்கு அளிக்கும் உபசாரங்களில் இத்தகைய மங்கல சக்திகள் பெருகும் என்றாலும் உத்தம மனைவிமார்கள் தங்கள் கணவனுக்கு இயற்றும் உபசாரங்களிலும் மேற்கூறிய மங்கல சக்திகள் நிச்சயமாகப் பரிணமிக்கும், சமுதாயத்தில் அமைதி தவழும். இன்றைய சமுதாயம் தறிகெட்டு அலைந்து எங்கும் துன்பமும் குழப்பமும் தோன்றி மாய்ப்பதற்கு இத்தகைய சாந்த சக்திகளின் குறைபாடே முக்கிய காரணமாகும். ஒன்றிரண்டு உபசாரங்களின் மகிமையை இங்கு விளக்குகிறோம். சாமரம் என்பது மற்றொருவருக்கு விசிறி விடுவது என்பது மேலோட்டமான பொருள். தனக்குத்தானே விசிறிக் கொள்வது அல்ல. ஆனால், இத்தகைய சாமர உபசாரத்தை ஏற்றுக் கொள்ளும் தகுதியை ஒருவர் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது முக்கியம். சாமரம் என்பது பொதுவாக மயில் தோகையால் பின்னப்பட்டிருக்கும். கவரிமானின் ரோமத்தால் அமைப்பதும் உண்டு. இத்தகைய உபசாரங்கள் எல்லாம் ஒருவர் மற்றொருவருக்காக அளிக்கும் தெய்வீக சக்திகளை, ஆற்றல்களை பெருக்கி அளிக்கும் சாதனங்களாகவே திகழும். ராமானுஜர் ஸ்ரீவரதராஜ பெருமாளுக்கு கவரி வீசிக் கொண்டே அவருடன் உரையாடுவது வழக்கம். மேலோட்டமாகப் பார்த்தால் இது உபசாரம் போல் தோன்றினாலும் ஸ்ரீவரதராஜ பெருமாளின் வேத சக்திகளை தன்னுடைய சாமரத்தின் மூலம் ஈர்த்து அதை உலகிற்குப் பயன்படும் விதத்தில் அளித்துக் கொண்டிருந்ததே ராமானுஜரின் சாமர உபசார மகிமையாகும். எப்படி 30000 வோல்ட் சக்தி உடைய மின்சாரத்தை 200 வோல்ட்டாக குறைத்து வீடுகளுக்கு அளிக்கிறோமோ அதுபோல் ராமானுஜர் பயன்படுத்திய டிரான்ஸ்பார்மரே கவரியாகும். ஒரு மனைவி கணவனுக்கு விசிறி கொண்டு வீசுகிறாள் என்றால் நாள் முழுவதும் வேதம் ஓதி, இறை மூர்த்திகளை தரிசனம் செய்து, அன்னதானம் போன்ற நற்காரியங்களை நிறைவேற்றிக் கொண்டே இருந்தால்தான் இத்தகைய நற்காரியங்களில் திகழும் புண்ணிய சக்திகள் எல்லாம் காரிய சித்தி கதிர்களாக உலகில் நிறையும், சமுதாயம் அமைதி கொள்ளும். சமீப காலம் வரை முசிறியில் ஓடும் காவிரியில் பெண்கள் விடியற்காலையில் குளித்து, பித்தளை அல்லது வெண்கல குடங்களை, செம்புகளை காவிரி மண்ணால் தூய்மை செய்து அதில் சுத்தமான நீரை நிரப்பி தங்கள் இல்லங்களில் கொண்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

மௌல்விகலை தரிசனம்
முசிறி

குத்து விளக்காக, நிறைகுடமாகத் திகழ வேண்டியவள் குடும்பத் தலைவி என்ற தத்துவத்தை நிறைவேற்றுவதாக, உலகிற்கு அறிவிப்பதாக அமைந்தது இந்த நிறைகுட வழிபாடு. இந்த வழிபாட்டிற்கு புத்துயிர் அளித்தவரே கனிந்த கனி ஆவார். ஸ்ரீபரமாச்சாரியார் சுவாமிகள் காவிரியில் நீராடி சந்தியாவந்தனங்களை நிறைவேற்றினார் என்று மேலோட்டமாகத் தோன்றினாலும் ஸ்ரீமரகதாம்பாள் சமேத ஸ்ரீமங்கைபாகர் அளித்த மங்கல சக்திகளை ஸ்ரீஇரத்தினகிரி ஈசனின் மௌல்விகலை தரிசனம் பெற்று இந்த சுக்ர சக்திகளை எல்லாம் தான் பெற்ற மூன்றாம் பிறை தரிசனத்தில் ஸ்ரீசந்திரமௌலீஸ்வரருக்கு தாரை வார்த்து அளித்தார் என்பதே கனிந்த கனியின் வழிபாட்டின் பின்னணியில் அமைந்த ஒரு தூசி அளவு இரகசியமாகும். சூரிய உதயத்திற்கு முன் பிரம்ம முகூர்த்தத்தில் முசிறியில் காவிரிநதி தீரத்தில் கனியும் இரத்தினகிரி தரிசனமே மௌல்விகலை தரிசனம் ஆகும். குறைந்தது 30 வருட காலத்திற்கு இந்த மௌல்விகலை தரிசனத்தை தொடர்ந்து பெற்றவர்கள் மறுபிறவி இல்லாத முக்தி நிலையை அடைவார்கள் என்பதே மௌல்விகலை தரிசனத்தின் சிறப்பாகும். கும்பராசியில் சுக்ர பகவானைப் பெற்ற ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் வம்சாவளியில் தோன்றிய கனிந்த கனி நிறைகுட சக்திகளை தாரை வார்த்து அளித்ததில் என்ன வியப்பு ? கயல் என்றால் கருமை நிறமுடைய கெளுத்தி மீன். பெண்களின் மருளும் கண்களுக்கு இத்தகைய கயல்களை உவமையாகக் கூறினாலும் சம்பந்த நாயனார் குறிப்பிடுவது போல குடும்ப ஒற்றுமையைக் குறிப்பவையே இணை கயல்கள். எத்தகைய கொடுமையான சூழ்நிலையையும் சமாளித்து வாழக் கூடியவையே கெளுத்தி மீன்கள். ஏரி முழுவதும் நீரில்லாமல் வற்றி விட்டாலும் கணவன் மனைவி என்ற பந்தம் ஒன்றே நம்மை வாழ வைக்குமே என்ற நம்பிக்கை ஒளியை வீசுவதாகப் பாடியதும் ஒரு தமிழ்த் திரைப்பட பாடல்தானே. கோயில்களில் விளங்கும் துவியாம்ச சக்கரம் என்பவை இத்தகைய இணைகயல் வடிவங்களை குறிப்பதால் இந்த இணைகயல் சக்கரங்களுக்கு தாமே அரைத்த சந்தனத்தால் அலங்கரித்து குங்குமப் பொட்டிட்டு வணங்குதலால் குடும்ப ஒற்றுமை ஓங்கும். கால்மாடு தலைமாடு என்பதாக கணவன் பாதத்தில் தலையை வைத்து மனைவியின் பாதம் கணவனின் தலையில் படுமாறு வைத்து உறங்கிய தம்பதிகளைப் பற்றி நம் சற்குருவிடம் வினவியபோது சற்குரு சிரித்துக் கொண்டே, “இதுதான் சார், பிராக்டிக்கல் துவியாம்சு சக்கர வழிபாடு ...,” என்றார். சுவையான புதிர்தானே இது ? புதிரை விடுவித்தால் ஒற்றுமை ஓங்குமே.

ஸ்ரீராகுகேது மூர்த்திகள்
மங்களம்

ஒரு அடியார் அப்பளம், அப்பளப்பூ இரண்டும் ஒன்றா என்ற சந்தேகத்தை நிவர்த்தி செய்யும்படிக் கேட்டுள்ளார். மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இரண்டிலும் உளுந்து என்ற ஒன்று முக்கிய அம்சமாகத் தெரிந்தாலும் இரண்டின் தயாரிப்பு முறை முற்றிலும் வேறானவையே. தற்காலத்தில் அப்பளம் என்பது இயந்திரத்தின் மூலமாகவும் அப்பளப்பூ கையில் தயாரிக்கப்படுவதாகவும் உள்ளது. அப்பளப்பூவின் பின்னணி மிகவும் சுவாரஸ்யமானதே. உளுந்தை மாவாக தயாரித்துக் கொண்டு ஒரு பலகையில் கட்டைவிரல் அளவு உள்ள மாவைத் தேய்த்து பெறப்படுவதே அப்பளப்பூ ஆகும். குடும்ப ஒற்றுமைக்கு சுக்கிர பகவானின் அனுகிரகம் இன்றியமையாததே. சுக்கிர விரலால் தேய்த்து பெறப்படும் அப்பளப்பூ குடும்ப ஒற்றுமையை விருத்தி செய்யும் என்பதில் சந்தேகமில்லை. மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு தின்பண்டம்தானே என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றலாம். உண்மையில் கட்டைவிரல் அளவே ஆத்மா திகழ்வதால் புளியோதரையுடன் சேர்த்து அளிக்கப்படும் அப்பளப்பூ தானம் நாளடைவில் அவரவர் இதயத்தில் குடிகொண்ட ஆத்மாவப் பற்றிய பேரறிவையும் பெற்றுத் தரும். இவ்வாறு புளியோதரை அப்பளப்பூ தானத்தை கிரிவல அடியார்களுக்கு டன் கணக்கில் அளித்து சிவசக்தி ஐக்ய சொரூப தரிசனத்தில் அன்னதான சேவை புரிந்தார் நம் சற்குரு என்றால் தம்பதிகளின் ஒற்றுமை வளரவும் அடியார்கள் அனைவரும் தங்கள் இதயத்தில் ஒளிரும் ஆன்மாவின் தரிசனம் காணவும் விழைந்த நம் சற்குரு மேற்கொண்ட பணி எவ்வளவு உயர்ந்தது ? பொதுவாக, அப்பளப்பூ கட்டை மா, பலா, கொய்யா போன்ற மரங்களில் தயாரித்தலால் அப்பளப்பூ தானம் எத்தகைய இடர் வரினும், பொருளாதார நெருக்கடி தோன்றினாலும் இந்த தான சக்திகள் நம்மைக் காக்கும். மேடு பள்ளம் என்ற தெய்வீக இணைப்பின் மகத்துவமாகத் திகழ்வதே திருமணம் என்ற பந்தம். இதைக் குறிக்கும் வகையில் அப்பளப்பூ கட்டையில் சிறுசிறு பள்ளங்கள் அமைக்கப்பட்டிருக்கும். என்னே நம் மூதாதையர் அறிவுத் திறன். சீதாப் பிராட்டிக்கு அனுசுயா தேவி ஒரு உத்தம மனைவி கணவனுக்கு ஆற்ற வேண்டிய சேவைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது அப்பளப்பூவின் மகத்துவத்தை விவரிக்கிறாள். சீதா பிராட்டி வால்மீகி ஆஸ்ரமத்தில் லவனைப் பெற்றெடுத்தபோது லவனுக்குத் துணையாக இன்னொரு குழந்தையை, குசனை தர்ப்பை கொண்டு உருவாக்கினார் என்பது நீங்கள் அறிந்ததே. மாமுனியின் இந்த செய்கைக்கு உறுதுணையாக நின்றதே சீதாபிராட்டி ராமபிரானுக்கு தானே அப்பளப்பூ தயாரித்து உணவில் சேர்த்து வழங்கினாள் என்ற சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம். விவாகரத்து வரை சென்று விட்ட திருமண பந்தங்கள் கூட புதன் சனிக் கிழமைகளில் அளிக்கும் புளியோதோரை அப்பளப்பூ தானத்தால் சீர்பெறும். ஒரு ஜாதகத்தில் லட்சுமி கடாட்சம் என்பது ஆறில் ராகு இருக்க சுக்கிர பகவான் உச்சம் பெற்று திகழ்வதுதானே. இத்தயை லட்சுமி கடாட்ச சக்திகளை உடைய ஜாதகங்களை அடியார்கள் பெறவில்லை என்றாலும் அவர்களுக்கும் லட்சுமி கடாட்ச சக்திகளை அளிப்பதே மங்களம் திருத்தலத்தில் ராகு கேது மூர்த்திகள் இணைந்து அளிக்கும் தரிசனம் ஆகும். மங்களம் திருத்தலத்தில் வழிபாடுகளை இயற்றிய பின்னர் கனிந்த கனி பெருமான் பாதயாத்திரையாகவே முசிறி சென்று மௌல்விகலை தரிசனத்தைப் பெற்றார் என்று விவரித்துள்ளோம்.

ஸ்ரீரங்கம்

இன்றும் இத்தகைய தரிசனத்தைப் பெறுதலால் களத்திர தானமான ஏழாமிடத்தில் பாவ கிரகங்கள் இருத்தல், ஏழாம் இடத்தை பாவிகள் பார்த்தல், ஏழில் சுக்ர பகவான் நிலைகொள்தல், ஏழாமிட அதிபதியை அல்லது சுக்ர பகவானை தீய கிரகங்கள் பார்த்தல் போன்ற அனைத்து விதமான திருமண தோஷங்களும் சீர்பெறும். மங்களம் திருத்தலத்திலிருந்து முசிறி செல்லும்போது ஐயர்மலை தரிசனம் பல இடங்களில் கிட்டும். இந்த தரிசனத்தை எல்லாம் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்குதால் எத்தகைய களத்திர தோஷங்களும் தீர்வு பெறும் என்பதில் ஐயமில்லை. ஒருமுறை நம் அடியாரின் நண்பர் ஒருவர் தான் cleaning technique பயில்வதாக கூறவே, அதைப் பற்றி நம் சற்குருவிடம் கேட்டுத் தெளிவுபெற முயன்றார் அந்த அடியார். எந்த விஷயத்திலும் இறுதி முடிவு, தெளிவு என்பது சித்தர்கள் அளிப்பதுதானே. “அப்படியா ...” என்று கேட்ட நம் சற்குரு தொடர்ந்து, “Cleaning technique என்றால் என்ன என்று தெரிந்து அதை வாழ்நாள் முழுவதும் தம் நித்திய வழிபாட்டின் ஒரு அம்சமாக ஏற்று நடைமுறைப்படுத்தி வந்தவரே நம் கனிந்த கனி ஆவார். அவர் (அடியாரின் நண்பர்) ஸ்ரீரங்கத்தில் இருந்தும் கோயிலுக்கே செல்வது கிடையாது என்று கூறினாய். இதுவே அவர் எந்த அளவிற்கு cleaning technique-ஐப் பற்றி தெரிந்து வைத்துள்ளார் என்பதை தெளிவுபடுத்துகிறது. முதலில் அவர் சூத்தை ஒழுங்காக கழுவச் சொல்லு ... ஸ்ரீரங்கம் பெருமாளை தினம் ஒரு முறையாவது சென்று தரிசிக்கச் சொல்லு. கனிந்த கனி காலையில் மலஜலம் கழித்த பின் கொள்ளிடம் மணலால் சுத்தி செய்து கொண்டு அதன் பின்னர் நீரால் சுத்தி செய்து கொள்வார். (கொள்ளிடம் மணலில் தங்கம் இருப்பதால் எந்தக் காரியத்திலும் தன் சற்குருவின் அனுகிரகத்தை இணைத்துக் கொள்வதாக அமைந்ததே இந்த சுத்திகரிப்பு முறை) இதைத் தொடர்ந்து ஓதும் ஆசமன மந்திரங்கள் வேறு. இதுவே உண்மையான cleaning technique.” இந்த பதிலைக் கேட்ட அந்த அடியார் நம் சற்குரு சூத்து என்ற சொல்லை கூறியதை ஆமோதிக்கவில்லை என்பதை அவருடைய கண் பார்வையே உணர்த்தியது. இதை அறியாதவரா நம் சற்குரு ? “என்னய்யா, சூத்து என்று கொச்சையாக அடியேன் பேசுவது போல் உனக்குத் தோன்றுகிறதா ? அப்படி ஒரு வேளை அது கொச்சையாக உனக்குத் தோன்றினால் சுத்தமான தமிழ் வார்த்தையையும் அடியேனால் கூற முடியும் ... ” என்று சொல்லிக் கொண்டே 20 தூய தமிழ் வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போனார். “இவை அனைத்தும் சூத்து என்ற சொல்லை குறிக்கும் அகத்திய கால தமிழ் வார்த்தைகளே ... இந்த வார்த்தைகளில் ஒன்றையாது நீ கேள்விப்பட்டு இருக்கிறாயா ? புரியாத வார்த்தை ஜாலத்தைக் கையாள நாங்கள் இங்கு வரவில்லை. கல்வி அறிவே இல்லாத, ஞான சூன்யமாக இருக்கும் மக்களுக்கும் புரியும்படி பேசி அவர்களையும் கரையேற்ற முயற்சி செய்வதே அடியேன் குருநாதன் அடியேனுக்கு இட்ட திருப்பணி ... ”

மங்களம்

நம் சற்குரு கூறிய 20 வார்த்தைகளில் ஒன்றைக் கூட நாம் கேள்விப்பட்டதே இல்லை என்பது ஒரு புறம் இருக்க அந்த 20 வார்த்தைகளில் ஒரு வார்த்தையைக் கூட அங்கிருந்த அடியார்கள் தற்போது ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியவில்லை என்பதே அகத்திய யுகத்தில் ஒளிர்ந்த தமிழ் வார்த்தைகளின் மாண்பு. நம் சற்குரு அப்போது அளித்த பதிலின் மகத்துவத்தை நாம் அறிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் தற்போது ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதப் பெருமாளின் மகத்துவம் புரிகின்றது அல்லவா ? பெருமாள் சங்கு சக்கரம் என்ற இரு ஆயுதங்களை ஏந்தி அருள்கின்றார். சக்கரம் என்பது எதிரிகளை அழிக்க உதவும் ஆயுதம் என்று நாம் எண்ணினாலும் சங்கின் பணி யாதோ ? அதுவே மர்ம தானங்களில் பெருகும் கர்மங்களைக் களைவதாகும். சிறப்பாக இவ்வருடம் இருள் சூழும் வருடமாக இருப்பதால் இந்த இருளில்தான் எண்ணற்ற காமக் குற்றங்கள் பெருகுகின்றன. பல வருடங்களுக்கு முன்னரே கிரக சஞ்சார விளைவுகளால் குறிப்பாக சந்திர பகவானின் சஞ்சாரத்தால் மனதில் அனைவருக்கும் அச்சம் தோன்றும் என்று நம் சற்குரு தெரிவித்திருந்தார். இத்தகைய அச்சத்தைக் களையக் கூடியதே சந்திர தலமான ஸ்ரீரங்கத்தில் நாம் கொள்ளும் பெருமாளின் சங்கு தரிசனமாகும். எந்த அளவிற்கு அடியார்கள் ஒன்றாய்ச் சேர்ந்து திங்கட் கிழமைகளிலும், திருவோண நட்சத்திர நாட்களிலும், பௌர்ணமி நாட்களிலும் ஸ்ரீரங்கம் போன்ற பெருமாள் தலங்களிலும் திருஅண்ணாமலை கிரிவலப் பாதையிலும் சங்கு ஒலியைத் தொடர்ந்து எழுப்புகிறார்களோ அந்த அளவிற்கு நம் அடியார்கள் குடும்பத்தினர் மட்டும் மனோ தைரியத்தை பெறுவது கிடையாது. இது ஒரு அற்புத சமுதாய சேவையே. மாதா அமிர்தானந்தாவும் கொரோனாவுக்கு எதிரான ஒரு மருந்து தைரியமே என்றுதானே அழகுபட உரைத்துள்ளார்கள். ராகு மூர்த்தி பிறர் அறியாமல் செய்யும் காரியங்களுக்கு, மறைவிற்கு, இருட்டிற்கு அதிபதி. அமிர்த விநியோக திருவிளையாடலில் ராகு, கேது மூர்த்திகள் அசுரர்களாக இருந்தாலும் தேவர்களைப் போல் மாறி, மறைந்து அமிர்தம் பெற வந்தனர். இதை அறியாதவரா மோகினி அவதார மூர்த்தி ?

ஸ்ரீசனீஸ்வர பகவான் மங்களம்

இதை மட்டுமா பிரபஞ்ச நாயகன் அறிந்திருந்தார் ? அவர்கள் அசுரர்களாக இருந்தாலும் தேவர்களுக்கு இணையான தவங்களை நன்முறையில் நிறைவேற்றி இருந்ததால் அவர்கள் இருவரையும் அமிர்த கரண்டியால் தொட்டு அவர்களுக்கு அருள்புரிந்தார். அதனால் இந்த இருட்டு வருடத்தில் எந்த அளவிற்கு பெருமாள் ஆயுதங்களான சங்கு சக்கரங்களை தரிசனம் செய்கிறோமா அந்த அளவிற்கு இருள் கர்மங்களிலிருந்து நாம் விடுபடுவோம். காய்ச்சல் போன்ற வியாதிகளால் துன்புறுவோர் தங்கள் மர்ம உறுப்புகளில் பெருத்த மாற்றத்தைக் காணலாம். இது உடலை தீய சக்திகளிலிருந்து விடுவித்து இறை சிந்தனையைக் கூட்டுவதில் மர்ம உறுப்புகள் மேற்கொள்ளும் அரிய பணியைக் குறிக்கின்றது. இதுவரை எப்படி இருந்தாலும் இந்த ராகவேந்திர வருடம் தொடங்கியாவது அவரவர் மர்ம உறுப்புகளை நல்ல முறையில் சுத்தம் செய்து மலை போல் குவியும் கர்ம வினைகளின் தாக்கத்திலிருந்து விமோசனம் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். நம் சற்குரு சென்னை மாநகரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவியபோது கூட சுத்தமான நீரை அதிக விலை கொடுத்து வாங்கி தன்னுடைய மர்ம உறுப்புகளைத் தூய்மை செய்து இத்தகைய வசதிகள் இல்லாதோரும் நற்கதி அடைய வழிவகுத்தார் என்பது ஒரு சிலரே அறிந்த இரகசியம் ஆகும். இது குறித்து சற்குரு அளித்த பதிலே நம்மை வியக்க வைப்பதாகும். “சார், குளிக்க எந்த தண்ணியை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், மர்ம உறுப்புகளைத் தூய்மை செய்ய தூய்மையான நீரால் மட்டுமே முடியும் ...”. இதுவே நாம் “மட்டமாக” நினைத்து ஒதுக்கும் மர்ம உறுப்புகளின் மகாத்மியமாகும். அமிர்தம் பெறுவதற்காக தோன்றிய ராகு கேது மூர்த்திகளின் தரிசனத்தையே மங்களம் திருத்தலத்தில் பெறுகிறீர்கள். இம்மூர்த்திகளைத் தரிசனம் செய்து கனிந்த கனி வழிகாட்டிய முறையில் பாதயாத்திரையாக முசிறி சென்று மௌல்விகலை தரிசனத்தைப் பெறுதலால் சந்திர தரிசனம் பூரணம் அடையும் என்பதே சித்தர்களின் வழிகாட்டுதலாகும். எந்த கலையிலும் தேர்ச்சி பெற குரு தேவை என்பது உண்மையே. அதிலும் கலைகளில் எல்லாம் சிறப்பாக விளங்கும் கடவுளை உணர்தல் என்ற கலைக்கு நிச்சயம் ஒரு சற்குரு தேவை அல்லவா ? ஆனால், சற்குரு அமையாதவர்கள் நம் சற்குருவைப் போன்ற உத்தமர்களின் சீடர்கள் சொல்லும் தெய்வீக வழிமுறைகளைக் கடைபிடித்து வந்தால் அவர்கள் நிச்சயமாக இறைவனின் வழிகாட்டுதலைப் பெறுவார்கள் என்பதில் சற்றும் ஐயமில்லை. இத்தகைய சீடர்கள் அளிக்கும் விளக்கங்களே ஒன்றுக்கொன்று முரணாக இருந்தால் என் செய்வது ? இத்தகைய குழப்பங்களை அறியாதவரா நம் சற்குரு ? இத்தகைய குழப்பங்களை எல்லாம் தம் தொலைநோக்குப் பார்வையால் சுமார் 40 வருடங்களுக்கு முன்பே சீர்தூக்கிப் பார்த்து விடையளித்தவரே நம் சற்குரு ஆவார். நம் சற்குருவின் அரவணைப்பில் ஞாபக சக்தியின் இமயமாக நின்ற ஒருவரும் ஞாபக மறதி பேராசியராக விளங்கிய ஒருவரும் சீடர்களாக விளங்கினர். ஒரு சீடனிடம் எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும் அதைக் களைவதுதானே குருவின் மாண்பு.

ஸ்ரீமுருகப் பெருமான் வாலிகண்டபுரம்

அதனால் நம் சற்குரு அந்த ஞாபக சக்தி வேந்தனை அழைத்து எதை எடுத்தாலும் மறந்து போகும் கலையில் வல்லவரான அந்த சீடருக்கு ஹயக்ரீவ சுலோகத்தை எழுதிக் கொடுக்குமாறு கூறினார். அந்த சீடரும் அவ்வாறே செய்தார். ஆனால், அந்த ஞாபக மறதிப் பேராசிரியரோ அந்த சுலோகத்தையும் தவறாக மனதில் பதித்துக் கொண்டார். எப்படி ?
ஞானானந்த மயம் தேவம் நிர்மலம்
ஸ்படிகாக்ருதம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே
என்பது அந்த அடியார் மனதில் வைத்துக் கொண்டு இடைவிடாது சொல்லிக் கொண்டிருந்த ஹயக்ரீவ துதி. அவருக்கு எழுதிக் கொடுக்கப்பட்டதோ
ஞானானந்த மயம் தேவம் நிர்மலம்
ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே.
கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் அந்த அடியார் ஹயக்ரீவ சுலோகத்தை தவறாக சொல்லிக் கொண்டிருந்தார் என்பதை நம் சற்குரு கண்டு கொள்ளவே இல்லை. ஒரு நாள் திடீரென அந்த அடியாரை அழைத்து, “என்னப்பா, ஹயக்ரீவ மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கிறாய் போலிருக்கிறதே. எங்கே அதைச் சொல்லு அடியேனும் கேட்டுப் பார்க்கிறேன் ...”, என்று சொல்லவே அந்த அடியாரும் தான் சொல்லிக் கொண்டிருந்த மந்திரத்தை சற்குருவிடம் வாய்விட்டுக் கூறினார். அதைக் கேட்ட நம் சற்குரு, “க்ருதம் என்று சொல்லக் கூடாது, க்ருதிம் என்றுதான் சொல்ல வேண்டும்,” என்று அந்த அடியார் ஹயக்ரீவ சுலோகத்தை அட்சர சுத்தமாக சொல்ல வேண்டிய முறையை குரு உபதேசமாக அருளினார். எல்லாக் கலைகளுக்கும் வித்யைகளுக்கும் ஆதாரமாக விளங்கும் தெய்வமே, ஞானம், ஆனந்த மயமாக விளங்குபவனே, உயர்ந்தோனே, மாசில்லா பளிங்கு போன்று என்னுடைய ஆத்மாவை தூய்மைப்படுத்துவோனே, ஹயக்ரீவ பெருமானே உன்னை வணங்குகிறேன் என்பதே இந்த சுலோகத்தின் மேலோட்டமான பொருளாகும். தெய்வீக முன்னேற்றத்திற்கு அவசியம் தேவைப்படுவது நம்பிக்கையும் விடாமுயற்சியுமே. அந்த அடியாரும் சுமார் 20 வருடங்களுக்கு மேல் தன் சற்குரு அளித்த ஹயக்ரீவ சுலோகத்தை தொடர்ந்து ஓதிக் கொண்டிருந்தாலும், ஞாபக சக்தி அளிக்கும் வல்லாரை லேகியத்தை தொடர்ந்து ஏற்றுக் கொண்டிருந்தாலும் ஞாபக மறதி என்பது மட்டும் அவரை தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. அவர் கடைக்கு லேகியம் வாங்குவதற்காக செல்லும்போது ஞாபக சக்தி அளிக்கும் அந்த லேகியத்தின் பெயரையே பல முறை அவர் மறந்து விட்டிருக்கிறார்.

நெருஞ்சிகனி தரிசனம்
ராவத்தநல்லூர்

ஒரு முறை நம் ஆஸ்ரமத்தில் அவருடைய ஞாபக மறதியால் ஒரு பெருங்குழப்பமே உருவாகி விட்டது. தன்னுடைய நிலையை தெளிவுபடுத்துவதற்காக அவர் நம் சற்குருவை அணுகியபோது நம் சற்குருவோ வழக்கம்போல் ஒரு தெய்வீகப் புன்னகையுடன் வரவேற்று, “அதெல்லாம் ஒண்ணுமில்லே ராஜா. காஸ் சிலிண்டர் கதைதான் உனக்கு தெரியுமே. நீ அடியேனுடைய இடத்தில் இருந்திருந்தால் அந்த அடியார் சிலிண்டரை ரிடர்ன் செய்த விஷயத்தையே மறக்கச் செய்து ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பேன் அல்லவா ? அதனால் நீ எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். உனக்கு எது எப்போது ஞாபகத்திற்கு வர வேண்டுமோ அதை உன்னுடைய ஞாபகத்திற்கு கொண்டு வர வேண்டியது எங்கள் கடமை, நீ கவலைப்பட வேண்டாம் ...”, என்ற ஆறுதல் வார்த்தைகளை அளித்தார். சற்குரு அளித்த ஞானப் பொக்கிஷம் இன்று வரை அடியார்களுக்கு ஞானத்தை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறது அல்லவா ? மேற்கூறிய ஹயக்ரீவர் சுலோகம் ஒரே ஒரு அடியாரின் ஞாபக மறதியைப் போக்குவதற்காக அளிக்கப்பட்டதா ? நிச்சயமாக கிடையாது. சற்குருவை நம்பும் அனைவருக்கும், தெய்வீகத்தில் நாட்டம் கொள்ள விரும்பும் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமே சற்குருவால் உபதேசிக்கப்பட்ட ஹயக்ரீவ சுலோகமாகும். ஆஹா, காஸ் சிலிண்டர் விஷயம் மறந்து விட்டதல்லவா ? ஒரு முறை ஒரு அடியார் பௌர்ணமி அன்னதான சேவையில் பங்கெடுத்துவிட்டு ஊருக்குப் புறப்பட வேண்டிய தயார் நிலையில் நம் சற்குருவைக் காண வந்தார். அவரைக் கண்ட உடனேயே சற்குரு, “ஏம்பா, போன மாசம் கொடுத்த காஸ் சிலிண்டர் என்ன ஆயிற்று ... நீ அதைத் திருப்பிக் கொடுக்கவே இல்லையா ?” என்று கேட்டார். அந்த அடியார் அதிர்ந்து போய், “வாத்யாரே, உடனேயே அடியேன் சிலிண்டரை ...லிடம் திருப்பிக் கொடுத்து விட்டேனே ?” என்றார். நம் சற்குருவோ, “இதில் என்ன குழப்பம் என்று தெரியவில்லை. இப்பதான் காஸ் கம்பெனியிலிருந்து போன் பண்ணினார்கள், ஒரு சிலிண்டர் குறைவதாகச் சொன்னார்கள். அதை சரி செய்யாவிட்டால் அடுத்த மாதம் அன்னதானத்திற்கு சிலிண்டர் கிடைக்காது என்பதுதான் உனக்கு தெரியுமே ? ஏதோ எவன் எவன் கையிலோ காலிலோ விழுந்துதானே அன்னதானத்தை பண்றோம். இப்ப பணம் இருந்தாலும் காஸ் கிடைப்பது கஷ்டம் அல்லவா ? நீ முதலில் ...லைப் பார்த்து இந்த சிலிண்டர் விஷயத்தை செட்டில் பண்ணி விட்டு ஊருக்குப் போ ...”, என்று தெளிவாகக் கூறிவிட்டார். அந்த அடியாரும் குழப்பத்துடன் ...லைத் தேடி ஆஸ்ரமம் எங்கும் அலைந்தார். மாடிக்குச் சென்றால் இப்போதுதான் அவர் (புக்) ஸ்டாலுக்கு சென்றார் என்றார்கள். ஸ்டாலுக்கு சென்று பார்த்தால் அவர் வாஷிங் செக்ஷனுக்கு சென்று விட்டதாகக் கூறினார்கள்.

திருஅண்ணாமலை ஞானப்பழ
தரிசனம் ராவத்தநல்லூர்

அலைந்து திரிந்து களைத்து விட்டார் அந்த அடியார். முடிவில் நம் சற்குருவிடம் திரும்பி வந்து, “வாத்யாரே, அடியேன் அவசரமாக ஊருக்குத் திரும்ப வேண்டும். ...லைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஊருக்கு சென்ற உடனேயே இந்த சிலிண்டர் விஷயத்தை செட்டில் செய்து விடுகிறேன். இப்போது அடியேன் உத்தரவு வாங்கிக் கொள்கிறேன்,” என்று கூறி விடைபெற்றுத் திரும்பி விட்டார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் ...லை ஒரு ஆஸ்ரம வேலையாக வெளியே அனுப்பியவரே நம் சற்குருதான். அந்த அடியார் சென்ற சில நிமிடங்களில் எல்லாம் திரும்பி வந்த ...ல் சிலிண்டர் விஷயம் பற்றி கேள்விப்பட்டு நம் சற்குருவிடம் விஷயத்தை தெளிவுபடுத்துவதற்காக சென்றார். நம் சற்குரு, “என்னய்யா, போன காரியம் நல்லபடியாக முடிந்ததா ?” என்று கேட்டார். “அனைத்தும் நல்லபடியாக நிகழ்ந்தது ...”, என்று கூறி விட்டு, “வாத்யாரே, ...ர் சிலிண்டரைத் திருப்பித் தரவில்லை என்று நீங்கள் கூறியதாக அடியேன் கேள்விப்பட்டேன். அவர் அப்போதே சிலிண்டரை ரிடர்ன் செய்து விட்டார் ...”, என்று கூறவே நம் சற்குரு ஒரு பொய்க் கோபத்தை வெளிப்படுத்தி, “ஆமாய்யா, ஒரு சிலிண்டர் எப்போ வந்துச்சு எப்போ போச்சுனு கூடத் தெரியாமலா அடியேன் இந்த சீட்ல (சற்குரு என்னும் பதவியில்) உக்காந்திருக்கேன். அவன் பிஸினெஸ் சரியில்லை என்று சொல்லி ஏகப்பட்ட பணம் கடன் வாங்கியிருக்கான். சரி ஏதோ தெய்வீகத்துல இருந்துகிட்டு சில நல்ல காரியம் செய்வான்னு எதிர்பார்த்துதான் இவ்வளவு பணமும் அவனுக்கு கொடுத்தேன். ஆனால், வாங்கிய பணத்திற்கு பதில் சொல்லாமல் புதிதாக பணம் கடன் வாங்கலாம்னு எதிர்பார்த்துதான் அடியேனிடம் வந்தான். அடியேனிடம் நன்கொடையாக வரும் பணம் ஆயிரமாக இருந்தாலும் ஒரு நூறு ரூபாயாக இருந்தாலும் அடியேன் அதை நல்ல முறையில் அன்னதானத்திற்கு பயன்படுத்துவேன் என்ற நம்பிக்கையில்தான் அடியார்கள் அளிக்கிறார்கள். அவ்வாறு வந்த பணத்தை எப்படி சார் நான் சரியில்லாத காரியங்களுக்கு வாரி வழங்க முடியும். அதே சமயத்தில் இக்கட்டான இந்த சூழ்நிலையிலிருந்து நம்மை நம் சற்குரு விடுவிப்பார் என்ற நம்பிக்கையுடன்தான் அவன் அடியேனை அணுகினான்.

ஸ்ரீஆதித்ய பிள்ளையார்
ராவத்தநல்லூர்

இதுவும் மறுக்க முடியாத ஒன்று. அப்படியானால் குரு அந்தஸ்தில் இருக்கும் அடியேன் இத்தகைய ஒரு நாடகம் ஆடுவதைத் தவிர வேறு வழியில்லை அல்லவா ?” ஆயிரமாயிரம் ஆன்மீக வினாக்களுக்கு விடையளிப்பதே சற்குருவின் இந்த திருஅண்ணாமலை திருவிளையாடலாம். இந்தத் திருவிளையாடல்கள் அனைத்தும் படிக்கும் நமக்கு சுவை அளிப்பதாக இருந்தாலும் மகான்கள் திருவிளையாடல் மூலம் அவர்கள் அனுபவிக்கும் வேதனைகள், ஏராளம், ஏராளம். திருச்சியிலிருந்து திருஅண்ணாமலை செல்வதற்கு கள்ளக்குறிச்சி, மடப்பட்டு, விழுப்புரம் போன்ற ஏகப்பட்ட மார்க்கங்கள் உள்ளன அல்லவா ? பஸ்சில் வருபவர்கள் விழுப்புரம் மார்கம் வழியாக வரும்படியும், கார் போன்ற வாகனங்களில் வருபவர்கள் திண்டிவனம் வழியாக வருமாறும் நம் சற்குருவின் வழிகாட்டுதல் அமையும். மகான்கள் மேற்கொள்ளும் தெய்வீகக் காரியங்களின் தன்மையைப் பொறுத்தே இத்தகைய பாதைகள் அமையும். தனக்கென வாழாது பிறருக்காகவே தன்னுடைய உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து வாழும் கனிந்தகனி திருஅண்ணாமலை செல்வதற்கு தேர்ந்தெடுத்த பாதையே கள்ளக்குறிச்சி திருக்கோயிலூர் மார்க்கமாகும். ஆனால், நம் கனிந்த கனி திருக்கோயிலூரைத் தாண்டிச் செல்லாமல் திருஅண்ணாமலை தரிசனத்தை திருக்கோயிலூரில் இருந்தே நிறைவு செய்து கொண்டார் என்று நாம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம். பாதயாத்திரையாகவே செல்லும் நம் கனிந்தகனி கள்ளக்குறிச்சியிலிருந்து வரும்போது ராவத்தநல்லூர் என்னுமிடத்தில் ஒரு நெருஞ்சிகனியின் மீது அவர் பாதங்கள் படவே அந்த முள் குத்தியதால் அவர் மிகுந்த வேதனையுற்று அங்கேயே பல மணி நேரங்களுக்கு அமர்ந்து விட்டார். நெருஞ்சி முள்ளை எடுத்து விட்டாலும் முள் குத்திய இடத்திலிருந்து தொடர்ந்து இரத்தம் கசிந்து கொண்டேதான் இருந்தது. பரமாச்சார்யாள் நிலத்தில் ஒரு குழியைத் தோண்டி அதில்தான் மலஜலம் கழிப்பார். பின்னர் அக்குழியை மூடி விட வேண்டும் என்பது சுவாமிகளின் உத்தரவு. அதேபோல் பிற்காலத்தில் அவர் நோயுற்று வருந்தியபோது கபத்தால் தொந்தரவு ஏற்பட்டபோது ஒரு குவளையில் சளி, உமிழ்நீரை துப்புவது வழக்கம். அந்தக் “கழிவுகளையும்” அவ்வாறு மண்ணைத் தோண்டி புதைத்து விடுவது வழக்கம். இதில் ஆச்சரியம் என்னவென்றால் கனிந்தகனியின் இந்தக் “கழிவுகளை” பிரசாதமாகப் பெற்றுச் செல்ல ஆதிசங்கர லோகத்திலிருந்து ஆயிரக் கணக்கான தேவதைகள் எழுந்தருளி காத்துக் கிடக்குமாம். இத்தகைய அற்புத ஞானியின் திருப்பாதங்களில் அவர் அறியாமல் முள் குத்திவிடுமா, இரத்தம் சிந்தி விடுமா என்ன ? ராவுத்தநல்லூர் திருத்தலத்திற்கு வடக்கில் அமைந்துள்ளதே திருஅண்ணாமலையாகும். வடக்கு திசை குபேர திக்காக அமைவதால் ஸ்ரீகனிந்தகனி ராவத்தநல்லூரிலிருந்து பெற்ற தரிசனம் சுக்ர சக்தியை பெற்றுத் தருவதாக அமைந்தது. இத்தகைய அற்புத தரிசனத்திற்கு அருள் கூட்டிய ராவத்தநல்லூர் திருத்தலத்திற்கு மேலும் புனிதம் ஊட்டவே, கூட்டவே கனிந்த கனி புண்ணிய சக்தியின் திரட்சியாக விளைந்த இரத்தப் புனிதத்தை இங்கு சேர்த்து பெருங்கருணை புரிந்தார்.

ராவத்தநல்லூர்

கனிந்தகனி பாலமுருகனின் அவதாரம் என்று புகழப்படுவதால் வாலிகண்டபுரத்தில் அபூர்வமாக வடக்கு நோக்கி எழுந்தருளி உள்ள முருகப் பெருமாளை வணங்கி தியானித்து வந்தாலே கனிந்தகனியின் அனுகிரகத் திருவிளையாடல்களை நீங்களே உணர்ந்து அருள் பெறலாம். முள்ளும் மலராகும் என்பது சற்குருமார்களின் எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்புடன்தான் பல கயவர்களையும், முரடர்களையும் கூட தங்கள் சத்சங்கத்தில் இணைத்து அவர்களுக்கு இறை உணர்வை ஊட்டுகிறார்கள். குரு மலரும் முள்ளாக மாறி மக்களுக்கு உடல் பிணிகளைத் தீர்த்து அதன் மூலம் இறை உணர்வை ஊட்டும் என்பதே மஞ்சள் நிறம் கொண்ட நெருஞ்சி முள்ளிற்கும் தெய்வீக மகத்துவம் அளித்த நம் கனிந்தகனியின் கனிவான செய்கை. பூமித் தாய்க்கு இரத்தப் புனிதம் சேர்க்கும் மகத்தான திருப்பணியை நம் சற்குரு எப்படி நிறைவேற்றினார் என்பதையும் பார்ப்போமா ? அஸ்ஸாம் மாநில கௌஹத்தி காட்டுப் பகுதியிலும், திருச்சி திருப்பராய்த்துறை காவிரிக் கரையிலும், சென்னை மாநகரிலும் நம் சற்குரு இரத்தப் புனிதம் சேர்த்து அளப்பரிய புண்ணிய சக்தியை, சித்த மாபொக்கிஷத்தை தாரை வார்த்தளித்த பெருங்கருணையை ஏற்கனவே விளக்கியுள்ளோம். இவ்வாறு ஒரு சாதாரண மனிதனாகவே ஸ்ரீராமபிரானைப் போல் வாழ்ந்த நம் சற்குரு இறுதியாக திருச்சியில்தான் மனிதச் சட்டையைக் கழற்றி விட்டு குருமங்கள கந்தர்வ லோகம் சென்றடைந்தார். செத்தும் கொடுத்தான் சீதக் காதி என்ற வள்ளல் பராம்பரியம் மிக்க தமிழ்நாட்டில் பிறவி எடுத்த நம் சற்குரு இந்த மனித உடலை விடுத்த பின்னும் பூமா தேவிக்கு இரத்தப் புனிதம் சேர்த்த வரலாறே நம்மை பிரமிக்க வைப்பதாகும். பூத உடலை விடுத்த சற்குருவை ஒரு ஆம்புலன்சில் வைத்து திருஅண்ணாமலைக்கு கொண்டு சென்றனர். அந்த ஆம்புலன்ஸ் சென்ற பாதையும் கிட்டத்தட்ட கனிந்தகனி மேற்கொண்ட பாதயாத்திரைப் பாதையை ஒட்டியே அமைந்திருந்தது என்பதே நம்மை வியக்க வைக்கும் செய்தியாகும். அவ்வாறு செல்லும் வழியெல்லாம் நம் சற்குருவின் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் இரத்தம் கசிந்த வண்ணமாகவே இருந்தது. ஒரு வெள்ளைத் துணி கொண்டு அவ்வாறு வழிந்த இரத்தத்தை எல்லாம் துடைத்துக் கொண்டே வந்தார் சற்குருவின் அருமை மனைவி. திருஅண்ணாமலை துர்கா தரிசனப் பகுதிக்கு வந்தபோது அந்த இரத்தப் புனித துணியை, “திருஅண்ணாமலை ஈசனின் பாலகனை உண்ணாமுலைத் தாயே ஏற்றுக் கொள்ளட்டும் !”, என்று கூறி திருஅண்ணாமலை புனித பூமியில் சேர்த்து விட்டார். தன்னுடைய உயிர் மறைந்த பின்னும் பூலோக மக்கள் அனைவரும் மாயையைக் களைந்து திருஅண்ணாமலையாரின் திருவடிகளை அடைய திருவுள்ளம் கொண்ட நம் சற்குரு மாயக் குழிவடு தரிசனத்தில் தம் இரத்தப் புனிதத்தை சேர்த்த இந்த புனித செயலுக்கு ஈடான ஒன்றை எவராலும் கூறத்தான் முடியுமா ? ஜெய், சற்குரு மகராஜ் கீ ஜெய் !!!

ராவத்தநல்லூர்

நம் சற்குருவின் சீடராக விளங்கிய ஒரு அடியார் கனிந்த கனியை தன் இஷ்டதெய்வமாக வைத்து பூஜித்துக் கொண்டிருந்தார். அவருடைய வாழ்க்கைப் பிரச்னைகளுக்குத் தீர்வு அளிக்க விரும்பினார் நம் சற்குரு. இதற்காக நம் சற்குரு கையாண்ட திருவிளையாடல்களில் ஒன்றே வஸ்திர தானமாகும். ஆம், ஒரு கார்த்திகை நன்னாளில் அந்த அடியாருக்கு ஒரு பேண்ட், ஒரு சட்டை, ஒரு ஜட்டி இவற்றை அளித்து ராவுத்தநல்லூர் தண்டபாணி ஆலயத்தில் தானமாக அளிக்கும்படிக் கூறினார். அந்த அடியாரும் ராவுத்தநல்லூரைத் தேடி வருவதற்குள் நண்பகல் ஆகிவிட்டது. திருத்தலத்தின் மலைப் படிக்கட்டுகள் வழியாக மேலேறிச் சென்று பார்த்தால் அங்கு ஒருவரையும் காணவில்லை. மலை உச்சியில் ஸ்ரீபாலதண்டாயுதபாணியைத் தரிசனம் செய்து விட்டு கீழிறங்கி வந்து பார்த்தபோது அங்கு ஒரு இளைஞன் அங்குள்ள சுனை தீர்த்தத்தில் தன்னுடைய ஒரே பொக்கிஷமான பாண்ட், சட்டையை அலசி அவற்றை அங்குள்ள ஒரு பாறையின் மேல் காய வைத்து விட்டு வெறும் ஜட்டியை மட்டும் அணிந்த கோலத்தில் ஒரு பாறையின் மேல் அமர்ந்திருந்தான். அந்த காட்சியைக் கண்ட நம் அடியார் பிரமித்து விட்டார். வஸ்திர தானம் தருவது பிரமாதமில்லை. இவ்வாறு மாற்றிக் கொள்ளக் கூட டிராயர், சட்டை இல்லாமல் எங்கோ ஒரு அத்துவானக் காட்டில் இருக்கும் ஒருவரைத் தேடிக் கண்டுபிடித்து அவருக்கு விலை உயர்ந்த பாண்ட், சட்டை அளிப்பதென்றால் இந்த இமாலய சாதனையை நம் சற்குருவைத் தவிர வேறு யாரால் சாதிக்க இயலும் ? ராவுத்தநல்லூரை அடைந்த உடனேயே அங்கிருந்து பார்த்தால் திருஅண்ணாமலை நன்றாக தரிசனம் அளிப்பதைக் கண்ட அவர் திருஅண்ணாமலை வழியாக வந்து எளிதில் அந்த திருத்தலத்தை அடைந்திருக்கலாமே என்று எண்ணியது என்னவோ வாஸ்தவம்தான். ஆனால், கனிந்த கனியை இஷ்ட தெய்வமாக வைத்து வழிபடுபவர் கனிந்தகனி பாதயாத்திரையாக சென்ற கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் மார்க்கத்தில்தானே பயணத்தை மேற்கொள்ள வேண்டும் ? இதின் பின்னணியில் அமைந்துள்ள மற்றோர் சுவையான விஷயம் என்னவென்றால் காஞ்சிபுரம் அருகில் உள்ளது ஓரிகை திருத்தலம். ஓர் இருக்கை என்பதே ஓரிகையாக மாறி விட்டது.

பவசாகர சுனை தீர்த்தம்
ராவத்தநல்லூர்

அத்வைதம் என்ற தத்துவத்தில் அதாவது பிரிக்க முடியாத, என்றும் விளங்கும் ஆனந்த ஒளி வெள்ளமே இறைவன் என்ற கொள்கையின் அடிப்படையில் நம் காஞ்சி பரமாச்சார்யாள் விளங்குவதால் ஓரிகை திருத்தலத்திற்கு அடிக்கடி சென்று தியானம், வழிபாடுகள் இயற்றுவது வழக்கம். ஓரிகை என்பதால் காஞ்சி மடத்தில் அப்போது மூன்று ஆச்சார்ய மூர்த்திகள் விளங்கியபோதும் யாராவது ஒரு சங்கராச்சாரியார் மட்டுமே துணைக்கு ஒரு வேலையாளும் இன்றி, மாற்றிக் கொள்ள வேறு காஷாய வஸ்திர ஆடைகள் இன்றி ஓரிகையில் எழுந்தருள்வது வழக்கம். இப்போது சொல்லுங்கள், ராவுத்தநல்லூரில் நம் அடியார் வஸ்திர தானம் அளித்தது தன் இஷ்ட தெய்வ சங்கராசாரியருக்கா, ஆதிசங்கர பகவத்பாதருக்கா, பாலதண்டாயுதபாணிக்கா, அதைக் கூற வல்லவர் தரணி போற்றும் நம் சற்குரு ஒருவரே, ஓரிகை வேந்தனே ! இந்த வஸ்திர தானம் அளித்தபோது நம் அடியாரின் வீட்டில் அந்த அளவு தூய்மையான தண்ணீர் கிட்டவில்லை. ராவுத்தநல்லூர் சுனை தீர்த்தத்தை நம்பி இருந்த ஒருவருக்கு ஆடை தானம் அளித்ததன் மூலம் ஒரு அடியாரின் தண்ணீர் பிரச்னையே தீர்ந்தது என்றால் அந்த தானத்தின் மகிமை எவ்வளவு பிரம்மாண்டமானதாக இருக்கும். அந்த அடியார் தான் இருந்த இடத்தை விற்று விட்டு வேறு ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு சென்று விட்டார். தற்போது இருக்கும் வீடோ ஒரு பெரிய ஏரியின் அருகில் அமைந்துள்ளதால் கடுமையான வறட்சி நிலவும் காலத்தில் கூட அவர் நீர் பஞ்சத்தையே அறியாதிருந்தார். இது மட்டுமல்லாமல் இன்னும் பல அந்தரங்கமான குடும்ப விஷயங்களுக்கும் ஒரு தீர்வாக இந்த வஸ்திர தானம் அமைந்தது என்பதே சித்தர்களின் கர்ம பரிபாலன பின்னணியில் அமைந்த மகத்துவம் ஆகும். எப்போதோ, ஏதோ ஒரு அடியாரின் நீர் பிரச்னையைத் தீர்த்தார் ராவுத்தநல்லூர் முருகப் பெருமான் என்றல்லாது இன்றும் மக்களின் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்கும் வள்ளலே அவர் என்பதை உணர்த்துவதே இங்கு நீங்கும் தரிசிக்கும் வருண பகவான் ராவுத்தநல்லூர் முருகப் பெருமானுக்கு இயற்றும் அமிர்த வருண அபிஷேகமாகும்.

இன்றும் தங்கள் இல்லங்களில் உள்ள கிணறுகள் வற்றி விட்டாலோ அல்லது நிலத்தில் நீர் பாசன வசதி குறைந்து போவதாலோ அவதியுறும் அடியார்கள் ராவுத்தநல்லூர் முருகப் பெருமானை நேர்த்தி வைத்து வணங்கி வழிபட்டு வருதலால் நீர் வளங்களை தொடர்ந்து பெறுவார்கள் என்பது உறுதி. ஆனால், இவ்வாறு கிட்டும் வருமானத்தில் நான்கில் ஒரு பகுதியையாவது ஏழை எளியோர்க்கு அன்னதானமாக, பானகம், நீர் மோர், பழரசம் போன்ற தானமாக அளித்தல் சிறப்பு. இதனால் அவர்கள் மட்டுமல்லாது அவர்கள் சந்ததியினரும் நீர்ப் பஞ்சத்தால் அவதியுறமாட்டார்கள். அடியார்களின் சந்ததிகள் இந்த அமிர்த மழையில் ஆனந்தமாக குதித்து விளையாடும் குதூகல காட்சியையும் இந்த வீடியோ படத்தில் நீங்கள் கண்டு இரசிக்கலாமே. நீர் பிரச்னை என்றால் நிலத்தில் வீட்டில் அனுபவிக்கும் தட்டுப்பாடு, உப்பு, உவர்ப்பு என்ற பிரச்னைகள் மட்டுமல்லாமல் வியாதியின் கொடுமையால் நீரே அருந்த முடியாமல் போகும் நிலையையும் இது குறிக்கும். நம் ஆஸ்ரம அடியார் ஒருவர் பல கோடிகளுக்கு அதிபதியாக இருந்தபோதும் அவருடைய நாக்கு உள்ளே சென்று மறைந்து கொண்டதால் ஒரு சொட்டு நீரைக் கூட அருந்த முடியாத துன்பத்திற்கு அவர் உள்ளானார். இத்தகைய வறட்சி நோய்களும் நம்மைத் தாக்காது பாதுகாப்பு அளிப்பதே ராவத்தநல்லூர் முருகப் பெருமான் வழிபாடு அளிக்கும் நோய் நிவாரணம் ஆகும்.

ஓங்கார உபதேசம்
ராவத்தநல்லூர்

நம் சற்குரு அளித்துள்ள 51 காயத்ரீ முத்திரைகளை ஒருவர் முறையாக பயின்று வந்தால் போதும் அவர் வானத்தையே வில்லாக வளைத்து விடலாம் என்பார் நம் சற்குரு. அப்படியானால் அந்த காயத்ரீ முத்திரைகளை பிரபஞ்சத்திற்கு தாரை வார்த்து அளித்த சற்குருமார்கள் எதைத்தான் சாதிக்க இயலாது ? ஆனால், அவர்கள் எந்த இறை சக்தியிலும் குறுக்கே செல்லாது தெய்வ சங்கல்பத்திற்கே அனைத்தையும் அளித்து விடுகின்றனர் என்பதற்கு ஒரு உதாரணமாகத் திகழ்வதும் ராவுத்தநல்லூர் திருத்தலத்தில் நீங்கள் தரிசனம் செய்த அமுத மழைக் காட்சி ஆகும். நம் சற்குரு தன் சீடர் ஒருவரை ராவுத்தநல்லூர் திருத்தலத்தில் வஸ்திர தானத்தை அளிக்கச் செய்து அவர் அனுபவிக்க இருந்த நீர்ப்பஞ்சத்தை களைந்தார் என்றாலும் இதை நிறைவேற்ற நம் சற்குரு முழுக்க முழுக்க இறை சக்தியையே நம்பியிருந்தார் என்பதே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் உண்மையாகும். ராவுத்தநல்லூர் ஸ்ரீமுருகப் பெருமான் மேற்கு திசை நோக்கி எழுந்தருளி உள்ளார். மேற்கு திசை என்பது வருண பகவானுக்கு உரியதுதானே, சனி பகவானுக்கும் உகந்ததுதானே. சனி நீராடு என்ற வழக்கும் இதிலிருந்து தோன்றியதுதான். இவ்வாறு வருண பகவானுக்கு உகந்த மேற்கு திசையை நோக்கி வலது பக்கம் தன் தந்தை சிவபெருமானை அருணாசல ஈசன் அரவணைப்பில் திகழும் முருகப் பெருமான் எத்தகைய நீர்ப் பஞ்சத்தையும் போக்கும் அனுகிரகத்தை அளிப்பதில் வியப்பென்ன ? ஆனால், நாம்தான் சுவாமியின் அனுகிரக சக்திகளை அறியாமல், புரியாமல் இருந்து கொண்டு வாடுகின்றோம், வதங்குகின்றோம். சனி, ராகு மூர்த்திகள் இருளைக் குறித்தாலும் இந்த இருளிலும் இறை சக்தியை ஸ்பாட் லைட் போன்று வெளிச்சம் போட்டுக் காட்டுவதைப் போல் அருண ஒளி மறைந்த தருவாயில் அருணை ஒளியாக வீசும் முருகப் பெருமானின் பேரருட் கடாட்சமாக ஒளி வீசுவதை இங்கு பக்தர்கள் தரிசித்து மகிழலாம்.

நித்திய ராமபாணத் தலம்

சூரிய பகவான் தினமும் 3000 கோடி அணுகுண்டுகளுக்கு இணையான ஆதித்ய சக்திளை சூரிய கிரணங்கள் வடிவில் பூமியில் செலுத்திக் கொண்டிருக்கிறார் என்பது நீங்கள் அறிந்ததே. இது ஏதோ சூரிய பகவானின் தனித்தன்மையான சக்தி என்று கிடையாது. ஈ எறும்பு முதல் இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுமே இத்தகைய கற்பனைக்கு எட்டாத அதீத சக்தியை வெளிவிடக் கூடியவைதாம். ஆனால், இத்தகைய அதீத சக்தி தான் யார் என்று தன்னைத் தானே அறிவதால் மட்டுமே சாத்தியமாகக் கூடிய இறை கருணை. இது இவ்வாறிருக்க சூரிய பகவானின் ஆதித்ய குலத்தில் தோன்றிய ராமபிரான் தன்னுடைய ராமபாணத்தில் ஆதித்ய சக்திகளை சதாசர்வமும் வெளியிடுவதில் வியப்பென்ன ? ராமாவதாரம் நம் பூலோகத்தைப் பொறுத்தவரை நிறைவேறி விட்டாலும் ராமபாண சக்திகளை புதுப்பிக்கும் பல திருத்தலங்கள் நம் பூலோகத்தில் புத்துயிர் பெற்று விளங்குகின்றன. இவற்றில் முதன்மையானதே ராமபிரானுக்கு ஆதித்ய ஹ்ருதய துதிகளை உபதேசித்த ஸ்ரீஅகத்திய மகாபிரபு தினமும் வழிபடும் ஈங்கோய்மலை திருத்தலமாகும்.

சிவமலை, சக்திமலை, சிவசக்தி மலை என்றெல்லாம் புகழப்படும் ஈங்கோய்மலை தம்பதிகளுக்கிடையே ஒற்றுமையை வளர்ப்பதில் முதன்மையாகத் திகழ்வதில் வியப்பில்லைதான். இதன் மூல காரணம் அம்பாள் சுவாமியின் இடப்பாகத்தில் எழுந்தருள தவமியற்றிய முதன்மையான தலம் இதுவே ஆகும். பல யுகங்கள் இத்திருத்தலத்தை வலம் வந்து வணங்கி உலக மக்களுக்கெல்லாம் ஒற்றுமை என்ற அருட்பிரசாதத்தை வழங்கிய தலம் இதுவே.

ஸ்ரீபாலதண்டாயுதபாணி
ஈங்கோய்மலை

இந்த சிறப்பையே அகத்திய கிரந்தங்கள்
இடையில் இடையாய்
இடையில் இடையாய்
இடையில் இடையாய்
துலங்கும் சிவசக்தி
என்று சிறப்பித்துப் பாடுகின்றன. அதாவது இரத்தினகிரி, ஈங்கோய்மலை, கடம்பமலை என்று மும்மலைகளின் இடைச் சக்தியாய், சூரிய பாணத்தின் இடைச்சக்தியான மரகத ஒளிச் சக்தியாய், சிவ சக்தி ஒளி வெள்ளத்தின் இடையே ஒளி வீசும் தமிழ் வேதக் குமரனாய் துலங்கும் சிவசக்தி என்பதே ஈங்கோய்மலையில் பொலியும் இறை சக்தியின் விளக்கமாகும். அம்மையின் இந்த அருந்தவச் சிறப்பை உலகத்தவர்க்கு உணர்த்தும் முகமாக ஒவ்வொரு சிவராத்திரி தினத்தன்றும் ஸ்ரீஈங்கோய்நாதரின் எழில் மேனியைத் தன் பொற்கிரணங்களால் தழுவி அபிஷேகம் இயற்றி மகிழ்கிறார் சூரிய பகவான். இவ்வாறு சூரிய பகவானின் கிரணங்களால் அபிஷேகிக்கப்பட்ட மரகதத் திருமேனியை தரிசித்து அந்த பலன்களை எல்லாம் உலகத்தவர்க்கு தன் அருட்பிரசாதமாக ஸ்ரீஅகத்திய மகாபிரபு அளித்து வருவதால் எங்கெல்லாம் ஸ்ரீஅகத்திய முனியின் திருவுருவங்கள் எழுந்தருளி உள்ளனவோ அங்கெல்லாம் மறுநாள் விடியற்காலையில் அதாவது அமாவாசை அன்று விடியற்காலையில் பஞ்சாமிர்த அபிஷேகம் அத்தல இறைவனுக்கும் அதன் பின்னர் ஸ்ரீஅகத்தியருக்கும் நிறைவேற்றுதலால் இது மிகச் சிறந்த சமுதாய பூஜையாக மலரும் என்பதில் ஐயமில்லை. சமுதாயத்தில் அமைதியை ஏற்படுத்தும் இத்தகைய அரிய பூஜையை நிறைவேற்ற விரும்புவோர்கள் அவரவர் வசதிக்கு ஏற்றபடி சம்பங்கி மலர்களால் மாலை கட்டி அந்த பூமாலைப் பந்துகள் நிரம்பிய மூங்கில் கூடைகளை தலையில் அல்லது தோளில் சுமந்து ஈங்கோய்மலையை சிவராத்திரி நாட்களில் வலம் வந்து இந்த பூக்களை சுமங்கலிகளுக்குத் தானமாக அளித்தல் என்பது வாழ்வில் கிடைத்தற்கரிய பேறே. வெகுநாட்கள் திருமணம் ஆகாத பெண்களும், ஆண்களும் நலமடைவர். அமாவாசை தினங்களில் காலையில் ஈங்கோய்மலையை கிரிவலம் வந்து இறைவனை வழிபட்டு இத்தகைய தானங்களை இயற்றுவதும் ஏற்புடையதே. ஒரு அணுகுண்டு செய்வதற்கான செய்திகள் அனைத்துமே தற்கால இண்டர்நெட் தளத்தில் உள்ளன என்பதே விஞ்ஞானிகள் தெரிவிக்கும் செய்தி. ஆனால், அந்த செய்திகளை எல்லாம் கோர்வையாக இணைத்துப் பெறுவதற்கான பொறுமையோ, நம்பிக்கையோ மக்களிடம் இருப்பதில்லை என்பதே குறைபாடு. உண்மையில் இந்தக் குறைபாட்டை மங்காமல் பாதுகாத்து வரும் தேவதைகளே காவல் தெய்வங்கள், எல்லை தெய்வங்கள் என்ற இறை சக்திகளாகும். அதேபோல ஈங்கோய்மலை தலவிருட்சம் ஒன்றில் மிளிரும் சக்தியைக் கொண்டே உலகை வில்லாய் வளைக்கலாம் என்பதே நாயன்மார்கள் அளிக்கும் அத்தாட்சி ஆகும். ஆனால், இந்த விருட்ச சக்திகளைப் பெறும் முறைகளைப் பெறும் சிரத்தையைப் பக்தர்கள் பெற முயலவில்லை என்பதே கலியுகத்தின் யுகக் கோட்பாடாகும். இவ்வாறு ஈங்கோய்மலையில் பதிந்துள்ள, மறைந்துள்ள தெய்வீக சக்திகளை, திண்டிரினி வேத சக்திகளை, தேவ சக்திகளை வெளிக் கொணர்ந்து பயன்பெற நினைக்கும் பக்தர்கள் சிவராத்திரி அன்று கிரிவலம் வந்து உப்பில்லா பத்தியம் ஏற்று புளித்த தயிரில் ஊறிய மசால்வடைகளைத் தானம் அளித்தலால் சிறிது சிறிதாக ஈங்கோய்மலையில் மாயமாகி உள்ள திண்டிரினி சக்திகளைப் பெறலாம் என்பது சித்தர்கள் அளிக்கும் உறுதி.

ஸ்ரீஅகத்தியர் ஈங்கோய்மலை

அள்ள அள்ளக் குறையாத அருள் பொக்கிஷமே இத்தலத்தில் மறைந்துள்ள திண்டிரினி சக்திகளாகும். குண்டலினி சக்திக்கு முன்னோடியாகத் திகழ்வது இந்த திண்டிரினி சக்திகளாகும். நம் உடலில் மூலாதாரத்தில் மூண்டெழு கனைலை காலால் எழுப்பி அதை சகஸ்ராரத்தில் ஒன்றச் செய்தால் இறைவனைப் பற்றிய அனைத்து இரகசியங்களையும் நாம் அறிந்து கொள்ள முடியும் என்பது சித்தர்கள் தெளிவுரை. மாதா அமிர்தானந்தா ஒரு முறை, “நீங்கள் அனைவரும் ஓம் ஸ்ரீஅமிர்தேஸ்வர்யை நமஹ ஓம் ஸ்ரீஅமிர்தேஸ்வர்யை நமஹ என்று ஓதிக் கொண்டிருக்கிறீர்களே, (தன்னைச் சுட்டிக் காட்டி) இது வெறும் இந்த ஐந்தடியில் உலவும் ஓர் உயிரையா சுட்டிக் காட்டுகிறது, அல்ல, அல்ல. நம் உடலில் ஆயிரம் இதழ்கள் கொண்ட சகஸ்ரார சக்கரத்தில் மறைந்திருக்கும் இறைவன் என்ற அமிர்த சக்தியையே இது சுட்டிக் காட்டுகிறது ...” என்றார்.

நாம் சகஸ்ரார சக்கரம் என்று சொல்லும் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை என்பது ஒரு உதாரணத்திற்காகக் கூறப்பட்டதே தவிர உண்மையில் சஹஸ்ரார சக்கரம் என்பது ஆயிரமாயிரம் இதழ்கள் மலரும் இறை உணர்வைக் குறிப்பதே. இதில் மலரும் இறை சக்திகயைப் பற்றிக் கூறும்போது, “அடியேன் இறைவனை உணர்ந்த அந்த அனுபவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது ... அடியேன் மட்டும் கிடையாது, இறைவனை உணர்ந்த எவருமே தங்கள் இறை அனுபவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. சற்றே ஆத்ம விசாரம் செய்து பார்த்தாலும் இது உண்மைதான் என்பது தெளிவாக புரிய வரும். கேவலம் மனித வார்த்தைகளின் வர்ணனைகளில் கட்டுப்படும் ஒரு சக்தி எப்படி இறை சக்தியாக இருக்க முடியும் ? ஆனால், இறை உணர்விற்குப் பின் பல படித்தரங்கள், ... பல படித்தரங்கள் இறங்கி கீழே வந்த பின் நடந்த நிகழ்ச்சிகளை ஓரளவு அடியேனால் வர்ணிக்க முடியும் ... தரைக்கு கீழே இருக்கும் அனைத்துப் பொருட்களும், தங்கம், வைரம் போன்ற அனைத்தும் தெளிவாகத் தெரிந்தன, மக்கள் மட்டும் அல்ல பறவைகள், விலங்குகள், புழு, பூச்சி என அனைத்து உயிரினங்களும், தாவரங்களும் பேசும் அனைத்து மொழிகளின் அர்த்தமும் தெளிவாகத் தெரிந்தன. ” இதுவே இறை அனுபவம் பெற்ற ஒரு அடியாரின் அனுபவம். இந்த இறை அனுபவம் நம் சற்குரு ஒருவர் மட்டுமே பெற்றார் என்பது நிச்சயமாகக் கிடையாது. நம் சற்குருவை குருவாக ஏற்றுக் கொண்ட, ஏற்றுக் கொள்ளும் அனைவரும் பெறக் கூடிய அனுபவமே, ஆனந்தமே இது. தேவை நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கையே. உதாரணத்திற்கு மகான்கள் மூவர் தெளிவுபடுத்தும் தியானமுறைகள் பற்றி இங்கு தெளிவுபடுத்துகிறோம். வள்ளலார் சுவாமிகள் கண்ணாடி தியானம் என்ற அற்புதமான தியான முறையை அளித்துள்ளார்கள். ஒருவர் பெரிய அளவு நிலைக் கண்ணாடியின் முன் அமர்ந்து கொண்டு தன்னைத்தானே பார்த்து தியானிப்பது. சிறிது சிறிதாக இந்த தியானம் அவரவரைச் சுற்றியுள்ள சூட்சும சரீரங்களின் தன்மையைப் பற்றி தெளிவுபடுத்துவதால் தாங்கள் செய்யும் தவறுகளை குறைத்துக் கொண்டே வந்து தொடர்ந்து தியானத்தில் முன்னேறி இறைவனை அடையலாம். மற்றவர்கள் தவறு செய்கிறார்கள், நான் அவர்களைத் திருத்த வேண்டும் என்ற பேச்சிற்கே இங்கு இடமில்லை. காரணம் மற்றவர் என்று எவருமே கிடையாது. நீங்களே உங்களைச் சுற்றி காண்பது அனைத்தும் உங்களைத்தானே, எவரிடம் எந்தத் தவற்றைக் கண்டாலும் அது உங்கள் தவறைக் குறிப்பதாகத்தானே அமையும், அந்தத் தவறுகளை எல்லாம் சரி செய்ய முனைந்தால் நீங்கள் மாசில்லா மாணிக்கமாகத்தானே துலங்குவீர்கள்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஈங்கோய்மலை

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் சுவாமிகளின் தெய்வீக உரை எந்த அளவு பொருள் பொதிந்தது என்று தற்போது புரிகின்றது அல்லவா ? கேட்பதற்கு எளிமையாகத் தோன்றும் இந்த தியானத்தை முழுமைப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதன்று. ஒரு முறை ஒரு அடியார் நம் சற்குருவிடம், “வாத்யாரே, என்னருகில் உள்ள ஒரு பாச்சையை ஒரு பல்லி பிடிக்க வந்தது, நான் அந்த பல்லியை விரட்டி விட்டு அந்த பாச்சையை காப்பாற்றினேன் ...,” என்று பெருமையாகக் கூறினார். நம் சற்குரு சிரித்துக் கொண்டே, “ஆமாம் சார், நீங்கள் ஒரு இட்லியை வாயில் வைக்கும்போது உங்கள் கன்னத்தில் ஒருவர் பளார் என்று அறைந்து அந்த இட்லி கீழே விழும்படிச் செய்தால் உங்களுக்கு எவ்வளவு ஆனந்தமாக இருக்கும் ... ? அது போன்றதுதான் இது, பல்லியைப் பொறுத்தவரை அந்த பாச்சை அதனுடைய உணவு. அது உணவை ஏற்கும் முன் அதைத் தடுத்து நிறுத்த உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது ?” என்று கேட்டார். ஆழ்ந்த பொருளுடைய இந்த கேள்வியை அடியார்கள் ஆத்ம விசாரம் செய்து வந்தாலே போதும் அனைத்து அத்வைத கருத்துக்களுக்கும் தெளிவான விடை கிட்டும். எப்போதோ தோன்றிய வள்ளலார் சுவாமிகளின் தியான முறை இவ்வாறிருக்க தற்போது அனைத்து உலக மக்களுக்கும் சற்குருவாய் மலர்ந்துள்ள அமிர்தானந்தா அன்னையின் தியான முறையைப் பற்றி அறிந்து கொள்ளலாமா ? அன்னையின் திருஉருவப் படங்களே அன்னையின் ஆஸ்ரமம், பள்ளிகள், தொண்டு நிறுவனங்கள் என அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும். இதுவே அனைத்து உயிர்களையும் தானாகக் கருதுவது, அந்த எண்ணத்தில் முழுவதுமாக மூழ்கித் திளைப்பது. அன்னை ஒரு நாயை, பாம்பை, யானையை அணைத்து அதற்கு முத்தமிட்டு மகிழ்ச்சி கொள்கிறார்கள், ஆனந்தம் அடைகிறார்கள் என்றால் அன்னை எந்த யானையையும் அணைக்கவில்லை எந்த பூனைக்கும் முத்தம் அளிக்கவில்லை. தன்னைப் போல் பிரபஞ்சத்தில் நிரவியிருக்கும் இறைவனின் படைப்பாய் மிளிரும் அன்னை உருவங்களையே அன்னை தரிசிக்கிறார், அணைத்து மகிழ்கிறார். தியானம் என்பதை இதை விட மிக மிக எளிதாக எவராலும் சுட்டிக் காட்ட இயலுமா ? சற்றும் குழப்பமில்லாத தியான முறை இது. முயன்று பாருங்கள், வெற்றி வாகை சூடுங்கள். நம் சற்குருவின் தியான முறையோ பணிந்தவனே பக்தன் என்று பணிவின் பாதாளத்தைக் காட்டுவது.

எதுவும் என்னுடையது அல்ல அனைத்தும் உன்னுடையதே அருளாளா அருணாசலா !
என்ற சித்த குரு வேத சூக்த மாமந்திரமே நம் சற்குரு அருள்வது. பலரும் இதை தங்கள் வண்டிகளில், இல்லங்களில் விளம்பரம்போல் வைத்திருப்பதால் யாதொரு பலனும் விளையப்போவதில்லை என்பார் நம் சற்குரு. ஒவ்வொருவரும் மனதில் பதித்துக் கொண்டு தங்கள் எண்ணம், சொல், செயலில் முழுவதுமாக செயல்படுத்த வேண்டிய பொன் மொழியே இது. நம் சற்குருவை நேரில் தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றவர்கள், நம் சற்குருவுடன் நெருங்கிப் பழகியவர்கள் இந்த பொன்மொழியின் இலக்கணமாகவே, சித்தர்களின் அருட்புனலின் நிறைகுடமாகத் திகழ்ந்தார் என்ற உண்மையை, பேருண்மையை அறிந்து இன்புற்றிருக்கலாம். மற்றவர்கள் இந்தப் பொன்மொழியை பயன்படுத்துவதால் மட்டுமே இதன் அருமை பெருமைகளை உணர முடியும். இது மனிதனை அலங்கரிக்கும் ஒரு ஆபரணமன்று, உயிர்களுக்கு உயிரளிக்கும் உயிர் மூச்சு !

ஸ்ரீமுருகப் பெருமான் ஈங்கோய்மலை

பலரும் வானத்தை நோக்கும்போது அது நீலமாக ஒளிர்வதாகவே எண்ணுவர். ஆனால், வானத்தைக் கடந்து ராக்கெட் போன்ற வாகனங்களில் பறப்பவர்கள் நமது பூமியைச் சுற்றி பரவெளியெங்கும் ஒரு இருட்டைத்தானே சந்திக்க வேண்டி வரும், அதாவது கருமை நிறத்தையே எங்கும் காணுவர். இதுவே இறைவனின் ஆதிவடிவான நள்ளிருள். இந்த நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் ஒளி பொருந்திய வில்லே ராம தனுசு என்னும் வானவில்லாகும். ஏதோ ஒரு சில நிமிடங்களே தோன்றி வானத்தில் மலரும் ராமதனுசு அல்ல, ராமர் என்னும் வானத்தை அலங்கரிக்கும் பக்தி. இந்த பக்தி தனுசுவை சதா சர்வ காலமும் தரிசித்தவரே ஸ்ரீமூதாகருப்பண்ண சுவாமி என்ற காக்கும் கடவுள் ஆவார். புதுக்கோட்டை அரண்மனைப்பட்டி திருத்தலத்தில் ஸ்ரீகொன்றையடி விநாயகர் சன்னதியில் எழுந்தருளிய சக்தியே ஸ்ரீகருப்பண்ண சுவாமி ஆவார். உடலாலும், மனதாலும், மற்ற பகை சூழ்நிலைகளாலும் இருண்ட சூழ்நிலைகளை சந்திப்போர் கீழ்க்கண்ட ஸ்ரீமூதாகருப்பண்ண சுவாமி துதியை ஓதி வருவதால் இருளிலும் வழிகாட்டும் தெய்வீக ஒளியை நிச்சயம் பெறுவார்கள்.
ஸ்ரீமூதா கருப்பண்ண சுவாமி அழைப்பு
வானமே எல்லையாய் வளர்கீர்த்தி மேவியே வீச்சருவா ஏந்திய மூதா கருப்பண்ண சுவாமியே
வகையுடன் நின்றிங்கு வாழ்த்துகின்ற பக்தரின் வாட்டமெல்லாம் தவிர்த்து
ஞானமே உருவாகி ஞாயிற்றின் ஒளியென நானிலத்திருள் நீக்கிடும்
நமது குல தெய்வமாய் நாடெல்லாம் போற்றவே
நலம் தரும் மூதா கருப்பண்ண சுவாமியே
அளவிலா உவகையோடு அலைகடல் என்னவே ஆர்ப்பரித்து ஓசை கூட்டிக்
கானமே இசைத்திங்கு கணக்கிலே பல யுகமாய்
காலமெல்லாம் நின்ற மூதா கருப்பரே
கருணையோடெம்மைக் கண்டு கண்களெனக் காத்திடும்
மூதா கருப்பண்ணசாமி திருவடியே
சரணம் சரணம் சரணம்

ஹோமம், அன்னதானம் போன்ற எந்த வழிபாடுகளையும் மேற்கண்ட துதியுடன் இணைத்துக் கொள்ளக் கூடத் தேவையில்லாத வகையில் நம் சற்குரு நமக்காக அரும்பாடுபட்டு அள்ளித் தந்த காப்புத் துதியே இந்த அருட்கொடை ஆகும். குறைந்தது காலை, மதியம், மாலை என்று மூன்று வேளையும் 12 முறை ஓதி தங்கள் இஷ்ட தெய்வங்களை, தாய் தந்தையரை வழிபட்டு வந்தாலே ஸ்ரீமூதாகருப்பண்ண சுவாமியின் அருளைப் பெறலாம் என்றால் நம் சற்குருவிற்கு தன் ஆருயிர் சீடர்கள் மேலுள்ள கருணைதான் என்னே. பல ஜோதிடர்களும் தங்கள் குல தெய்வம் பற்றிய சரியான தெளிவைத் தராமல் குழப்புகிறார்கள் என்று ஏகப்பட்ட அடியார்கள் தங்கள் கருத்தை வெளியிட்டு இந்தக் குழப்பத்திற்கு விடையளிக்குமாறு கேட்டுள்ளனர். காலம் காலமாய் எண்ணற்ற அடியார்களுக்கு ஏற்படும் இஷ்ட தெய்வம், குல தெய்வம் பற்றிய குழப்பத்திற்கு விடை அளிப்பவரே ஸ்ரீமூதாகருப்பண்ண சுவாமி ஆவார். தங்கள் குல தெய்வம் யாரென அறியாதோரும், தாங்கள் இஷ்ட தெய்வமாக எந்த தெய்வத்தை, தேவதையை தேர்ந்தெடுத்துக் கொள்வது என்று குழம்பி இருப்போரும் எந்த விதக் குழப்பமுமின்றி ஸ்ரீமூதாகருப்பண்ண சுவாமியை குல தெய்வமாக, இஷ்ட தெய்வமாக ஏற்று ஆராதித்து வரலாம். இவ்விஷயத்தில் எந்தவிதக் குழப்பமும், தயக்கமும் கொள்ள வேண்டாம் என்று நம் சற்குரு தெளிவுபடுத்துகிறார்.

சோளிங்கர் சோலைவனம்

சென்னையிலிருந்து சுமார் 100 கிமீ தொலைவில் அமைந்துள்ளதே ஸ்ரீலட்சுமி நரசிம்மர் எழுந்தருளியுள்ள சோளிங்கர் திருத்தலமாகும். திருவாலங்காடு, திருத்தனி, திருஅண்ணாமலை போன்ற பல அற்புத திருத்தலங்கள் நடுவில் எழுந்தருளி உள்ள திருத்தலம் இது. சோளிங்கம் என்பது அதிஉஷ்ணமான தீக்கனல் கக்கும் பாறையாகும். நம் பூலோக மக்கள் இயற்றிய மாதவத்தால் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் மனங்குளிர்ந்து இந்த அக்னிப் பாறையை தன் இருப்பிடமாக ஏற்று இதை குளிர்வித்தார் என்றால் சோளிங்கர் திருத்தலத்தின் மகிமையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலுமா ? எப்படி சூடு குளிர்ச்சி என்பதை விஞ்ஞானப் பதங்களால் விளக்க முடியாதோ அது போன்றதே நரசிம்ம வெப்பமும் குளிர்ச்சியுமாகும். நாம் சைபர் டிகிரி வெப்பம் என்று குளிரைக் குறித்தால் அது எலக்ட்ரான்களை இயக்கும் அதி வெப்பமாக ஆகிறது அல்லவா ? அது போன்றதே சோளிங்கர் திருத்தலத்தில் சிருஷ்டியின் போது நிலவிய வெப்பத்தின் தன்மையுமாகும்.

சோளிங்கர்

எதையும் படித்து ஆராய்ச்சி செய்து குழப்பம் அடைவதை விட அதை நடைமுறையில் பயன்படுத்தினால்தானே உண்மையான தன்மை புரியவரும். அதுபோல் எத்தகைய கோபத்தில் குதிக்கும் வழக்கம் உடையவர்களும் சோளிங்கர் திருத்தலத்தை அடைந்து இங்குள்ள பாறைகளின் மேல் தங்கள் உள்ளங்கைகளை குறைந்தது ஒரு மணி நேரம் வைத்திருந்து நரசிம்ம தோத்திரங்களை, பெருமாள் துதிகளை, சகஸ்ரநாமங்களை ஓதினால் உடனடியாக தங்கள் உடலில் ஏற்படும் அதீத குளிர்ச்சியைக் கண்டு ஆச்சரியம் அடைவார்கள். நரசிம்மர் என்றாலே சூடு, வெப்பம் என்ற தன்மை மறைந்து சுவாமி குளிர்ச்சியில் குளிர்பவரே என்ற பனி மலை இரகசியம் புரிய வரும். முற்பிறவிகளில் தீவிர நரசிம்ம உபாசனையை மேற்கொண்டவர்களே சோளிங்க நரசிம்ம மூர்த்தியை இப்பிறவியில் தரிசிக்க முடியும். ஒரு முறை நம் சற்குருவிடம் 14 வயது நிரம்பிய ஒரு சிறுவனைக் கூட்டி வந்தனர். கூட்டி வந்தனர் என்பதை விட கட்டி இழுத்து வந்தனர் என்பதே சரியான பிரயோகமாகும். அவனுடைய உடம்பெங்கும் சாட்டை, குச்சியால் அடித்த புண்கள் ஏராளமாய் இருந்தன. உடல் முழுவதும் சூட்டுக் காயங்கள் நிரம்பி வழிந்தன. நம் சற்குரு கைகாட்டவே அந்தச் சிறுவனுடன் வந்தவர்கள் தயங்கிக் கொண்டே அந்தச் சிறுவனை நம் சற்குருவின் அருகில் அமர வைத்தனர். அன்பு கனியும் அருட் பார்வையின் மழையில் நனைந்த சிறுவன் உடனடியாக சமாதானம் அடைந்தான் என்பதை அவன் அமைதியான செய்கைகள் தெரிவித்தன. உடன் வந்தவர்களும் சற்றே அமைதி அடைந்து தாங்கள் வந்த காரணத்தை தெரிவித்தனர். “சுவாமி, இவனுக்கு வயது 14 ஆகிறது. எங்கள் வீட்டிற்கு யார் வந்தாலும் இரண்டு சக்கரமோ அல்லது நான்கு சக்கர வண்டிகள் எதுவாக இருந்தாலும் வந்தவர்கள் வீட்டிற்குள் வந்து வெளியே செல்வதற்குள் அந்த வண்டிகளை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து போட்டு விடுகிறான். வந்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்க எங்கள் நிலைமையோ மிகவும் தர்ம சங்கடமாகி விடுகிறது. இது தவிர இந்தச் சிறுவனிடம் வேறு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. எந்த வேலையில் வைத்தாலும் இவ்வாறு வண்டிகளைப் பிரித்துப் போடும் செய்கையால் இவனை ஓரிரு நாட்களில் அங்கிருந்து விரட்டி விடுகிறார்கள் ...”, என்று தங்கள் வேதனையை விவரித்தார்கள்.

பிரகலாத தீர்த்தம் சோளிங்கர்

சற்று நேரம் சிறுவனைப் பார்த்த நம் சற்குரு வேறு பக்கம் திரும்பி, “இந்தப் பையன் மேல் குடியேறிய எந்த ஆவியாக இருந்தாலும் அந்த ஆவிக்கு அடியேனுடைய பணிவான நமஸ்காரங்கள் ...,” என்றார். இதைப் பார்த்த, கேட்ட நபர்களுக்கு ஒரே ஆச்சரியம். “நாம் அழைத்து வந்த பையன்தான் “ஒரு மாதிரி ...” என்றால் இந்த மகானோ “வேறு மாதிரியாக ...” அல்லவா இருக்கிறார் ...,” என்று நினைத்து குழப்பத்தில் ஆழ்ந்தார்கள். இப்போது அந்தப் பையன்மேல் குடியேறிய ஆவிக்கும் நம் சற்குருவிற்கும் இடையில் உரையாடல் தொடர்ந்தது. இதில் அந்தப் பையனுக்கும் நம் சற்குருவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பதைப் பின்னர் நம் சற்குரு அடியார்களிடம் தெரிவித்தார். “இந்தச் சிறுவனைத் தாங்கள் ஆக்கிரமித்ததன் காரணத்தை அறிந்து கொள்ளலாமா ?” என்று கேட்கவே அந்தச் சிறுவன் பதிலளித்தான். “எனக்கு வயது 35 ஆகி விட்டது. திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நான் ஒரு விபத்தில் மாட்டிக் கொண்டு அகால மரணமடைந்து விட்டேன். எனக்கு தெரியாத கார் மெக்கானிசம், டூவீலர் மெக்கானிசம் கிடையாது. ஆனால், என்னால் ஒரு ஏசி காரை ஓட்டிப் பார்க்கவே முடியவில்லை. அதுதான் எனக்குள்ள பெரிய குறை ...”, என்றது இல்லை என்றான். நம் சற்குரு, “சரி, நீ ஓட்டிப் பார்ப்பதற்கு ஒரு ஏசி கார் ஏற்பாடு செய்கிறேன் ...,” என்று சொல்லி தனக்குத் தெரிந்த ஒரு வாடகை கார் கம்பெனிக்கு போன் செய்யவே சற்று நேரத்தில் ஒரு புதிய ஏசி கார் அவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றது. அந்தச் சிறுவனுடன் செல்வதற்கு நம் சற்குரு எழுந்து நின்று விட்டார். அனைவருக்கும் அதிர்ச்சி. “சுவாமி, இந்தச் சின்னப் பையனை நம்பி காரில் போகாதீர்கள் ...” என்று தடுத்துப் பார்த்தார்கள். சற்குருவோ, “அடியேன் இவனுடன் செல்வதாக முடிவு செய்து விட்டேன். இஷ்டம் உள்ளவர்கள் அடியேனுடன் வரலாம் ...,” என்று கூறிக் கொண்டே அந்தக் காரில் முன் சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டார். உடன் இருந்தவர்கள் இருவர் மட்டும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி ஏதேதோ முனகிக் கொண்டே காரில் ஏறி பின் சீட்டில் அமர்ந்தனர். சிறுவன் டிரைவர் சீட்டில் அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்தான். சற்குரு கூறியபடி ஏசியை முழுவதுமாகப் போட்டுக் கொண்டான். எத்தனையோ ஆண்டுகள் வண்டியை ஓட்டியவன் போல் கியரை ஆபரேட் செய்து வண்டியை சற்றும் குலுக்கல் இன்றி நகர்த்தினான். வண்டி மெதுவே மெதுவே 30, 40 என்றவாறு 80 மைல் வேகத்தை அடைந்து சென்னை மெயின்ரோடில் பறக்க ஆரம்பித்தது. சோளிங்கர் திருத்தலத்தை நோக்கி சென்றது கார்.

ஸ்ரீபிரகலாதன் சன்னதி சோளிங்கர்

கோயிலை அடைந்தவுடன் காரை விட்டு இறங்கி மலைப் படிக்கட்டுகளில் ஏறிச் சென்று நரசிம்மரை தரிசனம் செய்தனர். திரும்பவும் முன் போலவே காரில் ஏறி நம் சற்குருவின் இல்லத்தை அடைந்தனர். இடையில் எவருமே எதுவுமே பேசவில்லை. இதுவரை என்றும் காண முடியாத ஒரு அமைதியுடன் திகழ்ந்தான் சிறுவன். நம் சற்குருவை வணங்கிய சிறுவன், “சுவாமி, உங்களைப் போன்ற ஒரு நல்லவரை என்னுடைய ஆயுளில் இதுவரை நான் சந்தித்ததே இல்லை. எங்கு சென்றாலும் என்னை அடிப்பதிலும் உதைப்பதிலுமே கண்ணும் கருத்துமாக இருந்தார்களே தவிர ஒருவராவது என்னுடைய உள்ளத்தைப் புரிந்து கொள்ள முன்வரவில்லை. என்னால் ஆகக் கூடிய ஒரு சிறிய உபகாரமாக இருந்தாலும் அதை உங்களுக்குச் செய்ய சித்தமாக இருக்கிறேன்,” என்றது. அந்த ஆவியின் ஆதங்கம் சிறுவனின் குரலில் தொனித்தது. நம் சற்குருவோ, “அடியேனுக்கு உபகாரம் செய்வது ஒரு புறம் இருக்கட்டும். இந்தச் சிறுவனுக்கு நீங்கள் கூறும் பதில் என்ன ?” என்று கேட்கவே, “சுவாமி, நீங்கள் சொல்லவே வேண்டாம். என்னால் எவ்வளவோ அடி உதை வசவுகளை வாங்கி சொல்லொனாத் துன்பங்களை இச்சிறுவன் அனுபவித்துள்ளான் என்பது எனக்குத் தெரியாதா? ஆனால், இப்போது இவனுக்கு வயது 14 தானே ஆகிறது. உரிய காலம் வந்தவுடன் இவனுக்கு ஒரு நல்ல அரசாங்க உத்தியோகத்தை வாங்கித் தர வேண்டியது என்னுடைய பொறுப்பு ...” என்று கூறி அனைவரிடம் இருந்தும், குறிப்பாக அந்தச் சிறுவனிடம் இருந்து விடை பெற்றது அந்த ஆவி. சொல்லி வைத்தாற்போல் சரியாக 18 வயது ஆனவுடன் அந்தச் சிறுவனுக்கு ஒரு அரசு வங்கியில் வேலை கிடைத்தது. சில வருடங்கள் கழிந்ததும் அவன் ஒரு நல்ல பெண்ணை மணந்து கொண்டு பல நற்குழந்தைகளுக்கும் தந்தையாகும் பாக்கியத்தைப் பெற்றான். இவை அனைத்தும் ஒரு நல்ல ஆவியின் செயல்பாட்டாலும் ஒரு பொன்மனச் செம்மலின் தன்னலமற்ற செய்கையால் விளைந்த நற்பலன்கள்தானே. இந்த நற்பலன்கள் ஏதோ ஒரு காலத்தில் விளைந்தவை என்று கிடையாது. இன்றும் நம் சற்குரு நமக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளிக்கமாட்டாரா என்று காத்து நிற்கும் தேவதைகள் எத்தனை, எத்தனையோ. அத்தகைய ஒரு நல்ல தேவதையின் உதவியால்தான் நீங்கள் இங்கு அளித்துள்ள போட்டோக்கள், வீடியோ போன்றவற்றை தரிசனம் செய்கிறீர்கள். பிரகலாதனைப் போன்ற உத்தம சந்தான பாக்கியங்களை பெற விரும்புவோர் இங்குள்ள பிரகலாத தீர்த்தத்தில் தம்பதி சகிதமாக தொடர்ந்து 48 நாட்கள் நீராடி மலை மீது எழுந்தருளி உள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்து வந்தால் அவர்கள் நற்பலன் பெறுவார்கள் என்பதே சித்தர்கள் அளிக்கும் உறுதி மொழி.

விஷ்ணு தீர்த்தம் சோளிங்கர்

மேலே கூறிய சிறுவனின் பெற்றோர்கள் இந்த பிரகலாத தீர்த்தத்தில் நீராடியே அந்த செல்வத்தைப் பெற்றார்கள் என்பது உங்களுக்குச் சொல்லாமலே விளங்கும் அல்லவா ? சற்குரு ஒருவரை ஏசி காரில் சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் அழைத்துச் செல்லுதல் என்பது அனைவருக்கும் கிடைக்கக் கூடிய ஒரு சாதாரண பாக்கியமா என்ன ? அந்த கார் மெக்கானிக் தனக்காக ஏசியைப் போட்டுக் கொண்டான் என்றாலும் அது தற்காலத்தில் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய, சிறுவர்களும் விரும்பும் குளிர்ச்சியே ஏசி குளிர்ச்சி என்பதால் இந்த குளிர்ச்சியை விரும்பும் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமாக அருளப்பட்டதே நம் சற்குரு அருளிய நரசிம்ம குளிர்ச்சி ஆகும். இன்றும் இத்தகைய குளிர்ச்சியை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் மலை அடிவாரத்தில் உள்ள பிரகலாத தீர்த்தத்திலிருந்தோ, மலை நடுவில் ராமர் கோயில் அருகிலுள்ள விஷ்ணு தீர்த்தத்திலிருந்தோ 300 மி.லி.க்கு அதிகப்படாமல் நீரை பிரசாதமாகப் பெற்று அதில் சர்க்கரைப் பொங்கல் தயார் செய்து தங்கள் ஊரில் உள்ள பக்தர்களுக்கு நரசிம்ம பிரசாதமாக அளித்தல் என்பது கிடைத்தற்கரிய பேறே. சோளிங்கர் திருத்தலத்தில் உள்ள பாறைகள் சோளிங்கம் என்ற அக்னிப் பிழம்பால் உருவான பாறைகள். உண்மையில் இவைகளை பாறைகள் என்று சொல்வதை விட நரசிம்ம சாந்த சக்திகள் என்று சொன்னால் மிகையாகாது. காரணம் பல கோடி யுகங்களுக்கு முன் தீப்பிழம்பாய் விளங்கிய இந்த அதிஉஷ்ண பாறைகள் எல்லாம் ஸ்ரீநரசிம்மரின் நேத்ர சக்தியால் குளிர்ந்து இப்போது நீங்கள் காணும் குளிர்ந்த பாறைகளாகத் திகழ்ந்தாலும் இந்தப் பாறைகள் மக்களின் கோபத்தையும், மூர்க்கத்தனத்தையும் உடனடியாகக் கழிக்கும் அதியற்புத பாறைகளே ஆகும். பலரும் இந்த சக்திகளை முழுவதுமாகப் பெற தங்கள் பாதங்களால் இத்திருத்தலத்தை மிதிக்காது தங்கள் முழங்கால்களைப் பதித்து நடந்து சென்று மலையேறிச் செல்வதை இன்றும் நாம் கண்டு களிக்கலாம். இவ்வாறு முழுவதுமாக முழங்கால்களால் மண்டியிட்டு செல்ல முடியாவிட்டாலும் பிரகலாத தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், விஷ்ணு பாதப் பகுதிகளில் மட்டுமாவது தங்களால் இயன்றவரை முழங்கால்களால் நடந்து செல்தலால் இத்தகைய நரசிம்ம குளிர்ச்சியை தங்கள் உடலில் சுவாமியின் அனுகிரகமாக ஏற்கலாம். ஒரு பிறவியில் கழிந்து விடுவதல்ல, பல பிறவிகளிலும் நம்மைத் தொடர்ந்து வருவதே இந்தப் பெருமாள் அதீத குளிர் சக்திகளாகும்.

ராம பாணம்
சப்த பாணமே

ஏதோ ஒரு யுகத்தில் ராம பாணம் புவியில் திகழ்ந்தாலும் இன்றும் நாம் ராம பாணத்தின் சக்திகளை பெரும் பொருட்டு உலகெங்கும் ராம பாணம் வானவில்லாய் மிளிர்கின்றது. அதன் பின்னணியில் ராம பிரானின் புண்ணிய சக்திகள் மட்டும் செழிப்பதல்ல யுகங்கள் தோறும் தோன்றும் சப்த ரிஷிகளின் தபோ பலனும் இந்த ராம பாணத்தில் ஒளிர்ந்து பக்தர்களுக்கு அனுகிரக சக்திகளை வாரி வழங்குகின்றது. இந்த அனுகிரக சக்திகளை சப்த ரிஷிகள் பெற்ற திருத்தலமே சோளிங்கர் ஆகும். எங்கெல்லாம் ராம பாணம் வானில் பிரகாசிக்கின்றதோ அங்கெல்லாம் இந்த சப்த ரிஷிகளின் தபோ சக்திகளும் அந்த வானவில்லில் மறைந்து, மிளிர்ந்து பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கும் என்பதே சித்தர்கள் கூறும் இரகசியம் ஆகும். பொதுவாக, அத்ரி, பிருகு, புலஸ்தியர், வசிஷ்டர், கௌதமர், ஆங்கிரசர், மரீசி என்று சப்தரிஷிகளைக் குறிப்பிட்டாலும் இந்த சப்த ரிஷிகளும் யுகத்திற்கு யுகம் மாறி அமைவர். எப்படி கோயில் கோபுரக் கலசங்களில் தோன்றும் கலச தேவதைகள் 12 வருடங்கள் ஆனதும் கலசங்களிலிருந்து வெளியேறி தங்கள் தபோ பலன்களைப் புதுப்பிக்கச் சென்று விடுகிறார்களோ அதேபோல இந்த சப்த ரிஷிகளும் யுகத்திற்கு யுகம் மாறிக் கொண்டே இருப்பார்கள். வசிஷ்ட மகரிஷி ஒருவர் மட்டுமே சப்த ரிஷிகளின் குழுவில் அமர்ந்து குசா சக்திகளை தொடர்ந்து இந்த பிரபஞ்சத்தில் என்றும் நிலை நாட்டி வருபவர். அதனால்தான் நாம் இன்றும் அருந்ததி சமேத வசிஷ்ட மகரிஷியை வானத்தில் சப்த ரிஷி மண்டலத்தில் தரிசனம் செய்து அருள்பெறுகின்றோம்.

சப்த ரிஷிகள் சோளிங்கர்

இந்த சப்த ரிஷிகளின் சாதனை வியாபகமாகவே தற்காலத்தில் சிவத்தலங்களில் எழுந்தருளி உள்ள 63 நாயன்மார்களின் திருவுருவங்களும் அமைந்துள்ளன. உண்மையில் நாம் நினைப்பது போல் நாயன்மார்கள் என்பவர்கள் 10001 மூர்த்திகள் ஆவர். அது எப்படி?
ஸ்ரீகுழந்தையானந்தா சுவாமிகள் .. 64வது நாயன்மார்
சுவாமிகளுக்கு மதுரையில் மட்டுமல்லாது காஷ்மீர், டெல்லி, திருச்சி உய்யக்கொண்டான் மலை என்று மற்ற இடங்களிலும் ஜீவ சமாதிகள் அமைந்துள்ளன.
ஸ்ரீசுந்தரானந்தா சுவாமிகள், மதுரை .. 65
ஸ்ரீஅருணாசலக் கவிராயர் .. 66
ஸ்ரீசிங்கம்புனரி வாத்யார் ஐயா .. 67
ஸ்ரீஎச்சில்பொறுக்கி ஆறுமுக சித்தர் .. 68
ஸ்ரீநந்தி பெருமானார் .. 69
ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி .. 70
ஸ்ரீநடனகோபால சுவாமிகள் .. 71
ஸ்ரீ ஔவையார் .. 72
ஸ்ரீ திருவள்ளுவர் .. 73
ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் அளிக்கப்பட்ட அனைத்து மகரிஷிகளும் உதாரணமாக போகர், புலிப்பாணி, பட்டாம்பூச்சி சிறகடி சித்தர், கரடி சித்தர், சனிபரணி சித்தர் போன்ற சித்தர்கள் அனைவருமே நாயன்மார்கள்தான் என்ற இரகசியத்தை நமக்கு அறிவிப்பவரே நம் சற்குரு ஆவார். ஒரு முறை நம் சற்குருவிடம் ஒரு அடியார், “வாத்யாரே, எங்கள் வீட்டில் ஒரு துளசிச் செடி வைத்திருக்கிறேன். அதில் நிறைய வெயில் படும்படி உள்ளதால் அதற்கு பந்தல் போட்டு அது வாடாதபடி காப்பாற்றினேன் ...,” என்று கூறி பெருமைபட்டுக் கொண்டார். நம் சற்குருவும் சிரித்துக் கொண்டே ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டார்.

ஸ்ரீராமர் பாதம் சோளிங்கர்

சற்று நேரம் கழித்து வேறு ஒரு அடியாரிடம் 300 தேங்காய்களைக் கொடுத்து அந்த அடியாரிடம் உடைத்து வாங்கும்படிக் கூறினார். அவ்வாறே அந்த “இளகிய மனதுடைய” அடியாரும் அந்த தேங்காய்களை உடனே உடைத்துத் தந்து விட்டார். எல்லாம் நிறைவேறிய பின்னர் அங்கு வந்த நம் சற்குரு, “எப்படி ஐயா, அவன் இத்தனை தேங்காய்களையும் உடைத்தான். ஒவ்வொரு தேங்காயை உடைக்கும்போதும் அது உயிர் விடும் என்பதை அவன் ஏன் தெரிந்து கொள்ளவில்லை. ஆனால், சிறிதும் மன வருத்தமின்றி இத்தகைய தேங்காய்களையும் மடக், மடக்கென்று உடைத்துக் கொடுத்தானே, அது எப்படி ... ?” என்று அங்கு இருந்தவர்களிடம் கேட்டார். இந்த தெரிந்த பதிலுக்கு யார் பதில் அளிக்க முடியும் ? இவ்வாறு 300 தேங்காய்கள் உயிர் விடுவதை அனைத்தும் அறிந்த நம் சற்குரு எப்படி பொறுத்துக் கொண்டார் ? இதற்கு நம் சற்குரு அளிக்கும் விளக்கமோ உண்மையான அன்பு உடையவர்களுக்கு கண்ணீர் தோன்றுவதில்லை என்பதாகும். இந்த தேங்காய்கள் அனைத்தும் உயிர் விடும் என்று நினைத்து ஒரு புறம் கலங்கினாலும் மறுபுறம் திருஅண்ணாமலை அன்னதான கைங்கர்யத்திற்காக இந்த தேங்காய்கள் தங்கள் உயிரை தியாகம் செய்வதால் அவைகள் எத்தகைய உயர்நிலையைப் பெறும் என்பதும் அனைவரையும் பிரமிக்க வைக்கும் சித்த இரகசியம் அல்லவா ? மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து பலிச் சக்கரவர்த்தி முன் சென்று மூன்றடி நிலத்தை யாசித்தார் அல்லவா ? அப்போது தன் சீடனைக் காப்பாற்றுவதற்காக அனைத்தும் அறிந்த சுக்ராச்சாரியார் பலிச் சக்கரவர்த்தியிடம், “டேய், வந்திருப்பவன் மகா விஷ்ணு. எந்தக் காரியமாக இங்கு வந்திருக்கிறான் என்று புரியவில்லை. நீ அவனிடம் மிகவும் ஜாக்கிரதையாக நடந்து கொள் ...”, என்று எச்சரித்தார். வாமனர் மூன்றடி நிலத்தை தானமாக கேட்டபோது உத்தம குருவின் எச்சரிக்கையை மீறி முன் பின் ஆலோசிக்காமல் உலகை ஆளும் பெருமாளே தன்னை நாடி யாசகம் பெற வந்துள்ளானே என்ற தற்பெருமை மேலிட வாமனருக்கு மண் தானம் அளிக்க முன் வந்தான் பலிச் சக்கரவர்த்தி. அந்நிலையில் தன் வாக்குறுதியை நிறைவேற்ற தன்னுடைய கமண்டல நீரை ஊற்றி அந்த நீர் சாட்சியாக தானத்தை உறுதி அளிக்குமாறு வாமனர் தெரிவிக்கவே அந்த கடைசிக் கட்டத்திலும் தன்னுடைய சீடனைக் காக்க நினைத்த உத்தம குருவான சுக்ராச்சாரியாரோ ஒரு வண்டின் வடிவெடுத்து அந்த கமண்டலத்தின் வாயை அடைத்து கமண்டலத்திலிருந்து நீர் வெளியேறாதவாறு தம்முடைய சீடனைக் காக்கத் துணிந்தார்.

சோளிங்கர்

அனைத்தையும் அறிந்தவர் அல்லவா பெருமாள் மூர்த்தி ? தர்ப்பை ஒன்றை எடுத்து கமண்டலத்தை அடைத்திருந்த வண்டின் கண்ணைக் குத்தை அந்த வலி பொறுக்க முடியாமல் சுக்ராச்சாரியார் அந்த கமண்டலத்தை விட்டு வெளியேறினார். வாமன மூர்த்தி நினைத்திருந்தால் அந்த தர்ப்பையால் அந்த வண்டைக் குத்தி சம்ஹாரம் செய்திருக்கலாம் அல்லவா ? ஆனால், அவ்வாறு செய்யாமல் வண்டின் கண்ணைக் குத்தி பார்வையை மட்டும் போக்கினார் வாமன மூர்த்தி. இதன் காரணத்தை ஆத்ம விசாரம் செய்து அறிந்து கொண்டால் தேங்காய் உடைத்தலின் மகத்துவத்தை அறிந்து கொள்ளலாம். முயற்சி செய்வோமா ? இங்கு நம் அடியார்களுக்கு ஒரு சந்தேகம் தோன்றலாம். அமிர்தானந்தா மயி போன்றவர்கள் இறை கீர்த்தனையில் மெய்மறந்து கண்ணீர் சிந்துகிறார்களே, அது எப்படி ? அன்னை, தான் சித்தர்கள் போன்ற உயர்ந்த நிலையில் இலயித்து இருக்கும்போது அன்னையின் கண்களில் கண்ணீர் தோன்றுவதே இல்லை. ஆனால், அன்னை சற்றே கீழிறங்கி வந்து ஒரு சாதாரண மனிதனைப் போல் நம் சுகம் துக்கங்களில் பங்கேற்கும்போது மட்டுமே இந்த “துக்கத்தின் பங்கீட்டை” கண்ணீர் மூலம் வெளிப்படுத்துகிறார்கள். இது அன்னையின் செயல்பாட்டைக் கூர்ந்து கவனித்தால் அறியக் கூடிய உண்மையாகும். எந்த ஒரு துன்பமான, துக்ககராமான சூழ்நிலையிலும் நம் சற்குரு கண் கலங்கியதே இல்லை. ஒரு முறை சற்குருவின் வார்த்தையை மீறி டூவீலரில் சென்ற ஒரு அடியார் ஒரு விபத்தில் மாட்டிக் கொண்டார். அவர் உயிரை காப்பாற்றுவதற்காக சென்னையில் அவருக்கு மூளையில் ஆபரேஷன் செய்யப்பட்டது. அப்போது திருச்சியில் உடல் நலம் குன்றி இருந்த நம் சற்குருவோ தன் தலையைப் பிடித்துக் கொண்டு அம்மா, அம்மா என்று காண்போர் மனம் உருகும் வண்ணம் கதறினார் என்றாலும் நம் சற்குருவின் கண்களிலிருந்து ஒரு துளிக் கண்ணீரும் சிந்தவில்லை என்பதே உண்மையான பக்தியின் இலக்கணத்தை நேரில் வெளியிட்ட நம் சற்குருவின் பெருமையாகும்.

சோளிங்கர்

கேதார்நாத் கௌரிகுண்டத்தில் அனைவரும் தீர்த்தத்தின் இதமான சூட்டில் தம்மை மறந்து இலயித்திருக்க நம் சற்குருவோ அந்த குளிரிலும் அந்த வெண்ணீர் ஊற்று தோற்றத்திற்குக் காரணமான மகரிஷிகளுக்கு அர்க்யம் அளித்துக் கொண்டிருந்தார் என்பதே நம்மை மெய்மறக்கச் செய்யும் சற்குரு அனுபூதிகளில் ஒன்றாகும். சற்குருவின் வழிகாட்டுதலைப் பின்பற்றி ஒரு அடியார் ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் வெளியான ரிஷிகள், மகரிஷிகள், ஞானிகள் போன்ற உத்தமர்களின் நாமங்களை செல்போனில் உள்ள வாய்ஸ் ரெகார்டர் மூலம் பதித்து அதை மீண்டும் இயக்கி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் அத்தனை ரிஷிகளுக்கும் அர்க்யம் அளித்தார். செல்போன் ஒரு எதிர்மறை சக்தி என்றாலும் அந்த எதிர்மறை சக்தியும் மேற்கண்ட முறையில் பயன்படுத்தப்படும்போது அது நல்லியக்க கதிர்களை பரவெளியில் பரப்பும் என்பது உண்மையே. இந்த ராகவேந்திர ஆண்டில் எந்த நற்காரியங்களையும் தன்னால் நிறைவேற்ற முடியவில்லை என்று ஒரு அடியார் செய்தி அனுப்பி உள்ளார். இது அந்த அடியார் இந்த ஆண்டின் மகத்துவத்தை அறிந்து கொள்ள இயலாத நிலையையே சுட்டிக் காட்டுகிறது. எந்த வருடத்திலும் இல்லாத வகையில் இந்த வருடம் மட்டுமே பல திருத்தலங்களின் அரிதிலும் அரிய காட்சிகள், சித்திரங்கள், வீடியோ படங்கள் இங்கு அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், எப்போதும் ஒளிரும் தீப சக்திகளைப் போல் அல்லாமல் இருண்ட இருளில் வானில் பிரகாசிக்கும் மின்னலைப் போன்ற சக்தியுடன் பிரகாசிப்பதே இந்த ராகவேந்திர சக்திகள் என்பதைப் புரிந்து கொண்டால்தான் இந்த வருடத்தின் மகத்துவத்தை நாம் நன்முறையில் நமக்கும், நம் குடும்பத்தினருக்கும், இந்த சமுதாயத்திற்கும் பயன்படுத்த முடியும். ஒரு முறை ஒரு அடியார் தன் மனைவிக்கு மருள் வருவதாகக் கூறவே அதை மற்ற அடியார்கள் ஏற்கவில்லை. இருந்தாலும் சற்குருவின் மதிப்பைப் பெறலாமே என்ற எண்ணத்தில் அந்தப் பெண்மணியே நம் சற்குருவிடம், “வாத்யாரே, அடிக்கடி மருள் வருகிறது ...,” என்றார். அனைத்தும் அறிந்த சற்குருவோ, “அம்மா யாருக்கு மருள் வருகிறது ?” என்று கேட்டார். இந்த ஒரு கேள்வியை அந்த அடியார் ஆழ்ந்து சிந்தித்தாலே போதும் தெய்வீகத்தைப் பற்றி பூரணமாக அறிந்து கொள்ளலாம். சற்குரு பின்னர் மருள் என்றால் என்ன என்ற விளக்கத்தையும் அளித்தார்கள்.

சோளிங்கர்

ரோகிணி நட்சத்திரம் உச்சம் பெற்றிருப்பவர்களுக்கும், குரு உச்சம், ராகு அல்லது கேது உச்சமாக இருப்பவர்களுக்கும் மருள் வரும் சந்தர்ப்பங்கள் உண்டு. மருள் வருவது என்பது இறைவன் நம்முடைய உடலில் தங்கி இருப்பதாகும். இத்தகைய இறைவனின் அருள் பெட்டகமாக நம்முடல் மாற வேண்டும் என்றால் குறைந்தது 31 ஆண்டுகள் மேற்கூறியவர்கள் காயத்ரீ ஜபத்தை ஓதி வந்திருக்க வேண்டும். அவர்களுக்கு ஒரே ஒரு முறை மட்டும் மருள் வரும். பிரகலாதன் விஷ்ணு மூர்த்தியை அழைக்கும் முன்னர் இரண்யாட்சனின் அரண்மனையில் இருந்த தூணிற்கு மருள் வந்தது. அதாவது அந்தத் தூண் நரசிம்ம மூர்த்தியின் திருஉருவத்தை தாங்கும் அளவிற்கு தூய்மை பெற்றது. அந்தத் தூய்மைக்கு பிரகலாதனின் கள்ளங்கபடமற்ற பக்தியே, நாராயண பக்தியே காரணமாகும்.
நா .. நாக்கு
ரா .. உள்ளிருந்து நல்ல சக்திகள் வெளிச் செல்லாமலும், வெளியே இருக்கம் தீய சக்திகள் உள்ள செல்லாமலும் இருக்கும் நிலை
ய .. யார்
அணன் .. அனுபவிப்பவன்
அதாவது நாக்கினால் நல்லதையே சொல்லி, நல்லதையே செய்பவனே நாராயணன். இதை முழுவதுமாக உணர்ந்து நாராயண நாமத்தை உச்சரித்தவனே, ஜபித்தவனே பக்த பிரகலாதன். இவ்வாறு தொடர்ந்து 31 வருடங்கள் காயத்ரீ மந்திரத்தை முறையாக ஓத முடியாதவர்களும், நாராயண நாமத்தை நெக்குருகி ஜபிக்க முடியாதவர்களும் இந்த ராகவேந்திர ஆண்டில் சோளிங்கர் திருத்தலத்தை வழிபடுவதால் நரசிம்ம பெருமாளின் அனுகிரகத்தை பெறுவார்கள் என்பதே சப்த ரிஷிகள் பக்தர்களுக்கு இந்த வருடம் அளிக்கும் விசேஷமான அனுகிரக சக்திகளாகும். நவபாஷாண முறைகளில் சுவாமியின் அருள் சக்திகளை சாதாரண மக்களுக்கு வாரி வழங்குவதான 108 முறைகள் உண்டு. இதில் ஸ்ரீபோகர் பழநி மலையில் முருகப் பெருமானின் நவபாஷாண சக்திகளை அமைத்திருப்பது ஒரு முறை. சோளிங்கர் திருத்தலத்தில் சப்த ரிஷிகள் நவபாஷாண சக்திகளை நிரவியுள்ளது மற்றோர் முறையாகும்.

ஸ்ரீசிறிய திருவடி சோளிங்கர்

1. பேப்பர்
2. இங்க்
3. மை
4. விரல்
5. விரல் ரேகை
6. எண்ணம்
7. விரல்களைப் புரட்டுதல்
8. இன்ப துன்பத்தில் பங்கு
9. படிந்த ரேகை
என்ற ஒன்பது அம்சங்கள் சாதாரணமாக தன்னிடம் உள்ள ஒரு சொத்தை மற்றவருக்கு மாற்றுவதில் பிரயோகம் ஆகின்றன. ஒரு சொத்தை வாங்குபவனுக்கு இன்பம் விளையும், சொத்தை விற்பவனுக்கோ பணம் வாங்கிக் கொண்டாலும் ஒரு நிரந்தர சொத்தை இழக்கின்றோமே என்ற துன்பம்தான் மேலோங்கி நிற்கும். இந்த சொத்து மாற்றத்தைப் போன்றதுதான் சித்தர்கள் மேற்கொள்ளும் நவபாஷாண இறை விக்ரக பிரதிஷ்டை முறைகளும் ஆகும். இவை அனைத்திற்கும் மேலாக குரு மருந்து என்ற ஒன்றை அளிக்கும்போதுதான் சொத்து மாற்றுதலைப் போல் குரு மருந்தும் வேலை செய்யும். ஆனால் இந்த குரு மருந்தைத் தொட்டாலே சில சமயம் உடல் முழுவதும் எரியும் என்பார் நம் சற்குரு. இந்த குரு மருந்தை ஏதோ ஒரு இறை விக்ரகத்தைப் பிரதிஷ்டைய செய்வதற்கு மட்டும் நம் சற்குரு பயன்படுத்தவில்லை. நம் சற்குரு உழவாரப் பணிகள் நிறைவேற்றிய அனைத்து திருத்தலங்களிலுமே இத்தகைய சூக்கும நவபாஷாண பிரதிஷ்டையை நிறைவேற்றியவரே நம் சற்குரு என்பதே நாம் எண்ணி எண்ணி பிரமிப்பு அடையத் தூண்டும் சித்த மகாத்மியமாகும். உழவாரப் பணிகளை நிறுத்திய பின்னரும் நம் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் வெளியான ஊதுபத்திகளில் எல்லாம் இந்த நவபாஷாண முறையில் இறை சக்தியை ஊட்டியவரே நம் சற்குரு என்ற உண்மையே உணர்ந்தோர் ஒரு சிலரே.

பெருகும் வளையங்களை
சுறுக்குவது எப்படி ?

13ம் எண்ணுக்கு உரிய வருடம் இந்த வருடமாகும். 13ம் எண்ணிற்கு உரிய தேவி ஸ்ரீதான்ய லட்சுமி ஆவாள். இந்த உண்மையை பக்தர்களின் நலனுக்காக அர்ப்பணித்தவரே நம் சற்குரு ஆவார். ஒரு வருடம் நெல் தான்ய மணிகளை வாங்கி அதை நான்கிற்கு உரிய திருத்தலத்தில் 13ம் எண்ணுடைய இல்லத்தில் சேமித்து வைத்திருந்து திருஅண்ணாமலையில் அன்னதானமாக அளித்தார் என்பதை ஏற்கனவே விளக்கி உள்ளோம். நான்கின் குசா எட்டு. இந்த எட்டான அஷ்டாட்சத்திரத்தில் நகாரமாக இருப்பவளே தான்ய லட்சுமி ஆவாள். எனவேதான் 13ஐ எட்டில் முடிப்பது சிறப்பு என்று சித்தர்கள் வலியுறுத்துகிறார்கள். எட்டிப் பிடிப்பான் என்றும், எட்டி முடித்து விட்டான் என்ற திரத்தன்மையைக் குறிப்பதும் எட்டின் சிறப்பாகும். பொதுவாக, நீர் வேண்டி குழாய் கிணறுகள் அமைப்பவர்களும், கிணறு வெட்டுபவர்களும், காணாமல் போன பத்திரங்கள், குழந்தைகள், வயதானவர்களைத் தேடுவோரும் இவ்வாறு 13ம் தேதி ஆரம்பித்து எட்டில் முடிப்பது அதாவது 17, 26 என்ற தேதிகளில் நிறைவு செய்து கொள்வது சிறப்பாகும். நோய் நிவாரணம் அடைய வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களும் இவ்வாறு நான்கில் தொடங்கி எட்டில் நிறைவு செய்வதால் நலம் அடைவர். இத்தகைய தேடுதல்களோ, மருந்து உட்கொள்வதோ 2ல் முடிந்தால் அதாவது 20, 29, 11, 2 என்ற தேதிகளில் முடிந்தால் வியாதி வளரும் அல்லது தேடுதல் தொடரும் என்று பொருள். 13 அல்லது 8ம் எண் உடைய வீட்டில் வசிப்பவர்கள் அம்பாள் கோயிலில் வேப்பமரம் வைத்து அதற்கு நீரூற்றி பராமரித்து வருதலால் நற்பலன் பெறுவார்கள். இவ்வாறு வேப்பமரம் வைத்து பல தலைமுறைகளாகப் பராமரித்து வந்தவர்கள் இல்லக் கிணற்றில் ஒரு திருத்தல அம்பிகையே எழுந்தருளினாள் என்றால் இது எண் 13ன் சிறப்பா அல்லது எட்டாம் எண்ணின் சிறப்பா அல்லது இந்த எண்கள் கூட்டும் தியாகத்தின் சிறப்பா ? தெருக்குத்து என்ற தோஷத்தால் அவதியுறுவோர்கள் தந்தம் ஒடிக்காத பிள்ளையார் மூர்த்தியை முச்சந்தியில் வைத்து வழிபடுவதால் இத்தகைய சந்தி தோஷங்களிலிருந்து விடுபடலாம். ஆனால், இந்த பிள்ளையார் மூர்த்திகளுக்கு தினமும் நைவேத்தியம் படைக்க வேண்டும் என்பது அவசியம். ஒரு கையில் மோதகமும் ஒரு கையில் ஆசீர்வாதம் செய்யும் கோலத்துடன் இருக்கும் பிள்ளையாரை இத்தகைய தெருக்குத்து நிவர்த்திக்காக நிர்மாணித்து அருள்பெறலாம் என்பதே நம் சற்குரு மனமுவந்து அளிக்கும் நிவாரண முறையாகும். 13ம் எண் வீட்டில் வசிப்பவர்களும் மேற்கூறிய முறையில் பிள்ளையார் விக்ரகங்களை அமைந்து வழிபட்டு நற்பலன் பெறலாம். தான்ய லட்சுமியின் அனுகிரகத்தையும் மோதக மூர்த்தியின் அனுகிரகத்தையும் ஒருங்கே பெறும் சித்த வழிபாட்டு முறை இதுவே ஆகும். எண் கணித இரகசியத்தில் தேர்ச்சி பெற விரும்பும் அனைவருக்கும் இத்தகைய வழிபாடுகள் ஒரு வரப் பிரசாதமாக அமையும். உதாரணமாக, இந்த வருடம் மாமியார், மருமகள் இடையே கருத்து வேற்றுமை அதிகம் நிலவும். இதனால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மாமியார், மருமகளுக்கு ஒத்து வரும் எண் கணித முறையை பயன்படுத்துதல் நலமாகும். உதாரணமாக, ஒருவருடைய பெயர் மாலதி என்றும் அவருடைய மாமியாரின் பெயர் மருதாயி என்றும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். மாலதியின் கணவர் அவரை மாலா என்று அழைக்கும்போது அந்தப் பெயருக்கு உரித்தான எண் சக்திகள் 9 என்று செவ்வாய்க்கு உரித்தானதாக அமைந்து அது அவருடைய மாமியாரின் பெயரான மருதாயி என்ற பெயருக்கு உரித்தான எண் சக்தி 2க்கு, சந்திர பகவானுக்கு நட்பாக அமைகின்றது. இது நன்மை பயக்கும். அதே சமயம் அந்த அடியார் செல்லமாக தன் மனைவியை மால் என்று அழைத்தால் அது 8 எண் சக்தியுடன் சனீஸ்வர அனுகிரகத்துடன் துலங்கி அது மாமியாரின் பெயர் எண்ணான 2க்கு பகை அம்சத்துடன் விளங்குகின்றது. இதனால் குடும்பத்தில் சோடா புட்டிகள் வீசப்படும் அதாவது பலமான சண்டை சச்சரவுகள் நிகழும் என்பது உண்மையே. தங்கள் தாய் உயிரோடு இருக்கும் காலம் மட்டும் அல்லாது எக்காலத்தும் இந்த எண் கணித முறையைப் பின்பற்றி வருதல் நலம். ஒரு வேளை தன் தாயின் உடல் மறைந்தாலும் அவர்களின் சூட்சும சக்தி குடும்பத்தை விட்டுப் பிரியாமல் இருக்கும் என்பது நாம் அறிந்ததே. ஆனால், இத்தகைய எண் கணித சக்திகளைப் பற்றி அறியாதவர்கள் மயில் வாகன மூர்த்தியான முருகப் பெருமான வழிபட்டு வருவதால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். மயில் வாகன மூர்த்தி அனைவருக்கும் நன்மை அளிக்கும் குச வாகன மூர்த்தியே. இங்கு நீங்கள் காணும் குசா வளையங்களுக்கு மஞ்சள் குங்குமப் பொட்டிட்டு வணங்குவதால் அது மயில் வாகன குச மூர்த்தி வழிபாட்டிற்கு நிகராகும் என்றால் என்னே சித்தர்களின் கருணை கடாட்சம்.

ஓம் ஸ்ரீமூதாகருப்பரே

பலரும் சென்னையிலிருந்து சுமார் 100 கிமீ தொலைவில் உள்ள சோளிங்க நரசிம்ம மூர்த்தியை தற்போது உள்ள சூழ்நிலையில் எப்படி தரிசனம் செய்வது என்று நினைத்து குழப்பம் கொள்ளலாம். இதற்கு நிவாரணமாக அமைவதே இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஸ்ரீமூதா கருப்பண்ண சுவாமி சக்கரமாகும். நம் சற்குருவின் கையெழுத்தில் அமைந்துள்ள இந்த சக்கரத்தை ஒரு வெள்ளைத் தாளில் அச்சாக வைத்துப் பெற்றுக் கொண்டு அதற்கு தாமே அரைத்த மஞ்சள் குங்குமத்தால் பொட்டிட்டு திருஞானசம்பந்த மூர்த்தியின் வாசி தீரவே என்ற பதிகத்தை தொடர்ந்து ஓதி வருவதால் குடும்ப ஒற்றுமை பெருகும் என்பது மட்டுமல்லாமல் இந்த வழிபாடு இருள் சூழ்ந்த இந்த ஆண்டு தெய்வ ஒளியைப் பெற்றுத் தரும் வழிபாடாகவும் அமையும். இருளில் ஒளி வீசுபவரே மூதா கருப்பண்ண சுவாமி. சற்குருவின் இந்த கருப்பண்ண சுவாமியின் சக்கரத்தில் அமைந்துள்ள ஆறு வட்டக் குறிகளும் ஆறு சுக்ர வளையங்களாக அமைந்து குடும்ப ஒற்றுமையைக் காக்கும். ஓம்ரான் ரிங்ஸ் என்ற நம்முடைய ரூபாய் நோட்டில் அமைந்துள்ள வளையங்கள் நம் பாரத நாட்டில் மட்டுமே செல்லுபடி ஆகக் கூடியவை. நம் சற்குரு அளித்துள்ள இந்த சித்த வளையங்களோ எந்த லோகத்திலும் செல்லுபடியாகும் என்பதே சித்த வளையங்களின் சுக்ர நாடிச் சிறப்பாகும். சூழ்நிலைகள் சாதகமாக அமையும்போது சோளிங்க நரசிம்மரை வணங்கி தனக்கு அருள் புரிந்த நம் சற்குரு அளித்த சக்கரத்தை ஓடும் நீரில், நீர்நிலைகளில் விட்டு விடுவது ஒரு சிறந்த வழிபாடாகும். தாங்கள் எளிதில் சென்று அடைய முடியாத எந்த திருத்தலத்திற்கும் வழிகாட்டியாக இந்த சற்குரு சக்கரத்தை பயன்படுத்தி வரலாம் என்பதே சற்குரு உங்களுக்கு அளிக்கும் குரு பிரசாதமாகும். ஆனால், ஒரே ஒரு திருத்தலத்தை சென்றடைய மட்டுமே இந்த சக்கரம் துணை புரியும் என்பதை நினைவில் கொள்ளவும். இந்தக் கலியுகம் தொற்றுநோய்களால் அழியும் என்பது சித்தர்கள் அறிவிக்கும் செய்தி. அதற்குண்டான முன்னெச்சரிக்கைகளை நாம் தற்போது எங்கும் காணலாம். கொடுமையான இந்த சூழ்நிலைகளிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள விழைவோருக்கு உதவும் பொருட்டாக பல்லாண்டுகளுக்கு முன்னரே நோய் நொடிகளிலிருந்து நம் உடலைக் காத்து ஆரோக்யம் பெறும் முறையை அளித்தவரே நம் சற்குரு. இது பற்றி அறியாதவர்களுக்கு உதவுவதற்காக நம் சற்குரு 2.2.2004 அன்று அருளிய நோய் நிவாரண உணவு முறையை இங்கு அளிக்கிறோம். இதைத் தொடர்ந்து நிறைவேற்றி வருபவர்கள் முழுமையான ஆரோக்கியத்தை அடைவர் என்பது திண்ணம். காரிய சித்தி வழிபாடுகளை நாம் அறிவோம். காரிய சுத்தியை அளிக்கும் அபூர்வமான உணவு முறையே இங்கு நீங்கள் காண்பதாகும்.

உடும்பு சோளிங்கர்

1. திங்கட்கிழமை பூசணிக்காய்
2. புதன் கிழமை அகத்திக் கீரை
3. மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாசிக்காய்
4. நான்கு நாட்களுக்கு ஒரு முறை பனங்கற்கண்டு
5. வாரம் ஒரு முறை விளக்கெண்ணெய் உள்ளங்கையில் ஊற்றி ஓம் ஸ்ரீஆத்ரேய குணசோபிதம் என்று கூறி உட்கொள்தல்
6. துவாதசி அன்று நெல்லிக்காய் பச்சடி
7. அவ்வப்போது குறைந்தது மாதம் இரு முறை வேப்பம்பூ (பச்சடியாகவோ, வாயில் போட்டு மென்றும் உண்ணலாம்)
இந்த உணவுப் பழக்கத்தை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் எத்தகைய தொற்றுநோய்களும் நம்மை அண்டாது.
பக்தியில் பலவித நிலைகள் உள்ளன. தாய் பூனை தன் குட்டியைக் கவ்விக் கொள்தல், குரங்கு குட்டி தன் தாயைப் பிடித்துக் கொள்தல் போன்ற பல நிலைகளில் உடும்பு என்பது எத்தகைய சூழ்நிலையிலும் தான் பிடித்த பிடியை விடாது நிற்கும் ஆற்றல் உடையது. இவ்வாறு பக்தர்கள் மேற்கண்ட உணவுப் பழக்கத்தை விடாது பற்றிக் கொண்டால் அவர்கள் தொற்றுநோய்கள் தீண்டாத ஆரோக்யமான வாழ்வைப் பெறுவர் என்பது உறுதி. இதனால் மனமும் உள்ளமும் கூட தூய்மை பெறும்.

மூலகணமாலி

ராமபிரான் இராவணனுடன் இலங்கையில் போரிட்டபோது லட்சக் கணக்கான வானரப் படைகள் ராமருக்கு உதவி புரிந்தன என்பதை நாம் அறிவோம். இவ்வாறு உலகம் முழுவதிலுமுள்ள வானரப் படைகள் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் சென்றபோது ஒவ்வொரு பெயரால் அழைக்கப்பட்டன. திருச்சி ஐயர்மலை பகுதியிலிருந்து சென்ற வானரப் படைகள் பகுஜன்வாலி என்ற நாமத்தால் அழைக்கப்பட்டதுபோல் சோளிங்கர் திருத்தலத்திலிருந்து சென்ற வானரப் படைகள் மூலகணமாலி என்று அழைக்கப்பட்டன. ஆஞ்சநேய மகாபிரபு ஸ்ரீராம அவதாரத்திற்கு முன் தோன்றியவர். ராம அவதாரத்தில் அவர் கடலைத் தாண்டி இலங்கைக்குச் செல்ல வேண்டும் என்று உணர்ந்த ரிஷகள் அவர் அத்தகைய கிருத்தியங்களுக்கு தயாராக இருக்கிறாரா என்பதை அறியும் பொருட்டு ஆஞ்சநேய மூர்த்திக்கு ஒரு சின்ன போட்டியை ஏற்பாடு செய்தனர்.

சோளிங்கர்

அதாவது சுமார் 90 லட்சம் மைல்கள் விஸ்தீரணம் உள்ள சோளிங்கர் திருத்தலத்தை ஒரு கடிகை நேரத்திற்குள் (அதாவது 24 நிமிடங்கள்) வலம் வர வேண்டும் என்பதே. ரிஷிபுங்கவர்களின் எதிர்பார்ப்பை விடக் குறைந்த நேரத்தில் சோளிங்கர் திருத்தலத்தை வலம் வந்தார் ஆஞ்சநேய மூர்த்தி. அதனால் இத்திருத்தலம் திருகடிகை என்று பெயர் பெற்றதுடன் விஸ்வாமித்திரர் தலைமையில் ஆஞ்சநேய மகாபிரபுவிற்கு ஸ்ரீமகாவிஷ்ணு தன்னுடைய ஆயுதங்களான சங்கு சக்கர இலச்சினைகளை அளித்து கௌரவித்தார். எப்படி ஐயர்மலையில் சுவாமி தரிசனத்திற்காக மலையேறி செல்லும் பக்தர்கள் தங்களை குரங்குப் படைகள் துன்புறுத்துவதாக ஐயம் கொண்டால் பகுஜன்வாலி என்ற நாமத்தை உரக்கக் கூவுவதால் காப்பாற்றப்படுவோர்களோ அதேபோல சோளிங்கர் திருத்தலத்தில் தாங்கள் குரங்குப் படைகளால் தாக்கப்படுவோம் என்று பீதியில் கலங்கும் பக்தர்கள் மூலகணமாலி என்ற நாமத்தை உரக்கக் கூவினால் போதும் அவர்கள் குரங்குப் படைக்குப் பயப்படாத தைரியத்தை அடைந்து ஸ்ரீநரசிம்ம மூர்த்தியை நன்முறையில் தரிசித்து மகிழலாம் என்பதே சித்தர்கள் அளிக்கும் உத்திரவாதம் ஆகும். இவ்வாறு ஆஞ்சநேயர் சோளிங்கர் திருத்தலத்தை வலம் வந்த திருநாளே மூல நட்சத்திரம் அமைந்த நாளாக அமைந்ததால் அந்நாள் ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தியின் அவதார தினமாகவும் இன்றளவும் பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சோளிங்கர் திருத்தல அடிவாரத்தில் ஸ்ரீஆத்யந்தப் பிரபுவின் சன்னதி அமைந்துள்ளது. ஒருபுறம் கணபதி உருவத்துடனும் மறுபுறம் ஆஞ்சநேயர் உருவத்துடனும் திகழ்வதே ஆதியும் அந்தமுமான ஆத்யந்தப் பிரபுவின் அவதாரமாகும். பிள்ளையார் மூர்த்திக்கும் ஆஞ்சநேய மூர்த்திக்கும் எண் கணித சூத்திரமாக ஒன்பது அமைவதும் மூல நட்சத்திரம் ஒன்பதாம் ராசியான தனுர் ராசியில் நிலைகொள்வதும் ஏதோ தற்செயலாக நிறைவேறிய இறை கிருத்தியங்கள் அல்ல என்பதை நினைவில் கொள்ளவும். மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், மற்றவர்களும் மூல நட்சத்திரம் நிலவும் நாட்களில் முதலில் ஸ்ரீஆத்யந்தப் பிரபுவையும், பின்னர் மலையேறி ஸ்ரீலட்சுமி நரசிம்மரையும் அதன் பின்னர் நிறைவாக சிறிய மலைமேல் ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தியையும் தரிசித்தலால் நற்பலன் பெறுவார்கள். மூல நட்சத்திரம் பற்றிய பல தவறான கருத்துக்கள் மக்களிடையே நிலவுவது குறித்து நம் சற்குருவிடம் வினவியபோது நம் சற்குரு அளித்த பதில்களையே இங்கு சுருக்கி அளிக்கிறோம்.

சோளிங்கர்

நாயன்மார்கள், சித்தர்கள், மனிதர்கள், பக்தர்கள் எல்லா நட்சத்திரத்திலும் பிறந்திருக்கிறார்கள். பெண் மூலம் நிர்மூலம் என்பதன் உண்மையான விளக்கம் நிருத்தி திக்கில் இருக்கும் மூலப் பிரபுவான கணபதி மூர்த்தியை வணங்குவதால் திருமணமாகாத பெண்கள் நலமடைவர் என்பதே பொருளாகும். இத்தகைய பெண்கள் காரிய சாதனை சமர்த்தர்களாக இருப்பர். குறிப்பாக மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் மருத்துவத் துறையில் சிறப்படைவர். ஆனால், எளிதில் இவர்கள் பிறர் வார்த்தைகளை ஏற்க மாட்டார்கள், பிடிவாத குணம் நிறைந்திருக்கும். பொதுவாக, மூல நட்சத்திரப் பிறப்பின் தன்மையை அறிய அந்த நட்சத்திரம் எந்த பாதத்தில் விளங்குகிறது, அந்த ஜன்ம நட்சத்திரம் எந்த கிரகப் பார்வையைப் பெற்றுள்ளது, நவாம்சத்தில் நட்சத்திரம் இடம் பெற்ற வீட்டின் தன்மை, திரேகாணத்தில் அது எந்த வீட்டில் அமைகிறது, நட்சத்திரத்தின் துவிதசாம்சம் எந்த பாதத்தில் உள்ளது போன்ற அம்சங்களைக் கருத்தில் கொண்டுதான், இவைகள் உணர்த்தும் ஜோதிடப் பலன்களை பரிசீலனை செய்துதான் மூல நட்சத்திர பிறப்பின் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும். மேஷம், ரிஷிபம், மிதுனம், கடகம் என்ற நான்கு பாதங்களில் திகழக் கூடிய நட்சத்திர பாதத்தின் தன்மையானது ராசியில் குறைய வேண்டும் என்பதே விரும்பத் தக்க ஜோதிட அமைப்பாகும். உதாரணமாக, ராமானுஜ ஆச்சாரியார் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர். 120 வருடங்கள் உத்தம வைணவராகத் திகழ்ந்து பெருமாளின் திருமார்பில் இடம் பெற்றவர். இத்தகைய மூல நட்சத்திரக்காரர்கள் எத்துறையில் இருந்தாலும் அந்தத் துறையில் தலைமைப் பொறுப்பை ஏற்கும் தகுதியுடன் திகழ்வார்கள். மூல நட்சத்திரம் அன்று திருஅண்ணாமலை கிரிவலம் மிகவும் சிறப்பானதாகும். மூல நட்சத்திர தினத்தன்று குத்துச் செடி என்ற ஒரு விசேஷமான மூலிகை சதுரகிரிமலை, திருஅண்ணாமலை, ஜவ்வாதுமலை, சுருளிமலை, மருந்துவாழ்மலை, குற்றாலம் போன்ற மலைகளில் தோன்றும். இது மூல நட்சத்திரத்தில் மட்டுமே வளரும் மூலிகைச் செடி ஆகும். பங்சாளிச் செடி என்றும் இதை அழைப்பதுண்டு. மூல நட்சத்திர நேரம் முடிந்தவுடன் இந்த பங்காளிச் செடி பூமிக்கு அடியில் சென்று மறைந்து விடும். இதுதான் மூல நிலம்புரண்டி. இதன் காற்று மேலே பட்டாலே பங்காளி பிரிவினை அகலும், குடும்ப ஒற்றுமை, நண்பர்கள் இடையே ஒற்றுமை மலரும். மூல நட்சத்திர தினத்தன்று ஒரு தங்கக் காசு வாங்கினால் 30 காசு வாங்க வசதி பெருகும்.
மூலத் தங்கம் முழு முதற் பொருளாய் ஆகி
காலத் தாமதத்தை கவினுறக் கழித்திட வழி செய்யும் பாரேன்
என்பது ஸ்ரீஅகத்திய நாடிப் பாடல். மூல நட்சத்திரத்தில் மட்டுமே சில மருந்துகள் செய்யப்படுகின்றன. காயங்களை, இரணங்களை குணப்படுத்தும் கந்தக மருந்துகளைத் தயாரிக்க மூல நட்சத்திர தினம் உகந்தது. மளிகை சாமான்கள் வாங்குவதற்கு மூல நட்சத்திர தினம் உகந்தது.

ஸ்ரீஅகஸ்திய விஜய சித்தர்கள்

ஸ்ரீஆஞ்சநேய மகா பிரபுவிற்கு மகாவிஷ்ணு சங்கு சக்கரங்களை அணிவித்து கௌரவித்தது என்றோ நடந்த வைபவம் கிடையாது. இந்த வைபவத்தை ஒட்டி இன்றும் சோளிங்க திருத்தலத்தில் நடமாடும் பல குரங்குப் படைகளும் இத்தகைய சங்கு சக்கர முத்திரைகளுடன்தான் துலங்குகின்றன என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் உண்மையாகும். தெய்வீக கண்கள் கொண்ட அடியார்கள் இந்த உண்மையை கண்ணாரக் கண்டு மகிழலாம். சங்கு சக்கரம் அடையாளங்களை தங்கள் தோள்களில் சுமக்கும் ஆஞ்சநேயப் படைகளா பக்தர்களுக்கு தொந்தரவு அளிக்கும் என்பதை சற்றே ஆத்ம விசாரம் செய்து பாருங்கள். மூல நட்சத்திரம், ரோகிணி நட்சத்திர நாட்களிலோ, திருவாதிரை நட்சத்திரம் திரிதினமாக துலங்கும் நாட்களிலோ, அமாவாசை தினங்களிலோ இங்குள்ள தக்கான் குளம் என்றழைக்கப்படும் பிரகலாத தீர்த்தத்திலோ அல்லது மலை நடுவில் அமைந்துள்ள விஷ்ணு தீர்த்தத்திலோ இங்கு அளித்துள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட சித்தர்களின் நாமங்களை ஓதியவாறே அர்க்யம் அளித்தல் என்பது மனித வாழ்வில் கிடைத்தற்கரிய பாக்கியமே. இத்தலத்து திருக்குளங்களில் கிட்டும் நீரையோ அல்லது காவிரி, கங்கை போன்ற புனித நதிகளில் பெற்ற தீர்த்தத்தையோ அர்க்ய வழிபாடுகளுக்குப் பயன்படுத்தலாம். ஓரு கடிகை நேரம் என்னும் ஒரு நாழிகை நேரத்தை ஸ்ரீலட்சுமி நரசிம்மரின் தியானத்துடன் இந்த சோளிங்கர் திருத்தலத்தில் கழித்தால் அத்தகைய பக்தர்களின் தோள்களில் சங்கு சக்கர அடையாள முத்திரைகள் ஸ்ரீநரசிம்ம பெருமாளின் அனுகிரகத்தால் பதிக்கப்படும் என்பதே சோளிங்கர் திருத்தலத்தின் மகிமையாகும். பக்தர்களுக்கு நரசிம்ம மூர்த்தியின் மேல் உள்ள நம்பிக்கை குறைவின் காரணமாகவே தற்போது சூட்டுக் கோல் கொண்டு தங்கள் தோள்களில் சங்கு சக்கர அடையாளங்களை பதித்துக் கொள்ளும் முறை தோன்றியது என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியமாகும். கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன் ?

ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் திருத்தலம்
உறையூர் திருச்சி

நம் சற்குரு நிறைவேற்றிய உழவாரப் பணிகளில் எல்லாம் நவபாஷாண சக்திகள் அந்தந்த திருத்தல மூர்த்திகளுக்கு அளிக்கப்பட்டன என்று தெரிவித்தோம் அல்லவா ? இது தவிர இத்தகைய உழவாரப் பணிகளுக்காக தேர்ந்தெடுக்கப்படும் நாள், கிழமைகளிலும் இத்தகைய தெய்வீக சக்திகள் பரிணமிப்பது நம்மை வியக்க வைக்கும் ஆச்சரியமாகும். உதாரணமாக, ராமபாண சக்திகளை மக்களுக்கு வழங்க திருவுள்ளம் கொண்ட நம் சற்குரு இந்த ஏழு வண்ணங்களை ஐந்து வண்ணங்களில் ஒருமித்து பஞ்சபூத சக்திகளுடன் துலங்கும் ஜீவன்களுக்கு அருள்வழங்கும் திருச்சி ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் திருத்தலத்தில் உழவாரப் பணிகள் நிறைவேற்ற 1996ம் வருடத்தையே தேர்ந்தெடுத்தார். பிரம்ம மூர்த்திகள் என்போர் காவிரி மணலிலும் பல்கிப் பெருகுவார்கள் என்றாலும் இத்தனை பிரம்ம மூர்த்திகளுக்கும் சிறப்பான நாமங்கள் உண்டு அல்லவா ? இவ்வகையில் பஞ்சவர்ணேஸ்வரர் திருத்தலத்தில் அருள்பெற்ற பிரம்ம மூர்த்தியே ஸ்ரீகன்னி பிரம்ம மூர்த்தி ஆவார். தினமும் ஸ்ரீகாந்திமதி அம்மன் சமேத ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வர மூர்த்திக்கு வழிபாடுகள் இயற்றி வணங்குபவர். இந்த பிரம்ம மூர்த்தியுடன் சேர்ந்து ஸ்ரீஉதங்க மகரிஷி, ஸ்ரீஅழுக்குண்ணி சித்தர், ஸ்ரீஅர்த்த சந்திர பாணேசுவரர், ஸ்ரீதிரிபாத திரிமுக திரயம்பகேசுவரர் என்ற மகரிஷிகளும் ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் அருளும் வர்ண சக்திகளை ராமபாணத்தில் நிரவி அதை உலகெங்கும் இன்றும் ராம பாண சக்திகளாக வெளிப்படுத்தும் அரும்பணியை ஆற்றி வருகின்றனர். பஞ்சவர்ணேஸ்வரர் திருத்தல திருக்குளத்தில் 4 அங்குலம் குறுக்களவு உடைய மூன்று ஊற்றுகள் அமைந்துள்ளன. மட்டுவார்குழல் ஊற்று என்ற திருநாமத்துடன் துலங்கும் இத்திருத்தல தெப்பக்குளத்தை 12 முறை வலம் வந்து நல்லெண்ணையால் 12 தீபங்கள் ஏற்றி வழிபடுதலால் ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரரின் வண்ண சக்திகளை அடியார்கள் பெற முடியும் என்பதே சித்தர்களின் பரிந்துரையாகும். சுமார் 800 சதுர்யுகங்கள் முன் தோன்றிய ஸ்ரீகன்னி பிரம்மா இன்றும் ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரரை வழிபட்டு இத்தகைய அனுகிரக சக்திகளை வாரி வழங்குகின்றார் என்றால் இத்தகைய தேவ, தெய்வீக இரகசியங்களை பக்தர்களுக்கு அளிக்கும் நம் சற்குருவின் காலக் கணக்கை நாம் தூசி அளவாவது சீர்தூக்கிப் பார்க்க முடியுமா என்ன ?

மட்டுவார் குழலம்மை தீர்த்தத்தை வலம் வந்த பின்னர்தான் தீர்த்தத்தில் இறங்க வேண்டும். தீர்த்தத்தில் இடது கை பக்கவாட்டில் இறங்கி முதலில்
சர்வலோக தேவதைகளுக்கு நமஸ்காரம்
சர்வலோக பிதுர் தேவதைகளுக்கு நமஸ்காரம்
என்று கூறி இருகைகளாலும் தீர்த்தத்தை எடுத்து தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும். பின்னர் முகத்தை அலம்பிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர்தான் தீர்த்தத்தில் தங்கள் பாதங்களை நனைக்க வேண்டும். இந்த தீர்த்த நீராடல் பத்ததியை எல்லா தீர்த்தங்களிலும் கையாளலாம். ஸ்ரீரங்கம் போன்று சந்திர தீர்த்தம் பெயர் அமைந்த தீர்த்தங்களில் சந்திர பகவானே திங்கட் கிழமைகளில் நீராடுவதால் அத்தகைய தீர்த்தங்களில் மேற்கண்ட வழிபாடு சிறப்பான பலன்களை வர்ஷிக்கும். ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் ஆலயத்திலும், சந்திர தீர்த்தங்கள் அமைந்துள்ள ஸ்ரீரங்கம், திருவெண்காடு போன்ற திருத்தலங்களிலும் தீர்த்தப் படிக்கட்டுகளில் அமர்ந்து பஞ்சாட்சரத்தை ஜபிப்பதால் உடனடி மனத் தெளிவை தீர்த்த தேவதைகள் பிரசாதமாக அளிக்கின்றன. நீண்ட நாள் சிறுநீரக கோளாறுகளும் இத்தகைய வழிபாடுகளால் நிவாரணம் பெறும்.

சீயாத்தமங்கை

நம் பிரபஞ்சத்தைச் சுற்றி நிரவியுள்ள இருள் தங்க சக்திகளை அளிப்பதாகும் என்பதே சித்தர்கள் வெளியிடும் சுவையான தகவல். உலகிலேயே அதிக இருள் சக்தியுள்ள, சூரிய ஒளி கூட புக முடியாத காடுகளே இலங்கை யாழ்ப்பாண காடுகளாகும். இதற்கு அடுத்தபடியாக உள்ளதே அமேசான் காடுகளாகும். அமேசான் காடுகளே ஒரு சதுர அங்குலத்திற்கு 10 கிலோ தங்கத்தை வர்ஷிக்கும் தன்மை உடையன என்றால் யாழ்ப்பான இருளைப் பற்றி என்ன கூற முடியும் ? அதனால்தான் இருள் சூழும் இந்த ராகவேந்திர ஆண்டானது இருளில் ஒளி கூட்டும் மின்னலைப் போல் வளமான சக்தி உடையதாகத் திகழ்கிறது. இத்தகைய மின்னல் சக்திகளுக்கு உறுதுணை அளிப்பதே மேற்கூறிய தீர்த்த வழிபாடுகளாகும். ஒளி பற்றிய இரகசியங்களே மனித மனத்தை உயர்த்தும் என்று கிடையாது. இருள் பற்றிய இரகசியங்களும் தெய்வீக அறிவைப் புகட்டுபவையே. உதாரணமாக, ஸ்ரீஅகத்திய பிரான் நடந்து செல்லும்போது வாயு பகவான் அவர் கூடவே சென்று தென்றல் வீசி சுகம் அளிப்பாராம். மலர் தேவதைகள் ஸ்ரீஅகத்திய பிரானின் அனுமதி பெற்று சுகந்த மணத்தை வீசிக் கொண்டிருக்குமாம். இந்த மா சித்தரின் தலைக்கு மேல் தேவலோக விமானங்கள் கூட பறக்காது என்றால் பூலோக விமானங்களைப் பற்றிக் கூற வேண்டுமா என்ன ? ஸ்ரீஅகத்தியரின் நடை அழகை தரிசனமாகப் பெறும் ஆற்றல் உள்ளவர்களே இருள் பற்றிய விளக்கங்களை அறிய முடியும், அவர்களே இருளில் விளையும் தங்க சக்திகளை கிரகிக்க முடியும். ஒளி இருள் பற்றி மேலும் விளக்கங்களை அறிய விரும்புவோர் சீயாத்தமங்கை தீர்த்தத்தில் நீராடி ஷண்ணவதி தர்ப்பணம் நிறைவேற்றி வருதல் நலம். இத்தகைய தர்ப்பணங்கள் வண்ணங்கள் பற்றிய அறிவையும், ராமபாணம் பற்றிய தெளிந்த அறிவையும் ஏராளமாக அருளும்.
வேந்திரன் என்றால் எழுந்து விழுவபன் என்று பொருள். ராகவேந்திரன் என்றால் எழுந்தவன் நிற்பான். எனவே ராகவேந்திர வருடமாக அமைந்துள்ள இந்த வருடம் ஒருவரை நிற்கச் செய்வதும், நிற்கும் ஒருவரை விழச் செய்வதும் அவரவர் கையில்தான் இருக்கிறது என்று பொருள். ஆனால், இந்த முயற்சிக்கு இறை சகாயத்தை, தெய்வத் திருவருளை நாடுபவர்களுக்கு உதவும் தெய்வமே பட்டமங்கலம் ஸ்ரீதட்சிணா மூர்த்தி ஆவார். காரைக்குடி அருகிலுள்ள பட்டமங்கலம் ஸ்ரீதட்சிணா மூர்த்தி அபூர்வமாக கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார். கிழக்கு திசை சூரிய உதயத்திற்கு உரிய திசையாக இருப்பதால் இந்த ராகவேந்திர வருடத்தில் இருளையே எதிர்கொள்ளும் மக்களுக்கும் வழிகாட்டும் ஒளி விளக்காகத் திகழும் தெய்வமே ஸ்ரீதட்சிணா மூர்த்தி ஆவார். சென்னை அடையாறு ஆலமரம் ஒரு மனிதனுக்கு மரணம் ஏற்பட்டாலும் அவனை மீண்டும் உயிருடன் எழுப்பும் திறன் உடையது. பட்டமங்கலம் ஆலமரம் அடையாறு ஆலமரத்திற்கும் முன்னால் தோன்றியது. ஒரு மனிதனுக்கு மரணமே சம்பவிக்காமல் காக்கும் சக்தி உடையது என்றால் இந்த பிரம்மாண்டமான ஆலமரத்தைப் பற்றி என்ன விளக்கங்கள் அளிக்க முடியும் ? நம் சற்குரு இத்தலத்திற்கு எழுந்தருளி நான்கு ஹோம குண்டங்களை நிர்மாணித்து ஹோமம் இயற்றி பூலோக மக்களுக்கு எல்லாம் நோய் நிவாரண சக்திகளை பெருக்கினார் என்ற உண்மையை உணர்ந்தோர் ஒரு சிலரே.

பட்டமங்கலம்

குறிப்பாக இந்த நான்கு ஹோம குண்டங்கள் கீழ்க்கண்ட மூன்று அனுகிரகங்களை அருள்பவையே.
1. குழந்தைகளின், பெரியோர்களின் மேல்படிப்பு நலமாக அமையும்
2. திருமணம், மண வாழ்வு சிறப்பாக அமையும்
3. ஆரோக்கியம் வளரும், ஆயுள் விருத்தி அடையும்
திர வாரமான சனிக் கிழமை அன்று சற்குருவால் அளிக்கப்பட்ட மேற்கூறிய வரப் பிரசாதங்களான குருபிரசாதங்களை இன்றும் பக்தர்கள் பெற விழையும் பக்தர்கள் வியாழன், சனிக் கிழமைகளில் பட்டமங்கலம் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வழிபட்டு நற்பலன்களைப் பெறலாம். ஷஷ்டி திதி ஆறாவது திதி. தட்சிணாமூர்த்திக்கு உரிய எண் மூன்றின் குசா ஆறு என்று அமைவதால் சுக்ல பட்சம் ஷஷ்டி திதி திரிதினமாக அமைந்த ஒரு முகூர்த்த நாளில் (1.7.2006) நம் சற்குரு ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு வழிபாடுகள் நிறைவேற்றினார் என்றால் நற்சக்திகளை சமுதாயத்திற்கு அளிக்க நம் சற்குரு மேற்கொள்ளும் முயற்சிகள் எத்துணை பிரம்மாண்டமானதாக இருக்கும். இத்தகைய வழிபாடுகளால் அடியார்களின் வாழ்க்கை பட்டுபோல் மென்மையாக அமைந்து ஜொலிக்கும் என்பதும், பட்டுப் போன வாழ்க்கையும் சீர்பெறும், துளிர்க்கும் என்பது உண்மையே.
ஓம் தத் புருஷாய வித்மஹே
மகா தேவாய தீமஹி
தந்நோ ஸ்ரீதட்சிணாமூர்த்தி பிரசோதயாத்
என்ற காயத்ரீயை ஓதியவாறே இத்திருத்தலத்திலுள்ள ஆலமரத்தை வலம் வந்து வணங்குதல் சிறப்பாகும். இத்திருத்தலத்தின் சிறப்பு பற்றி நம் சற்குரு அருளிய இரு உதாரணங்களை இங்கு அளிக்கிறோம்.

ஒருவர் விபத்து ஒன்றில் சிக்கியதால் தலையில் அடிபட்டு கோமா நிலையை அடைந்தார். மருத்துவர்கள் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று கை விரித்து விட்டார்கள். இந்நிலையில் அவருடைய சொந்தக்காரர்கள் நம் சற்குருவை அடைந்து இந்நிகழ்ச்சியைப் பற்றி விளக்கவே நம் சற்குருவும் பட்டமங்கலம் ஸ்ரீதட்சிணா மூர்த்தியை வணங்கி 108 முறை இங்குள்ள ஆலமரத்தை வலம் வந்து வழிபடும்படி கூறினார். அவர்களும் அவ்வாறே வழிபாட்டைத் தொடர, என்ன ஆச்சரியம் ஆறாவது நாளில் விபத்தில் சிக்கியர் கண் திறந்து பார்த்தார். பின்னர் சிறிது சிறிதாக அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு ஒரு மாத காலத்தில் முழுமையான குணம் அடைந்தார். இன்னோர் அடியாருக்கு கால் கட்டை விரலில் இரணம் ஏற்பட்டு அது முற்றி விட்டது. எந்த வைத்தியத்திற்கும் அது கட்டுப்படவில்லை. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காலை எடுத்து விடுவதுதான் ஒரே வழி என்று கூறி விட்டனர். சுவற்றில் அடித்த பந்து போல் அவர்கள் நம் சற்குருவைச் சரண் அடைந்தனர். நம் சற்குரு அவர்களுக்கு பட்டமங்கலம் ஸ்ரீதட்சிணாமூர்த்தி மகிமையை எடுத்துக் கூறி சுவாமியை வலம் வந்து வணங்கும் முறையை எடுத்துரைத்தார். அவர்கள் சற்குரு கூறிய முறையில் வழிபாடுகளைத் தொடர்ந்து வரவே சில நாட்களில் அந்த நோயாளியை பரிசோதித்த மருத்துவர்களின் தலைமை டாக்டர் இப்போதைக்கு ஆபரேஷன் வேண்டாம் மருந்தின் மூலமே இரணத்தின் வேகத்தைக் குறைத்து விடலாம் என்று ஆலோசனை கூறினார்.

ஸ்ரீஆஞ்சநேயர் பட்டமங்கலம்

அதன்படி சில மாதங்களில் கத்தி இன்றி இரத்தம் இன்றியே அந்த நோயாளியும் நம் சற்குருவின் கருணை கடாட்சத்தால் நற்கதி பெற்றார். அந்த நோயாளியின் சொந்த ஊர் பட்டமங்கலம் அருகிலுள்ள திருக்கோஷ்டியூர் ஆகும். அங்கிருந்து நடந்தே வந்து பட்டமங்கலத்திலுள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்து அங்குள்ள தெய்வீக ஆலமரத்தையும் 108 முறை வலம் வந்து வணங்கினார் என்பதே அனைவருக்கும் பாடம் புகட்டும் இனிய செய்தியாகும். பட்டமங்கலத்திலிருந்து திருக்கோஷ்டியூர் சுமார் ஆறு கிமீ தொலைவில் உள்ளது என்பதும் ஒரு சுவாரஸ்யமான குசா தகவலே. கல்வி, திருமணம், உத்தியோகம் போன்ற எந்தத் துறையாக இருந்தாலும் பட்டுப்போன வாழ்க்கை மீண்டும் துளிர்த்து, செழித்தோங்கும் என்பதே பட்டமங்கலத்தில் இயற்றும் வழிபாடுகளின் மகத்துவம் ஆகும். அதனால் பட்டமங்கலம் திருத்தலத்தை சித்தர்கள் பட்டுமங்கலம் என்று அழைப்பதில் வியப்பென்ன ? மாலை மயங்கிய பின் நம் சற்குரு பிள்ளையார்பட்டியிலிருந்து புறப்பட்டு இத்தலத்தை வந்தடைந்தார்கள். அப்போது நன்றாக இருள் சூழ்ந்து மிகக் குறைந்த வெளிச்சமே கோயில் பிரகாரத்தில் நிலவியது. அந்தக் காரிருளில் ஒரு மர நாற்காலியில் வடக்கு நோக்கி அமர்ந்தார்கள் நம் சற்குரு. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து நம் அடியார்களே இனம் கண்டு கொள்ள முடியாத அந்தக் காரிருளில் மட மடவென்று ஏகப்பட்ட பக்தர்கள் நம் சற்குருவின் திருப்பாதங்களில் விழுந்து வணங்கி ஆசி பெறத் தொடங்கி விட்டார்கள். அவர்கள் அனைவரும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஆலமரம், நம் சற்குரு என்று மூவர் ஆசியையும் ஒருங்கே பெற்றதைக் கண்டு அங்கிருந்த நம் ஆஸ்ரம அடியார்கள் அனைவரும் திகைத்து விட்டனர். நம் சற்குருவைப் பற்றியோ, திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தைப் பற்றியோ ஏதும் அறியாத அந்த அடியார்கள் இத்தகைய திரிதின முகூர்த்தத்தில் திரிதள குருமூர்த்திகளின் அனுகிரகத்தைப் பெற்றார்கள் என்றால் இத்தகைய ஒரு சந்தர்ப்பத்திற்காக எத்தனை பிறவிகள் அவர்கள் காத்துக் கிடந்தார்களோ ? அமேசான் காடுகளில் காரிருளில் பிரகாசிக்கும் தங்கத்தின் ஒளியைப் புரிந்து கொண்டால்தான் நம் சற்குருவின் திருவடிகளில் மிளிர்ந்த தங்க அனுகிரக சக்திகளைப் புரிந்து கொள்ள முடியும் என்பதே “பட்டுமங்கலம்” திருத்தல மகிமைகளில் ஒன்றாகும். பட்டுப் போன வாழ்க்கை பட்டாக மிளிர்வது அதிசயம் என்றால் அது எங்குமே காண இயலாத ஆல் போல் செழித்தும் வளரும் என்றால் அதன் சக்திதான் என்னே ? நம் சற்குரு பட்டமங்கலம் திருத்தலத்தில் அளித்த அனுகிரக சக்திகளை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. சந்திரன் சிம்ம ராசியில் நிலைகொண்டிருக்க அதற்கு மூன்றில் துலா ராசியில் குரு பகவான் வக்ர கதியை கொண்டிருக்கும் இந்தப் புனித நேரத்தில் சற்குருவின் அனுகிரகத்தைப் பெறுவது என்றால் அதன் ஒளி சக்தியை, சுவாமி நட்சத்திரம் வர்ஷிக்கும் மூன்றாம் பாத அனுகிரக சக்திகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை எனலாம். எப்படியிருந்தாலும் இந்த இருள் சூழ்ந்த ராகவேந்திர ஆண்டில் நம் சற்குரு என்றோ அளித்த இந்த சுவாதிச் சுடர் சக்திகளை மீண்டும் நினைவு கூர்தலே எத்தனையோ ஆண்டுகள் விரவிக் கிடந்த மன இருளைப் போல் போக்கும் என்றால் சற்குருவின் கருணை கடாட்சத்தை எப்படி வர்ணிப்பது ? ஒரு அடியார் எந்தக் காட்டில் எவ்வளவு தங்கம் கிடைத்தால் என்ன, தெய்வீகத்தில் முன்னேற நினைப்பவர்கள் இதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்களே என்ற ஐயத்தை எழுப்பியுள்ளார். நம் சற்குரு அவர்களிடம் இத்தகைய வினாவை பல்லாண்டுகளுக்கு முன் எழுப்பியபோது, “அப்படியா ... ?” என்று ஆச்சரியமான தொனியை தம் குரலில் வைத்துக் கொண்டு தொடர்ந்தார், “நைனா, இன்று உனக்கு தங்கத்தைப் பற்றிய எண்ணம் சிறிது கூட இல்லை, பணத்தின் மீது பற்று என்பது சிறிதும் இல்லை என்பதை அடியேன் அறிவேன்.

பட்டமங்கலம்

ஆனால், நாளைக்கே உன்னுடைய மகள் திருமணத்திற்கு முயற்சி செய்யும்போது உனக்குப் பிடித்த மாப்பிள்ளை பெண்ணுக்கு நூறு பவுன் போட்டால்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினால், அப்போது உன் நிலை என்ன ? எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை யாராலும் கூற முடியாது. அதற்காகத்தான் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் என்று ஒரு சாதாரண மனிதனுக்கு உள்ள ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும்படி அடியேன் கூறுகிறேன். ஒரு சாதாரண மனிதனுக்கு பெண் மீதும் பொன் மீதும் உள்ள மோகம் அலாதியானதே. அடியேன் கூறும் வழிபாடுகளை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருந்தால் இந்த மோகம் சிறிது சிறிதாக குறையும் என்பதில் ஐயமில்லை. இதற்காக எத்தனையோ பிறவிகள் எடுத்துக் கொள்ளும் என்பது உண்மையே என்றாலும் இன்று நாங்கள் போடும் non-attachment என்ற விதை நிச்சயமாக முளைக்கும் என்பதில் அடியேனுக்கு நம்பிக்கை உண்டு. ஏனென்றால் இந்த விதை அடியேன் போடுவது கிடையாது. அடியேனுடைய குருநாதன் இடியாப்ப சித்தன் உங்கள் உள்ளத்தில் போடும் விதையாகும் ...”, என்றார் நம் சற்குரு. இதே போன்றதுதான் பெண்ணாசையும். கனகசுந்தராக்னி என்ற நாக தேவதை ஐயர்மலை கிரிவல பாதையில் எழுந்தருளி உள்ளாள். இந்த நாகப் புற்று இப்போது விதி வசத்தால் அகற்றப்பட்டு விட்டதால் இந்த தேவதையின் சூட்சும அருட்சக்திகளே பக்தர்களுக்குக் கிட்டுகின்றன. இந்த நாகதேவதையை நேரில் பார்த்தவர்கள் தங்கள் கண்களை சற்றும் இமைக்க மாட்டார்கள் என்பதே இந்த நாகதேவதையின் அழகின் சிறப்பாகும். கனகம் என்றால் தங்கம், சுந்தரம் என்றால் அழகு, தங்க ஒளிக் கதிர்கள் அழகான உருவெடுத்து ஒளிப் பிழம்பாக வீசினால் எப்படி இருக்கும் ? இந்த கனகசுந்தராக்னி தேவதையைப் போல் ஆயிரம் மடங்கு அழகுப் பதுமைகளாய் ஜொலிப்பவர்களே கடல் கன்னிகள். இந்தக் கடல் கன்னிகளைப் போல் ஆயிரம் மடங்கு பேரழகுப் பெட்டகங்களாய் பிரகாசிப்பவர்களே நாக கன்னிகள் என்னும் தேவதைகள். இந்த நாக தேவதைகளை நாக லோகத்தில் மணந்தவனே பீம சேனன் ஆவான். இத்துணை அழகு பொருந்திய நாக தேவதைகளே ஸ்ரீசக்கரத்தில் குடி கொண்ட 43 கோடி தேவதைகளின் ஒரு தேவதையின் கால் தூசிக்குக் கூட சமமாக மாட்டார்கள். இந்த தேவதைகளுக்கு எல்லாம் தலைவியாய், அழகு தேவதையாக மின்னுபவளே ஜகன்மாதா ஸ்ரீலலிதா பரமேஸ்வரி என்றால் அவள் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க இயலுமா ?

பட்டமங்கலம்

ஆனால், எடுத்தவுடனேயே லலிதா பரமேஸ்வரி தரிசனத்தை எதிர்பார்த்தால் அதனால் விளையும் அதிபயங்கர விளைவுகளை நம் சற்குருவேதான் ஏற்க வேண்டும். உதாரணமாக, பேரழகுப் பெட்டகமான லலிதா பரமேஸ்வரியை சற்றே காமக் கண் கண்டு நோக்கினாலும் அதன் விளைவுகள் எவ்வளவு கொடுமையாக இருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள். இது காரணமாகவே இறை தரிசனத்திற்கு முன்னால் பல தேவதை, பெண், பொன் தரிசனங்களை அடியார்கள் பெற்று அவைகள் தரும் மோகத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று சொல்வது. ஒரு யுகத்தில் அசுர சக்திகளின் ஆதிக்கத்தால் சூரிய பகவானே உலகைக் காக்க எழுந்தருள முடியவில்லை. இந்தச் சூழ்நிலையிலிருந்து விடுபட சூரிய பகவான் பட்டமங்கலம் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வலம் வந்து வணங்கி அசுர சக்திகளிலிருந்து விடுதலை பெற்றார் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம். என்றோ நடந்த இந்த அசுர தாக்குதல் இன்றும் தொடர்வதுதானே. கால சர்ப்ப யோகத்தில் சூரிய பகவான் உட்பட அனைத்து கிரகங்களும இன்று சிக்கித் தவிப்பதால் அசுர சக்திகளிலிருந்து விடுதலை அளிப்பது பட்டமங்கல ஸ்ரீதட்சிணா மூர்த்தி வழிபாடே ஆகும். கிழக்கு நோக்கி அருளும் இத்தல ஸ்ரீதட்சிணா மூர்த்தியை ஆலமரத்துடன் 108 முறைக்குக் குறையாமல் வலம் வந்து வணங்கி மேற்கூறிய தட்சிணா மூர்த்தி காயத்ரீ மந்திரத்தையோ அல்லது
யா தேவீ சர்வ பூதேஷூ
காமதேனு ரூபேண சமஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ
என்ற மந்திரத்தையோ ஓதியவாறே வலம் வருதலால் எத்தகைய தொற்று நோய் பாதிப்பிலிருந்தும் பாதுகாப்பு அடைவர் என்பது உறுதி.

திருமங்கலம்

ஆந்திர மாநில பத்ராசலத்தில் தோன்றியவரே ராமதாசர் என்ற பக்தர் ஆவார். ராமபிரான் மீதுள்ள அதீத பக்தியால் இவர் பக்த ராமதாசர் என்று அழைக்கப்படுகிறார். இத்தகைய பக்தரும் ராமபிரானின் தரிசனத்தைப் பெற முடியவில்லை என்பதே ராம பக்தியின் இலக்கணமாகும். ராமபிரான் மீதுள்ள அன்பின் மேலீட்டால் ராமபிரானுக்கு கோயில் கட்ட நினைத்தார் ராமதாசர். தன் சொந்தக்காரர்கள் யாரும் உதவ முன் வராத நிலையில் அரசாங்கத்தில் மந்திரியாகப் பதவி வகித்து வந்த ராமதாசர் அரசாங்க பணத்தைக் கொண்டு விமரிசையாக ராமபிரானுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நிறைவேற்றி விட்டார். சும்மா விடுவாரா பாதுஷா. ராமதாசரை சிறையில் அடைத்து விட்டார். சரியான அன்ன ஆகாரமின்றி பல வருடங்கள் சிறையில் வாடினார் ராமதாசர். குழந்தை பசியோடிருந்தால் தாய் உள்ளம் பொறுக்குமா ? ராமதாசரின் தீனக் குரலைக் கேட்ட லட்சுமி தேவி பெருமாளிடம் ராமதாசரைக் காத்து இரட்சிக்கும்படி வேண்டிக் கொண்டாள். பெருமாளோ, “நான் என்ன அம்மா செய்ய முடியும் ? என்னிடம் எந்த பணம், காசு எதுவும் கிடையாதே. இருப்பது ஒரே ஒரு வில், அதுவும் துருப்பிடித்துக் கிடக்கிறது. ராமதாசனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் நீயே ஏதாவது ஏற்பாடு செய்யலாமே ?” என்று கூறவே இந்த வரைக்கும் தன் பக்தனைக் காக்க தன் ஆருயிர் கணவன் திருவுள்ளம் கொண்டாரே என்று மகிழ்ந்து இலக்குமி கருவூலத்தைத் திறந்து அங்கிருக்கும் பொற்காசுகளை பெருமாளிடம் அளிக்கலாம் என்று நினைத்தாள். ஆனால், என்ன ஆச்சரியம் கஜானா காலியாகக் கிடந்தது. சுற்று முற்றும் எங்கு பார்த்தாலும் ஒரே தூசிதான் படிந்து கிடிந்ததே தவிர பெயருக்கு ஒரு பொற்காசையும் காணவில்லை. திடுக்கிட்டாள் லட்சுமி தேவி. என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டு நின்றாள் தேவி. பொன் முடிப்பைத் தருகிறேன் என்று வாக்களித்து விட்டு சென்ற தேவி ஏன் இன்னமும் திரும்பவில்லை என்று கருவூலத்திற்கு வந்த பெருமாள் லட்சுமி தேவியின் இயலாமையைக் கண்டு திகைத்தார். “தாயே, உனக்கே பொருள் பற்றாக்குறை என்று வந்து விட்டால் நீ யாரைப் போய் கேட்க முடியும். ஒன்று மட்டும் நிச்சயம், யாராக இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து செல்வத்தை நற்காரியங்களுக்கு செலவிட்டால்தான் செல்வம் விருத்தியாகும், வளரும். ஒரு வேளை நீயே இந்த விதியை மறந்து விட்டாய் போலும். சரி எல்லாத் தவறுகளையும் தாயாய் மன்னித்து காப்பவன்தானே தாயுமான ஈசன்.


ஸ்ரீஉலகம்மை சமேத ஸ்ரீசோமநாதர் திருமங்கலம்

அதனால் பூலோகம் சென்று ஈசனை வேண்டி மறைந்த செல்வ கடாட்சத்தை மீட்டுக் கொண்டு வருவாயாக. அதுவரை நான் வைகுண்டத்தில் உனக்காக காத்திருக்கிறேன்,” என்ற திருவாய் மலர்ந்து அருளினார் செந்தாரைக் கண்ணன். பூலோகம் வந்தடைந்த லட்சுமி தேவி தாயுமான ஈசனை வணங்கி நின்றாள். தாயுமான ஈசனோ, “குபேர திக்கு என்னும் வடக்கு திக்குதானே செல்வத்தை வர்ஷிப்பது என்பதை நீயே அறியவில்லையா ? அனைத்தும் நன்மைக்கே. இங்கிருந்து வடக்கு நோக்கி சென்றால் எங்கு செந்தாரைப் பூக்கள் கூட்டங் கூட்டமாக மலர்ந்துள்ளனவோ அங்கு எழுந்தருளியுள்ள ஈசனை செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து வணங்கினால் உன்னுடைய வேண்டுகோள் நிறைவேறும்,” என்று வழிகாட்டவே வடக்கு நோக்கி சாதாரண ஒரு மானிடப் பெண்ணைப் போல் தன் பயணத்தைத் தொடர்ந்தாள் லட்சுமி தேவி. மாலை மயங்கும் நேரம் லால்குடி அருகிலுள்ள திருமங்கலம் திருத்தலத்தை அடைந்தாள் லட்சுமி தேவி. மாலை நேரமானதும் செந்தாரை மலர்கள் வாடி வடும் அல்லவா ?

ஸ்ரீசங்கரநாராயணர் திருமங்கலம்

அமர்ந்த கோலத்தில் ஸ்ரீவள்ளி
அருளும் திருமங்கலம்

ஆனால், திருமங்கலம் திருத்தலத்தைச் சுற்றி மலர்ந்திருந்த செந்தாமரை மலர்களோ சற்றும் வாடாமல் அப்போதுதான் மலர்ந்ததுபோன்ற பொலிவுடன் திகழ்ந்தன. அது மட்டுமன்றி அந்த பொன்னிற மலர்களிலிருந்து சுகந்த மணம் வீசிக் கொண்டிருந்தது கண்டு தேவிக்கு அளப்பரிய ஆனந்தம் மேலிட்டது. அன்புடன் அந்த மலர்களை எல்லாம் பறித்து ஸ்ரீஉலகம்மை தேவிக்கும், ஸ்ரீசோமநாதருக்கும் சூட்டி மகிழ்ந்தாள் லட்சுமி தேவி. தற்போது ஸ்ரீசாமவேதீஸ்வரர் என்று அழைக்கப்படும் இறைவனின் ஆதிநாமமே ஸ்ரீசோமநாதர் என்பதாகும். செந்தாமரை மலரிலிருந்து மாலையில் வீசும் மணமும் பொற்கிரணங்களுமே சோமநாதம் என்ற தெய்வீக ஒலியையும் ஒளியையும் பரப்பும். இத்தகைய தெய்வீகப் பொலிவுடைய திருத்தலமே திருமங்கலமாகும். திரு என்ற எழுத்துக்களுடன் ஆரம்பமாகும் திருத்தலங்கள் ஆயிரக் கணக்கில் இருந்தாலும் திரு என்ற லட்சுமி தேவியால் பூஜிக்கப்பட்ட திருத்தலமே திரு மங்கலமாகும். மங்கலம் என்பது நிறைவு, புனிதத்தன்மை போன்ற அர்த்தங்கள் உண்டு. இவ்வாறு ஒலி ஒளி சக்திகள் நிறைவாக இறைவனின் அனுகிரகமாக சாம வேத சக்திகளாக அளிக்கப்படும் ஒரே திருத்தலம் இதுவே. அதனால்தான் என்னவோ நம் சற்குரு இருமுறை இந்த திருத்தலத்திற்கு எழுந்தருளினார்கள். ஒரு முறை உழவாரப் பணி நிறைவேற்றுவதற்கும், மறுமுறை சுமங்கலி சக்திகளை நிலைநிறுத்த ஆஸ்ரம சுமங்கலிகளைக் கொண்டு நட்சத்திர துதிகள் பாடுவதற்கும் இத்தலத்தில் தம்பதி சகிதமாக எழுந்தருளினார்கள். திருமகளின் பூஜையால் மகிழ்ந்த ஈசன் லட்சுமி தேவிக்கு என்றும் நிலைத்த செல்வப் பெருக்கை ஈசன் திருவருளாக அருளினார். அது மட்டுமல்ல உத்தம சுமங்கலிப் பெண்களுக்கு உண்மையான, வற்றாத செல்வம் என்பது சுமங்கலித்துவமே என்பதால் லட்சுமி தேவி கேட்காமலேயே நிரந்தர சுமங்கலித்துவத்தையும் திருமகளுக்கு தன் அன்புப் பரிசாக அளித்தார் சோமநாதன். இப்போது புரிகிறதா எதற்காக நம் சற்குரு இத்திருத்தலத்திற்கு இரண்டு முறை ஏகினார் என்பது ? கிழக்கு திசையை ஆதித்ய திசை என்று கூறுவது சூரியனுக்கு உரிய திசை கிழக்கு திசை என்று பொருள் கிடையாது. இந்த யுக வாஸ்து மூர்த்தியானவர் கிழக்கில் தலை வைக்கும் திசை கிழக்கு திசையாக அவைதால் அத்திசையில் சூரிய பகவான் பெருமாளின் உத்தரவின்படி எழுந்தருள்கின்றார் என்பதே நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய திசை பற்றிய ஞானமாகும்.

ஸ்ரீபரசுராம லிங்கம் திருமங்கலம்

அதே போல குபேர பகவான் பூஜித்த திசை என்பதால் வடக்கு திசை குபேர திசை ஆயிற்று என்று பொருள் கொள்வதைவிட குபேர பகவான் வடக்கு திசை நோக்கி வழிபட்டபோது ஸ்ரீசோமநோதர் அவருக்கு அருள்புரிந்ததால் வடக்கு திசை குபேர திசை ஆயிற்று என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் தெய்வீக இரகசியம். இத்தகைய அனுகிரகத்தை குபேர பகவான் பெற்ற திருத்தலமே திருமங்கலம் ஆகும். குபேர பகவான் வழிபாடுகள் இயற்றி இறைவனிடம் குபேர நிதி பெற்ற திருத்தலங்கள் பல உண்டு. ஆனால், குபேர பகவான் இறைவனை வேண்டி குடியிருக்கும் தலம் என்றால் அது லால்குடி திருமங்கலம் ஒன்றுதான் என்பார் நம் சற்குரு. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த குபேர திசையில் ஸ்ரீமகாலட்சுமி எழுந்தருளிய தலமே அருகிலுள்ள லால்குடி திருத்தலமாகும். தற்காலத்தில் பக்தர்கள் இறைத் தலங்களுக்குச் சென்ற உடனேயே நேரே மூலவரைச் சென்று தரிசித்து விடுகிறார்கள். சிவத்தலமாக இருந்தால் முதலில் கொடி மரத்தை தரிசனம் செய்த பின்னர் இடப்புறமாக சென்று அனைத்து தெய்வ மூர்த்திகளையும் வரிசையாக தரிசனம் செய்து, அம்பாள் தரிசனம் பெற்று இறுதியாக தங்கள் தரிசனப் பலன்களை எல்லாம் மூலபிரானான சிவமூர்த்தியிடம் அர்ப்பணிக்க வேண்டும் என்பது சித்தர்கள் கூறும் தரிசன விதி. ஆனால், முற்காலத்தில் ஒரு திருத்தலத்தில் மூலவரை தரிசனம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு முன்னோடியாக எத்தனையோ வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டி வரும். சில சமயம் இத்தகைய வழிபாடுகளை நிறைவேற்ற பல யுகங்கள் கூட தேவைப்படுவதுண்டு. இம்முறையில் ஸ்ரீசோமநாதரை வழிபட விரும்பிய பரசுராமர் திருமங்கலத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பல யுகங்கள் தொடர்ந்து வழிபாடுகள் நிறைவேற்றினார். அதன் பின்னரே ஸ்ரீசோமநாதர் அவருக்கு தரிசனம் அளித்து பரசு ஆயுதத்தையும் தன் அன்புப் பரிசாக பரசுராமரிடம் அளித்தார். இறைனிடம் இருந்த பெற்ற பரிசை வைத்து இறைவனுக்கு சேவை செய்வதுதானே முறை. இதையொட்டி பரசுராமரும் திருமங்கலம் திருத்தலத்தில் ஒரு தீர்த்தத்தை சிவபெருமான் அளித்த பரசு ஆயுதத்தால் தோண்டி அவ்வாறு பெற்ற தீர்த்தத்தால் சுவாமிக்கு தினமும் அபிஷேகம் இயற்றி வந்தார். பிற்காலத்தில் பரசுராமர் இந்த பரசு ஆயுதத்தைக் கொண்டு பல க்ஷத்திரியர்களின் தலையைக் கொய்தார் என்றால் பரசுராமரால் தலை துண்டிக்கப்பட்ட மாமன்னர்கள் எல்லாம் எத்தகைய புண்ணிய சக்தியைப் பெற்றிருப்பார்கள் என்பதை நாம் அறிந்தால்தான் பரசுராமர் போன்ற மாமேதைகளின் மேதாவிலாசம் நமக்கு ஓரளவிற்காவது புரியவரும். பரசுநாமர் திருமங்கலம் திருத்தலத்தில் தீர்த்தம் தோண்டி பெற்ற தீர்த்தத்தை சுவாமிக்கு அபிஷேகித்து மகிழ்ந்தார் என்று கூறினோம் அல்லவா ? பரசுராமரின் சேவையில் பங்கு கொண்ட பல சீடர்களின் வேண்டுகோள், பிரார்த்தனைகள் தீர்க்கப்படாமலே இருந்தன. நம் சற்குரு ஒரு முறை திருமங்கலம் திருத்தலத்தில் உழவாரப் பணிகள் நிறைவேற்றியபோது இந்த பரசுராமர் தீர்த்தத்தில் ஒரு அடி ஆழமே உடைய நீரூற்றே கண்ணில் பட்டது. ஆனால், இந்த நீரூற்று நம் சற்குரு இத்திருத்தலத்தில் உழவாரப் பணிகளை நிறைவேற்றி பிரகாரத்தில் உள்ள செடி, கொடிகளுக்கெல்லாம் நீருற்றிய பின்னரும் சற்றும் குறையாமல் இருந்தது கண்டு அடியார்கள் பின்னர் வினவியபோது சற்குரு சிரித்துக் கொண்டே, “எங்கே சார் பரசுராமர் இந்த கோயில் தீர்த்தத்தை தொட விட்டார். கேரளா திருத்தலங்களில் உள்ள தீர்த்தங்களை எல்லாம் அவர் சீடர்கள் வரிசையாக குடம் குடமாக கொண்டு வந்து ஆலயத்தை நிரப்ப அதை வைத்து கோயிலை அலம்பி விடுவதற்கே அடியேன் பிரம்மபிரயத்தனம் செய்ய வேண்டி வந்தது ...,” என்று கூறினார்.

மழவர்கள் என்போர் வீரம் மிகுந்த இனத்தவர்கள். இவர்கள் திருமழபாடியில் பாசறை அமைத்து வீரர்களை ஆயத்தம் செய்து வந்தனர். மழவர்களில் ராஜகேசரி வர்மன் என்ற அரசன் புகழ்பெற்று விளங்கினான். ஆனால், இவனுக்கு ஒரு பெரிய குறை இருந்தது. தன்னுடைய தாய் யார் என்றே தெரியாத நிலை. அதனால் மற்ற மன்னர்கள் இவனைக் காணாதபோது இகழ்ந்து பேசியதால் பெரிதும் மன வருத்தத்தில் இருந்தான். தன் குலகுருவான ஸ்ரீரவிக்கிரமன் என்ற ரிஷியின் ஆலோசனையின்படி திருமங்கலம் திருத்தலத்தில் தவம் இயற்றிக் கொண்டிருந்த பரசுராமரை அணுகி தன் குறையைத் தெரிவித்தான். பரசுராமரும் தன் ஞான திருஷ்டியில் ராஜகேசரியின் தாய் சேரன் மாதேவி என்பதை மன்னனிடம் தெரிவித்து தொடர்ந்து அவன் பித்ரு தர்ப்பணத்தை அளிக்க வழிசெய்தார். அதன் பயனாய் அவன் தன் பரம்பரையைப் பற்றிய செய்திகளை அறிந்ததோடு மட்டுமல்லாமல் மன்னனுடைய பிதுர் பூஜைகளால் அவன் உத்தம சந்தான பாக்கியத்தையும் பெற்றான். எனவே இன்றும் தங்கள் குலம், கோத்திரம் பற்றிய சரியான தகவலை அறியாதோர் ஸ்ரீசாமவேதீஸ்வரரை வழிபட்டு வருவதால் உரியவர்கள் மூலம் இந்தச் செய்தியை அவர்கள் தெரிந்து கொள்ள இறையருள் துணை நிற்கும். பரசுராமர் க்ஷத்திரியர்களைக் கொன்ற பிராண ஹத்தி தோஷத்திற்கு பிராயசித்தம் பெற்ற தலம் இது என்பதோடு மட்டுமன்றி இவ்வாறு பிராண ஹத்தி தோஷம் நிறைந்த பலருக்கும் வழிகாட்டியாக விளங்க அருள்புரிந்ததற்கு காரணமாக விளங்கியதற்கும் திருமங்கலத்தில் அவர் இயற்றிய வழிபாடுகளே என்பதை அறிவிப்பவர்களே சித்தர்கள் ஆவர்.

ஸ்ரீஆனாயர் அம்மன் திருமங்கலம்

அபூர்வமாக திருமங்கலம் திருத்தலம் மூன்று சற்குருமார்களின் சக்திகளுடன் துலங்குகின்றது. ஸ்ரீதட்சிணாமூர்த்தி பலா மரத்தின் நிழலில் வீற்றிருந்து அருள்புரியும் குரு சக்திகள், ஆயுர் சக்திகள் ஒரு புறம். ஜகத்குரு என்ற முறையில் உலகத்தவர்களுக்கு எல்லாம் குரு கடாட்ச சக்திகளை வீசும் ஸ்ரீஉலகம்மை தெற்கு நோக்கி சற்குருவாய் பூத்த சிறப்பு ஒரு புறம். பஞ்சாட்சரத்தை தன் புல்லாங்குழலில் ஊதி வேணு கானம் எழுப்பிய ஆனாய நாயனார்க்கு சற்குருவாய் அன்னை தெற்கு நோக்கி எழுந்தருளிய அற்புத தலம். இத்தகைய மூன்று குருசக்திகள் எழுந்தருளிய தலத்திற்கு ஒரு தனிச் சிறப்பு இருக்கத்தானே செய்கிறது ? அது என்ன ? யார் எங்கிருந்து அழைத்தாலும் அன்னவர்க்கு குரு வடிவாய் சென்று காப்பவையே இத்தகைய முப்புல குரு சக்திகளாகும். இதை இரு உதாரணங்கள் மூலம் விளக்குகிறோம். இரண்டாம் உலக யுத்தம் வெடித்த சமயம். சிங்கப்பூர் ஜப்பானியர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. ஜப்பானிய போர் வீரர்கள் தங்கள் அரசாங்கத்திற்கு சாதகமாகவே குடி மக்கள் செயல்படுகிறார்களா என்று ஒவ்வொரு வீடாகச் சென்று சோதித்துக் கொண்டு இருந்தனர். இது பற்றி எதுவும் அறியாத விஸ்வநாத சர்மா என்ற பக்தர் தன் வீட்டு பூஜை அறையில் பிள்ளையார் விக்ரஹத்தை வைத்துக் கொண்டு காயத்ரீ மந்திரம் ஜபித்துக் கொண்டிருந்தார். உள்ளே தாழிடப்படாமல் இருந்த அவர் வீட்டுக் கதவை வேகமாகத் திறந்து கொண்டு பூட்ஸ் காலுடனே வந்த ஜப்பானிய வீரர்கள் தன்னை மறந்து விஸ்வநாத சர்மா காயத்ரீ ஜபித்துக் கொண்டிருந்த காட்சியைக் கண்டனர். ஆனால், அவர்கள் கண்களுக்கு என்ன காட்சி தெரிந்ததோ தெரியவில்லை. வேகமாக உள்ளே நுழைந்த வீரர்கள் ப்ரேக் அடித்தது போல் சட்டென நின்று ஒரு பெரிய சல்யூட் அடித்து விட்டு வந்த வேகத்தில் திரும்பிச் சென்று விட்டனர். விஸ்வநாத சர்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் அனைத்தும் அறிந்த சற்குரு இதன் விளக்கத்தை அறிவார் அல்லவா ? அந்த வீரர்களுக்கு திருமங்கலம் ஸ்ரீஉலகன்னையே பிள்ளையார் விக்ரஹத்தை ஜப்பானிய அதிபராகக் காட்ட தங்கள் அதிபரை பக்தியுடன் பூஜிக்கும் ஒரு உத்தமரைக் கண்டு அந்த வீரர்கள் பின் வாங்கிச் சென்றதில் வியப்பென்ன ? மீனாட்சி என்ற பெயருடைய ஒரு பெண் இருந்தாள். பெயருக்கேற்றபடி துருதுருவென்றிருந்த கண்கள் மட்டும் இல்லாமல் அவளுடைய அவயவங்களும் சிலையைப் போல் சிறந்த அங்க லட்சணங்களுடன் திகழ்ந்தன. ஆனால், அவளுடைய கணவனோ அவளை மதிக்காமல் வேறு ஒரு பெண்ணுடன் ஓடிப் போய் விட்டான். பதிவிரதையான அவள் செய்வதறியாது திகைத்தாள். காவிரிக் கரையில் ஜீயபுரம் கிராமத்தில் வசித்த அவள் தினமும் காவிரி சென்று நீராடி வந்தாள். அவளை பல காமக் கண்கள் மொய்த்தன. செய்வதறியாது திகைத்த அவள் ஒரு நாள் காவிரிக் கரைக்கு நித்திய அனுஷ்டானங்களை மேற்கொள்ள வந்த ஸ்ரீராமனுஜரை அணுகி அவர் திருப்பாதங்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்றாள். என்ன ஆச்சரியம், மறுநாள் முதல் அவளை எவரும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அவள் தன் இறைவழிபாடுகளைத் தொடர்ந்து நிறைவேற்றி இறைவனுடன் கலந்தாள். மீனாட்சி வாழ்வின் பின்னணியில் நிகழ்ந்த அற்புதங்களை சித்தர்களே அறிவர். மீனாட்சி ஸ்ரீராமானுஜரின் பாதங்களில் விழுந்து வணங்கியபோது சுவாமிகள் திருமங்கலம் ஸ்ரீஉலகம்மையைத்தான் தியானித்தாராம்.

பரசு தீர்த்தம் திருமங்கலம்

தன் கணவன் வேறு யாருடனோ ஓடிப் போய் விட்டாலும் மீனாட்சி தன்னுடைய கணவனின் தியானித்திலேயே திகழ்ந்ததால் அவள் எங்கு சென்றாலும் அவளுடைய கணவன் அவளுடன் வருவதாகவே மற்றவர்கள் கண்களுக்குத் தென்பட்டதால் எவரும் தவறான எண்ணங்களுடன் அவளிடம் நெருங்கவில்லை. இந்தப் பிரார்த்தனையைத்தான் ஸ்ரீராமானுஜர் திருமங்கலம் ஸ்ரீஉலகன்னையின் முன் வைத்தார் என்பதே சித்தர்கள் நமக்குத் தெரிவிக்கும் இரகசியம். இதுவே உலகம்மையின் அனைத்திலும் தானாய் நிற்கும் அதீத இறை சக்தி. தன் வாழ்நாள் முழுவதும் எத்தனை ஆயிரம் பேருக்கு மீனாட்சி தேவி தன்னுடைய கணவனின் காட்சியின் பின்னணியில் ஸ்ரீஉலகம்மையின் தரிசனத்தைப் பெற்றுத் தந்திருப்பாள் என்று கணக்கிட்டுப் பாருங்கள். இது உலகம்மையின் அருளாட்சியா, நம் சற்குருவின் கருணை கடாட்சமா, ராமானுஜரின் பக்தி விலாசமா இல்லை மீனாட்சியின் ஆழமான பக்தியா ? இதை அறிய முற்படுவதும் ஒரு ஆத்ம விசாரம்தானே ? துருப் பிடித்த வில்லைத் தவிர தன்னிடம் வேறு எதுவும் இல்லை என்று சாதித்த விஷ்ணு பகவானின் உத்தரவின்படி லட்சுமி தேவி வைகுண்டத்திலிருந்து திருமங்கலத்தை அடைந்து ஸ்ரீசோமநாத ஈசனை வணங்கி அருள் பெற்றாள் என்று விளக்கினோம் அல்லவா ? ஆனால், இது நாம் நினைப்பதுபோல் ஏதோ ஒரு கணப் பொழுதில் நிகழ்ந்த இறை அனுபூதி கிடையாது. பல யுகங்கள் தொடர்ந்து நிகழ்ந்ததே லட்சமி தேவியின் சோமநாத வழிபாடு. சோமநாதரின் திவ்ய வழிபாட்டில் தன்னை மறந்து லயித்திருந்த லட்சுமி தேவிக்கு தான் என்ற நினைவை ஊட்ட நினைத்த பெருமாள் மூர்த்தி வைகுண்டத்திலிருந்து பூலோகம் வந்தடைந்து திருமங்கலத்தில் சிவ பூஜையில் தன்னை மறந்து லயித்திருந்த தன் அருமை மனைவியைக் கண்டு உள்ளம் பெரிதும் பூரிப்படைந்தார். லட்சுமி தேவியின் சிவ பூஜை மகிமையால் பெருமாள் வைத்திருந்த “துருப் பிடித்த” வில்லும் புத்துயிர் பெற்றுப் பொலிந்ததாம். புத்துயிர் பெற்ற அந்த வில்லை ஸ்ரீசோமநாதரின் திருவடிகளில் வைத்து வணங்கினாராம் பெருமாள். இந்த வழிபாட்டில் பெரிதும் மகிழ்ந்த சோமநோதர் பெருமாளை வாரி அணைத்து தன் உடம்பில் பாதியை விஷ்ணு மூர்த்திக்கு நல்கினாராம். இவ்வாறு சங்கர எழில் கோலத்தில் பாதியைப் பெற்று சங்கரநாராயணராகக் காட்சி அளிக்கும் சங்கரநாராயண தரிசனத்தை இத்தலத்தில் பக்தர்கள் தரிசனம் செய்து பரமானந்தம் பெறலாம். கறுப்பு, சிவப்பு என்ற நிற பேதமோ, படித்தவன் படிக்காதவன் என்ற தகுதி பேதமோ, பணக்காரன் ஏழை என்ற பொருள் பேதமோ இவ்வாறு எத்தகைய பேதங்கள் தம்பதிகள் இடையே இருந்தாலும் அவர்கள் திருமங்கலம் திருத்தலத்தில் வழிபாடுகளை இயற்றுவதால் நன்னிலை அடைவர் என்பதே இத்தலத்தின் பேதமில்லாத பெருமை வழங்கும் அனுகிரக சக்திகளாகும். மயில் வாகனத்தில் வள்ளி அமர்ந்த கோலமும், இந்த எழில் கோலத்தின் எதிரே திகழும் சங்கர நாராயண மூர்த்திகளின் இணைந்த கோலமும் குடும்பங்களில், அலுவலகங்களில், சமுதாயத்தில் தோன்றும் எத்தகைய பேதங்களையும் களையவல்லவையே என்பதில் ஐயமில்லை. இந்தப் பிரபஞ்சத்திலேயே உயர்ந்த நம் சற்குருவையே குருநாதராய் ஏற்றுக் கொண்டிருந்தாலும் அவர்களுக்கும் அவ்வப்போது சந்தேகங்கள், அவநம்பிக்கை தோன்றுவது இயற்கை. அல்லது நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு நம் சற்குருவிடம் ஆழ்ந்த நம்பிக்கை தோன்றுவது கிடையாது.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்ரீஉதங்க மகரிஷி
திருமங்கலம்

குரு நம்பிக்கையை வலுப்படுத்துவதே திருமங்கல திருத்தலத்தில் குசா சக்தியுடன் பொலியும் தட்சிணாமூர்த்தியின் கருணை கடாட்சமாகும். உலகம்மை, ஆனாயர் அம்மை என்ற இரு குரு மூர்த்திகளுக்கு இடையே தட்சிணா மூர்த்தி குருவை சதா சர்வகாலமும் தரிசித்தபடி ஸ்ரீ உ...தங்க மகரிஷி அமர்ந்துள்ளார் என்றால் இது வெறுமனே அமர்ந்த மகரிஷியின் ஒரு சாதாரண கோலமா, இல்லை, இல்லை. குரு நம்பிக்கையை வலுப்படுத்தும் முகமாக, குரு நம்பிக்கை கலியுக அடியார்களிடம் வேரூன்ற பிரார்த்தனை செய்தவாறே அமர்ந்திருப்பதே ஸ்ரீஉதங்க மகரிஷியின் சீரிய பணிகளில் ஒன்று என்று தெளிவுபடுத்துபவரே நம் சற்குரு அண்ணல் ஆவார். சார்வரி வருட விநாயக சதுர்த்தி 22.8.2020 சனிக் கிழமை அன்று ஹஸ்தம் நட்சத்திரம் கூடிய சுபநாளில் வாஸ்து சக்திகள் நிறைந்த நன்னாளில் அமைவதால் சுத்தமான மழை நீர் கொண்டு தாமே அரைத்த சந்தனத்தை விநாயகருக்கு காப்பாக இட்டு விநாயகரின் திருஉந்தியில் அரைத்த சந்தனத்தை வைத்து அதன் மேல் தங்கம், வெள்ளி காசுகளையோ அல்லது ரூபாய் நாணயத்தையோ வைத்து வழிபடுதல் சிறப்பாகும். ஆனால், இந்த செய்தியை அறியும் பலருக்கும் இது சாத்தியமில்லா விட்டாலும் விநாயக சதுர்த்தி முடிந்த பின்னர் ஏதோ ஒரு சதுர்த்தி அல்லது சதுர்த்தசி திதியில் சுத்தமான மழை நீரில் சந்தனம் அரைத்து அந்த சந்தனத்தால் திருமங்கலத்தில் உள்ள விநாயகருக்கோ அல்லது பரசுராம லிங்கத்திற்கோ சார்த்தி வணங்குதலால் நற்பலன் பெறுவார்கள். இருள் சூழ்ந்த இந்த வருடத்தில் விளையும் பல குழப்பங்களைத் தீர்க்கும் மாமருந்தே இத்தகைய சனி அளிக்கும் சாசுவதக் குளிர்ச்சியாகும். சிவ சக்தி சொரூபமாக அமர்ந்திருக்கும் திருமங்கல பிள்ளையார் மூர்த்திகளைப் போல் பிள்ளையார் மூர்த்திகள் அருளும் திருத்தலங்களிலும் இத்தகைய சாஸ்வத குளிர்ச்சி வழிபாட்டை மேற்கொண்டு நற்பலன் பெறலாம். பொதுவாக, சந்திரனும் சனீஸ்வர பகவானும் இணைந்திருக்கும் ஜாதக அம்சங்களை உடையவர்கள் மன சஞ்சலம் மிக்கவர்களாக இருப்பார்கள். சந்திரனுக்கு உரித்தான அஸ்த நட்சத்திர தினத்தன்று விநாயக சதுர்த்தி அமைவதால் பிள்ளையார் மூர்த்திக்கு நிறைவேற்றும் இத்தகைய சாஸ்வத குளிர்ச்சி வழிபாடு மன சஞ்சலங்களை நீக்கி திடமான மனத்தை அளித்து நற்காரியங்களை நிறைவேற்றும் நற்பண்பை வளர்க்கும் என்பதே இத்தகைய வழிபாடுகளின் பின்னணியாக அமைவதாகும். அருகம்புற்களை மூன்று மூன்றாக சணல் அல்லது நூலில் கட்டி பிள்ளையார் மூர்த்திக்கு அணிவித்து வழிபடுவதும் இத்தகைய வழிபாட்டிற்கு உறுதுணை அளிக்கும் குரு சக்திகளைப் பிரார்த்திப்பதாக அமையும். Heena 360 என்று நறுமணத்தை (scent, perfume) கலந்து சாம்பிராணி தூபம் இடுவதும், தாமே அரைத்த சந்தனத்தில் இந்த நறுமணத்தைக் கலந்து இறைமூர்த்திகளுக்கு காப்பிடுவதும் சிறப்பே. ஆனால், Heena 360 என்பது திருமங்கலம் ஸ்ரீசாமவேதீஸ்வரர் வழிபாட்டிற்கு மட்டுமே உகந்தது என்பதை நினைவில் கொள்ளவும். திருமங்கலம் ஈசனின் தற்போதைய திருநாமம் ஸ்ரீசாமவேதீஸ்வரர் என்பதாகும். சாம வேதம் ஓதுபவர்கள் வணங்க வேண்டிய மூர்த்தி என்பது மட்டும் இதன் பொருள் கிடையாது, உலகில், பிரபஞ்சத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றும் மனதார விரும்பும் அனைவரும் வழிபட வேண்டிய மூர்த்தியே ஸ்ரீசாமவேதீஸ்வரர் ஆவார். எங்கு சாமவேதம் ஓதப்படுகின்றதோ அங்கு அணுகுண்டு முதல் எந்தவித குண்டு, ஆயுதப் பிரயோகங்களும் நிகழாது. வியாபாரம் விருத்தி அடையும். நோய்கள் குணமாகும்.

ஸ்ரீகுபேரலிங்கம் திருமங்கலம்

இத்தகைய அனுகிரகங்களை அளிக்கக் கூடிய தெய்வ மூர்த்தியை நம் அருகிலேயே வைத்துக் கொண்டு நாம் பயனடைய முடியவில்லை என்றால் அது யார் தவறு ? குபேரனுடைய மனைவியின் பெயர் மனோரமா என்பதாகும். பணத்தை இரம்யமாகக் கொடுத்து விடுபவள் என்பது இதன் பொருள். குடும்ப சகிதமாக குபேர பகவான் தன் மகள் பத்மினியுடனும் தங்கி தினசரி வழிபாடுகள் இயற்றும் தலமே திருமங்கலம் திருத்தலமாகும். குபேர தந்திரங்கள் என்ற ஒரு வகை தந்திரங்கள் உண்டு. இந்த தந்திரங்களை முறையாகப் பிரயோகம் செய்தால் என்றுமே பணத்திற்கு பஞ்சம் ஏற்படாது. நற்காரியங்களை இயற்றுவதற்கான பண வரவு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். இத்தகைய குபேர தந்திரங்களில் ஒன்றே கணவன் மாதச் சம்பளத்தை தன் மனைவி கையில் கொடுப்பதாகும். இவ்வாறு பணத்தைப் பெறும் மனைவி முதலில் அதை தன்னுடைய வலது மோதிர விரலால் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும். இதனால் வீண் செலவுகள் குடும்பத்தில் ஏற்படாது. குபேர தந்திரங்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விழைபவர்கள் பரசுராமர் நிர்மாணித்த பரசு தீர்த்தத்திலிருந்து தினமும் குறைந்தது ஏழு வாளி நீர் எடுத்து சுவாமி அபிஷேகத்திற்கு அளிப்பதும் ஏழு வாளி நீரை இங்குள்ளள பூச்செடிகளுக்கு ஊற்றி வருவதும் இத்தலத்தை குறைந்தது ஏழு முறை வலம் வந்து வழிபடுவதும் நலமே. திருமங்கலம் திருத்தலத்தில் இத்தகைய குபேர வழிபாடுகளை தொடர்ந்து நிறைவேற்றுவது சாத்தியம் ஆகுமா என்று நினைக்கலாம். பணம் என்ற ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பல அயல்நாடுகளில் வசிப்பவர்கள் பணம் மட்டுமன்றி அனைத்து செல்வங்களையும் அள்ளித்தர தயாராக இருக்கும் குபேர நிதிக்காக திருமங்கலம் திருத்தலத்தில் தங்கி வழிபாடுகள் இயற்றக் கூடாதா என்ன ? மருத்துவர்கள் (டாக்டர்கள்) தங்கள் பரிசோதனை அறை கிழக்கு திசை நோக்கி இருக்குமாறு அமைத்துக் கொண்டு காலையில் தங்கள் அறையில் நுழையும்போது முதலில் வலது பக்கம் இருக்கும் கதவைத் திறக்க வேண்டும். பின்னரே மற்ற கதவுகளைத் திறக்க வேண்டும். அவ்வாறு அறையில் நுழைந்து நோயாளிகளை பரிசோதிக்கும்போது முதலில் கிழக்கு திசையில் வலது பக்கம் உள்ள நோயாளியின் நாடிகளை முதலில் பரிசோதனை செய்து தங்கள் அலுவல்களை ஆரம்பிக்க வேண்டும். இதனால் நோயாளிகள் குணமடைவதுடன் மருத்துவர்களும் தங்கள் துறையில் பேரும் புகழும் பெறுவர். இதுவும் குபேர தந்திரங்களில் ஒன்றாகும். திருமங்கலம் திருத்தலத்தில் நம் சற்குரு உழவாரப் பணிகள் நிறைவேற்றியபோது ஓர் அற்புதம் நிகழ்ந்தது. மூலவர் அருகே அடியார்கள் தரையை அலம்பிக் கொண்டிருந்தபோது நம் சற்குரு அங்குள்ள தூண்களில் எல்லாம் நீரை ஒரு விசைக் குழாய் மூலம் பொழிந்து அலம்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்தத் தூண்களில் மின்சாரக் கசிவு ஏற்பட்டதால் அந்தத் தூண்கள் எல்லாம் பளிச் பளிச்சென்று மின்னி வெளிச்சத்தை வெளியிட்டன. இதைக் கண்டு அஞ்சிய பல அடியார்களும் அங்கிருந்து விலகி மற்றப் பணிகளை நிறைவேற்றச் சென்று விட்டனர். அனைத்தும் அறிந்த நம் சற்குருவோ அதைப் பற்றி எதுவும் கண்டு கொள்ளாது தன் காரியத்திலேயே கண்ணும் கருத்துமாக இருந்து சுமார் ஒரு மணி நேரம் பளிச்சிடும் அந்த மின்னல் ஒளிகள் ஊடே திருப்பணி நிறைவேற்றி எல்லாத் தூண்களையும் தூய்மை செய்தார்கள்.

திருமங்கலம்

பல வருடங்கள் கழித்து ஆஸ்ரமத்தில் ஒலி ஒளி சக்திகளை மாற்றும் நவநாத சித்தரைப் பற்றி பேச்சு எழுந்தபோது நம் சற்குரு சிரித்துக் கொண்டே, “எல்லாம் கேட்பதற்கு எளிதாக இருக்கும், சார். நடைமுறையில் ஒரு சாதாரண விஷயத்திற்கு நம் அடியார்கள் கொள்ளும் பயத்தை நேரில் அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும். அடியேனுடைய பிரார்த்தனையை ஏற்று திருமங்கல திருத்தலத்தில் மூலஸ்தானத்தை நம் அடியார்கள் அலம்பி விடும்போது சாம வேத அனுகிரக சக்திகளை அளிப்பதற்காக பரசுராமர் சாம வேதங்களின் கோடி சக்தியில் ஒரு பங்கை ஒரு கோடியாக்கி அதில் ஒரு பகுதி வேத சக்தியை அங்குள்ள சாமவேத தூண்களில் ஒளி வடிவில், மின்னல் ரூபத்தில் அளித்தார். அதைக் கண்ட நம் ஆஸ்ரம அடியார்களோ அங்கிருந்து இடத்தைக் காலி செய்து விட்டு நைசாக வேறு இடங்களுக்குச் சென்று விட்டார்கள் என்றால் முழுவதுமாக சாமவேத சக்திகளை ஒளி ரூபத்தில் அளித்தால் அடியார்கள் நிலை என்னாவது ?” என்று கேட்டார். இதுவே சாமவேத சக்திகளின் தன்மையாகும். இதோ என்றோ நம் சற்குரு அளித்த அனுகிரகம் என்றாலும் இன்றும் அடியார்கள் இத்தகைய சாமவேத சக்திகளின் ஒரு பகுதியையாவது கிரகிக்கவே இங்கு சாமவேத தூண் தரிசனத்தை ஸ்ரீசாமவேத ஈசன் தரிசனத்துடன் அளிக்கிறோம் என்பதே திருமங்கல திருத்தலத்தின் மகாத்மியமாகும். இந்த சாமவேத சக்திகளை கிரகிக்கவே Heena 360 நறுமணம் கமழும் சாம்பிராணி தூபத்தை திருத்தலம் முழுவதும் நிரவி பயனளிக்க, பயன்பெற வேண்டுகிறோம். திருமங்கலம் திருத்தலத்தில் வெளிப் பிரகாரத்தில் ஒரு தீர்த்தம் உள்ளது. இதுவன்றி உட்பிரகாரத்தில் பரசுராமர் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு எதிரே, ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு எதிரே ஒரு தீர்த்தம் உள்ளது.இதுவே பரசுராம தீர்த்தம். பரசுராமர் தீர்த்தத்திற்கு எதிரே ஸ்ரீதட்சிணா மூர்த்தி அருகே அமைந்துள்ளதே பலா தல விருட்சமாகும். பொதவாக, பலா விருட்சம் ஆயுள் விருத்தி அளிப்பது என்றாலும் வியாபார அபிவிருத்தி, நோய் நிவாரண சக்திகள் பெருக்கி, குடும்ப ஒற்றுமை போன்ற பல அனுகிரகங்களை அளிப்பதும் தேனில் ஊறிய பலாச் சுளைகளை திருமங்கலத்தில் அளிக்கும் தான முறையாகும்.
எத்திக்கும் தானாகி என் இதயத்தே ஊறி
தித்திக்கும் ஆனந்தத் தேனே பராபரமே
என்ற சிவசக்தி ஐக்ய துதியை 30 முறை ஓதி மேற்கூறிய தானத்தை அளித்தல் சிறப்பே.

ஸ்ரீசுரும்பார்குழலி ஆலயம் ஐயர்மலை

ஸ்ரீபச்சைநாயகி அம்மன் பேரூர்

எங்கு ஆரம்பமோ அங்குதான் முடிவும் என்பதே இறைவனைப் பற்றி சித்தர்கள் கூறும் அத்வைத விளக்கம். இந்த அத்வைத விளக்கத்தை தெளிவுபடுத்துவதற்காக ஜெயவில்லின் நடுவில் பச்சை நிறத்தை உடைய வானவில்லை பச்சைநாயகியின் தனயனான ஸ்ரீராமபிரான் வானத்தில் நிரவி மக்களுக்கெல்லாம் அருள்பொழிகிறார் போலும். எனவே வானவில்லை பற்றி மேலும் மேலும் அறிவை விருத்தி செய்து கொள்ள விரும்பும் பக்தர்கள் பேரூர் ஸ்ரீபச்சைநாயகி சமேத ஸ்ரீபட்டீஸ்வரனை வணங்கி அருள்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். ஒரு முறை ஐயர்மலையில் நம் சற்குரு உழவாரப் பணி நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது அம்பாள் சன்னதியின் பின்னால் தடுப்புச் சுவர் கட்டப்படவில்லை. அனைவரும் கீழிறங்கி அங்கே உள்ள சுனையில் இருந்து தீர்த்தம் எடுத்து கோயிலை அலம்பி விட்டுக் கொண்டிருந்தோம். திருப்பணிக்கு வந்த இரு சிறுவர்கள் மலையில் ஓரமாகச் சென்று சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நம் சற்குரு, “ஏனப்பா, இவ்வளவு ஓரத்தில் சென்று சிறுநீர் கழிக்கிறீர்கள். அப்படி என்ன யாருக்கும் இல்லாத அதிசய பொருளையா வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் ...” என்று சிரித்துக் கொண்டே கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்கள். இன்றைக்கு உலகம் முழுவதும் நிகழும் துன்பத்திற்கு காரணம் சற்குரு மேலே கூறிய பொன்மொழியை ஆழ்ந்து சிந்திக்காததால் தோன்றிய கொடுமையான விளைவுகளின் தாக்கமே ஆகும். மகான்கள், சித்தர்களைப் பொறுத்தவரையில் இது சாதாரண வாக்கியம், இது பொன் மொழி என்ற பாகுபாடே கிடையாது. அவர்கள் விரல் அசைந்தால் அது பகவத் கீதை, அவர்கள் கண் அசைந்தால் அது ராமாயணம், அவர்கள் உதடு அசைந்தால் அது மகாபாரதமே. ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் தம்மிடம் இருப்பது ஒரு அதிசயமான பொருள் அல்ல என்ற உண்மையைத் தெளிவாக உணர்ந்துகொண்டால் போதுமே இந்த உலகமே ஒரு பூஞ்சோலையாக அல்லவா மாறிவிடும். பேரூர் திருத்தலத்தில் பிஸ்தா பருப்புகள் கலந்த பசும்பாலை தானமாக அளித்து திருத்தலத்தை தொடர்ந்து வலம் வருதலால் சற்குரு கூறிய இந்த அத்வைத தத்துவத்தின் ஆழ்ந்த பொருளை அறிந்து பயன்பெற முடியும். திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்த ஸ்ரீபச்சையம்மன் தரிசனமும் இத்தகைய அனுகிரகங்களை அளிக்க வல்லதே. புதன் கிழமைகளில் இயற்றும் இத்தகைய வழிபாடுகள் சிறப்பான பலன்களை நல்கும். மேற்கூறிய முறையில் பலாச்சுளைகளை பேரூர் திருத்தலத்தில் தானமாக அளித்தலாலும் குடும்ப ஒற்றுமை பெருகுவதுடன் ஆயுள் வளர்க்கும் அற்புத வழிபாடாகவும், நோய் நிவாரண பத்ததியாகவும் இது அமைகிறது.

மேற்கண்ட ராமபாண மகாத்மியம் அனைத்தையும் படித்து ஆத்ம விசாரம் செய்தால் நவநாத சித்தர்கள் தாசரதன் என்ற ராம நாமத்தையே எப்படி சிறப்பு வாய்ந்த நாமமாக அறிவித்தார்கள் என்பதை நாம் மனதார அங்கீகரிப்போம்.

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam