சனியில் நீராடி சாசுவதமான அருளைப் பெறலாமே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்



திருகோடிகா சிவத்தலம்

தஞ்சை மாவட்டத்திலுள்ள திருகோடிக்கா திருத்தலம் கோடிக் கணக்கான சிறப்புகளுடன் பொலியும் சிவத்தலம். கோடி என்பதற்கு லட்சம், கோடி என்ற எண்ணிக்கை மட்டுமல்லாது ஒரு மூலை, சாஸ்வதமான இடம், இது இன்ன தன்மை உடையது என்று கோடிட்டுக் காண்பிப்பதாகவும், புகலிடம் என்றவாறு பலவிதமாக பொருள் கொள்ளலாம். இறையன்பில் உச்சக்கட்டத்தில் நின்ற துர்வாசர், எமதர்மராஜா மட்டுமல்லாது எண்ணற்ற அவதாரங்களும், ரிஷிகளும், தேவர்களும், தேவதைகளும், மகான்களும் முக்தி பெற்று இன்று இத்தலத்தில் உறையும் சிறப்பான பெருமை உடையதே திருகோடிக்கா திருத்தலம் ஆகும். காவிரி வடக்கு முகமாக வலஞ்சுழித்து ஓடும் பெருமை மட்டுமல்லாமல் சிவபெருமானுக்கு உகந்த கார்த்திகை மாதத்தில் முதல் நாள் நீராடும் சிறப்புத் தன்மையுடன் திகழ்வதும் இத்தலம் ஆகும். குறிப்பாக சப்த கன்னிகள் நீராடி பக்தர்களுக்கு அருள்வழங்கும் திருத்தலம் இதுவே. எனவே கார்த்திகை மாதப் பிறப்பன்று மட்டுமல்லாமல் நாள்தோறும் இத்தலத்தில் திகழும் தீர்த்தங்களில் நீராடுதல் கிடைத்தற்கரிய பாக்கியமாகும். சிறப்பாக வரும் கார்த்திகை மாதப் பிறப்பன்று காலை ஆறு மணி அளவில் காவிரியில் நீராடி முழுத் தாமரை மலர்களால் ஈசனை அர்ச்சித்தலால் கிட்டும் பலன்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பல அகால மரணங்ளைத் தடுப்பதுடன் கைக்கெட்டியது வாய்க்கெட்டாது வாழும் நிலையிலுள்ள பலரும் இத்தகைய வழிபாடுகளால் சிறப்பான பலனைப் பெறுவார்கள். நிரந்தர லட்சுமி கடாட்சம் என்பதைப் பெயரளவில்தான் பலரும் கேள்விப்பட்டுள்ளோம். அது உண்மையில் எப்படி இருக்கும் என்பதை சாதாரண மக்களும் அறிய இறைவன் அருளும் இனிய சந்தர்ப்பமே மேற்கண்ட வழிபாடாகும்.


ஸ்ரீஎமபகவான் திருகோடிக்கா திருத்தலம்
சனி நீராடு என்பதற்கு சனிக்கிழமைகளில் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்று மட்டும் பொருள் கிடையாது. குளிர்ந்த நீரில் குளி, சனி தனித்தருளும் திருத்தலங்களில் நீராடி ஆயுளை விருத்தி செய்து கொள் என்றெல்லாம் பொருள் உண்டு. அபூர்வமாக திருகோடிக்காவில் ஸ்ரீபாலசனி என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ள ஸ்ரீசனீஸ்வர பகவான் தலையில் சிவலிங்கத்துடனும் காக்கை வாகனத்திற்குப் பதிலாக கருட வாகனத்துடனும் எழுந்தருளி உள்ளார். சனிக் கிழமைகளில் இவரை தரிசனம் செய்து இவர் எதிரில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீஎமதர்மராஜாவையும் தரிசனம் செய்வது சிறப்பாகும். குறிப்பாக வரும் முடவன் முழுக்கு நாளில் இந்த இரு சூரிய புத்திரர்களையும் தரிசனம் செய்தல் வாழ்வில் கிடைத்தற்கரிய பேறாகும். நவகிரக மூர்த்திகளில் மிகவும் மெதுவாக ஊர்ந்து செல்லும் சனிபகவானும் ஒரு வகையில் முடவன்தானே. ஆனால், அதிக வேலைப் பளு பொறுப்புகள் காரணமாக ஓய்வு தேவைப்படும்போது அதை சிறந்த முறையில் அளிப்பவர் சனிபகவான் மட்டுமே. அது மட்டுமல்லாமல் எவ்வளவோ சிரமங்களுக்கு இடையில் கஷ்டப்பட்டு உழைத்த பொருள் சீக்கிரமாக அநாவசியமாக செலவழிந்து விடாமல் தகுந்த முறையில் மெதுவாக செலவாக அருள்புரிபவரும் சனீஸ்வர பகவானே. முடவன் ழுமுக்கு தினத்தில் வெள்ளிக் கிண்ணத்தில் சுத்தமான நல்லெண்ணய் தானம் இத்தலத்தில் அளித்தல் சிறப்பாகும். இதனால் ஜாதக ரீதியாக உள்ள பல அரிஷ்ட யோகங்கள் நிவர்த்தியாவதோடு நீண்ட ஆயுளும் முடவன் முழுக்கு தினத்தில் மட்டுமே இந்த அனுகிரகம் சனி பகவான், சூரிய பகவான், சுக்ர பகவான் இவர்களால் அளிக்கப்படுகிறது என்பது சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியமாகும்.


ஸ்ரீபாலசனீஸ்வர பகவான் திருகோடிக்கா
ஆட்சி பெற்ற சுக்ர பகவான் துலாவில் எழுந்தருள அதிலிருந்து லக்னம் உட்பட அனைத்து கிரகங்களுமே கிரக மாலிகையாக எழுந்தருள்வது கிடைத்தற்கரிய பாக்கியமாகும். இந்த கிரக மாலிகை சமயத்தில் துலா நீராடலை மேற்கொள்வது என்பது சற்குருவின் அனுகிரகத்தால் அன்றி வேறு எதனாலும் சாதிக்க முடியாது என்பதை சூரிய பகவானுடன் விருச்சிக ராசியில் எழுந்தருளி குருபகவான் இதற்கு நிரூபணமாக அமைகின்றார். இந்த கிரக மாலிகையில் ஐந்து ராசியில் ஏழு கிரகங்கள் எழுந்தருளி உள்ளதால் ஸ்ரீநடராஜர் சபாநாயகராக அம்பிகையுடன் எழுந்தருளியுள்ள நடராஜ மண்டபத்தில் ஸ்ரீபால சனீஸ்வரர், ஸ்ரீதுர்வாசர், ஸ்ரீசித்திர குப்தர், ஸ்ரீஎமதர்ம ராஜரை வணங்கி இந்த தரிசன பலன்களை எல்லாம் ஸ்ரீசிவகாமி சமேத ஸ்ரீநடராஜ பெருமானின் திருவடிகளில் சமர்பிப்பதால் கிடைக்கும் அனுகிரக சக்திகளை எழுத்தில் வடிக்க இயலாது. நவகிரகங்களின் அனுகிரகம் மட்டுமல்லாது ஸ்ரீதுர்வாச முனிவரின் தரிசனத்திற்காக ஏங்கிய முப்பத்து முக்கோடி தேவர்களின் அனுகிரகமும் அடியார்களுக்கு கிடைக்கும் என்றால் இந்த தரிசன பலன்களை எப்படி வார்த்தைகளால் வர்ணிக்க இயலும் ? சுத்தமான நல்லெண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் பசு நெய் சேர்த்து திருக்கோயில் முழுவதும் சிறப்பாக ஸ்ரீநடராஜர் எழுந்தருளியுள்ள மண்டபத்தில் இம்முக்கூட்டு எண்ணெயால் தீபமேற்றி வழிபடுதலால் நிரந்தர லட்சுமி கடாட்சம் கிட்டுவதுடன் அபமிருத்யு தோஷங்களும் விலகி நீண்ட ஆயுள் கிட்டும். சிறப்பாக பெண்களுக்கு ஏற்படும் திருமண தோஷங்கள் விலகி நல்ல திருமண பாக்கியம் கிட்டும். சதய நட்சத்திரம் ஒன்றை நூறாக்கும் தன்மை உடையதால் இன்று தாமே அரைத்த சந்தனத்தால் ஸ்ரீநடராஜருக்கும் மற்ற தெய்வ மூர்த்திகளுக்கும் காப்பிட்டு வணங்குதல் சிறப்பு.


ஸ்ரீசிவகாமி சமேத ஸ்ரீநடராஜ பெருமான் திருகோடிக்கா
மூன்று கோடி மந்திர தேவதைகள் ஸ்ரீதுர்வாச முனிவரை வணங்கி இத்தலத்தில் வழிபட்டு சாயுஜ்ய முக்தி அடைந்ததாக இத்தல வரலாறு கூறுகிறது. உண்மையில் எத்தனையோ யுகங்களுக்கு முன் மந்திர தேவதைகள் பெற்ற சாயுஜ்ய முக்தியால் கலியுக மக்களுக்கு என்ன பயன் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா ? ஸ்ரீராமரைப் போல் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று தந்தை சொல்லையே மந்திரமாக ஏற்று அது சுட்டிக் காட்டும் பொருளைப் பற்றி தெரியாமல், கவலைப்படாமல் வாழ்பவர்கள் இன்றும் ஸ்ரீராமராகவே போற்றப்படுவார்கள் என்பார் சற்குரு வெங்கடராமன் அவர்கள். அவர்கள் ஸ்ரீராமரைப் போல் ஆஜானுபாகுவாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அவர்கள் கருப்பாகவோ, சிவப்பாகவோ, குட்டையாகவோ நெட்டையாகவோ, ஒல்லியாகவோ தடியாகவோ, கிறிஸ்துவராகவோ முசல்மானாகவோ இருக்கலாம். அவர் தன்னுடைய தந்தை எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்தாலும் அவர் காட்டிய வழியில் சென்றால் அவர் ஸ்ரீராமராகவே கருதப்படுவார். யாரெல்லாம் தன்னுடைய மனைவியை தெய்வமாக மதித்து போற்றுகிறார்களோ அவர்கள் அனைவரும் ஸ்ரீராமரே. நெற்றிக்குத் திலகமிட்டு ருத்ராட்சம் அணிந்து பெண்களை வேறுவிதமாகப் பார்ப்பவர்களை நிச்சயமாக ராமர் என்ன ஒரு மனிதனாகக் கூட கருத முடியாது என்பார் ஸ்ரீவெங்கடராமன் அவர்கள். ஸ்ரீதுர்வாச முனிவரைத் தொடர்ந்து அவர் காட்டிய வழியில் நின்று பெண்களை தெய்வமாக மதித்து இத்தல மூர்த்தியை முறையாக வணங்கி முக்தி நிலை அடைந்தோர் ஏராளமாக உண்டு.


ஸ்ரீதுர்வாச மகரிஷி திருகோடிக்கா
தன்னுடைய உருவப் படத்தை வைத்து வழிபட விரும்பிய அடியார்களுக்கு சற்குரு அளித்த பதில் இதுவே. “அடியேனுடைய படத்தை வைத்து வழிபடுவதால் எந்த வித பயனும் கிடையாது. ஸ்ரீராமரை வழிபட்டுக் கொண்டு ராவணனைப் போல் வாழ்வதால் என்ன பயன் ? ராமரைப் பற்றி கேள்விப்படாத அடியார் கூட ஏகபத்தினி விரதனாக வாழ்ந்தால் அவருக்கு நிச்சயமாக ஸ்ரீராமரின் அனுகிரகம் கனிவதுடன் அடியேனுடைய குருநாதர் இடியாப்ப சித்தரின் அனுகிரகமும் நிச்சயமாக உண்டு,” என்று கூறி ஒரு நிகழ்ச்சியை விவரித்தார். மந்திராலயத்தில் ஸ்ரீராகவேந்திரரின் நினைவாக தினமும் ஆயிரக் கணக்கானோருக்கு அன்னதானம் நடைபெறுகிறது அல்லவா? அதை நிறைவேற்றும் பாரம்பரியத்தில் வந்த ராஜா தினமும் ஒரு மாங்கல்யத்தை இலவசமாக தானமாக அளிப்பதுண்டு. இதை அறிந்த ஸ்ரீஇடியாப்ப சித்தர் சிறுவன் வெங்கடராமனை அழைத்துக் கொண்டு மந்திராலயம் சென்றாராம். “டேய், அன்னதானம் பண்ற அந்த ராஜாவுக்கு மாங்கல்ய தானம் பற்றிய இரகசியம் தெரியாது. அடியேனைப் பற்றியும் தெரியாது. ஆனால், அவன் செய்கிற மாங்கல்ய தானம் என்ற விஷயம் அடியேனுக்கு பிடித்த விஷயம். அதை தன்னலம் கொஞ்சமும் இல்லாம அவன் பண்றான். அதனால அவனுக்கு அனுகிரஹம் தர வேண்டியது அடியேனுடைய டூடியாப் போச்சு,” என்று அந்த ராஜா வழங்கிய மாங்கல்ய தானத்திற்கு தான் அனுகிரஹம் செய்ய வேண்டிய காரணத்திற்கான விளக்கத்தை கோவணாண்டி அளித்தாராம்.


ஸ்ரீசித்ரகுப்தர் திருகோடிக்கா
சூரிய பகவான், சந்திர பகவான் போன்ற எண்ணற்ற கால தேவதைகள் நம்முடைய காரியங்களுக்கு சாட்சியாக இருந்தாலும் சித்ர குப்தர், எம பகவான் போன்ற பலரும் நம்முடைய காரியங்களுக்கு சாட்சியாகத் திகழ்கின்றனர். வெறும் சாட்சியாக திகழ்வதால் என்ன பயன் என்று கேட்கத் தோன்றுகின்றது அல்லவா ? உண்மையில் இவ்வாறு தெய்வ தேவதைகள் நம்முடைய காரியங்களை எல்லாம் கண்காணிக்கின்றன என்பது ஆரம்பத்தில் நமக்கு ஒரு பெரிய விஷயமாகத் தோன்றுவது கிடையாது என்றாலும் நம்முடைய பக்தி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்போது இந்த கால தேவதைகளின் மகத்துவம் புரியத் தொடங்குகிறது என்பதே உண்மை. இவ்வாறு காலத்தையும் நேரத்தையும் ஒன்றாகக் கருதும் மனிதன் நேரத்தின் தொகுப்பே காலம் என்று உணர முற்படும்போதுதான் நேரத்தை கவனமாகக் கையாள ஆரம்பிக்கின்றான். உண்மையில் எந்தத் துறையில் முன்னேற்றம் என்றாலும் அது இறுதியில் காலம் நேரத்தைப் பற்றிய முன்னேற்றமாகத்தான் இருக்கும். உதாரணமாக கம்ப்யூட்டர் துறையில்தான் முதன் முதலில் மில்லி செகண்ட், நாநோ செகண்ட் என்ற காலப் பகுப்பின் முக்கியத்துவமும் உன்னதமும் புரியவருகின்றது. செகண்ட் என்ற காலப் பாகுபாடே இல்லாதபோது நாநோ செகண்ட் என்று காலத்தை பகுப்பதால் யாது பயன் ? இதைத்தான் ஸ்ரீகோடீஸ்வர மூர்த்தியின் துவார பாலகர்களாய் அமைந்துள்ள ஸ்ரீசித்ரகுப்த மூர்த்தியும் ஸ்ரீஎம மூர்த்தியும் நமக்குப் புலப்படுத்துகின்றனர். உண்மையில் இவ்விரு மூர்த்திகளின் வழிபாடு மேலோட்டமாகப் பார்த்தால் வேறு வேறாகத் தோன்றினாலும் இரண்டும் காலம் நேரத்தைப் பற்றியதுதான் என்ற இரகசியம் புரியவரும். கால நேரத்தின் பகுப்பான முந்திரிப் பருப்பு கலந்த அன்னதானத்தை இத்தலத்தில் நிறைவேற்றுவதால் கால நேரம் பற்றிய இரகசியங்களும் ஸ்ரீசித்ர குப்தர் ஸ்ரீயம பகவானின் அருட் சுரக்கும் பாங்கும் மக்களுக்குப் புரியும் என்பதில் சந்தேகமில்லை.


ஸ்ரீவடுக பைரவர் திருகோடிக்கா
பொதுவாக பைரவ லோகம் என்பது காலம் பற்றிய அறிவைத் தரும். பைரவ வழிபாடு கால நேரத்தைப் பற்றிய அறிவை விருத்தி செய்யும். அதனால்தான் வெளியூர்ப் பயணங்களின்போது கால நேரத்தைக் குறிக்கும் முந்திரி பருப்பு மாலையைச் சாற்றி நீண்ட யாத்திரைகளை மேற்கொள்தல் நலம் என விதிக்கப்பட்டுள்ளது. அதிலும் சிறப்பாக திருகோடிக்கா போல ஸ்ரீவடுக பைரவர் அருளும் தலங்கள் முக்கால ஞானத்தை எளிதில் கூட்டவல்லவை. ஒரு காரியத்தில் பல தடவை முயற்சி செய்து அது விரும்பிய பலனை அளிக்காதபோது வழிபட வேண்டிய மூர்த்தியே ஸ்ரீவடுக பைரவர் ஆவார். தேர்வுகள் எழுதி நல்ல மதிப்பெண்களை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் பலர், வேலை தராத கம்பெனிகள் பலவற்றில் ஏறி இறங்கி அலுத்துப் போனவர்கள் ஏராளம், ஒரே குழந்தைக்கு வரன் பார்த்து பார்த்து சலித்துப் போனவர்கள் அனேகர் உண்டு. இத்தகையோருக்கு நல்லதொரு திருப்பத்தை தருவதே ஸ்ரீவடுக பைரவர் வழிபாடு ஆகும். பொதுவாக மேற்குப் பார்த்த மூர்த்திகள் யாவருமே வாழ்வின் இறுதி காலத்தில், கடைசி தசையில் வழிபட வேண்டிய மூர்த்திகள் ஆவர். குறிப்பாக திருகோடிக்கா போன்று மேற்கு திசையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபாலசனீஸ்வர மூர்த்தி, ஸ்ரீதுர்வாச முனிவர், திரிகோடி லிங்க மூர்த்திகள் அனைவருமே எதிர்காலம் பற்றிய பயத்தைப் போக்கி நல்வாழ்விற்கு உறுதுணையாய் நிற்பவர்களே. உண்மையில் மனித வாழ்க்கை என்பது சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அருளியதைப் போல ஒரு கமாவே தவிர அது புல் ஸ்டாப் ஆகாது. இப்பிறவியில் நாம் செய்யும் காரியங்களே அடுத்த பிறவியில் மனைவி, குழந்தைகளாக, உற்றம், சுற்றத்தாராக அமைவார்கள் என்ற ஞானத்தை அளிப்பவரே ஸ்ரீவடுக பைரவ மூர்த்தி ஆவார். மேலும் அடுத்த பிறவி எத்தகைய ஜீவ ராசியாக அமைந்தாலும் அதிலும் துளசி, பசு மாட்டைப் போல இறை நினைவுடன் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் பண்பாட்டை அளிப்பதும் ஸ்ரீவடுக பைரவர் வழிபாடாகும்.


ஸ்ரீஅகஸ்தியபிரான் திருகோடிக்கா
ஸ்ரீதுர்வாச முனிவர் மந்திர தேவதைகளை ஸ்ரீஅகத்திய பிரானிடம் அனுப்பி அவர்கள் உய்யும் வழியை கேட்டுப் பெறுமாறு கூறினார். அதனால் ஸ்ரீதுர்வாசருக்கே மந்திர தேவதைகளுக்கு முக்தி அளிக்கும் சக்தி கிடையாது, அதை அளிக்கவல்லவர் ஸ்ரீஅகத்தியர் ஒருவரே என்று பொருள் கொள்ளக் கூடாது. தெய்வீகத்தில் எந்த உத்தம நிலையை அடைந்தாலும் அதற்கு மேலும் பல படித்தரங்கள் உண்டு. இவை எல்லையற்றவை என்பதை இறை மார்க்கத்தில் சஞ்சரிக்கும் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். மந்திரம், தந்திரம், தான தர்மம் என்று எந்த உபாயம் மூலமாகவும் இறைவனை அடையலாம் என்பது உண்மையாக இருந்தாலும் முதலில் ஒரு மனிதன் அடைய வேண்டியது உத்தம சற்குருவையே என்பதுதான் ஸ்ரீதுர்வாச முனிவரும் ஸ்ரீஅகத்திய முனிவரின் தரிசனமும் நமக்கு உணர்த்தும் பாடமாகும். கோடி கோடியாக தீர்த்தங்களும், மந்திரங்களும், மந்திர தேவதைகளும், இறை மூர்த்திகளும் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட சீடனுக்கு எந்த உபாயம் ஒத்து வரும் என்ற இரகசியத்தை உணர்ந்தவரே சற்குரு ஆதலால் சற்குருவைச் சரணடைந்தால் அவரே எந்த தீர்த்தத்தில் நீராடி, எந்த மந்திரத்தை ஓதி, எந்த மூர்த்தியை வழிபட்டு முக்திப் பாதையில் முன்னேறலாம் என்பதை உணர்த்துவார். சற்குருமார்கள் கோடி கோடியாக இருந்தாலும் இவர்களில் நமக்கு எவர் வழிகாட்டுவார் என்ற திடமான வழிகாட்டுதலை அளிப்பதும் திருகோடிக்காவில் இயற்றும் தீர்த்த தான வழிபாடாகும். இவ்வாறு குரு பகவான் அனைத்து கிரகங்களுடன் புடை சூழ அமர்ந்திருக்கும் வரும் விளம்பி வருட கார்த்திகை மாதப் பிறப்பு தினம் அமைந்திருப்பதால் இந்த அற்புத முகூர்த்த நாளில் திருகோடிக்கா வலஞ்சுழி காவிரியிலோ, திருகோடிக்கா தீர்த்தங்களிலோ அல்லது இரண்டிலுமோ நீராடி உரிய தான தர்மங்களுடன் வழிபடுதல் எத்தகைய சிறப்புடையதாக இருக்கும் என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம்.


ஸ்ரீதிரிபுர சுந்தரி அம்மன் திருகோடிக்கா
ஸ்ரீதுர்வாச முனிவரால் ஸ்ரீஅகத்திய தரிசனத்திற்கு வழிகாட்டப்பட்ட மந்திர தேவதைகள் ஸ்ரீஅகத்தியர் காட்டிய வழியில் தங்கள் வழிபாடுகளைத் தொடர்ந்த பின்னர் அவர்களுக்கு ஸ்ரீதிரிபுரசுந்தர அம்மனின் தரிசனம் கிட்டியது. மந்திர தேவதைகள் அனைவரும் ஸ்ரீதிரிபுரசுந்தரியை ஸ்ரீரெங்கநாதராக வழிபட்டனர் என்று இத்தல புராணம் கூறினாலும் இதன் உண்மைப் பொருளை உரைக்கவல்லவர்கள் சித்த பெருமக்களே. உண்மையில் அனைத்தும் கடந்த பிரம்மாண்ட நாயகனே ஸ்ரீரெங்கநாதராக ஸ்ரீதிரிபுரசுந்தரியின் புவன மாயைக் காட்சியாக அளித்தான் என்பதே சித்தர்கள் கூறும் இரகசியமாகும். உருவம் உணர்வு கடந்து நிற்பவன் இறைவன் என்பதே உண்மை. எனவே ஒருவர் ஸ்ரீரெங்கநாதராக, ஸ்ரீதிரிபுர சுந்தரியாக தரிசனம்செய்கிறார் என்றால் அது இறைவனின் பெருங்கருணையையே குறிக்கிறது. இந்த தரிசனம் பற்றி ஓரளவு புரிந்து கொள்ள வேண்டும் என்றால் துருவனுக்கு பெருமாள் அளித்த தரிசனத்தைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஓம் நமோநாராயணாய என்று நாரதர் உபதேசித்த எட்டெழுத்து மந்திர உபதேசத்தை பக்தி சிரத்தையுடன் ஏற்று ஜபித்த துருவனுக்கு மகர குண்டலங்களுடன் கூடிய பெருமாளின் தரிசனம் கிடைத்தது. ஆனால், பெருமாள் அணிந்திருந்த குண்டலங்கள் ஆடாமல் அசையாமல் ஜொலித்தன. ஏன் அந்த குண்டலங்கள் காற்றில் ஆடி ஆனந்தத்தை ஏற்படுத்தவில்லை என்று அப்பாவித்தனமாக சிறுவனான துருவன் கேட்டபோது அதற்கு பெருமாள், “நீ அசைக்கவில்லை அதனால் குண்டலங்கள் ஆடவில்லை,” என்று பதிலளித்தாராம். எனவே பெருமாளுக்குத் தெரியாத இரகசியமில்லை. இந்த கேள்வியிலும் பதிலிலும் ஆழ்ந்து முழுகுங்கள், அப்போதுதான் முத்து கிட்டும்.


ஸ்ரீகரைசேர்த்த விநாயகர் திருகோடிக்கா
பக்தர் ஒருவர் பெருமழையில் நனைந்து இருட்டில் வீடு தெரியாமல் தடுமாறியபோது அவருடைய இருப்பிடம் சேர வழிகாட்டியவர் இவரே என்று தலவரலாறு கூறுகிறது. உண்மையில் ஆன்மீகம் என்ற காட்டில் திக்குத் திசை தெரியாமல் தடுமாறும் எவரையும் நல்வழிப்படுத்தக் கூடிய விநாயக மூர்த்தி இவரே. பொதுவாக, ஸ்ரீவிநாயக மூர்த்தியை வணங்கி எந்த வழிபாட்டையும் ஆரம்பிக்க வேண்டும் என்ற விதி இருந்தாலும் இந்த விதிக்கு விலக்காக ஸ்ரீஉதங்க மகரிஷியை வழிபட்டு உறையூர் ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரரை வழிபட வேண்டும், ஸ்ரீதுர்வாச மகரிஷியை வழிபட்டு ஸ்ரீஅருணாசல ஈசனை வழிபட வேண்டும், ஸ்ரீஏரண்ட மகரிஷியை தரிசனம் செய்து கொட்டையூர் ஸ்ரீகோடீஸ்வர மூர்த்தியை வழிபட வேண்டும் என்ற விதி இருப்பது போல திருகோடிக்கா ஈசன் ஸ்ரீகோடீஸ்வர மூர்த்தியை வழிபடும் முன்னர் தரிசனம் பெற வேண்டிய மூர்த்தியே ஸ்ரீகரைசேர்த்த விநாயகர் ஆவார். தெரியாத எந்தத் துறையிலும் பிரவேசிக்கும் முன்னர் இந்த விநாயக மூர்த்தியை மானசீகமாக வேண்டியேனும் பிரவேசிப்பதால் நற்பலனைப் பெறுவார்கள். “சுக்லாம் பரதரம் ... ” என்று வேண்டி தலைக்கு குட்டிக் கொண்டு தோப்புக் கரணம் போடும் முறையில் வெள்ளை நரம்புகளால் தூண்டப்படும் மண்டலத்தை செயல்படுத்துபவரே இந்த விநாயக மூர்த்தி ஆவார். மூளை அறுவை சிகிச்சைகளில் என்னதான் கவனமாக மருத்துவர்கள் செயல்பட்டாலும் மூளையின் சில பகுதிகள் பயன்படாமல் செயலிழந்து விடும். நரம்பு சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சைகள், மூளை சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சை போன்றவைகளில் ஈடுபடும் மருத்துவர்கள் இந்த விநாயகரை வேண்டி தங்கள் சிகிச்சைகளை மேற்கொள்தல் நலம். “கரை” என்பது மூளையின் சில பகுதிகளையும் குறிக்கும். மூளை அறுவை சிகிச்சைக்கு முன்னால் நோயாளிகளும் இந்த விநாயகரை வணங்கி ராஜ்மா பருப்பு சுண்டலை தானமாக வழங்குதலால் நற்பலன் பெறுவார்கள்.


வேதலிங்க மூர்த்திகள் திருகோடிக்கா
வேதம் என்பது நாமறிந்த ரிக் முதலான நான்கு வேதங்கள் மட்டுமல்லாது கோடி கோடியாய் இப்பிரபஞ்சத்தில் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், நாம் அறிந்ததோ நான்கு வேதங்கள் மட்டுமே. இதைப் பற்றி கவலைப்படாது தினந்தோறும் திருக்கோடிக்கா போன்ற தலங்களில் உள்ள வேதலிங்க மூர்த்திகளை தரிசனம் செய்து வருதலால் நொடி தோறும் புதிது புதிதாய் தோன்றும் வேத மந்திர சக்திகளை நாம் கிரகிக்க முடியும். அவ்வாறு இந்த வேத லிங்க மூர்த்திகளை தரிசனம் செய்ய இயலாதவர்கள் தங்கள் ஊரில் உள்ள சுயம்பு லிங்க மூர்த்திகளை தரிசனம் செய்து வருதலாலும் அத்தகைய சுயம்பு லிங்க மூர்த்திகளை பிரதட்சிணம் செய்து வழிபடுதலால் க்ஷணம் தோறும் தோன்றும் வேத சக்திகளை சாதாரண மக்களும் கிரகித்து பலன்பெற முடியும். இது போன்ற ஆயிரமாயிரம் கருத்துக்களை கணக்கில் வைத்துத்தான் ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று நம் பெரியோர்கள் ஆலய வழிபாட்டை தினந்தோறும் நிகழ்த்த வேண்டிய அவசியத்தைப் பற்றி வலியுறுத்தினார்கள். திருத்தவத்துறை, திருகோகர்ணம் போன்ற பல தலங்களில் மேல்விதானங்களில் நவகிரக மூர்த்திகளின் உருவங்கள் அமைந்திருக்கும். ஸ்ரீவில்லிபுத்தூர், கரிவலம்வந்தநல்லூர் போன்ற தலங்களில் கோயில் விதானங்களில் ஸ்ரீசக்கரம் வரையப்பட்டோ செதுக்கப்பட்டோ இருக்கும். இவை அனைத்துமே ஒவ்வொரு நொடியும் பிரபஞ்சத்தில் தோன்றும் வேத சக்திகளை மக்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் விநியாகிப்பதற்காக சித்தர்கள், மகான்களின் ஏற்பாடு ஆகும். பிரதோஷ நாட்களில் தமிழ் வேத மறைகளை ஓதிக் கொண்டு பக்தர்கள் முன்னே செல்ல அதைத் தொடர்ந்து ரிஷப வாகனத்தின் மேல் சிவனும் பார்வதியும் கொலுவீற்றிருக்க அதைத் தொடர்ந்து நான்கு வேதங்கள் முழங்குவதைக் கேட்டிருப்பீர்கள். திருத்தலங்களில் சுவாமியுடன் செல்லும் பக்தர்கள் ஒரு குறிப்பிட்ட தேவார திருவாசக பாடலையோ ரிக் வேதத்தின் ஒரு குறிப்பிட்ட சாகையையோ ஒவ்வொரு பிரதோஷ தினத்திலும் ஓதிக் கொண்டு சென்றாலும் அந்த பிரதோஷ விழாவில் பங்கேற்கும் மற்ற லோகத்திலிருந்து வரும் தேவதைகள் இந்த வேத ஒலிகளை அந்தந்த கால நேரத்திற்கு ஏற்றவகையில் மாற்றித் தருகிறார்கள் என்பதே நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய விந்தையாகும். இவ்வாறு பிரதோஷ பூஜையில் ஒரு திருத்தலத்தில் நடைபெறும் மகிமைகளில் ஒரு தூசு அளவு அறிந்தால் கூட ஒரு பக்தரும் கோயில் வளாகத்தை விட்டு நகர மாட்டார்கள். உதாரணமாக நவராத்திரி விழாவின்போது பஞ்சமி திதி அன்று முழங்கிய மேள வாத்திய ஒலியை இங்கு கேட்கலாம். நவராத்திரியின் நடுநாயகமாக விளங்குவது பஞ்சமி திதிதானே. இதில் குசா சக்திகள் மிளிர்வதால் குசா சக்தி, திரிதின பஞ்சமி திதி சக்திகள் இந்த மத்தள ஒலியிவ் பெருகிப் பொலிவதைக் கேட்டு ஆனந்தம் அடையுங்கள்.


ஸ்ரீசிவகாமி சமேத ஸ்ரீநடராஜ மூர்த்தி திருகோடிக்கா
ஒரு முறை காரில் வந்த முதல்வர் ஒருவருடைய கார் ரிப்பேர் ஆகி நடுரோட்டில் திடீரென்று நின்று விட்டது. கூட வந்தவர்கள் இந்த எதிர்பாராத நிகழ்ச்சியால் கீழே இறங்கி காரை சரிசெய்ய முயற்சி செய்து கொண்டிருந்தபோது அந்த முதல்வர் காரை விட்டுக் கீழே இறங்கி சற்று தூரத்தில் நிழல் குடையின் கீழ் ஓய்வெடுக்கச் சென்றார். அப்போது பூர்வ ஜன்ம நல்வினையால் அவருடைய மூதாதையருடைய அருந்தவப் பயனால் அங்கு நின்று கொண்டிருந்த சற்குரு வெங்கடராமன் அவர்களைக் காணும் பேறு பெற்றார். எல்லா முதல்வர்களும் எல்லா ஜோதிடர்களிடம் கேட்கும் அதே கேள்வியை ஸ்ரீவெங்கடராமன் அவர்களிடமும் கேட்டு வைத்தார். “நான் நிரந்தர முதல்வராவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அந்த பரிகாரத்தைச் செய்ய தயாராக இருக்கிறேன். பணத்தைப் பற்றி கவலை இல்லை,” என்று தன்னுடைய பாணியில் கூறினார். ஸ்ரீவாத்யார் சற்று நேரம் அந்த முதல்வரைப் பார்த்து விட்டு, “அம்மா, நீங்கள் நிரந்தர முதல்வராக இருப்பது ஒரு புறம் இருக்கட்டும். தங்களை வெகு விரைவில் மரணம் தழுவப் போகிறது. அப்போது நீங்கள் சுயநினைவுடன் இருக்கும் வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது. எனவே நீங்கள் நல்ல நினைவுடன், இறை சிந்தனையுடன் மரணத்தை சந்திப்பதே சிறந்தது. தாங்கள் அதை கேட்டுப் பெறுவதாக இருந்தால் அடியேன் தங்கள் மூதாதையர்கள் தெரிவிப்பதை அடியேனுடைய குருவருளால் தெரிவிக்கிறேன்,” என்று கூறினார்கள். புகழின் உச்சியில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த அந்த முதல்வருக்கு சற்குருவின் பதில் வேப்பங்காயாக கசந்தது இயல்புதானே. அவர் வெறுப்புடன், “அட சீ போ”, என்று கூறி தன்னுடைய காரை நோக்கி நகர்ந்து விட்டார். சற்குருவோ தன் குரு தனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றிய திருப்தியில் அமைதியாக இருந்து விட்டார்.


ஸ்ரீலிங்கோத்பவ மூர்த்தி திருகோடிகா
இது போன்ற நிகழ்ச்சி மாதா அமிர்தானந்தா மயி வாழ்க்கையிலும் நடைபெற்றது. அவர் சிறுமியாக இருக்கும்போது ஒருமுறை வயதான தன்னுடைய கணவருக்காக சிறிது உணவும் மருந்துகளும் வாங்கிக் கொண்டு தன்னுடைய இருப்பிடம் திரும்ப நினைத்த மூதாட்டி வழி தெரியாது திகைத்தார். காரணம் நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு படகோட்டிகள் யாரும் இல்லாத நிலையில் தான் நதியைக் கடந்து அக்கரைக்கு சென்றால்தான் தன்னுடைய இல்லத்திற்கு திரும்ப முடியும். அந்த சிக்கலான சூழ்நிலையை உணர்ந்து கொண்ட சிறுமி அங்கிருந்த அரசாங்க படகில் அந்த மூதாட்டியை ஏற்றிக் கொண்டு சென்று எப்படியோ மறுகரையில் கொண்டு சேர்த்து விட்டார். ஆனால், இந்த அபார தைரியமான நிகழ்ச்சிக்கு அவருடைய வீட்டாரிடமிருந்து கிடைத்தது அடியும் உதையும்தான். ஆம், காற்றினால் அந்த அரசாங்க படகு நதியில் மூழ்கி இருந்தால் அனைவரின் நிலையும் என்ன ஆகி இருக்கும் என்று மாதாவின் வீட்டோர் நினைத்ததில் எந்த வித தவறும் கிடையாதே. ஆனால் அம்மாவைப் பொறுத்த வரையில் தன்னால் முடிந்த ஒரு நல்ல காரியத்தைச் செய்து விட்டோம் என்ற திருப்தியில் எல்லா வசவுகளையும் அடி உதையையும் மன மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார். இதுவே கீதை கூறும் தன்னலம் கருதாப் பணி. இந்த நிலைக்கு தயாரானவர்களுக்கு உள்ளங்கை நெல்லிக் கனியாக எதிர்காலம் தெரியவரும். மற்றவர்களுக்கு வழிகாட்டியாக உதவி செய்வதே திருகோடிக்கா திருத்தலத்தில் உறையும் ஸ்ரீவடுக பைரவர் வழிபாடு.


ஸ்ரீதட்சிணாமூர்த்தி திருகோடிகா
தன்னுடைய சூரிய சக்திகள் நிறைந்த வலது காலை ஸ்ரீதட்சிணாமூர்த்தி சற்றே இடது புறம் நகர்த்தி சந்திர சக்திகளை தோற்றுவிக்கும் காட்சி அபூர்வமான சந்திர சக்தி தரிசனமாகும். இரண்டு அல்லது அதற்கு மேல் பெண் குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு அருள் கூட்டும் சிறப்பான தரிசனம் இது. சந்திர சக்தி என்பது பெண் சக்தியைக் குறிப்பதால் முடவன் முழுக்கு நீராடல் அன்று இந்த ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் தரிசனம் மிகவும் அபூர்வமானதாகும். நீங்கள் ஊன்றிக் கவனித்தால் இந்த தரிசனத்தின் மகத்துவம் புரியவரும். விருச்சிக ராசி என்பது பெண் ராசிதானே. அந்த ராசியில் முடவன் முழுக்கு தினத்தில் தட்சிணாமூர்த்தியைக் குறிக்கும் மூன்று கிரகங்கள் அதிலும் சிறப்பாக குரு கிரகத்துடன் எழுந்தருள்வது சிறப்பே. மூன்றாம் பிறை தரிசன நாட்களில் ஒரே கல்லில் அமையும் மூன்று மூர்த்திகளான சோமாஸ்கந்த தரிசனமும் (உதாரணம் சாக்கோட்டை காரைக்குடி) சந்திரனைத் தலையில் சூடிய ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் (உதாரணம் திருவக்கரை) தரிசனமும் பெறுவது சிறப்பே. திருகோடிக்கா தலத்தில் உள்ளதைப் போல மூன்று மூர்த்திகளாய் எழுந்தருளியுள்ள ஸ்ரீஜேஷ்டாதேவியின் தரிசனமும் மூன்றாம் பிறை தரிசன நாட்களில் சிறப்பானதாகும். இதனால் இரவில் ஆழ்ந்த உறக்கமும் நிம்மதியான வாழ்வும் கிட்டும்.


ஸ்ரீஜேஷ்டாதேவி திருகோடிக்கா
பலரும் ஸ்ரீஉத்தாதலகரின் மனைவியான ஸ்ரீஜேஷ்டாதேவியையும் சனீஸ்வர பகவானின் மனைவியான ஸ்ரீஜேஷ்டை தேவியையும் குழப்பிக் கொள்வதுண்டு. ஸ்ரீஜேஷ்டாதேவி லட்சுமிக்கு மூத்தவள், மூத்த லட்சுமி. ஸ்ரீஜேஷ்டைதேவி தேவ மாது. ஸ்ரீஜேஷ்டாதேவி ரிஷி பத்தினி. ஆனால் இருவருமே ஆழ்ந்த உறக்கத்தையும் அமைதியையும் அளிப்பவர்கள் என்பதில் சந்தேகமில்லை. குழப்பமான சூழ்நிலையை மனிதன் சந்திக்கும்போது அவன் உறக்கமின்றித் தவிக்கிறான். ஸ்ரீஜேஷ்டாதேவி வழிபாட்டால் மனம் அமைதி அடையும்போது அமைதியைத் தொடர்வது உறக்கம்தானே.


ஸ்ரீஜேஷ்டாதேவி பசுபதிகோயில்
ஸ்ரீஜேஷ்டாதேவி லட்சுமி தேவிக்கு மூத்தவளாக மூத்த லட்சுமி என்று புகழப்படுவதால் ஸ்ரீஜேஷ்டாதேவி லட்சுமிக்கு உரிய வாயு மூலையில் எழுந்தருள்வது இயல்பு என்றாலும் பசுபதிகோயில் போன்ற சில குறிப்பிட்ட தலங்களில் ஸ்ரீஜேஷ்டாதேவி நிருதி மூலையில் எழுந்தருள்வதும் உண்டு. ஸ்ரீஜேஷ்டாதேவியை மணந்து கொண்டால் வறுமையும் துன்பமுமே மிஞ்சும் என்பதால் பாற்கடலிலிருந்து வெளிப்பட்ட அவளை மணந்து கொள்ள எவரும் முன்வரவில்லை. இது பற்றி சிவபெருமானிடம் முறையிட்டபோது ஸ்ரீஉத்தாதலகர் என்ற தியாகசீலர் ஸ்ரீஜேஷ்டாதேவியை மணந்து கொள்ள முன்வந்தார் என்பது நீங்கள் அறிந்ததே. இன்றும் செல்வம், படிப்பு, அழகு போன்ற காரணங்களால் திருமணம் ஆகாத பெண்கள் பசுபதிகோயில் ஸ்ரீஜேஷ்டாதேவியை வழிபடுவதால் அவர்கள் நற்பலன் பெறுவார்கள் என்பது உறுதி. பசு என்ற உயிர்களுக்கு மட்டும் பதி அல்ல இறைவன், மனைவிக்கும் பதியாக திருமணக் கோலத்தில் இறைவன் இறைவி எழுந்தருளிய திருத்தலமே பசுபதிகோயில் ஆகும். செல்வம் சேர்ந்து விட்டால் உறக்கம் மறந்து விடும் என்ற கூற்றிற்கு மாறாக செல்வ கடாட்சத்துடன் ஆழ்ந்த உறக்கத்தையும் இவ்வாறு நிருதி திக்கில் எழுந்தருளிய தேவிகள் அருள்வர். கல்லாப்பெட்டி, பீரோ போன்ற செல்வங்களைப் பாதுகாப்பாக வைக்க உதவும் திசையே நிருதி திசையாகும்.
அபூர்வமாக சில தலங்களில்தான் இலட்சுமியும் சரஸ்வதியும் ஒருங்கே எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். அறிவும் செல்வமும் சேர்வது அரிதுதானே. ஆனால், இத்துடன் ஞானமும் சேர்வது என்பது அரிதிலும் அரிதானதே. இந்த அரிதான தரிசனத்தை நீங்கள் பெற வழிவகுப்பதே திருகோடிக்கா திருத்தலமாகும். இங்கு நீங்கள் லட்சுமி சரஸ்வதி தேவிகளுடன் அரிதாக ஸ்ரீவிநாயகப் பெருமானும் எழுந்தருளிய கோலத்தைக் காணலாம். இலஞ்சி, ஊட்டத்தூர் போன்ற சில திருத்தலங்களில் மட்டுமே ஒருங்கே அருள்புரியும் சரஸ்வதி லட்சுமி தேவியரைக் காணலாம். செல்வ விருத்தி, கல்விக்கு அதிபதியாக இலட்சுமி தேவியும் சரஸ்வதி தேவியும் அதிபதியாகத் துலங்க ஞானத்தை தாயினும் சாலப் பரிந்து ஊட்டுபவரே விநாகப் பெருமான் ஆவார். கையில் ஞானக் கனியான மாம்பழத்துடன் விநாயகப் பெருமான் துலங்குவது அரிதான ஞான தரிசனமாகும்.


ஸ்ரீவிநாயகர் ஸ்ரீஇலக்குமி ஸ்ரீசரஸ்வதி திருகோடிக்கா
தங்கத்தாலான படுக்கையில் ஆடையின்றி புரண்டு நிர்வாணமான இளம்பெண்களுடன் சரசமாடி அவர்களுடன் வெள்ளிக் கிண்ணத்தில் பசும்பாலை அருந்தி மகிழ்ந்தவரே ஜனக மகராஜா. ஆனால், மேலோட்டமாக பார்த்தால் சொர்க்கபுரியாகத் திகழும் ஜனக மகாராஜவின் படுக்கை அறையில் பெற்ற சுக போகத்தின் அருமை தெரிய வேண்டுமானால் ஜனகரைப் போல் அரசமரத்தில் ஆயிரம் ஆண்டுகள் நிர்வாணமாக தலைகீழாகத் தொங்கி தவம் இயற்றினால்தான் முடியும். ஆனால் தற்காலத்தில் ஜனக மகாராஜா இயற்றிய தவத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான உடல் பலமோ மன பலமோ எவருக்கும் இல்லை என்பது நாமறிந்ததே. அத்தகையோரும் ஜனகர் பெற்ற அந்த உயர்ந்த ஞான நிலையை, பக்தியை, அறிவைப் பெற உதவுவதே முடவன் முழுக்கு தினத்தில் திருகோடிக்கா திருத்தலத்தில் நிறைவேற்றும் தீர்த்த நீராடலும் வழிபாடும் தான தர்மங்களும் ஆகும்.
துர்வாசர் விவரித்த முறையில் திருகோடிக்கா ஈசனை வழிபட்டு சாயுஜ்ய முக்தி நிலையை அடைந்தவர்கள் மந்திர தேவதைகள் மட்டுமல்ல. ஜனகர், ரஜனீஷ் போன்ற நாமறிந்த மகான்களும் சாயுஜ்ய முக்தி நிலையை அடைந்தவர்களே. பலரும் சாயுஜ்ய முக்தி நிலை என்பது வைணவர்களுக்கு உரித்தானது என்ற தவறான கருத்து கொண்டுள்ளனர். முக்தி என்பது அதிலும் சாயுஜ்ய முக்தி நிலை என்பது சைவம், வைணவம் என்ற பேதத்தைக் கடந்து நிற்பதுதான். அப்படியானால் பெருமாளைத் தவிர வேறு எவரையும் தரிசனம் செய்ய மாட்டோம் என்று மந்திர தேவதைகள் “பிடிவாதமாக” இருந்து சாயுஜ்ய முக்தி நிலையை திருகோடிக்காவில் பெற்றார்களே அவர்களுக்கு உதவியாக துர்வாசர், அகத்தியர், திரிபுர சுந்தரி அம்மன் போன்றோரும் நின்றார்களே என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா ? ஆனால் சாயுஜ்ய முக்தி நிலையைப் பற்றி பூரணமாக உணர்ந்தவர்களால்தான் முக்தி நிலைக்கும், சாயுஜ்ய முக்தி நிலைக்கும், திருகோடிக்காவில் மந்திர தேவதைகள் பெற்ற சாயுஜ்ய முக்தி நிலைக்கும் உள்ள வேறுபாட்டை உணர முடியும். மற்றவர்களுக்கும் விளக்கிக் கூற முடியும்.


ஸ்ரீதிரிபுர சுந்தரி அம்மன் திருகோடிக்கா
பொதுவாக சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்களால் கூட்டப்பட்ட திருமண முகூர்த்தங்கள் அனைத்துமே சாயுஜ்ய முக்தி நிலையைத் தரவல்லவையே. உதாரணத்திற்கு விச்வபூரணி திருக்கல்யாண வைபவத்தை எடுத்துக் கொண்டால் அதில் ஏழு கிரகங்களும் மூன்று ராசியில் அமைந்திருப்பதே இது குருவருளால் கூட்டப்பட்ட சாயுஜ்ய முகூர்த்தம் என்ற இரகசியம் புரியவரும். மேலும் லக்னத்தில் புதன் ஆட்சி பெற்று இருப்பதும், 12ல் சுக்ர பகவான் ஆட்சிபெற்று வீற்றிருப்பதும் விச்வபூரணி பதிவிரதை என்பதற்கு சாட்சியாய் அமையும். நாமறியும் வண்ணம் சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் ஒவ்வொரு நாளும் ராயபுரம் ஸ்ரீஅங்காளி அம்மனை தன்னுடைய குருநாதர் கோவணாண்டி அளித்த மந்திரத்தை ஓதிக் கொண்டு 1008 முறை வலம் வந்தார் அல்லவா ? இதன் பின்னால் பல பல இரகசியங்கள் அமைந்தாலும் ஒவ்வொரு 1008 சுற்றிற்கும் ஒரு ஜீவனுக்கு சாயுஜ்ய முக்தி நிலையை அளிக்கும் சக்தி உண்டு என்பதே நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய இரகசியமாகும். ரஜனீஷ் தத்துவத்தின்படி ஒரு ஆணோ பெண்ணோ பலருடன் கூடி மகிழ்வதும், கிருஷ்ணரின் சித்தாந்தத்தின்படி ராசலீலையில் ஒரே கிருஷ்ண பகவான் பல கிருஷ்ண ரூபலாவண்யங்களுடன் பல பக்தைகளுடன் ஆடி மகிழ்வதும், சற்குரு அவர்கள் கூறியபடி ஒரே பெண்ணுடன் திருமண வாழ்வை மேற்கொண்டு அதில் மூழ்கித் திளைத்திருப்பதும் ஒன்றே. அனைத்தும் சாயுஜ்ய முக்தி நிலையைத் தரவல்லவையே. எனவே இதில் நிலைகள் என்ன என்பதை விட எந்த அளவிற்கு ஒரு சீடன் தனது சற்குருவை மதித்துப் போற்றி அவர் கூறும் வழிமுறைகளை இம்மி அளவும் பிசகாமல் மேற்கொள்கிறான் என்பதே மிக மிக முக்கியமானதாகும்.


ஸ்ரீகோடீஸ்வர சுவாமி திருகோடிக்கா
வரும் முடவன் முழுக்கு நாள் அன்று திருகோடிக்கா ஈசனை 1008 முறை வலம் வந்து வணங்குவதால் அனைவருக்கும் சாயுஜ்ய முக்தி நிலை சம்பவிக்க குருவருள் துணை நிற்கும். ஆனால் கார்த்திகை மாதப் பிறப்பு அன்றே 1008 முறை ஈசனை வலம் வருவது என்பது சிரமமான காரியம் என்று நினைத்தால் அன்றைய தினத்திற்கு முன்போ பின்போ இந்த திருச்சுற்றை நிறைவு செய்யலாம் என்பது சித்தர்கள் கூறும் தெளிவுரையாகும். அதே போல எந்த சுயம்புமூர்த்தியையும் ஞாயிற்றுக் கிழமை அன்று ஆரம்பித்து 1008 சுற்றுக்கள் வலம் வருவதும் உன்னத ஞான நிலையைக் கூட்டுவிக்கும் வழிபாடாகும். ஞாயிற்றுக் கிழமை சூரியனுக்கு உரிய தினமாக அமைந்தாலும் குருவருள் பெருகும் தினங்களாக ஞாயிறும் வியாழனும் அமைவதால் ஞாயிற்றுக் கிழமையும் வியாழக் கிழமையும் இத்தகைய பிரதட்சிணங்களுக்கு உகந்த தினங்களாக அமைகின்றன.
கிருஷ்ண பகவான் நிறைவேற்றிய ராசலீலையை சாதாரண மக்கள் நிறைவேற்ற இயலாது. பகவான் ரஜனீஷ் அருளிய கலாசாரம் அதாவது பெண் குலத்தை ஓரினமாகப் பார்ப்பது என்பது நடைமுறைக்கு ஒத்துவராததால் அவர் தயார் செய்த ஆண் பெண் அடியார்கள் இருவருமே திருமணம் செய்து கொண்டு ரஜனீஷ் அளிக்கும் வழிபாட்டு முறை மிகவும் சிறப்புடையதாக இருந்தாலும் கலியுகத்திற்கு அது ஒத்து வராது என்பதை நிரூபித்து விட்டார்கள். எனவே சற்குரு வெங்கடராமன் அவர்களின் அணுகுமுறையான ஒருவனுக்கு ஒருத்தி என்ற பாரம்பர்ய கலாசாரமே எக்காலத்தும் ஒத்து வரக் கூடியது ஆகும். அத்வைத தத்துவத்தை விளக்க வந்த பகவான் ரஜனீஷ் இந்த சாதாரண விஷயத்தை அறியாதவரா என்ன ? ஆனால் இவ்வாறு ஒரு மகான் வாழ்ந்து காட்டினால்தான் கலியுகத்திற்கு ஏற்ற வாழ்க்கையை மக்கள் தேர்ந்தெடுத்து வாழ்வர் என்பதே ரஜனீஷ் போன்ற மகான்கள் சுட்டிக் காட்டும் வரலாற்று உண்மையாகும்.


சீடன் சற்குரு இறைவன் அனைத்தும் ஒன்றே
அதே போல மந்திர தேவதைகள் சாயுஜ்ய முக்தி நிலை என்பது ஆண், பெண், சிவன், பார்வதி, ரெங்கநாதர் என்ற நிலைகளைக் கடந்தது என்பதை அறியாதவர்களா என்ன ? இருந்தாலும் ஒருவர் தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருந்தால் இறைவன் கீழிறங்கி வந்து அவர்களுக்கு உதவுவார், இறைவன் எதிர்பார்க்கும் அளவிற்கு சாதாரண பக்தனால் தன்னுடைய நிலையை உயர்த்திக் கொள்ள முடியாது என்னும் உண்மையை தெளிவுபடுத்துவதற்காகவும் மந்திர தேவதைகள் விரும்பிய அனைத்தையும் கடந்த நிலையான சாயுஜ்ய முக்தி நிலையில் ஸ்ரீதிரிபுர சுந்தரி அம்மனே ஸ்ரீரெங்கநாதராக காட்சி நல்கி இறைவன் காட்சிக்கு மட்டும் எளியவன் அல்லன், தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் அவன் எளியவர்க்கு எளியவனே என்னும் கொள்கையை நிரூபித்தாள், இல்லை இறைவன்தான் நிரூபித்தானா ?
பொதுவாக நிர்விகல்ப சமாதி நிலையில் உடல் மனம் உள்ளம் என்ற பேதத்தைக் கடந்து இறைவன் அடியார் சற்குரு என்ற நிலைகளை எல்லாம் கடந்தே செல்ல வேண்டும் என்பது நியதி. ஆனால், சற்குரு வெங்கடராமனோ தன்னுடைய குருவான இடியாப்ப சித்த ஈசனின் வழிகாட்டுதலின்றி நிர்விகல்ப சமாதி நிலையைக் கூட பெற சிறிதும் தயாராக இல்லை. இதில் சற்குரு வெங்கடராமன் உறுதியாக இருந்தார். எனவே ஸ்ரீஇடியாப்ப சித்த பிரான் கீழிறங்கி வந்து நிர்விகல்ப சமாதி நிலையில் குரு சீடன் என்ற எண்ணமெல்லாம் மறைந்து விடும் என்ற நிலையை மாற்றி நிர்விகல்ப சமாதி நிலையிலும் குரு சீடன் உடம்பு என்ற நிலைகள் தொடரவே செய்யும் என்ற விதியை நிலைநாட்டிய பெருமை நம் நம் சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்களையே சாரும்.


ஸ்ரீஅகஸ்திய லிங்கம் திருகோடிக்கா
இயற்கையின் விநோதம் நம் சிற்றறிவிற்கு எட்டாதது. சித்தர்கள் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடிய இரகசியமாகும். பலாச மரத்தின் மலர்கள் (forest fire) தெரு, சாலை, காடு என்று மனித சஞ்சாரமே அற்ற இடங்களில் கூட தரையில் கொட்டிக் கிடப்பதை பார்க்கலாம். பூமியில் நிகழும் குற்றங்களைக் களைந்து பூமியின் மேற்பரப்பில் நிலவும் ஜீவ ராசிகளைக் காப்பாற்ற பூமாதேவி மேற்கொள்ளும் பூஜைகளில் இதுவும் ஒன்று என்று சித்தர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு ஒன்றுக்கும் பயன்படாது என்று நாம் நினைக்கும் பலாச பூக்கள் கூட பூமியில் நிகழும் குற்றங்களைக் களைந்து பூமாதேவிக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன என்பதே மந்திர தேவதைகள் பெற்ற சாயுஜ்ய ஞானமாகும். அதே போல பவளமல்லி அல்லது பூலோக பாரிஜாதமும் பூமாதேவிக்கு குளிர்ச்சி ஊட்டுவதே. பவளமல்லி மலர்களை மக்கள் பூஜைக்காக பயன்படுத்தும்போது மாலையில் இந்த பூ மரங்களின் கீழ் தென்னங்கீற்று, கோரைப்பாய், தர்ப்பை பாய் இவைகளைப் பரப்பி வைத்திருந்து மறுநாள் காலையில் இதன் மேல் விழும் மலர்களைச் சேகரித்து உதிரியாகவோ மாலையாகவோ கட்டி இறைமூர்த்திகளுக்கு அர்ப்பணிப்பதே சரியான வழிபாட்டு முறையென சித்தர்கள் தெரிவிக்கின்றனர். தரையில் விழும் மலர்கள் ஸ்ரீமந் நாராயண மூர்த்திக்கு பூமாதேவியால் அர்ப்பணிக்கப்படுவதால் அவை நிர்மால்ய பூக்களாகப் பெரியோர்களால் கருதப்படுகின்றன. சிறப்பாக வாஸ்து நாட்களிலும், செவ்வாய் கிழமைகளிலும் இத்தகைய வழிபாடு சுயம்பு மூர்த்திகளுக்கு உகந்தது. இதனால் பலவிதமான பூமி தோஷங்கள் விலகும். முடவன் முழுக்கு தினத்தில் இத்தகைய வழிபாடுகளை ஸ்ரீஅகத்திய லிங்கத்திற்கும் மூலவருக்கும் இயற்றி அற்புத பலன்களைப் பெறலாம். பவள மாலைகள், பவள மோதிரங்கள் வைத்திருப்போர் இத்தகைய ஆபரணங்களை இறைவனுக்கு சாற்றி மீண்டும் தாங்கள் அணிந்து கொள்ளலாம். முடவன் முழுக்கு தினத்தில் மட்டுமே கிட்டும் இந்த அரிய வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு முடவன் முழுக்கு தினம் மட்டுமல்லாது அனைத்து நாட்களிலும் மாணிக்கம் போன்ற இரத்தினங்களில் நிலவும் தோஷங்களை களையவல்லரே ஐயர்மலை ஸ்ரீஇரத்தினகிரி ஈசன் ஆவார். குளித்தலை ஸ்ரீஅய்யர்மலை ஈசனை முறையாக வலம் வந்து நவரத்தின ஆபரணங்களை இறைவனுக்குச் சார்த்தி பிரசாதமாக அடியார்கள் அணிந்து கொள்வதால் அனைத்து விதமான இரத்தின தோஷங்களிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.


ஸ்ரீபிரம்மமூர்த்தி திருகோடிக்கா
மனிதனுக்கு நீண்ட ஆயுள் அளிக்கப்பட்டிருப்பதன் காரணம் மனிதன் தான் செய்த தவறுகளை நினைத்து வருந்தி, அத்தவறுகளுக்குப் பிராயசித்தம் செய்து மீண்டும் இத்தகைய தவறுகளை செய்யமாட்டேன் என்று உறுதி பூண்டு, உறுதியாக நிற்பேன் என்று தான் பிராயசித்தம் பெற்ற முறையில் நடைமுறையில் நடந்து காட்டுவதற்கு நிச்சயமாக நீண்ட ஆயுள் தேவைப்படும் அல்லவா ? இவ்வாறு லட்சக் கணக்கான ஆண்டுகளை ஆயுளாகப் பெற்ற பிரம்ம விஷ்ணுமூர்த்திகள் தாங்கள் பெற்ற ஆயுளை நல்ல முறையில் மக்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்து வழிகாட்டுவதற்காகவே அடி முடி காணாத புராண நிகழ்ச்சிகளில் பங்கேற்று இறைவனின் மகிமைகளை உலகத்தோர்க்கு உணர்த்தி வருகின்றனர். அவ்வாறு பிரம்ம மூர்த்தியானவர் தான் இறைவனுடைய தலையைக் கண்டு விட்டதாக பொய் கூறி கோயில் இல்லா சாபத்தை பெற்று மீண்டும் ஒரு முடவன் முழுக்கு தினத்தில் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி தன்னுடைய தவற்றிற்கான பிராயசித்தத்தைப் பெற்றார். அவருடைய திருஉருவத்தை அடுத்த சூரிய மண்டல பிரம்மாவாக திருகோடிக்கா திருத்தலத்தில் நீங்கள் தரிசனம் செய்கிறீர்கள். எனவே பலவிதமான தவறுகளால் மனம் வருந்தும் பக்தர்கள் இந்த பிரம்ம மூர்த்தியை வழிபட்டு மீண்டும் தவறுகளை செய்யாத மன உறுதியையும் வைராக்கியத்தையும் பெற உதவுபவரே திருகோடிக்கா தல பிரம்ம மூர்த்தி ஆவார். முழுத் தாமரை மலர் அர்ச்சனை இவருக்குப் ப்ரீதியானது என்பது நீங்கள் அறிந்ததே. தேய்பிறை, தகாத நட்சத்திரங்கள், பிரபலாரிஷ்ட யோகங்கள் போன்று பல்வேறு தோஷங்களால் தங்கள் ஜனன ஜாதகத்தில் குறை உடையவர்கள் இந்த பிரம்ம மூர்த்தியை வழிபட்டு வருவதால் அவர்கள் விதியையும் இறைவன் மாற்றி நல்லருள் புரிவார். பெயரளவிற்கே ஆயுள் ரேகையைப் பூண்ட ஒரு அடியார் சற்குரு அருளால் இன்றும் நீண்ட ஆயுளுடன் திகழ்ந்து பலருக்கும் வழிகாட்டி வருகிறார் என்பதற்கு சான்றாய் நிற்கும் பிரம்ம மூர்த்தி இவரே.


சூரிய சந்திர மூர்த்திகள் திருகோடிக்கா
சூரிய சந்திர மூர்த்திகள் ஸ்ரீவடுக பைரவருடன் சேர்ந்து திருகோடிக்கா திருத்தலத்தில் அருள்புரிகின்றார்கள். காலத்தின் கோலமாய் விளங்கும் இத்தகைய தரிசனம் பற்றிய சுவையான ஒரு நிகழ்ச்சியை இங்கு விளக்குகிறோம். லுங்கி அணிந்து காட்சி அளிக்கும் சற்குரு வெங்கடராமன் அவர்களுடைய பழைய புகைப்படத்தை பலரும் பார்த்திருக்கலாம். மகாபாரதத்தில் உயிருக்குயிராய் விளங்கிய நள தமயந்தி மூர்த்திகளுள் நள மகராஜா ஒரு சமயம் தான் ஆடைகளை இழந்த நிலையில் தமயந்தியின் ஆடையில் பாதியைக் கிழித்து தன்னுடைய ஆடையாக அணிந்து கொண்டார். அத்தகைய தரித்திர நிலை அடியார்களை ஒருகாலும் அடைய வேண்டாம் என்று விளக்குவதற்காகவே ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் யாரும் லுங்கி அணிய வேண்டாம் என்று வற்புறுத்துவதுண்டு. ஆனால், தான் லுங்கி அணிந்து பலருடைய தரித்திர நிலையை ஏற்கும் சற்குருவாக விளங்கியதால் இவ்வாறு லுங்கி அணிந்த சற்குருவை நாம் காணும் பேற்றைப் பெறுகிறோம். லுங்கி என்பது மட்டும் மனிதனைப் பாதிக்கும் தரித்திர நிலை என்பது கிடையாது. இது போன்ற ஆயிராமாயிரம் தரித்திர நிலைகளை தீர்க்க வல்லதே சற்குரு வெங்கடராமன் அவர்களுடைய ஜாதக கட்ட வழிபாடாகும். அதே போல முடவன் என்பது கால் முடமான நிலையை மட்டும் குறிக்காமல் அனைத்து மன ஊனங்களையும் குறிக்கும். முழுத் தாமரை மலர்களால் சற்குருவின் ஜாதகத்தை அர்ச்சித்து வணங்குவதால், குறிப்பாக லட்சுமி கடாட்ச நாட்களில், முடவன் முழுக்கு நாட்களில் சற்குரு அவர்களின் ஜாதகத்தை வணங்கி வழிபடுவதால் கிட்டும் லட்சுமி கடாட்ச சக்திகளை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. இலட்சுமி கடாட்சி சக்திகளைக் குறிக்கும் 1, 2, 9, 11ம் அதிபதிகள் பூரணமாகப் பிரகாசிக்கும் ஜாதகமே சற்குருவின் ஜாதகமாகும். அது மட்டுமல்லாமல் எவ்வளவோ பணக்கார கோடீஸ்வரர்களின் ஜாதகங்களில் இத்தகைய லட்சுமி கடாட்ச சக்திகள் பல்கிப் பெருகும் என்றாலும் இந்த லட்சுமி கடாட்ச சக்திகள் அனைத்துமே மற்றவர்களின் நலனுக்காகவே பயன்படும் என்பதை ராசி, நவாம்சம், துவிதசாம்சம் என்று சற்குருவின் ஜாதகம் ஒவ்வொன்றின் அம்சத்திலுமே லக்னத்தில் சனீஸ்வர பகவான் வீற்றிருப்பது அதிசயக்க தக்க ஜாதக அம்சமாகும்.


ஸ்ரீஅஷ்டபுஜ துர்கை திருகோடிக்கா
திருகோடிக்கா திருத்தலத்தில் மட்டும்தான் ஸ்ரீஅஷ்டபுஜ துர்கையின் தரிசனம் கிட்டும் என்றல்லாமல் பல சிவத்தலங்களிலும் இத்தகைய மூர்த்திகளின் தரிசனத்தைப் பெறலாம் என்றாலும் ஒவ்வொரு மூர்த்தியின் தரிசனப் பலனிலும் வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது. பொதுவாக அஷ்ட புஜ மூர்த்திகளின் தரிசனம் எட்டு திசைகளிலிருந்து வரும் தீய சக்திகளைக் களையும் என்பது எல்லா அஷ்டபுஜ மூர்த்திகளுக்கும் உள்ள பொதுவாக பலன்களில் ஒன்று. எண்ணங்கள் பரிணமிக்கும் நுணுக்கத்தை அறிந்தவர்களே இவ்வாறு அஷ்டபுஜ மூர்த்திகளை வேண்டி எண்ணத்தை முறைப்படுத்தலாம் என்றாலும் மற்றவர்கள் இத்தகைய மூர்த்திகளை வழிபட்டு வருதலால் எண்ணங்களின் வேகத்திலிருந்து விடுபடலாம் என்பது உண்மையே. மேலும் கண் மூடி அமரும் தியான நிலைக்கு இத்தகைய அஷ்டபுஜ மூர்த்திகளின் தியானம் முதற்படியாக அமைகிறது. சிறப்பாக துர்கையின் மகிஷி வாகனம் எண்ணங்களை கிரகித்து ஒடுக்கும் வலிமை பெற்றது. தான் கறுப்பாய் இருப்பதற்கு தேவையான மூலிகா சக்திகளை மக நட்சத்திரத்தன்று தன்னுடைய எண்ணத்தின் வலிமையாலாயே அது பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கருப்பு என்பது ஒரு வண்ணமல்ல அதுவும் ஒருவித ஆற்றலே என்பதே துர்கா வழிபாடு உணர்த்தும் பாடமாகும். உதாரணத்திற்கு காட்டெருமையின் பலம் அதன் வண்ணத்தில்தான் பதிந்துள்ளது.


ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் திருகோடிக்கா
ஈருடல் ஓருயிராக இணைந்த சுவாமியின் அர்த்தநாரீஸ்வரக் கோலம் மிகவும் பொருள் பொதிந்ததாகும். கணவன் மனைவி, குரு சீடன், இறைவன் அடிமை போன்ற இத்தகைய உறவுகளை எல்லாம் ஒட்டுமொத்தமாகக் குறிப்பதே அர்த்தநாரீஸ்வர தத்துவமாகும். அதுவே கிருஷ்ண பகவானின் ராசலீலை விளக்கம், ரஜனீஷ் எதிர்பார்க்கும் ஆண் பெண் உறவின் உச்சக்கட்ட துரீய நிலை, தந்திரம் புகட்டும் தர்மமிகு பாடம். ஆண் பெண் உறவைக் கடந்த நிலையாக அமிர்தானந்த மயி கூறும் உயரிய தத்துவமும் இதுவேயாம். “பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் ...” என்ற மணிவாசகரின் சொற்களும் இந்த நிலையையே குறிப்பதாக சற்குரு அருள்வார்கள். ஸ்ரீரமண மகரிஷி, ஸ்ரீபோடா சுவாமிகள் போன்றோர் எப்போதோ முக்தி அடைந்து விட்டாலும் இன்றைக்கும் அவர்களுடைய அன்பான சீடர்கள் கூப்பிட்ட குரலுக்கு செவி சாய்க்கும் உத்தமர்கள் இவர்கள். ஆனால், அவ்வாறு செவி சாய்ப்பவர்கள் தங்களுடைய சீடர்களுக்கு தங்களை கடைசியாகப் பார்த்த உருவங்களிலேயே காட்சி அளிப்பதுதான் அவர்களின் தனிப் பெருங்கருணை. இவர்களுடைய அவதார வைபவங்கள் என்றோ முடிந்து விட்டதாக யாரும் கருத வேண்டாம். அது, “தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே” என்பதாக தர்மத்தை நிலைநாட்ட யுகங்கள் தோறும் தோன்றும் இனிய வைபவமாகும். சற்குரு வெங்கடராமன் அவர்களின் தோற்றமும் என்றும் மிளிரும் அத்தகையதொரு இனிய வைபவமே !


கொலு வைபவம் திருகோடிகா
திருக்கோயில்களில் நிறைவேற்றப்படும் கொலு வைபவமும் இல்லங்களில் வைக்கப்படும் நவராத்திரி கொலு பொம்மைகளும் எதிர்மறை சக்திகளைக் குறைத்து நற்சக்திகளை வலுப்படுத்தும் ஒரு வழிபாடே. இவ்வாறு வீட்டில் கொலு வைக்கமுடியாதவர்கள் திருக்கோயில்களில் ஏற்பாடு செய்யப்பட்ட கொலு பொம்மைகளை குறைந்தது ஒரு நாழிகையேனும் தரிசனம் செய்து பூஜித்தலால் அத்தகைய நற்சக்திகள் அவர்கள் இல்லங்களில் பெருகும். அவர்கள் முடிந்த தான தர்மங்களை நிறைவேற்றுவதால் இத்தகைய நற்சக்திகள் மேலும் பெருகி திருமணம், சந்தானம், பொருள்சேர்க்கை போன்ற பல நற்காரிய சித்திக்கு ஏதுவாக அமையும். வண்டாசுரனின் வதம் எப்போதோ நிகழ்த்துவதற்காக அம்பாள் ஊசி முனையின் மேல் அமர்ந்து நவராத்திரிகளிலும் கொலுவீற்றிருந்தாள் என்று பொருள் கொண்டாலும் இன்றும் ஒவ்வொரு நொடியிலும் தோன்றி உலகை ஆக்கிரமிக்கும் அசுர சக்திகளை மாய்ப்பதே அம்பாள் இயற்றும் நவராத்திரி தவமாகும். அசுர சக்திகளை மாய்ப்பதற்காகவே கருடன், பஞ்சவர்ணக் கிளிகள், தும்பி, இரட்டை வால் கருங்குருவிகளின் நடமாட்டம் இச்சமயத்தில் அதிகமாக இருப்பதைக் காணலாம். நவராத்திரி வழிபாட்டின் மகிமையைப் புரிந்து கொண்டாலே பகல் இரவு, சூரியன் சந்திரன், அமாவாசை பௌர்ணமி தத்துவங்கள் உள்ளங்கை நெல்லிக்கனியாகும் என்று சித்தர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். உள்ளங்கை நெல்லிக் கனி என்பதே ஒரு தத்துவ பிரயோகம்தானே. அதனால்தான் உள்ளங்கையில் விளக்கெண்ணெயை ஊற்றி இரவில் படுக்கும் முன் நாக்கால் நக்கி உண்ணும்படி பெரியோர்கள் வற்புறுத்துகிறார்கள்.


மேற்கூறிய அர்த்தநாரீஸ்வர வழிபாட்டை எளியோரும் பெறும் வண்ணம் உதவி செய்வதே கார்த்திகை பிறப்பன்று காலையில் எமதீர்த்தத்தில் நீராடும் வைபவமாகும். இத்தகைய நீராடலுக்குப் பின்னர் திருகோடிக்கா இறை மூர்த்திகளை தரிசனம் செய்து உரிய தான தர்மங்களை நிறைவேற்றுவதால் அது அற்புத அர்த்தநாரீஸ்வர வழிபாடாக மலரும் என்பதில் ஐயமில்லை. முடவன் முழுக்கு தினத்தில் இத்தகைய தீர்த்தங்களில் நீராடுவதால் உடலில் நிகழும் சீதோஷ்ண மாற்றங்களைப் புரிந்து கொள்ள மனிதர்களால் முடியாது என்பதால் இதை ஒரு சிறந்த வழிபாடாக பெரியோர்கள் வைத்துள்ளார்கள். உள் சூடு, நடு சூடு, வெளிச் சூடு என்ற உடல் சூட்டு இரகசியங்களைப் புரிந்தவர்களால்தான் முடவன் முழுக்கு தினத்தில் திருகோடிக்கா எமதீர்த்தத்தில் நீராடும் மகிமை பற்றிய இரகசியங்களை ஓரளவு புரிந்து கொள்ள முடியும். சூடு உடலில் சமனடையும்போது மனமும் குளிர்ந்தால் அது மறைந்து விடும் அதாவது மனம் மகான்களுக்கு இருப்பதைப் போல செயலற்றுப் போய் விடும். அப்போது முகிழ்த்தெழும் உள்ளக்கிளர்ச்சி இறை தரிசனத்தைக் கூட்டும். இங்குள்ள வீடியோ படத்தில் மூன்று விதமான அசைவுகள் தோன்றுவது இயல்பே. எப்போது இந்த மூன்று அசைவுகளும் மறைகின்றனவோ, தெளிந்த நீரோடைமேல் பிள்ளையார் மிதக்கின்றாரோ அப்போது உங்கள் மனமும் உள்ளமுமே அமைதி அடைந்து விட்டதாக அர்த்தம்.
திருகோடிக்கா, திருஆனைக்கா போன்ற திருத்தலங்கள் தற்போது திருகோடிக்காவல், திருஆனைக்காவல் என்று மருவி ஒலிக்கின்றன. அதுவும் இறைவன் செயலே. மலர்களைப் பறித்து மாலையாகக் கட்டி இறை மூர்த்திகளுக்கு சாற்றி வழிபடுதலாலும், அடிப்பிரதட்சணம் போன்ற கோயில் வலங்களுமே மக்களுக்கு உண்மையான பாதுகாப்பை அளித்து காவலாக அமைகின்றன. சிறப்பாக பெண்களுக்கு இத்தகைய திருத்தல வழிபாடுகளே பாதுகாப்பாக அமையுமே தவிர செல்போன், மனிதர்கள், ஆயுதங்கள் இவை எக்காலத்திலும் இருளிலும் தனிமையிலும் பாதுகாப்பாக அமைய மாட்டா என்பதே உண்மை. இதை உணர்த்துவதே இக்கட்டுரையின் ஆரம்பித்தில் திகழும் திருகோடிக்கா நந்தவன சித்திரம். தலவிருட்சமே ரட்சை, நந்தவனங்களே பாதுகாப்பு. சீதையின் பன்னீர்ப்பூ பூஜையால் ராமர் உயிர் பெற்ற வரலாறு நீங்கள் அறிந்ததே.


ஏழேழ் பிறவிக்கும் துணை நிற்கும் திருகோடிக்கா
ஒரு முறை ஸ்ரீசிவானந்தா அவர்களைப் பற்றிக் கூறும்படி ஒரு சீடர் பணிந்து கேட்டபோது சற்குரு வெங்கடராமன் அவர்கள், “ரிஷிகேஷ் சிவானந்தா ஒவ்வொரு பொருளும் ஏதோ ஒரு காரண காரியத்தோடுதான் படைக்கப்பட்டு இருக்கிறது. அந்த காரண காரியத்தை அந்த பொருள் உணர்ந்து நடந்து கொண்டாலே போதும்,” என்பது சிவானந்தா கூறும் விளக்கமாகும் என்றார்கள். தொடர்ந்து, “ஒரு மின்விசிறி காற்றைத் தந்தால் அது தன்னுடைய கடமையைச் செய்து விட்டதாக அர்த்தம், அது போல் ஒரு மின்சார விளக்கு வெளிச்சத்தைத் தந்தால் அது படைக்கப்பட்டதன் பொருளை அறிந்து அதன்படி நடந்து கொள்கிறது என்று அர்த்தம்,” என்று சிவானந்தாவின் பதிலை எளிமைப்படுத்தி தந்தார்கள். “தன்னை அறிந்தால் தன்னலம் புரியும் தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்,” என்று அடிக்கடி சற்குரு அவர்கள் இசைப்பதைப் போல ஒவ்வொரு மனிதனின் படைப்பின் பின்னால் உள்ள இரகசியத்தை வெளிப்படுத்தி அதை நிறைவேற்ற உதவுவதே சாதாரண மனிதனும் பேரின்பத்தைப் பெற வழிவகுக்கும் திருகோடிக்கா ஈசனின் வழிபாடாகும்.


ராயபுரம் கல்மண்டபம்
சற்குரு வெங்கடராமன் அவர்கள் திருஅண்ணாமலையில் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் அன்னதானம் நிகழ்த்தி வந்தார்கள். சற்குருவின் இத்தகைய கைங்கர்யங்களில் நேரிடையாக பங்கேற்று தங்கள் உடல் உழைப்பு, பண சகாயம், பொருளுதவி அளித்தவர்கள் மட்டுமல்லாது சற்குருவின் நற்காரியங்களில் மறைமுகமாகப் பங்கேற்று சரீர வேவை, பொருளுதவி, பணம் பொருள் வசூல் செய்து உதவியவர்களும் ஏராளம். இவர்களையும் கௌரவித்து உரிய முறையில் அன்பை அளிப்பதுதானே மரியாதை. இதற்காக கோவணாண்டி பெரியவரும் சற்குரு வெங்கடராமனும் திட்டமிட்டு செய்த “சதி” தான் சற்குரு அவர்கள் மகளின் திருமணம். குருவருளால் சற்குரு நிறைவேற்றிய நற்காரியம் அனைத்திலும் பங்கேற்ற அடியார்களின் வயிறும் மனமும் நிறையும்படி சுவையான விருந்து ஏற்பாடு செய்ததோடு மட்டுமல்லாமல் திருமண வைபவத்தின்போது கோவணாண்டிப் பெரியவரும் எழுந்தருளினார். எப்படி? ஆம், கோவணாண்டியான சற்குரு எந்த வடிவில் வருவார் ? உங்கள் ஊஹம் சரியே. சற்குருவிற்கு உரித்தானது தங்கம்தானே. அந்த சுத்த தங்கம் வடிவில் நேரம் காலத்தைக் கடந்த சற்குருவானவர் தங்க கைக்கடியார வடிவில் ஸ்ரீவெங்கடராமன் அவர்களின் திருக்கரங்களில் எழுந்தருளினார். எனவே திருமண வைபவத் தினத்தன்று சற்குருவை தரிசனம் செய்யும் பாக்கிய பெற்ற அனைவரும் அறிந்தோ அறியாமலோ அவர்கள் கோவணாண்டிப் பெரியவரையும் தரிசனம் செய்து ஆசி பெற்றார்கள் என்பதே உண்மை. ஸ்ரீஅகத்திய பிரான் விறகு வெட்டியாக கொல்லிமலைக்கு வந்தபோது அவருடைய அன்புச் சீடர்கள் கைப்பிடியாக, கோடலியாக, தலைப்பாகையாக, கால் செருப்பாக மாறி நின்றதை இங்கு நினைவு கூறுங்கள். இந்த நிகழ்ச்சியை ஒன்றுக்கு நூறு முறை படித்து ஆத்ம விசாரம் செய்து பார்த்தால்தான் யார் உண்மையான கோடீஸ்வரன் என்ற இரகசியம் புரிய வரும். குரு மங்கள கந்தர்வ மோட்ச சக்திகள் எவ்வாறு இந்த திருமண வைபவத்தில் பல்கிப் பெருகின என்று தெரிய வரும்.


சங்கபதும நிதி மூர்த்திகள் திருபனந்தாள்
நாம் அறிந்தவை சங்க பதும நிதிகள் என்ற இரண்டே நிதிகளே. உண்மையில் நிதிகள் கோடிக்கானவை என்பதே சித்தர்கள் கூறும் இரகசியமாகும். உதாரணமாக சற்குரு கூறும் முறையில் நவராத்திரி வழிபாடுகளை இயற்றி உரிய தான தர்மங்களுடன் ஆயுர்தேவி பூஜையுடன் நிறைவு செய்பவர்களுக்கு நவநிதிகளுக்கு மேலான நிதிகள் காத்திருக்கின்றன. உதாரணமாக, நீங்கள் இதைப் படிக்கும் தினம் நவநிதி தினமாக அமைவதும் நவராத்திரியின் ஒன்பதாம் திதியாக அமைந்து நவ தேதி சக்திகளுடன் இணைந்து குருவிற்கு உரிய அன்னதான தினமாக அமைவதும் குருவருளையும் குருவின் குருவான இடியாப்ப சித்த ஈசனின் அனுகிரஹத்தையும் வர்ஷிக்கும் என்பதே உண்மை. சற்குருவின் மகளின் திருமணத்தோடு நிறைவு பெறும் இனிய வைபவம் அல்ல அது, ஸ்ரீகோடீஸ்வர சுவாமிகளின் அனுகிரக சக்திகளைப் போல என்றும் தொடரும் இனிய வைபவமாகும்.
சங்க பதும நிதி, துவார பாலகர்கள், சண்டேஸ்வர மூர்த்திகள் என்ற சக்திகள் இரட்டை இரட்டையாக திருக்கோயில்களில் குடிகொண்டிருப்பது போல் தோன்றினாலும் ஒரே சக்தியே மனிதனுக்குப் புரியும் வகையில் இரண்டு சக்திகளாகத் தோற்றம் கொண்டுள்ளன என்பதே உண்மையாகும். இங்கு பக்தர்களுக்கு குழப்பம் ஏற்படுவது இயற்கையே. தொடர்ந்து படித்து குழப்பத்தை பெருக்கிக் கொள்வதும், தெளிவைப் பெறுவதும் உங்கள் கையில்தான் இருக்கிறது. அதற்கு வழிகாட்டுவதும் திருகோடிக்காவில் நீங்கள் இயற்றும் ஆத்மாத்மார்த்தமான வழிபாடுதான். யாதவ வம்ச வழித் தோன்றலான பகவான் கிருஷ்ணர் தன்னுடைய காலை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்துக் கொண்டு ஒரு மரக்கிளையின்மேல் அமர்ந்திருந்தபோது ஏகலைவன் பகவானின் கால் பாதங்களை மான் எனத் தவறாக நினைத்து புல்லாக வளர்ந்த இரும்புத் துண்டு பொருத்தப்பட்ட அம்பை எய்து விட்டான். பகவான் கிருஷ்ணரும், “தனித்துணை சிவமே, வழித் துணை சிவமே,” என்று கூறி பரமபதத்தை அடைந்து விட்டார். எனவே பகவான் கிருஷ்ணர் துர்வாச முனிவர் இட்ட சாபப்படி பரமபதத்தை அடைந்தால் அது ஒரு பூர்ண அவதாரம் இறைவனுடன் இணையும் இனிய வைபவமா இல்லை ஒரு ரிஷியின் சாபமா ?

 

திருத்தல யாத்திரை தொடரும்


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam