கண் மூடி வந்தவர் மண் மூடிப் போகார்.

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை ஓம் ஸ்ரீகுருவே சரணம்

எளிய அகஸ்திய தேவாரத் திரட்டு

கருணையே வடிவானவர்கள் சித்தர்கள். எல்லையில்லா பரம்பொருளாகிய இறைவனின் ஒரு அணுத் துகளைக் கூட புரிந்து கொள்ள முடியாத நிலையில் நாம் இருப்பதால் சித்தர் பெருமக்கள் இறைவனின் பெருங்கருணையை நாமும் அனுபவித்துப் பயன் பெறும் வகையில் பல வழிபாட்டு முறைகளை அமைத்துத் தந்துள்ளனர். இவ்வகையில் பன்னிரு திருமுறைப் பாடல்களை நாம் எப்படி ஓதிப் பயன்பெற வேண்டும் என்ற முறையையும் நமக்காக அவர்கள் வகுத்துத் தந்துள்ளனர்.

விதிவசத்தால் இரண்டு பெண்களுடன் வாழும் ஆண்களும், சூழ்நிலை சந்தர்ப்பங்களால் இரண்டு கணவன்மார்களுடன் வாழும் பெண்களும் திருச்சி உய்யக் கொண்டான் திருமலை ஸ்ரீஉஜ்ஜீவ நாதர் திருக்கோயிலில் அருள்புரியும் இரட்டை பிள்ளையார் மூர்த்திகளை வணங்கி அர்த்த நாரீஸ்வரருக்கு ஐந்து தேங்காய் எண்ணெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டு வந்தால் அவர்கள் துன்ப நிலை மாற வழி பிறக்கும்.

இதன் பின்னால் அமைந்த வரலாறு மிகவும் ஆச்சரியமான ஒன்று. அது என்ன என்பதைத் தெரிந்து கொள்வோமா?

காலத்தின் சுழற்சியில் கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. கிருத யுகத்தில் மனிதர்களுக்கு இறை நம்பிக்கை பரிபூரணமாக இருந்தது. இறைவன், இறைவி அவர்களின் நடமாட்டங்களும் இருந்தன. அதனால் இறை அவதாரங்களை நேருக்கு நேர் பார்க்கும் பாக்கியத்தை அந்த யுக மக்கள் அனைவருமே பெற்றிருந்தனர். சிவன், பார்வதி, பெருமாள் என அனைத்து இறை மூர்த்திகளையும் நாம் இன்றைய மனிதர்களைப் பார்ப்பது போல தெருக்களிலேயே காணும் பேற்றைப் பெற்றிருந்தனர். ராமர், கிருஷ்ணர் போன்ற அவதார மூர்த்திகளும், மார்கண்டேயர், அகஸ்தியர், வசிஷ்டர், காகபுஜண்டர் போன்ற மகரிஷிகளும் கூட மக்களோடு மக்களாய்ப் பேசி உரையாடி, ஆன்மீக ரகசியங்களைப் பகிர்ந்து கொண்டு உலாவி வந்தனர். இறை வழிபாடுகளும், சந்தியா வந்தனம், தர்ப்பணம், ஹோம, யக்ஞம் போன்றவையும் நேரம், காலம் தவறாமல் முறையாக நிறைவேற்றப்பட்டு வந்தன.

யுக தர்மங்கள் மாற்றம் கொண்டபோது இந்த வழிபாட்டு முறைகளில் அசிரத்தை ஏற்பட்டு சிறிது சிறிதாக மக்கள் இறைவழிபாட்டை ஏனோ தானோ என்று நிறைவேற்ற ஆரம்பித்தனர். ஆனால், மக்களை நன்னெறியில் இட்டுச் செல்லும் சித்தர் பிரான்கள் எவ்வகையிலேனும் இறை உணர்வை மங்காமல், தளராமல் வைத்துக் கொள்ள தங்களால் இயன்ற வரையில் அருட் பணிகளை தொடர்ந்து ஆற்றிக் கொண்டே இருக்கிறார்கள். வானமும் பூமியும் உள்ள அளவும், ஏன், அதன் பின்னரும் காணும் பொருட்களும், காணாத பொருட்களும் தோன்றி மறைந்தாலும் கூட கருணை உள்ளம் கொண்ட சித்தர்களின் அருந் தொண்டு என்றும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இம்முறையில் கிருத யுகத்தில் முறையாக விளங்கி வந்த வேத பாராயணம் நாளடைவில் சந்தியா வந்தனம், காயத்ரீ ஜபம் போன்ற வழிபாட்டு முறைகளைப் போல நலிவடைந்த போது புனித தென் பாரதத்தில் நால்வர் என்று அன்புடன் அழைக்கப்படும் திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள், திருநாவுக்கரசு சுவாமிகள், சுந்தர மூர்த்தி சுவாமிகள், மணிவாசக சுவாமிகளும் தேவார திருவாசகப் பாக்களை ஓதி இறை பக்தியையும், தமிழ் வேத பாராயணத்தையும் மங்காது காத்து வந்தனர்.

ஸ்ரீஅகத்தியர் நடந்து செல்லும்போது வாயு பகவான் கூடவே சென்று அவர் அனுமதியுடன் குளிர்ந்த தென்றல் காற்றை வீசுவார். நறுமண மலர் தேவதைகள் அகத்தியருக்கு அற்புத மணத்தை வீசும். அவர் தலைக்கு மேல் தேவ லோக விமானங்கள் கூட பறப்பது கிடையாது.

மனித கற்பனைக்கு எட்டாத பல உண்மைச் சம்பவங்களையும் இத்திரு மூர்த்திகள் சிவனருளால் நிகழ்த்தியுள்ளனர். மண்ணைப் பொன்னாக்குதல் வறுமை, பஞ்சம் தீர்த்தல், முதலை விழுங்கிய குழந்தையைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு முதலை வாயிலிருந்து உயிருடன் மீட்டல், இறந்து சாம்பலாகிப் போன சிறுமியை உயிர் பெற்று எழச் செய்தல், வயிற்றில் கல்லைக் கட்டி கடலில் வீசினாலும் நமச்சிவாயத் தெப்பம் கொண்டு கரையேறுதல் போன்ற பற்பல அற்புதங்களை எல்லாம் நிகழ்த்தி சிவ நாம மகிமையை உலகெங்கும் பரப்பி வந்தனர். நாயன்மார்கள் மட்டும் அல்லாது திருமூலர், சேக்கிழார் போன்ற 27 உத்தம இறையடியார்கள் அருளிய தெய்வீகப் பாடல்களையே பன்னிரு திருமுறைப் பாக்கள் என வழங்குகிறோம்.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இந்த பன்னிரு திருமுறைப் பாக்கள் அனைத்தையும் தினந்தோறும் ஓதியே ஆக வேண்டும். இத்திருமுறைப் பாடல்கள் அனைத்தும் நமது அன்றாட வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுடன் தொடர்பு கொண்டவை. ஆனால், இன்றைய கலியுகத்தில் வாழும் ஒரு சாதாரண மனிதனால் பன்னிரு திருமுறைகளில் உள்ள அனைத்துப் பாடல்களையும் தினமும் ஓத முடியுமா? தேவாரம், திருக்கோவையார், திருப்பல்லாண்டு, திருவாசகம், பெரிய புராணம், திருவிசைப்பா, திருமந்திரம் போன்ற நூல்கள் இப்பன்னிரு திருமுறை தொகுப்பில் அடங்கும்.

இறைப் பெரும் அடியார்களால் இறையருளால் மனித குல மேம்பாட்டிற்காக அருளப் பெற்றவையே இந்தப் பாக்கள். சாதாரண மனிதனுக்கு உண்டான இறை பக்தி, அவனுக்கு உலகப் பொருட்கள் மேல் உள்ள நாட்டம் இவற்றை முழுவதுமாக உணர்ந்த சித்தர் குல நாயகரான ஸ்ரீஅகஸ்திய மாமுனி கலியுக மனிதன் பன்னிரு திருமுறைப் பாக்கள் அனைத்தையும் தினமுமே எவ்வாறு ஓத முடியும் என்பதைக் குறித்து பொதிய மலையில் இறைவனை நோக்கி தவமியற்றினார். அன்ன ஆகாரமின்றி பன்னெடுங் காலம் அவருடைய தவம் தொடர்ந்தது. நீண்ட கால தவத்திற்குப் பின் எம்பெருமான் மனம் கனிந்து ஸ்ரீஅகஸ்திய மாமுனிக்கு காட்சி அளித்து அச்சித்தர் பிரானின் நீண்ட தவத்திற்கான காரணத்தை வினவினார்.

ஸ்ரீஅகஸ்திய மாமுனியும், “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே! தாங்கள் அறியாதது ஒன்று உண்டா? கலியுகத்தில் இன்று வாழும் மனிதன் தன்னுடைய சாதாரண கடமையான பொருள் ஈட்டுதல், குடும்பத்திற்காக உணவு தேடுதல், குடும்பத்தாரைப் பாதுகாத்தல் என்று சுயநல செயல்களிலேயே தன்னுடைய பெரும்பான்மையான நேரத்தைச் செலவிட்டு விடுகிறான். தன்னுடைய உண்மையான கடமையான சிவ வழிபாட்டை முற்றிலுமாக மறந்து விட்டு அலைகிறான். சிவ வழிபாட்டிற்காக தற்போது செலவிடும் நேரத்தை மிக மிகக் குறைவாக மனித சமுதாயம் அமைத்துக் கொண்டு விட்டது. அதனால் மனிதன் சிவ வழிபாட்டை இயற்றாமல் வீணாக்கிய நேரம் என்னும் சஞ்சித கர்மாவின் அளவு பெருகிக் கொண்டே வருகிறது. இந்த வினைச் சுமையிலிருந்து மக்களைக் காக்க வேண்டியது சித்தர்களின் கடமை அல்லவா? இதுவும் தாங்கள் எங்களுக்குக் கருணை மேற்கொண்டு அளித்த பெரும் பேறு அல்லவா?’’

"கிருத யுகத்தில் நிகழ்ந்தது போல் இன்றைய கலியுகத்தில் வேத பாராயணத்தை நிறைவேற்ற இயலாவிட்டாலும் பன்னிரு திருமுறைப் பாக்களைத் தினமும் ஓதி வந்தால், அதுவே கலியுக மனிதன் வேதம் ஓதிய பலனை அடைய வழிகாட்டும் என்று முன்னரே அருளினீர்கள். ஆனால், இன்றைய மனிதன் பன்னிரு திருமுறைப் பாடல்களைக் கூட தினமும் முழுமையாக ஓத முடியாக அவல நிலையில் தள்ளப்பட்டுள்ளான். தாங்கள் பெருங் கருணை கொண்டு பன்னிரு திருமுறைப் பாக்கள் அனைத்தையும் ஓதியே ஆக வேண்டும் என்ற இறை நியதிக்குச் சற்று விலக்கு அளிக்க வேண்டும் என்று தங்கள் திருவடிகளைச் சரணடைந்து கேட்டுக் கொள்கிறேன்," என்று எம்பெருமானிடம் தன்னுடைய கருத்தை வெளியிட்டார் அகத்திய மாமுனி.

ஓங்கார பிரகாரம்
உய்யக்கொண்டான்மலை

காயத்ரீ மந்திரத்தின் பொருள் தெரிய வேண்டுமா? திருச்சி உய்யக் கொண்டான் மலை ஸ்ரீஉஜ்ஜீவ நாதர் ஆலயத்தின் ஓங்காரப் பிரகாரத்தை 24 முறை வலம் வந்து வணங்குங்கள்.

ஸ்ரீஅகஸ்திய மாமுனிக்கு உயிர்கள் மேல் கொண்ட பெருங் கருணையைப் பாராட்டிய சிவபெருமான், "உனது வேண்டுகோள் எமக்கு மிகவும் ஆனந்தத்தை அளிக்கிறது, மாமுனியே. மண்ணுயிர்கள் மேல் நீர் கொண்ட கருணை ஒப்பற்றது. நீர் விரும்பிய வண்ணமே கலியுக மனிதன் பன்னிரு திருமுறைப் பாடல்கள் அனைத்தையும் ஓதியே ஆக வேண்டும் என்ற எமது நியதியிலிருந்து சற்றே விலக்கு அளித்து சில குறிப்பிட்ட பாடல்களை மட்டும் ஓதினாலே யுக தர்ம நியதியால் அவனுக்கு அனைத்துப் பாடல்களையும் ஓதிய பலன் கிடைக்க யாம் வழி செய்வோம்," என்று திருவாய் மலர்ந்து அருளினார்.

இவ்வாறு வேத நாயகனான சிவபெருமான் பெருங் கருண கொண்டு நமக்கு அளித்த பாடல்களே ஸ்ரீஅகஸ்தியர் பன்னிரு முறைத் திரட்டு என்னும் இறைப் பாக்கள் ஆகும். பல்லாயிரக் கணக்கான பன்னிரு திருமுறைப் பாடல்களை ஓத வேண்டிய கடுமையான நியதியிலிருந்து விலக்களித்து எம்பெருமான் அருளிய 32 பதிகப் பாடல்களை இங்கு அளித்துள்ளோம். திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரை சித்த பாரம்பரியம் மூலமாக இந்தப் பன்னிரு முறைத் திரட்டுப் பாடல்களை கலியுகத்தில் நமக்காகப் பெற்றுத் தந்தவரே திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரை 1001வது குரு மகா சந்நிதானம் சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் ஆவார்கள். தன்னுடைய குருநாதரான சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த சுவாமிகளிடம் குருகுல வாசம் கொண்ட திரு வெங்கடராம சுவாமிகள் நாம் அனைத்து நலன்களையும் பெற்று வாழ இவ்வரிய பாக்களை வழங்கி உள்ளார்கள். அனைவரும் எளிய இந்தத் திருமுறைப் பாடல்களைப் பாடி உலகத் துன்பங்களிலிருந்து விடுதலை பெற்று வாழ எல்லாம் வல்ல அருணாசல ஈசனின் திருப் பாதங்களைப் பணிந்து வேண்டுகிறோம்.

ஸ்ரீஅகஸ்திய மாமுனி அருளிய
பன்னிரு திருமுறைகளை ஓதும் விதிமுறைகளும் பலாபலன்களும்

1. காலை, மதியம், மாலை என எந்த நேரத்திலும் இந்தப் பன்னிரு திருமுறைப் பாடல்களைப் பாடி இறைவனை வழிபடலாம்.

2. தனி மனித ஆராதனையை விட கூட்டுப் பிரார்த்தனைக்கு வலிமை அதிகம். இறையடியார்கள் தங்கள் குடும்பத்திலுள்ள அனைவருடனும் சேர்ந்து இந்தப் பதிகங்களை ஓதுதல் சிறப்பு. உற்றார், உறவினர், நண்பர்கள், அறிந்தோர், அறியாதோர் என அனைவரையும் ஒன்று திரட்டி இத்திருப்பதிகங்களை ஓதி வந்தால் சமுதாய ஒற்றுமையும், அமைதியும் நிலவ வழி ஏற்படும்.

3. காலை, மதியம், மாலை என்ற மூன்று வேளைகளிலும் தினமும் சந்தியா வந்தன வழிபாடுகளை அனைவரும் நிறைவேற்றியாக வேண்டும். இதற்கு எந்தவித விலக்கும் கிடையாது. காணாமல், கோணாமல், கண்டு சந்தியா வந்தன வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பது சித்தர்கள் வாக்கு. அதாவது காலையில் சூரிய உதயத்திற்கு முன்னும் (சூரியனைக் காணாத போது), மதியம் உச்சி வேளையிலும் (சூரியன் கோணாமல் சரியாக தலை உச்சிக்கு நேராக இருக்கும்போது), மாலையில் சூரியன் மறைவதைக் கண்டும் (சூரிய அஸ்தமனத்தின்போது) சந்தியா வந்தன வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். சந்தியா வந்தன வழிபாட்டைத் தக்க சற்குரு மூலம் அறிந்து நிறைவேற்றுவதே சிறப்பு. அவ்வாறு சற்குரு அமையப் பெறாதோர் இந்த 32 பதிகங்களைக் கொண்ட ஸ்ரீஅகஸ்தியர் தேவாரத் திரட்டுப் பாடல்களைப் பாடி வந்தால் சந்தியா வந்தன வழிபாட்டுப் பலன்களைப் பெறலாம்.

பிரம்மாவை நிந்தித்தால் விஷ்ணுவிடம் சென்று பிராயச்சித்தம் பெறலாம். விஷ்ணுவை வசைபாடினால் சிவபெருமானிடம் சென்று மன்னிப்புக் கோரலாம். அந்தச் சிவனையே திட்டி விட்டால் கூட உத்தம சற்குரு அதற்கும் பிராயச் சித்தம் தருவார். ஆனால், சற்குரு ஒருவரை நிந்தனை செய்தால் ஈரேழு உலகிலும் பிராயச் சித்தம் பெறவே முடியாது. அந்த உத்தம குருவே மனம் வைத்தால்தான் பிராயச் சித்தம் தர முடியும். அறியாமை காரணமாக குரு வார்த்தையை மீறியதற்கு (குருவை நிந்தித்தவர்கள் அல்ல) பிராய சித்தம் தருவதே திருச்சி உய்யக் கொண்டான் மலை ஸ்ரீஉஜ்ஜீவ நாதர் ஆலய தீர்த்தமாகும்.

4. இந்தப் பன்னிரு திருமுறைத் திரட்டுப் பாடல்களைக் காரிய சித்திக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக, நோயால் வாடும்போது மந்திரமாவது நீறு ... என்னும் திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய திருநீற்றுப் பதிகத்தை ஓதி திருநீறு அணிந்து வந்தால் நோய் அகலும். காய்ச்சல், தலைவலி போன்ற நோய்களின் கடுமை தணியும். திருமணம், வீடு, நிலம் போன்ற நியாயமான தேவைகளுக்காகவும், வருமானத்தை மிஞ்சிய செலவு, கடன் தொல்லை போன்றவை நிவர்த்தியாகவும் வாசி தீரவே காசி நல்குவீர் .. என்ற திருஞான சம்பந்த சுவாமிகள் அருளிய தேவாரப் பதிகத்தைத் தொடர்ந்து ஓதி பலன் பெறலாம்.

5. ஒவ்வொரு திருப்பதிகத்தின் இறுதியிலும் திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம் என்று மூன்று முறை ஓதுதல் சிறப்பு.

6. பாடல் பெற்ற சிவத் தலங்கள், மங்கள சாசனம் அமைந்த பெருமாள் தலங்கள் (திவ்ய க்ஷேத்திரங்கள்), சுயம்பு மூர்த்தி அருளும் தலங்கள், கங்கை, காவிரி போன்ற புனித நதிக் கரைகள், துளசி மாடம், பசுமடம், திருஅண்ணாமலை, ஐயர்மலை, பழனி மலை கிரிவலப் பாதைகள், மலைத் தலங்களில் இந்தப் பதிகங்களை ஓதுவதால் வழிபாட்டின் பலன்கள் பன்மடங்காகப் பெருகும். ஆனால், அபரிமிதமான இந்தப் பலன்களை சுயநலத்திற்காகப் பயன்படுத்தாமல் வெள்ளம், புயல், வறட்சி, பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்களிலிருந்து மக்களைக் காக்கவும், சமுதாய அமைதிக்காகவும், இன ஒற்றுமைக்காகவும் அர்ப்பணித்தல் சிறப்பாகும்.

7. தமிழ் மொழியும், சமஸ்கிருதம் என்னும் வடமொழியும் இறைவனின் இரு கண்கள் என்பது சித்தர்கள் கூற்று. ஹோமம், வேள்வி, யாக வழிபாடுகளில் தேவமொழியில் அமைந்த மந்திரங்களை ஓதியே ஆஹூதி அளித்து வருகிறோம். ஆனால், தேவமொழி அறியாதோரும் இந்த 32 பதிகங்களில் உள்ள பாடல்களை ஓதி ஹோம, யக்ஞ வழிபாடுகளை மேற்கொள்ளலாம். பொதுவாக, திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியுள்ள திருத்தாண்டகப் பதிகங்களை ஹோம வழிபாட்டிற்காக ஓதுதல் சிறப்பாகும்.

8. மனிதப் பிறவிக்கு வித்தாக அமைவது நாம் செய்த கர்மமே. நிறைவேறாத ஆசையும் கர்மா என்னும் முறையில் பிறவிக்கு வழி வகுக்கும். முறையான எல்லா ஆசைகளையும் நிறைவேற்றி வந்தால்தான் பிறவி இல்லாத நிலையை என்றாவது ஒரு நாள் மனிதன் அடைய குருவருள் துணை புரியும். நியாயமான எல்லா இன்பங்களையும் இந்தப் பிறவியிலோ அடுத்த பிறவிகளிலோ நாம் பெற துணை புரிவதே இந்த 32 திருப்பதிகங்கள். உணவு, உடை, இருப்பிடம், வாகனம், செல்வம், போகம் என மனித அனுபவிக்கக் கூடிய இன்பங்கள் 32 வகைப்படும். இந்த 32 வகையான இன்பங்களை ஒரு மனிதன் பெற வேண்டுமானால் அவன் 32 விதமான அறங்களை நிறைவேற்றியாக வேண்டும். அன்னதானம், ஆடை தானம், கல்வி தானம், விலங்குகளுக்கு உணவு, அநாதை குழந்தைகள் பராமரிப்பு, இலவசத் திருமணங்கள், முதியோர் சேவை என 32 விதமான அறங்களையும் நிறைவேற்றியவர்களுக்கே 32 விதமான இன்பங்களை, போகங்களை அனுபவிக்க ஏதுவான பிறவிகள் அமையும். இந்த 32 விதமான இன்பங்களை ஒரு மனிதன் அனுபவித்த பின்னரே அவன் ஆசைகள் இல்லாத, பிறவி அற்ற நிலையை அடைய முடியும். ஆசை இல்லாத நிலையை அடைந்த மனித மனமே முழு மூச்சுடன் இறை வழிபாட்டில் ஈடுபட முடியும். அணு அளவு ஆசை இருந்தால் ஒரு மனிதனிடம் இருந்தால் கூட அது ஒரு பிறவிக்கு வித்தாக அமைந்து அப்பிறவியில் பல கர்ம வினைகளை உருவாக்கிப் பிறவிகளைப் பெருக்கிக் கொள்ளும் நிலை ஏற்படலாம். இங்கு அளித்துள்ள 32 பதிகங்களை தொடர்ந்து ஓதி வந்தால் 32 அறங்களை நிறைவேற்றும் நிலையை அடைய குருவருள் துணை புரியும்.

9. தர்பைப் பாய், துண்டு, கம்பளி இவைகளின் மேல் அமர்ந்து திருமுறைப் பதிகங்களை ஓதுதல் சிறப்பு.

10. திருமுறைகளை ஓதும்போது அனைவரும் கைகளைக் கோர்த்துக் கொண்டு வட்ட வடிவில் அமர்ந்து வழிபாட்டை மேற்கொள்வதால் மனம் அலைபாயாமல் ஒருமுகப்பட்ட தியானம் எளிதில் கை கூடுவதைக் கண் கூடாகக் காணலாம். வழிபாட்டுப் பலன்களும் பன்மடங்காகப் பெருகும்.

11. தேவ மொழியில் அமைந்த ரிக், யஜூர், சாம, அதர்வணம் என்னும் நான்கு வேதங்கள் ஓதிய பலன்களை ஒட்டு மொத்தமாக அளிக்கவல்லதே இந்த 32 திருமுறைப் பாடல்கள். தேவமொழி அறியாதோரும் வேதம் ஓதிய பலன்களை எளிதில் பெற வழி வகுப்பதே திருமுறைப் பாடல்கள். உதாரணமாக, மந்திரமாவது நீறு என்று தொடங்கும் ஒரு (திருநீற்றுப்) பதிகத்தின் பாடல்களே நான்கு வேதங்களின் பீஜாட்சர சக்திகளை உள்ளடக்கி, நான்கு வேதங்களின் திரட்சியாக அமைகின்றது என்றால் அனைத்துப் பதிகங்களின் பலாபலன்களை எழுத்தில் வடிக்க இயலுமா என்பதை சற்றே எண்ணிப் பாருங்கள்.

12. கடுக்கன், தீட்சை, ருத்ராட்சம், யக்ஞோபவீதம், ஸ்திர கங்கண், வைபவ கங்கண் போன்ற காப்புச் சாதனங்களை அணிந்து திருமுறைகளை ஓதுவதால் வழிபாட்டுப் பலன்கள் பன்மடங்காகப் பெருகும்.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய இடர் களையும் பதிகம்

(ருக், யஜுர் முதலான நான்கு வேதங்களும் சமஸ்கிருத மொழியில் அமைந்துள்ளதால் பலருக்கும் இந்த வேதங்களை ஓத இயலவில்லையே என்ற மனக் குறை இருந்து கொண்டு இருக்கும். மேலும் இந்த வேதங்களை முறையான ஸ்வரம், அட்சர சுத்தியுடன் ஓதுவது மிகவும் அவசியம். இம்முறை அறியாதோர் தொடர்ந்து இடர்களையும் பதிகத்தை ஓதி வந்தால் இக்குறை தீர்ந்து நான்கு வேதங்களையும் முறையாகப் பயிலும் வழிமுறை சிவனருளால் கிட்டும்.)

பண் : பழந்தக்கராகம்      

           

மறை யுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறை யுடையாய் பிஞ்ஞகனே என்றுனைப் பேசினல்லால்
குறை யுடையார் குற்ற மோராய் கொள்கையினா லுயர்ந்த
நிறை யுடையார் இடர் களையாய் நெடுங்கள மேயவனே.

Sri Thirunedungalanatha Swamy Temple
Thirunedungalam

கனைத் தெழுந்த வெண்திரை சூழ் கடலிடை நஞ்சுதன்னை
தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவநின்னை
மனத்தகத்தோர் பாடல்ஆடல் பேணி இராப் பகலும்
நினைத் தெழுவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத
என்னடியான் உயிரை வவ்வேல் என்றடர் கூற்றுதைத்த
பொன்னடியே பரவி நாளும் பூவொடு நீர்சுமக்கும்
நின்னடியார் இடர் களையாய் நெடுங்கள மேயவனே.

மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர்பால் மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கை தங்கும் அவிர்சடை ஆரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவ நின்தாள் நிழல்கீழ்
நிலைபுரிந்தார் இடர் களையாய் நெடுங்கள மேயவனே.

பாங்கின் னல்லார் படிமம் செய்வார் பாரிடமும் பலிதேர்
தூங்கி னல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கி நில்லா அன்பினொடுந் தலைவ நின்தாள் நிழற்கீழ்
நீங்கி நில்லார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

விருத்தனாகி பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து
கருத்தனாகி கங்கையாளைக் கமழ் சடைமேல் கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடியிணையே பரவும்
நிருத்தர் கீதர் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

கூறுகொண்டாய் மூன்றும் ஒன்றாகக் கூட்டியோர் வெங்கணையால்
மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்த மீதென்று எம்பெருமான் அணிந்த
நீறுகொண்டார் இடர் களையாய் நெடுங்கள மேயவனே.

குன்றின் உச்சி மேல்விளங்கும் கொடிமதில் சூழ் இலங்கை
அன்றி நின்ற அரக்கர்கோனை அருவரைக் கீழ் அடர்த்தாய்
என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி இராப் பகலும்
நின்று நைவார் இடர் களையாய் நெடுங்கள மேயவனே.

வேழவெண் கொம்பொசித்த மாலும் விளங்கிய நான்முகனும்
சூழவெங்கும் தேட ஆங்கோர் சோதியுள்ளாகி நின்றாய்
கேழல் வெண்கொம்பணிந்த பெம்மான் கேடிலா பொன்னடியின்
நீழல் வாழ்வார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

வெஞ்சொல் தஞ்சொல் ஆக்கி நின்ற வேடமிலாச் சமணுந்
தஞ்சமில்லாச் சாக்கியரும் தத்துவ மொன்றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே
நெஞ்சில் வைப்பார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

நீடவல்ல வார்சடையான் மேய நெடுங்களத்தை
சேடர் வாழும் மாமருகிற் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவன்மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும் பாட வல்லார் பாவம் பறையுமே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

1. திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளியது

(வாழ்க்கையில் வளம்பெற இப்பதிகத்தை ஓதி வரவும். குழந்தைகளுக்கு நல்ல ஞாபக சக்தியை அளித்து படிப்பில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கக் கூடிய பதிகம். குழந்தைப் பருவத்திலிருந்தே ஓதி வந்தால் ஞான வளத்தை சிவனருளால் எளிதில் பெற முடியும்.)

பண் : நட்டபாடை      

தோடு டையசெவி யன்விடை யேறியோர் தூவெண் மதிசூடிக்
காடு டையசுடலைப் பொடி பூசியென் னுள்ளங் கவர் கள்வன்
ஏடு டையமல ரான்முனை நாட்பணிந் தேத்த அருள் செய்த
பீடு டையபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே.

முற்ற லாமையிள நாகமோ டேனமுளைக் கொம் பவைபூண்டு
வற்ற லோடுகல னாப்பலி தேர்ந்தென துள்ளங் கவர் கள்வன்
கற்றல் கேட்ட லுடை யார்பெரி யார்கழல் கையால் தொழுதேத்தப்
பெற்ற மூர்ந்தபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே.

நீர்ப ரந்த நிமிர் புன்சடை மேலோர் நிலாவெண் மதிசூடி
ஏர்ப ரந்தயின வெள்வளை சோரஎன் உள்ளங் கவர்கள்வன்
ஊர்ப ரந்தவுல கின்முத லாகிய ஓரூரிது வென்னப்
பேர்ப ரந்தபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே.

விண்ம கிழ்ந்தமதி லெய்த்து மன்றி விளங்கு தலையோட்டில்
உண்ம கிழ்ந்துபலி தேரிய வந்தென துள்ளங் கவர்கள்வன்
மண்ம கிழ்ந்தஅர வம்மலர்க் கொன்றை மலிந்த வரைமார்பில்
பெண்ம கிழ்ந்த பிரமாபுர மேவிய பெம்மா னிவனன்றே.

பெருமாள் ஆலயங்களில் துவார பாலகராக அருள்புரியும் தெய்வமே ஸ்ரீவிஷ்வக்சேனர் என்றழைக்கப்படும் சேனை முதலியார் ஆவார். திருமகளைக் கொடியில் ஏந்திய இவரைத் தரிசித்து பெருமாள் பிரசாதமான துளசித் தீர்த்தத்தை அருந்தி வந்தால் விந்து குற்றங்கள் நீங்கும்.

ஒருமை பெண்மையுடை யன்சடை யன்விடையூரும் இவனென்ன
அருமை யாகவுரை செய்ய அமர்ந்தென துள்ளங் கவர்கள்வன்
கருமை பெற்ற கடல் கொள்ள மிதந்ததோர் காலம் இதுவென்னப்
பெருமை பெற்றபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.

மறை கலந்தஒலி பாடலோடு ஆடலராகி மழுவேந்தி
இறை கலந்த இனவெள் வளைசோர என்னுள்ளங் கவர்கள்வன்
கறை கலந்த கடியார் பொழில் நீடுயர் சோலைக் கதிர் சிந்தப்
பிறை கலந்த பிரமா புரமேவிய பெம்மான் இவனன்றே.

சடை முயங்கு புனலன் அனலன் எரிவீசிச் சதிர்வெய்த
உடை முயங்கு மரவோடுழி தந்தென துள்ளங் கவர்கள்வன்
கடன் முயங்கு கழிசூழ் குளிர்கானலம் பொன்னஞ் சிறகன்னம்
பெடை முயங்குபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே.

வியரிலங்கு வரையுந்திய தோள்களை வீரம் விளைவித்த
உயரிலங்கை அரையன் வலிசெற் றெனதுள்ளங் கவர்கள்வன்
துயரிலங்கு் உலகிற்பல ஊழிகள் தோன்றும் பொழுதெல்லாம்
பெயரிலங்குபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே.

தாணுதல் செய்திறை காணிய மாலொடு தண்டா மரையானும்
நீணுதல் செய்தொழியந் நிமிர்ந்தான் எனதுள்ளங் கவர்கள்வன்
வாணுதல் செய் மகளிர் முதலாகிய வையத்தவர் ஏத்தப்
பேணுதல் செய்பிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே.

புத்த ரோடுபொறியில் சமணும் புறங்கூற நெறிநில்லா
ஒத்த சொல்ல உலகம் பலிதேர்ந் தெனதுள்ளங் கவர்கள்வன்
மத்த யானை மறுகவ்வுரி போர்த்ததோர் மாயம் இதுவென்னப்
பித்தர் போலும்பிர மாபுரம் மேவிய பெம்மா னிவனன்றே.

அரு நெறிய மறைவல்ல முனியகன் பொய்கை அலர்மேய
பெரு நெறியபிரமாபுர மேவிய பெம்மான் இவன்றன்னை
ஒரு நெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரைசெய்த
திரு நெறிய தமிழ்வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

2. சுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளியது

(கபால நோய்கள் அனைத்தும் விலக அருள் புரிவது இப்பதிகம். மூளையில் உண்டாகும் கட்டி, புற்று நோய், cerebral thrombosis. meningitis (மூளைக் காய்ச்சல்) போன்ற நோய்கள் வராது தற்காத்துக் கொள்ள உதவும் அற்புதமான பதிகம். தெளிந்த அறிவு கிட்டும்.)

                     

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்துறையுள்
அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.

முதன் முதலில் கடவுள் தரிசனம் பெற்றவர்கள் யார்?
ஆப்பிரிக்கா நாட்டில் அரிசோனா என்னும் தலத்திலுள்ள புனிதமான கறுப்பு இன மக்களுக்கே முதன் முதலில் மனித வரலாற்றில் இறை தரிசனம் கிட்டியது. பொருளாசை என்பது ஒரு துளியும் அற்ற இப்புனிதர்களுக்கு கடவுளே மனமுவந்து தரிசனம் தந்தருளினார்.

நாயேன் பலநாளும் நினைப்பின்றி மனத்துன்னைப்
பேயாய்த் திரிந்தெய்த்தேன் பெறலாகா அருள்பெற்றேன்
வேயார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள்
ஆயா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.

மன்னே மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னைப்
பொன்னே மணிதானே வயிரம்மே பொருதுந்தி
மின்னார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்துறையுள்
அன்னே உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.

முடியேன் இனிப் பிறவேன் பெறின் மூவேன் பெற்றம் ஊர்தி
கொடியேன் பலபொய்யே உரைப்பேனைக் குறிகொள்நீ
செடியார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்துறையுள்
அடிகேள் உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.

பாதம் பணிவார்கள் பெறுபண்டம்மது பணியாய்
ஆதன் பொருளானேன் அறிவில்லேன் அருளாளா
தாதார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட் துறையுள்
ஆதி உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.

தண்ணார் மதிசூடீ தழல் போலுந் திருமேனி
எண்ணார் புரமூன்றும் எரி உண்ண நகை செய்தாய்
மண்ணார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட் துறையுள்
அண்ணா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.

ஊனாய் உயிரானாய் உடலானாய் உலகானாய்
வானாய் நிலனானாய் கடலானாய் மலையானாய்
தேனார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட் துறையுள்
ஆனாய் உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.

ஏற்றார் புரமூன்றும் எரி உண்ணச் சிலை தொட்டாய்
தேற்றாதன சொல்லித் திரிவேனோ செக்கர்வானீர்
ஏற்றாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட் துறையுள்
ஆற்றாய் உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.

மழுவாள் வலன் ஏந்தி மறை ஓதி மங்கை பங்கா
தொழுவார் அவர் துயராயின தீர்த்தல் உனதொழிலே
செழுவார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட் துறையுள்
அழகா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.

காரூர் புனலெய்திக் கரை கல்லித் திரைக் கையால்
பாரூர் புகழெய்தித் திகழ் பன்மாமணி உந்திச்
சீரூர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட் துறையுள்
ஆரூரன் எம்பெருமாற்காள் அல்லேன் எனலாமே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

3. திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய திருநீற்றுப் பதிகம்

(ஏவல், பில்லி, சூன்யம், காற்று சேஷ்டை போன்ற துன்பங்கள் விலகும். எதிரிகளின் பொறாமை, கண் திருஷ்டி தோஷங்கள் விலகும். கன்னிப் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கூடிய பதிகம். திருநீற்றை நீரில் குழைத்து கை, கால்களில் 36 இடங்களில் காப்பாகப் பூசி இப்பதிகத்தை ஓதி வருதல் சிறப்பு. காலை, மதியம், மாலை மூன்று வேளைகளிலும் நீராடி முறையாக திருநீறணிந்து இப்பதிகத்தை ஓதி வந்தால் தியானம் எளிதில் கை கூடும். முழுமையான ஆரோக்யம் கிட்டும்)

         

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாய் உமை பங்கன் திருஆலவாயான் திருநீறே.

வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல் வயல் சூழ்ந்த திருஆலவாயான் திருநீறே.

உலகில் முதன் முதலாக முள் இல்லாத வில்வமரம் தோன்றிய அற்புத தலமே திருச்சி லால்குடி அருகே உள்ள நகர் ஸ்ரீஅப்பிரதட்சிணேஸ்வரர் சிவாலயமாகும். வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாதப் பிறப்பு தினங்களில் தாமே அரைத்த மஞ்சளை இத்தல வில்வமரத்திற்குப் பூசி வலம் வந்து வணங்குவதால் பணி நிரந்தரம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கு
(confirmation of jobs) வேலை நிரந்தரமாகும்.

முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆலவாயான் திருநீறே.

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆலவாயான் திருநீறே.

பூச இனியது நீறு புண்ணியமாவது நீறு
பேச இனியது நீறு பெருந் தவத்தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆலவாயான் திருநீறே.

அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆலவாயான் திருநீறே.

எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே.

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவமாவது நீறு
அரா வணங்குத் திருமேனி ஆலவாயான் திருநீறே.

மாலொடு அயனறியாத வண்ணமும் உள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலமதுண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே.

குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமுங் கூடக்
கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்திசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு
அண்டத்தவர் பணிந்தேத்தும் ஆலவாயான் திருநீறே.

ஆற்றல் அடல்விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞான சம்பந்தன்
தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணியாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

4. திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளியது

(எம பயம் விலக, ம்ருத்யு தோஷம் விலக அருள் புரியும் பதிகம். அவரவர் பிறந்த தினங்களிலும், திருமண ஆண்டு நிறைவு நாட்களிலும், குறிப்பாக 60, 80 ஆண்டு வயது நிறைவு நாட்களிலும் இப்பதிகத்தை ஓதி உரிய தான தர்மங்கள் அளித்து வந்தால் அகால மரணம் ஒருக்காலும் அண்டாது தற்காத்துக் கொள்ளலாம். நீண்ட ஆயுள் கிட்டும்).

பண் : காந்தாரபஞ்சமம்      

துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்
நெஞ்சக நைந்து நினைமின் நாடொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்த கூற்று
அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே.

மந்திர நான்மறையாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை ஆள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே.

ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்
ஞான விளக்கினை ஏற்றி நன்புலத்து
ஏனை வழிதிறந்து ஏத்துவார்க் கிடர்
ஆன கெடுப்பன அஞ்செழுத்துமே.

நல்லவர் தீயர் எனாது நச்சினர்
செல்லல் கெடச் சிவ முத்தி காட்டுவ
கொல்ல நமன்தமர் கொண்டு போமிடத்து
அல்லல் கெடுப்பன அஞ்செழுத்துமே.

கொங்கலர் மன்மதன் வாளி ஐந்தகத்து
அங்குள பூதமும் அஞ்ச வைம்பொழில்
தங்கரவின் படம் அஞ்சும் தம்முடை
அங்கையில் ஐவிரல் அஞ்செழுத்துமே.

தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மைவினை அடர்த் தெய்தும் போழ்தினும்
அம்மையிலுந் துணை அஞ்செழுத்துமே.

வீடு பிறப்பை யறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பின்னை நாள்தொறு
மாடு கொடுப்பன மன்னு மாநடம்
ஆடி உகப்பன அஞ்செழுத்துமே.

அஷ்டம சனி, ஏழரை ஆண்டுச் சனி, சனி தசை, சனி புத்தி துன்பங்களிலிருந்து மீள சனி பகவான் தனிச் சன்னதி கொண்டு அருளும் ஆலயங்களில் சுவாமிக்கு புளியோதரை நைவேத்யம் செய்து தானமாக வழங்கவும். சுவாமியை 51 முறை வலம் வந்து வணங்குதல் நலம்.

வண்டமரோதி மடந்தை பேணின
பண்டை இராவணன் பாடி உய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்கு
அண்டம் அளிப்பன அஞ்செழுத்துமே.

கார்வணன் நான்முகன் காணுதற் கொணாச்
சீர்வணச் சேவடி செவ்வி நாள்தொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர்வணம் ஆவன அஞ்செழுத்துமே.

புத்தர் சமண் கழுக்கையர் பொய்கொளாச்
சித்தத்தவர்கள் தெளிந்துதேறின
வித்தக நீறணிவார் வினைப்பகைக்கு
அத்திரம் ஆவன அஞ்செழுத்துமே.

நற்றமிழ் ஞான சம்பந்தன் நான்மறை
கற்றவன் காழியர் மன்னன் உன்னிய
அற்றமில் மாலை ஈரைந்தும்அஞ்செழுத்து
உற்றன வல்லவர் உம்பர் ஆவரே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

5. திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளியது

(காரியங்கள் சித்தி பெற, எடுத்த காரியம் தடையில்லாமல் செயல்படுத்த உதவும் பதிகம். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறவும், எளிதில் வேலை வாய்ப்புப் பெறவும் உதவும் பதிகம்).

பண் : காந்தாரபஞ்சமம்

         
பல வருடங்கள் கஷ்டப்பட்டு இறைவனைப் பூஜித்து பெற்ற புண்ணிய சக்தியை ஓரிரு வினாடிகளில் ஏற்படும் கடுமையான கோபத்தில் இழந்து விடுபவர்கள் உண்டு. செல்வம், பதவி, நண்பர்கள், சுற்றம் இவற்றைக் கோபத்தால் வெளிவரும் சூடான வார்த்தைகளால் இழந்தோர் எத்தனையோ பேர். இவ்வாறு கோபத்தால் ஏற்படும் தீய விளைவுகளிலிருந்து ஓரளவேனும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள விரும்புவோர்கள் கும்பகோணம் திருபுவனம் ஸ்ரீகம்பஹரேஸ்வரர் சிவாலயத்தில் உள்ள கோபுரம் தாங்கித் தூண்களை வணங்கி வலம் வருதல் நலம். சித்திரை, ஐப்பசி மாதங்களில் வரும் ஞாயிற்றுக் கிழமைகள் இத்தகைய வழிபாட்டிற்கு சிறப்பான பலன்களை அளிக்கக் கூடியவை.

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.

நம்புவா ரவர் நாவினவிற்றினால்
வம்பு நாண்மலர் வார்மது வொப்பது
செம்பொனார் திலகம் உலகுக் கெலாம்
நம்பன் நாமம் நமச்சிவாயவே.

நெக்குள் ஆர்வம் மிகப் பெருகி நினைந்து
அக்கு மாலை கொடு அங்கையில் எண்ணுவார்
தக்க வானவராய்த் தகுவிப்பது
நக்கன் நாமம் நமச்சிவாயவே.

இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
நயம் வந்தோத வல்லார் தமை நண்ணினால்
நியமந்தான் நினைவார்க்கினியான் நெற்றி
நயனன் நாமம் நமச்சிவாயவே.

கொல்வாரேனுங் குணம் பல நன்மைகள்
இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லார் நாமம் நமச்சிவாயவே.

மந்தரம்மன்ன பாவங்கள் மேவிய
பந்தனையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமு மல்குமால்
நந்தி நாமம் நமச்சிவாயவே.

நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்
உரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர்
விரவியே புகுவித்திடும் என்பரால்
வரதன் நாமம் நமச்சிவாயவே.

பூலோகத்தில் சந்திர தீர்த்தம்
என்ற பெயர் பெற்ற தீர்த்தங்களில் (உதாரணம் திருவெண்காடு, ஸ்ரீரங்கம், திங்களூர்) ஒவ்வொரு திங்கட் கிழமையும் சந்திர பகவானே தீர்த்த நீராடல் புரிந்து அத்திருத்தலத்தில் உறையும் சிவ மூர்த்தியை வழிபட்டுச் செல்கிறார். பவ்வேறு மனக்கொந்தளிப்புகளால் அடுத்து செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றித் தெளிவில்லாத நிலையில் இருப்போர் திங்கட் கிழமைகளில் சூரியோதய நேரத்தில் சந்திர தீர்த்தங்களில் நீராடி தீர்த்தக் கரையில் அமர்ந்து ஒரு மணி நேரத்திற்குக் குறையாமல் பஞ்சாட்சரம் ஜபித்து வந்தால் மனம் தெளிவடையும்.

இலங்கை மன்னன் எடுத்த அடுக்கன் மேல்
தலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை
நலங் கொள் நாமம் நமச்சிவாயவே.

போதன் போதன கண்ணனும் அண்ணல்தன்
பாதந்தான் முடி நேடிய பண்பராய்
யாதுங் காண்பரிதாகி அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சிவாயவே.

கஞ்சி மண்டையர் கையில் உண் கையர்கள்
வெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால்
விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய்
நஞ்சுண் கண்டன் நமச்சிவாயவே.

நந்தி நாமம் நமச்சிவாய வெனும்
சந்தையால் தமிழ் ஞானசம்பந்தன் சொல்
சிந்தையால் மகிழ்ந்து ஏத்தவல்லார் எல்லாம்
பந்த பாசம் அறுக்க வல்லார்களே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

6 திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியது

(திக்கு வாய், தெளிவாக வார்த்தைகளை உச்சரிக்க இயலாதோர் பாடி பயன்பெற உதவும் பதிகம். வக்கீல்கள், ஆசிரியர்கள், முகவர்கள் போன்று பேச்சு, வாக்கை ஆதாரமாக உடைய தொழில் புரிவோருக்கு உதவும் பதிகம். மனமும் வாக்கும் ஒன்றுபட்டு தெளிந்த சிந்தனை பெற, தெளிவான முடிவெடுக்க சிவனருள் கிட்டும்.)

பண் : காந்தாரபஞ்சமம்

         

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழ
கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சிவாயவே.

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரன் அஞ்சாடுதல்
கோவினுக் கருங்கலம் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே.

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை ஒன்றும் இல்லையாம்
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்றறுப்பது நமச்சிவாயவே.

இடுக்கண் பட்டிருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கில் பிரானென்று வினவுவோம் அல்லோம்
அடுக்கல் கீழ்க் கிடக்கினு மருளின் நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே.

இந்த உலகத்தில் யார் எங்கிருந்து இறைவனிடம் வேண்டினாலும் அவர்கள் பிரார்த்தனைகள் அனைத்தும் உறையும் இடமே திருச்சி உறையூர் ஆகும். மஞ்சள், வெள்ளை, கருப்பு, சிவப்பு என உலகில் உள்ள அனைத்து நிறமுடைய மக்களாலும் வணங்கப்பட வேண்டிய தெய்வமே உறையூரில் அருள்புரியும் ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வர மூர்த்தி ஆவார்.

வெந்த நீறருங்கலம் விரதிகட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம் அருமறை ஆறங்கம்
திங்களுக் கருங்கலம் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கலம் நமச்சிவாயவே.

சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க் கல்லால்
நலமிலன் நாடொறும் நல்குவான் நலன்
குலமில ராகினுங் குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சிவாயவே.

வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினேன் ஓடிச் சென்று உருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே.

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே.

முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறியே சரணாதல் திண்ணமே
அந்நெறியே சென்றங்கு அடைந்தவர்க்கெலாம்
நன்னெறியாவது நமச்சிவாயவே.

மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சிவாயப் பத்தும்
ஏத்தவல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

7. சுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளியது

(ஒருவர் நமக்கு செய்த நன்மை எல்லாவற்றையும் மறந்து விட்டு அவர் செய்த ஏதாவது ஒன்றிரண்டு தீமையை மட்டுமே மனதில் வைத்திருப்பவர் மனம் தெளிவு பெற இப்பதிகம் உதவும். நன்றி மறப்பது நன்றன்று. செய் நன்றி மறவாத உத்தம குணத்தையும், சற்குரு நமக்கு அளித்த வரப் பிரசாதங்களை நினைவு கூர்ந்து குரு சேவையில் உன்னதம் பெறவும் பக்தியை வளர்ப்பது இப்பதிகம். மேலும், ஒருவரிடம் பல நற்குணங்கள் மிகுந்திருக்கும், ஆனால் அவரிடம் ஏதாவது ஒன்றிரண்டு தீய குணங்கள் இருக்கலாம். ஆனால், பாலிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும் அன்னப் பறவையைப் போல நாம் ஒருவரிடம் உள்ள தீய குணத்தை விடுத்து நற்குணத்தை மட்டுமே பாராட்டும் பண்பை வளர்க்க அருள் புரிவது இப்பதிகம். மரணத் தறுவாயில் இருக்கும் ஒருவரிடம் இப்பதிகத்தை ஓதுவதால் அவர் மனச் சாந்தி பெற்று இறைவனடி சேரவும் இறை பக்தி மிகுந்த அடுத்த பிறவிகளை அடையவும் வழி ஏற்படும்.)

பண் : பழம்பஞ்சுரம்


ஜாதகப் பொருத்தம் பாராது நிறைவேறிய திருமணங்களால் ஏற்படும் குடும்பப் பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும் தலமே திருச்சி லால்குடி அருகே உள்ள நகர் திருத்தலமாகும். இரு பத்தினிகளுடன் இங்கு அருளும் சூரிய மூர்த்திக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் வில்வ மாலை சார்த்தி வணங்குவதால் கணவன் மனைவியரிடையே உடல் கூறுகளால் ஏற்படும் துன்பங்களுக்கு ஓரளவு நிவர்த்தி கிட்டும்.

மற்றுப்பற் றெனக்கின்றி நின்திருப் பாதமே மனம் பாவித்தேன்
பெற்றலும் பிறந்தேன்இனிப் பிறவாத தன்மை வந்தெய்தினேன்
கற்றவர் தொழுதேத்துஞ் சீர்க்கறை ஊரிற் பாண்டிக் கொடுமுடி
நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

இட்டன் நும்மடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள் மறந்திட்ட நாள்
கெட்ட நாள் இவையென்றலால் கருதேன் கிளர்புனற் காவிரி
வட்ட வாசிகைகொண்டடி தொழுதேத்து பாண்டிக் கொடுமுடி
நட்டவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

ஓவு நாள் உணர்வழியும் நாள் உயிர் போகும் நாள் உயர் பாடை மேல்
காவு நாள் இவை என்றலால் கருதேன் கிளர் புனற்காவிரிப்
பாவு தண்புனல் வந்திழி பரஞ்சோதி பாண்டிக் கொடுமுடி
நாவலா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

எல்லையில் புகழ் எம்பிரான் எந்தை தம்பிரான் என்பொன் மாமணி
கல்லை உந்தி வளம்பொழிந்திழி காவிரி அதன் வாய்க்கரை
நல்லவர் தொழுதேத்துஞ் சீர்க்கரை ஊரிற் பாண்டிக் கொடுமுடி
வல்லவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

ஸ்ரீசரஸ்வதி பிரம்ம ஐக்யம்
கொடுமுடி

அஞ்சினார்க்கரண் ஆதியென்றடி யேனும் நான் மிக அஞ்சினேன்
அஞ்சல் என்றடித் தொண்டனேற் கருள் நல்கினாய்க் கழிகின்றதென்
பஞ்சின் மெல்லடிப் பாவைமார் குடைந்தாடு பாண்டிக் கொடுமுடி
நஞ்சணி கண்டம் நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

ஏடு வான் இளந் திங்கள் சூடினை என்பின் கொல்புலித் தோலின் மேல்
ஆடு பாம்பதரைக் கசைத்த அழகனே அந்தண் காவிரிப்
பாடு தண் புனல் வந்திழி பரஞ் சோதி பாண்டிக் கொடுமுடி
சேடனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

விரும்பி நின்மலர்ப் பாதமே நினைந்தேன் வினைகளும் விண்டனன்
நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெழில் பெற நின்ற காவிரிக் கோட்டிடைக்
குரும்பை மென்முலைக் கோதைமார் குடைந்தாடு பாண்டிக் கொடுமுடி
விரும்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

செம்பொனேர் சடையாய்த் திரிபுரம் தீயெழச் சிலை கோலினாய்
வம்புலாங் குழலாளைப் பாகம் அமர்ந்து காவிரி கோட்டிடை
கொம்பின்மேல் குயில் கூவ மாமயில் ஆடு பாண்டிக் கொடுமுடி
நம்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

கடவுள் கருண உள்ளவர் என்று எப்படிச் சொல்கிறோம்? நீ ஒரு நெல் விதைத்தால் அதை உனக்கு நூறு நெல்லாகத் திருப்பித் தருகிறார். கடவுளின் இந்தக் கருணையைப் பகிர்ந்து கொள்ளவே அந்த நூறு நெல்மணிகளில் 95 நெல்லை அன்னதானம் செய்து விட்டு நமக்கு ஐந்து நெல்லை வைத்துக் கொள்ளலாம் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.

சாரணன் தந்தை எம்பிரான் எந்தை தம்பிரான் என் பொன் மாமணியென்று
பேரெணாயிரங் கோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார்
நாரணன் பிரமன் தொழுங்கறை ஊரிற் பாண்டிக் கொடுமுடி
காரணா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

கோணிய பிறை சூடியைக் கறை ஊரிற் பாண்டிக் கொடுமுடி
பேணிய பெருமானைப் பிஞ்ஞகப் பித்தனைப் பிறப்பில்லியைப்
பாணுலா வரிவண்டறை கொன்றைத் தாரனைப் படப் பாம்பரை
நாணனைத் தொண்டன் ஊரன் சொல்லிவை சொல்லுவார்க் கில்லை துன்பமே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

8. திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய திருக்ஷேத்திரக்கோவை

(கடல் கடந்து வியாபாரம் செய்கின்றவர்கள், கடல் கடந்து இல்லத்தைப் பிரிந்து அயல் நாடுகளில் வேலை செய்பவர்கள் பத்திரமாக இல்லம் வந்து சேர இப்பதிகம் உதவும். காதல் திருமணங்கள், சாதி, மத, இன வேறுபாடுடைய திருமண சம்பந்தங்களால் பல குடும்பங்களில் மனக் கொந்தளிப்புகள் ஏற்படும். இத்தகைய மனக் குழப்பங்கள் நீங்கி சுமுகமான உறவு ஏற்பட, குடும்பத்தில் அமைதி நிலவ இப்பதிகப் பாடல்கள் உறுதுணையாக நிற்கும்.)

பண் : இந்தளம்

சட்டையை அணியும்போது முதலில் வலது கையை நுழைத்து அணிவதால் குசம் என்னும் நற்சக்திகளைப் பெறலாம்.

ஆரூர் தில்லை அம்பலம் வல்லந் நல்லம் வடகச்சியும் அச்சிறுபாக்கம் நல்ல
கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி கடல்சூழ் கழிப் பாலை தென்கோடி பீடார்
நீரூர் வயல் நின்றியூர் குன்றியூருங் குருகா வையூர் நாரையூர் நீடுகானப்
பேரூர் நன்னீள் வயல் நெய்த்தானமும் பிதற்றாய் பிறைசூடிதன் பேரிடமே.

அண்ணாமலை ஈங்கோயும் அத்தி முத்தாறு அகலா முதுகுன்றம் கொடுங்குன்றமும்
கண்ணார் கழுக்குன்றம் கயிலை கோணம் பயில் கற்குடி காளத்தி வாட்போக்கியும்
பண்ணார் மொழி மங்கையோர் பங்குடையான் பரங்குன்றம் பருப்பதம் பேணி நின்றே
எண்ணாய் இரவும் பகலும் இடும்பைக் கடல் நீந்தலாங் காரணமே.

பறவைகள் கூடு, புலி, மான்களின் தோல், மிருகங்களின் எலும்புக் கூடு இவற்றை அலங்காரத்திற்காக வீட்டில் வைத்திருப்பவர்கள் அந்த பறவைகள், மிருகங்கள் இயற்கையாக இறந்ததுதானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அப்பிராணிகள் மனிதர்களால் வேட்டையாடப்பட்டு, கொல்லப்பட்டிருந்தால் அவைகளின் வேதனைக் குரல் இல்லத்தில் எதிரொலித்து துன்பம் பெருகும் என்பதை நினைவில் கொள்ளவும்.

அட்டானம் என்றோதிய நாலிரண்டும் அழகன் உறைகா அனைத்துந் துறைகள்
எட்டாந் திருமூர்த்தியின் காடொன்பதுங் குளமூன்றும் களம் அஞ்சும் பாடி நான்கும்
மட்டார் குழலாள் மலை மங்கை பங்கன் மதிக்கும் இடமாகிய பாழி மூன்றும்
சிட்டானவன் பாசூர் என்றே விரும்பாய் அரும்பாவங்கள் ஆயின தேய்ந்தறவே.

அறப்பள்ளி அகத்தியான்பள்ளி வெள்ளைப் பொடிப் பூசி ஆறணிவான் அமர் காட்டுப்பள்ளி
சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன் பள்ளி திருநனி பள்ளி சீர்மகேந்திரத்துப்
பிறப்பில்லவன் பள்ளி வெள்ளச் சடையான் விரும்பும் மிடைப் பள்ளி வண்சக்கர மால்
உறைப்பாலடிபோற்றக் கொடுத்த பள்ளி உணராய் மடநெஞ்சமே உன்னி நின்றே.

ஆறை வடமாகறல் அம்பர் ஐயாறு அணியார் பெருவேளூர் விளமர் தெங்கூர்
சேறை துலை புகலூர் அகலாதிவை காதலித்தான் அவன்சேர் பதியே
·· ··

மனவஞ்சர் மற்றோட முன்மாதராரும் மதிகூர் திருக்கூடலில் ஆலவாயும்
இன வஞ்சொல் இலா இடைமாமருதும் இரும்பைப் பதி மாகாளம் வெற்றியூரும்
கனமஞ்சின மால் விடையான் விரும்புங் கருகாவூர் நல்லூர் பெரும்புலியூர்
தனமென் சொலிற்றஞ்சம் என்றே நினைமின் தவமாம் மலமாயின தான் அறுமே.

திருவேதிகுடி

மாட்டூர் மடப்பாச்சிலாச் சிராமம் முண்டீச்சரம் வாதவூர் வாரணாசி
காட்டூர் கடம்பூர் படம்பக்கங் கொட்டுங் கடல் ஒற்றியூர் மற்று உறையூர் அவையும்
கோட்டூர் திருவாமாத்தூர் கோழம்பமுங் கொடுங்கோவலூர் திருக்குணவாயில்
··

·· குலாவு திங்கட் சடையான் குளிரும் பரிதி நியமம்
போற்றூர் அடியார் வழிபாடு ஒழியாத் தென்புறம்பயம் பூவணம் பூழியூரும்
காற்றூர் வரையன் றெடுத்தான் முடிதோள் நெரித்தான் உறைகோயில் என்று நீ கருதே.

நெற்குன்றம் ஓத்தூர் நிறைநீர் மருகல் நெடுவாயில் குறும்பலா நீடுதிரு
நற்குன்றம் வலம்புரம் நாகேச்சுரம் நளிர்சோலையுஞ் சேனை மாகாளம் வாய்மூர்
கற்குன்றம் ஒன்றேந்தி மழைதடுத்த கடல்வண்ணனும் மாமலரோனுங் காணாச்
சொற்கென்றுந் தொலைவிலாதான் உறையும் குடமூக்கென்று சொல்லிக் குலாவுமினே.

குத்தங்குடி வேதிகுடி புனல்சூழ் குருந்தங்குடி தேவன்குடி மருவும்
அத்தங்குடி தண்டிரு வண்குடியும் அலம்புஞ் சலந்தன் சடை வைத்துகந்த
நித்தன் நிமலன் உமையோடுங்கூட நெடுங்காலம் உறைவிடம் என்று சொல்லாப்
புத்தர் புறங்கூறிய புன்சமணர் நெடும்பொய்களை விட்டு நினைந்துய்ம்மினே.

அம்மானை அருந்தவமாகி நின்ற அமரர் பெருமான் பதியான உன்னிக்
கொய்ம்மா மலர்ச் சோலை குலாவு கொச்சைக் கிறைவன் சிவஞான சம்பந்தன் சொன்ன
இம்மாலை ஈரைந்தும் இருநிலத்தில் இரவும் பகலும் நினைந்தேத்தி நின்று
விம்மா வெருவா விரும்பும் அடியார் விதியார் பிரியார் சிவன் சேவடிக்கே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

9. திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியது

(ஒரு கொள்கையில் முடிவெடுக்கவும், ஒரு காரியத்தில் முடிவெடுக்கவும், குடும்பப் பிரச்னையில் முடிவெடுக்கவும் இப்பதிகம் அருள் செய்யும். எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் சற்குருவின் ஆணைப்படி, அவர் காட்டிய வழியில் செல்வதே சாலச் சிறந்தது. சற்குரு அமையப் பெறாதோர் சிவனருள் காட்டும் வழியில் செல்ல விரும்பும்போது அவர்களுக்கு இப்பதிகம் சாட்சியாக அமையும். ஆனால், இப்பதிகத்தைச் சாட்சியாக வைத்து எடுத்த முடிவை எக்காரணம் முன்னிட்டும் மாற்றுதல் கூடாது என்பது இறை ஆணை. இப்பதிகத்தைச் சாட்சியாக வைத்து எடுக்கும் எந்தக் காரியமும் தவறாகப் போகாது என்பது சித்தர்கள் வாக்கு.சித்தர்கள் அளித்துள்ள இந்த அற்புத வரப்பிரசாதத்தை நன்முறையில் கவனமாகக் கையாளவும்.)

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து விதமான நாகதோஷங்களையும் தீர்க்கும் அற்புத தலமே திருச்சி மலைக்கோட்டை அருகில் உள்ள ஸ்ரீநாகநாத சுவாமி திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் உள்ள ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு விதமான நாக தோஷங்களைத் தீர்க்கும் சிறப்புடையவை. தங்கள் கையால் அரைத்த மஞ்சளைத் தடவி இத்திருத்தலத்தில் உள்ள ஒவ்வொரு தூணையும் 16 முறை வலம் வந்து வணங்குதல் நலம்.

தில்லைச் சிற்றம்பலமுஞ் செம்பொன் பள்ளி தேவன்குடி சிராப்பள்ளி தெங்கூர்
கொல்லிக் குளிரறைப் பள்ளி கோவல் வீரட்டங் கோகரணங் கோடிகாவும்
முல்லைப் புறவம் முருகன் பூண்டி முழையூர் பழையாறை சத்தி முற்றம்
கல்லில் திகழ் சீரார் காளத்தியும் கயிலாய நாதனையே காணலாமே.

ஆரூர் மூலட்டானம் ஆனைக்காவும் ஆக்கூரில் தான்தோன்றி மாடம் ஆவூர்
பேரூர் பிரமபுரம் பேராவூரும் பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங்
கூரார் குறுக்கை வீரட்டானமும் கோட்டூர் குடமூக்குக் கோழம்பமும்
காரார் கழுக்குன்றும் கானப் பேருங் கயிலாய நாதனையே காணலாமே.

இடைமருது ஈங்கோய் இராமேச்சுரம் இன்னம்பர் ஏரிடவை ஏமப் பேரூர்
சடைமுடி சாலைக்குடி தக்களூர் தலையாலங்காடு தலைச்சங்காடு
கொடுமுடி குற்றாலம் கொள்ளம்பூதூர் கோத்திட்டைகோட்டாறு கோட்டுக்காடு
கடைமுடி கானூர் கடம்பந்துறை கயிலாய நாதனையே காணலாமே.

ஸ்ரீசசபிந்து மகரிஷி
ஸ்ரீநாகநாதசுவாமி கோயில்

எச்சில் இளமர் ஏமநல்லூர் இலம்பை யங்கோட்டூர் இறையான் சேரி
அச்சிறு பாக்கம் அளப்பூர் அம்பர் ஆவடு தண்டுறை அழுந்தூர் ஆறை
கச்சினங் கற்குடி கச்சூர் ஆலக் கோயில் கரவீரம் காட்டுப்பள்ளி
கச்சிப் பலதளியும் ஏகம்பத்துங் கயிலாய நாதனையே காணலாமே.

கொடுங்கோளூர் அஞ்சைக்களம் செங்குன்றூர் கொங்கணம் குன்றியூர் குரக்குக்காவும்
நெடுங்களம் நன்னிலம் நெல்லிக்காவும் நின்றியூர் நீடூர் நியமநல்லூர்
இடும்பாவனம் எழுமூர் ஏழூர் தோழூர் எறும்பியூர் ஏராரும் ஏமகூடம்
கடம்பை இளங்கோயில் தன்னின் உள்ளுங் கயிலாய நாதனையே காணலாமே.

மண்ணிப் படிக்கரை வாழ்கொளி புத்தூர் வக்கரை மந்தாரம் வாரணாசி
வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி விளமர் விராடபுரம் வேட்களத்தும்
வெண்ணை அருட்டுறை தண்பெண்ணாடகம் பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூருங்
கண்ணை களர்க்காறை கழிப்பாலையுங் கயிலாய நாதனையே காணலாமே.

வீழிமிழலை வெண்காடு வேங்கூர் வேதிகுடி விசயமங்கை வியலூர்
ஆழி அகத்தியான்பள்ளி அண்ணாமலை ஆலங்காடும் அரதைப் பெரும்
பாழி பழனம் பனந்தாள் பாதாளம் பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட்டூர் தண்
காழி கடல் நாகைக் காரோணத்துங் கயிலாய நாதனையே காணலாமே.

உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர் உருத்திர கோடி மறைகாட்டுள்ளும்
மஞ்சார் பொதியின் மலை தஞ்சை வழுவூர் வீரட்டம் மாதானம் கேதாரத்தும்
வெஞ்சமாக் கூடல் மீயச்சூர் வைகா வேதீச்சுரம் விவீசுரம் வெற்றியூரும்
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையுங் கயிலாய நாதனையே காணலாமே.

திண்டீச்சரஞ் சேய்ஞலூர் செம்பொன்பள்ளி தேவூர் சிரபுரம் சிற்றேமம் சேறை
கொண்டீச்சரம் கூந்தலூர் கூழையூர் கூடல் குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு
அண்டர் தொழும் அதிகை வீரட்டானம் ஐயாறசோகந்தி ஆமாத்தூரும்
கண்டியூர் வீரட்டங் கருகாவூருங் கயிலாய நாதனையே காணலாமே.

நறையூரிற் சித்தீச்சரம் நள்ளாறு நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல
துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை தோணிபுரம் துருத்தி சோமீச்சரம்
உறையூர் கடல் ஒற்றியூர் ஊற்றத்தூர் ஓமாம்புலியூர் ஓர் ஏடகத்துங்
கறையூர் கருப்பறியல் கன்றாப்பூருங் கயிலாய நாதனையே காணலாமே.

புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர் புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர்
வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல் வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி
நிலமலி நெய்த்தானத்தோ டெத்தானத்தும் நிலவு பெருங்கோயில் பல கண்டால் தொண்டீர்
கலிவலி மிக்கோனைக் கால்விரலால் செற்ற கயிலாய நாதனையே காணலாமே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

10. சுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளியது

பண் : கொல்லிக் கௌவாணம்

காட்டூர்க் கடலே கடம்பூர் மலையே காணப் பேரூராய்
கோட்டூர்க் கொழுந்தே அழுந்தூர் அரசே கொழுநற் கொல்லேறே
பாட்டூர் பலரும் பரவப் படுவாய் பனங் காட்டூரானே
மாட்டூர் அறவா மறவா துன்னைப் பாடப் பணியாயே.

திருப்பாற்கடலிலிருந்து வெளிவந்த ஆலகால விஷம் நாம் நினைப்பது போல் ஒரு சாதாரண விஷம் கிடையாது. பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருப்பவர்கள் கூட அதன் வெப்பக் கிரணங்களால் பஸ்மமாகி விடுவர். அத்தகைய கடுமையான வெப்பம் உடைய ஆலகால விஷத்தை எம்பெருமான் உண்டபோது விஷத்தின் உஷ்ணம் தாளாமல் அவர் கழுத்து, கை, கால், இடுப்பு என திருமேனியின் எல்லாப் பாகங்களிலும் இருந்த நாகங்கள் எல்லாம் தரையில் இறங்கி விட்டன. சிவபெருமானின் உச்சந் தலை ஜடாமுடியை அலங்கரித்த சசபிந்து என்னும் நாகம் மட்டும் அந்தக் கடுமையான ஆலகால வெப்பத்தையும் பொருட்படுத்தாது சிவ பஞ்சாட்சர ஜபத்திலேயே இலயித்திருந்தது. அதன் தியாகத்தை மெச்சிய சிவபெருமான் பிரபஞ்சத்தில் இனி வரும் எந்த நாக தோஷத்தையும் தீர்க்கக் கூடிய ஆசீர்வாத சக்தியை அனுகிரகமாக அந்நாகத்திற்கு அளித்தார். சசபிந்து நாகம் மனித உருவம் கொண்டு மகரிஷியாக துõணில் அமர்ந்து அருளாட்சி செய்யும் திருக்கோயிலே திருச்சி தெப்பக்குளம் அருகே உள்ள ஸ்ரீநாகநாத சுவாமி திருக்கோயிலாகும். ஸ்ரீசசபிந்து மகரிஷிக்குக் கையால் அரைத்த மஞ்சள் காப்பிட்டு வணங்கி வந்தால் நாக தோஷங்களால் தடைபட்டுள்ள திருமணங்கள் விரைவில் நிறைவேறும்.

கொங்கிற் குறும்பிற் குரக்குத் தளியாய் குழகா குற்றாலா
மல்குல் திரிவாய் வானோர் தலைவா வாய்மூர் மணவாளா
சங்கக் குழையார் செவியா அழகா அவியா அனலேந்திக்
கங்குல் புறங் காட்டாடீ அடியார் கவலை களையாயே.

நிறை காட்டானே நெஞ்சத்தானே நின்றியூரானே
மிறைக் காட்டானே புனல்சேர் சடையாய் அனல்சேர் கையானே
மறைக் காட்டானே திருமாந்துறையாய் மாகோணத்தானே
இறைக் காட்டாயே எங்கட்குன்னை எம்மான் தம்மானே.

ஆரூரத்தா ஐயாற் றமுதே அளப்பூர் அம்மானே
காரூர் பொழில்கள் புடைசூழ் புறவில் கருகாவூரானே
பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான் பிறவா நெறியானே
பாரூர் பலரும் பரவப் படுவாய் பாசூர் அம்மானே.

மருகல் உறைவாய் மாகாளத்தாய் மதியஞ் சடையானே
அருகற் பிணி நின்னடியார் மேல அகல அருளாயே
கருகற் குரலாய் வெண்ணிக் கரும்பே கானூர்க் கட்டியே
பருகப் பணியாய் அடியார்க்குன்னைப் பவளப் படியானே.

தாங்கூர் பிணி நின்னடியார் மேல அகல அருளாயே
வேங்கூர் உறைவாய் விளமர் நகராய் விடையார் கொடியானே
நாங்கூர் உறைவாய் தேங்கூர் நகராய் நல்லூர் நம்பானே
பாங்கூர் பலிதேர் பரனே பரமா பழனப் பதியானே.

தேனைக் காவல் கொண்டு விண்ட கொன்றைச் செழுந்தாராய்
வானைக் காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே
ஆனைக் காவில் அரனே பரனே அண்ணாமலையானே
ஊனைக் காவல் கைவிட்டுன்னை உகப்பார் உணர்வாரே.

துருத்திச் சுடரே நெய்த்தானத்தாய் சொல்லாய் கல்லாலா
பருத்தி நியமத் துறைவாய் வெயிலாய்ப் பலவாய்க் காற்றானாய்
திருத்தித் திருத்தி வந்தென் சிந்தை இடங்கொள் கயிலாயா
அருத்தித் துன்னை அடைந்தார் வினைகள் அகல அருளாயே.

புலியூர் சிற்றம்பலத்தாய் புகலூர்ப் போதா மூதூரா
பொலிசேர் புரமூன்றெரியச் செற்ற புரிபுன் சடையானே
வலிசேர் அரக்கன் தடக்கை ஐஞ்ஞான் கடர்த்த மதிசூடி
கலிசேர் புறவிற் கடவூராளீ காண அருளாயே.

கைம்மா உரிவை அம்மான் காக்கும் பலவூர் கருத்துன்னி
மைம்மாந் தடங்கண் மதுரம் அன்ன மொழியாள் மடச்சிங்கடி
தம்மான் ஊரன் சடையன் சிறுவன் அடியன் தமிழ்மாலை
செம்மாந் திருந்து திருவாய் திறப்பார் சிவலோகத்தாரே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

11. திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளியது

பண் : காந்தாரம்

வரிய மறையார் பிறையார் மலையோர் சிலையா வணக்கி
எரிய மதில்கள் எய்தார் எறிய முசல முடையார்
கரிய மிடறு முடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பெரிய விடைமேல் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே.

ஆவுடைமேல் முருகன் அற்புதக் காட்சி தரும் திருத்தலமே திருச்சி உய்யக்கொண்டான்மலை ஸ்ரீஉஜ்ஜீவ நாதர் ஆலயமாகும். குழந்தைகள், பெரியவர்கள் தொலைந்து போனால் அவர்களைப் பற்றிய தகவல்கள் கிடைக்க ஆவுடை முருகன் அருள்புரிவார். செவ்வாய்க் கிழமைகளில் அரளிப் பூ மாலை ஆறு முழத்திற்குக் குறையாமல் சார்த்தி முருகனை வழிபடுதல் சிறப்பு. ஞாயிற்றுக் கிழமை அன்று தேன் கலந்த தினைமாவு முருகனுக்குப் படைத்து குழந்தைகளுக்குத் தானமாக வழங்குவதால் அப்பா பையன்களுக்கு இடையே உள்ள கருத்து வேற்றுமை மறையும். பெண் பிள்ளைகள் மட்டுமே உள்ள குடும்பங்களில் புது வாழ்வு மலரும்.

மங்கை மணந்த மார்பர் மழுவாள் வலன் ஒன்றேந்திக்
கங்கை சடையிற் கரந்தார் கடவூர் மயானம் அமர்ந்தார்
செங்கண் வெள்ளேறேறிச் செல்வஞ் செய்யா வருவார்
அங்கை யேறிய மறியார் அவர் எம்பெருமான் அடிகளே.

ஈட லிடபம் இசைய ஏறி மழு ஒன்றேந்திக்
காடதிடமா வுடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பாடல் இசை கொள் கருவி படுதம் பலவும் பயில்வார்
ஆடல் அரவம் முடையார் அவர் எம்பெருமான் அடிகளே.

இறை நின்றிலங்கு வளையாள் இளையாள் ஒருபால் உடையார்
மறை நின்றிலங்கு மொழியார் மலையார் மனத்தின் மிசையார்
கறை நின்றிலங்கு பொழில் சூழ் கடவூர் மயானம் அமர்ந்தார்
பிறை நின்றிலங்கு சடையார் அவர் எம்பெருமான் அடிகளே.

வெள்ளை எருத்தின் மிசையார் விரிதோ டொருகா திலங்கத்
துள்ளும் இளமான் மறியார் சுடர்பொற் சடைகள் துலங்கக்
கள்ள நகுவெண் தலையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பிள்ளை மதியம் உடையார் அவர்எம் பெருமான் அடிகளே.

பொன்றாது திருமணங் கொள் புனைபூங்கொன்றை புனைந்தார்
ஒன்றா வெள்ளே றுயர்த்த துடையார் அதுவே ஊர்வார்
கன்றா வினஞ்சூழ் புறவிற் கடவூர் மயானம் அமர்ந்தார்
பின்தாழ் சடையார் ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே.

பாசமான களைவார் பரிவார்க் கமுதம் அனையார்
ஆசை தீரக் கொடுப்பார் அலங்கல் விடைமேல் வருவார்
காசை மலர்போல் மிடற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பேச வருவார் ஒருவர் அவர்எம் பெருமான் அடிகளே.

செற்ற அரக்கன் அலறத் திகழ் சேவடிமேல் விரலால்
கற்குன்றடர்த்த பெருமான் கடவூர் மயானம் அமர்ந்தார்
மற்றொன் றிணையில் வலிய மாசில் வெள்ளி மலைபோல்
பெற்றொன்றேறி வருவார் அவர் எம்பெருமான் அடிகளே.

வருமா கரியின் உரியார் வளர்புன் சடையார் விடையார்
கருமான் உரிதோல் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
திருமாலொடு நான்முகனுந் தேர்ந்துங் காணமுன் ஒண்ணாப்
பெருமான் எனவும் வருவார் அவரெம் பெருமான் அடிகளே.

தூய விடைமேல் வருவார் துன்னாருடைய மதில்கள்
காய வேவச் செற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்
தீய கருமஞ் சொல்லுஞ் சிறுபுன் தேரர் அமரர்
பேய் பேயென்ன வருவார் அவர்எம் பெருமான் அடிகளே.

மரவம் பொழில் சூழ் கடவூர் மன்னு மயானம் அமர்ந்த
அரவம் அசைத்த பெருமான் அகலம் அறியலாகப்
பரவு முறையே பயிலும் பந்தன் செஞ்சொல் மாலை
இரவும் பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

12. திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய
சமக கவசம்

வடிவேறு திரிசூலந் தோன்றும் தோன்றும் வளர் சடைமேல் இளமதியந் தோன்றும் தோன்றும்
கடியேறு கமழ் கொன்றை கண்ணி தோன்றும் காதில் வெண்குழை தோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும் எழில் திகழுந் திருமுடியும் இலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத் தெம்புனிதனார்க்கே.

800 சதுர்யுகங்களுக்கு முன் பிரம்ம மூர்த்தியால் நிர்மாணிக்கப்பட்டதே திருச்சி உறையூர் ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் சிவாலயத்தில் உள்ள மட்டுவார் குழலம்மை தீர்த்தமாகும். இத்தீர்த்த நீரை தலையில் தெளித்துக் கொண்டு சுவாமிக்கு ஐந்து நிற மணமுள்ள பூக்களால் ஆராதித்து வணங்கினால் மஞ்சள் காமாலை, வெண் குஷ்டம் போன்ற நிறத்தின் பெயரைக் கொண்டு அமையும் நோய்களிலிருந்து நிவாரணம் கிட்டும்.

ஆணாகிப் பெண்ணாய வடிவு தோன்றும் அடியவர்கட் காரமுதமாகித் தோன்றும்
ஊணாகி ஊர்திரிவான் ஆகித் தோன்றும் ஒற்றைவெண் பிறை தோன்றும் பற்றார் தம்மேல்
சேணாக வரைவில்லால் எரித்தல் தோன்றும் செத்தவர்தம் எலும்பினாற் செறியச் செய்த
பூணாணும் அரைஞாணும் பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.

கல்லாலின் நீழல் கலந்து தோன்றும் கவின் மறையோர் நால்வர்க்கு நெறிகள் அன்று
சொல்லாகச் சொல்லியவா தோன்றுந் தோன்றும் சூழரவும் மான்மறியுந் தோன்றும் தோன்றும்
அல்லாத காலனைமுன் அடர்த்தல் தோன்றும் ஐவகையால் நினைவார்பால் அமர்ந்து தோன்றும்
பொல்லாத புலால் எலும்பு பூணாய்த் தோன்றும் பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.

படைமலிந்த மழுவாளும் மானுந் தோன்றும் பன்னிரண்டு கண்ணுடைய பிள்ளை தோன்றும்
நடைமலிந்த விடையோடு கொடியுந் தோன்றும் நான்மறையின் ஒலிதோன்றும் நயனந் தோன்றும்
உடைமலிந்த கோவணமுங் கீளுந் தோன்றும் மூரல்வெண் சிரமாலை உலாவித் தோன்றும்
புடைமலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும் பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.

மயலாகுந் தன்னடியார்க் கருளுந் தோன்றும் மாசிலாப் புன்சடைமேல் மதியந் தோன்றும்
இயல்பாக இடுபிச்சை ஏற்றல் தோன்றும் இருங்கடல் நஞ்சுண்டிருண்ட கண்டந் தோன்றும்
கயல்பாயக் கடுங்கலுழிக் கங்கை நங்கை ஆயிரமா முகத்தினொடு வானில் தோன்றும்
புயல்பாய சடை விரித்த பொற்புத் தோன்றும் பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.

பாராழி வட்டத்தார் பரவியிட்ட பன்மலரும் நறும்புகையும் பரந்து தோன்றும்
சீராழித் தாமரையின் மலர்களன்ன திருந்தியமா நிறத்தசே வடிகள் தோன்றும்
ஓராழித் தேருடைய இலங்கை வேந்தன் உடல் துணித்த இடர்பாவங் கெடுப்பித் தன்று
போராழி முன்னீந்த பொற்புத் தோன்றும் பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.

தன்னடியார்க் கருள்புரிந்த தகவு தோன்றும் சதுர் முகனைத் தலையரிந்த தன்மை தோன்றும்
மின்னனைய நுண்ணிடையாள் பாகந் தோன்றும் வேழத்தின் உரிவிரும்பிப் போர்த்தல் தோன்றும்
துன்னியசெஞ் சடைமேலோர் புனலும் பாம்புந் தூயமா மதியுடனே வைத்தல் தோன்றும்
பொன்னனைய திருமேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.

செறிகழலுந் திருவடியுந் தோன்றும் தோன்றும் திரிபுரத்தை எரிசெய்த சிலையுந் தோன்றும்
நெறியதனை விரித்துரைத்த நேர்மை தோன்றும் நெற்றிமேல் கண்தோன்றும் பெற்றந் தோன்றும்
மறுபிறவி அறுத்தருளும் வகையுந் தோன்றும் மலைமகளும் சலமகளும் மலிந்து தோன்றும்
பொறியரவும் இளமதியும் பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.

அருப்போட்டு முலைமடவாள் பாகந்தோன்றும் அணிகிளரும் உருமென்ன அடர்க்குங் கேழல்
மருப்போட்டு மணிவயிரக் கோவை தோன்றும் மணமலிந்த நடந்தோன்றும் மணியார் வைகைத்
திருக்கோட்டில் நின்றதோர் திறமுந் தோன்றும் செக்கர் வானொளி மிக்குத் திகழ்ந்த சோதிப்
பொருப்போட்டி நின்றதிண் புயமுந் தோன்றும் பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.

ஆங்கணைந்த சண்டிக்கும் அருளியன்று தன்முடிமேல் அலர்மாலை அளித்தல் தோன்றும்
பாங்கணைந்து பணிசெய்வார்க் கருளியன்று பலபிறவி அறுத்தருளும் பரிசுந் தோன்றும்
கோங்கணைந்த கூவிளமும் மதமத்தமும் குழற்கணிந்த கொள்கையொடு கோலந் தோன்றும்
பூங்கணை வேல் உருவழித்த பொற்புந் தோன்றும் பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.

ஆரொருவர் உள்குவார் உள்ளத்துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளுந் தோன்றும்
வாருருவப் பூண்முலைநன் மங்கைதன்னை மகிழ்ந்தொருபால் வைத்துகந்த வடிவுந் தோன்றும்
நீருருவக் கடலிலங்கை அரக்கர்கோனை நெறுநெறன்ன அடர்த்திட்ட நிலையுந் தோன்றும்
போருருவக் கூற்றுதைத்த பொற்புந் தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

13. திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளியது

பண் : தக்கராகம்

பொடியுடை மார்பினர் போர்விடையேறிப் பூதகணம் புடைசூழக்
கொடியுடை ஊர்திரிந் தையங் கொண்டு பலபல கூறி
வடிவுடை வாணெடுங் கண்ணுமைபாக மாயவன் வாழ்கொளி புத்தூர்க்
கடிகமழ் மாமலரிட்டுக் கறைமிடற் றானடி காண்போம்.

காரணமில்லாமல் பிள்ளைகளோ பெரியோர்களோ அடிக்கடி நோய்வாய்ப்பட்டால் பிள்ளையார் கோயிலில் பூரணக் கொழுக்கட்டை நைவேத்யம் செய்து குழந்தைகளுக்குத் தானமாக வழங்கவும். கோயிலை 17 முறை வலம் வந்து வணங்கவும்.

அரைகெழு கோவண ஆடையின் மேலோர் ஆடரவம் அசைத்தையம்
புரைகெழு வெண்டலை யேந்திப் போர்விடை ஏறிப் புகழ
வரைகெழு மங்கைய தாகமோர்பாக மாயவன் வாழ்கொளி புத்தூர்
விரைகமழ் மாமலர் தூவி விரிசடை யான்அடி சேர்வோம்.

பூணொடு நாகமசைத் தனலாடிப் புன்றலை அங்கையில் ஏந்தி
ஊணிடு பிச்சையூர் ஐயம் உண்டியென்று பலகூறி
வாணெடுங் கண்ணுமை மங்கையோர் பாகம் ஆயவன் வாழ்கொளி புத்தூர்
தாணெடு மாமலரிட்டுத் தலைவன தாள்நிழல் சார்வோம்.

தாரிடு கொன்றையோர் வெண்மதி கங்கை தாழ்சடை மேலவை சூடி
ஊரிடு பிச்சைகொள் செல்வம் உண்டியென்று பலகூறி
வாரிடு மென்முலை மாதொரு பாகம் ஆயவன் வாழ்கொளி புத்தூர்க்
காரிடு மாமலர் தூவிக் கறைமிடற் றானடி காண்போம்.

கனமலர்க் கொன்றை அலங்கல் இலங்கக் காதிலோர் வெண்குழையோடு
புனமலர்மாலை புனைந்தூர் புகுதியென் றேபல கூறி
வனமுலை மாமலை மங்கையோர் பாகம் ஆயவன் வாழ்கொளி புத்தூர்
இனமலர் ஏய்ந்தன தூவி எம்பெருமானடி சேர்வோம்.

வாழ்கொளிபுத்தூர்

அளைவளர் நாகமசைத்தனலாடி அலர்மிசை அந்தணன் உச்சிக்
களைதலை யிற்பலி கொள்ளுங் கருத்தனே கள்வனே என்னா
வளையொலி முன்கை மடந்தையோர் பாக மாயவன் வாழ்கொளி புததூ்ர்த்
தளையவிழ் மாமலர் தூவித் தலைவன தாளிணை சார்வோம்.

அடர்செவி வேழத்தின் ஈருரிபோர்த்து அழிதலை அங்கையில் ஏந்தி
உடலிடு பிச்சையோ டையம் உண்டியென்று பலகூறி
மடனெடு மாமலர்க் கண்ணியோர் பாகம் ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
தடமலர் ஆயின தூவித் தலைவன தாள்நிழல் சார்வோம்.

உயர்வரை ஒல்க எடுத்த அரக்கன் ஒளிர்கட கக்கை அடர்த்து
அயலிடு பிச்சையோ டையம் ஆர்தலை என்றடி போற்றி
வயல்விரி நீல நெடுங்கணி பாகம் ஆயவன் வாழ்கொளி புத்தூர்ச்
சயவிரி மாமலர் தூவித் தாழ்சடை யானடி சார்வோம்.

கரியவன் நான்முகன் கைதொழு தேத்தக் காணலுஞ் சாரலு மாகா
எரியுரு வாகியூ ரையம் இடுபலி உண்ணி என்றேத்தி
வரியர வல்குல் மடந்தையோர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்
விரிமலராயின தூவி விகிர்தன சேவடி சேர்வோம்.

குண்டம ணர்துவர்க் கூறைகள் மெய்யிற் கொள்கையினார் புறங் கூற
வெண்டலையிற் பலி கொண்டல் விரும்பினை என்று விளம்பி
வண்டமர் பூங்குழல் மங்கையோர்பாக மாயவன் வாழ்கொளிபுத்தூர்த்
தொண்டர்கள் மாமலர் தூவத் தோன்றநின் றானடி சேர்வோம்.

கல்லுயர் மாக்கடல் நின்று முழங்குங் கரைபொரு காழிய மூதூர்
நல்லுயர் நான்மறை நாவின் நற்றமிழ் ஞானசம் பந்தன்
வல்லுயர் சூலமும் வெண்மழு வாளும் வல்லவன் வாழ்கொளி புத்தூர்ச்
சொல்லிய பாடல்கள் வல்லார் துயர்கெடுதல் எளிதாமே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

14. திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய திருஅதிகை வீரட்டானப் பதிகம்

அரவணையான் சிந்தித் தரற்றும் மடி அருமறையான் சென்னிக் கணியா மடி
சரவணத்தான் கைதொழுது சாரும் மடி சார்ந்தார்கட் கெல்லாஞ் சரணா மடி
பரவுவார் பாவம் பறைக்கும் மடி பதினெண் கணங்களும் பாடும் மடி
விரவுநீர்த் தென்கெடில நாடன் னடி திருவீரட் டானத்தெஞ் செல்வன் னடி

கொடுவினையார் என்றுங் குறுகா வடி குறைந்தடைந்தார் ஆழாமைக் காக்கும் மடி
படு முழவம் பாணி பயிற்றும் மடி பதைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்த வடி
கடுமுரணேறூர்ந்தான் கழற்சே வடி கடல்வையங் காப்பான் கருதும் மடி
நெடுமதியங் கண்ணி அணிந்தா னடி நிறைகெடில வீரட்டம் நீங்கா வடி

வைதெழுவார் காமம்பொய் போகா வடி வஞ்சவலைப் பாடொன் றில்லா வடி
கைதொழுது நாமேத்திக் காணும் மடி கணக்கு வழக்கைக் கடந்த வடி
நெய்தொழுது நாமேத்தி ஆட்டும் மடி நீள்விசும்பை ஊடறுத்து நின்ற வடி
தெய்வப் புனற்கெடில நாடன் னடி திருவீரட் டானத்தெஞ் செல்வன் னடி

அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும் மடி அழகெழுத லாகா அருட்சே வடி
சுரும்பித்த வண்டினங்கள் சூழ்ந்த வடி சோமனையும் காலனையுங் காய்ந்த வடி
பெரும்பித்தர் கூடிப் பிதற்றும் மடி பிழைத்தார் பிழைப்பறிய வல்லவடி
திருந்து நீர்த் தென்கெடில நாடன்னடி திருவீரட்ட டானத்தெஞ் செல்வன்னடி

ஒருகாலத் தொன்றாகி நின்ற வடி ஊழிதோறூழி உயர்ந்த வடி
பொரு கழலும் பல்சிலம்பும் ஆர்க்கும் மடி புகழ்வார் புகழ்தகைய வல்ல வடி
இருநிலத்தார் இன்புற்றங் கேத்தும்மடி இன்புற்றார் இட்டபூ ஏறும் மடி
திருவதிகைத் தென்கெடில நாடன் னடி திருவீரட் டானத்தெஞ் செல்வன் னடி

திருமகட்குச் செந்தா மரையா மடி சிறந்தவர்க்குத் தேனாய் விளைக்கும் மடி
பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்ற வடி புகழ்வார் புகழ்தகைய வல்ல வடி
உருவிரண்டும் ஒன்றோடொன் றொவ்வா வடி உருவென் றுணரப் படாத வடி
திருவதிகைத் தென்கெடில நாடன் னடி திருவீரட் டானத்தெஞ் செல்வன் னடி.

உரைமாலை எல்லாம் உடைய வடி உரையால் உணரப் படாத வடி
வரைமாதை வாடாமை வைக்கும் மடி வானவர்கள் தாம் வணங்கி வாழ்த்தும் மடி
அரைமாத் திரையில் அடங்கும் மடி அகலம் அளக்கிற்பார் இல்லா வடி
கரைமாங் கலிக்கெடில நாடன்னடி கமழ் வீரட் டானக் காபாலி யடி.

நறுமல ராய்நாறு மலர்ச்சே வடி நடுவா யுலகநா டாய வடி
செறிகதிருந் திங்களுமாய் நின்ற வடி தீத்திரளாய் உள்ளே திகழ்ந்த வடி
மறுமதியை மாசு கழுவும் மடி மந்திரமும் தந்திரமும் ஆய வடி
செறிகெடில நாடர் பெருமானடி திருவீரட் டானத்தெஞ் செல்வன் னடி.

அணியனவுஞ் சேயனவும் அல்லா வடி அடியார்கட் காரமுத மாய வடி
பணிபவர்க்குப் பாங்காக வல்ல வடி பற்றற்றார் பற்றும் பவள வடி
மணியடி பொன்னடி மாண்பா மடி மருந்தாய்ப் பிணிதீர்க்க வல்ல வடி
தணிபாடு தண்கெடில நாடன் னடி தகைசார் வீரட்டந் தலைவன் னடி.

அந்தாமரைப் போதலர்ந்த வடி அரக்கனையும் ஆற்றல் அழித்த வடி
முந்தாகி முன்னே முளைத்த அடி முழங்கழலாய் நீண்டவெம் மூர்த்தி வடி
பந்தாடு மெல்விரலாள் பாகன் னடி பவளத் தடவரையே போல்வா னடி
வெந்தார் சுடலைநீ றாடும் மடி வீரட்டங் காதல் விமல்லன் னடி.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

15. திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளியது

பண் : காந்தாரபஞ்சமம்

பந்து சேர்விர லாள்பவளத்துவர் வாயினாள் பனிமாமதி போல்முகத்து
அந்தமில் புகழாள் மலை மாதொடும் ஆதிப்பிரான் வந்துசேர்விடம் வானவர் எத்திசை
யுந்நிறைந்து வலஞ்செய்து மாமலர்
புந்தி செய்திறைஞ் சிப்பொழிற் பூந்தராய் போற்றுதுமே.

காவியங்கருங் கண்ணினாள் கனித் தொண்டை வாய்க்கதிர் முத்தநல் வெண்ணகைத்
தூவி யம்பெடையன்ன நடைச் சுரி மென் குழலாள்
தேவியுந் திருமேனி யோர் பாகமாய் ஒன்றிரண்டொரு மூன்றொடு சேர்பதி
பூவி லந்தணனொப்பவர் பூந்தராய் போற்றுதுமே.

பைய ராவரு மல்குல் மெல்லியல் பஞ்சின் நேரடி வஞ்சிகொள் நுண்ணிடைத்
தையலாள் ஒரு பாலுடை எம்மிறை சாருமிடஞ்
செய்யலாங் கழுநீர் கமலம் மலர்த் தேறலூறலிற் சேறுலராத நற்
பொய்யிலா மறையோர் பயில் பூந்தராய் போற்றுதுமே.

முள்ளி நாண்முகை மொட்டியல் கோங்கின் அரும்பு தேன்கொள் குரும்பை முவா மருந்து
உள்ளியன்ற பைம்பொற்கல சத்தியல் ஒத்தமுலை
வெள்ளை மால்வரை அன்னதோர் மேனியின் மேவினார்பதி வீமரு தண்பொழில்
புள்ளி னந்துயில் மல்கிய பூந்தராய் போற்றுதுமே.

பண்ணி யன்றெழு மென்மொழியாள்பகர் கோதையேர் திகழ் பைந்தளிர் மேனியோர்
பெண்ணியன்ற மொய்ம்பிற் பெருமாற் கிடம் பெய்வளையார்
கண்ணி யன்றெழு காவிச் செழுங் கருநீல மல்கிய காமரு வாவிநல்
புண்ணியர் உறையும் பதி பூந்தராய் போற்றுதுமே.

சனிக் கிழமைகளில் காலையில் தயிர் சாதத்துடன் பச்சை மிளகாய் சேர்த்து உண்டு வந்தால் உடல் வளம் பெறும்.

வாணிலா மதிபோல் நுதலாள் மடமாழை ஒண்கணாள் வண்தரளந் நகை
பாணி லாவிய இன்னிசையார் மொழிப் பாவையொடுஞ்
சேணிலாத் திகழ் செஞ்சடை எம்மண்ணல் சேர்வது சிகரப் பெருங்கோயில் சூழ்
போணிலா நுழையும் பொழிற் பூந்தராய் போற்றுதுமே.

காருலாவிய வார்குழலாள் கயற் கண்ணினாள் புயற் காலொளி மின்னிடை
வாருலாவிய மென்முலையாள் மலை மாதுடனாய்
நீருலாவிய சென்னியன் மன்னி நிகரு நாமம்முந் நான்கு நிகழ்பதி
போருலா வெயில் சூழ்பொழிற் பூந்தராய் போற்றுதுமே.

காசை சேர்குழலாள் கயலேர்தடங் கண்ணி காம்பன தோட்கதிர் மென்முலைத்
தேசு சேர்மலை மாதமருந் திருமார் பகலத்து
ஈசன் மேவுமிருங் கயிலை யெடுத்தானை அன்றடர்த் தானிணைச் சேவடி
பூசைசெய்பவர் சேர்பொழிற் பூந்தராய் போற்றுதுமே.

கொங்குசேர் குழலாள் நிழல் வெண்ணகைக் கொவ்வை வாய்க் கொடி யேரிடை யாளுமை
பங்குசேர் திருமார்புடையார் படர் தீயுருவாய்
மங்குல் வண்ணனும் மாமலரோனும் மயங்க நீண்டவர் வான்மிசை வந்தெழு
பொங்கு நீரின் மிதந்தநற் பூந்தராய் போற்றுதுமே.

கலவ மாமயிலாரியலாள் கரும்பன்ன மென் மொழியாள் கதிர் வாணுதல்
குலவு பூங்குழலாளுமை கூறனை வேறுரையால்
அலவை சொல்லுவார் தேரமணாதர்கள் ஆக்கினான்தனை நண்ணலும் நல்குநற்
புலவர்தாம் புகழ் பொற்பதி பூந்தராய் போற்றுதுமே.

தேம்பல் நுண்ணிடையாள் செழுஞ் சேலன கண்ணி யோடண்ணல் சேர்விடந் தேனமர்
பூம்பொழில் திகழ் பொற்பதி பூந்தராய் போற்றுதுமென்று
ஓம்பு தன்மையன் முத்தமிழ் நான்மறை ஞானசம்பந்தன் ஒண்டமிழ் மாலை கொண்
டாம்ப டியிவை ஏத்தவல்லார்க் கடையா வினையே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

16. திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியது

வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி ஓவாத சத்தத் தொலியே போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

குருவின்மேல் அவநம்பிக்கை தோன்றும்போது இறைவனை நோக்கி அழு. அது ஒன்றுதான் விதியை மாற்றும் வழி.

பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி பிறவி அறுக்கும் பிரானே போற்றி
வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
பொய்ச்சார் புரமூன்றும் எய்தாய் போற்றி போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
கச்சாக நாகம் அசைத்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

வானத்தார் போற்றும் மருந்தே போற்றி வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கு முடலே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி
கானத்தீ யாடல் உகந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

ஊராகி நின்ற உலகே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
பேராகி எங்கும் பரந்தாய் போற்றி பேராதென சிந்தை புகுந்தாய் போற்றி
நீராவி யான நிழலே போற்றி நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி
காராகி நின்ற முகிலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி தேவர் அறியாத தேவே போற்றி
புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி பற்றி உலகை விடாதாய் போற்றி
கல்லுயிராய் நின்ற கனலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ ஆனாய் போற்றி மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.

இமையாது உயிரா திருந்தாய் போற்றி என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
உமைபாகம் ஆகத் தணைத்தாய் போற்றி ஊழி ஏழான ஒருவா போற்றி
அமையா வருநஞ்சம் ஆர்ந்தாய் போற்றி ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
கமையாகி நின்ற கனலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

மூவாய் பிறவாய் இறவாய் போற்றி முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
தேவாதி தேவர் தொழுந் தேவே போற்றி சென்றேறி எங்கும் பரந்தாய் போற்றி
ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி அல்லல் நலிய அலந்தேன் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

நெடிய விசும்பொடு கண்ணே போற்றி நீள அகலம் உடையாய் போற்றி
அடியும் முடியும் இகலிப் போற்றி அங்கொன் றறியாமை நின்றாய் போற்றி
கொடிய வன்கூற்றம் உதைத்தாய் போற்றி கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி
கடிய உருமொடு மின்னே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

உண்ணா துறங்கா திருந்தாய் போற்றி ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி
எண்ணா இலங்கைக்கோன் தன்னைப் போற்றி இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி
பண்ணார் இசையின் சொற்கேட்டாய் போற்றி பண்டே என்சிந்தை புகுந்தாய் போற்றி
கண்ணா உலகுக்கு நின்றாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

17. திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள்
அருளிய கோளறு பதிகம்

பண் : பியந்தைக் காந்தாரம்

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

காலையில் எழுந்தவுடன் முதன் முதலில் எப்போது கண் சிமிட்டுகிறோம் என்பதைக் கவனிக்க முடிந்தால் ஆத்ம விசாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

என்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதோ டொன்றொ டேழு பதினெட்டோடாறும் உடனாய நாட்கள் அவைதாம்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

உருவளர் பவள மேனி ஒளி நீறணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வம் ஆன பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து மறையோதும் எங்கள் பரமன்
நதியோடு கொன்றை மாலை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடு நோய்களான பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

வாள்வரி அதளதாடை வரிகோவணத்தர் மடவாள் தனோடும் உடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல் கொடுநாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

செப்பிள முலைநன் மங்கை ஒருபாகமாக விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

வேள்பட விழிசெய்தன்று விடைமேலிருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் தனோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோ டெருக்கு முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர் வருகாலமான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரொ டமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

18. திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியது

குலம்பலம் பாவரு குண்டர்முன் னேநமக் குண்டுகொலோ
அலம்பலம் பாவரு தண்புனல் ஆரூர் அவிர்சடையான்
சிலம்பலம் பாவரு சேவடி யான்திரு மூலட் டானம்
புலம்பலம் பாவரு தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

மற்றிட மின்றி மனைதுறந்  தல்லுணா வல்லமணர்
சொற்றிட மென்று துரிசுபட் டேனுக்கு முண்டுகொலோ
விற்றிடம் வாங்கி விசயனோ டன்றொரு வேடுவனாய்ப்
புற்றிடங் கொண்டான்றன் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

பிறந்த நாளை எப்படிக் கொண்டாடுவது?
ஒவ்வொரு வருடமும் எந்த அளவிற்கு கடவுளை நோக்கி முன்னேறி உள்ளோம் என்று ஆத்ம விசாரம் செய்து பார்ப்பதே பிறந்த நாள் கொண்டாட்டத்தின் முதல் கட்டமாகும்.

ஒருவடி வின்றிநின் றுண்குண்டர் முன்னமக் குண்டுகொலோ
செருவடி வெஞ்சிலை யாற்புரம் அட்டவன் சென்றடையாத்
திருவுடை யான்திரு வாரூர்த் திருமூலட்டானன் செங்கண்
பொருவிடை யானடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

மாசினை யேறிய மேனியர் வன்கண்ணர் மொண்ணரைவிட்
டீசனை யேநினைந் தேசறு வேனுக்கும் உண்டுகொலோ
தேசனை ஆரூர்த் திருமூலட் டானனைச் சிந்தைசெய்து
பூசனைப் பூசுரர் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே

அருந்தும் பொழுதுரை யாடா அமணர் திறமகன்று
வருந்தி நினைந்தர னேயென்று வாழ்த்துவேற் குண்டு கொலோ
திருந்திய மாமதில் ஆரூர்த் திருமூலட் டானனுக்குப்
பொருந்துந் தவமுடைத் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

வீங்கிய தோள்களுந் தாள்களு மாய்நின்று வெற்றரையே
மூங்கைகள் போலுண்ணும் மூடர்முன் னேநமக் குண்டுகொலோ
தேங்கமழ் சோலைத்தென் னாரூர்த் திருமூலட் டானன்செய்ய
பூங்கழலானடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

பண்ணிய சாத்திரப் பேய்கள் பறிதலைக் குண்ட ரைவிட்
டெண்ணில் புகழீசன் தன்னருள் பெற்றேற்கும் உண்டு கொலோ
திண்ணிய மாமதில் ஆரூர்த் திருமூலட்டானன் எங்கள்
புண்ணியன் தன்னடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

குழந்தை ஏன் புத்தகத்தைக் கிழிக்கிறது?
பகுத்து உணர வேண்டியதை உன்னால் படித்து உணர முடியாது என்பதை உணர்த்தவே குழந்தை புத்தகத்தைக் கிழிக்கிறது.

கரப்பர்கண் மெய்யைத் தலைப்பறிக் கச்சுகம் என்னுங்குண்டர்
உரைப்பன கேளாதிங் குய்யப்போந் தேனுக்கும் உண்டுகொலோ
திருப்பொலி ஆரூர்த் திருமூலட் டானன் திருக்கயிலைப்
பொருப்பன் விருப்பமர் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

கையிலிடுசோறு நின்றுண்ணுங் காதல் அமணரை விட்
டுய்யு நெறி கண்டிங் குய்யப் போந் தேனுக்கும் உண்டுகொலோ
ஐயன் அணிவயல் ஆரூர்த் திருமூலட்டானனுக்குப்
பொய்யன் பிலானடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

குற்ற முடைய அமணர் திறமது கையகன்றிட்
டுற்ற கருமஞ்செய் துய்யப் போந்தேனுக்கும் உண்டு கொலோ
மற்பொலி தோளான் இராவணன் தன்வலி வாட்டுவித்த
பொற்கழலானடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

19. சுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளிய
திருத்தொண்டத் தொகை

பண் : கொல்லிக் கௌவாணம்


தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன் விரிபொழில் சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே.

மகாலட்சுமி தான் மக்களுக்கு
அளிக்கும் செல்வம் நிரந்தரமாய் தங்கி இருக்க இறைவனிடம் வேண்டி வழிபட்ட தலமே திருச்சி லால்குடி அருகே உள்ள ஸ்ரீசாமேவேதீஸ்வரர் திருத்தலமாகும். சோமநாதர் என்று முற்காலத்தில் திருநாமம் கொண்ட இத்தல இறைவனை குபேரன் வழிபட்டு, இத்தலத்தில் நெடுங்காலம் தங்கி திருப்பணிகள் செய்து தன் குபேர நிதிக்கு நிரந்தரத்தன்மை பெற்றார். தீராத தரித்திரத் தன்மை உள்ளோரும், கைக்கெட்டியது வாய்க்கெட்டாத அவலச் சூழ்நிலையில் வறுமையால் வாடுவோரும் திருமங்கல சிவாலயத்தில் உள்ள நந்தவனத்திற்கு நீர் பாய்ச்சும் திருப்பணியை ஏற்று மலர்ச் செடிகள் செழிக்க அருள்புரிவதால் திருமகளின் நிரந்தர செல்வ கடாட்சத்திற்கு பாத்திரம் ஆவார்கள்.

இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன் ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன் கடவூரிற் கலயன்றன்அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ்சாறன் எஞ்சாய வாட்டாயன் அடியார்க்கு மடியேன்.
அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே.

மும்மையா லுலகாண்ட மூர்த்திக்கு மடியேன் முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளைப் போவார்க்கு மடியேன் திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கு மடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினா லெறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே.

திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக்கரையன்தன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன் பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கு மடியேன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன் ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்
அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும் மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கு மடியேன் ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கு மடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கு மடியேன் நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கு மடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே.

வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன் செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்
கார்கொண்ட கொடை கழறிற் றறிவார்க்கும் அடியேன் கடற்காழிக் கணநாதன் அடியார்க்கு மடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோ னடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

பொய்யடிமை யில்லாத புலவர்க்கு மடியேன் பொழிற் கருவூர்த் துஞ்சிய புகழ்ச் சோழர்க் கடியேன்
மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன் விரிதிரை சூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன் கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கு மடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கு மடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

கறைக் கண்டன் கழலடியே காப்புக் கொண்டிருந்த கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கு மடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக் கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித் தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக் கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கு மடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்சை மன்னவனாஞ் செருத்துணைதன் னடியார்க்கு மடியேன்
புடைசூழ்ந்த புலியதன்மேல் அரவாட ஆடி பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கு மடியேன்
அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன் முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிசார்ந்த அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல் வரிவளையான் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன் திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் இசைஞானி காதலன் திருநாவலூர்க்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார் ஆரூரில் அம்மானுக் கன்பராவாரே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

20. திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளியது

பண் : குறிஞ்சி


வாசி தீரவே காசு நல்குவீர்
மாசில் மிழலையீர் ஏசல் இல்லையே

இறைவர் ஆயினீர் மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை முறைமை நல்குமே

இரவில் தவளைகள் எழுப்பும் ஒலி மனிதனுக்கு நிம்மதியான உறக்கத்தைக் கொடுக்கும். தவளைச் சத்தம் கேட்க முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் இந்தச் சப்தத்தை ஒலி நாடாவில் பதிவு செய்து கொண்டு உறங்கும் முன் கேட்பதும் நலமே.

செய்ய மேனியீர் மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர் உய்ய நல்குமே

நீறு பூசினீர் ஏற தேறினீர்
கூறுமிழலையீர் பேறும் அருளுமே

காமன் வேவவோர் தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர் சேம நல்குமே

பிணிகொள் சடையினீர் மணிகொள் மிடறினீர்
அணிகொள் மிழலையீர் பணிகொண்டருளுமே

மங்கை பங்கினீர் துங்க மிழலையீர்
கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே

அரக்கன் நெரிதர இரக்கம் எய்தினீர்
பரக்கு மிழலையீர் கரக்கை தவிர்மினே

அயனு மாலுமாய் முயலு முடியினீர்
இயலு மிழலையீர் பயனும் அருளுமே

பறிகொள் தலையினார் அறிவதறிகிலார்
வெறிகொள் மிழலையீர் பிரிவ தரியதே

காழி மாநகர் வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல் தாழும் மொழிகளே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

21. மாணிக்க வாசக சுவாமிகள் அருளியது

வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவா றுந்தீ பற

ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீ பற
ஒன்றும் பெருமிகை உந்தீ பற

தச்சு விடுத்தலும் தாமடியிட்டலும்
அச்சு முறிந்ததென்று உந்தீ பற
அழிந்தன முப்புரம் உந்தீ பற

உய்யவல்லார் ஒருமூவரைக் காவல்கொண்டு
எய்ய வல்லானுக்கே உந்தீ பற
இளமுலை பங்கன் என்றுந்தீ பற

 

நெற்றியில் ஏற்படும் சுருக்கங்கள் உடலில் உள்ள ஆக்ஞா சக்கரம், மணிப்பூரகம் போன்ற யோகச் சக்கரங்களின் ஆரோக்கிய நிலையைக் குறிக்கின்றன. இந்தச் சக்கரங்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுபவையே நெற்றியில் நாம் அணியும் விபூதி, குங்குமம், சந்தனம், திருமண் போன்ற இறைச் சின்னங்கள் ஆகும்.

சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடியவா பாடி உந்தீ பற
உருத்திர நாதனுக் குந்தீ பற

ஆவா திருமால் அவிர்ப்பாகங் கொண்டன்று
சாவா திருந்தா னென்றுந்தீ பற
சதுர்முகன் தாதையென் றுந்தீ பற

வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய
கையைத் தறித்தா னென்று உந்தீ பற
கலங்கிற்று வேள்வி யென்று உந்தீ பற

பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப்
பார்ப்பதென் னேயடி உந்தீ பற
பணைமுலை பாகனுக்குந்தீ பற

புரந்தரனார் ஒரு பூங்குயிலாகி
மரந்தனில் ஏறினார் உந்தீ பற
வானவர் கோனென்றே உந்தீ பற

வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
துஞ்சின வாபாடி உந்தீ பற
தொடர்ந்த பிறப்பற உந்தீ பற

உலகிலேயே மிகச் சிறந்த மணி எது தெரியுமா?
கோயில் என்று சிறப்புப் பெயர் பெற்ற சிதம்பரத்தில் உள்ள ஆலயமணியே உலகில் உள்ள மிகச் சிறந்த மணியாகும். சிகண்டி பூரணம் என்று சித்தர்களால் அழைக்கப்படும் இந்த மணியிலிருந்து எழும் தெய்வீக ஒலி எளிதில் நம்மை ஆழ்நிலை தியானத்தில் ஆழ்த்தி விடும் தன்மை உடையது. தியானத்தில் முன்னேற்றம் அடைய விரும்புபவர்கள் இந்த சிகண்டி பூரண மணி ஓசையைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருத்தல் நலம்

ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீ பற
கொங்கை குலுங்க நின்றுந்தீ பற

உண்ணப் புகுந்த பகனொளித் தோடாமே
கண்ணைப் பறித்த வாறுந்தீ பற
கருக்கெட நாமெலாம் உந்தீ பற

நாமகள் நாசி சிரம்பிர மன்படச்
சோமன் முகம் நெரித்துந்தீ பற
தொல்லை வினை கெட உந்தீ பற

நான்மறை யோனும் மகத்தியமான்படப்
போம்வழி தேடுமாறுந்தீ பற
புரந்தரன் வேள்வியில் உந்தீ பற

சூரியனார் தொண்டை வாயினிற் பற்களை
வாரி நெரித்த வாறுந்தீ பற
மயங்கிற்று வேள்வி என்றுந்தீ பற

 

நாராயணன் என்ற இறை நாமத்திற்கு சித்தர்கள் அளிக்கும் எளிய விளக்கம் இதோ.
நா(நாக்கு), ரா(உள்ளிருந்து நல்ல சக்திகள் வெளியே செல்லாமல், வெளியே இருக்கும் தீய சக்திகள் உள்ளே செல்லாமல்), ய(யார்), அனன்(அனுபவிப்பவன்). சுருக்கமாகச் சொன்னால் நாக்கினால் நல்லதையே சொல்லி, நல்லதையே செய்பவன் நாராயணன்.

தக்கனார் அன்றே தலையிழந்தார் தக்கன்
மக்களைச் சூழநின்றுந்தீ பற
மடிந்தது வேள்வி என்றுந்தீ பற

பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட
கோலச் சடையற்கே உந்தீ பற
குமரன்தன் தாதைக்கே உந்தீ பற

 

நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை
ஒல்லை அரிந்ததென்றுந்தீ பற
உகிரால் அரிந்ததென்றுந்தீ பற

தேரை நிறுத்தி மலைஎடுத்தான் சிரம்
ஈரைந்து மிற்றவாறுந்தீபற
இருபதும் இற்றதென்றுந்தீ பற

ஏகாச மிட்ட இருடிகள் போகாமல்
ஆகாசங் காவலென்றுந்தீ பற
அதற் கப்பாலுங் காவலென்றுந்தீ பற

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்


22. திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியது

வட்டனை மதிசூடியை வானவர்
சிட்டனை திருஅண்ணாமலையனை
யிட்டனை யிகழ்ந்தார் புரமூன்றையும்
அட்டனை அடியேன் மறந்துய்வனோ

வானனை மதிசூடிய மைந்தனைத்
தேனனைத் திருஅண்ணாமலையனை
ஏனனை யிகழ்ந்தார் புரமூன்றெய்த
வானனை அடியேன் மறந்துய்வனோ

மத்தனை மதயானை யுரித்தவெஞ்
சித்தனைத் திருஅண்ணாமலையனை
முத்தனை முனிந்தார் புரமூன்றெய்த
வத்தனை யடியேன் மறந்துய்வனோ

உடலில் உள்ள இரும்புச் சத்தை சமன்படுத்தும் அற்புத ஆற்றல் படைத்ததே ராஜ்மா என்னும் தானியம் ஆகும். இரும்பு சத்து உடலில் அதிகரித்து விட்டால் ராஜ்மாவை சுண்டல் செய்து சாப்பிடவும்.
ஒரு வாரத்திற்குப் பின் இரண்டு வாரம் ராஜ்மாவை உணவில் சேர்க்கக் கூடாது. திரும்பவும் ஒரு வாரம் சுண்டலும், பின் இரண்டு வாரம் சுண்டல் சேர்க்காமலும் இருக்க வேண்டும்.

காற்றனைக் கலக்கும் வினை போயறத்
தேற்றனைத் திருஅண்ணாமலையனை
கூற்றனைக் கொடியார் புரமூன்றெய்த
வாற்றனை யடியேன் மறந்துய்வனோ

மின்னனை வினை தீர்த்தென்னை யாட்கொண்ட
தென்னனைத் திருஅண்ணாமலையனை
யென்னனை யிகழ்ந்தார் புரமூன்றெய்த
வன்னனை யடியேன் மறந்துய்வனோ

 

மன்றனை மதியாதவன் வேள்விமேற்
சென்றனைத் திருஅண்ணாமலையனை
வென்றனை வெகுண்டார் புரமூன்றையும்
கொன்றனை கொடியேன் மறந்துய்வனோ

உணவிற்குப் பின் சாதம், இட்லியுடன் மோர் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும். மோரை மட்டும் தனியாக அருந்தக் கூடாது.

வீரனை விடமுண்டனை விண்ணவர்
தீரனைத் திருஅண்ணாமலையனை
யூரனை யுணரார் புரமூன்றெய்த
வாரனை அடியேன் மறந்துய்வனோ

கருவினை கடல்வாய் விடமுண்ட எம் 
திருவினை திருஅண்ணாமலையனை 
உருவினை உணரார் புர மூன்றெய்த 
அருவினை அடியேன் மறந்துய்வனோ

அருத்தனை யரவைந்தலை நாகத்தைத்
திருத்தனை திருஅண்ணாமலையனை
கருத்தனைக் கடியார் புரமூன்றெய்த
வருத்தனை யடியேன் மறந்துய்வனோ

அரக்கனை யலற விரலூன்றிய
திருத்தனைத் திருஅண்ணாமலையனை
இரக்கமாயென் னுடலுறு நோய்களைத்
துரக்கனைத் தொண்டனேன் மறந்துய்வனோ.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

23. திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியது

பட்டியேறுகந்தேறிப் பலவில
விட்டமாக விரந்துண்டுழிதரும்
அட்டமூர்த்தி யண்ணாமலை கைதொழக்
கெட்டுப் போம் வினை கேடில்லை காண்மினே.

பெற்றமேறுவர் பெய்பலிக் கென்றவர்
சுற்றமாமிகு தொல் புகழாளொடு
மற்றந் தீர்க்கு மண்ணாமலை கைதொழ
நற்றவத் தொடு ஞாலத் திருப்பரே

பல்லிலோடுகை யேந்திப் பலவில
மொல்லைச் சென்று ணங்கல் கவர்வாரவ
ரல்லல் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ
நல்லவாயின நம்மை யடையுமே

பாடிச் சென்று பலிக்கென்று நின்றவ
ரோடிப் போயினர் செய்வதொன் றென்கொலோ
வாடிப்பாடி யண்ணாமலைகை தொழ
வோடிப் போகும் மேலை வினைகளே

பதிவிரதா தேவிகளில் ஒருவராக
சீதையைக் கூறுவதற்குக் காரணம் என்ன? 108 அங்க லட்சணங்களும் முழுமையாகப் பெற்ற தேவியே சீதாப் பிராட்டி ஆவாள். அந்த அங்க லட்சணங்களுள் ஏதேனும் ஒன்றைத் தியானித்து வந்தாலே போதும் எல்லா ஞானங்களையும் பெற்று விடலாம். தற்போது அந்த அங்க லட்சணங்களுள் ஒன்றைக் கூட யாரும் பெற முடியவில்லை என்பதே கலியுக நிலையாகும்.

தேடிச் சென்று திருந்தடி யேத்துமி
னாடி வந்தவர் நம்மையு மாட்கொள்வ
ராடிப்பாடி யண்ணாமலை கைதொழ
வோடிப்போ நமதுள்ள வினைகளே

கட்டியொக்குங் கரும்பினி டைத்துணி
வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனா
ரட்ட மூரத்தி யண்ணாமலை மேவிய
நட்ட மாடியை நண்ண நன்காகுமே

கோணிக் கொண்டையர் வேடமுன் கொண்டவர்
பாணி நட்டங்களாடும் பரமனா
ராணிப் பொன்னி னண்ணாமலைகைதொழப்
பேணி நின்ற பெருவினை போகுமே.

 

படித்த அறிவை விட்டு விட்டு கொஞ்ச நேரம் குழந்தையாக இருந்து பார். கடவுள் உன் கண்ணுக்குத் தெரிவார்.

கண்டந்தான் கறுத்தான் காலனாருயிர்
பண்டு கால் கொடு பாய்ந்த பரமனா
ரண்டத் தோங்கு மண்ணாமலை கைதொழ
விண்டு போகு நம்மேலை வினைகளே

முந்திச் சென்று முப்போதும் வணங்குமின்
அந்திவா யொளி யான்றன ண்ணாமலை
சிந்தியா வெழுவார் வினை தீர்த்திடுங்
கந்த மாமலர் சூடுங் கருத்தனே.

 

உலகில் மிகப் பெரிய அதிசயம் இரவில் தூங்கும் மனிதன் காலையில் எழுவதுதான். இந்த அதிசயத்தைப் புரிந்து கொள்பவன் முக்காலமும் உணர்ந்தவன் ஆகின்றான்.

மறையினானொடு மாலவன் காண்கிலா
நிறையு நீர்மையுள் நின்றருள்செய்தவ
னுறையு மார்பினா னண்ணாமலை கைதொழப்
பறையு நாஞ்செய்த பாவங்க ளானவே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

24. திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளியது

பண் : காந்தார பஞ்சமம்


இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உன்கழல் தொழு தெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே

தினமும் கங்கை நீரில் சிறிதளவாவது துவைக்கும் நீரில் கலந்து ஆடைகளைத் துவைக்க வேண்டும். இத்தகைய தூய்மையான ஆடைகளை அணிந்து வந்தால் உடலும், மனமும் புனிதமடையும்.

வாழினும் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உன்கழல் விடுவேன் அல்லேன்
தாழிளம் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

நனவினும் கனவினும் நம்பா உன்னை
மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்
புனல்விரி நறுங் கொன்றைப் போதணிந்த
கனலெரி அனல்புல்கு கையவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடு துறை அரனே

தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றாதென் நா
கைம்மல்கு வரிசிலை கணை ஒன்றினால்
மும்மதில் எரிஎழ முனிந்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்றெமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.

கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன்
கொய்யணி நறுமலர் குலாய சென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

 

சந்திரனுக்கு ராக்கெட் அல்லது வேறு எந்தவித எந்திரம் மூலமும் போக முடியாது. பக்தி, தபஸ், பூஜைகள் மூலமாகத்தான் மற்ற கிரகங்களுக்குப் போக முடியும். பூஜா பலன் உள்ளவர்கள் இந்த மனித உடலோடு சந்திர மண்டலத்திற்குப் போகலாம். அப்படி உடலோடு போய் வந்தவர்களில் ஒருவரே பெரிய வாத்யார் என்று அன்புடன் அழைக்கப்படும் சிவகுருமங்கள கந்தர்வா ஆவார்.

வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய் உன்னடியலால் ஏத்தாதென் நா
ஐந்தலை அரவு கொண்டு அரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் அடியலால் அரற்றாதென் நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படிஅழல் எழ விழித்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடு துறை அரனே.

 

தலைவலிக்கு தற்காலிக நிவாரணம் தருவதற்காகத் தைலத்தைத் தடவுகிறோம். தலைவலிக்கு நிரந்தர நிவாரணத்தைத் தருவது எது? ராம நாமமும், சிவ நாமமுமே தலைவலிக்கு நிரந்தரமான மருந்து.

பேரிடர் பெருகியோர் பிணிவரினும்
சீருடைக் கழலலால் சிந்தை செய்யேன்
ஏருடை மணிமுடி யிராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன் றெமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே

உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண்மலர் அடியலால் உரையாதென் நா
கண்ணனும் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன் றெமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே.

ஆசை நிறைவேறாதபோது ஏக்கம் வரும். ஏக்கம் நிறைவேறாதபோது தூக்கம் போகும். தினம் ஒரு கைப்பிடி அரிசி எடுத்து ஒரு பானையில் வைத்திருந்து, அதை அன்னதானம் செய்து வரவும். ஆசை கட்டுக்கடங்காமல் வளர்ந்து துன்பத்தில் கொண்டு போய் விடும் நிலை ஏற்படாது.

பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தா உன்னடி யலால் அரற்றாதென் நா
புத்தரும் சமணரும் புறன் உரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன் றெமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே

அலைபுனல் ஆவடுதுறை அமர்ந்த
இலைநுனை வேற்படை எம்மிறையை
நலமிகு ஞான சம்பந்தன் சொன்ன
விலையுடை அருந் தமிழ் மாலைவல்லார்
வினையாயின நீங்கிப் போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாக முன்னேறுவர் நிலமிசை நிலையிலரே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

 

25. திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியது

சுண்ணவெண் சந்தனச் சாந்தும் சுடர்திங்கட் சூளாமணியும்
வண்ணவுரிவை யுடையும் வளரும் பவள நிறமும்
அண்ணலரண் முரணேறு மகலம் வளாய வரவும்
திண்ணன் கெடிலப் புனலுமுடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதியா தொன்றுமில்லை யஞ்ச வருவதுமில்லை

பூண்டதோர் கேழலெயிறும் பொன்றிகழாமை புரள
நீண்ட திண்டோன் வலஞ்சூழ்ந்து நிலாக் கதிர் போல வெண்ணூலும்
காண்டகு புள்ளின் சிறகுங் கலந்த கட்டங்கக் கொடியும்
ஈண்டுகெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர்நாம்
அஞ்சுவதியாதொன்று மில்லை அஞ்சவருவதுமில்லை

ஒத்தவடத்திள நாகமுருத்திர பட்ட மிரண்டும்
முத்துவடக் கண்டிகையு முளைத்தெழு மூவிலை வேலும்
சித்தவடமுமதிகைச் சேணுயர்வீரட்டஞ் சூழ்ந்து
தத்துங்கெடிலப்புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதியா தொன்றுமில்லை யஞ்ச வருவதுமில்லை.

மடமான் மறிபொற்கலையு மழுப்பாம் பொருகையில் வீணை
குடமால் வரைய திண்டோளுங்குனி சிலைக் கூத்தின் பயில்வும்
இடமாறழுவிய பாகமிரு நிலனேற்ற சுவடும்
தடமார் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதியா தொன்றுமில்லை யஞ்ச வருவதுமில்லை

மற்றவர்களைச் சிரிக்க வை.
நீ சிரிக்காதே.

பலபல காமத்தராகிப் பதைத்தெழுவார் மனத்துள்ளே
கலமலக்கிட்டுத் திரியுங் கணபதியென்னுங் களிறும்
வலமேந்திரண்டு சுடரும் வான் கயிலாய மலையும்
நலமார் கெடிலப் புனலுமுடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்றுமில்லை யஞ்ச வருவதுமில்லை.

கரந்தன கொள்ளி விளக்குங் கறங்கு துடியின் முழக்கும்
பரந்த பதினென் கணமும் பயின்றறியாதன பாட்டும்
அரங்கிடைநூ லறிவாளரறியப்படாததொர் கூத்தும்
நிரந்த கெடிலப் புனலுமு டையாரொருவர் தமர்நாம்
அஞ்சுவதியா தொன்றுமில்லை யஞ்ச வருவதுமில்லை.

கொலைவரி வேங்கையதளுங் குலவோடிலங்கு பொற்றோடும்
விலைபெறு சங்கக் குழையும் விலையில் கபாலக் கலனும்
மலைமகள் கைக்கொண்ட மார்பு மணியார்ந்திலங்கு மிடறும்
உலவு கெடிலப் புனலுமுடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்றுமில்லை யஞ்ச வருவதுமில்லை.

கம்பு, கேழ்வரகு, பாசிப் பயறு இவற்றை வேக வைத்தோ, பவுடராகவோ வாரம் ஒரு முறையாவது உண்டு வந்தால் உடலில் இரும்புச் சத்து சமமாக இருக்கும்.

ஆடல் புரிந்த நிலையுமரையி லசைத்த அரவும்
பாடல் பயின்ற பல்பூதம் பல்லாயிரங் கொள்கருவி
நாடற்கரியதொர் கூத்தும் நன்குயர்வீரட்டஞ் சூழ்ந்து
ஓடுங் கெடிலப் புனலுமுடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்றுமில்லை யஞ்ச வருவதுமில்லை.

சூழு மரவத் துகிலுந் துகில் கிழி கோவணக் கீளும்
யாழின்மொழிய வளஞ்ச வஞ்சா தருவரை போன்ற
வேழமுரித்த நிலையும் விரிபொழில் வீரட்டஞ் சூழ்ந்து
தாழும் கெடிலப் புனலுமு டையாரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்றுமில்லை யஞ்ச வருவதுமில்லை

நரம்பெழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை
உரங்க ளெல்லாங் கொண்டெடுத்தா னொன்பது மொன்றுமலற
வரங்கள் கொடுத்தருள் செய்வான் வளர்பொழில் வீரட்டஞ் சூழ்ந்து
நிரம்பு கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை யஞ்ச வருவதுமில்லை.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

26. திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியது

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலு
மூசுவண்டறை பொய்கையும் போன்றதே
ஈசனெந்தை யிணையடி நீழலே

கடவுள் தன்னை நம்பியவர்களை நல்லோர்கள் மூலமாகக் காப்பாற்றிக் கொண்டே இருப்பார். கடலைப் பிளந்து சென்ற தீர்க்கதரிசி மோசஸை நம்பி வந்த நொண்டிக் கால் வாத்தையும் காப்பாற்றியவர்தானே எம் ஈசன்.

நமச்சிவாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சிவாயவே நானறி விச்சையும்
நமச்சிவாயவே நாநவின் றேத்துமே
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே

ஆளா காராளானாரை அடைந்துய்யார்
மீளா வாட்செய்து மெய்மை யுணற்கிலார்
தோளாத சுரையோ தொழும்பர் செவி
வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவரே

 

ஒருவருடைய ஜாதகத்தில் பத்தாம் இடத்தில் மாந்தி, குளிகள் இருந்தால் புது கண்டு பிடிப்புகளுக்கு உதவுவார்கள். கம்யூட்டர் துறையில் முன்னேற்றம் ஏற்படும். இத்தகையோர் திருச்சி திருவெறும்பூர் ஈசனை வணங்கி கோதுமை ரவையுடன் சர்க்கரை கலந்து எறும்புகளுக்கு இடுவதால் நலம் அடைவர்.

நடலை வாழ்வு கொண்டென் செய்தீர் நாணிலீர்
சுடலை சேர்வதுசொற்பிரமாணமே
கடலினஞ்ச முதுண்டவர் கைவிட்டால்
உடலினார் கிடந்தூர் முனிபண்டமே.

பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்ட ரனாம நவிற்றிலார்
ஆக்கைக் கேயிரை தேடியலமந்து
காக்கைக் கேயிரையாகிக் கழிவரே

குறிகளு மடையாள முங்கோயிலும்
நெறிகளு மவர் நின்றதோர் நேர்மையும்
அறியவாயிர மாரண மோதிலும்
பொறியிலீர் மனமென்கொல் புகாததே

வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்த சென்னியுந் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேநெடுங்காலமே

எழுது பாவை நல்லார் திறம்விட்டு நான்
தொழுதுபோக நின்றேனையுஞ்சூழ்ந்து கொண்டு
உழுத சால்வழியே யுழுவான் பொருடடு்
இழுதை நெஞ்சமிதென் படுகின்றதே

மகான்களின் பிரார்த்தனைகளால்தான் அணுகுண்டு போன்ற கொடுமையான ஆயுதங்களிலிருந்து உலகம் தப்பித்துக் கொண்டிருக்கிறது. அணுகுண்டுகள் இருக்கும் வரை மக்களைக் காக்க மகான்கள் பூமிக்கு வந்து கொண்டிருப்பார்கள்.

நெக்குநெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன்
பொக்கமிக்கவர் பூவு நீறுங் கொண்டு
நக்கு நிற்பவரவர் தமை நாணியே

விறகிற் றீயினன்பாலிற்படு நெய்போல்
மறைய நின்றுளன் மாமணி சோதியான்
உறவு கோனட்டுணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக்கடைய முன்னிற்குமே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

27. திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளியது

நின்றுமலர் தூவியின்று முதுகுன்றை
நன்று மேத்துவீர்க்கென்று மின்பமே

எது விஞ்ஞான முன்னேற்றம்?
ஒரு அம்பு விட்டால், ஒரு குண்டு போட்டால் 10 மூட்டை நெல் விழ வேண்டும். அதுதான் உண்மையான விஞ்ஞான முன்னேற்றம். எந்த முட்டாளும் ஒரு கோழி முட்டையை உடைத்து விடுவான். ஆனால், எந்த அறிவாளியாலும் ஒரு முட்டையை உருவாக்க முடியாது.
அர்ச்சுனன் அம்பு எய்தான். பீஷ்மரின் தாகம் தீர்க்க கங்கை ஓடோடி வந்தாள். இதுதான் வல்லவனின் செயல்.

அத்தன் முதுகுன்றைப் பத்தியாகிநீர்
நித்த மேத்துவீர்க் குய்த்தல் செல்வமே

ஐயன் முதுகுன்றைப் பொய்கள் கெடநின்று
கைகள் கூப்புவீர் வையமுமதாமே

ஈசன்முது குன்றை நேசமாகி நீர்
வாசமலர் தூவப் பாசவினை போமே

மணியார் முதுகுன்றைப் பணிவாரவர் கண்டீர்
பிணியாயின கெட்டுத் தணிவாருலகிலே.

மொய்யார் முதுகுன்றி லையாவென வல்லார்
பொய்யா யிரவோர்க்குச் செய்யாளணியாளே

விடையான் முதுகுன்றை யிடையாதேத்துவார்
படையாயின சூடி வுடையாருலகமே

பத்துத் தலையானைக் கத்த விரலூன்று
மத்தன் முதுகொன்றை மொய்த்துப் பணிமினே

இருவரறியாத வொருவர் முதுகுன்றை
உருகி நினைவார்கள் பெருகிநிகழ்வோரே

தேரரமணரும் சேரும் வகையில்லா
நேரின்முதுகுன்றை நீர்நின்றுள்குமே

நின்று முதுகுன்றை நன்று சம்பந்த
னொன்றுமுரை வல்லா ரென்று முயர்வோரே

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

 

28. நக்கீரர் சுவாமிகள் அருளியது

சூலபாணியை சுடர்தரு வடிவினை
நீலகண்டனை நெற்றியோர் கண்ணனை
பாலவெண்ணீற்றனை பரம யோகியை
காலனைக் காய்ந்த கறை மிடற்றண்ணலை

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
உங்கள் மூதாதையருக்கு நீங்கள் செய்யும் பித்ரு பூஜைகளும், பிறர் நலத்திற்காக ஆற்றும் தான, தர்மங்களுமே உங்கள் தலையைக் காக்கும். துப்பாக்கி உங்களைக் காப்பாற்றாது. துப்பாக்கி எப்போதும் ஒரு எதிர்மறை சக்தி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நூலணி மார்பனை நுண்ணிய கேள்வியை
கோல மேனியை கொக்கரைப் பாடலை
வேலுடைக் கையனை விண்டோய் முடியனை
ஞாலத் தீயினை நாதனைக் காய்ந்தனை

தேவதேவனை திருமறு மார்பனை
காலமாகிய கடிகமழ் தாரனை
வேதகீதனை வெண்டலை யேந்தியை
பாவநாசனை பரமேச்சுவரனை

கீதம் பாடியை கிளர் பொறியரவனை
போதணி கொன்றை யெம்புண்ணிய ஒருவனை
ஆதிமூர்த்தியை அமரர்கள் தலைவனை
சாதிவானவர்தம் பெருமான்தனை
வேதவிச்சையை விடையுடை அண்ணலை
ஓதவண்ணனை உலகத் தொருவனை
நாதனாகிய நன்னெறிப் பொருளினை

எண்கள் எண்ணத்திற்குள் அடங்காது. எண்களைப் பற்றி முழுமையாக அறிந்தவர்களே சித்தர்கள்.
தக்க வழிகாட்டியின் உதவியுடன் 20 ஆண்டு காலம் பூஜைகள் செய்து வந்தால் ஒரு எண்ணைப் பற்றி புரிந்து கொள்ளலாம்.

மாலைதா னெரி மயானத் தாடியை
வேலை நஞ்சினை மிகஅமுதாக்கியை
வேத வேள்வியை விண்ணவர் தலைவனை
ஆதிமூர்த்தியை அருந்தவ முதல்வனை

ஆயிர நூறுக் கரிவரியானை
பேயுருவு தந்த பிறையணி சடையனை
மாசறு சோதியை மலைமகள் கொழுநனை
கூரிய மழுவனை கொலற் கருங்காலனை
சீரிய அடியால் செற்றருள் சிவனை
பூதிப் பையனை புண்ணிய மூர்த்தியை
பீடுடையாற்றைப் பிராணி தலைவனை
நீடிய நிமலனை நிறைமறைப் பொருளினை

இரகசியங்கள் மூன்று விதம்.
அவை மண் மறைத்த ரகசியங்கள், ஜோதி மறைத்த ரகசியங்கள், கோயில் மறைத்த ரகசியங்கள் ஆகும். ஜோதி மறைந்த ரகசியங்கள் தெரிய வேண்டுமனால் மூன்று கோடி பேருக்கு அன்னதானம் இட, ஒரு லட்சம் ஹோமங்கள் நடத்த வேண்டும், மூன்று இறை அடியார்களுக்கு இலவச திருமணங்கள் நிகழ்த்த வேண்டும்.

ஈசனை இறையனை ஈறில் பெருமையை
நேசனை நினைப்பவர் நெஞ்சத்துள்ளனை
தாதணி மலரனை தருமனை பிரமனை
காதணி குழையனை களிற்றினுரியனை
சூழ்சடைப் புனலனை சுந்தர விடங்கனை
தார்மலர்க் கொன்றை தயங்கு மார்பனை
வித்தக விதியனை

தீதமர் செய்கைத் திரிபுர மெரித்தனை
பிரமன் பெருந்தலை நிறையதாகக்
கருமன் செந்நீர் கபால நிறைத்தனை
நிறைத்த கபாலச் செந்நீர் நின்று
முறைத்த உருவாரையனைத் தோற்றினை
தேவரும் அசுரரும் திறம்படக் கடைந்த
ஆர்வமுண் நஞ்சம் அமுதமாக்கினை

குழந்தை பிறந்தவுடன் ஏன் அழுகிறது?
பிறந்த குழந்தைக்கு தான் இறக்கப்போகும் தேதி தெரிந்து விடும். இறப்பதற்குள் தான் இறைவனுக்கு ஆற்ற வேண்டிய சேவைகளும் தெரிந்து விடும். அச்சேவைகளை நிறைவேற்ற 80 ஆண்டு கால ஆயுள் கூட குறைவாகவே தெரியும். இப்படிக் குறைந்த காலத்தில் எவ்வாறு இறைவனுக்குச் சேவை செய்யப் போகிறோம் என்று நினைப்பதால் எழுவதே குழந்தையின் அழுகை.

ஈரமில் நெஞ்சத்து ராவணன் தன்னை
வீரமழித்து விறல்வாள் கொடுத்தனை
திக்கமர் தேவரும் திருந்தாச் செய்கைத்
தக்கன் வேள்வியைத் தளரச் சாடினை

வேதமும் நீயே வேள்வியும் நீயே
நீதியும் நீயே நிமலன் நீயே
புண்ணியன் நீயே புனிதன் நீயே
பண்ணியன் நீயே பழம்பொருள் நீயே

ஊழியும் நீயே உலகமும் நீயே
வாழியும் நீயே வரதனும் நீயே
தேவரும் நீயே தீர்த்தமும் நீயே
மூவரும் நீயே முன்னெறி நீயே

மால்வரை நீயே மறிகடல் நீயே
இன்பமும் நீயே துன்பமும் நீயே
தாயும் நீயே தந்தையும் நீயே
விண்முதற் பூதம் ஐந்தவை நீயே
பத்தியும் நீயே முத்தியும் நீயே

சொலற் கருந் தன்மைத் தொல்லோய் நீயே யதனாற்
கூடலாலவாய்க் குழகனாவது
அறியாது அருந்தமிழ் பழித்தனன் அடியேன்
ஈண்டிய சிறப்பின் இணையடிக் கீழ் நின்று
வேண்டுமது இனி வேண்டுவன் விரைந்தே.

வெண்பா
விரைந்தேன் மற்றெம் பெருமான் வேண்டியது வேண்டா
திகழ்ந்தேன் பிழைத்தேன் அடியேன் - விரைந்தென்மேல்
சீற்றத்தைத் தீர்த்தருளும் தேவாதி தேவனே
யாற்றவும் நீ செய்யும் அருள்

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

29. திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளியது

பண் : தக்கராகம்

செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்
துப்ப னென்னா தருளே துணையாக
ஒப்ப ரெப்பர் பெருமான் ஒளிவெண்ணீற்
றப்பர் சோற்றுத்துறை சென்றடைவோமே

திருமணங்களை இறைவனின் திருச்சன்னதியில் நிகழ்த்துவதே சிறப்பு. இதனால் எந்தவிதமான மந்திர, எண்ண, சங்கல்ப தோஷங்களும் மணமக்களை அண்டாது. இத்தகைய திருமண வைபவங்களில் மாங்கல்ய தாரணத்தின்போது மணமக்கள் வடக்கு நோக்கி அமர்தல் வேண்டும். நின்ற நிலையில் தாலி கட்டுவதாக இருந்தால் மணமக்கள் கிழக்கு நோக்கி நிற்கலாம். சுவாமியின் நேரடிப் பார்வையில் நின்றால் அப்போது கிட்டும் தெய்வீகச் சக்திகளை நம்மால் தாங்க இயலாது என்பதே உண்மை.

பாலும் நெய்யுந் தயிரும் பயின்றாடித்
தோலும் நூலுந் துதைந்த வரைமார்பர்
மாலுஞ் சோலை புடைசூழ் மட மஞ்ஞை
ஆலுஞ் சோற்றுத் துறை சென்றடைவோமே.

செய்யர் செய்ய சடையர் விடையூர்வர்
கைகொள்வேலர் கழலர் கரிகாடர்
தையலாளொர் பாக மாயஎம்
ஐயர் சோற்றுத்துறை சென்றடைவோமே

பிணிகொ ளாக்கை யொழிய பிறப்புளீர்
துணிகொள் போரார் துலங்கு மழுவாளர்
மணிகொள் கண்டர் மேயவார் பொழில்
அணிகொள் சோற்றுத்துறை சென்றடைவோமே

பிறையும் அரவும் புனலுஞ் சடைவைத்து
மறையும் ஓதி மயானம் இடமாக
உறையும் செல்வம் உடையார் காவிரி
அறையும் சோற்றுத்துறை சென்றைடைவோமே

சென்னை, பெங்களூர் போன்ற மாநகரங்களில் வசிப்போர் வாகனங்களிலிருந்து வெளியாகும் கார்பன்டைஆக்ஸைடு, கார்பன்மோனாக்சைடு போன்ற நச்சுக் காற்றைச் சுவாசிக்க வேண்டிய நிலையில் இருப்பதால் இவர்கள் பல விதமான மூச்சிறைப்பு நோய்களுக்கும், ஆஸ்துமா போன்ற அலர்ஜி நோய்களுக்கும் ஆளாகிறார்கள். அண்ணாமலையில் கார்பன் ஆக்சைடுகளைக் கிரகிக்கும் செடிகள் உண்டு. மூன்று நாட்களே ஆயுள் பெற்ற இந்த மூலிகைச் செடிகள் தங்கள் ஆயுள் முழுவதும் கார்பன் ஆக்சைடுகளை ஈர்த்து பஸ்மம் ஆக்குகின்றன. ஆயுள் முடிந்தவுடன் காய்ந்து சருகாகி மண்ணில் மறைந்துவிடுகின்றன. இத்தகைய அற்புதங்கள் மிகுந்த திருஅண்ணாமலையை மாதம் இருமுறையாவது கிரிவலம் வந்து மூச்சுக் காற்று நோய்களிலிருந்து நிவாரணம் பெற்றுக் கொள்ளுங்கள்.

துடிகளோடு முழவம் விம்மவே
பொடிகள் பூசிப் புறங் காடரங்காகப்
படிகொள் பாணி பாடல் பயின்றாடும்
அடிகள் சோற்றுத்துறை சென்றடைவோமே

சாடிக் காலன் மாளத் தலை மாலை
சூடி மிக்குச் சுவண்டாய் வருவார்தாம்
பாடியாடிப் பரவுவா ருள்ளத்
தாடி சோற்றுத்துறை சென்றடைவோமே

பெண்ணோர் பாகம் உடையார் பிறைச் சென்னி
கண்ணோர் பாகம் கலந்த நுதலினார்
எண்ணா தரக்கன் எடுக்க வூன்றிய
அண்ணல் சோற்றுத்துறை சென்றடைவோமே

தொழுவா ரிருவர் துயரம் நீங்கவே
அழலா யோங்கி அருள்கள் செய்தவன்
விழவார் மறுகில் விதியால் மிக்க எம்
எழிலார் சோற்றுத் துறை சென்றடைவோமே

கோது சாற்றித் திரிவார் அமண்குண்டர்
ஓதும் ஒத்தை யுணரா தெழுநெஞ்சே
நீதி நின்று நினைவார் வேடமாம்
ஆதி சோற்றுத் துறை சென்றடைவோமே

அந்தன் சோற்றுத்துறை எம்ஆதியைச்
சிந்தை செய்ம்மின் அடியீராயினீர்
சந்தம் பரவு ஞான சம்பந்தன்
வந்த வாறே புனைதல் வழிபாடே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

 

30. சுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளியது

ஆலந்தா னுகந்த முதுசெய்தானை யாதியை யமரர் தொழுதேத்துஞ்
சீலந்தான் பெரிதுமு டையானைச் சிந்திப்பாரவர் சிந்தையுளானை
யேலவார் குழலாளுமை நங்கை யென்று மேத்தி வழிபடப் பெற்ற
காலகாலனைக் கம்ப னெம்மானைக் காணக் கண்ணடியேன் பெற்றவாறே

உற்றவர்க்குதவும் பெருமானை யூர்வ தொன்றுடையானும் பர்கோனைப்
பற்றினார்க் கென்றும் பற்றவன்றன்னைப் பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை
யற்றமில் புகழாளுமை நங்கையா தரித்து வழிபடப் பெற்ற
கற்றைவார் சடைக் கம்பனெம்மானைக் காண கண்ணடியேன் பெற்றவாறே

திரியுமுப்புரந் தீப்பிழம்பாகச் செங்கண்மால்விடை மேற்றிகழ்வானைக்
கரியினீருரி போர்த்து கந்தானைக் காமனைக் கனலா விழித்தானை
வரிகொள்வெள் வளையாளுமை நங்கைமருவி யேத்தி வழிபடப் பெற்ற
பெரியகம்பனை யெங்கள் பிரானைக் காணக் கண்ணடியேன் பெற்றவாறே.

குப்பைமேனி, வேப்பிலை, மஞ்சள், கொள் என்ற நான்கு மூலிகைகளின் பவுடருடன் தேங்காய் எண்ணெயைச் சேர்த்து தலையில் தடவி வந்தால் தலை மருவு உதிரும்.

குண்டலந்திகழ்கா துடையானைக் கூற்றுதைத்த கொடுந் தொழிலானை
வண்டலம்பு மலர்க் கொன்றையினானை வாளராமதிசேர் சடையானைக்
கெண்டையந் தடங்கண்ணுமை நங்கை கெழுமியேத்தி வழிபடப் பெற்ற
கண்ட நஞ்சுடைக் கம்பனெம்மானைக் காணக் கண்ணடியேன் பெற்றவாறே

வெல்லும் வெண்மழுவொன்று டையானை வேலை நஞ்சுண்ட வித்தகன்றன்னை
யல்லல் தீர்த்தருள் செய்யவல்லானை யருமறைய வையங்கம் வல்லானை
யெல்லையில் புகழாளுமை நங்கையென்று மேத்தி வழிபடப் பெற்ற
நல்ல கம்பனை யெங்கள் பிரானைக் காண கண்ணடியேன் பெற்றவாறே.

கீரமங்கலம்

திங்கடங்கிய சடையுடையானைத் தேவதேவனைச் செழுங்கடல் வளருஞ்
சங்க வெண் குழைக்கா துடையானைச் சாமவேதம்பெரிதுகப்பானை
மங்கை நங்கை மலைமகள் கண்டு மருவியேத்தி வழிபடப் பெற்ற
கங்கையாளனைக் கம்பனெம்மானைக் காணக் கண்ணடியேன் பெற்றவாறே.

விண்ணவர் தொழுதேத்த நின்றானை வேதந்தான் விரித்தோத வல்லானை
நண்ணினார்க்கென்று நல்லவன்றன்னை நாளுநாமுகக்கின்ற பிரானை
யெண்ணிதொல் புகழாளுமை நங்கை யென்றுமேத்தி வழிபடப் பெற்ற
கண்ணு மூன்றுடைக் கம்பனெம்மானைக் காணக் கண்ணடியேன் பெற்றவாறே.

சிந்தித்தென்றும் நினைந்தெழுவார்கள் சிந்தையிற்றிகழுஞ் சிவன்றன்னைப்
பந்தித்த வினைப்பற்றறுப்பானைப் பாலொடானஞ்சு மாட்டுகந்தானை
யந்தமில் புகழாளுமை நங்கையா தரித்து வழிபடப் பெற்ற
கந்த வார்சடைக் கம்பனெம்மானைக் காணக் கண்ணடியேன் பெற்றவாறே

வரங்கள் பெற்றுழல் வாள ரக்கர்தம் வாலிய புரமூன்றெரித்தானை
நிரம்பிய தக்கன்தன் பெருவேள்வி நிரந்தரஞ் செய்த நிட்கண்டகனைப்
பரந்த தொல்புகழாளுமை நங்கை பரவி யேத்தி வழிபடப் பெற்ற
கரங்க ளெட்டுடைக் கம்பனெம்மானைக் காணக் கண்ணடியேன் பெற்றவாறே

எள்கலின்றி யிமையவர் கோனையீசனை வழிபாடு செய்வாள்போ
லுள்ளத்துள் கியுகந்துமை நங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சிவெருவி யோடித் தழுவ வெளிப்பட்ட
கள்ள கம்பனை யெங்கள் பிரானைக் காணக் கண்ணடியேன் பெற்றவாறே.

பெற்றமேறு கந்தேற வல்லானைப் பெரிய வெம்பெருமானென்றப்போதுங்
கற்றவர் பரவப்படுவானைக் காணக் கண்ணடியேன் பெற்றதென்று
கொற்றவன் கம்பன் கூத்தனெம்மானைக் குளிர் பொழிற்றிரு நாவலாரூர
னற்றமிழிவை யீரைந்தும் வல்லார் நன்னெறியுல கெய்து வர்தாமே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

31. சுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளியது

பண் : செந்துருத்தி

மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி
ஆளா யிருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே

விற்றுக் கொள்வீர் ஒற்றி அல்லேன் விரும்பி ஆட்பட்டேன்
குற்றம் ஒன்றுஞ் செய்ததில்லை கொத்தை ஆக்கினீர்
எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்
மற்றைக் கண்தான் தாராதொழிந்தால் வாழ்ந்துபோதீரே

அன்றில்முட்டா தடையுஞ் சோலை ஆரூர் அகத்தீரே
கன்று முட்டி உண்ணச் சுரந்த காலி யவைபோல
என்று முட்டாப்பாடும் அடியார் தங்கண் காணாது
குன்றின் முட்டிக் குழியில் விழுந்தால் வாழ்ந்து போதீரே

துருத்தி யுறைவீர் பழனப் பதியாய்ச் சோற்றுத்துறை ஆள்வீர்
இருக்கை திருவாரூரே உடையீர் மனமே எனவேண்டா
அருத்தி உடைய அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வருத்தி வைத்து மறுமைப் பணித்தால் வாழ்ந்து போதீரே

செந்தண் பவளந் திகழுஞ் சோலை இதுவோ திருவாரூர்
எந்தம் அடிகேள் இதுவே ஆமா றுமக்காட் பட்டோர்க்குச்
சந்தம் பலவும் பாடும் அடியார் தங்கண் காணாது
வந்தெம் பெருமான் முறையோ என்றால் வாழ்ந்து போதீரே

தினைத்தாள் அன்ன செங்கால் நாரை சேருந் திருவாரூர்ப்
புனத்தார் கொன்றைப் பொன்போல் மாலைப் புரிபுன் சடையீரே
தனத்தாலின்றித் தாந்தாம் மெலிந்து தங்கண் காணாது
மனத்தால் வாடி அடியார் இருந்தால் வாழ்ந்து போதீரே

ஆயம்பேடை அடையுஞ் சோலை ஆரூர் அகத்தீரே
ஏயெம் பெருமான் இதுவோ ஆமா றுமக்காட் பட்டோர்க்கு
மாயங்காட்டி பிறவி காட்டி மறவா மனங்காட்டி
காயங் காட்டிக் கண்ணீர் கொண்டால் வாழ்ந்து போதீரே

கழியாக் கடலாய்க் கலனாய் நிலனாய்க் கலந்த சொல்லாகி
இழியாக் குலத்தில் பிறந்தோம் உம்மை இகழாதேத்துவோம்
பழிதான் ஆவதறியீர் அடிகேள் பாடும் பத்தரோம்
வழிதான் காணாது அலமந் திருந்தால் வாழ்ந்து போதீரே

பேயோ டேனும் பிறிவொன் றின்னா தென்பர் பிறரெல்லாம்
காய்தான் வேண்டிற் கனிதா னன்றே கருதிக் கொண்டக்கால்
நாய்தான் போல நடுவே திரிந்தும் உமக்காட் பட்டோர்க்கு
வாய்தான் திறவீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே

செருந்தி செம்பொன் மலருஞ் சோலை யிதுவோ திருவாரூர்
பொருந்தித் திருமூலட்டா னம்மே இடமாக் கொண்டீரே
இருந்தும் நின்றும் இடந்தும் உம்மை இகழா தேத்துவோம்
வருந்தி வந்தும்உமக்கொன்று ரைத்தால் வாழ்ந்து போதீரே

காரூர் கண்டத் தெண்தோள் முக்கண் கலைகள் பலவாகி
ஆரூர் திருமூலட்டானத்தே அடிப்பேர் ஆரூரன்
பாரூர் அறிய என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்
வாரூர் முலையாள் பாகங் கொண்டீர் வாழ்ந்து போதீரே

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

32. திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியது

கண்டுகொள் ளரியானைக் கனிவித்துப்
பண்டுநான் செய்த பாழிமை கேட்டிரேல்
கொண்டபாணி கொடுகொட்டி தாளங்கைக்
கொண்டதொண்டரைத் துன்னிலுஞ் சூழலே

தற்காலத்தில் விளை நிலங்களில் இயற்கை உரங்களை விடுத்து யூரியா, அம்மோனியா போன்ற ரசாயண உரங்களை இடும் வழக்கம் நிலவி வருவதால், நாம் உண்ணும் அரிசி, காய்கறிகள் போன்றவற்றில் யூரியாவின் அளவு அதிகமாக உள்ளது. இதனால் பலருக்கும் மூட்டு வலி, சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இத்தகைய துன்பங்களிலிருந்து மீள சுயம்பு லிங்க மூர்த்தி எழுந்தருளியுள்ள தலங்களில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து அந்த பிரசாத சாதத்தை புளியோதரை, எலுமிச்சை சாதமாகக் கலந்து அன்னதானம் செய்து வரவும்.

நடுக்கத்துள்ளு நகையுள்ளு நம்பர்க்குக்
கடுக்கக் கல்ல வடமிடுவார்கட்குக்
கொடுக்கக் கொள்க வெனவுரைப்பார்களை
இடுக்கண் செய்யப் பெறீரிங்கு நீங்குமே

கார்கொள் கொன்றைக் கடிமலர்க்கண்ணியான்
சீர்கொணாமஞ் சிவனென்றரற்றுவார்
ஆர்களாகினு மாகவவர்களை
நீர்கள் சாரப் பெறீரிங்கு நீங்குமே

சாற்றினேன் சடை நீண் முடிச் சங்கரன்
சீற்றங் காமன் கண் வைத்தவன் சேவடி
ஆற்றவுங் களிப்பட்ட மனத்தராய்
போற்றி யென்றுரைப்பார் புடைபோகலே

இறையென் சொன் மறவேனமன் றூதுவீர்
பிறையும் பாம்புமுடைப் பெருமான்றமர்
நறவ நாறிய நன்னறுஞ் சாந்திலும்
நிறைய நீறணிவா ரெதிர் செல்லலே

 

‘பில்லி, சூன்யம், ஏவல் போன்றவை உண்மையா, பொய்யா? அவை எப்படிச் செயல்படுகின்றன?‘ என்று ஆராய்ச்சி செய்வதை விட அத்தகைய கொடுமையான விளைவுகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதே புத்திசாலித்தனம். சரபேஸ்வரர் வழிபாடு எல்லாவிதமான பில்லி, சூன்யத் துன்பங்களையும் தீர்க்கும்.

வாமதேவன் வளநகர் வைகலும்
காமமொன்றிலராய்க் கைவிளக்கொடு
தாமந்தூ பமுந் தண்ணறுஞ் சாந்தமும்
ஏமமும் புணைவாரெதிர் செல்லலே

படையும் பாசமும் பற்றிய கையினீர்
அடையன் மின்னமதீ சனடியரை
விடை கொளூர்தி யினானடியார்குழாம்
புடைபுகாது நீர்போற்றியே போமினே

விச்சையாவதும் வேட்கை மையாவதும்
நிச்ச னீறணிவாரை நினைப்பதே
அச்ச மெய்தியரு கணையாது நீர்
பிச்சை புக்கவனன்பரைப் பேணுமே

 

கடல் முழுவதும் உப்பு நீர். ஆனால், அதில் வாழும் மீனுக்கு உப்பு கிடையாது. இதை ஆத்ம விசாரம் செய்து பார்த்தால் கடவுளின் கருணையும், வல்லமையும் தெரிய வரும். மீன் பவித்ரமானது, தூய்மையானது. அதனால்தான் சிவபெருமான் மீனவராக வந்து திருவிளையாடல் புரிந்தார். அம்மையும் மீன் கண் உடையவளாய், மீனாட்சியாய் அருளாட்சி செய்து வருகிறாள்.

இன்னங் கேண்மி னிளம்பிறை சூடிய
மன்னன் பாதமனத்துட னேத்துவார்
மன்னுமஞ் செழுத்தாகிய மந்திரம்
தன்னி லொன்று வல்லாரையுஞ் சாரலே

மற்றுங் கேண்மின் மனப்பரிப் பொன்றின்றிச்
சுற்றும் பூசிய நீற்றொடுகோவணம்
ஒற்றையேறு டையானடியே யலால்
பற்றொன்றில்லிகண் மேற்படைபோகலே

அரக்கனீரைந் தலையு மோர்தாளினால்
நெருக்கி யூன்றிட்டான்றமர் நிற்கிலும்
சுருக்கெனாதங்குப்பேர்மின் கண்மற்றுநீர்
சுருக்கெனிற் சுடரான்கழல் சூடுமே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam