பெறுவதற்கு ஒன்றுமில்லை, இழப்பதற்கும் ஏதுமில்லை .. மாதா அமிர்தானந்தா

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்!

கபாலம் நிரம்பியதோ சுவாமி!

எத்தனை துறைகளில், எத்தனை விதங்களில் பெரியவர், ஆன்மீக ரீதியாக, தெய்வீக வளம் பொங்க, சிறுவனை விருத்தி செய்திருக்கின்றார். சிறுவயதிலேயே, ஜோதிடம், வாஸ்து சாஸ்திரம், ஆலயச் சில்ப சாஸ்திரம், ஆகமம், வேத மந்திரங்கள், எண் கணிதம், (numerology), பெயர் கணிதம், ஹோம முறைகள், யக்ஞங்கள் .. அப்பப்பா .. எவ்வளவுதான் மனதில் பிடிப்பது? எத்தனை கோடி விஷயங்களைத்தான் அவன் தன் மூளையில் நிரப்பி வைத்துக் கொள்வது?

“வாத்யாரே! என்னோட குருவி மூளையில எவ்வளவுதான் ஏத்த முடியும்? ஏற்கனவே நான் அடிமண்டு! மனப்பாடம், கணக்குன்னாலே எனக்கு வேப்பங்காயாய்க் கசக்குமே!” என்று பன்முறை சிறுவன் பெரியவரிடம், பகன்றும் பார்த்து விட்டான். ஆனால் பெரியவராவது சற்றும் மசிவதாவது!

“சொல்ல வேண்டியது எங்க கடமை! பயன்படுத்த வேண்டியது உன் கடமை!” என்று சொல்லியே பெரியவர் அவனை மடக்கி விடுவார்!

பொருள் ஆனந்தம்
இடையே புலன் ஆனந்தம் !

Spiritual Perennial river ஆக, வற்றாத (ஆன்மீக) ஜீவநதியாய்த் தெய்வீக விஷயங்களை அவனிடம் நாளுக்கு நாள், மணிக்கு மணி, நிமிடத்திற்கு நிமிடம் பெரியவர் பொழிந்து கொண்டே இருந்தார்!

“கண்டேன் சித்தரை!” எனக் களித்திடாதே!

இம்மாதிரியாக அவருடைய அருட்பிரவாகத் தெய்வீக உரையினைத் தாங்கும் விதமறியாது, அவன் பெரியவரிடம் கொண்ட, மேற்கண்ட வகையான உரையாடல்கள் எல்லாம் பன்முறை அவனுடைய குருகுலவாசத்தில் நிகழ்ந்தன! இதற்கு முத்தாய்ப்பு வைத்தாற் போல் அமைந்த “காலம் கடக்கும்” ச(மு)த்தான உரையாடல், ஒன்று, ஒரு முறை சிறுவனின் குருகுல வாசத்தில் நிகழ்ந்தது! எங்கோ?

இமாலய மலைப் பகுதியில்.. கூலு மலைப் பள்ளத்தாக்கில் … மணாலி என்ற இடம் என்பதாகச் சிறுவனுக்கு ஞாபகம்!

ஹிருத்தாபநாசினி தீர்த்தமும்
விஜயகோடி விமானமும்
திருவள்ளூர்

ஆம், ஆங்கே.. கூலுவில்.. அப்போது…

எங்கெங்கோ நடுங்கும் குளிரில் சிறுவனை அழைத்துச் சென்ற பெரியவர், வழியில், பல அற்புதமானச் சித்தர்களை, யோகியரை, மகரிஷிகளைத் தரிசனம் செய்து வைத்தார். ஆனால், மூன்று நிபந்தனைகளுடன் தான்!

அவை யாவையோ?

அவர்களுடைய பாதங்களில் வீழ்ந்து நமஸ்கரித்து, ஆரவாரம் செய்து, அவர்களுடைய பூலோக யோக உலாவிற்கு இடைஞ்சல் தரலாகாது!

“அது வேண்டும், இது வேண்டும்!” எனப் பிய்த்துப் பிடுங்காது அவரவரை அவரவர் வழிச் செல்ல அமைதியாக விட்டு விட வேண்டும்!

இவர்தான் அவரென அகில உலகறிய அறிவித்து, ஆர்ப்பரித்து அவர்களுடைய யோக வாசங்களுக்குத் தடங்கல் செய்யக் கூடாது!

இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பெரியவர் அறிமுகம் செய்து, ஆங்காங்கே சிறுவன் தரிசித்த பலரும் மானசரோவரிலும், திருக்கயிலாயப் பகுதியிலும் உறைகின்ற யோகியர், சித்தர்கள், மாமுனிகள் ஆவர். நினைத்தால், ஆகாய மார்கமாகப் பல்லாயிரம் மைல்களுக்கு யோகப் பூர்வமாகப் பறந்து செல்ல வல்லவர்கள்!

ஆனால் தற்போது அவர்களோ… நடுங்கும் குளிரில்.. ஏதேதோ சிறு சிறு காய்ந்த பழங்களை ஆங்காங்கே பொறுக்கி, வயிற்றுப் பசியை ஆற்றியவாறு மிகவும் சாதாரணமாக, எளிய முறையில், மலைப் பாதையில் நடந்து செல்வது கண்டு சிறுவனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது!

“இந்த மாதிரித் தாண்டா நீயும் தெய்வீகத்துல ரொம்ப நல்லா டெவலப் ஆகணும்! எதிர்காலத்துல உனக்கு, கடவுள் அருளால எவ்வளவு தெய்வீக சக்திகள் வந்து குவிஞ்சாலும், எதையும் வெளிக்காட்டாம, ரொம்ப, ரொம்ப சாதாரணமா இருக்கணும்கறதுக்கான ஒரு பிராக்டிகல் பாடம் இது!”

எத்தனை கோடி தரிசனம் வைத்தாய் இறைவா?

உத்தம பைரவ உபாசகியாகப் பிரகாசித்த கன்யாகுமரி “மாயி” மாதாவிலிருந்து, இமாலயத்தின் மஹாஅவதூது பாபா வரை, எத்தனை வடிவுகளில், விதவிதமான சித்தர்கள், யோகியர்! ஒருவர் போல் இன்னோருவர் இல்லை!

இடையிடையே பாரத்தின் பல பகுதிகளுக்கும்.. கால் நடையாகவும், வாகனங்களிலும் சென்று.. தூல வடிவிலும், சூட்சுமமாகவும்.. அப்பப்பா எத்தனை எத்தனை சித்தர்களின், மகான்களின், யோகியரின் தரிசனங்கள் ஜீவசமாதி பூண்ட சித்தர்கள் கூட, சூட்சும வடிவில், தூல வடிவில்  காட்சி கொடுத்த இனிய அனுபூதிகள் தாம் எத்தனை எத்தனை!

“இவர்தான் மஹாஅவதூது பாபா, இவர்தான் குப்பைச் சித்தர், இவர்தான் த்ரைலிங்க யோகி, இவர்தான் மாதங்க மகரிஷி என்று ஆங்காங்கே உலவும் உத்தமர்களைப் பகுத்துரைக்க வல்ல அண்டசராசரச் சித்தர்பிரானே, சாலைக் கடையில் ‘பரோட்டா’ தின்னும் வெறும் ‘கோவணாண்டிப் பெரியவராகத்’ தானே தன்னை மானுடராக வடிவு அமைத்துக் கொண்டு, என்னே எளிமையுடன் பூலோகத்தில் வலம் வருகின்றார்!”

இவ்வளவு சித்தர்கள், யோகியரை அவனுக்கு அடையாளங் காட்ட வல்லவரோ சற்றும் அசங்காது மிகவும் சர்வ சாதாரணமாக இருந்தார்! இதுவே ஒரு பெரிய உத்தமப் பெருநிலை போலும்!

இவ்வாறு பெரியவரைப் பற்றி அவன் பெருமை கொண்டாலும், தனக்கு ‘பரோட்டா’ வாங்கித் தருபவராகவே அவரை எண்ணி வரும் தன் மடமையை எண்ணிச் சிறுவனுக்கு என்னவோ போல் இருந்தது!

விண்ணளாவிய யோகா(க)ச(ய)னம்!

செஞ்சிமலை

மறுநாள் காலை…

சிறுவனுக்கு அரைகுறையான தூக்கத்தில், திடீரென்று எழுந்தது போல் இருந்தது! ஏனென்றால், நடப்பது கனவா, நனவா என்றே அவனுக்குத் தெரியவில்லை!

சிறுவனை ஒரு கூடாரத்தில், வாடகை கொடுத்து, மரக் கட்டிலில் படுக்க வைத்த பெரியவர், தான் மட்டும் கோவணாண்டியாய், போர்த்திக் கொள்ள ஒரு போர்வை கூட இல்லாமல், நடுரோட்டில் ஒரு பெஞ்சை இழுத்துப் போட்டுப் படுத்துக் கொண்டு விட்டார்! அவர் உறங்கிய கோலமோ, அதைவிட அதிசயமாக இருந்தது!

வானத்தை நோக்கி நேரே படுத்து, கைகளை மார்புக்கு எதிரே உயர்த்தி, கூப்பி வணங்கிய நிலையில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்! யாராவது கைகளைக் கூப்பி வணங்கியபடி, சற்றும் கரங்கள் அசையாது தூங்க முடியுமா? இது நிச்சயமாக அதிதுரீய யோகசயனம்தான்!

.. போவோர் வருவோர் எல்லாம் பெரியவரின் இக்கோலத்தைப் பார்த்து, வியந்து, அதிசயித்து, சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்து வணங்கிச் சென்றார்கள்.. சிறுவனுக்கோ நிஜமாகவே நடப்பது கனவா, நனவா என்று இன்னமும் தெரியவில்லை!

அவருடன் பழகிய வரையில் அவர் இப்படி வெளிப்படையாக ‘துரீய யோகசாதன நிலையில்’ படுத்துறங்கி அவன் கண்டதில்லையே!

விடியல் முன்னரேயே எழுந்த சிறுவன், பெரியவரைத் தொந்தரவு செய்யலாகாது என்பதற்காகப் பலவிதமான சூரிய நமஸ்கார வழிபாடுகளை விஸ்தாரமாகச் செய்தான்., குளிருக்கு இடையில், யோகாசனங்களில், அவனுள் எழுந்த யோகாக்னி அவனை மென்மேலும் ஆன்மப் பூர்வமாகப் பண்படுத்தியதை அவன் நன்கு உணர்ந்தான்! எல்லாம் இடத்தின் மகிமைதான்! எண்ணற்ற சித்தர்களும், மகரிஷிகளும் வலம் வரும் மலை பூமி என்றால் அங்கு யோக சக்தி, சித்திகளுக்குப் பஞ்சமா என்ன?

“அந்தந்த யோகத்தை, யோக முத்திரையை அதற்கு உரித்தான இடத்துல செஞ்சாத் தாண்டா பரிபூரணமான பலன்கள் கிடைக்கும்! செஞ்சியில சிரசாசனம் பண்ணினா ஆயிரம் மடங்கு பலன் வரும்! மாயவரத்துலன்னா மயூராசனம் பண்ணனும்! திருப்போரூர்னா அங்கே குக்குடாசனம் பண்ணனும்! ஏன்னா அந்தந்த பூமியோட யோகப் பாங்கு அப்படி! தேசிங்கு ராஜா செஞ்சியில அப்படித்தான் சிரசாசனம் பண்ணி நிறைய யோகசித்திகளைப் பெற்றான்! அவனோட தேவ கல்யாணி குதிரை கூட சிரசாசனம் பண்ணும் தெரியுமா?” பெரியவர் திருஅண்ணாமலை நடைப் பயணத்தில் உரைத்தது அவன் நினைவுக்கு வந்தது!

முக்கியமான நாளப்பா, முத்தையா!

… திடீரென்று தானாக அமைதியாகவே கண் விழித்த பெரியவர், சிறுவனுடைய சிந்தனா ஓட்டங்களைக் கண்டு கொள்ளாதவராய், ஒன்றுமே நடவாதவர் போல் உயர்த்திய கைகளைக் கீழே கொணர்ந்து சாதாரணப்படுத்தி, எழுந்தவராய், “சரி வாடா போகலாம்! நமக்குன்னு சில முக்கியமான வேலைகள் இன்னிக்கு இருக்கு! உன்னோட குருகுலவாசத்துல ரொம்ப, ரொம்ப முக்கியமான நாள் இது!” என்று சஸ்பென்ஸாகச் சொல்லி விட்டு, உறங்கிய சுவடே தெரியாமல், சுறுசுறுப்புடன் புறப்பட்டார்.

நல்ல குளிரில் நெடுந்தூரம் நடந்ததும்.. திடீரென்று ஓரிடத்தில் நின்று… வானத்தை நோக்கி வணங்கி நின்று, பல முத்திரா வந்தனங்களுடன், பல மந்திரங்களை ஓதி, கீழே சாஷ்டாங்கமாகப் பன்முறை நமஸ்காரப் பிரதட்சிணங்கள் செய்து, நெடுநேரம் வழிபட்டார்! சிறுவனும் அப்படியே இயன்றவரைக் கடைபிடித்தான்!

“இதோ பாருடா கண்ணா! உன்னோட குருகுல வாசத்துல ரொம்ப ரொம்ப முக்கியமான நாள் இது! எதிர்காலத்தையும் அறியற பாடமப்பா! எதிர்காலத்துக்குள்ள நுழையணும்னாலே அதுக்குன்னு விசேஷமா “காலபந்தன வரத” யோகம் கை கூடணும்! ஆனா அது அவ்வளவு ஈஸியா வந்துடாது! ஏன்னா எதிர்காலத்தை அறியறப்போ, இப்படி நம்முடைய சாதாரண தூல சரீரத்துல இருந்தா சரிப்படாது! நடக்கறதைப் பார்த்து மனசு சஞ்சலப்பட்டுடும்!”

தட்டுங்கள் திறக்கப்படும்!

“ஒவ்வொரு மனுஷனுக்கும் இருக்கற ஒன்பது சரீரத்துல, எந்தச் சரீரம் நடப்பதெல்லாம் நாராயணன் செயல்ங்கற, நியூட்ரலான, மிச்ர பாவன நிலையில இருக்கோ, அது மூலமாத்தான் எதிர்காலத்துக்குள்ள நுழைஞ்சு பார்க்கணும்!

“நடந்ததே, நடப்பனவாக, நடந்து கொண்டு இருக்கிறதுங்கறது சித்தர்களோட சித்தாந்த வாக்கு! அதுக்குத்தான் இவ்வளவு ஆயிரம் மைல் தாண்டி வந்து, காடு, மலையெல்லாம் கடந்து வந்து, இங்கே இவ்வளவு யோக பூஜைகள் செஞ்சோம்! இதெல்லாம் வராஹி உபாசனையில, காலபைரவர் உபாசனையில வரக் கூடியது! பழகறதுக்கு ரொம்ப ரொம்பக் கஷ்டமானது கரணம் தவறினா பிறவியோ பிறவிதான்!” என்று சொல்லியவாறே, பெரியவர் அவனுடைய கபாலத்தில் தட்டி, நேரே நிற்க வைத்து, அவனைச் சுழுமுனை சுவாச யோக நிலைக்கு மீண்டும் மாற்றினா!

அவர் தன்னுடைய கட்டை மற்றும் சுண்டு விரல்களால் அவனுடைய மண்டைச் சுழியை மூன்று முறை தட்டிடவே… அவனுக்கு ஒளிப் பூர்வமாக, ஏதேதோ புலர ஆரம்பித்தன! அவன் காலத்தின் முன்னும், பின்னும் சென்று வருவது போல் இருந்தது! மலை, நில, தாவர அமைப்புகள் மாறி, மாறித் தெரிந்தன!

சிறுவனுக்கு நடப்பது கனவா அல்லது நனவா என்று தெரியவில்லை!

விதி விதித்தபடி வி(தை)தித்தது!

அப்போது வெகு தூரத்தில் மலைச் சரிவில் பஸ் ஒன்று வருவதைச் சுட்டிக் காட்டினார் பெரியவர்! அதைப் பற்றி அவர் சொல்லச் சொல்ல… அதற்கு மேல் பெரியவர் அதைப் பற்றி என்ன சொன்னார் என்று அவனால் தெரிந்து கொள்ள முடியவில்லை!

ஆனால் அவர் சொன்னார் அவன் கேட்டான் என்பது மட்டும் நிச்சயம்! காரணம், அவர் அவனுக்குச் சொன்னதை, அவனுடைய ஒன்பது சரீரங்களில் எந்த சரீரம் எடுத்துக் கொண்டது என்று அவனால் அப்போது பகுத்தறிய முடியவில்லை!

… சற்று நேரத்தில்…

மிக வேகமாக வந்த அந்த பஸ் சறுக்கிட….

அருகில் பள்ளத்தில் பஸ் சரிந்து கவிழ்ந்தது..

ஒரே கூக்குரல்.. சப்தம், பெரியவர் நிதானமாக முன் நோக்கி நடந்தார்..

“இதுதான் நடக்கும்னு முன்னமேயே விதி தெரிஞ்சாலும், நம்மால ஒண்ணும் செய்ய முடியாது!... நம்மால எந்த உயிரைக் காப்பாத்தணும்னு எழுதியிருக்கோ, அது தாண்டா நடக்கும்! அதைத்தான் செய்யவும் முடியும்! விதிப் பூர்வமாக நடக்க இருக்கறதை மாத்தவும் முடியாது! கடவுளே விதியை மாத்தினால்தான் எதுவும் மாறும்! ஆனா நடப்புலக விஞ்ஞானத்துக்கு இது ஒத்துவராது! தப்பாவே இதை எடுத்துக்கும்!”

விறுவிறு என்று நடந்த பெரியவர் நாலைந்து பேர்களைக் கூப்பிட்டுக் கொண்டார். வழியில் கிராமத்தில் ஒரு மாட்டு வண்டியைத் தயார் செய்து. கீழே விழுந்து கிடந்தவர்களுக்கு முதலுதவி அளித்து, அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார். சிலருக்குத் தாமே மூலிகை வைத்தியம் செய்து, அவர்களையும் அங்கே வந்த வண்டிகளில் அனுப்பி வைத்தார். சிறுவனும் கூடவே பரக்கப் பரக்க வேலை செய்தான்!

முன்பு ஒரு முறை பல்லாண்டுகளுக்கு முன், பெரியவருடன் ஆந்திர மாநில, நெல்லூர்ப் பகுதி அருகே… புயலில் சிக்கிப் பலரும் மாண்டமையால் அவதியுற்ற பல ஏழைக் குடும்பங்களுக்கு உதவி செய்து, பல பிணங்களைச் சம்ஸ்காரம் செய்ய உதவி புரிந்து, இறையருளால் அரும்பெரும் சமுதாய இறைப் பெரும் பணி ஆற்றியது அவனுக்கு நினைவுக்கு வந்தது. அப்போதும் இப்படித்தான், புயல் வருவதற்கு ஒரு நாள் முன்னர்.. திடீரென்று பெரியவர் அவனைக் கூட்டிக் கொண்டு அங்கு சென்றார்! தெரிந்தும் தெரியாதிருப்பதே பெரும் யோக நிலை போலும்!

ஜாதி, மத, குல பேதமின்றி (அநாதை) பிரேத சம்ஸ்காரத்திற்கு உதவுவது கும்பாபிஷேகப் புண்ய பலன்களைத் தந்திடும் என்பது வேதப் பூர்வமான வாக்கன்றோ!

உறக்கமா? யோகசயனமா?

கூலு மலைப் பகுதியில்…. நடந்ததெல்லாம் அவனுக்குக் கனவு போலவே இருந்தது. நிஜமாகவே நடந்ததா, இல்லையா எதையும் அவனால் கடைசி வரை உணர முடியவில்லை!

எல்லாம் முடிவதற்கு நள்ளிரவு ஆயிற்று, வெடவெடக்கும் குளிரில் இருவரும் திரும்பினர். பழையபடி கூடாரத்துக்கு வந்த பின்னர், பெரியவர் வழக்கம் போல் பெஞ்சில் படுத்துக் கொண்டாலும்,

“டேய் ராத்திரியில ரொம்பக் குளிரும் போல இருக்கே! எதுக்கும் ஒரு வேஷ்டி இருந்தாக் கொடு! போர்த்திக்கலாம்!” எனக் குரல் கொடுத்தார்.

‘எதற்கும் இருக்கட்டும்’ என்று தன் கைப் பையில் எடுத்து வைத்திருந்த வேஷ்டியை எடுத்து, சிறுவன் அவரிடம் கொடுத்திடவே, அவர் அதனைத் தலை முதல் கால் வரை இழுத்துப்ப் போர்த்திக் கொண்டு படுப்பதைக் கண்டு அவனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

நேற்று வரைக் கோவணாண்டியாய்க் குளிரைத் தாங்கியவருக்கு இன்று மட்டும் குளிர்வானேன்? ஆனால் சித்தன் போக்கு, சிவன் போக்கு என்றாலும் காரண காரியமின்றி எதனையும் அவர் செய்வதில்லையே!

“ஆமாம் வாத்யார் இன்று எதற்காகப் போர்த்திக் கொள்கிறார்?” என்ற அடுத்த சிந்தனையுள் அவன் புகுந்தான்! இதற்கான காரணமானது அவன் அறியாத ஒன்றல்லவே!

எப்போதெல்லாம் பெரியவர் “astral travel” செல்கின்றாரோ, அப்போதெல்லாம் எதிலேனும் அவர் மறைந்திடுவார் என்பதும் அவன் அறிந்த ஒன்றுதானே! இவ்வாறாகப் பலவிதமான சிந்தனைகளில் புரண்டான்.

“யாமுரையோம், நீயே உணர்!” என்பதாக அல்லவா தற்போதெல்லாம் அவர் பாடம் புகட்டும் முறையாகி விட்டது! எனவே தான் இச்சிந்தனை மழை!

தட்ப வெப்ப நுட்ப ஞானி!

பெரியவர், தான் போர்த்திக் கொண்டது மட்டுமல்லாது, சிறுவனையும் தன் அருகிலேயே மற்றொரு கட்டிலில் படுக்க வைத்துக் கொண்டார்.

சிறுவனால் எப்படிக் குளிரைத் தாங்க முடியும்? அதுவும் வெட்ட வெளியில்!

ஆனால் என்ன ஆச்சரியம். அன்று எந்தக் குளிருமே அவனுக்குத் தெரியவில்லை! அவனுக்கு மிகவும் பழக்கமான திருஅண்ணாமலை இரவு வெப்பமே அங்கு அவனுக்கென ஸ்பெஷலாக வந்திருப்பதாக தோன்றியது!

ஆனால் நேற்றோ, “நீ சின்னப் பையன், ரொம்பக் குளிர் தாங்க மாட்டாய்!” என்று சொல்லி ரஜாய்களையும் (கம்பளி) ஸ்டாக்கிங்கஸ்களையும் வாங்கி, வாடகைப் படுதாக் கூடாரத்தில் அவனைப் படுக்க வைத்தவர், “வெறுமனே படு அப்பனே!” என உரையாமல் உரைத்து இன்று கதையையே மாற்றி விட்டாரே!

“என்ன இது, அண்ட சராசரத்திலும் தட்ப வெப்ப நிலையை மாற்றும் சக்தியைக் கொண்டவரா பெரியவர்?” சிறுவன் அதிசயித்து , அதிசயித்து மகிழ்ந்து உறங்கலானான்!

உறங்குவது போலும்….

அவனுக்கு செஞ்சி மலை அனுபூதிகள் நினைவில் தோன்றலாயின பெரியவர் விண்வெளியில் பிறலோகப் பயணங்களை (astral travel) மேற்கொள்கையில், தம் மானுட சரீரத்திற்குக் காவலாக, அருகில், ஒரு ‘positive divine soul’ ஐ வைத்துச் செல்வார்.

ஏனென்றால், astral travelல் இருந்து மீண்டு வந்த பின், அதே சரீரத்தில்தானே புகுதல் வேண்டும், இடையில் negative elements அந்த சரீரத்தைத் தூக்கிக் கொண்டு போய்விட்டால் என்ன ஆவது? ஆதிசங்கர பகவத்பாதாள், அருணகிரிநாதரின் சரிதைகளில் இந்நிலைகள் வருவது நாமறிந்தது தானே!

ஆனால்… குளிரையே அறியாது வெட்டவெளியில் படுத்து உறங்கியவுடன் எங்கெங்கோ.. பல… லோகங்களுக்கும்.. இதுவரையில் அவன் கண்டறியாத உலகங்களுக்கு எல்லாம் சென்று வந்த தோரணையை அவனால் நன்கு உணர முடிந்தது!

“ஓஹோ! நம்மையும் துரீயப் பயணத்தில் இட்டுச் சென்றாரோ? அதற்குத்தான் இவ்வளவு ஏற்பாடுகளா?”

… ஆனால் அந்த பஸ் விபத்து பற்றித்தான் அவன் மனம் புரண்டு கொண்டே இருந்தது.

அதற்குக் காரணம் என்ன?...  அவனால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.. தற்போதெல்லாம் அனைத்திற்குமான காரண, காரியங்களை நோக்கி அவன் மனம் செல்வதாகின்றதே!

…”ஏன் வாத்யாரே? இந்த மாதிரி பஸ் விழுகும்னு உனக்கு முன்னாடியே தெரியும்தானே! அப்ப அதை விதிப் பூர்வமாகத் தடுத்து நிறுத்தலாம்தானே!” சிறுவன் சிறுகுழந்தையாய்க் கேட்டு விட்டான் தான்!

அனைத்தும் அறிந்தவரை மதியா நிலை வருமே!

பெரியவர் விரக்தி கலந்த வேதனையோடு சிரித்தார்!

“கலியுகத்துல கேள்வி கேட்கறது ரொம்ப ஈஸிடா? போகப் போக கலியுகத்துல அவநம்பிக்கை பெருகிக் கிட்டே போகும்! இது நடக்கப் போகுதுன்னு தீர்க தரிசனமாச் சொன்னாக் கூட, அதை யார் நம்புவாங்க! இதுவே பெரிய பிரச்னையாயிடும்! ஏன்னா திட்டமிட்டு நடந்ததுன்னு சொல்லிடுவாங்க! அதனாலதான் தீர்க தரிசனமா அடுத்து நடக்கப் போறதை அறிஞ்சாக் கூட, எதையும் வெளிப்படச் சொல்லக் கூடாதுன்னு ஜோதிடத்துலேயும், சகுன சாஸ்திரத்துலேயும், சட்ட நியதிகள் இருக்கு! இது ஆன்மீகச் சட்டம்! இது உனக்கு ஒரு பாடம்!”

“நிறையப் பூஜைகள், ஆன்மீகப் பணிகள், இறைப் பணிகள் செய்யச் செய்யம் குரு அருளாலே எதிர்காலம், கடந்த காலத்துக்குள்ள நுழைஞ்சு வர தீர்க தரிசனபலம் கிடைக்கும். ஆனால் நடக்கப் போறது தெரிஞ்சாக் கூட, தன் முன்னாடி நிக்கறவங்களோட கடந்த காலப் பிறவிகள் தெரிஞ்சாக் கூட, தார்மீகமாக, மனசஞ்சலம் ஆகாம எதையும் வெளிக்காட்டாம இருக்கறதே ஒரு பெரிய தவம்தான்! ஏன்னா, எடுத்துச் சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க! வர்றது நஷ்டமோ, கஷ்டமோ, அதிர்ஷ்டமோ, நல்வரமோ எதுவானாலும் சரி, மிச்ர பாவனத்தோட, மன சஞ்சலம் ஆகாம இருக்கறவங்களுக்குத்தான் காலத்தைக் கடக்கும் சக்தி கிடைக்கும்! ஆனா எல்லாம் தெரிஞ்சும், தெரியாதவராய், அறிஞ்சும் அறியாதவராய், புரிஞ்சும் புரியாதவராய் இருக்கறதுங்கறது ஒரு பெரிய உத்தம ஞான நிலை! ஒரு சற்குருவாலத்தான் இப்படி இருக்க முடியும்!”

விண்ணளவு கபாலச் செல்(வ)வடம்! சற்குரு ஒரு வற்றாத ஞானஜீவநதி!

“இதபாருடா! ஒவ்வொரு மனுஷனோட மூளையிலேயும், லட்சக் கணக்கான ஞானச் செல்கள் இருக்குன்னு நம்ப ஆன்மீக மெய்ஞ்ஞானம் சொல்றதை, பூலோகத்து விஞ்ஞானமும் ஏத்துக்குது! இதுல ஒவ்வொரு ஞானச் செல்லுமே கோடி, கோடியான விஷயங்களை, பூர்வ ஜன்ம அனுபவங்களை நல்லாவே ரெகார்ட் பண்ணி வச்சுக்குது! ஆனா அதையெல்லாம் retrieve பண்ற அமானுஷ்ய யோக சக்தியை மனுஷன் அடையணுமே! எல்லாமே ஒரே வாரத்துல தியான, யோகத்துல வந்துடுமா என்ன?”

“ஆனா இப்படி ஒரு ஆயிரம் கபால ஞானச் செல்லையே யோகப் பூர்வமா, தெய்வீகமாப் பயன்படுத்துற மனுஷன், ஒரு மகரிஷி நிலைக்கு நிச்சயமா உயர்ந்திடலாம்னா, ஆயிரமாயிரம் செல்களைப் பயன்படுத்தற யோக சக்தி கை கூடிச்சுன்னா என்னே உத்தமமான பாக்யமது!”

“இப்படி கபால யோக சக்திக்கு மகத்தான சக்தி இருக்கறதுனால, ஆன்மீக விஷயத்தை உனக்கு நான் நிறையக் கொட்டறேன்! இதுக்காக நீ ரொம்ப பயந்துடாதே நைனா! நாங்க சொல்ற ஒரு விஷயத்தை மட்டும் நல்லாப் புரிஞ்சுக்கிட்டு மனசுல வச்சுக்க! நாங்க கொட்டற அபூர்வமான ஆன்மீக விஷயங்கள்ல உன் மனசுல நிக்கறது நிக்கட்டும்! நிக்காததைப் பத்திக் கவலைப்படாதே! அது பத்திரமா அந்தந்தக் கபாலச் செல்லுக்குள்ளேயே டெபாஸிட் ஆயிடும்! எப்பத் தேவையா இருக்குதோ, கடவுள் கிருபையால அப்பப்பத் தேவையானது மட்டும் ரிலீஸ் ஆகும்!”

முக்கால ஞானத்துக்கு அப்பாலேதாம் முக்தி நிலையாம்!

“ஏண்டாப்பா! நிகழ்காலத்து விஷயத்துக்கே இப்படி நீ ஆடிப் போயிட்டா, என்னிக்கு நீ எதிர்காலத்துக்குள்ள போகற யோக சக்தியைக் கத்துக்கப் போறே? கோடிக்கணக்கான ஜீவன்களோட கடந்த காலத்துக்குள்ள எப்படித்தான் புகுந்து பாக்கறது? முக்காலத்தையும் உணர்ற சக்தியையும் தாண்டினாத் தானேயப்பா முக்தி, மோட்ச வழியெல்லாம் தெரிய வரும்!”

சிறுவனுக்குத் தலையைச் சுற்றியது! கபாலத்தினுள் செல்வடிவம் ஆக்கம் பெறுகின்றமையாலோ! இப்படியாக, குருகுலவாசத்தில் கடுமையான நிலைகளையும் சிறுவன் நல்அனுபூதிகளாகப் பெற்றான்! குருவருள், குருவருள் என்றால் தாழி வெண்ணெயாய் உடனே திரண்டு வந்து விடாது! நன்கு பரிபக்குவம் ஆகிட வேண்டும்!

நவநாத சித்தர்கள் மகிமை

வாணிபலா நவநாத சித்தர் கிரிவலம் வரும் புரட்டாசி மாத சிவராத்திரி நாள்

பௌர்ணமி கிரிவலத்தைப் போன்று மாத சிவராத்திரி கிரிவலமும் சிறப்புடையதே! அபரிமிதமான அருள்நல்வரங்களைப் பொழிவதே!  திருஅண்ணாமலை மாத சிவராத்திரி கிரிவலம்!

காலத்தைக் கடந்த திருஅண்ணாமலையில், நாமறியாத வகையில், மானுட சரீரத்தில் வாழ்ந்து சர்வ லோகங்களுக்கும் அருட்பணி ஆற்றிய சித்புருஷர்கள் ஏராளம்! ஏராளம்! இவ்வரிய தொடர் மூலம், பல அற்புதமான சித்தர்களை நீங்கள் அறிந்திட, உங்களைப் பல நூற்றாண்டுக்கு முன்னான, சித்தர்களின் இறைப் பாசறையான அருணாசலப் புனித பூமிக்கு இட்டுச் செல்கின்றோம்!

தாமரையைத் தந்த தகைமையாளர்

கோட்டைக்கால் சித்தர், கோரைக்கால் சித்தர், வடுகநாத சித்தர் ஆகிய மூன்று சித்தர்களை அடுத்து, நான்காவது நவநாத சித்தராக அமைபவரே வாணிபலா சித்தர் ஆவார்.

கமல பிரம்மவாணி லோகத்தில் இருந்து பூலோகத்திற்குத் தாமரை மலர்கள் வருவதற்கு ஆதியுகக் கலிகாலத்தில் காரணமாகிக் கடுந்தவம் புரிந்தவரே நவநாத சித்தர்களுள் ஒருவரான வாணிபலா நவநாத சித்தர்!

தாமரை மலர் என்றாலே என்ன என்று பூலோக மக்கள் அறியாத காலத்திலேயே, கமலாட்சரத் தாமரைகளுக்கு ப்ரத்யதித் தேவியான ருத்ர அட்சயாம்பாள் தேவியை உபாசித்து, பூமியில் தாமரை மலர் தோன்றத் தம் தபோபலத்தால் துணை புரிந்தவரே வாணிபலா நவநாத சித்தர்!

தாமரையின் அதிதேவதா மூர்த்தி ருத்ர அட்சயாம்பாள் தேவி

உதய நேரத்தில் சூரியன் சிகப்பாக இருந்து பிறகு மஞ்சள் நிறமாக மாறும், சூரிய பகவானின் சிகப்பு நிறம் தரிசனத்திற்கும், மஞ்சள் நிறம் வழிபாடு நமஸ்காரத்திற்கும், உரியதாம். சூரியனைத் தரிசிக்கும் போது, வெறும் கண்களால் தரிசிக்காது தக்க முத்திரைகளை இட்டுத்தான் தரிசிக்க வேண்டும்.

சூரதண்டத்ரய ஹோமம் என்னும் மிக மிக அபூர்வமான ஹோம வழிபாடு ஒன்று உண்டு. ருத்ர அட்சயாம்பாள் தேவி தோன்றி அருளும் உத்தம ஹோம வழிபாடு இது!

காலையில், சூரிய உதய நேரத்தில், சூரியன் சிகப்பு நிறமாய் இருக்கும் போது செய்யப்படும் மகத்தான ஹோமம்! இதற்கான ஹோம குண்டக் கற்கள் யாவும் தாமே சுயம்புவாக சூரியச் சிகப்பில் தோன்றி, பூர்ணாஹூதி முடிந்தவுடன் ஹோம கற்கள் தாமே பூமியிலிருந்து மறைந்து சிகப்புச் சூரியனிடம் ஐக்கியமாகி விடும்.

சூரியோதயச் சிகப்பு வண்ண நேரத்தின் போது சூரிய பகவானைத் தரிசித்து, ஹோமத்தைத் தொடங்கி, மறுநாள் சூரிய உதயச் சிகப்பின் போது ஹோமம் நிறைவு பெறும். பூர்ணாஹூதி அளித்த பின் ஹோமம் நடந்த சுவடே தெரியாது, சுயம்புச் செங்கற்கள் தவிர அனைத்தும் பூமியினடியில் மறைந்து விடும். இக்கலையில் வல்லவர்களே ஆங்கீரஸ மகரிஷியும், குபேர மூர்த்தியும் ஆவர்.

சகடக் கமலப் புஷ்பத் தாரண ஹோமம்

இந்த ஹோமத்தில் தாமரை மலர்கள் மட்டுமே ஆஹூதியாக அளிக்கப்படும். இத்தகைய சகடக் கமலப் புஷ்பத் தாரண ஹோமத்தைத் திருநின்றவூர், தீயத்தூர், தஞ்சபுரி, திருவாரூர்க் கமலாலயம் போன்ற தலங்களில் லட்சத்து எட்டு முறை, பல யுகங்களில் நிகழ்த்திய பின்னரே, ருத்ர அட்சயாம்பாள் தேவி, சித்தரின் முன் தோன்றி காட்சி தந்து, வாணி பலா சித்தருக்குக் ‘கமல யோகிச் சித்தர்” பட்டத்தை வழங்கினாள்.

இந்த ஹோமத்தில் பயன்படுத்தப்பட்ட சந்தன மர ஹோமக் கரண்டியே பிறகாலத்தில் தாமரை மலர்களைப் பறிப்பதற்கான சுருதண்டி எனும் மரக் குச்சி வளையல் ஆயிற்று.

தாமரை மலரைப் பறிக்கும் தானவ மாமறை வழி!

அதாவது தாமரை மலரை வெறும் கைகளால் கொய்தல் கூடாது. சுருதண்டி எனும் மரக் குச்சியின் வளையம் மூலமாக,

யாதேவி சர்வ பூதேஷூ ருத்ர அட்சயாம்பா ரூபேண சமஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

என்ற மந்திரத்தை ஓதிப் பறித்தல் வேண்டும். தாமரை மொட்டைப் பறிப்பதென்றால்…

யாதேவி சர்வ பூதேஷூ அட்சய திதி வடரூபேண சமஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

என்று ஓதி, சுருதண்டியால் தாமரை மலரைக் கொய்தல் வேண்டும்.

கொய்த மலர்களைத் தாமரை இலை மேல் வைத்து, ஓம் ரவியே போற்றி என்று தொடங்கி ரவி, பாஸ்கரா, சூர்யா, ஆதித்யா, கதிரவா, பரிதியே, ஞாயிறே, அருணா, சூரியநாராயணா, ரவயே, உத்யத் கிரண ஜாலாய, திவாகரா போன்ற 12 சூரிய நாமங்களை ஓதி மற்றொரு தாமரை இலையில், சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் வைத்து,

ஓம் தத்புருஷாய வித்மஹே சச்சிதானந்த தேவாய தீமஹி
தந்நோ பத்ம பத்ர ப்ரசோதயாத்

என்ற கமல காயத்ரீ மந்திரத்தை 12 முறை பக்தியுடன் ஓதிய பின், தாமரை பூக்களால் சிவலிங்கத்தை, பெருமாளை, பிள்ளையாரை, பைரவரை, நவகிரக மூர்த்தியை, எந்த மூர்த்தியையும் சுக்ர ஹோரை நேரத்தில் அர்ச்சித்திட, வீட்டில், தொழிலில் உள்ள தரித்திர நிலை மாறி, செல்வ விருத்தி உண்டாகும்.

குரு துரோகத்தைக் குருபகவானும் பொறுத்திடார்!

குருவிற்கு துரோகம் செய்தவர்கள், பிறவித் தளையில் சிக்கி அதே குருவை ஏதேனும் ஒரு பிறவியில் சந்தித்து விமோசனம் பெற்றால்தான் குரு துரோக விளைவுகளுக்கு ஏதேனும் பரிகார வழிகள் கிட்டும், ஆனால் இது எளிதல்லவே!

குருவிற்கு துரோகம் செய்தவர்களுக்கு ஈஸ்வரன் கூட மன்னிப்பு அளிப்பதில்லை! குருவிற்கு உரியவற்றை ஏமாற்றி அபகரித்துக் குரு துரோகம் செய்தோர் நித்ய கண்ட தோஷங்களிலேயே தினமும் மாய்ந்து, மாயந்து பல கோடிப் பிறவிகள் எடுத்து மாள்வர். நம்பியோரை ஏமாற்றுதலும், நம்பித் தந்த பொருளை அதர்மமாக அபகரித்தலும் கூட குரு துரோகத்தையே சார்ந்ததாகும்.

பொதுவாக, கலியுகத்தில் மனித சமுதாயம், வன்முறை, திருட்டு, காமத் தீச்செயல்கள், குரோதம், பகைமை, விரோதம், பொறாமை, கூடாநட்பு, தீயொழுக்கம், நாணயமிம்மை, அதர்மம், லஞ்சம், குருதுரோகம், தீய எண்ணங்கள், முறையற்ற மனச் சிந்தனைகள், தகாத வார்த்தைகளைப் பேசுதல், பிறரைக் காரண காரியமின்றி இகழ்தல், பேராசை போன்ற பல அரக்கக் குணங்களுக்கு ஆளாகிப்ப் பாவ வினைகளைச் சேர்த்துக் கொள்கின்றனர்.

கலியில் அவரவர் மனத்தளவில் அசுரர்களே!

அவரவர் மனசாட்சியைத் தொட்டுப் பார்த்தால்தான் எந்தெந்த அரக்கக் குணங்கள் அவரவரிடம் ஒட்டிக் கொண்டிருக்கின்றன என்று புலப்படும். எனவே இவை அனைத்திற்கும் பரிகாரம் பெறுவதற்காக வாணிபலா நவநாதச் சித்தர் பிராயச்சித்த வழிமுறைகளை ஓதி, இன்று முழுத் தாமரை மலர்களைத் தாங்கியவாறு சுபானு ஆண்டின் புரட்டாசி மாதத்தில சிவராத்திரி கிரிவலம் வந்திடுவீர்!

மிகவும் நன்றாகப் படித்தும் எதிர்பாராத விதமாக மிகக் குறைந்த மார்க்குகளைப் பெற்றுள்ளவர்கள், இன்று அருணாசலத்தில் மாத சிவராத்திரி கிரிவலம் வருதலால், எந்தத் தோஷங்களால் கல்வியில் துரதிருஷ்டம் ஏற்பட்டதோ அது நிவர்த்தியாக நல்வழிகள் பிறக்கும்.

ஒவ்வொரு மந்திரத்திற்கும் பலச்ருதி எனப்படும் மந்திரப் பலாபலன்களை விவரிக்கும் துதியானது சுலோகத்தின் நிறைவில் இருக்கும். பலாபலன்களை அறியாமல் எவர் அம்மந்திரத்தை ஓதினாலும், ஓதுபவரின் பக்தி நிலைக்கு ஏற்ப மந்திரப் பலன்கள் கை கூடி வரும்.

வாணிபலா சித்தர் சரஸ்வதி கடாட்ச நிறைவாளர்!

திருவெறும்பூர்

வாணியாகிய கலைவாணிதாம் பாமரரும் கலியுலகில் உணரும் வண்ணம், மிக எளிய மொழிகளையும் அந்தந்த மொழிக்கான அட்சரங்களையும் படைத்து, யாவரும் அரிய மந்திரங்களை ஓதும்படி, இன்றளவும் அனுகிரகித்து அருள்புரிந்து வருகின்றாள்.

கலைவாணி லோகமான வாணி லோகத்திலும் எண்ணற்ற சித்தர்கள், மகரிஷிகள் நிறைந்துள்ளனர். குறிப்பாக ஸ்ரீசுசரித சரஸ்வதி லோகத்தில்தாம் கலியுகத்திற்கென விசேஷமான அருள்புரியும் சித்தர்கள் உறைகின்றனர். இவர்கள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு குழுவினராக, தினமும் புதன் ஹோரை தோறும், வித்யா சக்திகள் நிறைந்த திருஅண்ணாமலை, கும்பகோணம் அருகே உள்ள மூன்று வித்யாபூரணத் தலங்களான கூத்தனூர், இன்னம்பூர் ஸ்ரீஎறும்பீஸ்வரர் ஆலயம் போன்ற தலங்களில் கிரிவலம், அடிப்பிரதட்சிணம், தியான, யோக, பூஜைகளை மேற்கொள்கின்றனர்.

புத ஹோரை தோறும் பூலோகத்தின் பல இடங்களிலும் வழிபட மானுட வடிவில் தோன்றுபவரே வாணிபலா நவநாத சித்தர்.

ஆதிசிவன், சிருஷ்டிக்கான பூர்வ யோகத்தில் பலா மரப் பலகையில் அமர்ந்து யோகம் பூணுகையில் அவர் அமர்வதற்கான பலாமரப் பலகையாகி, ஈஸ்வரனுடைய திருமேனியைத் தாங்குபவர் எனில் வாணிபலா சித்தரின் மகிமைதான் என்னே! மேலும் பிரம்ம மூர்த்தி சரஸ்வதி திருமண வைபவத்தைப் பரிபூரணமாக நிகழ்த்தி வைத்த பெருந்தகையாளரும் வாணிபலா சித்தர் ஆவார்.

ஸ்ரீவீணாதட்சிணாமூரத்தி லால்குடி

வாணிகூடமே கலைமகளின் அருள்நிறைவு

இச்சித்தர் பிரான் வாணிபலாச் சித்தர் என்ற பெயரைச் சூடக் காரணமென்ன? இங்கு வாணி என்பது சரஸ்வதியைக் குறித்தாலும், வாணிகூடம் எனும் ஞானகுருத் தத்துவ ஞானத்தையும் குறிப்பது இதுவேயாம்.!

பொதுவாக நின்ற நிலையில் வீணை தாங்கிய கோலத்தில் காட்சி தரும் ஸ்ரீதட்சிணா மூர்த்தியிடம் நேரடியாகவே பெறும் ஞானப் பாடமே வாணிகூடம் என்பதாகும்.

சற்குருவின் திருவடிகளில் சிஷ்யன் ஐக்யமாகின்ற குருவருட் பூரண நிலையையும் வாணிகூடம் குறிக்கின்றது. பூரணத்தில் பூரணமாக அருள்பெறும் சற்குருவானவர் இறைவனின் திருவடிகளில் ஜோதியாய்ப் பரிணமிப்பதற்கும் வாணிகூடம் என்று பெயர்.

ஆதிமுதல் சப்தஸ்வரங்கள்!

வாணி என்பதில் பல பீஜாட்சர அர்த்தங்கள், சப்த ஸ்வர வாக்கியங்கள் நிறைந்துள்ளன. சரஸ்வதி கடாட்சப் பதாட்சரங்கள் பொதிந்த இறைச் சொல் இது! ஆதிப் பிரளய காலத்தில், சப்தேஸ்வர ஈஸ்வரன்  அ, ஆ, இ என்ற மூன்று சப்தங்களையே முதன் முதலில் படைத்தார். ஒளி, ஒலி (சப்தம்)க்குப் பிறகு அட்சரங்களாகிய எழுத்துக்கள் தோன்றின.

ஒலியிலும் அ, ஆ, இ சப்தங்கள் முதலில் தோன்றியது போல, அட்சரமாகிய எழுத்து வடிவிலும் அ, ஆ, இ என்ற மூன்று எழுத்துக்களே முதன் முதலில் தோன்றிய சப்த அட்சரங்களாயின. இவைதாம் உலகின் பெரும்பான்மையான மொழிகளில் தற்போது சப்தாதிக்கம் கொண்டுள்ளன. வேத மந்திரங்கள், குரான், பைபிள், கிரந்த் சாஹிப் போன்ற சக்தி வாய்ந்த சகல இறைமறைகளிலும் அ, ஆ, இ ஒலி வகை பீஜாட்சரங்களே, சப்தாதிக்கம் கொண்டுள்ளதைத் தற்போதும் நன்கு அறிந்து, உணர்ந்திடலாம்.

 

பேச்சுத் தன்மை இல்லாத ஊமையர்களும் அ, ஆ, இ என்று மூன்று ஒலிகளை நன்றாக எழுப்புவதையும் கண்கூடாகக் காணலாம். பசு, எருமை போன்ற பிராணிகளும், மற்றும் பட்சிகளும், இந்த ஒலிகளில் நன்றாக ஒன்றுக்கொன்று உரையாடுகின்றன. காக்கை, குருவி, கிளிக்கான பட்சி மொழிகளில் வாணியட்சரம் நன்கு பொலிகின்றது.

இவை அனைத்தையும் பூவுலகிற்குக் கொணர அருந்தவம் பூண்ட வாணி பலா சித்தரே, நடப்பு சுபானு ஆண்டிற்கான புரட்டாசி மாத மாதசிவராத்திரியில் அருணாசலமாம் திருஅண்ணாமலையில் கிரிவலம் வருகின்றார்.

சித்தர்கள் வலம் வரும் நாள்

அருணாசல கிரிவலத்தில் தினந்தோறும் எண்ணற்றச் சித்தர்கள் கிரிவலம் வந்தாலும், மானுட வடிவில் சித்தர்கள் கிரிவலம் வரும் நன்னாட்களும் பல உண்டு. இவ்வாறு நூறு, இருநூறு, ஆயிரம் வருடங்கட்கு ஒரு முறை மட்டுமே மானுட வடிவில் கிரிவலம் வருகின்ற அபூர்வமான சித்தர்களும் உண்டு.

பொதுவாக இத்தகைய நாட்களைச் சித்தர்களும், மகரிஷிகளும் முன் கூட்டியே உரைப்பதில்லை. ஆனால் சற்குருமார்கள் மூலமாக, கோடானு கோடி ஜீவன்களின் நன்மைக்காக இத்தகைய ஆன்மீக ரகசியங்கள்  எடுத்துரைக்கப்படும்போது, இவற்றில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு, இந்நாட்களில் மாத சிவராத்திரி கிரிவலம் வருவோர்க்கு, அளப்பரிய பலன்கள் நல்வரங்களாய்க் கிட்டுகின்றன.

வாணி என்பதற்குப் பலவிதமான அர்த்தங்கள் உண்டு. ஞானம் நிறைந்தது, பரிபூர்ணம் கொண்டது. பூர்ணத்தில் பூர்ணமாக விளங்குவது, எத்தகைய பெரும் சிக்கல்களிலும் தெளிவான முடிவைத் தருவது போன்ற பலவிதமான தார்மீகமான அர்த்தங்களைக் கொண்டதே ‘வாணி’ என்ற சக்தி வாய்ந்த இறைச்சொல் ஆகும்.

வாணியே துணை!

வாணிபலா சித்தர் என்று உரைத்து ஓதுகையில் நாம் உணர்வதுதான் என்னே? கர்ம வினைகள் நிறைந்த இவ்வுடல், பண்படா, பகுத்தறிவு பூரணம் பெறா அறிவுடன் இறையை உணரும் ஞானத்தை நேரடியாகப் பெறுவது கடினமாதலால், ஞானத்தின் சத்துகளைப் பெற்றால், ஞானத்தின் பலன்களை ஓரளவு அடைந்ததாக ஆகும் அல்லவா!

உதாரணமாக, பாகற்காய் மிகவும் கசப்பாக இருந்தால், அதை உண்ண இயலாது என்பதற்காக, பாகற்காயை பல திரவியங்களுடன் சேர்த்துச் சமைத்து, ருசியாக உண்ணும் போது, பாகற்காயின் மூலிகைச் சத்து நம் உடலில் எளிதில் நம்மையும் அறியாது சேர்கின்றதுதானே!

ஞானத்தை நாம் நேரடியாகப் பெறுதற்கான தெய்வீக நாடிகளை முறையாகப் பக்குவப்படுத்திக் கொள்ளாமையினால், ஞானத்தின் பலன்களைப் பெறுவதற்கு உதவும் எளிய இறைவழி முறைகளுள் ஒன்றே வாணிபலா சித்சக்தியாகும். இச்சித்சக்திகளைப் பூவுலகெங்கும், விண்ணுலகிலும் நிரவுதற்காகவே வாணிபலா சித்தர், இறையருளால் மானுடத் தோற்றம் கொண்டு வருகின்றார்.

ஸ்ரீஞானசரஸ்வதி வேதாரண்யம்

இறைவனின் ஞான வடிவுகள்

வாணிபலா சித்சக்தியிலிருந்து உருவாகிய மரத் தாவரங்களுள் ஒன்றே தேன்பலா விருட்சம் ஆகும். வாணிபலா சித்தர் இன்று பூவுலகில் அடிக்கடி உலாவரும் இடமே திருஅண்ணாமலை, திருகுற்றாலம், பண்ணுருட்டி அருகேயுள்ள திருவதிகை போன்ற தலங்களாகும்! மற்றும் வீணை ஏந்திய ஸ்ரீஞான தட்சிணா மூர்த்தி (லால்குடி). ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தி (தக்கோலம், திருநெடுங்களம்) அருள்கின்ற தலங்களிலும், வீணை ஏந்திடாது ஸ்ரீஞான சரஸ்வதியாகக் கலைவாணி (கோயம்பேடு, மயிலை) அருள்பாலிக்கின்ற இடங்களிலும், வாணிபலா சித்தர் இன்றும் தினமும் பலவிதமான வழிபாடுகளை மேற்கொள்கின்றார்.

தற்காலத்தில் புத்தகங்கள், பேனா, பென்சில் போன்ற சரஸ்வதி கடாட்சம் நிறைந்த பொருட்கள் கீழே விழுந்து விட்டாலோ, காலில் பட்டு விட்டாலோ அவற்றைக் கையால் தொட்டுக் கும்பிடுகின்ற பழக்கம் நிலவுகின்றது அல்லவா! இதே போல்தான் நாம் எவரையும் அறியாது மிதித்து விட்டாலும், அவரைப் பணிவுடன் தொட்டு “சிவ, சிவ” என்று நாம் சொல்கின்றோம் அல்லவா, இது எங்கும் பரந்துள்ள ஆத்ம சக்தி நிரவலைக் குறிக்கின்றது! யாங்கணும் இறைவன் உறைகின்றான் என்பதை உணர்விப்பது! இத்தகைய நற்பழக்கங்களில் எழும் பணிவு, எதிலும் இறைமையை உணரும் பாங்கு வாணிபலா சக்தியைத் தோற்றுவித்து, நமக்கு ஆன்ம ஊட்டத்தை அளிக்கின்றது. இவற்றில் பொதிந்திருக்கும் பண்டைய தேவமகத்துவத்தைப் பாரத மக்களே, அதுவும், தமிழக மக்களே நன்கு அறிவார்கள்!

ஆனால் இது போன்ற நல்ல பழக்க வழக்கங்கள் தற்காலத்தில் மறைந்து, அலட்சியமும், பணிவின்மையும் பெருகி வருவது வேதனைக்குரியதாகும்.

மருதாணியில் செறியும் வாணி சக்திகள்!

வாணிபலா சக்தி நிறைந்த மூலிகைகளுள் ஒன்றே மருதாணியாகும். கைரேகைகளிலும், கால் ரேகைகளிலும் வாணிபலா சக்திகளைக் கிரகிக்கும் ரேகாம்சங்கள் மிகவும் நிறைந்துள்ளன. ஒரு பட்சத்திற்கு ஒரு முறையாவது  உள்ளங்கை, உள்ளங்கால் மற்றும் அனைத்து விரல்களுக்கும் மருதாணியிடுவதால் நாம் வாணிபலா சக்தியைப் பெறுகின்ற சாதனத்தைக் கொண்டவர் ஆகின்றோம். பொதுவாக மருதாணியிட்ட கரங்களுடன், பாதங்களுடன் ஆலயத்தை அடிப்பிரதட்சிணம் வருபவர்களுக்குத்தான் வாணிபலா சித்தரின் தரிசனம் தென்படும்.

வாணிபலா சித்தர் ஒரு பலாப் பலகையை எப்போதும் தன் சிரசிலோ, முதுகிலோ தாங்கி இருப்பார். எப்போதும் நடந்து கொண்டே இருக்கும் இச்சித்தர்பிரான். அமர்கையிலோ நிற்கையிலோ இப்பலகையை வைத்து, அதன் மேல் நின்றோ, அமர்ந்தோ தியானித்து இருப்பார். நடக்கும் காலம் தவிர மற்ற  சமயங்களில் இவருடைய உடல், பூமியில் படா வண்ணம் பலாப் பலகையிலேயே சஞ்சாரம் கொள்வார். எப்போதும் மருதாணிச் சின்னங்கள் இவருடைய கரங்களில், கால்களில் மிளிரும். மருதோன்றிச் சித்தர் என்ற காரணப் பெயரையும் தாங்கி வருகின்றார். மருதாணி இட்டுக் கொள்ளும் போது,

“வாணி பலாத்ஸ்யம் வரத மஹாகல்பம்” என்று ஓதி இட்டுக் கொள்ளவும்.

ஸ்ரீஞானாம்பிகை முழையூர்

ஞானப் பாடம் கண்டுய்த்த வாணிபலாச் சித்தர்!

Physics, Chemistry, Engineering போன்ற அனைத்துக் கல்வித் துறைகளிலும் ஞானப் பூர்வமாகப் பிரகாசிப்பவரே வாணிபலா சித்தர் ஆவார். ஸ்ரீசுசரித சரஸ்வதியை உபாசனா மூர்த்தியாகக் கொண்டு தினமும் ஆறு வேளையும் பூஜித்து, ஸ்ரீசுசரித சரஸ்வதியின் தரிசனத்தைப் பெறுபவர். சரஸ்வதி அம்பிகை ஹயக்ரீவ மூர்த்தியிடம் குருகுலவாசம் பயில்கின்றபோது இறையருளால் அருகிலிருந்து ஞானவாசம் பூண்டவர். 64 விதமான சரஸ்வதி தேவிகளின் அருளைப் பெற்றவர். 64 தேவியர்களையும் ஒரு வருடத்தில் வரும் மூன்று விதமான நவராத்திரி பண்டிகைகளிலும் வழிபட்டு வருபவர். ஞானாம்பிகை, ஞானாம்பாள் என்று பராசக்தி தேவி அருள் பாலிக்கின்ற தலங்களில் தினமும் மானுட வடிவில் வழிபட்டு வருபவரும் வாணிபலா சித்தரே ஆவார்.

பிரபஞ்சத்தில் எந்த லோகத்தில் எந்தப் புராண வைபவம் நிகழ்ந்தாலும், அவற்றை (என்றும் அழியாத) தேவபதனச் சுவடியிலே எழுதி வைத்துப் போற்றிப் பாதுகாத்து வருபவரே வாணிபலா சித்தராவார். இன்றைக்குப் புனிதமான, உண்மையான, சத்திய சக்திகள் நிறைந்த நாடிச் சுவடிகள் சில இடங்களில் தோன்றிடக் காரணமாக இருப்பவரும் வாணிபலா சித்தரே!

நாடி ஜோதிடம் புனிதம் பெறுதல் வேண்டும்!

மிகவும் புனிதமான முறையிலே, காசு, பணம் வாங்காது, ஜாதி, மத, குல, இன பேதமின்றி, சமுதாய இறைப் பணியாக, நாடி ஜோதிடத்தை மிகவும் பக்தியுடன் அளிப்போர்க்கு, வாணிபலா சித்தரின் அருட்புலமே மகாசிவராத்திரி தோறும் பல தலங்களிலும் ஜீவநாடிகள் கிட்டிடத் துணை புரிகின்றது. நாடிகள் வேறு, ஜீவநாடிகள் வேறு!

ஆனால் எங்கெல்லாம் நாடி ஜோதிடம் புனிதத்துடன் கடைபிடிக்கப்படாது. வியாபாரமாக ஆக்கப்படுகின்றதோ, எங்கு பக்தியின்மை, அசத்தியம் நிலவுகின்றதோ, அங்கு தீர்க தரிசனம், சத்திய வாக்பலன், ஜோதிடப் பிரகாசம் தோன்றிடாது மறைந்து காலதேவதா சாபங்கள், தோஷங்கள் பெருகிடும்.

தற்காலத்தில், மிகவும் புனிதமான முறையிலே, நாடி ஜோதிடத்தைக் கடைபிடிப்பவர்கள் குறைந்து வருகின்றனர். இத்துறைக்கு வாணிபலா சித்தருடைய ஆசிர்வாதம் மிகவும் முக்கியமானதாம்.

படைப்பு இலக்கணத்தில் சூக்கும ரகசியமாக உள்ள கர்ம வினை பரிபாலனத்தை வெளிக்காட்ட முனைவதால், நாடி ஜோதிடர்கள் பஞ்சாங்கத்தில், தினசரி குறிப்பிடப்படும் விரதங்கள், நோன்புகள், பண்டிகைகள், தியான, யோக நிலைகள், நித்யக் கர்ம நிவாரண பூஜைகள் அனைத்தையும் கண்டிப்பாக, பக்தி சிரத்தையுடன், மிகவும் கடுமையான அனுஷ்டானங்களுடன் கடைபிடித்தாக வேண்டும். இதனால்தான் பிறர்வினை தம் மீது சேராது தற்காத்துக் கொள்ள முடியும்.

அறியாததை அறிய வேண்டில்…

சிருஷ்டிப் பரிபாலன இல்லக்கணத்தில் பிறப்பு, இறப்பு சம்பந்தமான அனைத்துமே, அறிந்து உணர்வதாகவே அமைக்கப்பட்டுள்ளன. கர்மவினை, முன் வினை விஷயங்களும் சூக்கும ரகசியமாகவே உள்ளன. ஆனால் புனிதமான நாடி ஜோதிட முறையில், ஜீவன்களின் நல்வாழ்விற்காகப் பரிகாரம் பெறும் பொருட்டு, அவரவர் பெற்ற ஜோதிட ஞானத்தைப் பொறுத்து, பட்டவர்தனமாக இவை ஓரளவு வெளிக்காட்டபடுவதால், நாடி ஜோதிடத்தின், அறியக் கூடாததை அறிய முயலும் இந்த “வினை வெளிப்பாட்டு வெளிச்சக் காரியத்தன்மையால்”, தக்க பூஜைகள், விரதங்களும், நேர்மை, சத்தியத் தன்மையுடன் முறையாகக் கடைபிடிக்கப்படாவிடில், பிறர் வினை விளைவுகள் நாடி ஜோதிடக் கர்த்தா மீது சேரும் நிலை வந்திடும். மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும்.

எனவே உன்னத பக்தியுடன், எளிமையுடன், படாடோபமின்றி, சமுதாயச் சேவை மனப்பான்மையுடன் நாடி ஜோதிடத்தைக் கடைபிடித்தலே மிகவும் சிறப்புடையது! இதற்குத் தான தர்மங்களும் பெரிதும் துணை புரியும்.

பன்மொழித் திறமருளும் வாணிபலா சித்தர்!

பல மொழிகளிலும் புலமை  பெறுவதற்கு மிகவும் உதவுவது வாணிபலா சித்தருடைய அனுகிரக சக்திகளாகும். எனவே பன்மொழிகளில் புலமை பெற விரும்புவோர், அல்லது குறைந்தது நான்கு மொழிகளையாவது பேச்சு வழக்கில் அறிந்திருப்போர், வாணிபலா சித்தரை வேண்டிப் புலமையில் அற்புதத் திறம் பெறுவதுடன், தெய்வீகத்திற்குப் பயன்படும் வகையில் அமைந்திடவும் வழி வகுக்கும். பன்மொழித் திறம் தெய்வீகத்திற்கு, நற்கல்வித் துறைக்குப் பயன்படுவதாக இருத்தலே சிறப்புடையது.

Phd., M.Phil. போன்ற பெரிய படிப்புகளில் ஒரு சப்ஜெக்ட் முடியாமை, பணக் கஷ்டம், குடும்பப் பொறுப்பு, Incomplete project work போன்ற ஏதேனும் ஒரு காரணமாகக் கல்வியை முடிக்க இயலாமல் தவிப்போர், இன்று திருஅண்ணாமலையில் மாதசிவராத்திரி கிரிவலம் வந்து, புதன் கிழமைகளில் கூத்தனூர், வாணியம்பாடி போன்ற வாணி சக்தி நிறைந்தத் தலங்களில் வழிபட்டு வர, படிப்பு முழுமை பெறும்.

வாக்சக்தி, வாக்பலம், வாக்தவம் தரும் திருவாசி பேச்சாயி அம்மன்

திருவாசி சிவாலயம்

பேச்சாயி அம்மன் என்ற பெயருடன் அம்பிகை அருள்பாலிக்கின்ற தலங்களில் (திருச்சி அருகே திருவாசி) வாணிபலா சித்தர், தூல, சூட்சும வடிவுகளில் குறித்த நாட்களில் பூஜித்து வருகின்றார். திக்குவாய் உள்ளோர், பேச்சுத் தன்மை பாதிக்கப்பட்டவர்கள். கடுஞ் சொற்களைப் பேசிப் பலத்த வினைகளுக்கு ஆளானோர் திருவாசியில் பேச்சாயி அம்மனை வழிபட்டு வர, சொற்குற்றங்கள் நீங்க வழி பிறக்கும். வக்கீல்கள் தம் துறையில் சத்தியத் தன்மையைப் பேண வேண்டிய கடமையைப் பெற்று இருப்பதால், சத்திய பங்கக் குற்றங்கள் ஏற்படாதிருக்க இங்கு வழிபட்டு வரவேண்டும்.

M.Phil., Ph.d போன்ற உயர்படிப்புகளைக் கொண்டிருப்போர் வாணிபலா சித்தருடைய திருநாமத்தைப் பன்முறை ஓதி உரைத்து,

“வாணிபலாதி பல வாக்படுத்வம் வந்தித சரணம், பவசாகர சரணம், குரு சரணம் ப்ரபத்யே!’ என்ற ஸ்ரீகுரு மகாமந்திரத்தை, வளர்பிறைச் சந்திர ஹோரை, புத ஹோரை நேரங்களில் ஓதி வந்தால், மனன சக்தி விருத்தியாகி, கல்வித் துறையில் நன்கு பிரகாசிப்பர். பள்ளிக் குழந்தைகளுக்கும் இதனைச் சொல்லிக் கொடுத்து வழிபடச் செய்திட, அவர்களுடைய கணித, மனன சக்தி நன்கு விருத்தியாகும்.

புராண சாட்சியரே நவநாத சித்தர்கள்!

நவநாத சித்தர்களுள் வாணிபலா சித்தருடைய முக்கியமான கடமை என்னவென்றால், பிரபஞ்சமெங்கும் நிகழ்கின்ற இறைத் திருவிளையாடல்களை, லீலைகளை, சூக்கும, தூல வடிவுகளில், பிரம்ம நாடிகளில், சுவடிகளில் படிய வைத்து, தேவையான போது அவற்றை எடுத்துரைக்கின்ற தெய்வீகத் தன்மையாகும்.

முப்பத்து முக்கோடி தேவர்களுடைய தேவ மண்டபங்களிலும், பலவிதமான பட்டிமன்றங்களும், தெய்வீக உரையாடல்களும், புராண வைபவ சதஸ்களும் நிகழ்கின்றன. ஆனால் பூலோகத்தில் நிகழ்வது போல இது பெரிதா, அது பெரிதா, இது சிறந்ததா, அது சிறந்ததா என்ற தேவையற்ற முறையில் சர்ச்சைகள், விவாதங்கள் ஆங்கே எழுவது கிடையாது. ராமாயணத்தில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றதென்றால் அதனைத் தத்ரூபமாகக் இறைத் தாத்பர்யங்களை உணர்விப்பதற்காகவே, முப்பத்து முக்கோடி தேவர்களுடைய இறையுரை மண்டபங்களில், தலைமை நடு நாயகராக  இருந்து இன்றும், என்றுமாக, பல தெய்வீகப் பட்டி மண்டபங்களை, உரையாடல்களை நிகழ்த்தி வருபவரே வாணிபலா சித்தராவார். இதில், தேவையானால் அந்தந்தப் புராணச் சம்பவ தேவாதி தேவ மூர்த்திகளே சம்பவங்களை நேரே நிகழ்த்தித் தந்து, தக்க விளக்கங்களைத் தந்திடுவர்.

எனவே பேச்சாளர்கள், ஆன்மீக உரையாளர்கள், உபந்யாசக் கர்த்தார்க்கள் யாவரும் இம்மாத சிவராத்திரிக் கிரிவலத்தைக் கைக் கொள்வதுடன் தம் உரைகளில் வாணிபலாச் சித்தரைச் சிந்தையில் வைத்துப் போற்றி வர, வாக்சக்தி பெருகும், உரையில் தேவ சக்திகள் மிளிரும்.

செம்படம்பர் 2003 பௌர்ணமி நாள்: 9.9.2003 செவ்வாய்க்கிழமை இரவு 10.2 மணி முதல் 10.9.2003 புதன் கிழமை இரவு 10.6மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பௌர்ணமி திதி அமைகிறது. கிரிவல நாள் : 9.9.2003 செவ்வாய்க்கிழமை இரவு.

கட்டிடம், வீடு, தொழிற்சாலைகள் அரைகுறையாக நின்று அவதியுறுவோர், இன்று கிரிவலம் வந்து வழிபட்டிட, நின்று போயுள்ள காரியங்களில் முழுமை கிட்டும். பல பூஜைகள், பரிகாரங்கள், ஹோமங்கள், தரிசனங்கள், ஆலய பூஜைகள் செய்தும் நற்காரியங்கள் முழுமை பெறவில்லையே என்று ஏங்குவோர் இன்று மாதசிவராத்திரி கிரிவலம் வந்திட, அனைத்துப் பரிகாரங்களும் பரிபூரணம் பெற்றுக் காரிய சித்தி பெறத் துணைபுரியும்.

மாளய பட்சம்

பித்ருக்களின் பிரம்மோற்சவத் திருவிழா ! அனைவருடைய பித்ருக்களும் பூமியில் குழுமும் நன்னாள்! இதுவரையில் முறையாகப் பித்ரு பூஜை செய்யாதோர்க்குப் பரிகாரம் கிடைக்கப் பெறும் திருநாள்!

பித்ருக்களின் அதிபதியாம் ஸ்ரீமகாவிஷ்ணுவிற்கான பிரம்மோற்சவத்தைப் பித்ருக்கள் கொண்டாடும் பெருநாள்! 

புரட்டாசி மாத அமாவாசை மாளயஅமாவாசை ஆகும். அமாவாசைத் திதிகளுக்கெல்லாம் அதிபதியே மாளய பட்ச அமாவாசை, மகாளய அமாவாசையே மாளய அமாவாசை ஆயிற்று. புரட்டாசி மாளய அமாவாசைக்கு முந்தைய பதினான்கு திதிகளுமே தினசரித் தர்ப்பணத்துக்கு உரிய மிகவும் முக்கியமான மாளயபட்சத் தர்ப்பணத் திதிகளாகும்.

நம் மூதாதையர்களில், நன்கு பக்தியுடன் வாழ்ந்து சிறந்து, உத்தம தெய்வீக நிலைகளை அடைந்தவர்களே பித்ருக்கள் ஆவர். தமிழில் தென்புலத்தார் என இத்தகையப் பித்ருக்களைக் குறிக்கின்றோம்.

ஜாதி, மத, இன, குல பேதமின்றி மானுடர்கள், ஆண், பெண், தாவரங்கள், பிராணிகளென எவ்வித பேதமும் இன்றி யாவர்க்கும், யாவைக்குமாய்ப் பித்ருக்கள் உண்டு. பித்ருக்களிலும் பித்ரு தேவர், பித்ரு நாயகர், பித்ரு மூர்த்திகள் போன்ற பல உத்தமப் பித்ரு நிலைகளில், வசு, ருத்ரர், ஆதித்யர், தரணி பந்து, ஜெயக்ஷீராஸ் போன்ற பித்ருக்கள் கலியுக ஜீவன்களுக்கென அருள்கின்ற மிகவும் முக்கியமானவர்கள் ஆவர்.

நமக்கு நல்வாழ்வு தருவது நல்மூதாதையர்களே!

நாம் அனைவரும் நன்கு வாழ்வதும், நமக்குப் பல வசதிகள், வீடு, வாகனங்கள், அனுகிரகங்கள், குழந்தை பாக்யம் போன்ற யாவும் அமைவதும் நிச்சயமாக அவரவர் பித்ருக்களின் ஆசியால்தாம், மனித குலம் வேண்டும் பெரும்பான்மையான லௌகீகமான விருப்பங்களை, இறைவனும் பித்ருக்களின் நல்வரங்களாகவே  நல்குகின்றார். ஆனால் அதே சமயத்தில் நமக்குள்ள கஷ்டங்கள் யாவும் நம் பூர்வ ஜன்மக் கர்மாக்களின் விளைவுகளே ஆகும் என்று அறிந்து தெளிதல் வேண்டும். இவ்வுணர்வால் தாம் தக்கப் பரிகாரங்களை நாம் பெறுதலும் முடியும்.

கலியுக மனிதன் தினந்தோறும் ஆற்ற வேண்டிய கடமைகள் பலப்பல உள்ளன. இவற்றை ஒழுங்காக நிறைவேற்றாவிடில், கடமைச் சுமையும், கடன் சுமை போல் மிகுந்து விடும் அல்லவா? சோம்பேறித்தன, உழைப்பின்மை, கடுமையாக உழைக்காது வெறுமனே உட்கார்ந்தபடியே நிறையச் சம்பாதிக்கும் பேராசை, சுகபோகத்தை நாடும் மனப்பான்மை போன்ற பல அதர்ம நிலைகளால்தான், கலியுக மனிதன் தம் மூதாதையர்கள் தந்த நன்னெறி விதிமுறைகளைத் தளர்த்திக் கொண்டு மிகவும் பொய்மையாக வாழ்பவனாகி விட்டான்.

நன்னெறியில் இருந்து பிறழும் மனித சமுதாயம்! நன்னெறியில் நிறுத்தப் பாடுபடும் பித்ருக்கள்!

உதாரணமாக, ஒரு மண்டல ஐயப்பப் பூஜா விரதம் எனில் அதனைத் தன் இஷ்டம் போல் குறைத்துக் கொள்வது, இருமுடி விதிகளை மீறுவது, உடை, உணவு போன்றவற்றில் விரத, பூஜை நியதிகளைத் தன் இஷ்டத்திற்கு வளைப்பது, மௌனமாகவோ, இறைத் துதிகளையோ ஓதியே கிரிவலம் என்ற நியதி இருக்கும் போது, வளவளவென்று தேவையில்லாததைப் பேசிக் கொண்டே கிரிவலம் வருவது… இவ்வாறு கலியுக ஆலயப் பூஜை முறைகளில் கூட ஆயிரத்தெட்டுத் தளர்ச்சிகளை, சுயநலமாக மனிதன் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டு விட்டமையால்தான் எந்தப் பூஜை இறைவழிபாடுகளிலும் கலியுகத்தில் முழுமையான பலன்கள் மனிதனுக்குக் கிடைப்பதில்லை.

கலியுகத்தில் இவ்வாறு மனிதர்கள் இறைமையை, சற்குருமார்களை, வழிபாடுகளை, விரதங்களை, பண்டிகைகளை மதியாமையாகிய அவல நிலைகள் வரலாகும் என்பதை முன்னரேயே தீர்க தரிசனமாக அறிந்து, மூதாதையர்களாகிய நம் பித்ருக்கள், மேலுலகங்களிலும், பல வடிவுகளில் பூமியிலும், எண்ணற்ற கூடுதல், வழிபாடுகளை மேற்கொண்டு, “ஸ்ரீவர்ஷிதம்” எனும் அரிய தம் புண்ய சக்தியை ஈந்து நம்மைத் திருத்தி நன்கு வாழ வைக்கக் கடுமையாக உழைக்கின்றனர்.

ஸ்ரீவர்ஷிதப் பலன்கள் கிட்டும் பண்டிகைகளில் மாளயபட்ச அமாவாசை வழிபாடும் ஒன்றாக அமைவது நமக்குப் பெரும் பாக்யமே! ஆனால் மூதாதையர்களை நாம் நினைவு கொண்டு தர்ப்பணம், படையல் அளித்து வேண்டினால்தாமே அவர்களுடைய நல்ஆசியை நாம் பெற முடியும்.

மாளய பட்சம் என்பது பித்ருக்கள் தங்களுடைய பித்ரு லோகங்களில் தம்முடைய பித்ரு லோகங்களில் தம்முடைய மூல தெய்வ நாயகரான ஸ்ரீமன் நாராயண மூர்த்திப் பெருமாளுக்கு ஆற்றும் பிரம்மோற்சவமாகும். புரட்டாசி அமாவாசைக்கு முந்தைய 15 திதிகளுமே மாளயபட்சத் திதிகளாகும். இந்நாட்களில்தாம் பித்ருக்களுக்கு வசு, ருத்ர, ஆதித்ய, தரணிபந்து, ஜெய க்ஷீராஸ் பித்ருக்கள் எனப் பற்பல உத்தம நிலைகள் அளிக்கப்படுகின்றன. ஆனால் பூலோகத்தில் உள்ள பதவி நிலைகள், படாடோப அந்தஸ்துகள், மேலதிகாரி, கீழதிகாரி என்ற அந்தஸ்து வித்யாசங்கள் உத்தம மேல் உலகங்களில் கிடையாது. அங்கு பக்தியும், ஞானமுமே அளவைகள்! ஆங்கே அனைவரும் பணிவின் சிகரமாய்த் துலங்குவர்.

ஹரிசோபித பகவத் சக்திகள்

துறவிகளுக்கென விசேஷமான தெய்வீக இலக்கணங்கள் பல உள. சாதுர்மாஸ்ய விரதம் எனப்படும் மண்டல கால வியாச பூஜைகள், மூன்றாம் பிறைச் சந்திர தரிசனங்கள் என்ற வகையில் அற்புதமாக இறைப் பணிகளை ஆற்றியோரை, ஏனைய துறவிகளும், வயது பேதமின்றி மனங் கனிந்து வணங்குவர். இதுவே துறவிகளுக்கான இறைப்பணிவு இலக்கணங்களுள் ஒன்றாம்!

இதே போல, பித்ருக்கள் யாவருமே ஹரிசோபித பகவத் சக்திகள் நிறைந்த பித்ருக்களை நாடித் தம்மை அர்ப்பணிப்பர். பூவுலகில் குருவருளுடன் தன்னலமின்றித் தியாகமயமாகத் தொண்டாற்றுபவர்கள் இறையருளால் எளிய முறையில் பித்ரு நிலைகளை அடைகின்றனர்.

இறப்பிற்குப் பின்தான் பித்ரு நிலை அடைதல் என்பதும் கிடையாது. தர்ப்பணம், படையல், திவசம், தான தர்மம் போன்றவற்றை முறையாகக் கடைபிடித்து, பிற ஜீவன்களின் நல்வாழ்விற்காகத் தொண்டாற்றி வாழ்வோர், இப்பிறவிச் சரீரத்திலேயே பல பித்ரு, பரிபாலன அம்சங்களை அடைகின்றார்கள். இவர்களுக்குப் பித்ருக்களின் தொடர்பு பூமியில் இருந்தே கிட்டும். இவர்களே பிரசன்ன பரசத்விக்குகள் எனப்படுவர். இவர்களுக்கு எதிர்காலத்தை அறியும் தீர்க தரிசன சக்தி உண்டு என்றாலும் இவ்வரிய காலவதன சித்சக்தியை எக்காலத்தும் சுயநலக் காரியங்களுக்காகப் பயன்படுத்தமாட்டார்கள். ஆனால் இவர்கள் மென்மேலும் அடைய வேண்டிய உத்தம நிலைகளோ பற்பல!

ஜெயக்ஷீராஸ் பித்ரு மண்டல பார்த்திப ருத்விக்குகள்

சுபானு ஆண்டின் மாளயபட்சத்தில் பார்த்திப ருத்விக்குகள் எனப்படும் விசேஷமானப் பித்ருக்கள் பூலோகத்திற்கு வருகின்றார்கள். பொதுவாக 60, 70, 80 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இறை ஆணையாகக் கிட்டுகின்ற பீமதாரண சக்திகளை பூமிக்குக் கொண்டு வருபவர்களே பார்த்திப ருத்விக்குகள். இவர்களுக்கு இன்றும், என்றும் பீஷ்மாச்சாயார்தாம், தாத்பர்யக் குருவாய், தெய்வீக விளக்கங்களை அளிக்கின்றார்.

அஷ்ட வசுக்களில் ஒருவரான பீஷ்மர், இச்சாமிருத்யு எனும் வரத்தைத் தம் தந்தையிடம் இருந்து பெற்றவர். அதாவது, மற்றவர்களைப் போலன்றி, ‘தான் நினைத்த போது மரணம் அடைதல்’ என்ற நல்வரத்தைப் பெற்றவர். எனவே, எமலோகம் போன்ற காலசக்தி நிறைந்த விண்வெளி மண்டலங்களுக்கு எப்போதும் சென்று வரும் சிரசீவப் பேற்றைப் பெற்றவரே பீஷ்மர் ஆவார்!

எனவே பீஷ்மரே ஆசீர்வதித்து அனுப்புகின்ற பார்த்திப ருத்விக் பித்ருக்கள் பூமிக்கு வருகின்ற அற்புத மாளயபட்சம் ஆதலால் மிகவும் சக்தி வாய்ந்த தர்ப்பணக் காலமிது! வாழ்க்கையில் மிகவும் அரிதாக வருவது! விட்டு விடாதீர்கள்!

மாளயப் பிரதமைத் திதி – சஞ்சீவி நிதித் தர்ப்பணம்

இன்று முதலில் ‘ஸ்ரீபீஷ்மம் தர்ப்பயாமி!” என்று ஓதி, பீஷ்மருக்கு 36 முறை துளசித் தீர்த்தத்தால் அர்க்யத் தர்ப்பணம் அளித்திடல் வேண்டும். இன்று வில்வ மரத்தடியில் தர்ப்பணம் அளிப்பது சிறப்பான பலன்களைத் தரும். ஸ்ரீகௌண்டின்ய மகரிஷி அனைத்து ஆலய விருட்சங்களையும் வலம் வந்து வழிபடும் திருநாள்!

விந்தை வீணாக்கிய குற்றங்கள், விந்துக் கசிவு, முறையற்ற காம உணர்ச்சிகள், காமத் தீயொழுக்கச் செயல்கள், நேரம் காலம் பாராது சேர்க்கை, காமத்தை ஊட்டும் அருவருப்பான படங்களைக் காணல், ஆபாசக் காட்சிகளைப் பார்த்தல், பிறன்மனை நோக்குதல் போன்றவைதாம் கலியுகத்தில் பலரையும் குறிப்பாக இளைய சமுதாயத்தினரைப் பாழ்படுத்தும் அதர்மங்களாகும்.

இவ்வாறு நடந்தன(மை)க்குப் பிராயச்சித்த வழிகளைப் பெறவும், இனி வாழ்வில் இவ்வாறு நிகழாது திருந்தி வாழவும், அவரவர் பிள்ளைகள், பெண்கள் இவற்றில் சிக்காது காக்கப்பட்டு நல்வாழ்க்கை பெறவும், உலகத்தை மாய்க்கும் காமாந்திரச் செயல்களை ஒடுக்கவும் இன்று சமுதாயப் பூஜையாக முதலில் புனிதமான பிரம்மச்சாரியாக வாழ்ந்த பீஷ்மருக்கு அர்க்யம் கொடுத்து, பித்ருக்களுக்குத் தர்ப்பணம் அளித்து, ஆலயங்களில் அல்லது இல்லங்களில் பலரும் ஒன்று சேர்ந்து பித்ரு ஹோமம் ஆற்றுதல் விசேஷமானதாகும்.

அர்க்யம் என்பது இரு குதிகால்களை உயர்த்தி நின்று, இரு கைகளாலும் நீரை பூமியில் வார்ப்பதாகும்! தர்ப்பணம் என்பது சுக்கிர விரல் (வலது கட்டை விரல்), குருவிரலுக்கு (வலது ஆள்காட்டி விரல்) இடையே நீரை வார்ப்பது! இரு குரு (விரல்) மண்டலங்களுக்கு இடையே பொலிவதே பித்ரு மண்டலாகும்!

12, 24 ,36, 48 என்ற வகையில் புதுச் செங்கற்களை வைத்து, 80 வயதுக்கு மேற்பட்ட தம்பதிகளுக்குப் பாத பூஜை செய்து அவர்கள் முன்னிலையில் பித்ரு ஹோமத்தை நிகழ்த்த வேண்டும். தாம்பூலம், மிளகு, கிராம்பு, சர்க்கரைப் பொங்கல், 12 புளியோதரை உருண்டைகள், அத்தர், புனுகு, ஜவ்வாது, குங்கிலியம், பலாக்கொட்டை, துருவிய தேங்காய்ப் பூ போன்றவற்றைப்  பசு நெய்யுடன் சேர்த்து ஆஹூதிகளாகக் கொண்டு ஹோமம் நிகழ்த்துதல் வேண்டும்.

இரட்டைப் பனைமரங்கள்
அரண்மனைப்பட்டி

பித்ரு தேவ காயத்ரீ மந்திரம்

ஓம் பித்ரு ப்ரசன்ன பூம்யாய வித்மஹே
ஜெயக்ஷீராஸ் நாமாய தீமஹி
தந்நோ பித்ரு மூர்த்தி ப்ரசோதயாத்

என்ற பித்ரு தேவ காயத்ரீ மந்திரத்தை ஓதி ஆஹூதி அளித்தல் வேண்டும். இன்று சுரைக் குடுவை மூலம் பூர்ண ஆஹுதி அளித்தல் விசேஷமானது.

இன்று பிரதமைத் திதியில், இரட்டைப் பனை மரத்தடியில் அருகம்புல்லைப் பரப்பித் தர்ப்பணம் அளிப்பது விசேஷமானதாகும்.! இரட்டைப் பனை மரத்தடியில் வளரும் அருகம்புல்லுடன், மணமுள்ள பூக்களைச் சேர்த்துத் தொடுத்து கணபதிக்குச் சார்த்துதலால் உறக்கமில்லாது வாடுவோர் அல்லது பீதிகள் நிறைந்த கனவுகளால் பீதி அடைவோர் நல்ல உறக்கமும், மனஅமைதியும் பெறுவர்.

புதுக்கோட்டை திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி கிராம ஸ்ரீகொன்றையடி விநாயகர் தலமானது அரிய இரட்டைப் பனை மரத்தைக் கொண்டுள்ளமையால் இங்கு 15 நாட்களிலும் மாளய பட்சத் தர்ப்பணாதிகளை நிகழ்த்துதல் அபூர்வமான வேதசக்திகளைப் பெற்றுத் தருவதாகும்.

64 துறைகளைச் சேர்ந்த இன்ஜினியர்கள், கோயில் திருக்குளக்கரையில், குறிப்பாக, சென்னை அருகே திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் ஆலயத் திருக்குளத்தில் ஸ்ரீசாலிவாகன மகரிஷிக்கு முதலில் 12 முறை அர்க்யம் அளித்து, மூதாதையர்களுக்குக் கண்டிப்பாகத் தர்ப்பணம் அளிக்க வேண்டிய பிரதமைத் திருநாள்!

பொறியாளர்கள் தம் துறையில் செய்த தவறுகளுக்குத் தக்க நிவாரண வழிகள் பெறவும், இனியும் தொழிலில் குறைகள் நேராமல் காக்கவும் திருவள்ளூர் தலத்தர்ப்பண சக்தி மிகவும் உதவும்.

80 வயதுக்கு மேற்பட்டுச் சுமங்கலிகளாக வாழ்ந்தவர்கள் உங்கள் தலைமுறையிலோ அல்லது வேறொருவர் தலைமுறையிலோ இருப்பின் கேட்டு அறிந்து அவர்களுக்கு இன்று மாமல்லபுரம் கடற்கரையில் பெருமாளை நோக்கி அமர்ந்து தர்ப்பணம் இடுதலால் தொலைந்து போன பொருள் கிட்டவும், காணாமற் போனவர் மீளவும் நல்வழி பிறக்கும்.

இரட்டைக் குழந்தைகளைப் பெற்று இறந்தோர்க்கு இன்று இரட்டைப் பனை மரத்தடியில் தர்ப்பணம் அளிப்பதால் இறந்தோர்க்குச் சில விசேஷமான நன்னிலைகள் கிட்டுகின்றன!

ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் என்ற நாமம் பூண்டு இறைவன் அருளும் ஆலயங்களில் இன்று தர்ப்பணம் இட்டு, புளியோதரையை அன்னதானமாக அளிப்பதால் தோல் சம்பந்தமான வியாதிகளுக்கு நல்நிவாரணம் கிட்டும்.

இன்று ‘தாண்டு கயிறு’ எனப்படும் skipping கயிறுகளைக் குழந்தைகளுக்குத் தானமாக அளித்தலால், குடும்ப உறவு முறைகளில் உள்ள சிறு சிறு பிரச்னைகள் தீரும்.

இன்று பலாப் பலகை மேல் தர்பைச் சட்டம் வைத்துத் தர்ப்பணம் அளித்து, பலாப் பலகையைத் தானமளித்திட, கோபித்துச் சென்ற பெற்றோர்கள், மாமனார், மாமியார், சகோதர, சகோதரிகள், நலமுடன் திரும்ப நல்வழி பிறக்கும். இதற்கு வேதாரண்யத் திருத்தலத்தில் ஆலயத் தீர்த்தம் கொண்டு தர்ப்பணம் அளித்தல் விசேஷமானதாகும்.!

பரிதிநியமம்

துவிதியைத் திதி பரிதிச் சுடர்த் தர்ப்பணம்

இன்று அரச மரத்தடியில் தர்ப்பணம் அளிப்பது விசேஷமானது. பிப்பிலிய மகரிஷி பூவுலகில் அனைத்து அரச மரங்களையும் வலம் வந்து ஆசி தரும் நன்னாள்!

சரியாகத் தர்ப்பணம், திவசங்கள், படையல்களை நிகழ்த்தாமல் இறந்தோர், மகள், மகன் அருகில் இல்லாது பிற உறவினர்களால் தகனம் பெற்றோர், கடவுள் கொடுத்த அங்கங்களுடன் முழுமையாக வாழ இயலாது. தசை, திசு, எலும்பு, நரம்புச் சிகிச்சைக்கு ஆளாகி இறந்தோர்க்கு இன்று உத்தராணி தாம்பாளத்தில் தர்பைச் சட்டம் விரித்து தர்பைச் சட்டத்தின் மேல் ‘கொய்யாத பழம்’ எனப் பண்டைய காலத்தில் அழைக்கப் பெற்ற கொய்யாப் பழங்களைத் தாமரை அல்லது மந்தாரை இலை மேல் வைத்து, சூரிய ஒளி படும் இடத்தில் (பரிதி – சூரியன்) தர்ப்பணம் அளிக்க வேண்டும்.

இன்று பட்டுக்கோட்டை அருகே பரிதிநியமம் ஆலயத்தில் தர்ப்பணம் அளிப்பது விசேஷமானது. வாலகில்லிய மகரிஷிகள் இன்று சூட்சுமமாக இங்கு தர்ப்பண அர்க்யாதிகளை நிகழ்த்துகின்றனர்.

இன்று பல்வகைப் பழங்களைத் தானமாக அளித்தலால் பரிதிப் பவித்திரர்கள் எனும் பித்ருக்கள் சந்தோஷம் அடைகின்றார்கள். அரைகுறையாக வாழ்க்கை முடிந்தவர்களுக்க்கும், தற்கொலையால் குடுமபத்தில் புரளும் துக்கம், விபத்தால் மரணம், திடீரென்று வேலை இழத்தல் அல்லது வியாபாரம் நொடித்தலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பரிதிப் பவித்ரர்கள்தாம் நன்னிலை அளிக்க வல்லவர்கள்!

இன்று 80வயதுடையோரின் உடல் ஆரோக்யத்திற்கு ஏற்புடைய உணவு வகைகளை அன்னதானமாக அளித்தலால் (இட்லி, தோசை, இடியாப்பம், சர்க்கரைப் பொங்கல்) பகைமை காரணமாக நின்று போயுள்ள நில, வீட்டுப் பத்திர வழக்குகள் நன்முறையில் தீர்வு பெறும்.

திருப்போரூர் சிவாலயம்

திரிதியைத் திதி

இன்று காலை சனி ஹோரையில் சூரிய நமஸ்காரம் செய்து, அன்னதானப் பிரசாதம் தயாரிக்கத் தொடங்க வேண்டும். இன்று ஆலமரத்தடியில் தர்ப்பணம் அளித்தல் விசேஷமானது. குக்குட மகரிஷி தர்ப்பண, அர்க்யப் பூஜைகளுக்காகப் பூலோகத்திற்கு வரும் திருநாள்!

சென்னை திருப்போரூரில் மலையைக் கிரிவலம் வந்து அடிவார ஆலயத் தீர்த்தத்தில் தர்ப்பணம் அளித்தலால், தொழிலில், பதவியில் உள்ள நிலையற்ற தன்மை நன்முறையில் மாறும்.!

விஷ ஜ்வரம், விஷ மருந்துகளாலும், விஷமருந்தியும் இறந்தோர்க்கு இன்று பூவரச இலை மேல் தர்பைச் சட்டம் வைத்துத் தர்ப்பணம் அளித்திட அவர்கள் பரிகார வழிகள் பெற இது உதவும். தற்கொலைக்கு எந்தப் பிராயச்சித்தமும் கிடையாது என்பதை மனதில் கொள்ளவும்.

12 சுமங்கலிகள் 12 குத்து விளக்குகளை ஏற்றிட அவர்களுக்குப் பாத பூஜை செய்து, தேங்காய், வளையல், தாம்பூலம் போன்ற 12 வகை மாங்கல்யப் பொருட்களை அளித்து அவர்களை சுவாசினிகளாக பாவித்து, வணங்கிட வேண்டும். பிறகு பூஜிக்கப்பட்ட 12 விளக்குகளையும் வீட்டில் வைத்திட்டு, 12 பேருக்கும் புது விளக்குகளைத் தானமாக அளித்தலால், பல தலைமுறைகளாகச் சரியாகக் கடைபிடிக்கப்படாத சுமங்கலி பூஜைகளுக்கு நிவர்த்தி கிடைக்கும்.

பல தலைமுறைகளிலும் படிந்த சுமங்கலித்வ எதிரிடைத் தோஷங்கள் தணிந்து, சர்ப்ப தோஷம் காரணமாக தொடர்ந்து குடும்ப வழி வழியாக வருகின்ற கணவனை இழக்கின்ற துர்ப்பாக்கிய நிலைமை மாறும்.

3-5 வயதிற்கு உட்பட்ட 12 பேருக்கு வெள்ளிக் காப்பும், பெரிய பெண்களுக்கு ஒரு டஜன் வளையல்களும், 12 ஏழைக் குழந்தைகளுக்குப் பரமபத படங்களைத் தானமாக அளிப்பதும், சிறு வயதிலேயே குழந்தைகள் இறத்தல், கர்பம் நழுவுதல் போன்றவற்றில் பிணைந்திருக்கும் தோஷங்களைத் தீர்க்க உதவும்,

ஐந்து வயது முதல் பத்து வயது வரை உள்ள 18 ஆண் குழந்தைகளை அமர வைத்து, பிரம்ம புத்திரர்களாகப் பாவித்து, வேஷ்டி, துண்டு, அன்னம் அளித்து, மல்லிகைப் பூ மாலை சூட்டி, தத்தாத்ரேய அஷ்டோத்திரம் ஓதி சிரசிலும் தோளிலும் அர்ச்சித்து, இயன்ற தான தர்மங்களை அளிக்க வேண்டும். இதனால் ஆண் அல்லது பெண் குழந்தை இல்லாது வருந்தும் குடும்பங்களில் தக்க சந்ததி விருத்தி ஏற்படும். இவ்வகையில் மாளய பட்சத் தர்ப்பண சக்திகள் பலவிதமான தோஷங்களைக் களைய வல்லதாம்.

பெரிய கங்கைச் செம்பில் உளுந்து நிரவி, மேலே சிறிது பால் பெருங்காயம் வைத்து 18 பேருக்குத் தானம் அளித்தலால் சரியாக உணவு உண்ண முடியாது பல வகைத் துன்பங்களால் வாடி இறந்தோர் நன்னிலை பெறுவர்.

சப்தசாகரத் தீர்த்தம்
திருநல்லூர்

நெருப்புத் துறை சம்பந்தப்பட்டோர் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டிய மாளயத் தர்ப்பணப் பூஜையிது.

50 வயதுக்குள் இறந்த பெற்றோர்களுக்கும், இன்று வேதாசாரத் தர்ப்பண முறையில், சுற்றிலும் மூவருக்கு மேல் தேவமொழி மற்றும் தமிழ்மறைகளை ஓதிட, மறையொலியின் ஊடே தர்ப்பணம் அளித்தல் மிகவும் விசேஷமானதாம்.

பொதுவாக, காது கேளாது இறந்தோர் சப்த தோஷங்களில் இருந்து விடுபட்டு ஆகம சாந்தம் பெற உதவும் தர்ப்பணப் பூஜை இது!

கும்பகோணம் சாக்கோட்டை அருகே உள்ள திருநல்லூர் ஆலயத் தீர்த்தத்தில் இத்தர்ப்பண பூஜையை நிறைவேற்றுவதால் காது சம்பந்தமான நோய்களுக்கு நல்ல நிவாரணம் கிட்டும். நாகம் போல மிகவும் மெல்லிய ஒலியையும் உணர வல்ல சக்திகளைப் பெற்றிருந்த குந்தி தேவி நீராடி ஏழு கடல் தீர்த்த சக்திகளைப் பெற்ற, சப்தாகர்ஷண சக்திகள் நிறைந்த அற்புதத் தலம் திருநல்லூர் திருத்தலமாகும்!

சதுர்த்தித் திதி

இன்று வன்னி மரத்தடியில் தர்ப்பணம் அளித்தல் மிகவும் விசேஷமானதாம். மிகவும் முக்கியமாக, எலெக்ட்ரானிக்ஸ் துறையினர் நிச்சயமாகக் கடைபிடிக்க வேண்டிய தர்ப்பணம்.

பெண்கள் இன்று மஞ்சள் பூசி நீராடி நெற்றி வகிடு, நெற்றி, மாங்கல்யத்தில் மஞ்சள் இட்டும் பூஜித்து, அன்னதானக் காரியத்தை நாராயண நாமம் ஓதியவாறே மேற்கொள்ள வேண்டும். இன்று 24 கொழுக்கட்டைத் தீபம் ஏற்றி வழிபடுதலால் குடும்பத்தைச் சூழும் பிரயாண, வாகன தோஷங்களில் இருந்து காப்பு கிட்டும். அதாவது அவித்த கொழுக்கட்டை மாவை அகல் விளக்குபோல் ஆக்கித் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

உத்தராணி மரத்தாம்பாளம் அல்லது தாமரை இலை/ மந்தார இலையின்மேல் வன்னி தளங்களைப் பரப்பி, தர்ப்பைச் சட்டம் அமைத்துத் தர்ப்பணம் இடுதல் வேண்டும்.

ஸ்ரீருத்ர பல்குனி சித்தர்
பூவாளூர்

முதல் நாளே வில்வம், மற்றும் துளசி, பச்சைக் கற்பூரம், ஜாதிக்காய் நீரில் ஊற வைத்து, இத்தீர்த்தத்தால் இன்று தர்ப்பணம் அளித்தலால் பல தலைமுறைகளாக நன்கு செழித்து விளங்கிய பாரம்பரியமான குடும்பமானது கடந்த சில தலைமுறைகலாக மிகவும் சுருங்கி ஆண் அல்லது பெண் வம்சம் இல்லாது, ஒன்று மாற்றி ஒன்றாகத் துர்மரணங்கள் சம்பவித்துச் சந்ததி தொடர்ச்சியற்று வாடுகின்ற குடும்பங்களில் சந்ததிகள் நன்கு தழைத்திட, இச்சதுர்த்தித் திதி மாளய பட்சத் தர்ப்பண சக்திகள் உதவும்.

பல குடும்பங்களிலும் முன்னோர்கள் தம்முடைய சொத்துக்களை ஆண், பெண் சந்ததிகளுக்கு முறையாகப் பிரித்துத் தராமல் ஒருதலைப் பட்சமாக, பிடித்தவருக்குப் பிரித்தளித்து விட்டு மற்றவர்களை மனம் நோகடித்து வாட்டுவர். இத்தகைய முன்னோர்களும், தம்முடைய அதர்மச் செயல்களால் பலவிதமான பிறவிகளை எடுத்து, தாங்கள் ஒருதலைப் பட்சமாக நடந்து கொண்டதற்குப் பிராயசித்தமாக, அதே பிள்ளைகளை, பெண்களைப் பெற்று மீண்டும் சொத்துக்களைச் சேர்த்து முறையாக அளிக்கும் வரை இப்பிறவித் தளை தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

மாளய பட்சத்தில்தான் இதற்கான தக்க பரிகார வழிமுறைகள் காட்டப்படுகின்றன. பரிகார வழிமுறைகள் தான் காட்டப்படுகின்றனவே தவிர, முழுமையானத் தீர்வுகளை இப்பரிகாரங்களை நிறைவேற்றுவதன் மூலமாகத்தான் பெறுதல் முடியும் என்பதை நினைவில் கொள்தல் வேண்டும்.

இவ்வாறு ஒருதலைப் பட்சமாக அநீதியாக நடந்து கொண்வடர்களும், நீதித் துறையில் அதர்மத் தீர்ப்புகளை வழங்கி இறந்தோரும் தக்கப் பரிகாரங்களைப் பெற உதவும் தர்ப்பண நாள்! இத்தவறுகளை இழைத்தோர் தற்போது இத்தர்ப்பண நாளில் திருச்சி லால்குடி அருகேயுள்ள பூவாளூர் தலத்தில் ஸ்ரீபல்குனி ருத்ர சித்தரை தரிசித்து, இவருடைய சந்நிதியின் முன் முன்னோர்க்குத் தர்ப்பணம் அளித்து ஸ்ரீகுங்குமாம்பிகை சமேத ஸ்ரீதிருமூலநாதரை வழிபட்டு வந்திட, தக்க பரிகாரங்களைப் பெறுவர்.

பஞ்சமித் திதி

இன்று துளசிச் செடியின் அருகே அமர்ந்து தர்ப்பணம் அளித்தல் வேண்டும்.

பலரும் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு, முதலாம் மனைவியைச் சரியாக நடத்தாது, முதல் தாரமும் துக்கத்தால் மாய்ந்திட அல்லது முதல் மனைவி, பல துன்பங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்க, இரண்டாம் தாரத்துடன் வாழ்பவர்கள் அல்லது வாழ்ந்து இறந்தவர்கள் பலரும் சொல்லொணாத் தீவினைகளைச் சேர்த்துக் கொள்கின்றார்கள்.!

இத்தகைய முன்னோர்கள் பெற்ற சாபங்களும், பாவ வினைகளும் வம்சாவளியினரையும், சந்ததிகளையும் பல விதங்களில் பாதிக்கும். மாதா, பிதா செய்வது மக்களைச் சாரும் என்ற வகையில் நாம் நம் சந்ததியினருக்கு நல்விதமாகச் சேர்த்த சொத்துக்களையும், நற்குணம், நற்பழக்கங்களை அளித்துச் செல்கின்ற வகையில் நன்முறையாக வாழ வேண்டுமே தவிர தீய வழக்கங்களுடன், பாவங்களை நிறைத்துப் பெற்றோர்கள் வாழ்ந்தால் இது சந்ததிகளையே பாதிக்கும் என்பதை உணர்தல் வேண்டும். இதனால் தான் பெற்றோர்கள் இழைத்த தீவினைகளால் பல குடும்பங்களிலும் திருமண வாழ்வில் முறையான ஒற்றுமையில்லாது பல கஷ்டங்கள் ஏற்படுகின்றன. இதற்குப் பரிகாரமாக,

இன்று ஐந்து கன்னிப் பெண்களை சுவாசினியாக பாவித்து இல்லறப் பெண்கள் உபாசித்துப் பூஜைகளைச் செய்து, 70வயது நிரம்பிய ஐந்து சுமங்கலிகளுக்குப் பாத பூஜை செய்து, இயன்ற தான தர்மங்களை அளித்து, ஐந்து சுற்றுகளை உடைய 51கை முறுக்குகளை அவர்களுடைய கரங்களால் பலருக்கும் அன்னதானமாக அளிப்பதும் விசேஷமானதாகும். இதனால் பிறருடைய பொறாமையால், துர்செயல்களால் பாதிக்கப்பட்டுள்ளோர் நன்மை பெறுவர்.

ஒரு வாழை இலையில் பச்சரிசியைப் பரப்பி, தாமரை இலை அல்லது ஒரு மந்தார இலை வைத்து அதன் மேல் தர்ப்பைச் சட்டம் அமைத்து, தர்ப்பணம் இட்டு, அரிசியைச் சாதமாக்கி புளியோதரையாக அன்னதானம் இடுதல் வேண்டும்.

35 வயதுக்கு மேலும் திருமணமாகாமல் இருக்கின்ற ஏழை ஆண்களுக்கு வேஷ்டி, துண்டு, சட்டை போன்றவற்றை அளித்து மண் அடுப்பு, அரிசிப் பானை, ஒரு குண்டு சவுக்கு விறகு – இவ்வாறு சமையலுக்குத் தேவையான 21 செட்டுகளையும் 21ஏழைக் குடும்பங்களுக்குத் தானமாக அளித்திட, முறையற்ற வகையிலே காம இச்சையுடன் வாழ்ந்தமைக்கும், முதலாம் மனைவியைத் துன்புறுத்தி வாழ்ந்த கொடுமைக்கும் தக்க பரிகாரங்கள் கிட்டும்.!

இன்று பஞ்சமித் திதியில் திருவையாறு காவிரி ஆற்றங்கரையில் தர்ப்பணமிடுதல் விசேஷமானதாகும். ஆற்றில் நீர் வராவிட்டாலும் சூட்சுமமாக முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் காவிரி ஜலப்ரவாகம் எப்போதும் இங்கு திகழ்வதால், இத்தலத்தில் மண் செம்பில் அல்லது மரச் செம்பில் நீர் எடுத்துச் சென்று தர்ப்பணத்தை நன்முறையில் இடுதல் வேண்டும்.

சஷ்டித் திதி

உத்தராணி மரத் தாம்பாளம் அல்லது மந்தாரை இலையின் மேல் சம்பங்கிப் பூக்களை வைத்து இதன் மேல் தர்ப்பைச் சட்டம் அமைத்துத் தர்ப்பணம் இடுதல் வேண்டும்.

உடல் மிகவும் பருமனாக இருக்கின்ற ஆறு பேர்களுக்கு வயிராற உணவு, தாம்பூலம் அளித்து, மற்றும் அவர்களுடைய நியாயமான தேவைகளை நிவர்த்தி செய்திட, சொந்த வீடு இல்லாது அல்லது வாடகைக்கு நல்ல வீடு இல்லாது அவதியுறுவோர் நல்ல வீடுகளைப் பெறுவர்.

இன்று 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மேல் துண்டு, கோவணம் அளித்தலால் சிறு மனஸ்தாபங்களால் பிரிந்தோர் கூடுவதற்கு நல்வாய்ப்புகள் பிறக்கும்.

கும்பகோணம் மகாமகக் குளக்கரை அருகே உள்ள ஸ்ரீகௌதமேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீயக்ஞோபவீதேஸ்வரராக, முப்புரிநூல் நாதராக அருளும் சிவபெருமானுக்குப் பூணூல்களை அணிவித்து இதைப் பிரசாதமாகப் பூணூல் அணிவோர்க்கு அளித்தல் விசேஷமானதாம்.

பலருடைய பழிச்சொற்களால், அவதூறு சொற்களால் மனம் வெந்து, நொந்து இருக்கின்றோர், இன்றையத் தர்ப்பணத்தாலும், தான தர்மங்களாலும் நன்முறையிலே மனசாந்தி பெறுவர். பிரயாணத்திலேயே உயிரை நீத்தோருடைய ஆன்மம் நன்முறையில் ‘விமல சாந்தி’ நிலை பெற இது பரிகாரமாக அமைகின்றது!

இன்று வெட்ட வெளியில் இருக்கின்ற பாணலிங்கங்களுக்கு முன்னால் தர்ப்பணம் அளித்தலும் மிகவும் விசேஷமானதே! திருச்சி குளித்தலையின் மறுகரையில், ஈங்கோய் மலையிலிருந்து முசிறி செல்லும் வழியில் தொட்டியம் அருகேயுள்ள மராச்சிப்பட்டியில் வெட்டவெளி லிங்கமாக அருளும் ஸ்ரீமார்கபந்து ஈஸ்வர லிங்க மூர்த்தி அருகே இன்று தர்ப்பணப் பூஜைகளை நிகழ்த்துதலால் இதுவரையில் தன்னை வழிகாட்டி வந்த முதலாளியோ, கணவனோ, மனைவியோ திடீரென்று மறைந்திட வியாபாரமோ, வாழ்விலோ ஸ்தம்பித்து நிற்பவர்கள் நன்முறையிலே தெளிவடைந்து நல்வாழ்க்கையைப் பெறுவதற்கு இன்றைய சஷ்டித் திதித் தர்ப்பணத் திருநாள் பெரிதும் நன்கு உதவும். மிகவும் பழமையான மூர்த்தி! ஆலயமின்றி எளிமையாக அருளும் சிவலிங்கம்!

இன்று இங்கு ஆறு வகையான வாசனைப் புஷ்பங்களைத் தொடுத்து லிங்கத்திற்குச் புஷ்பங்களைத் தொடுத்து லிங்கத்திற்குச் சார்த்தி ஏழைச் சுமங்கலிகளுக்குத் தானமாக அளித்தல் விசேஷமானதாகும். இதனால் கணவனுக்கு நிரந்தரமான வேலை கிட்ட வாய்ப்புகள் கூடிவரும்.

சப்தமித் திதி

இன்று குதிரை குளம்படி கால்பட்ட மண்ணை வாழை இலையில் பரப்பி இதன் மேல் தர்ப்பைச் சட்டம்  வைத்ததுத் தர்ப்பணம் இடுதல் வேண்டும். குதிரையை, வெறும் குதிரையாக எண்ணாது, ஸ்ரீஹயக்ரீவரின் அம்சவாகப் போற்றிடுதல் வேண்டும்.

மூன்றுக்கு மேல் பெண்களைப் பெற்று இறுதியாக ஆண் குழந்தையைப் பெற்று வளர்த்து ஆளாக்கி இறந்தோர் ஆத்ம சாந்தி அடைவதற்காகவும் இன்று குதிரை காலடி பட்ட மண்ணின் மேல் தர்ப்பணம் அளிக்கின்றோம்.

பூச தீர்த்தம் விளங்குளம்

பட்டுக்கோட்டை பேராவூரணி அருகே உள்ள விளங்குளம் பூச ஜோதித் தீர்த்தத்தில் இன்று தர்ப்பணம் அளித்தலால் வீடு இல்லாமல் தவிப்போர்க்குத் தக்க நன்மைகள் கிட்டும்.!

சங்கீதம் வாழையடி வாழையாகத் தழைக்கட்டும்!

பாரம்பரியமாகச் சங்கீதக் கலையில் திளைத்து வருகின்ற குடும்பத்தில் நடுவில் திடீரென்று சங்கீதத்தை, விடுத்துப் பலரும் வேறு பல பணிகளுக்குச் செல்வதால் சங்கீதத்தைக் கலையாக கொண்டிருந்த முன்னோர்கள் மிகவும் வருத்தப்பட்டு அவர்கள் ஆன்மம் கானாம்ருத சாந்தி பெறாது வருந்துவர்.

எனவே அவர்களுடைய ஆத்ம சாந்திக்காக சங்கீதப் பாரம்பரியத்தோர் இன்று முதலேனும் மீண்டும் சங்கீதத்தைப் பரிபாலிக்க முயற்சி செய்யச் சங்கல்பம் செய்து கொண்டு மீண்டும் சங்கீதத்தைத் தொடர்தல் வேண்டும்.

இன்று 12 பானைகளில் கடலைப் பருப்பு, புளி வைத்து 12 ஏழைகளுக்குத் தானமாக அளித்தல் வேண்டும். இதனால் பாதம், முழங்கால் சம்பந்தமான வியாதிகளால் அவதியுற்று நடக்க இயலாமல் படுத்தப் படுக்கையாக இருந்து இறந்தவர்கள் நற்கதி பெறுவதற்கு இத்தர்ப்பணப் பலன்கள் உதவுகின்றன.

பிரிந்துள்ள மாமனார், மாமியார்கள், தாய் தந்தையர், சகோதர சகோதரிகள் ஒன்று சேர்வதற்கு இத்தர்ப்பண சக்தி உதவும், பலவிதமான கருத்து, மன வேறுபாடுகளால் பிரிந்து தயாதிகளுடன், உறவினருடன் பேசாமல் இறந்த மூதாதையர்களுக்கு இன்று தர்ப்பணம் அளித்தலால் இழந்த வாக்சக்திகளை பெற இயல்வதுடன் ஊமைப் பிறப்புகள்  ஏற்படுவதும் தவிர்க்கலாகும்.

நடப்புக் கலியுக வாழ்விலும் பலவிதமான கருத்து வேறுபாடுகளால் பகைமை, குரோதம் கொண்டுள்ள சகோதர, சகோதரிகள், பெற்றோர், பிள்ளைகள் ஒன்று சேர்வதற்கும் இன்று அளிக்கப்படுகின்ற பித்ருத் தர்ப்பணம் பெரிதும் துணை புரியும்.!

தம் இல்லத்தில் இத்தகைய நிலைகள் ஏற்படவில்லையே எவ்வாறு நாம் மேற்கண்ட பலன்களுக்காகத் தர்ப்பணம் அளிப்பது என்று யோசிக்காதீர்கள். தர்ப்பண சக்திகள் கோடானு கோடிப் பலன்களைத் தருபவை! இவற்றுள் ஒரு சிலவற்றையே அளித்துள்ளோம்.!

மேலும், பிற குடும்பங்களில் இவ்வாறு இருந்து இறந்திருந்தால், இத்தகைய முன்னோரின் பூரித சரீரம் நன்னிலை வேண்டிச் சங்கல்பம் செய்து, காருண்யத் தர்ப்பணமாக அளித்திடுங்கள்.

ஜாதி, மத, இன பேதமின்றி, பொது மக்கள் நலம் நாடும் சமுதாயப் பூஜையான சுயநலமற்ற காருண்யத் தர்ப்பணத்திற்கு மகத்துவமும், தேவ சக்தியும் அதிகம் என்பது நினைவிருக்கட்டும்.

அஷ்டமித் திதி

ஒரு நாளைக்கு ஒரு முறைதான் தர்ப்பணம் என்ற அளவு முறை கிடையாது. எவ்வளவு முறை வேண்டுமானாலும் தர்ப்பணம் அளித்திடலாம்.

இன்று தென்னை மரத்தடியில் ஸ்ரீதுர்வாசரைத் தியானித்துத் தர்ப்பணம் அளித்தல் மிகவும் விசேஷமானதாம்.

இன்று எட்டுப் புடவைகள், எட்டு ரவிக்கைகளை வைத்து, (ஜாதி, மத, குல, இன பேதமின்றி) எட்டுச் சுமங்கலிகளுக்குத் தானமளித்த பின்னர், எட்டு வண்ணங்களில் ஆடைகளைத் தானமாக அளித்தல் வேண்டும்.

வடகுரங்காடுதுறை

வயதான காலத்தில் வெளியூரிலோ, வெளிநாட்டிலோ இருந்து கொண்டு, தாய் தந்தையர் இறக்கும்போது அவர்கள் அருகில் இல்லாது அவர்கள் மனம் வருந்தி இறந்தோரின் நலன் வேண்டி இன்று தர்ப்பணம் அளித்திட்டால் அவர்கள் ஓரளவு சப்தபுல சாந்தி பெறுவார்கள்!

எட்டுப் புடவைகளில், புடவையின் நான்கு மூலைகளிலும், நடுவில் இரண்டு இடங்களிலும் மொத்தம் ஆறு முடிச்சுக்களை அமைத்து, அதில் ஒரு படி அரிசி, ஒரு நாணயத்தை வைத்து ஆறு முடிச்சுக்களுடன் புடவையைத் தானமாக அளித்தல் வேண்டும். இதனால் பலவிதமான வழக்குகளால் பிதுரார்ஜிதச் சொத்துக்கள் கைக்கு வராமல், ஏக்க நிலையிலேயே இறந்த முன்னோர்களுக்கு, நல்லவிதமான ஆன்ம சாந்தி கிட்டிட இத்தர்ப்பணப் பலன்கள் உதவும்.

இன்று ஆவுடையார் கோயில் அருகே தீயத்தூரில் சிவலிங்கத்தின் முன் உள்ள நந்தீஸ்வரர் அருகே தர்ப்பணம் அளித்துப் பலரையும் சத்சங்கமாகத் தர்ப்பணம் அளிக்கச் செய்தலால் கடன் சுமை தணிய நல்வரங்கள் கிட்டும்.

நவமித் திதி

 

இன்று ஆலயக் கலசத்தை நோக்கிய நிலையில் தர்ப்பணம் அளித்தல் விசேஷமானதாம்.

இன்று தான்ய ரவைகளை, வாழை இலையில் பரப்பி அதன் மேல் தர்ப்பைச் சட்டம் வைத்துத் தர்ப்பணம் இடுதல் வேண்டும். பிறகு தான்ய ரவையில் சர்க்கரை சேர்த்து ஆலய மதில் சுவரோரம் இட்டு வர பணவகைத் துன்பங்கள் தீரும்.

ஸ்ரீநந்தீஸ்வரர் தீயத்தூர்

இன்று 80 முதல் 90 வயது நிறைந்த ஆறு பழுத்த சுமங்கலிகளுக்குப் பாத பூஜை செய்து, உணவளித்து ஒன்பது ஆண் பிள்ளைகளுக்கு, ஒன்பது விதமான தான தர்மங்களைச் செய்திடுதல் வேண்டும்.

5 வயது முதல் 9 வயது வரையுள்ள ஒன்பது ஆண் பிள்ளைகளுக்குத் தேவையான காலணிகள், ஆடைகள், உணவு வகைகள், துணிப் பைகள் போன்றவற்றை அளித்திடுதல் வேண்டும். இறுதிக் காலத்தில் வாய் பேச முடியாமல் வாய்குழறி பேச்சுத் தன்மையை இழந்து இறந்தோர்க்கு இன்று தர்ப்பணம் அளித்தல் அவர்கள் சப்தமந்திர சாந்தி பெறுதற்கு இது உதவும்.

இன்று 51 பேருக்காவது குடைதானம் அளித்தலால் பெரிய வீடு இருந்தும் பலவிதமான பழக்கங்களால், தொந்தரவுகளால் நன்முறையிலே நிலபுலன்களை அனுபவிக்க இயலாமல் திணறுவோர் நன்னிலைகளைப் பெறுவர்.

இன்று வரதராஜப் பெருமாள் ஆலயங்களில் (சுவாமி மலை) மரப்பலகையில் அமர்ந்துத் தர்ப்பணம் அளித்தல் விசேஷமானதாம்!

நவமித் திதி

இன்று குருந்த மரத்தடித் தர்ப்பணம் விசேஷமானது. கொன்றை மரம், குருந்த மரத்தடியில் தர்ப்பணம் அளிக்கும் பெரும் பாக்யம் அரண்மனைப்பட்டி ஸ்ரீகொன்றையடி விநாயகர் தலத்தில் கிட்டுகின்றது.

வாழ்க்கையின் இறுதியிலோ அல்லது வாழ்நாள் முழுவதுமோ கண்பார்வை தெரியாது இறந்தோர்க்கு நன்முறையில் இன்று தர்ப்பணம் அளித்திடுதல் வேண்டும். கண் பார்வையற்றோர்க்கு அன்னதானம் அளித்தலும் மிகவும் விசேஷமானதாகும்.

ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஆலயம்
சுவாமிமலை

தேவையானோர்க்கும், வயதானவர்களுக்கும் இன்று கைத்தடிகளைத் தானமாக அளித்தலால் ஆண், பெண் குழந்தைகளைப் பெற்றிருந்தும் அவர்களுடைய ஆதரவு இல்லாமல் வாழ்வோர் நன்முறையிலே நல்வாழ்க்கையைப் பெறுவார்கள்

பெற்றோர்களை சரிவரப் பராமரிக்காதவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இது பலவிதமான மனவருத்தங்களைத் தந்து கொண்டே இருக்கும். இவற்றிலிருந்து மீள்வதற்கு கண்பார்வை அற்றோர்க்கு இன்று குறைந்தது 21 வகைத் தானங்களை அளித்து வருதலால் அவர்கள் நன்னிலைகளைப் பெறுவர், மன வருத்தமும் தணியும்.

தசமித் திதி

இன்று சாணி மெழுகிய மண் தரை உள்ள இடத்தில் தர்ப்பணம் அளித்தலால் பூமா தேவி மகிழ்ந்து ஆசி தருகின்றாள்.

இன்று 108 பேருக்கு விசிறிகளை தானமாக அளித்தலால் கணவன் அல்லது மனைவியின் சூடான சொற்களால், தீயவார்த்தைகளால் பிரிந்துள்ள குடும்பங்கள் நன்முறையில் ஒன்று சேரும்.

இன்று வெள்ளித் தட்டு, பித்தளைத் தட்டு, அல்லது உத்தராணி மரத் தாம்பாளம், மண் தட்டுகளில் பசும் பால் ஊற்றி அதன் மேல் வாழை இலை வைத்துத் தர்ப்பணம் அளித்திடுதல் வேண்டும். பசும் பாலை அரச மர வேரில் அல்லது ஓடும் நீரில் ஊற்றி விட வேண்டும். இன்று குறைந்தது 10 பேருக்காவது வாழையிலை நிறைய அன்னதானம் அளித்திடுதல் வேண்டும்.

விவசாயிகளுக்கு (101 பேர்) இன்று வஸ்திர தானம் அளித்தலால், புது வீடு வாங்க வசதிகள் இருந்தும், நிலைமை சரியாக அமையாதோர் அனைத்தும் கை கூடி வரப் பெறுவர்.

இன்று 12 அலுமினியக் கடாய்களில் (பெரிய இலுப்பைச் சட்டி) துவரம் பருப்பை வைத்து, 12 குடும்பங்களுக்கு அளித்திடுவதால், தான்ய தர்ம சக்திப் பலனாக, தர்ப்பணம் அளிக்காமலேயே விட்டுப் போன சில தலைமுறைகளும் ஓரளவு பிராயசித்த வழிகள் பெற உதவும்.

ஐந்து குழந்தைகளைப் பெற்றோர்க்கு இன்று பாத பூஜை செய்து, ஐந்து தேங்காய்கள் கூடிய தாம்பூலம் மற்றும் இயன்ற தான தர்மங்களைச் செய்திட ஆபத்தான நிலைகளை வாழ்வில் சந்தித்தோர் நல்அமைதி பெறுவர். வாழ்வில் திகிலடைவதும் பெரிதும் தணியும்.

இன்று தனுஷ்கோடி, கன்யாகுமரி, ராமேஸ்வரம் போன்ற புனிதமான கடற்கரைத் தலங்களில் தர்ப்பணம் அளிப்பது சிறப்புடையது.

ஏகாதசித் திதி

இன்று பெருமாள் ஆலயத் தீர்த்தங்களில் தர்ப்பணம் அளித்தல் சிறப்பானதாம்.

நெற்றியில் தினமும் நாமமாகிய மூன்று திரிச்சூர்ணம் இட்டு அவர்கள் மனமார, உளமார மனமகிழும்படி அனைத்து வகைத் தானங்களையும் அளித்திடுதல் வேண்டும்.

இவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவார்களாய் இருந்தால் இவர்களுக்குப் பாதபூஜை செய்து வேண்டிய தான தர்மங்களைச் செய்து, உணவளித்து அவர்கள் குடும்பத்திற்கும் தேவையான உதவிகளைச் செய்து வந்தால், பலவிதமான சாபங்களால் கணவனை இழக்கும் துர்பாக்ய நிலை தொடரும் குடும்பங்களில்  நன்முறையில் சுமங்கலித்வம் நிலவிட இத்தர்ப்பணச் சக்திகள் பெரிதும் உதவும்.

கொன்றை அஞ்சைக்களம்

இன்று கொன்றை மரத்தின் கீழ் தர்ப்பைச் சட்டம் அமைத்து 11 பேருக்காவது பால் சம்பந்தமான இனிப்புகளை வழங்கி அதன் பிறகு தர்ப்பணம் இடுதல் வேண்டும்.

குருணை அரிசியில் சர்க்கரையைக் கலந்து அதன் மேல் தர்ப்பைச் சட்டம் அமைத்துத் தர்ப்பணம் அளித்து, பிறகு அதை பெருமாள் கோயில்களில் உள்ள எறும்புகளுக்குப் போட்டு வரப் பலவிதமான மனக் கஷ்டங்கள் தீர்வதற்கு இது உதவும்.

இன்று ஐந்து மண் பானைகளில் பச்சரிசியை நிரப்பித் தானமளிப்பதால், சந்ததிகளில் ஒன்று மாற்றி ஒன்றாக ஏற்படும் குறைபாடுகள் நீங்கிட, வலம்பரப் பித்ருக்கள் ஆசி நல்குவர்.

இன்று ஐந்து வயதுள்ள ஐந்து சிறுமிகள், 60 வயதுக்கு மேற்பட்ட, ஐந்து சுமங்கலிப் பாட்டிமார்கள், 2, 3 வயதுள்ள ஐந்து குழந்தைகளுக்கு ஐந்து வகைப் பொருட்களைத் தானமாக அளித்தலால், நோயால் வாடும் கணவனின் உடல் துன்பங்கள் தணிய ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தி லோக சடாட்சர ஸ்ரீவாரிப் பித்ருக்கள் அருள்வர்.

தலையில் முடி இல்லாதோர், வழுக்கைத் தலையுடன் இறந்தவர்களுக்கு இன்று தர்ப்பணம் அளித்தலால் முன்னோர்களுடைய பலவிதமான ஏக்கங்களுக்கு நிறைவு கிட்டி அவர்கள் ஆன்மா சாந்தியடைவதற்கு இது உதவும். கும்பகோணம் அருகே கூந்தலூர் குளக்கரையில் தர்ப்பணம் அளித்தல் விசேஷமானது.

துவாதசித் திதி

நன்முறையிலே வேத பாராயணம் செய்து தமிழ், வடமொழி மறைகளை ஓதி வேதாகமத்தில் தலைசிறந்து விளங்கியோர்க்கு இன்று தர்ப்பணம் அளித்திடுதல் வேண்டும். இவர்கள் தாம் பெற்ற அபரிமிதமான வேதசக்தி காரணமாக, ஸ்வேத லக்ஷ்மி வராஹ கல்ப பூமியில் வாசம் கொண்டு இருப்பதால் இவர்களுக்கு பொன்மயத் தர்ப்பணம் என்ற வகையில் தங்க ஆபரணங்களின் மீது தர்ப்பைச் சட்டம் வைத்துத் தர்ப்பணம் கொள்தல் வேண்டும்.

மூதாதையர்கள் பூஜித்து வந்த சாளக்ராமம் பஞ்சாயதன பூஜை, விக்ரகங்கள், லிங்கங்கள் போன்றவற்றை வெறுமனே வைத்துக் கொண்டு முறையாக பூஜைகளைத் தொடராதவர்க்கு பலவிதமான தோஷங்கள் வந்து பேரும். எனவே இவற்றை நிவர்த்தி செய்வதற்கும் இன்றைய துவாதசித் திதித் தர்ப்பணம் உதவுகின்றது. இன்று முதலாவது மூதாதையர் தந்தவற்றை எளிய முறையிலேனும் மீண்டும் பூஜிக்கத் தொடங்கிடுக!

இன்று சுத்தமான கதர் ஆடைகளை அணிந்து, வாழை இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி, இதன் மேல் புதுக் கதர்த் துண்டை விரித்து, ஆறு தங்கச் செயின்களைச் சட்டம் போல் வைத்து, இதன் மேல் தர்ப்பைச் சட்டம் அமைத்துத் தர்ப்பணம் அளித்திடுதல் வேண்டும். பிறகு இந்த ஆறு தங்கச் செயின்களை உண்மையாகவே ஏழையாக இருக்கின்ற ஏழைத் தம்பதிகளுக்கு, திருமணமாகாத ஏழைக் கன்னிப் பெண்களுக்குத் திருமணத்திற்கான உபகாரமாக அளித்து, உதவி செய்தல் வேண்டும்.

செய்வார் உளர் என உணர்வீர்காள்!

இதற்கு எவ்வளவோ செலவாகுமே, வெறும் தர்ப்பனத்திற்காக இத்தகைய உயர்ந்த தான தர்மங்களை மனமுவந்து செய்வதற்கு யார் தயாராக இருக்கின்றார்கள் என்று எண்ணாதீர்கள்! சித்தர்களால் சுபானு ஆண்டிற்கென அளிக்கப்படும் விசேஷமான மாளய பட்சத் தர்ப்பண முறைகள் இவை! உலகில் ஏதேனும் ஒரு மூலையில் எவ்விதப் படாடோபமும் இன்றி இவற்றைக் கடைபிடிப்போர் நிச்சயமாக உண்டு!

தென்திருமுல்லைவாயில்

இதனைச் செய்ய வல்ல வசதி படைத்தோர் பிறருக்காகவேனும் சத்சங்கத் தர்ப்பண பூஜையாக, பலரையும் சத்சங்கமாகக் கூட்டி, இதனை இன்று முறையாகக் கடைபிடித்திட்டால், வர வேண்டிய பெருந்தொகையையும், முடங்கிக் கிடக்கும் அதிர்ஷ்டமான பண வரவையும் நற்பலன்களாகப் பெற்றிடலாம்.

கொடுத்த கடன் திரும்பி வருமே!

இதன் பலாபலன்களாக, நியாயமான முறையில் வர வேண்டிய பாக்கிகளும், கடன்களும் மிகவும் துரிதமாக வந்து சேரும்! பாடுபட்டு வாங்கிச் சேர்த்துத் தங்க நகையை இழக்கின்றோமே என்று எண்ணாதீர்கள்! ஏனெனில் பல லட்சங்களாக மாபெருந் தொகை வர வேண்டிய பாக்கியாக இருக்கும்போது, சில ஆயிரங்களைத் தானப் பொருளாக, வேதத்தில் போற்றப்பட்டுள்ள ஸ்வர்ண தானமாக அளிக்கும் போது, கணிசமான தொகையை நல்வரமாக வரப் பெறலாம் அன்றோ!

மேலும், இன்று உங்களிடம் உள்ள நகைகள் யாவும், உங்களுடைய பூர்வ ஜன்ம, ஸ்வர்ண தானப் பலன்களே எனவும் உணர்க! செய்தவற்றின் பலன்களே பிறவி அம்சங்களாக, சொத்துக்களாக, நிலபுலன்களாக, சந்ததிகளாகத் திரும்பி வரும் என்பது பிறவித் தத்துவ நியதி!

தங்கம் செல்கின்ற இடம் தங்கமயமான சுகப்ரவாள ஆனந்தத்தை ஏழைகளுக்கு அளித்திட்டால், அந்த ஆனந்தம் உங்களுக்குத் தங்கமயமானதாகப் பல்கிப் பெருகித் திரும்பி வந்து கைகூடும் அல்லவா!

தேவலோகத்து அபராஜிதத் தங்கம்!

இன்று நன்முறையிலே வேதபாராயணமாகத் தமிழ், வடமொழி மறைகளை ஓதி, வேதாகமத்தில் தலைசிறந்து விளங்கியோர்க்கு இன்று தர்ப்பணம் அளித்திடுதல் வேண்டும். இத்தகைய மூதாதையர்கள் ஸ்வேத லக்ஷ்மி வராஹ கல்ப பூமியில் இருப்பதால் இவர்களுக்குப் பொன்னாகரத் தர்ப்பணமாக, மேற்கண்ட வகையில் பொன் ஆபரணங்களின் மீது தர்ப்பணம் கொள்தல் வேண்டும். இதற்காக, மூதாதையர்கள் தங்கப் பூர்வமானத் தர்ப்பணத்தை விரும்புகின்றார்கள் என்பது பொருளல்ல!

தாடிக்கொம்பு

தங்கம் புனிதமானது, புனிதத்தைப் பொழிய வல்லது. இன்று நாம் புவியில், தங்கமாக, நவரத்னங்களாகப் போற்றுபவையாவும் தேவலோகங்களில், பித்ரு லோகங்களில், தேவசாரண்யம் எங்கும், அள்ளிச் செல்வார் எவருமின்றி நிரவிக் குவிந்து கிடப்பதாகும்.

மேலும் தேவ லோகங்களில் உள்ள அபராஜிதத் தங்கமானது பூமியில் கிட்டும் தங்கத்தை விடப் பல்லாயிரம் மடங்கு தூய்மையானது!  விலைமதிப்பற்றது! ஆங்கு இறைவனுக்கே அனைத்துத் தங்க ஆபரணங்களையும் அர்ப்பணிப்பர். இறைவனே மனமுவந்து அளிக்கின்ற நகைகளை மட்டுமே விண்ணுலகத்தில் அனைவரும் அணிவர்.

விட்ட பூஜைகள் தொட்டுத் துலங்கிடும் திருநாள்!

மூதாதையர்கள் பூஜித்து வந்த சாளக்ராமம் பஞ்சாயதன பூஜை விக்ரகங்கள் லிங்கங்கள் போன்றவற்றை வெறுமனே வைத்துக் கொண்டு முறையாகப் பூஜைகளைத் தொடராதவர்கட்குப் பலவிதமான தோஷங்கள் வந்து சேரும். எனவே இவற்றை நிவர்த்தி செய்வதற்கும், மீண்டும் பூஜைகளைத் தொடர்வதற்கும் இன்றையத் துவாதசித் திதித் தர்ப்பணம் உதவுகின்றது..

இன்றையத் தர்ப்பணத்தை சீர்காழி, மாயூரம் அருகில் உள்ள தென்திருமுல்லைவாயில் ஆலயத் தீர்த்தத்தில் அளித்தல் சிறப்புடையதாம். மகத்தான பித்ரு முக்தித் தலம். இங்கு இன்று ஸ்வர்ண மாதவப் பித்ருக்கள் வழிபடுகின்றனர். மேலும் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷன பைரவர் அருளும் ஆலயங்களில் (திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு, சிவகங்கை மாவட்ட திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டி) இதனை நிறைவேற்றிட, வராக் கடன்கள் மீள் நல்வாய்ப்புகள் மலரும்.

திரயோதசித் திதி சதுர்த்தசித் திதி

மொழி பேதம் தாண்டிய பொழிப்புனல் தர்ப்பணம்!

இன்று பகல் 1.25 மணி வரை திரயோதசித் திதி அமைகின்றது. இதற்குள் திரயோதசித் திதித் தர்ப்பணத்தை நிறைவேற்றிடுக! ஜாதி, மத, குல, இன பேதமின்றி, நம்முடைய நல்ல நண்பர்களாக இருந்து வாழ்ந்து இறந்தோர்க்கு இன்று காருண்யத் தர்ப்பணம் அளித்திடுதல் வேண்டும். பல மாநிலங்களில், நாடுகளில், பன்மொழிகளில் பேச வல்லவராய் வாழ்ந்து இறந்தோர்க்கு இன்று தர்ப்பணம் அளித்தலால், அவர்கள் பாஷாம்ருத சாந்தம் எனும் தேவ சக்தியை சரஸ்வதி லோகத்தில் இருந்து பெறுவர்.

இன்று தர்ப்பண மந்திரத்துடன், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஓதி, இயன்றால் பல மொழிகளிலும் உள்ள பித்ரு (போற்றி உரை)த் துதிகளை நன்கு ஓதித் தர்ப்பணம் அளித்தல் மிகவும் விசேஷமானதாகும். தமிழைத் தவிர வேறு மொழி தெரியாதவர்கள் கூட சமஸ்க்ருதம், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளிலும் உள்ள தர்ப்பண உரை மந்திரங்களை அந்தந்த மொழி அறிந்தோரால் ஓத வைத்துத் தர்ப்பணம் அளித்தலால், இதன் தேவ சக்தி உலகில் பலருக்கும் சென்றடையும்.

நம் முன்னோர்கள் பாரதமெங்கும், உலகெங்கும் பிறப்புகளைக் கொண்டு இருக்கலாம் அல்லவா! தர்ப்பண மூல மந்திரம் தேவ மொழியில் இருப்பினும், உரை மந்திரமாக எம்மொழியிலும் ஓதிடலாம்.

தாமரை இலையின் மேல் கோதுமையைப் பரப்பி, கோதுமை மேல் ஆறு வெள்ளிக் கம்பிகளை வைத்து இதன் மேல் இன்று தர்ப்பணம் அளித்திட வேண்டும். பல உறவினர்களின் துன்புறுத்தலால் வாடுவோர் இன்று பால்கோவா தானம் செய்தலால், இதன் தான சக்தியாகப் பல நன்மைகளைப் பெறுவர்.

கோதாயனப் பித்ருக்கள் தரும் நிலையான பணி!

இன்று கோமதி லோகத்து கோதாயனப் பித்ருக்கள் பூமிக்கு மிகவும் அரிதாக வருவதால் இன்று கும்பகோணம் அருகே பந்தணைநல்லூர், கோமல் தலங்களில் தர்ப்பணம் அளித்து, குறைந்தது 101 பால்கோவாக்களைத் தானம் செய்திட, நிலையற்ற வேலையுடன் அல்லலுறுவோர் நிலையான தொழில், பணி பெற இது உதவும்.

பந்தணைநல்லூர் சிவாலயம்

பித்ருக்கள் மாளய பட்சத்தில் அபரிமிமிதமான ஆசியைப் பொழிவதால் கிடைக்கின்ற நல்வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்க!

சதுர்த்தசித் திதிக்கான நவரத்தினத் தர்ப்பணம்!

இன்று தீர்த்தம் மட்டுமே, அல்லது அவரவர் உடல் வாகிற்கேற்ப பால் மட்டும் அருந்தியே நன்முறையில் விரதம் பூண்டு, சிவபூஜை செய்து சிவநாமாவளிகளை ஓதி, வாழை இலையை வட்டமாக அமைத்து நடுவில் அரிசி, உளுந்து, துவரை தானியங்களைப் பரப்பி நவரத்தின மோதிரம், நவரத்தினத் தோடு, நவரத்தின மூக்குத்தி, நவரத்தின கடுக்கன்களை வைத்து இதன் மேல் தர்ப்பைச் சட்டம் அமைத்துத் தர்ப்பணம் அளித்து, பிரியமானவர்களுக்கு இந்த நவரத்தின ஆபரணங்களை எவருக்கு வேண்டுமானாலும் அளித்திடலாம், ஏழைகளுக்குத்தான் அளிக்க வேண்டும் என்பதில்லை, எவருக்கும் அளித்திடலாம்.

ஆனால் இவ்வாறு அளித்திட எவருக்கு மனம் வரும் என்று எண்ணாதீர்கள்! ஏனெனில் இதில் கிட்டும் தான தர்மப் பலாபலன்கள் மிகவும் அற்புதமானவை! வசதி உள்ளோரும், ஏனையோரும் சத்சங்கமாக ஒன்று கூடிச் செயலாற்றிடில், அனுபூதிகளை அவரவர் தாமே உணர்ந்திடுக! வசதி அற்றோர், இன்று குறைந்தது ஒரு ஜோடிக் கடுக்கன்களையாவது வைத்துத் தர்ப்பணம் அளித்துக் கடுக்கன்களைத் தானமாக அளித்தலால், பிறரிடம் ஏமாந்து இழந்த சொத்துக்கள், டெபாஸிட்டுக்களைப் பெறப் பரிகார வழிகள் கிட்டும்.

இன்று இராமேஸ்வரம், பூவாளூர், திருவிடைமருதூர் போன்ற பித்ரு முக்தித் தலங்களில் குறைந்தது ஆயிரம் பேருக்குக் குறையாமல் அன்னதானம் செய்திட்டால், பல வருடங்களாக குடும்பத்தில் இருந்து வருகின்ற துன்பங்கள் தீர்வதற்கு நல்வழிகள் பிறக்கும்.

இன்று சென்னை அருகே நேமம் ஸ்ரீஅமிர்தாம்பிகை சமேத ஸ்ரீஆவுண்டீஸ்வரர் ஆலயத் தீர்த்தத்தில் தர்ப்பணம் அளிப்பதால் பூர்வ சொத்துக்களை இழந்து தவிப்போர் முறையானவற்றைப் பெற்று நன்னிலை அடைவர்.

பகலில் ஒரு திதி தொடங்கி, மறுநாள் பகலில் முடியும் போது எந்த நாளில் எந்தத் திதித் தர்ப்பணம் என்று சற்றுக் குழப்பம் ஏற்படலாம். திதி நிர்ணயம் பற்றிப் பல நியதிகள் உள்ளன. மாளய பட்சத்தில் பல நியதிகள் மாறுபடும். அவரவர் குலகுரு உரைப்பதைக் கடைபிடிக்கவும். ஒரே நாளில் இரு திதித் தர்ப்பணங்களை அந்தந்தத் திதி நேரத்தில் அளித்திடலாம். ஒரே திதிக்கு இரண்டு நாட்களிலும் இரண்டு தர்ப்பணங்களை அளித்திடலாம்.

பொதுவாக மாளய பட்ச நாட்களில், தர்ப்பண நாட்களில் காலையில் தர்ப்பணம் அளித்தல் சிறப்பானது. திதி நேரத்தைப் பொறுத்து சூரியன் மறைவதற்கு முன் எந்நேரத்திலும் தர்ப்பணம் அளித்திடலாம். தக்க குலகுருவை நாடி விளக்கங்களைப் பெறவும்.

ஞானச் சங்கம வாணிக் கூடங்கள்

ஞானம் என்பது கண்ணால், காதால், வடிவால் காணப் பெறுவதல்ல! ஆத்மார்த்தமாகக் குருவருள் மூலம் அடையப் பெறுவது! ஆழ்ந்த, சீரான நம்பிக்கை, குருவருள், பக்தி ஆகிய மூன்று நதிகளும் சங்கமமாவதே ஞானசாகரம் ஆகும்.

இதனால்தான் பொதுவாக, மூன்று நதிகள் சங்கமிக்கின்ற திரிவேணி சங்கமத் துறைகளில் சரஸ்வதி நதி அந்தர்யாமியாகக் கண்ணுக்குத் தெரியாமல், ஞான நதியாய் அடியில் சங்கமிக்கும்.

உதாரணமாக, திரிவேணி சங்கமம் எனப்படும் அலகாபாத் (கங்கை, யமுனை, சரஸ்வதி) , பவானி முக்கூடல், திருச்சி, பூவாளூர், அன்பில் அருகேயுள்ள காயத்ரீ முக்கூடல்!

குஜராத்தில் சோம்நாத் அருகே வெராவல் நகரத்தில் ஹிரண்ய நதி, சரஸ்வதி நதி, கபில நதி சங்கமம் (இங்கு தர்பை, சங்கு, துளசி மூன்றையும் நதிச் சங்கமத்தில் இட்டு, விளாம்பழ ஓட்டைக் கொண்டு தர்ப்பணம் அளித்தலால், ஈரேழு தலைமுறைகளுக்கும் முந்தையோர் கூடத் தேவநலம் பெறுவர். மிகவும் சக்தி வாய்ந்த பித்ரு முக்தித் தலம்!

தனுஷ்கோடி, கன்யாகுமரி போன்ற கடல் சங்கமத் துறைகள் போன்ற மூன்று கடல்கள், மூன்று நதிகள் சங்கமிக்கின்ற துறைகளிலே பௌர்ணமி, அமாவாசை, புனர்பூசம், நவமி, புதன் நாட்களில் வாணிபலா சித்தர் ஞானஸ்நானம் செய்து ஞான சக்திகளை நிரவி அருளாசி தருகின்றார்!

கோத்ராதிபதி

ஜாதி மத, குல பேதமின்றி நாமனைவரும் குறித்த மகரிஷிகளின் வழிவந்தவர்களே! ஆம், அனைவருக்கும் கோத்ர மகரிஷி, குல மகரிஷி உண்டு!

கோத்ராதிபதிகளும், ப்ரவர ரிஷிகளும் (மூலமாமுனிகளும், குலமாமுனிகளும்)

கோத்ர ரிஷி – மூலமாமுனி

கோத்ர ரிஷிகள் என்பவர்கள் மூலமாமுனிகள் (கோத்திரம் – குலம்) ஆவர். கோத்ரம் என்பது ஜாதி, இன, மதத்தைக் குறிப்பதன்று! கோத்ரம் என்பது சந்ததிச் சங்கிலி! அதாவது அவரவருடைய முந்தைய, நடப்பு, வருங்காலக் குடும்ப சந்ததிச் சங்கிலியே கோத்ரமாகிய குலச் சங்கிலி ஆகும்.

இவ்வாறாக அவரவர் குலத்தின், முதன்முதலாகத் தோன்றிய ஆதிமூல மகரிஷியே மூலமாமுனி அல்லது கோத்ர ரிஷி ஆகின்றார். இவர்கள் பிறப்பு, இறப்பிற்கு அப்பாற்பட்ட சிரஞ்சீவி மாமுனிகள்!

பாரத்வாஜ கோத்திரம், ஆத்ரேய கோத்ரம், கௌண்டின்ய கோத்ரங்கள் எனில் முறையே பாரத்வாஜர், ஆத்ரேயர் (அத்ரி), கௌண்டின்ய மகரிஷி குலங்களில் வந்தவர்கள் என்ற பொருள்.

கோத்திரம் அறிய, அதாவது, தான், எந்த மாமுனியின் குலத்தில் வந்தோர் என அறிய, குருவாசகம், ஜீவநாடி ஜோதிடம் பெரிதும் துணை புரியும். பொதுவாக, தற்காலத்தில் கோத்ரம் அறியாதோர், சிவ கோத்ரம், விஷ்ணு கோத்ரம், அகஸ்திய கோத்ரம் என்று கூறுவது சமுதாய வழக்கமாக நிலவுகின்றது!

எனவே கோத்ர ரிஷி என்றால் மூலமாமுனி என்று பொருள். அதாவது எந்த மூலமாமுனியின் வம்சத்தில் நாம் பிறந்திருக்கின்றோமோ, அந்த வம்சத்தில், முதன் முதலாக, ஆதி முதலில், தோன்றிய மகரிஷிக்குக் கோத்ர ரிஷி என்று பெயர்.

ப்ரவர ரிஷியே – குலமாமுனி

ப்ரவர ரிஷி என்றால் யார்? முத்திரைக் குலமாமுனியே ப்ரவர ரிஷி! அதாவது குறித்த மூலமாமுனியின் (கோத்ர ரிஷி) வம்சாவளியில் வந்து மிகவும் பிரசித்திப் பெற்றுச் சிறந்து விளங்குகின்ற மாமுனிகளையே ப்ரவர ரிஷிகள் அல்லது முத்திரைக் குலரிஷிகள் என்று குறிப்பிடுகின்றோம்.

உதாரணமாக, ஒருவர் “உதமேத” மகரிஷியின் வம்சாவளியில் பிறந்தவரென்றால், உதமேத மகரிஷியே மூலமாமுனியாக, கோத்ரரிஷியாக, அமைகின்றார். உதமேத மூலமாமுனியின் வழிவந்தவர்களில், அதாவது உதமேத கோத்திரத்தைச் சார்ந்த மிகவும் முக்கியமான ரிஷிகளே காஸ்யபர், சாண்டில்யர், ஆவத்சாரர், ஆஸிதர், தேவலர், ஆஸ்திலர் போன்ற ரிஷிகள் ஆவார்கள். இவர்கள் யாவருமே முத்திரை மாமுனிகள், குலமாமுனிகள், ப்ரவர ரிஷிகள் என்று அழைக்கப்படுகின்றார்கள்.

மூலமாமுனியாக ஒருவர் இருப்பினும் அவர் வழிவந்த சிறப்பான பல முத்திரை மாமுனிகள், குலமாமுனிகள் மேற்கண்ட வகையில் பலர் இருப்பதுண்டு! இவ்வகையில் மூலமாமுனியில் வருகின்ற முத்திரைக்குல மாமுனிகளையும் சில வரிசைகளாகப் பிரித்தல் உண்டு. உதாரணமாக, மூல (கோத்ராதிபதி) = உதமேத மகரிஷி

உதமேத கோத்ரத்தின் முத்திரைக் குலமாமுனி (ப்ரவர ரிஷிகள்) உபவரிசைகள்:

ஒரே மகரிஷி பல யுகங்களிலும் தோன்றுவதால், முதலாம் குலோத்துங்கன், இரண்டாம் குலோத்துங்கன் போன்ற சரித்திரப் பெயர்கள் போல, அதே மகரிஷிகள் மீண்டும், மீண்டும் தோன்றி பல உபாங்க ப்ரவர ரிஷிகள் ஆகின்றனர்

அடுத்த உதாரணமாக, கர்தபீமுக மகரிஷியின் கோத்திரத்திற்கு உரிய முத்திரைக் குலமாமுனிகள் காஸ்யபர், ஆஸிதர், தைவலர் ஆவர்.

உதமேதர், கர்தபீமுகர் போன்ற மாமுனிகளின் பெயர்கள் நாமறியாதவையாக, புதிதாக இருக்கின்றனவே என்று எண்ணாதீர்கள்! ஆழ்ந்த நம்பிக்கையுடன் வேண்டிடில் இன்றும் நேரில் வந்து துணை புரிகின்ற கருணை உள்ளம் கொண்டவர்களே இத்தகைய தொன்மையான மகரிஷிகள்! இவர்களை மறந்தது மனித சமுதாயத்தின் பெருந் தவறே!

சித்தர்களின் அருளாணைப்படி நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள், கலியுகம் மறந்த இத்தகைய மூலமாமுனிகள், முத்திரைக் குலமாமுனிகளின் (கோத்ராதிபதிகள், ப்ரவர ரிஷிகளின்) அருமை, பெருமை, மகத்துவத்தை எடுத்துரைத்து, ஓர் சிறு இறைக்கருவியாக, ஸ்ரீஅகஸ்தியர் விஜயம் மூலம் இறையருளால் செயல்படப் பிரார்த்திக்கின்றார்கள்!

எனவே ஒவ்வொருவரும் தம்முடைய மூலமாமுனியையும் குல மாமுனியையும் அறிந்து கொண்டு, குலதெய்வம் போல, மூலகுல குருவையும், முத்திரைக் குருமார்களையும், வணங்கி வருதல் வேண்டும். ஆனால் தற்போது அந்தணர், விஸ்வகர்மர்கள், வைஸ்யாள் போன்ற குறித்த துறையினர், மட்டுமே இந்த மூலமாமுனி, முத்திரை மாமுனி வந்தன வழிபாடுகளைக் கடைபிடித்துவரினும், ஜாதி, மத, குல, இன பிராணிகள், தாவரங்கள் பேதமின்றி அனைவருக்கும் மூல மாமுனிகளும் முத்திரை மாமுனிகளும் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அவரவருடைய மூல மாமுனியையும் முத்திரைக் குல மாமுனியையும் அறிவதற்கான சில ஆன்மீக வழிமுறைகள் உண்டு. பொதுவாக, இவற்றை ஜீவநாடிகள் (நாடி வேறு, ஜீவநாடி வேறு) குருவாய்மொழி மூலமாகப் பலரும் அறிந்து கொள்கின்றார்கள். இதற்கான பிற நல்வழி முறைகளும் உண்டு.

மூலமாமுனியையும், முத்திரைக்குல மாமுனியையும் ஏன் போற்றித் துதிக்க வேண்டும்?

குலமாமுனிகளை வணனங்குவதால் நமக்கு உரிய சற்குருவை நாம் எளிதில் பெற்று விடலாம். கலியுகத்தில் குருவை அடைதற்கு இதுவும் எளிமையான முறையாகும். பல சந்ததிகளாக வரும் தோஷங்களையும் நீக்க உதவும்.

எனவே நம்முடைய மூலமாமுனியையும், முத்திரை குல மாமுனிகளையும், நாம் நினைவில் மீண்டும் வைத்துப் போற்றி வழிபட்டு வந்தோமேயானால், அவர்களுடைய நல்ஆசிகளால், நமக்குக் குருகுல வாச மேன்மையை உணர்கின்ற பக்குவம் கிட்டும். சமுதாயத்தில் அற்புத சாந்தம் நிலவிடும்.

இடையாற்றுமங்கலம்

உத்திர நட்சத்திரத்தில் பிறந்தோர் வழிபட வேண்டிய தலம்! இடையாற்றுமங்கலம் ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீமாங்கல்யேஸ்வரர் சிவாலயம் (திருச்சி – வாளாடி – பச்சாம்பேட்டை – மாந்துறை – லால்குடி மார்கத்தில், பச்சாம்பேட்டை வளைவில் இறங்கி, வலப்புறம் 4 கிமீ உட்சென்று இடையாற்றுமங்கலம் சிவாலயத்தை அடைய வேண்டும். திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது!)

மிகவும் சுபசக்திகள் நிறைந்த நட்சத்திரங்களுள் ஒன்றே உத்திர நட்சத்திர, திருமணம், பூணூல் கல்யாணம், சீமந்தம், வளைகாப்பு, கிரகப்பிரவேசம் போன்ற அனைத்துச் சுபகாரியங்களுக்கும் ஏற்ற மங்களகரமான நட்சத்திரமாகும்.

இந்த உத்திர நட்சத்திர மண்டலத்தில் தோன்றியவரே, ஸ்ரீமாங்கல்ய மகரிஷி ஆவார். அகஸ்தியர், வசிஷ்டர், பைரவ மகரிஷி போன்ற மகரிஷிகளின் திருமண வைபவங்களில், மாங்கல்ய தாரண பூஜையை நிகத்தி வைக்கும் பாக்யம் பெற்றவரே ஸ்ரீமாங்கல்ய மகரிஷி!

இம்மாமுனியின் தபோபல சக்தி யாவும் அவருடைய உள்ளங்கை ரேகைகளில் நிறைந்துள்ளது. அட்சதை தேவதைகள், சதாஸ்து தேவதைகள், மாங்கல்ய தேவதைகள் யாவருமே  மாங்கல்ய மகரிஷியையே குருவாகக் கொண்டுள்ளனர்.

திருமணப் பத்திரிகையில் நீங்கள் காணும் மாலைகளைத் தாங்கி வானில் பறப்பது போலான “மாங்கல்ய மாலா தேவதைகள், சதாஸ்து தேவதைகள்” யாவரும் ஸ்ரீமாங்கல்ய மகரிஷி அளிக்கும் மந்திரங்களை ஓதியே மாங்கல்ய சக்திகளைப் பரப்புகின்றனர்.

திருமணத்திற்கான சுபமுகூர்த்த நேரத்தில், அமிர்த நேரம் என்ற ஒன்றுண்டு. இதன் ரகசியங்களை, தாத்பர்யங்களைச் சித்தர்களே அறிவர். இந்த அமிர்தக் கடிகை நேரத்தைத் தக்க தருணத்தில், சூக்குமமாக உரைக்க உதவுபவரே மாங்கல்ய மகரிஷி ஆவார். இவர் அமிர்த நேரம், சித்த யோக நேரங்களில் பதிந்துள்ள அமிர்தாமிர்த நேரத்தில், தூல, சூக்கும வடிவுகளில் இடையாற்று மங்கலம் ஸ்ரீமாங்கல்யேஸ்வர சிவலிங்கத்தைப் பூஜித்து வருகின்றார்.

பொதுவாக, மங்கள காரியங்களுக்கான அட்சதை, தேங்காய், தாம்பூலம், மாங்கல்யத்தை, உத்திர நட்சத்திரத்தைக் கொண்ட பழுத்த சுமங்கலிகளின் கரங்களில் அளித்து ஆசியாகப் பெறுவது மிகவும் விசேஷமானதாகும். உத்திர நட்சத்திரத்திற்கு  மாங்கல்ய மங்கள வரம் நிறைந்திருப்பதால் தான், அனைத்துத் தெய்வ மூர்த்திகளின் திருமண உற்சவங்கள் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் நிகழ்கின்றன.

மதுரையில் ஸ்ரீமீனாட்சி கல்யாணம் ஆண்டுதோறும் சித்திரை உத்திர நட்சத்திரத்தில் நிகழ்வதும் குறிப்பிடத்தக்கது. அனைத்துத் தெய்வ மூர்த்திகளின் திருமண உற்சவங்களிலும், கோரைக்கால் சித்தர் கங்கணக் காப்பு அளிப்பது போல், மாங்கல்யச் சரடுகளை அளிப்பவர்களே மாங்கல்ய மகரிஷித் தம்பதிகள் ஆவர்.

படிதாண்டாப் பத்தினி என, சில பெருமாள் ஆலயங்களில் தாயார் மூர்த்திகள் ஆலயத்தின் உள்ளேயே  விழா வைபவங்கள் நிகழும். மாங்கல்ய மகரிஷியின் பத்தினியாம் மங்களீ, மாங்கல்ய மகரிஷியின் உத்திர மண்டலத்தில் உள்ள “உத்திர கிரகத்தை” விட்டு வெளிவருவது கிடையாது. இருக்கும் இடத்தில் இருந்தே அனைத்தையும் உணர அறிய வல்லவரே மங்களீ ஆவார். எனினும் ஸ்ரீமங்களாம்பிகையே நேரில் உத்திர மண்டலத்திற்கு வந்து, தெய்வ மூர்த்திகளின் திருமண உற்சவங்கள், மானுட சமுதாயத் திருமணங்களில் மாங்கல்ய தாரண (தாலி கட்டும் வைபவத்தில்) சுபநேரத்தில் ஆங்காங்கே நேரில் வந்து ஆசிர்வதிக்குமாறு நல்வரம் அளித்திட, மாங்கல்ய வைபவங்கள் அனைத்திலும், மங்களீ, தன் கணவராம் ஸ்ரீமாகங்கல்ய மகரிஷியுடன் தம்பதி சகிதமாய் நேரில் தூல, காரீய வடிவுகளில் தோன்றி ஆசி தருகின்றார்.

மங்களீ, ஸ்ரீமாங்கல்ய மகரிஷியுடன் ஆசி வழங்கிடத் திருமணங்களில் தோன்றும் நேரமே அமிர்த நேரமாகும்! இந்நேரத்தில் மங்கள நாண் சூட்டும் வைபவம் நிகழ்தல் பெரும் பாக்யமன்றோ!

“உத்திரப் பத்திரம்
சத்திர முத்திறம்
புத்திரச் சித்திரம்
சொற்றிறக் கத்ரயமே!”

என்பது உத்திர நட்சத்திர மண்டல சூக்தத் துதியாகும். உத்திர நட்சத்திரர்காரர்கள் தம் மனதினுள் மந்திர ஓடை போல் ஓதிக் கொண்டிருக்க வேண்டிய மாமந்திர நட்சத்திரத் துதி!

அருந்ததி, அதிதி, அனுசூயா உட்பட அனைத்து மகரிஷிப் பத்னிகளும், உத்திர மண்டலத்திற்குச் சென்று மங்களீ தேவிக்குப் பாதபூஜை செய்து வழிபட்டு வருவர். கணவனையே கண்கண்ட தெய்வமாகப் பூஜித்து, தன் மாங்கல்யச் சரடையே எந்நேரமும் பூஜித்து வருபவரே மங்களீ ஆவார். எப்போதும் இவர் மாங்கல்ய பூஜையில் திளைப்பதாலும், பஞ்சாங்கத்தில் நாம் காணும் அனைத்துத் தினசரி விரதங்களையும், பண்டிகைகளையும் உலக நலன்களுக்காக மிகவும் பக்தி சிரத்தையுடன் விரத நியதிகளில் இருந்து சற்றும் வழுவாது கடைபிடித்து வருவதால் தம் உத்திர மண்டலத்தை விட்டு அவ்வளவாக வெளிவருவது கிடையாது! இவருடைய விரதபாவன மகத்துவத்தால் “விரத மங்களீ” என ஸ்ரீஅகஸ்தியரால் விருது சூட்டப் பெற்று, தம் ஒன்பது சரீரங்களிலும் மங்கள சக்திகளைப் பூண்டிருப்பவர். எங்கும் எந்நேரத்திலும் மாங்கல்ய பூஜைகளின் போது நேரில் கணவருடன் வந்து ஆசிர்வதிப்பவர்.

சுமங்கலிப் பெண்டிர் பூஜை என்று பல குடும்பங்களில் பண்டைய வழிபாடு ஒன்று உண்டு. ஜாதி, குல பேதமின்றி ஏழைச் சுமங்கலிகளை இல்லத்திற்கு அழைத்து வந்து, உணவிட்டு, மாங்கல்யச் சரடு, குங்குமம், மஞ்சள், புடவை, ரவிக்கை, வலையல்கள், தாம்பூலம், வெள்ளி மெட்டி, புஷ்பம் போன்ற ஒன்பது மாங்கல்யப் பொருட்களை அளித்து, மங்களகரமான சுமங்கலித்வ சக்திகள் நாட்டில், உலகில் விருத்தி அடைய அருளும் பூஜைகளில் மங்களீ தேவியே நேரில் வந்து ஆசி தருகின்றார்.

சுமங்கலித்வம் என்பதற்குப் பல ஆழ்ந்த அர்த்தங்கள் உண்டு. கணவனே கண்கண்ட தெய்வமாக மனைவி போற்றிச் சாந்தமான மணவாழ்வைப் பெறுதல், கணவனும் மனைவியின் ஆழ்ந்த நம்பிக்கைக்கு ஈடாக உள்ளன்போடு வாழ்தல், இல்லறத்தில் அன்பு பரிணமித்தல், மனைவியின்றி ஏனைய பெண்டிரைச் சகோதரித்துவத்துடன், புனிதமான அன்புடன் போற்றுதல், பெண்மையின் புனிதத்தைப் போற்றுதல், கணவன் நல்ல ஆரோக்யம், நீண்ட ஆயுள் பெறும் வண்ணம் நல்விரதங்களோடு பூஜித்தல், ஏழைக் கன்னிப் பெண்களின் திருமணத்திற்கு உதவுதல் போன்றவை இல்லறப் பெண்களுக்கு, சுமங்கலித்வ சக்திகளையும், கணவனுக்கு புனிதமான பக்தி நிறைந்த நல்ஒழுக்க வாழ்வையும் பெற்றுத் தரும் வழிபாட்டு அம்சங்களாகும்.

உத்தம நிலைகளில், மறைந்த கணவன் இட்டுச் சென்ற இறைப் பணிகளைக் கண்ணும், கருத்துமாய்க் கவனித்து நிறைவேற்றுவோரும், மறைந்த கணவனையே தெய்வமாக எண்ணிப் போற்றி வாழ்வோரும், சாயாச் சுமங்கலித்வ பாக்யத்தை அடைந்து விண்ணுலகில் ஒன்று சேர்கின்றனர்.

இவ்வாறு மங்களம் பொங்கும் சுமங்கலித்வ சக்திகள் நிறைந்ததும், பெண்களுக்குப் புனிதம் அளிக்க வல்லதும், திருமண தோஷங்களை நிவர்த்தி செய்வதுமான சிறப்பான தெய்வீக சக்திகளைப் பெற்ற தலமான இடையாற்றுமங்கலம் சிவாலயமே உத்திர நட்சத்திரத் திருத்தலமாகப் பொலிந்து இந்நட்சத்திரத்தார் தம் ஆயுள் முழுதும் வழிபட வேண்டிய தலமாகப் பரிணமிக்கின்றது.

இங்கு வழிபடுவதால் பாதங்களில் புரை நோய் உள்ளோரும், மற்றும் ஏனைய கால் நோய்களால் அவதியுறுவோரும் தக்க குணங்களைப் பெறுவர்.

பிள்ளைகள், மாட்டுப் பெண், மாப்பிள்ளையால் துரத்தப்பட்டுத் தனியே வாழும் முதியோர் நன்முறையில் குடும்பத்துடன் இணைந்திட இத்தல வழிபாடு உதவும்.

முதல் மனைவி இறந்து இரண்டாம் தாரத்துடன் வாழ்ந்து, இருவழிப் பிள்ளைகளால் பகைமை, சச்சரவுகள் உண்டாகி, இல்லற வாழ்வில் நிம்மதி இன்றி இருப்போர் மனசாந்தி பெறும் வண்ணம் குடும்பப் பகைமைகள் தீர்ந்திட உதவும் தலம்.

உத்திர நட்சத்திரத்தில் பிறந்தோர் தம் வாழ்நாள் முழுதும் அடிக்கடி வழிபட வேண்டிய உத்தமத் தலமிதுவே!

மாளய அமாவாசை

இன்று குறைந்தது 108 மகரிஷிகள், சித்தர்கள், யோகியர்களுக்கு அர்க்யம் அளித்துப் பிறகு தாம்பாளத்தில் தர்ப்பைச் சட்டமிட்டுத் தென்புலத்தார்க்குத் (பித்ருக்கள்) தர்ப்பணம் அளிக்க வேண்டும். இதன்பின் தெரிந்த நண்பர்கள், உறவினர்கள், அறிந்தோர், அறியாதோர், தான் வளர்த்த பிராணிகள், மரங்கள், செடிகள், தானுண்டு களித்த மீன், கோழி, ஆடு, நண்டு போன்றவற்றிற்கும் காய்கறிகள், கனிகளுக்கும் தர்ப்பணம் அளிக்க வேண்டும். இதற்கு சர்வ ஜீவகாருண்யத் தர்ப்பணம் என்று பெயர்.

போர், விபத்து, பூகம்பம், புயலில் இறந்தோர்க்கு ஜாதி, மத பேதமின்றித் தர்ப்பணம் அளித்தலும் மகத்தான சமுதாய பூஜையாக மலர்கின்றது. அவரவர் ஊரில் சத்சங்கத் தர்ப்பணப் பூஜையாக, ஜாதி, மத, இன, குல பேதமின்றிப் பலருக்கும் எள், நீர், தர்பை, பவித்ரம் அளித்து முறையாகத் தர்ப்பணம் அளிக்கச் செய்திட்டால் உலக சுபிட்சத்திற்கு இது பெருமளவில் உதவும். இன்று தேனிமலை, பழனி, வெள்ளியங்குடி, நெடுங்குடி போன்ற மலைத் தலங்களில் மந்தாரை இலை மீது தர்ப்பணச் சட்டம் அமைத்து வழிபடுதல் விசேஷமானது. இதனால் பலவிதங்களில் குடும்பத்தில் திடீர் மரணங்கள் ஏற்பட்டு அவதியுறும் குடும்பங்களுக்கு சதவேதப் பித்ருக்கள் மூலம் தக்க நிவாரணங்கள் கிட்டும்.

திருச்சி- லால்குடி அருகே பூவாளூரில் ஸ்ரீபல்குனிச் சித்தரை அபிஷேகித்த நீரினால் தர்ப்பணம் அளித்திட, பணக் கஷ்டங்களால் தடைபட்டுள்ள திருமணங்கள், கிரகப் பிரவேசம் போன்ற சுபகாரியங்கள் நிறைவு பெற, மங்களதேவப் பித்ருக்கள் மூலம் தக்க உதவிகள் கிட்டும்.

சென்னை அரக்கோணம் இடையில் உள்ள தக்கோலம் ஸ்ரீகங்காதரேஸ்வரருக்கு அபிஷேகித்த நீரினால் இன்று அங்கு, கல்லாற்றங் கரையில் தர்ப்பணம் அளித்திட, மனவேறுபாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களில் நல்அமைதி நிலவிட, வரிவஸ்யப் பித்ருக்கள் ஆசி தந்து துணை புரிவர்.

சென்னை அருகே திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் ஆலயத் தீர்த்தத்தில் பலருக்கும் தர்ப்பணம் அளித்திட நல்வாய்ப்புகள், வசதிகள் செய்து தந்து சத்சங்கமாகப் பலரும் சேர்ந்து தர்ப்பணம் அளித்திட, சந்ததிகள் நன்கு தழைக்கும், தீவினைப்பட்டோர் திருந்திட உதவும். இவற்றிற்கு சுதவாணிப் பித்ருக்கள், கஜபூஜப் பித்ருக்கள், பிரம்மாம்புலப் பித்ருக்கள் நல்வரங்களை அளிக்கின்றனர். இவர்கள் சாலிஹோத்ர மாமுனியைக் குருவாக வரித்தவர்கள்.

அரண்மனைப்பட்டி ஸ்ரீகொன்றையடி விநாயகர் வளாகத்தில் குருந்த மரத்தடியில் மல்லிகை, ரோஜா, துளசி, வில்வம் போன்ற எட்டுவகை வாசனைப் புஷ்பங்களை விநாயகர் மேல் சார்த்தி எடுத்து, இப்புஷ்பங்களின் மேல் தர்ப்பணம், அளித்தலால் உறவுப் பகை, அடுத்த கடைவியாபாரப் பகை, அடுத்த வீட்டுப் பகை, அலுவலகப் பகையால் ஏற்படும் துன்பங்கள் நீங்க வழி பிறக்கும். இதற்கு ரீதாம்பரப் பித்ருக்கள் துணை புரிகின்றனர்.

ராமேஸ்வரம், வேதாரண்யம், திலதைப்பதி, மதுரை அருகே திருப்பூவணம், எண்கண் போன்ற தலங்களிலும் தர்ப்பணம் அளித்தல் சிறப்பானதாகும்.

கும்பகோணம் அருகே கண்டரமாணிக்கம் ஸ்ரீவரதராஜர், தெற்குப் பார்த்த ஸ்ரீராமர் அருளும் ஆலயத்தில் தர்ப்பணம் அளித்தால் நடுத்தரக் குடும்ப நிலையால் வீடு வாங்க இயலாமை, திருமணம் செய்ய இயலாமை, மேல்படிப்புக்கு வசதியின்மை போன்ற குறைகள் தீர பெருமாள், கடாட்சவாணி பித்ருப் பத்னிகள் மூலம் அருள்வரம் நல்குகின்றார்.

தர்ப்பணத்திற்கான மந்திரம்

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயத மே பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத

அல்லது

மெய்யில் விளங்கும் சோதி, மெய்யுணர்ந்த
மேல் நீத்தார் மனங்குளிர வார்த்த எள்நீர் ஏற்று
மனங்குளிர்வீர் மனங்குளிர்வீர் மனங்குளிர்வீரே! (அகஸ்தியர் நீத்தார் கடன் படலம்)

நீத்தார் நினைவோடு
நெடுங்கிடையாய் நாமளிக்கும்
நீர்த்தாரை எள்ளோடு
நுணல் தருப்பை யாவுமாய்
மூத்தார் துதிபாடி
மூலவரையாம் பணிவோம் – தமிழ் மந்திரம்

மால் + அயம் | மாளயபட்ச அமாவாசைச் சிறப்பு

அமாவாசைத் திதிகளுக்கு எல்லாம் தலையாயதாக புரட்டாசி மாத மாளய அமாவாசை துலங்குகின்றது. சூரிய, சந்திர கிரகங்களின் சங்கமம்தானே அமாவாசைத் திதியாகிறது! விஞ்ஞானம் பகர்வது போல வானில் இருப்பது ஒரே சூரியன், ஒரே சந்திரன் மட்டும் அல்ல, உண்மையில் விண்ணில் எண்ணற்ற சூரிய, சந்திர, பூமிக் கோள்கள் உள்ளன. அனைத்துச் சூரிய, சந்திர கிரகங்களும் இணைந்து விண்ணில் அணிவகுத்து நிற்கும் புளகாங்கிதமான திருக்காட்சியே, மகாளய அமாவாசை கிரக சங்கமமாக மலர்கின்றது. சித்தர்களின் இந்த பல சூரிய, சந்திரக் கோட்பாட்டு வேத வாக்கினை விஞ்ஞானப் பூர்வமாக நாம் உணர்கின்ற காலமும் வருங்காலத்தில் நிச்சயமாக வரும்.

சூரியனும் சந்திரனும் இணைகையில் பல ஒலி, ஒளி மண்டல வட்டங்கள் சுயம்பாய்த் தோன்றுகின்றன. இவற்றில்தாம் பித்ருக்கள் சப்த மண்டலப் பூர்வமாகவும் (துழாய் அம்சங்களுடனும் ஒலிப் பூர்வமாகவும்), ஜோதி பகவத் அம்சங்களின் பூர்வமாகவும் (அதாவது ஒளிப் பூர்வமாகவும்), பித்ருக்களுக்கு அதிபதியான ஸ்ரீமன் நாராயண மூர்த்தியைத் துதித்து, (மாளய) பட்ச மண்டல பூஜைகளுடன் கொண்டாடி, மகத்தான பிரம்மோற்சவம் கொள்கின்றனர்.

எனவே மால் + அயம் என்பது திருமாலுகு உரியதாகின்றது. மால்அயமே, மாளய, மகாளய அமாவாசையாக ஆயிற்று. இவ்வாறாக, மாளய அமாவாசை என்பது பிரபஞ்ச ஜீவன்களின் அனைத்துப் பித்ருக்களுக்கும் ஒன்று கூடி, பித்ரு மண்டலங்களிலும், பல்வகை விண்வெளி லோகங்களிலும், பூமியிலும் பிரசன்னமாகி பூஜை, ஹோமம், யாகம், தியான வழிபாடுகள் நிகழ்த்தும் அதியற்புதக் காலமாகும்.

பித்ரு நிலை என்பது உத்தமத் தெய்வீக நிலைகளுள் ஒன்றாம். உணவு, உறக்கம், பசி, களைப்பு, நோய் இல்லாத அற்புதத் தேவ சரீரம் உடையதே, பித்ரு வடிவ நிலை ஆகும். உடலில் ஏற்படும் மேற்கண்ட பசி, நோய் போன்ற சரீர இம்சைகள் இல்லாத தேவ நிலையே உத்தமப் பித்ரு நிலை என்பதால், ஒவ்வொரு விநாடியும் பலவிதமான வழிகளில் இறைவனை வழிபட்டுத் தம்முடைய சந்ததிகளை இறைநெறியில் ஆட்படுத்த வேண்டிய மகத்தான கடமை ஒவ்வொரு பித்ருவிற்கும் உண்டு. ஒரு விநாடி கூட ஓய்வில்லாது பூஜிக்கின்ற உத்தம தேவப் பெரு நிலையே பித்ரு நிலையாகும். சூரிய மண்டலம், காயத்ரீ மண்டலம், குரு மண்டலம், யோக மண்டலம், ரிஷி மண்டலம் போன்ற பல்வகை தேவலோகங்களுக்கு அருகில் பல பித்ரு மண்டலங்கள் உள்ளன!

பித்ருக்களுக்குப் பசியில்லாததால் உணவு தேவை இல்லை என்றாலும் அவர்களுக்கு அர்க்ய சக்தி, தர்ப்பண சக்தி, திதிப் பிரசாத சக்தி போன்ற பலவிதமான ஆன்ம சக்திகள் தேவைப்படுகின்றன. இவையாவும் அவர்களுடைய தபோ பலன்களை யோக, தவ சக்திகளை நிலை நிறுத்தி, விருத்தி செய்யக் கூடியவை ஆகும். மேலும் அவர்களுடைய சந்ததியினர் பூவுலகில் ஆற்றுகின்ற இறைவழிபாடுகளில் கிட்டும் குறித்த விமலக் காஷ்ட பலன்களும் பித்ருக்களுக்கு நிரம்பத் தேவையாக இருக்கின்றன. மனிதன் உழைத்துச் சம்பாதித்து வாழ வேண்டி இருப்பது போல, பித்ரு நிலையில் இறை லட்சியங்களை நிறைவேற்றுவதற்கான வேத, மந்த்ர, யந்த்ர, வேள்வி, பூஜா சக்திகளை அவர்களே கடுமையாக உழைத்துப் பெறுதல் வேண்டும்.

ஒவ்வொரு பித்ருவும் பல கோடிக்கணக்கான தம்முடைய சந்ததிகளை, முந்தைய, பிந்தைய, தலைமுறைகலைக் காத்து நல்வழிப்படுத்த வேண்டிய தார்மீகக் கடமை, இறை ஆணையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. கலியுகத்தில் மானுடர்கள் உத்தமமான பித்ரு நிலையை அடைகின்ற விகிதாசாரம் மிகவும் குறைவாக இருப்பதையே நாம் பித்ரு சாபம் என்று சொல்கின்றோம்.

அதாவது தம் சந்ததியினர்களில் தர்ப்பணப் பூஜை வழியாக, இறைப் பணிகளின் மூலமாக சேர வேண்டிய முந்தைய, பிந்தைய தலைமுறைகளைக் காத்து நல்வழிப்படுத்த வேண்டிய தார்மீகக் கடமை இறை ஆணையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. கலியுகத்தில் மானுடர்கள் உத்தமமான பித்ரு நிலையை அடைகின்ற விகிதாசாரம் மிகவும் குறைவாக இருப்பதையே நாம் பித்ரு சாபம் என்று சொல்கின்றோம்.

அதாவது தம் சந்ததியினர்களில் தர்ப்பணப் பூஜை வழியாக, இறைப் பணிகளின் மூலமாக சேர வேண்டிய முத்கலக் காஷ்ட பலன்கள் பித்ருக்களுக்கு பூமியில் இருந்து கிட்டாத போது, இது பித்ருக்களின் தபோ சக்தியைக் குறைக்கின்றது. குறித்த முத்கல சக்திகள் கிட்டாமையால் அவர்கள் வருந்துகின்றனர். வருத்தமெனில் பூலோக வாசிகள் போல மன வருத்தம் கிடையாது. படிப்பதற்கு நல்ல வசதிகள், வீடுகள் கொடுத்தும் நன்கு படிக்காத பிள்ளையைப் பற்றிப் பெற்றோர்கள் மனக் கவலை கொள்வது போல, பெறுதற்கரிய பூலோக வாழ்வைப் பெற்றும், தக்க இறைப் பணிகளைச் சாராது வாழ்கின்ற நம் சந்ததியினரைப் பற்றிப் பித்ருக்கள் கொள்கின்ற வருத்தமே பித்ரு சாபமாக மாறுகின்றது.

இதனால் சந்ததியின்மை, கணவனின் ஆயுள் பாதிக்கப்படுதல், வறுமை, தலைமுறை தலைமுறையாக விருத்தியான சொத்துக்கள் திடீரென்று முடங்கிப் போதல் போன்றவை ஏற்படுகின்றன. இவற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கும், பித்ருக்களுக்குத் தேவையான தேவ சக்திகள், காஷ்ட சக்திகளைப் பெற்றுத் தரவும் மாளயபட்சத்தின் 15 நாட்களிலும் ஆற்றும் தர்ப்பண பூஜை, தான தர்மங்கள் உதவுகின்றன.

இவ்வருட மாளயபட்சத்தின் 15 திதிகளிலும், முதலில் சுத்தமான, புனிதமான நைஷ்டிக பிரம்மச்சாரியான பீஷ்மருக்குத் தர்ப்பண அர்க்யம் அளித்து விட்டுப் பிறகுதான் ஏனையோர்க்கு அர்க்யம் தர்ப்பணம் அளிக்க வேண்டும்.

அமுத தாரைகள்

தாமரை மலர்கள் தாங்கி அருணாசல கிரிவலம் வருவீர்!

பல தலைமுறைகளாக வறுமையிலும், நடுத்தரக் குடும்பமாகவும், ஏழ்மையிலும், தக்க வீடு, வாசல் இன்றி, வாடகை வீட்டிலிருந்து பணக் கஷ்டத்தில் வருந்துவோரும், வியாபாரத்தில் கஷ்ட, நஷ்டங்களிலேயே தொடர்ந்து உழல்வோரும் இம்மாத சிவராத்திரியில் தாமரை மலர்களைத் தாங்கி திருஅண்ணாமலையில் கிரிவலம் வந்து குபேர லிங்கம், இடுக்குப் பிள்ளையார், பஞ்ச லிங்கங்கள், பூத நாராயணப் பெருமாள், இரட்டைப் பிள்ளையார் மற்றும் தங்கள் ஊர்களில் உள்ள இறைவனுக்கு, ஸ்ரீமகாலக்ஷ்மிக்குத் தாமரை மலர்களைச் சார்த்தி வழிபட்டிட, துன்பங்கள் தணிந்து, நியாயமான முறையில் பண விருத்தி பெற்று நன்னிலைகளை அடைவர். தாமரை மலரையும், நீரையும் காசுக்கு விற்றல் கூடாது. விற்றால் குரு துரோக விளைவுகள் வந்து சூழும்.

Phd., M.Phil. போன்ற படிப்புகளில் ஒரு சப்ஜெக்ட் முடியாமை, பணக் கஷ்டம், குடும்பப் பொறுப்பு, incomplete project work போன்ற ஏதேனும் ஒரு காரணமாகக் கல்வியை முடிக்க இயலாமல் தவிப்போர், இன்று திருஅண்ணாமலையில் மாதசிவராத்திரி கிரிவலம் வந்து, புதன் கிழமைகளில் கூத்தனூர், வாணியம்பாடி போன்ற வாணி சக்தி நிறைந்தத் தலங்களில் வழிபட்டு வர, படிப்பு முழுமை பெறும்.

மாளய பட்ச நாட்களில் இல்லங்களில் மூதாதையர்களுடைய பொருட்களில் விக்ரகங்கள், சந்தனக் கட்டை, கைத்தடி, மூக்குக் கண்ணாடி, நகைகள் –போன்றவற்றில் பித்ருக்கள் ஆவாகனாவதால் அவர்கள் உறைகின்ற தேவநிலைகளை மேம்படுத்த பதினைந்து நாட்களிலும் ஸ்ரீசுதர்சன தூபம், ஸ்ரீமன் நாராயண தூபம் போன்ற திருமால் அனுகிரகம் நிறைந்த தூபங்களை ஏற்றுதல் மிகவும் விசேஷமானது.

தீனக் காப்பு எனப்படும் மர வளையல், ஸ்திர கங்கண், ம்ருதுள மணி கங்கண் போன்றவற்றை அணிந்து அளித்தல், தர்ப்பண சக்திகளை விருத்தி செய்து தருவதாகும்.

வேலையிழந்தோர் நன்னிலை பெற….

திடீரென்று வேலையை விட்டு நீ(ங்)க்குதல், தன் கீழ் பணிவோர்க்குக் காரணமின்றி மெமோ கொடுத்து வதைத்தல் போன்று பல குடும்பங்களில் வேதனை சூழக் காரணமானோர்க்குப் பலவிதமான ஹத்தி தோஷங்கள் சேர்ந்து குடும்பத்தை, சந்ததிகளைப் பெரிதும் வாட்டும். இவ்வாறு துன்பம் தந்தோர் சனி, புதன் நாட்களில், குறைந்தது 12 யானைகளுக்குத் திருமண் இட்டு நன்கு அலங்கரிக்கும் கைங்கர்யங்களை ஏற்று, யானைக்கு உணவளித்து, யானையுடன் சேர்ந்து ஆலயங்களை அடிப் பிரதட்சிணம் செய்து வலம் வந்து, ஏழைக் குடும்பங்களுக்கு ஒரு நாளுக்கு உரிய உணவை (காசாக அல்ல) அளித்து வந்தால் ஓரளவுப் பிராயச்சித்தம் பெறலாம். மேற்கண்ட வகையில் வேலையிழந்து வாடுவோர் பசுமடம், அல்லது யானை உள்ள ஆலயங்களில் தக்க அனுமதியுடன், பசுக்கள், யானை வசிக்கும் இடத்தைச் சுத்திகரிக்கும் திருப்பணிகளைச் செய்து வர, நன்மை பெறுவர்.

மூன்றாம் பிறைச் சந்திர தரிசன சந்திரப் பிறை தோன்றும் நேரத்தில் வீட்டில் கற்கண்டு, திராட்சை, முந்திரி கலந்த (காயச்சிய) பசும்பாலை மூன்று லிட்டருக்குக் குறையாமல் வானை நோக்கி வைத்து ஸ்ரீசந்தரமௌளீஸ்வரரைப் பூஜித்து சந்திர தரிசனத்திற்குப் பின் ஏழைக் குழந்தைகளுக்குத் தானமாக அளித்து வந்தால், அளவுக்கு மீறி, வரம்புக்கு மீறிப் பேசியதால் வந்த விபரீதங்கள் வாழ்க்கையில் வந்து மோதாமல் தடுத்திடுவதற்கான நற்பரிகாரங்கள் கிட்டும். கொட்டிய வார்த்தைகளுக்கு அந்த வார்த்தைகளே எஜமானன். பேசாத வார்த்தைகளுக்கு அவரவரே எஜமானர் என்பதை உணர்க!

வாழ்க்கைத் துன்பங்களின் விரக்தியால் ஆலய தரிசனத்தில், பூஜைகளில் ஈடுபாடு இன்றி இருப்போர் வாரம் அல்லது மாதந்தோறும் தங்கள் வசதிக்கு ஏற்ப 51 ஏழைகளுக்கு 21 பசுக்கள், 12 யானைகளுக்கு அன்னம், பழங்கள், தானியங்கள், புல் அளித்து வரச் சங்கல்பம் செய்து கொண்டு முறையாக நிறைவேற்றி வருதலால், இதில் தோன்றும் புண்ய சக்தியானது தேவையில்லாது அவ்வப்போது கிளைக்கும் விரக்தி, சோகம், வாழ்க்கையில் பிடிப்பின்மை, மனச் சங்கடங்களை வென்றிட ஆன்மீக ரீதியாக உதவும். யானைகளுக்கும், பசுக்களுக்கும், தான, தர்ம சக்திகளுக்கும், ஒவ்வொரு மனிதனுக்கும் தக்க இறை லட்சியத்தைப் பெற்றுத் தர வல்ல ஆன்ம சக்திகள் நிறைய உண்டு. சப்த மாதர்களை வழிபட்டு வந்திட விரக்தி நிலைகள் நீங்கும்.

எலெக்ட்ரானிக்ஸ் துறையில் இருப்பவர்கள் வானியல் சம்பந்தப்பட்ட காஞ்சனாதி ஸ்படிகம் போன்ற ஆன்ம சாதனங்களை அணிந்து வானியல் சக்திகள் (cosmic energies) நிறைந்துள்ள தலங்களில் வானியல் அம்சங்கள் நிறைந்த நட்சத்திர, திதி நாட்களில் (செவ்வாய், ரோஹினி, ஹஸ்தம், மூலம், சஷ்டி, சப்தமி) சாம்பிராணி தூபம் இட்டும், பட்டு வஸ்திரங்களை இறைவனுக்குச் சார்த்தியும் வழிபட்டு வருதல் வேண்டும்.

“நட்சத்ர நட்சத்ராதி நட்சத்ராம்ச நட்சத்ரயம்
நட்சத்ரஸ்ய நட்சத்ரமாதா நட்சத்ர பரிபாலிதம்”

என்ற மந்திரத்தை எலெக்ட்ரானிக்ஸ் துறையில் இருப்பவர்கள் (CSE, ECS, ECE, EE GROUPS) ஓதி வருதலால் இவர்களுக்கு வானியல் சக்திகள் பெருகும்.

ஆகம சாந்தி, அனந்த சாந்தி, கரண சாந்தி, பஞ்சபூரண சாந்தி, பவித்ர சாந்தி, காரண சாந்தி, கர்த்தம சாந்தி என 1008 வகை சாந்திகளைக் கொண்டவையே பித்ரு நிலைக்கு முந்தைய சகல சரீர விதேக சம்ஸ்காரம் ஆகும். இவற்றை அடைந்து பல உடல்கூடு தளைகளில் இருந்து விடுபட்டுப் பரிபூரணமான ஆன்ம சாந்தி, ஆத்ம சாந்தி நிலைகளைப் பெற்றால்தான் பித்ரு நிலைகளை அடையமுடியும்.

சோக நிவர்த்தி யோகநாள்

சோகம், மன வேதனைகள், மனச்சஞ்சலங்கள், கவலைகள், உடல் வேதனைகள் இவற்றோடு தான் மனிதன் வாழ்நாள் முழுதும் எப்போதும் போராடிக் கொண்டு இருக்கின்றான். உடல் துன்பங்களுக்கு மருத்துவம் ஓரளவு நிவர்த்தி தரும். மனத் துன்பங்கள் தீர ஆசனம், யோகம், பிராணாயாமம், முத்திரைகள் போன்றவை இருந்தாலும் கலியுக மனிதன் எதனையும் முறையாகத் தினந்தோறும் பின்பற்றுவது கிடையாது. கலியுகத்தில் மனிதன் பலவிதமான மனப் போராட்டங்களுக்கு ஆட்படுவான் என்பதால் பஞ்ச (ஐந்து) கால அம்சங்களில் அமிர்த யோகம், சித்த யோகம் போன்ற அமிர்த யோக நேர கால வகைகளும், இதில் செய்ய வேண்டிய காரியங்களும், பூஜைகளும், விரதமும் அளிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீதண்டாயுதபாணி
கரிவலம்வந்தநல்லூர்

அமிர்த காலத்தில் காலக்குழாயில் அமிர்தமும் சித்த யோக நேரத்தில் காலக் குழாயில் சித்த சக்தி அமுதமும் சுரக்கின்றன. இவற்றை நாம் பெறும் வழிமுறைகளை அறிந்து கொண்டால் மனத்துன்பங்கள் ஏற்படும் போது இந்த அமிர்த சக்திகள் மூலம் மனசாந்தியை தேடிக் கொள்ளலாம். அமிர்த யோக நேரத்தில் கையில் தண்டம் தாங்கிய ஸ்ரீபாலதண்டாயுத மூர்த்திக்குத் தேன் அபிஷேகமும், சித்த யோகநேரத்தில் சப்த மாதர்களுக்கு கற்கண்டு கரைத்த பசுல்பால் அபிஷேகமும் செய்து வந்தால் கபாலத்தில் அமிர்தம் சுரந்து வாழ்க்கைச் சோகங்கள் தீர வழி பிறக்கும். எனவே அமிர்தாபிஷேகக் காலக் குழாய் எனப்படும் ஆலய கோமுகங்களை அமிர்தயோக நேரத்தில் சுத்தம் செய்திட்டால் நெடுங்காலமாக தீர்வு பெறாமல் இருக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு கிட்டும்.

மூன்றாம் பிறைச் சந்திரனைத் தன் சிரசில் சூடிய பைரவர், ஈஸ்வரன், கங்காதரர், தட்சிணாமூர்த்தி போன்ற பல சிவமூர்த்திகள் உண்டு. இவர்களுக்குச் சந்திர பகவான் பாத பூஜை செய்த நாட்கள், குறிப்பாக, நின்ற நிலையில் உள்ள தட்சிணா மூர்த்திக்குச் சந்திர பகவான் பாத பூஜை செய்கின்ற நாட்கள் மிகவும் விசேஷமானவை! லால்குடி, திருநாவலூர் போன்ற தலங்களில் நின்ற நிலை தட்சிணாமூர்த்தியைத் தரிசித்திடலாம். எந்தத் துறையில் சேர்வது, படிப்பில் எதைத் தேர்ந்தெடுப்பது, டிரான்ஸ்பர் பிரச்னைகள், பல விஷயங்களிலும் எம்முடிவு எடுப்பது எனத் தெரியாது திகைப்போர் நல்வழி பெற்றுச் சிறப்புடன் வாழ அமிர்த யோக, சித்த யோக நாட்களில் நின்ற நிலை தட்சிணா மூர்த்தி உள்ள ஆலயங்களில் கோமுகத்தைச் சுத்திகரித்துத் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வர வேண்டும்.

ஒரே நாளில் பகல் பொழுதில் அடுத்த திதி பிறக்குமானால் இந்நாளுக்கு உரிய  திதியைச் சரியாக நிர்ணயம் செய்ய இயலாது. இதனை சூன்யத் திதி நாள் எனப் பஞ்சாங்கத்தில் குறிப்பார்கள். சூன்யத் திதி வேறு, திதி சூன்யம் என்பது வேறு! திதி நிர்ணயம், தர்ப்பணம் அளிக்க வேண்டிய நேரம் பற்றியும் பல வகை விளக்கங்கள் உண்டு. எனவே இவை பற்றிக் குழப்பம் கொள்ளாதீர்கள்! மாளயபட்சக் காலத்தில் பூவுலகில் எப்போதும் பித்ருக்கள் நிறைந்திருப்பதாலும், மாளயபட்சத் தான தர்மங்கள் பலவிதமான தோஷங்களையும், போக்குவதாலும் மாளய பட்ச நாளில் அந்தந்தத் திதி நேரத்தில் அந்தத் திதிக்கான தர்ப்பணம் அளித்தல் விசேஷமானது என அறிக!

சந்திரன் உச்சமாகும் இரவே பௌர்ணமி கிரிவலத்திற்கு உகந்தது ஆவது போல் இரு திதிகள் நிரவும் நாளில் எந்தத் திதி சக்தி உச்சம் பெறுகின்றதோ, அதுவே அந்நாளுக்குரிய திதியாகும். இத்திதி விளக்கங்கள் நிறைய உள்ளமையால், இதில் குழப்பமடையாது, நாம் மாளய பட்சத்தில் அறிந்து கடைபிடிக்க வேண்டியது யாதெனில், சரியான திதி நேரங்களிலும், மொத்தம் 15 திதிகளிலும், 15 நாட்களிலும் தர்ப்பணம் அளிக்க வேண்டியது என்பதேயாம். இதில் ஒரே நாளில் இரண்டு காலங்களில், இரு திதித் தர்ப்பணங்கள் அமைய வாய்ப்புண்டு. ஒரு நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் தர்ப்பணம் அளிக்கலாம்.

ஸ்ரீவீணாதட்சிணாமூர்த்தி
திருப்பாற்றுரை

கல்விக்கான உதவிகள் கிட்டிட…

பிள்ளையின் படிப்புச் செலவைத் தன்னால் தாங்க இயலுமா என்று பரிதவிப்போர், புதன், நவமி, புனர்பூச நாட்களில் பிரம்பு அல்லது மூங்கில் கூடையில் நிறையத் தாமரை மலர்களைத் தாங்கி, ‘கலைவானியைப் போற்றும்’ குமரகுருபரரின் சகல கலாவல்லி மாலைத் துதி மற்றும் வேதா சூக்த மந்திரங்களை ஓதியவாறு குடும்பத்துடன் அருணாசலத்தில் கிரிவலம் வந்து, தாமரை மலர்களை, சரஸ்வதியின் நாயகராம் ஸ்ரீபிரம்மருக்கான (ஆலயத்தில் பிரம்ம தீர்த்தக் கரையில் உள்ள) ஸ்ரீபிரம்ம லிங்கத்திற்கும் சார்த்தி, மூங்கில் கூடையில் பழங்களை வைத்து ஏழைக் குடும்பங்களுக்கும், பசுக்களுக்கும் அளித்து வந்திட, கல்விக்கான உதவிகள் கிட்டும். இதனைக் குழந்தைகளின் சிறு வயதிலிருந்தே செய்து வந்தால் பள்ளி, இறுதி, கல்லூரிப் பருவத்தில் இறையருளால் தக்க உதவிகள் வந்து சேரும்.

தான் மிகவும் நெருங்கிப் பழகியவரை நம்பிக் கடன் அளித்தோர், கடனுக்கு உத்தரவாதம் (Guarantee) அளித்தோர், பலவிதமான துன்பங்களில் சிக்கும் நிலை ஏற்பட்டிடில், இவற்றிலிருந்து மீள்வதற்கு, தினசரிப் பிரதோஷம் அதாவது நித்ய பிரதோஷம் எனப்படும் நேரமான தினமும் மாலையில் 4½ மணி 6½ மணிக்குள், பாடல் பெற்ற சிவத் தலங்களில் அல்லது பிரதோஷ பூஜை நிகழும் ஸ்ரீநரசிம்மப் பெருமாள் தலங்களில் (ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர், பண்ணுருட்டி – திருவதிகை சயனக்கோல நரசிம்மர்). குறைந்தது 108 முறை பிரதட்சிணம் செய்து இயன்ற தான தர்மங்களைச் செய்து வருதல் வேண்டும். இடைவிடாது ஒரு மண்டலத்திற்கு இவ்வாறு வழிபட்டு வந்தால் இறையருளால் பல முன்னேற்றங்களை நன்கு கண்கூடாகக் காணலாம். திண்டுக்கல் அருகே தவசிமடை ஸ்ரீமகாலிங்கர் சிவாலய பிரதோஷ பூஜையில் காரிய சித்திகளைக் கனிய வைக்கும் சக்திகள் நிறைய உண்டு! பல்வேறு யுகங்களிலும் எண்ணற்ற சித்தர்கள், மகரிஷிகள் தவமடங்களைக் கொண்டு அனைவரும் பிரதோஷ பூஜை கொண்டாடிய தலமல்லவா! அனைத்துச் சித்தர்களின், மாமுனிகளின் திருப்பாதங்கள் பட்ட தலம்! ஸ்ரீராமர் வழிபட்ட தலம்!

புனிதமான அன்பு நேயம் மலர, தாவரங்களுடன் உரையாடுவீர்!

மழை அல்லது வெயிலில் மரங்களுக்கு அடியில் ஒதுங்க நேரிட்டால், புறப்படும்போது, அந்த மரத்தை நன்றியுடன் தொட்டு வணங்கி அதனுடன் உரையாடும் நற்பழக்கத்தைக் கையாளுங்கள். இதனால் அம்மரம் மிகவும் மகிழ்ந்து ஆனந்தமான மகிழ்ச்சியான நல்வரங்களை உங்களையும் அறியாமலேயே உங்களுக்கு நல் ஆசிகளாகத் தந்திடும். இவ்வாறாக அனைத்து ஜீவன்களுடைய ஆசிகளைப் பெறுகின்ற தெய்வீக வழிமுறைகளைத் தக்க சற்குருவிடமிருந்து மனித சமுதாயம் பெற்றுக் கடைபிடித்து வந்தால்தான் மனித சமுதாயம் நன்முறையில் சீர்மை பெறும். ஆத்மவிசார சக்தி பெருகிடும். சக ஜீவன்களிடையே புனிதமான அன்பு நேயம் உருவாகும்.

பசுமடிக் காம்புச் சங்கு, வலம்புரிச் சங்கு போன்றவற்றினால் தர்ப்பணம் அளித்தலால் தர்ப்பண சக்திகள் பன்மடங்காகப் பெருகும். காரணம், சங்குகளில் இயற்கையாகவே ஓங்கார ரீங்காரம் எப்போதும் சிரஞ்சீவித்வமாய் தோன்றிக் கொண்டு இருப்பதுதான், தர்ப்பைப்பாய், பவித்ரம், ஸ்திரகங்கண், ம்ருதுள மணி கங்கண், கடுக்கன், பூணூல், பஞ்சகச்சம் அணிதல் போன்றவற்றால் தர்ப்பணப் பலன்கள் பல்கிப் பெருகுவதுடன் இதுவரையில் முறையாகத் தர்ப்பணம் அளிக்காததற்குத் தக்கப் பரிகார வழிகளும் கிட்டும்.

ஸ்ரீவரதராஜ பெருமாள்
கண்டிரமாணிக்கம்

ஸ்ரீராமபிரான்
கண்டிரமாணிக்கம்

மாளய பட்சத் தர்ப்பணப் பூஜையால் எண்ணற்ற பயன்கள் அனுகிரகங்கள், நல்வரங்கள், விளைந்தாலும், மூன்று முக்கியமான பலனம்சங்கள் குறிப்பிடத்தக்கவை!

இந்த மூன்று அம்சங்களும் தர்ப்பண பூஜைகளில் கூடி வருகின்றமையால் இது பிரம்மாண்டமான சமுதாய பூஜையாக அமைகின்றது! எனவே நம் இல்லத்தில் குறித்த பலன்கள் கிட்டுவதற்கான துன்பங்கள், பிரச்னைகள், இல்லையே என எண்ணாது பிறர் நலன்களுக்காகச் சமுதாய வழிபாடாக, தர்ப்பணப் பூஜைகளை ஆற்றிடுவீர்!

தொடரும் ஆனந்தம் ...

நம்மில் பெரும்பாலோர் என்ன, அனைவருமே என்று கூட சொல்லலாம், என்னுடைய காரியங்களை இறைவன் பொறுப்பில் விட்டு விட்டேன், அனைத்தையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று சொல்வது உண்டு. சற்குருவின் மேல் பாரத்தைப் போட்டே அனைத்துக் காரியங்களையும் நிறைவேற்றுகிறேன், சற்குருவே இந்தக் காரியங்களின் பலாபலன்களைப் பார்த்துக் கொள்வதால் நான் அவைகளைப் பற்றி சிறிதும் சிந்திப்பதில்லை என்றே கூறி வருகிறோம். இது உண்மையில் உண்மையா ?

ஸ்ரீபாதாள லிங்கேஸ்வரர்
திருஅண்ணாமலை

நிச்சயமாக இல்லை. நான், எனது என்ற சிந்தனையின்றி காரியங்களை நிறைவேற்றக் கூடிய உத்தம மகான்களே இத்தகைய வார்த்தைகளை மனதார கூற முடியும். மற்ற அனைவருமே இறைவன் மேல் பாரத்தைப் போடுவதாகக் கூறி, கடவுளை முழுக்க முழுக்க நம்பி காரியங்களை நிறைவேற்றுவதாகக் கூறி தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்பதே உண்மை. இவ்வாறு சற்குருவின் மேல் “பாரத்தைப் போடும்” ஒருவர் சொல்வது உண்மையா இல்லையா என்பதை எப்படி அறிந்து கொள்வது ? மற்றவர்கள் கூறும் இந்தக் கூற்று உண்மையா இல்லையா என்பதை அவர்கள் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் “கிண்டி” தெரிந்து கொள்வதை விட நம்மை நாமே பரிசீலனை செய்து தெரிந்து கொள்வதுதானே முறை. இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.

குருவருளே திருவருள்

நிர்சலமாக இருக்கும் வானத்தைப் பார்த்து, “வருண பகவானே, மழையைக் கொண்டு வந்து குவிப்பாயாக ...”, என்று கூறிப் பாருங்கள், இல்லை “சற்குருவின்மேல் ஆணையிடுகிறேன் இங்கு உடனே மழை பொழிய வேண்டும்...,” என்று கதறிப் பாருங்கள். ஒரு சொட்டு மழையாவது விழுகிறதா என்று அறிய முடிந்தால் உங்களுக்கு சற்குருவின் மேல் எந்த அளவிற்கு “ஆழமான” நம்பிக்கை இருக்கிறது என்று தெரிந்து விடும். கையளவு மண்ணை எடுத்து உள்ளங்கையில் வைத்துக் கொண்டு, “சற்குருவே இந்த மண்ணை தங்கமாக மாற்றுங்கள் ...”, என்று கூவிப் பாருங்களேன். தொண்டையில் நீர் வற்றி குரல் கம்முவதுதான் கைமேல் காணும் பலனாக இருக்கும். ஆனால், இதைப் பற்றி நீங்கள் சற்றும் கவலை வேண்டாம். “அனைத்து காரியங்களையும் கடவுள் பொறுப்பில் விட்டு விட்டேன், சற்குருவை நம்பித்தான் காரியங்களை நிறைவேற்றுகிறேன்,” என்று கூறி உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வதை விட ஒவ்வொரு காரியத்திலும் எந்த அளவிற்கு இறை நம்பிக்கையை வலுப்படுத்தும் முயற்சிகைளை மேற்கொள்கிறோம் என்று உடலில் உயிர் உள்ளவரை தொடர்ந்து முயற்சி செய்வதே சற்குருவின் உத்தம சீடர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நம்முடைய தலையாய பணியாகும். அதே சமயத்தில் உண்மையான கடவுள் நம்பிக்கை பூரணம் பெற்ற அடியார்கள் ஒரு சிலரைப் பற்றியாவது அறிந்து கொண்டால்தானே நம்முடைய நம்பிக்கை எந்த அளவிற்கு ஆழமானது என்பதைப் புரிந்து கொள்ளலாம். ராமகிருஷ்ண பரமஹம்சரின் அத்வைத சற்குருவான ஸ்ரீதோத்தாபுரி பரமஹம்சருக்கு அத்வைத ஞானம் புகட்டி நிர்விகல்ப சமாதியில் இலயிக்கச் செய்தார். தன்னுடைய சீடன் ஒரு சில நிமிடங்களிலேயே இவ்வாறு நிர்விகல்ப சமாதியில் நிலைக்க முடியும் என்பதைக் கண் கூடாகக் கண்டு பெருமிதம் கொண்ட அவர் மூன்றாம் நாள் மீண்டும் அங்கு தோன்றி ராமகிருஷ்ணரின் காதுகளில் ஓங்காரத்தை ஓதி தன்னுடைய ஆருயிர் சீடனை மீண்டும் சகஜ நிலைக்கு கொண்டு வந்தார். நான், எனது என்ற உணர்வின்றி ஒருவர் நிர்விகல்ப சமாதியில் மூன்று நாட்களுக்கு மேல் நிலைத்திருந்தால் அவர் உடலை விட்டு உயிர் பிரிந்து விடும் என்பது சிருஷ்டி நியதி. 12 விநாடி x 12 = 144, 144 x 144 = நிர்விகல்ப சமாதி என்பது நிர்விகல்ப சமாதி கணக்கு. நிர்விகல்ப சமாதியில் இலயித்திருக்கும் ஒருவர் உடலிலிருந்து மல்லிகை மணம் வீசும் என்பதால் திருஅண்ணாமலை பாதாள லிங்கத்தில் நிர்விகல்ப சமாதியில் இலயித்திருந்த ரமணரைக் கண்டு கொண்ட ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ரமணரை வெளிக்கொணர்ந்து சுவாமிகளின் தெய்வீக நிலையை உலகிற்கு உணர்த்தினார் என்பது நீங்கள் அறிந்ததே. இத்தகையோரே மண்ணைத் தொட்டாலே தங்கமாக்கும் சக்தி பெற்றவர்கள். அப்படியானால் ஒரு சதுர்யுகம் முழுவதும் எம்பெருமானின் கால் கட்டை விரல் தியானத்திலேயே இலயித்திருந்த நம் சற்குருவின் சமாதி நிலை பற்றி நாம் கற்பனை செய்துதான் பார்க்க முடியுமா ? யுகக் கணக்கில் நீடிக்கும் சமாதி தியான நிலையையும் தம் ஆருயிர் பக்தர்களுக்கு பெற்றுத் தரும் திருவுள்ளம், பரந்த கருணையைக் கொண்டவரே நம் சற்குரு. ஆனால், இத்தகைய சித்த கருணை பரிசைப் பெறும் தகுதியை நாம் வளர்த்துக் கொண்டு உள்ளோமா ?

கால்மாறி ஆடும் ஸ்ரீநடராஜப் பெருமான் லால்குடி

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam