குருவருள் வியக்க வைக்கும் பிரம்மாண்டம் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஸ்ரீகொன்றையடி விநாயகர்

அரண்மனைப்பட்டி ஸ்ரீகொன்றையடி விநாயகர் மகிமை!

கொன்றை விருட்சத்தின் கீழ் உறைந்து அருளும் திரேதா யுகத்தில் உற்பவித்த அரண்மனைப் பட்டி கொன்றையடி விநாயகர்!

பைரவச் சித்தர்கள் தினமும் தூல, சூக்கும வடிவுகளில் பூஜிக்கும் அரண்மனைப் பட்டி கொன்றையடி விநாயகர்!

புதுக்கோட்டை - திருமயம் நேமத்தான்பட்டி - காரைக்குடி மார்கத்தில், நேமத்தான்பட்டியில் இருந்து 2 கி.மீ தொலைவில் அரண்மனைப்பட்டி உள்ளது! மிகவும் சக்தி வாய்ந்த காணாபத்ய பூமியிது! திருஅண்ணாமலை போல் எண்ணற்ற பைரவச் சித்தர்கள் புழங்குகின்ற மகத்தான விநாயக பைரவ பூமி!

ஸ்ரீகொன்றையடி விநாயகர், பலரும் அறியா அரண்மனைப் பட்டி கிராமத்தில் உத்தம வேத சக்திமிகு கொன்றை மரத்தின் கீழமர்ந்து அருள்பாலிக்கின்றார்! யுக யுகமாய்க் கொன்றை மரத்தினடியில் வீற்றிருக்கும் மிகவும் சக்தி வாய்ந்த விநாயக மூர்த்தி! தற்போது நாம் இங்கு காணும் திரேதா யுகக் கொன்றை மரமான‌து ஆதி மூலக் கொன்றையின் சகஸ்ரத் தொள்ளாயிரத் தலைமுறையாகும். ஆம், மரங்களுக்கும் தலைமுறைகள் உண்டு! பலரும் இந்த கொன்றையடி விநாயகர்தம் மகிமையை அறியாததால் இதற்கான இறையாவணம் இறையருளால் இதன் மூலம் இனிமேல்தான் பரவி, நிரவ வேண்டி இருப்பதால், தற்போது சிறு சிராமத்தில் தனிச் சந்நிதி கூடக் கொள்ளாது, கொன்றை மரத்தின் கீழ் வீற்று இருந்து மிக மிக எளிமையாக அருள்பாலிக்கும் திவ்யமான தெய்வ மூர்த்தியே கொன்றையடி விநாயகர்! கூடிய விரைவில் தனிக் கோயில் கொண்டு பண்டைய யுகத்தில் பிரம்மாண்டமாகத் துலங்கியது போல் மிகவும் பிரசித்தி பெற்றுப் பொலிய இருக்கும் கலியுகத்தின பிரத்யட்சப் பிள்ளையாரே ஸ்ரீகொன்றையடி விநாயகர்! கொன்றை மரத்தடியில் விநாயகர் அமர்ந்து அருள்பாலிப்பது கலியுகத்தில் மிகவும் விசேஷமான அவதாரிகையாம்! வேதத்தின் வடிவாகக் கொன்றை மரம் விளங்குவதால், எங்கெல்லாம் கொன்றை மரம் இருக்கின்றதோ, அங்கு பூமியினடியில் சதுர்வேத மகா சியாமள சக்திகள் நிறைந்த நான்கு வகையான வேத பாவன சக்திகூடிய நீரோட்டங்கள் மிகுந்திருக்கும். எனவே கொன்றை மர அடி பூமி மிகவும் வேத விஸ்வ ப்ரவாள சக்தி கொண்டதாம்.

ஸ்ரீகொன்றையடி விநாயகர்

கொன்றை மரத்தின் இலைகளில் உள்ள நரம்புகள் வேத பீஜாட்சரங்களின் நாள வடிவுகளாகும். எனவேதாம் பீடாதிபதிகள் தாங்கும் வேத சடாட்சரக் கோலானது கொன்றை மரக் குச்சியால் அமைவது மிகவும் விசேஷமானதாகும். கொன்றை, சரக் கொன்றை, மீட்சிக் கொன்றை எனச் சில வகைகள் உள்ளன. கொன்றை மர நிழலுக்குத் துர்சக்திகளைப் போக்கும் அரிய தெய்வீக சக்திகள் உண்டு. சரக் கொன்றை தலவிருட்சமாக உள்ள இடங்களில் சாம வேத சக்திகள் பொங்கித் திரளும்.

அரண்மனைப்பட்டியில் ஸ்ரீவிநாயகர் துலங்கும் கொன்றை மரத்திற்குச் சுபதரக் கொன்றை என்று பெயா். பித்ரு சக்திகளையும், பித்ரு அனுகிரகத்தையும் பொழிந்திடும் அதியற்புத விநாயகர்! குறிப்பாக, உட்பகை, வெளிப் பகையால் அலுவலகம், குடும்பம், அரசியல், வியாபாரம், நிலபுல விஷயங்களில் அஞ்சி வாழ்ந்து கொண்டிருப்போர், நிம்மதி அடைந்து சாந்தமுடன் வாழ்ந்திட, கொன்றையடி விநாயகரை செவ்வாய் தோறும் வழிபட்டு வர வேண்டும். செவ்வாயன்று ராகு காலத்தில், கொன்றையடி விநாயகருக்கு எலுமிச்சை மாலை சாற்றி, வெற்றிலையில் எலுமிச்சை தீபம் ஏற்றி, பால் பொங்கல் படைத்துத் தானமளித்து வழிபடுதலால் பகைமையை வென்று சாந்தமான வாழ்க்கையைப் பெற்றிடலாம்.

வாக்குத் தவறுதல், பொய்மை, முரணான சாட்சி, வாக்குக் குற்றங்கள், பொய் சாட்சிகளால் வாழ்வில் சொத்து, உற்றம் பாதிக்கப்படுதல் இவற்றால் ஏற்பட்ட துன்பங்களுக்குத் தக்க நிவர்த்திகளைப் பெற, திங்கள், புதன், அமாவாசை, மூலம், பூரட்டாதி, சப்தமி, சதுர்த்தி, சதுர்த்தசி நாட்களில் கொன்றையடி விநாயகரை வழிபட்டு வர வேண்டும். கொன்றை மர நிழலில் மரத்தடியில், தர்பைப் பாயில் அமர்ந்து கொன்றையடி விநாயகரைத் துதித்துத் தியானிப்பதும், ஹோம, விளக்கு வழிபாடுகள் மற்றும் அன்னதானம் செய்வதும் மகத்தான பலன்களைத் தருவதுடன், மேற்கண்ட வாக்கு சம்பந்தபட்ட துன்பங்களால் அவதியுறுவோர்க்குத் தக்க வேத சக்திகளை அளித்துக் காப்பாற்றக் கூடியதுமே கொன்றையடி விநாயகர் வழிபாடு ஆகும். கொன்றை மரத்தடியில் உறைந்து அருளும் விநாயகர் மஹிமை சொல்லவும் பெரிதன்றோ!

குழந்தை பாக்ய நல்வரங்கள் தரும் கொன்றையடி விநாயகர்!

திருமணம் மற்றும் குழந்தை பாக்யத்தைத் தடுக்கும் நிழல் தோஷங்களும் நிறைய உண்டு. இவற்றைச் சில திருத்தலங்களில்தாம் தீர்க்க இயலும். இவற்றுள் அரண்மனைப் பட்டி கொன்றையடி விநாயகர் தலமும் ஒன்றாம்! ஆண்கள், இங்குள்ள கொன்றை மர வேத வேர் சக்திகள் நிரவியுள்ள மகாவேத சகதி வாய்ந்த குளத் தீர்த்தத்தால் கொன்றை மர நிழலில் தர்ப்பணங்கள் அளித்து அன்னதானம் செய்து வர ஜெயக்ஷீராஸ் எனும் சந்தான பாக்ய சக்தி பூண்ட பித்ருக்களின் ஆசியால் நிழல் தோஷங்கள் நீங்கப் பெறுவர்!

அடிமை கண்ட ஆனந்தம்

(நம் குரு மங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்)

ஆலய பூஜைகள், ஹோம அக்னி வழிபாடுகள், கிரிவலம், தீர்த்த யாத்திரை, அன்னதானம் போன்ற 32 வகையான தர்மங்கள், கிரிவலம், விளக்கு பூஜை, கும்பாபிஷேக நியதிகள், தீர்த்த நீராடல்கள், பாரதமெங்கும் க்ஷேத்திராடனம், மகான்கள், யோகியர், கோடி ஞானிகளின் தரிசனங்கள், ஜீவ சமாதிகள், ஜீவாலயங்கள், குருமூர்த்த தரிசனங்கள், நின்று, இருந்து, கிடந்த, நடந்த கோல தெய்வ மூர்த்தி தரிசனங்கள், அபிஷேக ஆராதனைகள், விரத நியதிகள், தூப, தீப பூஜை முறைகள், தர்ப்பண திவச தாத்பர்யங்கள் போன்ற அனைத்துத் துறைகளிலும் சிறுவனை, பள்ளிப் பருவத்திலிருந்தே பிரகாசிக்கச் செய்திடவே சிவகுருமங்கள கந்தர்வ ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈசர், சிறுவனாம் வெங்கடராமனை (குருமங்கள கந்தர்வா) மிகவும் கடினமான சித்த நெறியில் செலுத்தியதில் விளைந்த அருட்கனி ரச நல்முத்துக்களே நீங்கள் இத்தொடரில் துய்க்கும் அடிமை கண்ட ஆனந்த அனுபூதிகளாகும். உண்ணல், அருந்துதல், கேளிக்கைகள் போன்றவற்றில் கிட்டும் சொற்ப சந்தோஷம் அவரவருடன் சுயநலமாக மிகவும் குறுகிய காலத்தோடு நின்றுவிடும். ஆனால் சித்தர்களின் குருகுலவாசத்தில் விளையும் ஆனந்த சாகரம் படித்து, உற்று, உய்ப்போர் யாவரையும் சென்றடையும். இதுவே சுயநலமற்ற இறைப்பணியாம்.

பொருள் ஆனந்தம்
இடையே புலன் ஆனந்தம் !

சீதளமறியாக் கோவணச் சிவயோகி!

ஒரு முறை... பாரதத்தின் வடக்குப் பகுதியிலான புனித யாத்திரையின் போது.... கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் என்றவாறாகப் புகழ் பெற்ற “சார்தாம்” (நான்கு தல) யாத்திரையது! அங்கே பலரும் உறைகுளிர் தாளாது உடல் முழுதும் கம்பளி ஆடைகளைச் சுற்றிக் குவித்து அணிந்திருக்க..... கோவணாண்டியாய், ஒரு கம்பளியுமின்றி, தலைக்கு ஒரு மப்ளர் கூட இல்லாது செல்லும் பெரியவரைக் கண்டு அதிசயித்துப் பலரும் பய பக்தியுடன் அவரைப் பார்த்தனர்! தரையில் வீழ்ந்தும் அவரை நமஸ்கரித்தனர்!

பெரியவரோ எதையும் உணராத உத்தம ஞான ஜட பரதராய்.... வெகு விரைவாக நடக்கலானார்! திடீரென்று யாருமே போகாத ஒரு மலைப் பாதையில் திரும்பிச் சென்றார் பெரியவர்!

சிறுவனுக்குச் சற்றும் பழக்கமில்லா குளிர், சறுக்கு மலைப் பாதையது! மிக மிக குறுகிய பாதை! சற்றுத் தள்ளி எட்டிப் பார்த்தால் அதல பாதாளம்! .... இவற்றோடு அந்த மலைப் பகுதியில் ... கடும் குளிரில் என்னதான் பெரியவர், ஷூ, கம்பளி, ஸ்டாகிங்ஸ், ஸ்வெட்டர், குல்லாய் என அவனுக்கு வாங்கி உடுத்திட்டாலும் ... அவற்றைச் சுமந்து, அணிந்து நடப்பது சிறுவனுக்கு மிகவும் சிரமமாகத்தான் இருந்தது!

மலைப் பாதையில் நெடுந்தொலைவு நடந்த பெரியவர்....

ஓரிடம் வந்ததும் திடுக்கென்று நின்றார்!

ஸ்ரீபடேசாகிப் சித்தர் ஜீவாலயம்
சின்னபாபு சமுத்திரம்

ஸ்ரீபடே சாகிப் சமாதியில் சந்தனம் அரைத்து சார்த்த ஓத வேண்டிய துதி
ஓம் மஜும் போட் துத்யாய வித்மஹே
மதிபூரண சந்தன சந்த்ராய தீமஹி
தந்நோ குரு பாத விருட்ச ப்ரசோதயாத்
மூன்றாம் பிறையாகி முக்கண் சுதமாகி
முச்சுடர் பரிமாணம் மூதையர் வழி தாங்கி
ஒன்றாய் புலன் சேர்ந்து ஓதிய சந்தனப் பூ மலர்
நன்றாய் நவின்றேன் நமசிவாய என மகிழம்பூ சாறல்
மறையொலியாய் மாதவனை அகிலம் புகழ் ஓங்கும் அரணே அரண் !

ஆங்கே.... பெரிய குகை ஒன்று சற்றுத் தொலைவில் தென்பட்டது! பெரியவர் அங்கிருந்த ஒரு பெரிய மரத்தின் கீழ் அமர்ந்தார்.

“.. இங்க தாண்டா... இந்த குகை முன்னாடி தாண்டா.... ரொம்ப காலத்துக்கு முன்னாடி...' என்று சொல்லிக் கொண்டே வந்த பெரியவர் தன்னையும் அறியாது கண்களை மூடிக் கொண்டார்! நிசப்தமாய்... நிர்ச்சலனமாய் இருந்த அந்த இடத்தில்..... ஏதோ ஓர் அற்புதமான இறை சக்தி விண்ணிலிருந்து.... பூமியிலிருந்து பொங்கி நிரம்பி உடலுக்குள் 72000 நாளங்களிலும் பரவசமாய் நிரவுவதைச் சிறுவனால் உய்த்துணர முடிந்தது!

அவருடைய தூல சரீரம் இங்கிருக்க, கோடிக் கணக்கான ஒளி மைல்களை (light years) அவருடைய சூக்கும சரீரம் கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து செல்வதை அவன் பரிபூரணமாக உணர்ந்திட்டான்! அவருடைய வாய் மட்டும் அந்த “இறை அனுபூதியை” இறைச் சுவையோடு மொழிந்து கொண்டிருந்தது!

கண்டேன் சித்தரை!

மிகுந்த பயபக்தியுடன் சிறுவனும் கண்களை மூடிக் கொண்டான்! பெரியவர் பேசுவது மட்டும் இப்போது அவனுக்கு நன்றாகவே காதில் விழுந்தது! ஒரு வேளை இச்சம்பவம் நடந்த யுகக் கால கட்டத்திற்கே அவனை அழைத்துச் செல்கின்றாரோ! ஓங்கி உயர்ந்த ஆவலில்... மிக வேகமாகச் சிறுவன் ஓர் உந்துதலில் கண்களை திறந்து பார்த்திட... அவனுக்கு வியர்த்து விறு விறுக்க ஆரம்பித்து விட்டது ஏனோ?

ஆம்... அவன் அங்கு அமர்ந்த போது இருந்த வன மரங்கள், செடி, கொடிகள் அங்கு இல்லை! ஏதேதோ மரங்கள்... சுற்றிலும் ஒரு சில பர்ண சாலைகள் தென்பட்டன! புள்ளிமான்கள் துள்ளித் திரிந்தன! சில ரிஷிகள் கையில் கமண்டலங்களுடன்... கூடவே சில சிஷ்யர்களுடன் சென்றிட...என்ன இது கிருத யுகக் காலமா இது? காலச் சக்கரத்தில் பின் சென்று திரேதா யுகத்திற்கே வந்துவிட்டோமா?

மிகுந்த ஆச்சரியத்துடன் சிறுவன் தான் எங்கிருக்கிறோம் என்று எண்ணி இடப்புறம் திரும்பிப் பார்த்திட.... ஆம் பெரியவர் அந்த யோகிச் சித்தரின் அருகில் நின்றிருப்பதைக் கண்டதும் ... அவனுக்கு அனைத்துமே மாபெரும் கனவு போலிருந்தது!

காலம் மாறிப் போச்சே!

“இந்த காட்சியோட உனக்குப் போதும்டா!” ஆம் பெரியவர் குரல்தான் அது! ஆம், அவர்தான் வெகு வேகமாக அவன் கண்களைப் பொத்திட...... சிறுவன் “தன்னிலைக்கு" வந்தான்!

இப்போது என்ன முயற்சித்தும் அவனால் கண்களைத் திறக்க முடியவில்லை!

பெரியவர்தான் “காலம் மாறும்'' பட்டனைத் தன் கண்ட்ரோலில் வைத்துக் கொண்டு விட்டாரே!

சிறுவன் நடப்பு உலகிற்கு மீண்டு வந்ததும்.... பெரியவர் தொடர்ந்தார்... அந்தப் பகுதிக்கு ... அவர் எந்த யுகத்திலோ... எப்போதோ வந்தபோது ... அங்கே...

ஒரு யோகி! ... யோகியா... சித்தரா என்று தெரியவில்லை! அவருடைய பல நூறு ஆண்டு கால நீண்ட நெடு ஜடாமுடி, தாடி அமைப்பு அப்படித்தான் சொல்ல வைத்தது!

புஸு ... புஸுவென்று அவருடைய தலையிலிருந்தும், முகத்தில் இருந்தும் ரோமங்கள் சுழற் கற்றைகளாய்ச் சுற்றிச் சுற்றிப் படர்ந்திருக்க ... யோகத்தில் திளைத்திருந்த அவரைச் சுற்றியும் தரையிலும் ஜடாமுடிக் கற்றைகள் சடைக் கொடிகளாய்ப் பரந்து, விரிந்து கிடந்தன!

கருமை நிறமோ, நரைத்த வெண்ணிற முடிகளோ அல்ல அவை! தங்கக் குழல்கள் போல் ... இதுவரை பெரியவர் பார்த்திரா.... பொன்மயப் பிரகாசத்தில்.... அந்த ரோமக் கற்றைகள், சடை, சடையாய்ப் பெருகி விருத்தி அடைந்து அவரைச் சுற்றிலும் பொங்கி விரிந்து தங்கக் கம்பிச் சுருள் கொடிகளாய்ப் படர்ந்து கிடந்தன! எத்தனை யுகங்களாய் அங்கு அவர் இந்நிலையில் தவம் பூண்டு இருக்கின்றாரோ, யாரறிவார் சிவமயமே?

அசைக்க முடியா சித்த சாம்ராஜ்யம்!

…பெரியவர் அந்த யோகிச் சித்தரின் அருகில் சென்றதும் ... அவர் கண்களைத் திறந்து ''நீ” யார் என்பது போல் புருவங்களை உயர்த்திப் பார்த்து ... எதையும் கேட்காமல் கேட்டிட....

பெரியவரும், “சுவாமி! அடியேனும் ரொம்ப வருஷமா எங்கெங்கேயோ சுத்தி அலைஞ்சு நிறைய தெய்வீகப் பணிகளை முடிச்சுக்கிட்டு வர்றேன்!!”

ஆனால் அந்த யோகிச் சித்தரோ திடீரென்று கைகளை அசைத்து, ஆட்டி இடைமறித்து, “அது சரி, இப்ப என்ன வேணும்!” என்று தமிழில் கேட்டிடவே பெரியவர் அயர்ந்து விட்டார்!

“உங்களோட ஆசீர்வாதம் வேணும்”.

உடனே அவர் தன் ரோமக் கற்றை ஒன்றைச் சுட்டிக் காட்டி, “இதை நகர்த்தி வச்சுட்டு இந்த வழியாப் போ! அங்க ஒரு தீர்த்தம் வரும்! அதுல ஸ்நானம் செஞ்சுட்டு வா, எல்லாம் தானாய்ப் புரிய வரும்!”

அவர் சுட்டிக் காட்டிய பொன்மய ஒற்றை ரோமக் கற்றை, சுமார் 15 அடி நீளம் இருக்கும்! பெரியவர் அதனைத் தொட்டு வணங்கி.... கீழே வீழ்ந்து நமஸ்கரித்து அதைச் சற்றே நகர்த்தித் தள்ளி வைத்திட...

இல்லை, இல்லை..... அவர் அதனைச் சற்றே நகற்றி வைத்திட யத்தனித்திட...

மீண்டும் காலச் சக்கரத்தைச் சுற்றினான்!

.... சிறுவன் மறுபடியும் ஓர் உந்துதலில் கண்களைத் திறந்து பார்த்திட.... அவனுக்கு மிகவும் ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது! மீண்டும் வனச் சூழ்நிலைகளே மாறி இருந்தன! பெரியவரும்.... அருகில் யோகிச் சித்தரும்.... என்னென்னவோ மரங்கள்... சுற்றிலும் ரிஷிகளின் நடமாட்டம்! அந்தக் காலத்துப் பாணியிலான ஆடைகளுடன் பலரும் சென்று கொண்டிருந்தனர்.

அவ்வளவுதான்! யுகக் காலமாற்றங்களை ஜீரணிக்க இயலாதவனாய் அவசரம் அவசரமாகக் கண்களை வெகு வேகமாக மூடிக் கொண்டான் சிறுவன்!

“இதை நகர்த்தி வச்சுட்டு இந்த வழியாப் போ! அங்க ஒரு தீர்த்தம் வரும்! அதுல ஸ்நானம் செஞ்சுட்டு வா, எல்லாம் தானாய்ப் புரிய வரும்!''....... அந்த சித்த யோகி கூறியதுதானே!

சித்த அனுபூதி தொடர்ந்தது!

ஊஹூம்.... எங்கே, எதை, எப்படித் தள்ளி வைப்பது? அந்த ரோமக் கற்றையை ஒரு இஞ்ச் கூடப் பெரியவரால் சற்றும் நகர்த்தக் கூட முடியவில்லை! எவ்வளவுதான் முக்கினாலும் ஒரு துளியும் அசைக்க முடியவில்லை!

“நானே செய்தேன்”? அப்படியா “நான்” போன பின் வா!

பெரியவருக்கு உடனே புரிந்து விட்டது, தான் வந்திருப்பது பீமன் சட்டிப் பகுதி என்று! ஆம், சயனக் கோலத்தில் இருந்த அனுமாருடைய வாலை பீமன் அசைக்க முயன்று தோற்ற புனித பூமியன்றோ! இது புரிய வந்ததும் உடனேயே பெரியவர் தடாலென்று ஆஞ்சநேயர் சயனத்திலிருந்த அப்புனித பூமியில் அமர்ந்திருந்த யோகிச் சித்தரின் முன் வீழ்ந்து,

“சுவாமி! மன்னிக்கணும்! அடியேன் நல்ல காரியங்கள் நிறையச் செஞ்சுகிட்டு வர்றதா ஆணவத்தோட சொன்னதுக்கு ... அடியேன் கிட்ட இருக்கற அகங்காரத்துக்கு, கர்வத்துக்கு இன்னிக்கி அடியேனுக்கு, நல்ல பாடம் கிடைச்சது! நீங்கதான் மன்னிச்சு என‌க்கு நல்ல வழி காட்டனும்!”

காலக் canal !

புன்முறுவலுடன் அந்த “யோகிச் சித்தர்” தன் சடையைத் தானே நகர்த்தி விட்டுப் பெரியவரை அருகிலிருந்த தீர்த்தத்தில் நீராடி உடலை சுத்திகரித்து வருமாறு பணித்திட, பெரியவர் அவ்வழியே சென்று நீராடி, தியானித்து, துதித்து, வழிபட்டு வந்திட ...

சித்தரும், “அடியேனுக்கு வயது 191!” என்று சொல்லிட,

“என்ன கணக்கு இது? தேவ கணக்கில்அவருக்கு 191 வயசா?” என்று மனதுக்குள் வயசுக் கணக்குப் போட்ட பெரியவரிடம், அவர் அங்கே கங்கை போல் படர்ந்திருந்த ரோமக் கற்றையில் ஒரு ரோமத்தை எடுத்துக் காட்டி..... அதன் நுனியில் ஒரு குகைப் பாதை தெரிந்தது!

“இதனுள் போய் வா!” என்றார் அவர்!

பெரியவர் கூப்பிய கரங்களுடன் ''ஓம் நமசிவாய” என்று ஓதியவாறே ரோமத்தின் நுனியில் உருவான குகையின் உள்ளே சென்றிட....!

திடீரென்று கண்களைத் திறந்தார் பெரியவர்! ஆனால் சிறுவன் ... இந்த "அனுபூதியில்" மனதினுள் ஐக்கியமாகி விட்டதாலும்.... மீண்டும் காலம் மாறும் கோலத்தைக் கண்டு தாங்கும் உள்ளம். பக்குவம் இல்லாததாலும்...... அவ்வளவு எளிதில் அவனால் இவ்வுலகிற்கு மீண்டு வர முடியவில்லை!

“இந்த பார்டா, அதோ தெரியுதே அந்த குகை மூலமாத் தாண்டா திரும்பி வெளியே வந்தேன்! போனது, வந்ததே தெரியலை! ஏதோ கண் மூடிக் கண் திறக்கறதுக்குள்ள நூறு வருஷம் ஓடிடுச்சு!”

பெரியவர் தொடர்ந்தார்...

“இது எனக்கு எப்படித் தெரியும்னா வெளியே வந்தப்போ, போறதுக்கு முன்னாடி சிறுசா இருந்தா மரங்கள் எல்லாம் ஜம்முனு பெருசா ஆயிடுச்சுங்க! வந்த பாதையே அடையாளம் தெரியலை!”

அதுவரைக்கும் அங்கேயே இருந்த அந்தச் சித்தரும், “அப்பனே! போய்த் தீர்த்தத்துல நீராடிட்டு வந்து என்னைப் பாருன்னுதானே சொன்னேன்! இப்ப அடியேனோட வயசு 291! நூறு வருஷமா இந்த குகைக்குள்ள அப்படி என்னதான் பண்ணினேன்னு கேட்டப்போ எனக்கு ரொம்ப, ரொம்ப ஆச்சரியமா இருந்தது!” என்று சொல்லி ஆனந்தக் கண்ணீர் உகுத்தார் பெரியவர்!

சிறுவனும் மஹா மஹா ஆச்சரியத்துடன் பெரியவரைப் பார்த்தான்! உண்மையில் இப்போதுதான் கண்களைத் திறந்து பார்த்தான்.

முடியில் முடியாத காலம்! முடியிலே முடிந்த முடிவிலாத் தலைப்பு!

“ஆமாண்டா! தன்னோட யோகாக்னியில் ஸ்வா்ண மயமா விளைஞ்ச ஒரே ஒரு ரோமத்தை நகத்தி வச்ச ரோமத்து நுனியிலேயே நூறு வருஷம் நடந்து போற மாதிரி பிரம்மாண்டமான குகைன்னா... அந்த குகைக்குள்ள போய்ட்டு வர்றதுக்கே நூறு வருஷம் ஆச்சுன்னா... அவரோட தபஸைப் பத்தி இந்தப் பிரபஞ்சத்தின் விஸ்தாரத்தைப் பத்தி எப்படித்தான், என்னதான் சொல்லி விளக்க முடியும்?”

கண்கள் பனித்திட, பெரியவர் அந்தக் குகையை நோக்கி மீண்டும் வீழ்ந்து வணங்கினார்.

“இந்த மாதிரி .... இந்த இமாலயத்துல ஒவ்வொரு அடிக்கும் ஆயிரமாயிரம் தெய்வீக அற்புதங்கள், ரகசியங்கள் கொட்டிக் கிடக்கு! இதையெல்லாம் ஜனங்களுக்கு எப்ப எடுத்துச் சொல்றது, எப்படித்தான் புரிய வைக்கறது? அந்த அளவு சொல்றதுக்கும், கேக்கறதுக்கும் யாருக்குத் தான் நீண்ட ஆயுசு இருக்கு?”

“ஆமாம், அந்தச் சித்தர் யாரு வாத்யாரே?”

அவன் எதிர்பார்த்தது போல் பெரியவர் கோபப்படவிலலை!

“உன் மேல கோபப்பட்டு என்னடா பிரயோஜனம்? இதுதாண்டா கலியுக மனுஷங்க புத்தி! அவர் யாருன்னு தெரிஞ்சுக் கிட்டு யார், என்ன செய்யப் போறாங்க சொல்லு பார்க்கலாம்! ஆனா ஒண்ணு தெரிஞ்சுக்க, எங்களோட குருகுல வாசத்துல உனக்கு காலச் சக்கரத்தை மாத்தி மாத்தி நெறைய தெய்வீக தரிசனங்களை, அனுபூதிகளைக் காட்டிக் காட்டி மறைப்போம்! கண்ணை மூடிக்கிட்டு மனக் கண்களால் பாக்கறது, தியானத்துல சூட்சுமக் கண்களால பாக்கறது ... மானுடக் கண்களால பாக்கறது.... இந்த டிவைன் ஆர்ட்ல நீ நல்லா டிரெயின் ஆகணும்! சேஷாத்ரி சுவாமிகள் கிட்ட ஒரு மூதாட்டி பண்ணின மாதிரி தேவ தரிசனம் கிடைக்கறப்போ மனுஷக் கண்களைத் திறந்துட்டா பிரச்னை ஆயிடும்!

 .....இதுக்குத்தான் திருஅண்ணாமலையில நேத்ர சக்தி உள்ள நட்சத்திர தினங்களில் உன்னை கிரிவலம் வர வச்சு ஆயிரக் கணக்கான மலை தரிசனங்களைப் பார்க்க வச்சு திரேதா யுக, கிருத யுக காட்சிகளை எல்லாம் பார்க்கறதுக்கு தீட்சண்ய யோகத்துல, உன்னைக் கஷ்டப்பட்டு டெவலப் பண்ணிக் கிட்டு வர்றேன்!...

சிறுவன் திகைத்தான்! காலம் அறிதல் என்பது கோடானு கோடி ... சத கோடி யுக தபசுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது என்றால்.... இறைவனே சற்குரு மூலமாக ஆண்டு கொண்டு வந்து அரவணைத்தால் தானே நன்கு புரிய வரும்! அதுதானே இப்போது அவனுள் நடந்து கொண்டிருக்கிறது! அன்றும், இன்றும், என்றுமாக!

சின்னபாபு சமுத்திரம்

சின்னபாபு சமுத்திரம் ஸ்ரீஅபீத குஜாம்பாள் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரர் ஆலயம்!

ஸ்ரீபடே சாஹிப் சித்தருக்கு அருள் புரிந்த தலம்!

அருணாசலம், அருணா, அண்ணாமலை, அண்ணா, ஈஸ்வரன், பரமேஸ்வரன், ராமேஸ்வர், மகேஸ்வரன், மகேஷ், உலகநாதன், உலகநாயகி, ஈஸ்வரி, ராஜேஸ்வரி, மாதேஸ்வரி, மஹேஸ்வரி, லிங்கேஷ், லிங்கேஸ்வரன், செல்வலிங்கம், தர்மலிங்கம், பரமசிவம், சுவாமி, சுவாமிநாதன், பெரியசாமி, சாமியப்பன், சாமிக்கண்ணு, சாம்பசிவம், சதாசிவம், போன்ற சுவாமி, சாமி, ஈஸ்வரி, ஈஸ்வரப் பெயரை உடையவர்களுக்கு உரித்தான அற்புத வழிபாட்டுத் தலம்!

புதுச்சேரி - வில்லியனூர் அரியூரை அடுத்துள்ள கண்டமங்கலம் ஊரின் சின்னபாபு சமுத்திரம் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் பாதையை ஒட்டிய பாதையில் 2 கி.மீ தொலைவில் உள்ளதே அமிர்த தன்வந்த்ரீயின் அரும்பெரும் மருத்துவ லோகச் சித்தரான ஸ்ரீபடேசாஹிப் சித்தருடைய ஜீவ சமாதி குருமூர்த்தமாம். ஸ்ரீபடேசாஹிப் சித்தரின் ஜீவாலய மதிலை ஒட்டியே சின்ன பாபு சமுத்திரம் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது!

ஸ்ரீபடேசாகிப் சித்தர் ஜீவசமாதி

இமயத்தில் இருந்து காரண மகரிஷி தம் தபோ பலத்தால் சர்வேஸ்வரனை வேண்டி இறையருளால் கொணர்ந்த “உளி படா வளிஒளி லிங்கம்” எனச் சித்தர்களின் கிரந்தங்கள் சின்னபாபு சமுத்திரம் ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலய மகத்துவத்தைப் பறை சாற்றுகின்றன!

பல ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் மானுட ரூபத்தில் உறைந்து வாழ்ந்து, லட்சக்கணக்கான மக்களுடைய நோய்களைத் தீர்த்து, மறைந்து, ஜீவ சமாதி பூண்டு என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாக ஜ்வலிக்கும் ஸ்ரீபடே சாகிப் சித்தரின் ஜீவசமாதி அருகே இச்சிவாலயம் உளளது. இங்குள்ள பழமையான மகிழ மரம், கருடக் கொடிச் சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டமையால் இதனை வலம் வர வைத்தே ஸ்ரீபடே சாஹிப் சித்தர் தீர்க்க முடியாத வியாதிகளை எல்லாம் தீர்த்திட்டார்.

சித்தர்பிரான் தாங்கும் வைத்யநாதம் ஒலிக்கும் தும்புரு வீணை!

தன்வந்த்ரீ லோகத்தில் ஆயுர்வேத மண்டலத்தில் தோன்றிய, அரிய, அற்புத, அபூர்வமான மருத்துவ ஸ்வர சக்திகள் நிறைந்த வைத்யநாதம் எனும் மருத்துவ ஒலி பீஜாட்சர கானங்களை எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் தும்புரு வீணையை, ஸ்ரீபடேசாகிப் சித்தர்பிரான் அருணாசலேஸ்வரர் ஆலய தீப ஜோதியில் செவ்வாய்க் கிழமையும், அஸ்வினியும் கூடிய தன்வந்த்ரீ உற்பத்தி நாளில், வானில் ஆயிரத்தெட்டு கருடன்கள் பறந்திட்ட சுபவேளையில் பெற்று லட்சக்கணக்கானோரின் பிணிகளைத் தீர்த்த மருத்துவ சக்தித் தலமிது!

ஸ்ரீபடே சாகிப் சித்தர் தினமும் வழிபட்ட அதியற்புதமான, மிகவும் பழமை வாய்ந்த சிவ ஆலயம்! நாகலோகச் சித்தர்கள், ஸ்ரீ அஸ்தீக சித்தரின் தலைமையில் தினமும் தூல, சூட்சும வடிவுகளில் நாகலிங்க புஷ்பம் சார்த்தி வழிபடும் தலம்! இதன் தலவிருட்சம் நாகலிங்க மரமாகும். தற்போது மறைந்துள்ளது. மேற்கண்ட பெயர்களை உடையோர் இங்கு நாகலிங்க மரம், தலவிருட்சமாக விருத்தியாக நாகலிங்க மரம் வைத்தல் சிறப்பான திருப்பணியாம். நந்தவனம் பாலித்தல், கும்பாபிஷேகம் போன்ற இறைத் திருப்பணிகளை ஆற்றுதல் பல தலைமுறைகளுக்கான புண்ய சக்தியை அபரிமிதமாகத் திரட்டித் தரும்! ஆலயத் தல விருட்சங்கள் மனித முயற்சியால் வளர்வது போல் தோன்றினாலும் உண்மையில் தபோபலன்கள் மிகுந்த மகரிஷிகளும், யோகிகளுமே தல விருட்சங்களாக அமைகின்றனர் என்பதே வேத வாக்காகும்!

இயற்கைப் பெயர்களில் பொங்கும் இறைவள சக்தி!

மண்ணாங்கட்டி, அமாவாசை, மண்வெட்டியான், வெட்டியான், அடைக்கன், அடைக்கப்பன், தோளான், ஆட்டையன், விடத்தையா, கடப்பாரை, பரதேசி, பெளர்ணமி, அடுப்பு, கலியன், கறுப்பு, காத்தான். மூக்கன், கொம்பேறி, வண்ணான், தண்டலை, மாசம், சவுரி, கருத்தான், மம்பட்டி, கட்டை, கொம்பன், தாம்பு, மாடன், கருப்பட்டி, சக்கரை, மருதை, செருப்பன், ஆணி, பூரான், சட்டையன், தாப்பாள், அடுப்பு, கரந்தமலை, ஊதா ராஜா, சுப்புணி, கீரப்பாளையன், பாளையன், மாரி, எட்டி, காத்தாவு, சுடலை மாடன், பூங்கா, பூங்காவனம், துரை, தும்பை, செந்தாமரை, உடுப்பு, புளியன், ௧சப்பன், சிலம்பு, சிலம்பன், சோணையன், மீசை, குப்பை, வீராசாமி, வேலன், கருப்பாயி, வெள்ளை, காளை, சோணமுத்து, கசமுத்து, கொசவன், மாடன், சுடலைமுத்து, ஊதையன், லாந்தர், விளக்கன், குந்துமணி, புண்ணாக்கு, பென்சிலையா, மண்புழு, மண்ணு, கொட்டையன், சடையன், கம்பளி, மலையன், மலைச்சாமி, நாதாங்கி, சவலை, தகரன், சேவல், சாலையான், எருமைவெட்டி, மரம் வெட்டி, காடுவெட்டி, கழனி, கொடியான், பெருமா, தொப்புளான் போன்ற பெயர்களை உடையோரும் வழிபட வேண்டிய அற்புதத் தலமே சின்ன பாபு சமுத்திரம் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் ஆலயமாகும்!

ஸ்ரீஅபீதகுஜாம்பாள் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரர் சின்னபாபுசமுத்திரம்

என்ன இது இவையெல்லாம் வழக்கில் இல்லாத பழங்கால கிராமத்துப் பெயர்களாயிற்றே என எண்ணாதீர்கள்! இவற்றுள் பலவும் அரிய தேவதைகளின் பெயர்களாகும். நம் தமிழ்நாட்டு குக்கிராமங்களில் இவ்வரிய பெயர்களைத் தாங்கி உள்ள பாமரர்கள் இன்றும் பலருண்டு! உங்கள் குடும்பத்தில் எவருக்கும் இப்பெயர் இல்லையாயினும் இத்தகைய பெயர்களை உடையோருக்கு பயணச் செலவு, சாப்பாட்டுச் செலவுகளை ஏற்று, இயன்றால் இவர்களைக் குடும்பத்துடன், தாமே அழைத்துச் சென்று சின்ன பாபு சமுத்திரம் ஸ்ரீஅருணாசலேஸ்வரரை தரிசிக்க வைத்தல் மிக மிக அரிதான, அபரிமிதமான புண்ய சக்திகளைத் தருகின்ற, அற்புதமான திருப்பணி ஆகும். இதனால் கண்கூடான பலன்களை இக்கோயில் அறத் திருப்பணிகளில் நேரடியாகவே காணலாம்! பல வருடங்களாகத் தேங்கிக் கிடக்கும் கோயில் திருப்பணிகள், வழக்குகள், மனை, வீட்டுப் பணிகளில் உள்ள தேக்கங்கள், வழக்குகள் துரிதமாகத் தீர்வு பெற உதவும் தலம்.

ஸ்ரீஅருணாசலேஸ்வரர் திருக்கோயில்
சின்னபாபுசமுத்திரம்

உற்றம், சுற்றத்திடம், கூட்டு வியாபாரம் பார்ட்னர்ஷிப்பில் ஏமாந்து அனைத்தையும் இழந்து அல்லல்படுவோர், இங்கு மாத சிவராத்திரி, பிரதோஷ உற்சவங்களை எளிமையான முறையில் துவக்கிப் பலரையும் பங்கு பெறச் செய்து அரிய இறைப்பணிகளை ஆற்றி வர, தர்ம தேவதைகளின் கருணைக் கடாட்சம் பெற்று இழந்தவற்றை ஓரளவேனும் மீண்டும் பெற்று நல்வாழ்வைப் பெற சின்ன பாபு சமுத்திரம் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் அருள் புரிகின்றார்.

சம்பாதித்தது, வியாபாரத்தில் வந்தது, மூதாதையர் சொத்துக்கள் யாவும் நிலைக்காமல் அவதியுறுவோர் இங்கு செவ்வாய் ராகு கால நேரத்தில் ஸ்ரீஅபீதகுஜாம்பாளுக்கு குங்குமப் பூ கலந்த பாலபிஷேகம் செய்து, துர்க்கைக்குப் ப்ரீதியான சிகப்பு நிற உணவினை (தக்காளி சாதம்) தானம் செய்து வர, ஸ்திரமான வாழ்க்கையைப் பெறுவர். மிகவும் குண்டாக இருப்போர் இங்கு ஸ்ரீ அருணாசலேஸ்வரரை வேண்டி பரங்கி, பூசணி கலந்த உணவு வகைகளை மந்தாரை இலைகளில் இலை நிறைய வைத்து திங்கள், செவ்வாய், திருவாதிரை, பரணி, அசுவனி, பிரதோஷம் நாட்களில் அளித்து, கையில் ம்ருத்யுஞ்ஜய தூபம் ஏற்றி அடிப் பிரதட்சிணம் செய்து வர பிணிகளுக்குத் தீர்வு காண நல்வழிகள் கிட்டும்.

மேற்கண்ட பெயர்களை உடையோ தம் ஆயுள் காலத்தில் இங்கு அடிக்கடி வழிபட்டு வருவதுடன் பலரையும் இங்கு தரிசிக்க வைக்கின்ற பாக்யத்தையும் பெற்றுத் தருதல் பூஜா பலன்களைப் பன்மடங்காக்கும்.

ஸ்ரீபைரவர்

ஸ்ரீபைரவ மூர்த்தியின் ஆத்ம போதன வடிவு!

ஸ்ரீபைரவருடைய கோலம் ஆத்மப் பூர்வமாக, ஆன்மீக ரீதியாக, ஆடையற்ற வடிவமல்ல! ஜீவ பேதங்களைக் கடக்காது கர்ம வினைகளால் பின்னப்பட்டு இருக்கின்ற மனிதர்களுக்கே பைரவ மூர்த்தி உணர்விக்கும் பைரவ பாவனம், ஆடையற்ற வடிவாகத் தோன்றுகின்றது! லிங்கத்தின் வடிவானது வடிவற்ற இறைவனின் வடிவில்லாத் தன்மையை மனித அறிவிற்குப் புரியும்படி காட்டுகின்றது அல்லவா! இதேபோல ஜீவ பேதமற்ற இறைத் தன்மையை, அவரவர் அறிவு நிலைக்கு ஏற்ப உணரும் வண்ணம், தூல வடிவில் விளக்குவதே பைரவ மூர்த்தியின் வடிவாகும்.

ஸ்ரீபைரவர் ஒழுகமங்கலம்

மூர்த்தி ஒன்றே! கிட்டும் பைரவ தரிசனங்கள் பலப்பல!

உதாரணமாக, நாம் பார்க்கின்ற பைரவரின் வடிவினை ஒரு பசுவோ, பறவையோ, தாவரமோ பார்க்கும் போது அதனதன் ஆன்ம நிலைக்கு ஏற்ப பைரவரின் வடிவு வெவ்வேறு விதமாகத் தோன்றும்!

எனவே, பார்த்தே எதையும் நம்பிப் பழகிப் போன அரைகுறைப் பகுத்தறிவுடைய மனித வர்கத்திற்கு, இறைமையை, பரிபூரணமான இறைப் பகுத்தறிவுடன், அனைத்தும் தெய்வ சக்தியாக இயங்குவதை நன்கு உணர்த்திடவே பலவிதமான இறை வடிவுகள் தோன்றின! எனவே உலகப் பொருட்கள் யாவற்றிலும் அப்பழுக்கற்ற, புனிதமான இறைமையானது ஆத்மமாகப் பரிணமிக்கும் திறனை உணர்த்த உதவுவதே பைரவ மூர்த்தி வடிவாம். இறைவடிவுகள் அனைத்திலும் நமக்குப் புரியும் வகையான ஈஸ்வர ஜோதி பரிணமிக்கும் திறனை, ஜீவ பேதமற்ற நிலையில் உணர வைக்க உதவுவதும் பைரவ வடிவாகும்.

உறக்கத்தில் உறங்கும் பேதங்கள்!

ஜாதி, மதம், குலம், ஆண், பெண், விலங்கு, தாவரம், புழு, பூச்சி என ஜீவ பேதம் கொண்டவர்கள்தாம் ஆடைகளை அணிந்தாக வேண்டும். ஆனால் தாவரங்களும், விலங்குகளும் இத்தகைய. ஜீவ பாவன நிலைகளைக் கடந்தவை! மனிதன் கூட ஆழ்நிலை உறக்க நிலையில் இத்தகைய பேதங்களைக் கடந்தவன் ஆகின்றான் என்பது பலரும் உணராத ஆன்மீக ரகசியமாகும்!

எனவே உறக்கமே மனிதனுடைய உண்மையான ரூபத்தை உணர்விக்கும் யோக சாதனங்களில் ஒன்றாகின்றது! உறக்கத்தில்தான் மனிதன் ஜீவ வித்யாசங்களைக் கடந்தவன் ஆகின்றான்! இத்தகைய ஜீவ பேதமற்ற உத்தம தேவ நிலைகளை, உறக்கத்தில் மட்டுமல்லாது விழிப்பு நிலையிலேயே அடைந்தவர்களே உத்தம “நிர்வாண தேவ நிலைகளை” அடைந்ததாகப் போற்றுகின்றோம்.

கசவனம்பட்டி சுவாமிகள், மஹா அவதூது பாபா போன்ற பரவெளி, உள்வெளி பேதங்களை, ஜீவ பேதங்களைக் கடந்தவர்களையே அவதூதர்களாகப் போற்றுகின்றனர். புத்த, ஜைன மதத்தில் உத்தம தேவ நிலைகளை நிர்வாண நிலைகளாகக் குறிப்பதும் உண்டு!

அறியாமையாகிய மாயையே ஆடை!

எனவே உன்னத ஆத்ம நிலைகளின் நிர்வாண நிலை என்பது ஆடையற்ற நிலையாகாது! ஆண், பெண், விலங்கு, தாவரம் என ஜீவ பேதம் கொள்வதே என்பதே அறியாமை உருவாக்கும் ஆடையாகும்! இந்த அறியாமை உள்ள வரை, உத்தம இறை ஞானத்தால் இறைப் பகுத்தறிவால் இந்த அறியாமை களையப் பெறும் வரை அனைவரும் ஆடைகளை அணிந்தாக வேண்டும்.

ஜீவ பேதங்களைக் கடந்தவர்களாய், ஆண், பெண், தாவரம், விலங்கு, புழு, பூச்சி போன்ற இன பேதங்களைக் கடந்தவர்களாய், அனைத்திலும் பரமாத்ம இறை வடிவைக் காண்பதே, ஒவ்வொரு ஜீவனும் அடைய வேண்டிய உத்தம நிர்வாண நிலையாகும். இதையே முக்தி, ஞானம், மோட்சம் எனப் பல பெயர்களில் விளிக்கின்றோம்.

பச்சிளங் குழந்தை உடுத்தும் பரவசத் தூய அன்பு!

தெய்வீகம் பூத்துக் குலுங்கும் களங்கமற்ற பச்சிளங் குழந்தையின் திருமேனியை, ஆடையற்ற கோலம் என்றா கூறுவது? உண்மையான, புனிதமான அன்பு பரிமளிக்கும் உத்தம தெய்வீக நிலையல்லவா பச்சிளங் குழந்தைப் பருவம்! மகா அவதூது பாபா, சதாசிவ பிரம்மேந்திரர் சமீப காலம் வரை திண்டுக்கல் அருகே ஜோதி அவதூதராய்ப் பரிணமித்த கசவனம்பட்டி சுவாமிகள் போன்ற மகான்கள், சித்புருஷர்கள், நிர்வாண அவதூது நிலை பூண்டு, உலக நினைவின்றி எப்போதும் பரப்பிரம்ம சிந்தனையையே ஆடையாகக் கொண்டனர். எனவே வெளி ஆடை அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல! இத்தகைய அவதூதர்களே அனைத்திலும் இறைமையைக் கண்டவர்களாய். என்றும் வாழும் ஏகாந்த ஜோதிகளாய்ப் பொலிகின்றார்கள்! உத்தம அவதூது (நிர்வாண) குணத்திற்குப் பூஜ்ய குணம் என்றும் பெயர் உண்டு.

பேதங்களைக் களையும் பைரவப் பெருமூர்த்தி!

இத்தகைய உத்தம பூஜ்ய குண (நிர்வாண) தெய்வீக நிலைகளை உணர்த்தி, அவற்றை அடைய வல்ல ஞான சக்திகளை அளிப்பதே இறைவனின் பைரவ வடிவாகும்! எனவே பைரவ வடிவமானது நாமெல்லாம் அடைய வேண்டிய ஜீவ பேதம் காணாத உத்தம தெய்வீக நிலையின் காரண வடிவே ஆகும்!

முறையற்ற காம உணர்வுகளை நீக்கி மனதைப் புனிதப்படுத்துவதே பைரவ வழிபாடு. பேராசை, நிராசை, துர்ஆசைகளையும் தணித்து, சிந்தனைகள், எண்ணங்களை நெறிப்படுத்த உதவுவதும் பைரவ வழிபாடேயாம். எப்போதும் ஏதேனும் எண்ணங்களில் உழன்று கொண்டு நிம்மதியின்றி வாழ்வோர்க்கு பைரவ வடிவ தியானமே அதிசயிக்கத் தக்க வகையில் மன நிம்மதி, சாந்தம் நல்உறக்கத்தைத் தந்தருளும்.

தினமும் காலை சூரிய உதயத் தருணத்தில், ஆலயங்களில் பைரவருக்கு முழு முந்திரி மாலை சார்த்தி தரிசித்து வருவதன் மூலம் அழுக்கான, கறை படிந்த மனதை வெகு விரைவில் தூய்மை செய்திடலாம். ஜீவ வடிவ பேதமின்றியும், ஆண், பெண், மனிதர், விலங்குகள், தாவரங்கள் என பேதமின்றியும் வாழ்வதற்கான ஆத்ம சக்தியை அளித்து நற்பண்பு, நல்லொழுக்கம், புனிதமான கற்பு, மனத் தூய்மை, உடல் தூய்மை அளிப்பதே பைரவ வழிபாடாகும்.

ஸ்ரீவிநாயகர்

ஆறு கால பூஜைகளிலும் விநாயகருக்கு ஆறுபுரிப் பூணூல் சார்த்தும் அற்புத வைராக்ய பூஜை!

அடுக்கடுக்கான துன்பங்களைத் தணிக்கும் முப்புரி நூல் பூஜை பலன்கள்!

விநாயக மூர்த்திக்கு எத்தனை புரிகள் உள்ள பூணூலைச் சார்த்த வேண்டும்? மூன்று புரிகளா அல்லது ஆறு புரிகளா? சித்தி, புத்தி சமேதராக, வாணி, கமலை சமேதராக விநாயகர் விளங்குவதால், பிள்ளையாரப்பனுக்கு ஆறு புரிகள் உள்ள பூணூலை அணிவித்து வழிபடுதல்தான் மிகவும் சிறப்புடையதாகும்.

பூணூல் தானத்தில் விளையும் புண்ணிய சக்தி!

ஸ்ரீபூமிநாதர் ஸ்ரீநடராஜர் ஸ்ரீஅங்கவளநாயகி திருநல்லம் கோனேரிராஜபுரம்

மாதத்திற்கு ஒரு முறையேனும் கும்பகோணம் ஸ்ரீயக்ஞோப வீதேஸ்வரராகிய (முப்புரிநாதர்), ஸ்ரீகெளதம லிங்க மூர்த்திக்கு பூணூல்களைச் சார்த்தி அவற்றை இறைவள முப்புரிப் பிரசாதமாக எடுத்து வந்து அணிவதுடன் மட்டுமன்றி, பூணூல்களைப் பிறருக்குத் தானமாக அளிப்பது பெறுதற்கரிய பித்ரு புண்ய சக்திகளையும் பெற்றுத் தரும். ஸ்ரீகாயத்ரி மந்திர சக்தியைப் பூலோகமெங்கும் பரப்புவதற்கு, முப்புரி நாதராகிய ஸ்ரீயக்ஞயோபவீதேஸ்வரரின் வரவளத்தைத் தாங்கி வரும் இப்பூணூல் தானம் மகத்தான சமுதாய நல்வள பூஜையாகவும் விளங்குகின்றது. ருத்ராட்சம், ஸ்படிகம் போன்று ஜாதி, மத, இன, குல பேதமின்றி யாவரும் அணிய வேண்டிய அற்புதமான இறைச் சாதனங்களுள் ஒன்றே பூணூலாம்! ஆரோக்ய ரீதியாகவும் சுவாச நாளத்தை மேம்படுத்தி நல்ல ஒழுக்கத்துடன் பக்தி, புனிதம், கற்பு, சகல உயிர்களிடத்தும் அன்புடன் வாழத் துணை புரியும் இறைசாதனமே பூணூலாம்! எனவேதாம் நம் மூதாதையர்கள் யாவருமே, பண்டைய சமுதாயத்தில் ஜாதி, இன பேதமின்றிப் பூணுல் அணிந்து சமுதாயத்தில் சாந்தமும், இறைவளமும் பெருகச் செய்தனர்.

ஸ்ரீவைத்யநாதர்
திருநல்லம் கோனேரிராஜபுரம்

ஸ்ரீசனீஸ்வர பகவான்
திருநல்லம் கோனேரிராஜபுரம்

தினமும் விநாயகருக்குப் பூணூல் சார்த்தும் புனித வழிபாடு!

வாழ்க்கையில் ஒன்று மாற்றி ஒன்றாகப் பிரச்னைகள் வந்து, நிம்மதி குலைந்து வாழ்வோர்க்குத் துன்பங்கள் தணிந்து, தக்க மனசாந்தி கிட்டிட, அரச மரத்தடி, கொன்றையடி, வேப்ப மரத்தடி, வன்னி மரத்தடி, குளக்கரை என ஆங்காங்கே அருள்பாலிக்கும் ஸ்ரீவிநாயக மூர்த்திகளுக்கு, தினமும், குறிப்பாக, திங்கள், புதன், வியாழக் கிழமைகளில் புதுப் பூணூல் அணிவித்து, ஆலமரத்தடி விநாயக தூபம், அரச மரத்தடி விநாயக தூபம் ஏற்றி புதியதான பிள்ளையார் வஸ்திரங்களையும் சார்த்தி வருதல் வேண்டும்! ஏற்கனவே இருந்த பூணுலை நிர்மால்யப் புஷ்பம் போல, ஆறு, குளம், கடலில் சேர்த்திடுக!

பஞ்சபூத சக்திகள் நிறைந்த கோனேரிராஜபுரம் சிவபூமி!

ஆலயங்களில் ஆறு வேளை பூஜையின்போதும் இறைவனுக்குப் புதுப் பூணூல்களைச் சார்த்திப் பூஜிக்கும் முறை பண்டைய காலத்தில் பொலிந்தமையால் பரவெளியில் பஞ்ச பூத சக்திகள் நிரவி சமுதாயத்தில் சாந்தம் நிலவியது. எனவே சமுதாய ஒற்றுமை மலர்ந்திட, அவரவர் ஊரில் உள்ள ஆலயத்திற்கு நூற்றுக் கணக்கான பூணூல்களை அளித்து, தினமும் மூன்று வேளை, ஆறு வேளை பூஜை நேரத்திலும் அனைத்து இறை மூர்த்திகளுக்கும் புதுப் பூணூல் சார்த்தும் பண்டைய பூஜை முறையை மீண்டும் மலர வைத்தலால் சமுதாயத்தில் ஒற்றுமை கூடிச் சாந்தம் பூக்கும்!

குறிப்பாக கும்பகோணம் கோனேரிராஜபுரம் சிவாலயத்தில் ஆறு வேளை பூஜையிலும், இதிலும் குறிப்பாக ஸ்ரீவைத்யநாத சுவாமிக்கு ஒவ்வொரு பூஜை நேரத்திலும் பூணூல் சார்த்துவதற்கான எளிய திருப்பணியை ஆற்றிடில் பல நோய்களுக்கும் தக்க தீர்வுகள் கிட்டிடும்! பஞ்ச பூத சக்திகள் பொங்கித் திரள்கின்ற தலங்களுள் கோனேரி ராஜபுரம் சிவத்தலமும் ஒன்றாகையால் இங்கு மிகவும் அபூர்வமாக, கறுப்பு வஸ்திரம் அல்லாது வெள்ளை நிற வஸ்திரம் பூண்டு அருளும் சனீஸ்வரருக்குத் தினமும் பதுப் பூணூல் சார்த்தி வழிபடுதலால், கர்ம வினைகளின் அழுத்தத்தால், சனி தசை, புக்தி, அந்தர காலத்தில் ஏற்படும் கஷ்டங்களில் இருந்து விடுபட நல்வழிகள் கிட்டும். எனவே இறை மூர்த்திகளுக்குப் புதுப் பூணூல் சார்த்தி வழிபடுவதும் ஓர் அற்புத பூஜையே!

மார்பு, இருதயம், வயிறு, முதுகுத் தண்டு சம்பந்தமான நோய்களால் வாடுவோர் குணம்பெற கோனேரி ராஜபுரம் ஸ்ரீவைத்யநாத சுவாமிக்கு, தினமும் அனைத்துப் பூஜை காலங்களிலும் புனுகு தோய்த்த பூணூலை சார்த்தி முப்புரி சக்திகள் நிறைந்த நீளப் புடலங்காய், கொத்தவரங்காய், தட்டைப் பயிறு, நீள்வகை சம்பா அரிசி, பாசுமதி அரிசியால் ஆன உணவு வகைகளை இங்கு தானமளித்து வரவேண்டும்.

வாஸ்து பூஜை

ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் விஸ்வ ரூப தரிசன நாட்களே வருடத்தின் எட்டு வாஸ்து பூஜை நாட்களாகும்

வாஸ்து மூர்த்தியின் ஐந்து வித தேவ பாவன காரியங்களான தந்த சுத்தி, நீராடல், பூஜை, பிரசாதம் ஏற்றல், தாம்பூல தாரணம் ஆகியவற்றைப் "பஞ்ச கற்ப பாவனங்கள்" எனச் சித்புருஷர்கள் உரைக்கின்றனர். அனைத்து மனிதர்களுக்கும், ஜீவன்களுக்கும், உயிர், உடல், உடை, உணவு, உறைவிடம் ஆகியவை முக்கியமானதாம். எனவே இவற்றை அளிக்க வல்ல “பஞ்ச காஷ்ட சக்திகள்” ஐந்திலும், நல்ல உறைவிடத்திற்கான நல்வர சக்தியை அளிப்பவரே ஸ்ரீவாஸ்து மூர்த்தி ஆவார்.

தூக்கணாங் குருவி, குளவி, காக்கை போன்றவற்றின் கூடுகளும் வாஸ்து நியதிகளின் படியே கட்டப்படுகின்றன என்பது பலரும் அறியாத ஆன்மீக விஷயமாகும். எனவே பிரபஞ்சமெங்கும் அனைத்து ஜீவன்களின் உறைவிடத்திற்கும் தேவ இலக்கணமாக அமைவதே ஸ்ரீவாஸ்து நியதிகளாகும்.

பூச்சிகளின் “சட்டையுரிப்பும்” ஒரு சகுன நிலையே!

மனிதனுக்குத் தானே ஆடைகள், ஏனைய உயிரினங்களுக்கு இல்லையே என எண்ணிடலாம்! பல்லி, பாம்பு, கரப்பான் போன்றவை "சட்டை" உரிப்பதைப் பார்த்திருப்பீர்கள். மனித வகையற்ற உயிரினங்களின் "சட்டை உரிப்பு" பற்றி ஆன்மப் பூர்வமாக விவரிக்கத் தொடங்கினால் அது "சட்டை உரிப் படலமாக", பெரும் புராணமாக விரியும். அந்த அளவிற்கு சட்டையுரிப்பு விஷயமானது பல கோடி ஆன்மீகக் காரணங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. உயிர்க் கலயம் மாட்டியிருக்கும் சட்டைதானே இவ்வுடல்! சீர்காழியில் சட்டைநாதரென இறைவன் நாமம் பூண்டு ஆன்மச் சட்டை ஞான விளக்கங்களை உணர்த்துகின்றாரே!

எனவே ஊர்வன வகை ஜீவனங்களின் "சட்டை உரிப்பை" ஆன்மீகத்தில் "கர்மக் கழிச் ச(ட்)டை" எனச் சித்தர்கள் வகைப் படுத்துகின்றனர். இவை சகுன சாஸ்திரத்தில் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. அதாவது பல்லி, பாம்பு போன்றவற்றின் சட்டையைக் காணும் நேரம், நாள், நட்சத்திரம்,  ஹோரையைப் பொறுத்தும், எல்லாவற்றையும் விட, இதற்கு முன் சமீபத்தில் இல்லத்தில், வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளையும் கொண்டே "சட்டையுரிப்பின்" சகுன உரையை, ஆன்ம விளக்கத்தைத் துல்லியமாக அளிக்க முடியும்.

தர்மமே பூமியைத் தாங்குகிறது!

நம் உடலில் 72,000 நாடிகள் மையங் கொண்டுள்ள 32 விதமான ஆத்மக் கிரந்திகளும், 32 விதமான அறங்களின் சக்தியால் தாம் மேன்மை பெறும். மேலும் 32 விதமான அறங்களால்தாம் இந்த உலகில் ஜீவ வாழ்க்கை தழைக்கின்றது. ஆதி பராசக்தி இன்றும் பல திருத்தலங்களிலும் 32 விதமான அறங்களை ஓச்சுவதால்தான், ஜீவ வாழ்க்கைக்காக நாம் வாழும் பூமி நிலை பெற்றுத் தழைக்கின்றது. தர்ம சக்திகளை மனித குலம் மதிக்காது மிதிக்கும் போதும் சித்தர்களையும், மகான்களையும் அவமதிக்கும் போதும் பூமியின் நிலை சீர் தவறி, பூகம்பம் ஏற்படுகின்றது. நிலநடுக்கம் ஏற்படுவதற்கான ஆன்மீகக் காரணங்களுள் இதுவும் ஒன்றாம்!

வாஸ்து பூஜை தரும் ஐந்து பஞ்ச கற்ப சக்திகள்!

மண், நீர், காற்று, வெப்பம், குளுமை ஆகிய ஐந்தும் கூடினால்தான் இல்லம், தோட்டம், அலுவலகம் போன்றவை நன்கு அமையும். இவை தவிர, இவற்றின் உப திரவியங்களும் பல உண்டு. இத்தகைய ஐந்து பஞ்ச கற்ப சக்திகளைப் பெற்றால்தாம், எவ்விதத் தடங்கல்களும், பிரச்னைகளும் இன்றி ஒருவருக்கு நிலம், தோட்டம், வீடு, தொழிற்சாலை, அலுவலகம் போன்றவை நன்கு அமையும். இந்த முக்கியமான ஐந்து பஞ்ச கற்ப வாஸ்து சக்திகளுள் முதன்மையானதே அக்னியாகும்.

டூத் பிரஷை பிடிக்கும் முறை

பூமிகாரத் தத்துவங்களைக் கொண்ட செவ்வாய், சனி கிரகங்களின் அம்சங்கள் பலவும் வாஸ்து நெறிகளைச் சார்ந்தவையாம். செவ்வாய் கிரகமும் அக்னி மண்டலமே! நம் பற்களும் செவ்வாய் கிரக அம்சங்களைக் குறிப்பவையே! வெப்ப அம்சமான அக்னி சக்தியின் வெளிப்பாட்டைக் குறிப்பதே (வாஸ்து நாளில்) வாஸ்து மூர்த்தியின் முதல் தேவ காரியமான தந்த சுத்திக் காரியமாம் (பல் துலக்குதல்). வாஸ்து இலக்கண ரீதியாக, தந்த சுத்தி என்பது வெறும் பல் துலக்கல் என்பதல்லாது ஆத்ம சுத்திகளைக் குறிப்பதாகும்.

ஸ்ரீவட்ஸ அக்னி மகிமை!

வாஸ்து மூர்த்தி வலது நடு விரலால் தந்த சுத்தி செய்கையில் அங்காரக சக்திகளையும், சனைச்சர சக்திகளும் சேர்ந்து பூவுலகில் வாஸ்து சக்திகளைப் பிரகாசிக்கச் செய்கின்றன. எனவேதான் வலது கை சனி விரலால்தான் (நடுவிரல்) பல் துலக்க வேண்டும். ஆள்காட்டி விரலால் ஒரு போதும் பல் துலக்கக் கூடாது. சனி விரலாகிய நடுவிரலின் கிரகக் கணுக்கள் செவ்வாய் அம்சங்களைக் கொண்ட பற்களுடன் உரசும் போது ஏற்படும் ஒரு வகை அக்னிக்கு ஸ்ரீவட்ஸ வாஸ்து அக்னி என்று பெயர். இந்த அக்னியில் தோன்றியவர்களே ஸ்ரீவத்ஸ கோத்ராதிபதிகள்.

ஆழ்ந்த உறக்கத்தில் உடலில் ஒரு வித சூடு ஏற்படும். இதற்குக் காரணம் நாபிச் சுடர் மூலமாக பல லோகங்களுக்கும் ஆழ்நிலை உறக்கத்தில் சூட்சும உடல் சென்று வருகையில் ஏற்படும் பரகாச ஸ்வேத அக்னி எனும் அக்னிச் சூடு அதில் பதிந்து வரும். இதனை நற்கிரண அக்னி சக்திகளாக ஆக்கிடவே உறங்கி எழுந்த உடனேயே நடுவிரலாம் சனி விரலால் பற்களைத் தேய்க்கும் போது எழும் ஸ்ரீவட்ஸ அக்னி சக்தியானது, சனிவிரலில் எழும் சனைச்சராக்னி, பற்களில் எழும் அங்காரக அக்னி, உறக்க நிலை சூட்சுமப் பிரயாணத்தில் எழும் பரகாச ஸ்வேத அக்னியுடன் சேர்ந்து சமனாகி உடலுக்குள் நற்கிரணங்களாய்ச் சேர்கின்றது! வட்ஸ என்பது அக்னி வேத பீஜாட்சரங்களாகும்.

தற்போது டூத் பிரஷ் முறை வழக்கத்திற்கு வந்து விட்டதால் பல் தேவதைகளுக்குத் தேவையான சனி விரல் கணுவில் தோன்றும் தர்மகாஷ்ட அக்னி சக்திகளைப் பலராலும் பெற இயலாமற் போய்விடுகிறது! ஸ்ரீவட்ஸ அக்னி சக்திகளைப் பெற்றுத் தரும் மூலிகை சக்திகள் தினமும் உடலில் சேர்வதற்கு மூல சாதனமாக மூலிகைப் பற்பொடி விளங்குகின்றது. எனவே டூத் பிரஷ், டூத் பேஸ்ட்டைத் தொடும் முன், ஒரு சிறிதேனும் மூலிகைப் பற்பொடி கொண்டு சனி விரலால் தினமும் கட்டாயமாகப் பல் துலக்கி, சனி விரல் கணுக்கள் தந்த (பல்) நாளங்களை ஸ்பரிசிக்கும்படி செய்து, சனீஸ்வரரையும், செவ்வாய் பகவானையும் தியானிக்க வேண்டும்! இதற்காகவே பல் துலக்கும் போது ஓத வேண்டிய மந்திரங்களையும் நம் பெரியோர்கள் அளித்துள்ளனர்.

எவ்வாறு ஒரு கட்டடத்திற்குச் செங்கல், தூண்கள், கற்கள் மிகவும் முக்கியமானவையோ, இதே போல் எண் ஜாண் உடலுக்குப் பற்களும் மிகவும் முக்கியமானவையாம். எனவேதாம் வாஸ்து நாளில் பற்களால் நன்கு கடித்து உண்ணுகின்ற வகையில் கரும்பு, சோளத் தட்டை, ஆப்பிள், சப்போட்டா போன்ற கனிகள், முழு நெல்லிக்காய் போன்றவற்றை ஏழைகளுக்குத் தானமாக அளிப்பதால் வாஸ்து சக்திகள் பெருகி, நில, வீடு சம்பந்தமான தடங்கல்கள் நீங்கும்.

எனவே 90 நிமிடங்களுக்கு மட்டுமே அமையும் வாஸ்து பூஜையில் ஸ்ரீபூமீஸ்வரர், பூலோகநாதர், ஜகதீஸ்வரர், பூமிநாதர், ஜகன்னாதர் போன்ற தெய்வ மூர்த்திகளுக்கு 18 நிமிடங்களுக்கான ஐந்து வாஸ்து கால பூஜைகளை, 90 நிமிடங்களுக்கும் முழுவதுமாக, ஐந்து வாஸ்து கால பூஜைகளாக பிரதோஷம், சிவராத்திரி, ராகு கால பூஜைகள் போல அபிஷேக ஆராதனைகளுடன் வழிபட வேண்டும்.

வாஸ்து சக்தி நிரம்பிய திரவியங்கள்!

எனவே, வருடத்தில் ஆறு நாள் நடராஜர் அபிஷேக தினங்கள் அமைவது போல, ஸ்ரீவாஸ்து மூர்த்தி, நமக்காக வருடத்தில் எட்டு நாட்கள் விஸ்வ ரூப தரிசனம் தருகின்ற நாட்களே ஸ்ரீவாஸ்து பூஜா நாட்களாகும். இந்த வாஸ்து நாட்களில் அனைத்து வாஸ்து திரவியங்களிலும் வாஸ்து சக்தி அபரிமிதமாகப் பரிணமிக்கும்.

மரப் பலகை, கட்டிடப் பொருட்கள், நீர், சுண்ணாம்பு, செங்கல், சிமெண்ட் சரளைக் கற்கள், மண் போன்றவை வாஸ்து திரவியங்களாகும். இந்த எட்டு வாஸ்து நாட்களில், வாஸ்து நேரத்தில் பிரகாசிக்கின்ற சூரிய பகவானின் அம்சங்கள் பலவிதங்களில் மாறுபட்டு, பூலோகத்தின் அனைத்து வாஸ்து திரவியங்கள், வாஸ்துப் பொருட்கள் வாஸ்து மூலங்கள், வாஸ்து நிறங்கள் வாஸ்து தீர்த்தங்களிலும் ஊடுருவிப் பிரகாசிக்கும்.

படிகாரம், சங்கு, கருப்புக் கயிறு, சிகப்பு மிளகாய், எலுமிச்சை, குங்குமம், மஞ்சள், பச்சரிசி மாவு, செங்காவி, பால் போன்றவையே வாஸ்துவிற்கு மாறாகப் பெருகும் எதிர் வினை தோஷங்களை நீக்கவல்ல ஆன்மீகத் திரவியங்களாம். எனவே வாஸ்து நாட்களில் வாஸ்து சக்திகள் அபரிமிதமாகப் பொங்கும் தலங்களையும் அறிந்துகொண்டு, ஆங்கே தக்க பூஜைகளையும் நிகழ்த்தி வந்தால் வாஸ்து இறைவள சக்திகள் நன்கு பூரித்திடும்.

ஷடாட்சபலவாரி பூஜை! ஸ்ரீவாஸ்து முதல் கால பூஜை!

ஏற்கனவே நாம் குறிப்பட்டுள்ளது போல ஸ்ரீவாஸ்து நேரத்தின் 90 நிமிடங்களுமே ஐந்து கால பூஜைகளாகின்றன அல்லவா! இதில் ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் தந்த சுத்தி நேரமான முதல் 18 நிமிடங்களுக்கான முதல் வாஸ்து கால பூஜையில் கரும்புச் சாறு, நெல்லிக்காய், சோளப் பொரிகள், பழச் சாறுகளால் அபிஷேகம் செய்திட வேண்டும். இந்த முதல் அபிஷேக பலன்களாக, நாம் வாழ்ந்து வரும் வீட்டின், நிலம், அலுவலகப் பகுதியில் நாமறியா வகையில் சேர்ந்துள்ள பூமி தோஷங்களுக்கு நிவர்த்தி கிட்டும். நிலபுலன், வீடு, தோட்டம் உள்ளோர்க்கு விவசாயமும், தாவர வளர்ச்சியும் நன்முறையில் விருத்தி அடையும். ஒரு பிளாட், ஒரு வீடு என இருப்போர்க்குச் சந்ததிகளுக்காக நன்முறையில், இல்ல விருத்தி கிட்டும். வாடகை வீட்டில் குடியிருந்து வாழ்வோர்க்கு, நன்முறையில் சொந்த வீடு அமைவதற்கான நல்வழிகள் பிறக்கும். கோர்ட் வழக்கு, உறவுச் சண்டைகளால் தாவாக்களாக பிரச்னைகளாக, தடைபட்டு நிற்கும் நிலபுல வீட்டுச் சொத்துக்கள் நன்முறையில் தீர்வு பெறும். புதிதாக வீடு வாங்க வசதி இல்லாது வாடகை வீட்டில், வசிப்போர்க்கு நல்ல வாடகை வீடும், பண்புள்ள வீட்டுக்காரர்கள் அமையவும் உதவும் விஷ்ணுபதி போல் வாஸ்து பூஜா நாட்களில் குறித்த காலத்தில் இடைவிடாது பூஜைகளை நிகழ்த்திட வேண்டும்.

வாஸ்து சக்தி நிறைந்த செவ்வாய்க் கிழமை!

உண்மையில் வாஸ்து நாட்கள் மட்டுமன்றி ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையுமே வாஸ்து சக்தி நிறைந்த நாளாகவே திகழ்கின்றது. பூமிகாரராகிய செவ்வாய்க் கிழமையின் செவ்வாய் ஹோரை நேரம் மகத்தான வாஸ்து சக்திகளைப் பெற்றுப் பொலிகின்றது.

வாஸ்து நேரம் அமைகின்ற தொண்ணூறு நிமிடங்களில் வாஸ்து மூர்த்தியின் தந்த சுத்தி, நீராடல், பூஜை, பிரசாதம் ஏற்றல், தாம்பூலம் ஆகிய ஜந்து தேவ காரியங்களும் லெளகீகமான நிலையில் சாதாரண மனிதக் காரிய நிலைகள் போல் தோன்றினாலும், உத்தம பக்தி நிலையில் இவற்றின் விளக்கங்கள் வேறு ஆகும். இவை யாவும் வாஸ்து மூர்த்தி பிரபஞ்சத்திற்கென அருள்கின்ற பஞ்ச கற்ப சக்திகளைத் தரும் தேவ தரிசன சாதனங்கள் ஆகும்.

ஸ்ரீகொன்றையடி விநாயகர்

"முக்திஅக” தீர்த்தத் தலமாக, முக்தி அடைந்த பிரம்ம ஞானிகளுக்கும் உத்தம அகமுக்தி நிலைகளைத் தருவதே கொன்றையடி விநாயகத் தலமாம்!

சிவபெருமானுக்கு ஓங்கார ஞானம் உரைத்த முருகனே வழிபட்ட கொன்றையடி விநாயகர் அருளும் தலம்! வேதக் கொன்றை மாமரத்தின் அகவேத சக்திகள், வேர்அக சக்திகளாகப் பூரிக்கும் தலம்!

முக்திஅகத் தீர்த்தமே, அகமுக்தித் தீர்த்தமே, முத்தையனாம் முருகனே வழிபட்ட கொன்றையடி விநாயக பூமித் தீர்த்தமே இங்குள்ள முத்தையா தீர்த்தம்!

சுபமங்கள சக்திகள் தந்து, கணவனின் நோய்களைத் தீர்த்து சுபதர சுமங்கலித்வம் தருபவரே அரணமனைப்பட்டி கொன்றையடி விநாயகர்!

புதுக்கோட்டை - திருமயம் நேமத்தான்பட்டி- காரைக்குடி பஸ் தடத்தில் நேமத்தான்பட்டியில் இருந்து 2 கி.மீ தொலைவில் அரண்மனைப் பட்டி கொன்றையடி விநாயகர் தலம் உள்ளது.

பாணலிங்கம்
அரண்மனைப்பட்டி

வேதமா சக்திகள் பொங்குவதே கொன்றை மரம் ஆகும். கொன்றை அருகே ஆற்றப்படும் புனிதமான ஹோமத் தீயில் எழும் சுபதர வேத சக்தியால் பகைமையை மிகவும் எளிதில் வென்றிடலாம். இல்லம், தொழில், அலுவலகம், அரசியலில் பகைமையால் பாதிக்கப்பட்டுப் பெரும் துன்பங்களை அனுபவித்து வருவோரும் நிறைய உண்டு. எத்தகைய பகைமையில் இருந்தும் மீண்டிடத் தேவையான ரட்சா சக்திகளைப் பெற்றிடவும், குரோத, விரோத சக்திகளின் ஆதிக்கம் தணியப் பெற்றுச் சாந்தமான வாழ்க்கையைப் பெறவும் உதவுவதே அரண்மனைப் பட்டி கொன்றையடி விநாயகர் வழிபாடாகும்!

சுபதராக்னி சக்தியரே கொன்றையடி விநாயகர்!

பூலோகத்தில் எங்கு ஹோம வழிபாடு நிகழ்ந்திடினும் அதில் எழும் ஹோம அக்னி சக்திகளை யாங்கணும் உள்ள கொன்றை மரங்கள் ஈர்த்து, கிரகித்துப் பூலோகமெங்கும் நிரவுகின்றன. பிரணவ லோகத்தில், வேத நாள வித்துக்களில் இருந்து கொன்றை மரங்கள் உற்பவிக்கப் படுவதால்தான் இத்தலத்தின் அருகில் உள்ள திருப்பத்தூர் ஸ்ரீதளிநாதர் ஆலயத்தில் ஓங்காரப் பிரணவமே கொன்றைத் தல விருட்சமாகப் பொலிகின்றது! எனவேதாம் இப்பகுதித் தலங்களை "பைரவப் பிரணவ பூமி" எனச் சித்புருஷர்களின் கிரந்தங்கள் போற்றிப் புகழ்கின்றன!

ஒவ்வொரு வகைத் தாவரங்களுக்கும் சற்குருமார்கள் உண்டு. கொன்றை மரங்களுக்கு எல்லாம் குருவான குருந்தாயக் கொன்றை விருட்சம் வகையைச் சார்ந்த அரண்மனைப் பட்டி விநாயகத் தலக் கொன்றை விருட்சத்தைச் சித்புருஷர்கள் "சுபதரக் கொன்றை மரம்" எனவும் போற்றித் துதிக்கின்றனர். எனவேதாம் குருந்தம் பாறை எனவும் இவ்விடம் பெயர் கொண்டுள்ளது. உலகில் நற்கிரணங்களை, நல்ல சக்திகளைப் (positive forces) பன்மடங்காக்கும் த‌ன்மை கொண்டவை கலியுகத்தில் மிகச் சிலவே உள்ளன. இவற்றுள் ஒன்றே கொன்றை மரமாகும்.

மேலும் வேதத்தின் வடிவாய்ப் பொலியும் கொன்றை மரமானது வேத சக்திகளைப் பன்மடங்காய் விருத்தி செய்யும் தன்மைகளையும் கொண்டதாம். அக்னி சக்தி, வேத சக்தி, கிரக சக்தி, நட்சத்திர சக்தி, ஒளி மற்றும் ஒலி சக்தி போன்றவற்றை இறைப் பூர்வமாக இணைக்க வல்ல அரிய, அபூர்வமான தன்மைகளைக் கொண்டதே கொன்றை மரமாகும்.

ஸ்ரீகொன்றையடி விநாயகர்
அரண்மனைப்பட்டி

கலியுகத்தில் பெருகி வரும் அச்சம், பீதி, வன்முறைகள், துர்சக்திகளைத் தணித்திட மிகவும் தேவையானதே அக்னி சக்தியும், வேத சக்தியும் கூடிய சுபதராக்னி சக்தியாகும்! இவ்வித சுபதராக்னி வேத சக்தியை உருவாக்கி, விருத்தி செய்து, பூலோகத்தின் பல பகுதிகளுக்கும் சுபதரக் கொன்றை விருட்சம் மூலமாக நிரவும் கருணாகர வேத விநாயக மூர்த்தியே அரண்மனைப்பட்டி கொன்றையடி விநாயகராம்!

அம்பிகைக்கு ஜலப் பழன யோக நிலை தந்த கொன்றையடி விநாயகர்!

மஞ்சள், தாம்பூலம், குங்குமம், மாங்கல்யம், தேங்காய், நூல் சரடு போன்ற புனிதமான திரவியங்களுக்குச் சீரஞ்சீவித்வம் நிறைந்த சுபதர மங்கள சக்திகளைப் பெற்றுத் தருவதற்காக, பார்வதி தேவி, திருக்கயிலாய மானசரோவர் தீர்த்தத்தின் அடியில் ஆழ்ந்த தவம் பூண்டனள். இதுவே முருகப் பெருமானின் அவதார உற்பவிப்பும் நிகழ்ந்த யுகக் காலமுமாம்! இவ்வாறு அம்பிகை நீரினடியில் பூண்ட தவ யோகமே ஜலப் பழன யோக நிலை ஆகும். இந்த யோக நிலையைப் பெற்றிட ஈஸ்வரி பூஜித்த ஆதிவேத விநாயகரே அரண்மனைப்பட்டி கொன்றையடி விநாயக மூர்த்தி!

ஜலப் பழன சுபமங்கள சக்தி!

இந்த அரிய ஜலப் பழன யோகத்தின் நல்வரமாகவே அம்பிகை பெற்ற பேறு யாதோ? ஜீவபரிபாலேஸ்வரர், வாழற நாதீஸ்வரர் எனப் பெயர் பூண்டு, நீர்ப் பழனி எனும் அரிய சிவத் தலத்தில் ஜீவ பரிபாலன பழன யோகம் பூண்டிருந்த ஈஸ்வரனை மணக்கும் அவதாரத்துவம் அம்பிகைக்குக் கிட்டியது! கீரனூர் – விராலிமலை மார்கத்தில் உள்ள நீர்ப்பழனித் திருத்தலத்தில்தாம் ஜலப் பழன யோகத்தில் வேத சக்தியையும், அக்னி சக்தியையும் பிணைத்து யோகாக்னியில் திளைத்த அம்பிகையே சுபதர நாயகி என்ற பெயரைப் பூண்டு ஈஸ்வரனை மணக்கும் பேற்றைப் பெற்றிட்டாள்! இறைவன் இறைவியின் இந்த ஜலப் பழன யோக நிலையில் ஒளிர்ந்த நேத்ர வேதாக்னியில் உற்பவித்தவரே பழனியம் பதியானாகிய முருகப் பெருமான்! எனவே அரண்மனைப் பட்டி கொன்றையடி விநாயகர் உறையும் இத்தலத்திற்கும், நீர்ப் பழனிச் சிவத்தலத்திற்கும் பூமியடி தேவ நீரோட்ட இணைப்புகள் நிறைய உண்டு! எனவே சுப மங்கள நல்வரங்களை, பாக்யங்களை தேவாதி, தேவ, தேவ மார்த்தாண்ட மூர்த்திகளுக்கும் பெற்றுத் தருகின்றவருமாகப் பொலிபவரே அரண்மனைப்பட்டி கொன்றையடி விநாயகர் ஆவார்!

இவ்வாறாகப் பராசக்தி தேவியின் ஜ‌லப் பழன யோக நிலையில் பூரித்த சிவ மூர்த்தத் தலங்களே பழனி, வடபழனி, நீர்ப் பழனி என்றாயின. இவ்வாறு சுபதர நாயகியாக அம்பிகை பூஜித்த ஆதிமூல முதல் மூர்த்தியே அரண்மனைப்பட்டி கொன்றையடி விநாயகர் ஆதலின் மங்களகரமான நற்காரியங்களை நடத்தித் தருபவருமாக அரண்மனைப்பட்டிக் கொன்றையடி விநாயகர் பிரகாசிக்கின்றார்.

நன்மதியால் திதி தவறாது நல்அறமே கதியெனக் காத்தாள்!

ராமாயணத்தில்..... தினமுமே மூன்று வேளை சந்தியா வந்தனம், நித்யத் தர்ப்பண பூஜைகளைச் செய்து மனித குலத்திற்கு வழிகாட்டியாக விளங்கிய அவதாரச் செம்மலான ஸ்ரீராமர், ஜீவன்களின் நல்வாழ்விற்காகச் சத்திய வார்த்தையைச் செம்மையாக்கப் பூண்ட வனவாசத்தில் ... ஒரு முறை ... தசரத‌ருக்கு உரித்தான திவசத் திதியில்.... சிராத்தம், திவச, படையல் வழிபாடுகளை நிறைவேற்றுவதற்கு அனைத்தும் த‌யாராகின! ஆனால் வேள்விக்காகக் குறித்த சில சமித்து மற்றும் மூலிகைச் சமூலங்களைக் காட்டில் தேடச் சென்ற ஸ்ரீராமரோ இன்னமும் வரவில்லை! திதி நேரமே முடிந்திடும் போலிருந்தது!

அரண்மனைப்பட்டி

ஸ்ரீராமருடைய வருகைக்காகக் காத்திருந்து, காத்திருந்து தவித்த சீதா தேவி, த‌ர்ப்பண. சிராத்த திதி நேரம் தவறுதல் கூடாது என்பதற்காக, விநாயகரை வேண்டி, ஆங்கே மரத்தடியிலேயே, ஸ்ரீராமர் சார்பாகத் தர்ப்பண, சிராத்தக் காரியங்களை முறையாக ஆற்றிட்டாள். சற்றுக் கால தாமதமாக ஆங்கே வர நேரிட்ட ஸ்ரீராமர், சீதை முடித்திட்ட பிதிர்க் காரியங்களைக் கண்டு வியந்தார்!

"சீதே! ஏற்கனவே அடியேனின் தந்தையாம் தசரதருக்கு ஈமக் கடன் செய்யும் போது நாங்களிருவரும் அருகில் இருக்கும் வாய்ப்பைப் பெறவில்லை! எனவே பித்ருக்கள் விஷயமல்லவா, மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டுமே! அடியேன் அகிர்புத்ன்ய மகரிஷியின் ஆஸ்ரமத்தில், மாமுனியைத் தரிசித்து வருவதற்குச் சற்றுக் காலதாமதம் ஆகி விட்டது! திதி நேரம் தவறினால் அதற்கானப் பிராயச் சித்தமும் உண்டே! நீ தற்போது செய்தது நற்காரியம் எனினும் இதுவே பித்ருக்களுடைய பரிபூரண அனுகிரகத்தைப் பெற்றுத் தந்திடுமா? அடியேன் மீண்டும் தர்ப்பணத்தை, சிராத்த பிரயோகக் காரியங்களைச் செய்திட வேண்டுமா என்பதைப் பெரியோர்கள் மூலமாக அறிந்தாக வேண்டும்! எதற்கும் நான் மீண்டும் தர்ப்பண, சிராத்த காரியங்களைச் செய்து விடுகின்றேன்!" என்று கூறினார்!
ஆனால் ...... பரப்பிரம்மமான ஸ்ரீராமர் அறியாதது ஏதும் உண்டா? மானுட ரூபத்தில் தம் அவதார லீலைகளைத் திறம்பட நடித்துக் காட்டியவர்தாமே ஸ்ரீராமர்!  இந்த ராமாயண மார்கத்தில், சீதா தேவி மூலம் உலகிற்குப் பல பாடங்களைப் புகட்ட எண்ணினார் ஸ்ரீராமர்! ஸ்ரீராம லீலைகளுக்கு எல்லையேது?

சீதை பூஜித்த சிறப்பான தென்புலத்தார்!

அப்போது... "ஹே ராமா," என்று ஆயிரக் கணக்கானோர் ஒருங்கே கூவும் நாமாவளிக் குரல் மழை கேட்டிடவே, ஸ்ரீராமர் தலை நிமிர்ந்து பார்த்தார்! விண்வெளியில் தென்புலத்தில் ... தெற்குத் திசையில் ... ஆயிரக் கணக்கான பித்ருக்கள் வரிசையாக நின்று குரல் கொடுத்தனர்!

"ஹே ராமா! நின் சார்பில் சற்று முன் பக்தி சிரத்தையுடன் சீதா தேவி அளித்த தர்ப்பண, சிராத்த பிண்டங்களை, திவசத் துளசித் தீர்த்தத்தை, பிதுர் பண்டங்களை, திரவியங்களை யாம் பெற்றடைந்து வயிறும், மனமும், உளமும் பூரித்து ஆனந்தமயமாய்ச் செறிந்து நிற்கின்றோம்! மீண்டும் நீ தர்ப்பண, சிராத்தங்களை அளித்திட்டால் அவற்றை ஏற்பதற்கான மகத்தான சகஸ்ர வேத பித்ரு சக்தியை நாங்கள் பெற்றிருக்கவில்லை! பித்ருக்களுக்கு அதிபதியான ஸ்ரீமன் சூரிய நாராயண மூர்த்தியின் அம்சமான, ரகு குல திலகரான நீ தான் அந்த மகத்தான சக்தியை எங்களுக்குப் பெற்றுத் தர வேண்டும்!"  என்று பித்ரு மூர்த்திகள் கூறிடவே, ஸ்ரீராமர் மிகவும் ஆச்சரியப்பட்டார்!

பித்ரு லோகத் தாத்பர்யங்களில் தலைசிறந்தவரான அகிர்புத்ன்ய‌ மஹரிஷியிடம் மேலும் விளக்கங்கள் தருமாறு ஸ்ரீராமர் வேண்டிடவே, அவரும் "ஹே! ராமச்சந்திர மூர்த்தி! பித்ரு காரியங்களில் நேரந் தவறலாகாது என்ற ஐதீகப்படி சீதாதேவி துணிந்து, கிரமத்துடன், மிகுந்த சிரத்தையுடன், பித்ரு காரியங்களை ஆற்றியதுடன், வெள்ளை எள் கொண்டு உன் சார்பாகத் தர்ப்பணம் அளித்ததும் ஏற்புடையதே! இதோ பார்! உன் தந்தை தசரதரே பரமானந்தத்துடன் அவற்றை ஏற்று நிற்பதை!” என்று கூறி அவர் பித்ருலோக ஒளிக் கதவைத் திறந்து காட்டிட, அங்கு தசரதரே மனமகிழ்வுடன் தோன்றி, "ராமா!  அகிர்புத்ன்ய மஹரிஷி கூறியது யாவும் உண்மையே! சீதா தேவி அளித்த சிராத்த, தர்ப்பண தீர்த்தங்கள் யாவும் சூரிய வம்சப் பித்ருக்களையும், எம்மையும் அடைந்து பரமானந்தம் கொண்டோம்!” என்று கூறிடவே, ஸ்ரீராமர் மேன்மேலும் அதிசயித்து நின்றார்!

குருந்தமரம் அரண்மனைப்பட்டி

அனைத்தும் கொன்றையடி விநாயகர் லீலையே!

இதன் பிறகு ஸ்ரீராமர், சீதைக்கு இவ்வரிய அருள் கிட்டியதின் காரணத்தை அறிய விழைந்திடவே, அப்போதுதான் அனைவருக்கும் ஒரு தெய்வீக ரகசியம் புரிய வந்தது! இதுவும் ஸ்ரீராம லீலைதானே! இதற்காகத்தானே இத்தகைய அதியற்புத ராம அனுபூதியும் நிகழ்ந்தது! அந்த அற்புத வேத தேவ ரகசியம் யாதோ?

சீதா தேவி ஸ்ரீராமர் சார்பாக திவச, தர்ப்பண சாஸ்திரக் காரியங்களை ஆற்றுவதற்கு முன்.... அருகிலிருந்த கொன்றை மரத்தின் கீழ், வெற்றிலையில் மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்து வைத்துக் கொன்றையடி விநாயகர் அருளுடன் தர்ப்பணம், சிராத்த காரியங்களை நிறைவேற்றியமையால், கொன்றையடி விநாயகர் திருவருள் பெருகி, கொன்றை மரத்தின் மகத்தான வேத சக்திகள் காரணமாகத் தர்ப்பண, திவச சக்திகள், பலாபலன்கள் பன்மடங்காகப் பெருகி ஸ்ரீராமரின் சூரிய வம்சப் பித்ருக்களுக்குப் பரவச யோக முக்தி நிலை கிட்டிற்று! "கொன்றையடி விநாயகர் எதனையும், எவருக்கும், எந்நேரத்திலும், எங்கும் சாதித்தருள வல்லார்" என்ற தெய்வீக ஞான விளக்கத்தை இந்த ராமாயண அனுபூதி மூலமாகப் பல கோடி மகரிஷிகளும், ஜீவன்களும் உணர்ந்தனர்.

இத்தகைய அரிய அனுபூதிகளை சித்தர்களின் இருடிகள் ராமாயணத்தில்தாம் அதுவும் குருவருள் மூலமாகவே பெற்றிட முடியும்!

இந்த அரிய அனுகிரகம் எதிர் வரும் யுகங்களிலும் யாவரையும் சென்றடையும் வண்ணம் தக்க நல்வரம் தரும்படி சீதா தேவி, தாம் வெற்றிலையில் பிடித்து வைத்து கொன்றையடி மஞ்சள் பிள்ளையார் சுவாமியிடமே விண்ணப்பித்தனள்! இதன் பின்னர் திரேதா யுகத்தில் சீதா தேவி பிடித்து வைத்த கொன்றையடி மஞ்சள் பிள்ளையாரே, பூலோகத்தில் பல இடங்களிலும் கொன்றையடி விநாயகராக, கொன்றை மரத்து அடியில் உற்பவித்தார். இவ்வாறாகவே, பூமியின் பல இடங்களிலும் சீதா தேவியார் திரேதா யுகத்தில் கொன்றை மரத்தடியில் பிடித்து வைத்த வெற்றிலை, மஞ்சள் பிள்ளையாரின் சுயம்புத் திருமேனிகளே பாரெங்கும் பல இடங்களில் கொன்றை மரத்தடியில் கொன்றையடிச் சுயம்புப் பிள்ளையார் மூர்த்திகளாகத் தோன்றினர்.

அரண்மனைப்பட்டி

இவ்வரிய கொன்றையடி விநாயக மூர்த்தங்களுள் ஒன்றே, அரண்மனைப்பட்டி கொன்றையடி விநாயகராம்.

பைரவர் பூஜித்த கொன்றையடி விநாயகர்

பிரபஞ்சத்திற்கான எட்டு (அஷ்ட) பைரவ மூர்த்திகளை உற்பவிக்கும் முன், ஸ்ரீஆதிமூல பைரவேஸ்வரர் கொன்றை மரத்தடி விநாயகரைத் துதித்தே முதலில் பைரவ பூமிகளைத் தோற்றுவித்து, பைரவ பூமி வளாகங்களில், அஷ்ட பைரவ மூர்த்திகளாக பிரபஞ்சத்தின் எட்டுத் திக்குகளிலும் தோன்றினார்! இவ்வாறாக முந்தைய ராமநாதபுர மாவட்ட திருப்பத்தூர், குன்றக்குடி, பொன்னமராவதிப் பகுதிகள்தாம் இன்றைக்கும் பூலோகத்தின் மகத்தான பைரவ பூமியாக விளங்குகின்றன. இவ்வாறு பைரவ மூர்த்திகளுக்கு எல்லாம் ஈஸ்வரரான ஸ்ரீபைரவேஸ்வரரே பூஜித்த ஸ்ரீமஹா கணபதியே அரண்மனைப் பட்டி கொன்றையடி விநாயகராம்!

வேத சக்திகள் கூடிய கொன்றை மர இலைகள், தண்டுகள், வேர்கள், பூக்களின் இறைமய இயற்கைத் தன்மை என்னவென்றால் அந்தந்த ஹோரை, லக்ன, கரண, யோக வார நட்சத்திர நிலைகளுக்கு ஏற்ப, ஒவ்வொரு விநாடி நேரமும் இவை யாவும் விதவிதமான வேத சக்திகளை இடைவிடாது பொழிந்து கொண்டிருப்பதாகும். இவ்வகையில் அரண்மனைப் பட்டியில் உள்ள விநாயகத் தலக் கொன்றை மரமானது “சுபதர வேத விருட்ச'' வகையைச் சார்ந்த கொன்றை மரமாகும்.

முழங்கால் பிரதட்சிணம் பெருங் குற்றம் களையுமே!  பெருவினை தீர்க்குமே!

கொன்றை மரம் ஹஸ்த நட்சத்திர மண்டலத்துடன் மிகுந்த தொடர்பு கொண்டது! எனவே ஹஸ்த நட்சத்திர நாட்களில் அரண்மனைப் பட்டி கொன்றையடி விநாயகர் முன் பச்சரிசி மாக்கோலம் இட்டு மாம்பழம், ஆப்பிள், கொய்யா, வாழைப் பழம், சாத்துக்குடி போன்ற கனி வகைகளால் கோலத்தை அலங்கரித்து வழிபட வேண்டும். ஹஸ்தம் என்றால் கை! ஹஸ்தமாகிய உள்ளங் கை ரேகைகள் தரையில் பதியுமாறு வைத்து, தவழும் குழந்தை போல முட்டிக் கால்களால் ஐந்து முறை முட்டித் தவழ் பிரதட்சிணமாக கொன்றையடி விநாயகரை வலம் வர‌ வேண்டும்.

கொன்றை மரத்தின் அடியில் பூவுலகின் 80000 புனித தீர்த்தங்களின் சக்திகளும் திரண்டிருக்கும். முட்டித் தவழ் பிரதட்சிணம் மூலமாக இவை உடலில் சேரும். கொன்றை மர வேத சக்திகளைக் கொண்டு இவற்றை கொன்றையடி விநாயகப் பெருமான் நால்வகை வேத நீரோட்டங்களாக ஆக்குகின்றார். பூலோகத்திற்கு உரிய ஏழு வகை அக்னி நீரோட்டப் பதிவுகள் துலங்குவதும் கொன்றை மரத்தடியில் தாம்!

ரேகையின் விதியை மாற்றும் ஹஸ்த ரேகா பிரதட்சிணம்!

இவ்வாறு கைரேகைகள் பூமியில் நன்கு பதியும்படி, கொன்றை மரத்தைச் சுற்றி "ஹஸ்த ரேகைப்" பிரதட்சிணம் செய்தலால், வாழ்வில் பலரும் அறியாமல் செய்த பெருங் குற்றங்களைக் களைந்திடத் தேவையான பிராயச் சித்தங்களை அடைய நல்வழிகள் பிறக்கும்.

மேலும், தான் அழகாக இல்லையே, நன்கு படிக்கவில்லையே, நல்ல குடும்பத்தில் பிறக்கவில்லையே, தனக்கு நல்ல கணவன், மனைவி, அமையவில்லையே என (விதியால் அமைந்ததை உணராது) எண்ணி வருந்தி வேதனைப்பட்டு வாழ்வோர் ஹஸ்த நட்சத்திர நாட்களில் கொன்றையடி விநாயகரை மேற்கண்ட முறையில் "முழங்கால் பிரதட்சிணம்" செய்து வழிபட்டு வருதலால் "விதி" கனிந்து, ஹஸ்த (கை) ரேகைகளில் மாற்றம் ஏற்பட்டு, வாழ்வின் நிலைகளும் நன்முறையில் மாறும்.

வியாக்ரபாத மாமுனி, தூல, சூட்சும வடிவுகளில், பலவிதமான புஷ்பங்களைத் தேடி பூலோகத்தில் யாங்கணும் அலைந்து வருகையில், இங்கு பூத்த அற்புதமான, காணுதற்கரிய சுபதரக் கொன்றைப் பூக்களைக் கண்டு அதிசயித்துக் கொன்றையடி விநாயகரின் திருவடிகளில் தவம் புரிந்த அற்புத பூமியிது. மிகவும் சக்தி வாய்ந்த மூர்த்தி! நற்காரிய சித்திக்குத் துணை நிற்பவர்! நற்பிரார்த்தனைகளைத் துரிதமாக நிறைவேற்றித் தரும் கருணாகர மூர்த்தி!

கொன்றையடி விநாயகா!
என்றைக்கும் நின் திருவடி நிழல் தா!

வாகன பூஜை

உங்கள் வாகனம் ஆத்ம ஜோதியை, ஆன்ம‌ சக்தியைத் தாங்குவதாம்!

பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றிலும் வற்றாத இறையொளியான ஆத்மம், ஆத்ம ஜோதியாகப் பரிணமிக்கின்றது. இதுவே பல ஆத்ம அம்சங்களுடன், ஆன்ம சக்தியாகப் பிரதிபலித்து வெளி வரும். எனவே எங்கெல்லாம் நீங்கள் சென்று, அமர்ந்து, நடந்து வருகின்றீர்களோ அங்கெல்லாம் ஆன்ம சக்தியும் நிரவுகின்றது.

நாம் வாழும் சமுதாயத்தில் சாந்தம் நிலவிட, தம்முள் உறையும் ஆன்ம சக்தியை, ஒவ்வொருவரும் வெளியில் நல்விதமாக நிரவுவதுடன், தத்தம் ஆன்ம சக்தியை, விருத்தியும் செய்தாக வேண்டும். ஆத்ம ஜோதி அழிவில்லாதது, நிரந்தரமானது! ஆத்ம ஜோதி தரும் ஆத்ம சக்தி அள்ள அள்ளக் குறையாதது, நன்மை கருதின் ஆன்ம சக்தியாய்ப் பன்மடங்காய்ப் பெருகும் வல்லமையும் கொண்டது. எனவே ஆத்ம சக்தியிலிருந்து ஒளிர்வதே ஆன்ம சக்தி!

அனைத்தும் நல்மரத்தாலே!

நீங்கள் அமரும், பயன்படுத்தும் துணி வகைகள், பாதணி, இடம், தரை, நாற்காலி, பலகை, மேஜை, பேனா, கைக் குட்டை என அனைத்துமே ஆன்ம சக்தி கொண்டதாக, ஆன்ம சக்தியை ஈர்ப்பதாக, விருத்தி செய்வதாக, ஒளிர்விப்பதாக இருக்க வேண்டும். கூடிய வரையில் அனைத்துமே நல்ல மர வகைகள், தங்கம், வெள்ளி, தாமிரம், வெண்கலம், பருத்தி போன்ற தேவ தன்மைகளால் ஆனதாக இருப்பதே சிறப்புடையது. இரும்பு நாற்காலி, இரும்பு பீரோ போன்ற இரும்பு வகைகளைத் தவிர்த்திடுங்கள்! இரும்பானது நல்லது, தீயது இரண்டையுமே ஈர்க்கும்! நல்ல மரமோ நல்லதை மட்டுமே ஈர்த்து அவற்றை அபிவிருத்தியும் செய்யும்!

இரும்பைப் பயன்படுத்த நேரிட்டால் நல்ல நிறம், வண்ணம், வண்ணக் கலை, கலவை மூலம் (good positive colors and positive designs) அதனை ஆன்மீகக் கவசமாக ஆக்கிட வேண்டும். உங்களைத் தினமும் சுமந்து செல்லும் சைக்கிள், ஸ்கூட்டர், மோட்டர் சைக்கிள், மொபெட், கார், பஸ் போன்றவற்றிலும் ஆன்ம சக்தி நிரவும் வண்ணம், வரைவு (designs), நிறம், வண்டி எண்கள் அமைதல் வேண்டும். பலரும் தங்கள் வாகனங்களை “உதைத்துப் புறப்படும்” உடல் சுமக்கியாகவே எண்ணுகின்றார்களே தவிர ஆத்ம ஜோதி, ஆன்ம சக்தி மிளிர்கின்ற பொக்கிஷமான மானுட உடலைச் சுமந்து செல்லும் பாக்யம் பெற்ற வாகனமென உணர்வதில்லை!

வாகனத்திற்கும் ஆத்ம சக்தி உண்டு!

ஆன்ம சக்திகள் பல வகைப்படும். வாகனத்திற்கும் ஒரு வகை ஜ‌ட பாவன ஆன்ம சக்தி உண்டு! எனவே நவராத்திரியில் ஆயுத பூஜையில் மட்டுமே வருடத்திற்கு ஒரு முறையான வாகன பூஜை என்று எண்ணிடாது, தினமும், கோயிலுக்குச் சென்று மஞ்சள், குங்குமம், விபூதிப் பிரசாதம் பெற்று வந்து, உங்கள் குழந்தைகளுக்கு இடுவது போல வாகனத்திற்கும் இட்டு வாருங்கள்! இதனால் ஜட பாவன ஆன்ம சக்தி தழைத்து விருத்தியாகி, உயர் ஆன்ம நிலைகளை உங்கள் வாகனம் பெற்றிடும்! உங்களுக்கு வாகன ப்ராப்தியும் கூடிடும். விபத்து, திருட்டு, நஷ்டத்தில் இருந்து காக்கும் ரட்சா சக்தியும் விருத்தியாகும்.

வாகன பூஜை பெருகட்டும்!

ஆயுத பூஜை நாளைத் தவிர, வாகன பூஜைக்கென, அஷ்டமி, செவ்வாய், சனிக்கிழமைகள், மிருகசீரிஷம், ஆயில்யம், சித்திரை, மூலம் நட்சத்திர நாட்களும் அமைகின்றன. இந்நாட்களில் வாகனங்களைச் சுத்தம் செய்து மஞ்சள், சந்தனம், குங்குமம், விபூதி இட்டு வழிபட வேண்டும். வாகனத்திற்கான குறித்த தேவதைகளும் உண்டு.

பிராப்தமும், பூஜா பலன்களும் இருந்தால்தான் நிலமோ, வாகனமோ கிட்டும் என்பதால் அந்தந்த நில, வாகன தேவதைகளையும் அவ்வப்போது வழிபட வேண்டும்! தினமும் சங்கில் பூஜைத் தீர்த்தம் வைத்து வாகனங்களுக்குத் தெளித்து வர வேண்டும். உண்மையில் சொல்லப் போனால், கேவலம் கருதாது, தினமும் சாஷ்டங்கமாக வீழ்ந்து வண்டிக்கு நமஸ்காரம் செய்து வழிபட்டே வாகனத்தை எடுத்திட வேண்டும். ஆலயங்களில் நந்தி, சிம்மம், யானை, ஆடு வாகனங்களுக்கும், ௧ருட பகவானுக்கும் மேற்கண்ட வாகன ப்ராப்தி நாட்களில் மருதாணித் தைலக் காப்பிட்டு புஷ்பம் சார்த்தி முறையாகப் பூஜித்து வர,

1. வாகனம் இல்லாதோர்க்கு சைக்கிள், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் போன்ற வாகன ப்ராப்தி கிட்டும்.
2. உயர் வகை வாகனத்திற்காக ஏங்குவோர் தமக்குரிய நல்பாக்யப் பிராப்தங்களைத் துரிதமாகப் பெறுவர்.
3. தினமும் வாகனத்தில் நெடு நேரம், நெடுந்தொலைவு செல்ல வேண்டி இருப்போர். மிகவும் முக்கியமாகப் பெற வேண்டிய ரட்சா சக்திகளைப் பெறுவர்.
4. வாகன விபத்துக்களில் பல துன்பங்களை அடைந்தோர், தோஷங்கள் களையப் பெற்றுச் சாந்தமான வாழ்க்கையைப் பெறுவர்.

ஸ்ரீபைரவ மூர்த்தி, சுவானனான நாயைத் தன் வாகனமாகக் கொண்ட நாளே சனிக் கிழமையும், அஷ்டமி திதியும் கூடிய நாள் ஆதலின் அஷ்டமித் திதி தோறும் பைரவருக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்து கறுப்புக் காசிக் கயிறுகளை ஸ்ரீபைரவரின் திருவடிகளில் சார்த்தி வழிபட்டுத் தானும், தன் குடும்பத்தாரும் அணிவது மட்டுமன்றித் தன் வாகனத்திற்கும் (சைக்கிள், ஸ்கூட்டர், கார்) கறுப்புக் கயிற்றைக் கட்டுதலால் ரட்சா பந்தன சக்திகள் நிறையக் கிட்டும். விபத்துகளில் இருந்தும் காத்திடும்! இனியேனும் உங்களுடைய வாகனத்தை ஆன்ம சக்தி கொண்டதாக உணர்ந்து செயல்படுங்கள்.

வாழ்வில் ஒவ்வொருவரும் குறைந்தது மூன்று முறையேனும் நல்ல நிலைமையில் உள்ள வண்டிகளை ஏழைகளுக்குத் தானமாக அளித்திட வேண்டும்.

தூர்வாஷ்டமி

ஸ்ரீதூர்வா கணபதி, ஸ்ரீபைரவர், ஸ்ரீசனீஸ்வரா் மூன்று மூர்த்திகளின் மகத்தான அருளைப் பெற்றுத் தரும் தூர்வாஷ்டமி கூடிய கரிநாள்

கணபதிக்கு உரிய தூர்வாஷ்டமி (அருகம்புல்) பூஜை, ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு உரிய அஷ்டமி வழிபாடு, ஸ்ரீசனீஸ்வரருக்கான கரிநாள் பூஜை ஆகிய மூன்றும் சேர்ந்த தூர்வாஷ்டமிக் கரிநாள் பண்டிகையானது மிகவும் விசேஷமானதாம்! பெறுதற்கு அரிய மூன்று மூர்த்திகளின் அனுகிரக சக்திகள் இணையும் பூஜை நாள்!

அவரவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப பொங்கு சனி, மங்கு சனி, தங்கு சனிக் காலங்களில் ஏற்படும் வினைத் துன்பங்களின் அழுத்தமான சுமையைத் தாங்க இயலாது அவதியுறுவோர்க்கு, சனி பகவானே ஸ்ரீபைரவரைப் பூஜித்துத் தாம் பெறும் பைரவ சக்திகளால் தம் பக்த‌ர்களின் துன்பங்களைத் தணித்திடத் துணை புரியும் நாளே தூர்வாஷ்டமித் திருநாள்!

தூர்வம் என்பது அருகம்புல் ஆகும். பொங்கு சனி, தங்கு சனி, மங்கு சனி என, சனி தசை, புக்தி, அந்தரக் கால கட்டங்களில், தம் கர்ம வினைத் துன்பங்களால் பெரிதும் வாடுவோர்க்கு, ஸ்ரீசனீஸ்வர பகவானே முன் வநது, அஷ்டமித் திதிக்கான ஸ்ரீபைரவேஸ்வரர் பூஜைகளைக் கடைபிடித்து பைரவ பூஜா பலன்களுடன் ௮ருள் புரிகின்ற தூர்வாஷ்டமி கூடிய கரிநாளானது 13.9.2002 அன்று அமைகின்றது! இவ்வாறு தூர்வாஷ்டமியும், கரிநாளும் சேர்வது மிகவும் அபூர்வமானதாகும்.

முறையற்ற காமத் தீய எண்ணங்கள், தீவினைகள் மற்றும் அசுத்தமான எண்ணங்களால் "கரிக்கறை" படிந்து, க‌ரிதோஷங்களால் வாடுவோரின் உடல், மனம், உள்ளத்தைச் சுத்திகரிக்கும் அரிய நாளே கரிநாள் வழிபாடு ஆகும். தீய எண்ணங்கள் ஒரு சில விநாடிகளுக்கேனும் மனதினுள் எழுந்தால் கூடப் போதும், உடனேயே "அட்ட கரி (தோஷம்)" மனிதனுக்குப் பிடித்து விடும். இந்த கரிப் படிவுகளே பலத்த கரி தோஷங்களாக மாறும். மனிதனுக்குக் கரிய நிழல் ஏற்படுவதும் ஒரு வகைக் கரி தோஷத்தால்தான்!

இறையடியார்களின் கர்மங்களைத் தம் யோகாக்னியால் பஸ்மம் செய்து, இறையடி நிழலில் உறைய வைத்த உத்தம மகானாம் ஸ்ரீவள்ளலார் பெருமானுக்கு என்றுமே நிழல் படிந்ததில்லை!

சனீஸ்வர வழிபாட்டு நாளே கரிநாள்!

சித்தலவாய் ஸ்ரீதிருக்கண்மாலீஸ்வரர் சிவாலயம்

கரிநாளில் அனைத்துப் பணிகளையும் ஒதுக்கி வைத்து விட்டு, ராகு கால வழிபாடு போல, சனீஸ்வர வழிபாடுகளைக் கடைபிடித்து வேண்டினால்தான், விநாடிக்கு விநாடி அசுத்தமான எண்ணங்களால், தீவினைகளால் கரி தோஷங்களைச் சேர்த்துக் கொண்டு அவதியுறும் மனிதனுக்கு, இப்பூஜா பலன்களால் அவனுடைய மனம் புனிதமடைய நல்வழி கிட்டும். இல்லையெனில் ஆயுள் முழுவதும் அசுத்தமான எண்ணங்களால், தீவினைகளால் நாறும் கொடிய கரிய, மனமலத்தைச் சுமந்து, பலத்த தண்டனைகளை அனுபவிக்க நேரிடும். பைரவ, சனீஸ்வர பூஜா பலன்களால் மனதை எளிதில் சுத்திகரித்து விடலாம். பிள்ளைகளுக்குப் புனிதமான ஒழுக்கத்தையும் இப்பூஜா பலன்கள் தந்து ரட்சிக்கும்!

ஸ்ரீஅகஸ்தியர் ஆடுதுறை

ஸ்ரீகரிய மாலீஸ்வரா், திருக்கண் மாலீஸ்வரர், கரிகிருஷ்ணப் பெருமாள், மேற்கு நோக்கி தனிச் சந்நிதி கொண்டு அருளும் சனீஸ்வரர், தம் பத்னியுடன் அருளும் சனீஸ்வரர் போன்ற மூர்த்திகளும் கரிநாளின் விசேஷ வழிபாட்டுக்கு உரித்தான, மூர்த்திகளாவர்!

கரிதோஷங்களை நீக்கும் கரிநாள் பூஜை!

கடந்த பல வருடங்களிலே கரிநாள் எனக் கூடப் பார்க்காது எவரும் அறிந்தோ. அறியாமலோ பல காரியங்களைச் செய்திருந்தால், அவற்றில் பொங்கிய (கரி) தோஷங்கள் வாழ்நாளில் பெருகிக் கொண்டே சென்று பெரும் துன்பங்களாக அவ்வப்போது எதிர்பாராத தருணங்களில் வெடித்து விடுவதும் உண்டு. ஆனால் கடந்து போன கரிநாட்களில் செய்த காரியங்களில் ஏற்பட்ட கரி தோஷங்களை, கரிநாள் பூஜைகள் மூலமாகத்தான் தீர்த்திட முடியும். இதற்காகத் தனியாகப் பரிகாரங்களைப் பெற முடியாது. இதுவரையில் வாழ்வில் மலை போல் குவிந்துள்ள பலத்த கரி தோஷங்களுக்கு ஓரளவேனும் ஒட்டு மொத்தமாகப் பரிகாரம் கண்டிட உதவுவதே தூர்வாஷ்டமி கூடிய கரிநாள் தினமாம்.

காமக் குற்றங்களை, காம தோஷங்களைப் போக்கும் அஷ்டமி கூடிய கரிநாள் பூஜை!

பொதுவாக, காமம் என்றால் ஆசை என்றே பொருள். நிராசைகள், துர்ஆசைகள், பேராசைகள், தேவையற்ற விருப்பங்கள், முறையற்ற காம இச்சைகள், தீவினைச் செயல்கள் என அனைத்து விதமான கேவலமான ஆசைகளுக்கும் முறையற்ற காமம் என்றே பெயர். மது, துர்ஆசைகள், சூது, அசத்தியம், குரோதம், தீயகாமம், கற்பின்மை, பகைமை போன்ற எட்டு (அஷ்ட) வகையான தீய குணங்களுக்குக் கலியுக மனிதன் ஆட்பட்டுள்ளான். கடவுள் நம்பிக்கை இருந்தாலும் புனிதமான பக்தி இல்லாமையால், தன் ஆயுள் சக்தியைக் கலிகால மனிதன் பலவாறான தீவினைகளில் இழக்கின்றான். பல பூஜைகளில் திரள்கின்ற மலையளவு புண்ய சக்தியைத் தீய எண்ணங்களில், தீவினைகளில் விரைவாகவே கரைத்தும் விடுகின்றான்.

முறையற்ற காமம், தகாத ஆசை, தேவையற்ற விருப்பங்கள் போன்றவற்றால் ஏற்படும் பலவிதமான துன்பங்களுக்கும் தக்கப் பிராயச் சித்தங்களைப் பெற்றுத் தர வல்லதே தூர்வாஷ்டமியின் ஸ்ரீபைரவ பூஜையாகும். நோய்கள் வருவதும் கூட ஒருவரிடம் சனியருள் மங்கி இருப்பதைக் குறிப்பிட்டுக் காட்டுவதேயாம். எனவே ஆயுள் சக்தியை இழக்காது காத்திட, ஆயுள்காரகராகிய சனீஸ்வரரின் அருளை அனைவரும் பெற்றிட, தினமும் நவகிரக வழிபாட்டை மேற்கொண்டே ஆக வேண்டும்.

தான் நடத்திய பிரம்மாண்டமான வேள்வியில் தட்சன், சிவபெருமானுக்கு ஆஹூதி தந்திட மறுத்தான். சிவனாருக்கு ஆஹூதி இல்லாத யாகத்தில் பங்கு கொண்டதற்கான தண்டனையாக, சனீஸ்வரரும் தம்முடைய நவகிரக சக்திகளை இழந்து அல்லல்பட வேண்டியதாயிற்று. புராணங்களிலே, இவ்வாறாக சூரிய பகவான், சந்திர பகவான், நவகிரகங்கள், இந்திரன், சுக்கிரன், நாரதர் போன்ற தேவதா மூர்த்திகளும், மஹரிஷிகளும் கூடப் பலவிதமான நோய்களுக்கும், துன்பங்களுக்கும் ஆட்பட்டதாக நாம் காண்கின்றோம். இதற்குக் காரணம் என்ன? தேவதா மூர்த்திகளும், தேவதைகளும், தங்களை வழிபடும் ஜீவன்களுடைய கர்ம வினைகளைத் தாங்களே ஏற்று, அவரவருடைய கர்ம வினைகளின் விளைவுகளை நோய்களாக, துன்பங்களாக அனுபவித்து பக்தர்களைக் காக்கின்றனர்.

எனவே நாம் பக்திப் பூர்வமாக வேண்டிட்டால், நம் கர்ம வினைகளின் கணிசமான பங்கினை, தெய்வ மூர்த்திகளை வழிபடும் தேவதைகளே ஏற்று நம்மைப் பெரிதும் காப்பாற்றுகின்றார்கள். ஆனால் எது வரினும் நம் கர்ம வினைப் பலன்களாக ஏற்போம் என்ற ஆரம்ப நிலை பக்தி அவ்வளவு எளிதில் யாவர்க்கும் கனிந்திடுமா என்ன? இந்த நன்னிலை கூடினால் தானே நல்தேவதைகளின் கருணையைப் பெற முடியும்! ஆனால் உண்மையான, உத்தமமான பக்தியை ஒரு சிறிதும் காண்பதே கலியுகத்தில் மிகவும் அரிதாக இருக்கின்றதே! இதற்காகத்தான் குலதெய்வ வழிபாடு, எல்லை தெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு என்ற மூன்று முக்கியமான வழிபாடுகளை நம் மூதாதையர்கள் நமக்கு அளித்துள்ளனர்.

ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர்
ஆடுதுறை

அகஸ்தியர் ஸ்தாபித்த ஆடுதுறை ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர்!

தானிழந்த நவகிரக சக்திகளை மீட்டுப் பெறவும், தன் சகோதரனாம் எம பகவானுடன் கொண்ட வேறுபாடுகளினால் வந்த விளைவுகளில் இருந்தும் தன்னை இரட்சித்துக் கொள்வதற்காகவும், இந்த தூர்வாஷ்டமிக் கரிநாளில்தான் ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி, தன் தந்தையாம் சூர்ய பகவானுடன் சேர்ந்து தூர்வாஷ்டமி விரதத்தை மேற்கொண்டு ஸ்ரீஅகஸ்தியர் பிரதிஷ்டை செய்து பூஜித்த ஆடுதுறை ஸ்ரீஸ்வாணாகர்ஷண பைரவரை வழிபட்டார்! ஆம், கும்பகோணம் மயிலாடுதுறை மார்கத்தில் உள்ள தென் குரங்காடு துறையாகிய, ஆடுதுறை ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில்தாம் ஸ்ரீஅகஸ்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் அருள்புரிகின்றார்.

தமக்கு ஈஸ்வரப் பட்டம் வேண்டி, சனீஸ்வரர் திருக்கயிலாயத்தில் ஸ்ரீகைலாயநாதரை வழிபடச் சென்ற போது, அங்கு முதலில் காட்சி தந்த ஸ்ரீதூர்வா கணபதியை வணங்கிட்டார். ஸ்ரீவிநாயகரும், சனைச்சரருக்கு ஒரு சிறு அருகம்புல் தளத்தைப் பிரசாதமாகத் தந்து, "இதனை உண்டு அருகம்புல், தர்பை இரண்டினாலும் ஆன "தூர்வதர்பா" லிங்கத்தை வழிபட்டு வருவாயாக! நீ இழந்த நவகிரக ஜோதி சக்திகளைப் பெறுவதற்கான ஸ்வர்ணாக‌ர்ஷண சக்தியை "தூர்வதர்பா" லிங்க வழிபாடும், இந்த அருகம்புல் பிரசாதமும், உனக்கு அளிக்கும்!" எனவும் ஸ்ரீதூர்வா கணபதி மொழிந்திட்டார்!

பெயருக்கு ஏற்றபடி, ஸ்ரீதூர்வா கணபதி பிரசாதமாகத் தந்த அந்தச் சிறு அருகம்புல் (தூர்வம்) துண்டினை உண்ட பின் தனக்கு ஏற்பட்ட அரிய ஞானத்தால், "தூர்வதர்பா" லிங்க வழிபாட்டை முறையாக மேற்கொண்ட பிறகே சனீஸ்வரர் திருக்கயிலாய ஈஸ்வர தரிசன மகிமையை ஓரளவு உணர்ந்தார். மேலும், ஈஸ்வரப் பட்டம் பெறுதற்கான இறையவதாரத் தன்மைகள் பற்றிய ஞான விளக்கங்கள் பலவும்.அவருக்குக் கிட்டின.

ஆங்கே, திருக்கயிலையில் பல அவதார மூர்த்திகளும் சர்வேஸ்வர தரிசனத்திற்காகக் காத்திருப்பதைக் கண்டு, தாம் மீண்டும் நவகிரக மூர்த்த சக்திகளைப் பெறுதற்கான தேவ பூஜா பலன்கள் இன்னமும் போதாது என சனைச்சரர் உணர்ந்திட்டதுடன் மேலும் தாம் கடைபிடிக்க வேண்டிய தவ, பூஜை முறைகளையும் தூர்வா ஞானமாக ஆங்கே சனிப் பரணிச் சித்தர் என்ற அற்புதமான சித்தர் பிரானிடம் கேட்டு அறிந்திட்டார். இச்சித்தர்பிரான் உரைத்தபடி, சனைச்சரர் பூலோகத்தில் கரிநாள், தூர்வாஷ்டமி, சனிக்கிழமை மூன்றும் கூடிய 1008 தினங்களில் பல ஆலயங்களில் கடுமையான விரத வழிபாடுகளை மேற்கொண்டார்.

கலியுகத்தில் தூர்வாஷ்டமியும், கரிநாளும் கூடிய விசேஷ நாளின் விரத முறை சனிப்பரணிச் சித்தரால் நமக்காக மிகவும் எளிமைப் படுத்தப் பட்டுள்ளது. இப்பண்டிகையில், அஷ்டமி திதி தொடங்குகின்ற நேரம் முதல் திதி முடியும் வரை (கரிநாள் நேரத்தையும் சேர்த்து) ஒரு சிறு துளி நீர்கூட அருந்தாமல் விரதம் இருந்து அருகம்புல் ஊறிய தீர்த்தம் அருந்தி விரதத்தை முடிப்பதே தூர்வாஷ்டமி விரத பலன்களை மேம்படுத்துவதாகும். தூர்வம் எனப்படும் அருகம்புல்லை முதல் நாளே நீரில் ஊற வைத்து, அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப விரத நேரத்தின்போது சிறிதளவு அருந்திடலாம் என்றாலும் நிர்ஜல விரதமாக, அதாவது ஒரு துளி நீர் அருந்திடாது தூர்வாஷ்டமி விரதம் புரிதல் விரத பலன்களைப் பன்மடங்காக்கி மேம்படுத்தும்.

தீய வழக்கங்கள் தீய்ந்திட...

முறையற்ற தீய வழக்கங்களுக்கு ஆட்பட்டுத் தேவையற்ற அநாவசியமான செலவுகள், மது, சூதாட்டம், முறையற்ற காமக் குற்றங்களுக்கு ஆளாகி வழி தவறிச் செல்கின்ற கணவன், மனைவி, பிள்ளைகளைக் காத்து நல்வழி காட்டிட, இந்த தூர்வாஷ்டமி விரதத்தைப் பரிபூர்ணமாகக் கடைபிடித்து, பைரவப் பேரருள் கூடிய சனீஸ்வர கடாட்சத்தையும் பெற்றிட வேண்டும்.

தூர்வாஷ்டமி கூடிய கரிநாள் விரதத்தைப் பரிபூரணமாகப் பூண்டவர்களுக்காக, சிவ, விஷ்ணு மூர்த்திகளே சனீஸ்வர கடாட்சத்தைத் திரட்டி அளிக்கின்ற மகத்தான திருநாளே தூர்வாஷ்டமியாம்! இக்கரிநாள் பூஜையைத் திறம்படக் கடைபிடித்து, கருமை பூசி வந்து நிற்கும் துன்பங்களைத் துடைத்து, ஒளிமயமான இறைமை துலங்கும் வாழ்க்கைக்கான நல்வழியைப் பெறுவீர்களாக!

கரிநாள் என்றாலே ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு உரித்தான விசேஷமான பூஜை நாள் என்பதை மக்களின் மனதில் நன்கு படியும் வண்ணம் கரிநாள் பூஜையின் மகத்துவத்தை உணர்த்த வேண்டும். எவ்வாறு பெளர்ணமியன்று திருஅண்ணாமலையில் கிரிவலம் வருதலானது மகத்தான கிரிவல பூஜையாக நன்கு விருத்தி அடைந்துள்ளதோ, இதே போல பண்டைய யுகங்களில் சிறப்புடன் விளங்கியது போல, கரிநாளானது ஸ்ரீசனீஸ்வர மூர்த்திக்கு ப்ரீதி தரும் விசேஷமான பூஜை நாளாகக் கலியுகத்திலும் மலர வைக்க வேண்டியது நம்முடைய கடமையாகும்.

பத்துச் சடங்குகள்

சடலத்திற்கான பத்துச் சடங்கு கிரியை முறைகள்

மரணம், தகனம், தகனக் காரியங்கள் பற்றிய சில ஆன்மீக விளக்கங்கள்

மரணம் என்பது சாரிச் சட்டை மாற்றுதலே!
ஸ்ரீ ம்ருத்யுஞ்ஜய வழிபாட்டால் மரண பயத்தை வென்றிடுக!

கடந்த மார்ச், ஏப்ரல், மே 2002 ஸ்ரீஅகஸ்தியர் விஜயம் மூன்று இதழ்களிலும் தகனக் கிரியை (மரணச் சடங்குகள்) பற்றிச் சித்புருஷர்களின் ஞானபத்ர கிரந்தங்களில் துலங்கும் பல அரிய விளக்கங்களை அளித்துள்ளோம். மேலும் தொடரும் முன் முந்தைய விளக்கங்களை மீண்டும் படித்திடுக!

மூதாதையர் இறந்த திதி, கிழமை, நட்சத்திரத்தைப் பொறுத்துப் பித்ரு பூஜைகளும், தான தர்ம முறைகளும் அமைவதால், பொதுப்படையான சில பித்ரு பூஜைகளை மட்டுமே இங்கு நாம் அளிக்க முடியும்.

ஒருவர் இறந்த தினத்தில், சடலம் இருக்கும் போதே மாயைச் சாயைச் சரீர உருவ மாற்றம் ஏற்படுகின்ற. நிகழ்ச்சிகள் நடைபெறுவதால், இந்த தினத்தில் இருந்தே இனிப்பு வகைகள், கரும்புச் சாறு, நீர் மோர், புடலங்காய் கலந்த உணவு, காலணிகள் ஆகிய ஐந்தையும் தினந்தோறும் இயன்ற வரை பத்து நாட்களிலும் தானமாக அளித்திட வேண்டும். தினமும் பத்து நாட்களிலும் யானைகளுக்குக் கரும்பு அளிப்பதும் மிகவும் சிறப்பானது! நீர் சம்பந்தமான பொருட்களும், கஜ (யானை) ப்ரீதி சக்திகளும் சடலத்தில் நீர் தோஷங்களும், பூத தோஷங்களும் வராது பாதுகாக்கும்.

ஸ்ரீஅரிச்சந்திரர் திருஅண்ணாமலை

பொதுவாக, முதல் நாளில் உற்றம், சுற்றத்திற்காக உடலைக் கிடத்தி, இரண்டாம் நாள்தான் தகனக் கிரியைகள் நடைபெறுவதால், முதல், இரண்டாம் நாட்களில் ஸ்ரீஅரிச்சந்திர மூர்த்திக்கு உரிய வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். ஸ்ரீஅரிச்சந்திர மூர்த்திக்கு ஆடை அணிவித்து வலம் வந்து வழிபடுதலும் வேண்டும். மயானக் காவல் மூர்த்தியாகவும் ஸ்ரீஅரிச்சந்திர மூர்த்தி விளங்குவதால், பிண தோஷங்கள், சுடலை தோஷங்கள் சடலத்தையும், இல்லத்திலும் பற்றா வண்ணம், சடலம் நன்கு சிதையில் சாம்பற் பரிணாமத்தை அடைந்து அக்னித் தீர்வு பெறவும் அரிச்சந்திர வழிபாடு உதவும். இதனை இயன்றவரை குடும்பத்தாரே செய்ய முயற்சிக்க வேண்டும், அல்லது நெருங்கிய உறவினர்கள் அவர்கள் சார்பாகவும் செய்திடலாம்.

இரண்டாம் நாள் காரியங்கள்

பொதுவாக இரண்டாம் நாளே சடலமானது தகனம் ஆகின்ற நாளாக அமைவதால் இந்நாளில் அக்னி சம்பந்தப்பட்ட திரவியங்களையும் உணவு வகைகளையும் தானமாக அளித்திடுதல் வேண்டும். ஊதுபத்தி, தீப்பெட்டி, சூடம் ஆகியவற்றை ஆலயங்களுக்கும், கார வகை உணவுகள், மாம்பழம், பப்பாளி, கோதுமை உணவு வகைகள் போன்ற அக்னி சக்திகள் நிரம்பியவற்றை ஏழை எளியோர்க்கும் அளித்திடுதல் சிறப்பானது.

அக்னி சக்திகள் நிறைந்த குங்குமப் பூ சேர்ந்த பால் தானம் மிகவும் சிறப்புடையதாகும் குங்குமப் பூவில் உள்ள அக்னி சக்தி ஆவி தோஷங்களை பஸ்மாமாக்கும் சக்தி உள்ளதாகும். இவ்வாறு அக்னி சம்பந்தமான திரவியங்களின் தான‌ தர்மங்களில் எழும் மாயாதீத அக்னி சக்தியே தகனம் நன்கு நடை பெறத் துணை புரியும்.

அக்னி சக்தி நீக்கும் சடல தோஷங்கள்!

காலை சூரிய உதயம், அபிஜித் முகூர்த்தம் எனப்படும் உச்சி வேளையான நடுப்பகல், சந்தியா வேளையாகிய மாலைப் பொழுது ஆகிய மூன்று வேளைகளிலும் தான, தர்மங்களை மேற்கொள்ள வேண்டும். மரணத்தின் போது, சூரிய கிரணங்கள் சடலத்தின்மேல் சில நற்பரிமாணங்களை ஆற்றியாக வேண்டும். சடல தோஷங்கள் இருந்தால் சூரிய கிரணங்கள் அதன் மேல் சரியாகப் படியாது. எனவே சூர்யாக்னியும் சடல தகனப் பரிமாற்றத்திற்கு உதவிட, சடல தோஷங்கள் வராது தற்காத்திட, இன்று (முதலாம் மற்றும் இரண்டாம் நாளில்) சூரிய பகவான் தனித்து சன்னிதி எழுந்தருளி உள்ள ஆலயங்களில் சூரிய பகவானுக்கு குங்குமப் பூ கலந்த பசும்பால் அபிஷேகம் செய்து சூரியனுக்கு உரித்தான கோதுமை வகை உணவுகளைத் தானமாக அளித்திட வேண்டும்.

ஸ்ரீசூரிய நாராயண மூர்த்தியின் லோகத்தில்தான் பித்ரு தேவதா மூர்த்திகள் உறைவதால், இன்று பித்ரு பூஜைகளுக்கான அங்க பூஜையாக, குடும்பத்தார் ஆதித்ய பித்ரு ஹோமம் எனப்படும் சூரிய ப்ரீதி, ஆதித்யப் பித்ரு ப்ரீதி ஹோமத்தை இல்லத்திலோ, இட வசதி இல்லாதோர் வேறு எங்குமோ செய்திட வேண்டும். இறப்பு ஏற்பட்ட இல்லங்களில் கோயிலுக்குச் செல்லக் கூடாது, ஹோமத்தை நடத்தலாகாது என்று சிலர் தவறாகக் கூறுவர். பித்ரு காரியங்கள் சம்பந்தப்பட்ட ஹோமங்களையும், எந்த ஹோம, பூஜா வழிபாடுகளையும் இல்லத்திலும், நதிக் கரைகளிலும் நெடுங்குடி, காசி, ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தாராளமாகப் பத்து நாட்களிலும் நிகழ்த்திடலாம் ஆலய வழிபாட்டிற்கும் சென்றிடலாம். 

சூரிய பகவானுக்கு உரித்தான எண் ஒன்று ஆகையால் 10, 19, 28, 37 என்று கூட்டு வருகின்ற வகையால் செங்கற்களை வைத்துச் சூரிய லோகப் பித்ருக்களுக்கான ஹோமத்தை இன்று நடத்துதல் வேண்டும். இதில் பசு நெய்யில் தோய்ந்த அரசு, எருக்கு, புரசு போன்ற சமித்துக்கள் மட்டுமே ஹோமப் பருப் பொருட்களாக (ஆஹூதிகளாக) அளிக்கப்படும். ஆரஞ்சு நிற வண்ணத் துணியில் பூர்ண ஆஹூதி அளித்திடுதல் வேண்டும். கோதுமையைத் துணியில் வைத்துக் கட்டி, பசு நெய் கலந்த கோதுமையை பூரண ஆஹூதியாக அளித்திடலாம்.

மாயைச் சாயைச் சரீர வடியுடைத் தண்டுலமே!
மந்திர வடிவுடைத்தாய் பித்ருபுரி ஏகிடுவாய்!

- என்று சங்கல்பம் செய்து கொண்டு குறைந்தது 21 ஆஹூதிகளாவது அளித்து ஹோமம் செய்திட வேண்டும்.

காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் ஆதித்ய பித்ரு ஹோமத்தைச் செய்திடுதல் வேண்டும். குடும்பத்தார் பங்கு பெறுதலே சிறப்பானதாம். தக்கப் பெரியோர்களின் துணையுடன் இதனை ஆற்றுதல் உத்தமமானதே!

மூன்றாம் நாள் காரியங்கள் நடுக்கல் பூஜை

 பொதுவாக, மூன்றாம் நாள் எலும்பை சாம்பலில் கரைக்கின்ற முக்கியமான நாளாக அமையும். இறந்த நாளை முதல் நாளாகக் கொண்டு  நாள் கணக்கைக் கடைபிடிக்கவும். இன்று, அதாவது சாம்பலைப் பாலில் கரைக்கின்ற நாளில் எஞ்சிய சாம்பலை ஆற்றில், கடலில் கரைத்திடுக! கங்கை, காவிரி, ராமேஸ்வரத்தில் கரைப்பதற்கு ஒரு மஞ்சள் துணியில் தனியாக எடுத்தும் வைத்திடலாம்.

சொந்த வீட்டில் இருப்போர் வீட்டில் ஒரு சிறு மண் பாத்தி கட்டி நல்ல, மணலை வைத்து, நீர் ஊற்றி, நல்ல ஆற்றங்கரை, நல்ல குள‌க்கரை அல்லது சொந்த வீட்டு தோட்டத்தில் இருந்து மூன்று சிறு கற்களைப் பொறுக்கி எடுத்து மணலில் வைத்து -

“வசு, ருத்ர, ஆதித்யப் பித்ருக்களே ஆவாஹனம் ஆகுவீர்!”

- என்று துதித்து வசு பித்ரு, ருத்ர பித்ரு, ஆதித்ய பித்ரு ஆகிய மூன்று வகைப் பித்ருக்களையும் மூன்று கற்களில் ஆவாஹனம் ஆகிடும் படி வேண்டி, எள் கலந்த நீரை வார்த்து, பத்தாம் நாள் வரை தினமும் தர்ப்பணம் வார்த்துப் பூஜிக்க வேண்டும். தண்டுலப் பாத்தியாகிய இதில் எள் முளைப்பது ஆன்ம ப்ரீதிக்கான நல்ல சகுனமாகும்.

இறந்தவர், உத்தம நிலையில், பித்ரு லோகத்தில் அடுத்துப் பெற இருக்கின்ற நிலையைக் குறிப்பதே "வசு பித்ரு" நிலையாகும். இவருக்கு முந்தைய பித்ரு லோக தேவ மூர்த்திகளே ருத்ர பித்ரு, ஆதித்ய பித்ரு ஆகின்றார்கள். ஆண், பெண் இரண்டு தலைமுறை வழிகளிலும் இந்த மூன்று வகையினர் உண்டு.

மூங்கில், வெள்ளி, செப்பு தம்ளர்களில் நீரை வைத்து, எள்ளைக் கரைத்து உத்தரணி கொண்டு மூன்று நடுக் கற்களின் மேலும் எள் கலந்த நீரை வலது கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் ஊற்றி

“எள் நீர் இறைத்திட்டேன் எம் பெரும் பிதாமஹரே!
ஏகி வந்து ஏற்றம் தருவீர்!”

- என வேண்டி எள் கலந்த நீரை கற்களின் மேல் வார்த்தல் வேண்டும். பத்து தினங்களில் தினமும் மூன்று வேளையும் ஸ்ரீசுந்தரரின் நமசிவாயப் பதிகம் ஓதி வழிபட்டு வருதல் வேண்டும். அவ்வப்போது நடுக்கல்களில் நீர் ஊற்றி வருதலும் வேண்டும். இதில் முளைக்கின்ற எள் செடிகளில் ஏற்படுகின்ற பித்ரு பூஜா சக்திகள் மூலமாகத் தான் இறந்தவருடைய விண்ணுலகப் பயணம் நன்கு நடைபெறும் என்பதை உணர்ந்திடுங்கள். பொதுவாக பழைய கால முறைப்படி வீட்டிற்குள்ளேயே கொட்டகை கட்டப் பெற்று அல்லது மாடியில் இந்த "நடுக்கல் பாத்திக்கு" முன்னர் ஹோம வழிபாடு நடைபெறும். இல்லத்திற்குள்ளும் ஹோமத்தை வைத்துக் கொள்ளலாம்.

மாயைச் சாயைச் சரீரப் பயணம்

பாலில் எலும்பைக் கரைக்கும் தினத்தில்தான் மாயைச் சாயைச் சரீரமானது பல உலகங்களுக்கும் விண் பயணம் சென்று தன்னுடைய கோடானு கோடி (முந்தையப் பிறவி) சந்ததிகளைப் பார்வையிடுவதால் சாயைச் சரீர நேத்ர யாத்ரா மண்டல பூஜையாக இது அமைகின்றது. எனவே இந்நாளிலும், செய்யப்படுகின்ற பித்ரு பூஜைக்கு உத்தர வடிச் சடங்கு என்று பெயர். பித்ரு லோகத்திலிருந்து வாயு பித்ரு தேவ மூர்த்திகள் துணை புரிவதால் இன்று வசு வாயுபித்ரு வடிஹோமம்தனை நிகழ்த்துதல் வேண்டும். இன்று வாயு சம்பந்தமான யாத்திரைகளை மாயைச சாயைச் சரீரம் மேற்கொள்வதால் இன்று வாயு சக்திகள் நிறைந்த எருக்கு, சமித்துக்களைப் பசு நெய்யில் தோய்த்து ஆஹூதியாக அளித்திடுதல் வேண்டும்.

நவ தானியங்கள், பசு நெய், வெண்ணெய் தோய்ந்த பிரண்டை ஆகியவற்றை ஹோம ஆஹூதிகளாக அளித்து வாயு பகவானுக்குரிய நிறமான வெளிர் நீல வண்ணத் துணியில் ஆஹூதி வைத்து அளித்திட வேண்டும். இன்று வாயு சம்பந்தப்பட்ட பொருட்களான கோதுமை, கிழங்கு வகைகள், எண்ணெய்ப் பலகாரங்களைத் தானமாக அளித்திட்டால் யாத்ரா பூர்வமாக பித்ரு தேவதா மூர்த்திகள் மாயைச் சாயைச் சரீரத்திற்கு உதவி புரிவார்கள்.

நான்காம், ஐந்தாம் நாட்கள்

நான்கு, ஐந்தாம் நாட்களிலும் மாயைச் சாயை சரீரமானது பல உலகங்களுக்கும் பறந்து சென்று தன்னுடைய கோடிக் கணக்கான சந்ததிகளின் நிலைமையைப் பார்த்து, வருந்தி, வேதனைக்கு உள்ளாகி நிறையப் பாடங்களைக் கற்கும். எனவே மாயைச் சாயைச் சரீரத்திற்குச் சாந்தம் அளிப்பதாக நான்காம், ஐந்தாம் நாள் பூஜைகள் துணை புரிகின்றன.

தீய கர்மவினைகள் நிறைந்த ஒருவர் இத்தகைய நிலைகளை அடையாது நேரடியாகவ. துன்பகரமான ஆவி நிலைகளை அடைந்து மறுபிறவி எடுத்துப் பல்லாயிரம் ஆண்டுகள் துன்பப்படுவார்கள். எனவே இங்கு நாம் விளக்குவது சாதாரண‌மாக நன்முறையில் வாழ்ந்து இறந்த ஒருவருக்கு இறந்த பின் மாயைச் சாயைக் சரீரத்தில் ஏற்படுகின்ற நிலைகள் ஆகும்.

நான்காம் ஐந்தாம் நாட்களில் சாந்த ருத்ர குண பித்ரு ஹோமம் என்ற வகையில் காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் சாந்த சக்திகள் நிறைந்துள்ள சமூலங்களைக் கொண்டு பித்ரு ஹோமங்களை நடத்திடுதல் வேண்டும்.

சமூலங்கள் எனப்படுவை பல வகை மூலிகை திரவியங்களின் கூட்டுச் சேர்க்கையாகும். ஒவ்வொரு சமூலமும், மூலிகையும் மகத்தான பித்ரு சக்திகளைக் கொண்டமையால் அவற்றின் பலா பலன்களை உடனடியாக கிரகித்துத் தருவனவாம். ஹோம அக்னிகள் நல்கும் தேவ சக்திகளை கிரகிக்கும் அளவிற்கு உடல் மற்றும் உள்ளத் தூய்மை நிலைகளை யாவரும் பெறவில்லை ஆதலால் பல கூட்டு மூலிகைகள் சேர்ந்து சமூலங்கள் ஆகும்போது அவற்றில் எழுகின்ற வாயு பூர்வமான சக்திகள் நம் உடலையும், உள்ளத்தையும், மனதையும்  அடைகின்றன.

எனவே நான்காம், ஐந்தாம் நாட்களில் ச‌மூலங்களைக் கொண்டு ஹோமங்களை ஆற்றுதல் வேண்டும். அதிகக் காரம் இல்லாது சாந்த சக்திகளை தரக் கூடிய உணவு திரவியங்களை நான்காம், ஐந்தாம் நாட்களில், தானமாக அளித்திட வேண்டும். நான்காம் நாள் பழ வகைகள், பழ ரகங்கள், நீர் மோர் போன்ற குளுமையான உணவுப் பண்டங்களையும், ஐந்தாம் நாள் பல வகையான காய்கறிகள் சேர்ந்த உணவு அதாவது அவியல், கூட்டு போன்றவற்றையும் தானமாக அளித்திடுதல் வேண்டும்.

ஐந்தாம் நாள் கொத்துக் காய்கறிகள், பழ வகைகளான திராட்சை, அத்தி, வாழைப்பூ போன்றவற்றை உணவில் முறையாக சேர்த்துத் தானமாக அளித்தல் வேண்டும்.

ஆறாம் நாள்

மாயைச் சாயைச் சரீரம் பல உலகங்களுக்கு வாயுப் பூர்வமாக சென்று வருவதால் ஆறாம் நாள் மாயைச் சாயைச் சரீரத்திற்கு சாயைப் பசி என்ற ஒருவிதமான தாகமும், பசியும் எடுப்பதால் இன்று புண்ய நதித் தலங்களில், பலவிதமான தான தர்மங்களைச் செய்திடுதல் சிறப்பானதாம்.

அன்னதானம், ஆடை தானம், மாங்கல்ய தானம், காலணி தானம், ஏழைகளுக்கு உரித்தான பாத்திர தானங்கள் என்று குறைந்தது 12. வகை தானங்களைச் செய்திடுவதால் அதன் தாகமும், பசியும் அடங்கும். சாயைப் பசி, சாயைத் தாகம் என்றால் நம்முடைய பூலோகக் கணக்கில் நீர் அருந்தியோ, உணவு உண்டோ தணிவது கிடையாது. பலவிதமான ஜலத்வீப புண்யசக்தியில் ஏற்படும் அமுத சக்தியே மாயைச் சாயைச் சரீரத்தின் பசியைத் தீர்க்க வல்லதாகும். எனவே ஆறாம் நாள், நிறைய புண்யத் தலங்களில் நிறைய தான தர்மங்களைச் செய்திடுதல் வேண்டும். இல்லத்தில் நடுக்கல்லுக்கு இன்று எள் நீரோடு தங்கை மற்றும் காவிரி நீர் சேர்த்து நீரை வார்த்தல் வேண்டும். இன்று நிகழ்த்துகின்ற பித்ரு ஹோம பூஜைக்கு ஜலத்வீப பித்ரு ஹோமம் என்று பெயர். இந்நாளில் நிறைய பசு விரட்டி மற்றும் நிறைய சமித்துக்களை வைத்து அக்னி வளர்த்து நீர் சம்பந்தப்பட்ட ஆஹுதிகளை, பழ வகைகளை, துளசி, வில்வம் போன்ற மூலிகை இலைகளையும் ஆஹுதியாக அளித்து நிறையப் புகை வருமாறு செய்து இப்புகையால் பலவிதமான பித்ரு தோஷங்களைத் தீர்ப்பதற்கு வழிவகை செய்து கொள்ளவேண்டும்.

ஏழாம் நாள்

ஏழாம் நாளன்று ஏழு வகைக் காய்கறிகள் சேர்ந்த உணவை அளிக்க வேண்டும். இன்றைய ஹோமத்திற்கு சப்த தீப பித்ரு ஹோமம் என்று பெயர். இன்று ஏழு விதமான சமித்துக்களை வைத்து ஆஹூதியாக அளிப்பதுடன் சப்த தீப சக்திகள் நிறைந்த கடலை, சந்தனக் குச்சிகள், அவல், பொரி ஆகியவற்றை ஆஹுதியாக அளித்திடுதல் வேண்டும். இன்று ஆடைகள் தானம் விசேஷமானதாகும். இந்நாளில்தாம் மாயைச் சாரீர சரீரம் ஜீவசம்பந்தமான பேதங்களை உணரும் நாள்! அதாவது தம் பூர்வ ஜன்மப் பிறப்புகள், தம் மூதாதையர்கள் எந்த வடிவில் உள்ளனர் என உணரும் நாள்!

எட்டாம் நாள்

எட்டாம் நாளன்று எட்டு திக்குகள் வருமாறு செங்கற்களை வைத்து பித்ரு ஹோம குண்டங்களை அமைத்து எட்டு பேர்கள் அமர்ந்து பித்ரு ஹோமத்தை நடத்திடவேண்டும். அஷ்டசுத பித்ரு ஹோமம் என்று இதற்குப் பெயர். ஒரே சமயத்தில் எட்டுப் பேரும் சேர்ந்து ஆஹூதி அளித்து அஷ்ட திக்குகளிலும் மாயைச் சாயை சரீரம்‌ யாத்ரா பூர்வமாகச்‌ செல்லும்போது வழியில்‌ ஏற்படும்‌ தடங்கல்களுக்குத்‌ தக்க நிவர்த்திகளை தருவதாக இந்த பித்ரு ஹோம சக்திகள்‌ உதவுகின்றன.

இன்று சனீஸ்வரர்‌ அருள்பாலிக்கும்‌ ஆலயங்களில்‌ எள்‌ உருண்டை, எள்‌ சாதம்‌ மற்றும்‌ எள்‌ சம்பந்தப்பட்ட உணவுகளை தானமாக அளித்திடவேண்டும்‌. இன்று பித்ரு ஹோமத்தில்‌ நிறைய எள்ளை சேர்த்து எள்ளை ஆஹூதியாக அளித்து ஹோமங்களை நடத்திடுதல் வேண்டும்.

ஒன்பதாம்‌ நாள்‌

ஒன்பதாம்‌ நாள்‌ மாயைச்‌ சாயைச்‌ சரீரத்திற்கு மிகவும்‌ முக்கியமான நாள்‌ ஆகும்‌. இவ்வுலகைவிட்டு மாயைச்‌ சாயைச்‌ சரீரம்‌ நெடுந்தொலைவு பூமிப்‌ பயணங்கள்‌, விண்வெளி யாத்திரைகளைத்‌ தொடர்கின்ற நாள்‌ இதுவேயாகும்‌. இன்று நவகிரகங்களை வலம்‌ வந்து, நவதானியங்களை புறாக்களுக்கு அளித்து, இன்று நவகிரக ஹோமம்‌ செய்தல்‌ வேண்டும் நவகிரகத்திற்காக பிரசித்தி பெற்ற கோளிலித்‌ தலம்‌ அதாவது அனைத்து நவகிரக மூர்த்திகளும்‌ ஒரே திசையில்‌ பார்த்துக்‌ கொண்டு இருக்கின்ற தலங்களில்‌ ஒன்பது விதமான ஆடைகள்‌, கனிகள்‌, உணவு வகைகளை தான தர்மங்களாக நிகழ்த்துவது மிகவும்‌ விசேஷமானதாகும்‌.

பத்தாம்‌ நாள்‌

பத்தாம்‌ நாள்‌ ஏழைகளுக்கு, பெரிய வாழை இலைகளில்‌ அன்னம்‌, சாம்பார்‌, குழம்பு, ரசம், வடை. பாயசமென வைத்து முழுச் சாப்பாடாக அன்னதானம்‌ அளித்திடுதல்‌ வேண்டும்‌. தச வாயுக்களும்‌ மாயைச்‌ சாயைச் சரீரத்திலிருந்து விடுபட்டு, அதனதற்கு உரித்தான பகுள சரீரம்‌ பெறுகின்ற நாளாக இது விளங்குவதால் இன்று தசாவதார ஆலயங்கள்‌, ஆறு முகங்களை கொண்டு முருகன் அருள்‌ பாலிக்கின்ற தலங்கள்‌, மூன்றுக்கு மேற்பட்ட திருமால்‌ மூர்த்திகள்‌ அருள்‌ பாலிக்கின்ற பெருமாள்‌ தலங்கள்‌ ஆகியவற்றில்‌ அன்னதானம்‌ செய்வது சிறப்புடையதாகும்‌.

பத்து விதமான மங்களப்‌ பொருட்களை ஏழைச்‌ சுமங்கலிகளுக்கு தானமாக அளித்தல் சிறப்பானது. இன்று தசபூர்வ பித்ரு ஹோமத்தை நிகழ்த்த வேண்டும்‌. அதாவது ஒன்பது தான்யங்கள்‌ சேர்ந்த நவதான்யத்தோடு, வெள்ளை எள்ளையும்‌ சேர்த்து பத்தாவதாக வைத்து ஆஹூதியாக அளித்திட வேண்டும்.

இன்றுடன்‌ நடுக்கல்‌ வடிவுகளாக உள்ள, முக்கல்‌ பாவனாதிகளைப்‌ ப்ரீதி செய்து வழியனுப்பும்‌ நாள்! அவர்களைச்‌ சாந்தம்‌ அடையச்‌ செய்து, இல்லத்திற்குச்‌ சாந்தி தரச் செய்து அவரவருடைய பித்ரு லோகத்திற்கு வழியனுப்புகின்ற நாள்‌. எனவே இன்று மூன்று நடுக்கல்களையும்‌ நன்றாக கங்கை, காவிரி போன்ற புனித நீர்‌, தேன்‌, சந்தனம், இளநீரால்‌ - சுத்திகரித்து ஆறு, கடல்‌ போன்றவற்றில்‌ முறையாகச்‌ சேர்த்திடல்‌ வேண்டும்‌.

மாத சிவராத்திரி

திருஅண்ணாமலை மாத சிவராத்திரி கிரிவலம்

பர்வத குமாரி பெருநடை வல ஆவணி மாத சிவராத்திரி

தெய்வத்‌ தமிழுக்கு “ழகர, ளகர, லகர” அட்சர சக்திகளைப் பெற்றுத் தந்த வழநாத வெளிப் பிரவாகச் சித்தர் அருணாசல கிரிவலம் வரும் நாள்

பெளர்ணமி போன்று திருஅண்ணாமலையில், அமாவாசைக்‌கு முதல் நாள்‌ வரும்‌ மாத சிவராத்திரி கிரிவலமும்‌ மிகவும்‌ சக்தி வாய்ந்ததாம்‌. பல‌ ஆண்டுகளுக்குப் பிறகு மாதாந்திரப்‌ பெளர்ணமி கிரிவலமானது தெய்வீக ரீதியாக, அருணாசலத்தில்‌ தற்போது ஆன்ம மறுமலர்ச்சி (spiritual regeneration) கொண்டுள்ளது போல்‌, அருணாசல மாத சிவராத்திரி கிரிவலத்தையும்‌, பெளர்ணமி கிரிவலம்‌ போல்‌ சிறப்படையச்‌ செய்ய வேண்டியது பக்தர்களுடைய பெருங்‌ கடமையாகும்‌.

லட்சக்‌ கணக்கானோர்‌ பக்தியுடன்‌ திரளும்‌ கும்பாபிஷேகம்‌, கும்பமேளா போன்ற அனைத்து வகை பிரம்மாண்டமான பூஜைகளில்‌ கிட்டும்‌ அளப்பரிய இறையருளானது மாத சிவராத்திரி மற்றும்‌ பெளர்ணமி தினங்களில்‌ திருஅண்ணாமலையை கிரிவலம்‌ வருவதாலும்‌ மிகவும்‌ எளிதில்‌ அடைவதாகப்‌ பொங்கித்‌ திரள்கின்றது. பல கோடிப்‌ பழம்பிறவி வினைகளைக்‌ களைவதற்கான வேதமா சக்திகளையும்‌, புண்ய சக்திகளையும்‌ ஒருவா்‌ தன்னுடைய தூல, சூட்சும, காரண, சரீர வடிவுகளில்‌, அருணாசல கிரிவலப்‌ பலன்களாகப்‌ பெறுகின்றார்‌. ஆனால்‌ இவை அனைத்தையும்‌ விரயம்‌ செய்யாது குருவருளுடன்‌ காத்து, நன்னெறியில்‌ செலுத்துதல்‌ மிகவும்‌ முக்கியமானதாம்‌.

கலியுக மனித சமுதாயம்‌ மறந்து விட்ட, கை விட்டு விட்ட மங்கள சதுர்த்தி, பவித்ரா ரோபண விரதம்‌, சர்வ காமதா ஏகாதசி, ஷடசீதி போன்ற பல பூஜைகள்‌, பண்டிகைகள்‌, விரத பலன்களை, வேத சக்திகளை ஓரளவேனும்‌ மீண்டும்‌ பெறும்படி செய்யவே, சித்தர்களும்‌, மகரிஷிகளும்‌ அருணாசலத்தில்‌ மாத சிவராத்திரி மற்றும்‌ பெளர்ணமி கிரிவலங்களை, அற்புதச்‌ சமுதாயக்‌ கூட்டு இறைவழிபாடுகளாக மலர வைத்துள்ளனர்‌.

பார்வதியின்‌ கிரிவலப்‌ பிரார்த்தனைகள்‌!

பூலோக ஜீவன்களைக்‌ காத்திடும்‌ இறைநல்வரங்களைப்‌ பெற்றுத்‌ தந்திடவும்‌, ஸ்ரீபிராம்ராம்பிகையாக அவதரித்துப்‌ பர்வத மலையில்‌ ஸ்ரீமல்லிகார்ஜுன சுவாமியை மணந்திடும்‌ பாக்யத்தைப்‌ பெறவும்‌ அன்னை பார்வதி தேவி, மாத சிவராத்திரி தோறும்‌ அருணாசலத்தை கிரிவலம்‌ வந்திட்டாள்‌.

திருஅண்ணாமலை வரப்பிரசாத மலையாகக் கலியுகத்தில்‌ ஆக்கி ஜீவன்களுடைய துன்பங்களைக்‌ களைதல்‌ வேண்டும்‌, எம்‌ மஹேஸ்வரா! என்று ஒரு யுகத்தில்‌ அம்பிகை வேண்டிட்டாள். எனவே இதற்கான தேவசங்கல்பமாகவும்‌ அந்த யுகத்தின்‌ சித்ரபானு ஆண்டில்‌ ஆவணி மாதசிவராத்திரியில்‌ அம்பிகையாம்‌ பார்வதி தேவியின் கிரிவலம்‌ கனிந்தது.

மேலும் "வரப்பிரசாத மலையான" அருணாசல கிரிவல வழிபாடானது, கலியுகத்தில்‌ “மக்களுக்குத்‌ தேவையான” பிரார்த்தனைகளையும்‌ நிறைவேற்றித்‌ தரும்படி வேண்டி ஐகன்மாதா பார்வதி தேவி, மானுட வடிவில்‌ பர்வத குமாரியாகவும்‌ ஒரு யுகத்தில்‌ அருணாசல கிரிவலம்‌ வந்த விசேஷ தினமே ஆவணி மாத சிவராத்திரியாம்‌! ஆதிபராசக்தியின்‌ இவ்வரிய அனுபூதியே தற்போது, இறையருளால்‌, கலியுக ஜீவன்களின் மேன்மைக்காக, வரும்‌ ஆவணி மாதசிவராத்திரியில்‌ அம்பிகை கடைபிடிக்கும்‌ “பர்வத அருணாசல” யாத்திரையாகவும்‌ மீண்டும்‌ கனிகின்றது.

உமையவளாம்‌ பார்வதி தேவி கடைபிடித்த 32 அறப்பணிகளின்‌ தேவ சக்திகளுடன் இணைந்த கிரிவலப் பலன்களையும்‌ இத்திருநாளில்‌ வெகு விசேஷமாகப்‌ பெற்றிடலாம்‌.

பர்வதமலை முதல்‌ அருணாசலம்‌ வரை பார்வதி தேவியின்‌ பெருவல நடை!

இவ்வாறாக, இமவான்‌ புத்திரியாக, மானுடப்‌ பெண்ணாய்ப்‌ பிறந்த பர்வத குமாரி, சிவமே பவம்‌, பவமே சிவம் என ஞானப்‌ பிரகாசம்‌ கொண்டு, நீண்ட நெடுந்‌ தவம்‌ புரிந்து, பல யுகங்களில்‌ அருணாசலத்தைக்‌ கிரிவலம்‌ வந்து, ஈஸ்வரனைப்‌ பூஜித்த இரவுக்‌ காலமே மாதசிவராத்திரியாகக்‌ கலியுகத்தில்‌ மலர்ந்துள்ளது.

அம்பிகையின்‌ பெரு நடை என்பதற்கு, “பிரபஞ்சத்தினும்‌ விரிந்தது'' என்ற ஆன்மப்‌ பொருளும்‌ உண்டு. அனைத்து சிவராத்திரிகளிலும்‌ அம்பிகையின்‌ கிரிவல பூஜை உண்டெனினும்‌, பர்வத குமாரியாய்‌, சித்ரபானு வருட ஆவணி மாத சிவராத்திரியே மானுட ரூபத்தில் அம்பிகையே மன‌முவந்து அருள்கின்ற கிரிவல யாத்திரையாகும்‌. அஷ்ட லக்ஷ்மீ தேவியரும்‌, குபேர பகவானும்‌ இன்னோரன்ன சித்தர்களும்‌, மகரிஷிகளும்‌ இந்த பர்வத அருணாசலத் திருயாத்திரையிலும்‌, அருணாசல கிரிவலத்திலும்‌ அன்னையாம்‌ பர்வத குமாரி தேவியைத்‌ தொடர்கின்றனர்.

எவர்‌ வடிவில்‌, எந்தெந்த ரூபங்களில்‌ ஆதிபராசக்தி பர்வத மலையில்‌ இருந்து அருணாசலப்‌ புனித பூமிக்குப்‌ “பெருவல நடை” மேற்கொள்கின்றாள்‌ என்பது பிரம்ம ரகசியமாகும். சற்குருவின்‌ இந்த வேத ப்ரகாச வாக்கியங்களில்‌ ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு இன்று அருணாசலத்தை கிரிவலம்‌ வருவோர்க்கு, சிறுமியாய்‌, மூதாட்டியாய்‌ எந்த மானுட வடிவிலேனும்‌ “பர்வத அருணாசலப்‌ பெரு நடை வரும்‌”, அம்பிகையை, பார்வதியை, ஆதிபராசக்தியை தரிசிக்கும்‌ பாக்கியம்‌ நிச்சயமாகக்‌ கிட்டும்‌.

வழநாத வெளிப்‌ பிரவாகச்‌ சித்தர்

 பர்வத குமரியாம் அகிலாண்டேஸ்வரிக்கு, பர்வதமலையில் இருந்து அண்ணாமலை கிரிவலம்‌ நிறைவுறும்‌ வரை முடிவில்லாத தலைப்பாகிய அருணாசல மகிமைகளை அன்னைக்கு உரைத்தவாறே, அம்பிகையுடன்‌ வருபவரே “வழநாத வெளிப்‌ பிரவாகச்‌ சித்தர்‌” ஆவார்‌! இவரே தெய்வத்‌ தமிழ்மொழிக்கு ஆத்ம சக்திகள்‌ நிறைந்த, “ழகர”, “ளகர”, “லகர” பீஜாட்சர சப்தங்களைப்‌ பெற்றுத்‌ தந்தவர்‌.

“வழநாலள” யோகநாதம்‌

வழநாலளம்‌ என்பது யோக நாத சப்தவகை யோகங்களில்‌ ஒன்றாம்‌. அதாவது நாக்கை உள்ளே சுருட்டித்‌ தொண்டைக்குள்‌ வைத்து யோகிக்கும்போது “லலாடங்க” யோக நாதத்தில்‌ எழுவதே வழநாலள நாத யோகமாகும்‌. இவ்வாறாக, இருதயத்தில்‌ உறையும்‌ ஆத்ம ஜோதியில்‌ பொலியும்‌ உள்ஒலியை, பிரம்மப்‌ பிரணவ சப்தத்தை, வெளி உலகிற்குப்‌ பயன்படும்‌ வகையில்‌ வெளிப்படுத்தும்‌ அற்புத “வழநாலள” யோக சாதனத்தில்‌ கரைகண்டவரே "வழநாத வெளிப்‌ பிரவாகச்‌ சித்தர்பிரான்!"

"ழ" என்று சொல்லும்போது உள்நோக்கி நாக்கு உருண்டு சப்த நாளத்தைத்‌ தொண்டைக்குள்‌ செலுத்தி ஆத்மத்தை நோக்கிச்‌ சென்று ஒலிப்பதையும். "ள" என்று சொல்கையில்‌ வெளிப்‌ பிரவாகமாகப்‌‌ பிரணவ சப்தம்‌ வருவதையும்‌ நீங்களே உணரலாம்‌.

குழையாலாட்டி வளகுதம்பைமேனி, பழலொளி படுவேட்டு மேனி, தரலழக மிளகொடு பொடுமேனி ஆகிய ழகர, ளகர, லகர பீஜாட்சர சக்திகள்‌ நிறைந்த மூன்று மூலிகைகளின்‌ மூன்று இலைகளை மட்டுமே உண்டு, வழநாத வெளிப்‌ பிரவாகச்‌ சித்தர்‌ நெடுங்காலம்‌ ஜீவித்து என்றும்‌ வாழும்‌ ஏகாந்த ஜோதியாய்ப் பொலிபவர்!

பர்வத குமாரியாம்‌ பார்வதி தேவி பிரபஞ்ச ஜீவன்கள்‌ அனைத்திற்கும்‌ தினமும்‌ ஒவ்வொரு வேளையும்‌ படியளப்பவள்‌ ஆதலின்‌, ஆதிபராசக்தியின்‌ பெருவல நடையின்‌ ஓரடி என்பது அ(௧)ண்ட சராசர பிரம்மாண்டமான பிரபஞ்சத்திற்கும் மேலானதைக்‌ குறிப்பதாம்‌. எனவே பர்வத குமாரி வலம்‌ வருவது, ஆதியும்‌ அந்தமும்‌ இல்லாப்‌ பெருஞ்ஜோதியையேயாம்‌. ஆதியும்‌, அந்தமுமில்லா சிவஅழல்‌ ஆணையிடும்‌ வரை அம்பிகையாம்‌ பர்வத குமாரியின்‌ அருணாசல கிரிவலம்‌ தொடரும்‌. அப்படியானால்‌ பர்வத குமாரியின்‌ திருக்கண்களுக்குப்‌ புலப்படும்‌ திருஅண்ணாமலையின்‌ சுற்றளவை, வடிவை என்னென்பது?

இறையருட்‌ திரட்சிகளாய்த்‌ துலங்கும்‌ பல்லாயிரக்கணக்கான திருஅண்ணாமலை (கிரிவல) மலை தரிசனங்களில்‌ சித்தர்களும்‌, ஞானிகளும்‌, யோகிகளும்‌, மகரிஷிகளும்‌ தங்களுடைய தபோ சக்திகளை, கிரிவலப்‌ பலன்களைப்‌ பதித்து வைத்தாலும்‌, நடைவலமாய்‌ இங்கு அருணையில்‌ கிரிவலம்‌ வந்தால்தானே இறையருளைத்‌ துய்த்து அவரவருள் மெய்யாய் உறையும்‌ ஆத்மமும்‌ ஈஸ்வர ஜோதிப்‌ பிரகாசம்‌ பெறும்.

எனவே கோடானு கோடி ஜீவன்களை இறைநெறிகளில்‌ நன்கு உய்ய வைத்திடவே, பர்வத குமாரியாக அம்பிகையே மானுடப்‌ பெண்‌ வடிவில்‌ வரும்‌ ஆவணி மாத சிவராத்திரியில்‌ தூல, சூக்கும, துரீய, தேவ வடிவுகளில்‌ கிரிவலம்‌ வந்து, கிரிவல பூஜை சக்திகளை கிரிவலப்‌ பாதை எங்கும்‌ நிறைந்திருக்கும்‌ ஒவ்வொரு சிறு மண்‌, கல்லிலும்‌, மர இலையிலும்‌ விண்ணிலும்‌, மண்ணிலுமாக, நீரிலும்‌, நிலத்திலுமாகப்‌ பதிப்பதால்‌, மாத சிவராத்திரியன்று வேதபர்வத மந்திரமாம்‌

“தர நக சிவ உரு சிவா சிவா!”

என்று ஓதியவாறு கிரிவலம்‌ வருவோர்க்கு அளப்பரிய இறைநல்வரங்கள்‌ அருள்‌ நல்வர மழையாய்ப்‌ பொழிகின்றன. ஆன்மீக ரீதியாகப்‌ பல உத்தம நிலைகளை அடைவதற்கான இறைவழித்துறைகள்‌ காட்டப்‌ பெறும்‌.

தொடர்ந்து மூன்று மணி நேரம்‌ நிலைத்து இருக்கின்ற அக்னிக்கு சிவராத்திரியில்‌ மகத்தான காரிய சித்தி நல்வரங்களைத்‌ தருகின்ற தேவ குணம்‌ உண்டு. இருளில்‌ ஒளிர்கின்ற எந்த விதமான அக்னிக்கும்‌ பன்மடங்குப்‌ பலன்கள்‌ உண்டு. நெருப்புக்‌ கோளத்தின்‌ மேல்‌, ஊசிமுனை மீது நின்று கடுந்‌ தவம்‌ புரிந்த பர்வத குமாரியாம்‌ காமாட்சி தேவியே அக்னி வகை வழிபாடுகளில்‌ கிட்டும்‌ பலாபலன்களை அளிக்கின்றார்‌. கடைசி வருட பள்ளி, கல்லூரி படிப்பைக்‌ கொண்டிருப்பவர்களும்‌, நல்ல வேலை மாற்றம்‌ வேண்டுவோரும்‌, கல்லூரி மாணவ மாணவியரும்‌, இம்மாத சிவராத்திரியில்‌ கிரிவலம்‌ வருதல்‌ நன்முறையில்‌ எதிர்கால வாழ்வு அமையப்‌ பெரிதும்‌ உதவிடும்‌.

ரோகிணி நட்சத்திரம்

நட்சத்திரச் சிறப்பு ஆலயங்கள் தொடர்br> ரோகிணி நட்சத்திரத்தில்‌ பிறந்தோர்க்கான ஆயுட்‌ கால வழிபாட்டுத்‌ தலம்‌!

காஞ்சீபுரம் ஸ்ரீபாண்டவ தூதப் பெருமாள் கோயில் (ஸ்ரீகிருஷ்ணர்‌ ஆலயம்‌)

இந்த நட்சத்திர ஆலயத்‌ தொடரில்‌, அந்தந்த நட்சத்திரத்தில்‌ பிறந்தோர்க்கு உரிய ஆயுட்கால வழிபாட்டிற்கான கோயில்‌ விளக்கங்கள்‌, குருவருள்‌ கூடியதாக அளிக்கப்படுகின்றன. இதுவரையில்‌ ரேவதி, கார்த்திகை, திருவாதிரை, அவிட்டம்‌, அனுஷம்‌, சதயம்‌, பரணி நட்சத்திரக்‌ கோயில்கள்‌ வந்துள்ளன.

காஞ்சீபுரம்‌ ஸ்ரீகாமாட்சி அம்மன்‌ ஆலயத்தை அடுத்துள்ள குமரக்‌ கோட்டம்‌ ஸ்ரீமுருகன்‌ திருக்கோயில்‌ அருகே ஸ்ரீபாண்டவ தூத ஸ்ரீகிருஷ்ணப்‌ பெருமாள்‌ ஆலயம்‌ உள்ளது.

ரோஹிணி தேவி, ஸ்ரீகிருஷ்ணரை வழிபட்டு, ஞானயோக நிலைகளை அடைந்து சந்திர பகவானை அடையும்‌ பேற்றைப்‌ பெற்றாள்‌. 27 நட்சத்திர தேவியர்களில்‌, சந்திர பகவான்‌, முதலில்‌ ஞான சக்திகளை உடைய ரோஹிணி தேவியையும்‌. பிறகு அக்னி சக்திகளைக்‌ கொண்ட கார்த்திகை தேவியையும்‌ மணந்த பிறகே, ஏனைய 25 நட்சத்‌திர தேவியர்களையும்‌ மணந்தார்‌. சந்திர பகவானை அடைதற்காக, ரோஹிணி தேவி சென்னை பூந்தமல்லி அருகே உள்ள சித்துக்காடு கிராமத்தின்‌ ஸ்ரீதாந்த்ரீஸ்வரர்‌ சிவாலயத்தில்‌, வலது கால்‌ கட்டை விரலில்‌ மட்டும்‌ நின்று, பல யுகங்களாய்த்‌ தவம்‌ புரிந்து ஒளவையார்‌ போற்றிய “காலால்‌ எழுப்பிக்‌ கருத்தறிவுக்கும்‌” சகஸ்ரபாதாம்புஜ ஞானயோக சக்திகளைப்‌ பெற்றிட்டாள்‌. ஞான யோகத்தில்‌ சிறந்தவளான ரோஹிணி நட்சத்திர தேவி, இந்த சகஸ்ர பாதாம்புஜ ஞான யோக சக்திகளுடன்‌ ஸ்ரீகிருஷ்ணரின் விஸ்வ ரூப தரிசனத்தைப்‌ பெற்றதுடன்‌ இன்றும்‌, தூல, சூட்சும வடிவுகளில்‌ தினமும்‌ வழிபட்டு வரும்‌ தலமே காஞ்சீபுரம்‌ ஸ்ரீபாண்டவ தூதப்‌ பெருமாள் ஆலயமாகும்‌.

மகாபாரதத்தில் ……. ஸ்ரீகிருஷ்ணரை வஞ்சகத்தால்‌ வென்றிட, துரியோதனன்‌ அதல பாதாளக்‌ குழி ஒன்றைத்‌ தோண்டி அதன்‌ மேல்‌ பலகை தாங்கிய ஒரு அரியாசனத்தை வைத்து, இயந்திரப்‌ பொறி ஒன்றை அமைத்தான்‌. ஸ்ரீகிருஷ்ணர்‌ அதில்‌ அமர்ந்தவுடன்‌ அரியாசனத்தின்‌ கீழுள்ள பலகையைத்‌ தகர்த்து அதல பாதாளத்தில்‌ ஸ்ரீகிருஷ்ணரை விழச்‌ செய்து, அங்கு மல்லர்களைக்‌ கொண்டு மாய்ப்பது என்று சதித்‌ திட்டம்‌ வகுத்தான் துரியோதனன்‌. மாயக்‌ கண்ணன் அறியாதது இப்பிரபஞ்சத்தில்‌ ஏதேனும்‌ உண்டா என்ன?

ஸ்ரீகிருஷ்ணரும் வந்திட்டார்‌! …. துரியோதனன்‌ ஸ்ரீகிருஷ்ணரைக்‌ கவிழ்ப்பதற்காக இயந்திரப்‌ பொறியை இயக்கிட.... பலகை தகர்ந்து பாதாளத்தில்‌ விழுந்தது! ஆனால்‌ ஸ்ரீகிருஷ்ணரோ கட்டை விரலால்‌ தரையை அழுத்தி, பிரம்மாண்டமான விஸ்வருபம்‌ கொண்டு ...... விண்ணிற்கும்‌, மண்ணிற்குமாய்‌.... விஸ்வரூபம்‌ புனைந்து எழுந்தார்‌! பாண்டவ தூதப் பெருமாளாம்‌ ஸ்ரீகிருஷ்ணபிரானாய்‌!

இக்கோலத்தில்‌ தாம்‌.... ஸ்ரீபாண்டவ தூதப்‌ பெருமாளாக, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா மிகவும்‌ அபூர்வமான அமர்ந்த கோலத்தில்‌.... சுமார்‌ 30 அடி உயரத்தவராய்‌ ... விஸ்வரூபக்‌ கோலத்தில்‌ இவ்வாலயத்தில்‌ திவ்யமாகக்‌ காட்சி தந்து அருள்கின்றார்‌.

ரோஹிணி நட்சத்திரத்‌ தினத்தில்‌ ரோஹிணிச்‌ சக்கரத்தை ஸ்ரீகிருஷ்ணனின்‌ திருவடிகளில்‌ வைத்து, ரோஹிணி நட்சத்திரக்காரர்கள்‌ இங்கு ஆயுள்‌ முழுதும்‌, அவ்வப்போது வழிபட்டு வருதலால்‌ நட்சத்திர சகாய நல்வரங்கள்‌ அபரிமிதமாகக் கிட்டும்‌.

இங்கு ரோஹிணி நட்சத்திர தூபம்‌ ஏற்றி, தூபம்‌ சாந்தமாகும்‌ வரை ஆலயத்தில் அடிப் பிரதட்சிணமாக வலம்‌ வந்து, தியானித்து கண்ணனுக்கு ப்ரீதியான வெண்ணெய் கலந்த அடை போன்ற வெண்ணெய், முறுக்கு, சீடை, பட்சணங்களை ஏழைகளுக்குத்‌ தானமாக அளித்து வழிபட்டிடில்‌, பக்கத்து வீடு, அடுத்த கடை, அடுத்த நிலச்‌ சொந்தக்காரர்கள்‌ மற்றும்‌ உறவினர்களால்‌ ஏற்படும்‌ துன்பங்கள்‌ தீரப்‌ பெறுவர்‌. நன்முறையில்‌ உத்தியோகம்‌, வியாபாரம்‌, தொழில்‌, விவசாயம்‌ தொடர்வதற்கான நல்வழிகளையும்‌ பெற்றிடலாம்‌.

ஸ்ரீகிருஷ்ணர் தம்‌ பாதங்களை அழுத்தி விஸ்வபாத யோக சக்திகளைக்‌ கொண்டு அருளும்‌ தலம்‌! பிரபஞ்சத்தின்‌ விஸ்வ ரூப ஸ்ரீகிருஷ்ண பூமியும்‌ கூட! ஸ்ரீருக்மணி தேவியும்‌ பூம்ய சக்தி நிறைந்தவளாதலின்‌, பூமியின்‌ ஆகர்ஷண சக்திகள்‌ இங்கு வேதாக்னிப்‌ பூர்வமாக நீரோட்டங்‌ கொண்டுள்ளன! எனவே இங்கு அடிப்‌ பிரதட்சிணம்‌ மற்றும்‌ அங்கப்‌ பிரதட்சிணங்களை மேற்கொள்தலால்‌ அடிப்‌ பிரதட்சிணம்‌, அங்கப்‌ பிரதட்சிணம்‌ செய்வோரின்‌ 72000 அங்க நாடிகளிலும்‌ விஸ்வ பூம்ய ஆகர்ஷண சக்தி நன்கு பரிணமித்து, சோகங்களுக்கும்‌, துன்பங்களுக்கும்‌ நல்ல நிவர்த்திகளைத்‌ தரும்‌.

பாண்டவர்களுக்கு ஏற்பட்டது போல்‌ பலத்த சோதனைகள்‌ வாழ்வில்‌ பலருக்கும்‌ ஏற்படும்‌ போதெல்லாம்‌ இங்கு ஸ்ரீகிருஷ்ணரை வழிபட்டிட சோகங்களுக்கும்‌, துன்பங்களுக்கும்‌ தக்க நிவா்த்திகள்‌ கிட்டும்‌. புதன்‌, சனி, ரோஹிணி, அஷ்டமி திதி, எட்டாம்‌ தேதிகளில்‌ இங்கு வழிபடுதல்‌ மிகவும்‌ சிறப்புடையதாம்.

ரோஹிணி நட்சத்திரக்காரர்கள் மிகவும்‌ விசேஷமாகத்‌ தம்‌ ஆயுள்‌ முழுதும்‌ ரோஹிணி தூபம்‌ ஏற்றித்‌ தாங்கி வந்து வழிபட வேண்டிய தலம்‌! மிகச்‌ சிறந்த இறைச்‌ சேவையாக இங்கு ஏழைப் பிள்ளைகளுக்கு, ரோஹிணி தூபங்களை, வழிபாட்டிற்காகத்‌ தானமாக‌ அளித்து, தூபங்களைத்‌ தாங்கியவாறு இவ்வாலயத்தை அடிப் பிரதட்சிணமாக வலம்‌ வரச் செய்தல்‌ மகத்தான‌இறைப்பணி ஆகும்‌. இந்த ஆலயத்தில்‌ ரோஹிணி நட்சத்திர தூபத்தை எந்நாளிலும்‌ எந்நேரமும்‌ ஏற்றி வழிபடலாம்‌.

ரோஹிணி நட்சத்திர மண்டலத்தின்‌ அபூர்வமான தேவ சக்தி என்னவென்றால்‌, இம்மண்டலத்தில்‌ உள்ள ஆலயங்களில்‌, தெய்வ மூர்த்திகள்‌ யாவரும்‌, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீநர்தன விநாயகர்‌, ஸ்ரீகோதண்ட .ராமர் என அனைத்து மூர்த்திகளுமே தக்கோலம்‌ சிவாலயம்‌ போல, அமர்ந்த நிலையிலேயே காட்சி அளிப்பர்! தர்பைச்‌ செடிகள்‌ கூடிய வனங்கள்‌ நிறைந்ததே ரோஹிணி புனித பூமியாதலின்‌ இங்கு, தர்பாசனத்தில்‌ யோக நிலை பூண்டு, பல்லாயிரக்கணக்கான சித்தர்கள்‌, மகரிஷிகள்‌ பல கோடி யுகங்களாக அமர்ந்துள்ளனர்‌. இதனால்தாம்‌ நம்‌ பெரியோர்கள்‌, சிறு குழந்தையானது படுத்த நிலையில்‌ இருந்து தவழ்ந்து, உட்காரும்‌ நிலை வருகையில்‌ முதன்‌ முதலாக மா, பலா மரத்தாலான ரோஹிணி சக்கரப்‌ பலகையில் அமர வைப்பார்கள்‌!

மேலும்‌ ஸ்ரீசண்டிகேஸ்வரர்‌ போன்ற யோக அமர்நிலை தெய்வ மூர்த்திகளைப்‌ பிரதிஷ்டை செய்யும்போது ரோஹிணி நட்சத்திர நாளில்‌ பிரதிஷ்டை செய்வது மிகவும்‌ உத்தமமானதாகும்‌. 27 நட்சத்திர தேவியரை மணக்கும்‌ முன்னர்‌, சந்திர பகவான் முதலில்‌ ரோஹிணி தேவிக்கும்‌ பிறகு கார்த்திகை தேவிக்கும்‌ மாங்கல்யம்‌ சூட்டியமையால்‌, ரோஹிணிக்குள்‌ ஏனைய 26 நட்சத்திரங்களும்‌ அடக்கம்‌ என்பதால்தான் 27 நட்சத்திர தேவியர்கள்‌ சமேத‌ சந்திர பகவானை தரிசித்த பலனை, ரோஹிணி மற்றும்‌ கார்த்திகை சமேத சந்திர பகவானை (மதுரை) வழிபடுவதால் பெற்றிடலாம்.

பௌர்ணமி நாள்: பௌர்ணமி நாள்: 20.9.2002 வெள்ளிக்கிழமை மாலை 5.18 மணி முதல் 21.9.2002 சனிக் கிழமை இரவு 7.29 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பௌர்ணமி திதி அமைகிறது.

கிரிவல நாள்: 20.9.2002 வெள்ளிக் கிழமை இரவு

5.9.2002 வியாழக்கிழமை பகல் 3.22 மணி முதல் 6.9.2002 வெள்ளிக்கிழமை பகல் 12.11 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி செப்டம்பர் மாத சிவராத்திரித் திதி நேரம் அமைகின்றது.

செப்டம்பர் மாத சிவராத்திரி கிரிவல நாள்: 5.9.2002 வியாழக்கிழமை இரவு.

அமுத தாரைகள்

பௌர்ணமி தூபம் தாங்கி பௌர்ணமி நாட்களில் திருஅண்ணாமலை, மலைக் கோட்டை, திருக்கோளக்குடி, குன்றத்தூர், அய்யர்மலை போன்ற மலைத் தலங்களிலும் கிரிவலமும் அனைத்து ஆலயங்களிலும் அடிப் பிரதட்சிணமும் செய்து வழிபட்டு அரிய பலன்களைப் பெற்றிடுவீர்.

சனி பகவான் நீராடிய எட்டு சகஸ்ர தச (80000) தீர்த்தங்கள்

தற்காலத்தில் சனி தசையில் தம்முடைய கர்ம வினைகளால் வாடுவோர் நிறைய உண்டு. அவரவருடைய குறித்த பல கர்ம வினைகள் உதாரணமாக முறையற்ற காமத் தீவினைகள், தீய எண்ணங்கள், பகைமை, விரோதம், குரோதச் செயல்கள், பிறரை ஏமாற்றுதல், வஞ்சித்தல், சொத்தை அபகரித்தல் போன்ற கர்ம வினைகளுக்கான துன்பங்கள் சனி தசை, புக்தி, அந்தரக் காலத்தில் நோய்கள், நஷ்டங்கள், வறுமை, பணக் கஷ்டங்களாக வந்து மொய்க்கும். இதற்காக சனி பகவானையோ, சனி தசையையோ நிந்தித்தல் கூடாது. மேற்கண்ட துன்பங்களுக்கு தீர்வுகளைத் தருபவராகவே சனீஸ்வரர் விளங்குவதாலும் ஆயுள்காரக மூர்த்தியாக இருப்பதாலும் நாம், ஒவ்வொரு விநாடியும் ஆயுளுடன் நன்கு வாழ சனீஸ்வரரின் அனுகிரகம் தேவையானதாகும். மேற்கண்ட தீவினைகள் கலியுகத்தில் பெருக்கெடுப்பதால், சனீஸ்வர வழிபாடு மேலும் நன்கு விருத்தியடைய வேண்டும். இதற்காகவே சனீஸ்வர பகவான் தினமும் பிரபஞ்சமெங்கும் எண்ணற்ற தீர்த்தங்களில் நீராடி அவற்றின் பலாபலன்களைக் குறித்த சில தலங்களில், தீர்த்தங்களில், தல விருட்சங்களில், திரவியங்களில் சேர்க்கின்றார்.

சனிபகவான் நீராடும் தீர்த்தங்கள் சகஸ்ர தச விபூதி சக்திகளைக் கொண்டவை. அதாவது ஒரு தீர்த்தத்தில் நீராடி சனிபகவான் அதன் சக்திகளை ஒரு எள் மணியில் சேர்த்திட அந்த எள் பத்தாயிரம் மடங்காகும். இதே போல பூலோக ஜீவன்களுக்கு பூமியின் அஷ்ட திக்குகளிலும் சனிபகவான் எட்டு முக்கியமான தீர்த்தங்களில் நீராடி அவற்றை எட்டு எள் மணிகளில் நிரப்பி வந்திட, அவை 8 x  10,000 = 80,000 தீர்த்தங்களின் நீராடல் பலன்களை அளிக்கின்றன. எனவே சனீஸ்வர பகவான் பல கோடித் தீர்த்தங்களில் நீராடி அதன் பலாபலன்களை எட்டு சகஸ்ர தச விபூதித் தீர்த்தங்களில் 80,000 தீர்த்த நீராடல் பலன்களாக அளிப்பதால் மந்த கச்ச வேக தூபத்தில் நல்லெண்ணெய் விட்டு தீபமேற்றி வழிபடுதல் மிகவும் சிறப்புடையதாகும்.

வாஸ்து நாளில் ஸ்ரீஜகதீஸ்வரர் பூஜை!

சில தலங்களில் (உ-ம். சென்னை ஸ்ரீகபாலீஸ்வரர் ஆலயம்) ஸ்ரீவாஸ்து மூர்த்திக்கு விஸ்வ ரூப தரிசனம் தந்த ருத்ர சிவ மூர்த்தியே, ஸ்ரீஜகதீஸ்வர சிவலிங்கராக அருள்பாலிக்கின்றார். ஸ்ரீஜகதீஸ்வரரே பூமி சம்பந்தமான வாஸ்து பூஜைகளுக்கான மூர்த்தியும் கூட! வாஸ்து நாளில், குறிப்பாக வாஸ்து நேரத்தில், 90 நிமிடங்களுக்கும் “ஷடாட்சபலவாரி” பூஜையாக, ஸ்ரீவிஷ்ணுபதி பூஜை, சிவராத்திரி பூஜை போலத் தொடர்ந்து ஐந்து வாஸ்து கால பூஜைகளை, அபிஷேக ஆராதனைகளை ஸ்ரீஜகதீஸ்வரருக்கு நிகழ்த்தி வருதல் வேண்டும். ஸ்ரீராமர் வந்து வழிபட்ட தலமே சென்னை ஸ்ரீகபாலீஸ்வரர் ஆலயமென்பது பலரும் அறியாததாகும்.

ஸ்ரீஜகத்ரெட்சக பெருமாள் ஆலயம் ஆடுதுறை

இங்குள்ள ஸ்ரீஜகதீஸ்வர லிங்க மூர்த்திக்கு வருடத்தின் எட்டு வாஸ்து நாட்களிலும், செவ்வாய்க் கிழமை செவ்வாய் ஹோரை, சனிக் கிழமை சனி ஹோரைகளிலும் ஸ்ரீவாஸ்து பூஜைகளை, அபிஷேக ஆராதனைகளை நன்முறையில் நிகழ்த்தி வர, வாஸ்து நியதி மீறல் குற்றங்கள், தோஷங்கள் நீங்கி வீடு, வாசல், நிலபுலன்கள், தொழிற்சாலை, அலுவலகம் விருத்தியாகும். கட்டிடத் தடங்கல்களும் நீங்கும்.

அங்கமாலைத் துதிப் பலன்களைத் தரும் அருணாசல கிரிவலம்!

திருஅண்ணாமலை கிரிவலம் என்பது ஒரு விரத பூஷண நடை பூஜை வகையாம். மற்ற வகை பூஜைகளை விட, அருணாசல கிரிவலத்தில்தாம் ஒவ்வொரு ம‌னிதனிடமும் உறையும் ஒன்பது தூல, சூக்கும, காரண சரீரங்களும், தலை முதல் பாதம் வரையான அனைத்து அங்கங்களும், 72000 நாடிகளும் பரிபூரணமாக, முழுமையாகப் பங்கு பெறுகின்றன. கேசாதி பாதம், பாதாதி கேசம் என இறைவனின் அங்கங்களைப் போற்றுவதான அங்கமாலை ஒதிய பலாபலன்களைத் தர வல்லதே அருணாசல கிரிவலமாம்.

ஆன்மீக பொக்கிஷமாக, ஹோமம், விரதம், காவடி, விளக்கு பூஜை, அர்ச்சனை, அபிஷேக, ஆராதனைகள் எனப் பலவிதமான வழிபாட்டுப் பலன்களை, அருணாசல கிரிவலம் ஒருமித்துத் திரட்டித் தருகின்றது.

எவ்வித வித்யாசமும், ஜீவ பேதமும் இன்றி, பலரும் ஒன்று கூடி ஆற்றுகின்ற பிரம்மாண்டமான சத்சங்கக் கூட்டு வழிபாடாகவே, கலியுகத்தில் அண்ணாமலை கிரிவலத்தைச் சித்தர்கள் போற்றுகின்றனர். ஒவ்வொரு அருணாசல கிரிவலத்திலும், பல்கிப் பெருகும் மகத்தான அரும் பெரும் நல்வரப் பலன்களை, பல தலைமுறைகளுக்கான புண்ய சக்திகளையும் ஒருவர் தன்னையும் அறியாது, ஒவ்வொரு கிரிவலத்திலும் தன்னுடைய ஒன்பது தூல, சூக்கும, காரண சரீரங்களில் நிரப்பிப் பெற்றுச் செல்கின்றார். ஆனால் இத்தகைய தேவ சக்திகளை, புண்யா பலன்களை தேவையற்ற எண்ணங்களில், தீவினைகளில், பேராசைகளில் விரயம் செய்யாது கட்டிக் காத்திட வேண்டுமே!  அருணாசல கிரிவல சக்திகளைக் காத்திட சற்குருவைச் சரணடைக!

அரண்மனைப்பட்டி

திரும‌ணத் தடங்கல்களை நீக்கும் கொன்றையடி விநாயகர்!

குறைந்த கல்வி, வசதியில்லாமை, கறுப்பு நிறம், வேலையின்மை, அழகின்மை போன்ற பல காரணங்களால், தன் பெண்களுக்குத் திருமணம் நடக்குமோ, நடக்காதோ என்று பலத்த மன வேதனைகளுடன் வாழ்கின்ற  பெற்றோர், அரண்மனைப் பட்டி கொன்றையடி விநாயகருக்கு, வியாழக் கிழமை அன்று ராகு கால நேரத்தில் (பகல் 1 1/2 - 3 மணி), பால் பொங்கல் படைத்து, தலையில் 12, 21, 30 என்ற மூன்று கூட்டுத் தொகை வரும்படியான எண்ணிக்கையில் மஞ்சள் பூசிய முற்றிய தேங்காய்களைச் சுமந்து, பக்தியுடன் அடிப் பிரதட்சிணம் வந்து, ஒன்பது தேங்காய்களைச் சிதறு காய்களாக உடைத்து , மீதித் தேங்காய்களைத் தாம்பூலத்துடன் ஏழைச் சுமங்கலிகளுக்குத் தானமாக அளித்து முழங்கால் பிரதட்சிணமும் செய்து உளமாற வேண்டி வர, தேங்காய்களின் முக்கண் சக்தியால், திருமணத் தடங்கல்கள் நீங்கி, குரு பார்வை நெறிப்படுத்தப் பட்டு, நன்முறையில் திருமண வாழ்வு அமைய நல்வழிகள் பிறக்கும்.

தூர்வாஷ்டமிக் கரிநாளில் 80000 புண்ய தீர்த்த நீராடல் பலன்களை நல்கும் ஸ்ரீசனீஸ்வரர்!

ஸ்ரீசனீஸ்வரப் பெருமான் 80000 பூலோகத் தீர்த்தங்களிலும் நீராடி, ஸ்ரீபைரவேஸ்வரரை வழிபடுகின்ற விசேஷ தினமே தூர்வாஷ்டமியுடன் கரிநாள் கூடும் விசேஷ நாளாகும். இந்நாளில் பைரவரையும், ஸ்ரீசனீஸ்வரரையும் பக்தியுடன் வழிபடுவோர்க்கு, 80000 தீர்த்த நீராடல் பலன்களை ஸ்ரீசனீஸ்வரரே நல்வரங்களாகத் தருகின்ற மகத்தான கரிநாள் பூஜை தினமும் இதுவே!

தூர்வாஷ்டமியில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபைரவேஸ்வரர், ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவரை வழிபட்ட சனீஸ்வரர்!

தூர்வம் என்றால் அருகம்புல்தானே! வெறும் அருகம் புல்லை மட்டுமே உண்டு உறையும் தூர்வாச மகரிஷி, கும்பகோணம் - திருநல்லூர் அருகே உள்ள மாளாபுரம் முப்புரி விநாயகரிடம் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கான மூல மந்திர உபதேசங்களைப் பெற்று, ஸ்ரீஅகஸ்தியர் பூஜித்து வந்த ஆடுதுறை ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவரைப் பல கோடி யுகங்கள் வழிபட்டு, பைரவ மூர்த்திகளுக்கு எல்லாம் ஈஸ்வரரான சக்குவாம்பாள்புரம் ஸ்ரீபைரவேஸ்வரருடைய தரிசனத்தைப் பெற்ற விசேஷ தினமே கரிநாளும், தூர்வாஷ்டமியும் கூடிய தூர்வாஷ்டமி விசேஷ தினமாகும்!

சனிப் பரணிச் சித்தர்

தூர்வாஷ்டமி, பரணி, கரிநாள், சனிக்கிழமை ஆகிய நான்கும் கூடிய 1008 நாட்களில் அரிய பைரவ, தூர்வாஷ்டமி விரதங்களைக் கடைபிடித்து ஸ்ரீதூர்வா கணபதி, ஸ்ரீபைரவரேஸ்வரருடைய திவ்யமான தரிசனங்களைப் பெற்றவரே சனிப்பரணிச் சித்தர் ஆவார்! இந்நான்கும் கூடிய 1008 நாட்களைப் பெறுதல் என்றால் எத்தனை லட்சம் யுகங்களில் பக்திப் பூர்வமாக சனிப் பரணிச் சித்தர் தவம் புரிந்திருக்க வேண்டும் எனச் சிந்தையாலா கணிக்க முடியும்? பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துக் கோடி காக்கைகளும் இவரையே தம் குருவாக ஏற்றுள்ளனர். காக்கைகள் திடீரென்று கூட்டம் கூட்டமாக ஓரிடத்தில் குவிந்து "கரைந்து" கொண்டிருந்தால் அவ்விடத்தில் சனிப் பரணிச் சித்தர் காக்கை அல்லது மானிட ரூபத்தில் வந்திருக்கிறார் என்று பொருள். இவ்வரிய காட்சியைக் கண்ட உடனேயே "சனிப் பரணிச் சித்த சிவா! தனித்துணைச் சிவசகாயா!" என்று 108 முறை குடும்பத்தாருடன் சேர்ந்து ஓதி, இயன்ற அளவு ஏதேனும் தான தர்மம் செய்திட காக்கைகள் மகிழ்ந்து, பித்ருக்களுக்கும் ப்ரீதி தந்து ஆசிகளை அளித்திடுவார்! பித்ரு சாபங்களும் தணியும்! என்னே எளிய பூஜை!

தூர்வாஷ்டமியில் நீங்கள் வழிபட வேண்டிய ஆடுதுறை, சக்குவாம்பாள்புரம், சோழபுரம் திருத்தலங்கள்!

எனவே கரிநாள் கூடிய தூர்வாஷ்டமி தினத்தில், ஆடுதுறை ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர், ஆடுதுறை ஸ்ரீசாந்தமல்ய சனீஸ்வரர், சோழபுரம் ஸ்ரீகைலாசநாதர், சோழபுரம் ஸ்ரீமார்த்தாண்ட ஸ்ரீசனீஸ்வரர், கால பைரவ க்ஷேத்திரமான சக்குவாம்பாள்புரம் ஸ்ரீபைரவரேஸ்வரர், இங்குள்ள ஸ்ரீமார்கசகாய சனீஸ்வரர் ஆகிய மூன்று சனீஸ்வர மூர்த்திகளை வழிபடுதற்கு "த்ரயம்பக சோபனம்" என்று பெயர்!  சனிக்கிழமை, கரிநாள் மற்றும் தூர்வாஷ்டமி நாட்களில் "த்ரயம்பக சோபன சனீஸ்வர" வழிபாட்டை மேற்கொண்டு பெறுதற்கரிய சனீஸ்வர கடாட்சத்தைப் பெற்றிடுவீர்களாக.

ஸ்ரீபைரவரும் ஸ்ரீசனிபகவானும் ஆடுதுறை

ஆடுதுறை ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவரை அருகிருந்து வழிபடும் ஸ்ரீசாந்தமல்ய சனீஸ்வரர்!

சனீஸ்வர பகவானுக்கு மிகவும் ப்ரீதியான கஜ பூஜை, யானை தரிசனம், கால பைரவ பூஜை, வலது கை மணிக்கட்டில் காசிக் கயிறு மற்றும் இடுப்பில் புதிதாக அரைஞாண் கயிறு கட்டிக் கொள்தல், ஏழைகளுக்குக் கருப்பு நிற ஆடைகளை தானமாக அளித்தல், கருப்பு நிற வகை உணவு, பழங்கள், கருவேப்பிலை சாதம் தானம் போன்றவற்றை கடைபிடித்து, அஷ்டமி திதி விரதம் பூண்டு, நிறைவாக ஆடுதுறை ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு அபிஷேக ஆராதனைகளுடன் வழிபடுக! இதே விரத நேரத்தில், தாமே விரத பாவனையில் இருக்கும் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் அருகில் இருக்கும் ஸ்ரீசாந்தமால்ய சனீஸ்வர பகவானை வழிபடுதலால், சனீஸ்வரரே பரமானந்தம் கொண்டு அருள்பாலிக்கின்ற அதியற்புதத் தலம்.

மனிதனின் மனச் சுமைகளைத் தாங்கும் மரங்கள்

மனித குலத்தின் நன்மைக்காக எத்தனையோ விலங்குகளும், தாவரங்களும் பல அரிய தியாகச் செயல்களைப் புரிந்து வருகின்றன. இதனை மனித குலம் ஒரு போதும் அறிவதில்லை. சற்குருமார்களை நாடி உணர்வதும் கிடையாது. திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஆயிரக்கணக்கான மரங்கள், கிரிவலம் வருகின்ற பக்தர்களின் வேதனைகளையும், துன்பங்களையும் தாங்களே ஏந்தி அவர்களுக்குப் பலவிதங்களில் துணைபுரிகின்றன. அவர்களுடைய நன்மைக்காகத் தாவரங்களும் பிரார்த்தனைகளைச் செய்கின்றன.

ஒரு மரத்தின் நிழலில் நூற்றுக் கணக்கான மக்கள் நிழலுக்காகத் தங்கும்போது பலரும் பலவிதமான குடும்பப் பிரச்னையோடு வேதனை எண்ணங்களைச் சுமந்து வருகின்றனர் அல்லவா? மரத்தின் நிழலில் அமர்ந்திருக்கும் போது அவர்கள் தம் துன்பங்களை எண்ணி, எண்ணி வருந்தும் போது மரத்தின் இலைகள், பட்டைகள், வேர்கள் முதலியன மனிதர்களின் வேதனைகளைச் சுமந்து அவர்தம் துன்பச் சுமையைத் தணிக்கின்றன. ஆனால் மனிதன் இதை உணர்வதில்லை. தனக்கு நிழல் தந்த மரங்களுக்குக் கூட நன்றிப் பிரார்த்தனை செய்வதில்லை. எனவே இனியேனும் மரத்தின் நிழலில் தங்கும் வாய்ப்பு ஏற்படும்போது அந்நிழலில் அமரும் முன்னும், பின்னும் மரத்தைத் தொட்டு வணங்கி, “உன் தியாக சேவைக்கு எம் நன்றிப் பிரார்த்தனையைச் செலுத்துகின்றோம்” என்று நன்றியுடன் வணங்க வேண்டும். “உன்னுடன் சேர்ந்து பிற ஜீவன்களின் நன்மைக்காக நாங்களும் சேர்ந்து பிரார்த்திக்கின்றோம்" என்று அழகாக அந்த மர இலைகளிடமும் பேசி வாருங்கள். இதனால் மர இலைகள் மகிழ்ந்து காற்றில் அசைந்தாடிப் பேரின்பம் கொள்வதை நீங்களே கண்கூடாகக் காணலாம்.

ஸ்ரீகைலாசநாதர் சோழபுரம்

திடீரென்று ஒரு மரம் வெட்டுப் படக் காரணம் என்னவெனில் அதன் வழியே செல்கின்ற அதன் நிழலில் தங்குகின்ற மக்களின், ஜீவன்களின் பலவிதக் கர்மவினைகளைத் தாங்கித் தன்னுள் ஏற்கும் மரத்தால் அவற்றைத் தாள இயலாதபோது வெட்டுப்பட்டு சம்பந்தப் பட்டவர்கள் அனுபவிக்க வேண்டியவற்றை தானே ஏற்றுத் துன்பப்படுகின்றது. ஆனால் சுயநலத்திற்காக, காரணமின்றி மரத்தை வெட்டிடில் வனதேவதைகளின் சாபம் பெருகி சந்ததிகள் மனக் கோளாறுகளினால் பாதிக்கப்படுவர்.

பிரிந்த குடும்பம் ஒன்று சேர உதவும் திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் வழிபாடு!

கணவன் எங்கோ பணி புரிந்து கொண்டு இருக்க, மனைவியோ குழந்தைகளுடன் இன்னொரு இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்க, இவ்வாறு ஸ்திரமற்ற குடும்ப நிலை இன்றைக்கும் பல இல்லங்களில் இருந்து வருகின்றது. அலுவலகப் பணி, குழந்தைகளுக்கான கல்வி, நிலபுல வீடு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் காரணமாக கணவன் - மனைவி பிரிந்து வாழுகின்ற நிலைமை பல குடும்பங்களில் காணப்படுகின்றது. குழந்தைகளுக்கு எந்த வருடத்தில் படிப்பு முடிவது? என்று தம்பதிகள் ஒன்று சேர்வது? இதற்கான முடிவு தான் என்ன?

இவைதாம் இன்றும் பல குடும்பங்களில் தீர்க்க முடியாத பெரும் பிரச்னையாக இருந்து வருகின்றது. தேவகோட்டை திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூர்த் தலத்தில் ஸ்ரீபாகம்பிரியாள் என்னும் அற்புத பராசக்தி தேவியின் திருக்கோயிலில் கணவன்-மனைவி குடும்பத்தாரோடு இரவு தங்கி மனப்பூர்வமாக பக்தியுடன் வழிபட்டால் இப்பிரச்னைக்கு அம்பிகையே தக்கத் தீர்வைப் பெற்றுத் தருவதைக் கண்கூடாகக் காணலாம். சென்னையிலும் திருவொற்றியூர் உள்ளது. இங்கு நாம் குறிப்பிடுவது திருவாடானை அருகே உள்ளது.

தன்னுடைய தேவியை விட்டுப் பல கோடி யுகங்கள் வாழ்ந்த இந்திரன், ஸ்ரீபாகம் பிரியாள் அம்பிகையை வேண்டி இங்கு ஒரு மாத சிவராத்திரியின் போது தங்கி வழிபட்டு, அடுத்த நாள் சூரிய உதயத்திலேயே தன் குடும்பத்துடன் சேருகின்ற அபூர்வமான பாக்கியத்தைப் பெற்றான். மகத்தான சக்தி வாய்ந்த பராசக்தித் தலம்! பலராலும் அறியப்படாதது! எத்தனையோ லட்சாதிபதிகளும், நடுத்தர மக்களும், ஏழை எளியோரும் எவ்வித பேதமும், வித்தியாசமும் இன்றி இங்கு இரவு தங்கி, பூஜித்து அளப்பரிய பயன்களைப் பெற்று வரும் தலம்! கோடீஸ்வரர்களும், பெரிய ராஜ பரம்பரையினரும் கூட சர்வ சாதாரணமாக இங்கு வந்து தங்கிக் கண் கூடாக பலன்களைப் பெற்றுக் கொண்டிருக்கின்ற, அதியற்புதங்கள் நிகழ்கின்ற சக்கி வாய்ந்த தலமே திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் தலமாகும்!

இறைவனின்‌ திருக்கண்களில்‌ உற்பவித்த தமிழும்‌, தேவமொழியும்‌!

தமிழும்‌, தேவமொழியாகிய சமஸ்கிருதமும்‌ இறைவனின்‌ இரு கண்களில்‌ தோன்றிய அட்சர சக்திகளாகும்‌. மனிதர்கள்தாம்‌ எங்கும்‌, எல்லோரிடமும்‌, அனைத்திலும்‌ பரிணமிக்கும்‌ ஆத்ம சக்தியை உணராது மொழி பேதமும்‌, மொழி வெறியும்‌ கொள்கின்றார்களே தவிர, பிரெஞ்சு, லத்தீன்‌, மான்டாரின்‌, ஹீப்ரு, தெலுங்கு என அனைத்துலக மொழிகளுமே தமிழ்‌, தேவமொழிகளின்‌ வழிவந்தவையும்‌, கலைமகளாம்‌ சரஸ்வதி தேவியின்‌ அருட்‌ பரிபாலனத்திலும்‌ திளைப்பவையும்‌ தாம்‌! அனைத்து மொழிகளுக்கும்‌ அருள்பாலிப்பவளே கலைவாணியாம்‌ சரஸ்வதி தேவி! உலக‌ மொழிகள்‌ யாவைக்கும்‌ பெற்றோர்களாக விளங்கும்‌ தமிழ்‌ மற்றும்‌ தேவமொழியின்‌ எழுத்துக்கள்‌ ஒவ்வொன்றையும்‌ அரும்‌ பெரும்‌ சித்தர்களும்‌, மகரிஷிகளுமே கடுந்தவம்‌ புரிந்து கலைவாணியின்‌ நல்வரப்‌ பீஜாட்சர வடிவுகளாகப்‌ பெற்றுத்‌ தந்துள்ளனர்‌

ஆத்மவளம்‌ நிரம்பிய திருமறைகளை உடைய தமிழ்மொழிக்கு வேதாத்ம, வேதாக்னி சக்திகள்‌ நிறைந்த, “ழகர”, “லகர”, “ளகர” பீஜாட்சர சப்தங்களைப்‌ பெற்றுத்‌ தந்தவரே வழநாத வெளிப்‌ பிரவாகச்‌ சிவராத்திரி சித்தர் ஆவார்!

சித்தர்கள், மாமுனிகளின் அனுட்டானத் தலமே பர்வதமலை!

வரும் ஆவணி மாத சிவராத்திரி தன்னுள் அரும் பெறும் மகத்துவங்களைக் கொண்டுள்ளது. விஷ்ணுபதிப் புண்யகாலம் போல், பல புராண அனுபூதிகளை உள்ளடக்கியதே பர்வத குமாரியாகிய பார்வதி தேவியே பர்வத மலையில் தொடங்கி திருஅண்ணாமலையை வலம் வருகின்ற சித்ரபானு ஆண்டின் ஆவணி மாதசிவராத்திரி கிரிவலமாம்!

போளூர் – கடலாடி – தென்பாதி மகாதேவமங்கலம் அருகே உள்ள பர்வதமலைத் திருத்தலமானது சித்தர்களின் சிறப்பான தினசரி வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாகும். அனைத்து சித்தர்களும், மகரிஷிகளும், தேவாதி தேவர்களும், பூலோகத்திற்கு வரும் முன் இன்றைக்கும் தங்களுடைய ஆசார அனுஷ்டானங்களை, நித்ய தேவானுஷ்டானங்களை, பூஜைகளை, யோக நியமங்களை ஆற்றுகின்ற தலமே பர்வத மலையாம்.

பர்வதமலையிலிருந்து கிட்டும்
திருஅண்ணாமலை கயிலை தரிசனம்

தெய்வ மூர்த்திகள், சித்தர்கள், மகரிஷிகள் வலம் வரும் அருணாசலம்!

அந்தந்த நாள், நட்சத்திர, லக்ன, நேர, கரண, யோக நிலைகளுக்கு ஏற்ப, தினமும் திருஅண்ணாமலையை கிரிவலம் வரும் தேவாதி.தேவ மூர்த்திகள், சித்தர்கள், மகரிஷிகள், யோகியர்கள், ஞானிகள், பந்து தரணிப் பித்ருக்கள் என விளக்கும் சித்தர்களின் ஞானபத்ர கிரந்தப் பட்டியலைப் பார்த்தால், எவராலும் நம்ப இயலாத அளவிற்கு ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு நொடியிலும் ஸ்ரீமுருகன், ஸ்ரீஆஞ்சநேயர் முதல் ஸ்ரீஅகஸ்தியர், நாரத மகரிஷி என எத்தனையோ தேவாதி தேவ மூர்த்திகளும், மகரிஷிகளும், ஞானியரும் அருணாசலத்தை கிரிவலம் வந்தவாறுதாம் உள்ளனர். இத்தகைய தெய்வீகக் காட்சிகளை, அருணாசலத்தில் காண்கின்ற அற்புத நேத்ர சக்தியை ஒருவா் பெற்று விட்டால், அவர் திருஅண்ணாமலை புனித பூமியை விட்டு ஒரு விநாடியும் அகலார். எனவேதாம் புனிதமான இல்லற தர்மத்திலும், மிகவும் கடினமான துறவு வாழ்க்கையிலும் சற்குரு மூலமாகவே பரிபூரணமாக உணர்வதாக அருணாசல கிரிவல மகிமை பொலிகின்றது!

“ழகர, ளகர, லகர” அட்சரச் செல்வங்கள்

தெய்வத் தமிழின் அருள்நிறைச் செல்வ அட்சரங்களான “ழகர, ளகர, லகரத்தைச்” சரியாக உச்சரிக்க இயலாதவர்கள் என்னதான் செல்வம் பெற்றாலும் செல்வப் பயனை அடைய இயலாது தவிப்பர். பழந்தமிழ் என்பதைப் “பளந்தமிள்” என்று பீஜாட்சரக் குற்றங்களுடன் சொல்பவர்கள் இன்றும் உண்டு. எனவே ழகர, ளகர, லகரத்தைச் சரியாக உச்சரிக்க இயலாதவர்கள் யாவரும், வரும் ஆவணி மாத சிவராத்திரியில் கிரிவலம் வந்திட, வழநாத வெளிப் பிரவாகச் சித்தரின் அருளால், சொற்குற்றம் களையும் வாக்சக்திகளைத் தரும் நல்வழிகளை அடைவர். செல்வப் பெருவள சக்திகளையும் துய்ப்பர்.

கோடிக் கணக்கான லிங்க தாரண மலை தரிசனங்களை அருணாசல கிரிவலத்தில் ஒருவர் பெறுகின்றார். இப்பூவுலகம் மட்டுமல்லாது பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஆலயங்களின் கோபுர விமான வ‌டிவுகளையும் அருணாசல மலை தரிசனங்களில் காணலாம். எனவே அருணாசல கிரிவலத்தில் உள்ள மலைமுகடுகள் யாவும் எண்ணற்ற ஆலய தரிசனப் பலன்களையும் அளிக்கின்றன. எனவே சர்வ லிங்க மஹாபூஜையாகவும் அருணாசல கிரிவலம் மலர்கின்றது.

ஓதுவீர் வேத பர்வத மந்திரம்தனை!

ஆவணி மாத சிவராத்திரியாகிய இன்றைய தினம் பர்வத குமாரியாம் பார்வதி தேவி, “தர நக சிவ உரு சிவா சிவா!”

என்ற அற்புதமான அருணபர்வத மந்திரத்தை ஜபித்தவாறு கிரிவலம் வருவதால் இன்று இந்த வேதபர்வத மந்திரத்தை ஆழ்ந்த நம்பிக்கையுடன் ஜபித்து சிவராத்திரி கிரிவலத்தை மேற்கொள்வோர்க்கு பர்வத குமாரியாம் ஆதிபராசக்தியின் அனுகிரகங்கள் அபரிமிதமாய்க் கிட்டிட, காரணீயப் பித்ருக்கள் பெருந்துணை புரிகின்றனர். இவர்கள் விநாயகரின் காணாபத்ய லோகத்தைச் சார்ந்தவர்கள். இந்த வேதபர்வத மந்திரத்தைச் சிவராத்திரி காலம் முழுதும் ஓதுவது மிகவும் சிறப்புடையதாம். இதுவரையில் காரணீய பித்ரு லோகத்திற்கு மட்டுமே உரித்தானதாக விளங்கி வந்த இந்த அரிய மந்திரம் தற்போது சித்புருஷர்களால் கலியுக மக்களுக்காகப் பெற்றுத் தரப்பட்டுள்ளது நம் பெரும் பாக்யமே!

மாதம் ஒரு முறையேனும் கிரிவலம் வந்திடுக!

உங்களுடைய வாழ்க்கையில் நாள்தோறும் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்க மட்டுமல்லாது உங்களுடைய மூதாதையர்கள், பித்ருக்களும் தெய்வீக நன்னிலைகளை அடைய உங்களுடைய கிரிவல பலாபலன்கள் மிகவும் தேவையாக இருக்கின்றன என்பதை இனியேனும் உணர்ந்திடுக! கலியுகத்தில் பெருகி வரும் தீவினைகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான தேவ சக்திகளை, ரட்சா சக்திகளைப் பெற்றிட, ஒவ்வொரு குடும்பமும் மாதமொரு முறையேனும், ஏதேனும் ஒரு நாளில், குறிப்பாக, பெளர்ணமி, மாதசிவராத்திரி நாட்களில் திருஅண்ணாமலையில் நிச்சயமாக, கிரிவலம் வந்தாக வேண்டும். எனவே "கூட்டமாக இருக்கிறதே" என சிவராத்திரி, பெளர்ணமி கிரிவலத்திலிருந்து அறியாமையால் ஒதுங்கிடாதீர்கள்! பெளர்ணமியில் இயலாவிடில் அமாவாசைக்கு முதல் நாள் அமையும் மாத சிவராத்திரியிலாவது கிரிவலம் வந்திடுக! மாதசிவராத்திரியில் கிரிவலம் வருதலும் பெளர்ணமியைப் போல, உத்தமமான பலன்களையும், நற்காரிய சித்திகளையும் தந்திடுவதாம்.

கோடிக்கணக்கான லிங்க தாரண மலை தரிசனங்களை அருணாசல கிரிவலத்தில் ஒருவர் பெறுகின்றார். இப்பூவுலகம் மட்டுமல்லாது பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஆலயங்களின் கோபுர, விமான வடிவுகளையும் அருணாசல மலை தரிசனங்களில் காணலாம். எனவே அருணாசல கிரிவலத்தில் உள்ள மலைமுகடுகள் யாவும் எண்ணற்ற ஆலய தரிசனப் பலன்களையும் அளிக்கின்றன. எனவே சர்வ லிங்க மஹாபூஜையாகவும் அருணாசல கிரிவலம் மலர்கின்றது.

நித்யகர்ம நிவாரணி

1.9.2002 - மிதுனத்தில் சந்திரன் வருவதால் மிருக சீரிஷ நட்சத்திரக்காரர்கள் ஐந்து பிள்ளையார் கோயில்களில் ஷோடச கணபதி தூபம் ஏற்றி அன்னதானம் செய்திடில், ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் வரும் சோதனைகளிலிருந்து மீளலாம்.

2.9.2002 - சந்திரன் பூஜித்த சிவன் கோயிலில் திருஆதிரை நட்சத்திர தூபம் ஏற்றி அன்னதானம் செய்திடில் தன் திறமையைத் தவறான வழிக்கு பயன்படுத்தியவர்கள் திருந்தி நல்வழியை நாடுவர்.

3.9.2002 - இன்று சர்வ அஜபா ஏகாதசியாய் அமைவதால் எட்டுப் பெருமாள் கோயில்களில் ஸ்ரீசுதர்சன தூபம் ஏற்றி, சர்க்கரைப் பொங்கல் அன்னதானமும் செய்வதால் எதிரிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.

4.9.2002 - பத்துச் சிவன் கோயில்களில் பிரதோஷ தூபம் ஏற்றி, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கிடில், வீணாக வம்புக்கு இழுக்கின்றவர்கள் விலகிப் போவார்கள்.

5.9.2002 - தர்மராஜா கோயில்களில் (சைதாப்பேட்டை, கோவை போன்றவை) சிவராத்திரி தூபத்தை ஏற்றி, புளியோதரை தானம் செய்திடில், பகட்டாக இருந்து, வறட்டு கெளரவம் பார்க்கும் மனைவி திருந்துவாள்.

6.9.2002 - பெருமாள் கோயிலில் மக நட்சத்திர தூபம் ஏற்றி, தேங்காய் சாதம் தானம் செய்திடில், முடிவு எடுக்க முடியாமல் இருக்கும் காரியத்தில், திடமான முடிவு எடுக்க வழி பிறக்கும்.

7.9.2002 - கன்னியில் சந்திரன் பிரவேசிப்பதால், பெருமாள் ஆலயத் தாயார் சன்னிதியில் அஷ்ட லக்ஷ்மி தூபம் ஏற்றி, குறைந்தது ஐந்து சுமங்கலிகளுக்கேனும் மர வளையல், தாம்பூலம், ரவிக்கை, மஞ்சள், குங்குமம் அளித்து சேவித்திடில் வக்கீல் தொழிலில் இருப்போர் மறைமுக ஆபத்திலிருந்து தப்பிக்கலாம்.

8.9.2002 - பலராமன், பாலு, பார்த்திபன், பாலுசாமி, பாலமுருகன், பாலசுப்பிரமணியன் என்ற பெயருடையோர் இன்று எட்டுப் பெருமாள் கோயிலில், ஸ்ரீதன்வந்த்ரீ தூபம் ஏற்றி அன்னதானம் செய்திடில், அண்ணன், தம்பியின் உதவிகளைப் பெற்று காரிய சாதனை புரிவர்.

9.9.2002 - சிவன் கோயில்களில் திரயோதசி திதி தூபம் ஏற்றித் தேங்காய் சாதம் தானம் செய்திடில் கணினிப் பொறித் துறையில் வேலை செய்வோர்க்கு இடமாற்றம் தற்காலிக நிறுத்தம் பெறும்.

10.9.2002 - நூற்றி எட்டு விநாயகர் கோயில்களில் ஷோடச கணபதி தூபம் கற்பக கணபதி தூபம் ஏற்றி 1000 பேருக்குக் குறையாமல் அன்னதானம் செய்திடில் செவ்வாய் தோஷ துன்பங்கள் விலகி வாழ்க்கையில் நல்ல மாற்றம் காணலாம்.

11.9.2002 - பஞ்சமி தூபம், திதி தீபம் ஏற்றி அம்மன் கோயில்களில் அன்னதானம் செய்திடில் ரிஷிகளின் ஆசியைப் பெறலாம்.

12.9.2002 - இன்று மலைத்தலங்களில் சிவனோடு இருக்கும் முருகனுக்கு விசாக தூபம் ஏற்றி அரிசிப் புட்டு தானம் செய்திடில் மருத்துவத் துறை, வான்வழித்துறையில் இருப்போர் உயர் அதிகாரிப் பதவியைத் தக்க வைத்துக் கொள்வர்.

13.9.2002 - துர்வாச மகரிஷி விரதம் இருந்து சிவனிடம் நல்வரம் பெற்ற நாளிது! எட்டு பேருக்காவது அன்னதானம் செய்து சிவன் கோயிலில் பஞ்சாட்சர தூபம் ஏற்றி வழிபடுவதால் உயர் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாகாமல் தப்பிக்கலாம்.

14.9.2002 - இன்று ஜெய கணபதி தூபம் ஏற்றி மலைக்கோயிலை கிரிவலம் வருவதாலும், அன்னதானம் செய்வதாலும் செய்தித் துறையில் வேலை செய்பவர்கள் நலம் பெறுவர்.

15.9.2002 - வயதான தாய் தந்தையைப் பிள்ளைகள், பெண்கள் சந்தித்து அவர்கள் மனம் மகிழும் வண்ணம் நடந்து ஆசி பெறுவதால் பேத்தி பேரன்களுக்கு வரும் கண்டம் தவிர்க்கப்படும்.

16.9.2002 - இன்று தசமி திதி தீபம் ஏற்றி ஸ்ரீ சுதர்சன மூர்த்தியை வழிபட்டு அன்னதானம் செய்திடில் வேலை செய்யும் பெண்களுக்கு உத்தியோகத்தில் வரும் ஆபத்து விலகும்.

17.9.2002 - இன்று ஸ்ரீநரசிம்மமூர்த்தி கோயிலில் அன்னதானம் செய்திடில் வாகனச் சக்கரங்கள், tyre கம்பெனிகளில் வேலை செய்வோர் நல்ல இடமாற்றம் பெறுவர்.

18.9.2002 - 5 1/2 அடிக்குக் குறைவாக வளர்ந்துள்ளவர்கள் பெருமாள் கோயிலில் அன்னதானம் செய்து குடைதானம் செய்திடுவதால் மாமன் மகளால் வரும் ஆபத்து விலகும் 

19.9.2002 - மூன்று சிவன் கோயில்களில் அஷ்ட பைரவ தூபம் ஏற்றி எலுமிச்சை சாதம் அன்னதானம் செய்திடில் பல் வைத்தியர்கள் நல்ல மாற்றம் காண்பார்கள்.

20.9.2002 - நடராஜ தூபம், பெளர்ணமி தூபம் ஏற்றி சிவன் கோயில்களில் அன்னதானம் செய்திடில் எதிர்பாராத உத்தியோக உயர்வு கிடைக்கும்.

21.9.2002 - உமா மகேஸ்வர விரதம் இருந்து மாங்கல்ய தானம் அன்னதானம் செய்திடில் மருந்துப் பொருள்களை விற்போர் வியாபார விருத்தி அடைவர்.

22.9.2002 - இன்று சரபேஸ்வர தூபம் ஏற்றிப் பாதணி தானம் செய்திடில் பகைவரின் பொறாமைச் செயல் நம்மைத் தாக்காது.

23.9.2002 - கருப்பண்ணசாமி கோயிலில் ரேவதி நட்சத்திர தூபம் ஏற்றித் தேங்காய்த் துருவலில் வெல்லம் கலந்து நைவேத்தியம் செய்து தானம் செய்திடில் உங்கள் சொல்லுக்குப் பிறர் கட்டுப்படுவர்.

24.9.2002 - கால் ஊனமுற்றோர்களுக்கு மருத்துவ உதவி செய்திடில் குடும்ப ஒற்றுமை வளரும்.

25.9.2002 - 21 கோயில்களில் பரணி நட்சத்திர தூபம் ஏற்றி, அன்னதானம் செய்திடில் பெண்களால் வரும் துன்பங்களில் இருந்து விடிவு பெறலாம்.

26.9.2002 - இன்று 152 முருகன் கோயில்களில் கிருத்திகை நட்சத்திர தூபம் ஏற்றி   அன்னதானம் செய்திடில் வீட்டில் இருந்து கொண்டே உறவாடி, சதி செய்பவர்கள் சதி அம்பலமாகும்.

27.9.2002 - அரைத்த மஞ்சள் பூசி, நீராடி, பெண்கள் முருகனின் வஜ்ராயுத பூஜை விரதம் இருந்து, அன்னதானம் செய்திடில் உத்தியோகத்தில் கணவன் மீது வீண் பழி விழாமல் காக்கலாம்.

28.9.2002 - இன்று நாக தேவதைகளை வழிபட்டு பால் தானம் செய்திடில் வண்டி ஓட்டுனர்களுக்கு வரும் துன்பம் குறையும்.

29.9.2002 - இன்று எட்டு வில்வ மரம் தல விருட்சமாக உள்ள கோயில்களில் அஷ்ட லக்ஷ்மீ தூபம் ஏற்றி அன்னதானம் செய்கிடில் கடன் தொல்லை தீரும்.

30.9.2002 - திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் இன்று புது வஸ்திர தானம் செய்திடில் தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையோடு போய் விடும்.

அறியாமையாகிய மாயையே ஆடை !

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam