மதியின் பிழையே ரவியின் பிழையன்று !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

யுகயுகமாய் ஒளிர்கின்ற குருபாதபூஜை! ஜகம் முழுதும் மிளிராதோ குருபாத சேவை! ஸ்ரீஅகஸ்திய விஜயம்தான் அவர் காட்டும் பாதை! நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்! கலியுகத்தில் சற்குரு பரிபாலனம் உண்டா என்பதற்கு அடிமை கண்ட அனுபூதிகள் தாம் “உண்டு! உண்டு! உண்டு!” என ஆணித்தரமாகப் பகுத்துரைக்கின்றன.. சித்தர்களின் குருஅருளால் சிறுவயதிலேயே குருகுலவாசம்தனைச் சிறுவன் பெற்றான் என்று உங்களுக்குப் புரியும் வகையில் எடுத்துரைத்தாலும், கோடானு கோடி யுகங்களாகத் தொடர்கின்ற குருகுலவாசமிது!

குருகுலவாசப் பாடங்களுக்கு எல்லை ஏது? எனவே முக்தி நிலை, மோட்ச நிலை என்பது இறை ஆணைப்படி தாமடைந்த அத்தகைய உத்தம நிலைகளை எல்லாம் பிறர்க்கு ஊட்டிடவே, சற்குருமார்களும், சிஷ்யர்களும் மீண்டும் மீண்டும் தோன்றி, தோன்றித் தோன்றா இறைப் பொலிவோடு புனிதமாகத் துலங்குகின்றார்கள்.! சற்குரு பரிபாலனத்தில் மொத்தத்தில் முடிவில்லாத் தலைப்பாக விளங்குவதே குருகுலவாச அனுபூதிகள்!

கிராத மூர்த்தியாய்ச் சிவபெருமான் அவதாரம் பூண்டு ஸ்ரீபிரம்ம மூர்த்தி பூஜித்த சிருஷ்டிக் கலசத்தில் தோன்றிய ஜீவ அணுக்கள் மீண்டும் கலயத்தை அடையும் வரை குரு-சிஷ்ய அனுபூதிகள் நமக்காக அருளப்பட்டுக் கொண்டே இருக்கும்..! எம் சற்குருநாதராம் ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் குருநாதராம் ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் உய்த்த குருகுலவாச அனுபூதிகள்யாவும் ஜீவன்களுக்கு இறைச் சக்தி ஊட்டும் தெய்வீக மூலிகைச் சாரமாகும்..!

ஸ்ரீதேனுறிஞ்சி பிள்ளையார்
திருபுறம்பியம்

... அங்கோ பெரியவர் மிகவும் நிதானத்துடன் அப்’பேன்’!  குடும்பத்தின் மூத்த வாரிசுடன் பேசிக் கொண்டிருந்தார்.. அவர் கையில், இரண்டு, மூன்று மூலிகைக் கொத்துச் செடிகள் பரிமளித்தன.!  ‘எப்படி, எப்போது அவர் உள்ளே வந்தார்?”

சிறுவனுக்கு ஒருபுறம் அவர் மேல் பெருங் கோபமோ கோபம்! மறுபுறம், தான் நெடு நாளாய் அவரைக் காணாமல் காய்ந்து கிடக்க, நேற்று வந்த பேன் குடும்பத்தை அவர் கவனிக்கப் போய்விட்டாரே என்ற ஆதங்கம் வேறு சிறுவனுக்குத் தொண்டையை அடைத்தது! ஏதேதோ நினைவில் ஆழ்ந்து கிடந்தமையால் சிறுவனால் அவற்றினின்று மீண்டு வர மிகவும் பிரயத்தனப்பட வேண்டியதாயிற்று!

“திருநெல்வேலி பக்கத்துல ஒரு மூலிகை மலை ரேஞ்சுக்குப் போய் அங்க ரொம்ப நாளா அலஞ்சு ரொம்பக் கஷ்டப்பட்டு இதைக் கொண்டாறேன்! இந்த அபூர்வ மூலிகையைத் தலையில் தடவி...!” எனக் கூறிக் கொண்டிருந்த பெரியவருடைய ஒரு சில வார்த்தைகளே சிறுவனுக்குக் காதில் விழுந்தன.!

 ஒரு வாரத்திற்கு மேல் அவரைக் காணாமையால் எதையோ இழந்தவன் போல் உடல் மெலிந்தவனாய், சக்தியற்ற உடம்புடன் எழும்பியவனாய் ஏதோ திக்கித் திணறிக் கொண்டிருந்தான். பெரியவர் எதையும் கண்டுகொள்ளவில்லை! வந்த குடும்பமோ மகிழ்ச்சிக் கடலில் திளைத்தது! ஒருவர் பின் ஒருவராக மிகவும் பவ்யமாய் வந்து மூலிகைக் கொத்துகளை அவரிடமிருந்து வாங்கிக் கொண்டு பக்தியுடன் சிரத்தையுடன் வணங்கிச் சென்றனர்! இக்காட்சி அவனுக்கு ஒருவிதத்தில் மிக்க மகிழ்ச்சியை அளித்தாலும் மறுபுறம் அவன் எதையோ பறி கொடுத்தவன்போல் பித்துப் பிடித்தவனாய் இருந்தான்! காரணம், பெரியவரின் அத்தனை நாள் பிரிவை அவனால் தாள இயலவில்லை! அக்குடும்பம் விடை பெற்றவுடன், சிறுவன் மெதுவாகத் தள்ளாடித் தள்ளாடி நடந்து சென்று தன்னையும் அறியாமல் பெரியவர் கால்களில் தொப்பென விழுந்தான்!  விக்கி விக்கி அழுதான்! கண்களில் நீர் தாரை தாரையாகக் கொட்டி அவர்தம் புனிதப் பாதங்களை நனைத்தன!

“என்ன என்பது.? ஏது சொல்வது.?” எனப் புரியாமல் திகைத்து அவன் கேவிக் கேவி அழுவதைப் பார்த்து அவர் பெரிதாகச் சிரித்தார்..! “என்னடா இப்ப நடந்து போச்சு? அவனவன் ஆயிரமாயிரம் வருஷமா தலையில வண்டி வண்டியாய்ப் பேனை வச்சுக்கிட்டுத் தெய்வீகத்துல solution கேட்டு வாங்கி கிட்டுப் போறாங்க! உனக்கு அழற மாதிரி இப்ப என்ன நடந்து போச்சு! நான்தான் இங்கே உன் எதிரேயே குத்துக் கல்லாட்டம்! உக்காந்துக்கிட்டு இருக்கேனே!”

சிறுவன் கலங்கிய கண்களினூடே அவரைப் பார்த்தான்.! அவர்தம் ஆழ்நீரோட்ட தேவ பார்வை சிறுவனின் உள்ளக் கிடக்கையைத் தெளிவுபடுத்தின!

“அதுதான் அப்பவே சொல்லிட்டேனேடா, இனிமே தினமும் நீ என்னைப் பார்க்க முடியதுன்னு! நான் எப்போ நினைக்கிறேனோ அப்ப மட்டும்தான் உன்னைப் பார்க்க வருவேன்! அது கூடக் கொஞ்ச நாளில் நின்னு போகும்! அப்புறம் என் குரல் மட்டும் கேட்கும்! இதுக்கு இப்பவே ரெடியாக வேண்டியது உன்னோட பெரிய பொறுப்புடா!... ஒண்ணு தெரிஞ்சுக்க, நான் சொன்னதை இனிமே நீ சத்சங்கமா எடுத்து நடத்தறதுக்கான அறிவு, திறமை, ஞானம் எல்லாம் உனக்குக் கொடுத்தாச்சு! எடுத்து நடத்த வேண்டியது இனிமே உன்னோட முழுப் பொறுப்பு!”

ஸ்ரீஅகத்தியர் திருபுறம்பியம்

ஒவ்வொரு படியிலும் ஒரு சித்தர்!

“ஒருத்தரை டெவலப் பண்ணியாச்சுன்னா தெய்வீகத்துல நாங்க அவருக்கான அடுத்த ஸ்டெப்புக்குப் போயிடுவோம்! தெய்வீகத்துல எந்த எந்த மகா உத்தம நிலைகளுக்குப் போனாலும் சரி, அதுக்கு அடுத்த ஸ்டேஜூல .. ஒரு சித்தர் உட்கார்ந்துக்கிட்டு இருப்பாரு!”

“நான் உன்னையே பாத்துக்கிட்டு இங்கேயே உட்கார்ந்திருக்க முடியுமா? எனக்குன்னு  எத்தனையோ கோடி லோகத்துல நெறய இறைப்பணி கொடுத்திருக்காங்களே அதையெல்லாம் யார்தான் செய்யறது? அதுக்குத்தான் ஆரம்பத்துலேந்தே சொல்லிக்கிட்டே வர்றேன்!  அடியேனோட உருவத்தைப் பார்த்து நம்பிக்கையை வளர்க்காதே! உள்ளத்துல சற்குருவைப் பிடின்னு... சொன்னாக் கேட்டாத்தானே! உருவம் மறைஞ்சா, இந்த மாதிரி மனசு புஸ்ஸுன்னு ஆயிடும்...!”

“ஆழ்ந்த நம்பிக்கை இருந்துச்சுன்னா அங்க அழுகைக்கு வேலையே இல்லையேடா! உலகமே மறைஞ்சாலும் என் உருவம் மறையாது! சரி .. சரி..! என்ன நடந்ததுன்னு கேட்டுக்கோ! இந்தப் பத்துப் பதினஞ்சு நாளா எங்கே போயிருந்தேன்னு தெரிஞ்சுக்கோ! இதை எல்லாம் உனக்குச் சொல்லணும்னு எங்களுக்கு அவசியம் இல்லைதான்! இருந்தாலும் நீ இன்னமும் சின்னப் பையன்னு நெனச்சுக்கறதுனாலச் சொல்றேன்!”

“இந்த பேன் குடும்பம் நிச்சயமா தெய்வீகத்துக்கு நெறய சேவை செஞ்சுகிட்டு வருது! அதனாலதான் அவங்களுக்குப் பித்ருக்கள் சப்போர்ட் நெறைய இருக்கு! ஆனா இந்தப் பித்ருக்கள் கூட அவங்களோட பிரச்னைக்கு விடை கண்டுபிடிக்க முடியலைன்னா, எந்த மாதிரிக் கர்மவினை அந்தக் குடும்பத்தை யுகம் யுகமா தொத்திக் கிட்டு வருதுன்னு யோசிச்சுப் பாரு..! இன்னிக்கி அந்தக் குடும்பம் இங்க வரதுக்கு முன்னாடியே அவங்களோட பித்ருங்க அங்காளி கிட்ட நேரடியா வந்துட்டாங்கன்னா பார்த்துக்கோயேன்..!”

மனத் தெளிவு கிட்டியவுடன், சிறுவன் சற்றே சிந்தித்துப் பார்த்தான்!

“பெரியவருக்குப் பித்ருக்கள் என்றாலே கொள்ளைப் ப்ரியம்! அவர்களைத் தரிசிப்பதில் பரமானந்தப் பரவசம் பெற்றிடுவார்! பூலோகத்தில், பித்ருக்கள் எங்கேனும் பிரார்த்தனை, வழிபாடு செய்கின்றனர்... என்றாலே கிடுகிடுவென அங்கு ஓடி விடுவார்... பல நாட்கள் கண்களுக்குத் தென்பட மாட்டார்!”

பெரியவர் தொடர்ந்தார்..! “அவங்களோட பித்ருக்கள் அங்காளிகிட்ட பிரார்த்தனை பண்றதுக்கு நேரே கோயிலுக்கே வந்துட்டாங்க! நம்ப சித்தர்கள் சார்புல அவங்களை வரவேற்கணும்தானே! அவங்க இதெல்லாம் எதிர்பார்க்கறது கெடயாதுதான்! ரொம்ப ரொம்ப சிம்பிளா வந்துட்டுப் போயிடுவாங்க! அவங்க, வர்றது, போறதே தெரியாது!”

“மாலை, மரியாதைன்னா பூலோகக் கணக்குல மாலையை மாட்டிட்டு கையில் பூச்செண்டு கொடுப்பதுன்னு, கிடையாதுடா! பித்ருக்கள் பூலோகம் வந்தாங்கன்னா பூர்ண கும்பம் வச்சு நிறைய வேதம் ஓதி ஓதி அவங்களை வரவேற்கணும்! சூரிய மண்டலத்துலேந்து வர்றவங்களாச்சே! சூரிய நமஸ்கார மந்திரங்கள் நெறய ஓதணும்! அவங்க ஆலய கோபுரம், ராஜ கோபுரம், கோபுரக் கலசம், அரசு, ஆல், வேம்புன்னு முக்கியமான சமித்து, ஸ்தல விருட்சத்துலதான் தங்குவாங்க! அவ்வளவு ஜோதிமயமான தேகம் அவங்களுக்கு!” என்று சொல்லியவாறே பெரியவர் புன்னகை பூத்தார்!

ஸ்ரீதட்சிணாமூர்த்தி திருபுறம்பியம்

Let there be Pithrus traffic jam! “… .. .. பித்ருக்கள் தங்கற இடம் ரொம்ப ரொம்பப் புனிதமாக இருக்கணும்! கோயில், தீர்த்தம், ஆறு தவிர அந்த மாதிரி இடம் பூலோகத்தில் எங்க இருக்கு சொல்லு பார்க்கலாம்! அவங்க அடிக்கடி வந்து போனாத்தான் மழை, விளைச்சலோட பூமி சுபிட்சமா இருக்கும்! எங்க பார்த்தாலும் பித்தலாட்டம், சூதாட்டம் போல கொடுமைகள் பரவிக் கெடக்குது! இந்த பூலோகத்துல அவங்க தங்கறதுக்கு இடம் தேடறதே ரொம்பக் கஷ்டமாச்சே! இருக்கற புனிதமான மரத்தை எல்லாம் விறகு, வீட்டுக்குன்னு வெட்டிக் கிட்டே வராங்களே!”

“ஒரே ஒரு பித்ரு தேவதை இங்க வந்து அவருக்கு நாம சிசுருட்சை செஞ்சா அவரு கொஞ்சம் ஆசீர்வாதம் தந்தார்னா கூடப் போதும், எத்தனையோ ஆயிரம் ஜென்மங்களுக்கு நாம் நற்காரியம் சாதிச்சுக் கொடுக்க முடியும்டா! அதனால தான் இன்னிக்கும் பித்ரு தேவ மூர்த்திகள் வராங்கன்னா அடியேன் அடிச்சுப் புடிச்சு அங்க ஓடிப் போய் தரிசனம் பண்ணிட்டு வருவேன்...! ஏன்னா கலியுகத்தில போகப் போக பித்ருக்கள் போக்குவரத்து ரொம்பக் கொறஞ்சிக் கிட்டே வருது! காரணம் என்ன? முறையா திவசம், சிரார்த்தம், படையல், அர்க்யம் பண்ணினாத்தானே அவங்க திருப்தி அடைஞ்சு பூலோகத்துக்கு வருவாங்க! தெனமும் தர்ப்பணம் பண்ணின காலம் போய் மாதா மாதம் அமாவாசைத் தர்ப்பணமாயிடுச்சே!”

“நாம சாதாரணமா நெனைக்கிற ஒரு பேன் தொல்லையிலேந்து ஒரு குடும்பத்தை விடுவிக்கப் பித்ருக்கள் திரண்டு வராங்கன்னா, எத்தனை லட்சம் வருஷமா ஏதோ ஒரு குறிப்பிட்ட கர்ம வினைகளனால, பெரும்பாவச் சுமைல அந்தக் குடும்பம் கஷ்டப்படுதுன்னு நம்ப தாண்டா புரிஞ்சுக்கணும்! இந்த மாதிரி கட்டுக் கோப்பான நல்ல பக்தி உள்ள குடும்பம் கலியுகத்துல அமையறது ரொம்ப ரொம்பக் கஷ்டம்! அதுக்குத்தான் அவங்களுக்குன்னு பாடுபடறேன்!”

அன்ன ஜோதி எங்கும் உதயமாகட்டும்! “எல்லாத்தையும் விட, பித்ருக்கள் வந்தா அவங்க எதிர்பாக்கறது என்னன்னா, குறைஞ்சது ஆயிரம் பேருக்காவது அவங்க வரும்போது நாம அன்னதானம் பண்ணனும்! ஏன்னா அந்த அன்னதானத்துல உதயமாகுற அன்னஜோதிதான் அவங்களுக்கு ப்ரீதியாகும்! அப்பத்தான் அவங்க அடிக்கடி பூமிக்கு வந்து போவாங்க! எதிர் காலத்துல நீயும் அண்ணாமலைல ஒரு ஆஸ்ரமம் வச்சு நெறய அன்னதானம் பண்ணி பித்ருக்கள் வரவுக்கு ஒரு கருவியா இருந்து நெறய அன்னதானத் திருப்பணி செய்யணும்!”

”இங்க கூட அன்னதானமா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஆயிரம் பேருக்கு மேல மந்தார இலை, வாழை இலையில நம்ம சோறு வச்சுக் கொடுத்ததைப் பார்த்துப் பித்ருக்கள் ரொம்ப சந்தோஷமாப் போறாங்க!”

சிறுவன் இப்போதுதான் விழித்துக் கொண்டான்!

யார் தருவார் அந்த அன்ன(தான) சாசனம்..? .. “பூலோகத்திலேயே இல்லாத புது நறுமணச் சாம்பிராணி மணம், மிகவும் அருமையான புஷ்ப வாசம் வீசுவதிலிருந்து அங்கு பித்ருக்களின் வருகையை அவன் அறிந்து கொண்டான்.. மற்றதெல்லாம் சரி! ஆனால்... ஆயிரம் பேருக்குப் பெரியவர் அன்னதானம் இட்டாரா? அந்தச் சுவடே தெரியவில்லையே! இந்தச் சிறிய கோயிலில் ஆயிரம் பேர் வந்து போவதென்றால் எவ்வளவு ஜே ஜே என்று இருக்கும்!”

திருபுறம்பியம்

இதற்குமுன் பல சமயங்களில் பித்ருக்களைத் தங்க வைக்கக் குறித்த சில புனிதமான மரங்களைத் தேடி அவர் அலைவதைக் கண்டிருக்கின்றான்... சிறுவன்! அதையெல்லாம் ஆழ்ந்த நம்பிக்கையுடன் ஏற்றுக் கொண்ட அவன் மனம், ‘ஜனப் புழக்கமே இல்லாது ஆயிரம் பேருக்கு இவர் இங்கு அன்னதானம் இட்டதாகச் சொல்கின்றாரே! ஆனால் அனைத்தும் சிறிது நேரத்திலா முடியும்? எப்படி ஜனங்களே இல்லாமல் ஆயிரம் பேருக்கு மேல் அவர் அன்னதானம் இட்டிருக்க முடியும்’, என எண்ணியது! அவன் மனதில் புதுப் புதுக் கேள்விகள் தோன்றின! ஆனால் இக்கேள்விகளை அவர் உணராமலா இருப்பார்? இந்த மாதிரிக் கேள்விகள் அவனிடம் பிறந்தால்தானே அவனிடம் “wonted normalcy restored”  என்று அர்த்தம்!!

குருபார்வை கோடி ஆணவ, அகங்கார நாசம்!

திடீரென்று அவர் கீழே குனிந்து... எதையோ கையில் எடுத்துப் பார்த்து, .. “இங்க பாருடா, யாரோ இங்க ஒடஞ்சு போன ஒரு சின்ன ‘முள் வாங்கி’ கம்பியை போட்டுட்டாங்க பாரு! யார் காலிலாச்சும் குத்தப் போகுது! எடுத்துட்டுப் போய்க் குப்பை மேட்டுல ஓரமாப் போட்டு மண்ணுக்கு உள்ளாரத் தள்ளிடு! கையோட செஞ்சுட்டு வா போ..!”

‘இவர் ஏன் இன்று பேச்சை மாற்றுகின்றார்? ஏன்... ’ என்று உடைந்த கேள்விகளுடன் சிறுவன் அந்த ‘உடைந்த முள் வாங்கி’யை எடுத்துக் கொண்டு வந்து.... வாசலில் குப்பைத் தொட்டி இருக்குமிடத்தில் சற்றே அவன் திரும்பிப் பார்த்தால்....! அவனுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது! பெரும் பேரானந்த அற்புத அதிர்ச்சியாகவும் இருந்தது!!

ஆம்! அந்தக் குப்பைத் தொட்டி நிறைய சாப்பிட்டு எறிந்த இலைகள் கிடந்தன!  .. ‘அவ்வளவு பேர் எங்கிருந்து வந்து சந்தை, சச்சரவு, சப்த சந்தடி இல்லாமல் எப்போது இலையில் சோறு வாங்கி சாப்பிட்டு போனார்கள்..? அப்போதுதான் பெரியவரின் லீலா விநோதத்தை சிறுவன் உணர்ந்து கொண்டான்.!

“தான் இல்லாமல், தனக்குத் தெரியாமல் பெரியவர் என்ன செய்வார்” என்று நினைத்த சிறுவனுக்குக் கனத்த, பலத்த அடி அது! ... தலையைக் குனிந்தவாறே சிறுவன் நெருடிய கண்களுடன் உள்ளே பார்த்திட..... பெரியவரே வெளியில் வந்து நின்று. ஒரு வசீகரமான குறும்புப் பார்வையை வீசிட.... அப்பார்வையில் எழுந்த அக்னிச் சுடர்கள் அவனுடைய அகங்கார, ஆணவ எண்ணங்களைச் சுட்டு பஸ்மமாக்கி அவனைப் புனிமாக்கியது!

ஸ்ரீசாட்சிநாதர்

திருப்புறம்பியம் ஸ்ரீசாட்சிநாதேஸ்வரர் ஆலயம்.. நவநாத சித்தர்கள்தாம் இறைவனுடைய அனைத்துக் காரியங்களுக்கும் இறைவனாலேயே சாட்சியாக நிலைகொள்ளுமாறு தோற்றம் பெற்றவர்கள்.! இவர்களுடைய நித்திய பூஜைத் தலங்களுள் ஒன்றாக விளங்குவதே கும்பகோணம் புளியஞ்சேரி இன்னம்பூர் அருகிலுள்ள திருப்புறம்பியம் ஸ்ரீசாட்சிநாதேஸ்வரர் ஆலயமாம்.! மனிதன் எத்தனையோ நிகழ்ச்சிகளுக்கு சாட்சியாக இருக்க வேண்டியதாக உள்ளது.. பல சமயங்களிலும், நடந்ததைச் சொன்னாலும் அது உண்மையாக ஏற்கப்படுவதில்லை..! சில இடங்களில் பொய்மைதான் உண்மையாகவும் சட்டத்தின் கண்களுக்குப் புலப்படுகின்றது.. தெய்வீகத்தில் கூட பூலோகத்தில் உண்மை என்பது மேலுலகங்களில் மாறிவிடும்.. பூலோகத்தில் சொல்லப்படுகின்ற பொய் விண்ணுலகங்களில் உண்மையாவதும் உண்டு.. அமாவாசையைப் பௌர்ணமி என்று மாற்றி உரைத்த அபிராமி பட்டருடைய வாக்கையே இறைவன் சத்தியமாக்கி காட்டினான் அல்லவா! சுண்ணாம்புக் காளவாயின் அக்னியானது மனித உடலை பஸ்மமாக்கும் என்ற விஞ்ஞான உண்மையானது அப்பர் சுவாமிகளின் தெய்வீக வாழ்க்கையில் பொய்மையாயிற்று.. எனவே ஸ்ரீசாட்சிநாதரை ஆழ்ந்த நம்பிக்கையுடன் வணங்கினால் நம் சாட்சித் தன்மையை நிரந்தரமாக்கி அருள்புரிகின்றார்..! பஞ்சபூதங்களின் சாட்சியாகத்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.. பல தவறுகளிலிருந்து தப்பித்து வந்துள்ளமையால்தான் செய்யாத தவறில் நமக்கு வீண் பழி ஏற்படுகின்றது... எத்தனை பெரும் பாவங்களிலிருந்து தப்பித்தார்கள் அல்லது பிறரை மாட்டிவிட்டார்கள் என்பதை கணிக்கும்போதுதான் அபாண்டப் பழி என்பது கர்மவினைகளின் பிரதிபலிப்பே என்பதும் புரியும்.!

சூரிய, சந்திர நட்சத்திர தேவதா மூர்த்திகள் நம்முடைய ஒவ்வொரு வினாடி அசைவிற்கும், ஆக்கங்களுக்கும், காரியங்களுக்கும் சாட்சிப் பொருளாக இருப்பதால் ஸ்ரீசாட்சிநாதப் பெருமான் தான் உண்மையான தெய்வீக சாட்சியாகத் துலங்குவதற்கு அருள்பாலிக்கின்றார்.! விநாயகர் சதுர்த்தி அன்று குடம், குடமாகத் தேனை அபிஷேகித்தாலும் அனைத்தையும் உறிஞ்சும் ஸ்ரீபிரளயம் காத்த விநாயகர் நம்மிடம் பொதிந்திருக்கும் பொய்மையை உறிஞ்சி பஸ்மமாக்குகின்ற புனிதத் தன்மையை திருப்புறம்பியம் – ஐந்து நிலை, ஏழு கலச ராஜ கோபுரத்திற்கு அளித்து அருள்பாலிக்கின்றார்! பஞ்ச பூதத் துறைகளாகிய இந்த ராஜ கோபுரத்தின் ஐந்து துறைகளானவை நம்மிடம் பஞ்ச பூத சக்தியைப் பெருக்கி ஏழு பீஜாட்சர ஸ்வரங்களினால் ஆகிய நம்முடைய ஒலி ரூப சூட்சும வடிவை மேம்படுத்துகின்றார்..! எனவே ஸ்ரீசாட்சிநாதரைத் தொழுது தெய்வீக சாட்சியாய் நிலை நிற்பதற்குத் தக்க இறைவழிபாடுகளைக் கடைபிடிப்போமாக! பொதுவாக நீண்ட கால கோர்ட்டு வழக்குகளால் வாடுபவர்கள் மீண்டு நன்னிலை பெற இத்திருத்தலத்தில் சுவாமிக்கு தேனாபிஷேகம் செய்து சூரிய, சந்திர ஒளியில் எப்போதும் இறை சாட்சியாக விளங்கும் புனிதமான பசுவின் பால் பொருட்களான, சர்க்கரைப் பால், பால் பாயசம், பால் பொங்கல், பால்கோவா போன்றவற்றை செவ்வாய்க் கிழமைதோறும் தானமாக அளித்து வரவேண்டும்..!

முப்புரி நூலாம் பூணூல்

ஸ்ரீமுஞ்சிகேச மகரிஷி பெற்றுத் தந்த முப்புரி நூலாம் பூணூல்! (ஆவணி அவிட்டம் 1.9.2001) முஞ்சி கேச மகரிஷி என்பார் மிகவும் பிரசித்தி பெற்ற மாமுனி! இறையருளால் தலையிலும், இடுப்பிலும் முஞ்சிக் கொடி சுற்றிய நிலையில் அவர் முஞ்சிக் கொடி அருகே தோன்றியபோது த்விதீய ஜீவ சம்ரட்சகர் என்ற அரிய தெய்வீகப் பட்டத்துடன் பூவுலகிற்கு வந்தார்...அதாவது இருபிறப்புடைய மாமுனி என்ற அரிய நிலை அவருக்கு ஸ்ரீபிரம்ம மூர்த்தியாலேயே அளிக்கப்பட்டது.. பொதுவாக முனிவர்கள் மோட்ச நிலைகளை அடைந்தவர்கள்தாமே! இதில் முஞ்சி கேச மாமுனிவரோ பல்லாயிரம் மகரிஷிகளுக்குமே மோட்ச நிலைகளைப் போதித்தவராக இருக்கும்போது அவருக்கு மட்டும் எப்படி த்விதீய, அதவாது இருபிறப்பாளர் என்ற பட்டத்தைப் பிரம்ம லோகத்தில் அளித்தார்கள்? இதன் பின்னணியில் நிறைய இறை லீலைகள் உண்டு!

ஹிருத்தாபநாசினி தீர்த்தமும்
விஜயகோடி விமானமும்
திருவள்ளூர்

பிறந்த குழந்தை ஆற்றிய ஏழு நாள் அருணைப் பெருங் கிரிவலம்! ஒரு யுகத்தில் முஞ்சி கேச முனிவருக்கு, ஏழு நாள் பூலோக வாழ்க்கை மட்டுமே என நிர்ணயிக்கப்பட்டபோது அவர் மூலமாக இறைவன் பல லீலைகளை பிரபஞ்சத்திற்கு உணர்த்த விரும்பினான்! எத்தனையோ கோடி சதுர் யுகங்கட்கு முன்னால் ஏழே நாட்கள் மட்டும் வாழக் கூடிய ஓர் அரிய பிறவியை முஞ்சி கேச மகரிஷி அருணாசல புனித பூமியில்தான் இறையருளால் பெற்றார்.! முஞ்சிக் கொடி அருகே ஜனித்த குழந்தை, தான் தோன்றி பூமியைத் தொட்ட அடுத்த விநாடி முதலாக, தவழ் நிலையில் திருஅண்ணாமலை கிரிவலத்தைத் தொடங்கிற்று! அந்த ஏழு நாட்களிலும் அச்சிறு குழந்தை தவழ்ந்து தவழ்ந்து திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து இறைவனுடைய திருவடிகளை  அடைந்தது! பனிக்குடம் கூடச் சரியாகப் பகுத்துப் பிரிந்திடா நிலையில் ஒரு விநாடி நேரத்தைக் கூட விரயம் செய்யாது அக்குழந்தை திருஅண்ணாமலையைத் தவழ்ந்தே கிரிவலம் வந்திட, இவ்வற்புதத்தைக் கண்டு சித்தர்களும், மகரிஷிகளும், யோகியரும், முப்பத்து முக்கோடி தேவர்களும் உய்த்து உவந்து மகிழ்ந்தனர்!

தொட்டாலே துல்லிய முக்தியாம்! அப்போது கோடிக்கணக்கான ஈக்களும் மற்றும் பல உயிரினங்களும் அதனை மொய்த்துக் கூடவே கிரிவலம் வந்து உத்தம முக்தி நிலைகளை அடைந்தன! வழியில் அதன் திருஉடலிற்பட்ட பல லட்சப்புல், பூண்டுத் தாவரங்களுக்கும், சிசுவின் தேகத்தில் ஒட்டிய கோடிக்கணக்கான மண் துகள்கள், சிறு கற்கள் என சகல விதமான ஜடப் பொருட்களும் உத்தம தெய்வீக நிலைகளைப் பெற்றன! இவ்வகையில் சகல உயிரினங்களுக்கும் முக்தி நிலையை அளிக்கக் கூடிய மூலாதாரத் தெய்வமே அருணாசலப் பெருமான் என்பதை முஞ்சிகேச மாமுனிவர் தம் அருணாசல சிசுவாச சிசுபால கிரிவலத்தின் மூலம் உணர்த்தினார். அந்த ஏழு நாட்களிலும் அச்சிசுவைத் தொட்டோர்க்கு எல்லாம் பரமானந்தப் பரவசம் கிட்டியது! தவழ்ந்து தவழ்ந்து கிரிவலம் வருகின்ற பாங்கினை உலகிற்கு இவ்வாறு எடுத்துரைத்தவரே முஞ்சி கேச மகரிஷியாவார்!

இவ்வாறு தவழ் நிலையில் கிரிவல பவனி வந்த அந்தச் சிசு, குறித்த தரிசனப் பகுதியில் முஞ்சிக் கொடி அருகே சாந்தமாகி அருணாசல இறை தரிசனம் பெற்று முக்தி நிலை கூட்டி முஞ்சி கேச மாமுனிவர் ஆனார்! இதன் மூலம் பிறவிக் கூட்டிலேயே முக்தி நிலையை அடைந்தவராக, ஓருடலில் இருநிலை கண்டவராக, இரு பிறப்பாளராக, முஞ்சி மாமுனிவர் இன்றைக்கும் மகரிஷி பிறந்த குழந்தையாய் ஏழு நாட்களில் கிரிவலத்தைத் தவழ்ந்து முடித்து ஸ்ரீஅருணாசல இறைத் தரிசனத்துடன் முக்தி நிலை பெற்ற மலை தரிசனப் பகுதியே சிசுபால மோட்ச தரிசனம் என்று காரணப் பெயர் பூண்டது!  சிசுபால மோட்ச தரிசனப் பகுதியில் கனிந்த பக்தியுடன் எவரெல்லாம் திருஅண்ணாமலையாரை ஆழ்ந்த பக்தியுடன் தரிசிக்கின்றாரோ அவர்களுக்கு எத்தகைய பாலாரிஷ்ட தோஷங்கள் இருந்தாலும் அவை நீங்கி நன்முறையில் சந்ததி விருத்தி பெறும்.. எதிர் வரும் சந்ததிகளையும் இத்தகைய தோஷங்கள் அண்டாது!

முஞ்சி மாமுனி பெற்றுத் தந்த முப்புரிநூல் (பூணூல்)! இவ்விடத்தில் அங்கப் பிரதட்சிணம் செய்வது சிறப்புடையது, ஏனென்றால் முஞ்சி மாமுனி தவழ்ந்து கிரிவலம் வந்து அருணாசல தரிசனத்துடன் பால்வாய் மாறா பாலக் குழந்தைப் பருவத்திலேயே, அம்மானுட உடலிலேயே முக்தி பெற்ற இடமாயிற்றே! இவ்வாறு முஞ்சி மாமுனிச் சிசுவாய் முக்தி பெற்ற நாளே அந்த யுகத்தின் வ்ருஷ வருடத்திய ஆவணியும் அவிட்ட நட்சத்திரமும் கூடிய விசேஷ தினமாகும்.! இவ்விடத்தில் மும்மூர்த்திகளான ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீசிவன் ஆகியோர் ஒரு சேர முஞ்சிகேச மகரிஷிக்குத் தரிசனம் தந்து மூன்று ஒளிப் பிழம்புகள் ஆயினர்! இதுவே சிசு பால லிங்க தரிசனமாகும்.!

மும்மூர்த்திகளின் மூன்று ஒளிப் பிழம்புகளும் அவ்விடத்திலேயே ஒரு சுயம்பு லிங்கத்திலே ஒன்றாய் இணைந்து மறைந்திட அவ்விடத்தில் ஸ்ரீயக்ஞோபவீத லிங்க மூர்த்தியாய் இறைவன் மீண்டும் தரிசனம் அளித்திட்டார்! லிங்கத்தின் திருமார்பில் மூன்று பிரிகளுடன் கூடிய சுவர்ண ரேகைகள் தோன்றின.! இந்த தரிசனமே முப்புரி லிங்க (ஸ்ரீயக்ஞோபவீத லிங்க தரிசனம்) தரிசனமாகும்! ஸ்ரீமூகாம்பிகா தேவியாய் அம்பிகை அவதாரம் பெறத் தவம் பூண்ட அற்புத தரிசனப் பகுதியிது! முஞ்சி மாமுனிவர் முஞ்சிக் கொடியை லிங்கத்தின் மேல் வைத்து எடுத்து அந்த மூன்று சுவர்ண ரேகைகளின் பிம்பங்களைத் தோய்த்து எடுத்திட ஸ்ரீயக்ஞோபவீத லிங்க மூர்த்தி அதனை முப்புரி நூலாக்கிட, முஞ்சி கேச மாமுனி அதற்கு பஞ்சபூத சக்திகளைக் கூட்டிட முப்புரி நூலாகிய பூணூல் உதயமாயிற்று! அதுவரையில் மகரிஷிகளுக்கும், சித்புருஷர்களுக்கும், யோகியர்களுக்கும் மட்டுமே கண்ணுக்குத் தெரியாத சூட்சும இறைச் சின்னமாகப் பொலிந்த யக்ஞோபவீதமாகிய, முப்புரி நூலாகிய பூணூலானது அன்று முதல் உலகத்திலுள்ள அனைத்து ஜீவன்களுக்கும் உரித்தானதாக இறைவனால் முஞ்சி முனிவரின் பிரார்த்தனையால் அளிக்கப்பட்டது!

மூன்று முக்கிய தரிசனங்கள்! இந்த இறைலீலை நிகழ்ந்த நாளே அந்த யுகத்தின் வ்ருஷ வருட ஆவணியும் அவிட்டமும் கூடிய சுப மங்கள தினமாகும். இவ்விடத்தில் மும்மூர்த்திகள் தோன்றிய அதே நேரத்தில்தான் ஸ்ரீகாயத்ரீ, ஸ்ரீசாவித்ரீ, ஸ்ரீசரஸ்வதி ஆகிய மூன்று தேவியரும் ஒரு சேரவும் அருகில் தரிசனம் தந்தனர்.. இதனால் இவ்விடத்திற்கு அருகிலேயே ஸ்ரீகாயத்ரீ தரிசனமும் உள்ளது.. திருஅண்ணாமலை கிரிவலப் பாதையிலே உண்ணாமுலை மண்டபத்தின் அருகில் திருஅண்ணாமலையார் மூன்று மலை முகடு பாகங்களாகத் தோற்றமளிப்பார். இதற்கு முன் உள்ள மலையின் தரிசனமே சிசுபால மோட்ச தரிசனம் ஆகும். இதனை அடுத்து வருவதே ஸ்ரீயக்ஞோபவீத லிங்க தரிசனமாகும்.. இங்குதான் முஞ்சிகேச மாமுனிவர் மும்மூர்த்திகளால் அளிக்கப் பெற்ற முமூட்சு நிலையைப் பெற்றார்... இதற்கு அடுத்து வருகின்ற மூன்று முகடுகள் உள்ள மலை தரிசனமே ஸ்ரீகாயத்ரீ தரிசனமாகும். எனவே ஸ்ரீஉண்ணாமுலை மண்டபத்திலிருந்து ஸ்ரீகாயத்ரீ லிங்க தரிசனப் பகுதி சற்று வரையேனும் அங்கப் பிரதட்சிணம் செய்வது சிறப்புடையது.. இதனால் சந்ததி தழைக்கும்.. பாலாரிஷ்ட தோஷங்களைத் தீர்க்கக் கூடிய அதியற்புத தரிசனம்! தீய வழக்கத்திற்கு ஆட்பட்டோர்  திருந்தி வாழ நல்வழி காட்டும் தரிசனம்! புனிதமாக வாழ்ந்திட உதவும் தரிசனம்! நம்முடைய 24 தலைமுறைகளைக் குறிக்கும் வகையில் இங்கு குறைந்தது இருபத்து நான்கு அடி தூரமாவது அங்கப் பிரதட்சிணம் செய்வது சிறப்புடையதாகும்!

யக்ஞோபவீத லிங்கத் தரிசனப் பகுதியில் யக்ஞோபவீத தாரணம் எனப்படும் பூணூலை அணிந்து கொள்தல் உத்தமமானது! அடுத்து மூன்று அடிகளில் வருகின்ற ஸ்ரீகாயத்ரீ தரிசனப் பகுதியில் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபித்தலும், மூன்று வேளைகளிலும் சந்தியா வந்தன பூஜைகளை நிறைவேற்றுதலும் உத்தமமான பலன்களைத் தரும்!

ஆவணி அவிட்டத்தில் அற்புத பூஜைகள்! ஆவணி மாதம் அவிட்ட நட்சத்திர தினத்தன்று சிசுபால தரிசனப் பகுதியில் அங்கப் பிரதட்சிணமும், ஸ்ரீயக்ஞோபவீத லிங்க தரிசனப் பகுதியில் பூணூல் அணிந்து கொள்தலும், அடுத்து வருகின்ற ஸ்ரீகாயத்ரீ தரிசனப் பகுதியில் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபித்தலும் இறையருளால் ஸ்ரீகாயத்ரீ மந்திர சித்திக்கான நல்பாக்யங்களைப் பெற்றுத் தரும்... ஸ்ரீமுஞ்சி கேச மாமுனிவர் நமக்கு முப்புரிநூலை நமக்குப் பெற்றுத் தந்த இடமாகையால் சிசுபால லிங்க தரிசனம், முப்புரி நூல் தரிசனம், யக்ஞோபவீத தாரண மந்திர தரிசனம், ஸ்ரீகாயத்ரீ தரிசனம் என்றவாறாக, பலவிதமான தரிசனங்களை நீங்கள் அடுத்தடுத்து இங்கே பெற்றிடலாம்.. மலை தரிசனங்கள் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கின்றனவே என்று எண்ணாதீர்கள்.! ஒவ்வொரு விநாடியும் சூட்சுமமாகவும்,  தூலமாகவும் அண்ணாமலை தரிசனங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன!

உண்மையில் கோடிக் கணக்கான மகரிஷிகளும் சித்புருஷர்களும் யோகியர்களும் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபித்து சித்தி பெற்று எத்தனையோ தரிசனங்களையும் கண்டு பரமானந்தம் கொண்டமையால் இப்பகுதியில் மூன்று அடிகளுக்குள்ளாகவே பலவாயிரம் லிங்க தரிசனங்களை நீங்கள் இங்கு பெற்றிடலாம். ஏனென்றால் ஒவ்வொரு விநாடியும் திருஅண்ணாமலை லிங்க தரிசனத் தோற்றங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன.. மலை ஒரே வடிவில் இருப்பது போல் நமக்குத் தோன்றினாலும் நொடிக்கு நொடி தரிசனக் காட்சிகள் மாறிக் கொண்டே இருக்கின்றன..!

ஆவணி அவிட்டமே வருடாந்திரப் பூணூல் பிரம்மோற்சவம்! ஆவணி மாதத்தில் அவிட்ட நட்சத்திரம் வருகின்ற திருநாளே ஆவணி அவிட்டத் திருநாளாகிய முப்புரி நூலுக்கான பிரம்மோற்சவத் திருநாளாகும்.. பிள்ளையார் முதல் அனைத்து தெய்வ மூர்த்திகளும், சித்தர்களும், மகரிஷிகளும், பித்ரு தேவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் இத்திருநாளில், முப்புரி நூல் தரிசனப் பகுதியில் ஸ்ரீமுஞ்சி கேச மகரிஷியிடம் இருந்து பூணூலைப் பெற்று அணிந்து கொள்கின்ற கோலாகலமான திருவிழா, நாமறியா வகையில் சூட்சுமமாக இத்தரிசனப் பகுதியில் நிகழ்ந்து வருகின்றது! கோலாகலமாக என்றால் பூலோக பாணியில் ஆடம்பரம் என்ற பொருளல்ல! அனைத்துக் கோடியினரும் புனிதமாக, பவித்ரமாக, ஆழ்ந்த பக்தியுடன் நடத்துகின்ற் பூஜை என்றால் அதன் மகிமைதான் என்னே!

ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை முறையாக குருவருளுடன் தியானித்து வருவோர்க்கும், தினமும் மூன்று வேளையும் குருவருளுடன் தியானித்து வருவோர்க்கும், தினமும் மூன்று வேளையும் சந்தியா வந்தன வழிபாடுகளைச் செய்து வருவோர்க்கும் இவ்வரிய காட்சிகள் கண்கூடாகக் கிட்டும்! விபூதி, குங்குமம், மாங்கல்யம் போல பூணூல் என்பது யாவருக்கும் உரித்தான ஓர் அற்புதமான இறைச் சின்னம், சாதி, மத, இன, குல பேதமின்றி யாவரும் பூணூல் அணிந்து ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஓதி பரப்ரம்மத்துடன் ஐக்யமாகின்ற பாக்யத்தைத் தரவல்ல மிகவும் முக்கியமான இறைச் சின்னம், தற்காலத்தில் பல திருமணங்களில் திருமணத்திற்கு முதல் நாள் மட்டும் மாப்பிள்ளைக்குப் பூணூலைச் சார்த்தித் திருமணம் முடிந்த பிறகு அதனைக் கழற்றி விடுகின்றார்கள். கிட்டத்தட்ட அனைத்துக் குடும்பங்களிலும் பாரம்பர்யமாகத் துலங்கி வரும் இந்தச் சமுதாய இறைச் சடங்கிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் பூணூல் என்பது ஜாதி மத இன பேதமின்றி முற்காலத்தில் அனைத்துப் பிரிவினருக்கும், வகையினருக்கும் உரித்தான மிகவும் முக்கியமான இறைச் சின்னமாகத் திகழ்ந்து காலப் போக்கில் மறக்கப்பட்டு விட்டது என்பதேயாம்..! எனவே இனியேனும் அனைவரும் தக்க பெரியோர்களின் ஆசியுடன் பூணூல் அணிந்து ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஓதி, பெறுதற்கரிய இறையருட்சக்தியை பெற்றுய்யுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்..!

தெய்வ மூர்த்திகளுக்குப் பூணூல் அணிவிப்பு வைபவம்!

ஆவணி அவிட்டமான இன்று (1.9.2001) உங்கள் ஊரில் உள்ள ஆலயத்திலுள்ள அனைத்து மூர்த்திகளுக்கும் தக்க அனுமதியுடன் முப்புரி நூலாகிய பூணூலைச் சார்த்துகின்ற வைபவத்தை சிறப்புறக் கொண்டாடுங்கள்.. பிள்ளையார், சூரியன், சந்திரன், பைரவர், சண்டிகேஸ்வரர், பிரம்ம மூர்த்தி போன்ற அனைத்து மூர்த்திகளுக்கும் மஞ்சள் தடவிய பூணூலைச் சார்த்தி அந்தந்த மூர்த்திகளுக்கு உரித்தான ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஓதி வணங்கி வழிபடுங்கள். இன்று முப்புரி நூல் விசேஷ தினமாகையினால் இன்று கொடி வகைக் காய்களான புடலங்காய் அவரைக்காய், பீர்க்கங்காய், பூசணி, பரங்கி போன்ற காய்கறிகள் கலந்த உணவை அன்னதானமாக ஏழைகளுக்கு அளித்திடுங்கள்..!

தாவரங்களுக்கும் பூணூல் சக்தி! தாவரங்களுக்கும் பூணூல் இறைச் சின்னமுண்டா? ஆம், நிச்சயமாக உண்டு! ஒவ்வொரு தாவரத்திலும் அவற்றின் மேல் பகுதி, தண்டுப் பகுதி, இலைப் பகுதியில் பிரிகள் போன்ற அமைப்பு இழைந்து ஓடுவதை நீங்கள் கண்டிடலாம். எவ்வாறு கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகையின் சிவ சுயம்புத் திருமேனியில் ஸ்வர்ண ரேகை முப்புரிநூல் போல் ஓடுகின்றதோ அதேபோல் தாவரங்களிலும் மந்திரப் புரிகள் காணப்படும். மேலும் சில தாவரங்கள் தம்முடைய திருமேனியில் சில கொடிகளைச் சுற்றி பின்னல்கள் கொண்டிருக்கும்! இவையும் தாவரங்களுக்கான முப்புரி நூல் வகையைச் சார்ந்ததாகும்.. இதே போன்று ஒவ்வொரு தாவரமும் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபித்துக் கொண்டுதான் இருக்கின்றன.. அனைத்துத் தாவரங்களுமே ஸ்ரீசாகம்பரி தேவி காயத்ரீ மந்திரத்தை உபாசனா மந்திரமாகக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கதாகும்.!

ஒவ்வொரு தாவரத்தின் இலையிலிருந்தும் வேரிலிருந்தும் தண்டிலிருந்தும் மெல்லிய ஒலிக் கிரணங்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன..! இவையாவும் தாவரங்களுடைய மந்திர ஒலிகளாகும்.. மனிதர்களைப் போலல்லாது அனைத்துப் பிராணிகளும் விலங்குகளும் எப்போதும் இறை ஜபத்தில் திளைத்திருப்பவையே! உங்கள் வீட்டிற்கு, அலுவலகத்திற்கு அருகிலுள்ள சிறு புல், பூண்டு, செடி, கொடி, மரம் ஆகியவை அவைகளுக்குரித்தான இறைப்பணியை, சமுதாய இறைப்பணிகளை செவ்வனே ஆற்றிக் கொண்டிருக்கின்றன.! உதாரணமாக, சுமார் அறுபது எழுபது அடி உயரமான பனை மரமானது மிஞ்சிப் போனால் அதன் உச்சியிலே பதினைந்து அல்லது பன்னிரெண்டு ஒலைகளை மட்டும் வைத்து ஜீவிக்கின்றதென்றால் அந்த பன்னிரெண்டு ஒலைகளிலுள்ள ஜீவாம்ருத சக்தியை என்னென்று சொல்வது! இந்தப் பனை மரங்கள் தங்களுடைய ஓலை இலைகளால் மனித குலத்தால் கிரஹிக்க முடியாத பல அரிய கண்ட மத்ய பீஜாட்சரங்களை விண்வெளியிலிருந்து கிரஹித்து அவற்றை ஸ்புடம் செய்து பூமிக்கும் பரவெளிக்கும் காற்று மண்டலத்திற்கும் எப்போதும் இருபத்தி நாலு மணி நேரமும் பரப்பிக் கொண்டிருக்கின்றது..!

ஆனால் மனிதனோ அதனுடைய தெய்வீக மகத்துவத்தை உணராது தன்னுடைய சுயநலத்திற்காகப் பயன்படுத்துகின்றான்..! பனை மரத்தால் வேய்ந்த கூரைக் குடிசையில் கிடைக்கின்ற தியான சக்திகள் மிகவும் சக்தி வாய்ந்தவை! குறிப்பாக, தனக்கென்று தசரதச் சக்ரவர்த்தி பெரிய இல்லத்தை அளித்திருந்தாலும் ஸ்ரீவசிஷ்ட மாமுனி தன்னுடைய பெரும்பான்மையான நேரத்தை பனை ஓலை, பனைக் கட்டை வேய்ந்த சிறு குடிசையில்தான் தியான, யோக, நியம நிஷ்டங்களுடன், பல அரிய பீஜாட்சர ஜப மந்திரங்களை ஓதியவாறே அன்றும், இன்றும், என்றும் தன் தினசரி யோக தாரணங்களை நடத்துகின்றார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்..!

மாளய பட்சம்

மாளயபட்ச பித்ரு வழிபாடு

மாளய பூஷித லோகத்தின் பிரம்மோற்சவமே மாளய பட்சம்! முதன் முதலில் பிரபஞ்சத்தில் தோன்றிய ஆதிமூலச் சூரிய கிரகமும், ஆதி மூலச் சந்திர கிரகமும் இணைகின்ற கிரக மண்டல சங்கமத்தில் தோன்றுவதே மாளய பூஷித லோகமாகும்! இங்குதான் மாளய பட்சம் கும்ப மேளா போன்று பெரும் திருவிழாவாகப் பித்ருக்களும், தேவாதி தேவர்களும் கொண்டாடுகின்றார்கள்.. இவ்வாறாக மாளய பட்சம் என்பது மகாமகம் போல பல்லாயிரக் கணக்கான அமாவாசை தேவதைகளுடன் அனைவரும் மாளய பூஷித லோகத்தில் ஒன்று கூடும் புனிதமான வைபவமாகும்!

பொதுவாக அமாவாசை திதி தேவதைகளுக்கும், பௌர்ணமி திதி தேவதைகளுக்கும் எவ்வித தோஷமும் இல்லாமையால்தான் விஷ திதி சூன்ய ராசிக் கட்டில் எல்லாத் திதிகளுக்கும் சூன்ய ராசிகள் அளிக்கப்பட்டு இருந்தாலும் அமாவாசையும் பௌர்ணமியும் எவ்வித தோஷமும் இல்லாத பரிபூரணமான திதிகளாக இன்றைக்கும் திகழ்கின்றன..! மேலும் அனைத்துக் கோடி பித்ரு தேவர்களும் மாளய பட்சத்தின் போது இந்த மண்டலத்தில் அமாவாசை திதி தேவதா மூர்த்திகளோடு ஒன்று கூடி அனைத்துவிதமான பூஜைகளையும் கடைபிடிக்கின்றனர். நம்முடைய கால வாய்பாட்டில்தான் நாள், வாரம், பட்சம் என்ற கணக்கு உண்டே தவிர பித்ருக்களுடைய இந்த மாளய பூஷித யதி மண்டலத்தில் உள்ள காலக் கணக்கு நம் பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட ஞான விளக்கம் ஆகும்..!

உதாரணமாக இந்த யதி மண்டலத்தில் பிரபஞ்சத்தில் உள்ள புண்ய நதிகள், அரிய சிவலிங்க மூர்த்திகள், விருட்சங்கள், மலைத் தலங்களும் ஆங்கே தோன்றிட, பித்ரு மூர்த்திகள், பித்ரு பத்னிகள், தேவதைகள், முப்பத்து முக்கோடி தேவர்கள் அனைவருமே தனித்தனியாகவும், கூட்டு பூஜையாகவும் அனைத்திற்கும் பூஜை செய்து முடிக்கின்றனர் என்றால் யதி மண்டலத்தின் பரப்பையோ, காலக் கணக்கையோ உணர முடியுமா என்ன?

பித்ரு மண்டலத்திலும் தான தர்மங்கள்! நாம் பூலோகத்தில் காண்கின்ற திருஅண்ணாமலையும் வேறு வடிவில் யதி மண்டலத்திலும் தோன்றுகின்றது. இறைவனே மலையாக வீற்றிருக்கும் போது பிரபஞ்சத்தில் அண்ணாமலை தோன்றாத இடம்தான் எதுவோ? இங்கும் யதி மண்டல மாளய பூஜையிலும் கூட பித்ரு தேவதைகள் அன்னதானம், வஸ்திர தானம் போன்ற அனைத்தையுமே கடைபிடிக்கின்றனர்.. இவற்றை தானமாகப் பெறுகின்றவர்கள் யார் தெரியுமா? பித்ருக்களின் கரங்களால் தானம் பெறுதல் என்பது மகத்தான, உத்தம, புண்ய சக்தியைத் தாங்கி வரும் ஆதலால் இவற்றைப் பெறுபவர்களும் அதற்குரிய இறைத் தகுதிகளைப் பெற்றிருப்பார்கள்.! பூலோகத்தில்தான் ஏழைகளுக்கும், இல்லாதோர்க்கும் தான தர்மங்களே தவிர யதி மண்டலத்தில் தான தர்ம இலக்கண முறைகளே வேறாகும்.. உதாரணமாக சூரிய மண்டலத்தைச் சேர்ந்த ஒரு பாஸ்கர தேவதை தன்னுடைய ஆதித்ய ஹ்ருதய ஹோமத்திற்குத் தேவையான தேவ காந்த அலரி என்னும் மூலிகை வேர் கிட்டவில்லை என்றால் அது மாளய பட்சத்தின் போது யதி மண்டலத்திற்கு வந்து வேத காந்த அலரிப் புஷ்பத்தைத் தானமாகத் தருகின்ற பித்ரு மூர்த்தியை நாடிடும்!

இதே போன்று பூலோகத்தில் ஏதேனும் ஒரு கோயில் ராஜகோபுர திருப்பணிக்குத் தேவையான கும்ப மூலிகைச் சக்திகள் குறையும்போது இதற்குரித்தான கும்ப ராஜ தேவதா மூர்த்திகள் மாளய பட்சத்தின் யதி மண்டலத்திற்கு வந்து கும்ப மூலிகா சக்தியைத் தருகின்ற பித்ரு மூர்த்தியை நாடுவர்... இவ்வாறாக பித்ரு மூர்த்திகள், பித்ரு தேவர்கள், பித்ருக்கள், பித்ரு பத்னிகள், பித்ரு கணங்கள் அனைவரும் விளக்கு பூஜை, கணங்கள் அனைவரும் விளக்கு பூஜை, அர்ச்சனை ஆராதனைகள், பலவிதமான சமித்துக்கள் கூடிய ஹோமங்கள், யோகாசன, முத்திரா வழிபாடுகளை நிகழ்த்துத்தும் தலமே மாளய பூஷித யதி மண்டலமாகும்! கேதார்நாத், பத்ரிநாத் திருத்தலங்கள் வருடத்திற்கு ஆறுமாதம் மட்டுமே திறக்கப்படுவது போல் வருடத்திற்கு ஒரு பட்சம் (15 நாட்கள்) மட்டுமே இந்த யதி மண்டலம் கண்களுக்குத் தென்படும்!

மேலும் ஒரு பித்ருவானவர் நல்ல இறை நெறியில் திளைக்கின்ற தம்முடைய சந்ததியில், கனத்த அசௌபாக்ய தோஷத்தால் திருமணம் தடைப்பட்டு அவதியுற்றால் அதை நிவர்த்தி செய்ய வல்ல மகர பாஷ்ய புஷ்பத்தைத் தானமாக அளிக்கின்ற பித்ருக்களைத் தேடி யதி மண்டலத்திற்கு ஓடோடி வருவார்.. மொத்தத்தில் 15 நாட்களுக்கு மட்டுமே இந்த மாளய பட்ச யதி மண்டலமானது free puja zone போல் விளங்குகின்றது என்றால் அது மிகையல்ல.!

தீய சக்திகளில் இருந்து நம்மைக் காக்கும் வேதராஜ பித்ருக்கள்..!

இரண்யன், இரண்யாட்சன் வழி வந்த அரக்கர்கள் கொலை பாதகர்களாக, கடத்தல்காரர்களாக, கொள்ளைக்காரர்களாக, துரோகிகளாக, தேச விரோதிகளாக இன்றைக்கும் பூலோகத்தில் உள்ளனர்... இத்தகைய தீய சக்திகளை மாய்ப்பதற்காகவே வேத ராஜ பித்ருக்கள் ஒளிர்கின்றார்கள். ஆனால் இவர்களுடைய எண்ணிக்கையோ மிக மிகச் சொற்பமே, ஏனென்றால் கலியுகத்தில் இவர்களுக்கு மிகவும் கடுமையான இறைப் பணிகளை கடைமையாக விதித்திருக்கின்றார்கள் கரணம் தவறினால் சாபம் என்பதால் இவர்கள் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டியிருக்கிறது!

எங்கு பூகம்பம், எரிமலை வெடிக்கின்றதோ, கடுமையான விபத்துக்கள் ஏற்பட இருக்கின்றனவோ, அவ்விடத்தில் உள்ள நல்ல ஆத்மாக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இவர்களுக்கு நிச்சயமாக உண்டு. ஆனால் மானுட வடிவில் இவற்றை நிகழ்த்தும்போது ஏற்படும் சோதனைகளைச் சமாளித்திட இவர்கள் பல கடுமையான தவங்களையும் பூஜைகளையும் மேற்கொண்டாக வேண்டும்.!

பல லட்ச வயதுடைய பித்ருக்கள்! இவ்வாறாக மாளய பட்சத்தின், நம்முடைய பூலோக கணக்குப்படி 15 நாட்களிலுமே கோடிக் கணக்கான பூஜைகளைப் பித்ருக்கள் கடைபிடிப்பதால் அவர்களுக்கு இந்த 15 நாட்களுமே 15000 வருடங்கள் போல அமையும். அதாவது நமக்கு ஒரு வருட மாளய பட்சம் முடியும்போது யதி மண்டலத்தில் பித்ருக்கள் 15000 வருட வயதுகளைக் கூட்டிக் கொள்கின்றார்கள்., இவ்வகையில் 30, 40 லட்சம் வருட வயதுடைய பித்ரு மூர்த்திகள் இன்றும் உண்டு.. இவ்வகையில் ஒரு பித்ரு மூர்த்தியே ஞானப் பிரகாசராய் பல லட்சம் தலைமுறைகளைக் காப்பவராய் விளங்குகிறார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.. ஸ்ரீராமர் தோன்றிய திரேதா யுகத்தில் பிறந்த உங்களுடைய மூதாதையர் கூட இன்றைக்கு பலகோடி வருட ஆயுளுடன் இன்றைக்கும் பித்ரு லோகத்தில் பரிமளிப்பதும் உண்டு.!

ஏன் இவர்கள் பித்ரு நிலைகளிலேயே இத்தனை லட்சம் ஆண்டுகள் இருந்திட வேண்டும்? ‘இவற்றிற்கு அடுத்த உத்தம நிலைகளை அடையவில்லையா’ என்று கேட்டிடலாம்.. ஆனால் தெய்வீக நிலைகளில் உயர்வு தாழ்வு கிடையாது! ஸ்ரீஅகஸ்தியரும், ஸ்ரீவசிஷ்டரும் பெரு மதிப்பு கொண்டு ஒருவரை ஒருவர் வணங்கிடுவர்! எனினும் எவ்வாறு ஒரு வங்கியில் ஒரு அதிகாரி, மேனேஜர், ரீஜினல் மேனேஜர் என்று பலவித உயர் பதவிகள் இருந்தாலும் பலரும் ஒரு சாதாரண குமாஸ்தாவாகவே மனத் திருப்தியுடன் வாழ்க்கையை ஓட்டுவதுபோல பித்ருக்களுக்கு எத்தனையோ உத்தம நிலைகள் கிட்டினாலும் சிலர் மிக எளிமையுடன் பித்ரு நிலையிலேயே பிரபஞ்ச ஜீவன்களுக்குப் பணியாற்ற விரும்புகின்றனர்..! அனைத்தும் இறை ஆணையால் நிகழ்வதுதாமே!

எனவே மாளய பட்சம் என்பது பித்ரு லோகத்தின், அமாவாசை கிரக மண்டலத்தின், பிரமோற்சவமாக விளங்குவதால் இந்த பதினான்கு நாட்களிலும், மாளய அமாவாசையிலும் நாம் செய்கின்ற நற்காரியங்களின் பலாபலன்கள் பன்மடங்காய்ப் பெருகி நம்முடைய மூதாதையர்களுக்குப் பெரும் நல்வரங்களையும் சிறப்புகளையும் தருகின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.. வன்முறைகள், முறையற்ற காமக் குற்றங்கள், கொள்ளை போன்ற அதர்மச் செயல்கள் பெருகி வருகின்ற இக்கலியுகத்தில் மற்றைய சமுதாயக் காப்பு முறைகளைவிட, பித்ருக்களே நமக்கு ரட்சா மூர்த்திகளாக, இறைத்துறை தூதுவர்கள் போல நம்மை எப்போதும் எந்நேரமும் காக்கின்றனர் என்பதை இனியேனும் புரிந்து கொள்ளுங்கள்.. எனவே இந்த 15 நாட்களிலும் தினந்தோறும் தர்ப்பணம், குறித்த வழிமுறைகளில் தான தர்மங்கள் செய்து பித்ரு சக்திகளையும் ஆசிகளையும் பெருக்கிக் கொள்ளுங்கள்!

பதினைந்து நாள் தர்ப்பணத் திருவிழா!! மாளய பட்சமே பித்ருலோக பிரம்மோற்சவம்! (3.9.2001 முதல் 17.9.2001 வரை)
“நீத்தார் நீர் கடன் பூஜை நீடு வாழ வழி செய்யும்!”

மாளய பட்சத்தின் 15 திதித் தர்ப்பணங்களையும் நிறைவேற்றக் கூடிய திருத் தலங்களாவன : திருஅண்ணாமலை எம லிங்கம், கிரிவலப் பாதையில் அபய மண்டபம் அருகே பித்ரு பரிபாலனத் தீர்த்தம், திருவிடைமருதூர், கோடிக்கரை, கன்யாகுமரி, ராமேஸ்வரம், கும்பகோணம் சக்கரைப் படித் துறை, தென்னிந்திய கயாவான திருச்சி லால்குடி அருகே உள்ள பூவாளூர், தஞ்சாவூர் ஒரத்தநாடு அருகே பரிதி நியமம், பட்டுக்கோட்டை அருகே இடும்பாவனம், திருவாரூர் அருகே திலதைப்பதி, சென்னை திருவள்ளூர், பேராவூரணி அருகே பெருமகளூர் திருக்குளம், புதுக்கோட்டை அருகே செவலூர் ஸ்ரீபூமிநாதர் ஆலய ப்ருத்வி தீர்த்தம், சீயாத்த மங்கை (சூரிய,சந்திர தீர்த்தம்), வாரணாசி, கயா (பல்குனி நதிக்கரை), பிரயாக் (அலாகாபாத்), பத்ரிநாத் கேதார்நாத், அயோத்யா சரயூ நதிக் கரை.!

மாளய பட்சத்தின் பதினைந்து நாட்களிலும் நீங்கள் செய்யும் தர்ப்பணத்தின் புண்ய சக்தியானது, சமுதாய சேவைப் பலன்களாகத் தர்ப்பணத்தைப் பற்றி அறியாத ஏழை, எளியோர்க்கும் பாமரருக்கும், ஏன் அயல் நாட்டவர்களுக்கும் கூட பித்ரு சக்தியைப் பெற்றுத் தருகின்றது... வ்ருஷ வருடத்திற்கான, மாளய பட்ச விசேஷமான தர்ப்பண முறைகளை, சித்புருஷர்களுடைய ஞான பத்ர வேத மாமறை மொழிகளை, நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய குருவாய் மொழிகளாக இங்கு பிரபஞ்சத்திற்கு அர்ப்பணிக்கின்றோம்! ஒன்றைப் புரிந்து கொள்க! ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் அளிக்கப்படுகின்ற இறை விஷயங்கள், விளக்கங்கள், அரிய வழிபாட்டு முறைகள் யாவும் தேவ லோகங்களில் கூடப் பல தேவாதி தேவர்களும் வேத மறை ரகசியமாய்ப் பாதுகாத்து இப்போது அற்புத குருவாய் மொழி இறைச் சுடர்களாகப் பரிமளிக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்! எனவே தேவாதி தேவர்கட்கும் உரித்தான இறைவாக்கியச் சுவடிகளாகச் சித்தர்களுடைய குருவாக்கிய மொழிகள் பரிணமிக்கின்றன என்பதைப் பணிவன்புடன் எடுத்துரைக்கின்றோம்..!

சனாதன தர்ம நாடாக ஒன்றாக இருந்த உலகம்தான் அன்பின் புனிதம் பாதிக்கப்பட்டுப் பல நாடுகளாய்ப் பிரியலாயிற்று! உண்மையில் புனிதமான ஆன்மீகத்தில் அயல்நாடு, உள் நாடு என்ற வேறுபாடே கிடையாது! நன்கு படித்து, நன்றாகக் கை நிறையச் சம்பாதிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் திருஅண்ணாமலை கிரிவலம், பாத யாத்திரை போன்ற வழிபாடுகளைச் செய்பவர்களே அருள் பூமியாகிய நம் பாரத புனித நாட்டை அதிலும் சிவனே உறையும் தென்னாடுடைய தமிழ்நாட்டை விட்டு அயல் நாடுகளில் பிறக்கின்றார்கள்.. பூர்வ ஜென்ம நினைவுகளாய் இதே இடத்திற்குச் சுற்றுலாவாகத் திரும்பி வருகின்றார்கள்!

நம் மூதாதையர்களில் பித்ருக்களாய் ஆனவர்களைத் தவிர ஏனையோர் எங்கெங்கோ, எந்தெந்த நாடுகளிலோ, மாநிலங்களிலோ, கடல், குளங்களிலோ ஏனைய உலகங்களிலோ, கிரக மண்டலங்களிலோ தற்போது வாழ்ந்து கொண்டிருந்தால் அவர்களுக்கு இத்தர்ப்பண சக்தியானது நோய் தீர்க்கும் மருந்து சக்தியாகவோ, விபத்துகளில் இருந்து காக்கும் ரட்சா சக்தியாகவோ, பண உதவியாகவோ ஏதேனும் ஒரு நல்உதவியாகச் சென்றடையும்.! நீங்கள் எடுத்துள்ள ஆயிரக் கணக்கான பிறவிகளை நோக்குங்கால், நீங்களும் பல வம்சங்களுக்கு மூதாதையர்கள் ஆகின்றீர்கள்... உங்களுக்கும் யார் யாரோ தர்ப்பணம் அளித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதுவே தற்போது உங்களுக்குப் பல விதங்களில் வாழ்க்கையில் உதவிக் கொண்டிருக்கின்றது! நாம்தாம் பூஜைகளை சந்தியா வந்தன வழிபாடுகளை முறையாகச் செய்வது கிடையாதே! மூர்த்தி, தீர்த்தம், தல வழிபாடுகளைச் சரிவர மேற்கொள்வதும் கிடையாதே.. இப்படி நாம் இருந்தாலும் வாழ்க்கை ஓரளவு சௌகரியமாக ஓடிக்கொண்டிருக்கின்றதே என்று அதிசயிக்கின்றீர்களே, இதன் காரணத்தை இனியேனும் உணர்ந்து கொள்ளுங்கள்!

உங்களுக்கும் பையனாக, பெண்ணாக, பெற்றோராக ஒரு ஜன்மத்தில் இருந்தவர்தாம் பக்கத்து வீட்டில் முத்தையா, ராமையா, சுப்பையா என்ற பெயர் பூண்டு வாழ்ந்து உங்களுக்கு பூர்வ ஜென்ம உறவாக ஏதோ தர்ப்பணமும் அளித்துக் கொண்டு இருப்பார். அதுவும் வங்கியின் “recurring deposit, monthly interest” போல் உங்களுக்கு வந்து கொண்டிருக்கும். நீங்கள் யாருக்கு முறையாகத் தர்ப்பணம் செய்யவில்லையோ அதன் பாதிப்பால்தான் அவர்களே எங்கெங்கோ பிறந்து அவர்களுடன் முன் ஜென்ம பாக்கியாக இன்று உங்களுக்குப் பல இடங்களில் தகராறுகளும் விரோதங்களும் முன்வினைத் தொடர்களாக உண்டாகின்றன. இன்று உங்களுக்கு முக்கிய எதிரியாக இருப்பவரின் பகைமை உங்களுக்கு ஒரு ஜன்மத்தில் நெருங்கிய உறவாக, நட்பாக இருந்து அதில் பெருகிய விரோதமே தொடர்கிறது!

பதினைந்து தினங்களுக்கும் தேவையான தர்ப்பணப் பொருட்களை முன்னரேயே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.. 15 தினங்களிலும் முடிவெட்டாது, வேஷ்டி, சட்டை, பூணூல், கடுக்கன் அணிந்து ஓர் எளிமையான விரதம் போல் கடைபிடித்தால் மனதிற்குச் சாந்தமும் இல்லத்தில் அமைதியும் தவழ்வதைக் கண்கூடாக உணர்ந்திடலாம்.. உங்கள் தாத்தா, பாட்டி, மூதாதையர்கள் பயன்படுத்திய பூஜைப் பொருட்கள், மாலை மணிகள், பலகை, புத்தகங்கள், கைத்தடி போன்றவற்றைச் சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம், சந்தனமிட்டு நமஸ்காரம் செய்து வாருங்கள்! அவர்கள் சூட்சுமமாக வந்து அமர்ந்து தங்கி மகிழ்வுடன் ஆசீர்வதிப்பர்.

தர்ப்பணத்தில் பயன்படுத்தப்படும் தான்யங்கள், காய்கறிகள், கனிகள், நாணயங்கள், வஸ்திரங்கள், புஷ்பங்களைத் தானமாக அளித்திடவும்.! தினசரித் தர்ப்பண்த்திற்கான தேவையான பொருட்கள் : உத்தராணி (உத்தரிணி) மரத் தாம்பாளம், எள், தர்பை, மரப் பலகை, தர்பைப் பாய் அல்லது நல்ல பருத்தித் துண்டு, தர்பை மோதிரம் (பவித்ரம்), உத்ரணி என்னும் செப்புக் கரண்டி, பஞ்ச பாத்திரம் (தாமிரத் தம்ளர், தாமிரச் சிறு கரண்டி). தெற்கு நோக்கி பலகை, தர்ப்பைப் பாயில் அமர்ந்து காலையில் 7 மணிக்குள் தர்ப்பணம் அளித்தல் வேண்டும்.. காலை, மதியம், மாலையில் தானதர்மங்கள் செய்திடுக! ஆண்கள் வேட்டி மேல் இடுப்பில் துண்டு கட்டி இரட்டை வஸ்திரங்களுடன் பூஜித்தல் வேண்டும். பஞ்ச கச்ச முறையில் வேட்டி தரித்தல் உத்தமமானதாம்! கங்கை, காவிரி, போன்ற புண்ணிய நதித் தீர்த்தம், பல ஆலயத் தீர்த்தங்கள் கலந்த புனித நீரை தர்ப்பணத்திற்குப் பயன்படுத்துதல் தர்ப்பணப் பலன்களை மேம்படுத்தும், வில்வம், துளசி ஊறிய புனிதமான நீரையும் சேர்த்திடலாம்.. தர்பைப் பாயில் அமர்தல் விசேஷமானது.. தங்க, வெள்ளித் தம்ளர்கள் புனிதமானவை! ஆனால் நடைமுறையில் சாத்யமானதா என்று எண்ணாதீர்கள்! இதனைச் சுட்டிக் காட்டிடக் காரணம் வசதி உள்ளோர் அவரவர் ஊரில் தர்ப்பணச் சங்கம் அமைத்து ஜாதி, மத, குல பேதமின்றி அனைவரும் தர்ப்பணம் அளிப்பதற்கான பொருட்களை அளித்துப் பெரும் புண்ய சக்தியைப் பெற்றிடலாம் அல்லவா! ஒரே வெள்ளி அல்லது தங்கத் தம்ளரினால் பலரும் சுற்று முறையில் தர்ப்பணம் அளித்தால் அனைவருக்கும் இப்புண்ய சக்தி வந்து சேர்வதற்கு ஓர் அற்புத இறைக் கருவியாகச் செயல்படலாம் அல்லவா! பூஜை முடிந்தவுடன் தம்ளர்களை பத்திரப்படுத்திடுங்கள்!

மாளய பட்சத் தர்ப்பண வர்க முறை – மூர்த்தார் நினைவுப் படையலான தர்ப்பணமானது,,

1. தந்தை வழி ஆண் வர்கம் – 3
2. தந்தை வழி பெண் வர்கம் – 3
3. தாய்வழி ஆண் வர்கம் – 3
4. தாய்வழி பெண் வர்கம் – 3
ஆக நம்முடைய முந்தைய சந்ததி வரிசையில் 12 பேர்களுக்கு அளிக்கப்படுவதாகும்! 24 தலைமுறை என்பது ஒரு வட்டச் சந்ததி ஆகின்றது! எனவே 24 மூதாதையர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதே சிறப்பானது! ஆனால் மனிதனின் ஞாபக சக்தி மிகவும் மங்கி வருவதால் 12 பேருக்கான தர்ப்பண பூஜையாக மாறிவிட்டது.. இன்றைக்கும் 24, 36, 64, 96, 108 மூதாதையர்களுக்கு தர்ப்பணம் அளிப்போரும் உண்டு! அவர்களை அறிந்து ஆசி பெற்றிடுங்கள்!

மிண்டு ரங்க மூங்கில் குவளையால் தர்ப்பணம்! தாமிரத் தம்ளர், பஞ்ச பாத்திரத்தை விட, மிண்டு ரங்கக் குவளை எனப்படும் மூங்கில் தம்ளரில் தர்ப்பணம் அளித்தல் சிறப்புடையது.. மேலும் உத்தராணி மரத்தில் செய்யப்பட்ட மரத் தாம்பாளத்தில் தர்ப்பணம் இடுதல் சிறப்பானது.. வெண்கலத் தாம்பாளத்தையும் பயன்படுத்திடலாம்.. எவர்சில்வர் கூடவே கூடாது. ஆஸ்த்மா, சிறுநீரக நோயால், தீ விபத்துக்களால் அவதிப்பட்டு இறந்தோர்க்குத் தக்க ஆன்ம சாந்தி தருவதாக வ்ருஷ வருட மாளய பட்சத் தர்ப்பண பூஜை அமைகின்றது. எந்தக் கர்ம வினைகளால் இந்நோய்கள் ஏற்படுகின்றனவோ அவை தீர்வு பெறாவிட்டால் எதிர்வரும் பிறவிகளில் இந்நோய்கள் கடுமையாகத் தொடரும். ஆதலின் 60 ஆண்டுகளுக்கு ஒரு முறையே வரும் இந்த விசேஷமான தர்ப்பண பூஜையை முறையாகக் கடைபிடித்து இந்நோய்களால் வாடி வதங்கி இறந்தோர்க்கு ஆன்ம சாந்தி அளித்திடுக! பூர்வ ஜன்மங்களில் நமக்கோ நம் சந்ததிக்கோ இந்நோய்கள் இருந்திருக்கலாம் அல்லவா!

எனவே ‘நமக்குத்தான் இந்நோய்கள் இல்லையே நாம் ஏன் இதைச் செய்ய வேண்டும்’ என்று எண்ணாதீர்கள்! நமக்காக இல்லாவிட்டாலும், நம் சந்ததிக்கு இவை வராமலிருக்கவும், இவற்றால் அவதிப்பட்டு இறந்தோர்க்கு ஆத்ம சாந்தி அளித்திடவும், இவற்றால் இன்றும் வாடுவோர்க்கு நல்வழி காட்டவும் ஒரு மாபெரும் சமுதாய பூஜையாக இதனைக் கொண்டாடிடுங்கள்! இந்த வியாதிகளால் தற்போது அவதியுறுவோரும் இதனைக் கடைபிடித்திட்டால் நோயின் கடுமைகள் தணிந்து நல்ல நிவர்த்தி உண்டாவதற்கான நல்வழி முறைகள் கிட்டும். எதிர்காலத்தில் சந்ததிகளை இந்நோய்கள் தாக்காமலிருக்கும் இத்தர்ப்பண பூஜைகள் பெரிதும் உதவும்..

சிறுநீரக வியாதிகளால் இறந்தோர்க்கு இருசுழி வட இணைத் தர்ப்பணம்! : தர்ப்பண நாள் : 15.9.2001 சிறுநீரக நோயால் அவதியுற்று இறந்தோர்க்குத் தக்க ஆன்ம சாந்தி அளிப்பதே இருசுழி இணைத் தர்ப்பணம்.. Double Beans எனப்படும் பெரிய வகைப் பட்டாணி தான்யங்களை உத்தராணி மரத் தாம்பாளத்தில் நிரப்பி இதன் நடுவில் ஒரு வெற்றிலையை வைத்து அதன்மேல் சிறுநீரக வடிவமைப்பில் வைத்திட வேண்டும்.. இதைச் சுற்றி மஞ்சள், குங்குமம் தடவிய பஞ்சு மாலையை வைத்து இந்த பட்டாணிகளின் மேல் சிறுநீரக நோய்களால் இறந்தோரின் பெயரைச் சொல்லித் தர்ப்பணம் அளிக்க வேண்டும்.. இவ்வகையில் உங்கள் குடும்பத்தில் யாரும் இல்லையெனில் பொது சங்கல்பமாக இவ்வாறு இறந்தோரின் ஆன்ம சாந்திக்கு இத்தர்ப்பணம் உதவ வேண்டும் என்று சங்கல்பப் பிரார்த்தனை செய்திடுக! “கங்கே ச யமுனே சைவ கோதாவரீ சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதிம் குரும்!” என்ற மந்திரத்தை ஓதி, பிறகு தர்ப்பண மந்திரத்தைச் சொல்லி மூங்கில் குவளையில் மஞ்சள் கலந்த நீரால் தர்ப்பணம் அளித்திடுக! டயாலிஸிஸ் முறையில் மருத்துவம் பெறுவோர் தினந்தோறும் தம் மூதாதையர்க்கு நித்தியத் தர்ப்பணம் அளித்து வந்தால் தக்க நல்வழி குண முறைகளைப் பெற்றிடலாம்!

ஆஸ்த்மா சம்பந்தப்பட்ட நோயால் துன்பப்பட்டு இறந்தோர்க்கு சுவாச த்வாரகாம்பரத் தர்ப்பணம்! தர்ப்பண நாள் : 7.9.2001 – உத்தராணி மரத் தாம்பாளத்தில் முந்திரிப் பருப்புகளைப் பரப்பி இதன் மேல் தர்பைச் சட்டம் அமைத்திடுக! இருதய வடிவான பூவரசு இலை ஒன்றை வைத்து இதன் மேல் வலஞ்சுழிக் காயையும் அதன் கீழ் இரண்டு முந்திரிப் பருப்புகளை (இரு நுரையீரல்கள்) இருதய சுவாசக் குழாய் வடிவில் வைத்து மூங்கில் குவளையில் பச்சைக் கற்பூரம் கரைத்த தீர்த்தத்தால் தர்ப்பணம் அளிக்க வேண்டும். வலஞ்சுழி, இடஞ்சுழிக் காய்கள் நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்.! முதலில், “ஆதம் ஸ்வரூபாய வித்மஹே ஆத்மானந்தாய தீமஹி தந்நோ ஆத்ம ஜோதி ப்ரசோதயாத்!” – என்ற காயத்ரீ மந்திரத்தை ஓதிப் பிறகு தர்ப்பண மந்திரங்களை ஓதித் தர்ப்பணம் இட வேண்டும்! பேரிக்காய், சீதாப் பழங்களைப் படைத்துத் தானமளித்தல் விசேஷமானது!

மாளய பட்சத் தர்ப்பண முறைகள்! –பிரதமை திதி (3.9.2001 திங்கள்) இன்று ஸ்வேத ராகச் சந்திர மூர்த்தியாகச் சந்திர பகவான் பரிணமிக்கின்றார்.

பொதுத் தர்ப்பணம் : முதலில் தந்தை வழி ஆண் வர்க்கத்தினருக்குத் தர்ப்பணம் அளித்த பிறகு ஏனையோர்க்குத் தர்ப்பணம்! உத்தராணி மரத் தாம்பாளத்தில் உளுந்து தான்யம் பரப்பித் தர்பைச் சட்டம் அமைத்திட்டு இதன் மேல் முழு வெண் தாமரை அல்லது வெண்பட்டுத் துண்டு அல்லது புது வெள்ளை வஸ்திரம் வைத்துத் தர்ப்பணம் இடுக! மூங்கில் குவளையில் கங்கை, காவிரி நீர் நிரப்பி, வெள்ளை நிறத்தில் இருக்கும் பச்சைக் கற்பூரம் சேர்த்துப் பச்சை கற்பூர நறுமண வாசனையுடன் தர்ப்பணம்!

விசேஷத் தர்ப்பணம் : வழுக்கைத் தலையுடன் வாழ்ந்து இறந்தோர்க்கு முதலில் தர்ப்பணம். இதனால் அவருடைய உள்ளக் கிடக்கைகள் சாந்தமாகி ஆன்ம சாந்தி உண்டாகும். இறைவன் அளித்துள்ள வாழ்வில் நமக்கு எந்தக் குறைகள் இருந்தாலும் அது நம் முன் வினைக் கர்ம வினைப்படி அமைந்ததே என்ற உணர்வு ஏற்படாவிடில் அக்கர்ம வினைகள் தொடர்ந்து விடும்! இத்தகைய ஏக்கத்துடன் இறந்தால் அவ்வாறு ஆனதற்கான கர்மவினைகள் தொக்கி நின்று எதிர்வரும் பிறவிகளிலும் துன்பங்கள் தொடரும்.!

இந்நாள் எம பகவானுக்கு உரித்தான நாளும் கூட! ஸ்ரீமார்கண்டேய புராணத்தில் ஸ்ரீஎம பகவான், ஆத்ம தேவ மூர்த்திகள் ஆத்ம தேவதா தர்ப்பண சக்தி மகிமையை உய்த்தே மீண்டெழுந்து, இத்திருநாளில் ஞான மூர்த்தம் பெற்றார்! திருப்பைஞீலி, ஸ்ரீவாஞ்சியம், திருஅண்ணாமலை, ஸ்ரீஎம லிங்கம், கும்பகோணம் திருவாலங்காடு, சென்னை காஞ்சி சாலையில் சுங்குவார் சத்திரம் அருகே எச்சூர் போன்ற எம அம்சத் தலங்களில் தர்ப்பணமிட்டு எள் உருண்டை, எள் சாதம் தானம்!

துவிதியை திதி (4.9.2001) செவ்வாய் :- 3.9.2001 திங்கள் பின்னிரவு 5.32 மணி முதல் 5.9.2001 புதன் காலை 7.37 மணி வரை மூன்று நாள் துவித்யைத் திதி படர்ந்து மலரும் அபூர்வ நாட்கள் இவை! எனவே இன்று துவித்யைத் திதி மிகவும் சக்தி வாய்ந்ததாக விளங்குகின்றது. மாளய பட்சமும் கூடுவதால் பெறுதற்கரிய துவித்யை திதி சக்தி பல்கிப் பெருகும் மிகமிக அற்புதமான நாள்!

பொதுத் தர்ப்பணம் : முதலில் தாய் வழிப் பெண் மற்றும் ஆண் வர்கத்திற்கும், பிறகு ஏனையோர்க்கும் தர்ப்பணம்! உத்தராணித் தாம்பாளத்தில் இருபாகங்களாகப் பிரிக்கப்பட்ட முந்திரிகளைப் பரப்பி தர்ப்பைச் சட்டமிட்டு மூங்கில் குவளையில் துளசி+வில்வம் ஊற வைத்த நீரால் தர்ப்பணம் அளித்திட வேண்டும்! இரட்டைக் குழந்தைகள் மற்றும் இரு பெண் குழந்தைகளைக் கொண்டோர், இரு மனைவியருடன் வாழ்வோர்க்குச் சந்ததிக் குழப்பங்கள் வாராதிருக்க இத்தர்ப்பண சக்தி உதவிடும்! தர்ப்பணத்திற்குப் பின் ஏழைகளுக்குப் பாய், தலைணைகளைத் தானமாக அளித்தலால் உறக்கமில்லாமை, கெட்ட கனவுகள் தீர்வு பெறும்!

விசேஷத் தர்ப்பணம் : பெற்றோர் இருக்க, தம்பி இறந்திருந்தால் அண்ணன்மார்கள் மறைந்த இளவல்களுக்கு விசேஷமான தர்ப்பணம் அளிக்க வேண்டிய நாள்! உத்தராணித் தாம்பாளத்தில் துவரை நிரப்பித் தர்பைச் சட்டம் அமைத்து செம்பருத்தி, விருட்சிப்பூ, செவ்வரளி மூன்றையும் அல்லது ஒன்றிரண்டையேனும் வைத்து அதன் மேல் தர்ப்பணம்! வாகன விபத்தில் அடிபட்டுப் பல ஆண்டுகள் அவதிப்பட்டு இறந்தோர்க்கும் தர்ப்பணம்! இவர்கள் “தீ பொசுக்கிய, அல்லது உறுப்பு நைந்த வேதனைகளுடன்” இறந்திருந்தால் செவ்வாய் லோகத்தில் இத்தர்ப்பண சக்தியால் இவர்கட்கு ஆத்ம மருத்துவம் நிகழ்ந்து ஆத்ம சாந்தி ஏற்படும்.!

தான தர்மம் : துவிதியைத் திதி பரிபூரணமாக இருப்பதால் துவிதீய சார சக்தி நிறைந்த  இரு பங்காக, இரண்டிரண்டாக உள்ள முந்திரி, வேர்க் கடலை, வேட்டி சட்டை, புடவை ரவிக்கை, காலணிகள், கடுக்கன்கள், தோடுகள், மூக்குக் கண்ணாடிகள் போன்றவை தானம்! ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானையுடன் கூடிய ஸ்ரீமுருகன் தலங்களில் தர்ப்பணம் அளித்தல் விசேஷமானது! கும்பகோணம் அருகே கூந்தலூரில் ஸ்ரீமுருகனுக்கு எதிரே ஸ்ரீசனீஸ்வர பகவான் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பானதாம்! இரு சந்நிதிகளுக்கும் இடையே அமர்ந்து தர்ப்பணம் அளித்து, தக்காளி, பீட்ரூட் கலந்த உணவு கருந்திராட்சை, சிகப்பு நிற பன்னீர் திராட்சைக் கனிகள் தானம்! இதனால் எப்போதும் பிரயாணங்களிலேயே இருப்போர்க்கு மன அமைதி கிட்டும், வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படும்!

திரிதியை திதி (5.9.2001) புதன்

பொதுத் தர்ப்பணம் : முதலில் தாய் வகையில் ஆண் வர்க்கத்தினருக்குத் தர்ப்பணம், பிறகு ஏனையோர்க்குத் தர்ப்பணம், உத்தராணித் தாம்பாளத் தட்டில் பச்சைப் பயறு பரப்பித் தர்பைச் சட்டம் அமைத்துத் துளசி, வில்வம், திருநீற்றுப் பச்சை வைத்துப் பொதுத் தர்ப்பணம்! மூங்கில் குவளையில் நல்ல கிணறு, ஆலயத் தீர்த்த நீரை ஊற்றித் (Bore Water, Corporation Water கூடாது) தர்ப்பணம்!

விசேஷத் தர்ப்பணம் : பால பருவம் மற்றும் குழந்தைப் பருவத்திலேயே இறந்தோர்க்கு இன்று விசேஷத் தர்ப்பணம் அளித்திடில் அவர்களுடைய ஆன்ம சாந்திக்கு இது வழிவகை செய்யும்! கருவிலேயே இயற்கை இறந்த குழந்தைக்கும் தர்ப்பணம் அளித்திட்டால் அதற்குரிய கர்ம வினைப் பரிகார வழியைச் சுட்டிக் காட்டும்! பொதுவாக, கருச்சிதைவு செய்து கொண்டோர் சிதைத்த கருக்களுக்கும் நித்யத் தர்ப்பணம் அளித்தாக வேண்டும்.! இல்லாவிடில் கலைக்கப்பட்ட கரு பழிவாங்க எண்ணிடில், பெரும் பாதக விளைவுகளாக மாறிடும்! குழந்தையின்றி இறந்தோர் அத்தகைய ஏக்கங்களுடன் இறந்தால் அதன் உள்ளக் கிடக்கைகளைச் சாந்தப்படுத்த இன்று வெறும் வயிற்றுடன் தர்ப்பணம் அளித்து “கர்ப வாசனை” சக்திகள் நிறைந்த பலாச்சுளை, மாதுளை போன்ற கனி வகைகளுடன் கர்பாசன சக்தி நிறைந்த பறங்கி, பூசனி, வாழைப்பூ போன்ற காய்கறிகள் கலந்த உணவோடு தானமளித்தல் சந்ததி இன்றி இறந்தோர்க்கு ஆன்ம சாந்திக் கருணை கிட்டிடக் கர்த்தமப் பித்ருக்கள் வேண்டுவர்! கும்பகோணம் அருகே கருவளர்ச்சேரி மூலக் கருவறை வாசலுக்குப் பசு நெய் இட்டு மெழுகி ஆலயத்தில் தான தர்மங்களுடன் இவ்வகைத் தர்ப்பணம் அளித்தலால் சிசு நழுவும் கர்ப்பக் கோளாறுகள் தீரும்! எந்நாளிலும் சித்த, அமிர்த யோக நேரத்தில் கும்ப லக்னத்தில் இதைச் செய்வது பலன்களைப் பெருக்கும்!

சதுர்த்தி திதி (6.9.2001) – வியாழன்

பொதுத் தர்ப்பணம் :- முதல் நாள் இரவிலேயே ரேவதி நட்சத்திரம் இருக்கும்போதே முளைப் பாலிகையில் (சிறு மண் சட்டி) முளைப் பயிறு ஆக்கிக் கொள்ளுங்கள்! இன்று உத்தராணி மரத்தாம்பாளத்தில் முளை விட்ட பயிறுகளைப் பரப்பி முந்திரியுடன் உள்ள முந்திரிப் பழம் அல்லது மேல் கீரையுடன் உள்ள முள்ளங்கி, காரட் ஆகியவற்றை வைத்து அவற்றின் மேல் தர்ப்பணம்! மேல் கீரையை அகற்றக் கூடாது!

விசேஷத் தர்ப்பணம் :- ஏதேனும் காரியம் ஆற்றிக் கொண்டே திடீரென்று இறந்தவர்களின் ஆன்ம சாந்தி அடைய இத்தர்ப்பணம் உதவும்! தானம் :- முளைப் பயிறுக்கு உப்புக் காரமிட்டு தானம்! முள்ளங்கி, காரட்டைச் சமைத்து எலுமிச்சை சாதத்துடன் அன்னதானம்!

சதுர்த்தி திதி (7.9.2001) வெள்ளிக்கிழமை

பொதுத் தர்ப்பணம் :- முதலில் தந்தை வழிப் பெண் வர்கத்தினருக்குத் தர்ப்பணம், பிறகு ஏனையோர்க்குத் தர்ப்பணம்! முதல் நாள் இரவே நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் மாசிக்காய் எனும் உருண்டைக் காய்கள் மூன்றை உடைத்து ஊறிடும் வண்ணம் மூங்கில் குவளையில் இட்டு வைத்திடவும்! உத்தராணி மரத் தாம்பாளம் நிறைய கேழ்வரகு பரப்பி, தர்ப்பைச் சட்டமிட்டு மூங்கில் குவளையில் குறைந்தது ஆறுவிதமான நதி நீர், ஆலயத் தீர்த்தங்களை நிரப்பி, மாசிக்காய்த் தீர்த்தத்துடன் தர்ப்பணம் இடவும்!

விசேஷத் தர்ப்பணம் : மிகவும் குண்டாக இருந்து வாழ்ந்து இறந்தோருக்கு விசேஷமாகத் தர்ப்பணம் அளிக்க வேண்டிய நாள்! அவர்கள் வாழ்நாள் முழுதும் பலவகை ஏக்கங்களுடன், தாழ்வு மனப்பான்மையுடன், தன்னால் பிறர்போல் எத்தனையே காரியங்களை ஆற்ற முடியவில்லையே என்ற ஏக்கத்துடனேயே வாழ்ந்து இறந்தால், இக்கர்ம வினைகள் பஸ்மமாக்கப்படாமல் எதிர்வரும் பிறவிகளிலும் தொடரும்! எனவே இத்தகையோருக்கு ஆன்ம சாந்தி அளிப்பதற்காக இன்று மிகவும் முக்கியமான தர்ப்பண முறையைச் சித்தர்கள் அருள்கின்றார்கள்! இன்று சுக்ர சக்தி நிறைந்த நாளாகையால் வெள்ளித் தட்டில் தர்ப்பணம் இடுதல் அபரிமிதமான பலன்களைத் தரும்! வசதி இருப்போர் தம்முடைய வெள்ளித் தட்டை வசதி இல்லாதோருக்கும் தந்து தர்ப்பணம் நிகழ்த்திடப் பேருதவி புரிதலால் அபரிமிதமான புண்ய சக்திகளைப் பெற்றிடலாம்! பிறகு தட்டைப் பத்திரப்படுத்திடவும்.

உத்தராணி மரத் தாம்பாளத்தில் பார்லி அரிசி அல்லது ஜவ்வரிசியை நிரப்பி இதன்மேல் ஒரு கஜம் நீளம் கத்தரிப் பூ (நீல) நிற ரவிக்கைத் துணியைப் பரப்பித் தர்பைச் சட்டம் அமைத்துத் தர்ப்பணம்! எண்ணெய்ப் பண்டங்களையும், மாவு வகை, தேங்காய் கூடிய உணவுப் பண்டங்களையும் தானமாக அளித்தலால், மிகவும் குண்டாக இருந்து இதை எண்ணியே தினமும் வேதனையோடு வாழ்பவர்களும் வாரந்தோறும் புதன் மற்றும் சனிக் கிழமைகளிலும் மேற்கண்ட வகையில், தர்ப்பணம் அளித்து வருதலால் தக்க நிவர்த்திகள் கிட்டும்! இத்தகைய தர்ப்பணத்தை நிகழ்த்திட உரிய தலம் சிவ பெருமானுக்கும், அம்பாளுக்கும் உரிய நந்தி வாகனங்கள் ஒரே மண்டபத்தில் அபூர்வமாக அமைந்து அருள்பாலிக்கும் கும்பகோணம் பட்டீஸ்வரம் அருகில் இருக்கும் செருக்கை ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயமாகும்! நந்திக்கு எதிரே அம்பிகையையும், சிவபெருமானையும், நந்தியையும் நோக்கியவாறு அமர்ந்து தர்ப்பணம் அளித்து, தேங்காய் மற்றும் எண்ணெய் வகை உணவுப் பண்டங்களைத் தானமாக அளித்து வருதலால் உடல் பருமனுக்குத் தக்க நிவர்த்திகள் கிட்டும்! ஒருமுறை வாயு பகவானின் தேகம் பெருகிப் பெருகி வானையே அடைத்திட இங்கு செருக்கைத் தலத்தில் ஸ்ரீபுஷ்பவல்லி சமேத பிரம்புரீஸ்வரரை வேண்டி தச வாயு பற்றிய ஞானம் பெற்று நன்னிலை அடைந்த தலம்!

பஞ்சமி 8.9.2001 சனிக்கிழமை

 இன்று மஹா பரணித் திதி நாளாகும், பிதுர்லோகங்களில் மிகப் பெரிய எண்ணெய் தீபங்கள் ஏற்றி பிதுர் தேவ மூர்த்திகள் அக்னி தேவதா மூர்த்தியை வழிபடுகின்ற மகத்தான அக்னி பூஜைத் திருவிழா நாள்! இன்று உத்தராணி மரத் தாம்பாளத்தின் மேல் வாழை இலை வைத்து அரிசியைப் பரப்பி இதன் மேல் குறைந்தது ஒரு கஜம் நீளம் உள்ள மஞ்சள் நிற ரவிக்கைத் துணியை வைத்திடுக! அவரவர் பிறந்த தேதி எண்ணிக்கையில் மிளகு வைத்துத் தர்ப்பைச் சட்டம் அமைத்து மூங்கில் குவளையில் எள் இட்டத் தீர்த்தத்தோடு இட வேண்டும்! இந்தத் தர்ப்பணத்திற்குச் சாட்சியாக மஹா பரணி ஜோதி விளக்குகளாக 12 அகல் விளக்குகளை வைத்துத் தேங்காயெண்ணெய் தீபங்களேற்றி ஜோதி தேவதா மூர்த்திகளின் சாட்சியாக இந்த தர்ப்பணத்தை அளித்திடுதல் வேண்டும்.!

பொதுத் தர்ப்பணம் :- மஞ்சள் துணி மேல் தர்ப்பைச் சட்டம் அமைத்து, மூங்கில் குவளையில் செந்தூரம் மற்றும் குங்குமம் கலந்த தீர்த்தத்தால் தர்ப்பணம் அளித்திடுதல் வேண்டும். முதலில் தந்தை வழியிலான பெண் வர்க்கத்தினருக்குத் தர்ப்பணம், பிறகு ஏனைய வர்க்கத்தினருக்குத் தர்ப்பணம்!

தீ விபத்தில் இறந்தோர்க்கு விசேஷத் தர்ப்பணம் :- பொதுவாக தீ விபத்துக்களின் வேதனைகளுடன், மனத் துடிப்புடன் மரணம் அடைந்தோர்க்கு விசேஷமான தர்ப்பண முறை ஒன்று உண்டு. உத்தராணி மரத் தாம்பளத்தின் மேல் வாழை இலை வைத்து, பச்சரிசியைப் பரப்பிடுக! நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் மூன்று இலவம் பஞ்சுக் காய்களை உடைத்து ஓடுகளோடு வைத்து, இதன் மேல் தர்ப்பைச் சட்டம் அமைத்திடுக! இதனைச் சுற்றிலும் இலவம் பஞ்சினால் ஆன பஞ்சு மாலையை (மஞ்சள், குங்குமம் தடவிய இலவம் பஞ்சுத் திரி மாலை) வட்டமாக வைத்து மூங்கில் தம்ளரில் துளசியும் நல்ல குங்குமமும் கலந்து தர்ப்பணம் அளித்திட வேண்டும்.. தீ விபத்தில் ஆட்பட்டதற்கான கர்ம வினைகள் தீர்வதற்கு இத்தர்ப்பண சக்திகள் உதவும்! பொதுவாக, தீ விபத்துக்களில் ஆட்பட்டோர் பலத்த மன வேதனைகளுடன் வாழ்வதால் இந்த வருத்தங்கள் எல்லாம் தொக்கி நின்று எதிர்வரும் பிறவிகளிலும் கூடவே வந்திடும். தற்போதும் தீ விபத்துக்களினால் பலவிதமான துன்பங்களை அனுபவித்து வருகின்றவர்களும் இந்தத் தர்ப்பண வேதனைகளுக்குத் தக்க நிவாரணம் கிட்டுவதோடு, இப்பிறவியோடு இதற்கான கர்ம வினைகள் முடிந்து விடுவதற்கு இத்தர்ப்பண சக்தி பெரிதும் துணை புரியும்!

ஸ்ரீஅக்னிபுரீஸ்வரர் திருகாட்டுப்பள்ளி

பொதுவாக ஸ்ரீஅக்னீஸ்வரர் என்ற பெயரைத் தாங்கி இறைவன் அருள்பாலிக்கும் ஆலயங்களில் இந்த விசஷத் தர்ப்பண முறையை இன்று கடைபிடித்தல் சிறப்புடையதாகும்.. (திருச்சி – வயலூர் ஸ்ரீஅக்னீஸ்வரர், தஞ்சாவூர் – கண்டியூர் அருகே உள்ள திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீதீயாடியப்பர் எனும் ஸ்ரீஅக்னீஸ்வரர், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், கும்பகோணம் அருகே கஞ்சனூர் ஆலயம் (சுக்ர ஸ்தலம்)..!

தான தர்மங்கள் : மஹா பரணி மாளய பட்சத் தர்ப்பண தினமான இன்று ஆலயங்களில் குறைந்தது 108 அகல் விளக்குகளை ஏற்றுதலும், ஏழைகளும் விளக்கேற்றும் வண்ணம் அகல், எண்ணெய், திரியை தானமாக அளித்தலும் விசேஷமானதாகும்! அன்னதானமாக இன்று எண்ணெய் வகை உணவுப் பண்டங்களை (பஜ்ஜி, போண்டா போன்றவை) தானமாக அளித்தலால் வயிறு, குடல் சம்பந்தமான நோய்களால் வாடுவோர்க்குத் தக்க நிவாரணம் கிடைக்கும்! அமாவாசை மட்டும் அல்லாது பரணி நட்சத்திர நாள்தோறும் இதனைச் செய்து வருதல் நற்பலன்களைத் தரும்!

ஷஷ்டி திதி (9.9.2001) ஞாயிறு

ஷஷ்டி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வருவது மிகவும் விசேஷமானதாகும்.. ஞாயிற்றுக்கிழமையும் பாஸ்கர அக்னி சம்பந்தப்பட்ட நாளானதால் இன்று அக்னி சம்பந்தப்பட்ட நற்காரியங்கள் சிறப்பாக நடைபெறுவதற்குப் பித்ருக்கள் பெரிதும் உதவுகின்றார்கள்.. இன்றையத் தர்ப்பணத்தில் பாஸ்கர அல்லது சூரிய தீர்த்தத்தால் தர்ப்பணம் அளித்தல் சிறப்பானது! பல ஆலயங்களிலும் சூரியத் தீர்த்தம் உண்டு! ஆலயத் தீர்த்தங்களில் இருந்து நீரை எடுக்கும் போது உண்டியலில் தக்க தொகையைச் செலுத்திட வேண்டும்! பாஸ்கர தீர்த்தம், சூரிய தீர்த்தம் பற்றி அறியாதவர்கள் கும்பகோணம் (காவிரி நதி) சக்கரப் படித்துறையிலிருந்து சக்கரத் தீர்த்தமும் பெற்றுச் செய்திடலாம்! இன்று பித்ரு ஹோமம் நிகழ்த்திய பின் பித்ரு தர்ப்பணம் செய்வது விசேஷமானதாம்.. ஹோமம் பற்றிய சிறப்பு விளக்கங்களைக் கீழே காண்க! ஹோமத்திற்குப் பின் ஹோம குண்டத்திற்கு அருகிலேயே இந்நாளுக்கு உரித்தான தர்ப்பணத்தைத் தொடங்கிடுங்கள். உத்தராணி மரத் தாம்பளத்தில் நிறைய நெல் வைத்து, இதன் மேல் தர்ப்பைச் சட்டம் அமைத்து, 12 சமித்துக் குச்சிகளை இதன் நடுவில் சூரியன் போல் விரித்து, மூங்கில் குவளையில் பாஸ்கர தீர்த்தம் கொண்டு இதன் நடுவில் தர்ப்பணம் அளித்திடுதல் வேண்டும்.. முயற்சி செய்தும் பாஸ்கர தீர்த்தம் கிடைக்காவிடில் முதல் நாள் இரவே பச்சரிசி மாவால் சூரியக் கோலமிட்டு அதன் மேல் மண் அல்லது வெள்ளி / தங்க பாத்திரத்தில் துளசியை இட்டு மறு நாள் தர்ப்பண சூர்யத் தீர்த்தமாகக் கொள்க!

சூரிய தீர்த்தம்
பாபநாசம் கும்பகோணம்

பொதுத் தர்ப்பணம் : இன்று முதலில் தாய்வகைப் பெண் வர்கத்தினருக்கும், பிறகு ஏனையோர்க்கும் தர்ப்பணம்!

விசேஷத் தர்ப்பணம் : தலை, கபாலம் சம்பந்தப்பட்ட வியாதிகளால் அவதியுற்று இறந்தோர்க்கு இத்தர்ப்பணம் தக்க கபால ஆன்ம சாந்தியை அளிக்கின்றது. மேலும் தற்போது தலை, கபாலம், நெற்றி பட்டைகளில் ஒற்றைத் தலைவலி, நினைவு இழப்பு போன்றவற்றால் அவதியுறுவோரும் இத்தர்ப்பணத்தை ஞாயிறுதோறும் கடைபிடித்தல் மிகவும் சிறப்பானதாகும். இவர்கள் சார்பாக நெங்கிய உறவினரும் செய்திடலாம்!

தான தர்மங்கள் : ஸ்ரீமுருகனுக்குப் ப்ரீதியான தினைமாவு, மற்றும் சிகப்பு நிற உணவு வகைகள் (தக்காளி சாதம், போன்றவை) பொதுவாக இன்று கிரிவலம் வரக்கூடிய மலைத் தலங்களில் தர்ப்பணம் அளித்தல் சிறப்புடையது.. சூரிய தீர்த்தம், சக்கர தீர்த்தம், சந்திர தீர்த்தம் உள்ள இடங்களிலும் தர்ப்பணம் அளித்தலால் தலை சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு தக்க நிவாரணம் கிட்டும்..!

சப்தமி திதி (10.9.2001 திங்கள்)

உத்தராணி மரத் தாம்பளத்தில் ஏழு விதமான காய்கறிகளைப் பரப்பி (ஒவ்வொன்றிலும் குறைந்தது ஒரு கிலோ) இதன் மேல் தர்ப்பைச் சட்டம் அமைத்து, ஏழு வெற்றிலை, பாக்கு (இரட்டை படை எண்ணிக்கையில்), (நீர்த்த) சுண்ணாம்பு வைத்து, ஏழு வெற்றிலைகளின் மேல் தர்ப்பணம் அளித்திடுதல் வேண்டும். சப்த ரிஷிகளுக்கு ப்ரீதி தரக்கூடிய முக்கிய தர்ப்பண பூஜை இது!

பொதுத் தர்ப்பணம் : இன்று முதலில் தாய் வழி, தந்தை வழி ஆண் வர்கம், பிறகு ஏனையோர்க்குத் தர்ப்பணம்!

விசேஷத் தர்ப்பணம் : பொதுவாக நட்பினால் பலவிதமான கடன்சுமைகள், அல்லது கர்மச் சுமைகள் ஏற்படுவது உண்டு.. நமக்காக உடல் அசதி பாராது உழைக்கின்ற நண்பர்களுக்கு எவ்வாறு கைம்மாறு செய்ய போகின்றோம்? அவர்களுக்கு நாம் எவ்வகையிலும் மறு உதவியும் செய்யாமல் அவர்கள் இறந்துவிட்டால் அந்த கர்மச் சுமைத் தொடர்ந்து எதிர் பிறவிகளில் ஒருவருக்கு ஒருவர் எஜமானன் (அதிகாரி), தொழிலாளியாக பிறப்பு எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.. எனவே அந்தந்த கர்ம பந்தங்களை அந்தந்த பிறப்பிலேயே தீர்ப்பதற்காக இன்றையத் தர்ப்பண பூஜைகள் பெரிதும் உதவுகின்றன..! இத்தர்ப்பண பூஜையை சப்தரிஷி, சப்த மாதர், சப்த கன்னியர் உள்ள தலங்களில் நிகழ்த்துவது சிறப்பானதாம். (திருக்கருகாவூர், லால்குடி சிவகங்கைத் தீர்த்தம்) சப்த கன்னிகள், சப்த மாதர்கள் உள்ள தலங்கள் அய்யர்மலை போன்றவை (சப்த கன்னியர் பல தலங்களிலும் காணப்படுகிறார்கள்.!) பொதுவாக நெருங்கிய நண்பர்களாக இருந்தும் கூட வர வேண்டிய பணவரவோ, அல்லது பத்திரங்களோ வர வேண்டியது இருப்பின் இன்றைய தர்ப்பண முறையானது நல்முறையில் அவற்றை மீட்டுத் தருவதற்குப் பெரிதும் உதவும். இத் தர்ப்பணத்தைச் செவ்வாய் தோறும் செய்தலால் கொடுத்த கடன்கள் மீளும் வழிவகை காணலாம்!

சப்தரிஷி மண்டல தரிசனம்: இன்றைக்கு இரவில் சப்தரிஷி மண்டல நட்சத்திரங்களைக் கண்டிப்பாக ஒவ்வொருவரும் தரிசித்தாக வேண்டும்.. தினந்தோறும் சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்தால்தான் சுமங்கலித்வ சக்தி பெருகிடும். தக்க பெரியோர்களை நாடி இன்று சப்தரிஷி மண்டலங்களின் ஏழு நட்சத்திரங்களையும், குறைந்தது 12 நிமிட நேரமாவாது தரிசித்திடுங்கள்.. தான தர்மங்கள் :- ஏழுவகைக் காய்கறி கலந்த உணவுகள்..!

மாளயபட்சத் தர்ப்பணத்தில் பசுந் தயிர் கொண்டு தர்ப்பணம் இடுவதும் பித்ரு மூர்த்திகளுக்குப் ப்ரீதி தருவதாகும்.!

அஷ்டமி திதி (11.9.2001 செவ்வாய்)

இன்றையத் தர்ப்பண முறையில், உத்தராணித் தாம்பாளத்தில் வாழை இலை வைத்து, சிகப்பு நிற ராஜ்மா எனப்படும் பருப்பு தானியங்களைப் பரப்பி, சுத்தமான மண் சட்டியில் அல்லது வெள்ளி, தங்கப் பாத்திரத்தில் பசு வெண்ணெய் அல்லது நெய் வைத்து நன்றாக மூடி அதன் மேல் தர்ப்பைச் சட்டம் வைத்து, தர்ப்பணம் அளித்திடுதல் வேண்டும்.! எவர்சில்வர் பாத்திரத்தைத் தவிர்க்கவும். தங்கம், வெள்ளி, வெண்கலப் பாத்திரங்கள் சிறப்பானவை! பாத்திரத்தினுள் ஒன்றன் மேல் ஒன்றாக மூன்று அடுக்கிற்கு சிறு வாழை இலைகளை வைத்து நன்முறையில் வெண்ணெய் அல்லது நெய்யை வைத்திடவும்.. இதன்மேல் மரத் தட்டு அல்லது வெள்ளித் தட்டு, இலை வைத்து மூடித் தர்ப்பணம் சட்டம் அமைத்துத் தர்ப்பணம் அளித்திடுக!

பொதுத்  தர்ப்பணம் :- முதலில் தாய், தந்தை வழியில் பெண் வர்கங்களுக்குத் தர்ப்பணம்! பிறகு ஏனையோர்க்கு!

விசேஷத் தர்ப்பணம் : உறவினர்களாக இருந்து பகைவர்களாக மாறி இறந்தவர்களுடைய பகைமை தீர்ந்து அவர்கள் நன்முறையில் ஆன்ம சாந்தி பெற இத்தர்ப்பணம் பெரிதும் உதவிடும்! பகைவர்களாக வாழ்ந்து மறைந்தவருடைய பகைமை எதிர்வரும் பிறவிகளில் தொடராமல் இருப்பதற்கு இத்தர்ப்பணம் நல்வழிகளைக் காட்டும்..!

தானதர்மம் : இன்று வெண்ணெயை உருக்கி (பழைய நெய் கூடாது) நெய்யால் செய்யப்பட்ட தோசை, அடை போன்ற மாவு வகைப் பண்டங்களைத் தானமாக அளித்தலால் பக்கத்து வீடு, அடுத்த வீடு, அலுவலகத்தில் பக்கத்து பகைமை உணர்வுகள் தணியும்.!

நவமி திதி (12.9.2001 புதன்) உத்தராணி மரத் தாம்பாளத்தில் நவதானியங்களைப் பரப்பி அவற்றின் மேல் தர்ப்பைச் சட்டம் வைத்து 9 வெற்றிலைகளை வைத்து வெற்றிலைகளின் மேல் தர்ப்பணம் இடுதல் வேண்டும்..

பொதுத் தர்ப்பணம் :- முதலில் தாய் வகைப் பெண் வர்கம், ஆண்வர்கம் பிறகு ஏனையோர்க்கு!

விசேஷத் தர்ப்பணம் : நவகிரக ஹோமம் செய்த பின் அல்லது ஒன்பது வகையான பொருட்களைத் (உணவு, உடை, காலணி....) தானமளித்த பின் தர்ப்பணம் செய்தலால் சொத்து சம்பந்தமான வழக்குகள் தீர்வு பெறும்..!

தான தர்மங்கள் : இன்று குதிரைக்கு அவித்த கொள் அளித்தல் விசேஷமானது! மஞ்சள், குங்குமம், மருதாணி, ரவிக்கை போன்ற 9 விதமான சுப மங்களப் பொருட்களை வைத்துக் குறைந்தது 12 ஏழைச் சுமங்கலிகளுக்கு அளித்தலால் தடைபட்டு உள்ள நற்காரியங்கள் நல்ல முறையில் விரைவாக முடியும்.!

தசமி திதி (13.9.2001 வியாழன்) :- உத்தராணி மரத் தாம்பாளத்தில் வாழை இலை பரப்பிச் சோளம் வைத்து, தர்பைச் சட்டம் வைத்துத் தர்ப்பணம் அளித்திட வேண்டும்.. இன்றைக்கு தசாவதார மூர்த்திகள் எழுந்தருளியுள்ள தலங்களில் தர்ப்பணம் அளித்தல் விசேஷமானது!

திருஅண்ணாமலை நமது ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்திற்கு அருகில் அபய மண்டபத்திலிருந்து மலையை நோக்கினால் மலையின் 10 முகடுகளும் நன்றாகத் தெரியும். இதற்கு தசாவதார தரிசனம் என்று பெயர். இங்குள்ள பித்ரு பரிபாலனத் தீர்த்தத்தில் நீர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நீங்களாவது தீர்த்தத்தை எடுத்துச் சென்று தசமி திதிகளில் தர்ப்பணம் அளித்திடுதல் வேண்டும்.! இன்று இட்லி, இடியாப்பம் போன்ற மாவு வகைப் பண்டங்களை தானமாகக் கொடுத்திட வயிறு, குடல் சம்பந்தப்பட்ட கோளாறுகளால் வாடி இறந்தோர்க்கு ஆன்ம சாந்தி அளிக்கும்! வயிற்றுத் தொந்தரவுகளால் அவதிப்படுவோர் இன்று தர்ப்பணம் அளித்துக் குறித்த தான தர்மங்கள் நிறைவேற்றி வந்தால் நற்பலன்கள் கிட்டும்.!

ஏகாதசி (14.9.2001 வெள்ளி)

பொதுத் தர்ப்பணம் : பொதுவாக உடல் மெலிந்து வாடுகின்ற பெரியோர்கள், குழந்தைகள் நற்குணம் அடைய இன்றைய தர்ப்பணச் சக்தி உதவும். மேலும், கீழே விழுந்து பாரிச வாயுவினால் பாதிக்கப்பட்டு இறந்தோரின் ஆன்ம சாந்திக்காக இத்தர்ப்பணம் உதவும்.! இன்று ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் பசும் தயிர் வைத்து இதன்மேல் தர்ப்பைச் சட்டம் வைத்து இதன் மேல் தர்ப்பணம் அளித்திடுதல் வேண்டும்.. பசும் தயிர் தயாரிக்கும் முறையை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.. இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னரேயே பசும் தயிர் தயாரிப்பதற்கான பணியில் ஈடுபடுங்கள்.. சுத்தமான பசும் பாலில், சுத்தமான பசும் தயிர் கொண்டு உறையிட்டுப் பெறுவதே பசும் தயிர் ஆகும்..! ஆனால் பசும் தயிர் உடனடியாக கிடைக்காதே! எனவே முதல் நாள் பசும்பாலை வாங்கி, காய்ச்சி, ஆற வைத்து, எருமைத் தயிர் கொண்டு உறையிடுங்கள், மறுநாள் மீண்டும் பசும்பாலில் முதல் நாள் எருமைத் தயிரில் உறைந்து வந்த தயிரால் உறையிடுங்கள். மூன்றாம் நாளும் பசும்பாலில் இரண்டாம் நாள் கிடைக்கும் தயிரை வைத்து உறையிடுக! இவ்வாறாக மூன்று நாள் உறையிட்டுப் பெறுவது தான் பசுந் தயிர் ஆகும். இது மிகவும் விசேஷமானதாம்! இவ்வாறு சுத்தமான பசுந் தயிர் தயாரித்து புதன் தோறும் பெருமாளுக்கு அபிஷேகம் செய்து நிறைய சாம்பிராணித் தூபக் காப்பு இட்டு, தயிர் சாதம் தானமளித்து வந்தால் பல தீய வழக்கங்களை அறவே நீக்கி விடலாம்!

விசேஷத் தர்ப்பணம் :- உத்தராணி மரத் தாம்பாளத்தில் எள் பரப்பி தர்ப்பை சக்கரமிட்டு மூங்கில் குவளையில் துளசி, பச்சை கற்பூரம், ஜாதிக் காய் ஊற வைத்து கங்கை, காவிரி போன்ற நதித் தீர்த்தங்களுடன் சேர்த்துத் தர்ப்பணம் இன்று சர்க்கரைப் பொங்கல் தானம் அளித்தலால் பல கடுமையான வியாதிகளுடன் அவதிப்பட்டு இறந்தோருக்கு ஆத்ம சாந்தி கிட்டும்.. சென்னை திருவள்ளூர், ராமேஸ்வரம் அருகே ஏகாந்த ராமர் பெருமாள் ஆலயம் போன்றவை இத் தர்ப்பணத்திற்கு உரிய தலங்களாகும்!

யதி மாளய நாள்! வைஷ்ணவ ஏகாதசி போன்ற பெருமாளுக்குரித்தான அனைத்து அம்சங்களும் பொருந்தியிருக்கின்றமையால் இன்றைய யதி மாளயத் தர்ப்பணம் மகத்தான ஆயுள் விருத்தியை தருகின்றது... இன்று  தயிர் அன்னம் தானம் விசேஷமானதாகும். பொதுவாக வாழ்க்கையில் முறையாக தர்ப்பணம் செய்யாதவர்கள், இனியேனும் மனம் வருந்தி தங்களுடைய தவறுகளை உணர்ந்து செய்த தவறுகளுக்குப் பிராயசித்தம் பெற உதவிடும் அற்புதமான தர்ப்பணமாகும்.. இதனைப் பெருமாள் ஆலயங்களில் நிகழ்த்துவது சிறப்புடையதாம்..!

துவாதசி திதி (14.9.2001 வெள்ளி)

இன்று காலை 6.09க்குள் ஏகாதசித் தர்ப்பணமும் இதற்கு மேல் துவாதசி திதி தர்ப்பணமும் செய்தல் சிறப்புடையது..! பலரும் முதல் நாளே ஏகாதசி தர்ப்பணத்தை செய்யும் வழக்கத்தை கொண்டுள்ளனர். ஏகாதசி தர்ப்பணம் என்பதால் பிரம்ம முகூர்த்தத்தில் இருந்து விடியற்காலை வரை உள்ள நேரத்தில் இரவு கண்விழித்து பூஜை செய்தபின் தர்ப்பணம் அளித்தல் மிகவும் விசேஷமானதாகும்.! இன்றைய நாளில் இரு திதித் தர்ப்பணங்கள் அமைகின்றன. பொதுவாக லக்ஷ்மி கடாட்சம் பெறுவதற்கும், திருமகளின் அனுக்ரஹத்தை அடைவதற்குமான நல்வழிகளைப் பெற இத்தர்ப்பணச் சக்திகள் உதவுகின்றன.. பொதுத் தர்ப்பண முறையில் முதலில் அனைத்துப் பெண் வர்கத்தினருக்கும், பிறகு ஏனயோருக்குத் தர்ப்பணம். உத்தராணித் தாம்பாளத்தில் பச்சை அரிசி பரப்பி தாமரை மலரின் மேல் தர்ப்பை சட்டம் அமைத்துத் தர்ப்பணம்..! விசேஷ தர்ப்பணம் முறையில் தம்முடைய சொத்தை பிறர் அபகரித்தால் மனம் நொந்து வருந்தி இறந்தோருடைய ஆன்ம சாந்திக்காக இன்று உத்தராணி தாம்பாளத்தில் புது நாணயங்களை பரப்பி தர்ப்பை சட்டம் அமைத்து தர்ப்பணம் அளித்திடுதல் வேண்டும்.. இளஞ்சிவப்பு நிற ஆடைகளை தானமளித்தல் பணக் கஷ்டத்தைப் போக்கும்!

திரயோதசி (15.9.2001 சனிக்கிழமை)

உத்தராணி மரத் தாம்பாளத்தில் அருகம்புல்லையும் காப்பரிசியையும் நன்கு பரப்பி இதன்மேல் தர்ப்பைச் சட்டம் இட்டுத் தர்ப்பணம் அளித்திடல் வேண்டும்.. பொதுவாக புற்றுநோய் புரைநோய் போன்ற கடுமையான நோய்களால் வாடி வதங்கி இறந்திட்டோர்க்கு ஆன்ம சாந்தி அளிப்பதற்காக உதவிடும் தர்ப்பணம், இன்று கருப்பு, கருநீல நிற ஆடைகள், எள் அன்னம், எள் உருண்டை போன்றவற்றைத் தானமாக அளித்தலால் அடிக்கடி நோய்கள் வரும் குழந்தைகட்கு நல்ல நிவர்த்தி கிட்டும் இன்று ஸ்ரீசனீஸ்வரர் தனிச் சந்நிதியைக் கொண்டுள்ள ஆலயங்களில் தர்ப்பணம் அளித்தல் சிறப்பானது.. சென்னை ஸ்ரீகபாலீஸ்வரர் ஆலயம் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி, கூந்தலூர் போன்றவை.!

ஸ்ரீசனீஸ்வர பகவான்
திருவலஞ்சுழி

சதுர்த்தசி (16.9.2001 ஞாயிறு)

பொதுவாக ஆஸ்த்மா நோயில் அவதிப்பட்டு இறந்தோர்க்கு ஆன்மசாந்தி பெறுவதற்காக நமக்கு பெரியோர்கள் இத்தர்ப்பணத்தை அளித்துள்ளார்கள்.. விஷ்ணுபதி போல ஷடசீதி புண்ய காலம் போதாயன அமாவாசை மற்றும் சஸ்த்ரஹத மஹாளயம் போன்றவை சேருகின்ற மிகமிக சிறப்புடைய தர்ப்பண நாள் மேலும் ஷடசீதி மாளயைபட்சத்தில் சேருவதும் அதுவும் போதாயன அமாவாசையோடு சேருவதும் சிறப்புடையது.. இதுவரையில் மனித குலம் உண்டு களித்த காய்கறித் தாவரங்களுக்கும் மீன், கோழி போன்ற விலங்கினங்களுக்கும் ஆத்ம சாந்தி கிட்டுவதற்காக இத்தர்ப்பணம் பெரிதும் உதவும். கிருஷ்ணா நதிக்கரையில் இத்தர்ப்பணத்தை அளித்தல் மிகச் சிறப்பானது. அல்லது ஸ்ரீகிருஷ்ணன் கோயில் உள்ள தீர்த்தத்தில் இத்தர்ப்பணத்தை அளித்திட வேண்டும்..!

உத்தராணி மரத் தாம்பாளத்தில் இலவம் பஞ்சுக் காய்களைப் பரப்பி அதன்மேல் தர்ப்பைச் சட்டம் அமைத்து அதில் தர்ப்பணம் அளித்திட வேண்டும்! தான தருமங்கள் : சீதாப்பழம், பேரிக்காய், நுங்கு அல்லது பனம்பழம், பொதுவாக பலவிதங்களிலும் அடிப்பட்டு நோய்கள் ஏற்பட்டு இறந்தோர்களுக்கு இந்நாள் தர்ப்பணம் தக்க ஆன்ம சாந்தியை அளித்திடும்.. குறிப்பாக ஆயுதங்களால் அடிபட்டு இறந்த ராணுவ வீரர்களுக்கு இந்நாள் தர்ப்பணம் தக்க ஆன்ம சாந்தியைத் தந்திடும்.!

பிரதட்சிண மாளய அமாவாசை (17.9.2001 திங்கள்)

இன்று தாய் தந்தை வர்க்கத்தில் முதலில் ஆண் பின் பெண் வர்க்கத்தினருக்கு தர்ப்பணம், உத்தராணி மரத் தாம்பாளத்தில் முழுவதுமாக தர்ப்பை பரப்பி இதன் மேல் வாழை இலையில் தர்பைச் சட்டம் அமைத்து துளசி வில்வம் கலந்த புனித தீர்த்தத்தால் அறிந்தோர், அறியாதோர் அனைவருக்கும் காருண்ய (Social) தர்ப்பணத்தை அளித்திடல் வேண்டும்.. இறந்து போன பிடித்தமான விளையாட்டு வீரர்கள், தலைவர், நடிகர், நடிகையர், நண்பர்கள், நெருங்கிய மற்றும் தூரத்து உறவினர்கள், ராணுவ வீரர்கள், பூகம்பத்தில் இறந்தோர், நன்கு பழகிய நாய், பூனை, தரிசித்த யானை, பசு போன்ற அனைத்திற்குமே இன்று தர்ப்பணம் அளித்தல்.. பிரபஞ்சத்தின் மகத்தான இறைப்பணிகளுள் ஒன்றாக பிரகாசிக்கின்றது என்பதை உணர்ந்திடுங்கள்..!

அனைத்துப் புண்ணிய நதிகளிலும், ஆலயத் தீர்த்தங்களிலும் இதனைக் கொண்டாடிடலாம்.. இதுவரை முறையாகத் தர்ப்பணம் செய்யாமைக்கு ஓரளவு பிராயச்சித்தம் பெற்றிட இன்று காருண்ய தர்ப்பணங்களை ஒரு மணி நேரத்திற்கு மேலாவது செய்து நற்பலன்களை அடையுங்கள்.. இன்று அனைத்து வகையான அன்னங்கள், உணவுப் பொருட்களையும், சத்சங்க ரீதியாக மகத்தான அன்னதானப் பெருவிழாவாக நடத்தி பித்ருக்களுடைய ஆசிகளைப் பெற்றிடுங்கள்.!

கிருஷ்ணன் கோயில் விளங்கும்
லால்குடி திருத்தலம்

பித்ருக்களுக்கன ஹோமம்!

தினமும் இதனைச் செய்திடலாம்! சுத்தமான தரையில் மணலைப் பரப்பி, மணலில் பிள்ளையார் சுழி இட்டு முருகனுடைய ஆறு நட்சத்திரங்களைக் குறிக்கின்ற வகையிலே, ஓம் ஸ்ரீகார்த்திகேய ஸ்வாமியே நம: என்று வலது கை மோதிர விரலால் (சூரிய விரல்) எழுதி ஆறு செங்கற்களை வைத்து, அரசு, ஆல் சமித்துகளை அடுக்கி வைத்து பசுநெய் கொண்டு ஹோமத்தைத் தொடங்குங்கள்.. விநாயகர், ஸ்ரீமுருகன், ஸ்ரீஅக்னி ஆகியோருக்கான ஸ்ரீகாயத்ரீ மந்திரங்களை ஓதி பசு நெய் ஆஹூதியுடன் ஹோமம் செய்திடுக! பூமிக்கு ஹோம வழிபாட்டைக் கொணர்ந்த ஸ்ரீஆங்கீரஸ மகரிஷிக்கு நன்றி செலுத்தும் பொருட்டு ஸ்ரீஆங்கிரஸ மூர்த்திக்கு உரித்தான ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஓதி ஹோமத்தை நடத்திடுக

ஓம் ஸ்ரீபிள்ளையாரப்ப ஸ்வாமியே அக்னியில் ஆவாஹனம் ஆகிட வேண்டும்!
ஓம் ஸ்ரீசுப்பிரமண்ய ஸ்வாமியே அக்னியில் ஆவாஹனம் ஆகிட வேண்டும்!
ஓம் ஸ்ரீஆங்கிரஸ மஹரிஷியே அக்னியில் ஆவாஹனம் ஆகிட வேண்டும்!
ஓம் ஸ்ரீமும்மூர்த்தி தேவதா மூர்த்திகளே அக்னியில் ஆவாஹனம் ஆகிட வேண்டும்!
ஓம் ஸ்ரீபித்ரு தேவதாமூர்த்திகளே அக்னியில் ஆவாஹனம் ஆகிட வேண்டும்!
ஓம் ஸ்ரீபித்ரு பத்னி தேவதா மூர்த்திகளே அக்னியில் ஆவாஹனம் ஆகிட வேண்டும்!
-என்று சங்கல்பம் செய்து வேண்டி ஒவ்வொரு தெய்வ மூர்த்திக்கும் 12 முறை பசு நெய் ஆஹூதி அளித்திடுக! பசு நெய்யுடன் பித்ருக்களுக்கு ப்ரீதியான எள், எள்ளுருண்டை போன்றவற்றையும் அவரவர் வசதிக்கேற்ப ஆஹுதியாக அளித்திடலாம்.!

மூதாதைய தேவர்கள் (பித்ருக்கள்) மகிமை :- மாளய பட்ச சக்திகள் நிறைந்த புரட்டாசி மாதத்தில் பித்ருக்கள் பற்றிய ஞானத்தைத் தரும் இதனைப் படிப்பதும், பிறர்க்கு உணர்த்துவதும் பெரும் புண்ய காரியமாகும்!

ஆலய இறைத் திருப்பணிக்கு அருளும் கும்ப சோபிதப் பித்ருக்கள்!

பித்ருக்களாகிய நம் உத்தம மூதாதையர்கள் வசிக்கின்ற பித்ரு லோகங்கள் பல உண்டு. அவரவருடைய தெய்வீக நிலைகள், தேவ கடமைகளைப் பொறுத்துப் பல்வேறு லோகங்களிலும் பித்ருக்கள் இறைப் பணிகளை ஆற்றுகின்றார்கள்.. உதாரணமாக கும்ப சோபிதப் பித்ருக்கள்தாம் ஆலய கும்பாபிஷேகங்களுக்கான அருளாசிகளை வழங்குபவர்கள் ஆவர்..! ஆலயத் திருப்பணிகளில் தரையைப் பெருக்குதல், முள், குப்பை, கூளங்களை அகற்றுதல், கட்டிடத் திருப்பணிகள், கோபுரத் திருப்பணிகள் போன்று ஒவ்வொரு ஆலயச் சேவையைப் புரிவோருடைய பின்னணியில் அவரவருடைய பித்ருக்கள்தாம் பெருந் துணையாய் நிற்கின்றார்கள்.. ஆனால் ஆலயத் திருப்பணிகளில் நற்காரியங்களுக்காக மட்டுமே பித்ருக்கள் ஆசி வழங்குவார்களே தவிர இவற்றில் ஊழல், கையாடுதல், ஏமாற்றுதல், கோயில் சொத்தை அபகரித்தல் போன்ற பெரும் பாவச் செயல்கள் இருப்பின் நற்காரியங்களுக்கு மட்டும் துணை இருந்து விட்டு தீவினைகளுக்குச் சாபங்களையும் இட்டிடுவர்!

உதாரணமாக, ஆலயத் தேர்த் திருப்பணி என்றால் தேர்கள் நன்முறையில் செப்பனிடப்பட்டு மராமத்து வேலைகள் போன்றவை நிகழ்வதற்கு உறுதுணையாக இருக்கின்ற பித்ருக்கள் இப்பணிகளில் ஏமாற்று வழிமுறைகள், கையாளப்பட்டால், அக்காரியங்களில் பின்னாது நற்காரிய சித்திக்கு மட்டும் துணை புரிந்திடுவர்! மேலும் அதர்மத்தில் சம்பந்தப்பட்டோருக்குப் பித்ரு சாபமும் பல்கிப் பெருகி விடும்! நற்காரியங்களுக்கு நிறைந்த புண்ணியமும், நற்காரியத்தை நிறைவேற்றும் போது நிகழும் அதர்ம, அநியாயங்களுக்குப் பெரும் பாவமும் சம்பந்தப்பட்டோருக்கு ஒன்றாகவும் இவ்வாறாக வந்து சேரும்! இவ்வாறாக, ஒருபுறம் ஆலயத் திருப்பணிகளில் ஈடுபடுவதற்காகச் சம்பந்தப்பட்டோருக்கு நற்புண்ணிய சக்திகள் கிட்டினாலும் பணக் கையாடல்களினால், முறையற்ற பண வரவினால், அதர்மச் செயல்களினால் பெரும் பாவங்களையும் சேர்த்துக் கொள்கின்றார்கள். இதனால் வந்த புண்ணியமும் உடனேயே கரைந்து விடும்!

எனவே ஒரு புறம் பித்ருக்கள் நற்காரியங்களை ஆற்ற வைத்தாலும் இச்சேவையில் முறைகேடுகள் இருப்பின் அவற்றிற்குத் தக்க தண்டனையையும் சாபத்துடன் கூடவே தந்து விடுகின்றார்கள்.. இறைவனுடைய கர்ம பரிபாலனச் சட்ட திட்டத்தில் எந்தப் புண்ணிய சக்தி நல்வரங்களாகவோ, எந்தப் பாவ சக்தி எத்தகைய பெருந் துன்பங்களாகவோ மாறி வரும் என்பதை சற்குரு மூலமாகத்தான் ஒருவர் உணர முடியும்.. பிராயச்சித்தப் பரிகாரங்கள் யாவும் செயல்களின் தீய விளைவுகளைச் சற்றே தணிக்குமே தவிர அவையே முழு நிவாரணமும் தந்திடாது..! பித்ருக்கள் மிகவும் கண்டிப்பானவர்கள்! நன்மைக்கு நல்வரங்களும், தீவினைகளுக்குத் தக்க தண்டனைகளையும் இறை நேர்மையுடன் அளிப்பவர்கள்! எனவே நம்மை வாழவிக்கின்ற பித்ரு சக்தியோடு, இறைக் காரியங்களில் நாம் செய்கின்ற தீவினைகளுக்கு பித்ருக்களுடைய சாபமும் சேர்ந்தே இருக்கும்.!

நம்மை வாழ்விக்கும் பித்ருக்கள் சாபமிடுவார்களா?

பித்ருக்களின் சாபம் என்று நாம் எளிமையாகப் புரிந்து கொள்வதற்காகச் சொல்லப் பட்டாலும் உண்மையில், தவறுகளில் இருந்து நாம் திருந்துவதற்காக அவர்களுடைய ஆசிப் படலங்கள் நம்மை அடையாமல் போகின்றது என்பதே உண்மையாம்! அவர்களுடைய ஆசி கிட்டாத காரியங்களில், நேரங்களில் நாம் இன்னல்களைச் சந்திக்கின்றோம். அதாவது ஒருவருடைய தீவினைக் கர்மப் புகையால் பித்ருக்களுடைய ஆசியைப் பெற இயலாமல் போகும்! இது நம் பிழைதாம். நற்பித்ரு பிழை அன்று! இதனையே பித்ரு சாபம் என்று பொருள் கொள்கின்றோம்! கோழி மிதித்துக் குஞ்சு காயம் படுமா என்ன? எனவே நம்மைக் கரையேற்றுவதற்காகப் பித்ருக்கள் தங்கள் வழிமுறைகளைப் பகுத்து நாம் அனுபவிக்க வேண்டிய கர்மவினைகளை நன்முறையில் அனுபவிப்பதற்குத் துணை நிற்கின்றார்கள்.. அதாவது குழந்தை பாக்யம், வீடு பாக்யம், சாந்தமான குடும்பம், திருப்தியான பணவரவு போன்றவற்றிற்கு ஆசி வழங்குகின்ற பித்ருக்களே, நம்முடைய தீவினைகளுக்கான விளைவுகளானவை நோய் நொடிகள், பணக் கஷ்டங்கள், இழப்புகள், விபத்துகள், அடிபடுதல், வேலை இழப்பு போன்ற கர்ம விளைவுகளாக அமையும்போது அவற்றைத் தாங்குவதற்கான உத்தமமான மனோ நிலைகளையும் தருகின்றார்கள்..!

நோய் தீர்க்கும் ஔஷதத் தண்டுலப் பித்ருக்கள்!

இதே போல நோய் நொடிகளைத் தீர்ப்பதற்கான மருத்துவ சக்திகளைத் தருவதற்கென்றே ஒரு பித்ருக்களின் குழுவே உண்டு.. ஔஷத தண்டுலப் பித்ருக்களாகிய இவர்கள் தம் தலைமுறைகளில் பலவிதமான கர்மவினைகளின் தன்மைகளால் ஏற்படுகின்ற நோய்களுக்கான நிவர்த்திகளை, பல அறவழி முறைகளாகப் பெற்றுத் தந்துகொண்டு இருக்கின்றார்கள் ஒரு யுகத்திற்கான அதாவது சராசரியாக கிட்டத்தட்ட ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு உரித்தான முந்தைய தலைமுறைகளின் பிறப்பு, இறப்புகளையும், எதிர் வருகின்ற ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கான சந்ததிகளின் கர்மவினைப் பகுப்புகளையும் ஒரு பித்ரு தீர்க தரிசனமாக உணரவல்லவர் என்றால் ..

ஒரு பித்ருவின் பத்து லட்ச வருடக் கர்ம பரிபாலானத்தை, அதுவும் தம் லட்சக் கணக்கான சந்ததி ஒவ்வொருவரைப் பற்றியும் தனித்தனியே தீர்க தரிசனமாக உணர்கின்ற ஞான சக்தியைப் பற்றி எவ்வாறு எடுத்துரைக்க முடியும்? விஞ்ஞானத்தால் பகுத்து உணர முடியாத தெய்வீகக் கம்ப்யூட்டர் சக்தியைப் பித்ருக்கள் பெற்று உள்ளனர்! மருத்துவ நோய் நிவாரண சக்தியை அளிக்கவல்ல ஔஷத தண்டுலப் பித்ருக்கள் தங்களுக்குரித்தான மருத்துவ  சக்திகளுக்காக தினசரி பூஜைகள், புனித நதி நீராடல்கள், ஆலய தரிசனங்கள், சுயம்பு லிங்க பூஜைகள், ஹோமங்கள், வேள்விகள், தான தர்மங்கள் போன்றவற்றையும் முறையாகச் செய்து வருகின்றார்கள்!

மாமுனிகளுக்கும் தினசரி பூஜைகள் உண்டு!

மகரிஷி, யோகிகளின் முக்தி நிலைகளிலும் இத்தகைய குறித்த சில தினசரி பூஜைகள் தொடரும்! அவர்கள்தாம் மோட்ச நிலைகளைப் பெற்று விட்டார்களே, இனி பூஜைகள் எதற்கு என்று நீங்கள் எண்ணிடலாம்! முக்தி, மோட்ச நிலைகளுக்கான விளக்கங்கள் உத்தம நிலைகளிலும் மாறுபடும்!

இறை ஆணையாக ஸ்ரீஅகஸ்தியர், ஸ்ரீவசிஷ்டர் போன்ற சித்தர்களும், மகரிஷிகளும் முறையான தினசரிப் பூஜைகளைச் செவ்வனே நிறைவேற்றியே என்றும் வாழும் ஏகாந்த ஜோதி சிரஞ்சீவிகளாய்ப் பரணியில் உலா வருகின்றார்கள்! இவர்கள்தாம் பித்ரு தேவர்களுக்கும் உரிய பூஜை முறைகளை அளிக்கின்றனர்! ஆனால் இறை நியதிப்படி பித்ருவின் சந்ததியினர் இவற்றைக் கடைபிடிக்கும் போது அவற்றில் குறிப்பிட்ட ஒரு பங்கு பித்ருக்களைச் சென்றடைவதால் பித்ருக்களுடைய புண்ய சக்தியும் பெருகும்! பூமியில் பூஜை செய்வது அவ்வளவு மகத்தான சக்தி வாய்ந்தது ஆகும்! உங்களுடைய தான தர்ம காரியங்களில் நிறைந்திருக்கின்ற அன்ன சக்தி, தர்ப்பண சக்தியும் அவர்களுக்கு உதவிடும்.. நீங்கள் முறையாக திவசமோ, தர்ப்பணமோ அளிக்கவில்லை என்றால் அது அவர்களையும் பாதிக்கும்! அவர்களால் முறையாக ஆசி அளிக்க இயலாது போவதுமுண்டு!

நம் பூஜா புண்ய சக்திகள் பித்ருக்களையும் அடையும்!

பித்ரு சக்தி வேறு, பித்ரு ஆசி வேறு! நாம் செய்கின்ற தர்ப்பணங்கள், திவசங்கள் போன்றவை நம் மூதாதையர்களை அடைந்து நமக்குப் பித்ரு சக்தியை அளிக்கின்றன.. மேலும் பூலோகத்தில் கிட்டுகின்ற எந்தப் புண்ணிய சக்திக்கும் மகத்தான தெய்வீக ஆற்றல் உண்டு என்ற இறை நியதியையும் பித்ருக்கள் நன்கு உணர்ந்துள்ளமையால் அவர்கள் தங்களுடைய பூலோக சந்ததியினரிடமிருந்து நல்ல பூஜா பலன்களையும் தான தர்ம புண்ய சக்திகளையும் பெரிதும் எதிர் பார்க்கின்றார்கள்.! தமக்காக அல்ல! பிரபஞ்சம் எங்கு நிரவிடவே! கிரிவலம், பிரதோஷ நேரம், ஏகாதசி, விஷ்ணுபதி புண்ய காலம், ராகு கால பூஜைகள், பிரம்ம முகூர்த்த நேர வழிபாடுகள் போன்றவற்றில் பூஜா சக்திகள் பன்மடங்காகப் பெருகுவதால் இவற்றின் மூலம் நம் வாழ்நாளில் இவற்றை நன்முறையில் பயன்படுத்தாது விடுபட்ட பூஜைகள், தர்ப்பணங்களுக்கு இயன்றவரை பிராயச்சித்தம் பெறுதல் வேண்டும்.. உதாரணமாக, கடந்த (கும்பகோணம்) மகா மகத்தில் பெற்றிருக்க வேண்டிய நீராடல், அன்னதானம், தர்ப்பண சக்திகளை மீண்டும் பெற்றிட முடியுமா? வாழ்வில் எத்தனையோ பிரதோஷ பூஜா சக்திகளை, பலன்களை இழந்து விட்டோமே? நமக்காக இவற்றில் பங்குகொண்டு பித்ருக்கள் நமக்கு நல்வரங்களைப் பெற்றுத் தருகின்றார்கள்! ஆனால் பித்ரு தர்ப்பணம், திவசம் போன்றவற்றை முறையாகச் செய்தால்தானே நாம் அவர்களுடைய ஆசியை, பூஜா பலன்களைப் பெற முடியும்!

பிராயச் சித்த விளக்கங்கள்! :- பிராயச்சித்தம் அல்லது பரிகாரம் என்றால் என்ன? செய்ய வேண்டிய நற்கடமை, நல்லதைச் செய்யாது விட்டமைக்குச் செய்ய வேண்டிய தீர்வை நற்செயலே பிராயச்சித்தமும் பரிகாரமும் ஆகும்.. இது ஒரு விளக்கமே!  ஆனால் எல்லாவற்றிற்கும் பரிகாரம் கிடையாது! உதாரணமாக சந்திர, சூரிய கிரகண நேரங்களில் பூஜைகளைச் செய்யத் தவறினால் அதே நாள், கிழமை, நட்சத்திர, யோக, கரண காலச் சங்கமங்களை மீண்டும் உருவாக்க முடியுமா? இழந்தது இழந்ததுதானே? எனவேதான் எல்லாவற்றிற்கும் பரிபூரணமான பரிகாரங்களோ, பிராயச்சித்தங்களோ கிடைப்பதில்லை, கிடையவும் கிடையாது!

கருச் சிதைவு செய்து கொண்டால் ஜீவ சக்தி தடுக்கப்பட்ட அந்த சிசுவானது அதே தம்பதியருக்குக் குழந்தையாகப் பிறக்கும் வரை மேலுலகங்களில் பிண்டமாக உலவிக் கொண்டிருக்கும் அல்லது அத்தம்பதியருக்குக் கனத்த தண்டனையையும் தந்து விடும். ஆனால் உண்மையிலேயே அத்தம்பதியினர் தாம் செய்தது பெரும் பாவம் என்று உளமார உணர்ந்து மன்னிப்பை நாடினாலும் இதற்கு முழுப் பரிகாரத்தைப் பெறுதல் மிக மிகக் கடினம், இயலாது என்று கூட நிச்சயித்துச் சொல்லி விடலாம்.. பொதுவாக உத்தம தெய்வீக நிலைகளில் எவரும் தவறையோ, குற்றத்தையோ பொறுப்பது இல்லையாதலால் மன்னிப்பு, பிராயச்சித்தம், பரிகாரம் என்பதற்கே அங்கு இடமில்லை.. மேலும் கருச் சிதைவு, கொலை, கொள்ளை, கோயில் சொத்துக்களை அபகரித்தல் அல்லது அனுபோகம் செய்தல் அல்லது குறைந்த வாடகை, குத்தகை கொடுத்து இறைவனையே ஏமாற்றுதல் போன்ற கொடூரமான பாவச் செயல்களைப் புரிந்தோர்க்குப் பித்ருக்களும் என்றும் துனை புரிவதில்லை!

மகத்தான இறை ஞானம் கூடியவர்களாகப் பித்ருக்கள் விளங்குவதால் ஒருவர் எத்தகைய பாவங்களைப் புரிந்தவர்களாக இருந்தாலும் தண்டனைகளை அளிப்பதோடு அவர் செய்கின்ற தான தர்மங்கள் மற்றும் அறச்செயல்களில் அவற்றிற்கு உரித்தான ஆசிகளை மட்டும் அளிக்கின்றார்கள்.  இந்த ஆசிகளின் மகத்துவத்தால் சம்பந்தப்பட்டோருக்கு உண்மையிலேயே மனம் திருந்தி, தண்டனைகளை அனுபவித்துப் பிராயச்சித்தம் நாடுகின்ற பக்குவமும் கிட்டும்! ஆனால் எல்லாத் தவறுகளும் பித்ருக்களின் நீதி நியதியில் வருவது கிடையாது!

பித்ருக்களுக்கும் தங்களுடைய தெய்வீக உத்தம நிலைகளில், தங்கள் சந்ததியினருக்கு ஆசிகளை வழங்குதற்கும், சர்வ ஜீவ சேவையாகப் பிரபஞ்சத்தில் இறைப் பொதுச் சேவை புரிவதற்கும் நிறைய பூஜா புண்ய சக்திகள் தேவைப்படுகின்றன.. புல், பூண்டு, விலங்குகள், மனிதர்கள், தாவரங்கள், கட்டை, கல் போன்ற அசையாப் பொருட்கள் எனப் பித்ருக்களின் வகைகள் எவ்வடிவும், எப்பிறப்பும் கொண்டிருக்கலாம்! ஸ்ரீஅகஸ்தியர், ஸ்ரீவசிஷ்டர், ஸ்ரீபரத்வாஜர் போன்ற முக்தி நிலைகளை அடைந்த மாமுனிகளும் தினந்தோறும் மூன்று வேளை சந்தியா வந்தன பூஜைகளையும், ஆறுகால ஆலய தரிசனங்களையும் பெற்று இன்றளவும் தங்களுடைய பூஜா புண்ய சக்திகளைப் பெருக்கி இறைவனுக்கு அர்ப்பணித்துப் பல அரிய பிரபஞ்ச இறைப் பொதுப் பணிகளை ஆற்றி வருகின்றார்கள் அல்லவா? இதே போலவே பித்ருக்களும் அனைத்து பூஜைகளையும் கடைபிடிக்க வேண்டும்!

பித்ரு சக்தியின் அம்சங்கள்! :- பித்ரு சக்தி என்பது அன்னதானத்தின் அமிர்த பிரம்ம சக்தி, ஆலய வழிபாட்டின் பிரம்ம கர்ப சக்தி, ஆடை தானங்களின் பவித்ர தேவசக்தி, ஏழைகளுக்கான மாங்கல்ய தானத்தின் சுமங்கலித்துவ மஞ்சுள சக்தி, ஹோம வழிபாடுகளின் பூர்வாக்னி சக்தி, கிரிவலத்தின் பாதக்ஷீராம்ருத சக்தி இவ்வாறாக எத்தனையோ ஆயிரம் புண்ய பூஜா சக்திகளில் திரண்டு சேர்பவைதாம் பித்ருக்களையும் அடைந்து பரவசப்படுத்துகின்றன! நீங்கள் சாலையில் நடக்கும்போது கீழே கிடக்கும் வாழைப் பழத் தோல், ஆணியை எடுத்து ஓரமாகப் போட்டுச் சிறு சேவை புரிந்தால் கூட அதிலும் ஒருவகைப் புண்ய சக்தி கிட்டுகின்றது.. இவ்வகைகளில் ஒரு பித்ரு மூர்த்திக்கு எவ்வகைப் பித்ரு சக்தி குறைகின்றதோ அதற்கு உரித்தான ஆசிகளை சந்ததிகளுக்கு அளிக்க முடியாமல் போய்விடுகின்றது. அப்போதுதான் நோய் நொடிகள், கவலைகள், நஷ்டங்கள் மிகுகின்றன!

சந்தான பாக்யத்திற்கான சுந்தர பால புண்ய சக்தி! உதாரணமாக குழந்தை பாக்யத்திற்குத் தேவையான புண்ய சக்திகளுள் ஒன்றே சுந்தர பால புண்ய சக்தியாம்! பொதுவாக,ஏழைக் குழந்தைகளுக்கான தான, தர்மங்கள் அநாதைக் குழந்தைகளுக்கு ஆதரவு அளித்தல் கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவுதல் போன்றவற்றில் எழுகின்ற சுந்தர பால புண்ய சக்தியால்தான் குழந்தை பாக்யம் கிட்டுகின்றது. இது குறையும்போதுதான் விந்து எண்ணிக்கைகள் குறைவதாக மருத்துவ அறிக்கை வேறுவிதமாகக் கூறுகின்றது...!

இயன்றவரையில் பித்ருக்கள் தங்களுடைய லோகங்களில் தம் சந்ததியினர் சுந்தர பால புண்ய சக்தியைப் பெறுவதற்கான பல வழிபாடுகளை மேற்கொண்டு குறைபாடுகளை நீக்கப் பிரார்த்தனை செய்கின்றார்கள். உதாரணமாக புத்ர காமேஷ்டி யாகத்தில் எழும் ஹோமப் புகையானது பித்ரு மண்டலத்தை அடைந்து இந்த புண்ய சக்திக் குறைவை ஓரளவு நிவர்த்தி செய்கின்றது. தற்போது இந்த அரிய, அற்புத யாகத்தை முறையாகச் செய்வோர் யார் இருக்கின்றார்கள்? அறிந்த சற்குருமார்களை யார் நாடுகின்றார்கள்? புத்ர காமேஷ்டி யாகப் பலன்களைத் தரும் தான தரும சக்திகளைத் தருபவைதாம் இன்று பரிகாரத் தலங்களாகத் துலங்குகின்றன! சில குறித்த தலத் தீர்த்தங்கள் இந்த யாக சக்திகளைப் பெற்றுள்ளன! (உ.ம் கும்பகோணம் அருகே திருவாலங்காடு)

எனவே உங்களுடைய பித்ருக்கள் அனைத்து விதமான பித்ரு சக்திகளைப் பெற்றிருந்தால்தான் உங்களுடைய துன்பங்கள் அனைத்தையும் நீக்குதற்கு அவர்களால் இயலும்! மேலும் ஒரு பித்ரு மூர்த்திக்கு அவருடைய சந்ததிகள் லட்சக் கணக்கில் இருப்பார்கள் அல்லவா? உதாரணமாக கி.மு 600ம் ஆண்டிலோ அல்லது துவாபர யுகத்திலோ, கிருத யுகத்திலோ நம்முடைய மூதாதையர் வாழ்ந்த போது இன்று வரை அவருக்கு ஆயிரக்கணக்கான சந்ததிகள் இருப்பார்கள் அல்லவா? அவர்கள் அனைவருக்குமே தம் பித்ரு சக்திகளைப் பிரித்துத் தருவதென்றால் அதுவே பெருங் கணக்காய்ப் பெருகும் அல்லவா?

ஆனால் இவற்றை எல்லாம் கண் இமைக்கும் பொழுதில், கர்ம பரிவர்த்தனை, புண்ய சக்தி பரிவர்த்தனை, பித்ரு சக்தி பரிவர்த்தனைகளாக ஒரு பித்ரு நிகழ்த்துகின்றார் என்றால் அவர்களுடைய இயக்கத் திறனை (divine cyber mechanism) என்னென்று உரைப்பது! எனவே பித்ருக்களைச்  சாதாரணமாக எடை போடாதீர்கள்.. அதியற்புதமான, அபரிமிதமான தெய்வீக ஆற்றல்களைக் கொண்டவர்களே பித்ருக்கள் என இனியேனும் உணர்ந்து நம்முடைய மூதாதையர்களுக்கு உரித்தான தர்ப்பணங்கள், திவசங்கள், படையல்களை முறையாக அளித்திடுவீர்களாக! மாளய பட்சத்தில் அனைத்துப் பித்ருக்களுக்களும் பூலோகம் வருகின்றனர்! தர்ப்பணத்தோடு இயன்ற அளவு தான தருமங்கள் சேர்ந்திடில் தர்ப்பணத்தில் உள்ள குறைபாடுகளை நீக்குதற்கும் இதுவரையில் விடுபட்டுப் போன தர்ப்பண பூஜைகளுக்கு ஓரளவு பரிகாரம் பெறவும் தான தர்ம புண்ய சக்தி பெரிதும் துணை புரிகின்றது..!

மாரடைப்பு விளக்கங்கள்

மாரடைப்பு என்றால் என்ன?

ஆன்மீகத்தில் மாரடைப்பு (HEART ATTACK) என்ற ஒன்றே கிடையாது! The Spiritual Science deems the concept of heart attack a wholly deceptive one and as nonexistent! மார்ஜனம் என்பது சந்தியா வந்தன வழிபாடுகளில் வருகின்ற மிகவும் எளிமையான பிரயோக பூஜையாம்! குறித்த  மந்திரங்களை ஓதியவாறு உத்தரிணியில் உள்ள புனிதமான தீர்த்தத்தை சூரிய (பாஸ்கர) கிரக விரலாகிய வலது மோதிர விரலால், ஆத்மா உறையும் இருதயத்தில் 3/6/12 முறை தெளித்துக் கொள்தலே மார்ஜனம் ஆகும்!

வயதான காலத்தில் மாரடைப்பு (heart attack) என்ற ஆங்கில மருத்துவம் கூறுகின்ற நோயானது ஏற்படாதிருக்க இம்மார்ஜன பூஜை பெரிதும் துணை புரியும்! இருதயத்தில் சுரக்கின்ற ஆத்ம நீரோட்டத்திற்குப் பரவெளியில் உள்ள மந்திர பீஜாட்சர சக்திகளை ஈர்ப்பதற்காகவே மார்ஜனப் பிரயோகங்கள் சந்தியா வந்தனத்தில் உள்ளன.. ஆனால் சந்தியா வழிபாட்டு முறைகள் அறியாத பாமர மக்கள் என்ன செய்வது?

எளிய மார்ஜன (மார்ஜல) பூஜை! :- ஒரு மரக் குவளையிலோ, மூங்கில் குவளையிலோ, தாமிரத் தம்பளரிலோ காவிரி, கங்கை போன்ற புண்ய நதித் தீர்த்தங்களை வைத்துக் கொண்டு

ஓம் ஸ்ரீஇருதய ஆத்ம ஜோதியே போற்றி!
ஓம் ஸ்ரீஇருதயாலீஸ்வரா போற்றி!!
ஓம் ஸ்ரீஇருதய புண்டரீகாக்ஷா போற்றி!
– என்று தினமும் குறைந்தது 12 முறை ஓதி சூரிய (கிரக) விரலாகிய வலது மோதிர விரலால் இருதயத்தை நோக்கி நீரைத் தெளித்துப் பிரார்த்தனை செய்து வருதலே மார்ஜன தீர்த்த பூஜையாம்! பூணூல் அணிந்து கடைபிடித்தல் சிறப்புடையது! பொதுவாக மார்ஜன பூஜையை முறையாகச் செய்து வந்தால் நெஞ்சு நோய்கள் அண்டாது! இந்நோய் இருப்போரும் இதனை மூன்று வேளையும் ஆழ்ந்த நம்பிக்கையோடு செய்து வந்தால் இருதயக் கோளாறுகள் தணியும்!

ஆன்மீக ரீதியாக மாரடைப்பு என்ற ஒன்று கிடையாது!

மருத்துவ விஞ்ஞானத்தில் மாரடைப்பு நோய் (ஹார்ட் அட்டாக்) எனச் சொல்லி விளக்கினாலும் இதற்கான தெய்வீக விளக்கங்களே பரிபூரணமான சத்திய வேத வாக்குகளாம்! இதுவரையில் நாமும் உங்களுக்கு எளிமையாகப் புரிவதற்காகவே மாரடைப்பு, இருதயக் கோளாறுகள், நெஞ்சு நோய்கள் என்று விளக்கினோமே தவிர பவித்திரமான இருதயத்தில் ஆத்மா உறைவதினால் அதில் எவ்வித அடைப்பும், கோளாறுகளும், நோய்களும் ஏற்படலாகாது, ஏற்படக் கூடாது என்பதே பிரம்ம நியதியாகும். எனவே ஆன்மீகத்தில் மாரடைப்பு என்ற ஒன்றை ஏற்பது கிடையாது.. விஞ்ஞான மருத்துவம் தற்போதைக்கு இதனை ஏற்றிடாது! ஆனால் காலப் போக்கில் மெய்ங்ஞான விளக்கங்களின் சத்யத்வம் உணரப் பெறும்! ஆன்மீக விளக்கங்களே சத்தியமானவை, நிரந்தரமானவை! நல்லவர்களுக்கும், தீயவர்களுக்கும், அனைவருக்கும், அனைத்திற்கும் இருதயத்தில் உறைகின்ற தேகமானது கர்ம வினைகளால் சூழப்பட்டிருப்பதால் ஒளி பொங்கும் ஆத்மாவை உடலால், மனதால் உணர முடிவதில்லை. மருத்துவ விஞ்ஞானத்தில் மாரடைப்பு என்பதை ஆன்மீகத்தில் மார்வெளித் தசை வலி என்றே சொல்கின்றார்கள்.. அதாவது இருதயத்தினுள் அடைப்பு என்ற ஒன்று இல்லாது அதன் வெளித் தசைகளில் ஏற்படுகின்ற வலிதான் பொதுவாக மார்வலியாகும் என்பதே ஆன்ம விளக்கமாம்! அந்த வலியும் மனதால்தான் உணரப்படும்!

இருதயத் துடிப்பின் வேகம் அதிகரிப்பது, இரத்த அழுத்தம் இருதயத்திற்குச் சுமை அதிகரிப்பதாக மருத்துவம் கூறினாலும் ஆன்மீகம் இவற்றை ஏற்பது கிடையாது. ஆழ்ந்த நம்பிக்கையுடன் கூடிய பிரார்த்தனையால் (சென்னை – திருநின்றவூர்) ஸ்ரீஇருதயாலீஸ்வர சக்தியால் எந்த இருதய நோய்களையும் குணமாக்க முடியுமென்றால் மாரடைப்பு என்ற ஒன்று உண்டா என்ன? எனவே இப்பூவுலகில் எவருக்கும் மாரடைப்பு ஏற்படவில்லை என்பதே உண்மையாகும்.. இருதயத்தைப் பவித்திரமான ஆத்மாவின் உறைவிடமாக உணர்ந்து கொண்டால்தான் மாரடைப்பு என்பது நிகழமுடியாத ஒன்று என்பதை ஆத்மார்த்தமாகப் புரிந்து கொள்ள முடியும்!

தலைவலிக்கான விஞ்ஞானக் காரணமும், மெய்ங்ஞானக் காரணமும்!

உதாரணமாக உங்களுக்குத் தலைவலி என்றால் மருத்துவப் பூர்வமாக, தலையில் உள்ள குறித்த நரம்பின் வீக்கம் அல்லது தலையின் குறிப்பிட்ட பகுதிக்குச் சரியான அளவில் ஆக்ஸிஜன் செல்லாமை அல்லது குறிப்பிட்ட நரம்புச் சந்திப்பில் ஏற்பட்டுள்ள நிணநீர்த் தேக்கம் என்றெல்லாம் காரணம் கூறுவதுண்டு.! உண்மையில் தலைவலிகளில் பலவகை உண்டு.. அவற்றிற்கான மெய்க் காரணங்களும் உண்டு.. உங்களைப் பற்றி எவரும் அனாவசியமாகத் திட்டினாலோ, எண்ணினாலோ அந்தத் தீவினை எண்ணங்களின் சக்தியே உங்களைப் பாதித்து தலைவலியை ஏற்படுத்துகின்றது.. இதுவும் இறைலீலைதான்! ஏனென்றால் தலைவலி என்ற ஒன்று ஏற்படுவதால்தான் நீங்கள் தலைவலித் தைலம், மருந்து, மாத்திரை என்று எதையோ தடவி, உண்டு உங்கள் நடவடிக்கைகளைத் தணித்துக் கொள்கின்றீர்கள். இதனால் பெரும் ஆபத்துகளிலிருந்து காப்பாற்றப்படுகின்றீர்கள் என்பது நீங்கள் அறியாத ஆன்மீக உண்மையாகும்! ஒரு தலைவலி மாத்திரையை உள்ளே தள்ளினால் தலைவலி தீர்ந்து விடும் என்ற வெளிக் காரணங்களையே நீங்கள் பெறுவீர்கள்! நூலறிவில் நம்பிக்கை இருக்கும் வரை, இந்த வெளி மருத்துவ நூல் அறிவுதான் மாயா விநோதமாக வேலை செய்யும்!

எவ்வளவுதான் தலைவலி மாத்திரைகளை விழுங்கினாலும் அந்தக் குறிப்பிட்ட மனிதர் வசைபாடுவதை நிறுத்தும் வரையும், அவர் அதற்கான புண்ணியத்தைத் தாரைவார்த்துக் கழிக்கும் வரையும், அவருக்கு உங்கள் மேல் உள்ள கோபம் தணியும் வரையும் தலைவலி இருந்து கொண்டு, பிறகு அகன்று விடும்... உங்களுக்குத் தலைவலி தருபவர் யார் என்பதை நீங்கள் தீர்க்க வேண்டிய நியாயமான பாக்கியைத் தீர்த்து விட்டால் அல்லது அவருக்கு எதற்காகக் கடமைப் பட்டுள்ளீர்களோ, அதை நிறைவேற்றிவிட்டால் தலைவலி உடனே அகன்று விடும்..!

ஆனால் இந்த மெய்ங்ஞானக் காரணம் தேவ ரகசியமாகத் தான் இருக்கும்! ஏனோ? இவற்றை  உணரும் தன்மையை நீங்கள் பெற்று விட்டால், தலைவலியைத் தருகின்றவர் யார் என்று தெரிந்து விட்டால், அவர் மீது விரோதமும், குரோதமும், பகைமையும்தான் ஏற்படும். எனவே தான் இதனை தேவ ரகசியமாகவே பகுத்து உணரப்படுவதாகவே இறைவன் வைத்துள்ளான்.. மாரடைப்பு என்று சொல்லும்போது நூலறிவு என்னும் மருத்துவ விஞ்ஞானத்தை நாம் நம்பியிருத்தலால், நூலறிவுப்படியே மருத்துவ ரீதியாகத்தான் குணத்தை நாடிச் செயல்பட வேண்டும்..! நம்மைப் படைத்த இறைவன் மீது உண்மையிலேயே ஆழ்ந்த நம்பிக்கை இருக்குமேயானால், எதையும் தாங்கும் தெய்வீக இதயத்தைக் கொண்டு அனைத்தையும் சகித்துக் கொண்டு, இன்பமும், துன்பமும் இல்லா வாழ்வைப் பெற்றிடலாமே! மருந்துகளே தேவையில்லை! ஆனால் தற்காலத்தில் மிகுந்த கடவுள் நம்பிக்கை உள்ளவர்களிடம் கூட இந்த உத்தம நிலை இல்லையே! வெறும் இறை நம்பிக்கையானது ஆழ்ந்த நம்பிக்கையாகப் பழுத்துக் கனியவே நீண்ட ஆயுளை மனித வாழ்வாக இறைவன் நமக்குத் தந்துள்ளான். எனவே இறை நம்பிக்கை நன்கு கனியும் வரை, இறைவனால் நம் நோய்களைத் தீர்ப்பதற்காக அனுப்பப்பட்டவர்களே மருத்துவர்கள், பித்ரு சக்திகள் மருத்துவர் மூலமாக நம்மைக் குணமடையச் செய்யும் என்ற ஆன்மீக உண்மை விளக்கத்தை உணர்ந்திடுங்கள்!

நெஞ்சுவலிக்கான காரணங்கள்! :- எனவே மெய்ங்ஞான விஞ்ஞானத்தில் மாரடைப்பு என்ற ஒன்று கிடையாது! எத்தனையோ நோய்களுக்குக் கர்மவினைக் காரணங்களைத் தரும் ஆன்மீகம் மாரடைப்பினை ஒரு நோயாக உரைக்கவில்லை! மேலும் ஆத்மா உறையும் இருதயத்திற்கு எவ்வித வலிகளும், நோய்களும் ஏற்படாது என்பதே ஆன்மீகத்தின் முடிவு! நெஞ்சுவலி என்பதெல்லாம் பிறருக்கு நாம் அளித்த வேதனைகளே நமக்குத் திரும்பி வருவதாம்! எவ்வாறு வலியானது மனதால் உணரப்படுகிறதோ அதே போல மார்வலி என்பதும் மனிதனால் தாங்க முடியாத உணர்வே! மணப்பதாகச் சத்யம் செய்து ஏமாற்றுதல், மணந்தவரைக் கை விடுதல், பிறரை அநாவசியமாக ஏசுதல், மகான்களை வேதனைப்படுத்துதல்,  கொடுமை செய்தல், ஏமாற்று வேலைகள், அன்பில்லாத, பண்பில்லாத காரியங்கள், பொய்மை போன்றவற்றால் எந்த அளவிற்குப் பிறருடைய மனம் நோகுதற்குக் காரணமாக இருந்திருப்போம் என்பதை உணர்த்துவதற்ககத்தான் மனதால் உணரப்படுவதாக  நெஞ்சு வலி மனதால் உணர்ந்து அனுபவிப்பதான ஒரு தண்டனையாக வருகின்றது.. இதற்கு வெளிக் காரணமாக விஞ்ஞான பூர்வமாகப் புகட்டப்படுவதே இருதய வீக்கம். பலவீனமான இருதயம், மாரடைப்பு, இருதய நோய் போன்றவையாகும். சென்னை திருநின்றவூரில் உள்ள சிவாலயத்தில் ஸ்ரீஇருதயாலீஸ்வரராக இறைவன் இன்றும் அருள்பாலித்து இருதய நோய்களுக்குத் தீர்வுகளைத் தருகின்றார்.. இருதய நோய் என்ற ஒன்றையே மெய்ங்ஞானம் ஏற்காதபோது, இச்சிவபெருமான எவ்வாறு இருதய நோய்களைத் தீர்க்கின்றார்? பரிபூர்ணமாக ஸ்ரீஇருதயாலீஸ்வரரை நம்பி வழிபடுவோர்க்கு இருதய நோய்களே ஏற்படாது. அவ்வாறு இருப்பினும் அவர்கள் அதையும் இறைவன் சித்தமென ஏற்று அமைதியாக வாழ்வார்கள்.!

இருதய ஆத்மத்தைக் காக்கும் ஸ்ரீஇருதயாலீஸ்வரர்! தாம் இருதய நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று வெளிக் காரணங்களை நம்புவோர்க்குத்தான் இருதய நோய்களைத் தீர்ப்பவர் என்ற காரணப் பெயர் சுவாமிக்குப் பொருந்தும், உண்மையில் ஸ்ரீஇருதயாலீஸ்வரர் அருள்பாலிக்கின்ற முறைகளைச் சித்புருஷர்கள் விளக்கியுள்ளார்கள். இவற்றை முழுமையாக உணர்ந்து கொண்டாலே, மாரடைப்பு பற்றிய இறை ஞான விளக்கங்கள் நன்குபுரியும். மருத்துவக் கூற்றுப்படியான இருதய நோய்களால் வாடுவோர், இங்கு வந்து சுவாமியைத் தரிசித்து, மனப் பூர்வமாக வேண்டி வரும்போது, இறைவனே அவர்களுக்கு இருதய நோய்களுக்கான ஆன்மப் பூர்வமான காரணங்கள் உணர வைக்கின்றான்.

உதாரணமாக முற்பிறவிகளில் தான் மணந்தவரைக் கைவிட்டு வேறு, மணம் புரிந்து அனாதையாக்கப்பட்டவர்களுடைய வேதனைகளே, இப்பிறவிகளில் தாங்கமுடியாத நெஞ்சு வலியாக, ஊழ்வினையாக உறுத்து வரும்.. ஆனால் அவர் ஸ்ரீஇருதயாலீஸ்வரர் அருளால்தான் குருமூலமாக இதனை நேரடியாக உணர முடியும்! உணர முடியாவிடிலும், தன்னால் பாதிக்கப்பட்டவருக்கு இப்பிறவியில் எவ்வகையிலேனும் உதவிகளைப் புரியச் செய்து, கர்மவினைகளைக் கழியச் செய்து இருதய நோய்க்குப் பரிபூரண நிவாரணம் தருகின்றவரே ஸ்ரீஇருதயாலீஸ்வரர் ஆவார்! எனவே முறையான பூஜைகள், தான தருமங்கள் தாம் நோய்களுக்கான தக்கப் பிராயச்சித்தங்களைத் தந்து நோய் நிவாரணத்தையும் தருகின்றது..!

ஸ்ரீஇருதயாலீஸ்வரர் போன்று, கபால நோய்களுக்கு ஸ்ரீகபாலீஸ்வரர், நரம்பு நோய்களுக்குச் சென்னை திருமுல்லைவாயில் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர், எலும்பு முறிவுக்கு திருச்சி நாச்சியார் கோவில் உள்மண்டபத்திலுள்ள ஸ்ரீஆஞ்சநேயர் போன்ற மூர்த்திகள் நிவர்த்தி தருகின்றனர்..! எனவே மாரடைப்பு, இருதயக் கோளாறு என்று மருத்துவ ரீதியாகக் கூறப்பட்டாலும், நம் மனம் ஞானத் தெளிவு பெறும் வரை மருந்துகளையும் உட்கொண்டு, பிறவிப் பிணிகளுக்கே மாமருந்தாக விளங்குகின்ற திருநின்றவூர் ஸ்ரீஇருதயாலீஸ்வரர் பதம் பணிந்து பவித்திரமான இருதயத்தில் உறையும் ஸ்ரீஇருதயாலீஸ்வரரை உணர்ந்து ஞானம் பெறுவோமாக!

பல்லியின் ஆன்மீகக் குணங்கள்

எவ்வாறு ஜாதி, மத, இன குல பேதமின்றி அனைவரையும் இறைவனின் ஒரு குடை கீழ் ஜீவிக்கின்றவராய் உணர்தல் வேண்டுமோ, இதே போன்று மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள் பேதமின்றி அனைத்தையும் ஒரே இறைப் படைப்பாய் நோக்குதலும் ஆண், பெண் பேதமின்றி அனைத்திலும் ஆத்ம ஸ்வரூபத்தை உணர்தலும் பல வகை உத்தம இறை நிலைகளாகும்! ஆனால் இவையெல்லாம் சற்குருவின் அருட்பரிபாலனத்தில் மட்டுமே கிடைக்கக் கூடிய இறை பொக்கிஷங்களாகும்.!

பல்லி என்பது முருகுக்கு மூத்த சருகு என்ற சித்த பரிபாஷையின்படி சிருஷ்டியின் போது தோன்றிய மிகமிகப் பழமையான ஜீவன்களுள் ஒன்றாகும். அவை காணாபத்ய சிருஷ்டி கால சக்தியைக் கொண்டவை! சிலவகை மனிதப் படைப்புகளுக்கு மூத்ததாகவும் விளங்குகின்றது. ஆம், மனிதப் படைப்புகளிலும் பலவகை உண்டு! கலியுகப் பிறப்பு, அனைத்து யுகப் பிறப்பு, கர்ம வினைப் பிறப்பு, ஊழ்வினைப் பிறப்பு, சற்குரு பரிபாலன ஜீவப் பிறப்பு என்று எத்தனையோ வகைகளில் மனித சிருஷ்டி ஏற்படுகின்றன! இவற்றில் நீங்கள் எவ்வகை என அறிய சற்குருவை நாடுங்கள்! 

வாலிகண்டபுரம்

பல்லியின் விருட்ச கூர யோக அக்னித் தவம்! : பல்லி, பாம்பு, கரப்பான் போன்றவை சட்டை உரிப்பதைப் பார்த்திருப்பீர்கள்... இதில் நிறைய தெய்வீகத் தாத்பர்யங்கள் உள்ளன. உண்மையில் பாம்பும், பல்லியும், பூமியிலும், காற்றிலும் படிந்துள்ள மனிதர்களுடைய தீய எண்ணங்களின் படிவைத் தம் உடலில் தாங்கி விருட்ச கூர யோக அக்னியில் பஸ்மம் செய்து பரவெளியைத் தூய்மை செய்கின்றன.. விருட்சகூர யோகம் என்றால் ஓரிடத்தில் சற்றும் அசையாது மரம் போல ஒன்பது நாழிகைகள் யோகத்தில் கிடந்து நிலைப்பதாகும்! பல்லியும், பாம்பும் எவ்விதக் கண், வால், கால் அசைவின்றி மூன்று மணி நேரத்திற்கு மேல் ஒரே இடத்தில் கிடக்கும் யோக சக்தி பெற்றவை.. பொதுவாக இரண்டரை நாழிகையாகிய ஒரு மணி நேரம் ஓரிடத்தில் அசைவற்றுக் கிடந்தாலே உடலுக்கும், பூமிக்கும் இடையில் அலகாக்னி என்ற ஒருவகை அக்னி உருவாகும்! இது தீய எண்ணங்களையும் தீவினைக் கர்மங்களையும் பஸ்மம் செய்யும் சக்தி உடையதாம்!

இதுவே சித்தர்கள் காட்டும் தெய்வீக யோக இலக்கணங்களுள் ஒன்றாம்! கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் யோகம் புரிந்து அலகாக்னியை எழுப்பும் தல்மே அலகாக்னிபுரமாக, அலாகாபாத் ஆயிற்று! இந்த அக்னிக்குப் பல கர்மங்களை பஸ்மம் செய்யும் சக்தி உண்டு! ஆனால் அதன் நடமாட்டத்தைக் கவனித்தல் வேண்டும்..! எனவே பாம்பு, பல்லி போன்ற சகல ஜீவன்களும் மனித சமுதாயத்திற்குப் பல வகையில் துணை புரிந்து கொண்டுதான் இருக்கின்றன.. எந்தத் தீவினைக் கர்மங்களைத் தம் யோகாக்னியில் பஸ்மம் செய்யும் சக்தியை இந்த ஜீவன்கள் பெற்றுள்ளனவோ, அவற்றையே விஷ ஜந்துக்களாக மனித உலகம் கண்டு அஞ்சுகின்றது. தெய்வீகம் நிறைந்த நல்ல பாம்பு என்றால் ஒதுங்கி விடுகின்றார்கள்.. அடித்து விடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் பால் ஊற்றி நல்தகனம் செய்கின்றார்கள். ஆனால் பல்லியை விரட்டுதல் பாவம், பல்லி நமக்கு நன்மை செய்கிறது.., பல்லி சொல்லுக்குப் பலன்கள் உண்டு என்ற நல்மூதுரைகளால் எவருமே இல்லத்திலிருந்து பல்லியைத் துரத்துவதில்லை., அடிப்பதும் இல்லை! பல்லியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டும்..!

யோக மார்த்தாண்ட பல்லிகள்! பல்லியானது இல்லத்திலும் பரவெளியிலும் பரவிக் கிடக்கின்ற தீய எண்ணங்களை கிரகித்து உரிச் சட்டையாக (ஷெல்) ஆக மாற்றுகின்றது.. அதுவே சட்டையாக உரிக்கப்பட்டு பூமியில் சேர்கின்றது.. பல்லியின் உடலில் உள்ள பச்சை நாளங்களுக்குத்தான் இந்த யோகாக்னிப் பரிமாண சக்திகள் உண்டு.. பல்லிகள் மட்டும் சில விஷப் பூச்சிகளை உண்டு மனித குலத்தைக் காப்பாற்றாவிட்டால் விஷ வண்டுகளால் மனித சமுதாயத்திற்குப் பெரு நோய்களும், சொல்லொணாத் துயரங்களும் ஏற்பட்டிருக்கும்..!

பல்லியின் ஆதிமூல வர்கங்களில் ஏழுவித மூல பல்லிகள் உண்டு. இவை சப்த ஸ்வர்ணச் சுடரொளி யோக வகைகளைச் சார்ந்தவை.. இந்த புராதனமான பல்லிகள் சட்டையை உரிப்பதும் கிடையாது.. எந்தக் கர்ம பந்தமும் அணுகாத அற்புதப் படைப்புகள் இவை! இவற்றின் தரிசனமே பெரும் பாக்கியங்களைப் பெற்றுத் தரக் கூடியவை.. இவை எப்போதும் சஞ்சரித்துக் கொண்டே இருப்பவை.. ஓரிடத்தில் நிலையாகத் தங்குவதில்லை.. இவை சூரிய மண்டலம், சந்திர மண்டலம் என அனைத்து லோகங்களுக்கும் செல்லும் சக்தி பெற்றவை... இவற்றின் வடிவுகளைப் பல ஆலயங்களின் உட்புற மேல் தளங்களில் காணலாம். கர்ம பந்தமே அணுகாத தேகம் என்பதால் சித்தர்களும், மஹரிஷிகளும், ஞானியரும், யோகியரும் இப்பல்லிகளின் ஆத்ம ஸ்வரூபத்தில் சற்றே தங்கி ஆத்ம தரிசனம் பெற விரும்புவர்! கர்ம பந்தம், வினைத் தொடர், பிறவித் தளைகள் ஏதுமில்லா ஜோதித் தத்துவ தேகமாதலின் இப்பல்லிகளின் திருஉடல்களிலிருந்து பெறுகின்ற கடவுள் தரிசனம் பரமானந்தத்தைத் தருவதாகும்..!

தலைமுடியின் தாத்பர்யங்கள்

நம்முடைய உடலில் உள்ள ஒவ்வொரு ரோமமும் அங்கமும் பல காரண காரியங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன. பிறக்கும்போது எவ்வளவு முடி தலையில் இருக்க வேண்டும்.. நடுவில் எந்தக் காலத்தில் எவ்வளவு தலை முடிகள் தோன்ற வேண்டும்... எவ்வளவு உதிர வேண்டும் என்பதெல்லாம் ஸ்ரீரோமச முனிவர் தலைமைப் பீடமாக உள்ள ரோமகாந்த லோகத்தில் நிர்ணயம் செய்யப்படுகின்றன..!

தலைமுடிக்கும் ஆன்ம சக்திகள் உண்டு! ஒரு தலைமுடிதானே விழுகின்றது என்று சாதாரணமாக அசட்டையாகக் கருதாதீர்கள்! தலைமுடியும் நம் உடல் உறுப்புதான்! நகம், தலைமுடிகளை அப்படியே தரையில் போட்டுவிடாமல் பத்திரமாக எடுத்துத் தக்க முறையில் ஒதுக்கிட வேண்டிய வழிமுறைகள் உண்டு! இவற்றை அலட்சியமாகக் கீழே எறியக் கூடாது! பில்லி, சூன்ய வசியங்களுக்குப் பலரும் இவற்றைத் தவறாகப் பயன்படுத்திடுவர்! தலைமுடி என்பது அவரவருடைய பூர்வ ஜென்ம வினைகள், நடப்பு வாழ்க்கையில் வருகின்ற கர்மவினைகளுடனும் தொடர்பு உடையவையாம். சித்தர்களையோ, மகரிஷிகளையோ, மகான்களையோ தரிசிக்கும்போது உங்கள் தலை மேல் தோன்றுகின்ற aura எனப்படும் ஒளி வட்டத்தைக் கொண்டு கண் சிமிட்டும் நேரத்தில் உங்களுடைய பூர்வ ஜென்மத்தின் ஆயிரமாயிரம் பிறவி நிலைகளையும் அவர்கள் உணர்ந்து கொண்டு விடுவார்கள்... எனவே தேவ ஒளிக் காப்புப் பெட்டகமாகவும் உரோமம் விளங்குகின்றது!

ஸ்ரீரோமச மகரிஷி திருக்காட்டுப்பள்ளி

தலைமுடிகளுக்கும், தலையின் மேல் தோன்றுகின்ற ஒளி வட்டமான auraவிற்கும் நிறையத் தொடர்புகள் உண்டு. Aura யோக சக்திகள் பெருகிட ஸ்ரீகபாலீஸ்வரர் அல்லது ஸ்ரீஇரட்டைப் பிள்ளையாருக்கு சதய நட்சத்திரம் சேர்கின்ற திங்கள், சதுர்த்தசி, சதுர்த்தி நாட்களில், அமிர்த யோக நேரத்தில் 108 தேங்காய்கள் நேர்த்தி வைத்து உடைத்துத் தேங்காய் சாதம் செய்து தானம் அளித்து வரவேண்டும்! இதனால் அபரிமிதமாக ஞாபக சக்தி பெருகுவதைக் கண்கூடாகக் கண்டிடலாம்!

இதற்காகத் தலை வழுக்கையாக உள்ளவர்களுக்கு aura இல்லை என்று எண்ணாதீர்கள்.. ரோமத் துளைகளும் நிச்சயமாக வழுக்கை உள்ளோர்க்கும் உண்டுதானே! ஆதலால் நீண்ட தலைமுடியின் ஆன்மீகத் தன்மைகளை அவர்கள் இழந்தாலும் இவற்றின் மூலமாக முடி சக்திகளைப் பெறுதற்கான அறவழி முறைகள் நிச்சயமாக உள்ளன.. தினந்தோறும் செம்பருத்தி, கரிசலாங்கண்ணி, மருதாணி போன்ற ரோம சாகர சக்திகள் நிறைந்த மூலிகைத் தைலங்களை காலை, மாலை, இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் தலையில் இட்டு வருதலால் ரோமக் கால்கள் மூலிகா சக்திகளைப் பெற்றுத் தலைமுடிகளால் பெறவேண்டிய சக்திகளை ஓரளவு பெற்றுத் தருகின்றன... இதற்கு உரித்தான வழிபாட்டு முறைகளும், பிரத்யேகமான ஆலயங்களும், தான தர்மங்களும் உண்டு!

கோடிக்கணக்கான மூளைச் செல்களைக் கண் இமைக்கும் நேரத்தில் இயக்கும் மகான்கள்! எவ்வாறு Pentium 4 chip ஒரு நொடிக்கும் குறைந்த காலத்தில் எத்தனையோ விளக்கங்களைக் கம்ப்யூட்டர் மானிட்டரில் கொண்டு வருகிறதோ, இதே போன்று பெண்டியம் 4-ஐ விடக் கோடானு கோடி மடங்கு சக்திகளை உடைய, கோடிக்கணக்கான மூளைச் செல்களை எப்போதும் இறையருளால் மகான்கள் இயக்கிக் கொண்டே இருப்பதால் ஒரே சமயத்தில் அவர்களால் பல்லாயிரக்கணக்கான ஜீவன்களுடன் உரையாடிப் பல கோள்களுடனும் தொடர்பு கொள்ள முடிகின்றது!

சீப்பு, தைலங்கள், சீயக்காய் ஆகியவற்றைச் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பெண்களுக்கும், ஆண்களுக்கு புதன், சனிக்கிழமைகளிலும் தானமாக அளித்து வருதலும், தைல நாயகியாக இறைவி அருள்பாலிக்கும் தலங்களில் (சென்னை பூந்தமல்லி மற்றும் சீர்காழி/ மயிலாடுதுறை அருகே வைதீஸ்வரன் கோவில், ஸ்ரீவைதீஸ்வரர் மூர்த்தி அருள்பாலிக்கும் தலங்கள்) தைலம் சார்த்தி ஏழைகளுக்குத் தானமாக அளித்தலாலும் ரோமம் மூலம் தேவையான ஆன்மீக சக்தியைப் பெற்றிடலாம்... தலைமுடி இல்லாதோர் மட்டுமல்லாது தலைமுடி இருந்தாலும், அதைத் தெய்வீக முறையில் பராமரிக்காதோரும் உரோமம் மூலமாக வருகின்ற ஆன்மீக சக்திகளைப் பயன்படுத்த முடியாமல் போய்விடும். எனவே நமக்குத் தலைமுடி இருக்கின்றதே, தாமாகவே நமக்கு ரோம தேவ சக்திகள் கிட்டும் என்று எண்ணாதீர்கள்.. குறித்த வகையில் தக்க தலைமுடி பரிபாலன முறைகளைக் கையாண்டால்தான் ரோம தேவ சக்திகள் உடலில் சேரும். எனவே அனைவருமே ஸ்ரீதைல நாயகியின் அனுகிரகத்தைப் பெறுவதற்கான வழிபாடு முறைகளைக் கைக்கொள்ள வேண்டும்.

ஸ்ரீஇரட்டைப் பிள்ளையார் மூர்த்திகள்
திருவீழிமிழலை

சிகைக் குடுமியே சிறப்பானது! நேர்த்தி, பிரார்த்தனை என்று ஆலயங்களில் மொட்டை அடித்துக் கொள்ளும்போது ரோமக் கால்களுக்கு பஞ்சபூத ஜடா சக்தி கிட்டுகின்றது! ஒவ்வொரு முறையும் முடியை வெட்டும் போது ரோமம், உடல், மனம், உள்ளத்தின் சக்திகள் இழக்கப்படுகின்றன! ஆனால் கோயில் நேர்த்திகளுக்கு மட்டும் இதில் விதி விலக்கு உண்டு! எனவே அடிக்கடி முடி வெட்டுதல் கூடாது! முடியை வெட்டாது சிகைக் குடுமி வைத்தலே சிறப்பானது., உத்தமமானதும் கூட! குடுமி முறையில் கபால நாளங்கள்! வலுப் பெறுவதால் தீர்க சக்தி, மனோதிடம், நீண்ட ஆயுள், பக்தி, பணிவு, நல்லொழுக்க பிரம்மச்சர்யம் உண்டாகும்! எனவேதாம் ஜாதி, மத, இன, குல பேதமின்றி நம் ஆன்றோர்கள் கட்டுக் குடுமி வைத்திருந்தார்கள்!

கூந்தலூர் ஸ்ரீஆனந்தவல்லி சமேத ஸ்ரீஜம்பகாரண்யேஸ்வரர்

ரோமாமிர்தச் சுரப்பு பரவெளிக் காற்று மண்டலத்தில் உள்ள ஜடமால்ய சக்திகளுடன் சங்கமமாகி உடலுக்கும், ஆன்ம உடலுக்கும் நிறைய தேவ சக்திகளை அளிக்கின்றன.. பூலோகத்திற்கான இந்த ஜடமால்ய சக்திகள் யாவும் ஒட்டு மொத்தமாகப் பூரிக்கின்ற திருத்தலம் எது தெரியுமா? இதுவே கும்பகோணம் அருகே கூந்தலூரில் உள்ள ஸ்ரீஆனந்தவல்லி சமேத ஸ்ரீஜம்காரண்யேஸ்வரர் அருள்பாலிக்கும் திருத்தலமாகும்.. இன்றும் ஸ்ரீரோமச முனிவர் மானுட வடிவிலோ ஏனைய ரூபங்களிலோ இங்கு வந்து இச்சிவலிங்கத்தில் ஆதிசிவனுடைய ஜடாமுடியை நேரிடையாகவே தரிசித்துப் பூஜிக்கின்ற இடமாகும்.! இச்சிவாலயத்தில் தரிசனம் தரும் ஸ்ரீரோமச மாமுனிச் சித்தரை வணங்கி இங்கு முடிப் பிரார்த்தனை செலுத்துதலால் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும்!

பரிபூரணமான அன்பிற்கு ஜாதி, மத, இன பேதம் கிடையாது! எனினும் அயல் நாட்டுப் பெண், அயல் உறவுச் சம்பந்தம் உள்ள சில குடும்பங்களில் சிலரும் அனுசரித்துச் செல்ல இயலாமல் இதுவே பகைமையாக, விரோதமாக மாறிப் பல வருடக் குரோதமாகப் பொங்கி விடும்! இவர்கள் கூந்தலூர்ச் சிவபெருமானைப் பிரார்த்தித்து, முடி நேர்த்தி வைத்து முடியிறக்கி வாழைப் பூ, பலா முசு (சிறிய அளவிலான இளம் பலாக்காய்), பலாப் பழம், கீரை போன்ற உணவு வகைகளைப் புழுங்கலரிசி அன்னத்துடன் தானமாக அளித்து வந்தால் முறிந்த உறவும் நல்அன்பால் பிணையும்!

ஸ்ரீவைத்யநாதசுவாமி
திருநல்லம்

ஸ்ரீரோமச முனிவர் :- ஸ்ரீரோமச முனிவருடைய திருமேனியில் உள்ள  ரோமங்கள் யாவும் அவருடைய கோடானு கோடிச் சதுர்யோகத் தவங்களில் பிரகாசித்துப் பொன்னாய்ப் பொலிபவை! பலகோடி வருடங்களுக்கு ஒரு முறையே இவர்தம் ஜடாமுடியில் இருந்து ஒரே ஒரு பொன் முடி உதிரும்! இவருடைய யோக, தவ,, ஜப சக்திகள் திரண்டிருக்கும் முடி ஒன்றாவது உதிர்ந்திடாதா அதனைத் தாங்கும் பாக்யம் கிட்டாதா என்று ஏங்கிக் காத்துக் கிடக்கும் மாமுனிவர்களும், தேவாதி தேவர்களும் உண்டு..! பிரதோஷ நாட்களில் கூந்தலூரில் ஸ்ரீசம்பகாரண்யேஸ்வரர், ஸ்ரீஆனந்தவல்லி அம்பாள், நந்தி, ரோமச முனிவர்க்கு ‘S’ (எஸ்) வடிவத்தில் அருகம்புல் கிரீடம் செய்து சார்த்தி வாழைப் பூப் பொறியலுடன் அன்னதானம் செய்து வந்தால் தோல் சம்பந்தமான நோய்களுக்கு நிவாரணம் கிட்டும்!

இங்கு ஸ்ரீமுருகன் சந்நதி எதிரே ஸ்ரீசனீஸ்வரர் அருள்பாலிப்பது காணக் கிடைக்காத பெரும் பேறாம்1 செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளிலும் கிருத்திகை, விசாகம், உத்திரம் நாட்களிலும் ஸ்ரீமுருகனுக்கு சிகப்பு வண்ணத்திலும், ஸ்ரீசனீஸ்வரருக்குக் கருநீல வண்ணத்திலும் வஸ்திரங்கள் சார்த்தி ஏழைகளுக்கு இந்நிற ஆடைகளைத் தானமாக அளித்து வந்தால் பெற்றோர், கணவன், மனைவி, சம்பந்தியினர் இடையே உள்ள மனக் கசப்பு தீரும். இவ்வாறாக உரோமத்தைப் பற்றிய தெய்வீக ரகசியங்கள் நிறைய உண்டு.!

இரும்பு

உலகில் எந்தப் பொருளும் வீணாவது கிடையாது. இறைவனே இந்தப் பிரபஞ்சத்தையும் அதன் பருப்பொருளையும் படைத்திருப்பதால் இறைமொழியில், இறை இலக்கணத்தில், இறை வழியில் எதுவுமே வீணாவது கிடையாது.. ஆனால் நம்முடைய சமுதாய நோக்கில், குறுகிய பார்வையில் பலவும் வீணாவது போல் தோன்றும். இறை நெறியில் ஆழ்ந்த நம்பிக்கையுடன் செல்லாத எந்த ஒரு மனிதனும் தன் மனிதப் பிறவியைத் தானே வீணாக்குகின்றானே தவிர இதற்கு இறைமை பொறுப்பு அல்ல.!

இயற்கை தரும் கர்மவினைக் கழிப்பு! :- தற்போதைய நவீன கழிப்பறை இல்லாது, நம்முடைய பெரியோர்கள் மலத்தைக் கூட பூமியில் சிறு குழியில் இட்டு மூடி அதனைப் பல வகைகளில் உரமாக, நிலத்தடி வாழ் உயிரினங்களுக்கு உணவாக ஆக்கினார்! மனிதனின் கர்மவினைக் கழிப்பாக மலத்தை உருவாக்கி அந்தக் கர்மவினைகளைப் பஸ்மம் செய்வதாக, பன்றிக்கு உணவாக இவ்வாறாகப் பல வகைகளில் ஒவ்வொன்றின் பயன்களையும் இறைவன் வகுத்துப் படைத்துள்ளான்..! பன்றியும் நம் கர்மவினைக் கழிப்பிற்குப் பெரிதும் துணை புரிகின்றது! விஷச் செடிகள் என்று நாம் கருதுகின்ற பலவும் காட்டு விலங்கினங்களுக்குப் புல் உணவாகவும், ஆன்மீக ரீதியில் பரவெளியில் பரவி இருக்கின்ற தீய சக்திகளை, தீவினை எண்ணங்களைத் தம்மிடமுள்ள விஷ அக்னியால் பஸ்மம் செய்வதற்கும் உதவுகின்றன..!

சிங்கம், புலி, திமிங்கிலம் போன்று நாம் அஞ்சுகின்ற பல விலங்கினங்களும். ஊமத்தை போன்ற விஷத் தாவரங்களும் உலகத்தின் ஜீவசிருஷ்டி சம நிலைகளில் பெரிதும் பங்கு கொள்வதோடு, பரவெளியில் இருக்கின்ற பல பகைமை, விரோத, குரோத சக்திகளை எல்லாம் தம் உடலில் கிரகித்துப் பூவுலகைக் காப்பாற்றுகின்றன என்பது தேவப் படைப்பு இரகசியங்களில் ஒன்றாகும்.. இதற்காகவும் வனவிலங்குகள் படைக்கப்பட்டுள்ளன என்பதை உணர்ந்திடுக!

கூந்தலூர்

வாழை, தென்னை காட்டும் தியாகமய வாழ்வுப் பாடங்கள்! :- தேங்காய், வாழை, பனையின் அனைத்துப் பகுதிகளும், மனித சமுதாயத்திற்குத் தேவையானவை போக மற்றவை பலவிதங்களிலும் பூமிக்கும், பூமி வாழ் ஜீவன்களுக்கும் பயனாகின்றன.. தேங்காய் ஓட்டில் உள்ள மருத்துவ சக்தியானது, அதனை அடுப்பில் எரிக்கும்போதோ அல்லது பூமியில் குப்பையாய்ப் படிந்து மக்கும்போதோ, ஆகாயக் காற்றிலும், பூமியிலும் சேர்ந்து தாவர இலைகளுக்கும் வேர்களுக்கும் மகத்தான காப்புச் சக்தியை அளிக்கின்றது.. நாம் தேவையற்றது என்று எறிகின்ற வெண்டைக்காய், கத்தரிக்காய் போன்ற காய்களின் தலைப் பகுதி, விதைகள், தோல் போன்றவை ஆடு மாடுகளுக்கு உணவாகவும், பூமியில் அடியில் வாழ்கின்ற சைவ ஜீவன்களுக்கு உணவுப் பொருளாகவும் உதவுகின்றன.. இதே போன்று மனிதன் தனக்கென மட்டும் வாழாது பிறருக்குச் சேவை புரியும் அளவில் வாழ வேண்டும்! இதற்குத் தர்ப்பண பூஜைகளும் பெரிதும் உதவும்!

பயன் அறியாததால் மூலப் பொருள் இருப்பில் பெரும் இழப்பு! இதே போன்று இறைவன் பல உலகில் உலோகங்களைப் படைத்திருந்தாலும் எதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற பயன் தெரியாது மாற்றினால் பலன்கள் பூரணமாகக் கிடைக்காது. அல்லது எதிர்வினைகளே உண்டாகும்... அவற்றின் பூலோக இருப்பும் பெரிதும் மாறி ஜீவ வாழ்க்கையையே குழப்பி விடும்! உதாரணமாக, இரும்பானது எதிர்வினைச் சக்திகளைத் தாங்கக் கூடிய தன்மை உடையது.. ஆனால் அதனைப் பயன்படுத்துவோர்க்கு அதில் தேங்கி உள்ள தீய சக்திகள் சேர்ந்திடும்! எனவே இரும்பிற்கு வண்ணம் பூசி, அதன் வழிமுறைகளை அறிந்து சமுதாயத்திற்கு நன்மைகள் சேரும் வகையில் பயன்படுத்திட வேண்டும்! இரும்பைக் கொண்டு தாழ்ப்பாள், பீரோ, ஜன்னல் போன்ற காப்புச் சக்திப் பொருட்களாகப் பயன்படுத்த வேண்டும்.. ஆனால் நாற்காலி, ஆசீர்வாதப் பொருட்கள் போன்றவற்றிற்கு இரும்பை அறவே பயன்படுத்தக் கூடாது.!

இரும்பின் பயன் யுகத்திற்கு யுகம் மாறுபடும்., முந்தைய யுகங்களில் இரும்பை ஆயுதங்களுக்கும், வண்டி பாகங்களுக்கும் பயன்படுத்தினார்கள். ஆனால் சாப்பிடும் தட்டு, பூஜைப் பொருட்கள், அமர்வதற்கான ஆசனங்கள் போன்றவற்றிற்கு இரும்பை ஏற்பது கிடையாது! மந்தாரை, பூவரசு, தென்னை, தாமரை, வாழை இலைகள், மரத் தட்டுகள், வெள்ளி மற்றும் தங்கத் தட்டுகள்தாம் சாப்பிடுவதற்குப் பயன்பட்டன.  எனவே எவர்சில்வர் பாத்திரங்களையும், தட்டுகளையும் முற்றிலுமாகத் தவிர்த்தலே தெய்வீகத்திற்குச் சிறப்புடையது.. நம் ஆன்றோர்கள் தாமிரம், வெண்கலம், பித்தளை, மரம், வெள்ளி, தங்கம் இவற்றையே முழுவதுமாகப் பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது...!

யோக ஆமைகள்

யோக ஆமைகளும் தேக ரேகைகளும்!

பாத ரேகைகளுக்கும், ஆமைகளுக்கும் நெருங்கிய ஆன்மீகப் பிணைப்பு உண்டு! ஸ்வர்ண ராஜ ஆமைகள் என்ற புனிதமான ஆமைகள் தாம் பாற்கடலில் வசித்துக் கூர்ம அவதார பூஜைகளை மேற்கொண்டு பூலோகம் வந்தவை! இன்றைக்கும் என்றைக்கும் பாற்கடல் உண்டு! பௌர்ணமி தோறும் இவை பாற்கடலுக்குச சென்று அமிர்த யோக நாட்களில் மட்டும் பூலோகத்திற்கு வரும்! இவற்றின் தரிசனமே பல அமிர்த சக்திகளைப் பெற்றுத் தருவதாகும்! இவை சென்று வருகின்ற நில, நீர், வான் வழிகள் மிகவும் ரகசியமானவை!

இவ்வாறு தேவ வழியில், பூமியின் அடி நீரோட்டங்களின் அடியில், வான் வழியில் செல்லும் ஆமை தேவதைகள் ஒன்றிரண்டு வழி தவறி வீடுகளில், தோட்டங்களில் வந்து சேர்ந்துவிடும்!  பல்லாயிரம் ஆண்டு யோக சக்தி மிகுந்த இவற்றை எவரும் தீண்டி இம்சைப் படுத்தலாகாது என்பதற்காகவே வீடு புகுந்த புனிதமான ஆமையைத் தொடக் கூடாது என்ற வாக்கே வழக்கில் தவறாக ஆமை புகுந்த வீடு... என்ற தவறான வழக்கு மொழி ஆகி விட்டது! எனவே ஆமையைக் கண்டால் விட்டு விடுங்கள் அல்லது அமைதியாக நீர் நிலைகளில் இட்டு விடுங்கள்! 

பெருமாளுடைய கூர்ம (ஆமை வடிவு) அவதார காலத்தில் ஸ்வர்ண ராஜ ஆமைகள் யாவும் பாற்கடலில் அவர்தம் அவதார கிருத்திய தரிசனங்களைப் பெற்றவையாம்! அமிர்த யோக நாட்களில், அந்நாளுக்கு உரித்தான அமிர்த நேரத்தில் இவை பூமிக்கு வந்து தம் யோக சக்திகளைப் பதித்துச் செல்லும்! ஆமைகளின் பாத சக்தியே அவற்றிற்கு நீண்ட ஆயுளைத் தருகின்றன! ஆமைகளின் பாதங்களிலும் சூட்சும ரேகைகள் உண்டு! இவற்றைப் பூவுலகிற்கு அளிப்பதற்காக அவை கடலில் தரைக்கு வருகின்றன!

ஆமையின் உஷ்ணம் தீவினை பஸ்மம்!  : இந்த முதுமையான ஆமைகள் பல யுகங்களிலும் அவதார மூர்த்திகளையும் தரிசித்து இன்றும் தம்முடைய யோகத்தால் கடல்களுக்கும், பூமிக்கும் புனிதம் சேர்த்துக் கொண்டிருக்கின்றன... ஒரு விதத்தில் பல்லாயிரக் கணக்கான வயதுடைய இவற்றைப் பாதுகாத்திட இறைவன் ஆழ்நிலைச் சமுத்திரங்களைப் படைத்தார் என்றே சொல்ல வேண்டும்.. இல்லை எனில் இம்மனித சமுதாயம் ஆமைக் குலத்தையே சூறையாடி, உண்டு, தீர்த்துக் களித்துக் கொழுத்திருக்கும்! 

இவை முதுமையானவை என்றால் வயதானவை என்று எண்ணி விடாதீர்கள்! யோகத்தில் முதுமை கொண்டவை என்பதே இதன் பொருளாம்! சம்பூர்ண ஆமையின் ஓடானது மிகுந்த உஷ்ணம் உடையதாக இருக்கும். இன்றைக்கு அனைத்து நாடுகளிலும் கடலில் பாய்ச்சப்படுகின்ற சாக்கடை நீர், கழிவு நீர், மல ஜல நீர் இவற்றின் தீவினைத் தொகுப்பைப் பஸ்மம் செய்வதற்கு சூரிய ஒளி, கிரக, நட்சத்திர ஒளிகளுடன் சம்பூர்ண ஆமைகளின் ஓட்டின் வெளிப்படும் கூர்மசார சக்தி என்ற அரிய உஷ்ண சக்தியும் சேர்ந்து துணைபுரிகின்றன.!

கைவிரல் முத்திரைகளின் யோக சக்திகள்! :- வானில் பல லட்சம் மைல்களுக்கு அப்பால் உள்ள நட்சத்திரக் கோள மண்டலங்களில் நிகழ்வனவற்றையும் தீர்க்க தரிசனமாக உணர்வதற்கு நம் விரல்களில் உட்பக்கம் ஒவ்வொரு விரலிலும் உள்ள கணு மத்ஸ்ய ரேகைகள் துணை புரிகின்றன..! கைவிரல்களினால் பலவிதமான முத்திரைகளை இட்டு விரல்களில் கூட்டி ஏற்படுவதே கங்கணப் பரல் கோண முத்திரைகளாகும்! விதவிதமான வகைகளில் விரல் இடைவெளிகளுக்கு இடையே, யோக முறையிலாகக் கிட்டும்.. முத்திரையே  விதானப் பலகணி யோக முத்திரை ஆகும்... இவற்றை முறையாகப் பயின்று வந்தால் குருவருளால் நீங்கள் பகலிலேயே நட்சத்திரங்களைத் தரிசிக்கும் அரிய யோக நேத்ரா சக்திகளைப் பெற்றிடலாம்! ஆனால் புனிதமான உள்ளமும், யோக நேத்ர சக்திகளும், சற்குருவின் குருவருளுமே இதற்குப் பெரிதும் துணை புரியும்.!

பாத ரேகைகளுக்குப் புனிதம் சேர்க்கும் பாத  யாத்திரைகள் இவற்றைப் பெறப் பெரிதும் துணைபுரிகின்றன! இவற்றிற்காகவே திருப்பதி, சபரிமலை, திருத்தணி பாத யாத்திரைகள் நடைமுறை வழிபாடுகள் ஆயின! நாட்டியத்தில் வரும் பல முத்திரைகளும் பரவெளியில் இருந்து அபூர்வமான மந்திர சக்திகளை கிரகித்துத் தருகின்றன! எனவே நாட்டியத் துறையில் இருப்போர் உடல், மனம், உள்ளப் புனிதத்துடன், சம்பாதிக்கும் நோக்கமின்றி இதனைத் தெய்வீகக் கலையாக பாவித்து, பொறாமை, பகைமை இன்றிப் பிறரையும் ஊக்குவித்துத் தக்க குருவருளுடன் இறைப் பெருந் தொண்டாற்றினால் நிச்சயமாக சிதம்பர நாட்டியப் பெருமானாம் ஸ்ரீநடராஜ சிவத் திருவருளைப் பெற்றிடலாம்! நாட்டியத்தில் மிளிர வேண்டியவை பக்தி, புனிதம், பணிவு அடக்கமாகும்! இவையாவும் குருவருளில் ஒன்றாய்த் திரண்டிடும்! முக்காலச் சந்தியா வந்தன வழிபாடுகளில் சூரிய ஒளி வழிபாட்டிற்காக விரல்களில் ‘பாசாங்குலி’ முத்திரை இட்டு சூரிய ஒளியை தரிசிக்கின்ற உத்தம முத்திரை வழிபாட்டு முறையும் உண்டு! (சந்தியா வந்தன வழிபாட்டில் ஸ்ரீசூரிய பகவானைத் தரிசிக்கின்ற தெய்வீக முத்திரை) தக்க பெரியோர்களை நாடி இம்முத்திரையை அறிந்து கடைபிடித்துப் பயன் பெறுக!

அண்டங் காக்கைக்கும் ஆயிரம் வழிபாடுகள்!

 பல பறவைகளும் புனிதமான வழிபாடுகளை மேற்கொண்டு பல லோகங்களுக்குச் செல்வதற்கும், பகலில் நட்சத்திரங்களைத் தரிசிப்பதற்குமான தெய்வீகச் சக்திகளைப் பெற்றுள்ளனர்..! குறிப்பாக அண்டங் காக்கைகளும், சில வகைப் புறாக்களும் பல நட்சத்திரங்களைப் பகலிலேயே காணும் சக்திகளைக் கொண்டவை! இவை தினமும் தங்களுக்கு உரித்தான விடியற்காலை பூஜை முறைகளைச் செல்வனே முடித்துக் கொண்டு குறைந்தது 108, 1008 கோபுரக் கலச தரிசனங்களைப் பெற்ற பின்னரே உணவெடுக்கும்! 

இவை ஏகாதசி, சிவராத்திரி போன்ற நாட்களில் உண்ணா நோன்பிருக்கும்! திதி என்பது சூரிய, சந்திர கோளங்களுக்கு இடையே உள்ள தூரத்தையே குறிப்பதால் பகலில் நட்சத்திரங்களையே காணவல்ல பறவைகளுக்குக் கோள அம்சங்களைக் கொண்டு திதிப் பகுப்பினை அறிவது எளிமையானதுதானே! திதி, கிழமை அறிய நாம்தான் பஞ்சாங்கத்தை நாட வேண்டும்! வான சாம்ராஜ்யத்தில் கொடி கட்டிப் பறக்கும் பல பறவைகளுக்கு இவை குலஞானமாக, யோக மார்க்கமாக தாமாகவே உணர்விக்கப் பெறும்.. ஏனென்றால் மனித குலத்தைப் போல் சுய நலத்திற்கு அல்லாது பறவைகள் இந்த யோக சக்திகளைச் உலக நன்மைகளுக்காகவே பயன்படுத்தும்! இதற்கான நல்வரங்களை அவை இறைவனிடம் இருந்தே பெற்றுள்ளன! அண்டங் காக்கைகள் சனீஸ்வர லோகத்துடன் தொடர்பு கொண்டவை ஆதலால் அவை அடிக்கடி சனீஸ்வர லோகம் சென்று வரும்! எனவே காக்கைகள் போன்ற பறவை இனங்களும் நிறைய இறைவழிபாடுகளை மேற்கொள்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்! இவை வேப்ப மரம், ஆல மரம் போன்ற பாத ரேகா சக்திகளை உடைய மரங்களின் கீழ் யோக நடை பயில்வதை நீங்கள் கண்டிருக்கலாம்! பாத சக்திகளும் பறவைகளுக்கும் தேவ சக்திகளைத் தருகின்றன! பறவைகள் எல்லா இடங்களிலும் நடப்பதில்லை! பாத சக்திகள் நிறைந்த இடங்களை, தலங்களை யோக மார்க்கமாக உணர்ந்து அங்குதாம் யோக நடை பயிலும்!

மேலும் ஆடு, மாடு போன்றவை பாத ரேகா சக்திகள் நிறைந்த மூலிகைப் புல், மூலிகைச் செடி வகைகளை உண்டிடில் இவற்றை யோகப் பூர்வமாக உணர்கின்ற குருவி, குயில், காக்கை போன்றவை அவற்றின் மேல் அமர்ந்து ‘பயணம்’ செய்து அத்தகைய சக்திகளைத் தம் பாதங்கள், மூலமாக ஈர்த்துக் கொள்ளும்! எனவே பறவைகள் விலங்கினங்களின் மேல் ஆனந்தமாக அமர்ந்து செல்வதற்கும் தாத்பர்யங்களும், காரண காரியங்களும் உண்டு! இறைவனின் பிரபஞ்ச இயக்கத்தில் அனைத்திற்கும் அர்த்தங்கள் உண்டு! இவற்றை உணர்விப்பவர்தாம் சற்குரு ஆவார்! பாத ரேகைகளைப் பற்றி ஆரம்பித்த ஆன்மீக விளக்கங்கள் எவ்வகையில் கடல் மடை போல் தெய்வீக ரகசியங்களைக் கொட்டுகின்றன பார்த்தீர்களா! நீங்கள் ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் இவற்றைக் காண்பதும் சற்குருவின் அருளால்தான்!

பாத யாத்திரையில் கூடும் பாதரேகா சக்திகள்!

பாத ரேகைகளைப் பற்றித் தெரிந்து கொண்டு என்ன சாதிக்கப் போகின்றோம்? மகரிஷிகளும், சித்புருஷர்களும் ஆலயங்களில் அடிக்கடி வழிபட்டுச் செல்கின்றமையால் அவர்கள் பிரதட்சிணம்,  அடிப் பிரதட்சிணம், அங்கப் பிரதட்சிணம் செய்த புனித வளாகங்களில் நாமும் பிரதட்சிணம் செய்வதால் நம் பாத ரேகைகள் மூலமாக அவர்களுடைய திவ்யமான தபோ பலன்கள் நம் உடலில் சேர்கின்றன..! அறிந்தோ அறியாமலோ செய்த பல பூஜைகளின் பயனாகவும், திருஅண்ணாமலை, திருப்பதி, கும்பகோணம் அருகே திருப்பாலைத்துறை போன்ற இடங்களில் உள்ள ஸ்ரீராமர் பாத தரிசனங்களும், பெரியோர்களுக்கான / கணவனுக்கான பாத பூஜை, ஆலயங்களில் பிரதட்சிணங்கள், அடிப் பிரதட்சிணங்கள், அங்கப் பிரதட்சிணங்கள், சபரிமலை, திருப்பதி, திருத்தணி போன்ற இடங்களுக்கான தல யாத்திரை, திருஅண்ணாமலை, திருப்பரங்குன்றம், தேனிமலை போன்ற மலைத் தலங்களில் கிரிவலம் போன்றவையும் பாத ரேகைகள் மூலமாகவும் ஐம்பூதப் புனித சக்திகளைக் கூட்டுகின்றன..!

ஆண்களாயின் காலில் திருவெண்டயம் அணிதல், பெண்களாயின் சலங்கை, சதங்கை, மெட்டிகள், தண்டு பாத தடங்கம் அணிதலால் பாத ரேகைகள் மூலமாக எழுகின்ற தீர்க சக்திகளை இவை கிரகித்து நம் உடல் நாளங்களுக்கு அனுப்புகின்றன.. பலவிதமான பூஜை முறைகளில் உடலை வருத்தி இறைச் சேவை புரிபவர்களுக்கும் உத்தமப் பலன்கள் கூடுவது உண்டு..!

இறைவனே போற்றும் சமுதாய இறை உடற்பணி! ஒருமுறை நாட்டில் வறுமை தோன்றிய போது திருவீழிமிழலையில் அன்னதானம் செய்வதற்காக இறைவன் அப்பர் சுவாமிகளுக்கும், சம்பந்தர் சுவாமிகளுக்கும் ஆலயத்தில் தினந்தோறும் தங்கக் காசு இட்டு அருள்பாலித்தான்.. ஆனால் இங்குதான் ஈஸ்வர லீலை தொடங்கியது.. அப்பருக்கு அளித்த பொற் காசு, சம்பந்தருக்கு அளித்த பொற் காசை விடக் கூடுதலான தொகையையும் பெற்றுத் தந்தது. இதைக் கண்டு அனைவரும் வியந்த போது, உடல் வருத்தி ஆலய உழவாரத் திருப்பணிகளை அப்பர் சுவாமிகள் செய்தமையால் உடல் வருத்திச் செய்யும் உத்தம இறைச் சமுதாயப் பணிகள் உன்னத பூஜா பலன்களை வர்ஷிக்கின்றன என்பதை இறைவன் உலகிற்குத் தெளிவுடன் எடுத்துரைத்தான்... மகான்கள் ஒருவரை ஒருவர் நன்கு அறிவர்! இறைவன் நமக்கு அவர்கள் மூலமாகப் பல போதனைகளைத் தருகின்றான்!

பாத யாத்திரைகள் மூலமாக ஆயிரக் கணக்கானத் திருத்தலங்களை தரிசித்துப் பூஜா பலன்களைப் பெற்றுப் பாத ரேகைகள் மூலமாக மகான்களும், மாமுனிகளும் அவற்றை யாங்கணும் நிரவுகின்றனர்! எனவேதாம் பெரியோர்களுக்கான பாத பூஜை உத்தமமான பலன்களைத் தருகின்றது! இவ்வகையில் நன்முறையில் புனிதமாகக் கடுமையாக விரதமிருந்து ஆலயங்களுக்குப் பாத யாத்திரை செல்வதில் மகத்தான புண்ய சக்திகள் உண்டாகின்றன.. ஆனால் விரதங்களை முறையாகக் கடைபிடிக்க வேண்டும்! தற்காலத்தில் நடக்கும் சபரி மலை விரத பங்கங்கள் கூடவே கூடாது!

எனவே உங்கள் உள்ளங் கால்களில் உள்ள பாத ரேகைகளை இனியேனும் தினந்தோறும் நன்கு உற்றுக் கவனித்து வாருங்கள். அவரவர் கை ரேகை தரிசனம் போலப் பாத ரேகை தரிசனமும் மிகவும் முக்கியமானதாகும்! கை, கால் விரல்கள், உள்ளங்கை, உள்ளங் கால்களுக்கு மருதாணி அணிந்து பாத யாத்திரை, ஆலயங்களில் அடிப் பிரதட்சிணம், அங்கப் பிரதட்சிணம், கிரிவலம் வருதல் உத்தமமான பலன்களைப் பெற்றுத் தரும்.!

பாத ரேகை சக்திகளின் பலன்களும் பயன்களும்! :- கைரேகை சாஸ்திரம் போல், கால் ரேகை சாஸ்திரமும் உண்டு. தற்போதைய அகுபஞ்சர் முறையானது நமது பண்டைய முள் முனைச் சுருக்கு வடி என்பதான சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் கடைபிடிக்கப்பட்டதாகும்.. நெருஞ்சி, நெருஞ்சி முள், கண்டங்கத்திரி, நாயுருவி, கல்யாண முருங்கை போன்ற தாவர (முள் வகை) மூலிகைகளைக் கொண்டு பாத ரேகைகளில் குறித்த கோணங்களில் அழு(ந்)த்தி நரம்பு நோய்களுக்கும், இரத்த அழுத்த நோய்களுக்கும், தசை நோய்களுக்கும், நல்ல தீர்வுகளை நம் பண்டைய சித்த வைத்யர்கள் பெற்றுத் தந்தார்கள்..!

இரத்த சோகை உள்ளவர்களை மூலிகைப் பூச்சுகள் பதிந்த நெருஞ்சி முள் பத்தையில் நிதானமாக வெறுங் காலில் நடக்க வைத்து நெருஞ்சி முள் அழுத்தத்தால் பல நரம்பு, தசைகளை வலுப்படுத்தும் யோக சக்திகளை உடலின் பல நாளங்களில் ஆக்கப்படுத்தி எத்தனையோ நோய்களுக்கான சித்த வைத்திய முறைகளை நம் தொன்மையான சித்த மருத்துவ முறை தந்துள்ளது! இவ்வாறாக இறைமை, இறைச் சமுதாயப் பணி, பக்தி, இயற்கை, கருணை, இயல்பாக இறையருளுடன் இணைந்த மருத்துவமே சித்த மருத்துவமாகும்! பாத ரேகைகள், இவ்வாறாக, நோய் நிவர்த்திக்கான நாளங்களாகவும் பயன்படுகின்றன.. சிலவகையான வந்தி மற்றும் நிலம் புரண்டி மூலிகைகள் கண்களுக்குத் தென்படாமல் பூமிக்கு அடியில் மறைந்து கொள்ளும். குறித்த தினங்களிலோ, நட்சத்திர நாட்களிலோ, அமாவாசை, பௌர்ணமி திதிகளிலோ அல்லது புனிதமானவர்கள் வரும்போது மட்டும் இவை பூமியின் மேல் பகுதியில் வெளிப்படும் என்பன போன்ற தேவ விளக்கங்களைக் கடந்த ஸ்ரீவிஷ்ணுபதி இதழில் (ஆகஸ்ட் 2001) விளக்கி உள்ளோம்! இத்தலங்களுக்குப் பாதயாத்திரையாகச் செல்வது பாத ரேகைகள் மூலமாக மூலிகா சக்தியைப் பெருக்கும்.!

கும்பமேளாவில் பொலியும் பாத ரேகா சக்திகள்!

எனினும் சித்தர்களின் அனுகிரகத்தால், பலருக்கும் இந்த அரிய மூலிகா சக்திகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக வந்தி மூலிகைச் செடிகள் மற்றும் நிலம்புரண்டி மூலிகைச் செறிவு உள்ள இடங்களை பூமியில் தேர்ந்தெடுத்து அங்கு மகத்தான உற்சவங்களை நிகழ்த்தி, பல லட்சக் கணக்கான ஜனங்களைக் கூடச் செய்து இறைவன் யாவருக்கும் பாத ரேகைகளில் அரிய மூலிகை சக்திகளையும், ஜல த்வீப சக்திகளையும் அளித்திடச் செய்கின்றான்.! அலகாபாத் (பிரயாகை), நாசிக், ஹரித்வார் போன்ற இடங்களில் நிகழ்கின்ற கும்பமேளாவும், கும்பகோணம் மகாமகமும் இவ்வகையில் லட்சக் கணக்கான மக்களுக்குப் பாத ரேகா சக்திகளைப் பெருக்குவதற்கு இறைவனே அளித்த நல்வரங்களாகும்.!

எனவே இனியேனும் அடிப்பாதம் மற்றும் பாத ரேகைகளைத் தினமும் சுத்தம் செய்து தினமும் காலையில் உங்கள் கை, பாத ரேகைகளை தரிசித்துப் பாத சக்திகள் நிறைந்த தலங்களில் அடிப்பிரதட்சிணம், அங்கப் பிரதட்சிணம் செய்திட்டுப் பல அரிய தேவ சக்திகளைப் பெற்றிடுங்கள்! இது உங்களுடைய பாத ரேகை சக்திகளின் தேவ லாவண்யங்களையும் பெருக்கிடும்! நிதமும் காலையில் நாயைப் பிடித்துக் கொண்டோ, அரை டிராயர், ஸ்போர்ட்ஸ் ஷூ மாட்டிக் கொண்டோ நடை ஓட்டம் பயில்வதை விட மந்திரம் ஓதியவாறு ஆலயங்களில் தினமும் காலையிலும், மாலையிலும் அடிப் பிரதட்சிணம் செய்து உடல், மன, உள்ள சுத்தியைப் பெற்றுத் தெய்வீக வாழ்வைப் பெற்றிடுங்கள்! சில குடும்பங்களில் ஒவ்வொரு தலைமுறையிலும் ஏதேனும் விபத்து நடந்தவாறு இருக்கும்! பொதுவாக கர்பங்களில் ஊனம் ஏற்படாதிருக்கவும், மேற்கண்டவாறாகத் தலைமுறைகளில் ஏற்படும் விபத்து தோஷங்கள் தணியவும், பாத நட்சத்திர தினங்களில் (கார்த்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி) திருஅண்ணாமலை போன்ற திருத்தலங்களில் கிரிவலமும், ஆலயங்களிலும் அடிப் பிரதட்சிணமும் செய்து வருதல் வேண்டும்!

திருஅண்ணாமலையார் பாதங்கள்

மேலும், அமர் யோக பாவன பாத சக்திகளைக் கொண்ட பறங்கி, பூசணி போன்ற அமர் நிலைக் காய்கறிகள் கலந்த உணவை அன்னதானமாக அளித்து வருதலும் கால் சம்பந்தப்பட்ட பலவிதமான தோஷங்களைப் போக்கும்! அடிக்கடி பயணம் செய்ய வேண்டிய தொழிலில் உள்ளோர் மேற்கண்ட பூஜைகளைத் தவறாமல் கடைபிடித்து வரவேண்டும்! இதற்குரித்தான தலங்களாவன :- தேவகோட்டை அருகே ஸ்ரீபாகம்பிரியாள் ஆலயம், கும்பகோணம் அருகே திருநல்லூர், திருப்பாலைத்துறை சிவாலயங்கள் போன்றவை!

கை ரேகைகள், போல உள் பாதத்தில் உள்ள ரேகைகளும் (கால் ரேகைகள்) மனிதனுடைய ஆன்ம வாழ்வில் பெரும் பங்கை ஆற்றுகின்றன! காலையில் எழுந்தவுடன் உள்ளங்கையின் மங்களகரமான கரதரிசனம் போல பாத ரேகை தரிசன முறைகளும் உண்டு! உள்ளங் காலில் மருதாணி இடுதலால் பரவெளியில் இருந்து பீஜாட்சர மந்திர சக்திகளை கிரகிக்கக் கூடிய வேத சக்தி உடலில் பெருகும்! நம் பாதங்களுக்கு அடியில் உள்ள பாத ரேகைகளைப் பற்றி என்றேனும் நினைத்து இருக்கின்றோமா? அல்லது கை ரேகைகள் போல கால் ரேகைகளும் உண்டு என்பதைத்தான் நீங்கள் அறிவீர்களா, பார்த்துத்தான் இருக்கின்றீர்களா? கை ரேகைகள் போல கால் ரேகைகளும் உண்டு! உங்கள் பாதங்களுக்கு அடியில் உள்ள பாத ரேகைகளை இன்றேனும் உற்றுக் கவனித்துப் பாருங்களேன்! பாத ரேகைகளுக்கும் நிறைய தெய்வீக சக்திகள் உண்டு.. பொதுவாக எங்கும், எவ்வளவு அழுத்தமான கோடுகளாக இருந்தாலும் அவை சில வருடங்களில் மறைந்து விடும்.. தாவரங்களின் ஆண்டுகளைக் குறிக்கும் பல்லாண்டு மர வளையங்கள் கூடக் காலப் போக்கில் மாறுதல்களை அடைகின்றன! ஆனால் ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்தாலும், 60, 70 வருடங்கள் ஆனாலும் கால் ரேகைகள் மட்டும் அழுத்தமாக இருப்பது பிரம்ம பாத முத்திரைகளில் இருந்து எழுகின்ற ஜீவ பாவன ரேகா சக்திகள் பாதங்களில் நிறைந்து இருப்பதையே குறிக்கின்றன..!

பஞ்சபூத வான்வழி நீரோட்டங்கள்! :- பூமியின் அடியில் உள்ள நீரோட்டங்களைப் போல வானமாகிய பரவெளியிலும் நம் கண்ணுக்குத் தெரியாத வகையில் சூட்சும பிருத்வி ரேகை, அக்னி ரேகை, ஜல ரேகை, ஆகாச ரேகை, வாயு ரேகை நீரோட்டங்களும் உண்டு.. இவை தவிர நட்சத்திரங்கள், கோளங்கள், கிரகங்களிலிருந்து ஒன்றுக்கொன்றுமாய், பரவெளியிலுமாய்ப் பாய்கின்ற ஒளிப் படல் ரேகை நீரோட்டங்களும் நிறைய உண்டு.. மின்னல் என்பது வான்வழி ஒளி நீரோட்டங்களின் ஒரு வகையாகும்!

பூமியில் கால் பாதம் படட்டுமே! :- மேல் நாடுகளில் வீடுகளுக்குள் காலணியும், ஷுவும் அணிகின்ற வழக்கம் வந்துவிட்டதால் அங்கு பாத ரேகைகளின் சக்திகளை அவர்கள் பெருமளவில் இழந்து விடுகின்றார்கள். பூமியிலிருந்து பெற வேண்டிய பாத பாவன பிருத்வி சக்தியையும் அவர்களால் பெற இயலாமல் போய் விடுகின்றது.. மேலும் பூமியில் வெறுங் கால்கள் படுவதே மிகவும் அரிதாகி விடுவதால், பூமிக்கும், பாத ரேகைகளுக்கும் ஆன்மீகப் பிணைப்பு குறைந்து அவர்களுடைய உடல்களில் பஞ்சபூத ரேகை ஓட்டங்களைச் சரியான முறையில் ஐக்யமாக்கிடவும் முடிவதில்லை.. குறித்த நேரங்களிலாவது (இளங் காலை நேரம், மாலை அந்தி நேரம் போன்றவை) பாத ரேகைகள் பூமியில் பட்டாக வேண்டும்.. எவ்வளவுக்கு எவ்வளவு பாத ரேகைகள் பூமியில் நேரடியாகப் படிகின்றனவோ, அந்த அளவிற்குப் பஞ்ச பூத ரேகை சக்திகள் உடலில் பரிமளிக்கும்..

ஸ்ரீகாஞ்சி பரமாச்சார்யாள் போன்ற மகான்கள் தம்முடைய மானுட உடலின் ஜீவிதத்தில் எப்போதும் காலணி அணியாது பூமி, கிரக, பிருத்வி கிரண ரேகைகளுடன் தங்கள் பாத ரேகைகளைச் சம்பந்தப்படுத்தி இருந்தமையால் அவர்கள் மிகமிக அபூர்வமான, அதியற்புதமான பஞ்ச பூத சக்திகளைப் பெற்றார்கள்.. இதன் இறைத் துணைப் பலன்களாக பூமியில் எவ்வளவு மைல்களுக்கு அப்பாலும் நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தீர்க தரிசனமாக உணர்கின்ற தேவ சக்திகளை அவர்கள் பெற்றார்கள்..! பாத ரேகைகள் மூலமாகவும் அவர்கள் பலவற்றை உணர்கின்றனர்...

நட்சத்திர ஆமைகள்! :- நட்சத்திர ஆமைகள் இத்தகைய பாத ரேகா பிருத்வி சக்திகளைப் பெற்றவையாகும்.. இவையும் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் நடக்கின்றவற்றை உணரும் தெய்வீக ஆற்றலைப் பெற்றவையே! மேலும் நம் கண்ணுக்குத் தெரியாத நட்சத்திரங்களைக் காணும் நேத்ர சக்தியையும் கொண்டவையாம்! இதேபோல நீரில் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் நிகழ்கின்றவற்றைத் தீர்க்க தரிசனமாக உணர்வதற்கு நீரில் உள்ள ஜல ஸ்தம்பன ரேகைகள் பெரிதும் உதவுகின்றன... அதாவது பிராணாயாம யோகத்தில் பூமிக்கு அடியில் சுவாசத்தை நிலைப்படுத்தி ஸ்தம்பனப் (அசையாமல் நிலைப்) படுத்தும்போது நாசியின் (மூக்கு) உள்ளே படிந்திருக்கின்ற சுவாச பந்தன ரேகைகள், நீரிலுள்ள பஞ்சபூத ரேகைகளுடன் ஐக்யமாகி ஆழ்நீரினுள்ளும், பெருங் கடல்களில் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலும் கடல் விட்டுக் கடல் தாண்டியும் நிகழ்கின்றவற்றைத் தீர்க்க தரிசனமாகப் பெற்றுத் தரும்.!

ராமேஸ்வரத்தில் உள்ள ஒரு ஆமையால் ஜப்பான் கடற்கரையில் நடக்கும் சம்பவங்களை துல்லியமாக உணர முடியும்! ஆனால், இந்த நன்றி கெட்ட சமுதாயமோ ஆமைகள் நிலத்திற்கு வந்து இடும் முட்டைகளை ஆம்லெட்டாக்கச் சுவைத்துத் தன் சுயநலத்திற்காக மகத்தான யோகப் பாரம்பரியங்களைக் கொண்ட ஆமைகளையே கூண்டோடு அழித்து விடுகின்றது! இதற்கும் மனித குலம் பிராய சித்தம் செய்யாவிடில் பாதம் சம்பந்தப்பட்ட நோய்களே பெருகும்.! இந்த ஸ்தம்பன ரேகா சக்திகளைப் பெறுவதற்கு நீரினுள் அமிழ்ந்து ஜலஜட யோகங்களில் சிறந்த கடல்வாழ் உயிரினங்கள் நிறைய உண்டு! கடல் ஆமைகளில் ராஜ மகுட ஆமை, சிந்தூர ஆமை, சம்பூர்ண ஆமை போன்ற பல்லாயிரம் ஆண்டு வயது கொண்ட ஆமைகள் இன்றும் உண்டு! பல யுகங்களைக் கண்ட ஆமைகளும் உண்டு! ஏன், பாற்கடலில் அமிர்தம் கடைந்த போது வெளி வந்த ஆமைகள் இன்றும் சிரஞ்சீவித்வம் கொண்டவையாக வாழ்கின்றனவே! இவையாவும் பாத சக்திகள் நிரம்பிய ஜீவன்களாகும்.!

வானில் உள்ள நீர், காற்று, ஆகாயம், அக்னி சம்பந்தப்பட்ட ரேகை நீரோட்டங்கள் பூமியில் உள்ள பிருத்வி நீரோட்டங்களுடன் சேர்ந்தால்தான் பூலோக வாழ்வில் பஞ்ச பூத சக்திகள் நன்கு நிலை பெறும். அதாவது ஐம்பூத ரேகைகளை பிருத்வி சக்திகளுடன் பிணைக்கும் சக்திகளைப் பெற்றவையாகும்.! எனவே பாத ரேகைகளின் பாங்கின்றி நம் பூலோக வாழ்வு நிறைவு பெறுவதில்லை. மேலும் நம்முடைய ஆரோக்கியத்திற்காகப் பாத ரேகைகள் பலவிதமான பிருத்வி சக்திகளை பூமியின் அடியில் உள்ள நீரோட்டங்களில் இருந்து பெற்று நமக்கு அளிக்கின்றன.. இவைதாம் மனம், உள்ளம், உடலை தார்மீக ரீதியாகவும், யோக ரீதியாகவும் பரிபாலித்து மன வளமும், மனோ சக்தியும் பெறுவதற்குப் பெருந்துணையும் புரிகின்றன!

அமுததாரைகள்

1. ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஜபிக்கும் ஸ்ரீநந்தீஸ்வரர் :- ஆலயத்தில் அமர்ந்த கோலத்தில் வலது காலைச் சிறிது தூக்கி/நீட்டிய நிலையில் ஸ்ரீநந்தீஸ்வரர் இருந்தால் அவர் அந்தந்த ஈஸ்வரருடைய காயத்ரீ மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருக்கின்றார் என்பது பொருள்.. இம்மூர்த்தியும் விசேஷ சக்தி அம்சங்களைக் கொண்டவராவர்! சித்த யோக நேரத்தில் இவருக்கு அருகம்புல் காப்பிட்டு வெண்பொங்கல் படைத்து அன்னதானமாக அளித்துவர நிலையான வேலை கிடைக்கும்.

ஸ்ரீநந்தீஸ்வரர் கரிவலம்வந்தநல்லூர்

2. தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் உரித்தான ஸ்ரீகாயத்ரீ மந்திரமும் உண்டு... பசுவானது தன்னுடைய வலது காலை நீட்டி அமர்ந்திருக்கின்ற கோலமானது அது ஸ்ரீகாயத்ரி ஜபத்தை மேற்கொள்கின்றது என்பதற்கான பாவனையாகும்.. எனவே இனிமேல் பசுவானது வலது கால் மட்டும் நீட்டிய கோலத்தில் அமர்ந்திருந்தால் அது ஸ்ரீகாயத்ரீ ஜபத்தை மேற்கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்து அதனைத் தொந்தரவு செய்யாமல் சுற்றிப் பிரதட்சிணம் வந்து தொட்டு வணங்கிடுங்கள்.. ஏனென்றால் நாம் செய்கின்ற காயத்ரீ ஜபத்தை விட கோடிக்கணக்கான தேவாதி தேவ மூர்த்திகள் உறைகின்ற பசு செய்கின்ற காயத்ரீ ஜபமானது பலகோடி மடங்கு விசேஷத் தன்மைகளைக் கொண்டதாகும்.!

3. ஆமை ஓட்டின் மருத்துவ குணம்! :- இறைச்சி, மருந்திற்காக கொல்லப்படாமல் தாமாகவே இயற்கையாகவே இறக்கும் ஆமைகளின் ஓட்டில், சுட்ட மஞ்சளால் சித்த வைத்ய முறையில் பற்று எடுத்து நெற்றிக்குஇப் பட்டைப் பற்றாக இட்டு வர, ஒற்றைத் தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும்! ஆமை ஓட்டை அரைத்து வரும் பற்று பல நோய்களுக்கும் தீர்வைத் தருகின்றது! ஆனால் மருந்திற்காக ஆமைகளைக் கொன்றால் பெருத்த சாபம் ஏற்படுவதோடு, அம்மருந்தும் பயனளிக்காது! இவ்வாறு ஆமைகளைச் சுயநல நோக்கத்தோடு கொல்பவர்களையும் அவர்களுடைய சந்ததிகளையும் கடல்வாழ் ஜீவனின் சாபங்கள் மாய்த்து விடும்! ஆமைகளை வளர்ப்பதை விட, அவற்றை நீர் நிலைகளில் துன்புறுத்தாமல் விட்டு விடுதலே சிறப்பானதாம்!

4. ஸ்ரீபாத வழிபாடு! கால்களில் ஊனம் ஏற்பட்டுள்ளோர் அல்லது பாத வியாதிகளால் அவதியுறுவோர் பெருமாளுடைய கூர்ம அவதார வழிபாடுகளை மேற்கொண்டு பாத ரேகா சக்திகள் நிறைந்த இடங்களிலும், ஸ்ரீராமர் பாதம் உள்ள தலங்களிலும் வழிபாடுகளை மேற்கொண்டு வருதல் வேண்டும்! பாத சக்திகள் நிறைந்த கூர்ம அவதார மந்திரங்களை ஓதி வருவதுடன் பாத சக்திகள் நிறைந்த வேர்வகை உணவு வகைகளையும் ஏழைகளுக்கு (தோல் வகை இல்லாத) காலணிகளையும் தானமாக அளித்து வந்திடில் நன்மைகள் பெருகி நல்வாழ்வு அமையும்! (வேர்க் கடலை, கீரை, நன்னாரி சர்பத், காரட், கிழங்கு வகைகள்)

ஸ்ரீராமர் பாதம் கோடியக்கரை

5. மூலிகை முள் மருத்துவம் பாத, நரம்பு நோய்களைக் குணப்படுத்தும்! தக்க மூலிகை மருத்துவ தேவதா வழிபாடுகளுடன், நெருஞ்சி முள்ளில் பல வகை மூலிகைப் பூச்சுகளைத் தடவி பாரிச வாயு மற்றும் பல கடுமையான பாத நோய்களுக்கு நெருஞ்சிப் புல்வெளி, நெருஞ்சிப் படுக்கை, நெருஞ்சி நடக்கை போன்ற குண வழி முறைகளில் உடலின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடலில் ஊசி ஏற்றுவது போல இயற்கையான முறையில் தோல் துவாரங்கள், பாத ரேகைகள் மூலமாக மூலிகைச் சக்திகளை இயற்கையாகவே உடலில் சேர்க்கின்ற பண்டைய சித்த முறைகளும் நிறைய இருந்தன. நடைமுறையில் சித்த வைத்தியத்தைப் பலரும் வணிகமாக்கி வருவதால் இதன் புனிதமும் மறைக்கப்படுகின்றது! தக்க மூலிகை பூச்சு கலந்த மூலிகைக் காந்த முள், நெருஞ்சி முள் ஒட்டிய பலகையில் தினந்தோறும் நின்று பழகினால் பாரிச வாயுக்களால் செயலிழக்கின்ற கால்களுக்கு, பாதங்களுக்கும், தலையணை போல் படுத்துவர நினைவுச் செயல் ஆக்கம் இழந்த மூளைக்கும் நல்ல நிவர்த்தி கிடைக்கும். தக்க குருவருளுடன் ஏழைகளுக்கு இலவச மருத்துவப் பணி புரிந்து, புனிதம் நிறைந்திருக்கும் சித்த மருத்துவ்வரை நாடிப் பயன் அடையுங்கள்! இத்தகைய தெய்வீகப் பணிகளைப் புரிகின்ற சித்த வைத்தியர்களுக்குத் துணையாக நிற்க வேண்டியதும் நம் கடமையாகும்!

6. நூலறிவு அறியா நுண்ணியோனான இறைவனைப் பரிபூரணமாக நம்பிடில் நுண்ணறிவாம் இறைப் பகுத்தறிவு வேலை செய்து எதையும் நூலாலன்றி ஞானத்தால் உணர வைக்கும்.. உதாரணமாக கும்பகோணம் கஞ்சனூர் திரைலோக்கி அருகே உள்ள கீழ்சூரியமூலை கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசூர்ய கோடீஸ்வர சிவ லிங்கமே பிரபஞ்சத்தின் அனைத்துச் சூரிய மண்டலங்களுக்கும் சூரிய ஒளியைப் பெற்றுத் தந்து பிரபஞ்சத்தின் சூரிய ஒளி உதயமாகும் இடம் இதுவே என்று மெய்ஞானப் பூர்வமாக இறையருளால் சித்தர்களின் ஞானபத்ர கிரந்தங்களில் இருந்து உணர்த்தியது ஸ்ரீஅகஸ்திய விஜயமே! தற்போது ஜப்பானிய solar specialists இதனை ஆராய்ந்ததாக அறிகின்றோம்! நுண்ணறிவே நூலறிவை அறவழியில் ஆக்கப்படுத்தும்.

7. எதற்குமே நம்முடைய மனமானது நூலறிவு விளக்கம்., ஆன்மீக இறைநெறி விளக்கம் என்ற இரண்டையும் பெற்றாலும், நூலறிவிற்கே மனித மனம் பழக்கப் பட்டுவிட்டதால், கலியுகத்தில் நூலறிவை ஒத்த இறைநெறிகளே நிர்ணயிக்கப்படுகின்றன... முற்காலத்தில் அலுவலகத்தை நமக்கு அன்னம் தரும் மூலக் கரு என உணர்ந்து நேர்மையுடனும், நல்ல பண்பாட்டுடனும் செயல்பட்டுக் காலணிகளைக் கூட அலுவலகத்தில் அணியாது பணிபுரியும் நன்னெறி மிளிர்ந்தது! பள்ளிகளையும் கலைமகளின் கலைக் கூடமாகப் போற்றுகின்ற புனித நெறி இருந்தமையால் பிள்ளைகளும் ஆசிரியர்களும் வகுப்பறைகளுக்குள் காலணிகள் அணிவதில்லை! ஆனால் தற்காலத்தில் நாகரீகம் என்ற பெயரில் அதர்மமும், பொய்மையும் பெருத்து விட்டதால், பாரதத்திற்கே உரித்தான மேற்கண்ட புனிதமான பண்பாடுகள் தகர்க்கப்பட்டு விட்டன, பள்ளி என்பது ஞானம் கூ(ஊ)ட்டும் இறைச்சாலை என்ற உணர்வும் மறைந்து விட்டது.. இவை மீண்டும் தழைத்திட பாத ரேகா சக்திகளைக் கூட்டும் கிரிவலங்களைச் சத்சங்கமாக மேற்கொள்ள வேண்டும், அனைத்து மலைத் தலங்களிலும் மாதந்தோறும் பௌர்ணமி கிரிவலம் பரந்து விரிந்து விருத்தியாக வேண்டும்!

ஸ்ரீசூர்யகோடீஸ்வரர் கீழ்சூரியமூலை

8. வலி என்பதற்குக் கூட ஆன்மீகத்தில் அர்த்தங்கள் பல உண்டு.. உண்மையில் வலி என்பது தசையுடலில் ஏற்படுவதைவிட, மன உடலில் உணரப்படுவதே ஆகும்... இவ்வகையில் நெஞ்சு வலி என்பது இருதய வெளிச் சுவற்றுத் தசைகளில் ஏற்படுகின்ற நாள நாடிக் குறைவுகளேயாகும்! அதாவது நம் உடலின் ஒவ்வொரு நாளமும், நாடியும், நரம்பும், அங்கமும், தலைமுடியும் பலவிதமான கர்ம வினைகளின் தோற்றமேயாம்., கண், காது, மூக்கு, வாய், பற்கள், முகம் போன்ற அனைத்து வடிவங்களும் நம்முடைய கர்ம வினைகளின் சூட்சுமத் தோற்றங்களாகும்! உடலின் வெளியில் தோன்றும் அங்கங்கள் மட்டுமின்றி நம் கண்ணுக்குத் தெரியாத உள் அங்கங்கள் பலவும் நம் கர்ம வினைகளின் விளைவுகளால் தோற்றம் பெறுபவையே! இதனால்தான் ஒரே வீட்டில் ஒரே விதமான உணவு, உஷ்ண நிலை இருந்தாலும் உடல் ஆரோக்கிய நிலை ஒரே மாதிரியாக இருப்பதில்லை உண்கின்ற உணவு ஒரே வகையாக இருந்தாலும் அவரவர் தேகத்தில் உள்ள கர்மவினைகளுக்கேற்ப ஜீரணமாகி ஜீவ சக்தியை வெவ்வேறாக உண்டாக்கும்.. விஞ்ஞான மருத்துவத்தில் ஒரு தம்ளர் பாலில் இவ்வளவு விட்டமின், புரோட்டீன் என்று வரையறுத்தாலும், அதே அளவிலா பால் சத்து அனைவரையும் சென்றடைகின்றது! அப்படியானால் ஒரு வீட்டில், நாட்டில் ஒரே மாதிரியான வியாதிகள்தானே தோன்ற வேண்டும்? எனவே விஞ்ஞானப் பகுப்பு என்பது மேம்போக்கான ஏதோ ஓரளவிற்குப் புரிந்து கொள்வதற்கான நூலறிவுதான்.. அதனால்தான் நூலறிவு நுண்ணியோனாக சிவபரம்பொருள் இலங்குகின்றான்...!

9. ஔஷத லோக பித்ருக்கள் உங்களுக்கு நோய் நிவாரண சக்திகளைத் தருவதுடன், சில நோய்களையும் தந்து காப்பாற்றுகின்றார்கள். அதெப்படி பித்ருக்கள் நோய்களைத் தந்து காப்பாற்ற முடியும்? வெளிநாட்டுப் பயணம் என்ற ஒன்று உங்கள் தலைவிதியாக எழுதப்படாத போது, இதனை உணராது நீங்கள் வெளிநாடு செல்வதற்காக முயன்றிட்டால் அந்தச் சமயத்தில் பேதியையோ, வயிற்றுவலியையோ தந்து பித்ருக்கள் தடுத்தி நிறுத்தி விடுவார்கள்.. இதே போன்று உங்களைப் பிறர் வசைபாடும் போது நீங்கள் வெளியில் பல காரியங்களில் ஈடுபட்டால் உங்களை ஏசுகின்றவர்களுடைய தீயசக்தியால் பல குற்றங்களைச் செய்தோ அல்லது ஆபத்துக்களிலோ சிக்கிடுவீர்கள்! இதிலிருந்து உங்களைக் காப்பாற்றவும், அதே சமயத்தில் அந்தத் தீவினைச் சக்திகளின் விளைவுகளுக்கு நீங்கள் ஆட்பட்டாக வேண்டும் என்ற விதிக்கு உட்பட்டு அதனைச் சிறு தலைவலியாக மாற்றி அனுபவிக்கச் செய்து கர்ம வினைகளைக் கழிக்கின்றார்கள்.. இவற்றை விஞ்ஞானம் ஏற்குமா?

10. நூலறிவு பொய்யா? நூலறிவு மாயையால் ‘நூலறிவு உணரா நுண்ணியோன்’ தென்பட்டான்! அனைத்தும் கர்மவினைப் பயன் என்றால் விஞ்ஞானத்தில் ஆயிரமாயிரமாக மருத்துவ ஆராய்ச்சி நூல்கள் வந்திருப்பவை யாவையுமே பொய்யா? நூலால் அறியும் அறிவு வேறு, நுண்ணிய அறிவால் அறிவது வேறு., அழிகின்ற இவ்வுடலால் பெறுகின்ற அழிகின்ற அறிவு வேறு., அழிகின்ற இவ்வுடலில் என்றும் அழியாத இறை ஞானத்தைக் காட்டும் அறிவு வேறு, மாயைகளுக்கான மாயா விளக்கங்களே நூல்கள்! மெய்ங்ஞானத்திற்கு நூல்கள் தேவையில்லை! நூலால் அறியப்படாததே மெய்ங்ஞானம்! மெய்ங்ஞான விஞ்ஞானிகளே மெய்ங்ஞான மருத்துவர்களே சித்தர்கள்! ஆறறிவிற்கும் கீழ் விஞ்ஞானமே மாயையால் உண்மை போல் தோன்றும்! ஆறறிவு காட்டும் மெய்ங்ஞான விஞ்ஞானமே நுண்ணிய இறைப் பகுத்தறிவாகும்! எனவே இன்றைய மனிதர்களில் முழுமையான ஆறறிவின்றி பலரும் ஒன்றரை, மூன்றே கால் என அரைகுறை அறிவோடு செயல்படுவதால்தான் மிருகத்தனமான காமவெறி, வன்முறைகள், பேராசைக் கர்மவினைகள் சமுதாயத்தில் பெருகி உள்ளன!

பாவைவிளக்கு லால்குடி

11. வெறும் கடவுள் நம்பிக்கை போதவே போதாது! அது விநாடிக்கு விநாடி விருத்தியாக வேண்டும் என்பதற்காகவே மாங்கல்யம், மெட்டி, விபூதி, குங்குமம், பூணூல் போன்றவற்றை நிரந்தரமாக தேகத்தில் அணிந்து உள்மனதிலும் ஆழ்நீரோடையாக மந்திர ஆற்று ஓட்டத்தை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்! இறை நம்பிக்கை ஒரு நிலை! இறையுணர்வுடன் மிளிர்தல் மற்றொரு நிலை! சற்குருவின் அருளுடன் இறைமையுடன் ஜ்வலித்தல் பிறிதொரு நிலை! அனைத்தும் இறைவன் செயலே, நம் கர்ம வினைகளுக்கு ஏற்பவே இன்ப துன்பங்கள் அமைகின்றன என்ற ஆழ்ந்த நம்பிக்கை ஏற்படும் வரையில் எல்லாமே இறைவனுடைய நாட்டியத்தால் ஏற்படுகின்ற ஆக்கக் காரியங்கள், நமக்கு வரும் நோய்கள் யாவுமே கர்ம வினைகளின் விளைவுகளே என்று நுண்ணிய இறைப் பகுத்தறிவால் உணரும் வரை மனிதனுக்கு லௌகீகமான நூலறிவும், மருத்துவ மனையும், மருந்துகளுமேதான் தேவைப்படும்.. இவற்றோடுதான் அவன் வாழ்ந்தாக வேண்டும்! எனவே இவற்றை ஒட்டியவாறு கலியுகத்தில் கர்ம பரிபாலனமும் அருளப்படுகின்றது!

12. காஞ்சீபுரம், வந்தவாசி ஆலய தேவ பல்லிகள், காஞ்சி ஸ்ரீதேவராஜப் பெருமாள் (ஸ்ரீவரதராஜர்) ஆலயத்தில் உள்ள தங்க, வெள்ளி பல்லிகளின் தரிசனம், ஸ்பரிசம்தனை அனைவரும் அடிக்கடி பெறுவது சிறந்ததாம்.. இதனால் மனதில் தீய எண்ணங்கள் அலை பாய்வது தணியும்..! வந்தவாசி சிவாலயத்தில் தரிசனம் தரும் பல்லியும் ஸ்வர்ணச் சுடரொளி யோக வகையைச் சார்ந்ததாம்! இந்த தேவபல்லி தரிசனத்திற்குப் பிறகு அவரை, தட்டைப் பயிறு, பட்டாணி, கொத்தவரங்காய் கூடிய உணவு வகைகளை அன்னதானமாக அளித்தலால் நீண்ட கால நோயால் வாடுவோர்க்கு நல்ல நிவர்த்தி கிட்டும்! நோய் தீர்க்கும் மருந்து உண்பதற்கான நாட்களான செவ்வாய், அஸ்வினி , ஆயில்யம், சதயம் நட்சத்திர நாட்களிலும் மற்றும் அமாவாசை அன்றும் இந்த பல்லியைத் தரிசித்து மேற்கண்ட வகையிலான அன்னதானத்தை நிறைவேற்றுவதும் கடுமையான நோய்களுக்கு நிவாரணத்தைத் தரும்!

13. பாவை விளக்கு என்று அழைக்கப்படுகின்ற திரிசடைப் பின்னல்கள் நிறைந்த வெண்கல, பித்தளை பாவை விளக்கு தேவதைகள் விளக்கைத் தாங்கிய பாவனையில் இன்றும் பல ஆலயங்களை அலங்கரிப்பதைக் காணலாம்., வழுக்கை உள்ளவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் இயன்ற அளவு பாவை விளக்குகள், எண்ணெய், திரிகளை ஆலயங்களுக்குத் தானமாக அளித்து வருவதுடன், ஏழைகளின் இல்லங்களிலும் தீபம் ஏற்றிடத் தேவையானவற்றையும் தானமாக அளித்துவர வேண்டும்! கோயில்களில் இவற்றை நன்கு தேய்த்துச் சுத்தம் செய்து தருகின்ற மகத்தான இறைப் பணிகளையும் அடிக்கடி மேற்கொள்ள வேண்டும்! தலைமுடிகள் அடர்த்தியாக இல்லாவிடினும் அல்லது ஒரு சிறிதே இருந்தாலும் தலை முடியால் பெறக் கூடிய ஆன்மீக சக்திகளை இவற்றின் மூலம் ஓரளவு பெற்றிடலாம்! தாழ்வு மனப்பான்மையும் அகலும்! இதனால் திருமணம் தடைபட்டிருந்தால் மேற்கண்ட தானமும் இறைப்பணியும் நல்வழியைத் தரும்.

14. கூந்தலூரில் குவியும் பலாபலன்கள்! :- தங்களுக்கு நியாயமான முறையில் வரவேண்டிய சொத்து, உயர் பதவியைப் பெற்றிடவும் வழுக்கை, இளநரை, மற்றும் குறைந்த முடியால் திருமணம் கை கூடாது இருப்போரும், மற்றும் தாழ்வு மனப்பான்மையால் அவதிப் படுவோரும் தக்க நிவர்த்திகளைப் பெற்றிட, கும்பகோணம் அருகே கூந்தலூரில் ஸ்ரீசூரிய பகவானுக்கு உரித்தான ஞாயிறு, கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நாட்களில் ஸ்ரீஜம்பகாரண்யேஸ்வர சுவாமிக்கும், ரோமச முனிவர்க்கும் செம்பருத்தித் தைலக் காப்பிட்டு வழிபட்டு ஏழைகளுக்கு எண்ணெய், சீயக்காய், சீப்புகளை தானமாக அளித்து வர நற்பலன்கள் கிட்டும்!

15. சௌன சாஸ்திரம் என்பது தலைமுடி பரிபாலனத்தைப் பற்றி நன்கு விளக்குகின்றது.. பரணி, கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், கேட்டை, மூலம், பூராடம், பூரட்டாதி போன்ற நட்சத்திர நாட்களிலும், செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும் உங்களுக்கு உரித்தான சந்திராஷ்டம நாட்களிலும், திதி சூன்ய நாட்களிலும் தலைமுடி வெட்டிக் கொள்தல், ஷேவ் செய்து கொள்தல் கூடவே கூடாது.. இந்த நியதி ஆலயப் பிரார்த்தனைகளுக்குக் கிடையாது! எப்போதும் முடி நேர்த்தியை நிறைவேற்றிடலாம்! எனவே திடீரென்று நினைத்துக் கொண்டு சலூனில் போய் தலைமுடியை வெட்டிக் கொள்வதோ அல்லது நினைத்த நேரத்தில் ஷேவ் செய்து கொள்வதோ தவறானது.. ஏனெனில் ஒவ்வொரு நாளிலும், நட்சத்திரக் கால்களுக்கு ஏற்ப ரோமாமிர்தச் சுரப்புகள் ஏற்படும்.. இவை முடியில் உள்ள கண்ணுக்குத் தெரியாத கிரணக் குழல்கள் மூலமாகப் பரவெளியில் உள்ள அமிர்த பீஜாட்சர மந்திரங்களைக் கிரகிக்கின்றன.. ரோமாமிர்தம் சுரக்கும் நாளில் தலைமுடி, மீசை, தாடி ரோமங்களை மழித்தால் இந்த ரோமாமிர்தச் சுரப்பு அடைபடும்.. தடைபடும்..!

16. நாம் பயனற்றதாக எண்ணும் கழிவு நீர், குப்பைகள், மலஜலம், சிறுநீர், அழுகிய பொருட்கள் போன்றவையாவும் பூமியில் சேர்ந்து ஏதேனும் ஒரு வகைப் பொருளாக மாறுகின்றனதானே? மேலும் இறைவனுடைய படைப்பில் எல்லாவற்றின் படைப்பிற்குமான காரண காரியங்களும், பயன்களும் உண்டு.. ஆனால் இந்த விஞ்ஞானமய உலகத்தில் அனைத்துப் பொருட்களின் படைப்புக் காரியங்கள் புலப்படாமையால் இதுதான் பயன்படும்.. இது விஷத் தன்மை உடையது.. இது தேவையில்லாதது என்று ஒதுக்கி விடுவதோடு சுயநலத்தால் தங்கம், பவளம் போன்றவற்றைப் பதுக்குவதோடு, ஒன்றன் பயனை மற்றொன்றோடு மாற்றிப் பயனபடுத்திக் குழப்பி அதனதன் பூலோக இருப்பையே (Stock)  தேவையற்ற முறையில் மாற்றி விடுகின்றோம்! இவ்வாறுதாம் காகிதம், தங்கம், விறகு, மூலிகைகள் போன்றவை மறைந்து வருகின்றன! எனவே அதனதன் பயன் அறிந்து உபயோகப்படுத்தாவிடில் உலகில் பிரச்னைகள் தாம் பெரும்!

17. ஒரு பிரளயம் முடிந்து சிருஷ்டி துவங்குமுன் இடையே உள்ள ஒரு சில நொடிகளுக்கு மகத்தான இறை அமைதி நிலவும்..இதற்கு பூஜ்ய ஹாரம் என்று பெயர்! மாத முதலாம் நாளான அசுவினி நட்சத்திரமும், மாத முடிவாம் ரேவதி நட்சத்திரமும், இணைகின்ற காலத்தின் ஒரு சில விநாடிகளுக்கு மட்டுமே இந்த பூஜ்ய ஹார சக்தியின் சில அம்சங்கள் தோன்றுகின்றன! இந்த பூஜ்ய ஹார நேரத்தை நன்கு அறிந்து பூஜை, அபிஷேக, ஆராதனைகள், தர்ப்பணங்கள் அளிப்பது சிறப்பானது..! இதே போன்று உத்தராயண, தட்சிணாயன மாற்ற் நாளிலும் ( ஆடி , தை முதல் தேதிகள்) ஓரிரு (வி)நாடித் துளிகள் அயன பூஜ்ய ஹார சக்திகளைக் கொண்டிருக்கின்றன! இவையாவும் சற்குருவை நாடி அறிய வேண்டிய ஸ்ரீகால பைரவ தேவதா பூஜா ரகசியங்களாகும்!

பௌர்ணமி நாள் : 1.9.2001 சனிக்கிழமை இரவு 12.48 மணி முதல் 2.9.2001 ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு 3.13 மணி (திங்கட்கிழமை அதிகாலை) வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பௌர்ணமி திதி அமைகிறது. கிரிவல நாள் : 2.9.2001 ஞாயிற்றுக் கிழமை
ஆவணி அவிட்டப் பூணூல் அணியும் நாள் : 1.9.2001 (விடியற்காலை)

நித்யகர்ம நிவாரணம்

1.9.2001 – மனப் போராட்டத்திற்கு மது நிம்மதியைத் தராது, மதுவிற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய முக்கியமான நாள்! இன்று மது அருந்தினால் மங்கள வாழ்வே ஒட்டு மொத்தமாக மறைந்து விடும்! பிறகு வாழ்வு அலங்கோலமாகிடும்!
2.9.2001 – வன தேவதைகள் அடர்ந்த காடுகளிலிருந்து வெளி வந்து வரம் அருளும் நாளிது. காட்டில் இருக்கின்ற தேவதைகளுக்கு உரித்தான பொங்கல் படையல் பிரார்த்தனையை நிறைவேற்றினால் குடும்பத்தில் நலம் பெருகும்.
3.9.2001 – 20 வயதிலிருந்து 30 வயதிற்குள் வடநாட்டில் இருக்கும் திருக்கயிலை சென்று மானசரோவர் நதியை வணங்கி கயிலாய பரிக்ரமாவை (பிரதட்சிணம், மலைசுற்று) முடித்து விடுதல் நலம். 60 வயதிற்குப் பிறகு போய் வருவது என்பது அவ்வளவு உகந்தது அல்ல.. ஆகவே எப்போதும், என்றும் திருஅண்ணாமலையை வலம் வருவதே மிகவும் உகந்தது ஆகும்.. இத்தகைய கிரிவல ஆரம்பத்திற்கு இன்று உகந்த நாள்.
4.9.2001 – பரப்ரம்ம நாக தாரா தேவியைப் பிள்ளையாருடன் சேர்த்து இன்று வணங்குவதால் கடினம் என்று சாதிக்க முடியாத காரியங்கள் இருந்தால் அவை எளிமையாக சித்தியாக வழி பிறக்கும்.
5.9.2001 – உளுந்து வடை செய்து குரங்களுக்குத் தானமாய் அளித்திடில் இன்று சந்திராஷ்டமத்தால் வருகின்ற துன்பத்தின் வேகம் தணியும் நாளிது..!
6.9.2001 – இன்று பப்பாளிப் பழத்தைக் குரங்கணி அம்மனுக்கு நைவேத்யமாய் வைத்துத் தானம் செய்திடில் கணவன் முன்னே நடிக்கும் பெண்களின் உண்மை நிலை வெளி வரும் நாளிது.
7.9.2001 – நாதஸ்வரம் வாசிக்கின்ற கலைஞர்கள், அக்குலத்தைச் சேர்ந்தோர்கள் இன்று திரிசடைக் கடவுளுக்காக உண்ணா நோன்பும் மௌன விரதமும் இருந்திடில் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் தீர வழியுண்டு.
8.9.2001 – நடிகைகள், நடிகர்கள் இன்று உண்ணா நோன்பிருந்து மௌன விரதத்தைக் கடைபிடித்திடில் உதவுகின்றேன் என்று சொல்லி வருகின்றவர்களிடமிருந்து உண்மையைத் தெரிந்து கொள்ளும் நாளிது.. உதவி செய்வாரா இல்லையா என்பதும் தெரிந்து விடும்.
9.9.2001 – பதவிகளைப் பறிக்கும் நாளிது.. அவரவர் தலைவர்களைச் சந்தித்து தலைவர்களின் மனநிலைக்கு ஏற்றபடி நடந்து கொள்ளவும்.
10.9.2001 – குடும்பக் காரியங்களுக்காக ஜவுளிக் கடைக்குச் செல்லும் பெண்களின் மன நிலையால் குழப்பம் உருவாகும் நாளிது. கவனம் தேவை!
11.9.2001 – பவளத்தில் பல வகைகள் உண்டு.. பொதுவாக தாலிப் பவளம், மணிப் பவளம் மட்டுமே மக்களுக்குத் தெரிந்தது, இதில் கிரகப் பவளங்கள் என்று உண்டு.. சந்திரப் பவளம், சனிப் பவளம், குரு பவளம், என்ற வகைகள் உண்டு.. இந்த கிரகப் பவளங்கள் இன்று மாசுபடும் நாளிது, இன்று பவளங்கள் சம்மந்தமான பொருட்களை வியாபாரிகளும் பொது மக்களும் விற்றலையும் வாங்குவதையும் தவிர்த்தல் நலம் தரும்.
12.9.2001 – இன்று கோழி மாமிசம் தவிர்த்தல் வேண்டும்.., பாசிப் பட்டை என்ற நோய் கோழியைத் தாக்கும் நாளிது.
13.9.2001 – பூனைக் குட்டிகளைச் செல்லப் பிராணிகளாய் வளர்ப்போர் இன்று கவனமாய் இருத்தல் நலம்.., பூனைகளுக்கு மனப் போராட்டம் நிறைய ஏற்படும் நாளிது.
14.9.2001 – இன்று கோயில் யானைகளுக்கு வயிறார உணவளித்திடில் கஞ்சன்குடி என்ற செல்வ தோஷத்தால் வருகின்ற வேதனைகளுக்கு ஓரளவு பரிகாரம் காணலாம்.
15.9.2001 – இன்று மரபணுக்களால் கருத்தரிக்கப்படும் குழந்தைகள் நிர்ணயிக்கப்பட முடியாத குணாதிசயங்களுடன் பிறக்கும்.. அதனால் உலகத்திற்கு பலவிதமான துன்பங்கள் ஏற்படலாம்.
16.9.2001 – நன்றாக கறவை உள்ள, கொம்பு பாதிக்கப்படாத கருப்பு எருமைகளுக்கு நல்லெண்ணெய் உடல் பூராவும் தடவி நன்கு சீவி குங்குமம் இட்டு, சந்தனம் இட்டு விழுந்து வணங்கி, தேங்காய் நார் கொண்டு தேய்த்து, அரைத்த சீயக்காய்த் தூள் குழைத்துத் தடவி நீராட்டி எண்ணெய் ஸ்நானம் செய்வித்தல் மகா விசேஷம், டாக்சி, ஓட்டுநர்கள், டாக்சி உரிமையாளர்கள், ஆட்டோ உரிமையாளர்கள் தவறி விழும் ஆபத்திலிருந்து தப்பிக்கலாம்.!
17.9.2001 – அடி வயிறு சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு இன்று லங்கோடு (கோவணம்) தானம் மகா விசேஷம்.
18.9.2001 – சமையல் எரிவாயு (gas) கம்பெனிகளில் வேலை செய்கின்றவர்கள் சிலிண்டர்களை மாற்றுவதிலும், தூக்குவதிலும், வைப்பதிலும் கவனம் தேவை.
19.9.2001 – காய்கறி வியாபாரிகள் சரியான செய்தித் தொடர்பு இல்லாததால் காய்கறி விலை ஏற்ற இறக்கத்தில் பலவிதமான குழப்பங்கள் ஏற்படுகின்ற நாளிது..
20.9.2001 – தன லாப கணபதிக்குப் பன்னீரால் அபிஷேகம் செய்து மிளகு போண்டா அன்னதானம் செய்திடில் டாக்டர்கள் சிறப்படைவர்,,!
21.9.2001 – மண்பாடி வண்டி ஓட்டுவோருக்கும், குத்தகைக்கு ஆற்று மணல் எடுத்து விற்போருக்கும் இன்று வாய்ச் சண்டையால் துன்பம் வரும் நாளிது.
22.9.2001 – தேங்காய் பறிப்போர், தேங்காய் தோப்பில் வியாபாரம் செய்பவர் குத்தகைகள் சம்மந்தமாக பிரச்னைகள் உருவாகும் நாளிது.., கவனம் தேவை
23.9.2001 – தாய், தந்தையின் கட்டாயத்தாலும் மாமனார், மாமியாரின் கட்டாயத்தாலும் மனைவியையோ கணவனையோ பிரிந்திருப்பவர்கள் இன்று ஒன்று கூடுவதற்கு உகந்த நாளிது.. பிரிந்த கணவன் மனைவியர் சிறுசிறு பூசல்களை மறந்து ஒன்றாய்ச் சேரும் நாளிது.
24.9.2001- மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மலை உச்சியில் அமர்ந்திருக்கும் பிள்ளையாரை தரிசனம் செய்யும் முன் கிரிவலம் வந்து மலை மீது இருக்கும் பிள்ளையாரை தரிசனம் செய்து கருணைக் கிழங்கு கலந்த சாதம் அன்னதானம் செய்திடில் காரியத் தடங்கல்கள் விலகும்.
25.9.2001 – குதிரை வைத்திருப்பவர்கள் குதிரையின் பிடரி மயிரை நன்றாக வாரி, எண்ணெய் தடவி அதோடு சிறிது நேரம் அன்பாக அளவளாவி தன்னுடைய வாழ்க்கைச் சங்கதிகளையும் தன்னுடைய பிரச்னைகளையும் சொல்லி நன்றாகத் தட்டிக் கொடுத்து, தன்னுடைய குடும்ப விஷயங்களை ஒரு நண்பனிடம் பரிமாறிக் கொள்வது போல் சொல்லி அளவளாவி ஆறுதலாகப் பேசுவதால் நரம்பு சம்பந்தமாக வருகின்ற நோய்களுக்கு விடிவு பிறக்கும்..
26.9.2001 – சட்டம் ஒழுங்கு பராமரிப்போர்களிடையே மனஸ்தாபங்களும் சண்டைகளும் உருவாகும் நாளிது.
27.9.2001 - வண்டியில் இனிப்புப் பொருட்கள் விற்போர், ஐஸ்க்ரீம் விற்போர் இன்று பண சம்பந்தமான பிரச்னைகளைச் சந்திக்கும் நாளிது.. கவனம் தேவை.
28.9.2001 – 21 கண்களுக்கு குறையாமல் இருக்கும் பாம்புப் புற்றிற்கு மஞ்சள், குங்குமம், புஷ்பம் சார்த்தி சுத்தமான தேங்காய் ஓட்டில் பால் வார்த்து வைத்து வணங்கி வந்திடில் திருட்டுப் பட்டம் கட்டப்படாமல் சுகமாய் வாழலாம்.
29.9.2001 – கைத்தறித் துணி வியாபாரிகள் இன்று தனியார் விற்பனையாளர்களிடம் ஏமாந்து போகாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
30.9.2001 – பிறந்த நாளிலிருந்து இன்று வரை லௌகீக இன்பத்தைப் பார்க்காமல் லௌகீகத் துன்பத்தையே பார்த்துக் கொண்டிருப்பவர்கள் வெள்ளியங்கிரி ஈசனைப் பார்ப்பதற்கு நேர்த்தி வைத்து மலையேறிச் சென்று சுவாமியை தரிசித்துத் திரும்பி வந்திடில் வாழ்வில் மாற்றம் தெரியும்..!

ஆஸ்ரமப் பொருட்கள்

1. அலுவலகப் பணிகள், நிதி சம்பந்தமான முறையான நற்காரியங்கள், திட்டமிட்ட நற்பணிகளில், அவரவர் நட்சத்திர, ராசி சஞ்சார நிலைகள், அவரவர் உடல் வாகுகள், தேக உஷ்ண அம்சங்களுக்கும் ஏற்பவும், சூரிய, சந்திர, சுழுமுனை சுவாச முறைகள், வாத , பித்த, சிலேத்தும நாடிகளையும் முறைப்படுத்தி காரிய சித்திகள் பெற துளசி மணிகளால் ஆன வலது கை மணிக்கட்டில் கட்டக் கூடிய ‘ம்ருதுள மணி கங்கண்’

2. அக இருள் போக்கும் சிவாநீ மஞ்சள்! ஜீவனைச் சிவனாக்கும் சம்பு ஜீவநாதி சாம்பிராணி தூபம்! திருஅண்ணாமலை ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தின் சார்பாக வெளியிடப்படும் ஸ்ரீஅகஸ்திய விஜயம் மாத இதழ், ஸ்ரீபிரதோஷ மகிமை, ஸ்ரீஐயப்பன் மகிமை, ஸ்ரீஆயுர்தேவி மகிமை, சுபமங்கள தீப மகிமை, ஸ்ரீசரபேஸ்வரர் மகிமை போன்ற பல தெய்வீக நூல்கள், திருஷ்டி தோஷ நிவாரண கண்டி தீபம், நவாவர்ண ஊஞ்சல், ஷோடச நித்யா துளசி மாடம் மற்றும் ஸ்ரீஷோடச கணபதி, ஸ்ரீவாஸ்து சக்ரம், ஸ்ரீஹேரம்ப கணபதி போன்ற தெய்வத் திருஉருவப் படங்களையும் அன்பர்களுக்குப் பெற்றுத் தருவதற்காக மேற்கண்ட விலாசத்தில் மேலும் பூஜைக்கான யந்திரம்/சக்கரம், பிள்ளையார் துண்டு, அமுத தாரைகள் நிறைந்த 2001க்கான ஆன்மீகக் காலண்டர், அற்புத சக்திகள் நிறைந்த தெய்வீக சக்திகளை ஈர்த்தளித்து , காரிய சித்திகளைக் கனிய வைத்திடும் காணுதற்கரிய அபூர்வச் சங்குகள், வெற்றி மேல் வெற்றி தரும் ஸ்ரீஅகஸ்தியர் திருநீறு, மங்களம் தரும் ஸ்ரீஅபயாம்பிகை குங்குமம், பலவித தோஷங்களை நீக்கும் இறை மணம் கமழும் சம்பு ஜீவநாதி சாம்பிராணி, எங்கும் தங்கும் மங்களம் தரும் சிவாநீ மஞ்சள், மூலிகா பந்தன நறுமணம் நிறையும் ஜெய் அகஸ்தியா, விஜய் ஸ்ரீபரத்வாஜர், ஆத்ரேயா, விஜய் அத்ரி, சிவாநீ  ஊதுபத்திகள், அம்பாள் வஸ்திரங்கள், வீட்டில் விளக்கேற்றவும் ஹோமம் வளர்ப்பதற்கும் தேவையான நந்தினி க்ஷீரக்ருதம் (பசு நெய்), ஹோமத்திற்கான சமித்து வகைகள், மூலிகை ஜூஸ் உத்தரிணி மரத்தாம்பாளம், திதி தீப எண்ணெய், ருத்ராட்சம், பூஜை, தர்ப்பணம், அபிஷேகம், மற்றும் நீர் அருந்திட மிண்டு ரங்க (மூங்கில்) குவளைகள் போன்ற பல தெய்வீகப் பொருட்களையும் பெற்றுத் தருகின்றோம். அனைத்தும் இறையருளால் சற்குருவின் கருணையுடன் கைகூடப் பிரார்த்திக்கின்றோம்.. வந்து பாருங்கள்! ஆன்மீக மணப் பொழிவில் திளையுங்கள்! இல்லறத்தில் இறையறத்தைக் கூட்டுங்கள்!

3. தனக் கூட்டு சங்கமத் தட்டு என்பது புனிதமான உத்தரிணி விருட்சத்தில் செய்யப்படுகின்ற மரத் தாம்பாளத்தைத் தர்ப்பணம், பூஜை, அபிஷேகத்திற்குப் பயன்படுத்திடலாம். திருமண, வரவேற்பு, உபநயனம் போன்றவற்றிற்கான ஸ்ரீஷா ஈஷா தாம்பூலப் பைகள், பித்ரு தர்ப்பணச் சக்திகள் நிறைந்த பசு மடிக் காம்புச் சங்கு, கடுமையான நோய்கள் நிவர்த்திக்கான வடக்கு முள்ளீஸ்வரர் சங்கு, நாகதோஷம் நீக்கும் பூநாகப் புறவளர் குங்குமச் சிமிழ், பிரயாணத்தில் தற்காத்துக் கொள்ள உதவும் கடக்காட்டுக் குங்குமச் சிமிழ்! பஞ்சபூத பிராணாயாம ஊது குழல் சங்கு!

4. நுரையீரல் சம்பந்தமான பிணிகளைத் தணிக்கும் மூலிகைச் சாறு கூடிய ஹிமான்ஷு க்ருதம் என்னும் மாம்பழ ஜூஸ், வயிற்றுச் சூடு, வயிற்று வலியைத் தீர்த்து குடல் சுத்தி, மல சுத்தி தரும் மூலிகைச் சாறு கூடிய ஷகிலா பரம் திராட்சை ஜூஸ்

5. திருஅண்ணாமலை ஸ்ரீயக்ஞோபவீதேஸ்வர லிங்க தரிசனத்தில் பூஜிக்கப்பட்டதும், கும்பகோணம் ஸ்ரீயக்ஞோபவீதேஸ்வரர் ஆலயத்தில் சுவாமிக்குச் சார்த்தப்பட்டு ஸ்ரீகாயத்ரீ மந்திர ஹோமங்களில் வைக்கப்பட்டதுமான புனிதமான பூணூல் ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயங்களில் கிடைக்கும்! ஆலயங்களுக்கு பூணூல் அளிப்பது மகத்தான புண்ய காரியமாகும்..!

நீங்கள் அளிக்கும் தொகை அனைத்தும் ஆஸ்ரமத்தின் பௌர்ணமி அன்னதானம் போன்ற சமுதாய இறைப்பணிகளுக்காகவே அர்ப்பணிக்கப்படுகின்றன.! எனவே இதனைச் செலவென்று கருதாதீர்கள்!

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam