அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய பருவ குருகுலவாச அனுபூதிகள்

சித்புருஷர்கள் என்றால் ஜடாமுடியராய் யோகத்தில் திளைக்கும் வஜ்ரம் போலான உடலைக் கொண்டவர்களாய், உடலெங்கும் விபூதி தரித்தவர்களாய்த் திளைப்பார்கள் என்றுதானே எண்ணி வந்துள்ளீர்கள்! நம் சிவ குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்பஈச சித்த சுவாமிகளிடம் ஆரம்பப் பள்ளிப் பருவத்திலேயே குருகுலவாசம் பூணும் பேறு பெற்ற அச்சிறுவனும் உங்களைப் போலவே எண்ணினான். ஆனால் சற்குரு ஊட்டிய ஆன்மீகப் பாடங்கள், தெய்வீக அனுபவங்கள், குருகுலவாச அனுபூதிகள் மூலமாகத்தான் வேஷ்டி, சட்டை என எந்த ஆடைகளை அணிந்தும், எந்த ரூபத்திலும் சித்புருஷர்கள் தோன்றுவார்கள் என்பதைச் சிறுவன் உணர்ந்தான். வெளிநாடுகளில் மெக்ஸிகோவின் அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும் செவ்விந்தியப் பழங்குடி மக்களிடையேயும், சாந்தம் பொழியும் உயர்ந்த ஆல்ப்ஸ் சிகரங்களிலும் பெரியவராகிய சற்குரு இடியாப்ப ஈச சித்த சுவாமிகள், விதவிதமான கோலங்களிலும், கோட், டை, சூட்டுடன் மேல்நாட்டுபாணி உடைகளுடன், எத்தனையோ அரிய சித்தர்களுடைய தரிசனங்களைச் சிறுவனுக்குப் பெற்றுத் தந்திருக்கின்றார். எனவே சித்தர்கள் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் காணக் கிடைக்கின்றார்கள். இவ்வாறாக அரிய இறை தரிசனங்கள், பெரியோர்கள், யோகியரின் ஆசிகள், அதியற்புத விருட்ச, தீர்த்த தரிசனங்களைக் குரு கடாட்சத்தால் சிறுவன் பெற்று இன்று நம்மிடையே குருமங்கள கந்தர்வா எனப் போற்றப்படும் ஸ்ரீவெங்கடராமனாய் சாதாரண மனிதர் போல் இல்லற வாழ்க்கை கொண்டு இனிதே இறைவழிகாட்டி வருகின்றார். கலியுகத்தில் பெறுதற்கரிய குருகுல வாசத்தைப் பெற்ற அச்சிறுவனின் குருகுலவாச அனுபூதிகளே இத்தொடரில் குருசிஷ்ய சம்பாஷணைகளாக, அமிர்தமய அனுபூதிகளாகத் துலங்குகின்றன...

அன்பின் வழியில்
நடப்பவர் ராமரே !

“இந்தாடா, இந்தச் சொம்பை நல்ல வெலைக்கு வித்துட்டுக் காசைக் கொண்டு வா, போ!“ பெரியவர் தந்த அந்தச் செம்பைப் பார்த்துச் சிறுவன் முகத்தைச் சுழித்தான் எத்தனை நெளிசல், வளைசல்கள், சொட்டைகள்! உள்ளே தண்ணீரை ஊற்றினால் அடுத்த நிமிடம் கீழ் இறங்கி விடும். ஏன்தான் பிடிவாதமாய் எங்கிருந்தோ இந்த ஓட்டைச் செம்பைப் பிடித்து வந்து இப்போது விற்றுக் கொடு என்று நம்மைப் பாடாய்ப் படுத்துகிறாரோ! சரி போனால் போகிறது என்று முப்பது நாற்பதோ (அக்காலத்து ரூபாய் மதிப்பு) என்று விற்றுப் பணத்தை கொண்டு வந்தாலும் முந்நூறு, நானூறுக்குப் போகுமே, வெறும் முப்பதுதானா என்று உலுக்கி எடுத்து நையப் புடைத்து விரட்டி விடுவாரே....! ஏதேதோ எண்ணச் சுழல்களில் சிக்கிய சிறுவனைப் பெரியவரின் சிம்ம கர்ஜனை உலுக்கி விட்டது.

“இதப் பாருடா, இது ஒண்ணும் பல் தேய்க்கிற தண்ணிச் சொம்பு கெடையாதுடா, முந்நூறு, நானூறு வருஷமா... ஏன், எத்தனையோ யுக யுகமாக பூஜை செஞ்ச சொம்புடா! இது மட்டும் இன்னைக்கு தேவலோகத்துல இருந்துச்சுன்னா இந்திரன், சந்திரன்னு எல்லாரும் இதுக்கு அடிச்சு புடிச்சுகிட்டு ஓடி வருவாங்கடா, என்ன செய்யறது, இது கலியுகம்! குருவே பக்கத்துல வந்து நின்னு நல்லது சொன்னாக் கூட ரேஷன் கார்டு எடு, ஐடன்டிடி கார்டு கொடுன்னு கேப்பாங்கடா”, பெரியவர் கண்ணைச் சிமிட்டினார்!

சிறுவன் செம்பை எடுத்துக்கொண்டு அரைகுறை மனதுடன் புறப்பட்டான். எத்தனையோ பாத்திரக் கடைகளில் ஏறி இறங்கியதுதான் மிச்சம், எவருமே பெரியவர் எதிர்பார்த்த தொகைக்கு வரவில்லை! நெளிசல் வளைசல்களைத் தட்டி விற்கலாம் என்றால் அதற்கென்று தனிக் கூலி வேறு! மேலும் ஒரு நாளேனும் இதற்கு ஆகும். இதில் நடு நடுவே சிறுவனுக்கு சந்தேகம் வேறு வந்துவிட்டது என்னவோ அது? “ஆமாம், எல்லாமே காரண காரியத்தோட நடக்கும்னு சொல்வாரே, இந்தச் செம்பில் அப்படி என்னதான் தெய்வீகம் இருக்கிறது? ஆமாம், இத்தனை நாள் அவரிடம் இந்தச் செம்பு இல்லையே! இன்று திடீரென்று எப்படி வந்தது? ஒரு வேளை பொதியமலையில் ஸ்ரீஅகஸ்தியரை தரிசித்த போது அங்கு கிடைத்திருக்குமோ? அப்படியானால் அதைப் பத்திரமாக வைத்திருப்பாரே, விற்கமாட்டாரே...!”

சிறுவனுக்கு ஒரே குழப்ஸ்!!!

அதற்குள் மாலை வேளையும் வந்துவிட்டது, சிறுவனால் செம்பைப் பற்றி ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. நேரே கந்த கோட்டத்திற்குப் போய் அங்குள்ள தீர்த்தத்தில் செம்பைப் புளி போட்டுத் தேய்த்தான். பளிச்சென்று ஆன உடன் அதற்கு சந்தனம், விபூதி, குங்குமம் இட்டு, கழுத்தில் கயிறு கட்டிக் கொண்டு சில கோயில்களுக்குச் சென்று பெரியவர் சொல்லிக் கொடுத்த இறைப் பாடல்களையும் அரிய பல இறை விஷயங்களையும் கணீரென்று எடுத்துச் சொல்லலானான். இப்படி ஆரம்பித்ததுதான் சிறுவனின் சித்தோபநிஷத் உபந்யாச ப்ரவேசம்! பாடகச்சேரி ஸ்ரீராமலிங்க சுவாமிகள் இப்படிக் கழுத்தில் செம்பைக் கட்டிப் பொருள் சேர்த்து மிகவும் பிரம்மாண்டமான கும்பகோணம் நாகேஸ்வரர் ஆலயக் கும்பாபிஷேகத்தை நிறைவு செய்த அற்புதச் செயலைக் கண் முன்னால் ஆனந்தத்துடன் நினைத்துப் பார்த்தான் சிறுவன். சிறுவனுடைய ஆவேசமான சித்தோபநிஷத் விஷயங்களைக் கேட்ட பக்தர்களும் .. “இந்தச் சிறுவயதில் இவ்வளவு தெய்வீகம் ததும்புகின்றதா!” என்று எண்ணி வியந்து அவன் கழுத்தில் கட்டிக்கிடந்த செம்பை நிரப்பி விட்டார்கள்! செம்பு நிரம்பியதுதான் தாமதம், அடுத்த வினாடி ஓட்டமும் நடையுமாக அங்காளி கோயிலுக்குப் பறந்தான் சிறுவன். அவனுடைய குருகுல வாசமே ஓட்டமும் நடையுமாய், வியர்வையும் களைப்புமாய், பட்டினியும் பரவசமுமாய்த்தானே அமைந்தது!

ராயபுரம் அங்காளி கோயிலை நெருங்க நெருங்கச் சிறுவனுக்குக் கிலி பிடித்துக் கொண்டது. ஆமாம் மேலே இன்னமும் ஒன்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! ....ஓட்டமும் நடையுமாய், வியர்வையும், களைப்புமாய், கிலியும் பயமுமாய், எப்போது என்ன சொல்வாரோ ஏது செய்வாரோ, என்ன தண்டனை கொடுப்பாரோ.. என்ற வகையில் தானே சிறுவனுடைய குருகுலவாசம் க(னி)மழ்ந்தது!
“ ... ஆமாம், சொம்பை விற்கச் சொன்னா, நாமோ ஏதோ செய்து கொண்டு வந்து விட்டோமே..!”

“வாங்க துரை! ஐயா பெரிய அளவுல ஆன்மீகப் பிரசாரம் செய்ய ஆரம்பிச்சுட்டாரு போலிருக்கு! வெரி குட்... செய், செய்!! இதத் தாண்டா உங்கிட்ட ரொம்ப வருஷமா எதிர்பார்க்கிறேன்!“ என்று அன்று பெரியவர் கோயில்களில் அவன் பேசிய வாசகங்களை அதே intonationல் அதே modulationல் அவனுடைய பாணியிலேயே அவர் பேசிக் காண்பித்திடச் சிறுவனுக்கே சிரிப்புத் தாளவில்லை! அதுவும் அவனைப் போலவே அவர் மூக்கு உறிஞ்சிய தோரணையும் தத்ரூபமாக அமைந்ததைக் கண்டு சிறுவன் வெட்கத்தால் சிவந்தான்! பெரியவர் அவனுடைய இறைப் பிரச்சாரப் பணியைப் பற்றிப் புகழப் புகழச் சிறுவனுக்கு அடிவயிறு பற்றிக் கொண்டது. ஏனென்றால் ஆன்மீகத்தில், இந்த பெறுதற்கரிய குருகுல வாசத்தில் பலவகையான புயலுக்கு முன்னான அமைதிகளைச் சந்தித்தவனாயிற்றே! அவனுடைய இந்த எண்ணத்தையும் பெரியவர் receive பண்ணமாட்டாரா என்ன? அதெல்லாம் ஒண்ணும் இல்லைடா, ராஜா! ... ரொம்பப் போட்டு மனசக் கொழப்பிக்காதே! ... உனக்கு அகங்காரம் (ego) வரக் கூடாதுங்கறதுக்காக anti-virus software மாதிரி நாங்க அப்பப்ப செக் பண்ணுவோம்டா! அது உனக்குக் கொஞ்சம் புயல் மாதிரித்தான் இருக்கும்!”

Anti-virus-ஆ சிறுவன் விழித்தான்! அவனுக்குப் புரியாத வார்த்தை ஆயிற்றே!  (அக்காலத்தில் கம்ப்யூட்டர் கிடையாதே!) பிறகுதான் பெரியவர் விலா வாரியாக விவரித்து பிற்காலத்தில் கம்ப்யூட்டர் என்ற கருவி உலக விஞ்ஞானத்தை ஆளப் போவதையும் அதில் Total Negative forcesன் ஒட்டு மொத்த உருவமாக வைரஸ் என்ற வகையில் பூலோகத்தில் தீவினை சக்திகள் பெருகப் போவதையும் பிற லோகங்களிலிருந்து எதிர் வினைச் சக்திகள் Internet வைரஸ் மூலமாக உலகத்திற்குப் பெரும் துன்பங்களை ஏற்படுத்தப் போவதையும் அப்போதுதான் (பல ஆண்டுகளுக்குப் பின் நிகழ இருப்பதை தீர்க தரிசனமாக) உணர்த்துகிறார்...! சிறுவனால் அப்போது அதனைப் புரிந்து கொள்ளவும் முடியவில்லை! ஆனால் சிறுவயதில் பெறுதற்கரிய குருகுலவாசம் பூண்டு இன்று குருமங்கள கந்தர்வா, ஸ்ரீவெங்கடராமனாய் ஆன்மீகத்தில் மலர்ந்து சற்குரு காட்டுகின்ற வழிகளில் இறைப்பணிகளை ஆற்றுகின்ற இந்த நவீன கலியுகத்தில் தான் உலகத்தில் வைரஸ் படுத்துகின்ற பாட்டை நாமும்தான் அறிகின்றோமே!

“சரி சரி, சொம்புக் காசை எண்ணு பாக்கலாம்..’ ஆஹா நாம் செய்ததற்கு வாத்தியாரின் ratification கிடைத்து விட்டது!” என்று குதூகலம் கொண்ட சிறுவன் செம்புக் காசை எடுத்து எண்ணி வைத்திட, ‘240 ரூபாய் 45 பைசாவா ...?‘ என்று பெரியவர் வானத்தைப் பார்த்துக் கொண்டு கேட்டிட, நீங்கள் எதிர்பார்ப்பது போல் சிறுவனுக்கு ஆச்சரியம் ஒன்றும் வரவில்லை, மாறாகக் கோபமும் எரிச்சலும் தான் வந்தது!

‘என்ன வாத்யாரே! மாங்கு மாங்குனு இவ்வளவு நேரம் எண்ணினேனே? உனக்குத்தான் சொம்புக்குள்ள எவ்வளவு காசு இருக்குன்னு தெரியுமில்ல? பின்ன எதுக்கு என் டயத்தையும் வேஸ்ட், பண்ணி, உன்னையும் காக்க வச்சு... எதுக்கு இந்த வேலையெல்லாம்? இதுல எவ்வளவு காசு இருந்தா.. என்ன, இல்லாட்டினா என்ன? இங்க நீ சொல்றதுதானே சட்டம், வெச்சதுதானே சட்டம்?” சிறுவன் சராமாரியாய்ப் பொழிந்து தள்ளி விட்டான்! Rather கடல் மடை திறந்த மடைத்தனமோ! இதற்காக எத்தனை நாள், எத்தனை யுகமாய்ச் சேர்த்து வைத்திருந்தானோ தெரியவில்லையே! தான் அண்டியிருப்பது இருப்பது இந்த பிரபஞ்சத்தின் அருட்பெரும் சித்புருஷர்களுள் ஒருவர் என்பதை அவன் உணர்ந்தானில்லை! இல்லை.. இல்லை... அவர் எங்கே இவனை உணர விட்டார்? மாயையால் மறைத்து விட்டாரே! பெரியவர் சிறுவனை அரவணைத்துக் கொண்டார்.

 “அப்படி இல்லைடா.... இந்த மாதிரி தெரிஞ்சும் தெரியாம இருக்கறதுக்கு நெறைய காரணமிருக்கு! இதுக்குப் பின்னாடி பெரிய தெய்வீக ரகசியமும் இருக்குடா! உனக்குப் புரியற மாதிரி சிம்பிளாச் சொல்றேனே...! உனக்குப் பசிக்குதுன்னு வெச்சுக்கோ, வானத்தைப் பாத்து உன்னோட பித்ருக்கள வேண்டிக்கிட்டு உனக்கு நாலு பரோட்டா வாங்கித் தந்துடலாம். ஆனா இங்க இருக்கிற ஓட்டல் கடைக்காரன் நாலு பரோட்டாவோ, இட்லியோ, காப்பியோ வித்தாத்தானே அவன் பொழப்பு நடக்கும்? அப்படி மாயாஜாலமா உனக்கு வாங்கிக் கொடுத்தாலும் அதோட value உனக்குப் புரியாதுடா! உழைக்காம திண்ணு பழகிட்டா அதயே நீயும் தெனமும் எதிர்பார்ப்பியே, என்ன செய்யறது? இப்படி ஓஸில சோறு வந்துச்சுன்னா உலகத்துல எல்லாருமே சோத்துப் பட்டாளமா வெறும் திண்ணைத் தூங்கிச் சோம்பேறியா ஆயிடுவாங்க!”

“திருஅண்ணாமலைக்கு உன்னோட நடந்து வரப்போ வழில இந்த தோசை இவன் வயித்துக்குள்ள போகணும், இது எச்சில் வடை மிச்சமா நாய்க்கு, கோழிக்கு, எறும்புக்குப் போகணும்(னு)னா அது..அது அதுதலையில எழுதியிருக்கும்.. அதெயெல்லாம் படிச்சுத்தான் அதுபடியே நாங்க நடப்போம்! திருஅண்ணாமலைக்கு நாம்ப நடந்து போறப்போ அச்சிறுப்பாக்கம் ஓட்டல்ல இருக்கிற வடையிலதான் உன் பேரு எழுதியிருக்கும், அதைத்தான் அப்ப நீ தின்னு ஆகணும்னு உன் தலைல எழுதி இருக்கறப்போ அதை நீ திங்கறவரைக்கும் உன்னைப் பட்டினி போட்டுடுவேன்! வேற எதயும் வழில வாங்கித் தர மாட்டேன்! நீயோ இந்தக் கெழவன் இப்படி நம்மள பட்டினி போடறானேன்னு நெனப்ப, நெனக்கவும் நெனச்சும் இருக்கியே! இதைத்தான் கபாலத்துல எழுதியிருக்குற தலையெழுத்துன்னு சொல்லுவாங்க, அதைச் சில பேர்னாலதான் படிக்க முடியும்.. படிக்கறவங்களும் பிரம்மாவே கையெழுத்துப் போட்டதுனால அதை டிவைன் ஆர்டராக கண்டிப்பா நடத்தியாகணும்! அத மாத்தி விதில குறுக்க புகுந்தா ஒரே களேபரம் ஆயிடும்!”

“அது அது விதிப்படி நடக்கறத்துக்கு ஒரு இறைக் கருவியா நம்ம இருக்கணும்னு பாடுபடணும்.. ஆனா இதுல நெறைய தெய்வீக ரகசியங்கள் இருக்கு, இதுக்கு மேல சொல்லக் கூடாதுன்னு மேலேந்து divine command வருதுடா! ஏன்னா இந்த விஞ்ஞான உலகம் எந்த நல்ல விஷயத்தையுமே மொதல்ல தப்பாத்தாண்டா எடுத்துக்கும்... இல்லாட்டி எல்லாத்துக்கும் proof கொண்டான்னு கேட்கும்! இப்ப உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேன்..”

“இந்த அங்காளி கோயில் குளத்தை எடுத்துக்க ..(பல ஆண்டுகளுக்கு முன் அப்போது இதில் நீர் நிறைந்திருந்தது). இதுல மீன் நெறைய இருக்கு. இதோ இந்தத் தூண் பக்கத்துல நின்னுகிட்டு பேந்தப் பேந்தத் திருட்டுத் தனமாய் முழிச்சிக்கிட்டு நிக்குதே இந்த கருப்புப் பூனை... இதுக்கு இப்ப வயிறு பசிக்குது, ரெண்டு நாளாய்த் தீனி சரியாய்க் கெடைக்கலை! இதத் தெரிஞ்சுக்கிட்டு நாங்க என்ன செய்யணும், என்ன செய்ய முடியும்...? சொல்லு பார்க்கலாம்? ”

“பெரியவரே! சொம்பு நெறய காசு வெச்சுருக்கியே., ஒரு டம்ளர் பால் வாங்கிக் குடுத்தா என்ன கொறஞ்சா போயிடுவேன்னு இப்ப பூனை என்னைக் கேக்குது! இப்ப உனக்கு பூனை பாஷை தெரிஞ்சு இத கேட்டுருந்தா.. என்ன பண்ணுவ?”

“ போனாப் போகுது, வாத்யாரே! சொம்புக் காசுலேந்து ஒரு ஒழக்கு பால் வாங்கி பூனைக்கு ஊத்திடுவேன் , வாத்தியாரே!” சிறுவன் பரமானந்தமாய் பதிலளித்தான்!

ஆனால்....... டொக் ... வெளியில் ஒரு பாறாங்கல் விழுந்தது போல் சத்தம்! என்ன அது? ஒன்றுமில்லை, பெரியவர்தான் சிறுவனுடைய தலையில் நன்கு குட்டினார். பண விஷயமென்றாலே பெரியவர் ரொம்ப ரொம்ப உஷாராகவே இருப்பாரே!

“பணத்துல ரொம்ப ஜாக்ரதையா இருக்கனும்டா..! இல்லையனா போச்சுடா! ஏன்னா பணத்துல ரொம்ப ஈஸியா கர்ம வினை சேந்துரும்டா கண்ணு! அதுவும் ஒழுங்கா வராத பணம், லஞ்சம் லாவண்யப் பணம்னா சந்ததியையே நாசம் பண்ணிடும்! அதுவும் கோயில் சொத்துல வெளயாண்டா குலநாசம் தான்! சந்தேகமே இல்லை!  பூனைக்கு பால் ஊத்தறது தர்மம்தான்... இல்லைன்னு சொல்லலை! ஆனா இந்தச் சொம்பு குபேர லோகத்துச் சொம்புடா! அதனாலதான் தெய்வ சக்தி உன்னை இதை விக்க விடலை! இத வச்சு நல்ல காரியமும் பண்ணிட்டு வந்துருக்கே! காரணம் இந்த சொம்புக்குள்ள பித்ரு சக்தி நெறஞ்சிருக்கு! அதனால இந்த சொம்புக் காசு மகாலட்சுமிக்குச் சொந்தம்டா! நீ பாட்டுக்கு என்ன ஏதுன்னு தெரியாம இந்த மாதிரி பூனைக்குப் பால் ஊத்தினா இப்படி புதுசா சேர்ற கர்மக் கணக்கை எவன் தீர்க்கறது? இப்படி கொஞ்சம் சித்தி வந்தாலேயே ஏடாகூடமா ஏதாச்சும் பண்ணிடுவே! அதனாலத்தான் உனக்கு பூனை மொழி, புறா பாஷை, எறும்பு பாஷை எதுவுமே நான் சொல்லித்தரலை...” தலையில் குட்டு வாங்கிய வலி போகவில்லை என்றாலும் சிறுவன் கேள்வி கேட்பதைவிடவில்லை...

 “பூனையோட பசிக்கு நீ என்ன செய்யப் போற, வாத்தியாரே?”

“அப்படிக் கேட்டீன்னா நாங்க பதில் சொல்லுவோம். ஏன்னா சித்தர்களையே, மகான்களையே கேள்வி கேட்கற கலியுகமாச்சே இது! உலகத்துல ரொம்பக் கஷ்டமான போஸ்ட் எது தெரியுமா? சற்குரு போஸ்ட்தான்டா, ஏன்னா முக்காலமும் தெரிஞ்சாலும் அறிஞ்சும் அறியாமல் இருக்கணும், இதுக்கு நடுவுல உன்ன மாதிரி வடிகட்டின முட்டாளுங்க பூனையோட பசி தெரிஞ்சும் அதுக்கு ஏன் பால் ஊத்தலைன்னு வேற கேப்பீங்க! அதுக்கும் நாங்க பதில் சொல்லணும்! ஏன்னா எல்லாமே அவங்கவங்க பூர்வ ஜென்ம கர்ம வினைப்படிதான் நடக்கும்னு எங்களுக்குத் நல்லாத் தெரிஞ்சாலும், மத்தவங்களுக்கு வெறும் கேள்வி தானே கேட்கத் தெரியும்!”

“இப்ப இந்தப் பூனை இருக்கே .. இந்தக் குளத்துப் பக்கத்துல போச்சுன்னா அது ஒண்ணு ரெண்டு மீனைப் புடிக்கும்.. நீயே பாத்திருக்க! அந்த மீனை எடுத்துக் கிட்டு வரப்ப நாய் மடக்கிடிச்சுன்னா நீ மீனைக் காப்பாத்துவீயா, பூனையோட பசியத் தீர்ப்பியா, நாய்க்கு விட்டுக் குடுப்பியா, என்ன செய்வ சொல்லு பாக்கலாம் .... ?”

சிறுவன் தலையைப் பிய்த்துக் கொண்டான்.

“எங்களுக்கு மீன் தப்பிக்குமா, இல்லாட்டி பூனை வயித்துல மீன் போகுமா, நாய் அதைப் பிடுங்கித் திங்குமான்னு நாங்க கொஞ்சம் கூடக் கவலைப் பட மாட்டோம் ஏன்னா எது, எப்படி, எங்க நடக்கப் போகுதுன்னு நல்லாத் தெரியும் .. தெரிஞ்சு அதோட கர்மவினைப்படி நடக்க விட்டிடுவோம்!” இதுவே பெரியவரின் மிகமிக எளிமையான மீமாம்சம்! சிறுவன் பெரியவரை இதோடு விடவில்லை!

 “ஏன் வாத்தியாரே உன்னாலத்தான் எல்லாரோட விதியையும் மாத்த முடியுமே மாத்த வேண்டியது தானே! பூனை வாயிலந்து மீனைக் காப்பாத்தித் தண்ணீல விட்டுட்டுப் பூனைக்கும் நாய்க்கும் வேற வழிவகை பண்ணிட வேண்டியது தானே!”

“சிவசிவ! அப்படிச் சொல்லக் கூடாதுடா! அடியேனுக்கு விதிய மாத்தற சக்தியெல்லாம் கெடயாதுடா! அடியேன் அங்காளியோட அடிமை அவ்வளவுதான்”, என்று சொல்லி வானத்தை நோக்கிக் கும்பிட்ட பெரியவர் திடீரென்று மௌனமானார்.

“வழக்கம் போல் முட்டாள்தனமாய் எதையேனும் கேட்டுவிட்டோமா”, சிறுவன் அஞ்சினான்!

‘‘விதிய மாத்திடுன்னு நீ ரொம்ப ஈஸியாய்ச் சொல்லிட்ட ராஜா! Divine karmic calculations அவ்வளவு ஈஸி இல்லப்பா! கர்ம்மா கர்மான்னு சொல்லி எல்லாருமே எல்லாத்துக்கும் விதிமேல பழியைப் போட்டுடறாங்க... ,இந்த உலகம் இயங்கறத்துக்கு காரணம் தாண்டா விதி! வீட்டுல மழை பெஞ்சு ஒழுகினா, அஸ்திவாரத்தையா பேத்து எடுப்பாங்க...! அதுமாதிரி ஒரு மீனுக்காக பூனை, நாய்ன்னு எத்தனை ஜீவன்களோட நாங்க கூத்தாடறதாடா?  நான் தண்ணீல கெடந்து சும்மா போடறத்துக்குப் பதிலா, ஒரு ஜீவனோட பசியைத் தீர்க்கறதுக்குன்னு தன்னைத் தியாகம் பன்ண ஒரு மீன் முன் வருதுன்னு வச்சுக்கோ, அப்ப என்ன செய்யறது? அது அந்த மாதிரி தியாகத்துக்காக மேலேந்து வரம் வாங்கி வந்துச்சுன்னா நாங்க அதோட தியாகத்துல குறுக்கால நுழையமாட்டோம்.!”

“இந்த மீன் ஒரு ஜன்மத்துல மீன் கொத்தியா இருந்து அப்ப மீனா இருந்த இந்தப் பூனையைத் தின்னுருந்தா அந்த விதி நியதி இப்ப இந்த ஜன்மத்துல மாறி நடக்கலாம் இல்லையா! இந்த மாதிரி நெறய karmic calculus – calculations போட்டாத் தாண்டா தெளிவு கெடைக்கும்! இதெல்லாம் spiritual scientist டோட வேலை! அவங்கதான் சித்தர்கள், மகரிஷிங்க, யோகிங்க! நாங்க அவங்களோட divine assistant அவ்வளவுதான்! இது ரொம்ப ஹெவி சப்ஜக்ட்டுடா, நல்லா ஆத்ம விசாரம் பண்ண வேண்டிய சப்ஜக்ட், நீ சொல்ற மாதிரி அந்த மீனோட விதியை மாத்தணும்னா, இந்த உலகத்துல இருக்கிற ஆயிரம் கோடி மீன், 80 கோடி பூனை, 60 கோடி நாய் எல்லாத்தோட விதியெல்லாம் மாத்திக்கிட்டேயிருந்தால் நாங்க வேற எதயும் செய்ய முடியாதுடா? இப்படிச் செஞ்சுக்கிட்டே இருந்தா உலக நியதி என்னாவறது? எங்க divine fuseயையும் மேலேந்து புடுங்கிடுவாங்க! பெரியவர் கலகலவென்று சிரித்தார்!

சிறுவனுக்கோ தலை சுற்றியது......

“ஒரு பூனைக் கதைக்கே உனக்கு மூளை புரண்டு போச்சே, ஆனா வாய் மட்டும் நீண்டு கேள்வி கேட்கத் தெரியுதுல்ல, கலியுகத்துல மனுஷனோட ஒரே scientific achievement என்னன்னா எல்லாருக்கும் நல்லா கேள்வி கேட்கத் தெரியும்.. ஆனா கேள்வி யெல்லாம் அடங்குற ஒரே இடம் சற்குருதான்! ஏன்னா, தெரிஞ்சும் தெரியாமலும் அறிஞ்சும் அறியாமலும், புரிஞ்சும் புரியாமலும் இருக்கிற அழியாத அறிவின், அகங்காரமில்லாத அடக்கத்தின், உண்மையான பக்தியின் மொத்த உருவகம் தான் சற்குரு!

குளவிக் கூடு காட்டும் வாஸ்து சாஸ்திரம் !

பறவைகள் வண்டினங்கள் ஆற்றும் மகத்தான இறைப் பணி! குளவியின் கூடு கூட வாஸ்து சாஸ்திரப்படிதான் அமைந்திருக்கிறது. மனிதர்களைத் தவிர அனைத்து ஜீவன்களுமே தங்கள் வீடுகளை, கூண்டுகளை, கூடுகளை வாஸ்து சாஸ்த்திரப்படியே அமைத்துக் கொள்கின்றன.. ஒரு வீட்டில் குளவி அமைக்கின்ற கூட்டைப் பொறுத்து அவ்வீடு வாஸ்து சாஸ்திரப்படி அமைந்திருக்கிறதா, இல்லையெனில் எவ்வித மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதை நன்முறையில் வாஸ்து சாஸ்திர ரீதியாக அறிந்து கொள்ளலாம்... குளவி கொண்டு வரும் மண்ணுக்கு அதியற்புத பிருத்வி சக்தி உண்டு. இது பலவிதமான தோஷங்களை நிவர்த்தி செய்யக் கூடியதாகும். குளவி கொட்டுதற்கும் பல காரண காரியங்கள் உண்டு. குளவி போன்ற வண்டினத்தைச் சார்ந்த பூச்சிகளின் சிருஷ்டிக்கும் எத்தனையோ பிறப்பு இரகசியங்கள் உண்டு.

வானிலே நிறைந்திருக்கின்ற எத்தனையோ பீஜாட்சர மந்திர சக்திகளை எல்லாம் தன்னுடைய தவ, யோக வலிமையால் ஈர்க்கின்ற சக்தியை மனிதன் இழந்து வருகின்றான். காரணம் பிராணாயாமப் பயிற்சிகள், முத்திரைகள், யோகாசனங்கள் ஆகியவற்றின் தெய்வீக சக்திகளைக் கலியுக மனிதன் உணராது தீய ஒழுக்கங்களிலும் முறையற்ற காமச் செயல்களிலும் தன் சக்திகளை இழந்து வருகின்றான். இந்நிலையில் எத்தனையோ கோடானு கோடி மைல்களுக்கு அப்பால் விண்ணில் நிரவியுள்ள வேத சக்திகளையும் ஜோதி கிரண சக்திகளையும் அவன் எவ்வாறு பெற முடியும்? இதற்காகவே, பூலோக ஜீவன்களின் நன்மைக்காகவே ஆண்டவன் பறவைகளைப் படைத்துள்ளான். சில வகையான காக்கைகள், அண்டங்காக்கை, கழுகு, பருந்து, கருடன் போன்றவை பல அண்டங்களுக்கும், கோளங்களுக்கும் செல்லும் சக்தியைப் பெற்றவை. சில வகைக் காகங்கள், பித்ரு லோகங்களுக்கே பறந்து செல்லும் சக்தியைப் பெற்றுள்ளமையால் திவசம், சிரார்த்தம், (நீத்தார் நினைவு பூஜை) போன்றவற்றில் அளிக்கப்படும் சோற்றுப் பிண்டங்கள், அதிரசம், எள்ளுருண்டை போன்றவற்றை முதலில் காக்கைகளுக்குத்தான் படைப்பார்கள்.. எந்தத் திசையிலிருந்து உணவை காகம் எடுத்துப் புசிக்கின்றது என்பதைக் கொண்டு பித்ருக்களுடைய ஆசி மலர்ந்திருக்கிறதா என்பதை அறியும் சகுன சாஸ்திரமும் உண்டு. இத்தகைய விசேஷமான சக்திகளையுடைய பறவைகள் எல்லாம் எங்கோ தொலைவில் விண்ணில் நிரவி இருக்கின்ற வேத மந்திர பீஜாட்சர சக்திகளைத் தம் உடலிலும் இறக்கைகளிலும் தாங்கி பூமியின் வான எல்லைக்குக் கொண்டு வந்து தம்முடைய சிறகுகளின் அசைவின் மூலமாக மனித சமுதாயத்திற்கு அவற்றை அர்ப்பணிக்கின்றன.

தெய்வீகமாய் வாழ ...

தெய்வீகமாக வாழ்வது எப்படி?

நம்முடைய வீட்டுக் கதவுகளிலோ, சுவர்களிலோ, வாகன்ங்களிலோ, ஆடைகளிலோ எதைப் பொறிப்பது, எதை எழுதுவது? இவற்றில் இறையருள் பொங்கித் ததும்பும் God Be with us, the way to Good என்ற வகையிலா நல்ல இறை (Positive) வசனங்களே பொதிந்திருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.. கருந்தேள், கரும் பாம்பு, தலை கீழான வார்த்தைகள், மேலும் கீழுமாக ஒரு அடுக்கில் வரிசையில் அமையாத எழுத்துக்கள்,, தாறுமாறான, கோணலான வார்த்தைகள், Bad Thunder, Kiss Me போன்ற தீய எண்ணங்களை எழுப்பும் வார்த்தைகள் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்... தீய எண்ணங்களையே பெருக்கும் இவையெல்லாம் எதிர்வினைகளையே (negative forces) வளர்க்கும்..

உங்கள் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் பொழுது கூட அது இறைவனின் திருநாமமாக, இனிமை மிக்கதாக இருந்திட வேண்டும். அரக்கர்களின் பெயரோ, அசுப வார்த்தைகள் அடங்கிய பெயரோ நிச்சயம் கூடாது. உங்களுடைய வியாபாரப் பொருட்களுக்கும் கூட positive thinking அமைந்த வார்த்தையாக இருக்கட்டும். Thunder, Waterfalls போன்ற எதிர்மறை வார்த்தைகளைப் புகுத்தாதீர்கள்! தற்காலத்தில் வெளிவரும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களின் பெயர்களும் பலவித எதிர்மறைச் சாயல்களை, சப்த ஒலிகளைக் கொண்டிருப்பதால் இது கலியுகத்திற்கு நன்மை பயக்காது, sweep, துப்பாக்கி முனை என்றோ எதிர்மறைப் பெயர்களை வைத்திடாது, வாழ்க்கை நெறியினின்று இறங்குதற்கான சாத்தியக் கூறுகளை அறிவிக்கும் ஏக்க, தேக்க, மூர்க்க, துக்க கரமான வார்த்தைகள் இல்லாமல் Well done, Good mark, Bliss போன்ற இறைமை நிறைந்த நல்வள வார்த்தைகளைப் பயன்படுத்திடுக!

பொருட்களுக்குப் பெயரிடும் பொழுது, அதன் உரிமையாளரின் நட்சத்திரத்திற்குப் பொருத்தமான முறையில் பெயர் சூட்டுவதே சிறப்புடையது.. உதாரணமாக மக நட்சத்திரத்தைச் சார்ந்தவர்களின் வியாபாரப் பொருட்கள் ம, மி, மு, மே என்ற எழுத்துக்களில் அமைதல் விசேடமானதாகும்.. எல்லா நட்சத்திரங்களுக்கும் நான்கு பாதங்கள் உண்டு.. ஆனால் வழக்கில் இரு ராசிகளில் பாதங்கள் வரும் ஒரு நட்சத்திரத்திற்கு (விசாகம், கார்த்திகை) மட்டுமே நான்கு பாதசஞ்சாரங்கள் கொண்டதாகக் கணிக்கப்படுகின்றன.. இது தவறு... 27 நட்சத்திரங்களுக்கும் உரித்தான நான்கு பாதங்களையும் கணக்கில் கொள்வதே சிறப்பானதாகும். இந்த உதாரணத்தில் மகநட்சத்திரத்தின் முதல் பாதத்தைச் சேர்ந்தவர் ம என்ற எழுத்தைக் கொண்டும்.. இரண்டாம் பாதத்தவர் மி எனும் எழுத்திலும், 3ம் பாதத்தவர் மு எனும் எழுத்திலும் ,4ம் பாதத்தவர் மே என்னும் எழுத்தையும் கொண்டு செயல்பட வேண்டும்.

மக நட்சத்திரத்தின் முதல் பாதத்தவர் மல்லிகை என்றும், இரண்டாம் பாதத்தவர் மித்ரம் அல்லது, மிஷ்ரம் போன்றும் , 3ம் பாதத்தவர் முகத்தாமரை, May Flower என்று நல்வளம் நிறைந்த இறை வார்த்தைகளை வெளிப்படுத்த வேண்டும். இதே போன்று லாரி, வேன்களுக்குப் பெயர் சூட்டும் போதும் போக்குவரத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒவ்வொரு நிமிடமும் அப்பெயரைப் படித்துச் செல்வதால் மேம்படுத்தும் வண்ணம் அப்பெயர் அமைவது சிறப்பானதாகும்.. “வாழ்க வளமுடன், அன்பே சிவம், அன்பு நிலா, தங்க நிலா, சிவமே செல்வம், கடமையே ஊதியம், கடவுளை நம்பு”, என்ற வகையிலான நல்வள இறை சிந்தனைகளைக் கூட்டும் வகையில் அது அமைந்திட வேண்டும். எனவே பல்லாயிரக் கணக்கானோரின் கண்களில் நல்வள எண்ணங்களைக் கூட்டும் விதத்தில் நல்வார்த்தைகளைப் பொறித்தல் சிறப்பானதாகும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிமிடத்திலும் அந்த இறைவளப் பெயரைப் படிக்கப் படிக்க உங்களுக்குத் தானாகவே புண்ய சக்தி கூடிடும்! Don’t  come near me, பத்து அடி தள்ளு போன்றவை எல்லாம் எதிர்மறைவானவைகளை வெளிப்படுத்துபவைகளே! எனவே உங்களுடைய ஒவ்வொரு காரியத்திலும் இறைவழி எண்ணங்கள் பெருகுமுகமாக இருந்தால்தான் Power of  Positive Thinking எனும் வகையில் நல்வள இறை எண்ணங்களைப் பரவெளியில் மேம்படுத்த இயலும். இத்தகைய இறை எண்ணங்களே ஒரு மனிதனின் மன வாழ்வைச் சாந்தமாக அமைக்கின்றன.. நந்தி, யானை, சிம்மம் போன்ற இறை வாகனங்களுக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக நீரை தினமும் உங்கள் வாகனங்களுக்குத் தெளித்து வந்தால் ஆபத்துகளிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.. இத்தகைய தெய்வீக இரகசியங்களை ஊட்டி வளர்க்க ஒரு சற்குரு தேவைதானே! இனியேனும் இந்த இறை ரகசியங்களை உணர்ந்து கொள்ளுங்கள்.

சமநிலை பௌர்ணமி

திருஅண்ணாமலை – பௌர்ணமி கிரிவல மகிமை

சமநிலை பௌர்ணமி நாட்கள்

என்றும் எப்போதும் எந்நேரமும் இங்கு கிரிவலம் வந்திடலாமே! கோடானு கோடி யுகமாய் எந்நேரமும் திறந்திருக்கும் அருணாசல மலை ஆலயம்! ஆம். திருஅன்ணாமலையே மூலத்தான இறைவன், கிரிவலமே ஆலயப் பிரதட்சிணம்!

பிரபஞ்சத்தின் தெய்வீக மையமாக விளங்குகின்ற திருஅண்ணாமலையை எந்தக் கிழமையிலும், தேதியிலும், நட்சத்திரத்திலும், எந்நாளிலும், எந்நேரத்திலும் கிரிவலம் வந்திடலாம். அந்தந்த நேரத்திற்குரித்தான விசேஷமான பலன்களும் உண்டு. தக்க சற்குருவை நாடினால் அவரவருடைய கர்மவினைகளுக்குத் தக்க தீர்வைத் தருவதற்கான கிரிவலப் பலன்களை அளிக்க வல்ல நேரத்தையும் நாளையும் அவரே தந்திடுவது மட்டுமல்லாமல் பெறுதற்கரிய முக்தி, மோட்ச நிலைகளைத் தரவல்ல திருஅண்ணாமலையின் கிரிவல மகிமையையும் அவரே நன்கு உணர்த்திடுவார்.. நாமாக அருணாசல மஹிமையை உணர்தல் மிகவும் கடினம்.. சற்குரு உணர்த்துதலே நிலைத்து நிற்கும். மனிதர்கள் மட்டுமல்லாமல் தேவாதி தேவ மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், தாவரங்களும், விலங்கினங்களும் நம் கண்ணுக்குத் தெரியாத சூட்சும ஜீவன்களும் எப்போதும் கிரிவலம் வருகின்ற அதியற்புத தெய்வீகத் திருத்தலமே திருஅண்ணாமலையாகும்.

அஞ்சனை பெற்ற ஆஞ்சநேயர்!

ஸ்ரீஆஞ்சநேய மகாபிரபுவின் அன்னைதான் அஞ்சனா தேவி என்பது நீங்கள் நன்கு அறிந்ததே! அனுமனைப் பெற்றெடுப்பதற்காக அஞ்சனா தேவி பிரபஞ்சமெங்கும் பல திருத்தலங்களிலும் நீராடிப் பல தெய்வ மூர்த்திகளைத் தரிசித்து, புண்ய கர்ப்ப தாரிணியாக மலரும் அருள் பெற்றாள். திருப்பதியில் ஆகாச கங்கை, கபில தீர்த்தம், ருத்ர தீர்த்தம், காயத்ரீ தீர்த்தம் என்னும் பலவகையான தீர்த்தங்களிலும் நீராடிய அஞ்சனா தேவி அங்குள்ள ருத்ர தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீவிக்னேஸ்வரரை பூஜித்தபோது ருத்ர தீர்த்தத்தில் தோன்றிய ஜோதியானது தேவ சப்த வாக்காக “ருத்ர புஷ்கரிணியில் நீராடியால் நீ மகத்தான புண்ணிய கர்ப்ப தாரிணியாக ஆவதற்கான திருஅருளைப் பெறுகின்றாய்! எம் ஜோதியைத் தொடர்ந்து சென்று சாக்த கர்ப்ப வாச மகிமைகளை அறிந்து கொள்வாயாக!” என்று திருஅருள் கூறிடவே, அந்த ஜோதியைப் பின்பற்றியவாறே அஞ்சனா தேவி தன் திருத்தல யாத்திரையைத் தொடர்ந்தாள்.

32 விதமான அறங்களைச் செய்தவாறே வழியில் எத்தனையோ திருத்தலங்களையும , புண்ணிய நதிகளையும் தரிசித்துக் கொண்டே வந்த அஞ்சனா தேவி அருணாசல உத்தம பூமியான திருஅண்ணாமலைக்கு வந்து சேர்ந்தாள்.. இங்கு அப்போது நிரம்பி வழிந்த காயத்ரீ தீர்த்தம், சுந்தர தீர்த்தம், அக்னி தீர்த்தம், யம தீர்த்தம் போன்ற 108 தீர்த்தங்களில் நீராடி கிரிவலத்தைத் தினசரி வழிபாடாகக் கொண்டனள். கிரிவலப்பாதையில் உண்ணாமுலையம்மன் தீர்த்தம் என்ற அற்புதமான தீர்த்தம் இன்றைக்கும் உண்டு.. கோடையில் வற்றியிருப்பது போல் தோன்றினாலும் இவ்விடத்தில்தான் அம்பிகையானவள் ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு தெய்வத் துணைவியாய் ஆவதற்கான கடும் தவத்தை மேற்கொண்டதால் சூட்சுமமாய் இங்கு எப்போதும் தீர்த்தம் உண்டு.

அஞ்சனை பெற்ற அற்புத தரிசனம்!

அஞ்சனா தேவி இப்பகுதிக்கு வந்தபோது ஸ்ரீபார்வதி தேவி “ஸ்வர்ணமய பிராணாயாம சுவாசக் கலையில்” யோகம் பூண்டிருந்தமையால் அம்பிகையின் சுவாசக் காற்று சற்றே அஞ்சனையின் மேல்பட்டு அதுவே பெரும் சுழற்காற்றாக மாற்றிறு, சுழற் காற்றென்றால் ஒரு மனிதனையே தள்ளிக் கொண்டு செல்கின்ற அளவிற்குப் பெரும் காற்றாக ஆனால் தெய்வீக சாந்தம் கொண்டதாய் இருந்தது. ஆனால் இதன் மகிமை என்னவென்றால் அச்சுழல் காற்றில் இறைவியின் யோக சுவாசத் தன்மைகள் நிறைந்திருந்தமையால் அஞ்சனா தேவியையே தள்ளிச் சென்ற சுழற்காற்றானது கிரிவலத்தின் பல பகுதிகளிலும் சுழன்று சென்று அஞ்சனா தேவிக்குப் பல புதுப்புது கிரிவல தரிசனங்களைப் பெற்றுத் தந்தது!

இவ்வாறாக முப்பத்து முக்கோடி தேவர்களுக்கெல்லாம் கிடைக்காத பல அரிய தரிசனங்களை அஞ்சனா தேவி பெற்றாள்.. காரணம், அம்பிகையின் சாக்த சக்தியானது வாயுப் பரிமாணம் மூலமாக கிரிவலத்தையே ஒரு தபஸாகவும், தீர்த்த நீராடலையே ஒரு யோக தவமாகவும் மேற்கொண்ட அஞ்சனா தேவிக்குப் பல அற்புதமான திவ்ய கீர்த்திகளைப் பெற்றுத் தந்தது. வாயு பகவானின் அருள் பெற்ற அஞ்சனா தேவிக்கு ஈஸ்வரியினுடைய சுவாச யோகத்திலிருந்து எழுந்த யோகப் பரிமாணக் காற்றானது ஒரு அருட் பரிசாக பெறுதற்கரிய சுழல்வல கிரிவல முறையை, தத்துவத்தை உணர்த்தியது என்ன அது?

அஞ்சனை பெற்ற ஆத்ம பிரதட்சிண கிரிவலம்!

தன்னைத்தானே சுற்றிக் கொள்வதற்கு “ஆத்மப் பிரதட்சிணம்” என்று பெயர்.. அதாவது உள்ளிருந்து உடலை இயக்குகின்ற கடவுளுக்கு ஒரு பிரதட்சிணமாக, வணக்க வலமாக நம்மை நாமே சுற்றி வருகின்றோம். இதுவே ஆத்மப் பிரதட்சிணமாகின்றதல்லவா! இவ்வாறாக தன்னைத் தானே சுற்றியவாறே. ஆத்மப் பிரதட்சிண முறையாகத் திருஅண்ணாமலையை கிரிவலம் வருவதற்கு “சுழல்வல கிரிவலம்” என்று பெயர்.. இவ்வாறு சுழல்வலமாக இங்கு கிரிவலம் வந்த அஞ்சனா தேவிக்குப் பல அற்புதமான தீர்த்தங்கள் தென்பட்டன. இவையெல்லாம் தற்போதைய இயற்கை மாற்றங்களால் நம்மால் காண முடியாதபடி பூமிக்கடியில் நீரோட்டங்களாய் மாறியுள்ளன.. தேவாதி தேவர்களுக்கெல்லாம் காணக் கிடைக்காத பல அற்புத தீர்த்தங்களையெல்லாம் தரிசித்த அஞ்சனா தேவி சுழல்வல கிரிவல முறையில் இரண்டு நாட்கள் தொடர்ந்து திருஅண்ணாமலையினை கிரிவலம் வந்தனள்.. அந்த இரு தினங்களின் இரவுகளிலுமே பௌர்ணமி திதியானது சமமாகப் பரவி அன்றைய மாதத்தில் இரண்டு பௌர்ணமி தினங்களாய்ச் சிறப்புற்று விளங்கியது... இவ்வாறு முறையாக அருணாசலத்தை கிரிவலம் வந்த அஞ்சனா தேவி ஸ்ரீஆஞ்சநேய மகாப் பிரபுவை கர்ப்பம் தாங்கும் நல்வரம் பெற்ற இடமே காயத்ரீ தரிசனப் பகுதியாகும்...

அஞ்சனா தேவிக்கு சத்புத்திர பாக்கியம் கிட்டியது அவள் கடைபிடித்த இந்தச் சுழல்வல கிரிவலத்தின் பலன்களால்தான், மேலும் அன்னப்பிராசனம் என்று சொல்லப்படுகின்ற குழந்தைக்கான முதலாண்டு நிறைவின்போது அன்னம் ஊட்டப்படுகின்ற விழா ஸ்ரீஆஞ்சநேயருக்கு நடைபெற்ற திருத்தலமும் திருஅண்ணாமலையே.. எனவே குழந்தைகளுக்கு முதலாண்டு நிறைவின் போது அன்னம் ஊட்டுகின்ற விழாவினை திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள உண்ணாமுலையம்மன் தீர்த்தக் கரையில் நிகழ்த்தி அவ்விடத்திலேயே அன்னதானமும் செய்வோருக்கு மேலும் சத்புத்திரங்கள் வாய்ப்பதுடன், குழந்தைகள் நல்லொழுக்கத்துடனும், நல்ல இறை பக்தியுடனும் வளர்ந்து உத்தம தெய்வ நெறியில் திளைத்திடுவார்கள்... சந்ததியும் தழைக்கும்... இதற்கு அருள்பாலிப்பதே திருஅண்ணாமலையைச் சுழல்வல முறையில் அதாவது தன்னைத் தானே சுற்றி வந்துகொண்டே ஆத்மப் பிரதட்சிண முறையில் கிரிவலம் வருதலாகும்... இதில் பிரசித்தி பெற்ற பல ஞானியரும் யோகியரும் உண்டு... ஸ்ரீஉண்ணாமுலையம்மனே தம்முடைய யோக சுவர்ண சுவாச ஸ்பரிய தீட்சையாக சுழல்வல கிரிவலம் வந்து சத்புத்திரனாக, சிரஞ்சீவியாக ஆஞ்சநேயரைக் குழந்தையாகப் பெறும் பாக்கியத்தைப் பெற்றாள்.. எனவே, கலியுகத்தில் நன்முறையில் குழந்தைகள் பிறந்து, அவர்கள் ஒழுக்கத்திலும், பக்தியிலும் திளைத்து நின்று நல்வாழ்க்கை வாழ்ந்து., இறைநெறியில் சிறந்து விளங்குவதற்குத் தம்பதியர்கள் செவ்வாய்க் கிழமையும், புதன் கிழமையும் கூடி வருகின்ற பௌர்ணமி தினங்களில் சுழல்வல கிரிவல முறையில் திருஅண்ணாமலையின் கிரிவலம் வந்திடுதல் வேண்டும்..!

அஞ்சனை பெற்ற சமநிலைப் பௌர்ணமி திதி!

நிகழும் விக்ரம ஆண்டு ஆவணி மாதப் பௌர்ணமி செவ்வாய், புதன், ஆகிய இரண்டு தினங்களிலுமே பூரித்திருக்கின்றது.... இவ்வாறு அமைவது மிகவும் அபூர்வமானதாகும்.. சரிசமனாக அமைகின்ற இரு பௌர்ணமி தினங்களிலும் கிரிவலம் வருவதால் அற்புதமான பலன்கள் கிட்டுகின்றன.... பௌர்ணமி திதிச் சந்திரனுக்கும் ஏறு முகம், நடு முகம், இறங்கு முகம் என்று பலவிதமான சக்திகள் நிறைய உண்டு.

எனவே இறங்கு முகப் பௌர்ணமி திதியில் நாம் திருஅண்ணாமலையை கிரிவலம் வருகையில் சந்திர மண்டலத்தில் பித்ருக்கள் யாத்திரை செய்து அங்கு பித்ரு மண்டல பூஜைகளைப் பலவிதமான ஹோம பூஜைகளுடன் துவக்குவதால் பித்ரு ஹோம சக்தி வாய்ந்த கிரணங்களைச் சந்திர பகவான் அருட்பரிசாகத் திருஅண்ணாமலையை கிரிவலம் வருவோர்க்கு இன்று அள்ளித் தருகின்றார்.. பித்ருக்களும் தங்களுடைய மூல தேவநாயகர்களுக்குச் செய்ய வேண்டிய ஹோம பூஜைகள் நிறைய உண்டு. அதில் பலவிதமான சந்திர மூலிகைகள் ஹோமத்தில் ஆஹூதியாக இட்டு மிகவும் அபூர்வமான தெய்வீகமணம் நிறைந்த ஹோமப் புகையை எழுப்புகின்றார்கள். தீட்சண்யமான கண் (நேத்திர) சக்தியை உடையவர்களுக்கு மாளயபட்சப் பிரதமை திதியின்போது கிரிவலம் வரும் போது சந்திர மண்டலத்தின் வெளித் தோற்றங்கள் சற்றே மாறுபடுவதைக் காண முடியும். எவ்வாறு பூஜையைறையை நாம் சாம்பிராணி தூபத்தால் நிறைத்திடும்போது வெண்மையான மேகம் போன்ற புகைப்படலம் ஏற்படுகின்றதோ அதேபோல மாளயபட்சப் பிரதமை திதியில் சந்திர மண்டலத்தில் பித்ரு தேவர்கள் கடைபிடிக்கின்ற ஹோம பூஜையில் எழுகின்ற திரவியங்களின் நறுமணப் புகையானது சந்திர மண்டலத்தைச் சூழ்ந்து அதனுடைய அருட்சக்தியினை கிரிவலம் வருவோர்க்கு இன்று அள்ளித் தருகின்றது.! எனவே செவ்வாய், புதன் கிழமைகளில் சரிசமமாக வருகின்ற பௌர்ணமி திதிகள் மிகவும் சிறப்பானவையாகும். அபூர்வமான இந்தப் பௌர்ணமி தினங்களில் சுழல்வல கிரிவல முறையில் கிரிவலம் வருவோர்க்கு அதிஅற்புத கிரிவலப் பலன்கள் பூரித்திடக் காத்திருக்கின்றன..

இன்றைக்கு மாதம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பௌர்ணமி திதியன்று திருஅண்ணாமலையை கிரிவலம் வருகின்ற கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு உள்ளம் பூரிகின்றது. முப்பத்து முக்கோடி தேவர்களுமே போற்றுகின்ற அளவிற்கு இன்றைய கலியுக மக்கள் திருஅண்ணாமலை கிரிவலத்தை மகத்தான இறைபூஜையாக ஏற்றுக்கொண்டு கடைபிடிக்கின்றார்கள் என்பதை எண்ணுகின்ற மனம் பேருவகை கொள்கின்றது. ஆனால் திருஅண்ணாமலை கிரிவலத்தால் கிடைக்கின்ற புண்ணிய சக்தியாவுமே நல்ல நெறிகளுக்காகவும், இறை தர்மங்களுக்காகவும், அருள் வழிகளுக்காகவுமே பயன்படுத்தப் படுமேயானால் பாரத நாடானது உலகத்திலேயே, ஏன் பிரபஞ்சத்திலேயே உத்தம நாடாக ஸ்ரீஇராமபிரான் போற்றிய சனாதன தர்ம நெறி நிறைந்த நாடாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை..

அருணை கிரிவலம் கொண்ட மாமுனிகளோ கோடி கோடி!

ஆனால் இன்றைக்கு லட்சக்கணக்கான மக்கள் திருஅண்ணாமலையை கிரிவலம் வருவதற்கான வித்துக்களை இட்டவர்கள் யார்? ஸ்ரீரமண மகரிஷி, ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள், ஸ்ரீதட்சிணாமூர்த்தி சுவாமிகள், ஸ்ரீஅங்கப் பிரதட்சிண அண்ணாமலை சுவாமிகள், ஸ்ரீவிசிறி சுவாமிகள், ஸ்ரீகுகை நமசிவாயர், ஸ்ரீகுரு நமசிவாயர் போன்ற நாம் அறிந்த மகான்களுக்கும், மகரிஷிகளுக்கும், முன்னரே எத்தனையோ கோடி மகரிஷிகளும், முனிபுங்கவர்களும், புனிதத் துறவியர்களும், சித்புருஷர்களும் திருஅண்ணாமலையை மானுட வடிவத்திலேயே கிரிவலம் வந்துள்ளனர்.. இன்றைக்கும் கோடிக் கணக்கான யோகியரும், சித்புருஷர்களும், மகரிஷிகளும், திருஅண்ணாமலைத் திருத்தலத்தை தினந்தோறும் சூட்சுமமாக கிரிவலம் வந்தவாறே உள்ளனர்.. ஆனால் கலியுகத்தில் மனிதச் சமுதாயமானது எதையுமே கண்ணால் கண்டால் தான் நம்புகின்றது என்பதற்காகவே தான் இறைவன் மகான்களையும், சித்புருஷர்களையும் மானிட வடிவத்திலேயே பூமிக்கு வரச்செய்து அவர்களுக்கென ஒரு கர்ம வாழ்வைத் தந்து, நம்மிடையே நம்மைப் போலவே வாழச் செய்து நமக்கு அருள்வழி காட்கின்றான்! ஆனால் ஒருவர் தெய்வ சக்திகள் நிறைந்தவரென்றால் இந்த மனிதச் சமுதாயம் கலியுகத்தில் அவர்களைக் கூறு போட்டுவிடுமே!

“எனக்கு செல்வம் வேண்டும், பதவி வேண்டும்!” என்று கேட்டு சற்குருமார்களைத் துரத்தி தம் சுயநலத்திற்காக அவர்களைத் துன்புறுத்தி எத்தகைய இறை நற்காரியங்களையும் செய்ய விடாமல் படாதபாடு படுத்தி விடுவார்களே! இதற்காகத்தான் கலியுகத்தில் சற்குருமார்கள் இலைமறை கனியாகத் தங்களுடைய தெய்வீக சக்தியை வெளிக்காட்டாமல் மக்களோடு மக்களாய் வாழ்ந்து குருகுலவாசத்தை நடத்திக் கொண்டு வருகின்றார்கள்.. ஸ்ரீஅருணகிரிநாதர், ஸ்ரீமாணிக்கவாசகர் சுவாமிகள், ஸ்ரீதிருநாவுக்கரசு சுவாமிகள், ஸ்ரீசம்பந்தப் பெருமான், அறுபத்திமூன்று நாயன்மார்கள் என்று இன்னும் எத்தனையோ மகான்கள், சித்தர்கள் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்துள்ளனர். இவர்களையெல்லாம் இந்தச் சமுதாயம் மறந்துவிட்டது. தம் குருமார்களின் அறவழி முறைகளைக் கடைபிடித்தவர்களும் தங்களுடைய நினைவுக் குறிப்புகளையெல்லாம், ஏட்டுச் சுவடிகளிலோ, புத்தக வடிவிலோ வெளியிட்டுச் சென்றிருந்தால் மனித சமுதாயம் மறந்திருக்காது.

ஆனால் இத்தகைய வசதிகள் அந்நாளில் இருக்கவில்லை. சித்புருஷர்களின் ஞானபத்ர கிரந்தங்களில் அருளியுள்ளபடி திருஅண்ணாமலை கிரிவலம் வந்துள்ள சில சித்புருஷர்களைப் பற்றி நாம் இங்கு காண்போம். நாம் பலமுறை எடுத்துரைத்து உள்ளபடி ஒவ்வொரு சித்புருஷருமே ஒவ்வொருவிதமான பெயரைத் தாங்கி இறைவன் அமைத்தபடி தங்களுக்கென ஒரு தனி பாணியை வகுத்துக்கொண்டு மக்களோடு மக்களாய்ச் சாதாரண மனிதரைப் போலவே வாழ்கின்றனர். மகான்களிடையே உயர்வு, தாழ்வு என்பது ஒருபோதும் கிடையாது. எனவே, ஒரு மகானையும், மற்றொரு மகானையும் ஒப்பிட்டுப் பார்ப்பதே தவறானதாகும். “இந்த மகான் இப்படி இருக்கின்றாரே, அந்த மகான் அப்படி வாழ்கின்றாரே”, என்று யோகியரையும், சித்புருஷரையும் ஒப்பிட்டு எடைபோடும் தவறான மனப்பாங்கினைக் கையாளாதீர்கள்.

நிலா புரந்தர வாசுமாமுனி

நிலா மாசு நீக்கும் நிலா புரந்தர வாசுமாமுனிச் சித்தர்!

நிலா புரந்தர வாசு மாமுனி என்னும் அதிஅற்புத சித்புருஷர் பல யுகங்களுக்கு முன்னால் திருஅண்ணாமலையில் கிரிவலப் பாதையில் வாழ்ந்து மக்களுக்கு நல்வழி காட்டி வந்தவர். இன்றைக்கும் என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாய் அருள்பாலித்தும் வருபவர், இவருடைய மகிமையை இன்றும் பலர் அறியார், திண்டுக்கல் அருகே கசவனம்பட்டி ஸ்வாமிகளாக, அவதூதராக சமீப காலத்தில் அருள்பாலித்த அற்புத சித்தரும் உண்டு. தன்னுடைய பூத உடலை விடுத்தாலும் கூட இன்றைக்கும் எத்தனையோ கோடி லோகங்களில் இறைவன் அளித்த புதுப் புது நாமத்திலேயே/பெயர்களிலேயே தன்னுடைய சித்தாமிர்த இறைவழி முறைகளை நடத்திக் கொண்டு இருக்கின்றனர். இறைவனின் அருட்தூதுவராக வந்த பூண்டி மகான் ஸ்வாமிகள் தன்னுடைய பூத உடலைச் சட்டைபோல் கழற்றி வைத்தாலும்கூட இன்றும் என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாய் அருள்பாலித்துக் கொண்டுதான் இருக்கின்றார்.

நம்முடைய பூலோகம் போன்று இருக்கின்ற எத்தனையோ கோடி பூமிகளில் இத்தகைய சித்புருஷர்களின் அருளாட்சி இன்றும் நடந்து கொண்டுதான் வருகின்றது, நதி தேவதைகளெல்லாம் சர்வேஸ்வரனிடம் “ஸ்வாமி, பலரும் எங்களுடைய ஜீவ நதிகளில் நீராடுவதால் அவர்களுடைய பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர். ஆனால் நாங்களோ அந்தப் பாவங்களை ஏற்று மாசடைகின்றோம். அதைத் தீர்ப்பதற்காக எங்களுக்கு நல்வழி காட்ட வேண்டும்”, என்று வேண்டி மக்களுடைய கர்மச் சுமைகளை ஏற்பதால் தமக்கு ஏற்படுகின்ற மாசினைக் களைவதற்காகப் பலதெய்வீக பூஜை முறைகளை மேற்கொண்டார்கள் அல்லவா?

இதேபோலத்தான் சந்திர பகவானும் கோடிக்கணக்கான லோகங்களில் எத்தனையோ ஜீவன்கள் தம்முடைய அருட்கிரணங்களைக் கண்டு, தரிசித்துக் கொண்டு உயிர் வாழ்வதால் இரவிலும் தம்மைக் காண்பதாலும் ஜீவன்களுடைய இரவு நேரக் கர்மவினைகளுக்குத் தான் சாட்சியாக இருப்பதாலும் தன்மேல் படியும் மாசினைக்  களைவதற்காக ஸ்ரீசந்திர மௌளீஸ்வர சுவாமியிடம் பிரார்த்தனை செய்து கொண்டார். “ஸ்வாமி! பிரபஞ்சம் எங்கும் உள்ள கோடானு கோடி லோகங்களில் பௌர்ணமி திதியன்று அனைத்துக் கோடி ஜீவன்களும் அடியேனைக் காண்பதால் அவர்களுடைய மனதிலும், உள்ளத்திலும் உள்ள தீய, அசத்திய சக்திகள் என்மீது படிகின்றன, இவற்றை நீக்குவதற்குத் தாங்கள் தான் பூஜை முறைகளைக் தந்தருள வேண்டும்” என்று வேண்டி நின்றார்.

சர்வேஸ்வரனும், “சந்திரா, நீ கேட்கும் முன்னரே கொடுப்பதுதானே இறைலீலை! உன்னுடைய பிரார்த்தனை நிறைவேறுவதற்காகப் பலகோடி யுகங்களாக லோகத்தில் ஒரு சித்புருஷர் தவம் பூண்டிருக்கின்றார். அவரை நீ தரிசித்துத் தெளிவு பெறுவாயாக”, என்று கூறி சந்திர பகவானை பூலோகத்திற்கு அனுப்பினார்! ஆம், ஒவ்வொரு சித்புருஷரும் ஓர் அற்புதமான இறைப்பணியை ஏற்றுக் கொண்டு அதை நிறைவேற்றுகின்றபோது ஏற்படுகின்ற துன்பங்களையும், தடங்கல்களையும் சகித்துக் கொண்டு தமக்கிட்ட இறைப்பணியைச் செவ்வனே செய்கின்றார். இவ்வாறுதான் நிலா புரந்தர வாசுமாமுனி திருஅண்ணாமலையிலே கிரிவலப் பாதையிலே அமர்ந்து சோமமௌளீஸ்வர யோகத்தில் திளைத்தார், பௌர்ணமி திதிகளில் சந்திரனுடைய அருட்கிரணங்கள் திருஅண்ணாமலையின் மேல்படிவதால் அந்தச் சந்திரனுடைய கிரணங்கள் தூயதாக இருக்க வேண்டும். எம்பெருமானுடைய திருமேனியில் மாசுபட்ட சந்திர கிரணங்கள் படிதல் கூடாது, பௌர்ணமி திதியன்று பூலோகம் மட்டுமன்றி எத்தனையோ கோடி லோகங்களிலிருந்து பலரும் சந்திர பகவானை தரிசிப்பதால் சந்திர மண்டலத்தில் ஏற்படுகின்ற மாசுபட்ட கிரணங்களை எல்லாம் தன்னுள் ஈர்த்துச் சந்திர மதி மண்டலத்தினைத் தூய்மை செய்து நன்முறையில் பூலோகத்திற்குச் சந்திர அருட்கிரணங்களை அனுப்பவேண்டும் என்பதற்காக இந்த நிலாபுரந்தர வாசுமாமுனிச் சித்தர் என்பவர் இதுவரை யாருமே கடைபிடிக்காத புதுமையான யோக முறைக்கு இறையருளால் தம் குருவின் ஆணைப்படித் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். இவ்வாறு இவர் கடைபிடித்த சுழல் கிரிவல முறைதான் ஆத்மப் பிரதட்சிண கிரிவல முறை எனப்படும் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு ஆத்மப் பிரதட்சிணமாக திருஅண்ணாமலையினை கிரிவலம் வருவதலாகும்.

அருணை உலா வந்து நிலாமாசு நீக்கு!  பலாதிபலா சிவவாக்கு!

இவ்வாறு பல கோடி யுகங்களாக நிலாபுரந்தர வாசுமாமுனிச் சித்தர் சுழல் கிரிவல முறையில் கிரிவலம் வந்தமையால் அவருடைய உள்ளக்கிடக்கையை உணர்ந்து இத்தகைய அருட்பெரும் தவத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள சித்புருஷருக்கு அருள்பலம் கூட்ட வேண்டும் என்பதற்காக ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத திருஅண்ணாமலையாராய்க் காட்சி தந்து “பௌர்ணமிதோறும் நீ சந்திரனை தரிசிக்கும் போது உன்னுடைய அதிஅற்புத நேத்திர சக்தியால் சந்திர மண்டலத்தில் படிகின்ற மாசுகள் அகலும், நீயும் நிலாபுரந்தர வாசுமாமுனி என்ற அருட்பட்டத்தைப் பெறுவாய்”, என்று கூறி அருள்பாலித்தார். இவ்வாறாக நிலாபுரந்தர வாசுமாமுனி அமர்ந்து யோகாக்னி தவம் பூண்ட இடமே இன்றைக்கும் திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் அடிஅண்ணாமலைப் பகுதியில் ஒரு சிறுபாலத்தின் மேடாக அமைந்திருக்கின்றது, யோகியர்களும், சித்புருஷர்களும் அமர்ந்து அதற்கு மெருகு கூட்டியுள்ளனர். இன்றைக்கும் இவ்விடத்தில்தான் நிலாபுரந்தர வாசுமாமுனி சூட்சுமமாக மௌலீஸ்வர யோகாக்னி பயின்று பௌர்ணமி திதிதோறும் சந்திரனை நேத்ர தரிசனம் செய்து சந்திர கிரணங்களில் படிகின்ற மாசுகளை அகற்றிப் புனிதமாக்கி, நிலா மூர்த்தியின் புனிதமான அருட்கிரணங்கள் திருஅண்ணாமலையின் மேல்தோயுமாறு இறையோகம் பயில்கின்றார், இது பலகோடி யுகங்களாகத் திருஅண்ணாம்லையில் நிகழ்ந்து வருகின்ற அதிஅற்புத இறைலீலை!

இவ்வாறாக எத்தனையோ சித்புருஷர்களும், துறவியர்களும், யோகியர்களும், முமூட்சுக்களும், முனிபுங்கவர்களும் திருஅண்ணாமலையில் வாழ்ந்து மக்களுக்கு வழிகாட்டி வருகின்றனர். இன்று லட்சாதிலட்சம் மக்கள் திருஅண்ணாமலையில் கிரிவலம் வருதற்கு தெய்வீக வித்திட்டவர்கள் இவர்களே, எனவே இவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்து கிரிவலத்தைத் தொடங்கி நன்றி தெரிவித்து முடிப்பதுதான் சிறப்புடையதாகும்.. ஆஞ்சநேயருடைய அன்னையான அஞ்சனா தேவி சுழல்வல கிரிவல முறையில் தன்னைத் தானே ஆத்மப் பிரதட்சிணம் செய்துகொண்டே கிரிவலம் வந்தபோது அடிஅண்ணாமலை அருகில் அக்னிமேட்டுப் பகுதியில் தவம் பூண்டிருந்த நிலாபுரந்தர வாசுமாமுனியின் தரிசனத்தைப் பெற்று அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கி ஆசிகளைப் பெற்றாள். ஆஞ்சநேயருடைய அவதாரத்திற்கு முன்னரே திருஅண்ணாமலையில் யோகம் பயின்றார் என்றால் நிலாபுரந்தர வாசுமாமுனியின் தேவ ஆயுளை எவ்வாறு நீங்கள் கணக்கிடுவீர்கள். இன்றைக்கும் திருஅண்ணாமலையில் சூட்சுமமாயும் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சித்புருஷர்! நிலாபுரந்தர வாசு மாமுனி சித்தரைப் பற்றி நமக்கு சித்தர்களுடைய ஞானபத்ர கிரந்தங்களிலிருந்து எடுத்துரைத்த நம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப சித்த சுவாமிகளுக்கும், அவருடைய குருவாய்மொழிகளைத் தொகுத்து ஸ்ரீஅகஸ்திய விஜயம் மூலம் அருள்மழை பொழிந்து வருகின்ற நம் குருமங்கள கந்தர்வா அவர்களுக்கும் நம்முடைய அன்புக் காணிக்கையைச் செலுத்துவோமாக!

நவராத்திரி

நவராத்திரிப் புண்ய கால பூஜை

இரவு நேர வாழ்க்கைக்குப் புண்ய சக்தி தரும் புனித பூஜை! இரவு நேர தீவினை சக்திகளிடமிருந்து நம்மைக் காக்கும் பூஜை! அம்பிகையே நம் நல்வாழ்விற்காகப் பூஜிக்கும் புனிதகாலம்! மனித வாழ்க்கை இரவு, பகல் என்ற இரண்டு காலங்களில் விரிந்திருந்தாலும் மனிதனோ இரவு காலத்தை ஓய்விற்கும், உறக்கத்திற்கும் மட்டுமே என்று எண்ணுகின்றான். பகலில் வழிபட வேண்டிய தேவ மூர்த்திகளைப் போலவே இரவு காலத்திற்கும் உரிய தெய்வ மூர்த்திகள் உண்டு.., இதற்காகத்தான் ராத்ரி ஸூக்தம் போன்ற அற்புதமான துதிகளை நமக்குப் பெரியோர்கள் தந்துள்ளனர்.. ஒவ்வொரு மனிதனுக்கும், ஏன், ஈ, எறும்பு போன்ற ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒன்பது விதமான உடல்கள் உண்டு என்பதை நாம் அடிக்கடி உணர்த்தி வருகின்றோம் அல்லவா? இந்த ஒன்பது சரீரங்களில்தான் நாம் அவ்வப்போது மாறி மாறி வாழ்கின்றோம், நம்மால் உணரப்படுகின்ற ஒன்பதில்  ஏதேனும் ஓர் உடம்பில்தான் நாம் உறங்கச் செல்கின்றோம்,

ஆனால் உறக்கத்தில் எத்தனையோ காரியங்களை நம்முடைய ஏனைய உடல்களின் மூலமாகச் செய்துதான் வருகின்றோம். உறங்கும் போது நம்முடைய ஜீவித சக்தியை எழுப்பி இந்த பூமியிலோ அல்லது வேறு லோகங்களிலோ உள்ள உடல்களில் இணைத்துக் காரியங்களை நிறைவேற்றுவதற்காக எத்தனையோ பித்ரு தேவர்களும், குருலோக தேவர்களும் நிறைய உள்ளனர், எனவே நாம் உறங்கும் போதும்கூட நாம் காரியங்களைச் செய்து கொண்டுதான் இருக்கின்றோம் என்று உணர்ந்திடுதல் வேண்டும், எனவே நமது இரவு நேர வாழ்க்கைக்கும் உரித்தான பூஜைகளைக் கைக்கொண்டால்தான் நம்மால் காலத்தின் மகிமையை உணர முடியும், காலத்தின் மகிமையும், பிரபஞ்சத்தின் இரகசியமும், சிருஷ்டியின் பிறப்பு, இறப்பு இரகசியங்களும் தெரிய வரும், இவற்றை உணர்ந்தவர்கள்தாம் தீர்க்கதரிசிகள் ஆவார்கள். இவையெல்லாம் முக்தி அடைவதற்கு முன்னால் பெறவேண்டிய உத்தம இறைநிலைகளாகும். இவையன்றி மோட்சத்தை அடைய முடியாதா? இதையெல்லாம் அறிந்து கொண்டால்தான், ஜீவன்களுடைய நல்வாழ்விற்காகப் பல இறைப்பணிகளை மேற்கொண்டால்தான் முக்திக்கான முதல் கதவே திறக்கப்படும். கலியுக மக்கள் ஆசை, மாயைகளில் சிக்கிக்கொண்டு தீய ஒழுக்கங்களின் வசப்பட்டு இறை நெறியிலிருந்து வழிமாறிப் போய்விவார்கள் என்பதை தீர்க்க தரிசனமாக உணர்ந்த அம்பிகை கலியுகத்தில் நவகிரகங்களின் அனுக்கிரக சக்திதான் பிரதானமாக இருக்கும் என்பதையும் அறிந்து,

1.கலியுக ஜீவன்களுக்கு முறையான நவகிரக அனுக்கிரக சக்தியைப் பெற்றுத் தருவதற்காகவும்

2. கலியுக மனிதர்களால் மறக்கப்பட்டு வருகின்ற இரவுநேர பூஜைகளின் மகத்துவத்தைப் பற்றி அவர்களுக்கு உணர்த்திடவும்

3. உறக்கம், கேளிக்கை மற்றும் தீயொழுக்கங்களில் இரவு நேர காலத்தை வீணாகச் செல்வழித்து விடுகின்ற கலியுக மக்களுக்கு இரவு நேர புனிதமான பூஜைகளைப் பற்றி விளக்கிடவும், பூலோகத்தில் பல திருத்தலங்களிலும் ஒன்பது நாட்களுக்குத் தொடர்ந்து இரவு நேர பூஜைகளை மேற்கொண்டு நமக்கு அவற்றை நவராத்திரி சிறப்பு தினங்களாக அளித்துள்ளான். அம்பிகையே இறைவனை பூஜிக்கின்ற இரவு காலமாதலால் நவராத்திரியின் ஒன்பது தினங்களிலும் இரவு நேரத்தில் நாம் செய்கின்ற பூஜைகள், தான தர்மங்கள் யாவையுமே அம்பிகையின் ஈஸ்வர பூஜையோடு இணைந்து நமக்குப் பல நல்வரங்களை எளிதில் பெற்றுத் தருகின்றது.

சாரதா நவராத்திரி என்று தேவர்களால் அழைக்கப்படுகின்ற நவராத்திரிப் பண்டிகையானது பூலோகத்தில் மட்டுமல்லாது அனைத்து லோகங்களிலும் கொண்டாடப்படுகின்ற அற்புத பூஜையாகும். தட்சிணாயனம் என்று சொல்லப்படுகின்ற ஆடி முதல் மார்கழி வரையிலான ஆறுமாத காலமும் தேவர்களுக்குரித்தான இரவு நேரமாதலால் தேவர்களுடைய புனிதமான ராத்திரி காலபூஜையாக விளங்குவதே நவராத்திரி ஆகும். எனவே மங்களத்தை அள்ளித் தருகின்ற ஈஸ்வரி பூஜையாக நவராத்திரி விளங்குகின்றது. எனவே நவராத்திரியின் ஒன்பது தினங்களிலும் சுபமங்கள கிரணங்கள் நிறைந்து இருப்பதால், மாங்கல்யச் சரடு, மஞ்சள், குங்குமம், குங்குமச் சிமிழ், கண் மை, வளையல்கள், பெரிய கண்ணாடி, சீப்பு, சிறுவர் சிறுமியருக்கான புது ஆடைகள், எட்டு, ஒன்பது கஜப் புடவை, நூல் புடவைகள், இரவிக்கைகள் போன்ற மங்களப் பொருட்களை தினந்தோறும் தானம் செய்து வருதல் வேண்டும்.. தனித்துச் செய்வதைவிடப் பலரும் ஒன்று சேர்ந்து சத்சங்க தான தர்மங்களாக ஒன்றுகூடி செய்து வந்தால் இதனுடைய பலாபலன்கள் எத்தனையோ ஏழைகளைச் சென்றடைவதால் அபரிமிதமான புண்ணியச் சக்தியைச் சத்சங்க பூஜையே அள்ளித் தங்திடும்.. நவராத்திரி விழாவின் முதல் நாளான பிரதமை திதி முதல் ஒன்பதாம் நாளான நவமி திதியோடு, விஜய தசமியாக நவராத்திரி பரிபூரணமடைகிறது.

ஒன்பதின் மகத்துவம்  முடிவில் முடியா முதல் 
ஒன்று முதல் ஒன்பது வரை உள்ள எண்களில் ஒன்பதுடன் ஒற்றைப் படை எண்ணிக்கை எல்லை கொள்கின்றது, ஆனால் மீண்டும் பத்து, பதினொன்று, பன்னிரண்டு என்றவாறாக மீண்டும் ஒன்றிலிருந்துதான் துவங்குகின்றது. எனவே எண்ணுக்கும் எல்லை உண்டு, கணிதத்தில் உள்ளது போல Infinity  அல்ல என்பதையே இது உணர்த்துகின்றது.. இதேபோன்று பிரதமை திதி முதல் நவமி திதி வரை நவராத்திரி விசேஷ தினங்களில் சரஸ்வதி பூஜையாகிய நவமி திதியானது நவராத்திரி விழாவின் எல்லையாகவே விளங்குகின்றது, எனவேதான் பத்தாவது திதியாகிய தசமியில் அதனுடைய எல்லை நிறைவு பெற்று விஜயதசமி திதியான தசமியில் ஒன்றாய் மீண்டும் அது பரிபூரணம் பெறுகின்றது.. இதேபோல நவராத்திரியின் ஒன்பது தினங்களின் பூஜாபலன்களின் தொகுப்பாக விஜய தசமி அன்று அம்பிகையானவள் தன்னுடைய பூஜா பலன்களைத் தொகுத்துத் கும்பக் கலசத்தில் வைத்து ஜீவன்களின் நல்வாழ்விற்காக ஸ்ரீஆயுர்தேவியாகப் பரிமளித்து அர்ப்பணிக்கின்றாள்., எனவேதான் விஜய தசமியன்று ஸ்ரீஆயுர்தேவியைக் கும்பக் கலசத்தில் எழுந்தருளச் செய்து வழிபடுகின்றோம்., இந்தப் பிரபஞ்சத்தின் அனைத்துத் திருத்தலங்களிலும் ஒன்பது தின இரவுகளிலும் அம்பிகை பூஜை செய்து திரண்ட லோகமாதா சக்தியை எல்லாம் ஸ்ரீஆயுர்தேவியாக அவதாரம் கொண்டு கலச பூஜையில் தசமி அன்று நமக்கு அளிக்கின்றாள்.

ஸ்ரீநந்தி வாகனம்
பெருநகர் அம்பாள் சன்னதி

நவராத்திரி – 1 பிரதமை படிப்பறிவு தரும் பூஜை

விக்ரம ஆண்டின் நவராத்திரி விழாவின் முதல் நாளான பிரதமை திதியில் அம்பிகையானவள் சர்வேஸ்வரனை ஸ்ரீஞானேஸ்வர மூர்த்தியாக பாவித்து பூஜை செய்கின்றாள்.. நமக்குக் கல்வி அறிவைத் தரக்கூடிய புதகிரகத்தில் உள்ள பௌம்ய சந்திர தேவதைகள் அம்பிகையுடன் சேர்ந்து ஞான சொரூப மூர்த்தியாக ஸ்ரீதட்சிணாமூர்த்தியாக ஈஸ்வரனை வழிபடுகின்றனர். பொதுவாக, தன்னுடைய குழந்தைகள் கல்வியில் மந்த புத்தி உள்ளவர்களாகவும், தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்களைப் பெற்று வாடுகின்றவர்களாகவும் அமைந்து மனவேதனையுடன் வாழ்கின்ற பெற்றோர்கள் ஏராளம். அத்தகைய குழந்தைகள் நல்ல முறையில் படிப்பில் சிறந்து விளங்கவும், தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறவும் நவராத்திரி பிரதமை திதி வழிபாடு நல்வழி காட்டுகின்றது. பேராசை, பகைமை உணர்வுகளால் பாதிக்கப்பட்டு வாழ்விலும், அலுவலகப் பணியிலும், வியாபாரத்திலும் முன்னேற இயலாமல் தவிப்போர், அம்பிகை அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கின்ற திருத்தலங்களில் ஈஸ்வரிக்குத் தேங்காய் எண்ணெய், சந்தனத் தைலம் சாற்றி, ஞான சக்திகள் நிறைந்த வெள்ளைத் தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து புத பகவானுக்குரித்தான பச்சை நிற உணவுவகைகளை தானமாக அளித்தல் வேண்டும். இதனால் பகைமை மற்றும் பொறாமை குணங்களால் பாதிக்கப்பட்டுள்ளோர் அவரவர் துன்பங்களிலிருந்து விடுபடுவர். நந்தி லோகத்தில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்ற பிரம்மோற்சவமாக நவராத்திரி விழா விளங்குகின்றது. எனவே நந்தியை வாகனமாகக் கொண்டுள்ள அம்பிகை சன்னதிகளில் இன்று வழிபடுவதால் பொறுப்பின்றி வாழ்ந்து வரும் கணவன்மார்கள் தங்கள் தவறை உணர்ந்து திருந்தி பொறுப்புடன் வாழத் தொடங்குவர்.

இன்று ஆலயங்களில் பசுவிற்கும் காளை மாட்டிற்கும் திருமணங்களை நிகழ்த்தி அவற்றை தானமாக கோயில்களுக்கே அளித்திட வேண்டும். தற்காலத்தில் கோயில்களுக்கு தானமாக வருகின்ற பசுக்களையும், காளை மாடுகளையும் ஏலத்தில் தெரிந்தவர்களுக்கோ அல்லது குறைந்த விலைக்கோ விற்று விடுகின்றார்கள். இது பெரும் பாவமாகும். இதில் ஈடுபடுவோருக்குத் தீவினைகளே வந்து சேரும்.. இந்த பசு காளை திருமண உற்சவத்தின் பலாபலன்களாக, திருமணம் ஆகியும் கணவனுடன் சேர்ந்து வாழ முடியாத பெண்களுக்கு நல்ல முறையில் குடும்ப வாழ்வு கூடிவரும். ஒரு நவராத்திரி பிரதமை பூஜைக்கு உரித்தான பூஜாபலன்கள் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன என்றால் கலியுகத்தில் எத்தகைய துன்பங்கள் ஜீவன்களுக்கு ஏற்படும் என்பதை அம்பிகையே தீர்க்க தரிசனமாக உணர்ந்து அந்தந்தத் துன்பங்களை நீக்குவதற்குத் தேவையான புண்ணிய சக்தியையே அந்தந்த திதிக்குரிய பூஜாபலன்களாக அர்ப்பணித்து விடுகின்றாள்.. இவ்வாறு அம்பிகையே மனம் உவந்து அளிக்கின்ற பண்டிகையே நவராத்திரி பூஜையாகும்.

திருவீழிமிழலை

நவராத்திரி – 2– துவிதியை திதி தம்பதியர் இணை பிரியாது வாழ உதவும் பூஜை

பூலோகத்தில் இருப்பதைப் போலவே தேவலோகங்களிலும்  ஸ்ரீவாஸ்து சாஸ்திரம், ஜோதிடம் போன்றவை கண்டிப்பாகக் கடைபிடிக்கப்படுகின்றன. தேவர்களும் மகரிஷிகளும் ஒரு லோகத்திலிருந்து மற்றொரு லோகத்திற்குச் செல்வதற்கு உரித்த திதி, யோக நியதிகளைக் கடைபிடிக்கின்றார்கள். பொதுவாக, ரிஷி லோகங்களிலிருந்து பிற லோகங்களுக்குச் செல்வதற்கு துவிதியை திதிதான் சிறப்புடைய நாளாக விளங்குகின்றது. எனவேதான் துவிதியை திதிகளில் கிரிவலம் வருவது சிறப்பான பலன்களை அள்ளித்தருகின்றது.. காரணம், இந்தத் திதியில்தான் மகரிஷிகளுடைய அண்டவெளிப் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.

ஆதி சிருஷ்டி காலத்தில் இப்போது இருப்பது போல வெவ்வேறு நாடுகள், எல்லைகள், நிலப்பரப்பு என்ற பேதமின்றி உலகம் முழுவதும் ஒன்றாக, சனாதன தர்மம் நிறைந்த இடமாக இருந்தது. ஆனால் வரும் யுகங்களில் இவ்வாறு வெவ்வேறு நாடுகள், ராஜ்யங்கள் என்ற வேறுபாடுகள் ஏற்படும் என்பதை தீர்க்க தரிசனமாக உணர்ந்த அம்பிகையே நாடுவிட்டு நாடு மாறுவதாலும், மற்றும் பூமி பேதங்களால் ஏற்படுகின்ற நிலதோஷங்களுக்கும் பிராயசித்தமாக பல அரிய பூஜைகளை மேற்கொண்டு அதன் பலன்களைத் துவிதியை திதிபூஜா பலன்களாக அர்ப்பணிக்கின்றாள். இந்தியாவைத் தாய்நாடாகக் கொண்டு வெளிநாட்டில் பிறந்து ,வளர்ந்து, திருமனமாகிக் கணவன் மனைவி தம்பதி சகிதமாக இணைபிரியாது 60 ஆண்டுகள் வாழ்ந்து சஷ்டியப்த பூர்த்தி எனப்படும் 60 ஆண்டு நிறைவு பூஜைகளைப் பல காரணங்களல் செய்ய இயலாதிருப்போர் பலர் உண்டு. அதர்மம், வன்முறை, தீயொழுக்கங்கள், ஒழுங்கீனம் போன்றவை நிறைந்துள்ள வெளிநாடுகளில் ஏகபத்தினி விரதனாக, அதாவது கட்டிய மனைவியுடன் இணைபிரியாது நீண்ட திருமண வாழ்வைப் பெறுதல் என்பதே மிகவும் அபூர்வமானதாகும். பாரதத் திருநாட்டின் மகத்தான பண்பாடாக விளங்குகின்ற ஒரே தாரத்துடன் கூடிய மணவாழ்க்கையைப் பெறுதல் என்பது பிற நாடுகளில் காண்பதற்கே அபூர்வமான ஒன்றாகும். இவ்வகையில் வெளிநாட்டில் அன்புடன் இணைபிரியாது வாழ்கின்ற 60 வயது நிறைந்த தம்பதிகளுக்கு நவராத்திரி துவிதியை திதியன்று சஷ்டியப்த பூர்த்தி விழாவை முறையான பூஜைகள், தான தர்மங்களுடன் கொண்டாடுதல் பல அரிய பலன்களைப் பெற்றுத் தரும். நவசக்தி தேவியர்களே இந்நாளில் அம்பிகையுடன் சேர்ந்து பூஜைகளை மேற்கொள்வதால் லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி போன்ற இறைத் துதிகளை இரவு நேரம் முழுவதும் ஜெபித்து, பூஜித்து வந்தால் உலகெங்கும் இவ்வகையிலான நீண்ட திருமண வாழ்விற்கு அம்பிகை அருள்பாலிக்கின்றாள்.

அம்பிகை நமக்கென வேண்டும் ஜீவ சுமங்கலித்வம்!

துவிதியை திதியன்று நவராத்திரி விழாவை ஈஸ்வரன் அம்பிகை திருமணக் கோலம் கொண்டுள்ள கோயில்களில் ஏழைகளுக்கு ஆடை தானத்துடன் கொண்டாடுவது சிறப்புடையதாகும். இதனால் தம்பதியருக்கிடையே ஒற்றுமை பெருகி இல்லற வாழ்வில் அமைதி உண்டாகும். உண்மையில் அம்பிகையே இப்பூவுலகில் சஷ்டியப்த பூர்த்தி மற்றும் சதாபிஷேக பூஜைகள் நிறைந்திட வேண்டும் என்று விரும்பி வேண்டி பூஜித்த தினமே நவராத்திரி துவிதியை திதியாகும்.

ஆம் ஒவ்வொரு இல்லறப் பெண்ணும் செவ்வாய், வெள்ளி தோறும் எண்ணெய் தேய்த்து தலைக்கு நீராடி அம்பிகையிடம் வேண்டுவது தீர்க்க சுமங்கலித்துவம் தானே. எனவே, தன்னுடைய பக்தைகள் யாவரும் தீர்க்க சுமங்கலித்துவம் வேண்டி வழிபடுவதால் அம்பிகையே இறைவனிடம் தீர்க்க சுமங்கலித்துவம் பெறுவதற்கான விசேஷமான பலன்களை அடைய வேண்டி இறைவனை வழிபட்ட திருநாளே நவராத்திரி துவிதியை இரவு பூஜையாகும். இதற்காக இறைவனே நவராத்திரி துவிதியை திதி பூஜை முறைகளை அம்பிகைக்கு எடுத்துரைத்தான். புதிய ஆடைகளை, வாங்குவதற்குக் கூட துவிதியை திதி ஏற்றதாகும் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு ஆடைகளை வாங்குபவர்கள் வளர்பிறைத் துவிதியை திதியில் ஆடைகளை வாங்குவார்களேயானால் அவர்களுக்கு என்றுமே ஆடைப்பஞ்சம் ஏற்படாது. ஆடைகள் பெருகிக்கொண்டே இருக்கும்.. மேலும் கோயில்களில் சுவாமிக்கு வஸ்திரம் சார்த்துவதை ஒரு பூஜையாக, பிரார்த்தனையாக ஏற்றுள்ளவர்கள் துவிதியை திதியில் சுவாமிக்கு வஸ்திரம் சார்த்துவது சிறப்புடையதாகும் இதனால் தோல் நோய்களால் வருந்துவோர் தக்க நிவாரணம் பெறுவர்.

இறைவனும் அம்பிகையும் சேர்ந்து தரிசனம் அளிப்பதற்காக இறைவனே தேர்ந்தெடுத்த திதியே துவிதியை திதியாகும். இதனால் இன்று இறைவனும், இறைவியும் சேர்ந்து திருமணக் கோலம் கொண்டு எழுந்தருளியுள்ள திருக்கோயில்களுக்குச் சென்று சுவாமிக்கும் அம்பிகைக்கும் தைலக் காப்பு இட்டு ஏழைகளுக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், வெண்ணெய் ஆகியவற்றை தானமாக அளிக்கவேண்டும். இதனால் கணவன் மனைவியரிடையே மனவேற்றுமைகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமை வளரும்.

சிறுசிறு பிரச்சனைகளுக்குக் கூட கோபத்தில் கொதிதெழும் கணவன்மார்கள் நல்ல முறையில் மனம் திருந்தி அமைதியாக குடும்பத்தோடு உரையாடி உறவாட மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் திருக்கோயில், திருவேற்காடு, திருவீழிமிழலை, வேதாரண்யம், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில், குற்றாலம், திருமணஞ்சேரி, திருவிடந்தை பெருமாள் கோயில் போன்ற இறைவனும், இறைவியும் திருமணக் கோலத்தில் காட்சி தருகின்ற திருத்தலங்களில் துவிதியையில் தம்பதி சகிதமாகக் கணவன் மனைவியும் சென்று தரிசித்து மகிழுங்கள். ஏழைகளுக்கு எண்ணெய் தானம் எதற்காக அளிக்க வேண்டும் என்றால் எண்ணெய்தான் உணவுச் சத்திற்கு மிகவும் முக்கியமானதாகத் திகழ்கின்றது.. இன்றைய கலியுகத்தில் எண்ணெய் இன்றி உணவுப் பொருட்கள் அமைவதே இல்லை. எனவே ஒரு ஏழையால் பெற முடியாத (எண்ணெயில் உருவாகும்) உணவுப் பண்டத்தை நீங்கள் அளிப்பதால் அவர்கள் மனம் மகிழ்வதால், எவ்வாறு எண்ணெய் வித்திலிருந்து எண்ணெய் பெறப்படுகின்றதோ, அவ்வாறு உங்கள் குடும்ப வாழ்விலும், மன அமைதிவித்தாகி திரண்டு பொழியும். பொதுவாக, வெளிநாடுகளில் வசிக்கும் தம்பதிகள் மகிழ்வுடன் ஒற்றுமையுடன் வாழ துவிதியை திதி பூஜை உறுதுணையாக இருக்கின்றது.. திருஅண்ணாமலையை துவிதியை திதியன்று வலம் வந்து இரட்டைப் பிள்ளையாரை தரிசித்தால் தம்பதிகளிடையே மன ஒற்றுமை பெருகும்.

நவராத்திரி -3- திரிதியை திதி ரிஷிகளின் ஆசியைப் பெற:-

அம்பிகையே பூஜிக்கின்ற நேரமென்றால் அந்த நேரத்தில் காலத்தை ஆட்சி செய்கின்ற கிழமை, திதி, நட்சத்திரம், யோக, கரண தேவதைகள் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றன. ஏனென்றால் அம்பிகையானவள் தன்னுடைய பூஜை மூலம் அந்த குறித்த கால தேவதைகளுக்கு அபரிமிதமான தெய்வீக சக்திகளைக் கூட்டுகின்றாள் அல்லவா? லட்சக்கணக்கான மக்கள் புண்ணிய நதியில் நீராடுகையில் கரைக்கின்ற பாவங்களை எல்லாம் தம்முள் ஏற்கின்ற நதி தேவதைகள் எவ்வாறு இறைவனிடம் பிராயசித்த வழிபாட்டு முறைகளைக் கேட்டுப் பெறுகின்றனதானே! பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவன்களுடைய (நல்லதோ, கெட்டதோ) அனைத்து காரியங்களுக்கும் சாட்சி பூதமாக விளங்குகின்ற சூரிய சந்திர மூர்த்திகள் இதனால் தம்முடைய கிரணங்களுக்கு ஏற்படுகின்ற களங்கத்தைப் போக்குவதற்காக சிவலிங்க, சுயம்பு மூர்த்திகளின் மேல் சூரிய பூஜையாகத் தம்முடைய ஒளிக்கிரணங்களைப் பெய்து பிராயசித்தங்களைப் பெற்றுக் கொள்கின்றார்கள் தானே! இதேபோல வன்முறைகள், தீயொழுக்கக் காரியங்கள், அதர்மச் செயல்கள் போன்ற கலியுக மனித சமுதாயத்தில் பெருகி வருகின்ற கர்மவினைகளுக்கெல்லாம் சாட்சி பூதமாக நிற்கவேண்டிய கால தேவதைகளுள் ஒன்றாக திதி தேவதையும் இருப்பதால் திரிதியை தேவதா மூர்த்தி அம்பிகையிடம் இதற்கான பிராயசித்த முறைகளைக் கேட்டுப் பிரார்த்தனை செய்துகொண்டனர். அப்போது இறைவனே தானே முன்வந்து திதி தேவதைகளுக்கெல்லாம் அற்புத தெய்வீக சக்திகள் நிறைந்த காலமாக மாளயபட்சத்தை அடுத்த சுக்கில பட்ச (வளர்பிறை) காலத்தை அளித்து, “நவராத்திரி தினங்களில் ஈஸ்வரி என்னை இரவில் பூஜிக்கும்போது, திதி தேவதைகளாகிய நீங்களும் அதில் பங்குபெற்று உங்களை மேலும் புனிதப்படுத்திக் கொள்வீர்களாக!” என்று கூறி ஆசீர்வதித்தார்.. இறைவனே ஆசீர்வதித்து அளித்த திதி ஆகையால் திரிதியை திதி மிகச் சிறந்த சுப முகூர்த்த திதிகளுள் ஒன்றாக விளங்குகின்றது..

ஸ்ரீஅருந்ததி சமேத ஸ்ரீவசிஸ்டர்
தென்குடித் திட்டை

மங்கள அட்சதை தானம் மகத்தான தானமிது!

மங்கள அட்சதை எனப்படும் மஞ்சள் தோய்ந்த முழு அரிசி மணிகளை நாம் ஆசீர்வதிக்கும் போது பயன்படுத்துகின்றோம் அல்லவா? 80 வயது நிறைந்த பழுத்த சுமங்கலிகளுடைய கரங்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற முழு அரிசி மணிகளில் மஞ்சள் தடவி அவற்றை அட்சதைகளாகப் பயன்படுத்துதலே மிகவும் சிறப்புடையது. நுனி உடைந்த அரிசி மணிகளைக் கொண்டோ, அரை, முக்கால் அரிசி மணிகளைக் கொண்டோ, தற்போதைய திருமணங்களில் அவசரக் கோலத்தில் தயாரிக்கப்படுகின்ற மங்கள அட்சதைகளைக் கொண்டு ஆசீர்வதிப்பதில் எவ்விதப் பலனும் கிடையாது.. பொதுவாக, சுபகாரியங்களுக்கான அட்சதை தயாரிப்பதற்கு மிகச் சிறந்த திதியே வளர்பிறை திரிதியை திதியாகும்... (அமாவாசையிலிருந்து மூன்றாவது திதி) இறைவனுடைய திருமண உற்சவங்களில், ஸ்ரீலோபாமாதா சமேத ஸ்ரீஅகஸ்தியர், ஸ்ரீஅருந்ததி தேவி சமேத ஸ்ரீவசிஷ்டர், ஸ்ரீஅதிதி தேவி சமேத ஸ்ரீகாஸ்யபர், ஸ்ரீஅகல்யா தேவி சமேத ஸ்ரீகௌதமர், ஸ்ரீஅனுசூயா தேவி சமேத ஸ்ரீஅத்திரி போன்ற மகரிஷி தம்பதியர்தாம் என்றைக்கும் நவராத்திரியில் திரிதியை திதியில் மங்கள அட்சதை லோகத்தில் தேவ அரிசி மணிகளைக் கொண்டு மங்கள அட்சதைகளை ஆக்குகின்றனர். அவையே இன்றும் திருக்கயிலாயத்திலும், வைகுண்ட லோகத்திலும் ஆசீர்வாத அட்சதைகளாக அருள்கூட்டுகின்றன., எனவே, இனியாவது உங்களுடைய குடும்பத்தின் சுபகாரியங்களுக்கு சாதி, இன, குல பேதமின்றி 80 வயதிற்கு மேற்பட்ட பழுத்த சுமங்கலிகளைக் கொண்டு வளர்பிறை திரிதியை திதியில் மங்கள அட்சதைகளைத் தேர்ந்தெடுக்கும் காரியத்தினைச் செய்யுங்கள். அன்னதானம், ஆடை தானம் போன்று உங்களுடைய மிகச் சிறந்த இறைப்பணிகளுள் ஒன்றாக இவ்வகையில் அட்சதைகளைத் தயாரித்து, திருமணம் போன்ற பல சுப நிகழ்ச்சிகளில் ஆசீர்வதிக்க அளித்து, ஆசீர்வாத சக்திகளை அதிகரிக்கச் செய்வீர்களாக.

யானை வாகன ஸ்ரீமுருகன்
பட்டீஸ்வரம்

நவராத்திரி திரிதியை தினமான இன்றுதான் அம்பிகையானவள் ஈஸ்வரனுக்கே பிட்சையிடுகின்ற பெரும்பாக்கியத்தைப் பெற்றாள். இந்தப் பிரபஞ்சத்திற்கே முதன்முதலாக உருவான தாவரமாகிய நெல்லை உற்பவித்த ஸ்ரீஆஷா சுவாஸினி தேவி அவதரித்த நாளும் நவராத்திரி திரிதியை திதியாகும். பிரபஞ்சத்தில் முதன்முதல் உருவான அரிசி மணிகளைப் பெறும் பாக்கியத்தைப் பெற்றவரான ஸ்ரீஅகஸ்திய மாமுனி இறைவனுடைய ஜோதியிலிருந்து ஆதி ஜோதி அட்சர மாமுனியாய், பீஜாட்சரப் பெருஞ்ச்சித்தனாய்த் தோன்றிய நாளும் திரிதியை திதியே.!

யானை தரிசனம் சுப தரிசனமே! உலக ஜீவன்களுள் பூலோகத்தில் படைப்பைப் பெறுவதற்கு முன்னரேயே இறைவனுடைய வாகனமாக அமைந்து பின்னர் பூலோகத்திற்கு வந்த தெய்வீக விலங்குகளுள் ஒன்றே யானையாகும். சித்தர்களுடைய பரிபாஷையிலே யானைக்கு “நட்சத்திர சுழுமுனை வரிக்கால்” என்று பெயர். எவ்வாறு ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் நட்சத்திர ரீதியாக நட்சத்திரக் கால்கள் உள்ளனவோ அவ்வாறே எப்போதும் சுழுமுனை சுவாசத்தைக் கொண்டு துதிக்கையுடன் ஐங்கால் கரிக்காலனாக விளங்குவதே யானை. வெறும் தாவர சக்தியிலிருந்து நல்ல வலிமையுடன் ஒரு பிரம்மாண்ட உருவம் எழுகின்றதென்றால் என்னே இறைவனின் படைப்பு! எங்கெல்லாம் இறை மூர்த்திகளுக்கு யானை வாகனமாக அமைந்துள்ளதோ அந்த மூர்த்திகளுக்கெல்லாம் கல்பித யோக சக்திகள் அதிகமாம். பிராணாயாம யோகத்தைப் பயில்பவர்கள் திரிதியை திதியில்தான் பயிற்சியைத் தொடங்கி, திரிதியை திதியிலேயே மலைத்தலங்களுக்குச் சென்று புதிய யோகக் கலைகளைத் தொடர்வார்கள். திரிதியை திதியன்று யானையின் தரிசனம் மிகவும் விசேஷமானது மிகச் சிறந்த சுபசகுணமும் கூட. வியாழக்கிழமையும், திரிதியை திதியும் சேர்ந்து வருகின்ற நாளில் ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதால் மூன்றாம் எண்ணிற்கு உரித்தான குருவின் அருளால் மந்த புத்தி அகலும், புத்திக் கூர்மை ஏற்படும். எனவே வியாழனும், திரிதியையும் சேர்வது மிகவும் அபூர்வமானது.

மாளய பட்ச மகிமை

மாளய பட்சம் – 15 நாள் பித்ரு பூஜைகள்

மாளயபட்சம் என்பது நம்முடைய மூதாதையர்களுடைய பித்ரு லோகங்களில் கொண்டாடப்படுகின்ற பிரம்மோற்சவம் ஆகும். பித்ருக்களின் நாயகரே ஸ்ரீமன்நாராயணப் பெருமாள் ஆவார். மாளயபட்ச பிரம்மோற்சவத்தில் பித்ருக்கள் பூலோக ஜீவன்களுடைய நல்வாழ்விற்காகப் பிரார்த்தனை செய்கின்றனர். பூலோகத்தில் நாம் அளிக்கின்ற தர்ப்பணத்தில் எழுகின்ற தர்ப்பண சக்தி நீரைக் கொண்டு பித்ரு லோகங்கள் பலவற்றிலும் பித்ருக்களும், பித்ரு பத்தினிகளும், பித்ரு கணங்களும் கும்ப கலச பூஜை செய்து அளப்பரிய ஆசீர்வாதப் பலன்களைப் பெறுகின்றனர். மாளயபட்ச அமாவாசை என்பது சூரிய சந்திர கிரகங்களின் சங்கமத்தில் தோன்றுகின்ற சோமாதித்ய (சோமம் +ஆதித்ய) யதி மண்டலத்தின் தோற்றமாகும். மாளயபட்சத்தின் 14 திதிகளிலும் பித்ருக்கள் நடத்துகின்ற பூஜா பலன்களாக திருமால் மூர்த்தியே, சோமனாகிய சந்திரனையும், ஆதித்யனாகிய சூரியனையும் சங்கமத்தில் இயக்க வைத்து யதி மண்டலத்தைத் தோற்றுவிக்கின்றார். இதில்தான் பித்ருக்களுடைய ஜீவ சக்தியை  இறைவன் யதி மண்டலக் கலசமாய் ஆராதனை செய்து தருகின்றார்.

மாளயபட்சம் என்பது பித்ரு லோகங்களுக்கு உரித்தான பிரம்மோற்சவம் ஆகும். இதன் நிறைவாக அமைகின்ற மாளயபட்ச அமாவாசையின் போது சூரியனும், சந்திரனும் இணைகின்ற சங்கமத்தில் தான் ஓர் அற்புத ஜோதி மண்டலம் உருவாகின்றது. எவ்வாறு சிருஷ்டியின்போது இறைவன் ஜீவன்களுடைய ஜீவ சக்தி நிறைந்த கும்பத்தை வைத்து சிருஷ்டியைத் தொடங்குகின்றாரோ அதேபோல பித்ருக்களின் ஜீவசக்தி அமுதக் கலசமாக உற்பவிக்கும் இடமே இந்த ஜோதி மண்டலமாகிய சோமாதித்ய யதிமண்டலமாகும்.. ஆம், இங்கும்  ஓர் அமுதக் கலசம் உண்டு. ஆதிமூல சிருஷ்டியில் உண்டான அமுதக் கலசக் கும்பமே இன்றும் கும்பகோணத்தில் ஸ்ரீஆதி கும்பேஸ்வரலிங்க மூர்த்தியாய் அருளைப் பொழிகின்றது.. நீங்கள் முறையாகச் செய்கின்ற தர்ப்பணத்தில் நிறைந்திருக்கின்ற ஜல சக்திதான் இந்த யதி மண்டல அமுதக் கலசத்தை அடைகின்றது. இதனைத் தாங்கிச் செல்பவள்தான் ஸ்ரீஅக்னிபகவானுடைய பத்தினி தேவியான ஸ்வதா தேவி.

புல், பூண்டு, புழு முதல் யானை, சிங்கம், புலி ஆகிய அனைத்திற்குமே பித்ரு மூர்த்திகள் உண்டு. அப்படியானால் பறவைகள், விலங்குகள் யாவையுமே பித்ரு தர்ப்பண பூஜைகளைச் செய்கின்றனவா? ஆம், நிச்சயமாக, அமாவாசை தினத்தன்று ஒன்றும் உண்ணாமல் விரதமிருந்து பூஜை செய்கின்ற பறவைகள் உண்டு. இவ்வாறாக மாளயபட்சத்தின் மகிமையை மனிதனைத் தவிர அனைத்து உயிரினங்களும் உணர்ந்துதான் இருக்கின்றன. ஆனால் பகுத்தறிவு இருப்பதாகக் கூறிக்கொண்டு திரியும் மனிதனோ மாளயபட்சத்தின் சிறப்பை உணர்வதே கிடையாது.

வெள்ளைப் புலி, மயில், அரிய பறவைகள், திமிங்கலங்கள் போன்றவை தற்காலத்தில் சரியான காரண காரியமின்றி இறந்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதற்குப் பரிகாரமாக நாம் என்ன செய்ய முடியும்? தேசியப் பறவையான மயிலானது காரண காரியமின்றி திடீரென்று மடிவது நாட்டிற்கு நல்லதல்ல, பித்ரு சாபங்களையும், பூஜைகள் குறைந்து விட்டதையுமே இது குறிக்கின்றது. வெள்ளைப் புலி என்றால் அதற்குரிய பித்ரு மூர்த்திகளும் உண்டு. ஆனால் இவர்கள் மிகவும் அரிதாக ஒன்றிரண்டு லோகங்களில் மட்டுமே காணப்படுவதால் வெள்ளைப் புலிக்கான ஜீவ ஆக்கத்திற்கான ஜீவசக்திப் பாதை தேவ லோகங்களிலும் கூட காண்பதற்கு அரியதாகும். இவ்வாறு அபூர்வமான விலங்குகளும், பறவைகளும் இறப்பதானது மனிதனைச் சார்ந்துள்ள மற்ற பூமிவாழ் ஜீவன்களுக்கு உரித்தான தன் கடமைகளை மனிதனானவன் முறையாகச் செய்யவில்லை என்பதையே சுட்டிக் காட்டுகின்றது.. பசியிலும், பட்டினியிலும் அவதிப்பட்டு எலும்பும் தோலுமாக இருக்கின்ற கோயில் யானைகள் எத்தனை எத்தனை? இன்றைக்கும் பால் மரத்துப் போன பசுக்களை வதைத்துக் கொன்று மாமிசமாகப் புசிக்கின்ற அலங்கோலமானது, பசுவை தெய்வமாக மதிக்கின்ற நம் பாரதத் திருநாட்டிலேயே நடந்து வருகின்றதே, என் செய்வது.

நம் மூதாதையர்கள் தினமும் காக்கைக்கும்,  இலையில் மற்ற ஜீவராசிகளுக்காகவும், சிறிதளவு உணவை எடுத்து வைத்தல், எருமை, பசுக்களுக்குப் புல், கீரை போன்ற உணவளித்தல், சதுர்த்தி, சதுர்த்தசி நாட்களில் யானைக்குக் கவள உணவளித்தல் என்று மிருகங்களுக்கும் உணவளித்துப் பாதுகாக்கும் தர்ம நெறிகளைப் பெற்றிருந்தார்கள்.. ஆனால் தற்போது நாம் அவற்றையெல்லாம் ஒரு துளி அளவாவது கடைபிடிக்கின்றோமா என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.

பிறப்பு இரகசியங்களை உணர்த்துவதும் மாளய பட்சத் தர்ப்பணத்தின் மகிமையாகும். உத்தமத் தாய், தந்தையர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளைப் பிள்ளைகள் சரியாகச் செய்யாதபோது அப்பெற்றோர்களே நாய், பூனைகளாகப் பிறவி எடுத்து தங்கள் பிள்ளைகைன் வீடுகளிலேயே செல்லப் பிராணிகளாக வாழ்ந்து அவர்களது அன்பையும், அரவணைப்பையும் பெற்றுத் தங்கள் ஏக்கத்தைத் தீர்த்துக் கொள்கின்றனர். என்னே விந்தை பாருங்கள்! சகல ஜீவன்களிடம் நாம் அன்போடும், கருணையோடும் நடந்து கொண்டு பித்ரு தர்ப்பணக் காரியங்களை முறையாகச் செய்து வந்தால்தான் இத்தகைய விலங்குகளின் பரிதாபகரமான இறப்பிற்கு நாம் காரணமாக மாட்டோம். ஏனென்றால் நம்மோடு வாழ்கின்ற மிருகங்கள் யாவையும் பூர்வ ஜன்மங்களில் நம்மோடு ஏதாவது ஒரு வகையில் தொடர்பு உடையவையே!  அமாவாசைதோறும் நம்முடைய மூதாதையருக்கு மட்டுமல்லாமல் காருண்ய பித்ரு தர்ப்பணம் என்று சொல்லப்படுகின்ற வகையில் மனிதனால் உணவாக உண்டு தீர்க்கப்பட்ட காய்கறிகள், பழ வகைகள், கோழி, மீன், நண்டு , ஆடு, மாடு, காடை , கௌதாரி, புறா, ஆமை போன்றவற்றிற்கும் நற்கதி அளிக்க வேண்டியது மனிதனின் பொறுப்புதானே! மிருகங்கள், தாவரங்களின் நற்கதிகாகத் தர்ப்பணம் அளிக்க வேண்டிய திதிகளை, நாட்களைக் கூட நம் மூதாதையர்கள் குறித்திருந்தனர். எனவே மனித குலத்தின், குறிப்பாக, பாரத மக்களின் கடமை என்னவென்றால் சமீபத்தில் பரிதாபகரமான முறையில் இறந்த வெள்ளைப் புலிகளின் நற்கதிக்காகவும், அவற்றின் வம்ச விருத்திக்காகவும் ஒவ்வொரு மாதப்பிறப்பின் போதும் பம்பை நதியில் தர்ப்பணம் இடவேண்டும், இத்தகைய புலிகள் யாவும் சிருஷ்டி விதிப்படி, கர்ம வினைகளின் இலக்கணப்படி பூமியில் ஸ்வேத பந்தனம் என்னும் அற்புத யோக சக்தியைப் பரப்பிடப் பிறப்பெடுத்து வந்தவையாகும். வரிப் பச்சைகள் என்று சொல்லப்படுகின்ற கோட்டுப் புடலை, பீர்க்கங்காய், பறங்கிக்காய் போன்ற கோட்டுக் காய்கறிகளைச் சமைத்து அன்னதானமாக இட்டு வருதல் வேண்டும். குறைந்தது இரண்டு வருடங்களுக்கேனும் தொடர்ந்து இந்த வரிக்கோட்டுத் தர்ப்பணத்தைச் செய்து வந்தால் தான் வெள்ளைப் புலிகளின் சாபத்திலிருந்து நாம் மீள முடியும்.

புலியின் யோக சக்தி
சாதி, மத, இன பேதமின்றி சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து இதனை மாதாந்திரத் தர்ப்பண பூஜையாக மாதப் பிறப்பிலும் திருவோண நட்சத்திர நாட்களிலும் இந்த வரிக்கோட்டு தர்ப்பணத்தைச் செய்து வருதல் வேண்டும். எங்கெல்லாம் புலிகளின் சரணாலயங்கள் இருக்கின்றனவோ அங்கும் அதன் சுற்றுப்புறத்தில் இருப்பவர்களுக்கும் இத்தர்ப்பணக் கடமை பெரிதும் உண்டு. ஏனென்றால் மனிதர்களுக்கு எதிரிகள் போல் புலிகள் விளங்கினாலும் மனிதனைவிடப் பல அரிய யோக சக்திகளை அவை பெற்றுள்ளன. புலிகளின் இந்த அரிய யோக சக்தியின் பலன்களை மனித சமுதாயமே பெரிதும் பெறுகின்றது.. புலிப்பாலுக்கு அற்புதமான நோய் நிவாரண சக்திகள் உண்டு. காரணம், எருது, கரடி, சிறுத்தை போன்ற விலங்குகளைக் கொன்று தின்று உயிர் வாழும் புலியானது, சீரணிப்பதற்கும் பச்சை மாமிசத்தில் நிறைந்திருக்கும் விஷ சக்தியை நீக்குதற்கும் சில அரிய மூலிகைகளை இனம் கண்டு அவற்றை உண்ணும். எலி மற்றும் பூச்சிகளை உண்ணும் நாயும், பூனை கூட பாம்பின் விஷத்தை விடக் கொடியதான எலி மாமிசத்தின் விஷ சக்தி தன்னைத் தாக்காமல் இருக்கச் சில மூலிகைச் செடிகளின் இலைகளை உண்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதே போல புலியானது விஷம் நீக்கும் மூலிகைகளை இனம் கண்டு அந்த மூலிகைகளின் வேரின் மேல் குறித்த ஹோரை நேரத்தில் படுத்து அதனுடைய உடல் சூட்டில் சில மூலிகா பந்தனங்களை ஏற்படுத்திப் பிறகு அந்த மூலிகைகளை உட்கொள்கிறது. எனவே தான் புலிப் பாலுக்கு கபால சம்பந்தப்பட்ட நோய்களை நிவர்த்தி செய்கின்ற அதியற்புத மூலிகா சக்தி உண்டு.

எனவே இவ்வாறு புலியானது தான் வேட்டையாடுகின்ற நேரம் போக மற்ற நேரங்களில் எல்லாம் பலவிதமான மூலிகைப் புதர்களில் நெடுநேரம் உறைந்து, பதுங்கி, மறைந்து வாழ்வதால்தான் அதுனுடைய தோலுக்கு மூலிகா யோக சக்திகள் நிறைய உண்டு. மேலும் கஷாயம், பஸ்மம், அரிஷ்டம் போன்ற பல வகைகளில் தயாராகின்ற சித்த, ஆயுர்வேத மருந்துகளைப் போன்று புலித் தோலுக்கு மூலிகா யோக சக்தியை பல்லாண்டுகளுக்கு நிலை பெறச் செய்கின்ற சக்தி நிறைய உண்டு. எனவேதான் புலித்தோலைப் பலவிதமான யோகாசனங்களுக்காக ஆசனப் பலகையாகப் பயன்படுத்துகின்றோம். குறிப்பாக, முறையற்ற காம எண்ணங்களை முறியடித்து நந்தன யோக சக்தியைப் பெற்றுத் தரும் வல்லமை புலித் தோலுக்கு உண்டு! ஆதலின் துறவிகளும் சந்நியாசிகளும் புலித்தோலில் யோகம் கொள்கின்றனர்.

மயிலின் தேவ மகிமை
தெய்வீக மற்றும் தேசியப் பறவையாகிய மயில்கள் காரண காரியமின்றி இறத்தல் என்பது நாட்டின் ஆன்ம பலத்தை மிகவும் பாதிக்கும். குறிப்பாக, செவ்வாய் கிரக அம்சங்கள் பெரிதும் பாதிக்கப்படும் வீடு, வாசல், தொழிற்சாலைக் கட்டிடங்கள், நிலங்களும் வெள்ளம் போன்றவற்றால் சேதமுறும். மயில்கள் ஸ்திரத் தன்மையைக் குறிக்கின்றன. மயில் பீலிக்கு எத்தகைய தோஷங்களையும் நிவர்த்தி செய்யக் கூடிய மயூர பந்தன யோக சக்திகள் உண்டு. எனவேதான் இறைவனுக்கு மயில் பீலியால் சாமரம் வீசுகின்றோம். ஆனால் மயில் பீலியைப் பெறுவதற்காகவும், இறைச்சிக்காகவும், தைலத்திற்காகவும், பலரும் அதர்மமான முறையில் மயில்களை வேட்டையாடியே இந்தியாவில்  மயிலினம் அழிந்து விட்டது. இதற்கும் மக்களே பொறுப்பேற்க வேண்டும். பாரதமெங்கும் இறை நெறிச் சத்சங்கங்களை அமைத்து முருகனுடைய வாகனமாக விளங்குகின்ற மயிலின் தெய்வீக சக்தியைப் பற்றி பட்டிதொட்டி எங்கும் பரப்பினால் தான் மயிலினம் மேலும் எவ்வித அழிவின்றி பாதுகாக்கப்படும் அல்லவா? இதை ஏன் பலரும் செய்ய முன்வரவில்லை! ?

எனவே மயிலினங்கள் சமீபத்தில் பரிதாபகரமான முறையில் இறந்தமைக்காக மக்களே தார்மீகப் பொறுப்பேற்று சித்திரை, விசாகம், கார்த்திகை நட்சத்திர தினங்களிலும், செவ்வாய்க் கிழமைகளிலும் குன்றுதோறும் ஆடும் குமரன் தீர்த்தங்களில் மயில்களின் நற்கதிக்காகக் காருண்ய தர்ப்பணம் இட்டு கொத்துக் கடலை, நிலக்கடலை, பொட்டுக் கடலையாலான உணவுப் பண்டங்கள் (சுண்டல், பருப்புத் தேங்காய்) ஆகியவற்றை ஏழைகளுக்குத் தானமாக அளித்துவர இவற்றைப் பெற்று உண்டு ஏழைகள் பெறுகின்ற ஆனந்தமே மயில்களுக்கு ஆத்ம சாந்தி அளித்திடும்! பொதுவாக மயில்கள் இறப்பது நாட்டிற்கு நல்லதல்ல, ஒரு மயில் இயற்கையாக இறந்தால் கூட அதனை எவ்வாறு தகனமோ, புதைப்பதோ செய்ய வேண்டும் என்பதற்காக மயூர தேக தகனக் கிரியை ரகசியங்களும் நிறைய உண்டு. எனவே ஒரு மயிலின் பவித்திரமான உடலைத் தக்க முறையில்தான் தகனம் செய்திட வேண்டும்.. இயற்கையாக இறந்த மயிலைத் தக்க வந்தன முறைகளுடன் தகனம் செய்தல் என்பது பெறுதற்கரிய பாக்யமாகும்.

பூமியில் ஏதேனும் ஒரு பகுதியில் பட்சிகள் காரண காரியமின்றி இறக்குமாயின் அவ்விடத்தில் ஜீவ இம்சை நிறைந்திருக்கின்றது என்பது பொருளாகும். கருக்கலைப்பு, தொழிலாளர்களை வதைத்து வேலை வாங்குதல், உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் தராதிருத்தல், பசுக்களை வதைத்துக் கன்றுகளுக்குத் தேவையான பாலை விடாமல் பாலை ஒட்டக் கறத்தல், பறவைகளின் கூடுகளைக் கலைத்தல், மருமகளை, மாமியாரை இம்சித்தல் போன்ற பாவ வினைகள் நிறைந்திருக்கும் இடங்களில்தாம் இதைக் காட்டும் வகையில் பட்சிகளின் இறப்பு ஏற்படும். மனித குலத்தின் காருண்யக் கடமையில் அலட்சியம், கவனக் குறைவு போன்றவை இருக்குமாயின் அதற்கு அந்தந்தப் பொறுப்பில் இருப்பவர்கள் பலத்த தோஷங்களுக்கும் தீவினைகளுக்கும் ஆளாவர் என்பதை உணர்ந்திடுக, இதற்கு பித்ரு தர்ப்பணங்களே தக்க பிராயச்சித்தத்தைப் பெற்றுத் தரும்.

விக்ரம வருட ராஜ மாளய பட்சம்

மாளய அமாவாசை என்பது உங்களுடைய முன்னோர்களுக்காக நீங்கள் அளிக்க வேண்டிய நீத்தார் கடன் நிறைவு பூஜையாகும், உங்களுடைய தாத்தா, பாட்டி, அப்பச்சி, ஆயா போன்ற உங்களுடைய மூதாதையர்கள் உத்தம தேவ நிலைகளை அடைந்து இன்றைக்கும் மேலுலகில் நீத்தார் உலகங்களிலிருந்து ஆசீர்வாதம் வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இவற்றை முறையாகப் பெற நீங்கள் அளிக்கும் ‘பணம்’ தான் தர்ப்’பணமா’கிய எள்ளு தண்ணீர் பூஜையாகும்.. முதியோர் தர்ப்பண பூஜை மிகமிக எளிதானதே. ஆறு தர்ப்பைகளைக் குறுக்கு நெடுக்காகப் பரப்பி உங்களுடைய உள்ளங்கையில் நீரை ஏந்தி இறந்தவர்களின் பெயரைச் சொல்லி நீரைத் தாரையாக தர்ப்பைக் கட்டத்தின் மேல் ஊற்றுதலே தர்ப்பண பூஜை எனப்படுகிறது. இந்த எளிய பூஜையிலேயே மூதாதையர்கள் திருப்தி அடைகின்றார்கள் என்றால் இதனைத் தவறவிட்டது பெரும் தப்புதானே!

உங்கள் குழந்தைகள் நல்ல பண்புடன் நல்ல ஒழுக்கத்துடன் வளர்ந்து கல்வி கற்று நல்ல வேலையில் அமர்ந்து நன்முறையில் திருமண வாழ்வை அடைவதற்கு மாதப் பிறப்பிலும் அமாவாசை திதியிலும் சூரிய சந்திர கிரகண நாட்களிலும் செலவே இல்லாத எளிய தர்ப்பண பூஜையைச் செய்து வாருங்கள். எளிய தர்ப்பண முறை பற்றி உங்களுக்குப் புரியவில்லை என்றால் ஸ்ரீஅகஸ்திய விஜயம் உங்களுக்குத் தக்க விளக்கங்களைத் தரக் காத்திருக்கின்றது. சுயவிலாசமிட்ட, தபால் தலையுடன் கூடிய உறையிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு உங்கள் வீட்டிலும் தர்ப்பண பூஜை மலர்வதற்கு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.

மாளய அமாவாசை எனப்படுகின்ற நீத்தார்களுக்கென தேய்பிறை பூஜை 15 நாட்களுக்கு அமைகின்றது. அமாவாசை திதியில் சூரிய சந்திர கிரகங்கள் ஒன்று கூடுவதால் இந்த இணைப்பில் சூரிய சந்திர உலகம் எனப்படும் நீத்தார் நெடுஞ்சோதி படலம் (சோமாதித்ய யதிமண்டலம்) ஏற்படுகின்றது. மாளய பட்ச அமாவாசையில் ஏற்படுகின்ற பித்ரு மண்டலமிது! அக்னி குண்டத்தில் தேவர்களுக்கு நாம் உணவாக அளிக்கின்ற பசுநெய், அவல், பொரி, உடைத்த கடலை, பேரீச்சம்பழம், திராட்சை போன்றவற்றை ஸ்வாஹா தேவதைகள் தான் எடுத்துச் சென்று தேவர்களுக்கு அளிக்கின்றார்கள், இதேபோல தர்ப்பணத்தில் நாம் கொடுக்கும் தர்ப்பண நீரை ஸ்வதாதேவியே எடுத்துச் சென்று நீத்தார் உலகத்தில் கண்ணுக்குத் தெரியாத வடிவில் உள்ள நம் மூதாதையர்களுக்கு அளிக்கின்றாள். பொதுவாக அனைத்து அமாவாசை திதிகளிலும் ஸ்வதா தேவி நாம் ஊற்றும் எள்ளையும் தண்ணீரையும் வாங்கி வானத்தில் எங்கெங்கோ உள்ள நீத்தார் உலகங்களுக்கு எடுத்துச் செல்கின்றாள்.

மாளய அமாவாசையின் சிறப்பு என்ன? மற்ற அமாவாசைத் திதிகளில் நம் மூதாதையர்களைத் தேடி எங்கெங்கோ செல்கின்ற ஸ்வதா தேவிகள் மாளய அமாவாசையில் எல்லா மூதாதையர்களும் சூரிய சந்திர உலகத்திற்கு வந்து போவதால் அவர்களால் அனைத்து உறவினர்களையும் அங்குச் சந்திக்க முடிகின்றது. இதற்குக் காரணம் இந்தச் சூரிய சந்திர உலகத்தில்தான் எப்படி ஆடிக் கிருத்திகை அன்று ஊர் ஜனங்கள் திரளாக வந்து திருவிழா கொண்டாடுகின்றார்களோ அதே போல மாளய அமாவாசையில் நம்முடைய மூதாதையர்கள் சூரிய சந்திர உலகில் திருநாள் கொண்டாடுகின்றார்கள். எனவே மாளய அமாவாசையில் நீங்கள் ஊற்றுகின்ற எள் தண்ணீரை ஸ்வதா தேவி மிகவும் சுலபமாக இறந்த எல்லார் கையிலும் சேர்த்து விடுகிறாள். இறந்த உறவினர்கள் மீண்டும் எந்தப் பிறவி எடுத்திருந்தாலும் அந்தப் பிறவியில் அவர்களுக்கு மிக முக்கியமாகத் தேவைப்படுகின்ற காரியத்திற்கு தேவையான உதவியைக் கால சூழ்நிலைக்கு ஏற்றபடி இந்த ஸ்வதா தேவதை அவர்களுக்கு மாற்றுப் பண்டங்களாக உருவாக்கித் தந்து விடுகின்றது. ஆகவே நீங்கள் உண்மையாக உங்களுடைய இறந்த உறவினர்களுக்கு உதவ வேண்டும் என்றால் நீத்தார் நீர்க் கடனாகிய எள்ளுந் தண்ணீர் வார்த்து பூஜித்திடுதல்தான் மிகமுக்கியமாகக் கருதப்படுகின்றது.. இதுதான் மாளய அமாவாசை தர்ப்பணமாகும்.

மாளயபட்ச அமாவாசை தர்ப்பணப் பொது நியதிகள்

1. மற்ற அமாவாசை போல் மாளய பட்சத்தின் 15 நாட்களிலுமே முதலில் வழக்கம்போல் நம்முடைய முன்னோர்களுக்கும் பிறகு விசேஷமான தர்ப்பணங்களையும் நிறைவேற்றிடுக.

2. உதாரணமாக மாளய பட்ச சஷ்டி திதி அன்று வாகன விபத்தில் இறந்தவர்களுக்கு விசேஷமான தர்ப்பணம் அளிக்க வேண்டும் என்றால் நம் குடும்பத்தில் அவ்வாறு நிகழவில்லையே என்று எண்ணாதீர்கள் இதனை ஓர் அற்புத சமுதாய சேவையாகக் கருதி வாகன விபத்தில் இறந்தவர்கள் உங்கள் உறவினராய் இல்லாவிட்டாலும் கூட எவருக்கும் தர்ப்பணம் அளித்திடலாம் அல்லது செய்தித் தாளில் ஏதேனும் விபத்து பற்றி நீங்கள் அறிய வந்தால் அதில் இறந்தவர்கள் முன்பின் தெரியாதவர்களாக இருந்தால்கூட அவர்களுக்கும் தர்ப்பணம் இடலாம்.. அவர்கள் பெயர் தெரியாவிட்டாலும் கூட இந்தச் சம்பவத்தில், விபத்தில் இறந்தவர்கள் நற்கதிக்காக இந்த தர்ப்பணம் அளிக்கின்றேன் என்று சங்கல்பம் செய்து எள்ளும் நீரும் வார்த்து தர்ப்பணம் அளித்திடலாம்.

3. பொதுவாக பித்ருக்கள் மேலுலகிலிருந்து தர்ப்பண பூஜையை ஏற்கும் நேரத்தில் நீங்கள் எள்ளும் நீரும் வார்ப்பதே சிறப்புடையது. அந்த பித்ரு தர்ப்பண நேர இரகசியத்தை அறிந்த சற்குருவிடம் விளக்கங்களைப் பெறவும். எனினும் சூரியன் உதயமாகும் நேரத்தை ஒட்டி தர்ப்பணம் அளிப்பது சிறப்புடையது. பொதுவாக சூரியன் உதயமாகும் நேரத்திலிருந்து மறையும் நேரத்திற்குள் தர்ப்பணத்தை முடித்து விடவும். சூரியன் மறைந்த பின் தர்ப்பணம் அளித்தல் கூடாது..

4. பித்ரு தர்ப்பணம் பற்றி அடிப்படை விளக்கங்களைப் பெற விரும்புவோர் எளிய தர்ப்பண பூஜை முறைகள் என்னும் எமது வெளியீட்டைக் காணவும்.

5. எள் தண்ணீர் வார்க்கும் போது கீழ்க்கண்ட மந்திரத்தை ஓதுவது சிறப்புடையது..

நீத்தார் நினைவொடு நெடுங்கிடையாய் நாமளிக்கும்
நீர்த்தாரை எள்ளொடு நுணல் தருப்பை யாவுமாய்
மூத்தார் துதி பாடி மூலவரை யாம் பணிவோம்!
................... ( மூதாதையர் பெயர் ) ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.

உதாரணமாக கிருஷ்ணசாமி என்பது மூதாதையர் பெயராக இருந்தால்...  கிருஷ்ணசாமி ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி என்று மும்முறை கூறித் தர்ப்பணம் அளிக்கவும்.

6. தர்ப்பணம் அளிக்கும்போது தந்தை வழியில் மூன்று தலைமுறையினருக்கும், தாய் வழியில் மூன்று தலைமுறையினருக்கும், (ஆண், பெண் இருபாலருக்கும்) மொத்தம் 12 பேருக்கு அவர்கள் பெயரைச் சொல்லித் தர்ப்பணம் அளிக்கவும்.

விக்ரம ஆண்டிற்குரித்தான மாளயபட்சத்தை ராஜ மாளய பட்சம் என்று சித்தர்களின் ஞான பத்ர கிரந்தங்கள் அறிவிக்கின்றன. காரணம், திதிகளுக்கெல்லாம் மூலமூர்த்தியான திதி பைரவர் உற்பவித்த ஆண்டு விக்ரம ஆண்டாகும். பஞ்சாங்கம் என்பது நாள், திதி, யோகம், நட்சத்திரம், கரணம் ஆகிய ஐந்தையும் கொண்டிருப்பதைப்போல பஞ்ச காலங்களையும் ஆள்கின்ற பஞ்சயோக பைரவ மூர்த்தியாக, ஐந்து பைரவ மூர்த்திகளின் தரிசனம்தான் திதி தேவதைகளின் பரிபூரண அனுகிரகத்தைப் பெற்றுத் தருவதாகும். எங்கு ஐந்து பைரவ மூர்த்திகளை தரிசித்திடலாம்? நாள், கிழமை, பாராது காரியங்கள் செய்வதால் ஏற்படும் துன்பங்களிலிருந்து நிவாரணம் பெறுவது எப்படி? முக்கியமான திதிகளி ஐந்து பைரவ மூர்த்திகள் ஒரு சேரக் காட்சியளிக்கும் பஞ்சபைரவ மூர்த்திகளின் தரிசனத்தைப் பெற்று ஐந்து வகையான எண்ணெய் தீபம் ஏற்றி ஐவகை காய்கறிகள் சேர்ந்த அன்னத்தை தானமாக அளித்திடுக.

ராஜ பிரதமை திதி விசேஷ தர்ப்பணம ஆண் வாரிசில்லா ஏக்கங்கள் தணிய

ஒவ்வொரு திதிக்கும் உரித்தான சப்தங்கள் பல உண்டு. ஆலயங்களில் அக்காலத்தில்  அந்தந்த திதிகளுக்கு உரிய வாத்தியங்களையே வாசிப்பார்கள். காற்றின் மூலம் பரவுவது தானே சப்தம்! மழையில் ஏற்படும் ஒலி, சூரிய மறைவின் போது ஏற்படும் கடல் அலை ஒலி, உச்சி வெயிலில் காற்றில் ஏற்படும் சப்தம் இவ்வாறாகப் பல வகைகளில் காற்று மண்டலத்தில் சப்த மாற்றம் ஏற்படுகின்றது அல்லவா! திதி என்பது சூரிய சந்திர கிரகங்களுக்கு இடையே உள்ள தூரத்தைக் குறிப்பதால் சூரிய சந்திர கிரகங்களுக்கு இடையே உள்ள உஷ்ணம், குளிர்ச்சியைப் பொறுத்து உலகில் ஒலியின் தன்மையும் வேறுபடும்.

பஞ்ச பைரவ மூர்த்திகள்
ஆவூர்

பிரதமை, திதிக்குரித்தான ஒலிகளே தாரை, துந்துபி, சங்கு போன்ற வாத்ய ஒலிகளாகும். பிரதமை திதியில் வாத்தியங்களில் பயிற்சி கொள்வோருக்கு ஸ்வர லாவண்யங்கள் எளிதில் கைகூடும். குறிப்பாக ப்ருகா என்று சொல்லப்படுகின்ற ஈர்ப்பு இசை நாள ஒலியில் இந்த சக்தியைப் பெற்றிடலாம். இன்றைய ராஜ பிரதமை திதிக்கான தர்ப்பண பூஜைக்கு ஆம்ர வர்ண ராஜ பிரதமை என்று பெயர்.

பாலாடைச் சங்குத் தர்ப்பணம்
 ஒரே ஒரு பெண் குழந்தையைப் பெற்று அதற்குத் திருமணம் நிகழும் முன் பெற்றோர் இறந்து விடுவதால், கூடியிருக்கின்ற உற்றம், சுற்றம் அப்பெண்ணை ஏமாற்றிச் சொத்து நிலபுலன்களைச் சுருட்டி விடுவார்கள். இதனால் ஆதரவின்றி அனாதையாகவே அப்பெண் வாழ்ந்து மடிவாள். ஆனால் பிறரால் ஏமாற்றப்பட்ட அப்பெண்ணின் ஆவியானது ஏமாற்றியவர்களைச் சும்மா விடாது. பல ஜென்மங்களுக்கும் துன்பங்கள் தரும். ஆனால் அறிந்து செய்த இப்பாவத்திற்கும் பிராயச்சித்தம் தேடியாக வேண்டும் அல்லவா? எனவே இவ்வகையில் பிறரை ஏமாற்றியோர் ராஜ பிரதமையாகிய இன்று பாலாடைச் சங்கு என்னும் அபூர்வ சங்குகளைக் கொண்டு தர்ப்பணம் இடுவதால் இச்சங்கில் ஏற்படும் சூட்சும ஒலியானது ஓரளவேனும் பிராயசித்தத்தைப் பெற்றுத் தரும்.

ராஜ பிரதமை திதி தர்பண முறை
ஒரு வாழையிலையின் நடுவில் பச்சரிசியைப் பரப்பி நான்கு பாலாடைச் சங்குகளை நுனிகள் ஒன்றோடொன்று தொடுமாறு அமைத்துச் சங்குகளின் மேல் தர்ப்பைச் சட்டத்தை அமைக்க வேண்டும் இந்த தர்ப்பை சட்டத்தின் மேல் காமதேனு பசுமடிக் காம்புச் சங்கு என்னும் ஒரு விசேஷமான சங்கால் தீர்த்தம் வார்த்துத் தர்ப்பணம் அளிக்க வேண்டும். பசுவின் பால்மடி போன்ற வடிவுடையதே இச்சங்காகும். ஆலய தீர்த்தங்களிலும், கடற்கரைகளிலும் ராஜ பிரதமை திதி தர்ப்பணத்தை நிகழ்த்துவது சிறப்பானதாகும். இயலாதோர் இல்லங்களிலும் தர்ப்பணம் அளித்திடலாம். பொதுவாக வியாபாரம், பதவி காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழ்பவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து நிம்மதியுடன் வாழ ராஜ பிரதமை திதி வழிபாடு பெரிதும் உதவுகின்றது.

இரட்டையர்களில் ஒருவர் இறந்திருப்பின் மற்றவருக்காக சிறப்பான தர்ப்பணம் அளிப்பதற்கான சிறப்பான நாளிது. ஒரேயொரு பெண் குழந்தையைப் பெற்று அதன் மூலம் வருகின்ற சந்ததிகள் எல்லாமே பெண்களாக வருவதைக் கண்டு வருந்தி இறந்த பாட்டனார்கள், முப்பாட்டனார், பாட்டிகளுக்கு அவர்களுடைய ஏக்கம் தீர்வதற்காக தர்ப்பணம் அளிக்க வேண்டிய சிறப்பான நாளிது.. இவர்களுடைய மருமகன்கள் இன்றைக்கு ஒரு முழுத் தாமரையின் மேல் தர்ப்பைச் சட்டம் அமைத்து ஆண் குழந்தை வாரிசு இல்லாமைக்காக ஏங்கி இறந்த தாத்தா, பாட்டிமார்களின் பெயரைச் சொல்லித் தர்ப்பணம் அளிக்க வேண்டும். மருமகப் பிள்ளைகள் எந்தக் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தனது பெற்றோர்களுக்கான தர்ப்பணத்துடன் இதனையும் சேர்த்துச் செய்தல் சிறப்புடையதாகும். ஆண் வாரிசு இல்லாது இறந்த எவருக்கும் ஜாதி, மத, இன, குல பேதமின்றி தர்ப்பணம் அளித்திடலாம்.

ராஜ துவிதியை திதி விசேஷ தர்ப்பணம் பலதாரக் கர்ம வினைகள்

இரண்டு மனைவிகளைக் கொண்டவருடைய குடும்பத்தில் இரண்டாம் தாரத்துக் குழந்தைகளை முதல் குடும்பத்தினர் சரியான முறையில் நடத்துவதில்லை. இதனால் இரண்டாம் தாரத்தின் பிள்ளைகளும், பெண்களும் ஆதரவின்றிப் பல கஷ்டங்களுடன் வாழ்வார்கள்.. சொத்திலும் அவர்களுக்கு எவ்விதப் பங்கும் கிட்டாமையால் அவர்கள் எப்போதும் துன்பங்களில் உழல்வர். இதனால் மிதமிஞ்சிய கவலைகளினால் இரண்டாம் தாரமோ அல்லது இரண்டாம் தாரத்துக் குழந்தைகளோ இறந்திடுவர். இதன் சாபம் முதல் தாரத்தையும் சந்ததியினரையும் பாதிக்கும்.

இதற்குப் பிராயசித்தமாக இன்று துவிதியை திதியில் முதலாம் தாரத்துக் குடும்பத்தினர் தம்மால் ஏமாற்றப்பட்ட தாரத்துக் குடும்பத்தினர் தம்மால் ஏமாற்றப்பட்ட இரண்டாம் தாரத்துக் குழந்தைகள் பெண்களுக்கான உரிய சொத்துப் பங்கினைத் தந்து, (இறந்த) தந்தைக்கு தர்ப்பணம் அளித்திட வேண்டும். முதலாம் தாரத்துக் குடும்பம், இரண்டாம் தாரத்துக் குடும்பம் இரண்டிலுமே உள்ள ஆண் பிள்ளைகள் இன்றைய திதியில் தந்தைக்கு தர்ப்பணம் அளித்தாக வேண்டும். இரண்டு தாரங்களுடன் பல குழந்தைகளையும் பெற்றுவிட்டு இறந்தவருடைய ஆவியானது மேலுலகில் நன்முறையில் சாந்தமடைந்து மனம் குளிர்ந்தால்தான் தொடர்ந்து வருகின்ற அவருடைய குடும்ப சந்ததியினர் நலம் பெறுவர். இல்லாவிடில் மன ஏக்கங்களுடனேயே  அந்த ஆவியானது அலைவதால் அதனுடைய ஏக்கங்கங்களே பலவிதத் துன்பங்களாக இரண்டு தாரக் குடும்பங்களுக்கும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். முதல் தாரத்தினால் வஞ்சிக்கப்பட்ட இரண்டாம் தாரக் குடும்பம் நல்ல தீர்வுகளைப் பெறும் வரையில் (தந்தையின்) ஆவி நல்ல பேற்றை அடைய முடியாது.

இவ்வகையில் பரம்பரைச் சொத்து, பரம்பரைப் பதவி போன்றவற்றில் முதல் தாரத்திற்கு ஆண் வாரிசு இல்லாமலும் இரண்டாம் தாரத்திற்கு நிறைய ஆண் பிள்ளைகள் வாய்த்தும் பரம்பரைச் சொத்து, பதவிகளில் நிறைய சண்டைகள் ஏற்படும். இந்தப் பகைமையினால் இரண்டு குடும்பங்களிலுமே இறந்தவருக்கு தர்ப்பணம் அளிக்காமல் விட்டுவிடுவார்கள்.. தர்ப்பண சக்தி இல்லாமையால் இறந்தவருடைய ஆவியானது மேலுலகம் செல்ல முடியாமலும் மீண்டும் பிறவி எடுக்க முடியாமலும் நரகவாச மண்டலத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும். இதுவே சாபமாகி பரம்பரை வாரிசுகளை மிகவும் பாதிக்கும்.

பாலாடைச் சங்கு என்பது ஜீவ சக்திகள் நிறைந்ததாய் நல்ல வாரிசுகளைப் பெற்றுத் தரக்கூடிய தேவ சக்தியைக் கொண்டதாகும். அக்காலத்தில் மன்னர்களும் தங்களுடைய ராஜகுருவின்  அறிவுரையின்படி பாலாடைச் சங்கினால் தர்ப்பணம் அளித்து தங்கள் வம்ச விருத்தியைப் பாதுகாத்துக் கொண்டார்கள். இதற்காகத்தான் பாலாடைச் சங்கு என்று சுபமங்கள பெயரை இதற்கு அளித்துள்ளார்கள். பாலாடை என்பது கிண்டி என்றும் பெயர் கொண்டு வம்ச விருத்திக்கான சுபமங்களப் பொருளாய் விளங்குகின்றது.

ராஜ திரிதியை விசேஷ தர்ப்பணம் குழந்தையைப் பிரித்த தோஷம் தீர

இன்றைக்கும் பல மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளை மாற்றிவிடுவதாகப் புகார்கள் வருவதுண்டு. இதனால் தாயை விட்டுக் குழந்தையைப் பிரித்த தோஷம் உண்டாகின்றது. குழந்தையை மாற்றிய வினைகளும் சேர்ந்து கொள்ளும். இத்தீவினையின் விளைவாக அடுத்த பிறவியில் எவ்வளவுதான் கஷ்டப்பட்டு வளர்த்த பிள்ளை, பெண்ணானாலும் தமக்கு எவ்வித உதவியும் செய்யாது பிறர் வீட்டிற்குச் சென்று வாழ்ந்து பெற்றோர்களுக்கு மன வேதனையை ஏற்படுத்தும். இவ்வாறு குழந்தையைத் தாயிடமிருந்து பிரித்ததற்கும், குழந்தையை மாற்றியதற்கும் உண்டான பெரும் பாவங்களுக்கு ஓரளவு பிரயசித்தமாக இன்று வாழை இலையில் பச்சரிசியைப் பரப்பி 36 கட்டை தர்ப்பைகளைப் பிரித்து வைத்து அதன் மேல் தர்ப்பை சட்டம் வைத்து ஐவிரல் சங்கு கொண்டு தர்ப்பணம் அளித்தலால் ஓரளவு பிராயச்சித்தம் பெறலாம். ஐவிரல் நதி தீர்த்தங்களை நிரப்பித் தர்ப்பணமிட வேண்டும். பஞ்சபூத ரேகை சக்திகள் நிறைந்ததே ஐவிரல் சங்கு.

சில குடும்பங்களில் ஏதேனும் ஒரு மகள் அல்லது மருமகள் மேல் கொண்ட வெறுப்பால் பிறந்த குழந்தைகளை மாற்றி வைத்து அல்ப சந்தோஷம் கொள்வார்கள்..ஆனால் இதுவே பெரும் தீவினைகளாய் வெடித்துப் பெரும் பாவமாய் மாறுகிறது. ஆனால் இறந்த பின் மேலுகிற்குச் செல்கின்ற தாய் குழந்தை மாற்றப்பட்ட விஷயத்தைத் தன்னுடைய பெண், பிள்ளைகளுக்குத் தொலை நுண்ணறிவு (telepathy) மூலமாக ஏதேனும் ஒரு வகையில் உணர்த்தி விடுகிறாள். இதனால் த்ன்னை வளர்த்த தாயோ, தந்தையோ தனக்குரித்தான பெற்றோர்கள் அல்லர் என்பதை ஒருவர் உணர வரும்போது அவருடைய மன வேதனைகள் எப்படி இருக்கும்? சற்றே சிந்தித்துப் பாருங்கள்! இதற்கெல்லாம் காரணம் நந்துருணிபோல், கூனி போல் குழந்தையை மாற்றியவர்களுடைய சதிச் செயல்தானே?

இவ்வாறு மாற்றப்பட்டு பெரியவர்களாகிவிட்ட ஆணோ பெண்ணோ தன்னை வளர்த்த தாய், தந்தையர்க்கு மட்டும் அல்லாது தன்னைப் பெற்றெடுத்தோருக்கும் தர்ப்பணம் அளித்தாக வேண்டும். இதனால் இரண்டு பெற்றோர்களுக்குமே மேலுலகில் நல்ல புண்ணிய சக்திகள் கிட்டுவதுடன் யார் குழந்தையை மாற்றினார்களோ அவர்களும் மனம் திருந்தி பிராயசித்தத்தைப் பெற வேண்டிய நிலையை உணர்கின்றார்கள்.  குழந்தையை மாற்றிய தீவினையைச் செய்தவர்களுக்கு ஏன் பரிகாரத்தைப் பெற்றுத் தர வேண்டும்? குழந்தையை மாற்றி வைப்பது என்பது பெரும் பாவம் அல்லவா? ஆனால் எவ்வாறு திருடன் ஒருவன் நற்காரியங்களையும் செய்கின்றானோ இதேபோல நந்துருணியாக (கூனி போல்) செயல்பட்டுக் குழந்தையை மாற்றியவர்கள் மேலுலகில் தம்முடைய பாவச் செயல்களுக்காக வருந்தி பிராயசித்தம் பெற ஏங்குகையில் பூலோகத்தில் அளிக்கப்படுகின்ற தர்ப்பணங்களே இவர்களுக்கு (நந்துருணிகளுக்கு) பிராயசித்தத்தைப் பெற்றுத் தரும். இவ்வாறாக, தக்க சற்குரு ஒருவர் கிட்டிடில் அனைத்து விதமான பாவங்களுக்கும் தக்க தீர்வுகளைப் பெற்றிடலாம். மாளயபட்சத் தினசரி தர்ப்பணங்களும் எத்தனையோ தீவினைகளுக்குத் தக்க பிராய சித்தங்களைப் பெற்றுத் தருகின்றன

ராஜ சதுர்த்தி திதி தர்ப்பணம் கருவலரிச் சங்கு மகிமை

ஒரே பெண் வாரிசை வைத்து விட்டுப் பெற்றோர்கள் இறந்திட உற்றம் சுற்றத்தார்கள் அப்பெண்ணை ஏமாற்றி அச்சுறுத்தி கற்பிற்குக் களங்கம் விளைவிப்பதாக மிரட்டி, பொய்க் கையெழுத்து வாங்கி, கொன்று விடுவதாக அச்சமூட்டிச் சொத்து நிலபுலன்களைப் பிடுங்கி அநாதையாக்கிப் பெரும்பாவத்தைச் சேர்த்துக் கொள்கிறார்கள். இத்தகைய கொடுமையினால் அநாதையாகிய பெண் மனமுடைந்து இறந்துவிட்டால் அதனுடைய ஆவி மேலுலகிலிருந்து கொண்டு தன்னை ஏமாற்றியவர்களைப் பழி வாங்கிவிடும்.

இத்தகைய கொடுங்கோலர்களுக்குப் பிராயச்சித்தம் பெற்றுத் தரவேண்டியது சரியா? ஒரு வேளை இத்தகைய கொடூரங்களைப் புரிந்தவர்கள் உயிரோடு இருந்தால் தங்களுடைய தவறுகளுக்கு உண்மையிலேயே பிராயசித்தம் பெற விழைந்தால் அவர்கள் அப்பெண்ணிற்கு தர்ப்பணமிட்டுத் தாங்கள் தவறாகப் பெற்ற சொத்தை இனியேனும் தர்ம காரியங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு கொடுஞ் செயல் புரிந்தவர்கள் இறந்துவிட்டால் அவர்களால் அநீதி இழைக்கப்பட்ட பெண்ணின் ஆவி குற்றம் புரிந்தவர்களின் சந்ததியை நிச்சயமாகப் பழி வாங்கும். தன்னுடைய தாயோ தந்தையோ செய்த பெரும் பாவங்களுக்குத் தாங்கள் பலியாக வேண்டுமா என்று அவர்களுடைய சந்ததியினர் அஞ்சினால் அவர்கள் இன்று (சதுர்த்தி திதி) குற்றம் புரிந்த தங்களுடைய பெற்றோர்களுக்கும், ஏமாற்றப்பட்ட பெண்ணிற்கும் தர்ப்பணம் அளித்தால் அப்பெண்ணின் ஆவி சற்றே மனம் மாறி அக்குடும்பத்தைக் காப்பாற்றும். இக்கொடுஞ் செயல்களைப் புரிந்து நரகங்களில் அவதியுறும் ஆவிகளுக்கும் கொஞ்சம் கொஞ்சமாகப் பிராயசித்தம் கிட்டத் தொடங்கும். இதற்கு உதவி புரிவதுதான் கருவலரிச் சங்கு தர்ப்பணமாகும். இந்தக் கருவலரிச் சங்கானது ஆயுள்காரகராகிய சனீஸ்வர மூர்த்தியின் லோகத்திலிருந்து ஜீவவித்தினைப் பெற்று மழை மூலமாகக் கடலை அடைகின்றது. ஏனென்றால் கடல் நீரில் செய்யப்படுகின்ற பித்ரு தர்ப்பணங்களைச் சில குறிப்பிட்ட தினங்களில் மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்கின்றார்கள். இந்த தர்ப்பண சக்தியின் மகிமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆவி கூட மனம் குளிர்ந்து சாபங்களைத் தணிக்கக் கூடும். ஆனால், முறையாக ஆத்மார்த்தமாக அப்பெண்ணிற்குத் தர்ப்பணங்களைச் செய்து வர வேண்டும். விக்ரம ஆண்டின் மாளயபட்ச ராஜ சதுர்த்தி திதிக்குரிய விசேஷ பலன்களாகத்தான் இந்த பிராயசித்தம் கிட்டுகின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ராஜ பஞ்சமி திதி தர்ப்பணம் அரிய வேத சக்திகளைப் பெற

பித்ரு நிலைகளுக்கும் அடுத்தபடியான உத்தம நிலைகள் பல உண்டு, இவ்வாறாக நம் பித்ருக்கள் அற்புதமான உத்தம நிலைகளை அடைய அடைய அவர்களுடைய தெய்வீக சக்தி மேம்பட்டு நமக்குக் காரிய சித்தியைத் தருவதாக நமக்கு வந்து சேர்கின்றன. பூலோக ஜீவன்களின் உயிருக்குக் கருப்பொருளான ஜீவ சக்தியானது இந்தப் பிரபஞ்சத்தில் நிறைந்திருக்கும் வேத சக்தியால்தான் ஆக்கம் பெறுகின்றது. தமிழ் மறையோ, வடமொழி வேதங்களோ அனைத்துமே எவ்விதப் பாகுபாடுமின்றி சாதி, மத, இன பேதமின்றி யாவர்க்கும் உரித்தானதே. எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வேதத்தை ஓதுதற்கு எவ்விதக் கட்டணமும் பெறாமல் வேதம் ஓதுவதைச் சமுதாயத்திற்குச் செய்யும் இறைப்பணியாக மனமுவந்து ஏற்று வேத சக்தியைப் பரப்புவதற்காகத் தன்னுடைய உடல், பொருள், ஆவியைத் துறந்து சிறப்பாக வேதப் பணியாற்றி மறைந்தோர்க்கு தர்ப்பணம் இடும் நாள் இது.

உத்தாலகப் பொன் வலம்புரிச் சங்கு என்னும் அற்புதமான சங்கில் சந்தனம் கரைத்த தீர்த்தம் எடுத்து ஒரு மரப் பலகையில் அரிசிக் கோலமிட்டு அதன்மேல் வாழை இலையை விரித்து நவதான்யங்களைப் பரப்பி தர்ப்பை சட்டம் வைத்து உத்தம வேதம் ஓதி, தியாகமய வாழ்க்கையை வாழ்ந்து மறைந்தோர்க்குத் தர்ப்பணம் அளித்திடில்  அது அவர்களுக்கு மேலும் பல உத்தம நிலைகளைத் தந்திடும். பெரிய பீடாதிபதிகள், கட்டளைக் குருக்கள், கட்டளைத் தம்பிரான்கள், ஆதீன கர்த்தாக்கள் போன்றோர்க்கு உளப்பூர்வமாகத் தியாக சீலத்துடன் சேவை செய்து இறந்தோர்க்கு இன்று தர்ப்பணம் அளித்திடில் அவர்களுக்கும் உத்தம நிலைகள் கிட்டிடும். இத்தகையோரைப் பற்றி நீங்கள் அறிந்திராவிட்டால் கூட இவ்வாறு சேவை புரிந்தவர்களுக்கு இந்தத் தர்ப்பண சக்தி வந்தடையட்டும் என்று சங்கல்பம் செய்து தர்ப்பணம் அளித்திட்டால் எவருக்கு இந்தத் தர்ப்பணப் புண்ணிய சக்தி செல்ல வேண்டுமோ அவருக்கு இதனை அக்னி பகவானின் பத்னியாகிய ஸ்வதா தேவி எடுத்துச் செல்கின்றாள்.

ராஜ சஷ்டி தர்ப்பண பூஜை வாகன விபத்து மரண வினைகள் தீர

வாகனத் துறை உதிரிபாகங்கள், வாகனத் தொழிற்சாலைகள் போன்றவற்றில் ஈடுபட்டு இறந்தோர்க்கு இந்த சஷ்டி தர்ப்பண பூஜை நற்கதியைத் தரும். மந்தாரை இலை மேல் பச்சரிசியைப் பரப்பி தர்ப்பைச் சட்டத்தை அமைத்திடுக. சுதர்ஸன வட்டச் சங்கு என்ற ஒரு வகை சங்கு உண்டு. நான்கு சுதர்ஸன வட்டச் சங்குகளை மந்தாரை இலைமேல் வைத்து அதன் மேல் தர்ப்பைச் சட்டத்தை வைத்துத் தர்ப்பணம் இட்டிடில் மேற்கண்ட துறையில் வாழ்ந்து இறந்தோர்க்குத் தக்க நற்கதி கிட்டும். மேலும் வாகன விபத்துக்களில் இறந்தோருக்குரித்தான விசேஷமான சங்குத் தர்ப்பண பூஜையிது. வாகனத்திற்கும் வாகன விபத்திற்கும் நமக்கும் சம்பந்தமில்லை என்று எண்ணாது இதனைத் தியாகமயக் காருண்ய தர்ப்பணமாகச் செய்திடில் விபத்துக்களில் இறந்தவர்கல் நாம் அறியாதவர்களாக இருந்தால் கூட அவர்களுக்கு தர்ப்பணப் பலன்கள் சென்றடையும். நமக்கோ நம்முடைய சந்ததியினருக்கோ எவ்வித விபத்தும் ஏற்படாமல் ரட்சையாகவும் இதுகாக்கும்.

ராஜ சப்தமி தர்ப்பண பூஜை அகால மரண வினைகள் தீர

குதிரை வளர்ப்போர், குதிரை லாயங்கள், பண்ணை வைத்திருப்போர் மற்றும் horse power unit-ஐக் கொண்டுள்ள பம்ப் செட் மோட்டார் என்ஜின், வால்வ் தயாரிப்பாளர், விற்பனையாளர்கள், கார், பஸ், லாரி சம்பந்தப்பட்ட துறையிலிருந்து பலத்த விபத்தில் அடையாளம் தெரியாது இறந்தவர்களுக்கும் இந்நாளில் விசேஷமான முறையில் தர்ப்பணமளித்திட இத்துறைகளில் அவர்கள் சேர்த்த பல தீய கர்மவினைகளுக்குத் தீர்வு கிட்டும். பொதுவாக வாகன விபத்தில், தொழிற்சாலை என்ஜின்களில் சிக்கி எவ்வித அடையாளமும் தெரியாது அங்கங்கள் சிதைந்து இறந்தோர்க்கு இன்றைய சப்தமி திதியில் அளிக்கப்படுகின்ற விசேஷமான தர்ப்பணத்தினால் அவர்களுக்கு நற்கதி கிட்டும். கதிர்காமக் கொண்டைச் சங்கு என்ற அற்புதச் சங்கு ஒன்றுண்டு. இலங்கையில் உள்ள கதிர்காமம் முருகப் பெருமான் மிகவும் சக்தி வாய்ந்த மூர்த்தி. செவ்வாய்த் தலங்களுள் ஒன்றாக சித்புருஷர்கள் இதனை அளிக்கின்றனர். வாகன நிலபுலன்களை அளிப்பவர் செவ்வாய் பகவான் தாம்! செவ்வாய் கிரகத்திற்கான மூர்த்தியே ஸ்ரீமுருகப் பெருமானாகிறார். கதிர்காமம் திருக்கோயிலிருந்து எப்போதுமே பரிணமித்துக் கொண்டிருக்கும் குஜசாம்ப ஸ்கந்தக் கதிர்களை கடலில் இருந்து இச்சங்கு ஈர்த்து கிரகித்துத் தன்னுள் தேக்கி வைத்துக் கொள்கின்றது. இதனை பூஜைக்காகவோ தர்ப்பணத்திற்காகவோ பயன்படுத்தும் போது இதில் படிந்துள்ள கதிர்காம குஜ சாம்ப ஸ்கந்த சக்திகள் பூஜை செய்வோருக்கு அபரிமிதமான பலன்களை அளிக்கின்றன.. இத்தர்ப்பண சக்தியைப் பெறுகின்ற மேலுலகில் உள்ள மூதாதையர்களுக்கும் இந்தக் கதிர்காம சக்தியானது பெறுதற்கரிய தெய்வீக சக்தியாதலால் அவர்களும் இந்தச் சங்கின் மூலமாக அளிக்கப்படுகின்ற தீர்த்த சக்தியை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்கின்றார்கள்.

ராஜ அஷ்டமி திதி தர்ப்பணம் (Merciless mercy-killing)

Euthanasia என்று சொல்லப்படுகின்ற கருணைக்கொலை (mercy killing)  பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். மருத்துவ உலகில் பெரிதும் சர்ச்சைக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும்  வார்த்தைகள் இவை. கொடிய வியாதிகளால் பாதிக்கப்பட்டிருப்போர் ஒவ்வொரு விநாடியும்  அதனுடைய துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள், மருத்துவத் துறையில் முடிவே இல்லாத வியாதியால் தினமும் செத்துக் கொண்டு இருப்பதாகக் கருதுகின்ற தீராதபிணிக்குத் தீர்வாக மருத்துவ உலகம் தருகின்ற அவலமான ஆலோசனைதான் euthanasia ஆகும். அதாவது எவ்வாறு இறைச்சிக்காக ஒரு கோழியோ ஆடோ Mechanic device மூலமாக அதிக வலியின்றிக் கொல்லப்படுகின்றதாக எண்ணுகின்றார்களோ அதே போல கடுமையான வியாதிகளால் வாடுகின்ற ஒருவரையும் எவ்வித வலியுமின்றி மருத்துவ ரீதியாகக் கொன்று விடுவதே Euthanasia ஆகும். படிப்பதற்கே அவமானமாக, கேட்பதற்கே மிகவும் அருவருக்கத் தக்கதாக உள்ளது அல்லவா? அப்படியானால் இதில் எவ்வளவு தீவினைகள் சேர்ந்திருக்கும் என்பதை அறிந்திடுங்கள்! பெறுதற்கரிய மானிடப் பிறவியை அழிப்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. இதனால்தான் தற்கொலை என்பதை மேலுலகங்களில் உயிர்க் கொலை என்றே கருதப்பட்டு தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு ஆவியாய், பிசாசாய் அலைகின்ற கொடிய நரகலோக தண்டனைகளை அளிக்கின்றார்கள். கடவுளருளால் நம் பாரதநாட்டில் Euthansia என்ற கொடி செயல் பொதுவாக ஏற்கப்படவில்லை என்பது நல்லதே. ஆனால் மேல் நாடுகளில் தான் இதற்கு ஆதரவாகப் பலத்த பிரசாரம் செய்யப்படுகின்றது. இவ்வகையில் இறந்தோர்க்கு என்ன பிராயசித்தம்? இதற்கு உடந்தையாக இருந்தவர்களும் மனம் திருந்தி வாழ விரும்பலாம் அல்லவா? அல்லது இதற்குக் காரணமாக இருந்தவர்களும் இறந்து மேலே சென்றால் எவருடைய உயிரை euthanasia மூலம் மாய்த்தார்களோ அந்த ஆவியுடன் நித்திய போராட்டத்தைச் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகின்றது. இதனை காருண்யக் கொலை என்று சொல்வதே தவறு! கழிக்க முடியாத இந்த பெரும்பாவத்திற்கு நிறைய நரகலோக வேதனைகளைக் கட்டாயம் அனுபவித்தாக வேண்டும். மேலும் இதற்கு உடந்தையாக இருந்தவர்களுடைய சந்ததியும் இப்பாவச் செயலினால் பெருமளவு பாதிக்கப்படுகின்றது.

தம் பெற்றோர்கள் செய்த கொடும்பாவத்திற்காகக் கடுமையான சோதனைகளை வாழ்க்கையில் அனுபவிக்கின்ற அவர்களுக்கேனும் நல்ல பிராயச்சித்தத்தைப் பெற்றுத் தர வேண்டும் அல்லவா? இவ்வாறான கடுமையான ஆத்ம சோதனைகளுக்குத் தக்க தெய்வீகத் தீர்வை அளிப்பவர் சற்குருவே.! பாலாய வெண் வலம்புரிச் சங்கு என்றதோர் அற்புத வலம்புரிச் சங்கு உண்டு. எவ்வாறு ஒரு உயிரைச் சுமந்து செல்கின்ற வாகனத்திற்கு இரண்டு சக்கரங்களும் அவற்றை இணைக்கின்ற சங்கிலியும் பெல்ட்டும் உள்ளதோ அதுபோல இல்லறத்தை ஓட்டுவதற்குக் கணவன் மனைவி என்ற இரு சக்கரங்கள் அமைந்து அவற்றை இணைக்கும் சங்கிலியே அன்பாகும். இவற்றை இயக்குகின்ற எஞ்சின்தான் இருதயத்தில் உள்ள ஆத்ம யந்திரம்! மார்பின் இடப்புறம் உள்ள ஆத்ம சக்கரத்திற்கு இணையான வலப்புற சூட்சும ஆத்ம சக்கரம் ஒன்று உண்டு. இதனை இயக்குவதுதான் வலம்புரிச் சுழலாகும். இந்தச் சக்தியைக் கொண்டுள்ளதுதான் வலம்புரிச் சங்காகும். இதனால்தான் வலம்புரி விநாயகரின் தரிசனமோ அல்லது வலம்புரிச் சங்கில் பூஜை செய்து பிரசாதமாக பெறப்படுகின்ற பால் , தேன், தீர்த்தம் இவற்றிற்கு இருதய சக்தியை மேம்படுத்தும் ஆற்றல் உண்டு. எனவே மாரடைப்பு (heart attack) நோயினால் அவதியுறுவோர் வலம்புரிச் சங்கினால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து தண்ணீர், தேன் ஆகியவற்றைச் சிறிது பிரசாதமாக உண்டு வந்தால் இருதயம் வலுப்படும். இன்றைய ராஜ அஷ்டமி திதியில் பாலாய வெண்பெரு வலம்புரிச் சங்கினால் தர்ப்பணம் அளிப்பது சிறப்புடையதாகும். இதுவே மேற்கண்ட euthanasia கொடிய செயல்களுக்கு ஓரளவேனும் பிராயசித்தத்தைப் பெற்றுத் தரும். இன்று வாழை இலையில் கேழ்வரகு, தானியத்தை நிறைய பரப்பி, தர்ப்பைச் சட்டத்தை அமைத்து ஆலயங்களிலிருந்து பெறப்பட்ட கோமுக நீரை (கருவறையிலிருந்து வெளியாகும் அபிஷேக நீர்த்தாரை) பாலாய வெண் பெருவலம்புரிச் சங்கில் நிரப்பித் தர்ப்பணம் அளித்து வந்தால் செய்த தவறுக்கு மாற்று வழி காணலாம்

ராஜ நவமி திதி பூஜை மருத்துவத் தவறுகளுக்குப் பரிகாரம்

இன்றைய மருத்துவத் துறையில் குறிப்பாக அறுவை சிகிச்சைத் துறையில் பல பெரும் தவறுகள் நிகழ்கின்றன. எந்தப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமோ அதற்கு எதிர்மாறாகத் தவறான இடத்தில் அறுவை சிகிச்சை செய்து இதனால் வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்படுபவர்கள் ஏராளம். இதற்காக இதில் சம்பந்தப்பட்டோர்கள் பெரும் தீவினைகளைச் சேர்த்துக் கொள்கிறார்கள். இதனுடைய பாதிப்பு பல கோடி ஜென்மங்களுக்குத் தொடர்ந்து இவ்வாறு தவறாக அறுவை சிகிச்சை செய்தவர்களுடைய சந்ததியினரையும் பாதிக்கும். அறுவை சிகிச்சையில் பாதிக்கப்பட்டோரும் சிகிச்சை செய்தவரும் இறந்துவிட்டால் மேலுலகில் ஆவிகளிடையே பெரும் பகைமை உண்டாகிவிடும். பாதிக்கப்பட்டவருடைய ஆவியின் சாபத்தால், துர்வினைகளால் இவ்வாறு தவறாக அறுவை சிகிச்சை செய்தவருடைய சந்ததிகளையும் குடும்பத்தினரையும் பாதிக்கும். இந்நாளில் இவ்வாறு பாதிக்கப்பட்டு இறந்தவருக்கும், தவறாக அறுவை சிகிச்சை செய்து இறந்தோர்க்கும் தர்ப்பணம் அளித்திடில் இந்த தர்ப்பண சக்தியால் மேலுலகில் பாதிக்கப்பட்டோருடைய ஆவி சாந்தமடைந்து மனம் குளிர்ந்து இத்தகைய பாவங்களின் விளைவுகளை சற்றுத் தனிக்கும்.

பாதிக்கப்பட்டவர் இறந்திட, தவறாக சிகிச்சை செய்தவர்கள் உயிரோடு இருப்பின் அவர்கள் தங்களுடைய தவறுகளுக்காக உண்மையிலேயே மனம் திருந்தி தங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தக்க நிவாரண உதவிகளைச் செய்திட வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டு இறந்தவர் தனக்கு, அறிமுகம் இல்லாதவராக இருந்தாலும் கூட நோயாளி என்ற முறையில் மருத்துவர்கள் அவருக்காகக் காருண்ய தர்ப்பணம் அளித்தல் வேண்டும்.. இவ்வாறு பாதிக்கப்பட்ட ஆவிக்குப் பிட்லரா சூழ் ஆவி என்று பெயர். அதாவது தவறான முறையில் வைத்திய சிகிச்சையினால் பாதிக்கப்பட்டு இறப்போருடைய ஆவியானது பிட்லர மார்க்கத்தில் சென்று திணறும். இவ்வாறு தவறாக வைத்தியம் செய்தவர்களும் இறக்கும்போது அவர்களும் இதே பிட்லர மார்க்கத்தின் வழியாகச் சென்று அந்த ஆவியின் வசப்பட்டுத் துன்பம் அடைவார்கள். எனவே செய்த தவறுகளுக்குத் தண்டனைகளை நிச்சயமாக அனுபவித்தேயாக வேண்டும்.. ஆனால் இவர்களுக்கு அளிக்கப்படுகின்ற தர்ப்பண சக்தியின் மகிமையால் பிட்லர மார்க்கத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் ஆத்மா சாந்தி அடையுமேயானால் கடுமையான விளைவுகள் தவிர்க்கப்படும்.

புடலங்காய் அளிக்கும் பித்ரு ப்ரீதி!
மேலும் பித்ருக்களுக்கு ஆத்ம திருப்தி அளிப்பதாக இருப்பதே புடலங்காய் ஆகும். இன்று தர்ப்பணத்துடன் புடலங்காய் பிட்லை என்று சொல்லப்படுகின்ற புடலங்காய்க் கூட்டுடன் அன்னதானம் செய்திடில் பிட்லர மார்க்கத்தில் உள்ள பித்ருக்களுக்கு ஆத்ம திருப்தி அளிப்பதுடன் பலவித ஆவிகளின் சாபங்களும் தீரும். ஏனென்றால் பிட்லர மார்க்கத்தில் உள்ள மூலிகையாக விளங்குவதே புடலங்காயாகும். இந்த புடலங்காயின் நிழலில்தான் பித்ரு தேவர்கள் இளைப்பாறுகின்றார்கள்! அமாவாசையின் போது சூரிய சந்திர கிரகங்களின் சங்கமத்தின் போது ஏற்படுகின்ற சாயா நிழல் கிரகமாக விளங்குவதே சோமாதித்ய யதி மண்டலமாகும். இதுவே புடலங்காயின் ஆதிமூல சாகம்பர்ய லோகமாகும்..  எனவேதான் ஆத்ம திருப்தி அளிப்பதாக புடலங்காய் விளங்குகின்றது.

பித்ருக்களும் astral travel எனப்படும் மனோலய விண்வெளிப் பயணங்களை மேற்கொள்வது உண்டு. எவ்வாறு ஒவ்வொரு மனிதனுடைய நாபியினுள் (தொப்புள்) silver cord எனப்படும் வெள்ளிக் குழல் வழியே மனிதனுக்கு astral பயணம் ஏற்படுகின்றதோ அதேபோல பித்ருக்களுக்கும் பல உத்தம தெய்வீக நிலைகளில் ஆன divine astral travels உண்டு. இதற்கான தேவ சக்தியை அளிப்பதே நாம் திவசத்தில் சமைக்கின்ற புடலங்காய் பிட்லை (பொறியல்) ஆகும்.

ராஜ தசமி திதி தர்ப்பண பூஜை வலம்புரித் தர்ப்பண மகிமை

எந்த நற்காரியத்தை எடுத்தாலும் அதில் வெற்றிபெற வேண்டும். ஆனால் விண்வெளி ஆராய்ச்சி, ஏவுகணை (missiles) ஆய்வு, புது கோள்கள், நட்சத்திரங்கள், வால் நட்சத்திரக் கண்டுபிடிப்புகள். ரசாயன ஆராய்ச்சிகள் போன்றவற்றில் ஈடுபட்டு அதில் எந்த முடிவுக்கும் வர இயலாமல் இறப்போர் உண்டு. இதற்குக் காரணம் தான், தான் தன்னுடைய விஞ்ஞான அறிவைக் கொண்டு ஆராய்ச்சி செய்கின்றோம் என்ற அகங்கார எண்ணமே ஆகும்... ஆனால் தான் ஒரு இறைக் கருவியாகச் செயல்படுகின்றோம் என்ற எண்ணம் ஏற்பட்டால்தான் எந்தக் காரியத்திலும் வெற்றி பெற முடியும். இதற்குப் பித்ரு தேவர்கள் பெருந்துணை புரிகின்றார்கள். பொதுவாக பித்ரு தர்ப்பணம் என்றாலே பலவிதமான சாபங்களைத் தீர்ப்பதற்காகவே அமைகின்றது. ஆனால் மனித சமுதாயத்திற்குப் பயன்படும்படியாக எந்த விஞ்ஞான ஆராய்ச்சியும் அமையுமானால் அந்தக் காரியத்தை முடித்துக் கொடுப்பதற்குச் சிலவகை பித்ருக்கள் கருணை புரியக் காத்திருக்கிறார்கள்.. கணித மேதை ராமானுஜர், ஆர்யபட்டா, சுஸ்ருதா, வராகமிகிரர் போன்ற பல இந்திய விஞ்ஞானிகள் இறைவன் மேல் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு இன்றைக்கும் உத்தம லோகங்களில் அரிய இறைப்பணிகளை ஆற்றிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்களுடைய அனுகிரகத்தைப் பெற்று நன்முறையில் விஞ்ஞான ஆராய்ச்சிகளை நிறைவேற்றுவதற்குத் தர்ப்பணம் அளிக்க வேண்டிய முக்கியமான நாளாகும் இது!

பனை ஓலை தரும் சரஸ்வதி கடாட்சம்!
பலை ஓலைக்கு பௌம்ய சக்தி எனப்படும் வித்யா சக்தி அதாவது கல்வி அறிவிற்கான தேவ சக்தி நிறைய உண்டு. அதனால்தான் அக்காலத்தில் பனை ஓலையில் கிரந்தங்கள் சுவடிகளாப் படைக்கப்பட்டன. இன்றைக்கும் இந்தியாவின் பழமையான வேத விஞ்ஞான சூத்திரங்களும் (vedic science) பனை ஓலையில் நிலை பெற்றுப் பலகோடி யுகங்களாய் வேத விஞ்ஞான உண்மைகளைப் பறைசாற்றி வருகின்றன.. எனவே இன்று பனை ஓலையின் மேல் தர்ப்பனைச் சட்டத்தை அமைத்துத் தர்ப்பணம் அளித்தல் சிறப்புடையது.. இதனால் முடிவு பெறாமல் தடைபட்டிருக்கும் விஞ்ஞான ஆராய்ச்சிகள் முற்றுப் பெற்றுப் பெரும் புகழும் கிடைக்கும்.. ஆனால் இந்த தர்ப்பண சக்தியானது அழிவு முறையான ஆராய்ச்சிகளுக்கு (nuclear science, weaponry) ஒரு போதும் பயன்படாது... நம் சிவகுரு மங்களா கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த சுவாமிகளுடைய சித்தோபநிஷத் வாக்கியமாவது: “ஒரு அணுகுண்டு போட்டு லட்சம் பேர் செத்து விழுந்தா அது விஞ்ஞானமில்லை, ஒரு அணுகுண்டு போட்டு லட்சம் அரிசி மூட்டை விழுந்தால் அதுதான் ஆக்க பூர்வ விஞ்ஞானம்!”

ராஜ ஏகாதசி தர்ப்பண பூஜை குடும்பத்தைப் பிரித்த சாபம் தீர!

பல குடும்பங்களிலும் நந்துருணியாக, சகுனியாக செயல்பட்டுத் தம்பதிகளைப் பிரிக்கின்ற விஷ சக்திகள் நிறைய உண்டு.. அங்குமிங்குமாக கோள்மூட்டி குடும்பத்தையே கலைத்து தம்பதிகள், குழந்தைகளையெல்லாம் பிரித்து இப்பெரும் பாவச் சுமையுடன் இறப்போருக்கு ஏதேனும் பிராயசித்தம் உண்டா? இத்தகைய கொடூரச் செயல்களைப் புரிந்தவர்களுக்குப் பரிகாரத்தை ஏன் பெற்றுத் தர ஆக வேண்டும்? கூனியாகச் செயல்பட்டுப் பாவங்களைச் செய்தமைக்காக அவர்களுடைய சந்ததியினரும் பாதிக்கப்படுவர் அல்லவா? அவர்கள் ஏதேனும் பரிகாரம் செய்தால்தானே நிம்மதியாக வாழமுடியும்? அல்லது கூனியாகச் செயல்பட்டு வாழ்ந்தவர்கள் மேலுலகத்திலாவது தம்முடைய பாவச்செயல்களால் தம்முடைய சந்ததியினர் பாதிக்கப்படக் கூடாது என்று விரும்பலாம் அல்லவா? கூனியாகச் செயல்பட்டவர்கள் உயிரோடிருந்தால் என்றேனும் ஒரு நாள் மனம் திருந்தி தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தந்து மனம் திருந்தி வாழ விரும்புவார்கள் அல்லவா? இத்தகைய பிரச்சனைகளுக்கெல்லாம் ஆன்மீகத் தீர்வை அளிக்கவல்லவர் குரு ஒருவரே. இன்று கூனியின் சதிகளால் பாதிக்கப்பட்டோரும் கூட இறந்த கூனியின் குணம் கொண்டோருக்குத் தர்ப்பணம் அளித்தால் இதன் தர்ப்பண சக்தியால்...
1. கூனிச் செயல்களில் ஈடுபட்டோருடைய சந்ததியினரும் அத்தகைய பாவச் செயல்களின் விளைவுகளிலிருந்து ஓரளவு நிவாரணம் பெறுவர்.
2. எவருடைய தீவினைகளால் குடும்பங்கள் பாதிப்பட்டனவோ அவரை மன்னிக்கும் பாணியில் பெருந்தன்மையாக அளிக்கப்படுகின்ற தர்ப்பணத்தின் சக்தியால் பிரிந்த குடும்பங்கள், சந்ததியினரிடையே உள்ள மனஸ்தாபங்கள் நீக்க குடும்பம் ஒன்றுபடும். இத்தகைய தர்ப்பண சக்தியை அளிக்க வல்லதே பறவை சங்கு தர்ப்பணமாகும். பட்சி ராஜ தேவ சக்திகளைப் பெற்ற அரிய சங்கு இது..! பிறர் வாழ்வை சூன்ய எண்ணங்களால் கெடுத்த துன்பங்களிலிருந்து விடுதலை பெற இன்றைய மாளயபட்ச ராஜ ஏகாதசி திதியில் வாழை இலையில் பச்சரியைப் பரப்பி முழு முந்திரிப் பருப்புகளையும் வைத்து அதன் மேல் தர்ப்பை சட்டம் அமைத்து ஆகாயப் பறவை சங்கு என்னும் அற்புதச் சங்கினால் தர்ப்பணம் அளித்திட வேண்டும். வில்வம் அல்லது துளசி தீர்த்தத்தினால் அர்க்யம் அளித்தல் சிறப்புடையதாகும்.. மேற்கூறிய பிரச்சனைகள் தங்கள் குடும்பத்தில் இல்லையே என்று நினைத்து அசட்டையாக இருந்து விடாமல் அனைவருமே இன்று ஆகாயப் பறவை சங்கினால் தர்ப்பண பூஜைகள் நிறைவேற்றுதல் வேண்டும். ஏனென்றால் தற்போதைய சூழ்நிலையில் இத்தகைய பிரச்னைகள் தம்முடைய குடும்பங்களில் எழாவிட்டாலும், எதிர்காலத்தில் ஏற்படும் தீய நிகழ்ச்சிகளுக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் அல்லவா? இதனை அளிப்பது ஆகாயப் பறவை சங்கு தர்ப்பணமாகும்... மேலும் நமது குடும்பம், உற்றம், சுற்றம், என்று மட்டுமல்லாது சமுதாயத்தில் இத்தகைய கூனிகளின் துர் செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அத்தகைய தவறுகளைப் புரிந்தவர்களுக்கும் ஒரு பிராயசித்தத்தை அளிக்க வேண்டியது மனிதர்களின் கடமை அல்லவா? அதற்காகவும் இந்த அற்புதத் தர்ப்பண பூஜையை ஆற்ற வேண்டுகின்றோம்.

ராஜ துவாதசி திதி தர்ப்பண பூஜை

கடமை தவறிய பெற்றோர்களின் வினைக் கடன் தீர
பல குடும்பங்களிலும் பெற்றோர்களின் பொறுப்பின்மையால் பிள்ளைகள், பெண்களுக்குத் திருமணம் ஆகாமலேயே நடுவயது வந்து விடும். ஜாதகம் பொருந்தவில்லை, பொருந்தவில்லை என்று பெற்றோர்களே வருடங்களைக் கடத்தினால் பாதிக்கப்படுபவர்கள் யார்? இதனால் வேதனையுற்றுப் பிள்ளைகளோ, பெண்களோ காதல் திருமணம் என்று இறங்கிவிட்டால் பிறகு பெற்றோர்கள் வருத்தப்பட்டு என்ன பலன்? ஜாதி, குலம் என்று குறுகிய வட்டத்திற்குள் வாழ்க்கையில் புழங்குவதைவிட சற்குருவை அடைந்தால் அவரே அவரவர் விதிப்படி அமைந்துள்ள திருமண உறவுகளை பூர்வஜென்ம வினைப்படித் தீர்க்க தரிசனமாக அளித்திடுவார்!

தர்ப்பண சக்தி நீக்கும் திருமண தோஷம்
பிள்ளை, பெண்களுக்குத் தக்க வயதில் திருமணம் செய்து வைக்காது இவ்வாறாகப் பொறுப்பின்றி வாழ்ந்து இறக்கின்றோர் மேலுலகில் கடும் வேதனைகளை அனுபவிப்பார்கள். பொதுவாக பெற்றோர்களுடைய கர்ம வினைகளும் தாம் திருமண தோஷங்களுக்கான காரணங்களுள் ஒன்றாக விளங்குகிறது. குறிப்பாக, மனைவியை இழந்தவுடன் தந்தையானவர் தன் பிள்ளைகளின் திருமணத்திற்காக எவ்வித முயற்சியும் எடுக்காத குடும்பங்கள் கலியுகத்தில் நிறைய உண்டு. இதனால்தான் பிள்ளைகள், பெண்கள் பலவிதமான தீய வழக்கங்களுக்கு ஆட்பட்டுவிட அதன்பின் வருந்தி, ஏங்கி, அழுது என்ன பயன்? இவ்வாறு பொறுப்பை, கடமையை முறையாக நிறைவேற்றாத தாய், தந்தையர் இறந்தவுடன் அவர்களுடைய ஆவி நிலையின்றித் தவிக்கும். அவர்களுடைய பிள்ளைகள் இன்று முறையாகத் தர்ப்பணம் செய்தால்தான் மேலுலகில் அவர்களுக்குள்ள தளைகள் விடுபட்டு, எந்த பித்ரு சாபங்களால் திருமணம் ஆகவில்லையோ அவையும் ஓரளவு நிவர்த்தியாகும்.

தன் பிள்ளைகளுக்குத் திருமணம் ஆகவில்லையே என்று வருந்துகின்ற தந்தை இன்று ராஜ துவாதசி திதியில் ஐவிரல் சங்கு என்ற ஓர் அற்புதமான சங்கினால் தர்ப்பணம் செய்திடில் பல குடும்பங்களுடைய திருமணங்களுக்குத் தடங்கல்களை விளைவித்துப் பூர்வ ஜென்ம வினைகளால் அஞ்சுகறை மார்கத்தில் அவதியுறுகின்ற அவர்கள் வம்சா வழி ஆவிகள் நிவாரணம் பெற்று பலவிதமான திருமண தோஷங்களை நிவர்த்தி செய்கின்றன.. எவருடைய குடும்பங்களில் எல்லாம் திருமணங்கள் நடைபெறா வண்ணம் தடுத்தார்களோ அவரால் பாதிக்கப்பட்டு சிலசிற்ப நிலையில் (bodyless state) இருப்பவர்கள் மேல் நிலையை அடைந்தால்தான் தவறு செய்தவர்களின் சந்ததியில் திருமணத் தடங்கல்கள் நீங்கும். அதுவரையில் எவ்வித முயற்சியாலும் திருமணம் நடைபெறாது என்பதை நினைவிற் கொள்ளுங்கள். இவ்வாறான திருமண தோஷங்களை நிவர்த்தி செய்வதற்கான அற்புத சங்கே தும்பை வெண்மணி சங்காகும். தர்ப்பையில் சிவ தர்பை, விஷ்ணு தர்பை என்ற இரண்டு வகை தர்பைகள் உண்டு. அஞ்சு கறை மார்க்கத்தில் நிறைய ருத்ர சிவ கணங்கள் உண்டு. ஆனால் முறையாக தர்ப்பண புண்ய சக்தி இருந்தால்தான் இவற்றின் அருளைப் பெறமுடியும். இதற்கு வழிவகுப்பதே ருத்ரவிஷ்ணு தர்ப்பை ஆகும். இம்முறையில் வாழை இலைமேல் பச்சரிசியைப் பரப்பி தும்பை, பவள மல்லிப் பூக்களைத் தூவி அதன்மேல் நான்கு தும்பை வெண்மணிச் சங்குகளை நுனிகள் ஒன்றையொன்று தொடுமாறு அமைத்து அதன் மேல் தர்ப்பைச் சட்டத்தை அமைத்து வில்வம், துளசி இலைகள் ஊறிய தீர்த்தத்தால் தர்ப்பணம் அளிக்க வேண்டும். ருக்மிணி தேவியானவள் தேவலோகத்துப் புஷ்பமான பவளமல்லியைத் தன்னுடைய கிருஷ்ண பிரேமையினால் பூலோகத்திற்குக் கொண்டு வந்து நிறைய பூஜைகளைச் செய்து தனது திருமணத்திற்கு வந்து தடங்கல்களை நீக்கிக் கொண்டாள். அது மட்டுமல்லாது எவருக்கெல்லாம் பித்ரு சாபங்களால் திருமணங்கள் தடைபட்டுள்ளதோ அவர்கள் மகாலட்சுமிக்குரிய துவாதசி திதியில் பவளமல்லி கொண்டு பூஜைகள், தர்ப்பணங்கள் செய்து வந்தால் திருமண தோஷங்கள் நிவர்த்தியாகும் என்ற நல்வரத்தையும் ஸ்ரீகிருஷ்ணனிடமிருந்து பெற்றுத் தந்தாள்.

ராஜ திரயோதசி தர்ப்பண பூஜை தேவ புங்கவ பிருஷ்ட சங்கு தர்ப்பணம்

பலரும் பணத்தைச் சேர்த்து சேர்த்து வைத்து உருப்படியாக ஒன்றையும் அனுபவிக்காது சேர்த்து வைத்து அந்த இடத்தையோ, புதையலையோ கூட ஒருவரிடமும் சொல்லாமல் இறந்து விடுவார்கள். பிறகு அடுத்த பிறவியும் இல்லாமல் மேலுலகத்திற்கும் செல்லாமல் இடைப்பட்ட ஆவி நிலையிலேயே சுற்றிக் கொண்டிருப்பார்கள், அதுவும் மூதாதையர்களுடைய சொத்தாக அமைந்து புதையல், ஆக்கப்பட்டோ, வங்கி லாக்கர்களிலோ, நிலவறைகளிலோ அச்செல்வம் மாட்டிக் கொண்டு விட்டால் மூதாதையர்களுடைய கனத்த பித்ரு சாபம் தான் ஏற்படும்..

நல்வகை ரகசியங்கள் வெளிவர உதவும் ராஜ திரயோதசி தர்ப்பணம்

ஆனால் விண்ணுலகச் சட்டப்படி எந்த இரகசியமும் ஆயுள் முடிவதற்கு முன்னரேயே எவருக்காவது கட்டவிழ்க்கப்பட வேண்டும்.. இல்லையென்றால் அந்த இரகசியங்கள் வெளிவரும் வரை காலக் கணினி ஆவி ஓட்ட மார்க்கத்திலேயே மாட்டிக் கொண்டு கதறி அழ வேண்டி வரும், இவர்கள் மறைத்த செல்வம், தீயவர்கள் கையில் அகப்பட்டு அதனால் ஏற்படும் தீவினைகள் யாவுமே மறைத்தவருடைய ஆவி நிலையைச் சார்வதால் நரக வேதனைகள்தான் மிஞ்சும். இது சந்ததியினரையும் பாதிக்கும். எனவே எவருக்கும் எதையும் அறிவிக்காமல் இறந்தவருடைய நிலபுலச் சொத்து விவரங்கள் வெளிவந்து அவை நல்லவர்கள் கையிலே சென்று நற்காரியங்களுக்குப் பயன்பட்டால்தான் அவரது சந்ததியும் நிவாரணம் பெறும் இதற்கு என் செய்வது? இவ்வாறாக மறைக்கப்பட்ட தஸ்தாவேஜுகள் நிலபுலச் சொத்து விவகாரங்கள் தார்மீக ரீதியாக நன்முறையில் வெளிவருவதற்கு தேவ புங்கவ பிருஷ்ட சங்குத் தர்ப்பணம் பெரிதும் உதவுகின்றது. வேதங்களை அசுரர்கள் கடலில் மறைத்த போது அவற்றைப் பெறுவதற்காக தேவாதி தேவர்கள் தேவ புங்கவ சங்கினால் அர்க்யம் அளித்துத்தான் மறைக்கப்பட்ட வேதங்களைப் பற்றிய இரகசியங்களைப் பெற்றார்கள். இறந்து போனவர் ஏதேனும் விஷயத்தைத் தெரிவிக்காமல் இறந்திருந்தால் ஆன்ம ரீதியாக சூட்சும ரீதியாக முக்கியமான விஷயங்களைப் பெறுவதற்கு இந்த ராஜ திரயோதசி திதி தர்ப்பண பூஜை உதவுகிறது. இன்று வாழை இலையில் அரிசியைப் பரப்பி அதன் மேல் வெட்டி வேரைப் பரப்பி அதன் மேல் தர்ப்பைச் சட்டம் அமைத்து தேவ புங்கவ பிருஷ்ட சங்கின் மூலம் வெட்டி வேர் கலந்த நீரால் தர்ப்பணம் அளிக்க வேண்டும். இந்த தர்ப்பண சக்தியால் மேலுலகில் இருப்பவர்கள் தாங்கள் மறைத்து வைத்த செல்வத்தையோ புதையலையோ நல்லவர்கள் எவர் மூலமேனும் உணர்த்துவதற்கான நல்வழி முறைகளைப் பெற்றுத் தருவார்கள். ராகு தசை, ராகு புக்தி உள்ளவர்கள் மூதாதையர்களுக்கு இம்முறையில் தர்ப்பணம் அளித்து தோஷ நிவாரணப் பலன்களைப் பெறலாம்.

ராஜசதுர்த்தசி தர்ப்பண பூஜை பெற்றோரைப் பேணாத பாவம் தீர!

பல பிள்ளைகளும், பெண்களும் தங்களுடைய தாய் தந்தையரைச் சரியாகக் கவனிப்பது கிடையாது. குறிப்பாகப் பெற்றோர்களுடைய இறுதிக் காலத்தில் அவர்கள் பெற வேண்டிய அன்பையோ, அரவணைப்பையோ, சரீர சேவையையோ அளிக்காது அவர்களை அநாதையாகவோ, நிராதரவாகவோ, தனித்தோ விட்டு விடுவோரும் உண்டு. அவர்களைப் பற்றியே கவலைப்படாது இருப்போரும் உண்டு. குறிப்பாக மன வியாதி உள்ள பெற்றோர்களுக்குப் பிள்ளைகள் போதிய அன்பையோ மருத்துவ வசதியையோ அளிப்பதில்லை. இதற்குக் காரணம் பெற்றோர்களும் அவர்களுடைய முன்னோர்களைச் சரியாக கவனிக்காததே! History repeats Itself! இன்றைக்கு பலரும் வெளிநாட்டு மோகம் கொண்டு பிள்ளைகளையும், பெண்களையும் அனுப்பிவிட அவர்கள் அங்கேயே நிரந்தரமாகத் தங்கி விடுகின்றார்கள். இறுதிக் காலத்தில் மட்டுமே பிள்ளை, பெண்களைக் காண முடிகிறது. அவர்களில் பலரும் பெரும் பணத்திற்கு ஆசைப்பட்டு அன்பு, பண்பு, ஒழுக்கம், பாசம் அனைத்தையும் இழந்து விடுகின்றார்கள். இவ்வாறு தாய் தந்தையரை முறையாகப் பேணாது அவர்கள் பெரும் வருத்தத்துடன் இறந்திருந்தால் மேலுலகில் அவர்களுடைய ஏக்கம் தீரும் வரை இங்கு அவர்களுடைய சந்ததியினருக்குப் பலவிதத் துன்பங்கள் ஏற்படும். இத்தகைய ஆவிகளின் ஏக்கங்களுக்குத் தீர்வு தருவதுதான் மாளய பட்ச ராஜ சதுர்த்தசி திதி தர்ப்பணமாகும்.. பூசுர சோளிச் சங்கு என்ற ஓர் அற்புதமான சங்கு உண்டு. மகா விஷ்ணுவின் கூர்ம அவதாரத்தின் போது அவருடைய திருமேனியிலிருந்து எழுந்த ஜோதிப் பிரகாசமானது சமுத்திரத்தில் உள்ள நீர்க் குமிழிகளில் பிரதிபலித்துப் பிரகாசித்து அவைகளுக்கும் சில கூர்ம யோக சக்தி நிலைகள் உண்டாயின. அந்த அருட்பிரகாசத் திவலைகள் அப்படியே நீரினுள் அமிழ்ந்து ஜீவ நிலை கொண்டு பூசுர யோகச் சங்குகளாயின. ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தன்னுடைய குருதட்சணையாக ஸ்ரீசந்தீபனி முனிவர் வேண்டியபடி அவருடைய மகனை மீட்டு, லவண சமுத்திரத்திலிருந்து கொண்டு வந்த பூசுர யோகச் சங்குகள்தாம் பெறுதற்கரிய விமல மாதவ சக்தியைப் பெற்றன.

ராஜ மாளய அமாவாசை

விக்ரம ஆண்டின் மாளய பட்ச அமாவாசை பல விசேஷமான தன்மைகளைக் கொண்டது. பொதுவாக குடும்பப் பெண்களுக்கு ஏற்படுகின்ற பலவிதமான துன்பங்களைத் தீர்ப்பதற்கான தர்ப்பண சக்தியைப் பெற்றுத் தருவதே மாளய பட்ச அமாவாசை, பெண்கள் எவ்வாறு இதனைப் பெறுவது? ஒவ்வொரு இல்லறப் பெண்ணும் இந்த மாளய பட்சத்தின் 15 திதிகளிலும் தினமும் கட்டாயமாகத் தர்ப்பணத்தைச் செய்வதற்குத் தன் கணவனுக்கு உதவி புரியவேண்டும். பொதுவாக மனைவியின் அனுமதியுடன்தான் தர்ப்பண பூஜைகளையும் ஹோமங்களையும் நிகழ்த்திட வேண்டும். தர்ப்பணத்திற்கான பலகை, தாம்பாளம், தர்பை, எள், பவித்ரம் (தர்ப்பையாலான மோதிரம்), பஞ்ச பாத்திரம், உத்தரணி, தர்ப்பைப் பாய் ஆகியவற்றை எடுத்து வைத்துக் கணவனுக்கு ஆர்வமூட்டித் தர்ப்பணம் செய்ய வைத்தல் மனைவியினுடைய முக்கியமான கடமையாகும்..

ஆன்மீகப் புவியீர்ப்பு மேல் விசை உண்டு! இதுவே தர்ப்பண விஞ்ஞான சக்தி!

பொதுவாக திடப் பொருளுக்கும் நீருக்கும் மேலிருந்து கீழிறங்கும் தன்மையே உண்டுதானே! இதற்கு பூமியின் ஆகர்ஷண சக்தியே காரணம் என்று விஞ்ஞானம் விளக்கம் தருகின்றது. ஆனால் மெய்ங்ஞான விளக்கமே சத்தியமானது, சாசுவதமானதும் கூட! அதாவது தர்ப்பணமிடுகையில் வலது ஆள்காட்டி (குரு) விரலுக்கும், கட்டை (சுக்கிர) விரலுக்கும் இடையே உள்ள பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக அளிக்கப்படுகின்ற தர்ப்பண நீரின் சக்தியானது பூமியின் ஆகர்ஷ்ண சக்தியை மீறி எழும்பி மேல் நோக்கிச் சென்று எத்தனையோ கோடி மைல்களுக்கு அப்பாலுள்ள பித்ரு லோகத்தைச் சென்றடைகின்றது. அமாவாசையன்று கீழிருந்து மேல் செல்வதே இந்த பித்ருலோக அந்தர ஆகர்ஷண சக்தியின் தெய்வீகத் தன்மையாகும். அதிலும் இந்த மாளயபட்ச அமாவாசை தினத்தன்று இச்சக்தி மிகவும் அபரிமிதமாக பெருகின்றது. இன்று உங்களுடைய முன்னோர்களுக்கு மட்டுமல்லாமல் நெருங்கிய, தூரத்து சம்பந்தங்கள், நண்பர்கள், சக அலுவலர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என அறிந்தோர், அறியாதோர் அனைவருக்கும் சாதி, மத, இன பேதமின்றித் தர்ப்பணம் அளித்திடுங்கள். நீங்கள் அறிந்த, உங்களுக்குப் பிடித்தமான (இறந்த) தலைவர்களுக்கும் கூடத் தர்ப்பணம் அளித்திடலாம்.. பொதுவாக உங்கள் முன்னோர்களுக்கு மட்டுமே தர்ப்பணம் அளிக்க வேண்டும் என்று எண்ணிடாதீர்கள். பரிதாபகரமான விபத்து பற்றிச் செய்தித் தாளில் அறிய வந்தால் அதில் இறந்தவர்களுக்கான காருண்ய தர்ப்பணத்தைச் செய்திடுங்கள்! சாதி, மத, இன, குல பேதமின்றி யாருக்கும் எவரும் காருண்யத் தர்ப்பணம் அளித்திடலாம்.

முறையற்ற காதல் தீவினைகள் தீர!

உதாரணமாக, கலியுகத்தில் காதல் என்பது அவசரகோல முடிவாக மாறிவிடுகின்றது. ஒரு பெண்ணைக் காதலித்துக் கர்ப்பமுறச் செய்து திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வேறொருவரைத் திருமணம் செய்து கொள்கின்ற பரிதாபமான நிலைகளைக் காண்கின்றோம், அல்லது அப்பெண் கர்ப்பமுற்றிருக்கும் போதே காதலித்தவர் திடீரென்று இறந்து விடுவார். திருமணம் என்பது தெய்வீக வாழ்க்கைக்குப் புனிதத்தை அளிக்கின்ற ஒரு பூஜையே, எனவே காதல் என்பது வெறும் விளையாட்டல்ல! பிறருடைய வாழ்வில் புகுந்து நாசம் விளைவித்தால் கிட்டுகின்ற இதற்குரித்தான கடும் தண்டனைகளை எழுத்தில் வடிக்க முடியாது. பெண்களை ஏமாற்றி வாழ்பவர்கள் பல ஜென்மங்களில் பெண் பிறவி எடுத்து அதே வகையான நிர்கதிக்கு ஆளாக நேரிடும். ஆனால் தான் செய்கின்ற தவறுகளுக்கு உண்மையிலேயே மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கோரி தன்னால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தால் மாளயபட்ச அமாவாசைத் தர்ப்பண பூஜையின் மூலம் தக்க நிவாரணத்தைப் பெற்றிடலாம். எனவே திருந்தி வாழ்வதற்கான நல்வழி முறைகளைத் தக்க குருவிடம் கேட்டுப் பெற்றிடுங்கள்.. தன்னைக் காதலித்து வேறு பெண்ணை மணந்தாலும் மனம் நொந்திடினும் தனக்குப் பிறந்த குழந்தையை வளர்த்து ஆளாக்கியவர்கள் பலரும் தன்னை ஏமாற்றியவனையே கணவனாக வரித்துப் பண்புடன் வாழ்ந்திடுகின்றார்கள். ஆனால் ஏமாற்றியவர் இறந்து விட்டால் பெண்ணை ஏமாற்றிய பெரும் பாவத்திற்காக அவருடைய ஆவியானது குண்டு குலப்பாறை என்னும் நரக லோகவழியில் சிக்கிக் கொண்டு தவிக்கும், பூமியிலிருந்து எவரேனும் தர்ப்பணமிட்டுத் தர்ப்பண சக்தி கிட்டினால்தான் அவர்களுக்கு விடிவு ஏற்படும், என்னதான் தன்னை ஏமாற்றியவராயினும் தான் வேறொரு திருமண வாழ்வை நாடாமையால் தன் பிள்ளைக்குத் தகப்பனாக இருந்து இறந்தவருக்குத் தன் பிள்ளை மூலம் இன்று தர்ப்பணம் அளிக்கச் செய்திடில் குண்டு குலப்பாறை என்னும் நரக லோகத் தொட்டியில் சிக்கியிருக்கும் ஆவிக்கு விடுதலை கிட்டும். இதனால் நன்றிப் பெருக்குடன் அந்த ஆவி ஜீவனும் அதனிடமிருக்கும் ஓரளவு புண்ணிய சக்தியைத் தன்னால் ஏமாற்றப்பட்டவரின் பிள்ளையின் நல்வாழ்விற்காக அர்ப்பணிக்கின்றது.

இதுமட்டுமல்லாமல் தான் ஏமாந்து விட்டோமே என்று வேதனையில் நொந்து கொண்டிருக்கின்ற பெண்ணுக்கும் இந்த தர்ப்பணத்தின் பலன்களாகச் சாந்தமும் மன அமைதியும் கிட்டும். பொதுவாக இவ்வாறு 12 வருடங்களுக்குத் தர்ப்பணம் அளித்து வந்திடில் இத்தகைய தீவினைகளுக்குத் தக்கப் பிராயசித்தம் கிட்டும். இதே போன்று திருமணமாகிக் குழந்தைகள் பெற்றுத் தன் கணவன் தன்னை நிராகரித்து வேறிடத்தில் திருமண வாழ்வு கொண்டிடில் இவ்வாறு குழந்தையைப் பெற்றும் நிராகரிக்கப்பட்ட பெண்கள் தன் பிள்ளை/ பெண் மூலம் (இறந்த) கணவனுக்குத் தர்ப்பணம் செய்து வருதல் வேண்டும் அல்லது தானே செய்திடல் வேண்டும். இவ்வாறாக ஒவ்வொருவரும் தன் வாழ்வில் செய்கின்ற எத்தனையோ பெருந்தவறுகளுக்குத் தக்க பிராயசித்தங்களைப் பெற்றுத் தருவதாக மாளயபட்ச அமாவாசைத் தர்ப்பணம் அமைந்துள்ளது என்பதை இனியேனும் உணருங்கள்! பிறருக்கும் உணர்த்திடுங்கள்!

வேண்டாம் கருக்கலைப்பு

கருக் கலைப்பின் கர்ம வினைகள்

எந்தக் குழந்தையுமே நமக்கு இறைவன் அளிக்கின்ற பிரசாதமே! எனவே கருக்கலைப்பு (abortion) என்பது பெரும் பாவச் செயலாகும். நம்முடைய மனைவி, குழந்தைகள் யாவருமே நம்முடைய பூர்வ ஜென்ம கர்ம வினைகளுக்கேற்ப அமைந்தவர்களே. எனவே இதில் விருப்பு, வெறுப்பிற்கு எவ்வித இடமுமில்லை. இல்லற தர்மம் தான் தீயொழுக்கத்தைத் தடுத்து முறையற்ற காம உணர்வுகளை நீக்கி மனதை, உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும் உத்தம அற வாழ்க்கை முறையாகும். எனவே திருமண வாழ்வு என்பதுதான் சிறப்பான ஆத்ம வாழ்க்கையைத் தரும். கைக்குழந்தைகளுக்கும் உரித்தான நித்தியக் கடமைகளும் காரியங்களும் நிறைய உண்டு. ஜீவ சக்திப் பரிமாற்றத்திற்கு (Soul transfusion/ Communication) குழந்தைகளின் பணிதான் மகத்தானதாகும். ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குக் கூட இறைவன் நிறையப் பணிகளை அளித்திருக்கின்றான். எப்படி? ஒரு கைக்குழந்தை ஒரு நாளில் 18 மணி  நேரத்திற்கு மேல் வெறுமனே தூங்குவது போல் தோன்றினாலும் அது உறக்க நிலையில் பல லோகங்களுக்கும் சென்று எத்தனையோ தேகங்களில் ஆத்ம சரீரம் கொண்டு அந்த தேகங்களின் மூலம் எண்ணற்ற பணிகளை ஆற்றுகின்றது.

காத்திருக்குமாம் கரு!
தற்காலத்தில் முறையற்ற, வரம்பற்ற காமச் செயல்களினால் ஏற்படுகின்ற கருவையோ அல்லது தேவையில்லை என்பதற்காகவோ கருக்கலைப்பு என்ற முறையில் அழித்து விடுகின்றனர். இனி குழந்தைகள் வேண்டாம் என்று எண்ணுகின்ற தம்பதியினரும் இவ்வாறு செய்வதுண்டு. ஒரு தம்பதியர்க்கு எவ்வளவு குழந்தைகள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அதை விதிப்படி அவர்கள் பெற்றாக வேண்டும். உள்ளங்கையில் உள்ள ஆத்ம ஜீவ ரேகைகளும், ஜாதகத்தின் ஜீவ அம்சங்களும் அவரவருக்குரிய குழந்தை பாக்யத்தை அறிவிக்கின்றன.  ஜீவினின் இறப்பு பிறப்பு அம்சங்களைத் தேவ ரகசியமாக இறைவன் வைத்திருப்பதற்குக் காரணமே கலியுகத்தில் மனிதனானவன் சிருஷ்டி விஷயங்களில் கருக்கலைப்பு போன்ற வினைகளின் மூலம் வரம்பிற்கு மீறிச் செயல்படுவான் என்பதால்தான்! மருத்துவர்களோ, கணவன் மனைவியரோ எண்ணுவது போலக் கருக் கலைப்புடன் அந்த சிசுவின் எதிர்காலம் முடிந்திடவில்லை! இறைவன் படைத்த சிருஷ்டியை எவராலும் அழிக்க முடியாது. அழிப்பது போல் வெளிப்படையாக விஞ்ஞானக் கண்களுக்குக் தோன்றினாலும் கருவில் அழிந்த சிசு வேறு எங்கும் போய்விடவில்லை.

சூட்சும ரூபத்தில் அதே தம்பதியருக்குக் குழந்தையாகப் பிறந்திடவோ அல்லது அந்த தம்பதியரைப் பழி வாங்கவோ சூட்சுமப் பரவெளியில் காத்துக் கொண்டிருக்கும். எனவேதான் கருக் கலைப்பை நம் முன்னோர்கள் எண்ணிக் கூடப் பார்த்ததில்லை! கருவுறுவதை இறைவனின் சித்தமென ஏற்று வாழ்க்கையின் இலக்கணங்களை நம் பெரியோர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். தற்காலத்தில் மருத்துவர்களும் பெருமளவில் கருக் கலைப்பிற்குத் துணை போவது வருத்தத்திற்குரியதாகும். ஏனென்றால் கருக்கலைப்பில் பூலோக வாழ்விற்கு வராமல் தடுக்கப்பட்ட சிசுவானது வானில் காத்துக் கொண்டிருந்து இடுகின்ற சாபமானது சம்பந்தப்பட்ட மருத்துவர்களின் வாழ்விலும் சாபச் சுழல்களாய்க் குடிகொண்டிருந்து அவர்களுடைய சந்ததியினரையும் பாதிக்கும். எனவே கருக்கலைக்கப்பட்ட எந்த சிசுவும் ஆன்மீக ரீதியாக அழிவதில்லை. மாறாக தான் அதே தம்பதியர்க்குப் பிறக்கும்வரை சூட்சும வடிவில் காத்துக் கொண்டிருக்கும். ஆனால் எத்தனை கோடி ஜென்மங்களில் அதே கணவன் மனைவி உறவு கிட்டும் என்று சொல்ல முடியுமா? அதுவரையில் கருக் கலைப்பிற்குத் துணைபோன மருத்துவர்களின் சந்ததிகளும் பல விளைவுகளைச் சந்தித்தாக வேண்டும். ஆனால் மனித உலகம் இதைப்பற்றி ஆன்மப் பூர்வமாக உணர்வதே கிடையாது. கலியுகத்தின் அவல நிலை இது! கருக்கலைப்புச் செய்தவர்கள் அந்தச் சிசுவிற்குக் கண்டிப்பாகத் தர்ப்பணம் கொடுத்தாக வேண்டும். அந்த தர்ப்பண சக்தியால் அந்த சிசு ஓரளவு மனம் குளிர்ந்தால் தான் சிறிதளவாவது பிராயசித்தத்தைப் பற்றி எண்ணிப் பார்க்க முடியும். இதே போல் இதற்கு மருத்துவ ரீதியாகத் துணைபுரிந்த மருத்துவர்களும் தங்களால் அழிக்கப்பட்ட கருக்களுக்கு நிச்சயம் தர்ப்பணம் அளித்தாக வேண்டும். அப்போது தான் எவ்வித ஜீவ நிலையும் இன்றி விண்ணில் தவிக்கும் சிசுக்கருவானது தர்ப்பண சக்தியால் சாந்தமுற்று ஓரளவேனும் தானே பரிகாரத்தை அளித்தால்தான் உண்டு. கலைக்கப்பட்ட சிசுவிற்காக மாளயபட்சம் முழுதுமே குறிப்பாக மாளய அமாவாசை அன்று விசேஷமான தர்ப்பணங்களைச் செய்திடுதல் வேண்டும்.

சிசுபால ப்ரீதி பிண்டத் தர்ப்பணம்
மூன்று வாழை இலைகளை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து அதன் மேல் நெல் பொரி (அரிசிப் பொரி அல்ல) யைக் குறைந்தது மூன்று படியாவது நிரப்பி 8, 80, 800 என்றவாறாக அவரவர் வசதிக்கு ஏற்றபடி ரசகுல்லா உருண்டைகளை வைத்து எட்டு பாலாடைச் சங்குகளை எட்டுத் திக்குகளிலும் ஒன்றாக இணைத்து வைத்திட வேண்டும். இந்தச் சங்குகளின் மேல் தர்ப்பைச் சட்டம் அமைத்துக் கருக் கலைக்கப்பட்ட சிசுக்களுக்குக் தர்ப்பணம் அளிக்க வேண்டும், ரசகுல்லா என்பது பாலில் உள்ள ஜீவ சக்திகள் செறிந்த கோளங்கள் ஆகும். இதனை க்ஷீர பிண்டங்கள் என்று தேவர்கள் அழைக்கின்றார்கள். கலைந்த கரு பிண்டமாகத்தானே பூமியில் தள்ளப்படுகின்றது. இந்த வேதனைகளைத் தாங்காமல் பூமா தேவி வேதனையுறுகின்றாள். பூமாதேவியின் மேனியில்தானே கருக் கலைந்த பிண்டங்களின் சுமை வீழ்ந்து வேதனை கூடி விடுவதால் கங்கா தேவியானவள் இப்பிண்டங்களைத் தாங்கி பூமாதேவியின் பாரத்தைக் குறைக்கின்றாள். இதனால்தான் நீரில் எந்தத் திடப்பொருளின் எடையும், நிறையும் குறைந்து காணப்படுகின்றது. ஒவ்வொரு சிசுவின் சிருஷ்டிக்கும் பிரம்ம மூர்த்தியானவர் அஷ்ட வசுக்கள் எனப்படும் எட்டு சிசுபால மூர்த்திகளின் தேவ திசு சிசு சக்தியை இணைக்கின்றார். இவற்றைச் சூட்சுமமாகக் குறிப்பதே பாலாடைச் சங்குத் திரட்சிகளும் பாலின் திரிபுப் பொருளான ரஸ்குல்லாவும் ஆகும்.
மேலும் பிரம்மச்சர்ய விரதத்திலிருந்து இல்லற தர்மத்திற்கு நுழைவதாக சிசுக் கருத் தோற்றப் பிறப்பு அமைவதால் பிரம்மச்சர்ய தேஜசுடன் இன்றும் விளங்குகின்ற பீஷ்மரே கடல் நீரில் தோன்றும் ஒவ்வொரு பாலாடைச் சங்கையும் தன் கரங்களால் தொட்டுப் பிரார்த்தனை செய்து ஆசீர்வதிக்கின்றார். தர்ப்பணத்திற்குப் பின் ரசகுல்லாக்களை சிறு குழந்தைகளுக்குத் தானமாக அளிக்க வேண்டும். ஆனால் ஒன்றை நினைவில் கொள்க! கருக்கலைக்கப்பட்ட சிசுவைச் சாந்தப்படுத்துவது என்பது எளிதான காரியமல்ல! வெறும் பிராயசித்தத்தால் மட்டும் ஒரு தீவினைக்கு மாற்றுவழி காணுதல் மிகவும் கடினமாகும். எனவே தவறுகளைச் செய்து விட்டு உடனே பரிகாரத்தை நாடுவதும் ஏற்புடையதும் அல்ல. தெரிந்தே செய்த தவறுக்கு பிராயச்சித்தம் கிடையாது. அஷ்ட வசுக்களுக்கும் பிஷ்மருக்கும் உள்ள தெய்வீகப் பிணைப்புகளை நீங்கள் அறிவீர்கள். பீஷ்ம தர்ப்பணம் என்று சொல்லப்படுகின்ற விசேஷமான நாட்களும் உண்டு. இந்நாட்களிலும் மாளய பட்சத்திலும் அளிக்கப்படுகின்ற தர்ப்பணங்களால் இயற்கையாகவே கர்ப்பம் நழுவுதல், கர்ப்பத்தில் சிசு இறத்தல், குறைப் பிரசவமாக சிசு மடிதல் போன்றவற்றில் குறைவான ஆயுள் கொள்ளும் சிசுவிற்கு ப்ரீதி கிட்டுவதால் இது மிகச் சிறந்த தர்ப்பணம் ஆகும். இது மிகச் சிறந்த தர்ப்பணம் ஆகும், இது மிகச் சிறந்த தெய்வத் தொண்டுமாகும். இத்தர்ப்பண சக்தியின் உதவியால் பீஷ்மரின் தாயான கங்காதேவியே இத்தகைய சிசுக்களை அரவணைத்து அருள்பாலிக்கின்றாள். பிறந்து ஒரு வருடத்திற்குள் இறந்த குழந்தைக்குத் தர்ப்பணம் தேவையில்லை என்ற நடைமுறை வழக்கம் தவறானதாகும்.

பொதுத் தர்ப்பணம்

விக்ரம ஆண்டு மாளயபட்ச பொதுத் தர்ப்பண பூஜை

பொதுவாக எந்த ஒரு பூஜையிலும் கிடைக்கின்ற நல்வரங்கள் துரிதமான பலன்களாக மாற வேண்டுமாயின் அதனை ஆக்கப்படுத்தும் வண்ணம் அமைவதே அன்னதானமாகும். அதாவது அன்னதான பலன்கள்தாம் அதுவும் கலியுகத்தில் மிகவும் துரிதமான முறைகளில் சித்தியைத் தருகின்றன. கலியுகத்தில் அன்னத்தை நம்பியே எந்த ஜீவனும் உயிர் வாழ்வதால் தானங்களுள் சிறந்ததாக அன்னதானம் விளங்குகிறது. மாளயபட்சச் சிறப்பிதழான இவ்விதழில் இந்த ஆண்டு மாளயபட்சத்தில் நிறைவேற்ற வேண்டிய விசேஷமான சங்கு தர்ப்பண முறைகளைப் பற்றியும் இதனால் கிட்டுகின்ற விசேஷமான பலன்களையும் தனியாக அளித்துள்ளோம். மாளயபட்சத்தில் பிரதமை திதி முதல் மாளய அமாவாசை வரை உள்ள 15 தினங்களிலும் பொதுவாக எவருக்கெல்லாம் தர்ப்பணம் அளிக்க வேண்டும் என்பதை இங்கு அளிக்கின்றோம். இந்த பொதுத் தர்ப்பணங்களை நிறைவேற்றிய பின் இவ்விதழில் அளிக்கப்பட்டுள்ள விசேஷமான தர்ப்பணங்களையும் சேர்த்துச் செய்வதால் இந்த வருட மாளயபட்ச தர்ப்பணத்தை சிறப்பாக நிறைவேற்றினோம் என்ற ஆத்ம திருப்தி உங்களுக்கு இறைப் பிரசாதமாக கிட்டும்.

மாளயபட்ச பொதுத் தர்ப்பணம் பிரதமை

பிரதமை இன்று முதலில் தாய், தந்தை வழி மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் அளித்திடுக. தீ விபத்து, போர் என்றவாறாக மரணமடைந்தோர்க்கு இன்றைய தர்ப்பண பலன்கள் விசேஷமாக சென்றடைகின்றன. இன்று ஆடைதானம் செய்வது பித்ருக்களுக்கு ப்ரீதி அளிக்கும். வாகனம் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும், மாயூரம் காவேரிப் படித்துறைத் தர்ப்பணம் சிறப்புடையது.

துவிதியை  ; வழக்கம் போல் தாய், தந்தையை வழிபட்டு மூதாதையர்களுக்கு தர்ப்பணம் அளித்திட வேண்டும். பொதுவாக தூக்கத்திலேயே இறந்தோர்க்கு இந்த திதியின் தர்ப்பணப் பலன்கள் உதவுகின்றன. புளியோதரை அன்னதானம் செய்திடல் வேண்டும். கெட்ட கனவுகள் மற்றும் கணவனுடைய பிள்ளைகளுடைய தீய வழக்கங்கள் நீங்க உதவும் தர்ப்பணம் இது. தொடர்ந்து தர்ப்பணம் செய்து வருவதால் துரிதமான பலன்களைப் பெறலாம். திருநெல்வேலி அருகே வகுளகிரியில் நதிக்கரைத் தர்ப்பணம் விசேஷமானதாகும்.

இலுப்பை மரம் அடிஅண்ணாமலை

திரிதியை – விஷ்ணுபதி போல மிகமிக விசேஷமான ஷடசீதி தர்ப்பண நாள் இது, இன்று முதலில் தாய், தந்தை வழி மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் அளித்து விட்டுத் தாம் அறிந்த நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், சக தெருவாசிகள், சக அலுவலக நண்பர்கள் போன்றோருக்குத் தர்ப்பணம். தம் வாழ்க்கைக்குப் பல நிலைகளிலும் உதவி புரிந்த உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கண்டிப்பாகத் தர்ப்பணம் அளித்து நன்றிக் கடனைத் தீர்த்துக் கொள்ளுங்கள். ஆறு வகையான காய்கறிகள் கலந்த  உணவினை அன்னதானம் செய்திடவும். ஷடசீதி புண்ணிய காலம் ஆதலால் புனித ஆற்றிங்கரைகள், ஆலயக் குளங்கள், நூறு வயதிற்கு மேற்பட்ட நல்ல விருட்சங்கள் ஆல், அரசு, வேம்பு, இலுப்பை, திருஅண்ணாமலையில் கிரிவலப் பாதையில் அடிஅண்ணாமலையைத் தொடும் பகுதியில் மிகவும் உயரமான நூறு வருடங்களுக்கும் மேற்பட்ட இரு இலுப்பை மரங்கள் போன்றவற்றின் கரையில்/அடியில் தர்ப்பணம் இடுவது பித்ருக்களின் சாபங்களைத் தீர்க்கும்.

சதுர்த்தி – மகா பரணி விசேஷத் தர்ப்பண நாள். முதலில் தாய் தந்தை வழி முன்னோர்களுக்குத் தர்ப்பணம். சுவாச சம்பந்தமான நோய்களால் இறந்தோர்க்கு இன்று தர்ப்பணம் அளித்தலால் நற்கதி பெறுவர், சங்கட ஹர சதுர்த்தி மிகவும் விசேடமாதலால் கொழுக்கட்டை மோதகம், கரும்பு, அவல் பொரி, அப்பம் அன்னதானம் செய்தல் சிறப்புடையது. வயிறு, சிறுநீரகம் மற்றும் நீர் சம்பந்தமான நோய்களுக்கு நிவாரணம் கிட்டும். பவானியில் மூன்று நதிகளின் சங்கமத்தில் தர்ப்பணம் சிறப்புடையது.

பஞ்சமி – முதலில் தாய் தந்தை வழி மூதாதையர்களுக்குத் தர்ப்பணம், மயக்கம், இருதயக் கோளாறுகள், கால் இடறுதல் காரணமாகக் கீழே விழுந்து அடிபட்டு இறந்ததற்கு விசேஷமான தர்ப்பணங்கள் அளிக்க வேண்டிய நாள் இது, தினை மாவு, கிழங்கு வகைகள், சிவப்பு நிற உணவு வகைகளை (பீட்ரூட், தக்காளி) அன்னதானம் செய்யவும். மாமனார், மாமியார், நாத்தனார், சம்பந்திகள் தருகின்ற பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் கிட்டும் கும்பகோணம் திருவாலங்காடு அருகே வெள்ளை வேம்பு மாரியம்மன் ஆலய மஞ்சள் ஆற்றங்கரையில் தர்ப்பணம் விசேஷமானது.

சஷ்டி – முதலில் அன்னை வழி மூதாதையர்களுக்குத் தர்ப்பணம், பிறகு தந்தை வழி மூதாதையர்களுக்குத் தர்ப்பணம், பொதுவாக மயக்க நிலையில் (coma) இறந்தோர்க்குத் தர்ப்பணம் அளிக்கும் நாள் இது. இத்திதிக்குரிய விசேஷமான தர்ப்பணத் தலம் ராமநாதபுரம் – தேவிபட்டணம் அருகில் உள்ள நவபாஷாணம் ஆகும். தன்னுடைய பெண்கள், பிள்ளைகளைப் பற்றி மனக் குழப்பங்களுடன் இருப்பவர்கள் மனத்தெளிவு பெற இந்த சஷ்டி தர்ப்பணங்கள் பெரிதும் உதவுகின்றன. வெண்பொங்கல், தயிர் சாதம், வெள்ளை கேசரி, வெள்ளை அப்பம் தானம்.

திருமழபாடி

சப்தமி – முதலில் சகோதர சகோதரிகள் மற்றும் அவர்களுடைய வழியில் வந்தவர்களுக்குத் தர்ப்பணம். பொதுவாக வறுமையில் இறந்தவர்க்குத் தர்ப்பணம் அளித்திடில் அவர்கள் நற்கதி அடைவர். பணக்கஷ்டத்தை நீக்க வல்ல தர்ப்பணம் இது. ஸ்ரீமகாலட்சுமி எழுந்தருளியுள்ள அல்லது லட்சுமி தீர்த்தம் உள்ள தலங்களில் (ஸ்ரீவாஞ்சியம், திருவெள்ளறை, திருமழபாடி) தர்ப்பணம் செய்வது சிறப்புடையது. நிறைய முந்திரி கலந்த சர்க்கரைப் பொங்கல் தானம் அளிக்கவும்.

அஷ்டமி – முதலில் தந்தை வழி பிறகு தாய் வழி மூதாதையர்க்குத் தர்ப்பணம். அசைவ உணவு உண்போர் தாம் உண்டு களித்த மீன், நண்டு, ஆடு, கோழி, காடை, கௌதாரி, ஆமை போன்ற ஜீவன்களுக்குக் கண்டிப்பாகத் தர்ப்பணம் அளித்தல் வேண்டும். இறைச்சித் தொழில், காலணித் தொழிலில் (leather shop/ Industries) உள்ளோர் தம் தொழிலுக்கான பிராணிகளுக்குத் தர்ப்பணம் அளித்தல் அவசியமாகும். கும்பகோணம் சக்கரப் படித்துறையில் கத்தரிக்காய் கலந்த உணவு பஜ்ஜி, போண்டா போன்ற எண்ணெய் உணவுப் பண்டங்களை அன்னதானமாக அளித்தல் வேண்டும். மிகவும் குண்டாக இருப்பவர்கள் தர்ப்பணம் அளித்து எண்ணெய் பொரிகள், உணவு வகைகளைத் தானம் செய்துவர தாழ்வு மனப்பான்மை (inferiority complex) கொழுப்பு நோய்கள் தணியும், இன்று குன்றக்குடி ஆலயத் தீர்த்தத்தில் தர்ப்பணம் அளித்தல் சிறப்புடையது.

திருப்புனவாசல்

நவமி – இறந்த குழந்தைகள், பெண் பிள்ளைகள், மாப்பிள்ளை, மாட்டுப் பெண்ணிற்கு முதலில் தர்ப்பணம். பின் தந்தை தாய் வழியினருக்குத் தர்ப்பணம். ஊனமுற்றோர், மனநோய், மன வளர்ச்சி குன்றியோருக்குத் தர்ப்பணம், இன்றைய தர்ப்பண சக்தியால் தாமதமாக நடக்கும் விவசாயம், தொழில் அலுவலகப் பணி, உத்தியோக உயர்வு ஊக்கம் ஆக்கம் பெற்றுத் துரிதமாகும். கோதுமை உணவு (சப்பாத்தி, பூரி) அன்னதானம் சிறப்பாகும். ஆவுடையார் கோயில் அருகே உள்ள திருப்புனவாசல் ஆலயத்தில் தர்ப்பணம் அளித்தல் சிறப்பானது.

தசமி – தந்தை வழியினருக்கும் பின் தாய் வழியினருக்கும் தர்ப்பணம், இரண்டாம் தாரம், தத்து எடுத்த பெற்றோர்கள், ஆதரவற்று இறந்தோருக்குத் தர்ப்பணம், தக்க கிரியை இல்லாமல் மின்சார தகனம் பெற்றோருக்கும் விசேஷ தர்ப்பணம் அளிக்க வேண்டிய நாள் இது, பிரண்டை எள், புடலங்காய், தேங்காய் கலந்த உணவு, வடை, அதிரசம் தானம் சிறப்புடையது. தென்காசி அருகே பாபநாசம் சிவாலயத் தீர்த்தத்தில் தர்ப்பணம் கொடுத்தல் விசேஷமானது.

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம்

ஏகாதசி முதலில் தாய், தந்தை வழியில் பெண்களுக்கும் பிறகு ஆண்களுக்கும் தர்ப்பணம், துறவிகளாய், மகான்களாய், சந்நியாசிகளாய், யோகியராய் உடலைத் துறந்து என்றும் ஏகாந்த ஜோதியாய்த் திகழ்வோருக்கும் அர்க்யம் அளித்திடுக. (தர்ப்பணம் அல்ல!) அர்க்யம் என்பது இரண்டு கைகளிலும் நீரை ஏந்தி ஐந்து விரல்களின் வழியே நீரைத் தாரையாக வார்த்தல் ஆகும். தர்ப்பணம் என்பது வலது கை ஆள்காட்டி விரல், சுட்டு விரல்களுக்கிடையே நீரை பூமியில் ஊற்றுதல் ஆகும். பணியாரம், ஊத்தப்பம், இட்லி, இடியாப்பம் போன்ற நீராவியில் வேகும் உணவு வகை அன்னதானம் சிறப்புடையது. பொதுவாக பலவீனம், மெலிந்த உடல் கொண்டோர் நல்ல ஆரோக்யம் பெற்றிட இத்தர்ப்பண பலன்கள் உதவும்., தொடர்ந்து அன்னதானம் செய்து வரவும். இன்றைய தர்ப்பணம் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரிக் கரையில் செய்வதற்கு உகந்த இடமாகும்.

சங்கு தீர்த்தம் திருக்கழுக்குன்றம்

துவாதசி – முதலில் சந்நியாசியாய், பிரம்மச்சாரியாய் இறந்தவருக்குத் தர்ப்பணம். பின் தாய் தந்தை வழியினருக்குத் தர்ப்பணம்., நெல்லிக் காய், எலுமிச்சை கலந்த உணவு மற்றும் பழங்கள் அன்னதானம், புற்று நோய், ஆஸ்துமா, காசம் போன்ற நீடித்த நோய்களிலிருந்து நிவாரணம் பெற துவாதசி சனிக்கிழமை தோறும் மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் அளித்து நெல்லிக்காய், எலுமிச்சை கலந்த உணவுடன் பழங்களைத் தானமாக அளித்து வர வேண்டும், திருக்கழுக்குன்றத்தில் கிரிவலம் வந்து சங்கு தீர்த்தத்தில் தர்ப்பணம் அளிப்பதால் பழைய சொத்து வழக்குகள் நன்முறையில் தீரும்.

திரயோதசி – சிவபக்தராக வாழ்ந்தவர்க்கும், ஸ்ரீவிஷ்ணு பக்தராக வாழ்ந்தவர்க்கும் முதலில் தர்ப்பணம், பிறகு தாய், தந்தை வழி முன்னோர்க்குத் தர்ப்பணம், குறிப்பாகப் பள்ளிப் பருவத்தில் இறந்தவர்களுக்கு அளிக்கின்ற தர்ப்பணத்தால் அவர்களுக்கு நற்கதி கிட்டும். இன்று திருவிடைமருதூர் திருக்குளத்தில் தர்ப்பணம் அளிப்பது சிறப்புடையது. கீரைக் கூட்டு, கீரை மசியல், கீரைப் பொரியலுடன் அன்னதானம் செய்தல் சிறப்புடையது. குழந்தைகளை அடித்து அவர்கள் வேதனையுற்றிருந்தால் அவர்கள் சாந்தமுடன் மனங்குளிர அனுகிரகம் தரும் தர்ப்பணம். சதுர்த்தசி – முதலில் தாய், தந்தை வழி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் இன்று பகைவர்களாய், எதிரிகளாய் இருந்த உறவினர்கள், சக அலுவலர்களுக்குத் தர்ப்பணம், தாங்கள் விரும்புகின்ற தலைவர்கள், எழுத்தாளர்கள், நடிகர், நடிகையர், விளையாட்டு வீரர்கள் என எவருக்கும் தர்ப்பணம் அளித்திடலாம். 10008 முறை ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை இன்று நாள் முழுவதும் ஓதிடில் முறையற்ற காமச் செயல்களுக்குப் பரிகார பிராயசித்த வழிகளைக் காட்ட வல்ல தர்ப்பண சக்தி நிறைந்த நாள். ஆனால் செய்த தவறுகளை மீண்டும் செய்திடில் பெருத்த சாபமாகி விடும். 1008 முறுக்கு, காராபூந்தி, காராசேவு, மிக்சர் போன்றவற்றை அன்னதான உணவுடன் சேர்த்து தானம் அளிப்பது சிறப்பாகும். பல்லில்லாதவர்களும் உண்ணும் வண்ணம் மெதுவடை, அல்வா போன்றவற்றைத் தொடர்ந்து தானமாக அளித்திடில் பேச்சு சரியாக வராத குழந்தைகள் ஓரளவு பேசிட பித்ருக்கள் கருணை புரிவர். மதுரை அருகேயுள்ள திருப்பூவணம் தர்ப்பணத்திற்குரிய பித்ரு முக்தித் தலமாகும்.

அமாவாசை – முதலில் தாய் தந்தை வழியினருக்குத் தர்ப்பணம், பிறகு அறிந்தும் அறியாதோர், தெரிந்தும், தெரியாதோர் அனைவர்க்கும் தர்ப்பணம், தான் அறிந்து இறந்த சகல பிராணிகளுக்கு தர்ப்பணம், தான் வளர்த்து இறந்த பிராணிகளுக்கு தர்ப்பணம், சற்குருவின் கருணை கடாட்சம் பெற உதவும் தர்ப்பணம். ஆனால் குருவின் கட்டளைகளை சிரமேற் கொண்டு நிறைவேற்ற வேண்டும். பெற்றோரை ஏசியமைக்கு ஓரளவு பிராயசித்த வழிகளைக் காட்டும் தர்ப்பணம், சென்னை ஸ்ரீவீரராகவப் பெருமாள் ஆலய சர்வ பாபநாசினி தீர்த்தத்தில் தர்ப்பணம் இடுதல் சிறப்பானது. சகலவித அன்னவகைகள், பழங்கள், அரிசி தானியங்கள், துணி மணிகள், காலணிகள், பொன் மாங்கல்யம் என அவரவர் வசதிக்கேற்ப தானம் அளிக்கலாம்.

அண்ணாமலை தரிசனங்கள்

அஞ்சனா தேவி பெற்ற அற்புத அண்ணாமலை தரிசனங்கள்!

சங்கட நாசன லிங்கமுக தரிசனம்! தரிசன இடம் : ஸ்ரீஉண்ணாமுலை அம்மன் தீர்த்த மண்டபம் (கிரிவலப் பாதை).  இங்குள்ள தீர்த்தக் கரையில் தவம் புரிந்து ஸ்ரீஅருணாசலப் பெருமாளை மணந்து ஸ்ரீஉண்ணாமுலை அம்பிகை இவ்விடத்தில் நின்ற நிலையிலும் அமர்ந்த நிலையிலும் தன் கடுந்தவத்தை மேற்கொண்டு பெறுதற்கு அரிய பாக்கியத்தைப் பெற்றாள். காணுதற்கு அரிய அம்பிகையின் ருத்ர யோக நிலைகளை தரிசித்து அம்பிகை சூட்சுமமாக உபதேசித்த சுழல் கிரிவல முறையில் (ஆத்ம பிரதட்சிணம்) அருணாசலத்தை கிரிவலம் வந்த அஞ்சனா தேவி தற்போதைய கிரிவலப் பாதையில் உண்ணாமுலை அம்மன் மண்டபத்திலிருந்து நாம் காண்கின்ற சங்கட நாசன லிங்க முக தரிசனத்தைப் பெற்றாள். கலியுக மக்களுடைய குறிப்பாக குடும்பப் பெண்களுடைய வெளியில் சொல்ல முடியாத பல துன்பங்களைக்களையும் நிவாரண சக்தியைப் பெற்றது. மிகுந்த நல்வர சக்தியை உடைய தரிசனம். இந்த சங்கட நாசன லிங்க முக தரிசனத்தால் சங்கடங்கள் முழுமையாகத் தீர்வதோடு அதன் தீயவிளைவுகளும் முற்றிலுமாக நீங்கிவிடும். மீண்டும் வரவே வராது. வரும் சமநிலைப் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வந்து இத்தகைய நன்மைகளைப் பெறுவீர்களாக,

ஸ்ரீஉண்ணாமுலை மண்டபம்
திருஅண்ணாமலை

தனக்கோ, பெண்ணிற்கோ, பையனுக்கோ ஏற்பட்டுள்ள வியாதிகளையோ குடும்ப ரகசியங்களையோ வெளியே சொல்ல முடியாமல் பலர் வாழ்கின்றனர். இதேபோல் வியாபாரத்தில் ஏற்பட்டுள்ள சில சிக்கல்களையும் வெளியே சொல்ல முடியாதிருக்கக் கூடும். நன்கு வளர்ந்து வந்து ஒரு சிறு மனஸ்தாபம் காரணமாக கூட்டுவியாபாரமே (partnership) முறிந்து விடும் போலான நிலைகள் ஏற்படுவதுண்டு. தன் பெண் குறித்த வயதில் பருவத்திற்கு வரவில்லையே என்று இதை வெளியில் சொல்ல முடியாமல் மனதில் புழுங்கி இறைவனிடம் அழுது அழுது வேதனையிலேயே நாட்களைக் கழிக்கின்ற இல்லறப் பெண்கள் உண்டு. இத்தகைய வேதனைகளைக் களைந்து மகிச்சியைப் பெற்றுத் தருவதுதான் திருஅண்ணாமலை நாசன லிங்கமுக தரிசனம். சர்வேஸ்வரனும் மூலமுதல்வனாய் ஓங்கார முழுமுதற் பொருளாய் விநாயகரை வைத்துள்ளமையால் ஈஸ்வரியும் தன்னை சாதாரண மானுடப் பெண்ணாக வரித்துக் கொண்டமையால் தன் தவத்தைத் தொடங்கும் முன் விநாயகரைத் தொழுதிட்டாள். அன்று அம்பிகை தொழுத விநாயகரோ சக்கரம் தாங்கியவராய், சங்கட நாசன விநாயகராய்ப் பரிமளித்தமையால் திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் ஸ்ரீஉண்ணாமுலை மண்டபம் வரையேனும், ஆத்மப் பிரதட்சிணம் எனப்படும் சுழல்வல முறையில் கிரிவலம் வந்து அம்பிகையை தரிசித்து சங்கடங்களை நாசம் செய்யும் விநாயகப் பெருமானுக்கு உவப்பான கொழுக்கட்டை, அவல், பொரி, மோதகம்தனை தானமாக அளித்திடில் காரியத் தடங்கல்கள் நீங்கி சுபிட்சம் ஏற்படும். மேலும் தங்களுடைய கிரிவலப் பலன்களை எல்லாம் சங்கட நாசன லிங்க முக தரிசனம் போன்ற முக்கியமான தரிசனப் பகுதிகளில் பதிக்கின்றமையால் வருகின்ற யுகங்களில் சற்குரு மூலமாக இத்தகைய தெய்வீக இரகசியங்களை உணர்கின்றவர்களுக்கு இந்த தரிசன முறைகளைக் கடைபிடித்தால் மகரிஷிகள், யோகிகள், பத்தினி ஸ்படிகங்களுடைய நல்வரங்கள் நமக்குப் பரிசாக காரிய சித்தி தரும் அனுகிரகங்களாகக் கிட்டுகின்றன.

அஞ்சனா தேவி பெற்ற அற்புத அண்ணாமலை தரிசனங்கள். நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட இலுப்பைச் சிவபாண விருட்ச லிங்கத்தை தரிசித்தீர்களா?

அடிஅண்ணாமலைக்கு முன் திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் வருண லிங்கத்தை அடுத்து, அடிஅண்ணாமலை கிராமத்தைத் தொடுமிடத்தில் அடிஅண்ணாமலை கோபுர தரிசனம் தெரிகின்ற நிலையில், சாலையின் வலது புறம் இரண்டு உயர்ந்த இலுப்பை மரங்களைக் கண்டிடலாம். இம்மரங்களின் ஆயுள் குறைந்தது 100 ஆண்டுகளுக்குக் குறையாது. இதன் தெய்வீக சக்தியோ மனித மனக்கணக்கில் அடங்காது. எத்தனையோ மகரிஷிகள் ஆவாஹனம் ஆகி என்றும் அருள்பாலிக்கின்ற மரங்கள்.! பொதுவாக முந்நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட மரங்களுக்குச் சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு வழிபடுவதும் அம்மரங்களின் அடியில் தர்ப்பண பூஜைகள் செய்வதும் விசேஷமானதாகும். இம்மரங்களின் வரிசையில் முந்நூறு ஆண்டுகள் ஆயுளைக் கடந்து திகழ்கின்ற மரங்கள் பல திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்தாலும் இவ்விரண்டு மரங்களு சிறப்பான இடத்தைப் பெறுகின்றன.. (பின் அட்டைப்படம் காண்க..!)

இழந்த பொருட்களை மீட்க உதவும் தரிசனம் :
அனுமனின் தாயாம் அஞ்சனா தேவி பெற்ற அற்புத அண்ணாமலை தரிசனங்களில் இதுவும் ஒன்றாகும். ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு வித விருட்சமாக விளங்கிய இம்மரங்கள் கலியுகத்தில் நமக்கென எளிய முறையில் பெறுதற்கரிய பலாபலன்களைத் தருகின்றன. இம்மரங்களின் இடையில் திருஅண்ணாமலையைத் தரிசித்திடில் இழந்த பொருட்களை நியாயமான முறையில் மீட்பதற்கான அருள்வழிகள் கிட்டும். இம்மரங்களருகே நின்று அண்ணாமலையை தரிசிப்பது மிகவும் விசேஷமானதாகும். ஏனென்றால் எத்தனையோ மகரிஷிகள் சூட்சும வடிவில் இதன் உள்ளிருந்து தவம் பூண்ட மரங்களிவை! எனவே இவற்றிற்கு வானளா பாணலிங்கம் என்றும் இலுப்பை மர பாணலிங்கம் என்றும் பெயர்.

உதாரணமாக பிறரால் ஏமாற்றப்பட்டு கோர்ட் வழக்குகள் முடியாமல் இருக்குமாயின் இதன் தரிசனப் பலன்களாக இழந்த பொருட்களை மீட்டிடலாம். பிறருடைய சூழ்ச்சியால், வஞ்சனையால் பதவி உயர்வையோ, பணியையோ இழந்தவர்கள் இங்கு இலுப்பைச் சிவ பாண லிங்க தரிசனத்தைப் பெற வேண்டும். பொதுவாக தொலைந்து போன பொருட்களை நன்முறையில் பெற்றிடவும் குறிப்பாக சமநிலைப் பௌர்ணமி நாட்களில் இலுப்பைச் சிவபாண லிங்கத்தை வலம் வந்து சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமமிட்டு, ஒரு கூடையினுள் இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய், விளக்கெண்ணெய் கூடிய பஞ்சகூட்டு எண்ணெய்க் கலவையில் மூன்று திரிகளிட்டு, விளக்கேற்றிப் புனிதமான இம்மரங்களை சிவபாண லிங்கங்களாக உணர்ந்து வலம் வந்து இம்மரங்களின் ஊடே அண்ணாமலையை தரிசித்திட இதுவே வான் அளா நீள் விருட்ச தரிசனமாகிறது. வீட்டிலேயே சந்தனம், மஞ்சள், அரைத்து கொண்டு வந்திடுங்கள். இலுப்பை நெய் எனப்படும் இலுப்பை எண்ணெய் அடிக்கடி உறைந்து விடுமாதலின் இதர எண்ணெய் வகைகளுடன் சேர்த்தே தீபம் ஏற்ற வேண்டும். இங்கு சர்க்கரைப் பொங்கலுடன் சுண்டல் தானம் செய்வது சிறப்புடையதாகும்.,!

சக்கரப் படித்துறை
கும்பகோணம்

இந்த இலுப்பைச் சிவபாண லிங்க மரத்தை வெட்டுதலோ, மரக் கிளைகளை உடைத்தலோ கூடாது! எத்தனையோ கோடி மகரிஷிகள் உறைந்து அருணாசல யோகத்தில் திளைத்து நிற்கும் தெய்வீக மரமான இந்த இலுப்பை மரத்தை வெட்டினால், பட்டைகளை உரித்தால், விறகுக்காகக் கிளைக் குச்சிகளை உடைத்தால் பெரும் சாபங்கள் ஏற்பட்டுக் குடும்பத்தையும், சந்ததியையும் பாதிக்கும். குறிப்பாக குடும்பத்தில் பிரிவுகள் சொத்து இழப்பு, பூமி, நிலபுலன்களில் தகராறுகள், கோர்ட் வழக்குகள் உண்டாகும், விவசாயத்தையும் பாதிக்கும். எனவே இந்த தெய்வீக மரங்களை வெட்டிப் பாவத்தையும் நஷ்டத்தையும் சம்பாதித்துக் கொள்ளக் கூடாது. இந்த மரத்திற்கு தினமுமோ, திங்கள், திருவாதிரை, நாட்களிலோ கிரிவலத்தின் போது மஞ்சள், சந்தனம், குங்குமமிட்டு வலம் வந்து மரங்களிடையே அண்ணாமலையை தரிசித்து வந்தால் விளைச்சல் பெருகும். பயிர் நஷ்டங்களும் தணியும். பல்லாண்டுகளாகப் பரந்து நின்று பல கோடி மகரிஷிகளின் பவித்திரமான யோக தேகத்தைத் தாங்கும் பேறு பெற்ற மரங்களிவை!

செம்படம்பர் 2000 – விசேஷ தினங்கள்

பௌர்ணமி திதி – 12.9.2000 செவ்வாய் நள்ளிரவு 12.12 மணி முதல் 13.9.2000 புதன் நள்ளிரவு 1.07 மணி வரை பௌர்ணமி திதி அமைகிறது. 12, 13 இரு தினங்களுமே இரவு கிரிவலத்திற்கு ஏற்ற அபூர்வமான சமநிலைப் பௌர்ணமித் திதி நாட்களாகும்.

சங்குகளில் தீர்த்தம் ஊற்றித் தர்ப்பணம் அளிப்பது பன்மடங்கு பலன்களைத் தரும். பூஜை மற்றும் தர்ப்பணத்திற்கானப் பலவகைச் சங்குகளை சென்னை ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயாவில் பெறலாம். 11.9.2000 ஆவணி மாதத்தில் அவிட்டம் சேருகின்ற ஆவணி அவிட்ட பூணூல் அணிகின்ற பூஜை நாளாகும். ஜாதி, மத, இன பேதமின்றி யாவரும் பூணூல் அணிந்து ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜெபித்திடலாம்.

நித்ய கர்ம நிவாரணம்

1.9.2000 – பாடல் பெற்ற சிவமூர்த்திக்கு தாமே அரைத்த சந்தனத்தால் இராப் பற்று இட்டு மறுநாள் எடுத்து பள்ளி மாணவர்களுக்கு நெற்றிக்கு இட தானமாய் அளித்திடில் வீட்டில் குழந்தைகளுடைய படிப்பு நல்லபடியாய் அமையும்.

2.9.2000 – பாதணிகள் தானம் – குறைந்த உழைப்பிற்கு நிறைந்த வருமானம் வரும்.

3.9.2000 – எலக்ட்ரிகல் வேலை செய்பவர்களுக்குத் தேவையான உபகரணங்களை வாங்கி தானம் அளித்தல் – வீட்டு சாவியைத் தொலைத்து விட்டு அடையும் துன்பம் வராது.
4.9.2000 -  தான் விரும்பிய கணவனை வேறு ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டிடில் அந்த பெண்ணிற்கோ, ஆணிற்கோ தொடர்ந்து துன்பம் தருபவர்கள் இன்றோடு திருந்தி செய்த தவறையே செய்யாமல் இருத்தல் வேண்டும். திருந்துவதற்கு சரியான நாள், இது தொடர்ந்து செய்திடில் தங்கள் உயிருக்கே ஆபத்து விளையும்.

5.9.2000 – டயர் பஞ்சர் சரி செய்யும் சிறுவர்களுக்கு இலவச உணவு, ஆடை தானம் – முக்கியமான பிரயாணங்களில் காரிய சாதனை பெறலாம்.

6.9.2000 – மின் விசிறி இல்லாத பள்ளிகளுக்கு இலவச மின்விசிறி தானம் – ஆஸ்த்துமா நோயிலிருந்து விடுதலை பெறுவதற்கு ஒரு அரிய சந்தர்ப்பம்.

7.9.2000 – இன்று நீர் மோர் தானம் – குழந்தைகளின் வயிற்று வலியிலிருந்து நிவாரணம் பெற்றுத் தரும்.

8.9.2000 – இன்று குபேர லிங்கத்திற்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்து ஏழை எளியவர்களுக்குத் தானமாய் அளித்திடில் சேமித்த பணத்திற்கு சுப செலவு வரும்.

9.9.2000 – இன்று புறாக்களுக்கு கேழ்வரகு உணவு அளித்திடில் வேறு மதத்தினரால் அன்பான உதவியைப் பெறுவர்.

10.9.2000 – சீதாராமன், கோதண்டராமன், ஜெயராமன், ஜானகிராமன் போன்ற ராமன் நாமம் பூண்டவர்களுக்கு ஏதாவது ஒரு சிறு உதவியேனும் செய்திடில் கருட தரிசனப் பலன்களைப் பெறலாம்.

11.9.2000 – சவரம் பண்ணுவதற்குப் பணம் இல்லாமல் தாடி/முடி வளர்த்திருப்பவர்களுக்கு இலவசமாக ரேஸர், பிளேடு தானம் அளித்திடில் இல்லத்தில் சோகச் சூழ்நிலைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

12.9.2000 – குழந்தைக்கு குல தெய்வத்திற்கு முடி கொடுக்கிறேன் என்று பிரார்த்தனை செய்து முடி கொடுக்க முடியாமல் குழந்தையும் பெரிதாக வளர்ந்திருந்தால் அந்த குல தெய்வத்தின் பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்கான பண உதவி அளித்து உதவிடில் குடும்பத்தில் கொடுக்கல் வாங்கலால் துன்பம் ஏற்படா வண்ணம் காக்கலாம்.

13.9.2000 – அடுப்பு வசதி இல்லாத குடும்பங்களுக்குப் புதிய அடுக்களை (kitchen)/சமயலறை / அடுப்புகள் ஏற்படுத்தி தந்து உதவிடில் புகுந்த விட்டில் தன் பெண்ணுக்கு வரும் துன்பங்கள் விலகும்.

14.9.2000 – இன்று 300 இட்லிகளுக்குக் குறையாமல் தானம் செய்திடில் வீட்டில் உள்ள பெண்கள் மனதில் ஏற்பட்ட மன பளு குறையும்.

15.9.2000 – கிராமப்புரங்களில் உயிரைப் பணயமாக வைத்து வாழும் ஏழைக் கழைக் கூத்தாடிகளுக்கு வயிறார உணவிட்டு, ஆடைதானம் செய்திடில் எதிர்பாராத இடத்திலிருந்து பண உதவி வரும்.

16.9.2000 – அனாதைக் குழந்தைகளுக்கு இலவச மருத்துவ வசதி இன்று செய்திடில் உங்கள் மீது அன்புடையோர் நோய் நொடிகளால் துன்புற மாட்டார்கள்.

17.9.2000 – சுடுகாடுகளில் பழுதடைந்த மேற்கூரைகளை இலவசமாகப் பழுது பார்த்திட உதவி செய்திடில் தேடி அலைந்து உழைத்த தொழிலில் தடங்கல் பட்ட பணம் திரும்பி வரும்.

18.9.2000 – பள்ளியில் பெரிய வகுப்பில் படிக்கும் மாணவர்களை வீணாக கரம் வைத்து அடிக்கின்ற ஆசிரியர்களுக்கு இன்று குடும்பப் பிரச்சினை வேரூன்றும் நாளிது. குரு மூலமாய் தக்க பரிகாரம் தேடாவிட்டால் தற்கொலையில் முடிகின்ற சோகச் சூழ்நிலை ஏற்பட்டு விடும். கவனம் தேவை.

19.9.2000 – தோட்டக்காரர்களுக்குத் அவர்கள் தோட்டப் பராமரிப்புக் கருவிகளை மாற்றம் செய்ய வேண்டிய நாளிது. அவ்வாறு செய்யாவிடில் அக்கருவிகளாலேயே ஆபத்து உருவாகும்.

20.9.2000 – இன்று பழைய புதை குழிகள் மீது கட்டிய பாழடைந்த சமாதிகளைப் புதுப்பிக்க வேண்டிய நாளிது. இவ்வாறு செய்திடில் இல்லறத்தில் நிறைய நல்மாற்றங்கள் ஏற்படும். தர்ப்பண வழிபாடுகளில் இதுவும் ஒன்று.

21.9.2000 – ஊனமுற்ற பள்ளி மாணவர்களுக்கு மூன்று கால் சக்கர வண்டிகள் வாங்கி தானம் அளித்திடில் எதிர்காலத்தில் வரும் வாகன ஆபத்தைத் தவிர்க்கலாம்.

22.9.2000 – புதிதாக பள்ளிக்கு மாணவர்களைச் சேர்க்கின்றவர்களுக்கு நிதி உதவி செய்து அவர்களுக்கு எழுத்தறிவித்தல் – கணக்கு வழக்குகளில் வருகின்ற விவகாரங்கள் சுமுகமாய் முடியும்.

23.9.2000 – மொசைக் பாஸிஷ் போடும் தொழிலாளர்களுக்கு உணவு உடை தானம், அதோடு வெற்றிலை பாக்கு (நீர்த்த சுண்ணாம்புடன்) தாம்பூலம் அளித்திடில் நீண்ட நாள் மறந்து இருந்த பொருள் ஞாபத்திற்கு வரும் நாளிது.

24.9.2000 – இன்று தேனு புங்கவ பிருஷ்டி சங்கு வைத்து பூஜித்து பால் பாயச தானம் செய்திடில் பெரிய முதலாளிகள் தொடர்பு ஏற்பட்டு வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம்.

25.9.2000 – இன்று பசுமாடுகளுக்கு அகத்திக்கீரை அளித்து மக நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு வெள்ளிக் கொலுசு தானமும், ஆண் குழந்தைகளுக்கு வெள்ளி வளையல் தானமும் செய்திடில் – வங்கியில் இருந்து வரும் துன்பங்கள் நிவர்த்தி ஆகும்.

26.9.2000 – இன்று ஏழை மாணவர்களுக்கு கணக்கு, பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, ஆங்கிலம் இலவச டியூசனுக்கு உதவுகின்றவர்களுக்கு தேர்வில் நிறைய மார்க் வர வேண்டியவர்க்குக் குறைந்த மார்க் வராமலும் பொய்,புரட்டு செய்தவருக்குச் சரியான தண்டனையும் கிடைக்க வழி செய்யும்.

27.9.2000 – இன்று தர்ப்பைச் சட்டம் வைத்துத் தர்ப்பணம் செய்யும் போது காமதேனு மடிக்காம்பு சங்கு என்ற அற்புத சங்கு மூலமாக நீர் வார்த்து பண்டிட், வித்வான், புலவர், பேராசிரியர், லெக்சரர் போன்ற கல்லூரி/பல்கலைக்கழக / கல்வித் துறைகளில் பணிபுரிந்து சிவபதவி அடைந்தவர்களுக்குத் தர்ப்பணம் இட்டிடில் அவர்கள் உயர்ந்த தேவ நிலைகளைப் பெறுவர்.

28.9.2000 – வாகனங்களில் உள்ள பழைய டயர்களை மாற்றிப் புது டயர்களை மாட்ட வேண்டிய நாளிது, பழைய டயர்களை Retread பண்ணி விற்று அன்னதானம் செய்ய வேண்டும்.

29.9.2000 – இன்று 80 வயதுக்காரர்கள், சஷ்டியப்த பூர்த்தி, கனகாபிஷேகம் செய்தவர்கள் கணவன் மனைவியாக அமர்ந்து நுனிமுறியாத அரிசியால் அட்சதை செய்தல் வேண்டும்.

30.9.2000 – இன்று உத்தாலக வலம்புரி சங்கு வைத்து துளசி அல்லது வில்வம் கூடிய நீர்விட்டு விஷ்ணு சகஸ்ரநாமம்/ வேதாந்த தேசிகரின் ஸ்ரீதுதி / திவ்ய பிரபந்த தமிழ் துதிகளை ஓதி வழிபட்டு சங்கு நீரைப் பருகிடில் விற்காத வீட்டிற்கும் விற்பதற்கு நல்வழி பிறக்கும்.

சாயும்போது மனைவி உடன் வருவதில்லையே :: மாதா அமிர்தானந்தா

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam