நம்மிடம் குறை இருந்தால்தான் பிறரிடம் குறை இருப்பதாகத் தோன்றும் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

குழந்தை பரிபாலனம்

கர்ப்பம் தரித்த நேரம் முதல் குழந்தை பிறந்து நற்சடங்குகள் முடிவுபெறும் வரை ஒவ்வொரு பருவத்திலும் அக்குழந்தையைப் பல்வேறு தேவதைகள் போஷிக்கின்றன .அதற்குப் பிறகும் மனித வாழ்வில் பல்வேறு பருவங்களில் தேவதைகளின் பாதுகாப்பும் தொடர்கின்றது. மனிதனுடைய அறிவுக்கு எட்டாத இத்தகைய மாபெரும் ஆன்மீக ரகசியங்களை அறிந்த மகான்களையும், சித்த புருஷர்களையும் நாடி இவற்றை அறிந்து தெளிவு பெற வேண்டும்.
கருகாக்கும் தாயான திருக்கருகாவூர் தேவியாம் அகிலநாயகி மனிதகுலம் மட்டுமின்றி நெல் முதலிய தானியங்கள் உள்ளிட்ட அனைத்து ஜீவன்களின் கருபரிபாலனத்தை ஏற்று நடத்தும் ஆதிசக்தியாவாள்.
எனவே கருவுற்றவர்கள் ஸ்ரீதிருக்கருகாவூர் அம்பிகையைப் பிரார்த்தித்தல் வேண்டும். ஆண், பெண் குழந்தை என்று நாமே விருப்பத்தைத் தெரிவிப்பதை விட “எதுவரினும் ஏற்போம், எமக்கு எது நலம் புரியும் என்பதை நீயே அறிவாய்”, என்று அம்பிகையிடம் சரணடைதல் வேண்டும்.

ஆயிரம் கோடி சித்து தெரிஞ்சாக்கூட அண்ணாமலையைப் புரிந்து கொள்வது கஷ்டம்தான்.

தம்பதியர் கூடுகின்ற சங்கம சுபநேரம் காண இரவு கால எமகண்டம், ராகு காலம், ஹோரைகள், நட்சத்திரங்கள் கணித்துப் பகுத்தல் அற்புதமான வாரிசை உருவாக்கும். இதற்குரிய தகுந்த வழிமுறைகளைச் சற்குருவே அருளும் தகைமை உடையவர். ஆதலால் அவரை நாடி விளக்கம் பெறுதல் வேண்டும்.
ஸ்ரீதிருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகையிடம் பிரார்த்தித்துக் கூடக் குறைப்பிரசவம் ஆகிவிட்டதே என்று சிலர் வருத்தமுறுவதைக் காண்கிறோம். நம்முடைய மனிதச் சிற்றறிவுக் கண்களுக்குத்தான் அது குறைப்  பிரசவமே (Natural Abortion) தவிர இப்புனித பூமியில் அக்கருவிற்கு உரிய வாழ் நாளைத் தந்து, பிறகு அதற்குரிய அடுத்த வாழ்க்கையை ஸ்ரீஅம்பிகையே ஏற்றுக் கொள்கிறாள் என்பது பலரும் அறியாத ஆன்மீக ரகசியமாகும். எனவே நலம் தரும் நாயகியாம் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை தான் அளித்த கருவைத் தானே மீண்டும் ஏற்றுக் கொண்டு கரு பரிபாலனத்தைத் தொடர்கிறாள். எனவே குறைப் பிரசவ சிசுக்கள், இறந்து பிறந்த சிசுக்கள் (Still born babies) ஆகியவற்றின் கருபரிபாலனமும் ஸ்ரீஅம்பிகையின் அருளுக்கு ஆட்பட்டதே என்பதை உணர்ந்தால் தெளிவு கிட்டும். மனக் கவலையும் மறையும்.
பொதுவாகவே நம் முன்னோரே நம் குடும்பங்களில் மீண்டும் பிறக்கின்றனர் என்பதனால்தான் தாத்தா, பாட்டியின் பெயர்களை நம் குழந்தைகளுக்கு வைக்கும் நற்பழக்கம் கொண்டுள்ளோம். எனவே நம் பெற்றோரை, முதியோரை நன்முறையில் கவனித்துப் பேணி நம் கடமைகளைச் சரிவர ஆற்றுவதனாலும் குல தெய்வத்திற்குரிய நேர்த்தி கடன்களைச் செலுத்தி முறையாக வழிபடுவதாலும், மாமனார், மாமியார் இவர்களை அன்புடன் நடத்துவதாலும் குறைப் பிரசவங்களைத் தவிர்க்கலாம்.
மதுரை அரசரடியிலுள்ள “ஸ்ரீகுழந்தையானந்த சுவாமி” சிறு குழந்தைகளைக் காத்து அருள் புரிகின்றார். இவருடைய ஜீவ சமாதியில் ஏழைக் குழந்தைகளுக்கு இனிப்புத் தானங்களும் துணிகளும், காலணிகள் போன்ற தானங்களும் உன்னதமானதாகும், குழந்தைகளை எத்தகைய கொடிய நோய்களினின்றும் காத்து அருள் பாலிக்கின்றார் ஸ்ரீகுழந்தையானந்த சுவாமி, குழந்தையற்றோருக்கும் குழந்தை பாக்கியம் அருள்புரியும் அற்புத சித்தர் இவர்.

திருச்சி உய்யக்கொண்டான்மலை

திருச்சி மாவட்டம் திருவாசியில் உள்ள “மாற்றுரைவாதீஸ்வரர்” சிவாலயத்தின் வெளிப் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு எதிர் வளாகத்தில் அமர்ந்து அருள் புரியும் “ஸ்ரீபேச்சியம்மன்” ஊமைக் குழந்தைகளுக்குப் பேசும் வரத்தை தந்து அருள் பாலிக்கின்றாள. சக்தி வாய்ந்த இந்த அம்மனுக்கு இளநீர் அபிஷேகம் செய்து அவ்விளநீரைப் பாலுடன் சேர்த்து ஏழைக் குழந்தைகளுக்குப் பால் தானம் அளித்தால் திக்குவாய்க் குழந்தைகள் நன்றாகப் பேசுவர். ஊமைகளும் பேசுகின்ற நல்வழி காணலாம்.
திருச்சி உய்யக்கொண்டான் மலையிலுள்ள “உஜ்ஜீவநாதர்” ஆலயத்தின் அம்பிகை “அஞ்சனாட்சி தேவி” சந்நதியில் சிறுகுழந்தைகள் ஒன்று சேர்ந்து திருப்பணி, நாமசங்கீர்த்தனம் போன்ற நற்செயல்களைப் புரிய திருஷ்டியாலும் செய்வினைகளாலும் அவதியுறும் குழந்தைகளுக்கும், பாலாரிஷ்ட தோஷம் உள்ளோருக்கும் நிவாரணம் கிட்டும். சிறு குழந்தைகள் பக்தியோடு குழந்தைப் பிராயத்தில் வளர அவர்களை ஒன்று சேர்த்து இச்சன்னதியில் நற்செயல்கள் செய்வித்தல் வேண்டும். இது பெற்றோர்களின் கடமை.
பெண் குழந்தைகளையும், பருவம் அடைந்த கன்னிப் பெண்களையும் அவர்கள் நன்முறையில் திருமணம் ஆகும் வரை பரிசுத்தமான கன்னித் தன்மையையும், கற்பு நெறியையும் அளித்துக் காத்தருள்பவள் துவாரசக்தி அம்பிகை ஆவாள் துவார சக்தி அம்பிகை தனிச் சன்னதி கொண்டு அருள்பாலிக்கும் திருக்கோவில்கள் மிகச் சிலவே.
தஞ்சை மாவட்டத்தில் கூத்தானூரில் தனி ஆலயம் கொண்டு அருள் பொழியும் ஸ்ரீசரஸ்வதி தேவி நற்கல்வி மட்டுமல்லாது நல்லறிவும் தரும் கலைமகளாவாள். ஸ்ரீசரஸ்வதியின் குருவே ஸ்ரீஹயக்ரீவப் பெருமாள் என்பது பலரும் அறியாத ஆன்மீக ரகசியங்களாகும். மாதா மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் ஸ்ரீஹயக்ரீவப் பெருமானுக்குச் சாமந்திப்பூ திண்டு மாலை அல்லது மல்லிகைப்பூ திண்டுமாலை சார்த்தி் கற்கண்டு  நைவேத்தியம் செய்து குழந்தைகளுக்குத் தானமாக அளிக்க வேண்டும். இதனால் கணிதத்தில் மந்தமாக உள்ள குழந்தைகளும், பொதுவாகவே மந்தமான அறிவுள்ள குழந்தைகளும் நன்முறையில் தேர்ச்சி அடைவர்.
இவ்வாறு குழந்தை பரிபாலனத்தில் பல தெய்வ மூர்த்திகளும், ஆயிரக்கணக்கான தேவதைகளும் குழந்தையின் பல்வேறு பிராயங்களில் பங்கு பெறுவதால் இதற்கான விளக்கங்களைச் சற்குரு மூலமாக அறிந்து கொள்ள வேண்டும். சற்குரு உரைக்கும் தகுந்த வழிபாடுகளையும், தானதர்மங்களையும் மேற்கொண்டால் அற்புதமான வாழ்க்க்கையை நம் குழந்தைகளுக்குப் பெற்றுத் தரலாம். இதுவே பெற்றோர்களின் தலையாய கடமையல்லவா ?
ஒரு தாய் கருவைச் சுமந்து குழந்தையைப்  பெற்றெடுக்கும் வரை ஒவ்வொரு மாதக் கருவிலும், ஒவ்வொரு ரூபத்திலும், ஒவ்வொரு நாமத்தைத் தாங்கி எம் சிவபெருமான் காக்கின்றான்.

கருவுற்ற  மாதம்

வணங்க வேண்டிய தெய்வம்

வழி கூறிய சித்தர் பெருமான்

முதல் மாதம்

முல்லை வனநாதர், கருகாக்கும் நாயகி

கழுவெளிச் சித்தர்

இரண்டாவது மாதம்

சந்திரசேகரன்

தொள்ளைக் காதுசித்தர்

மூன்றாவது மாதம்

பசுபதியான சொக்கநாதன் (பசுபதி வடிவான சிவன்)

கரபாத்திர சித்தர்

நான்காவது மாதம்

திருநீலகண்டன்

வேட்டவலம் சித்தர்

ஐந்தாவது மாதம்

பஞ்சாட்சர ரூபன்

சிலக்காகித சித்தர்

ஆறாவது மாதம்

சுக்ரனோடு சேர்ந்த வெள்ளீஸ்வரன்

தொள்ளைக்காது சித்தர்

ஏழாவது மாதம்

ஏகாம்பரேஸ்வரன்

பாட்டப்பவன் சித்தர்

எட்டாவது மாதம்

கபாலீஸ்வரன்

சிலக்காகித சித்தர்

ஒன்பதாவது மாதம்

திருஅண்ணாமலை அருணாசலேஸ்வரன்

இடைக்காட்டுச் சித்தர்

பத்தாவது மாதம்

தாயுமானவன்

சாரமா முனிவர்

இவ்வாறாகப் பத்து மாதங்களிலும் ஒவ்வொரு நாமம் பூண்டு, ஒவ்வொரு ரூபத்திலும் அனைத்து ஜீவன்களையும் காப்பவன் சிவனே.
கருவுற்ற தாயானவள் அந்தந்த மாதத்திற்கு உரிய சிவ நாமங்களைப் பாராயணம் செய்தல் வேண்டும். அச்சிவநாமங்களுக்கு உரித்தான தலபுராணங்களையும், திருவாசக தல பாடல்களையும் தினமும் பாராயணம் செய்தல் வேண்டும். அந்தந்தத் திருத்தலங்களில் கணவன்மார்கள் கர்ப்பிணிகளுக்கு உரிய தானங்களைச் செய்வது விசேஷமானதாகும்.
கருவைக் காக்கும் நாயகி திருக்கருகாவூர் அம்மன் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாம ஸ்மரணம் அவசியம் செய்தல் வேண்டும்.

கசவனம்பட்டி சுவாமிகள்

ஸ்ரீகோரவ நாத சித்தரின் தலையாய சிஷ்யரான ஸ்ரீஜெயிநிநாத சித்தர் சாக்த உபாசனையில் ஸ்ரீபாஸ்கரராயர் போன்ற உத்தமப் பெரியோர்களுக்குச் சூட்சுமமாக அருள் வழிகாட்டிய அற்புத சித்த புருஷர், ஸ்ரீவருணா இஷ்ட திகம்பர யோகினி தேவியைப் பலகோடி யுகங்கள் பூஜித்து ஸ்ரீஅம்பாளின் பரிபூரண அனுகிரகத்தைப் பெற்றவர்.
ஸ்ரீஜெயிநிநாதர் நிவர்த்திநாத ஸ்வாமியாக எதிரில் நிற்கும் சிறுவனின் சிரசில் கை வைத்து ஆசிர்வதிக்க, நான்கு ஜோதிகள் சிறுவனைச் சுற்றி வியாபித்துக் கவசமாய் ஒளிர்ந்தன.
“நிவர்த்திநாதா! உன் உடன்பிறந்தோருக்கும் ஏனைய மக்களுக்கும், இந்த ஜோதித் தத்துவத்தை விளக்குவாயாக!“ என்றும் ஆசீர்வதித்தார்.

உன் சந்ததிகளுக்கு இரண்டு சரியான பாதைகளைக் கற்றுக் கொடு. ஒன்று தானம். அடுத்தது தெய்வ நம்பிக்கை.

சிறுவன் தன்னை மறந்த நிலையில் வீடு திரும்பினான்.. நெடு நாட்களுக்குப் பிறகு சகோதரனைக் கண்ட மகிழ்ச்சியில் ஏனைய மூவரும் அவனைக் கட்டித் தழுவினர்.
நிவர்த்திநாதனைச் சுற்றி மிளிர்ந்த நான்கு ஜோதிகளில் மூன்று ஜோதிகள் ஞானேஸ்வர ஸ்வாமியிடம் சங்கமமாயின்.. நான்காவது ஜோதி மூன்றாகப் பிரிந்து நிவர்த்திநாத ஸ்வாமி, சோபனா தேவஸ்வாமி, முக்தாபாய் ஆகிய மூவரிடம் ஐக்கியமாயின!
ஸ்ரீகோரவநாத சித்தர், ஸ்ரீஜெயிநிநாத சித்தர் போன்றோர் ஜோதி லீலா கடாட்சம் நிரம்பப் பெற்றவர்கள் ஆதலின் திருஅண்ணாமலை கார்த்திகை ஜோதியின் வடமேற்கு அம்சம் இவர்களைப் போன்ற ஜோதி லீலா கடாட்சம் பெற்ற சித்தர்களின் அருட்புனலில் அமைகின்றது. இவ்வாறாக கோடிக்கணக்கான சித்தர்கள், திருஅண்ணாமலை கார்த்திகை தீபப் பெருவிழாவில், பரமாத்மாவாகிய சிவபெருமானின் ஜோதி ஸ்வரூபத்தைப் பல திக்குகளிலும் தாங்கி நின்று அனைத்து லோகவாசிகளும் ஜோதி தரிசனத்தைக் கண்டு அருள் பெற அற்புத இறைப்பணி புரிகின்றனர். ஆதிசிவனின் ஜோதி ஸ்வரூபத்தைத் தாங்கும் தவவலிமையும், இறையருளும், எல்லாவற்றிக்கும் மேலாக ஸ்ரீஅகஸ்திய சித்த மஹாபிரபுவின் குருவருளும் பரிபூரணமாகப் பெற்றவர்கள் சித்தர் குல சிவனடியார்களே!

ஸ்ரீகசவனம்பட்டி சுவாமிகள்

திருஅண்ணாமலை மலைப்பாதையில் வடமேற்கு திசையில் “ஸ்ரீவருணா இஷ்ட திகம்பர தீர்த்தம்” என்ற சுனையில் நீராடி குருவருளுடன் மலை உச்சியைக் தரிசனஞ் செய்திடில் நான்கு ஜோதிகளின் தரிசனம் கிட்டும். இதற்கு “ஸ்ரீவருணா இஷ்ட திகம்பர தரிசனம்” என்று பெயர். குருவருள் நிரம்பப் பெற்றவர்களுக்கே இந்தத் தரிசனம் கிட்டும்.
ஸ்ரீஞானானந்தகிரி சுவாமிகள், ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள், ஸ்ரீரமண மகரிஷி, ஸ்ரீசிவானந்தா, ஸ்ரீதட்சிணாமூர்த்தி சுவாமிகள், காஞ்சி ஸ்ரீபரமாச்சார்யாள் போன்றோர் இத்தகைய அபூர்வ தரிசனத்தைக் காணும் பேறு பெற்ற ஞானிகளாவர்.
ஸ்ரீஅம்பாளின் மூன்று ஜோதிகளில் சங்கமித்துப் பரிணமித்த ஞானேஸ்வர ஸ்வாமியாகிய சிறுவனே பிற்காலத்தில் ஞானி ஞானேஸ்வரராகப் பிரபஞ்சமெங்கும் குருவருள் மகிமையை எடுத்துரைத்தார்.
ஏழு வயதிலேயே ஸ்ரீவருணா இஷ்ட திகம்பர ஜோதியால் ஞானம் பெற்ற ஸ்ரீஞானேஸ்வரர் பட்டி தொட்டியெங்கும் ஜோதித் தத்துவத்தை எளிமையாக உபதேசித்து அருள் மழை பொழிந்தார்.
ஓரிடத்தில் ஸ்ரீஞானேஸ்வரரை ஏளனம் செய்ய எண்ணிய சிலர் “இந்த எருமை மாட்டிற்கு ஞானம் புகட்டுவாயா?” என்று கேட்டுப் பரிகசித்தனர், அவர் அவ்வெருமை மாட்டை வலம் வந்து வணங்கி “என்னுள் உறையும் ஆத்மஜோதியின் மற்றொரு வடிவே! நம்மை, சகல ஜீவன்களையும் ஒன்றெனச் சாற்றும் வேதத்தை எடுத்துரைப்பாயாக” என்று பிரார்த்தித்தார்.
விண்ணோர்கள் பூமாரி பொழ்ந்திட மக்கள் வியக்கும் வண்ணம் அந்த எருமை மாடு வேத கானத்தைப் பொழிந்தது!
சுவாஸினன் என்ற அந்த ஞான ஜீவனே மகிஷமாய்த் (எருமையாய்த்) திருவுரு தாங்கி ஸ்ரீஆயுர்தேவியின் (ஸ்ரீஆதிபராசக்தி அம்சம்) பாதாரவிந்தங்களில் ஸ்ரீகால மகாப் பிரபுவாகிய தர்மராஜாவின் மகிஷவாகனமாக நின்று அருள்பாலிக்கின்றது.
மற்றோரிடத்தில் ஹடயோகி ஒருவர் தம் ஹடயோக சித்திகளால் விண்ணில் குதிரையில் பறந்து சாகஸங்களை நிகழ்த்த, அவருக்குத் தக்க பாடமும் ஞானமும் புகட்ட விழைந்தார். ஸ்ரீஞானேஸ்வரர் உடனே இளம்பாலகர்கள் அமர்ந்திருந்த அந்தக் குட்டிச்சுவர் விண்ணில் பறந்து ஹடயோகியின் முன்னால் சென்று தரையில் இறங்கிற்று.
“ஹடயோகத்தால் ஜீவன்களை இதுகாறும் அறியாமையால் வதைத்தேனே! இதோ இச்சிறுவன் ஞானேஸ்வரன் எவ்விதயோகமுமின்றி ஒரு சாதாரண ஜடப்பொருளை விண்ணில் பறக்க வைத்தனனே! அற்பப் பதரான மானிட ஜடப் பொருளான என்னைத் தன் ஞானங்கொண்டு அசைத்த பாலஞானி ஞானேஸ்வரனின் பாதங்களைச் சரணடைகிறேன்”.
பிறகு அந்த ஹடயோகி நல்வழி நடந்து ஸ்ரீஞானேஸ்வரரின் சீடரானார்.
இவ்வாறாக எண்ணற்றோருக்கு ஞானப்பால் ஊட்டிய ஸ்ரீஞானேஸ்வரர் மகாராஷ்டிர மாநிலத்தில் ஆனந்தி நதிக்கரையில் ஜீவசமாதி பூண்டார். அவர்தம் தெய்வீக சரீரம் ஜீவசமாதியைத் தழுவிய அமிர்த நேரத்தில் அவர் திவ்ய தேகத்திலிருந்து கிளர்ந்தெழுந்த பரமானந்த ஜோதி ஒன்று ஒளிபொங்கும் பாதையில் விண்ணில் ஊர்ந்து சென்று ஸ்ரீவருணா இஷ்ட திகம்பர ஜோதி தேவியின் பாதார விந்தங்களில் ஒன்றியது...
1926ஆம் ஆண்டு, கிருஷ்ண பட்ச கிருத்திகைத் திருநாளில் ....
ஸ்ரீஅம்பிகையின் திருவடிகளில் சங்கமித்த ஞானேஸ்வர ஜோதி மீண்டும் அகண்ட ஜோதியாய் சிருஷ்டி கொண்டு .....
தமிழ் நாட்டில் திண்டுக்கல் அருகே கசவனம்பட்டி கிராமத்தில் ஒரு கள்ளிச்செடியின் கீழ் அந்த பிரம்மஜோதி ஓர் அவதூது பாலகனாய் உருப்பெற்று வருணா இஷ்ட திகம்பர சித்தராய் அவதாரங் கொண்டு இறைப் பணியாற்ற விழைந்ததம்மா! ஸ்ரீஅம்பிகையின் அருளாணையினால்!
ஸ்ரீவருணா இஷ்ட திகம்பர சித்தராக ஸ்ரீகசவனம்பட்டி மௌன அவதூது சித்தராக கசவனம்பட்டி ஸ்வாமிகளாக ஸ்ரீகசவனம்பட்டி மௌன ஜோதி ஸ்வாமிகள் மலர்ந்து அருட்பணி ஆற்றிய அவர்தம் எஞ்சிய சரிதம் அடியார்கள் நன்கு அறிந்ததன்றோ!
1926ம் ஆண்டு கிருஷ்ண பட்ச கார்த்திகையில் ஸ்ரீவருணா இஷ்ட திகம்பர சித்தராக அவதாரங் கொண்ட ஸ்ரீஞானேஸ்வர ஜோதிதனை விண்ணில் பிரகாசிக்கும் திருக்காட்சியாகக் காணும் இறைப் பேறு பெற்ற சித்த குருமஹேஸ்வரரே நம் சிவகுரு மங்களகந்தர்வா!

அடிமை கண்ட ஆனந்தம்

(குருமங்கள கந்தர்வாவின் பாலபருவ குருகுலவாச அனுபூதிகள்)
சிறுவன் கண் விழித்தான்.... “ராமேஸ்வரமா!” கண்கள் விரிந்து மலர வியப்புடன் ஓரக் கண்களால் பெரியவரை நோக்கினான்.
“காசியிலிருந்து ராமேஸ்வரம் வர்ற வரைக்கும் ஒரு ரயில்வே ஸ்டேஷனும் கண்ல படலையே! ஆகாசத்துல அனுமார் மாதிரி எண்னைத் தூக்கிண்டா வந்தீங்க”, ஓரக் கண் பார்வையில் தொக்கி நின்ற விசாரங்களிவை!

அவரவர் கைக்கடிகாரங்கள் காட்டும் நேரத்தை நம்புகிறோம். இதில் எந்த கடிகாரம் சரியான நேரத்தைக் காட்டுகிறது. சொல்லுங்கள்.
எந்த கடிகாரமும் சரியான நேரத்தைக் காட்டுவதில்லை.
இருந்தாலும் ஒவ்வொருவரும் தன் கடிகாரம் மட்டும்தான் சரியான நேரத்தைக் காட்டுகிறது என்று நம்புகிறார்கள். இந்தக் குருட்டு நம்பிக்கை (Blind Faith) ஏன் வழிகாட்டி மீது வருவதில்லை? வந்து விட்டால் வழிகாட்டி சரியான நேரத்தைக் காட்டி தான தர்மத்தில், தவத்தில், சேவையில் ஈடுபடுத்தி தேவ திருப்தியைச் செய்ய வைத்து சிவநிலை காட்டும் சரியான நேரத்தில் அனைவரையும் சேர்த்து விடுகிறார். ஆகவே, சரியான நேரத்தை அறிந்தவர் உன் வழிகாட்டியே.

இதற்கெல்லாம் மசிபவரா இந்தப் பெரியவர்!
சிறுவனைத் தட்டிக் கொடுத்தவாறே,”இப்படியாடா ரயில்ல ஒரே முட்டாத் தூங்கறது! எழுப்பி எழுப்பி ஓஞ்சு போய்ட்டேண்டா!” எனப் பெரியவர் யாரை தேடுவதுபோல் பாவனை செய்து கொண்டே கூறினார்.
“ஆங்! அப்படியா!” கலகலவென்று சில்லறை கொட்டியது போல் சிரித்த சிறுவன், “இப்படியே எத்தனை நாளைக்குப் பூசிமெழுகப் போறீங்க வாத்தியாரே?” என்று கேட்டவாறே பெரியவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டான்! மாணிக்கவாசகர் அனுபவித்த “சிக்கெனப் பிடித்தல் இது தானே!  காசியிலிருந்து சேதுவிற்கு வந்தது எவ்வாறு ?
பரவெளிப் பிரயாணச் சித்துகளைப் பக்குவமாய் ஊட்டி, அறிந்தும் அறியாதவராக, தெரிந்தும் தெரியாதவராக, புரிந்தும் புரியாதவராக மொத்தத்தில் அற்புதமான சித்த புருஷராய் வாழும் முறையினை இவ்வாறாகவே சிவகுரு மங்களகந்தர்வா தம் குருமங்கள கந்தர்வாவிற்குப் போதித்தார்.  
ராமேஸ்வரம் கோயிலில் ....
கோயிலின் பெரிய வெளிப்பிரகாரத்தைச் சுறுசுறுப்புடன் இருமுறை வலம் வந்தார் பெரியவர். நடந்து நடந்து களைப்படைந்திருந்த சிறுவனை அமர்த்தி விட்டு மூன்றாம் முறையும் வலம் வரச் சென்றார்.
சிறுவனோ, பெரியவர் தம் இடுப்புக் கயிற்றில் வைத்திருந்த காசி-கங்கைக் கரை மண்ணைக் கொண்டு அவர் என்ன செய்யப் போகிறார் என்ற சிந்தனையில் லயித்து விட்டான்.!
“சரி வாடா தனுஷ்கோடி போகலாம்! உன் களிமண் மூளையை வெச்சுக்கிட்டுக் கங்கை மண் ஆராய்ச்சி வேறயா ?” பெரியவர் குரல் கொடுக்கச் சிறுவன் திரும்பிப் பார்த்தான். அவனுக்குத் சிரிப்புத் தாளவில்லை..
அங்கே...
கோவணாண்டியாய் வலம் வரச் சென்ற பெரியவர், வடநாட்டவர் பாணியில் வலது புறம் சரிந்த பஞ்சகச்சத்தில் ஜகத்ஜோதியாய் நின்றார். கழுத்தில் எலுமிச்சம் பழ அளவிற்கு ருத்ராட்சங்கள் நிறைந்த மாலை! கையில் தக்காளியெனச் சிவந்த தாமிரப் பூக்கூடை!

இது பெரியவரின் அடுத்த திருவிளையாடலா?
இத்தகைய திருகோலங்கள் பலவற்றைப் பார்த்து இரசித்துச் சத்சித்து ஆனந்தத்தில் திளைத்தெழுந்து, தீர்க்க ஸ்புடம் போட்டு வடிக்கப் பெற்றவரல்லவா நம் குருமங்களகந்தர்வா!
கேட்கத் திகட்டாத அமிர்தமய அற்புத அனுபூதிகளிவை!
குஜராத்திக்காரர் போல் சாய்த்துக் கனத்து நடந்த பெரியவரின் பலவித ரூப லாவண்யங்களை நினைத்தவாறே அவர்பின் நடந்தான் சிறுவன்!
“அரே! தோணி மே சலோ!” என்று சொல்லி அங்கவஸ்திரத்தை லாகவகமாகச் சுழற்றியவாறே மிடுக்குடன் பெரியவர் சிறுவனுடன் படகில் ஏற, இருவரும் தனுஷ்கோடியை அடைந்தனர்.
அழகான சிவாலயம்! தனுஷ்கோடிநாதர் அருள்புரியும் அற்புதத்தலம்! தற்போது கடலில் அமிழ்ந்திருப்பதாக விஞ்ஞான உலகம் முடிவு கட்டியுள்ள தனுஷ்கோடி சிவாலயம். பல ஆண்டுகளுக்கு முன் தனுஷ்கோடித் தீவில் புகழுடன் பரிணமித்து அருள் ஈந்து நின்றது. பூமியின் கீழுள்ள ஏழு பாதாள லோகங்களிலுமுள்ள ஜீவன்கள் வழிபடும் அற்புதமான திருக்கோயிலாகத் தற்போது அது உருப்பெற்றுள்ளது. கோடி கோடி சமுத்ர தேவியர், தேவர்கள் தேவதைகள் இத்திருக்கோயிலைப் புனரமைத்துள்ளனர். திருவானைக்கோயில் ஸ்ரீஜம்புகேஸ்வரரை உபாசனை செய்வோருக்கும், இராமநாதபுரம் அருகே தர்ப்பசயனம், நவபாஷாண நவக்கிரக ஸ்தலத்தில் முறைப்படி புத்ர காமேஷ்டி யாகம் செய்பவர்களுக்கும் தற்போது கடலினுள் அருளுபுரியும் தனுஷ்கோடி சிவலிங்கத்தின் அற்புத தரிசனம் இன்றைக்கும் கிட்டும். இவை சிவகுரு மங்கள கந்தர்வா அருளிய ஆன்மீக இரகசியங்களாகும்.
பெரியவர் தனுஷ்கோடி சிவலிங்கத்தைத் தரிசித்து தனுஷ்கோடி புண்யத் தீர்த்தக் கிணற்றிற்குச் சிறுவனை அழைத்துச் சென்றார்.
“நம்ம பிள்ளையாண்டானுக்குத் தீர்த்தம் கொடு” – பெரியவர் அதிகார தோரணையில் கூறிட,, அவருடைய ரூப ஸ்வரூப லாவண்யங்களையே வேடிக்கையாகப் பார்த்து நின்ற சிறுவனை “அடிமண்டு! ஸ்ரீராமன் கால்பட்ட இடமடா இது! தலையைக் குனிஞ்சு தீர்த்தம் வாங்கிக்கோ!” என்ற தெய்வீக குரல் ஈர்க்க “எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்கிறதே” என்ற யோசனையுடன் சிறுவன் சட்டென நிமிர்ந்தான்,
அங்கே .. தீர்த்தம் கொடுப்பவர் யார்? காசியில் கங்கைக் கரையில் கண்ட அதே துறவி! “அடிமண்டு” என்று ஒலித்த குரலில் அதே நளினம்!
இவர் எங்கே காசியிலிருந்து இங்கு வந்தார்?” என்று கேட்பது போல் சிறுவன் சாந்தமாகப் பெரியவரை நோக்கித் திரும்பினான். அவரோ, மீண்டும் கோவணாண்டியாகக் காட்சியளித்தார்!
வடநாட்டவர் கோலம் OVER!
மீண்டும் துறவியைப் பார்த்தான் ,, இருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டேயிருந்தான். ஒருபுறம் அவதூதர் காசித்துறவி, மறுபுறம் கோவணாண்டிப் பெரியவர் .. இரு சித்த புருஷர்களின் SPIRITUAL CROSS CURRENTல் சிக்கித் திணறினான் அச்சிறுவன்! ஒன்றன்மேல் ஒன்றாக ஆன்மீக அதிர்ச்சிகள் அவனைத் தாக்கிடவே மௌனமானான்! தனுஷ்கோடித் தீர்த்தத்தை அந்தத் துறவி அவன் சிரசில் தெளித்தும் அவன் மீளவில்லை.
குக்குட நிர்விகல்ப சமாதியிலன்றோ அவன் திளைத்துக் கொண்டிருக்கிறான்! எப்படி மீள முடியும்! மீட்பவர், மீள்பவரின் சங்கமந்தானே குக்குட நிர்விகல்ப சமாதியின் உச்சக் கட்டம்!
யார் அந்தத் துறவி!?

சுற்றினால் கிட்டும் சுந்தரானந்தம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஸ்ரீமப்பேடு சிங்கீஸ்வரர் ஆலய மஹிமை
நம் குருமங்கள கந்தர்வா இதுகாறும் ஸ்ரீசிங்கீஸ்வரர், புஷ்ப குஜாம்பாள், வீர்ய பாலீஸ்வரர், நவவியாகரண பலிபீடம் ஆகியவற்றின் மஹிமைகளை சித்த புருஷர்களின் கிரந்தங்களிலிருந்து எடுத்துக் கூறிட அடியார்கள் அளவிலா மகிழ்ச்சி கொள்கின்றனர்.
ஸ்ரீசிங்கீஸ்வரர் ஆலய ராஜகோபுரத்தில் நுழையும் முன் கோபுரத்தின் வலப்புறம், கீழிருந்து மேலாக இரண்டாவதாக “சுதபுதர்” என்ற மகரிஷியின் திருவுருவம் சிலாரூபத்தில் வடிக்கப் பெற்றுள்ளது.
ஸ்ரீசிங்கீஸ்வரரைத் தொழுது பணிந்து, இங்கு ஜீவசமாதி கொண்டு இன்றும் அருள்புரியும் மஹரிஷி இவர்.

நீங்கள் எப்படி வாத்யார் ஆனீர்கள்? ஒரு அன்பு நிறைந்த ஆத்மாவின் முதல் கேள்வி இது.
பல பிறவிகளில் தொடர்பு கொண்ட உத்தம குரு அருளால், விட முடியாத பல பற்றுகளைக் குறைத்துக் கொண்டு ’கடவுள் உண்டு. அவர் துணைதாம் நிரந்தரம்’ என்று உறுதியாக நம்பி, குரு பின்னே ஊர்ஊராக நடந்து சென்று, பட்டினி கிடந்து, அங்குள்ள சுயம்பு கோயில்களில் உழவாரத் திருப்பணி செய்து, குருவின் துணையால் அங்கு வாழும் சித்தர்களைச் சந்தித்து, அவர்களின் ஆசியால் அடங்கா ஆசைகளை ஓர் அளவே அடக்கி, தெய்வத் திருஅருளாளனான சிவன் அருளால் மனோவலிமை அளித்து சிவனே ‘வாத்யார்’ என்ற பெயரை குரு மூலமாகத் தந்தருளினார்.

அவர் அருள்புரியும் தன்மை தான் என்னே!
நம் குருமங்கள கந்தர்வா விளக்குகிறார்! இடையே அடியார்களின் சந்தேகங்களுக்கு அற்புதமான விளக்கங்கள் வேறு!
‘மனிதன் தன்னுடைய வெவ்வேறு அங்கங்களினால் பற்பல செயல்களைச் செய்து அச்செயல்களின் விளைவுகளுக்கு ஏற்ப பாவ புண்ணியத்தை ஏற்கின்றான்.
அடியார் : செயல்களினால் தானே பாவம், புண்ணியம் கிட்டுகின்றது?
குரு : செயலின் விளைவுக்கேற்பவே பாவம், புண்ணியம் வந்து சேரும். செயலினால் அல்ல! பொய் சொல்வது பாவம் என்று கருதுகிறோம். ஆனால், ஒரு பொய் மூலம் பலருக்கு நன்மை செய்ய முடியுமானால் அப்பொய்யின் விளைவு பல நற்செயல்கள் என்பதால் அப்பொய்யைச் சொல்பவர் அளவற்ற புண்ணியத்தைப் பெறுகிறார். தார்மீக முறையில் தன் நாட்டைக் காக்க ஒரு போர்வீரன் எத்தனையோ எதிரிகளைத் தாக்கி மாய்த்துக் கொன்றாலும் அது பாவமன்று. ஆனால் இத்தகைய கர்மப் பகுப்பினைச் சற்குரு மூலம் அறிந்தே செயல்பட வேண்டும். தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டால் நல்லதன்று...
அடியார் : எல்லோருக்கும் சற்குரு கிட்டுவதில்லையே?

குரு : (புன்முறுவலுடன்) அப்படியல்ல! மனிதன் குடிதண்ணீருக்கு அலைவது போல அதே தீவிரத்துடன் தேடினால் குருவை நிச்சயம் அடையலாம். ஒவ்வொரு ஜீவனுடைய வாழ்க்கைப் பயணமும் சற்குருவைத் தேடித்தான் என்பதை, அவன் ஜீவனுடைய வாழ்க்கைப் பயணமும் சற்குருவைத் தேடித்தான் என்பதை அவன் உணரவில்லை! செல்வம், குழ்ந்தைப் பேறு, நல்மனைவி, நோய் நொடியில்லாத வாழ்வு நீண்ட ஆயுள் என எதை எதையோ தேடி, இறைவனிடம் மன்றாடும் மனிதன், என்றேனும் சற்குருவைத் தருமாறு இறைவனை வேண்டுகிறானா? சுய நலமாகப் பல யாகங்கள் செய்தும் இறைவனைக் காண இயலா மனிதன் சற்குருவைப் பெறும்போது அச்சற்குரு மனிதரூபத்தில் அவனுடன் வாழ்ந்து மஹானோடு உறையும் பாக்கியத்தைப் பெறுகின்றானல்லவா?
சற்குருவே இறைவனைக் காட்டும் வல்லமை பெற்றவர்! இறைவனை எவரும் நேரிடையாக அடைதல் எளிதல்லவே! என்று குருமங்கள கந்தர்வா உரைக்க அதைக் கேட்டு “ஆஹா! நாம் எத்தகைய பாக்கியம் பெற்றவர்கள்” என அடியவர்கள் மனம் மகிழ்ந்தனர்.
குருமங்கள கந்தர்வா மேலும் தொடர்ந்தார்.
மனிதன் தன் வாக்கினால், முறையற்ற பேச்சினால் சேர்த்துக் கொள்ளும் கர்மவினைகளே கோடிகோடியாம், பொய் சொல்வது, சூது, பித்தலாட்டம், கபடு முறையற்ற காமம் போன்ற தீவினைகளின் பிறப்பிடம் மனிதனின் வாய் ஆகும். ஆதிமூல இறைவனைச் சதா சர்வ காலமும் உச்சரிக்க வேண்டிய திருவாயினில் அதைத் தவிர ஏனைய தீவினைகளே உழல்கின்றன.
“தீய சொற்களால்” எவ்வுளவு பேரை வருத்தினோம் ? கெட்ட வார்த்தைகளால், எத்தகைய மானபங்கம் விளைவித்தோம்! மனித இதயங்களைச் சுட்டோம்! தீய செயல்களுக்கு உதிர்ந்த அபாண்டமான கொடிய வார்த்தைகள் எத்தனையோ கோடி! கோபத்தில், பேராசையில், போதையால் வெடித்த தீய வார்த்தைகள் எண்ணற்றவை. இதன் விளைவுகளை யார் ஏற்பது ?
இத்தகைய வினாக்களை ஒவ்வொரு மனிதனும் தனக்குத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும்!
வாயினால் இழைத்த கோடி கோடி பாவங்களுக்குப் பரிகாரம் தான் என்னே?
கொடிய சொற்களால் குறிப்பாக, உத்தமப் பெண்களை நிந்தித்தவர்களே ஊமைகளாகப் பிறக்கின்றனர். வாயில் புற்றுநோய் ஏற்படும், திக்குவாய் ஏற்படும். சந்ததியினர் ஊமைகளாகப் பிறப்பர். மரணத்திற்கு முன் பேச இயலாது செயலிழப்பர். கொடிய விலங்குகளாகப் பிறப்பெடுப்பர். ஆனால் இதுவரை தன் வாயினால் இழைத்த துன்பங்களுக்கு யாது பரிகாரம்?



மப்பேடு திருத்தலம்

கலியுக மனிதன் நாவை அடக்காது பேசுவதால் விளையும் பாவங்களிலிருந்து அவனைக் கரையேற்ற “சுததபர்” என்ற மஹரிஷி அவதரித்தார். “லலாடங்க யோகம்” என்ற அற்புத யோகமுறையில் நாவை உள்ளிழுத்துத் தொண்டைக்குள் அழுத்திப் பலகோடி யுகங்கள் இந்தச் சிங்கீஸ்வரர் ஆலயத்தில் தவமிருந்தார்.
“சுதபுதா! ஸ்ரீஅகஸ்திய மஹரிஷி உருவாக்கிய கல்லால மரத்தை உமக்குத் தருகிறோம். இதை இப்பகுதியில் உற்பவித்து ஆலமரப்பட்டையில் “லலாடங்க கஷாயத்தைச்” சித்த மண்டல அருமருந்தாக மக்களுக்கு அளித்தால் அவர்தம் நாக்கிலும், வாயிலும் இறை நாமம் உறையும்” என இறைவன் வரமளித்தார்..
ஸ்ரீசுதபுத மஹரிஷி இக்கோயிலைச் சுற்றியுள்ள பகுதியில் பல ஆலமரங்களை வளர்த்தார், அவர் தந்த ஆலமரங்களே இன்றும் இக்கோயிலைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் காணப்படுகின்றன. அவரை தியானித்திடில் ஸ்ரீசிங்கீஸ்வரரின் தரிசனம் கிட்டும். தெய்வ தீர்க்க தரிசனமும், வாக்பலிதமும். சிவஞானமும் கூடும்.
“லலாடங்க கஷாயம்”
ஸ்ரீசுதபுதர் தம் அரிய தவத்தால், கலியுக மக்களின் நாவால், வாயால் எழும் தீவினைகளுக்கு லலாடங்க கஷாயம் என்னும் அதிஅற்புதக் கஷாய மருந்தை அளித்துள்ளார்.

ஸ்ரீசுதபுத மகரிஷி
மப்பேடு சிவாலயம்

ஆலமரப் பட்டையினை ஸ்ரீசுதபுத மகரிஷியை நம: என்று தியானித்துப் பின் அதைச் சுத்தமான நீரில் கழுவி கங்கை, அல்லது புண்ணிய நதிநீர் கலந்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். வாயில் வெண்துணி கட்டி மௌனமாக “ஸ்ரீசுதபுதாய நம:” ஸ்ரீசுதபுத மகரிஷிக்கு நமஸ்காரம்” என்று.... தியானித்து இந்த லலாடங்க கஷாயத்தைத் தயாரிக்க  வேண்டும்.
பட்டையுடன் கொதிக்க வைத்த நீரைச் சுத்தமான பாத்திரத்தில் வைத்துப் பூஜை அறையிலோ, சுவாமி படத்தின் முன் வைத்தோ நன்கு ஆறவிட வேண்டும்.
இந்த லலாடங்கக் கஷாயத்தால் தினமும் காலையில் (பல்தேய்த்த பின்) மூன்று முறை நன்றாக வாய்கொப்பளித்தல் வேண்டும். ஸ்ரீசுதபுத மகரிஷியைத் தியானித்தவாறே குறைந்தது மூன்று மண்டலங்கள் (3x45) நிதமும் இவ்வாறு செய்தால் இறையருளால் பல நற்குணங்கள் இயல்பாய் வந்து அமைவதோடு முகத்தில் சாந்தம் ஏற்பட்டு தேஜஸ் எனப்படும் தெய்வீக கலை தோன்றும். பொய் பேசுதல் குறையும், வாக்வன்மையும், வாக்பலிதமும் ஏற்படும் குறிப்பாக ஜோதிடர்கள், வானவியல் அறிஞ்ர்கள், நாடிஜோதிடர்கள், கோயில் குருக்கள், பட்டாச்சார்யார்கள் போன்றோர்க்கு இது அத்தியாவசியமான சித்தமருத்துவ பரிகாரமாகும். தீர்க்க தரிசனமும் , ஞானமும் கைகூடும்.
சரஸ்வதி கடாட்சம் பெருகி, நற்கல்வி அறிவு பெருகும். இறைப் பாடல்கள் ஆசுகவி போல் நாவில் பெருக்கெடுக்கும். இதுகாறும் செய்த நாக்குற்றங்கள், வாய்க்குற்றங்களுக்கு இது பரிகாரமாக அமைய நல்வழி காணலாம். ஊமையர்களுக்கும், திக்குவாயர்களுக்கும் இது கண்கண்ட மருந்து. குருவருள் கிட்டிடில் இவை நிவர்த்தியாகும்.

சுயநாம ஜபம்

ஒவ்வொரு மனிதனும் தினந்தோறும் தன்னுடைய நாமத்தைச் (பெயரை) சில நிமிடங்களாவது தியானிக்க வேண்டும். ஜெயராஜ் போன்ற பெயரை உடையவர்கள் கூடத் தம்முடைய நாமம் இறை நாமாவாக இல்லையே என்று பாராது, தத்தம் சுய நாமத்தை (எப்பெயராயினும் சரி) தியானம் செய்தல் வேண்டும். அனைத்து நாமங்களும் இறைவனுக்கு உரியனவே. சுய நாம ஜபத்தின் தெய்வீகப் பேரருள் தரும் தன்மையைச் சித்தர் புருஷர்கள் அற்புத ஆன்மீக விளக்கங்களாக அருளியுள்ளனர்.
ஒவ்வொரு ஜீவனுக்கும் உரித்தான பீஜாட்சரம் ஒன்று உண்டு. சிருஷ்டியின் உடுக்கையின் ஒலி கொண்டு இறைவன் அனைத்து ஜீவன்களையும் படைக்கின்றான். இந்த உடுக்கையிலிருந்து எழும் ஒலித் துகள்களே “பீஜ அட்சரம்” ஆகும். எனவே ஒவ்வொரு ஜீவனும் உடுக்கை ஒலியிலிருந்தே பிறப்பதால் அந்தந்த ஜீவனுக்குரித்தான பீஜாட்சர உடுக்கை ஒலியும் நிச்சயம் உண்டு. உண்மையில் இவ்வுலகில் படைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஜீவனும் அதனுடைய பீஜாட்சர ஒலியை நாடியே வாழ்க்கைப் பிரயாணத்தை நடத்துகின்றன.,
எந்த ஜீவன் அதற்கான பீஜாட்சர ஒலியை அறிகிறதோ அந்த க்ஷணத்திலேயே அது தான் தோன்றிய சிவ பிரம்ம உடுக்கயிலேயே லயித்து, அவ்வுடுக்கையைத் தாங்கும் சிவபெருமானிடம் சென்று ஐக்கியம் ஆகின்றது. எனவே நம்முடைய வாழ்க்கைப் பிரயாணம் எல்லாம் நம்முடைய பீஜாட்சர ஒலியை உணர்வதற்கே. இந்தப் பீஜாட்சர மந்திர ரகசியங்கள் பற்றிப் பரிபூரணமாக அறிந்தவர்கள் நம் சற்குருமார்கள்.
இந்தப் பீஜாட்சர ஒலி பல வியத்தகு சக்திகளைத் தரவல்லது. அமீபா முதல் திமிங்கலம், யானை, மனிதன், தேவர்கள், விண்ணுலகவாசிகள் உட்பட அனைத்து ஜீவராசிகளுக்கும், பீஜாட்சர அட்சரங்கள் உண்டு. ஆதிசிவனின் உடுக்கையிலிருந்து எழுகின்ற பீஜாட்சரங்களுக்கு ஆதிபராசக்தி தேவியானவள் பஞ்சபூதத் தத்துவங்களைச் சேர்த்து ஜீவன்களாகப் படைக்கின்றாள்.
வள்ளலார் போன்ற ஜீவன்முக்தர்கள் தங்கள் தேகத்தை, பஞ்சபூதங்களினால் சங்கமமான இப்பூவுடலை மீண்டும் அதே பஞ்சபூத வஸ்துக்களாக, சக்தி உபாசனையால் பீஜாட்சரங்களாகப் பிரித்து ஸ்ரீதேவியின் திருப்பாதங்களை அடைந்து சிவனிடம் ஐக்கியம் ஆகின்றனர்.

ஜீவன்களுடைய பீஜாட்சரங்களை உணர்ந்த சற்குருமார்கள் அவற்றை ஏன் ஜீவன்களுக்குத் தெரிவிப்பதில்லை என்கின்ற வினா எழுகின்றது. அனைத்துச் சித்திகளையும் தரவல்ல ஒரு ஜீவனுடைய பீஜாட்சரம் அந்த ஜீவனுக்குத் தெரிய வந்தால், அதைத் தன்னலத்திற்காகப் பயன்படுத்த நேருமல்லவா?
இவ்வாறு பற்பல மனிதர்களும் தங்களுடைய பீஜாட்சரங்களைத் தெரிந்து கொண்டு பல சித்திகளைத் தவறான முறையில் பயன்படுத்திச் செல்வம் சேர்த்தல், போன்ற தவறான செயல்களில் ஈடுபட்டால் இந்தப் பிரபஞ்ச நடவடிக்கைகள் ஸ்தம்பித்து விடுமல்லவா? பீஜாட்சர ரகசியமும், சித்திகளும் உலக ஜீவன்களையே உய்விக்கும் அருமருந்தெனில் அதனைத் தன்னலத்திற்கு எனப் பயன்படுத்துதல் மஹா பாவமன்றோ?
நன்கு பரிபக்குவம் அடைந்த ஆன்ம நெறியுடையோருக்கு மட்டுமே இதனைச் சற்குருமார்கள் அருள்கின்றனர். ஏன்,  தன்னுடைய பீஜாட்சரத்தை நன்குணர்ந்த ஸ்ரீசற்குருமார்களே அதனை எதற்கும் தமக்கெனப் பயன்படுத்தாது பிற ஜீவன்களின் நலன்களுக்காகப் பல கர்மங்களை அனுபவித்து, இப்பூவுலகில் வாழ்கின்றனர் என்றால் அவர்களுடைய தன்னலமின்மையை என்னென்று எடுத்துரைப்பது?

வாழ்க்கை என்பது கணவன் மனைவியரிடையே ‘நீ சொல்வது சரியா? நான் சொல்வது சரியா?’ என்ற போராட்டங்கள் இடையே இரவு பகலாய்ப் பேசாமலும், உண்ணாமலும், சரிவர உறங்காமலும் இருந்து நாட்களைக் கழிப்பது, இறைவன் கொடுத்த நல்ல நேரத்தைப் பயன்படுத்தாமல் கழித்து விடுவது அல்ல. எத்தகைய மனவேறுபாடுகள் இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை. ஆகவே, கணவன் மனைவி எந்தக் காரணத்தைக் கொண்டும் சின்னச் சின்ன விஷயங்களுக்காக சண்டை போட்டுக் கொண்டு இல்லற தர்மத்தின் சீரிய நடத்தையைக் கெடுத்துக் கொள்ளாமல் இருப்பதுதான் திருமணத்தின் உயரிய தத்துவம் ஆகும்.

பிறருக்காக வாழ்கின்ற அறப்பண்பு எவரிடம் ஓங்குகின்றதோ, அவரிடமே இந்தப் பீஜாட்சரத் தெளிவும் கிட்டும். கருணைக் கடலாக விளங்கும் சற்குருமார்கள் தம்மை நாடி வந்தோர்க்கு அவரவர் பீஜாட்சரங்களைக் குறிக்கும் வகையில் மறைமுகமாகச் சில மந்திரங்களை உபதேசமாக அருள்வது உண்டு. இந்த மந்திர உபதேசங்கள் அவருடைய பீஜாட்சரங்களின் மாற்றியமைக்கப்பட்ட வடிவமேயாகும்.
இவற்றைக் உச்சரித்துத் தியானிக்கும் மனிதன் பல சித்திகளைப் பெறுகிறான். தன் சற்குருவிற்கே அந்தச் சித்திகளை அர்ப்பணிக்க வைராக்கியம் பூண வேண்டும். இவ்விதமாகச் சற்குருவால் உபதேசம், உபதேசத்தால் மந்திரம், மந்திரத்தால் தேவதை, தேவதையால் சித்தி தேவதையையும் மந்திரத்தையும் வேறுபடுத்தலாகாது இரண்டும் ஒன்றே.

மனிதன் நேரிடையாகவே தாம் விரும்புவன அடையலாமே! இடையே கோடானு கோடி தேவதைகளின் சாம்ராஜ்யம் எதற்காகப் படைக்கப்பட்டுள்ளது என்று எழும் கேள்வியும் நியாயமானதே. சுகத்தை எப்போதும் நாடும் மனிதன், இகபர சுகத்தைத் தேடியே வாழ்க்கை நடத்துகிறான். நேரம் கிட்டும் போதும், துன்பங்கள் சூழும் போதும்தான் அவனுக்குத் தெய்வீக நினைப்பு உண்டாகிறது.
எனவே அவன் கேட்கின்ற ஆயிரமாயிரம் இகபர சுகங்களை அருள்வதற்கே தேவதைகள் படைக்கப்பட்டுள்ளனர். சற்குருவைப் பெற்ற மனிதனோ அனைத்துத் தேவதைகளின் காட்சிகளைப் பெற்றால் கூட, அவற்றின், சித்திகளை அந்தந்த தேவதைகளுக்கும் குருவிற்கும் அர்ப்பணம் செய்து அடுத்த ஆன்மீக நிலைக்குச் செல்கிறான். இதுவே சாதாரண மனிதனுக்கும், சற்குருவின் சத்சங்க அடியார்க்கும் உள்ள வேறுபாடாகும்.
சற்குருவானவர் தம் அனைத்துச் சீடர்களுக்கும் எளிதாக உபதேச மந்திரங்களை அருள்வதில்லை. தனக்கு உரித்தான உபதேச மந்திரத்தைக் குரு மூலமாகப் பெறும்வரையில் ஒரு சாதகன் தன்னுடைய சுய நாமாவைத் (தன் பெயரை) தியானித்தல் வேண்டும். ஒவ்வொருவருடைய இதயத்திலும் “ ஆன்மீக ஜோதி” ஒளிர்வதால் அந்த ஜீவனின் சுயநாமமே, அதனுள் உறைந்து அருள் புரியும் ஆன்ம ஜோதியின் திருநாமம் ஆகிறது ..., பிள்ளையார், முருகன், ஆஞ்சநேயர் என்று தெய்வங்களுக்குப் பெயர் சூட்டுவது போல் ஒவ்வொரு மனிதனும் ஆன்மஜோதியாய், தெய்வத்தின் பிரதிபிம்பமாய் விளங்குவதால் அவனுடைய சுயநாமமே ஆன்ம பிம்பத்திற்குரிய திருப்பெயராகும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பெயர் இருப்பது போலவே அந்த மனிதனுக்குரிய தேவதையும் ஒன்றுண்டு. ஒருவன் தன் சுய நாமத்தைத் தினந்தோறும் தியானித்து வருவானாகில் அதற்குரித்தான தேவதை அவன் முன் தோன்றி அவனுக்கு வேண்டிய வரங்களைத் தரும்.
ஆனால் மனிதனோ சுய நாம ஜபத்தினால் விளைந்த சித்திகளை அத்தேவதைக்கு அர்ப்பணம் செய்வானாகில் அத்தேவதையே மிகவும் மகிழ்ந்து அவனுடைய மூலக்கருவான பீஜாட்சர மந்திரத்தை அருளும் குருவருளை அவனுக்கு எடுத்துக் காட்டும். இதனால் அந்தத் தேவதைக்கும் முக்தி கிட்டும்..
சுய நாமத்தை ஜபிக்கும் மனிதன் தன்னுடைய பெயரே தனக்குத் தெய்வீக்ச் சக்தியை ஊட்டும் என்ற வலுவான எண்ணத்தைப் பெறும்போது அவனுடைய நம்பிக்கை அதிகரிக்கிறது., இந்தத் தன்னம்பிக்கைதான் (self confidence) அவனுடைய முன்னேற்றத்திற்கு மூலப் பொருள் ஆகும்.
சுயநாம ஜபத்தை எவ்வாறு தொடங்குவது?
ஞானியரும், யோகியருக்கும் அவரவர்க்கு உரித்தான பீஜாட்சரங்களும் கோத்ராபதிகளும் உள்ளன. இதையும் படைப்பு  ரகசியமாகவே இறைவன் வைத்துள்ளான், ஏனெனில் இதனை அறிந்து கொள்ள முற்படும் மனிதன் அதற்குப் பின்னணியாகத் தன் சிற்றறிவிற்கெட்டாத ஆராய்ச்சியொன்றில் புகுந்து எந்த முடிவிற்கும் வர இயலாது இருக்கின்ற இறைத் தன்மையையும் குருவருளையும் இழந்து விடுகிறான். அதையொட்டித்தான் ரிஷிமூலம் நதிமூலம் அறியலாகாது என்ற முதுமொழியையும் பெரியோர்கள் விதித்துள்ளனர்..
பல்வேறு லோகங்களில் உள்ள ஜீவன்களை உய்விப்பதற்காகவே கந்தர்வர்களும், தேவர்களும், பித்ருக்களும் பல அம்சங்களைத் தாங்கிப் பூலோகத்தில் வந்து இறங்குகின்றனர். இவர்கள் தவிர ஞானியரும், யோகியரும், சித்தர்களும் சில வடிவங்களை மேற்கொண்டு நம் நல்வாழ்விற்காக நம்முடன் மறைபொருளாக வாழ்ந்து நம்மை வாழவைத்து நிற்கின்றனர்.
அங்க அடையாளம் தெரியாது இன, குலம் பாராது வேதம் போல் இலைமறை காயாக நம்முடன் வாழும் சற்குருமார்களை சுய நாம ஜபம் மூலமும் சத்சங்கங்கள் மூலமுமே அறிய இயலும். எனவே சத்சங்கங்களை நாடி நற்செயல்களைச் செய்து உண்மையான வாழ்க்கை வாழ்ந்து இறையருளை அடைவோமாக!

ஆத்ம விசார வினா விடை

வினா : இறைவன் அங்குசம் வைத்திருப்பதன் தாத்பர்யம் என்ன?
விடை : உருவத்தில் பெரிய விலங்கு யானை என்பதை நாம் அறிவோம். நினைவாற்றல் அதிகமுடைய யானைக்கு மதம் பிடித்து விட்டாலோ அனைத்தும் நாசமாகி விடும், ஆனால் ஒரு சிறு அங்குசத்தை வைத்து அதன் மத்தகத்தில் பாகன் அழுத்தும்போது அது அடங்கி விடுகிறது. அது போல் ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு இடத்தில் பலவீனத்தை வைத்தான் இறைவன். அவைகளைத் தன்னுடைய இயக்கத்தில், கருணையில் அடங்கி இருக்க, மதம் (கர்வம்) கொண்டால் தட்ட வேண்டிய இடத்தில் தட்டவும் தன்னிடம் அங்குசம் வைத்திருக்கிறான்.
பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் குருஷேத்திரப் போர் நடந்து கொண்டிருக்கிறது. பிதாமகர் என்று சொல்லப்படும் பீஷ்மர் அம்புப் படுக்கையில் வீழ்ந்து கிடக்கின்றார். கௌரவர் படையினைத் தாங்கி நடத்திய ஒரு பெரிய தூணைச் சாய்த்து விட்ட சந்தோஷத்தில் பாண்டவர்கள் மிதக்கின்றனர்.

வாழ்க்கையில் யார்மீது அன்பு செலுத்தலாம்? ஏன் அன்பு செலுத்த வேண்டும்? சொல்லுங்கள், பார்க்கலாம்.
வாழ்க்கையில் யார் வேண்டுமானாலும் யார் மீதும் அன்பு செலுத்தலாம். ஆனால் யார் மீது யார் அன்பு செலுத்துகிறார்கள் என்று கண்டுபிடிப்பது மிகவும் கடினம். சித்தர்கள் மட்டுமே அறிய முடியும். ஏனென்றால் பிறர் மீது அன்பு செலுத்துபவர்கள் வெளியில் சொல்ல மாட்டார்கள். ஏன் அன்பு செலுத்த வேண்டும்? மீண்டும் மீண்டும் இப்புவியில் பிறப்பதற்காக அன்பு செலுத்த வேண்டும். இப்பொழுது புரிகிறதா, யார் மீது அன்பு செலுத்த வேண்டும் என்று. உண்மையான நம்பிக்கை உள்ளோரிடம் அன்பு செலுத்தலாம்.
நம்பிக்கை ஒருவரிடம் எப்படிப் பிறக்கிறது?
‘எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.’ என்று உறுதியாக குரு அருளோடு கூடி செயல்படுகிறார்களோ, அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அன்பு செலுத்துவதற்குத் தகுதி உடையவர் ஆவர்.

ஆனால் என்னே ஏமாற்றம்! பீஷ்மரின் வீரத்தையும் தாமே எடுத்துக் கொண்டு விட்டது போல் துரோணாச்சாரியார் கடும் வேகத்துடன் பாண்டவப் படையைத் தாக்கிச் சின்னா பின்னப்படுத்துகின்றார். வெற்றி தமக்கே என்ற மகிழ்ச்சியில் இருந்த பஞ்ச பாண்டவர்களோ செய்வதறியாது மயங்கி ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவைச் சரணடைகின்றனர்.
மாயப் புன்னகை புரிந்த கிருஷ்ண பரமாத்மாவோ பலவாறு யோசித்துப் பேசத் தொடங்குகின்றார். “மனிதனுக்குப் பலம் நம்பிக்கையில்தான் இருக்கின்றது யானைக்குப் பலம் தும்பிக்கையில், அப்படிப்பட்ட யானைக்கும் மத்தகம் என்ற பலவீனமான இடமிருக்கிறது. மதம் பிடித்த யானையைப் போல் பாண்டவப் படையை அழிக்கும் துரோணருக்கும்  பலவீனம் உண்டு,” என்று சொல்லி நிறுத்துகின்றான்.
புத்துயிர் பெற்றதுபோல் மகிழ்ந்த பஞ்ச பாண்டவர்களில் தருமனைத் தவிர ஏனையோர் குதித்துக் கும்மாளமிடுகின்றனர். தருமனோ, “நீ சொல்ல வந்ததைச் சொல்லுவாயாக”, என்று வேண்டுகின்றார். கிருஷ்ணன், “துரோணர் மகாதீரர், அனைத்துப் போர்க் கலைகளிலும் கரை கண்டவர். உங்களையும், கௌரவர்களையும் சிறந்த வீரர்களாக உருவாக்கியவர்.. “குரு” என்ற பெரிய உன்னதப் பதவியைப் பெற்றவர். இருப்பினும் அவர் இப்போது எதிரியின் அணியில் இருக்கிறார். வீரம், விவேகம் போன்றவை பெரிய பலங்கள் அவருக்கு இருப்பினும் அவருக்கும் ஒரு பலவீனம் உண்டு”, என்று நீண்ட பீடிகை போடுகிறார்.
ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டு இருந்த பாண்டவர்கள் மேலும் சொல்லத் தூண்டவே கிருஷ்ணன் தொடர்ந்து, “துரோணருக்கு தம் மகன் அசுவத்தாமன் மீது அபரிதமான அன்பும், பாசமும் உண்டு. அதையே அவருடைய பலவீனம் என்று குறிப்பிட்டேன். நாளைய போரில் நீங்கள் அனைவரும் அசுவத்தாமனைச் சூழ்ந்து கொண்டு தாக்குங்கள். அப்போது அசுவத்தாமன் இறந்து விட்டான் என்ற பொய்ச் செய்தியைப் போர்க் களத்தில் பரப்புவோம். வருத்தம் தாங்காது துரோணர் தம் பலவீனத்தில் அடிபடும்போது நாம் அவரை வெற்றி கொள்ளலாம்.. ஆனால் “அசுவத்தாமன் இறந்தான்” என்ற பொய்யை அங்குசாயுதமாக உங்களில் தருமனே போர்க்களத்தில் வாய்விட்டுச் சொல்ல வேண்டும்”, என்று முடிக்கின்றார்.
உலக தருமங்களைக் கட்டிக் காக்கும் தருமதேவனின் மகனான தருமனோ பொய் கூற மறுத்து இதற்குச் சம்மதிக்க மறுத்து விடுகிறான். இதர பாண்டவர்கள் இடிந்து போய் விடுகின்றனர். அப்போது கிருஷ்ண்னே தருமனைப் பார்த்து, “இவ்வுலகில் பிறந்த உயிர்கள் ஒரு நாள் படைத்த பரந்தாமனிடமே சென்று அடங்கி ஐக்கியமாகத்தான் வேண்டும். தருமனே!  இன்ன நேரத்தில் இச்செயல் இவ்வாறுதான் நடைபெற வேண்டும் என்பது இறைவனின் ஆணை.. நீ தருமத்தில் நிலை நிறுத்தப் பொய் கூற மறுப்பதால் யாது பயன்? சரி! ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்போம்.. நாளைய போரில் நீங்கள் அனைவரும் அசுவத்தாமனைச் சுற்றி வளைத்துப் போரிடுங்கள். அப்போது தருமா! நீ அசுவத்தாமா அத: குஞ்சர : என்று (அசுவத்தாமன் என்ற யானை இறந்தது) சொல்ல வேண்டும். உன் மனச் சாந்திக்காக நீ அசுவத்தாமா அத: (அசுவத்தாமன் இறந்து விட்டான்: அதாவது வீட்டில் pet animal அவன் இவன் எனச் சொல்வது போல்  அசுவத்தாமன் இறந்து விட்டான் என யானையை மனிதன் போல் சொல் என்கிறார்) என்ற சொற்களை வாய்விட்டு உரக்கச் சொல்.. “குஞ்சர” (யானை) என்ற சொல்லைச் சற்று மெதுவாகச் சொல். இறைவன் தாம் விரும்பும் போது ஓர் உயிரை அடக்கியோ, அடங்க வைத்தோ இட்டுச் செல்வான். அதர்மம் தலை தூக்கும் போது தருமத்தை நிலை நிறுத்தித் தட்டவே அவன் அங்குசத்தைத் தம் கையில் வைத்திருக்கிறான்,” என்று உரைக்கிறான்.
மறுநாள் பாண்டவர்கள் அசுவத்தாமனைச் சுற்றி வளைத்துப் போரிட தருமன் துரோணர் காதுகளில் நன்கு விழுவது போல் “அசுவத்தாமா அத:” என்றும் பின்பு “குஞ்சர:” என்பதை மெதுவாகவும் சொல்கிறான். எப்போதும் தருமனின் சத்திய வாக்கில் பெருநம்பிக்கை வைத்திருக்கும் ஸ்ரீதுரோணர் “குஞ்சர:” என்ற சொல் மிக மெதுவாகத் தம் காதுகளில் விழுவதற்குள் தம் மகன் அசுவத்தாமன் உண்மையிலேயே இறந்து விட்டான் எனக் கருதி விடுகின்றார். பெருஞ் சோகத்தில் ஆழ்ந்து புத்திரனைப் பற்றிய நினைப்பில் செயலிழக்க, அத்தருணத்திற்காகவே காத்திருந்த அர்ச்சுனன் அம்பால் தாக்கி வெற்றி கொள்கின்றான்.. கௌரப் படையின் இரண்டாவது பலமான தூணும் சரிகின்றது. ஸ்ரீகிருஷ்ணன் பரமாத்மாவாகச் செயல்பட்டு தருமனின் பொய்யை அங்குசமாகக் கொண்டு, பல ஆயிரம் யானைகளை நிகர்த்த துரோணரின் பிள்ளைப் பாசமெனும் மத்தகத்தைத் தாக்கி அதர்ம சகாப்தத்தை முடிக்க வழிவகை செய்தார்.
ஆகவே உயிர்களைப் படைத்த இறைவன் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அவற்றின் செயல்பாடுகளை அடக்கித் தம் வசம் மீண்டும் இணைத்துக் கொள்ளவே அங்குசத்தை ஏந்தியுள்ளார் என்பதை நாம் உணர வேண்டும்.

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam