காமக் கதவைத் தட்டும் வரை அன்புக் கதவு மூடியேதான் இருக்கும் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்!

அந்த இரண்டு நாகங்களும் இப்போது தேவலோகப் பெண்களாக உருவெடுத்தன.! தேவலோகத்தினருக்கு இரு பாதங்களும் தரையில் படாது அன்றோ! சிறுவன் மிகவும் அதிசயமாகப் பார்த்தான்.

இரண்டு பெண்களும் குடிசையின் உள்ளே சென்றனர். “குவா! குவா!” என்ற சப்தமும் மெதுவாக வந்து கொண்டிருந்தது மிகவும் நன்றாகவே கேட்டது!

சிறிது நேரத்தில் அந்த தேவ மகளிர் இருவரும் ஒரு அழகான குழந்தையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர். “குவா குவா” சப்தம் அடங்கி விட்டது. வெளியே வந்த அவர்கள் அந்தக் குழந்தையை வானத்தை நோக்கிக் காட்டினார்.

வானத்தில் இருந்து ஒரு நட்சத்திரப் பொறி ஒன்று பறந்து வந்து அந்தக் குழந்தையின் உடலுக்குள் செல்வதை இப்போது சிறுவனால் நன்கு பார்க்க முடிந்தது!

அப்போது குழந்தை திடீரென்று ஆனந்தமாகவே அழுதது. இந்த இரண்டு பெண்களும் மீண்டும் அந்தக் குழந்தையை உள்ளே எடுத்துச் சென்று விட்டு விட்டு வந்தனர். மீண்டும் அழகிய நாகங்களாக உருவெடுத்து, குடிசையின் பின்னே சென்று வானில் மறைந்து விட்டனர்.

சிறுவனின் வாயை மூடியபடியே பெரியவர் சிறிது தூரம் அவனை இழுத்து வந்து.... சற்றுத் தூரம் வந்த பின் கையை எடுத்தார்.

“ஏண்டா, திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணைன்னு சொல்வாங்களே! இப்ப கண் கூடாத் தெரியுது தானே!”

அழகு அழகு அம்மா
உந்தன் நடை அழகு !

பெரியவர் சொன்னதைக் கேட்ட சிறுவனுக்கு நிறையக் கேள்விகளைக் கேட்க வேண்டும் போலிருந்தது! கலியுகத்தில் பெரியவர் சொல்வது போல, “கேட்கத்தானே தெரியும்!” – நல்ல பதில்கள் தெரியாமையால் தான்! அந்த அளவிற்கு (இறைப்) பகுத்தறிவு மங்கிக் கிடக்கிறது.

“சரி! சரி! நட!” என்று கூறி வெகு வேகமாக அவனை அழைத்துக் கொண்டு அந்த இடத்தை வெகு வேகமாகத் தாண்டிக் கடந்து விட்டார் பெரியவர்.

“வந்த தேவதை யார்? யாரிந்த நாகங்கள்?”

‘ஊஹூம்! பெரியவரோ தானாகவே ஒன்றுமே சொல்லவில்லை! இப்போதும் கேட்கவும் முடியாது! அவராகச் சொன்னால்தான் கேட்க முடியும்! என்னப்பா இந்த குருகுலச் சட்டம்! சிறுவன் மிகவும் சலித்துக் கொண்டான்.

இன்னமும் மலை ஏற்றம் பெரிதாக, உயரமாக வந்த மாதிரித் தெரியவில்லை! ஆங்காங்கே சிறு, சிறு குக்கிராமங்கள் தென்பட்டன. மாலை நேரமும் வந்து மறையலாயிற்று!

அங்கு வந்த ஒருவரிடம், “ஏம்பா! இங்க லாந்தர் விளக்கு (hurricane lamp) கெடைக்கும்னு சொன்னாங்களே!” என்று வினவினார்.

வந்தவரும் அடுத்து வரும் கிராமத்தில் தூரத்தில் தெரிந்த ஒரு கடையைச் சுட்டிக் காட்டிட, இருவரும் அதை நோக்கி நடந்தனர்.

“இந்த லாந்தர் விளக்கு வெளிச்சம் போதாதுடா! இதோட பாக்கியும் முடிஞ்சது! அடுத்த லாந்தரைப் பாக்கலாம் வா!”

அங்கு பெரியவர் நல்ல லாந்தர் ஒன்றைப் பொறுக்கி எடுத்துக் கொண்டார். கடைக்காரன் அவரை மிகவும் அதிசயமாகப் பார்த்தான்!

“என்ன பெரியவரே! உங்களை இந்தப் பக்கத்துல அடிக்கடி பார்த்துருக்கேனே! போன மாசம் சிவராத்திரிக்குக் கூட வந்தீங்களே! நல்ல கும்மிருட்டுல கூட கிடுகிடுன்னு மேல ஏறிப் போயிடுவீங்க! இன்னிக்கு அதிசயமா லாந்தர்னு கேக்கறீங்க!”

சிறுவன் பெரியவரை விநோதமாகப் பார்த்தான்!

விளக்கில் கூட (இவர்) விளக்காத விளக்கம் இருக்கும் போல இருக்கே!

‘வெள்ளியங்கிரி மலையில் கோடி ரகசியம் என்றால் இவரிடமே அதில் பாதி, இருக்கும் போலிருக்கே!’ சிறுவன் மனதினுள் தனியே எண்ணிச் சிரித்துக் கொண்டான். ஏன்னென்றால் வாய்க்குப் பூட்டுப் போட்டு வைத்திருக்கிறாரே! கொஞ்ச நேரத்துக்கு மனதால், மனதிடம், மனதுக்குள் தானே உரையாட முடியும்! ஆனால் அவனை எங்கே மனவுலகில் கூடப் பெரியவர் தனியே விட்டார்?

‘எங்கிட்டே எந்தக் கோடி ரகசியமும் கிடையாதுடா? நீயா தெய்வீகத்துல நல்லா முன்னுக்கு வந்து, உத்தம நிலைக்கு வந்து, இதுகளைத் தெரிஞ்சுக்கணும்னுகற ஆர்வமே கொஞ்சம் கூட இல்லியே! நல்லா சோத்து மூட்டையாத் தானே டெவலப் ஆறே?’ பெரியவர் சற்றுக் கடுத்தவாறும், சிரித்தவாறே சொன்னதும், சிறுவன் வாயோடு, மனசையும் வெகு வேகமாக மூடிக் கொண்டான்.

‘இவருக்குத் தெரியாதது என்னதான் உலகத்தில் இருக்கிறது?’

பெரியவர், கடைக்காரரிடம், “கொஞ்சம், கொஞ்சமென்ன நெறையவே மண்ணெண்ணெய் கொடுத்துருப்பா! எப்ப திரும்பி வருவோம்னு தெரியாது இல்ல!”

“ஏன், சாமி இவ்வளவு வெயிட்டத் தூக்கிக்கிட்டு மலை ஏற முடியுமா! இருக்கறதுலேயே நல்ல பெரிய கனமான லாந்தர் இது! பத்து  லிட்டரு மண்ணெண்ணெய்னா என்னாச்சு! தூக்கத்தான் முடியுமா?”

‘என் உடம்பைத் தூக்கிக்கிட்டே தெனமும் நடக்கறேனேப்பா! ஆனா கர்ம மூட்டையைத் தாம்பா யாராலும் சுமக்கறது ரொம்ப ரொம்பக் கஷ்டம்., அதுதான் ரொம்பவே கனக்குது! அதப் பார்க்கறப்போ இதெல்லாம் ஒரு வெயிட்டா என்ன நயினா?’

கடைக்காரன் அவரை மிகவும் அதிசயமாகவே நெடுநேரம் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்!

“சரிடா புறப்படு!”.      பெரியவர் நகன்றார்!

“என்ன இது, இவர் இந்த பெரிய லாந்தர் விளக்கை வாங்கியதைப் பார்த்தால், இரவு முழுக்க நடக்க வைப்பார் போல இருக்கே!”

சிறுவனுக்கு அவனுடைய குறைப்பாடு தான் இப்போது பெரிதாகிக் கிடந்தது! மனதினுள் மறுகினான் சிறுவன்!

அந்த கடைக்காரனிடத்திலேயே நல்ல புதிதான ஐந்தடி உயரமுள்ள கைக்கு அடக்கமான இரண்டு மூங்கில் தடிகளையும் வாங்கிக் கொண்டார்.

“ஏன் வாத்யாரே! இந்த கும்மிருட்டிலேயா மலையேற முடியும்? எனக்கு ரொம்பவே பயமாயிருக்கே!”

“நான்தான் கையில லாந்தரும், குச்சியும் வெச்சிருக்கேனே! அப்புறம் உனக்கென்ன மனக் கவலை?”

“லாந்தர் வெளிச்சத்துனால இருட்டுதான் போகும்! பயமா போகும் வாத்யாரே? நல்லா இருக்கே கூத்து!”

சிறுவனின் இந்த பதிலைக் கேட்டு, பெரியவர் நன்கு சப்தம் போட்டுச் சிரித்தார்!

அதற்குள் அந்தக் கடைக்காரர் பின்னாலேயே ஓடி வந்தார்!

“சாமீ! சாமீ! எங்க வீட்டுப் பெரிய ஐயா சொல்லி இருக்காங்க, “வாத்யார், வாத்யார்னு” சொல்றது குரு மண்டலச் சித்தர்களோட குருகுலவாசப் பழக்கம்னு! எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க!” என்று சொல்லியவாறே திடீரென்று பெரியவரின் காலில் வீழ்ந்து வணங்கினார்.

பொதுவாக, இப்படி நடுச்சாலையில் எவரேனும் தன் காலில் விழுந்தால், “சாமியைக் கும்பிடுங்க ஐயா! இந்த ஆசாமியைக் கும்பிடாதீங்க!” என்று கூறி விலகித் தள்ளிச் செல்லும் பெரியவரோ இன்று மிக மிக மௌனமாகி விட்டார்! சிறுவனுக்கு இதுதான் ஆச்சரியமாகி விட்டது!

கடைக்காரர் நகன்றவுடன், பெரியவர், “எண்ணூத்தி நாப்பத்து ஆறு வருஷத்துக்கு முன்னாடி இவங்க முப்பாட்டனாருக்கு முப்பாட்டனார் நமக்கு இங்க உதவி செஞ்சுருக்கார்டா! அந்த பாக்கி இப்படித் தாண்டா தீரணும்!”

சிறுவன் வியந்தான்! அவன் ஏற்கனவே எண்ணி ஒரு முடிவுக்கு வந்தது போல வெள்ளி மலை ரகசியங்களில் பாதி நிச்சயமா இவரிடம் தான் இருக்கும் போல என்ன, இவரிடமே தான் குடி இருக்கிறது!

ஆனால் அதற்குள் அவன் மன ஓட்டத்தைப் “பிடித்த” பெரியவர், “பாதியும் இல்லை! பூமியில் சாதியும் இல்லை! எல்லாம் கடவுள் சித்தம்” என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே நடந்தார்!

மாளய பட்சம்

மாளய பட்சம் நீத்தாரப்ப (பித்ரு) பூஜை மஹிமை

இப்பூவுலகில் உள்ள அனைத்து மனிதர்களின், குறிப்பாக இளைய சமுதாயத்தின், மூலாதார முதல் வாழ்க்கை லட்சியம் இறைவனுடைய அன்பிற்குப் பாத்திரம் ஆகும் வகையில் எத்தனை இடர்கள் வந்தாலும் இறையருளால் அனைத்தும் நடப்பதே என்ற உத்தமச் சிந்தனையுடன் நன்முறையில் வாழ்வதாகும். உண்மையான இந்த இறை லட்சியத்தை அடைவதற்காக, இறைவன் அளித்துள்ள நல்மார்கமே தங்கள் வாழ்க்கை என்பதை ஒவ்வொரு இளைஞனும் பரிபூரணமாக உணர்ந்திட உதவுவதே நீத்தாரப்பர் பட்சம் எனப்படும் புரட்டாசி மாதத்தின் மாளய பட்சத்தின் பதினைந்து தினங்களாகும். பெரியோர்களுக்கு மட்டுமானதல்ல இது! இளைஞர்களும் பல்வகைகளில் பங்கேற்றிட வேண்டிய மூதாதையர் படையல் உற்சவமிது!

திதிவளங் கொழிக்கும் மாளய பட்ச நீத்தாரப்பர் பூஜைகள்

எப்போதும் தர்ப்பணம், தர்ப்பணம் என்று படித்துப் படித்து அலுத்ததாகத் தோன்றிடலாம். நாம் பெற்றிருக்கும் நல்ல அங்கங்கள், வசதிகள், மண வாழ்க்கை, அலுவலகப் பணி, வாகனம் என பற்பல வசதிகளும் நம் முன்னோர்களின், பெற்றோர்களின் புண்ணிய சக்திகளிலிருந்து வந்தவையே என்ற உண்மையை உணர்ந்திட்டால், தர்ப்பணம் என்றால் அலுப்பு, வெறுப்புத் தோன்றாது. மாறாக நன்றிப் பெருக்குடன் கண்களில் நீர் மல்க ஆற்ற வேண்டிய நன்றிக் கடன்களே, நன்றி வகைப் பூஜைகளே என்பது புலனாகும்.

நாம் ஒவ்வொரு விநாடியும் இறையருளால் வாழ்கின்றோம் என்பதை உணர்விக்கும் ஆன்மீக அம்சங்களுள் நன்றி உணர்ச்சியும் ஒன்றாகும். திருப்புகழ், திவ்யப் பிரபந்தம், தேவார மாமறைகளில் இதனை நன்கு உணரலாம். மாளய பட்சத்தின் 15 திதிகளும் மிகவும் சக்தி வாய்ந்தவை. இவற்றை மாளாசக்தித் திதிகள் என்று சித்தர்கள் போற்றுகின்றனர். ஒவ்வொரு திதியிலும் எண்ணற்ற பித்ரு சக்திகள் பொதிந்துள்ளன.

1.10.2004 திரிதியைத் திதி வெள்ளி – மகா பரணி

29.9.2004, 30.9.2004 தேதிகளுக்கான மாளய பட்ச தின விளக்கங்களைக் கடந்த செப்டம்பர் 2004 மாத இதழில் காணலாம்.

இன்று, பித்ரு மண்டலங்களில் பித்ருக்கள், ஸ்ரீசூரிய நாராயண சுவாமியின் பாதங்களைத் தரிசிக்கின்ற திருநாள், அனைத்துத் தேவ மூர்த்தி மண்டலங்களிலும் விஸ்வ ரூப தரிசன பட்சமாக இது அமைகின்றது.

பரணி நட்சத்திர நாட்சகளுக்கெல்லாம் மூத்ததாக விளங்குகின்ற மகா பரணி நாள் இதுவே. இன்றும், பரணி தோறும் பரணி நட்சத்திரத் தலமான – பிரபஞ்சத்தின் உத்தம அக்னி ஹோமத் தலங்களில் ஒன்றாக விளங்கும் – மாயூரம் அருகே உள்ள நல்லாடை ஆலயத்தில் ஹோமங்களை ஆற்றி வழிபட்டு வருவதால் உறவு, தொழில் பகைமையால் அல்லல் படுவோர்க்குத் தக்க காப்பு சக்திகள் நிறையும்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
திருக்காட்டுப்பள்ளி

மகத்தான அக்னி சக்திகளைக் கொண்டது பரணி நட்சத்திரமாகும். மாளய பட்சத்தில், பித்ரு லோகத்தில், நிகழும் ஸ்ரீசூரிய நாராயண சுவாமி உற்சவத்தில் ஏற்றப் பெறும் ஹோம பூஜையின் அக்னி சக்திகள் திரண்டு அக்னி வகைத் தாரைகளில் ஒன்றான மகாபரணி நட்சத்திரத்தில் பரிணமிக்கின்றன.

தேனிமலை

எனவே, இன்று அக்னி சாட்சியாகத் தர்ப்பணம் அளிப்பது மிக மிக விசேஷமானது. பசு நெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெணெய், வேப்பெண்ணெய், பொன்னாங்கண்ணித் தைலம், நீலிபிருங்காதித் தைலம், மருதாணித் தைலம் என்ற 12 விதமான தைலங்களால், 12 அகல் விளக்குகளில் 12 தீபங்களை ஏற்றி, இவற்றின் சாட்சியாகத் தர்ப்பணம் அளித்தலால் திருஷ்டி, பொறாமை, பகைமை, குரோத, விரோத சக்திகளால் அடிபட்டுள்ள குடும்பங்கள் இவற்றிலிருந்து மீண்டிட உதவும்.

அனைவரும், குறிப்பாக இளைஞர்கள், இன்று அக்னீஸ்வரர், வீரபத்ரர், அஷ்டபுஜ துர்க்கை, காளி போன்ற வீராக்னி அம்ச மூர்த்திகள் அருளும் ஆலயங்களில் சாம்பிராணி தூபம், ஊதுபத்தி தூபம், விளக்குகளை மூன்று மணி நேரமாவது ஏற்றியும், ஏற்ற உதவியும் செய்து வழிபடுதலால், உள்ளக் கொந்தளிப்புகள் அடங்க நல்ல வழிமுறைகள் கைகூடும்.

2.10.2004 சதுர்த்தி சனிக்கிழமை சிந்தூரக் கிருத்திகை

மிகவும் அபூர்வமாக 24 மணி நேரமும் கிருத்திகை நட்சத்திரம் பொலியும் திரிதின நட்சத்திரத் திருநாள் இது. விசாகம், அஸ்வினி, பரணி போன்று கிருத்திகை நட்சத்திரமும் அக்னி நட்சத்திர வகையே ஆகும். தேனி மலை போன்ற முருகப் பெருமான் குடியிருக்கும் அக்னி வகை மலைத் தலச் சுனைத் தீர்த்தத்தில், ஏழு மந்தாரை இலைமேல் வட்ட வடிவில் பன்னீர்ப் புஷ்பங்களை வைத்துத் தர்ப்பணச் சட்டம் அமைத்துத் தர்ப்பணம் அளித்தலால் கோபம், வெறுப்புடன் பழகும் கணவன், மனைவி இடையே நல்ல சுமுகம் நிலவ உதவும் மாளய பட்ச நாள் இது.

ஸ்ரீஅக்னீஸ்வரர் நல்லாடை

சந்திர மூர்த்தி தனிச் சன்னதி கொண்டு அருளும் தலங்களில் இன்று முறுக்கு, தேன் குழல் போன்ற வட்ட வடிவ வகை உணவுப் பண்டங்களைப் படைத்துத் தானமளித்திட, பல கஷ்டங்களில் இருந்து விடுதலை பெறாது மன வேதனையுடன் வாழ்ந்து இறந்தோர் நன்னிலை பெற உதவும் இது, குடும்பத்திற்கும் க்ஷேமத்தை அளிக்கும்.

3.10.2004 ஞாயிறு – பஞ்சமி

மாளய பட்சத்தின் மகிமை யாதெனில், இந்த ஒரு பட்சத்தின் 15 நாட்களிலும் ஒவ்வொரு வகையில் வாரம், திதி, யோகம், கரணம், நட்சத்திரம் என பஞ்ச கால அங்கங்களுமே சிறப்புப் பெறுவதாகும். எந்நாளில் எந்தத் திதி, எந்த யோகம், எந்த நட்சத்திரம் சக்தி வாய்ந்ததாக விளங்குகிறது என்பது அந்த வருட மாளய பட்ச ஜாதக நியதிகளைப் பொறுத்து அமைவதாகும்.

குரு கிரகம் கிழக்கே உதிக்கின்ற திருநாள் இது. இன்றைய குரு நட்சத்திரக் கிழக்குப் பிரகாச நேரத்தில் ஏழு கிரகங்களும் இன்றைய நாளின் ராசிச் சக்கரத்தில் இடப் பூர்வமாக அமைந்துள்ளன. எனவே, இன்றைய தர்ப்பணத்தில் விளக்கு, தட்டு நிறையப் பழங்கள், தாம்பூலம், ஒரு செம்பில் கங்கை, காவிரி போன்ற புண்ணிய தீர்த்தம், ஹோம குண்டத்தில், ஹோமம் நடத்துகின்றவர் இடப்புறம் நிறைய ஊதுபத்திகளை ஏற்றி வைத்தல், ஒரு பெரிய வாழை இலை நிறைய அன்னம், ஆகார வகைகள், கிழக்குப் புறத்தில் சூரிய, சந்திர வடிவக் கோலங்கள் அல்லது சூரிய, சந்திர வடிவ விளக்குகள், ஆகிய ஏழு வகை ஆன்ம சாதனங்களை வைத்து, இவற்றின் சாட்சியாகத் தர்ப்பணம் அளித்தலால், நமக்கு முந்தைய ஏழேழு (தந்தை வகை ஏழு, தாய் வகை ஏழு), ஜென்மங்கள் நெடுங்காலமாகத் தர்ப்பணமே பெறாமல் வாடுகின்ற முன்னோர்கள் தர்ப்பண சக்தி பெற உதவும்.

4.10.2004 திங்கள் – சஷ்டி

ஒரு வருடத்திற்கு உரித்தான 96 வகைத் தர்ப்பண நாட்களுள் வ்யதீபாத தர்ப்பண நாளும் ஒன்றாகும். இது மாளய பட்சத்தில் அமைவது மிகவும் விசேஷமானது.

சஷ்டி அப்த பூர்த்தி என்பது 60 ஆண்டு நிறைவைக் குறிப்பதாகும் அல்லவா! வ்யதீபாத யோக நாள் என்பது பித்ரு ஆசீர்வாத சக்திகளை நிறைவுடன் பொழியும் நாளாகும். வ்யதீபாதம் என்ற வார்த்தையே மரண தோஷங்களை நிவர்த்தி செய்ய வல்ல பீஜ சக்திகளைப் பூண்டிருப்பதாகும்., சஷ்டியும், வ்யதீபாதமும் மாளய பட்சத்தில் சேர்வது வ்யதீதரர் எனும் சிவசுதப் பித்ருக்களின் அறுபத ஆறுபாத மந்திர சக்திகளைக் குறிப்பிடுவதாகும். அறுபத மந்திரம் என்பது ஆறு பீஜ சக்திகளைக் குறிப்பதாகும்.

வ்யாபகச் சக்கரம்
ஆதீ பாவனம்
தீர்க பலம்
பாத சக்தி
தண்டுல சக்தி
ம்ருத்யுஞ்சய சக்தி

-ஆகிய ஆறு பத சக்திகளை, மாளய பட்சத்தில் சஷ்டியும், வ்யதீபாத யோகமும் கூடும் நாளில் பித்ரு பூஜைகள் மூலம் பெற்றிடலாம்.

ஸ்ரீஆதிலட்சுமி தாயார் சமேத ஸ்ரீஆதிமூலப் பெருமாள் நத்தம்

வ்யதீபாத நாளில் தர்ப்பணம் மட்டுமல்லாது, படையலாகிய பல்வகை உணவு வகைகளைச் சமைத்துத் திவசம் செய்வதும் சிறப்பானது. இன்று பித்ருக்கள் லோகத்தில், ஈஸ்வரனைப் பலவிதமான பிரதோஷ நடைகள் போல் ஸ்ரீசூரிய நாராயண சுவாமி, வ்ருத்திகர யதீந்த்ர தீன பாந்தவ யோக நடையைப் பயின்று தரிசனம் அளிக்கின்றார்.

எனவே, பெருமாள் யோக சயனம் பூண்டிருக்கும் தலங்களில் இன்று தர்ப்பணம் அளித்தல் சிறப்பானது, நத்தம் ஸ்ரீஆதிமூலப் பெருமாள் ஆலயம், சென்னை திருமழிசை வெள்ளிவேடு  அடுத்து வரும் நேமம் ஸ்ரீநித்ய கல்யாண வீரராகவப் பெருமாள் ஆலயங்களில் தர்ப்பணம் அளித்தல் விசேஷமானது. இன்று ஆறுவிதமான நறுமணப் புஷ்பங்களால் ஆன மலர்ப் பந்துகளை வைத்து இதன் முன் தர்ப்பணம் அளித்துப் பிறகு மலர்களைத் தானமாக அளித்திட வேண்டும். இதனால் வயதானவர்களுக்கு அல்லது வயதானவர்களால் ஏற்படும் துன்பங்கள் தணிய உதவும்.

ஸ்ரீகுந்திதேவி திருநல்லூர்

5.10.2004 செவ்வாய் சப்தமி திதி

இன்று சூரிய பகவானே அனைத்துப் பெருமாள் தீர்த்தங்களிலும் பூவுலகிற்கு வருகின்ற பித்ரு மூர்த்திகளுக்குத் தீர்த்த சக்திகளை எடுத்தளிக்கும் திருநாள். இன்று ஏழு விதமான தீர்த்தங்களை, ஏழு மண் பாண்டங்களில் வைத்து இதன் சாட்சியாகத் தர்ப்பணம் அளித்திட வேண்டும். (கடல் தீர்த்தம், ஆறு தீர்த்தம், கிணற்றுத் தீர்த்தம், கோயில் குளத் தீர்த்தம், மழைத் தீர்த்தம், அருவித் தீர்த்தம், கோமுகத் தீர்த்தம் போன்றவை!)

இவ்வாறு சப்தமித் திதியில் அளிக்கும் தர்ப்பணம் தலை சிறந்ததாகும். எத்தனையோ தலைமுறைகளைத் தாண்டிச் சென்று தர்ப்பண சக்திகள் பாய்ந்து பல்லாயிரக் கணக்கான முன்னோர்களுக்குப் பல்வகையில் உதவிடும். முன்னோர்கள் எல்லோரும் மூதாதையர்களாக, நீத்தாரப்பர்களாக, பித்ரு மூர்த்திகளாக ஆவதில்லை. இவர்களுள் மறு பிறவி கொண்டோர்க்கு, நரக லோகத்தில் இருப்போர்க்கு, ஆவி நிலைகளில் இருப்போர்க்கு இந்நாளில் ஏழு தீர்த்தத் தர்ப்பணம் உதவிடும்.

இன்று கும்பகோணம் சுந்தரப் பெருமாள் கோயில் கிராமத்திற்கு அருகில் உள்ள தினமுமே லிங்க மூர்த்தியின் வண்ணம் மாறுகின்ற திருநல்லூர் (நல்லூர்) ஆலயத் திருக்குளத்தில் குந்தி தேவிக்காக ஏழு கடல்களும் ஒன்று கூடிப் புனித தீர்த்தமாயிற்று. இன்று இங்கு தர்ப்பணம் அளிப்பதும் சிறப்புடையது. வெளியில் சொல்ல இயலாத துன்பங்களால் வாடும் பெண்களுக்கு இது நன்மை பயக்கும்.

6.10.2004 புதன் பூரித அஷ்டமி

அட்ட தரித்திரம் பீடிக்கின்ற நிலை என்று அதிக வறுமை நிலையைக் குறிப்பிடுவார்கள். ருத்ர சக்திகள் பலவும் அஷ்டமியில் பூரித்து வறுமையை அகற்ற உதவும், மாளய பட்சத்தின் நடுநாளில் வருகின்ற அஷ்டமிக்கு மத்யாஷ்டமி என்று பெயர் உண்டு. வந்த வினை, வருவினை என இருவகை வினைகளையும் வந்த வினை கால நற்காரியங்கள் மூலம் நிவர்த்தித்தலும் வாழ்க்கையின் இலட்சியங்களுள் ஒன்றாகும். இன்று பிண்டத் தர்ப்பணம் அளித்தல் அட்ட தரித்திரத்தை நீக்க உதவும், இன்று ஆண்களே அன்னம் வடித்து, 24 உருண்டைகளைப் பிடித்து வைத்து மூன்று தர்ப்பைகளால் ஒவ்வொரு பிண்டத்தையும் இரண்டு பாகங்களாய்ப் பிரித்து, எள் தெளித்து ஹோம குண்டத்தில் ஆஹூதியாக அளித்தலும் தர்ப்பணத்திற்குப் பிறகு காக்கைகளுக்கு அளித்தலும் மிகவும் விசேஷமானதாகும். இதனால் 24 தலைமுறைகளில் தர்ப்பணம் விடுபட்டோர்க்கு முறையாகத் தர்ப்பண சக்தி சென்றடைய நல்வழி பிறக்கும்.

7.10.2004 வியாழன் – அவித்ய துர்க்கா ஸ்ரீநவமி

இன்று மிகவும் அபூர்வமாக மாளயபட்ச நவமித் திதி நாள் முழுவதுமாக நிரவி அருள்கின்றது.

துர்க்கையாய் அவதரித்த ஈஸ்வரி அசுரர்களை சம்ஹாரம் செய்து சிந்தூர வண்ணத்தினளாய் நல்லோரைக் காத்தும், சான்றோரைக் கொண்டு, மாய்ந்த அசுரர்களுக்கு நல்லெண்ணத்தை வித்திடும் படியும் காருண்யத் தர்ப்பணம் அளித்திடச் செய்த நன்னாள் இதுவாகும். இன்று நாள் முழுதும் நவமித் திதி சஞ்சாரம் செய்வதால் இன்று அளிக்கும் தர்ப்பணம், அசுர எண்ணங்களுடன், கெட்டவர்களாக முறையற்ற செயல்களைச் செய்து அவலமாக வாழ்ந்து இறந்தோரின் சாயா சரீரங்கள் நரக தண்டனைகளில் இருந்து மீண்டு நன்னிலை பெற மிகவும் உதவும்.

8.10.2004 வெள்ளி தசமி ஸ்ரீஆயுர் தேவி பூஜை

காலை 7.05 மணி வரை நவமித் திதி, பிறகு தசமித் திதி.

இறைவனுடைய திருப்பாதப் பத தரிசனங்கள் இன்று பல இடங்களிலும் தோன்றும் தினம் ஆகும். அம்பாசமுத்திரம் சிவாலயத்தில், அன்னத்தை வடித்து, சிறு குன்றாய்க் குவித்து வைத்திட, அதில் ஸ்ரீஅகஸ்தியரின் திருப்பாதங்கள் தென்படுகின்ற திவ்யமான அனுபூதி நிகழ்வதும் உண்டு. அன்னத்தில் காணும் இதற்குப் பாதபத தரிசனம் என்று பெயர்.

திருப்பதியில் பெருமாளைத் தரிசிக்கும் போது, தரிசன நேரம் ஒரு சில விநாடிகளோ, நிமிடங்களோ அமைந்தாலும், முதலில் பெருமாளின் பாதத்தில் இருந்து தரிசனத்தைத் தொடங்கி மெதுவாக, சாந்தமாக கண்களை உயர்த்தி, சிரசு தரிசனம் வரை பெறுதல் தான் உண்மையான, பாதபத தரிசன முறையாகும். இதனை உலகிற்கு அளித்தவரே ஸ்ரீஅகஸ்திய மகா பிரபு.

எனவே, இன்றைய ஹோமத்தில் பிள்ளையார், குல தெய்வம், சிவன் ஆகிய மூவருக்கும் ஆஹூதிகள் அளித்தவுடன் “அகஸ்திய பாதபத ஸ்ரீராமபத தரிசனம் ஆவாஹயாமி” என்று ஓதி, ஸ்ரீஅகஸ்திய மகரிஷிக்கு 21 முறை ஆஹுதிகள் அளித்திட வேண்டும்.

கலியுகத்திலும் இளைஞர்களுக்கு நல்வழி காட்டிட ஓடோடி வந்து துணை புரிபவரே கோடானு கோடி சித்தர்களின் சர்வ பீடாதிபதியாம் ஸ்ரீஅகஸ்திய மஹாசித்தர் ஆவார். எனவே பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் யாவரும்..

ஸ்ரீஅகத்தியபிரான் வேதாரண்யம்

“அகமே அகத்தியம், அகத்தியமே அகம்,”
“அகத்திய வளமே அகிலாண்ட வளம்”,
“அகத்திய ஞானம் அனைத்துறை ஞானம்”,
“அகத்திய குரு வளமே அகத்தின் திருவளம்”
“அகத்திய தளமே வில்வஞான விபூதி”,
“அகத்தில் அகத்தியமே அருளகம்”,
“அகத்திய வளமே அகத்தின் வளமாம்”,

-ஆகிய ஏழு அகத்திய சித்த மாமறை வாக்கியங்களையும் உபதேச மாமந்திர சித்த மந்திரங்களாய், கல்விப் பருவத்திலும், வாழ்க்கையிலும் இடைவிடாது தினந்தோறும் எப்போதும் ஓதிவர, வாழ்வில் நல்ல மாற்றங்களைக் காணலாம். காரணம், ஆழ்ந்த நம்பிக்கையோடு அழைத்திடில், அனைவர்க்கும் ,குறிப்பாக இளைய சமுதாயத்திற்கென  ஸ்ரீஅகஸ்திய மஹா சித்தரே ஓடோடி வந்து நல்வழி காட்டுகின்றார்.

ஸ்ரீராமர் பாதம் கோடியக்கரை

அகஸ்திய மகரிஷியின் சிலை வடிவம் திருவிடைமருதூர், கருவளர்ச்சேரி போன்ற பல தலங்களிலும் உள்ளன. இன்று, எவ்வகையிலேனும் அகஸ்தியரைத் தரிசித்திட வேண்டும் என்று இளைய சமுதாயத்தினர் சங்கல்பம் செய்து கொண்டு, இன்று எந்த ஆலயத்திலாவது, ராஜகோபுரத்திலாவது, ஆலய விமானத்திலாவது அகஸ்தியரின் தரிசனத்தை பெற்றிடல் வேண்டும்.

இன்று ஸ்ரீஅகஸ்திய தரிசனம் பெற இயலாவிடில் (பெற இயலவில்லை என்று இளைய சமுதாயம் சொல்லலாகுமா அய்யா!) திருஅண்ணாமலை கிரிவலப் பாதை, ராமேஸ்வரம் போன்ற தலங்களில், கற்பாறையில் பதிந்துள்ள ஸ்ரீராம பாத தரிசனத்தையாவது பெற்றிடல் வேண்டும். ஏனென்றால் ஸ்ரீராமபிரானுக்கு ஆதித்ய ஹ்ருதய மஹா மந்திரங்களைப் பல தலங்களிலும் (ஆம் போர் முனையில், ஒரே இடத்தில் மட்டுமல்ல.,) உபதேசித்த போது அகஸ்தியர் பிரான் ஸ்ரீராமனின் திருப்பாதங்களைக் கண்டு தரிசித்து கொண்டே தான் ஆதித்ய ஹ்ருதய மந்திரங்களை உபதேசித்தார். அதாவது இறை அவதாரத்திற்கே உபதேசம் செய்யும் பெரும் பாக்யம் பெற்றமையால், அடக்கத்தின் சிகரமாய், அகஸ்தியர் தன் இதயத்தில் ஸ்ரீராமனின் வடிவத்தைப் பூண்டார் என்பது இதன் பொருளாகும். இதனுடைய மகத்துவத்தை நெஞ்சார உணர்ந்திட்டே எப்போதும் ராம நாமத்தில் திளைக்கும் ஸ்ரீஆஞ்சநேய மகா பிரபுவே ஸ்ரீஅகஸ்தியரைப் பரமானந்தத்துடன் போற்றி ஸ்ரீஅகஸ்திய மஹரிஷிக்குத் தினந்தோறும் அர்க்யம் அளிக்கும் திருத்தலமே ஆந்திராவில் உள்ள ராமகிரி ஆகும்.

9.10.2004 சனிக்கிழமை தசமியும், ஏகாதசியும்

இன்று காலை 8.50 மணி வரை தசமித் திதி, பிறகு ஏகாதசித் திதி, மாதத்திற்கு இரண்டாக, வருடம் முழுதும் 24, 25 ஏகாதசிகள் வருவதுண்டு. உண்மையில், வருடத்திற்கு ஒரு முறை வரும் தாய், தந்தையின் வருடாந்திரத் திவச நாளில் முறையாகத் திவசம் செய்திடில், இது பல ஏகாதசி விரத புண்ணிய சக்திகளைப் பெற்றுத் தருவதாகும். மாளய பட்ச ஏகாதசி மிகவும் மகத்துவம் வாய்ந்தது. உறக்கம், பசி நிலைகளைத் தாண்டிய தேஜோமய சரீரத்தைப் பித்ருக்களே கொண்டிருப்பினும், ஏகாதசி நாளில் பித்ருக்களின் நிலைகளுக்கு உரிய பல விரதங்களைக் கடைபிடிக்கின்றனர். இன்று 11 வகை இலைகள், பூக்கள், பழங்களின் சாட்சியாகத் தர்ப்பணம் அளிப்பது மிகவும் விசேஷமானது.

தங்களுக்குள் தக்க மன ஒற்றுமை இழந்து வாழும் தம்பதியர் இன்றும், சனிக்கிழமை மற்றும் ஏகாதசி நாளில் துளசி அல்லது வில்வ இலைகள் ஊறிய நீர் மட்டும் சிறிது அருந்தி விரதமிருந்து வந்திடில், நல்லபடியான மன மாற்றத்தைப் பெற்றிடலாம்.

10.10.2004 ஞாயிறு ஏகாதசியும், துவாதசியும் யதிமாளயம்

காலை 10.00 மணி வரை ஏகாதசித் திதி பிறகு துவாதசித் திதி! புரட்டாசியில் ஆண்டு தோறும் வரும் மாளயபட்ச நீத்தாரப்ப உற்சவமானது, திதிகளை ஒட்டி அமைவதால், அந்தந்தத் திதி நேரத்தில் குறித்த பூஜைகளை ஆற்றுவது உத்தம பலன்களைத் தரும்.

சாதாரணமாக வாழ்ந்து இறந்தோர்க்குத் தர்ப்பணம், திவசம், படையல் உண்டு. புனிதமான, உத்தமமான துறவியாக வாழ்ந்து இறந்தோர்க்குத் தர்ப்பணத்திற்குப் பதிலாக அர்க்யம் அளிக்கப் பெறும். இன்று சாதமும், துவையலுமாக எளிமையான உணவு வகைகளைத் தானமாக அளித்தலும் மயிலுக்குத் தான்ய உணவுகளை அளித்தலும் மருத்துவச் செலவுகளால் வருந்துவோர்க்கு நல்ல நிவர்த்திகளைத் தந்திடும்.

ஸ்ரீபோடா சுவாமி சித்தர்

இரு உள்ளங் கையிலும் நீரை ஏந்தியவாறு நன்கு எழுந்து நின்று குறித்த சித்தர்கள், மகரிஷிகள், துறவிகள் பெயர்களைச் சொல்லி, “(காஞ்சி) போடா ஸ்வாமிச் சித்தர் தர்ப்பயாமி! ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் தர்ப்பயாமி!” என்றவாறாக நீரை விரல் நுனிகளின் வழியே பூமியில் வார்த்தல் அர்க்யம் ஆகும். யதிமாளயம் எனப்படும் இன்றைய நாளில் உத்தமத் துறவிகளுக்கும் குரு பூஜை கொள்ளும் மாமுனிகளுக்கும் அர்க்யம் அளித்திடுதலால் குடும்பத்திற்குப் பெரியோர்களின், பித்ருக்களின் ஆசிகள் நன்கு திரண்டு வந்து சந்ததிகளுக்கு அருள்பாலிக்கும்.

காஞ்சீபுரம் போடா ஸ்வாமிச் சித்தர், சிங்கம்புணரி (வாத்யார் ஐயா) முத்து வடுக நாத சித்தர் போன்றோர்க்கு அர்க்ய பூஜைகளை நிகழ்த்தி வர, எப்போதும் சிறு சிறு கடன்களை வாங்கியே வாழ வேண்டிய நிலையில் உள்ளோர், படிப்படியாக முன்னுக்கு வர வழிகளை அடைவர்.

இன்று திண்டுக்கல் நிலக்கோட்டை பாதையில் உள்ள தவசிமடைத் தலத்தில் தர்ப்பணம் அளிப்பதும், ஊர் மக்களை ஒன்று கூடி அமர வைத்து சமஷ்டியான சத்சங்கத் தர்ப்பணம் அளித்தலும் மிகவும் விசேஷமானதாகும். முற்காலத்தில் சித்தர்களும், பரத்வாஜர், ஜைமினி போன்ற மகரிஷிகள் பலரும் தவப் பர்ண சாலைகள் கொண்டு இருந்தமையாலும் இத்தலம் தவசிமடை ஆயிற்று. இங்கு பிரதோஷம் மற்றும் அஷ்டமித் திதிப் பூஜைகளில் பங்கு பெறுதலால் ஆங்காங்கே பிரிந்துள்ள குடும்பம் ஒன்று சேர உதவிடும்.

11.10.2004 திங்கட் கிழமை துவாபர யுகாதி தினம் துவாதசியும், திரயோதசியும்!

இன்று காலை 10.31 மணி வரை துவாதசித் திதி, பிறகு திரயோதசித் திதி..!

ஒவ்வொரு யுகமும் தோன்றுகின்ற மறைகின்ற, பிறக்கின்ற நேரம் உண்டு. யுகாதி தினங்கள்  நான்கும் 96 வகைத் தர்ப்பண நாட்களுள் அமைகின்றன. கிருத, திரேதா, துவாபர யுகாதிகள் இவ்வாண்டு முறையே சித்திரை 10, புரட்டாசி 26, கார்த்திகை 5, மாசி 26 ஆகிய நான்கு நாட்களில் அமைகின்றன. நம்முள் பலரும் கிருத, திரேதா, துவாபர யுகங்களில் வாழ்ந்திருக்கக் கூடும் அல்லவா! இனி வர இருக்கின்ற நான்கு யுகங்களில் வாழவும் கூடும் அன்றோ! 12 தலைமுறைகள், 24 தலை முறைகள் நாம் விரிந்த அளவில் தர்ப்பணம் அளிக்கும் போது, ஒரு விதத்தில் சொல்லப் போனால், 18வது, 23வது தலைமுறை நாமாகவே இருக்கக் கூடும் தானே. அதாவது நம்மையும் அறியாமல், மூதாதையர் என்ற பெயரில் நமக்கு நாமே தர்ப்பணம் அளித்துக் கொள்கின்றோம் என்பதே உண்மை. இதை ஒட்டியே ஆத்மத் தர்ப்பணம் தத்வார்த்தமும் செறிகின்றது.

திலதைப்பதி

இவ்வாறாக நாம் நம் மூதாதையர்களுக்கு அளிக்கும் தர்ப்பண சக்திகள், பண்டைய பிறப்பு தொடர்பு மூலமாக நமக்கே வந்து சேர்வதும் உண்டு. எனவே, நான்கு யுகாதித் தர்ப்பணங்கள் நம் தலைமுறைச் செழிப்பிற்கு மிகவும் துணை புரிபவை. மேலும் நம் தலைமுறையினர் வேறு எங்காவது பிறந்து தர்ப்பணத்தைப் பற்றி அறியாமலே இருந்தாலும், மரம், செடி, கொடிகளாகப் பிறந்திருந்தாலும் தர்ப்பணங்கள் விடுபட்டிருக்கலாம் அல்லவா. இவற்றை நிவர்த்தி செய்யவே இந்த நான்கு யுகாதி நாட்களிலாவது குடும்பத்தில் உள்ள பெற்றோர்கள், பிள்ளைகள், பெண்கள், பேரன், பேத்திகள் யாவரும் ஒன்று கூடியும், உற்றம் சுற்றத்தாரோடு சத்சங்கமாகச் சேர்ந்தும் இல்லத்திலோ அல்லது மிகவும் விசேஷமாக பட்டுக்கோட்டை அருகேயுள்ள இடும்பாவனம், நன்னிலம் அருகேயுள்ள திலதைப்பதி, லால்குடி அருகே உள்ள பூவாளூர், பத்ரிநாத், கேதார்நாத், அலகாபாத், கன்னியாகுமரி, நர்மதை, கிருஷ்ணா, துங்கப்பத்திரா, காவேரி நதித் தீரங்களிலும் தர்ப்பணம், அன்னதானம் அளித்திடுதலால் சந்ததிகள் நன்கு தழைக்க உதவும்.

12.10.2004 செவ்வாய்க் கிழமை திரயோதசியும், சதுர்த்தசியும்

மகா திரயோதசி, சஸ்த்ர ஹத மாளயம். இன்று காலை 10.22 மணி வரை த்ரயோதசி திதி, பிறகு சதுர்த்தசி.

மகா நவமி, மகா அமாவாசை, மகா பரணி, மகா மத்யாஷ்டமி என்றவாறாக மகா வல்லப தினங்களைக் கொண்டதே மாளய பட்சமாகும். திரயோதசி திதி, பொதுவாக அஷ்டபுஜ துர்க்கை, சுதர்சனப் பெருமாள், காளி போன்ற பல ஆயுதங்களைத் தாங்கி அருளும் மூர்த்திகளுக்கு மிகவும் ப்ரீதியானதாகும்.

மரணங்கள் எத்தனையோ விதங்களில் ஏற்படும், தூக்கத்திலேயே உயிர் பிரிவது. நோய் நொடி கடுமைகளால் ஆகாரம் உண்ண முடியாது உடல் மெலிந்து, பலம் குறைந்து இறப்பது, மார்பு அடைப்பு, மூச்சுத் திணறல், விபத்து, நீரில் மூழ்குதல், தற்கொலை போன்று இறப்பிலும் அவரவர் பூர்வ ஜன்ம, நடப்பு வினைகளுக்கேற்ப இறப்பு அமையும். இதில் கருச்சிதைவிற்கும், தற்கொலைக்கும் எவ்விதப் பரிகாரமும் கிடையாது. கொலைக்கு நிகரான அதிபயங்கர பாவ வினைகளே தற்கொலைக்கும் வந்து சேரும்.

ஏனைய வகையில் மடிவோர்க்கும் அவர்களுடைய அடுத்த சரீர நலன்களுக்காக, மாளய பட்சத்தில் 15 திதிகளிலும் நல்வகைத் தர்ப்பண முறைகளை அளித்துள்ளனர். எனவே, மாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் எண்ணற்ற வகைகளில் தர்ப்பண முறைகள் உண்டு. இவை அனைத்தையும் விளக்கினால், கலியுக மனிதனுடைய குருவி மூளையில் நன்கு பதியாது, மனம் குழப்பமாகும். எனவே, எளிமையான தர்ப்பண முறைகள் மட்டும் அளிக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது தேவைப்படும் விளக்கங்களைத் தக்க சற்குரு மூலம் கேட்டுக் கடைபிடித்தலே நன்று.

இன்றைய திதி மகா திரயோதசி திதியாக, எமதர்ம மூர்த்தி வழிபாட்டிற்கு உரித்தானதாக விளங்குகின்றது. மேலும், இதற்கு “ஆயுதப் பரி நாள்” என்பதாக இயற்கையற்ற முறையில் விபத்து, மற்றும் அடிபட்டு, நோய்கள் ஏற்பட்டு இறப்பது போன்ற மிருத்யு தோஷங்கள் கலந்த இறப்பிற்கான பிரதே தோஷ நிவர்த்திகளைக் கணிசமாக அளிப்பதாகும்.

இரும்பு, மரம் சம்பந்தப்பட்ட கருவிகளை, இயந்திரங்களை, வாகனங்களை இயக்குவோர், நெசவாளர்கள், உழைப்பாளிகள், கூலியாட்கள், விவசாயிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், கல் உடைப்பவர்கள், விறகு வெட்டுபவர்கள், கொல்லர்கள், தச்சர்கள் போன்றோர்க்கு இன்று நல்ல உதவிகளை அளிப்பதுடன் அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்திற்கும் வயிறார உணவு அளித்து, அவர்கள் குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்கேனும் வரும் வகையில் முறுக்கு, சீடை, தேன்குழல் போன்ற பண்டங்களை அளித்தலால், விபத்து, நோய், வலி கண்டு இறப்பவர்களுக்கு நல்ல அடுத்த வாழ்க்கை அமைய உதவும். ஆயுத தோஷங்கள் குடும்பத்தைத் தாக்காமல் காக்க உதவும்.

முக்தி, மோட்சம் என்பதெல்லாம் புனிதமான குருவருள், பக்தியின்றி எளிதில் பெறுவதல்ல, பத்திரிகைகளில் போடுவது போல இறந்தோர் எல்லாம் சிவலோக அல்லது வைகுண்ட பதவி அடைவதில்லை. மேலும், ஒருவர் இறந்தால் அதனைக் கறுப்பு நோட்டீஸ் அடித்து ஊரெங்கும் ஒட்டக் கூடாது. பல தீய ஆவிகள் இதனால் பிரேதம் அருகே கூடி இழிவுகள் செய்து பலத்த பிரேத தோஷங்களைக் குடும்பத்திற்கு அளித்துவிடும்.

13.10.2004 புதன் சதுர்த்தசியும், அமாவாசையும் மாளய பட்சத் தர்ப்பணம்

இன்று காலை 9.36 மணி வரை சதுர்த்தசித் திதி, பிறகு அமாவாசைத் திதி, நாளை 14.10.2004 வியாழன் காலை 8.18 மணி வரை அமாவாசைத் திதி நிரவுகின்றது. எனவே நாளையும் தர்ப்பணம் அளித்தலே மாளயபட்சத்தை நிறைவு செய்யும்.

இந்தத் தாரண வருட மாளய பட்சத்தில் பித்ருக்கள் சூரிய சந்திர ஒளிபடா தீர்த்தத் திரவியங்களில், பொருட்களில் ஆவாஹனம் ஆகி, உறைந்து அருள்கின்றனர். குறிப்பாக இளநீர், நுங்கு, உருண்டை வகைப் பழங்கள் போன்றவை சூரிய, சந்திர ஒளிபடா வகையில் அமைந்துள்ள பொருட்களாகும். இவைகளில் பித்ருக்கள் ஆவாஹனம் ஆவதால் இவற்றைக் கொண்டு தர்ப்பணம் அளிப்பது மிகவும் விசேஷமானதாகும். இதன் தர்ப்பண சக்திக்கு ஈடான தான தர்ம வகைகளும் உண்டு.

இன்றைக்கு பசுக்கள் மற்றும் ஏழைக் குழந்தைகளுக்கு நீராட நன்னீர், வெந்நீர், சீயக்காய், மூலிகைப் பொடி, சோப் போன்றவை அளித்து உதவுதலும் தர்ப்பண சக்திகளை ஓரளவு பெற்றுத் தரும். திருப்பத்தூர் அருகே காஞ்சாத்து மலையில் அற்புதப் புண்ணியத் தீர்த்தம் இருக்கின்றது. இதனருகில் தர்ப்பணம் அளிப்பதும் மிகவும் விசேஷமானதாகும். இன்று 21 இளநீர், 21 பழங்களை வைத்து இவற்றின் சாட்சியாகத் தர்ப்பணம் அளிப்பதால் வாழ்க்கையில் வாக்குத் தவறியது, சொன்ன காரியத்தை நிறைவேற்றாதது. பிறரை ஏமாற்றியது போன்றவற்றிற்குத் தக்கப் பிராயசித்தங்கள் பெற, நீத்தாரப்பப் பித்ருக்கள் மிகவும் துணை புரிவர். ஆனால், உளமுருக மனம் திருந்தி வாழ்தல் முக்கியமானது.

அன்னாபிஷேகம்

ஐப்பசி மாத அன்னாபிஷேகப் பௌர்ணமி

ஒவ்வொரு தமிழ் மாதப் பௌர்ணமியும் ஒவ்வொரு வகைப் பெயருடன் பல விசேஷமான மகத்துவங்களையும் தாங்கி வருகின்றது. ஐப்பசி மாதப் பௌர்ணமிக்கு அன்னாபிஷேகப் பௌர்ணமி என்று பெயர்.

இறைவனே அன்னமலையாக, அன்ன லிங்கமாகத் தரிசனம் தந்த திருநாளே ஐப்பசி மாதப் பௌர்ணமித் திதி நாளாகும். அதாவது, இறைவனே, சோற்றுத்துறை நாதராக, ஓதனவனேசுவரராகக் காட்சி தந்த திருநாளே ஐப்பசி மாதப் பௌர்ணமி திதி நாள்! பராசக்தி தேவி அன்னபூரணியாக, சோற்றுத்துறை நாதருடன் (ஓதனவனேசுவரர்) இணைந்து காட்சி அளிக்கும் திருநாளும் ஐப்பசிப் பௌர்ணமியே!

சந்திர மூர்த்தி, ஐப்பசிப் பௌர்ணமியில் அன்னச்சார மூலிகா சக்திகளைத் தம் சந்திரக் கிரணங்கள் மூலமாகப் பூவுலகிற்கு அளிக்கின்றார். அன்னச்சாரச் சிந்தூரச் சக்திகள் பரிணமிக்கும் தினமும் பௌர்ணமி தினமேயாகும்.

இருதய சிகிச்சை ஆனவர்கள், இருதய வால்வுக் கோளாறு உள்ளவர்கள், ரத்த சோகை, இரத்தப் புற்று நோய் உள்ளவர்கள் ஐப்பசிப் பௌர்ணமியில், நிறைய அன்னம் வடித்து அவரவர் ஊரில் உள்ள சுயம்பு லிங்கத்திற்கு அன்னத்தால் காப்பிட்டு சிகப்பு நிற நறுமண மலர்களால் 1008 முறை (கனகாம்பரம், ஜவ்வந்தி கூடாது) அர்ச்சித்து வழிபடுதல் வேண்டும். பிரசாதப் பூக்களின் மேல், இரு கைகளையும் மலர வைத்து விரித்து, உள்ளங்கை ரேகையை மலர்களின் மேல் நன்கு படர வைத்து

“ஹ்ருதய ஆகாச ஹ்ருதய புஷ்ப மாளயம்
ஹ்ருதய குஸுமாஞ்சலி
ஹ்ருதயாலீஸ்வரர் இதம் சுகம் பதமாஸ்ரயம்”

-என்று ஓதி, புஷ்ப ரேகா யோக பாவனம் பூணுதல் வேண்டும். பிறகு இந்த மலர்களை பசுக்கள், காளைகள், மாடுகளுக்கு புல் தழைகளோடு அவை உண்ணும் வரை அளித்திடுக, மீதமுள்ள புஷ்பங்களை நந்தவனம், பூத்தாவரங்களின் வேர்ப் பகுதியில் மேல் மண்ணோடு சேர்க்கவும்.

சித்த மருத்துவ, ஆயுர்வேத நாட்டு மருந்து கடையில் அன்னபேதி சிந்தூரம் என்ற ஒரு மருந்து கிட்டும். நிறைய மூலிகைகள் மற்றும் உலோக சக்திகள் நிறைந்ததாக, ரத்த விருத்திக்கு இது மிகவும் உதவுவது. இன்று இதனைச் சிறிதளவேனும் வாங்கி, கங்கை, காவிரி போன்ற புனித நீரில் கரைத்து மா, பலா, வாழை, தென்னை, பனை ஆகிய ஐந்து தாவரங்களின் நுனித் தண்டுப் பகுதியிலிருந்து ஆரம்பித்து மெதுவாக வேர்ப் பகுதி வரை தண்டைச் சுற்றி ஊற்றி வருதல் வேண்டும்.

“விருட்ச தேவதைகளே, நல்ல மனோ வைராக்கிய சீர்மைக்கான அன்னச்சாரச் சிந்தூரச் சக்திகளை அனுகிரகம் செய்து அளிப்பீர்களாக!” என்று உளமாற வேண்டிடுக!

ஐப்பசிப் பௌர்ணமியில் வடிக்கப் பெறும் அன்னத்திற்கு “விமலச் சோறு” அதாவது தோஷங்களே இல்லாத அன்னம் என்று பெயர். அன்னத்திற்கு ஐந்து வகை தெய்வாம்சங்கள் உண்டு. தான்ய சக்தி, ஜலசக்தி, அக்னி சக்தி, அமிர்தப் பரவெளிச் சக்தி (அன்னம் வெந்த நறுமண வாசனை), ஆகாச சக்தி என்பதாக பஞ்சபூத சக்திகளைப் போல் பஞ்சாத்மாகார தெய்வீக சக்திகளைக் கொண்டதே அன்னமாகும்.

மப்பேடு

ஆவுடையார் கோயிலில், பாணலிங்கம் இல்லாது ஆவுடை மட்டுமே உள்ள மூலவருக்குப் பாகலும், சுடச் சுடப் புழுங்கரிசி நைவேத்யமும் படைக்கப் பெற்று அன்ன ஆவியே ப்ரீதியான நைவேத்யமாக, படையலாக ஆகின்றது. இதனை 27 நட்சத்திர தேவியரும் நித்ய சாட்சியாக வந்து வணங்கிச் செல்கின்றனர்.

ஆலயங்களில் பிரகாரச் சுற்றுகளில், கொடி மரத்தருகே உள்ள பல திசைகளில் பலி பீடங்களில் பைரவ மூர்த்திகள் ஆவாஹனம் ஆவதால் காலையிலும், அர்த்த ஜாமத்திலும் பலிபீடப் பூஜை நிகழும், பெருமாள் கோயிலிலும் இது கடைபிடிக்கப் படுவதுண்டு. பலி பீட பூஜை நேரத்தை அறிந்து இதனைத் தினமும் பக்தியோடு பைரவ பூஜையோடு தரிசித்து வந்தால் வெளியில் சொல்ல முடியாத கடுமையான மனத்தாங்கல்கள் தீர வழி பிறக்கும்.

ஆற்றங்கரையோரப் பிள்ளையார், அரச மரத்தடிப் பிள்ளையார், ஆலமரத்தடிப் பிள்ளையார் என அனைத்து விநாயக மூர்த்திகளுக்குமே இன்று அன்னத்தால் காப்பிட்டு அபிஷேகம் என்றால் மூங்கில் கூடைகளில் புதிதாக வடித்த அன்னத்தை நிரப்பி, லிங்கத்தின் மேல் அன்னாபிஷேகமாக சாதத்தை வார்த்தலே அன்னாபிஷேகமாம்.

குறைந்தது 30 படியேனும் சாதத்தை அன்னாபிஷேகம் ஆக்குதல் சமுதாயத்திற்கே நல்ல பலன்களை அளிப்பதாகும். அவரவர், குடும்பத்தில் தம்பதி சகிதமாய் ஒன்று சேர்ந்து அன்னம் வடித்து அளிப்பது விசேஷமானது. அல்லது ஆலயத்தில் அன்னம் வடித்து அன்னக் காப்பு சார்த்திட, விறகு, அரிசி, நன்னீர் அளித்தல் மிகவும் சிறப்புடையதாகும். சென்னை அருகே மப்பேடு ஆலயத்தில் உள்ள மஹாவாரிப் பலிப் பீடத்திற்கு வஸ்திர, புஷ்ப அலங்காரங்களுடன் ஐப்பசிப் பௌர்ணமி அன்று அன்ன உருண்டைகளுடன் அர்ச்சனா பூஜை நிகழ்த்துவது மிகவும் விசேஷமானது. இதனால் அடைய வேண்டிய, பதவி, விருது, பணவிடைகள், ஓய்வூதியம், பணக் கொடை, பரிசு, உத்யோக உயர்வு தடங்கல்கள் இன்றிக் கிட்ட உதவும்.

பொன்னாக்குடி

பெற்ற தாயிடம் பாசம், அன்பைப் பொழிவோர் நிச்சயமாக வழிபட வேண்டிய தலம்! தாயின் பரிவைப் பெறாதோர், தாயை மதிக்கத் தவறியோர், ஈன்ற தாய்க்குரிய கடமைக் கடன்களை ஆற்ற உதவும் தலம்!

தாயன்பு தெய்வத் தகைமையுடன் பூரிக்கும் பொன்னாக்குடி ஆலயம் (திருநெல்வேலி நாகர்கோயில் – திசையன்விளை - களக்காடு செல்லும் பேருந்துகள் பொன்னாக்குடி செல்லும்!)

பலருக்கும் தாய் மேல் அபரிமிதமான வாஞ்சையும், பரிவும், பாசமும், அன்பும் நிறைந்திருக்கும். குறிப்பாக, பெண்களுக்கு, இவ்வகையில் தாயின் மீது அளவற்ற பற்று, தாயின் மேல் குறிப்பாக இறுதிக் காலத்தில் ஏற்படுவது உண்டு. தாயை விட்டுப் பிரிந்தாலோ இப்பற்று ஏக்கமாக மாறிடும். பாசத்தால் வரும் பிரிவு என்றால், அது கவலைகளையும், வருத்தத்தையுமே தரும். பரிசுத்தமான அன்பு என்றால், அது நிலைத்து நின்று, உலகிற்கே தாயன்பு சக்திகளை நிறைத்திடும்.

தாமிரபரணி ஆற்றங்கரையில் பல நூற்றாண்டுகளுக்கு முன், “பொன்னா” என்ற பெயருடைய ஓர் பவித்ரமான உத்தம இல்லறப் பெண்மணி, புனிதமான சிவ பக்தையாக, 120 ஆண்டுகள் பரிபூரணமான ஆயுளை, இறையருளால் பெற்று, ஆயிரக்கணக்கானோருக்கு உண்மையான தாயாக, அன்பால் சேவை புரிந்து, உத்தம தெய்வீக நிலைகளைப் பெற்றாள். கால்நடைகளும், பறவைகளும், மீன்களும் அம்மா என அழைக்கும் அளவிற்கு, கல்வி அறிவு இலாத பொன்னா இறைப் பகுத்தறிவில் சிறந்து, அன்பில் உறைந்து பிரகாசித்தனள்.

இவ்வம்மையின் இறைச் சேவையைக் கருத்திற் கொண்டுதான் பொன்னம்மாள், பொன்னாத்தாள், பொன்னி என்றவாறான பெயர்கள் இப்பகுதியில் தோன்றின. “பொன்னா” என்ற இந்த அற்புத சிவபக்தை வழிபட்ட தலங்களுள் ஒன்றே, பாளையங்கோட்டை அருகில் உள்ள பொன்னாக்குடி ஸ்ரீஉண்ணாமுலை அம்பாள் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரர் ஆலயமாகும்.

உலகம்மையின் அன்பை நிரவிய பொன்னம்மை!

இத்தலத்தில் “பொன்னா”, பல சித்தர்களின் தரிசனத்துடன், அவர்களுடைய அருளாசிகளை நேரடியாகவே பெற்றாள். பொன்னாவின் அருள் சுரப்பானது, பசுக்களைக் கூட ஈர்த்து, “அம்மா” என்று பொன்னாவைச் சுற்றிச் சுற்றி வந்து அன்பைப் பொழிந்தன. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாள்!

கல்லினுள் இருக்கும் தேரைக்கும், கருப்பையில் இருக்கும் உயிருக்கும் அமுது படைப்பவளன்றோ உண்ணாமுலைத் தாய்! தாயின் மீது மிகுந்த பாசம், பரிவு, அன்பு கொண்டவர்கள், தன் தாயிடனோ, தாயில்லாவிடில், தாயின் நினைவுடனோ, பொன்னாக்குடி உண்ணாமுலை சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரர் ஆலயத்தில், பிரதோஷ நாளில், இதிலும் மிக, மிக விசேஷமாக, சனிப் பிரதோஷ நாளில், பொன்னாங்கண்ணிக் கீரைப் பொரியலுடன் உணவைப் படைத்து அன்னதானம் செய்து வழிபடுதலால், உண்ணாமுலை அம்மையின் கருணை கிட்டிட வழி பிறக்கும். பெற்ற தாய்க்கும் சாந்தமான, நிம்மதியான வாழ்வு கிட்டும். மேலுலகில் உறையும் தாய்க்கு உத்தம நிலைகள் கிட்ட நல்வழி பிறக்கும்.

“அம்மா” எனும் அற்புதத் தமிழ் வார்த்தையில் “அம்” மற்றும் “ஆ” (த்மாட்சர) வகை, அம்மையப்ப பீஜாட்சர சக்திகள் பொலிகின்றன. கருவறையில் அம்மையப்ப பீஜாட்சர சக்திகள் பொலியும் அற்புதத் திருக்கோயில் இது!

மூன்று அன்னையரும் முத்தான சான்றோரே!

பிரபஞ்சத்தின் அனைத்து ஜீவன்களுக்கும் முதலன்னை ஆதிபராசக்தியாம் உண்ணாமுலை அம்மனே! அடுத்ததாக தாயமுதை ஊட்டி வளர்க்கும் ஈன்றெடுத்த அன்னை! மூன்றாவது பெரும் அன்னையாய் அமைவது மடிப் பால் சுரந்து தந்து, சிசு முதல் பெரியோர் வரை அனைவரையும் போஷிக்கும் பசு!

பொன்னாக்குடி ஸ்ரீஅருணாசலேஸ்வரர் ஆலயத்திற்குப் பசுக்களைக் கன்றுகளுடன் அழைத்து வந்து, வயிறு நிறைய புல், புண்ணாக்கு, வைக்கோல், நீர் போன்றவற்றை அளித்து, அதியற்புத “கோ சூக்த மந்திரங்களை” ஓதி, கோ பூஜை ஆற்றி பசு, கன்றுடன் கோயிலை வலம் வந்து வழிபடுதலால், கடைசி வரை பிள்ளைகள், பெண்களுடன் நல்லுறவு நன்கு பரிமளிக்க உதவும். பெற்றோர்கள் – பிள்ளைகள் இடையே ஏற்பட்டுள்ள பிளவுகள் சீரமைந்து, இறுதி வரை நன்கு வைத்துக் காப்பாற்றிட நல்லுறவும் உதயமாக உதவும் தலம்.

திருஅண்ணாமலையில் தோன்றும் கார்த்திகைச் சிவாத்மத் தீபப்பிரகாச ஜோதியில் ஸ்வர்ணாம்ருத தீப ஜோதிக் கிரணங்கள் பரிபூரணித்து நிரவியுள்ள தலங்களில் எல்லாம், ஸ்ரீஅருணாசலேஸ்வரர் ஆலயம் அமைந்திடும்.

பட்டுக்கோட்டை – மதுக்கூர் அருகே அண்டமி, பொன்னாக்குடி, கும்பகோணம் – குடவாசல் இடையே விடையல் கருப்பூர், பாண்டிச்சேரி – வில்லியனூர் – கண்டமங்கலம் அருகே உள்ள சின்னபாபு சமுத்திரம் போன்ற இடங்களில் ஸ்ரீஅருணாசலேஸ்வர ஆலயங்கள் அமைந்துள்ளன. மேற்கண்ட கோ சூக்த மந்திர வழிபாடுகளை இவற்றில் கடைபிடித்திடலாம்.

நவராத்திரி பூஜைகள்

இரவு நேரப் பூஜைகளில் கிட்டும் பலாபலன்களை மனித உலகம் பெரிதும் இழந்து வருகின்றது. இதனால்தான் உலகில் வன்முறை, காமக் குற்றங்கள், பயங்கரத் தீவினை சக்திகள் பெருகி வருகின்றன.

இரவு நேரத்தில் செய்யும் தவறுகளுக்கான பரிகாரங்களை, பௌர்ணமி நாளின், மாத சிவராத்திரியின் இரவு நேர கிரிவலம், நவராத்திரிப் பூஜைகள் போன்ற இரவு நேர பூஜைகள் மூலமே பெற இயலும்.

நவராத்திரிப் பூஜைகள்

இரவு, பகல் என இரண்டாக விரியும் காலப் பகுப்பின் தெய்வீக ரகசியங்களை கலியுக மனித குலம் இன்னமும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இதன் தாத்பர்யங்களை நன்கு அறிந்த சத்குருவையும், உத்தமர்களையும் கலியுக மனித சமுதாயம் நன்கு பேணி, மதித்துப் போற்றாமையால், கலியுலகில் உத்தமர்கள் இலைமறை கனியாய் வாழ்ந்து, தம்மை நம்பிச் சரண்டைவோர்க்கு கால மஹா அனுபூதிகளை தேவகால ரகசியங்களை உணர்விக்கின்றனர்.

ஸ்ரீசண்டிகேஸ்வரி லால்குடி

உத்தமக் காலப் பகுப்பு முறை!

நம் முன்னோர்கள் கடைபிடித்த – சூரிய உதயத்தில் இருந்து மறையும் வரையான – பகலில் 8 முகூர்த்தங்கள், இரவில் 8 முகூர்த்த நேரங்கள் – என்ற காலப் பாகுபாட்டு முறைதான் மிகவும் உத்தமமானது, நல்ஆரோக்யத்தையும், மனவளத்தையும் அளிக்க வல்லது.

இரவு எனில் உறங்க வேண்டிய நேரம் என்று மட்டுமே கலியுக உலக மக்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். சூரிய அஸ்தனமத்திற்கு முன்னரேயே உண்டு, எட்டு மணிக்குள் படுத்துறங்கி, விடியற்காலை மூன்று மணிக்கு (பிரம்ம முகூர்த்த நேரத்தில்) எழுவதுதான் மிகவும் ஆரோக்கியமான காலப் பயன் முறையாகும். இதனால் கண்கள் நல்ல சக்தியுடன் விளங்கி, பார்வையும் நன்கு வளம் பெறும். சாந்தமான மனோ நிலையும் கிட்டும். அனாவசியமான துர் எண்ணங்கள், முறையற்ற காம இச்சைகள், தீய வழக்கங்கள் தொற்றாதபடி, மனம், உள்ளம், உடலைத் தற்காத்துக் கொள்ள இக்காலப் பகுப்பு முறையே மிகவும் உதவுவதாகும். ராகு கால, எம கண்ட, குளிகை கால நேரங்கள் இத்தகைய எண்வகை முகூர்த்தக் காலத்தை ஒட்டி அமைந்தவையே!

ஆனால், கலியுகத்தில், தற்போது இத்தகைய எண்வகை முகூர்த்தப் பகுப்புக் கால வாழ்க்கை முறையையே எண்ணிப் பார்க்க இயலாத அளவிற்கு, கலியுக நிகழ்ச்சிகள், வாழ்க்கை அமைப்பு, சமுதாயச் செயல்கள் அமைந்துவிட்டன. இரவு நேரப் பணி (night duty) என்பது பல தொழில் துறைகளிலும் தவிர்க்க முடியாததாக ஆகி விட்டது. ஆகாய, விமான, ரயில், பஸ் பிரயாணங்களே இரவில் தானே பெரும்பான்மையானதாக நிகழ்கின்றன.

எனவே, இரவு, பகல் கால உத்தம அம்சங்களை மனித குலம் முறையாக உணர்ந்து வாழாமைக்குப் பிராயசித்தமாகவே, மாத சிவராத்திரி, மஹா சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி மற்றும் நவராத்திரி எனப்படும் ஒன்பது தின இரவு வழிபாடுகள் தெய்வீகப் பூர்வமாக அளிக்கப்பட்டுள்ளன.

கலியுகத்தில் இரவில்தாம் நல்லவர்களும் கூட நிறைய தவறுகளைச் செய்கின்றார்கள். இரவு நேரத்தில் செய்யும் பெருந்தவறுகளை, இரவு நேரப் பூஜைகளால் தாம் நிவர்த்திக்க முடியும். இதற்காகத்தான் வைகுண்ட ஏகாதசி, மகா சிவராத்திரி, பௌர்ணமி கிரிவலம் போன்றவற்றுடன் நவராத்திரிப் பூஜைகளும் இரவு நேரப் பூஜைகளாக அபரிமிதமான பலன்களைத் தருகின்றன.

ஆலயங்களில் பூஜைக்கான தேவகாலப் பகுப்பாக ஆறு ஜாமப் பூஜை நேர முறைகளும் உண்டு. சூரிய மறைவு நேரத்திலிருந்து மறு நாள் சூரிய உதயம் வரை உள்ள இரவுக் காலம் எட்டு முகூர்த்த நேர வகைக் காலம் ஆலயங்களில் தேவ பூஜைக்கான காலமாகும்.

நவராத்திரியின் ஒன்பது தினங்களிலும் சூரிய மறைவு நேரத்தில் இருந்து, இரவு அர்த்த ஜாம நிறைவுப் பூஜை வரை உள்ள இரவுக் காலத்தில், எந்த அளவிற்கு அம்பிகையின் தரிசனங்களைப் பெறுகின்றார்களோ, அந்த அளவிற்கு மன சாந்தமும், செல்வ விருத்திக்கான சுபிட்சங்களும் விருத்தியாகிட உதவும்.

மேலும், பல தீய வழக்கங்களுக்கும், கோபம், பிடிவாதம், அகங்காரம், ஆணவம், கர்வத்திற்கும் அடிமையான கணவன், மீண்டும் குடும்ப வாழ்வில் நன்முறையில் பொறுப்பு கொண்டு பணி ஆற்றி, இல்லறத்தில் ஈடுபாடு கொண்டு மன நிம்மதி பெறவும், நவராத்திரி பூஜைகள் நன்கு உதவும்.

ஸ்ரீபொற்கொடி அம்மன்
திலதைப்பதி

உண்மையில் நவராத்திரியின் ஒன்பது தினங்களிலும், தினமும், இரவில் ஒன்பது அம்பிகையரைத் தரிசித்து, தினமும் ஒரு ஏழைச் சுமங்கலியின் குடும்பத்திற்கு ஏதேனும் சிறிய அளவிலாவது உதவி வந்திட மன சாந்தம் பூரிப்பதை அவரவர் தாமே நன்கு உணர்ந்திடலாம்.
மாளய அமாவாசை நிறைவு அடைவதில் இருந்து உடனே தொடங்கும் பிரதமைத் திதியிலிருந்து நவராத்திரி உற்சவம் தொடங்குகின்றது. இந்த நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும், தினந்தோறும் ஏழைச் சுமங்கலிகளுக்கு ஒன்பது வகை மங்களப் பொருட்களை அளித்தலுடன், சிறுமியர் கன்னிப் பெண்களுக்கு நல்ல உதவிகளை ஆற்றுதலும் வேண்டும். இதனால் தேவையற்ற மனபீதிகள் அகலும்.
ஆண்கள், நவராத்திரியில் பெண்களை புனிதமான சக்தியராக உத்தமமாக எண்ணிடச் சங்கல்பித்துத் தினமும் ஸ்ரீலலிதா பரமேஸ்வரியை வழிபட வேண்டும்.
பிரதமைத் திதி

இன்று காஞ்சி காமாட்சி தேவி, திலதைப்பதி (கோயில் பத்து) ஸ்ரீலலிதா பரமேஸ்வரி போன்று அமர்ந்த நிலை அம்பிகை தரிசனம் மிகவும் விசேஷமானது. இன்று ஆலய மரங்கள், செடிகளுக்கு நீர் ஊற்றுதல் நன்று, மஞ்சள் நிறக் கனி வகைகள் தானம் சிறப்புடையதாகும். தகாத எண்ணங்கள் ஏற்படாது மனம், உடலைக் காத்திட உதவிடும் அற்புத நவராத்திரி பூஜை! இன்று மூன்று வேளைகளிலும் தாமரை மணி மாலையால் கீழ்க்கண்ட மந்திரத்தை 1008 முறை ஜபித்த பிறகு உணவேற்றல் நல்ல மனோசக்திகளைத் தரும்.
மந்திரம்:
அவித்யாநா மந்தஸ்திமிர மிஹிர த்வீப நகரீ
ஜடாநாம் சைதந்ய ஸ்தபக மகரந்த ஸ்ருதிஜரீ!

துவிதியைத் திதி
இன்று இரு அம்பிகையர் உள்ள ஆலயங்களில் வழிபாடு கொள்வது சிறப்புடையதாம். 12 வகை கோபுரக் கலச, விமான தரிசனம், ஆலயக் கோமுகத்தைச் சுத்திகரித்தல், கம்பளியின் மேல் தர்பைப் பாய் விரித்து இதன் மேல் 1008 முறை காயத்ரீ மந்திர ஜபம், வாழை இலையில் சுடச் சுடச் சாதம் வைத்து, ஏட்டுக் காய்கறிக் கூட்டுக் கறியுடன் அன்னதானம் அளிப்பது சிறப்பான புண்ய சக்திகளை நல்கும். பெண் பிள்ளைகளை நன்கு வளர்த்து ஆளாக்கிட உதவும் பூஜை. இன்று நாள் முழுதும் துளசி மணி மாலை அணிந்து கீழ்க் கண்ட மந்திரம் ஜபித்தல், நல்ல இருதய சக்திகளைப் பெற நல்வழிப் பூஜை முறைகளைத் தக்கோர் மூலம் பெற்றுத் தரும்.
மந்திரம்:
தடித்வந்தம் சக்த்யா திமிர பரிந்த்தி ஸ்புரணயா
ஸ்புரந் நாநாரத்நாபரண பரிணத் தேந்த்ர தனுஷம்
தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக சரணம்

ஸ்ரீபாலாம்பிகை அஞ்சனாட்சி அம்மன் சமேத உஜ்ஜீவநாதர் உய்யக்கொண்டான்மலை

திரிதியைத் திதி
திருவேற்காடு, திருநல்லூர், வேதாரண்யம் போன்ற இறைவன் திருமணக் கோலம் பூண்ட தலங்களில் இன்று, குடும்பத்துடன் பூஜித்தல் விசேஷமானதாகும். ஆலயப் படிகளில் பச்சரிசி மாக்கோலம் இட்டு, இட்லி, இடியாப்பம் போன்ற மாவு வகை உணவுப் பண்ட தானம் அளித்தல் சிறப்பானதாம். வாழ்வில் முன்னேற முடியாது நடுத்தரக் குடும்பமாகவே வாழ்வோர் கணிசமான முறையில் சிறுகச் சிறுக நிச்சயமாக வளம் பெற உதவும் பூஜை நாள்.

திருநல்லூர்

சதுர்த்தித் திதி
இன்று, பிள்ளையாரும் முருகனும் துவார பாலக மூர்த்திகளாக உள்ள தல அம்பிகை தரிசனம் மிகவும் விசேஷமானதாகும். ஆலயத்தில் அனைத்து மூர்த்திகளுக்கும் வஸ்திரம், பூணூல் சார்த்துதல், தேன்குழல், இடியாப்ப உணவு தானம் நன்று., குடும்பத்தைக் கட்டிக் காத்திட நல்ல உறுதுணையை அளிக்க வல்ல பூஜை., இடுப்பிற்குப் புது அரைஞாண் கயிறும் மணிக் கட்டிற்கு காசிக் கயிறும் அணிந்திடுதலும், இவற்றைத் தானமாக அளித்தலும் நல்ல காப்பு சக்திகளைத் தரும்.

பஞ்சமித் திதி

வில்வம், துளசி, வன்னி, அரசு, ஆல் போன்று ஐந்து முக்கியமான விருட்சங்கள் உள்ள தலத்திலும், நான்கு திசை ராஜகோபுரங்கள் உள்ள தலத்திலும் அம்பிகை தரிசனம், ஆலய விருட்சங்களுக்கு மஞ்சள், சிந்தூரம், விபூதி, குங்குமம், வஸ்திரம் சார்த்துதல் சிறப்பான பூஜையாம். பித்ரு வழிபாடுகளை முறையாக ஆற்றாமையால் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடிகள் தீர முதலில் பித்ரு தோஷ நிவர்த்திக்கு நல்வழி பெறத் துணையாகும் பூஜை!

சஷ்டித் திதி

ஸ்ரீசண்டிகேசர், ஸ்ரீசண்டிகேஸ்வரி இருவரும் சன்னதி கொண்டு அருளும் தலங்களில் இன்று அம்பிகை தரிசனம், வாழைப்பூ, வாழைத் தண்டு, வாழைக்காய் கூடிய உணவை வாழைப் பழத்துடன், வாழை இலையில் வைத்தும், (வாழை நாரால் தொடுத்துக் கட்டிய) பூச்சரம் அளித்தும் ஆகிய ஆறு வகை வாழைக் குடும்பப் பொருள் வகை தானம், குடும்பம், வியாபாரம், சந்ததி நொடித்துப் போகாது காத்திட சுமங்கலி ஆசி சக்திகளைத் தரும் பூஜை.

சப்தமித் திதி, அஷ்டமி திதி

இசைத் தூண்கள், வீணை தாங்கிய வீணாதர தட்சிணா மூர்த்தி, தும்புரு, நாரதர், வீணை ஏந்திய சரஸ்வதி அருளும் தலத்தில் அம்பிகை தரிசனம், ஏழைப் பாடகர்களை, இன்னிசைக் கருவி வித்வான்களை ஆலயத்தில் பாட வைத்து சன்மானம் அளித்தலால் திருமணமாகிச் சென்றுள்ள பெண், பிள்ளைகள் நல்ல மகிழ்ச்சி பெறுவர்.

அவரவர் குடும்பத்தில் தம் பேரன், பேத்தி, அன்னை, தந்தை, தாத்தா பாட்டி ஆகிய ஆறு பேருடனும் – குறைந்தது ஏழு பேர் உள்ள ஏழை, நடுத்தரக் குடும்பத்தைச் சந்தித்து ஏதேனும் உதவி செய்தல் நல்லது, குடும்பம் பிரிந்து விடுமோ என்று அஞ்சி வாழ்வோர்க்கு நன்னிலை தரும் பூஜை.

அஷ்டமித் திதி

ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீசனீஸ்வரர் என குறைந்தது எட்டு மூர்த்திகளின் தனிச் சன்னதிகள் அமைந்துள்ள தலத்தில் அம்பிகை தரிசனம் – விளக்கு தீபம், தல விருட்சத்திற்குச் சரடு சார்த்துதல், சாம்பிராணி தூபம், ஊதுபத்தி, சிதறு தேங்காய் உடைத்தல், வஸ்திரம் சார்த்துதல், பூ மாலை சார்த்துதல், படையல், அன்னதானம் ஆகிய எட்டு உபசார வழிபாடு சிறப்பானது. கட்டுக்கடங்காது செல்லும் கணவன், மனைவி, பிள்ளைகள், பெண்கள் திருந்திட உதவும் பூஜை.!

நவமி திதி, தசமி திதி

சப்த மாதர்கள் உள்ள தலத்தில் அம்பிகை தரிசனம் – சப்த மாதர்கள், ஸ்ரீதுர்க்கைக்கு வஸ்திரம் சார்த்துதல், அமர்ந்த கோல துர்க்கையுடன் ஒன்பது துர்க்கா தேவிகள் தரிசனம் மிக, மிக விசேஷமானது. குடும்பம், உற்றம், சுற்றம், அக்கம் பக்கம், அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள பகைமை, அவதூறு, பழிகள் நீங்க அமர்ந்த கோல ஸ்ரீதுர்க்கா தேவி வழிபாடு உதவும்.

தசமி ஸ்ரீஆயுர்தேவி வழிபாடு

“ஸ்ரீஆயுர் தேவி மஹிமை” என்ற எம்முடைய ஆஸ்ரம வெளியீட்டு நூலைப் படித்து இதன்படிக் கலசம் வைத்து வழிபடக் கூடிய மிகவும் எளிமையான பூஜை, புரட்டாசி சனிக் கிழமையில் மாவிளக்கு வைத்துப் பெருமாளை வழிபட வேண்டும். ஏழைக் குழந்தைகளுக்கு மாவிளக்கு தானம் சிறப்பானது. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர், திருவேற்காடு போன்ற திருமணக் கோலத் தலங்களில் உள்ளது போல, சிவபெருமான் சிலா வடிவில் உள்ள ஆலயத்தில் (உ.ம் சீர்காழி சட்டநாதர்) இன்று அம்பிகை தரிசனம் பெறுவது அற்புதமான புண்ய சக்திகளைத் தருவதாகும்.

பிறரைப் பற்றி அவதூறாக எண்ணியது, திட்டியது, பழி வாங்கியது, பழி சுமர்த்தியது, பிறரைப் பற்றிக் கோள் மூட்டியது, பொய் பேசியது போன்றவற்றிற்குப் பரிகாரம் பெற உதவும் பூஜை.

குறிப்பு : அந்தந்தத் திதி நேரத்தில் குறித்த பூஜைகளை ஆற்றிடவும்.

ஸ்ரீஜெயம்கொண்டீஸ்வரர்

“வெற்றியப்பர், வெற்றீஸ்வரர், வெற்றியம்பதியர்” என்ற அர்த்த நெறிகளோடு, “ஜெயம் கொண்டீஸ்வரர்” என்ற பெயரில், சில தலங்களில் இறைவன் கோயில் கொண்டு, “வெற்றியை” அருளும் மூர்த்தியாக அருள்கின்றார்.

வெற்றி நிலைக்கட்டுமாக!

வெற்றி பெறுவது என்பது, வெறுமனே கோர்ட் வழக்கில், பந்தயத்தில், ஒலிம்பிக்கில் அடைவது போல, வெறுமையான, நிரந்தரமற்ற, தனக்கு மட்டுமே பயன்படுவதான வகையில் ஜெயம் அடைவதல்ல! எத்துறையில், எதில் ஜெயமாகிய வெற்றி கிட்டியது. இது எவ்வளவு காலம் நீடிக்கும், இதனால் மென்மேலும் கிட்டுவது என்ன போன்ற அளவீடுகளைப் பொறுத்துத் தான் வெற்றிக்கு உரிய நல்ல சந்தோஷமும், உளப்பூர்வமான மகிழ்ச்சியின் பாங்குகளும் அமையும். ஒரு பௌர்ணமி அல்லது கார்த்திகை தீப அன்னதானம் நன்முறையில் இறையருளால் நிகழ்வது சத்சங்கத்திற்கு சற்குரு மூலமாக இறைவனே அளிக்கின்ற வெற்றியாகும்.

குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள் என ஒவ்வொரு பருவத்திலும் வயதிலும் வெற்றியின் தன்மைகள் மாறுபடும். ஒருவருடைய வெற்றி, மற்றொருவருக்கு, துக்கம், சோகம், இழப்பு, நஷ்டம் தருவதானால் இது முழுமையான வெற்றி ஆகிவிடாது! இவ்வாறு வரின் என் செய்வது? எந்த வெற்றியையும் ஸ்ரீஜெயங்கொண்டீஸ்வரருக்கு அர்ப்பணித்தலும் “நிஷ்காம்ய கர்ம யோகத்தில்” (சரணாகதிக்கான அடிப்படை அர்ப்பணிப்பு யோகம்) சேர்ந்து வருகின்றது.

வாழ்க்கையில் பலவற்றிலும் நிச்சயமாக வெற்றி அடைய வேண்டியது மிகவும் முக்கியமானதே! ஒரு சிறிய வெற்றியே பல நற்காரியங்களுக்கு வித்திடுமானால், அச்சிறிய வெற்றியும் ஏற்புடையதே!

கலியுகத்தில், வாழ்க்கைக் காரியங்களோடு ஆன்மீக ரீதியான அன்னதானம், கூட்டுத் தர்ப்பணம், விஷ்ணுபதிப் புண்ய கால பூஜை போன்ற நற்காரியங்களை எண்ணுவதே பெரிய பாக்கியமாகின்றது. இதோடு எண்ணிய நற்காரியத்தை சத்சங்கமாகப் பலருடன் சேர்ந்து ஆரம்பித்து, எடுத்து, நடத்தி, முடித்து வெற்றி பெறுவது என்பது இறையருளால் தான் பரிணமிக்கும். இதுவும் பிற யுகத்தில் மாபெருந் தவத்தால் கிட்டுவது போலான கலியுகத்தில் அடையும் மா தவ நல்வரமே! ஆனால், குடும்ப வாழ்க்கை ஒழுங்காக எவ்விதப் பிரச்னையும் இன்றி நடந்தால்தானே தெய்வீகத்தைப் பற்றி எண்ன முடியும் என்பது பலருடைய ஆதங்கம்!

இரு துறை ஈறாக இனிய வெற்றியாமே!

அலுவலகப் பணி, குடும்ப சம்பவங்கள், அனுபவங்கள், வியாபாரம் போன்ற தினசரி வாழ்க்கையை நடத்த உதவும் அம்சங்களோடு இணைந்த, உத்தமமான நற்காரியங்களிலும் வெற்றி கிட்டுவதற்கான அபரிமிதமான நல்வரங்களையும் இணைத்து அருள்பவரே ஸ்ரீஜெயங் கொண்டீஸ்வர மூர்த்தி ஆவார். அதாவது லௌகீகமான நடைமுறை வாழ்க்கைத் தேவைகளோடு ஆன்மீக வழிமுறைகளிலும் ஈடுபாடு தந்து வெற்றிகளை அமைத்துத் தருபவரே ஸ்ரீஜெயங் கொண்டீஸ்வரப் பெருமான்! இவைதாம் சற்குருவின் அருளுக்குப் பாத்திரமாக்க வைக்கும். ஆம், திரண்ட குருவருளும், இறையருளால் திரண்டு பரிணமிப்பதேயாம்!

ஸ்ரீஜெயங் கொண்டீஸ்வரர் எனப் பெயர் பூண்டு இறைமை அருளும் மூர்த்தங்களில், ஜெய சூரியம், ஜெயச் சந்த்ரம், ஜெய குஜபலம், ஜெய வித்யம், ஜெய குருபலம், ஜெயச் சுக்ரம், ஜெய சனைஸ்சரம் போன்ற கோள வர சக்திகளையும் இணைத்துத் தருவதால், ஸ்ரீஜெயங் கொண்டீஸ்வரர் வழிபாடு மகத்தான காரிய சித்திகளைத் தருவதாகும்.

வெற்றி தரும் பூஜை நாட்கள்

(நாள் முழுதும் 60 நாழிகையும் அமையும்) சுவாதி, அனுஷம் திரிதின நட்சத்திர நாட்கள், வளர்பிறைப் பிரதோஷ நாள், தனலட்சுமி கடாட்சம் பூரிக்கும் (திருமகளுக்குரிய) துவாதசித் திதி, 27 வகை யோகங்களில் சௌபாக்கிய யோக நாள், ஜெய சக்தி நட்சத்திரங்களான மூலம், மகம் போன்ற ஜெயசக்தி நாட்களில், ஸ்ரீஜெயங் கொண்டீஸ்வரருக்கு, அவரவர் வசதிக்கு ஏற்ப,

வெள்ளிக் காப்பு அல்லது அரைத்த சந்தனத்தில், அத்தர், குங்குமப் பூ, புனுகு, கோரோஜனை, ஜவ்வாது, குல்கந்து, மகிழம்பூப் பொடி கலந்து காப்பு சார்த்தி அலங்கரித்து,

இந்நறுமணக் கலவையைச் சாம்பிராணி தூபத்தில் சிறிது சிறிதாக இட்டு, குறைந்தது ஐந்து மணி நேரத்திற்காவது சாம்பிராணி தூபப் படையல் இட்டு வழிபடுதலால்,

-நற்காரியங்களில் வெற்றி காணும் ஜய ஐஸ்வர்ய சக்திகள் நன்கு விருத்தி ஆகும். மேலும் வெற்றிகளைத் தடுக்கும் பகைமை, விரோதம், குரோத எதிர்ப்பு சக்திகளும் அறவே விலகும்.

ஓய்வு பெற்ற வாழ்க்கையை உடையோர், VRS பெற்று இருப்போர் இத்தலங்களில் அடிக்கடி பூஜித்து வருதலால் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள விரக்தி, வெறுப்பு, பொறுப்பின்மை அகன்று ஆன்மீக ரீதியாக இனியேனும் நல்லதைச் சாதிக்கும் சக்திகளைப் பெறுவர்.

இவ்வாலயங்களில் நைவேத்யத் தளிகையாக, விறகு அடுப்பில் (காஸ் அடுப்பில் அல்ல), புது வெண்கலப் பாத்திரப் பானை அல்லது புது மண் பானைகளில் சாதம் வடித்து, சாம்பார் சாதம், வற்றல் குழம்பு அன்னமாக, வடாம், அப்பளத்துடன் சேர்த்து ஏழைகளுக்கு அன்னதானமும், உணவை நிரப்பி, (வடித்த) மண் பானை, பாத்திரங்களோடு தானமும் செய்து வர, தத்தம் துறைகளில் வெற்றி பெற, தக்க புண்ய சக்திகள் கை கூடும். வாழ்வில் மன நிம்மதி கிட்ட வழி பிறக்கும். நன்முறையில் காரிய சித்தியும், ஜயமாகிய வெற்றியும் முழுமையாகக் கிட்ட நல்வழி பிறக்கும்.

சோழபுரம் ஸ்ரீசிவபூரணி

சந்தோஷி மாதாவைத் தோற்றுவித்த ஈஸ்வரியின் பரிபூரண சிவபூஷண அவதாரிகையே சோழபுரம் ஸ்ரீசிவபூஷணி அம்பாள்! சோகம், வறுமை, நோய்க் கொடுமைகள், சூறாவளியான வாழ்க்கைக்கு இடையே உழலும் எத்தகைய குடும்பத்திற்கும் நன்முறையில் சந்தோஷத்தை அளித்து அருளும் ஸ்ரீசிவபூரணித் தாயார்! இறைவனே எவ்விதப் புராண அனுபூதிகளும் இன்றி, தாமே தன் பரிபூரணத் தோற்றமாகத் தோற்றுவித்த அவதாரமே ஸ்ரீசிவபூரணி அன்னை!

கடந்த இதழில் சோழபுரம் ஸ்ரீசிவபூரணி தேவியின் மகிமையைப் பற்றி, சித்தர்கள் சற்குரு மூலம் உறைத்த அதியற்புத விளக்கங்களை ஓரளவு அளித்துள்ளோம்! சொல்லவும் பெரிதே சிவபூரணி மஹிமை!

ஸ்ரீவிநாயகப் பெருமான்
சோழபுரம்

எத்தகைய வறுமை, நோய், குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள், மன ஒற்றுமை இன்மை குடும்பத்தில் இருப்பினும், சோழபுரம் ஸ்ரீசிவபூரணியை ஒரு கால் மணி நேரமேனும் கண்டு தரிசித்து, நினைந்து துதித்தாலே போதும், உள்ளத்திலிருந்து தானாகவே துன்பங்களின் நடுவிலும் இறைப் பரிமாண சந்தோஷம் ஊறிப் பூரித்துக் கிளைப்பதை யாவரும் நன்கு உணர்ந்திடலாம்.

வறுமையிலும், நோய்க் கொடுமையிலும், சோகத்திலும் தோய்ந்து வாழ்வோரும் சந்தோஷத்தை அனுபவிக்கும் வண்ணம் அமைந்துள்ள மிகவும் அபூர்வமான ஆனந்தமய, இறைமய வளாகமே சோழபுரம் ஸ்ரீசிவபூரணி ஆலயத் தலமாகும்.

தெய்வ மூர்த்திகளும் தினமும் வழிபடும் திவ்யத் தலம்

ஸ்ரீசனீஸ்வரர் பூஜிப்பது: தெய்வ மூர்த்திகளே, இறை மூர்த்தங்களை வழிபடும் அபூர்வமான மூர்த்த வர்ஷத் தலமிது! அம்பிகையே உபதேசித்து ஆக்கித் தந்த சிவலிங்க பூஜையை, ஸ்ரீசனீஸ்வர மூர்த்தியே லிங்கத்திற்காக ஆற்றுகின்ற அற்புத வடிவை இங்கு நாம் கண்டு தரிசித்திடலாம்.

ஸ்ரீமஹாலக்ஷ்மீ பூஜிப்பது: உலக அன்னையாம் உமையவளாம் சிவபூரணி, சங்குச் சக்கரம் தாங்கி இங்கு அருள்வதால் திருமகளும், ஸ்ரீமஹாவிஷ்ணு ரூபியாக சிவபூஷணியை நிதமுமே பூஜிக்கும் அற்புதத் தலம்.

ஈஸ்வரன் பைரவரை வழிபடுவது: வைரவருக்கெல்லாம் ஈஸ்வரராகிய மஹா பைரவேஸ்வரரை, ஈஸ்வரனும் வழிபடுகின்ற பைரவேஸ்வர ஆலயத் திருத்தலம்! தற்போது ஸ்ரீமஹா பைரவேஸ்வரர் ஆலயம், சிவபூரணி சமேத ஸ்ரீகைலாசநாதர் ஆலயம் அருகில் பலருக்கும் தெரியாத வகையில் அமைந்து பூஜையின்றி மிகவும் சிதிலமடைந்து உள்ளது. மஹாளய பட்ச அமாவாசைக்கு முந்தைய மத்யாஷ்டமியும், தேய்பிறை அஷ்டமித் திதி யாக பூஜைகளும், அனைத்து அஷ்டமித் திதிப் பூஜைகளும், ஒரு யுகத்தில் மிகவும் பிரசித்தியுடன் கொண்டாடப் பெற்ற மகத்தான மஹா பைரவ பூமி வளாகம் இதுவே!

சரஸ்வதியும் வந்து வழிபடும் சோழபுரம்

ஸ்ரீசிவயோக சரஸ்வதி பூஜிப்பது: ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தியைச் சற்குருவாகப் பெறுதற்காக, ஸ்ரீசிவயோக சரஸ்வதியாக, இங்கு தவமிருந்து ஸ்ரீயோக தட்சிணா மூர்த்தியை வழிபட்ட திருத்தலமாகும்.

ஸ்ரீசிவபூரணி அம்பாள்
சோழபுரம்

கலைமகளுக்கும், ஸ்ரீஹயக்ரீவ மூர்த்திக்கும் உரிய நவமி திதியிலும், மற்றும் வித்யாகாரகரான புத மூர்த்திக்கு உரிய புதன் கிழமையிலும் இங்கு வெண் தாமரை மலர்களால் ஸ்ரீசிவயோக சரஸ்வதியை அலங்கரித்து, கற்கண்டுப் பொங்கல், 9 காய் கறிகள் கலந்த கலவைச் சோறு தானமும் அளித்திட, ஸ்ரீசிவயோக சரஸ்வதியின் திருவருளால் அறிவுப் பிரகாசமும், நல்ல ஞாபக சக்தியும் பெற்றிட அட்சர பலதாரணப் பித்ருக்கள் ஆசி அளிப்பர்.

இவ்வாறு தேவாதி தேவ தெய்வ மூர்த்திகளும், சித்தர்களும், மகரிஷிகளும், மஹான்களும் வழிபடும் திருத்தலமே சோழபுரச் சிவப்பதி ஆகும்.

இயற்கையில் எழும் எழிலார்ந்த சந்தோஷக் கோயில்!

நீங்கள் உட்கொள்கின்ற ஆங்கில வகை அல்லோபதி மருந்துகள் சந்தோஷத்தை மிகவும் தணித்து மங்கச் செய்கின்றன. எனவே கூடிய மட்டும் இயற்கையான சித்த, ஆயுர்வேத மூலிகை மருந்துகளையே ஏற்கப் பழகுவீர்களாக!

கண்ணால் சற்றுக் கண்டாலே போதும், இயற்கையாகவே அபரிமிதமான சந்தோஷத்தை அளிக்கக் கூடியள,சடிளை,சடி மூலிகைகள், வாசனைப் பூக்கள், ஆலய கோபுரங்கள், மழை, சந்தனம், கைக் குழந்தையின் கள்ளங் கபடமற்ற முகம், யானை, கடல், குங்குமம், மஞ்சள் போன்ற திரவியங்கள், பொருட்களை சந்தோஷ ரூபிணியான சிவபூரணி மூலமாகவே இறைவன் நிறையவே படைத்துள்ளான். உலகில் சந்தோஷ திரவியத்தை அனைத்திலும் நிரவுபவளே சோழபுரம் ஸ்ரீசிவபூரணி! வெல்லப் பூரணத்தில் சிறிது எடுத்தாலும் பூரணத்தின் இனிமை குறைவதில்லை என்ற நிதர்சன வேதாந்த உரைக்கேற்ப சந்தோஷத்தின் பூரண வடிவே ஸ்ரீசிவபூரணி! சந்தோஷக் கோயில் கொண்ட சந்தோஷியைப் பூரணமாக்கி சிவபூஷணியாய் உற்பவித்தவளே ஸ்ரீசிவபூரணி அம்பாள்!

மும்மூர்த்திகளின் ஆக்கல், காத்தல், மறைத்தல் ஆகிய மூன்று கடவுட்புலன்களில், காத்தல் பிரானாகிய திருமால் பெருமாள், யோக சயனம் பூண்டிருக்கையில், அம்பிகையே பிரபஞ்சத்தைக் காத்து ரட்சிக்கின்றாள். அப்போது, அம்பிகையே சங்கு, சக்கரம் தாங்கி, காத்தல் பதமூல தேவியாக அருள்பாலிக்கின்றாள்.

ஸ்ரீகைலாசநாதர்
சோழபுரம்

ஆவூர், கோமல், பந்தணை நல்லூர்த் தலங்களில் பசுவாய் வந்த உமையவளாம் உலக அன்னைக்குப் பாதுகாவலராய் வந்த சோதரராம் திருமாலுக்கு நன்றியாக அம்பிகை, “தாங்கள் அசுரர்களுடன் சமர் செய்கையில் தங்களுக்குத் துணையாய் அடியேன் சங்குச் சக்கரம் ஏந்திட அருள்வீர்” என வேண்டி, இவ்வகை அவதாரப் பொலிவுடன் பிறதொரு யுகத்தில் இங்கு, சோழபுரத்தில், ஸ்ரீசிவபூரணி அம்பிகையே சங்கு, சக்கரம் தாங்கி விஸ்வபாவன விஷ்ணு அம்சங்களுடன் பொலிகின்றாள்.

இவ்வாறு பராசக்தியே விஷ்ணு அம்ச பாவனையுடன் இங்கு சங்கு, சக்கரத்துடன் சிவபூரணியாய்ப் பூரித்து நிற்பதால், திருமகளாம் ஸ்ரீமகாலெட்சுமியும் தினமுமே ஸ்ரீமஹாவிஷ்ணுவிற்கான பூஜைகளை ஸ்ரீசிவபூரணிக்கு நிகழ்த்திட, இவ்வகையில் திருமகளும், கலைமகளும், சனீஸ்வரரும் தினந்தோறும் பூஜித்து அருளும் தலமுமாய்ப் பன்மடங்கு தேவாதி, தேவ தெய்வ மூர்த்திகளின் பூஜா பலன்களையும் ஒருங்கிணைத்துத் தருவதே சோழபுரம் ஆகும்.

குடமுழுக்கிற்கான இறைபணிகள் நிகழும் இத்தல மஹிமையைப் பரப்புதலும் ஓர் அற்புதத் திருப்பணியே!

பிரபஞ்சத்தில் சிவனன்றி வேள்வி ஒன்றுண்டா என்ன?

தட்சனின் திருமகளாய் தாட்சாயணியாக, பார்வதி அம்பிகை, சிவபெருமானை மணந்திட்ட காலை...

தட்சன் யாகம் ஒன்றை எழுப்பி, சிவனை விடுத்து ஏனையத் தெய்வ மூர்த்திகளை அழைத்திட...

இதனால் சீற்றமுற்று “தன் தந்தையைச் சீர்திருத்துவேன்!” எனச் சீறிச் சென்ற பார்வதியையும் தட்சன் மதித்திடாது, சிவனை மீண்டும் ஏசிட...

பார்வதி தேவி யாகசாலை அக்னியுள் புகுந்தனள். இதுவும் இறை லீலையே! சிவ ஆஹூதி இன்றி நடக்கும் எந்த யாகமும் பரிபூரணம் பெறாது. மேலும், சிவ தோஷத்திற்கு ஆளாகிய யாகத்தில் எழும் கிரணங்கள் சிவ அபராத தோஷக் கிரணங்களாய் சகல உலகங்களையும் வியாபித்து விட்டால், அது சகல கோடி அண்டங்களையும் ஜீவன்களையும் பாதிக்கும் அல்லவா! எனவே, பார்வதி தேவி, தன் ஜோதி ஸ்வரூபத்தை ஒரு சந்தன பிம்பத்தில் ஆவஹனித்து அக்னியில் புகுந்து யாகத்தைத் தூய்மையாக்கிட விழைந்தாள். சிவாத்ம ஜோதியாய் யாகாக்னியில் புகுந்தனள்.

ஸ்ரீமுருகப் பெருமான்
சோழபுரம்

தட்சனுக்கு அஞ்சி, ஹோம அக்னியை ஆக்கிய அக்னி மூர்த்தி, யாகாக்னிற்குள் புகுந்த உலக நாயகியாம் பார்வதியின் ஜோதிப் பிரகாசத்தைத் தாங்க இயலாது திகைத்திட,

பின்னர் நிகழ்ந்த ஏனைய புராண அனுபூதிகளை.. வீரபத்திரர் அவதாரம் முதல் அனைத்தையும் நீங்கள் அறிவீர்கள் தானே!

தட்சனுடைய யாகத்தில் எழுந்த யாகக் கிரணங்கள் யாவும் சிவதுவேஷம் பூண்டு... ஆங்காங்கே அசுரர்கள் அவற்றைக் கிரகித்து பூமியில் பதுக்கி அசுர குல விருத்திக்குப் பயன்படுத்திட முனைந்தனர். தெய்வ நிந்தனை சாபங்களும் அந்த அக்னியில் சேர்ந்திட...

...சிவபெருமான், அக்னியிற் புகுந்த பார்வதியின் திருமேனியைத் தன் தோளில் தாங்கிப் பிரபஞ்சமெங்கும் வலம் வந்து, தோஷமுற்றுப் பரவிய யாகக் கதிர்களைக் களைந்தார். மேலும் தோஷங்களை முழுதுமாய்க் களைந்திட, பூலோகமெங்கும் சக்தி அம்சங்கள் நிரவ வேண்டும் என்பதும் இவ்வாறு சிவசக்தி ஐக்ய தர்ம நியதியும் ஆயிற்று. பராசக்தி அம்சங்களை ஆங்காங்கே நிரவிய சிவபெருமான், நிறைவாக, திருக்கயிலாயத்தில் கயிலை லிங்கமாய் அமர்ந்தார்.

அறுபத்து நான்கு பைரவ சக்திகளின் சங்கம தளமாய் ஆன அற்புதச் சோழபுரம்!

மஹா பைரவபுரமாய் ஒரு யுகத்தில் பொலிந்ததே இன்றைய சோழபுரம்! தட்ச யாகாக்னி தோஷங்களை நிவர்த்திக்க, 64 பைரவ மூர்த்திகளின் ஓரம்சமாக உற்பவித்த ஆதிமூல ஸ்ரீபைரவேஸ்வரர், ஆதிசிவன், பல இடங்களிலும் நிரவிய சக்திப் பீட அம்சங்களைத் திரட்டித் தந்து, 64 பலி பீட பைரவ பூமியை மஹா பைரவபுரத்தில் (சோழபுரத்தில்) நிர்மாணித்துத் தந்திட்டார்.

ஸ்ரீபைரவேஸ்வரர்
சோழபுரம்

உத்தம தெய்வீக லோகங்களில்தாம் மிகவும் சக்தி வாய்ந்த 64 திசை பூஜைகள் கடைபிடிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆம்! சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வர ஆலய வளாகத்தில், ஒரு யுகத்தில், 64 திசைகளிலும் பலிபீட பூஜைகள் நிகழ்ந்து பிரம்மாண்டமான சிவாலயமாகப் பிரகாசித்தது, தற்போதோ, எவ்விதமான முறையான பூஜையுமின்றி, ஆலயமும் மிகவும் ஜீரணமாகிச் சிதிலமடைந்து இருப்பது மிகவும் வேதனை தருவதாகும்.

பைரவருக்கு, இதிலும் அனைத்து கால பைரவ மூர்த்திகளுக்கும் இதிலும் சர்வ விசேஷமாக ஆதி மூல ஈஸ்வரரான ஸ்ரீபைரவேஸ்வரருக்கு ஆலயம் அமைத்தல், பைரவ ஆலயத் திருப்பணிகளில் பங்கேற்றல் போன்றவை தலைமுறை, தலைமுறையாக அபரிமிதமான புண்ய சக்திகளைப் பெற்றுத் தந்து, சந்ததிகள் நன்கு தழைக்க உதவுவதாகும்.

தானே தனித் “துவந்த” தாரக பரபிரம்மம்

... இவ்வாறாக அன்னையை மீட்டிட, ஆதிசிவனே, பராசக்தியின் திருமேனியைத் தாங்கியமையால், பிரபஞ்சமே சிவசக்தி ஐக்ய சச்சிதானந்த சிவஜோதிப் பூரணப் பிரகாசத்தில் திளைத்தது. இச்சிவானந்த ஜோதிப் பூரணானந்தப் பிரகாசத்தைப் பூமியில் நிரவிட, கயிலாய மூர்த்தியாரே, தானே சங்கல்பம் பூண்டு 64 பைரவர்களுக்கும் ஆக்கித் தந்த பைரவப் பிலாகாசத்தில் பரபிரம்மானந்த வடிவாய், சுயம்புவாய், சிவபூரணியைத் தோற்றுவித்துத் தாமும் கைலாசநாதராய் சுயம்புவாய் மஹா பைரவபுரமாம், சோழபுரத்தில் வந்தமர்ந்தார்.

அதாவது தட்ச யாகத்திற்குப் பிறகு சிவசக்தி ரூபராய், அம்மனைத் தாங்கி உக்ர தாண்டவம் ஆடிய ஈஸ்வரன், சக்திப் பீடங்களையும், மாரியம்மன், முப்பாத்தம்மன் போன்ற உப சக்திப் பீடங்களையும் தோற்றுவித்து, உக்ரம் தணிந்து 64 பைரவ மூர்த்திகளின் வேண்டுதலை ஏற்றுப் பரமானந்த ஸ்வரூபராய்த் தம் பரமானந்த, ஈஸ்வரானந்த, பைரவானந்த நிலையிலிருந்து ஸ்ரீசிவபூரணியைத் தோற்றுவித்த தலமே இன்றைய சோழபுரம் சிவாலயம் ஆகும்.

பல மாமன்னர்களும் தம் வம்சம் தழைத்தோங்க வழிபட்ட தலமாகையால் சோழபுரமுமாகவும் ஆயிற்று! சிம்மேந்திர ஆட்சி சக்திகளை அளிக்க வல்ல திருத்தலம்!

ஸ்ரீபைரவேஸ்வரி அம்மன்
சோழபுரம்

தொன்மையான ஸ்ரீபைரவேஸ்வரர் ஆலயத்தில் தொடங்கட்டும் திருப்பணிகள்!

64 பைரவ மூர்த்திகளும் ஒன்று சேர்ந்தருளிய ஸ்ரீபைரவேஸ்வரத் தலத்தில் இது நிகழ்ந்தது. எனவே, கைலாச நாதர் ஆலயத்தை விட மிகவும் தொன்மையானதே ஸ்ரீபைரவேஸ்வரர் ஆலயமாகும். ஸ்ரீபைரவேஸ்வரி என்பது அம்பிகையின் நாமம். இந்த அம்பிகை எச்சமயத்தில் தோன்ற வேண்டுமோ, அத்தருணத்தில் சித்தர்களின் அருளால், பெருங்கருணையுடன் தோன்றுவாள்.

எங்கு தட்சனின் சிவஅபராத தோஷ யாகாக்னிக் கீற்றுகள் பதிந்தனவோ, அங்கு அசுரர்கள் நரபலி இட்டு உக்ரம் தணித்து சக்தியருளைத் திரட்டித் தவறாக, சுயநலமாகப் பிரயோகிக்க முற்பட்டனர். இச்சமயத்தில் தாம், ஆதிசங்கரர் போன்ற சிவஸ்வரூப மகான்கள் தோன்றி நரபலியைத் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அசுரர்கள் தீய குணங்கள் தணிந்து திருந்தினர். ஸ்ரீஆதிசங்கரர் வழிபட்ட தலங்களுள் சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். ஜீவன்களின் நலன்களுக்காக ஸ்ரீஆதிசங்கரரே, தம் சிஷ்யர்களுடன் ஸ்ரீகாலபைரவாஷ்டகத் துதிகளை ஓதியத் திருத்தலங்களுள் இதுவும் ஒன்று.

இதுவரை ஸ்ரீஅகஸ்திய விஜயம் போன்ற தெய்வீக இதழ்களில் வந்துள்ள சோழபுரம் ஸ்ரீசிவபூஷணி சமேத ஸ்ரீகைலாசநாதர், ஸ்ரீபைரவேஸ்வரர் ஆலய மகிமை வாசகங்களைப் பிரதி எடுத்துப் பல்லாயிரம் குடும்பங்களுக்கு அளித்து தெய்வீக விஷயங்களைப் பரப்ப உதவுதலும் ஆற்றுதற்கரிய அறப்பணியே!

நரகலோக வாழ்வு

நரக லோகம் நிச்சயமாக உண்டு! நரக லோகம் தண்டனைகளை அனுபவிப்பதற்கல்ல! பரிபூரணமாகத் திருந்திடவே நரக லோக வாழ்வு!

செய்த தவறுகளுக்கு எவராயினும், இப்பிறவியிலோ, எப்பிறவியிலோ, இப்பூமியிலோ, வேறு உலகத்திலோ நிச்சயமாகத் தண்டனைகளை அனுபவித்தே ஆக வேண்டும், எவரும் இதிலிருந்து தப்ப முடியாது.

சிறு பொய் சொன்னமைக்கும் கூடத் தீர்வு கண்டால்தான் மொத்தக் கர்மங்களும் கழியும், இதன் பிறகே பிறவியற்ற நிலை!

சத்குருவை அடைபவர்களுக்கு வினை தீர்க்கும் முறைகள் முற்றிலுமாக மாறுபடும். துவிதியைத் திதி வழிபாடு கர்ம வினைகளைத் தணிக்க மிகவும் உதவும்.

துவிதியைத் திதி, எமதர்ம மூர்த்தியாகிய தர்மராஜா வழிபாட்டிற்கு உரித்தான திதிகளுள் ஒன்றாகும். மரண பயத்தை அகற்றி, நரக லோகத்தை அடையாமல் காத்து, நல்ல உத்தம நிலைகளை அடைய உதவும் பூஜா பலன்களைத் தருவதே துவிதியைத் திதி பூஜையின் மஹிமைகளுள் ஒன்றாகும்!

பலரும் கருதுவது போல, எம தர்ம மூர்த்தி உயிரைப் பறிப்பவர் அன்று. அஷ்ட திக்கு பாலகர்கள், ஜீவபூமியின் எட்டுத் திக்குகளையும் தாங்கிக் காப்பவர்கள் தாமே! அஷ்ட திக்கு பாலகர்களில், தெற்குத் திசையில் பூமியைத் தாங்கி நின்று காக்கும் எம தர்ம மூர்த்தியா நம் உயிரைப் பறிப்பவர்? என்னே அறியாமையில் வந்த எண்ணமிது! அகற்றுங்கள் உடனே இதை!

பூமியில் அவரவர் ஆயுள் முடிந்தவுடன், அந்தந்த உடலில் உள்ள ஜீவ சக்தியை விடுவித்து, அடுத்த ஜீவ பரிபாலனத்திற்கு அளிக்கின்றவரே எம தர்ம மூர்த்தி!

இறப்பிற்குப் பின் (ஆவி, மற்றும் பிற சரீர) வாழ்நிலைகள் நிறைய உண்டு. இதில் நரக லோக வாழ்வும் ஒன்றாகும்.

நரக லோகம் உண்டு, உண்டு, உண்டு!

நரக லோகம் என்ற ஒன்று உண்டா? ஆம், நிச்சயமாக உண்டு.

நரக லோகம் என்பது தவறு செய்யாமல் இருப்பதற்காக சிருஷ்டிக்கப்பட்ட கற்பனை மண்டலமா?

நிச்சயமாக இல்லை. உண்மையாகவே, ஜீவன்களைத் திருத்திக் கரை சேர்த்திட உதவும் நரக லோகம் என்ற ஒன்று அமைந்துதான் இருக்கின்றது. வெறும் தண்டனைகளைப் பெறுவதற்காக அல்ல.!

நரக லோகம் என்பது நம் பூமியைப் போன்ற ஓர் உலகே!

சந்திர மண்டலம், சூரிய மண்டலம் போல் நரக மண்டலத்தைப் பார்க்க முடியுமா?

நிச்சயமாக, நன்றாக நம் கண்களால் பார்க்க முடியும். ஆனால், இந்த நரக மண்டலமானது, பூமி, சந்திரன் போல் குறித்த திசையில், பாதையில் நகர்வதில்லை. இது கர்ம பரிபாலன தேவதா மூர்த்திகளால் இயக்கப்பட்டு கதிப்புலப் பாதையில் செல்வதாகும். உண்மையில் இது ப்ராணாயாதி அக்னிச் சுழல் இயக்கத்தால் இயங்குவதாகும்.

ஒருவர் இறந்த பின்தான் நரகத்தை அடைகின்றாரா?

பல சமயங்களில் அப்படித்தான். இருப்பினும் பூமியில், வாழ்க்கையில் உறக்க நிலையில் பெறும் சில கனவு நிலைகள், நரக லோக அனுபவங்களைத் தரும். நடப்பு வாழ்வில் ஏற்படும் பீதி, பயங்கர மன அச்சம் போன்றவையும் நரக லோக நிழல் சம்பவங்களேயாகும்.

அனுபவிக்க வேண்டியதை, அனுபவித்தே ஆக வேண்டும் ஐயா!

நரக லோகத்தில், பெரும் அதி பயங்கர தண்டனைகள்தாம் இருக்குமா?

சில சமயங்களில் அப்படித்தான் இருப்பதாகத் தோன்றும். ஆனால், நரக லோகத்தில் தண்டனைகளே இருக்கும் என்று கருதுவதை விட, “வினைக்கேற்ற விளைவுகள் அமையும் தர்மவழி உலகம்” எனச் சொல்வதே சரியாகும். இப்படிச் சரியாகப் புரிந்து கொண்டால், “அதிபயங்கர தண்டனை” என்ற வார்த்தையே தேவையற்றதாகி விடுகின்றது. பூமி வாழ்க்கையிலேயே நன்கு திருந்தி வாழ்ந்திட இறைவன் பல வாய்ப்புகளை அளிக்கின்றான். இவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ளாததற்கு யார் பொறுப்பு? திருந்தி வாழ வாய்ப்பளித்தும் திருந்தாதோர்க்கு நிச்சயமாக நரக லோக வாழ்வே பல்லாயிரம் ஆண்டுகளுக்குமாக அமையும்.

குறிப்பாக, தெய்வத்தை நிந்திப்போர்க்கு, தற்கொலை செய்து கொள்வோர்க்கு நிச்சயமாக நரக லோக வாழ்வே கூடும் என்பதை, அறுதி இட்டுக் கூறி விடலாம்.

ஒருவர் தான் செய்த தவறுகளுக்கு அந்தத் தவறின் விளைவுகளுக்கு ஏற்ப, தக்க தண்டனைகளை அனுபவித்தாக வேண்டும் என்ற தர்மச் சட்டமானது பூமி உட்பட அனைத்து லோகங்களிலும் உண்டு. இது சரியானதும், நியாயமானதும் தானே! அப்படியானால், செய்த தவறுகளுக்கான விளைவுகளைத் தந்து திருத்தும் நரக லோகமும் நீதி, நியம, சத்தியப் பூர்வமானது தானே! எனவே நரகலோகம் வெறும் தண்டனை தரும் லோகம் என்று எப்படிச் சொல்ல முடியும்?

நரக லோகம் தண்டனைக்காக அல்ல, திருந்(த்)திடவே நரக லோகம்!

நரக லோகம் என்பது பூமிச் சிறைவாசம் போலானதா?

நரக லோகத்தின் பயன்களுள் ஒன்றே வினைகளின் விளைவுகளை அனுபவிக்கச் செய்து திருத்துவதற்காகவே! இதே கருத்தில் தான் பூமியில் சிறைச் சாலைத் தன்மையும் அமைகின்றது. ஆனால் பெரும்பாலான பூமிச் சிறைகளில் பெருத்த அமைதி இன்மையும், அதர்மமும் நிலவுவதால், அதர்மம் புரிந்தவன் விரக்தியில் மென்மேலும் கெட்டவனாகின்றான்.

எனவே நரக லோகம் தான் உண்மையிலேயே ஒரு ஜீவன் உளமாற, அதாவது மீண்டும் அத்தவறைச் செய்யா வண்ணம் கர்மச் சுமையை நீக்கித் திருந்த உதவிடும் “திருந்துதேவசாலை” !

நரக லோகம் என்றாலே ஏன் பயம் வருகிறது?

தவறுகளுக்கான தண்டனைகளை அனுபவிக்க மனிதன் மிகவும் தயங்குவதால்தான்! அதாவது, என்ன தவறுகள் செய்தாலும் அவற்றுக்கான விளைவுகளில் இருந்து தப்பிக்கவே கலியுக மனித மனம் விரைவாக வேலை செய்கின்றது. இவ்வாறு அதர்மமாகத் தப்பிக்க ஒவ்வொரு தவறிலிருந்தும், பாவ வினையில் இருந்தும் முயல்கையில், ஒன்றுக்கு மேல் ஒன்றாக மென்மேலும் தவறுகளைச் செய்து கொண்டே போகின்றான் மனிதன்.

இறப்பிற்குப் பின் எழும் கர்ம நியதி நீதி விசாரணை

இறந்த பின், ஒவ்வொரு உயிரும் சாயைச் சரீரம் என்ற இன்னொரு உடலைத் தாங்கி மேலே செல்கின்றது. ஆங்கே தர்ம தேவதைகளை ஒரு தர்மலோகச் சாலையில் நீதி விசாரணைக்காகச் சந்தித்தாக வேண்டும். இங்கு நீதி மன்றமோ, நீதிபதிகளோ, சாட்சிகளோ, வக்கீல்களோ கிடையாது! ஏனெனில் இங்கு, தன் வாழ்வின் அனைத்து உண்மைகளும், சம்பவங்களும் படம் பிடித்தது போல் சத்தியப் பூர்வமாகத் தானாகவே தெரிய வரும். உலகில் இறப்போர் அனைவருக்கும் இந்த “இறந்த பின் எழும் நீதி விசாரணை மேடை” நிகழும் இடமே விரஜா நதித் தீரத்தில்தான்!

பூவுலக வாழ்வில் அளவுக்கு மீறிப் பாவ வினைகளைச் சேர்த்தவர்கள் இந்த நீதி மன்ற நிலையைக் கூட அடைய முடியாது. இவர்கள் கொடுமையான ஆவி வடிவில் பல்லாண்டுகளுக்குப் பயங்கரமான வேதனைகளை அனுபவிப்பர்.

இந்த இந்தத் தவறுகளுக்கு இந்த இந்தத் தண்டனைகள்,

          -இவற்றுள் சில பூலோகப் பிறவிகளிலும்,

          -சிலவற்றை சாயைச் சரீரத்திலும்,

          -சிலவற்றை நரக லோகத்திலும் அனுபவிக்க வேண்டும்.

-என்ற வகையில் பல தர்ம நியதிகள் உண்டு. இவை யாவும் விரஜா நதித் தீர வட்டப் பாறையில், சத்தியப் படிகளில், சாயைச் சரீரத்திற்குத் தானாகவே புலப்படும். இங்கு புலனாகும் தர்மச் சட்ட முறைப்படியே இறந்த பின் அனைவரும் பெறும் சாயைச் சரீரத்தில் கிட்டும் தர்மபரிபாலன சம்பவமாகும். இதன்படியே அனைவரும் நடந்தாக வேண்டும். எனவே நரக லோகம் என்பது எவரும் பிடித்துத் தள்ளி அனுபவிப்பது அல்ல! இறந்த பின் சாயைச் சரீரத்தில் தானே தன் தீவினைகளை நியாயமாக உணர்ந்து இவற்றுக்கான நரக லோக தண்டனைகளைத் தானே முன் வந்து அனுபவிப்பதாகவும் அமைவதுண்டு.

அனைவருக்கும் நரக லோக உணர்வுகள் வரும்!

ஸ்ரீபவிஸ்யேஸ்வர லிங்க மூர்த்தி
திருப்புகலூர் (எதிர்காலம்)

நரக லோக சம்பவத்திற்கு, ஓர் உதாரணம் ...?

பூமியில் வாழ்க்கையில், பிறர் சொத்துக்களை ஏமாற்றி ஒருவர் அனுபவிக்கின்றார் என்றால்...

இதற்கான தண்டனைகள் பூமியிலேயே சிறிது தொடங்கி விடும். ஆனால், அவர் செய்துள்ள சில நற்காரியப் புண்யசக்திகள், அவர் திருந்திடுவதற்காக தண்டனை காலத்தை சற்று தாமதித்து முதலில் சற்று வாய்ப்புகளையும் தரும்.

ஆனால், இதனைப் பலரும், “நாம் தப்புச் செய்தாலும், தண்டனை தராது, கடவுள் மன்னித்து விட்டார். நாம் தவறுகளில் இருந்து தப்பித்து விட்டோம்!” என்று எண்ணி விடுகின்றனர். ஆனால் இறக்கும் முன்னர் ஒவ்வொருவருக்கும் தம் தவறுகளுக்கான நரக லோக உணர்வுகள் அளிக்கப்படுகின்றன. இதை அறிந்த பின்னராவது திருந்தி வாழ முயற்சிக்க வேண்டும்.

தானே அடைவதே நரக லோக வாழ்வு!

ஒருவர் இறந்த பின், விரஜா நதி என்ற புனித நதி தீர்த்தத்தால் தெளிக்கப்படும் போதுதான் அல்லது இதில் மூழ்கி எழும் போதுதான் அவர் செய்த பாவங்கள் தானாகவே புலனாகும். இவற்றிலிருந்து தப்பிக்க முடியாது என்ற நிலை வந்தவுடன், அவரே நரக லோகத்தில் சத்தியப் பூர்வமாக தண்டனைகளை ஏற்கத் தயாராவார். பிறகு மீண்டும் பிறப்பு!

ஆனால் பூமியில் அவரவர் தான் நரக லோகத்தில் செய்த சங்கல்பங்களை மறந்து விடுகின்றனர். இதுவும் இறை லீலையே! ஏனெனில் செய்த பாவங்கள் நினைவுக்கு வந்து கொண்டே இருந்தால் மனம் சாந்தமாக இராது.

நரக லோக அம்சங்கள் எப்படி இருக்கும்?

ஸ்ரீபூதேஸ்வர லிங்க மூர்த்தி
திருப்புகலூர் (கடந்தகாலம்)

ஒருவர் இறந்த பின், மனித உடல் போல ஒரு சாயைச் சரீர உடல் தரப்படும் என நாமறிவோம் அல்லவா! ஒரு பெரிய எண்ணெய்க் கொப்பறையில், இருபதடி ஆழத்திற்கு எண்ணெய் கொதிக்கும். அதற்குள் அவர் நுழைதல் வேண்டும். ஆனால், அந்தக் கொப்பளிக்கும் எண்ணெயில் கூட, உடலில் இருந்து உயிர் பிரியாது, மாறாக, உடல் அனலால் கொதிக்கும், சுடும் எண்ணெய் உடலை வருத்தும், கண்கள், காதுகள் பொசுங்கும். வயிறு எரியும். இவ்வாறு நாட்கணக்கில், மாதக் கணக்கில் கொதிக்கும் எண்ணெயில் சாயைச் சரீர உடலில் வாடி வதங்கி ஆக வேண்டும்.

மேலும் எண்ணெய் கொதிக்கும் கொப்பறைக்குள் பன்னெடுங்காலம் இவ்வாறு அவதியுற்று இருக்கையில், அவர் எந்தச் சொத்தை அதர்ம்மாகப் பறித்தாரோ அதன் விளைவுகளால் அவருடைய சந்ததியினரே அதிபயங்கரமாக பூமியில் அல்லல்படுவதையும் கண்ணால் கண்டு, மேலும் துயரமடைய வேண்டிய நிர்பந்தமும் ஏற்படும்.

நரக லோகத்தை அடையாதிருக்க

இவ்வாறு, இங்கு நாம் காணும் இந்த நரக லோக அம்சமும் ஓர் அணுத் துளியே! ஏனைய நரக லோகங்களும் இருப்பது உண்மையே, தவறு செய்தவர்கள் எவரும் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். இப்பிறவிக்குள் தம் தவறுகளைத் திருத்திக் கொண்டு, தம் தவறுகளால் பாதிப்படைந்தோருக்குத் தக்க நிவாரணங்கள் அளித்து, முழுமையாகத் திருந்தி வாழ்ந்தால்தான், நரக லோக வேதனைகளைத் தணிக்க இயலும் தவிர்க்கவும் முடியும்.

வந்த வினை, வருவினை, வந்திருக்கும் வினை என மூன்று வகையான வினைகளையும் தீர்க்க வல்ல, நிகழ் காலம், கடந்த காலம், எதிர்காலம் ஆகிய முக்கால சக்திகளையும் உணர்விக்கும் பூத லிங்கம், பவிஷ்ய லிங்கம், வர்தமான லிங்க மூர்த்திகளை கும்பகோணம் நன்னிலம் அருகே உள்ள திருப்புகலூர் ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயத்தில் தரிசித்திடலாம்.

வெளியில் சொல்ல முடியாதவாறு செய்த பாவ வினைகளுக்குத் தக்க பரிகாரம் பெறவும் இத்தலங்களில் நீராடி, பூஜித்து வர, விரஜா நதி பாவனா ஸ்நான சக்திகளை ஓரளவேனும் பெற்றுத் திருந்தி வாழ, பாவ சம்ஸ்காரம் பெற்றிட, பாவங்களை நசித்திடப் பெரிதும் உதவும். இங்கு பிறந்த நட்சத்திர நாள், சதய நட்சத்திர நாட்களில் பூஜித்து 13 வகையான உணவு வகைகளைத் தானமாக அளிக்க வேண்டும். எல்லாவற்றையும் விட, தக்க சற்குருவை அடையும் பாக்யம் பெற்றிடில் அனைத்திற்கும் தீர்வுகளை அடையும் மார்கமும் பெற வழி பிறக்கும். ஏனெனில் சற்குரு பரிபாலனத்தில் வினைகளைக் களையும் தேவ இலக்கணங்களே முற்றிலுமாக மாறுபடும். குருவருளின்றி நிச்சயமாகத் திருவருளை அடைய இயலாது.

சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர்

குரு பார்வையில் கோடி நன்மைகள்

அஷ்டமா சித்திகளைப் பலவிதங்களில் பெற்றிடலாம். சித்திகளை ஓரளவு பெற்ற பின், சுயநலம் உண்டாயின், அவற்றைத் தவறாகப் பயன்படுத்தும் எண்ணம் வந்து விட்டால், அதிபயங்கர பாவ விளைவுகளே ஏற்படும். சித்திகளின் (தவறான பிரயோக) விளைவுகளும் அவரவர் மேலேயே பாய்ந்து விடும்.

எனவே, தக்க குரு மூலம் அடைகின்ற பைரவ உபாசனையில் பெறும் (அஷ்டாஷ்டம் மற்றும் அஷ்டமா) சித்திகள் தாம், மனச் சலனமின்றி நல்வகையில் பயன்படும். 16, 32, 64, 128, 256 என்ற வகையிலும் பைரவச் சித்சக்திகள் உண்டு. இவைதாம் பஞ்ச ஜீவ புலன்களை நன்முறையில் இயக்கும் தர்ம சக்திகளை தார்மீகமாக அளிக்கின்றன.

பைரவ உபாசகர்களின் பைரவக் கயிலாயம் இதுவே!

“பைரவ உபாசனை” என்பது மிக மிகக் கடினமானது. ஆனால், பைரவ உபாசனையில் தாம் அனைத்து விதமான முக்தி, மோட்ச, பரபிரம்ம நிலைகள் கிட்டுகின்றன. பைரவ மகரிஷி தினந்தோறும் தூல, சூக்கும, காரண, காரிய வடிவுகளில் வழிபடும் தலமே சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர் ஆலயமாகும். காரண மஹரிஷியும், சுதபுத மகரிஷியும் ஆயிரத்தெட்டு அண்டங்களைக் கடந்து வந்து அஷ்டமித் திதியில் குளிகை நேரந்தோறும் இங்கு சூக்கும ரீதியாகப் பூஜிக்கின்றனர்.

“மிகவும் சிதிலமடைந்த கோயில் ஆயிற்றே, பைரவ மகரிஷியும், காரண மஹரிஷியும், சுதபுத மகரிஷியும் கூடி வருவதென்றால், அவர்களுடைய பரிவாரங்களே பல்லாயிரக் கணக்கான மஹரிஷிகளாக நிறைந்து இருப்பார்களே! அவர்கள் எவ்வாறு இங்கு சிதிலமடைந்த ஆலயத்தில் வந்து வழிபடுவர்?” என்று எண்ணிடலாம். ஆனால், பல கோடி யுகங்களுமாக, அவர்கள் தினந்தோறும் அண்ட சராசரங்களையும் கடந்து வந்து இங்கு மஹாபைரவபுரமான சோழபுரத்தில் பூஜிக்கின்ற போது, எந்த யுகத்தில் பிரம்மாண்டமான ஆலயமாக, மிகப் பெரிய வளாகங்களுடன், பிரகாரங்களுடன் பொலிவுடன் துலங்கியதோ, அதே வடிவில் இவ்வாலயம் அவர்களுக்கு இப்போதும், எப்போதும் நன்கு காட்சி தரும். ஆம், பைரவ உபாசகர்களின் பைரவக் கயிலாயம் சோழபுரம் ஸ்ரீமஹாபைரவேஸ்வரர் வளாகமே ஆகும்!

தேவ தேவர்களுக்கும், சித்தர்கள், மாமுனிகள், மஹரிஷிகள், யோகியருக்கும் வித விதமான சிவப்ரகாசத்துடன் பல்வகைச் சிவலிங்க தரிசனம் கிட்டிடினும், யாவரும் சாதாரண மானுட வடிவில் சிவலிங்க தரிசனம் பெறுவதையே நாடுகின்றனர். காரணம் பெறுதற்கரிய மானுடப் பிறவியில் தாம் இறைப் பேரருளை நன்கு துய்க்க முடியும் என்பதால் தான்!

அரிதிலும் அரிதாகிய பைரவ சக்திகள் எண்ணற்றவை உண்டெனினும், இவற்றில் 96 வகைகள் இப்பூவுலகிற்கு உரித்தானவையாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இவற்றில் எட்டு மனிதர்களுக்கும், பிறிதொரு எட்டு வகைகள் ஏனைய ஜீவன்களுக்கும், நான்கு, இந்த எட்டிலும் ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் நான்கு, நான்கு பைரவ சக்திகள் உரித்தானவை ஆகும். பைரவ பூஜாபலன்கள் அனைத்து வகையான தோஷங்களையும் போக்கும்.

குடும்பத்தின் சொத்து, வீடு, நிலம் பிறரிடம் சிக்குண்டு அவதியுறுகின்ற குடும்பங்கள் பல உண்டு. உறவினர்கள், நெருங்கிப் பழகியவர்களின் துரோகத்தால் பல்வகைச் செல்வங்களையும் இழந்து அவதியுறும்போது, பிறருடைய துரோகச் செயல்களை எண்ணி எண்ணியே வேதனை அடையாமல், தன் பூர்வ ஜன்ம வினைகளே இதற்கு மூல காரணம் என உணர்தல் வேண்டும்.

ஸ்ரீபைரவேஸ்வரர் வழிபாடு!

எனவே, எது எது எந்த அதர்மச் செயலுக்கு மூல காரணமோ, அந்தத் தீவினை களையப் பெற்றால்தான், தான் (ஏமாந்து) இழந்த நிலபுல, பண, திரவியச் சொத்துகள் ஓரளவேனும் மீள வழி பிறக்கும். இவ்வாறு ஏமாறுதலால் சொத்துக்களை இழந்து அவதிப்படுவோர் சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர் ஆலயத்தில் தினந்தோறும் குளிகை நேரத்தில், அல்லது சனி, அஷ்டமி, திருவாதிரை நாட்களில் 64 பைரவ தூபம் ஏற்றி வழிபடுதல் வேண்டும். முழு முந்திரி கலந்த பாயசம் படைத்து 64 அகல் விளக்குத் தீபங்களை ஏற்றி வழிபட்டு வருதல் வேண்டும். தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமித் திதி. சனிக் கிழமை வழிபாடு, சனிக்கிழமை குளிகை நேர வழிபாடு பெரிதும் உதவும்.

பைரவ பூஜைக்கு உரிய உத்தமக் குளிகை நேரம்

பிரபஞ்சத்தின் அனைத்து பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் மூல மஹாபைரவப் பீடமான சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர் ஆலயம் பண்டைய யுகங்களில் பொலிந்தது. தற்போது சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடுகள் எதுவும் நடைபெறவில்லை. பக்த கோடிகள் முனைந்து தினசரி வழிபாடு நடைபெற ஆவன ஆற்றல் வேண்டும்.

பொதுவாக, பைரவருக்கு குளிகை நேர வழிபாடு மிகவும் சிறப்புடையது. முதலில் வாரத்தின்  ஏழு நாட்களுக்குமான குளிகை நேரத்தை நன்கு அறிந்து கொள்ளுங்கள். சூரிய உதய நேரத்தை ஒட்டி குளிகை நேரம் சற்றே மாறுபடும்.

குளிகை நேரங்கள்

சனிக் கிழமை – காலை  6 – 7.30 மணி – ஸ்ரீமஹா பைரவர் பூஜை

வெள்ளிக்கிழமை –காலை 7.30 – 9 மணி - ஸ்ரீமஹா ஸ்வர்ணாகர்ஷண பைரவர் பூஜை

வியாழக்கிழமை – காலை 9-10.30 மணி – ஸ்ரீமஹா காலபைரவர் பூஜை

புதன் கிழமை – காலை 10.30 – 12 மணி – ஸ்ரீமஹா கல்பாந்த பைரவர் பூஜை

செவ்வாய்க்கிழமை – மதியம் 12-1.30 மணி –ஸ்ரீமஹா சண்ட பைரவர் பூஜை

திங்கள் கிழமை – மதியம் 1.30 -3 மணி – ஸ்ரீமஹா வடுக பைரவர் பூஜை

ஞாயிற்றுக் கிழமை – மாலை 3-4.30 மணி – ஸ்ரீமஹா கபால பைரவர் பூஜை

ஒரு நாளைக்குப் பகற் பொழுதை எட்டு முகூர்த்தங்களாகப் பகுத்து, ஒவ்வொரு முகூர்த்த நேரத்திற்கும் ஒரு பைரவராக பாவனை செய்து அபிஷேக ஆராதனைகளை ஆற்றி இவ்வாறாக 64 முகூர்த்த கால பூஜைகள் அஷ்டமித் திதியை ஒட்டி முன்னும் பின்னுமாக நடைபெற்ற பிரசித்தி பெற்ற சோழபுரம் தலமானது தற்போது ஒரு வேளைப் பூஜையுமின்றிச் சிதிலமடைந்துள்ளது. பக்த கோடிகள் முன் வந்து, முன்னின்று இவ்வாலயத்தின் சிறப்பு மிக்க குளிகை காலை பைரவ பூஜை மஹிமை மற்றும் தெய்வீகப் பாரம்பரியத்தினை நிலை நாட்டிடத் தக்க இறைப் பணிகளை உடனடியாக ஆற்றிட வேண்டும்.

ஸ்ரீபஞ்சுமிட்டாய் சித்தர்

பௌர்ணமி கிரிவலத்தைப் போன்று மாத சிவராத்திரி அருணாசல கிரிவலமும் சிறப்புடையதே! அபரிமிதமான நல்வரங்களைப் பொழிவதே! திருஅண்ணாமலை மாத சிவராத்திரி கிரிவலம்!

காலத்தைக் கடந்த திருஅண்ணாமலையில், நாமறியாத வகையில், மானுட சரீரத்தில் வாழ்ந்து சர்வ லோகங்களுக்கும் அருட்பணி ஆற்றிய சித்புருஷர்கள் ஏராளம், ஏராளம்! இவ்வரிய தொடர் மூலம், பல அற்புதமான திருஅண்ணாமலை வாழ் சித்தர்களை நீங்கள் அறிந்திட, உங்களைப் பல நூற்றாண்டுக்கு முன்னான, சித்தர்களின் இறைப் பாசறையான அருணாசலப் புனித பூமிக்கு இட்டுச் செல்கின்றோம்!

இத்தொடரில் இதுவரையில் ஸ்ரீகாரைக்கால் சித்தர், ஸ்ரீஞாயிற்றம்பலச் சித்தர், ஸ்ரீகாளான் குடைச் சித்தர், ஸ்ரீநீர் ஆரை விசிறிச் சித்தர், ஸ்ரீபன்னீர் பழச் சித்தர் ஆகியோருடன் தாரண வருட புரட்டாசி மாத சிவராத்திரி அருணாசல கிரிவலத்தில் நம்மை அருள்விக்க வரும் பஞ்சுமிட்டாய்ச் சித்தர் வரை அனைவரும், வாலகில்லிய மஹரிஷிகளைப் போல் கட்டை விரல் அளவேயுள்ள சித்தர்கள் ஆவர்.

தினமும் சூரிய மூர்த்தியின் ஒற்றைச் சக்கர, ஏழு குதிரைகளைப் பூட்டிய தேரின் முன் வேதங்களை ஓதி வரும் கட்டை விரல் அளவேயுள்ள வாலகில்லிய மகரிஷிகளுக்கும் மூத்தவர்களே இவர்கள் யாவரும் ஆவர். அனைத்துச் சித்தர்களுமே பல்வகைக் காரணப் பெயர்களைப் பூண்டு வருகின்றார்கள் என்பது நாம் அறிந்ததே.

இங்கு நாம் காணும் பஞ்சு மிட்டாய்ச் சித்தர், அஷ்டமா சித்திகள் எனப்படும் பஞ்சு போல் மெல்லியது ஆதல், பாறாங் கல்லாய்ப் பெரும் எடையாதல், ஒரு செவி புகுந்து மறு செவி வருதல், விண்ணில் பெருத்து பெருவுரு ஆதல் என்பதாகிய அஷ்டமா சித்திகளையும் கடந்து, 80000 எண் கோடிகளுள் வல்லவராகியும், இவர்கள் உருவமே ஒரு கட்டை விரல் அளவுடையதே!

ஸ்ரீபஞ்சுமிட்டாய் சித்தரின்
அருணைவலம்

தேவ பூரணங்களை அளிக்கும் பஞ்சுமிட்டாய்

எனினும், ஆறடி கொன்றைக் கொம்பின் மேற் செருகிய குச்சிகளில் பஞ்சு மிட்டாய்களைத் தாங்கி அருணாசல கிரிவலம் வருவார். ஒவ்வொரு பஞ்சு மிட்டாயும், சித்தரின் அருட்பெருந்தவத்தில் முகிழ்த்தமையால், பாற்கடல் அமுதமாய் இனிதே உவக்கும்.

இவர் தாங்கி வரும் ஒவ்வொரு பஞ்சு மிட்டாயும் தெவிட்டாத அமிர்தச் சுவையுடன், நோய் நிவாரண சக்திகளையும் பூண்டு, உள்ளத்தைப் புனிதமாக்கவும், தேவ பூரணங்களையும் அளிக்க வல்லதாகும். பஞ்சுமிட்டாய்ச் சித்தர் பூவுலகிற்கு வந்த காரணங்களுள் ஒன்றே, கலியுக மனித மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஆசைப் படலத்தைச் சுத்திகரிப்பதாகும்.

ஒவ்வொருவருக்கும் சிறு வயதிலிருந்தே சின்னச் சின்ன ஆசைகள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். உண்மையில், பஞ்சுமிட்டாய் என்றாலே 60 வயதினருக்கும் நாக்கில் ஜலம் ஊறும் தானே! ஆசையை நிறைவேற்றுதல், ஆசையைத் தணித்தல், ஆசையை வேரோடு அறுத்தல் என்பன வெவ்வேறானவை! ஆசையைத் தணித்தலும், ஆசையை வேரோடு அறுத்தலும் மிகவும் கடினமானவையே சிறு வயதில் இருந்தே உள்ளூர ஊறும் ஆசை, மனதில் ஒரு மூலையில், உயர் சுவர்ச் செடியாய் வேர் விட்டு வளர்ந்து கொண்டிருக்கும்.

பஞ்சு மிட்டாய் ஆசையை ஒருமுறை மட்டும் தின்றா தீர்க்க முடியும்? தின்னத் தின்ன ஊறும் ஆசை அல்லவா! பால பருவத்தில் இருந்து தொடரும் இத்தகைய சிறு, சிறு ஆசைகளை, எல்லாம் ஆசை எண்ண வினைகளின் வடிவாக சித்திரகுப்தன் தனிக் கணக்காக எழுகின்றார். இதற்கு ஏக்க நிதானக் கணக்கு என்று பெயர்.

ஆசைகளுக்கு வயது வரம்பு கிடையாது அல்லவா! தற்போதைய கலியுகத்தில் 80, 85 வயதில் கூட பூஜை வேளைகளில் டீ.வியில், சினிமா, டிராமா, கிரிக்கெட் மேட்ச் பார்க்கின்ற ஆசையானது பெருகித்தானே கிடக்கின்றது. பஞ்சுமிட்டாய்ச் சித்தர் ஆறு வயது முதல் அறுபதிற்கும் மேலான வயதிலும் அந்தந்தப் பருவத்தில் சேர்ந்து தேங்கி மலையாய், பெருகிக் கிடக்கும் ஆசை மலையை, நாக்கில் பஞ்சு மிட்டாய் கரைவதைப் போல கரைத்துத் தரவல்லவர். பெரிய பெரிய புனிதமான உத்தமத் துறவிகள் கூட இவரை வணங்கிடும் போது அவர்கள் மனதில், அவர்களையும் அறியாது ஒரு ஓரத்தில் மறைந்து கிடக்கும் ஆசையை மறைமுகமாகவோ, நேரிடையாகவோ, எடுத்துரைத்து, அதனை அந்த விநாடியே களைந்திட நல்வழிகளை அருளியவர்.

இவ்வாறாக, கலியுகத்தில் உத்தமத் துறவி ஒருவருக்கு, பஞ்சு மிட்டாய்ச் சித்தர், ஒரு காவி ஆடையைக் கொடுத்திட்டு, அடுத்த விநாடி உடனேயே துறவியிடம் கொடுத்த காவி வேட்டியை வாங்கி, அதன் ஓரக் கரையைக் கிழித்து மீண்டும் அவரிடமே கொடுத்து விட்டார். இச்சிறு சம்பவம் மூலம் காவி வேட்டியின் பெரிய கரை மேல் அவர் கொண்டிருந்த சிறு பற்றையும், சற்றே காவித் துணி கிழிந்திருந்தால் கூட அதை விடுத்து, வேறு காவித் துணியை அணியும் பழக்கத்தையும் குறிப்பாக, மௌனமாகச் சுட்டிக் காட்டினார்.

இவ்வாறு புனிதமான துறவிகளையும் மேன்மேலும் உத்தம நிலையை அடையச் செய்பவரே பஞ்சு மிட்டாய்ச் சித்தர். இவர்தாம் மனித சமுதாயத்தில் உலகெங்கும் 55 வயது முதல் 60 வயதிற்குள் அனைத்து விதமான ஆசைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டிய உத்தம மனித இலக்கணத்தை வகுத்துத் தந்தார்.

பஞ்சுமிட்டாயும் பாக்கியும்

பஞ்சுமிட்டாய்ச் சித்தர், பஞ்சு மிட்டாய்கள் நிரம்பிய மரத் தட்டிகள் தாங்கிய கொன்றைக் கொம்புக் குச்சிகளைத் தாங்கி, கிரிவலம் வரும் போது சிலர் கண்களில் படுவதுண்டு., இவரை அடையாளம் கண்டு இவரருகே வந்து பஞ்சு மிட்டாய்ப் பிரசாதம் கேட்பார்கள்.

“உனக்கு இது பாக்கி இல்லை! உனக்கு இதைப் பார்ப்பதற்கு மட்டுமே பாக்கி! இந்தா ஒரு முழு பஞ்சு மிட்டாய்! ஆனால் இதில் நீ ஒரு துளியைக் கூட வாயில் போடாது, உங்கள் ஊர் ஏழை மக்களிடம் பிரசாதமாகப் பலருக்கும் கொடுத்து விடு, இதனை நீ மட்டும் இன்று கிரிவலம் வருவதற்குள் தின்று விட வேண்டும். இதனை கிரிவலப் பாதையில் வருகின்ற குழந்தைகளுக்குக் கொடுத்து விட்டு நீயும் கொஞ்சம் தின்னலாம்!” என்று விதவிதமான அன்புக் கட்டளைகளை அளிப்பார்!” ஆனால் எவரிடம் எதைச் சொல்வார் என்ற அருட்கட்டளையை எவராலும் அறுதி இட்டுக் கூற இயலாது.

“பஞ்சுமிட்டாயைத் தின்னக் கூடாது!” என்ற அவருடைய அருட் கட்டளையை மீறித் தின்றால், வாயில் உலகக் கசப்புடன் பஞ்சு மிட்டாய் மிதக்கும். தொண்டைக்குள் ஒரு சிறிதும் செல்லாது! மேலும் வாங்கியவர் கையில் மிஞ்சி இருக்கும் பஞ்சுமிட்டாயும் மறைந்து விடும். இவ்வாறு பஞ்சுமிட்டாய்களைக் கொண்டு இவர் ஆற்றிய லீலைகள் ஏராளம், ஏராளம்!

அவரவர் தமக்குரிய மனிதப் பிறவிக்குள் ஆசைகளைக் களைதல் வேண்டும் என்று வலியுறுத்துவார். ஆசைகளைப் பதம் பிரித்துக் காட்டுவார். அன்புடன் வழி காட்டுவார்.

காலக் கோடிகளைக் கடந்தவர்

உண்மையிலேயே தம்மிடம் மனம் திறந்து பேசியவர்களின் ஆசையை நீக்குவதற்கு அருள் புரிந்தவர். ஒவ்வொரு உத்தராயண, தட்சிணாயனப் புண்ய காலத்திலும் நீக்கப்பட வேண்டிய ஆசைகளின் வரைமுறைகள் உண்டு. தம் அருணாசல கிரிவலத்தில் 110 கோடி மக்களின் ஆசைகளைத் தீர்த்தவர் எனில் இவருடைய ஆயுட் காலத்தை எவராலேனும் எடை போட முடியுமா?

முறையற்ற ஆசைகளை நீக்குவதற்கும், வீடு வாங்குதல் போன்ற முறையான ஆசைகளை நிறைவேற்றிடவும் இவரை நாடி வந்தவர்கள் உண்டு. இவ்வாறு நல்ல குணங்களுடன் வருகின்றவர்களிடம் ஒரு சிறிது பஞ்சு மிட்டாய் அளித்து தின்னச் செய்து நாக்கை நீட்டச் சொல்லி அதன் சிகப்பு நிறத்தைப் பார்த்து, “ஆசைக் கறை இன்னமும் நீங்கவில்லை! ஆசைக் கறை நீங்கிட ஆறு வருட காலம் பிடிக்கும்! ஒரு வருடத்தில் 5000 பஞ்சு மிட்டாய்களை ஏழைகளுக்கு தானமாகக் கொடுத்திட துர்ஆசைகள் நீங்கும்!” என்று கூறிடுவார். சிலருக்கோ, “சித்ர குப்தரின் கணக்குப்படியும் அவர் வைத்திருக்கும் “ஏக்க நிதான ஏட்டின் படியும்” உனக்கு 397 பஞ்சுமிட்டாய்கள் பாக்கி!” என்ற கணக்கையும் தந்திடுவார். இவ்வாறு பாமர மக்களுக்கும், நல்ல அறிவாளிகளுக்கும் பல வகைகளிலும் எளிமையாகப் புரியும் படியாகப் பலவகைகளில் பரிகாரம் தந்தவர்.

அக்காலத்தில் ஒவ்வொரு மாத சிவராத்திரியிலும் குறைந்தது 8 லட்சம் பேர் கிரிவலம் வருவார்கள். ஆனால் 10 அல்லது 15 பேருக்கு மட்டுமே இவரின் தரிசனம் கிட்டும். வாழ்க்கையில் பல தெய்வீக நிலைகளை அடைந்தவர்களும், சுத்தமான பக்தி பூண்டவர்களும், ஒன்றுமறியாப் பாமரர்களும், யாவரும் பாக்யம் கூடிடின் இவரைத் தரிசிக்க முடியும். இவரே வலியச் சென்று எத்தனையோ பேர்களுக்கு, கிராம ஏழைகளுக்கு அருள்மழை பொழிந்துள்ளார்.

இவரைத் தரிசித்தவர்கள் தம் வாழ்வில் ஏற்பட்டுள்ள பெருத்த மாறுபாடுகளைக் கண்டு மகிழ்ந்தனர். “கர்மம் தொலைந்ததே!” என்றும், “இமயமலை போல் பெருகிய துன்பம் எளிதில் கரைந்ததே!” என்றும் வாய் திறந்து மனதாரக் கூறிச் சென்றவர்களும் உண்டு. மாத சிவராத்திரி கிரிவலத்தில் இவர் எப்போது வருவார், எங்கு காட்சி அளிப்பார் என்று எவராலும் கூற இயலாது. இத்தகைய சித்தர்களுக்காக ஒவ்வொரு முறையும் அருணாசல கிரிவலம் வருகையில் அவர்களுக்காக ஆங்காங்கே நன்னீரால் அர்க்யம் அளித்து வாருங்கள்!

பல்லாண்டுகளுக்குப் பிறகு, பக்தி உடையோரும், குருவருள் நிறைந்தோறும் ஆழ்ந்த நம்பிக்கையுடன் தரிசிக்கும் வண்ணம் கட்டை விரல் அளவே உடைய பஞ்சுமிட்டாய்ச் சித்தர் கிரிவலம் வரும் மாத சிவராத்திரித் திருநாள் இது!

திருஅண்ணாமலை கிரிவலத்தில் உணவுக் கட்டுப்பாடு நியதிகள் கிடையாது. எனவே தாராளமாக நன்கு உண்டும், இடையில் உண்டவாறும் கிரிவலம் வந்திடலாம். எனவே கிரிவலத்தில் பஞ்சு மிட்டாயைத் தின்பதில் தவறு கிடையாது. உண்ணா விரதத்தோடு வருவோர்க்கு விசேஷமான கூடுதல் பலன்கள் அமையும்.

இயன்றால் பஞ்சு மிட்டாய் செய்பவர்களை திருஅண்ணாமலைக்கு வரவழைத்து, நிறைய பஞ்சு மிட்டாய் செய்ய வைத்து தானம் செய்வதும் இனிப்புகளைத் தயாரிக்கும் ஏழைக் குடும்பங்களை வாழ வைத்த பலன்களும் நிறைந்து வரும். பஞ்சு மிட்டாய் என்பதில் நிறைய தெய்வீகத் தத்துவார்த்தங்கள் அடங்கி உள்ளன. உண்மையில், தற்போதைய மின் மோட்டார் முறையில் அல்லாது பழைய முறையிலான கையால் சுழற்றும் உருளை எந்திரம் மூலமாகப் பெறப்படும் பஞ்சு மிட்டாயில் ஆகாச அக்னிக் கூட்டு சக்திகள் நிறைந்துள்ளன.

பஞ்சில் பழுக்கும் பஞ்சபூத சக்தி

பஞ்சு மிட்டாய் புரந்தராக்னி, வாயுதூள அக்னி, ஆகாசவரி வர அக்னி போன்ற பல அரிய அக்னி சக்திகளைக் கொண்டது. பஞ்சு போல் மெலிதாக இருப்பதால் பஞ்சு மிட்டாய் எனப் பெயர் வந்தாலும், இதில் உள்ள சர்க்கரைப் பாகு, பஞ்ச பூத சக்திகளால் பகுந்து, நன்கு பகுக்கப் பெற்று வருவதால், பண்டைய காலக் காற்று எந்திரம் மூலமாக வரும் பஞ்சு மிட்டாய் ஆசைகளைப் பிரித்து, மனதை மெலிதாக்கி அரிய மனோ வள சக்திகளைத் தருவதாகும். அஷ்டமா சக்திப் பயிற்சிகளில் சந்திர ஹோரை நேரத்தில் பஞ்சு மிட்டாய் உண்பதும் ஒரு யோகத் திறனாகும். வாயில் நன்கு கரைந்து உமிழ் நீருடன் வயிற்றுக்குள் செலுத்தப்படும் உணவுக்கு அதியற்புத ஜீரணக் கோள சக்திகள் உண்டு. இதனால் நாக்கில் உள்ள ஆயிரக்கணக்கான மொட்டுகள் நன்கு ஆன்ம வளம் பெறுகின்றன.

பஞ்சு மிட்டாயின் குச்சியைக் கூட அக்காலத்தில் மூலிகைக் குச்சியாகவே அமைத்தமையால் குச்சியையும் இது மூலிகை வகையிலான குர மூங்கில் போன்ற மூலிகைக் குச்சியாக இருப்பின் குச்சியைக் கடித்து மென்று துப்புதலும் நல்ல நாக்கு வள சக்தியைத் தருவதாகும்.

குல்கந்து எனப்படும் ரோஜா வகை திரவியம் இயற்கை மணம், குணம், நிறம் அமைந்ததாகவும் விளங்குகின்றது. இந்த நறுமணத்துடன் அக்காலத்தில் முகம் போன்று வட்ட வடிவில், பெரிய அளவில் பஞ்சு மிட்டாய் செய்து அளிப்பார்கள். சிறிதில் பெரிதாய், வாயில் கரைதலால், பெரிதும் சிறிதாய் ஆகும் அஷ்டமாசித்தி தன்மைகளைக் குறிப்பதே பஞ்சு மிட்டாய்.

நெருப்பில் ஆக்கியவுடன் உண்ணும் எந்தப் பொருளுக்கும் உண்மையில் மகத்தான அக்னி சக்திகள் உண்டு. இதைப் போலவே உள்ளதான பஞ்சு மிட்டாயில் படியும் உஷ்ணம் தணியும் முன்னர் சில நிமிடங்களுக்குள் உண்ணப்படுவதால் “ஆக்க இயக்கம் தேக்கமுறாது பூக்கும் யோகப் புஷ்பமாய்” பஞ்சு மிட்டாய் மிளிர்கின்றது. பார்த்தாலே பரவசமூட்டும் ஆன்ம சக்திகளும் கொண்டதே பஞ்சு மிட்டாய்., இவ்வாறாகப் பஞ்சு மிட்டாயின் ஆன்மீக சக்திகள் பலப் பல ஆகும்.

உண்மையில் பஞ்சு மிட்டாய்க்கு வான வாயு தீர்த்த சக்திகள் நிறைய உண்டு. எனவே தான் பஞ்சு மிட்டாயை உண்ணு முன் வானத்தில் காண்பித்து, ஆகாசாக்னி தேவதைக்குப் படைத்த பின் உண்பர்.

எனவே இந்த மாத சிவராத்திரியின் திருஅண்ணாமலை அருணாசல கிரிவலத்தில் பஞ்சு மிட்டாய் தானம் மகத்தான அருள் வரங்களைத் தருவதாகும்.

முறையான ஆசைகளை, விருப்பங்களை, பிரார்த்தனைகளை நிறைவேற்றிட,

பிறருடைய பேராசையால் இழந்தவற்றில் அடைந்த நஷ்டத்திலிருந்து படிப் படியாக மீண்டிட,

அவசரப்பட்டு பேராசையால் அதிகத் தொகையை முதலீடு ஆக்கி அனைத்தும் முடங்கிப் போய் வாடி இருப்பவர்கள் சிறிது, சிறிதாக கஷ்ட நஷ்டத்தில் இருந்து மீண்டிட இம்மாத சிவராத்திரி கிரிவலம் உதவுவதாகும்.

இம்மாதத்தில் வசதியுள்ளோரும், ஏனையோரும் பலருடன் சத்சங்கமாகவும் குறைந்தது 5000 பஞ்சு மிட்டாய்களைத் தானமாக அளித்து அருணாசல கிரிவலம் வருபவர்களுக்கு, பேராசை, துராசை, நிராசையால் விளைந்த, ஏமாந்த, நஷ்டமடைந்த துன்பங்கள் அகல நல்வழிகள் கிட்டும். எனவே இந்த மாத சிவராத்திரி கிரிவலத்தில் குழந்தைகள், பிள்ளைகளுடன் கிரிவலம் வந்து, நிறையப் பஞ்சு மிட்டாய்களை குழந்தைகளின் கையால் ஆங்காங்கே தானமாக அளித்து வாருங்கள்.

ஆத்ம விசாரம்

துன்பங்களும், பீதிகளும் வெளியிலிருந்து வருவதல்ல!

அடியார்:-  குருவே! கலியுலகில் எங்கு பார்த்தாலும் துன்பங்கள் பெருகி வருவது போல் ஒரு பீதியும் பயமும் ஏற்படுகின்றதே, என் செய்வது?

சற்குரு :- அவரவர் செய்த காரியங்களின், வினைகளின் விளைவுகளுக்கு ஏற்பவே இன்ப, துன்பங்கள் அவரவருக்கு ஏற்படுகின்றன. கலியுகச் சமுதாயத்தில் கஷ்டங்கள் பிறரால் வருவது போல் தோன்றினாலும், வருகின்ற கஷ்டங்கள் யாவும், செய்த வினைகளின் விளைவுகளே என்பது சத்தியமான வாக்கியமே!

இவற்றின் ஊடே, “இறைவா! அறிந்தோ, அறியாமலோ நிறையத் தவறுகளைச் செய்து விட்டேன்! அவற்றுக்கான விளைவுகளைப் பக்குவமாக ஏற்று அனுபவிக்கும் மனம், உடல் திறனை அளிப்பாயாக! அனைத்தும் உன் ஆணை!” என்று வேண்டி வருதலும் உண்மையான இறை வழிபாடுகளில் ஒன்று. எதையாவது சுயநலமாகக் கேட்டு, கேட்டு வழிபடுவதை விட இவ்வாறு இறைவனை எப்போதும் நன்றியுடன் வேண்டிடப் பழகி வந்தால், கலியில் துன்பங்கள் பெருகி வருவது போல் பீதியும் பயமும் ஏற்படுவது தணியும். ஆனால் இது முற்றிலுமாக அகல வேண்டுமாயின், மனம் சற்றும் தளர்ச்சி அடையாது, கடவுள் நம்பிக்கையை ஆழமாக விருத்தி செய்து கொண்டு வாழ்ந்து வருதல் வேண்டும்.

அடியார்:- உலகில் பெரும்பாலும் அனைவருமே கடவுள் நம்பிக்கையுடன் தானே வாழ்கின்றனர். அப்படியும் துன்பங்களும்,  இதன் காரணமாக, பயமும், அச்சமும் ஏன் பெருகி வருகின்றன?

சற்குரு:- கேள்வியே தவறானது! பதிலின் வார்த்தைகளை நன்கு கவனிக்க வேண்டும். வெறும் கடவுள் நம்பிக்கை மட்டும் போதாது, ஒவ்வொரு நாளும் இது நன்கு விருத்தியாகி வருவதற்காகவே தினசரி ஆலய தரிசனம், தினசரி பூஜைகள் யாவும், இருக்கின்ற கடவுள் நம்பிக்கை ஆழமாக நன்கு விருத்தி செய்து கொண்டு வாழத்தான் இவ்வளவு பெரிய பூமியில் நீண்ட வாழ்க்கையை அடைந்துள்ளோம்.

ஆயுள் முழுதும் கடவுள் நம்பிக்கை ஆழ்ந்து விருத்தி ஆகட்டும்!

அடியார்:- குருவே! .... ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை என்றால்..

சற்குரு:- திருடர்களும், ஏமாற்றுபவர்களும், துரோகம் செய்பவர்களும் கூட, ஒருபுறம் கடவுளை வழிபட்டுக் கொண்டு, மறுபுறம் அதர்மத்தைச் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். கடவுள் நம்பிக்கை உண்மையாக, ஆணித்தரமாக, ஆழ்ந்ததாக இருந்தால் இப்படி நடக்குமா? எனவே கலியுக மனித சமுதாயத்திற்கு உள்ள கடவுள் நம்பிக்கை போதவே போதாது!

இதே போலத்தான் நல்லவர்களும், சாதாரண மனிதர்களும், ஒரு புறம் கடவுள் நம்பிக்கை மறுபுறம் பொய், பொறாமை, புகை பிடித்தல், மது அருந்துதல், முறையற்ற எண்ணங்கள், அதர்மமான காம இச்சைகள்... எனத் தொடர்கின்றனர். நிலைமை இப்படி இருக்க, கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கையே முழுமையாக இல்லையே!

“முதலில் உன்னைத் திருத்திக் கொள், பிறகு சமுதாயத்தைத் திருத்த முற்படு!”

கலியில், ஆலயத்தில், இறை வடிவின் அருகில் நின்று பூஜிக்கும் பாக்யத்தைப் பூர்வ ஜன்ம வசத்தால் பெற்றவர்கள் கூட கலியுகத்தில் சில தவறான பழக்கங்களுக்கு ஆளாகி வருகின்றார்கள் என்பது மிகவும் வேதனை தருவதாகும். வேறு பலவற்றில் செலுத்துகின்ற கவனம், பூஜை சிரத்தையில் தோன்றுவதில்லை.

இவ்வாறு பூர்வ ஜன்மப் புண்ய வசத்தால் பெற்ற சேவையால் இறைவடிவின் அருகில் இருக்கும் போதே மாயை விளையாடுகிறது எனில், மனிதன் ஒவ்வொரு நிமிடமும் எவ்வளவு கவனத்துடன் வாழ வேண்டும் என்பதை உணர்வதில்லை! ஏனோதானோ வென்று இயந்திரம் போல் வாழ்வதில் என்ன பயன்?

தினந்தோறும் ஒரு அரை மணி நேரமாவது தன் வாழ்க்கை முறை பற்றி மனசாட்சிக்கு விரோதமில்லாது உண்மையாக, யதார்த்தமாக ஒவ்வொருவரும் ஆத்ம விசாரம் செய்து பார்க்க வேண்டும். நீதி கொழிக்கும் இடமாக (மன) நீதி மன்றம் அமைய வேண்டும். வழக்குகள், விசாரணைகள் குவியும் இடமாக அல்ல!

ஆத்ம விசாரம் எனில், புனிதமான முறையில், தர்ம ரீதியாக, மனசாட்சிக்கு விரோதமில்லாமல் தன்னைத் தானே ஆய்வு செய்து கொள்ளல் ஆகும். எவருமே தன்னை உடனடியாகத் திருத்திக் கொள்ள முடியாது. எனினும் தான் எங்கு நிற்கின்றோம் என அறிய, தினமும் ஆத்ம விசாரம் மூலம் தன்னைத் தானே ஆத்ம நீதி விசாரணைக்கு ஆட்படுத்திக் கொள்ள வேண்டும்.

எனவே, கண் இமைக்கும் ஒவ்வொரு பொழுது நேரமும் இறையருளால் வாழ்கின்றோம் என்ற நிலையை அடைய, சிறிது சிறிதாக இறை நம்பிக்கையை நன்கு ஆழ்ந்து விருத்தி செய்து வர வேண்டும்.

அடியார்:- குருவே! எவ்வளவுதான் இறைவனைக் கும்பிட்டாலும், பூஜைகள் செய்தாலும் கஷ்டங்கள் குறைந்த பாடில்லை என்றுதானே பலருக்கும் எண்ணத் தோன்றுகின்றது!

சற்குரு:- கடவுள் நமக்கு எதை எல்லாம் நல்ல குடும்பம், நல்ல வீடு, நல்ல வேலை, மூன்று வேளை உணவு, உடை என்றவாறாக கொடுத்திருக்கின்றாரோ இதை எல்லாம் நன்றி உணர்ச்சியுடன் முதலில் எண்ணிப் பார்த்து முதலில் நன்றிப் பிரார்த்தனையுடன் இறைவனை வணங்கிட வேண்டும்.

இதை விடுத்து, தனக்கு மென்மேலும் தேவைப்படுவதை இறைவனிடம் கேட்டு விட்டு, எண்ணியதும், கேட்டதும் நடைபெறாதபோதுதான் பலருக்கு இப்படியான மன விரக்தி வருகின்றது.

எனவே, “கடவுளே! இதைக் கொடு, அதைக் கொடு இதைச் செய்து கொடு!” என்று தினமும், எப்போதுமே கேட்டுக் கொண்டிராமல், “இறைவா, எனக்கு இவ்வளவு வசதிகள் கொடுத்திருக்கின்றாயே, இதற்கெல்லாம் எனக்குத் தகுதியே இல்லையே! தகுதி, யோக்யதை இல்லாவிட்டாலும், இவை அனைத்தையும் தரும் நீயன்றோ கருணாகர மூர்த்தி!” என்று உண்மையாகக் கதறி அழுதிடுக!

கேட்டலாகிய பிரார்த்தனைகளை விட, இறைவன் தந்துள்ளமைக்கான நன்றியளிப்புப் பிராத்தனைகளை முதலில் ஆற்றி வந்தால், பல தெய்வீக மாற்றங்களைத் தாமே உணரத் தொடங்கிடுவீர்கள்!

அடியார்:- குருவே! அப்படியானால் ஆலயத்தில் கடவுளிடம் ஒன்றுமே கேட்காமல் வணங்கி வருவதே உத்தமப் பிரார்த்தனை அல்லவா?

சற்குரு:- உத்தமப் பிரார்த்தனைக்கு வாழ்க்கையில் நெடுந்தூரம் செல்ல வேண்டும் ஐயா! இது அவ்வளவு எளிதில் வந்து விடுவதில்லையே! இறைவனே தானாக மனமுவந்து அளிப்பதே அனைத்தும்! எதையும் ஆண்டவன் கேட்டுத்தான் அளிக்க வேண்டும் என்பதில்லை! இத்தகைய உத்தமப் பிரார்த்தனை நிலை வரும் வரை மற்றவை எல்லாம் வெறும் வேண்டுதல்களே!

ஆலயம் வரை (நடந்து) செல்ல, நல்மனம், உடல் ஆரோக்யம், வாகனமும் தந்து கைகூப்பிக் கும்பிட்டு, நடந்து சுற்றி வர இரு கால்களையும், சுவாமியைத் தரிசிக்க இரு கரங்களையும் மந்திரங்களைக் கேட்க இரு செவிகளையும், ஆலய தரிசனத்திற்காக ஒவ்வொரு எலும்பு, தசை, நரம்பு, இயக்கத்தையும் தந்த இறைவனை முதலில் நன்றிப் பெருக்குடன் கண்ணீர் மல்கப் பிரார்த்தித்தல் தான் பிரார்த்தனையின் ஆரம்ப அரிச்சுவடிப் பாடம். எனவே, உங்கள் குழந்தைகளுக்கு முதலில் இந்த நன்றிப் பிரார்த்தனை இலக்கணத்தையே சொல்லிக் கொடுத்து வாருங்கள்!

அடியார்:- குருவே! அப்படியானால் தலைக்கு மீறிப் பிரச்னைகள், நோய்த் துன்பங்கள், அலுவலகப் பிரச்னை, பணக் கடன்கள் வரும்போது இறைவனிடம் முறையிடக் கூடாதா?

சற்குரு:- முதலில் தந்துள்ள வசதிகளுக்கு நன்றி, பிறகு இறைவனிடம் எதையும் கேட்டிடலாம், சித்தர்கள் அளித்துள்ள ஆரம்ப நிலை இறைவழிபாட்டைச் சிறிது சிறிதாக செய்து கொண்டே வந்தால், அளவுக்கு மீறித் துன்பங்கள் வரும்போது ஏற்படும் பீதிகளை, இறைவழிபாட்டில் ஏற்படுகின்ற விரக்தியை முறியடித்து விடலாம். தவறு செய்தால் தவறுகளுக்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற தர்ம நியதி தழைத்தால் தான் உலகம் சுபிட்சமாக இருக்கும்.

எனவே, “எனக்கு வந்துள்ள துன்பங்களைத் தாங்கி அனுபவித்து மனம் திருந்தி இத்துன்பங்களுக்கான காரண வினைகளை அடியேன் மீண்டும் செய்யாதிருக்க அருள வேண்டும்!” என்று முதலில் உண்மையாகவே வேண்டி, பிறகு, “சுவாமி என்னதான் அடியேன் இப்படி வசன ரீதியாக வேண்டினாலும் துன்பச் சுமை தாங்காது எதையாவது கேட்டாக வேண்டிய நிலையில் இருக்கிறேன்!” என்று பிறகு உங்கள் துன்பங்களைக் கொட்டுங்கள்!

கனிந்த மனம் தானாகவே வர இது மிகவும் உதவும். எனவே, உங்கள் குழந்தைகளுக்கும் இந்தப் பிரார்த்தனைகள், இறைவழிபாட்டின் நல்ல இலக்கணத்தைச் சொல்லிக் கொடுங்கள்.

இவ்வாறு மனப் பூர்வமாக நீங்கள் இறைவனுடன் உரையாடி, இறை மண்டபத்தில் தினமுமே சஞ்சாரம் செய்ய வேண்டும். உதடானது மந்திரங்களை, துதிகளை ஓதிக் கொண்டிருந்து மனத்தளவில் இறைவனுடன் உரையாடல் நிகழ்ந்தாலும் இதுவும் ஒரு வகை தியானம் கூடிய பிரார்த்தனையே!

அடியார்:- எதற்கெடுத்தாலும் கர்மா, தர்ப்பணம், பூர்வ ஜன்ம வினைகள், செய்த தவறுகளின் விளைவுகள் என்றே காரணங்களைக் கூறி வந்தால் மனம் சலித்து விடாதா?

சற்குரு:- முற்காலத்தில், சற்குருவின் மேல் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு அவரைப் பரிபூரணமாக நம்பி மக்கள் வாழ்க்கை நடத்தியமையால் இவ்வளவு விளக்கங்கள் அப்போது தேவைப்படவில்லை. ஆனால், நடப்புக் கலியுலகில் குருவின் மேல் நம்பிக்கை கொள்ளும் இறை இலக்கணம், மங்கியும், மறைந்தும் வருகின்றது.

ஒரு சிலர் செய்கின்ற பெருந்தவறுகள் காரணமாக, ஒட்டுமொத்தமாக, ஸ்வாமியார் அதாவது சுவாமியாகிய இறைவனிடமே அடைக்கலம் பூண்டவர்களைச் சாமியார், சாமியார் எனக் கேலி செய்யும் அதர்ம நிலை பெருத்து வருகின்றது. எனவே, கலியுகத்திலும் சற்குருமார்கள், இறைத் தூதுவர்களாக வந்திருந்தாலும், இலைமறைக் கனியாக உறைந்து தம்மைப் பரிபூரணமாக நம்பிச் சரண் அடைபவர்களுக்கு ஜாதி, மத, குல, இன பேதமின்றி நல்வழி காட்டி வருகின்றார்கள்.

இவ்வாறாக, சான்றோரை, ஆன்றோரை, பெரியோர்களை மனித சமுதாயம் மதிக்காத நிலைமை பெருகி வருதலும், காதால் கேட்பதை விட, படித்து, படித்து, படித்தே, சினிமா, டீ.வியைப் பார்த்து, பார்த்து பார்த்தே வளர்கின்ற சமுதாயமாகவும் ஆகி விட்டதால், கர்மம், வினை, வினையின் விளைவுக்கான விளக்கங்கள் நிறைய அளிக்கபடுகின்றன. தானே அறிகின்ற கிருத யுக ஞானத்தில்தான் மனிதன் ஆறறிவுடன் முழுமையாகப் பிரகாசித்தான். அப்போது ஆலயங்கள் கூட அவ்வளவாக எழவில்லை! திரேதா யுகத்தில் சற்குருவின் பர்ண சாலைகள், குருகுல வாசங்கள், நிறைந்தன. சற்குருவின் குருவருளுடன் இறைப் பகுத்தறிவு பொலிந்தது.

துவாபர யுகத்தில் சற்குருமார்களே சமுதாயத்திற்கு வந்து மக்களை அரவணைத்து இறையருளைப் புகட்டினர்.

கலியுகத்தில் மனிதனுடைய ஆறு அறிவுகளும் முழுமையாக இறைமையுடன் பிரகாசிக்காது மங்கி வருகின்றது. இதனை யுக மாற்றம் என்று நன்கு புரிவதற்காக விளக்கிச் சொல்வதை விட, மனித குலத்தில் சுயநலம், பகைமை, குரோதம், விரோதம், பேராசை, முறையற்ற காமம், தீயொழுக்கம், தீய பழக்க வழக்கங்கள் இவை மனிதர்களிடம் சேரச் சேர மனிதன் இறைப் பகுத்தறிவுக் குணங்கள் ஆறையும் இழந்து ஒன்றரை, இரண்டே முக்கால் – என விலங்கு குணங்களுடன் கோபம், வன்முறை, காமக் குற்றங்களுடன் வாழலாகி விட்டான். இதுவே யுக மாற்றம்!

அமுத தாரைகள்

மூன்றாம் பிறைச் சந்திரனைத் தன் சிரசில் ஏற்றிட, சிவபெருமான் சசிதர்மக் கலை அம்சங்களைச் சந்திரனுக்கு ஈன்ற போது, பதினாறு கலைகளை இழப்பதற்கு முன் சந்திர பிரகாசம் எப்படி இருந்ததோ, அதைவிட 64 மடங்கு பிரகாசம் உள்ளதாய் சந்திர கலைகளைப் பொழிந்தன. எனவே, தட்சனுடைய சாபமும் நன்மைக்காகவே அமைந்தது. பைரவ லோகத்தில் இருந்து நேரடியாக சோழபுரத்தில் தோன்றிய 64 பைரவ மூர்த்திகளும் ஒருங்கிணைந்த சர்வ பைரவ மூர்த்தியாக ஸ்ரீபைரவேஸ்வர லிங்க மூர்த்தியாக அவதாரிகை கொண்டு முதன் முதலில் பைரவ ஈஸ்வரராக, சர்வேஸ்வரன் தோன்றிய இடம் கும்பகோணம் அருகே சோழபுரமே! இதனால்தான் ஈஸ்வரப் பட்டம் பெற்ற பிறகு சனீஸ்வரர் முதன் முதலில் இங்கு ஸ்ரீபைரவ லிங்க மூர்த்திக்கு வழிபாடுகளை ஆற்றினார்.

இறந்தோர் எல்லாம் ஆத்ம சாந்தி பெறுவது கிடையாது, “இறந்தவரின் ஆத்மா சாந்தி அடைவதாக!” என்று பண்பாடு கருதி உரைத்தாலும், இவ்வாறு கூறுவதாலோ, நோட்டீஸ் அடிப்பதாலோ எவருடைய ஆத்மாவும் அவ்வளவு எளிதில் ஆத்ம சாந்தி அடைந்து விடாது. இறந்தவர் செய்த தீவினைகளைப் பிறகு யார்தான் கழிப்பது, அனுபவிப்பது? அவரவர் செய்த நல்வினை, தீவினைகளின் பலாபலன்களை அனுபவித்தால் தான் ஆத்ம சாந்திக்கு நல்வழி கிட்டும். இதிலும் ஆத்ம சாந்திக்கான நல்வழிகளே உணரப் பெறுதலாகுமே தவிர, உடனேயே ஆத்ம சாந்தி வந்து விடாது. தயவு செய்து மரண அறிவிப்பு நோட்டீஸ் அடித்து ஒட்டாதீர்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில், ஒரு நித்ய கர்ம நிவாரணி விளக்கத்தில், இதுவரையில் வாழ்க்கையில் ஒரு போதும் அழுதிடாத ஒருவருக்குச் சில உதவிகளை ஆற்றிடுதலால் கிட்டும் உத்தம பலன்கள் பற்றி விளக்கம் அளித்திருந்தோம். இவ்வாறு ஓரிருவர் செய்ததாக நமக்கு நற்செய்திகள் வந்தன. வாழ்வில் ஒரு போதும் அழுதல் கூடாது எனினும் இது கலியுக நடைமுறையில் சாத்தியப்படுவதில்லை. குழந்தை அழுதலை ஆன்மீகத்தில் அழுகை வகையாக ஏற்பது கிடையாது. துக்கம், சோகம், நோய்த் துன்பங்கள், மனக் கஷ்டங்கள், அளவுக்கு மீறிய துன்பங்கள், கடுமையான வலி, தாங்க முடியாத மரணப் பிரிவு போன்ற நிலைகளில் ஒரு மனிதன் அழுகின்றான். சித்தர்களுடைய பைரவ சித்தாந்த நெறிப்படி, பைரவ தோஷங்கள் இல்லாதவர்களே ஒரு போதும் அழாதவர்கள் ஆவர். அதாவது ஒருவர் தன் வாழ்நாளில் இதுவரையில் அழுதது கிடையாது என்று கூறினால் இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அவர் பைரவ தோஷங்கள் இல்லாதவர் என்று அறுதியிட்டுக் கூறி விடலாம். எனவே கண்ணீர் பெருகும் வகையில் வாழ்க்கையில் சம்பவங்கள் நடந்தால் இதற்கான பைரவ தோஷங்களைக் கழித்திட தினமும் குறிப்பாக அஷ்டமியில் குளிகை நேர (கால) பைரவர் வழிபாட்டை மேற்கொண்டு வருதல் வேண்டும்.

மகிழ்ச்சி பொங்கிடும் போது கண்களில் ஆனந்தக் கண்ணீர் திரள்கின்றது அல்லவா! இதனையும் ஆன்மீகத்தில் அழுகையாக ஏற்பது கிடையாது. எனவே தான் பைரவ சக்திகள் நிறைந்த சோழபுரம் போன்ற பைரவ பூமியில் ஆண்டவன் ஆனந்த சக்திகளை, மகிழ்ச்சி தரும் சக்திகளை, பரமானந்த சக்திகளைப் பதித்து வைத்திருக்கின்றான். மேலும் மஹாபைரவ பூமியான சோழபுரத்தில் ஸ்ரீபைரவேஸ்வரர் பல கோடி யுகங்களாக அருள்பாலிக்கின்றார். பைரவேஸ்வரி, பைரவ பூஷணி போன்ற பைரவ நாமங்களைத் தாங்கி அருளிய அம்பிகை தற்போது மிகவும் பழைமையாக சிதிலமடைந்துள்ள ஸ்ரீபைரவேஸ்வரர் ஆலயத்தில் தோன்றாது மறைந்து இருக்கின்றாள். காலம்  வரும் போது அம்பிகை கனிந்து காட்சி தருவாள்.

பல நூறு மடங்கு பலன் தரும் திவச வகைக் காய்கறிகள்

மாளய பட்ச தினசரி அன்னதானத்தில், படையல் திவச சக்திகள் நிறைந்த பாகற்காய், பிரண்டை, பலாக்காய் ஆகிய மூன்றையும் சேர்த்தல் விசேஷமானது. பாகற்காய் நூறு காய்கறிகளுக்கும், பிரண்டை முன்னூறு காய்கறிகளுக்கும், பலாக்காய் அறுநூறு காய்களுக்கும் சமமான அன்னதானப் புண்ய சக்திகளை கொண்டவை!

காரவல்லீ சதம் ப்ரோக்த்தம் வஜ்ரவல்லீ சதத்ரயம்
பநஸ: ஷட்சதம் ப்ரோக்த்தம் ஸ்ராத்த காலே வதீயதே!

(காரவல்லீ – பாகல் : வஜ்ரவல்லீ – பிரண்டை : பநஸம் – பலா)

தேய்பிறை அஷ்டமித் திதியில் சோழபுரத்தில் தோன்றிய ஸ்ரீபைரவேஸ்வரர், திரயோதசித் திதியில், சனிக்கிழமைக்குரிய மகா பிரதோஷ நாளில், பூலோக ஜீவன்களுக்காகத் தரிசனம் தந்திட்டார். எனவே, இந்த தொன்மையான ஸ்ரீபைரவேஸ்வர ஆலயத்தில், 64 தேய்பிறை அஷ்டமித் திதிகளில் தொடர்ந்து முறையாகப் பூஜித்து வருவோர்க்கு, அஷ்டாஷ்டம (8x8 =64) சித்திகளை அடையும் நல்வழிகள் கைவரப் பெற ஸ்ரீபைரவ மகரிஷி அருள்கின்றார்.

ஸ்ரீசந்தோஷி மாதா பூஜிக்கும் சிவபூஷணி! சந்தோஷியே சிவபூரண சிவபூஷணி!

ஈஸ்வரனே தாமே தெய்வாத்மானந்த ஸ்வரூபமாக சிவபூரணி இறைவியை உற்பவித்திட்டார், இறைத் துணையாம் சிவபூரணி, சிவபூஷணியாய் உற்பவித்த சந்தோஷி மாதாவும், பரமானந்தத்தில் திளைத்து இங்கு சிவபூஷணாம்பரி ஆனந்தசாகரியாய், அம்பிகையைத் தினமுமே ஆனந்த பாஷ்பவாரிப் பரிபூரண லோசனப் புஷ்பங்களால் ஆராதித்து வழிபடும் திருத்தலமே சோழபுரமாம்!

நல்லவர் நல்லருள் பெற...

நல்லவராக, நேர்மையாக வாழ சங்கல்பம் கொண்டு வாழ்கின்றபோது பலத்த சோதனைகள் பலருக்கும் வரலாகும். இத்தகைய நேர்மையைப் பிறர் வெறுத்து, மனம், உடல் நோகும்படி அவர்கள் தரும் துன்பங்களைத் தாங்க இயலாது, வேதனைகளால் வாடுகின்ற நல்லவர்கள், உயரதிகாரிகள், காவல் துறையினர், நீதிபதிகள், வக்கீல்கள், போன்றோர் காரைக்குடி குன்றக்குடி அருகில் உள்ள நேமம், மன்னார்குடி, அரக்கோணம் கடம்பத்தூர் காஞ்சீபுரம் அருகே செஞ்சி (ஸ்ரீஜெனமே ஜெயஈஸ்வரர்) திருவாரூர் ஸ்ரீஜெயங்கொண்ட நாதராக இறைவன், அருளும் தலங்களிலும், தம் பிறந்த நட்சத்திர நாள், மற்றும் மேற்கண்ட ஜயசக்தி நாட்களிலும் வழிபட்டு வர, தம் வாழ்வில் நிறைந்த மன அமைதி பெறுவர்.

ஸ்ரீநடராஜப் பெருமான்
திருப்புகலூர்

சங்கு, சக்கரம் தாங்கிய சிவபூரணி!

ஸ்ரீவிஷ்ணு ரூபின்யை நம: ஸ்ரீவிஷ்ணு ரூபியே போற்றி!

ஸ்ரீவிஷ்ணு துர்க்கையாக சங்கு, சக்கரத்துடன் ஸ்ரீதுர்க்கை அருள்வதுண்டு! சிவாலயத்தில், சங்கு சக்கரபாணியளாக, சாந்த வடிவில் மூலத் திருமேனியராய் அன்னை அருள்வது அபூர்வமானதே! இவ்வரிய காட்சியைக் கலியுகத்தில் காண்பதே அரிதிலும் அரிதாம், இதன் பலன்களை, கலியுக மனித சமுதாயத்திற்கு இரு மடங்குப் பலா பலன்களாக, சிவ, விஷ்ணு பூஜா பலன்களாகக் குவித்துத் தருகின்ற திவ்யமான தலமே சோழபுரமாம்! எனவே, இங்கு 1008 சங்குகளால் சங்காபிஷேகப் பூஜை நிகழ்த்துதலால், பெண் பிள்ளைகளைப் பற்றித் தாய்மார்கள் கொண்டுள்ள கவலைகள் தணிய உதவும்.

கும்பகோணம் நன்னிலம் அருகே உள்ள திருப்புகலூர் ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயத்திலும் மற்றும் எம மூர்த்தி வழிபட்ட தலங்களிலும் (வேலூர் அருகே விரிஞ்சிபுரம், மயிலாடுதுறை அருகே தர்மபுரம், கும்பகோணம் அருகே உள்ள ஸ்ரீவாஞ்சியம் மற்றும் திருவாலங்காடு, திருச்சி அருகே திருப்பைஞ்ஞீலி, எமனேஸ்வரம்), துவிதியைத் திதி மற்றும் செவ்வாய், சனி தோறும் வழிபட்டு வந்தால் அவரவர் தாமிழைத்த வல்வினைகளை உணர்ந்து பரிகாரம் பெற்று, நரக லோக வாழ்வையே தவிர்த்து விடலாம்.

வசதியுள்ளோரும், ஏனையோரும் பலருடன் சத்சங்கமாகவும் குறைந்தது 500 பஞ்சு மிட்டாய்களைத் தானமாக அளித்து அருணாசல கிரிவலம் வருபவர்களுக்கு, பேராசை, துராசை, நிராசையால் விளைந்த, ஏமாந்த, நஷ்டமடைந்த துன்பங்கள் அகல நல்வழிகள் கிட்டும். எனவே குழந்தைகள், பிள்ளைகளுடன் கிரிவலம் வந்து, நிறையப் பஞ்சு மிட்டாய்களை குழந்தைகளின் கையால் ஆங்காங்கே தானமாக அளித்து வாருங்கள்.

சிவபெருமான், சந்திர மூர்த்திக்கு, தன்னுடைய சிரசில் இருந்து “சசிதர்மம்” என்ற ஒளிநிலைப்பாட்டில் இருந்தே மூன்றாம் பிறை சந்திர கலைகளை அளித்தார். “சசிதர்மம்” என்பது 64 பரிபூரணமானக் கலைகளைக் கொண்டதாம். இவற்றில் 13 கலைகள், 64 பைரவ மூர்த்திகளிடம் அளிக்கப் பெற்றன. எனவே 13 என்பது துரதிர்ஷ்டமான எண் என்று (மேல் நாட்டவர்கள் போல) எண்ணுவது மிக மிகத் தவறு. 13 என்ற எண்ணில் பைரவ அம்சங்கள் நிறைய உள்ளன. 13 என்ற எண்ணிற்கு மட்டும், 1+3 =4 என்று கூட்டாக அல்லாது, இரண்டு இலக்கங்களையும் ஒன்றாக 13 என்று வைத்தே பலாபலன்களை, பைரவ அம்சங்களுடன் இணைத்துக் கணித்து அளிப்பார்கள். இதனால்தான், அமாவாசை, பௌர்ணமியில் இருந்து 13ஆம் திதியான திரயோதசியில் சிவபெருமானுக்கு உரித்தான பிரதோஷ பூஜை நிகழ்கின்றது. எனவே பைரவ சக்திகள் பரிபூரணமாகப் பூரிக்கும் எண்ணே 13 ஆகும். தமிழ் மற்றும் ஆங்கில மாதங்களின் 13ஆம் தேதியில் “பைரவர்” என தெய்வீக அன்புடன் அழைக்கப்படும் நாய்களின் நடவடிக்கைகள் மாறுபடுவதை நன்கு காணலாம், இந்நாட்களில் நாய்கள் பேரமைதியை நாடுவதால் அவற்றை அமைதியாக இருக்க விடுவதே மேன்மை உடையதாம்.

ஸ்ரீஜகதீஸ்வரர்
மணமேல்குடி

64 பைரவ மூர்த்திகளும், சிவபெருமானிடம் இருந்து பெற்ற 13 சசிதர்மக் கலைகளைக் கொண்டு, அன்றைய பைரவேஸ்வரபுரமும் இன்றைய  சோழபுரமுமான சிவத்தலத்தில் ஜீவ தர்மத்தை அன்றும், இன்றும், என்றுமாகப் பேணிக் காத்து வருகின்றனர். சனீஸ்வர மூர்த்தியின் புத்திரரான மாந்திக்கு ஏற்ற நேரம் குளிகை என்று நாம் நன்கு அறிவோம். சனீஸ்வரச் சோழபுரமான பைரவேஸ்வர புரத்தில் ஸ்ரீபைரவேஸ்வரரை வழிபட்டு, சனீஸ்வரர் மாந்தியைத் திருப்புத்திரராகப் பெற்ற நேரமே குளிகை நேரமாகும். இதனால் தான் மாந்தியும் யுரேனஸ், நெப்டியூன், ப்ளுட்டோவிற்குப் பிறகு 13ஆவது கிரகமாகப் பொலிகின்றது. யுரேனஸ், நெப்டியூன், ப்ளுட்டோ இம்மூன்றும் மேலைநாட்டுக் கிரகங்கள் என்று (தவறாக) எண்ணக் கூடாது. இவற்றிற்கான தூயத் தமிழ் பெயர்களும் உண்டு.

திக்கற்றோரைக் காக்கும் ஸ்ரீஜெகத்ரட்சகி

கணவன் அல்லது மனைவியை, பெற்றோர்களை இழந்து பிறர் தயவில் வாழ்ந்து தவிப்போர் அறந்தாங்கி மீமிசல் மார்கத்தில் மீமிசலில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள மணமேல்குடி ஸ்ரீஜெகதீஸ்வரர், ஸ்ரீஜெகத்ரட்சகி ஆலயத்தில் சாம்பிராணி தூபம் இட்டு சுவாமி, அம்பாளுக்கு ருத்ராட்ச மாலை சார்த்தி ருத்ராட்சத்தில் வடிந்த தீர்த்தத்தைப் பிரசாதத் தீர்த்தமாக இல்லத்திற்கு எடுத்து வந்து தினமும் வீட்டில் அனைவரும் அருந்திவர மானம், தன்மானத்தில் காக்கப் பெற்று வர படிப்படியாக அருள் கிட்டும். இங்குள்ள தீர்த்தத்தில் அமாவாசைத் தர்ப்பணம் அளிப்பதால் குடும்பம் ஸ்திரமாக இருக்க உதவும்.

உத்திரட்டாதி நட்சத்திர லிங்கம்

அட்டைப் படத்தில் தரிசிப்பது உத்திரட்டாதி நட்சத்திர லிங்கம்.  உத்திரட்டாதி நட்சத்திர தேவி தினமும் பூஜிக்கின்ற லிங்கத்தின் உத்தமத் தோற்றம். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தோர் இதனை அடிக்கடி வரைந்து பழகி தன் மனத்தினுள் நிலை நிறுத்திக் கொண்டு அவ்வப்போதும், உறங்கும் முன்னரும் மானசீக பூஜையைப் பயின்று வருதல் வேண்டும். உத்திரட்டாதி நட்சத்திரத்தார் மட்டுமல்லாது ஏனைய நட்சத்திரத்தவர்களும் இதனை உத்திரட்டாதி நட்சத்திர நாள்தோறும் வழிபட்டு வருதலால் பணக்கஷ்ட நிவர்த்திக்கு உதவும். முறையாகச் செல்வ வளம் சேர உதவிடும். கண்ணாடிச் சட்டத்திற்கு அடியில் கைபடா வண்ணம் வைத்து, வருகின்ற, எடுத்துத் தருகின்ற பணத்தை இதன் மேல் வைத்து “ஓம் பூர்வ உத்ராதன ஆகர்ஷண சாதனாமிர்தம் சரணம்” என்று ஓதிப் பெறுதல், அளித்தலால் பணத்தில் தொற்றி வரும் நஷ்ட தோஷங்கள் தணியும், தனவிருத்தி ஆகர்ஷண சக்திகள் மலரும். அட்ட தரித்திரங்களும் நீங்கிட உத்திரட்டாதி நட்சத்திர நாளில் அறந்தாங்கி ஆவுடையார் கோயில் அருகே உள்ள தீயத்தூர் ஸ்ரீசகஸ்ர லக்ஷ்மீஸ்வரர் ஆலயத்தில் தாமரை மலர்களை காப்பு கட்டி அபிஷேகித்து முழுத் தாமரைப் பூக்களை நல்ல மலைத் தேனில் தோய்த்து அபிஷேகித்து ஆராதனைகள் செய்து வர வேண்டும்.

தொடரும் ஆனந்தம்...

அறந்தாங்கி மணமேல்குடி அருகிலுள்ள பொன்னகரம் பெருமாள் தலம் வரலாற்று சிறப்புடையது. இத்தலத்தில் விஷ்ணுபதி வழிபாடுகள் நிறைவேற்றுவதற்கான விவரங்களை அறிந்து கொள்ள இரண்டு அடியார்களை அனுப்பினார் நம் சற்குரு. அவர்கள் மணமேல்குடியிலிருந்து வாடகைக்கு சைக்கிள் ஒன்றை எடுத்துக் கொண்டு அத்தலத்தை அடைந்தனர். அவர்கள் அத்தலத்தில் தேவையான முன்னேற்பாடுகளை செய்து விட்டு திரும்பி வரும்போது மதியம் நல்ல வெயில் நேரம். அவர்கள் சென்ற சைக்கிள்களில் ஒன்று செயின் கழன்று போகவே அக்கம்பக்கத்தில் எந்த சைக்கிள் ரிப்பேர் கடையும் இல்லாத காரணத்தால் அந்த அடியார்களே அந்த சைக்கிள் செயினை சரிபார்க்கும் முயற்சியில் இறங்கினர். சற்று நேரம் கழித்து சைக்கிள் செயின் சரியாக பூட்டப்பட்டு சைக்கிள் ஓடும் நிலைக்கு தயாரானது. அதனால் ஒரு அடியார் கைகளில் ஏகப்பட்ட கருப்பான எண்ணெய் பிசுக்கு ஒட்டி விட்டது.

என்ன செய்வது ?

சுற்றும் முற்றும் பார்த்தார். அருகில் தண்ணீர் பெறுவதற்கான எந்த வசதியும் இருப்பதாகத் தெரியவில்லை. சுற்றிலும் மணல், மணல். தலைக்கு மேல் சூரியன் மட்டும் ஜோராக காய்ந்து கொண்டிருந்தது. வேறு வழியின்றி அங்கே இருந்த மணலை கையில் அள்ளி தேய்த்து கையை சுத்தம் செய்து கொண்டார். ஆனால், என்ன ஆச்சரியம் கையில் அந்த மணலைத் தேய்க்க தேய்க்க உள்ளங்கை சுத்தம் ஆகியது ஒரு புறம் இருக்க, மறுபுறம் அந்த மணலில் உள்ள “தங்க மணல் சக்திகளால்” அவருடைய உள்ளங்கை அந்த நண்பகல் வேளையில் ஜொலிக்க ஆரம்பித்தது. அந்த ஜொலிப்பு மணமேல்குடி மண்ணிற்கே உள்ள பிரத்யேகமான பளபளப்புதான் என்று அந்த அடியாரும் பேசாமல் இருந்து விட்டார்.

அடுத்த பௌர்ணமி அன்னதானத்தின்போது நம் சற்குருவைச் சந்தித்தபோதுதான் அந்த அடியார் பெற்றது வெறும் தங்க மணல் அனுகிரகம் அல்ல பொன்னகரத்தில் மட்டுமே சிறப்பாக பொலியும் பெருமான் அனுகிரகம், குருவின் சீரிய அனுகிரகம் என்பதே அந்த அடியார் அறிந்து பேருவகை எய்தினார். இது பற்றிய இரகசியங்களை நம் சற்குரு விவரித்தபோது, “யோவ், உண்மையில் அது மணமேல்குடியே அல்ல, பொன்மேல் குடி என்பதே உண்மை. பொன்னகரம், பொன்மலை என்று ஒரு இடத்திற்கு பெயர் வந்திருக்கிறது என்றால் அது ஏன் என்பதை நீங்கள் ஆத்மவிசாரம் செய்து பார்க்க வேண்டாமா ? பொன்னகர பெருமாள் தலத்தில் திகழும் பூமி மட்டும் பொன் சக்திகள் நிறைந்த மணல்மேடு கிடையாது, அங்கு வீசும் காற்று கூட பொற் சக்திகள் நிறைந்ததே. சொல்லப்போனால் அங்கு குருக்கள் வீட்டில் நீ குடித்த காபி கூட பொற் சக்திகளை உடையதுதான்...”, என்று கூறி கண் சிமிட்டினார் நம் சற்குரு.

பெருமாள் மட்டும்தான் சர்வ வியாபி (எங்கும் நிறைந்தவர்) என்று கிடையாது, நம் சற்குருவும்தான் என்று நிரூபித்ததும் இந்த பொன்னகர குரு விளையாடலே !

இது போன்ற ஆயிரமாயிரம் அனுகிரகங்களை, பொற் கிரணங்களை, அள்ளி வீசியவரே, இன்றும் வீசிக் கொண்டிருப்பவரே நம் சற்குரு.

தேவை நம்பிக்கை, நம்பிக்கையே.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam