அகங்காரத்தால் தோன்றும் பாரமே மிகவும் பளுவான பாரம் .. மாதா அமிர்தானந்தா

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்! யுகயுகமாய் ஒளிர்கின்ற குருபாத பூஜை! ஜகம் முழுதும் மிளிராதோ குருபாத சேவை! ஸ்ரீஅகஸ்திய விஜயம்தான் அவர் காட்டும் பாதை!

கலியுகத்தில், பள்ளிப் பருவத்திலேயே, சிறுவனாகிய வெங்கடராமன் பிரபஞ்சத்தின் உத்தமப் பெருஞ் சித்புருஷரிடம் குருகுலவாசம் பூணும் பாக்யத்தைப் பெற்றான் என்பது உங்களுக்கு எளிதில் புரியும்படியாக எடுத்தாளப்படுகின்ற சொல் வழக்கு. ஆனால் பலகோடி தேவ ஆண்டுகளாக, பலயுகங்களிலும், பலகோளங்களிலும், பல பூமிகளிலும், தொடர்கின்ற குருகுலவாசத்தின் குரு சிஷ்ய இறைப் பிணைப்பின் வேதமா மலர்வே இது என்பதே நால் வேத சத்தியப் பொருளாகும்! ஞானத் தாயாம் ஸ்ரீசரஸ்வதியே ஸ்ரீஹயக்ரீவப் பெருமாளிடம் இன்னமும், இன்றும், எந்நேரமும் ஞானப் பாடம் பெற்றுக் கொண்டிருக்கின்றாள் என்றால் குருகுலவாசம் என்பது ஓர் ETERNAL DIVINE SESSION தானே! எல்லையில்லாத இறைவனே ஞானத்தின் முதலும் முடிவும் என்பதும் இதனால் புலப்படும்.. இங்கு இறைவளமை பெற்றுப் பூ(ரி)க்கும் குருகுலவாச அநுபூதிகளின் ஒவ்வொரு வரியும் பல வகைகளில் எல்லோருக்கும் பல பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கின்றது..! ‘தேவாரக் கயிறு’ சார்த்திப் பார்க்கும் அருட்படலம் போல் ‘அநுபூதிக் கயிறு’ம் சார்த்தி ஆன்மப் பரிகாரம் பெற்றிடுங்கள்!

பாரதம் முழுதும் பெரியவருடன் பல இடங்களுக்கு நடை யாத்திரையாகவும், பஸ், ரயில் மார்க்கமாகவும், சூட்சும சரீர (astral travel) யாத்திரையாகவும் சிறுவன் சென்றிருக்கின்றான். ஆனால் சூட்சும யாத்திரை செல்லும்போது அவ்வாறு செல்வதாகப் பெரியவர் ஒரு போதும் சொல்வதில்லை. இரவில் விஜயவாடாவில் ரெயிலில் ஏறி பெர்த்திலோ, தரையிலோ, படுத்தால் காலையில் “வாரணாசி” ஸ்டேஷனோ, “ஹரித்வார்” ஸ்டேஷனோ தென்படும். “எப்படி வாத்யாரே அவ்வளவு டிஸ்டன்ஸ் (distance)  ஒரே நைட்டுல தாண்டிடுது?” சிறுவன் அப்பாவித் தனமாய்க் கேட்டான்!

“ஆமாண்டா, நீ பாட்டுக்கு அடிச்சுப் போட்ட மாதிரி நாலஞ்சு நாள் ஒரேயடியாத் தூங்கிட்டு இப்படிக் கேட்டா எப்படிடா? ஏண்டா இடார்ஸியில் உன்னத் தோள்ல தூக்கிக்கிட்டு படி மேல ஏறி.. பிளாட்பாரம் தாண்டி.. அப்பப்பா....” என்று ஏதாச்சும் சொல்லி மழுப்பி... topic..ஐயே மாற்றி விடுவார்! பிரபஞ்சத்தின் உத்தம சித்புருஷர்களுள் ஒருவரென உணரவிடாது ஸ்ரீகிருஷ்ணன் போல இறை லீலைகளை உருட்டி குருகுலவாசத்தை மணக்கச் செய்த(ப)வர் ஆயிற்றே! அப்பப்பா... எவ்வளவு மகான்களின் தரிசனம் வழியெங்கும்.! ஆனால் பரதேசியாகவும், அவதூதராகவும், பிச்சைக்காரனாகவும், பைராகியாகவும், சாதாரணப் பிரஜைகளாகவும்.. எத்தனை உருவங்களில் யோகியர்களும்.., சித்தர்களும்.! ஆனால் அவர்கள் நெடுந் தொலைவு சென்ற பிறகுதான்... இது தாண்டா... “புலஸ்தியரு”... “காளாங்கி நாதரு”... “ரோமச மகரிஷி” ... என்று பவ்யமாகப் பெரியவர் எடுத்துரைக்கும்போது சிறுவனுக்குக் கோபம் கோபமாக வரும்!

ஸ்ரீவெள்ளை வாரணப் பிள்ளையார் திருவலஞ்சுழி

“ஏன் வாத்யாரே! அவருக்கு எதுத்தாப்பலேயே சொல்லக் கூடாதா, நான் கொஞ்சம் விழுந்து நமஸ்காரம் பண்ணி இருப்பேன்!” என்று சொல்லிச் சிறுவன் அங்கலாய்ப்பான்!

“ஆங்... இவரு மஹானு, இவரு சித்தரு, இவரு யோகின்னு நாங்க சொல்லிக் காட்டறதுக்கு மேலேந்து, எங்க ஹெட் ஆபீஸ்லேந்து (upper divine worlds) பர்மிஷன் கெடச்சாத்தான் நாங்க சொல்வோம்.. இல்லாட்டி அறிந்தும் அறியாமலிரு, தெரிந்தும் தெரியாமலிரு, புரிந்தும் புரியாமலிருங்கற மாதிரியே கம்முனு நாங்க இருந்துடுவோம்!”

“ஏன்னா, ஒரு மஹானை நேரே பார்த்தா நீ சும்மாவா இருப்பே, சொல்லு பாக்கலாம்! நான் நல்லாப் படிக்கணும் சாமி, நல்ல மார்க் வாங்கணும் சாமின்னு அவங்களைத் தொந்தரவு பண்ணி புடுங்கி எடுத்துடுவியே! அப்புறம் எங்களுக்கு மேலேந்து “தொம் தொம்முனு” உதை விழும், ஏண்டா உன் சிஷ்யனை இப்படியா develop பண்றது? முக்தியோ, மோட்சமோ, குரு கடாட்சமோ கேட்பான்னு பார்த்தா இப்படி சுயநலமாக, லௌகீகமா இருக்கானேன்னு எங்களுக்கு உதை விழும்! நல்லா தெரிஞ்சுக்க, இதுனாலத்தான் கலியுகத்துல சித்தர்களும், மகான்களும், பித்ருக்களும் பூலோகத்துல தாங்க இருக்கறதையே வெளிக் காட்ட மாட்டாங்க!”

அஸ்ஸாமில் கௌஹாத்தி அருகே காமாக்யா என்ற அற்புத இறைத் தலமுண்டு! அம்பிகையின் யோனி பீடமிது.. இங்கும் பல சித்தர்கள் விதவிதமான வடிவங்களில்.. வங்காளிக் குடும்பப் பெண் போல ரோஸ் கலர் குங்குமத்துடன்.. அமர்நாத்தில் முழங்கால் வரை சட்டையுடன் காஷ்மீர் மாநில வாசிபோல.. கலர் கலராகத் தொப்பியுடன் மணாலியில் (Manali in Himachal Pradesh) … இவ்வாறாக விதவிதமான ஆடைகளில் தோற்றங்களில் எத்தனையோ சித்தர்களின் தரிசனம் சிறுவனுக்குக் கிட்டியது! சித்தர்கள் ஆமையாய், எறும்பாய், ஆடவர்களாய்... எப்படி வேண்டுமானாலும்தான் அவர்கள் வந்திடலாமே? எகிப்தில் பிரமிட் அருகே கூட எகிப்து நாட்டு உடைகளில் எத்தனை எத்தனை சித்தர்கள்..! அந்தந்த மொழி பேசி... பெரியவரும் அவரவர் மொழியில்... அப்பப்பா.. பெரியவரின் ஞான பிரவாகம் கண்டு சிறுவனே வியந்தோ வியந்து மகிழ்ந்தது எத்தனை தெரியுமா?

நினைத்தாலே வலிக்கும்! ... வந்திருந்த பேன் குடும்பத்தினருக்குப் பெரியவர் அபூர்வமான மூலிகை ஒன்றை எடுத்தளித்ததைக் கண்டு வியந்த சிறுவன் இம்மூலிகைகளைப் பெற்றிடவே பெரியவர் இத்தனை நாள் “காணாமல் போயிருந்தார்” என உணர்ந்து தெளிந்தாலும் பெரியவரோ ஞான மூலிகைப் பழ ரசமாய்ப் பொழியலானார்! மேலும் அம்மியைப் பொழிவது போல் பொழிந்தும் விட்டார்..! “ஏண்டா இத்தனை நாள் நான் எங்கெங்கேயோ சுத்தி இந்த மாதிரி ரொம்ப ரொம்ப அபூர்வமான மூலிகை கொண்டு வந்திருக்கேனே., அதைப் பத்தி ஒரு வார்த்தை நீ கேட்கலையே, அதை விட்டுட்டு நம்பளை விட்டுட்டு இந்தக் கிழவன் எங்கேயோ போய்ட்டானேன்னு சுயநலப் புலம்பல் புலியாய்க் காள், காள்னு வாயால, மனசால கத்திக் கிட்டு இருக்கியே! நீ என்னைப் பத்தி அநாவசியமா நினைச்சா அது என்னைத் தாக்கும்னு உனக்கு நல்லாவே தெரியுமில்ல... யாரைப் பத்தி எந்த ஒரு அநாவசியமான நினைப்பும் ஒரு அஸ்திரமா மாறிக் கர்மவினைதான் சேரும்! பிறத்தியாருக்குத் தலைவலி, கால் வலின்னு போய்ச் சேரும்!”

சிறுவன் புருவங்களைச் சற்றே உயர்த்தினான்! “நான் எங்கேயோ திருநெல்வேலி பக்கத்துல மலை மலையா ஏறி, இறங்கி மூலிகையைத் தேடிக்கிட்டு இருக்கிறப்போ, என்னடா இது நம்பளை அம்போன்னு விட்டுட்டுப் போய்ட்டானேன்னு மனசால கதறி, கண்ணுல கண்ணீர் கட்டிக் கொட்டிக்கிட்டு அழுதா, அது எனக்கு அங்க மலையில கல்லுக் குத்து, முள்ளுக் குத்து, தலைக் குத்தா வந்து வலிக்குதேடா..!” பெரியவர் அவருடைய பாதங்களையும் முழங்கால்களையும் காண்பித்தார்! நிறைய முட்கள் குத்தி, சீழ் கோர்த்து, வீக்கங்களாய், பேல் பூரியாய்ப் பெருத்திருந்தன!

சிறுவனின் கண்கள் கலங்கின! ‘அடடா, வாத்யாரைப் பத்தி நெனச்சு நெனச்சு எவ்வளவு பாடாய்ப் படுத்திட்டோம்..! அவர்தான் நமக்குத் தலைக்குமேல தெய்வீகப் பணிகள் நெறயக் கொடுத்து இருக்காரே! பேசாமல் அவற்றை ஒன்னொன்னா நிறைவேத்தறதை விட்டுட்டு... தேவையில்லாமல் அவரைப் பத்தி நெனச்சு அவருக்கு மனவலி கொடுத்து ரொம்ப ரொம்பப் படுத்திட்டோமே!”  சிறுவனின் மனக் கண்களும் கலங்கின!

தேவ லோகத்தில் இருந்து பீறிட்டுக் கிளம்பிய உன்னத தெய்வீக சக்தி போல ஏதோ ஓர் உத்வேகத்துடன் எழுந்த சிறுவன் பெரியவரின் பாதங்களை மெல்ல மெல்ல வருடிக் கெட்டியாகப் பற்றிக் கொண்டு... “வாத்யாரே, இனிமே நீ எங்க போனாலும் சரி, அநாவசியமா நெனச்சுக் கலங்க மாட்டேன்..! நீ எங்க இருந்தாலும் சரி கோடிப் பேருக்கு நல்லது செஞ்சுக்கிட்டு இருப்பேன்னு நல்லாப் புரிஞ்சிடுச்சு....”, என்று உணர்ச்சி வசப்பட்டு உரைத்தான்... சிறுவனின் உள்ளக் கண்களுமே கலங்கின!

உள்ள அழுகையா? உத்தம உள்ளலின் பரமாத்ம விள்ளல் அது! ஆத்மாவின் அற்புத ஸ்வரம்! ஆன்மாவின் ஆனந்த முராரி கானம்! பெரியவர் பரிவுடன் அவனை அரவணைத்துக் கொண்டு தொடர்ந்தார்..!

தேடித் தேடி இளைத்தேனே! “ஏதோ பொதிய மலையோட தொடர்ச்சிடா அது! எங்கேங்கேயோ போனேன்.. ஏன்னா இந்த ‘பேன் குடும்பத்துக்கான தலைப் பேன் பரிகார வழியை’ .., மூலிகைப் பரிகார முறையை நம்ப ‘தலையில’ எழுதிட்டாங்களே, என்ன செய்யறது? அந்த மலையில அது எங்கேயோ இருக்குதுன்னு தெரிஞ்சு ‘தேடோ தேடு’ன்னு அலைஞ்சேன்... ஆனா அவ்வளவு ஈஸியா கிடைக்கல... காரணம்?... பெரியவர் சற்றே நிறுத்தினார்! அவர் கண்கள் பெரிதும் கலங்கி இருந்தன! ‘ஒண்ணுமில்லைடா... கொஞ்சம் அகங்காரத்துல நம்பளால இந்த மூலிகையை புடிச்சுட முடியாதான்னு நெனச்சேன்! அங்கதான் அகங்காரத்துல கொஞ்சம் தப்புப் பண்ணிட்டேன்! ஏன்னா தூரத்துலேந்து பார்த்தா மங்கலா கண்ணுக்குத் தெரியற மூலிகை, பக்கத்துல வந்தா தள்ளிப் போயிடும்.! சில இடத்துல பக்கத்துல தெரியுதேன்னு அதோட இலைகளைத் தொட்டுப் பார்க்கப் போனா, அது நிலம் புரண்டி மூலிகை மாதிரிச் சுருண்டு பூமிக்குள்ள பதுங்கிடும்... எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை... இப்படியே அந்த தெய்வீக மூலிகை கண்ணாமூச்சி வெளையாடி வெளையாடியே எனக்குப் பெரிய சோதனையா ஆயிடுச்சு! இதனால ரொம்ப மனசு ஒடிஞ்சு போய் அந்த மூலிகை எங்கே பூமிக்குள்ளாற மறஞ்சுதோ அங்கேயே அது பக்கத்துலேயே பத்மாசனம் போட்டுக் கிட்டு தியானத்துல உட்கார்ந்தேன்...”

Siddha’s voice poised for solution :- “ஏய்! அந்த மூலிகையைத் தொடறதுக்கு முன்னாடி உன்னையே ஸ்புடம் போட்டுப் பார்’... அப்படீன்னு சொல்லி திடீர்னு ஒரு அசரீரிக் குரல் கேட்டுச்சு! அலறி அடிச்சுக்கிட்டு கண்ணைத் திறந்து பாத்தா அடியேனுக்கு மூலிகை ரகசியமெல்லாம் சொல்லிக் கொடுத்த குருவோட உருவம் வானத்துல தெரிஞ்சுது...”

“அடியேன் ரொம்ப ஆடிப் போயிட்டேன்! ‘ஏய் நம்மால முடியும்னு நெனச்சா எந்த மூலிகையும் வேலை செய்யாது.... கண்ணுலேயும் படாது...! குருதான் அமைதியாச் சொன்னாரு..! திடீர்னு நறுக்குனு ஒரு பலத்த குட்டு தலையில விழுந்துச்சு! எனக்குப் பொறி கலங்கிடுச்சு.. அதோட அடியேனோட ஆணவமும் அடங்கிப் போச்சு! அப்புறம் அந்த மூலிகையைப் பூஜை பண்ணி கெஞ்சிக் கூத்தாடி குருவோட ஆசிர்வாதம் கேட்டு இதை எடுத்துக் கிட்டு வந்தேன்! ஒன்ணு, புரிஞ்சுக்கடா, நம்மனாலத்தான் நடக்குதுன்னு நெனச்சா நல்ல புண்ய சக்தி புஸ்ஸுனு கரைஞ்சிடும்! யுகம் யுகமாப் பெருசா வந்துக்கிட்டு இருக்கற ஒரு பெரிய கர்ம வினைக்கு மூலிகைப் பரிகாரம் தரதுக்கு உனக்குத் தகுதி இருக்கான்னு கேட்டு அடியேனுக்கு மூலிகை ஞானம் கொடுத்த சற்குரு தலையில வச்ச கொட்டு இன்னமும் வலிக்குதுடா!

பெரியவர் உணர்ச்சிப் பூர்வமாய்த் தன் தலையைத் தடவிக் கொடுத்தார்! திடீரென்று அவர் முகத்தில் நைஸான புன்னகை இழையோடுவதைக் கண்டு சிறுவன் அவரை (சிக்கென)ப் ‘பிடித்துக் கொண்டான்’ All in his characteristic divine flamboyance!

அதெல்லாம் சரி வாத்யாரே! பொய் சொல்லாமச் சொல்லு, உனக்கு ஏன் குட்டு விழுந்துச்சு? உனக்குத் தெரியாத மூலிகையே கிடையாது இந்த உலகத்துல! எல்லா மூலிகைக்கும் கட்டு மந்திரம், விடுப்பு மந்திரமும், பவ ஔஷத மந்திரமும் தெரிஞ்சவன் நீ! திருத்துறைப்பூண்டி ஸ்ரீபவ ஔஷதீஸ்வரர் கோயில்ல ஒரு மண்டலம் சாப்பிடாம விரதம் இருந்து ஸ்வாமி தரிசனம் கிடைச்ச உனக்கு ஏன் குட்டு விழுந்துச்சு?”

‘அதுக்குத் தான் சொன்னேனேடா, என்னால முடியும்னு நெனச்ச அகங்காரத்துக்கு விழுந்த குட்டுன்னு.!” ...

“இல்ல வாத்யாரே நீ பொய் சொல்ற... கொல்லூர் மூகாம்பிகை கிட்ட பேசறதைப் பார்த்துருக்கேன்!  இங்க தெனமும் அங்காளி கிட்ட பேசிக் கிட்டு இருக்கே! கும்பகோணம் மகாமகம் உற்சவம் வந்த போது மகாமகக் குளத்துல “ஜோதி விருட்சம்” மூலிகைச் சாறு சேர்க்கணும்னு சொல்லி, கொல்லி மலையில அடசலான காட்டுக்குள்ள மாளய பட்ச அமாவாசை இருட்டுல, நடு ராத்திரியில ஜோதி விருட்சம் மூலிகையைத் தேடப் போயிருந்தோமே, அப்ப நடுக் காட்டுல அங்க சக்தி வாய்ந்த கொல்லிப் பாவை அம்பாளை தரிசனம் பண்ணி ‘ஆத்தா!  இங்க ரொம்ப இருட்டா இருக்கு, ரொம்ப ரொம்ப பயமா இருக்கு ஆத்தா, பாம்பு பூச்சி பட்டையெல்லாம் இருக்கேன்னு சொல்லி சொல்லிக் கொல்லிப் பாவை அம்பாள் கிட்ட நேரேயே பேசி  அம்பாளும் அதுவும் பதில் தந்துச்சே! உடனேயே அங்க பெரிய சூரிய நட்சத்திரப் பிரகாசம் வந்து 10 மைல் தூரத்துக்கு ஒளிப் பிரகாசம் வந்ததை அடியேனே பார்த்துருக்கேனே! அப்படிப்பட்ட உனக்கா குட்டு விழுந்துச்சு? ”

சிறுவனின் வார்த்தைகளில் Innovative divine wisdom பொங்கியது! The boy scored points!  of course by the Siddha’s blessings!

GOOD, குட்டு! ... “ஒண்ணு தெரிஞ்சுக்கடா, இந்த ‘குட்டு’ ஸப்ஜெக்ட் உங்கிட்ட ஒரு ஆராய்ச்சி ஸப்ஜெக்ட்டாவே இருக்கட்டும்! அதை விலாவரியா விளக்கித்தான் ஆகணும்னு அவசியம் எங்களுக்குக் கிடையாது! சில மூலிகைகளுக்கு ஞான ப்ரகாச ஒளி உண்டு! அதெல்லாம் பக்கத்துல சற்குரு இருந்தாத்தான் அவர் தர ஞானக் கண்ணோட அந்த மூலிகையையே பார்க்க முடியும்! அவங்க தன்னோட வலது கைக்குள்ள அந்த மூலிகையை வச்சுப் பிழிஞ்சு வலது கை சூரிய (பாஸ்கர) விரலான மோதிர விரல் மூலமா சிரசுல ‘குட்டு’ வச்சு மோதிர விரல் அங்குலாஸ்திதி (விரல் வளைய ரேகைகள்) மூலமா தலையில இருக்கற சூரிய நாளத்தைத் தொட்டு உள்ளே இறக்குவாங்க! இப்படித்தான் அந்த மூலிகையோட ஞான ப்ரகாசத்தைப் பார்க்க வைப்பாங்க! அதுக்கப்புறம்தான் மூலிகையே கண்ல படும்! இதுதாண்டா குட்டுப் பட்டாலும் மோதிரக் கையினால குட்டுப் படணும்னு சொல்றது!  பெரியவர் கண்களைச் சிமிட்டிக் கொண்டு, தெய்வீகப் புன்னகையைச் சுமந்து, திடீரென்று சிறுவன் தலையில் நறுக்கென்று தலையில் கொட்டினார்! வலி தாங்காது சிறுவனுக்குக் கண்களில் நீர் பொங்கி (வெளி)ப் பார்வையை மறைத்திட....  சிறுவனுக்கு அரிய காட்சிகள் கிட்டின! பெரியவர் மலையில் மூலிகை தேடுவது.. கிடைக்காமல். தியானத்தில் அமர்வது.. வானில் அவருடைய மூலிகை குரு (பவ ஔஷதபாவன சித்தர்) தோன்றுவது... மூலிகையின் ஞான ப்ரகாசம் தோன்றுவது... அனைத்தையும் அந்த ‘ஞானக் குட்டின்’ தேவ சக்தி மூலமாகக் கண்டான்!

அவன் பரவசம் பொங்கி எழுந்து அவருடைய பாதங்களில் வீழ்ந்து நமஸ்கரித்தான்! “வாத்யாரே! பெரிய பாக்யம்..,” என்று ஏதோ சொல்ல வந்து தலையை உயர்த்திட.... ஆங்கே பெரியவரைக் காணோம்! ‘இவரைப் புரிந்து கொள்ளவே முடியவில்லையே!’ என்று ஆயிரத்தெட்டாவது முறை தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் சிறுவன்!

ஸ்ரீஔர்வர் மகரிஷி

நாம் அனைவரும் ஜாதி, மத, இன, குல, நாடு பேதமின்றி ஒவ்வொரு மகரிஷியின் வழி வந்தவர்களே! இதற்காகத்தான் சந்தியா வந்தன மந்திரங்களில் மஹரிஷிகளின் பாரம்பர்யங்களை நினைவூட்டி அவர்கள் பெயர்களைச் சொல்லி நமஸ்காரம் செய்வார்கள்! தான் இருக்குமிடமே தெரியாது மிகமிக எளிமையாக, அடக்கமாக, பணிவன்புடன் திகழும் அப்நவானர் மஹரிஷியின் திருமகனே ஔர்வர் மஹரிஷி! இவர் காலத்தில், அசுரர்கள், மஹரிஷிகளின் சந்ததிகளை அழிக்க எண்ணி கர்பிணிகளாய் இருந்த மஹரிஷி பத்னிகளைத் தேடி குழந்தை பிறந்தவுடன் அதனை அழிக்கத் திட்டமிட்டனர்.!

கர்பவதியான அப்நவானரின் மனைவி இறையருளை வேண்டிப் பெருந்தவம் பூண்டு காடு, மலை எங்கும் ஒளிந்து வாழ்ந்து தன் கர்பத்தையே தன் தொடைக்கு மாற்றிக் கொண்டு நூறாண்டுகள் கர்பம் தாங்கி “ஔர்வர்” மஹரிஷியைப் பெற்றெடுத்தாள்! கருவிலேயே நான்மறை ஞானத்தைக் கொண்டமையால் நூறாண்டுகள், தேவ ஜோதிகள், வேதாக்னி நிறைந்த மகரிஷி பத்னியின் திருவயிற்றிலும் உறைந்தமையால் கருவிலே திருவேதம் பூண்டவரானார்.! கர்பத்தில் இருக்கும்போதே வேத மழை பொழிந்தமையாலும் ஔர்வரின் தாய் காடு, மலை எங்கும் பாத யாத்திரை சென்றமையாலும் “கோதுணாண் பதுமன்” என்ற அணில் ரூபங்களை உடைய ஞான வேதிகள் அவரைக் காத்தனர் இவர்கள்! “ணா” என்ற சுழி பீஜாட்சர சக்திகளிலிருந்து உதித்தவர்கள்! ஔவர்வருடைய சிஷ்யர்களாக பிற்பாடு ஆன இந்த ஞானவேதிகள் (அணில் ரூபம் கொண்டவை) தாம் “கோதுணாண் பதுமன்” என்ற அரிய நாமத்தைப் பெற்றன.. அசுரர்கள், கர்பதியான அப்நாவனரின் பத்னியைத் தேடியபோது இந்த கோதுணாண் பதுமன் தாம் அவர்களை அடையாளம் கண்டு ஔர்வரின் அன்னையைக் காப்பாறினர்.. இவர்கள் யாவரும் சாகம்பர்ய யோகத்திலிருந்து “ணா” என்னும் பீஜாட்சரங்களில் இருந்து தோன்றியவர்கள்..!

“ணா” (நா)வில் எழும்பும் லலாடங்க யோகம்! :- மூன்று சுழி கொண்டதாக “ணா” நமக்குத் தமிழில் தோன்றினாலும் நாம் இங்கு குறிப்பிடுவது “ணா” என்னும் வேத ஸ்வரமாகும்! நாக்கினை உட்புறமாக இழுத்து மேல் வரிசை விதானத்தைத் தொட்டு எழும்புவதே “ணா” என்ற அட்சர ஸ்வர சப்தமாகும்.. இது லலாடங்க யோக சப்த சக்திகளையும் கொண்டதாம்.. லலாடங்க யோகம் என்பது நாக்கை நன்கு உள் இழுத்துத் தொண்டைக்குள் வைத்திருந்து அன்னம், ஆகாரம், நீரின்றித் தவம் புரிவதாம்.! எனவே ஞான வேதிகள் என்றழைக்கப்படும் கோதுணாண் பதுமன்கள் எப்போதும் ஔர்வர் மஹரிஷியின் ஆத்யந்த சிஷ்யர்களாய் பிரபஞ்சத்தில் நற்காரியத்தை ஆற்றுபவர்கள் ஆவர்! எந்த subject மிகவும் கடினமாக உங்களுக்குத் தோன்றுகின்றதோ, அப்பாடத்தின் முன் (அட்டைப் படம் காண்க) இப்படத்தை வைத்து ஔர்வர் மஹரிஷியின் அருளை வேண்டி ஞான வேதிகளாம் கோதுணாண் பதுமன்களைக் கண்டு “கண்” திறந்த நிலையில் ஜாக்ரதேவ தியானத்தை மேற்கொள்தலால் கோதுணாண் பதுமன்களின் ஒளியுடலில் இருந்து எழும் ஞானவேதப் பட்டை சக்தி உங்களுடைய கபாலச் செல்களுக்கு ஆக்கம் ஊட்டி நல்ல தெளிவைத் தரும்..!

ஔர்வர் பெருமான் தம் பூஜைகள், யோக வேள்விகள் மற்றும் யோக நிலைகளைக் கைக் கொள்ளும் ஞான வேத மண்டபமே (அட்டைப் படம் காண்க) “ஹாடோ” எனப்படும் Pagoda வகையான ஞான வதன பூஜா மண்டபமாம்! தேவ ஒளிக் கற்கள், பிரம்மேந்திரக் கல், Moonstone எனப்படும் நிலப் பிறைக் கல், சந்திர காந்தக் கற்கள் போன்றவற்றால் ஆனவை! இதில் மழைத் துளி போல் வேத மழைச் சாரல் மந்திர ஸ்வரங்களாக, வேத கானங்களாக பொழிந்து கொண்டிருக்கும்.. ஆனால் அவை தரையை அடைந்திடாது தரைக்கு முன் வாயு ஜோதியாய்ப் பிரபஞ்சத்தில் கரைந்து விடும்..! இங்கு காணப்படும் விருட்சங்கள் சக்தி அம்சங்கள் நிறைந்தவையாதலின் இவை யாவும் லலித பாவன சக்தியைப் பொழிந்து கொண்டிருப்பவை! இவற்றை தரிசிப்பதால் பெண்கள் அளப்பரிய சுமங்கலித்வ சக்தியைப் பெறுவர். லலித சோப சக்தி அம்ச விருட்சங்களில் ஒன்றுதாம் குரா வகை மரங்களாகும்..!

“குராவதீ” எனப் பெயர் கொண்ட ஔஷத வேதிகள் ஓர் அரிய பிராணி ரூபத்தில் (like koala) இந்த குரா வகைப் புனித மரங்களில் நோய்களைத் தீர்க்கின்ற ஆயுர்வேத மந்திரங்களை எப்போதும் ஓதியவாறு அஸ்வினி யோகத்தில் திளைக்கின்றனர். இவர்கள் வளர்பிறை முழுவதும், குரா மரத்தில் அஸ்வினி யோகத்தில் திளைத்திருப்பர்.. குராவதீ மிகுந்த அன்பு பூண்டவை! தம்மிடம் கருணை கொள்பவரிடம் வாஞ்சையுடன் ஒட்டிக் கொண்டு என்றும் பிரியாத மகத்தான அன்புடனும் உறைந்திடும்.!

ஔர்வர் தினந்தோறும் வழிபடுகின்ற தலங்களுள் திருஅண்ணாமலை, ஸ்ரீவைதீஸ்வர ஸ்வாமி, ஸ்ரீதன்வந்த்ரீ ஆலயங்கள் மற்றும் மன்னார்குடி அருகே திருத்துறைப்பூண்டி ஸ்ரீபவ ஔஷதீஸ்வரர் ஆலயம்.. மேலும் குரா மரம் தல விருட்சமாக உள்ள ஆலயங்களிலும், அஸ்வினி தேவர்கள், மருத்துவ தேவதைகளுடன் ஔஷத வேதிகளான குராவதீகளும் இணைந்து வழிபட்டு ஔஷத (நோய் நீக்கும்) சக்தியைப் பரவெளியில் பரப்புகின்றன.. குறிப்பாக கர்பிணிப் பெண்களுக்கு இந்த ஔஷத வேதிகளான குராவதீகள் நல்ல மருத்துவ சக்திகளை அளித்து வயிற்றில் குரா மூலிகைச் சாற்றினைத் தடவி கர்ப சிசுவிற்கு இறை ஆக்கம் அளிக்கின்றன..!

ஔர்வரின் தாய், அசுரர்களுக்கு அஞ்சி தம் கர்பத்தை வயிற்றிலிருந்து தொடைக்கு மாற்றிக் கொண்டபோது இக்குராவதீ ஔஷத வேதிகள்தாம் அருகிலிருந்து பிரசவத்தை நன்முறையில் நிறைவேற்றின! இவர்கள் வளர்பிறையில் குரா மரத்தில் யோகம் பூண்டு ஆதிமூலச் சந்திர கிரகத்திலிருந்து ஔஷத சக்திகளைக் கிரகித்துத் தேய்பிறையில் பூமியில் இறங்கிப் பல ஆலயங்களுக்கும் சென்று ஆங்கே அவற்றைப் பதித்து தாம் கிரகித்த ஔஷத சக்திகளை ஆலய வழிபாட்டிற்கு வரும் பக்தர்களுக்கு அளிக்கின்றனர்.! இவ்வாறு ஔர்வரைச் சார்ந்திருக்கும் ஞானவேதிகள், ஔஷத வேதிகள், வித்யா வேதிகள், சற்குண வேதிகள், வேத வேதிகள், புராண வேதிகள் என நிறைய உண்டு... ஸ்ரீபிருகு, ஸ்ரீஅத்ரி, ஸ்ரீச்யவனர், ஸ்ரீஅப்நவானர், ஸ்ரீஔர்வர் ஆகிய ஐந்து கோத்ராதிபதிகளை, ப்ரவரங்களை உடையோர் இந்த தெய்வீகப் படத்தை வைத்துத் தினந்தோறும் வழிபட வேண்டும்...!

இறைவன் படைத்த இப்பிரபஞ்சத்தில் இறைமை புனிதத்துடன் பூரித்துத் திளைக்கும் தலங்களே ஆலயங்களாயின! புனிதம் என்றால் சற்குணம் அதாவது எல்லாமே நல்லபடியாக உள்ளது என்று பொருள்.. புனித வடிவான மஹரிஷியர்க்கு இறைவியே புதல்வியாக வந்து உலகத்தில் அவதாரம் பூண்டு பக்தியுடன் வளர்ந்து இறைவனைத் திருமணம் பூண்ட அவதார லீலாத் தவங்கள் பல உண்டு... (ஆண்டாள், நாச்சியார் கோயில் தாயார்) ஔஷத வேதிகளான குராவதி பெண் மருத்துவத் துறையில் (Gynaecology)  சிறப்புடையவை ஆதலின் பிரசவத்துறை விசேஷ மருத்துவர்கள் இப்படத்தை பூஜைகளிலும் மருத்துவ மனைகளிலும் வைத்து வழிபட்டு வருதலால் பிரசவங்கள் நன்முறையில் நிறைவேறும்.!

அட்சர சுத்தோதக ரிஷி பல்லி

வந்தவாசி சிவாலயத்தில் அட்சர சுத்தோதக ரிஷி பல்லி (பின் அட்டைப் பட விளக்கம்) :- மனிதனோ, ஈயோ, எறும்போ எதுவாயினும் சரி ஒவ்வொரு ஜீவனுக்கும் ஆதிமூல தேகம் உண்டு! அந்தந்தப் பிராணி, தாவரத்திற்கும் சற்குருமார்கள் தேவதைகள், ரிஷிகள் உண்டு.. இவ்வகையில் பல்லி ஜீவன்களுக்கு எல்லாம் ஆதிமூலமான ஜீவப்ரகாச தேகத்தை அன்றும், இன்றும், என்றும் வடிவமைத்துத் தாங்கியிருப்பவரே வந்தவாசி சிவாலயத்தில் அருள் கூட்டும் அட்சர சுத்தோதக மஹரிஷியாவார்.! இவர் எப்போதும் புனிதத் தீர்த்தங்களில் நீராடி அட்சர சுத்தோதக யோகத்தில் திளைத்திருப்பவர். இவர் தீர்த்தமாடாத புண்ய நதிகளோ, தீர்த்தங்களோ பிரபஞ்சத்திலேயே இல்லை என்று சொல்லும் வண்ணம் அனைத்துத் தீர்த்தங்களிலும், புண்ய நதிகளிலும், புனிதமான சுனைகளிலும் நீராடி பல்லி வடிவு கொண்ட மகரிஷி இவரே, எவ்வாறு சுகப்ரம்ம மஹரிஷி கிளி முகத்தைக் கொண்டாரோ, வியாக்ர பாத மஹரிஷி புலிப் பாதங்களைப் பெற்றாரோ, இதேபோல அட்சர சுத்தோதக மஹரிஷியும் பல்லி வடிவம் கொண்டார்..!

வாசி கலைகள் என்றால் சுவாசிக்கும் காற்றின் அம்சங்கள், கோணங்கள், குணங்கள், என்று பொருள், நாம் சுவாசிக்கும் காற்றும் ரேசகம் (உள் வருவது), கும்பகம் (உள் இருப்பது), பூரகம் (வெளியில் வருவது) என்று மூன்று யோக நிலைகளாக நம்மையும் அறியாமல் நம்மிடம் அமைகின்றது. இறைவன் இந்த மூன்று யோக நிலைகளிலும் சிருஷ்டியை உருவாக்குகின்றார். ரேசக வாசி யோக நிலைக்கான சிருஷ்டி குணங்கள் நிறைந்த தலமே வந்தவாசி., அதாவது ரேசக யோகங்களைப் பூணுவதற்கான உத்தம பூமியே “வந்தவாசி”! சிவா தந்வ யோக நிலை என்ற ஒன்றும் உண்டு. தலை கீழாக நின்று ரேசக வாசியில் சுவாசத்தை ஒட்டுவதே சிவா தந்வ யோக நிலை.. அதாவது சிவபெருமான் கிராத மூர்த்தியாக சிருஷ்டியைத் தொடங்கும் போது வில் ஏந்திய (தநு – வில்) தந்வ யோக நிலை இதுவே.. இவ்விரண்டு அரிய யோக நிலைகளிலும் சிறப்புப் பெற்றவரே அட்சர சுத்தோதக மஹரிஷி. அவர் பல்லி வடிவம் பூண்டிடக் காரணம் மற்ற ஜீவன்களை விட நேராகவும், தலைகீழாகவும் ஒரே சீராகச் செல்லும் யோகத் தன்மை கொண்டதே பல்லியாம்..!

வந்தவாசி என்ற சொல்லைத் திருப்பிப் படித்துப் பாருங்கள்! “சிவா தந்வ” என்று வரும்.. (இறைவனின் ரேசக சுவாசம் உள்ளே) வந்தவாசியில்தாம் ரேசக யோகத்திலும், சிவா தந்வ யோகத்திலும் தலை சிறந்த அட்சர சுத்தோதக ரிஷி, பல்லி வடிவில் வந்தவாசி ஸ்ரீசற்புத்ரி சமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் குடிகொண்டு அருள்பாலிக்கின்றார். ஜோதிடர்களுக்கு தீர்க தரிசன சக்தியையும் வாக் சக்தியையும் அருளும் உத்தம மஹரிஷி! நீதிபதிகளுக்கும், வக்கீல்களுக்கும், வாக்குக் குற்றங்கள் ஏற்படாது நல்வாக்கினால் காரிய சித்தியைப் பெற உதவுபவர்.. தீர்ப்புக் கூறும் முன் நீதிபதிகள் வந்தவாசியில் அட்சர சுத்தோதக மஹரிஷியைத் தரிசித்துத் தீர்ப்பளித்தல் நன்மை பயக்கும்..!

பொய் கூறி ஏமாற்றி வாழ்க்கை நடத்தும் கணவன்மார்கள், மற்றும் வியாபாரிகள் திருந்திட உதவும் தரிசனம்! திடீர் பணக்காரர், திடீர் ஏழையாக வாழ்க்கையையே மாற்றி மாற்றி வாழ்ந்து சோர்ந்தவர்கள் மீண்டும் நன்னிலை அடைய உதவும் தரிசனம்! திக்கு வாய் மற்றும் ஊமைக் குணத்தால் வருத்தமுற்றோர் இங்கு மஹரிஷியை தரிசித்து வர நல்ல தீர்வுகள் கிட்டும்..! தினமும் சந்திர ஹோரை நேரம் மற்றும் அமாவாசை, பௌர்ணமி, மிருகசீரிஷ நட்சத்திரம், ஞாயிறு தினங்களில் பல்லி வடிவில் வந்தவாசி சிவாலயத்தில் அருள் கூட்டும் அட்சர சுத்தோதக மஹரிஷிக்கு செந்தூரம், குங்குமக் காப்பிட்டு வணங்கி பட்டாணி, வாழைக்காய் போன்ற தோல் உரித்து சமைக்கப்படுகின்ற காய்கறிகள் கலந்த உணவு, புளியோதரை அன்னம் போன்றவற்றை ஏழைகளுக்குத் தானமாக அளித்துவர மேற்கண்ட பலன்கள் கிட்டும்.!

நடராஜர் அபிஷேகம்

நடராஜர் அபிஷேக தினங்கள் என்பதானவை நடராஜப் பெருமானின் முக்கியமான ஆறு வகை நடன அவதாரிகைக் காலங்களைக் குறிப்பதாகும். வருடத்தில் ஆறு நாட்களே வருகின்ற அற்புதமான விசேஷ தினங்கள் என்பதால் இதுகாறும் சிவபூஜையை முறையாகச் செய்திடாதோர்க்கு, பல அரிய தரிசன, அபிஷேக, ஆராதனைப் பலாபலன்களைப் பெற்றுத் தருவதாக அமைவதே “நடராஜர் அபிஷேக தினம்” ஆகும்.!

ஆயுள் இறுதி வரை நல்ல தீர்கமான கண் பார்வையுடன் திகழ வேண்டுமென்றால் ஒவ்வொருவரும் கற்பூர ஆரத்தி, அபிஷேக, கார்த்திகை தீப கோயில் கலசம், பிரதோஷ நாயகர் போன்ற பல தரிசனங்களைப் பெற்றிருக்க வேண்டும்! இவற்றை முறையாகப் பெற்றுத் திருவருளைக் கூட்டிக் கொள்ளாதோர்க்குத் தக்க நிவர்த்தியைத் தந்து பக்தியுடன் துதிப்போர்க்குத் இப்பலாபலன்களை திரட்டித் தந்திடவே இறைப் பரம்பொருளே வருடத்திற்கு ஆறு முக்கியமான தேவ அபிஷேக நேரங்களைத் தந்துள்ளார்!

அறுநான்கு தலைமுறைக்கும் ஆகிய அபிஷேகம்! :- நடராஜர் அபிஷேக தினமான இன்று குறைந்தது 24 நடராஜ மூர்த்திகளைத் தரிசனம் செய்திட வேண்டும் என்ற சங்கல்பத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். நகரங்களில் இது எளிமையானதாக இருக்கலாம், கிராமங்களில், சிறு நகரங்களில்... என்ன செய்வது? 24 தெய்வ மூர்த்திகளுக்கோ அல்லது அரசு, ஆல், வேம்பு, புரசு, வில்வம், துளசி, கொன்றை, மா, பலா போன்ற 24 சமித்து விருட்சங்களுக்கோ மஞ்சள், குங்குமம் இட்டு வலம் வந்து வழிபட வேண்டும்!

இதற்குக் காரணம் யாதெனில், ஒரு தலைமுறை என்பது 24 முந்தைய தலைமுறைகளைக் குறிக்கின்றது.. ஒவ்வொருவரும் தம்முடைய 24 தலைமுறையினருக்கும் தர்ப்பணம் அளித்தாக வேண்டும்... ஆனால் மனிதனின் குறுகிய ஞாபக சக்தியைக் கருத்திற் கொண்டு இதனைத் தற்காலத்தில் 12 என அமைத்து விட்டனர். விடுபட்டுப் போனதால் அந்த எஞ்சிய 12 முந்தைய தலைமுறை மூதாதையர்கள் எவ்விதத் தர்ப்பண சக்தியும் இன்றித் தவிப்பர்!

ஸ்ரீநடராஜப் பெருமான்
பாபநாசம்

உம்முள் உறைந்து தரிசிக்கும் உத்தம மூதாதையர்!

எனவே மாதத் தர்ப்பணமோ, திதி, படையல், சிரார்த்த சக்திகளோ இல்லாது தவிக்கும் அந்த 12 தலை முறையினருக்கும் நற்கதி அளிக்கும் வகையில் நடராஜர் அபிஷேக தரிசன பலாபலன்கள் அமைகின்றன! இவ்விசேஷமான அபிஷேக தினத்தன்று 24 தலை முறையினருக்கும், பித்ருக்களாகி உத்தம நிலை அடைந்தோர்க்கும், பித்ரு நிலை அடையாதோர்க்கு வேறு நிலைகளில் இருப்போர்க்கும், மீண்டும் பிறவி பெற்றோர்க்கும் நடராஜர் அபிஷேக தரிசன பாக்கியங்களை உங்கள் மூலமாக மேலோர் நல்குகின்றனர்!

எனவே இன்று குறைந்தது 24 நடராஜ மூர்த்திகளை தரிசிப்பதால், அதனைத் தரிசிக்க வருகின்ற உங்களுடைய 24 தலைமுறையிலிருந்து எவரேனும் ஒருவராவது ஸ்தூலமாகவோ, சூட்சுமமாகவோ, உங்கள் உடலில் யோகச் சாயை கொண்டு காணும் பேறு பெறுகின்றனர்! மேலும் இன்று 24 நடராஜ மூர்த்திகளைத் தரிசித்து அன்னதானம், வஸ்திர தானம், போன்ற தான தருமங்களை மேற்கொள்வதலால் இவற்றின் பலாபலன்களாக விடுபட்டுப் போன தர்ப்பண பூஜைகளுக்கான பிராயச்சித்தமும் கிட்டும்.! ஸ்ரீநடராஜர் அபிஷேகத்திற்கான முக்கியத் தலங்கள் இராமநாதபுரம் அருகே உத்தரகோசமங்கை, மதுரை, சிதம்பரம், திருச்சி அருகேயுள்ள ஊட்டத்தூர், திருவாரூர், கோனேரிராஜபுரம், மன்னார்குடி அருகிலுள்ள திருக்காறாயில், சப்த விடங்கத் தலங்கள், நெல்லை ஸ்ரீநெல்லையப்பர் ஆலயம், சென்னை – திருவாலங்காடு, கும்பகோணம் அருகில் உள்ள உடையாளூர் , மற்றும் திருவாலங்காடு, திருக்குற்றாலம், ஆவுடையார் கோவில் போன்றவையாம்..! அடியார்களின் தரிசனத்திற்காக இங்கு சில நடராஜ மூர்த்திகளின் திருஉருவங்களை அளித்துள்ளோம்.

உடையார் பாளையத்தில் உன்னத சிலாக்கல் வடிவில் ஸ்ரீசிவகாமி சமேத ஸ்ரீநடராஜ மூர்த்தி! :- கும்பகோணம் அருகே, உடையார்பாளையத்தில் அஷ்ட திம்மக்கல் என்னும் அரிய மூலிகை சாரக் கல்லில் உருவான ஸ்ரீநடராஜப் பெருமான் அதி அற்புத சக்திகளைக் கொண்டவர் ஆவார்.. சுயம்பு பாணக் கல்லின் வேத கைலாச சக்திகள் நிறைந்த இச்சிலா உருவிற்கு மகத்தான அனுகிரஹ சக்திகள் நிறைந்த அளவில் பரிணமிக்கின்றன... மேலும் தொழுதை பிச்சைப் பாளை என்னும் மிகவும் அரிதான மூலிகை வேர்ச் சாற்றில் பலகோடி யுகங்கள் செறிந்த சிலாக் கல் ஆதலாலும், ஸ்ரீகாளியம்மன் எதிரே இருந்து அருள்பாலிப்பதாலும், ஆறு விசேஷ கால அபிஷேகங்களை முப்பத்து முக்கோடி தேவர்களும் சூட்சும ரீதியாக இங்கு கடைபிடித்து வருவதாலும் இதற்கு அபார சக்திகள் உண்டு..! இங்குள்ள கோயில் தீர்த்தத்தில் தினந்தோறும் குறித்த ஹோரையில், குறிப்பிட்ட சித்தர் பெருமான் தொழுதைப் பிச்சைப் பாளை மூலிகையின் மகத்தான சக்தியைப் பலவித பூஜா சக்திகளுடன் கலந்து இதன் வைத்திய சக்தியைப் பெருக்குகின்றார்கள்.. ஈர மடி தீர்த்த வழிபாடு என்னும் முறையில் இத்தீர்த்தத்தில் நீராடி, ஈர ஆடைகளுடன் ஆலயத்தை 21 முறை வலம் வந்து மாற்று உடை அணிந்து ஈர உடைகளைத் தானமாக அளிப்பதோடு மட்டுமல்லாமல் 32 விதமான அறங்களை இவ்வாலயத்தில் செய்து வருபவர்களுக்கு எத்தகைய கடுமையான, கொடுமையான நோய்களும் நிச்சயமாக குணம் அடையும், ஆழ்ந்த நம்பிக்கையுடன் கடைபிடித்திடில்!

உடையாளூர் ஸ்ரீநடராஜர் அபிஷேகம்

வருகின்ற ஸ்ரீநடராஜர் அபிஷேக தினத்தில் இங்கு அஷ்ட திம்மக்கல்லால் ஆன ஸ்ரீசிவகாமி சுந்தரி சமேத நடராஜப் பெருமானுடைய சிலா உருவத்திற்கு 32 விதமான அபிஷேக ஆராதனைகளைச் செய்து, ஏழைகளுக்கு கொடி வகைக் காய்கறி உணவு வகைகளைத் தானமாக அளித்து உங்களுடைய நோய்களுக்குத் தக்க நிவாரணத்தைப் பெற்றிடுவீர்களாக! 32 விதமான அபிஷேகங்கள் என்றவுடன் பயந்துவிடாதீர்கள். பலவிதமான எளிமையான ஹோம திரவியங்கள் கலந்த அபிஷேகங்களே நூற்றுக்கும் மேற்பட்டு உள்ளன.. காரிய சித்தியை தருகின்ற சிலாக்கல் உருவ ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீநடராஜ மூர்த்தி ஆதலாலும், அருகிலேயே மிகவும் அபூர்வமான ஐந்து பைரவ மூர்த்திகள் அருள்பாலிப்பதாலும் எதிரில் ஸ்ரீகாளி தேவியாய் அம்பாள் காட்சி தருவதாலும் அஷ்ட திக்கிலிருந்தும் காரிய சித்தி சக்திகள் பொங்கி வழியும் திருத்தலமாக உடையாளூர் சிவாலயம் விளங்குகின்றது..., நிரந்தரப் பதவி, நிலையான இல்லம் பெற்றிடவும் அருள்பாலிக்கும் அஷ்ட திம்ம சிலாக்கல்லால் ஆன அதி அற்புத மூர்த்தி!

சோமசஷ்டி

சாப விமோசனத்திற்குச் சந்திர பகவானின் வழிபாடுகள்! தட்சனுடைய சாபங்களைப் பெற்று சந்திர பகவான் தன்னுடைய பதினாறு கலைகளையும் இழந்தாரன்றோ! இதனால் அவர் மிகவும் வருத்தமுற்றுப் பல லோகங்களுக்கும் சென்று ஆழ்ந்த தவம் புரிந்து பல தேவதா மூர்த்திகளின் தரிசனங்களையும் பெற்றார்! பூலோகத்தில் ஆலய தரிசனம், தீர்த்த நீராடல், கலச தரிசனம், ஹோம பூஜைகள் போன்றவற்றை அவர் கடைபிடித்து வருகையில், சந்திர பகவான் எந்த லோகத்திற்குச் சென்றாலும் அங்கிருக்கின்ற ஐஸ்வர்யங்களும் தேய்ந்து மறையலாயின! எனவேதான் தேய்பிறையில் (கிருஷ்ண பட்சம்), திருமணம், சுபமுகூர்த்தம், கிரஹப் பிரவேசம் போன்று எந்த சுபகாரியங்களையும் வைத்திடக் கூடாது! தற்காலப் பஞ்சாங்கங்களில் தேய்பிறை நாட்களையும் சுபமுகூர்த்த நாளாகக் குறித்திருப்பது வேதனைக்கு உரியதாகும்..!

சந்திர பகவான் தேவ லோகத்திற்குச் சென்றபோது, அங்கிருந்த ஐஸ்வர்யங்களும் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து மறைந்திடவே, இதைக் கண்டு அஞ்சிய இந்திரன் சந்திர பகவானிடம், ‘ஸ்வாமி! தங்களுக்கு ஏற்பட்டுள்ள ஏதோ ஒரு சாபத்தினால் தாங்கள் செல்லும் இடமெல்லாம் ஐஸ்வர்ய பொக்கிஷங்கள் தேய்கின்றன! எனவே தாங்கள் அருள் கூர்ந்து இவ்விடத்தை விட்டு அகன்று எங்களுக்குப் பெருந்துணை புரிந்திட வேண்டும்.. என்று வேண்டிடவே, சந்திர பகவானும் வருந்தியவராய் எந்த லோகத்திற்கும் செல்ல முடியாதவராய்த் துடித்தார்..

நாரத முனிவர் தந்த நற்பரிகாரம்! :- இடையில் அவர் ஸ்ரீநாரத மாமுனிவரை தரிசித்துத் தம் நிலையை விளக்கிடவே, நாரத மாமுனிவரும் பத்ரை கரண யோக காலத்தில் கடைபிடிக்க வேண்டிய சில யோகாம்சங்களை உபதேசித்தார்! சிவபெருமானின் நெற்றி ஜோதியில் உதித்த முருகப் பெருமானை, கிருத்திகை நட்சத்திரத்தன்று தரிசித்து அவர் அளிக்கின்ற ஒளிப்பாதை வழியே சென்று திருக்கைலாயத்தை அடைந்து தக்க பிராயச்சித்தத்தைப் பெற்றிடுமாறும் அருள்வழி கூறினார்..! ஸ்ரீநாரத மகரிஷி அருளியது போல, சந்திர பகவான், முருகப் பெருமானுடைய ஜோதி தரிசனத்தைப் பெறுவதற்காக செவ்வாய் ஹோரை நேரம், செவ்வாய், மற்றும் கிருத்திகை நட்சத்திரக் காலம்தோறும் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து முருகத் தலங்களுக்கும், முருக லோகங்களுக்கும் சென்று வழிபட்டு வந்தார்.!

சந்திர பகவான் பெற்ற ஸ்கந்த பாத தரிசனம்! .... ஓரிடத்தில்.! அது அக்னிக்குரிய பத்ரை கரண நேரமாகையால் அங்கு அக்னி மூர்த்தியானவர் யோகாக்னியில் கடுந்தவத்தில் ஆழ்ந்திருந்தார்.. இதுவே காணுதற்கரிய திருக்காட்சி ஆயிற்றே! அனைத்துக் கோடி அக்னி மூர்த்திகளும் அங்கு பிரசன்னமாவதைக் கண்டு ஆச்சரியமுற்ற ஸ்ரீசந்திரபகவான் ஆங்கே சிவஜோதியில் உற்பவித்த முருகப் பெருமானுக்கு உரித்தான அனைத்து அபிஷேக ஆராதனைகளையும் அக்னி மூர்த்திகளின் சாட்சியாகக் கடைபிடித்து வீழ்ந்து வணங்கி எழுந்த போது அவருக்கு முருகப் பெருமானுடைய பாத ரட்சை தரிசனம் ஆங்கே கிட்டியது! இதற்கு ஸ்கந்த பாத ரட்சா மகா தரிசனம் என்று பெயர்... முருகப் பெருமானுடைய அரிய சூட்சும திருப்பாத தரிசனத்தைத் திருஅண்ணாமலை, திருக்கயிலாயம், கேதார்நாத் போன்ற திருத்தலங்களில் குருவருளால் பெற்றிடலாம்! ஆனால் திருஅண்ணாமலையில் சந்திர பகவான் கிரிவலம் வந்த போது அவருக்கு இந்த ஸ்கந்த பாத ரட்சா தரிசனம் கிட்டாமல் போயிற்று., காரணம் அதற்குரிய தெய்வீக சக்தியை, தபோபலன்களை, பத்ரை கரண மகா யோக சக்திகளை அப்போது அவர் பெறாமல் இருந்ததேயாம். இவற்றைப் பெற சந்திர பகவான் பலகோடி ஆண்டுகளாக அனுஷ்டித்த விரதமே சோமசஷ்டி விரதம் ஆயிற்று..!

சோம சஷ்டி விரதம் பூண்டு, முருகப் பெருமானின் அருளால் கிடைத்த பாதரட்சைகளைத் தலையில் சுமந்த வண்ணம் அருணாசல புனித பூமியை வலம் வந்த சந்திர பகவானுக்கு, அந்த யுக வ்ருஷ (விஷு) ஆண்டில் திங்களும், சஷ்டியும் கூடிய மகா சோம சஷ்டித் திருநாளில் முருகப் பெருமானின் பாதங்களோடு கூடிய தரிசனமும் அருணாசல புனித பூமியின் கிரிவலத்தில் கிட்டியது! பாத ரட்சைகளை அணிந்தவராய் முருகனுடைய திருப்பாதங்களுடன் கூடிய தரிசனத்தையே குஞ்சித பாத குரு சிவமு(ரு)க தரிசனம் என்றும் விளக்குவர்.. இங்குதாம் அருணாசல கிரிவலப் பாதையின் ‘சந்திர லிங்கம்’ அமைந்துள்ளது! ஆனால் தற்போது நடைமுறை வழிபாட்டில் இல்லை! தக்க நேரத்தில் இறையருளால் காட்ட பெறும்! ஸ்கந்த பாதத்தில் உதித்த, ஜ்வலித்த ஒளியைத் தொடர்ந்து சென்று திருக்கயிலாயத்தை அடைந்தார் சந்திர பகவான்.. ஸ்கந்த பாத ரட்சைகளைச் சந்திர  பகவான் தம் சிரசில் சுமந்து வருவதைக் கண்டதுமே அவற்றின் திவ்யமான ஜோதியால் திருக்கயிலாயக் கதவுகள் யாவும் தாமாகவே திறந்து சந்திர பகவானை வரவேற்றன., இதன் பிறகு கைலாயத்தில் அம்பிகையே அளித்த பல அறவழி முறைகளை, கரண யோகங்களைக் கடைபிடித்து மகா சோம சஷ்டி விரதப் பலன்களாக சந்திர பகவான், சிவபெருமானுடைய சிரசிலே மூன்றாம் பிறைச் சந்திரனாக என்றும் பிரகாசிக்கின்ற பாக்யம் பெற்றதை நாம் நன்கு அறிவோம்..!

விஸ்வ பாத மரப் பாத ரட்சைகள் தரும் மகத்தான யோக சக்திகள்! ::-  மரப் பாத ரட்சை என்பது விஸ்வ பாத மரம் போன்ற புனிதம் நிறைந்த மரத்தாலான பாத ரட்சைகளாம்! மகத்தான தெய்வீக சக்திகளைக் கொண்டவை.. மேல் வார் இல்லாது கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் மட்டும் உள்ள ஒரே ஒரு சிறிய மரக் குமிழை இறுக்கியவாறு நடந்திடுதல் பாத க்ரந்தி யோக வகையைச் சார்ந்ததாம்! பல மலைத் தலங்களில் கிரிவலத்தை மேற்கொள்ளும்போது குறித்த இடங்களில் விஸ்வ பாத மரத்தாலான பாத ரட்சைகளை அணிந்து கிரிவலம் வருவர்! கிரிவலத்தில் காலணிகளை அணியக் கூடாது எனும் நியதி இருந்தாலும், விஸ்வ பாத மரத்தால் செய்யப்பட்ட பாதரட்சையானது கால் கட்டை விரலுக்கும், கால் சுட்டு விரலுக்கும் இடையே ஒரேயோரு  மரக் குமிழ் அமைப்புடன் இருப்பதால் இதில் நடை பயில்தலே மகத்தான பாதக்ரந்தி யோகமாவதால் இவற்றை அணிந்து கிரிவலம் வந்திடிடலாம்! ஆனால் கிரிவலப் பகுதியில் குறித்த ஓரிடத்தில் இம்மரப் பாத ரட்சைகளை விட்டு விட வேண்டும்!

குருபாதரட்சைகள்

தினந்தோறும் குறைந்தது அரைமணி நேரம் இந்த மரப் பாதரட்சைகளை அணிந்து நடந்து பயிற்சித்திட உங்களுடைய பாத ரேகைகளுக்கு மகத்தான தெய்வீக சக்தி கிட்டுவதுடன், பத்ரி வாடக யோக சக்தியையும் நீங்கள் இதன் மூலம் பெற்றிடலாம்.., நன்கு பழகப் பழகக் கூடுதல் யோக சக்திகள் பலவும் நன்கு விருத்தி ஆகும்.! கால் கட்டை விரல் மற்றும் கால் ஆள்காட்டி விரல்களுக்கிடையே உள்ள மரக் குமிழ்கள் இறுக்கமான யோகச் சாயையால் உங்களுடைய உடலிலுள்ள அனைத்து நாடி நாளங்களையும் இறை ஆக்கம் பெறச் செய்து, பாத ரேகைகளுக்கு தேவ சக்தியும் கூட்டி, கபாலத்திலும், பாத கமல மூளைச் செல்களை ஆக்கப்படுத்தும் ஓர் அற்புத கரண யோகாசன முறையாக  இது அமைகின்றது! இன்றும் ஹிமாலயம், ரிஷிகேஷ் போன்ற இடங்களில் உள்ள புனிதமான துறவிகள் இத்தகைய பாத ரட்சைகளையே அணிந்திருப்பார்கள்.! திருக்கயிலை கிரிவலத்தில் புனிதமான திபெத் லாமாத் துறவிகள் இத்தகைய விஸ்வ பாத மரப் பாத ரட்சைகளை அணிந்து கிரிவலம் வந்து, தாங்கள் அணிந்திருக்கின்ற அனைத்து உடைகளையும், பாத ரட்சைகளையும், கிரிவலப் பாதையில் விஸ்வ பாத மரமருகே அர்ப்பணித்திடுவர்.. திருக்கயிலாயத்தில் வலம் வந்து பாத ரட்சைகளை அங்கேயே துறத்தலே நியதியாகும்..!

இவ்வாறாக சந்திர பகவான் திருக்கயிலாய தரிசனம் பெற்றுத் தம் சாபத்திற்குப் பரிகாரம் பெறக் காரணமே, சந்திர பகவான் கடைபிடித்த சோம சஷ்டி விரதமாம்! எனவே தினந்தோறும் மரப் பாத ரட்சைகளை அணிந்து நடை கூட்டிப் பெறுதற்கரிய பாத க்ரந்தி யோக சக்தி, பத்ரி வாடக யோக சக்தி மற்றும் அரிய யோக சக்திகளைப் பெற்றிடுங்கள்! சோம சஷ்டி முறையை இவ்விதழில் கண்டு கடைபிடித்துப் பயன்பெறுக!  இத்தகைய அரிய மரப் பாத ரட்சைகள் ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயங்களில் கிடைக்கும்..!

ஸ்ரீபூமிநாதர் ஸ்ரீநடராஜர் ஸ்ரீஅங்கவளநாயகி திருநல்லம் கோனேரிராஜபுரம்

சோம சந்திர சஷ்டி விரதம்  - சோம சந்திர சஷ்டி விரத நாளாகிய இன்று சஷ்டி விரதம் போல் உண்ணா நோன்பிருந்திடுக! சோமனாகிய சந்திரனுக்குரிய நாளாதலின் இன்று வெள்ளை ஆடை தரித்தல் விசேஷமானது! பெண்கள் வெள்ளைப் பூக்களைத் தாமே கோர்த்து முருகனுக்குச் சார்த்தி பிரசாதமாகப் பெற்று தலையில் ஆறு சரங்களாக நாள் முழுதும் அணிதல் வேண்டும்! ஆலயத்திலும், இல்லத்திலும், முருகனுக்கு வெள்ளைத் தாமரை சார்த்துதல் மிகவும் விசேஷமானது! நல்முத்து, மல்லிகை, சம்பங்கி, வெள்ளி நாணயங்களால் (வெண்மையான அர்ச்சனைப் பொருள்) முருகனுடைய 1008 நாமங்களை அர்ச்சித்துத் தேங்காய் சாதம், வெண் பொங்கல், தயிர் சாதம் படைத்தல் சிறப்பானதாம்! இன்று ஸ்ரீஆதி சங்கரரின் சுப்ரமண்ய புஜங்கத் துதிகளை ஓதுதலால் கடுமையான நோய்களுக்குத் தக்க நிவாரணம் கிடைக்கும்! தமிழில் வள்ளலாருடைய கந்த கோட்டம் உறை முருகப் பெருமானின் துதிகளை ஓதிடுக! உண்ணா நோன்பினை தயிர் சாதம் சற்று உண்டு நிறைவு செய்திடுக!

மரப் பாத ரட்சை நடைதரும் மகத்தான யோக சக்திகள்! : உங்கள் வாழ்க்கையில் மரத்தாலான பாதரட்சைகளை இன்று முதலேனும் யோக ரீதியாகப் பயன்படுத்தத் தொடங்குங்கள்.. சோம சஷ்டியாகிய, சஷ்டி திதி கூடும் இன்றையை திங்கட் கிழமையில் சந்திர ஹோரை நேரத்தில் (காலை 6-7) மரத்தாலான பாதரட்சைகளைப் பூஜையில் வைத்து அவைகட்கு உரித்தான பாதுகா சகஸ்ர நாமத் தோத்திரங்களையும், கீழ்க் கண்ட துதிகளையும் ஓதி குறைந்தது ஒரு மணி நேரம் பூஜிக்க வேண்டும்..! மரத்தாலான பாதரட்சைகளுக்கு மஞ்சள், சந்தனம் இடல் வேண்டும்.. அணிவதற்கு முன்னர் தான் மரப் பாத ரட்சைகளுக்குப் பூஜை செய்ய வேண்டுமே தவிர அணிந்த பின் அதனைப் பூஜையில் வைக்கக் கூடாது... பூஜையில் வைக்கப்படக் கூடிய பாதரட்சை குரு, மஹான், சித்தர்கள், உத்தமப் பெரியோர்களின் திருப்பாதம் பட்ட பாத ரட்சைகளே ஆகும்.. பாதரட்சைக்கு அர்ச்சனை செய்து பூஜித்து 12 முறை வலம் வந்து, பாதுகா சஹஸ்ர மந்திரங்களை ஓதித் தக்க பெரியோரிடம் (80 வயதுக்கு மேற்பட்ட பக்தி நிறைந்த பழுத்த தம்பதியினர்) கொடுத்து அவர்கள் ஓரிரு அடிகள் எடுத்து வைத்த பின் நீங்கள் பயன்படுத்த ஆரம்பியுங்கள்..!

முதலில் மிகவும் சிரமமாக இருக்கும். இதனைச் சாதாரணமான காலணி போல் எண்ணி அணிந்து அசுத்தம் செய்யாதீர்கள்... வீட்டிற்குள் அல்லது நல்ல பரவெளியில் நடந்து பயிலுங்கள்... தினமும் பாதரட்சையைக் கழுவி சுத்தம் செய்து பத்திரப்படுத்துங்கள்.. நன்கு பழகிய பின் வெளியே செல்லும்போது நீங்கள் இந்தப் பாதரட்சைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.. ஆனால் இதற்குப் பல மாதங்கள், வருடங்கள் கூட ஆகலாம்... பொதுவாக சந்திர தசை, சந்திர புத்தியில் உள்ளோர் சந்திராஷ்டம தினங்களில் இத்தகைய பூஜைகளைத் தொடர்ந்து நிறைவேற்றுதல் வேண்டும்... சந்திர பகவான் திருக்கயிலாய தரிசனம் பெற்றுத் தம்முடைய கலைகள் தேய்வதற்கான சாபத்திற்குப் பரிகாரம் பெறக் காரணமே, அவர் பெற்ற ஷண்முகப் பெருமானுடைய சோம சஷ்டி ரட்சா பாதுகையின் சக்தியால்தாம்! தான் பெற்ற தெய்வீகப் பரமானந்த அனுபூதிகளை பூலோக மக்கள் யாவரும் பெறும் பொருட்டுச் சந்திர பகவான் மானுட உருவத்தில் அனைத்து அண்டங்களிலும், சோம சஷ்டி ரக்ஷப் பாதுகையை அணிந்து யாத்திரை புரிந்து அனைவருக்கும் இந்தப் பாத ரட்சை பற்றிய மகிமையை எடுத்து விளக்கினார்.!

சந்திராஷ்டம தோஷம் போக்கும் மரப் பாத ரட்சை யோகம்! :- பாதுகைகளை அணிந்து பாதுகா பத்ர யோக நடை புரிதலால், இதுவரையில் சந்திராஷ்டம தினங்களுக்கு உரித்தான தோஷ நிவர்த்தி பெறாதோர், நன்முறையில் பரிகாரம் பெற நல்வழிகிட்டும்.. அனைவருக்கும் மாதத்தில் இரண்டே கால் நாட்களுக்கு சந்திராஷ்டம தினம் அமையும் என்பதை அறிவீர்கள்... இப்பாத ரட்சை நடை சந்திராஷ்டம தினத்தின் மனோநிலை விளைவுகளைத் தணித்து, ரக்ஷை போல் காப்பாற்றும், எனவே சந்திராஷ்டம தினங்களில், இப்பாத ரட்சைகளை நாள் முழுதும் அணிந்து கொள்தலும் சிறப்பானதாகும்... மற்ற நாட்களில் இதை அணிந்து அரை மணி நேரம் யோகம் பயின்றால், உங்களுக்குரித்தான சந்திராஷ்டம தினங்களில் 3, 5 மணி நேரம் கூடவே அணிந்து கொள்ளுங்கள்.. அல்லது உங்கள் அலுவலகப் பையில் இப்பாதரட்சைகளை வைத்துக் கொண்டு சாதாரண காலணி அணிந்து சென்று அலுவலக நேரத்தில் சாதாரணக் காலணிகளை கழற்றி விட்டுப் பாதரட்சைகளை அணிந்து கொள்ளுங்கள்...!

சந்திராஷ்டம தினங்களில் நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு இந்தப் பாதரட்சைகளை அணிந்து செல்கிறீர்களோ, அந்த அளவிற்கு சந்திராஷ்டம தின விளைவுகளிலிருந்து நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள்.. இதே போல் சந்திர தசை, சந்திர புக்தியுள்ளோரும் இந்த காலங்களில், இப்பாதரட்சைகள் அணிந்து தினமும் யோகம் பயில வேண்டும், இதனால் தோஷ விளைவுகள் தணியக்கூடும்...!

காலணிகளின் தோஷம் நீக்குவீர்!

சஷ்டி திதியே புதுக் காலணிகளை அணிவதற்கு உகந்த நாள்! புதனும், சஷ்டியும் கூடிய நாள் பெரியோர்களுடைய பாத பூஜைக்கு உகந்த நன்னாள்! நல்ல வேலையில் நிலைத்திட, அல்லது வியாபாரத்தில் நன்கு நிலை பெற்றிட சஷ்டி திதியில் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து, கிரிவலப் பாதையில் சூரிய லிங்கத்தை அடுத்து வரும் ஸ்ரீருத்ர பாதத்திற்குப் பூஜைகள் செய்திட வேண்டும்! பொதுவாக புதிதாக கார், வண்டி வாங்கும்போது ஆலயங்களில் வாகன பூஜை மற்றும் பலவிதமான பூஜைகளை மேற்கொள்கின்றோம் அல்லவா? இதேபோல, காலணிகளை வாங்கிய உடனேயே டக்கென எடுத்து மாட்டிக் கொள்ளக் கூடாது, புனிதமான ஆத்மா உறைகின்ற நம் உடலைத் தாங்கும் பாக்யத்தைக் காலணிகள் பெறுகின்றன என்றால் அதற்கு உரித்தான நற்கர்ம வினைகளை அது தாங்கி வந்திருக்க வேண்டும் அல்லவா? யார் எந்தக் காலணிகளை அணிய வேண்டும் எனும் நியதியுடன் தான் ஒவ்வொரு காலணியும் உருவாகிறது...!

சஷ்டியில் புதுக் காலணி அணிந்திடுக! : திடீரென்று செருப்பு அறுந்துவிட்டால் உடனே புதியது அணிய வேண்டுமே என யோசிக்காதீர்கள்.. முன்னரே காலணிகளை வாங்கி சஷ்டி திதியில் மந்திரப் பதனம் செய்து அணிந்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.. புதுக் காலணியில் உங்கள் முதல் நடை அன்னதானம், கோயில் யாத்திரை போன்ற நற்காரியங்களுக்காக இருக்கட்டும்! என்றேனும் உங்கள் செருப்பு அறுந்தால், ஏற்கெனவே மந்திரம் ஓதிப் பதனம் செய்யப்பட்ட, சஷ்டி திதியில் ஆரம்பம் செய்யப்பட்ட புதுக் காலணிகளை அணிந்து கொள்ளுங்கள்.. மருதாணி இட்ட பாதங்களுடன் புதுக் காலணிகளை அணிந்திடில் அவற்றின் தோஷங்கள் தணியும்! வழியில் செருப்பு அறுந்திட்டால்... செருப்பின்றிச் சற்றுக் காலாற நடந்துதான் பாருங்களேன்! இக்கட்டான நிலைகளில் வழியில் இரண்டு ஜோடி செருப்புகளை வாங்கி ஒன்றை தானமளித்து மற்றொரு ஜதையை அணிந்து கொண்டால் இதன் தான தர்மப் பலன்கள் புதுக் காலணியின் தோஷங்களை நீக்கிடும் அல்லவா!

நாம் சாதாரணமாக நினைப்பது போல் காலணிகள், நாற்காலிகள் போன்றவை உயிரற்ற பொருட்களுமல்ல! நாம் அணியும் காலணி, ஆடை, மோதிரம், சங்கிலி, கடிகாரம் போன்ற அனைத்திற்கும் நமக்கும் பூர்வ ஜென்மத் தொடர்புகள் உண்டு.. இவ்வகையில் நாம் அணியப் போகும், புதுக் காலணிகளில் உள்ள தோஷங்கள் நீங்கிட, சில மந்திரங்களை ஜெபித்து மந்திர பதனம் செய்து குறித்த இடங்களில் வைத்து அணிதலே சிறப்பானதாகும்.!

காலணிகளின் அபரிமித தோஷங்கள் நீங்கிட... தாமாக, இயற்கையாக இறந்த விலங்குகளின் தோலாலான காலணிகளுக்குக் கூட மந்திர பதனம் செய்து அதில் உள்ள அபர மத தோஷங்களை நீக்கிய பின்னரே அணியலாம்.. புதிய காலணிகளை வாங்கியவுடன் முதல் இரண்டு, மூன்று நாட்களுக்கு உங்கள் அன்றாட நிகழ்ச்சியில் ஏற்படும் மாறுதல்களை உன்னித்துக் கவனியுங்கள்... நீங்கள் அணிகின்ற காலணிகள் வதைக்கப்பட்ட மிருகங்களின் தோல் மூலம் செய்யப்பட்டது, அது வந்த வழி சரியில்லை என்றால், நிச்சயமாக அதன் சோகமயப் பிம்பம் உங்கள் வாழ்வில் நிச்சயமாகப் படியும்..! ஆனால், அலுவலகம், தொழிற்சாலைகளில் தவிர்க்க முடியாத நிலையில் தோல் காலணி, ஷூக்களை அணிய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் என்ன செய்வது? என்ன இருந்தாலும் ஷு அணிவது என்பது நம் பாரதப் பண்பாட்டிற்கு உரித்தானது இல்லையே? வெளியிலிருந்து இரவல் வாங்கப்பட்ட அதி நவீனப் பழக்கம் தானே இது... ஷூ அணிய வேண்டியவாறு தவிர்க்க ,முடியாத நிர்பந்தம் ஏற்பட்டால் நீங்கள் ஒரு ஜோடி ஷு வாங்கித் தானமாக அளித்து விடுங்கள்.. இந்த காலணி தானப் புண்ய சக்தியால் ஓரளவு கர்மவினைகள் நம்மைத் தாக்கா வண்ணம் நாம் பாதுகாப்படைவோம்.. எப்போதும் காலணி, ஷூக்களை அணிந்து கொண்டிருக்காமல் அரை மணி நேரத்திற்கு ஒரு முறையேனும் பாத ரேகைகள் சிறிது நேரமாவது பூமியில் பரவும்படி வெற்றுக் காலுடன் இருத்தலே சிறப்பானதாம்! எனவே சாதாரணமாக எப்போதும் காலணிகளை நீங்கள் அணியும் பழக்கம் இருந்தாலும் அவற்றை அடிக்கடிக் கழற்றி வைத்து நிலத்தின் மேல் உங்கள் பாத ரேகைகள் படும்படி வேலை செய்யுங்கள்.. பாத ரேகை மகிமை பற்றிக் கடந்த ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் நன்கு விளக்கியுள்ளோம்..!

பாத யாத்திரை தீர்க்கும் பாதணி தோஷங்கள்! மாதந்தோறும் பாதணிகளையும் தானமளித்தால் தான் உங்களுக்குப் பாத நோய்கள் ஏற்படாது. தற்காலத்தில் நிரந்தரமற்ற பணி, தற்காலிக வேலை, அடிக்கடி வாடகை வீடு மாறுதல், சொந்த வீடு இருந்தும் அங்கு குடியிருக்க இயலாமை மற்றும் பலவிதமான பாத (கால்) நோய்களால் வாடுவோர்க்கு மூலத் தீவினைக் கர்மமாக விளங்குவது என்னவெனில், அவர்கள் காலணிகள் தானம் மூலம் சேர வேண்டிய புண்ய சக்தியைச் சரியாகப் பெறாததாகும்... இதற்காகத்தான் அடிப் பிரதட்சிணம், சபரிமலை யாத்திரை, போன்ற பாதங்களாலான பலவிதமான பிரார்த்தனைகளை நம் பெரியோர் நமக்கு அளித்துள்ளனர். ஒருவிதத்தில் ஒரு மண்டலமான 48 நாட்கள், பழநி, திருப்பதி, சபரி மலை விரதம் மேற்கொள்வதானது ஏனைய நாட்களில் நீங்கள் வதைக்கப்பட்ட மிருகங்களின் தோலாலான காலணிகளை அணிவதால் ஏற்படுகின்ற பலவித சாபங்களுக்கு, பாவங்களுக்குப் பிராயசித்தம் அளிப்பதாய் இறைவனே உங்களுக்கு அளித்துள்ள பாத யாத்ரா விரத பூஜை என்பது குறிப்பிடத் தக்கதாகும்...!

திருப்பதி தரிசன முறை! ஒவ்வொரு  சஷ்டி திதியிலும், பாதாள லோகத்திலுள்ள அனைத்து தேவதா மூர்த்திகளும், பூலோகத்திற்கு வந்து பல இடங்களிலும் உள்ள ஸ்ரீராம, சிவ பாதங்களுக்குப் பூஜை செய்கின்றார்கள்.. இது மட்டுமின்றி பாத பங்கஜ லோகம் என்ற லோகமும் உண்டு.. இங்கு அனைத்து தெய்வ மூர்த்திகளுடைய பாத தரிசனங்களைப் பெற்றிடலாம்... இப்பாத பங்கஜ லோகத்தின் ஆதி தேவ மூர்த்தியாக விளங்குபவரே திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாள் ஆவார் காரணம் இங்குதாம் ஸ்ரீமகாலட்சுமி தேவி, சுவாமிக்கு நித்ய பாத பூஜை செய்கின்றாள்! எந்த ஒரு மூர்த்தியையுமே தரிசிக்கும் போது அவருக்கு உரித்தான தரிசன முறைகளை அறிந்து தரிசிப்பதால் பலா பலன்கள் பரிபூரணமாகக் கிட்டும்.. சித்புருஷர்கள் அளிக்கும் தரிசன முறையில் முதலில் அவர்தம் பாத தரிசனமே பெரிதும் போற்றப்படுகின்றது...  திருப்பதிப் பெருமாளைத் தரிசிக்கும் முறையாக முதலில், திருப்பதி க்ஷேத்திரத்தின் திருப்பாதமாக விளங்கும் திருமலையில் தாயாரை சேவித்துப் பின் திருப்பதிக்குச் சென்று திருப்பதிப் பெருமாளை தரிசிக்கும்போது முதலில் பெருமாளின் திருப்பாதத்தில் இருந்து சிறிது, சிறிதாக சிரசு வரை ஆனந்தமாக தரிசிக்க வேண்டும்! இதற்காக நீங்கள் க்யூவில் நிற்கும் போதே பெருமாள் பதத்தையும், பெருமாளின் திருப் பாதத்தையும் சிந்தித்திடுக..! நாம் காலணிகள் அணிவதற்கான மேலும் பல ஆன்மீக விதி முறைகள் உண்டு.. இவற்றைத் தக்க சற்குருமார்களிடம் பெற்றுக் கடைபிடித்துப் பயனுறுங்கள்..!

நவராத்திரி

நவராத்திரி கொலு பொம்மைகளின் தெய்வீக மகத்துவம்

நவராத்திரி கொலு என்பது குடிசை முதல் மாடமாளிகை வரை அனைத்து இல்லங்களிலும் கொலு வைத்துக் கொண்டாடப் படவேண்டிய மிகவும் முக்கியமான சுபமங்களப் பண்டிகையாகும்.. நமக்குக் கொலு பொம்மை வாங்குவதற்கு வசதி இல்லையே என்று எண்ணாதீர்கள்... உங்கள் வீட்டில் இருக்கின்ற சாமான்கள், பலகைகள், பெட்டிகளை வைத்துக் கொண்டு சுத்தமான ஒரு இடத்தில் 1, 3, 5, 9 என ஒற்றைப் படை எண்ணில் கொலுப் படிகளை அமைத்து உங்களால் இயன்ற கொலு பொம்மைகளை 3, 4, 5 என எந்த சிறு எண்ணிக்கையாக இருந்தாலும் நற்கொலுவாக வைத்து வழிபடுங்கள்..!

சிறு தட்டுகளில் அரிசி, நவ தானியங்கள், எள், நெல் பரப்பி வைப்பது கூட கொலுவிற்குப் புனிதத்தை ஏற்படுத்துவதாகும்.. அனைத்து தெய்வ மூர்த்திகளின் வடிவங்கள், மஹரிஷி, சித்புருஷர், யோகியருடைய உருவங்கள் அனைத்தையும் கொலுவில் வைத்திடுங்கள்.. நவராத்திரியின் ஒன்பது தினங்களுமே அனைத்து அம்பிகையினருமே பூலோகத்திற்கு வந்து பல இடங்களிலும் பூஜிப்பதால் அவர்களுடைய திருப் பாதங்களிலிருந்து எழுகின்ற தெய்வீக அருள் ரேகைகளுடன் நவராத்திரியின் ஒன்பது தினங்களுமே தெய்வீக விண்ணில் பிரகாசிக்கின்றன.. இவை வீட்டு கொலுவிலும் நிறையும்..

வீட்டில் பரிச் சுடர் யோக சக்தி நிரவட்டும்! இதனால் ஏனைய நாட்களை விட இந்த ஒன்பது நாட்களில் பரவெளியில் உள்ள காற்று மண்டலத்தில் பலவிதமான புது தேவ சக்திகள் நிறைந்து இருப்பதை நீங்கள் கண் கூடாக உணர்ந்திடலாம்... கொலு என்பது இறைமையைப் பரப்புகின்ற வடிவங்களின் தொகுப்பு ஆகும்.. பொதுவாக நவராத்ரி கொலுவிலுள்ள பொம்மைகளை அசைக்காது நிலையாக இருக்கின்ற நிலையிலேயே பரிச்சுடர் யோக சக்தியில் உங்கள் இல்லமானது திளைக்கட்டும்..!

அதாவது அடிக்கடி பொம்மைகளை அசைத்தோ, இடம் மாற்றி வைத்தோ அவற்றின் பரிச்சுடர் யோக நிலையை கலைத்து விடாதீர்கள்... நீங்கள் ஒரு சிறு மண் பிள்ளையாரை வைத்தால் கூட அதற்கும் கூட பரிச்சுடர் யோக தெய்வ நிலை கூடி விடுகின்றது... எனவே, நவராத்திரி கொலு அமைப்பது என்பது உங்கள் வீட்டில் எப்போதும் பரிச்சுடர் யோக இறைச் சுடர்கள் பரிணமித்து இல்லத்தையும், பரவெளியையும் தூய்மைப்படுத்துவதற்காகவே! பொதுவாக, தினந்தோறும் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரமாவது நீங்கள், யோக, தியானப் பயிற்சிகளில் ஈடுபடுதல் வேண்டும்.. ஆனால் ஆசனம், யோகம், முத்திரைகள் போன்றவற்றைப் பலரும் மறந்துவிட்ட நிலையில் எந்த இல்லத்திலுமே தியான சக்திகள் நிலை பெறாமல் போய்விடுவதால் தான் வீட்டில் மனக் குழப்பங்களும், பிரச்னைகளும் தோன்றுகின்றன.!

நவராத்திரி கொலு நல்கும் தியான அமைதி! :- தியான கட்டமே இல்லாமல் போய்விட்ட தினசரி வாழ்க்கையில் எதன் மூலமாக நீங்கள் மன அமைதியைப் பெற முடியும்? இதற்காகத்தான் நவராத்ரி கொலு மூலம், தியான சக்திகளை, யோக ஊட்டச் சக்திகளை இல்லத்தில் உருவாக்கி நிரப்புவதற்காகத்தான் கொலுவில் பொம்மைகள் பரிச்சுடர் யோக நிலையில் வைக்கப்படுகின்றன.. ஒரு சிறு மரப்பாச்சி உருவை கொலுவில் வைத்தால் கூட அதுவும் பரிச்சுடர் யோக தேவ ஒளியினைப் பரப்பிக் கொண்டு இருக்கும்... நவராத்திரியின் ஒன்பது தினங்களிலும் அவரவர் வசதிக்கு ஏற்ப ஜாதி, மத, குல, இன பேதமின்றி சுமங்கலிகளுக்கு வெற்றிலை, தாம்பூலம் ரவிக்கைத் துணி தான தருமங்களையும் சுபமங்களப் பொருட்களையும் அளித்திடுதல் வேண்டும்... கண்ணாடி, சீப்பு, வளையல், மருதாணி, மஞ்சள், குங்குமம், கால் மெட்டிகள் போன்ற சுபமங்களப் பொருட்களை ஏழைகளுக்குத் தானமாக அளித்தலால் சுமங்கலித்வ சக்தி பெருகுவதோடு மட்டுமல்லாமல் கொலுவில் இருக்கின்ற பல தெய்வ மூர்த்திகளின் திருச்சந்நிதியில் இறைசாட்சியாக இத்தகைய தான தருமங்கள் நிகழ்வதால் அவற்றிற்கு மகத்தான தான தருமப் பலன்களும், இப்பூவுலகில் சுமங்கலித்வ சக்திகளும் பல்கிப் பெருகுகின்றன..

மேலும், எத்தனையோ ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர் மன அமைதியின்றி வாழ்கின்ற போது அச்சுமங்கலிப் பெண்களையும் ஜாதி, சமய பேதமின்றி உங்கள் இல்லத்திற்கு அழைத்தோ அல்லது ஆலயங்களில் ஏழைகளுக்கோ சுபமங்களப் பொருட்களை இறைப் பிரசாதமாக அளிக்கின்றபோது, அவர்களுடைய வாழ்விலும் சுமங்கலித்வ வசந்தம் பொங்கும் பொருட்டுத் தக்க மன நிம்மதியைத் தந்தருள்வதாக மகத்தான இறைச் சேவையாக அமைவதே நவராத்திரி கொலு உற்சவமாகும்..!

கொலு பொம்மைகள் தானம்! :- வசதி உள்ளோர் ஏழை மக்களுக்குக் குறைந்தது பத்து தெய்வீக பொம்மைகளையாவது வாங்கி தானம் அளித்து அனைத்து இல்லங்களிலும் கொலு அமையுமாறு செய்வது மகத்தான இறைச் சேவையாகும்... உங்கள் வீட்டிற்கென கொலு பொம்மைகள் மற்றும் ஆடைகள் வாங்கும்போது தானத்திற்கு என மற்றொரு செட் வாங்கி வைத்து உடனடியாகத் தானமளித்திடுங்கள்... குடிசைகளில் வாழ்கின்ற பாமர ஏழைகளுக்கும் கொலு வைக்க வேண்டிய அத்யாவசியத்தை உணர்வித்திடுங்கள்! இருக்கின்ற இடத்தில் ஒரு மூலையில் ஒன்று அல்லது மூன்று படிக்கட்டுகளிலேனும் தெய்வ மூர்த்திகளின் பொம்மைகளை வைத்துச் சிறு அளவில் கோடிக்கணக்கான இல்லங்களில் நவராத்திரி கொலு பூஜை கொண்டாடப்பட்டால்தான் நாட்டில் பரிச்சுடர் யோக சக்திகள் பெருகி, வான்வெளியே புனிதமாகி அனைத்து மக்களும் நல்லொழுக்கத்தில் திளைத்திட சமுதாயத்திலும் இறையமைதி பூத்துக் குலுங்கும்!

நீங்கள் மட்டும் கொலு வைத்து நவராத்திரியைக் கொண்டாடுகின்ற சுயநலமின்றி ஏழைகளின் இல்லத்திலும் கொலு அமைவதற்கான நீங்கள் மகத்தான இறைப் பணிகளைச் செய்து பெரும் புண்ணியத்தைச் சேர்த்துக் கொண்டு நாட்டிலும் சுபிட்சம், சாந்தம் நிலவிட நல்லதோர் இறைக் கருவியாகச் செயல்படுங்கள்..!

வ்ருஷ வருடத்திற்குரிய பிரம்மஸ்ரீ நவராத்திரித் திருவிழா

நவராத்திரித் திருவிழாவில்தாம் சுமங்கலித்வ சக்திகள் பூரிக்கின்றன..! எனவே உலகமளாவிய இந்த அம்பிகை பூஜையை, ஜாதி, மத பேதமின்றி இப்பூவுலகின் அனைத்து இல்லறப் பெண்களின் சுமங்கலித்வத்திற்குமாகக் கொண்டாட வேண்டிய பொறுப்பு, புனிதமான பாரதப் பெண்மணிகளுக்கு நிச்சயமாக உண்டு! நவராத்திரி உற்சவம் என்பது பூலோகத்தில் மட்டுமல்லாது, முப்பத்து முக்கோடித் தேவ லோகங்களிலும் அண்ட சராசர கோளங்களிலும், கோள்களிலும், தேவர்களாலும், தேவ மூர்த்திகளாலும் கொண்டாடப்படுகின்ற மகத்தான அம்பாள் உற்சவம் ஆகும்.. இறைவனைப் பூஜிக்கின்ற கோலத்தில் அம்பிகையைப் பூஜிப்பதெனில் பெறுதற்கரிய பாக்யம்தானே!

நவராத்திரியின் ஒன்பது தினங்களிலும் அம்பிகையானவள் காலை, மதியம், மாலை, இரவு என்று அனைத்துப் பொழுதுகளிலும் பூலோகத்திற்கு வந்து விசேஷமான இறை பூஜைகளைக் கடைபிடித்து, அண்ட சராசரத்திலும் உள்ள ஜீவன்களுக்கும் நற்கதியைப் பெற்றுத் தருவதற்காக ஈடு இணையற்ற, யோக, தபோ, பூஜா பலன்களை அர்ப்பணிக்கின்ற மகத்தான சுமங்கலித்வ பிரம்மோற்சவமாகும்..!

சுமங்கலித்வத்தைப் பெற வேண்டும் என்று உளமாற வேண்டுகின்ற பெண்கள் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி, ஸ்ரீவரலக்ஷ்மி நோன்பு, கேதார கௌரி விரதம் போன்றவற்றைக் கண்டிப்பாகத் தக்க விரத நியதிகளுடன் கடைபிடித்தல் வேண்டும்... ஏனென்றால் சுமங்கலி தேவதைகளும், சுமங்கலித்வ தேவதா மூர்த்திகளும் பரிபூரணமான அருள்வளத்தைப் பெற்றுத் தருகின்ற உத்தம தேவதிருவிழாவே நவராத்திரி பூஜையும் ஏனையவுமாம்! ஒவ்வொரு வருடத்திற்கும் உரித்தான நவராத்திரி உற்சவமானது பலவிதமான காரணப் பெயர்களைக் கொண்டு இலங்குவதுடன், பன்மடங்கு பலாபலன்களை நல்கி, இறை வாழ்க்கைக்கான அருளுரம் கூட்டுகின்றது.. விஷு வருடத்திற்கு உரித்தான இந்த வருட பிரம்மஸ்ரீ நவராத்திரி உற்சவத்தின் மிகவும் முக்கியமான விசேஷமான கல்யாண குணங்களுள் ஒன்றாக இந்த ஒன்பது நாட்களிலும், ஒன்பது பிரம்ம மூர்த்திகளுடைய, ஒன்பது பத்னி சரஸ்வதி தேவிகள், பூலோகத்திற்கு வந்து திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து அம்பிகையுடன் சேர்ந்து குறித்த பல திருத்தலங்களிலும் நவராத்திரி பூஜைகளை நம் மேன்மைக்காக நிகழ்த்துகின்றனர்..!

வ்ருஷ (விஷு) வருடத்திற்கான பிரம்மஸ்ரீ நவராத்திரி :- ஆதிமூல பிரம்ம மூர்த்திதான் சிருஷ்டிக்கு மூலகர்த்தா ஆவார். எவ்வாறு முருகப்பெருமான், காத்திகேயன், சுப்ரமண்ய ஸ்வாமி, செந்தில்வேலன், ஆறுமுகம், முத்துக் குமாரசாமி என்று பல அவதார நாமங்களைத் தாங்கி, பல ரூபங்களை ஏற்று அருள்பாலிக்கின்றாரோ, இதே போல ஸ்ரீஆதிமூல பிரம்ம மூர்த்தியானவர் ஒன்பது வகையான பிரம்ம மூர்த்தி ரூபங்களைத் தாங்கி இன்றைக்கும் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்..! ஆனால் என்றேனும் நாம் சிரத்தையுடன் ஸ்ரீபிரம்மாவை வழிபடுகின்றோமா? ஆலயங்களில் கோமுகத்திற்கு (அபிஷேக நீர்த் தாரை) மேல் கோஷ்ட மூர்த்தியாக அருள்பாலிக்கும் ஸ்ரீபிரம்மாவை என்றேனும் முறையாக வழிபடாமைக்கான பிராயசித்தமாக அமைவதும் நடப்பு வ்ருஷ (விஷு) வருட பிரம்மஸ்ரீ நவராத்திரி வழிபாடாகும்! நவராத்திரி என்பது பெண்களுக்கான வழிபாடு மட்டுமல்ல, ஆண்களும் இதனை அற்புதமான கூட்டு வழிபாடாகக் கடைபிடித்திட வேண்டும்!

எவ்வாறு பிரம்ம மூர்த்திகளுக்கு எல்லாம் மூலமான ஸ்ரீஆதிமூல பிரம்ம மூர்த்தியானவர் தன் உருவத்திலிருந்து ஒன்பது நவசாம்ப பிரம்ம மூர்த்திகளைத் தோன்றுவித்தாரோ அதேபோல ஆதிமூல சரஸ்வதி தேவியின் தெய்வத் திருமேனியிலிருந்து ஒன்பது நவசாம்ப சரஸ்வதி மூர்த்திகள் தோன்றினர்... இந்த ஒன்பது பத்னி கலைவாணி மூர்த்திகளும் பூலோகத்திற்குத் தினமும் ஒவ்வொருவராக வந்து பூஜை செய்கின்ற நவராத்திரி பிரம்ம உற்சவமாக விஷு வருடத்தின் பிரம்மஸ்ரீ நவராத்திரி உற்சவத் திருவிழா அமைந்துள்ளது... பொதுவாக 60 வருடங்களுக்கு ஒரு முறையே வ்ருஷ (விஷு) வருடத்தில் மட்டும் நிகழ்கின்ற இந்த அற்புதமான பிரம்மஸ்ரீ நவராத்திரி பிரம்ம உற்சவத்தில் சித்புருஷர்கள் அருள்கின்ற வழியிலே நாம் அனைவரும் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு பெறுதற்கரிய பலாபலன்களைப் பெற்றிடுவோமாக!

அம்பிகையே பூமிக்கு வந்து வழிபடும் நவராத்திரி! :- சிவராத்திரியன்று அம்பிகையானவள் பூலோகத்தில் இரவு நேர பூஜைகளைக் கடைபிடித்து பிரபஞ்சத்திற்கு மகத்தான நல்வரங்களைப் பெற்றுத் தருகின்றாள் அல்லவா! சிவராத்திரியின் இரவு பூஜைக்கும், நவராத்திரி இரவு பூஜைக்கும் உள்ள வித்யாசங்கள் யாதோ? அம்பிகை இறைத் துணைவியாய் எப்போதும் இறைவனுடனேயே உறைந்திருப்பதால் தனிப்பட்ட முறையில் பூலோகத்தில் பூஜைகளைக் கடைபிடிக்க வேண்டிய அவசியம் என்ன? வேறெங்கும் பெறுதற்கரியதாக பூமியின் சுயம்பு மூர்த்திகள் பிரகாசிப்பதால் அனைவரும் இங்கு ஓடோடி வந்து பூஜிக்கின்றனர். ஆனால் நம் பூலோக மானுடப் பிறப்பின் மகிமையை உணராது ஏனோதானோ என்று நாம் வாழ்வது சரிதானா? மஹரிஷிகளும், சித்புருஷர்களும், தேவாதி தேவ மூர்த்திகளுமே மானுடவடிவில் பூஜை செய்வதில் பெரிதும் பரமானந்தம் கொள்கின்றனர் என்றால் மானுடப் பிறவியின் மகத்தான பெருமையை எவ்வாறு நாம் விண்டுரைக்க இயலும்?

மூல சிருஷ்டியின்போது ஸ்ரீபிரம்ம மூர்த்திக்கும் பலவிதமான இடையூறுகள் ஏற்பட்டனவே! இது தவிர, திருஅண்ணாமலைப் புராணத்திலே, அடி முடி காணா அருணாசலப் பெருமானுடைய புராணத்திலே உண்மையை உரைக்க மறுத்ததால் ஒரு குறிப்பிட்ட பிரம்ம மூர்த்திக்குப் பல சாபங்கள் ஏற்பட்டு, பூலோகத்தில் ஸ்ரீபிரம்ம மூர்த்திக்கு எத்தகைய தனிக் கோயிலும் எழா நிலை ஏற்பட்டது... இது பிரம்ம மூர்த்திக்கு ஏற்பட்டது என்பதை விட பிரம்ம சிருஷ்டியில் வாழும் நமக்கு உரிய ஆன்மப் பாடம் என உணர்க! எத்தனை பொய்மையுடன் அடிமுடி காண இயலாப் பரம்பொருளை கிரிவலம் வருகின்றார்கள்.? இதனால்தான் ஆத்மக் கோயில் மனிதனிடம் அமைய முடியாமல் போகின்றது! இதுவே ஸ்ரீபிரம்மாவிற்கு வழிபாட்டுக் கோயில் அமையவில்லை என்பதாக நாம் உணரும் இறைப் பாடமாகும்..!

நம் இல்லத்தில் நல்லருள் கூட்டும் நற்குண நாயகி! :- நவராத்திரியின் ஒன்பது தினங்களிலுமே அம்பிகை பல திருத்தலங்களிலும் பல சூட்சும, ஸ்தூல வடிவங்களிலும், மானுட வடிவிலும், இறைவனைப் பூஜித்து நல்வரங்களைப் பெற்றுத் தருகின்றாள்.. எளிமையாக இருந்தாலும் பக்தி சிரத்தையுடன், புனிதமான பூஜை நடக்கின்ற இல்லங்களில் அம்பிகை தூல வடிவிலோ, சூட்சும சரீரத்திலோ அல்லது தாமே இல்லறப் பெண் வடிவிலும் வந்து அருள்பாலிப்பதும் உண்டு.. தன்னுடைய தெய்வ நாயகராகிய பிரம்ம மூர்த்திக்குத் தக்க வழிபாட்டுத் தலங்களை பெற்றுத் தரவேண்டும், சிவசாபத்திலிருந்து மீட்டிட வேண்டும் என்பதற்காகவே ஒன்பது பிரம்ம பத்னிகளும் ஒன்பதாயிரம் அண்ட சராசர லோகங்களிலும் நவராத்திரி பூஜைகளை மேற்கொண்டு ஸ்ரீபிரம்ம மூர்த்திக்குப் பரிகாரங்களையும் சிறப்பையும் பெற்றுத் தந்த பூஜையே பிரம்மஸ்ரீ ஸ்ரீபிரம்மபத்னி நவராத்திரி உற்சவம் ஆகும்... எனவே தன்னுடைய கணவனிடம் உள்ள குறைபாடுகளைக் களைந்து புனிதம் படைத்திட ஒவ்வொரு பெண்மணியும் நவராத்திரி பூஜையைக் கடைபிடித்திட வேண்டும்..!

பூமிகள் பலவிதம்! :- வான்வெளியில் எத்தனையோ ஆயிரம் பூமிகள் துலங்கிட, இவ்வாறாக ஒன்பது பிரம்ம பத்னிகளும் நம் பூமியில் நவராத்திரி பூஜையைக் கொண்டாட, மற்றொரு பூலோகத்தில் சிவராத்திரி உற்சவமும், பிறிதொன்றில் அமாவாசையும், பௌர்ணமியுமாக இவ்வாறாகப் பல பூமிகளிலும் பல நித்ய உற்சவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் வருகின்றன! அதாவது ஒரு பூலோகத்தில் கிருத யுகமும், ஒரு பூலோகத்தில் திரதோ யுகமும் (ராமாயணக் காலம்), மற்றோர் பூலோகத்தில் துவாபர யுகமும் (மகாபாரதக் காலம்), மற்றுமொன்றில் கலியுகமும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன.. கலியுகம் நிகழ்கின்ற பூமிகளும் நிறைய உண்டு...! எனவே நாம் வசிப்பது ஒரே ஒரு பூமிதான் என்ற பிரபஞ்சத்தின் பல தெய்வீகத் தாத்பர்யங்கள் உங்களுக்குப் புரியாமல் போய்விடும்.. தக்க சற்குருவைப் பெற்றிடில், இந்தப் பிரபஞ்சத்தில்  நாம் வசிக்கின்ற பூமியில் நமக்குத் தேவையான தெய்வீகத் தெளிவுகளை மட்டும் அவரே நமக்கு ஊட்டி உணர்த்தித் தெளிவித்து நமக்கு உரித்தான தெய்வீகப் பாதையிலே இட்டுச் செல்வார்.! ஒரே சற்குருவிடம் பல்லாயிரக்கணக்கான சீடர்கள் இருந்தாலும் ஒவ்வொருவருடைய தேக, மனோ நிலைகளைப் பொறுத்து அவரவர்க்கு உரித்தான தெய்வீகப் பாதையை உணர்த்துபவரே சற்குரு ஆவார்.. ஆதிமூல ஸ்ரீசரஸ்வதியின் அம்சங்களைத் தாங்கி, பிரம்ம பத்னிகளாகிய ஒன்பது தேவியரும் இந்த விஷு வருடத்தின் நவராத்திரி உற்சவத்தின் போது பல்வேறு தூல, சூட்சும வடிவங்களிலும் பூலோகத்திற்கு வந்து பல்வேறு ஆலயங்களிலும், இல்லங்களிலும் எழுந்தருளி நமக்கு அளப்பரிய நற்காரிய சித்திகளைப் பெற்றுத் தருகின்றனர்.. ஒன்பது திதிகளுக்கும் உரித்தான நவராத்திரி பூஜை முறைகள் உண்டு... சத்சங்கமாகப் பல இல்லறப் பெண்களும் ஒன்று சேர்ந்து இவற்றை முறையாகக் கடைபிடித்தால் மகத்தான பலன்களை மிக எளிதில் அனைவரும் பெற்றிடலாமே!

பூஜை, தான தர்மப் பலன்களால் பெறுவதே சுமங்கலித்வ சக்தி! :- குறிப்பாக, தன்னுடைய கணவன் நல்ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து, சந்ததி நல்ல பக்தியுடன், நல்ல ஒழுக்கத்துடன் தழைக்க வேண்டும் என்பதுதானே ஒவ்வொரு இல்லறப் பெண்மணியின் உள்ளக் கிடக்கை! எனவே சுமங்கலித்வ சக்தி என்பது பல்வேறு பூஜைகளின் நல்வரங்களாக, நற்பலன்களாகப் பெறப்படுவதுதான்...! ஏதோ மூன்று வேளை உணவு, உடற்பயிற்சி, மருந்துகள், டானிக்குகள் மூலமாக மட்டும் கணவனுக்கு ஆரோக்யம் வந்து விடும் என்று ஒரு போதும் எண்ணி விடாதீர்கள்..! இறைவி இறைவனுடைய கருணை இல்லாமல் நம்மால் ஒரு சுண்டு விரலைக் கூட அசைக்க முடியாது.. ஒரு கண்ணசைவு கூட ஏற்படாது... ஒரு விநாடி கூட நம்மால் வாழ முடியாது என்பதை உணர்ந்திடுக..!

தேவ சக்தி, நல்வரம், தெய்வீக அருள், சற்குருவின் கருணை போன்றவை யாவும் ஏதோ வெளியிலிருந்து வருவதாகவும் எண்ணிடாதீர்கள்! பிரபஞ்சத்தின் உள்ளும் புறமுமாய் இருக்கின்ற இறைவனுடைய கருணையுடன்தான் நாம் வாழ்ந்திடவே, “இறைவனுடைய சக்தியும், கருணையும்” அபரிமிதமாகப் பூரிக்கின்ற தலங்கள், பொருட்கள், மரங்கள், மலைகள், ஆறுகள் உண்டு. இறைவன் தம்முடைய தேவ சக்திகளை நறுமணமுள்ள பூக்கள், அட்சதை எனப்பட்டும் நுனி உடையாத மஞ்சள் பூசிய முழு அட்சதை அரிசிமணிகள், மாங்கல்யச் சரடு, தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம் போன்ற பல சுபமங்களப் பொருட்களில் பதித்து வைத்திருக்கின்றான்..! இவற்றை அறிந்து நாம் வழிபட்டு ஆத்மார்த்தமாக உள்ளேயே உறைந்திருக்கும் இறைவனை உணர்தலே, இறையருளைப் பெறுவதான வழிமுறைகளே வெளி முறையிலான பூஜைகள் வழிபாடுகள், பண்டிகைகள் ஆகும்..! இவற்றில் கூடும் இறைச் சக்திகள்தாம் உள்முக பூஜையாகிய தியானத்திற்கு வழிவகுக்கும்! வெறுமனே உட்கார்ந்து கண்ணை மூடிக் கொண்டு விட்டால் தியானமாகி விடாது!

எனவே உள்ளிருக்கும் இறையொளியை நாமாக உணர இயலாத நிலையில், இதற்குக் காரணமாக இருக்கும் தேக அசுத்தத்தை, மன அழுக்கைப் போக்குவதே வழிபாடுகளாகும்! எனவே நவராத்திரி போன்ற விசேஷமான பூஜை தினங்களில், அபரிதமாக தெய்வீக சக்திகள் நிறைந்திருக்கின்ற பொருட்களிலிருந்து, தலங்களில் இருந்து அவற்றைப் பெற்று மனித சமுதாயத்திற்கு அளித்து உள்உறை இறைவனை உணர்வித்திடவே இத்தகைய பண்டிகைகளை இறைவனே, சித்புருஷர்கள், மகரிஷிகள் மூலமாக நமக்கு அளித்துள்ளான்!

சுபம் பொங்கும் அரிசி மணி அட்சதை, புஷ்பம், தாம்பூலம், மஞ்சள்!

ஒன்பது நவராத்திரி தின பூஜைகளிலும் முக்கியமாக அமைவது அட்சதை பூஜையாகும்..! அட்சதை என்றால் நுனி முறியாத முழுமையான பச்சை அரிசி மணிகளைத் தேர்ந்தெடுத்து, மஞ்சள் தடவிப் பூஜையில் வைத்திடுதலாம்! 60, 70, 80 வயதுடைய நன்கு பக்தியுள்ள பழுத்த சுமங்கலிகளுடைய திருக்கரங்களினால், குறித்த மந்திரங்களை ஓதி இந்த அட்சதைகளைப் பொறுக்கி எடுத்திடச் செய்தல் வேண்டும். திருமணத்திற்கான நல்ல சுபமுகூர்த்த நேரம் கணிப்பது போல அட்சதை எடுப்பதற்கும் நல்ல நேரம் பார்த்துத் துவங்குதல் வேண்டும்..! உங்களால் தனிப்பட்ட முறையில் நவராத்திரி பூஜை செய்ய வசதி இயலாவிடினும் இதற்காகத் தானே உறவினர்கள், நண்பர்கள் உற்றம், சுற்றம், சத்சங்கம் என பல வழிமுறைகளையும் இறைவன் தந்துள்ளான! எனவே பல இல்லறப் பெண்களும் அவரவருடைய ஊர் ஆலயங்களிலே நவராத்திரி பூஜை சங்கம் அமைத்து இதனைக் கூட்டு வழிபாடாக நிறைவேற்றினால் பல அபரிதமான பலன்களைப் பெற்றிடலாம் அல்லவா!

அட்சதையை முன்கூட்டியே முறைப்படி செய்து எடுத்து வைத்துக் கொண்டாலும், நவராத்திரியின் ஒன்பது தினங்களிலும் தினந்தோறும் மஞ்சளை உரலில் இடித்து அரைத்து மஞ்சள் பொடியைத் தயார் செய்து தினமும் நல்அரிசி மணிகளுக்கு மஞ்சள் பூசி அட்சதை ஆக்கிக் கொள்ள வேண்டும். மஞ்சளை இடிக்கும்போது சொல்ல வேண்டிய மந்திரங்களும் உண்டு... உரல் என்பது தற்போதைய வழக்கில் இல்லை என்று எண்ணாதீர்கள்... எவ்வளவோ மேஜை, நாற்காலி, காபி, டீ, சினிமா, TVக்களுக்காகவும் செலவு செய்கின்ற நீங்கள் உங்கள் வீட்டின் அளவைப் பொறுத்து மிகச் சிறிய அளவிலே ஒரு மர உரலைத் தயார் செய்து கொள்ளலாம் அல்லவா! இதில் தினந்தோறும் மஞ்சள் இடித்து ஸ்வாமிக்குப் படைத்துப் பூசி வந்தால் வீட்டில் சுபமங்களக் கிரணங்கள் பெருகுமே! கண்டா பூஜை, மணி, மிருதங்கம், சங்கு, புல்லாங்குழல், உரல் போன்ற சுபமங்கள சப்த நாளங்கள் தினமும் இல்லத்தில் ஒலித்திட்டால் தான் தெய்வீக அமைதி நிலவும்..!

வீட்டிலேயே உரலில் மஞ்சளை இடிப்பதால் மங்களம் பெருகும்! உரல் சப்தம் மிகவும் மங்களகரமானதாகும்! நோய்களால் வாடுகின்ற பல கணவன்மார்களுக்கும் தக்க நிவர்த்தியும் இதனால் கிட்டும்..சுமங்கலித்வம் என்பது இவ்வாறு பலவிதமான பூஜை முறைகளால் விருத்தி செய்யப்படுவதே தவிர, ஏதோ கணவன் மனைவியாக எந்தவித பூஜையும் இல்லாமல் ஏதோ சுமாராக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு வந்தால் சுமங்கலித்வம் ஆகாது. நல்லொழுக்கங்களுடன், நீண்ட ஆயுளுடன், பக்தியோடு கணவன் வாழ வேண்டும் என்றால் மனைவி செய்கின்ற பூஜைகள் தாம் பெரிதும் உதவும்..! கணவனும் இதற்குத் துணை புரிதல் வேண்டும்.!

அட்சதா சங்கல்பம் :- இறைவனுடைய அருட் சுரப்பு, மஹரிஷிகளுடைய, சித்புருஷர், பெரியோருடைய ஆசிகள் நிறைந்து தங்குகின்ற பொருட்கள் (அட்சதை, புஷ்பம்) ஒரு சிலவே! இவற்றை நம் மனித வாழ்வில் நாம் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.. ஒவ்வொரு நவராத்திரி திதிக்குமான அட்சதை சங்கல்பத்தைத் தினந்தோறும் மேற்கொள்ள வேண்டும்.. அதாவது பூஜா பலன்கள் எதற்காகப் பயன்பட வேண்டும் என்ற இறை அர்ப்பணிப்பே சங்கல்பமாகும்! தினந்தோறும் எத்தகைய பலாபலன்கள் ஏற்பட வேண்டும் என்பதற்காக அட்சதை சாட்சியாகச் சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்! சுயநலச் சங்கல்பமாக இல்லாது பொதுச் சங்கல்பமாக இருத்தலால் பலன்கள் பெருகும்.!

அட்சதா சங்கல்பம், அட்சதை பூஜை, அட்சதை நீரோட்டம், அட்சதை வழிபாடு, அட்சதை அர்ச்சனை என்று நுனி முறியாத சுத்தமான பச்சரிசி தானிய மணிகளுக்கு மஞ்சள் பூசி அட்சதைகளாக்கிப் பலவித வழிபாடுகளை மேற்கொண்டு அளப்பரிய பல தெய்வீக சக்திகளைப் பெற்றிடலாம்.. பெரியவர்கலை வணங்கும்போது அவர்கள் அட்சதை தூவி ஆசீர்வதிப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பல்லாயிரம் பெரியோர்களுடைய ஆசீர்வாத பூஜா சக்தியைத் தாங்குகின்ற சக்தி மங்கள அட்சதைகளுக்கும் உண்டு..!

அட்சதைகள் நல்ல கார்யங்களை நிறைவேற்றித் தருவதற்கான காரிய சித்தித் தன்மைகளைக் கொண்டவை! மேலும் நற்காரியங்களுக்கான நல்லாசிகளுக்குத் தேவ சாட்சியாகவும் அட்சதைகள் துலங்குகின்றன! ஒன்பது நவராத்திரி தினங்களிலும், ஒன்பது பிரம்ம மூத்திகளுடைய பிரம்ம பத்னிகள் பூலோகத்தின் அனைத்து இடங்களிலும் பூஜித்து எங்கெல்லாம் சித்புருஷர்கல் அருள்கின்ற வகையிலே இந்த பிரம்மஸ்ரீ நவராத்திரி பூஜைகள் பக்தி சிரத்தையுடன் கொண்டாடப்படுகின்றனவோ அவ்விடத்தில் இவர்கள் எழுந்தருளி நேரடியாகவே அருள்பாலிக்கின்றார்கள்..!

ஸ்ரீதாடங்க பூஷண சரஸ்வதி – பிரதமை திதி – (17.10.2001) நவராத்திரி பூஜை

இன்றைய அட்சதா சங்கல்பமாக, ‘உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள இல்லறப் பெண்கள் தன்னுடைய கணவனைத் தெய்வமாக மதித்து நல்வாழ்க்கை வாழவேண்டும்’, என்று சங்கல்பம் செய்து கொண்டு உத்தராணி மரத் தாம்பாளத்தில் வாழை இலையை கிழக்கு நோக்கி நுனி அமையுமாறு அமைத்து இதன்மேல் மஞ்சள் பூசிய 90 அட்சதை மணிகளை வைத்திட வேண்டும்... அருகில் ஒரு தாமரை இலையில் தாமே தொடுத்த மல்லிகை புஷ்பத்தை வளையமாக, அமைத்து அம்பிகைக்கான மந்திரங்கள், ஸ்ரீலலிதா ஸஹஸ்ர நாமம், அபயாம்பிகை சதகம், அபிராமி அந்தாதி போன்ற திருப்பாடல்களை ஓதி, சாம்பிராணி தூப தீபங்கள் காட்டி, வெள்ளை நிற உணவுப் பண்டங்களை (வெண் பொங்கல், வெள்ளை கேசரி, தயிர் சாதம்) போன்றவற்றைப் படைத்து பூஜித்தல் வேண்டும்.. பிறகு அன்னதானம்!

இந்நாள் ஸ்ரீதாடங்க பூஷண பிரம்ம சரஸ்வதி அம்பிகைக்கான திருநாள்! பல ஆலயங்களிலும், புனிதமான இல்லங்களிலும், பக்தியுடன் பூஜிப்போருடைய இடங்களிலும் தேவியானவள், கன்னிப் பெண்ணாகவும் பல ரூபங்களிலும் அருவுருவமாக வந்து பூஜித்து அருள்பாலிக்கின்ற விசேஷமான தினமாகும்.. இல்லத்திற்குப் பல சுமங்கலிப் பெண்களை அழைத்து அவர்களை மூன்று அட்சதைகளை எடுத்து அம்பிகைக்கு இட்டு வணங்கி ஆசீர்வாதம் பெறச் செய்தல் சிறப்புடையதாம்.. மேலும் பல சுமங்கலிப் பெண்களை அழைத்து நவராத்திரிக்கு உரித்தான மங்களப் பொருட்களைத் தானமாக அளிக்கும் போதுதான் இந்த சரஸ்வதி தேவியும் ஏதேனும் ஒரு வடிவில் வந்து நம்மை ஆசீர்வதிக்கின்றாள். ஏழைக் குடிசையோ, நடுத்தர வர்க்கத்தின் ஓட்டு வீடோ, பணக்காரரின் பெரும் பங்களாவோ, எங்கு பக்தி சிரத்தை இருந்தாலும் அவ்விடத்தில் ஆவாஹனம் ஆகி அருள் பாலிக்கின்ற தெய்வீக விசேஷ கல்யாண குணங்களை ஒன்பது சரஸ்வதி மூர்த்திகளும் தாங்கி இருப்பதால் உங்கள் இல்ல(ற)த்தில் அவர்களுடைய அருள் சுரப்பதற்கும் அவர்களுடைய திருப்பாதங்கள் படிவதற்கும் நீங்கள் தாம் தக்க பூஜைகளைச் செய்து தெய்வீக வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இன்றைய பிரதமை திதி நவராத்திரி பூஜா பலன்களாக இதைப் படித்து நன்முறையில் பூஜையைக் கடைபிடிக்கின்ற கன்னிப் பெண்களுக்குத் திருமண பாக்கியம் கைகூடும்! மேலும் பலவிதமான சொந்த, பந்த உறவு முறைப் பகைமைகளால் துன்பப்படுகின்ற பல இல்லறப் பெண்களுக்கும் தக்க தீர்வுகள் கிட்டும்.. இன்றைய நவராத்திரி பூஜைக்கான விசேஷ தரிசனத் தலமாக விளங்குவது திருஆனைக் கோயில், காஞ்சீபுரம் ஸ்ரீகாமாட்சி ஆலயத்தில் உள்ள காமத் தீர்த்தம், சிதம்பரம் – கொள்ளிடம் – தூற்றூர் அருகே காமரஸவல்லி ஸ்ரீகார்க்கோடகேஸ்வரர் ஆலயம். இங்கு இன்றும் மற்றும் பிரதமை திதி தோறும் பூஜைகளைச் செய்து கொடி வகைக் காய்கறி கலந்த உணவினைத் தானமாக அளித்திட, காணாமற் போனவர் பற்றிய தகவல்களைப் பெற பிரதமை திதி தேவதைகள் துணை புரிவர்!

துவிதியை திதி (18.10.2001) ஸ்ரீசங்க பால பிரம்ம சரஸ்வதி

இன்று உத்தராணி மரத் தாம்பளத்தில் மஞ்சள் பூசிய 120 அட்சதை அரிசி மணிகளை ஒரு தாமரை இலைமேல் வைத்திடுதல் வேண்டும்.! செம்பருத்தி புஷ்பத்தால் இன்று அர்ச்சனை! விரத அட்சதா சங்கல்பமாக, இப்பூவுலகில் அனைத்துப் பெண்களுக்கும் முறையான வகையில் மங்கள நீரோட்டம் தேகத்தில் அமையும்படியும் இறைவனால் பெண்களுக்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள மாதவிலக்கு சுழற்சி முறையானது நன்முறையில் அமைந்து எவ்வித நோய்களுக்கும் ஆளாகாமல் வேண்டியும் சங்கல்பம் செய்து கொண்டு பூஜை ஆற்றிட வேண்டும். மந்தூக ஸ்தோத்ரம் (கீழே காண்க) என்ற அபூர்வமான துதியை 36 முறை ஓதி பூஜித்தல் சிறப்பானது.. தினந்தோறும் ஒன்பது பொன் மாங்கல்யங்களை ஜாதி, மத, பேதமின்றி ஏழைச் சுமங்கலிகளுக்குத் தானமாக அளித்தல் மகத்தான புண்ணியத்தைத் தரும். பலரும் சத்சங்கமாகச் சேர்ந்து செய்தலால் இது நன்கு சாத்யமாகும்! வசதி இல்லாதோர் குறைந்தது இயன்ற அளவு மாங்கல்யச் சரடுகள், சுபமங்களப் பொருட்களுடன் இந்த அட்சதைகளையும் சேர்த்துத் தானமாக அளித்திட வேண்டும்..!

மந்தூக ஸ்தோத்ரம் – (இதற்குச் சமமான தமிழ்ப் பாடல் இதோ!) முருகனைப் பற்றி கந்தபுராணம்
‘அருவமு முருவுமாகி அநாதியாய்ப்
பலவாயொன்றாய்ப்
பிரம்மமாய் நின்ற சோதிப் பிழம்பதோர்
மேனியாகிக்
கருணைகூர் முகங்களாறுங் கரங்கள்
பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தன னுலக முய்ய!’

கும்பகோணம் அருகே கருவில்(கொட்டிடை), தாராசுரம், திருச்செங்கோடு, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை உய்யவந்த அம்பாள் துவிதியை திதி வழிபாட்டிற்குரிய தலங்களான இவற்றில் துவிதியை திதிக்கான பூஜையைக் கொண்டாடி, அம்பிகையை வேண்டி, அடிப் பிரதட்சிணம் செய்து, சிகப்பு நிற ஆடைகள், சிகப்பு நிறப் பழங்களை ஏழைகளுக்கும், ஏழை கர்பிணிகளுக்குத் தேவையான ஆடைகளையும், சத்தான ஆகாரங்களையும் தானமளிப்பதால், பெண் பிள்ளைகள் தக்க வயதில் பருவத்தில் வராமை மற்றும் பெண்களுக்கான மாத விடாய்க் கோளாறுகளுக்குத் தக்க தீர்வுகளைப் பெற்றிடலாம்!

திருதியை திதி (19.10.2001) – ஸ்ரீகாந்த பூஷணி சரஸ்வதி :- இன்று முக்கூட்டு எண்ணெயால் தீபமேற்றி, உத்தராணி மரத் தாம்பாளத்தில் அரச இலை மேல் மஞ்சள் பூசிய 131 அட்சதை அரிசி மணிகளை வைத்து சம்பங்கிப் பூக்களை வட்ட ஆரமாக அமைத்து அர்ச்சனை செய்து வழிபடல் வேண்டும்.. இன்று ஓத வேண்டிய முக்கியமானது மண்டித ஸ்தோத்திரம் (கீழே காண்க) ஆகும்.. இன்றைய அட்சதா சங்கல்பமாக பூவுலகில் உள்ள இல்லறப் பெண்களுக்கு ஸ்நான தேவதையுடைய ஆசி கிட்டுமாறு வேண்டிடுக!

முழையூர் ஸ்ரீபரசுராமர் சிவாலயம்

மண்டித ஸ்தோத்ரம் – (தமிழில்) வில்வத்தின் மகிமையை உணர்த்துகிறது..!

“வில்வமே புனிதனாகும் விளம்பு வில்வத்தின் மிக்காம்
வில்வமுள் சக்தியாகும் வில்வத்தின் கோடு வேதம்
வில்வ வேர் பதினொரு கோடி வியருத்திர ரேயாகும்
வில்வமேத்து நர்க்கே தேவர் மெய் வடிவாகுமென்றே..!”

எண்ணெய் ஸ்நானம் சுமங்கலித்வம் தரும்! – வெள்ளிக்கிழமை தோறும் பெண்கள் எண்ணெய் ஸ்நானம் செய்தால்தான் அவர்களுடைய சுமங்கலித்வ சக்தி பெருகும். ஆனால் நடைமுறை வழக்கில் இது மறைந்து வருவதால் பெரும்பாலான இல்லறப் பெண்கள் சுமங்கலித்வ சக்தியை எண்ணெய் நீராடல் மூலம் பெற முடியாமல் போகின்றது.. எனவே அனைவருக்கும் இந்த எண்ணெய் ஸ்நான சக்தியைப் பெறுவதற்காக இன்றைக்கு சங்கல்பம் செய்து பிரார்த்தனை செய்தல் சிறப்பானதாம்! இன்று சுமங்கலிகள் ஐந்து அட்சதை மணிகளை வைத்து வணங்கிய பின் அவர்களிடம் ஆசி பெறுதல் வேண்டும்.!

இன்றைய பூஜா பலன்களாக, பெண்களுக்குக் கழுத்து, இடுப்பு சம்பந்தமான நோய்களுக்குத் தக்க நிவர்த்தி கிட்டும். மேலும் பலருடைய ஏசுதலுக்கும் பழிகளுக்கும் ஆளாகி அஞ்சித் தலை குனிந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானோர் தக்க நிவர்த்தி பெறுவதற்கு இந்நாள் பூஜா பலன்கள் பெரிதும் உதவும்... இன்றைய திதியில் பூலோக ஆலயங்களிலும் இல்லங்களிலும் நேரடியாக சூட்சுமமாக அல்லது ஸ்தூல ரூபத்தில் வந்து ஆசீர்வதிக்கின்ற பிரம்ம பத்னியே ஸ்ரீகாந்த பூஷணி சரஸ்வதி அம்பிகை ஆவாள்.! இன்றைய திருதியை பூஜைக்கான தலங்கள் கேதார்நாத் மற்றும் கும்பகோணம் பட்டீஸ்வரம் அருகே முழையூர் ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீபரசுநாதர் ஆலயம்! இங்கு சந்திர மற்றும் செவ்வாய் ஹோரை நேரத்தில் அன்னாபிஷேகம் செய்து ஏழைகளுக்குப் புடலங்காய் கூடிய உணவினை தானமாக அளித்தலால் நியாயமான உயர்ந்த பதவிகள், பதவி உயர்வுகள் கிட்டும்..!

சதுர்த்தி திதி (20.10.2001) – ஸ்ரீகானாம்ருத பிரம்ம சரஸ்வதி

இன்றைய சங்கல்பமாக, ‘உலகில் பெண்கள் வாக்குக்குக் குற்றங்களுக்கு ஆளாகாது, கணவனை நன்கு பேணி, புனிதமான கற்பு நெறியுடன் துலங்கிட இறையருளை வேண்டி, அட்சதா சங்கல்பம் செய்து பிரார்த்தித்திடுக..! இன்று உத்தராணி மரத் தாம்பாளத்தில் வாழை இலையை நுனி கிழக்கு நோக்கி வைத்து மஞ்சள் பூசிய 210 அட்சதை மணிகளை வைத்து கபந்த ஸ்தோத்ரம் (கீழே காண்க) ஓதி பூஜித்தல் வேண்டும். அருகில் ஒரு தட்டில் மல்லிகைப் பூக்களால் வட்டமாக அமைத்திடுக!

கபந்த ஸ்தோத்ரம்
“பூதாத்மா பூதக்ருத் ஸ்வாமீ
காலஜ்ஞாநீ மஹாவடு:
அநிர் விண்ணோ குணக்ராம:
நிஷ்களங்க: களங்கஹா!

இன்று இல்லத்திற்குப் பல சுமங்கலிகளை அழைத்து ஆறு அட்சதைகளைக் கொடுத்து அம்பிகையை வழிபடச் செய்து அவர்களுடைய ஆசியையும் பெறுதல் வேண்டும்.. இன்றைக்கு அன்னதானமாக நான்கு வகையான கொழுக் கட்டைகளைப் படைத்து தானம்! பேச்சுக் கோளாறுகள், வாய்த் துடுக்கினால் பலரையும் ஏசியதால் வந்த விபரீதங்கள், பலருடைய ஏசல்களுக்கு ஆளாகிப் பல துன்பங்களுக்கு ஆட்பட்டோர்க்கு இன்றைய சதுர்த்தி திதி பூஜா பலன்கள் தக்க நிவாரணங்களைத் தரும். இன்று குறைந்தது 36 மாங்கல்யச் சரடுகளையாவது தானமாக அளித்திட வேண்டும்.. இன்றைய பூஜைத் தலம் திருச்செங்காட்டங்குடி மற்றும் திருவலஞ்சுழியாம்! திருவலஞ்சுழி ஸ்ரீகபர்தீஸ்வரரை வேண்டி, கபந்த ஸ்தோத்ரம் ஓதி, பிள்ளையாருக்குப் பச்சைக் கற்பூரம் சார்த்தி வழிபடுக! இங்குள்ள அபூர்வமான ஸ்ரீதுர்க்கை சந்நதியில் ஆராதனைகளுடன் மாதுளைக் கனி ரச அபிஷேகம் செய்து ஏழைகளுக்கு பாஸ்கர சக்தி நிறைந்த கோதுமை அல்வா தானமளித்திட வாக்குத் தவறியதால் நின்று போன திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நன்னிலை பெறும்! வாக்குத் தவறுதலால் உண்டான வழக்குகள் தீர்வு பெறும்!

ரிஷபாயன கோமுகம் ரிஷிவந்தியம்

ஸ்ரீமகாவிஷ்ணு ரிஷிவந்தியம்

பஞ்சமி திதி (21.10.2001) ஸ்ரீபரிபூர்ண லோசன பிரம்ம சரஸ்வதி

இன்றைய அட்சதா சங்கல்பமாக உலகில் உள்ள அனைத்து இல்லறப் பெண்மணிகளுக்கும் பாத பூஜா கிட்டிடுமாறு பிரார்த்தித்தல் வேண்டும். ஏனென்றால் கணவனுக்குத் தினந்தோறும் அல்லது செவ்வாய், வெள்ளி தோறுமாவது பாத பூஜை செய்தல் ஒவ்வொரு மனைவியுடைய கடமையாகும்.. ஆனால் தற்காலத்தில் இதைப் பலரும் மறந்து விட்டதால் இதனால் கிட்டக் கூடிய சுமங்கலித்வ சக்தியைப் பெண்களால் பெற இயலவில்லை! இன்று உத்தராணி மரத் தாம்பாளத்தில் வாழை இலை நுனி இடது பக்கம் வருமாறு வைத்து மஞ்சள் பூசிய 140 அட்சதை அரிசி மணிகளை வைத்து கண ஸ்தோத்திரம் ஓதுதல் வேண்டும்.

கண ஸ்தோத்ரம் – ஓதுவிக்கும் ஸ்ரீஷண்முகன் பாடல்

வானோ புனல் பார் கனல் மாருதமோ
ஞானோ தயமோ நவிநான் மறையோ
யானோ மனமோ எனை ஆண்ட இடம்
தானோ பொருளாவது ஷண்முகனே!

புஷ்பார்ச்சனை, அபிஷேக, ஆராதனைகள், ஏகாதசி விரதம், பாத பூஜை, விளக்கு பூஜை போன்ற பல பூஜைகளில் திரள்கின்ற சுமங்கலித்வ சக்திதான் ஒரு இல்லறப் பெண்மணிக்கு மிகவும் பவித்ரமான, புனிதமான, சுமங்கலித்வ பாக்யத்தைத் தருகின்றது.. இத்தகைய சுமங்கலித்வ சக்தி தரும் பல பூஜைகளைப் பலரும் மறந்து விட்டமையால்தான் இவற்றுக்கு ஓரளவேனும் பிராயசித்தம் தரும் பொருட்டும், இவற்றால் பெற முடியாமற் போன சுமங்கலித்வ சக்தியைத் தக்க முறைகளில் பெறுவதற்காகவும்தான் நவராத்திரி பூஜைகளும், தான தருமங்களும் விதிக்கப்பட்டு இருக்கின்றன.! எனவே பலரும் செய்ய மறந்த, விடுபட்டுப் போன பலவிதமான சுமங்கலித்வ பூஜைகளுக்கு ஓரளவு நிவர்த்தி செய்வதற்காகவே நவராத்திரி பூஜைகள் அமைகின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.. இன்று சுமங்கலிகளுக்கு ஏழு அட்சதை மணிகளை அளித்து வழிபடச் செய்து அவர்தம் ஆசிகளைப் பெற்றிடுக!

இன்றைக்குப் பிரசாதமாக இட்லி படைத்து நைவேத்யம் செய்து சட்னி சாம்பாருடன் முழுமையாக வயிறு நிறைய அன்னதானம் அளித்தல் வேண்டும்..! குறைந்தது 30 சுமங்கலிகளுக்குப் பொன் மாங்கல்யம் அல்லது மாங்கல்யச் சரடுகளை, தாம்பூலம், புஷ்பம் போன்ற சுபமங்களப் பொருட்களுடன் தானமளித்தல் வேண்டும். இன்றைய பூஜைத் தலமாக விளங்குவது லால்குடி ஸ்ரீமதி அம்பாள் சமேத சப்தரிஷீஸ்வரர் ஆலயம் மற்றும் திருஅண்ணாமலை அருகே உள்ள ரிஷிவந்தியம் சிவத்தலமுமாம்.. மகரிஷிகளின் வருகை நிறைந்த விசேஷமான நாளாதலின் இங்கு இன்று சுளை வகைப் பழங்களால் (சாத்துக்குடி, ஆரஞ்சு, பலா) அம்பிகைக்கு அபிஷேகமும், அலங்காரமும் செய்து, முழுமையான உருண்டை வகைக் கனி வகைகளை (சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவை) ஏழைகளுக்குத் தானமாக அளித்திடில் ஓரிடத்தில் நிலையாக இல்லாது ஊர் ஊராகச் செல்வோர் இப்பூஜா பலன்களால் நிரந்தரமாக ஓரிடத்தில் நிலை பெறும் வாய்ப்பைப் பெறுவர்!

ஸ்ரீநடராஜப் பெருமான் லால்குடி

சஷ்டி திதி (22.10.2001) – ஸ்ரீகாரணீய பிரம்ம சரஸ்வதி

இன்று உத்தராணி மரத் தாம்பாளத்தில் பன்னீர் இலை மேல் மஞ்சள் பூசி 222 அட்சதை மணிகளை வைத்து அருகில் வட்டத் தட்டில் சங்குப் பூக்களை வட்டமாக அமைத்து சகாய ஸ்தோத்திரம் ஓதி பூஜித்தல் வேண்டும்.!

சகாய ஸ்தோத்ரம் – சிவாய நம துதியின் சக்தியை விளக்கும் தமிழ்ப் பாடல்

பாடற்கினிய வாக்களிக்கும் பாலும் சோறும் பரிந்தளிக்கும்
கூடற்கினிய அடியவர்தம் கூட்டமளிக்கும் குணமளிக்கும்
ஆடற்கினிய நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்
தேடற்கரிய திருவளிக்கும் சிவாய நம வென்றிடு நீறே

இன்றைய அட்சதா சங்கல்பமாக உலகில் அனைத்து இல்லறப் பெண்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கு பனிக்குட நன்னீரோட்டம், நல்ல ஆரோக்யம் அமைந்திடவும், மற்றும் பிள்ளைத் தாய்ச்சி மார்களுக்கும் நன்முறையில் உடலில் நல்ல இரத்த ஓட்டம், ஆரோக்ய சக்திகள் ஏற்படும்படியும் வேண்டிப் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்..! இல்லறப் பெண்களுக்கு ஏற்படும் வயிற்றுக் கோளாறுகள், சிசேரியன் ஆபரேஷன், கர்ப்பப்பை விலக்குதலால் ஏற்பட்ட பக்க விளைவுகள் நன்முறையில் தீர்வதற்கு இன்றைய பூஜை உதவும்.. ஒவ்வொரு உடலும் இறைவன் அளித்த அதே உறுப்புகளுடன் நன்முறையில் இருந்து முடிவில் தகனம் பெறுதல் தான் உத்தமம் ஆகும்.. ஆனால் பலவிதமான அறுவை சிகிச்சைகளால் கர்ப்பப் பை போன்றவை நீக்கப்பட்டால் அந்த உறுப்புகளை இழந்தமைக்கான கர்ம வினைகள் தீராமலேயே போய்விடும்.. எந்த உறுப்பானது அறுவை சிகிச்சையால் இழக்கப்பட்டதோ அதற்கு உரித்தான கர்மவினைகள் தீராமல் இருந்தால் மீண்டும் பல பிறப்புகள் இதனால் ஏற்பட்டு விடும்.!

திருமலை

இவற்றை நிவர்த்தி செய்வதற்காக இன்றைய மகத்தான நவராத்திரி திதி பூஜை பெரிதும் உதவுகின்றது.. இன்று இல்லத்திற்கு வரும் சுமங்கலிகளிடம் எட்டு அட்சதை மணிகள் அளித்து வழிபடச் செய்து ஆசிகளைப் பெறுதல் வேண்டும்.. இன்று அன்னதானமாக விளங்குவது பன்னீர் (பால் திரிதலில் செய்யப்படும் உணவுப் பொருள்) சேர்த்துச் செய்யப்பட்ட காய்கறி அவியல், திரட்டுப் பால் போன்றவையாகும்.. இன்றைய பூஜைக்கான தலங்கள் குன்றக்குடி, செங்கோட்டை அருகே திருமலை, எட்டுக்குடி, மற்றும் எதிரில் சனீஸ்வரருடன் முருகன் அருள்பாலிக்கும் கும்பகோணம் அருகே கூந்தலூர் சிவாலயம்.! இங்கு அம்பிகைக்குக் கண்கள், பாதங்களில் பூனுகு கலந்த மஞ்சள் காப்பிட்டு 108 சுமங்கலிகளுக்கு சுபமங்களப் பொருட்கள் நிறைந்த தாம்பூலப் பைகளை தானமாக அளித்திடில் கணவனுடைய கெட்ட பழக்கங்கள் படிப்படியாகத் தணியும்! செவ்வாய், சனி, சஷ்டி தோறும் செய்து வருக!

சப்தமி திதி (23.10.2001) ஸ்ரீசூடாமணி பிரம்ம சரஸ்வதி

இன்று உத்தராணி மரத் தாம்பாளத்தில் 12 வெற்றிலைகளின் மேல் மஞ்சள் பூசி 280 அட்சதை மணிகளை வைத்து, ஸ்ரீஅகஸ்தியர், ஸ்ரீராமருக்கு அருளிய ஸ்ரீஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்ரம் 10 முதல் 28 முறை வரை ஓதி பூஜித்தல் வேண்டும்.. இன்றைய அட்சதா சங்கல்பமாக, ‘உலகத்தில் உள்ள அனைத்து இல்லறப் பெண்மணிகளுக்கும் தாம்பூல தேவ சக்திகள் கிடைத்திட வேண்டும்’ என வேண்டிடுக! ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணும், தன்னுடைய கணவனுக்குக் குறித்த விசேஷ தினங்களில் உணவிற்குப் பின் தாம்பூலத்தைத் தானே அளிக்க வேண்டும்.. இது மட்டுமல்லாது ஒவ்வொரு வாரமும் குறைந்தது 36 சுமங்கலிகளுக்காவது தாம்பூலத்தை அளித்து அவர்களுடைய ஆசிகளைப் பெறுதல் வேண்டும்..!

ஸ்ரீவைத்யநாதர் ஆலயம்
திருவில்லிபுத்தூர்

எனவே தாம்பூல தானம் மற்றும் கணவனுக்குத் தாம்பூலம் அளிப்பதன் மூலமாகவும் பெண்களுக்குச் சுமங்கலித்வ சக்தி விருத்தி ஆகின்றது.. சுமங்கலித்வ பூஜை சக்தியைத் தருகின்ற பலவிதமான எளிய வழிபாட்டு முறைகளைக் கைவிட்டமையால் தான் சுமங்கலித்வத்தை விருத்தி செய்ய இயலாது பல குடும்பங்களிலும் தவிக்கின்றார்கள்.. சுமங்கலித்வ சக்தி குறைந்தாலே கணவனுக்கு நோயின் கடுமைகள் பெருகும்.. புற்று நோய் மற்றும் கொடிய நோய்கள் தோன்றும், ஆயுள் குறையும். எனவே நவராத்திரி, வரலட்சுமி நோன்பு, கேதார கௌரி விரதம் போன்ற சுமங்கலித்வ சக்தியை விருத்தி செய்கின்ற பண்டிகைகளை ஒவ்வொரு இல்லறப் பெண்மணியும் கண்டிப்பாகக் கடைபிடித்தல் வேண்டும்.. மேலும் இன்றைய நவராத்திரி பூஜையை நன்முறையில் கடைபிடிப்பதனால் இசைத் துறையில் நன்முறையில் வளர்ச்சி பெற்று செல்வம், கீர்த்தி அடைவதற்கும் பணக் கஷ்டத்தால் வாடுகின்ற பெண்மணிகள் நல்வகையில் பண விருத்தி பெறுவதற்குமான தக்க நல்வரங்கள் கிட்டும்.. இன்று ஏழு வகையான காய்கறிகள் கலந்த உணவைப் படைத்து அன்னதானமாக அளித்தல் வேண்டும்.!

இன்றைய பூஜைக்கான தலங்கள் திருவாரூர் அருகே திருமீயச்சூர், சென்னை திருவொற்றியூர், தேவகோட்டை அருகே திருவாடானை, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீவைத்யநாதர் ஆலயங்கள், இன்றும், சஷ்டி, செவ்வாய் தோறும், அம்பிகைக்கு அருகம்புல் கிரீடம், மாலை அணிவித்து ஏழு வகை கனிகள், உணவு வகைகளை தானமாக அளித்துவர உறவு முறையில் தட்டிப்போன நல்உறவுகள், சம்பந்தங்கள் தொடரும்! குடும்பத்தில் உள்ள பகைமை உணர்வுகள் மறையும்!  விலகிய பெற்றோர்கள், சகோதர, சகோதரிகள் மனம் திருந்தி ஒன்று சேர்வர்!

அஷ்டமி (24.10.2001) – ஸ்ரீவேதமூலாம்ருத பிரம்ம சரஸ்வதி

இன்றைய அட்சதா சங்கல்பமாக உலகில் உள்ள இல்லறப் பெண்மணிகளுக்கு நல்ல பக்தியுடைய சந்ததிகள் அமைந்திட சங்கல்பம் செய்து கொள்க.. இன்று உத்தராணி மரத்தாம்பாளத்தில் ‘பின்ன இலையை’ வைத்து அதன் மேல் ஒரு கிண்ணத்தில் தங்கம், வெள்ளி, அல்லது வெண்கலக் கிண்ணத்தில் மஞ்சள் பூசிய 530 அட்சதை மணிகளை வைத்து பால ராஜ கோபால ஸ்தோத்ரம் ஓதி பூஜித்தல் வேண்டும்.. அருகில் ஒரு தட்டில் துளசி தளங்களை வைத்து சுற்றிலும் விளக்குத் திரியை வளையமாக வைத்து இதில் பசுநெய் தடவி தீபமாக ஏற்றுதல் வேண்டும்.. இந்த வட்ட தீப ஜோதி இருக்கும் போதே எட்டு முறை நமஸ்காரம் செய்ய வேண்டும்.. இன்று பிரசாதமாக குழந்தைகளுக்கும் சிறு பிள்ளைகளுக்கும் மிகவும் பிரியமான போண்டா போன்ற எண்ணெய் வகைப் பலகாரங்களை அளித்திட வேண்டும்.. இல்லத்திற்கு சுமங்கலிகளை அழைத்து 10 அட்சதை மணிகளை அளித்து அம்பிகையை வழிபட வேண்டும். பொதுப் பலன்களாக அலுவலகப் பிரச்னைகளால் வாடுவோர்க்கு நிம்மதி கிடைக்கும்! பக்கத்திலேயே எதிரிகளை வைத்துக் கொண்டு வாழ வேண்டி இருப்போர்க்கு நல்ல தீர்வும் மன அமைதியும் கிட்டும்.!

இன்றைய நவராத்திரி தின அன்னதானத்திற்கு மிகவும் விசேஷமானதாக அமைவது வட்ட வடிவில் உள்ள போண்டா, வடை, முறுக்கு போன்ற உணவுப் பண்டங்களாகும். இன்றும், அஷ்டமி திதி தோறும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஸ்ரீதளிநாதர் ஆலயம், இதனருகில் வைரவன்பட்டி பைரவர் ஆலயம், கும்பகோணம் அருகே உடையாளூர் சிவாலய பஞ்ச பைரவ மூர்த்தி இத்தலங்களில் அம்பிகைக்கு கரும்புச் சாறு அபிஷேகம் செய்து 18 ஏழைச் சுமங்கலிகளுக்கு வெள்ளி மெட்டி தானமாக அளித்திடில், தீய பழக்கங்கள் உள்ள பிள்ளைகள், கணவன்மார்கள் திருந்துவர்..!

ஸ்ரீநடராஜப் பெருமான் திருப்பத்தூர்

பால ராஜ கோபால ஸ்தோத்ரம்
ஸ்ரீச: சரண்யோ பூதாநாம் ஸம்ஸ்ரிதா பீஷ்ட தாயக
அநந்த ஸ்ரீபதி ராஜகோபால குணப்ருந் நிர்குணோ மஹாந்:

நவமி திதி (25.10.2001) ஸ்ரீவித்யா சௌந்தர்ய பிரம்ம சரஸ்வதி

உத்தராணி மரத் தாம்பாளத்தில் இன்று வாழை இலையை வைத்து மஞ்சள் பூசிய 180 அரிசி மணிகளை நிரப்பி தந்திர பூடண மந்திரங்களை ஓதி பூஜித்தல் வேண்டும்.. ஒரு மரத் தட்டில் ஆலிலை மேல் ஜாதி மல்லிப் பூக்கள் வைத்திடுக.. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பெண்ணெய், வேப்பெண்ணெய் ஆகியவற்றால் தீபம் ஏற்றுவது சிறப்புடையது.  ஒன்பது அகல் விளக்குகளை அருகில் வட்டத் தட்டில் ஏற்றி ஒன்பது தீபங்களின் சாட்சியாக அம்பிகையை வணங்குதல் வேண்டும்..!
தந்திர பூடண மந்திரம்
கவசீ குண்டலீ சக்ரீ கட்கீ பக்த ஜநப்ரிய:
அம்ருதயுர் ஜந்மரஹித: ஸர்வஜித் ஸர்வ கோசர:

இன்று அட்சர சங்கல்பமாக, உலகில் உள்ள அனைத்து இல்லறப் பெண்களுக்கும் அரணித் தீட்டுத் தோஷங்கள் அண்டாத வண்ணம் காத்திடும்படி பிரார்த்தனை செய்ய வேண்டும். மேலும் இன்றைய பூஜையைக் கடைபிடிப்பதால் பலவிதமான விபத்துகளால் ஏற்பட்ட பிரச்னைகளால் வாடுவோர் நன்முறையில் தீர்வு பெறுவர்.. இன்றைக்கு பிரசாதமாக அமைவது ஆல்பக்கோடா பழம் என்பதாகும்.. இது நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்..! இன்று இல்லத்திற்கு வருகின்ற சுமங்கலிகளிடம் 11 அட்சதை மணிகளை அளித்து ஸ்வாமிக்கு இட்டு வழிபடச் செய்ய வேண்டும்.. ஆலயங்களில் ஆல்பக்கோடா பழத்தை ஏனைய பழங்களுடன் சேர்த்து கனிகள் தானம் செய்வதால் முதுமையில் ஏற்படுகின்ற பலவிதமான மன ஓட்டங்களுக்கு தக்க நிவார்த்தி கிட்டும். நவமி திதியால் ஏற்படுகின்ற இன்னொரு விசேஷமான பலன் என்னவென்றால் காப்புச் சக்தி இல்லாமையால் அடிக்கடி நோய் வாய்ப்பட்டு வாடுபவர்கள் நன்முறையில் குணமாகி பலவீனம் நீங்கி தேக ஆரோக்யம் பெறுதற்கு இன்றைய நவமி திதி பூஜை உதவும்..!

இன்றைய பூஜைக்கான தலம் கும்பகோணம் திருநல்லூர் அருகே உள்ள மாளாபுரம் சிவாலயம்! மூன்று பிள்ளையார் அருள் கூட்டும் தலம்! இங்கு ஆலயம் முழுதும் நீர் விட்டுக் கழுவி சுத்தம் செய்து (மாவு) நீர்க் கோலமிட்டு அம்பிகைக்கு மாதுளம் பழக் காப்பிட்டு ஏழைகளின் வீட்டிற்கான இயன்ற மளிகைச் சாமான்களை தானமாக அளித்தலால் கடன் பிரச்னைகள் தீர் நல்வழி கிட்டும்!

தசமி திதி (26.10.2001)– ஸ்ரீஸ்வேத ப்ரகாச பிரம்ம சரஸ்வதி

தசமி திதி பூஜை அட்சதை சங்கல்பமாக உலகத்தில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் நல்லறிவு ஏற்படவும் வாயு சம்பந்தமான நோய்களிலிருந்து காத்து இரட்சிப்பதற்கும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.. ஒரு இல்லத்திற்குத் தேவையான முக்கியமான பத்து உணவு மூலாதாரப் பண்டங்களை உத்தராணி மரத் தாம்பாளத்தில் ஒரு வாழை இலையில் நிரப்புதல் வேண்டும்.. அரிசி, உப்பு, புளி, மிளகாய், தானிய வகைகள் போன்ற குறைந்தது பத்து வகையான பொருட்கள் இருப்பது விசேஷமானது. இன்று சுமங்கள ஸ்தோத்ரம் ஓதி பூஜித்தல் வேண்டும்.. பக்கத்தில் தட்டில் சர்க்கரைப் பொங்கலை நிரப்பி கலைவாணி படத்திற்குப் பொற்பாத பூஜை செய்து 550 அட்சதை மணிகளைக் கொண்டு பூஜித்தல் வேண்டும்...
சுமங்கள ஸ்தோத்ரம்
புண்ய: புண்யாதிக: பூர்வ: பூர்ண: பூரயிதா ரவி:
ஜடில் கல்மஷத்வாந்த ப்ரபஞ்ஜத விபாவஸு:

இன்று இல்லத்திற்கு வருகின்ற சுமங்கலிகளுக்கு 12 அட்சதை மணிகளை அளித்து வணங்கச் செய்து ஆசியை பெறுதல் வேண்டும்.. மேலும் இன்றைய நவராத்திரி பூஜையைக் கடைபிடிப்பதனால் அடிக்கடி மரணங்கள், நோய்கள், நஷ்டங்கள் ஏற்பட்டு வாடுகின்ற குடும்பங்களுக்குத் தக்க நிவாரணம் கிட்டும்... நவராத்திரியில் தினந்தோறும் சாதி, சமய, மத, குல,இன, பேதமின்றி சுமங்கலிப் பெண்களை இல்லத்திற்கு வரவழைத்து அவர்களுக்கு அட்சதைகளையும் சுபமங்களப் பொருட்களையும் தானமாக அளிப்பது சிறப்பானதாகும் நல்ல பெரிய கண்ணாடி (தற்காலத்தில் மிகச் சிறியதாகக் கொடுத்து தானத்தை ஒப்பேற்றுவது தவறு), கை வளையல்கள், குங்குமச் சிமிழ், நல்ல குங்குமம், மாங்கல்யச் சரடு, இனிப்பு வகைகள், மருதாணி, கண் மை போன்ற நல்ல மங்களப் பொருட்களை முன்னமேயே திட்டமிட்டுச் சேர்த்து வைத்துக் கொண்டு தாம்பூலப் பைகளில் இவற்றை அளித்தல் மிகச் சிறப்பானதாகும்!

ஸ்ரீசூரியகோடி பிரகாசர் கீழ்சூரியமூலை

இன்றைய பூஜைக்கான விசேஷ ஆலயம் சூரியனார் கோயில், திரைலோக்கி அருகே உள்ள கீழ்சூரிய மூலை ஸ்ரீசூர்யகோடி பிரகாசர் ஆலயம்! அம்பிகைக்கு ஏலம், புனுகு, ஜவ்வாதுடன் செம்பருத்தித் தைலம், மருதாணித் தைலம், மரிக்கொழுந்து திரவியம், நெல்லித் தைலம், தேங்காயெண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், சிறிது தேன் மெழுகு ஆகியவை கலந்த தைலக் காப்பிட்டு ஏழைச் சுமங்கலிகளுக்கு பாத்திரங்கள், காலணிகள், மர ஆசனப் பலகைகள் அளித்தலால் தடைபட்டுள்ள கட்டடம், விவசாயம், வீடு, வேலை, சுப காரியங்கள் நிறைவேறும்! தசமி தோறும் செய்தல் சிறப்புடையது!

வித்யா தானம் :- வித்யா தானம் இந்த பிரம்மஸ்ரீ நவராத்திரிக்கு மிகவும் விசேஷமானதாகும். ஏனென்றால் பிரம்ம பத்னியாகிய ஸ்ரீசரஸ்வதி தேவியே தினந்தோறும் ஒன்பது தினங்களிலும் பூலோகத்திற்கு வந்து அதுவும் பக்தி சிரத்தையுடன் பூஜிப்போருடைய இல்லங்களிலும் புனிதச் சாரம் கொள்வதால் ஸ்ரீஅகஸ்திய விஜயம், இறைத் துதிகள், ராமாயணம், மகாபாரதம், போன்ற ஆன்மீக நூல்களைத் தானமாக அளித்தலால் இது மகத்தான வித்யா தானமாக இறை ஞானத்தை தானமளிப்போர்க்கும் ஊட்டுகின்றது என்பதை மனதில் கொள்ளுங்கள்.. இதனால் தான் அக்காலத்தில் இராமாயணம், மகாபாரதம், தேவாரம், திருவாசகம் போன்ற இறை நூல்களைத் திருமணம் மற்றும் விசேஷ தினங்களில் வித்யா தானமாக அளிக்கின்ற நடைமுறையைக் கொண்டிருந்தார்கள்.. பிரம்ம பத்னியாகிய ஸ்ரீசரஸ்வதி தேவியே ஒன்பது தினங்களிலும் பூலோகத்திற்கு வந்து பூஜை செய்வதால் வித்யா தானமானது கலைவாணிக்கு மிகவும் ப்ரீதியானதாகும். அன்னதானம், வஸ்திர தானம், காலணி தானம் போன்று வித்யா தானமும் மிகவும் சிறப்புடையது!

இன்றைக்கும் பல குடும்பங்களில், ‘மக்குப் பிள்ளைகளாய் இருக்கின்றார்களேம் சரியாக படிக்கவில்லையே’ என்று எண்ணுவதுண்டு. இவர்கள் வித்யா தானம் பெறக்கூடிய புண்ணிய சக்தியைச் சரியாகப் பெறாததனால்தான் இத்தகைய நிலை ஏற்படுகின்றது.. எனவே வித்யா தானத்தையும் உங்களுடைய தான தர்மங்களில் ஒன்றாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.. தசமி திதியாகிய இன்று, கலைவாணியின் பெயராகிய சரஸ்வதி, பாரதி, வாணி போன்ற பெயருடைய வயதான சுமங்கலிகளுக்குப் பாத பூஜை செய்தல் வேண்டும்.. இத்தகைய பெயருடையவர்கள் கன்னிப் பெண்ணாக இருந்தால் மணையில் அமர வைத்து கன்யா பூஜை செய்திடுங்கள்... கன்யா பூஜை என்றால் அப்பெண் குழந்தைக்குப் பாவாடை, சட்டை, தாவணி அளித்து, வளையல்கள், குங்குமம், மருதாணி, சடை பில்லை, மரத்தால் ஆன ஹேர்பின் போன்றவற்றை அளித்து கன்யா தேவதையாக பாவித்துச் சுற்றி வந்து தான தர்மங்கள் அளித்து வழிபடுதல் வேண்டும்...! சரியாகப் படிக்காத பிள்ளைகள், பெண் குழந்தைகள் நன்முறையில் படிப்பதற்கும், கல்லூரிப் படிப்பு வரையில் தேர்ச்சி பெறுவதற்கும். இன்றைய பூஜை முறைகள் ஆண்டாண்டு காலமாக மிகவும் உதவும்.. வித்யா தானமாகிய தெய்வீக நூல் தானம் மிகவும் இன்றியமையாததாகும்.. இந்தப் புண்ய சக்திதான் உங்களுடைய குழந்தைகளுக்கு நல்லறிவைத் தரும்!

படி தாண்டுதல்

ஆஸ்ரமப் படி தாண்டும் அற்புத ‘கரண யோக’ முறைகள்!

எந்தெந்த நாளில் எந்தெந்த யோகம், கரணம் பயில வேண்டும் என்பதை உணர்த்துவதும் பஞ்சாங்கத்தின் யோக, கரண காலப் பாகுபாடுகளாம்..! கரண, யோகங்கள் நோய்கள் நீக்கி, நல்ஆரோக்யம், நீண்ட ஆயுள் தருகின்றன எனில் எந்தெந்த நாளில், எந்தெந்த யோக, கரண காலத்தில் எத்தகைய இன்னல்கள் ஏற்படும் என்பதை உணர்வதற்குத் தானே இறைவன் பகுத்தறிவை நமக்குத் தந்துள்ளான்! நிலை வாசல் படிகளைத் தாண்டிச் செல்தல் என்பது ஒரு வகை கரண யோகமாகும்.! இதனால் மகத்தான கரண யோக சக்திகள் கிட்டுகின்றன..!

நம்முடைய தினசரி வாழ்வில் பத்மாசனம், தோப்புக் கரணம், பாசாங்குலி போன்ற முத்திரைகள் என்றவாறாகக் குறைந்தது 12 ஆசன, யோக கரணங்களையாவது செய்து வந்தால்தான் சர்க்கரை நோய், ஆஸ்த்மா, மூட்டு வலி, இடுப்பு வலி, ஒற்றைத் தலைவலி, வயிற்றுக் கோளாறுகள் போன்று தற்காலத்தில் பெருகி வருகின்ற நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்வதோடு தியானத்தின் தெய்வீகத் தன்மையை உணர்ந்து உண்மையான தியானத்தில் லயித்திடலாம்! இள வயத்திலிருந்தே இவற்றைச் செய்து வருதலால் உத்தமமான ஒழுக்க நிலைகள் தாமாகவே அமையும்!

சித்தர்கள், தம் ஞானபத்ர கிரந்தம் மூலமாக அருள்கின்ற சில அரிய வழிபாட்டு முறைகளை நாம் கடைபிடித்தால் கரண, யோகங்களுடைய அற்புத தெய்வீக சக்தியை நாம் நன்முறையில் பெற்று, கர்ம வினைகளைக் கழித்து, நோய்களிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொண்டு பெறுதற்கரிய தெய்வீக மன அமைதியையும் பெற்றிடலாம்! கரணம் மற்றும் யோகம் போன்றவை உடல் மற்றும் மனதிற்கான அரிய தெய்வீக சக்திகளைத் தந்து நோய்கள், கர்ம வினைகள், தீவினைகளின் சக்திகளை வெல்வதற்கு தேவையான கரண சக்தியை, யோகாக்னி சக்தியை உடலில் எழுப்புவதாம், சந்தியா வந்தன வழிபாட்டில் உள்ள கரண, யோகாசனங்கள் நோய்களைத் தீர்க்கின்றன என்றால், உடலில் 72000 நாடி நாளங்களில் ஏற்படுகின்ற அந்தந்த நோய் வருவதற்கான தீவினைக் கர்மங்கள் யாவும் குறித்த கரண மற்றும் யோகாசன சக்திகள் மூலமாக பஸ்பம் செய்யப்படுகின்றன என்பதே பொருளாம்! நொண்டியாட்டம், குட்டிக் கரணம் போன்ற நம் பண்டைய விளையாட்டுக்கள் கரண யோக வகையைச் சார்ந்தவை..!

கரண, யோகாசனங்கள் நம்முடைய தினசரி வாழ்வில் கண்டிப்பாக இடம் பெற்றாக வேண்டும்.. ஒவ்வொருவரும் குறைந்தது அரைமணி நேரமாவது பத்மாசனம், தோப்புக் கரணம்தனைப் பயின்றால்தான் வயிறு, குதம், மூட்டும் இடுப்பு, கழுத்து போன்ற இடங்களில் நோய்கள் வாராது தற்காத்துக் கொள்ள முடியும்.. மேலும் அந்தந்த அங்கத்தால் செய்கின்ற தீவினைகளுக்கும் தக்க பிராய சித்தமும் கிடைக்கும்! மேலும் சிறு, இள வயதிலிருந்தே உடல் ஒழுக்கத்தையும், மன ஒழுக்கத்தையும் நன்முறையில் மேலும் தியான முறையில் பெருக்குவதற்கான எளிய தோப்புக் கரணம், ஒற்றைக் காலில் நிற்றல் போன்ற எளிய கரண, யோகாசன முறைகளைத் தினந்தோறும் கண்டிப்பாகச் செய்து வந்தாக வேண்டும்..!

யோக பாவனத்தைக் கா(கூ)ட்டுவதே பஞ்சாங்க கால கணித யோகமும், கரணமும்!

சுபமுகூர்த்த நாட்களைக் கணிக்கும் போது, கண்டிப்பாக 27 யோகங்கள், 11 கரணங்கள் ஆகியவற்றையும் சேர்த்துத்தான் கணிக்க வேண்டும்... யோகம் என்றால் அமிர்த யோகம், சித்த யோகம், மரண யோகம், பிரபலாரிஷ்ட யோகம் (கூடா நாட்கள்) ஆகிய அமிர்தாதி யோகங்கள் மட்டுமல்லாது மேலும் 27 யோகங்களும் உண்டு... இவற்றில் சில யோகங்களும், கரணங்களும் யோகாசனத்திற்கு உரித்தான மகத்தான புனித நேரமாக விளங்குகின்றன.. எந்த யோகத்தில், கரணத்தில் எந்த யோகத்தை, கரணத்தை பயின்றால் உத்தமமான பலன்களையும், நோய் நிவர்த்திகளைப் பெறலாம் என்பதற்கான யோக, கால வாய்ப்பாடுகளும் உண்டு..!

கரண வகைகளுள் ஒன்றுதான் பத்ரை கரணமாம்... இந்த பத்ரை யோகத்தில்தான் ஜோதி மற்றும் அக்னி சம்பந்தமான பல கரண யோகங்களைச் செய்தல் சிறப்புடையதாம்.. ஜோதி வேறு, அக்னி வேறு! அக்னியில் மட்டும் 3000 வகையான அக்னிகள் உண்டு. ஜோதியிலும் மட்டும் 45000 வகையான ஜோதிகள் உண்டு. மேற்கண்ட ஜோதிகளுக்கும், அக்னிகளுக்கும் மூலாதாரமாக விளங்குவதே திருஅண்ணாமலை ஜோதியாம்..! நாம் நினைப்பது போல திருஅண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்தில் மட்டும் ஏற்றப்பட்டுத் தெரிவது கிடையாது... இத்திருநாளில் மனிதக் கண்களுக்குப் புலனாகும் பொருட்டு விளக்கேற்றி ஜோதி தரிசனத்தை நமக்காக இறைவன் பெற்றுத் தருகின்றானே தவிர, திருஅண்ணாமலை ஜோதியானது எப்போதும் ஒளிர்ந்து கொண்டிருக்கின்ற அருணாசல ஜோதி ஆகும்... இதிலிருந்துதான் சூரிய, சந்திர மற்றும் கோள்கள், நட்சத்திரங்களுக்கான அண்ட சராசரத்திற்கும் தேவையான அக்னி சக்தியும், ஜோதி சக்தியும் பெறப்படுகின்றன...!

தாண்டி(ய) கர்ம வினைகளுக்குத் தாண்டியே ‘கரண’ பரிகாரம்!

கலியுகத்திற்குத் தேவையான் முக்கியமான கரணங்களுள் நிலைகளுள் ஒன்றே படி தாண்டும் கரண யோகப் பயிற்சியாம்! அதாவது தாண்டக் கூடிய பொருட்கள், தாண்டக் கூடாத பொருட்கள் என உலகியல் வழிமுறைகள் உண்டு! தற்காலத்தில் அனைவரின் இல்லத்திலும், flat முறையிலும் ஒன்று அல்லது இரண்டு அறைகளே அமைந்திருப்பதால், குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும், அனைத்துப் பொருட்களையும் தாண்டிச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகின்றது.. படுத்து இருக்கின்றவர்களையோ, சிறு குழந்தைகளையோ, கால்களை நீட்டி அமர்ந்து இருப்பவர்களையோ, ஒருபோதும் தாண்டிச் செல்லக் கூடாது..!  ஏனெனில் புனிதமான ஆத்மா உறைகின்ற ஒரு மனித உடலானது, தெய்வத்தையே தாங்கி நிற்கும் புனிதமான திருமேனியாக இருப்பதால் எவரையும் தாண்டலாகாது! தாண்டக் கூடாதவற்றைத் தாண்டியமைக்கான பரிகாரமாக அனைவருமே தினமும் பயில வேண்டிய முக்கிய கரண யோக நிலைகளுள் ஒன்றே படிதாண்டும் யோகமாகும்...

ஆலயப் படிகள் அற்புத மகரிஷி வடிவுகளே!

மேலும் இல்லத்தின் நிலைப்படி, வாசற்படிகளையும் மிதித்தல் கூடாது.. தாண்டித்தான் செல்ல வேண்டும்.. இவ்வாறு கால்களை சற்றே உயர்த்தித் தூக்கி வைத்துச் செல்வதால் உடலின் பல நாளங்களும் சீர் பெறுகின்றன! நிலை வாயிற்படியில் “படி தேவதைகள்” நிறைந்துள்ளனர். அவர்களை மிதிக்கக் கூடாது.. மேலும் இல்லங்களில் சற்றே உயரமான வாசற்படிகலை வைப்பதனால் தாண்டித் தாண்டிச் செல்லும்போது இவைதாம் நாமறியா வண்ணம் “கரண” யோகப் பயிற்சிகளாகவும் ஆகி அபூர்வமான கரண சக்திகளைத் தந்து நமக்கு உதவுகின்றன! ஆலயங்கள், சபரிமலை போன்ற இடங்களிலுள்ள படிக்கட்டுகளில் சித்தர்கள், மகரிஷிகளும் திருஅண்ணாமலை ஸ்ரீஅகஸ்தியர் ஆஸ்ரமம் போன்ற இறைப் பணிகள் நிறைய நிகழும் இடங்களின் படிக்கட்டுகளில் பித்ரு மூர்த்திகளும், பாதாம்ருத தேவாதி தேவ முனிகளும் படிகளாக வடிவெடுத்துள்ளனர்.. திருப்பதியில் படியாய்க் கிடக்க வேண்டும் என்ற வரம் பெற்று இவ்வாறு படிகளாய் மாறிய உத்தம மகரிஷிகளும் உண்டு.. இறைவனைத் தரிசிக்க வருகின்ற அடியார்கள் – எவராயினும் சரி – இறை தரிசனத்திற்காக வந்திருப்பதால், அவர்தம் பாதங்கள் புனிதமானவை என்ற தாத்பர்யமே இதற்குக் காரணமாம்..!

நிலைப் படிகள், வாசற் படிகள் குறித்த மரங்களால் ஆக்கப் பட வேண்டும்! தற்காலத்தில் வீட்டைக் கழுவி விடுதலுக்காக வசதியானது என எண்ணி வாசற்படிகளைப் பலரும் மரத்தால் வைப்பது கிடையாது.. வெறுமனே விட்டு விடுகின்றார்கள்! இது வாஸ்து சாஸ்திரத்திற்கு முற்றிலும் புறம்பானதாம்.. இதனால் நிலை வாசல்படி தேவதைகள் தங்காமல் போய் விடும்... செல்வம் நிலைக்காது செல்வ தேவதைகள் செல்வோம் எனச் சென்றிட நிலைப் படிகள் இல்லாமையும் ஒரு காரணமாகும்.!

உயர நிலைப் படிதரும் உத்தம தெய்வீக நிலைகள்!

நம் சிவகுருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஈச சுவாமிகள், அவர்கள் இன்றைக்கும் சூட்சும வடிவில், திருஅண்ணாமலை ஆஸ்ரமத்திற்கான வாஸ்து நியதி முறைகளை அளித்துக் கொண்டுள்ளார்கள்.. ஒருமுறை ஆஸ்ரமத்தின் சற்றே உயரமான வாயிற் படிகள் கொண்ட அறைகளைத் தாண்டித் தாண்டிச் செல்வதால் முழங்கால்களில் அடிபடுவதாக ஒரு அடியார் நம் குருமங்கள கந்தர்வாவிடம் எடுத்துரைத்து, “ஏன் இவ்வளவு உயரமாக வாயிற்படிகளை வைத்துள்ளீர்கள்? தாண்டித் தாண்டி நடக்கும்போது முட்டியில் அடிபட்டு இரத்தக் காயம் ஏற்படுகிறது! தவறாக design செய்து கட்டியுள்ளார்கள்.. சரியாகப் plan செய்து administration செய்யவில்லை!” எனக் கூறிப் பொறுமினார்... மிகவும் சாந்தமம் நிறைந்த பணிவோடு, அடக்கத்துடன் நம்குருமங்கள கந்தர்வா அவர்கள் அளித்த தெய்வீக விளக்கமாவது:-

ஆஸ்ரம வாஸ்து பூஜை அனைத்துலகக் கட்டடங்களுக்குமாம்! சித்புருஷர்கள் அருளிகின்ற வாஸ்து சாஸ்திர முறைகளுடன் துலங்கிடவே ஸ்ரீஅகஸ்தியர் ஆஸ்ரம நிலை வடிவுகள் நிர்மாணிக்கப்பட்டுகின்றன.. எல்லாவற்றிற்கும் காரண காரியங்கள் உண்டு! ஆஸ்ரமத்தின் ஒவ்வொரு செங்கல்லும் ஸ்ரீவாஸ்து தேவ மூர்த்தியைத் துதித்துப் பிரார்த்தித்து, வழிபட்டு அமைக்கப்படுகின்றது! காரணம், வாஸ்து வழிபாடு பற்றிய முறைகளை நன்கு அறியாது கட்டப்பட்டுள்ள உலகின் அனைத்துக் கட்டடங்களிலும் உள்ள நில, நீர், கல், மண், சிமெண்ட்டில் உள்ள தோஷங்கள் நீங்கும் வண்ணம் சத்சங்கப் பூஜைகளாக சாதி, மத, இன பேதமின்றி பலரும் ஒன்று சேர்ந்து பித்ருப் படிக்கட்டுப் பூஜைகளாகவும், அக்னி வடிவுகளிலும் பூஜிக்கப்படுகின்றது! திருஅண்ணாமலையில் நம் ஆஸ்ரமத்தில் பௌர்ணமி மற்றும் கார்த்திகை தீப நித்திய அன்னதானச் சமையல் முடிந்த பின் கோட்டை அடுப்பிற்கான பூஜையில் அக்னி க்ஷீர சாந்த பூஜையில் அக்னியில் இடப்படும் பசும் பாலில் இருந்து எழும் கோ கரண சக்தி வாயு சக்தியானது பல்லாயிரம் அடி உயரத்திற்கு எழும்பி விண்ணில் நிறைந்து உலகில் நிலவும் பலவிதமான வாஸ்து சாஸ்திர மீறல் தோஷங்களுக்குப் பரிகாரமாகவும் அமைகின்றது!

ஆனாம் இவ்வரிய அக்னியில் எழும் கோ கரண சக்தி வாயு சக்தியை அளிக்கும் அக்னிப் பசும் பாற் புகையை எழுப்பிட குறித்த சில பத்ரை கரண சக்திகளைப் பெற்றவர்களால்தாம் அக்னி பூஜையோடு நிறைவேற்ற இயலும்! இதற்காகவே பல அடியார்களும் நிலைப் படிகளைத் தாண்டித் தங்களையும் அறியாமல் கரண சக்திகளைப் பெறும் வண்ணம் கல், மண், பலகை, கம்புகளைச் சுமக்கும் இறைப் பணிகள் மூலமாகப் பெறுதற்கரிய பத்ரை கரண சக்திகளைப் பெறுகின்றார்கள்..!

பித்ருக்களும் வேண்டும் கரண சக்தி! மேலுலகில் பல பித்ருக்களும் இக்கரண சக்தியைப் பெற இயலாமல் மேலும் பல உத்தம, உன்னத தெய்வ நிலைகளை அடைய முடியாமல் தவிக்கும் போது அவர் பாரம்பரியத்தில் வரும் அடியார்கள் ஆஸ்ரம இறைப் பணிகளைப் புரிகையில் அவர்களுடைய உடல்களில் பித்ருக்கள் ஆவாகனமாகி நிலைப் படிகளைத் தாண்டித் தாங்களும் சூட்சும சரீரத்தில் இறைப் பணிகளாற்றித் தாங்கள் பெற இயலாதிருந்த கரண சக்திகளைப் பெற்று உத்தம நிலைகளை அடைகின்றார்கள்! பித்ருக்களுக்கும் இறைவழி காட்டும் நிலைப் படிக் கட்டுகளையா ‘சரியில்லை’ என்று சொல்லிச் சாபங்களைப் பெருக்கிக் கொள்வது? தெய்வீக வாய்ப்புகளை அள்ளித் தந்தாலும் அடியார்கள் அவற்றைப் பயன்படுத்தாது ஏதேதோ காரணங்களால் நழுவ விடுவதை விதி எனத்தான் சொல்லிட வேண்டும்!

கட்டிடத்தில் பயன்படுத்தப்பட்ட மண் புனிதமான ஆற்றின், ஆலயக் குளத்தின் மணலாக இருந்தால், அரசாங்கத்திற்கோ, அல்லது, அந்த ஆற்றுப் படுகைகளிலுள்ள எல்லை தேவதைக்கோ, ஆலயத்திற்கோ தக்க தொகை செலுத்திப் பரிகார பூஜை செய்த பின்பே ஆற்று மணலைப் பயன்படுத்த வேண்டும்... இவ்வாறு செய்யாவிடில் அதில் பல நில தோஷங்கள் சேர்ந்து வாஸ்து இலக்கணத்திற்கு மாறாகச் செயல்பட்டுப் பெரும் துன்பங்களையும், நஷ்டங்களையும், இழப்புகளையும் சந்திக்க நேரிடும்! .. எனவே கட்டடத்தில் சேர்கிற ஒவ்வொரு செங்கல், மண், சிமெண்ட், மரம் அனைத்திற்கும் உரிய பூஜை முறைகளைச் செய்தால்தான் நில தோஷங்களை நீக்க முடியும். நிலம் புனிதமாக இருந்தால் கூட அதில் பயன்படுத்தப்படும் கட்டிடப் பொருட்களில் தோஷங்கள், இருக்குமாயின், இதனாலும் பெருந் தீங்களும், சாபங்களும் ஏற்படும்.. இதற்காகத்தான் வாரந்தோறும் ஸ்ரீவாஸ்து ஹோம பூஜைகளை மேற்கொள்ள வேண்டும்..

வான்மழை நீக்கும் வாஸ்து மீறல் தோஷங்கள்!

ஒருவிதத்தில் வான் மழையானது, வருண பகவானின் அனுகிரகமாகக் கட்டடங்களில் உள்ள நில தோஷங்களை ஓரளவு குறைந்து நம்மைக் காக்கின்றது என்பதும் மழைப் பொழிவின் இயற்கை ரகசியங்களுள் ஒன்றாம்! ஆனால் அவற்றிற்கு உரித்தான வருண ஜபங்களைச் செய்தால் தானே சரியான மழைப் பொழிவு ஏற்பட்டு வாஸ்து இலக்கணங்களை மீறிய தோஷங்களுக்கு உரித்தான பரிகாரம் கிட்டும். மேலும் கட்டடங்களில , நிலங்களில் மழைப் பொழிவு நன்கு ப(டி)தியுமாறு நீர்த்தாரை அமைப்புகள் இருக்க வேண்டும்..!

எனவே ஒவ்வொருவரும் வாழ்வில் பல வகைகளிலும் தவறுகளைச் செய்து வருவதால் நிலைப் படிக்கட்டுக் கரண சக்திகளும் அவற்றை நிவர்த்தி செய்ய உதவுகின்றன! குழந்தைகள், பெரியோர் எனப் பலரையும் தினமும் கால்களால் தாண்டி, தோஷங்களைப் பெருக்கிப் பெருக்கியே வாழ்கின்றோம்! இவையெல்லாம் மலை போல் விரிந்து பெருந் தோஷங்களாக மாறி, பிற்பாடு நடக்க இயலாமல், பாரிச வாயு நோய்களாக, கால் வீக்கங்களால், அங்கச் செயல் இழப்புகளாக, உடல் ஊனங்களாக மாறி வருத்துகின்றன! இத்தகைய “தாண்டல்” தோஷங்களை நிவர்த்தி செய்யவே சித்புருஷர்கள் ஆலயங்களில், ஆஸ்ரமங்களில் இவ்வாறான உயர்ந்த வாயிற் படிகளை அமைக்கச் சித்தம் கொள்கின்றனர்! ஆன்மீகத்தில்தாம் தாண்டக் கூடாததைத் தாண்டிக் கூட்டிய குற்றங்களுக்கு அற்புதமான வழிமுறைகளில் தாண்டியும் கரண யோக வழிப் பரிகாரம் நற்பரிகாரம் தரப்படுகின்றது! சாலையில் பிணப் பூக்களை, திருஷ்டிக் கழிப்புகளை (நெருப்பு, பூசனி, வரட்டி, மிளகாய்) மிதித்தல் மற்றும் தாண்டுதல், பிறரை அறியாது மிதித்து விடுதல், புனிதமான இடங்களில் பாதணிகளுடன் செல்தல் போன்ற குற்றங்களுக்கானப் பிராயச்சித்த வழிகளைப் பெற்றுத் தரும் கரண சக்திகளை அளிப்பதே படி தாண்டும் கரண முறைகளாகும்!

தாண்டல் தரும் காண்டீபக் கரண சக்தி!

அர்ஜுனனுடைய காண்டீப வில் அம்பு பல லோகங்களையும் தாண்டக் கூடியது அல்லவா! அவன் இவ்வரிய தெய்வீக சக்தியைப் பெறக் காரணம் பத்ரை கரண நேரத்தில் ஸ்ரீதுர்க்கையை வேண்டி, ஒற்றைப் பாத யோகமாகிய துர்க்கா கரண சார யோகத்தைப் பூண்டு ஒற்றைக் காலால் தாண்டித் தாண்டி பல மலைத் தலங்களை கிரிவலம் வந்து பெறுதற்கரிய காண்டீப கரண யோக சக்தியைப் பெற்றிட்டான்! இவ்வாறாக ஒவ்வொரு முறையும் உயர்ந்த நிலைப் படியை நாம் மிகவும் ஜாக்கிரதையுடன் கவனமாகத் தாண்டி வரும்போது, முழங்காற் பகுதி இடிபடுவது போல் நமக்குத் தோன்றும். இதுவரையில் தாண்டக் கூடாத பொருட்களைத் தாண்டியதால் அவற்றிற்கான தண்டனைகளாகவே இந்த முழங்கால் உரசல் வலிகள் ஏற்படுகின்றன! உண்மையில் கரண சக்தியால் தண்டனைகள் குறைக்கப்படுகின்றன! உண்மையான தண்டனை கடும் பாத நோய்களாகக் கூட இருக்கக் கூடும்!

தாண்டுதலில் கிட்டும் கரண யோக விழிப்பு உணர்ச்சி

எனவே பிறரைக் காலால் உதைத்தல், ஆலயப் பிரதட்சிணங்களில் காலணிகளுடன் வலம் வருதல் போன்றவற்றால் ஏற்படும் தோஷங்கள் நீங்கவே ஒரு பிராயச்சித்தப் பரிகாரமாகவும் உயரமாக, நிலை வாயிற்படிகள் வைக்கப்படுகின்றன.. ஆதலால் நிலைப் படிகளைத் தாண்டும் போது பாதம் முதல் தலை வரை ஒரு கரண யோக விழிப்பு உணர்ச்சி  ஏற்படுவதை இனியேனும் உணருங்கள்.. மேலும் தாண்டித் தாண்டிச் செல்லும்போது தியானத்திற்குத் தேவையான மன ஒடுக்கம், மன ஒருமைப்பாடு கிட்டுகின்றது!.. கரண யோக சக்தியுடன், இந்த தியான யோக சக்தியும் சேரும்போது பல்லாண்டு யோக சக்தி சில நிமிடங்களில் கிட்டுகின்றது.. குருவருளுடன்! ஆனால் இரண்டு அடி உயரமேனும் நாம் பாதங்களை உயர்த்தி என்றேனும் முறையான யோகாசனம் பயின்று உள்ளோமா? அதற்கான வாய்ப்பு இல்லத்திலோ, அலுவலகத்திலோ கிட்டுவதில்லையே! ஆனால் இவ்வளவு சற்றே உயரமான நிலை வாயிற்படிகளை வைக்கும்போது, கால்களைச் சற்று உயரத் தூக்கி நடந்து துர்க்கா கரண சார யோகத்தை நடத்தி நம்மையும் அறியாது கரண யோக சக்திகளைப் பெருக்கிக் கொள்கின்றோம்தானே! 

எனவே இவ்வாறாக உயர்ந்த நிலை வாயிற்படியானது பலவித கரண யோகாசன சக்திகளை உங்களுக்கு அளிக்கின்றது.. இன்றும் செட்டிநாட்டுப் பகுதியில், நகரத்தாருடைய பிரம்மாண்டமான இல்லங்களில் உயரமான நிலைப்படி கொண்ட ரேழிகள், முற்றங்கள் நிறைய இருப்பதன் காரணம் தாண்டிச் செல்வதால் கிட்டும் கரண சக்திகளைப் பெற்றிடவே! எனவேதாம் நிலைப் படிகளை அமைக்கும் போது பத்ரை கரண நேரத்தில் அமைப்பார்கள்!

கரண சக்தியைப் பெறும் எளிய வழிமுறைகள்!

வெறும் கரணப் பயிற்சி, யோகாசனம் என்றால் நேரமில்லை என ஏதேனும் சாக்குச் சொல்லி ஒதுங்கி விடுவோம்! திருஅண்ணாமலையில் நம் ஆஸ்ரமத்தில், பௌர்ணமி அன்னதானத்தின் போது கிட்டத்தட்ட 100 தடவைக்கு மேல் ஒருவர் இந்த நிலை வாயிற்படிகளைக் கடக்கும்போது ஒவ்வொரு முறையும் ஒரு கரணப் பயிற்சி செய்ததாகின்றது.. அல்லவா! உங்களை அறியாமலேயே நீங்கள் பெறுகின்ற பலவிதமான அரிய தெய்வீக கரண யோகாசன அமைப்புகள்தாமே இவை! என்னே இறை லீலை! இவைதாம் உண்மையான வாஸ்து சாஸ்திர நியதிகள்! நம் வாழ்க்கையோடு இணைந்ததாக சற்குரு கூட்டிடும் கரண, யோக வழி முறைகள்! நமக்கு ஆஸ்ரம இறைப் பணிகள் கிட்டவில்லயே, நாம் எவ்வாறு நில தோஷ நிவர்த்திகளையும், கரண யோக சக்திகளையும் நாம் பெறுவது என்று எண்ணி ஏங்குவோர் அன்னதானம் கைங்கர்யங்களுக்கு உதவுதல், பௌர்ணமி அன்று வரிசையில் பொறுமையுடன் நின்று பிரசாதம் பெறுதல், அன்னதானம் முடிந்தபின் நிகழ்கின்ற படிக்கட்டுப் பூஜைகளைத் தரிசித்தல், அன்னதானம் நன்கு நடைபெற இறைவனை வேண்டுதல் போன்றவற்றின் மூலமாகப் பலரும் கரண யோக அன்னதானப் புண்ய சக்திகளைப் பெற்றிடலாம். தத்தம் இடங்களில் அமைந்துள்ள பழங்காலப் பெரிய படிகளுள்ள ஆலயங்களுக்குத் தினமும் சென்று வழிபடுதல் மூலமாகவும் கரண யோக சக்தியைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.!   

எச்சில் இலை எடுத்தல் எச்சம் போக்கும் இறை மாமருந்து!

எச்சம் என்பது தொக்கி நிற்கும் கர்ம வினைகளைக் குறிப்பதாம்! கிரிவல அடியார்கள் பிரசாதம் உண்டு வைக்கின்ற இலைகளை வெறும் எச்சில் இலை எனக் கருதாது பித்ருக்கள் மற்றும் உத்தம இறையடியாரகளின் திருக்கரம் பட்ட இலைகள் என ஆன்மப் பூர்வமாக உணர்ந்து அவற்றைப் பொறுக்கி, சுத்தப்படுத்துதலும் உத்தம இறைப் பணிதானே! பல்லாயிரக் கணக்கானோருக்கான அன்னதானத்தில், சித்தர்களும், மகரிஷிகளும் கலந்து கொள்தல் என்பது அவர்களுக்கு உரித்தான தெய்வீக இயல்பு நியதிகள்தாமே! நீங்கள் எடுக்கின்ற இலை ஒரு சித்தர் பெருமானோ, மகரிஷியோ, உங்கள் பித்ரு மூர்த்தியோ பெற்ற பிரசாத இலை எனில் என்னே பெரும் பாக்யம் உங்களுக்கு! பலருடைய கரண யோக சக்திகளுடன் உருவாகின்ற பிரசாதமெனில் அவற்றை நீங்கள் பெறுதலும் பெரும் பாக்யம்தானே!

வரிசை தரும் பரிசை அறிவீர்! தங்களை வெளிக் காட்டிக் கொள்ளாது வரிசையில் நின்று வரும் சித்தர்களுடன், மகரிஷிகளுடன் வரிசையில் நீங்களும் நிற்பது பெரும் பாக்யம்தானே! புற்று நோய் உள்ளோரும், கடுமையான இருதய நோயாளிகளும் இன்றும் ஆஸ்ரமப் பிரசாதத்தின் மகிமையை உணர்ந்து வரிசையில் நெடு நேரம் நின்று பிரசாதம் பெறுகின்றனர் எனில் அவரவர் உடலில் பித்ரு மூர்த்திகள் ஆவாகனமாகி, கூடுதல் புண்ய சக்தி தந்து அருளுடன் பிரசாதம் பெற ஆன்மசக்தி தந்து உதவுகின்றனர்... இதற்கெல்லாம் வரிசையில் நின்றால்தானே உங்கள் பித்ரு மூர்த்திகளை ஆன்மப் பூர்வமாக தரிசிக்க முடியும்.!

எனவே பௌர்ணமி அன்னதானத்தின் போது  பலவித யோக சக்திகள் உங்கள் உடலில் சேர்ந்து, தாண்டத் தகாத பொருட்களைத் தாண்டிய குற்றங்களை நிவர்த்தி செய்வதற்காகப் பரிகார வழிமுறைகளைப் பெறுகின்றீர்கள்! எனவே யார் இவ்வாறு உயரமாக ஆலயங்களிலோ, ஆஸ்ரமத்திலோ தவறாக நிலை வாயிற்படி கட்டியது, Administration சரியில்லை என்றெல்லாம் தவறாகப் பேசி சித்புருஷர்களின் கணக்குகளையும், கணிப்புகளையும் எடை போட்டு, வீண் சாபங்களைப் பெருக்கிக் கொள்ளாதீர்கள்..!

இரும்பு கரும்பா ?

காக்கும் சக்திக்காக இரும்பைப் பயன்படுத்தினால் அது நம்மை பாதிக்காது! இருப்பினும் இயற்கையாகவே இரும்பிற்குத் தீவினைகளைத் தாங்கும் சக்திகள் இருப்பதால்தான் கதவுகள், கஜானாப் பெட்டிகளுக்கு நல்ல ஆழ்ந்த வண்ணம் பூசி, பல தெய்வீக சம்பந்தமான வரைவுகளை (designs) அதில் ஏற்படுத்தி அவற்றிற்குத் தினமும் மஞ்சள், குங்குமம், சந்தனம் வைத்து வணங்குதல், அவற்றின் முன் கோலம் போடுதல், குறித்த வாஸ்து திசைகளில் வைத்து வணங்குதல் போன்றவற்றால் இவற்றில் சேர்கின்ற தீவினைச் சக்திகள் நம்மை அடையாது காத்திடலாம்! கலியுகத்தில் தீவினை சக்திகளிலிருந்து காக்கும் சக்திகளை மனித சமுதாயம் பெருமளவில் இழந்து வருவதால் இரும்புப் பொருட்களைப் பயன்படுத்தும்போது அதில் ஈர்க்கப்பட்டுள்ள தீவினைகள் நம்மைப் பாதிக்கின்றன..!

பணத்தில் சேரும் கர்ம வினைகள்! :- வங்கி, கடை போன்ற இடங்களில் கஜானாப் பெட்டி இரும்பில் இருப்பதால்தான் பணத்தில் உள்ள கர்மவினைகளை இரும்பு தனக்குரித்தான ஈர்ப்பு சக்திகள் மூலமாகத் தாங்கி ஈர்த்து நம்மைக் காப்பாற்றுகின்றது! பணமானது மதுக் கடை, சூதாட்ட இடம் எனப் பல வகைகளில், பல கைகள் மாறி வருவதால் ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் நல்ல மற்றும் தீவினைக் கர்மங்கள் சேர்ந்தே வரும்! எனவே இரும்பின் பயனறிந்து பயன்படுத்திட வேண்டும்! பணத்தில் லட்சுமி கடாட்சம் உண்டு! ஆனால் நேர்மையாகச் சம்பாதித்து அவற்றை நன்முறையில் பயன்படுத்துவதோடு தெய்வீக, தான, தர்ம, மற்றும் நற்காரியங்களுக்குப் பயன்படுத்தினால்தான் திருமகள் கடாட்சம் பரிணமிக்கும்!

எவர்சில்வர் பாத்திரங்கள், சாப்பாட்டுத் தட்டுகள் வேண்டாமே!

பொதுவாக இரும்பாலாகிய எவர்சில்வர் சாப்பாட்டுத் தட்டுகள் கூடத் தீவினைச் சக்திகளை ஈர்க்கும்.. இதற்காகத்தான் ஒவ்வொரு முறையும் இத்தட்டுகளைக் கழுவி, நன்கு துடைத்து குறித்த மர ஆப்பக் கூடையில் வைப்பார்கள்.. மரத்தின் புனிதத் தன்மையால் இந்த மர ஆப்பக் கூடை, தட்டில் ஈர்க்கப்பட்டுள்ள தீய சக்திகளை விலக்கிடும்! மேலும் புளிக்கும் தீய சக்திகளை ஈர்க்கும் தன்மை உண்டாதலின், மூலிகைப் பொருளான சீயக்காய் தீவினைகளை மாய்க்கும் என்பதால் புளி, சீயக்காயால் எவர்சில்வர் தட்டுகளைத் தேய்த்திடில் அது ஓரளவு சுத்தமாகும்! ஆனால் இதனை முறையாகச் செய்ய வேண்டுமே! சாப்பாட்டிற்கு முன்னும் பின்னும் ஓதுகின்ற மந்திரங்கள் உணவையும், உணவைத் தாங்கும் பொருட்களையும், புனிதப்படுத்தும். மந்தாரை, பூவரசு, தென்னை, தாமரை, வாழை, மந்தாரை இலைகள் உணவைப் புனிதப்படுத்தும்..! கலியுகத்தில் தீவினைச் சக்திகள் பெருக்கெடுப்பதால் இவற்றைத் தாங்கக் கூடிய, இவை தங்கக் கூடிய இரும்பைத் தவிர்த்தல் நலம்.. இரும்பைப் பயன்படுத்தக் கூடிய முறைகளில் நாம் கையாண்டால்தான் அது நன்மை பயக்கும்! இதற்காக இரும்பினை நம் எதிரி என்று பொருள் கொள்ளாதீர்கள்! கம்பிகள், கம்பங்கள் போன்றவற்றிற்காகத் தக்க பூஜை, பூச்சு, வர்ணம், பிற உலோகக் கலப்புடன் இரும்பைக் காக்கும் சக்திப் பொருளாக பயன்படுத்தலாம்.. மேலும் இரும்பின் மேல் பூசப்படுகின்ற குறித்த வண்ணமும் அதன் தன்மைகளை நன்முறையில் மாற்றுவதால் எப்போதும் இரும்புப் பொருட்கள், குறித்த காரியங்களுக்குக் குறித்த வண்ணத்தில் இருப்பது நல்லது..!

பூஜைகளில் இரும்பைத் தவிர்க்கவும் ! :- சந்தியா வந்தனம், தர்ப்பண பூஜைகளில் இரும்புத் தம்ளர், தட்டு, தாம்பாளம் போன்றவற்றை முழுவதுமாக தவிர்த்துவிட வேண்டும்.. கதவுகள் மரத்தில் இருத்தல் சிறப்பானது.. கல்லா, கஜானா பெட்டிகள் இரும்பாக இருந்தால் அவற்றுள் சங்கு, சக்கரம், அமர்ந்த கோல மகா லட்சுமி, இயற்கைச் சூழ்நிலைகள் பொறிக்கப்பட்டு நன்முறையில் வண்ணம் பூசுவதுடன் குபேர திக்கான வடக்கு திசையில் வைத்து இதனுள் மல்லிகைப் புஷ்பம், தன ஆகர்ஷண சக்கரம் போன்றவற்றை வைத்துக் குறித்த சில வண்ணங்களைப் பூசுதல் வேண்டும். எனவே இரும்பைப் பயன்படுத்தும்போது அதனுடைய ஆன்மீகக் குணங்களைப் பெருக்கும் வண்ணம் கூடுதல் அறவழிகளைக் கடைபிடிக்க வேண்டும்! கதவு, தாழ்ப்பாள்கள், ஜன்னலில் உள்ள இரும்புக் கம்பிகள், வெளிவாசல் கேட்டுகள் போன்றவை எப்போதும் கருப்பு நிற வர்ணத்தில் இருந்தால்தான் அவற்றில் சனைச்சர சக்தி மிகுந்து காப்புச் சக்தி பெருகும்.

தீயவற்றை ஈர்த்து நம்மைக் காக்கும் இரும்பு!

இரும்பைத் துருப் பிடிக்க விடக் கூடாது.. துருப்பிடித்தால் அதில் ஈர்க்கப்பட்டுள்ள தீய சக்திகள் பரவ ஆரம்பிக்கும்! இதற்காக இதன்மேல் தடவப்படுகின்ற எண்ணெய் வகைகள், வண்ணங்கள் தீவினைகளைப் பரப்பும் துருவை மாற்றுகின்றன! நம்முடைய பண்டைய ஆலயங்களில் பெரும்பாலும் இரும்பே இல்லாததை, இரும்பு தவிர்க்கப்பட்டு இருப்பதை நீங்கள் கண்டிடலாம்.. இரும்பு கடிகாரம் கூட தேவையற்றதே... ஆனால், வெள்ளி நிறம், மஞ்சள் நிறம், பொன்னிறம் அல்லது பொன் முலாம் பூசப்பட்ட கடிகாரம் சிறப்புடையது... தோலாலான ஸ்ட்ராப் கூடவே கூடாது! தங்கம், வெள்ளி முலாம் அல்லது தங்க முலாம் பூசிய சங்கிலியோ, சங்கிலிக் கயிறோ நன்மையானது.. அதாவது பொதுவாக வர்ணம் இல்லாத இரும்பு சிறப்புடையது அல்ல. பரவெளியிலும், இல்லத்திலும் இருக்கின்ற தீவினைகளை இரும்பு தன்னுள் ஈர்த்து நமக்கு நன்மை செய்தாலும் அவற்றைப் பயன்படுத்தும்போது அவை மீண்டும் நம் உடலில் சேரும் அல்லவா? இரும்பு ஈர்க்கும் தீவினைகளை எவ்வாறு மாய்ப்பது? ஆயுத பூஜை அன்று இரும்புப் பொருட்களுக்கு ஓரளவு ஆன்ம சக்தியை அளித்துப் பெரும்பாலான தீய சக்திகளை பஸ்மம் செய்து விடும்! தற்போதைய விஞ்ஞானமய உலகத்தில் கண்ட கண்ட பொருட்களைக் கண்டபடி பயன்படுத்துவதால் எந்தப் பொருளின் பயன்களையும் நம்மால் முழுமையாகப் பெற முடியாது போகிறது.. எளிமையான இல்ல அமைப்புகளோடு நம் மூதாதையர் போல் நாம் வாழ்ந்திடில் இன்றைக்கு உலகில் மரம், உலோகங்கள், உணவு போன்றவற்றிற்கு எக்காலத்திலும் பஞ்சம் ஏற்பட்டிருக்காது, ஒவ்வொரு இல்லத்திலும் அளவுக்கு மீறிய தங்கம், மரப் பொருட்களைச் சேர்த்து அவற்றின் பயன்களை வீணாக்குவதால் தான் மர வகைகளுக்கே உலகில் பஞ்சம் ஏற்பட்டு ப்ளாஸ்டிக் போன்ற ரசாயன மாற்றுப் பொருட்கள் வழக்கத்திற்கு வந்து விட்டன.

ஆஹா, ஓஹோ என்று சில ஆண்டுகள் முன் வரை ப்ளாஸ்டிக்கைப் போற்றிய விஞ்ஞான உலகம் அதில் உள்ள டயாக்ஸின் என்ற விஷ ரசாயனத்தால் இன்று ப்ளாஸ்டிக் பையையே சட்ட பூர்வமாகத் தடை செய்ய வேண்டும் என்று கூறுகின்றது.. உருவாக்கிய விஞ்ஞானிகளே இதன் அழிவிற்கு போராடுகின்றார்கள்.. இதற்குக் காரணம் இறைவன் கொடுத்துள்ள பொருட்களைப் பயன்படுத்த வேண்டிய இடங்களில், பயன்படுத்த வேண்டிய காரணங்களுக்காகப் பயன்படுத்தாது வேறு தவறான காரியங்களுக்கு, தவறான வழிகளில் பயன்படுத்தியதே ஆகும்..! தேவையில்லாத பயங்கர ஆயுதங்கள், போர்க் கப்பல்கள், போர் விமானங்கள், வெடி குண்டுகள், ராக்கெட்டுகள் போன்றவற்றிற்குத் தேவையில்லாத வகையில் தவறான வழிவகைகளில் இரும்பைப் பயன்படுத்தினால் இரும்பு வர்க்கமே மனித சமுதாயத்திற்கு எதிராகத் திரும்பிடும் அல்லவா? கெடுதலான ரசாயனத்தினால்தான் மனித சமுதாயமே அழியும் என்ற அளவிற்கு, மனித குலம் இறைவன் இனிமையாகப் படைத்த இரும்பைத் தவறான அலங்கோலமான முறையில் விஞ்ஞானம் பயன்படுத்தி அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது...

(பண்டைய) ரசவாதத்தின் தெய்வீகப் பயன்!

ரசவாத வித்தை என்ற தாந்த்ரீக மந்திர முறை ஒன்றுண்டு.. விஞ்ஞானத்தின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட மெய்ங்ஞான மார்க்கம் இது! ஆனால் நடப்பு வழக்கில் ரசவாதம் என்றாலே தவறான முறையில் பொருள் கொள்ளப்படுகின்றது.. ரசவாத முறை என்பது மனித சமுதாயத்தின் நன்மைக்காக இறைவனால் தாந்த்ரீக முறைகளாக யோகியர்கள், சித்தர்கள் மூலமாக உலகிற்கு அளிக்கப்பட்டதாகும். பிரம்ம லோகத்தில் சிருஷ்டியைப் பரிபாலிக்கின்ற ரசாஞ்சன சித்தர்கள், ரசாஞ்சன யோகியர்கள், ரசாஞ்சன ஞானிகள், ரசாஞ்சன மகரிஷிகள் உண்டு.. விஸ்வாமித்ர மகரிஷியானவர் திரிசங்கு சொர்க்கம் என்னும் கோளத்தை ரசாஞ்சன தாந்த்ரீக முறை மூலமாகவே படைத்தார்... எனவே ரசவாதம் என்பது உண்மையிலேயே மிகவும் சிறப்பான தெய்வீக வழிமுறைகளில் ஒன்றாகும். ஆனால் சித்திகளுக்காக இதனைத் தவறாகப் பயன்படுத்துகின்ற மனித அறிவு பெருகியதால் கலியுகத்தில் இதனைக் கடைபிடிப்போரை ஒரு சிலராகவே இறைவனே தனித்துள்ளான்.. ரசவாதம் என்றால் சிருஷ்டி அணுக்களை நன்முறையில் இறை நியதிகளுக்காக மாற்றி அமைத்தல் என்பதாகும். இங்கு சுயநலம், பேராசை, சித்தி செய்தல் போன்ற தவறான அணுகுமுறைகள் புகுந்தால் ரசவாதமே அவர்களைப் பதம் பார்த்து விடும்!

ஸ்ரீவஜ்ரேஸ்வரர் வல்லம்

ரசவாத சக்திகள் நிறைந்த புண்யத் தலங்கள் உண்டு. தஞ்சாவூர் அருகே வல்லம் இத்தகைய தேவ சக்திகள் நிறைந்த தலம்.. பொற்கொல்லர்கள் இங்கு அடிக்கடி வழிபாடுகளை மேற்கொண்டு வருதல் சிறப்புடையதாம்.. வல்லப சித்தர் இத்துறைக்காகவே ஸ்ரீஅகஸ்திய பெருமானால் சிறப்பூட்டப்பட்டவர் ஆவார்.. இரும்பிலும் தங்கத்திலும் உள்ள அணுக்களை விஞ்ஞானம் மிகவும் கடுமையான ஆராய்ச்சிகள், ரசாயன மாறுதல்களுக்குப் பிறகு பகுத்துத் தந்திருக்கின்றது. ஆனால் தாந்த்ரீக முறையில் ரச ஜ்வாலைகளின் மூலம் இரும்பைத் தங்கம் ஆக்கலாம், தங்கத்தை இரும்பாக்கலாம். அதாவது மூலிகைகள் அனைத்துமே படைப்புப் பொருட்களின் அணுக்களை நன்முறையில் நற்காரியங்களுக்காக மாற்றுகின்ற தேவ சக்திகளைப் பெற்றவை.. ஆனால் கலியுகத்தில் இந்த தாந்த்ரீக ரசவாதத்தை அறிமுகப்படுத்தினால் உலகத்தில் பெரும் விஞ்ஞானப் பிரளயம் ஏற்பட்டு பேராசைப் பட்டாளமே விஞ்ஞானத்தில் பெருத்து விடும்..

ரசவாதம் என்றும் (இறை) ரகசியமே!

எனவேதான் இறைவன் கலியுகத்தில் இதனை பெரும் தேவ ரகசியமாகப் படைத்துள்ளான்... இதனை அறிந்த சித்தர்களும், யோகியரும் தம்மை வெளிக்காட்டிக் கொள்வதில்லை.. தாந்த்ரீக ரசவாதம் கலியுகத்தில் எவ்வாறு இறை நெறிகளுக்காகப் பயன்படும்? ஆலயங்களில் தங்கத் தேர், பஞ்ச உலோக மூர்த்திகள் போன்றவை தக்க வழிபாடுகளுடன் மனிதப் பிரயத்தனமாக உருவாக்கப்படுவதுபோல் தோன்றினாலும் உண்மையில் அருட்பெரும் சித்தர்களும், மகரிஷிகளும், பித்ரு மூர்த்திகளும் ஒன்று கூடி இதனை உருவாக்குபவர்களின் தேகம் மூலமாகவும் வான சாஸ்திர வடிவங்களிலும் ரசவாத சித்திகள் மூலமாக இறை மூர்த்திகளை உருவாக்குகின்றனர்... மேலும் இப்பூவுலகில் குறித்த அளவில் தங்க சக்திகள் இறை மூர்த்திகளின் வடிவிலும், நகைகள், நாணயங்கள், முத்திரைகள் வடிவிலும் இருந்தால்தான் பிரபஞ்சத்திலிருந்தும் பல ஜீவ சக்திகள் பூலோகத்தில் காக்கப்பட்டு பூலோக வாழ்க்கை நடைபெறும்,  ஏதோ விஞ்ஞான பூர்வமாக தங்கச் சுரங்கம், இரும்புச் சுரங்கம், பெட்ரோல் கிணறுகள் மூலமாக நாம் பல பொருட்களைப் பெறுவதாக வெளிப்படையாகத் தோன்றினாலும் உலோக தேவதைகளின் அனுகிரகம் இல்லாமல் ஒரு மில்லி கிராம் இரும்பு, வெள்ளி, தங்கத்தைக் கூட வெளிக் கொணர முடியாது.

ஜீவ சக்திகளின் ஆக்கம் எந்த உலோக சக்தியால் பூலோகத்தில் குறைகின்றனவோ அவற்றை ரசவாத முறையில் சித்புருஷர்களும், ஞானிகளும், யோகியர்களும் தேவ ரகசியமாக உருவாக்கி அல்லது அதிகமாக உள்ளதை வேறு உலோகமாக மாற்றி பூலோகத்தில் அவற்றின் குறைவை நிவர்த்தி செய்கின்றார்கள். இன்றைக்கு, கடலிலும் பூமியின் அடியிலும் நம் மூதாதையர்கள் புதைத்த அல்லது இழந்த தங்கப் பாளங்கள் கிட்டுவதாகச் செய்திகள் வந்தாலும் அவை பூலோகத்தில் மீண்டும் தோன்றுவதற்குக் காரணம் மேற்கண்ட ரசவாத கர்ம பரிபாலன முறையே ஆகும்... இரும்பு மட்டும் அல்லாது மனித வாழ்க்கையில் நாம் காண்கின்ற அனைத்துப் பொருட்களுக்கும் இவ்வகையில் தெய்வீக தாத்பர்யங்களும், தெய்வீக விளக்கங்களும் உண்டு. இவை அனைத்தையும் பெற்றுத் தர வல்லவர் சற்குரு ஒருவரே என்பதை உணர்த்தவே இத்தகைய குருவாய் மொழி விளக்கங்கள் தரப்படுகின்றன..!

புத்தாடைகள்

புத்தாடைகள் அணிய புனித நல்புத ஹோரை!

புது ஆடைகளை, துணிகளை வாங்குவது பெரிதல்ல, அவற்றை அணியும் முன் இறைவழிபாடுகளால் புனிதப்படுத்தி, குறித்த சுப நேரத்தில் அணிதல் வேண்டும்! புதன் மற்றும் புத ஹோரை நேரம் புத்தாடை அணிய ஏற்றதாம்! தங்கம், வெள்ளி, தாமிரம், வெண்கலம், மூங்கில் குவளை என ஏதேனும் ஒன்றில் புனித ஆற்று நீரை வைத்து, தர்ப்பைப் புல்லின் ஒரு நுனியை வைத்து மற்றொரு நுனியை ஒரு தாம்பாளம் அல்லது மரத் தாம்பாளத்தில் உள்ள புத்தாடைகளின் மேல் வைத்து, நீங்கள் மற்றொரு தர்ப்பையை புத்தாடைகள் மேல் படும்படியாகப் பிடித்து ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஜபிக்க வேண்டும். ஜபம் முடிந்தபின் பழங்களை நிவேதனம் செய்து ஆலயத்தில் உள்ள ஏழைகளுக்கு தானம் அளித்திடவும்.. குவளையில் உள்ள நீரை கால் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஊற்றி விடவும்.

இதன் மூலம் புத்தாடைகளின் மேல் பஞ்சு முதலான மூலப் பொருள் நிலையிலிருந்து ஆடையாக மாறும் நிலை வரை சேரும் தோஷங்கள் குவளையில் உள்ள நீரில் சேர்ந்து அகற்றப்படும். நிவேதனப் பொருட்களை தானம் அளித்திடல் மூலம் எஞ்சியுள்ள சில தோஷங்களும் தான தேவதைகளின் மூலம் அகற்றப்படும் ஏழைகள் மேல் சூட்சும ரூபத்தில் ஆவாஹனமாகி உங்கள் மூதாதையர் ஆசியும் அளித்திடுவர்.. பிறகு நீங்கள் புத்தாடைகளைப் பயன்படுத்திடலாம்! ஒரு மனிதனின் உடலில் எப்போதும் ஒட்டி இருப்பதால் ஆடைகள் தேவ தூய்மையுடன் உறைதல் வேண்டும்! இரவும், பகலுமாக நம்மிடம் உறைவதால் நம் கர்ம வினைக் களத்தில் ஆடைகளுக்குப் பெரும் பங்கு உண்டு! ஆடைதானம் என்பது முறையற்ற காமத்தால் சேர்கின்ற கொடிய வினைகளுக்குத் தக்கப் பிராயச்சித்தம் பெற பெரிதும் உதவும்! அம்பிகைக்கு பட்சத்திற்கு (இரு வாரம்) ஒரு முறையேனும் சித்தாடைகள் சார்த்தி வருதலால் பெண் குழந்தைகள் நல்ல ஒழுக்கத்துடன், பக்தியுடன் வாழ இப்புண்ய சக்தி பெரிதும் துணை புரியும்! உங்களுடைய மாதாந்திர பிறந்த நட்சத்திர நாளில் குறைந்தது ஐந்து அமர்ந்த நிலை அம்பிகைக்கு வஸ்திரம் சார்த்தி வந்தால் பணக் கஷ்டம் தீர வழிபிறக்கும்!

தினமும் செவ்வாய் ஹோரையிலும் மூதாதையர்களுடைய மாதாந்திரத் திதிகளில் கிழக்கு மற்றும் வடக்கு நோக்கிய எட்டு பிள்ளையார் மூர்த்திகளுக்கு குறிப்பாக கும்பகோணம் திருநல்லூர் அருகே மாளாபுரம் சிவாலய மும்மூர்த்தி விநாயக மூர்த்திகளுக்கு ஆறு புரி பூணூல் சார்த்தி, பிள்ளையார் வஸ்திரம் சார்த்தி, நாவல் பழம் படைத்து வழிபட்டு வந்தால் கடன் தொல்லைகள் படிப் படியாகத் தணியும்..! கல்யாணம் போன்ற சுப காரியங்களுக்கான புது ஆடைகளை மாயூரம் அருகில் உள்ள நல்லாடை ஸ்ரீநூதன வஸ்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் படைத்துப் பிரசாதமாக எடுத்து வந்து தம்பதிகளுக்கு, உறவினைகளுக்கு அளித்திட சுப காரியங்கள் தடங்கலின்றி நடக்கும்!

சதுர்வேத பாராயண ஜப வஸ்திரம் நான்மறைத் துதி நல்லாடை

இமயமலையில் அதியற்புதமான மூலிகைப் பொழிவுடைய பகுதியில் உருவாக்கப்பட்டு இமயமலை முதல் நர்மதா தீரம், கோதாவரி, கிருஷ்ணா நதிக் கரைத் திருத்தலங்கள், திருஅண்ணாமலை மற்றும் இராமேஸ்வரம் வரை பலத் திருத்தலங்களிலும் வைத்து நான்கு வேத மந்திரங்களாலும் உரு ஏற்றப்பட்டு பவானி ஸ்ரீஜுரகரேஸ்வரர், திருமழிசை ஸ்ரீசீதளா தேவி, சென்னையை அடுத்த பூந்தமல்லி ஸ்ரீவைதீஸ்வரன் கோயில், மாயவரம் சீர்காழி இடையே உள்ள ஸ்ரீவைதீஸ்வரன் கோவில், ஸ்ரீவில்லிப்புத்தூர் சிவாலய ஸ்ரீவைத்யநாத ஸ்வாமி, திருச்சி அருகே உள்ள திருமழபாடி ஆகிய தலங்களில் எழுந்தருளியுள்ளார். திருவான்மியூர் ஸ்ரீமருந்தீஸ்வரர், கும்பகோணம் திருவிசை நல்லூர் அருகே கற்குடி ஸ்ரீஅருமருந்தம்பிகை சந்நதியிலும் வைத்துப் பூஜிக்கப்பட்டு பல தேவ மருத்துவ சக்தி நிறைந்த ஆலயங்களில் சதுர்வேதப் பாராயண மந்திரங்களுடன் பூஜிக்கப்பட்டு அமைந்திருப்பதே சதுர்வேத பாராயண ஜப வஸ்திரம் ஆகும்.!

கடுமையான ஜுரங்களால் பாதிக்கபட்டோருக்கு இந்த வஸ்திரத்தை அணிவித்து ஜபித்திட, ஜுரங்களின் வேகம் தணியும். முக்கியமான நற்கூட்டங்களுக்குச் செல்கையில் இதனை அணிந்து கொண்டு சென்றால் நல்ல புகழையும், கீர்த்தியையும் பெற்றிடலாம்..பாராட்டக் கூடியத் தகுதி உடையவர்களுக்கு இதனைச் சார்த்தி கௌரவித்திடலாம்... 60, 70, 80 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு, நோய் நீக்கும் சக்திகள் நிறைந்த ஸ்ரீஇந்திராக்ஷீ கவச மந்திரங்கள் அல்லது திருஞான சம்பந்தரின் திருநீற்றுப் பதிக மந்திரங்களை ஜபித்துச் சார்த்தினால் சிறந்த இறை பக்தி உண்டாகும். தேவையில்லாத மரண பயமும் ஏற்படாது! ஸ்ரீஅகமர்ஷண சூக்த மந்திரங்களும், திருச்சி திருமங்கலத்தில் ஸ்ரீசாம வேதீஸ்வரருக்கு ப்ரீதியான சாமவேத மந்திரங்கள் ஓதியும், பீஜாட்சர மந்திரங்களின் சக்தியும் நிறைந்த இந்த சதுர்வேதப் பாராயண ஜப வஸ்திரம் ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயங்களில் கிடைக்கும்..!

ஆஸ்ரமப் பொருட்கள்

1. இல்லத்தில் படர்ந்து இருக்கும் தீய எண்ணங்களைப் போக்கிடவும்.., எதிரிகளின் பகைமை, பொறாமைத் தீயை விரட்டிடவும், தீர்க சுமங்கலித்வம் தரும் மங்கள கிரணங்களை விருத்தி செய்திடவும், பிரகாசச் சந்திர த்வீப நறுமணக் கிரணங்கள் நிறைந்த விஜய் அத்ரி ஊதுபத்திகள், ஞானப் பூர்வமான மூளைச் செல்களுக்கு ஆக்கம் தந்து, பக்தி ஒழுக்கம் தரும் பலாதி பலா மூல காயத்ரீ மந்திர சக்திகள் நிறைந்த விஜய் ஆத்ரேயா ஊதுபத்திகளும், நற்காரிய சித்திகளுக்கான சித்தி கணபதியின் அருளைக் கூட்டும் காணாபத்ய சக்தி கூடிய விஜய் அகஸ்தியா ஊதுபத்திகளும், பகைமை, விரோதிகளிடமிருந்து நம்மைக் காத்து ரட்சித்திடும் ஸ்ரீசரபேஸ்வரர் ஊதுபத்திகளும், ஹோம கோமள சக்திகளைத் தந்து அலைபாயும் மனதை அடக்கும் ஸ்ரீஆங்கரீஸர் ஊதுபத்திகளும், பாவவினை போக்கும், விஜய் ஸ்ரீபரத்வாஜ ஊதுபத்திகளும், அக இருள் போக்கும் சிவாநீ ஊதுபத்திகளும் சத்சங்க பக்தியை வளர்த்து குரு அருளை உணர்விக்கும் ஸ்ரீவட்ஸ ஊதுபத்திகளும் ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயங்களில் கிடைக்கும்! அற்புத மூலிகைப் பூச்சுகள் கூடியவை! ஆன்மீக சக்திகள் நிறைந்தவை!

2. கணவனுக்கு நீண்ட ஆயுள் தந்து சுமங்கலி சக்தியைக் கூட்டும் தேவ வட்டச் சிற்பக் குங்குமச் சிமிழ் , சந்திராஷ்டம நாட்களின் தோஷங்களை நீக்கிடும் நல்முத்து பூரண வண்ண குங்குமச் சிமிழ், ‘வல்லோட்டுத் தம்பதி’ குங்குமச் சிமிழ் பயன்படுத்தி இதய நோய் நிவாரணம் தனை ஸ்ரீஇருதயாலீஸ்வரர் நல்லருளால் காணுங்கள்! இக்குங்குமச் சிமிழ், அவரவர் நட்சத்திரத்திற்குரிய மூலிகை விருட்ச சக்தி கூடிய ஊதுபத்தி மற்றும் திருமணத் தோஷங்களை நீக்கும் “கன்னி வாழைப்பூ” குங்குமச் சிமிழ் ஸ்ரீஅகஸ்திய கேந்த்ராலயங்களில் கிடைக்கும்.

3. ஹோமத்திற்குத் தேவையான சில அற்புத தெய்வீக வடிவுகளில் உள்ள ஹோமக் கரண்டிகள், தூய பசு நெய், ஹோம திரவியங்கள், அரிய சமித்துகள், தனக் கூட்டு சங்கமத் தட்டு என்னும் மரத் தாம்பாளம் ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயங்களில் கிடைக்கும்.. தனக் கூட்டு சங்கமத் தட்டு என்பது புனிதமான உத்திரிணி விருட்சத்தில் செய்யப்படுகின்ற மரத் தாம்பாளத்தைத் தர்ப்பணம், பூஜை, அபிஷேகத்திற்குப் பயன்படுத்திடலாம்.

4. புண்ணிய காரியங்களில் பங்கு பெற வேண்டுமா? ஆஸ்ரமத்தின் புனிதப் பொருட்களை வாங்கி தான, தர்ம காரியங்களுக்குத் துணை புரிவீர்! எங்கள் ஆஸ்ரமத்தின் பரிபூரண தெய்வீக வெளியீடுகளான ஸ்ரீஅகஸ்திய விஜயம் (ஆன்மீக மாத இதழ்), பிரதோஷ மகிமை, ஸ்ரீஆயுர் தேவி மஹிமை, போன்ற தெய்வீக நூல்கள், ஸ்ரீஹேரம்ப கணபதி, ஸ்ரீசரபேஸ்வரர், ஸ்ரீஅம்ருத தன்வந்த்ரீ, ஸ்ரீசுசரித சரஸ்வதி, ஸ்ரீஅமிர்த ம்ருத்யுஞ்ஜயர், ஸ்ரீபூமி அந்தர வாஸ்து சுந்தரச் சக்கரம், ஸ்ரீசாகம்பரி தேவி, 16 திதிகளுக்கான ஷோடச கணபதிகள் போன்ற தெய்வீகப் படங்களும் (Laminated Pictures), திருஷ்டி தோஷ நிவர்த்தி தூப தீப கண்டி, ஸ்ரீஸ்கந்த சமஷ்டி தீப கண்டியும் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்திலும், சென்னை, திருச்சி, மதுரை, மேலூர், கோவை கேந்த்ரலாயங்களில் கிடைக்கும்.!

5. நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஈச சுவாமிகளின் குருவருளால் பொழிந்த குருவாய்மொழி உபன்யாசங்கள் “தனித் துணை சிவனே! சிவன்தான் பரப்பிரம்மம்! அறிவதற்கு அறியோன் சிவனே!” தம்பதியரிடையே மனக் கொந்தளிப்புகள் தீர்ந்து ஒற்றுமையும், அன்பும் பரிணமித்திட குங்குமச் சிமிழில் குங்குமம் வைத்துப் பூஜித்து ஏழைச் சுமங்கலிகளுக்கு அளித்திடுக! விசேஷமான பலவகை குங்குமச் சிமிழ்கள்.. பிரயாணம் செய்யும்போது, கடக்காட்டுக் குங்குமச் சிமிழுடன் பிரயாணம் செய்து ரட்சை சக்திகளைப் பெற்றிடுக..! பித்ரு தர்ப்பணச் சக்திகள் நிறைந்த பசு மடிக் காம்புச் சங்கு, கடுமையான நோய்கள் நிவர்த்திக்கான வடக்கு முள்ளீஸ்வரர் சங்கு, நாகதோஷம் நீக்கும் பூநாகப் புறவளர் குங்குமச் சிமிழ், மேலும் மலச் சிக்கலைப் போக்கும் மூலிகைச் சாறு நிறைந்த மாத்ரு க்ஷீர ரசம் எனும் பைன் ஆப்பிள் ஜூஸ்! பஞ்ச பூத பிராணாயாம ஊது குழல் சங்கு,! திருமணம், வரவேற்பு, உபநயனம் போன்றவற்றிற்கான ஸ்ரீஷா ஈஷா தாம்பூலப் பைகள், கும்பகோணம் ஸ்ரீயக்ஞோப வீதேஸ்வரருக்கு சார்த்தப்பட்ட பூணூல், தர்ப்பணம் மற்றும் ஹோமத்திற்கான பூஜை, அபிஷேகம் தர்ப்பணத்திற்கான மரத் தாம்பாளம், தர்பை, மிண்டு ரங்க மூங்கில் குவளைகளும், உங்கள் ராசிக்கான சந்திராஷ்டம நாட்களில் ரோஹிணி சந்திர சக்கரத்தைப் பூஜித்து சந்திராஷ்டம நாளில் தோஷங்கள் மற்றும் காரியத் தடங்கள்களில் இருந்து தற்காத்துக் கொள்ளுங்கள்.. இச்சக்கரம் ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயாவில் கிடைக்கும்.

6. திருஅண்ணாமலை ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தின் சார்பாக வெளியிடப்படும் ஸ்ரீஅகஸ்திய விஜயம் மாத இதழ், ஸ்ரீபிரதோஷ மகிமை, ஸ்ரீஐயப்பன் மகிமை, ஸ்ரீஆயுர்தேவி மகிமை, சுபமங்கள தீப மகிமை, ஸ்ரீ சரபேஸ்வரர் மகிமை போன்ற பல தெய்வீக நூல்கள், திருஷ்டி தோஷ நிவாரண கண்டி தீபம், நவாவர்ண ஊஞ்சல், ஷோடச நித்யா துளசி மாடம் மற்றும் ஸ்ரீ ஷோடச கணபதி, ஸ்ரீ வாஸ்து சக்ரம், ஸ்ரீ ஹேரம்ப கணபதி போன்ற தெய்வத் திருஉருவப் படங்களையும் அன்பர்களுக்குப் பெற்றுத் தருவதற்காக பல மாவட்டங்களில் ஸ்ரீ அகஸ்திய விஜய கேந்த்ராலயங்கள் திறக்கப்பட்டுள்ளது.. மேலும் பூஜைக்கான யந்திரம் / சக்கரம், பிள்ளையார் துண்டு, அமுத தாரைகள் நிறைந்த 2001க்கான ஆன்மீகக் காலண்டர், அற்புத சக்திகள் நிறைந்த தெய்வீக சக்திகளை ஈர்த்தளித்து, காரிய சித்திகளைக் கனிய வைத்திடும் காணுதற்கரிய அபூர்வச் சங்குகள், வெற்றி மேல் வெற்றி தரும் ஸ்ரீஅகஸ்தியர் திருநீறு, மங்களம் தரும் ஸ்ரீஅபயாம்பிகை குங்குமம், பலவித தோஷங்களை நீக்கும் இறை மணம் கமழும் சம்பு ஜீவநாதி சாம்பிராணி, எங்கும் தங்கும் மங்களம் தரும் சிவாநீ மஞ்சள், மூலிகா பந்தன நறுமணம் நிறையும் ஜெய் அகஸ்தியா, ஆத்ரேயா ஊதுபத்திகள், அம்பாள் வஸ்திரங்கள், வீட்டில் விளக்கேற்றவும் ஹோமம் வளர்ப்பதற்கும் தேவையான நந்தினி க்ஷீர க்ருதம் (பசு நெய்) போன்ற பல தெய்வீகப் பொருட்களையும் பெற்றுத் தருகின்றோம்.. அனைத்தும் இறையருளால் சற்குருவின் கருணையுடன் கைகூடப் பிரார்த்திக்கின்றோம்.. வந்து பாருங்கள்..! ஆன்மீக பொழிவில் திளையுங்கள்! இல்லறத்தில் இறையறத்தைக் கூட்டுங்கள்..! நீங்கள் அளிக்கும் தொகை அனைத்தும் ஆஸ்ரமத்தின் பௌர்ணமி அன்னதானம் போன்ற சமுதாய இறைப் பணிகளுக்காகவே அர்ப்பணிக்கப்படுகின்றன... எனவே இதனைச் செலவென்று கருதாதீர்கள்...!

பௌர்ணமி நாட்கள் : 1.10.2001 திங்கள் கிழமை மாலை 5.25 மணி முதல் 2.10.2001 செவ்வாய்க் கிழமை இரவு 7.19 மணிவரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பௌர்ணமி திதி அமைகிறது..!  கிரிவல நாள் : 1.10.2001 திங்கள் கிழமை.. அக்டோபர் மாத இரண்டாவது பௌர்ணமி 31.10.2001 புதன் கிழமை காலை 10.18 மணி முதல் 1.11.2001 வியாழக் கிழமை காலை 11.11 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பௌர்ணமி திதி அமைகிறது..!

அமுத தாரைகள்

1.  தீயவற்றை ஈர்த்தல், தீயவற்றை ஈர்த்துப் பரப்புதல், தீயவற்றை ஈர்த்து பஸ்மம் செய்தல்! :- சந்தனக் கட்டை, சந்தனக் கல், வெள்ளி, தங்கம் போன்றவையும் தீவினைச் சக்திகளைத் தம்முள் ஈர்த்தாலும் அவை அவற்றை இரும்பு போல் வெளிவிடாது தம்முள் பஸ்மம் செய்யும் நல்வர சக்திகளைப் பெற்றவை.. மேலும் அவற்றைப் பெரும்பாலும் வெளியிட்டுப் பரப்புவதும் கிடையாது! ஆனால் இரும்போ தானாகவே தீவினைகளை மாய்ப்பதில்லை.. மாறாக அதில் நாம் பூசும் வண்ணம், துருவைப் போக்கும் எண்ணெய் ஆயுத பூஜை போன்றவைதாம் இரும்பிற்கு அத்தகைய தீவினை பஸ்ம சக்திகளை ஓரளவு தருகின்றன... ஆலய கோமுக நீரை வண்டிகளின் மேல் தெளித்து வந்தால் தீய சக்திகள் அகலும்..

2. புனிதமான சுமங்கலித்வ சக்தி என்பது பல்வேறு வழிமுறைகள் மூலம் ஒரு இல்லறப் பெண்மணி அடையும் தெய்வீகப் பரிசாகும். விளக்கு பூஜையின் விமல சக்தி, கோலமிடும்போது உருவாகின்ற யந்த்ர பூபால சக்தி, தினமும் காலையும் மாலையும் விளக்கேற்றும் போது எழுகின்ற சந்தியா தேவதா சக்தி, தினமும் காலையில் மாங்கல்யத்தைத் தொட்டுக் கும்பிடும்போது உள்ளங் கை ரேகையில் பதியும் மாங்கல்ய ரேகா சக்தி, கழுத்தில் எப்போதும் மாங்கல்யச் சரடுடன் சேர்ந்திருக்கின்ற, மாங்கல்யத்தை அணிவதால் கிட்டுகின்ற பஞ்சபூத பாலாம்ருத ப்ருத்வி சக்தி,  கால்களில் எப்போதும் மெட்டி அணிந்திருப்பதால் உண்டாகும் பாதாம்புஜ சக்தி, கைகளில் வளையல்களை அணிந்திருப்பதால் மணிகார மங்கல சக்தி, தினந்தோறும் மஞ்சள் இட்டு நீராடுவதால் ஏற்படுகின்ற திரிவேணி சக்தி, கூந்தலைப் பரட்டையாக விடாது நுனியில் வாழை நாரோ அல்லது ரிப்பனோ கட்டி முடிந்து வைப்பதால் கிட்டும் ரோம சங்கர்ஷண சக்தி, நெற்றி, வகிடு, நெற்றி மத்தி, மாங்கல்யத்தில் ஆகிய மங்களகரமான மூன்று இடங்களில் குங்குமம் தரிப்பதால் ஏற்படுகின்ற திரயம்பக மாங்கல்ய சக்தி,  தினந்தோறும் கணவனுடைய பாதங்களைத் தொட்டு வணங்குவதால் ஏற்படுகின்ற காரணீஸ்வர சுமங்கலித்வ சக்தி, நாள்தோறும் ஆலயங்களுக்குச் சென்று மருதாணியிட்ட கால்களோடு அடிப்பிரதட்சிணம் செய்வதால் கிட்டுகின்ற கிரகதாம்பிகா சக்தி இவ்வாறு பல்வேறு இறைவழி முறைகளில் கிட்டுகின்ற சுமங்கலித்வ சக்திதான் ஒரு இல்லறப் பெண்மணிக்கு தீர்க்க சுமங்கலித்வத்தைத் தருகின்றது. ஆனால் நெற்றியில் பயனில்லாத பிளாஸ்டிக் ஸ்டிக்கர் ஒட்டுப் பொட்டு இட்டால் இவை அனைத்தையும் இழக்கின்றார்கள்..!

3. ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முன்னதான, பதினான்காவது திதியான சதுர்த்தசி திதியே அதாவது தேற்பிறை சதுர்த்தசி திதியே மாத சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகின்றது. இறை அவதாரங்கள் இன்றளவும் தோன்றிக் கொண்டுதாம் இருக்கின்றன! மாத சிவராத்திரி மற்றும் மாசி மாத மகாசிவராத்திரியின் போது இறைவனுடைய பலகோடி அவதாரத் தோற்றங்களுக்கு இறைத் துணைவியாய் அமையும் பொருட்டுத் தேவையான தெய்வாவதார சக்திகளை இறைவனிடமே பிரார்த்தித்துப் பெறுவதற்காக மட்டுமல்லாது, எண்ணற்ற பூமிக் கோளங்களிலும் பிரபஞ்சத்தின் அனைத்து மண்டலங்களிலும் இரவுப் பொழுதில் நேர்கின்ற துன்பங்களுக்கும் தீவினைகளுக்கும் பாவச் செயல்களுக்கும் தக்க பரிகாரம் தந்து பிரபஞ்சத்தைப் தூய்மைப்படுத்துவதற்கான தக்க நல்வரங்களைத் தந்திடவும் அம்பிகையே மாத சிவராத்திரி தோறும் இரவு பூஜைகளை மானுட வடிவில் பூலோகத்தின் பல ஆலயங்களிலும் தலங்களிலும் மேற்கொள்கின்றாள்..!

4. மூல சிருஷ்டியின்போது ஸ்ரீபிரம்ம மூர்த்திக்கும் பலவிதமான இடையூறுகள் ஏற்பட்டனவே! இது தவிர, திருஅண்ணாமலைப் புராணத்திலே, அடிமுடி காணா அருணாசலப் பெருமானுடைய புராணத்திலே உண்மையை உரைக்க மறுத்ததால் ஒரு குறிப்பிட்ட பிரம்ம மூர்த்திக்குப் பல சாபங்கள் ஏற்பட்டு, பூலோகத்தில் ஸ்ரீபிரம்ம மூர்த்திக்கு எத்தகைய தனிக் கோயிலும் எழா நிலை ஏற்பட்டது. இது பிரம்ம மூர்த்திக்கு ஏற்பட்டது என்பதை விட பிரம்ம சிருஷ்டியில் வாழும் நமக்கு உரிய ஆன்மப் பாடம் என உணர்க! எத்தனை பொய்மையுடன் அடிமுடி காண இயலாப் பரம்பொருளை கிரிவலம் வருகின்றார்கள்? இதனால்தான் ஆத்மக் கோயில் மனிதனிடம் அமைய முடியாமல் போகின்றது! இதுவே ஸ்ரீபிரம்மாவிற்கு வழிபாட்டுக் கோயில் அமையவில்லை என்பதாக நாம் உணரும் இறைப் பாடமாகும்..

5. அந்தந்தத் திதிக்கான தீப எண்ணெயை அறிந்து விளக்கேற்றிடுக! :- ஒவ்வொரு திதிக்கும் உரிய திதி எண்ணெய் வகையால் ஆலயங்களிலும் தீபங்களை ஏற்றி வழிபட்டு நவ பிரம்ம சரஸ்வதி தேவியரும் பெறுதற்கரிய தெய்வாவதார நிலைகளைப் பெற்றனர் என்றால் அதே திதி வகைகளைத் தக்க சற்குரு மூலம் அறிந்து, நவராத்திரி தினங்களில் மட்டும் அல்லாது தினந்தோறுமே அந்தந்தத் திதி தேவதைகளுக்கு உரித்தான எண்ணெய் வகைகளினால் விளக்கேற்றி வந்தால் நற்காரிய சித்திகளை எளிதில் பெற்றிடலாமே! தெய்வ மூர்த்திகளே திதி தீப வழிபாடுகளைக் கைக் கொண்டனர் எனில் என்னே அவற்றின் மகிமை! பிரதமை, அமாவாசை, பௌர்ணமி என அந்தந்தத் திதியில் விளக்கு ஏற்றுவதற்கான விசேஷமான திதி எண்ணெய் வகைகளை சற்குருவின் அருளால் பெற்றுத் தீபமேற்றிக் கிடைத்தற்கரிய அரிய பலாபலன்களை உய்த்திடுக! திருஅண்ணாமலை கிரிவலத்தின் போது எந்தத் திதியில், கிழமையில், நட்சத்திர நாளில், கிரிவலம் வருகின்றீர்களோ அந்நாளுக்குரிய எண்ணெய் வகையுடன், நிறைய அகல்களை எடுத்துச் சென்று கிரிவலத்தில் ஆங்காங்கே தீபம் ஏற்றி கிரிவலத்தின் பலாபலன்களைப் பன்மடங்காய்ப் பெருக்கிக் கொள்ளுங்கள். அவரவர் நட்சத்திரம், அந்தந்த நட்சத்திர நாள், திதிக்குரிய தீபத்திற்கான எண்ணெய் வகைகள் ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயாவில் கிடைக்கும்!

காயத்ரீ படிக்கட்டுகள்
திருவெள்ளறை

4.  24 வயதிலிருந்து குறித்த வயதிற்குள்தான் இல்லற தர்மத்திற்குரிய முறையான காமம், தக்க அறவழி முறைகளுடன் அனுமதிக்கப்படுகின்றது..! இதற்கும் தலையில்லா, வால் இல்லா, பாதமில்லா மற்றும் குருட்டு நாட்களை பஞ்சாங்கம் மூலம் அறிந்து உணர்தலால் குறைபாடுகளற்ற சந்ததிகளைப் பெறலாம்! இதற்கான பஞ்சாங்க நட்சத்திர முறைப்பாடுகளும் உண்டு! பஞ்சாங்கம் என்பது பஞ்ச (5) அங்கமாக நாள் (கிழமை), நட்சத்திரம், யோகம், கரணம், திதி, ஆகிய ஐந்தும் சேர்ந்ததென நீங்கள் நன்கு அறிவீர்கள்! ஆனால் இவற்றில் யோகம், கரணம் பற்றிப் பலரும் அறியாது இருக்கின்றார்கள். இவைதாம் உங்களுக்கு ஆரோக்ய சக்திகளைத் தருபவை.

5. போக்குவரத்து நெரிசல் நிறைந்த இக்கலியுகத்தில் இரயில் பிரயாணத்திலோ, அலுவலகத்திலோ, பஸ் பிரயாணத்திலோ, செருப்புக் கால்களுடன் பலரையும் மிதிப்பதால் எத்துணையோ மன சஞ்சல தோஷங்கள் உண்டாகின்றன... செருப்புடன் மிதித்து விட்டு sorry என ஒரு வாரத்தையைக் கூறுவதால் அத்தோஷம் நிவர்த்தி ஆகி விடுமா, வலிதான் குறையுமா? உதட்டளவில் சொல்லும் sorryக்கு எவ்விதப் பயனும் கிடையாது... இவ்வாறாக ஒவ்வொரு மனிதனும் பிறரை மிதிப்பதால், தேவையில்லாமல் பல தோஷங்களையும், சாபங்களையும், தீவினைக் கர்மங்களையும், பிரச்னைகளையும் சேர்த்துக் கொள்கிறான்.. இவற்றிற்குப் பிராயசித்தமாக அமைவதே கரண யோக சக்திகளாம்! ஆலயங்களில் படிகளைக் கழுவி நீர்க் கோலமிட்டு வழிபட்டு வருதல் நல்ல பிராயச்சித்தமாகும்! திருச்சி- திருவெள்ளறை பெருமாள் ஆலய உயர் படிக்கட்டுகள் 24ம் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் 24 அட்சரங்களைக் குறிப்பதால்  இவற்றை நன்கு சுத்தம் செய்து நீர்க் கோலமிட்டு தொட்டு வணங்கி வந்தால் பிள்ளைகளுக்கு நல்ல ஞாபக சக்தி கிடைக்கும்.

6. வாஸ்து சாஸ்திரப்படி எத்தனை ஹால்கள், படுக்கை, சமையலறைகள் இருந்தாலும், ஒவ்வொன்றிற்கும் கண்டிப்பாக மர நிலைப் படி இருந்தாக வேண்டும்.. இம்மரப் படிக்கு வாஸ்து நாட்களில் மட்டுமின்றித் தினந்தோறும் செய்ய வேண்டிய முக்கியமான எளிமையான வாஸ்து பூஜையாக ஒவ்வொரு நிலை வாயிற்படிக்கும் மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டுக் கோலமிட்டு வணங்கி வருதல் வேண்டும்.. நிலை வாயிற் படிகளை மிதிக்கக் கூடாது.. தாண்டியே செல்ல வேண்டும்.. இவ்வாறாகப் படிகளிலும் படிந்து செல்ல வேண்டியவை, தாண்டிச் செல்ல வேண்டியவை என வகைகள் உண்டு! ஆலயங்களில் சமத் தரை ஆயின், படிகளைக் கைகளால் ஒற்றித் தொட்டு வணங்கித் தாண்டிச் செல்ல வேண்டும்! மலைத் தலப் படிகளில் பாதம் படிந்து நன்கு நடந்து செல்ல வேண்டும்! பட்சம் அல்லது மாதம் ஒரு முறையேனும் மலைத்தல வழிபாடுகளைக் கைக்கொண்டால் இதுவே நம்மையும் அறியாது இறையாருளால் உடலுக்குத் தேவையான கரண யோகமாகி விடுகின்றது! தினமும் குறைந்தது 108 முறை மூன்று வேளையும் தோப்புக் கரணம் இட்டு வந்தால் இக்கரண சக்திகளால் பல நோய்கள் அண்ட விடாமல் தடுப்பதோடு நல்ல தியான நிலைகளுக்கான கரண சக்திகளையும் தருகின்றன! பாறைகளில் தியான சாந்தம் ஏற்படக் காரணம் அதில் ஏறும்போது அமையும் கரண யோகமும் அதன் கரண சக்திகளுமாம்!

6. கரணம் என்பது யோக வகை முறைகளுள் ஒன்றாம்! தோப்புக் கரணமும் இதனைச் சார்ந்ததே! கரண, யோகாசனங்களை நன்முறையிலே பயிற்றுவிப்போர் அரிதாகி விட்டமையால், புனிதமான யோகாசனத்தையும் மருத்துவம், கல்வி போல் ஒரு வியாபாரத் துறையாகக் கலியுகத்தில் ஆக்கிவிட்டார்கள்! எனவே கலியுகத்தில் சற்குருமார்கள் தாம் நம்முடைய நவீன வாழ்க்கையிலேயே நாம் அறியா வண்ணம் நம் வாழ்வில் கரண, யோகாசனங்களைச் சேர்த்து வழிபாடுகளாகவும், இறைப் பணிளாகவும் அமைத்துத் தருகின்றார்கள்.. இவற்றில் ஒன்றுதாம் (ஆஸ்ரம/ஆலயப்) படிக்கட்டு கரண யோக முறைகளாம்! உயர்ந்துள்ள ஆலயப் படிக் கட்டுகளும் மற்றும் ஆஸ்ரமத்தின் தட்சிணாயன, உத்தராயணப் படிகளும் சித்தர்கள் அருள்கின்ற கரண யோக வழிமுறைகளின்பால் அமைவதாம்!

7.  இன்றைக்கு, நீங்கள் வசிக்கும், பணிபுரியும் இல்லம், கட்டடங்களுக்கான, மண், பல புனித ஆற்றுப் படுகைகளில் இருந்தோ அல்லது தவறான வழிமுறைகளிலோ கொண்டு வரப்பட்டவையாக இருக்கலாம்... பலவிதமான நில தோஷங்களுடன் பரம்பரை பரம்பரையாக வந்திருக்கக் கூடும்.. உங்கள் பாட்டனார் காலத்தில் ஒரு தொழிலாளிக்கு ஒரு ரூபாய் குறைத்துக் கொடுத்தோ, அல்லது பணியாளர்கள் மனம் வருந்தும்படி நடந்திருந்தால் கூட, அவ்வருத்தம், கவலைகள் உங்கள் வீட்டுச் செங்கலில் காலம் காலமாகப் பதிந்து அவரே ஏனைய பிறவியில் மீண்டும் பணி புரிய வந்து உங்கள் காலத்தில் அதனைப் பழுது பார்த்து பாக்கியைத் தீர்த்துத்தான் அவ்வகையான நில தோஷங்கள் தீரும்! எனவே உங்கள் வீட்டிற்கு வரும் பணியாளர்களும் உங்களுடன் பூர்வ ஜன்மத் தொடர்பு கொண்டவர்களே!

8. துர்க்கா கரண சார யோக முறை :- ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு நாளும், தன் காலைக் குறைந்தது இரண்டடி உயரத்திற்காவது, தூக்கி நின்று சில யோகாசனங்களைப் பயில வேண்டும்... இதற்காகத்தான் துர்க்கா கரண சார யோகம் எனும் முறையில் நின்ற நிலையில் வலது காலை மடித்து, இடது காலின் முழங்காலில் சாய்த்து வைத்து ஒரு பாத யோகமாகச் செய்து வருதல் சிறப்பானதாம்! இதற்காகத்தான் இறைவனே ‘ஏகபாத மூர்த்தியாக’ கரண சக்தியை அருள்கின்றான்! துர்க்கா கரண சார யோக முறையில் தினந்தோறும் அல்லது வாரந்தோறும், செவ்வாய்க் கிழமை அன்று குறைந்தது ஒரு மணி நேரமாவது பயின்று வந்தால்,! பாரிசவாயு, hydrocele போன்ற பலவிதமான நோய்கள் வராதவாறு தற்காத்துக் கொள்ளலாம்!

9. திருச்சி அருகே நெடுங்களம் திருத்தலத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக மகரிஷி பத்னிகளும், தேவாதி தேவ பத்னிகளும், பித்ரு பத்னிகளும், உத்தம சுமங்கலிகளும், மஞ்சள் இடித்து தயாரிப்பதற்காகப் பயன்படுத்திய மிகவும் மகத்தான தெய்வீக சக்திகள் நிறைந்த பழமையான தெய்வீக உரல் ஒன்று உள்ளது... இங்கு வாரந்தோறுமோ, மாதந்தோறுமோ சென்று மஞ்சளை இடித்து அம்பிகைக்குச் சார்த்துவதுடன் இதனைப் பிரசாதமாக எடுத்து வந்து பூஜைக்குப் பயன்படுத்தியும், ஆலயங்களுக்கு மஞ்சள் திரட்டித் தந்து தினந்தோறும் நீராடும் போது பூசியும் வந்தால் திருமண வாழ்வில் மகள் படுகின்ற பல துன்பங்களுக்கும், திருமண பாக்கியம் கிட்டாது அவதியுறுகின்ற கன்னிப் பெண்களுக்கும் தக்க நிவர்த்திகள் கிட்டும்.

நித்ய கர்ம நிவாரணம்

1.10.2001 – நாய்களுக்குப் பொறை பிஸ்கட் இடுவதால் உத்யோகத்தில் பல நாட்களாக உள்ள குறைபாடுகள் நீங்கும்.
2.10.2001 – இன்று புறாக்களுக்குக் கேழ்வரகு, நவதான்யங்கள் இடுவதால் தேவையின்றி வருத்திக் கொண்டிருந்த உதவியாளர்களால் வந்து துன்பம் விலகும்!
3.10.2001 – இன்று குரங்குகளுக்கு வயிராற உணவளித்தலால் உடன் பிறந்து துன்புறுத்துவோரால் வரும் கஷ்டங்கள் நீங்கும்.
4.10.2001 – வாத்து மேய்ப்பவர்களுக்கு வயிராற உணவிட்டு உடையளிப்பதால் வைத்த பொருள் மறந்திருந்தால் வைத்த இடம் ஞாபகத்திற்கு வரும்.
5.10.2001 – சிறு குழந்தைகளுக்குக் கோலாட்டக் குச்சிகளைத் தானமாக அளிப்பதால், வீட்டிலுள்ள சண்டை, பூசல்கள் தீரும்.

ஸ்ரீவீணா தட்சிணா மூர்த்தி
லால்குடி

6.10.2001 – இன்று யானைக்கு உணவளித்திட, குறித்த சோதனைகளுக்கு உள்ளாகாமல் தப்பிக்கலாம்.
7.10.2001 – ஏழைப் பெண்களுக்குக் கொலுசுகளைத் தானம் அளித்தலால் காதலில் தோல்வியுற்றோர் அமைதியுறும் நாளிது.
8.10.2001 – இன்று Cable Tv Operators மிக கவனமாய் இருத்தல் நலம்.. இன்று ஆகாய மார்க்கத்தில் தீய சக்திகள் தலை தூக்கும்.
9.10.2001 – புரோகிதர்கள் விரதமிருந்து ஆட்டுக்குப் பழங்கள் அளித்தலால் நல்ல வாக்சக்தி கிட்டும்..
10.10.2001 – இன்று மனைவி வகையில் பணம் கொடுத்து ஒரு நற்காரியம் செய்ய ஆரம்பித்தால் காரியம் சிறப்படையும்..
11.10.2001 – இன்று குழந்தைகள் விரும்பியவற்றைச் சக்திக்கேற்ப வாங்கியளிப்பதால் பித்ருக்கள் சாந்தி அடைவர்.
12.10.2001 – ஒன்று முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் கையில் தங்கக் காசை வைத்து அதன் மீது தர்ப்பைச் சட்டம் வைத்து அதில் தர்ப்பண அர்க்யம் கொடுத்தலால் மூதாதையர் சொத்துக்களால் வந்த பிரச்னைகளுக்கு நிவர்த்தி கிட்டும்.
13.10.2001 – ஆண்கள் திருவெண்டயம் அணிந்து எட்டுப் பெருமாள் கோயில்களில் ஒவ்வொரு கோயிலையும் 51 முறை பிரதட்சணம் வருதலால் உத்யோகத்தில் வரும் மானப் பிரச்னைகள் தீரும்..!
14.10.2001 – பாரிஜாத மலர்களால் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து, அன்னதானம் செய்தலால் அலைந்து, திரிந்து முடியாத நற்காரியங்கள் சுமுகமாக முடிவுறும்.
15.10.2001 – பள்ளிகளில் பூச்செடிகளை வளர்ப்பதற்காகத் தொட்டிகளைத் தானமளித்தலால் செய்யும் காரியங்கள் எளிதாய் முடியும்.
16.10.2001 – சந்திர சஹஸ்ர நாமத்தால் நல்முத்தை பூஜித்துக் கண்களில் ஒற்றி அணிவதால் நற்பலன்கள் விளையும்.
17.10.2001 – 2 வயது சிறுமியர்க்கு ஆடை தானமளித்து, உணவளித்திடில் நல்லாசி பெறுவர்.
18.10.2001 – 3 முதல் 5வயது குழந்தைகளுக்கு ஆடைகள் அளித்து சிறப்பு செய்தலால் நற்பலன்கள் கிட்டும்.
19.10.2001 – 2 முதல் 7வயது குழந்தைகளுக்குப் புத்தாடை, பாடப் புத்தகங்கள் அளித்து மகிழ்விப்பதால், தேடிய பொருள் நாடி வரும்.
20.10.2001 – இன்று கணபதிக்கு அபிஷேகம் செய்து அன்னதானம் செய்வதால், தகப்பனாருக்கு வருகின்ற துன்பங்கள் விலகும்.!
21.10.2001 – இன்று பள்ளிக் குழந்தைகளுக்கு பாடப் புத்தகங்கள் இலவசமாக அளிப்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும்.
22.10.2001 – கணபதியை மகிழ்வித்த முருகன் கோயில்கள் அனைத்திலும் அன்னதானம் செய்திடில் அவசர கோல முடிவுகளால் செய்யப்பட்ட, தொடங்கப்பட்ட காரியங்களின் இன்னல்களிலிருந்து துன்பப்படாமல் தள்ளிப் போடும் நிலையாய் நலம் பெறலாம்..!
23.10.2001 – இன்று வலம்புரிச் சங்குகளை கோயில்களுக்கு தானம் அளிப்பதால் செல்வம் சேரும்.
24.10.2001 – இன்று வீணை வாசிக்கும் தட்சிணாமூர்த்தி உள்ள இடங்களில் அபிஷேக ஆராதனை செய்து அன்னதானம் செய்வதால் கல்வியில் சிறப்புறுவர்.

திருக்கழுக்குன்றம்

25.10.2001 – பெருமாள் ஆலயங்களில் துளசிக் கன்றுகளையும் சிவன் ஆலயங்களில் பாரிஜாத (மலர்) செடிகளையும் நட்டுப் பராமரிக்க ஆவன செய்தல் வேண்டும்.. அவற்றை தினசரி நீர் ஊற்றிப் பராமரித்திட ஏற்பாடு அவசியம்... இத்திருப்பணி தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து செய்யப்பட வேண்டியதாகும்.. பரம்பொருளுக்கான (திருமால்) திருத்துழாய் மாலைகளும் பரப்பிரம்மத்திற்கான (சிவன்) பாரிஜாத மலர் மாலைகளும் எப்போதும் கிடைக்கும் நித்ய சேவையில் இருக்கும் நம் சந்ததியினர் திளைக்க வழி செய்வதால் இது அளப்பரிய நல்வரங்களை நமக்குப் பெற்றுத் தரும். மேலும் இன்று பிரபஞ்சத்தை விசேஷமாக வலம் வரும் துளசி தேவதைகள் மற்றும் பாரிஜாத தேவதைகளின் அருள் பார்வை திருக்கோயில் நந்தவனங்களில் சேவை செய்யும் (நாற்று நடுதல், நீர் ஊற்றுதல், மற்றும் பராமரிப்பு) அடியார்களின் மீது படிந்து இத்தேவதைகளின் அளப்பரிய ஆசிகள் கிட்டும்.. இதனால் இழந்த பொருள் நியாயமான முறையில் கிடைக்கும். தொலைந்த, காணாமற் போனவர்கள் மற்றும் பொருட்கள் மீண்டிட நல்வழிகள் கிட்டும்.
26.10.2001 – வாகனங்களைத் தூய்மைப்படுத்தி, நைவேத்தியம் செய்து விழுந்து வணங்குதல் வேண்டும். வாகனங்களை உங்கள் உறவினர்களாய் எண்ண வேண்டும்.. அவ்வாறு செய்தலால் அவ்வாகனத்தால் பலவித நன்மை பெறலாம்..
27.10.2001 – இன்று வேதங்களை வணங்க வேண்டிய நாள்., ஸ்ரீவேதபுரீஸ்வரர் (திருக்கழுக்குன்றம்) இருக்கும் மலைத் தலங்களில் கிரிவலம் வருதலால் வாஸ்து குற்றங்கள் நிவர்த்தியாகி இல்லம் அமைதி பெறும். 
28.10.2001 – சுவாதி நட்சத்திரக்காரர்கள், இன்று 51 தோப்புக் கரணங்கள் கணபதி முன் போட்டு அன்னதானம் செய்வதால் நண்பர்களால் வரும் ஆபத்து விலகும்.
29.10.2001 – அர்த்தநாரீஸ்வரரை மூலவராக உள்ள கோயில்களில் அபிஷேக ஆராதனையுடன் அன்னதானம் செய்வதால் நல்லோர் உதவி கிட்டும்.
30.10.2001 – இன்று ரேவதி நட்சத்திரக்காரர்கள் தங்கள் நட்சத்திர மூலிகையால் செய்த ஊதுபத்தியை இறைவன் சன்னிதியில் ஏற்றி அன்னதானம் செய்வதால் மனோதிடம் பெறுவர்..
31.10.2001 – ரேவதி நட்சத்திரக்காரர்கள் அவர்களின் மூலிகை ஊதுபத்தி ஏற்றி அன்னாபிஷேகம் செய்தலால் நம்பிக்கை வாழ்வில் ஏற்படும்.

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam