முப்பூ ஈசனை எப்போதும் நினைவில் வை !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய குருகுலவாச அனுபூதிகள்

குருகுலவாசத்திலும் குருவின் இறைமொழிகளிலும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளோருக்கு அகஸ்தியர், பரத்வாஜர், ருத்ர கண்ட சித்தர் போன்ற சித்தர்களுடைய, மகரிஷிகளுடைய தரிசனம் இன்றைக்கும் தெள்ளத் தெளிவாகக் கிட்டும். ஸ்ரீவியாச மகரிஷியைத் தரிசிக்க வேண்டுமா? சென்னை வியாசர்பாடி ஸ்ரீரவீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வாருங்கள்! ஸ்ரீபோகர் சித்தரைக் காண விரும்புகின்றீர்களா? பழனி ஸ்ரீபோகரின் ஜீவாலயத்திற்குச் சென்று வாருங்கள்! ஸ்ரீகொங்கண சித்தரின் ஆசியைப் பெற தஞ்சாவூர் ஸ்ரீகொங்கணேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்றிடுக! ஸ்ரீமார்க்கண்டேய மகரிஷியைப் பார்த்து அருளாசி பெற்றிட வாருங்கள் பட்டுக்கோட்டை ஒரத்தநாடு அருகே மேலூர் ஸ்ரீபரிதியப்பர் ஆலயத்திற்கு! ஸ்ரீஅருந்ததி தேவி சமேத ஸ்ரீவசிஷ்டமா முனியைக் காண வேண்டுமா? வந்து பாருங்கள் தஞ்சாவூர் கரந்தை சிவாலயத்திற்கு!

வாக்தேவி வாகீஸ்வரி
வாத்யார் உருவில் வந்துதித்த
வரமாலினி !

ஆம், இவ்வாறாக மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் விஜயம் செய்து கொண்டிருக்கின்ற திருத்தலங்கள் ஏராளம், ஏராளம்! ஆனால் நீங்கள் எதிர்பார்க்கின்ற, படத்தில் பார்த்துப் பழக்கப்பட்ட துறவி வடிவங்களில் அல்ல! வேஷ்டி, துண்டு அணிந்த சாதாரண மனதிர்களாய், பசுவாய், இளைஞர்களாய், முதியவராய் .... எந்த வடிவத்திலும் சித்தர்கள் வந்திடலாம்.. இவ்வாறாகத் தம்முடைய கலியுக குருகுலவாசத்தில் சிவகுருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஸ்வாமிகள் தந்த சித்த மஹா குருகுல வாசத்தில் குருமங்கள கந்தர்வா என்று போற்றப்படும் ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் குருகடாசத்தால் பெறுதற்கரியா மகான்களின், சித்புருஷர்களின் தரிசனங்களையும் ஆசிகளையும் பெற்றிட்டும் எவ்வித சித்தியையும் வெளிக்காட்டாது குடத்தில் இட்ட திருவிளக்கு போல் பிரகாசித்து, நம்மோடு, ஜீவன்களுடன் ஜீவனாய் வாழ்ந்து இல்லறந் தழுவி அருள்வழி காட்டி வருகின்றார்கள்.. திருஅண்ணாமலையில் குருவருளால் ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம்தனை நிறுவி மாதந்தோறும் பல்லாயிரக் கணக்கான கிரிவல அடியார்களுக்கு அன்னப் பிரசாதம் படைக்கின்ற அருட் பெருங்காரியத்தை எவ்வித படாடோபமுமின்றி அடக்கம், எளிமை, பணிவுடன் தான் சற்குருவின் திருவடிப்பொடி, ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியின் அடிமை என்றுணர்ந்து குருவின் அருளாணையைப் பல சமுதாய இறைப் பணிகளையும் சாந்தமுடன் ஆற்றி வருகின்றார்கள். அவர்தம் குருகுலவாச அனுபூதிகளே ஸ்ரீஅகஸ்திய விஜயச் சித்த மஹா ஆத்மத் தடாகத்தில் இறைத் தாமரையாய் மலர்ந்து சற்குருவை நாட வேண்டும் என்ற மனோவைராக்கியத்தை, மனத் தெளிவை, ஆழ்ந்த நம்பிக்கையை தெய்வீக மணத்தை நமக்கு உணர்விக்கின்றன.

பொதிய மலையில் தாம் பெற்ற ஸ்ரீஅகஸ்தியர் தரிசன அனுபூதிகளைப் பெரியவர் தொடரலானார்.... ஸ்ரீஅகஸ்தியரே ரத்தினச் சுருக்கமாய்த் தன் அறப் பணியைப் பெரியவருக்கு எடுத்துரைக்கலானார்!    

“அப்பா, நம்ப சித்தர்கள் கூட்டத்துலேந்து நல்ல காரியத்துக்காக ருத்ர கண்ட சித்தரை ஆழ்திரள் (அமெரிக்கா) நாட்டுக்கு அனுப்பியிருக்கோம்! அங்க அவரு தான் நம்ப ருத்ர கண்ட சித்தருதான் ரொம்ப கஷ்டபடறாரு,  கஷ்டப்படுத்தறாங்க. ஸ்ரீராமனே எத்தனையோ துன்பங்களை ஏத்து அனுபவிச்சவராச்சே! அதுவும் இந்த கலியுகத்தில மகான்களுக்குத்தான் எவ்வளவு பெரிய கஷ்டம்! அவரைக் காப்பாத்திக் கூட்டிக் கிட்டு இங்க வந்து சேர்க்கணும்... அடியேனுக்கு ஏதோ கொஞ்சம் வஸ்திரம் தயார் பண்ணிக் கொடுக்கறத்துக்கு உன்னாலதான் முடியும்னு நம்ப பெரியவங்க முடிவு செஞ்சிருக்காங்க!”

ஸ்ரீபடேசாகிப் சித்தர் ஜீவாலயம்
சின்னபாபு சமுத்திரம்

ஸ்ரீபடே சாகிப் சமாதியில் சந்தனம் அரைத்து சார்த்த ஓத வேண்டிய துதி
ஓம் மஜும் போட் துத்யாய வித்மஹே
மதிபூரண சந்தன சந்த்ராய தீமஹி
தந்நோ குரு பாத விருட்ச ப்ரசோதயாத்
மூன்றாம் பிறையாகி முக்கண் சுதமாகி
முச்சுடர் பரிமாணம் மூதையர் வழி தாங்கி
ஒன்றாய் புலன் சேர்ந்து ஓதிய சந்தனப் பூ மலர்
நன்றாய் நவின்றேன் நமசிவாய என மகிழம்பூ சாறல்
மறையொலியாய் மாதவனை அகிலம் புகழ் ஓங்கும் அரணே அரண் !

“அகஸ்தியரே இப்படிச் சொன்னதும் நான் கொஞ்சம் ஆடிப் போயிட்டேண்டா, ஏன்னா கொங்கண சித்தரு, போகரு, உலகத்துல எல்லா ஜீவன்களோட வஸ்திரத்துக்கு பஞ்சபூத சக்தி கொடுக்கிற நல்லாடைச் சித்தருன்னு இவங்களெல்லாம் அடிக்கடி பொதிய மலைக்கு அடிக்கடி வந்து போறப்போ.... அவங்க முன்னாடி நான் ஒரு பொடியன் தானேடா! அகஸ்தியரே இந்த மக்கு தண்டக் களஞ்சியத்த கூப்புட்டு வாய்ப்புக் கொடுக்கறார்னா.... எனக்குக் கண்ணுல தாரை தாரையா ஆனந்தக் கண்ணீ கொட்டிச்சு... விடு விடுன்னு எழுந்திருச்சேன் !”

“அங்க பக்கத்துல அந்தக் காலத்து இஞ்ச் துணி டேப் இருந்துச்சு! நம்ப அகஸ்தியர் சாமிய உக்காத்தி வச்சுக் கிடுகிடுன்னு சட்டை, பாண்ட், கோட்டுனு அளவெடுத்தேன்...! சாமிக்கு என்னென்ன அளவுன்னு எடுத்துக்கிட்டு வாசப் பக்கம் வந்தேனா, அங்கரொம்பப் பழய தையல் மெஷின் கெடந்துச்சு... கிடுகிடுன்னு ஒரு சுத்து சுத்தி நம்ப சாமிக்கு ஜோரா சொக்காய், கோட்டு, பாண்ட்டேல்லாம் தெச்சு மஞ்சள், குங்குமம் வச்சு...  என்னமோ தெரியலடா, அவ்வளவு வேலையும் கிடுகிடுன்னு அஞ்சு நிமிஷத்துல முடிஞ்ச மாதிரி இருந்தது..... அகஸ்தியரு சாமி கையில எல்லாத்தையும் கொடுத்தேன்.. உள்ளே போனாரு! அடுத்த அஞ்சாவது நிமிஷத்துல அவருடைய உருவமே மாறிப் போச்சுடா!”

“ஏன்னா சிங்கப்பூர்ல எங்க குரு ஒரு சித்தரைக் காமிச்சார்டா, சொன்னா நம்ப மாட்டே, அங்க ஒரு ஆளு சப்ப மூக்கும் பூனைக் கண்ணுமா மங்கோலியன் மாதிரி பெரிய மல்யுத்த பயில்வானாட்டம் ring dressல இருந்தான்டா... என்னாலேயே நம்ப முடியலை... அப்புறம் தான் அவன் தலைக்கு மேல பிரகாசமா “halo” (ஒளிவட்டம்) தெரிஞ்சிச்சு, அடடா! எவ்வளவு பெரிய சித்தருன்னு அப்பத்தான் புரிஞ்ச்சுசு! இது தெரியாம அவன் இவன்னு பேசிட்டோமேன்னு ரொம்பக் கவலைப் பட்டேன்! அந்த மாதிரி... ஒண்ணு தெரிஞ்சுக்க சித்தர்கள் எப்படி வேண்டுமானாலும் நம்மைக் காப்பாத்தலாம்.! ... டிரைவரா கிளீனரா, பாம்பாட்டியா, ஸ்டெதாஸ்கோப் வச்சுக்கிட்டு டாக்டரா .... கறுப்புக் கோட்டுப் போட்ட வக்கீலா... சின்னக் குழந்தையா..... தொந்தியும் தொப்பையுமா.... சேட்டு மாதிரி.... எறும்பா... வண்டா.. எந்த வடிவத்துலயும் ரிஷியும் சித்தரும் வந்து நம்பளைக் காப்பாத்துவாங்க, நம்பிக்கை வச்சா! . இதுல சந்தேகமே கெடயாது..!   திடீர்னு கோட்டு சூட்டோட ஏதோ கம்பெனி சேர்மனாட்டம் அகஸ்தியரு வந்து நிக்கறதப் பார்த்ததும் எனக்கு ஒரே ஆச்சரியமாப் போச்சு....  கனவா நனவான்னு தெரியலை! ஏன்னா எந்த ரூபத்துல போய் ஒத்தரைக் காப்பாத்தப் போறோம்னு ஒவ்வொரு சற்குருவும் ரொம்ப முக்கியமான சிஷ்யர்கள் கிட்ட ஆதிசங்கரர் மாதிரி சொல்லிட்டுப் போவாங்க !”

பெரியவர் சற்றே நிறுத்தினார்! நம் சிறுவனுக்குத்தான் கொஞ்சம் time, clue கிடைத்தால் இருப்புக் கொள்ளாதே! ஒன்று பசியெடுக்கும், இல்லாவிடில் கேள்வி பிறக்கும், வயிறுக்கும் செவிக்கும் உணவைக் கேட்டே சிறுவனின் குருகுலவாசமும் அமுதமாய் நிறைந்து விட்டது! அவன் ஞானப்பூர்வமாகத் தம் சற்குருவிடம் கேட்டுத் திளைத்த குருகுல வாச அனுபூதிகளும் சித்தோபநிஷத் பொக்கிஷங்களும்தான் ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் ஆனந்தாமிர்தமாய்ப் பொங்கி வழிகின்றன!  இதன் பிறகு பெரியவர் அப்பலேச்சியன் பகுதியில் ஒரு கொடியவனிடம் அடிமையாய்ப் பணி புரிந்து கொண்டு துன்பப்பட்டுக் கொண்டிருந்த ருத்ர கண்ட சித்தரை அகஸ்தியர் பெருமானே மீட்டு வந்த குரு அனுபூதிகளை விவரித்தார்.

“மாட்டுக் கொட்டகையில் வண்டு, கொசு, அட்டை கடித்து ரணமாகி... சரியான சாப்பாடு இல்லாமல் .... எப்போதும் .... வேலை.... வேலை . வேலைதான்! ... எவருடைய கர்மத்தையோ தானே ஏற்று அந்த சித்தர் அவதிப்பட்டு.. எத்தனையோ மகான்களும் சித்தபுருஷர்களும் சாதாரண பூலோக ஜீவன்களாய் வாழ்கின்ற போது இன்றும் எத்தனையோ இன்னல்களை பூமியில் அனுபவிக்கின்றனர்! காரணம் கலியுக மனிதனால் மகான்களின் மகத்துவத்தை உணர முடியவில்லை! குருவை நாடாமையால்! லட்சக் கணக்கான மக்களுடைய கர்மவினைகளைத் தீர்ப்பதற்காக இறைவனின் நல்வரமாக சித்தர்களாக, ரிஷிகளாக எடுத்த பிறவியாதலின் மனித குலம் அவர்களை வாதனைகள், சோதனைகள், தூஷணைகள், ஏவல்கள், ஏசல்கள், அவநம்பிக்கைகள் கொண்டு வாட்டி எடுத்தாலும் அனைத்தையும் பொறுத்துச் சகித்துக் கொண்டு இறைவனையே நம்பித் தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள மனிதக் கூட்டில் அவர்கள் வாழ்கின்றனர்.  இந்த ருத்ர கண்ட சித்தர்தாம் தம் அதியற்புத யோக பலன்களையெல்லாம் ஜீவன்களுக்கு அர்ப்பணித்து நமக்கு உத்தராயண புண்ய காலத்தையும் ஆருத்ரா தரிசனக் காட்சியையும் பெற்றுத் தந்தவராம்! இத்தகைய உத்தமத் தெய்வீகப் பெருநிலைகளை அடைந்தவருக்கே அகஸ்தியரே சென்று மீட்கின்ற அளவிற்குச் சோதனைகள் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்? இந்த பூலோகத்தில்தான் எத்தனையோ குடும்பத்தினர்கள் இன்றும் தாங்கள் சற்குருமார்களாக வழிபடுகின்ற ஸ்ரீபூண்டி மஹான், ஸ்ரீகசவனம்பட்டி சித்தர், ஸ்ரீவிட்டோபா சித்தர், ஸ்ரீகரப் பாத்திர சித்தர் போன்றோர் இன்றைக்கும் டாக்டர்கள் போன்றும் மற்றும் எத்தனையோ வடிவங்களிலும் மருத்துவமனைக்கே வந்து உயிரைக் காப்பாற்றுகின்ற அற்புதங்களைப் பற்றி எடுத்துரைத்தும் எழுதியும் வருகின்றார்கள், நீங்கள் அறிவீர்கள்தானே!

மறைந்திருந்து (அருள்) வார்க்கும் தர்மம்!
அகஸ்தியர், வசிஷ்டர், பரத்வாஜர் போன்றோருக்கு இன்றும் பல லோகங்களில் பர்ணசாலைகள், குருகுல வாசங்கள் இன்றும் உண்டு. ஏன் ஸ்ரீதுர்வாசர், ஸ்ரீகௌதமர் போன்ற மஹரிஷிகட்குப் பர்ணசாலைகள் இருந்த புனித இடம்தானே திருஅண்ணாமலை! ஆனால் கலியுகத்தில் மஹரிஷிகள், சித்தர்கள், யோகியரைத் தெளிந்து உணர்ந்து மதிக்கின்ற பண்பாடு மறைந்து விட்டதால் அனைத்து இறைத் தூதுவர்களும் மனிதச் சுவடில்லா வனாந்திரங்களுக்கும், பாலை வனங்கட்கும், தீவுகளுக்கும் குளிர்ந்த  மலைப் பிரதேசங்கட்கும் (uninhabited places) மலைக் காடுகளுக்கும் தங்கள் உறைவிடத்தை மாற்றிக் கொண்டு விட்டனர். பலரும் வெவ்வேறு மனித வடிவகளில் மனித சமுதாயத்தில் மக்களோடு மக்களாய் இருந்து தம் தெய்வீக சக்தியை வெளிக்காட்டாது. இறைமலைக் கனியாய், இலை மறைக் கனியாய்... வாழ்ந்து வருகின்றனர்!

yours truly (divine tool)
அகஸ்தியருக்கு வஸ்திரம் தைத்து அளிக்கின்ற பாக்கியத்தைப் பற்றிப் பெரியவர் விவரிக்கையில் அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் தாரை தாரையாய்ப் பெருகி ஓடியது! ...குருதரிசனமே ஒரு பாக்கியம், குரு நம்பளை மழுங்கிப் போன Toolந்னுத் தூக்கிப் போட்டுடாம ஏதாச்சும் இறைப்பணிக்கு, சேவைக்குனு கடைசி வரைக்கும் பயன்படுத்தறது பெரிய பாக்கியம்! அந்த சேவையையும் குரு மனசுப்படியே செஞ்சு தர்றது மகா மகா பாக்கியம்! சற்குரு தனக்குத் தந்த குருகுலவாச அனுபூதிகளை எல்லாம் பலருக்கும் சொல்லித் தந்து கிரிவலம் வர வைத்து குருவின் மஹிமை உணர்த்துவது மகாபாக்கியத்திலும் மகா பாக்கியம்!

இ(எ)ன்றும் அகஸ்தியர் வருகின்றார்! பொதிய மலை, திருஅண்ணாமலை, திருக்கயிலாயம், திருஇடைமருதூர், இன்னம்பூர் (கும்பகோணம்), மற்றும் ஸ்ரீஅகஸ்தீஸ்வரராக இறைவன் கோயில் கொண்டுள்ள இடங்கள், தென்காசி, திருப்பதி, திருக்குற்றாலம், பஞ்சபூதத் தலங்கள் என்றவாறாக ஸ்ரீஅகஸ்தியர் தினந்தோறும் வழிபடுகின்ற தலங்களில் பாக்யம் உள்ளவர்கள் அவரைப் பல வடிவங்களில் அறிந்தோ அறியாமலோ இன்றைக்கும் தரிசித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.. இன்றைக்கும் பெரும் பெரும் மகரிஷிகளும், யோகிகளும், சித்தர்களும் தங்களுடைய மானுட வடிவிற்கான ஆடைகள், உணவு, எண்ணெய், ருத்ராட்ச மாலைகள், திருநீறு, குங்குமம், சந்தனம் போன்றவற்றைப் பூலோகமெங்கும் நிறைந்துள்ள சற்குருமார்கள், பக்தியிற் சிறந்து விளங்கும் இறையடியார்கள் மூலமாகவே பெறுகின்றனர். திருஅண்ணாமலையில் ஆயிரம் அடியார்க்கு உணவிடுகையில் ஆயிரத்து ஒன்றாவது அடியாராக ஒரு சித்தர் உணவைப் பெற்று ஆசீர்வதிக்கின்றார் என்பது இன்றும் நடக்கும் உண்மையே! இதனை அனுபவப் பூர்வமாக உய்த்து உணர்ந்தவர்களும் உண்டு!

A divine tryst with “000”!
ஒரு முறை .... இப்படித்தான் திருஅண்ணாமலையில் நல்ல இறை அடியார் ஒருவர் பெரியவரைத் தனது அன்னதானத்திற்காக அழைத்தார். பெரியவர் பொதுவாக எதற்கும் போவதில்லை. கர்ம பாக்கி என்று சொல்லி ஒதுங்கி விடுவார்! ஆனால் அன்னதானம் என்றதும் குஷியுடன் நிச்சயமா வர்றேன் என்று சொல்லி விட்டார்.. ஏனென்றால் அன்னதான வளாகத்தில்தானே சித்தர்கள் அதிகம் நடமாடுவார்கள்! சிறுவனுக்குக் குறும்பு மூளை வேலை செய்தது! மறுநாள் அந்த அன்னதான ஆரம்பத்திலிருந்து பெரியவரின் கையைப் பிடித்துக் கொண்டு நின்று கொண்டான்.. எதற்கு? நாம் ஒன்று, இரண்டு என்று அன்னதானம் பெறுவோரை எண்ணிப் பார்ப்போம்.. ஆயிரத்து ஒன்றாவது ஆளாக அவர் அன்னம் பெற்றால்... அவர் (பெரியவர்) சித்தர் தான்.... ஏனென்றால் பெரியவர்தான் சொல்லியிருக்கிறாரே திருஅண்ணாமலையில் ஆயிரம் அடியார்க்கு உணவிட்டால் ஆயிரத்து ஒன்றாவது அடியாராக ஒரு சித்தர் வந்து உணவைப் பெற்று ஆசீர்வதிக்கின்றார் என்று! என்ன செய்கிறர் என்று பார்ப்போமே! சிறுவன் பெரியவரின் கைகளைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டான்.... அன்னதானம் தொடங்கிற்று அழகாக வரிசையில் வந்து கிரிவல அடியார்கள் அன்னம் பெற்றிட... “500 , ...576 .,... .884..... 957... 989 ...அன்னதான அடியார்களின் எண்ணிக்கை உயர... உயர.... சிறுவன் பெரியவரின் கைகளை நன்கு.. கெட்டியாக... உறுதியாக... இறுக்கமாக... நெருக்கிப் பிடித்துக் கொண்டான்! மிகவும் சாந்தமான, மெதுவான க்யூ. அது! எனவே வந்தவர்களை மிக எளிதாக எண்ணி விடலாம்.... 990.. 993... 995... 997 அடியார்களின் எண்ணிகை பெருகியது..“

திடீரென்று ... எங்கிருந்தோ வந்த கும்பல் ஒன்று வந்து குறுக்கே புகுந்திட.... க்யூ வரிசை கலைந்தது.. சிறுவன் காலைப் பலரும் மிதித்துப் பதம் பார்த்துத் தள்ளி விட்டார்கள்...! ஒரு ஐந்து நிமிடத்தில் எல்லாம் ஒரே கசமுசாவாகி விட்டது! நடுவில் ஒரு பெரிய கறுப்பு வால் நாய் புகுந்து கீழே விழுந்த இலையைக் கவ்விக் கொண்டு க்யூ வரிசையின் ஊடே அனைரின் கவனத்தைக் கவர்ந்து ஓடிட.. மீண்டும் க்யூ சிதறி..  பலரும் சிறுவன் மேல் பொத்துப் பொத்தென்று விழுந்தார்கள் சிறுவனுக்கு நாய் மேல் கோபம் கோபமாக வந்தது! இந்தக் களேபரத்தில் சிறுவன் பெரியவரின் கையை விட்டுவிட்டான்! .. பலரிடம் மிதிபட்டு. அடிபட்டு... ஒருவழியாய்.... எழுந்த சிறுவன், முதலில் பெரியவரைத் தானே தேடுவான் என்று எண்ணுகின்றீர்கள்... இல்லையில்லை... விட்ட கணக்கைத் தொடரலாமா என்பதற்காக அன்னதானம் தொடர்கின்றதா என்று எட்டிப் பார்த்தான்! அங்கே அன்னதானம் தானாகவே ஒழுங்காகவேதான் நடந்து கொண்டிருந்தது! எந்தக் குளறுபடியும் இல்லவே இல்லை! சிறுவன் தலையைச் சொறிந்து கொண்டான், கணக்கை ஓட்டை விட்டு விட்டதால்..!

மறைந்த மறையவர் மாமறைச் சித்தரே! அடுத்ததாக, பெரியவரைத் தேட வேண்டுமே! அவர் கொடுக்கும் தண்டனையை ஏற்றாக வேண்டுமே! ஏனென்றால் தப்புக் கணக்கு போட்டுவிட்டானே! அவர் எங்கு போனார்? கோபத்தில் திருஅண்ணாமலையை விட்டுப் போயிருப்பாரோ! சிறுவனுக்குக் கிலி பிடித்துக் கொண்டது. கையில் காசு இல்லை... நேரே சென்னை ராயபுரம் அங்காளம்மன் கோயிலுக்கு நடக்க வேண்டியது தானா? ஏனென்றால் எவரிடமாவது கடன் வாங்கி பஸ் ஏறினால், ஏன் கடன் வாங்கினாய் என்று நம்மைத் தொலைத்து விடுவாரே! ஒரு முறை இப்படித்தான் ஏதோ அவர் சொல்படிக் கேட்கவில்லை என்பதற்காகக் கிரிவலத்தில் திருஅண்ணாமலையில் அம்போ என்று சிறுவனை விட்டுவிட்டுப் பெரியவர் மறைந்து விட்டார்.. சிறுவனிடம் ஒரு பைசா கூடக் கிடையாது! கிரிவலப் பாதையில் எல்லாம் பெரியவரைத் தேடோ தேடெனத் தேடி .. .பசியோடு  தாகத்தோடு... மீண்டும் கிரிவலம் வந்து தேடி.. .. உறங்காமல்... உண்ண முடியாமல் நடையோ நடையென நடந்து. ... ஒரு வழியாய்ப் ப்ட்டினிக் களைப்போடு செங்கற்பட்டுவந்து அங்கு (இப்போதைய சக்தி) வினாயகர் சன்னதியில் பொத்தென்று மயக்கமாகி விழுந்தான்! விழுந்ததுதான் தெரியும்.. எழுந்து பார்த்தால்! ... பெரியவருடன் ராயபுரம் அங்காளி கோயிலில் உட்கார்ந்து கொண்டிருந்தான்! .. பசி, பட்டினி, களைப்பு எல்லாம் என்ன ஆயிற்று? பெரியவரைப் பார்த்ததும் சிறுவன் ஓவென்று கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதான்... ‘ஏன் வாத்யாரே, இப்படி என்னை அம்போன்னு அநாதையாட்டம் விட்டுட்டு மெட்ராஸூக்கு ஓடி வந்துட்டியே! இது ஒனக்கே நல்லா இருக்கா? பெரியவர் சொன்ன பதில் சிறுவனைத் திடுக்கிட வைத்தது! “போடா போடா! என்ன கனவு கண்டுட்டு வர்றியா... நான் எங்கடா போனேன்? மூணு நாளா நான் ஆத்தா கோயிலை விட்டுட்டு ஒரு இஞ்ச் கூட நகரலை.. நீ எதயோ பாத்துட்டு பயந்திருக்க.. கனாக் கண்டுட்டு நடுங்கிட்ட.. போய் நல்லாக் கொழு மோர் காய்ச்சிக் குடிச்சிட்டு வா. போ..!“ சிறுவன் மீண்டும் தலையைப் பிய்த்துக் கொண்டான் எது உண்மை? எது பொய்? எது கனவு? எது நனவு? சித்தர்கள் சாம்ராஜ்யத்தில் எதுவுமே புரியவில்லையே! எல்லாமே மாயைதா(னோ)னா?!

ஆயிரத்தில் இருவர்!
“இப்போதும் சிறுவன் பெரியவரைத் தேடி அலைந்தான். எப்போதுமே அவர் திடீரென்ரறு காணாமல் போய் விட்டால் அவரை நகருக்குள் தேடுவது கிடையாது.. கிரிவலப் பாதையில் தான் தேடுவான். அதற்குள் அவர் குடுகுடுவென்று நடந்து பாதி கிரிவலப் பாதையைக் கடந்து விடுவார். போகும் வழியெல்லாம் ஒரு கோவணாண்டிப் பெரியவரைப் பார்த்தீர்களா என்று கேட்டுக் கொண்டே சிறுவன் செல்ல வேண்டும்! ஏன் இப்படி அடிக்கடி சிறுவன் பெரியவரைத் துரத்தித் தேட வேண்டியதாகிறது? பெரியவரே இதற்கும் விடை சொல்லுவார்.... “ஒண்ணு தெரிஞ்சுக்கோடா! நான் சொல்றத நீ செஞ்சுட்டா நான் உன் பின்னாடி நிப்பேன். நான் சொல்றதைச் செய்யலைன்னா வேற எங்கேயாச்சும் நிப்பேன்,,, நீ தேட வேண்டியது தான்! ரொம்ப சிம்பிளான குருலோக maximடா இது.” ஒரு வழியாய் அண்ணாமலை கிரிவலப் பாதையில் சிவராஜ சிங்க தீர்த்தம் அருகே (தற்போது ஸ்ரீகிருஷ்ணர் ஆலயம் அருகில் உள்ள தீர்த்தம்..) பெரியவரைக் கண்டதும் தான் அவனுக்கு நிம்மதி பிறந்தது! அங்கு தற்போதுள்ள பிள்ளையார் மண்டபத்தில்தான் பெரியவர் அமர்ந்து காலாட்டிக் கொண்டிருந்தார். அவர் பக்கத்தில்.....

அதே பெரிய கறுப்பு வால் நாய்...! அன்னதானத்தில் இலையைத் தூக்கிக் கொண்டு ஓடியதே அதே நாய்! பெரியவர் முன்னாலும் இலை.. அதில் அன்னதானப் பிரசாதம்..!  “இத பாரு சாமி ....”

ஆம் அந்த நாயிடம்தான் பேசிக் கொண்டிருந்தார் பெரியவர். குட்டிப் பையன் வருவான்.. ஏதோ தப்புக் கணக்குப் போட்டுட்டான்.. மன்னிச்சிடு!” சிறுவன் வருவதைக் கண்டும் காணாதது போல் வேண்டுமென்றே உரத்த குரலில் பெரியவர் நாயிடம் பேசிக் கொண்டிருந்தார். அதுவும் ரொம்ப சுவாரசியமாய்த் தலையாட்டிக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தது! 

“.... நம்ப பையன் ... ஏதோ ஆயிரம், ஆயிரத்தி ஒண்ணுன்னுத் தப்புக் கணக்குப் போட்டுட்டான், மன்னிச்சிடு சாமி...” சிறுவன் கண்களில் (கஷ்டப்பட்டு) அழுகையை வரவழைத்துக் கொண்டு வாத்தியாரே என்று பெருங்குரல் கொடுத்து அழுதான்....

“அட போடா! ஒரே பொய் அழுகை அழுதுகிட்டு! ... ஏண்டா யாராச்சும் answer தெரிஞ்சிகிட்டுத் தப்புக் கணக்கு போடுவாங்களா? சொல்லு பார்க்கலாம்!” பெரியவர் சொல்லிக் கொண்டே எழுந்தார். சிறுவனுக்குப் பொறி தட்டியது! அவர் எதைச் சொல்கிறார்? ... சிறுவன் திரும்பிப் பார்த்தான். நாயைக் காணோம்.. அதன் முன்னிருந்த இலையையும் காணோம்! சிறுவன் திகைத்தான்! வந்த பைரவ சித்தர் யாரோ? பெரியவர் வழக்கம் போல், நமுட்டுச் சிரிப்பை உதிர்த்தார்! சிறுவனுக்குப் பெரியவருடைய இந்த சித்தோபநிஷத் வாக்கியமானது வருடங்கள் பல கடந்தும் சிரஞ்சீவி போல் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது!  “யாராச்சும் answer தெரிஞ்சுக்கிட்டுத் தப்புக் கணக்குப் போடுவாங்களா?” இதிலிருந்து உங்களுக்கு என்ன புரிகிறது? நன்கு ஆத்ம விசாரம் செய்து பாருங்கள்! சித்தோபநிஷத் ஆத்ம லேகியக் குளிகையிது! நீங்கள் உங்கள் வாழ்க்கையில் தேடுகின்ற ஒன்றிற்கு இதிலிருந்து மிகவும் சிறப்பான தீர்வும் பிரமாதமான விடையும் கிடைக்கும்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான answer-ரும் கிடைக்கும்! மீண்டும்.. மீண்டும்.. படித்துப் பாருங்கள்! சற்குருவின் அனுபூதியை உய்த்து உணருங்கள்!

முதல் அமுது

குழந்தைகளுக்கான முதல் அமுது ஊட்டும் (அன்ன ப்ராசன) பூஜை – (அட்டைப் படவிளக்கம்)

உங்கள் சந்ததிக்கு அன்ன துவேஷமோ, சோற்றுப் பஞ்சமோ, உணவுக் குழாய் நோய்களோ வராமல் இருக்க வேண்டுமா? இதற்கு உங்கள் குழந்தைக்கு முதல் அமுது ஊட்டும் வைபவத்தை சில விசேஷமான தலங்களில் கொண்டாடுங்கள் ! உங்கள் குழந்தையின் முதல் அன்னம் (சோறு) அம்பிகையின் இறைப்பிரசாதமாக இருக்கட்டும்!

கைக் குழந்தைப் பருவத்திலிருந்து தாய்ப்பால், புட்டிப்பால் இவற்றைத் தாண்டி முதன் முதலாகக் குழந்தைக்கு முதல் அமுதாகிய சாதத்தை ஊட்டுகின்ற பூஜைத்தான் அன்ன ப்ராசனம் அல்லது அமுது ஊட்டும் பூஜையாகக் கொண்டாட வேண்டும்.. இதனை நம் பெரியோர்கள் மகத்தான பூஜையாகக் கொண்டாடினார்கள். மகத்தான பூஜை என்றால் ஏதோ பெரிய செலவு கூடிய பண்டிகை என்று எண்ணிடாதீர்கள்! ஒரு குழந்தைக்கு முதன்முதலாக அமுது ஊட்டப்படுவது ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்றால் கலியுகத்தில் உணவு மூலமாகத்தான் நல்லதும் கெட்டதும் உடலுக்கு, மனதுக்கு, உள்ளத்திற்குச் சேர்கின்றது.. இதைத்தான் அன்னமய கோசம் என்கிறோம்..!

அன்னமயகோசம் என்பதாக உணவைச் சார்ந்து வாழ்கின்ற உடல் என்று கலியுகத்திற்கு விதித்திருக்கின்றார்கள்..! இதற்கு முந்தைய யுகங்களில் உணவு இல்லாமல் கூட வெறும் காற்றை மட்டும் சுவாசிக்கின்ற யோக சக்திகள் நிறைந்ததாகவும் மனித உடல் அமைந்திருந்தது.! மேலும் கலியுகத்தின் நோய்கள், நாம் சுவாசிக்கும் காற்று மற்றும் உண்ணும் உணவின் மூலமாகவே வருவதால், “இறைவா! இக்குழந்தை இனி வெளியுணவைச் சார்ந்து வாழப் போவதால் அந்த உணவு நல்லதாகவும் நல்ல இறை சக்திகள் உடையதாகவும் நல்ல எண்ணங்களைக் கொண்டதாகவும் இருக்கட்டும். பிறருக்கும் அவ்விதத்தில் அன்னதானம் படைக்கட்டும். உண்ணும் உணவும் தோஷங்கள், பகைமை, விரோதம் மற்றும் நோய்க்கிருமிகள் போன்ற எதிர்வினைகள் இல்லாததாகவும் அமைந்து உன் ஆசியில் பிறந்த இக்குழந்தை தீர்கமான ஆயுளுடன், பக்தியுடன் திளைத்திட நீதான் அருள்புரிய வேண்டும்!”

“அம்மா! அன்னபூரணித் தாயே! இந்தக் குழந்தை உண்ணும் வெளி உணவு உன்னுடைய திருக்கரங்கள் மூலமாகவே எம்மை அடைந்து பசி, பஞ்சம் இல்லாமல் எப்போதும் இல்லத்தில் உணவு நிறைந்திருக்கும்படி அருள்வாயாக!” என்று பகவானை வேண்டி அமுதாகிய தேன் கலந்த பால் சாதத்தை இறைவனுக்குப் படைத்து ஏழைக் குழந்தைகளுக்குத் தானமாக அளித்துப் பிறகு பாலமுதைக் குழந்தைக்கு ஊட்டுவதுதான் அன்ன ப்ராசனமாகிய முதல் அமுதூட்டும் பூஜையாகும்.! முதல் அமுது கோயில் பிரசாதமாக இருத்தல் பெரும் பாக்யமாகும். இந்தப் பிரசாத முதல் அமுதினால் ஏற்படுகின்ற தேக சக்திக்குப் பிரதம பிட்சாமிர்தம் என்று பெயர். ஏனென்றால் தாய்ப் பால் / பசும்பாலை ஜீரணிக்கும் சக்தியைத் தரக்கூடிய க்ஷீர தேவதைகள் தம்முடைய ஜீரணத் தொழிலை வெளி உணவை ஜீரணிக்கக் கூடிய கிருபா உதர தேவதைகளிடம் இன்று சமர்ப்பிக்கின்றன.. இவை ஸ்ரீஅன்னபூரணி லோகத்திலிருந்து தோன்றி வருவதாம்! இந்த நல் தேவதைகள் ஜீரணத் தொழிலை ஏற்கும் போது முதல் அன்னமானது தெய்வீகப் பிரசாதமானால் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர். மேலும் அக்குழந்தை  நல் ஆரோக்கியத்துடன் பசி, பட்டினி, பஞ்சமின்றி ஆனந்தமாக வாழ்ந்து வளர்ந்து எவ்வித வயிற்று நோய்களும் இல்லாது இறை நினைவுடன் அன்னதானப் பண்புடன் வாழ்ந்து வளம் பெறுவதற்குத்தான் இந்த அமுதூட்டும் பூஜை.

ஆனால் தற்காலத்தில் கலியுக மக்கள் இந்த அற்புத பூஜையை மறந்து விட்டார்களே, என் செய்வது? குழந்தையின் முதல் அமுதில் சேர்கின்ற பிட்சாமிர்த சக்தி நிறைந்த சக்தி பீடங்கள் ஒரு சில உண்டு.. இவ்விடங்களில் பால் சாதம், தேன் ஊற்றிய சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றைத் தானம் செய்து மேலும் இறைப் பிரசாதத்தையோ, இறைவனுக்கு அபிஷேகம் செய்த பால், தேன், பஞ்சாமிர்தம் போன்றவற்றையோ குழந்தையின் நாக்கில் தடவி பிறகு அன்னத்தை அமுதாகக் குழந்தைக்கு இறைச் சந்நிதியிலேயே ஊட்டுவது விசேஷமானதாகும்.

கேரளாவில் ஸ்ரீகுருவாயூரப்பன் சந்நிதி, திருப்பரங்குன்றத்தில் (வேறெங்கும் காணக் கிடைக்காத அதிஅற்புத அன்னபூரணி தேவிகள் பலர் கூடியிருக்கும் சந்நிதி), திருஅண்ணாமலையில் கிரிவலப்பாதையில் ஸ்ரீஉண்ணாமுலை மண்டபம் போன்றவை இவ்வரிய இறைசக்தியுடைய தலங்களாகும்.. பாண்டிச்சேரி அருகில் சின்னபாபு சமுத்திரத்தில் உள்ள ஸ்ரீபடே சாகிப் சித்தரின் ஜீவாலயத்தில் அன்னதானம் செய்து இங்குள்ள சக்தி வாய்ந்த மகிழ மரத்தைக் குழந்தையுடன் அடிப்பிரதட்சிணம் செய்து இங்கு குழந்தைக்கு முதல் அமுதூட்டுவதால் குழந்தைகள் நோய் நொடியின்றி பக்தியுடன் வளரும். பொதுவாகக் குழந்தையின் முதல் ஆண்டு நிறைவிற்குப் பின் வரும் அஸ்வினி, மிருகசீரிஷம், புனர்பூசம், அனுஷம், பௌர்ணமி நாட்கள் ஏற்றவையாகும். அட்டைப்படத்தில் ஸ்ரீஆஞ்சநேயருக்குத் திருஅண்ணாமலை புனித பூமியில் கிரிவலப் பகுதியில் உண்ணாமுலை அம்மன் மண்டபத்தில் அஞ்சனாதேவி முதல் அமுது ஊட்டுவதைக் கண்டு ஆனந்தம் அடையுங்கள்.. பூர்ண சந்திர பிரகாஸிகா மூர்த்தியாகிய பாற்கடலிலிருந்து தோன்றிய ஆதிமூலச் சந்திர பகவான் இதைக் கண்டு பரமானந்தம் கொள்கின்றார்.. அமுதவனின் அருளொளியில் அம்பிகையே அன்னபூரணியாக அமுதூட்டி அருள்பாலிக்கும் அற்புத அருணாசல அனுபூதியை அறிந்திடுவீரே!

தென்காசி ராஜகோபுரம்

தென்காசி மகாத்மியத் தொடர் – வெற்றிக்கு வடிவழகு தரும் தென்காசி தேவா போற்றி! போற்றி!

தென்காசித் திருத்தலத்திற்குக் காசிக்கு நிகரான தெய்வீக சக்தி எவ்வாறு உண்டாயிற்று? தென்காசித் தலத்தைப் பற்றிய குறிப்புகளை நம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகளின் அருட் கருணையால் அவர்தம் அருட்பெரும் சிஷ்யராம் குரு மங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் சித்தர்களுடைய ஞானபத்ர கிரந்தங்களிருந்து ஆலயத் தெய்வீக இரகசியங்கள் பற்றிய அரிய அபூர்வமான விஷயங்களுடன் தொகுத்துத் தருகின்றார், கலியுக மக்களுடைய நல்வாழ்விற்காக!

பல வருடங்களாகத் தென்காசி ஆலயத்திற்கு இராஜ கோபுரம் இல்லாமல் இருந்தது பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள். இன்றைக்கு பிரம்மாண்டமாக வானில் உயர்ந்து, எழுந்து, தெய்வீகமாக ஆர்ப்பரித்து சிவச்சின்னமாய் ஆவிர்பவித்து நிற்கின்ற இந்த ராஜ கோபுரமானது பித்ருக்களுடைய ஆசிகளாலும், தேவாதி தேவ மூர்த்திகளுடைய அனுகிரகத்தாலும் தான் நமக்கு இன்றைக்கும் எத்தனையோ முறைகளில் நல்வரங்களைத் தந்து கொண்டிருக்கின்றது. இராஜ கோபுரம் எழுவது என்பது மக்களுடைய சீரிய முயற்சியாலும் பலருடைய பொருள் வள தான தர்மத்தாலும் தான் என்று நாம் எண்ணினாலும் இறைவனின் விருப்பமின்றி தேவாதி தேவமூர்த்திகளுடைய பெருந்துணையின்றி எந்த ராஜ கோபுரத்தையும் எவராலும் எழுப்ப இயலாது என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.!

திருக்குற்றாலத்திற்கும் தென்காசிக்கும் நெருங்கிய தெய்வீகத் தொடர்பு உண்டு. இன்றைக்கும் ஸ்ரீஅகஸ்தியர் பெருமான் தினந்தோறும் வழிகின்ற ஆலயங்களில் ஒன்றாக விளங்குவதுதான் திருக்குற்றாலச் சிவாலயமாகும்.. ஏனென்றால் எந்த ஆலயத்தில் நுழையக் கூடாது என்று ஸ்ரீஅகஸ்தியர் பெருமானுக்கே அறியாமையாலும், ஆணவ, அகங்காரத்தாலும், தடையிட்டார்களோ அவ்விடத்தில் தினந்தோறும் இங்கு வந்து என்னைப் பூஜித்திடுவாய் என்று இறைவனே உளமார நல்வரம் தந்தருளிய தலமே திருக்குற்றாலச் சிவாலயமாகும். இன்றைக்கும் ஸ்ரீஅகஸ்தியர் தினந்தோறும் வந்து துதித்துச் செல்கின்ற தலம்! தென்காசியும் திருக்குற்றாலமும் சித்தர்கள் எப்போதும் குழுமியிருக்கின்ற தலமாகவும் விளங்குகின்றது.!

சுயம்பு லிங்கம் என்றால் ஆலயத்தில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள், இன்றைக்கும் பாரதமெங்கும் ஏன் உலகமெங்கும், பிரபஞ்சமெங்குமே வழிபாட்டிற்கு வாராது வயல்களின் ஊடேயும், நிலத்தின் அடியிலும், வனாந்திரங்களிலும், மலைப் பாறைகளிலும் இருக்கின்ற சுயம்பு மூர்த்திகள் நிறைய உண்டு. அவற்றுள் ஒன்றுதான் முப்பூ கூட்டு லிங்கமாகும்.. இன்றைக்கும் திருக்குற்றாலத்தில் மனிதர்களுடைய சஞ்சாரமில்லாத சம்புநாத வனப் பகுதியில் சூட்சும ஜோதியுடன் விளங்குகின்ற அதி அற்புத லிங்கப் பாறை ஒன்று உண்டு..இதனை வழிபடாத சித்தர்களோ, மகான்களோ, யோகிகளோ, முமூட்சுக்களோ எவரும் இல்லை என்று சொல்லும் வண்ணம் அந்த அளவிற்கு பிரபஞ்சத்திற்கே முப்பூசுர ஜோதியை அள்ளி வழங்கி வருகின்ற லிங்கமாகும்.

தக்க சித்தர்களுடைய அனுமதியின்றி சுயம்பு லிங்க மூர்த்தியை தரிசிக்க இயலாது. இச்சுயம்பு லிங்க மூர்த்தி எவ்வாறு பிரபஞ்சத்தின் சூட்சும வழிபாட்டிற்கு வந்தது? சூட்சும வழிபாடு என்றால் என்ன?  யாருடைய, யாருக்கான சூட்சும வழிபாடு? இன்றைக்கு நாம் காண்கின்ற பல்லாயிரக்கணக்கான ஆலயங்கள் போன்றே இப்பூவுலகில் சூட்சும ரூபத்தில் உள்ள எத்தனையோ கோடி சுயம்பு லிங்க மூர்த்திகள் உண்டு.. மனிதன் குறிப்பிட்ட தெய்வீக சித்திகளைப் பெற்றால்தான் இந்த சூட்சும ஜோதி லிங்கங்களை தரிசிக்க முடியும். இவற்றை வழிபாட்டிற்கு உரிய சுயம்பு லிங்கமாக ஆவாஹனம் செய்கின்ற அருட்பணியை காளாங்கி நாத சித்தருடைய அருட்தோன்றல்கள் தாம் எடுத்துச் செய்கின்றனர். கோடானு கோடி பிரம்ம மூர்த்திகள் இதுவரையில் பிரபஞ்ச சிருஷ்டியில் பங்கேற்றுள்ளனர்.. ஒரு பிரம்ம மூர்த்திக்கு உரித்தான தேவகாலம் முடிவுக்கு வருகின்றபொழுது அவர் ருத்திர கபால மூர்த்தியாக இறைவனுடைய ருத்திராட்ச சாரத்தில் சேர்கின்றார். இவ்வாறு கோடானு கோடி ஆண்டுகளாகப் பிரம்ம மூர்த்திகளாக இருந்த அனைத்து விதமான பிரம்ம மூர்த்திகளையும் நீங்கள் தரிசிக்க வேண்டுமென்றால் சிவபெருமானுடைய கங்காள மூர்த்தி அவதார தரிசனத்தைப் பெற்றாக வேண்டும்.

பல ஆலயங்களில் ஸ்ரீகங்காள மூர்த்தியாய் ஆதிசிவன் இன்றைக்கும் பரிமளித்துக் கொண்டிருக்கின்றார்.. இவரை தரிசித்தால் கோடானு கோடி பிரம்ம மூர்த்திகளை தரிசித்த புண்ணியம் உங்களைச் சேரும்... ஒவ்வொரு பிரம்ம மூர்த்தியும் குறைந்தது ஆயிரம் கோடி சதுர்யுகங்களுக்கு பிரம்ம ஆட்சி புரிகின்றபொழுது ஒவ்வொரு பிரம்ம மூர்த்தியும் திருக்குற்றாலத்தில் சூட்சும ஜோதிலிங்கமாக விளங்கின்ற முப்பூ லிங்கப் பாறையைத் தங்களுடைய அருள்மணிக் கோலால் தட்டி நாதம் எழுப்பி பூஜை செய்கின்றனர். அதாவது ஒரு பிரம்ம மூர்த்தியுடைய ஆயிரம் கோடி சதுர்யுக ஆட்சி முடிகின்ற பொழுது அவருக்குச் சந்தனத்தால் ஆன சந்தன மணிக் கோல் ஒன்று ஈஸ்வரனால் பரிசாக அளிக்கப்படுகின்றது. .அவர் இந்த சந்தன மணிக் கோலைக் கொண்டு திருக்குற்றாலத்தில் உள்ள முப்பூ லிங்க சாள கிராமத்தை பூசுர நாத யோக ராக தாளம் எழும் வண்ணம் லேசாக மூன்று முறை தட்டுவார்.. இதில் எழுகின்ற நாதமானது பிரபெஞ்சமெங்குமே ஒலித்திடும்..

இந்த ஒலிக்காகக் கோடானு கோடி யுகங்களாகக் காத்துக் கொண்டிருக்கும் மகரிஷிகளும், சித்தர்களும் உண்டு..இவ்வாறாக ஆயிரம் ஆயிரம் கோடி பிரம்ம மூர்த்திகளால் சந்தன மணிக் கோலால் தட்டி நாதம் எழுப்பி பூஜிக்கப்பட்ட முப்பூ லிங்க சாளகிராம பாறையானது குறித்த யுகத்தில் தானாக விரிந்து மலர்ந்து முப்பூ சுயஞ்ஜோதி லிங்கத்தை சூட்சும தரிசன வழிபாட்டிற்காக சுயஞ்ஜோதி லிங்கமாக ஆர்பவிக்கின்றது. இவ்வாறாகக் கோடானு கோடி சதுர் யுகங்களாக கோடானு கோடி பிரம்ம மூர்த்திகளால் சந்தன மணிக் கோலால் தட்டி நாத பூஜை செய்யப் பெற்ற சுயம்பு லிங்க மூர்த்தியே இந்த முப்பூ சுயஞ்ஜோதி லிங்க பகவானாவார். இதிலிருந்துதான் இன்றைக்குப் பிரபஞ்சத்தில் உள்ள எத்தனையோ சுயம்பு லிங்க மூர்த்திகள் உருவாயினர்.. எனவே இவரே ஆதிமூல முப்பூ சாளகிராம லிங்க மூர்த்தி ஆவார். இன்றைக்கும் மனித சஞ்சாரமில்லாத திருக்குற்றால வனப் பகுதியில் சூட்சும ஜோதியாக வரும் தேவர்களால் பூஜித்து வழிபடப்பட்டு வருகின்ற முப்பூ லிங்க மூர்த்தி.

நவராத்திரி பூஜைகள்

நல்வரம் தரும் நவராத்திரிப் பூஜைகள்!

கணவன் தீய பழக்கங்களிலிருந்து மீள வேண்டுமா? பிள்ளைகளின் மந்த புத்தி அகன்று நன்கு படிக்க வேண்டுமா? பெண் பிள்ளைகள் நல்லொழுக்கத்துடன் வாழ்ந்து சிறப்பான திருமண வாழ்வைப் பெற வேண்டுமா? இதற்கெல்லாம் அருள் கூட்டும் எளிய நவராத்திரி பூஜையைச் செய்திடுங்கள்! நமக்கென அம்மனே, அம்பிகையே, காளியே கடைபிடிக்கின்ற வழிபாடுகளே நவராத்திரி இரவு பூஜைகள்! நாமும் அம்பிகையின் நவராத்திரிப் பூஜைகளில் பங்கு கொண்டால் பூஜா பலன்கள் பன்மடங்காகப் பெருகுகின்றனவே!

முப்பத்து முக்கோடி  தேவர்களும் பூஜிக்கின்ற திருவிழாவாக நவராத்திரி விளங்குவதால் உங்களுடைய பிரார்த்தனைகளை விரைவான காரிய சித்தியாக மாற்றுவதே நவராத்திரி பூஜையாகும்! ஒரு வருடத்தின் மிகப் புனிதமான பூஜா நாட்களாக மிகுந்த சிறப்புடையதாக விளங்குவதால் நவராத்திரிப் பூஜைகள் நாம் செய்ய மறந்த, அலட்சியமாகக் கவனக் குறைவாக விட்டு விட்ட பூஜா பலன்களுக்கான நிவர்த்தியைப் பெற்றுத் தரும்.

நாம் செய்ய வேண்டிய தினசரி இரவு நேர பூஜை முறைகளும் உண்டு.. சிவபாத பூஜை, இராத்திரி சூக்த பாராயணம், இரவு நேர தியானம், யோகம் போன்றவற்றையும் கலியுக மனிதன் மறந்து விட்டுக் கேளிக்கைகளிலும் முறையற்ற காமச் செயல்களிலும் சூதாட்டம், மது மற்றும் போதை மருந்துகளின் வசப்பட்டும் இரவைக் கழிக்கின்றான். இவற்றிற்கெல்லாம் தக்க நிவாரணம் தந்து இரவு நேர பூஜா பலன்களை நமக்குப் பெற்றுத் தருவதே ஒன்பது நவராத்திரி தின பூஜைகளாகும். சென்ற இதழில் விக்ரம ஆண்டிற்கான ஒன்பது நவராத்திரி பூஜா தினங்களுக்கான பொது விளக்கத்தைக் கண்டோம்.. வீட்டில் சுபிட்சமும் ஆரோக்கியமும், மன அமைதியும், சாந்தமும், நல்வளமும் நிறைந்திருக்க வேண்டுமென்றால் பிறரும் இவற்றைப் பெறும் வண்ணம் நீங்கள் உங்கள் வாழ்கையில் நம்மை விடக் குறைந்த வசதியுடன் வாழும் ஏழை எளியோர்க்கான தான தருமங்களையும் சரீர சேவைகளையும் அவரவர் வசதிப்படியும் சத்சங்க இறைப் பணிகளாகவும் செய்து வந்திருக்க வேண்டும். ஆனால் இவ்வாறு செய்து வந்திருக்கின்றீர்களா? உங்களுடைய வருமானம் போதவில்லை என்றால் பலரும் சத்சங்கமாக ஒன்று கூடி சுலபமாக எத்தனையோ இறைச் சேவைகளைப் புரிந்திடலாமே? காபி, டீ, டீவி, நாடகம், சினிமா, பொழுது போக்கு கேளிக்கைகள் போன்றவற்றிற்கு நீங்கள் செலவழிக்கின்ற தொகையை/ வீணாக்குகின்ற நேரத்தை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

அண்ணாமலையின் (விஜய) தச(மி) முக தரிசனம்!

எனவே உங்களுடைய வருமானத்திற்கு ஏற்றபடி வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு நிறைந்த தாம்பூலம், தேங்காய் ஆகிய மங்களப் பொருட்களை நவராத்திரியின் போது தினந்தோறும் அளித்து வருதலே மிகச் சிறந்த தானமாக உங்களுக்கு ஆசி வழங்கும் (பித்ரு) விண்ணுலகங்களின் புண்யக் கணக்கு நியதிகளில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.. இதில் பெருவகைச் சமுதாய நல தானமும் உண்டு! உதாரணமாக நவராத்திரிப் பிரதமை திதியில் ஒரு யானையைக் கோயில் சேவைக்காகத் தானமாக அளிப்பதால் கிடைக்கின்ற பலன்களோ கோடானு கோடி! இந்த தானமானது அனந்த கோடி புண்ய சக்தியைத் தரவல்லது. ஆனால் தனிப்பட்ட முறையில் இதை நிறைவேற்ற முடியாவிட்டாலும் வாழ்க்கையில் ஒரு முறையேனும் இதனை நிறைவேற்றுவதால் பெறுதற்கரிய கஜதான பலன்களை இவ்வாழ்க்கையிலோ / பல கோடிப் பிறவிகளில் எப்போதாவது ஒரு முறையேனும் பெறலாம் அன்றோ? நவராத்திரியின் பிரதமை முதல் விஜய தசமி அமையும் தசமி திதியோடு ஒன்பதோடு பத்தாக நவராத்திரியின் நிறைவு பூஜையாக விஜய தசமி அமைகின்றது. திருஅண்ணாமலையில் நம் ஆஸ்ரமத்தின் அருகே அபயமண்டபத்திலிருந்து பெறுகின்ற பத்து (அண்ணாமலை) மலை முகடுகளின் தரிசனத்திற்கு (விஜய) தச முக தரிசனம் என்று நீங்கள் அறிவீர்கள். விஜய தசமியன்று பெறுதற்கரிய இந்த தசமுக தரிசனத்தைப் பெறுவதற்கு ஆயுர் பல மகா தரிசனம் என்று பெயராகும். திருஅண்ணாமலையில் ஒவ்வொரு தரிசனத்தின் பெயரும் பலனும் அந்தந்த நாளுக்கு, நேரத்திற்கு ஏற்ப மாறுபடும். இதன் தெய்வீக ரகசியங்களை உணர்ந்தவர் சற்குரு ஒருவரே!

மேலும் ஸ்ரீஉண்ணாமுலை அம்பிகையே ஸ்ரீஆயுர்தேவியாக நவாகர்ஷண யோக நிலையில் கிரிவலம் வந்து அருணாசல மூர்த்தியை வழிபடுகின்ற திருநாளாதலின் இன்று (விஜய தசமியில்) கிரிவலம் வந்து ஆயுர் பல மகா தரிசனத்தைப் பெற்றுப் பித்ருக்களின் (தென்புலத்தாரின்) ஆசீர்வாதம் நிறைந்த புடலங்காய், வாழைக்காய் போன்றவை கலந்த உணவை அன்னதானமாக அளித்து வந்தால் பித்ரு சாப நிவர்த்திக்கான அறவழி முறைகளும் கிட்டும்.. பித்ரு ஆசீர்வாதம் பெருகும்.

குறிப்பாக பலவிதமான கடுமையான கபால/தலை சம்பந்தப்பட்ட நோய்களால் துன்புறுவோர் தசமி தோறும் அதிலும் விசேஷமாக விஜய தசமியன்று கிரிவலம் வந்திடில் கணவனுக்கு தீர்க ஆயுள் கிட்டும். அடிக்கடி நோய்கள் வந்து அவதியுறுகின்ற குழந்தைகள் நன்முறையில் சுகமுடன் வளர ஆயுர்பல மகா தரிசனம் உதவுகின்றது. அம்பிகையே ஆண்டவனைப் பூஜிக்கின்ற நவராத்திரி தினங்கள் ஆதலால் இல்லறப் பெண்கள் நல்ல தீர்க்கமான சுமங்கலித்துவம் பெற (கணவன் நோய் நொடிகயின்றி தீர்கமான ஆயுள் பெறுதல்) நவராத்திரியின் ஒன்பது தினங்களிலும் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, தேங்காய், வளையல், பெரிய கண்ணாடி, பெரிய சீப்பு, மருதாணி போன்ற மங்களப் பொருட்களைச் சந்தோஷத்துடன் அளித்து உண்மையான பரம ஆனந்தத்தை உங்கள் உள்ளத்தில் நிரந்தரமாகப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனென்றால் பிறருக்கு மகிழ்ச்சி தரும் வகையில் நீங்கள் செய்யும் நற்காரியங்களே உண்மையான ஆனந்தத்தைத் தரும்., பலரும் சத்சங்கமாக ஒன்று சேர்ந்து (சிரமம் பாராது, பெருஞ்செலவென்று எண்ணாது) பெருமளவில் மேற்கண்ட மங்களப் பொருட்களை வாங்கிப் பலருடைய ஒருமித்த பூஜையாக மகத்தான முறையில் நவராத்தியைக் கொண்டாடுவீர்களேயானால் அதிக அளவில் பெறுதற்கரிய பலன்களைப் பெற்றிடலாம்.

மங்களம் தரும் சாரதா நவராத்திரி சௌபாக்ய பூஜைகள்!

இங்கு நீங்கள் காணும் நவராத்திரி பூஜைகளும் தான தருமங்களும் விக்ரம வருடத்திற்கு உரித்தான விசேஷமான வழிபாடுகளாக விளங்குகின்றன.. நவராத்திரி தினங்களில் தினந்தோறும் மாலையில் மங்களப் பொருட்களை ஜாதி, இனம் பாராது ஆலயங்களில் பலருக்கும் அளித்திடுக! நவராத்திரியின் பிரதமை, துவிதியை, திரிதியை மூன்று தினங்களுக்கான பூஜை விளக்கங்களை செப்டம்பர் 2000 ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் கண்டீர்கள் அல்லவா? ஏனையவற்றைத் தொடர்வோமா!

நவராத்திரி சதுர்த்தி திதி கணவன் நல் ஆயுளைப் பெற திருமண தோஷங்கள் தீர

உலகம் போற்றும் நம்முடைய பாரதப் பண்பாட்டின் இல்லற தர்மத்தின் மகத்தான நல்முத்தாக விளங்குவது ஏக பத்தினி விரதப் பாங்கும், அதாவது கணவனே கண்கண்ட தெய்வம் என்ற சத்திய நெறியின்படி தம்பதி சகிதம் குழந்தைச் செல்வத்துடன் நன்னெறியில் நீடூழி வாழ்தலாகும். இதிலும் 60, 70, 80 ஆண்டுகளாக இல்லற தர்மத்தைப் பேணுகின்ற பழுத்த தம்பதிகள் தங்களுக்குள் எவ்வித மன வேறுபாடுகள், பிரச்சனைகள் இருந்தாலும் இறையருளால் அவற்றை வென்று சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் என்பதை தம்முடைய நெடுநாள் வாழும் பாக்கியத்தை இறைவனுக்கு நன்றி காணிக்கை செலுத்தும் வைபவமாகக் கொண்டாடுகின்றார்கள். ஆனாம் ஏழ்மை, நடுத்தரக் குடும்ப அமைப்பு, வசதியின்மை காரணமாக 60, 70, 80 ஆண்டு வயது நிறைவினைக் கொண்டாட இயலாதோர் நிறைய உண்டுதானே! இன்றைய நவராத்திரிச் சதுர்த்தி திதியில் குறைந்த பட்சம் 12 பழுத்த ஏழைத் தம்பதிகளுக்கு சதாபிஷேகம், சஷ்டியப்த பூர்த்தி வைபவத்தைக் கொண்டாடிட மனமகிழ்வுடன் உதவி புரியுங்கள். வயதான தம்பதிகளுக்கு இலவசமாகப் பொன் மாங்கல்யம், ஆடைகள், உணவு அனைத்தும் அளித்துத் தக்க பூஜைகள், ஹோம வழிபாடுகளுடன் கொண்டாடுங்கள்..

பொதுவாகவே நிறம், உயரம், நல்ல வேலை, அழகு இல்லாமை காரணமாகப் பல ஏழை நடுத்தரக் குடும்பங்களில் திருமணங்கள் தேங்கி நிற்கின்றன.. இதற்குப் பரிகாரமாக மேற்கண்ட முறையில் வயதான தம்பதிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தால் பலவிதமான திருமண தோஷங்களை எளிதில் நிவர்த்தி செய்து விடலாம். வில்வ மரத்திற்கு தாமே அரைத்த சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு அடிப்பிரதட்சிணம் செய்து வந்தால் பலவித திருமண தோஷங்களுக்கு நிவர்த்தியாகப் பித்ருக்கள் பலவிதமான ஆசிகளை அளிக்கின்றார்கள்.

உய்யக்கொண்டான்மலை

பஞ்சமி கல்யாணத் தடங்கல்கள் நிவர்த்தியாக

திருமண தோஷங்கள் வேறு, திருமணத் தடங்கல்கள் வேறு! 35 வயதிற்கு மேலாகித் திருமணமாகாமல் கவலைப்படுகின்ற ஆண்களும் பெண்களும் உண்டு. தங்களுடைய புதல்விகள் / பிள்ளைகளுக்குத் திருமணம் ஆகவில்லையே என்று துளிக் கூடக் கவலையில்லாது வாழ்கின்ற பெற்றோர்களும் உண்டு. இந்நிலையில் சம்பந்தப்பட்ட கன்னிப் பெண்களும் இளைஞர்களும் தான் பரிகாரங்களை நாடியாக வேண்டும். எவ்வுளவு வசதியிருந்தும் திருமண பாக்யம் தள்ளிக்கொண்டு சென்றால் நவராத்திரி பஞ்சமி திதியில் ஒன்று சேர்ந்து 108 ஏழைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொன் மாங்கல்யத்தையும் மங்களப் பொருட்களையும் இந்த பஞ்சமி திதி நவராத்திரியின் போது தானமாக அளித்தால் நிச்சயமாகத் திருமணத் தடங்கல்களுக்குத் தீர்வினைப் பெற முடியும். பல சத்சங்கங்கள் ஒன்று சேர்ந்து இந்த நவராத்திரி பூஜையைக் கடைபிடித்தால் பல குடும்பங்களுக்கு நன்முறையில் தடங்கல்களை நிவர்த்தி செய்து திருமண வாழ்வைப் பெற்றுத் தர முடியும். இது முக்கியமான சமுதாய இறைச் சேவையுமாகும்.

இரு அம்பிகைகள் உடைய ஆலயங்களில்  திருச்சி உய்யக் கொண்டான் மலை, திருப்பைஞ்ஞீலி, திருமழபாடி, தாயாரும், ஆண்டாளும் உடைய பெருமாள் ஆலயங்கள்.. திருச்சி நெடுங்களம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் சந்நிதி போன்ற இடங்களில் இந்நவராத்திரி பூஜை, தான தர்மங்களை நிகழ்த்திட திருமணத் தடங்கல்கள் நிவர்த்தியாகும்.

சஷ்டி தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழ

பல குடும்பங்களிலும் திருமண வாழ்வு சுமுகமாக அமைவது கிடையாது. குறிப்பாகப் பெண் வழி உறவு முறைகளில் ஏற்படுகின்ற சச்சரவுகளினால் தம்பதிகள் எத்தனை குழந்தைகளைப் பெற்றாலும் கூட கருத்து ஒற்றுமை இல்லாமல்தான் வாழ்கின்றார்கள். அதுவும் வேலைக்குச் செல்கின்ற இல்லறப் பெண்கள் என்றால் தம்பதியரிடையே ஆணவ, அகங்காரப் பிரச்சனைகள் தான் பெருக்கெடுக்கும்.. தீர்க்க சுமங்கலித்துவம் என்பதாக கணவன் மனைவியரிடையே அன்புப் பரிமாற்றம் வேண்டும் என்பதற்காக அம்பிகையே இல்லறப் பெண்களின் சுமங்கலித்வத்திற்காக வழிபடுகின்ற பூஜையாக நவராத்திரி அமைகின்றது ! இன்று அம்பிகை தன் இளஞ்செல்வமாம் முருகப் பெருமானை, பழனியப்பனாக மடியில் அமர்த்தி வைத்து பூஜை செய்வதால் இன்று ஆறு மயில்களை ஆலயங்களுக்கு, குறிப்பாக மலைக் கோயில்களுக்கு அவற்றிற்குரிய பராமரிப்புச் செலவுடன் தானமளிக்க வேண்டும். அல்லது மயில்கள் உள்ள ஆலயங்களில் மயில்களுக்கு வேண்டிய கூண்டு, உணவு, பாதுகாப்பிற்கான வசதிகளைச் செய்து வந்தால் கணவன் மனைவியரிடையே உள்ள கொந்தளிப்புச் சூழ்நிலைகள் மாறுவதுடன் உண்மையான அன்பும் மலரும். முருகன் மடியிலமர்ந்த கோலமாக சோமாஸ்கந்தர் (சுவாமி மலை, சென்னை போரூர்) எழுந்தருளியுள்ள தலங்களில் நவராத்திரி சஷ்டி பூஜையைக் கடைபிடிப்பது சிறப்பானதாம்.

சப்தமி இசையில் சிறந்து விளங்க காது வியாதிகள் நீங்க

பல ஆலயங்களிலும் கும்பாபிஷேகப் பணிகள் பல்லாண்டுகளாக அரை குறையாகத் தேங்கி நிற்கின்றன என்று பல ஊர் மக்களும் கவலைப்படுகின்றனர்... இத்தகைய ஆலயங்களில் ஆறுகால பூஜைகளை எளிமையான முறையிலாவது குறைந்தது ஒரு மண்டலமேனும் நிகழ்த்தி சப்தமி திதிகளில் வசதியற்ற ஆலயங்களுக்கு வாத்யக் கருவிகளை இலவசமாக அளித்து ஆறுகால பூஜையோடு வாத்தியங்களை இசைக்கச் செய்தால் எத்தகைய இறைத் திருப்பணியும் நன்முறையில் நிறைவு பெறும். இன்று அம்பிகை சப்தமாதர்களுடன் சேர்ந்து இறைவனை பூஜிப்பதால் சப்த மாதாக்கள் எழுந்தருளியுள்ள ஆலயங்களில் (குளித்தலை கடம்பவனேஸ்வரர், சென்னை கோவூர்) சப்த மாதாக்களுக்குத் தாமே அரைத்த மஞ்சள், குங்குமம், சந்தனம் இட்டு வஸ்திரம் சாற்றி வழிபட்டு வந்தால் காது சம்பந்தமான வியாதிகளுக்கு நிவாரணம் கிட்டும்.. இசைக் கலைஞர்கள் முக்கியமாக வழிபட வேண்டியதே நவராத்திரி சப்தமி திதி வழிபாடாகும்.. இன்று புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸப்த லிங்கங்கள், சென்னை மப்பேடு சிவாலயம் போன்ற இசைக்குரித்தான தலங்களில் நவராத்திரியைக் கொண்டாடுவது விசேஷமானது.

சுவாமிமலை

அஷ்டமி குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து வாழ

பெரிய வீடு, பங்களா, தொழிற்சாலை, Collector, Chariman, M.D போன்று பெரிய பதவிகளிலிருந்தும் அபரிமிதமான அதிகாரம், அந்தஸ்து, வருமானம் காரணமாகப் பலருக்கும் பதவிச் செருக்கால் கேளிக்கை மற்றும் தீய வழக்கங்களுக்கு ஆட்பட்டு அமைதியான வாழ்வைப் பெறாது திக்கித் திணுறுவோரும் உண்டு..

வெளி உலகிற்குக் கோடீஸ்வர/ கூட்டுக் குடும்பம் என்று பெயர் கொண்டு உள்ளுக்குள் தாய், தந்தை, மகன், பெண்களுக்குள்ளேயே பகைமை காரணமாக ஒரே வீட்டில் பிரிந்து வாழ்வோரும், பெண்/பிள்ளை மேல் கொண்ட பாசம் காரணமாகக் கணவன், மனைவியே பிரிந்து வாழ்கின்ற குடும்பங்களும் உண்டு.. இவ்வருட நவராத்திரி அஷ்டமி திதிக்கான சங்கல்பமாக எட்டுக் கோயில்களின் விமானங்களைப் பழுது பார்த்து, புதுப்பித்து, வண்ணமிட்டுப் பராமரித்தலால் பிரிந்த குடும்பம் நிச்சயமாக ஒன்று சேரும். பெரிய பட்ஜெட்டாயிற்றே என்று யோசிக்காதீர்கள். குடும்ப ஒற்றுமையை வளர வைக்க எவ்வளவு லட்சம் செலவழித்தாலும் தகும்தானே?

நடுத்தரக் குடும்ப மக்கள் என்ன செய்வது? இத்தகையோர் சத்சங்கமாக ஒன்று கூடி கூட்டாக இத்தகைய பூஜைகளைச் செய்து சிறப்பான பலன்களைப் பெறலாம்.. கும்பகோணம் அருகே திருகண்ணனூர்ப் பெருமாள் ஆலயத் திருப்பணிகள் அஷ்டாங்க விமான சக்திகளைக் கொண்டதாகும்.

நவமி பிள்ளைகள் பொறுப்புடன் திகழ நல்லொழுக்கத்துடன் வளர

அறிவு என்றால் கல்வியால் வருவது மட்டுமல்ல, அனுபவ அறிவு, ஆத்ம விசார அறிவு போன்று பலவிதமான பகுத்தறிவு அம்சங்களைக் கைகொண்டால்தான் தெய்வீகமான வாழ்வைப் பெறமுடியும். ஆனால் கலியுக மனிதனோ, தான் பெற்ற பகுத்தறிவைப் பல வழிகளில் வீணாக்கிக் கொள்கின்றான்.. அறிவுச் சேதமின்றிக் கணவனும் மனைவியும் நல்லொழுக்கத்துடன் வாழ்ந்திடவும் தன்னுடைய குழந்தைகள் நல்ல கல்வியறிவைப் பெற்றுச் சிறந்த ஒழுக்கத்துடன் வாழ்ந்திடவும் ஈஸ்வரனை வேண்டி அம்பிகை இன்று வித்யாரூபிணியாக சர்வேஸ்வரனை வழிபடுகின்றாள். கும்பகோணம் அருகே இன்னம்பர் சிவாலயம் (அகத்தியர் சிவபெருமானிடம் இ(ர)ருந்தே தமிழ் இலக்கணம் கற்ற புனிதமான கோயில்..), திருச்சோற்றுத் துறை , தஞ்சை கொங்கணீஸ்வரர் ஆலயம் போன்ற இடங்களில் இன்றைய நவராத்திரி பூஜையைச் சிறப்பாகக் கொண்டாடி, சுவாமிக்கு வாகனங்கள் இல்லாத ஆலயங்களில் குறைந்த பட்சம் ஒன்பது ஆலயங்களில் அத்தி மரத்தாலான வாகனங்களை சுவாமிக்கு அர்ப்பணித்தலால் பொறுப்பற்றுத் திரியும் பிள்ளைகள் நல்வாழ்க்கையைப் பெறுவர்.!

சுவாமிக்கு வலப்புறமாக அம்பிகை உள்ள ஆலயங்களில் (சென்னை – திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர், குளித்தலை அருகே கருப்பத்தூர், திருச்சோற்றுத் துறை, திருஆனைக்கோயில்) இன்றைய நவராத்திரி பூஜைகளைக் கொண்டாடுவது சிறப்புடையது. இத்தகைய ஆலயங்களில் பாஸ்கரேஸ்வர சக்தி மிகுந்திருப்பதால் குழந்தைகளுக்கு அறிவு விருத்தியைத் தரும் சக்தியை உடையதாம்...

தசமி திதி அமைதியான வாழ்வைப் பெற

என்னதான் வசதிகள், குழந்தைச் செல்வம், மன அடக்கம், மனத் திருபதி, இறை நம்பிக்கை இருந்தாலும் நோய்களுடைய துன்பங்களை மட்டும் மனிதனால் தாள முடியவில்லை! கலியுகத்திலோ நாளுக்கு நாள் விதவிதமான நோய்கள் பெருகி வருகின்றன.. நோயைத் தீர்க்க வேண்டிய மருந்துகளோ புதுப்புது பிரச்சனைகளைக் கிளப்பிவிடுகின்றன மருத்துவத்தைப் புனிதமாகக் கருதி மக்களுக்கு இறைப்பணி புரிந்த மருத்துவத் துறையில் தற்போது பணம் சம்பாதிப்பது முக்கியத்துவம் பெறத் துவங்கி விட்டது. பரவெளியில் நல்ல எண்ணங்களும் நல்ல மந்திர ஒலிகளும் ஹோம பூஜையின் புனிதமான மந்திர சக்திகள் நிறைந்த புகையும் நன்முறையில் நிரவினால்தான் ஆரோக்கியமான கதிர்களை நாமே இயற்கையாகவே உருவாக்க முடியும். இதுவே பல கிருமிகளையுந் தடுக்கும்.

கலியுகத்தில் மனித சமுதாயத்தை வருத்துகின்றதாக நோய்களின் தன்மை அமையும் என்பதை தீர்க தரிசனமாக உணர்ந்த அம்பிகை எதிர்வினைகளை அழிக்கின்ற துர்கா சக்தியாக அமர்ந்த கோலத்தில் தவம் புரிந்த தலங்களில் இன்று நவராத்திரி பூஜையைக் கொண்டாடுவது சிறப்பானதாகும்... (திருவாரூர், மயிலாடுதுறை அருகே திருமீயச்சூர், காஞ்சீபுரம்.) திருஅண்ணாமலை கிரிவலத்தில் கிரிவலத்தின் இறுதிப் பகுதியில் சக்தி வாய்ந்த ஸ்ரீதுர்கை அம்மன் ஆலயம் உண்டு. இங்கும் விஜய தசமியைக் கொண்டாடுதல் சிற்ப்புடையதாகும்.. விஜய தசமியில் தேர் கொண்டு அம்பிகை அ(ன்)ம்பைப் பெய்து தீய சக்திகளை அழிக்கின்ற நன்னாள் ஆதலின் காரைக்குடி செட்டிநாட்டுப் பகுதிகளில் தசமிதிதி அன்று அம்பிகை அம்பு எய்யும் திருவிழாக்களைக் கொண்டாடுகின்றார்கள்.. இந்த அம்பினை பெறுதற்கரியப் பிரசாதமாக எடுத்து, பத்திரப்படுத்தி வைக்கின்ற நல்வரப் பழக்கமும் இன்றும் உண்டு. விஜய தசமி நாளில் இத்தகைய (பல ஆண்டுகளாகப் பூஜிக்கப்பட்டு வரும்) தெய்வீக அம்புகளைத் தரிசனம் செய்து பூஜித்தல் பெறுதற்கரிய பாக்கியமாகும். எனவே நன்கு விசாரித்து 20, 25 ஆண்டுகளுக்கு மேலான நவசக்தி சாரம் எனப்படும் இத்தகைய அம்புகளை தரிசிக்கின்ற பாக்கியத்தைப் பெற்றிடுங்கள்...கோயில்களின் மணி மண்டபத்திற்குப் பெரிய வெண்கல மணிகளை இன்று தானமாக அளிப்பதால் இந்த மணியின் தெய்வீக ஒலியானது பரவெளியில் உள்ள தீவினை சக்திகளை விலக்கித் தூய்மைப்படுத்துகிறது.

ஸ்ரீகடம்பவனேஸ்வரர் ஆலயம்
குளித்தலை

சமுதாயம் ஆரோக்கியமும், வளமும், இறைமேன்மையும் பெறுவதற்குக் கோயில் மணி சப்தம் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறையாவது நிச்சயம் ஒலித்திடல் வேண்டும். இன்று அம்பிகை மந்திரங்களாலும் இன்னிசைப் பாடல்களாலும் வாத்திய ஒலிகளாலும் வீணை நாதத்தினாலும், ஜலதரங்கம், கிண்கிணி மணி ஒலிகளாலும் இறைவனைப் பூஜிப்பதால் இன்று மணியோசை கொண்டும், சங்கின் ஒலி கொண்டும் இறைவனைப் பூஜிப்பதே விசேஷமான பலன்களைத் தரும். பல கடுமையான வீக்க நோய்களால் (குறிப்பாக ஹைட்ரசல்ஸ், காது நோய்கள், வயிறு வீக்கம்) வருந்துவோர் கோயில்களுக்கு வெண்கல மணியைத் தானமாக அளித்து வர நோய்களின் கடுமை தணியும்.

அசூன்ய சயன விரதம்

சூன்ய திதி, திதி சூன்யம் என்றவாறெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.. திதி சூன்யம் அல்லது திதிகளின் விஷ சூன்ய ராசி எனப்படுவது பஞ்சாங்கத்தின்படி ஒவ்வொரு ராசிக்கும் உரிய சில திதிகளில் அந்த நட்சத்திரக்காரர்கள் சுப காரியங்களை விலக்க வேண்டும். உதாரணமாக சிம்ம ராசிக்குத் திரிதியை, சஷ்டி, நவமி, தசமி திரயோதசி திதிகள் சூன்யமாகும்.. இவை தவிர பஞ்சாங்கத்தில் சூன்ய திதி என்று கொடுத்திருப்பார்கள்.

திதி சூன்யம் வேறு, சூன்ய திதி வேறு!

அதாவது ஒரே நாளில் இரண்டு திதிகள் சமநேரத்திற்கு வரும்போது பஞ்சாங்கத்தில் அந்நாளுக்கு உரித்தான திதியை நிர்ணயம் செய்ய முடியாமல் அந்த நாளை சூன்ய திதி என்று குறிப்பிட்டிருப்பார்கள்.. சில கிழமைகளும் சில நட்சத்திரங்களும் சேரும் தினங்களைக் கூடா நாட்கள் என்று குறிப்பிடுகிறோம். உதாரணமாக திங்கட்கிழமை அன்று சித்திரை நட்சத்திரம் சேர்ந்து வரும் நாள் கூடா நாள் ஆகும்.. இதை பிரபலாரிஷ்ட யோக தினம் என்றும் சொல்வதுண்டு... ஆனால் நடப்பு வழக்கத்தில் திருமணத்திற்கான சுபமுகூர்த்தங்களையும், சீமந்தம் மற்றும் பல நற்காரியங்களையும் கூடா நாட்கள் எனப்படும் பிரபலாரிஷ்ட யோக நாட்களிலும், சூன்ய திதிகளிலும், திதி விஷ சூன்ய ராசி நாட்களிலும் வைத்து விடுகிறார்கள். இது தவறானதாகும். கலியுகத்தில் திதி விதிகள் வாழ்க்கையில் பல முக்கிய அம்சங்களுக்காக மிகவும் பயன்படுகின்றன. உதாரணமாக சாந்தி முகூர்த்தமாகிய தம்பதியரின் சேர்க்கை நாட்கள் மிகவும் மங்களகரமான நேரத்தில்தான் அமைதல் வேண்டும்.. இல்லையெனில் பிறக்கும் குழந்தைகள் மன நோய், ஊனம் போன்ற குறைகளுடன் தான் பிறக்கும்..

கருப்பத்தூர் சிவாலயம்

மடமையில் மனிதன் மறந்த கடமை! மேலும் மனித சமுதாயத்திற்குப் பிற ஜீவன்களுடைய ஜீவ விருத்திக்காக அவற்றின் ஆண் பெண் சேர்க்கைக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய கடமையும் தார்மீக ரீதியாக உண்டு.. உதாரணமாக, இனச் சேர்க்கையில் இருக்கின்ற நாய்கள், குளவிகள், வண்டுகள், பாம்புகள் போன்றவற்றை ஒருபோதும் பிரித்தலோ, வேடிக்கை பார்த்தலோ கூடாது.. எவ்வாறு முறையான இல்லற தர்மம், காமம் தனை முறைப்படுத்தித் தர்ம நெறிக்கு உட்பட்ட வகையில் மனிதனுக்கு அளிக்கப்பட்டு உள்ளதோ அதே போல் இனவிருத்தி முறைகள் மற்ற ஜீவ சிருஷ்டிகளுக்கும் உண்டு. பிற ஜீவன்களின் விருத்திக்குத் துணை புரிய மனித குலத்திற்கெனத் தனிக் கடமையும் தார்மீக நெறிமுறைகளும் உண்டு.

எனவேதான் பசு, ஆடு, கோழி வாத்து போன்றவற்றை ஜீவ காருண்ய முறையில் வளர்ப்பதற்கென மனித சமுதாயத்திற்கான கடமைகளும் உண்டு. எனவே எக்காரணம் கொண்டும் பிற ஜீவன்களின் இனச் சேர்க்க்கையைக் காமக்கண் கொண்டு காண்பதோ, பிரிப்பதோ, இம்சிப்பதோ, கேலி செய்வதோ கூடாது. இவ்வாறு செய்திடில் இதுவே பெருந் தீவினைக் கர்மமாக மாறி இப்பிறவியிலோ அடுத்து வரும் பிறவிகளிலோ குழந்தையில்லாத நிலையை உருவாக்குகின்றது. அல்லது பிரசவத்தில் குழந்தை சிசேரியன் போல் அவஸ்தைப்பட்டு பிறக்கும். மேலும் இதுவே திருமணத் தடங்கல்களுக்கும், தம்பதிகளிடையே மன ஒற்றுமை இல்லாமைக்கும், குடும்பத்தில் பிரிவினைகள் ஏற்படுவதற்கும் காரணமாகின்றது தற்காலத்தில் மாமனார், மாமியார் கொடுமைகளாகத் தம்பதியரைச் சேர விடாமல் தடுக்கின்றவர்கள் மேற்கண்ட துன்பங்களை எதிர்காலத்தில் பெறுகின்றனர்.

இவ்வாறாகப் பிற ஜீவன்களுடைய சேர்க்கைகுச் செய்த துன்பங்களுக்கு ஓரளவு பரிகாரமாய்த் தம்பதிகளுடைய தார்மீகமான இல்லறச் சடங்குகளுக்கு / சேர்க்கைக்கு விளைவித்த துன்பங்களுக்கும் ஓரளவு பிராயசித்தமாகவும் அமைவதுதான் அசூன்ய சயன விரதமாகும். இவ்விரதத்தினால் எத்தனையோ பலன்கள் கிட்டுகின்றன என்றாலும் கலியுகத்தில் நடப்பு விக்ரம ஆண்டிற்குரித்தான அசூன்ய சயன விரத பலன்களாக இவற்றைச் சித்தர்கள் அருள்கின்றார்கள்.

ஆவிகளுடன் உரையாடல்

பில்லி, சூன்யம், செய்வினை, ஏவல் போன்ற துர்சக்திகளுடன் விளையாடி அதில் பணம் சம்பாதித்தவர்கள் இதற்குரிய பிராயச்சித்தங்களைப் பெற்றால்தான் அவர்கள் ஆவி உலகத்திலிருந்து மீள முடியும். மது, போதை பொருட்கள் போன்றவற்றின் வசப்படுபவர்கள் யாவருமே பலவீனமான மனதை நாளடைவில் கொண்டு விடுவதால் அவர்கள் உடலிலும் ஆவிகளின் போக்குவரத்து எளிதாகி விடும்.. இது நல்லதல்ல.. எனவே அவ்வப்போது யோக, தவ, தியானங்களால் மனோலயத்தைத் திடமாக்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் நல்ல ஆவிகள் என்றால் நன்மைகளைச் செய்யும், தீயவை என்றால் உடலையும் மனதையும் ஆட்டி விட்டுச் சென்றுவிடும். எனவே மீடியம் என்று சொல்லப்படுகின்ற ஆவிகளுடன் தொடர்பு கொள்ளக் கூடிய சக்தியை உடையவர்கள் கண்டிப்பாக அபூர்வமான பலன்களைத் தரும் அசூன்ய சயன விரதத்தைக் கடைபிடித்தல் வேண்டும்.

ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒன்பது உடல்கள் உண்டு என்பது பற்றிய சித்தர்களுடைய ஜீவக்கூட்டு தெய்வீக இரகசியங்களை நாம் அவ்வப்போது விளக்கி வருகின்றோம். இந்த ஒன்பது தேக சஞ்சாரங்களில் ஆவிகள் வந்து சேர்வதற்குச் சிறந்த மனக்கட்டுப்பாடும், ஆவிகளைப் பகுத்தறியும் தன்மையும் நிச்சயமாகத் தேவையே! தக்க குரு, வழிகாட்டி மூலமாக ஆவி சஞ்சார இரகசியங்களை உணர்ந்தவர்களுக்குத்தான் இவ்விளக்கங்கள் புரியலாகும்.. இவ்வாறு ஆவி சஞ்சார மர்க்கங்களில் ஈடுபட்டோர் தாங்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த தவறுகளுக்குப் பிராயசித்தம் தருவதே இந்த அசூன்ய சயன விரதமாகும்.

உறங்கும் முறை அறிவீரே! மேலும் கலியுகத்தில் மனிதன் தூய்மையான உறக்கத்தைப் பெறுவதற்கான யோக முறைகளை அறிந்து கொள்ளாமல் உண்டவுடன் உறங்குவது, இரவு வெகு நேரம் கண்விழித்து வேலை செய்வது / வீணான சினிமா பார்ப்பது, எந்த விதமான இரவு பூஜைகளின்றி அல்லது எளிய பிரார்த்தனை மந்திரங்கள் கூட ஓதாது அப்படியே படுக்கையில் சாய்ந்து விடுவது என்றெல்லாம் பலவிதமான தவறான உறக்க நிலைகளைக் கடைபிடிக்கின்றான். இது மனோ சக்தியின் தன்மையைக் குறைத்துவிடும்..

மேலும் வீட்டிலோ அலுவலகத்திலோ நாற்காலியிலோ, தரையிலோ சோபாவிலோ முறையாக அமர வேண்டிய நிலைகளும் உண்டு, சாய்ந்து கொள்தல், உட்கார்ந்த நிலையில், சாய்ந்த நிலையில் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் ரயிலிலோ, பஸ்ஸிலோ கார்களிலோ கிடைத்த நேரத்தில் ஏதேதோ கோலங்களில் அவரவர் இஷ்டத்திற்குத் தூங்குவது என்பதெல்லாம் உடல் ஆரோக்கியத்தைப் பாதிப்பதாகும். இவ்வாறு பிரயாண நேரங்களில் தூங்குவது பெருந்தவறே! அப்படி உறங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் தக்க மந்திரம் ஓதி, விபூதி இட்டு தேகக் காப்பு இட வேண்டும்., நம் பெரியோர்கள் நெற்றிக்கு விபூதி இடாது ஒரு போதும் படுக்க மாட்டார்கள். இவ்வகையிலான தக்க பரிகாரங்களை ஓரளவு தரவல்லனவே. பலவிதமான சயன யோக முத்திரைகளும் அசூன்ய சயன விரதம் போன்ற இராப் பூஜைகளும் ஆகும். இவ்வாறு குற்றம் என்று அறியாமல் செய்த பெரும் பிழைகளுக்கு ஓரளவு பிராயச்சித்தம் பெற்றுத் தருவதாக நம் முன்னோர்கள் பலவிதமான பூஜை முறைகளைத் தந்திருக்கின்றார்கள்.. இவற்றைத்தாம் நீங்கள் பஞ்சாங்களில் காண்கின்றீர்கள். பஞ்சாங்கம் என்பது நம் பெரியோர்கள் வகுத்துத் தந்த அற்புதமான ஜோதிட இலக்கியமும், ஜோதிட கணிதமும் ஆகும்.

அசூன்ய சயன விரதம், ஸ்ரீதன்வந்த்ரீ ஜெயந்தி, கரவீர விரதம், கோ துவாதசி விரதம் போன்ற பல அபூர்வமான விரத முறைகளை நம் பெரியோர்கள் நமக்கு அளித்திருக்கின்றார்கள். ஒவ்வொரு விரதமும் பல்லாயிரக்கணக்கான சித்தர்களால், மகரிஷிகளால் கடைபிடிக்கப்பட்டு இவற்றின் பலாபலன்கள் எல்லாம் இவற்றைக் கடைபிடிப்போர்க்குக் கிட்டும் வண்ணம் சங்கல்பம் செய்யப்பட்டதாகும்.. ஆனால் ஓரளவு பிராயசித்தம் கிட்டும் என்று நாம் கூறுவதற்குக் காரணமே எதற்குமே தக்க சற்குருவைப் பெற்றால்தான் முழுமையான பலன்களைப் பெற முடியும் என்பதனால்தான்!

ஆரம்பக் கல்வி, உயர்தரக் கல்வி மாணவ, மாணவியரிடையே நல்லொழுக்கத்தைப் பேணவும் சில விரதங்கள் உள்ளன. அசூன்ய சயன விரதம் மிகவும் எளிமையானது கிடையாது.. ஆனால் பலவிதமான முறைகலில் சேர்ந்த தீவினைக் கர்மங்களை அவ்வளவு எளிதிலா தீர்க்க முடியும்? மேலும் விந்துக் குற்றங்களை இழைத்தவர்களும், முறையற்ற காமத் தீவினைகளைச் செய்தோரும் என்றேனும் ஒரு நாள் மனம் திருந்தி நல்வாழ்க்கை வாழ வேண்டுந்தானே? ஆனால் இவ்விமாலயக் குற்றங்களினால் எவ்வளவு பேருடைய வாழ்க்கை சீரழிந்திருக்கும்? இதை எண்ணி அவர்களுக்கு நிவாரணம் அளித்தால்தான் எந்தப் பரிகாரமும் பயனளிக்கும்!

எனினும் திருந்தி வாழ விழைவோருக்கு என்ன பரிகாரமோ? இதற்கான நல்வழிகளைக் காட்டுவதே  அசூன்ய சயன விரதப் பலன்களாகும்.. எனவே இயற்கைச் சங்கமத்தில் இருக்கின்ற பிராணிகளையும், பூச்சிகளையும் ஒரு போதும் பிரித்தல் கூடாது.. இது மகாபாவம் ஆகும்...மகாபாரதத்தில் இயற்கைச் சங்கமத்திலிருந்த மானைப் பிரித்ததால் பாண்டவர்களின் தந்தையாம் பாண்டு மகாராஜா பட்ட சொல்லொணாத் துன்பங்களை நீங்கள் அறிவீர்கள் தானே!

இயற்கை ஏவல்கள்! இவ்வாறு பல ஜீவ சங்கமங்களைப் பிரிக்கின்ற தோஷத்தால் இயற்கை ஏவல் துன்பங்கள் ஏற்படுகின்றன.. பில்லி, சூன்ய வகைகளிலும் குத்து, படல், நக, முடி, அழுக்கு, ஆடை, சோறு, நீர் எனப் பல வகைகள் உண்டு.. பில்லி, சூன்ய, ஏவல்கள் என்றால் பிறருக்குத் தீவினைகளை மந்திரித்து வைப்பது என்று மட்டும் எண்ணாதீர்கள்... மேற்கண்டபடி வண்ணத்துப் பூச்சி, தட்டாம் பூச்சி, தும்பி, நாய், வண்டு, பல்லி போன்ற பிராணிகளின்  / ஜீவன்களின் இயற்கைச் சங்கமங்களைப் பிரித்தால், இயற்கை ஏவல்கள் தாமாகவே உருவாகி இவ்வாறு வினை செய்தவர்களைத் தாக்கும்.

நாம் அடிக்கடி வலியுறுத்தி வருகின்ற சித்தர்களுடைய ஜீவகாருண்யத் தத்துவப்படி பிற ஜீவன்களுடைய இனவிருத்திக்கு மனித சமுதாயம் துணை புரிதல் வேண்டும்! எனவே இறைவன் அளித்துள்ள இயற்கைச் சட்டங்களை மனிதன் மீறுகின்ற பொழுது தண்டனையாக இயற்கை ஏவல் துன்பங்கள், சூறாவளியாக, பெருமழைச் சேதங்களாக, தீ விபத்தாக வந்து சேரும்.  மேலும் நாம் எப்படி உறங்க வேண்டும் என்ற வகைமுறைகளும் உண்டு.. ஏதோ தூக்கம் வந்தால் எப்படி எங்கு வேண்டுமானாலும் படுத்துறங்கலாம் என்று எண்ணுவது தவறானதாகும்., வேலை பளுவால், அயற்சியாலும் மட்டுமின்றி சில சமயங்களில் நன்றாகத் தூங்கிய பிறகும் மீண்டும் தூக்கம் வரும்.. இதற்குக் காரணம் ஒரு விதத்தில் சோம்பித் திரிதல் என்றாலும் மறுபுறம் உங்கள் உடலில் உள்ள ஒன்பது சரீர சூட்சுமத் திசுக்களுக்குத் தேவையான ஆகாஸ தேவ கிரண சக்திகளைப் பெற உடலானது உறக்க நிலையிலான தேகப் பரிமாண யாத்திரையை (astral travel) மேற்கொள்ள வேண்டும் என்பதாகும்.

ஆத்மா என்றால் ... ?

ஆத்மா (SOUL) என்றால் என்ன?

இதற்கு எத்தனையோ விதமான பதில்களைப் படித்திருப்பீர்கள். ஆனால் படித்தால் மட்டும் தெளிவு பிறக்காது! முதலில் புரிந்து கொள்ள வேண்டும், இதற்கு சற்குரு தேவையே! ஆத்மா, ஆன்மம் என்றெல்லாம் சொல்லப்படுகின்ற soul பற்றி நிறைய விளக்கங்கள் இருந்தாலும் சித்தர்கள் சித்தோபநிஷத் மூலமாகத் தருகின்ற விளக்கங்கள் தாம் மிகமிக எளிமையானவை. பாமரரும் புரிந்து கொள்ளக் கூடியவை..!

ஆத்மா என்பது பரம்பொருளாம் இறைவனுடைய சக்தியின் வெளிப்பாடுதான்! அதாவது ஆத்மா ஒரு வகையான தேவ சக்தியே! ஆலயத்தில் உள்ள தெய்வ மூர்த்திகள் எல்லாம் பரம்பொருளின் பரிபூரணமான தேவசக்திகளின் வெளிப்பாடுதாம்.. இந்த தேவ சக்தியின் தன்மை, மகிமை, குணப்பாடுகள் இடத்திற்கு இடம்/ மனிதனுக்கு மனிதன் வேறுபடும்..

இறை ஜோதிக் கலசமே ஆத்மா! இறைவனின் தேவ சக்தி இந்தப் பிரபஞ்சமெங்கும் நிறைந்து இருந்தாலும்/ வெளிப்பட்டாலும் பல இடங்களில் பல பொருட்களில்தாம் இந்த தேவ சக்தியின் பரிமாணம் பூரித்து நாம் இந்த மனித உடலில் உணரும் வகையில் நன்கு நிறைந்திருக்கும். அவ்விடங்களில் தாம் அது இருப்பதும் தெரிய வரும்.. ஆத்மாவை அது இது என்று ஒருமையில் பேசுவதும் தவறே! ஏனெனில் இறைச் சக்தியின் பிம்பமாயிற்றே!

மனித உடல் என்பது இறைவனால் அவரவருடைய பூர்வ ஜன்ம வினைகளுக்கேற்ப அளிக்கப்பட்டது.. இதனுள் உள்ள தேவ, பிராண சக்தியே இறைவனால் அனுப்பப்பட்டதாக ஆத்மாவாக உடலின் உள்ளே உள்ளத்துள் பிரதிபலிக்கின்றது.. எனவே ஆத்மா உறையும் கூடே இவ்வுடல்! அப்படியானால் மகான்கள், சித்தர்களின் உடலில் இந்த ஆத்மப் பிரவேசம் எப்படி நிகழ்கின்றதோ? இத்தகைய தேவதூதர்களின் உடலில், இறை சக்தியானது பரிபூரணமாக ஆத்மப் பிரவேசம் செய்து ஆத்மாவானது இறைஜோதியாகவே முழுமையாகவே (pristine pure Athma) பிரகாசிக்கின்றது.. ஆனால் சாதாரண மனித உடலில் ஆத்மப் பிரவேசமானது சிப்பியில் மறைந்த முத்துமாணிக்கப் பிரதிபலிப்பாகவும் மின்சக்தி போல மறைந்திருக்கும் தேவ சக்தியாகவும் (reflected atman) விளங்குகின்றது.

ஒரு மனிதன் தன் முகத்தைத் தானே பார்க்க முடியாது. அதற்கொரு கண்ணாடி வேண்டுமல்லவா! இதே போலத்தான் இறைவனின் கருவியே நாம் என்று உணர்ந்தாலன்றி தன்னிடம் உள்ள பிராண தேவ சக்தியான ஆத்மாவை உணர முடியாது. இதை இவ்வாறு உணரும் நிலையை அடைந்தவர்களே மகான்கள், சித்தர்கள் ஆதலின் அவர்களுக்குத் தங்கள் முகத்தைப் பார்த்துக் கொள்ளக் கண்ணாடி தேவையில்லை! ஏனென்றால் தன்னில் தன்னையே தனதெனக் காணும் அவர்கள் தன்னிலையை அறிந்தவர்களே!

தன்னை அறிந்தால் தன்னலம் புரியும்
தன்னலம் மறைந்தால் பெரும் பேரின்பம்

எனவே சாதாரண மனிதனுக்கு எவ்வாறு தன் முகத்தைக் காண கண்ணாடி தேவைப்படுகின்றதோ அதேபோலத் தன்னை அறிவதற்கு, தன் பிராண சக்தியாக ஆத்மாவை அறிவதற்குக் கண்ணாடியாகிய சற்குரு தேவை! ஒரு சாதாரண மனிதன் பலவிதமான ஆசாபாசங்கட்கு ஆட்பட்டு வாழ்வதால்தான் அவனால் தன்னுள் உள்ள பிராண தேவ சக்தியாகிய ஆத்மாவை உணரமுடிவதில்லை.. இதற்காக அந்த ஆத்ம ஜோதி அவனுள் மழுங்கி விடவில்லை! மறைந்த மாணிக்கமாய்த் தானே சுடர்விட்டுக் கொண்டிருக்கின்றது.

மகான்கள் சித்தர்களின் உடலில் நிறைந்திருக்கும் பிராண தேவ சக்திக்கு திடதீர்க பிரவேஸிகா (ஆழ்நிலை ஆத்மச் சுடர்) என்று பெயர். மகான்கள், சித்தர்களிலும் பல உத்தம சேவா நிலைகள் உண்டு. வள்ளலார் சுவாமிகள், பட்டினத்தார், ஆதிசங்கரர், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற உத்தம இறைத் தூதுவர்கள் ஒவ்வொருவரும் ஒரே முறையில் அல்லாது விதவிதமான இறைவழி முறைகளில் தெய்வீகத்தை ஊட்டினார்கள்... காரணம், கலியுக மக்களின் மனோநிலைகள் நிமிடத்திற்கு நிமிடம் மாறி வருவதால், மது, சூதாட்டம், முறையற்ற காமம் எனத் தீவினை சக்திகளின் வசப்பட்டுத் திரிகின்ற போது கலியுக நியதிகளுக்கேற்ற வகையில் ஹோம, பூஜா, தியான வழிபாட்டு முறைகளை நல்ல நிவாரண மருந்தாக மகான்கள் அளிக்கின்றார்கள்.. பித்ரு தேவர்களும் , மகான்களும் பல வடிவங்களிலும் பலர் மூலமாக நமக்கு நல்வழி காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். ஆலயம் என்பதும் கூட சமுதாய அறவழிக் கூடம்தானே!

மகான்களும் தங்களுக்குரித்தான மானுட உடலை உகுக்கின்ற நேரம் வரும்போது தங்களுக்கென இறைவன் விதித்துள்ள தேக நிவாரண முறைகளைக் கைக் கொள்கின்றார்கள். பஞ்சபூத சக்திகள் நிறைந்த யோக உடலைக் கொண்டிருந்தமையால் ஸ்ரீவள்ளலார் சுவாமிகள் தம் உடலைப் பரவெளியில் ஜோதி மூலமாக மறைத்தார்.. ஜலசமாதி பூண்ட மகான்களும் உண்டு. ஸ்ரீபரமாச்சார்யார், ஸ்ரீகாஞ்சீபுரம் போடா (சிவசாமி) சுவாமிகள் போன்று சாதாரண முறையில் மானுட உடலை உகுத்த மகான்களும், சித்தர்களும் உண்டு. பலகோடி யுகங்களுக்கு முன் பல சித்தர்களும் மகரிஷிகளும் பூமியில் இறங்கி ஜீவசமாதி பூண்டு லிங்கமாய் மாறினர். இவ்வாறு இன்றைக்கும் பல ஆலயங்களில் லிங்க மூர்த்தங்களில் ஜோதியாய்ப் பொலிந்து கூடி அருள்புரிபவர்கள் சித்புருஷர்களும், மகான்களும் ஆவர்!

பாண்டிச்சேரி அருகே சின்னபாபு சமுத்திரத்தில் ஜீவசமாதி கொண்டிருக்கும் ஸ்ரீபடேசாகிப் சுவாமிகள் இன்றைக்கும் ஜீவாலயத்திலிருந்து ஆரோக்கியக் கதிர்களைத் தெய்வக் கிரணங்களாக அளித்துப் பரிணமித்துக் கொண்டிருக்கின்றார்... திருஅண்ணாமலையில் மூலத்தானத்தில் இடைக்காடரின் ஜீவ ஜோதிப் பரிமாணமே மிளிர்கின்றது!

அசூன்ய சயன விரத முறை

உறக்க முறைகளிலும், உறக்க நிலைகளிலும் ஆவி சஞ்சார மார்கத்திலும் ஜீவ ப்ரவேச முறைகளிலும் உள்ள குறைபாடுகளினாலும் ஜீவன்களுடைய இனச் சேர்க்கையைத் தடுக்கின்றமையாலும் ஏற்படுகின்ற பலவிதமானக் குற்றங்களுக்கு ஓரளவு நிவர்த்தியைத் தருவதாக அமைந்திருப்பதே அசூன்ய சயன விரதமாகும். அசூன்ய சயன விரதத்திற்கு முன்னால் குறைந்தது ஒரு மண்டலமேனும் (48 நாட்கள்) கடுமையான விரதத்தை மேற்கொள்ள வேண்டும். ஸ்ரீபெருமாள் சயனக் கோளம் (படுத்த யோக நிலை) கொண்டுள்ள ஆலயத்தில் அசூன்ய சயன விரதத்தை மேற்கொள்வதாகச் சங்கல்பம் செய்து கொண்டு 48 நாட்களுக்குப் பிறகு வீராசன யோக நிலையில் அருள்பாலிக்கின்ற பெருமாளின் ஆலயத்தில் விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

காலையில் ஐந்து மணிக்கெல்லாம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி அவரவர் குல தர்மப்படி விபூதி, குங்குமம், நாமம், கோபிச் சந்தனத்தை இட்டுக் கொள்ள வேண்டும்.. காலையில் இரண்டு மணி நேரமும் மதியம், மாலையில் ஒரு மணி நேரமும், இரவில் இரண்டு மணி நேரமும் அசூன்ய சயன விரத மந்திரத்தை ஜபித்தல் வேண்டும். இது பெறுதற்கரிய மந்திரமாகும்.! யாரொருவர் அசூன்ய சயன விரத முறையைக் கடைபிடிப்பதாக சத்தியச் சங்கல்பம் செய்கின்றார்களோ அவர்களுக்கு மட்டுமே இந்த மந்திரம் தக்க சற்குருவால் அளிக்கப்படும். இவ்விரதத்தை அனுஷ்டிக்க விரும்புவோர் ஸ்ரீஅகஸ்திய விஜயம் அலுவலகத்திற்குத் தபாலிலோ, நேரிலோ தொடர்பு கொண்டால் தக்க விளக்கங்கள் அளிக்கப்படும்.! ஆனால் மந்திரத்தைப் பெற்று விட்டுக் காரண காரியமின்றி விரதத்தை நிறுத்தி விட்டால் மந்திரம் பலிக்காததோடு சங்கல்பத் தவறுகளால் மனக் குழப்பங்களும் துன்பங்களும் ஏற்படும்.. ஆனால் தீவிர மனோ வைராக்யத்துடன் அசூன்ய சயன விரதத்தைக் கடைபிடிப்போருக்கு பிறவிப் பெரும்பயனாக அளப்பரிய பலன்கள் பரிசாகக் கிடைக்க இருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

விரத நாட்களில் ஒரே ஒரு வேளை மட்டுமே உணவு ஏற்க வேண்டும். நீர் மட்டும் தாராளமாக அருந்திடலாம். தினந்தோறும் ஆலயங்களில் கண்டிப்பாக அடிப்பிரதட்சிணம் செய்திடல் வேண்டும். சயனக் கோலப் பெருமாள் (ரங்கநாதர்) அருள்பாலிக்கும் ஆலயங்களிலும், அரச மரம், ஆல மரம், வேப்ப மரம், வில்வ மரம் தலவிருட்சமாக உள்ள ஆலயங்களிலும் அடிப்பிரதட்சிணம் செய்வது சிறப்புடையது.

48 நாட்களிலும் எவ்விதத் தீய பழக்க வழக்கங்களையும் கைக்கொள்ளக் கூடாது.. பீடி, சிகரெட், மது போன்ற தீய பழக்கங்கள் இருந்தால் விரதத்தின் போது மட்டுமன்றி அதன் பிறகும் தீயது எதையும் தீண்டலாகாது.. ஆனால் கவலைப்படாதீர்கள். இந்த ஒரு மண்டல விரதம் நல்ல மனோவைராக்கியத்தைத் தரும் வல்லமை கொண்டதாகும். நன்முறையில் கடைபிடித்தால்!

விரதத்திற்கு ஆடைநெறி முறைகள் இல்லையென்றாலும் அவரவர் மனோதிடத்திற்கும் சூழ்நிலைச் சந்தர்ப்பத்திற்கும் ஏற்றவாறு குறித்த வண்ண ஆடைகளை அணிதல் நல்ல மனோ சக்தியைக் கொடுக்கும்.. பொதுவாக நாள் முழுவதும் பஞ்சகச்ச முறையில் எட்டு முழ வேட்டியை அணிதல் சிறப்பானது. உறக்கத்திற்கு முன்னால் குறைந்தது, அரைமணி நேரமாவது சயனக் கோல மூர்த்திகளுக்கு (ரங்கநாதர்) உரித்தான துதிகளை ஓதுதல் வேண்டும். உறங்குவதற்கு முன் சுழுமுனை சுவாசம் எனப்படும் நாசியில் இருவழியாகச் சுவாசித்தல் மனோபலத்தை மேம்படுத்தும்.. ராத்திரி சூக்தம், அப்பர் சுவாமிகளுடைய திருத்தாண்டகம், அமாவாசை பௌர்ணமி சங்கமத்தில் உதித்த அபிராமி பட்டருடைய அபிராமி அந்தாதி போன்ற துதிகளையும், ஜேஷ்டா லட்சுமியின் துதிகளையும் ஓதி வருதலால் சயன நிலையில் யோக சக்தியை நாம் எளிதில் பெறுவதோடு நாம் சரியான நிலை கொண்டு உறங்காமைக்கான குற்றங்களுக்கானப் பரிகாரங்களையும் பெற்றிடலாம்.

விளக்கு தீபதரிசனம் ஒரு நேத்திர யோ(யா)கமே!
நம் பெரியோர்கள் தினந்தோறும் கால , மதியம், மாலை மூன்று வேளைகளிலும் விளக்கேற்றுகின்ற நற்பழக்கத்தை நமக்குப் பெற்றுத் தந்திருக்கின்றார்கள்.. எவ்வாறு ஆலயங்களில் ஆறு கால பூஜையானது சுருங்கி மூன்று வேளைகளாகக் குறைந்து போனதோ இதே போல நம் இல்லத்துப் பூஜைகளிலும் மாலையில் மட்டுமே விளக்கேற்றுவது என்றாகி விட்டது மிகவும் கவலைக்குரியதாகும். ஏனென்றால் தினந்தோறும் நம்முடைய கண்களால் குறைந்தது ஆறு மணி நேரமேனும் எண்ணெய் தீபத்தை தரிசித்தால்தான் நம்முடைய கண்கள் மூலமாக நாம் பல தேவையற்ற காட்சிகளைக் கண்டு, எண்ணிய தீவினைகளுக்குத் தக்கப் பிராயசித்தம் கிட்டும். மேலும் தீபத்திலிருந்து எழுகின்ற சுபர்ண கிரணங்கள் உடலெங்கு நிரவி நம்மை புனிதப்படுத்துகின்றன.

இந்த அசூன்ய சயன விரதத்தின் போது குறித்த அசூன்ய சயன மந்திரத்தை விளக்கு தீபத்தின் முன்னால் ஜபித்தல் சிறப்புடையதாகும்.. ஒரு மண்டல காலத்திற்குக் கடைபிடிக்க வேண்டிய இந்த அசூன்ய சயன விரதத்தின் போது அவரவர் வசதிக்கேற்ப தினந்தோறும் அன்னதானம், வஸ்திர தானம், பொன் மாங்கல்யம், காதணி, பாதணி போன்றுவற்றுடன் ஹோமம், விளக்கு பூஜைகள் எனப் பலவிதமான தானங்களையும் வழிபாடுகளையும் மேற்கொள்ளுதலால் அசூன்ய சயன விரதத்தின் பலன்கள் பெருகுவதுடன் திடமாகவும், துரிதமாகவும் பலன்கள் நம்மை வந்தடையும். செலவைக் கண்டு அஞ்சாதீர்கள்! காலம் காலமாய்க் காலனாய் நம்மோடு ஒட்டி உறவாடுகின்ற நோய்களோடு படுகின்ற அவஸ்தையை ஒப்பிடுகையில் விரத, தானச் செலவுகள் எல்லாம் ஒரு செலவா? விரதத்தின் நிறைவில் பெருமாள் வீராசன கோலம் கொண்டுள்ள ஆலயத்தில் சுவாமிக்கு நீண்ட வஸ்திரம் சார்த்தி சந்தனம் அரைத்துச் சார்த்திப் பூஜையை/விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

கேதார கௌரி விரதம்

கலியுகத்தில் பலவிதமான துன்பங்கள் தினந்தோறும் ஒவ்வொரு திசையிலிருந்தும் வெவ்வேறு கோணங்களிலிருந்தும் நாளுக்கு நாள் வந்து குதித்துப் பெருகிக் கொண்டிருக்கிறது. எனவே இல்லறப் பெண்கள் அனைத்து விதமான விரதங்களையும் ஒன்றையும் விடாது கடைபிடித்தால்தான் பலவிதமான புண்ணிய சக்திகளைப் பெற்றுத் துன்பங்களைச் சமாளிக்க முடியும். கலியுகத்தில் குடும்ப வாழ்வில் இல்லறப் பெண்களுடைய பங்கு மிகவும் முக்கியத்துவம் பெறுவதால் விரத பூஜைகளின் பலன்களால்தான் அவர்கள் எதையும் சமாளிக்க முடியும்.. குடும்பத்தில் தினந்தோறும் விரதங்களைக் கலியுகத்தில் கடைபிடிப்பது கடினம் என்பதனால்தான் ஆலயங்களிலும், சத்சங்க பூஜையாக சமுதாய பூஜையாக அனைத்து விரதங்களையும் கொண்டாடி மக்களையும் பங்கேற்கச் செய்து விரத பலாபலன்களை யாவரும் அடையும் வண்ணம் செய்திடுதல் மகத்தான இறைப் பணியாகும். உதாரணமாக கேதார கௌரி விரதம், சங்கடஹர சதுர்த்தி, ஜெயா பார்வதி விரதம், வராஹ ஐயந்தி, வாசவி ஜயந்தி போன்ற பலவிதமான பண்டிகைகளை மக்கள் மறந்து விட்டமையால் வசதியுள்ளவர்களும், ஏனையோரும் சத்சங்கமாக ஒன்று சேர்ந்து இத்தகைய விரத பூஜைகளை, ஆலயங்களில் கலச பூஜையாக, ஹோம பூஜையாக, விளக்கு பூஜையாக, சாதி, இன பேதமின்றி மக்கள் யாவரும் பங்கு கொள்ளும் வண்ணம் நடத்தி அதியற்புத இறைப் பணி புரிதலானது எழுத்தில் வடிக்க இயலாத அளவிற்கு மகத்தான புண்ணிய சக்தியைப் பெற்றுத் தரும்.

மிகச் சிறந்த விரதங்களுள் ஒன்றாக கலியுகத்திற்கு மிகவும் தேவையானதாக இருப்பது கேதார கௌரி விரதம். கேதார சக்திகள் நிறைந்த ஆலயங்கள் பல பூலோகத்தில் நிறைந்திருந்தாலும் இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் கேதார சக்தி நிறைந்த தலங்கள் சில உண்டு. வட இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் கேதார்நாத்தில் கௌரி குண்டத்தில் நீராடித் தவமிருந்து இறைவனிடமிருந்து கேதார சக்திகளைப் பெறுவதால் கிடைக்கின்ற அபூர்வ சக்தி என்ன தெரியுமா? இறைவளம் நிறைந்த இல்லற வாழ்வைப் பெற்று தீர்க சுமங்கலித்துவத்துடன் பல ஐஸ்வர்யங்களையும் பெற்றுப் பலருக்கும் பயன்படும்படியாக இறைப்பணி நிறைந்த வாழ்வைப் பெறுவதற்கு இக்கேதார சக்திகள் உதவுகின்றன.. அருள்வாக்குப் பெற இச்சக்தி முக்கியமானதாகும்.. வருடத்திற்கு ஒரு முறையாகப் பொதுவாக தீபாவளியை ஒட்டிய நாளில் வருகின்ற கேதாரகௌரி விரதத்திற்கு காரிய சித்தி பலாபலன்கள் மிக மிக அதிகமாகும். குருலோகத்தில் இருக்கின்ற பத்தினிமார்கள் மிகச் சிறந்த பக்தியுடன் கொண்டாடுகின்ற விரதங்களுள் ஒன்றே கேதார கௌரி விரதமாகும். வாழ்க்கையில் இன்பங்களும் துன்பங்களும் கலந்தே வரும் என்பது எதைக் குறிக்கின்றது என்றால் அவரவருடைய பூர்வஜென்ம கர்மவினைகளில் நல்வினைகளும் தீவினைகளும் சேர்ந்துள்ளது என்பதையே குறிக்கின்றது. இன்பம் கிட்டும்போது சாந்தமும் மன அமைதியும் பெறுகின்ற மனிதன், துன்பங்கள் வரும்போது மன சஞ்சலம் அடைந்து கொதிப்படைந்து நிதானத்தை இழக்கின்றான். இதை குறிக்கும் முகமாகத்தான் கேதார்நாத் செல்லும் வழியில் உள்ள கௌரி குண்டத்தில் சுற்றிலும் குளிர்ந்த நீர் இருக்க குண்டத்தில் மட்டும் வெந்நீர் ஊற்று பெருகி வருவதை இறை அற்புதமாக இன்றைக்கும் கண்டிடலாம்.. பார்வதி தேவி பல கோடி யுகங்கள் தவமிருந்து அக்னி யோகத்தைக் கூட்டி இறைவனை வேண்டிப் பிரார்த்தித்தமையால் இறைவியின் திருமேனியில் உதித்த துர்கா சக்தியே பூமாதேவியால் ஏற்கப்பட்டு அக்னி நீரோட்டமாக வருடம் முழுவதும் குளிர்ந்த இமாலயப் பகுதியில் கௌரி குண்ட வெந்நீர் ஊற்றாய் மலர்ந்து நம் உடலில் உள்ள பல வியாதிகளுக்கும் தீர்வை அளிப்பதுடன் மன அழுக்குகளையும் தீவினைகளையும் தீய்த்து விடுகின்றது..!

ஆனால கௌரி குண்டம் தருகின்ற வெந்நீர் ஆரோக்கிய சக்தியையும், இறையருளையும் குளிர் பிரதேசமான கேதார்நாத் ஈஸ்வரனையும் அனைவராலும் தரிசிக்க முடியுமா? எனவேதான் இறைவனே தானே நம்மை ஆட்கொண்டவராய் கேதார சக்தி “விரத சக்தி” பலன்களை நல்லதோர் விரதமாக கேதார கௌரி விரதமாக நமக்கு அளித்துள்ளார். இறைவனைப் பூஜிக்கும் இறைவியை நாம் பூஜிக்கின்ற விரத நாளே கேதார கௌரி விரதமாகும்..ஜாதி, இன, குல பேதமின்றி யாவரும் இந்த எளிமையான விரதத்தைக் கடைபிடித்துத் தங்களுடைய பலவிதமான துன்பங்களுக்கும் தீர்வை பெறுவதுடன் அரிய புண்ணிய சக்திகளையும் பெற்று எதிர்வரும் துன்பங்களிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்வதுடன் பலவிதமான இன்னல்களையும் எதிர்த்துச் சமாளிக்கின்ற ஆன்ம சக்தியையும் பெற்றிடலாம்.

தன்வந்த்ரி ஜெயந்தி

மருத்துவர்கள் கைராசி பெற உதவும் ஸ்ரீதன்வந்த்ரீ ஜெயந்தி பூஜை

காலத்தை ஒட்டி அமைவதுதானே மனித வாழ்வு. எனவே பஞ்சாங்கம் என்பது மிகச் சிறந்த தெய்வீக விஷயங்களைத் தருகின்ற இறைநூலாகும். ஸ்ரீகால பைரவரின் ஆணையின் கீழ் வரும் ஸ்ரீபிரம்ம மூர்த்தியும் நாள் தேவதை, திதி தேவதை, நட்சத்திர தேவதை, யோக தேவதை, கரண தேவதை எனப் பலவிதமான கால தேவதைகளின் நாமங்களைக் கொண்டு விளங்குவதால் பஞ்சாங்கம் மிகவும் புனிதமான புத்தகமாகும்.. வெறும் ஜோதிடத்திற்காகவும் நல்ல நாள் பார்ப்பதற்காகவும் மட்டுமே பஞ்சாங்கம் என்று ஒரு போதும் எண்ணாதீர்கள்!

பஞ்சாங்க தரிசனமே பரம தரிசனம்! ஒவ்வொரு நாளும் கிரகத்தின் நிலைகள் மாறி மாறி அமைவதால் சில பஞ்சாங்கங்களில் மிகவும் அபூர்வமாக தினசரி கிரக நிலைகளை அந்தந்த நாளுக்குரியதாகப் படம் போட்டுக் காண்பித்திருப்பார்கள்.. இந்தத் தினசரி நவகிரக சஞ்சார தரிசனமே அற்புதமான நேத்திர பூஜையாக மலர்ந்து உங்களுக்குப் புண்ணிய சக்தியைத் தருகின்றது. எனவே சற்றே ஒரு மணி நேரத்தைச் செலவழித்து ஒரு பஞ்சாங்கத்தின் முக்கியமான நேரத்தைத் தெரிந்து கொண்டாலே போதும் உங்களுக்குத் தானாகவே ஆர்வம் வந்துவிடும்..  ஏனென்றால் அவ்வளவு தெய்வீக சக்திகள் நிரம்பிய தெய்வீக நூலாகப் பஞ்சாங்கம் விளங்குகின்றது. உங்களுக்குப் பஞ்சாங்கம் பார்க்கத் தெரிகின்றதோ இல்லையோ தினமும் இதைத் தொட்டுக் கும்பிடுவதே பெரிய புண்யமாகும்! மேலும் பஞ்சாங்கத்தில் உங்களுக்குப் புரியாத பெயராகச் சில பண்டிகை விளக்கங்களை அளித்திருப்பார்கள்.. அவற்றைப் பற்றித் தக்க பெரியோர்களிடமோ, சற்குருமார்களிடமோ அல்லது ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழிலோ கேட்டுப் பெற்றீர்களேயானால் எத்தனையோ தீராத துன்பங்களால் வாடி வதங்கும் உங்கள் குடும்பத்திற்கு ஏதேனும் ஒரு பண்டிகையின் விரத பலன்களால் அத்தகைய துன்பங்கள் தீர்வதற்கு உடனடியாக ஒரு தெய்வீக முடிவு கிட்டும்தானே!

பித்ருக்களே வருக வருக! மேலும் அமாவாசை, இறந்தோர்களின் திதி, மாதப் பிறப்பு போன்ற பலவிசேஷமான பண்டிகைகளின் போது உங்கள் இல்லத்திற்குப் பித்ரு தேவதைகளும் பித்ரு தேவதா மூர்த்திகளும் நிச்சயமாக வருகின்றனர்.. அப்போது அவர்கள் அமர்வதற்கான புனிதமான இடங்கள், பொருட்கள் என்று சில உண்டு.. உங்களுடைய மூதாதையர்கள்.. பயன்படுத்திய பலகை, பூஜைப் பொருட்கள், கண்டா மணி, விளக்கு, சந்தனக் கட்டை, சந்தனக் கல், சாள கிராம உருவங்கள், விக்ரகங்கள், சந்ததி சந்ததியாய், வழிவழியாய் வீட்டில் உள்ள பழமையான தெய்வீகப் பொருட்கள் போன்றவற்றோடு பஞ்சாங்கப் புத்தகத்திலும் பித்ருக்கள் ஜோதி ரூபமாகவோ மலர்களாகவோ குங்கும, சந்தன பொட்டாகவோ வந்து அமர்கின்றார்கள்.

எனவே உங்களுக்குப் பஞ்சாங்கத்தைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்றாலும் கூட உங்களுடைய பூஜை அறையில் பஞ்சாங்கம் இருக்குமேயானால் அதனை நீங்கள் காலை இறை வணக்கத்தில் தொட்டுக் கும்பிடுகின்ற வழக்கத்தைக் கைக்கொள்வீர்களேயானால் உங்களுக்குக் கால தேவதைகளின் / பித்ரு தேவர்களின் பரிபூரண ஆசி கிட்டும். இதனால் பலவிதமான தீயசகுனங்கள் கூட தீர்வு பெறுகின்றன..

ஏன் இத்தகைய பஞ்சாங்க விளக்கங்கள். என்றால்ல். மத்ஸ்ய ஜயந்தி, வராஹ ஜயந்தி, ஹயக்ரீவ ஜயந்தி, தன்வந்த்ரீ ஜயந்தி என்று பஞ்சாங்கத்தில் போட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இவையெல்லாம் என்னவென்று எப்போதாவது யோசித்துப் பார்த்திருகின்றீர்களா? எவ்வாறு ஸ்ரீராம நவமி, ஸ்ரீஹனுமத் ஜயந்தி, ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி போன்றவையெல்லாம்  ஸ்ரீராமருடைய, ஸ்ரீகிருஷ்ணருடைய, அவதார புனித நாளைக் குறிக்கின்றனவோ இதே போலத் திருமாலுடைய ஸ்ரீமச்சாவதாரம், ஸ்ரீவராக அவதாரம், ஸ்ரீஹயக்ரீவ அவதாரம், ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்திகளின் அவதார புனித நாட்களைக் குறிப்பவைதான் ஜெயந்தி தினங்களாகும்.

பிராணிகளின் நோய்கள்! கலியுகத்தில் ஸ்ரீதன்வந்த்ரீ ஜெயந்தி வழிபாடு மிகவு பிரசித்தி பெற இருக்கின்றது. காரணம் பசி, பஞ்சம் போன்ற கலியுகத் துன்பங்களில் நோய் நொடிகள் தாம் மனித சமுதாயத்தை மிகவும் வருத்துகின்றன.. பறவைகள் விலங்குகள், புழு, பூச்சிகளுக்கு நோய்கள் வருவது கிடையாதா? பசு, காளை, தான் வளர்க்கும் நாய், குதிரை போன்றவை நோய்வாய்ப்படுமேயானால் அவற்றைப் பாதுகாக்கின்ற கடமை மனிதனுக்கு உண்டுதானே. ஆனால் பறவைகள், பூச்சிப் புழுக்கள் இவைகளுக்கு நோய்கள் வருவதுண்டா? அவை எவ்வாறு தம் நோய்க்கு நிவாரணத்தை மேற்கொள்கின்றன?

ஸ்ரீகூர்மஅவதார மூர்த்தி
பெருமாள்மலை துறையூர்

எவ்வாறு மனித குலத்தில் சித்த வைத்தியர்கள் இருக்கின்றார்களோ அதேபோல பறவை இனங்களிலும் புழு, பூச்சி இனங்களிலும் கூட வைத்யர்கள் நிச்சயமாக உண்டு! அவைகளும் பச்சிலைகளையும், விதைகளையும் உண்டு தம்முடைய நோய்களைத் தீர்த்துக் கொள்கின்றன. இவையெல்லாம் நமக்குத் தெரியாமல் நிகழ்கின்ற இயற்கையின் விந்தைகளாகும்.

திருமாலுடைய திவ்யமான அவதாரங்களில் ஒன்றாகப் பாற்கடலில் தோன்றிய ஸ்ரீதன்வந்திரீயைப் பற்றிய விளக்கமானது எவ்வளவு அரிய விஷயங்களை நமக்குப் பெற்றுத் தருகின்றது பார்த்தீர்களா? அனைவருமே குறிப்பாக நோயாளிகளும் மருத்துவர்களும் தினந்தோறும் வழிபட வேண்டிய மூர்த்தியே ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தியாவார். இவருடைய திருக்கரங்களில் தவழ்வதுதான் அமுதகலசமாகும்.. இந்த அமுத கலசத்தின் தெய்வீகத் திருவரலாறானது விரிப்பின் பலவேறு புராணங்களாக விரியும். ஸ்ரீமந்நாராயண மூர்த்தி கூர்ம அவதார மூர்த்தியாகப் பல கோடி யுகங்களாகத் திருப்பாற்கடலில் சயனம் கொண்டிருந்தார் அல்லவா? அப்போது அவருடைய அட்சரப் பரம யோகத்தில் மலர்ந்த சுவாசக் கீற்றுகள் திருப்பாற்கடலிலும் பிரபஞ்சத்திலும் உறையும் பல கோடிக்கணக்கான ஜீவன்களுக்கு ஆரோக்கியத்தையும் ஆனந்தத்தையும் தந்தது.

ஆமை ரூபப் பெருமாளின் கூர்ம அவதார மகிமை!

பாற்கடலைக் கடையும் போது வாசுகி நாகத்தின் விஷ ஜ்வாலைகள் திருப்பாற்கடலில் கரையும், இதனால் அதிலுள்ள ஜீவன்களுக்கோ, தேவப் பிரசாத தீர்த்தமாக விளங்குகின்ற பாலமுதத்திற்கோ எவ்விதக் களங்கமும் ஏற்படக் கூடாது. மேலும் வாசுகி நாகத்தின் விஷ சக்தி பாற்கடலிலிருந்து பொங்கிப் பலகோடி நட்சத்திரங்களுக்கும், லோகங்களுக்கும் தெறிக்குமேயானால் அதனுடைய தாங்க முடியாத உஷ்ணத்தால் பலகோடி ஜீவன்கள் அவதிப்படுவார்கள் தானே? இதையெல்லாம் தீர்க தரிசனமாக உணர்ந்தே ஸ்ரீமந்நாராயண மூர்த்தி தம்முடைய கூர்ம அவதாரத்தில் அட்சர பரம யோகத்தை மேற்கொண்டார்.. இந்த யோகத்தின் பலாபலன்களும் சுவாசக் கீற்றுகளும்தான் இன்றும் என்றும் பூலோகத்திற்கு ஆரோக்கியத்தைப் பொழிந்த வண்ணம் உள்ளன. மேலும் கலியுகத்தில் பல்லாயிரக்கணக்கான நோய்கள் பெருகும் என்பதால் இவற்றைத் தணிப்பதற்காகவே உலகத்தில் பெருமாள் பல இடங்களிலும் சயனக் கோலத்தில் அருள்பாலிக்கின்றார். நோய் வந்தால் முதலில் நாம் செய்வது படுக்கையில் படுப்பதுதானே! நின்ற பெரும் பெருமாளாகப் பாற்கடலில் உதித்த ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தி கூர்ம அவதாரத்தின் பிரதிபலிப்பாகவும், சயனக் கோல ஸ்ரீரெங்கநாதரின் அட்சர பரம யோக சயன சக்திகளைக் கொண்டவராகவும் விளங்குகின்றார்.

திருமால் திருமுடியில் திரளும் திவ்யாமிர்தம்! எவ்வாறு இந்த அமிர்தக் கலசம் பாற்கடலில் உருவாகியது?

குண்டலினி யோகத்தின் உச்ச நிலையில் சகஸ்ராரத்திலிருந்து பிந்துவாக அமிர்தத் துளிகள் கொட்டும். அதிலும் பிரபஞ்சத்தின் பரம்பொருளாம் திருமாலின் சகஸ்ராரத்திலிருந்து பொழிகின்ற அட்சரப் பரம யோக சகஸ்ரார அமிர்தத் துளிகள் என்றால் அதன் மகிமைதான் என்னே? பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துக் கோடி நோய் வகைகளுக்கும், துன்பங்களுக்கும் தீர்வைத் தருகின்ற அமிர்தம் என்றால் அதனுடைய பரம யோக சக்தியைத் தாங்குகின்ற தன்மையை அமிர்தத்தைத் தாங்கும் கலசமும் பெற்றிருக்க வேண்டும் அல்லவா? ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தி இந்த அமிர்த கலசத்தினை எங்கிருந்து பெற்றார்?

ஒரு யுகத்தில் பூமாதேவி, திருமாலிடம், “சுவாமி! பூலோக ஜீவன்கள் யாவருமே தங்களுடைய கழிப்புகளையெல்லாம் என்னுடைய மேனியில்தானே சேர்க்கின்றனர். இந்தக் கழிப்புகளின் சக்தியால் என்னுடைய பூமியின் பாரமும் பெருகுவதோடு என்னுடைய பூம்ய சக்தியும் பாதிக்கப்படுகின்றது. எனவே இந்தக் கழிப்புசக்திகள், விஷ சக்திகளிடமிருந்து என்னைக் காத்துக் கொள்வதற்குத் தாங்கள்தான் அனுகிரகம் செய்தல் வேண்டும்!” என்று வேண்டினாள்.

அப்போது பெருமாளும், “அடி முடி காணாப் பரம்பொருளாம் ஈசனைத் தேடி யாம் ஒரு அவதாரத்தில் வராஹ (பன்றி) உருவம் கொண்டு பூமியைத் தோண்டிச் சென்று ஈஸ்வர ஜோதியைத் தேடுகின்ற பணி கிட்டும்.. பூமியின் அடியெங்கும் புதைந்து கிடக்கும் கோடானு கோடி சிவலிங்க மூர்த்திகளையெல்லாம் அடியேன் வழிபட்டு, ஸ்பரிசித்து, ஆராதித்துச் செல்கின்றபோது ருத்ர லிங்க ஜோதிகளின் சக்தியானது அடியேன் பூமியைத் துளைத்துச் செல்கின்றபோது சிதறுகின்ற திருமண்ணோடு சேர்ந்து ருத்ர மகா சக்தியைப் பெற்றிருக்கும். அவற்றைத் திரட்டிக் கலசமாக்கித் திருமண் கலயமாகப் பூஜை செய்து நீ எமக்குத் தருவாயாக! அந்தப் பூஜைக் கலசமே எம் அமிர்த கலசமாகி இந்த பூஜையே உனக்கு அமிர்த சக்தியைத் தந்து பூமியில் சேர்கின்ற கழிப்புகளின் விஷ சக்திகளிலிருந்து உன்னைக் காப்பாற்றும்”, என்று அருள்பாலித்தார்.

பூமாதேவி தந்த பூஜைக் கலசம்!

எனவே திருப்பாற்கடலில் அட்சர பரம யோகம் பூண்டிருந்த கூர்மாவதார மூர்த்தியிலிருந்து எழுந்த ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்திக்கு ஈஸ்வரி பூஜை செய்த கலச பூஜைக் கலசமே அமிர்தக் கலசமாயிற்று. எனவே பூமாதேவியே நமக்குக் கலசபூஜை முறையை முதன்முதலில் நமக்குப் பெற்றுத் தந்தாள்.. பூமியெங்கும் நிறைந்திருக்கின்ற சுயம்பு லிங்க மூர்த்திகளின் ஜோதிப் பிரகாசத்தையும் அடிமுடிகாணா அண்ணாமலை பெருஞ்ஜோதியின் அடியைத் தேடிச் சென்ற கூர்ம மூர்த்தியின் தெய்வீக ஸ்பரிசத்தையும் பெற்ற உலகத் தாயாராம் பூமாதேவியின் திருக்கரங்களால் பூஜிக்கப் பெற்றதுமான அமிர்த கலசத்தையே ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தி தாங்கி இருக்கின்றார் என்றால் அதன் மகிமைதான் என்னே! தேவர்கள், அசுரர்கள் எல்லாம் இந்த அமிர்தத்திற்காகச் சண்டையிட்டுப் பாரெங்கும் ஓடித் திரிந்து பரந்தமானுக்கும், பரம்பொருளுக்கும் இந்த திவ்யமான ஔஷத அமிர்தத்தைப் படைக்க மறந்தார்கள் அல்லவா? இதற்கும் தக்கத் தீர்வைத் தந்தவர்தான் ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தி ஆவார்.. எப்படி? ஸ்ரீஅமிர்த கடேஸ்வரராகவும், அமிர்த லிங்கமாகவும் ஈஸ்வரன் அருள்பாலிக்கின்ற தலங்களில் அமிர்தத்தால் அபிஷேகித்து அமிர்த கலசத்தின் ஆரோக்கிய சக்தியை மேம்படச் செய்தார். இவ்வாறு ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தியால் ஆராகிக்கப்பட்ட லிங்க மூர்த்திகளே பாரதமெங்கும் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரராகவும், அமிர்தலிங்க மூர்த்தியாகவும் அருள்பாலிக்கின்றார்கள்.

எனவே ஸ்ரீதன்வந்த்ரீ ஜெயந்தியானது பெருமானின் அவதாரத் திருநாளாகையால் எங்கெல்லாம் ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தி எழுந்தருளியிருகின்றாரோ அங்கு இன்று அவருக்கு  ஒரு புதுமண் கலசத்தில் செம்பருத்தித் தைலம், பொன்னாங்கண்ணித் தைலம், கரிசலாங்கண்ணித் தைலம், தேங்காய் எண்ணெய், சுத்தமான பசு நெய் ஆகியவை கலந்த பஞ்ச (5) தைலம் சார்த்தி நீலநிற வஸ்திரங்களையும் சார்த்தி வழிபட்டு கீரை வகை உணவுகளைப் படைத்து அன்னதானமாக அளித்திடில் எவ்விதக் கடுமையான நோய்களுக்கும் தக்க நிவாரணம் கிட்டும்.அஸ்வினி, ஆயில்ய நட்சத்திர நாட்கள் செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் ஹோரை நேரம் ஆகிய மருத்துவ குணங்கள் நிறைந்த நேரத்தில் தன்வந்த்ரீ மூர்த்தியை பூஜிப்பது விசேஷமானதாகும்... ஆனால் ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தியை தரிசிப்பதே காணுதற்கரிய தரிசனமாயிற்றே, என்ன செய்வது? ஔஷத சக்திகள் நிறைந்தவராக விளங்குகின்ற சந்திர பகவான் தினந்தோறும் ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தியை வணங்கியே தன் இறைப்பணியைத் தொடங்குகின்றார்.

எனவே சந்திரமூர்த்தி தனிச் சன்னதி கொண்டுள்ள சந்நதிகளிலும் தன்னுடைய கிரணங்கள் மூலமாக ஆரோக்ய சக்தியை உலக ஜீவன்களுக்கெல்லாம் பரப்பித் தந்திடும் சூரியபகவான் தனிச் சன்னதி கொண்டுள்ள தலங்களிலும் அமிர்த நாமம் பூண்டவராய் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர், அமிர்த லிங்கம் போன்ற அமிர்த நாமத்தைச் சூடிய சிவாலயங்களிலும் தசாவதாரச் சிறப்புடைய தலங்களிலும் ஸ்ரீதன்வந்த்ரீ ஜயந்தியைக் கொண்டாடுவதால் பல்லாண்டுகளாக நோயின் கடுமையால் வாழ்கின்றோர்க்கு நல்ல நிவர்த்தி கிட்டும்..கேரளாவில் திருச்சூர் அருகே உள்ள நெல்லுவாய்புரத்தில் ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தியே மூலஸ்தான இறைவனாக வீற்றிருக்கின்ற தலத்தில் உங்கள் வியாதிக்கான மருந்துகளை வைத்துப் பூஜித்து இயன்றால் இங்கு ஒரு வாரமேனும் தங்கியிருந்து இயன்ற தான தர்மங்களைச் செய்து வந்தால் எத்தகைய கடுமையான நோய்களுக்கும் இறையருளால் தக்க நிவாரணப் பிராயச்சித்தம் கிட்டும். ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்திக்கு உரித்தான காயத்ரீ மந்திரங்களும் இறைத் துதிகளும் உண்டு..

டாக்டர்கள் வணங்க வேண்டிய மூர்த்தி!
மருத்துவர்களுக்கு கண் கண்ட தெய்வமாக விளங்குபவரே ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தியாவார். அவர்கள் தினந்தோறும் குறைந்தது 1008 முறையேனும் ஸ்ரீதன்வந்த்ரீ காயத்ரீ மந்திரத்தை ஓதித் தான் தம் தொழிலைத் தொடங்க வேண்டும். அறுவைச் சிகிச்சைக்கான கருவிகளையும், ஸ்டெதாஸ்கோப், தெர்மா மீட்டர் போன்றவற்றையும் இறைவனுடைய திருப்பாதங்களில் தினமும் வைத்துத் தக்க முறையில் தெய்வீக ரீதியாகக் கைராசித் தன்மையைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். அனைத்து மருத்துவர்களுமே ஸ்ரீநெல்லுவாய்புரத்து ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தியை மூன்று அடிப்பிரதட்சிணம் செய்து வழிபட வேண்டும். தேய்பிறை தோறும் செல்வது சிறப்புடையது...!

ஸ்ரீதன்வந்த்ரீ காயத்ரீ மந்திரம்

ஸ்ரீவிஷ்ணு ரூபாய வித்மஹே அமிர்த தத்வாய தீமஹி
தந்நோ அமிர்த தன்வந்த்ரீ ப்ரசோதயாத்

தரணி பந்துக்கள்

தரணி பந்துக்கள் – புனித ஆத்ம வடிவங்கள் – மகத்தான ஆத்ம விளக்கங்கள்!

சித்தர்கள் வகைப்படுத்துகின்ற புனிதத்திலும் மிகவும் புனிதமான ஆத்மாக்கள் இவர்களே ! ஆவி என்னும் சொல் தற்காலத்தில் பரவலாக மிகவும் தவறாகவே பயன்படுத்தப்படுகின்றது. உண்மையில் நமக்கு உதவி புரிகின்ற பித்ருக்கள் போன்று உத்தம நிலைகளை அடைந்த நல்ல ஆவிகளுக்குத் தரணி பந்து என்று பெயர்.. எனவே ஆவி என்று சொல்லாது தரணி பந்து என்றே சொல்லிடுக!

ஆவி பற்றிய விளக்கங்கள்! மிகவும் உத்தம நிலைகளில் உள்ள தரணி பந்துக்கள் நமக்குப் பலவிதமான வழிகளில் ஆசிகளைத் தருகின்றார்கள். ஆத்மாவிற்கான விளக்கங்களை அறிந்தால் தான் ஆவிகளைப் பற்றிய விளக்கங்கள் புரிய வரும். ஆவிகளுடன் உரையாடும் போது மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். ஏனென்றால் பூலோகத்தில் நடப்பது போலவே ஏமாற்று வித்தையாக நல்லவர்களுடைய பெயரைச் சொல்லி தீய ஆவிகளும் பேச வந்துவிடும். ஆவி சம்பாஷணை என்பது மிகவும் ஆராய வேண்டிய விஷயமாகும். ஆவி என்னும் சொல்லானது தற்காலத்தில் பேய், பிசாசுகளைக் குறிப்பதாகத் தவறான முறையில் அர்த்தம் கொள்ளப்படுகிறது.. இறப்பின்போது அந்த உடலிலிருந்து பிரிகின்ற “ஆத்மா” பந்துவானது விண்வெளியில் சில காலங்கள் பல லோகங்களில் தங்கி அதனுடைய பூர்வ ஜென்ம கர்ம வினைகளுக்கேற்ப மறு பிறவியையோ அல்லது சில விண்வெளி லோக வாசங்களையோ அல்லது பித்ரு லோகத்திலோ ஆன்மப் பயிற்சியைப் பெறுகின்றது..

நரக வேதனைகள்! பூர்வ ஜென்மத்திலோ, இப்பிறவியிலோ கொடுந் தீவினைகள் செய்யப்பட்டிருந்தால் அது பேய், பிசாசு போன்ற ஆவியாக எவ்வித உடலுமின்றி கடும் தண்டனை பெற்று அவதிக்கு உள்ளாகின்றது.. அந்தத் துன்பங்களை எல்லாம் எழுத்தில் விவரிக்க முடியாது.. சொன்னாலும் புரியாது, விளக்கினாலு கலியுக மனமும் ஏற்காது.. உதாரணமாக மனைவியை, குழந்தைகளைக் கொடுமைப் படுத்தியவர்கள் பிறரை ஏமாற்றிச் சொத்தைப் பறித்தல், திருடுதல், கொள்ளை போன்ற தீய செயல்களில் ஈடுபட்டோர் கொதிக்கின்ற எண்ணெய்க் கொப்பறையில் பல ஆண்டுகளாக வதைக்கப்படுவர்.. மனித உடல் என்றால் கொதிக்கும் எண்ணெய்க் கொப்பறையில் உடல் சிதைந்து விடும் அல்லவா? ஆனால் ஆவி உடலானது அவ்வாறு சிதையாது. ஆனால் மனித உடலில் எண்ணெய்க் கொப்பறையில் சிக்கினால் ஏற்படுகின்ற அனைத்துத் துன்பங்களும் அந்த ஆவி உடலில் உணர வேண்டியிருக்கும். அதாவது உயிர் பிரியாமல் கடுஞ்சூட்டில் இருத்தலும் நரக வேதனைகளில் ஒன்றாகும் தானே! தற்கொலை செய்து கொள்வோரும் இத்தகைய வேதனைகளைத்தான் அனுபவிக்கின்றார்கள்

அறிவீர் தரணி பந்துக்களை! தான தர்மங்களைப் புரிந்து நன்முறையிலே வாழ்க்கை நடத்தியவர்கள் தாம் ஆவிநிலை இல்லாது பலவிதமான உத்தம தரணி பந்து (variegated elevated souls) நிலைகளை அடைகின்றார்கள்.. தக்க குருவைப் பெற்று உத்தம இறைப்பணிகளை புரிந்தோர் பெறுகின்ற உன்னத நிலைகளும் உண்டு.. இவ்வாறான உத்தம தெய்வீக நிலைகளுள் ஒன்றே பித்ரு நிலை ஆகும்.. தரணிபந்துக்களிலும் பலவிதமான தெய்வீக நிலைகள் உண்டு.. இவர்களுக்கு பிரவேசா தீர்க தரிசிகள், பிரவேச தரணி பந்துக்கள் என்றும் பெயர்.., அவரவருக்குரிய ஆழ்ந்த தியான நிலைகள், தெய்வீக பொறுப்புகளைக் கொண்டு திட தீர்க தரிசி, கர்ம பரிபாலன தீர்க தரிசி, காருண்ய தீர்கதரிசி, ஜெயக்ஷீராஸ் தரிசிகள், ஜீவ சௌபாக்ய தீர்க தரிசி என்று பலவிதமாக நிலைகளும் உண்டு. சற்குருவின் பரிபூரணமான ஆசியைக் கொண்ட தரணி பந்துக்கள் குருமஹாதேவ தீர்கதரிசி நிலைகளைப் பெறுகின்றார்கள்.

பொதுவாக இத்தகைய உத்தம நிலைகளை அடைகின்ற மூதாதையர்களுக்குப் பிரவேசா தேஜஸ்வி என்று பெயர்.. இவர்கள்தாம் நமக்குக் குலதேவதைகளாகவும், குல தெய்வ மூர்த்திகள் மூலமாகவும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாது ஜோதிடத்தைப் புனிதமாக போற்றுகின்றவர்கள் மூலமாகவும் பக்தி நிறைந்த அருள்வாக்குச் சக்திகள் மூலமாகவும் நல்வரங்களைத் தருகின்றார்கள்.

ஆவித் தொடர்பில் அதிக கவனம் தேவை!

தற்காலத்தில் ஆவிகளோடு சஞ்சாரம் செய்கின்றோர் மிகுந்து வருகின்றனர். இதில் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். பேய், பிசாசு போன்ற தீய ஆவிநிலைகளைத் தண்டனைகளாக அடைந்தோர் நல்ல ஆவிபோல் உட்புகுந்துத் தவறான முறைகளில் கைகாட்டி விடுவார்கள். மேலும் தீய ஆவிகள் ஒரு முறை உள்ளே புகுந்தால் அது எளிதில் வெளிச்செல்லாது அல்லது அதே இடத்தையே சுற்றிச் சுற்றி வந்து தீவினைகளை நிரப்பி விளையாட்டாகவே பெருந்தவறுகளைச் செய்ய வைத்துவிடும்.. எனவே ஊஜா (ooja) போர்டு போன்ற ஆவி உலா வஸ்துக்களிடம் கவனமாக இருங்கள். விளையாட்டாகக் கூட வைத்துப் பார்க்காதீர்கள்.. பலவிதமான தரணி பந்துக்கள் என்ற உத்தம நிலைகளில் உள்ள பிரவேசா தேஜஸ்விகளிடம் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும்.. இதற்கு ஆழ்ந்த குருபக்தியும் குறித்த பூஜா பலன்களும் நிறையத் தேவையாகும்... இதற்கு மகான்களின்/சித்தர்களின்/ யோகியரின் ஜீவாலய பூஜை பெரிதும் உதவும்.

முதலில் ஆத்மா என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். தற்காலத்தில் கம்ப்யூட்டரின் உயிர் நாடியான பிராஸஸரில் ஒன்றான பெண்டியம் – 3 (processor chip) ல் பல லட்சக்கணக்கில் மைக்ரான்ஸ் இருப்பதாகச் சொல்கின்றார்கள்.. அதாவது ஒரு தலைமுடியின் நூற்றின் ஒரு பங்காக இருப்பதே பெண்டியம் சிப்பில் உள்ள ஒரு மைக்ரான் எலெக்ட்ரானிக்ஸ் அணுப்பகுதியாகும்... ஆனால் இதையும் விட ஆயிரம் மில்லியன் மடங்கு மெல்லியதாக ஒரு பொருளை உங்களால் உணர முடியுமா அல்லது கற்பனை செய்து பார்க்கத்தான் முடியுமா ? இதைப் போன்றதே நம்முள் நாமாகவே, உள்ள ஆத்மா!

விஞ்ஞானமய இப்பூவுலகில் the lightest object ஒன்றைக் காண்பியுங்கள் அதைவிட மெல்லியதின் மெல்லியதாக அணுவிலும் அணுப் பொருளாக விளங்குவதே ஆத்மா ஆகும். இதுவே பரம்பொருளிடமிருந்து வந்த ஜோதியின் தொகுப்பு.. இது உலகத்தின் அனைத்துப் பொருட்களிலும் திட, திரவ, வாயு மற்றும் நாம் அறியாத சூட்சுமமான இடங்களிலும் நிலைத்திருப்பதாகும்.. ஆனால் எத்தகைய அண்டசராசரங்களையும் கண் இமைக்கும் நேரத்திலும் குறுகிய நேரத்தில் கடந்து செல்லக் கூடியது. நீர், சுவர், மரம், பாறை, மலை என அனைத்தையும் ஊடுருவிச் செல்லக்கூடியது. இறைப் பரம்பொருளிடமிருந்து வந்தமையால் புனிதத்தின் சிகரமாக விளங்குவது.. இதைவிடப் புனிதமான, ஒளிமயமான பொருள் எதுவுமே கிடையாது. எப்போதும் ஜீவசக்தி நிறைந்தது.. அதனால்தான் இது அழிவதில்லை, மறைவதில்லை, மீண்டும் தோன்றுவதில்லை., ஐக்கியப் பொருளாக எந்த இறைப் பரம்பொருளிடமிருந்து வந்ததோ அங்கே சென்றே ஐக்கியமாகும்.. இந்த ஐக்கிய நிலைதான் முக்தியும், மோட்சமும், கைவல்யமும் ஆகும்.. பஞ்ச பூத சக்திகளால் அழிக்க முடியாது.. காரணம் பஞ்ச பூதங்களை உருவாக்கும் சக்தியைப் பெற்றதாகும்.. காற்றாலோ, நெருப்பாலோ அண்ட முடியாது, the purest of the purest ஆக ஜோதி மயமாக விளங்குவது.. இந்த ஆத்ம ஜோதி மிகவும் சாந்தமானது. ஆனால் எத்தகைய ருத்ராக்னியையும் தோற்றுவிக்கக் கூடியது. இந்த ஆத்ம ஜோதியே நம் உள்ளத்தில் இறைத் தூதுவனாக விளங்குவதாகும்..இதை உள்ளத்தில் இவ்வாறு கண்டவர்களே மகான்களும், சித்தர்களும் ஆவர்.. உணராதோர்தான் மீண்டும் மீண்டும் பிறவிகளை எடுக்கின்றனர்... எனவேதான் இறைவன் இதனைப் பவித்திரமாக, பரிசுத்தமாக, பத்திரமாக, ஜீவன்களின் உள்ளத்தில் பதித்திருகிறான்.

ஆத்மா + ஆத்மா = ஆத்மா! 
ஒரு சிறு தவிட்டு வண்டு முதல் பெரிய யானை, டினாசரஸ், முதலை உட்பட அனைத்துத் தாவரங்க்ளிலும், விலங்கினங்களிலும், உயிரற்றதாகக் கருதப்படுகின்ற திடப் பொருள்களிலும் நிறைந்திருப்பதாகும். ஒரு மனிதன் தன் உள்ளத்தில் நிலைத்திருக்கின்ற ஆத்ம ஜோதியையும், தவிட்டு வண்டின் சிறு உள்ளத்தில் உள்ள ஆத்ம ஜோதியையும் ஒன்றென உணர்ந்தால் இருவரும், இரண்டும் ஒன்றுக்கொன்று நன்றாக உரையாடிடலாம். அங்குமொழி பேதமில்லை. பேச்சு அவசியமில்லை..மனோலயமும் தேவையில்லை.. ஆத்ம உணர்வு பரிமாற்றம் கொள்ளும் போது உருவம், நிறம், மொழி பேதமே கிடையாது. இவ்வாறாக நம் இருதயத்திற்குள் பரிணமிப்பதுதான் சர்வேஸ்வரனிடமிருந்து பிறந்து நம்முள் குடிகொண்டுள்ள ஆத்ம் ஜோதி. இதுவே ஆன்மா, இதுவே ஆத்மம், இதுவே தெய்வீகம்..

இந்த ஆத்ம ஜோதி பரிசுத்ததையே காணும், புனிதத்தையே செய்யும், சுத்தத்தை மட்டுமே ஏற்றுக் கொள்ளும். இது பார்ப்பதும் கேட்பதும், செய்வதும், ஏற்பதும், அனைத்தும் புனிதமானதே, அசுத்தமும், அழுக்கும், அசத்தியமும் இதனைத் தீண்ட முடியாது. அண்டவும் முடியாது.. எல்லாருள்ளும் உறைகின்ற இந்த ஆத்ம ஜோதி நிலையானது.. அழியாது, எவராலும் அழிக்க முடியாது.. உள்ளும் புறமும் விரிந்து வெளி வந்து நிறைந்திருக்கக் கூடியது. இரண்டு ஆத்ம ஜோதிகள் ஒன்றையொன்று புனிதமாகக் காணும்போத் அதுவே உண்மையான அன்பாக மலர்கின்றது... இந்த புனித நிலையைக் கொண்டவர்கள்தாம் மகரிஷிகளும், சித்தர்களும், யோகியர்களும், ஆவர். எங்கு உண்மை, நேர்மை, சத்தியம், தர்மம், ஈவு, இரக்கம் காருண்யம் நிறைந்திருக்கின்றதோ அவ்விடத்தில் இந்த ஆத்மா பிரகாசிக்கும்.. இதனால் இந்த ஆத்மாவைத் தாங்குகின்ற உடலும் தேஜோமயமாய் விளங்கும். அன்பு எனப்படும் பக்தி நிறைந்த இவர்களால்தான் தேஜஸ்விகள் பிரவேசா தேஸ்விகளாக மலர்கின்றனர்..

சத்தியத்தின் மூலாதாரமாக விளங்குவதால் இவர்கள் சொல்வதே நடக்கும்.. இங்கு லட்டு வர வேண்டுமென்றால் அவ்விடத்தில் லட்டு தோன்றும், ஏனென்றால் தூய்மையிருக்கும் இடத்தில் இறைவன் கேட்பதையெல்லாம் நல்வரங்களாகத் தருகின்றான்... ஆனால் இந்தத் தூய ஆத்மாக்கள் தாங்கள் உண்பதற்காக லட்டைக் கேட்பதில்லை, பிறர்பசி தீர்க்க அதைப் பெற்றுத் தருகின்றார்கள். அதன்மூலம் இறையருளையும் பிரசாதமாகத் த்ருகின்றார்கள்.. இவ்வாறு நம் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் பக்தியால் பலரால் திரட்டப் பெற்று “அன்புடன் பெற்று” அளிக்கப்பட்டது தான் பௌர்ணமி லட்டு பிரசாதங்களாகும்.

அனைவரிடத்திலும் அனைத்திலும் ஒளிர்கின்ற இந்த ஆத்மத்தை நம்மால் உணரவிடாது தடுப்பதுதான் நம்முடைய தீவினைகளும், பூர்வ ஜென்ம வினைகளும் ஆகும்.. இத்தீவினைகள் ஆத்ம ஜோதியை மூடுவதில்லை. ஏனென்றால் ஆத்ம ஜோதி மிளிர்வதை எதனாலும் தடுக்க முடியாது.. ஆனால் இதன் தரிசனத்தைப் பெற முடியாமல் நம் கண்களை, மனதை,  உள்ளத்தை மறைப்பதே தீவினைகளாகும். இந்தக் கண் திரையாகிய கர்ம வினைகளைத் தீர்க்கின்ற அறுவை சிகிச்சை செய்கின்ற ஆன்மீக மருத்துவரே சற்குரு ஆவார்.. ஆனால் மருத்துவரை நாடி அவரிடம் நம்பிக்கை கொண்டு அவருடைய வைத்தியத்திலும் நம்பிக்கை ஏற்படுவது நம்மைப் பொறுத்துத் தான் இருக்கின்றது.

உயிர் என்பது என்ன? அப்படியானால் சித்தோபநிஷத்தில் உயிரை எப்படி விளக்குகின்றார்கள்? ஆத்மாவை உணர வைப்பதற்கான கருவிதான் உயிராகும்.. உத்தம நிலைகளில் வேறு சில வழிகளிலும் ஆத்மாவை உணரலாம். மகான்கள், சித்தர்கள் யோகிகள் யாவரும் உயிரைத் தாங்கும் உடலைக் கொண்டு ஆத்ம ஜோதியைத் தரிசிக்கின்றார்கள்...அப்போது ஆத்ம ஜோதியின் இருப்பிடமாக உணர வைப்பதாக உயிரை உணர்வதால் அவர்கள் அவ்வுடலில் உயிர் கொண்டாலும் இல்லாவிடினும் இரண்டுமே அவர்களுக்கு ஒன்றாகத்தான் தோன்றும்.. எனவேதான் அவர்களுடைய உடலில் துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை அவர்கள் உணர்வது கிடையாது.. ஆனால் நாமோ உயிரையும் ஆத்மாவையும் பிரித்துக் காண்பதால் உயிரைத் தாங்குகின்ற உடலில் துன்பங்களைத்தான் உணர்கின்றோம். நிலையான ஆத்மாவானது நிலையற்ற உடலில் குடி கொண்டிருக்கின்றது என்பதை உணராது இந்த வாடகை (தேக) வீடு நிரந்தரமானது என்று உயிரில் பற்றுதல் கொள்வதால் உடலுக்கே முக்கியத்துவம் தந்து உள்ளே பிரகாசிக்கும் ஆத்மாவை மறந்து விடுகின்றோம்... இந்த ஆத்ம ஜோதி எப்போதும் உடலில் தங்குமா? அவ்வப்போது வெளிச் செல்வதும் உண்டு... அதாவது வெளியேறுகையில் ஆன்ம மறுபதிப்பை (reflected soul attribute) வைத்துச் செல்கின்றது.. இவ்வாறு ஆத்ம ஜோதியை உள்வைத்து வெளிச் செலுத்தும் (soul transportation, soul transmission, soul transfusion) கலைகளை அறிந்தவர்கள் தான் ஞானிகள் ஆகின்றனர்.

ஆத்ம ஜோதி வெளிச்சென்றால் உயிர் உடலில் தங்குமா அல்லது உயிரற்ற சடலம் ஆகிவிடுமா? ஒரு மனிதன் கொடூரமான தீய செயல்களைச் செய்யும்போது புனிதமயமான ஆத்ம ஜோதி வெளிச் சென்று விடுகின்றது... அப்போது தன்னுடைய உபகருவிகளையும் ஆன்ம மறுபிரதியையும் உடலினுள் உப அம்சங்களாக வைத்துச் செல்கின்றது. இதனால்தான் மனிதன் மனிதனாக வாழாது பூச்சி, புழுக்கள், மிருகங்கள், பறவைகள், தாவரங்களைப் போன்று பகுத்தறிவு குறைந்தாற் போல் நடந்து கொள்கின்றான்.

தன்னுள்ளே இருக்கின்ற ஆத்ம ஜோதி வெளிச் செல்லா வண்ணம் அதனைப் புனிதமாக வைத்திருப்பதற்காக ஒரு மனிதன் நல்லொழுக்கத்துடன், இறைத் திருப்பணியுடனும் தெய்வீகமாக வாழும் போதுதான், ஆத்ம ஜோதி அவனிடம் இருக்கின்ற நேரம் பெருகப் பெருகத்தான் அவன் தெய்வீகத்தில் மிளிரத் தொடங்குகின்றான்.

ஆத்ம ஜோதி, அகலாதிருக்க ! எனவே சற்குருவின் முதல் பணி என்னவென்றால் ஒவ்வொருவரிடம் உள்ள ஆத்மஜோதி அடிக்கடி வெளிச் செல்லா வண்ணம் அதற்குரித்தான புனிதமான சூழ்நிலைகளை அவனிடம் பதிய வைப்பதுதான். அன்னதானம், இலவசமருத்துவ உதவி போன்ற புனிதமான பணிகளில் அடியார் ஈடுபடும்போது அவரிடம் உள்ள ஆத்மஜோதி அந்தப் புனிதப் பணிகளின் காரணமாக வெளிச் செல்லாது அவருக்குள்ளேயே இருக்கின்றது.. எனவே எந்த அளவிற்குப் புனிதமாக இருப்பதற்கான இறைப்பணிகளை மேற்கொள்கின்றோமோ அந்த அளவிற்கு ஆத்ம ஜோதியையும் நம்முள் நிலை நிறுத்திக் கொள்ளலாம்... இல்லையெனில் ஆத்மப் பிரதிபலிப்புதான் உள்நிற்கும்... இதை உணர்ந்தால்தான் அடுத்தபடியான உத்தம நிலைகளுக்குச் செல்ல முடியும்.

வணங்குவதும் ஆத்மாவையே! மரியாதை நிமித்தமாக ஒருவரையொருவர் வணங்குவது கூட நம்முள் உறைந்திருக்கின்ற ஆத்ம ஜோதியின் வழிபாடே ! இருகரங்களையும் ஒருமித்துக் குவித்துக் கும்பிடுகையில் உள்ளே மறைந்து ஒளிர்கின்ற அந்தர் ஆத்ம ஜோதி முத்திரையாக அது மலர்கின்றது. எவ்வாறு இரண்டு கரங்களுக்குள் ஆத்ம ஜோதி மறைந்து நமது வணக்கமாக, வணங்கப்படுதலாக உள்ளதோ அதுபோல உடலுக்கும் உயிருக்கும் உள்ளே மறைந்து விளங்குகின்ற ஜோதிதான் ஆத்ம ஜோதியாகும். இப்படிப் பார்த்தால் இப்பூவுலகில் உயிருக்கும் உடலுக்கும் இடையில் ஜோதியாக மறைந்திருக்கின்ற ஆத்ம ஜோதியை உணர்ந்து வாழ்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். எவ்வாறு ஆத்ம ஜோதி அழிவில்லாததாக என்றும் நிரந்தரமாக விளங்குகின்றதோ அதே போலத்தான் இதனை உணர்ந்தவர்களும் ஸ்ரீஅகஸ்தியராக, ஸ்ரீவசிஷ்டராக, ஸ்ரீபுலத்தியராகக் கோடானு கோடி யுகங்கள் நிலைத்து நின்று நமக்கு அருள்வழி காட்டுகின்றார்கள். எனவே முதலில் சித்தோபநிஷத் காட்டுகின்ற இந்த ஆத்ம் ஜோதி விளக்கத்தை மீண்டும் மீண்டும் படித்து இறைத் துதி போல் ஓதி வந்தால் ஆத்ம விளக்கத்தைப் பெற்றுத் தருவதற்கான தக்க சற்குருவின் மகிமையை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். குருவின்றி வெறும் புத்தகப் படிப்பால் மட்டும் ஆத்மாவை உணரமுடியாது.

வேண்டாம் வேலை நிறுத்தம்

வேலை நிறுத்தத்தில் விளையும் பெரும் பாவங்கள்!

கலியுகத்தில் தொட்டதெற்கெல்லாம் ஸ்ட்ரைக் வந்து விடுகிறது. நியாயமான கோரிக்கையாக இருந்தால் இதில் கர்மவினைகள் சேர்வது கிடையாது. அநியாயமான கோரிக்கைகள் என்றால் ஒரே நாளில் வேலை நிறுத்தம் செய்கின்றவர்கள் எக்கச்சக்கமான கர்ம வினைகளைச் சேர்த்துக் கொண்டு விடுகின்றார்கள்.. இதைத் தீர்ப்பதென்றால் ஆயுள் காலத்திலும் முடியாது.

ஊதியத்திற்கேற்றபடி உழைக்கின்றீர்களா? தனக்கு இட்ட பணியை முறையாகச் செய்து ஒரு நாள் முழுதும் உண்மையாக உழைத்தால்தான் அந்த நாளுக்கு உரித்தான சம்பளமானது உடலில் ஒட்டும். வாங்குகின்ற ஊழியத்திற்கு உழைக்காவிட்டால் அந்த அளவு பணத்திற்கும் நேரத்திற்குமான கர்ம வினைகள் தினசரி சேர்ந்து மலைபோல் வாழ்நாளில் குவிந்துவிடும். இதனால்தான் VRS, CRS பெற்றவர்கள், ஓய்வு பெற்றவர்கள், தம் அலுவலக வாழ்க்கையில் சேர்த்த கர்மங்களை தீவினைகளைப் பெருமளவில் கழிக்க வேண்டியிருப்பதால்தான், அனுபவிப்பதால் தான் ஓய்வு பெற்ற வாழ்க்கை சாந்தமாக அமைவது கிடையாது. நற்காரியங்கள் பரிகாரம் தேடலாம் என்றால் வயதும் உடலும் அப்போது ஒத்துழைப்பதில்லை!

வேலை நிறுத்தம் என்பது பிறருடைய வாழ்க்கையைப் பாதிக்கக் கூடாது. உதாரணமாக ஒரு வங்கியில் வேலை நிறுத்தம் என்றால் அது நியாயமானதாக இல்லையென்றால் அதனால் பாதிக்கப்படுகின்ற கோடானு கோடி மக்களுடைய வருத்தங்கள், சாபங்கள், சம்பந்தப்பட்டவரின் வாழ்வில் திரும்பி வரும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் ! தற்காலத்தில் ஸ்ட்ரைக் என்பது மிகவும் சகஜமாகிவிட்டது.. நம்முடைய நியாயமான கோரிக்கைகளுக்கு முதலில் அமைதியான முறையில் தீர்வைக் காண முயல வேண்டும். அதன் பிறகு வேலை நிறுத்தம் செய்தால் பிறருடைய வாழ்க்கையை எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் அது அமைந்திட வேண்டும்.. உதாரணமாக முறையான ஊதிய உயர்வு கிடைக்கவில்லை என்றால் அது அந்த ஊழியர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் இடையே உள்ள பிரச்சனையே தவிர அதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளானால் ஆன்மீக ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுடைய மன வருத்தங்களும், துன்பங்களும் வேலை நிறுத்தம் செய்கின்றவர்களையும் அவருடைய குடும்பங்களையும் நிச்சயமாக கர்மவினைகளாக மாறி வந்து தாக்கும்.. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதுதானே தெய்வீகக் கோட்பாடு.

வேலை நிறுத்தம் பிறரை வதைக்கக் கூடாது! உண்மையிலேயே ஒவ்வொருவரும் தன்னுடைய வேலை நேரத்தில் முழுமையாகப் பணிபுரிந்தால் இறையருளால் தானாகவே அவருக்குக் கிட்ட வேண்டிய முறையான ஊதியம் கிட்டிவிடும்.. ஊழியர்களின் உழைப்பால் நிர்வாகத்தினருக்குப் பெருத்த லாபம் என்றால் நிர்வாகத்தினர் முறைப்படி அளிக்க வேண்டிய வருமானத்தைத் தரவில்லை என்றால் அதற்கும் அவர் அனுபவித்துத்தானே ஆகவேண்டும். இந்நிலையில் வேலைநிறுத்தம் என்பது தேவையில்லாத ஒன்றாகிவிடுகிறது! அல்லது வேலை நிறுத்தமானது பிறருக்கு எவ்விதத் தீங்கையும் தராததாக இருக்க வேண்டும்.. இதுதான் வேலை நிறுத்தம் பற்றிய ஆன்மீகத் தீர்வாகும்.

எப்போது உண்மையாக வரவேண்டிய ஊதிய உயர்வு கிட்டவில்லையோ அது வராததற்குக் காரணம் சரியாக உழைக்காததே என்று தெளிவு பெற வேண்டும்.. ஆனால் நடைமுறையில் யார் இவ்வாறு ஆத்மவிசாரம் செய்கின்றார்கள்? நமக்கு விருப்பம் இருக்கின்றதோ இல்லையோ நாமும் ஸ்ட்ரைக்கில் சேர வேணிடிய நிர்பந்தத்தில் இருக்கின்றோமே., இதில் நியாயம் இல்லையே என்று நீங்கள் எண்ணினால் இதற்கும் ஆன்மீகத் தீர்வு ஒன்று உண்டு. முதலில் உங்களுக்கு எட்டுமணி நேரம் தினசரி வேலை என்றால் அதில் முழுமையாக பணிபுரிகின்றீர்களா என்று யோசித்துப் பாருங்கள். தாமதமாகச் செல்வது, முன்னரே ஆபீஸை விட்டு வந்து விடுவது, ஆபீஸில் ஓசியில்  டெலிபோன் செய்வது இவ்வாறாக அலுவலக நேரத்தில் ஊதியத்திற்கேற்பத் தகுந்த அளவ் வேலை செய்கின்றீர்களா என்பதை நீங்களே மனசாட்சியுடன் ஆத்ம விசாரம் செய்து தெரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய தினசரி ஊதியம் ரூபாய் நானூறு என்றால் எட்டு மணி நேரம் உண்மையாக உழைத்தால் தான் இதில் இரண்டு மணி நேரம் பொழுது போக்கு, அரட்டை, personal work ஆகியவற்றில் கழித்துவிட்டால் ஒரு நாளில் 200 ரூபாயை உழைக்காமல் பிறர் பணத்தில் வெறுமனே கர்ம வினைகளைச் சேர்த்துக் கொண்டுதான் பெறுகின்றீர்கள் என்றுதானே பொருளாகிறது?

உழைக்காமல் பெற்றதற்குப் பரிகாரம்!

நீங்கள் இவ்வாறாக எவரையும் ஏமாற்றாமல் அதிகமாக 200 ரூபாயை உழைக்காமல் பெறுவதாக எண்ணினாலும் கூட ஆன்மீக ரீதியாக இதனை நோக்கினால் உங்களுக்கு உரிமையில்லாத பணத்தை எவ்வகையிலோ அதர்மமாகப் பெறுகின்றீர்கள் என்று தானே பொருளாகின்றது! ஆனால் பிச்சை, திருடு, கொள்ளை, லஞ்சம், ஏமாற்றுதல், வஞ்சித்தல் போன்ற தீய வழிகளில் பணத்தைப் பெறுவதற்கு உங்கள் மனம் ஏற்குமா? சற்றே சிந்தித்துப் பாருங்கள். இவ்வாறு நன்கு உழைக்காமல் பெறுகின்ற பண்த்திற்கு ஓரளவு பரிகாரமாக என்ன செய்ய முடியும்? அலுவலகத்தில் வேலை செய்யும் போதே உள்ளூர இறைத் துதிகளையும் ஓதிப் பழகுவதும், தனக்குப் பணி குறைவாக இருந்தால் பிறருடைய பணியை எடுத்துச் செய்வதும் தினசரியாக அலுவலகத்தில் சேர்க்கின்ற தீய கர்ம வினைகளைக் குறைகும். மேலும் ஸ்ரீஅகஸ்திய விஜய சித்தோபநிஷத் விஷயங்கள் போன்ற இறை நெறி விளக்கங்களைச் சக அலுவலகர்களுக்கு உணர்த்துவதும் வீணே நேரங்கழிப்பதில் உள்ள தீவினைகளைக் குறைத்து நன்னெறியில் காலத்தைக் கைக்கொண்டதாகும்.. மேலும் இறைத் துதிகளுடன் நீங்கள் அலுவலகப் பணிகளை முடிக்கின்ற நற்பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வீர்களேயானால் இது உங்களுடைய மனோசக்தியையும் மன ஒருமைப்பாட்டையும் பெருக்குவதால் வேலைத் திறனும் பெருகுகிறது..!

மேலும் அலுவலகத்தில் தெய்வீக சக்தியைப் பெருக்குவதால் அங்கு நிலவுகின்ற லஞ்ச லாவண்யச் சிந்தனைகள் மற்றும் தீய சக்திகளைத் தணிக்கின்றன.. இவ்வாறாக உங்கள் அலுவலக வாழ்க்கையை வெறும் சம்பாதிக்கும் இயந்திரமாக அல்லாது உங்கள் வாழ்வில் 30, 40 ஆண்டுகளுக்கு உங்களுடைய அலுவலகப் பரவெளியில் தீவினைக் கதிர்களை நிரப்புகின்ற நற்காரியமாகச் செய்திடலாமே! இவ்வகையில்தான் நீங்கள் அலுவலகத்தில் சேர்க்கின்ற தீவினைகளுக்கு முடிவு காண முடியும் !

நீங்கள் தபால் தந்தித் துறை, இரயில் துறை, வங்கித் துறை, போக்குவரத்து, பால், மின்சாரம் இவ்வாறாகப் பொதுத் துறையில் பணிபுரியும் போது எத்தனை லட்சம் மக்கள் உங்களுடைய வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்படுகின்றார்கள்? குறிப்பாக மருத்துவத் துறையில் இருப்பவர்கள் ஒரு வேலை நிறுத்தம் செய்தால் பெறுதற்கரிய மானிடப் பிறவிகளின் இழப்பிற்குக் காரணமாவதால் இதில் சம்பந்தப்பட்டவர்களுக்குச் சேர்கின்ற பாவச் சுமைகளை எதனாலும் தீர்க்க முடியாது. சூழ்நிலைச் சந்தர்ப்ப வசத்தால் உங்களுக்கு மன ஒப்புதல் இல்லாவிட்டாலும் கூட்டத்தோடு கூட்டமாக வேலை நிறுத்தத்தில் பங்கு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் இதற்கு எவ்வகையில் தெய்வீகத் தீர்வைப் பெறமுடியும்? ஸ்ட்ரைக் காரணமாக நீங்கள் வெறுமனே வீட்டில் முடங்கிக் கிடந்து பல லட்சம் மக்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளாமல் தெய்வீகத்திற்காக என்ன செய்ய முடியும் என்று சிந்தித்துப் பாருங்கள்.. உங்களுடைய அதர்மமான வேலை நிறுத்தத்தால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் போது (உங்களுடைய பெற்றோர், சகோதர, சகோதரிகள், உறவினர்கள், நண்பர்கள் உட்பட) நீங்கள் குறைந்தது நூறு பேருக்காவது உதவி புரியும் வண்ணம் அன்னதானம், வஸ்திரதானம் போன்ற தான தர்மங்களை அந்நாளில் உங்கள் சக அலுவலகர்களுடன் சத்சங்கமாகச் செய்தால்தான் ஏதோ ஓரளவு பிராயசித்தமாக அமையும். ஆனால் அதர்மமான முறையிலான வேலை நிறுத்தத்தில் நீங்கள் பங்கு கொண்டமையால் இதனால் ஏற்பட்ட சமுதாயத்திற்கான சேதங்களால் உங்களுக்குப் பெரும்பாவச் சுமை சேர்கின்றது என்பதை உணர்ந்திடுங்கள்..

தீவினைக் கர்மங்கள் மூட்டை மூட்டையாகச் சேர்ந்து விட்டால் உங்களுடைய குடும்பமும் சந்ததியும் தானே பாதிக்கப்படும்.. எனவே தெய்வீகமான முறையில் சிந்தித்துச் செயல்படுவீர்களாக! வேலை நிறுத்த நாளில் உங்கள் சக அலுவலகர்களுடன் ஒரு கோயில் உழவாரத் திருப்பணியையாவது மேற்கொண்டால்தான் அன்றைய உழவாரத் திருப்பணிப் பலன்களானவை ஆயிரக்கணக்கான பக்தர்களைச் சென்றடைந்து உங்கள் அதர்மமான வேலை நிறுத்தத்தால் விளைகின்ற பெரும் தீவினைகளுக்குச் சற்றேனும் பிராயச்சித்தத்தைத் தேடிக் கொள்ளலாம்.

தீவினைக் கர்மத்தையா சம்பாதிப்பது?

இனியேனும் ஸ்ட்ரைக் என்றால் ஒருநாள் சம்பளம்தானே போகின்றது.. வேறு ஒன்றுமே இல்லையே வீட்டில் சந்தோஷமாகச் சும்மா உட்கார்ந்து கொண்டு இருக்கலாம் என்று எளிதாக எண்ணாதீர்கள்.. இதன் பின்னணியில் உள்ள கர்மச் சக்கர விளைவுகளை உணர்ந்து கொள்ளுங்கள். ஏற்கனவே வாங்குகின்ற சம்பளத்திற்கு முழுமையான நேரத்திற்கு நன்முறையில் உழைக்காமல் இருக்கும்போது ஊதிய உயர்வு கேட்டுப் பெறுவது மேலும் மேலும் விளைவித்த கர்மங்களாகவேதானே (accrued karmic sediments) சேரும். உண்மையிலேயே உங்களுடைய சம்பளத்தில் எவ்வளவு நேரம், நாட்கள் உண்மையாக உழைக்கின்றீர்கள் என்று நீங்களே கணக்கிட்டு உழைக்காமல் சோம்பித்திரிந்த ஊதியப் பங்கைத் தெய்வப் பணிகளில் செலவிடுங்கள். இது ஒன்றுதான் உங்களுடைய கர்மச் சுமைகளின் பளுவைக் குறைக்கும்.

பணமிழக்கக் காரணம்! கஷ்டப்பட்டு உழைத்து ஓய்வு பெற்றுப் பெற்ற ஓய்வூதியப் பணத்தைப் பலரும் பல டொபாஸிட் கம்பெனிகளில் இழப்பதற்கான காரணங்களுள் ஒன்றுதான் முறையாக உழைத்துச் சம்பாதிக்காதது! நல்லவராக வாழ்ந்தாலும் ஆபீஸில் ஒழுங்காக உழைக்காவிடில் தீவினைக் கர்மம்தானே சேரும்! எனவே நன்கு உழைத்து வருகின்ற பணமே நிலைத்து நிற்கும்! மற்றவையெல்லாம் மருந்தாகவும், இழப்பாகவும், நஷ்டமாகவும், திருடாகவும் போய்விடும்..!

ஆவி நிலைகள்

ஆவி நிலைகளும் ஆவித் தொடர்புகளும்

ஆவிகளுடன் உரையாட முடியுமா? ஆவிகளும் சமுதாயப் பணிகளைச் செய்கின்றனவா? ஆவிகள் நம்முடைய துன்பங்களுக்கான அருள்வாக்கைத் தர வல்லனவா? முதலில் ஆவியின் நிலை பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்... angels என்று சொல்லப்படும் நல் ஆவிகள், வேறு பேய், பிசாசு வகையைச் சேர்ந்த துர் ஆவிகள் வேறு! ஆனால் நடைமுறை வழக்கில் ஆவி என்ற சொல் பிசாசுகளை மட்டும் குறிப்பது போல் தவறாக அர்த்தம் கொள்ளப்படுகின்றது. மரணத்தின் போது உடலை விட்டுப் பிரிகின்ற உயிர்தான் ஆவியா அல்லது ஆவியும் ஆத்மாவும் ஒன்றா? பலருக்கும் ஏற்படுகின்ற சந்தேகமிது! பரம்பொருளிடமிருந்து வருகின்ற ஆத்ம ஜோதிதான் ஆத்மாவாக உடலில் குடிகொள்கின்றது.. இந்த ஆத்மா உறைகின்ற உடலுக்கு ஜீவித சக்தி தருவதுதான் உயிராகும்.. இந்த ஜீவித சக்திதான் மரணத்திற்குப் பின் அதனுடைய பூர்வ ஜன்ம கர்மவினைகளைப்  பொறுத்துப் பல வடிவுகளைக் கொள்கின்றது. வேறு பிறவி கிட்டுமானால் இந்த ஜீவசக்தி அதில் போய்ச் சேர்ந்து கொள்ளும். ஆனால் தீவினைக் கர்மங்கள் அதிகமாக இருந்தால் அதற்கு உடனேயே பிறவிகிட்டுவதில்லை.. மாறாக எவ்வித வடிவும் தரப்படாமல் அல்லது பெற முடியாமல் வடிவில்லாத ஆவி வடிவத்திலே அது அலைந்து கொண்டிருக்கும்.. இந்த வடிவம்தான் நுண் அணு மேகவடிவம்.

சுவர் போன்ற எந்த திடப் பொருளையும், திரவப் பொருளையும் ஊடுருவிச் செல்லும் சக்தி கொண்டதாக இந்த மேக (புகை) வடிவ ஆவி இருந்தாலும் அதுபடுகின்ற் வேதனைகளை நம்மால் சொல்லி மாளாது. ஏனென்றால் கொடும்பசியும் தீராப் பிணியும் சேர்ந்து கொண்டு மேக வடிவில் எதையும் உண்ணமுடியாமல், துன்பங்களைத் தீர்க்கும் வழி வகையையும் அறியமுடியாமல் பரிதவித்து அலையும். ஏற்கனவே கெடுந் (கொடுந்) தீவினைகளில் உழல்கின்ற அந்த ஆவிக்கு இந்த ஆவிவடிவக் கொடுமைகளும் சேர்ந்து சினத்தால் கொதித்துக் கொண்டிருக்கும். இந்நிலையில் பூலோகத்தில் உள்ள தீயவர்கள் தீவினைகளைச் செய்ய அலைந்து திரியும்போது அவர்கள் உடலில் புகுந்து தீவினை விளையாட்டைத் தொடங்கிவிடும். இத்தகைய துர் ஆவிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டுமென்றால் ஸ்ரீமுனீஸ்வரர், ஸ்ரீசுடலையம்மன், ஸ்ரீஅரிச்சந்திர மகாபிரபு போன்ற மூர்த்திகளைத் தினசரி அல்லது வாரம் ஒரு முறையேனும் வழிபடுதல் வேண்டும்..

எங்கெங்கோ செல்வதால் வாகனங்களை வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக வாரத்திற்கு ஒரு முறை வண்டியுடன் சென்று இம்மூர்த்திகளை வழிபட்டாக வேண்டும்! சென்னை சிந்தாரிப் பேட்டையில் உள்ள பாடிகாட் ஸ்ரீமுனீஸ்வர மூர்த்தி இந்த பிரபஞ்சத்தில் உள்ள மிகமிக சக்தி வாய்ந்த மூர்த்திகளுள் ஒருவராவார். மூர்த்தி சிறிதானலும் கீர்த்தி பெரிது! செஞ்சி முக்கூட்டு ஸ்ரீமுனீஸ்வரரும் ருத்ர சக்தி நிறைந்த மூர்த்தியாவார்! இந்தத் தலங்களில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஹோரை நேரத்தில் தூய பசுநெய் விளக்கேற்றி அன்னம் பாலித்துத் தானமாக அளித்து வந்தால் துர் ஆவிகளின் வாசம் அண்டாது. மேலும் காசியில் ஸ்ரீகாலபைரவரிடமிருந்து பிரசாதமாகப் பெறப்பட்ட கருப்புக் கயிறை ஒவ்வொருவரும் கண்டிப்பாக எப்போதும் அணிந்திடல் வேண்டும்.. இடுப்பில் எப்போதும் கருப்பு நிற அரைஞாண் கயிறும் இருந்திடல் வேண்டும்.. பெண்களுக்குக் கை வளையல்களும் கால் மெட்டிகளும் இருப்பதால் இவை துர் ஆவிகளின் வாச(னையை)த்தைத் தடுத்து விடும்.

தரணி பந்துக்கள்! தரணி பந்து என்று போற்றப்படுகின்ற உத்தம நிலை ஆவிகள் உண்டு. அதாவது இறப்பிற்குப் பின் அவருடைய உத்தம வாழ்க்கையின் காரணமாகவும் தக்க பெரியோர்களுடைய அனுகிரகத்தாலும் அவர்கள் பித்ருக்கள் போன்ற பலவிதமான தேவலோக நிலைகளைப் பெறுகின்றார்கள்.. இவர்களுக்கு மறுபிறவிகள் இல்லை எனினும் இத்தகைய உத்தம நிலையைப் பெற்றவர்கள் ஆற்ற வேண்டிய தேவ மற்றும் பூலோகக் கடமைகள் நிறைய உண்டு.. எவ்வித ஓய்வும் இல்லாமல் தேவகால நிலைகளுக்கேற்ப அவர்கள் தியானம், யோகம், பூஜைகள், தீர்த்த நீராடல்கள், கிரக தரிசனங்களுடன் மனித இனத்திற்கான பல சேவைகளையும் புரிந்தாக வேண்டும்.. அதாவது அவர்கள் வம்சாவளியினரையோ அல்லது நல்லவர்களையோ, தம்மை வேண்டுபவர்களையோ எவ்வித பேதமுமின்றி நல்வழியில் நிலை நிறுத்திட அவர்கள் அரும்பாடுபடுதல் வேண்டும்.. எனவே இருப்பது நல்ல உத்தம லோகமானாலும் அவர்கள் ஓய்வின்றிச் செயல்பட்டாக வேண்டும்! உதாரணமாக, திருஅண்ணாமலையில் தீபப் பெருவிழாவின் போது மகத்தான சமுதாய இறைப்பணியான அன்னதானத்தைச் செய்வதற்காக இறை அடியார்களை அவ்விடத்திற்கு வரவழைப்பதற்கான எத்தனையோ நற்காரியங்களைத் தரணி பந்துக்கள் செய்தாக வேண்டும்..  

தரணி பந்துக்களாகிய இந்த பிரவேஸா தேஜஸ்விகள் தாம் இன்றையக் கலியுகத்தில் மனித சமுதாயத்திற்கு ஏற்படுகின்றப் பலவிதமான துன்பங்களைத் தீர்ப்பதற்கான அருள்வழிகளைத் தரவல்லவர்கள்.. எனவே இத்தகைய ப்ரவேசா தேஸ்விகளை ஆவி சஞ்சார மார்கத்தில் தொடர்பு கொண்டிடில் நல்விதமான அருள்வாக்குகளையும் அறநெறி முறைகளையும் பெற முடியும்.. ஆனால் அறிந்தோ அறியாமலோ துர் ஆவிகளின் வசப்பட்டால் அவை ஏமாற்றித் தீய வழியில் தள்ளிவிடும்.. ஆவி சஞ்சார மார்கத் தொடர்புகளுக்கான குறித்த நேரங்களும் பல பூஜை முறைகளும் உண்டு.. இவற்றைத் தக்க பெரியோர்கள் மூலம் கேட்டுப் பெறுதல் வேண்டும்.. உதாரணமாக சென்னை பாடிகாட் ஸ்ரீமுனீஸ்வர மூர்த்தி வழிபாடு இதற்குப் பெரிதும் துணைபுரியும்.!

தரணியில் எத்தனை எத்தனை தரணி தீர்கதரிசிகள்!
பிரவேஸா தேஜஸ்விகளான தரணி பந்துகளின் உத்தம நிலைகளிலும் பல வகைகள் உண்டு.. திட தீர்க்கதரிசி, காருண்ய தீர்க்க தரிசி, கர்ம பரிபாலன தீர்க தரிசி, குருமஹ தேவ தீர்க தரிசி, ஜெயக்ஷீராஸ் தீர்கதரிசி என்று உத்தம நிலை தேவ மூர்த்திகளும் உண்டு.. இவர்களை ஆவிகள் என்று சொல்வதே தவறு.. இவர்களுடைய வழிமுறைகளில் வருகின்ற தரணி பந்துக்களும் ஆவிமார்க்கத் தொடர்பு கொள்பவர்களுக்கு உதவுகின்றார்கள்.. ஆனால் சுயநலமற்ற இறைத் தொண்டை ஆற்றுபவர்களுக்கும் பக்தி உடையவர்களுக்கும், குருமார்கத்தைக் கடைபிடிப்பவர்களுக்கு மட்டும்தான் இவர்களுடைய நல்ல தொடர்பும் ஆதரவும் கிட்டும்.. ஆவிமார்கத் தொடர்பு கொள்வோர் தினந்தோறும் பயில வேண்டிய யோக முறைகளும் உண்டு... மீடியா எனப்படும் இவர்களுடைய மனோசக்தியை அவ்வப்போது விருத்தி செய்து கொண்டால் தான் ஆவிமார்கத்தில் நல்ல தரணி பந்துக்களின் தொடர்பு கிட்டும். இதற்கு உடல் தூய்மை, உள்ளத் தூய்மையும், தெளிந்த பக்தியும், திடமான நம்பிக்கையும் மிகவும் முக்கியமானதாகும்.. மேலும் ஆவித் தொடர்பு சம்பந்தமான நாளங்கள், நாடிகள் முதுகுத் தண்டு வடம் மூலமான யோக சக்தியைக் கொண்டுள்ளதால் தினந்தோறும் தேவையில்லாமல் பலவிதமான ஆவிகளுடன் தொடர்பு கொண்டால் மனோசக்தியின் திறன் பாதிக்கப்பட்டு உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். எனவே குறித்த சில முதுகுத் தண்டு வட யோக முறைகளைத் திறம்பட விருத்தி செய்துகொண்டு ஒரு தினத்தில் குறித்த சில ஆவிகளுக்கு மேல் கண்டிப்பாகத் தொடர்பைப் பெருக்கக் கூடாது!

நேரமறிந்து (ஆவிச்) சாரமறிவீர்! ஆவிகளின் சக்தி மிகுந்துள்ள ஹோரை நேரங்களிலும், யோகம், கண்டம், நேரங்களையும் அறிந்து கொண்டு அந்த நேரங்களில் மட்டுமே ஆவிமார்கத் தொடர்பை மேற்கொள்ள வேண்டும். இவையெல்லாம் தக்க பெரியோர்களிடம் உபதேசமாகவோ அனுபவப் பாடமாகவோ பெற்றுக் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான சூட்சும ஜோதிடத் துறையாகும். பொதுவாக , பித்ருத் தர்ப்பண பூஜைகளை முறையாகச் செய்து வந்து விட்டால் நம்முடைய பலவிதமான துன்பங்களுக்கு எளிதில் தீர்வு கிட்டும்.. ஆவிமார்கத் தொடர்பு மூலம் மூதாதையர்கள் நாம் செய்ய மறந்த குலதெய்வ பூஜைகளையும் தென்புலத்தார் (பித்ரு) காரியங்களையும் (திவசம், படையல்) நினைவுபடுத்துகின்றார்கள். தங்களுடைய குலதெய்வத்தை அறியாமல் இருப்போர் தரணிபந்துக்கள் மூலமாகத் தங்கள் குடும்பத்திற்கு சந்ததிக்கு உரித்தான குலதெய்வத்தையும், அதன் இருப்பிடத்தையும் அருள்வாக்கு, நல்ல மீடியங்கள் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம்..

ஆனால் ஆவி உலகத் தொடர்புகளை, அருள்வாக்குச் சேவைகளாய் சமுதாய இறைச் சேவையாகச் செய்தால்தான் பலனளிக்கும்! இவற்றைச் சம்பாதிக்கும் தொழிலாக்கி விட்டால் துர்ஆவிகளிடம் சிக்கிப் பெரும் கொடுமைகளை அனுபவித்தாக வேண்டும்! தக்க வழிகாட்டியின்றி எதைச் செய்தாலும் அரைகுறையான, ஆபத்தான விளைவுகளே கிட்டும்!

சிலம்பாக்னி சித்தர்

அக்னி பூஜை பலன்களைத் தரும் சீரியா சிலம்பாக்னி சித்தர்

நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவினை நமக்குத் தருகின்ற அக்னி சக்தியைப் பற்றி அறிந்து கொண்டீர்களா? அடுப்பேற்றினால் உணவு வருகின்றதென்றால் அந்த அக்னிக்குக் காரணமான அக்னி தேவதைகளை நாம் தினந்தோறும் வழிபடுகின்றோமா? கலியுகத்தில் அக்னி தேவ மூர்த்திகளை மக்கள் மறந்து விடுவார்கள் என்பதற்காகத்தான் அக்னியை வழிபட்டு மேல்நிலை கொண்ட சீரியா சிலம்பாக்னி சித்தர், ஆங்கீரசர், அக்னி புராந்தக மகரிஷி போன்ற சித்தர்களையும் , மகரிஷிகளையும் நாம் அறிந்து வணங்க வேண்டும்!

திருஅண்ணாமலை கிரிவல தரிசனங்கள் மகத்தான பலன்களைக் கொண்டிருப்பதன் காரணம் இங்கு கோடானு கோடி மகரிஷிகள், சித்தர்கள், தங்களுடைய யோக தபோ பலன்களைத் தரிசனப் பலன்களாகப் பதித்துச் சென்றிருப்பதுதான்! மகத்தான சித்தரான சீரியா சிலம்பாக்னி சித்தர் தாம் தரிசித்து, யோகம் புரிந்து பெற்ற கிரிவல தரிசனங்களின் பலன்கள்யாவும் நமக்குக் குறித்த சில அக்னி வழிபாட்டின் பலாபலன்களை அள்ளித் தருகின்றன! சர்வேஸ்வரனாம் சிவபெருமானுடைய திருமேனியில் கோடிக்கணக்கான நாகங்கள் தவழ்வதைப் பார்த்திருப்பீர்கள்.. அப்பர் சுவாமிகள் போன்று ஈசனையே நேரில் காணும் பேறு பெற்றோர் ஆதிசிவனின் அருள் திருமேனியில் எண்ணற்ற நாகங்களாகப் பொலிவதைக் காணலாம்.

ஆம், ஆண்டவனின் அருட்பெருவெள்ளத்தில் ஆனந்தமாய்ப் புரள்கின்ற அற்புத நாகங்கள் இவை! மகான்களும், சித்தர்களும், யோகிகளும் இறைவனுடைய திருவடிகளில் வீழ்ந்து கிடப்பதில் ஆனந்தப்படும்போது இறைவன் அவர்களை அரவணைத்து அரவமாய், அங்கத்தில் திருவாசியாய், திருக்கலிங்கமாய்ப் புனைந்து கொள்கின்றான்!

நாகங்களின் சமுதாயத் தொண்டு! எனவே இறைவன் திருமேனியில் காண்கின்ற நாகங்கள் யாவுமே இறைத் திருஅடியார்தாம். அதனால்தான் அவர்கள் பூலோகத்தில் மனிதக் கொடுமைகள் பெருகும்போது இறையரவமாய், இறைத் தூதுவர்களாய்ச் சீறி வந்து நம்மைச் சீர்திருத்திச் சீர்மிகு இறைவாழ்வைப் பெறுவதற்காகச் சீரியா சிலம்பாக்னி சித்தர் போல நமக்கு நல்வழி காட்டுகின்றார்கள்..! நாகம், நாகம் என்று நாம் அச்சமுடன் ஓடுகின்றோமே அந்த நாக வடிவங்களை ஏன் இறைவன் தன் உடலில் ஏற்றிருக்கின்றான்? உலகத்தில் இறைவன் மனிதர்களைப் படைத்தது பிற ஜீவன்களுக்குக் காருண்யம் காட்டி வாழ்வதற்குத்தான்! ஆனால் கலியுக மனிதனோ பிறஜீவன்களால் எவ்விதத்தில் தனக்கு உதவி கிட்டும், எவ்வாறு அவற்றை வதைத்துத் தன் சுயநலத்திற்கும், சுக போகத்திற்கும், வாய் ருசிக்கும் பயன்படுத்தலாம் என்றுதானே எண்ணிச் சுயநலப் பேயாய்ச் செயலாற்றுகின்றான்.

மனித உலகிற்கு மிகவும் பயன்படும் வகையில் வாழ்வது நாகங்கள் என்று சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்! நாகம் விஷமுள்ள ஜந்துதான் என்றாலும் மனிதனைக் கடிப்பதுதான் அதனுடைய தொழில் என்றால் இன்றைக்கு மனித இனமே அழிந்திருக்குமே! எனவே மனிதனைவிட விதியை அறிந்து அதன்படி செயலாற்றுகின்ற அற்புதப் பிராணியே நாகங்களாகும்! அவை பெறுதற்கரிய யோக சக்திகள் நிறைந்தவைதாம்! உண்மையில் வாஸ்து சாஸ்திரத்தில் நல்ல பாம்புப் புற்றுகள் இருந்தால் அவை சந்ததி விருத்திகளைக் கொண்டதாகத்தான் கொள்ளப்படுகின்றது.. மேலும் அதில் நல்ல பாம்பின் தரிசனம் கிட்டினால் அந்நிலத்திற்கு தனிமகத்துவமே உண்டு... மேலும் நாகங்கள் நிலத்தில் புரண்டு செல்லும் போது பலவிதமான யோக சக்திகளை நிரவிச் செல்கின்றன.. ஏனென்றால் புற்றுகளில் பூமிக்கு அடியில் பலத்த உஷ்ண நிலையில் அவை ஸ்புட யோகம் கொண்டிருப்பதால் நாகங்களின் உடலுக்கு மனித உடலால் தாங்க முடியாத வெப்பத்தையும் தாங்கும் சக்தியைக் கொண்டுள்ளன, எனவே அவற்றிற்கு அக்னிசக்திகள் அதிகமாகும்.!

நாகங்களின் ஸ்புட யோகம்! அந்த ஸ்புட யோகம் நிலையில் நாள் கணக்காக, மாதக் கணக்காக  சூட்சுமமான நமக்குத் தெரியாத வகையில் அமர்ந்திருக்கின்ற குடகு நாகங்கள் அதிகமாக உள்ள இடம் திருஅண்ணாமலையாகும்.. இவை அவ்வளவு எளிதில் நம் கண்களுக்குத் தெரிவதில்லை! ஏனென்றால் பாம்பைக் கண்டாலே அடித்துக் கொல்கின்ற பழக்கம் தானே மனிதனுக்கு இன்னமும் இருக்கின்றது! இத்தகைய யோக நாகங்களும் எளிதில் தரிசனம் தருவதில்லை... நாகத்திற்குக் கூட தரிசனம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதன் காரணம் மகத்தான யோக சக்திகளைக் கொண்டதாக ஸ்வேத ஸம்பூர்ண நேத்திர யோக சக்தியுடன் அவை விளங்குவதாகும். மனிதனைப் போலச் சுயநலமாக இன்றி நாகங்கள் யாவும் தாம் பெற்றுள்ள, தாம் கடுந்தவம் பூண்டு சேர்க்கின்ற யோக சக்தியைப் பிற ஜீவன்களுக்கும் பூமிக்கும்தான் அர்ப்பணிக்கின்றன! பூமியிலிருந்து கோடிக்கணக்கான தாவரங்கள் அவற்றைப் பெறுகின்றன! இத்தகைய பரந்த மனப்பான்மையை மனிதன் கொண்டுள்ளானா?

நாகம் தாரை வார்க்கும் யோகப் பலன்கள்! நாகங்கள் தாம் பெற்றுள்ள யோக சக்தியைப் பரப்பக் கூடிய பேரறிவையும் பெற்றுள்ளன என்றால் மனிதனுடைய பகுத்தறிவு இதன் முன் எம்மாத்திரம்? எனவே பகுத்தறிவு என்பது பூஜை, தவம், யோகம், யாகம், ஜபம், தான தர்மங்கள் மூலம் இறைசக்தியைப் பெருக்கி அதனைப் பிற ஜீவன்களுக்கு அர்ப்பணிப்பதுதான்! இதுதான் ஒவ்வொரு மனிதனின் லட்சியமாகும்! அவரவருடைய பிறப்பு, கர்ம வினைகளுக்கு ஏற்ப, உடல் வாகிற்கேற்ப இதற்கான வழிமுறைகளை வகுத்துத் தருபவரே சற்குரு! நாகங்களுக்கும் குருமார்கள் உண்டு! ஆச்சரியமாக இருக்கிறதா?  ஆனால் தன் உடலுக்கும் மிதமிஞ்சிய யோகக் சக்தியை ஒரு நாகம் பெறுவதால் அதற்கென்ன பயன்? நாகலோகத்திலிருந்து பூலோகத்தில் நாகப் பிறப்பு எடுப்பதாக வரம் வாங்கி வருகின்ற குடகு நாகங்கள் தம்முடைய யோக சக்திகளை பூமா தேவிக்கும், பூலோக ஜீவன்களுக்கும் அர்ப்பணம் செய்கின்றன. இதனால் பூமியின் நில அமைப்புத் தீர்மை பெறுவதோடு அதன் நில வளமும் பெருகுகின்றது... நீரோட்ட இலக்கணங்களில் பாம்புப் புற்று இருக்கும் திசையை வைத்து நீர் வளத்தை அறிகின்ற நீரோட்ட சாஸ்திர விதிகளும் உண்டு.. குறிப்பாக, கொய்யா மரத்தின் அருகே நாகப் புற்று வளமுடன் இருந்தால் அவ்விடத்தில் நீராட்டும் நன்னீரும் வளமாக இருக்கும் ஆனால் காலி நிலங்களில் உள்ள நாகப் புற்றை ஒரு போதும் கலைத்தல் கூடாது.. இது நாக தோஷத்திற்கு வழிவகுக்கும்... ஆனால் பாம்பின் வாசம் இல்லாத வெற்றுப் புற்றாக இருந்தால் அதற்குரிய வெள்ளிக்கிழமையிலான நாக பூஜைகளைச் செய்து பாம்பு வாசம் இல்லாத வெற்றுப் புற்றுதானா என்பதை நன்கு உறுதி செய்து அப்புற்று மண்ணைப் புண்ணியத் தீர்த்தங்களில் கரைத்தல் அல்லது மலைத் தலங்களில் சேர்த்து விடுதல் வேண்டும். இதற்குத் தக்க பெரியோர்களின் வழிமுறைகளை நாடுதல் நலம்.

பாம்புகள் பெரும்பாலும் இரவுகளில் நடமாடுவதை நீங்கள் அறிவீர்கள்! ஒரு பாம்பு தன்னுடைய வயிற்றுப் பசிக்காக ஒரு சுற்றுச் சுற்றி வந்தாலே போதும், தவளை, எலி என அதனுடைய வயிறு எளிதில் நிரம்பி விடும். ஆனால அது தன் வயிற்றுப் பசிக்காக உணவு தேடி அலைவதை விடத் தன்யோக சக்தியைப் பூலோக ஜீவன்களுக்காக பூமியில் நிரவிச் செல்வதற்காகவே அது ஆனந்தத்துடன் வெளி வருகின்றது! ஏனென்றால் உணவின்றிக் கடும் விரதத்துடன் மாதக் கண்க்கில் புற்றினுள் அமர்ந்து தவம் புரியும் வல்லமை கொண்டவை அவை!  இன்றைக்கும் ஆப்பிரிக்கக் காடுகளில் உள்ள சில நாகங்கள் தம்முடைய விஷத்தை 20 மீட்டர் தொலைவிற்கு மேல் பாய்ச்சக் கூடிய சக்தியைப் பெற்றுள்ளன. மேலும் தங்களுடைய எதிரிகளின் கண்களில் விஷத்தைப் பாய்ச்சித் தப்புகின்ற விஷ நாகங்களும் உண்டு.. ஆனால் காரண காரியமின்றி எந்த ஒரு நல்ல பாம்பும் தன்னுடைய விஷத்தை விரயம் செய்வது கிடையாது.

நாகங்களுக்கும் குண்டலினி சக்தி உண்டு! பிரம்மச்சர்ய விரதத்தைக் கடைபிடித்து விந்து கட்டித் தண்டு வடகுண்டலினி யோகத்தில் மனிதன் சிறப்புறுவது போல நாகத்திற்கு உரித்தான பிரம்மச்சர்ய விரதமாகக் கருதப்படுவது அதனுடைய ஆலகால பந்தன யோகமாக விஷத்தை விரயம் செய்யாமல் பல வருடங்களுக்குச் சேமித்து நாகங்களுக்கு என்று உரித்தான சகஸ்ரார நிலையில் விஷத்தை யோக ஆகர்ஷண சக்தியால் ஆக்ஞாவை நோக்கிச் செலுத்தி மாணிக்கமாக, ரத்தினமாக மாற்றுதல்தான் நாகங்களுக்கென இடப்பட்டுள்ள உத்தம முக்தி நிலைகளுள் ஒன்றாகும்.. நாகங்களுக்கென்று உரித்தான அக்னி சக்தி நிலைகளும் உண்டு. பூலோகத்தில் ஒவ்வொரு அயனம், ருது காலத்திற்கு ஏற்ற சீதோஷ்ண நிலை சரியான முறையில் அமைந்தாக வேண்டும். பூமியில் அக்னி சக்தி குறைகின்றபோது சூரிய பகவானுக்கு உதவியாகப் பல ஆதித்ய நாகங்களும் தம் உடலில் உஷ்ணத்தைத் தாங்கி வந்து பூமியில் நிரவுகின்றன.. இதே போன்று பாம்புப் புற்றுகளில் குடகு யோகம் பயில்கின்ற நாகங்களும் பூமியில் குறைந்திருக்கும் அக்னி சக்தியைக் கூட்டுகின்றன. இந்த அக்னி சக்தியின் வெளிப்பாடுதான் பாம்பின் சீற்றம் ஆகும்.

சீறுதலே சீரிய யோகம்! அதாவது ஒரு நாகம் “புஸ்” என்று சீறும் போது தன்னுடைய அக்னி யோக சக்தியிலிருந்து எழுகின்ற உஷ்ணமானது நெடுந் தொலைவுக்குப் பரவுகின்றது.. இவையெல்லாம் நம் கண்களுக்குத் தெரியாமல் சூட்சுமமாக நிகழ்கின்ற விந்தைகளாகும். அக்னியிலும் பல வகைகள் உண்டு என்பதை நாம் அறிவோம்.. நம் உடலால் அதிக சூட்டைத் தாங்க முடியாவிட்டாலும் நம்மால் தாங்க முடியாத வெப்பத்தில் உருவாகின்ற உணவுதானே நமக்கு ஜீவசக்தியை அளிக்கின்றது. அதாவது அன்னம் மூலமாகவும் ஒருவிதமான வெப்ப சக்தி நம் உடலில் சேர்கின்றது. இந்த அக்னி சக்தியை யோக முறையில் முறைப்படுத்தினால் நாம் பல அபூர்வமான சக்திகளைப் பெற்றிடலாம்.

ஆனால் கலியுகத்தில் யோக, பிராணாயாமப் பயிற்சிகள் மிக மிகக் குறைந்து விட்டன. ஒரு கோடிப் பேர்களில் ஐந்து பேர்கள் கூட முறையாகப் பிராணாயாம, ஆசன, யோக நிலைகளைப் பயில்வது கிடையாது.. எனவே மனித உடலில் முறைப்படுத்த முடியாத அக்னியானது முறையற்ற காமம், புகை பிடித்தல், விந்து விரையமாதல், போதை, மது போன்ற உஷ்ணமான கேளிக்கைகளில் சக்தியை இழத்தல் இவ்வாறாகப் பலவிதங்களில் மனித உடலின் உஷ்ண சக்தி விரயமாகின்றது. இவற்றை முறைப்படுத்துவதற்காகத்தான் நாகப்புற்று வழிபாடுகளை நமக்குப் பெரியோர்கள் தந்துள்ளார்கள்.

பூமியின் அடியில் குடகு யோகம் பயில்கின்ற நாகங்கள் நிறைந்த நாகப் புற்றினை வலம் வரும் போது இந்த அபூர்வமான யோகாக்னி சக்தியைப் பூமியின் நீரோட்டங்கள் மூலமாகவும் அடிப்பிரதட்சிணமாக வலம்வரும்போது பாத நரம்புகள், பாத ரேகைகள் மூலமாகவும் நாம் பெறுகின்றோம்! காலில் பாதங்களில் மருதாணி அணிதல், மெட்டி அணிதல் இவற்றின் மூலமாகவும் பெறுதற்கரிய சீரியா அக்னி சக்தி நம் உடலில் சேர்கின்றது. மேலும் விண்வெளியில் எண்ணற்ற பீஜாட்சர மந்திரங்கள் நிரவிக் கிடக்கின்றன. இவற்றிலிருந்து தாமாக எழுகின்ற அக்னி சக்திகளும் உண்டு.. அவற்றைப் பூலோக ஜீவன்களின் “நல்வாழ்விற்காகப் பெறுவதற்குத்தான்” நாம சங்கீர்த்தனம், சங்கீதம், இறைத் துதிகள், வழிபாட்டு மந்திரங்கள் போன்ற சப்த வழிபாடுகளைப் பெரியோர்கள் நமக்கு அளித்துள்ளார்கள். அதாவது எங்கெல்லாம் மந்திர ஒலியும், இசைக் கருவிகளின் நாதமும் எழுகின்றதோ அங்கு உருவாகின்ற பிரம்ம நாதம் விண்வெளியில் நிரவியுள்ள பீஜாட்சர மந்திரங்களின் சக்தியை, குறிப்பாக அக்னி சக்தியை நமக்கு கிரகித்துத் தருகின்றன! இறைவனுடைய நாட்டியக் கிருத்தியங்கள் பல உண்டு.. இவை இன்றைக்கும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன... காரைக்கால் அம்மையார், பதஞ்சலி மாமுனி, அகஸ்தியர் போன்றோர் இன்றைக்கும் இறைவனின் நாட்டியக் கோலங்களைப் பூலோகத்தில் தரிசித்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.. காண்பதோ தம்முடைய அருந்தவ இறைக் காட்சி என்றாலும் இதன் பலாபலன்களை உலக ஜீவன்களின் நல்வாழ்விற்காக அர்ப்பணிப்பதுதானே இத்தகைய சித்தர்களின், மகரிஷிகளின் மனமார்ந்த இறைப்பணி!

இறைச் சிலம்பொலியை எண்ணியே நுண்ணிய தியானம்!

இறைவனுடைய நாட்டியத்தில் எழுகின்ற வாத்திய சப்தங்கள் தான் எத்தனை, எத்தனை? ஒவ்வொரு சப்தத்தையும் கிரகித்து அதனுடைய தெய்வீக சக்தியைப் பிரபஞ்சத்திற்கு அளிப்பதற்காகத்தான் எத்தனை எத்தனை சித்தர்களும், மகரிஷிகளும் சிவத் திருமேனியில் நாகங்களாகப் பரிமளிக்கின்றார்கள்! ஆனால் அற்புதமான சித்தர்கள் பலர் திருஅண்ணாமலையில் கிரிவலப் பாதையில் எங்கோ ஓர் மூலையில் அமர்ந்து கொண்டு இறைவனுடைய திருப்பாதங்களில் தவழ்கின்ற சிலம்புகளின் நாதத்தை உய்த்து அதில் உள்ள முத்து மாணிக்கப் பரல்களின் உராய்வினில் ஏற்படுகின்ற ருத்ராக்னியைத் தன்னுள் ஆகர்ஷித்து அதன் சக்தியை கிரிவல தரிசனப் பலன்களாக அளிக்கும் பொருட்டுத் தவச் செம்மல்களாய்ப் பல கோடி யுகங்களாகப் பரிணமிக்கின்ற அருட்பெருஞ் சித்தரே சீரியா சிலம்பாக்னி சித்தராவார்.

சிலம்பு வகைகளில் நாகத்தோடு தொடர்புடைய சிலம்புகளும் உண்டு. சிலம்பினுள் வைக்கப்படுகின்ற முத்து, வைரப் பரல்களுக்கும் அவரவருடைய் நட்சத்திரத்திற்கும் தொடர்பு உண்டு.. இல்லறப் பெண்கள் அவர்களுடைய நட்சத்திரத்திற்கு ஏற்ற எண்ணிக்கையில் சிலம்பு, சதங்கை அணிந்து அவற்றினுள் குறித்த எண்ணிக்கையிலான பரல்களை வைத்தலால் காரிய சித்தியைப் பெற்றிடலாம்.. மேலும் பூஜை மணி, சங்கு ஒலி போல சிலம்பு, சதங்கை ஒலிகள் இல்லத்தில் எப்போதும் பரவெளிக்கும் அற்புதமான இறை சப்தநாள சக்தியைப் பரப்புகின்றன.

ஸ்ரீஆதிசேஷன் திருநீர்மலை

சிலம்பு யோகச் சுடர் நாகங்கள்! கடல் நாகங்களிலும் சிலம்பு நாகங்கள் என்ற ஒரு வகை உண்டு.. இவை தாழம்பூ நாகம் போல சிறிதாகச் சிலம்பு போல வளைந்து இருக்கும்... எவ்வாறு பிரம்மச்சர்யத்தில் சிறந்து விளங்குகின்ற யோகியானவர் தன் விந்தை ஆன்மச் சுடராக்கி வெள்ளை நரம்பாக மேல் நோக்கிச் செலுத்தி சகஸ்ராரத்தில் அமிர்த பிந்துவாக மாற்றுகின்றாரோ அதே போலக் கடல் சிலம்பு நாகங்கள் தங்களுடைய விஷசக்தியை விரயம் செய்யாது அக்னி யோகம் பூண்டு அதனை யோக சக்தியால் தம் சகஸ்ராரத்திற்குச் செலுத்தி முத்து மாணிக்கமாக மாற்றுகின்றன.. எவ்வாறு சகஸ்ரார யோகப் பிரவேசம் ஒரு மனிதனுக்கு நிலையைக் (கூ)காட்டுகின்றதோ அதேபோல கடல் சிலம்பு நாகத்திற்கு சகஸ்ரார  முத்து மாணிக்கப் பிரவேசமே அந்த நாகத்திற்கு உரித்தான மோட்ச நிலையாகும்.. மிகவும் அற்புதமான வெண்புரை யோக ஜோதி சக்தியைக் கொண்ட இந்த கடல் சிலம்பு நாகமானது தன்னுடைய முக்தி நிலைப் பொருளாக உருவாக்குகின்ற முத்து மாணிக்கமானது மாத்ந்தோறும் தானாகவே நிறம் மாறக் கூடியதாகும்.. சித்திரையில் ஆரஞ்சு நிறத்தையும், வைகாசியில் வெள்ளை நிறத்தையும், ஆனி மாதத்தில் வெள்ளையும் பச்சையும் கலந்த நிறத்தையும் பூண்டிடும்.. இவற்றை வெறும் நிறம் என்று சொல்லுதல் கூடாது.. ஏனென்றால் கடல் சிலம்பு நாகங்களின் பல்லாயிரமாண்டு யோக சக்தியில் திளைத்தமையால் இவற்றிற்கு விசேஷமான அக்னி சக்தி உண்டு.. இதுவே சிலம்பாக்னி சக்தியாகும்.

இந்த பிரபஞ்சத்தில் இவ்வகையான அக்னியை ஒரு சில லோகங்களில்தான் தரிசனமாகப் பெற முடியும்... அதுவும் பூலோகத்தில் சந்திர ஒளியில்தான் இதை யோக நேத்திரத்தில் தான் காண முடியும்! எனவேதான் இதற்கு சோமபாத ருத்ராக்னி என்று பெயர். இதனுடைய இருப்பிடத்தையும் தரிசனத்தையும் பெற வல்ல சித்தர்கள் ஒரு சிலரே. அவர்களுள் சிறப்பிடம் பெறுபவர் தான் சீரியா சிலம்பாக்னி சித்தர்! கடற் சிலம்பு நாகங்களிடமிருந்து இந்த முத்து மாணிக்கத்தைப் பெறுதல் சுலபம் அல்லவே! அதற்குரித்தான பலவிதமான அக்னி யோகங்களைப் பயில வேண்டும். ஏனென்றால் நாக சகஸ்ராரத்தில் விளைகின்ற முத்து மாணிக்கம் ஆதலால் கண்ணொளியைப் பெருக்குகின்ற ஜோதியுடன் காரிய சாதனை புரிவதிலும் இது மிக அற்புதமாகச் செயல்படும். மேலும் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக நாக சகஸ்ரார அக்னியில் திளைத்தமையால் அதனுடைய அக்னியைத் தாங்குகின்ற சக்தி ஒரு சிலருக்கே உண்டு !

அக்னியைத் தாங்கும் அருட்பெரும் சித்தர்!

திருஅண்ணாமலையில் எத்தனையோ கோடி யுகங்களாகக் கிரிவலம் வந்து சிலம்பாக்னி தரிசனப் பகுதியில் அக்னி யோகம் பூண்டிருக்கும் சீரியா சிலம்பாக்னி சித்தர்தான் அந்த முத்து மாணிக்கத்தைத் தம் திருக்கரங்களில் ஏந்துகின்ற சக்தியைப் பெற்றவர்களில் ஒருவராவார், இது மட்டுமல்லாது அந்த முத்து மாணிக்கத்தாலான சிலம்புகளைத் தம் யோகத்தால் உருவகித்து ஈஸ்வரனுடைய திருப்பாதங்களுக்குச் சமர்ப்பித்தும் வருபவரே சீரியா சிலம்பாக்னி சித்தராவார்.

மேலும் இந்த முத்து மாணிக்கத்தின் அக்னியைத் தாங்கக் கூடிய அக்னி சக்தியைப் பெற்றவர்கள்தாம் சிவபெருமானுடைய நாட்டியக் கிருத்தியத்தின் போது சிலம்பினுள் உள்ள முத்து மாணிக்கப் பரல்களின் உராய்வில் ஏற்படுகின்ற பீஜாட்சர அக்னி சக்திகளை சிலம்பொலி சப்தத்தின் மூலம் கிரகித்து அவற்றை அண்ணாமலை கிரிவல மலை தரிசனப் பலன்களாக வடித்துத் தருகின்ற அற்புத இறைத் திருப்பணியை இன்றும் புரிந்து வருபவரே சீரியா சிலம்பாக்னி சித்தர் பெருமான்! திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் அடி அண்ணாமலை அருகே ஒரு சிறு பாலமேடை உண்டு. பல மகரிஷிகளும் யோகிகளும் அமர்ந்த தெய்வீகப் பாலம் இது. இங்குதான் சீரியா சிலம்பாக்னி சித்தர் அருட்பெரும் அக்னி தவம் பூண்டு இன்றைக்கும் சூட்சுமமாய் கிரிவல தரிசனப் பலன்களை, இறைத் திருவருளால் அளித்துக் கொண்டிருக்கின்றார். பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக திருஅண்ணாமலை விளங்குவதால் ஒரு மனிதன் தன்னுடைய தியான யோகப் பிராணாயாம நிலைகளால் பெறத் தவறிய யோக சக்திகளைப் பெறுவதற்குத் திருஅண்ணாமலையில் பல அற்புத மலை தரிசனங்கள் உண்டு. இவற்றில் ஒன்றுதான் சிலம்பாக்னி மலை தரிசனமாகும்.

அமுத தாரைகள்

1. நிலையான வருமானம் பெற!

நன்கு படித்திருந்தும் பெரும் தொழிலில், வியாபாரத்தில் ஈடுபட்டும் முழுமையாக ஒரு வசதியையும் பெறாது நிரந்தரமான வருமானத்தையே காணாது, புரளும் பணத்தில் ஒன்று நிலையாக ஒட்டாது வாழ்க்கையை மனக் கஷ்டத்துடன் ஓட்டுபவர்கள் நிறைய பேர் உண்டு. நின்று, இருந்து, கிடந்து, நடந்த, வீராசன நிலைகளில் அருள்பாலிக்கும் திருமால் மூர்த்திகளை புத ஹோரை நேரத்தில் புதன், சனிக்கிழமை, திருவோண நட்சத்திர நாட்களில் குடும்பத்துடன் தரிசித்து உருண்டையாக உள்ள பழ வகைகளை (ஆரஞ்சு, சாத்துக்குடி, ஆப்பிள் போன்றவை) உணவுப் பண்டங்களை (லட்டு, ரவாலாடு, போண்டா) தானமாக அளித்து வந்தால் தொழிலில் நிலைத்து நிற்பர். நின்று, இருந்து, கிடந்து, நடந்த, வீராசன மூர்த்தி நிலைகளை அறிவீர்களா?! சென்னை திருநீர்மலையில் நின்று (ஸ்ரீராமர்), இருந்து (ஸ்ரீநரசிம்மர்), கிடந்த (ஸ்ரீரங்கநாதர்) நடந்த (த்ரிவிக்கிரமர்) நிலையிலான மூர்த்திகளைக் காணலாம். காஞ்சீபுரத்திலும் பல ஆலயங்களில் (உதாரணம் உத்திரமேரூர்) இப்பெருமாள் மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர். 108 மங்கள சாசனம் பெற்ற வைணவத் தலங்கள் ஒன்றில் பெருமாள் வீராசன கோலத்தில் எழுந்தருளியுள்ளார். தேடிக் கண்டுபிடித்து, வழிபட்டு முழுமையான பலன்களைப் பெறுங்கள்.

உத்திரமேரூர்

2. நல்ல வேலை கிட்டிட

நன்கு படித்திருந்தாலும் பலருக்கும் நல்ல வேலை கிடைப்பதில்லை. வயதும் ஆகிவிட்டால் அரசுத்துறைகளில் சேர முடியாமல் கிடைத்த வேலைகளில் மாறிமாறி இருக்க வேண்டிய நிலையும் ஏற்படுவதுண்டு.. ஓரளவு சுமாராகப் படித்து முடித்தவர்களோ ரொம்பவும் சிரம்ப்படுகின்றார்கள்.. இதற்கெல்லாம் பூர்வ ஜென்ம வினைகளே காரணமாகும்.. அதாவது உதாரணமாகத் தற்போது வங்கி போன்ற நல்ல துறைகளில் பணிபுரிபவர்கள் வாங்கும் சம்பளத்திற்கு உழைக்காது ஏனோதானோ என்று பணிபுரிந்தால் இத்தகையோரும், மற்றும் தன் கீழ் பணிபுரிபவர்களை வறுத்தெடுத்து வேலையைப் பிழிந்தெடுத்து ஒழுங்காகச் சம்பளம் தராதவர்களும்தான் மறுபிறவிகளில் வேலையின்றி, தகுதிக்குத் தகுந்த வேலையின்றியோ அல்லது குறைந்த சம்பளத்துடன் கவலைப்பட வேண்டியதாகவோ இருக்கிறது. நன்முறையில் வேலை கிட்ட வேண்டும் என்றால் சென்னை அருகே உள்ள திருபோரூர் மலைத் தலத்தைச் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் கிரிவலம் வந்து மலை மீதுள்ள சிவபெருமானுக்குச் சிவப்பு மற்றும் கருநீல வஸ்திரங்களைச் சம்ர்ப்பித்து ஏழைகளுக்கு வஸ்திரத்தையும் அன்னத்தையும் தானமாக அளித்து வருதல் வேண்டும்.. முருகப் பெருமானிடம் குட்டுப் பெற்றுத் தன் சிருஷ்டி கர்த்தாவாகிய பணியை இழந்தபோது ஸ்ரீபிரம்ம மூர்த்தி தம் சிருஷ்டி கர்த்தா தொழிலை மீண்டும் பெற்றிட அடிவல சூட்சும கிரிவலப் பிரதட்சிணம் வந்த மூல மலைகளுள் திருப்போரூர் மலையும் ஒன்றாகும்.

3. நாணயமுள்ளோர் நன்றியுடன் நிலைத்திட

பல கடைகளிலும் நல்ல பண்புள்ள ஒழுக்கமுள்ள பணியாளர்கள், உதவியாளர்கள் நம்பிக்கை, நாணயத்திற்கு உரியவர்களாகவும் அமைந்திட காஞ்சீபுரம் அருகே பெருநகரில் உள்ள சிவாலயத்தில் மூலஸ்தானத்திலும், அர்த்த மண்டபத்திலும்  சனி, புதன், அனுஷம், திருவோண நட்சத்திர நாட்களில் நன்றாக அடர்த்தியாக சாம்பிராணி தூபமிட்டு சுவாமிக்கு எதிரே உள்ள சாளரம் வழியே தூபம் வருவதை தரிசித்து வருதல் வேண்டும். பல அசுரர்கள் ஏமாற்றிக் கடல் பகுதிகளை அனைத்தையும் விழுங்கிய போது தம்முடைய ராஜ்யத்தைப் பெற சமுத்திர ராஜன் வழிபட்ட சாளர ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு இந்நாட்களில் நீரால் வேகும் பதார்த்தங்களைப் (இடியாப்பம், இட்லி, அப்பம்) படைத்துத் தானமாக அளித்து வந்தால் நாணயமான ஊழியர்களைப் பெறலாம்.. இத்தகைய தலங்களில் இறைவனின் விஸ்வ பாஸ்கர சக்தி மிகுந்திருப்பதால் மூலத்தானம் எதிரே சாளரம் அமைக்கப்பட்டிருக்கும்! சுவாமியைப் பக்கவாட்டில் சென்றுதான் தரிசிக்க வேண்டும்.

பெருநகர் சிவாலயம்

4. பிள்ளைக்கு நல்லன்பு கிட்டிட

கணவனுக்கு மனைவியும் பணிக்குச் செல்கின்ற இல்லங்களில் குழந்தை வளர்ப்புப் படாதபாடு படுகிறது கலியுகத்தில்! பெற்றோர்களின் அரவணைப்பால் வளர வேண்டிய பிள்ளைகள் பணிப் பெண்களிடமும், குழந்தைகள் காப்பகத்திலும் பிள்ளைப் பருவத்தை ஓட்டிவிட்டால் அதை மீண்டும் பெறமுடியுமா? சம்பாத்யமே குறி, வசதி, சொத்து சேர்ப்பதே குறிக்கோள் என்றால் பிள்ளைகள் எப்படிப் பண்பாடுடன் நல்லொழுக்கத்தில் வளர முடியும். சொல்லுங்கள் பார்க்கலாம்.. இவ்வாறு இருந்தால் இப்பெற்றோர்களுடைய இறுதிக் காலமானது ஆள் அரவமின்றித் தனித்து வாடுவதாக அமைந்திடும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இவ்வாறு பெற்றோர்களின் அரவணைப்பும், அன்பும் தக்க பருவத்தில் குழந்தைகளுக்குக் கிட்டிட தம்பதியர்கள் குழந்தையுடன் அல்லது குழந்தை பிறக்கும் முன்னரோ திருச்சி குளித்தலையில் உள்ள ஸ்ரீகடம்பவனேஸ்வரர் ஆலயத்தில் கடம்ப மரத்தை தரிசித்துக் கறுப்புக் காப்புக் கயிறு கட்டி வழிபட்டு ஸ்ரீகடம்பவனேஸ்வரரையும் அம்பிகையையும் தொழுதிடுக! குழந்தைகளின் ஏழு வயது வரை சப்த கன்னிகைகள்தாம் அவர்களைப் பேணிப் பாதுகாக்கின்றனர். இங்கு மூலவராம் கடம்பவனநாதரின் மூலப் பின் சுவற்றில் சப்த கன்னிகைகள் குஜ சந்த்ராம்பிகைகளாகத் தவம் பூண்டுள்ளனர். வெள்ளி, திங்கள், சதயம், திருவாதிரை நட்சத்திர நாட்களில் சப்த கன்னியருக்கு அரைத்த சந்தனம் சாற்றி சுவாமிக்கு கொடிவகைக் காய்கறிகளுடன் உணவைப் படைத்து தானமாக அளித்து  வந்தால் சப்த கன்னிகைகளின் அருளாசியால் குழந்தைகள் நன்முறையில் பெற்றோர்களின் அன்புப் பிணைப்புடன் நன்முறையில் வளர்ந்து சிறப்படைவர்.

5. யமதுவிதியை எமபயம் போக்கும் பூஜை மரணபயம் நீக்கும் வழிபாடு!

மார்கண்டேயன் மீது பாசக்கயிறு வீசியமையால் தன் எமத்திருப்பணியை இழந்த ஸ்ரீமயச்ச எம மூர்த்தி இதுவும் இறைவன் திருவிளையாடல் எனத் தெளிந்து தனக்குப் பிறகு எந்த எம மூர்த்திக்கும், இத்தகைய பிழைகள் ஏற்படா வண்ணம் காத்திடக் கடுந்தவம் மேற்கொண்டார்! அன்ன ஆகார நீரின்றி சுவாசமின்றி அங்க அசைவின்றிக் கால் கட்டைவிரல்களில் மட்டும் நின்று தவம் புரிந்தார் பல கோடியுகங்களாக! இறைவனும் மனமகிழ்ந்து யோகீஸ்வர மூர்த்தியாகக் காட்சி தந்தார். இவருடைய அருந்தவப் பயனாக இதன் மூலம் கிட்டிய யோகீஸ்வர தரிசனம் காரணமாக எமமூர்த்திகள் எப்போதும் பரம்பொருட் சிந்தனையுடன் பிழையின்றித் தம் இறைப் பணிகளில் பிரகாசிக்கலானார்கள். இதற்குக் காரணம் தம் யோகத் தவப்பயனாய் இறைவனுடைய வாகனமாக வேண்டியதே ஆகும். ஏனெனில் இறைவனையே தாங்கும் பேறு பெற்றால் எப்போதும் இறையருளைத் தாங்கிப் பிழையின்றி இறைப்பணி ஆற்றலாமன்றோ! இவ்வாறு எமபகவானே வாகனமாய் மாறி இறைவனைத் தாங்கி அவருடைய யோகீச மூர்த்த தரிசனம் பெற்ற திருநாளே யமதுவித்யைத் திருநாளாம். இன்று ஸ்ரீவேலூர் அருகிலுள்ள திருவிரிஞ்சிபுரம் ஸ்ரீமரகதாம்பிகை சமேத மார்க்கபந்தீஸ்வரர்  ஸ்ரீவாஞ்சியத்திலும் (சிறப்பான எமத் தலம்) தீர்த்தமாடி அடிப்பிரதட்சிணம் செய்திடுதலும் திருச்சி அருகே திருப்பைங்ஞீலியில் எம சந்நிதியில் அகல் விளக்குகளை ஏற்றுதலும், சென்னை வேளச்சேரி ஸ்ரீதண்டீஸ்வரர் ஆலயத்தில் (எம பகவான் தாம் இழந்த தண்டத்தைப் பெற்ற விசேஷமான தலம்) அடிப்பிரதட்சிணம் செய்தலும் கும்பகோணம் அருகில் திருவாலங்காடு ஸ்ரீஎமபகவான் சிலா ரூபத்திற்கு நல்லெண்ணெய்க் காப்பிட்டு அடிப்பிரதட்சிணம் வருதலும் திருஅண்ணாமலையில் கிரிவலம் வந்து எம லிங்க சந்நிதியில் கால் கட்டை விரல்களில் மட்டும் நின்று மலையை தரிசித்து (கடினமான சுக்ர பாண யோக நிலையிது.) எம லிங்கத்தை அடிப்பிரதட்சிணம், அங்கப்பிரதட்சிணம் செய்தலும் மிகவும் விசேஷமானதாகும். இந்த இடங்களில் எள்ளுப்பொடி சாதத்தைத் தானமாக அளித்தலால்.

அடிக்கடி ஏற்படுகின்ற மரண பயம் தீரும். மக நட்சத்திர நாட்களில் எருமைக்கு அகத்திக்கீரை தானமளித்து மேற்கண்ட தலங்களில் வழிபட்டு வருதல் வேண்டும். தற்கொலை உணர்ச்சிகள் மறைந்து வாழ்க்கையில் மனோதிடம் உண்டாகும், யம துவித்யை தினத்தில் சென்னை பூந்தமல்லி அருகே உள்ள சித்துக்காடு சிவாலயத்தில் கால் கட்டை விரல்களில் நின்று (கடினமான யோகப் பயிற்சி ஒரு சில நிமிடங்களேனும் நிற்க முயற்ச்சி செய்க!) ஸ்ரீதாந்திரீஸ்வர சிவமூர்த்தியை வழிபட்டு சுவாமிக்கு நல்லெண்ணெய்க் காப்பிட்டு எள்சாதம் படைத்துத் தானமளித்து வந்தால் கான்சர், மூளைக் காய்ச்சல் போன்ற கடும் நோயில் அவதியுறுவோர்க்குப் பித்ருக்களின் ஆசியால் நல்வழி காட்டப்பெறும்..

ஸ்ரீபரிமள ரெங்கநாதர் ஆலயம்
இந்தலூர் மாயவரம்

6. கணவனை இழந்தோர்க்குக் காட்டும் நல்லறம்!

இளவயதிலேயே கணவனை இழந்து, வேறு மணம் புரிதல் என்ற எண்ணம் துளிக்கூடயின்றி இறந்த கணவனையே கண்கண்ட தெய்வமாக வரித்துச் சங்கல்பத்துடன் வாழ்கின்றவர்கள் அனைத்துமே பூர்வ ஜன்ம வினைகளின் காரணமாகவே அமைகின்றன என்பதை உணர வேன்டும். எனினும் மானிடப் பிறவி என்பது பெறுதற்கு அரியதுதானே! எனவே இவர்களுடைய துயர் எண்ணங்களை நல்ல பிரார்த்தனைகளாக மாற்றக் கூடிய வழிமுறைகள் நிறைய உண்டு.. ஆனால் ஆழ்ந்த நம்பிக்கையுடன், பக்தியுடன் கடைபிடித்தல் வேண்டும்.. சூரிய மண்டலத்தில் பூஜ்ய காஷ்ட ஸ்வேதாம்பரம் என்ற நிலை ஒன்றுண்டு. கடும் நியதிகளை உடைய பிரார்த்தனா மண்டலம் அது! பூலோகத்தில் தூய சங்கல்பத்துடன் செய்யப்படுகின்ற பிரார்த்தனைகள் வெண்மை வடிவ ஸ்வேதாம்பரக் கதிர்களாக பூஜ்ய காஷ்ட ஸ்வேதாம்பர மண்டலத்தை அடையும். கணவனை இழந்தோர் தமக்குரிய குடும்பப் பணிகளை இறைநாமச் சிந்தனையுடன் முடித்துத் தம்முடைய பூஜா பலன்களை இந்த பூஜ்ய காஷ்ட ஸ்வேதாம்ப்ர தேவதைக்குத் தினந்தோறும் மானசீகமாகச் சமர்ப்பித்து வருதல் வேண்டும். இறந்த தன் கணவரின் சூட்சும சரீரத்திற்குத் தவிர வேறு எவருக்கும் இதனைத் தெரிவிக்க வேண்டிய அவசியம் கிடையாது! இதில் கடுமையான நியதிகளும் உண்டு! உதாரணமாக வெள்ளை, ஆரஞ்சு மஞ்சள் இம்மூன்றில் ஒன்றையே வாழ்நாள் முழுதும் உடுத்த வேண்டும்! இவையெல்லாம் மனக்கட்டுபாட்டிற்கும் உத்தம பக்தி நிலைக்கும் வழிவகுக்கும். இவ்வாறு ஆத்மப் பூர்வமாக சில குறித்த பூஜைகளைச் செய்து வந்தால் இறையருளால் நற்கதி பெறுவர்! ஆனால் இவ்வற்புத பூஜை இறந்த தன் கணவனையே தெய்வமெனப் போற்றி வாழும் மாதர்களுக்கு மட்டுமே! தியாக மனப்பான்மையோடு நல்வாழ்வு தந்திடத் தக்க உத்தமர் முன்வந்திடில் மனம் ஒப்பிடில் தக்க பெரியோர்களின் ஆசியோடு மறுமணம் புரிந்து கொள்ளலாம்! ஆதித்ய லோகத்தில் வெண்மை நிற அக்னியை ஹோம குண்டத்தில் வளர்த்து அதைப் பூஜித்து வரும் ஸ்வேதாம்பர குந்தள மாமுனியே கணவனை இழந்து இறந்த கணவனையே தெய்வமெனப் போற்றி வணங்கி வரும் பெண்களுக்கு நற்கதியளிக்கும் அறவழி முறைகளை அளித்து வரும் உத்தம மஹரிஷியாவார்!

7. பாண்டிச்சேரி சின்னபாபு சமுத்திரத்தில் உள்ள படேசாகிப் ஜீவாலயத்தில் ஒவ்வொரு மருத்துவரும் மாதந்தோறும் சென்று தரிசித்து வந்து தம்முடைய ஆரோக்கிய சக்தியை இறையருளால் பெருக்குதல் வேண்டும். கலியுகத்தில் மகான்களுடைய ஜீவசமாதி தரிசனம் தான் ஜீவன்களுக்குக் குருவின் அனுகிரகத்தை அபரிமிதமாகப் பெற்றுத் தரும் ! மயிலாடுதுறை அருகே வைத்தீஸ்வரன் ஆலய சித்தாமிர்த திருக்குளத்தில் நீராடி விபூதி உருண்டையைப் பிரசாதமாகப் பெற்று இயன்றால் ஸ்ரீதன்வந்த்ரீ ஹோம பூஜையை நிகழ்த்தி பிரசாதத்தை அனாதை இல்லங்களில் அன்னதானத்தோடு அளித்துவர எப்போதும் நோயின் துன்பங்களால் வாடுகின்றோர்க்குத் தக்க பிராயசித்தம் கிட்டும். மருத்துவர்களுக்கும் கைராசி பெருகும்.

8. வீராசனப் பெருமாள் :- மயிலாடுதுறை (திருஇந்தளூர்) ஸ்ரீபரிமள ரெங்கப் பெருமாளே வீரசயன, வீராசனக் கோலப் பெருமாள் ஆவார்.

விசேஷ தினங்கள்

பௌர்ண்மி கிரிவல நாள் :- 12.10.2000 வியாழக்கிழமை பகல் 2.54 முதல் 13.10.2000 பகல் 2.23வரை பௌர்ணமி திதி. கிரிவலம் 12.10.2000 வியாழக்கிழமை இரவு

29.10.2000 அன்று அமைகின்ற யமதுவிதியை வழிபாடானது யம பயத்தைப் போக்கித் தற்கொலை உணர்ச்சிகளை நீக்கி வாழ்க்கையில் மனோதிடத்தையும், மனோ தைர்யத்தையும் பெற உதவுகின்றது. இவ்விதழில் அளிக்கப்பட்டுள்ள அசூன்ய சயன விரதத்தை 14.10.2000ல் தொடங்கி 13.11.2000 வரை கடைபிடித்தல் மிகவும் விசேஷமானதாகும். ஸ்ரீவாஞ்சியம், திருச்சி அருகே திருப்பைஞ்ஞீலி, கும்பகோணம் அருகில் உள்ள திருவாலங்காடு போன்ற யம மூர்த்தி அருள்பாலிக்கும் சன்னிதிகளில் இன்று நல்லெண்ணெய்க் காப்பிட்டு எள்சாதம் படைத்து தானமாக அளித்துவர மரணம் பற்றிய பயம் அகலும்.

நித்ய கர்ம நிவாரணம்

1.10.2000 – வறுமையாலோ வேறு பல காரணங்களாலோ 35 வயதாகியும் திருமணமாகாத பெண்களுக்குச் சாதி, மத, இனம் பாராது இலவசத் திருமணம் செய்து வைத்தலால் தம்பியை ஏமாற்றிச் சொத்துக்களை அபகரித்தத் தவறுகளுக்கு ஓரளவு பிராயச்சித்தம் பெறலாம்.

2.10.2000 – கோயில் புறாக்களுக்குக் கேழ்வரகு தானம் – வேலையில் வரும் பளு குறையும்.

3.10.2000 – ஓராண்டுக்கு மேல் வீட்டில் பயன்படுத்திய பழைய எவர்சில்வர், கண்ணாடிச் சாமான்கள், பீங்கான் சாமான்கள், பிளாஸ்டிக் சாமான்களை ஏழைகளுக்குத் தானமாகக் கொடுத்து விட்டுப் புதிய சாமான்களை வாங்குவது சிறப்புடையது. நீண்ட காலமாக இருந்த சொத்து வழக்குகளுக்கு நல்ல சமரசம் ஏற்படும்.

4.10.2000 – பாலில் நல்ல தேன் ஊற்றி ஏழைகளுக்குத் தானம் – நரம்பு சம்பந்தமான நோய்களிலிருந்து விடுதலை பெறலாம்.

திருப்பைஞ்ஞீலி சிவத்தலம்

5.10.2000 – குபேர லிங்கத்திற்குச் (திருஅண்ணாமலை, திருஆனைக்கோயில்) சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வறியோர்க்குத் தானமாய் அளித்திடில் நற்காரியத்திற்காக வாங்கிய கடன்கள் படிப்படியாகத் தீரும்.

6.10.2000 – சொந்தக் காரியத்திற்காக ஆபீஸ் போனை பயன்படுத்தியதால் ஏற்படுகின்ற கர்ம வினை தீர அதற்கு ஈடான பணத்தை இன்று அன்னதானமாய்த் தானம் செய்திடுதலால் வீண் கர்மத்தைச் சேர்க்காது.

7.10.2000 – வெளியூர் பயணங்களுக்குப் பயன்படுத்திய சூட்கேஸ் carry bag ஏழைகளுக்கு தானமாய்த் தரவேண்டிய நாளிது. பழையதைத் தொடர்ந்து பயன்படுத்துதல் கூடாது.

8.10.2000 – இரண்டு ஆண்டுகளாய்ப் பயன் படுத்திய கைக்கடிகாரத்தை ஏழைகளுக்கு தானமாய் அளிக்க வேண்டிய நாளிது.

9.10.2000 – வயதான தம்பதியர்களுக்குத் தண்ணீர் கொண்டு வந்து அளித்து உதவி செய்தல் – வேலையில் உடனிருந்து துன்பம் தருபவர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படுவார்கள்.

10.10.2000 – நாற்று நடுகின்ற வயதான பெண்களுக்குப் புதுச் சேலை வாங்கித் தருதல் – கமிஷன் ஏஜெண்டுகள் நலம் பெறுவர்.

11.10.2000 – கூண்டுகளில் அடைபட்டிருக்கும் கிளிகள், குருவிகள், மைனாக்கள் போன்றவற்றை விடுவித்து காடுகளில் சுதந்திரமாக விட்டிடில் விமானப் பயண ஆபத்துக்களிலிருந்து காக்கப்படுவர்.

12.10.2000 – குளிர் பானங்கள் விற்போர் தினமும் ஏழைகளுக்கு ஐந்து  குளிர்பானங்களாவது அளிக்கத் தொடங்கிடில் வியாபாரத்தில் நல்ல மாற்றம் காண்பர்.

13.10.2000 – பாடல் பெற்றத் தலங்களில் ஊதுபத்தி ஏற்றி வைத்துக் கோயில்களை மணக்கச் செய்வதால் துர்நீர் சம்பந்தமாக ஏற்படுகின்ற நோய்கள் அகல வழியுண்டு.

14.10.2000 – கோயில் மடப்பள்ளிகளுக்கு சுவாமிக்கு நைவேத்யம் செய்ய இலவசமாக சவுக்குக் கட்டைகள் வாங்கித் தருவதால் கடலை உருண்டை, பர்பி, பொரி உருண்டை, மிட்டாய் வியாபாரிகள் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பர்.

15.10.2000 – கைக் கெடிகாரம், பெரிய கடிகாரம் ரிப்பேர் செய்கின்றவர்களுக்கு இலவசமாகக் கண் பரிசோதனை செய்தல் – ஆயுள் விருத்தி பெறுவர்.

16.10.2000 – சாக்கடையில் இறங்கிச் சுத்தம் செய்பவர்களுக்கு வயிறார உணவிட்டு மாதம் ஒருவருக்காவது தொடர்ந்து புதிய ஆட்களுக்கு உதவி இவ்வாறு செய்திடில் குடல் சம்பந்தமான நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.

17.10.2000 – ஏழை விவசாயிகளிடமிருந்து அவர்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை உழைப்பின் உயர்வாக கூலி / விலை அளித்து வாங்கி அவர்களை மனம் சந்தோஷம் அடையச் செய்திடில் தொழிலில் வேலை பளு குறைந்து செய்கின்ற தொழிலுக்கு அதிக வருமானம் பெறலாம்.

18.10.2000 – பூட்டுகளுக்குச் சாவி செய்யும் தொழிலாளர்களுக்கு வயிறார உணவிட்டு ஆடைதானம் செய்திடில் வீட்டில் திருடு போவதைத் தவிர்க்கலாம்.

19.10.2000 – சைக்கிள் பஞ்சர் போடுகின்ற பையன்களை அழைத்துச் சாப்பாடு போட்டு வஸ்திர தானம் செய்திடில் தச வாயுக்களால் வருகின்ற துன்பம் விலகும்.

20.10.2000 – ஏழைச் சவரத் தொழிலாளிக்கு முடி வெட்டும் கத்தரிக்கோலும், கட்டிங் மெஷினும் வாங்கி தானம் அளித்திடில் fashion show செய்கின்ற தொழிலில் உள்ளோர் நற்பலன்களைப் பெறுவார்கள்.

திருவானைக்கோவில் குபேரலிங்கம்

21.10.2000 – கண்ணாடிச் சாமான்கள் செய்யும் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு உணவிட்டு வஸ்திர தானம், வைத்திய தானம் செய்திடில் opticians, optical கண் டாக்டர்கள், கண்ணாடிக் கடைகளில் வேலை செய்பவர்கள் தங்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பர்.

22.10.2000 – பட்டாசுத் தொழிற்சாலைகளில் வேலை செய்து அங்கஹீனம் உற்றோர்களுக்கு ஆடைதானம் உணவு இட்டிடில் எதிர்பாராத செய்திகளால் (shocking news) வருகின்ற துன்பத்தால் வரும் வியாதிகளிலிருந்து நிவாரணம் பெறுவர்.

23.10.2000 – குஷ்டரோகிகளுக்கு உணவு, உடை தானம் செய்திடில் விதவையின் சாபத்திலிருந்து ஓரளவு விடுதலை பெறுவர்.

24.10.2000 – வேதம் ஓதுகின்ற சிறுவர்களுக்கு தீட்சை (குடுமி) வைப்பதற்கு பொருள் உதவி செய்திடில் தீயோர் செய்கின்ற சதித் திட்டம் முறிவடையும்.

25.10.2000 – வெள்ளை குதிரைகளுக்குக் கொள் தானம் – குறித்த இடத்திலிருந்து பணம் வரும்.

26.10.2000 – ஸ்டேஷனரி, நோட்டுப் புத்தகம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிறுவர்களுக்கு உணவு, ஆடைதானம் – நண்பர்களிடமிருந்து வருகின்ற பகைமை தீரும்.

27.10.2000 – சித்திரா, சிவகாமி போன்ற ‘சி’ எழுத்து நாமம் உடைய பெண் குழந்தைகளுக்குப் பொன் பூண் (வளையல், பொன்/பொன் நிற ஆபரணங்கள்) தானமாக அளித்தலால் தவறு வழி சென்ற மாணவ, மாணவியர் திருந்துவர்.

28.10.2000 – கறவை அடங்கிய பசுக்களைப் பராமரிக்கும் கோசாலைகளுக்குச் சென்று அதனுடைய பராமரிப்பிற்காகக் கோதுமை தவிடு, புண்ணாக்கு, புல்கட்டுக்களைத் தொடர்ந்து வாங்கி தானமாய் அளித்திடில் ரிடையர் ஆகியும் வந்து சேராத பணம் கதவைத் தட்டி வந்து சேரும்.

29.10.2000 – கால்நடைகளை மேய்க்கின்ற சிறுவர்களுக்கு வயிறார உணவளித்து ஆடைகளை அளித்திடில் அலுவலகத்தில் வருகின்ற துன்பங்கள் தணியும்.

30.10.2000 – 12 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர் குழந்தைகளுக்கு Tuition fees கட்டி நோட்டுப் புத்தகங்கள் வாங்கி அளித்திடில் படிப்பில் மந்தமாக உள்ள தம் பிள்ளைகள் சுறுசுறுப்புடன் ஆர்வம் கொண்டு நன்கு படிக்கத் தொடங்குவர்.

31.10.2000 – தெருக் குப்பையை சுத்தம் செய்கின்ற ஏழைத் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு வயிறு நிறைய உணவளித்து வளையல்கள், கைக்கடிகாரம் போன்றவற்றை தானமாக அளித்திடில் அலைபாய்கின்ற மனம் ஓரளவு சுத்தம் அடையும், மன நிம்மதி கிட்டும்.

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam