அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய பால பருவ குருகுலவாச அனுபூதிகள்.  சற்குருவின் குருகுலவாசம் என்றால் பண்டைய காலத்திற்குரித்தானது தானே! கலியுகத்தில் அதுவும் இந்த விஞ்ஞானமய உலகில், இயந்திர கதியான வாழ்க்கையில் குருகுல வாசம் எப்படி அமைந்திட முடியும் என்பதான வினாக்களுக்கு நல்விடை அளித்து இல்லறத்தோடு கூடிய இனிய சத்சங்க வாழ்க்கையையும் தந்து இலைமறை கனியாக மக்களோடு மக்களாய் கலியுலகில் வாழ்ந்து இறையறத்தைப் பெருக்குபவரே சற்குரு என்பதை ஆன்மப் பூர்வமாக உணர்த்துவதே நீங்கள் இத்தொடரில் காண்கின்ற குருகுலவாச அனுபூதிகளாகும். தம் சற்குருநாதராம் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகளிடம் ஆரம்பப் பள்ளிப் பருவத்திலேயே குருகுலவாசம் பெறும் தெய்வீக பாக்யத்தைக் கொண்ட குருமங்கள கந்தர்வா ஸ்ரீ வெங்கடராமன் அவர்கள் தம் குருகுலவாச அனுபூதிகளை, நம் மெய்ஞ்ஞானப் பகுத்தறிவை ஆக்கப் பூர்வமாகச் செயல்படுத்தும் வகையில் இத்தொடரில் உணர்த்தி வருகின்றார்கள். இக்குருகுலவாச அனுபூதிகள் உணர்த்துகின்ற இறைப் பாடங்கள், அனுபவ முத்திரைகள், நம் குறை தீர்க்கும் அறவழிகள்தாம் எத்தனை, எத்தனை! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வரியில் ஒரு (வாழ்க்கைப்) பாடம் தானாகக் கிட்டுகின்றதே!

பொருள் ஆனந்தம்
இடையே புலன் ஆனந்தம் !

பொதியமலையில் பொதி(ழி)ந்த குருவருள்!

“ஏன் வாத்யாரே! ரெண்டு, மூணு நாளா உன்னைக் காணோமே, எங்க போயிருந்தேன்னு கேட்டா, நம்ப குரு அகஸ்தியர் தரிசனம்னு சொன்னியே, நல்லா வெவரமாகச் சொல்லக் கூடாதா?”  “எதையுமே கேட்டாத்தான் சொல்லனும்னு எங்களுக்கு குரு கட்டளைடா! தெய்வீக விஷயத்தைச் சும்மாக் கொட்டினா அதோட ஐஸ்வர்யம் யாருக்கும் புரியாமப் போயிடும்டா! ரெண்டாவது எத எப்பப்ப சொல்லனும்னு எங்களுக்குத் தெரியும்டா கண்ணு! பொதிய மலையில் தான் பெற்ற ஸ்ரீஅகஸ்தியர் தரிசனப் படலத்தை பெரியவர் மிகவும் ஆனந்தத்தோடு தொடர்ந்தார்.
“ ... ஆச்சு ..... பொதியமலைல ஒரு வழியா கல்யாணி அருவி ரேஞ்சுக்கு அப்புறம் கொஞ்ச தூரம் தாண்டா போக முடிஞ்சது.... அதோட மனுஷன் ஏரியா (human limit) முடிஞ்சுதுடா! அப்படீன்னா என்னா அர்த்தம்? அதுக்கு மேலே மஹானுங்க, சித்தருங்க பர்மிஷன் கொடுத்தாத்தான் போகலாம்! என்னோட வந்த தேவாதி தேவருங்க தெகச்சு நின்னுட்டாங்க.... எனக்கோ என்ன செய்யறதுன்னு புரியலை!.... ஒரே வழி.. நம்ப அம்மா லோபாமாதாவைத்தான் நெனச்சு பிரார்த்தனை பண்ணினேன்! என்ன பண்றது? எப்பவுமே அம்பாளுக்குத் தாண்டா கருணை ஜாஸ்தி!” திடீர்னு கண்ண முழிச்சுப் பார்த்தா.... ஒரே ஒரு ஒத்தயடிப் பாத தெரியற மாதிரி இருக்கு.. அவ்வளவுதான் .. திபுதிபுன்னு வேக வேகமாக அதுல நடந்து போய்ட்டேன்... எவ்வளவு நேரம் அப்படி நடந்தேன்னு எனக்கே தெரியாது.. அப்பாடி. திடீர்ன்னு நல்ல வெளிச்சம்! எங்க பாத்தாலும்... அரசமரம்.. ஆலமரம். வேப்பமரம், அத்திமரம்.... கமகமன்னு நெறய நெறய பூச்செடி.... கமகமன்னு சாம்பிராணி தூப வாசனை.... அந்த மாதிரி சாம்பிராணி வாசனய நான் தேவலோகத்துல கூடப் பார்த்தது கெடயாதுடா... ஆனா ஒண்ணு தெரிஞ்சுக்க கல்யாணி அருவி வரைக்கும்தான் நம் கலியுக வாசம் மாதிரி இருந்துச்சுடா... ஆன அதத் தாண்டி.... மனுஷ வாசன முடிஞ்ச ஏரியா தாண்டிப் போனா.... போனா என்ன... குருவருள் இருந்தாத்தாண்டா அங்க போகமுடியும்.. அங்கேயெல்லாம் குருவருள்தாண்டா பாஸ்போர்ட், விசா எல்லாம்..!”

ஸ்ரீமனோக்ஞநாத சுவாமி திருநீலக்குடி

“அங்க பாத்தா... எல்லாமே கிருதயுக பாணில இருக்கு... அதாவது ராமாவதாரத்துக்கு முன்னாடி.... ராமரோட காலம்தான் திரேதா யுகம்,, கிருஷ்ணரோடது துவாபர யுகம்! இதுக்கும் முன்னாடி யுகம்தான் கிருதயுகம்! நம்ப ஆயுர் தேவி அம்பாள் வழிபாடு பிரமாதமா இருந்த யுகம்...அங்க ஒரு சின்ன பர்ணசாலை.. தென்னங் கீத்து, பனங் கீத்து போட்டது. அதச் சுத்தி ஒரு இட்த்துல ஹோமம், இன்னோரு பக்கம் வேத பாராயணம், இன்னொரு பக்கம் வெளக்கு பூஜை, கோ பூஜை.. கஜ பூஜை... அதுபாட்டுக்கு அது அது நடக்குது அங்கங்க ஜோரா... அடடா ! என்ன திவ்யமா இருந்துச்சு தெரியுமா!”

“நேத்திதான் பரத்வாஜ மஹரிஷி வந்துட்டுப் போனாரு, நாளக்கி சாயந்திரம் இங்க மார்கண்டேய மஹரிஷி வர்றாராம்! அங்க யாரோ சொல்லிக்கிட்டு இருந்தாங்க! நான் நேரே பர்ணசாலை வாசல்ல போய் தர்ப்பப் பாயில உக்காந்துகிட்டேன். நான் கலியுகத்து ஆசாமிடா! (கண்ணைச் சிமிட்டுகிறார்!) எழுதப் படிக்கத் தெரியாதவண்டா.... முழுசா உருப்படியா ஒரு மந்திரம் கூடச் சொல்லத் தெரியாது.... நமக்குத் தெரிஞ்சதெல்லாம் கோயில்ல குப்பை பொறுக்கறது! முடிஞ்ச போது கொஞ்சம் கொஞ்சம் அன்னதானம் பண்றது!” (சிரிக்கிறார்!) அப்பறம் யார் யாரோ வந்தாங்க..... என் பேரச் சொல்லிக் கூப்புட்டாங்க..!” (பெரியவர் இங்கு வேண்டுமென்றே நிறுத்தினார்!)
சிறுவன் முந்திரிக் கொட்டையாய்க் கேட்டுவிட்டான்... “என்ன பேர் சொல்லிக் கூப்புட்டாங்க வாத்யாரே...!”
“ங் .... ங் .... தெரியுமே! கொட்டாப் புளியாட்டம்.. முழிச்சுக்கிட்டு இந்தக் கெழவன, ஆராயறதுதாண்டா உனக்கு பொழப்பாப் போச்சு! எங்கள ஆராய்ச்சி பண்ணாத, அது உன்னால முடியாதுன்னு உனக்குச் சொல்லிச் சொல்லி எனக்கு அலுத்துப் போச்சுடா! எங்க lineage எல்லாம் நீ எடுத்தியான்னாக்க....” பெரியவர் ஆழ்ந்த நினைவில் மூழ்கினார்...

Shell and Shelving the Self’! எங்களைப் பத்தி எதச் சொல்றது, எதடாவிடறது! ஆலகால விஷம் வர்றதுக்கு முன்னாடியே எங்க குரு என்ன பாற்கடலுக்குக் கூட்டிக் கிட்டுப் போய் பெருமாளோட அனந்தசயனம் தரிசனமெல்லாம் காட்டியிருக்கார்னா எங்களோட ஆதி, அந்தமெல்லாம் ஒனக்குப் புரியுமாடா.... சொன்னாத்தான் இந்த கலியுகத்துல யாரும் நம்புவாங்கள....? இந்த மனுஷ ஒடம்பை நாங்க எடுத்துருக்கோம்னா ஆயிரக்கணக்குல shells (Divine bodies)  எல்லாம் அந்தந்த லோகத்துல விட்டுட்டு இந்த பூலோகத்துக்கு வந்திருக்கோம்னு அர்த்தம்! ஒவ்வொரு shell bodyயும் ஒவ்வொரு லோகத்துல இருக்கும்... உதாரணத்துக்கு செவ்வாய் (Mars) லோகத்துல இருக்குற அடியேனோட Shell ஒடம்போட டெம்பரேச்சரோ சாதாரணமா 10000°C மேல இருக்கும்டா...” சிறுவன் குறுக்கிட்டான். “என்ன வாத்யாரே... சென்டிகிரேட், பாரன்ஹீட் எல்லாம் இந்த பூலோகத்துல தானே...!”

“பாத்தியா.. இங்க தாண்டா நீங்க தப்பு பண்றீங்க? நான் படிச்சு படிச்சுச் சொல்லிருக்கேனே.. இந்த மாதிரி பூலோகம் எவ்வளவோ இருக்குடான்னு! ஒரு பூமில வேண்டாம்னு தூக்கிப் போட்ட பொம்ம தாண்டா நீங்க வச்சுருக்கற கம்ப்யூட்டரும், போயிங்கும்.. Concorde –ம் (boeing aeroplanes) இந்த பூமிய விட நூறு... ஐநூறு, ஆயிரம் வருஷம் முன்னாடி அட்வான்சா போய்க்கிட்டு இருக்கற பூமி நெறய இருக்குடா! ... ஆனா இப்பன்னு இல்ல.... நீ பெரியவனான, அப்புறம் இத எடுத்துச் சொன்னாக் கூட யாரும் நம்ப மாட்டாங்கடா..... ஆனா நூறு வருஷம் கழிச்சு கொஞ்சம் கொஞ்சமா..... ஆமா இந்த மாதிரி பூலோகம் ஒண்ணு. .. ரெண்டு இருக்குன்னு அப்ப விஞ்ஞானம் சொல்லும்.. இதயெல்லாம் நீ record பண்ணி வெய்டா! கடவுள் அருள்னால உனக்குன்னு சரஸ்வதி தேவி ஒரு மகஸின் (Magazine) தருவா! (என்னே தீர்க்க தரிசனம்!) அதுல இத record பண்ணி வச்சா பின்னாடி வர்றவங்க இத வச்சு பெரிய பெரிய ரிஸர்ச் எல்லாம் பண்ணுவாங்க....!“ சிறுவனும் ஏதோ நினைப்பில் ஆழ்ந்தான்..

காரிருளில் ககன கரிவலம்!
இப்படித்தான் ஒரு முறை.... அப்போது பெரியவரும் சிறுவனும் திருஅண்ணாமலையில் மிகவும் மெதுவாக அடிப் பிரதட்சிணமிட்டுக் கிரிவலம் வந்து கொண்டிருந்தார்கள்.. இதற்குக் குறைந்தது ஒரு வாரமாவது ஆகும். ஆங்காங்கே பானை, அரிசி, விறகு, காய்கறி, உப்பு, புளி வாங்கி ‘சால்’ வைத்துச் சாப்பிட்டு அங்கங்கே அன்னதானம் செய்து பெரியவர் ஒரேடியாக அமர்க்களப்படுத்தி விடுவார்... பிறகு அடிப்பிரதட்சிணம் தொடரும்.. ஆங்காங்கு அருகில் உள்ள தீர்த்தத்தில் குளியல்! அப்போது 360க்கும் மேற்பட்ட தீர்த்தங்கள் திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்தன.. சிறுவனே கிட்டத்தட்ட 100 தீர்த்தங்களில் நீராடியிருக்கின்றான்! இப்போதோ அவை சூட்சுமமாகத்தான் இருக்கின்றன, ஒன்றிரண்டைத் தவிர! எப்போதும் விடுவிடு என்று வேகப் பரிநடைபோடும் பெரியவர் அன்று ஆடி அசைந்து, நடந்து அடிப்பிரதட்சிணம் செய்தார். சிறுவன் கூடக் கேட்டுவிட்டான்.. “இப்படி நடந்தா எப்படி.... இருட்டுல என்ன தெரியும் வாத்யாரே?”

‘இருட்டுல எட்டுத் தலையும் தெரியும்டா.. மண்டு பின்னென்ன பயமா இருக்குன்னா என் பின்னாடி வரவேண்டியதுதானடா! ஒனக்கு பாம்பு பயம் எப்பவும் போகாதுடா! இத்தனைக்கும் நம்ப சித்தர் பரம்பரைல வர்ற நாகங்களுக்கு chief  அஸ்தீக சித்தரைப் பற்றி உனக்கு மாங்கு மாங்குனு நெறயச் சொல்லியிருக்கேனே, என்ன பிரயோஜனம்! நீ இருட்டுல தொட்டால் பாம்பு, விட்டா விரியன்னுல்ல ஓடற....!”

அப்போது கிரிவலத்தின் காமக் காட்டுப் பகுதி (தற்போது சிவராஜ சிங்க தீர்த்தத்திற்கு முந்தைய பகுதி) மிகவும் அடர்த்தியாக இருக்கும் அண்ணாமலை உச்சியே தெரியாது! அதாவது காமம் (காடாகக்) கண்ணை மறைத்தால் கடவுள் தரிசனம் கிட்டாது என்பது இதன் மறைபொருள்! அப்போது கிரிவலத்தில் மண் பாதைதான் இருந்தது! கிரிவலப் பாதையில் மூன்றாம் பிறை தரிசனத்தைப் பெரியவருடன் தரிசித்த சிறுவன் அத்துடன் பெரியவர் கிரிவலத்தை நிறுத்தி விட்டு இடையில் தங்கி மறுநாள் விடியற்காலையில் தொடருவார் என்று எதிர்பார்த்தான் சிறுவன்! ஆனால்..... “வா.... வா.... ! இந்த சந்திர வெளிச்சத்துல மலைப்பக்கம் வேகமாப் போயிடலாம்....” என்று சிறுவனுடன் அதுவும் கும்மிருட்டில்! இலை, தழைகளைத் தள்ளிக் கொண்டு காரிருளில் நடந்தால் என்ன தெரியும்? மலை தரிசனமே தெரியவில்லை! மூன்றாம் பிறை சந்திர ஒளியில் என்ன தெரியும்? அதுவும் ஒருசில நிமிடங்களுக்குத்தானே தெரியும்! சித்தன் போக்கு சிவன் போக்கு! ஏதோ நெடுந்தூரம் நடந்தாற் போல் சிறுவனுக்கு உணர்வு ஏற்பட்டது!

ஆனால் அடிக்கடி பெரியவர் சொல்லுவார், “அண்ணாமலைல ஒரு சின்னக் கல்லை நகத்திப் பார்த்தா போதும் உள்ளே கோடானு கோடி லோகங்கள் இருக்குடா! ஆனா விஷப் பரீட்சை செய்யக் கூடாது, சோதனை செஞ்சு பாக்கக் கூடாது! நீ வானத்துல பாக்கற அத்தனை கோடி சூரிய, சந்திர, நட்சத்திரத்தையும் இதுக்குள்ள பாத்திடலாம்னா பிரபஞ்சத்துகே இதுதான் Divine Head Office , divine centreங்கறதை புரிஞ்சுக்கோ! பின்னாடி எல்லாருக்கும் எடுத்துச் சொல்லு!”

கிரிவலப் பாதைச் சுற்றளவை விட ரொம்ப தூரம் நடந்தாற் போல் அப்போது சிறுவன் உணர்ந்தான்! முள், கல், கம்பு, குச்சியெல்லாம் குத்தி உராய்ந்த சிறுவனுக்கு முட்டி, கால், பாதமெல்லாம் சர்வம் எரிச்சல் மயம்! எரிச்சலால், “உஸ் உஸ்” கொட்டிய அவனுக்கே ஒரு எண்ணம் வந்துவிட்டது. “பெரிய டிராயரை மாட்டிக் கொண்டு அலையும் நமக்கே இந்த எரிச்சல் என்றால் கோவணாண்டியாய்த் திரியும் வாத்யாருக்கு எப்படி இருக்கும்?”
சிறுவனுக்குக் கண்களில் நீர் திரண்டு பொங்கியது. பாவம்! நமக்காக எவ்வளவு பாடுபடுகிறார். ஒருவழியாய்க் கும்மிருட்டில் ஏதோ ஒரு இடத்தை அடைந்த பெரியவர். “ஏண்டா ராஜா.. ரொம்ப டயர்டா இருக்கு இல்ல! கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுக்கறியா!”
களைப்பால் தாகம், பசியை மறந்த சிறுவன், “சரி வாத்யாரே... இப்படியே கீழே படுத்துடவா?” என்று பவ்யமாகக் கேட்டிட, “ஆங் ... இந்தக் காட்டுல உனக்காக ஒரு பெரிய bed  ரெடி பண்ணிருக்கேண்டா!”

ஸ்ரீதவக்கோல அம்பிகை திருநீலக்குடி

ஸ்ரீஅழகாம்பிகை திருநீலக்குடி

அந்த இருட்டில் பெரியவர் சிறுவனை அலாக்காகத் தூக்கி ஒரு பெரிய பாறை போலிருந்ததின் மேல் உட்கார்த்திப் படுக்க வைத்தார்! அது ஜில்லென்று நல்ல வழவழவென்றிருந்தது. கமகமவென்று மல்லிகை மணம் அங்கு பொங்கிடவே....! சிறுவனுக்கு பகீரென்றது! “மல்லிகைப் பூ வாசனை வந்தாக்கா வாத்யார் அங்க நல்ல பாம்பு இருக்கும்னு சொல்லுவாரே!” சிறுவனுக்குக் கிலி பற்றியது. கல் போலிருந்தாலும், ஊத்தப்பம் போல மெத்மெத்தென்றிருந்தது அப்பாறை, கப்சிப்பென்று வாயடங்கி அந்த பெரிய வழவழாவில் நன்கு புரண்டு படுத்து அசதியால் நன்கு உறங்கி விட்டான் சிறுவன்! விடியற்காலை... சூரிய உதய நேரத்திற்கு முன் சற்றே கண்விழித்த சிறுவன், படுத்த இடத்திலிருந்து பெரியவரைத் தேடினான். அவரோ சற்றுத் தொலைவில் கீழே புதரருகில் மண்ணோடு மண்ணாய்ப் படுத்து அசதியால் நன்கு உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது தான் இரவில் எதில் படுத்தோம் என்று பார்த்திட்டான் சிறுவன். கீழே பார்த்தால் நல்ல உயரம் ஐந்தடிக்கு மேலான வெள்ளைப் பாறை போலிருந்தது. தொப்பென்று கீழே குதித்த சிறுவன். தான் குதிக்கும்போது அந்தப் பாறை சற்றே அசைந்திடுவதைக் கண்டு ஆச்சரியமடைந்தான்!

கீழே குதித்து என்னவென்ன பார்த்தால்! “வாத்யாரே...” என்று அலறி அடித்துப் பெருங்குரல் கொடுத்து விழுந்தடித்துக் கொண்டு பெரியவரை நோக்கி தட்டுத் தடுமாறி கீழே விழுந்து, முழுங்கால்களில் ரத்தம் சொட்டச் சொட்ட பதட்டத்துடன் உலக மகாபீதியுடன் களேபரத்தைக் கூட்டிக் கொண்டு ஓடினான். உறங்கும் பெரியவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு ஊரே அலறக் குரல் கொடுத்துத் திரும்பிப் பார்த்தான் சிறுவன்! ... அங்கே....

20 அடிக்கும் மேலான எட்டுத் தலை நாகம்! ஆம்! அது மடித்து மடித்து அழகாகப் படமெடுத்து நிற்க! அதன் பாம்பு மடி மெத்தையில்தான் இரவு முழுவதும் அனந்த சயனம் கொண்டிருந்தான் சிறுவன். கனவா? நனவா? “என்னடா ராஜா... ஏண்டா பெரிசா குரல் கொடுத்து அழுவற....?”

“அதோ... அதோ .. ” சிறுவன் கண்களைத் திறவாமல் அந்த திசையைக் காட்டிட ... “என்னடா.. ஆச்சு... உனக்கு..” பெரியவர் அவனை உலுக்கிட, சிறுவன் மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தான். அந்த எட்டுத் தலை நாகம் இருந்த திசை நோக்கிப் பார்த்திட ... அங்கு ஒன்றையும் காணோம்., வெறும் செடி, கொடிதான் இருந்தது. பெரியவர் கலகலவென்று அண்ணாமலையே அதிரும்படி சிரித்தார்.. அவருடைய சிரிப்பில் கூட புன்னாகவராளி ரா(நா)கம் பளிச்சிட்டதோ!

“அது அப்பவே நாகலோகத்துக்குப் போயிருச்சுடா..!” பெரியவரின் சிரிப்பு நாகலோகம் வரை நீண்டதோ! “இருட்டுல எட்டுத் தலை தெரியும்டா..... என்று முன்னரேயே வாத்யார் சூட்சுமமாகச் சொன்னாரே புரிந்து கொள்ளாமல் போனோமே”,
சிறுவனை அரவணைத்துக் கொண்டு.. உலகம் அதிரச் சிரித்தார்... அரவ(ணை)ச் சிரிப்புத்தானது! 

திருநீலக்குடி சிவாலயம்

தென்காசி மகாத்மியத் தொடர் – 9 வெற்றிக்கு வடிவழகு தரும் தென்காசி தேவா போற்றி! போற்றி!! – திருநீலக்குடி

ஒன்பது என்பது நம் வாழ்வில் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கின்றது. ஏனெனில் உடலில் ஒன்பது துவாரங்களுடன் வாழ்பவன் தானே மனிதன். அவனுடைய பாவ வினையும், புண்ய சக்தியும், தீவினைக் கர்மங்களும், நல்வினைக் கர்மங்களும் அனைத்துமே உருவெடுப்பது இந்த ஒன்பது துவாரங்கள் வழியாகத்தான். இத்துவாரங்களின் வழியே ஏற்படும் ஆன்ம வாழ்வை முறைப்படுத்துவதற்காகத்தான் நவக்கிரஹ வழிபாடு என வகுத்தார்கள். வெற்றிக்கு வழிவகுக்கின்ற ஆயுட்சக்தியைப் பெற வேண்டுமானால் ஒன்பது துவாரங்களுக்கும், பீடமான மன உடலை ஆன்மப் பாதையில் செலுத்த வேண்டும். இதற்கு வழிவகை செய்பவரே கும்பகோணம் அருகில் திருநீலக்குடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீநீலகண்டேஸ்வர மூர்த்தியாவார். ஸ்ரீமனோக்ஞ நாத சுவாமி என்ற பெயர் கொண்ட இச்சிவலிங்க மூர்த்தி நம் வெற்றிக்கு வடிவழகு ஊட்டும் திடகாத்திரமான மனதையும் பக்தி நிறைந்த உள்ளத்தையும் பெற்றுத் தருகிறார். இவை இரண்டுமே வெற்றிப் பாதைக்கு மிகவும் அவசியம். உணவிற்கு நவச்சாரம் என்ற ஒன்பது வகையான குணப்பாடுகள் உண்டு. உப்பும் நம் உணவில் குறிப்பிட்ட அளவே இருக்க வேண்டும். அதிகமானால் விஷ சக்தியாக மாறுகிறதல்லவா? உண்ணும் உணவே நமக்கு மூலாதார ஆயுட்சக்தியை அளிக்கிறது. உணவில் உள்ள விஷசக்திகளை அகற்றி, நல்ல மனோசக்தியை ஏற்று கிரஹித்து ஆயுட்சக்தி அளிப்பதற்கு நல்ல மனோபாவமும், ஜீரண சக்தியும் நிறைந்திருக்க வேண்டும். உணவு என்பது நம் மனோபாவத்தின் வெளிப்பாடே! உணவு ஜீரணமாகவும், உணவின் விஷத்தை மலமாக்கிடவும் தகுந்த மனோசக்தியும் தேவையே! இம்மனோ சக்தியானது நன்முறையில் வெளிப்பட்டு மனதை திடமாக்கி உள்ளத்தைப் பக்குவமாக்கினால்தான் பக்தியும், வெற்றியும் மிளிரும். இவற்றை அருளிடவே ஆலகால விடத்தைத் தம் கண்டத்தில் நிறுத்திய ஸ்ரீஆதிசிவன் இங்கு வீற்றுள்ளார். மேலும் நம் உடல் உணவை மட்டுமா ஏற்கிறது. இப்பரவெளியில் பரவிக் கிடக்கும் நல்லது கெட்டது, நல்லவை தீயவை அனைத்துமே மூச்சு சுவாசம் வழியாக உள்ளே செல்கின்றது. இவற்றில் பூதசக்திகளின் உதவியால் நற்சக்தியை மட்டும் பெற உதவி புரிவதே மனோ சுவாசமாகும். பூரகம், ரேசகம், கும்பகம் ஆகிய மூன்று முறைப்படி சுவாசத்தை உள்ளே இழுத்தல், தங்குதல், உள்ளிழுத்தல் ஆகிய மூன்றிலும் பஞ்சபூத யோக நிலைகள் நிறைந்துள்ளன. நிலம் நீர் காற்று நெருப்பு ஆகாயம் என்ற ஐந்து பஞ்ச பூத சக்திகள் அனைத்துமே சுவாச நாளத்தில் நிறைந்துள்ளன. இந்த பஞ்சபூத சக்தியே சுவாசம் மூலமாக நம் உடலில் ஒன்பது துவாரங்களிலும் நம் ஆயுட்சக்தியை விருத்தி செய்கின்றது. இந்த அபூர்வமான ஆன்ம மனோ சக்தியை அளிப்பவரே திருநீலகண்ட மூர்த்தியாவார். மேலும் ஒன்பது வகையான நவபாஷாண சக்திகள் நிறைந்த அருட்தலமாகவும், விடத்தை வென்ற ஸ்ரீநீலகண்ட மேனியனின் இத்திருத்தலம் விளங்குகின்றது.. எடுத்த காரியத்தில் வரும் எவ்விதத் தடங்கல்களையும் நீக்கும் வல்லமை பெற்ற ஸ்ரீவசிஷ்ட முனிவர் வழிபட்டதே பஞ்ச வில்வாரண்யம் எனப்படும் திருநீலக்குடியாகும்.. அதுபோல எமதர்மனை எதிர்த்து நிற்கும் மனோதிடமும் உள்ளப் பக்குவத்தையும் ஸ்ரீமார்கண்டேயர் பெற்ற தலம் இதுவே! பிரம்மகுண்டம், க்ஷீரகுண்டம், தேவி தீர்த்தம் போன்ற பல தீர்த்தங்களை இவ்விடத்தில் ஸ்ரீபரத்வாஜ மாமுனியும், ஸ்ரீவசிஷ்ட மாமுனியும், ஸ்ரீமார்கண்டேய ரிஷியும் உருவாக்கி ஜீவன்களுடைய நல்வாழ்விற்காக அர்ப்பணித்துள்ளார்கள். வெற்றிக்கு வழிவகை செய்யும் தென்காசி தரிசனத்திற்கு முன் தேவையான மனோதிடத்தை அளிக்கவல்ல திருநீலக்குடி ஸ்ரீமனோக்ஞநாத சுவாமி திருவடிகளே போற்றி! போற்றி! போற்றி!

இறப்பின் இரகசியம்

முடிவில் முடியா முடிவு – இறப்பின் இரகசியம்

முடிவிற்கு முன் ஒரு தேவ Notice!

வாழ்க்கை முடிவிற்கு ஒரு வாரத்திற்குள்ளாக மரணதேவதை மூலமாக வாழ்வின் முடிவும் அனைவருக்கும் தெரிவிக்கப்படுகின்றது. ஆம், இது உண்மையே! தாவரங்களோ, விலங்குகளோ, தம் முடிவை இயற்கை நியதியாக ஏற்றிட மனிதன் மட்டும் மரணத்தை எதிர்க்கின்றான்.. நோயுடன் போராடுவது வேறு. மரண முடிவை இயற்கையின் நியதியாக ஏற்காமல் எதிர்ப்பது வேறு! மரண அறிவிப்பினை ஒருவாரத்திற்கு முன் ஒருவர் சூட்சுமமாகப் பெறும்போது ஒரு நிபந்தனையுடன் அது வருகின்றது! என்ன அது!

எக்காரணம் கொண்டும் மரண கால நேர தேவ ரகசியத்தை எவருக்கும் தெரிவித்தல் கூடாது என்பது அந்த நிபந்தனை.. மீறினால்... அதனைச் சொல்ல முடியாமல் வாய் குழறும்.. கோமா (Coma)  வரும், மயக்கம் ஏற்படும், மறதி வந்து சொல்ல முடியாமற் செய்துவிடும்.. மரண தேவதையின் முடிவை எவரும் மீற இயலாது.. பலரும் மரணப் படுக்கையில் எதையோ சொல்லத் துடிப்பதைப் பார்த்திருப்பீர்கள். அது ஏனோ? என்னவோ? தாம் மரணமடைய இருப்பதை அவர்கள் இயற்கைக் கட்டுபாட்டையும் மீறிப் பிறருக்குச் சொல்ல முயற்சிக்கு போது இயற்கை தேவதை அதனைச் சொல்ல விடாது. மேலும் ஒருவருடைய மரணத்தைப் பற்றி ஒருவருக்கு முன்னாலேயே தெரிய வந்தால் கலியுக விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை நாம்  நன்கு அறிவோம்... தற்கொலையின் நிலை எப்படியோ? அது உண்மையான மரணமாகாது. ஓர் உயிரைக் கொல்வது கொடூரமான பாவமாகும். தற்கொலை இவ்வகையைச் சேர்ந்ததே! தற்கொலை என்பது இறைவன் தந்த அதியற்புதப் பரிசான மனிதப் பிறவியையே (தற்கொலை மூலம்) இறைவனின் முகத்தில் வீசி எறிவதாகும். எந்த பிராயசித்தமும் இல்லாத கொடும்பாவச் செயலே தற்கொலை, தற்கொலை செய்து கொள்பவர்கள் கோடானு கோடி வருடங்களாகப் பசி, பிணி மூப்புடன் கூடிய கொடூரமான பிசாசுகளாகவே ஆதரவின்றி அனாதையாக அலைகின்றார்கள்.. நாய்களுக்குக் கூட எமலோக தேவதா காட்சிகள் நன்கு தெரியும்.. நாய்களின் அழுகையின் குணாதிசயங்களைக் கொண்டு மரணம் சம்பவிக்க இருக்கின்ற திசையைக் காட்டும் சகுன சாத்திரங்களும் உண்டு.

ஸ்ரீபரிதியப்பர் பரிதிநியமம்

மரண நேரத்தில் மாதவ ஸ்மரணம்!
ஏனிந்த மரணம் பற்றிய விளக்கங்கள்? என்றேனும் ஒரு நாள் பிறந்தவர்கள் இவ்வுடலை விட்டுப் பிரிந்தாக வேண்டும் தானே! உடலின் மரணப் பிரிவு பற்றிய தெய்வீக விளக்கங்களை நாம் ஓரளவேனும் உணர்ந்து கொண்டால்தான் இறுதியில் எதற்கும் அலையாது அமைதியுடன் மரண தேவதைகளை எதிர்கொண்டு சாந்தமான இறுதி நிலையைப் பெற்றிடலாம்! ஆமாம் மரண பயம் என்று ஒன்று இருக்கின்றதே! அதைப் எப்படிப் போக்குவது? தாம் இறந்துவிடுவோமா என்று அஞ்சி அஞ்சி வாழ்பவர்களும் மரண பயத்தைப் போக்க விரும்புவர்களும் என்ன செய்ய வேண்டும்? எமனை வென்ற ஸ்ரீமார்கண்டேய மஹரிஷி எந்நாளும் எந்நேரமும் சம்புட யோகத்தில் தியானிக்கின்ற, திளைக்கின்ற தலமான பட்டுக்கோட்டை அருகில் உள்ள பரிதிநியமத்தில் (ஒரத்தநாடு அருகே உள்ள தற்போதைய மேல்உளுர் கிராமம்) பரிதியப்ப சிவலிங்கத்தினை வழிபட்டு வருதல் வேண்டும். சூரிய பகவானே வழிபட்டுப் பல தோஷங்களையும், நோய்களையும் சாபங்களையும் நிவர்த்தி செய்து கொண்ட தலம் இது. எமன் தம் உயிரைப் பறிக்க வந்தபோது மரண பயத்தை வென்று சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்தார் ஸ்ரீமார்கண்டேய மஹரிஷி தாம் அவ்வாறு சிவலிங்கத்தை ஆலிங்கனம் செய்த அதே சம்புடயோகத்திலேயே பரமானந்த நிலையில் என்றும் திளைத்து நிற்க விரும்பியமையால் இறையருளால் என்றும் சிரஞ்சீவியாய் மரணமில்லாப் பெருவாழ்வு கொண்டாராய் என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாய் சம்புயோக ஜடாதரராய் சூட்சுமமாக இந்த ஆலயத்தில் ஸ்ரீமார்கண்டேய மஹரிஷி யோக நிலை பூண்டுள்ளார்., இது பித்ருத் தர்ப்பணத் தலமாகவும், பித்ருக்களுக்கே முக்தி தருகின்ற அற்புதத் தலமாகவும் விளங்குகின்றது. இங்கு அமாவாசை மற்றும் பித்ரு திதிகளில் தர்ப்பண மிட்டு பித்ரு ஹோமம் செய்து வந்தால் மரண பயம் தீரும். குறிப்பாக மாரடைப்பு நோயால் அவதிப்படுவோர் மரண பயம் நீங்கி தக்க அறவழி முறைகளைப் பெற்றிடலாம்.

குறிப்பு : (நம் ஆஸ்ரம வெளியீடான “இறப்பின் ரகசியம்” நூலில் சிறுவன் நம் சற்குருவாம் பெரியவரிடம் கற்ற குருகுலவாசப் பாடத்தின் ஒரு சில அமிர்தத் துளிகளாக மரணம் பற்றிய அரிய ஆன்ம விளக்கங்களைக் காணலாம். மரண பயம் நீக்கும் மாமருந்து இது!)

அமுத தாரைகள்

1. பெண் மருத்துவர்களுக்கான ஸ்ரீகௌடீ அம்மன் வழிபாடு :
காசிக்குச் செல்கின்றவர்கள் அறியாமையால் ஸ்ரீகௌடீஅம்மன் என்ற சோழி அம்மனைத் தரிசிக்காமல் வந்து விடுகின்றார்கள். காசி தரிசனத்தின் பலாபலன்களைப் பரிபூரணமாகப் பெற வேண்டுமென்றால் ஸ்ரீகௌடீ அம்மனை நிச்சயமாகத் தரிசித்தாக வேண்டும். இந்த அம்மனுக்குப் பட்டு வஸ்திரங்களைச் சார்த்தி அவற்றை தானமளிப்பதால் பலவிதமான கர்மவினைகளுக்கு நீங்கள் எளிய தீர்வுகளைப் பெற முடியும். ஸ்ரீகௌடீயம்மன் தரிசனத்தால் மட்டுமே தீருகின்ற எத்தனையோ கர்மவினைகள் உண்டு. வேறு எங்கு சென்றாலும் நீங்கள் அந்த கர்மவினைகளுக்கான பரிகாரங்களைப் பெறவே முடியாது. அந்த அளவிற்கு காசியில் ஸ்ரீகௌடீ அம்மன் அற்புத தெய்வீகச் சக்தி நிறைந்தவளாக விளங்குகின்றாள். யோனி சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தக்க தீர்வைப் பெற்றுத் தருவது ஸ்ரீகௌடீ அம்மன் தரிசனமும் இங்கு செய்யப்படுகின்ற பட்டு வஸ்திர தானமும் ஆகும். ஸ்ரீகௌடீ அம்மனுக்கு ஒரு மண்டல நேர்த்தி வைத்துக் கொண்டு உடல் சுத்தமாக, புனிதமாக விரதத்தை மேற்கொண்டு, காசிக்குச் சென்று ஸ்ரீகௌடீ அம்மனைத் தரிசித்து, அம்மனுக்குப் பட்டு வஸ்திரம் சார்த்தி, அவற்றை உடனடியாக அங்கே ஏழைகளுக்கு தானமாக அளித்து வந்தால் தீர்க்க முடியாத பல யோனி சம்பந்தமான நோய்களுக்கு அற்புதமான தீர்வைப் பெற்றிடலாம். பெண் மருத்துவர்கள் குறிப்பாகப் பிரசவ நிபுணர்களும், Gynaecologist, Obstertrician போன்ற பிரசவ வைத்தியர்களும் ஸ்ரீகௌடீ அம்மனைத் தரிசித்து வருதலாலும் இங்கு குறித்த தான தருமங்களைச் செய்தலாலும் தங்களுடைய துறையில் நல்ல முன்னேற்றம் அடையலாம். ஸ்ரீகௌடீ அம்மனின் திருவுருவப் படத்தைத் தங்களுடைய மருத்துவமனையில் வைத்திருந்து சோழிகளால் மாலை அணிவித்து, வழிபட்டு வருதலும் சிறப்புடையதாகும்.

திருக்கொண்டீச்சரம்

2. வெம்மை நோய் தீர்க்கும் ஸ்ரீஜுரஹரேஸ்வரர்
ஸ்ரீஜுரஹரேஸ்வர லிங்கமாகவும் ஸ்ரீஜுரஹரேஸ்வர மூர்த்தியாகவும், பவானி, தஞ்சாவூர் ஸ்ரீசங்கர நாராயணன் ஆலயம் போன்ற பல இடங்களில் தரிசித்திடலாம்., உலகத்தில் உஷ்ணத்தால், வெம்மையால் ஏற்படுகின்ற நோய்கள் பலப்பல. T.B எனப்படும் காசநோயினாலும், Fits எனப்படும் தேகவலிப்பு நோயினாலும் உள்ளங்கையில், உள்ளங்கால்களில், உடலில் எப்போதும் வெம்மை நிறைந்திருக்கும். அடிக்கடி காய்ச்சல் வந்து அவதியுறுகின்ற குழந்தைகளும் ஏராளம். இத்தகைஅ வெம்மை சம்பந்தமான நோய் உள்ளோர்க்கு ஒரு சிறு உடல் உபாதை ஏற்பட்டால் கூட உடல் வெப்பநிலை ஏறிவிடும்.. அடிக்கடி அம்மை நோயால் பாதிக்கப்படுகின்ற பிள்ளைகளும் அதிகம்.. எனவே உடல் வெம்மையால், வெப்ப நோய்களால் அடிக்கடி சுரம், உள்காய்ச்சல், ஆஸ்துமா, Wheezing போன்ற நோய்களால் அவதியுறுவோர் ஸ்ரீஜுரஹரேஸ்வரருக்குச் சந்தன காப்பு சாற்றி இளநீர், பழரசம், வெள்ளரிப் பச்சடி போன்றவற்றைப் படைத்து ஏழைகளுக்கு தானமாக அளித்து வந்தால் வெம்மை நோயால் ஏற்படுகின்ற நோய்களுக்கு நிவாரணம் கிட்டும்.. இவ்வகையில் திருவாரூர் (நன்னிலம்) அருகே திருக்கொண்டீச்வரம் (வில்வாரண்யம் – கொண்டீச்வரம்) என்ற திருத்தலத்தில் ஸ்ரீபசுபதி நாயகர் ஆலயத்தில் ஸ்ரீஅகத்தியப் பெருமானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீஜுரஹரேஸ்வர லிங்கமூர்த்தி அற்புத சக்தியுடன் அருள்பாலிக்கின்றார்.. லிங்கத்தில் பிளவு ஏற்பட்ட உஷ்ண சக்தியால் பிரபஞ்சம் பாதித்திடலாகாது என்பதற்காக அந்த வெம்மையை அகத்திய மாமுனி தன் திருஉடலில் தாங்கியமையால் அவருக்கு ஜுரம் கண்டது... இறைவன் இட்ட கட்டளைப்படி ஸ்ரீஜுரஹரேஸ்வரரை ஸ்ரீஅகஸ்தியரே பிரதிஷ்டை செய்து இங்கு வழிபட்டதால் செவ்வாய்க்கிழமை, ஷஷ்டி, அஸ்வினி நட்சத்திர நாட்களில் கொண்டீச்வரம் ஸ்ரீஜுரஹரேஸ்வரருக்கு சந்தனக் காப்பிட்டு பழரசம், இளநீர், தயிர் சாதம் படைத்து ஏழைகளுக்கு நிறைந்த அளவில் தானமளித்து வந்தால் மேற்கண்ட நோய்களுக்கு தக்க நிவாரணம் கிட்டும்.

3. நேரம் இல்லையா, ஏன் இந்தப் பொய் இறைவனிடம்...?
அந்தக் கோயில் கும்பாபிஷேகத்திற்குச் சென்றீர்களா? இந்த ஆன்மீகப் புத்தகத்தைப் படித்தீர்களா? இன்று கிருத்திகை ஆயிற்றே, விரதம் இருந்தீர்களா? முருகன் கோயிலுக்குச் சென்றீர்களா? என்று கேட்டால்... “எனக்கு எங்கே நேரம் இருக்கிறது இதற்கெல்லாம்? Mechanical life ஆக எப்போதும் tight ஆக இருக்கிறேன்”! என்று சொல்லிச் சொல்லி அங்கலாய்த்துக் கொள்பவர்கள் நிறைய உண்டு கலியுகத்தில்! ஏனிந்தப் பொய் இறைவனிடமே! சற்றே யோசித்துப் பாருங்கள்! உங்களுக்கு நேரமில்லை, நேரமில்லை என்று சொல்லி உங்களுக்கு ஊனுடம்பு, உயிரைத் தந்த இறைவனை ஏன் இரண்டாம் பட்சமாக்கி விட்டீர்கள்? இதே உங்களுக்கு வேறு ஏதாவது தலைவலி என்றாலோ, வயிற்று வலி என்றாலோ எல்லாக் காரியங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு நான்கைந்து மணி நேரம் படுக்கையில் படுக்கத்தானே, தூங்கத்தானே முயற்சி செய்கின்றீர்கள்! காலையில் 10 மணிக்கு அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்பதற்காக அரைகுறையாக இறைதரிசனம், பூஜைகளை முடித்துவிட்டு காலையில் வேகவேகமாக பஸ்ஸைப் பிடிப்பவர்கள் பஸ் பஞ்ச்சராகி இடையில் நின்று விட்டால் என்ன செய்வார்கள்! செல்கின்ற சைக்கிள், ஸ்கூட்டர், பஸ்ஸில் காற்று இறங்கி விட்டால் அலுவலகத்துக்கு போயே ஆக வேண்டும் என்று அந்தந்த வாகனத்தினிடமா முட்டிக் கொள்ள முடியும்! ஏன் இறைத் திருப்பணி என்றாலே ஒருவித பாரபட்சம்? பெறுதற்கரிய பௌர்ணமித் திருப்பணியாயிற்றே! மாதத்திற்கு ஒருமுறை தானே! இந்த அரிய வாய்ப்பை, தெய்வீகச் சந்தர்ப்பத்தை இழந்து விடாமல் பிடித்துக் கொள்வோம் என்ற எண்ணம் தோன்றாமல் திருஅண்ணாமலையில் பெறுதற்கரிய பௌர்ணமித் திருப்பணிகளை எல்லாம் உதறிவிட்டு பஸ்ஸைப் பிடிக்க வேண்டும் என்று அடித்துப் பிடித்து இடித்துக் கொண்டே விடியற்காலையில் அற்புதமான இத்திருத்தலத்தினை விட்டே ஓடி, திருக்கோயிலை விட்டே ஓடி வாழ்க்கையில் எதைத்தான் சாதித்தீர்கள்! சற்றே சிந்தித்துப் பாருங்கள்! இவ்வாறு இறைவனை விட்டே பிரிந்து வாழ நினைக்கின்ற மனிதனை என்னென்று சொல்வது?

ஸ்ரீசக்கரம் சிதம்பரம்

4. கர்பப்பை கோளாறுகளுக்கான நிவர்த்தி
தற்காலத்தில் கர்பப்பை கோளாறுகளால் எத்தனையோ இல்லறப் பெண்கள் அவதியுற்று வருகின்றார்கள்.. அறுவை சிகிச்சை செய்தும் உடல் பெருக்கம், மூச்சுத் திணறல் போன்ற பலவிதமான கூடுதல் விளைவுகள் (Side effects) ஏற்பட்டு விடுகின்றன... இதற்கு முதன்மையான காரணம் நம்முடைய மூதாதையர்களைப் போல துணிகளைத் துவைத்தல், கிணற்று நீரை இரைத்து நீராடுதல், பாத்திரங்களைத் தேய்த்தல், இல்லங்களை நன்கு குனிந்து கூட்டுதல், கோலமிடுதல், இடையில் குடங்களைச் சுமந்து வருதல் போன்ற பலவிதமான இயற்கையான, நடைமுறைக்கு ஏற்ற உடற்பயிற்சிக் காரியங்களைக் கைவிட்டமையால்தான்! Washing Machine, Water Pipe, பாத்திரங்களைத் தேய்க்கப் பணிப் பெண்களை அமர்த்திக் கொள்தல் இல்லறப் பெண்களுக்கு பழமையான யோகப்பூர்வமான உடற்பயிற்சிகள் குறைந்து விட்டன. இல்லாமலும் போய்விட்டன அக்காலத்தில் அரிசிக் குருணைக்காக சிறிய கல் எந்திரம் அமைக்கப்பட்டிருக்கும்.

இறைப் பாடல்களைப் பாடி ஆட்டுகல்லில் மாவு அரைத்தல், கல் எந்திரத்தில் கைகளால் சுற்றிக் குருணை செய்தல் போன்றவையெல்லாம் மிகவும் அற்புதமான தெய்வீகப் பயிற்சிகளாகும்.. ஒவ்வொரு வீட்டுக் காரியத்திற்கும் உரித்தான மந்திரங்கள், தெய்வீகப் பாடல்களும் நிறைய இருந்தன. ஆலயங்களில் விளக்கேற்றுதல் நீர்க்கோலம் போடுதல் போன்றவற்றை முறையாகச் செய்து வருபவர்களுக்கு முதுகுவலி, கர்ப்பபைக் கோளாறுகள் ஏற்படவே ஏற்படாது... இத்தகைய யோக சக்திகள் நிறைந்த உடற்பயிற்சிகளைக் கைவிட்டமையால்தான் பெண்களுக்குத் தற்காலத்தில் பல நோய்கள் ஏற்படுகின்றன.. அடிக்கடி கோயிலுக்குச் சென்று எல்லா சந்நதிகளிலும் கோலம் போட்டு வாருங்கள். அரிசி மாக்கோலம் தான் இடவேண்டுமே தவிர, எறும்புகளுக்கு வயிற்றுவலி தரும் மொக்கு மாவைப் போட்டால் ஏன் வயிற்றுவலியோ, கர்ப்பப்பை கோளாறுகளோ ஏற்படாது? சற்றே சிந்தித்துப் பாருங்கள். நோய்களுக்கு நிவாரணம் தரும் அற்புத மந்திர எந்திர சக்திகள் நிறைந்த பல ஆலயங்கள் உண்டு... இவ்வாலயங்களில் அடிக்கடி அரிசி மாக்கோலம் இட்டு வந்தால் இந்த எந்திர, தேவ சக்திகள் கால்பாதங்கள், விரல்கள் மூலமாக உடலில் கிரகிக்கப்பட்டு பலவிதமான நோய்களுக்குத் தக்க நிவாரணத்தையும் தந்திடும்.. ஸ்ரீசக்கர வழிபாட்டுத் தலங்களிலும் (சிதம்பரத்தில் ஸ்ரீசக்கரத்திற்கென தனி சந்நதியே உள்ளது..) ஸ்ரீஅக்னீஸ்வரர் என்றப் பெயரைத் தாங்கியுள்ள மூலமூர்த்தி அமைந்துள்ள கோயில்களும் (தஞ்சை அருகில் கஞ்சனூர், திருச்சி வயலூர் etc  காஞ்சீபுரம், திருஆனைக்காவல், சென்னை பூந்தமல்லி ஸ்ரீவைத்தீஸ்வரன் சிவ ஆலயம், மூலவருக்குப் பின்னால் ஸ்ரீமுருகன் சன்னதி அருகில் அற்புத சக்திகள் நிறைந்த சக்கரங்கள்/எந்திரங்கள்)... இவ்வாறாக எந்திர சக்திகள் நிறைந்த ஆலயங்களில் மாக்கோலமிட்டு ஏழை கர்ப்பிணிகளுக்கு ஆடைகள், டானிக்குகள், உள்ளாடைகள், நல்ல சக்தியுள்ள உணவு, பழங்கள் அளித்து பிரசவத்திற்கு உதவியும் செய்து வந்தால் கர்பப்பை கோளாறுகளுக்கு தக்க நிவர்த்திகளைப் பெற்றிடலாம்.

4. கணவனோ, பிள்ளைகளோ குடும்பத்தில் பற்றின்றி இருப்பதால் அல்லது பொறுப்பின்மையால் அவதிப்படுகின்ற குடும்பங்கள் ஏராளம்! தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பெருமகளூர் கிராமத்தில் தாமரைத் தண்டாலான லிங்க மூர்த்தியாக அருள்பாலிக்கும் ஸ்ரீசோமேஸ்வரருக்குத் திங்கட்கிழமைதோறும் வெண்பட்டு ஆடை சார்த்தி வழிபட்டுத் தேங்காய் சாதத்தையும், பட்டு ஆடைகளையும் ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்தால் பொறுப்பின்றி இருப்போருக்குக் குடும்பத்தில் பொறுப்பு ஏற்படும்.. பொறுமையுடன், நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள், ஸ்ரீசோமேஸ்வரர் நிச்சயமாகக் காப்பாற்றுவார்.

உத்திரமேரூர் விஷ்ணுபதி

ஸ்ரீவிஷ்ணுபதி புண்ய கால மகிமை :- நாள் : 14.5.2000

மனிதன் எதற்காகப் பிறந்தான்? தனக்குரிய கர்ம வினைகளை அறிந்து, தெளிந்து, அனுபவித்து, வினைகளைக் கரைத்துக் கர்மம் அற்ற கடவுட் பெட்டகமாக விளங்குவதற்காகத் தான்! மனிதன் என்ன, எறும்பு, புழு, மரம், செடி, கொடி போன்று ஒவ்வொரு ஜீவனின் வாழ்க்கைக் குறிக்கோளும் இது தானே! இந்த தெய்வீக உண்மை உங்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும்! மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாக ஒவ்வொரு வருடத்திலும் நான்கு முறை மட்டுமே வரும் விஷ்ணுபதி புண்ய காலமானது நள்ளிரவிற்குப் பின் சுமார் 2மணி முதல் காலை 10.30 மணி நேரம் வரை உள்ள மகத்தான தேவ மகிமைகள் நிறைந்த தெய்வீகமயப் புண்யகால நேரமாக அமைகின்றது. மிகமிகப் புனிதமாக விளங்குகின்ற இவ்விஷ்ணுபதி புண்யகாலத்தில் நீங்கள் செய்கின்ற அனைத்து விதமான வழிபாடுகளுக்கும், அபிஷேக ஆராதனைகளுக்கும் அதிஅற்புதமான, பலன்கள் கிட்டுவது மட்டுமின்றி அவை பன்மடங்காகப் பெருகி, நாம் மறந்து விட்ட, கைவிட்ட, அறியாமையினால் இழந்துவிட்ட பலவிதமான பூஜைகளின் பலன்களை ஓரளவு ஈடுகட்டுவதாகவும் அமைகின்றது. பூஜைகளைக் கைவிட்டால் கூட அதையும் மன்னித்து அதனையும் ஈடுசெய்வதற்கான அதிஅற்புதமான விஷ்ணுபதி, பிரதோஷம் போன்ற தெய்வீக நேரத்தையும் கடவுளே நமக்குத் தந்து அருள்கின்றான் என்றால் இப்பூலோக வாழ்வின் ஒவ்வொரு வினாடி காலகட்டமும் கடவுளின் அருளால் தானே இயங்கிக் கொண்டு இருக்கின்றது! என்னே இறைவனின் கருணை!

ஸ்ரீசோமநாதர் பெருமகளூர்

நம்முடைய வாழ்வின் கலியுகக் காலகட்டத்தில் மிகவும் விசேஷமான புண்ணிய நேரங்களுள் ஒன்றாக விளங்குவதே ஸ்ரீவிஷ்ணுபதி புண்ய காலமாகும். இப்புனிதமான விஷ்ணுபதி புண்ய நேரத்தில் செய்யப்படுகின்ற பூஜைகள், ஹோமங்கள், தர்ப்பணங்கள், அபிஷேக ஆராதனைகள், வழிபாடுகளுக்குப் பன்மடங்குப் பலன்கள் உண்டு. பலவிதமான வழிபாடுகளை நாம் மறந்து, கைவிட்டு வருகின்ற நிலையில் ஸ்ரீவிஷ்ணுபதி புண்யகாலம், பிரதோஷ காலம், கிரஹண காலம் போன்ற புனிதமான நேரங்களில் செய்யப்படுகின்ற பூஜாபலன்களின் பன்மடங்குப் பெருக்கமே நாம் இழந்த பூஜைகளுக்கு ஓரளவு நிவர்த்தியைத் தருவதாகும். இந்த விஷ்ணுபதி புண்யகாலத்தில்தான் எத்தனை எத்தனை இறைஅவதாரங்களும், இறை லீலைகளும், தெய்வீக அதிசயங்களும், அற்புதங்களும் நிறைந்துள்ளன. இன்றும் பூமியிலும் ஏனைய லோகங்களிலும் நிகழ்ந்து கொண்டும் இருக்கின்றன! ஏதோ விஷ்ணுபதி புண்யகாலம் என்றால் பழைய புராணம், மட்டுமே என்று எண்ணி விடாதீர்கள்.. ஏனென்றால் எத்தனையோ கோடி தேவ லோகங்களிலும், பூலோகங்களிலும் இந்த விஷ்ணுபதி புண்ய கால நேரத்தில்தான் இன்றைக்கும் எத்தனையோ இறை அவதாரங்கள் உற்பவித்துத்தான் வருகின்றன. இவையெல்லாம் மெய்ங்ஞான விஞ்ஞானத்தில் பகுத்துக் காட்டப்படுகின்ற இறைத் தத்துவங்களாகும்.. தக்க சற்குருவின் கருணையோடு தான், அருள்வழி முறைகளோடுதான் இவற்றை நாம் உய்த்து உணர இயலும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். விஞ்ஞானக் கண்களுக்குப் புலனாகாத அருட்புலனிது! கடந்த சில வருடங்களாகவே ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில், ஸ்ரீவிஷ்ணுபதி புண்யகாலத்தைப் பற்றி நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம்முடைய சற்குருவாம் சிவகுருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளின் திருவாய்மொழிகளாக விஷ்ணுபதி புண்யகாலத்தைப் பற்றிய அளப்பரிய தெய்வீக ரகசியங்களை இவ்வுலகிற்கு ஊட்டி உணர்த்தி வருகின்றார்கள்.. கடந்த முறை திருச்சி அருகே உள்ள பாடலூர் கிராமத்தில் ஸ்ரீவிஷ்ணுபதி காலத்தன்று ஆங்கே குழுமிய கருணைமிகுப் பெருமக்களின் பக்தி சிரத்தையை அறிந்து நாம் அளவிலாப் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.. எனவே இவ்வாறாக விஷ்ணுபதி புண்யகாலத்தின் மகிமையானது ஸ்ரீஐயப்ப விரதம், ஸ்ரீபிரதோஷ மகிமை போன்று உலகம் எங்கும் பரவிட வேண்டுமன்றோ! இதற்காக வைணவ அடியார்களும், பக்தர்களும் வைணவப் பெரியோர்களும், பக்த கோடிகளும் ஒன்றுகூடி அனைத்து வைணவத் தலங்களிலும், ஒவ்வொரு ஊரிலுமாக இதனைக் கொண்டாடி ஜாதி, மத, குல, இன பேதமின்றி உலக ஜீவன்களின் நன்மைக்காக இத்திருநாளில் பரம்பொருளாம் திருமாலுக்குரிய அபிஷேக ஆராதனைகளையும், தான, தர்மங்களையும் கடைபிடித்து அளப்பரிய இறையருளைக் கூட்டிட, பெற்றிட வேண்டுகின்றோம்..

பாண்டவர்கள் தரும் (இறைப்) பண்பாட்டுப் பாடம்!

மகாபாரதம் நமக்கு உணர்த்துகின்ற பாடங்கள் எத்தனை! எத்தனை! அதிலும் தர்ம சீலமிக்கவர்களாகப் பாண்டவர்கள் அறநெறியில் வாழ்ந்து காட்டித் தெய்வீகமும் இல்லற வாழ்க்கையும் இணைந்து மிளிர்வதாக மனித வாழ்வின் இலக்கணத்தை அமைத்துத் தந்து இருக்கின்றார்கள். பாண்டவர்கள் அஞ்ஞானவாசமாக தாங்கள் மேற்கொண்ட சத்திய நெறிப்படி பிறர் அறியாதவாறு வாழ்ந்த  இடங்கள் எத்தனையோ உண்டு. அவற்றிள் ஒன்றுதான் செங்கல்பட்டிலிருந்து 18கி.மீ தொலைவில் உள்ள உத்திரமேரூர் திருத்தலப் பகுதியாகும். இங்குதான் பஞ்ச பாண்டவர்கள் அருள்வரம் தரும் ஐந்து வரத (பஞ்ச) மூர்த்திகளை வழிபட்டு வந்திட்ட மிகவும் அற்புதமான ஸ்ரீவைகுண்டப் பெருமாள் ஆலயமுள்ளது! ஒன்பது பெருமாள் மூர்த்திகளுடன் திகழ்கின்ற உத்தமத் திருத்தலமே உத்திரமேரூர்! “மூவுறையிறைச் சாரம்” என்ற சித்த நெறி கருவறை நியதிச் சாரப்படி ஒன்றன் மேல் ஒன்றாக மூன்று கோபுர நிலைகளில் நின்ற நிலையில் ஸ்ரீசுந்தர வரதப் பெருமாளும், அமர்ந்த கோலத்தில் ஸ்ரீவைகுண்டப் பெருமாளும், சயனக் கோலத்தில் ஸ்ரீரெங்கநாத சுவாமியும் அருள்பாலிக்கின்ற திருத்தலம்! இங்கு தான் ஒவ்வொரு பாண்டவ சகோதரரும் தங்களுக்கென வழிபடு மூர்த்தியாக ஒவ்வொரு வரத மூர்த்தியைத் தேர்ந்தெடுத்துத் தங்கள் வனவாசத்தை இறைபக்தி வாசம் நிறைந்ததாக ஆக்கிக் கொண்டனர்! இன்றைக்கும் கிராமத்துத் தெய்வமாகப் போற்றப்படுகின்ற ஸ்ரீதிரௌபதி தேவியின் உத்தம தெய்வீக பக்தியைப் பற்றியும்  அவருடைய அற்புதமான இறைவழிபாடு முறைகளைப் பற்றியும் நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். ஸ்ரீதிரௌபதி தேவியே செய்த பூஜையின் அருட்திறனைக் கண்டு அம்பிகை ஆனந்தம் கொண்டமையால்தான் ஸ்ரீலோகநாயகியே ஸ்ரீஆனந்தவல்லியாக இங்கு ஆனந்த தரிசனம் இன்றைக்கும் தந்து அருள்கின்றார். இன்றும் தாயார் சந்நிதியில் குங்குமத்துடன் மஞ்சள் காப்பினைப் பிரசாதமாகத் தரக்கூடிய அதியற்புதத் தலம்!

ஸ்ரீமுருகப் பெருமான் வயலூர்

புஷ்பவதி வேண்டிய புஷ்ப நிதி!
பாண்டவர்களின் அந்த வனவாசத்தின் போது விக்ரம ஆண்டும் வந்து சேர்ந்தது. பூப்பந்தலின் புனிதம் தரும் விக்ரம ஆண்டிற்குரித்தான புஷ்ப பூஜை முறைகள் நிறைய உண்டு. இவற்றை குருவாய் மொழியாக அறிந்து கடைபிடித்தால் பல அற்புதமான உத்தம நிலைகளை எளிதில் பெற்றிடலாம். இப்பூவர்ச்சனைகளால் பொங்கிடும் திருப்பலன்களால் எத்தனையோ துன்பங்களுக்கும் தீர்வினையும் காணலாம். இது விக்கிரம ஆண்டிற்கே உரித்தான தனிப்பெருமை. பாண்டவ சகோதரர்கள் அதர்ம சக்திகளின் பிடியில் சிக்குண்டு அவ்வப்போது பிரிந்து வாழ்கின்ற நிலைகளைக் கண்ட ஸ்ரீதிரௌபதி ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் நேரடிப் பார்வையில் இருக்கும் தங்களுக்கே இந்நிலை என்றால் வரும் கலியுகத்தில் இதைப் போன்று கோடானு கோடி குடும்பங்களில் எழ இருக்கின்ற பல இல்லறப் பிரச்சனைகளை நினைந்து வருத்தமடைந்த ஸ்ரீதிரௌபதி இவற்றிற்குத் தக்க பரிகாரமாக ஓர் அற்புதமான புஷ்ப வழிபாட்டினை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடம் பெற்று அதனைக் கடைபிடிப்பதற்காக அதற்குரிய புஷ்பத்தை வேண்டி நின்றாள். ஆனால் புஷ்பத்தின் தெய்வ ரகசியத்தை உணர்வித்த ஸ்ரீகிருஷ்ணன் அப்புஷ்பம் எப்போது கிட்டும் என்பதை தேவ ரகசியமாக வைத்து விட்டார். செயற்கரிய செயலைச் செய்யவல்லவன் தானே பீமசேன மகாராஜா! “திரௌபதி உனக்கு வேண்டிய புஷ்பத்தை அடியேனே இறையருளால் தக்க சமயத்தில் கொண்டு வருகின்றேன்”, சத்திய வாக்குரைத்தார் உடனடியாகவா? அல்ல! அல்ல! ஒரு மண்டல காலம் ஸ்ரீசுந்தர வரதரை வேண்டி பல அற்புதமான புஷ்ப பூஜை முறைகளைக் கைக் கொண்டு சுந்தர வரதப் பெருமாளின் ஆசியுடன் தம் வனவாசத்தில் அதற்காகப் பெருமுயற்சி எடுத்துக் கொண்டான்.. எங்கு அந்த தேவலோகப் புஷ்பம் பூத்துக் கிடக்கின்றதோ அந்த வனத்திற்குச் செல்லும் வழியில்தான் வடக்கில் இமாலயப் பகுதியில் ஆஞ்சநேயப் பெருமாள் தம்முடைய நீண்ட வாலுடன் யோகச் சாயையில் சயனித்துக் கிடந்தார். அவர்தாம் மாருதி மூர்த்தி என்று அறியாத பீமசேனன், “ஏனிந்தக் குரங்கு குறுக்கே படுத்துக் கிடக்கின்றது”, என்று கோபங் கொண்டு அதனுடைய வாலைச் சுற்றிப் புரட்டி அடிக்க எண்ணிட்டான்.. ஓ! அந்த வாலோ சற்றும் அசைந்தபாடில்லை! பீமனால் அதனுடைய வாலைத் தொட்டுக் கூட சற்றே தள்ளவும் முடியவில்லை! மல்யுத்தத்தில் மகா வல்லவரான பீமராஜா, தன்னுடைய முழு பலத்தையும் தவப் பலன்களைப் பயன்படுத்தியும் தன்னால் அந்தக் குரங்கின் வாலை நகர்ந்த முடியாது என்று முடிவுக்கு வந்த போதுதான், “இது சாதாரணக் குரங்கு என்று எண்ணிட முடியாது“, என்ற எண்ணம் தோன்றிடக் கை கூப்பி வணங்கி நின்றான். ஸ்ரீஆஞ்சநேயப் பெருமான் புன்முறுவலித்தார், “பீமசேனா, என்னால்தான் எதுவ்ம் ஆகும் என்று எப்போதும் எண்ணிடாதே! இந்தப் பாடத்தை உலக ஜீவன்களுகும் உணார்த்தும் பொருட்டுத்தான் நான் வால் நீட்டும் கால லீலையை இங்கு புரிந்தேன். நீ தேடி வந்துள்ள புஷ்பமானது அனைவருடைய கண்களுக்கும் தென்படாது. திருமகளே நின்ற கோலத்தில் நெடுங்காலம் தவம் புரிந்து பெற்ற புஷ்பமல்லவா! நீ அந்த நீண்ட நெடும் பெருமாளாம் சுந்தர வரதரை முறையாகத் துதித்துள்ளமையால் உனக்கு மட்டும் அந்தப் புஷ்பத்தின் காட்சி தென்படும் அப்புஷ்பத்திற்கு உரிய கட்டு மந்திரங்களையும், விடுப்பு மந்திரங்களையும் இப்போதுயாம் உபதேசிக்கின்றோம்”, என்று கூறி பீமசேன மகாரஜாவிற்கு அந்தப் பூவிற்குரித்தான சௌகந்தி புஷ்ப மந்திரத்தை உபதேசித்தார்.. இதன்பின்னர்தான், பீமசேனருக்கே சௌகந்திப் புஷ்பத்தின் தரிசனம் தென்பட்டது. ஆஞ்சநேயப் பெருமானின் கருணையால் அந்த அரிய இப்புஷ்பத்தினை திரௌபதியிடம் சமர்ப்பித்திட்டான்.. ஆனால் எம்பெருமான் மூர்த்தியின் அருட்கருணையால் எப்போது சௌகந்திப் புஷ்பம் கிட்டியதோ அவற்றைப் பரந்தாமராம் ஸ்ரீசுந்தர வரதப் பெருமாளுக்கு அர்ப்பணிப்பதுதானே முறை! அவற்றைத் திரௌபதியும், பீமசேனனும் ஸ்ரீசுந்தர வரதருக்கு அர்ப்பணித்திடவே அது உத்திர மேனிலை சுந்தர வரதரின் சந்நிதியிலே பன்மடங்காகப் பெருகி, தானே மாலையாகி நெடும் பெருமாள் மூர்த்திக்கு படுக்கை மாலையாகப் படர்ந்து ஜ்வலித்தது. ஆமாம்... பீமசேனன் செய்த சுந்தர வரத விக்ரம வருட விசேஷ மண்டல பூஜைத்தான் பல அற்புதமான வரங்களைப் பாண்டவர்கள் பெறுவதற்குப் பெரிதும் உதவியது... இவ்வாறு பீமசேனன் அவ்வரிய புஷ்பத்தைப் பெற்று, திரௌபதியிடம் தந்திட்டு அப்புஷ்பத்தால் திரௌபதி தேவியும் ஸ்ரீசுந்தர வரதருக்கு அபிஷேக ஆராதனை, பூஜா வழிபாடுகள் செய்த காலமே அந்த யுகத்தின் விக்ரம வருடத்திய சித்திரை மாத விஷ்ணுபதி புண்ணிய காலமாகும். அதெப்படி, பீமசேன மகாராஜாவிற்கு மட்டும் இந்தப் சௌகந்தி புஷ்ப பூஜையின் ரகசியம் தெரிய வந்தது. பஞ்ச பாண்டவர்களில் மிகவும் சாதுர்யம் நிறைந்தவனாக விளங்கியவன் அர்ஜுனன் தானே! அறிவுடை ஞானக்கனலாக விளங்கியவனும் சகாதேவன் தானே! இவர்களுக்கெல்லாம் இல்லாத திறமை, உணவில் பெருநாட்டம் கொண்டு அறிவிற்சற்றுக் குறைந்தவனாகத் தென்பட்ட பீமசேனனுக்கு மட்டும் அப்புஷ்பத்தை அறியும் இந்த தெய்வ லாவண்ய சக்தி கிட்டியது? இத்தகைய தெய்வீக இரகசியங்கள் எல்லாம் சித்புருஷருடைய ஞானப் பத்ர கிரந்தங்களிலே நிறைந்து காணக் கிடக்கின்றன.. இவற்றைத்தான் சித்புருஷர்கள் அந்தந்த யுகநியதிகளுக்கு ஏற்ப பல சற்குருமார்கள் மூலமாக குருவாய் மொழிகளாக நமக்கு அளித்து வருகிறார்கள்.

ஸ்ரீமார்கண்டேய மகரிஷி திருநீலக்குடி

ஸ்ரீகிருஷ்ண புஷ்ப லீலா!  
ஒரு முறை   கிருஷ்ண பரமாத்மா எப்போது புஷ்பங்களை எடுத்து வந்தாலும் அவற்றை பீமனுக்கு மட்டுமே முதலில் கொடுப்பார். ஏனைய பஞ்ச பாண்டவ சகோதரர்களிடம் எந்தப் புஷ்பத்தையும் முதலில் கொடுப்பது கிடையாது... அப்படியே கொடுத்தாலும் புஷ்பங்களின் பெரும் பகுதி பீமனுக்கே போய்ச் சேரும்! இதனை நெடுநாள் கண்ணுற்று வந்த அர்ஜுனன், ஒரு நாள் கோபம் கொண்டு, “கிருஷ்ணா, நீ ஏன் இந்த ஓரவஞ்சனை செய்கின்றாய், பல அரிய தேவதா புஷ்பங்களை நீ கொண்டு வந்து எங்களுக்கென்று ஒன்றைக் கூடத் தராது, அனைத்தையுமே பீமனுக்குத் தந்து விடுகின்றாயே. இது நியாயமாகுமா? ஒருவருக்கே புஷ்ப பலாபலன்கள் செல்லுமானால், அதெப்படி தர்மமாகும்?” என்று அதிவேகத்தில் கடுகடுப்புடன் சற்று ஆக்ரோஷமாகவே கேட்டு விட்டான். ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனன் உறவு தாச (நட்பு) பாவனையில் திளைத்துப் பொங்கியதாயிற்றே! ஸ்ரீகிருஷ்ணன் அவனுக்கு உரித்தான விஷமத்துடன் புன்னகை புரிந்தான்... “அப்பா.. அர்ஜுனா! பீமசேனன் செய்கின்ற பூஜையின் வேகத்துக்கு உன்னால் ஈடு கொடுக்க முடியுமா?“ என்று கேட்டிடவே அர்ஜுனன் வெகுண்டெழுந்தான்!

“பீமனுக்கு உட்கார்ந்து எழுவதற்கே, ஒரு கையை மடக்கி எடுப்பதற்கே எவ்வளவு நேரமாகும். நானோ கண்ணிமைக்கும் நேரத்தில் பல்லாயிரக்கணக்கான அம்புகளைத் தொடுத்து விடுகின்றேன். ஆனால், அவனுடைய பூஜை வேகத்திற்கு என்னால் ஈடு கொடுக்க முடியுமா என்று கேட்கின்றாய், என்ன விளையாடுகின்றாயா?“ என்றான் அர்ஜுனன்.  “அர்ஜுனா, அவசரப்படாதே, நான் என்னும் அகந்தையில் நனைகின்றாயே! இந்தக் கிருஷ்ணன் சொன்னால், அதில் ஆயிரமாயிரம் தெய்வீக இரகசியங்கள் இருக்கும் என்பது உனக்குத் தெரியுமல்லவா? உன்னால் நிச்சயமாக பீமசேனனுடைய புஷ்ப பூஜைக்கு ஈடு கொடுக்க முடியாது.. சொன்னால் புரிந்து கொள். விட்டுவிடு.. வீணாக வம்புக்கு வராதே!” ஆனால் அர்ஜுனன் விடுவதாக இல்லை! “இல்லை கிருஷ்ணா, எனக்கு இதனை நீ நிரூபணம் செய்தாக வேண்டும்”

பூ .... இவ்வளவுதானா? பரந்தாமன் சாடினான் பார்த்திபனை!

 “சரி வா, என்னுடன் புறப்படு புறப்படு”, இருவரும் புறப்பட்டார்கள். அர்ஜுனனை வான்வெளி வழியாக எங்கெங்கோ அழைத்துச் சென்ற கிருஷ்ணன், தேவ புஷ்பலோகத்தின் அருகே தன்னுடைய விமானத்தை ஓட்டிச் சென்றார்.. அங்கே ஓரிடத்தில் புஷ்ப மழை! ஆம்! ஒரு சிவலிங்கத்தின் மேல் புஷ்பங்கள் தாரைத் தாரையாக வந்துக் கொட்டிக் கொண்டே இருந்தன. அந்த லிங்கத்தின் மேல் வர்ஷிக்கின்ற புஷ்பங்களைப் பொறுக்கி எடுத்து சுத்தப் படுத்துவதற்கென்று நிறைய தேவமூர்த்திகள் குழுமியிருந்தார்கள். ஆனால் எத்தனை பேர் வந்து அந்த நிர்மால்யப் புஷ்பங்களை எடுத்தாலும் புஷ்பங்கள் வந்து குவிவது மட்டும் தணியவே இல்லை! அந்த அளவிற்கு விநாடிக்கு விநாடி அபரிமிதமான புஷ்பங்கள் கொட்டிக் கொண்டே இருந்தன.. புஷ்ப மலையோ என்று சொல்லும் வண்ணம் புஷ்பம் வான்முட்ட வந்து குவிந்ததே! அர்ஜுனன் அந்த தேவ மூர்த்திகளைப் பார்த்துக் கேட்டான், “என்ன இது அதிசயமாக இருக்கின்றதே! இந்த சிவலிங்கத்தின் மேல் எப்போதும் புஷ்பங்கள் கொட்டிக் கொண்டே இருக்கின்றனவே, இது எப்படி சாத்தியமாகும்?“

அப்போது அங்கிருந்த தேவமூர்த்திகள் சொன்னார்கள். “பூலோகத்தில் யாரெல்லாம் மானசீகமாக பூஜை செய்கின்றார்களோ, அந்த புஷ்பங்கள் எல்லாம் இந்த மானஸப் பிரமாண லிங்கத்தின் மேல் வந்து விழ வேண்டும் என்பது தெய்வநியதி. இந்தப் புஷ்பங்களையெல்லாம் திரட்டி சந்நிதியைச் சுத்தம் செய்வதற்காக எங்களை நியத்திருக்கின்றார்கள். ஆனால் எங்களுக்கு இந்தப் புஷ்பங்களை எடுத்து எடுத்து மாளவில்லை. நாங்களே களைப்படைந்து விட்டோம்!” 

“ஊன், உறக்கம், களைப்பு இல்லாத தேவமூர்த்திகளான உங்களுக்கே இந்த அசதியா? அந்த அளவிற்குப் புஷ்பங்கள் கொட்டிக் கொண்டு இருக்கின்றனவா என்ன?”

“ஆமாம்! நாங்களும் எத்தனையோ ஆண்டுகளாக இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றோம். விநாடிக்கு விநாடி புஷ்பங்கள்  வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றனவே தவிர, குறைந்தபாடில்லை”

 “அப்படியா, யார் அந்த மஹானுபாவர்? இந்த அளவிற்கு பூலோகத்தில் பக்தி பெருத்து விட்டதா என்ன? எவரோ அப்படித் தீவிரமாக மானசீக பூஜை செய்து கொண்டிருக்கின்றார்கள்?”

“யாரோ பீமசேனன் என்று ஒருவர் பூலோகத்தில் இருக்கின்றாராம்! அவர் எப்போதும், நித்திரையின் போது கூட மானசீக யோக பூஜை செய்து கொண்டுதான் இருப்பாராம். அவருடைய மானசீக பூஜையில் வர்ஷிக்கின்ற புஷ்பங்கள்தாம் இவ்வளவும்! அவர் மானசீக பூஜையை ஒரு நிமிடமேனும் நிறுத்தினால் தான் எங்களுக்கு ஓரளவு ஓய்வு கிடைக்கும் போலிருக்கிறது. என் செய்வது என்று தெரியவில்லை! தெய்வ காரியமாயிற்றே, எப்படி எடுத்துச் சொல்வது”, என்றார்கள் தேவர்கள்.. கிருஷணன், அர்ஜுனனைப் பார்த்தார், அர்ஜுனன் தலையைக் குனிந்து கொண்டான்...!

எனவே மானசீக பூஜையில் தலை சிறந்தவனாக பீமசேனன் விளங்கி, எப்போதும் இறைவனுக்கு இடைவிடாத மானசீகமாக புஷ்ப அர்ச்சனை செய்து வந்ததால்தான், திரௌபதி கேட்ட அந்த அபூர்வமான தேவலோக புஷ்பத்தை எடுத்து வருகின்ற புனிதமான இறைப்பணியும், சௌகந்தி புஷ்ப தரிசனமும் வேறு எவருக்கும் கிட்டாத பேறாக பீமனுக்குக் கிட்டியது.. எனவே, பெறுதற்கரிய இந்த தேவலோகப் புஷ்பத்தைப் பெற்று, இதனைக் கொண்டு திரௌபதி, ஸ்ரீசுந்தர வரதப் பெருமாளுக்குப் பூஜை செய்கின்ற பாக்கியம் கிட்டிய காலம்தான் ஸ்ரீவிஷ்ணுபதி புண்யகாலம் என்றால், மானசீகப் பூஜைக்கு மிகச் சிறந்ததாக இந்த விஷ்ணுபதி புண்யகாலம் விளங்குகின்றது அல்லவா! ஆனால் மானசீக பூஜை என்பது எளிதல்லவே! இதனைப் பற்றி பிறகு விரிவாகக் காணலாம்!

ஸ்ரீமார்கண்டேய லிங்கம் திருநீலக்குடி

உத்தரமேரூரில் உவப்பான விஷ்ணுபதி
எனவே வரும் விஷ்ணுபதி புண்ய காலத்தன்று, செங்கல்பட்டிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள உத்திரமேரூர் ஸ்ரீசுந்தர வரதப் பெருமாள் ஆலயத்தில் அருள்பாலிக்கும் விஷ்ணுபதி புண்ய காலத்தில் ஐந்து வரதமூர்த்திகளுக்கும் அபிஷேக ஆராதனைகளும் பலவிதமான காப்புகளும் செய்து வழிபட்டு, பெறுதற்கரிய பல விசேஷமானப் பலன்களை நீங்கள் பெற்றிடலாம்... இந்த விஷ்ணுபதி புண்யகாலத்தில் இங்கு அமைந்துள்ள அற்புதமானத் தீர்த்த நீரைக் கொண்டு (இன்றைக்குப் பாசி படிந்தது போலக் காணப்பட்டாலும், மிகவும் அற்புதமான சக்தி நிறைந்த தீர்த்தம் இது!) பித்ருக்களுக்குத் தர்ப்பண பூஜை நிகழ்த்துவதும், பித்ரு ஹோமம் நிகழ்த்துவதும் மிகவும் சிறப்புடையதாகும்.. சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை அன்னம், வெண் பொங்கல், தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவாறாக ஏதேனும் ஐந்து விதமான அன்னங்களையும் முறையாகத் தக்க அனுமதியுடன் பஞ்சவரத மூர்த்திகளுக்குப் படைத்து ஏழைகளுக்குத் தானமாக அளிக்க வேண்டும். இன்றைக்குப் பலவிதமானப் புஷ்பங்களால் குறைந்தது ஐந்துவிதமான பூக்களால் ஐந்து வரத மூர்த்திகளுக்கும் புஷ்ப அர்ச்சனை செய்தல் சிறப்புடையதாகும்... ஆனால் கனகாம்பரம், டிசம்பர், காட்டுமல்லி போன்ற மணமற்ற பூக்களைக் கண்டிப்பாகத் தவிர்த்திட வேண்டும். இவற்றை ஒருபோதும் பூஜையில் சேர்த்திடக் கூடாது... தாமரைப்பூ, மல்லிகைப்பூ, சாமந்திப் பூ, சம்பங்கிப் பூ, செண்கப் பூ, மனோரஞ்சிதம் போன்ற மணமுள்ள வாசனைப் பூக்களை மட்டுமே பூஜைக்குப் பயன்படுத்த வேண்டும். மானசீகமாக ஓத வேண்டிய மந்திரங்கள் நிறைய உண்டு. உதட்டினால் ஒலித்து ஓதப்படுகின்ற மந்திரங்களை விட, உள்ளூர ஒலிக்கின்ற மானசீக மந்திர ஜபங்களுக்கு நிறைய பலன்கள் உண்டு.. 

1. இந்த விஷ்ணுபதி புண்யகால நேரத்தில் 14.5.2000 உத்தரமேரூர் ஸ்ரீசுந்தரவரதப் பெருமாள் ஆலயத்திற்குப் பசு மாட்டினை அழைத்து வந்து, பசும்பாலைக் கறந்து ஆதன் சூடு ஆறும் முன்னரே அதனுடைய இயற்கையான இளஞ்சூட்டிலேயே ஸ்ரீசுந்தர வர ஸ்வாமிக்குப் பாலாபிஷேகம் செய்து பால்பாயச தானம் அளிப்பதால் சொத்துப் பிரிவினைகளால் பிளவு பட்டிருக்கும்., குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ஒற்றுமை பெருகும்.

2. ஐந்து விதமான சித்ரான்னங்களை ஸ்ரீஅச்சுத வரதருக்குப் படைத்து, சந்தனக் காப்பிட்டு ஸ்ரீஅச்சுத வரதருக்குச் சம்பங்கிப் பூக்களால் அர்ச்சனை செய்து வந்தால் பலவிதமான பண இழப்புகளால் வாடுவோருக்குத் தக்க நிவர்த்திகள் கிட்டும்.. முறையான கடன்கள் நன்முறையில் வசூல் ஆகும்.. இழந்த சொத்துக்களை தார்மீகமான முறையில் மீண்டும் பெறுவதற்கானத் தக்க நல்வழிகள் கிட்டும். ஆனால் ஆழ்ந்த நம்பிக்கையுடன் தொடர்ந்து இவ்வழிபாட்டினைச் செய்து வருதல் வேண்டும்.!

3. ஸ்ரீஅனுருத்ர வரதமூர்த்திப் பெருமாளுக்கு சிவப்பு நிற புஷ்பங்களால் (கனகாம்பரம் கூடாது) அர்ச்சித்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டு வந்தால் கடுமையான தோல் வியாதிகளுக்குத் தக்க நிவாரணம் கிட்டும். வெண் குஷ்டத்தால் அவதியுறுவோர் இப்பெருமாள் மூர்த்திக்கு அவ்வப்போது சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்து வந்தால் தோல் வியாதிகளுக்குத் தக்க நிவாரணம் கிட்டும்.

4. பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கீழ்நோக்கு நாட்களில் ஸ்ரீலக்ஷ்மி வராக மூர்த்திக்குக் கிழங்கு வகைகளால் ஆன உணவுகளைப் படைத்து ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்தால், பணக்கஷ்டம், கோர்ட்டு வழக்குகள், பிரிவினை காரணமாக முடங்கிக் கிடக்கும் தொழிற்சாலைகள் வீட்டுக் கட்டடங்கள் ஆகியவற்றில் உள்ள பிணக்குகள் தீர்ந்து நன்முறையிலே கட்டிட வேலை தொடரும்.. செண்பகப் பூ, மகிழம்பூ, தாமரை வெள்ளைத் தாமரை போன்ற அபூர்வமான பூக்களால் (குறைந்தது 5 வகை) விஷ்ணுபதி புண்ய காலத்திலும், திருவோணம், புதன் வெள்ளிக்கிழமைகளிலும் ஸ்ரீகல்யாண வரதருக்கு அர்ச்சனை செய்து வந்தால் வேலையின்மை தீர்ந்து, தடங்கல்களால் நிற்கும் திருமணங்கள் நிறைவேறுவதுடன் திருமணத்திற்கான அனைத்து உதவிகளும் கிட்டும்.

ஸ்ரீமுக்தி லிங்கம் திருநீலக்குடி

5. இங்கு அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீவைகுண்டப் பெருமாளுக்கு அனுஷ நட்சத்திர, ஏகாதசி, துவாதசி திதிகளில் வெண்ணெய்க் காப்பிட்டு வெண்பொங்கல் படைத்துத் தானமளித்து வந்தால் உறவினர்கள், நண்பர்களால் ஏமாற்றப்பட்டுச் சொத்து, பதவி இழந்தோர் தார்மீகமான முறையில் மீண்டும் பெறுவர். ஆனால் ஆழ்ந்த நம்பிக்கையுடன் பூஜையைக் கடைபிடிக்க வேண்டும். நல்ல வேலை கிடைக்காமை, பணியில்/தொழிலில் நிரந்தரம் இல்லாமல் அவதியுறுதல், அடிக்கடி வேலை பறிபோதல், மனநிம்மதியின்றி இங்கும் அங்குமாக அலைந்து கிடப்போர், கால் மூட்டு சம்பந்தமான வியாதிகளால் அவதியுற்று, நிற்கவோ, நடக்கவோ, அமரவோ முடியாமல் சிரமப்படுவோர் ஸ்ரீவைகுண்டப் பெருமாளுக்குப் பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி, மருதாணி, தேங்காய் எண்ணெய், ஆகிய ஐந்தும் சேர்ந்த பஞ்சத் தைலக் காப்பிட்டு வழிபடுக! நிலையான வேலையை, தொழிலைப் பெற, முருங்கைக்காய், புடலங்காய், மர வள்ளிக் கிழங்கு, கீரைத் தண்டு போன்றவை கலந்த உணவினை நீண்ட வாழை இலையில் படைத்து (ஐந்தடிக்குக் குறையாத தஞ்சாவூர் தாட்டு வாழை இலை) ஸ்ரீவைகுண்டப் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்து ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்தால் தக்க தீர்வுகளைப் பெற்றிடலாம்.!

ஸ்ரீவிஷ்ணுபதி புண்யகாலம் : 13.5.2000 இரவு 2.00 மணி முதல் 14.5.2000 காலை 10.30 மணிவரை விஷ்ணுபதி புண்யகாலம் அமைகின்றது. செங்கல்பட்டிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள உத்திரமேரூர் ஸ்ரீசுந்தரவரதராஜப் பெருமாள் ஆலயத்தில் ஸ்ரீவிஷ்ணுபதி புண்யகால நேரத்தில் இத்தலத்தில் பஞ்சவரத மூர்த்திகளான ஸ்ரீசுந்தரவரதர், ஸ்ரீஅச்சுதவரதர், ஸ்ரீஅனுருத்ரவரதர், ஸ்ரீகல்யாண வரதர், ஸ்ரீவைகுண்டப் பெருமாள் ஆகிய 5 வரத மூர்த்திகளுக்கும் உரிய அபிஷேக ஆராதனைகளைச் செய்து பெறுதற்கரிய பலாபலன்களைப் பெறுவீர்களாக. நீங்கள் தரிசிப்பதோடு மட்டுமின்றி உங்கள் சுற்றம், நட்பு அனைவருக்கும் இத்தலத்தின் மேன்மையை உணர்த்தி விஷ்ணுபதி புண்யகாலத்தன்று இத்தலத்தில், பரமானந்தத்துடன் விஷ்ணுபதி புண்யகாலத்தை கொண்டாட வேண்டுகின்றோம். தர்ப்பணம், ஹோமம், பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் அனைத்திற்கும் பன்மடங்கு பலன்கள் உண்டு.!

ஷோடச கணபதி பூஜை

விக்ரம ஆண்டில் ஷோடச கணபதி பூஜையின் மகத்துவம்

அமாவாசை முதல் பௌர்ணமி வரையிலான பதினாறு திதிகளுக்குரித்தான பதினாறு கணபதி மூர்த்திகளையும், ஒன்றாகப் பூஜிப்பதுதான் ஷோடச கணபதியான 16 திதிப் பிள்ளையார் வழிபாடு! (ஷோடசம் என்றால் பதினாறு என்று பொருள்) இதுவே விக்ரம ஆண்டிற்கான மிகவும் விசேடமான வழிபாடாகும். விக்ரமாதித்ய மஹாராஜா வியக்கத் தக்க சாதுர்யத்தையும், அறிவுக் கூர்மையையும், மன, உடல் ஒழுக்கக் கட்டுபாட்டையும், சிறந்த பக்தியையும் பெறுதற்குக் காரணமே அவர் விக்ரம ஆண்டில் கடைபிடித்த ஸ்ரீஷோடச கணபதி பூஜை வழிபாட்டின் பலன்களேயாம் என்பதைக் கடந்த இதழில் விவரித்துள்ளோமல்லவா! குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் உரித்தானதாக அமைவது ஷோடச கணபதி வழிபாடாகும். 16 திதிகள், 16 கலைகள், 16வித கடவுட் சித்தாந்தங்கள் , 16 வீராசனங்கள், 16 ஆயுத நிலைகள், 16 யோக நிலைகள் என எத்துணையோ ஷோடச நிலைகள் உண்டு. அவற்றில் கலியுகத்திற்கு ஏற்றதாக விளங்குவனவற்றுள் ஒன்றே 16 திதிப் பிள்ளையார்களைக் கொண்ட ஷோடச கணபதி வழிபாடாகும். இவ்வழகிய படப் பெட்டகத்தையே சென்ற இதழின் பின்பகுதியில் நீங்கள் கண்டு மகிழ்ந்திருப்பீர்கள். எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்றும் சொல்கின்றோமல்லவா! இந்த தேகத்தின் எட்டுக் கட்டும் நிழலின் எட்டுக்கட்டும், பதினாறாகச் சேர்ந்ததே பெறுதற்கரிய மானுட உடலாக அமைகிறது. இதனையே மற்றொரு ஆன்மீகக் குறிப்பாக பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க எனச் சொன்னார்கள். எண் சாண் உடம்பு என்று சொல்லும் போது அவரவர் கை நீளத்திற்கேற்ப எட்டு சாண் உடையவர்களாக அவரவர் உயரம் அமையும். அதே போல்தான் அவர்தம் நிழலும் ஆகும். இதைத்தான் எட்டடி என்றார்கள்! நிழலே இல்லாத மனிதனே உத்தம தெய்வ நிலையுடையவன ஆவான். வள்ளலார் சுவாமிகள் இத்தகைய பெரும் பேற்றைப் பெற்றிருந்தார். அதனால்தான் அவருக்கு நிழல் ஏற்படாது! அவருடைய வெண்ணொளி ஆடையானது, எத்துணையோ கோடி ஜோதித் தத்துவங்களைக் கொண்டதாம . எனவே அவருடைய புனிதமான நிழல் என்றும் புவிமேல் படாது. தேகத்தில் ஜோதியாக ஒன்றியது 16 கலைகளை உடைய புனித தேகம் கொண்டதால் அவர் நிழல்படா நிர்மல யோகியாய்த் திகழ்ந்தார். அந்த தேவ வடிவைத் தாங்கிச் செல்வதற்கென்றே கோடானு கோடி தேவாதி தேவமூர்த்திகள் அவரைச் சுற்றி வலம் வந்து கொண்டிருப்பர். அத்தகைய அரிய தெய்வீகத் தன்மை கொண்டவராக ஸ்ரீவள்ளலார் சுவாமிகள் அன்றும், இன்றும், என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாய்த் திகழ்கிறார். எனவே, எட்டும் எட்டுமாய் 16 திதிப் பிள்ளையார் வழிபாடானது இந்த எண்சாண் உடம்பிற்கும், பிரதி பிம்ப உடலுக்கும் (நிழல்) உரித்தானதாக விளங்குகிறது. அதுவும் இந்த விக்ரம ஆண்டின் போதுதான் விக்ரமாதித்ய மகாராஜா ஆன்ம நிழல் பற்றிய ஆத்ம விசாரத்தினைப் புனிதத் துறவிகளிடமிருந்து ஆன்மப் பாடங்களாக உணர்ந்து ஆன்ம விசாரத்தில் தலைசிறந்து விளங்கினார். இதற்காகவே நிழல் விழாத ஆலயங்களில் விக்ரமாதித்யன் அரிய யோக நிலைகளை எல்லாம் பயின்று அவற்றின் பலாபலன்களை அறிவுத் தெளிவிற்காக, பூலோக ஜீவன்களின் நன்மைக்காக அர்ப்பணித்தார். நிழல் தேவதைகள் பல உண்டு. இவற்றில் நன்மை பயப்பனவும், தீமை தருவனவும் உண்டு. வேப்பமரம், அரசமரம், ஆலமரம் போன்ற ஹோம மூலிகா விருட்சங்களின் நிழல்கள் ஜீவன்களுக்கு ஆத்ம ஆரோக்ய சக்தியை அளிப்பதாக விளங்குகின்றன.. நாம் நினைப்பது போல (சூரிய) ஒளியை திடப்பொருள் மறைப்பதால்தான் நிழல் தோன்றுகிறது என்பது வெளிப்படையான விஞ்ஞான விளக்கமாக இருந்தாலும், மேற்கண்ட தெய்வீக விருட்சங்களின் நிழல் தன்மையில், பல அரிய ஆத்ம தத்துவங்கள் நிறைந்துள்ளன. இதில் சாந்த ஞானத்தைத் தர வல்லதே ஆலமர நிழலாம். வாயு சுத்தியையும் நோய் நிவாரணத்தையும் தருவதே வேப்ப மர நிழலாம். கல்லால மர நிழலின் கீழ் அமர்ந்தே சிவபெருமான், ஸ்ரீதட்சிணா மூர்த்தியாய் மௌனக் கோலத்தில் ஞானோபதேசம் அளிக்கிறாரன்றோ! அவரிடமிருந்து எட்டுத் திக்கிற்குமான சிவ, சக்தி அம்சங்களை கிரஹித்து 16 வகையான நிழல் தன்மைகளை நம்மையே உணர வைத்து, காலத்தின் நிழலாக விளங்கும் 16 திதிகளிலும் நம்மைக் காப்பவரே ஸ்ரீஷோடச கணபதி மூர்த்தி.

கொன்றைமரம் திருப்பத்தூர்

கொன்றையில் ஓங்காரம்!
நிழல் தரும் மூலிகா விருட்சங்களில் கொன்றை மரத்தின் நிழல் மிகவும் விசேடமானதாகும். எனவேதான் ஓங்கார ப்ரணவ மூர்த்தியே கொன்றை மர ரூபத்தில் (இராமநாதபுர மாவட்டம் – திருப்பத்தூரில்) ஸ்ரீதளிநாதர் சிவாலயத்தில் தலவிருட்ச மூர்த்தியாக விளங்குகின்றார். கொன்றை மர நிழலானது நம் உடலில்படுவது மிகவும் விசேடமானதாகும். அபிஜித் முகூர்த்தம் என்ற இந்த உச்சிக் காலநிழலின் ஆத்ம சக்தியை நாம் பெறவே இந்த அற்புத நேரத்தை நமக்கு நம் மூதாதையர்கள் எடுத்துரைத்துள்ளனர். பகல் உச்சிக் கால (பகல் 12மணி) பொழுதிற்குத்தான் அபிஜித் முகூர்த்தம் என்று பெயர். இந்த நேரத்தில் கொன்றை மர நிழல் நம்மீது படும் வண்ணம் ஏழுவித வண்ண ஆடைகளைக் கரத்தில் தாங்கி இம்மரத்தை அடிப் பிரதட்சிணம் செய்து ஓங்காரத்தை ஓதித் துதித்து 108 முறை இம்மரத்தை வீழ்ந்து வணங்கி இந்த ஏழு நிற ஆடைகளையும், ஏழைக் குழந்தைகளுக்குத் தானமாக அளித்து வந்தால் பித்ரு சாபங்களிலிருந்து குறிப்பாக தாமதமாகக் கல்யாணமாகி குழ்ந்தைப் பேறின்றித் தங்களுடைய பாதுகாப்புக்காக கவலைப்படும் தம்பதிகளுக்கு இறை நியதியாகத் தக்கத் தீர்வு கிட்டும்.

தராத தர்ப்பணத்திற்குத் தந்திடும் பிராயசித்தம்
இன்று எத்துணையோ குடும்பங்களில் அறியாமையால் சரியான முறையில் தர்ப்பணம் அளிக்கப்படுதில்லை. குறைந்தபட்சம் அமாவாசைத் திதியிலாவது அளிக்கப்பட்ட வேண்டிய தர்ப்பணம் கூட அளிக்கப்படாவிடில் குடும்பத்திற்கு எவ்வாறு சுபிட்சம் ஏற்படும்? வறுமையும், துன்பங்களும்தானே அலைமோதும்! எவ்வளவுதான் செல்வச் செழிப்புடனும் நல்ல வருமானத்துடனும் வாழ்ந்தாலும் தொழிலில் முன்னேறும் வசதி வாய்ப்புகள் இருந்தாலும், ஏதேனும் ஒருவிதத்தில் வளர்ச்சி ஏற்படாது கொந்தளிப்புடன் பல குடும்பங்களில் சாந்தமும் இன்றி இருக்க முக்கிய காரணம் பித்ரு சாபமேயாகும். மாமனார், மாமியார் சச்சரவுகள், தம்பதியரிடையே அடிக்கடி தகராறுகள், குழந்தைகளின் வளர்ச்சி, வளர்ப்பு, கல்வி முன்னேற்றம் பற்றிய பெருங்கவலைகள், அலுவலகத்தில் நெருக்கடியென ஒன்றன்பின் ஒன்றாகச் சங்கிலித் தொடர் போல் ஏதேனும் துன்பம் வந்து கொண்டிருந்தால் எவ்வாறு முன்னேற்றம், சந்தோஷம்தனைக் காண முடியும்? இதற்குக் காரணமாக இருப்பது நாம் பித்ருக்களைப் போற்றி வழிபடாததேயாகும். எனவே, பித்ரு சாப நிவர்த்திக்கு பித்ருக்களுக்குரித்தான திதி தினங்களிலும், ஓங்கார ப்ரணவ மூர்த்திக்குரித்தான திங்கள், புதன் நாட்களிலும், அபிஜித் முகூர்த்த நேரத்தில் பகல் (உச்சி நேரம்) கொன்றை மரத்தை அடிப்பிரதட்சிணம் செய்து வார வண்ண ஆடை எனப்படும்  ஞாயிறு முதல் சனி வரையிலான அந்தந்த வார நாளுக்குரித்தான வண்ண ஆடைகளாய் ஏழைக் குழந்தைகளுக்குத் தானமளிக்க வேண்டும். ஏனெனில் உடலின் நிழலே உள்ளாடையென சித்புருஷர்கள் நிழலின் சிறப்பை உணர்த்துகிறார்கள். ஆடையின்றி உலாவும் உத்தம பைராகியர்கள், அற்புத ஞானிகள் இன்றும் பலருண்டு.. அவர்களின் நிழலானது என்றுமே பூமியில் படாது. ஓங்காரத்தின் உட்பொருளான ஸ்ரீஷோடச கணபதி மூர்த்தி 16 வகையான ஓம்கார சக்தியை கொன்றை மர நிழலில் பூஷித சக்தியாகப் பொழிகின்றார். எனவே ஞானத்திற்கும், நிழலுக்கும், நிறையத் தொடர்பு உண்டு. சிலவிதமான மூலிகைகளின் நிழல் நம்மீது சிறிதே கூடப் பட்டால் போதும், பலவித நோய்கட்கு நிவாரணம் கிட்டும். இதனால்தான் பல விலங்கினங்கள் தேள், பாம்பு, பூரான், போன்ற  விஷமுள்ள பூச்சிகளைத் தின்றாலும், கடித்தாலும் உடனடியாக அருகம்புல் போன்ற மூலிகையைமென்று சில குறித்த மரங்களின் நிழலில் இளைப்பாறுவதைக் கண்டிருக்கலாம். எனவே நமக்குத் தெரியாத பல மூலிகை ரகசியங்களை விலங்குகள் அறிந்துள்ளன என்பது நமக்குப் பெரும் வியப்பை அளிக்கின்றதல்லவா! மர நிழல்களிலும் தன்மையிலும் அரும் பெரும் ஆன்மீக ரகசியங்கள் பல உண்டு. பெரிய மஹான்களின், சித்தர்களின், யோகியர்களின் நிழல்விழும் பூமி மண்ணைப் பிரசாதமாக எடுத்துச் செல்வோர் இன்றும் உண்டு. இதேபோல் கோபுர நிழலில் விளையும் மூலிகைகளுக்கும், தாவரங்களுக்கும், பல அற்புதமான சக்திகள் உண்டு. பூச நட்சத்திரத்திற்கும் நிழலுக்கும் நிறைய தொடர்பு உண்டு. பசி பிணி, உறக்க நிலையற்ற தேவ நிலை பெற பூச நட்சத்திரத்தில் தேங்காய் எண்ணெய் தீப வழிபாடு பெரிதும் உதவும் “நிழலாட்டம்“ எனப்படும் துர்ஆவிகளை விரட்டிட பூச நட்சத்திரத்தன்று ஸ்ரீவீரபத்ர ஹோம வழிபாடு அவசியமானதாகும். வீட்டு நிழல் என்றுமே கோயிலின் பரப்பில் விழக் கூடாது. இவ்வாறு இருப்பின் அவ்விடத்தைக் காலி செய்துவிட வேண்டும்.

படிகாரத்திற்கு நிழலின் தீவினை சக்திகளாய் ஈர்த்து பஸ்பம் செய்யும் சக்தி நிறைய உண்டு. இதனால்தான் கிணற்று நீரைப் பலரும் எட்டிப் பார்ப்பதால் நீரில் விழும் பல மனிதர்களின் நிழல்களால் நீருக்கு ஏற்படும் தோஷங்களை நீக்கிட கிணற்று நீரில் படிகாரத்தைச் சேர்கின்றோம். நெல்லி மரக் கட்டையையும் கிணற்றில் இடுவர், நெல்லி மரக் கட்டையில் அமர்ந்து மயானத்தில் ஜபம் புரியும் வாமன தந்திர சாத்திரங்கள் நிறைய உண்டு. தேவ விருட்சங்களின் நிழலில் வளரும் தாவரங்களுக்கு தோஷ நிவர்த்தி சக்தியும் அபரிமிதமாக உண்டு.. அகத்தி மர நிழலில் வளரும் வெற்றிலைகளால் ஸ்ரீஆஞ்சநேயருக்கு மாலை அணிவித்தால் அதில் சஞ்சீவ மலை நிழல் படிந்த மூலிகா சக்தியால் நோய் நிவாரண சக்தி உண்டாகிறது. ஆஞ்சநேயர் தாங்கிய சஞ்சீவ மூலிகை மலையின் நிழல் பட்டுத் (ஜோதியில்) திளைத்தமையால் வெற்றிலைக்கு மகத்தான நோய் நீக்கும் சக்திகள் உண்டு. இவ்வாறாக நிழலின் தேவரகசியங்கள் நிறைய உண்டு.

காற்று மண்டலம்

நடந்தால் அதிரும் காற்று மண்டலம்

நீங்கள் நடக்கும் போதெல்லாம் காற்று மண்டலத்தை உரசிச் செல்கின்றீர்கள்! அப்படியானால் நாம் சாதாரணமாகவே நடக்கக் கூடாதா? ஆம்! காரண காரியமின்றி வெறுமனே எவ்வித இறைத் துதியையும் ஓதாமலும் கூட எதையும் செய்யாமல் வெறுமனே நடந்தால் அது  காலத்தை, தேக சக்தியை விரயமாக்கியதாகும்!

1. ஏதோ கை, கால்களை வீசி நடக்கின்றோம், வண்டியில் செல்கின்றோம் என்று மட்டும்தான் நினைக்கின்றோம். அப்போதெல்லாம் காற்றும் மண்டல உட்குழல்களைக் கிழித்துக் கொண்டு செல்வதை நாம் அறிய மாட்டோம், உணர்வதும் கிடையாது.

2. காற்று மண்டலத்தில் ஒவ்வொரு சதுர அங்கலத்திற்கும் பல்லாயிரக்கணக்கான நற்கதிர்கள் நிறைந்த ஆன்மச் சதுரங்கள் உண்டு. இவற்றை உராய்ந்து கொண்டுதான் எப்போதும் நாம் செல்கின்றோம்.

3, கண்ணுக்குத் தெரியாத இந்தக் காற்று மண்டலத்தில் நடக்கும் விந்தைகள்தான் எத்தனை எத்தனை! கோடிக்கணக்கான நுண்ணிய சூட்சும உயிர்களின் வீடாகத்தானே காற்று மண்டலம் விளங்குகின்றது.

நீங்கள் காற்று மண்டலத்தில் உராய்ந்து அதனை அசைத்துக் கொண்டு செல்வதை என்றேனும் உணர்ந்திருக்கின்றீர்களா? நன்றாகக் காற்று, மழை அடித்தால்தான் இயற்கையின் வேகத்தை நீங்கள் ஓரளவு பார்க்கின்றீர்கள், ஆனால் ஒவ்வொரு முறையும் நீங்கள் ஓர் அடியை எடுத்து நடக்கும் போது, நகரும் போது, ஓடும் போது, வாகனத்தில் செல்லும் போது நீங்கள் காற்று மண்டலத்திலுள்ள ஆன்மச் சதுரங்களை உராய்ந்து கொண்டோ, கிழித்துக் கொண்டோ, அவற்றினூடே புகுந்து கொண்டுதான் செல்கின்றீர்கள்! பூமியின் தரையில் இருந்து ஒவ்வொரு சதுர அங்குலத்திற்கும் எத்தனையோ கோடி Layers காற்று மண்டல மடிப்புகள் உள்ளன. நம் கண்ணுக்குத் தெரியாமல் கோடிக்கணக்கான சூட்சும உயிர்கள் காற்று மண்டலத்தில் வாழ்வதை நீங்கள் நன்றாக அறிவீர்கள் தானே! அப்படியானால் இந்த நுண்ணுயிர்கள் மீது மோதிக் கொண்டு தான் செல்கின்றோமா! இது சரியானது தானா! எத்தனையோ கோடி நுண்ணுயிர்களுக்குச் சேதம் விளைவித்துக் கொண்டுதான் செல்கின்றோம். அது மட்டுமல்லாது, காற்று மண்டலத்திற்கு என விசேஷமான சாந்தமுக லட்சணங்களும் உண்டு. இன்றைக்கும் பல கிராமப்புறங்களில் வாகனத்தில் செல்லும் போது ஒரு சாந்தமான அமைதி நிலவுவதை நீங்கள் உணர்ந்திடலாம். உதாரணமாக செங்கல்பட்டிலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலைப்பகுதி, கேதார்நாத் செல்லும் மலைப்பகுதி, திருஅண்ணாமலை, வெள்ளியங்கிரி, சதுரகிரி, பர்வத மலை போன்ற இடங்களில், கிரிவலப் பகுதிகளில் மகத்தான இறைப் பேரமைதி நிலவுவதை இன்றைக்கும் நீங்கள் கண்கூடாகக் கண்டிடலாம். இவ்வாறாக காற்று மண்டலத்தைப் பிளந்து கொண்டு தான் நம்முடைய ஒவ்வொரு தேக அசைவும் நடைபெறுகிறது என்பதை நீங்கள் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் வெறும் கால்களால் நடக்கும் போதும், செருப்பு, Shoe அணிந்து கொண்டு நடக்கும் போதும் காற்று மண்டலத்தின் ஒரு பகுதியைக் காலால் மிதித்து, அழுத்திக் கொண்டுதான் சென்று கொண்டு இருக்கின்றீர்கள்.. அதாவது உங்கள் காலடியில் குறித்த அளவு காற்றுப் பகுதி நன்கு அழுத்தப்படுகிறது. இதனால் ஏற்படுகின்ற சிறு வெப்பத்திற்கு உட்பாத சம்புடாக்னி என்பது பெயர். இதனை முறையாகப் பயன்படுத்தினால் நம்முடைய யோக சக்திகளும், தவப் பலன்களும் பெருகும். இந்த பாத சம்புடாக்னியின் தெய்வீக சக்தியும் பெருகின்றது. இவ்வாறாகத்தான் ஸ்ரீராமர் கல்லாய் மாறிக்கிடந்த அகலிகையின் சூட்சும ரூபம் புகுந்திருந்த சிறுகல்லை தம் திருக்கால்களினல் மிதித்திட்ட பொழுது ஸ்ரீராம பாத சம்புடாக்னியின் அக்னி வேகத்தால் அகலிகை தன் சுய ரூபத்தைப் பெற்றாள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதற்காகத்தான் நம் கர்ம வினைகள் பொசுங்கிடவே ஸ்ரீராம சம்புடாக்னியின் சக்தியை வேண்டி ஸ்ரீராம பாதத்தைப் பல இடங்களில் வழிபடுகின்றார்கள்.. இந்த பாத சம்புடாக்னி மனிதர்களின் பாதங்களில் தங்கியிருந்து பாதத்திற்குரித்தான நாடி, நரம்புகள் மூலமாக சிரசு (தலை) வரையிலே நன்முறையில் நிரவ வேண்டும் என்பதற்காகவே கால்களில் மெட்டி இடுதல், சலங்கைகள் அணிதல் போன்ற நல்வழக்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மெட்டிகளைப்போல் பெண்கள் எப்போதும் சலங்கைகளையும் அணிதல் சிறப்பு உடையதாகும். ஏனென்றால் பெருமாளுடைய திருவடிச் சிலம்புகளிலிருந்து உற்பவிக்கின்ற புண்ய தீர்த்தங்கள் ஏராளம், ஏராளம், அவற்றுள் ஒன்றே மதுரை அழகர் கோயில் மலையில் உள்ள நூபுர கங்கை ஆறாகும். அவற்றின் சப்த திருவாக்கியப் பலன்களைப் பெற வேண்டுமென்றால் மெட்டி, கொலுசு, சலங்கை, போன்ற தெய்வீக ஒலிக் கிரணங்களைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். கிளிங் கிளிங்  என்று கொலுசு, சிலம்பு மற்றும் சலங்கையிலிருந்து ஏற்படுகின்ற ஒலிகள் நிறையும் போது சப்த தேவதைகளின் காரிய சித்திக் கதிர்கள் இல்லத்தில் நிரவுகின்றன.. கொலுசு, சலங்கை, சிலம்பு ஆகியவற்றிலுள்ள நவரத்னக் கற்கள், அவற்றின் எண்ணிக்கை அவை எழுப்புகின்ற பீஜாட்சர ஒலியைக் கொண்டு காரிய சித்தியைப் பெருக்குதல், கூட்டுதல், பலவிதமான சகுன தோஷங்களை நிவர்த்தி செய்தலும் உண்டு.. இவையெல்லாம் சப்த வாக்கிய கணிதத்தின் சிறப்பான அங்கங்கள் ஆகும்.

ஒவ்வொருவரும் ஒரு பட்சத்திற்கு (15 நாட்கள்) ஒரு முறையேனும், மாதத்திற்கு ஒரு முறையேனும் கை, கால் விரல்களிலும், உள்ளங்கால், உள்ளங்கைகளிலும் மருதாணி இட்டு வருதல் வேண்டும். இதற்கும் சம்புடாக்னி சக்தி உண்டு. இது நல் ஆரோக்யத்தைப் பெருக்குவதோடு நல்ல உடல் சுத்தியையும், நற்சகுண பாக்கியங்களையும் பெற்றுத் தரும். மேலும் இந்தக் காற்றுப் பரவெளி மண்டலத்திலுள்ள பலவகையான பீஜாட்சர சக்திகள் நம் உடலில் சேர்வதற்கு இந்த மருதாணிக் காப்பு ஒரு மூலக் கருவியாக விளங்குகின்றது. நாம் வண்டியில் மிகவும் விரைவாக தேவையில்லாத வேகத்தில் செல்வதினால் காற்று மண்டலத்தில் தேவையில்லாத சலனங்களை நாம் உருவாக்கி சாந்த தேவதைகளை நாம் துன்புறுத்துவதோடு மட்டுமல்லாமல் உலக சாந்தத்திற்கே நாம் கெடுதல் விளைவிக்கின்றோம்.

ஸ்ரீதட்சிணா மூர்த்தி திருநீலக்குடி

வேகத்திற்கோர் சாந்தி!
கலியுகத்தில் பஸ், விமானப் பயணங்கள் இன்றியமையாததாக ஆகிவிட்டன. ஒவ்வொரு வாகனமும் 80 கி.மீட்டர் வேகத்தில்தானே செல்கின்றது. எனவே அதிவிரைவு என்பது பிரயாணத்தில் கலியுகத்தில் தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது என்று தானே உங்களுக்குக் கேட்கத் தோன்றுகிறது. இத்தகைய வசதிகள் எல்லாம் இல்லாமல் நம் மூதாதையர்கள் அமைதியான வாழ்வைப் பெற்வில்லையா, சற்றே யோசித்துப் பாருங்கள். எனவே இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால், மனிதனுடைய அசைவுகள் யாவும் காற்று மண்டலத்தில் பல சலனங்களை ஏற்படுத்துகின்றன, காற்று மண்டல ஆன்மச் சதுரங்களையும் பாதிக்கின்றன என்பதேயாகும். ஏன்? நம் மூதாதையர்கள் கூட கட்டை வண்டி, மாட்டு வண்டி, குதிரைப் பயணம் போன்றவற்றை மேற்கொண்டார்களே! ஆமாம், ஆனால் சற்று யோசித்துப் பார்த்தீர்களேயானால் தாங்கள் வாயு மண்டலத்தில் ஏற்படுட்த்துகின்ற சலனங்களுக்குப் பரிகாரமாக ஒவ்வொருவரும் தினந்தோறும் ஓரிடத்தில் பலகையில் அமர்ந்து தியானத்தை மேற்கொண்டு, ஆங்காங்கே எல்லை தெய்வங்களை வழிபட்டு, பக்தியுள்ள நாட்டுப் பாடல்களாய் பாடி, வழியில் கட்டுச் சோற்றினை அன்னதானமிட்டு ஹோம வழிபாட்டினைச் செய்து தாங்கள் ஏற்படுத்திய காற்றுச் சலனங்களுக்கெல்லாம் தக்கத் தீர்வைப் பெற்றார்கள்.. எனவே இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் தியானத்தினுடைய முக்கியமான குணங்களுள் ஒன்று வாயுச் சலனங்களுக்குப் பரிகாரத்தைத் தருவதாகும். இதனால்தான் இன்றைக்கும் எங்கெல்லாம் வன்முறைகள் தலைவிரித்து ஆடுகின்றனவோ அங்கு கூட்டுப் பிரார்த்தனைகளை நிகழ்த்தி வாயுச் சலன அசைவுகளில் ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்பிற்குத் தக்கத் தீர்வை நாம் அறவழியில் தேடிக் கொள்ள வேண்டும். எனவே தியானத்தின் போது ஓர் இடத்தில் செவ்வனே அமர்ந்து தியானிக்கையில் அவ்விடத்தில் உள்ள வாயுமண்டல ஆன்மச் சதுரங்களை நன்முறையில் நிலைப்படுத்தி, உறுதிப்படுத்தி பரிசுத்தமான மந்திர சக்திகளின் துணையோடு காற்று மண்டலத்தைச் செம்மைப்படுத்துவதாக தியானம் அமைகின்றது. எனவேதான் விமான ஓட்டுநர்கள், கப்பல் மாலுமிகள், கார், பஸ், பேருந்து, வாகனங்களை ஓட்டுகின்றவர்கள் மற்றும் இத்தொழில் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் தாங்கள் வாயு மண்டலத்தில் ஏற்படுத்துகின்ற முறையற்ற சலனங்களுக்கு தக்கப் பரிகாரங்களாக வாயு மண்டல சக்திகள் நிறைந்த கோயில்களில் அடிக்கடி அபிஷேக ஆராதனைகள், தான, தர்மங்களைச் செய்து வழிபட்டு வருதல் வேண்டும்.. ஈரோடு அருகே மோகனூரிலுள்ள ஸ்ரீஅசலதீபேஸ்வரர் ஆலயம் வாயு ஜோதி சக்திகள் நிறைந்த அற்புதத் தலமாகும். மிதமிஞ்சிய வேகத்தினால் வாகனங்களை ஒட்டி பூமியில் வாயுச் சலனங்களை பாதிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் (லாரி, கார், பஸ் , வேன் அதிபர்கள்) தம்முடைய தவறுகளுக்கு வருந்தி இந்த ஸ்ரீஅசலதீபேஸ்வரர் ஆலயத்தில், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய், வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய் போன்ற ஐந்து விதமான எண்ணெய்களைக் கொண்டு எவ்வளவு பஞ்ச தீப விளக்குகளை ஏற்ற முடியுமோ அவ்வளவு விளக்குகளை ஏற்றி வந்தால் தான் வாயுச் சலனங்களில் நாம் ஏற்படுத்திய பல விளைவுகளுக்கு தீர்வுகளைப் பெற்றிட முடியும்.  நாம் தினமும் விளக்கேற்றி வழிபடுவது எதற்கென்றால் நாம் அறிந்தோ, அறியாமலோ நம்முடைய சுயநலத்திற்காகவோ, நம்முடைய லௌகீகக் காரியங்களுகாகவோ நம்முடைய வேகமான காரியங்களால் இயற்கையில் சாந்தமான வாயுவின் அசலக் குண்ப்பாடுகளுக்கு ஏற்படுத்துகின்ற வாயுச் சலனங்களுக்கு தக்கத் தீர்வைப் பெறுவதற்காகத்தான்! இவ்வாறாக ஒரு சிறு விளக்கில் இரண்டு திரிகளை இட்டு ஜோதியை எழுப்பி நாம் வழிபடுகின்ற போது நம்மையும் அறியாமல் வாயுச் சலன நிவர்த்தியாக எத்தனையோ ஆயிரக்கணக்கான தேவ ரகசியங்களுக்கு வித்திடுகின்றோம். எனவே இரண்டு விளக்கில் தீபத்தை ஏற்றுவது என்பது வாயுச் சலனங்களிலுள்ள மாற்றத்திற்கு ஈடுகொடுப்பதாகவும் அமைந்துள்ளது.

பிரிந்த உயிரின் பிரயாண முறை!
இதே போன்று ஒருவர் இறக்கும் போது அவருடைய உடலிலிருந்து பிரிகின்ற ஆன்ம சக்தி (encapsulated soul) உடலானது நம்மால் நினைத்துப் பார்க்கக் கூட இயலாத அளவிற்கு வாயு வேகம், மனோவேகம் என்று சொல்வார்களே அந்த வேகத்தில் இங்கும் அங்குமாக அலைகின்றது. ஏனென்றால் உடலை விட்டுப் பிரிகின்ற ஆன்ம உடலுக்கு (சூட்சும உடல்) எந்தச் சுவரையும், திடப் பொருளையும , நீர், திரவப் பொருளையும் கடந்து செல்கின்ற அற்புத சக்தி உண்டு. நினைத்தவுடனேயே பூலோகத்தின் எந்தப் பகுதிக்கும் கோடிக் கணக்கான எந்த உலகங்களுக்கும் அடுத்த வினாடியே செல்கின்ற வாயுவேக சக்தியும் உண்டு. இந்த ஆன்ம உடலின் சலனங்களுக்கு நல்தீர்வாகத்தான் இறந்தவருடைய உடலின் அருகில் தெற்கு திசையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த எமதீபத்தின் அசலத் தன்மையானது அந்த ஆன்ம உடலுக்கு நிலைப்பொருள் சக்தியைத் தருகின்றது. உண்மையில் உயிரின் மேல் நிறைய ஆசை கொண்டுள்ளவர்கள் மரணம் அடையும் போது அவரது உடலிலிருந்து பிரிகின்ற ஆன்ம உடலானது எவ்வாறாயினும் அதே உடலில் புகுந்து  உயிர் பெறத் துடித்து இந்த ஆசையில் என்ன செய்வதென்று தெரியாமல் இங்கும், அங்கும் அலைந்து திரிந்து கொண்டிருக்கும். ஒரு விநாடிக்குக் கோடிக்கணக்கான மைல்களைத் தாண்டுகின்ற சக்தி எந்த ஆன்ம உடலுக்கும் இருக்கின்றமையால் இந்த ஆன்ம உடலானது அங்கும், இங்குமாக எங்கும் பறந்து கொண்டு அமர்க்களப்படுத்திக் கொண்டேயிருக்கும். இதனை ஆன்ம உடல் (Soul) என்று விளிப்பது கூடச் சரியன்று! ஆனால் இறப்பின் ரகசியம் நன்கு புரிவதற்காக இவ்வாறு சொல்கின்றோம். உண்மையில் ஆன்மா ஜோதி மயமானது, அழிவில்லாதது! எனவேதான் இறந்த உடலுக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள சில முக்கியமான கிரியைகள் இந்த ஆன்ம உடலின் மிதமிஞ்சிய வேகத்தைத் தடுத்து அதற்குரிய விண் பாதையில் ராக்கெட்டை செலுத்துவதுப் போல முறையாகச் செல்வதற்கான நல்வழி முறைகளைத் தருவதாகும் எனவே, இறுதிச் சடங்குகளில் பல ஆன்மீக ரகசியங்களும் அர்த்தமுள்ள முறைகளும் நிறைந்துள்ளன. இத்தகைய விளக்கங்களை யெல்லாம் தக்க சற்குரு மூலமாகக் கேட்டுப் பெறவும்..

ஸ்ரீகாசி விஸ்வநாதர் திருநீலக்குடி

இது மிகமிகப் பெரிய ஆன்மீகப் பாடம் ஆகும். ஆகையால் மிதமிஞ்சிய வேகத்தால் வாயுச் சலனங்களில் பல விளைவுகளை ஏற்படுத்துகின்றோம் என்பதை மட்டும் இப்போது சற்று புரிந்து கொள்ளுங்கள். எனவேதான் எந்தக் காரியத்தைச் செய்தாலும், அதில் தெய்வீகத்தைச் சற்றே புகுத்திக் கொள்வீர்களேயானால் நீங்கள் சற்றே வேகமாகச் செல்கின்ற காரியங்களிலும் கூட சுயநலமில்லாத இறைப் பணியோ, சமுதாயப் பணியோ இருக்குமேயானால் அதில் கிட்டுகின்ற புண்ய சக்தியானது உங்களுடைய மிதமிஞ்சிய வேக விளைவுகளை தடுப்பதற்கு உதவியாக இருக்கும். மிதமிஞ்சிய வேகம் வேண்டவே வேண்டாம். எங்கெல்லாம் நடந்து செல்ல முடியுமோ அங்கு எல்லாம் நடந்து சென்று விடுங்கள். நடக்கும் போது உள்மனதில் ஸ்ரீகாயத்ரீ மந்திரம், திருமூல வேத வாக்கியங்கள், நமசிவாய, சிவாயநம என்று சிவ/வைணவ மந்திரங்களை சொல்லிக் கொண்டே செல்வீர்களாக! உங்கள் மனதிலிருந்து எழுகின்ற மந்திர சக்திக் கிரணங்கள் உங்களுடைய வேகத்தால் வாயுச் சலனங்களில் ஏற்படுத்துகின்ற விளைவுகளுக்கு தக்கப் பரிகாரத்தைத் தந்திடும்! வாயு மண்டலத்தில் பதிந்துள்ள ஆன்மச் சதுரங்கள் நன்முறையில் நிலைநிறுத்திட உதவி செய்யும். மேலும் நாம் வண்டியில் செல்லும் போது ஏற்படுகின்ற புகை, உராய்வுகள், பெரிய சப்தங்கள் யாவும் வாயு மண்டலத்தின் அமைதிச் சலனங்களைப் பாதிக்கின்றன என்பதும் உண்மையே என உணர்க! இதற்காகத்தான் அக்காலத்தில் எவர் எங்கு சென்றாலும் கூட்டம் கூட்டமாகச் சத்சங்கமாகச் சென்று வேதபாராயணம், தமிழ் மறைகள் ஓதுதல், இசைக் கருவிகளை/தெய்வீகப் பாடல்களை வாசித்தல்/பாடுதல் போன்ற தெய்வீக சப்த கிரணங்களை எழுப்பிக் கொண்டே சென்றமையால் இவை வாயுச் சலன மாற்றங்களை அவ்வளவாகப் பாதிப்பது கிடையாது. பரிகாரமாகவும் அமைந்தது. இதற்காகத்தான் மாப்பிள்ளை அழைப்பு என்ற வகையில் ஜானவாசத்தில் மணமக்களை அழைத்துச் செல்லும் போது வாயுமண்டல சலன மாற்றப் பரிமாணாத்திற்கு நிவர்த்தியாக நாதஸ்வரம், மேளம் போன்ற மங்கள இசைக்கருவிகள் மூலமாகப் பரவெளியில் தெய்வீக ஒலியை ஒலித்துக் கொண்டே செல்வார்கள். இது அந்த ஊரின் பரவெளியையே சுத்திகரித்துவிடும். இவ்வாறாக நாம் சாதாரணமாக நடக்கும் போதும், வண்டியில் செல்லும் போதும் ஏற்படுகின்ற வாயுச் சலன பரிமாற்றங்கள் தான் எத்தனை! எத்தனை! இத்தகைய அற்புதமான விளக்கங்களைத் தக்க சற்குரு மூலமாகத் தான் பெறமுடியும் என்ற மனத் தெளிவையையும் பெற்றிடுங்கள்!   ஸ்ரீகாளஹஸ்தி, சிதம்பரம், மோகனூர் போன்ற தலங்கள் வாயுச்சலன சக்திகளை அபரிமிதமாகக் கொண்டவை. எனவே வேக சம்பந்தமான காரியங்களில் லாரி, கார், பஸ் ஈடுபட்டு இருப்பவர்கள் இத்திருத்தலங்களுக்கு அடிக்கடி சென்று தரிசனம் செய்து செவ்வாய்க்கிழமைகளில் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து ஏழைகளுக்கும் எண்ணெயுடைய விளக்குகளை நிறைந்த அளவில் தானமாகச் செய்தல் வேண்டும். ஏனென்றால் விளக்கில் ஏற்றப்படுகின்ற ஜோதிகள்தாம் வாயுச் சலனவிளைவுகளுக்கு தக்கத் தீர்வைப் பெற்று தரும் என்பதையும் உணர்ந்திடுக!

ஸ்ரீபல்குனி ருத்ர சித்தர்

விலங்கினங்களுக்கும் முக்தி தரும் மகாசித்தர் – ஸ்ரீபல்குனி ருத்ர சித்தர்

பெறுதற்கரிய மானிடப் பிறவிகளைப் பெற்று பகுத்தறிவுடன் வாழ்கின்ற மக்களுக்கு முக்தி வழியைக் காட்டுவதை விட மாக்களாகிய பகுத்தறிவில்லா ஜீவன்களுக்கும் முக்தி தரும் வழியைப் புகட்டுவது எத்தகைய அரும்பெரும் சாதனை! இந்த தியாகமய வாழ்வை ஏற்பவர்கள்தாம் சித்புருஷர்கள்! ஸ்ரீபல்குனி ருத்ர சித்தரே விலங்குகளுக்கு குறிப்பாக கழுதைகளின் ஆன்மீக மேம்பாட்டிற்காக தம் யோக, தபோ பலன்களைத் தியாகம் புரிகின்றார். எவ்வாறு ஒவ்வொரு மனிதனையும் கடைத்தேற்றுவதற்காக சித்தபுருஷர்களும், மகான்களும் தோன்றுகின்றார்களோ, அதே போல விலங்கினங்கள், தாவரங்களின் தெய்வீக முன்னேற்றத்திற்காகவும் பல சித்த புருஷர்களும் தங்களைத் தியாகம் செய்கின்றார்கள். கிளி போன்ற முகத்தை உடைய சுகமுனிவர், புலியைப் போன்ற கைகளையும், நகங்களையும் கொண்ட வியாக்ரபாதர், பாம்பு உருவை உடைய பதஞ்சலி மாமுனி போன்றோர் பல பறவைகளுக்கும் விலங்கினங்களுக்கும் முக்தி, மோட்ச நிலையை அருளவல்லவர்களாக இ(எ)ன்றைக்கும் விளங்குகின்றனர். இதே போன்று கழுதைகள் தங்களுக்குரிய தெய்வ மகாபுருஷராகப் போற்றுவது பல்குனி ருத்ர சித்த முனிவராவார், இவரைச் சுற்றிலும் எப்போதும் கழுதைகள், ஆன்மப் பாடம் கேட்டவாறே சூழ்ந்து இருக்கும். ஒரு முறை, பல நதி தேவதா மூர்த்திகளெல்லாம் ஒன்று கூடி அனைத்து ஜீவன்களும் புண்ணிய நதிகளில் நீராடுதலால் தமக்குப் பாவச்சுமை ஏற்படுவதால், அவற்றைப் போக்குவதற்க்கான தெய்வீகப் பிராயச்சித்த வழிமுறைகளையும் நாடுவதற்காக ஒன்று கூடிப் பேசியபோது அதனை உற்று கேட்டுக்கொண்டிருந்த கழுதை ஒன்று வடக்கு நோக்கி கத்தி நல்ல சகுன சாத்திரத்தை எடுத்துரைத்தது. ஒரு கழுதைக்குக் கூட தம்முடைய பாவச்சுமைகளின் தன்மை புரிந்திருக்கின்றதே என்று ஆச்சரியப்பட்ட நதி தேவதா மூர்த்திகள் அக்கழுதையானது எவ்வாறு அத்தகைய தெய்வீகக் குணத்தைப் பெற்றது என்று அதனிடம் வினவியபோது தம்முடைய குலத்தை வாழவைக்கின்ற ஒரு சித்தமாமுனிவர்தான் இத்தகைய பேற்றை தமக்கு அளித்தார் என்றும் அவர் அப்போது கயா அருகில் உள்ள பல்குனி நதிக்கரையில் தவம் புரிந்து கொண்டிருக்கின்றார் என்றும் எடுத்துரைத்தது. உடனே அனைத்து தேவதா மூர்த்திகளும் பல்குனி நதியை அடைந்திட, ஆங்கே பல்குனி நதியோ மிகச் சிறய ஓடையாக ஒரு கழுதை தாண்டிச் அளவிற்கு மட்டுமே குறுகிய நதியாக ஓடிக்கொண்டிருந்தது. அதிலும் நீர்ப்போக்குவரத்து ஒரு பானை அளவுகூட இருக்காது.

ஸ்ரீபல்குனி ருத்ர சித்தர்
பூவாளூர்

மூன்று அங்குலம் ஆழமும் கூட இல்லாத நதியில் எவ்வளவு நீர் இருக்க முடியும். நீங்களே சிந்தித்துப் பாருங்கள். ஆனால் அது கூட அந்த வறட்சிக் காலத்திலும், கோடையிலும், மிகமிகச் சிறிய நதியாக ஓடிக்கொண்டு இருந்தது கண்டு நதி தேவதா மூர்த்திகள் ஆச்சரியம் அடைந்தார்கள்.. தாங்கள் அறியாத வகையில் கங்கையின் ஒருபகுதியாக சிறு பல்குனி நதி ஓடுவது கண்டு ஆச்சரியமடைந்த நதிதேவதா மூர்த்திகள் கயாநதிப் பிரவாகம் முழுவதுமாக கர்மவினைகள் நிறைந்திருப்பதைக் கண்டார்கள். அங்கு நீராடிச் செல்வோர் எல்லாம் தங்களுடைய பித்ரு சாபங்களையும், தோஷங்களையும் அங்கு விட்டுச் செல்வதால் கயா சங்கமமே கர்மதோஷம் நிறைந்திருந்ததாகக் கண்டு ஆச்சரியமுற்று அவ்வளவு கர்மவினைகளையும் ஒரு சிறிய பல்குனி நதிதேவதையால் எப்படித் தாங்கிக் கொள்ள முடிகிறது என்று எண்ணி ஆச்சரியப்பட்டார்கள். மேலும் பிரம்மபுத்ரா போன்ற நதிகளில் கரைபுரண்டு ஓடுகின்ற நதி நீரானது பல்குனி நதியில் மட்டும் ஒரு ஆடும், கழுதையும் தாண்டும் அளவிற்குக் கோடையில் குறுகிய அளவிலும் மகத்தான கர்ம நிவாரணியாக இருப்பதைக் கண்டு வியப்புற்றார்கள். மேலும், பல்குனி நதி தேவதையின் பணிவும், அடக்கமும், எளிமையும் நதி தேவதைகளைக் கவர்ந்தன. அவைகள் சூட்சும ரூபத்தில் ஓடியதால் பல்குனி நதியின் உருவத்தைக் காண எவராலும் இயலவில்லை. நதிக்கரை ஓரத்தில் பல்குனி ருத்ர சித்த மாமுனி தவம் கொண்டிருந்தார். அவருடைய திருவடிகளை வருடிச் சென்றமையால் அதன் பலனாக பல்குனி நதி அதிஅற்புதப் பூர்ணப் பிரகாசத்துடன் திகழ்ந்ததால் அதன் தாயான கங்கைக்கே அந்த வடிவத்தை அறிய முடியவில்லை. இத்தகைய அற்புதமான தெய்வீகப் பாதங்களை உடைய இந்த மாமுனிவர் யாரென அவர்கள் அறிய ஆவல் கொண்டு பல்குனி நதியிடம் விளக்கம் வேண்டினர். கழுதைகள் போன்ற பல துன்பங்களைச் சுமந்து வாழும் பிராணிகளுக்காக பிராயச்சித்தங்களையும் உத்தம தேவநிலைகளையும் பெற்றுத் தருவதற்காக தம்முடைய தபோபலன்களையும் யோக சக்திகளையும், அர்ப்பணிக்கின்ற சித்தமாமுனிகளுள் ஒருவராக பல்குனி ருத்ர சித்தர் விளங்கி வருகின்றார் என்ற அருட்பெரும் தேவ ரகசியத்தை பல்குனி நதிதேவதை அப்போது வெளியிட்டாள்!

கழுதையின் தெய்வீக குணங்கள்
நாய், கழுதை, எருமை என்று எவரையும் ஏசாதீர்கள்! மனிதனைவிடச் சிறப்பான, புனிதமான, தெய்வீக குணங்களை பெற்றவையாக இவை விளங்கும்போது இவற்றைச் சாடுவதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? எருமை, கழுதை, நாய் என்று பிறரை ஏசுவதால் அத்தகைய பிறவிகளை நீங்களே உங்களுடைய அவச்சொல்லால் ஏற்படுத்திக் கொள்கின்றீர்கள் .ஏனென்றால் நல்வார்த்தைகளைப் பேசி ஏன் நன்முறையில் பிறரைச் சீர்திருத்தவில்லை? ஏன் தீய வார்த்தைகளில் உழன்று நாக்கின் வாக்கினைச் சிதைத்தாய்? காலத்தை வெறுமனே அழித்தாயே ஏன் என்று மேலுலகத்தில் உங்களுக்குப் பல கேள்விகள் கேட்கப்படும்... கழுதையும், நாயும் பிற ஜீவன்களின் விதிகளை நன்கு அறிந்திருக்கின்றனவே, மனிதனால் இந்நிலையைப் பெற முடியுமா?

ஸ்ரீஆதிநாதர் வயலூர்

ஸ்ரீஆதிநாயகி வயலூர்

உதாரணமாக நாய்க்கு எம தூதர்களின் தரிசனம் நன்கு தெரியும்! பிறருக்கு மரணம் வருவதை நாய் தன் அழுகைக் குரலால் உணர்த்துகின்றது. புரிந்து கொள்வார் யார்? பொதுவாக உலகெங்கும் மனித குலத்தின் கிண்டலுக்கு ஆளாகின்ற கழுதையைப் பற்றி ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் ஏன் எழுத வேண்டும்? இறைவனுடைய ஒவ்வொரு படைப்பிலும் ஆயிரமாயிரம் தெய்வீகப் பின்னணிகள் உள்ளன என்பதை உணர்விப்பதற்காகத்தான்! அறிவற்ற ஜீவனே கழுதை என்று சாதாரணமாக நாம் நினைத்துக் கொண்டிருக்க அந்த ஜீவனோ பகுத்தறிவுள்ள மனிதனைவிட எத்தனையோ அரிய தெய்வீக குணங்களைப் பூண்டிருக்கின்றது. எத்தனை கோடி ஆண்டுகள் தவங்கள் புரிந்தாலும் கூட ஒரு மனிதனால் இவற்றை குருவருளின்றி நிச்சயமாகப் பெறமுடியாது. இவ்வாறாக உலகத்தில் ஒவ்வொரு பிறப்பினைப் பற்றியும் நீங்கள் ஆத்மவிசாரம் செய்து வந்தால்தான் இறைவனின் பேராற்றல் தெரியவரும். இத்தகைய தெளிவைப் பெற்றால்தான் பேராசையும் துர்குணங்களும் நிறைந்த மனதின் அழுக்கினை விலக்கிப் புனிதப்படுத்த முடியும். நாம் ஜெபிக்கின்ற மந்திரங்கள், செய்கின்ற பூஜைகள், ஆற்றுகின்ற தர்ம காரியங்கள் யாவுமே உள்மனதைத் தூய்மைபடுத்தும் ஆன்மத் துப்புறவுப் பணிகளாகத்தான் விளங்கி வருகின்றன..! முதலில் மன அழுக்கை நீக்கிய பிறகுதான் முக்தி வழியை நாட முடியும். தன்னுடைய தாங்கும் சக்திக்கு மேலாகவே எக்கச்சக்கமான சுமையை (அழுக்குத் துணி) மூட்டையைச் சுமந்து வருத்தம் தோய்ந்து வருகின்ற கழுதையே தன்னுடைய எஜமானனுடைய நல்வாழ்விற்காக அரும்பாடுபடுகின்றது தானே! கழுதையின் பாலோ எத்தனையோ மருத்துவ குணங்களையும் ஆன்மீக இரகசியங்களையும் தன்னுள் கொண்டதாகும். தோல் வியாதிகளையும், தொண்டை வியாதிகளையும் போக்கும் பல சூட்சும மருத்துவ சக்தியை கொண்டதுதான் கழுதைப் பாலாகும்.

கழுதை திருமணம்
பூவாளுர்

இன்றைக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் கழுதை மற்றும் ஒட்டகத்தின் பாலைக் கொண்டு பல அற்புதமான மூலிகை, ஆயுர்வேத மருந்துகளை ஆக்கி வருகின்றார்கள். கழுதைப் பிறவி எவ்வாறு கிட்டுகின்றது என்பதே ஒரு பெரிய தெய்வீக ரகசியமாகும். இன்று நீங்கள் கழுதை என்று ஏசுகின்ற பிராணி பலவிதங்களில் உங்களுடைய பூர்வ ஜென்மத் தொடர்பு உடையதாக இருக்கலாம். ஏன் கழுதை, கழுதை என்று பிறரை ஏசுகின்ற போது அதே பிறவியைக் கூட நீங்கள் பெற்றுவிடலாம். எனவே மனிதனாகப் பிறந்த பிறகு ஒவ்வொரு வார்த்தையும் தெய்வீகம் நிறைந்ததாக, அர்த்தம் உள்ளதாக இருக்க வேண்டும். அநாவசியமாக எதையும் பேசுதல் கூடாது.. இதனை உணர்த்தும் முகமாகத்தான் பலவகையான விலங்கினங்களும் மனிதனுக்குப் புரியாததாக மௌனமாக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றன. எந்தக் கழுதை மனித குலத்தால் கேவலப்படுத்தப்படுகின்றதோ அதனுடைய குரல்தான் சுபசகுனமாகி மங்களத்தைத் தருகின்றது. நம் மூதாதையர்கள் கழுதையின் கத்தலை ஒரு மிகச்சிற்ந்த சுப சகுனமாகவும் உணர்த்தியிருக்கின்றார்கள்தானே! ஆம் உண்மைதான்! மேல் ஸ்தாயி, கீழ்ஸ்தாயி என்ற இரண்டு விதமான கழுதையின் சப்த பேதங்கள் உண்டு. பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது போல பூமியில் மிகச்சிறந்த பொறுமைசாலியாக விளங்கும் ஆமையைப் போன்று கழுதையும் விளங்குகின்றது.. மனிதர்கள் பேசினால் சப்தம் கேட்கின்றது. ஆனால் பசு, எருமை, நாய், கழுதைகள் போன்றவை ஒன்றுக்கொன்று சப்தமின்றி மனவார்த்தைகளால் பேசக் கூடிய Telepathy வல்லமையைப் பெற்றவை. சென்னையில் இருக்கின்ற ஒரு கழுதை செங்கல்பட்டில் இருக்கின்ற ஒரு கழுதையிடம் மிகத் தெளிவான முறையில் மனோவார்த்தைகளைப் (Telepathy) பரிமாறிக் கொள்ள முடியும். அப்படியானால் மனிதனைவிடப் பல அபூர்வமான தெய்வீக சக்திகளை, சித்திகளை கொண்டவையாக விலங்குகள் விளங்குகின்றன என்பது புலனாகின்றதல்லவா! புறாக்களுக்கோ பூலோகம் தவிர எத்தனையோ லோகங்களுக்கும் செல்லுகின்ற அற்புத ஆற்றல் உண்டு. கருடன்களும், கழுகுகளும் எத்தனையோ நட்சத்திர மண்டலங்களுக்கும் சென்று வருகின்ற தெய்வீக சக்திகளைக் கொண்டவையாகும். அவற்றின் நேத்திர (கண்பார்வை) சக்தி நீண்ட நெடுந்தூரத்திற்குப் பரவுகிறது. இவையெல்லாம் மனிதனுக்கு உண்டா? மீன்களுக்கும் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள செய்திகளை அறியக் கூடிய தெய்வீகத் தன்மை உண்டு. ஆமைகளோ ஆயிரம் வருடங்களுக்கு மேலாக வாழ்கின்ற ஜீவசக்தியைப் பெற்றிருப்பதால் மிகச் சிறந்த நினைவாற்றலைக் கொண்டவையாக விளங்குகின்றன. ஆயிரம் வருடங்களுக்கு மேல் வாழும் ஒரு ஆமைக்கு எந்த இடத்தில் எந்த நிகழ்ச்சி நடந்தது என்பதை எடுத்துச் சொல்லக் கூடிய தெய்வீக நினைவாற்றல் உண்டு. ஆனால் ஆமையின் மௌன மொழிகளை நீங்கள் அறிந்தால்தானே அதனை உணர்ந்து கொள்ள முடியும். இதற்குரித்தான கடல் தேவதைகளை நீங்கள் முறையாக வழிபட்டு வந்தால் நீங்களும் இந்த ஆற்றலை எளிதில் பெற்றிடலாம். இன்றைக்கும் கூர்மயோக தந்திர சக்திகளில் தேர்ச்சி பெற்றிட விரும்புவோர் ஆமை ஓட்டில் அமர்ந்திருந்து வாமன யோக நிலைப் பயிற்சிகளைக் கைக் கொள்கின்றார்கள்... ஆனால் அவ்வாறு பெறப்பட்ட ஆமை ஓடானது இயற்கையாக இறந்த ஆமையிடமிருந்து பெறப்பட்ட ஓடாக இருப்பதோடன்றி அதற்குரித்தான கூர்ம ஜல தோஷ நிவர்த்தி பூஜைகளையும் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். கூர்ம ஜெயந்தியன்று கடல் நீரில் பூஜை செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். அக்காலத்தில் ஆமை ஓட்டினை அத்தி மரக்கட்டையில்/சந்தனக்கல்லில் வைத்து அரைத்து அதனைக் கொண்டு நெற்றிக்கு மருந்துப் பட்டை இட்டுப் பலவிதமான கபால நோய்களுக்கு அற்புதமான தீர்வைக் கொண்டார்கள்.. இன்றைக்கும் ஆமை ஓட்டு பஸ்மம் என்பது நாட்டு மருத்துவத்தில் Migraine என்ற விடாத தலைவலிக்கு நல்ல தீர்வைத் தரும்.
கழுதை எந்த திசையை நோக்கிக் கத்துகின்றது என்பதை அறிந்து அதன் சகுன சாத்திரப் பலன்களைக் காட்டும் கர்த்தப கிரந்தம் என்ற ஞான ஜோதிடம் உண்டு.. கழுதையின் ‘கத்தல்கள்’ ஒற்றப்படையாக இருந்தால் காரியம் தாமதமாகும் என்பதையும், இரட்டைப் படையாயின் காரிய சித்தியையும் குறிக்கின்றது.. கிழக்கு நோக்கிக் கத்தினால் பண வரவையும் நிதி நிலைமைகள் சீரடைவதையும் கடன்களின் நிவர்த்தியையும் சுட்டுகின்றது.. ஏனென்றால் அவ்வாறு கத்துகின்ற நேரமானது சுக்ர ஹோரை சக்தியையும், அனுஷ நட்சத்திர வியாபகத்தையும் துவாதச நாமா சக்தியையும் பரவெளியில் திகழ்வதைக் குறிக்கின்றது. அதாவது காலச் சுழலில் சுக்ரயோக பாவனையை உணர்விப்பதாக கிழக்கு நோக்கிய திசையிலான கழுதையின் கத்தல் சுபகரமாக உணர்த்துகின்றது. கழுதை கத்தியவுடன் என்ன செய்ய வேண்டும்?

கூடுவிட்டுக் கூடு பாய்தல்

வல்லபசித்தரின் அற்புத ஆற்றல்!
  கூடுவிட்டு கூடுபாய்தல் (சூட்சும வடிவுத் துரியல் சித்தி)
சுந்தரானந்த தேவர் சித்த மாமுனி என்றழைக்கப்படும் ஸ்ரீவல்லப சித்தர் கூடுவிட்டுக் கூடுபாய்தலில் வல்லவர். இதுவே சித்தர்களின் பரிபாஷையில் சூட்சும வடிவுத் துரியல் ஆகின்றது. ஆம்! புழு, பூச்சி முதல் மனிதர்கள் தேவர்கள் வரை எவ்வடிவும் எடுக்கக் கூடியதே சூட்சும வடிவுத் துரியல் சித்தியாகும். ஆனால் நல்ல இறைத் திருப்பணிகளுக்கே இதைப் பயன்படுத்த வேண்டும். கூடுவிட்டு கூடுபாய்தல் ஒரு ஏமாற்று வித்தையன்று, இந்த சித்தியைத் தவறாகப் பயன்படுத்தினால், தன் சுய உருவிற்கே மீள முடியாமல் போய்விடும்.. எனவே இதனை அறிந்திடத் தக்க குரு தேவை. கூடுவிட்டுக் கூடுபாயும் சித்தியை அதாவது தெய்வீக சித்தியைத் தான் சித்தர்கள் தம் பரிபாஷையில் சூட்சும வடிவுத் துரியல் எனக் குறிப்பிடுகின்றனர். கூடுவிட்டுக் கூடுபாய்தலின் ஒரு நற்பலனே தன் மனித உடலை ஒரு பத்திரமான இடத்தில் கிடத்தி விட்டு, மற்றொரு வடிவினை மேற்கொண்டு அவ்வுடலில் சென்று மானிட உடலில் சாதிக்க முடியாத பல தெய்வீக நற்காரியங்களைச் சிறப்புறச் செய்வதாகும். ஆதிசங்கரர், பரத்வாஜர் போன்ற அற்புத மஹான்களும், யோகியரும் இந்த வல்லப சித்தியில் சிறந்து விளங்கினர். ஆனால் இவ்வற்புத சித்தியை ஜீவன்களின் நல்வாழ்விற்கு மட்டுமே மஹான்கள், யோகியர் பயன்படுத்தினார்களே தவிர ஒரு பொழுதும் அகங்காரம், ஆணவம், கீர்த்திக்காகப் பயன்படுத்தியது கிடையாது.. இந்த சித்தியிலுள்ள முக்கியமான யோக இலக்கண நியதி என்னவெனில் இதைத் தவறாகப் பயன்படுத்தினால் எந்த உருவில் வடிவெடுத்தனரோ அவ்வுருவிலேயே தங்கிவிட வேண்டியதுதான். மீண்டும் தம்முடைய சுய உடலுக்குத் திரும்ப முடியாது. இதுவே சாபமாகவும் மாறிவிடும். தற்காலத்தில் எதையுமே விஞ்ஞான ரீதியாகவே நிரூபணம் செய்திட வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கின்றார்கள். கடவுள் நம்பிக்கை உள்ளோர்க்குக்கூட எதையும் நிரூபணம் செய்தால்தான், பல இறை விஷயங்களையும் அவர்கள் மனம் ஏற்கிறது. இறைபக்தி ஆழப் பதியவில்லை என்பதையே இது குறிக்கிறது. கண்ணுக்குத் தெரிந்தும், தெரியாமலும், சூட்சுமமாக இருந்தும் இல்லாமலும் எப்போதும் நிலையான பரப்ரம்மத்தின் ஜோதி ஸ்வரூபத்தை உணர்விப்பதுதானே பக்தி! சற்குருவின் மீது ஆழ்ந்த நம்பிக்கையுடன் அவரைச் சரணடையும் போது, அவரே அனைத்தையும் தாமாகவே உணர்விக்கின்றார் அல்லவா! எனவே சற்குருவே ஆழ்ந்த இறை பக்தியை அளிக்கவல்லவர்! கலியுகத்திற்கும் இக்கூடுவிட்டு கூடுபாய்தலுக்கும் என்ன சம்பந்தம்? சற்குருமார்களும், யோகியர்களும், மஹான்களும், சித்த புருஷர்களும் இன்றைக்கு நமக்கு அருள்பாலிக்கின்ற அறவழி முறையாகக் கலியுகத்தில்  முக்கியமானதாக விளங்குவதே இந்த தெய்வீக சித்தியாகும். ஏன் இந்த வழிமுறையோ கலியுகத்திற்கு? ஏனெனில், ஸ்ரீஅகஸ்தியரோ, ஸ்ரீவசிஷ்டரோ, ஸ்ரீபரத்வாஜரோ அல்லது எந்த சற்குருவாயினும் அவர்தம் உடலை விடுத்து ஜீவாலயம் புகுந்த ஸ்ரீபரமாச்சார்யாள் , ஸ்ரீபாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் போன்ற எந்த மஹான், யோகியர் ஆயினும் நேரே கலியில் நம்முன் ஜடாமுடி, கமண்டலத்துடன் இன்று தோன்றினால் அதனை நம் மனம் இந்நேரத்தில் ஏற்குமா? மஹான்களே நேரில் வந்தாலும் அஞ்சி அலறிப் புடைத்து அடித்துக் கொண்டு நம்பிக்கையின்றி ஓடுகின்ற மனபீதி நிறைந்த கலியுகத்தில்தானே நாம் வாழ்கின்றோம். ஆறு கரங்களுடன், பஞ்சாயுதங்களுடன் சிம்ம வாஹனத்தில் தெய்வ மூர்த்தியே நேரில் தோன்றினாலும் சுவாமியை எதிரில் நின்றா தரிசனம் செய்வார்கள்? புலி வந்தது, யானை வந்தது, சிங்கம், வந்தது என்றுதானே ஓடத் தோன்றும்., இதனால்தான் இறைவனே கலியுகத்தில், மனித குலம் ஏற்கக் கூடிய வடிவில் சற்குருவாக இறைத் தூவர்களை அனுப்புகின்றான், எதற்கு? ஜீவன்களைக் கடைத்தேற்ற! இவ்வாறு இதனால், இதற்காக, இப்படியாக ஏற்பட்டதே கலியுகத்தில் அற்புதமாக இன்று நிலை பெற்று விளங்கும் உருவ வழிபாடாகும்.. பல கரங்களுடன் தர்மபுரியில் அருள்பாலிக்கும் ஸ்ரீதுர்க்கையை நேரில் தரிசித்தால் எப்படி இருக்கும்? பயந்து அஞ்சி அலறி ஓடிவிடுவார்கள்தானே?

வர்த்தினி வீணையுடன் ஸ்ரீசரஸ்வதி
திருநீலக்குடி

இவ்வாறுதான் தோன்றுவாள் எனும் ஆழ்ந்த நம்பிக்கையுடன் அதே அம்பிகையைக் கல்லில் வடித்து வணங்கும் போது ஏற்படும் பரமானந்தமே இந்த பெறுதற்கரிய  மானுடப்பிறவியின் அரிய இறை குணங்களுள் ஒன்றை நமக்குக் காட்டுகிறது.. ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு ஆத்மார்த்தமாக தரிசனத்தை ஆராய்ந்து, உணர்ந்து அதில் தெய்வீகத்தை நாமாகக் காணும் போதுதான் அதன் பரமானந்தத்தை நாமே உய்த்து உணர முடியும்.. இத்தகைய தெய்வீக தரிசனங்களை உணர்வித்துக் காண வைப்பவரே சற்குரு ஆவார்.. இவ்வகையில் சூட்சும வடிவுத் துரியல் எனப்படும் கூடுவிட்டு கூடுபாயும் தெய்வீக சித்தியில் கரைகண்டவரே வல்லப சித்தர் எனப்படும் சுந்தரானந்த தேவ சித்தராவார்... இவர் மதுரையில் நிலைப்படுத்திக் கொண்டவர்.. இவர்தம் சூட்சும ஜீவாலயங்களும் உண்டு.. எவ்வாறு ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளுக்குச் சில இடங்களில் சூட்சும ஜீவாலயங்கள் அமைந்துள்ளனவோ அதேபோல் ஸ்ரீவல்லப சித்தரும் பல இடங்களில் ஜோதி கமனமாக இறை பக்தியை உணர்வித்து நமக்கு ஆசி தந்து வருபவர் தான்! எத்துணையோ கோடி யுகங்களைக் கடந்தவராய்ப் பல புராணங்களிலும் இறை ஆணையால் பங்கு கொண்டவராய் இன்றைக்கும், ஜ்வலித்துக் கொண்டிருக்கும் சித்தபுருஷரே ஸ்ரீவல்லபசித்தரெனும் சுந்தரானந்த தேவ சித்தமுனியாவார். இவரது சூட்சும ஜீவாலயங்களை ஆத்மப் பூர்வமாக உணர்ந்து, உத்தம நிலை அடைந்தோர் பலருண்டு.. மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் ஆலயத்தில் சித்தர் சன்னதி என்ற பிரசித்தி பெற்ற சக்திவாய்ந்த இத்திருச்சன்னதியில் வல்லப சித்தராய் ஜீவாலயம் பூண்டிருக்கும் மிகவும் அற்புதமான சித்தர், சூட்சும வடிவுத் துரியல் சித்தியில் அதாவது கூடுவிட்டுக் கூடுபாய்ந்து, பலகோடி வடிவங்களை ஏற்றுப் பிரபஞ்ச ஜீவன்களுக்காகத் தம் பதஞ்சலி யோகத்தின் அற்புத தபோபலன்களை அர்ப்பணித்து இன்றும் சிவத் திருவடியில் உறைந்து அருள்பாலிப்பவர்..!

விழிப்பு நிலைச் செயல்கள்! உறக்க நிலைக் காரியங்கள்!
ஜாக்ரத் எனப்படும் விழிப்பு நிலையில் நாம் ஒவ்வொருவரும் நிகழ்த்தும் காரியங்கள் போல, உறக்க நிலையிலும் ஆற்ற வேண்டிய காரியங்களும் நிறைய உண்டு. பொதுவாக ஒரு மனிதனின் 24 மணி நேர தினசரிக் காலக் கணக்கில் கிட்டத்தட்ட 8 மணி நேரம் உறக்கத்தில்தானே கழிகின்றது.. மூன்றில் ஒரு பங்கு நேரத்தில் இந்த தேகத்தில் நாம் வெறுமனே உடற் செயலின்றித் தூங்கிக் கொண்டா இருக்கின்றோம்? வெளிப்படையாகப் பார்க்கும்போது நம் சரீரம் ஓரிடத்தில் தங்கிப் படுத்து உறங்குவதுபோல் தோன்றினாலும், கனவுலகத்திற்குரித்தான சூட்சும தேகத்தில் அவன் தன் கர்மவினைகளை தன் விதி நியதிக்கேற்ப ஆற்றிக் கொண்டுதான் உள்ளான். ஆனால் பொதுவாக நாம் இதை உணர்வதில்லை. தக்க சற்குருவை நாம் பெற்றுவிட்டோமானால், உறக்க நிலை தெய்வீக ரகசியங்களையும், ஜாக்ரத் எனப்படும் விழிப்பு நிலை காரண காரியங்களையும் அவரே நமக்கு உணர்த்தி, இவ்விரு நிலைகளிலும், நாம் ஆற்ற வேண்டிய பலவித தெய்வீகத் திருப்பணிகளை நமக்கு அருளாசியாக அளித்து, நம்மை அறநெறியில் நடத்திச் செல்கின்றார். இந்த இறை யோக்யதாம்சம் பூண்டவரே சற்குரு ஆவார்.. இத்தகைய தகுதிகளை பள்ளியிலோ, கல்லூரியிலோ, புத்தகங்களிலோ நாம் பெற இயலாது, பெறவும் முடியாது, சற்குரு மூலமாகத் தாமாய் அமையும் தெய்வீக சக்திகள் இவை.

என் செய்வீர் கர்மவினை களைய!
உதாரணமாக நீங்கள் சென்று கொண்டிருக்கும்போது ஒரு கழுதையைப் பலரும் துன்புறுத்திக் கொண்டிருக்கின்றார்கள் எனில் உங்களால் என்ன செய்ய இயலும்? மனதால் அழுது உங்கள் வழியே நீங்கள் போய்க் கொண்டிருப்பீர்கள்... இன்னும் சொல்லப் போனால் அவ்வாரு அதனைத் துன்புறுத்துவோரிடம், “அப்பா, அவ்விதம் செய்யாதீர்கள், அது வாயில்லா ஜீவன்“ என்று தான் maximum சொல்ல முடியும்! ஆனால், பஸ்ஸிலோ , ஸ்கூட்டரிலோ வெகு வேகமாக, அவசர காரியமாகச் சென்று கொண்டிருக்கும் நீங்கள் இச்சோக நிகழ்ச்சியைக் கண்டால் என்ன செய்ய முடியும்? வெறும் சாட்சியாக இதைக் கண்டு சென்றுவிட்டால் இம்மனிதப் பிறவியின் குணப்பாடு முடிந்து விடுகிறதா? “ஆனால் இப்படி எத்துணையோ கோடி துன்ப நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுதான் உள்ளனவே அதற்கு நாம் என்ன செய்ய இயலும்? என் வாழ்வை நடத்துவதற்கே என் புண்ணிய சக்தியும், ஆத்ம சக்தியும் செலவழிந்து விடுவதால், இதற்கு மேல் என்ன செய்ய இயலும்?”என்றுதானே எண்ணுவீர்கள் அல்லது கேட்கத் தோன்றும் .. இவ்வாறு கேட்பதும் தவறில்லை தான்! ஏனென்றால்ல் எதையுமே மனப்பூர்வமாக ஆத்ம விசாரம் செய்து அலசி ஆராய்ந்து தெளிகின்ற மனோ நிலையை நாம் பெறவில்லையாதலின் இத்தகைய கேள்விகள் எழத்தான் செய்யும். எனவே அவ்வாறு துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்ற கழுதைக்கு எப்படி உதவுவது? உள்ளூர சில மந்திரங்களை ஜபித்து இதனுடைய இந்த மந்திர சக்தியின் பலாபலன்கள் யாவும் அந்த கழுதைகளின் நம்மைக்காகட்டும் என வேண்டிச் சென்றிடலாம். ஆனால் அந்தக் கழுதையினுடைய கர்மவினைகளையும் அவ்வாறு அது துன்பப்படுவதற்கான கர்ம இலக்கணங்களையும் உணர்வீர்களேயானால் அல்லது உணரக் கூடிய பக்குவம் ஏற்படுமேயானால் நீங்கள் அந்தக் கழுதையின் உடலில் துன்புறுத்துவோரின் உடலிலே புகுந்து அங்கே நிகழ வேண்டியதை நன்முறையில் நிகழ்த்திச் சென்றிடலாம்.. இதற்கெல்லாம் ஒரு வினாடிக்கு மேல் ஆகாது. ஆனால் இந்த சக்தியை மனிதன் மட்டும் பெற்றால் அவனால் சும்மாவா இருக்க முடியும்! எவ்வாறு இந்த சக்தியைக் கொண்டு குறுக்கு வழியில் பணத்தைப் பெறமுடியும், உட்கார்ந்த இடத்திலிருந்தே கோடி கோடியாகப் பணத்தைக் கொட்ட வைக்க முடியும் என்றுதானே கலியுகத்தில் மனித மனநிலை சாதாரணமாக இருந்து வருகின்றது. இதனால்தானே இந்த கூடுவிட்டுக் கூடுபாயும் சித்தியை இன்றைக்கும் தெய்வ ரகசியமாக வைத்திருக்கின்றார்கள். நல்ல வகையிலே இந்த புண்ணிய சித்தி சக்தி அமையுமேயானால் அதனுடைய பலாபலன்கள் பலருக்கும் சென்றடையும்., ஆனால் தனிப்பட்ட ஒருவன் இதைப்பெற முயற்சிப்பானேயானால் அது அவனுடைய சொந்த செல்வ விருத்திக்காகத்தான் சுயநலமாகத்தான் பயன்படும்.. ஆனால் அதுவும் நிலைத்து நிற்காது.. அவனையே தாக்கிவிடும்..

ஸ்ரீமகாலட்சுமி திருநீலக்குடி

பல்புராணப் பாத்திரக்காரரே ஸ்ரீவல்லப சித்தர்

ஸ்ரீவல்லப சித்தர் எனப்படும் சுந்தரானந்த தேவர் சித்தருடைய அற்புதமான இந்தக் கூடுவிட்டுக் கூடுபாயும் சித்தியால் இன்றைக்கும் பலாபலன்களை பெற்றுக் கொண்டிருப்போர் ஏராளம், ஏராளம். ஸ்ரீவல்லப சித்தர் எத்தனையோ புராண சம்பவங்களில் இறை லீலையாகப் பங்கேற்றார்.. மதுரையில் ஸ்ரீமீனாட்சி திருக்கல்யாணத்தின்போது மாப்பிள்ளை வீட்டாராம் சிவபெருமானின் திருக்கயிலாய அடியார்களுக்கு உணவிட வேண்டும் என்று விரும்பிய ஸ்ரீமீனாட்சி தேவி சிவபெருமானிடம் அவ்வாறு பிரார்த்தனை செய்திடவே, “அம்மா! எங்கள் திருக்கயிலாய அடியார்கள் வந்தால் உன்னால் உணவிட முடியுமா?” என்று ஆதிசிவனும் கேட்டிடவே, தான் மதுரையை ஆளும் மீனாக்ஷி என்பதால் சற்றே செருக்குக் கொண்டவளாய் (இதுவும் இறைலீலைதான்!) “ஸ்வாமி! தங்களுடைய அடியார்களை அனுப்புங்கள் அன்னமிடுகின்றோம்”, என்று கூறியமையால்தான் குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் என்ற அற்புதத் திருவிளையாடல் நிகழ்ந்தது.. அப்போதும்கூட அச்சமயத்தில் வல்லப சித்தர் உத்தம சித்தராய்ச் சூட்சும வடிவுத் துரியல் கொண்டு, “தாயே! திருக்கயிலாய அடியார்களுக்கு உணவிடுதல் என்பது நம் சாம்ராஜ்யத்தில் இயலாத ஒன்று.. எனவே தாங்கள் இறைவனிடம் மீண்டும் முறையிட்டு அன்னம் அளிப்பது பற்றித் தக்க மாற்று வழியைப் பெற்றிடுங்கள்”, என்று உரைத்தபோது அம்பிகையும்.. “திருக்கல்யாணத்திற்கான விருந்துக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பதார்த்தங்கள் மிதமிஞ்சி இருக்கின்றனவே, அவை வீணாகக் கூடாது..” எனச் சாதாரண மனிதர்போல் எண்ணியே தயக்கம் கொண்டார்.. ஆனால் இதுவும் சிவலீலைதானே! சிவனாணையின்படி சக்தியும் இறைலீலை புரிந்தாள்! வல்லப சித்தரோ அவ்விடத்தை விட்டு மறைந்தார். சிவபெருமானின் அருளாணைப்படி  இவ்வாறாகத்தான் இறைவியே தம்மை கடவுள் லீலைக்கு ஆட்படுத்திக்கொண்டு மனிதரோடு மனிதராய் வாழ்ந்து பல இறைத் திருப்பாடங்களைப் புகட்டி அருள்பாலித்து வருகின்றாள். இறைவனின் அம்சமாக விளங்குகின்ற இறைவிக்கு அகங்காரம், ஆணவமா வந்து சேரும்? ஆனால் மானுட உருவில் எத்தகைய உத்தம இறைநிலைகளைப் பெற்றாலும் அவ்வவ்போது பலவிதமான தடங்கல்கள், அகங்காரம், ஆணவம் மூலமாக வந்து சேரும் என்பதை நமக்கு உணர்விக்கும் முகமாகத்தான் இத்தகைய இறைத் திருவிளையாடல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதை நாம் நன்கு உணரவேண்டும். இவ்வாறாக வல்லப சித்தராகிய ஸ்ரீசுந்தரானந்த தேவ சித்த முனிவருடைய ஜீவாலய தரிசனத்தை மதுரை ஸ்ரீமீனாக்ஷி சுந்தரேஸ்வர் ஆலயத்தில் பெற்று ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவபெருமானுக்கு உரித்தான திருவாதிரை, உத்திரம், சதயம் நட்சத்திர நாட்களில் சித்தர்பெருமானுக்கு (ஆலயத்தில் சித்தர் சன்னதி என்ற தனித்த சன்னதி உண்டு) குங்குமப்பூ, முந்திரி, பாதாம் கலந்த பாலால் அபிஷேகம் செய்து இந்த மூலிகைச் சத்துகள் நிறைந்த பாலை ஏழைக் குழந்தைகளுக்கு தானமாக அளித்து வருதலால் யோகம், ஜோதிடம், ஆசனம் போன்ற இறை இறையோக நுண்கலைகளில் நல்லறிவு கிட்டும். ஆனால் இதனால் கிட்டும் தெய்வ ரகசிய சித்திகளைக் கொண்டு உலக மக்களுக்கு நன்மை பயக்கும் செய்கைகளைச் செய்ய வேண்டுமே தவிர இதனை வியாபாரமாக்கிடுதல் கூடாது. மேலும் விபத்துகள், தீ விபத்து, நீரில் முழ்குதல், போர், வெள்ளம், மலைச் சரிவு போன்ற பலவிதமான மரணங்களால் முழுமையான உடல் கிடைக்கப்பெறாமல் அல்லது சிதைந்த தேகங்களுடன் தகனக் கிரியை அடைந்தோர்க்கு நல்முறையிலே பித்ரு சாந்தி கிட்டுவதற்காக இத்சித்தர் பெருமானுக்கு மேற்கண்ட முறையில் அபிஷேக ஆராதனைகளைக் கடைபிடித்து வழிபட்டு வருதல் வேண்டும். ஏனென்றால் முழுமையான தேகத்துடன் எவ்வித அங்கக் குறைவின்றி உயிர்பிரிதல் என்பது ஒரு சிறப்பான நிலையாகும். ஆனால் தர்ம ரீதியாகப் போரிட்டு நாட்டின் நலனுக்காகத் தியாகம் புரிந்தோருக்கு தெய்வீக விதிவிலக்கு உண்டு. இவ்வாறு முழுமையான மரணம் ஒருவருக்குக் கிட்டவில்லை என்றால் அதற்குரித்தான கர்மவினைகளை அறிகின்ற பாங்கையும் நாம் பெறவில்லையாதலின் இவ்வாறு உடல் கிட்டாமலும் சிதைந்தும் இறந்தோருடைய ஆவியும் பலவிதமான ஆதங்கத்துடன் பல லோகங்களிலும் தங்கிவிடும்.. இந்த ஆன்மத் தேக்க நிலைகளை நிவர்த்தி செய்து பித்ரு சாந்தி யாத்திரையை அவர்கள் பெறுவதற்காக இச்சித்தர் பெருமானுக்கு மேற்கண்ட முறையில் பூஜைகள் செய்து வருதல் வேண்டும்.. ஏனென்றால் தேகக்கூடு ரகசியங்களில் தேர்ந்தவர்தானே சுந்தரானந்த சித்தர்!

ஸ்ரீஐயப்ப விரதம்

ஸ்ரீஐயப்ப விரத மகிமை

கடந்த பல இதழ்களாக இத்தொடரில் ஸ்ரீஐயப்ப விரதத்தில் நடப்பு முறையில் ஏற்பட்டுள்ள பங்கங்களைப் பற்றியும் அவற்றிற்குரித்தான தீர்வுகளையும் சித்தபுருஷர்கள் அருளிய முறையிலே அளித்து வருகின்றோம் அல்லவா! ஸ்ரீஐயப்ப பக்தர்கள் பலரும் நூற்றுக் கணக்கான கேள்விகளுக்கு விளக்கங்கள் கேட்டு இருந்தாலும் அவற்ற்றுள் ஒரு சிலவற்றையே இங்கு நம்முடைய குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் திருவாய்மொழியாக நாங்கள் அளிக்க முடிகின்றது.. மகர ஜோதி தரிசனம் என்பது ஒவ்வொரு ஐயப்ப பக்தரும் பெற்று ஆனந்திக்க வேண்டிய பவித்ரமான இறை தரிசனமாகும்.. ஆனால் ஏதோ விரதம் பூண்டோம். சென்றோம், மகர ஜோதி தென்பட்டது, தரிசித்தோம் என்று வந்துவிட்டால் மட்டும் போதுமா! மகர ஜோதியின் உண்மையான மகத்துவத்தை என்றுதான் முழுமையாகப் புரிந்து கொள்வது? மகர ஜோதி தரிசனம் என்பது வெறுமனே நம் கண்களால் மட்டும் தரிசிப்பது அல்லது தென்படுவது மட்டும்மல்ல.. இதனுடைய பின்னணியில் கோடிக்கணக்கான தெய்வீக ரகசியங்கள் நிறைந்துள்ளன. இவற்றை எல்லாம் தக்க சற்குரு மூலமாகப் பெறுவது சிறப்புடையது என்றாலும், இறையருளால் ஒரு சிலவற்றை மட்டும் இங்கு கோடிட்டுக் காட்டுகின்றோம். நாம் எல்லோரும் நினைப்பது போல ஒவ்வொரு ஆண்டும் ஒரேவிதமான மகர ஜோதி தோன்றுவது கிடையாது. இதனைப் பகுப்பதும் நம் ஆன்ம சக்திக்கு அப்பாற்பட்டதாகும்.. ஏனென்றால் இந்த மகர ஜோதியைப் பேணுவதற்கு என்றே கோடானு கோடி அக்னி தேவதா மூர்த்திகள் உண்டு. இந்த மகர ஜோதியை ஒளிர்விப்பதற்காக அக்னிதேவ மூல மூர்த்தியே பலகோடி யுகங்கள் தவம் செய்து வருகின்றார்.!

நாமெல்லாம் நினைப்பது போல சிவபெருமானுக்கு மட்டுமே நெற்றிக்கண் உண்டு என்று எண்ணுவது நம் அறியாமையையே குறிக்கிறது. அனைத்து தெய்வ மூர்த்திகளுக்கும் நெற்றிக் கண்ணாம் நேத்ர சக்தி உண்டு. இவ்வாறாக அனைத்து தெய்வ மூர்த்திகளுடைய மூன்றாம் நேத்திர சங்கமக் குமிழாக விளங்குவதுதான் மகர ஜோதியாகும். எனவே உணர்தற்கரிய தெய்வீகப் சக்திகள் வாய்ந்த மகர ஜோதியை தரிசனம் செய்வதென்றால் அதனை தரிசிப்பதற்கான வழி முறைகளையும் முதலில் நாம் நன்றாக அறிந்து கொள்ள வேண்டுமல்லவா! நெற்றியில் குங்குமம் / மஞ்சள் / சந்தனம் / விபூதியிட்டு மகர ஜோதியைத் தரிசிப்பது மிகவும் விசேஷமானதாகும்.. குறிப்பாக ஆண்கள் அரைத்த சந்தனத்தை வலது காது பகுதியிலிருந்து இடது காது பகுதி வரை நெற்றிப் பொட்டில் நீண்ட நெடுங்கீற்றாக இட்டு நேத்ர சிவஹரி ஜோதியான குங்குமப் பொட்டிட்டு மகர ஜோதியை தரிசிப்பது மிகவும் விசேஷமானதாகும். ஏனென்றால் ஒவ்வொரு மனிதருக்கும் நெற்றிப் பொட்டில், மையப் பகுதியில் உள்ளொளி நேத்திர ஜோதிக் குமிழ் உண்டு. ஆனால் இது சாதாரணமாகக் கண்ணுக்குத் தெரிவதிலை..

மகர ஜோதி தரிசன மாண்பு!
புனிதமான சூழ்நிலைகளில் தெய்வீகம் நிறைந்த குணப்பாடுகளில் தான் மகர ஜோதி தோன்றும். உத்தம தெய்வீக எண்ணங்கள், புனிதமான பூஜா சக்திகள், தவசக்தி, யோக குணங்கள் நிறைந்தோருக்குத்தாம் இந்த மைத்ரேய நேத்திர ஜீவ ஒளி தோன்றலாகும்... ஆனால் இயற்கைத் தன்மையாக (inherent) ஆக., ஆழ் ஒளிச் சாரலாக, ஜாதி, மத, இன பேதமின்றி அனைவருக்கும் இது நெற்றிமையக் கபாலக் கூட்டினில் ஒளிர்கின்றது. எனவேதான் நெற்றிக்கு விபூதி, மஞ்சள், சந்தனம், குங்கும மிட்டு, நெற்றியொளி இறைச் சாரலை, “இறைத்து” ஒளிப் பரவலாக்கி நீறிட்ட நெற்றி, குங்குமமிட்ட நெற்றியை தரிசிப்போர்க்கெல்லாம் இந்த மைத்ரேய நேத்ர ஜோதியின் பலாபலன்களைத் தருகின்றது. நெற்றிச் சின்னங்களுடன் நெற்றி மத்தியில் உள்ஜோதியின் மகர மைத்ரேய நேத்ர ஜோதிக் கிரணங்களின் கிரஹிப்பினால் பல அற்புதமான தெய்வீக சக்திகள் கபாலக் கூட்டில் உற்பவிக்கின்றன. எனவே குங்குமமிட்ட மனைவியின் நெற்றியைக் காலையில் கணவன் நல்தரிசனமாகக் காணுகையில் அவனுக்கு ஆயுட்சேமம் கூடுகின்றது.. மகர ஜோதி தரிசனத்தின் பரிபூர்ணமான பலன்களைப் பெறவேண்டுமானால் உண்மையான முறையில் ஸ்ரீஐயப்ப விரதத்தை மேற்கொண்டிருக்க வேண்டும் மனம்போன போக்கில் பலவிதமான பங்கங்களுடனும், குறைகளுடனும் ஸ்ரீஐயப்ப விரதத்தைக் கையாள்பவர்களுக்கு மகர ஜோதி தரிசனத்தின் பரிபூர்ண பலன்கள் கிட்டுவதில்லை. ஏனென்றால் மகர ஜோதி தரிசனத்தையும் பெறுவதற்காகவே பூலோக மக்களைப் போன்றே முப்பது முக்கோடி தேவர்களும், தங்கள் தேவலோக நியதிகளுக்கு உரித்தான முறையில் அற்புதமான விரத முறைகளைக் கையாள்கின்றார்கள் என்றால் அவர்கள் முன் மானிட ஜீவன்களாகிய நாம் எம்மாத்திரம்?

மகரஜோதி தரிசனத்திற்கு நம் உள்ளம், மனம், தேகம், ஆத்மம், ஆகிய அனைத்தையுமே, புனிதமான முறையில் இறைநெறியில் திளைக்கும், படியாகப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்., கண்கள் மட்டுமின்றி நம் உடலில் உள்ள 72 ஆயிரம் நாடி, நரம்பு, நாளங்களுமே மகரஜோதி தரிசனத்தைப் பெறுகின்றன என்பது நீங்கள் யாவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தெய்வீக ரகசியமாகும்.  ஏதோ நம் இரு கண்களால் மட்டும் மகரஜோதி தரிசனத்தைப் பெறுகின்றோம் என்று சாதாரணமாக இதனை எண்ணிவிடாதீர்கள்.. மகர ஜோதிதனை உடலில் (கண்களால்) தரிசிப்பது, உள்ளத்தால் ஸ்பரிசிப்பது, மனதில் பூரிப்பது ஆகிய மூன்றிற்குமே வித்யாசமான ஜோதி தரிசன தத்வார்த்தங்கள் உண்டு. உதாரணமாக மகரஜோதி தரிசனத்தின் போது ஸ்ரீஐயப்ப அடியார்கள் உறக்க நிலையில் இருந்தால் கூட அல்லது நோய்வாய்ப்பட்டு மயக்க நிலையில், ஓய்வு நிலையில் இருந்தாலும் கூட அவர்களுக்கும் மகரஜோதி தரிசனம் நாடி, நாளங்கள் மூலமாக உடலை அடைகின்றது என்பது உண்மையே. எனவே மகரஜோதி தரிசனத்தைப் பெறுவதற்கான தேக, உள்ள, மனப் பரிமாண விரதமுறைகளையும் ஜோதி தரிசன நிலைகளையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமல்லவா!

ஆதவனே அனைத்திற்கும் மூலம்
திருநீலக்குடி

அரிதான (ஜோதி) தரிசனங்கள்!
ஒவ்வொரு ஐயப்ப அடியாரும் ஒரு மண்டல (48 நாட்கள்) விரத நாட்களின் போது தினந்தோறும் குறைந்தது 108 ஜோதி தரிசனங்களையாவது பெற்றாக வேண்டும். விளக்கு, ஊதுபத்தி ஜோதி தரிசனம், சாம்பிராணி அக்னி தரிசனம், அன்னதானத்திற்காக அமைக்கப்பட்டுள்ள புனிதமான அடுப்புஜோதி தரிசனம், கோயில் விளக்குத் தரிசனம், கோயில் கோபுர விளக்குத் தரிசனம், தங்க கலச விளக்குத் தரிசனம், விமான விளக்குத் தரிசனம், அனைத்து மூலஸ்தானத்திலுள்ள தூண்டாவிளக்குத் தரிசனம், கோயிலை, மலையை வலம் வருகின்ற மினிமினிப் பூச்சிகளின் இயற்கை ஒளிதரிசனம், சந்திர ஒளி, சூரிய ஒளி தரிசனம், குறித்த சில நட்சத்திர ஒளிகளின் தரிசனம், அவரவர் ஜன்ம நட்சத்திர ஜோதி தரிசனம், திருஅண்ணாமலை போன்ற திருத்தலங்களில் தோன்றுகின்ற கார்த்திகைத் தீப தரிசனம், கற்பூர ஜோதி தரிசனம், நெய்விளக்கு தரிசனம், ஹோமகுண்டத்தின் அக்னி ஜோதி தரிசனம், ஷீரடி, மயிலாப்பூர் ஸ்ரீசாய்பாபா கோயில்களில் நெடுநாட்களாக எரிந்து கொண்டிருக்கின்ற புனித விறகுபந்தம் ஒளிதரிசனம், காஞ்சிபுரம், கும்பகோணம் போன்ற திருத்தலங்களில் பல குடும்பங்களிலும் புனிதமாக குறைந்தது நூறாண்டு காலமாக அணையாமல் பாதுகாப்பட்டு வருகின்ற அக்னி ஹோத்ர ஹோம குண்ட தரிசனம் – இவ்வாறாக ஒவ்வொரு ஐயப்ப விரத அடியாரும் தினந்தோறும் 108 ஜோதி தரிசனத்தைப் பெற்றால் தான் மகரஜோதி தரிசனத்தினுடைய பலன்களைப் பற்றி நன்கு உணர்வதற்கான ஆத்ம யோக்யதாம்சங்களைப் பெறுகின்றார்கள். இது எளிமையானது தானே!

பலவிதமான ஜோதி / விளக்கு தரிசனங்களைப் பார்க்கும் போது வெறும் கண்களால் மட்டும் பார்க்காமல் பலவித விரல் முத்திரைகளால் ஜோதிகளைத் தரிசிப்பது மிகவும் முக்கியமானதாகும்.. இதற்குரித்தான தகுந்த முத்திரா விதானங்களைத் தக்க சற்குருமாரிடம் பெற்று அறியவும். நம் ஆஸ்ரமத்தின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள ஸ்ரீகாயத்ரீ முத்ரா தரிசன மகிமை என்ற அற்புதமான நூலில் பெறுதற்கரிய பல அரிய முத்திரை விளக்கங்களைப் பற்றி அளித்துள்ளோம். ஒவ்வொரு ஐயப்ப அடியாரும் தினந்தோறும் பசுமையான காட்சியைக் குறைந்தது 15 நிமிடங்களுக்கேனும் தினந்தோறும் பெற்றாக வேண்டும். அப்போதுதான் நேத்ர ஜீவ சக்தி பெருகும். பரந்த வயல் வெளிபரப்பு, தென்னை, பனை போன்ற புனித தல விருட்சங்களின் தரிசனம், ஆகாயத்தில் தினமும் குறைந்தது 12 நிமிட நேரமாவது நட்சத்திரங்களைத் தரிசித்தல், பாசாங்குலி என்ற முறையில் தினந்தோறும் பெரியோர்கள் வகுத்துள்ளபடி தகுந்த முத்திரை மூலம் சூரிய ஒளியை தரிசித்தல், சந்திர தரிசனம் போன்றவையாவும், மனதிற்கு புனிதத்தன்மையை அளிக்கின்றது.

தீயவை எழும்போது !
எப்போதும் தீய எண்ணங்களே எழுந்து கொண்டிருக்கின்ற மனோநிலைகள் பலருக்கும் உண்டு.. புனிதமான இடங்களுக்குச் செல்லும் போதெல்லாம் தம்மையும் அறியாமல் உள்ளத்திலிருந்து காம, தீய எண்ணங்கள் எழுகின்றதல்லவா! இவற்றை எப்படித் தணிப்பது, கட்டுப்படுத்துவது என்று பலரும் தெரியாமல் திகைத்து வருந்திக் கொண்டு இருக்கின்றார்கள்.. தினந்தோறும் விதவிதமான ஜோதி தரிசனங்களை, பலவிதமான விளக்குத் தரிசனங்களை ஒருவர் முறையாகப் பெற்று வருவாரேயானால் அவருக்கு படிப்படியாகத் தூய்மையான மனம் தானாகவே வந்தடையும்..

ஒவ்வொரு ஐயப்ப அடியாரும் தினந்தோறும் கண்களை மூடி அமர்ந்த நிலையில் தன் மனதினுள் மகர ஜோதியை மானசீகமாக தரிசித்து, தியானித்து வருதல் வேண்டும்.. ஏனென்றால் உள் ஒளிதான் உத்தம ஆத்ம ஜோதியின் தரிசனத்தைப் பெற்றுத் தரும். சாம்பிராணி புகையிலேயே அமர்ந்து கொண்டு தியானிப்பது மிகச் சிறந்த தியான நிலையைப் பெற்றுத் தரும்.. ஆனால் தற்காலத்தில் மூச்சு அடைப்பு (Wheezing) என்று பல காரணங்களால் சாம்பிராணி தூபத்தின் புனிதப் புகையையே பலரும் அறியாமல் ஒதுக்கிவிடுகின்றார்கள். இதுவே கலியுகத்தின் கோலம்! இவ்வாறாக நல்விஷயங்களெல்லாம் ஒதுக்கப்படுவதால் தான் நாளுக்கு நாள் கலியுகச் சமுதாயத்தில் துன்பங்கள் பெருகுகின்றன.

Bickering Sticker பொட்டு!

ஒவ்வொரு இல்லறப் பெண்மணியும் எப்போதும் நல்ல பக்குவமான முறையில் தயாரிக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட குங்குமத்தையே நெற்றியில் அணிந்து வருதல் வேண்டும். நெற்றியில் புண்ணாகிறது என்று தற்காலத்தில் பிளாஸ்டிக்கினால் ஆன ஒட்டு பொட்டை (Sticker) இட்டு வருகின்றார்கள்.. நல்ல குங்குமத்தை நெற்றியில் இட்டு வந்தால் அது நெற்றியின் மைய மைத்ரேய நாடிகளுக்கு நல் ஆரோக்யத்தைத் தருகின்றது. எந்த குங்குமமானது கணவனுக்கு ஆயுள் விருத்தியையும், மனைவிக்கு சுமங்கலி தத்துவத்தையும் தருகின்றதோ அதைப் புறக்கணித்து விட்டு ஒன்றிற்குமே பயன் இல்லாத Sticker பொட்டையா நெற்றியில் வைத்துக் கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது? நீங்கள் உங்களையே ஏமாற்றிக் கொள்வதா? குங்குமம், சாந்துப் பொட்டு இல்லாத நெற்றியோ, ஒட்டுப் பிளாஸ்டிக் பொட்டு இட்ட நெற்றியோ சுமங்கலித்வம் ஆகாது.. மாறாக இது கணவனுடைய ஆயுளை குறைக்கின்றது. பிளாஸ்டிக் ஒட்டுப் பொட்டின் மூலம் தன்னுடைய சுமங்கலித்துவத்திற்கும், கணவனுடைய ஆயுள் விருத்திக்கும் தாமாகவே பெண்கள் கேட்டினை விளைவித்துக் கொள்ளலாமா? ஒரு கணவனுக்கு, நல்ல ஆயுள் விருத்தியையும், உடல் ஆரோக்கியத்திற்கும் காரணம் மனைவியின் நெற்றிப் பொட்டிலிருந்து எழுகின்ற உத்தமமான சுமங்கலித்துவ ஜோதியேயாகும்.. ஆனால் பிளாஸ்டிக் ஸ்டிக்கர் பொட்டிலிருந்து புனித ஜோதியா எழும்? சற்றே சிந்தித்துப் பாருங்கள். நன்முறையில் தயாரித்துப் பூஜிக்கப்பட்ட குங்குமத்திலிருந்து எழுகின்ற ஜோதிக்குத்தான் உள்ளத்தையும், மனத்தையும் சுத்தப்படுத்துகின்ற அற்புதமான குணங்கள் உண்டு. எனவே இல்லறப் பெண்மணிகள் நல்ல குங்குமத்தை நெற்றியில் இட்டு வந்தால்தான் ஐயப்ப விரதம் பூண்டு இருக்கின்றவர்களுக்கு நல்ல புனிதமான முறையில் எவ்வித விரத பங்கமும் இன்றி விரதம் பூர்த்தி அடையும், நல்ல மகர ஜோதி தரிசனமும் கிடைக்கும்.. இவ்வாறாக மகர ஜோதி தரிசனத்தைப் பற்றிய பல தெய்வீக ரகசியங்கள் உண்டு. மேலும் பல விளக்கங்களைத் தக்க சற்குருமார்களிடம் கேட்டுப் பெற்று இறைப்பூர்வமாகக் கடைபிடித்து அனுபவித்துப் பயன் அடைவீர்களாக!

ஆத்ம விசார வினா விடை

குருமங்கள கந்தர்வா ஸ்ரீ வெங்கடராமன் அவர்கள் அடியார்களுக்கு தந்த சித்தர் வாக்கிய விளக்கத் தொகுப்பு
எத்தனையோ ஆன்ம வினாக்களுக்கு விடை தெரியாது தத்தளித்து வாழுகின்ற மனிதர்கள் ஏராளாம்! ஏராளம்! ஏன் இந்த இறைவழிபாட்டை மேற்கொள்கின்றோம், இந்த பூஜை முறைகளைச் செய்கிறோம் என்பதைச் சற்றும் உணராது, இயந்திர கதியில் பூஜை செய்வோரும் உண்டு. ஏன் இப்படிச் செய்கின்றோம் என்பதை உணர்வுப் பூர்வமாக அறிந்து செய்யும் போது அதனுடைய பலாபலன்கள் பெருகுகின்றன அல்லவா! இன்றைய விஞ்ஞான உலகத்தில் உங்களுடைய குழந்தைகள் கேட்கின்ற கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்ல இயலாது. காரணம், கலியுகக் குழந்தைகளுக்கு அறிவு வேகம் அதிகம். விவேகமும் அதிகம். ஆனால், இந்த விவேகம் கூடிய அறிவை நன்முறையில் இறைவழியில் செலுத்தினால்தான் அது இறைப்பிரகாசத்துடன் திகழும். இல்லையென்றால், விவேகமற்ற மிதமிஞ்சிய வேகம் விபரீதமாக முடிந்து விடும் வாழ்க்கையைப் பாழாக்கிவிடும். இத்தொடரில் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீ வெங்கடராமன் அவர்கள் சாதாரண மனித உள்ளத்தில் எழுகின்ற பல வினாக்களுக்கு ஆன்மீக ரீதியாக சித்புருஷர்களுடைய வழிமுறைகளிலே தெளிவான ஞானபூர்வமான விடைகளைத் தந்தருள்கின்றார்கள். படித்து, உணர்ந்து, தெளிந்து உங்கள் வாழ்க்கையை இறைவழியில் செம்மைப் படுத்திக் கொள்வீர்களாக!

அடியார் : சற்குருவே! தூக்கம், சோம்பேறித்தனம், சினிமா, டி.வி, விளையாட்டு, கிரிக்கெட் மாட்ச் போன்ற பலவிதமான வாழ்க்கைக் கோணக் காலக் கட்டங்களில் மனிதன் தன் வாழ்க்கை நேரத்தைக் கடத்தி விடுகின்றான், வாழ்க்கையின் ஒவ்வொரு விநாடி நேரத்தையும் நன்முறையில் பயன்படுத்துவது எப்படியோ? முடியுமா அது?

குருமங்கள கந்தர்வா :

கலியில் மனிதனுக்குக் கேள்விகள்தான் கேட்கத் தெரியும். பதிலை எடுத்துச் சொன்னாலும் ஆழ்ந்த நம்பிக்கையுடன் கடைப்பிடிப்பது கிடையாது. கேட்பதோடு சரி, ஒவ்வொரு மனிதனுடைய ஆயுளுமே இத்தனைக் கோடி மூச்சுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் இத்தனை வருடங்கள் என்று நம்முடைய மனிதக் கணக்கில் நமக்குப் புரியும்படியாக மனிதனின் ஆயுளை நிர்ணயித்துக் கொள்கின்றோம். ஒவ்வொரு மனிதனும் அவன் இறந்தவுடன், அவன் சந்திக்க வேண்டிய மேலுலக இறைநீதி விசாரணைக் கூடம் ஒன்று உண்டு. அந்தந்த வாழ்வு முடிந்தவுடனேயே, மனித வாழ்வோ, மிருக வாழ்வோ, தாவர வாழ்வோ இந்த மேலுலக தர்ம பரிபாலன விசாரணைக் கூடத்தின் முன் ஒவ்வொரு ஜீவனும், எந்த நாட்டில் இருந்தாலும் சரி, நீதி தேவதையின் முன் ஆஜராக வேண்டும். (Day of Judgement).. இதில் சந்தேகமே கிடையாது.. அங்குள்ள விரஜா தீர்த்தத்தில் மூழ்கி எழும்போது ஒவ்வொரு ஜீவனுக்கும், தன்னுடைய முந்தைய வாழ்க்கையில், பிறவிகளில் செய்த தவறுகள், நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக தாமாகவே உணர்விக்கப்படுகின்றன. அங்குள்ள தேவ காலக் கணக்கே வேறு. ஒரே விநாடியில் divine video clippings போல பிறவியின் அத்தனை ஆண்டு நிகழ்ச்சிகலும் கண்மூடிக் கண்ணைத் திறப்பதற்குள் மனத்திரையில் ஓடிவிடும். எவரும் எடுத்துச் சொல்லாமலே ஒவ்வொரு ஜீவனும் இந்த அறதேவதா இறைநீதிக் கூடத்தில் தன்னுடைய தவறுகளையும், நிறைகளையும், குறைகளையும் தானே உணர்ந்துகொண்டு தன்னுடைய பிறவிப் பரிபாலனத்தை தானே வகுத்துக் கொள்கின்றது. இந்த நிலையில்தான் அந்தந்த ஜீவனுக்காக அளிக்கப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவு நேரத்தை வீணடித்துவிட்டார்கள் என்ற பாடமும் பக்குவமும் ஏற்படும்.

வினைதீர்க்கும் வேலவன்
திருநீலக்குடி

கால தேவதையை ஒதுக்கி காலத்தை வீணாக்கி.... “ஆஹா! எண்பது வருடம் வாழ்ந்த நாம், கிட்டத்தட்ட எழுபது வருட வாழ்க்கையை சினிமாவிலும், கேளிக்கைகளிலும், டி.வியிலும், தீயொழுக்கத்திலும், அரட்டையிலும், வெட்டியாகக் கழித்து விட்டோமே. இதை இறைவழியில் பயன்படுத்திக் கொண்டிருக்கலாமே!”அவ்வயதில் அவ்விடத்தில் இந்த மனமாற்றம் தோன்றி என்ன பிரயோஜனம்! அதே மனித வாழ்வு மீண்டும் கிடைக்குமா! அடுத்த பிறவி மிருக வாழ்க்கையாகவோ, தாவர வாழ்க்கையாகவோ, உடலற்ற ஆவி வாழ்வாகவோ அமைந்து விட்டால் என்ன செய்வது? எனவே ஒவ்வொரு மனிதனும் தனக்கு அளிக்கப்பட்ட ஆயுளின் ஒவ்வொரு விநாடியையும் நன்முறையில் பயன்படுத்தியாக வேண்டும் என்பதை உணர்ந்தே ஆக வேண்டும். எனவே நற்காரியங்களைச் செய்வதோடு மட்டுமல்லாமல் நேரத்தையும் நன்முறையில் செலவழிக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு மனிதனுக்கும் இடப்பட்டுள்ள மிக முக்கியமான இறைக் கடமைகளுள் ஒன்றாகும். இதனைப் பலரும் உணர்வதில்லை. ஏதொ பாக்கு, சிகரெட், அரட்டை, பீச், கோடை ஸ்தலம் என்று பொழுது போக்குகின்றார்கள். மேலும், பூஜைக்கு நேரமில்லை என்று ஆளாய்ப் பறக்கின்ற மனிதன் பஸ் ஸ்டாண்டிலும், ரயில்வே ஸ்டேஷனிலும், ரேஷன் கடைகளிலும், தாசில்தார் /ரிஜிஸ்டர் ஆபிஸிலும் சினிமா தியேட்டரிலும் டி.வியின் முன்பும், வங்கியிலும், அரசு அலுவலகத்திலும் காத்துக்கிடக்கின்ற நேரத்தைப் பார்த்தால், அவன் எந்த அளவிற்கு பூஜை செய்ய நேரமில்லை என்று பொய் சொல்கின்றான் என்பது அவரவர்க்கே நன்றாகத் தெரியும். எனவே personal வேலை என்று சொல்லி இறைவழிபாட்டை இரண்டாம் பட்சமாக ஆக்கிவிடாதீர்கள். நீங்கள் எந்த வேலையைச் செய்து கொண்டிருந்தாலும், உங்கள் உள்ளத்தில், மனதில் உள்ளூர திருமந்திரம், ஸ்ரீகாயத்ரீ மந்திர ஒலி போன்று நல்மந்திர ஓடை ஓடிக் கொண்டிருக்கட்டும். மானசீக பூஜை தேவையெனிலும் அது மட்டும் போதாது. வயிற்றுப் பசி என்று மானசீகமாக நாலூ தோசைகளைச் சாப்பிட்டால் தீருமா? மன சரீரம் வேறு, நகமும் சதையுமான மனித தேகம் வேறு, காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் கட்டாயமாக இந்த பெறுதற்கரிய தேகத்தால் நிச்சயமாக இறை வழிபாட்டைச் செய்தாக வேண்டும்
அன்னதானப் பணி, ஆலய உழவாரத் திருப்பணிகளும், சரீர பூஜைதான், உடலாலான பூஜையானது கோயில் தரிசனமாகவோ, மலை கிரிவலமாகவோ, அடிபிரதட்சிணமாகவோ, அன்னதானமாகவோ இருந்தால்தான் உங்களுடைய ஒவ்வொரு அங்கத்தாலும் செய்த கர்மவினைகளுக்கும் பாவத்திற்கும் தக்கப் பிராயச்சித்தத்தைப் பெற முடியும். எனவே மனிதனும் அவனுடைய வாழ்க்கை நேரத்தின் ஒவ்வொரு விநாடியையும் வீண் பேச்சு, அரட்டை இல்லாமல் நன்முறையில் கழித்தாக வேண்டும். இல்லாவிடில் மேல் உலகத்தில் காலத்தைக் கொன்றதற்கான தண்டனைகளைப் பெற்றாக வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.. ஒவ்வொரு மனிதனும் இரவில் உறங்கப் போகுமுன் தன்னுடைய வாழ்நாளை எவ்விதத்தில் நல்ல முறையில் கழித்திட்டான் என்பதை ஆத்ம விசாரம் செய்து பார்த்திட வேண்டும். பெறுதற்கரிய இந்த மானிடப் பிறவி எடுத்தது வெறுமனே வீணே கழிப்பதற்காகவா? ஏனென்றால், இறைவன் அளித்த அற்புதப் பரிசாக விளங்குகின்ற இந்த மானிடப் பிறவியை வீணாகக் கழித்து விட்டால், மீண்டும் இதுவே கிட்டும் என்பது என்ன நிச்சயம்! வீணாகக் காலத்தைக் கழித்து வீணாகப் பிறவியைப் பெருக்கிக் கொள்ளாதீர்கள்! இனியேனும் இந்த க்ஷணத்திலிருந்து ஒவ்வொரு விநாடியையும் நன்முறையில் பிறருக்குப் பயன்படும் வகையிலே வாழ்வதற்காக, குடும்பத்திற்கும் பிறர்க்கும் சுயநலமற்ற முறையிலே அற்புதமான இறைத் திருப்பணிகளுடன் வாழ்க்கையை நடத்துவதற்காக சங்கல்பம் செய்து கொள்ளுங்கள்! நல்ல மன வைராக்கியத்துடன் செயல்படுங்கள்! சற்குருவைத் தேடத் தொடங்குங்கள்! அதுவே உங்களின் முழுமையான முதன்மையான பிரார்த்தனையாக இருக்கட்டும். உங்கள் கிரிவல பிரார்த்தனையும் சற்குருவை நாடுவதாகவே இருக்கட்டும்.

அடியார் :

சத்குருவே! எத்தனையோ பாவங்களைச் செய்துவிட்டு வருத்தப்பட்டுக் கிடப்போர் ஏராளம். மது முறையற்ற காமம், புகை பிடித்தல், ஒழுக்கமற்ற வாழ்க்கை முறை இவ்வாறாக வாழ்க்கையைக் கழித்தவர்களும், கழிப்பவர்களும் உண்டு. ஏதோ ஒரு சில தவறுகளுடன் வாழ்பவர்களும் உண்டு. இவர்களுக்கெல்லாம் விமோசனமே கிடையாதா? தவறு இழைத்தவர்கள் எல்லாம் கலியில் வருந்தி வருந்திச் சாதல்தான் வேண்டுமா? இவர்கள் திருந்தி வாழ்வதற்கான வாய்ப்பே தெய்வீகத்தில் கிடையாதா?

சத்குரு :- ஏன் கிடையாது? உண்மையாக வருந்தி, மனம் திருந்தி வாழ்பவர்களுக்கு நிச்சயமாகப் பிராயச்சித்தம் தெய்வீகத்தில் உண்டு. இத்துடன் இந்நேரத்துடன், இந்த விநாடியுடன் உங்களுடைய அனைத்து விதமான கெட்ட வழக்கங்களுக்கும், தீய ஒழுக்கங்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடுங்கள். இனிமேல் அந்தத் தவறுகளைத் தொடர மாட்டேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு, மனோ வைராக்கியத்துடன் சற்குருவை நாடிச் சரணடையத் தீவிரமாகச் செயல்படுங்கள். இப்படிச் செய்திடில் நிச்சயமாக உங்களுக்குப் பிராயச்சித்தம் உண்டு. ஆனால் செய்த தவறினை மீண்டும் செய்தால் அந்தப் பிராயச்சித்த முறையே அடிபட்டுப் போய், தண்டனைகள் பன்மடங்காகப் பெருகிவிடும். ஏதோ தெய்வீகத்தில் பயமுறுத்துகின்றார்கள், சாபம் இடுகின்றார்கள் என்று எண்ணாதீர்கள்! உங்களுடைய நல்வாழ்க்கைக்காகத்தான் இந்த சத்தியமான தெய்வீக நியதிகளை மீண்டும் மீண்டும் எடுத்துரைக்கின்றோம். வயதான பிறகு எஞ்சிய பத்து, இருபது வருடங்களில் மிகவும் குறுகிய இந்த மானிட வாழ்க்கையிலே, தான் இழைத்த பெரும் பாவங்களுக்கு எவ்வாறு பிராயச்சித்தம் தேடமுடியும்?

முதலில், அத்தகைய தீய ஒழுக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.. இரண்டாவதாக, தன்னுடைய தவறுகளால், பாவங்களால் அவதிப்படுவோர்க்கு, பாதிக்கப்பட்டோர்க்குத் தக்க நிவாரண உதவிகளைச் செய்தல் மிகவும் முக்கியமானதாகும்.. மூன்றாவதாக உங்களைப் போன்று இதேவிதமான தீய ஒழுக்கங்களால், தவறுகளால் அவதிப்பட்டிருப்போருக்குத் தக்க நல் வழிகளைக் காட்டி, அவரையும் திருத்த முயற்சி செய்யுங்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக, தக்க சத்குரு மூலமாகத்தான் எதற்கும் பிராயச்சித்தமும், நல்வழியும் கிட்டும் என்பதை நீங்கள் மனப்பூர்வமாக உணர்தல் வேண்டும். சத்குரு கிடைக்கவில்லையே என்று ஏங்குவதைவிட, காஞ்சிபுரம் ஸ்ரீபோடா சித்தர் (சிவசாமி) ஸ்வாமிகள், பாண்டிச்சேரி சின்னபாபு சமுத்திரத்தில் உள்ள ஸ்ரீபடே ஸாஹிப் ஜீவாலயம், மதுரையில் உள்ள ஸ்ரீகுழந்தையானந்த ஸ்வாமிகள் ஜீவாலயம், திருவாரூர் ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் ஜீவாலயம், திருஅண்ணாமலை ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் சூட்சும ஜீவாலயம், ஸ்ரீபகவான் ஸ்ரீரமண மஹரிஷி ஜீவாலயம், காஞ்சி ஸ்ரீபரமாச்சார்யார் ஜீவசமாதி ஆலயம், மதுரை அழகர் கோயில் நடனகோபால ஸ்வாமிகள் ஜீவாலயம் போன்ற பல அற்புதமான சித்தர்களுடைய, மகான்களுடைய, யோகியர்களுடைய ஜீவாலயங்களில் உங்களுடைய வழிபாடுகளை மேற்கொண்டு தக்க சத்குருவைத் தந்தருளுமாறு வேண்டி வருக! ஏனென்றால் கலியுகத்தில் இத்தகைய சித்புருஷர்களுடைய மஹான்களுடைய ஜீவாலயம் தான் மனிதர்களுடைய பெருந்தவறுகளுக்கு உரித்தான பிராயச்சித்த நல்வழிகளைத் தருவதாக அமைந்து உள்ளன. ஏனென்றால் கலியுகத்தில் நடைமுறை வாழ்க்கையில் ஒரு மனித தேகத்தைத் தாங்கி, தான் சுயம்புப் புனித மேனியராக விளங்கினாலும், ஜீவனுடைய கர்மங்களுக்காக பலவிதமான கர்மங்களைத் தன்னுடைய தேகத்தில் சுமந்து பலவிதமான துன்பங்களை அனுபவித்து மக்களுடைய ஏச்சு பேச்சுகளை, நல்வாழ்விற்காகத் தன்னுடைய யோக, ஜப, தபோ புண்ணியச் சக்திகளை அர்ப்பணித்துச் செல்பவர்கள்தாம் என்றும் வாழும் ஏகாந்த ஜோதிகளாக விளங்குகின்ற மஹான்களும், யோகியரும், சித்புருஷர்களும் ஆவர். இவர்கள் இன்றும் பல இடங்களில் ஜீவசமாதி கொண்டிருப்பது போலத் தோன்றினாலும், இன்றைக்கும் ஒளி உடலில் யோக சக்தி கொண்டு தம்மை நம்பி, அண்டி வழிபடுவோர்க்குத் தம்முடையப் புண்ணியச் சக்திகளைத் திரட்டி என்றும் வாழும் ஏகாந்த ஜோதிகளாக நல்வரங்களைத் தந்து வருகின்றார்கள். எனவே எத்தகைய பெரும் பாவங்களையும், பெரும் தவறுகளையும் செய்தோரும், தம்முடைய தவறுகளுக்காக வருந்தி அவற்றை மீண்டும் செய்யாது, தம்மால் பாதிக்கப்பட்டவர்க்குத் தகுந்த நிவாரண உதவிகளை அளித்து வந்து அன்னதானம், வஸ்திர தானம், காலணி தானம், மாங்கல்ய தானம் போன்ற பலவிதமான தான, தருமங்களைச் செய்து வந்தால், குருவருளால் அவர்களுக்குத் தக்கபடி பிராயச்சித்தம் கிட்டும். எனவே, இறைவன் நமக்குப் பரிசாகத் தந்துள்ள மானுட உடலில், இதுகாறும் செய்த தவறுகளுக்குப் பிராயச்சித்தம் நிச்சயமாக உண்டு. அவற்றைத் தரவல்லவர் தக்க சற்குருதான். ஆனால் போலியான, உதட்டளவிலான, அறைகுறையான வைராக்கியங்கள் உதவாது, ஆழ்ந்த நம்பிக்கையுடன் உளப்பூர்வமான பிராயச்சித்தங்களைத் தேடுதல் வேண்டும்.

அடியார் : -  சற்குருவே! கொலை, கொள்ளை, அதர்மம், லஞ்ச, லாவண்யங்களில் ஈடுபடுவோர் எல்லாம் நல்ல செல்வத்துடன் வசதிகளுடன் வாழ்ந்து கொண்டிருக்க, உண்மையாகவே பிறருக்கு எத்துன்பமும் இழைக்கக் கூடாது என்று எண்ணுவோர்க்குத்தான் அதாவது நல்லவர்க்குத்தான் கலியுகத்தில் நிறைய துன்பங்கள் வருகின்றனவே! இதனால், அவர்கள் மனவருத்தம் அடைந்து நாமும் அதர்மம் செய்து நன்கு சம்பாதித்து வாழக் கூடாதா என்ற நிலைக்கும் தள்ளப்படுகின்றார்களே! என்ன செய்வது?

சத்குரு :- யார் ஒருவர் உண்மையாகவே இறை நம்பிக்கைக் கொண்டுள்ளார்களோ, எவர் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு விநாடியும் இறையருளால்தான் கழிந்து கொண்டிருக்கின்றது என்று உணர்கின்றார்களோ, அவர்களுக்கு இந்த எண்ணம் நிச்சயமாகத் தோன்றாது. அப்படி ஒரு வேளை இத்தகைய எண்ணங்கள் ஏற்படுமானால் அவருடைய இறைநம்பிக்கை இன்னும் ஆழமாக, பெருகிப் பன்மடங்காக வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அடியேன் அடிக்கடி வலியுறுத்துவது போல், இறை நம்பிக்கை என்பது நாளுக்கு நாள், மணிக்கு மணி, விநாடிக்கு விநாடி, தொட்டனைத் தூறும் மணற்கேணி போல ஆழப் பதிந்து, அமிர்தச் சுரங்கமாய் விரிந்து பரந்து பெருகுதல் வேண்டும். எனவே பிறர் இவ்வாறு வாழ்கின்றார்களே, அவர்களுக்கு செல்வச் செழிப்பு ஏற்படுகின்றதே, வசதிகள் வந்து குவிகின்றனவே என்றெல்லாம் எண்ணாதீர்கள். அவரவருடைய பூர்வஜென்ம கர்மவினைகளுக்கு ஏற்ப செல்வம் செழிப்பதும், வறுமை ஏற்படுவதும் உண்டு. மேலும், உண்மையான உழைப்புடன் உருவாகின்ற செல்வம்தான் உத்தமமான நல்வழியைக் காட்டிடும். எனவே அவரவருடைய கர்ம வினைகளுக்கு ஏற்பத்தான் உணவு, உடை, அழகு, ஆரோக்கியம், அமைதி, இல்லறம், சந்ததி, வியாபாரம், அலுவலகப் பணி, தொழில், மன வருத்தங்கள், மகிழ்ச்சி, வாழ்க்கை வசதிகள் அனைத்துமே அமைகின்றன என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் பிறரைப் பற்றிய இத்தகைய எண்ணங்கள் எப்போதும் ஏற்படாது. அதர்மமாக எவ்வளவு சம்பாதித்தாலும், அதற்கு அவர்கள் என்றேனும் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். உங்கள் உடலால் சிறிய அளவிலேனும் எவ்வாறு பிறருடைய வயிற்றுப்பசி, ஆடை பஞ்சம் போன்ற குறைகளைத் தீர்க்க முடியும் என்று எண்ணிச் செயல்பட்டால் மேற்கண்ட எண்ணங்கள் நிச்சயமாகத் தோன்றாது.. எனவே உங்களுக்கு வரவேண்டியது நிச்சயமாக வந்து சேரும். அதற்காகச் செய்ய வேண்டிய முயற்சிகளைச் செய்துதான் ஆகவேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டால் இத்தகைய பொறாமையான எண்ணங்களுக்கு இடமே இல்லை!

உங்களுடைய சம்பாத்யத்திற்குள், தானதர்மங்களுடன் வாழ்வது மிகவும் எளிமையானதாயிற்றே! தக்க சற்குருவை நாடினால் உங்கள் வாழ்விற்கு ஏற்ற ஆத்ம வாழ்வை அளித்திடுவாரே! ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் அடிக்கடி தர்ப்பணம், தான தர்மங்கள் பற்றி நிறைய எழுதி வருகின்றீர்கள். இவற்றை நாங்கள் படித்துப் பல விஷயங்களை அறிந்து மகிழ்ந்து கொண்டாலும் பொதுவாகவே தான தர்மங்கள் என்றால் செலவுதானே என்று நம் மனித சமுதாயத்திற்கு ஓர் அச்சம் ஏற்பட்டுவிடுகின்றது என்று சிலர் எழுதியுள்ளார்கள். ஆனால் பெரும்பான்மையோர் தர்ப்பணம் என்றால் என்ன என்று தெரியாத சமுதாயத்திற்கு அது ஜாதி, இன பேதமின்றி யாவரும் கடைபிடிக்க வேண்டிய எத்தகைய உத்தம இறைச் சமுதாயத் திருப்பணி என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்து வருகின்றீர்கள் என்று பலரும் எழுதி வருகின்றார்கள்.. சித்த புருஷர்கள் அருளியிருக்கின்ற வகையிலே கலியுகத்திலே அவரவர் கர்மவினைகள் மற்றும் வாழ்க்கை வசதிகள், வருமானத்திற்கு ஏற்ப தகுந்த இறைநெறி முறைகளை குருவருளால் அளிப்பதுதான் ஸ்ரீஅகஸ்திய விஜயத்தின் முக்கியமான அறவழிகளில் ஒன்றாகும். தர்ப்பணத்தைப் பற்றி அறியாதோரும் அதனுடைய முக்கியத்துவத்தை உணர்ந்து, கடைபிடித்து வாழ்வில் இறைவளம் பெற வேண்டும். தான, தர்மங்கள் என்றால் செலவு நிறைந்தது, பணக்காரர்களுக்கு மட்டும் உரித்தானது என்ற தவறான எண்ணத்தைத் தவிர்த்து மிகமிகச் சாதாரணமானக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் எவ்வாறு அவரவர்க்கு உரித்தான தான தர்ம நெறிகளுடன் பூஜைகளை மேற்கொண்டு எல்லாப் பூஜைகளின் முழுப் பலன்களையும் பெறவேண்டும், பெற முடியும் என்பதையும் குருவருளால் உணர்த்தி வருகின்றோம்.

ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி திருநீலக்குடி

இவ்வகையில் வஸ்திர தானம் என்று சொல்லப்படுகின்ற ஆடை தானத்திற்கு நிறைந்த தெய்வீக சக்திகள் உண்டு. உணவை விட, உறைவிடத்தை விட ஒவ்வொரு மனிதனுக்கும் ஆடைதான் மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றது. மானத்தை காக்கின்ற மகத்தான தெய்வீக இடம் பெற்று விளங்குவதுதான் ஆடையாகும்.. உயர்ந்த இறைநெறித் தத்துவங்களிலே நம்முடைய நிழலைக்கூட உடலின் உள்ளாடை என சித்தர்கள் விளக்குகின்றார்கள். இந்த பூலோக வாழ்க்கையில் நமக்கு மான சக்தியை அளித்து மானத்தை ரட்சையாகக் காப்பது ஆடைகள்தானே. நாம் அணிகின்ற ஆடையில் நிறைந்துள்ள  ஆத்ம தத்துவங்களை உணர்வதென்றால் இப்பிறவி போதாது. ஏனென்றால் எங்கோ எவராலோ நெய்யப்பட்டு வருகின்ற ஆடையானது எவருடைய வாகனங்கள் மூலமாக எவருடைய கரங்கள்/கடைகள் மூலமாக நமக்கு வந்து சேர வேண்டும். அதனை எத்தனை நாள் தரித்திருக்க வேண்டும் என்பதெல்லாம் ஏற்கனவே நமக்கு தீர்க தரிசனமாக விதிக்கப்படுகின்ற இறை நியதி என்றால் உங்களால் இதனை நம்பமுடியுமா? அறிவுதான் ஏற்குமா?

நம் ஆடைகளைப் புனிதமாக வைத்துக் கொள்ள வேண்டிய இறைநெறி முறைகளை நாம் அறிந்து கடைபிடித்து விட்டால் தினசரி வாழ்க்கையில் நாம் எதிர்நோக்குகின்ற பெரும்பாலான துன்பங்களிலிருந்து நாம் நம்மை தற்காத்துக் கொண்டு விடலாம். இதுவும் உங்களுக்கு ஆச்சரியமானதாகத்தான் இருக்கும்? காரிய சித்திக்காக எந்த நிற ஆடைகளை எந்நாளில் அணிந்து செல்ல வேண்டும் என்ற இறை விதிமுறைகளும் உண்டு. இவ்வாறாக வாழ்க்கையின் ஒவ்வொரு விநாடி காலத்திற்கும் ஒவ்வொரு அம்சத்திற்கும் ஒவ்வொரு, காரியத்திற்கும் ஏராளமான பின்னணிகள் உண்டு. இதற்காகத் தான் ஆண்டவன் நமக்குப் பரந்த பகுத்தறிவைக் கொடுத்திருக்கின்றான்.. ஆனால் மனிதனோ இறைவன் அளித்த மூளையில் 0.0001 சதவீகிதம் கூட முறையாகப் பயன்படுத்துவது கிடையாது. பலருக்கும் கோணல் மாணலாக தீய புத்தியில் தான் அது வேலை செய்கிறது. எப்படியோ சம்பாதித்து வாழ்ந்தால் சரி என்பதற்காக அதர்மமான முறையில் தன்னுடைய மூளையையும் சக்தியையும் செலவழிக்கின்ற மனிதன் சற்றே நல்ல திசையில் திரும்பி அதனை முறையாகப் பயன்படுத்தத் தொடங்கினால் எத்தனையோ ஐஸ்வர்யக் கடாட்சத்தைப் பெற்றிடலாமே. மேலும் ஏதோ அக்கம் பக்கத்தாருக்குத் துன்பம் கொடுக்காது நல்லவிதமாக நாமே வாழ்ந்திடுவோம் என்பது கூடச் சுயநலமே! பிறருக்கு உங்களால் எந்த நன்மை கிடைத்தது. பிறர் நல்வாழ்விற்கு நீ என்ன செய்தாய் என்பவையே அடுத்தடுத்த ஆன்மீக நிலைகளில் எழும் வினாக்கள். என்ன பதிலை வைத்திருக்கின்றீர்கள்! கலியுகத்தில் நாம் படுகின்ற துன்பங்களைப் பார்க்கின்ற போது நம்முடைய முன் ஜென்மங்களில் எத்தனையோ பாவங்களையும், தீவினைகளையும் புரிந்திருக்கின்றோம் என்பதை மட்டும் நன்றாக உணர முடிகின்றதல்லவா! இவற்றிற்கெல்லாம் எவ்வகையில் பிராயசித்தம் தேடுவது? பரிகாரம், பிராயசித்தம் என்றாலே செலவுகள் தானே என்ற கிலியும் பிடித்து விடுகின்றது. அனைத்துமே கலியுகத்தில் பணத்தை மூலமாக வைத்து அமைவதாக உங்களுக்குத் தோன்றுகின்றதல்லவா? பணம் என்பது மாயையே, அதனால்தான் இந்த அச்சமும், பீதியும் உங்களை எப்போதும் மாயைப் போல சூழ்ந்து கொண்டே இருக்கின்றன. உங்களுக்குப் பணம்தான் பெரிய விஷயம் என்றால் உங்கள் வீட்டிலே ஒரு கோடி ரூபாயை நிரப்பிவிட்டால் நீங்கள் அமைதியாக வாழ முடியுமா? உங்களுடைய பணத்தால் அல்லது உடல் உழைப்பால் அவ்வப்போது பிறருடைய துன்பங்களையும் சிறிதளவேனும் துடைத்துப் பாருங்கள்! தான தர்மங்கள் என்றால் அள்ளிக் கொடுப்பதுதான் என்பதில்லை! நம்முடைய உடலில் 24 மணி நேரமும் இருப்பது ஆடைகள் தாம். அருமை மனைவியை விட, அன்புடைய குழந்தைகளை விட, ஆருயிர்ப் பெற்றோர்களை விட நம்முடன் எப்போதும் இருப்பது ஆடைகள் தானே! அப்படியானால் நம்முடைய ஒவ்வொரு காரியத்திலும் மானசீகமாகவும், நேரடியாகவும் பங்கு பெறுவது ஆடைகள் தாமே. நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் சாட்சியாக இருப்பதும் ஆடைகள் அன்றோ! எனவே எவருக்கும் தெரியாது என்று நீங்கள் செய்கின்ற காரியங்களுக்கெல்லாம் உங்களுடைய ஆடைகள்தாம் சாட்சிகளாக இருக்கின்றன.

எனவேதான் ஒருவருடைய ஆடையை வைத்துக்கொண்டு அவருடைய கர்மவினைகளை அறிகின்ற பாங்கினை மகான்கள் அறிந்து வைத்து இருக்கின்றார்கள். நீங்கள் ஒரு மகான் முன் நிற்கின்ற போது உங்களுடைய கபாலத்திருந்து சூட்சுமமாக எழுகின்ற Aura எனப்படும் தேக ஆன்ம ஒளியை வைத்துக் கொண்டும், உங்களுடைய ஆடைகளில் படிந்திருக்கின்ற வினைத் தேக்கங்களைக் கொண்டும் உங்களுடைய பிறவிக் கர்ம வினைகளை ஒரு நொடிப் பொழுதில் அவர் உணர்ந்து கொண்டுவிடுவார். எனவே உங்களுடைய ஒவ்வொரு காரியத்திற்குத் தெய்வ சாட்சியாக நிற்கின்ற ஆடைகளைப் பற்றி நீங்கள் என்றேனும் ஆத்ம விசாரம் செய்து இருக்கின்றீர்களா? தினந்தோறும் ஆடைகளைத் துவைத்து உலர்த்தி அணிய வேண்டும் என்ற நியதியை ஏன் ஏற்படுத்தினார்கள்? உங்களுடைய உடலில் சேரவேண்டிய பலவிதமான தீய கர்மவினைகளை ஆடைகளே தங்களுக்குள் தாங்கி துவைக்கின்ற போது வெளிவிட்டுப் பலவிதமான துன்பங்களிலிருந்து நம்மை ரட்சையாகக் காப்பாற்றுகின்றது என்பதை மறைமுகமாக உணர்த்தும் பொருட்டுத்தான் கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்று சொன்னார்கள்..  மனிதனால், மனித உடலால் ஒரு சிறிய தீய கர்மவினையைக் கூட தாங்க முடியாது. ஆனால் ஆடைகளோ எத்தனையோ விதமான பெரும் கர்மவினைகளையும் தாங்கி இருக்கின்றன என்றால் அவை பஞ்சபூத சக்திகளைப் பெற்றிந்தால் தானே இவை சாத்தியமாகும்! பஞ்சபூத சக்திகளைக் கொண்ட பொருட்களுக்குத்தான் (தேங்காய், விளக்கு, கற்பூரம், உலோகப் பிரதிமைகள் etc… ) தோஷ நிவாரண சக்தி அதிகம். இதற்காகப் பாவத்தை செய்துவிட்டு ஆடைகளை தானம் செய்வதன் மூலம் அதன் விளைவுகளை கழித்துவிடலாமே என்று சுலபமாக எண்ணிவிடாதீர்கள்.. ஏனென்றால் கலியுகத்தில் எல்லாவற்றிற்கும் குறுக்கு வழி தேடுவதே மனித மனோபாவமாக ஆகிவிட்டது. ஒரே ஒரு செட் ஆடையை வைத்துக் கொண்டு ஏழ்மையில் வாடுகின்ற ஏழைகளுக்கு நீங்கள் புதிய ஆடைகளை தானமாக அளிக்கின்ற போது அந்த ஏழைகள் பெறுகின்ற ஆத்ம சந்தோஷத்தின் தெய்வீக சக்தியால் உங்களுடைய பலவிதமான கர்மவினைகள் தீர்க்கப்படுகின்றன. எனவே உண்மையான சந்தோஷமே, மனத் திருப்தியே எளிதில் பல கர்ம விளைவுகளை கழித்து விடும். புதிய ஆடைகளை தானமாக அளிக்க வசதியில்லாத நடுத்தரக் குடும்பத்தினர் தங்களுடைய பழைய ஆடைகளை நன்கு துவைத்து, உலர்த்தி, சுத்தம் செய்து, பட்டன்களை எல்லாம் நன்முறையில் சீரமைத்துத் தானமாக அளித்திட வேண்டும். உங்கள் பழைய ஆடைகளை தானமாக அளிக்கின்ற போது அதில் படிந்துள்ள கர்மவினைகள் அவற்றைப் பெறுபவர்களை பாதிக்காதா? என்ற கேள்வி எழலாம். இதுவும் அனைவருடைய உள்ளத்திலும் எழுகின்ற கேள்விதான், நாமும் பலமுறை விளக்கியதுதான்!

அன்னதானமோ, ஆடைதானமோ நீங்கள் ஏந்த தானத்தைச் செய்கின்ற போதும் அங்கே பிரசன்னமாகின்ற தர்ம தேவதைகள், அறதேவதைகள் நிறைய உண்டு. அந்த அன்னத்திலோ, ஆடைகளிலோ, உள்ள தோஷங்களை அற தேவதைகள் தாமே ஏற்று தெய்வீக ரீதியாக அந்த ஆடைகளைப் பவித்ரமாக்கி சுத்தம் செய்து, தானத்தின் குணப்பாடுகளையும் நிறைவு செய்கின்றார்கள்.. எனவே நீங்கள் ஒரே ஒரு தம்ளரில் மோரை தானமாக அளிக்கும் போது கூட அங்கே பிரசன்னமாகின்ற அநேக தர்ம தேவதைகள், அந்த தானத்தைச் சாட்சியாகக் காண்கின்ற அற தேவதைகளும், நிறைய நட்சத்திர கோள மூர்த்திகளும் உண்டு. வஸ்திர தானத்தின் போது அந்த ஆடைகளில் உள்ள தோஷங்களை நிவர்த்தி செய்கின்ற கர்ம நிவாரண தேவதைகளும் பரவெளியில் நிறைந்துள்ளனர்.! எனவே இவ்வளவு ஆயிரம் தேவதா மூர்த்திகள் சாட்சியாகவே தான தர்மம் நிகழ்வதால் பூஜைகளை விட தர்மத்திற்கு பூஜாபலன்கள் அபரிமிதமாக உண்டு. இவ்வாறாகத்தான் பலவிதமான கர்ம வினைகளைத் தாங்குவதற்கென்றே பல தர்ம தேவதைகளாகப் பிறப்புயெடுக்கின்ற பல உத்தமமான ஜீவன்களும் பல தேவலோகங்களில் உறைகின்றனர். இதுவும் ஒருவிதமான தியாகமய வாழ்வுதான்! பல பித்ரு தேவர்கள் கூட அறதேவதைகளாக மாறுகின்றனர். இவ்வாறு தான தர்மங்களில் சாட்சியாக நின்று ஆடைகளிலும், அன்னங்களிலும் உள்ள தோஷங்களைப் பெறுகின்ற போது இவற்றிலிருந்து தம்மைக் காத்துக் கொள்வதற்காக கங்கை, காவிரி போன்ற பல புனித தலங்களுக்கும் சென்று அறதேவதா மூர்த்திகள் நீராடி மீண்டும் தான தர்ம காரியங்களுக்குச் சாட்சியாக நின்று அந்த தோஷங்களைத் தாங்கிச் செல்கின்ற புனிதமான அறப்பணியை மீண்டும் மீண்டும் மேற்கொள்கின்றார்கள். அவர்களுக்கு அலுக்காத தியாகமயமான தேவ வாழ்விது.. எனவே நீங்கள் தானமாக அளிக்கின்ற ஆடைகளிலுள்ள தோஷங்கள் அதைப் பெறுபவர்களை எவ்விதத்திலும் பாதிக்காது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். மேலும் இதிலுள்ள மிகவும் அற்புதமான ஆன்மீக ரகசியம் என்னவென்றால் உங்களிடம் தான, தர்மத்தை பெறுபவர் உங்களுடைய பூர்வ ஜன்மப் பெற்றோராகவோ சகோதர சகோதரிகளாகவோ, குழந்தைகளாகவோ இருப்பது தான்.. ஆடை தானத்தைப் பெறுகின்ற ஏழைகள் படுகின்ற ஆனந்தத்தைச் சொல்லி வர்ணிக்க இயலாது அல்லவா! மனிதனாகப் பிறந்ததே பலருக்கு தெய்வீக ஆனந்தத்தை அளிப்பதற்காகத்தான்! உங்களுக்கு உள்ள சர்க்கரை வியாதி, கொழுப்பு நோய் போன்றவற்றால் சாதாரணமாக உங்களால் உண்ண இயலாத இனிப்பினை, நெய்யை ஒரு ஏழை மகிழ்வுடன் உண்கின்றபோது, “நம்மால் தான் இந்த இனிப்பைச் சாப்பிட முடியவில்லையே இந்த ஏழை எவ்வளவு ஆனந்தத்துடன் உண்கின்றான்”, என்று நீங்களே ஆனந்தமடைகின்ற போதுதான், அதாவது ஆனந்தம் பரிமாறப்படுகின்ற போது கிட்டுவதுதான் உண்மையான நிரந்தரமான தெய்வீக ஆனந்தமாகும். இதுவே பெருகிப் பெருகி சற்குரு அருளால் பரமானந்தமாகின்றது.. இவ்வாறாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிறவியில் அளிக்கவேண்டிய ஆடைதானங்களுக்கும் நிர்ணயம் உண்டு !

சூரியன் மார்க்கண்டேய மூர்த்திகள்
திருநீலக்குடி

இந்தப் பிறவியில், உதாரணமாக நீங்கள் அளிக்க வேண்டிய ஆடை தானத்தின் அளவு எத்தனை ஆயிரம் கஜம்/மீட்டர் துணி என்று நிர்ணயிக்கப்படுகின்றது. அதாவது உங்களுடைய கர்ம வினைகளைப் பொறுத்து எந்தெந்தத் தீவினைக் கர்மங்கள் எல்லாம் வஸ்திர தானம் மூலம் தீருமோ அந்த ஆடைகளின் அளவை இத்தனை கஜம் நீளம், அகலம் என்று நிர்ணயித்து விடுகின்றார்கள் ! உதாரணமாக இதுவரை நீங்கள் கொண்டுள்ள பிறவிகளில் அளிக்கவேண்டிய ஆடைகளின் (வஸ்திர) தானத்தின் அளவு 15000 கஜ/மீட்டர்கள் என்று இருப்பதாகக் கொள்வோம். இந்த அளவிற்குக் கர்மம் பெருத்துவிட்டதா என்று மலைக்காதீர்கள்! ஆணோ, பெண்ணோ பிறரைப் பார்த்து முறையற்ற காம உணர்வுகள் எழும்போது, மானத்தைக் காக்கின்ற ஆடைகளையும் மீறி அதர்மமான காம இச்சைகளை எழும் போதெல்லாம் என்ன ஆகிறது? அந்த அளவிற்குமான உணர்வுகளைக் காப்பதற்கான ஆடைகளை தானமாக நீங்கள் அளிக்க வேண்டியதாகக் கர்மவினைகளைச் சேர்த்துக் கொள்கின்றீர்கள். இவ்வாறாகத்தான் தினந்தோறும் ஒருவருடைய முறையற்ற காமச் செயல்களினால், காமப் பார்வைகளினால் மனிதனுக்கு நாள்தோறும் வஸ்திர தான பாக்கிக் கொஞ்சம் கொஞ்சமாகக் சேர்ந்து இத்தனை லட்சம் கஜம் (மீட்டர்) ஆடைதானம் செய்ய வேண்டியதாகக் குவிகின்றது. நீங்கள் இந்த அளவிற்கு ஆடைகளைத் தானம் செய்தால்தான் பிறவித் தளைகளிலிருந்து விடுபடமுடியும். இல்லாவிடில் ஆடைதானத்தால் எந்த தோஷங்கள், பாவங்கள், தீவினைகள், தீர வேண்டுமோ அவையெல்லாம் தீராமல் அப்படியே ஒவ்வொரு பிறவியிலும் தொக்கி நிற்கும்.. முறையற்ற காம தீய ஒழுக்கங்கள் வரம்பற்று பெருகினால் இதுவே பைத்தியமாக ஆடையற்ற கோலத்தில் பல பிறவிகளில் அலைய வேண்டியதாகிவிடும்.

பிறவிகளின் தொகுப்பாக 15 லட்சம் மீட்டர் துணி பாக்கி என்றால் மலைப்பாக இருக்கின்றதல்லவா? இதற்காகத்தான் திருஅண்ணாமலை, கும்பகோணம், இராமேஸ்வரம், காசி போன்ற புனிதமான இடங்களில் முறையாக குரு காட்டும் வழிமுறைப்படி ஆடைதானம் செய்தால் அவற்றின் பலாபலன்கள் பன்மடங்காகப் பெருகும். மேலும் அத்தகைய புனிதமான தலங்களில் குரு அளிக்கின்ற நாளில், குறித்த நேரத்தில், குறித்த நட்சத்திரங்களில் (கும்பமேளா, கார்த்திகை தீபம், மகாமகம்) தானம் செய்தால் வஸ்திர தான சக்தி ஆங்காங்கே ஆயிரமடங்காகப் பெருகும். இப்படியானால் ஒரு ஆயிரம் மீட்டர் அளவு துணிதான பாக்கியானது உங்கள் வாழ்நாளில் குறித்த தினங்களில்/ குறித்த தலங்களில் தானமாக அளிக்கின்ற போது அது பன்மடங்காகப் பெருகி பல்லாயிரம் மீட்டர் துணி தானப் பலன்களாகப் பெருகிக் கர்மத்தை தீர்த்துவிடுமல்லவா! ஆனால் தினந்தோறும் முறையற்ற காம உணர்வுகளை மேலும், மேலும் பெருகலாகாது, காமத்தின் துர்விளைவுகளும் மேலும் சேராமலிருக்க வேண்டும். இத்தகைய தான, தர்ம தெய்வீக ரகசியங்களை எல்லாம் உணர்த்த வல்லவராக இருக்கின்றவரே சற்குரு ஆவார்.

எனவேதான் நம் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் வருடந்தோறும் ஒவ்வொரு அடியாரும் எவ்வளவு ஆடை தானம் வழங்க வேண்டும் என்பதானது சற்குரு மூலமாக அறிவிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் என்னென்ன தலங்களில் அந்த வருடத்தில் எந்நாளில் வஸ்திர தானம் அளிக்கப்படவேண்டும் என்பதையும் சற்குருவே நிர்ணயம் செய்கின்றார். உதாரணமாக ஸ்ரீவிக்ரம ஆண்டில் ஆடிப் பூரத்தன்று தஞ்சையில் ஸ்ரீமாரியம்மன் ஆலயத்தில் வஸ்திர தானம் அளிக்க வேண்டும் என்று அடியார் ஒருவருக்கு 15 வேஷ்டி, ஏழுபுடவை, 12 பாய்கள் சற்குருவால் அளிக்கப்படுகின்றன என்றால், அவர் அந்த குறித்த தினத்தில் அங்கு சென்று தானமாக அளிக்க வேண்டும். இதனால் சற்குரு மொழிப்படி பல எத்தனையோ கர்மங்களை எளிதில் தீர்த்துவிடலாம். ஆனால் சற்குருவின் மேல் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிட வேண்டும். சற்குருவினுடைய பரிபாலனத்தில் ஒரு வஸ்திர தானம் எப்படி நிகழ்கின்றது என்பதை சற்றேனும் நீங்கள் உணர்ந்து கொண்டால் தான் ஆடைகள் தானத்தின் மகத்துவத்தை, தெய்வீக சக்தியை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். உதாரணமாக மதுரையிலிருந்து ஒருவருக்கு 8 புடவைகள், 11 வேஷ்டிகள், 6 பாய்கள், 9 ஜமுக்காளங்கள் என்று அவருடைய கர்ம வினைகளுக்கு ஏற்ற வகையில் ஆடைகளின் வகைகள் நிர்ணயிக்கப்பட்டு அவை கார்த்திகைத் தீபத்திற்கு முன் கொண்டு வந்து சற்குருவிடம் அளித்துவிடுவார்கள்.. இவ்வாறாகப் பல அடியார்களும் அளிக்கின்ற ஆடைகளை சற்குரு ஆனவர் திருஅண்ணாமலையாரின் நேத்திர தரிசனத்தில் வைத்து ஆடைகளுக்குரித்தான மந்திரங்களை ஜபித்து, வேத, ஹோம, தீப வழிபாடுடன் தியானித்து அவற்றைப் புனிதப்படுத்தி அனைத்து ஆடைகளையும் பகுத்து தொகுத்து மீண்டும் அவரவருடைய கர்ம விளைவுகளுக்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் அளிக்கப்படுகின்றன. அந்த ஆடையிலுள்ள தெய்வீக சக்தியால் அதைப் பெறுகின்றவருடைய வாழ்விலும் ஆனந்தமும், ஐஸ்வர்ய கடாட்சமும் ஏற்படும் அல்லவா! மேலும் ஏழைகளுக்கு ஸ்ரீகாயத்ரீ மந்திரம், ஸ்ரீருத்ரம் போன்ற சக்தி வாய்ந்த மந்திரங்களை அறிய வாய்ப்பில்லை! மேற்கண்ட வகையில் பூஜிக்கப்படுகின்ற ஆடைகளை ஏழைகள் பெறும் போது அவர்களுக்கு இம்மந்திர சக்திகள் தாமாகவே கிட்டுகின்றன! இவ்வாறாக சற்குருவின் அருட்பரிபாலனம் எத்தனையோ ஆயிரம் மக்களுக்கும் தாமாகவே கிட்டுகின்றது.!
மே மாதப் பௌர்ணமி திதி நேரம் : 17.5.2000 பகல் 11.48 மணி முதல் 18.5.2000 பகல் 1.04 மணிவரை.! பௌர்ணமி கிரிவல நாள் 17.5.2000

நித்ய கர்ம நிவாரண சாந்தி

அந்தந்த நாளில் வலுவான ஆட்சியைப் பெற்றிருக்கும் தீர்க்கமான பார்வையை உடைய திதி,  நட்சத்திரம், யோகம், கரணம், லக்னம், கிரகங்களின் தன்மைக்கேற்ப அந்நாளுக்குரிய விசேஷ பூஜை / வழிபாடு முறை அளிக்கப்பட்டுள்ளது.. இதனை முறையாக ஆழ்ந்த நம்பிக்கையுடன் கடைபிடித்திடில் குருவருளால் ஒவ்வொரு நாளையும் தீயகர்ம வினைகளின் கழிப்போடு மேலும் எவ்விதமான புதிய தீவினைகளும் சேரா வண்ணந் தடுத்து சாந்தமான நித்ய வாழ்வைப் பெற்றிடலாம்.
1.5.2000 – 100 வருடங்களுக்குக் குறையாமல் இருக்கின்ற வேப்பமரங்களுக்கு மஞ்சள் பூசிக் குங்குமம் இட்டு லலிதா சகஸ்ரநாமம் மற்றும் அம்பிகையினை தமிழ்மறை போற்றித் துதிகளை ஓதி பூக்களால் அர்ச்சித்து பக்தர்களை அழைத்து அந்த வேப்பமரத்தின் அடியில் மஞ்சள் நிற உணவு வகைகளை அன்னதானம் செய்திடில் ரிஷி பத்தினிகளின் ஆசி கிடைக்கும், கடன்களின் துன்பச் சுமை தணியும்.

2.5.2000 – திலகவதி, செந்தூரா, செந்தூரம், பொட்டம்மாள், பொட்டாச்சி என்ற பெயர் கொண்டவர்களுக்கு அன்னதானம் செய்து மாங்கல்ய சரடு அளித்திட குடும்பத்தில் அமைதி நிலவும்..!

3.5.2000 – மயில்களுக்கு வேகவைத்த சுண்டல் தானமாய் அளித்திடில் – கடல் அலைபோல் மிரட்டிக் கொண்டு வரும் எதிரிகளிடமிருந்து விடிவு பெறலாம்.

யாமிருக்க பயமேன்
திருநீலக்குடி

4.5.2000 – பரணியில் பிறந்த ஆண் குழந்தைகள் பொதுவாய் இரட்டைப் பிள்ளைகளாய் இருந்திடில் அவர்களுக்கு அன்னதானம் செய்திடில் ஆண் பெண் இருவரும் சம்பாதிக்கின்ற இல்லறத்தில் இருப்பவர்கள் நலம் பெறுவர்.

5.5.2000 -  பெண் காவல் தெய்வங்களுக்கு மண் தாலி அணிவித்துப் பொங்கல் வைத்து தானம் செய்திடில் – கிராமத்து மக்கள் நோய் நொடிகளிலிருந்து விடுதலை பெறுவர்.

6.5.2000 – கட்டில் இல்லாமல் தரையில் படுத்துறங்கும் வயதானவர்களுக்குக் கட்டிலும், மெத்தையும் தானமாய் அளித்திடில் Neuro Surgeons (நரம்பியல் நிபுணர்கள்) தொழிலில் முன்னேற்றம் காண்பர்.

7.5.2000 – இன்று ஏழு குதிரைகளுக்கு வேக வைத்த கொள் தானியத்தை அளித்திடில் – அரசாங்க அதிகாரிகளால் வருகின்ற துன்பம் தீரும்.

8.5.2000 – தையல் தொழில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலி சரடு, கண்ணாடி போன்ற மங்கல பொருட்களை அளித்திட பிரிந்து இருந்த உறவினர்கள் ஒன்று சேர்வர்.

9.5.2000 – பூட்டிற்குச் சாவி போடும் தொழிலைச் செய்கின்றவர்களுக்கு உணவிட்டு வஸ்திர தானம் செய்திடில் – வாடகை பாக்கி வைத்திருப்பவர் ஓரளவு திருப்பித் தருவார்.

10.5.20000 – கோயில்களில் மின்சார இணைப்புகளில் சரியான ஒயர்கள் பொருத்தப்படாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்ற ஒயர்களை எல்லாம் இலவசமாக மாற்றிச் சீரமைத்துத் தருகின்றவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிட்டும் நாள் இது.

11.5.2000 – அப்பளம் செய்யும் ஏழைக் குடும்பங்களுக்கு வியாபாரம் செய்ய பொருளுதவி செய்திடில் மனஸ்தாபத்தால் பிரிந்து இருந்த மனைவி கணவனுடன் சேர்வர்.

12.5.2000 – வீடு கட்ட வேண்டும் என்ற காரணத்தால் நிறைய நீர் இருக்கின்ற கிணற்றை மூடி அதன் மீது வீடு கட்டி இருப்பவர்கள் நீர் நிறைந்த கிணற்றை மூடிய தோஷத்திற்கு ஆளாவர். அவ்வாறு கட்டப்பட்ட வீடுகளில் குடியிருப்போர் ஆறுமுகமுடைய முருகன் கோயிலில் நீர் மோர் தானம் இன்று செய்திடில் ஓரளவு தோஷ நிவர்த்தி பெறுவர்.

13.5.2000 – கல்லுடைக்கும் பெண் தொழிலாளிகளுக்கு வயிறார உணவளித்து வஸ்திர தானம். செய்திடில் கல் நெஞ்சம் நிறைந்த முதலாளிகளின் கொடுமையிலிருந்து தப்பிக்கலாம்.

14.5.2000 – கற்புடைய பெண்களாய் இருந்து கிராம தேவதைகளாய் மாறிய உத்தம கோயில்களில் இஞ்சி சேர்ந்த உணவினை அன்னதானம் செய்திடில் வேலையில் வரும் துன்பங்கள் நிவர்த்தியாகும்..

15.5.2000 – மலைவாழ் பழங்குடியினருக்கு கறுப்பு நிற ஆடைகளை தானம் செய்திடில் துஷ்ட சக்திகளின் வேகத்திலிருந்து நிவாரணம் பெறலாம்.

16.5.2000 – பசுமாடுகளுக்குப் புல் கட்டுதானம் செய்திடில் தாத்தாவின் சொத்தில் முறையாக சிறிது பங்கு பெறலாம்.

17.5.2000 – புற்று மண்ணால் நாகலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து அன்னதானம் செய்திடில் மாமனார், மாமியார் கொடுமையிலிருந்து சுதந்திரம் அடையலாம்.

18.5.2000 – இன்று முருகன் கோயில்களில் தினைமாவும் தேங்காய் சாதமும் அன்னதானம் செய்திடில் – அண்ணன் தம்பி உறவு உறுதிபடும்.

19.5.2000 – கொன்றையும், அரசமரமும் சேர்ந்து இருக்கின்ற விருட்சத்தின் கீழ் சிவலிங்கம் இருந்திடில் அந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து அன்னதானம் செய்திடில் – கூட்டு வியாபாரத்தில் (Partnership) வருகின்ற பிரச்சனைகள் தீரும்.

20.5.20000 – கலை தேவதைகள் அருள்பாலிக்கும் நாளிது. Screen Printing தொழிலைச் செய்கின்றவர்களுக்கு தொழில் வழி உதவி செய்திடில் – உயர் அதிகாரியின் மனதில் நல்ல இடம் பிடிக்கலாம்.

21.5.2000 – இன்று ஷோடச கணபதிகளை தோத்திரம் சொல்லி வணங்கி கொழுக்கட்டை தானம் செய்திடில் மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் குழந்தைகள் நலமடைவர்.

22.5.2000 – வியாபாரிகளில் இரும்பு கல்லா இல்லாமல் மர கல்லா வைத்திருப்பவர்கள் மல்லிகைப்பூ வைத்து பணம் வைத்திடில் – இல்லத்தில் சுபச் செலவுகள் வரும்.

23.5.2000 – Textile Mills வைத்திருப்போர் தங்களுடைய பழைய மெத்தை, தலையணை நன்முறையில் தைத்து தானமாக அளித்து விட்டு நல்ல பஞ்சு மெத்தை தலையணை இன்று இல்லத்தில் மாற்றிடில் நல்ல செய்திகள் வரும்.

24.5.2000 – இன்று குறைந்தது 101 ஏழைக் குழந்தைகளுக்காவது நல்ல மாம்பழங்கள் தானம் செய்திடில் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள் வாழ்க்கையில் நலம் பெறுவர்.

25.5.2000 – ஐந்தடிக்கும் கீழே இருக்கின்ற குள்ள மனிதர்களுக்கு கொப்பரைத் தேங்காயில் செய்த தேங்காய் பர்பி தானம் அளித்திடில் – வருமானம் இல்லாமல் பூட்டிக் கிடந்த வீட்டிற்கு தார்மீக வழியில் நல்ல வருமானம் வரும்.

26.5.2000 – தோல் பையை சுமந்து சென்று கொண்டிருந்த பெண்கள் இன்றிலிருந்து தோல் பையை விட்டு விட்டு துணிப் பையை சுமந்து செல்வதால் உத்தியோகத்தில் மனநிம்மதி பெறுவர்.

27.5.2000 – கருப்பில் வெள்ளைப் பட்டை கொண்ட குதிரைகளுக்கு வேகவைத்த கொள்தானம் – இரும்பு வியாபாரிகள் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பர்.

28.5.2000 – இன்று செய்யும் தண்ணீர் தானத்தால் ஒற்றைத் தலைவலி, மண்டையில் நீர் கோர்த்து துன்புறுதல் போன்ற துன்பங்களிலிருந்து விடுதலை பெறலாம்.

29.5.2000  - பாட்டி, தாத்தாவிற்கு புதிய கைத்தடி தானம் செய்திடில் – வேலையில் நல்ல மாற்றம் தெரியும்.

30.5.2000 – கோயிலில் இருக்கும் திருக்குளத்தில் வாழ்கின்ற மீன்களுக்கு உடைத்த பொரி கடலை தானமாய் அளித்திடில் வரவேண்டிய வருமானம் முறையாக வந்து சேரும்.

31.5.2000 – இன்று நீர்மோர் தானம் – நெடுநாள் பயணம் தடைபட்டிருந்தால் அத்தடை விலகும்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam