நாகம் என்பது அன்பா வேதனையா !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

நாகத்தி ஸ்ரீபக்தவத்சலேஸ்வரர்

* சித்திரைச் சதய நட்சத்திரச் சந்தனக் காப்பில் சீரிய வரங்கள் தரும் சிவலிங்க மூர்த்தியே நாகத்தி பத்வத்சலேஸ்வரர்!

* சித்திரைச் சதயத்தில் நாகத்தி ஆலயத்தில் சந்தனக் காப்பிட்டு வேத சக்திகளைப் பெறுவீர்!

* குரு தசையில் வணங்க வேண்டிய ஸ்ரீபிரார்த்தனா தக்ஷிணா மூர்த்தி!

தேவர்கள் பாற்கடலில் அமிர்தத்தைக் கடைந்த போது மட்டுமே பல திரவியங்கள் அதில் விளைந்தன என்று எண்ணாதீர்கள்! அன்றும், இன்றும், என்றும் பாற்கடலில் தெய்வீகத் திரவியங்கள், தீர்த்தங்கள் முகிழ்த்துக் கொண்டு தாம் உள்ளன. புதுப் புது நட்சத்திரங்களும் தினமும் இதில் உற்பவிப்பதும் உண்டு!

ஒரு யுகத்தில்......பாற்கடலில் எழுந்த ஒரு அரிய சந்தன விருட்சமானது பறந்து சென்று கொண்டே இருந்தது. கோடானு கோடி தேவர்களாலும் கூட அதன் விரைவைத் தொடர இயலவில்லை! வாயு பகவானும் இதனைக் கண்டு அதிசயித்தார். சுயம்பு யாத்திரையாகக் கொண்ட அந்த சந்தன விருட்சம் இறுதியில் பூலோகத்தில் ஓரிடத்தில் ஒரு தடாகத்தில் இறங்கியது. பாற்கடலின் உள்ளும் பல லோகங்களும் மண்டலங்களும் உண்டு. இவற்றில் இந்த சந்தன விருட்சம் தோன்றிய இடமே பாற்கடலின் வித்யா சந்தன மண்டலமாகும். திருமாலின் ஸ்ரீஹயக்ரீவ அவதாரிகையில், இங்கு ஸ்ரீவித்யா சந்தன மண்டலத்தில் தாம் ஸ்ரீவித்யா சரஸ்வதியும், ஸ்ரீவித்யா லக்ஷ்மியும் அவரிடம் குருகுலவாசம் பூண்டு ஸ்ரீஹயக்ரீவப் பெருமாளின் திருநாக்கிலிருந்து உதிக்கும் வேத வாக்யங்களைக் கற்கின்றனர்.

இருதயகமல கோலம்

கிருத யுகத்திற்குப் பிறகு உலகங்களில் ஜீவன்களில் பக்தி சிரத்தை இல்லாமையால் வேத சக்திகள் குறைவுபடும். குறிப்பாக கலியுகத்தில் பூலோகத்தில் வேத சக்திகள் மங்கும் என்பதால் கலியுகத்தில் வேத சக்திகளை நிரப்பும் பொருட்டு ஈஸ்வரன் பல லீலைகளைப் புனைந்தார்.

வேதம் மங்கிய லோகங்களில் வேத சக்திகளை நிரவும் பொருட்டு, என்றும் சிரஞ்சீவித்வம் கொண்ட ஸ்படிக வேத மாமலையினை இருதய கமலத்தில் இருத்தி ஆதிசிவன் தவம் பூண்டார். அப்போது அவர் தம் திருமார்பில் உறையும் ஈஸ்வரியிடம் இருந்து வேத மூலத் தாமரை, மூல வேதத் தாமரை என்ற இரண்டு வேதத் தாமரைப் புஷ்பங்கள் தோன்றின! அப்புஷ்பங்களால் அம்பிகை பூஜித்த சிவலிங்கமே ஸ்ரீபக்தீஸ்வரர் ஆனார். ஆம் இருதய கமலத்தில் மலர்ந்து உறைவதுதானே பக்தித் தாமரை!  எனவே வேத பூஷணமாக, ஜாதி, மத, இன, மனிதன் விலங்கு தாவர பேதமின்றி அனைத்து ஆத்மத்திலும் வேதப் பிரகாசத்துடன் ஒளிரும் ஈஸ்வரனே ஸ்ரீபக்தவத்சலேஸ்வரர்! ஆம், பக்தியுடன் அம்பிகை வழிபட்ட ஸ்ரீபக்தீஸ்வரரே பூலோக ஜீவன்களுக்கென நாகத்தி ஸ்ரீபக்தவத்சலேஸ்வரர் ஆனார்!

பகவானின் இருதய கமலத்தில் பூரித்த அம்பிகையிடமிருந்து தோன்றிய தாமரைகள் அதி உஷ்ணமும், அளப்பரிய பிரகாசமும் கொண்டிருந்தமையால் அக்கமலங்களை பூமியில் இறைவனின் திருவடிகளைத் தவிர வேறு பூமியில், வேறு லோகங்களில் வேறெங்கும் நிலை நிறுத்த முடியுமா என்ன? பாற்கடலில் உதித்த சந்தன விருட்சத்தைத் தம் திருவடிகளில் சந்தனக் குழம்பாக ஏற்ற சிவலிங்க மூர்த்தி, அம்பிகையிடம் இருந்து எழுந்த இரு தாமரைகளையும் அதில் நிலைநிறுத்தி, அம்பிகையின் பூஜைகளை ஏற்று, அக்கமலங்களையே அம்பிகைக்கு "ஞான புஷ்பப் பிரசாதமாக" அளித்திட்டார்.  அம்பிகை உடனே வேத ஞானம் பெற்று, கைகளில் தாமரைகளைத் தாங்கிய ஸ்ரீசௌந்தர நாயகியாக, ஸ்ரீவித்யா சௌபாக்ய நாயகியாக இங்கு நாகத்தியில் அவதாரத் தோற்றம் கொண்டாள்.

சந்தனக் குழம்பில் திளைத்த பக்தவத்சலேஸ்வரரே "நா அகம் தீ" ஆக அதாவது ஈஸ்வர வேதத் திருநாவில் உதித்த வேதாக்னி சுயம்பு மூர்த்தியாக உதித்திட, இதுவே நாகத்தி சிவலிங்கம் ஆயிற்று!  இறைவனுடைய வேத பூஷ்ண அவதாரத் தத்துவங்கள் பல உண்டு. இங்கிருந்து தாம் அனைத்து வேத மூர்த்திகள், வேதபுரீஸ்வர மூர்த்திகள் உற்பவித்தனர். எனவே ஸ்ரீபக்தவத்சலேஸ்வரர் தோன்றிய சித்திரைச் சதய நாளில் இங்கு சந்தனக் காப்பிட்டு வழிபடுவது பெரும் பேறுகளைத் தருவதாகும். நா அகம் தீ என்பது மட்டுமல்லாமல் இறைவனின் இதயத்தில் உதிக்கும் தேவியாவும் இங்கு அம்பிகை எழுந்தருளி உள்ளதால் இருதய கமல கோலத்தை இத்திருக்கோயிலில் அரிசி மாவால் வரைந்து அதில் 16 தாமரை மலர்களை வைத்து அலங்கரித்தலால் எத்தகைய இருதய சம்பந்தமான நோய்களுக்கும் இரத்தம் சம்பந்தமான நோய்களுக்கும் நிவாரணம் கிட்டும். இருதயகமல கோலத்தை எங்கும் பிரிவு ஏற்படாமல் ஒரே கோடாக, இணைந்த சக்தியுடன் அமைப்பதே சிறப்பாகும். தடைபடாத, பிளவு படாத, தொடர்ந்த, ஆரோக்யமான இரத்த ஓட்டத்தை, உயிர் சக்தியை அளிப்பதுதானே இதயம்.

அடிமை கண்ட ஆனந்தம்

(நம் குரு மங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்)

சிறுவனுக்குத் தான் பள்ளிப் பருவத்தில் எத்தனை எத்தனை இறை அனுபவங்கள்! அதுவும் பிரபஞ்சம் போற்றும் உத்தமச் சித்தரின் நேரடித் திருநோக்கில்!  அவனுடைய குருகுலவாசத்தில் இறைவ‌ள அனுபூதிகள் பொங்கி வழிந்து, அவன் நெஞ்செல்லாம் நிரம்பி, ஆத்மார்த்தமாக, அமிர்தமயமாக இனித்தது. இன்றும் அவை குருவருள் நிறை அமிர்தப் பிரசாதமாய் இனிக்கின்றது!  அந்த அமிர்தத்துவத்தை நீங்களும் பெற வேண்டுமானால் இதற்கான சற்குருவை அடைய வேண்டும் அல்லவா!  ஆன்மப் பசி எழுந்தால்தானே இந்த அமிர்த பானம் கிட்டும்!  எனவே ஆன்மப் பசி கிளர்ந்தெழுவதாக அமைவதே நீங்கள் இத்தொடரில் காணும் குருகுலவாச அனுபூதிகள் யாவும்!

பொருள் ஆனந்தம்
இடையே புலன் ஆனந்தம் !

திருப்பதி, கேதார்நாத், தனுஷ்கோடி, கொல்லி மலை, பொதிய மலை, குற்றாலம் போன்ற இடங்களில் பெரியவர் சிறுவனை மிகவும் அரிய சுனைகளுக்கு, தீர்த்தங்களுக்கு அழைத்துச் சென்று அதியற்புத நீராடல்களை, தரிசனங்களைப் பெற்றுத் தந்துள்ளார். பௌர்ணமியில், குறித்த நட்சத்திர நாட்களில் மட்டுமே தோன்றுகின்ற அமிர்தச் சுனைகள் இவற்றில் நிறைய உண்டு.  திருஅண்ணாமலியில் பௌர்ணமியின் போது மட்டும் தோன்றி ஜீவ ஓட்டம் பெறுகின்ற அபூர்வமான சுனைகளும் சில உண்டு.

ஒருமுறை......

திருஅண்ணாமலைக்குக் கால்நடையாய் நடந்து சென்ற போது.....ஒவ்வொரு முறையும் திண்டிவனம், காஞ்சீபுரம், உத்தரமேரூர், வந்தவாசி என ஒவ்வொரு வழியில் கால்நடையாலான யாத்திரை அமையும்! எப்போது அவர் எவ்வழிச் செல்வார் என எவராலும் அறிய முடியாது!

தாகம் தணியா இளநீர்!

நல்ல கொதிக்கும் வெயிலில்......இருவருக்குமே நல்ல தண்ணீர் தாகம்!  வழியில் இருந்த இளநீர்க் கடை, சர்பத் கடை எல்லாவற்றிலும் நின்று ஒன்றும் வாங்காது "வெறுமனே" விசாரித்த பெரியவர், “கோயில் மரத்தில் திருடிய இளநீர், கோயில் நிலத்தில் குத்தகை சரியாகக் குடுக்காமல் பறித்த இளநீர், அதிக விலை, உப்புக்கரிக்கும் இளநீர், நிறைய கெமிகல்ஸ் சேர்ந்த சர்பத், கோயில் உண்டியலில் காசு போடாமல் கோயில் குளத்தில் எடுத்த நீரில் செய்த சர்பத்!" என்றவாறாக எதையாவது சொல்லி அனைத்தையும் "தட்டிக் கழித்தார்!" சிறுவன் எதிர்பார்த்ததுதானே!  எனவே அவ்வளவாக அவனுக்கு இதில் ஏமாற்றம் இல்லைதான்!

ஒரு stageல் சிறுவனே வெறுத்துப் போய், "போதும் வாத்யாரே! போதும்! தாகத்துக்கு மேல தாகமாக எடுத்து தாகமே எகிறி போய், தாகமே தானாவே ஒதுங்கிடுச்சு!  சும்மானாச்சுக்கும் ஏதாச்சும் சொல்லி ஒவ்வொரு கடையா ஏறி இறங்கி அது வேண்டாம், இது வேண்டாம்னு சொல்றதுக்கு எங்கேயும் நிக்காம ராஜபாட்டையா நடந்து நடந்து ஒரேயடியா திருஅண்ணாமலைக்கே போய்ப் பார்த்துக்கலாம்!" என்று மிகவும் தைரியமாக ஓங்கிப் பேசி விட்டான்!

"நல்லா இருக்கே! எவனாச்சும் காசைக் கொடுத்துக் கர்ம வினையையா வாங்கிக் குடிப்பான்! அடடா பிள்ளைக்கு ரோஷம் பொத்துக்கிட்டு வருது போல இருக்கே!" என்று கரித்துக் கொட்டியவர் திடீரென்று "....ஆங்.....அதோ அங்க பாரு! அற்புதமான குளத்துத் தண்ணீ(ர்)! கடவுளே நமக்கு ஒரு கோயில் தீர்த்தமா ஆக்கி வச்சுருக்காரு பாரு!" என்று கூறியவாறு தூரத்தில் கையைக் கட்டிடவே....சிறுவன் சற்றே தெம்பு கொண்டான்!  ஆனால் அந்தத் தீர்த்தமோ, அவர்கள் அருகில் செல்லச் செல்ல, சற்றுத் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது போல் தோன்றியது! ஒரு வழியாய் அந்தத் தீர்த்தத்தை அடைந்தார்கள் இருவரும்!  பொட்டை வெயிலில், சுற்றிலும் வரண்ட பூமியில் பளிச்சென தெள்ளத் தெளிவாக பளிங்கு போல் நீர் இருந்தது, மனதுக்கு இதமாக இருந்தது!

தாகம் தீர்ந்ததாம்! கோபம் சீறியதாம்!

"கேட்டியேடா, தண்ணீர், தண்ணீர்னு பக்கதுல போய்ப் பாரு!"

ஒரே பாய்ச்சலில் நீரை அடைந்தான் சிறுவன்! கால்களை சற்று உள்ளே இறங்கி கைகளால் நீரை நன்கு விலக்கி, கால்களை நன்கு அகல விரித்துக் கொண்டு "ப்ளக் ப்ளக்" என்று ஆசை தீர நீரை அள்ளி அள்ளிப் பருகினான். தொண்டையைத் தாண்டி நுனி நாக்குவரை நன்கு நீரைக் குடித்தான்!  செட்டி நாட்டு ஊற்றுக் கேணி போல் பால் நிறத்தில் பளிச்சென்றும் இருந்து, கல்கண்டாயும் நீர் தித்தித்தது!

"அப்பாடா" என்று சொல்லியவாறு மன நிறைவுடன் திரும்பிய சிறுவனுக்குப் பகீரென்றது!

ஆம், வழக்கம் போலப் பெரியவர் முகத்தைத் திருப்பிக் கொண்டு எங்கேயோ பார்த்தவாறு உட்கார்ந்திருந்தார்! திடீரென்று எழுந்து விட்டார்!

"போச்சுடா, என்ன வில்லங்கமோ, என்ன கோபாதி கோபமோ தெரியவில்லையே!" -சிறுவனுக்கு பயம் வந்து விட்டது!

"வாத்யாரே, தண்ணீர் ரொம்ப நல்லா இருக்குது, வாத்யாரே! வா, வா! வந்து குடிச்சுப் பாரேன்!"

"ஆமாண்டா, இவ்வளவு தூரம் நடந்து வந்த களைப்புக்கு என் கிட்ட ஒரு வார்த்தை சொன்னியா! டொடுக்குன்னு நீயே தண்ணியை எடுத்துக் குடிக்க ஆரம்பிச்சுட்டியே!"

"தப்புத்தான் வாத்யாரே!  தெரியாமல் பண்ணிட்டேன்!" சிறுவன் எடுத்த உடனேயே சரணாகதிக்குத் தயாரானான்! But where’s the taker?

Sorry, No Sorry please!

"ஆங்.....அதெப்படிடா ஆன்மீகத்துல தெரிஞ்சும், தெரியாமலும் தப்பு பண்றது?  உன்னைத் தண்ணீர் குடின்னா நான் சொன்னேன்! போய்ப் பாருடான்னுதானே சொன்னேன்! அவ்வளவு தானே! இப்ப குளத்தையே முழுங்கிட்டு வந்து நிக்கறியே! கோயில் உண்டியல்ல தண்ணீருக்குன்னு காசு போட்டியா? இந்த தீர்த்தத்துக்கான ஜல தேவதைகளோட அனுகிரகத்தைக் கேட்டியா? அவங்களுக்கு நமஸ்காரம் பண்ணினியா! இந்த தண்ணீர்ப் பஞ்சத்துல.....நீ குடிச்ச தண்ணியை ரெண்டு பசு மாடுங்க குடுச்சாலாவது நல்ல பாலா வந்து ஒரு குடும்பத்துக்கு உதவுமே!  தண்ணீ குடிக்கறதுக்கு  முன்னாடி என்னை நீர் ஒரு வார்த்தை சொல்லிக் கூப்பிட்டியா?"

"சரி, சரி வாத்யாரே! ஏதோ நடந்தது நடந்து போச்சு! தண்ணியைக் கண்டாப் போதுங்கற நெனைப்புல எல்லாத்தையும் மறந்துட்டுப் பாய்ஞ்சுட்டேன் Sorry வாத்யாரே!"

"என்னடா sorry பூரின்னு! இந்த sorry வார்த்தையே தெய்வீக அகராதியில் கிடையாதுன்னு உனக்கு எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன்!  பஸ்ஸுல காலை மிதிச்சுட்டு உடனே sorryன்னு சொன்னா வலி சரியாகிடுமா? வலி போயிடிச்சுன்னாத்தான் அந்த மன்னிப்புக்கு, அந்த வார்த்தைக்கு அர்த்தம் வரும்! தண்ணியைக் கண்டதும் எல்லாம் மறந்து போச்சுன்னு தண்ணியைக் காட்டினவனுக்கே தண்ணி காட்டுறியே!" எனப் படபடவென்று பெரியவர் பொரிந்தார்! சிறுவனுக்கு உடல், மனம் உஷ்ணமாகி மீண்டும் தாகம் வந்து விடும் போல் ஆகி விட்டது!

"சரி வாத்யாரே! இப்ப நான் செஞ்சது பெரிய தப்புதான்!  ஏற்கனவே தாகத்துல ரொம்ப கஷ்டப்படுறியே, இப்படிக் கோபத்துல கத்தினா இன்னும் தாகம் தான் ஜாஸ்தியாகும்! கொஞ்சம் திரும்பிப் பார்த்து கொஞ்சமாச்சும் தண்ணி குடி வாத்யாரே!"

பெரியவர் சீறினார்!

"ஆமாண்டா கலியுகத்துல நியாயத்தை, தர்மத்தை எடுத்துச் சொன்னா ஏன்யா ரொம்பக் கத்தறேன்னுதான் கேப்பாங்கன்னு எங்க குரு பத்தாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே சொல்லிட்டாருடா! எல்லாம் என் விதி!"

கலங்கா நீரால் கலங்கினானே!

"நான் அந்த அர்த்தத்துல சொல்லலை வாத்யாரே! ரொம்ப கெஞ்சிக் கேட்டுக்கறேன் வாத்யாரே, வந்து ஜலங் குடிச்சா தாகம் தணியும், உஷ்ணமும் தணியும்!"

"ஆமாண்டா நீ ரெண்டு கையால கலக்கி, காலால ஆட்டித் தீர்த்தத்தையே குண்டு யானையாட்டம் ஒரு கலக்குக் கலக்கிட்டு இப்ப என்னை இந்தக் களிமண் தண்ணியைக் குடின்னா சொல்றே!"

பெரியவர் புது குண்டைப் போட்டார்!  சிறுவன் அயர்ந்து விட்டான்!

"ஏன் இன்று இப்படி அபாண்டமாகச் சொல்கின்றார்? மெதுவாகத்தானே நீரை எடுத்துக் குடித்தோம்!" மிகுந்த வேதனையோடு சிறுவன் தீர்த்தத்தைப் பார்த்தான்!

அங்கே....சிறுவனுக்கு...பெரிய ஷாக் அடித்தது போல் இருந்தது!

ஆம், அங்கே பத்துப் பதினைந்து எருமை மாடுகள் திடீரென்று இறங்கினாற் போல் தீர்த்தமானது சேறும், சக்தியுமாய் இருந்தது. சிறுவன் நடுநடுங்கி, ஆடிப் போய்விட்டான்!

பெரியவர் திடுதிடுப் பென்று எழுந்தார்! சிறுவனைத் தரதர வென்று இழுத்துக் கொண்டு "இத பாருடா! இவ்வளவு கலக்கு கலக்கி வச்சுட்டு இந்தத் தண்ணியைக் குடின்னு சொன்னா என்னடா அர்த்தம்?"

கமலம் பூத்த தடாகமாம்!

சிறுவன் "மௌனம் சர்வ கார்ய சித்தி" என்ற முடிவிற்கு வந்து சாந்தத்தைக் கூட்டி மிகவும் அமைதியானான்!

"ஆமாண்டா! குத்துக் கல்லாட்டாம் நான் இங்க தாகத்துல வெந்துகிட்டு இருக்கேன்!  நீ மட்டும் ஜம்முனு தண்ணியைக் குடிச்சுட்டு நல்லாச் சேறு வர்ற மாதிரித் தண்ணியைக் கலக்கிட்டு, வாயே திறக்காம மௌனி ஆயிடுவே! ஆனா தெரியாம பண்ணிட்டேன் வாத்யாரே!  மன்னிச்சுக்கோன்னு ஒரு வார்த்தையாவது சொன்னியா!"

சிறுவன் அவரை விநோதமாகப் பார்த்தான், அவனால் அப்போது அவனால் அவரை முழுவதுமாகப் பார்க்க முடியவில்லை!  அவரிடம் எழுந்த தேஜஸின் வியாபகம் விண்ணுக்கும், மண்ணுக்கும் எழுந்ததால் அவனால் அவரை நன்கு பார்க்க முடியவில்லை! அர்ஜுனன் கதறியது போல் "போதும், போதும், கிருஷ்ணா! சாதாரணமாகி விடு!" என்று கதறியது போல், "வாத்யாரே! சாதாரணமாக சிடுசிடு வாத்யாராகவே இரு!" என்று கதற வேண்டும் போல் இருந்தது அவனுக்கு!

இப்போது அவன் பிரார்த்தனைக்குச் செவி சாய்ப்பது போல் பெரியவர், "திருவையாறு பக்கத்துல நாகத்தின்னு ஒரு ஊர்ல சிவன் கோயில் ஒண்ணு இருக்குடா! அங்க அந்த அம்பாள் கையில் இருக்கற ரெண்டு தாமரைப் புஷ்பமும் இந்த தீர்த்தத்துல விளைஞ்சதுதான்!"

சிறுவன் தன்னை மறந்து நின்றிட....தீர்த்தத்தை அவன் நோக்கிட....அதுவோ தெள்ளத் தெளிவாய்ப் பால் போல் மீண்டும் பிரகாசித்தது! அவன் தன்னை மறந்து மீண்டும் கண் விழிக்கும் போது பெரியவர் எங்கோ போய்க் கொண்டிருந்தார்!

சிறுவன் நல்ல வெயிலில் துரத்திச் சென்று அவரை எட்டிப் பிடிப்பதற்குள் ஒரு மைல் கடந்தாகி விட்டது. மூச்சு இரைக்க...இரைக்க சிறுவனுக்கு வியர்த்து மறுபடி தாகம் ஏற்பட்டு விட்டது!

மீண்டும் ஒரு தீர்த்தம்!

பெரியவர் சிரித்துக் கொண்டே தூரத்தில் கையைக் காட்டினார். ஆங்கே....மற்றுமொரு தீர்த்தம் தென்பட்டது!

சிறுவன் இப்போது உஷாராகி விட்டான்! பாவம், நெடுந்தொலைவு நீர் அருந்தாது வந்த பெரியவருக்கு முதல் சான்ஸ் என முடிவு கட்டிக் கொண்டான்.

"நீ முதல்ல தண்ணி குடி வாத்யாரே!"

"வாடா! நயினா இங்க வா! நீயே முதல்ல தண்ணி குடி! பாவம் என்னைத் துரத்திக்கிட்டு ஒரு மைல் ஓடி வந்துருக்க பாரு, நீயே முதல்ல குடி! ஓடி வந்ததினால் உனக்கு நாடி, நரம்பெல்லாம் ஆடுது! அப்பப்ப நீ கண்ணை மூடிக்கிட்டா ஏதோ தியானத்துல போறதா நினைப்பு! நான் தான் முழு பூசனிக்காயாட்டம், ஒரு சாதாரண மனுஷனாட்டம் உன் முன்னாடியே நிக்கறேனே!  எங்களைச் சரியாப் புரிஞ்சுக்காம நீ கண்ணை மூடிக்கிட்டா நாங்க பறந்து போய்கிட்டே தான் இருப்போம்!...நீ ஓடி வந்து எங்களைப் பிடிக்க வேண்டியது தான்! அப்பத்தான் தெய்வீகம்னா என்னன்னு நல்லாவே புரியும்!  குருவோட மகிமையும் தெரிய வரும்!"

நாகத்தி

பெரியவர் வழக்கம் போல் மிகவும் பிரமாதமாகப் பேசினார்! அவருக்கு அது கை வந்த கலைதானே!  ஆனால் சிறுவனாவது தற்போது அசருவதாவது! இப்போது நன்கு விழித்துக் கொண்டான் அவன்!  பெரியவர் தலைகீழாக நின்றால் கூட அவன் இன்று இத்தடாகத்தில் ஒரு துளி கூட நீர் குடிப்பதாக இல்லை!

"வாடா வந்து தண்ணி குடி!  நீ வயசுல சின்னவன்! உன்னை விட்டுட்டு இந்தக் கிழவன் தண்ணி குடிச்சா அந்த வயசு வித்யாசப் பாவம் வேற என்னை வந்து சுத்திக்கும்!"

சிறுவன் remained unmoved!

"அடேய்! கல்லுளிமங்கா! நீ குடிக்காம நான் தண்ணி குடிச்ச அது மகாபாவம்டா!"

ஊஹூம்!  சிறுவன் ஓரணுவும் நகர்வதாய் இல்லை! சிறுவன் கால்கட்டை விரல்களைப் பூமியில் நன்கு அழுத்திக் கொண்டான்!  "முன்பு போல தாக வேகத்தில் எங்கே தன்னையும் அறியாமல் தண்ணீர் குடிக்கப் போய் விடுவோமோ" என்ற பயம் தான் காரணம்!

"அப்ப நான் சொல்றதைச் சொல்லிட்டேன்!  ஆட்டத்துக்கு ஆட்டம் அமாவாசை வராது!  இப்ப நீ தண்ணி குடிக்கலைன்னா இதுக்கப்புறம் பத்து மைல் தாண்டினாத்தான் நல்ல இளநீர் கிடைக்கும்! நிஜமாவே நல்ல first class இளநீர்!"

இம்மாதிரியான இளநீர்க் கடை அனுபவங்களை அவன் அவரிடம் நிறையப் "படித்தவனாயிற்றே!" சிறுவன் ஒரு துளியும் அயர்வதாக இல்லை!

"எனக்கென்னப்பா! நான் முதல்ல தண்ணி குடிச்சுடறேன்! ஆனா தண்ணி கலங்கிடுச்சுன்னா எனக்குத் தெரியாது!"

கலங்கா நீரில் (தேவ) கலங்கரை விளக்கு!

துபு துபு என்று நீரில் இறங்கிய பெரியவர் கையை நன்கு வளைத்து, வளைத்து நீரை ஆட்டி, ஆட்டி முகந்தும், மொண்டும் குடித்தார். With the result தீர்த்தமே நிறம் மாறி கலங்கோ கலங்கு என்று மிகப் பிரமாதமாய்க் கலங்கி விட்டது!

"...ஆமாம் சற்று ஆற அமரக் குடித்தால் தான் என்னவாம்! இப்படி துபு துபுவென்று சகல அங்கங்களையும் ஆட்டிக் கொண்டு எருமை மாடுகள் நூறு சேர்ந்து ஆட்டுவது போல் கலக்கித் தண்ணீர் குடித்தால் எந்தக் குளத்து நீர்தான் சேறாய்ச் சகதியாய் ஏன் மாறாது?"

சிறுவன் உள்ளுக்குள் பேசிப் புரண்டு கொண்டான்.

"ஆமாண்டா, இதுக்கு மகிஷ தீர்த்தம்னு பேரு! அம்பாள் மகிஷாசுரமர்தினியாய்த் தீர்த்தம் உண்டாக்கின இடம்! அதனாலத்தான் இங்கே அடிக்கடி எருமை ஞாபகம் வரும்!"

பெரியவர் அவனைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டிப் பெரியாய்ச் சிரித்தார்! சிறுவன் தலையை குனிந்து கொண்டான்!

பெரியவர் தொடர்ந்தார்! ".....ஆனா ஒரு எருமை கூட இதில் இறங்காது!  பராசக்தியே நேரிலேயே வந்த ஸ்தலம் ஆச்சே!  அவ்வளவு விசேஷமான இடம் இது!  ஜ்வாலாமுகின்னு அம்பாளைத் தோற்றுவித்த இடம்! இந்தா...!" - என்று அவனைக் கூப்பிட்டு அவன் சிரசில் கொஞ்சம் தீர்த்தத்தைச் சற்றே தெளித்தார் பெரியவர்! சிறுவன் தீர்த்தத்தைத் திரும்பிப் பார்த்தான்! எங்கும் ஒரே சகதி! ஒரே மண் வாடை! ஏதோ ஆயிரம் எருமைகள் உழன்ற மாதிரி! பெரியவரை உர்ரென்று நோக்கினான் சிறுவன்!

"ஏண்டா தண்ணி குடி, தண்ணி குடின்னு உனக்கு எவ்வளவு சான்ஸ் கொடுத்தேன்! இப்ப எல்லாம் கலங்கிடுச்சே, என்னடா பண்றது?"

பெரியவர் தீர்த்தத்தை நோக்கிக் கையைக் காட்டிட...

சிறுவன் பெருங்கோபத்துடன் அங்கே பார்த்தான்!  சிறுவனுக்குத் திக்கென்றது!

தீர்த்தம் இருந்த சுவடையே காணோம்! குளம் எங்கே போயிற்று?

சிறுவன் வியப்பில் ஆழ்ந்தான்! பஞ்ச பூதங்களையும் வருவித்து, மறைத்துத் தோற்றுவிக்கின்ற தெய்வீக வல்லமை கொண்ட சித்தர்களிடம் சிக்கினால், சிக்கென்று பிடித்தால் மத்துவரசி ஓங்காரத் தத்துவம் மூலம் சித்தர்களை உதிக்க வைக்கும் சிக்கில் சிங்காரவேல் மூர்த்தியை டக்கென்று எளிதில் அடைந்து விடலாமே!

நடராஜர் திருத்தலம்

நடராஜர் சம்பந்தப்பட்ட பெயர் உடையோர்க்கு உரிய திருத்தலம்

பதஞ்சலி, வியாக்ரபாத மஹரிஷிகள் வழிபட்ட தலங்கள் யாவும் சிதம்பரனாம் நடராஜப் பெருமானின் நடானம்ருத சக்தி நிறைந்த தலங்களாம். எனவே சிதம்பரம், நடராஜர் சம்பந்தப்பட்ட பெயருடையவர்கள் தினசரி நடராஜரை வழிபட வேண்டும்.

ஊட்டத்தூர்

ஒவ்வொரு திங்கட்கிழமையும், மற்றும் திருவாதிரை நட்சத்திர நாட்கள், தமிழ் வருடத்தில் வருகின்ற ஆறு நடராஜர் அபிஷேக தினங்களில் கண்டிப்பாக இவர்கள் நடராஜ தரிசனத்தைப் பெறுதல் வேண்டும். வலது கால் ஊன்றிய கோலம், இடது கால் ஊன்றிய கோலம் (மதுரை), இரு கால்களையும் தரையில் ஊன்றிய கோலம், காலை உயர்த்திய ஊர்த்வ தாண்டவக் கோலம், கற்சிலையில் அரிய நடராஜர் தரிசனம் (உடையார்பாளையம், ஊட்டத்தூர், ஆவுடையார் கோயில், திருச்சுழி, அருப்புக்கோட்டை) விரிசடை நடராஜர் (பல தலங்களில் கல்லாலன்றி உற்சவ மூர்த்தியாகவே எழுந்தருளியுள்ளார்) போன்ற ஆறுவகை நடராஜ மூர்த்திகளையும், இந்த ஆறு நடராஜ அபிஷேக தினங்களில் தரிசிப்பது மிகவும் விசேஷமானதாம்.

தம் வாழ்நாளில் இவர்கள் குறைந்தது 1008 நடராஜ தரிசனங்களைப் பெற்றிடச் சங்கல்பம் செய்து கொண்டு சிவதரிசன லட்சியத்துடன் வாழ்ந்திடில் நடராஜப் பெருமானின் அருட்கடாட்சத்தைப் பெறுவர்.

மேற்கண்ட "நடராஜர்" சம்பந்தப்பட்ட பெயர் உடையோர் (நடராஜன், தியாகராஜன், சிதம்பரம், சபேசன், சிற்சபேசன், சிவகாமி, சிவகாம சுந்தரி, தியாகு, நடேசன், சபாபதி, நடனராஜ், நடன சேகர், குஞ்சிபாதம், பதஞ்சலி, அம்பலவாணன், பொன்னம்பலம்) தரிசிக்க வேண்டிய தலமே உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள ஓரத்தூர் சிவாலயமாம்!  அகஸ்தியர், வியாக்ரபாதர், பதஞ்சலி, காலவ மகரிஷி, மார்கண்டேயர் போன்றோர் வழிபட்ட ஓரத்தூர் ஸ்ரீசிதம்பரரேஸ்வரர் சிவாலயம்! மிகவும் சக்தி வாய்ந்த தலம்!

காலாள் காத்தான்

ஸ்ரீகருப்பண்ண சுவாமியின் காவல் தெய்வ பைரவர்

நடப்பு சித்ரபானு ஆண்டில், சமுதாயத்தில் எழ இருக்கும் இன்னல்களை வென்றிட ஸ்ரீபைரவர் பூஜையும், பைரவ வாகன மூர்த்தி பூஜையும் மிகவும் முக்கியமானதாம். பைரவ சக்தி நிறைந்த நாய் இனத்தை "நாய்" என்று கூறாது, "பைரவர்" என்று பக்திப் பூர்வமாக அழைக்கும் நற்பழக்கம் இன்றும் கிராமப் புறங்களில் உண்டு. அட்டைப் படத்தில் உள்ள காலாள் காத்தான் பைரவ வாகன மூர்த்தியானவர், பிருத்வித் தலங்களில் உள்ள ஸ்ரீகால பைரவருடைய வாகனமாக அமைகின்றார். ஸ்ரீகருப்பண்ண சுவாமி பொதிகை மலையில் பன்னிரெண்டு ஆண்டுகள் தவம் பூண்ட போது பைரவ மூர்த்தியிடம் இருந்து வெள்ளைத் தலைப்பாகையைப் பெற்றார். ஆகவே ஸ்ரீகருப்பண்ண சுவாமிக்கு வெள்ளைத் தலைப்பாகை நேர்த்தி வைத்து, 48 நாட்கள் விரதம் இருந்து சுவாமிக்குக் காணிக்கையாய் செலுத்துவதால் இப்பூஜா பலன்கள் மிகச் சிறந்த வரங்களைத் தந்து எங்கு சென்றாலும் நம்மை ரட்சையாய்க் காக்கும். நல்ல ஆழ்ந்த நம்பிக்கையுடன் வேண்டுவோர்க்கு ஸ்ரீகருப்பண்ண சுவாமியே துணையாய் வருவார். பெண்களின் கற்பைக் காக்கும் உத்தம தெய்வம்.

ஸ்ரீகருப்பண்ண சுவாமி, பொதிய மலையில் ஸ்ரீகால பைரவரை நோக்கிக் கடுந்தவம் இயற்றிய போது ஸ்ரீபைரவ மூர்த்தி அவருக்குக் காலாள் காத்தான் என்ற வெள்ளை நாயை (பைரவரை) பரிசாக அளித்தார். இந்த பைரவ வாகனர் அனைத்துப் பிருத்வித் தலங்களிலும் ஸ்ரீகால பைரவருக்கு வாகனமாக இருப்பார். கனவிலும் வெள்ளை பைரவராய்க் காட்சி தருவார். இவ்வாறு கனவு கண்டிடில் மக்களுக்கு வரும் துன்பங்கள் சூரியனைக் கண்ட பனி போல் விலகும். ஸ்ரீகருப்பண்ண சுவாமியைப் பூஜிப்பதுடன் அவருடைய தேவ துணையான, காலாள் காத்தான் வகை வெள்ளை நாய்களுக்கும் உணவளித்து பொறை, ரஸ்க், பிஸ்கட் போன்றவற்றை அளித்திட அனைத்து நன்மைகளும் கிட்டிடும். காஞ்சிபுரம், திருவாரூர் மற்றும் புற்று மண் லிங்கம், பூமீஸ்வரர், ஜகதீஸ்வரர் போன்ற பூமி சம்பந்தப்பட்ட லிங்க மூர்த்திகள் எழுந்தருளியுள்ள தலங்களில் உள்ள பைரவரே ப்ருத்வி தல பைரவர் ஆவார்.

திருஅண்ணாமலையை கிரிவலம் வருகையில் பைரவ வாகனர்களுக்கு (நாய்களுக்கு) ஆங்காங்கே பொறை, ரஸ்க், பிஸ்கட் இட்டு வருதலும் சிறப்பான பைரவ வாகனர் பூஜையே! மிகவும் எளிமையான ஸ்ரீபைரவ வாகன மூர்த்தி பூஜை இது!

மாத சிவராத்திரி

திருஅண்ணாமலை மாத சிவராத்திரி கிரிவல மகிமை!

திருஅண்ணாமலையில் பௌர்ணமி அன்று கிரிவலம் வருதல் போல் மாதந்தோறும் அமாவாசைக்கு முதல் நாளான (தேய்பிறைச்) சதுர்த்தசி திதியாகிய மாத சிவராத்திரி இரவில் கிரிவலம் வருதலானது அளப்பரிய கிரிவலப் பலாபலன்களை வர்ஷிக்கும். மாத சிவராத்திரி தோறும் அம்பிகையே தூல, சூட்சும வடிவில் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து வழிபட்டு, தவமிருந்து உண்ணாமலை அம்பிகையாய், அருணாசல இறைவியாய் ஆகும் பாக்யம் பெற்றாள்.

பலரும் வாழ்வின் லட்சியம் என்ன என்பதை அறியாது வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். "உடம்பை வளர்தேன், உயிர் வளர்த்தேனே" என்றவாறாகப் பிறவிகளை வினைகளால் பெருக்கிக் கொள்கின்றனர். மாத சிவராத்திரி கிரிவலம்தான் ஒருவருக்கு வாழ்வில் தெய்வீகப் பிடிப்பைத் தரும்! ஏனோதானோ என்று வாழ்வோருக்கு பக்தியின் நுனியைப் பற்றித் தரும்! மனைவி, கணவனிடையே உண்மையான தெய்வீகப் பரிமாற்றம் உருவாகும். பிள்ளைகளை எதற்கு, எப்படி வளர்க்க வேண்டும் என்ற தெய்வீகக் கோட்பாடுகளை உருவாக்கித் தரும். இவ்வாறாக வாழ்வோடு இயைந்த பலாபலன்களையும் தருவதே மாத சிவராத்திரி கிரிவலமாம்.

திருஅண்ணாமலையில் மாத சிவராத்திரி நாளில் கிரிவலம் வருதலால் அளப்பரிய நல்வரங்களையும், காரிய சித்திகளையும் பெற்றிடலாம். சூரியனும், சந்திரனும் சங்கமிக்கின்ற காலமே அமாவாசை ஆதலால் (அமாவாசையில் இரண்டும் ஒரே ராசியில் அமையும்) அமாவாசைக்கு முதல் நாளான மாத சிவராத்திரியில் கிரிவலம் வருதலால் பாஸ்கரச் சந்திர கூட்டுச் சக்திக் கிரணங்களை அருணாசல மலையிலிருந்து பிரதிபலிக்கக் காணலாம். தூலக் கண்களுக்கு சூரிய, சந்திர ஒளியின்றி அருணாசல மலை சுயம் பிரகாசத்துடன் பொலிகின்ற திவ்யப் பிரகாசத்தை இங்கு, மாத சிவராத்திரி நாளில் பெற்றிடலாம். இந்த சுயம் பிரகாச ஒளியானது கண்கள் மூலமாக நம் 72000 நாடி, நாள நரம்புகளையும் அடைந்து அரிய அருணாசல தேவ சக்தியைப் பெற்றுத் தருகின்றது.

அமாவாசையன்று நம் கண்களுக்குச் சந்திரப் பிரகாசம் தெரியவில்லையே தவிர சந்திர கிரணங்கள் தமக்கு உரிய ஒளி வடிவ ஆகர்ஷண சக்திகளை முழுமையாகப் பெறும் இடமே திருஅண்ணாமலையாம். அதாவது சந்திர பகவானுடைய தேய்கின்ற கலைகளில் இறுதிக் கலையாகிய "சந்திர வதனி கிரணங்கள்" ஜீவன்கள் மீது தோய்கின்ற நாளே மாத சிவராத்திரி ஆகும்.

எனவே மாத சிவராத்திரி கிரிவலத்தின் பலனாக திடமான மன வைராக்ய மனோநிலையும், தீர்க்கமான மன உறுதிப்பாடும் கிட்டும். குழப்பமான மன நிலைகளுடன் எந்த முடிவை எடுப்பது என்று திணறுவோர் மாத சிவராத்திரி அன்று கிரிவலம் வந்திட்டால் நல்ல தீர்வுகளை முடிவாகப் பெற்றிடலாம்.

பிரதோஷத்திற்கு மறுநாள் அமாவாசைக்கு முந்தைய நாளாக மாத சிவராத்திரி அமைவதால் இரு பெரிய பண்டிகைகளின் தேவ சக்திகளையும் தாங்கி நிற்பதால் திருஅண்ணாமலையில் மாத சிவராத்திரி கிரிவலம் மிகவும் சக்தி வாய்ந்ததாம்.

அம்பிகையாம் ஆதிபராசக்தி ஒவ்வொரு மாத சிவராத்திரியிலும் தூல, சூட்சும வடிவில் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து தன் பூஜா பலன்களின் ஒரு பங்கை மாத சிவராத்திரி அன்று மிகுந்த பக்தியுடன் கிரிவலம் வருவோர்க்கு அள்ளித் தருகின்றாள். எனவே மாத சிவராத்திரி அன்று இரவில் கிரிவலம் வருவோர் அம்பிகையின் பூஜா பலன்களோடு இல்லம் திரும்புவதால் வாழ்வில் பெருத்த நல் மாற்றங்களை உணர்ந்திடலாம்.

அனுஷ நட்சத்திர திருத்தலம்

அனுஷ நட்சத்திரம் உடையோர்க்கான திருத்தலம்! திருநின்றியூர் ஸ்ரீலக்ஷ்மிபுரீஸ்வரர்

அவரவர் நட்சத்திரத்திற்கு ஏற்ப நட்சத்திர பீஜாட்சரங்கள், தாரகா சக்திகள், நட்சத்திர ஜோதி தரிசனம், சந்திர சாரத் தத்துவம் போன்ற பல அம்சங்களைக் கொண்டு அந்தந்த நட்சத்திரத்துக்கு உரிய சிறப்பான ஆலயங்களை இத்தொடரில் அளித்து வருகின்றோம் அல்லவா!  இவ்விதழில் அனுஷ நட்சத்திரம் உடையோர்க்கான வழிபாட்டுத் தலத்தைக் காண்போமாக!

பூர்வ ஜன்மத்தில் பெருமாள் ஆலயங்களில் ஸ்ரீமகாலக்ஷ்மிக்கு இறைச் சேவை புரிந்தவர்களும், மிகச் சிறந்த முறையில் தான, தர்மங்களை நிகழ்த்தியவர்களும், திருமகள் பூஜையிற் பொலிந்தோரும் அனுஷ நட்சத்திரத்தை இப்பிறவியில் கொள்கின்றனர். அனுஷ நட்சத்திரம் கொண்டோர் தம் வாழ்நாளில் அடிக்கடி வழிபட வேண்டிய தலமே மயிலாடுதுறை-சீர்காழி அருகே உள்ள திருநின்றியூர் ஸ்ரீலக்ஷ்மிபுரீஸ்வரர் சிவாலயம் ஆகும்.

திருநின்றியூர்

செல்வம் நிலைத்திருக்க அனைவரும் ஸ்ரீலக்ஷ்மி தேவியை வழிபட, திருமகளோ தாம் என்றும் பரமாத்மாவாம் ஸ்ரீமன் நாராயண மூர்த்தியின் திருமார்பில் நிலைத்து நின்றிட, சிவனை வழிபட்ட திருத்தலமே திருநின்றியூர் ஆகும். சென்னை அருகேயும் திருநின்றவூரில் ஸ்ரீபக்தவத்சலப் பெருமாள் ஆலயமும் உண்டு. இங்கு நாம் குறிப்பிடுவது தஞ்சை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருநின்றியூர் சிவாலயமாகும்!

திருமகளின் அனுகிரகத்தைத் தர வல்ல அனுஷ நட்சத்திரத்தைக் கொண்டு விட்டால் மட்டும் செல்வம் வந்து குவிந்திடுமா? நியாயமான முறையில் பெற்ற சம்பளம், வியாபார வருமானம், கூடி வந்த செல்வத்தையும் பரிபூரண ஆனந்தத்துடன், திருமகளின் அனுகிரகத்துடன் அனுபவிக்க வேண்டும் அல்லவா!  திருமகளின் அனுகிரகம் என்றால் பணப்பொழிவு, சொத்து, நகைகள் என்றே பலரும் தவறாகவே எண்ணுகின்றனர். பெருஞ் செல்வம் இருப்பினும் தான, தர்மங்களில் பெருநாட்டம் கொண்டு இறைச் சேவைகளை ஆற்றினால் தாம் திருமகளின் கடாட்சம் பரிபூரணமாகக் கிட்டும்!

அனுஷ நட்சத்திரம் உடையோர் அனுஷ நட்சத்திர நாள், பிறந்த நாள், திருமண நாள், துவாதசித் திதி, வரலக்ஷ்மி விரத நாள், குபேர பூஜை நாள் மற்றும் முக்கியமான நாட்களில் இங்கு ஸ்ரீலக்ஷ்மிபுரீஸ்வர சிவலிங்க மூர்த்திக்கு மாதுளை முத்துக்களைச் சந்தனக் காப்பில் பதித்து இட்டு அலங்கரித்து வழிபட்டுச் சர்க்கரைப் பொங்கல் படைத்து ஏழைகளுக்குத் தானமாக அளித்து வருதல் வேண்டும்.

அனுஷ நட்சத்திரத்தார் மட்டுமன்றி யாவரும் இங்கு அடிக்கடி வழிபடுவதுடன்,  "தனக்கு மிஞ்சிய" அளவில் தானம் செய்திடில் இத்தலத்தின் அற்புத சக்திகளைத் தாமே உணரப் பெறுவர். இங்கு தக்க அனுமதியுடன் கோ(பசு) பூஜை செய்து வணங்கி வர பணக்கஷ்டம் நியாயமான முறையில் தீரும். இங்கு தினமும் புத ஹோரையில் முழுத் தாமரை மலர்களால் அர்ச்சித்தல் வறுமையைப் போக்கும் நல்வழிகளைக் காட்டும்!

அனுஷ நட்சத்திர நாளில் ஸ்ரீமகாலக்ஷ்மிக்கு ப்ரீதியான மயில் கழுத்து வண்ண ஆடைகளை ஈஸ்வரருக்குச் சார்த்தி வழிபட வேண்டும். பக்தர்கள், மருதாணி இட்டுச் சிவந்த பாதங்களுடன், கரங்களுடன், கரங்களில் பெரிய அகல் விளக்கில் மூன்று திரி இட்டு ஏற்றி தீபங்களைச் சுமந்தவாறு அடிப் பிரதட்சிணம் செய்து வழிபட்டு, அவரவர் வசதிக்கு ஏற்ப தங்கம், வெள்ளி மாங்கல்யங்கள் அல்லது  மாங்கல்யச் சரடுகளை ஏழைச் சுமங்கலிகளுக்கு அளித்து வருதலால் பணக்கஷ்டம் தீரும். மாங்கல்ய தானப் பலன்கள்தாம் சில வகை ஐஸ்வர்ய தோஷங்களை நீக்கும் சக்தி பெற்றவை ஆதலின் பணக்கஷ்ட நிவர்த்திக்கு மாங்கல்யம், மாங்கல்ய சரடு தானம் பெரிதும் துணை புரியும்.

முழையூர் ஸ்ரீபரசுராமர்

ஸ்ரீபிரம்மாவின் அகங்காரத்தைக் களைந்த அட்சயத் திருதியைத் திருத்தலம்!

உணவுக்கு கஷ்டமின்றிச் சந்ததிகளைக் காக்கும் சிவத்தலம்!

அட்சயத் திருதியைப் பண்டிகை வழிபாட்டு ஆலயம்!

அரிசி வளம், ஐஸ்வர்ய வளம் பெருக்கி வறுமையை நீக்கும் நல்பூஜை நாளே அட்சயத் திருதியைத் திருநாள்!

அநாவசியமாக எங்கெங்கோ ஓசியில் உண்டு பெருக்கிய சோற்றுக் கழித் துன்பங்களுக்கு நற்பரிகாரம் தரும் அட்சயத் திருதியைத் திருக்கோயில்!

கும்பகோணம் பட்டீஸ்வரம் அருகே அட்சயத் திருதியைப் பெருவிழாத் தலமான முழையூரில் ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீபரசுநாதர் ஆலயம் அமைந்துள்ளது.

அகங்காரம் களையும் அதியற்புதத் திருவிழாவே அட்சயத் திருதியை!

சரியாக, நேர்மையாக உழைக்காது சம்பளம் பெற்று வாழ்ந்தால் சோற்றுக் கழிக் கர்ம வினைகளே பெருகும்!  இதற்குரிய நிவர்த்தித் தலமே முழையூர் சிவத் தலமாம்!

முழையூர் சிவாலயம்

இப்பூவுலகின் விளங்குளம், காசி, திருப்பரங்குன்றம், திருச்சோற்றுத் துறை போன்ற மகத்தான அட்சயத் திருதியைத் தலங்களுள் மிகவும் முக்கியமானதே முழையூர் சிவத் தலமாம்! ஜமதக்னி மாமுனிவர் பிரபஞ்சமே போற்றும் அவதாரமாம் பரசுராமரைத் தவப் புதல்வனாகப் பெற்றிட அருந்தவம் பூண்டு, தம் புதல்வனுக்கு நல்வரங்களும், மறைஞானமும் பெற்றுத் தந்த அற்புதத் திருத்தலம்!

பண்டைய யுகங்களில் அட்சய திருதியைத் திருவிழாவில் பிரம்மாண்டமான தேர்கள் உலா வந்து மகாமகம் போல் தேசமளாவிய திருவிழாக் கோலம் பூண்ட சிவத் தலமே முழையூர் ஸ்ரீபரசுநாதர் சிவாலயமாம்!  பிரபஞ்சத்திலேயே மிகச் சிறப்பான அட்சய திருதியை சக்திகள் பரிபூரணமாகப் பொழிவதான, அனைத்து விதமான ஐஸ்வர்யங்களும் விருத்தி அடைவதற்கான மிகவும் பிரசித்தி பெற்றதாக, வட பாரதப் பகுதியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து அட்சய திருதியைத் திதியில் மாபெரும் திருவிழா நடத்திய சிவத் தலமாக விளங்கிய முழையூரானது தற்போது ஆரவாரமின்றி, எளிமையான சிவாலயமாக மாறிப் பலரும் அறியா வண்ணம் உள்ளது.

பக்த கோடிகள் இனியேனும் அட்சயத் திருதியை அன்றும் மற்றும் மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறைத் திருதியைத் திதிகளிலும் சுவாமிக்கு நெய் அன்னம் படைத்து, நெய் கூடிய வெண் பொங்கலை அன்னதானமாக அளித்து இத்தலத்தின் மகத்துவத்தை மீண்டும் உலகிற்கு உணர்த்துதல் வேண்டும்!

ஸ்ரீநர்த்தன கணபதி முழையூர்

அன்னசாரம் சம்பந்தமாக உடலில் எழுகின்ற சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், உணவு செரிவின்மை போன்ற நோய்களுக்குத் தக்க நிவர்த்தியைப் பெற்றுக் கொள்ள சிறப்பான தலமும் முழையூரே ஆகும். இன்று இத்தலத்தில் தினசரி பூஜைகளுக்குப் பக்தர்கள் அதிகம் வாராது இருந்தாலும், வருடந்தோறும் அட்சய திருதியைத் தினத்திலாவது ஆயிரக்கணக்கானோர்   கூடிப் பேருவகையுடன் திருவிழாக் கொண்டாடும் அரும்பெரும் சிவத் தலமாகவும் முழையூர் ஆலயம் விளங்குகிறது.

அட்சயத் திருதியை என்றால் என்ன? வருடந்தோறும் ஒரு முறையாக, திருதியைத் திதியில் அமைகின்ற பண்டிகை இது!  இதன் பின்னணியில் நிறைய இறைப் புராண அனுபூதிகள் உண்டு!  பிட்சாடனர் கோலத்தில் அன்னபூரணியாக உற்பவித்த அம்பிகையிடம் ஈஸ்வரன் பிட்சை பெற்ற திருநாளும் அட்சயத் திருதியை திருநாளாகும். என்றும் அன்ன வளம் குன்றா அட்சயப் பாத்திரத்தைப் பாண்டவர்கள் சூரிய பகவானிடம் இருந்து பெற்ற நாளும் அட்சயத் திருதியையே! அன்னபூரணியாக அம்பிகை அவதாரம் கொண்ட நாளும் அட்சயத் திருதியையே! ஐஸ்வர்ய லக்ஷ்மி, தான்ய லக்ஷ்மி போன்ற அருள் வள திருமகள் அவதாரங்கள் தோன்றிய நாளும் அட்சயத் திருதியையே!  ஸ்ரீசாகம்பரீ தேவி பல அரிய மருத்துவ மூலிகை விருட்சங்களை உற்பவித்த நாளும் அட்சயத் திருதியையே!  குபேர மூர்த்தி ஐஸ்வர்ய நிதிக் கலசங்களைப் பெற்ற நாளும் அட்சயத் திருதியையே!  இவ்வாறாக அட்சயத் திருதியைத் திருநாளானது பொக்கிஷங்களின் விருத்தி நாளாகப் பொலிகின்றதாம்!

இந்நாளில் குபேர பூஜை நடத்துவதும், முழையூரில் சிவலிங்கத்திற்குக் காசுமணிகளால் ஆன மாலை அணிவித்து அபிஷேக ஆராதனைகள் செய்வதும் ஐஸ்வர்ய விருத்தியைத் தரும்! முடங்கிக் கிடக்கும் பணம், தரிசாக, பயனின்றிக் கிடக்கும் நிலம், தோட்டம், வீடு, முதலீடு நன்கு விருத்தி அடைய இங்கு முழையூரில் அட்சயத் திருதியை அன்று சிவலிங்கத்திற்கு மாதுளை முத்துக்களால் காப்பிட்டு, அலங்கரித்து அபிஷேக ஆராதனைகளுடன் வணங்கி வருதல் வேண்டும். காணுதற்கரிய லிங்க வடிவமிது! பரசு பீஜாட்சர லிங்க வடிவைச் சார்ந்தது!  "நீண்ட கூம்பு நெடுஞ் சடை லிங்கத்தார்" என இதனைச் சித்தர்கள் போற்றுகின்றனர்.

பிட்சை என்றால்..................

அட்சயத் திருதியை நாளில் ஈஸ்வரனே ஏன் பிட்சை ஏற்க வேண்டும்?  பிட்சை என்றால் நம் வழக்குத் தமிழில் சொல்லப்படும் பிச்சை எடுத்தல் எனும் பொருளில் அல்ல. அக்காலத்தில் "பவதி பிட்சாந் தேஹி" என்று ஓதியவாறு மஹான்களும், பகவத் பாதப் பெரியோர்களும், உஞ்ச விருத்திக்காரர்களும் சிறு செம்புக் கலசம் தாங்கியவாறு வீதியெங்கும் உஞ்ச விருத்தி உலா வந்து பாடல்களைப் பாடியவாறு, நாம சங்கீர்த்தனத்துடன் இறைநாமாவளிகளை ஓதியவாறு, இல்லந்தோறும்  பிட்சையாக அரிசியைப் பெற்றுக் கொள்வர்!  ஒரு வீட்டில் ஒரு பிடி அரிசியை மட்டுமே பெறுவர்! பிறகு பக்தியுடன் சமைத்து இறைவனுக்கு அர்ப்பணித்து, தாம் ஒரு வேளை மட்டும் உண்டு, அன்றைய தினமே ஏனைய அரிசி, தான்ய மணிகளை உணவாக, அன்னதானமாக விநியோகித்து விடுவர். இதையே பிட்சை என்று அழைக்கின்றோம்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி முழையூர்

இவ்வாறு தனக்கென்று ஒரு சிறு தான்ய மணியைக் கூட வைத்துக் கொள்ளா தியாக சீலர்கள் உலாவிய தியாக பூமி நம் பாரத பூமியாம்!

அண்ணலுக்கு அன்னமளித்த அன்னபூரணி!

இந்நிலை கூடிய பிட்சாடனர் திருக்கோலத்தில் தான் ஈஸ்வரனும் இப்பூவுலகில் பவனி வந்தார். கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும், கருப்பை உயிருக்கும் படியளக்கும் இறைவனின் லீலையைக் கண்ட அம்பிகை, இறைவனின் ஜீவ பரிபாலனத்தின் ஓர் அம்சத்தையாவது தான் ஏற்று, இறைவனின் சிரமத்தைக் குறைக்க எண்ணினள். ஆனால் இக்காரியம் எளிதல்லவே! அன்னம், செல்வம், தான்யம், பொன், மணிகள் என அனைத்து விதமான திரவிய, தான்ய அபிவிருத்தி சக்திகளைப் பெற்று அன்னபூரணியாக அவதாரம் பூண்டிட, அம்பிகை கடுந்தவம் கொண்டனள்!

பல கோடி யுகங்கள் தபஸ் புரிந்த அம்பிகை, அன்னபூரணியாக அவதாரம் பெறும் முன், உலக ஜீவ பரிபாலனத்திற்கு உரிய அன்னமளிக்கும் அவதார சக்திகளைப் பெற்றிட வேண்டும் அல்லவா! இதற்காக, ஈஸ்வரனே பிரம்ம கபால ஓட்டைத் தாங்கியதாக மற்றுமொரு இறை லீலையைப் புரிந்து, அம்பிகையிடம் இருந்து, இரந்து பிட்சையை ஏந்தினார்!

அன்னவளாம் ஆதி பராசக்தி ஆண்டவனுக்கு அமுது படைத்திட.... ஈஸ்வரனுக்கே உணவளித்த திருக்கரமானது மகத்தான சிரஞ்சீவித்வ அன்னவளம் கொண்டதாயிற்று! அன்னபூரணிக்கும் மகத்தான அட்சய சக்திகள் கூடின! இது நிகழ்ந்த திருத்தலமே காசியாம் வாரணாசி! ஆனால் இந்த அவதாரிகையை இயக்கிட, இதற்கு உரித்தான யோக, தவ அம்சங்களையும், ஏனைய அருள் வரவள பாக்யத்தையும், ஞானத்தையும் அம்பிகை பெற்ற திருத்தலமே முழையூர் சிவத்தலம் ஆகும். இதனால் தான் உமையவள் இங்கு ஸ்ரீஞானாம்பிகையாக அருள்பாலிக்கின்றாள்.

திருதியைத் திதி தேவதைகள் இறைவனை வழிபட்டு எதையும் "விருத்தி" செய்யும் சக்தியைப் பெற்ற தலமும் முழையூர் சிவத் தலமேயாம்!  எனவே திருதியைத் திதியை சூன்ய திதியாகக் கொண்டோர் திருதியை நாளில் இங்கு சூட்சும (எவரும் காண இயலா இளநீர்) ஜலமதுர சக்தி கொண்ட 3, 12, 21 என்ற வகை எண்ணிக்கையில் இளநீர்களால் அபிஷேகம் செய்து வாயு சப்த சாகர சக்திகள் கூடிய புடலங்காய் கலந்த உணவைத் தானமாக அளித்திட்டால் அறிந்தோ, அறியாமலோ அவரவருடைய திதி சூன்ய நாட்களில் செய்த காரிய தோஷங்களில் விளைவுகளில் இருந்து காக்கப் பெறுவர்! எனவே அவரவர் ராசிக்கு உரிய திதி சூன்ய நாட்களை இன்றே அறிந்து கொள்க!  சந்திராஷ்டம நாட்களைப் போல் இவற்றையும் தவிர்க்க வேண்டும்.

ஆதிபிரம்ம மூர்த்திக்கும் ஆதியில் ஐந்து சிரசுகள் மிளிர்ந்தன. சதுர் வேதங்களையும் பரிபாலிப்பவராக மட்டுமன்றி சிருஷ்டி கர்த்தாவாகவும் துலங்கியமையால் அயனின் (பிரம்மரின்) ஐந்தாம் சிரசு மிகவும் சக்தி வாந்ததாகத் திகழ்ந்தது. சிருஷ்டிக்கான மூல முதல்வரான ஈஸ்வரனும் அனைத்து ஜீவன்களையும் படைக்கும் தொழிலை பிரம்மருக்குத் தந்திட்டால் நுண்ணிய உயிரினம் முதல், திமிங்கிலம், யானை போன்ற பெரிய விலங்குகள் மட்டுமன்றி, அனைத்து மனிதர்கள், தாவரங்களையும் இவ்வாறாக, பிரபஞ்சத்திலுள்ள அனைத்து ஜீவன்களையும் படைக்கும் பெரும் பொறுப்பு பிரம்மருக்கு ஏற்பட்டது.

ஸ்ரீஉச்சிஷ்ட கணபதி முழையூர்

சதுர்முக சக்திகளாலும், ஐந்தாவது சிரத்தின் பெருந் துணையுடனும் இதைத் திறம்படச் செய்து வந்த பிரம்மருக்கு ஒரு சிறு கர்வ பங்கம் மனதில் புகுந்தது. "தான் படைக்கும் ஜீவ வடிவுகள் அனைத்துமே கன கச்சிதமாகப் பிழையின்றி இருக்கின்றனவே!  எனவே ஜீவ வடிவுப் படைப்பில், இறைவன் எண்ணிய அளவில் நாம் சிறப்பை அடைந்து விட்டோம்!" என்னும் அகங்கார எண்ணம் சற்றே தலைகாட்டித் தோன்றியவுடன், அதுவே பிரம்மருக்குப் பெருங் களங்கமாக ஆகி விட்டது. அணு அளவிலான அந்த எண்ணத்தை என்னதான் அவர் உடனே களைந்திட்டாலும், கர்வம் வந்தது, வந்ததுதானே!

ஆதிகால சிருஷ்டியில் பிரம்ம மூர்த்தியானவர், அனைத்து ஜீவ பிம்பங்களையும் வெற்றிலை, களிமண், சந்தனப் படுகையில் வடிவமைத்துத் திருக்கயிலை சிருஷ்டிச் சாலையில் ஈஸ்வரனிடம் அங்கீகாரத்திற்காகப் படைத்திடுவார். சர்வேஸ்வரனும் ஒவ்வொரு ஜீவ வடிவையும் உன்னிப்பாகக் கவனித்து, மயிற் பீலிகையால் ஸ்பரிசித்து, சுழித்ரயம் இட்டு அதற்கு ஜீவ சக்தியை அளிப்பார். அதாவது ஈஸ்வரனே ஒவ்வொரு ஜீவ வடிவையும் அங்கீகரித்துக் கையெழுத்து இடுவார். இந்த சுழித்ரய அங்கீகரிப்பு வடிவுகளே நம்முடைய கை மற்றும் கால் ரேகைகள், தலைச் சுழி மற்றும் நாபி வளையங்களாம்!

எத்துணை கோடி எறும்புகள், பசுக்கள், தாவரங்கள், புழு, பூச்சிகள், விலங்குகள் ஆயினும் அனைத்து ஜீவ வடிவுகளையும் பிரம்ம மூர்த்தியானவர், ஸ்ரீகிராத மூர்த்தியாகிய மகாப்ரளய கால சிவ மூர்த்தியின் முன் வைத்திட வேண்டும். எத்துணை கோடிப் பிறப்புகளாயினும் சரி, ஈஸ்வரன் க்ஷண நேரத்தில் அவற்றைத் தம் மயிற் பீலியாற் சுழித்து, ஜீவ ஒளி ஆக்கம் தந்திட, அங்கு அவ்வடிவினுள் ஆத்மம் செறிவு பெறும், உயிர் உண்டாகும். இதுவே பிறவித் தோற்றமாம்!

மறு பிறவிகளுக்கு வேறு விதமான ஜீவ ஆக்க சக்தி கிட்டும்!  இவற்றில் கோடானு கோடி இறை ரகசியங்கள் இருப்பதால் தக்க சற்குருவே பிறப்பு, இறப்பின் இரகசியங்களை உணர்த்த வல்லார்! வெறும் ஏட்டால் உணர்வதல்ல இவை யாவும்!

படைப்பில் சிருஷ்டியான கர்வம்!

தம் படைப்பு வடிவுகளை மிகவும் துரிதமாக ஈஸ்வரன் ஆமோதிப்பதைக் கண்ணுற்ற பிரம்ம மூர்த்தி, "நாம் உருவாக்கும் ஜீவ வடிவுகள் எல்லாம் பிரமாதமாக இருக்கின்றன என சர்வேஸ்வரனே நினைப்பதால் தான் எதையும் சோதிக்காது கண் இமைக்கும் நேரத்தில் ஆமோதிக்கின்றார்! நமக்கு ஒரு துணை இருந்தால் இன்னமும் நன்றாகச் செய்யலாமே என்ற அவருடைய கர்வமும் பெரிதாய் ஆல் போல் விரிந்தது! இதனை ஈசன் அறியாரா என்ன?

முழையூர்

மேலும் யுகங்கள் பெருகப் பெருக, பிரபஞ்சத்தில் ஜீவ எண்ணிக்கையும் பெருத்துக் கொண்டே சென்றது!  இதோடு பிரம்மரின் அகங்கார விருட்சமும் தழைத்து விட்டதே! பிரம்ம மூர்த்தி, தனக்குத் துணை புரிய, தாமே ஒரு சிருஷ்டியை உருவாக்கினால் என்ன என்று எண்ணலானார்!  இதுதாமே தேவ மாயை! உத்தம இறைநிலைகளிலும் விதவிதமான மாயைகள் கிளைக்கும்!  இவ்வகை எண்ணம் தோன்றிடவே பிரம்மரும் தன்னைப் போன்ற ஐந்து முகங்களை உடைய மற்றொரு தேவ உருவைப் படைத்து அதனையும் சிவபெருமானிடம் அனுப்பி விட்டார்.

அனைத்து வடிவங்களையும் கண் இமைக்கும் நேரத்தில் நன்கு பரிசீலித்து, சோதித்த பிறகே ஆமோதிக்கும் ஸ்ரீகிராதமூர்த்தி வெளிப் பார்வைக்கு அனைத்தையும் வேகமாக ஆமோதிப்பது போல் தோன்றினாலும், அனைத்தையும் அறிந்த ஈஸ்வரனிடம் எந்த தேவ ஜாலம் தான் பலிக்கும்?

வழக்கம் போல் மயிற் பீலிகையால் சிவ அட்சயம், சுழித்ரயம் எனப் பல வகை ஆமோதிப்புகளை அளித்திட்ட ஈஸ்வரன் பிரம்மா எவரையும் கேட்காமல் தானாக சிருஷ்டி செய்த பிரம்மரின் புதுப் படைப்பாம் ஐம்முக அயம்பிரம்மா எனும் வடிவைக் கண்டவுடன் சற்றே நிறுத்தி, அவ்வடிவின் தலை மேல் "சிரசு பின்னம், நப்பின்னம்" எனச் சிவ பரிபாஷையில் எழுதி விட்டார்!  இதனை எவரும், பிரம்ம மூர்த்தியும் கூட சரியாகக் கவனிக்கவில்லை.

தனக்கு மிஞ்சிய படைப்பால் தவிப்பு!

தன் அனைத்து வடிவுகளுமே வழக்கம் போல் கோடிக்குக் கோடி ஆமோதிக்கப்பட்டதாகப் புளகாங்கிதம் அடைந்த பிரம்ம மூர்த்தி தான் படைத்த அயம்பிரம்மனை இறைவனின் முன் மீண்டும் நிறுத்தி, ஈஸ்வரனின், இறைவனின் திருப்பரிசையும் பெற விரும்பினார். எவராலும் படைக்க இயலாத ஓர் அரிய சிருஷ்டியைத் தான் படைத்து விட்டதால் சிவபெருமான் மிகவும் மகிழ்ந்து, ஆனந்தத்தில் திளைத்திடுவார் எனவும் பிரம்ம மூர்த்தி எண்ணினார்.

ஸ்ரீபைரவர் சூரிய பகவான்
முழையூர்

ஆனால், ஆதி பிரம்ம படைத்த அயம் பிரம்மாவோ, I am Brahma என்பது போல, கட்டுக் கடங்காதவராய் அகங்காரம் மிக்கவராய்த் தானே பல சிருஷ்டி வடிவுகளை தமக்கு வடிவு தந்த ஆதிபிரம்மாவைக் கேட்காமலேயே படைக்கத் துவங்கினார்.

அது பிப்பிலிய யுகாந்திரம் எனப்படும் எறும்பைப் படைக்கும் தருணம் ஆதலால் பல கோடிக் கணக்கான எறும்புகளை ஆதிபிரம்மா படைத்திட, அவர் உருவாக்கிய அயம்பிரம்மாவோ சில வெள்ளை நிறப் படைப்புகளையும் எவரையும் கேளாது உருவாக்கி விட்டார். இவற்றுள் ஒன்றே தாழம்பூவாம்! ஸ்ரீவரலட்சுமி அவதாரத்தில் தாம் தாழம்பூவின் குற்றத் தன்மைகள் களையப் பெற்றுத் தெய்வீகமாகச் சீரமைக்கப்பட்டன!

இவ்வாறாக ஐம்முக அயம்பிரம்மா தனித்தன்மை கொண்டு எதையெதையோ படைக்கத் துவங்கினார். இதனால் மங்களமின்றி மேலும் பல வடிவுகள், குணங்கள், அம்சங்கள், குணப்பாடுகள் பூவுலகில் தோன்றலாயின!  இன்றும் இவை உலகில் உள்ளன! அகங்காரம், ஆணவம் மிகும் போது அனைவரிடமும் தோன்றும். அபசவ்விய நட்சத்திர குணப்பாடுகள், வெள்ளைக் கறையான், வெள்ளை நிற வைதவ்யம் (விதவை குணம்), கபம் (சளி), சீழ், வெள்ளைத் தோல் நோய்கள் போன்றவை இவ்வாறு அகங்கார விளைவுகளாகத் தோன்றின!

திருத்திய படைப்புப் பதிப்புகள்!

இதைக் கண்டு அதிர்ச்சியுற்றார் ஆதி பிரம்மா!  நிலைமை கட்டுக்கு அடங்காது பெருகிடவே அவர் என் செய்வதென்று அறியாது திகைத்தார். எனினும், மேலும் ஐம்முக அயம்பிரம்மா படைத்த பிம்பங்களை எல்லாம் ஆதி பிரம்மா திருத்தி, சரி செய்து மீண்டும் சிருஷ்டிக்காக மாற்றிப் படைத்து ஸ்ரீகிராத மூர்த்தியான சிவப் பரம்பொருளிடம் மீண்டும் அனுப்பி வைத்தார். இதனால் அவரது பணி இரட்டிப்பாயிற்று. இருப்பினும் தன் பணிச் சுமையானது அயம்பிரம்மாவின் உதவியால் பெரிதும் குறைவதாக ஆனந்தம் அடைந்த ஆதி பிரம்ம மூர்த்தி "அனைத்தும் காலப் போக்கில் சரியாகி விடும்" எனத் தேற்றிக் கொண்டு தன் புதுப் படைப்பான அயம்பிரம்மாவை ஈஸ்வரனிடம் காட்டும் தருணத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தார்!

கர்வத்தின் உச்சம், அக்னியில் பஸ்மம்!

ஒருநாள்.....அன்றேனும் தன் அயம் பிரம்மப் படைப்பை ஈஸ்வரனுக்கு எடுத்துக் காட்ட வேண்டும் என்பதற்காக மிகவும் கர்வத்துடன், அயம்பிரம்மா பின் தொடர, திருக்கயிலை வளாகத்தினுள் நுழைந்தார் ஆதிபிரம்ம மூர்த்தி! நுழை வாயிலில் இருந்த அதிகார நந்தியோ, "ஸ்வாமி! இறைவன் இப்போதுதாம் ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என ஐம்முக சதாசிவ மூர்த்தியாக அருள்பாலிக்கும் நேரமாதலால், தாங்கள் சற்றுப் பொறுத்துச் செல்ல வேண்டுகின்றோம். ஏனெனில் இந்த ஐம்முக ருத்ர சிவ உக்ர வடிவை அனைவராலும் தரிசிக்க இயலாது. முதலில் அம்பிகை தரிசித்த பின், ஏனையோர் தரிசித்தால் தான் அந்த உக்ரம் தணிந்து அனைவராலும் அந்த ஒளிப் பிரகாசத்தைத் தாங்க இயலும்!" என்றார்.

ஸ்ரீரிஷபாரூட அர்த்தநாரீஸ்வரர்
முழையூர்

இதைக் கண்டு சினமுற்ற பிரம்ம மூர்த்தி, "ஐம்முக அயம்பிரம்மாவைப் படைத்த எனக்கா, சிவனைப்போல ஐந்து முகத்தை உடைய எனக்கா இந்தக் கட்டுப்பாடு? சிருஷ்டிக்கான வடிவுகளை இராப் பகலாக எந்நேரமும் படைத்து ஈஸ்வரனிடம் எப்போது வேண்டுமானாலும் அளித்திட எனக்கு ஈசன் சந்நிதியில் விசேஷமான தனி அனுமதி உண்டு!" என்று ஆணவத்துடன் சொல்லிய வண்ணம் உட்சென்றார் ஆதி பிரம்மா!

பிரம்ம மூர்த்தியின் அகங்கார தோரணையைக் கண்ட அனைவருமே அவர்தம் ஐம்முகத்தைக் கண்டு சிவபெருமானோ என எண்ணி எழுந்து நின்றனர். அம்பிகையும் முதலில் அவ்வாறே எண்ணிட்டாள்! இவ்வாறு அனைவரும் தம் ஐம்முகக் கோலம் கண்டே எழுந்து நிற்கின்றனர் என கர்வத்துடன் எண்ணியவாறு ஆதிபிரம்மா, சர்வேஸ்வரனின் திருச்சந்நிதியை அடைந்தார்.

ஆங்கே....ஐம்முக உக்ர கோலத்துடன் சதாசிவராய் ஈசன் பரிமளித்திட்டார். ஆனால் பிரம்மரால் எம்பெருமானைத் தரிசிக்க இயலவில்லை! காரணம், அகங்காரம் கண்களுக்குத் திரையிட்டு விட்டதோ!

ஐந்தும் நான்காகி ஆணவன் அடங்கியதே!

அங்கு பொங்கி எழுந்த உக்ரத்தையும் அவரால் தாள இயலவில்லை. வந்த வேகத்தில் மீண்டும் திரும்ப இயலாமல், எங்கு நோக்கினும் அக்னிப் பிழம்புகள் தோன்றி அவரைத் துரத்தலாயின!  உண்மையில் பிரம்மரின் அகங்காரத்தால் எழுந்த தீச்சுடரே சுற்றிலுமாக எழுந்து அவரைத் தாக்கின. இதை அறியாத பிரம்ம மூர்த்தி, உஷ்ணத்தின் தகிப்பைத் தாங்காமல் "ஐயனே! ஐயனே!" எனக் கதறினார்.

"உன்னுடைய அகங்கார உஷ்ணமே இந்த அக்னிக்குக் காரணம்!" எனக் கூறிய சிவ மூர்த்தி, தன் நகத்தால், ஓர் அரிசி மணியைக் (நப்பின்னம்) கொண்டு பிரம்மரின் ஐந்தாம் சிரசைக் கிள்ளி எறிந்தார். இதோடு பிரம்மா படைத்த சுயப் படைப்பு காணாமற் போயிற்று!

கர்வ பங்கம் நீங்கிச் சாந்தமடைந்த பிரம்ம மூர்த்தி அனைத்து அக்னிப் பிழம்புகளும் சாந்தமடைந்து சிவபெருமான் ஜோதிப் பிரகாசராய்க் காட்சியளிப்பது கண்டு ஆனந்தமடைந்தார். "இறைவா, தங்கள் அனுமதியின்றி, ஐம்முக அயம் பிரம்மாவைப் படைத்துக் கர்வத்தால் என் ஐந்தாம் சிரசையும் என் படைப்பையும் இழந்தேன்! தேவையில்லாத வகையில் என்னிடம் குடி கொண்ட அகங்காரத்தைப் பஸ்மம் செய்து அடியேனைக் காப்பாற்றினீர்கள்! தாங்களே தக்க நல்வழி காட்ட வேண்டும்!" என்று ஈஸ்வரனின் தாள் பணிந்து வணங்கி, ஆதிபிரம்மா பிரார்த்தித்தார். ஈஸ்வரனும் பல பிராயச்சித்த நல்வழிகளை அருளினார்.

பிரம்ம சக்திகள் விரிந்தன!

பிரம்மாவின் ஐந்தாம் முகத்தைக் கொய்ததால் ஏற்பட்ட தோஷத்தால் பிரம்ம கபாலம் சிவபெருமானின் வலக் கரத்தில் ஒட்டிக் கொண்டது என்று புராணத்தில் பகரப்படினும் இதுவும் இறையருள் கூடிய அருள் லீலையே!  ஐந்தாம் சிரசு மிகவும் சக்தி வாய்ந்த பிரம்ம ஞானத்தைப் பூண்டிருந்தமையால் இப்பிரம்ம கபால சக்தி ஞானப் பூர்வமாக நிரவ வேண்டும். பிரம்ம சக்தியானது பிரம்ம கபால விருட்சமாக, பிரம்ம கபால சூத்திரமாக, பிரம்ம கபால மணிகளாக, பிரம்ம தீர்த்தமாக, பிரம்ம ஹோம சக்தியாகப் பல இடங்களிலும் நிரவ வேண்டும் என்பதற்காகவே இறைவன் இந்த லீலையைப் புனைந்தான்.

ஸ்ரீநடராஜர் முழையூர்

கையில் பிரம்ம கபாலத்துடன் இறைவன் உலகில் பவனி வந்த போது ஆங்காங்கே பிரம்ம சக்திகள் தோன்றி சிருஷ்டிகளைச் சீரமைத்தன!  ஆங்காங்கே பிரம்ம ருத்ரர்கள், பிரம்ம கபால விருட்சங்கள், பிரம்ம சூத்திரங்கள், பிரம்ம கபால மணிகள், பிரம்ம தீர்த்தங்கள், பிரம்ம ஹோம சக்திகள் தோன்றின!  ஐம்முக அயம்பிரம்மாவால் ஏற்பட்ட பல சிருஷ்டிக் குற்றங்கள் யாவும் இதனால் தீர்ந்து, இறுதியாகக் காசியை ஈஸ்வரன் அடைந்த போது, அங்கு அன்னபூரணியாக அருளாட்சி புரியும் அம்பிகையின் திருக்கரங்களால் அன்னம் பெற்றவுடன் அந்த பிரம்ம கபாலம் கையை விட்டு அகன்றது!  இவ்வகையில் அம்பிகைக்கு அன்னபூரணி அவதாரமும், ஈஸ்வரனுக்கு பிட்சாடனர் அவதார லீலையும் பரிபூரணம் பெற்றன.

அன்னபூரணி அவதாரத்திற்கான ஞானத்தை அம்பிகை பெற்ற திருத்தலமே முழையூர் பரசுநாதர் சிவாலயமாம். எனவே தான் இங்கு ஞானம்பிகையாக அன்னை பரிமளிக்கின்றாள்!

பரசுநாத பீஜாட்சரங்கள்!

பரசு எனில் பிரபஞ்சத்தின் களங்கமற்ற, பரிபூரணமான நிரந்தரப் பொருள், எப்போதும் ஒளிப் பிரகாசம் கொண்டது எனும் அர்த்தங்கள் உண்டு. பரசுநாத் என்பது ப, ர, ஸ, ந, த் ஆகிய ஆதிமூல ஐந்து பஞ்சாட்சர பீஜாட்சரங்களின் பீடமாக இருப்பதால், ஐந்து என்ற எண்ணிற்கும், பரசுநாதர் ஆலயத்திற்கும் நெருங்கிய தெய்வீகத் தொடர்பு உண்டு. இந்த "பரசுநாத்" என்ற அட்சரத்தில் பொலியும் பஞ்சாட்சர பீஜாட்சரங்களே பரசுநாத சிவலிங்கமாக இங்கு நமக்கு அருள்பாலிக்கின்றது. பீஹாரில் கிரிதி (Giridhi) என்னும் நகர் அருகே பரசுநாத பீஜாட்சர சக்திகள் நிறைந்த பாரஸ்நாத் என்ற ஜைனத் திருத்தலம் தியானத்திற்கு மிகவும் சிறப்புடையதாம்.

முழவு எனும் ஒரு வகை இன்னிசைக் கருவி ஒன்று உண்டு. வழக்கில் முழை வாத்யம் என்றும் சொல்வார்கள். இதனை எல்லோராலும் வாசிக்க முடியாது. பிராணாயாம சுவாச சக்தியில் சுழுமுனைப் பாடகம் கொண்டோரே நன்முறையில் பீஜாட்சர நாதம் எழும்படி முழவு வாத்தியத்தை வாசிக்க இயலும். திருக்கயிலாயத்தில் வாசிக்கப்படும் முழை வாத்ய இன்னிசையில் ஏற்படும் முழவு சப்தமானது முதன்முதலில் பூமியில் பூலோகத்தை அடைந்த திருத்தலமே முழையூர் ஆகும்!

முழையில் இழையும் பீஜாட்சர வளமை!

எனவே திருக்கயிலாய முழவு ஓசையைக் கேட்பதற்காகவே, முப்பத்து முக்கோடித் தேவர்களும் அட்சயத் திருதியை அன்று இத்திருத்தலத்தில் கூடித் திருக்கயிலாயத்தில் ஒலிக்கும் முழவு வாத்ய இசை கேட்டுப் பரமானந்தம் அடைவார்கள். ஏனெனில் முழவு இசையில் மகத்தான வேத, யோக, ஞான சக்திகள் நிறைந்துள்ளன. வேத சக்திகள் பல வகையில் வெளிப்பட்டாலும், இன்னிசையாக வேத சக்திகள் வெளிவரும் போது, அவை ஜீவன்களுக்குச் செறிவு தருகின்ற வகையில் மிகவும் எளிமையான தன்மையில் அமைவதால் பூலோக மக்கள் எளிதில் முழவு வாத்ய ஒலியின் வேதமய சக்திகளை எளிதில் கிரகித்திடுவர்.

மாதிரி பிரம்ம முடிச்சு
கோலம் முழையூர்

பரசுநாதம், பஞ்சநாதம், பஞ்சாட்சர நாதமே!

முழவு வாத்யத்தில் இருந்து எழுகின்ற நாதத்திற்குப் பரசுநாதம் என்று பெயர். இந்த நாதத்தைத் திருக்கயிலாயத்தில் ஈஸ்வரன் முதலில் கேட்டுத் துய்த்த பின்னர், இந்த அரிய முழவு கீதமானது இறைவியின் திருச்செவிகளில் பாய்ந்து, மூன்றாவதாக முழையூரில் பக்தியுடன் வழிபடுவோர்க்கும் அட்சயத் திருதியை அன்று பக்திப் பூர்வமாகக் கேட்கும்.

இதன் பின்னரே பிரபஞ்சத்தின் அனைத்து லோகங்களிலும், முழவு வாத்ய சப்தங்களைக் கேட்க இயலும். இவ்வகையில் மகத்தான முறையில் பஞ்சாட்சரப் பரசுராம பீஜாட்சரங்களை, பரசுநாத மூல ஸ்தாயியாகக் கொண்டதே முழையூர் சிவத் திருத்தலம் ஆகும்.

மேலும் பஞ்சந(நா)தம் என்னும் ஒரு வகை நாதமும் உண்டு. இரண்டு காதுகள், இரண்டு நாசித் துவாரங்கள், வாய் ஆகிய ஐந்து துவாரங்களையும், நன்றாக மூடிக் கொண்டு தொண்டையில் எழுப்பும் நாதத்திற்குப் பஞ்சந(நா)தம் என்று பெயர். பஞ்ச நாத நாடிகளை யோகப் பூர்வமாக அடக்கி, இயக்கி எழும் நாதம் ஆதலால் இப்பரசுநாதப் பஞ்சநாதத்திற்கு இறை சக்திகள் நிறைய உண்டு.

முழையொலி இழையட்டும்!

உறுமி மேளம், முழை வாத்யம், மோர்சிங், ஏழு தந்திகளை உடைய பிடில் போன்ற வாத்யங்களில் மட்டுமே இவ்வகை வேத இசை ஒலிகளைத் துல்லியமாகக் கேட்க இயலும். திருக்கயிலாயத்தில் முழையை வாசிக்கும் சிவ கணங்கள், சிவ பூதங்கள் நிறைய உண்டு. இவர்கள் அட்சயத் திருதியை மற்றும் மஹா சிவராத்திரி நாட்களில் முழவு வாத்தியம் வாசிப்பதற்காகவே ஆண்டு முழுவதும் ஒரு விநாடி கூட இடைவெளி விடாது பயிற்சி பெறுவர். கிட்டத்தட்ட பத்தாயிரம் கஜ தூரம்  உயரே குதித்து முழவு வாத்தியங்களைப் பயில்கின்ற சிவ கணங்கள் அட்சயத் திருதியை நாளில் முழவு வாசித்து, இன்னிசை வளத்தை, ஒலியை, ஞானத்தை முழையூரில் அம்பிகையிடமும், பரசுநாதரிடமும் சமர்ப்பித்து அவற்றின் பலாபலன்களை உலக ஜீவன்களுக்கு அளிக்கின்றார்கள்.

எனவே அட்சயத் திருதியை அன்று முழவு வாத்யக்காரர்களை இத்தலத்திற்குத் தருவித்து முழையொலியைப் பலரும் கேட்குமாறு செய்தலானது சந்ததி, சந்ததியாய், வாழையடி, வாழையாய்ப் பெருகும் அளப்பரிய புண்ய சக்திகளைப் பெற்றுத் தருவதாகும். மேலும் இத்திருநாளில், இம்முழவு ஓசையைச் சூட்சுமமாகக் கேட்டு, அறிந்து, உய்த்து உணர்வதால் அபூர்வமான புத்திக் கூர்மையும், நல்ல நினைவாற்றலும், நல்ஞானமும் உண்டாகும். எனவே பிள்ளைகளுடன் இங்கு அட்சயத் திருதியையைக் கொண்டாடி மகிழ்வீர்களாக!

முழையூர்

முழையூரில் முகிழ்த்த இறைவன் திருவடிகள்!

பிரம்ம கபாலத்துடன் சிவபெருமான் பூலோகத்தில் பவனி வந்த போது, தம் திருவடி கொண்ட இடங்களுள் முழையூரும் ஒன்றாம்!  இங்கு தாம் இறைவனே பிரம்ம கபாலக் கரங்களுடன் முழவு வாத்யம் இசைத்து பரசுநாத பஞ்சாட்சர ஒலியை எழுப்பினார். அதுகாறும் திருக்கயிலாயத்தில் மட்டும் ஒலிக்கப்பட்ட பரசுநாதப் பண் பஞ்சாட்சர முழை வாத்ய ஒலியை முதன்முதலாக பூலோகத்தில் இறைவனே ஏற்று வந்து இசைத்த தலமே முழையூராகும். அதனால் தான் இங்கு அமைந்துள்ள தேருக்குப் பஞ்ச நதத் தேர், பரசுநாதத் தேர், பஞ்ச முழைத் தேர் என்றெல்லாம் பெயருண்டு. தேர்களுக்குப் பெயர் பெற்ற தலமாக ஒரு யுகத்தில் இது விளங்கியது. ஸ்ரீகிருஷ்ணர், சகாதேவன் பூஜித்த தலம்! ஐந்து வகைத் தேர்கள் முந்தைய யுகங்களில் இத்தலத்தில் நித்ய வலமாக வந்து கொண்டிருந்தன.

தரித்திரம் நீக்கும் தலமே முழையூர்!

பலவிதமான தரித்திர நிலைகளைத் தீர்க்க வல்லதே அட்சயத் திருதியை பூஜையாம். வறுமை, உடைகள், உணவிற்குக் கஷ்ட நிலை, தக்க வீடின்றி வாடுதல், தினசரிப் பொழுதிற்கே பணமின்றிக் கஷ்டப்படுதல் போன்ற தரித்திர நிலைகளால் வாடுவோர் வரும் அட்சயத் திருதியை அன்று முழையூர் ஸ்ரீஞானாம்பிகை சமேத பரசுநாதர் ஆலயத்தில் சுவாமிக்கு நவதான்ய (பொடிக்) காப்பிட்டு அடிப் பிரதட்சிணம், அங்கப் பிரதட்சிணம் செய்து வழிபட்டு வர வேண்டும். நவதான்ய ரவையுடன் சர்க்கரை கலந்து ஆலய மதில் சுவரோரம் எறும்புகளுக்கு இட்டு வர வேண்டும்.

சரியான வியாபாரமின்றி வாடுவோரும், வருமானத்தைப் பெருக்க வேண்டுவோரும் இங்கு திங்கள், திருதியைத் திதி, அட்சயத் திருதியை நாட்களில் தான்யங்கள், எண்ணெய், உப்பு, புளி, காய்கறிகள் ஆகிய ஒரு குடும்பத்திற்கு ஐந்து நாட்களுக்குத் தேவையான ஐந்து வகை உணவு திரவியங்களை ஒரு மஞ்சள் பையில் இட்டு ஏழைகளுக்குத் தானமாக அளித்தலால் அட்சயத் திருதியை சக்திகள், மகத்தான தேவ புண்ய சக்திகளாகக் கூடி வளம் பெருக்கும்.

பொதுவாக, பலவிதமான நோய்களால் உணவைச் சரியாக ஏற்க இயலாது வாடுவோர், சர்க்கரை வியாதி, ரத்த அழுத்த நோய்கள் போன்ற நோய்களால் அன்னம், உணவைச் சரியாக ஏற்க இயலாது அவதியுறுவோர் நல்ல ஆரோக்யம் பெறுவர். உணவு தோஷங்கள் தணியும்.

அட்சய திருதியை அன்று முழவு வாத்யம், பிடில், மோர்சிங் போன்றவற்றின் வாத்ய வல்லுநர்களை இங்கு வரவழைத்து இலவசமாக இறைக் கச்சேரி அமைத்துத் தருதலால் உணவு சரியாக உள்செல்லாது துன்பப்படுவோரின் வயிறு, தொண்டை சம்பந்தமான நோய்களுக்குத் தக்க நிவர்த்திகள் கிட்டும்.

கையெழுத்துப் பிழை தீர்க்கும் முழையூர்!

தன் கீழ் வேலை செய்வோரைப் பரிபூரணமாக நம்பிக் கையெழுத்திட்டுப் பலவிதமான துன்பங்களுக்கு ஆளானோர், பிறரை நம்பி இருப்போர் இந்நிலைகளால் ஏற்பட்ட பிரச்னைகளில் இருந்து விடுதலை பெறவும், எதிர்காலத்தில் பிறரை நம்புவதால் மீண்டும் துன்பங்கள் வராது தற்காத்துக் கொள்ளவும் அட்சயத் திருதியை தினத்தன்று, அட்சர சக்திகள் நிறைந்த ஜாதி மல்லிகைப் பூக்களை, தம் கரங்களால், அல்லது குடும்பத்தாருடன் சேர்ந்தும் குறைந்தது 30 முழங்களைத் தொகுத்து இறைவனுக்குச் சார்த்தி, வழிபட்டு ஜாதி, இன, பேதமின்றி, குறைந்தது 30 சுமங்கலிகளுக்குப் பூக்களைத் தானமாக அளித்திட வேண்டும். இதனால் அறிந்தோ, அறியாமலோ தவறாகக் கையொப்பம் இட்டதால் ஏற்பட்ட வேதனை தரும் சம்பவங்களில் இருந்து மீள்வதற்கான தக்க நிவர்த்திகளைப் பெறுவார்கள்.

அட்சயத் திருதியை என்பது, பலவித அட்சய சக்திகளைக் குறிக்கின்றது. அட்சயப் பாத்திரம் என்றால், அள்ள அள்ளக் குறையாதது எனும் பொருள் இருந்தாலும், மற்றொரு சூட்சும அர்த்தமாக, அட்சயம் என்றால் பிரம்ம முடிச்சு எனும் பொருளும் உண்டு. இந்த அட்சயம் என்பது அமிர்த பிரம்ம க்ரந்தி எனப்படுவதாக மூன்று வகை இழைகளால் ஆனது. இந்த பிரம்ம முடிச்சு மலர்கின்ற, அவிழ்க்கப்படுகின்ற ஞான மார்க்கம் பெறுகின்ற திருநாளே திருதியை எனப்படும் மூன்றாம் திதியாகும். எனவே தெய்வீகமாக முன்னேற விரும்புவோர், பிரம்ம முடிச்சு தாந்த்ரீக ரகசியங்களை ஆத்ம விசாரமாக, ஞானப் பூர்வமாக அடைய விரும்புவோர், அட்சயத் திருதியை அன்றும் பிற திருதியைத் திதிகளிலும் இங்கு பிரம்ம முடிச்சுக் கோலம் எனும் ஒரு வகை நீர்க் கோலங்களை ஆலயம் முழுதும் இட வேண்டும்.

தடைகளை நீக்கும் பிரம்ம முடிச்சுப் பெருங் கோலம்

அதாவது பச்சரிசி மாவை நன்கு அரைத்து நீரில் கரைத்து, ஆள் காட்டிவிரல் (குருவிரல்) நடுவிரல் (சனி விரல்), மோதிர விரல் (சூரிய விரல்) மூன்றை மட்டும் பயன்படுத்தி நீர்க் கோலமிடுதல் ஆகும்!  மோதிர விரல், நடு விரல் இரண்டையும் V போல் விரித்து, நடுவே ஆள் காட்டி விரலால் பிரம்ம வளையங்களாக பார்டர் போல் இடவேண்டும். இவ்வகைக் கோலமே பிரம்ம முடிச்சுக் (பிரம்மக் க்ரந்திக்) கோலம் ஆகும். ஒரு கோலத்திற்கான நான்கு பார்டர்களும் இந்த பிரம்ம முடிச்சு பார்டராக அமைக்கப்பட்டு, நடுவில் பிந்துப் புள்ளிகளால் கோலங்களிடுதல் சிறப்பானதாம். இதனால் காரியத் தடங்கல்கள் எளிதில் நீங்கும். நீண்ட காலச் சிக்கலில் உள்ள சம்பந்தங்கள் நன்னிலை பெற்று ராசியாகும்.

ஐந்தாம் எண்ணுடையோர்க்குக் கண்ணுக்குக் கண்ணான தலம்!

ஒரு குடும்பத்திற்குத் தேவையான ஐந்து நாட்களுக்கு உரிய உணவுப் பொருட்களைத் தானமாக அளித்தலால், 5 என்ற எண் இத்தலத்துடன் நெருங்கிய தொடர்புடையது ஆதலால், 5ம் தேதி பிறந்தோர், பிறந்த தேதி, மாதம், ஆண்டுக் கூட்டு எண் 5 ஆக இருப்போர் (உதாரணம் 15.7.1963 - 32 -5), இங்கு 5ம் தேதிகளிலும், மற்றும் அட்சயத் திருதியை தினத்திலும் இங்கு வந்து வழிபடுதலால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் பெறுவர்.

மிகுந்த ஆணவம் கொண்டு பிறருடைய நல்வாழ்விற்குத் துன்பம் இழைத்தோர் ஓரளவேனும் பரிகாரம் பெற்று தக்கப் பிராயச்சித்த நல்வழிகளைப் பெறுவதற்காக, அட்சயத் திருதியைத் தினத்தில் இங்கு மகத்தான அளவில் குறைந்தது 10,000 பேருக்கு அன்னதானம் செய்திட வேண்டும். ஆனால், இத்தகைய தான, தர்மங்களுக்குப் பின் தன் தவறுகளுக்கு மனதார வருந்தித் திருந்தி வாழ்வதுடன் மீண்டும் இழைத்த தவறுகளைத் செய்யாதிருக்க முழையூர் சிவ பூஜை பெரிதும் உதவும்.

நாகத்தி திருத்தலம்

நாகத்தி ஸ்ரீபக்தவத்சலேஸ்வரர் மகாத்மியம்

சித்திரை சதயத்தில் நாகத்தி சிவத் தலத்தில் பெருக்கெடுக்கும் லலாடங்க யோக சக்திகள்!

பக்தியை அளிக்கும் ஸ்ரீபக்தீஸ்வரரே நாகத்தி ஸ்ரீபக்தவத்சலேஸ்வர லிங்க மூர்த்தி!

சித்திரை சதய நட்சத்திரத்தில் நாகத்தி சிவலிங்கத்திற்குச் சந்தனக் காப்பிட்டு தீவினைக் கர்ம வினைகள் பஸ்மம் செய்திடுவீர்!

நாகத்தி என்னும் இச்சிவத் தலமானது தன்னுள் பல அரிய தல புராணங்களைக் கொண்டுள்ளது. எத்தனையோ யுகங்களில் பிரம்மாண்டமான சிவத் தலங்களாகப் பிரகாசித்த பல தலங்கள் யாவும் காலப் போக்கில், மனித சமுதாயத்தால் மறக்கப்பட்டு, மீண்டும் தக்க சற்குருவால், மகரிஷியால், யோகியால், சித்தர்களால் அதனதனுடைய தல புராணங்கள் தக்க காலத்தில் மீண்டும் எடுத்துரைக்கப்படும் போது அத்தலத்தின் சுயம் பிரகாசச் சிறப்பு மீண்டும் வெளியுலகிற்கு அறிவுறுத்தப் பெறுகின்றது.

இவ்வகையில் நம் குரு மங்களகந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம்முடைய சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் இருந்து பெற்ற நாகத்தி திருத்தலம் பற்றிய அரிய தெய்வீக விளக்கங்களையும், நாகத்தி தலப் புராண விளக்கங்களையும் இங்கு அளிக்கின்றோம்.

ஸ்ரீபக்தவத்சலேஸ்வரர் நாகத்தி

ஸ்ரீசௌபாக்ய வித்யா நாகத்தி

சதயத்தில் உதயமான நாகத்தில் லிங்கம்!

தஞ்சாவூர், திருவையாறு அருகில் உள்ள இந்த நாகத்தி என்னும் சிவத்தலமே சித்ரபானு ஆண்டின் சித்திரை சதய நட்சத்திர தினச் சந்தனக் காப்புத் தலமாகும். பல கோடி யுகங்களுக்கு முன் சுயம்பு லிங்க மூர்த்தியாய் ஸ்ரீபக்தவத்சலேஸ்வரர் தோன்றிய நன்னாளே சித்திரையில் சதய நட்சத்திரம் சேரும் திருநாள்! ஒரு யுகத்தில் அதியற்புதச் சந்தனக் காப்புத் தலமாக மிகவும் பிரசித்திப் பெற்று விளங்கிய நாகத்தி கிராமத்தின் சிவ மூர்த்தியான ஸ்ரீபக்தவத்சலேஸ்வரர் சிவாலயமே இன்று பலரும் அறியா வண்ணம், ஒரு குக்கிராமத்தில் அடங்கித் தன்னுள் எண்ணற்ற புராண சம்பவங்களைக் கொண்டுள்ளது. இவ்வாறு மறைந்த, மனித சமுதாயத்தால் மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட ஆலயங்களின் தல புராணங்களை மீண்டும் எடுத்துரைப்பவர்களே சற்குருமார்கள் ஆவர்.

பீஜாட்சர சக்தி பொங்கும் நாகத்திச் சொல்!

நாகத்தி மிகவும் அற்புதமான, அரிதான, சிறப்பான பீஜாட்சர சக்திகள் நிறைந்த இறைத் தலம் ஆகும். ஈஸ்வரனின் நாவில் இருந்து எழுவதாகிய "அக ஆத்மத் தீயே (அக்னியே) நா(அ)கத்தியாம்! பீஜாட்சரம் என்றால் மங்காத, நிரந்தர சுய ஒளிப் பிரகாசம் நிறைந்த புனிதமான, உத்தம இறைவேதச் சொல் என்று பொருள். ஒரு ஊரின் பெயரில் இவ்வாறு பீஜாட்சர சக்திகள் நிறைந்து, நிரம்பிப் பொங்கி வழிவதாக அமைவது மிக மிக அபூர்வமே!

நாகத்தி ஊர் மக்கள் மிகவும் பாக்யம் பெற்றவர்கள், ஏனெனில் நாகத்தி எனும் மிகவும் சக்தி வாய்ந்த பீஜாட்சர வாக்கியத்தைத் தினமும் ஓதியும், எழுதியும் வருவதுடன், பீஜாட்சர சக்திகள் கொழிக்கும் இறைத் தலத்திலும் நிறைவுடன் வாழ்கின்றார்களே! நா அகம் "நா+கம்" என்றால் என்ன? நா, கம் என்ற இரண்டுமே ருத்ராக்னி வகை பீஜாட்சர சக்திகளாம்!  "நா" என்ற அட்சரத்தை, எழுத்தை ஓதிப் பாருங்கள்! நாக்கின் வடிவும், ஒலியும் (அகத்தின்) உள்ளே ஒளிப் பரிமாணமாய்ச் செல்லும் பாவனையில் இருக்கும். நா அகம் என்றால் அகத்தினுள் அகமாக இருக்கின்ற அருமறை இறைப்பொருள் என்று அர்த்தமாகும்! அதாவது இறைமையானது நா (வன்மைச்) சக்தியாகப் பரிமளிக்கின்ற தலம் என்பதாம். ஆம், ஈஸ்வரனின் "நா" சக்தி, தங்கி ஆட்சி புரிகின்ற தலமே நாகத்தி!

திருநீலக்குடி

கர சக்தி, பாத சக்தி, சிரசு சக்தி, கண்ட சக்தி, ஆத்ம சக்தி என்று இறையவையம் ஒவ்வொன்றும் பரிணாம, பரிபூரணப் பிரகாச சக்திப் பெற்றுள்ள தலங்களும் பல உண்டு. புதுக்கோட்டை அருகிலுள்ள குடுமியான் மலையே இறைவனுடைய சிரசு சக்தி மிகுந்துள்ள திருத்தலமாகும். கும்பகோணம் அருகே உள்ள கரவீரம் என்னும் பாடல் பெற்ற திருத்தலமே இறைவனுடைய கர சக்திகள் நிறைந்த தலமாம். உத்தரகோசமங்கை, சிதம்பரம், பாதரக்குடி, சிவபுரி போன்றவை இறைவனுடைய பாத சக்திகள் நிறைந்த தலங்களாம். திருநீலக்குடியே இறைவனுடைய கண்ட சக்திகள் (தொண்டை) மிகுந்துள்ள தலமாகும். இவ்வகையிலே இறைவனுடைய "நா" சக்தி நிறைந்த தலமே நாகத்தி ஆகின்றது. பொதுவாக பக்தவத்சலர் என்ற நாமத்தைப் பெருமாளே பூண்டாலும், ஈஸ்வரனே ஸ்ரீபக்தவத்சலேஸ்வரர் என்ற நாமத்தைத் தாங்கி அருள்புரிகின்ற தலங்கள் ஒரு சிலவே ஆகும். திருக்கழுக்குன்றத்திலும், நாகத்தியிலும் இறைவன், பக்தவத்சலேஸ்வரர் என்ற நாமத்தையே சூடியிருக்கின்றார்.

ஈஸ்வரனின் மூன்றாம் நேத்திரத் தீயாகிய இறை அக்னியானது பரிபூரண குணங்களுடன், ஜோதிப் பிரகாசமாக ஒளிர்கின்ற சிவலிங்க மூர்த்திகளுக்குப் பக்தவத்சலேஸ்வரர் என்று பெயர். பக்தியே இல்லாதவர்களுக்கும், நாத்திகர்களுக்கும், ஆத்திகர்களாக இருந்தாலும் வாழ்க்கை இன்னல்களுக்கு இடையே இறைவனை உண்மையாக வழிபட மறக்கின்றவர்களுக்கும் கூட இவ்வாறாக அனைவருக்குமாக, வேண்டுமளவில் பக்தியை அருள்கின்றவர் என்றும் ஒரு பொருளாம்! இந்த ஆலயத்தில், சுவாமியை வாழ்நாளில் ஒருமுறை ஆழ்ந்த நம்பிக்கையுடன் தரிசித்தாலே போதும், உண்மையான பக்தி என்ன என்பதை இறைவனே குறித்த தருணத்தில் ஊட்டி உணர்த்திடுவான். அப்படியானால் அடிக்கடி இத்தலத்தை தரிசித்து வந்தால் நல்பக்தியை மிக மிக எளிதில் பெற்றிடலாம் அல்லவா! இதனால் தாம் பண்டைய யுகங்களில் சுவாமிக்கு ஸ்ரீபக்தீஸ்வரர் எனத் திருப்பெயர் அமைந்தது!

வெம்மையும் குளுமையும் வேத இயலே!

உஷ்ணம் என்றால் வெப்பமானது என்ற பொருளை மட்டுமே நாம் அறிவோம். வித்தியாசமான தேவ நாக்குகளை உடைய அக்னி பகவான் விதவிதமான அக்னி வகைகளை நமக்குத் தருகின்றார். சுண்ணாம்புக் காளவாயில் இடப்பட்டபோது, அப்பராகிய திருநாவுக்கரசு சுவாமிகளை அக்னியில் உள்ள வேதக் குளுமைதானே காப்பாற்றியது! சீதளாம்பிகையாக (குளிர்ந்த நாயகி) அருள்பாலிக்கும் அம்பிகையின் அருளே, கொதிக்கும் சுண்ணாம்புக் காளவாயில் இருந்து அப்பர் சுவாமிகளை காத்தது!

எனவே ஒவ்வொரு பொருளுக்கும், ஜீவனுக்கும் இயற்கையாகவே அளிக்கப்பட்டுள்ள உஷ்ணத் தன்மையும், குளுமைத் தன்மையும் நிச்சயமாக உண்டு. இதனை வேதியலாக (chemistry) நாம் கண்டாலும், உண்மையில் வேத இயல் என்பதே வேதியல் ஆயிற்று! எனவே அனைத்துப் பொருட்களின் அணுவையும் விளக்குவதும், மெய்ங்ஞான விஞ்ஞானத்தின் அம்சமாம்! இதுவே சாசுவதமானதாம்! ஒவ்வொரு பொருளுக்குள்ளும் ஆத்மார்த்தமாக ஒளிர்கின்ற சீதள, உஷ்ணத் தன்மைகளும், இதர தூல குணப்பாடுகளும் அப்பொருளுக்கு வடிவு, ஆக்கப்பாடு மற்றும் சக்தியைத் தருகின்றன. இவற்றை நன்கு உணர்ந்துவிட்டால், பஞ்சபூதங்களின் தொகுப்பாக அனைத்தையும் நாம் இறைப் பகுத்தறிவுடன் உணர்ந்திடலாம்.

சித்திரை மாத சதய நட்சத்திரத்திற்கும், நாகத்தி திருத்தலத்திற்கும் நெருங்கிய ஆன்மீகத் தொடர்பு உண்டு. பல கோடி யுகங்களில் பல இறை லீலைகளில், பல இறை புராணங்களில் கிளர்ந்து எழுந்த திருவிளையாடல்களின் தொகுப்பாய் அமைந்ததே நாகத்தி சுயம்பு லிங்கத் திருமேனியான ஸ்ரீபக்தவத்சலேஸ்வரரின் திருத்தலப் புராணச் சம்பவங்களாகும்.

நாகத்தி

நெற்றிக் கண்ணின் கீழ் ஒற்றிடும் சந்தனம்!

ஒவ்வொரு மகாப் பிரளயத்திற்குப் பின்னரும் ஜீவன்களைச் சிருஷ்டி செய்வதற்காக ஸ்ரீகிராதமூர்த்தி என்ற அவதாரத்தில் சிவபெருமான் ஆழ்ந்த தியான நிலையில் அமர்ந்திடுவார். இம்மூர்த்தியை கும்பகோணம் ஸ்ரீகும்பேஸ்வரர் ஆலயத்தில் தரிசித்திடலாம். இந்நிலையில் இறைவனுடைய இரு திருக்கண்களும் தியான நிலையில் கூடியிருப்பதால், அவருடைய நெற்றிக் கண் ஒளிப் பிரகாசத்தால் அப்போது பிரபஞ்சம் இயக்கப் பெறும். ஆனால் ஈஸ்வரனின் நெற்றிக் கண் பிரகாசத்தைத் தரிசிக்கின்ற, நெற்றிக் கண்ணிலிருந்து எழுகின்ற உஷ்ணத்தைத் தாங்கிட வல்லோரும் மிக மிக அரிதே1 தாங்கும் சக்தி கொண்ட இறைத் திரவியங்களும் ஒரு சிலவே!

எனவே தியான நிலையில் இறைவன் அமர்ந்திருக்கும் போது அவருடைய தியானத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படா வண்ணம் அம்பிகை தன்னுடைய திருக்கரங்களால் சந்தனம் அரைத்திட, அதை ஸ்ரீஅகஸ்தியப் பெருமான் பெற்று பகவானின் நெற்றிக் கண் கீழ் அடிக்கோடு இட்டு வருவார். இவ்வாறு விநாயகப் பெருமானின் முன்னிலையில் உமையவள், சந்தனத்தை அரைத்துத் தர, அகஸ்தியப் பெருமானே சுவாமியின் நெற்றிக் கண்ணின் கீழ் இடுகின்ற சந்தனக் கீற்று தான் சர்வேஸ்வரனின் மூன்றாம் நேத்திரத்தின் உஷ்ணத்தையும், பிரகாசத்தையும் அண்ட சராசரங்களுக்கும் ஏற்ற வகையில் வடிவமைத்து மகாப் பிரளயத்திற்குப் பின் மீண்டும் சிருஷ்டி ஏற்படும் வகையில் உலகத்தைப் பரிபாலிக்கின்றது.

இந்தச் சந்தனக் கீற்று பொதிந்த ஈஸ்வரத் திருமேனியின் பல அம்சங்களே சுயம்புத் திருமேனிகளாக உருவாகி, ஸ்ரீபக்தவத்சல மூர்த்திகளாக இன்றும் சில தலங்களில் சுயம்பு மூர்த்திகளாகப் பிரகாசிக்கின்றனர். இதில் மிகவும் விசேஷமானதாக, ஈஸ்வரனின் திருநாக்கில் எழும் ருத்ர பஞ்சாட்சர வேதாக்னி பீஜாட்சரமே நாகத்தி மூர்த்தி ஆயிற்று. அதாவது ஆதிமூல மூர்த்தியாக, சிருஷ்டியைத் தொடங்குவதற்கு முன்னரேயே உருவாகிய சுயம்பு லிங்க மூர்த்திகளில் ஒன்றே நாகத்தி ஸ்ரீபக்தவத்சலேஸ்வரர் ஆவார். இத்திருக்கோலத்தில், நாகத்தியில் ஆதிமூல பக்தவத்சலேஸ்வரராகத் தரிசிப்பது நமக்குப் பெறுதற்கரிய பாக்யமாம்!

பிரபஞ்சத்தில் பக்திக்கு இலக்கணமாகத் திகழ்பவர்தாமே அகஸ்திய மகரிஷி! சித்புருஷர், யோகி, மகரிஷி, முமூட்சு ஆகிய அனைத்து வகைகளிலும் பொருந்தி அதி அற்புதச் சித்புருஷராக, சித்தர் பிரானாக, அனைத்துக் கோடி சித்தர்களுக்கும் மூல நாயகராக அகஸ்தியர் பெருமான் பிரகாசிக்கின்றார்.

நாகத்தி

நா(அகப்) பரலி!  நல்லதோர் நெற்றிச் சந்தனச் சின்னம்!

சிருஷ்டிக்கு முன்னர் இறைவன் கொள்கின்ற அவதாரக் கோலமே கிராதமூர்த்தி ஆகும்! இந்த அவதார தியான நிலையில் எழுகின்ற அக்னியை, அண்ட சராசரத்தில் எவரும் காண இயலாத போது, அக்னிக் கோளமான இந்த ரூபத்தில் ஈஸ்வரனை தரிசிக்க அம்பிகையோடு சென்ற அகஸ்தியர் பெருமான் அடக்கம், பணிவு, எளிமை, பக்தி இவற்றையே இறை அணிகலன்களாகப் பூண்டவராய், ஈஸ்வரி அரைத்துத் தரும் சந்தனக் குழம்பைத் தாங்கி, சர்வேஸ்வரனின் நெற்றிக் கண் கீழ்க் கோடிட்டு, "நா(அகப்)பரலி" என்ற நீண்ட கீற்றாக, நெற்றிச் சின்னமாக இட்டுச் சிவபெருமானைத் துதிக்கின்றார்.

சிவபெருமான் தம் திருக்கரங்களால் வழித்துப் பிரசாதமாகத் தரும் இந்த நா(அகப்)பரலிச் சந்தன நெற்றிக் கீற்றைத் தரித்து அன்றும், இன்றும், என்றும் சற்குருமார்களாக பூலோகத்தில், அண்ட சராசரங்களில் வலம் வருகின்ற சித்த குருமார்களில் வலம் வருகின்ற சித்த குருமார்களில் சிறப்பிடம் பெறுபவர்கள்தாம் குரு மங்கள கந்தர்வ லோகத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இந்தச் சந்தனக் கீற்று மண்டலத்தின் தரிசனத்தை முதன் முதலாகப் பெறும் பாக்யத்தை அடைகின்ற குரு மங்கள கந்தர்வ லோக இறைத் தூதுவர்கள்தாம், ஸ்ரீஅகஸ்தியர் பாரம்பரியத்தில் ஒளிப் பிரகாச ஜோதிகளாக, இன்றும் குரு மங்கள கந்தர்வ சித்தர்களாகப் பிரகாசிக்கின்றார்கள். இச்சிவப் பாரம்பரிய என்றும் வாழும் ஏகாந்த ஜோதிகளே நம் சிவ குரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளும், அவர்தம் அருட்சிஷ்யத் தோன்றல் நம் குரு மங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமனும் ஆவர்.

சித்திரைச் சதய உத்தமச் சந்தன நாள்!

மகாப் பிரளயத்திற்கு முன், சிருஷ்டிக்கான ருத்ர தியான "நா அக" அக்னியில் சுயம்புவாய் உருவாகியவரே நாகத்தி ஸ்ரீபக்தவத்சலேஸ்வரர் என்பதால் இம்மூர்த்திக்கு சித்திரை மாத சதய நட்சத்திரத்தில் சந்தனக் காப்பிடுவது மிகவும் சிறப்புடையதாகும். எனவே நடப்பு சித்ரபானு ஆண்டின் சித்திரை மாத சதய நட்சத்திர தினத்தில் நாகத்தி ஸ்ரீபக்தவத்சலேஸ்வர லிங்க மூர்த்திக்குச் சந்தனம் சார்த்துவதற்கு அனைவரும் குடும்பத்தோடு தங்களால் இயன்ற அளவில் சந்தனக் கல்லில் சந்தனக் கட்டையால் தாமே சந்தனம் அரைத்து இத்திருத்தலத்திற்கு எடுத்து வந்து அளித்தல் விசேஷமானதாகும்.

ஒரு யுகத்தில் இவ்வாலயம் திருவையாறு ஆலயம் போல் பிரசித்திப் பெற்ற காலத்தில், வருடத்தின் அனைத்து சதய நட்சத்திர நாட்களிலுமே முப்பத்து முக்கோடி தேவர்களும், சகல கோடி அண்டங்களில் இருந்தும் சந்தனத்தைத் திரட்டி வந்து சுவாமிக்கு இட்டு, பூலோக ஜீவன்களுக்குச் சந்தனக் காப்பு லிங்க தரிசனக் காட்சியாக அளித்திடுவார்கள். காலப்போக்கில் இது மறைந்து, மனித குலத்தாலும் மறக்கப்பட்டு தற்போது சித்தர்களின் அருட்பணியாக மீண்டும் இவ்வழிபாடு புத்துணர்ச்சி பெற உள்ளது.

இறைவனை அடைவதற்கு முன் பக்தியைப் பெற வேண்டும். பக்தியை உணர சற்குருவை அடைய வேண்டும். சற்குருவை அடைதற்கு ஆழ்ந்த நம்பிக்கையைப் பெறுதல் வேண்டும். இந்த பக்தியை எளிமையில் பெற்றுத் தரக் கூடிய ஸ்ரீபக்தீஸ்வரராக, ஸ்ரீபக்தவத்சலேஸ்வரராகப் பொலிபவரே நாகத்தி சிவலிங்க மூர்த்தியாவார்.

சித்தர்களுக்குச் சிவ சிந்தனையைத் தரும் சிவ மஹாயோகியே ஸ்ரீஅகஸ்திய மகரிஷி!

அகஸ்தியப் பெருமானின் தோற்றத்தைப் பற்றி பலரும் அறியார்.  இறைவனுடைய திருநாக்கிலிருந்து தோன்றியவரே அகஸ்தியர் சித்தர்பிரான்!  எனவே தாம் கொல்லி மலை வனத்தில் விறகு வெட்டி உருவில் வந்த ஸ்ரீஅகஸ்தியர், ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரின் முன்னிலையில், நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய திருநாக்கில் எழுதி மகத்தான ஆசிகளை வர்ஷித்தார்.

ஸ்ரீராமருக்கு ஸ்ரீஆதித்ய ஹ்ருதயம் எனும் மாமந்திரத்தை உபதேசித்த மாமுனியே அகஸ்தியரென நாமறிவோம்!  இறைவனாலேயே பீஜாட்சர சக்திகளின் அருட்திரட்சியாய்த் தோற்றுவிக்கப்பட்டவர்!  அதாவது அகத்திய சுலோகம் என்ற ஒன்றை இறைவனே பலவித அட்சரங்களாய் வடித்து அதனை ஓதிய போது, அந்த அட்சரங்களின் ஒளிப் பிரகாசத்தில் தோன்றியவரே அகஸ்தியர் ஆவார். இதனால் தான் அன்றும், இன்றும், என்றும் சித்புருஷராய், மாமுனியாய், சிரஞ்சீவி யோகியாய், இறைவளம் நிறைந்த மகரிஷியாய் இறைவனின் திருவடிகளில் என்றும் உறைந்து துலங்குபவராய், இறை ஜோதியில் வரவளத்துடன் பிரகாசிப்பவராய், என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாய் மிளிர்கின்றார். எனவே நாகத்தி தலமே ஸ்ரீஅகத்தியர் தோற்றத்திற்கான மூலாதாரமாய் பீஜாட்சர மூல லிங்கமாய் அமைந்தது!

இறைவனுடைய "நா அக" மூலத்தில் இருந்து நாகத்தி லிங்கமாக எழுந்தமையால் இந்த நா அகத்தி லிங்கத்திலிருந்து உதித்த பீஜாட்சரங்களின் வடிவே அகஸ்திய மாமுனியின் திருமேனியும் ஆகும்.

அகஸ்தியரே எழுப்பிய பிரார்த்தனையில் எழும்பிய நாகத்தி ஸ்ரீபிரார்த்தனா தக்ஷிணா மூர்த்தி!

ஸ்ரீபிரார்த்தனா தட்சிணாமூர்த்தி
நாகத்தி

இவ்வாறு தம்மிடம் இருந்து தோன்றிய ஒளி வடிவ அகஸ்தியரிடம் ஈஸ்வரனும், "என் மகனே அகஸ்தியா!  உன் பிரார்த்தனை என்ன?" என்று கேட்ட போது "இறைவா! அடியேன் இவ்வகையில் எழுதல் வேண்டும் என்பது தங்களுடைய இறைப் பெருங்கருணையே காரணமாம்! தற்போது அடியேனுடைய பிரார்த்தனை என்ன என்றும் தாங்களே பெருங் கருணை கொண்டு கேட்பதால், பிரார்த்தனையைக் கேட்டு அருள்கின்ற பிரார்த்தனா மூர்த்தியாகவும் தாங்கள் இத்தலத்தில் எழுந்தருளி ஜீவன்களுக்கு அருள்பாலிக்க வேண்டும். ஞான மூர்த்தியாக இருக்கின்ற ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் சற்குண வழிபாட்டின் பலாபலன்களைப் பலரும் அறியவில்லை! பெற இயலவுமில்லை! எனவே தாங்கள் இங்கு பிரார்த்தனா தட்சிணாமூர்த்தியாகவும் தாங்கள் எழுந்தருளி அனைவருக்கும் நல்ல ஞானத்தையும் அளித்துப் பிரகாசிக்க வேண்டும்!" என்று வேண்டினார். எனவே இந்த நாகத்தியில் பிரார்த்தனா தட்சிணாமூர்த்தியாகவும் ஈஸ்வரன் தோன்றுகின்றார். குரு தசை, குரு புக்தி, குரு அந்தர காலங்களில் மட்டுமல்லாது, குருவாரமாகிய வியாழனன்றும், குரு ஹோரைகளிலும் மிகவும் முக்கியமாக வழிபட வேண்டிய மூர்த்தி!

"நா அக லிங்கமே, நா அகத்திய லிங்கமாம்"

சிவ நா அக லிங்கமே, நாகத்தி லிங்கமாக மருவி இன்று நா அக (ஸ்திய) லிங்கம் என்றும் ஸ்ரீபக்த்வத்சலேஸ்வரர் என்றும் ஆயிற்று. அதாவது ஈஸ்வரனின் நாவின் அகத்திலிருந்து உருவாகிய நாக்கின் அகமே இங்கு லிங்கமாக உருவெடுக்க "நா அகத்தின்" பீஜாட்சரத்தில் இருந்து எழுந்த முதற்பொருளே அகஸ்திய மாமுனி ஆனார்.

அக அக்னித் தலமே நா(அ)கத்தி!

அக்னி சக்தி நிறைந்த தலங்கள் பல உண்டு என்றாலும், இது அக அக்னி சக்தி நிறைந்த தலம்! அக அக்னியே அனைத்து அக்னிகளுக்கும் மூலாதாரம்! சகல இடங்களிலும் மௌனியாய், ஞான மூர்த்தியாய்ப் பிரகாசிக்கின்ற ஸ்ரீதட்சிணாமூர்த்தி, இங்கு ஸ்ரீபிரார்த்தனா தட்சிணா மூர்த்தியாகத் தோன்றி, பக்தர்கள் பக்தியுடன் அளிக்கின்ற பிரார்த்தனைகளை நிறைவேற்றுகின்ற காரிய சித்திப் பரம்பொருளாக விளங்குகின்றார்.

சித்திரை மாத சதய நட்சத்திர‌த்தில் தான் ஈஸ்வரன் படைப்புக் காரண மூலியாக மூல கும்பத்திற்கான பூமி பூஜை செய்து சிருஷ்டிக்கான இலக்கணங்களை வித்திட்டு வகுத்திட்டார். அகஸ்தியர் பெருமானைத் தோற்றுவிக்க இறைவன் பீஜாட்சரச் சங்கல்பம் கொண்ட நாளும் சித்திரை சதய நட்சத்திரத் திருநாளாகும். எனவே சித்திரை சதய நட்சத்திரத்தில் உற்பவித்த சிவலிங்க மூர்த்தி ஆனதால் இங்கு அகஸ்தியர் பெருமானே தூல, சூக்கும வடிவுகளில் ஒவ்வொரு சித்திரை சதயத்திலும் வந்து வழிபட்டுச் செல்கின்றார்.

எனவே சித்திரைத் சதயத் திருநாளில் இங்கு சுவாமிக்கு சந்தனக் காப்பு இடுவோர்க்கு அவரவருடைய ஆழ்ந்த நம்பிக்கை, பக்தியைப் பொறுத்து ஸ்ரீஅகஸ்தியர் பெருமானின் திவ்ய தரிசனம் நிச்சயம் கிட்டிடும். ஆனால் அகஸ்தியர் பெருமான் மானுட வடிவிலோ, பசு, யானை, ஒட்டகம், குதிரை, அரச மரம், ஆல மரம், எறும்பு, ஈ என எந்த வடிவிலும் வந்திடலாம். ஏனென்றால் ஈ வடிவில் ஈங்கோய் மலையில் ஸ்ரீமரகதாசலேஸ்வரரை தரிசித்தவரன்றோ அகஸ்தியர் பெருமான்!

சித்திரை சதய சந்தனக் காப்பு வழிபாட்டுப் பலா பலன்கள்

நாகத்தி திருத்தலத்தில் சித்திரைச் சதய நட்சத்திரச் சந்தனக் காப்பில் கிட்டும் பலாபலன்கள் ஏராளம், ஏராளம்! சொல்லவும் பெரிதே நாகத்தி சிவனின் மகிமை!

ஸ்ரீமுருகப் பெருமான் நாகத்தி

குரு தரிசனம் பெற.......

"குரு தரிசனம் கிட்டவில்லையே, சற்குரு கிட்டவில்லையே" என்று ஏங்குவோர் நாகத்தித் தலத்திற்குச் சித்திரை சதய நட்சத்திர நாளில் சந்தனக் கல், சந்தனக் கட்டை கொண்டு வந்து பலருக்கும் சந்தனம் அரைக்கும் வாய்ப்பினைப் பெற்றுத் தந்து தாமும் சந்தனம் அரைத்து இறைவனுக்குச் சார்த்தி தூப, தீப, சாம்பிராணி இட்டு அடிப் பிரதட்சணம் செய்து ஆழ்ந்த நம்பிக்கையுடன் துதித்து வந்திடில் குரு தரிசனம் கிட்ட ஸ்ரீஅகஸ்தியர் பெருமானே வழி வகுக்கின்றார்.

லலாடங்க யோக சக்தியைப் பெற.......

லலாடங்க யோகம் என்று நாவினால் செய்யப்படுகின்ற யோக முறை ஒன்றும் உண்டு. இதனைத் தக்க பெரியோர்களின் மூலம் பயிற்சி செய்தலால் அமிர்தமய பிராணாயாம சக்திகளைப் பெறலாம். இந்த யோக நிலையில் நாக்கினை உள்ளே மடித்து, நாக்கின் நுனியானது தொண்டையைத் தொட்டுக் கொண்டிருக்கும் படி சிறிது சிறிதாகப் பயிற்சி செய்து வருதல் வேண்டும். மிகவும் கடினமான யோகமிது!

இதனை நன்முறையில் பயில்வோருக்கு, சகஸ்ராரத்திலிருந்து இறங்குகின்ற அமிர்தத் துளியினைப் பெற்று, அருந்திச் சுவைக்கின்ற நல்ல இறைபாக்யம் கிட்டும். இத்தலத்தில் "நா அகத்தி" என்ற பக்தி முற்றோதலில், உள் அக நாக்கில் சகஸ்ராரத்தில் இருந்து சுரந்து கீழ் வரும் அமிர்தாக்னி சக்தியைப் பெறுவதற்காக, நாக்கினைச் சற்று உள்ளே மடித்துத் தொண்டையைத் தொடும்படியாக வைத்திருந்து ஸ்ரீபக்த்வத்சலேஸ்வரப் பெருமானைத் தியானித்தல் வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் (வா)நாக்கு வன்மை நன்முறையில் பெருகுவதோடு, பிள்ளைகளுக்கு நல்ல ஞாபக சக்தியும், நல்லறிவும் உண்டாகும்.

பெரியோர்களின் சேவா புண்ய சக்தியைப் பெற.....

சற்குருமார்களுக்கு, பெற்றோர்களுக்கு, பெரியோர்களுக்கு, முதிய நல்லாசிரியர்களுக்கு உடல் சேவைகளைச் செய்கின்ற நல்வாய்ப்புகளை வாழ்வில் விட்டு விட்டு, அவர்கள் இறந்தபின் அதற்காக ஏங்குவோர் பலரும் உண்டு. அவர்கள் இத்தலத்தில் சித்திரை சதய நட்சத்திரத்தன்று வந்து ஏழை எளியோர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்திடல் வேண்டும்.

உதாரணமாக, மிகவும் வயதானோர்க்குச் சுடுநீர் வைத்துக் கொடுத்தல், நீராடுவதற்கு தேவையான வாளி, சோப்பு, சீயக்காய்த் தூள், துண்டு ஆகியவற்றை அளித்து நீராடத் துணை புரிதல், கைத்தடி அளித்தல், தக்க மருத்துவ பரிசோதனையுடன் பார்வைக்கான கண்ணாடி அணிதல் போன்ற வயதானோர்க்கான தான தர்மங்களைச் செய்து வருதலால் பெற்றோர்களுக்கோ, தமக்கு உதவி செய்தவர்களுக்கோ, தத்தம் ஊரில் தெய்வீகமாக வாழ்ந்த பெரியோர்களுக்கோ சேவை செய்வதற்காக வந்த வாய்ப்புகளை இழந்ததற்கு ஓரளவு தக்க பிராயச்சித்தம் கிட்டும். மேலும் மீண்டும் அத்தகைய நல்வாய்ப்புகள் தேடியும் வரும். இப்போதாவது இதை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இப்புண்ய சக்தியால் பிள்ளைகள் நல்ல வருமானத்துடன் எதிர்காலத்தில் நன்கு வாழ்வர்.

ஆணவத் தீவினைகள் அழிந்திட......

தன்னுடைய அதிகார, ஆணவ தோரணையினால் பலரையும் இழிவுபடுத்தும் வண்ணம் வாய் கிழியப் பேசி திட்டி, மனம் வருத்தமடையச் செய்திட்டோர் இதற்கான விளைவுகளை ஏற்றுத் தான் ஆக வேண்டும். ஆனால் இவ்வாறு செய்த பின் தான் செய்தது தவறு என்று சத்தியமாக உணரும் போது உண்மையாகவே மனம் திருந்தி, தன்னால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தக்க நிவாரண உதவிகளைச் செய்திட்டால், மேற்கண்ட விளைவுகள் தம்மைத் தாக்காது காப்பாற்றிட நாகத்தி ஸ்ரீபக்த்வத்சலேஸ்வரர் பெரிதும் துணை புரிவார்.

சுமங்கலித்வ வரவளம் பெற......

கணவன் உயிருடன் இருந்த போது அவருக்கு எந்தவித உதவியும் செய்யாமல் அது வேண்டும், இது வேண்டும் என்று சொல்லி, வதைத்தலாகிய பெரும் பாவம் புரிந்தோர், கணவனிடம் தனக்கு இந்த நோய், அந்த நோய் என்று நடித்து வருத்திப் பாடாய்ப் படுத்துகின்றோர்க்கு கணவன் இறந்தபின் பிள்ளைகளோ, மருமகளோ, மகளோ சரிவரக் கவனிக்காமல் இருக்கும் போது தான் கணவனின் அருமை தெரிய வரும். ஆனால் இழந்த சுமங்கலித்வத்தை மீண்டும் பெற முடியுமா?

எனவே சுமங்கலித்வம் என்பது எந்நிலையிலும் கணவனை நன்கு புரிந்து கொண்டு, மிகவும் ஒத்துழைப்புத் தந்து பெரும் துணை புரிவதாம். கணவன் இருக்கும் போது சரியாக மதித்திடாது ஏனோ தானோ என்று வாழ்ந்திட்டால் இதுவே சுமங்கலித்வ சக்திகளைத் தங்க விடாது துரத்தி விடும். கணவன் இறந்த பின்னர் தான் பலரும் சுமங்கலித்வத்தின் மேன்மையை உணர்கின்றார்கள்.

இத்தகைய பரிதாபகரமான நிலை யாவருக்கும் ஏற்படாமல் இருக்க, சித்திரை சதய நட்சத்திரத்தில் எல்லோரும் குடும்ப சகிதம் நாகத்திக்கு வந்திருந்து இங்கு "ஸ்ரீசௌபாக்ய வித்யா" என்று அழைக்கப்படுகின்ற இரு கைகளிலும் தாமரைப் புஷ்பங்களைத் தாங்கி நிற்கின்ற அம்பிகையை மனம் உருகி வேண்டி இதன் பிறகேனும் கணவனைத் தெய்வமாக மதித்துத் தினசரி கணவனின் பாதங்களைத் தொட்டு வணங்கி, அவ்வப்போது பாத பூஜையும் செய்து கணவனுக்குப் பெரும் துணையாக வாழ்க்கையில் இருப்போர்க்கு நிச்சயமாக சுமங்கலித்வம் இறையருளால் நிச்சயம் கிட்டிடும்.

எனவே நன்முறையில் சுமங்கலித்வ ஐஸ்வர்யத்தைப் பெற்றிட மிகவும் முக்கியமாக வழிபட வேண்டிய அம்பிகையே நாகத்தி ஸ்ரீசௌபாக்ய வித்யா ஆவாள்.

நாகத்தி திருத்தலம் தஞ்சாவூர் திருவையாறு நெடுங்சாலையில் தஞ்சாவூரிலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது. தஞ்சையில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள அம்மன்பேட்டை என்னுமிடத்தில் இறங்கி, இங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள நாகத்திக்குச் செல்தல் வேண்டும். திருவையாற்ரில் இருந்தும் பஸ் வசதிகள் உண்டு.

பத்துச் சடங்குகள்

சடலத்திற்கான "பத்துச் சடங்குக் கிரியை முறைகள்

உறக்கம், மரணத்தின் ஒத்திகையே!

மரணம், சரீரச் சட்டை மாற்றமே!

கடந்த இரண்டு இதழ்களாக, சடல தகனம் பற்றிச் சித்தர்கள் அளிக்கின்ற விதிமுறைகளை அளித்து வருகின்றோம் அல்லவா!  எத்தனை நாள் இறுதிச் சடங்குகளை நிகழ்த்த வேண்டும் என்று பலரும் மேலும் பல விளக்கங்களையும் வேண்டிக் கேட்டிருக்கின்றார்கள். அனைத்தையும் விளக்கினால் பெரு நூலாக விரியும் என்பதால், இயன்ற வரை சித்தர்களுடைய ஞானப் பத்ரக் கிரந்தங்களின் "ருத்ர பூமிக்" காண்டத்தில் நன்கு விரிவாகக் காணப்படுவதை இங்கு ஓரளவு தருகின்றோம்.

ஒரு பட்ச காலச் சடங்குகள் அவசியமே!

இறுதிச் சடங்கு விதிகளில், இறப்பு ஏற்பட்ட நாளே, முதல் நாளாகின்றது. ஒரு பட்சம் அதாவது 15 நாட்கள் சடங்குகள் அவசியமானதாம். ஏனென்றால், பொதுவாக இந்த ஒரு பட்ச காலத்தில் தாம், இறந்தவரின் "மாயைச் சாயைச் சரீரமானது" இதுவரையில் தானெடுத்து வாழ்ந்த எண்ணற்ற பிறவிகள், வாழ்ந்த இடங்கள், நடத்திய, செய்திட்ட, கோடானு செய்கைகளின் கண்ணோட்டத்தைப் பெறும். பிறகு தனக்கு உரிய விண்வெளி யாத்திரையை அது தானாகத் தொடரும். இது யாவர்க்கும் பொதுவானதே என்றாலும், அவரவர் கர்ம வினைகளைப் பொறுத்து மாயைச் சாயை அனுபவ யாத்திரை முறைகள் மாறுபடும்.

தகன நேரந் தவறினால் தகன முறை மாறுமே!

சடங்கின் முதல் நாளில், கடந்த இரு இதழ்களில் குறித்தபடி சடலத்திற்கான கிரியைகளை நடத்திட வேண்டும்! சில சமயங்களில் "இறப்பு நாளிலேயே" தகனமும் நடந்திடலாம். நாம் ஏற்கனவே குறித்துள்ளபடி, ஆறு மணி நேரத்திற்குள் தகனம் செய்வதே சிறப்பானது. ஆறு மணி நேரத்திற்கு மேல் ஆகி விட்டால், தச வாயுக்களின் முழுப் பரிமாணம் தடைபடுவதால் சிதையில் சந்தனக் கட்டை, இந்துப்பு, படிகாரம், மிளகு போன்ற சில பரிகாராக்னித் திரவியங்களைத் தக்க பெரியோர்களின் வழிகாட்டுதலைப் பெற்றுச் சேர்க்க வேண்டும். பொதுவாக நடைமுறை வழக்கத்தில் உள்ளபடி முதல் நாள் இறப்பு என்றால், இரண்டாம் நாள் தகனமும், மூன்றாம் நாள் சஞ்சயனமும் (எலும்பைப் பாலில் கரைத்தலும்) நடைபெறும்.

சடங்குகளின் தாத்பர்யங்கள்!

இவ்வாறாக இறப்பு நாள் முதல் மூன்று நாட்களில் பிண தோஷம், ஆவி தோஷம், பிண மருகல் தோஷ நிவர்த்திகளும், நான்கு முதல் 12 நாட்கள் வரை ஈமச் சடங்குகளும், 13, 14, 15 நாட்களில் ஆன்மப் பயண நலச் சடங்குகளும் தொடரும். அதாவது முதல் 12 நாட்களில் பிண தோஷங்கள், இறப்பு தோஷங்கள், ஆவி தோஷங்கள், காரிய தோஷங்கள் போன்ற பலவிதமான இறந்தவர் கூட்டிய தோஷங்களுக்கும், இல்லத்தில் எழும் தோஷங்களுக்கும் ஓரளவு நிவர்த்தி கண்ட பின் 13. 14, 15 தினங்களில் சுபஸ்வீகாரம் எனப்படும் வழக்கமான பரிதி வாழ்க்கைக்கான ஆயத்தச் சடங்குகள் தொடரும். இந்தச் சடங்குகள் அனைத்தும் ஆழ்ந்த அர்த்தங்கள் பொதிந்தவை! இறந்தவரின் ஆன்ம நலம் மட்டுமல்லாது சந்ததிகளின் நல்வாழ்விற்கும் பெருந்துணை புரிவதாம்.

மரணத்தை "சரீரச் சட்டை மாற்றுதலாகப்" பக்குவமுடன் ஏற்கும் உள்ளப் பக்குவம் பலருக்கும் இல்லை!  எனவே மரணத்தைத் துக்ககரமானது என்று எண்ணும் வகையிலான மாயைக்கு மனித குலம் ஆட்பட்டு விட்டது. தவிர்க்க இயலாத ஒன்றைப் பற்றி இனியேனும் ஏங்காது, விதியாக ஏற்று, இறந்தவருடைய ஆன்ம நலத்திற்காகவும், சந்ததிகளின் நல்வாழ்விற்காகவும் வழிபடுவதாக 13, 14, 15 ஆவது நாள் சடங்குகள் அமையும்.

சடங்குகளை எங்கு நடத்துவது?

பொதுவாக இறந்தவர் ஒருவருடைய "மாயைச் சாயைச் சரீர" ஆன்மப் பயணம் நன்கு நிலை பெறுதற்குக் குறைந்தது ஒரு பட்சம் (15 நாட்கள்) ஆகும் என்பதால் தான் இந்த 15 நாள் சடங்குகள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

சடங்குக் காரியங்களை அவரவர் சொந்த வீட்டில் செய்வதும் சிறப்பானது. திருவையாறு, கும்பகோணம் போன்ற நதிக் கரைகளிலும் காசி, கேதார்நாத், பத்ரிநாத், ராமேஸ்வரம், நெடுங்குடி, திருவிடைமருதூர், திலதைப்பதி, பூவாளூர் போன்ற பித்ரு முக்தித் தலங்களிலும் இரண்டு அல்லது மூன்றாம் நாளில் இருந்தே செய்திடலாம்.

இறந்தபின் ஒருவர் பெறுகின்ற "மாயைச் சாயை" (உடலு)க்கு நாடு, அண்டம், பூமி வேறுபாடு என எந்த வேறுபாடும் கிடையாது. இந்த மாயைச் சாயைச் சரீரமானது கண் இமைக்கும் நேரத்தில் எத்தனையோ கோடி நாடுகள், பூமிகள், நட்சத்திரங்களை, அண்டங்களைக் கடக்கும் விரைவு கொண்டது! ஆதலால், இறந்தது ஓரிடமானாலும் உத்தம கிரியைகள் (ஈமச் சடங்குகள்) நடக்கும் இடத்தில் அவர்கள் எளிதில் பிரசன்னமாகி விடுவார்கள்.

இதுவரை கண்ட பிறவிகளின் கண்ணோட்டம் காண்பரே!

ஒருவர் இறக்கும் போது எத்தகைய குடும்ப அமைப்பு இருந்தாலும் இறந்த பின் அந்த "மாயைச் சாயை" உடலில் இதுவரை பல்பிறவி எடுத்துப் பெற்ற பிள்ளைகள், பெண்களின் தற்போதைய நிலைகள் உணர்விக்கப்படும். அவர்கள் எங்கெங்கோ பிறவி கொண்டு வாழலாம் அல்லவா! இதனைக் காண்பதால் அந்த மாயைச் சாயை உடல் பலத்த சஞ்சலங்களுக்கு ஆளாகும்! ஏன்?

இப்பிறவிகளில் நாலைந்து பிள்ளைகள் இருக்க, கடந்த பிறவியில் எண்ணற்ற பிள்ளைகள் இருந்து அவர்கள் தற்போது எங்கெங்கோ, எப்படி எப்படியோ, பிறவிகளைக் கொண்டிருந்தால் யாருக்கு உதவுவது? யாரைப் பற்றிக் கவலைப்படுவது? இவ்வாறு பூர்வ ஜன்ம சந்ததிகளின் தற்போதைய நிலைகள் குறித்து அந்த மாயைச் சாயை உடலுக்கே வேதனைகள் ஏற்படும். எனவே முதல் ஐந்து நாள் சடங்குகள் "மாயைச் சாயை" சரீரத்தின் வேதனைகளைத் தணிப்பதற்காகவும் ஆகும்.

சாயை ஆவிகளுக்கான பிம்ப பூமி!

நம்முடைய பூமியைப் போல, மாயைச் சாயை உடல்கள் உலவுவதற்கான பரவெளி உலகங்களும் உண்டு. இதற்கு "பிம்ப பூமி" என்று பெயர். அதாவது இறந்தவர்களின் மாயை உடல்கள் உழல்கின்ற, வாழ்கின்ற பூமியே பிம்ப பூமியாகும். இப்பிம்ப பூமியில் (மாயைச் சாயைச் சரீரங்களின் உலகில்) கோடிக்கணக்கான மாயைச் சாயைகள் உலாத்திக் கொண்டிருக்கும். பிறவி பெற்றவை, பிறவி பெறாதவை, மானுடப் பிறவியோ, ஏனைய பிறவியோ கொண்டவை என கோடிக்கணக்கான மாயைச் சாயை ஜனங்கள் உண்டு.

இந்த (மாயைச் சாயை) உலகில் உணவு, உடை, பணமெல்லாம் புண்ய சக்திதான்! ஜீவனாக வாழ்ந்த போது நற்காரியங்கள் செய்து திரட்டிய நற்புண்ணியமே அங்கு valuable currency ஆகும்! இதில் ஏற்படும் குறைவினை (deficit) ஓரளவேனும் ஈடு செய்து மாயைச் சாயை சரீரத்தின் அடுத்த விண்வெளிப் பயணத்திற்குத் துணை புரிவதே இந்த பதினைந்து நாள் "பத்துக் காரியச் சடங்குகளும்", பூஜை பலன்களும், தான தர்மப் பலன்களும் ஆகும்.

நடுக் "கல்" காலம்!

மாயைச் சாயைச் சரீரத்திலிருந்து அடுத்த பிறவி கொள்ளும் வரை இடைப்பட்ட நேரத்திற்கு "நடுக்க(ல்) காலம்" என்று பெயர். இறந்த உடனேயே அனைவருக்கும் அடுத்த பிறவி கிட்டும் என்று சொல்வதற்கு இல்லை. அவரவர் செய்த கர்ம வினைகளின் விளைவுகளைப் பொறுத்து மாயைச் சாயைச் சரீரத்தில் உலவுவதோ, பிறவி எடுப்பதோ அமையும்.

இந்த "நடுக்க(ல்) காலத்தில்" நிறைய விண்வெளி நிகழ்ச்சிகள், விண்வெளிக் காரியங்கள் நடைபெறும். இந்தக் கால கட்டத்தில் மாயைச் சாயைப் படிவத்தில் தாம் இதுவரை அது எடுத்த வந்த பிறவிகளும், வாழ்ந்த இடங்களும் காட்டப்படுகின்றன. எதற்காக? தான் செய்யாமல் விடுத்த விதிப்பாடுகளை அறிதற்காக!

இந்த நடுக்கல் தல வாசம் ஒரு பட்சமோ, ஆறு மாதமோ, பல வருடங்களோ கூட ஆகலாம். இதைக் குறிக்கும் வண்ணமே ஈமச் சடங்குகளில் தகனத்திற்குப் பின் ஒரு சிறு பாத்திக் கட்டி அதில் ஒரு சிறு கல்லை நட்டு அதில் இறந்தவரின் மாயைச் சாயைச் சரீரம் அமைவதாக பாவனை செய்து பூஜிப்பர். இதனால் தான் மாயைச் சாயை உடலைத் தரிக்கின்ற காலத்தை "நடுக்க(ல்) காலம்" என்பர்.

தான தர்ம, பூஜா பலன்கள் விரைவில் சென்றடைய உதவும் சடங்கு முறைகள்!

பொதுவாக ஒரு பட்சத்தின் "பத்துக் காரியங்கள்" காலத்தில் நிறைய தான, தர்மம் மற்றும் பூஜைகளைச் செய்யக் காரணங்கள் நிறைய உண்டு. இறந்தவர் உடனேயே அடுத்த பிறவி எடுத்திட்டால் நற்காரியப் பலன்களை அப்புதுப் பிறவி நிலைக்கு கொண்டு சென்று அளித்தல் மிகவும் கடினமானதாக இருக்கும். இதற்கான தேவதைகள், பித்ரு லோக தேவர்களை அழைத்தாக வேண்டும்! ஆனால் பித்ரு தேவ தேவர்களுக்கோ கோடிக் கணக்கான (மானுட, மிருக, தாவர) சந்ததிகளைக் கண்காணித்திடவே நேரமும், பொழுதும் சரியாக இருக்கும் ஆதலால் அவர்களை மந்திரப் பூர்வமாக அழைத்தல் மிக மிகக் கடினம்!

எனவே அடுத்த பிறவி நிர்ணயம் ஆவதற்குள் இடையிலான நடுக்கல் காலத்தில் அதாவது "மாயைச் சாயை" உடலில் திரியும் போது தான் தான தர்ம நற்காரியப் பலன்களை மிகவும் துரிதமாக அளித்திட முடியும்.

எனவே இறப்பிற்கு அடுத்து வரும் மாயைச் சாயைச் சரீரமானது தன்னுடைய பல கோடி ஜன்மப் பிள்ளைகளை, சந்ததிகளை இந்த ஒரு பட்ச காலத்தில் (15 நாட்கள்) கண்டு மலைத்துத் தடுமாறும். யாருக்கு எத்தகைய புண்ய சக்தியை எவ்வாறு, எவ்வளவு, அளிப்பது என்ற குழப்பமும் அதற்கு ஏற்படும். இதனால் பலத்த வேதனைகளும் அதற்கு வருவதும் உண்டு. நன்னிலையில் இருக்கும் தம் பூர்வ ஜன்ம சந்ததிகள் சிலவற்றைக் கண்டும் மாயைச் சாயைச் சரீரம் ஆனந்தம் அடைவதும் உண்டு.

விரஜா நதித் தீர்த்தம் விவரிக்கும் ஜீவ ரகசியம்!

எனவே இதற்கெல்லாம் தக்க விடை தருவதே வைகுண்டக் கரையில் உள்ள விரஜா நதித் தீர்த்த நீராடல் ஆகும். இதில் முழுகி எழும்போது தான் மாயைச் சாயைச் சரீரத்திற்குத் தன் பிறவி வரைவுகள் (birth graphs), பிறவிச் சந்தர்ப்பங்கள், எதிர்வரும் பிறவிகள் நன்கு அறியலாகும். அதுவரையில் கடந்தவையே உணர்த்தப் பெறும்! ஆனால் இந்நிலையை அடையவே நிறையப் புண்ய சக்தி தேவைப்படும். இதற்குத் தர்ப்பண சக்திகள், அமாவாசை, கிரகண, விஷ்ணுபதி, மாளய பட்சத் தர்ப்பணங்கள், திவசங்கள், படையல்கள், தான தர்மங்கள் பெரிதும் துணை புரியும்.

எனவே பத்துக் காரியங்கள் யாவும் முன்னோர்களுக்கு உதவும் மகத்தான நற்காரியங்கள் என உணர்ந்து இனியேனும் தகனச் சடங்குகளை அர்த்தமுள்ளதாக உணர்ந்து, கடமைகளை மனப்பூர்வமாக ஆற்றிடுங்கள்.

இறப்பு நடந்த நாளில் நடக்கும் கிரியைகளுக்கு "சரீர வளிப் படலம்" என்று பெயர். சடலத்தை மயானம் வரை எடுத்துச் செல்லும் முறைகளைக் கடந்த இரண்டு இதழ்களில் அளித்து விட்டோம்.

ஆசைகளையும் பந்தனம் செய்திடுவீர்!

இறந்த நாளிலேயே, அன்றைய தினமே இளநீர், கரும்புச்சாறு, ஜாங்கிரி, இடியாப்பம், தேன்குழல் போன்ற வாயு பந்தன உணவு வகைகளையும், இறந்தோர்க்குப் பிடித்தனமானவற்றையும் தானம் அளித்திட வேண்டும். இதனால் சடலத்தில் இருந்து தசவாயுக்களும் நன்கு பிரிந்திட உதவும்.

உதாரணமாக இறந்தவருக்கு இனிப்புப் போளியின் மீது அதிக விருப்பம் இருந்திருக்கலாம். ஆனால் கடைசிக் கால நேரத்தில் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்த நோய்கள், மயக்கம் காரணமாக போளியை உண்ண முடியாது இறந்தால் அதே ஆசைகள் போளியின் மீது தொடர்ந்து, இந்த ஆசை தணியும் வரை எண்ணற்ற பிறவிகளும் தொடரும். ஆனால் மனித உடலில் விடுவிக்க முடியாத போளி மீதான ஆசையை, இறந்தபின் அமையும் "மாயைச் சாயைச் சரீரத்தில்" இருக்கும் போது இறந்தவரின் நினைவாக "ஏழைகளுக்குப் போளி தானம்" செய்திடில் அவற்றை உண்பவர் ஆத்மார்த்தமாக பெறும் ஆனந்தமும், தான தர்ம சக்திகளும் மாயைச் சாயை வடிவில் இருக்கும் போதே போளி மீதான ஆசையைத் தணித்துப் பெரும் பிறவிகளின் எண்ணிக்கையைக் குறைத்திடும் அன்றோ!

இறந்தவர்கள் துக்கத்தில் இருக்கும் போது எவ்வாறு இனிப்புகளை, உணவு வகைகளைத் தானம் செய்ய முடியும்? இதற்காகவே அக்காலத்தில் "இறந்தவர்" வீட்டில் கூடி, வெறுமனே மாலை போட்டு விட்டு, வெட்டிக் கதை பேசாது, சத்சங்கம் போலக் கூட்டாகச் சேர்ந்து, உற்றாரும் சுற்றமும் தேவையான தான தர்ம காரியங்களை ஆற்றிடுவர்.

ஸ்ரீஅரிச்சந்திர மூர்த்தி பூஜை!

ஈமச் சடங்கின் முதல் நாளில் ஸ்ரீமுனீஸ்வரருக்கு, ஸ்ரீஅரிச்சந்திர மூர்த்திக்கு வெள்ளை வஸ்திரமும், மஞ்சள் துண்டும் சார்த்தி, மூர்த்திகளுக்கு விபூதியும், கறுப்புச் சாந்துப் பொட்டுத் திலகமும் இட்டு, 12 முறை வலம் வந்து வழிபட வேண்டும். வெட்டியானுக்குத் தேவையான உணவு, ஆடைகளையும் தானமாக மனப்பூர்வமாக அளிக்க வேண்டும்.

இரண்டாம் நாள் பொதுவாக தகனம் நடைபெறும் நாளாக இருக்கும். தகன முறை பற்றிய ஓரளவு விளக்கங்களை முன்னரேயே அளித்து விட்டோம். இரண்டாம் நாளிலும் ஸ்ரீமுனீஸ்வரருக்கு, ஸ்ரீஅரிச்சந்திர மூர்த்திக்கு மஞ்சள் ஆடையும், கருநீல வண்ணத் துண்டும் சார்த்தி 12 முறை வலம் வந்து வழிபட வேண்டும். இன்று இம்மூர்த்திகளுக்கு விபூதியுடன் சிவப்புச் சாந்துத் திலகமும் இட வேண்டும்.

இன்று ஆவியில் வேகும் பொருட்களான கொழுக்கட்டை, இட்லி, இடியாப்பம், அரிசிச் சாதம், கோதுமை சாதம் போன்றவற்றைத் தானமாக அளித்திட வேண்டும்!

நல்ல தெய்வீகமான வாழ்க்கையைக் கொண்டோரைத் தவிர ஏனையோர்க்கு மாயைச் சாயைச் சரீர வடிவிலும் (இறந்த) உடலில் கொண்டிருந்த விருப்புகள் தொடரும். எனவே எங்கெல்லாம் இறந்தவருக்குப் பிடித்தமான உணவு வகை தான, தருமங்கள் நிகழ்கின்றனவோ, அவற்றின் புண்ணிய சக்திகளைப் பெற்று மாயைச் சாயை வடிவம் ஓரளவு சாந்தம் அடைகின்றது. அவற்றின் ஆசைகளும் ஓரளவு தாமாகவே விலகும்.

சுவாமிமலை ஸ்ரீவரதராஜர்

ஸ்ரீவரதராஜர் ஆலய விஷ்ணுபதி மகிமை!

பெற்றோர்கள் பிள்ளைகளிடையே நல்லன்பைப் பெருக்கும் ஸ்ரீவிஷ்ணுபதி புண்யகால பூஜை!

ஓங்கார மத்துவர‌சிப் பொருளை உணர்விக்கும் குருவருளைத் தரும் ஸ்ரீவிஷ்ணுபதி புண்யகால பூஜை!

இடம், வீடு, சொத்து, நிலங்கள் நன்கு நிலை பெற்ற செல்வமாக உதவும் சுவாமிமலை ஸ்ரீவிஷ்ணுபதி பூஜை!

பல புராண அனுபூதிகளில், தெய்வ மூர்த்திகள், மத்துவரசி, மதங்கஸ்ரீ, வில்வபாவனம், சகஸ்ரபதம் எனப் பல ஓங்கார விளக்கங்களைத் தந்தருளி உள்ளனர். ஓங்காரம், தன் அம்சங்களை, சக்திகளை தத்வார்த்தங்களை வெளிப்படுத்தும் புண்ய காலங்களுள் ஒன்றே விஷ்ணுபதிப் புண்ய காலமாம்.

தெய்வ மூர்த்திகளிடையே நிகழ்கின்ற ஓங்காரத் தத்துவப் பரிமாற்றங்களுள் ஒன்றே மத்துவர‌சியாம்!  தண்டபாணித் தெய்வமாம் சிவபெருமானுக்கு உரைத்த ஓங்காரப் பொருளே மத்துவரசி!  இது சித்தர்களுடைய சிருஷ்டியைப் பற்றி உணர்விப்பதாகும். ஏனைய ஜீவன்கள், பிரம்ம சிருஷ்டிப் பட்டறையில் உருவாகிட, சித்தர்கள், மஹரிஷிகள், மாமுனிகள், யோகிகள், முமூட்சுக்கள் போன்ற இறைத் தூதுவர்கள் யாவரும் ஈஸ்வர ஓங்காரச் சிந்தனா அம்சத்தில் தோன்றுவதால் மத்துவரசி முறையிலேயே இவர்கள் தோற்றம் பெறுகின்றனர். இதையே திருமுருகன், மஹேஸ்வரனுக்கு உரைத்தார்.

ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயம்
சுவாமிமலை

எனவே தாம் அனைத்துச் சித்தர்களும் மத்துவரசி ஓங்காரத் தத்துவத்திலிருந்தே தோன்றியவர்கள் ஆகின்றனர். இந்த அற்புதமான ஓங்கார விளக்கமாகிய மத்துவரசி முருகப் பெருமானிடம் இருந்து பிரபஞ்சத்திற்காகத் தோன்றிய இடமே சுவாமி மலையாம்! ஆம், இங்கு தாம் மால்மருகனாகிய முருகன், திருமாலின் அவதாரமாம் மத்துவரதப் (ஆதி வரதராஜர்) பெருமாளுடைய ஆதி க்ஷேத்திரமாகிய சுவாமிமலையில் சிவபெருமானுக்கு மத்துவரசியாகிய ஓங்காரப் பொருளை உரைத்தார்.

திருஏரகமாகிய சுவாமிமலைத் தலத்தில் தாம் மத்துவரதர் எனும் ஸ்ரீவரதராஜ மூர்த்தி, பூலோகத்தில் உள்ள வரதராஜ மூர்த்திகளுக்கெல்லாம் ஆதியானவராக வீற்றிருக்கின்றார்! மிகவும் பழமையான ஆலயம்!  பலரும் அறியாத வகையில் சுவாமிமலை சிவன் கோயில் அருகிலேயே சிறு ஆலயமாக இன்றும் பொலிகின்றது! மிகவும் சக்தி வாய்ந்த பெருமாள் கலியுகத்தின் வரப்ரசாதி!

ஆதி வரதர் தம்மிடத்தை ஈஸ்வரனுக்கு ஈந்து தற்போதைய சுவாமிமலை சிவாலயம் அமைந்ததென வழங்கும் மூத்த புராண அனுபூதியும் இப்பொருளை ஒட்டியதேயாம்! இனியேனும் சுவாமிமலை ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஆலய மகிமையை உணர்ந்து திருப்பதி போன்று பக்தர்கள் திரண்டு வரும் வகையில் இதனைத் திவ்யமான ஆலயமாக ஆக்குதல் பக்தர்களின் கடமையாம்.

மத்துவரசி ஓங்கார ரகசியம்!

மற்றொரு வகையில் மும்மூர்த்திகளின் ஓங்கார ஜோதி சங்கம அம்சமாகவும் மத்துவரசி ஓங்கார தலமாகிய சுவாமிமலை அமைகின்றது. எவ்வாறு? ஈஸ்வரன் (சங்கரர்), திருமால் (மத்துவரதர்), திருமுருகன் மூவரும் திளைத்த சுவாமிநாதப் பதியே, மத்துவரசி ஓங்கார ரகசியப் பொருள் பிரகாசித்தமையால் மகத்தான விஷ்ணுபதித் தலமாகவும், முருகப்பதித் தலமாகவும், சிவப்பதித் தலமாகவும் பிரகாசிக்கின்றது.

பரம்பொருளுக்கு, மத்துவரசி ஓங்காரப் பொருளை முருகன் உரைக்கத்தான் அறியலாகுமா? உபதேசித்தல், பொருள் உரைத்தல் எல்லாம் பூலோக வழக்கின்படி வெவ்வேறு அர்த்தங்களாகின்றன! ஆனால் தெய்வ மூர்த்திகளிடையே ஓங்காரப் பரிமாற்றம் நிகழ்கையில், ஆங்காங்கே விதவிதமான ஓங்கார வேத சக்திகள் பொங்கி அண்ட சராசரமெங்கும் நிரவுகின்றன. சித்தர்கள் தோன்றும் ஓங்காரப் பொருளுரைக்கும் மத்துவரசித் தத்துவ பூமியாதலால் இவ்வாலயத்தில் சித்தர்கள் அதிக அளவில் தூல, சூக்கும வடிவுகளில் நிறைகின்றனர்.

ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயம்
சுவாமிமலை

தந்தைக்கு முருகன் மத்துவரசி ஓங்காரத்தை உபதேசித்தார் என்பது நமக்குப் புரிய உரைக்கும் வாக்கியம் என்றாலும் மத்துவரசி ஓங்கார ஒளி ஸ்கந்த லோகத்திலிருந்து திருக்கயிலாயத்திற்கும், அண்ட சராசரங்களுக்கும் நிரவியது என்பதே ஸ்கந்த மூர்த்தி தன் தந்தைக்கு உபதேசித்த ஓங்காரப் பொருளுக்கு சித்தர்கள் அளிக்கின்ற நமக்குப் புரியும்படியான ஓர் எளிய விளக்கமாம்!

மத்துவரதரே ஆதிவரதராம்!

ஏன் மத்துவரசி எனப் பெயர் வந்தது? மத்துவரதர் என்பதான திருமாலின் அவதாரமே ஆதிமூல வரதராஜ மூர்த்தி ஆவார். ஆம், மத்துவர சியாமளத் திருத்தலமே சுவாமி மலையாம்! இங்கு தாம் ஆதிவரதராக, மத்துவரதராக, ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஆதிகாலந் தொட்டு வீற்றிருக்கின்றார்!  எனவே எண்ணற்ற சித்தர்கள் சூட்சுமமாகவும், தூல வடிவுகளிலும் அடிக்கடி வந்து வழிபடுகின்ற ஆலயமே சுவாமிமலை ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயமாம்! எனவே சுவாமிமலை பூமியே ஒங்கார மத்துவரசி மணக்கும் பூமியாம்!

மத்துவரத சியாமளா
கோவிந்த கோபாலா!

- என்று தொடங்கும் பல நாமாவளிகள் மூலம் திருமாலின் அம்சமான சுவாமி மலை ஸ்ரீவரதராஜரின் மூத்த, ஆதி வரத அம்சங்களை நன்கு உணரலாம்! பெத்த நாராயண சித்தர், மத்துவரத சித்தர், பாலேந்திரச் சித்தர், வராகச் சித்தர், நாராயணச் சித்தர் போன்ற திருமால் வழிபாட்டில் தலை சிறந்த சித்தர்பிரான்கள் வழிபடுகின்ற பெருமாள்!

சிவ, வைணவ பேதம் இன்றிப் பரிபூரணமான இறைமையில் துலங்குபவர்களே சித்தர்கள்! இன்றும் ஸ்ரீஅகஸ்திய சித்த மாமுனி தினமும் திருக்கயிலாயம், வைகுண்டம் இரண்டிலும் பூஜித்து ஈஸ்வரனையும், பெருமாளையும் தரிசித்த பின்னரே தம் நித்திய இறைப் பணிகளைத் தொடர்கின்றார்!

பாலேந்திர சித்தர் என்பார் ஆதிமூல, ஆதிகாலச் சித்தர்களுள் ஒருவராம்!  அதாவது கல் தோன்றி, மண் தோன்றாக் காலம் எனக் காலத்தைப் பகுப்பதான வாக்கியம் போல பிரளயம், சிருஷ்டி இவற்றிற்கு எல்லாம் மூத்தவராக, அனைத்திற்கும் முன் தோன்றியவராகத் துலங்குபவர் தாம் பாலேந்திர சித்தர்பிரான்!  முருகன் தன் தந்தைக்கு மத்துவரசி ஓங்காரத் தத்வார்த்தத்தை உரைக்கையில் சர்வேஸ்வரனின் அனுமதியோடு அருகிருந்து மத்துவரசி ஓங்காரப் பிரகாச அனுபூதி கொண்டவரே பாலேந்திர சித்தபுருஷர்!

தந்தைக்கு உபதேசம் தந்தான் தண்டபாணி என்றால் இந்த உபதேச உரைப்பு நிகழ்ந்தது திருக்கயிலையில் அன்றி சுவாமிமலையில் ஏனோ? சிவபெருமானே மத்துவரசியின் அம்சத்தை அவதாரப் பூர்வமாக உணர்விக்க வேண்டிய தலமென திருஏரக (சுவாமிமலை) பூமியை உணர்த்திடவே, முருகவேளும் இவ்விடம் ஏகினார்.

இவ்வாறு பிரபஞ்சத்திற்கு மத்துவரசி ஓங்கார சக்தி அளிக்கப்பட்ட புனித நேரமே விஷ்ணுபதிப் புண்ய காலமாகும்! மேலும் பாலேந்திர சித்தர்பிரான், மத்துவரசி ஓங்காரப் பொருளை (மத்து) வரதராஜ மூர்த்தியிடம் இருந்து உபதேசமாகப் பெற்று ஏனைய சித்தர்களுக்கும், மகரிஷிகளுக்கும் உணர்த்திய காலமும் விஷ்ணுபதி புண்ய காலமே!

மாதப் பிறப்பு சங்கராந்தி பூஜை

சூரியன் ஒவ்வொரு ராசியிலும் பிரவேசிப்பதே மேஷ சங்கராந்தி, ரிஷப சங்கராந்தி என்றவாறாக மாதந்தோறும் கொண்டாடப் பெறும் கங்கை, யமுனை, காவிரி போன்ற முக்கியமான நதிக் கரைகளிலும், நதிகளின் சங்கமத்திலும் பித்ருப் புண்ய காலமாக மாதாந்திர சங்கராந்திகள் கொண்டாடப்படுகின்றன. பித்ருக்களின் அதிபதிதாமே ஸ்ரீமன் நாராயண மூர்த்தி!  பித்ருப் புண்ய காலங்களின் அதிபதியாக மகர சங்கராந்தி தேவதா மூர்த்தி விளங்குவதால் மகர சங்கராந்திப் பேரொளியாய் ஸ்ரீவரதராஜர் ஆலயத்தில், ஸ்ரீராஜகோபால மூர்த்தி இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்.

ஸ்ரீராஜகோபால மூர்த்தி இங்கு சங்கராந்தி தேவதா மூர்த்திகளுக்கு அருள்பாலித்த நேரமும் ஒரு யுகத்தின் சித்ரபானு ஆண்டின் வைகாசி விஷ்ணுபதிக் காலமான மேஷ சங்கராந்தி விசேஷ தினமாம்! மாதப் பிறப்பு பூஜைக்கு மிகவும் சிறப்பான சங்கராந்தித் தலம்!

ஸ்ரீசப்தமாதர்கள்
பெருமாள் ஆலயம் சுவாமிமலை

சப்தமாதர்கள் மகிமை

பிராமி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராஹி, சாமுண்டி, ஐந்த்ரீ ஆகிய ஏழு சப்தமாதர்களில் ஒருவராகிய வராஹி அம்மன் பராசக்தியின் அம்சங்களையும், ஸ்ரீதேவி, பூதேவி அவதாரிகைகளின் சற்குணங்களையும் தாங்கியவராய்ப் பல சிவ, வைணவ ஆலயங்களிலும் இன்றும் அருள்பாலித்துக் கொண்டு இருக்கின்றார். பல கோயில்களில் பிரகாரப் பரிவார மூர்த்திகளாகவும், மேலும் பல தலங்களிலும் வெயிலிலும், மழையிலும், பனியிலும் உறைந்து ஒவ்வொரு விநாடியும் அருள் சுரக்கும் அம்மன்களாயும் சப்தமாதாக்கள் திகழ்கின்றனர்.

பெண்களுக்கு கற்பு, பக்தி போன்ற தெய்வீக சக்திகளையும் அச்சம், மடமை, நாணம், பயிர்ப்பு போன்ற நற்குணங்களையும் முறைப்படி அளிக்கும் உத்தம தெய்வ மூர்த்திகளே சப்தமாதர்கள். பெண்களின் உடல் அவயங்கள், நாடி, நாள, நரம்புகள், உள்ளம், மனம் அனைத்திலும் எழுகின்ற மிக மிகச் சாதாரணமான துன்பங்கள், சிறிய நோய்கள், முதல் பெரிய இன்னல்கள், தீர்க்க இயலா நோய்கள் வரை அனைத்தின் தீர்வுக்குமான தக்க நல்வரங்களையும், பிராயச்சித்தப் பலன்களையும் அள்ளித் தருகின்ற எளிமையான அம்மன் மூர்த்திகளே சப்தமாதாக்கள் ஆவர்.

தன் உடலை ஈந்து உயிர் தந்த தாயுடன், இந்த ஏழு மாதாக்கள், பசுவுடன் (கோமாதா) சேர்த்து ஒவ்வொரு மனிதனுகும் ஒன்பது உத்தம மாதாக்கள் உண்டு. மாதா, அன்னை என்றால் ஈன்றெடுத்த உறவு மட்டுமல்ல! தாய்ப்பாலுடன், பசும்பாலிலும் மனிதன் வளர்வதால் கோமாதாவும் அனைவருக்கும் நல்அன்னை ஆகின்றாள்!  சப்த மாதாக்களாகிய ஏழு மாதாக்களே நம்முடைய எழுவகை குணங்களைப் பரிபாலனம் செய்கின்ற சற்குண மூர்த்திகள் ஆவர். ஆனால் தற்காலத்தில் பலரும் சப்தமாதர்களை முறையாக வழிபடாமையால் தாம் அச்சந்தரும் வன்முறைகள் பெருகி வருகின்றன.

கலியுகத்து அச்சங்களைத் தீர்க்கும் ஸ்ரீவராஹி

எதிர்வரும் யுகங்களில் வேதங்களை அசுரர்கள் மறைத்திடுவர், வேத சக்தி மங்கிடும், கூடவே வன்முறைகள் பெருகிடும் என்பதைத் தீர்க்க தரிசனமாக உணர்ந்த சப்தமாதர்களுள் ஒருவரான வராஹி அம்பிகை, பரந்தாமன் வேதத்தைக் காப்பவராய் வராஹ அவதாரம் எடுக்க இருக்கின்ற பாதாள லோகத்தில் பில துவாரம் மூலமாக நுழைந்து கடுந்தவம் பூண விழைந்தார்! பில துவார பூமியே திருவலஞ்சுழி, ஹரித்வாரமங்கலம் (திருஅரதைப் பெரும்பாழி) உள்ளிட்ட சுவாமிமலை ஆதலால் ஆதிவராஹருக்கும் மூத்தவராக சுவாமிமலையில் அருள்பாலிக்கும் வரதராஜப் பெருமானின் திருவடிகளை வராஹி தேவி பணிந்தனள்.

ஸ்ரீவராஹி அம்மன்
பெருமாள் ஆலயம் சுவாமிமலை

"சுவாமி!  தாங்கள் வராஹ அவதாரம் பூண்டு, பாதாள லோகங்களுக்குச் சென்று வேதங்களை மீட்டுத் தருகின்ற தருணத்தில் தங்களுக்கு அடியேன் சேவை புரிய அப்போதைக்கு இப்போதே தாங்கள் திருவடிகளில் தவம் புரிகிறேன்!" என எளிமையாக உரைத்துத் தவம் பூண்டு சுவாமியின் வராக அவதார அனுபூதிகளைக் கண்டு ஆனந்தித்து அதன் பலாபலன்களை இவ்வாலயத்தில் நமக்குப் பரிபூரணமாக அளிக்கின்றாள்! இவ்வாறு ஸ்ரீவராஹி தேவி ஸ்ரீவரதராஜரிடம் அனுகிரகம் பெற்ற காலமும் விஷ்ணுபதிப் புண்யகாலமே! இத்தகைய தொன்மையான, பழம் பெருமை மிகும் திருத்தலமே சுவாமிமலை ஸ்ரீவரதராஜர் ஆலயமாம். இம்மூலமூர்த்தியே பல கோடி யுகங்களாக வரதராஜ சக்தி கொண்டு நம்மை ஆட்கொள்பவர்!

இவ்வாறாக சித்திரபானு ஆண்டின் முதல் விஷ்ணுபதி புண்யகாலப் பெருமாள் தலமாக திருஏரகமாகிய சுவாமிமலையில் ஸ்ரீவரதராஜர் ஆலயம் சிறப்புறுகின்றது.

சுவாமிமலை வரதர் சந்நிதியில் விஷ்ணுபதி புண்ய கால பூஜை!

எனவே வரும் விஷ்ணுபதி புண்ய காலத்தில் (14.5.2002 இரவு 1.30 மணி முதல் 15.5.2002 காலை 10.30 மணி வரை) இவ்வாலயத்தில், விஷ்ணுபதி புண்ய கால நேரத்தில் வரதராஜப் பெருமாளுக்கு அனைத்து வித அபிஷேக ஆராதனைகளையும் பக்தியுடன் நிகழ்த்துவதால் பெறுதற்கரிய நல்வரங்களும், பல நற்காரிய சித்திகளும், சித்தர்களின் தரிசனமும், ஸ்ரீராஜகோபால சுவாமியை வழிபட வரும் பித்ருக்களின் ஆசியும் கிட்டும்!

எத்துணையோ நற்காரியங்கள் நிறைவேற முடியாமல் பலரும் பலவிதமான தடங்கல்களால் வாடுகின்றனர். "இந்த காரியம் நடந்தால் போதும் நான் வாழ்வில் முன்னுக்கு வந்து விடுவேன், இந்த ஒரு கஷ்டத்தைத் தாண்டினால் போதும் நான் வாழ்வில் விடிவெள்ளி காண்பேன், இத்துன்பத்தை இறைவன் நிவர்த்தி செய்தால் நான் எப்போதும் இறைத் திருவடிகளில் காத்திருப்பேன், இந்தப் பிரச்சினையை கடவுள் தீர்த்து விட்டால் நான் தீயப் பழக்கங்களினின்று விடுபடுவேன்" என்றவாறாக உரைப்போரும் உண்டு. இவ்வாறு தனக்கு ஏற்படும் பெரும் கஷ்டங்களைத் தீர்க்கும் வரப்ரசாதியே சுவாமிமலை ஸ்ரீவரதராஜப் பெருமாள் மூர்த்தியாவார்.

வரங்களை அள்ளி அருளும் மூர்த்தியாதலால் வரதராஜ மூர்த்தி ஆகிறார். இத்தலத்துடன் கூடிய இன்னும் பல புராண லீலைகள் உண்டு. இவற்றைத் தக்க சற்குருவிடம் கேட்டு அறிவீர்களாக!

திருப்பதி, திருச்செந்தூர், பழனி, ஸ்ரீரங்கம் போன்ற ஆலயங்களுக்குச் சென்று மூலமூர்த்தியின் சக்தியை நாம் பரிபூரணமாகப் பெற வேண்டுமென்றால் இதற்கான வரங்களைத் தருபவரே திருவேரகம் ஸ்ரீவரதராஜ மூர்த்தியாவார். ஏன்? எவ்வாறு? இன்றும் தேவாதி தேவ மூர்த்திகளும் எத்திருத்தலம் சென்றாலும் முதலில் ஸ்ரீவரதராஜப் பெருமாளை வேண்டியே நல்வரம் பெற்றுச் செல்கின்றார்கள். ஸ்ரீவரதராஜ மூர்த்தியும், ஸ்ரீவராஹி அம்மனுமே நமக்குப் பல ஆலய தரிசன பலன்களை முறைப்படுத்தித் தருபவர். வரங்களைத் தரும் வரதரன்றோ!  பல ஆலய தரிசன சக்திகளையும், புண்ய தீர்த்த நீராடல் சக்திகளையும் வழிப்படுத்தித் தரும் பெருமாளாகவும் நம்மை ஆட்கொள்கின்றார்.

ஸ்ரீமத்துவரதர் சுவாமிமலை

எனவே நாம் எந்த ஆலயத்திற்குச் சென்றாலும், சுவாமிமலை ஸ்ரீவரதராஜ மூர்த்தியைத் தரிசித்துச் சென்றால் அதன் பலாபலன்கள் கூடுதலாகப் பெருகும் என்பதை நீங்களே உணரும் போது பெரிதும் மகிழ்வீர்கள். காரணம் ஸ்ரீவராஹி அம்மனே பூலோகமெங்கும் பூமியின் அடியில் இருந்து சுயம்பு மூர்த்திகளும், அர்ச்சாவதாரங்களும் எழுதல் வேண்டும் எனத் தவம் பூண்டு நமக்குப் பல சுயம்பு மூர்த்தி வழிபாட்டினைப் பெற்றுத் தந்தாள். சுயம்பு மூர்த்திகள் தாமாக எழுவதற்கு ஸ்ரீவராஹி அம்மன் கடுந்தவம் கொள்கின்றார். அதாவது ஸ்ரீவராஹி அம்மன் நமக்கு அளிக்கின்ற நல்வரங்கள் மற்றும் அம்மனின் பூஜா பலன்களினால் நமக்கு நிறைய சுயம்புத் திருத்தலங்கள் தோன்றியுள்ளன.

இவ்வாறாக ஸ்ரீவராஹி அம்மன் இங்கு தோன்றிய நேரமும் விஷ்ணுபதி புண்ய காலமே!  எனவே நாம் வழிபட்ட, வழிபடுகின்ற வழிபட இருக்கின்ற சுயம்பு மூர்த்திகளின் தரிசனப் பலாபலன்களை முழுமையாகப் பெற சுவாமிமலை ஸ்ரீவராஹி அம்மன் அருள்பாலிக்கின்றாள். எனவே வரும் விஷ்ணுபதி புண்ய காலத்தில் இவ்வாலயத்தில் சிறப்பான வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.

தேவ நாசிக்கனி!

குறிப்பாக, வரதராஜ மூர்த்திக்கு ப்ரீதி தருவது என்னவெனில் "தேவ நாசிக் கனி" மாலையாம். "தேவ நாசிக் கனி" என்று ஒரு பழமுண்டு! என்னவென்று தெரிகிறதா? வரங்களையெல்லாம் கிரகித்துத் தரக் கூடிய ஸ்ரீவரதராஜப் பெருமாளுக்கு உரிய தெய்வீகத் திரவியம் இது!

ஸ்ரீசாகம்பரி தேவி பிரபஞ்சத்தில் உள்ள தாவரங்களைப் படைத்த போது, ஸ்ரீஆதிவரதராஜரை வணங்கித் தம் சிருஷ்டி நன்கு அமைய வேண்டிய போது, பெருமாள் அளித்த சுவாச பந்தன சக்தியால் ஸ்ரீசாகம்பரி அம்பிகையின் நாசியில் (மூக்கு) எழுந்த சுழுமுனை சுவாசத்தினின்று தோன்றிய கனியே முந்திரிக் கனியாகும். இக்கனி தோன்றிய நேரமும் விஷ்ணுபதிப் புண்ய காலமே!  இதனால் தான் முந்திரிப் பழத்திற்கு "தேவ நாசிக் கனி" என்று பெயர்.

எவ்வாறு வராஹ அவதாரத்திலும், நாசியாகிய மூக்கு பிரதானமோ அதே போல் முந்திரிப் பழத்தின் மூக்காகிய (நாசி) விதைக்குத் தான் சிறப்பு அதிகம். எனவே ஸ்ரீவராஹ மூர்த்திக்கு மிகவும் ப்ரீதியாக ஸ்ரீவரதராஜ மூர்த்திக்கும், ஸ்ரீவராஹி அம்பிகைக்கும் முழு முந்திரிகளைக் கோர்த்த மாலைகளைச் சார்த்தி ஸ்ரீவராஹ கவசம், வராஹ மந்திரங்களை ஓதி அபிஷேக ஆராதனைகளைச் செய்து அம்முந்திரிகளை பாயசம், சர்க்கரைப் பொங்கலில் கலந்து ஏழைகட்குத் தானமாக அளிக்க வேண்டும்.

இன்று முழு முந்திரி கலந்த சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல் நைவேத்தியம் மிகவும் சிறப்பானதாகும்.

நற்பிரயாணம் வெற்றி பெற!

பொதுவாக பல யாத்திரைகளை, வியாபாரப் பயணங்களை மேற்கொள்வோர், இங்கு ஸ்ரீவரதராஜ மூர்த்திக்கு முழு முந்திரிகளை மாலையாகச் சாற்றி வழிபட்டுப் புறப்படுதலால் யாத்திரை நன்கு முடிவதுடன், மூல மூர்த்தியின் அனுக்ரகமும், நல்ல காரிய சித்திகளும் கிட்டும். பிப்பிலிய சக்தி நிறைந்த தலம் என்பதால் இங்கு ஆலய மதிற் சுவர் ஓரத்திலும், நந்தவனத்திலும், அரிசி ரவை, கோதுமை ரவை, நவதான்ய ரவையுடன் சர்க்கரை சேர்த்து எறும்புகளுக்கு இடுதலால் பலவிதமான பணக்கஷ்டங்கள் தீரும். நல்வரங்களைப் பெற்றுத் தரும் தலமாக கலியுகத்தில் இத்தலம் விளங்குகின்றது.

விஷ்ணுபதி புண்ய காலத்தில் இவ்வாலயம் வர இயலாதோர் தங்கள் ஊரில் உள்ள பெருமாள் ஆலயத்தில் விஷ்ணுபதி பூஜையை மேற்குறிப்பிட்டுள்ள கால நேரத்தில் அபிஷேக ஆராதனைகளுடன் கொண்டாடிடுக!

ஸ்ரீவராஹி பூஜையின் மூலம் பலவிதமான பகைமைத் துன்பங்களை எளிதில் களைந்திடலாம். தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்தில் மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக அருள்புரியும் ஸ்ரீவராஹி அம்மனைத் துதித்த பின்னர்தான் கருவூர்ச் சித்தர், மூலவராம் ஸ்ரீபிருஹதீஸ்வரரை தரிசிக்கச் செல்வார்.

விஷ்ணுபதிப் புண்ய கால பூஜை!

இங்கு விஷ்ணுபதிப் புண்ய காலத்தில்

1. ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவரதராஜருக்கு ஓங்கார ரீங்கார சக்தி நிறைந்த முழு முந்திரிகளாலான மாலை, முழுத் தாமரைப் புஷ்ப மாலை, முழுத் தேங்காய்கள் மாலை, செவ்வந்தித் திண்டு மாலை சார்த்தி, சர்க்கரைப் பொங்கல், தயிர் அன்னம் படைத்துத் தானமாக அளித்தல்.

2. ஸ்ரீராஜகோபால சுவாமிக்கு சம்பங்கி மாலை சார்த்தி பால் கோவா, பால் பாயசம் போன்ற பால் வகைப் பொருட்களைப் படைத்துத் தானமளித்து, தர்ப்பணம், பித்ரு ஹோமத்துடன் வழிபடுதல்

3. ஸ்ரீவராஹி அம்மனுக்கு மஞ்சள் வஸ்திரம், முழு முந்திரிகளாலான மாலை சார்த்திக் கிழங்கு வகை உணவுகளைப் படைத்துத் தானமளித்தல் சிறப்புடையதாம்.

விஷ்ணுபதி புண்ய கால பூஜா பலன்கள்

பலவிதமான காரியத் தடங்கல்களை நீக்கி, காரிய சித்திகளைத் தருகின்ற மகத்தான பூஜை! ஆலயத் திருப்பணிகள் தடைபட்டு இருந்தால் இங்கு வரதராஜரை வேண்டி வழிபட்டு வர, திருப்பணிகள் நன்கு நிறைவு பெறும்.

விஷ்ணுபதி புண்ய காலத்தில் ஆயிரக்கணக்கான பித்ரு தேவ மூர்த்திகள் இத்தலத்தில் சூட்சும ரீதியாகக் குழுமுவதால் இங்குச் செய்யப்படும் தர்ப்பண பூஜைகள் சிறப்பிடம் பெருகின்றன.

பிள்ளைகள், பெண்கள், நன்முறையில் திருமண வாழ்வு பெற்று மகிழ்வுடன் இருந்தாலும் தனித்திருக்கும் பெற்றோர்களோ தம் பிள்ளைகளுடன் வாழ்ந்தாலும் எதோ ஒரு மன நெருடலுடனேதான் வாழ்கின்றனர். காரணம், இதுவரையில் சுதந்திரமாக வாழ்ந்து விட்டுத் திடீரென்று வெளிச் சார்பு வாழ்க்கை அமையும் போது இதனை மனித மனம் உடனே ஏற்றிடாது. இவர்கள் இங்கு ஸ்ரீவிஷ்ணுபதி பூஜை கொண்டாடிட சாந்தமான வாழ்வைப் பெறுவர்!

தந்தையோ, தாயோ இறந்து கிடக்க, குடிபோதையில் எங்கோ கிடந்தும், முறையற்ற காமத் தீயொழுக்கத்தில் உழன்றும், பெற்றோர்களுக்கு உரிய ஈமச் சடங்குகளைச் செய்யத் தவற விட்டோர் இவ்விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் இங்கு பித்ரு ஹோமம், பித்ரு தர்ப்பணங்களைச் செய்து அன்னதானம் அளித்திட ஓரளவு பரிகாரம் கிட்டும்.

வெளிநாட்டு வேலை, பிரயாண தாமதம், அலுவலகப் பணி போன்ற காரணங்களாலும், தாய், தந்தைக்கு ஈமச் சடங்கைச் செய்யாது தவற விட்டோர் பலத்த சாபங்களுக்கு ஆளாவர். இவர்கள் இங்கு விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் பித்ரு பூஜைகளைச் செய்திட ஓரளவு பிராயச்சித்தம் கிட்டும்.

கட்டிய மனைவி இருந்திட மனைவியின் சகோதரியை மணந்தும் வாழ்வோர் உண்டு. இது சட்டரீதியாகத் தவறு என்றாலும் இவ்வாறு நடந்த குடும்பங்கள் பல உண்டு. இவர்கள் ஒரளவு பிராயச்சித்தம் பெற இந்த விஷ்ணுபதி புண்ய கால பூஜைகள் உதவும். ஆனால் தன்னை அண்டி வந்துள்ள முதல் தாரம் நன்கு வாழ அனைத்து உதவிகளையும், வசதிகளையும் செய்து தந்தால் தான் பிராயச்சித்த வழிகள் காணப்பெறுவர்.  இல்லையெனில் சாபங்களே பெருகும். மூத்த தாரத்தையும் அன்புடன் நடத்திட்டால் தாம் பிராயச்சித்தங்கள் பலனளிக்கும்.

பொதுவாக, ஒரு பெண்ணை ஏமாற்றி வாழ்க்கை நடத்துவோர்க்கு எதிர் வரும் ஜென்மங்களில் அதே மாதிரிப் பெண் பிறவி எடுத்துப் பிறரால் ஏமாற்றப்பட்டுப் பெரும் துன்பங்களை அடைவதுடன் சொல்லொணாத் துயரங்களும் கூடி வந்து வருத்தும். இதற்கு ஓரளவுப் பிராயச்சித்தமாக இங்கு அனைத்து விஷ்ணுபதிப் புண்ய காலங்களிலும் கோ (பசு) பூஜை செய்து, ஏழைச் சுமங்கலிகளுக்கு மாங்கல்யம், தாம்பூலம், உடைகளைத் தானமாக அளித்து வர வேண்டும்.

தான் வேலைக்குப் போகாமல் மனைவி சம்பாத்யத்திலும், மனைவியின் சொத்திலும் வாழ்ந்து, அனுபவித்து மனைவிக்கே துன்பங்கள் அளித்து வாழ்கின்ற கணவன் திருந்தி வாழ இங்கு விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் பெருமாளையும், வராஹி தேவியையும் பூஜித்து எள் சாதம், எள் உருண்டைகள், குடை, காலணிகளை ஏழைகளுக்குத் தானமாக அளிக்க வேண்டும்.

தான் விரும்பியவரைத் திருமணம் செய்து கொள்ள முடியாததால் கன்னியாகவே வாழ்ந்தோர், எதிர்வரும் ஜன்மங்களிலாவது தான் விரும்பியோரை அடைய இங்கு விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் வழிபட்டு அடிப் பிரதட்சிணம் செய்து இயன்ற அளவு அன்னதானம் செய்திட வேண்டும்.

குடும்ப ஒற்றுமை பெருகும் என்று எண்ணி பெண் கொடுத்துப் பெண் எடுத்தல் என்ற வகையில் ஒரே குடும்பத்தில் பெண்ணை மணம் செய்வித்து அக்குடும்பத்திலிருந்தே தன் பிள்ளைக்கு நாட்டுப் பெண்ணைத் தேர்ந்தெடுத்து பலவிதமான துன்பங்களுக்கு ஆளான குடும்பங்கள் நடைமுறையில் உண்டு. இத்தகையோர் இங்கு விஷ்ணுபதிக் கால பூஜையைக் கடைபிடித்து வழிபட்டிட சொல்லும் வகையறியாத் துன்பங்களிலிருந்து ஓரளவு தீர்வு பெறுவர்.

எல்லாவற்றையும் விட, வெறும் பலன்களை நாடியே இங்கு விஷ்ணுபதி புண்ய காலத்தை கொண்டாடுவதை விட எதையும் எதிர்பாராது சற்குருவின் குருவருளை மட்டும் நாடிப் பூஜித்தல் ஸ்ரீவரதராஜப் பெருமாளே பேரானந்தம் கொள்வார் என்பதே சித்தர்களின் வாக்காம்!

சற்குரு பெற்றுத் தரும் ஸ்ரீவிஷ்ணுபதி புண்ய கால பூஜை!

கடந்த பல யுகங்களாக மனிதகுலத்தால் மறக்கப்பட்ட விஷ்ணுபதி புண்ய கால மகத்துவத்தைக் கடந்த பல வருடங்களாக ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழ் மூலம் நம் குரு மங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் எடுத்துரைத்து வருகிறார்கள். பக்த கோடிகளும், வைணவப் பெரியோர்களும் மூன்று மாத காலத்திற்கு ஒரு முறை வரும் ஸ்ரீவிஷ்ணுபதி புண்ய காலத்தை அவரவர் தலத்திலுள்ள வைணவக் கோயில்களில் நன்முறையில் கொண்டாடி, ஜாதி, மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் பரந்தாமனின் திரண்ட அருள் பெற்றுத் தருவோமாக!

கணதங்கணான் சித்தர்

திருஅண்ணாமலைச் சித்தர்கள் கண தங்கணான் சித்தர் (சென்ற இதழ் தொடர்ச்சி)

அங்கே வந்த கண தங்கணான் சித்தர் சற்று நேரம் சாந்தமாக இருந்த பிறகு மலையை நோக்கி வணங்கினார்.

"ஓம் ஸ்ரீஅஸ்தீக சித்தரே போற்றி", எனக் கூவியவாறு அந்தப் பெரும்பாம்பினை வணங்கிட, அதுவோ அவர் மேல் சீறிப் பாய்ந்தது. கண தங்கணான் சித்தரானவர், பாம்பின் மேல் உள்ள முட்களை அகற்றித் தம் தவ வலிமையால் பாம்பை அகற்றிடுவார் எனப் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் சித்தன் போக்கு சிவன் போக்குத்தானே!

மெல்ல...மெல்ல.... பாம்பின் அருகில் சித்தர் சென்றிட.....அதுவோ மிகவும் சீற்றத்துடன் அவரை நெருங்கியது. உடலெங்கும் முட்கள் தைத்திருந்தமையால் விரைவாக அதனால் நகர இயலவில்லை!  சித்தர்பிரான் தன் மூன்றாம் காலைப் பாம்பின் சிரசு மேல் வைத்து அழுத்தி கரங்களால் அதனை அணைத்து அழுத்த முயன்றிட....

ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர்
திருநறையூர்சித்தீச்சரம்

பாம்போ சர்ரென்று ஒரேயடியாய் அவரைச் சுற்றி வளைத்துப் புரண்டது. சுமார் ஒரு பர்லாங்கு தூரத்திற்கு அவரை இழுத்துச் சென்றது பாம்பு. இருவரினிடையே ஏதோ போராட்டம் நிகழ்ந்தாற்போல் இருந்தது!  இறுதியில் உடல் எல்லாம் நீலப் பிரகாச வண்ண ஒளியுடன் பாம்பின் பிடியிலிருந்து வெளியே வந்து விழுந்தார் சித்தபிரான்!  பாம்பின் உடல் முள் தைத்த இடங்களில் எல்லாம்.... வேல், சூலாயுத, உடுக்கைச் சின்னங்கள் பதிந்திருந்தன!  ஆம் பாம்பு வடிவில் வந்த ஈஸ்வரனே சித்தருக்கு முக்தி நிலை தந்திட்டார். வெளிப்பார்வைக்குப் பாம்புடன் போரிடுவது போல் தோன்றினாலும் ஸ்பரிஸ தீட்சை தந்து அரவணைத்து சித்தரை ஆட்கொண்டு விட்டார் அருணாசலப் பெருமான்!

நீலம் பாய்ந்த ஒளிப் பிரகாசமான உடலில் இருந்து ஒரு ஜோதி தோன்றி அண்ணாமலை உச்சியை அடைந்தது. அக்கால முறைப்படி சித்தருடைய ஜீவாலயத்திற்கான குரு மூர்த்தத்திற்கான ஏற்பாடுகள் நடந்தன. எங்கிருந்தோ திடீரென்று அங்கே வந்த இரு ஜடாமுடித் துறவிகள் பெரியோர் கண தங்கணான் சித்தருடைய குருமூர்த்தத் திருப்பணிகளை முன்னின்று நடத்தினார்கள். கற்பூரம், மிளகு, அகில், பச்சைக் கற்பூரம், புனுகு, ஜவ்வாது, இந்துப்பு, கல் உப்பு போன்றவற்றை இட்டு லிங்கப் பிரதிஷ்டை வைத்து குருமூர்த்தம் (ஜீவாலயம், ஜீவசமாதி) ஆக்கினர்! பாம்பு வளைத்துச் சித்தர்பிரான் உயிர் நீத்ததாக வெளி உலகிற்குத் தோன்றும். ஆனால் சிவப் பரம்பொருளிடம் இருந்து சிவசாரத்தைக் கிரகித்து கிரிவலப் பாதையில் நிரவிய இறைலீலையே இதுவாம். மாத சிவராத்திரி கிரிவலத்தின் போது அர்த்த ஜாமப் பூஜை நேரத்தில் குரு ஹோரையில் இவர் தரிசனம் பாக்யம் உள்ளோர்க்கு சூட்சுமமாகக் கிட்டும்.

பௌர்ணமி திதி நேரம்: 25.5.2002 சனிக்கிழமை இரவு 7.48 மணி முதல் 26.5.2002 ஞாயிற்றுக் கிழமை மாலை 5.21 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பௌர்ணமி திதி அமைகிறது.

பௌர்ணமி கிரிவல நாள்: 25.5.2002 சனிக்கிழமை

மாத சிவராத்திரி கிரிவல நாள்:

10.5.2002 வெள்ளிக் கிழமை மதியம் 1.03 மணி முதல் 11.5.2002 சனிக் கிழமை மதியம் 2.50 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி மாத சிவராத்திரி திதி அமைகின்றது.

மாத சிவராத்திரி கிரிவல நாள்: 10.5.2002 வெள்ளிக் கிழமை இரவு

அமுத தாரைகள்

தம்பதிகள் ஒருமித்து வாழ ஸ்ரீஅர்த்தநாரீஸ்வர வழிபாடு!

கோயிலில் மூலவருக்குப் பின்னால் பிரகாரத்தில் பெரும்பாலும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர், பெருமாள், லிங்கோத்பவர் போன்ற மூர்த்திகளைக் கண்டிருப்பீர்கள்! மூலவருக்கு அருகில் அமைவதால் இக்கோஷ்ட மூர்த்திகள் மிகுந்த சக்தி வாந்தவர்கள்!  மண்டல பூஜா சக்திகளை அருள் வரமாக அளிப்பவர்கள். ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரை வழிபடும் முறையைப் பலரும் அறியார்! பங்குனி உத்திரத்தில் ஈஸ்வரன், உமையவளை மணந்த போது இறைவனின் உத்தம ஸ்பரிசம் பெற்றுப் பரமானந்தம் பூண்ட அம்பிகை தம் திருக்கரங்களால் (ஹஸ்தம்) சுவாமிக்குப் பாத பூஜை செய்து ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரக் கோலத்தில் பங்கு பெற்றாள். இது நிகழ்ந்த காலமே உத்திர நட்சத்திரமும், அடுத்து வரும் ஹஸ்த நட்சத்திரமும் சங்கமிக்கும் காலமாம். எனவே உத்திர நட்சத்திரம் முடியும் தறுவாயில் ஹஸ்த நட்சத்திரம் துவங்கும் அதி அற்புத சங்கவ ஜோதி காலத்தில் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரருக்குத் துளசி, வில்வம் கலந்து தொடுத்த மாலையைச் சார்த்தி சந்தனமும், புனுகும் கலந்த பொட்டும், குங்குமமும் இட்டுத் தம்பதி சகிதம் வணங்கி வந்தால் மனம் ஒரு மித்த நல்வாழ்வு அமையும்.

இல்லறத்தில் புனிதமான அன்பு பரிமளித்திட......

தன் மனைவியோ, கணவனோ, குழந்தைகளோ அன்புடன் நடந்து கொள்வதில்லை, ஏனோதானோ என்று வாழ்க்கை நடக்கின்றது, உண்மையான பாசத்துடனோ, அன்புடனோ தன் குடும்பத்தவர்களே இருப்பதில்லை என்று வருந்தி பாசப் பிணைப்பிற்காக, அன்பிற்காக ஏங்குவோரும் உண்டு. இவ்வாறான வருத்தங்களுடன் வாழ்வோர், வாழ்வில் பற்று கொண்டு நல்ல நெறிகளில் சிறக்கவும், புனிதமான அன்பினை அடையவும் வழிபட வேண்டிய தலம் ஒன்று உண்டு. நன்னிலம் அருகே உள்ள திருச்சாத்தமங்கை எனப்படும் சீயாத்தமங்கை ஸ்ரீஅயவந்தீஸ்வரர் சிவாலயத்தில் ஏதேனும் இருவகை நறுமணப் பூக்களை 1008 எண்ணிக்கையில் தொடுத்து செவ்வாய் தோறும் இங்கு அம்பிகைக்குச் சார்த்தி வழிபட வேண்டும். வாயில் மென்று தின்கின்ற வகை உணவுப் பொருட்களை (பஞ்சு மிட்டாய், அல்வா, பால்கோவா, கிஸ்முஸ் திராட்சை, பலாப் பழம் போன்றவற்றைத்) தானமாக அளித்து வர முருகன் அமர்ந்து தங்கி வழிபட்ட தலமாதலால் இங்கு எழும் ஸ்கந்த சக்தியால் தக்க அன்பு வழிமுறைகளைப் பெறுவார்கள்.

ஆதி உலகில் நாடுகள் என்ற பேதமற்று இருந்த ஒரே சனாதன தர்ம நாட்டின் ஒருமித்த பிரஜைகளாக விளங்கியோரே, பிறவி மேல் பிறவிகளாக, பிறவிச் சக்கரங்களில் உழன்று, இன்று வெளிநாடுகளில் பிறக்கின்றனர். மேல் நாட்டவராகப் (பல நாடுகளில் வாழும் சனாதன ஆதி தர்ம நாட்டுப் பிரஜைகள்தாம்) பூர்வ ஜன்ம வாசனையாகப் பாரத நாட்டில் பல ஆலயங்களுக்கு மீண்டும் வருகின்றனர்! இதுவே ஒன்றே (மனித) குலம் என்பதை உறுதிப் படுத்துவதாம்!

புனித நேரத்தில் நல் ஓவியம்!

ஓவியர்கள் படம் வரையும் போது ஓவிய தேவ மூர்த்திகளையும், தேவதைகளையும் துதித்தே வரைய வேண்டும். மேலும் தெய்வீகப் படங்களை வரையும் போது வளர்பிறைச் சந்திர ஹோரை, புத ஹோரை, குரு ஹோரை, சுக்கிர ஹோரை போன்ற சுப ஹோரை நேரங்களில் மட்டுமே வரைதல் வேண்டும். இதர காலத்தில் நன்கு பூஜிக்க வேண்டும். எம கண்டம் மற்றும் கூடா நாள் போன்ற நேரத்தில் படம் வரைந்தால் தோஷங்களே ஏற்படும். தக்க சற்குருவை, பெரியோர்களை நாடி மேலும் விளக்கங்களைப் பெறவும். ஆறு நடராஜர் அபிஷேக தினங்களிலும் ஓவியர்களும், கலைஞர்களும் கண்டிப்பாக நடராஜ தரிசனம், பூஜையை மேற்கொள்ள வேண்டும்.

அமிர்தயோகம் என்பது பிரபஞ்சத்தில் அமிர்த சக்தி பெருகும் நேரம், சித்தயோகம் என்பது பிரபஞ்சத்தில் சித்தாமிர்த சக்தி பெருகும் காலமாகும். மரணயோகம் என்பது இரண்டு அமிர்த சக்திகளின் தன்மை மங்கி, மறைக்கப்படும் நேரமாகும். அதாவது அமிர்த சக்தி என்றும் குறையாத சிரஞ்சீவித் தன்மை கொண்டது என்றாலும் அழியும் தன்மை உடைய சரீரத்தில் அமிர்த சக்தி ஓட்டம் எப்போதும் நிகழ்வதால் மரண யோக நேரத்தில் உடலின் அங்க அவயங்களின் ஆரோக்ய சக்திக் குறைவதால் அமிர்த சக்திப் பரிமாணம் தாமதமாகும். எனவே தான் மரண யோக நேரத்தில் எந்த சுபகாரியத்தையும் செய்யாது ஜீவாமிர்த சக்திகளைப் பெருக்கும் வழிபாடுகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். எப்போதும் உடலில் "ஜீவ அமிர்த சக்தி" குறைவு படாது கவனிப்பாக இருக்க வேண்டும்.

மேற்கண்ட மூன்று யோகங்களைத் தவிர உள்ள நான்காவதாகிய "பிரபலாரிஷ்ட யோகம்" (கூடா நாள்) பற்றிப் பலரும் அசிரத்தையாக இருப்பது வேதனைக்கு உரியதாகும். "விஷ நேரம்" எனப்படும் நாள் தியாஜ்யம், நட்சத்திர தியாஜ்யம், லக்ன தியாஜ்யம் போன்றவற்றையும் பார்த்து ஒதுக்கியே நல்ல நேரத்தைக் கணிக்க வேண்டும். ஆனால் இதில் பல ஜோதிடர்களும் அசிரத்தையாக இருக்கின்றார்கள். இந்த பிரபலாரிஷ்ட யோக நேரத்தையும் சரியாக கவனிப்பதில்லை! இதனால் பல சுப முகூர்த்த நாட்கள் கூடா நாட்கள் எனப்படும் பிரபலாரிஷ்ட யோக நாட்களில் அமைவதால் வாழ்வில் பெரும் துன்பங்களே கூடி வந்து வாட்டும். எனவே கவனமாக இருங்கள். கூடா நாளில் செய்யப்படும் காரியங்களிலும் பெரும் இன்னல்கள் ஏற்படும்.

நித்ய கர்ம நிவாரணி

1.5.2002 - கடலில் முத்துக் குளிப்போருக்கு வயிராற உணவும், ஆடைகள், ஆபரணங்கள் அளித்தும் சிறப்பித்தலால் குடும்பத்தை அழிக்க வேண்டும் என்று காத்திருப்போரின் பகைமையை இழக்கச் செய்யும் நாளிது!

2.5.2002 - வயதானவர்களுக்குச் செப்புக் குடத்தில் வெந்நீர் வைத்து நீராட உதவி செய்து, சாம்பிராணி இட்டு, தலை கோதி வயிராற உணவு அளிப்பதால் பெண் சந்ததி இல்லாத குடும்பத்தினர் செய்த பாவம் விலக வழி பிறக்கும்.

3.5.2002 - பல் சொத்தை உள்ளோர், பல்லைப் பிடுங்குவதற்கு ஏற்ற நாளிது! குறைந்தது 5 பேருக்கு அன்னதானம் செய்து பல் பிடுங்கிக் கொள்ளலாம்.

4.5.2002 - தேன் கலந்த பாலை வலம்புரிச் சங்கில் ஊற்றி நடராஜருக்கு அபிஷேகம் செய்து அரிசிப் புட்டு நைவேத்யம் செய்து 21 பேருக்கு குறையாமல் தானம் செய்தலால் திடீரென மயக்கம் வருவோருக்கு - மயக்கம் வரும் நேரத்தில் நல்ல உதவி கிட்டுவதோடு நல்ல உதவியாளரும் கிட்டுவர்.

5.5.2002 - விருத்தாசலத்தில் இருக்கும் ஆழத்துப் பிள்ளையாருக்குக் கிழங்கு வகை உணவு நைவேத்யம் செய்து 5 முதல் 10 வயது உடைய சிறுவர்களுக்கு ஆடைகளைத் தானமாக அளித்தலால் அடிவயிறு, மூத்திரப்பை, யோனி சம்பந்தமான நோய்களுக்கு நல்மருத்துவர் கிட்டுவர்.

6.5.2002 - இன்று ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் ஓதி நிறைய நெய், முந்திரி கலந்த வெண் பொங்கல் நைவேத்யம் செய்து, (ஜாதி பேதமின்றி) குடுமி வைத்திருப்போருக்கு முதலில் அன்னதானம், பின் ஏனையோருக்கும் அன்னதானம் செய்வதால், வெளிநாடுகளில் பெண்ணைத் திருமணம் செய்தலால் அங்கு அவர்களுக்கு ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுதலை பெற நல்வழிகள் கிட்டும்.

7.5.2002 - இன்று பத்து முருகன் கோயில்களில் பூரட்டாதி தூபம் ஏற்றித் தக்காளி சாதம் தானம் செய்வதால், தவறாகக் கையொப்பம் இட்டதால் ஏற்படுகின்ற தொல்லைகளில் இருந்து விடுதலை பெற நல்வாய்ப்புகள் கிட்டும்.

8.5.2002 - இன்று ஏகாதசி விரதம் இருந்து குழந்தைகளுக்கு இலவசமாகப் பாடம் சொல்லித் தரும் ஆசிரியைகளுக்கு வயிராற உணவளித்துத் தாம்பூலம், தட்சிணை அளித்துச் சேவித்தலால் அநாவசியமாக, வீணாய்ப் பிறரைத் திட்டியதால் ஏற்படும் பாவங்களுக்கு ஓரளவு பிராயச்சித்தம் கிட்டும்.

9.5.2002 - இன்று குறைந்தது எட்டு சிவாலங்களில் சிவப் பிரதோஷ தீபங்களை ஏற்றி, குறைந்தது ஒரு ஆலயத்திலாவது நமஸ்காரப் பிரதட்சிணம் செய்திடக் கடன் தொல்லையால் ஏற்படும் மானப் பிரச்னை வராது தற்காத்துக் கொள்ளலாம். ஏற்கனவே ஏற்பட்டுள்ள மானப் பிரச்னைகளுக்கான பிராயச்சித்தமும் கிட்டும்.

10.5.2002 - இன்று சிவராத்திரி தூபமேற்றி கிரிவலம் அல்லது ஆலயங்களில் அடிப்பிரதட்சிணம் செய்து சர்க்கரைப் பொங்கல் தானமளித்து வேண்டினால், அள்ளித் தரும் கைகள் அள்ளித் தர வசதி இல்லையே என ஏங்காமல் இருப்பதற்காக இறைவன் (தான, தர்மங்களுக்கான) வசதிகளை அளிப்பான்.

11.5.2002 - கொசுக்களும் இறைவனின் படைப்பே!  அறியாமையால் கொசுக்களை அடித்துத் துன்புறுத்தியதால் வரும் "கொசு தோஷம்" நீங்க இன்று 51 பெருமாள் கோயில்களில் கொசு தோஷம் நிவர்த்தியாகப் பிரார்த்தனை செய்து அசுவினி நட்சத்திர தூபமேற்றி "கொ" எனும் எழுத்து (K, C) உடையவர்களுக்கோ அல்லது அவர்கள் கையாலோ உணவளித்தோ பெருமாளைப் பிரார்த்தித்தால் பெருமாளின் பரிபூரண ஆசி பெறலாம்.

திருக்கண்மாலீஸ்வரர் சிவாலயம், சித்தலவாய்

12.5.2002 - இன்று வெள்ளை நிறக் கதர் ஆடைகளை ஏழைகட்கு அளித்து, கால் ஊனமுற்றோருக்கு அன்னதானம் செய்து கரியமால், கருப்பண்ணசாமி, (திருக்)கண்மாலீஸ்வரர், கருப்பு, கந்தசாமி போன்ற நாமம் உடைய மூர்த்திகளின் ஆலயங்களில் அன்னதானம் செய்திட ரசாயனத் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வரும் துன்பங்கள் விலகும்.

13.5.2002 - ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர்களைச் சந்தித்து மனதாரப் பேசி அவர்களுக்குப் பகுதி நேரப் பணிகளை அளித்து உதவுவதால் விஸ்வகர்மாவின் ஆசியால் வியாபார விருத்தி உண்டாகும்.

14.5.2002 - ரோகிணி நட்சத்திர தூபமேற்றி, தூபம் சாந்தமாகும் வரை ஆஞ்சநேயர் ஆலயத்தை வலம் வந்து பத்துப் பேருக்கு அன்னதானம் செய்து ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி ஏழை, எளியோருக்குத் தானம் அளித்தலால் அடிக்கடி இடமாற்றத்தால் அவதியுறும் அலுவலர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஒரே இடத்தில் பணிபுரியும் நல்வாய்ப்பு கிட்டும்.

ஸ்ரீவனதுர்கை கிள்ளுக்கோட்டை
புதுக்கோட்டை

15.5.2002 - இன்று அறுபது சிவன் கோயில்களில் பஞ்சாட்சர தூபம் ஏற்றி 60 பேருக்கு அன்னதானம் செய்தலால், திருமணத்திற்குச் சென்று நன்கு தின்று விட்டு மொய் எழுதாமல் வந்த பாவத்திற்கு, இவ்வாறு இத்தனை வருடங்களாகச் சேர்த்த சோற்றுக் கழி கர்ம வினைகளுக்கு ஓரளவுக்குப் பிராயச்சித்தம் கிட்டும்.

16.5.2002 - குழந்தைகள் நன்கு படிக்கவும், வேலையில் promotion கிட்டவும் நல்ல நினைவாற்றல் பெறவும் இன்று தட்சிணாமூர்த்திக்கு 51 பிடிக் கொழுக்கட்டைகள் கொண்ட மாலை சாற்றி வணங்கிட, புத்தி, சாதுர்யம், கூர்மை, நினைவாற்றல் உண்டாகும்.

17.5.2002 - செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு உணவு, ஆடைகளைத் தானமளித்து, பெருமாள் கோயிலை, ஐம்பத்தொரு முறை வலம் வந்திடில், கைம்பெண்களின் கண் திருஷ்டி தோஷம் இளம் தம்பதிகளைத் தாக்காது காத்திடலாம்.

18.5.2002 - இன்று சுருளி மாடன் கோயிலில் ரவா கிச்சடி தானம் செய்திடில் மருமகன்களுக்கு வரும் துன்பங்கள் விலகும்.

19.5.2002 - இன்று வைத்தியநாத தூபம் ஏற்றி, குல தெய்வ வழிபாடு செய்து, ஒன்பது பேருக்குக் குறையாமல் அன்னதானம் செய்திடில் வயதான தாயிடம் குடும்பத்தை நடத்துவதற்காகப் பணம் வாங்கிய தோஷம் குறையும்.

20.5.2002 - ஏழைக் குழந்தைகள் படிக்கும் கல்விக் கூடங்களுக்கு இலவச மின் விசிறி அளித்து அன்னதானம் செய்திடில் பங்குதாரர்களுக்கு இடையே ஏற்படும் தகராறுகள் தீர வழியுண்டு.

21.5.2002 - மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் இன்று அன்னதானம், ஆடைகள் தானம் செய்திடில் குரு அருள் பெறுவார்கள்.

22.5.2002 - செங்கல் சூளையில் வேலை செய்பவர்களுக்கு அன்னதானம், ஆடைகள் தானம் செய்திடில் இடமாற்றம் நல்லதாய் முடியும்.

23.5.2002 - கணவன், மனைவி வெவ்வேறு இடத்தில் வேலை செய்து கொண்டு, தன்னுடைய குழந்தைகளை தாத்தா, பாட்டியிடம் படிக்க வைத்து கொண்டிருக்கும் தாய், தந்தையர், குழந்தைகளைத் தங்களிடத்தில் அழைத்துக் கொண்டு சென்று விடுவது நலம் தரும். இந்நாள் இதற்கு ஏற்ற நாளாகும்.

24.5.2002 - தொலைபேசித் துறையில் வேலை செய்பவர்களுக்கு இன்று சோதனையான நாளாகும். ஆகவே முருகன் கோயில்களில் அன்னதானம் செய்திடில் நலம் பெறலாம்.

25.5.2002 - சிவன் கோயில்களில் பஞ்சாட்சர தூபம் ஏற்றி 5 பேருக்காவது அன்னதானம் செய்திடில் திருஷ்டிப் பூசனிக்காயை மிதித்த தோஷம் விலகும்.

26.5.2002 - 21 கோயில்களில் அஷ்ட பைரவ தூபம் ஏற்றி அன்னதானம் செய்திடில் வழி தெரியாமல் அலை பாயும் மனம் அடங்கும் வழி காணலாம்.

27.5.2002 - சங்கரன், ஷண்முகன், சந்திரன், சபாபதி போன்ற பெயருடையோர், ராமானுஜர், ஆதிசங்கரர் வழிபட்ட மூன்று ஆலயங்களில் அன்னதானம் செய்தலால் ஆத்ம விசாரம் செய்யாது முடிவெடுக்கும் காரியம் மாறும்.

28.5.2002 - வன துர்க்கைக்குப் பிரார்த்தனை செய்து 18 பேருக்கு குறையாமல் அன்னதானம் செய்திடில் ஆள் பலமும், பண பலமும் உடையோரால் வருகின்ற ஆபத்து விலகும்.

29.5.2002 - கருப்பண்ண சுவாமிக்கு நன்றிப் படையலாக எட்டுவித காய்கள் கலந்த உணவு சமைத்து அன்னதானம் செய்திடில் கோர்ட்டு வழக்குகள் சுமூகமாய் முடியும்.

30.5.2002 - நன்றாக படிக்கின்ற மாணவனுக்கு சைக்கிள் தானம் செய்திடில் கால்களுக்கு வரும் ஆபத்து விலகும்.

31.5.2002 - தையல் வேலை தெரிந்த ஏழைகளுக்கு தையல் மிஷின் தானம் செய்திடில் வாழ்க்கையில் வரும் மானப் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கலாம்.

எப்போதும் கடவுளை நினைப்பதே கடவுளை நம்புபவனின் செயல்பாடு !


ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam