அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

திருஷ்டி கண்டி

திருஷ்டி தோஷ நிவாரண தீப கண்டி பூஜை
அட்டைப்பட விளக்கம் :- தீப கண்டியின் தெய்வீக அமைப்பு .. திருஷ்டி தோஷ நிவாரண தீப கண்டியைப் பார்த்தீர்களாயின், அதன் வெளிப்புறத்தில் நெற்றிக் கண்களுடன், இரு விழிகளுடன், ஒரு நாசி, வாய் அமைப்பைக் காண்கின்றீர்கள் அல்லவா! திருஷ்டி தோஷமானது, எவ்வகையில் எல்லாம் ஏற்படுகின்றதோ, எவ்விதத்திலெல்லாம் ஒருவரை பாதிக்கிறதோ, அவற்றைக் களைவதற்கான பலவிதமான ஜோதிமுக அக்னிச் சுழல்களை ஏற்படுத்துவதே இந்த தீபகண்டியாகும். இத் தீப கண்டியானது இதற்கே உரித்தான, கபிஸ்தலத்திலுள்ள புனித காவிரி மண்ணுடன் சேர்த்து செய்யப்பட்டதாகும்.
ஏனென்றால் கபிஸ்தலத் திருத்தலத்தில் தான் (கும்பகோணம் அருகே) திருஷ்டி தோஷங்களை நீக்குகின்ற அருட்பெருஞ் சுடராய், பிருத்வி, அக்னி அம்சம் நிறைந்தவராய் இறைவன் அருள்பாலிக்கின்றான். எனவே, கபிஸ்தலத் திருமண்ணிற்கு திருஷ்டியை நீக்கும் தெய்வீகத் தன்மையுண்டு. இந்த தீப கண்டியை தினந்தோறும், குறிப்பாக, வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில், காலையிலும், மாலையிலும் ஏற்றி வழிபட்டிட பிறருடைய பொறாமையால் வருகின்ற திருஷ்டித் தோஷங்கட்கு இது நிவர்த்தியாக அமைவதோடு மட்டுமின்றி, ஒரு இரட்சையாகவும் நின்று, எப்போதும் திருஷ்டி தோஷங்கள் தாக்காதவாறு நம்மைப் பாதுகாக்கிறது. அக்காலத்தில் திருஷ்டித் தோஷங்களின் நிவர்த்தியாக மந்திரங்களும், தீபகண்டி பூஜை வழிபாடுகளும் இருந்தன. ஆனால் கலியுகத்தில் தற்போது அனைத்து பூஜைகளும் சுருங்கி வருவதாலும், இறைவனை சிரத்தையாக வழிபடுவோர் அரிதாக இருப்பதாலும், இத்தகைய அரிய பழமையான தீபகண்டி விளக்கு வழிபாடுகளே மகத்தான பூஜை முறைகளுக்குரித்தான சக்தியைப் பெற்றுத் தருவதாக இருக்கின்றன. இதனை மீண்டும் நமக்குப் பெற்றுத் தந்து சற்குருவாய் வழிநடத்துபவரே குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள்..
தீபம் ஏற்றும் முறை :- இந்த தீப கண்டியினுள், ஒரு புதிய அகல் விளக்கில் நல்லெண்ணை ஊற்றி, நல்ல புதிய பருத்தி இழையாலான திரியை வைத்து ஏற்ற வேண்டும். மேற்புறமுள்ள மூன்று அகல் விளக்கிலும், நல்லெண்ணை, தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், பசு நெய், இலுப்பெண்ணையை ஊற்றி ஏற்றிடலாம். இந்த தீப கண்டியின் உள் அகல் விளக்கில் ஜோதியை ஏற்றி இதனை ஒரு ஐந்து நிமிடமேனும், ஜோதி தரிசனமாக வெளிப்புற முகம் வழியே உற்று நோக்கிட வேண்டும்.
தீப கண்டி தோற்ற விளக்கம் :- வெளிப்புறப் பகுதியிலுள்ள தீப கண்டியின் நெற்றிக் கண்ணிற்கு “அக்னி நேத்ரம்” என்று பெயர். இரண்டு கண்களில் வலக் கண்ணிற்கு “ஆருத்ரா நேத்ரம்” என்றும் இடது கண்ணிற்கு “சார்வ நேத்ரம்” என்றும் பெயர்.. இது தவிர மேலேயுள்ள காது போன்ற அகல் விளக்குப் பகுதிக்கு வலப்புறம் உள்ள அகலுக்குப் “பவிஷ்ய நேத்ரம்” என்றும், இடப் புறமுள்ள அகலுக்கு “புஷ்ய நேத்ரம்” என்றும், மூன்றாவதாக பின்புறம் உள்ள அகலுக்கு “சாம்ய நேத்ரம்” என்றும் பெயர். இவற்றிற்கு மூலமான வாயு பந்தன சக்தியைத் தரும் உள்ளேயுள்ள அகல் விளக்கிற்கு “ஐந்தாக்னி அகல் விளக்கு” என்றும் பெயர்.

அட்சர திருஷ்டிதோஷ
தீபநிவாரண கண்டி

உள்ளேயுள்ள அகல் விளக்குதான் திருஷ்டி தோஷத்தை நிவர்த்தி செய்யக்கூடிய மூல அக்னி ஜோதி மூர்த்தியாவார். பல யுகங்களுக்கு முன் மூன்று வகையான அக்னி மூர்த்திகளிருந்தனர்.. ஒவ்வொரு அக்னி மூர்த்திக்கும், ஒவ்வொரு அமைப்பும், நிறமும் இருக்கும். பின்னரே இவை மூன்றும் ஒன்றாகி ஒரே அக்னியாயிற்று. இந்த திருஷ்டி தீபகண்டியின் உள்ளே நாம் காண்பது. பல யுகங்களுக்கு முன் விளங்கிய மூன்று அக்னி வகைகளை உடைய த்ரயம்பக அக்னி மூர்த்தியாவார். “ஐந்தாக்னி அக்னிமூர்த்தி” என்று அவருக்குப் பெயர். இத்தீபத்தை ஏற்றி வழிபடுவதற்கான எளிய தீப பூஜை முறையும் ஒன்று உண்டு. ஏற்கனவே கூறியுள்ளபடி இதனை தினமும் கடைபிடித்தல் மிகவும் நன்று. குறிப்பாக அக்னி பகவானுக்குரிய செவ்வாய்க் கிழமையும், திருஷ்டி தோஷங்களை நீக்கக் கூடிய சுக்ர சக்தி நிறைந்த வெள்ளிக் கிழமையும் சிறப்பானதாகும்.
விளக்கு பூஜை : நம்முடைய கர்மவினைகள் ஓரளவேனும் தீர்ந்தால்தான் எந்த பிரார்த்தனையும் பலித்திடும்.. பெரும்பாலும், ஜோதியில் அனைத்து விதமான தீவினைகளும் பஸ்பமாகி விடுவதால் தான் விளக்கு பூஜையின் பலாபலன்கள் எளிதில் நல்ல காரிய சித்தியைத் தருகின்றன.
அட்சர திருஷ்டி தோஷ நிவாரண தூப தீப கண்டி பூஜை முறை
ஒரு மா/தேக்கு/பலா/வில்வப் பலகை மேல் தீப கண்டியை வைத்து இதனைச் சுற்றி எலுமிச்சைக் கனி 3, 12, 21, 30 என்ற எண்ணிக்கையில் அழகாக அடுக்கி வட்டமாகவோ, சதுரமாகவோ, செவ்வகமாகவோ அமைத்திடுக! தீப கண்டியை வைக்கும் போது கண், மூக்குப் பகுதியுள்ள வெளிப்புறப் பகுதி நம்மை நோக்கி இருக்குமாறு வைத்து, அகல் விளக்கு ஏற்றும் பகுதி பின்புறமும் அமையுமாறு வைத்திட வேண்டும். ஒரு அகல் விளக்கில், நல்லெண்ணை உள்ள மஞ்சள் தடவிய புதிய பருத்தி இழைகளாலான திரியை வைத்து தீபத்தை ஏற்றி இக்கண்டியினுள் வைத்திட வேண்டும். பிறகு மேலே மூன்று அகல் விளக்குப் பகுதியிலும், அகலில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட வேண்டும். தீபத்தை ஏற்றும் போது
“இல்லற விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது ஜோதியுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமசிவாயவே!”
என்ற துதியுடன் அவரவர் அறிந்த வடமொழி, தமிழ் மறைகளையும், தாங்களறிந்த நன்மந்திரங்களையும் ஓதி, குல தெய்வத்தைப் பிரார்த்தித்து விளக்கை ஏற்றிட வேண்டும். பின்னர், அகலின் உட்புறமுள்ள ஐந்தராக்னி ஜோதியை வெளிப்புற முகம் வழியாக (துவாரங்களின் வழியே) ஒரு ஐந்து நிமிடங்களேனும் தொடர்ந்து தரிசித்திட வேண்டும்.
ஏனென்றால், உங்கள் இல்லத்திலும், அதன் சுற்றுப்புறத்திலுமுள்ள திருஷ்டி தோஷங்களை எல்லாம் இந்த ஐந்தராக்னி தீப ஜோதியானது. தன்னுள் ஈர்த்து பஸ்மமாக்குவதோடு மட்டுமின்றி, திருஷ்டிகளால் உங்கள் உடம்பில் பதிந்துள்ள தோஷங்களை நிவர்த்தி செய்வதற்கான ஒளிக் கதிர்களையும் இந்த தீபஜோதி பாய்ச்சுவதால், அதனை நீங்கள் உங்கள் கண்களால் பார்க்கின்ற போது அந்த தீப சக்தியைப் பெற்று உங்கள் உடலானது பலவிதமான தோஷங்களினின்று நிவர்த்தி பெறுகின்றது. மேலும், தீபம் எரியத் துவங்கிய சில நிமிடங்களுக்கெல்லாம் மேற்கூறிய வகையில் தீபத்தின் வெளிப்பகுதியிலுள்ள நெற்றிக் கண்கள், நாசி, வாய், மூலமாக சிறிய அளவில் ஒளி பரவி வெளிவருவதைக் காணலாம்..
இதற்கு “நேத்ரஜோதி வழிபாடு” என்று பெயர்.. அதாவது எங்கும் சுயம்புவாய்த் தானே பிரகாசிக்கின்ற, ஒளிர்கின்ற, விளங்குகின்ற இறைவனை, பல வடிவங்களில் இருக்கும் இறைவனை, ஜோதி வடிவில் காண்பதின் மூலம் பிரார்த்தனா பலன்களாக திருஷ்டி தோஷங்களை நிவர்த்தி செய்யவும் இவ்வழிபாடு உதவுகிறது. புதிய வீடு கட்டி கிரஹப் பிரவேசம் செய்வோர், புது வாகனம் வாங்குவோர், புது ஆடைகள், டி.வி, பீரோ, ரேடியோ என புதுப் பொருட்கள் வாங்கும் பொழுதெல்லாம் இத்தீப கண்டியை வைத்து வழிபாடு நிகழ்த்துவீர்களேயானால், பிறருடைய பொறாமைக் கண்களால் ஏற்படும் தோஷங்களை எளிதில் அறவே நீக்கிடலாம்.
குறிப்பாக, கிரஹப் பிரவேசத்திற்கு இந்தத் “திருஷ்டி தோஷ நிவர்த்தி தீப கண்டி வழிபாடு” மிகவும் சிறப்புடையதாகும்... கடைகளில் உள்ள வியாபாரிகள் தாம் பெரும்பாலும் பலவித திருஷ்டி தோஷங்கட்கு ஆளாகின்றனர். ஏனெனில் ஆயிரக்கணக்கானோர், அதன் வழியே செல்லும் போது ஒவ்வொருவருடைய எண்ணமும், பார்வையும், எவ்விதம் அமையும் எனச் சொல்ல இயலாது. மேலும், திருஷ்டி தோஷத்தால் படிகின்ற பொறாமை எண்ணங்கள், தோஷங்கள் அனைத்தும் வியாபாரத் தலங்களையும் குறிப்பாக புதுக் கடைகளை நிச்சயமாய் பாதிக்கும். இவற்றினின்று தற்காத்துக் கொள்ள இந்த தீபஜோதி வழிபாட்டினை கடைகளில் தினந்தோறும், குறிப்பாக வெள்ளி, செவ்வாய் நாட்களில் செய்ய வேண்டியது மிக முக்கியமானதாகும்.
இந்த தீப கண்டியை ஏற்றி வைத்து இத்தீபஜோதி ஒளிரும் போதே திருஷ்டி கழித்தல், சிதறுகாய் உடைத்தல், எலுமிச்சைக் கனியால் திருஷ்டி சுற்றுதல் போன்ற பலவிதமான கூடுதல் கழிப்பு முறைகளையும் செய்வீர்களாயின் அதன் பலாபலன்கள் பன்மடங்காகி திருஷ்டி தோஷங்களை அறவே நிவர்த்தி செய்து விடலாம். அர்ச்சனை, ஆராதனை ஹோம குண்ட வழிபாடுகளைப் போன்று இந்த தீப ஜோதி வழிபாட்டிற்கு மகத்துவம் அதிகம். ஏனெனில், எங்கும் நிறைந்து விளங்கும் இறைப் பரம்பொருளானவர் பலவித தெய்வாவதார அர்ச்சாவதார மூர்த்திகளாக விளங்கினாலும், ஜோதி மூலமாகத்தான் ஒன்றே பரம்பொருள், ஒருவனே தேவன் என்ற சர்வேஸ்வர தத்துவத்தை நாம் எளிதில் உணரலாம்.
அதனால் தான் ஆலயங்களில் தீப வழிபாடு மிகச் சிறப்புடையதாக விளங்குகின்றது. யாங்கனும் இருள் சூழ்ந்திருப்பினும் அங்கு ஏற்றப்படுகின்ற சிறு அகல் விளக்கு எவ்வளவு ஜோதிப் பிரகாசமாய் அவ்விருளைப் போக்குகிறதோ அதே போல், அஞ்ஞானத்தில் ஆழ்ந்து கிடக்கும் நம் இருளைப் போக்க வல்லதே ஜோதி வழிபாடு.. இந்த வழிபாடானது இறைவனைக் காண்கின்ற உத்தம வழிபாடாக இருந்தாலும், கலியுகத்தில் நாம் பலவிதத் துன்பங்களுக்குகிடையில்  வாழ வேண்டியிருப்பதால், துன்பங்களையும், நோய்களையும் திருஷ்டித் தோஷங்களையும் நீக்கும் வழிபாடாகவும் இந்த ஜோதி வழிபாடு விளங்குகிறது என்பதை இதன் மூலம் நாம் உணரலாம்.
திருஷ்டியிலிருந்து பாதுகாப்புப் பெற :- இல்லை என்ற நிலை வராமலும், படுக்கையில் விழுந்து பதை பதைக்கும் தொல்லைகள் துளியுமில்லாமலும் வாழ்க்கை அமைய வேண்டும் என்றிடில் முன்வினைப் புண்ணியம் மிகமிக அவசியம். பிறவிப் பெருங்கடலில் பெருமையாய் வாழ்வதற்கும், கல்வி என்னும் அழியாச் செல்வத்தையும், நல்மணவாழ்வு என்ற சொர்க்கத்தையும், பதவி, உத்தியோகம், தொழில், வியாபாரம், என்னும் செல்வத்தையும் முறையாக அள்ளிப் பெற வேண்டும் என்றால்
“பிறர் எண்ணத் தாக்குதலிருந்து
துரோக நினைவிலிருந்து
மந்திர உச்சாடன வேகத்திலிருந்து
கண்களின் கரு தாக்குதலிலிருந்து
புருவச் சுழியோட்ட வேகத்திலிருந்து
கீழப் பார்வைக் குறியிலிருந்து
வாசி ஓட்ட சூட்டு மீசைக் கண்களிலிருந்து”
ஒவ்வொருவரும் தினமும் படும்பாட்டை விளக்குவது என்றால் சொல்லில் அடங்காது. (இவையெல்லாம் தோஷங்கள் வரும் வழிகளைப் பற்றிய சித்புருஷர்களின் பரிபாஷைக் குறிப்புகள்). தினமும் இக்கண்களின் சுற்று வட்டச் சுழற்சியில் சிக்காதவரே கிடையாது. நல்லவர் அல்லாத பக்கத்து வீட்டுப் பார்வையும், எதிர் வீட்டுத் தீக்கண்களின் வேகமும், நண்பர்கள் போல் நடித்து ஏமாற்றுவோர்களின் சொல்லால் தாக்கப்படாமலும், ஒத்த வியாபாரம் உடைய நல்மனம் இல்லாதோரின் போட்டிக் கண்களின் வேகம் தாக்காமலும் இருக்க பெரியோர்கள் கண் திருஷ்டி தீர்க்கும் வழிகளை அக்காலத்தில் அமைத்து இருந்தார்கள். இதில் தேவ வழி, அசுர வழி, யட்ச வழி, மந்திர வழி, யந்திர வழி, கூடு வழி, கரு வழி, அட்சர வழி – என்ற திருஷ்டி கழியும் வழிகளையும் கொண்டிருந்தனர்.. எப்படியெல்லாம் நம்மைப் பிறர் கண் திருஷ்டியால் தாக்கி இருப்பார்கள் என்பதை குரு ஓட்டச் சுழல் வழியால் புரிந்து கொள்ளலாம். இதை குரு மூலமாய் அறிவது நல்லது. “கல்லடி பட்டாலும் கண் அடிபடக் கூடாது” என்ற பெரியோர் வாக்கு இதனால் வந்ததே!
தீபகண்டியைப் பயன்படுத்தும் முறை :- வியாழக்கிழமை அன்று வியாபாரிகளும், இல்லறத்தோர்களும், தங்கள் தம் ஜாதக லக்னத்திலிருந்து ஐந்தாவது, ஆறாவது, ஒன்பதாவது, பன்னிரண்டாவது இட கிரக சஞ்சாரங்களினால் பிரச்சினைகள் பெற வழியுண்டு. இந்த மாதிரி நேரங்களில் தங்கள் வீடுகளில்/கடைகளில் இந்த அட்சர திருஷ்டி தூப தீப கண்டியை வைத்து, சுற்றிலும், மேல்புறத்திலும், நடுவிலும் தேங்காய் எண்ணெயால் தீபம் ஏற்றி, எண்ணெய் இல்லாமலும் கரிந்து போகாமலும், அரைமணி நேரத்திற்குத் தீப ஜோதியைப் பாதுகாத்தல் வேண்டும். பிறகு பூவால் நீரைத் தொட்டு தீபத்தைக் குளிர வைத்தல் வேண்டும். இதனால் திருஷ்டி படாமல் தற்காத்துக் கொள்ளலாம். ஒரு சாதாரண மனையில் அரிசி மாக்கோலமிட்டு அட்சர திருஷ்டி தூப தீப கண்டியை வைத்து தீபம் ஏற்றி எதிரே அமர்ந்து
“ஓம்” | “ஓம் நமசிவாய” | “ஓம் நமோ நாராயணா” | “ஓம் கணபதி” | “ஓம் சரவணபவ” | ஓம் பராசக்தி” – என எந்த இறை நாமமும் ஓதி, அரை மணி நேரம் ஜோதியைப் பார்த்து ஜபித்திடில் திருஷ்டி தோஷம் நம்மைத் தாக்காது.
வெளியிலோ, பிரயாணமோ, இறப்புத் தீட்டிற்கோ சென்று வீடு திரும்பியவர்கள் இதன் முன்னே அமர்ந்து ஜபித்திடில் பல மிதிப்பு, பிரேத, மயான திருட்டி கழியும்.. திங்கள், புதன் , வெள்ளி, சனிக் கிழமைகளில் மேல்புறம் தீபம் ஏற்றி உள்புறம் சாம்பிராணி, அல்லது தூபக் குச்சி வைத்து அந்தப் புகையைப் பார்த்தும், சுவாசித்தும் , மந்திர திருஷ்டி நிவாரண மந்திரம் ஜபித்தலால் திருஷ்டி தோஷங்கள் தீர்ந்து நல்ல காரிய சித்தியையும், நற்பலன்களையும் தரும். ஆண், பெண் முதல் குழந்தை பெரியோர் வரை யாவரும் எவ்வித பேதமும் இன்றி இந்த அட்சர திருஷ்டி நிவாரண தூப தீப கிண்டியை வைத்து தீபம் ஏற்றியோ தூபம் இட்டோ அதன் முன் அமர்ந்து ஜபித்திடில் தோஷ நிவர்த்தியுடன் பல நல்ல பலன்களைப் பெற்றிடலாம்.
செவ்வாய், ஞாயிறு, வியாழன் அன்று மாலையோ, இரவிலோ, இந்த தீபகண்டியை வைத்து இல்லத்தில் இருப்போர் சிவ,விஷ்ணு, சக்தி,முருகன், விநாயகர் குலதெய்வம் மந்திரத்தை அரைமணி நேரத்திற்கு குறையாமல் ஜபித்திடில் பிறர் திருஷ்டி நோய்கள் (அடிபடுதல், முகம் வீங்குதல், etc..) போகும்.. வியாழன் அன்று செய்திடில் குழந்தையின் மந்தப் படிப்பு அகன்று நல்வழி கிட்டும். ஞாயிறு தீப பூஜையினால் மனக் கவலை, துன்பம், செல்வ இழப்பு இவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம்.
பூஜை பலன்கள் :- திருஷ்டியால் பெரிதும் துன்பப் படுபவர்கள் வியாபாரிகளே! செவ்வாய் அன்று தீபம் ஏற்றி வியாபாரத் தலத்தில் வைத்திடில், அவர்கள் தம் லக்ன ராசியிலிருந்து மூன்றாவது, ஆறாவது, ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது, பன்னிரண்டாவது இட கிரஹ சஞ்சார விளைவுகளால் தம் கர்ம வினைகளுக்கு ஏற்ப வரும் வெறுப்பு, தோஷம், வலுச் சண்டை தோஷங்கள் தீரும்.. ஞாயிறு அன்று வியாபாரிகள் தீபமோ, தூபமோ ஏற்றி கடையிலோ, அல்லது வீட்டிலோ வைத்து அரைமணி நேரமாவது அமர்ந்து சிவ, விஷ்ணு, சக்தி, முருகன், விநாயகர், குலதெய்வ பெயரைச் சொல்லி வழிபட்டிடில் மூன்றாவது, ஐந்தாவது, ஆறாவது, எட்டாவது, பன்னிரெண்டாவது எண் சம்பந்தமான சக வியாபாரிகளிடமிருந்து அறிந்தோ, அறியாமலே ஏற்படும் வெறுப்போ, தோஷ பார்வையோ, உங்களைத் தாக்காமல் காக்கும்..
திங்கள் அன்று வீட்டில் இந்த அட்சர திருஷ்டித் தூப தீப கண்டியை வைத்து இல்லறப் பெண்கள் ஜபித்தால் மிகவும் நலம் தரும். மாலையும் வழிபடலாம். காலையும் வழிபடலாம். நல்ல மரப் பலகை வைத்து அதில் அரிசி மாக்கோலம் இட்டு அட்சர திருஷ்டி நிவாரண தூப தீப கண்டியை வைத்து பசுநெய் தீபம் ஏற்றி அதன் முன்னே அமர்ந்து வழிபடுக.. நூல்புடவை அணிதல் அவசியம், சிவ, சக்தி, விஷ்ணு, முருகன், விநாயகர், குலதேவதை நாமங்களை ஜபித்தல் வேண்டும். இதனால் மன சஞ்சலம், குழப்பங்கள் அகன்று நல்ல முடிவு தெரியும். உள்ளே தீபமும் ஏற்றலாம்.. சாம்பிராணி தூபமும் இடலாம்... புதன் கிழமைகளில் கடையிலும், வீட்டிலும்  தீப, தூபம் ஏற்றி வழிபடலாம். குங்கிலியம் சேர்ப்பது சிறப்புடையது.. இதனால், மாணவர்கள் படிப்பில் சுறுசுறுப்பும் போட்டி பந்தயங்களில் நல்ல முடிவுகளும், வரவு செலவு கணக்கில் நல்ல மாற்றமும், அதோடு மட்டுமல்லாமல் திறமையாக வியாபாரத்தில் ஈடுபடவும்., அறிவு ஜீவிகள் சுயமாய்ப் பிரகாசிக்கவும் முடியும்.
வியாபாரிகள் புதன் கிழமைகளில் இப்பூசையைச் செய்திடில் மூன்றாவது, ஐந்தாவது, ஆறாவது, ஒன்பதாவது, பன்னிரெண்டாவது எண்ணை இராசியாக உடைய நல்மனம் இல்லாத அண்டை வீட்டுக்காரர்கள், போட்டிக் கடைகளிலிருந்தும் வருகின்ற எதிர்ப்புகள், பொறாமைகள், செய்வினைகள் உங்களைத் தாக்காமல் இருக்க நல்வ்ழி கிட்டும். வெள்ளிக்கிழமைகளில் வியாபாரிகளும், இல்லறத்தார்களும், தீப தூபம் ஏற்றி வழிபட வேண்டும். இதனால் கணவன் மனைவியரிடையே மனக் குழப்பமும், மாமனார் மாமியார்களின் மனசஞ்சலங்களும், நாத்தனாரின் குழப்பச் செய்கைகளும் தீரும்.
நீங்கள் இருக்கும் வீட்டிலிருந்தோ, கடையிலிருந்தோ முக்கியமாக ஒன்று, மூன்றாவது, நாலாவது, ஏழாவது, எட்டாவது, பன்னிரெண்டாவது வீடுகளிலிருந்தோ, கடைகளிலிருந்தோ வரக் கூடிய நல்ல எண்ணம் இல்லாதோருடைய பொறாமை, எதிர்ப்பு இவைகளிடமிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்.. பொதுவாக சனிக்கிழமைகளில் தம் இராசியிலிருந்து இரண்டாவது, நாலாவது, ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது இட கிரஹ சஞ்சாரங்களினால் நம் கர்ம வினைகளுக்கேற்ப வரும் தோஷங்களும். சொத்துக்களால் வரும் சண்டை, தீய பார்வைகளால் வரும் வியாதி, மனபீதி இவைகளிலிருந்து, இந்த அட்சர திருட்டி தூப தீப பூசையால் நிவர்த்திக் கிட்டும். ஆகவே, அனைவரும் இந்த அட்சரத் திருஷ்டி நிவாரண தூப தீப கண்டி பூசையால் பலவிதமான தோஷங்கள் நீங்கி சுகம் பெறலாம்.
நவராத்திரி, நட்சத்திர பூஜைகள் :- அஷ்டமி, நவமி திதிகளில் இந்த அட்சர திருஷ்டி தோஷ நிவாரண தூப தீப கண்டி பூஜையால் வீட்டில் உள்ளோரும், குழந்தைகள், வியாபாரிகள், பெரியோர் அனைவரும் இல்லத்தில் அமர்ந்து இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி, தீபம் குறையாமலும், அணையாமலும் பக்குவமாய் அடிக்கடி எண்ணெய் ஊற்றிப் பாதுகாத்து வழிபடுவதால் நன்றாகப் படித்து வேலை கிடைக்காமல் இருக்கும் ஆணும் பெண்ணும், நோய், நொடி இருப்பவர்களால் வாடுவோரும் பதவி மாற்றம் விரும்புவோரும் “விநாயக கவசம்” 21 முறைக்கு குறையாமல் படிப்பது மிகவும் நல்லது,
கடன் தொல்லையிலிருந்து விடுபடவும், வறுமைக் கோட்டிலிருந்து நல்ல நிலைக்கு வரவும் அனைவரும் “திருமகள் வணக்கம்” என்னும் துவாதசி திதியில் இதனை ஓதுதல் நலம்.. பெண்கள் பசு நெய் தீபம் ஏற்றி அஸ்வினி, சுவாதி, மிருகசீரிஷ நாட்களில் “சக்தி கவசம்” படித்தல் மிக முக்கியம்.. இதனால் நல்ஆரோக்கியத்தோடு கணவனுக்கும், மற்றையோர்களுக்கும் சேவை செய்ய முடியும். கர்ப்பிணிப் பெண்களுக்கும், திருமணம் ஆகாதோருக்கும் உள்ள தோஷங்கள் தீரும். பள்ளிச் சிறுவர்களும், மேல்படிப்பு படிப்போரும், மாணவிகளும்  கண்டி தீபம் முன் அமர்ந்து “கலைமகள் வணக்கம்” என்னும் துதியை ஸ்ரீஹயக்ரீவருக்குரித்தான நவமி திதியன்றும், ஸ்ரீஹயக்ரீவருக்குரித்தான புனர்பூச நட்சத்திர நாளன்றும் ஓதுதலால் படிப்பில் நல்ல முன்னேற்றம் பெறலாம். திங்களன்றும், திருவாதிரை நட்சத்திர நாளன்றும் இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் , கலந்த தீபமேற்றி ஆண்கள், குடும்பத் தலைவர்கள், “சிவகவசம்” ஐந்து முறைக்கு குறையாமல் ஓதி வழிபட பெற்றோர்கள் / பிள்ளைகளுடன் கொண்டுள்ள பிணக்குகள் தீரும்.

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமனின் பாலபருவ குருகுலவாச அனுபூதிகள்...
... ஒரு நாள். .. பெரியவர் அங்காளி கோயிலில் வழக்கம் போல் தூணருகே அமர்ந்திருக்க... சிறுவன் வேகவேகமாக.. அங்காளியை வலம் வந்தான்.. 1008 முறை தினந்தோறும் வரவேண்டும் என்பது அவனுக்கு இடப்பட்டுள்ள குரு ஆணையல்லவா! அவ்வவ்ப்போது தலையை உள்ளுக்குள் நீட்டுவது போல நீட்டி.... சிறுவனை “CHECK” செய்வது போல் அன்று பெரியவர் இருந்திடவே... “பெரியவர் இருக்கின்றாரே” – என்று சிறுவன் சற்று அச்சத்துடன் தான் அன்று அங்காளி அம்பாளை வலம் வந்தான்.. “எதுக்கும் இருக்கட்டுமே” என்று 1008 எண்ணிக்கைக்கு மேலேயே பொதுவாக வலம் வந்திடுவான்.  அவர் கையும், களவுமாகப் பிடித்திடுவார் என்று நன்றாகத் தெரியும். அவர் கோயிலில் இல்லாத சமயங்களில் அவருக்கு எங்கே தெரியப் போகிறது என்று தூண்களுக்குக் குறுக்கே மருகியும், ஓடியும் சற்றே எண்ணிக்கையைக் குறைத்தும் அவன் கோயில் வலத்தை முடித்து அவரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதும் உண்டு! நிறை குறைகளைச் சரி செய்ய அன்றும் சற்று எக்ஸ்ட்ராவாகவே சுற்றி வந்தான்...
DIVINE MATHS! – “நிறைய கொறையுதுடா! ஏண்டா இன்னிக்கு 970 முக்கால் சொச்சம் தானா? நாலு மூலைல தூணுக்குக் குறுக்கால பாஞ்சு சுத்தலாமாடா? அப்ப அந்த நாலு தூண்ல இருக்கற நாக தேவதையெல்லாம் விட்டுட்டு சுத்தற மாதிரி இல்ல. .ஏண்டா எல்லாத்துலயும் தொண்ணூறு மார்க் வாங்கிட்டு பூகோளத்துல பத்து மார்க் வாங்கினா பாஸா போடுவாங்க...? இந்த வயசுலேயே தெய்வீகத்துல டபாய்ச்சின்னா என்னடா பிரயோஜனம்...?” 
  “ஒண்ணு புரிஞ்சுக்கடா.. அங்காளியை சுத்தற எந்த ஒரு சுத்தும் வீண் போகாது! ஒவ்வொரும் சுத்தும் ஒரு புண்யச் செடி மாதிரி! பெருசா வளர்ந்து LIFE ஃபுல்லா, பிறவி, ஜன்மா ஃபுல்லா ரட்சையா நிக்கும்டா? இன்னியோட நீ எங்க கணக்குப்படி இதுவரைக்கும் 1086726 சுத்து சுத்தியிருக்க! இதுல கால்வாசி நீ பள்ளிகூடம் போகாம என்னோட சுத்திட்டு இருக்கிறதுக்காக அதுல, திட்டு, ஓத, பெயில் மார்க்கு வாங்காம் இருக்கறதுக்கு புண்யமா கரைஞ்சிடும்! இதுல 636726 சுத்துக்கான புண்யம் இன்னிலேந்து இருபதாவது வருஷத்திலே உனக்கு வர்றப்போற தண்ணி கண்டத்துலேந்து தப்பிக்கிறதுக்கு புண்யமா சேர்ந்து கரைஞ்சிடும்!” (பல ஆண்டுகளுக்குப் பின் அவர் சொன்னாற் போல் குற்றாலம் அருவித் தேக்கத்தில் முழுகிய வெங்கடராமனை பாம்பாட்டிச் சித்தர் தாம் சூட்சுமமாக நாக வடிவில் மேலே தூக்கி விட்டுக் காப்பாற்றினார்.)
 “... தண்ணி கண்டத்துலேந்து தப்பிக்கிறதுக்கு புண்யமா சேர்ந்து கரைஞ்சிடும்! இப்படிக் கணக்குப் போட்டா என்னடா சர்ப்லஸ் (SURPLUS) தேறும்! இதுல உனக்கு நாலு தூணுக்கு நடுல அரகுறை குறுக்கு சுத்து வேற.., போய் இன்னும் ஒரு ஐம்பது சுத்து சுத்திட்டு வா.... ஆங்..... வேண்டாம்.. வேண்டாம்... அது ரொம்ப லகுவான பனிஷ்மெண்டு! இந்தப் பயலுக்குப் பெரிய தண்டனை, கொடுன்னு மெத்த மேல (UPPER WORLD)..சொல்றாங்க... அதனால இன்னிக்கு வுட்டுடு... ரொம்ப டயர்டா இருக்க..!”
“அப்பாடி.. “ என்று சிறுவன் பெருமூச்சுவிட.. “..  இருடா.... அதுக்குள்ள ஏண்டா அவசரப்படற, குறுக்கால சுத்தின கால்னால 108 முட்டிபிரதட்சிணம் பண்ணிட்டு, ரெகுலரா பண்ற ஆயிரத்தெட்டையும் பண்ணிட்டுத்தான் இனிமே என்ன வந்து பார்க்கணும்,, ...” JUDGMENT  DELIVERED!
சிறுவன் வெலவெலத்து விட்டான்.! உண்மையில் பெரியவர் சொன்னதைச் செய்து முடிக்க அவனுக்கு நான்கு முழு நாட்களாயின, முட்டிக் காயங்களோடு சேர்த்து...! பெரியவர் ஏதோ சிறுவனை வதைப்பது போல் தோன்றுகின்றதல்லவா! நான்கைந்து நாட்களாக முட்டி வலி, முட்டிப் புண், ரத்தம், சீழ்கசிவதுடன் அவஸ்தைப் பட்ட சிறுவனைக் கண்டு... ஐந்தாம் நாள்... “வாடா கண்ணு, ரொம்பக் கஷ்டப்பட்டுட்டியா!” என்று பரிவுடன் குசலம் விசாரித்து சிறுவனைப் பாசத்துடன் அரவணைத்த பெரியவர்.. “இந்த கிழவன் உன்ன ரொம்பப் படுத்தறான் இல்ல, வேண்டாம்னுனா.... சொல்லு... உடனே நான் கெளம்பிடறேன், நீ பாட்டுக்கு ஜாலியா இருக்கலாம்.. சுத்தி சுத்தி அல்லோலப்பட வேண்டாம்!”
“ஊஹும்” என்று மறுத்து, சிறுவன் பெரியவரின் கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்..
“பரவாயில்லையே, நல்லா புடிச்சுக்கிட்டியே,, இந்த அழுகற உடம்ப புடிச்சு என்னடா பிரயோஜனம், மனசுல புடிக்கணும், மனசு கூட உடம்போட போயிடும், உள்ளத்துல புடிக்கணும்டா.. அது தாண்டா ஸோல் காஸ்ஷ் (Soul Cache) ..!”
சிறுவனுக்கே புரியாத வார்த்தை இது! அவ்வப்போது பல மொழிகளில் வார்த்தை ஜாலமாடுவதுதான் அவருக்குக் கைவந்த கலை ஆயிற்றே!
“சரி சரி, வா, வா ரொம்ப டயர்டா இருக்க இல்ல. அடடா முட்டியெல்லாம் கண்ராவியா இருக்க,. எங்கடா விழுந்த..?”
சிறுவன் பரிதாபமாக அவரைப் பார்த்திட... அவர் குறும்புப் புன்னகையுடன், அவனைத் தன் மடியில் படுக்க வைத்து தலையை அன்புடன் கோதிடவே., அடுத்த நிமிடமே சிறுவன் தூங்கி விட்டான்.. அவர் தம் திருவிரல்களில்தான் நித்ரா தேவி நடனமிடுகிறாளோ!!
........... திடீரென்று... ஏதோ சப்தம் கேட்டு சிறுவந் அடித்துப் பிடித்துக் கொண்டு, அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்திட... பெரியவர் கூக்குரலிட்டுக் கொண்டு இருந்தார்..!

“ஏண்டா, கோயில்லா படுத்துத் மலைப் பாம்பா பொறப்பு எடுப்பாங்கன்னு,, சொல்லியிருக்கேனுல்ல.. உனக்கு அறிவில்லை..!! பெரியவர் கசமூசாவென்று. உரத்த குரலில் ஊரையே கூட்டும் வண்ணம் கத்திக் கொண்டிருந்தார்.. “நேரே போய் அங்காளிய ஒரு ஐம்பது சுத்து... ஆமாண்டா தூங்கினதுக்கு தண்டனைடா.... என்ன முழிக்கிறே... ஏதோ இந்த அம்பது சுத்துல ஒனக்கு மலைப்பாம்பு பொறவி இல்லாம பண்றோமே.. அதுவே பெரிய விஷயம்டா... ஓடு. ஓடு....  சுத்திட்டு வா .. போ.. போ!”
பெரியவர் ரொம்ப விரட்டிடவே ஏற்கனவே முட்டிக் கால்களில் ரணமயமாய் நின்று கொண்டிருந்த சிறுவனுக்கு....கிட்டத்தட்ட வெறுப்பே வந்து விட்டது.. பிள்ளையைக் கிள்ளியும் விட்டுத் தொட்டிலையும் ஆட்டுகிறாரே!
“வூ.... “ ஏதோ ஒன்று பொட்டுத் தெரித்தாற் போல் உதித்திடவே, சிறுவன் அப்போது தான் தன் முழங்கால்களைப் பார்த்தான்... நன்றாக சோப்புப் போட்டு அலம்பினாற் போல  பளிச்! ..பளிச்..! பளிச்.!!! ரண காயங்களைக் காணவில்லை! அவற்றின் சுவடே தெரியவில்லை! சிறுவன் வெட்கத்துடன் பெரியவரைப் பார்த்திட, அவர் நறுக்கென்று தலையில் கொட்டிடவே, சிறுவன், “வாத்யாரே, நீ தெனமும் இப்படி செஞ்சு விட்டாக்க ஆயிரத்தெட்டு வாட்டி என்ன, கோடியெட்டு வாட்டி அங்காளி அம்பாளை சுத்துவேன் வாத்யாரே!”
பரம சந்தோஷத்துடன் விருட்டென்று பறந்த சிறுவன் சில விநாடிகளுக்குள் முதல் சுற்றை முடித்து விட்டு, “வாத்யாரே.... நாளக்கி....” ஏதோ சொல்ல ஆரம்பித்தவன்... ஏதிரே பார்த்திட.. அங்கு பெரியவரைக் காணவில்லை..! கோயிலைச் சுற்றி எங்கும் பார்த்து விட்டான். சிறுவன் தன்னையுமறியாமல் அவர் லீலைகளை எண்ணி உரக்கச் சிரித்துவிட்டான்.!
(குருவின் பின்னால்) சுற்றினால் கிட்டும் சுந்தரானந்தச் சிரிப்பு அது!! ஒரு கோயிலை பிரதட்சிணம் செய்வதால் கடந்த, நடப்பு, எதிர்கால வினைகளுக்கெல்லாம் எத்தகைய எளிய தெய்வீகத் தீர்வுகள் குருவருளால் கிட்டுகின்றன என்பதை சிறுவன் அன்றுதான் உணர்ந்தான். .. இல்லையில்லை.. உணர்விக்கப்பட்டான், நீங்களும் தானே..!

சித்ரா பௌர்ணமி கிரிவலம்

உங்கள் தவறுகளுக்குத் தக்க பிராயசித்தம் தரும் பிரமாதி வருட சித்திரா பௌர்ணமி கிரிவலம்!  .. அருணாசல  கிரிவலம் வந்திடுவீர்! ... ஸ்ரீகாயத்ரீ மந்திர அர்க்ய பூஜை செய்தீடுவீர்! .. சூரிய பகவானுக்கு உதவிடுவீர்!... பெரும்பாலும் ஆயுளில் ஒருமுறை வருகின்ற பிராயசித்த வருட சித்ரா பௌர்ணமி அண்ணாமலை கிரிவலத்தின் போது அர்க்யம் தந்து சூரிய பகவானுக்கு அருள் கூட்டுவீர்களாக..! 
தீய சக்திகளை வென்று தினமும் நமக்கு அருள்புரியும் சூரிய பகவானுக்கும் உதவும் வகையில் விளங்குவதே  அர்க்ய பூஜை! உலகில் எங்கு ஸ்ரீகாயத்ரீ மந்திர அர்க்யம் அளித்தாலும் அதன் பலன்களை பூமாதேவி பெற்றிட, அருணாசலத்தில் தான் சூரியபகவான் அவற்றை அக்கினி கிரணங்களாகப் பெறுகின்றார்..  தினந்தோறும் விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்னர் மந்தேஹர் என்னும் அசுரர்கள் சூரிய ஒளியைப் படர விடாவண்ணம் தடுத்துப் போரிடுகின்றார்கள். பாற்கடலில் அமிர்தம் பெற இயலாமற் போனமையும் இந்த அசுர சக்திகளின் சினப் போரிற்கு ஒரு காரணமாகும். மிகவும் வலிமை வாய்ந்த இந்த அசுரர்களை எதிர்த்துப் போரிடுவது என்பது எளிதல்லவே!
காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளுக்குரித்தான சந்தியாவந்தன வழிபாடுகளின் அங்கங்களுள் ஒன்றாக ஸ்ரீகாயத்ரீ அர்க்ய/நீர்த் தாரை வழிபாடு விளங்குகின்றது அல்லவா! இதனைப் பற்றிய விளக்கங்களை இவ்விதழில் மற்றொரு பகுதியில் காணலாம். “காணாமல், கோணாமல், கண்டு கொடு” என்ற அர்க்ய பூஜை நேரத்திற்கான பரிபாஷைக் காலக் குறிப்பும் உண்டு.
1. காணாமல் = காலையில் சூரிய உதயத்திற்கு முன்னாலும், அதாவது சூரியனைக் காணாமலும்.
2. கோணாமல் = பகல் உச்சிப் பொழுது நேரத்தில் தலைக்கு நேராக (கோணல் நோக்கில் இல்லாமல் செங்குத்தாக) சூரியன் இருக்கும் போதும்.
3. கண்டு – மாலையில் சூரியன் மறையும் போது அதனைக் கண்டும்.
4. கொடு – ஸ்ரீகாயத்ரீ மந்திர அர்க்ய/நீர்த்தாரை பூஜையைச் செய்!
இவ்வாறு சரியான நேரத்தில் செய்யப்படுகின்ற நீர்த்தாரை பூஜையின் பலாபலன்கள் தாம் நமக்குப் பல விதங்களில் உதவுவது மட்டுமின்றி ஸ்ரீசூரிய பகவானுக்கும் ஸ்ரீகாயத்ரீ மந்திர அர்க்ய “த்ரிகுண ஜோதி” சக்தியை அளித்து தினமும் மந்தேஹர் என்னும் அசுர சைன்யத்தை வெல்லும் வண்ணம் சூரிய பகவானுக்குப் பேருதவி புரிகின்றது..
ஆனால் தற்காலத்தில் நீர்த்தாரை பூஜையைச் செய்பவர்கள் அருகிவிட்டார்களே! என் செய்வது? மேற்கண்ட புனிதமான கால நேரத்தில் செய்யப்படும் நீர்த்தாரை பூஜையின் பலாபலன்கள் தாம் ஸ்ரீசூரியபகவானுக்கு உதவிடுமே தவிர, காலதாமதமாகச் செய்யப்படும் அர்க்ய பூஜைகளின் பலாபலன்கள் மந்தேஹர் அசுரர்களுக்குப் போய்விடும்.. ஏனெனில், அவர்கள் தான் காலதாமதமாகச் செய்யப்படும் பூஜா பலன்களைப் பெறும் சக்தியை வரமாகப் பெற்றிருக்கின்றார்கள் ! போயும் போயும் ராட்ச்ச, தீய சக்திளையா வளர்ப்பது? தற்காலத்தில் சந்தியாவந்தன வழிபாடு, அர்க்ய பூஜை செவ்வோரும் ஆபீஸ், வியாபாரம் மற்றும் பல காரணங்களினால் மிகவும் தாமதமாக நீர்த்தாரை பூஜை செய்து மந்தேஹ அரக்க சக்திக்குத்தான் வழிவகுக்கின்றார்கள். இது சூரியபகவானுக்குச் செய்கின்ற துன்பம் அல்லவா!
மனசாட்சிக்கு விரோதமில்லாத, தவிர்க்க முடியாத தெய்வீக காரணங்களுக்காக மட்டும் தான் பிராயச்சித்த அர்க்ய தளர்வு விதியைப் பயன்படுத்தலாமே தவிர பிராயச்சித்த அர்க்யம் எனப்படுவதைத் தக்க காரணமின்றி செய்யக்கூடாது. காரணமில்லாது தாமத பூஜைக்கான கூடுதல் அர்க்யங்களினால் நல்ல பலன் கிடையாது என்பதை உணர்க! எனவே, நாம் தினசரி வாழ்வில் மூன்று வேளையும், ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஜபித்து மூன்று முறை அர்க்ய நீர்த் தாரை வார்த்து  ஸ்ரீசூரிய பகவானுக்கு உதவிட வேண்டும்.
இதுவரையில் ஸ்ரீகாயத்ரீ நீர்த்தாரை பூஜையைப் பற்றி அறிந்திடவில்லை. அறிந்தாலும் சரிவர அர்க்யம்தனை மூன்று வேளைகளிலும் அளிப்பதலில்லை. இதுவரை தவறியதற்கான பிராயசித்தமாக என் செய்வது? இதற்குரிய பிராயசித்தம் தருவதாக அமைவது தான் வருகின்ற பிரமாதி வருட சித்திரா பௌர்ணமி கிரிவலம்..! மேலும் பிரமாதி வருடத்தில் தான் பல தேவாதி தேவ மூர்த்திகளுக்கும் பலவிதமான பிராயச்சித்த வழிமுறைகள் அளிக்கப்பட்டன.. ஈஸ்வரி பெற்ற சில சாபங்கள், ஸ்ரீபிரம்மா செய்த தவறுகள், அம்மையப்பனைப் பிரிந்த ஸ்ரீமுருகன், ஸ்ரீநாரத முனிவர் ஆட்பட்ட தவறுகள் போன்று பல தேவாதி தேவமூர்த்திகளும், மஹரிஷிகளும் தங்களுடைய தவறுகளுக்காக பிரமாதி வருடம் வரை பலவிதமான தவக்கோலங்களுடன் காத்திருந்து பிரயாசித்த வழிமுறைகளை இறைவனிடமிருந்து பெற்றனர்.
எனவே பிரமாதி தமிழ் வருடத்தினை “பிராயசித்த ஆண்டாக” வழிபட்டு வாழ்க்கையில் செய்த தவறுகளுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டு சித்திரா பௌர்ணமியில் கிரிவலம் வந்து ஏனைய பிரமாதி வருட நாட்களிலும் பௌர்ணமி திதிகளிலும் இயன்ற போதெல்லாம் கிரிவலம் வந்து தக்க பிராய சித்தத்தைப் பெறுவதற்கான நல்வழிகளைக் காண்பீர்களாக! வெறுமனே சுற்றி வந்தால் எத்தகைய கொடிய தவறுகளுக்கும் பிராயசித்தம் கிட்டிடுமா? ஆழ்ந்த நம்பிக்கை எதைத்தான் அளித்திடாது? தார்மீகமான பிராயசித்தம் எனில் செய்த தவறுகளை உணர்ந்து மீண்டும் அதைச் செய்யாதிருந்து, தவறுகளினால் பாதிக்கப்பட்டோருக்குத் தக்க நிவாரணங்கள் அளிப்பதுமாகும். இதற்குரிய மனப்பக்குவத்தை, சக்தியை, ஆற்றலை, நல்வசதியை, நம்பிக்கையை, தெய்வ பக்தியைத் தருவதே பிரயாசித்த வழிபாடாகும்..
இரு அர்க்ய நீர்த்தாரை பூஜைகள்
எனவே வரும் பிரமாதி ஆண்டு சித்திரா பௌர்ணமியில் உங்களுடைய வாழ்க்கைத் தவறுகளுக்காக இரண்டு அர்க்ய வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்...
1. ஸ்ரீகாயத்ரீ மந்திர அர்க்யம்! சூரிய, சந்திர மூர்த்திகள் தாம் நம் வாழ்க்கையோடு இணைந்து அருள்புரிந்து வருபவர்கள். நம் தவறுகளுக்கான தீய சக்திகளை, பல கர்மவினைகளை பஸ்மம் செய்திடவும், மந்தேஹர் அசுரர்களை வென்று தம் சூரிய கிரணங்களைப் பாய்ச்சிட சூரிய பகவானுக்கு தினமும் உதவும் வண்ணமும் அண்ணாமலை கிரிவலப் பகுதியில் சூரிய லிங்கப் பகுதியில் எந்த இடத்திலும் மலையை நோக்கிய வண்ணம் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஓதியவாறே, குதிகால்களை உயர்த்தி நன்றாக நிமிர்ந்து மலையை நோக்கி நின்று
ஓம் பூர்புவஸுவஹ தத்ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோந: ப்ரசோதயாத்
என்று ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஓதி இரு கரங்களிலும் நீரை ஏந்தி மந்திரம் ஜபித்து நீர்த்தாரையாக, நீரை பூமியில் விட்டு விடவும். இவ்வாறு மூன்று அர்க்யங்கள்! இதன் பலன்கள் சூரிய பகவானைச் சென்றடைகின்றன. அதாவது பூலோகத்தில் யார், எங்கு ஸ்ரீகாயத்ரீ அர்க்ய/நீர்த்தாரை பூஜை செய்தாலும் அது திருஅண்ணாமலை தெய்வ பூமியை அடைந்துதான் இங்கிருந்தே ஸ்ரீசூரிய பகவான் அதனை பெற்று மந்தேஹ அரக்க சக்திகளை வெல்லும் தெய்வீக சக்தியை தினந்தோறும் பெறுகின்றார். ஸ்ரீசூரிய பகவானுக்கே உதவுகின்ற நீர்த்தாரை பூஜை என்றால் என்னே இதன் மஹிமை! இதை நாம் செய்திட என்னே பாக்யம் செய்திருக்க வேண்டும்..
சில தெளிவுரைகள் :- ஆமாம், சரியான நேரத்தில் அல்லவா ஸ்ரீகாயத்ரீ அர்க்யம் (மாலையில் சூரிய அஸ்தமனம் கண்டபின் தானே) அளிக்க வேண்டும்.. கிரிவலத்தில் சூரிய லிங்கப் பகுதியை அடையும் போது நேரம் தவறி, இரவு நேரம் வந்துவிட்டால் என் செய்வது? அல்லது சூரியன் மறைந்த பின்னர் கிரிவலம் தொடங்குவோர் என் செய்வது? தெய்வ காரணங்களுக்காகப் பிராயசித்த அர்க்யம் என்ற ஒன்று உண்டு என்று சொன்னோமல்லவா?
திருஅண்ணாமலை கிரிவலம் பரிபூரணமாக தெய்வ காரணமாக அமைவதால் சூரிய அஸ்தமன நேரத்தில் திருஅண்ணாமலையை கிரிவலம் வருபவர்கள் தாங்கள் கிரிவலத்தின் சூரிய அஸ்தமன நேரத்தைக் கடந்த பின்னர் சூரிய லிங்கப் பகுதியை அடைவோர் முதலில் மூன்று அர்க்யங்களை அளித்து விட்டுப் பிறகு இங்கு பிராயச்சித்த அர்க்யமாக விட்டுப் பிறகு இங்கு பிராயசித்த அர்க்யமாக மேலும் கூடுதலாக மூன்று முறை ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஓதி, நீர்த்தாரை அர்க்யப் பூஜையை மலையை நோக்கிய அளித்திட வேண்டும்..
மேலும், பிரமாதி வருடம் பிராயசித்த நல்வருடமாக விளங்குவதால், பிரமாதி வருடச் சித்திரா பௌர்ணமி அன்று திருஅண்ணாமலையைக் கிரிவலம் வர இயலாதோர், இவ்வாண்டு முழுவதும் எந்நாளிலும் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து சூரிய லிங்க சந்நிதிப் பகுதியில், குறித்த பிராயசித்த அர்க்யங்களோடு அளிக்கலாம். இதன் மூலம் இதுவரையில் வாழ்க்கையில் செய்த தவறுகளுக்கெல்லாம், அருணாசல கிரிவல ஸ்ரீகாயத்ரீ அர்க்ய நீர்த் தாரைப் பூஜை தக்க பிராயசித்த நல்வழிமுறைகளைத் தந்தருள்கிறது. இது பெறுதற்கரிய பாக்கியம் தானே!
ஆனால் தவறுகள் தொடர்ந்தால் பெருந் தண்டனை கூடிடும்..!  இவ்வாறு கூட்டம் காரணமாகவோ வேறு பல தார்மீக காரணங்களுக்காகவோ சூரிய லிங்கப் பகுதியில் அர்க்ய பூஜை செய்ய இயலாவிடில், மிகவும் சிறப்புடைய பிரமாதி வருட சித்திரா பௌர்ணமி தினத்தன்றோ அல்லது பிரமாதி வருடத்தின் எந்நாளிலும் கிரிவலம் மேற்கொள்வோர், காலையில் சூரிய உதயத்திற்கு முன்னும், மதியம் உச்சி நேரத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னும், தாங்கள் கிரிவலத்தின் எப்பகுதியில் இருப்பினும், தக்க நேரத்தில் மலையை நோக்கி மூன்று முறை ஸ்ரீகாயத்ரீ அர்க்ய நீர்த்தாரை பூஜையை மேற்கொள்ளலாம்.
இதை சரியான நேரத்தில் செய்யமுடியா வண்ணம், கிரிவல நேரமோ அல்லது உங்கள் சந்தர்ப்ப சூழ்நிலை அமைந்து விட்டால் அல்லது மேலே கூறியுள்ள காலங்கட்குரித்தான அர்க்ய நீர்த்தாரை நேரங்கள் தவறிவிட்டால், கிரிவலத்தில் மூன்று முறை ஸ்ரீகாயத்ரீ அர்க்ய பூஜையை அளித்து, பிராயசித்தமாக மேலும் மூன்று அர்க்ய நீர்த் தாரையை இட்டு ஸ்ரீஅருணாசலேஸ்வரரையும், ஸ்ரீசூரிய பகவானையும் கிரிவலத்தின் எவ்விடத்திலும் வணங்கலாம், அண்ணாமலை கிரிவலத்திற்கு மட்டும் உரிய பிராயசித்த அர்க்ய நியதி!
2. குரு காயத்ரீ அர்க்ய பூஜை
இரண்டாம் வகையான அர்க்ய நீர்த் தாரைப் பூஜை பிரமாதி வருட்த்திற்குரியதாக சிறப்பானதாக விளங்குகிறது. .இந்த அர்க்ய நீர்த் தாரைப் பூஜையை கிரிவலத்தின் எப்பகுதியிலும், எந்நேரத்திலும் எந்நாளிலும் செய்திடலாம்.. கிரிவலம் வரும் போது மலையை நோக்கி இந்த அர்க்ய பூஜையை நிகழ்த்திட வேண்டும் என்பதே இதன் எளிய விதிமுறையாகும்.. கோடானு கோடி யுகமாக, திருஅருணாசலத்தை தினந்தோறும், சூட்சுமமாக வலம் வருபவர்களில் ஸ்ரீஅகஸ்திய மாமுனியும் ஒருவர் ஆவார். சித்புருஷர்களின் முதன் முழுப் பொருளாகவும், மஹரிஷிகளின் மறையுரு மாமுனியாயும் விளங்கும் ஸ்ரீஅகஸ்திய பெருமானுக்குரித்தானதாக,
“ஓம் தத்புருஷாய வித்மஹே லோபாமுத்ரா சமேதாய தீமஹி
தந்நோ அகஸ்திய ப்ரசோதயாத்”
என்ற ஸ்ரீஅகஸ்திய சித்புருஷருக்குரித்தான ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஓதி, “ஸ்ரீஅகஸ்தியப் பெருமானின் திருவருளால் ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு இந்த நீர்த்தாரைப் பூஜையை அர்ப்பணிக்கின்றேன்” என சங்கல்பம் செய்து கொண்டு,,
“ஓம் தத் புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி
தந்நோ அருணாசல ப்ரசோதயாத்”
என்று ஸ்ரீஅண்ணாமலையாருக்கான ஸ்ரீகாயத்ரீ மந்திரம் மும்முறை ஓதி மும்முறை நீர்த்தாரைப் பூஜை செய்து வழிபடுதல் வேண்டும்.
மீண்டும் குறிப்பிடுகின்றோம் இந்த அருணாசல நீர்த்தாரை அர்க்யப் பூஜையை, கிரிவலத்தின் எந்நாளிலும், எந்நேரத்திலும், எவ்விடத்திலும், திருஅண்ணாமலையாரை நோக்கிச் செய்திடலாம்... முதலில் ஸ்ரீஅகஸ்திய காயத்ரீ மந்திரம் ஓதி, “ஸ்ரீஅகஸ்தியப் பெருமானின் திருவருளால் இந்த அருணாசல அர்க்ய நீர்த்தாரைப் பூஜையை அர்ப்பணிக்கிறேன்” என சங்கல்பம் செய்து கொண்டு, பின் ஸ்ரீஅருணாசல காயத்ரீ மந்திரத்தை ஓதி மூன்று முறை அர்க்ய தாரைப் பூஜையைச் செய்தல் வேண்டும்.
தமிழில் நீர்த்தாரை பூஜை :
மேற்கண்ட வடமொழி காயத்ரீ மந்திரத்தை ஓதி நீர்த்தாரைப் பூஜையைச் செய்ய இயலாதோர், மிகவும் எளிய தமிழில்
முழு முதற் சித்தனே! மாமுனி முதல்வனே!
தொழுமலர்ப் பாதம் நாடித் துதிக்கின்றேன் அகத்திய தேவா!
என்று சங்கல்பம் செய்து கொண்டு,
மூல ஒளிப் பொருளே!
முழுமைப் பரம்பொருளே!
தூல ஒளிச் சுடரே!
திருஅருணைப் பேரொளியே!
ஞால நீர்த்தாரைதனை
அர்ப்பணித்தேன்!
அர்ப்பணித்தேன்!
அர்ப்பணித்தேன்!
என ஓதி நீர்த் தாரையை அர்க்ய பூஜையாக மூன்று முறை செய்து பெரும் பயனைப் பெறுவீர்களாக! ஜாதி, மத, இன குல பேதமின்றி குழந்தைகள் முதல் பெரியோர் வரை, யாவரும் இந்த அர்க்ய நீர்த்தாரைப் பூஜையைச் செய்திடலாம்.
இந்த அர்க்ய நீர்த்தாரைப் பூஜைகளால் ஸ்ரீசூரிய பகவான், மந்தேஹ அரக்கர்களை வென்று தினந்தோறும், பூலோகத்திலுள்ள ஜீவன்கட்கும், சூரிய ஜீவக் கதிர் சக்தியை அளிக்கும் கதிரவனுக்குக் கவினுற உதவி செய்வது மட்டுமின்றி, நம் வாழ்க்கைத் தவறுகட்கெல்லாம், நல்லப் பிராயசித்த பூஜையாகவும் அமைவதால், இப்பிரமாதி வருடக் கிரிவலம் குறிப்பாக சித்திரா பௌர்ணமிக் கிரிவலம் எவ்வளவு உயர்ந்தது என நாம் உணரலாம்.
பெரும்பாலு வாழ்வில் ஒரு முறையே வருகின்ற இப்பிரமாதி வருடச் சித்திரா பௌர்ணமி கிரிவலம்! இவ்வாண்டில் செய்யப்படுகின்ற கிரிவலமும், பெறுதற்கரிய ஐஸ்வர்யம் என்பதை உணர்ந்து இப்பிறவியிலேயே செயல்பட வேண்டுகிறோம். ஸ்ரீகாயத்ரீ அர்க்ய நீர்த்தாரைப் பூஜையைப் பற்றிய மேலும் அரிய விளக்கங்களை அறிய வேண்டுவோர், ஸ்ரீஅகஸ்திய விஜயம் அலுவலகத்திற்கோ, திருஅண்ணாமலை ஆஸ்ரமத்திற்கோ, கடிதம் எழுதிடில் தக்க விளக்கங்கள் அளிக்கப்படும். சுயமுகவரி இட்ட தபால் கவரை இணைக்க மறவாதீர்கள்.. பெறுதற்கரியப் பூஜையாக விளங்கும் இந்த அர்க்யப் பூஜையின் விளக்கங்களை சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் பெற்று இதன் பலனைப் உய்த்திட நாம் அருணாசலப் பெம்மானைப் பிரார்த்திக்கின்றோம்.
அர்க்ய பூஜை என்றால் என்ன?
பலவிதமான வழிபாடுகளில் நீர்த்தாரை பூஜையான அர்க்ய பூஜையும் ஒன்றாகும்.. கார்ய சித்தியோடு வெவ்வேறு விதமான செயல்களினால் விளைகின்ற கர்ம வினைகளுக்கான தீர்வாகவும் பல பூஜைகள் அமைகின்றன.. ஜாதி, குல பேதமின்றி யாவரும் அர்க்ய பூஜையைக் கடைபிடித்திடலாம்! (அர்க்யம் = நீர்த்தாரை பூஜை)
தர்ப்பணம் அளித்தல், அர்க்யம் அளித்தல் என்று நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம் அல்லவா? தர்ப்பணத்தில் நீரை தாரையாக வார்த்து அளிப்பதற்கும், சந்தியாவந்தன பூஜையில் வருகின்ற காயத்ரீ மந்திர அர்க்யம் எனப்படும் அர்க்ய நீர்த்தாரைப் பூஜைக்கும் உள்ள வித்யாசம் என்ன? எவ்வாறு நாம் இறைவனைப் பல துதிகளாலும், புஷ்பங்களாலும், துளஸி, வில்வம் போன்ற தெய்வீக மூலிகைத் தளங்களாலும், ஹோமம், காவடி போன்று பலவிதமான முறைகளில் நாம் அர்ச்சித்து ஆராதனை செய்கிறோமோ, இதே போல் பரிசுத்தமான நீரைக் கொண்டு இறைவனுக்கு நாம் அளிக்கின்ற பூஜை முறையே அர்க்ய பூஜையாகும்.
நீரின்றியும், நெருப்பின்றியும் உயிர் வாழ்க்கை இயங்க முடியாதல்லவா? உண்மையில் பிரளய காலத்தில், பல கோடி லோகங்களிலும் நீர்தான் சூழ்ந்து இப்பிரபஞ்ச உலக வாழ்க்கைக்கு ஒரு முடிவைத் தருகின்றது. அதேபோல் மகாபிரளய காலம் முடிந்தபின் மீண்டும் சிருஷ்டி துவங்கும் போது, முதலில் அக்னியும், நீரும்தான் தோன்றுகின்றன.. இதன் பின்னரே அக்னி, ஜல சம்பந்தத்திலிருந்து தான் பலகோடி உயிரினங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன... எனவேதான், நம் அனைவருக்கும் தாய், தந்தையாக விளங்குவது அக்னியும், நீரும் ஆகும். ஏன், நம் உடலே இந்த இரண்டும் சம்பந்தப்பட்டது தானே!
உணவு ஒரு ஹோம ஆஹுதியே!
நம் உடலை ஹோம குண்டமாகக் கருதி அதனுள் நாம் செலுத்துகின்ற உணவை ஆஹுதியாகக் கொண்டு நம் உடலில் உறையும் ஜீவாக்னியில் நாம் தினமும் உணவு என்னும் முறையில் ஹோமம் செய்து கொண்டு தான் உள்ளோம். அதாவது ஒவ்வொரு முறையும் நாம் உணவை உண்ணும் போதும், தாக சாந்திக்காக நீரைப் பருகும் போதும், நாம் நிகழ்த்துவது இந்த உடலுக்கான ஒரு ஹோமமே! ஆனால், நாம் உணவு உண்பதை ஒரு தெய்வீகக் காரியம் என்பதாக எண்ணாமல், எப்பொழுதெல்லாம், வாய்ப்புக் கிட்டுகிறதோ அப்போதெல்லாம் எதையாவது மென்று தின்று இதனை ஒரு சாதாரண காரியமாக ஆக்கி விட்டோமே, என்னே அறியாமை இது!
பெறற்கரிய இந்த மானுடப் பிறவிக்கு மூலமான இந்த உடலைப் பேணுகின்ற உணவைச் சாதாரணமாக கருதிடலாமா? இதனால் தான் காஞ்சி ஸ்ரீபரம்மாச்சார்யார் போன்ற மஹான்கள் யாவரும் உணவு ஏற்பதை ஒரு தெய்வீக வழிபாடாக பவித்ரமாக கருதி, அதற்கு மிகுந்த மகத்துவம் தந்தமையால் தான், அவர்களெல்லாம், அன்றும், இன்றும், என்றும் மஹான்களாகப் பிரகாசிக்கின்றார்கள். எனவே, இனியேனும் நாம் எதை மென்றாலும், தின்றாலும், உண்டாலும், அருந்தினாலும், குறைந்தது பன்னிரெண்டு முறை ஸ்ரீகாயத்ரீ மந்திரம் அல்லது ஏதேனும் இறை நாமம் ஓதியபின் எதையும் உண்டால் தான், உணவு ஏற்பதையே ஒரு பவித்ரமான புனிதமான வழிபாடாய் ஹோமமாக நாம் மாற்றிக் கொள்ள இயலும்.
எனவே சாப்பிடுதல் என்பது ஒரு ஹோம பூஜை போலத்தான், இல்லை, இல்லை உண்மையாகவே ஒரு ஹோமம் தான் என்பதை அறிந்திடுங்கள்! சிறு கைக் குழந்தைக்கு உண்வூட்டும் தாயோ, பாட்டியோ உணவையோ, பாலையோ ஊட்டும், முன்னும், ஊட்டிய பின்னும் தலையைச் சுற்றி வாயுப் பரிமாண வழிபாடு நிகத்துவதைக் கண்டிருப்பீர்கள். உண்மையில் உணவை ஏற்கும் முன்னும், பின்னும் சொல்ல வேண்டிய மந்திரங்களும் உண்டு. சாப்பிடுவதற்கு முன் சொல்லப்படு மந்திரங்கள், நமது உள் உடலாகிய ஹோம குண்டத்தின் அடியில் வைக்கப்படுகின்ற செங்கல், மணல் மற்றும் வாழை இலை போன்று பெறுதற்கரிய இந்த மானுட உடலைப் பேணும் வகையில் BASE ஆக அமைகிறது. இதைப் போல், உணவு உண்டபின் ஓதப்படும் உதரவிதான மந்திரங்கள் உணவைத் தட்டு வைத்து மூடுவது போல் ஆகிறது. மேலும் ஹோமகுண்டத்தின் மேற்பரப்பில் அமைகின்ற பூர்ண ஆஹுதியுடன் (உதரவிதானம்) சேர்ந்த பஸ்மமாகவும் இது நிறைந்து விளங்குகின்றது..
இதிலிருந்து நாம் வலியுறுத்திச் சொல்ல விழைவது என்னவென்றால் டிபனோ, சாப்பாடோ உணவு உண்பதை மெகானிக்கலாக மிகவும் சர்வ சாதாரணமாக கருதி விடாதீர்கள். ஒரு தம்ளர் தண்ணீரைப் பருகினால் கூட குறைந்தது பன்னிரெண்டு முறை ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தையோ அல்லது ஓம ்நமசிவாய, ஓம் நமோ நாராயணாய என்று தங்களுக்கு மிகவும் விருப்பமான இறைநாமம் ஓதி, அருந்துதலோ, உண்ணுதலோதான் மிகவும் விசேஷமானதாகும். ஏனென்றால், நம் உடல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்ற இறைவனுக்கு பரிசுத்தமான பொருளை நல்ல பிரார்த்தனையுடன் தானே நாம் படைக்க வேண்டும்...
சாப்பிடுமுன் சில பிரார்த்தனைகள் :
எங்கே ஆரம்பித்தோம்? அர்க்யம் என்றால் என்ன என்பதில் தானே! இதில் ஏன் உணவு பற்றிய குறிப்பு வரவேண்டும்? நிச்சயமாக வந்தாக வேண்டும்! ஏனென்றால், நம் பெரியோர்கள் உணவை ஏற்கும் முன், இலையையோ அல்லது தட்டையோ வலது கையில் ஏந்திய நீரால் மூன்று முறை சுற்றி விட்டு சில மந்திரங்களை ஜபித்து இறைவனை எண்ணிப் பிரார்த்தனை செய்தபின் உணவு ஏற்பதைப் பார்திருப்பீர்கள். இதுவும் ஒருவகை ஜல பூஜையின் ஓர் அங்கமாகும்! அர்க்யம் என்பதைத் தமிழில் நீர்த்தாரை வழிபாடு என்று குறிப்பிடலாம்.. நாம் உண்ணும் இடத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்வதற்கும், உணவைத் தாங்கி இருக்கின்ற இலை, தட்டைப் புனிதப்படுத்துவதற்குமாகத் தான் இந்த மூன்று ஜலச்சுற்று நல்லதோர்  வழிபாடாக அமைகிறது..
முதல் சுற்றில் நம் குலதெய்வப் பிரார்த்தனையும், இரண்டாம் சுற்றில் இஷ்ட தெய்வப் பிரார்த்தனையும், மூன்றாம் சுற்றில் நமக்கு நாள்தோறும் உணவைப் படைக்கின்ற ஸ்ரீஅன்னபூரணியின் பிரார்த்தனையாகவும் அமையட்டும்... இதே போன்று உணவு அருந்தி முடித்த பின்னர், இடவலமாக மூன்று முறை நீரைக் கையில் ஏந்தி, சில துதிகளை ஓதி இலையையோ, தட்டையோ சுற்றி பிரார்த்தனை செய்தல் வேண்டும்..
“இறைவா! அன்னபூரணி தேவியே! இந்த உணவைப் படைத்து இந்த உடலை வளர்த்திட உன் கருணையே முதற் காரணமாகும். என் உடலுக்குள் சென்றுள்ள உணவானது, நன்முறையில் ஜீரணமாகி அடியேனுக்கு நற்சக்தியளித்து, நல்ல இறைப்பணியை ஆற்றி, உலகிற்கு இவ்வுடலானது நன்முறையில் பயன்படும் வண்ணம் அமைய அருள்புரிய வேண்டும்!” என்பதே உணவின் முன்னும் பின்னும் செய்ய வேண்டிய பிரார்த்தனையாகும்.. இதனைச் செந்தமிழில் ஓதியும் அன்ன பூஜையைச் செய்திடலாம்.. இவ்வாறாக இறைவனிடம் அடிக்கடி உரையாடக் கற்றுக் கொள்ளுங்கள்.
ஆனால், எத்துணை பேர் இப்பிரார்த்தனையை மேற்கொள்கின்றோம்? சொல்லுங்கள் பார்க்கலாம். ஏதோ வந்தோம், அவசர அவசரமாகத் தின்றோம், சென்றோம் என்பது தானே இன்றைய கலியுக உணவு வழக்கமாக மாறியுள்ளது! எந்த இறைவனுடைய அருட்கடாட்சத்தால் நாம் ஒவ்வொரு வினாடியும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமோ அந்த இறைவனை ஒரு வினாடி கூட மறவாமல் நினைப்பது தானே நாம் இந்த மனிதப் பிறவியை எடுத்ததின் குறிக்கோளாகும். பரவாயில்லை, நடந்தது நடந்து விட்டது. இனியேனும் உண்ணுதலோ, அருந்துதலோ எதைச் செய்தாலும் நல்ல இறை பிரார்த்தனையுடன் கூடியதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள உறுதி கொள்வோம்..
அக்னி பகவானும், ஜல தேவதைகளும் எப்போழுதுமே சூரிய,சந்திர மூர்த்திகளைப் போல சாட்சியாய் நின்று நமக்கு அருள்பாலிக்கின்றனர்.. இவர்களுடைய கவனிப்பு இல்லாமல் நாம் எந்த ஒரு செயலையும், நல்லதோ, கெட்டதோ எதையும் நிகழ்த்த இயலாது. இதனால் தான் சூரிய சந்திரர்கள் சாட்சியாக உள்ளளவும் இந்த தானம் என்று அக்காலத்தில் மன்னர்கள் பலவிதமான பத்திரங்கள், கல்வெட்டுக்களில் உருவாக்கினார்கள். ஏனென்றால், இவ்வுலகில் என்றும் நிலைத்து நிற்பது, அக்னியும், நீரும் ஆகும். உயிர் வாழ்க்கைக்கு மிகவும் அத்யாவசியமானவை இவை., இவை இயற்கைப் பொருளாகவே கிட்டுகின்றன. எவ்விதக் கலப்படமுமின்றி பிரபஞ்சத்தில் கிட்டும் மூலப் பொருட்களில், அக்னியும், நீரும் முக்கியமானவையாகும். நீரில் அசுத்தம் சேர்கின்றதே என எண்ணாதீர்கள்.. மழை நீர் என்றும் பரிசுத்தமானதே! அதில் அழுக்கையும், நாற்றத்தையும் சேர்ப்பது இம்மனித சமுதாயமே! இன்றைக்கு நாம் வாழ்கின்ற பூவுலகில், மூன்றில் இரண்டு பங்கு நீராகத் தானேயுள்ளது. கடல் நீரை மட்டும் இறைவன் உப்பு நீராக இருக்கும்படி செய்யாவிடில், அதனையும் ஆராய்ச்சி எனும் பெயரில் விஞ்ஞானம் பாழ்படுத்தியிருக்கும்..
என்னே இறைவனின் திருவிளையாடல்! ஆனால், எந்த கடல் நீரானது, உப்புக் கரிக்கிறதோ அதே கடல் நீரால் தானே மழைப் பொழிவு ஏற்பட்டு நமக்குத் தூய்மையான மழை நீர் கிட்டுகிறது... இதுவும் மகத்தான இறைக் கருணைதானே! எனவே, இறைவனுடைய பரிசுத்தப் படைப்பாக அன்றும், இன்றும், என்றும் விளங்குகின்ற நீரையும், அக்னியையும் கொண்டு நாம் செய்கின்ற வழிபாடுகட்கு மிகுந்த மகத்துவம் உண்டு. அதனால்தான், அக்னி சம்பந்தப்பட்ட ஹோமம், விளக்கு பூஜை, கற்பூர தீபம், சாம்பிராணி தூபம் போன்றவை தெய்வீக சக்தி மிக்கவையாக விளங்குகின்றன.. அதேபோல் தான், நீர் சம்பந்தப்பட்ட தர்ப்பணம், அர்க்யம், அபிஷேகம் போன்றவையும், மிகுந்த இறை சக்தியை நமக்குப் பெற்றுத் தருகின்றன.. எனவே, நீரைக் கொண்டு நாம் செய்யும் வழிபாடுகளுள் மிகவும் முக்கியமானதாக விளங்குவது அர்க்ய பூஜையாகும்.
அர்க்யம் என்றால், நம் உள்ளங்கையில் நீரை ஏந்தி, மந்திரங்களைத் துதித்து, அதனை விரல்களின் வழியே, தாரையாக ஊற்றி வேதப் பிரமாண சத்யமாக நம் பிரார்த்தனையை அர்ப்பணிப்பதாகும்.. இதன் பொருள் என்னவென்றால், பூமாதேவி சாட்சியாகவும், சூரிய, சந்திர சாட்சியாகவும், “நான் இந்த சத்தியத்தை, உண்மையை, வழிபாட்டை பிரார்த்தனையை அர்ப்பணம் செய்கின்றேன்”, என்பது இதன் பொருள் ஆகும். மேலும் அர்க்யமாகிய நீர்த் தாரையின் போது, பலவிதமான யோக நிலைகளையும், சுவாசக் கலைகளையும் கூடுதலாகச் சேர்த்து, அர்க்ய பூஜையின் மகாத்மியத்தை, சக்தியைப் பெருக்குகின்ற சிறப்பு வழிபாடுகளுமுண்டு.
காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளும் ஜாதி, குல, இன, பேதமின்றி யாவராலும் கடைபிடிக்கப்பட வேண்டிய சந்தியாவந்தன மந்திரங்களில், ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஓதி அளிக்கின்ற அர்க்யம் மிகவும் முக்கியமானதாகும். இதைப் பற்றி ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் நாம் பலமுறை விளக்கியுள்ளோம். மிகவும் சிறப்பான மந்திரங்களையும், வழிபாடுகளையும், பூஜை முறைகளையு, அவ்வப்போது வலியுறுத்தி வந்தால் தான், நாம் அவற்றை நினைவில் நிறுத்துவதோடு, மாதந்தோறும், ஆயிரக்கணக்கான புதிய வாசகர்கள் கூடுவதால் அவர்கள், மூலமாக லட்சோப லட்சம் மக்களுக்கு, அரிய பூஜைகளின் மகத்துவத்தை மீண்டும் உணர்த்துவதற்கான ஒரு நல்ல தெய்வீக வாய்ப்பாகவும் இவ்விதழ் அமைகின்றது.. நீங்கள் இதைப் படிப்பதுடன் நிறுத்தி விடாமல், உங்கள், நட்பு, உற்றம், சுற்றம், அனைவருக்கும் எடுத்துரைத்து, செய்தற்கரிய இறைப் பணியைச் செய்து, பெறுதற்கரிய இம்மானுடப் பிறவியில், சொல்லற்கரிய இறைப்பணியை ஆற்றி பிறவிப் பெரும்பயனை அடைந்திடுங்கள்!
அர்க்ய பூஜை அனைவருக்கும் உண்டு!
“எங்களுக்கு காலை, மாலை, மதியம் ஆகிய மூன்று வேலைகளிலும் செய்ய வேண்டிய, சந்தியா வந்தன மந்திரங்கள் தெரியாதே, இவையெல்லாம் வடமொழியில் உள்ளனவே”, என்று பலரும் எண்ணக்கூடும் இறைவனுக்கு எந்த மொழி பேதமும் கிடையாது, கலைவாணியின் கனிந்த கருணையாக விளங்குபவையே உலகிலுள்ள அனைத்து மொழிகளும்! அவரவருக்குரிய தாய் மொழியிலேயே சந்தியா வந்தன மந்திரங்களை ஓதிடலாம்.. அதனால் தான் செந்தமிழிலே, தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம், திருப்புகழ் போன்ற தமிழ் மறைத் துதிகளும், வள்ளலாரின் அருட்பாக்களும், இன்னும் எத்துணையோ கோடி இறைத் துதி தொகுப்புகளும், ஐஸ்வர்யமாய்க் குவிந்துள்ளன.. இவையாவும் நான்மறைகளின் திரட்சியாக அவற்றிற்கிணையாக உள்ள தமிழ் மறை மந்திரங்களாகும்.
அப்பர் பெருமானாம் நாவுக்கரசர் வடமொழி ருத்திர மந்திரத்திற்கீடான தமிழ்த் தேவாரப் பாக்களை ஈஸ்வரனின் முத்திரையோடு திருத்தாண்டகத்தை நமக்குப் பதித்துத்தந்துள்ளார். இதை விட நமக்கு வேறென்ன பாக்கியம் வேண்டும்!? எனவே, அந்தந்த மந்திரங்களை இறைவனால், மஹரிஷிகள், முனிவர்கள், மஹான்கள் மூலமாக எம்மொழியில் அளிக்கப்பட்டுள்ளனவோ அவற்றை, அம்மொழியில் ஓதுதலே சிறப்புடையது..இது இறைவனின் பரந்த சாம்ராஜ்யம் தானே! அனைத்து மொழிகளும் கலைவாணியின் அருட்படைப்பு தானே! இன்று உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் பறவைகள், விலங்கினங்கள் என அனைத்து உயிரினங்களின் மொழிகளையும் அளித்தவளே அன்னை கலைவாணி ஆவாள்.. நமக்கெல்லாம் கல்வித் தாயாக விளங்கும் ஸ்ரீசரஸ்வதி தேவியின் திருவடிகளில் அனைத்து மொழி தேவதைகளும் சரணடைந்துள்ளன. எனவே, எந்த மொழி பேதமும் பாராது, இறைத் துதிகளை ஓதி எவ்வித இன பேதமின்றி நம் வாழ்வில் இறைத் திருப்பணியை நெறிப்படுத்திக் கொள்வோமாக!
குதிகால் யோகாசனம் :
வடமொழியிலுள்ள சந்தியா வந்தனங்களை ஒருவர் அறிந்திராவிடில், அவர் எவ்வாறு ஸ்ரீகாயத்ரீ மந்திர அர்க்ய வழிபாட்டை மேற்கொள்ள இயலும்? தினமும், காலை, மாலை, மதியம் ஆகிய மூன்று வேளைகளிலும், இரு கைகளிலும், நன்னீரை எடுத்துக் கொண்டு, நன்றாக நிமிர்ந்து நின்று குதிகால்களை நன்கு உயர்த்தி, ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஓதி, நீரைத் தாரையாக, அர்க்யமாகப் பூமியில் விடுதலே அர்க்யம் அல்லவா! பொதுவாக, சந்தியாவந்தன மந்திரத்தை அறியாதோர், மூன்று வேளைகளிலும் ஒரு நல்ல மரப்பலகையிலோ அல்லது தர்ப்பையிலோ அமர்ந்து குறைந்தது 108 முறையேனும், ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபித்து பின்னர் இந்த அர்க்ய வழிபாட்டை மேற்கொள்ளலாம். ஆனால், சந்தியா வந்தன மந்திரங்களை முழுமையாக ஓதிய பின்னர் தான் அர்க்ய வழிபாடு பரிபூரணச் சிறப்படையும் என்பதை நினவில் கொள்ளவும். ஸ்ரீசந்தியா வந்தன மந்திரங்களை முழுமையாக ஓதிய பின்னர் தான் அர்க்ய வழிபாடு பரிபூரணச் சிறப்படையும் என்பதை நினைவில் கொள்ளவும். ஸ்ரீசந்தியா வந்தன மந்திரத்தின் தமிழ் மந்திரங்களை நாம் இனி வரும் ஸ்ரீஅகஸ்திய விஜய இதழ்களில் அளிக்கவுள்ளோம்.
அர்க்யம் அனைத்துலக, சமுதாய பூஜையே!
ஸ்ரீகாயத்ரீ மந்திர அர்க்கியத்தின் போது, குதிகால்களை உயர்த்தும் போது, பூமியின் புவிஈர்ப்பு விசைக்கு, மறுபிரதிபலிப்பாக பஞ்சபூத தத்துவங்களின் திரட்சியாக விளங்கும் நம் உடலினின்று, மாத்ரு, பிருத்வி சக்திகள் எழுகின்றன.. பாதங்களின் நுனி விரல்கள், புவி விசைக்கேற்ப பூமியில் அழுந்தி இருக்க, குதி கால்களிலிருந்து, புவிஈர்ப்பதற்கு மாத்ரு, பிருத்வி ஜீரண சக்திகள் கூடிட இத்தகைய தெய்வீக சக்திகளுடன், இரு கரங்களினின்றும், நீரானது, அர்க்யமாக, தாரையாக, ஸ்ரீகாயத்ரீ மந்திர சக்தியுடன் நீரானது பூமியில் விழுகிறது. பூமியின் புவிஈர்ப்பு விசை சக்தி மட்டுமின்றி, மாத்ரு, பிருத்வி சக்தியும , அந்நீரில் சேர்ந்திருப்பதால், இந்த அர்க்ய நீர்த்தாரைக்கு மகத்தான தெய்வீக சக்திகள் ஏற்படுகின்றன.. இதனையே பலவித நல்தேவதா மூர்த்திகளும், தேவாதி தேவ மூர்த்திகளும், பெற்று உலக சமுதாயத்தின் நல்வழிக் கதிர்களாக மாற்றி நல்லருள் பாலிக்கின்றனர்..
எனவே ஜாதி, இன, குல பேதமின்றி ஒரு சாதாரண மனிதன் அளிக்கின்ற நீர்த்தாரை பூஜையால், பல கோடி தேவாதி தேவ மூர்த்திக்கும், அருட்பயன் கிட்டுகின்றதெனில், எத்தகைய அற்புத அர்க்ய நீர்த்தாரை வழிபாடாக இது மலர்கின்றது என்பதை அறிந்து கொள்ளுங்கள்... வாழ்க்கையில் இத்தகைய அர்க்ய தாரை பூஜைகளை அறிந்தோ, அறியாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ இதுவரை விட்டிருப்பினும், இப்போது முதல் இனியேனும், இதனை முறையாகச் செய்திடுவோமாக! ஆனால், அர்க்ய நீர்த்தாரை பூஜைக்கு முன்னால், சந்தியாவந்தன மந்திரங்களை ஓதிடல் வேண்டும் அல்லது குறைந்த பட்சம் 108 முறை ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஜபித்தல் வேண்டும்.
ஏனென்றால், அர்க்ய பூஜையின் போது, உடலானது, ஓரளவேனும் பரிசுத்த நிலையைப் பெற்றிருக்க வேண்டும்.. 108 முறை ஸ்ரீகாயத்ரீ மந்திரனை ஜபிக்கும் போது, திருவாய் மலர்ந்து என்று சொல்வார்களே அதே போல் நம் வாய்க்கு ஒருவித சுத்த சக்தி உண்டாகிறது.. இதனால் தானே ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஜபித்தவுடனேயே, வேறு எதையும் பேசும் முன்னர் உடனடியாக ஒரு முறை ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஓதி, குதி கால்களை உயர்த்தி, ஸ்ரீகாயத்ரீ மந்திர அர்க்யத்தை அளிக்கின்றோம்.. இது தினந்தோறும் அனைவராலும், மூன்று வேளையும், கட்டாயமாகக் கடைபிடிக்கப்பட வேண்டிய சமுதாய பூஜையாகும்.. ஏனெனில் இந்த அர்க்ய நீர்த்தாரை பூஜையின் போது இதன் பலன் மனித சமுதாயத்திற்கு மட்டுமின்றி, நம் கண்களுக்குத் தெரியாத சூட்சுமமான பல கோடி, தேவ லோகங்களில், விண்ணுலக லோகங்களில் உறைகின்ற அனைத்து கோடி நல்தேவதைகட்கும், தேவதா மூர்த்திகட்கும் இதன் பலாபலன்கள் சென்றடைகின்றன..
சூரியனின் தினசரிப் போராட்டம்!
நாம் சாதாரணமாக நினைப்பது போல், தினந்தோறும் சூரிய பகவான் காலையில் தோன்றி, மாலையில் மறைகின்றார் என்று சாதாரணமாக எண்ணி விடாதீர்கள். ஒவ்வொரு தினமும், இளங்காலையில் ஸ்ரீசூரிய பகவானானவர் பலவித அசுர சக்திகளையும், தீய சக்திகளையும் எதிர்த்துப் போரிட்டுத்தான் தன்னுடைய பரிதிக் கதிர்களை பூலோகத்தில் பரப்புகின்றார்.. பாற்கடலின் அமுத விநியோகப் படலத்தில் இரு அரக்கர்கள் அமுதம் பெறுவதைத் தடுத்தமையால், அந்த அசுரச் சக்திகள் இன்றளவும், சூரிய, சந்திர கிரஹங்களை எதிர்த்துப் போரிடுகின்றன. இதற்குப் பின்னரே தன் சூரியக் கிரணங்களை உருவாக்கி, பூலோகத்திற்கு அனுப்புகிறார் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.. சூரியனுக்கு பெரிதும் உதவுதலே தினந்தோறும் செய்யப்பட வேண்டிய ஸ்ரீகாயத்ரீ அர்க்ய நீர்த்தாரை வழிபாடு ஆகும்.
எனவே, நீர்த்தாரை வழிபாடுகளில் பலவித முறைகள் உண்டு. ஸ்ரீகாயத்ரீ மந்திர அர்க்யத்தைப் போல, தேவாதி, தேவ மூர்த்திகட்கும் கூட நீங்கள் அர்க்யம் அளிக்கலாம்... இவையெல்லாம், பிரம்ம யக்ஞம் எனப்படும் முக்கிய வழிபாட்டு முறையில் அமைந்துள்ளனவாகும்.. கடந்த இதழில் (ஏப்ரல் 1999) புத்தாண்டு வழிபாட்டில் நாம் அளித்துள்ளது போல
ஸ்ரீ விஷ்ணும் தர்ப்பயாமி,
ஸ்ரீகிருஷ்ணம் தர்ப்பயாமி,
ஸ்ரீஈஸ்வரம் தர்ப்பயாமி,
ஸ்ரீகணபதிம் தர்ப்பயாமி,
என அனைத்து தேவாதி, தெய்வமூர்த்திகளுக்குக் கூட நீங்கள் அர்க்ய நீர்த்தாரை பூஜை செய்து ஆனந்திக்கலாம். நன்றாக பத்மாசனத்திலோ, சுகாசனத்திலோ அமர்ந்து கொண்டு, வலது உள்ளங்கையில் சுத்தமான நீரை ஊற்றி, ஸ்ரீவிஷ்ணு தர்ப்பயாமி என்றவாறான துதிகளை ஓதிக் கொண்டே, உங்கள் வலது விரல் நுனிகள் வழியாக (கட்டை விரலைத் தவிர்த்து) பூமியில் நீரைத் தாரையாக ஊற்றிடுங்கள்.. நீங்கள் பூமாதேவிக்கு அர்ப்பணிக்கும் இந்நீர்த் தாரையானது, பலவிதத் தெய்வமூர்த்திகளின் திருநாமங்களையும் சேர்த்து அளிக்கப்படுவதால், அவற்றைப் பூமாதேவி ஏற்று மிகவும் மகிழ்கின்றாள். ஏனென்றால், ஒவ்வொரு இறைநாமத்திற்கும் அத்தகு மகத்தான இறை சக்தி உண்டு என்பதை, உணர்த்தும் முகமாகத் தான் நீர்த்தாரை பூஜை அமைகின்றன..
அது போல் நீங்கள் விரும்பி வழிபடும் அனைத்து தெய்வமூர்த்திகட்கும், ஸ்ரீகாமாட்சி, ஸ்ரீமேல் மருவத்தூர் அம்பிகை, ஸ்ரீகருமாரி அம்மன், ஸ்ரீசமயபுரம் மாரியம்மன், ஸ்ரீகணபதி என அனைத்து தெய்வமூர்த்திகட்கும் ஸ்ரீமாரியம்மன் தர்ப்பயாமி, ஸ்ரீகாமாட்சியம்மன் தர்ப்பயாமி, என்றவாறாக, அர்க்ய பூஜை ஆற்றி மகிழுங்கள். மஹரிஷிகட்கும், யோகியர்க்கும், சித்புருஷர்கட்கும், மஹான்கட்கும் கூட நீங்கள் அர்க்யம் அளிக்கலாம்.. வலது உள்ளங்கையில் நீரை ஊற்றி, வலக்கையை மேலே உயர்த்துவீர்களாயின், நீரானது, மணிக்கட்டு வழியே உட்புறம் வழிந்து முழங்கை வழியாக பூமியின் மேல் தாரையாக மலரும். இதுவும் ஒருவித பிரம்ம அர்க்ய பூஜையே!
பொதுவாக பிரம்ம மஹரிஷிக்கு இத்தகைய அர்க்ய பூஜை அளிக்கப்படுகிறது. எனவே, பிரம்ம மஹரிஷி தர்ப்பயாமி, பிரம்ம யோகி தர்ப்பயாமி, பிரம்மமுனி தர்ப்பயாமி, பிரம்ம மூர்த்தி தர்ப்பயாமி என்று ஓதியவாறே வலது உள்ளங்கையில் நீரை எடுத்து வலக்கையை சற்றே உயர்த்தினால், நீரானது மணிக்கட்டு வழியே உட்புறம் வழிந்து, முழங்கை மூலம் நீர் பூமியில் படும்.. மேலும், சுண்டு விரல் மூலமும் நீரை வழியச் செய்து நீர்த்தாரை எனும் அர்க்ய பூஜை நிகழ்த்தலாம்.. இது மிகவும் சிறப்பான நீர்த்தாரை அர்க்யப் பூஜையாக மலர்கிறது.. பரஞ்ஜோதி முனிவர்களுக்கும், அக்னிபுராந்தக ரிஷிகட்கும் உரித்தான அர்க்ய பூஜை இது..
“பரஞ்ஜோதி மஹரிஷி தர்ப்பயாமி”, “பரஞ் ஜோதி முனிபுங்கவ தர்ப்பயாமி” என்று ஓதி வலக்கையில் நீரைத் தாங்கி, ஏனைய விரல்களை மடித்துக் கொண்டு, சுண்டு விரலை மட்டும் கீழே சாய்த்து நீரை நீர்த்தாரையாகப் பூமாதேவிக்கு வார்க்க வேண்டும். இதுவும் ஒரு வகை அர்க்ய பூஜையாகும்.. இவ்வாறாக அர்க்ய நீர்த்தாரை பூஜை முறை எத்துணையோ உண்டு.. இவற்றைத் தக்க சற்குரு மூலம் உணர்ந்து, கடைபிடித்து இவற்றின் பலாபலன்களை அடைவோமாக!
இவ்வாறாக சாதாரணமானோரும், பாமரரும் எளிதில் கடைபிடிக்கக் கூடிய பூஜையே அர்க்ய நீர்த் தாரைப் பூஜையாகும்.. ஜாதி, மத, இன பேதமின்றி யாவரும் இதைக் கடைபிடித்திடலாம்.. இல்லறப் பெண்மணிகளும் இதனை முறையாகச் செய்து கணவன் நல்லொழுக்கத்துடன் வாழவும், குடும்பம் நன்னிலையில் விருத்தியடையவும் வேண்டி இதனைச் செய்யலாம்.. பொதுவாக ஏதோ சிறிது இறை நம்பிக்கை கொண்டு இறை வழிபாடுகளில் ஈடுபடாது கணவன் இவ்வகையான மெத்தனமாக இருக்கும் பொழுது நல்லதோர் இறைப்பணி தீவிர பக்தியுடன் செய்யப்படும் இறைப் பணிகளே, அத்தகைய கணவன்மார்களை நல்வழிப் படுத்தும். இதற்குப் பெரிதும் உதவுவதே இத்தகைய அர்க்ய நீர்த்தாரை பூஜையாகும்.

ஸ்ரீசூரிய லிங்கம்
திருஅண்ணாமலை

ஸ்ரீசூரிய பகவானை தினசரி வழிபட மறக்காதீர்கள்!
உலகத்தில் உள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் ஜீவசக்தியைத் தருகின்ற ஸ்ரீசூரியபகவான் தனக்குரிய சக்தியை எங்கிருந்து பெறுகின்றார்? நாம் எண்ணுவது போல சூரியன் ஒன்றல்ல, எத்தனையோ பூமிகள், சூரியன்கள் உண்டு. நமக்கு முந்தைய யுகத்தில் கூட பூவுலகில் இரண்டு சூரியன்கள் பிரகாசித்துக் கொண்டிருந்தன! சூரிய சந்திர ஒளியிலிருந்து நாம் பெறுகின்ற ஜீவசக்திகள் எத்தனை எத்தனையோ! எனவே தினசரி சூரிய சந்திர வழிபாடுகளும் மிகவும் முக்கியமானவையே !
சூரிய நமஸ்காரம் என்ற அற்புதமான வேத மந்திரங்களைப் பற்றித் தாங்கள் அறிவீர்கள் அல்லவா! இவற்றுக்கு இணையான மந்திர சக்திகளை உடைய சக்கரங்களும், தமிழ்த் துதிகளும், தடாகங்களும், தீர்த்தங்களும் நிறைய உள்ளன. தினந்தோறும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எருக்கம் இலைகளை வைத்துக் குறித்த ஹோரையில் குளிர்ந்த நன்னீரில் நீராடி குறிப்பிட்ட சில சூரிய மந்திரங்களை ஓதி வருவோர்க்கு சூரிய நமஸ்கார மந்திரங்களின் வேத சக்திகள் எளிதில் தாமாகவே கிட்டுகின்றன. இது மட்டுமல்லாது சில குறிப்பிட்ட திருத்தலங்களில் குறித்த நாட்களில் ஸ்ரீசூரியபகவானே மூலமூர்த்தியின் மேல் தம் கிரணங்களைத் தோய்த்து வழிபடுகின்ற பாஸ்கர பூஜை தினங்களும் உண்டு. இவற்றில் குறைந்தது ஏழு தலங்களையேனும் வருடந்தோறும் தரிசித்து வருவோர்க்கு சூரிய நமஸ்கார வேத மந்திரங்களை ஓதிய நற்பலன்கள் எளிதில் கிட்டுகின்றன.
திருஅண்ணாமலை கிரிவலத்தில் அடிஅண்ணாமலைப் பகுதிக்கு முன் ஸ்ரீசூரிய லிங்க மூர்த்தியை தரிசித்திடலாம். சூரிய உதயத்தின் போதும் அஸ்தமனத்தின் போதும் ஆரஞ்சு நிற ஆடைகளை அணிவது விசேஷமானதாகும். இங்கு ஸ்ரீசூரிய லிங்க மூர்த்திக்கும் ஆரஞ்சு வண்ண வஸ்திரங்களைச் சார்த்தி மருதாணி இட்ட கால்களுடன் குறிப்பாக சூரிய ஹோரை நேரத்தில், குறைந்தது 108 முறை அடிப் பிரதட்சிணம் செய்து வருவோர்க்குப் பல அபரிதமான நேத்ர தீட்சா பலன்கள் கிட்டுகின்றன. இதன் தெய்வீக சக்தியானது தீர்க்கமான கண்ணொளியைத் தருவதோடு மட்டுமல்லாது, எதிர் வருகின்ற இன்ப துன்பங்களை அறிகின்ற அரிய சித்தியும் கிட்டும்.. இச்சூரிய லிங்க மூர்த்திக்கு, மிகவும் அபூர்வமான சாட்க்ஷோபநிஷத் மந்திரங்களை ஓதி அடிப் பிரதட்சிணம் செய்து வந்தால் (விளக்கம் பிப்ரவரி 1999 ஸ்ரீஅகஸ்திய விஜயம்) எத்தகைய கண் வியாதிகளுக்கும், ரோகங்களுக்கும் தக்க நிவர்த்தி கிட்டும்.
ஸ்ரீசூரிய பகவானுக்கு உரித்தான சில அர்க்ய வழிபாட்டு முறைகளும் உண்டு. அர்க்யம் என்றால் நீரைத் தாரையாக வார்த்தல் என்பது பொருள் அல்லவா! .அக்காலத்தில் நீர்ச் சத்தியம் எனும் முறையில் தாங்கள் நிரபராதி என்பதை நிரூபிப்பதற்காக ஓடுகின்ற நதி நீரில் கைகளால் தண்ணீரை அடித்துச் சத்தியம் செய்கின்ற நற்பண்பாடு நிலவி வந்தது. இன்றைக்கு கூட, ஆற்று நீரை அடித்து / நீர்த்தாரை வார்த்துச் சத்தியம் செய்வாயா, என்று கேட்கும் பழக்குமும் உண்டு. எனவேதான், காரண காரியமின்றி ஓடும் நீரைக் கைகளால் அடிக்கக் கூடாது என்ற நியதியும் உண்டு.. நீரும் நெருப்பும் அதாவது ஜல தேவதா மூர்த்திகளும், ஸ்ரீசூரிய பகவானும் உயிரின வாழ்க்கைக்கு இன்றியமையாத தெய்வமூர்த்திகளாக விளங்குகின்றனர்.
ஏதோ சூரியன் பகலில் தெரிகின்றது.. இரவில் சந்திரன் தெரிகின்றது என்று மிகவும் சாதாரணமாக இதுகாறும் நினைத்து விட்டோமல்லவா? இதற்குக் காரணம் என்னவென்றால் அந்த அளவிற்கு தெய்வீகத்தை நாம் நம் வாழ்க்கையில் பின்னிப் பிணைத்துக் கொள்ளாமல் ஏதோ காலையில் அல்லது மாலையில் சிறிது நேரம் சாமி கும்பிடுவோம் என்றவாறு இயந்திர கதியான வாழ்க்கையில் தான் (Mechanical Life) நம் நேரம் கழிந்து கொண்டிருக்கிறது என்பது உண்மையல்லவா?  சம்பாதிப்பதற்காக வாழ்கின்றோமோ அல்லது வாழ்வதற்காக சம்பாதிக்கின்றோமோ? இரண்டுமே நிலையற்றவை. எந்த தெய்வம் நம்மைப் படைத்ததோ அந்தத் தெய்வத்தை நோக்கிச் செல்வதற்காகத்தான் நாம் நம் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றோமே தவிர மற்றவையெல்லாம் இடையில் வந்து கடையில் (இறுதியில்) மறைகின்றவைதான்!
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சந்தித்த  நிறைவேற்றிய ஒரு சாசுவதமான பொருளைக் காட்டுங்கள் பார்க்கலாம். எப்போதும் எதுவும் மாறிக் கொண்டேயிருக்கும். அதுதான் மாயை. அந்த மாயையின் கண் அகப்படாமல் மீள்வதற்கு, என்றும் சாசுவதமான, நிரந்தரமான பரம்பொருளாம் தெய்வத்தை அடைவதற்கு ஒரே வழி தக்க சத்குருவை நாடிச் சரண் அடைவதாகும். அவர்தாம் இப்பிறவிக்கு அல்லாமல் எப்பிறவியாயினும் சரி தொடர்ந்து நம்முடன் வந்து நல்வழி காட்டுகின்ற தெய்வீகப் பிரதிநிதி (Godly Ambassador) ஆவார்.
ஸ்ரீசூரிய பகவான் நம் வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தில் நம்முடன் தெய்வ சாட்சியாக உலவிக் கொண்டிருக்கிறார் என்பதில் சற்றும் ஐயமில்லை தான்.. ஏனென்றால் இரவில் உறங்கும் நேரம் போக, மற்றபடி பகல் நேரத்தில் தானே நம்முடைய இயக்கங்கள் எல்லாம் நிகழ்கின்றன. சந்திர, சூரிய சாட்சியாகத்தான் நம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கழித்துக் கொண்டிருக்கின்றோம்.. ஸ்ரீசந்திர பகவானின் சாட்சியாகத்தானே இரவிலும் அனைத்துக் காரியங்களும் நிகழ்கின்றன. உண்மையில் சொல்லப் போனால், சூரியனோ, சந்திரனோ என்றும் மறைவதில்லை. இறப்பிற்குப் பின் நாம் விண்ணுலகிற்குச் செல்கின்ற போது தெய்வ சாட்சியாக நிற்கின்ற சூரிய, சந்திரர்களுக்கு முன்னர் தான் நம்முடைய ‘Day of Judgement’ எனப்படும் விதித் தீர்ப்புரை நிகழ்த்தப்படுகின்றது.. ஸ்ரீவிஷ்ணு மூர்த்தியோ, ஸ்ரீமுருகனோ, ஸ்ரீகணபதியோ, ஸ்ரீமாரியம்மனோ, ஸ்ரீசிவபெருமானோ, நாம் வழிபடுகின்ற தெய்வங்கள் யாவும், நமக்குத் தேவையான பொழுது நம்முடைய இறைவழிபாட்டின் போது தியானிக்கப்படுகின்ற மூர்த்திகளாக விளங்கிக் கொண்டிருக்க ஸ்ரீசூரிய, சந்திர மூர்த்திகள் தாம் உயிரின வாழ்க்கையோடு பெரும் தொடர்பு உடையவர்களாக விளங்குகின்றார்கள்.
ஆத்ம விசாரம் செய்து வாழ்க்கையில் இதனை நாம் முழுவதுமாக உணருகின்றோமா!? ஏதோ பகல் என்றால் வெளிச்சமாகவும், இரவு என்றால் இருட்டாகவும் இருக்கும். இதுதான் நாம் சாதாரணமாக அறிந்த கால நிலை. இதற்குப் பின்னால் உள்ள தெய்வீக ரகசியத்தை யார் அறிவதற்குத் தயாராக இருக்கின்றார்கள்? வெறும் இரவும், பகலும் மட்டும்தானா நமது வாழ்க்கை? இவ்வாறு பகல், இரவு காலத்தையும் பயனற்றுக் கழித்துக் கொண்டிருந்தால் நம்முடைய பொன்னான மனிதப் பிறவி வீணாகிப் போய்விடாதா? சற்றே சிந்தித்துப் பாருங்கள். இந்த சிந்தனையை நம்மிடம் தினம் தோறும் எந்நேரமும் தோற்றுவிப்பதற்காகவும் ஸ்ரீசூரிய, சந்திர மூர்த்திகளே நம்முடன் எப்போதும் நம் வாழ்வில் இணைந்து இருக்கின்றார்கள்.
ஒரு விநாடி பகலில் இருள் சூழ்ந்து விட்டாலோ அல்லது இரவுப் பொழுதில் திடீரென்று பகல் வெளிச்சம் வந்து விட்டாலோ என்ன ஆகிவிடும். சற்றே ஆத்மவிசாரம் செய்து தான் பாருங்களேன்! ஒரு நாம் சூரியன் இல்லாவிடில் என்ன ஆகும்? வெறும் பகலும், இரவுமா இவை, அல்ல., அல்ல நிச்சயமாக அல்ல. இந்த பகல் பொழுதிலும் இரவிலும் எத்தனையோ தெய்வீக சூட்சுமங்கள் உள்ளன. நாம் தாம் அவற்றை உணராது, இரவு என்றால் உறங்கும் பொழுது பகல் என்றால் நம்முடைய அலுவலக, இல்லறக் காரியங்களை நிகழ்த்துகின்ற நேரம் என்றும் இறைவனானனவன் ஸ்ரீசூரிய பகவானுடைய பகல் வெளிச்சமாகவும், ஸ்ரீசந்திர பகவானுடைய நிலவுக் கதிர்களுமாக, சேர்ந்ததாக நம்முடன் பின்னிப் பிணைந்து நம்முடைய அனைத்துக் காரியங்களுக்கும் சாட்சிகளாக இருந்து வருகின்றான். என்றைக்காவது இந்த வகையிலே நீங்கள் சிந்தித்துப் பார்த்திருக்கின்றீர்களா? இது தான் உண்மையான ஆத்ம விசாரம்..
உறங்கும் முன் ஒரு நொடி!
இதற்காகத்தான் ஒவ்வொருவரும் இரவில் உறங்கச் செல்வதற்கு முன்னால் அன்றையப் பொழுதில் தாங்கள் செய்த காரியங்களை ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்து அலசி, ஆராய்ந்து எந்த அளவிற்கு அந்நாளைய மனித வாழ்வை உருப்படியாகக் கழித்திருக்கிறோம் என்று எண்ணுதல் வேண்டும்.. நீங்கள் உறங்குவதற்கு முன் உள்ள ஒரு சிறிய விநாடி நேரம் அதாவது உங்கள் உடல் உணர்விலிருந்து செல்கின்ற ஒரு சிறு இடைவெளி நேரம் இருக்கின்றதே. இதனை நீங்கள் தெரிந்து கொண்டு விட்டீர்களேயானால் இதில்தான் உங்களுடைய இன்றைய மனித வாழ்வின் பல ஆன்மீக இரகசியங்கள் உள்ளன என்பது தெரிய வரும். ஏனென்றால் உறங்கச் செல்கின்ற நேரம் நீங்கள் இப்பூவுலகில் இருந்து விலகி புதிய மனோரீதியான கனவுலகம் அல்லது நித்திரா லோகத்திற்குச் செல்லுகின்ற நேரமாகும். இந்த நேரத்தில் தான் நம்முடைய தொப்புள் நாடியிலிருந்து வரும் “சில்வர் கார்டு” (Silver Chord) வழியே Astral Travelஐ நிகழ்த்த சூட்சும நித்திரைப் பிராயணம் தொடங்குகின்றது. ஆனால் இந்த சூட்சும நேரத்தை, நித்திரா யோகம் பயின்றவர்கள் மூலமாகத்தான் சரியாகக் கணித்திட முடியும்.  
உறக்கம் மரணத்தின் ஒத்திகையே
இத்தகைய சூட்சும நித்திரை யோகப் பிரயாண பயிற்சிகளை மேற்கொள்வதற்கு “இராத்திரி ஸுக்தம்” போன்ற இறைத் துதிகள் தாம் பெரிதும் உதவுகின்றன.. இரவு உறங்கும் போது நம்மைக் காத்து அருள்பவர் ஸ்ரீநித்ரா தேவி ஆவாள். பகல் பொழுதில் பாம்பு என்ற வார்த்தையைக் கேட்டாலே அஞ்சி ஓடுகின்ற மனிதன் இரவில் உறங்கும் போது அருகில் ஐந்து தலை நாகம் படம் எடுத்தால் கூட அறியாதவனாய் உறங்குகின்றான். இது எவ்வாறு நிகழ்கின்றது? தேக உணர்வு என்பது பலவிதமான சூட்சும வடிவங்களில் பணியாற்றுகின்றது. பாம்பு என்பதை அறியாத சிறு குழந்தை அந்த பாம்பினுடன் விளையாடும்.
ஆனால் அறிவின்பால் அக்குழந்தை வளர்கின்ற பொழுது எதையும் பகுத்து அறிகின்றது. ஆனால் இரவில் உறங்கும் பொழுது இந்த பகுத்தறிவு எந்த விதத்தில் வேலை செய்கின்றது? அப்போது அறிவும், உடலும் ஜடமாகி விடுகின்றதா! ஆனல் கனவு உலகில் எத்தனையோ காரியங்களை உணர்ந்து ஈடுபட்டு அறிந்து செயல்படுகின்றதல்லவா!  மனம் அந்த உறக்க நிலையிலும் செயல்படுகின்றதா! அப்படியானால் உறக்க நிலைக்கும், உறங்கும் போது ஜடமாக படுத்து இருக்கின்ற உடலுக்கும் என்ன சம்பந்தம்? இவற்றையெல்லாம் என்றாவது நினைத்துப் பார்த்திருக்கின்றீர்களா! ஏதோ படுத்தோம், உறங்கினோம் களைப்பு தீர்ந்தது எழுந்தோம் என்று தானே இயந்திர கதியில் உங்கள் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கின்றது.. உறக்கத்தைப் பற்றியே ஓராயிரம் கோடி ஆன்மீக ரகசியங்கள் உள்ளனவே, இதைப் பற்றி என்று நீங்கள் உணரப் போகின்றீர்கள். அறியப் போகின்றீர்கள்?
சற்குரு தரும் பரிசு :
எனவே, இவற்றையெல்லாம் கவனிக்கின்ற பொழுது எத்தனையோ தெய்வீக ரகசியங்களையும், இறைப் பரிபாலன சூட்சுமங்களையும் சற்றும் அறியாத வகையிலேயே நம்முடைய வாழ்க்கை கலியுகத்தில் இயந்திரமயமாக வெறும் சம்பாத்தியத்திற்காக ஓடிக் கொண்டுள்ளது.. இதனால் யாருக்கு என்ன பிரயோஜனம்? இறைவன் தந்த உடல், மனம், அறிவு கொண்டு இறைவனை அறிவதுதானே இந்த வாழ்க்கையின் முக்கிய குறிக்கோள். இதை விடுத்து பணம் என்று சொல்லி வசதி, போகம் என்று நிரந்திரமில்லாத எதையோ நாடி, தேடி, ஓடித் தானே வாழ்க்கையும் ஓடிக் கொண்டிருக்கிறது.
வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணரத்தான் ஒரு தக்க சற்குருவை நாடுதல் வேண்டும் என்று இறை நியதி கூறுகிறது.. அவ்வப்போது உங்களைத் தட்டி மடக்கி நல்வழியில் செலுத்தி இறைமையை எங்கும் உணரச் செய்து, இறை தரிசனத்தைப் பெற்றுத் தருகின்ற பெரும் பொறுப்பை அவரே தன் தோள்களில் ஏற்றுக் கொள்கின்றார் அல்லவா? அதற்கு அவருக்கு என்ன கைமாறு செய்யப்போகின்றீர்கள். அவர் உங்களிடம் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்று தான். காசோ, பணமோ, வசதிகளோ, வாகனங்களோ அல்ல. ஆழ்ந்த நம்பிக்கை ஒன்றுதான். இறைவனிடம் ஆழ்ந்த நம்பிக்கை, இறைவனிடம் இவர் இட்டுச் செல்வார் என்று சற்குருவிடம் கொள்ள வேண்டிய ஆழ்ந்த நம்பிக்கை.. இது தான் அவர் உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்ற பொக்கிஷம். அதற்கு அவர் அளிக்கின்ற பரிசு பொக்கிஷம் என்னவென்றால், பரிபூரண இறை அருள். சற்குருவைத் தவிர வேறு எவர் தான் இவ்வுலகத்தில் பரிபூர்ணமான இறை அருளைப் பெற்றுத் தரமுடியும்? சற்குருவின் அருள்தானே அனைத்து இன்ப, துன்பங்களிலும் சாசுவதமாக நின்று உங்களை தெய்வீகப் பாதையில் இட்டுச் செல்லுகின்றது...
முத்திரை யோகம் காட்டும் சற்குரு
சூரிய பூஜையில் தொடங்கிய ஆத்ம விசாரமானது நம்மை எங்கு எங்கோ ஈர்த்துச் சென்று விட்டதல்லவா! ஆமாம், இறைவனின் சாம்ராஜ்யம் மிகவும் பரந்தது தானே, அதற்கு எல்லை ஏது! இதற்குரித்தான Browser தான் சற்குரு. இந்த Website தான் இறைவனுடைய பரந்த சாம்ராஜ்யம். இந்த Celestial Netக்கு உதவி செய்யும் முகமாகத் தான் நம்முடைய திருஅண்ணாமலையிலுள்ள ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளன ஸ்ரீகாயத்ரீ முத்திரை மகிமை என்னும் நூலாகும்.. இதில் அளிக்கப்பட்டுள்ள காயத்ரீ முத்திரைகளை முறையாகப் பயின்று வந்தால் உங்களுக்கு சற்குருவின் அருள் திண்ணமாகக் கிட்டுவதோடு உங்களுடைய சற்குரு யார் என்பதை அறிகின்ற பாக்கியமும் நிச்சயமாகக் கிட்டும் என்பதில் சற்றும் ஐயமில்லை.
சூரியனுக்கும் துன்பங்களா?
ஆமாம், தினந்தோறும் சூரியபகவான் உதித்து எழுகின்றாரே. இது இயற்கையாக நடைபெறுகின்ற ஒன்று தானே! நிச்சயமாக இது சாதாரணமாக நிகழ்வது இல்லை.. ஏனென்றால் மாலையில் சூரிய பகவான் அஸ்தமித்து மீண்டும் தன்னுடைய இளம் சிவப்புக் கதிர்களோடு உதயம் ஆகையில் அவர் எத்தகைய பிரச்னைகளைச் சமாளிக்க வேண்டியுள்ளது தெரியுமா! பாற்கடலில் தேவர்களோடு கிடைத்த அமிர்தத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளே நுழைந்த அசுரர்களே மோகினி அவதார திருமாலின் ஆழ்ந்த திருவருளினால் ராகு, கேது நவகிரஹ மூர்த்திகளாகப் பரிணமிக்கின்ற இறைத் திருவிளையாடலை நாம் நன்கு அறிவோம்..

சித்திரை சதயம்

சித்திரை சதயச் சந்தனாபிஷேகத் திருநாள்
சென்னை திருமுல்லை வாயிலில் உள்ள ஸ்ரீமாசில்லாமணீஸ்வரர் ஆலயச் சிவலிங்க சுயம்பு மூர்த்திக்கு ஆண்டு தோறும் சித்திரை மாத சதய நட்சத்திரத் திருநாளில், சிவலிங்கத்தின் மேற்புற பாணலிங்கப் பகுதிக்கு இடப்படுகின்ற சந்தனக் காப்பானது வருடம் முழுதும் லிங்கத் திருமேனியில் உறைந்து அடுத்த வருடம் சித்திரை சதயத்தில் காப்பு களையைப் பெற்றுப் புதுச் சந்தனக் காப்பும் இடப்படுகின்றது.. அபிஷேகம், ஆராதனைகள் ஏனைய நாட்களில் ஆவுடையாருக்கு மட்டும் தான். நம்மைப் படைத்த இறைவனுக்காக அங்கங்கள் தேய உழைத்து அரும்பெரும் இறைப் பணிகளைப் புரிந்தால் தான் அந்தந்த அவயங்களால் செய்த கர்ம வினைகளும், பாவங்களும் நீங்கி, அந்தந்த உறுப்புகளுக்குப் புண்ய சக்தியும் கூடி நற்காரியங்களையே செய்கின்ற பாங்கும் கிட்டும்.. எனவே அன்பர்கள் யாவரும் 10.5.1999 (பிரமாத் வருட சித்திரை மாத சதய நட்சத்திரத் திருநாள்) ஸ்ரீமாசிலாமணீஸ்வரரின் லிங்கத் திருமேனிக்குச் சாற்றுவதற்காகத் தாங்களே அரைத்த சந்தனத்தைத் திருக்கோயிலில் 10.5.1999 காலை 7 மணிக்குள் அளித்து இறைவனின் திருமேனியில் சூடுவதான, வாழ்க்கையில் பெறுதற்கரிய பாக்கியத்தைப் பெற்றிட வேண்டுகின்றோம்.

ஸ்ரீஅகத்திய பிரான் பஞ்சேஷ்டி

ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் சுயம்பு லிங்க இறைத் திருமேனியில் உறைந்த சந்தனக் காப்புப் பிரசாதத்தைப் பெற்றுக் கர்ம வினைகளுக்கும் தீராத வியாதிகளுக்கும் குறிப்பாக நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கான தீர்வுகளைப் பெற்றிடுவீர். மிகவும் சக்தி வாய்ந்த சந்தனப் பிரசாதம்! புனிதமான உள்ளத்தைத் தரும் மாசிலாமணிப் புண்ய மூர்த்தி. குடும்பத்தோடு உற்றம், சுற்றத்தோடு ஜாதி, குல, இன பேதமின்றி யாவரும் இந்த அரிய இறைத் திருப்பணியில் பங்கேற்றிட வேண்டும்.. இறைவனே மனம் உவந்து தனக்குச் சந்தனத்தைச் சாற்றி மகிழுங்கள் என்று அருட்கட்டளை இடும் போது இந்த பாக்யத்தை விட்டுவிடலாமா? இதைவிட இம்மனிதப் பிறவியில் வேறு என்ன வேலை நமக்கு!?
குறிப்பு : சந்தனத்தை, சந்தனக் கல்லில் தூய நீர், (கங்கை, காவிரி போன்ற புனித நீருடன் சேர்த்து) சேர்த்து இறை நாமம் ஓதி அரைத்திட வேண்டும். சந்தனப் புவுடர் பில்லைகளை கரைத்தல், மிஷினில் சந்தனக் கட்டையை மாவாக அரைத்தல் போன்றவை அறவே கூடாது. கையால் சந்தனம் அரைப்பதே புனிதமானது, தெய்வீகமானது... சந்தனம் அரைக்கும் போது ஓத வேண்டிய திருமந்திரங்களாவன :- திருக்கயிலாயத்திலும், வைகுண்ட்த்திலும் இறைவனுக்குச் சந்தனமிட்டு அரைக்கும் பாக்யத்தைப் பெற்ற ஏழு மஹரிஷிகளின் பெயர்களைத் துதிப்பது மிகவும் பாக்யமானதாகும்.
ஓம் அத்ரி மஹரியே போற்றி
ஓம் பிருகு மஹரிஷியே போற்றி
ஓம் குத்ஸர் மஹரிஷியே போற்றி
ஓம் வஸிஷ்டர் மஹரிஷியே போற்றி
ஓம் காஸ்யபர் மஹரிஷியே போற்றி
ஓம் ஆங்கீரஸர் மஹரிஷியே போற்றி
ஓம் கௌதமர் மஹரிஷியே போற்றி
அல்லது
“ஏழு முனி ஏற்றருளணும் எம் சற்குரு தேவா!”  என தெய்வத் தமிழில் ஓதி சந்தனத்தை அரைத்திடுக..!

ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் லால்குடி

அமுத தாரைகள் :-
1. ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் என்னும் பெயரில் (லால்குடி, பவானி) அருள்பாலிக்கின்ற லிங்க மூர்த்திக்கு அசுவினி நட்சத்திரத் தினம்/துவாதசி திதியில் தேனால் அபிஷேகம் செய்து வந்தால் பொறாமை, குரோதம் ஆகியவற்றால் பிரிந்த உறவுகள் சேர்ந்து, உரிய சொத்துக்களும் வந்து சேரும்.
2. நல்லதோர் வாக்கருள் [பிறரை] நல்வழிப்படுத்த!
அண்ணன் தவறு செய்தால் தம்பி தட்டிக் கேட்கலாம். தம்பி தவறு செய்தால் அண்ணன் தட்டிக் கேட்கலாம். ஆனால் தட்டிக் கேட்டால் திருந்த வேண்டும்.. திருந்தாதவரைத் தட்டிக் கேட்பதில் பலனில்லை. ஆகவே, ஒருவர் தட்டிக் கேட்கும் நிலைக்கு வரவேண்டும் என்றால் அதற்குரிய தகுதிகளைப் பெற்றிருத்தல் அவசியம். அது என்னவென்றால் ஐந்துவிதமான காரியங்களை விடாமல் செய்பவராய் இருத்தல் வேண்டும்...
1. தேவ யாகம் :- செய்பவராய் இருத்தல் வேண்டும், ஹோமம் வளர்த்து தேவர்களுக்கு நெய், ஹவிசு தருபவராய் இருத்தல் வேண்டும்.
2. பிரம்ம யாகம் – நல்ல நடத்தை, நற்பழக்கம் கொண்டு நல்லவர்களாய் உள்ளவர்களோடு பழகுபவராய் இருத்தல் வேண்டும்.
3. பூத யாகம் – ஜாதி, மத, இன, பேதம் கடந்து அனைத்து உயிர்களுக்கும் சேவை செய்பவராய் இருத்தல் வேண்டும்.
4. பித்ரு யாகம் – மூதாதையர், நீத்தார் நீர்க்கடன் என்னும் தர்ப்பணம் மற்றும் அமாவாசை பூஜை செய்பவராய் இருத்தல் வேண்டும்..
5. மானுட யாகம் – ஏழை எளியவர்க்கும், தெய்வபக்தி உள்ளவர்களுக்கும் அன்னதானம் செய்பவராய் இருத்தல் வேண்டும்..
இந்த ஐந்துவித காரியங்களைச் செய்பவர்கள் யாரைத் தட்டிக் கேட்டாலும் மனம் திருந்தி நல்லவர் ஆவார்கள்.. இந்த ஐந்து காரியங்களையும் செய்து நலம் பெற அருளும் அகத்தியர் தலம் தான் சென்னை அருகே “பஞ்சேஷ்டி” என்னும் தலம் ஆகும்.. இத்தலத்தில் சித்திரை, வைகாசி பௌர்ணமியில் அன்னதானம் செய்திடில் முறையான அதிகார பதவியும், வரவேண்டிய பிரமோஷனும் தானாக வரும்.
3. அன்பில் மலரும் [காதல்] திருமணம் :- சாதி, மத, இன வேறுபாடின்றி அழகு, அறிவு, செல்வம் நிலை பாராது உள்ளம் ஒருமித்தலே உண்மையான அன்பு நிறைந்த காதல் ஆகும். எனவே, உண்மையான தார்மீக ரீதியான அன்பு நிலவுமாயின் காதல் கொள்வதில் தவறு கிடையாது. ஆனல் தனக்கு சரியான வயது, உத்தியோகம், தெளிந்த அறிவு இவை உள்ளதா என்று யோசித்தல் அவசியம்.. இவை இல்லாமல் மனம் போனபடி காதலித்தல் மிகவும் தவறு. இவ்வாறு செய்திடில் பிறர் சிரிப்புக்கும், அவமதிப்புக்கும் ஆளாகி நடுத்தெருவுக்கும் வந்து விடுவர். ஆகவே, முறையான, உண்மையான அன்புடன் காதல் கொண்டு சிறப்பான திருமணம் நிறைவேற தக்கதோர் வழிபாடு ஒன்று உண்டு.. கரும்பேந்திய கற்பக விநாயகரை முறையாக வணங்கி ஏழை தம்பதியருக்கு பொன் மாங்கல்ய தானம் அளித்து வர நன்முறையில் உண்மையான அன்பு கூடிய காதல் திருமண வாழ்வு அமையும். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் துர்க்கை அருகில் தாமரை மீது அமர்ந்து கைகளில், கரும்பும் கொண்டு அருள்கின்றார் ஸ்ரீகற்பக விநாயகர். உண்மையான தெய்வீக அன்பு நேயத்தையே காதலாகப் பூண்ட ரதி, மன்மத மூர்த்தி – தேவ தம்பதியர் அங்கு அற்புதத் தவம் பூண்டு ஸ்ரீகற்பக விநாயகரின் அருளைப் பெற்றனர். பல மஹரிஷிகளும் தம்பதியராக தரிசித்த அற்புத விநாயக மூர்த்தி!

ஸ்ரீபரிதியப்பர் பரிதிநியமம்

4. மறுமண வாழ்வு நன்முறையில் அமைய : கணவனே கண் கண்ட தெய்வம் என்பது வேதவாக்கே. ஆனால் வேதனைகள் நிறைந்த இக்கலியுலகில் திருமணம் ஆகி கணவனை இளம் வயதில் இழந்து இன்னலுறும் விதவைகள் தங்களுடைய பாதுகாப்பிற்காகவும், வேறு நற்காரணங்களுக்காகவும் தக்க பெரியோர்களின் ஆசியுடன் மறுமணம் செய்து கொள்வதில் தவறில்லை. ஆனால் மறுமணம் நலமுடனும், அமைதியுடனும், நல்லவரோடு அமைய ஆன்மீகத்தில் பல வழிகள் உள்ளன. மறுமணம் நன்முறையில் நிறைவேறவும் அதோடு மட்டுமல்லாமல் நியாயமான காரணங்களுக்காக தார்மீக ரீதியாக விவாகரத்து செய்து மறுமணம் செய்ய விரும்பும் ஆணும், பெண்ணும் முறையாக நல்வாழ்வைப் பெற தக்கதோர் வழிபாடு உண்டு.. புழுங்கல் வாரி விநாயகர் என்னும் அற்புதமான தெய்வமூர்த்திக்கு முறையாக நேர்த்தி வைத்து 48 சதுர்த்திகள் விரதம் இருந்து ஏழைகளுக்கு அன்னதானம், வஸ்திர தானம், ஏழை தம்பதியர்களுக்கு மாங்கல்ய தானம் செய்து புழுங்கல் அரிசி நைவேத்தியம் செய்து வேண்டினால் நலம் பெறலாம். நன்முறையில் மீண்டும் குடும்ப வாழ்க்கை அமையும். ஸ்ரீவில்லிபுத்தூரில் புழுங்கல் வாரி விநாயகர் ஆலயம் உள்ளது.
5. பரிதி நாதர் பிணி தீர்ப்பார்
பட்டுக்கோட்டை அருகே பரிதிநியமம் என்னும் சிவத்தலத்தில் ஸ்ரீபருத்தியப்பராய், ஸ்ரீபாஸ்கரேஸ்வரராய் சிவபெருமான் அருள்பாலிக்கின்றார். வார நாட்களில் சூரிய ஹோரை நேரத்தில், குறிப்பாக ஆதித்யனாம் சூரிய மூர்த்திக்குரிய ஞாயிற்றுக் கிழமையன்று காலை 6-7 பகல் 1-2 சூரிய ஹோரை நேரத்தில் பருத்தியப்பருக்கு சூரியனுக்குரிய தானியமாகிய கோதுமை அல்வா படைத்து ஏழைகளுக்கு தானமாக அளித்து வர தீராத வயிற்று நோய், குடல் அழற்சி நோய், குடல் புண், கர்ப்பப் பை நோய்களுக்குத் தக்க நிவாரணம் கிட்டும். ஸ்ரீசூரிய பகவானுக்கே ஏற்பட்ட வயிற்றுப் பிணிகள் தீர்ந்த மகத்தான புண்ணியத் தலமிது.
6. மனம் அமைதி பெற :- வியாபாரம், அலுவலகம், இல்லறம் .... அனைத்திலும் விடிந்து எழுந்தது முதல் மனக்குழப்பங்களுடன் வாழ்கின்றனர். ஒரு சிறு பிரச்னை கூட அதற்குத் தீர்வு கிட்டும் வரை மன உளைச்சளையே தந்து கொண்டிருக்கும். மனதிற்கு அதிபதியான சந்திர பகவானுக்குரித்தான திங்கட்கிழமையன்றும், அமாவாசையிலிருந்து மூன்றாம் நாளான மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத்திற்குப் பிறகும் [திண்டிவனம் அருகே உள்ள] திருவக்கரையில், நெற்றியில் பிறைச் சந்திரனுடன் அருள்பாலிக்கும் சிவலிங்க மூர்த்திக்கு வெண்ணெய்க் காப்பிட்டு, பால் படைத்து ஏழைகளுக்குப் பால் தானம் அளித்து வந்தால் மனக் குழப்பங்கள் தீர்வதற்கான தெளிவான நல்வழி கிட்டும்..
7. துன்பந்துடைக்கும் குருவடி சரணம்! பல பேர்களிடம் தெய்வ காரியத்திற்காக நல்லோர்கள் உதவிக்காக கடன் கேட்டுப் பணம் வராது நம் கைக்கு கிட்டாவிடில் இந்த மனம் படும்பாடு சொல்லில் அடங்காது. தலை சுற்றும், தலை வலிக்கும், நன்றாகப் பழகியவரைப் பார்ப்பதற்கே மனம் படபடக்கும். அழுவதா, சிரிப்பதா எதையும் செய்ய முடியாமல் தவிப்போம். இந்த மாதிரி நேரத்தில் நல்ல காரியம் செய்யவும் தன் வாழ்க்கையை நடத்தவும் கஷ்டப்பட்டான் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரின் சீடன் குருமங்கள கந்தர்வாவாகிய திருவெங்கடராமன் அவர்கள்.. வழி ஒன்றும் தெரியாமல் ஓவென்று அழுது கொண்டே “அருணாசல சிவா குருவே துணை” என்று தனியாக கிரிவலம் எல்லாம் அழுது கொண்டே சுற்றிக் கொண்டு வந்தார். அப்பொழுது “அருணாசல சிவ குருவே துணை” என்று அழும் பொழுது ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்தர் அந்த சீடனின் காதில் ஒரு அரிய இறை வாசகத்தை அசரீரியாய் ஓதினார்.. அந்த வாசகம் இதோ,“அனகோ விஜயோ ஜேதா விஸ்வயோனி புனர்வஸு:” இந்த திவ்ய விஷ்ணு சஹஸ்ரநாம வாசகத்தைக் காதில் கேட்டதும் நம் குருமங்கள கந்தர்வாவாகிய ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் அழுது கொண்டும், புலம்பிக் கொண்டும், பிதற்றிக் கொண்டும் ஒரு எழுத்தையும் விடாமல் ஜபித்துக் கொண்டே கிரிவலம் வந்து கொண்டே எத்தனை ஆயிரம் முறை ஜபித்தாரோ தெரியவில்லை. கிரிவலம் முடித்து சென்னை திரும்பினார் ஸ்ரீவெங்கடராமன் அவர்கள். வழியெல்லாம் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்தரின் குருவாசக ஒலியே அவர் நினைவில் இருந்தது. வீட்டிற்கு வந்த வெங்கடராமனைத் தேடி மூன்று பேர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.. அவர்கள் வட்டி இல்லாக் கடன் கொடுக்க வந்திருந்தார்கள்.. என்ன ஆச்சரியம்! விஷ்ணு சஹஸ்ரநாம புனர்வஸு மந்திரம்தனை நீங்களும் உண்மையாய் ஓதி துன்பத்திலிருந்து வடுபடுங்கள்... “அருணாசலத்தைச் சரண் புகுந்தோர், அரிய வரம் பல பெறலாம்.”
8. என் கடன் (இறைப்) பணி செய்து கிடப்பதே!
பொதுவாக பல நிறுவனங்களில் பலரும் ஓயாது உழைத்து வீட்டு வேலையைக் கூட அதிகமாக கவனிக்காமல் தாம் வேலை செய்கின்ற நிறுவனங்களில் இரவு பகல் பார்க்காமல் ஆண்களும், பெண்களும் வேலை செய்து வருகின்றனர்.. இவ்வாறு இல்லாது வயதானோர் தாங்கள் செய்த வேலையை விடுத்து எதிர்கால இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்க முன்வர வேண்டும். இது மிகச் சிறந்த சமுதாயப் பணியாகும். 20 ஆண்டுகளுக்கு மேல் ஒரு வேலையில் தொடர்ந்து இருந்து உழைத்தல், ஆன்மீக ரீதியாக சரியான முறை ஆகாது. இது உடலையும் சிறிதளவு பாதிக்கும்.. மேலும், மேலும் பதவி நீடிப்பில் ஆசை கொள்ளக் கூடாது. சுய ஓய்வு விடுப்பு [Voluntary Retirement Scheme] வெளியே வந்து தன் வாழ்நாட்களை இறைவன் சேவையில் கழிக்க வேண்டும். இவ்வாறு செய்ய நல்மனமும், பக்குவமும், வேண்டும். VRS வாங்கிக் கொண்டு வேறு வேலைக்குச் செல்வதில் என்ன பயன்? சுய ஓய்வு விடுப்புத் திட்டம் நல்ல இறை சேவைக்கும் பயன் தர வேண்டும்.. இவ்வகையில் நல்லதோர் இறை நினைவோடு முதிய வாழ்க்கையைப் பெற காஞ்சிக்கு அருகே உள்ள திருப்புட்குழி திருத்தலத்தில் தென்மேற்கில் உள்ள ஸ்ரீஆண்டாளுக்குத் திருமஞ்சனம் செய்து அன்னதானம் செய்திடில் நல்வகையான இறைவாழ்க்கை அமையும், புட்குழியில் புதைமுன் பூர தேவி அருள்பெறுவீர்.. முற்காலத்தில் முதிய பருவத்தில் அனைவரும் இங்கு ஆஸ்ரம வாழ்க்கை கொண்டிட ஓடோடி வருவர்.. புட்குழி புனித பூமிக்கு இறையருள் சுரக்கின்ற தனி மகத்வம் உண்டு.
9. கோள் வினையை ஓட்ட சுந்தர தாரா பூஜை!
அவரவர் வேலை செய்கின்ற இடங்களில் கோள் சொல்லியே பலர் தம் வாழ்நாளைக் கழிக்கின்றனர்.. இது பெரிய பெரிய நிறுவனங்களிலிருந்து சிறிய தொழில் நிறுவனங்கள் வரை தினமும் ஆங்காங்கே நடக்கின்ற கூத்து ஆகும்.. கோள் சொல்லிப் பலருடைய வாழ்க்கையைக் கெடுப்பது மிகப் பெரிய பாவமாகும்.. இவ்வாறு பிறர் வாழ்க்கையைக் கெடுத்திருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல உதவி செய்து தன் பாவம் தீர, பரிகாரமாக சிவன் கோயிலில், லிங்கமூர்த்தியின் மேல், பால் வழிகின்ற தாரா பாத்திரம் வைத்து தினமும் கறந்த பாலை ஊற்றி வழிபடுவதுடன் பால் அல்லது தயிர் சேர்ந்த அன்னதானம் செய்தும், வர வேண்டும். எதிர்காலத்தில் இது நிச்சயமாக கோள் மூட்டுவதால் வரும் கர்மவினைகளிலிருந்து ஒருவரைக் காக்கும்.
10. நீரை விற்ற கர்மம் தொலைய
இறைவன் அருளால் இயற்கையால் கிடைக்கின்ற தண்ணீரை விற்பது மாபெரும் தவறு. தண்ணீரை விற்பதால் பலவித நோய்கள் வந்தடையும். இதற்குப் பரிகாரம் பல இருந்தாலும் இத்தொழிலை உடனடியாக நிறுத்தி விட்டு சித்திரை வைகாசியில் நீர் மோர் தானம்தனை 1008 கோயில்களில் செய்து இறுதியில் திருமணிக்கூடம் என்ற வைணவ தலத்தில் உள்ள் நாலாயிரத்தொரு விநாயகருக்கு கங்கை, காவிரி, கோதாவரி, கிருஷ்ணா, தாமிரபரணி நீரால் பஞ்சநீர் அபிஷேகம் செய்து வர, தண்ணீரை விற்ற் பாவத்திற்கான பிராயச்சித்த நல்வழிகளைப் பெறலாம். எவராயினும் சரி, தன் ஆயுளில் அருந்துகின்ற அளவு நீரையேனும் நீர் தானம், நீர் மோர் தானம், பானக தானம், பழரச தானமாக அளித்தாக வேண்டும்.

விஷ்ணுபதி புண்ணியகாலம்

ஸ்ரீநந்தீஸ்வர மூர்த்தி, சிவபெருமானுக்கு மட்டுமின்றி அனைத்து தேவ மூர்த்திகளுக்கும், வாகனமாக விளங்கும் பாக்யத்தைப் பெற்றவராவார். ஸ்ரீமகாவிஷ்ணுவைத் தாங்கும் பேறு பெற்றவரும் ஸ்ரீநந்தீஸ்வர மூர்த்தியாவார். ஸ்ரீசங்கர நாராயண மூர்த்தி மோகினி அவதார தெய்வமூர்த்திகளுக்கு ஸ்ரீநந்தீஸ்வர மூர்த்தி வாகனமூர்த்தியாக விளங்குவதில் பேரானந்தம் கொள்கின்றார்.
பிரபஞ்சத்தின் பரம்பொருளாக விளங்குகின்ற ஸ்ரீமன் நாராயணமூர்த்திக்கு மிகவும் ப்ரீதியான காலமே ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய காலமாகும்.. நாம் கடந்த பல வருடங்களாக ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய காலத்தின் மகாத்மியத்தைப் பற்றி ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் நல்விளக்கங்களாக எடுத்துரைத்து வருகின்றோம் அல்லவா!
பிரதோஷம் போல ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய காலமும் மிகவும் புனிதமான, தெய்வீக சக்திகள் நிறைந்த காலமாகும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாக (பெரும்பாலும் மாதப்பிறப்பு அன்று) வருடத்திற்கு நான்கு முறை மட்டுமே வருகின்ற ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய காலமானது பெறுதற்கரிய புனித நேரமாக விளங்குவதால் இந்த தெய்வீக நேரத்தில் செய்யப்படும். ஹோமம், அபிஷேக ஆராதனைகள், தான, தர்மங்கள், தர்ப்பணம் போன்றவற்றிற்கு அபரிமிதமான பலன்கள் உண்டு. பலவிதமான கொடிய கர்மவினைகளையும், தீராத நோய்களையும் தீர்க்க வல்லதாக விளங்குவது இந்த ஸ்ரீவிஷ்ணுபதி காலம்.
கலியுகத்தின் நியதியாக விளங்குகின்ற பலவிதமான இல்லறத் துன்பங்களுக்கும். அலுவலகத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கும், வியாபாரத்தில் ஏற்படுகின்ற இடர்களுக்கும் விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் செய்யப்படுகின்ற பூஜை நல்ல பரிகாரத்தைத் தந்தருள்கின்றது.. ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய காலமானது விடியற்காலை பிரம்ம முகூர்த்த நேரத்திற்கு முன்பாகவே முன்னிரவு சுமார் 2.00 மணி முதல் பகல் 10.30 மணிவரை பொதுவாக விளங்குவதால் இப்புண்ணிய நேரத்தில், புனிதமான காலத்தில் அனைத்து வைணவத் தலங்களிலும், ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய கால பூஜையினை பரம் பொருளான திருமாலுக்குரித்தான அபிஷேக ஆராதனைகளுடன், தான, தர்மங்களுடன் கொண்டாடி இதன் பலன்கள் யாவரையும் சென்றடையும் வண்ணம் நன்முறையில் இறைப்பணி ஆற்றிட அனைவரையும் வேண்டுகின்றோம்.
இவ்விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் தான் எத்தனையோ இறை அவதாரங்களும், எத்தனையோ இறை லீலைகளும் ஏற்பட்டுள்ளன. ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய கால மகிமையைப் பற்றி பல புராணங்களாக வடித்திடலாம்.. அத்தகைய மகாத்மியத்தை உடையது இது. கடந்த பல யுகங்களில் மிகவும் போற்றி வழிபடப்பட்டு வந்த ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய கால பூஜையானது கலியுகத்தில் ஏனோ திடீரென்று நின்று விட்டது என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். இவ்வாறு சமீப காலத்தில் சுமார் 20, 30 வருடங்களுக்கு உள்ளாக நன்கு பிரசித்தி  பெற்று வந்துள்ள ஸ்ரீபிரதோஷ பூஜை, ஸ்ரீஐயப்ப விரதம் போன்றவை எவ்வாறு மகத்தான முறையில் கொண்டாடப் பெற்று விளங்குகின்றதோ அதே போல ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய கால பூஜைகளும் மிகுந்த சிறப்பு வாய்ந்ததாக, மகத்துவம் நிறைந்ததாக, நல்லதோர் சிறப்பிடத்தைப் பெற்று விளங்க வேண்டி இறையடியார்களும், பக்த கோடிகளும் நன்கு உழைத்து இறைப்பணி ஆற்றிட வேண்டும்.
வைணவப் பெரியோர்களும், பெருமாள் பக்தர்களும், சைவ, வைணவ பேதமின்றி ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற உத்தம இறைப்பாங்குடன் விளங்குகின்ற இறையடியார்களும் ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய கால மேன்மையினைப் பலருக்கும் எடுத்துரைத்து இப்புனிதத் தொண்டினாலே தமிழகமெங்கும், நாடெங்கும் அனைத்து வைணவத் தலங்களிலும் கொண்டாடிட வேண்டிப் பிரார்த்தனை செய்கின்றோம்.
திருக்கயிலாயச் சேவையில் ஸ்ரீரிதத்வஜ மூர்த்தி

திருமழிசை

ஸ்ரீரிதத்வஜ மூர்த்தி என்ற ஸ்ரீநந்தீஸ்வரப் பெருமான் பெரும் மகிமை வாய்ந்தவர். இவர் தான் தினந்தோறும் திருக்கைலாயத்திற்கு இறைவனுக்காக மலர்களைத் சுமந்து செல்கின்ற பெரும் பாக்கியத்தைப் பெற்றுள்ளவர் ஆவார். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிற்கு விருப்பமான பாரிஜாத மலர்களை பூலோகத்தின் சில குறித்த தலங்களிலிருந்து பெற்றுச் செல்கின்ற இறைப்பணியை ஸ்ரீரிதத்வஜர் அன்றும், இன்றும், என்றும் செய்து வருகின்றார். எங்கெல்லாம் பாரிஜாதமும், வில்வ மரமும் உள்ள திருத்தலங்கள் உள்ளனவோ (சென்னை திருமழிசை சிவாலயம்) அங்கெல்லாம் ரிதத்வஜ மூர்த்தி அம்சங்கள் நிறைந்த நந்தீஸ்வரராக தனிப்பட்ட முறையில் எழுந்தருளி இருப்பார்.. ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீமன் நாராயண மூர்த்திக்கு மட்டும் உரித்தான வாகனம் என்றும், ஸ்ரீநந்தீஸ்வர மூர்த்தி சிவபெருமானுக்கு மட்டும் உரித்தான வாகனம் என்றும் சாதாரணமாக எண்ணி விடாதீர்கள் இந்த மனித மனத்தளவில் தான் அனைத்து விதமான பேதங்களும் குடிகொண்டிருக்கின்றன.
எல்லா மனபேதங்களை எல்லாம் தாண்டிய நிலையில்தான் ஒன்றே பரம்பொருளாக, திருமாலே பரம்பொருளாக, சிவமூர்த்தியே, பரம்பொருளாக நமக்குத் தோற்றம் அளிப்பார். பல புராணங்களிலும் வருகின்ற சம்பவங்கள் யாவும் நமக்குப் பாடம் புகட்டுவதற்காகவே இறையருளால் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இறைவனுடைய பிரதிநிதிகளாக விளங்குகின்ற சித்புருஷர்களும், மகான்களும், யோகியர்களும் அவ்வப்போது பலவிதமான பிறவிகளை மேற்கொண்டு சாதாரணமானவர்களாக வாழ்ந்து நம்மை வழிநடத்திச் செல்ல அன்றும், இன்றும், என்றும் காத்துக் கிடக்கின்றனர்.. இவர்கள் தான் சற்குருமார்களாக உருக்கொண்டு நம்மைக் கடையேற்றத் துடிக்கின்றார்கள். ஆனால் நாமல்லவோ அவர்களைக் கண்டு, அறிந்து, நம்பிக்கை வைத்து, சரணடைந்து இறைவனை அடைவதற்கான முயற்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.. இந்த தார்மீகமான பொறுப்பிலிருந்து நாம் தவறலாமா?
ஸ்ரீகருடனுக்கு ஏற்பட்ட கர்வ பங்கம்!
ஒரு முறை பெரிய திருவடியாம் ஸ்ரீகருடாழ்வாருக்கு தாம் பரம்பொருளாம் ஸ்ரீமன்நாராயண மூர்த்தியைச் சுமந்து செல்கின்றோம் என்ற கர்வம் சிறிதே ஏற்பட்டு விட்டாதாம்..ஏன்? இறைவனின் திருவடியில் சதாசர்வ காலமும் கிடக்கின்றோர்க்கும் இந்நிலைதானா? இல்லையில்லை! இவையெல்லாம் இறை லீலைகள் தானே? சர்வேஸ்வரனாம் திருமால் மூர்த்தி இத்தகைய திருவிளையாடலை ஸ்ரீகருடாழ்வார் போன்ற மூர்த்திகள் மூலமாக ஏன் புனைந்திட வேண்டும்? எல்லாம் நமக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கத்தான்.
என்ன பாடமோ அது?
எத்தகைய உயர்நிலைகளை அடைந்தாலும் “அனைத்தும் இறைவன் அருளால் வந்ததே இதில் நமக்கு ஒரு சிறு பங்கும் இல்லை” என்ற எண்ணத்தையே சுமந்திட வேண்டும் என்பதே.. உத்தம இறைநிலையை அடைவதற்குக் கடுந்தவமும், பெரும் யோகமும் மனித முயற்சியாகத் தேவைதான்! ஆனால், அந்த முயற்சியும், முயற்சியின் பயனாக விளைகின்ற “நெடுந்தவமும், படர்யோகமும் அவனால் விளைந்ததே, இதன் பயனாக, இறைப் பரிசாக அரும்புகின்ற இறை தரிசனம் கூட அவரருளால் கிட்டியதே” என்ற மனப்பான்மை எப்போதும் விளங்கிட வேண்டும். என்பதற்காகத்தான் இத்தகைய இறை லீலைகளை ஸ்ரீமன் நாராயண மூர்த்தி அளிக்கின்றார்.
தாமே இறைவனைச் சுமக்கின்றோம் என்று ஸ்ரீகருடாழ்வாருக்கு கர்வம் கூடிய எண்ணம் வந்து விட்டதல்லவா! ஆனால் இது ஒரு விநாடி நேரம் தான் இருந்தது... அடுத்த வினாடியே “என்ன இது! நமக்கு இந்த எண்ணம் வந்து விட்டதே!” என்று வேதனையோடு இருந்தார் ஸ்ரீகருடாழ்வார்.. “பரம்பொருள் மூர்த்தியே, பரஞ்ஜோதியே, பிரபஞ்சத்தைக் காத்தருளும் எம் ஆண்டவா! அடியேனுக்கு இந்த எண்ணம் தோன்றிய உடனேயே தங்கள் அருளால் அது மறைந்து விட்டாலும் கர்வ பங்கம் வந்தது வந்தது தானே! எனக்குரிய தண்டனையை அளித்து ஒரு க்ஷண நேரம் உன்னை மறந்த நிலையில் இருந்தமைக்காக என்னை மன்னித்தருளி அதற்குரிய பெருந் தண்டனையையும் அளித்திட வேண்டுகின்றேன். எப்போதும் தங்கள் நிழலில் கிடக்கும் அடியேனுக்கே இந்த கேவலமான கர்வமான எண்ணம் ஏற்பட்டதெனில் இன்னல்கள் நிறைந்த கலியுக மக்கள் என் செய்வார்கள்?”
ஸ்ரீகருடாழ்வார் ஆழ்ந்து வேதனைகளுக்கு இடையே கண்ணீர் வடித்தார். இதற்கு ஸ்ரீமன்நாராயண மூர்த்தி தரிசனம் தந்து, “உன் குறையை நீயே உணர்ந்து விட்டாய், எனினும் அதற்குரிய தண்டனையைப் பெற்றாகத்தானே வேண்டும். பெறவும் தயாராக உள்ளாய் என்றும் நீ அறிவித்து விட்டமையால் அதனை நீ இப்போதே பெற்றிடுவாய், கவலையுறாதே!” என்று அருளிச் சென்றார் ஸ்ரீமன்நாராயண மூர்த்தி. என்ன தண்டனையோ? ஸ்ரீபெருமாளும் அதனைச் சொல்லவில்லை! தெய்வீக மாயையும் உண்(டே..!)டோ
மறுநாள்.. ஸ்ரீவைகுண்டத்தில் ஸ்ரீமன்நாராயண மூர்த்தியைச் சுமந்து செல்லச் சென்றார் ஸ்ரீகருடர்! வாயிலிலேயே, “சற்று முன்தான் ஸ்ரீமஹா விஷ்ணு புறப்பட்டுச் சென்றார்” என்ற பதில் கிடைத்தது.. துணுக்குற்றார் ஸ்ரீகருடாழ்வார்! “இறைவா! என்ன சோதனை இது! யாம் தான் சுவாமியைச் சுமக்கும் தகுதி உற்றவன் என்று எண்ணியமைக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? தண்டனையைப் பெறத் துடித்தவர் தண்டனையைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்தார்... “இனி, அடியேன் இந்த பாக்கியத்தைப் பெற மாட்டேனா?” என்று கதறி, மூர்ச்சித்து விழுந்து பின் பிரபஞ்சமெங்கும் ஸ்ரீமன்நாராயணனை நினைத்துத் தேடலானார் ஸ்ரீகருடாழ்வார்.. இதிலிருந்து ஒன்றைக் கருத்தில் கொள்க! எதுவுமே இறைவனின் கருணையின்றி நிகழ்வது கிடையாது.. அனைத்தும் அவன் லீலையே! ஸ்ரீமன் நாராயண மூர்த்தியைத் தேடியவாறு பிரபஞ்சமெங்கும் பித்துப் பிடித்தவர் போல “நாராயணா, நாராயணா” என்று பரம்பொருளின் திருநாமத்தை ஓதியவாறு ஸ்ரீகருடாழ்வார் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார்..
கருடாழ்வாரின் பக்தர் கருடக் கொடி சித்தர்! 
ஓரிடத்தில் முனிவரைப் போல தோற்றமளித்த ஒருவர் ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டு இருப்பதைக் கண்டு அங்கு சற்றே இறங்கினார் கருடாழ்வார். அவர் தான் கருட/விருட்சக் கொடி சித்தராவார். அவர் கருடாழ்வாரின் மீது பெரிதும் ஈடுபாடு கொண்டு தம்முடைய இஷ்டமூர்த்தியாக ஸ்ரீகருடாழ்வாரையே தொழுது வாருபவர். தமக்கு இத்தகைய அற்புதமான பக்தர் ஒருவர் இருக்கின்றார் என்பதை இப்பொழுதுதான் கருடாழ்வார் தெரிந்து கொண்டார்.. தமக்கு ஒரு சிறிய கர்வபங்கத்தை தந்து அதன் மூலம் ஒரு இறைலீலையை ஏற்படுத்தி அதன் பயனாகத்தானே நமக்குக் கொடி சித்தர் என்ற அற்புதமான பக்தரைக் காண இறைவன் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளான் என்பதை அறிந்த பொழுது கருடாழ்வாருக்கு ஆனந்தக் கண்ணீர் மல்கியது...
உண்மையிலேயே ஒரு இஷ்ட மூர்த்தியை அதுவும் ஒரு சித்புருஷர் வழிபட்டு வருகின்றார் என்றால் அது அந்த இஷ்டமூர்த்திக்குத் தெரியாமல் இருக்குமா என்ன? ஆனால் ஒரு தெய்வ மாயையை ஏற்படுத்தி கருடாழ்வாருக்கு விருட்சக் கொடி சித்தரைப் பற்றிய பக்தானுபவங்கள் இத்தருணத்தில் தான் கிட்ட வேண்டும் என்று பெருமாளே நிர்ணயித்து விட்டார் அன்றோ! தம்முடைய இஷ்ட மூர்த்தியே தம்முடைய எதிரில் நின்று தரிசனம் தருவது கண்டு பரமானந்தம் அடைந்தார் விருட்சக் கொடி சித்தர். அவரை வீழ்ந்து வீழ்ந்து நமஸ்கரித்துக் கொண்டேயிருந்தார். கருடாழ்வார் அவரை தூக்கியெடுத்து அரவணைத்து அருள்பாலித்தார். “அப்பனே! நீயோ என்னை வழிபட்டுக் கொண்டிருக்கின்றாய், நான் வழிபடுகின்ற எம்முடைய ஸ்ரீநாராயண மூர்த்தியோ எங்கு சென்றிருக்கின்றார் என்று தெரியாமல் ஏதோ மாயையில் ஈடுபட்டு விட்டேன்!” என்று தம் பக்தரிடமே முறையிட, கருடக் கொடி சித்தர் மிகவும் பணிவுடன், “சுவாமி, சற்று முன் தான் ஸ்ரீமன் நாராயண மூர்த்தியானவர் ஸ்ரீநந்தீஸ்வரன் மீது அமர்ந்து செல்வதைப் பார்த்தேன்”, என்று சொன்னவுடன் கருடாழ்வாருக்கு இது ஆச்சரியமாகவும், புதிய அனுபவமாகவும் இருந்தது. இதற்கு முன்பெல்லாம் மகா விஷ்ணுவானவர் யானை வாகனத்திலும், குதிரை வாகனத்திலும், சென்றதாகக் கேள்விப்பட்டிருக்கின்றார். அப்போதெல்லாம் தம்மை விடுத்து வேறு வாகனத்தில் சென்றார் என்ற எண்ணம் கூட இல்லாமல் நாராயண ஸ்மரணத்துடன் இருந்து விட்டு தற்போதைய கர்வபங்க லீலையினால் கருடாழ்வார் மிகவும் அவதிப்பட்டார். ஆனால், இதுவும் திருமால் திருலீலை தானே! தனக்குக் கிட்டாத அரிய காட்சி தம்முடைய பக்தரான ஸ்ரீகருடக் கொடி சித்தருக்கு தெய்வீகக் காட்சியாகக் கிட்டியதைக் கண்டு பெரிதும் ஆனந்தம் அடைந்தார்..
கருடக் கொடி சித்தர் மஹிமை
கருடக் கொடி சித்தருடைய மகிமை என்னவோ! அதியற்புதமான சித்புருஷர்! பிரபஞ்சத்தில் ஒரு சில இடங்களிலே கிடைக்கின்ற அரிய மூலிகைச் செடிகளையும், காடு போலத் தன்னுடைய முதுகில் சுமந்து, நோய் தீர்க்கும் மந்திரமான ஸ்ரீகருட பஞ்சாட்சரீ, ஸ்ரீகருட காயத்ரீ மந்திரத்தையும்,, ஜெபித்தவாறே ஆங்காங்கே பறந்து சென்று அனைவருடைய நோய்களையும் தீர்த்து வந்தார். அவர் வருவதோ, மூலிகைகளைச் சுமந்து, செல்வதோ எந்தவொரு சுவடும் தெரியா வண்ணம் தம்முடைய மகிமைகளை எல்லாம் பிறருக்கு அறிவிக்காவண்ணம் ஏதோ ஒரு சாதாரணமான சித்த வைத்தியர் போல வந்து சென்று விடுவார்!

ஸ்ரீகருடக்கொடி சித்தர்
சித்துக்காடு

கருடக் கொடி சித்தருடைய திருவுருவம் இன்றைக்கும் பல கோயில் தூண்களில் காணப்படுகின்றது. நாம் எத்தனையோ கோயில்களுக்குச் செல்கின்றோம். ஒவ்வொரு தூணிலும் பலவிதமான சித்புருஷர்களின், மகரிஷிகளின், யோகியர்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.. பொதுவாக அவரவர் ஜீவசமாதி கொண்ட தூண்களில் தான் இத்தகைய உருவங்கள் பதிக்கப்படுகின்றன. அதாவது, உதாரணமாக வயிறு சம்பந்தமான நோய்களைத் தீர்க்கவல்ல அக்னிபுராந்தக மகரிஷி ஜோதி வடிவில் சூட்சும நிலை கொண்டு சென்னை அருகே திருக்கச்சூர் சிவாலயத் தூணில் குடிகொண்டிருக்கின்றார். இதனை அந்தந்த கோயிலில் தரிசனம் செய்வதற்கு வருகின்ற மகான்களும், சித்புருஷர்களும் தான் தம்முடைய சிஷ்யர்கள் மூலமாக எடுத்துரைத்துப் பிறரும் அறியுமாறு செய்கின்றனர்.. இவ்வாறு நம் சிவகுருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த சுவாமிகள், தம் அருமை சிஷ்யரான குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமனுக்கு எண்ணற்ற திருத்தலங்களிலும் ஜீவசமாதி கொண்டிருக்கின்ற எத்தனையோ சித்புருஷர்களின் மகாத்மியத்தைப் பற்றி எடுத்துரைத்திருக்கின்றார்கள்.. அவற்றைப் பற்றி அவ்வப்போது ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழிலும் நாம் விளக்கி வருகின்றோம்.. இவ்வாறாக கருடக் கொடி சித்தர் திருவுருவத்தை சென்னை பூந்தமல்லி அருகே உள்ள சித்துக்காடு என்னும் திருத்தலத்தில் உள்ள ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஸ்ரீபெருமாள் ஆலயத்தின் பின்புறம் ஆண்டாள் சன்னதியில் உள்ள ஒரு தூணில் காணலாம்.. இது பற்றிப் பலரும் அறிய வாய்ப்பில்லை.. எப்போதும் கருடனுடைய சின்னம் பொறிக்கப்பட்ட கருடக் கொடியைத் தாங்கியவாறு ஸ்ரீகருடாழ்வாரையே தம்முடைய இஷ்ட தெய்வமாக ஏற்றுப் பிரபஞ்சமெங்கும் அன்றும், இன்றும், சூட்சும அருட்பெரும் ஜோதியாகப் பிணி தீர்த்து வருகின்ற ஸ்ரீகருடகொடி சித்தருடைய மகாத்மியத்தை இனியேனும் உணர்ந்திடுவீராக! ஸ்ரீகருட காயத்ரீ, ஸ்ரீகருட பஞ்சாட்சரீ, மந்திர ஜெபமானது நோய் தீர்க்கும் சக்தியைத் தரவல்லது. எனவே, அனைத்து டாக்டர்களும், சித்த வைத்தியர்களும், ஆயுர்வேத வைத்திய நிபுணர்களும், ஸ்ரீகருட பஞ்சாட்சரீ மந்திரத்தையும், ஸ்ரீகருட காயத்ரீயையும் ஸ்ரீகருட துதிகளையும் தினந்தோறும் 10,000 முறையேனும் துதித்து, தியானித்து வந்தால் நோய் குணமாக்கும் சக்தியும் கைராசியும் பெரிதும் மேம்படும். ஆனால், எந்த வைத்தியராயினும் சரி ஏழை, எளியோருக்கு இலவசமாக வைத்திய உதவி புரிந்தால் தான் அவருடைய குணமாக்கும் சக்தி விருத்தியாகும் என்பதை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். வைத்தியத்தின் மூலமாகப் பொருளை ஈட்டினாலும் தன்னுடைய தேவைக்குப் போக ஏனையவற்றை, இறைத் திருப்பணிகளுக்கு ஈடான ஏழைகளுக்கான இலவச வைத்திய சேவைகளைச் செய்து வந்தால் தான் இறைவன் தந்த வைத்திய அறிவை விற்றுப் பேராசையுடன் பொருள் ஈட்டிய சாபத்திற்கு நிவாரணம் கிட்டுவதோடு வைத்திய குணமும், நோய்களைத் தீர்க்கும் கைராசித் தன்மையும் விருத்தியாகும். இவர்களுக்கும் பெரிதும் உதவுபவரே ஸ்ரீகருடக் கொடி சித்தராவார்.
நந்தீஸ்வரரின் பெருமாள் சேவை! 
ஸ்ரீகருடாழ்வாருக்கு திடீரென்று ஒன்று நினைவிற்கு வந்தது. நாம் தினந்தோறும் ஸ்ரீவைகுண்ட லோகத்திற்குப் பெருமாளின் அர்ச்சனைக்காகப் பூக்களைச் சுமந்து செல்வோம் அல்லவா! இன்று ஒரு நாள் அக்காரியம் தடைபட்டு விட்டதே! இதற்குக் காரணம் தன்னுடைய கர்வ பங்கம் தானே! அனைவராலும் ஸ்ரீவைகுண்டத்திற்கு பூக்களைச் சுமந்து செல்ல இயலாததாயிற்றே! “புஷ்பார்ச்சனை இன்றிப் பெருமாள் பரிதவிப்பாரே” என்று எண்ணியவாறே கருடக் கொடி சித்தரிடம் விடைபெற்றுக் கொண்டு வைகுண்டத்தை நோக்கி விரைந்தார். ஸ்ரீகருடாழ்வார். ஆனால் அங்கு அவர் கணித்ததற்கு மாறாக ஸ்ரீநந்தீஸ்வரப் பெருமான் நெற்றியில் அழகிய திருச் சூர்ணத்துடன் பூக்களைச் சுமந்து செல்கின்ற காட்சியைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.. “மீண்டும் அதே கர்வ பங்கத்திற்கு ஆளாகி விட்டோமே! நம்மை விட்டால் வேறு எவர் பூக்களைத் தாங்கிச் செல்வார்?” என்று எண்ணியவர்க்கு இது ஒரு பாடமாகவே அமைந்து விட்டது. ஸ்ரீநந்தீஸ்வரரோ, தினந்தோறும் வைகுண்டத்திற்கும், திருகைலாயத்திற்கும் சென்று வரும் பாக்கியத்தைப் பெற்ற ஸ்ரீஅகஸ்தியப் பெருமான், ஸ்ரீநாரத முனிவர்களிடம் தாம் சுமந்த பூக்களை அளித்து விட்டு விடை பெற்றார். பிறகு நந்தீஸ்வரப் பெருமான் நேரே கருடாழ்வாரிடம் வந்து அவர்தம் திருவடிகளைச் சேவித்து “தங்களுடைய பேரருளால் சுவாமிக்கு இன்று புஷ்பங்களைச் சுமக்கின்ற பாக்கியம் கிட்டியது. இது தங்களுடைய கருணையினால் தான்! இதற்கு அடியேன் என்றென்றும் கடமைப்பட்டிருக்கின்றேன்”, என்று கூறி தண்டமிட்ட நந்தீஸ்வரர் தன்னுடைய நந்தி லோகத்திற்கு திரும்பினார். ஸ்ரீகருடாழ்வார் தன்னுடைய தவறுகளை உணர்ந்தவராய் ஸ்ரீபெருமாளை நோக்கி, “எம்பெருமானே! எனது கர்வத்தை நீக்கிய பெம்மானே! இது இவ்வுலகத்திற்கு ஒரு பாடமாக அமையத் தானே உன்னுடைய இறை லீலைகள் அமைந்தன. அடியேனுடைய சேவையை ஏற்றுக் காத்தருள வேண்டும்”, என்று மனமாரக் கெஞ்சி, கதறிட ஸ்ரீமன் நாராயண மூர்த்தி காட்சி தந்து அரவணைத்துக் கொண்டார்.
“கவலைப் படாதே, கருடா! உன்னுடைய பக்தியின் திறம் யாம் அறிந்ததே! ஆனால் எதிர்வரும் யுகங்களில் எத்தனையோ உத்தம நிலைகளை அடைந்தாலும் கூட அத்தகைய இறை நிலைகளிலும் கர்வம் உண்டாகுமானால், பக்திக்குக் குறைவு ஏற்பட்டு விடும் என்பதை இவ்வுலகிற்கு மட்டும் அல்லாமல் அனைத்து லோகங்களுக்கும் பாடம் புகட்டும் முகமாகத்தான் எம்முடைய லீலையாக இது அமைந்தது. அதற்கு உன்னை ஒரு பாத்திரமாக்கிக் கொண்டேன். மேலும், நந்தீஸ்வரனும், வைகுண்ட சேவை புரிவதற்காகப் பல காலம் தவம் புரிந்து கொண்டிருந்தமையால் ஈஸ்வர கிருபையால் அவருக்கும் இந்த பாக்கியம் கிட்டியது. ஆனால் எனக்கு அடியார்களின் சேவை தான் உகந்தது என்று நீ அறிவாய் அன்றோ! அதே போலத்தான் பல கோடி யுகங்களாகத் தவம் கிடக்கும் உன்னுடைய அடியாரான கருடக் கொடி சித்தருக்கு நீ தரிசனம் தந்து அருள்பாலிக்க வேண்டும் என்பதற்காகவும் தான் இந்த லீலை ஏற்படுத்தப்பட்டது என்பதை நீயும் உணர்வாயாக!”

ஸ்ரீவரதராஜ பெருமாள்
திருநெடுங்களம்

எப்போது கர்வபங்கத்தை ஒருவர் உணர்கின்றாரோ அப்போது அது பஸ்மமாகி விடுகின்றது.. ஆனால் எப்போதும் மீண்டும் அது எழலாகாது என்பதற்கு இறைவனின் மீது ஆழ்ந்த நம்பிக்கைத்தான் வழிவகுக்கும்.. எனவே, உன்னுடைய நாடகம் பலருக்கும் பாடமாக அமையட்டும்”.. என்று அருளுரை வழங்கி ஸ்ரீகருடாழ்வாரின் மீது ஏறி அமர்ந்து பிரபஞ்சத்தை மீண்டும் வலம் வரலானார் பரம்பொருளாம் ஸ்ரீமன் நாராயண மூர்த்தி!
இவ்வாறாக இன்றைக்கும் ஒரு சில இடங்களில் ஸ்ரீபெருமாள் மூர்த்திக்கு முன்னால் ஸ்ரீநந்தீஸ்வர மூர்த்தி அமர்ந்து கொண்டு அருள்பாலிக்கின்றார். ஸ்ரீகருடாழ்வார் தன்னுடைய கர்வபங்கத்திற்கு பிராயச்சித்தம் பெற்ற நேரமும், ஸ்ரீநந்தீஸ்வரப் பெருமான் புஷ்பங்களைச் சுமந்து ஸ்ரீவைகுண்டத்திற்கு வந்து சேர்ந்த நேரமும் தான் ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய காலமாகும். இருவருக்குமே பரம்பொருளாம் ஸ்ரீநாராயண மூர்த்தியின் அருள் தரிசனம் கிட்டிய காலமும் ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய காலமாகும்.. இதுவே பிரமாதி வருட வைகாசி மாத விஷ்ணுபதி புண்ணிய தினமாக அமைகின்றது.
முந்தையதொரு யுகத்தில் பிரமாதி வருடத்தில் வைகாசி மாதப் பிறப்பு அன்றுதான் ஸ்ரீகருடாழ்வாருக்கும், ஸ்ரீநந்தீஸ்வரருக்கும் இத்தகைய ஸ்ரீமன் நாராயணனின் திவ்ய தரிசனம் கிட்டியது.. எனவே, இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் (15.05.119999) எங்கெல்லாம் சிவாலயத்தில் ஸ்ரீபெருமாள் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாரோ (உதாரணம் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம், திருச்சி அருகே திருநெடுங்களம் ஆலயம்) அவ்வாலயங்களில் ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய தினத்தன்று விடியற்காலை 2.00 மணியிலிருந்து பகல் 10.30 மணி வரை அமைகின்ற விஷ்ணுபதி புண்ணிய காலத்தை அபிஷேக ஆராதனைகளுடனும், ஹோம வழிபாடுகளுடனும், தான, தர்மங்களுடனும் வழிபடுவோர்க்கு ஏற்படும் பலாபலன்களாவன.
அகங்காரம், கர்வம், ஆணவம், பதவி, செருக்கு, செல்வம், அழகு காரணமாக பலரைத் துன்புறுத்தியோரும், வதைத்தோரும் உண்டு. அழகு, அறிவு காரணமாக இலட்சக்கணக்கில் சீதனம் பெற்று பெண் வீட்டாரையோ, பிள்ளை வீட்டாரையோ துன்புறுத்தியோரும் உண்டு. பதவியிலிருக்கும் பொழுது லஞ்சம், பழி, குரோதம் காரணமாகப் பலவிதப் பெருங்குற்றங்களில் ஈடுபட்டோரும் உண்டு. மக்கள் சேவையாக நிறைவேற்ற வேண்டிய அலுவலகப் பணியும் இலஞ்சமாகப் பணத்தைப் பெற்று அநீதியான முறையில் செல்வம் சேர்த்தும், பிறரைப் பணக் கஷ்டத்திற்கு ஆளாக்கியோரும், இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் மானசீகமாகப் பெருமாளிடம் மன்னிப்புக் கேட்டு, இயன்றால் தம்மால் துன்பம் இழைக்கப்பட்டோருக்குக் தக்க நிவாரண உதவி செய்து, பெருமாளுக்குரிய இறைப் பணிகளையும், உழவாரத் திருப்பணிகளையும் இன்று செய்திடல் வேண்டும்.
இது மட்டுமின்றி மூன்று மாதத்திற்கு ஒரு முறை மட்டும் வருகின்ற விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் அச்சேவையைத் தொடர்ந்து வந்தால் தான் அவர்களுக்கு இந்த ஆயுளிலேயே தங்களுடைய மாபெரும் தவறுகளுக்கான பிராயசித்தங்களை அடைவதற்கான நல்வழியை இறைவனே தந்தருள்வான். ஆனால், ஆழ்ந்த நம்பிக்கையுடன் விஷ்ணுபதி பூஜையைத் தொடர்ந்து செய்து வருதல் வேண்டும். இது மட்டுமின்றி கர்வம் என்பது எல்லா மனிதர்களிடமும் குவிந்துள்ளது. மனிதன் நல்ல மனிதனாக வாழ்வதற்கு ஏதோ ஓரளவு Ego தேவை தான். ஆனால் பிறரை வதைப்பதற்கோ, துன்புறுத்துவதற்கோ கர்வம் வந்திடுதல் கூடாது. கர்வம் என்பது தற்கொலைக்கு நிகரானது. அத்தகைய கொடிய பாவங்களை கர்வம் தந்துவிடும் என்பதே இதன் உட்பொருளாகும்... உங்களுடைய அழகு, அறிவு, கம்பீரம், வீரம், பதவி அனைத்துமே உங்களுடைய பூர்வ ஜென்ம புண்ணியத்தினால் கிட்டியதே தவிர, தேர்வுகளிலும், Interviewகளிலும் நீங்களாகவே அறிவு, வலிமையால் பெற்றது என்று எண்ணி விடாதீர்கள். ஏனென்றால், இவை எதுவுமே நிரந்தரம் அல்ல. உங்கள் வாழ்க்கையின் ஏதேனும் ஒரு பருவத்தில் இவற்றைக் கட்டாயமாக நீங்கள் இழந்தாக வேண்டும். எனவே, கர்வ பங்கத்தைக் களைவதற்கான வழிகளை இப்போதே நீங்கள் மேற்கொள்ளுங்கள். அதற்கு உதவுவது தான் இந்த பிரமாதி வருட வைகாசி மாத ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய காலமாகும்.

ஸ்ரீபெருமாள் மூர்த்தி ஸ்ரீகுணபால ரிதத்வஜ நந்தீஸ்வரர் திருமழிசை

காஞ்சிபுரம் அருகே திருமால்பேறு (ஹரிசக்கரபுரம்) என்னும் திருத்தலத்தில் திருமால் மூர்த்தி சிவனை வழிபடுகின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றார். எனவே, இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் இத்தலத்தில் திருமாலுக்கு தைலக் காப்பு, மஞ்சள் காப்பு, சந்தனக் காப்பு மற்றும் பலவிதமான காப்புகளாலும், அபிஷேக ஆராதனைகள் செய்து சர்க்கரைப் பொங்கல் படைத்து ஏழைகளுக்கு அன்னதானமாக அளித்து வந்தால் கர்வ பங்கத்திற்கான பிராயச்சித்தங்களை நீங்கள் பெற்றிடலாம்.
பிரிந்த குடும்பங்கள் :- பல குடும்பங்களிலும் கணவன், மனைவியரிடையே செல்வம், அகங்காரங்கள் காரணமாக விவாகரத்து வரையான பலவிதமான குடும்பப் பிரிவுகள் ஏற்பட்டிருக்கும். அகங்காரம் காரணமாக அவர்கள் இணைந்து வாழ்வதற்குத் தடை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.. இவற்றையெல்லாம் களைந்து நன்முறையில் தம்பதியர் ஒன்று சேர்ந்து, இணைந்து வாழ்வதற்கு இந்த விஷ்ணுபதி புண்ணிய காலம் பெரிதும் உதவுகின்றது.. தனித் தனியாக கணவன், மனைவி வாழ்ந்தாலும் கூட இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்திலாவது ஒன்றாக வந்து திருமால்பேறு மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள ஸ்தலங்களில் பெருமாளுக்கு உரித்தான வழிபாடுகளை மேற்கொண்டிட, கர்வத்தினால் விளைந்த குற்றங்கள் நீங்கி தம்பதிகள் ஒன்று சேர்வதற்கு இவ்வழிபாடுகள் பெரிதும் உதவும்.
கோள்மூட்டி கலக தோஷங்கள் : உயர் அதிகாரிகளிடம் கோள் மூட்டியும், பிறர் நியாமாகப் பெற வேண்டிய பதவிகளைத் தாமே பெற்று அனுபவித்து அநீதிகளை பாவமாகச் சேர்த்துள்ளோரும் பலரும் உண்டு. இவர்கள் தம்முடைய குற்றங்களுக்கு மனமாற வருந்தி அநீதி இழைக்கப்பட்டவருக்கு நம்மால் இயன்ற அளவு தக்க நிவாரணங்களைச் செய்து தம்முடைய பாவங்களுக்கான பிராயசித்தமாக இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தன்று குறிப்பிட்டுள்ள வைணவத் தலங்களில் விஷ்ணுபதி புண்ணிய காலத்தன்று பெருமாளுக்கு நல்ல பட்டாடை சார்த்தி அதனை ஏழைகளுக்குத் தானமாக அளித்து வர அவர்களுடைய பெரும் குற்றங்களுக்குத் தக்க பிராயச்சித்ததிற்கான நல்வழிகளைப் பெற்றிடுவர் திருமால் திருவருளால்!
விஷ்ணுபதி பூஜைக்கான முக்கியமான திருத்தலங்கள் ; குறிப்பாக நந்தி உள்ள பெருமாள் தலங்கள் [கோயம்புத்தூர் நஞ்சப்பா சாலையில் உள்ள ஸ்ரீபொன்ராயர் கோயில், கோயம்புத்தூர் அருகே சின்னவேடப்பட்டி ஆலயம், காஞ்சீபுரம் செங்கல்பட்டு இடையே உள்ள திருமால்பேறு, திருச்சி திருநெடுங்களம், காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம், திருவக்கரை சிவாலயம், சென்னை  திருமழிசை போன்ற ஆலயங்களில் உள்ள ஸ்ரீமஹாவிஷ்ணு/ தசாவதார மூர்த்திகள்/ சன்னதிகள் மற்றும் அனைத்து வைணவத் தலங்கள்..
ஸ்ரீரிதத்வஜ மூர்த்தி மஹிமை கேளீர்! திருமழிசை சிவாலய மகிமை
இன்றைக்கும் பல பிரசித்தி பெற்ற ஸ்தலங்கள் தேவாரப் பாடல்கள் பெறாதவைகளாக விளங்குகின்றன. உண்மையில் இவற்றிற்கு தேவாரப் பாடல்கள் இல்லை என்று சொல்வதே தவறாகும். ஏனென்றால் நமக்கு கிட்டாத எண்ணற்ற ஆயிரமாயிரம் தேவாரப் பாடல்கள் உண்டு. எனவே, தேவாரம் பாடிய மூவரும், ஸ்ரீமாணிக்க வாசகப் பெருமானும் விஜயம் செய்யாத சிவத்தலமே கிடையாது. ஆனால் இப்போது இத்தலங்களுக்கு உரித்தான தேவாரப் பாடல்கள் கிட்டாமல் இருப்பினும் எதிர்காலத்தில் பல மகான்களின், யோகியர்களின், சித்புருஷர்களின் கருணையால் இவற்றிற்கு உரித்தான தேவாரப் பாடல்கள் நிச்சயமாக நமக்குக் கிடைக்கும்.

ஸ்ரீதேவராஜ கணபதி
திருமழிசை

இவ்வகையில் சென்னை அருகே திருமழிசையில் கை தந்த நாதராக, ஸ்ரீஒத்தாண்டீஸ்வரர் ஈஸ்வரன் அருள்பாலிக்கின்ற அற்புதமான சிவத்தலம் ஒன்று உண்டு. பாரிஜாத மரமும், வில்வ மரமும் இரண்டும் உள்ள மிகச் சிறந்த சிவதலமாக விளங்குகின்றது.. இங்கு அருள் பாலிக்கின்ற ஸ்ரீதேவராஜ கணபதி, இந்திரனுடைய கர்வம் நீக்கிய அரும் பிள்ளையார் ஆவார். தாம் இழந்த பதவியை இந்திரன் பெறுவதற்கு அருள்பாலித்த உத்தமப் பிள்ளையார். பலவிதமான குற்றச் சாட்டுகளினாலும், சந்தர்ப்பங்களினாலும் தன்னுடைய பதவிகளை இழந்து கோர்ட்டிற்கு அலைந்து கொண்டிருப்போர் தங்களுடைய பதவிகளை நியாயமான முறைகளில், தார்மீக ரீதியாக பெற்றிட அருள் பாலிக்கின்ற அற்புதமான தேவராஜ விநாயக மூர்த்தி. இக்கோவிலில் எத்தனையோ தெய்வீக இரகசியங்கள் உள்ளன. இவை தக்க தருணத்தில் மகான்களின், சித்தர்களின் மூலமாக வெளிவரும்.
பல கோயில்களைப் பற்றிய தெய்வீக இரகசியங்கள் எல்லாம் சித்புருஷர்களின் கிரந்த நாடிகளில் இன்றும் காணப்படுகின்றன. இவ்வாலயத்தில் மூலவருக்குப் பின்னால் பொதுவாக லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் கோஷ்டத்தில் ஸ்ரீமஹாவிஷ்ணு அருள்பாலிக்கின்றார். இவ்வாறாக ஒரு சில தலங்களில் மட்டுமே அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீபெருமாள் மூர்த்திக்கு முன்னால் நந்தீஸ்வரர் அமர்ந்துள்ளார் மூலவருக்குப் பின்னால் அமர்ந்து அருள்பாலிப்பவராகவும் இந்த நந்தீஸ்வரர் திகழ்கின்றார்.. இந்நந்தீஸ்வரர்தான் ஸ்ரீகுணபால ரிதத்வஜர். வைகுண்டத்திற்கு தினமும் புஷ்பங்களைச் சுமந்து செல்கின்ற ரிதத்வஜ நந்தீஸ்வரரின் பரிபூர்ண அம்சங்களைப் பெற்றவர். விஷ்ணுபதி புண்ணிய காலத்தன்று இந்த நந்தீஸ்வர மூர்த்திக்கு வாசனைப் பூக்களால் அலங்காரம் செய்து ஸ்ரீபெருமாளை வழிபட்டிட விஷ்ணுபதி புண்ணிய கால பூஜா பலன்கள் கிட்டும். பெருமானையும், பெருமாளையும் வழிபடுகின்ற திவ்யமான நந்தீஸ்வரர் சிவ, வைணவ பேதம் கடந்த சிறப்பான நந்தீஸ்வர மூர்த்தி. வரும் ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய காலத்தன்று திருமழிசை ஸ்ரீஒத்தாண்டீஸ்வரர் ஆலயத்தில் மூலவருக்குப் பின்னால் கோஷ்ட மூர்த்தியாக அருள்பாலிக்கின்ற ஸ்ரீபெருமாள் மூர்த்திக்கும் எதிரே அருள்பாலிக்கும் ஸ்ரீகுணபால ரிதத்வஜ நந்தீஸ்வரருக்கும் விதவிதமான பூக்களால் குறிப்பாக பாரிஜாத பூக்களால் அலங்காரம் செய்து ஸ்ரீவிஷ்ணுபதி பூஜையைக் கொண்டாடிட,
1. கர்வம், அகங்காரம், ஆணவம் காரணமாகப் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கும்.
2. கைவித்தையால் வாழ்க்கையில் பிரகாசிக்கின்ற தையல்காரர்கள், பூக்கள் வியாபாரம் செய்வோர், தட்டச்சு [Type-writing] செய்து வாழ்வோர், மிருதங்கம், வயலின் போன்ற இசை துறை விற்பன்னர் போன்றோருக்கு நற்புகழும், கீர்த்தியும், நற்செல்வமும் கிட்டும்.
கைராசிதாம் மருத்துவர்களுக்குக் கண்கண்ட நல்வரமாகும். அஸ்வினி நட்சத்திர நாளிலும், வைத்யத்திற்குரித்தான தேய்பிறை செவ்வாய்க் கிழமையன்றும் டாக்டர்கள் ஸ்ரீஒத்தாண்டீஸ்வரருக்குச் சந்தனக் காப்பிட்டு கோதுமை உணவை அன்னதானம் செய்து வர டாக்டர்கள் நல்ல கைராசியைப் பெறுவர். இந்த சந்தனத்தைத் தினந்தோறும் நெற்றியிலும், கைகளிலும் பூசியும் வர வேண்டும்.

வாஸ்துநாள் மகிமை

தற்காலத்தில் வாஸ்து சாத்திரத்திற்கு மிகவும் சிறப்பான முக்யத்துவம் அளிக்கப்பட்டு வருவதைப் பற்றி நாம் பரமானந்தம் அடைகின்றோம். ஏனென்றால் பல யுகங்களுக்கு முன்னால் பூலோகத்திற்கு மட்டுமல்லாமல் அனைத்து கோடி லோகங்களுக்கும் உரித்தானதாக விளங்கி வந்த வாஸ்து சாஸ்திர இலக்கணங்கள் காலப்போக்கில் மறக்கப்பட்டு, கலியுகத்தில் தற்போது மீண்டும் ஆன்மீகப் புத்துணர்ச்சியும் மறுமலர்ச்சியும் பெறுவது மிகவும் ஆனந்தம் அளிக்கக் கூடிய ஒன்று தானே! ஏனென்றால் நல்லதெல்லாம் நலமுடன் சமுதாயத்திலே கடைபிடிக்கப்படுமேயானால் அதைவிட வேறு என்ன மகிழ்ச்சிகரமானதாக இருக்கக் கூடும், இருக்க முடியும்?
கலியுகத்தில் தீய சக்திகள், தீய குணங்கள், தீய எண்ணங்கள் மற்றும் பல நல்லவை அல்லாதன எல்லாம் பெருகி வருகையில் ஸ்ரீவிஷ்ணுபதி புண்ய காலம், பிரதோஷ பூஜை, வாஸ்து நேர பூஜை, நற்பண்டிகைகள் மீண்டும் கடைபிடிக்கப்படுமாறு செய்தால் தான் கலியுகத் துன்பங்களுக்கு ஒரு நல்ல நிவாரணத்தை நம்மால் பெற முடியும்., நம்முடைய காலம் ஏதோ ஓடி விட்டது என்று எண்ணாதீர்கள். நம்முடைய குழந்தைகளும் சந்ததிகளும் நல்ல தெய்வீகமான எதிர்காலத்தைப் பெற வேண்டுமல்லவா அதற்காக நாமே முறையான தெய்வீகத்தைக் கடைபிடித்தால் தானே இவற்றை எதிர்காலச் சந்ததியினர் உணரத் தொடங்குவர். இவ்வகையிலே வாஸ்து பூஜைக்கு உரித்தான தினங்கள் வருடத்தில் ஒரு சில தினங்களே அமைகின்றன.
ஸ்ரீவாஸ்து தெய்வ மூர்த்தியானவர் ஒரு சாதாரண தேவதா மூர்த்திதானே என்று எடை போடாதீர்கள்! எவ்வாறு படைத்தலுக்கு நான்முகனும் காத்தலுக்குத் திருமாலும் இறைப்பரம் பொருளின் முழு அம்சமாக விளங்குகின்றார்களோ, அதே போல பூலோகத்தில் மட்டுமல்லாது அனைத்து லோகங்களிலும் பிருத்வி அம்சங்களுக்கு உரித்தான பிருதிவி ஈஸ்வர மூர்த்தியாக விளங்குபவரே ஸ்ரீவாஸ்து தெய்வ மூர்த்தியாவார். அவருக்கென்று தனித்த உருவம் உண்டா? ஸ்ரீஐயப்பன், ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீமுருகன் போன்று ஸ்ரீவாஸ்து மூர்த்திக்கும் உரித்தான உருவ வழிபாடும் உண்டு. அவை காலப்போக்கில் சித்புருஷர்களால் தக்க தருணத்தில் எடுத்துரைக்கப்படும், அதுவரையில் காத்திருங்கள்!

ஸ்ரீஆத்மநாதேஸ்வர சுவாமி
திருஆலம்பொழில்

ஸ்ரீஞானாம்பிகை
திருஆலம்பொழில்

பிருத்வி சக்தி
பிருத்வி அம்சமில்லாது நம்முடைய வாழ்க்கையில் ஒரு விநாடியைக் கூட கழிக்க முடியாது. நாம் நின்று, அமர்ந்து படுத்துக் கொண்டிருக்கின்ற புனித பூமியானது பிருத்வி அம்சம் தானே! இந்த பூமியில்லாது எங்கு எந்தக் காரியம் நிகழ முடியும்? நாம் வசிக்கின்ற வீடு, நிலபுலன்கள், நடக்கின்ற பூமி இவ்வாறாக பிருத்வி அம்சமில்லாத ஜீவச் செயல் ஏதேனும் உண்டோ? பறவை இனத்தை எடுத்துக் கொண்டால் கூட பிருத்வி அம்சமில்லாது ஒரு பறவை எப்போதும் பறந்து கொண்டேயா இருக்க முடியும்? சூரியனோ, சந்திரனோ, நட்சத்திரங்களோ அவற்றின் ஒளியைப் பாய்ச்சுவதற்கு ஒரு பூமியோ ஏனைய லோகங்களோ தேவை தானே!
இவ்வாறாக பிருத்வி அம்சம் பரிபூரணமாக பிரபஞ்சமெங்கும் நிறைந்திருக்கின்றது. இதற்குரித்தான தெய்வ அவதார மூர்த்தியே ஸ்ரீவாஸ்து புருஷ மூர்த்தியாவார். இவரை “ஸ்ரீவிஷ்ணுவின் அம்சம்” என்று பலரும் போற்றுகின்றனர்.. ஈஸ்வர அம்சமாகவும் வழிபடுவதும் உண்டு. ஹரிஹர பேதத்தைக் கடந்தவராய், சர்வேஸ்வர அம்சத்தைப் பூண்டவராய் ஸ்ரீவாஸ்து புருஷமூர்த்தி விளங்குகின்றார். இவருக்குச் சித்புருஷர்கள் அளிக்கின்ற பரிபாஷை அடைமொழி யாது தெரியுமா! சற்றுப் பொறுங்கள்! தற்காலத்தில் நாம் வசிக்கின்ற இல்லங்கள் பலவும், வளர்ந்து கொண்டிருக்கின்ற கட்டடங்கள் யாவும் வாஸ்து இலக்கணங்களுக்கு உரித்தானதாக அமைந்துள்ளனவா என்பதை நாம் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இறைவனுடைய சாம்ராஜ்யமானது பல தெய்வ மூர்த்திகள் தேவாதி தேவர்கள், கந்தர்வ மூர்த்திகள், தேவாதி தேவதைகள் என்று பல இறை அம்சங்களாக விரிந்துதான் இறை ஆட்சி நடை பெறுகின்றது. கல்விச் செல்வமா, கலைவாணியை கவினுற வழிபடுவீர்! மனோ தைரியத்துடன் வீரத்துடன் திகழ வேண்டுமா? ஸ்ரீவீரலக்ஷ்மியை வழிபடுவீர். இவ்வாறாக மனிதனுடைய விருப்பங்களுக்கேற்ப கர்ம வினைகளுக்கேற்ப புண்ய, பாவ சக்திகளுக்கேற்பத்தான் கலியுக மனித வாழ்க்கை நடைபெறுவதால் இது வேண்டும், அது வேண்டும் என்று எந்த மனிதனும் எண்ணாத நாளே கிடையாது.
நம்மை ஒவ்வொரு விநாடியும் வாழ வைக்கின்ற இறைவனுடைய திருப்பாதங்கள் மட்டுமே வேண்டும் என்ற மன உறுதியுடன் வாழ்பவர்கள் எத்தனை பேர் இருக்கின்றார்கள்! எனவே நாம் பெற்றிருக்கின்ற இந்த அபூர்வமான மனிதப் பிறவியானது இப்பிறவிக் கடலைக் கடப்பதற்கான ஒரு தோணி என்றால் அத்தோணியானது ஒன்றாக உறுதியுடன் நல்ல துடுப்புடன் திகழ வேண்டும் அல்லவா? தோணியில் ஏறி உட்கார்ந்து கொண்டு விட்டால் கடலைக் கடக்க முடியுமா? அதற்குரித்தான படகோட்டி யார்? இவ்வாறெல்லாம் தான் உங்களுடைய வாழ்க்கையைப் பற்றி ஆத்ம விசாரம் செய்து பார்த்தல் வேண்டும்.. எனவே, எங்கெங்கு காணினும் சக்தியடா என்பது போல நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு விநாடியும், வாழ்க்கைக் காரியங்கள் ஒவ்வொன்றிலும் தெய்வீகத்தை நாம் நிறைவு செய்தால் தான் நம்முடைய வாழ்க்கை பரிபூரணமாக அமையும். இல்லாவிடில் போகம், முறையற்ற காமம், அதர்மம், பொறாமை, விரோதம், பகைமை இவைகளுக்கிடையில் தான் ஒரு கொள்கையற்ற வாழ்க்கையாக மனிதப் பிறவி முடிந்து விடும்.

இவ்வாறாகத்தான் கோடிக்கணக்கான பிறவிகள் நமக்கு ஏற்படுகின்றன.. இவ்வாறாக ஒரு மனிதன் தன்னை தெய்வீக நிலையில் நன்முறையில் நிலைநிறுத்திக் கொள்வதற்காக உதவும் பூஜைகளில் ஒன்றே ஸ்ரீவாஸ்து பூஜையாகும். நாம் எல்லோரும் நினைப்பது போல ஸ்ரீவாஸ்து பூஜை என்பது புதுக் கட்டிடத்திற்கோ, புது அஸ்திவாரத்திற்கோ மட்டுமானது என்பது அல்ல. நாம் இருக்கின்ற இல்லம், கடை, வியாபாரத் தலம், பணிபுரிகின்ற அலுவலகம், விளைகின்ற பூமி அனைத்திலுமே பிருத்வி அம்சங்கள் நிறைந்து இருப்பதால் வாஸ்து பூஜை என்பது அனைவராலும் கடைபிடிக்கப்பட வேண்டிய நித்திய பூஜைகளில் ஒன்றாகும்.
ஆம் வாஸ்து நேரங்கள் ஒரு வருடத்திற்கு சில தினங்கள் அமைந்தாலும் ஸ்ரீவாஸ்து மூர்த்தியும் நம் குல தெய்வத்தைப் போல தினந்தோறும் வழிபட வேண்டிய மூர்த்திகளில் ஒன்றாவார். இவ்வாறாக அடுக்கிக் கொண்டே சென்ற நாம் தினந்தோறும் வழிபட வேண்டிய தெய்வ மூர்த்திகள் எத்தனை எத்தனையோ அல்லவா? ஆமாம், நிச்சயமாகத்தான்.. உங்களுடைய ஆசைகள் ஆயிரம் ஆயிரம் இல்லை?! குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும். வீடு கட்ட வேண்டும், கார், பங்களா என எத்தனை விதமாய் ஆசைகள் பல்கிப் பெருகுகின்றனவோ, அந்த அளவிற்கு உங்களுடைய புண்ணிய சக்திகள் விரிந்தால் தான் நீங்கள் இவற்றைப் பெற முடியும்.
எப்போது ஆசை என்று ஒன்று துளிர்த்து விட்டதோ, அது தார்மீகமான நல்ல ஆசையோ அல்லது நிராசையோ அந்த ஆசையை நிறைவேற்றுவதில் தானே உங்கள் மனம், உள்ளம், செயல், ஆற்றல், சக்தி , உடல் திறன், புத்தி அனைத்துமே செயல்படுத்தப்படுகின்றன. எனவே, ஆயுளுக்குள் ஒரு நல்ல வீட்டைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எப்போது துளிர்த்து விட்டதோ, அப்போதே ஸ்ரீவாஸ்து பூஜையைச் செய்ய வேண்டிய கட்டாயம் நிச்சயமாக உங்களுக்கு உண்டு. வீடு பாக்யம் பெற ஸ்ரீவாஸ்து பூஜை பெரிதும் உதவும்..
ஏனென்றால், உங்களுடைய உடல் வசிக்கின்ற இல்லமானது தோஷங்கள் அல்லாததாக, தீய சக்திகளின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்டதாக அமைந்தால் தானே உங்களுடைய மனம் எப்போதும் நிம்மதியாக இருக்கும். பில்லி, சூன்யம், ஏவல் வினைகள் நிறைந்ததாக ஆவி நடமாட்டம் உள்ளதாக இல்லமோ, அலுவலகமோ, அமைந்து விட்டால் உங்களுடைய வாழ்க்கை முழுவதும் ஒரு போராட்டமாகத்தானே அமையும்? இன்றைக்கும் பல வியாபாரிகள் பலவிதமான நஷ்டங்களுக்கு உள்ளாவதற்கான காரணமே அவர்களுடைய வியாபார இடங்கள் சரியான முறையில் அமையாததால் தான்.
எவ்வாறு நம் உடலில் தலை, கழுத்து, உடல், கால்கள் என அங்கங்கள் பிரிக்கப்பட்டுள்ளனவோ, அதே போன்று ஒவ்வொரு நிலத்திற்கும், ஒவ்வொரு கட்டிடத்திற்கும் தலை முதல் பாதம் வரையிலான அங்கங்கள் உண்டு. இதனை தெய்வ அம்சமாக பகுத்துத்தான் ஸ்ரீவாஸ்து புருஷ மூர்த்தியின் தெய்வீக அம்சம் அமைகின்றது. பஞ்சாங்கங்களில் ஸ்ரீவாஸ்து புருஷ மூர்த்தியானவர் சயனிக்கும் கோலங்கள், கைகளை வைத்திருக்கும் நிலைகள், கண்கள் பார்க்கின்ற திசைகள் யாவும் குறிக்கப்பட்டிருக்கும். இது ஒரு தெய்வ அவதாரத்தின் நின்று, நடந்து, கிடந்து இருக்கின்ற நிலைகளை மட்டும் குறிப்பதல்ல. எவ்வாறு ஸ்ரீமகாவிஷ்ணு நின்று (ஸ்ரீராமர்), இருந்து (ஸ்ரீவரதராஜர்), நடந்து (ஸ்ரீவாமன/திரிவிக்ரம மூர்த்தி), கிடந்து (ஸ்ரீரெங்கநாதர்) ஆகிய பல கோணங்களில் நமக்கு தோற்றம் தந்து விதவிதமான அனுகிரகங்களைத் தந்து அருள்கின்றார்களோ அதே போல ஸ்ரீவாஸ்து புருஷ மூர்த்தியின் சயனக் கோலங்களில் விழித்து எழல், நீராடல், பிரசாதம் ஏற்றல் (போஜனம்), தாம்பூலம் போன்ற பல பிருதிவி அம்சங்கள் குறிக்கின்றன..
ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் திவ்ய ரூபங்கள்
எத்தனையோ தெய்வமூர்த்தியின் புராணங்களை நாம் அறிந்திருக்கின்றோம். ஆனால் ஸ்ரீவாஸ்து புருஷ மூர்த்திக்கு உரித்தான ஐந்து விதமான கோலங்களை ப்ருதிவி அம்சங்களுடன் பொது தொடர்பு கொண்டுள்ளன. நாம் சாதாரணமாக நினைப்பது போல ஸ்ரீவாஸ்து மூர்த்தியானவர் பல துலக்குவதோ, நீராடுவதோ, பூஜை செய்வதோ, உணவு ஏற்பதோ , தாம்பூலம் – வெற்றிலைப் பாக்கு போடுவதோ என்று மிகவும் சாதாரணமாகக் கருதி விடாதீர்கள்.. ஸ்ரீவாஸ்து புருஷ மூர்த்தியின் இவ்வித தெய்வீக லட்சணங்களுக்கு எத்தனையோ ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.. இதன் பின்னணியில் கோடானு கோடி தெய்வீக இரகசியங்களும் உண்டு.. இவற்றை நீங்கள் நன்கு உணர்ந்தால்தான் ஸ்ரீவாஸ்து புருஷ மூர்த்தியின் அவதார மகிமையை உணர்ந்து கொள்ள முடியும்.. ஸ்ரீசரபேஸ்வரர் மகிமை, ஸ்ரீஆயுர் தேவி மகிமை போல ஸ்ரீவாஸ்து புருஷ மூர்த்தியின் மகிமையானது எல்லை அற்றது, என்றும் நிரந்தரமானது.

பிரபஞ்சத்திலுள்ள அனைத்து கோடி லோகங்களுக்கும் உரித்தானது.. மேலும், ஸ்ரீவாஸ்து புருஷ லட்சணங்களைக் குறிக்கையில் இம்மூர்த்தியானவர், சயனிக்கின்ற கோலத்தில், கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, திசைகளில் சிரசை வைத்து சயனம் கொள்வார். சயனம் என்றால் ஸ்ரீவாஸ்து புருஷ மூர்த்தியானவர் உறக்கம் கொள்கின்றார் என்று பொருள் அல்ல. எவ்வாறு ஸ்ரீரெங்க மூர்த்தியானவர் யோக நித்திரை பூண்டு இருக்கின்றாரோ அதே போல ஹரிஹர அம்சத்தைக் கொண்டுள்ள ஸ்ரீவாஸ்து புருஷ மூர்த்தியானவர் யோக நித்திரை கொள்கின்றார். ஸ்ரீமுருகன், ஸ்ரீபிள்ளையாரப்பன், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி போல விழி திறந்த கோலத்தில் நமக்கு அருள் பாலிக்கின்றதைப் போல ஸ்ரீவாஸ்து மூர்த்தி யோக நித்திரையிலிருந்து மீண்டு விழி திறக்கும் காலங்களையே ஸ்ரீவாஸ்து புருஷ நேரமாக நாம் குறிக்கின்றோம். .இதற்காக ஸ்ரீவாஸ்து புருஷ மூர்த்தியானவர் யோக நித்திரைக் கொள்ளும் போது நமக்கு அருள்பாலிப்பதில்லை என்று அர்த்தம் கொள்ளாதீர்கள்! ஏனென்றால் ஸ்ரீரங்கத்தில் என்றும் யோக நித்திரையில் அருள்பாலிக்கின்ற ஸ்ரீரெங்கநாதரானவர் அருள் பாலிக்காத நேரம் என்று உண்டா என்ன? இதைப் போலத் தான் ஸ்ரீவாஸ்து புருஷ மூர்த்தியானவர் என்றைக்கும் அன்றும், இன்றும், என்றும் அருள்பாலித்துக் கொண்டு தான் இருக்கின்றார். ஆனால் அந்த அருள்பாங்கினை நாம் உணர்வதற்காகத்தான் அவர்களுடைய அனுகிரகங்களை நாம் பரிபூர்ணமாக பெறுவதற்காகத்தான் தான் வாஸ்து நேரங்கள் குறிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீவாஸ்துவின் தந்தாவன நேரம் :-
உதாரணமாக ஸ்ரீவாஸ்து புருஷ மூர்த்தியின் தந்தாவனம் அதாவது பல் துலக்குதல் நேரம் என்பதற்கு உண்மையான அர்த்தம் என்ன? ஒவ்வொருவருக்கும் 32 பற்கள் உண்டு அல்லவா! மனிதனுக்கு மட்டும் அல்லாமல் எத்தனையோ உயிரினங்களுக்கும் பற்கள் உள்ளன! பற்கள் இல்லாத உயிரினங்களும் உண்டு. உண்மையில் பற்களுக்கு உரித்தான தேவதைகளை தந்த தேவதைகள் என்று கூறுகின்றோம். அக்காலத்தில் நம் மூதாதையர்கள் 80 வயது நிறைந்து, 32 பற்கள் அனைத்துமே உடைய பெரியோர்களை தேடிப் பிடித்து ஆசீர்வாதத்தை பெறுவார்கள். ஏனென்றால் 80 வயதுக்கு மேல் ஒருவருக்கு 32 பற்களும் விழாமல் கெட்டியாக இருக்குமானால் அவர் 32 விதமான தர்ம தேவதைகளின் ஆசீர்வாதத்தைப் பெற்று இருக்கின்றார் என்பது பொருளாகும். இந்த பாக்கியம் அனைவருக்கும் கிட்டுமா என்ன? இவர்கள் எல்லாம் முக்காலத்தில் ஸ்ரீவாஸ்து பூஜையை நன்முறையில் கைக்கொண்டு இருப்பார்கள்.
எனவே, நம்முடைய ஒவ்வொரு பல்லும் ஒவ்வொரு தர்மத்தைக் குறிக்கின்றது. நாம் உயிர் வாழ்வது பெரும்பாலும் காற்று, உணவு மூலமாகத்தானே! காற்றினை நாசியில் உள்ள பஞ்சபூத படிக்கட்டின் மூலமாகத்தான் நாம் இருதயத்திற்குச் செலுத்துகின்றோம். ஏனென்றால் மூக்கில் பலவிதமான தெய்வீக இரகசியங்கள் உண்டு. இவற்றுள் ஒன்றே பஞ்சப் பூத படிக்கட்டுகளாகும். இதனை சுவாச யோகத்தில் நன்கு விளக்குகின்றார்கள். வலது நாசியில், இடது நாசியில் இரண்டு சூழ்ந்த சூழ்முனையில் இவ்வாறாக பலவிதமான முறைகளில் சுவாசத்தை நாசியில் கைக்கொண்டிடலாம்.
சுவாச யோகத்தை நன்கு பயில வேண்டுமானால் அடிக்கடி கஜபூஜை செய்து வர வேண்டும். ஏனென்றால் பிரபஞ்சத்தில் மிகப் பெரிய நாசியை உடையது யானையாகும். அவ்வளவு பெரிய நாசியினுள் காற்றை இழுப்பது என்றால் அதனுடைய அங்குலாஸ்துதி சுவாசமானது பிரபஞ்சத்தில் வேறு எந்த உயிரினங்களுக்கும் கிடைக்கப் பெறாத அனுகிரமாகும்.. அதனால் தான் யானையின் துதிக்கையினால் ஆசியைப் பெறும் பொழுது அது சுழுமுனையில் சுவாசத்தை வாயு பரிமாணமாக நமக்குப் பீறிட்டு அளித்து ஆசியை தருகின்றது. இலை, தழை  மூலிகைகளுடன் எப்பொழுதும் தாவரப் பொருட்களையே உண்டு மிகுந்த வலிமையைப் பெற்று விளங்குகின்ற யானையின் பருத்த உடலானது தாவர சங்கமாக, தாவரத் திடலாக, மூலிகைப் பந்தலாக, மூலிகை தோட்டச் சுடராக விளங்குகின்றது அல்லவா!
எனவே, சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளில் யாரொருவர் யானையின் தரிசனத்தைப் பெற்று கஜ பூஜையை மேற்கொண்டு வருகின்றார்களோ அவர்களுக்கு சுவாச பந்தன யோகம் தானாகவே அமையும். எனவே, கஜபூஜை தான் வாஸ்து பூஜையின் மிகவும் சிறப்புடைய அங்கங்களுள் ஒன்றாக விளங்குகின்றது.. யானைக்கும் பற்கள் உண்டு. யானை தன்னுடைய பற்களில் அரைத்து, சுவைத்து உண்கின்ற இலை, தழை, மூலிகைகளின் சுவாசக் காற்று எப்போதும் பட்டுக் கொண்டு இருப்பதால் தான் யானையின் தந்தங்களுக்கு மகத்தான தெய்வீக மற்றும் மருத்துவ சக்தி உண்டு .
ஆனால் இயற்கையாக மரணம் அடைந்த யானையிடமிருந்து பெறப்படுகின்ற தந்தங்களிலும், யானை முடியிலும் வேதனைகள் தான் சூழ்ந்திருக்கும். அதனைப் பயன்படுத்தினாலோ, அணிந்தாலோ, வாழ்க்கை எப்பொழுதும் சோகமயமானதாகத் தான் இருக்கும் என்பதை நினைவில் கொண்டிடுக! எனவே, அவசரப்பட்டு யானை முடியையும் தந்தப் பொருட்களையும் வாங்கி விடாதீர்கள்! இப்பொழுதும் பல இடங்களிலும் யானையின் வாலிலிருந்து பிய்த்து எடுத்து இரத்தம் வடிந்ததாக முடியை எடுத்து பிறகு நீரால் கழுவி அதனை நமக்கு அளித்து ஏமாற்றி விடுகிறர்கள். தானே கீழே விழுகின்ற யானை முடிக்குத் தான் தெய்வீக சக்தியும் ஜோதிட சக்திகளும் உண்டு. எனவே, யானை முடி சுற்றிய மோதிரத்திற்கு உண்மையிலேயே ஜோதிட சக்திகள் உண்டு என்றாலும் ஆனால் இயற்கையாக தானாகவே விழுந்த யானை முடியாக இருந்தால்தான் இந்த தெய்வீக நியதி செல்லுபடியாகும் என்பதை உணர்ந்திடுக!
எண் நான்கு கண்ணான தர்மங்கள்
எனவே தந்தாவனம் எனப்படும் பூஜையில்/பூஜை நேரத்தில் ஸ்ரீவாஸ்து புருஷ மூர்த்தியானவர் தன்னுடைய பற்களை சுத்தம் செய்கின்றார் என்று மட்டும் பொருள் கொள்ளாதீர்கள். ஒவ்வொரு பல்லும் ஒவ்வொரு தர்ம தேவதையைக் குறிப்பதால் ஒவ்வொருவரும் தம்முடைய வாழ்க்கையில் 32 விதமான அறங்களைச் செய்தாக வேண்டும். காஞ்சீபுரத்தில் ஸ்ரீகாமாக்ஷி தேவி 32 விதமான தர்மங்களை இன்றும் செய்து கொண்டு இருக்கின்றாள். எனவே, இந்த பூலோகத்தில் தினந்தோறும் 32 விதமான அறங்கள் ஏதேனும் ஒரு வகையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் திருத்தலமே காஞ்சீபுரம் ஆகும். ஈஸ்வரனின் பல அவதாரங்களின் போதும் ஒவ்வொரு அவதாரத்திற்கும் உரித்தான ஈஸ்வரி தேவியாக அம்பிகை இறைவனை மணந்த போது அதற்கு முன் பலவிதமான தவ முறைகளை, உக்கிர தவங்களையும், யோகங்களையும், மேற்கொள்கிறாள். பிருத்வி தலமான காஞ்சீபுரத்தில் இறைவனை மணப்பதற்கு இறைவன் அம்பிகைக்கு விதித்த நிபந்தனைதான் தினந்தோறும் 32 விதமான அறங்களைச் செய்து வருதல் வேண்டும் என்பதாகும்..
ஹோமத்திற்கோர் காஞ்சி
மேலும் ஸ்ரீபிரம்ம, மூர்த்தியானவர் தன்னுடைய ஹோம பூஜைகளை இன்றைக்கும் காஞ்சிபுரம் திருத்தலத்தில் தான் செய்து வருகிறார்.. எனவே தான் ஹோமம் செய்வதற்கு மிகவும் சிறந்த ப்ருதிவி பூமியாக விளங்குவது காஞ்சிபுரம். இன்றைக்கும் இத்திருத்தலத்தில் 24 மணி நேரமும் அதாவது நாள் முழுவதும் ஹோமம் செய்கின்ற பாக்கியம் ஒருவருக்கு கிடைக்குமேயானால் அது மிகவும் வாழ்க்கையில் பெறதற்கரிய பாக்யமாகும். மேலும் மிக முக்கியமான ஹோம குண்டங்களில் 32 கற்களை வைத்துத் தான் ஹோம குண்டம் அமைப்பார்கள். ஏனென்றால் மனிதன் ஜீவிப்பதற்கு மிகவும் முக்கியமாக 32 விதமான விசேஷமான நாடி, நரம்புகள் குறிப்பிடப்படுகின்றன.
எனவே, ஸ்ரீவாஸ்து புருஷ மூர்த்தியானவர் யோக நித்திரையிலிருந்து எழுந்து தந்ததாவனம் எனப்படும் பல் துலக்குதலைச் செய்கின்றதன் தாத்பரியம் என்னவென்றால். உலக ஜீவன்களுடைய முக்யமான 32 விதமான நாடி நரம்புகளுக்கு அவர் ஜீவ சக்தியை ஊட்டுவிக்கின்றார். தான, தர்மங்கள் நிகழ்ந்த நிலமே வசிப்பதற்கும், கட்டிடங்களுக்கும் ஏற்புடையது ஆகும்.. 32 விதமான, தான, தர்மங்கள் உலகில் எங்கேனும் நிகழ்ந்து கொண்டிருந்தால் தான் இப்பூமியானது. மனித சமுதாயமானது தெய்வீக அமைதி நிறைந்ததாக விளங்கும். ஆனால் கலியுகத்தில் பலவிதமான தான, தர்மங்கள் மறக்கப்பட்ட நிலையில் 32 விதமான தான, தர்மங்களைச் செய்வோரும் குறைந்து விட்ட நிலையில் ஸ்ரீவாஸ்து புருஷ மூர்த்தியானவர் உலக மக்களுக்கு இந்த 32 விதமான தான, தர்ம சக்தியினை ஊட்டுவிக்கின்றார். எனவேதான் வாஸ்து நாட்கள் அன்று செய்யப்படுகின்ற பூஜைகளினால் தர்ம சக்திகள் மீண்டும் நிலை நிறுத்தப் பெறுகின்றன.. ஆனால் அவற்றைப் பேணி காக்க வேண்டியது நமது கடமை அல்லவா!
ஆலும், வேலும் தர்மத்திற்குறுதி!
32 விதமான தான, தர்மங்களுடைய சக்திகளைத் தன்னில் கொண்டுள்ளனவயே ஆல மரமும், வேப்ப மரமும் ஆகும். இதில் வேப்பமரம்  சக்தி அம்சத்தை கொண்டதாகவும், ஆலமரம் ஈஸ்வர சக்தியைக் கொண்டதாகவும் விளங்குகின்றது. எனவே தான் ஆலும், வேலும் பல்லுக்கு உறுதி என்ற நல்வாக்கியம் அமைந்தது. இந்த மூலிகை குச்சிகளின் சக்திகள் ஈஸ்வரி, ஈஸ்வர அம்சத்தைப் பிரதிபலிப்பதால் நம் பற்களில் பட்டால்தான் நமக்கு தர்ம எண்ணங்கள் உடலில் உறையும், மருத்துவத் துறையில் கூட பல்லில் ஏற்படும் நோய் பாதாள நோயாக மாறும் என்ற ஒரு சொற்சுடர் உண்டு. அதாவது பல்லில் ஏற்படுகின்ற நோய் சரியாக கவனிக்கப்படாவிட்டால் உயிரையே பாதிக்கும் என்பது இதன் பொருளாகும். எனவே பல்மூலமாக தான் நம்முடைய ஜீவசக்தி நிலைத்து நிற்கிறது என்று சொன்னால் மிகையாகாது. பல்லில் உள்ள ஈறுக்கும் மூளைக்கும் கூட நிறையத் தொடர்பு உண்டு. ஆகவே தான் நாம் உண்கின்ற உணவு சுத்தமானதாகவும், புனிதமானதாகவும், தெய்வத்திற்கு படைக்கப்பட்ட பிரசாதமாகவும், இருக்க வேண்டும் என்று நம் மூதாதையர்கள் விதித்துள்ளனர். எனவேதான் அடிக்கடி ஹோட்டல்களில் சாப்பிடுவதைக் கண்டிபாகத் தவிர்த்து வீட்டுச் சமையல் தான் சிறப்புடையது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
பஞ்ச தேவ வாஸ்து நேரங்கள்
தற்காலத்தில் வாஸ்து நேரத்தில் 5 விதமான நேரங்கள் குறிக்கப்படுகின்றன. பல் துலக்குதல், (வாஸ்து புருஷ மூர்த்தியின் தந்தாவனம்) நீராடல், பூஜை, பிரசாதம் ஏற்றல் (போஜனம்), தாம்பூலம் தரித்தல் ஆகிய 5 வகை நேரங்களில் பிரசாத நேரமும், தாம்பூலம் தரிக்கின்ற நேரமும் மட்டும்தான் கட்டிட பூஜைக்கு மிகவும் புனிதமுள்ளவையாக ஏற்கப்படுகின்றன அல்லவா! ஆனால் இந்த 5 விதமான நேரங்களில் செய்ய வேண்டிய தனிப்பட்ட பூஜைகளும் உண்டு. ஏனென்றால் வாஸ்து புருஷ மூர்த்திக்கு உரித்தான புனிதமான நேரம் மொத்தம் 90 நிமிடங்களுக்கு அமைகின்றது. இவற்றில் மேற்கண்ட ஐந்து வகையான காலங்களுக்கு ஒவ்வொன்றிற்கும் 18 நிமிடங்கள் உண்டு.
இவற்றில் பிரசாதம் ஏற்கும் நேரமும், தாம்பூலம் தரிக்கும் நேரமும் 18+18 = 36 நிமிடங்களைத் தவிர மற்ற நேரத்தில் எவரும் ஒன்றும் செய்வதில்லை. இது தவறானதாகும். வாஸ்து நேரம் முழுவதும் எந்தெந்த பூஜைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்ற நியதி உண்டு. கிரகப் பிரவேசம் அல்லது கிரஹ ஆரம்பம் ஸ்ரீவாஸ்து பிரசாதம் ஏற்கும் (போஜனம்) நேரத்திலும் தாம்பூலம் நேரத்திலும் செய்யப்படுவது சிறப்பு உடையதே! ஆனால் 32 கற்களை வைத்துக் கொண்டு ஸ்ரீவாஸ்து புருஷ மூர்த்தியின் தந்தாவனம் நேரத்தில் ஸ்ரீவாஸ்து ஹோமத்தை நிகழ்த்திட வேண்டும். இதுவே மிகவும் முக்கியம் உடையதாகும். 32 கற்களுக்கு உரித்தான 32 வகையான மூலிகை சமித்துக்கள் உண்டு. இதனை தக்க குருவிடம் அறிந்து ஸ்ரீவாஸ்து ஹோமத்தைப் பரிபூரணமாக நல்ல முறையில் நடத்திட வேண்டும்.
எனவே, ஸ்ரீவாஸ்து மூர்த்தியானவர் தந்த தாவனமாகிய பல்துலக்குதலை நிகழ்த்துகையில் உலகத்திலுள்ள மூலிகை விருட்சங்கள் விருத்தி அடைகின்றன. உலக ஜீவன்கள் எல்லாம் வாழ்வதற்கே உரித்தான பல்வேறு வகையான உணவு தானியங்கள், உணவுப் பொருட்கள் அனைத்துமே ஜீவசக்தியைப் பெறுகின்றன. பல் உறுதியாக இருப்பது, ஈறுடன் நன்கு பொருந்தி இருப்பதால் தான், ஈறு நல்ல வலிமையாக விளங்கினால் தான் பல் நிலைத்து நிற்கும். ஒவ்வொருவரும் வாக்சக்தி நிறைந்தவராக விளங்க வேண்டுமென்றால் அவர் வாஸ்து தந்ததாவன பூஜையை முறையாகச் செய்து வருதல் வேண்டும். ஏனென்றால் பல் போனால் சொல் போச்சு என்பதைப் போல பற்களை இழந்தால் வாக்குவன்மையும் குறைந்துவிடும்.
எனவே, ஜோதிடர்கள் வாஸ்து நாளில் மட்டுமல்லாது யாவரும் தினந்தோறும் தந்ததாவன பூஜையை செய்து வருதல் வேண்டும்.. இவற்றைச் செய்ய வேண்டிய முக்கியமான இறைத் தலங்களும் உண்டு. சென்னை அருகே உள்ள ஞாயிறு, பட்டுக்கோட்டை அருகே பரிதிநியமத்திலுள்ள சிவாலயம் போன்ற முக்கியமான தலங்கள் தந்த தாவன தேவதைகள் நிறைந்திருக்கின்ற தலங்களாகும். இங்கு ஆலம்பட்டைச் சாற்றினால், இறைவனுக்கு அபிஷேகம் செய்து 32 கற்களைக் கொண்டு ஹோமகுண்டம் அமைத்து ஸ்ரீவாஸ்து புருஷமூர்த்தி தந்த தேவதைகளுக்கு உரித்தான ஹோம ஆஹுதி மந்திரங்களை துதித்து, 32 விதமான மூலிகைச் சமித்துக்களை கொண்டு ஹோமம் வழிபாடு நிகழ்த்தி வந்தால் நல்ல வீடு பாக்யம் அமையும். ஜோதிடக் கலையில் நன்கு பிரகாசித்து வருவர்.
பொதுவாக அக்காலத்தில் ஒரு பூமியை வாங்குவதற்கு முன்னால் அவ்விடத்தில், நாலெட்டுத் திக்கில், நாலெட்டு மண்ணால், கால் கட்டு வைப்பாய் – என்ற சித்தர் பரிபாஷைக்கு ஏற்ப அஷ்டதிக்குகளான நிலத்தின் எட்டுப் பகுதிகளிலும் ஒவ்வொரு திக்கிற்கும் நான்கு குழிகளைத் தோண்டி 4 x 8 = 32 குழிகளிலும் உள்ள மண்ணைத் தோண்டி எடுப்பார்கள். அந்த மண்ணில் கிடைக்கின்ற சங்கு, பூச்சிகள், பூரான், மண்புழு, கல், எறும்பு போன்ற பலவிதமான பொருட்களைக் கொண்டு தான் அந்த பூமியின் தன்மையை நிர்ணயிப்பார்கள்.. மேலும் வாஸ்து சாஸ்திரத்தில் ஒரு பூமியில் கிடைக்கின்ற பொருட்களில் 32 விதமான பொருட்கள் தான் மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டு அவற்றின் தன்மையைக் கொண்டு தான் அந்த பூமியானது ஒருவருக்கு ஜாதக ரீதியாக ஏற்பு உடையதா என்பதைக் கணிக்கின்ற வாஸ்து சாஸ்திர முறையும் உண்டு. இதனைத் தற்காலத்தில் பெரும்பாலானோர் அறிந்திடவில்லை.. ஏதோ குறைந்த விலைக்கு இடம் கிடைக்கின்றது என்று வாங்கிப் போட்டு விடுகிறார்கள். இது முற்றிலும் தவறானதாகும்.
தவறான வாஸ்து இலக்கண அணுகுமுறை
தற்காலத்தில் வாஸ்து சாஸ்திரத்தின்படி புதுப்பிக்கின்றோம் என்று கூறி சன்னல்களையும், கதவுகளையும் இடம் மாற்றி வைத்து விடுகின்றார்கள். ஆனால் ஒரு முறை கதவோ, சன்னலோ அமைக்கப்பட்டு விட்டால் அவ்விடத்தில் தலைவாசல் தேவதைகளும், பிரமாண வாயு தேவதைகளும் குடியேறும். திடீரென்று சன்னல்களையும், கதவுகளையும் மாற்றி வைத்துவிட்டால், அங்கு குடிகொண்டுள்ள தேவதைகளைப் ப்ரீதி செய்ய வேண்டுமல்லவா? இதற்குரிய பரிகாரத்தைச் செய்யாது கதவுகளையும், சன்னல்களையும் மாற்றி விடுவதால் வாஸ்து சாஸ்திரத்தைப் பரிபூர்ணமாக செய்துவிட முடியாது. எந்த திசையில் கதவோ, சன்னலோ, அதற்குரிய தேவதைகளைப் பிரீதி செய்தவுடன் தான் அந்தக் கதவையோ, சன்னலையோ, உடைக்காமல் வாஸ்து சாஸ்திரத்தை வில்லாக நமக்கு ஏற்ற முறையில் வளைத்துக் கொள்வது ஏற்புடையதன்று, ஆனால் ஸ்ரீவாஸ்து புருஷமூர்த்தியின் அனுக்கிரஹத்தைப் பெற்றுத் தரக் கூடிய விசேஷமான கற்களும், மூலிகைகளும், சாளக்கிராமங்களும், திரவியங்களும், பாஷாண மூலப் பொருட்களும் உண்டு.. இவற்றைத் தக்க குரு மூலம் தான் அறிய வேண்டும்.

டூத் பிரஷை பிடிக்கும் முறை

ஸ்ரீவாஸ்து தேவரின் தந்தாவனம்
பல் தேய்த்தல் என்றால் முதலில் பல்லின் உள்ள அழுக்குகளை அகற்றுவதுதானே முக்கியமானது. இதைப் போல ஸ்ரீவாஸ்து மூர்த்தியினுடைய தந்த தாவன நேரத்தில் நாம் வாங்கியுள்ள பூமியுலுள்ள களைகள், முள் போன்றவற்றை அப்புறப்படுத்தும் நேரமாகும். மேலும் பல் தேய்க்கின்ற போது, பற்பசையாகவோ, மூலிகைப் பொடியையோ, ஆலம்/வேப்பங்குச்சியை பயன்படுத்துவது போல ஸ்ரீவாஸ்து புருஷ மூர்த்தியின் தந்ததாவன நேரத்தின் போது குறித்த நேரத்திலோ, பூமியிலோ, கட்டிடத்திலோ, புனிதப்படுத்தும் பொருட்களான, புனித நதிகளின் தீர்த்தங்கள் சந்தனம், மூலிகா திரவியங்கள், பூக்களின் சாற்றால் ஆன அத்தர், பஞ்சகவ்யம் போன்றவற்றை பூமியில் தெளித்து, அசுத்த / தீயச் சக்திகளை அகற்றியும் புனிதத்தை ஊட்டுதல் வேண்டும்.
மேலும் பல்துலக்குதல் என்றால் நடுவிரலான சனிவிரலைக் கொண்டு தான் பல் துலக்குதல் வேண்டும். பலரும் அறியாமையால் குருவிரலைக் கொண்டு (ஆள்காட்டி விரல்) பல் துலக்குகின்றார்கள் . தற்காலத்தில் Tooth Brush  / Tooth  paste பயன்படுத்துவதற்கு முன்னால் நடுவிரலான சனி விரலைக் கொண்டு மூன்று முறையாவது தேய்த்துவிட்டுப் பிறகு எதை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். என் செய்வது? ஏனென்றால் பற்களில் உறைகின்ற தந்த தேவதைகள் இராசயனப் பொருட்களை ஏற்பதில்லை. பற்பொடியிலாவது பல மூலிகை சக்திகளும், தானியப் பொடிகளும் சேர்ந்திருப்பதால் அது தந்த தேவதைகளுக்கு உரித்தான ஹோம ஆஹுதியாக பூஜையாக மலர்ந்து அவற்றிற்கு ப்ரீதியை அளிக்கின்றன.
பிறகு ஆலம்பட்டைக் கஷாயத்தைக் கொண்டு தினமும் 3 முறையேனும் வாய் கொப்பளித்தே ஆக வேண்டும்.. எனவே, ஸ்ரீவாஸ்து புருஷ மூர்த்திக்கு உரித்தான தந்த தாவன நேரத்தில் ஆலம் பட்டை கஷாயத்தைக் கொண்டு பூமியிலும், கட்டிடங்களிலும், தீர்த்தத்தைத் தெளிக்க வேண்டும். ஆலம்பட்டை என்றால் ஆலம்பட்டையை உரித்தல் என்று பொருளல்ல, தானாக காய்ந்து விழுகின்ற பட்டையை வைத்துக் கொண்டு முறையாக கஷாயம் தயாரித்து அதனைத் தெளித்தலாகும். இது மிக்ச் சிறந்த தீர்த்தங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. இவ்வாறாக ஸ்ரீவாஸ்து புருஷ மூர்த்தியின் தந்த தாவன (பல் துலக்கும்) நேர மகிமையை பல புராணங்களாக எடுத்து எழுதி விடலாம். அந்த அளவிற்கு ஸ்ரீவாஸ்து புருஷ மூர்த்தியின் மகிமையானது சொல்லவும் பெரிதே!

நித்ய கர்ம நிவாரண சாந்தி

அந்தந்த நாளில் வலுவான ஆட்சியைப் பெற்றிருக்கும் தீர்க்கமான பார்வையை உடைய திதி, நட்சத்திரம், யோகம், கரணம், லக்னம், கிரகங்களின் தன்மைக்கேற்ப அந்நாளுக்குரிய விசேஷ பூஜை/ வழிபாடு முறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை முறையாக ஆழ்ந்த நம்பிக்கையுடன் கடைபிடித்தல், குருவருளால் ஒவ்வொரு நாளையும் தீய கர்ம வினைகளில் கழிப்போடு மேலும் எவ்விதமான புதிய தீவினைகளும் சேரா வண்ணந் தடுத்து சாந்தமான நித்ய வாழ்வைப் பெற்றிடலாம்.
1.5.1999 – அலையும் ஆவிகளை அடக்கும் தலைவராகிய ஐங்கர தேவமூர்த்தி திருஅண்ணாமலையாரை கிரிவலம் வரும் நாள் – இன்று கிரிவலம் வருதலால் – பில்லி, சூன்யம், ஏவல் மற்றும் ஆவி சம்பந்தமான துன்பங்கள் தீரும்.
2.5.1999 – இன்று திருஅண்ணாமலையாரை மறைகளுக்கெல்லாம் அதிபதியான ஸ்ரீலகுளீசர் வலம் வரும் நாள். ஆகவே தமிழ் மறையும் தேவநாகரி மறையும் ஓதுகின்றவர்கள் வலம் வருதலால் நற்பலன்கள் நலம் பெறுவர். வாய்க் குற்றங்கள் தணியும், வாக் சக்தி பெருகும்.
3.5.1999 – இன்று ஸ்ரீசுபர்திமான் மஹரிஷி திருஅண்ணாமலையாரை வலம் வரும் நாள் – வைத்தியர்கள், விஞ்ஞானிகள், மெய்ஞானிகள் திருஅண்ணாமலையாரை வலம் வருதலால் நற்பலன்கள், கீர்த்தி, புகழ், விருதுகள் பெறுவர்.
4.5.1999 – இன்று திருஅண்ணாமலையாரை மஹரிஷி புலஸ்தியரின் மகனான விச்ரவசு ரிஷி வலம் வரும் நாள் – வருமான வரி, தணிக்கைத் துறையைச் சார்ந்தவர்கள் வலம் வருதலால் தங்கள் தொழிலில் ஏற்படும் அச்சம், பீதி, பாதுகாப்பின்மையைலிருந்து விடுபவர்.
5.5.1999 – இன்று திருஅண்ணாமலையாரை தேவன்னி என்ற உத்தம தேவிமூர்த்தி கிரிவலம் வரும் நாள் – இன்று கிரிவலம் வருவதால் கடன் தீர்வதற்கான நல்வழிகளைக் காட்டித் திருவருள் பொழியும் நாளாக அமைகிறது.
6.5.1999 – இன்று கீர்த்திமதி தேவிமூர்த்தி (ஸ்ரீசுகர் மஹரிஷியின் மகள்) கிரிவலம் வரும் நாள். இன்று திருஅண்ணாமலையாரை கிரிவலம் வருவதால் – நுணுக்கமான பணிகள் உள்ள தொழிலிலும், அணு சம்பந்தமான ஆராய்ச்சியில் ஈடுபட்டோரும் நலம் பெறுவர்.
7.5.1999 – இன்று திருஅண்ணாமலையாரை ஸ்படிக லிங்கம் தாங்கி கிரிவலம் வருவதால் – நீதித் துறையைச் சேர்ந்தவர்கள் நலம் பெறுவர். சத்யகீர்த்தியாம் ஸ்ரீஅரிச்சந்திர மூர்த்தி அண்ணாமலையாரை வழிபடும் தினம்.
8.5.1999 – இன்று வெள்ளியால் செய்த லிங்கம் தாங்கி திருஅண்ணாமலையாரை கிரிவலம் வருவதால் – கபாலம், தலை சம்பந்தமான நோயுள்ளவர்கள் நலம் பெறுவர்.
9.5.1999 – இன்று திருஅண்ணாமலையாரை “வியபோகன” தோத்திரத்தைத் துதித்துக் கொண்டே கிரிவலம் வருவதால் – ஆச்சரியமான பலன்களைப் பெறலாம்.
10.5.1999 – அந்தகன் என்ற தேவமூர்த்தி திருஅண்ணாமலையாரை கிரிவலம் வந்து ஈசன் கரம் பட்டுப் பொன்னிறமான நாள் – பொற்கொல்லர்கள், தங்க வியாபாரிகள் வந்து சிவனருள் பெறும் நாள் இது.
11.5.1999 – பால் வற்றிய பசுக்களுக்கு புல், தழை, தவிடு போன்று வயிறார உணவளித்து திருஅண்ணாமலையாரைக் கிரிவலம் வரவேண்டிய நாளிது – பால் கொடுக்கும் தாய்மார்கள் பால் வற்றிப் போவதற்காக மருந்து மூலம் பால்சுரப்பை நிறுத்தியிருந்தால் பெரிய பாவமாகும். அந்த தோஷம் நீங்க இன்றைய கிரிவலம் ஓரளவு பரிகாரமாக அமையும். காரண, காரியமின்றித் தாய்ப் பாலை வற்றச் செய்வது பெரும்பாவமாகும்.
12.5.1999 – வயல் வரப்புச் சண்டைகள் அடிக்கடி வருவதுண்டு. அநியாயமாக அடுத்தவர் வரப்பை வெட்டி விட்டு வலுச் சண்டைகள் இழுத்திருந்தால் குடும்பத்தில் பங்காளி சண்டை வரும். பிறருடைய வரப்புகளை உடைத்தோ, இரவோடு இரவாகத் தங்கள் வரப்புகளை பெரிதாக்கி இருந்தால் அந்த பங்காளி சண்டையில் பெருந் துன்பத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டும் என்றால் இத்தகைய தவறுக்காக மனம் வருந்தி, திருந்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்து இன்று திருஅண்ணாமலையாரை கிரிவலம் வந்தால் – பங்காளி சண்டையால் வரும் துன்பம் விலகும். இதே போன்று உறவு, நட்பினால் பிறர் சொத்தை அபகரித்து வாழ்வோர் மேற்கண்டவாறு தம்மால் பாதிக்கப்பட்டோர்க்கு நிவாரண உதவியளித்து இன்று கிரிவலம் வருதலால் – தக்க பரிஹாரம் பெற நல்வழி கிட்டும்.
13.5.1999 – கிரதஸ்தலை என்ற அப்சரஸ் தேவி மூர்த்தி திருஅண்ணாமலையாரை கிரிவலம் வரும் நாள் – மூன்று பெண் குழந்தைகளைப் பெற்றோர் பெண் குழந்தைகளோடு கிரிவலம் வருதலால் நலம் பெறுவர். குடும்பக் கஷ்டங்கள் தணியும்
14.5.1999 -  இன்று இரத சித்திரன் என்ற யட்ச தேவ மூர்த்தி திருஅண்ணாமலையாரை கிரிவலம் வரும் நாள். இன்று கணவனுக்கு பாதபூஜை செய்து இருவரும் திருஅண்ணாமலையாரை கிரிவலம் வந்திடில் – இரத சித்திரனின் ஆசியைப் பெற்று கணவனை எதிர்த்துப் பேசி, வாதாடி உருவாக்கிய சச்சரவுகளுக்கும், மன வேற்றுமைகளுக்கும் பரிகாரம் பெறலாம்.
15.5.1999 – இன்று மனைவி கணவனுடைய சட்டை, பேண்ட், வேட்டி, கடுக்கன், தங்க மோதிரம், போன்ற ஏதாவது ஒரு பொருளை பூஜையில் வைத்து லட்சுமி பூஜை செய்து 108/1008 போற்றி ஜபித்து கணவனுக்கு அன்பளிப்பாக அளித்து இருவரும் திருஅண்ணாமலையாரைக் கிரிவலம் வரவேண்டிய நாளிது . இன்று ‘சகசன்யை’ என்ற தேவி மூர்த்தி திருஅண்ணாமலையாரை கிரிவலம் வரும் நாள் – இதனால் தம்பதிகள் மனம் ஒத்து வாழும் நல்லாசியைப் பெறலாம்.
16.5.1999 – இன்று உத்தியோகம் செய்கின்ற பிள்ளைகள் ஆணோ, பெண்ணோ, தாய், தந்தையர்க்கு பாதபூஜை செய்து அன்பளிப்பு தந்து குடும்பத்தோடு திருஅண்ணாமலையாரை வலம் வர வேண்டிய நாளிது. இன்று “இரத பிருது” என்ற யட்ச தேவதை தாம்பூலம் தானம் செய்து கிரிவலம் வரும் நாளிது. இன்று கிரிவலம் வருதலால் – எதிரிகள் தொல்லையிலிருந்து விடுபடலாம். வியாபார, அலுவலகப் பகைமை தணியும்.
17.5.1999 – இன்று அனாதை இல்லத்திலிருக்கும் வயதான பாட்டி, தாத்தாவிற்கு வஸ்திர தானம் செய்து குடும்பத்தோடு திருஅண்ணாமலையாரைக் கிரிவலம் வரவேண்டிய நாளிது. இன்று “ஊரு” என்ற கந்தர்வ தேவர் சாம வேத கானம் பாடி திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருகின்ற நாள். பெற்றோர்களுக்கும், தாத்தா, பாட்டிமார்களுக்கு முறையாக சேவை செய்யாதோர் ஈமக் கிரியை செய்யாதோர் இந்த கிரிவலத்தினால் தக்க பரிஹாரங்கள் பெற வழியுண்டு. இசைக் கலைஞர்கள் இன்று அண்ணாமலையைக் கிரிவலம் வருதலால் புகழ், கீர்த்தி, செல்வம் மற்றும் நலம் பெறுவர்.
18.5.1999 – அழகுக் கலைஞர்கள், சிகை அலங்காரம், உடை அலங்காரம் செய்கின்றவர்கள் ஏழைகளுக்கு அன்னதானம் செய்து திருஅண்ணாமலையாரைக் கிரிவலம் வரவேண்டிய நாளிது. ஸ்ரீபிரம்மலோசனை என்ற அப்சரஸ் தேவி மூர்த்தி கிரிவலம் வருகின்ற நாளிது. இத்தேவியின் அருளால் தங்கள் தொழிலில் நல்ல மாற்றம் காண்பர். அழகின்மை காரணமாக வருத்துகின்றவர்களுக்கு வேதனை கொண்டுள்ளோர்க்கு நல்வரங்களைப் பெற்றுத் தர ஸ்ரீபிரம்மலோசனை கிரிவலப் பலன்களை அருள்கின்றனள்.
19.5.1999 – இன்று காவல் துறையினர், போலீஸ் படையினர், ராணுவத் துறையினர், ராணுவத் துறையில் பணிபுரிவோர்கள் அன்னதானம் செய்து திருஅண்ணாமலையாரைக் கிரிவலம் வரவேண்டிய நாளிது. இன்று வியாட்டரதன் என்ற தேவலோக ரட்சா தேவமூர்த்தி திருஅண்ணாமலையாரை வலம் வந்து சூரியன் அருள் சகாயராய் (Body Guard) உதவ வந்த நாளிது.
20.5.1999 – இன்று நாக தேவதைகள், நாகப் புற்றுகளுக்கு, நாகலிங்களுக்கு பகலிலேயே பூஜை செய்து திருஅண்ணாமலையாரை கிரிவலம் வரவேண்டிய நாளிது. இன்று சங்கபாலன் என்ற நாகதேவ மூர்த்தி திருஅண்ணாமலையாரை கிரிவலம் வந்து நாகலிங்க பூஜை செய்தவர்களுக்கு நன்முறையில் உத்தியோகம் மாற்றம் பெற அருள்வார்.
21.5.1999 – இன்று லட்சுமி பூஜை, குபேர பூஜை, பகலிலேயே செய்து குடும்பத்தோடு கிரிவலம் வந்திடில் “ஆஹாஊஹு” என்ற அற்புத கந்தர்வர், கானம் பாடி திருஅண்ணாமலையாரை வலம் வருவோர்க்கு காரிய சாதனை பெற அருளாசியைத் தரும் நாளிது. சஹஸ்ரநாமத் துதியில் “ஆஹாஊஹு” என்ற நாமத் துதி வருவது குறிப்பிடத்தக்கது.
22.5.1999 – இன்று யானைக்களுக்கு வயிறார உணவளித்து திருஅண்ணாமலையாரைக் கிரிவலம் வரவேண்டிய நாளிது. மலைபோல் வருகின்ற துன்பங்கள் பனிபோல் கரைந்து ஓடும்.
23.5.1999 – இன்று குதிரைகளுக்கு வயிறார உணவளித்து திருஅண்ணாமலையாரைக் கிரிவலம் வந்து வாகனங்கள் விற்பதோ, வாங்குவதோ செய்திடில் நல்லபடியாக முடியும்.
24.5.1999 – இன்று 5 வயது முதல் 15 வயதிற்குள் இருக்கின்ற மாணவ மாணவிகள் தாய், தந்தையருக்குப் பாதபூஜை செய்து திருஅண்ணாமலையாரை கிரிவலம் வரவேண்டிய நாளிது – கல்வியில் சிறப்புறுவர்.
25.5.1999 – இன்று ஜாதி, பேதமின்றி சுமங்கலிகள் யாவரும் துளசி மாடத்தை 101 முறைக்குக் குறையாமல் வலம் வந்து துளஸி பூஜை செய்து ஏழை சுமங்கலிகளுக்கு மாங்கல்ய சரடு தானம் தந்து திருஅண்ணாமலையாரைக் கிரிவலம் வந்திடில் கணவனுக்கு வருகின்ற நோய் நொடிகள் நிவர்த்தியாக நல்வழி பிறக்கும்.
26.5.1999 – இன்று வறுமை காரணமாக, எண்ணெயின்றி தலை காய்ந்த ஏழை, எளியவர்களுக்கு தேங்காய் எண்ணெய் தானமளித்து திருஅண்ணாமலையாரைக் கிரிவலம் வந்திடில் கபால நோய்கள் விலக அண்ணாமலையார் அருள் செய்வார்.
27.5.1999 -  மகான்கள் வைத்திருந்த கைத்தடி, சுரைக் குடுக்கை இன்னும் பல பொருட்கள் தங்கள் இல்லத்தில் வைத்திருப்போர் அந்த தெய்வீகப் பொருட்களைப் புனிதமாக இன்று பூஜித்து அந்த மகான்கள் பெயரில் அன்னதானம் செய்து இன்று திருஅண்ணாமலையாரைக் கிரிவலம் வந்திடில் அந்த பெரியோர்கள் பரிபூரணமான ஆசி கிட்டும் நாளிது. வாழ்நாளில் கிடைத்தற்கரிய நாள்.
28.5.1999 – பலகணி வழியாய் சிவலிங்கம் தரிசனம் செய்ய வேண்டிய லிங்க மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்து அன்னதானம் செய்து திருஅண்ணாமலையாரைக் கிரிவலம் வந்திடில் நிலையில்லாமல் பல வேலைகளைச் செய்து கொண்டு திருப்தி இல்லாமல் வாழ்வோர் ஒரு நல்ல வேலையில் அமர்வர். (சென்னை வியாசர்பாடி ஸ்ரீரவீஸ்வரர், திருவானைக்காவல் ஸ்ரீஜம்புகேஸ்வரர்)
29.5.1999 – துணி தைப்போர், துணிக்கடை வைத்திருப்போர் பொதுவாக துணி வியாபாரிகள் இன்று 21 முறை சாஷ்டாங்கமாக சூரிய நமஸ்காரம் செய்து சிவன் கோயிலில் தாமரை இலையில் அன்னதானம் செய்து திருஅண்ணாமலையாரைக் கிரிவலம் வந்திடில் வரவேண்டிய பாக்கிகள் வந்து சேர திருஅண்ணாமலையார் அருள் செய்வார்.
30.5.1999 – இன்று இல்லறப் பெண்கள் சுமங்கலிகளுக்கு வாசனைப் பூக்களைத் தானமாக அளித்து அவர்கள் பாதங்களுக்கு மஞ்சள் இட்டு வணங்கி அன்னதானம் செய்து திருஅண்ணாமலையாரைக் கிரிவலம் வந்து வணங்கிடில் பொறாமைக் கண்களிலிருந்து விடுபட்டு குடும்பம் நலம் பெறும். கண் திருஷ்டிக் கோளாறுகள் தீரும்.
31.5.1999 – படுக்கை இல்லாதவர்களுக்கு படுக்கை தானமளித்து திருஅண்ணாமலையாரைக் கிரிவலம் வந்திடில் தீய கனவுகள் துன்பம் தராது, கெட்ட கனவுகள் நீங்கும்.
விசேஷ தினங்கள்
29.4.1999 – சித்திரா பௌர்ணமி கிரிவல நாள்
29.4.1999 – 29.4.1999 வியாழன் மாலை 6.15 முதல் 30.4.1999 வெள்ளி இரவு 8.25 வரை. [திருக்கணித பஞ்சாங்க முறைப்படி] பௌர்ணமி திதி அமைகின்றது
15.5.1999 – விஷ்ணுபதி புண்ய காலம்

29.5.1999 – வைகாசி பௌர்ணமி கிரிவல நாள் – 29.5.1999 சனிக்கிழமை காலை 9.48 முதல் 30.5.1999 ஞாயிறு மதியம் 12.10 வரை., [திருக்கணித பஞ்சாங்க முறைப்படி] பௌர்ணமி திதி அமைகின்றது...

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam