நம்முடல் ஒவ்வொரு அணுவிலும் பூரணமாய் நிறைந்திருப்பவனே இறைவன் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

(நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்.!)
பெரியவர் சிறுவனை பலமுறை வடநாட்டுத் திருத்தலங்களுக்கு அழைத்துச் சென்றதுண்டு. அங்கெல்லாம் அவர் அழைத்துச் செல்லும் முறைகள் தாம் வேடிக்கையானதாகவும், விதவிதமான அனுபூதிகளைக் கொண்டதாகவும் இருக்கும். ஒவ்வொன்றும் எண்ணி, எண்ணி, உய்த்து அனுபவிக்க வேண்டிய ஆனந்தமான குருகுலவாச அனுபூதிகள் ஆகும். அப்போதெல்லாம் டில்லி, காசி செல்வதானால், ரயிலில் மூன்று இரவுகள் ஆகும். ஆங்காங்கே இறங்கி ரயில் மாறியும் செல்ல வேண்டும்.
“நதிமூலம், ரிஷிமூலம்” தேடாதே அப்பனே!
ஒருமுறை…. சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் பெரியவரும், சிறுவனும் ரயில் ஏறினார்கள். சிறுவனுக்கு Upper berth கொடுத்து விட்டுப் பெரியவர் கீழ் பெர்த்தில் அமர்ந்து கொண்டார். “டக் டக் கென்று” ரயில் முழுதுமே ஆடிச் சென்றது, சிறுவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இடையில் டிக்கெட் கலெக்டர் வந்திட… சிறுவனுக்கு ஒரே ஆவல்! ‘பெரியவர் என்ன செய்யப் போகிறாரோ’ என்ற திகில் வேறு அவனைத் தொற்றிக் கொண்டது! ஆனால் பெரியவரோ தன் கோவணச் சுருளில் இருந்து அனாயசமாக இரண்டு டிக்கெட்டுகளை எடுத்து நீட்டிய போது, சிறுவன் அசந்து போய் விட்டான்!

பொருள் ஆனந்தம்
இடையே புலன் ஆனந்தம் !

“எப்போது, எங்கே இவர் டிக்கெட் வாங்கினார்?” என்று அவன் எண்ணிய போது, பெரியவர் சிறுவனைப் பார்த்து அர்த்தபுஷ்டியுடன் சிரித்தார்!
‘பெரியவர் என்ன பெயரில் அவருக்கு டிக்கட் வாங்கினார். எங்கு போவதற்கு வாங்கினார்?” என அறிய ஆவல் பூண்டு, டிக்கெட் கலெக்டரின் ஷீட்டை எட்டி, எட்டிப் பார்த்தான் சிறுவன்! சோதனையாக, அவனுக்கு எதுவுமே புலப்படவில்லை! பல பயணிகளின் பெயர்களும், அவர்கள் செல்லும் ஊர்களும் அதில் எழுதப்பட்டிருக்க.. தங்களைப் பற்றி அதில் எதுவுமே இல்லாதது அவனுக்கு மிகவும் ஆச்சரியமாகவே இருந்தது!
..எங்க “மூலத்தைத்” தோண்டிப் பார்க்காதேன்னு சொல்லியிருக்கேன் தானே!
பெரியவரின் எங்கோ பார்த்த பார்வையுடன் கொடுத்த ‘சுள் சுள்’ பதிலானது. சிறுவனின் தலையில் டொக்கென்று குட்டு விழுந்தது போலாயிற்று! பிறகு, எதை எதையோ எண்ணியவாறு மேல் பெர்த்தில் புரண்டான் சிறுவன்!
என் சொல்வேன் அய்யா?
“பள்ளியில் பரீட்சை வந்து விட்டதே, இவர் பாட்டுக்கு நம்மை அழைத்துக் கொண்டு வந்து விட்டாரே! என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ தெரியவில்லையே!” பயம் கலந்த நினைவுகளுடன் சிறுவன் குழம்பினான். ரயிலின் “டக் டக்கிலும்”, ஏதேதோ எண்ண அலைகளிலும் சிக்கி, நன்கு அயர்ந்தும் விட்டான். பள்ளியிலிருந்து நேரே அங்காளி ஆலயத்திற்கு வந்தவனை, அன்று மாலையே மடக்கி அழைத்துக் கொண்டு வந்து விட்டார் பெரியவர்! சித்தன் சிவன் போக்கு என்றாலும்.. அவர் எங்கும் கூட இருந்து காப்பாற்ற வல்லவர் என்றாலும்… சமயத்தில் “டென்ஷனாக்கி” விடுகின்றாரே?
“வீட்டில் … பள்ளியில் … கேட்டால் யார், என்ன சொல்வது!”
இப்படித்தான்… சமீபத்தில், சில மாதங்களுக்கு முன் பெரியவருடன் கொல்லிமலையில் கோரக்க சித்தர் குகை தரிசனப் புனித யாத்திரை சென்று விட்டுத் திரும்புகையில்… இரவில்.. சுமார் ஒன்பது மணி இருக்கும் .. நல்ல பசியுடன் வீட்டுக்குத் திரும்பினான் சிறுவன்.. பிராட்வே பஸ் ஸ்டாப்பில் .. பஸ்ஸில் இருந்து அவனை இறக்கி விட்ட பெரியவர், “அப்ப நான் வர்றேண்டா!” என்று சொல்லி விட்டு விருட்டென்று இறங்கி விடுவிடுவென்று நடக்கலானார்!

ஸ்ரீபடேசாகிப் சித்தர் ஜீவாலயம்
சின்னபாபு சமுத்திரம்

ஸ்ரீபடே சாகிப் சமாதியில் சந்தனம் அரைத்து சார்த்த ஓத வேண்டிய துதி
ஓம் மஜும் போட் துத்யாய வித்மஹே
மதிபூரண சந்தன சந்த்ராய தீமஹி
தந்நோ குரு பாத விருட்ச ப்ரசோதயாத்
மூன்றாம் பிறையாகி முக்கண் சுதமாகி
முச்சுடர் பரிமாணம் மூதையர் வழி தாங்கி
ஒன்றாய் புலன் சேர்ந்து ஓதிய சந்தனப் பூ மலர்
நன்றாய் நவின்றேன் நமசிவாய என மகிழம்பூ சாறல்
மறையொலியாய் மாதவனை அகிலம் புகழ் ஓங்கும் அரணே அரண் !

“என்னமோ வீடு, வாசல், குழந்தை குட்டிகள் இருப்பது போல் வெகு வேகமாக ஓடுகின்றாரே!”
சிறுவன் இவ்வாறு எண்ணி ஓரளவு சிரித்துக் கொண்டாலும், இவ்வாறு அவர் திடீரென்று புறப்பட்டுச் செல்வது வெகு சகஜம் என்றாலும், “வெடுக்கென்றே” தன்னிடம் பெரியவர் எந்த சப்ஜெக்டையுமே முடிப்பதாக எண்ணிச் சிறுவன் பலமுறை தன்னுள் மிகவும் வருத்தப்பட்டதும் உண்டு. பெரியவரைத் தவிர யாரிடம் தான் போய் இதற்கான விளக்கங்களைக் கேட்டிட முடியும்? பெரியவர் தானாகவே தன்னை “மறைத்துக்” கொண்ட விஷயத்தை அவரிடம் எடுத்துச் சொல்லும் தைரியம் சிறுவனுக்கு வந்திடவில்லை. தன்னிடம் “சகஜமாக ஏன் நடந்திடாது” இறுதி வரை புரியாத புதிராகவே அவர் “இருந்து விட்டு” வானில் மறைந்தார் எனச் சிறுவன் தன்னுள் புலம்பிப் புலம்பி ஓயலானான்!
எம்மை அறியலாகுமோ?
“என்னை நீ நல்லாப் புரிஞ்சுக் கிட்டா, நான் யாருன்னு தெரிஞ்சுகிட்டா, அப்புறம் என்னை விட்டு நீ போகமாட்டேன்னு பிடிவாதமா இங்கேயே இருப்பேடா கண்ணு! இப்படி என்னைச் சுத்திச் சுத்தி வந்தா, அப்புறம் நீ இந்த உலகத்துல செய்ய வேண்டிய அன்னதானம், கோயில் திருப்பணி மாதிரி தெய்வீகக் காரியங்களை யார்தான் செய்யறதாம்? இதனாலத்தான் கடைசி வரைக்கும் நாங்க யாருன்னு உன்னைப் புரிஞ்சுக்கவும் விடமாட்டோம், நாங்களா எங்களைப் பத்திச் சொல்லிக்கறதும் கிடையாது! கடைசி வரைக்கும் நாங்க ஒண்ணும் தெரியாத முட்டாளாட்டமே இப்படியே இருந்துட்டுப் போயிடுவோம்!”
கொல்லிமலை யாத்திரைக்குப் பிறகு, அன்று இரவு ஒன்பது மணி வாக்கில் வீட்டிற்குள் நுழைந்த சிறுவனுக்கு பக்பக்கென்று இருந்தது! கொல்லிமலை யாத்திரை எதிர்பார்த்ததுக்கும் மேலாக, பத்து நாட்களுக்கு மேல் நீண்டு விட்டதால், “வீட்டில், பள்ளியில், யார் என்ன சொல்வார்களோ? ஏது சொல்வார்களோ?” என்ற பயம் வேறு அவனைப் பிய்த்துப் பிடுங்கியது!
“வாத்யார் பாட்டுக்கு தெய்வ யாத்திரை கிளம்புடான்னு சொல்லிடறாரு! போய்ட்டு வர்றதுக்கும் நல்லாத்தான் இருக்கு! ஆனா திரும்பி வந்தா… பெரிய பிரளயமே வந்த மாதிரி இருக்கே! … இதை யார் face பண்ணி அனுபவிக்கறதாம்?”
சிறுவன் தன் மனதுக்குள் குமைந்தான்!
அவனியில் “அவனும், இவனும்”!
கொல்லிமலைத் தல யாத்திரைக்குப் பிறகு, தயங்கித் தயங்கி வீட்டிற்குள் நுழைந்த சிறுவனை.. கிணற்றடியில் இருந்து வந்த ஒரு குரல் அதட்டி, மிரட்டி நிற்க வைத்தது! “ஏண்டா, எங்கே போய்ட்டு வர்றே? நாளைக்கும் பரீட்சை இருக்குன்னு ஸ்கூல்லேந்து சொல்லி விட்டாங்களே!”
“ஹும் ஹும்” என்று குழறியவாறே அப்படியே உள்ளே நுழைந்தவன் .. என்ன பதில் சொல்வது என்று திகைத்து நின்றிடவே… திடீரென்று எதையோ எதிரில் பார்த்து விட்டு .. அப்படியே அதிர்ச்சியால் அதிர்ந்து போய் நின்றும் விட்டான்! ‘என்னவாம் அது?’ காரணம் … அவன் முன்னால் அவனைப் போலவே ஒரு உருவம் வீட்டில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்த காட்சிதான் அவனை பலத்த ஆச்சரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது! அச்சிறுவன் … அவனைப் போல் அப்படியே ஒரு replica! அவனையே carbon copy எடுத்தாற் போல்…. Just வெளியே வந்து கொண்டிருந்தான்! “இவன்” உள்ளே போவதற்கும், “அவன்” வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது! போதாக் குறைக்கு… போகிற போக்கில் “அவன்”, இவனைப் பார்த்துக் கேலியான நையாண்டி இளிப்பு வேறு!

ஒரு சில விநாடிகள் தாம் இக்காட்சி நிகழ்ந்தாலும்…

அவனால் எதனையும் நம்பவே முடியவில்லை! நம்பாமலும் இருக்க முடியவில்லை!

“நம்மைப் போல் ஒருவனா?” ஓஹோ! இத்தனை நாள் இவன்தான் பெரியவரின் கருணையாக, நம் இடத்தைப் பிடித்துக் கொண்டு, நமக்காக adjust செய்து கொண்டிருந்தானா? இத்தனை நாள் பெரியவர் இதனைப் பற்றி நம்மிடம் கொஞ்சம் கூட மூச்சு விடவில்லையே!”

உண்டும் உண்ணாத நிலையேனோ?

பலத்த சிந்தனையுடன் சிறுவன் உள்ளே மெதுவாய் வீட்டினுள் நகர்ந்து நகர்ந்து சென்றிட..

பசியோ தொண்டையை முட்டியது. காதையும் அடைத்தது! ஒன்றும் தெரியாதவன் போல, சமயலறைக்குச் சென்று சாப்பாட்டுத் தட்டை அலம்பி வைத்துக் கொண்டு சாப்பிடுவதற்காகக் கீழே, தரையில் உட்கார்ந்தான்!

“ஏண்டா, உனக்கு என்ன ஆச்சு? இப்பத்தானே சாப்பிட்டுட்டு எழுந்திருச்சே!... அலம்பின கை ஈரம் கூட இன்னமும் காயலையே!.. அதுக்குள்ளாற திரும்பவும் தட்டை வச்சுக்கிட்டு சாப்பாட்டு ராமனாட்டம் வந்து உட்கார்ந்துட்டியே! ஞாபக மறதி ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சோ!”

ஷாக் மேல் ஷாக் வரவே…

“அவன்” உண்ண “இவன்” காய வேண்டுமா?  .. “என்னடா உலகம் இது?”

சிறுவன் சலித்துக் கொண்டு, அமைதியாகத் தட்டை எடுத்து மேலேயே வைத்து விட்டுப் பேசாமல் உள்ளே போய்ப் படுத்துக் கொண்டு விட்டான். என்னத்தையாவது பேசி, உளறி … எதையும் “complicate” செய்து கொள்ள அப்போது அவன் மனம் ஒப்பவில்லை!

“நடப்பதெல்லாம் நாராயணன் செயல்” என்பது இதுதானோ?”

மறுநாள் கைக்குக் கிடைத்த புத்தகங்களை எல்லாம் அள்ளி எடுத்து, அடுக்கி வைத்துக் கொண்டு, நேரே பள்ளிக்குச் சென்றான் சிறுவன்! ஏனென்றால், பள்ளிக்குச் சென்று பல நாட்கள் ஆகிவிட்டதால், எந்தப் பாடம் நடந்ததென அவனுக்கு எதுவுமே தெரியாதே!

“அவன்” விட்ட குறை “இவனுக்காம்!”

சக மாணவர்கள் “எங்கே போயிருந்தாய்? என்று கேட்டு, “குடையோ குடை என்று குடைவார்களே!’ என்று பயந்து, அவன் சற்றே ஒதுங்கி இருந்து.. மணி அடித்தவுடன் வகுப்பினுள் பாய்ந்தான்!

“ஏண்டா நேத்திக்கு கணக்கு டெஸ்டுல இப்படியா தப்புத் தப்பா கணக்குப் போடறது? கிளாஸ்ல சொல்லும் போது ஒழுங்காக் கவனிக்கிறது கிடையாது! ஒரு வாரமா சும்மானாச்சுக்கும் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி, கிளாஸ்ஸுல தலையை ஆட்டிக்கிட்டு இருந்தியே!”

சிறுவனின் காது நன்றாகத் திருகப்பட்டது, முதுகில் டொக்கென்று, டொக்கென்று அடிகளும் விழுந்தன!

“ஓஹோ இங்கேயும் “அவனா?” கணக்கு டெஸ்ட் எழுதியவன் “ஒருவன்” வாங்கிக் கட்டிக் கொள்வது “இவனா?”

“பெரியவர்தான் மாற்று ஏற்பாடாக, தன்னைப் போல் இன்னொருவனை இங்கும் வைத்து விட்டுத் தன்னை, கொல்லிமலைக்கு அழைத்துச் சென்றாரா? எத்தனை காலமாக இம்மாதிரி அவர் செய்து “தன்னைக் காத்து” வருகின்றாரோ? இன்று மாலை அவரிடம்– இந்த விஷயத்தோடு, இதுவரையில் தன்னிடம் மனத் தாங்கலாகத் தன் உள்மனதில் உள்ளவற்றையும், பெரியவர் “வெடுக்கென்று” பல விஷயங்களை முடிப்பது பற்றியும் நிச்சயமாக அவரிடமே நேரடியாக உலக தைரியத்துடன் கேட்டு விடுவது” என்று அவன் ஒரு முழு முதல் முடிவிற்கே வந்து விட்டான்!

பள்ளியில் வாங்கிய உதை, வீட்டில் விழுந்த சரமாரியான திட்டுகள் மனவலி, உடல் வலியுடன் அன்று மாலை அங்காளி கோயிலில் பெரியவரிக் காணச் சிறுவன் சென்ற போது..

“ஒரு நாலஞ்சு நாளா வெளியில போய்ட்டா எவ்வளவு வேலை நின்னு போயிடுச்சு பாரேன்! மத்தவங்க ரொம்ப ஈஸியா எல்லாத்தையும் நம்ப தலையிலப் கட்டிடறாங்க..” என்று பேசத் தொடங்கினார் பெரியவர்.

சிறுவனுக்குக் கோபம் கோபமாக வந்தது!

“இவர் ஏதோ ஆபீஸில் வேலை பார்ப்பது போலவும்.. ஒரு வாரம் லீவில் சென்று திரும்பிய பின் அனைத்து வேலைகளையும் ஒரு சேரப் பார்ப்பது போலும் சலித்துக் கொள்கின்றாரே!” என்று வேடிக்கையாகவும், கோபமாகவும் எண்ணிய சிறுவனுக்கு…

திடீரென்று அவனுடைய மனவலியும்.. உடல் வலிமையும் முன் வந்து நின்று எதையோ அவரிடம் “கேட்க வேண்டும்” என்பதை அவனுக்கு ஞாபகப்படுத்தின!

“ஆங்.. பெரியவரிடம் “அவனா இவன்?” என்று கேட்க வேண்டிய நேரம் வந்து விட்டதே!”

கேட்டும் கிடைக்கவில்லை!

இன்று விருட்டென்று பெரியவரிடம் தன் மனத்தாங்கல்களைப் பேசித் தீர்த்து விடுவது என்று நூறாவது முறை (!) முடிவிற்கு வந்தவனாய், “வாத்யாரே!” என்று சகலகலா மகா தைரியத்துடன் பேசத் தொடங்கினான்!

ஆனால் பெரியவர் அதனை அறியாதவரா என்ன? அவனைப் பேச விடாமலேயே அழுத்தி, அமுக்கி,  “இதெல்லாம் தெய்வீகத்துல சகஜம்தாண்டா அம்பி! தெய்வீகம்னு குதிச்சுட்டா அடி, உதை, திட்டு, பழி, பரிசுன்னு எல்லாம் தான் வரும்! ஆனா எதையும் எதிர்பார்க்கவும் கூடாது.. வந்ததை எல்லாம் கர்ம வினைன்னு அனுபவிக்கணும்! கிடைக்கறதை மனசார ஏத்துக்கணும்!” என்று ஏதேதோ பேசி… வழக்கம் போல் அவனை மடக்கி விட்டார்..

“வார்த்தை ஜால மாமன்னராயிற்றே!’ இதன் பிறகு, பெரியவரிடம் பல முறை இதைப் பற்றிக் கேட்டும், தொண தொணத்தும் பார்த்தான்! அவரோ, சற்றும் மசியாமல், பிடி கொடுக்காமல் நழுவிப் பேச்சையே மாற்றி விடுவார்.

ஒருநாள் … அவன் கங்கணம் கட்டிக் கொண்டு அவரை இது சம்பந்தமாக மிகவும் மொய்த்திடவே, “அங்காளி மேல பரிபூரண நம்பிக்கை வச்சு.. தைரியமா, தியாகத்தோட நற்காரியம் பண்ணினா, அம்பாளே எல்லா அற்புதங்களையும் பண்ணுவா!” என்று பொதுப்படையாக ஒரே வாக்கியத்தில் சொல்லி விட்டு அவனை இப்போதும் ஒரு வழியாய் ஓய்த்து அனுப்பி விட்டார்!

நற்குருவிடம் நவசரீரங்கள் நல்அடைக்கலமாம்!

கொல்லிமலை அனுபூதிகள் தாமாகவே அவன் மனதினுள் உதிர்ந்து போகும் வரை எதையெதையோ பேசி மல்லுக் கட்டிய பெரியவர், அவனாகவே “இனிமேல் இவரிடம் கேட்பதில் பிரயோஜனமில்லை” என்று ஓய்ந்து ஒடுங்கிப் பின்னர்…

ஒருநாள் …. மிகவும் அபூர்வமாக, இந்த heavy ஸ்ப்ஜெக்டையும் அவரே தானாகவே எடுத்துக் கொண்டார்.

“ஆமாண்டா! உன்னோட ஒன்பது சரீரங்கள்ல நாங்க எப்பவும், எதையும், எங்க வேண்டுமானாலும் அனுப்புவோம்! சற்குருன்னு ஒருத்தரைக் கலியுகத்துல சரணடைஞ்சுட்டா… சிஷ்யனோட ஒன்பது சரீரங்களும் குருவோட கண்ட்ரோல்ல வந்துடும்! இதுதான் மத்தவங்களுக்கும் சற்குரு பரிபாலனத்துல வந்த சிஷ்யனுக்கும் உள்ள வித்யாசம்! உன் சாய்ஸ் எப்படி?”

பெரியவர் புருவங்களை உயர்த்திச் சிறுவனிடம் கேட்காமல் கேட்டிடவே…

சிறுவன் தலையைக் குனிந்து கொண்டான்! அவன் கேட்க நினைத்தவையெல்லாம் அவருடைய அவருடைய அர்த்த புஷ்டியான புருவ நெரிப்பில் புஸ்ஸென்ரு பஸ்மமாயினவோ!

இந்த குருகுலவாச அனுபூதி நிகழ்ந்த மறுதினம்தான் அவனுடைய மேற்கண்ட ரயில் பிரயாணம் வேறு வந்து சேர்ந்தது!

இப்படிச் சுவையான  குருகுலவாச நினைவுகளை அசை போட்டவாறே … சிறுவன் ரயில் அப்பர் பெர்த்தில் அப்படியே தூங்கிப் போய் விட்டான்!

சொல்லாமல், கொள்ளாமல் நடைவாசம் கொள்!

நடுவில் விழிப்பு வந்தபோது யதேச்சையாகக் கீழே எட்டிப் பார்த்தான் சிறுவன்!

கீழே பார்த்தால்…  பெரியவர் பாட்டுக்கு ரயிலை விட்டு வெகு ஜோராக இறங்கி, வெளியே வேகமாகப் போய்க் கொண்டிருந்தார்! சித்தன் போக்கு என்றால் “சொல்லாமல் கொள்ளாமல்” இப்படியா சிவன் போக்காக இருப்பது!

அவ்வளவுதான், திடுதிப்பென்று அப்படியே பெர்த்தில் இருந்து குதித்துப் பெரியவரின் பின்னால் “வாத்யாரே! வாத்யாரே!” என்று குரல் கொடுத்துக் கொண்டு ஓடினான் சிறுவன்!

ஓடினான், ஓடினான் ரயில்வே பிளாட்பாரத்தின் எல்லைக்கே ஓடினான்!

தான் மட்டும் தூக்கத்தில் கண் விழித்துப் பெரியவரைப் பார்க்காதிருந்தால்… அவன் கதி என்ன ஆகியிருக்கும்?

ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்து அதிர்ந்தே போனான் சிறுவன்! ஓட்டைப் பையுடன், பாவாடை போலான அரை டிராயரை மாட்டிக் கொண்டு…

கையில் சல்லிக் காசு இல்லாமல்… ஹிந்தி பாஷை தெரியாமல்… மத்யப் பிரதேசத்தின் ஏதாச்சும் நடுக்காட்டு ஸ்டேஷனில் ஏடாகூடமாக மட்டிக் கொண்டிருந்தால் அவன் நிலைமை என்னவாகி இருக்கும்?

… கோபம் பெரிதும் கொந்தளிக்க, கொப்புளிக்க, சிறுவன்!

ஏதோ பெரிய ஸ்டேஷன் .. இடார்ஸியா.. சரியாக ஞாபகமில்லை! … இடார்ஸியில் இறங்கி ரயில் மாறவேண்டும் என்று எப்போதோ பெரியவர் சொன்னதாகவும் ஞாபகம்.. ஆனால் காசிக்குத் தானே இப்படி மாற வேண்டும், இப்போது பெரியவர் எங்கே போகின்றாரே, யாருக்குத் தெரியும், சிவபெருமானே?”

சொல்லியே செல்வோம்!

… ஏதோ மிகவும் பழக்கமான ரயில் நிலையம் போல, நீளமான பிளாட்பாரங்களில் சர்வ சாதாரணமாக நடந்து ஏறி இறங்கிய பெரியவர்… பின்னால் கோபத்துடன் வந்து கொண்டிருந்த சிறுவனைக் கவனிக்காதது போல் நேரே போய்க் கொண்டு இருந்தார்!

ஒரு வழியாய்… அவருடைய முதுகைப் பிடித்து அவன் இழுத்திட… அவரும் நின்றிட.. பெரியவரே நெடு நேர மௌனத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

“அதெப்படிடா உன்னை விட்டுட்டு நான் மட்டும் தனியா வர முடியும்? உன்னை பாஷை தெரியாத ஊருக்குக் கூட்டிக்கிட்டு வந்ததுக்கு எனக்குன்னு ஒரு தெய்வீகப் பொறுப்பு இருக்குதானே?”

“நீ என் பின்னாடி இப்படிச் சுத்தணும்னு உன் தலையில் எழுதி இருக்கறப்போ.. நானாவது .. உன்னை ரயிலேயே விட்டுட்டு வர்றதாவது?”

“வாத்யாரே! சும்மானுச்சுக்கும் விதி, தலையெழுத்துன்னு ஏதாவது சால்ஜாப்பு சொல்லாதே! என்னைத்தான் நீ ரயில்லேயே விட்டுட்டு வந்தாச்சு, அப்புறம் என்னவாம்? நானா ஏதோ தூக்கத்துல புரண்டு எட்டிப் பார்த்தா… நீ பாட்டுக்கு சர்சர்ருன்னு கிளம்பி ரயிலை விட்டு இறங்கி வந்துட்டியே, நான் அப்படியே தூங்கி.. ட்ரெயின் பாட்டுக்கு சல்லுன்னு புறப்பட்டுடுச்சுன்னா, டிக்கட் இல்லாம எவன் கிட்டயாவது நான் மாட்டிக்கிட்டு … ஹொர்ஷாபூர், பிவாண்டின்னு ஏதாவது நடுக்காட்டு ஸ்டேஷன்ல என்னை இறக்கி விட்டாங்கன்னா என் கதி என்னாவறது வாத்யாரே? ஏதோ கடவுள் புண்யத்துல கொஞ்சம் கண்ணைத் திறந்து பார்தேனோ, பிழைச்சேனோ!” சிறுவன் கொட்டித் தீர்த்தான்!

ஆட்டுவித்தால் ஆடுகின்றாய்!

“அது சரிடா… எல்லாம் ஓகேதான்! ஆனா… நாங்கதான் சரியான சமயத்துல உன்னைக் கண் திறந்து பார்க்க வச்சோம்னு கூட சரியா நினைக்கலாம்தானே!”

சிறுவன் திடுக்கிட்டான்!

“இந்த மாதிரி தாண்டா ஆன்மீகத்துல positiveஆ எதையும் பார்க்கணும்!  குருவோட மார்கம்னா இப்படித்தான் எப்பவும் இருக்கும்! “the way we take!”

சிறுவன் மௌனமானான்! ஏனென்றால் “தன்னை உறங்க வைப்பது, விழிக்க வைப்பது, இயங்க வைப்பது யாவும் பிரபஞ்சத்தின் அருணாசல மகாசித்புருஷர்களுள் ஒருவரான பெரியவரின் குருவருள்தான் என அவனை உணர வைக்கவா இந்த குருகுலவாச அனுபூதிகள் எல்லாம்!”

பெரியவர் இப்போது அவனை ஆழ்ந்த கண்களுடன் உற்று நோக்கிய போது…. நேத்ரயோகமாக அவன் ஆத்மாவிற்குள் ஞானரசத்தைப் பிழிந்து ஊட்டுவதாக உணர்ந்தான்!

இவ்வளவு பெரிய பாடத்தைப் புகட்டுவதற்காகவோ… கரி கரியாய், அழுக்கு அழுக்கான ரயில்வே பிளாட்பாரங்களெல்லாம் பெரியவர் மிகவும் கஷ்டப்பட்டு ஏறி… இறங்கி…

சிறுவன் திகைத்து நின்றான்! சிறிது நேரத்தில் அவனைப் பிளாட்பாரத்தில் காலியாக இருந்த பெஞ்சில் படுக்க வைத்தார் பெரியவர்.. நன்கு உறங்கிய சிறுவன் .. விழித்துப் பார்த்தால்… ஹரித்வாரில் இருந்தான்…!

திருக்கற்குடி

திருக்கற்குடி ஸ்ரீஅருமருந்து நாயகி!

சகல நோய்களையும் தீர்க்க வல்ல திருக்கற்குடி ஸ்ரீஅருமருந்து நாயகி! நோய் நிவாரண சக்திகளை விருத்தி செய்திட மருத்துவர்கள் வழிபட வேண்டிய தலம்!

கும்பகோணம் திருவிசநல்லூர் அருகில் உள்ள அதியற்புத நோய் நிவாரண சிவத்தலமே திருக்கற்குடி (திருந்துதேவன்குடி அல்லது நண்டாங்கோயில்) ஸ்ரீஅருமருந்து நாயகி சமேத ஸ்ரீகற்குடிநாதர் ஆலயமாகும். பிறவிப் பிணியையும் தீர்க்கும் பெம்மான்!

ஆயில்யம், அஸ்வினி, அமாவாசை, செவ்வாய், சனிக்கிழமை போன்ற மருந்து சக்தி நாட்களில் இங்கு மருந்துகளை எடுத்து வந்து ஸ்ரீஅருமருந்துநாயகி சன்னதியில் வைத்து வழிபட வேண்டிய அற்புத மருந்தீஸ்வரத் தலம்! இதனால் நோய் நிவாரணம் துரிதமாகும். டாக்டர்கள் தம் வாழ்நாளில் அடிக்கடி வழிபட வேண்டிய மருத்துவ சக்தித் தலம்! பல யுகங்களில் ஸ்ரீமருந்தீஸ்வரராக ஈஸ்வரன் அருளிய தலம்!

திருக்கற்குடியில் அருமருந்து நாயகியாய் அருள்பாலிக்கும் அம்பிகை ஒருமுறை.. இங்கு அருமருந்து நாயகியாய் அவதரிக்கும் முன் .. தீர்க தரிசனமாக, பல யுகங்களுக்கு முன்னரேயே… கலியுகத்தில் பெருகிடும் நோய்களுக்குத் தீர்வைத் தரும் அதியற்புத ஔஷத பூமியைத் தேடித் தவம் புரிந்து வருகையில்…

“ஆகாச கங்கை, பூம்ய கங்கையுடன் இணைய வல்ல கங்காவளி எனும் அதியற்புத மூலிகைச் சத்து நிலவுமிடத்தில் அருந்தவம் பூண்டு அருமருந்து நாயகியாய்ப் பரிமளிப்பாய்!” என இறைவனே எழுந்து வந்து உரைத்திட…

ஆகாச கங்கையும், பூம்ய கங்கையும் இணையும் “கங்காவளி” மூலிகா நீரோட்டத் தலமே திருவிசநல்லூர் புனித பூமியென அறிந்த அம்பிகை, இப்பகுதியில் தவம் பூண்டு, திருக்கற்குடியில் கங்கோத்பத்தி நாளில் ஈஸ்வரனை மணந்து, அருமருந்து நாயகியாய் அவதாரிகையைக் கொண்டனள்! கங்காவளி மூலிகையின் மகிமையால்தான் திருவிசநல்லூரில், ஸ்ரீதர அய்யாவாளின் தபோபலத்துடன் ருத்ர கங்கைப் பிரவாகம் தோன்றியது!

திருந்துதேவன்குடி சிவாலயம்

எனவே திருகற்குடிச் சிவத் தலத்திற்கும், திருவிசநல்லூருக்கும் அதிசூக்கும பூமியடி கங்காவளி மூலிகா நீரோட்டத் தொடரிணைப்பு உண்டு! குறித்த மூலிகா பூஜைகளைக் கடைபிடிப்போர்க்கே “கங்காவளி” மூலிகை தென்படும். எனவே கங்கோத்பத்தி நாளில் அவதரித்த அருமருந்துநாயகிக்கும், சிவலிங்கத்திற்கும் அபிஷேக, ஆராதனைகளை நிகழ்த்திட நோய்களின் கடுமை தணிந்து நற்குணம் கிட்டும்.

புற்று நோய், காச நோய், சுவாச நோய், வெண்குட்டச் சரும நோய்களைத் தீர்க்கவல்ல கங்காவளி மூலிகா சக்திகள் நிறைந்த மருந்தீஸ்வர பூமியே திருந்துதேவன் சிவாலய வளாகமாகும். இங்கு ஆயில்யம், அஸ்வினி, ரோகிணி, மிருகசீரிஷம், புனர்பூசம், உத்திரம், சித்திரை, சுவாதி, அனுஷம், உத்திராடம், அமாவாசை, செவ்வாய், சனிக்கிழமை, பிரதோஷ நாள் போன்ற மருத்துவ சக்தி நிறைந்த தினங்களில் அங்கப் பிரதட்சிணம் செய்வதால் கங்காவளி மூலிகா சக்திகள் உடலின் 72000 நாடிகளிலும் சேர்ந்து நோய் நிவாரணம் துரிதமாகும். சித்த மருத்துவம், யுனானி, ஆயுர்வேதம், இயற்கை வைத்தியத் துறையைச் சார்ந்தவர்கள் இங்கு தங்கள் மருந்து திரவியங்களை அர்ப்பணித்து, வழிபட்டு மருந்துளை பக்தியுடன் தயாரித்தலால் ஆன்மீக ரீதியாக, அற்புத நிவாரண சக்திகளை மருந்துகளில் பெற்றிடலாம். ஆனால் வியபார நோக்கன்றி, ஏழைகளுக்கு உதவும் தியாக மனப்பான்மையும், நற்சேவையுமே துரித நிவாரண சக்தியைத் தரும்.

கங்கோத்பத்திப் பண்டிகை

பூமியில் கங்கை உற்பவிக்கும் திருநாள்! கங்கோத்பத்தித் தினத்தில் ஸ்ரீகங்காதர சுயம்பு மூர்த்தித் தலங்களில் புது கங்கைப் பிரவாகம் உண்டாகின்றது!

கங்கை ஒன்றல்ல, கங்கை வடக்கில் ஓடுவது மட்டுமல்ல! நம் புனித பூமியில் கங்கை உற்பவிக்கும் புனித கங்கா சக்தித் தலங்கள் நிறைய உண்டு!

திருவிசநல்லூர்

கங்கோத்தபத்திப் பண்டிகையைக் கொண்டாடுவதால் நற்சந்ததி தழைக்கும். குழந்தைப் பேறு உண்டாகும்., குடும்பத்தை வாட்டும் ம்ருத்யு தோஷங்கள் தணியும், நாட்டில் நீர்வளம், மழைவளம் விருத்தியாகும்!

கங்கோத்பத்தி பண்டிகைக்கு உற்ற அற்புதத் திருத்தலமே ஸ்ரீமோகனவல்லி சமேத ஸ்ரீகங்காதரேஸ்வரர் கோயில்!

பூவுலகில் கங்கை தோன்றிய நாளே கங்கோத்பத்திப் பண்டிகையாகப் பண்டைய காலத்தில் நன்கு கொண்டாடப்பட்டு வந்தமையால்தான் நம் பாரதத் திருநாட்டில் நீர்வளம் கொழித்தது! நல் ஆறுகள் நிரம்பி வழிந்தன! இத்தகைய பண்டிகைகளை நாம் காலப் போக்கில் கடைபிடிக்க மறந்தோம், நீர்வளத்தையும், மழைவளத்தையும் இழந்தோம்! இனியேனும் விழித்துக் கொண்டு சற்குரு அளிக்கின்ற, கங்கோத்பத்திப் பூஜை முறைகளைக் கடைபிடித்து நாட்டின் நீர்வளம், மழைவளம், நிலவளத்தையும், உலக அமைதியையும் ஆன்மீக ரீதியாக நன்முறையில் பேணுவோமாக!

நாம் பன்னெடுங்காலமாகக் கடைபிடிக்க மறந்த இத்தகைய பல அரிய பூஜைகளின் தெய்வீக மகத்துவத்தை, தக்க சற்குரு மூலமாகவே நாம் பெற்றிட முடியும்.

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள், சித்தர்களின் இறைவேதமாம், அருள்மாமறையாம் ஞானபத்ர கிரந்தங்களில் எழுதாமறையாக, வாக்பதிகளாக மட்டுமே அறியக் கிடைக்கும் அரிய விளக்கங்களுள் கங்கோத்பத்திப் பூஜையின் மகத்துவத்தைப் பற்றி, கலியுக மக்கள் சமுதாய நலன்களுக்காக, இங்கு நன்கு விளக்கமாக எடுத்துரைக்கின்றார்.

பூமிக்கு கங்கை வரும் தேவ வழிகள் பலவிதம்!

கங்கோத்பத்தி எனில் பல அர்த்தங்கள் உண்டு. கங்கை பூலோகத்திற்கு வந்த திருநாள்! பூலோகத்திற்கு பல இடங்களிலும் புனிதமான கங்கை நீர் சுரக்கும் நிறைநாள்! கங்காதேவி பூமியில் பிரசன்னமாகி மஹேஸ்வரனை மானுட வடிவில் வழிபடும் திருவளநாள்! பல திருத்தலங்களிலும் கங்கை உற்பவிக்கும் நன்னாள்! சிவபெருமானின் சிரசில் இருந்து பொழிந்த கங்கையை, பகீரதன் தன் தவக் கோலத்தில் பூவுலகுக்கெனப் பெற்ற பொன்னாள் எனப் பல விளக்கங்கள் உண்டு.

பகீரதன், கங்கோத்தி சிகரத்தில் “பகீரதசிலா” எனும் கற்பலகையில் அமர்ந்து கொண்டு ஆற்றிய அருந்தவம் மூலமாக, ஆதிசிவனாரிடம் இருந்து கங்கை, புண்ணிய நதியாக பூமிக்கு வந்ததையும், இமய மலையில் கங்கோத்ரி கோமுக் எனும் புனிதமான இடத்தில் கங்கை நீர் சுரந்து உற்பவிப்பதையும் நாம் நன்கு அறிந்தாலும், பூலோகத்திற்கு, கங்கை வரும் தேவ வழிகள், தெய்வீகக் காரணங்கள் இன்னும் நிறைய உண்டு. தற்போது கங்கை நதிப் பிரவாகம் வட இந்தியப் பகுதியில் மட்டும் இருப்பது போல் பூகோள ரீதியாக நமக்குத் தோன்றுகின்றது. ஆனால் ஆன்மீக ரீதியாக, இன்றும் கங்கையின் தேவ சக்திகளான கங்காதர சக்திகள் நிறைந்த எண்ணற்றத் திருத்தலங்கள் பூமியெங்கும், பாரதமெங்கும். குறிப்பாக, தமிழ்நாட்டிலும் நிறையவே உண்டு. சித்தர்களும், மகான்களும் இத்தகைய கங்காதரத் தலங்களில் பலவிதங்களில், இறையருளால், கங்கை நீரைத் தருவித்துள்ளனர்.

மாமுனியின் இல்லக் கிணற்றில் ருத்ர கங்கைப் பொழிவு!

கங்கோத்பத்தி கிணறு
திருவிசநல்லூர்

இதற்கு உதாரணமாக, கும்பகோணம் அருகே திருவிசநல்லூரில், நாம் வாழும் கலியுகத்திலேயே, பல ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீதரஐயாவாள் என்னும் மாமுனி இறையருளால், பித்ருக்களின் ஆசியுடன், தம் இல்லக் கிணற்றில், இறைவனை வேண்டி, கங்கை நதி நீரை வர வழைத்தார். இதுவே ருத்ர கங்கை எனப்படுவதாகும்.

இதே போல கங்காதர சக்திகள் நிறைந்த கங்கா ஜலம் சுரக்கின்ற அற்புதச் சிவத் தலங்களும், கங்கா ஜலத்வீபத் தலங்களும், இன்றும் பல உண்டு. இவற்றில் கங்கோத்பத்தி நாளில் அற்புத கங்கை நீர்ப் பிரவாகம் பொங்குகின்றது.

இமய மலையில் கங்கோத்ரி கோமுக்கில் உற்பத்தியாகின்ற கங்கை நதியானது, பல மலைப் பாதைகள் வழியாக, சமுதாய பூமியை அடைகின்ற இடம் ரிஷிகேஷ் என்றும், மலைப் பாங்கிலிருந்து சமவெளிக்கு வருகின்ற இடம் ஹரித்வார் என்றும் நாம் அறிவோம். ஸ்ரீமஹாவிஷ்ணுவே (ஸ்ரீஹரி) கங்கைப் பிரவாகம் வரும் துவாரத்தில் யோக நிலையில் அமர்ந்து, சிவனின் சிரசிலிருந்து வழியும் கங்கை நீரைப் பெற்று நமக்கு அளிப்பதால் ஹரித்வார் எனப் பெயர் பெற்றது. இவ்வாறு பல திருத்தலங்கள் மூலமாக, புனித கங்கை நீரானது, புவியை அடையும் அற்புத தேவவழிப் பாதைகளும் நிறைய உண்டு.

உலக ஜீவன்களுக்கு அருள்பாலிக்கும் உத்தம கங்கை!

கங்கோத்ரி சிகரத்தில் கோமுக்கில் உற்பத்தியாகின்ற கங்கையானது, மேற்கு வங்காளத்தில் கடலில் சங்கமம் ஆகும் வரையில், இடையில் கோடானு கோடிக்கணக்கான ஜீவன்களுக்கு அருள்பாலிக்கின்றது அல்லவா! நாம் தென்னிந்தியப் பகுதியில் உள்ளோமே, நமக்கு கங்கையின் புனித சக்தியைப் பெறும் வழிவகை இல்லையே என எண்ணி ஏங்காதீர்கள்.. கங்கை தேவி இன்றைக்கும் பல தென்னிந்திய அலயங்களில், குறித்த நாளில், குறித்த நேரத்தில் தோன்றி, ஆங்காங்கே கங்கை நீரைத் தோற்றுவித்து ஆலயத் தல விருட்சங்களில், தீர்த்தங்களில், கோபுரக் கலசங்களில், பூமியடி நீரோட்டங்களில், மகான்கள், சித்தர்களின் ஜீவாலயங்களில் கங்காதர சக்தியைச் சேர்த்து, பூவுலகின் பல பகுதிகளிலும் பலகோடி ஜீவன்களும் கங்கைப் பிரவாக சக்தியைப் பெற அருள்பாலிக்கின்றாள். இத்தகைய கங்கா தேவ அனுபூதிகள் நிகழும் நன்னாளே கங்கோத்பத்தித் தினமாகும்.

கங்காதர சக்தித் தலங்களில் கங்கைப் பிரவாகம்

இவ்வாறாக, இத்திருநாளில் பூலோகத்தின் பல கங்காதர சக்தித் திருத்தலங்களிலும், கங்கை நீர் ஆன்மீக ரீதியாக உற்பத்திட ஆகிட, இதனைப் பரிபூரணமாக உலக ஜீவன்களின் ஆன்மீக நலன்களுக்காகப் பெறும் வழிமுறைகளே கங்கோத்பத்திப் பூஜை ஆகும்.

இத்திருநாளில் ஸ்ரீகங்காதீஸ்வரர், ஸ்ரீகங்காதரர், ஸ்ரீகங்காதரேஸ்வரர் போன்ற கங்கைப் பெயரை சுவாமி பூண்டுள்ள ஆலயங்களில், தீர்த்தக் குளம் இருப்பின் நீராடுதலும், இறைவனுக்கு கங்கை, காவேரி போன்ற புண்ணிய் தீர்த்தங்களால் அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபடுவதும், நன்முறையில், நல்ஒழுக்கத்துடன், நல்பக்தியுடன் சந்ததிகள் தழைக்கப் பெரிதும் துணை புரியும்.

உணவு, பணக் கஷ்டத்தால் இல்லத்தில் தம்பதிகளிடையே ஏற்படும் சச்சரவுகள் தணிந்து ஒற்றுமை நிலவிட, கங்கோத்பத்தி பூஜை உதவுகின்றது..!

இன்று கங்கை நீரை மட்டும் சிறிது அருந்தி, உண்ணாநோன்பு இருந்து, கங்கை நீர் கலந்து சமைத்த உணவினை ஏழைகளுக்குத் தானமாக அளித்திட, உடன்பிறந்தவர்களே பகைவர்களாய் மாறித் துன்புறுத்துகின்ற அவல நிலை மாறும்.

பூரண கங்கா சக்தி மிகுந்துள்ள கங்காதரத் தல மூலமூர்த்திகளுக்கும், உங்கள் ஊர் ஆலயத்தில் உள்ள சுயம்பு மூர்த்திகளுக்கும் இன்று துளசி, வில்வம், புனுகு, பச்சைக் கற்பூரம், ஜவ்வாது, கஸ்தூரி, கோரோஜனை, அத்தர், வெட்டி வேர், குங்குமப் பூ ஆகிய பத்துத் திரவியங்கள் கலந்த தீர்த்தத்தால் அபிஷேகித்து, இந்த கங்கோத்பத்திப் பலாபலன்கள் பூமியடி நீரோட்டங்கள் மூலமாக பூலோக மக்கள் யாவர்க்கும் சென்றடையும் வண்ணம் பூஜிக்க வேண்டியது நம் பாரத சமுதாயத்தின் உலகளாவிய நல் அமைதிக்கான இறைலட்சியக் கடமையாகும்.

இதனால் பிள்ளைகள், பெண்களுக்கு நன்முறையிலான மணவாழ்வு அமைந்து சந்ததியும் நன்கு தழைக்கும். இவ்வாறு கங்கோத்பத்திப் பூஜா பலன்கள், பலவிதமான கர்ம வினைகளை, பாவச் சுமைகளை பஸ்மம் செய்வதால், அந்தந்தத் துறைகளில் நன்மைகள் விருத்தியாகி, பல்துறை வளங்களை நல்க வல்லதாம்.

கங்கையருள் இப்பூவுலகம் முழுமைக்குமே!

மேலும், கங்கை நதி, மேற்கு வங்காள மாநிலத்தில் கடலில் சங்கமமாவதாலும், கடல் நீர் விரவி, மழை நீராகப் பரவி கங்கா சக்தி அனைத்து நாடுகளையும் அடைவதாலும், உலகத் தெய்வீக மையமாக பாரதம் சிறந்து விளங்குவதாலும், அனைத்து நாட்டு ஜீவன்களுக்குமான ஆன்மீகப் பொதுமறை நதிகளே கங்கை, காவிரி போன்ற பாரதப் புனித நதிகள் என்பதையும் நினைவில் கொள்க!

பூமியின் பல புனிதமான இடங்களிலும், தூல, சூக்கும ரீதியாக, கங்கை ஜலம் சுரக்கும் கங்கோத்பத்தி நாளாகிய இன்று பாரதத்தில், குறிப்பாக, நம் தமிழ்நாட்டில் கங்காதர சக்தி நிறைந்த ஸ்ரீகங்காதீஸ்வரர், ஸ்ரீகங்காதரர், ஸ்ரீகங்காதரேஸ்வரர் போன்ற கங்கை நாமச் சுயம்பு லிங்கங்களுக்கும், சுயம்புப் பெருமாள் மூர்த்திகளுக்கும் ஆற்றப்படுகின்ற கங்கை, காவேரி போன்ற புண்ணிய தீர்த்த அபிஷேக ஆராதனைகள், பூமி நீரோட்டங்கள் மூலமாகக் கோடி கோடியாம் ஜீவன்களை அடைந்து, உலக மக்களின் கர்ம வினைகளைத் தணித்து, இறைவளம் பெருக்குவதால், கங்கோத்பத்திப் பூஜையானது, ஜாதி, மத, இன பேதமின்றி யாவர்க்கும் நல்வரங்களை அருளும் உன்னதமான உலக சமுதாய வழிபாடாகவும் மலர்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது!

உலக அமைதிக்கு, பூலோக வளத்திற்கு ஆனமத் துணை புரியும் அற்புத கங்கை வழிபாடு!

கோடிக்கணக்கான சுயம்பு மூர்த்திகளும், புண்ணிய நதிகளும், புனித மலைகளும் நம் நாட்டில் இருப்பதால், உலகின் ஆன்மீக மையாக விளங்குகின்ற பாரத நாட்டின் பிரஜைகளாகிய நம் அனைவருக்குமே, புனித கங்கா நதி வழிபாட்டின் மூலம், உலக அமைதிக்காக, இறையருளை நாடும் வகையில், தினந்தோறும் பூஜிக்க வேண்டிய முக்கியமான தெய்வீகக் கடமை உண்டு. பலரும் இதனை இவ்வாறு உணராது, இயந்திர கதி மனிதனாகவே, சுயநலமாகவே வாழ்கின்றனர்.

எனவே இவ்வாறு உலக நலவளக் (லோக க்ஷேமம்) கடமையில் இருந்து தவறுகின்றமைக்கு, சிறிய அளவிலான பிராயச்சித்தமாக, கங்கோத்பத்தி நாளிலாவது அனைவரும் கங்காதர சக்தி நிறைந்த ஆலயங்களில் அபிஷேக ஆராதனைகளைக் கடைபிடித்திட வேண்டும்.. கங்கோத்பத்தி நாளிலும் இரத சப்தமித் திதிகளிலும் நீர் மோர், நீர்க் கொழுக்கட்டை, பானகம், பழரசம், பாயசம், கிருணிப் பழம், மாதுளை, திராட்சை போன்ற நீர்மய உணவுப் பொருட்களை, திரவியங்களை, கனிகளைத் தானமளித்து, இதன் கங்காதர சக்திகள், பூமியடி நீரோட்டங்கள் மூலமாக, உலக ஜீவன்களைச் சென்றடையும்படி பூஜைகளை நிறைவேற்றுதல் வேண்டும்.

இதனால் பூமியடி நீரோட்டங்கள் மூலமாக கங்கா சக்திகள் விருத்தியாகி வறுமையாலும், வன்முறையாலும், போர்களாலும், வாடுகின்ற பல ஏழை நாடுகளையும் அடைந்து– மக்களுக்கு நன்மைகளை அளித்து, ஆன்மீக ரீதியாகப் பல்துறை வளப்பங்களைத் தரவும் உதவிடும். எனவே கங்கோத்பத்திப் பூஜா பலன்கள் உலகளாவியவையே! சப்தமி திதி, பிரதோஷ நாட்களில், கங்காதர சக்தித் தலங்களில் உலக அமைதிக்காக வழிபடுவது மிகவும் சிறப்பானதாம்!

சோமாசிப்பாடி ஸ்ரீமதிவாணச் சித்தர்

பல நூற்றாண்டுகளுக்கு முன் திருஅண்ணாமலையில் மானுட ரூபத்தில் நடமாடி மக்களோடு மக்களாய் வாழ்ந்து, மறைந்து ஜீவாலயம், ஜீவ சமாதி பூண்டு என்றும் வாழும் ஏகாந்த ஜோதிகளாகப் பரிமளிக்கும் எண்ணற்ற சித்தர்களைக் காண இத்தொடரின் மூலம் அனைவரையும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதான அருணாசலப் புனித பூமிக்கு இட்டுச் செல்கின்றோம்.

சித்தர்களுக்கு பூமியே பெருவீடு, வானமே நல்ஆடை!

பெரும்பாலும் காரணப் பெயரையே சூடுகின்ற சித்தர்கள் தோன்றுமிடம் எவரும் அறியார். இச்சித்தர்பிரான் சோமாசிப்பாடியில் பலராலும் பாறைமுக யோக தியானத்தில் அருணாசலத்தை நோக்கியவாறு அமர்ந்த நிலையில் காணப் பெற்றமையாலும், திங்களன்றும், மூன்றாம் பிறைச் சந்திர நாளன்றுமே பெரும்பாலோருக்குத் தென்பட்டமையாலும், மூன்றாம் பிறை வடிவில் தன் சிகைக் கொண்டையைக் குடுமியாக இட்டிருந்தமையாலும், ஜடாமுடித் தலையில் எப்போதும் பிறையிட்டாற் போல் ஒளிப்பிரகாசம் பொங்கியமையாலும் சோம ஆசியை அதாவது சந்திர பகவானுடைய ஆசியைப் பெற்றுத் தரவல்ல களஞ்சியம் (பாடி-வாண-களஞ்சியம்) என்ற பொருளில் சோமாசிப்ப்பாடி மதிவாணச் சித்தர் என்ற காரணப் பெயரைக் கொண்டார்.

மதிவாணச் சித்தர் அமாவாசைத் தினத்திலும், சந்திரப் பிரகாசத்தைக் காட்டி அருளியவர். எப்போதும் சந்திர ஒளி, சூரிய ஒளியில், வெட்ட வெளியிலே வாழ்ந்து மக்களுக்கு அருள்புரிந்த அற்புதச் சித்தர்பிரான்.!

மடத்திலோ, வீட்டிலோ, மரத்தடியிலோ கூட உள்ளே எங்கும் தங்காது பரிசுத்த அத்வைதி போல் எப்போதும், பரவெளியிலேயே உலா வந்து, உறைந்து, மனித சமுதாயத்தில் எளிமையாக வாழ்ந்து, அருட்தொண்டாற்றியவர். திருஅண்ணாமலையில் கோசாலை அருகே சந்திரப் பிறை தரிசனப் பகுதியில் ஜீவசமாதி பூண்டு என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாய் அருள்பவர்!

பகலிலேயே நட்சத்திரங்களைத் தரிசித்த மதிவாணச் சித்தர்!

நம்முடைய பூமிக்கு அமாவாசை தினமாக இருந்தாலும், இந்நாளில் எத்தனையோ பூமிகளில் பௌர்ணமியாகவும், வளர்பிறையாகவும், தேய்பிறையாகவும் வேறு திதி இருந்திடும் அல்லவா! எனவே அமாவாசைத் திதியிலும் கூட, பிற பூமிச் சந்திர ஒளியைத் தரிசிக்கும் பேறு பெற்றவரே மதிவாணச் சித்தர். பகலிலும் சந்திர ஒளி மற்றும் நட்சத்திர தரிசனங்களைக் காணும் பேறு பெற்றதுடன் விவரிக்க இயலா அதியற்புத நேத்திர சக்திகளையும் பெற்றவர்.

புகழ் பெற்ற பஞ்சாங்கக் கணிதக்ஞர்கள் கூட எத்தனையோ மாதங்களுக்குப்ப் பின் வரும் கிரக சங்கமங்கள், சூரிய, சந்திர கிரகணங்கள் பற்றிய விளக்கங்களுக்கு இவரை நாடுவர். சந்திர கிரக ஹோமத்திற்கு உரித்தான ஓர் எருக்கச் சமித்துக் குச்சி கொண்டு வெறும் மணலில் துல்லியமாக, கிரக அமைப்புகளை, கிரக சஞ்சாரங்களை வரைந்து, தீர்கமாக, கோள் சங்கம நேரத்தை விநாடி தவறாது கணக்கிட்டுத் தந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவர். அவர் காலத்தைய பன்னாடு விஞ்ஞானிகளும் பேரதிகாரிகளும் இவருடைய அறிவைக் கண்டு வியந்து, பாராட்டிப் போற்றி வணங்கி உள்ளனர்.

மனவியாதிகளை நிவர்த்தி செய்த மனோவள மதிவாணச் சித்தர்!

நம் வலது கண்ணில் சூரிய சக்தியும், இடது கண்ணில் சந்திர சக்தியும் இருப்பது நாம் அறிந்ததே ஆகும். மதிவாணச் சித்தர் வலது கண்ணை மூடியவாறும் இடது கண்ணை மட்டும் திறந்தவாறும் அண்ணாமலையை நோக்கி தவம் பூண்ட காட்சியைப் பலரும் தரிசித்திருக்கின்றார்கள்..

பதினேழாம் நூற்றாண்டுக் காலத்தைச் சேர்ந்த மதிவாணச் சித்தர் எண்ணற்ற மன நோயாளிகளை குணமாக்கியவர். தாமிருக்கும் சுவடு கூடத் தெரியாது பல அற்புதங்களை நிகழ்த்தி எளிமையாக வாழ்ந்தவர். தற்காலத்தில் Down’s Syndrome என்று சொல்லப்படுகின்ற மனவளம், மன நலம் குன்றியோர், மன நிலை பாதிக்கப்பட்டவர்கள், மனநோய் உள்ளவர்கள் போன்ற வகையினர் பலரும் மதிவாணச் சித்தர் இருக்கும் இடத்தைத் தேடி, நாடி வந்திட, அவர்களைக் குறித்த நாளில் பெரும்பாலும் திங்களன்று, சந்திர ஹோரை நேரத்தில் குறித்த காலத்திற்கு அருணாசலத்தைக் கிரிவலம் வரச் செய்து, மூன்றாம் பிறைச் சந்திர தரிசன சக்திகளால் குணமாக்கிய மருத்துவச் சித்தர், ஸ்ரீதன்வந்த்ரீ சித்தர் பிரானின் அற்புதச் சிஷ்யராகப் பரிணமிப்பவர்.

சந்திர அமிர்தக் கிரணங்களை அருந்திய மதிவாணச் சித்தர்!

மதிவாணச் சித்தர் மனித சரீரத்தில் வாழ்ந்திட்டாலும், அவர் உணவு உண்டு எவரும் கண்டதில்லை! ஒரு தொன்னையை வைத்துக் கோண்டு சந்திரனுடைய அமிர்தக் கிரணங்களை தொன்னையில் ஈர்த்துப் பருகுவதையே பலரு கண்டுள்ளனர். அவர் எடுத்தளிக்கின்ற பிரசாதம் அனைத்திலுமே சந்திர கிரண அமிர்த சக்திகள் நிறைந்திருக்கும். இது எவ்வாறு உணரப் பெற்றதெனில் அவரளிக்கும் இனிப்புகள் அமிர்தம் போல் இனித்திட்டு, எவ்வளவுதான் தின்றாலும் தின்னத் தின்னத் திகட்டாததாய் இருந்தன.!

எப்போதும் தும்பைப் பூ போன்ற (சந்திர பகவானுக்கு உரிய) தூய வெண்மை ஆடையுடன் காட்சி அளித்த மதிவாணச் சித்தர் சோமாசிப்பாடியில் ஒரு பாறையில் யோக நிலை பூண்டிருந்து தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் புறப்பட்டு அருணாசல கிரிவலம் வந்து நள்ளிரவில் திரும்புவதைப் பலரும் கண்டுள்ளனர். எங்கு தங்குகின்றார். நீராடுகின்றார், தூய்மையான வெண்ணாடை அவருக்கு எவ்வாறு கிட்டுகிறது எவரும் விடையறியா வினாக்கள் இவை! ஆனால் சித்தர்களுக்கு உலகமே வீடு, வானமே ஆடையன்றோ!

மூன்றாம் பிறைச் சந்திரயோக யோகியே மதிவாணச் சித்தர்!

ஸ்ரீபடேசாகிப் சுவாமிகள் ஜீவாலயம் சின்னபாபுசமுத்திரம்

வாரணாசியிலும், ராமேஸ்வர்த்திலும் ஒரே சமயத்தில் தோன்றிய த்ரைலிங்கச் சித்தர் சுவாமிகள் போல மதிவாணச் சித்தர், சோமாசிப்பாடி கிராமத்திலும், திருஅண்ணாமலையிலும் ஒரே சமயத்தில் பல இடங்களில் இருப்பார். பொதுவாக, அமாவாசையிலிருந்து மூன்றாம் நாள் வருகின்ற மூன்றாம் பிறைச் சந்திர தரிசன நாளில் மதிவாணச் சித்தர், திருஅண்ணாமலையைச் சுற்றிலும் பல இடங்களிலும் பாறைகளின் அருகே ஒரே சமயத்தில் பல இடங்களிலும் சந்திர தரிசனத்தை பலருக்கும் பெற்றுத் தருவார். உத்தமப் பெரியோர்களுடன் சேர்ந்து மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம் பெறுவது பெரும் பாக்கியமுடையதன்றோ!

இவர் காட்டி அருளிய வழிமுறைகளில் மூன்றாம் பிறைச் சந்திரனைப் பார்த்து வழிபட்டு மனவியாதிகள் தீர்ந்து, பைத்தியம் தெளிந்து நன்னிலை அடைந்தோர் எண்ணற்றோர் ஆவார். ஆழ்ந்த, பரிபூரண நம்பிக்கைக் கொண்டு மதிவாணச் சித்தரைப் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து வழிபட்டு வந்தவர்களுக்கு பல அரிய அனுகிரகங்களும் கேளாமலேயே கிட்டின.!

மதிவாணச் சித்தர், அருணாசல கிரிவலப் பாதையில் அடி அண்ணாமலை அருகே பிறை தரிசனப் பகுதியில் ஜீவாலயம் பூண்டார். இவர் தூல, சூக்கும வடிவுகளில் கிரிவலம் வரும் நாளே சுபானு ஆண்டு சித்திரை மாத சிவராத்திரி தினமாகும்.

சந்திர பகவானே மனதை ஆட்சி செய்கின்ற கிரக மூர்த்தி ஆதலால் மன நோய்களால் பாதிக்கப்பட்டோர் இந்நாளில் கிரிவலம் வந்திட்டால், இறையருளால் மனநோய், கர்ம வினை அழுத்தங்கள், மேலும் தொடரா வண்ணம் இருந்திட, தக்கப் பரிகார முறைகள் காட்டப் பெறும். துன்பங்களும் தணியும்.

இத்தகைய சந்திரச் சக்கர யோக மகத்துவம் வாய்ந்த மதிவாணச் சித்தரே, தூல, சூட்சும, சரீர வடிவில் கிரிவலம் வருகின்ற இந்த மாத சிவராத்திரி நாளில் மன வளம் பாதிக்கப்பட்டோர் (afflicted with Down’s Syndrome) இயன்றவரை, தக்க துணையுடன் பெற்றோர்கள், உற்றம், சுற்றத்துடன் கிரிவலம் வருதலாலும் இயலாவிடில் அவர்கள் சார்பாகப் பிறரும் இன்று கிரிவலம் வருதலாலும் பல நன்மைகளைப் பெற்றிடலாம். ஆழ்ந்த நம்பிக்கை எதையும் சாதிக்க வல்லதாம்.!

தற்போது Down’s Syndrome என்று சொல்லப்படுகின்ற மனவளக் குறைவு நோய்களால் பாதிக்கப்பட்டோர், மனநலம் குன்றியோர் பலருக்கும் அதியற்புத முறையில் மூன்றாம் பிறைச் சித்தர்பிரானே மதிவாணச் சித்தர் ஆதலால், பொதுவாக திங்கள் தோறும் மௌனவிரதம் இருந்து, அருணாசலத்தைக் கிரிவலம் வந்திடில் மனநலக் குறைவுத் துன்பங்கள், மனோநல உடற்பிணி இன்னல்கள் தணிய நல்வழிகள் கிட்டும்.

ஸ்ரீஅரவிந்தமாதா

சித்தர்கள் போற்றுகின்ற உத்தூர்வ மகாயோகியே ஸ்ரீஅரவிந்த மாதா (ஸ்ரீஅன்னை)

“அழைத்து, அ(ரவ)ணைத்து குருவருள் பொழியும்!” - ஸ்ரீஅரவிந்த மாதா (ஸ்ரீஅன்னை)

ஹம்சத்வனி லோகத்தைச் சார்ந்த பரமயோகியாய், என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாய் அனைத்து பூமிகளிலும் (விஞ்ஞானம் பகர்வது போல் பூமி ஒன்றல்ல) பரிணமித்து, ஜீவ நற்பரிபாலனத்திற்குத் தம் யோக சக்திகளை அர்ப்பணித்து, யோகவடி மாதாவாய் ஜ்வலிக்கின்ற ஸ்ரீஅரவிந்த மாதா (ஸ்ரீஅன்னை) அவர்கள், பலவிதமான இன்னல்களால் வாடுகின்ற ஜீவாத்ம சரீரங்களை, பல விண்வெளி லோகங்களுக்கும் ஆன்மப் பூர்வமாக அழைத்து வந்து, ஆன்ம சேகரம், ஆத்மவிழிக் கூடம், சாந்தஸ்படிகம் போன்ற யோக சாதனங்கள் மூலம் காருண்ய ஆறுதல் அளித்து, அன்றும், இன்றுமாய், தன்னுடைய அற்புத நேத்திரங்களில் ஒளிர்கின்ற உத்தூர்வ யோகப் பிரகாச சக்தியை நல்வரமாக ஜீவன்களுக்கு வார்த்தளித்து, இன்றும் லட்சக்கணக்கான ஜீவன்களுக்கு (அன்புக்) காப்புப் பெட்டகமாக விளங்குகின்ற யோகஒளிப் பூரணப் பெம்மான் ஆவார்.

ஸ்ரீராம்பரதேசி சுவாமிகள் ஜீவாலயம்
வில்லியனூர்

ஸ்ரீஅன்னை அழைக்கின்றார்!

கடந்த இதழில் நாம் விவரித்துள்ளது போல, ஸ்ரீஅரவிந்த மாதாவை (ஸ்ரீஅன்னை) ஆத்மார்த்தமாக வேண்டி, உறங்குபவர்களுடைய ஜீவாத்மப் பரலிச் சரீரங்களை (உறங்கும் போது பரிணமிக்கும் தேகம்), அவரவருக்குத் தேவையான ஆத்ம சக்திகள் நிறைந்துள்ள பரவெளி ஆன்ம மண்டலங்களுக்கு, மகா காருண்யத்துடன், யோகப் பூர்வமாகத் தூல, சூக்கும வடிவுகளில் ஈர்த்துச் சென்று, ஆங்காங்கே பல திவ்யமான கடவுட் சாதன, யோகமறை தரிசனங்களையும் பெற்றுத் தருகின்ற உத்தூர்வ யோகத் திலகமே ஸ்ரீஅரவிந்தமாதா (ஸ்ரீஅன்னை) ஆவார்.

உறக்க நிலையிலும், ஜாக்ரத் நிலையிலும் அவரவர் ஆன்ம நிலைக்கேற்ப, அந்தந்த ஜீவ சரீரங்களுக்குத் தேவையான பலவிதமான யோகதேவ சக்திகளையும் கிரணபல யோக நீரோட்டம் மூலம், தம்மை வேண்டி வரும் ஜீவன்களுக்கு அளித்துப் பூலோகத்திற்கு, அருள்பலத்துடன் ஆன்ம அன்னபலமும் தந்து ஆனந்தமயத்துடன் ஸ்ரீஅன்னை பூமிக்குத் திருப்பி அனுப்புகின்றார்.

இத்தகைய அரிய கிரணபல யோக நீரோட்டம், இன்றும் ஸ்ரீஅரவிந்தமாதா (ஸ்ரீஅன்னை)யின் ஜீவசமாதியில் பொங்கிப் பொழிந்து ஜாதி, மத, இன, மனிதன், விலங்குகள், தாவரங்கள், ஆண், பெண் என எவ்வித பேதமும் இன்றி யாவர்க்கும் அருள்வழி காட்டுகின்றது!

உத்தூர்வ யோகசக்திகள் உற்பவிக்கும் உத்தம வளாகமே ஸ்ரீஅன்னையின் ஜீவாலயம்!

தியானம், யோகம், ஆத்ம சாதனம், மனோயோக லயம், telepathy, தாரணவடம் போன்ற அற்புத உத்தம நிலைகள் கூடிய உத்தூர்வ யோகக் கலையில் பெறுதற்கரிய உத்தம நிலைகளைப் பூண்டு, தூல, சூக்கும, காரண, காரிய வடிவுகளில், அருளுலகில் பெரும் சாதனைகளைப் புரிந்து வருபவரே ஸ்ரீஅரவிந்த மாதா (ஸ்ரீஅன்னை)!

இவ்வாறு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான சரீரங்களை, ஆன்மப்பொலிவுடன் சாந்தப் படுத்துகின்ற அபூர்வமான தெய்வீக சக்திகளைப் பூண்ட உத்தூர்வ யோகியான ஸ்ரீஅரவிந்த மாதா (ஸ்ரீஅன்னை), இத்திருப்பணியை இன்றும் ஜீவசமாதி மூலமாகவும், அருளுடற்பாங்கிலும், தம்மை அண்டிப் பரிபூரணமாகச் சரணடைவோர்க்குத் திருப்புலம், சூக்கும வடிச்சுடர், ஆத்ம வலம்பனம் போன்ற யோக சித்திகள் மூலமாகவும் ஜீவ சமுதாயத்திற்கும் அற்புதமான இறைத் திருப்பணிகளை ஆற்றி வருகின்றார்கள்.!

கலியுக மக்கள், தம் கர்ம வினைகளால் விளையும் கவலைகள், வேதனைகளைத் தாங்கி, அவற்றை எதிர்த்து நின்று சமாளித்து, வெல்வதற்குமான உத்தூர்வம் என்ற அபூர்வமான யோக கிரணங்கள், புதுச்சேரில், ஸ்ரீஅரவிந்த மாதாவின் (ஸ்ரீஅன்னை), ஜீவாலய வளாகத்தில், நீரோட்டங்கள், பரவெளிக் காற்றணுக்கள், மலர்கள், மர இலை, வேர் பாகங்கள், மூலமாகவும் நிரவி இங்கு வணங்குவோரை அடைகின்றன. இது இன்றளவும் பூவுலகில் நடந்து கொண்டிருக்கின்ற தெய்வீக அற்புதம் ஆகும்.

கேட்டை நாளில், பெறுவீர் ஜீவாலய தரிசனம்!

ஸ்ரீபோடா சுவாமிகள் ஜீவாலயம்
காஞ்சீபுரம்

பொதுவாக, அருணாசல கிரிவலம் போல, எந்நாளுமே ஸ்ரீஅரவிந்த மாதாவின் (ஸ்ரீஅன்னை) குருமூர்த்தம் (ஜீவாலயம்) தரிசனத்திற்கு விசேஷமானதே! சூரிய சக்திகள் ஞானப் பொலிவு தரும் ஞாயிற்றுக் கிழமையும், மற்றும் (ஞானப்ரகாச) கேட்டை நட்சத்திர தினமும், இதிலும் மிகவும் விசேஷமானதாக, கேட்டை நட்சத்திரமும், செவ்வாய்க் கிழமையும் கூடி வரும் நாளும், ஜீவசமாதி தரிசனத்திற்கும், குறிப்பாக, இத்தகைய உத்தூர்வ யோகியரைத் தரிசிப்பதற்கும் மிகவும் விசேஷமான தீர்க யோகசக்திகளை உடைய நாட்களாகும்.

கேட்டை நட்சத்திரத்தைப் பற்றிப் பலரும் தவறாக அபிப்பிராயம் கொண்டுள்ளனர். இறைவன் 27 நட்சத்திரங்களுக்கும் பல அபூர்வமான ஆத்ம சக்திகளைத் தந்திருக்கின்றார். இவை அனைத்தும் நம் வாழ்க்கைக்குத் தேவையானவையே! இவற்றுள் கேட்டை நட்சத்திர நாளானது உத்தம ஞானியர், யோகியர், அற்புதச் சித்தர்கள், அருள்நிறை மகரிஷிகளையும், அவர்களுடைய ஜீவாலய, குருமூர்த்தங்களையும் தரிசிப்பதற்கான மிகச் சிறப்பான நாளாகும்.

உத்தூர்வ யோக மூல ஒளிப் படலத்தின் யோக மூலக் கூறு அம்சங்களுக்கும், யோக நட்சத்திர ஒளி வடிவுகளும் கேட்டை நட்சத்திர வடிவ அமைப்பை ஒட்டி இருப்பதாலும், கேட்டை நட்சத்திர மண்டலமானது செவ்வாய் போல அக்னி குண்ட சக்திகளைக் கொண்டதாலும், கேட்டை நட்சத்திர நாளிலும், குறிப்பாக கேட்டை செவ்வாயுடன் கூடும் நாளிலும் ஸ்ரீஅரவிந்தமாதாவின் (ஸ்ரீஅன்னை) ஜீவாலயத்தைத் (ஜீவசமாதியைத்) தரிசிப்பது அபரிமிதமான யோக சக்திகளைப் பன்மடங்காய்ப் பெற்றுத் தருவதாகும்.

மிகவும் அபூர்வமாக அமையும் இக்கூட்டு நாளிலும், ஞாயிறு, கேட்டை தினங்களிலும் பாண்டிச்சேரி ஸ்ரீஅரவிந்த மாதா (ஸ்ரீஅன்னை), வில்லியனூர் ஸ்ரீராம்பரதேசி சுவாமிகள், காஞ்சீபுரம் பரமாச்சார்யாள் ஸ்ரீசந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சீபுரம் ஸ்ரீபோடா (சிவசாமி) சித்தர் சுவாமிகள், சின்னபாபு சமுத்திரம் ஸ்ரீபடேசாஹிப் சித்தர், சிங்கம்புணரி ஸ்ரீவாத்யார் ஐயா சித்தர், திண்டுக்கல் அருகே கசவனம்பட்டிச் சித்தர், மதுரை ஸ்ரீகுழந்தையானந்த சுவாமிகள், பகவான் ஸ்ரீரமண மகரிஷி போன்ற உத்தம சித்தர்கள், மகான்களுடைய ஜீவாலயங்களில், குருமூர்த்தங்களில், ஜீவசமாதிகளில் வழிபட்டு அளப்பரிய நல்வரங்களையும் அருள்வழி முறைகளையும் பெற்றிடுவீர்களாக!

எண்கண் பெருமாள்

விஷ்ணுபதிப் புண்ய காலத் தலம் – எண்கண் ஸ்ரீஆதிநாராயணப் பெருமாள் ஆலயம்! தஞ்சாவூர் – கொரடாச்சேரி – திருவாரூர் மார்கத்தில், கொரடாச்சேரியில் இருந்து 13 கி.மீ தொலைவில், எண்கண் கிராமத்தில் உள்ளதே ஸ்ரீஆதிநாராயணப் பெருமாள் ஆலயம் ஆகும்.

கலியுகத்தில் ஸ்ரீவிஷ்ணுபதிப் புண்ய கால பூஜைகள் மீண்டும் மலர்வதாக!

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், வைகுண்ட ஏகாதசி, ஆனித் திருமஞ்சனம் போல் நன்கு சிறப்புற்றிருந்த விஷ்ணுபதிப் புண்ய கால உற்சவமானது நாளடைவில் மக்களுடைய அறியாமையினால், பக்திக் குறைவால் கைவிடப்பட்டு, தற்போது கலியுகத்தில் இதன் மகத்துவம் உணரப் பெறாமல் மறைந்துள்ளது. இதனால் தான் விஷ்ணுபதிப் பூஜா பலன்களால் கழிவு பெற வேண்டிய ஜீவன்களின் கர்ம வினைகள் அப்படியே பல்லாயிரம் ஆண்டுகளாக மனித சமுதாயத்தில் தேங்கி விட்டன. மேலும் ஸ்ரீவிஷ்ணுபதிப் புண்யகால வழிபாடுகளால் மட்டுமே அடைய வல்ல பலாபலன்களும், அருள்வளமும் சமுதாயத்தை அடைய முடியாமற் போனமையால், தீயொழுக்கங்கள், முறையற்ற காமக் குற்றங்கள், அதர்மங்கள், அநீதிகள், லஞ்ச அதர்மங்கள், வன்முறைகள், உலகில் பெருகி வருகின்றன.!

எனவே இனியேனும் பெரியோர்களும், வைணவப் பீடாதிபதிகளும், பெருமாள் பக்தர்களும், பக்த கோடிகளும் விஷ்ணுபதிப் புண்ய காலத்தின் மகத்துவத்தை உணர்ந்து, அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் விஷ்ணுபதிப் புண்யகால தினத்தினை மகத்தான அளவிலே, இறைத்திருவிழாவாக, பெரிய உற்சவாதிகளாக, கலியுக ஜீவன்களுக்கு மீண்டும் நடத்தித் தந்திடப் பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, மாதப் பிறப்பைச் சார்ந்து வருகின்ற விஷ்ணுபதிப் புண்யகாலத்தின் பூஜை நேரமானது அந்தந்த மாதப்ப் பிறப்பிற்கேற்ப இருப்பதால் பொதுவான விஷ்ணுபதிப் புண்யகால, பூஜைகளுக்கான நேரமாக, முதல் நாள் நள்ளிரவு 1½ மணி முதல் மறுநாள் காலை 10½ மணிவரையான நேரம் அமைகின்றது.

பெருமானைக் கருடாழ்வார் தன் தோளில் சுமக்கும் அபூர்வமான மூலமூர்த்தி ரூபத்தை எண்கண் தலம் தவிர வேறெங்கும் நாம் காண்பது அரிதே! இந்த இறைலீலையின் அனுபூதிப் பின்னணியில் கோடானுகோடி தெய்வீக ரகசியங்கள் பொதிந்துள்ளன.!

யாவர்க்கும் யாவைக்குமாய் அமிர்தமே!

அடிமைத் தளையில் சிக்குண்ட தம் தாயை மீட்டிட, கருட மூர்த்தி ஆழ்ந்த தவங்கட்குப் பின் அமுதக் கலசத்தை அமிர்த லோகத்தில் இருந்து பெற்று எடுத்து வர, கடும் களைப்பினாலும், ஆயாசத்தினாலும் கருடனின் மேனி அசைந்திட, அமுதக் கலசத்தில் இருந்து சிறு அமிர்தத் துளிகள் சிந்தலாயின. ஆனால் இதுவும் இறைலீலைதானே! பகவான் அருளின்றி எதுதான் இப்பூவுலகில் நடக்கும்?

விச்வ யோக சக்தியில் வல்லவரான கருடாழ்வார், யோகத் திறமுடன் பலகோடி மைல்கள் அன்ன ஆகாரமின்றி விண்வெளியில் பறக்க வல்லவர் ஆயினும், அமுதக் கலசம் ஆங்காங்கே சற்றே ஆடி, ஆடி அமுதத் துளிகள் பல லோகங்களிலும் சிந்துவதைக் கண்டு திகைத்தார். ஏதோ ஒரு சக்தி அவ்வப்போது தன்னை அழுத்துவதையும், இதனால் தனக்கு பக்திப் பரவசம் உண்டாகி, அமிர்தக் கலசம் ஆடுவதையும் கண்ட கருடாழ்வார் இது பெருமாளின் திருவிளையாடல் என அப்போது உணர்ந்தார் இல்லை!

மிகவும் ஆழ்ந்த கவனத்துடன் அங்க அசைவுகள் இன்றி, இறக்கைகளை மட்டும் ஆட்டியவாறு கருடர் பறந்து வந்த போதிலும் கூட, பல இடங்களிலும் அமிர்தக் கலசத்தில் இருந்து அமுதத் துளிகள் சிந்தலாயின! எங்கே அமுதக் கலசம் இவ்வாறு ஆடி, ஆடி அமிர்தம் சிந்தி, சிந்தி அமுதக் கலசமே வற்றிவிடுமோ என அஞ்சிய கருட மூர்த்தி அமுத துளிகள் சிந்துவதற்கான காரணத்தை இப்போது ஆத்ம விசாரத்துடன் அறிய விழைவாராயினர்.

கருடாழ்வார் உய்த்த ஆத்ம விசாரம்!

தனக்கு இறைவன் அளித்துள்ள எட்டுத் திக்குகளிலும் ஒரே சமயத்தில் நோக்கும் அஷ்டாம்ருத நேத்ர யோக சக்திகள் நிறைந்த “எண்கண்களைக்” கொண்டு ஆத்ம விசாரத்தில் கனிந்தார், இதனாலும் “எண்கண்” என இத்திருத்தலம் பெயர் பெறுவதாயிற்று!

பல்வகை யோக சக்திகளில் வல்லவரான கருடழ்வார் அமிர்தக் கலசத்தைத் தாங்கி வரும் போது, இவ்வாறு அமிர்தக் கலசமே ஆடி, அமிர்தத் துளிகள் பல தலங்களிலும் சிந்திடக் காரணமென்ன? ஆம்! ஸ்ரீமன்நாராயண மூர்த்திதாம் ஆங்காங்கே தம்முடைய திருப்பாதங்களைக் கருடாழ்வாரின் தோளில் அழுத்தி, அமிர்தத் துளிகள் பிரபஞ்சமெங்கும் ஆங்காங்கே சிதறிப் பலகோடி லோகங்களுக்கும் அமிர்த சக்திகள் சென்றடைய அருள்வழி கூட்டினார். இதனால் அமிர்த சக்திகள் பல ஆலயத் தீர்த்தங்களிலும், புண்ணிய பூமிகளிலும், நதிகளிலும் சேருமாறு பெருமாள் ஆக்கியது உலக ஜீவன்களாகிய நம் நன்மைக்காகத் தானே!

‘தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் மட்டுமா அம்ருதம்?’ எனப் பல கோடி ஜீவன்கள் ஏங்கிய போது, அமிர்த சிரஞ்சீவித்வ சக்திகளை, பிரபஞ்சத்தின் அனைத்து உயிர்ப் பொருட்களும், ஜடப் பொருட்களும் பெற்றிட அருள் பாலிக்கும் உத்தம நோக்கில் தான், திருமாலப்பர், கருடரின் தோளிலே ஆங்காங்கே அழுத்தி, அமிர்தக் கலசத்தை ஆட்டி, அமிர்தம் சிதறும்படி செய்திட்டார்!

இதையன்றியும் எத்தனையோ அவதாரக் குண லீலைகளும் இதன் பின்னணியில் உண்டு! தக்க சற்குருவை நாடி அறிவீர்! ஸ்ரீமஹாவிஷ்ணு, மோகினி அவதாரத்தின் போது, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அமுதப் பங்கீடு செய்த பின்னர், அமிர்தப் பிரசாதம், பிரபஞ்சமெங்கும் பல அபூர்வமான தலங்களிலே நிரவி, இன்றளவும் அமிர்தக் கலசத்தில் இருந்து அமிர்த யோக நேரத்தில் சுரந்து அருள்பாலித்திடக் காரணமே பெருமாளின் எண்கண் தல இறைலீலையே!

இங்கெலாம் அமிர்தம் காண்பீரே!

வைதீஸ்வரன் கோயிலில் அம்பாள் கொண்டுள்ள தைலக் கலயம், வேதாரண்யத்தில் முருகப் பெருமான் தாங்குகின்ற அமுதக் கலசம், கேரளாவிலே நெல்லுவாய்புரத்தில் ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தி ஏந்தும் மருத்துவக் கலசம், தக்கோலம் ஸ்ரீகங்காதரேஸ்வரர் ஆலய நந்திவாய் (தற்போது நந்தி வாயில் நீர்ச் சுரப்பு நின்று போய் இங்கு சூக்கும கங்காமிர்த நீரோட்டமே நிலவுகிறது) இவ்வாறாக, பல தலங்களில், அமுதக் கலயத் துளிகள், எண்கல(ய)ங்களில் இருந்து குறித்த அமிர்த யோக நேரங்களில் தோன்றிச் சுரந்து, பூமியின் நீரோட்டத்தில் சேர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

எண்கண்ணில் பரவசம் வ(ழி)ந்தால்..!

ஒவ்வொரு முறையும் தன்னுடைய தோளில் திருமாலின் திருவடிகள் படும்போது ஒரு பரவசமான இறை நிலை ஏற்படுவதைக் கண்டு பரமானந்தம் கொண்ட கருடாழ்வார் இதன் காரணத்தை முதலில் அறியாததினால் ஒன்றுமே அறியாத தனக்கு இத்தகைய அரிய பரவசப் பரமானந்த நிலை கிட்டுவது ஏனென்று எண்ணி ஆச்சரியம் அடைந்தார்! எனினும் குறித்த நேரத்தில் அமுதத்தை அளித்து அன்னையை அடிமைத் தளையிலிருந்து மீட்டிட்ட பின்னர் கருடாழ்வார் அமிர்தம் கிட்டியமைக்காக இதற்கு நன்றிப் பிரார்த்தனையாக திருமாலை நோக்கி அருந்தவம் புரிந்து, “இப்பரவச நிலை அமிர்தம் போல் என்றும் நிலைத்திட” வேண்டிப் பிரார்த்தித்தார்.

கருடனின் நன்றிப் பிரார்த்தனைக்குச் செவிசாய்த்துத் திருமாலே  எழுந்தருளி, “அமிர்த சேவையில் உனக்குப் பரவசமூட்டிய யாம், அமிர்தத் துளிகள் உலகெங்கும் நிரவி அதனுடைய அற்புத சக்திகள் அனைத்து ஜீவன்களுக்கும் அடைய வேண்டும் என்ற உத்தம எண்ணத்தில் தான் இவ்வாறு செய்தோம்! இதற்கு நீ (அமிர்தப்) பாத்திரமானாய்! உனக்கென்ன வேண்டும்? பரிசாக எதை வேண்டுகின்றாய்?” என்று கேட்டிட, கருட மூர்த்தியும், “சுவாமி! தங்களுடைய திருப்பாதங்கள் ஒரு சில விநாடிகளே அடியேன் மேல் பட்டாலும் பெறுதற்கரிய பரமானந்த நிலையைப் பெற்று விட்டேன்! எனவே எப்போதும் இப்பரமானந்த நிலையிலேயே துய்த்திடத் தங்கள் திருமேனியை அடியேனின் திருத்தோளில் சுமக்கின்ற பாக்கியத்தை தருமாறு வேண்டுகின்றேன்!” என்று வேண்டிட்டார்.

வேயுறு தோளேறிய…

ஸ்ரீமகாவிஷ்ணு, கருடாழ்வாரின் தவங்கனிந்த நிலையில் மீண்டும் தோன்றி, அவருடைய திருத்தோளிலேயே அமிர்த யோகத்தில் அமிர்தமயமாய் அமர்ந்து, எப்போதும் சாசுவதமான, பெறுதற்கரிய பரமானந்த நிலையை கருட மூர்த்திக்கு அளித்திட்டார்.

பிரபஞ்ச ஜீவன்கள் யாவுமே அமிர்த சக்திகளைப் பெற இயலாது தவித்த போது, பகவான் தன் திருத்தோளில் அமர்ந்து அளித்த யோகப் பரமானந்த திவலைகளின் பல அம்சங்களை அமிர்த சக்திகளாக மாற்றி, எவரெல்லாம் கருடன் திருதோளேறிய ஸ்ரீஆதிநாராயணப் பெருமாளின் தரிசனத்தை எண்கண்ணில் பெறுகின்றார்களோ அவர்களுக்கெல்லாம் அமிர்த சக்திகள் நிறைந்த நல்வரங்களாக அளித்திடுமாறும் கருடாழ்வார் திருமாலை வேண்டிப் பெற்றார்.

இந்த அனுபூதிகள் யாவும் எண்கண் தலத்தில் நிகழ்ந்த காலமே அந்தந்த யுகத்தின், சுபானு ஆண்டின் விஷ்ணுபதிப் புண்ய காலமாகும்! அதாவது பண்டைய யுக சுபானு ஆண்டின் விஷ்ணுபதிப் புண்யகாலத் திருநாளில்தாம் திருமாலப்பர், ஸ்ரீஆதிநாராயணராய் கருட மூர்த்தியின் தோளிலே அமர்ந்து தரிசனம் தந்திட்டார்.

இவ்வாறு விஷ்ணுபதி நாளில், ஸ்ரீமகாவிஷ்ணு, ஸ்ரீஆதிநாராயணப் பெருமாளாக கருட பகவானின் திருத்தோளில் அமர்ந்து அமிர்த சக்திகளை நல்வரங்களாக அருளும் அமிர்த யோகத் திருத்தலமே எண்கண் ஸ்ரீஆதிநாராயணப் பெருமாள் ஆலயமாம். அமிர்த யோக நேரம் பிறந்த தலமும் இதுவே!

ஒரு முறை வேட்டையாட வந்த மாமன்னனன், மிருகம் போல் முரட்டுத்தனமாய் விரைவாக ஓடி ஆடி, பெருங்குரல் எழுப்பியமையால் தவம் கலையப் பெற்ற பிருகு முனிவர், தம் மாதவம் கலையக் காரணமாக இருந்த மன்னனுக்கு சாபம் அளித்திட, இதனால் மன்னன் சிங்க முகம் பெற்று அலைந்திட்ட போது, பிருகு முனிவரே சாப விமோசனத்திற்கான நல்வழிகளையும் தந்திட்டார்.

மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தோரின் ஆயுட்கால வழிபாட்டுத் தலமே எண்கண்!

பிருகு முனிவர் அளித்த விமோசனம் யாதோ? மிருகசீரிஷ நட்சத்திர சக்திகள் நிறைந்த ஓர் அருட்தலத்தில், கருடபகவானே தன்னுடைய தோளில் இறைவனைச் சுமந்து காட்சி அளித்திட, மயில் மீது மால்மருகனாம் முருகனும் காட்சி தரும் அருந்தலத்தில், மன்னன் இறைவனுக்கு சிம்ம வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனம், மேஷ வாகனம் போன்ற எட்டுவிதமான வாகனங்களை அமைத்துப் பெருவிழா நடத்திட வேண்டும் என்பதே மாமுனி அளித்த நல்வழியாம்!

இவ்வாறாக மாமன்னனுக்குப் பரிகாரம் கிட்டிய நாளும் இக்கலியுகத்தின் ஒரு விஷ்ணுபதிப் புண்ய காலத்தில்தாம்! மன்னனும் பலவிதமான அரிய திருப்பணிகளையும் விஷ்ணுபதிப் புண்ய கால பூஜைகளையும் இத்தலத்தில் நிகழ்த்தி, சிங்கமுகம் நீங்கப் பெற்று மகிழ்ந்து, மக்களுக்கு பக்தியைப் பெருக்கினான். எனவே ஒரு காலத்தில் சுவாமிக்கு 108 வாகனங்களுடன் அரும்பெரும் உற்சவாதிகள் நிகழ்ந்த தலமிது! அற்புதமான சிற்பிகள், ஸ்தபதிகள் வாழ்ந்த புண்ணிய பூமி!

மிருகண்டு மகரிஷி தினமும் பெருமாளைப் பூஜிக்கும் இத்தலமே மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தோர் தம் ஆயுட்காலத்தில் அடிக்கடி வழிபட வேண்டிய தலமாகச் சித்தர்கள் அருள்கின்றனர்!

வாகன ப்ராப்தித் தலமே எண்கண்!

பொதுவாக வாகன வசதிகளுக்காக ஏங்குவோரும், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களை வாங்க விரும்புவோரும், வாகனப் போக்குவரத்து துறை சம்பந்தமான பொருட்களில் வியாபாரம் செய்வோரும் இங்கு எண்கண் பெருமாள் தலத்தில் தங்கள் வாகனங்களைக் கொண்டு வந்து பூஜித்து நல்லருள் பெற்றிட வேண்டும். வாகன விருத்திக்கும், புது வாகன பூஜைக்கும் உற்ற தலம்!

எந்தவிதமான வாகனத்தை வைத்திருப்போரும் ஒரு முறையேனும் இங்கு வந்து பெருமாளுக்கும், கருடருக்கும் சாமந்தித் திண்டு மாலை சார்த்தி, பிரசாத மாலையை வாகனத்திற்கும் சார்த்தி அருள் பெறுதல் சிறப்பானது!

இறைவனுக்கு வாகனமாக அமைகின்றவர்கள் மகரிஷிகளும், யோகிகளும், சித்தர்களும் ஆவர். இத்தலத்தில் கடுந்தவம் புரிகின்றவர்களே இறைவனுக்கு வாகனமாகின்ற நல்பாக்கியத்தைப் பெறுகின்றார்கள்.!

ஆணவ வினைகளைக் களையும் எண்கண்!

ஒருமுறை, கருட மூர்த்தி, தாமே எப்போதும் நாராயணப் பெருமாலைச் சுமக்கின்றோம் என்று சிறிதே பெருமை கொண்டபோது, இதையறிந்த பெருமாளும் பல யுகங்களுக்கு கருட மூர்த்தியை வாகனமாகக் கொள்ளாது தாமே எங்கும் நடந்து செல்லலானார். இதுவும் இறைலீலை தானே!

நடந்து, நடந்து இறைவனின் திருப்பாதங்கள் நோவதைக் கண்டு வேதனையுற்ற கருடர், தம்மை மன்னிக்குமாறு வேண்டி, தன்னை அண்டிய சிறு பெருமையினால், பெருமாளின் திருப்பாதங்கள் நடந்து தோய்ந்ததற்குப் பிராயச்சித்தமாகத் திருமாலைத் தம் தோளில் எப்போதும் சுமக்கும் பாக்கியத்தை வேண்டிப் பெற்றார்.

எனவே பதவி, செல்வம், உடல் பலம், காரணமாக, அகங்கார ஆணவம் கொண்டு, பிறருக்குத் தீங்கிழைத்தோர் பிராயச்சித்தம் பெற வேண்டிய தலமாக கலியுகத்திற்கு எண்கண் தலத்தைக் கருடாழ்வார் கோடிட்டுக் காட்டியுள்ளார். மேதாவித்தனம், கல்விச் செருக்கு, பணபலம், அகங்காரம், காழ்ப்புணர்ச்சி, கௌரவம் காரணமாக, தம் கீழ் பணிபுரிகின்ற பலரையும் இன்னல்களுக்கு ஆளாக்கியோர் தக்க பிராயச்சித்தம் பெற வேண்டிய தலமும் இதுவேயாம். இவர்கள் இங்கு சனிக்கிழமை தோறும் சுவாமிக்கு குங்குமப்பூ, எள்ளுக்காப்பு இட்டு வழிபடவேண்டும்.

வாகனத் துறையினருக்கு அருளும் எண்கண்!

பெருவகை வாகனங்கள், லாரிகள், பஸ்கள், டெம்போக்கள் வைத்திருப்போர், டூரிஸ்ட் கார் பிஸினஸ் போன்றவற்றில் இருப்போர் இங்கு அடிக்கடி வந்து செவ்வாய், சனிக்கிழமைகளிலும், ஆயில்ய நட்சத்திர நாளிலும் அமிர்த யோக நேரத்தில் எண்கண் பெருமாளுக்கு சந்தனக் காப்பு, கருடருக்குத் தைலக் காப்பிட்டு, வழிபட்டு வருதல் வேண்டு. RTOs, Vehicle Inspectors, Traffic constables போன்ற போக்குவரத்துத் துறையினரும், இத்துறைகளில் பணிபுரிவோரும் இங்கு செவ்வாய் தோறும் வழிபட்டு வருதல் சிறப்புடையதாகும். இதனால் தம் துறையில் நேர்மையுடன் வாழ்ந்து சிறப்படைய உதவுவதோடு வீண் பழிகளுக்கு ஆளாகாதும் காக்கப்படுவர்.

பல ஆண்டுகளாக ஜாதக ரீதியான கோள்களின் அமைப்புகளால், கர்ம வினைகளின் அழுத்தங்களால் திருமண பாக்யம் கை கூடாது அவதியுறுவோர் இங்கு, புதன் கிழமை கருட மூர்த்திக்குக் குங்குமக் காப்பும், பெருமாளுக்கு சந்தனப் புனுகுக் காப்பும் சார்த்தி வழிபட்டு வந்தால் எத்தகைய திருமணத் தடங்கல்களுக்கும் நல்ல தீர்வுகள் கிட்டும்.

யோகப் புலம் தரும் எண்கண்ணார் பெருமாளப்பர்!

பலவிதமான யோக, தியான பூஜா தபோ முறைகளால்தான் இங்கு கருட பகவானுக்கு பெருமாளைத் தாங்குகின்ற அற்புதமான பாக்கியம் கிட்டியது. எனவே எண்கண் ஸ்ரீஆதி நாராயணப் பெருமாள் யோக, ஆசன, பிராணாயாம சக்திகளை அருளும் அற்புத மூர்த்தி ஆவார். இங்கு மயூராசனம் இட்டு வலம் வருதலால் விளையாட்டுத் துறையில் புகழ் பெற்றிடலாம்.

ஸ்ரீராமரின் ரவிகுல வழிபாட்டு மூர்த்தியான ஸ்ரீரெங்கநாதப் பெருமாளும், குலவம்ச தெய்வமான ஸ்ரீசூரிய நாராயண மூர்த்தியும் தம்முடைய அவதார அம்சங்களை ஐக்கியம் அடையச் செய்து ஒரு விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் ஸ்ரீமகாவிஷ்ணுவின் திருப்பாதங்களில் அர்ப்பணித்திட அத்திருவடி சக்திகளுடன் ஸ்ரீஆதிநாராயணப் பெருமாளாக ஸ்ரீமன்நாராயண மூர்த்தி பூலோகத்தில் உலா வந்தபோதுதான் இங்கு கருட பகவானின் திருத்தோளிலே அமர்ந்து காட்சி தந்திட்டார்.

முத்திருமால் மூர்த்திகள் எண்கண்ணில் முத்தாய் இணைந்தனரே!

ஸ்ரீசூரிய நாராயணப் பெருமாள், ஸ்ரீவேதநாராயணப் பெருமாள், ஸ்ரீரங்கநாதப் கருடாழ்வாரையே வாகனமாகக் கொண்டு சிருஷ்டி காலத்தில், காத்தல் தொழிலை நடத்துதலால் மிகவும் களைப்புற்ற கருட மூர்த்தியைக் கண்டு, மும்மூர்த்திகளுமே (ஸ்ரீசூரிய நாராயணப் பெருமாள், ஸ்ரீவேதநாராயணப் பெருமாள், ஸ்ரீரங்கநாதப் பெருமாள்) ஒன்றாய் ஸ்ரீஆதிநாராயணப் பெருமாளாக ஐக்கிய ஸ்வரூபம் கொண்டிட, ஸ்ரீஆதி நாராயணப் பெருமாளாக ஐக்கிய ஸ்வரூபம் கொண்டிட, ஸ்ரீஆதி நாராயணப் பெருமாளைத் தாங்கி தன்னுடைய களைப்பிற்கும் ஆயாசத்திற்கும் குணமாக கருடாழ்வார் பரமானந்த அமிர்தத்தைத் தேடிக் கொண்ட திருத்தலமாகவும் எண்கண் திருத்தலமாகவும் எண்கண் திருத்தலம் மிளிர்கின்றது.

திருமுருகுக்குத் திருமாலின் திருவருள் திரண்ட எண்கண்!

முருகப்பெருமான், பெருமாளைப் பூஜித்து, தெய்வயானையை மணந்து கொள்வதற்கு விசேஷமான அனுகிரகம் பெற்ற தலம் இதுவே! இத்துடன் ஸ்ரீஆதிநாராயணப் பெருமாள் தம் திருக்கரங்களால் மயில் வாகனத்தை ஸ்பரிசித்து முருகப் பெருமானுக்குப் பரிசாக அளித்திட்ட தலமும் இதுவேயாம். எட்டுத் திக்குகளிலிருந்தும் மயிலுக்குத் திருமாலின் ஸ்பரிசம் கிட்டியதால் எண்கண் தலமாக இது பிரசித்திப் பெற்றது.

ஸ்ரீகூர்ம மூர்த்தியாய் ஆதிமூலப் பெருமாள் பாற்கடலின் அடியில் பல யுகங்கள் இருந்து மத்தைத் தாங்கி நின்றமையால், அவருடைய திருப்பாதங்கள் தினவெடுத்தன! இவையாவும் இறைவன் நடத்தித் தரும் அற்புத லீலைகள் அன்றோ!

கூர்ம (ஆமை) வடிவுடையாராம் திருமாலுக்கு மேலும் பாதவலி ஏற்படலாகாது என்பதற்காகத் திருமாலின் திருவடிகளைத் தம் தோளில் தாங்குவதற்காகக் கருடாழ்வார் பணிவுடன் வேண்டினார்.

“காலம் கனிய, தோளில் குடி வருவோம்!” என உரைத்த கூர்ம மூர்த்தி இதனை நிறைவேற்றிய திருத்தலமாகவும் எண்கண் ஸ்ரீஆதிநாராயணப் பெருமாள் தலம் விளங்குகின்றது..!

நல்வேலை காண எண்கண் திருமாலே துணை!

படித்தும் நல்ல வேலை கிடைக்காதவர்கள், இந்த விஷ்ணுபதி புண்யகாலத்தில் மட்டுமல்லாது, புதன் மற்றும் சனிக் கிழமைகளிலும் இங்கு பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்து, முந்திரி, பாதாம், வேர்க்கடலை போன்ற பருப்பு வகைகள் கூடிய இனிப்பு உணவு வகைகள் மற்றும் உணவுப் பண்டங்களைத் தானமாக அளித்து வந்தால் இறையருளால் நல்ல வேலை வாய்ப்புகள் கிட்டும். நல்ல சம்பளம் கிடைக்க வேண்டும் என்பதைவிட நல்ல இடத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்று எண்ணுவது தான் சிறப்புடையதாகும்.

பாற்கடலில் என்றும் அமிர்தம் சுரந்த வண்ணம் உள்ளது! அமிர்த யோக நேரத்தில் பாற்கடலில் இருந்து அமுத சக்திகள் சுரக்கின்ற புண்ணியத் தலமாகவும் எண்கண் விளங்குவதால், இங்கு தேன் கலந்த சர்க்கரைப் பொங்கல், அதிரசம், பால் பாயசம் போன்ற இனிப்பு வகைகளைப் படைத்து தானமாக அளித்து வருதலால் குடும்பத்திலுள்ள மனக் கசப்புகளும், மனக் குழப்பங்களும் நன்முறையில் தீர்வு பெறும்.!

14 ஆண்டுகள் வனவாசம் இருந்து நடந்து களைத்திட்ட ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திருப்பாதங்களுக்கு பஞ்சத் தைலக் காப்பிட்டு சேவை செய்த ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி, சில காலமேனும் தம் திருத்தோளில் ஸ்ரீராமரைச் சுமந்து திருப்பாதங்களுக்கு நல்ல சாந்த அம்சங்கள் தந்திட வேண்டும் என்று ஸ்ரீஆதிநாராயணப் பெருமாளை வேண்டிய தலமும் இதுவே!

விஷ்ணுபதி பூஜைகள்!

எண்கண் புனித பூமியில் கருடாழ்வாரின் திருத்தோளில் ஸ்ரீஆதிநாராயணப் பெருமாள் அமர்ந்துள்ள அற்புதக் காட்சி பொலிய இங்கு விஷ்ணுபதி பூஜையைக் கொண்டாடுவது நம் வாழ்வில் பெறுதற்கரிய பாக்கியமாம்.! விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் இங்கு,

  1. கருடருக்கு வெண்ணெயும், பெருமாளுக்கு (அரைத்த) சந்தனமும் காப்பாகச் சார்த்தியும் வழிபடுதல் கால், தோல் சம்பந்தமான நோய்களுக்கு நிவர்த்தி தரும்.
  2. தாமரை மலர்களால் கருடன், பெருமாளை அலங்கரித்து வழிபடுதலால் சந்ததி நன்முறையில் தழைக்கும்.
  3. பானகம், சர்க்கரைப் பொங்கல், தேன் கலந்த பலாச் சுளை, பால் பாயாசம் படைத்தும், ஏழைகளுக்கு தானமளித்தும் வழிபட, ஒன்று மாற்றி ஒன்றாக, இடி மேல் இடியாகத் துன்பங்களால் வாடுவோர் நன்னிலை பெறுவர்.
  4. கைகளில் தாமரை இலைகளின் மேல் அகல் விளக்கு ஜோதிகளைத் தாங்கியவாறு நடைப் பிரதட்சிணம் வருதலால் அருகில் இருந்து கொண்டு பகைமையாய்ச் செயல்படுவோரிடம் இருந்து விடுதலை கிட்டும்.
  5. தாமரை இலை அல்லது மந்தாரை இலையில் தர்ப்பைச் சட்டம் வைத்து, தேன் கலந்த தீர்த்தத்தால் தர்ப்பணம் அளித்தலால் அடிக்கடி மரண சம்பவங்களால், கடும் நோய்களால் வாடும் குடும்பங்கள் ம்ருத்யு தோஷங்கள் நீங்கி சாந்தம் பெறுவர்.
  6. நிலக்கடலை, மாசிக்காய், வெட்டிவேர், நுங்கு, முழுத் தேங்காய்க் கொப்பறை போன்றவற்றை முக்கியமான ஆஹுதிகளாகக் கொண்டு ஹோம வழிபாடு செய்தலால் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும்.
  7. கருடமூர்த்தி தோளில் பெருமாளைச் சுமந்திருப்பது போல, இங்கு எண்கண்ணில், தம் குழந்தைகளைத் தோளில் சுமந்து அடிப்பிரதட்சிணம் வருதலால் குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் பிணிகள் தீரும்.
  8. ஐந்து கரும்புகளை ஒன்றாகக் கட்டி, நடுவில் வஸ்திரங்கள், பழங்கள், காய்கறிகள், உணவுப் பண்டங்களைத் துணிக்குள் வைத்து, கரும்புக் காவடியாக அமைத்து இருபுறமும் கணவன், மனைவி தம்பதி சகிதம் சுமந்து இங்கு பெருமாளை வலம் வந்து ஏழைகளுக்குக் கரும்புக் காவடியில் உள்ள அனைத்துப் பொருட்களையும் தானமாக அளித்திட, குழந்தைப் பேற்றுக்கான தந்தை வழிமூல “ஜெயக்ஷீராஸ்” பித்ருக்களின் ஆசி கிட்டும்.

இங்கு விஷ்ணுபதிப் புண்ய காலத்தில், அமாவாசைத் திதிகளில் மூதாதையர்களுக்குத்  தாமரை இலை அல்லது புரசை இலை மேல் தர்பைச் சட்டம் அமைத்து, தேன், எள், குங்குமப்பூ கலந்த அமிர்தத் தீர்த்தம் கொண்டு தர்ப்பணம் அளிப்பதால்!

விபத்து, மாரடைப்பு மற்றும் கடுமையான நோய்களால் இறந்த மூதாதையர்கள் நற்கதி அடைவதற்கான வழிமுறைகள் கிட்டும்.

நம் மூதாதையர்கள் அனைவருமே பித்ருக்களாக ஆவது கிடையாது. அவரவருடைய கர்மச் சேர்க்கைகளின்படி பலரும் பலவிதமான பிறவிகளை எடுத்து உலகின் பல இடங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடும் அல்லது பிறவிகள் எதுவுமே அமையாது திரிசங்கு நிலையில் இருத்தலும் கூடும் எனவே இவ்வாறு இல்லாது, மூதாதையர்கள் அவரவர் காம வினைகளுக்கேற்ப நல்ல பிறவிகள் பெறவும், உத்தமத் தெய்வீக மற்றும் உன்னதப் பித்ரு நிலைகளை அடைவதற்கும் எண்கண் தல விஷ்ணுபதிப் புண்ய காலத் தர்ப்பண பூஜா பலன்கள் பெரிதும் துணை புரிகின்றன.!

இங்கு பெருமான் தனது திருவடிகளை கருட மூர்த்தியின் மேல் வைத்து அமர்ந்து கொண்டிருத்தலால் (திருமாலின் திருவடிப்) பாத சக்திகள் நிறைந்த தலமாகவும் இது விளங்குகின்றது. பாத நோய்களைத் தீர்க்கும் பவித்ரமான தலம்.!

பாதயோக சக்திகள் நிறைந்த எண்கண் ஸ்ரீஆத்நாராயணப் பெருமாள் ஆலயத்தில் நேர்த்தி வைத்து, அமிர்த யோக நேரத்தில் 108 நடைப் பிரதட்சிணம் அல்லது 36 அடிப் பிரதட்சிணம் செய்து, ஏழைகளுக்கு மெட்டிகள், சலங்கைகள், சதங்கைகள், திருவெண்டயம், காலணிகள் போன்றவற்றை அவரவர் வசதிக்கு ஏற்பத் தானமாக அளித்து வருவதால் வாழ்க்கையில் எத்தகைய நிரந்தரப் பணி, சொத்து இல்லாது வீடு, நல்ல வேலை வாய்ப்பு இல்லாது அவதியுறுகின்றவர்கள், நன்னிலை பெறுவார்கள்.!

தக்கோலம்

தக்கோலம் ஸ்ரீகங்காதரேஸ்வரர்

சந்ததி தழைக்க உதவும் அற்புதப் பித்ரு தலம்! தக்கோலம் ஸ்ரீமோகனவல்லி சமேத ஸ்ரீகங்காதரேஸ்வரர் கோயில்!

மகத்தான கல்லாற்றங்கரை அமாவாசைத் தர்ப்பணத் தலமே தக்கோலமாம்! காசி நீராடல் பலன்களைத் தரும் தக்கோலம் ஸ்ரீகங்காதரேஸ்வரர் பூஜை!

தக்கோலம் திருத்தலத்தின் பெரிய சிவாலயமாகிய ஸ்ரீஜலநாதீஸ்வரர் ஆலயத்திற்குப் பின்புறம், பலரும் அறியா வகையில், மிகவும் பழமையான ஸ்ரீமோகனவல்லி சமேத ஸ்ரீகங்காதரேஸ்வரர் ஆலயம் உள்ளது.

கங்காதர சக்திகள் பரிபூரணிக்கின்ற மிகவும் சக்தி வாய்ந்த கங்கோத்பத்தித் தலமான தக்கோலம் ஸ்ரீகங்காதரேஸ்வரர் ஆலயத்தில், பல்லாண்டுகளுக்கு முன் எப்போதும் நீர் சுரந்து நந்தி முகவாய் வழியாக வழிந்து, ஸ்ரீகங்காதரேஸ்வரரின் சிறிய கருவறை மண்டபத்தைச் சூழ்ந்து, மீண்டும் மற்றோரு நந்திமுக வாயிலாக நீர் கல்லாற்றை அடையும் அற்புதக் காட்சி நிலவியது. நாள் முழுவதும் எப்போதும் நந்தி முகவாய் வாயிலாக நீர் சொரிந்த அற்புதத் தலத்தில் இப்போது நீர் சுரப்பு நின்று விட்டது.

கலியுகச் சமுதாயத்தில் தீய கர்ம வினைப் பெருக்கம், மகான்கள் மற்றும் சற்குருமார்களை மதியாமை, பக்தியின்மை, கோயில் நிலங்களை, கோயில் சொத்துக்களை அபகரித்தல், கோயில் குத்தகைத் தொகையில் பாக்கி வைத்தல், கோயில் இடங்களுக்கு வாடகை தராது அல்லது குறைந்த வாடகை தந்து, கோயிலை ஏமாற்றுதல், தீயொழுக்கச் செயல்கள் மற்றும் தீய சக்திகளின் பெருக்கம் காரணமாக திருக்கழுக்குன்றத்தில் வேதக்கழுகுகளின் வருகை, கரூர் அருகே தேவர்மலை ஸ்ரீநரசிம்மர் ஆலய நந்தித் தீர்த்தப் பெருக்கு போன்று பல தலங்களில் நிகழ்ந்து வந்த பல இறையற்புதகங்கள் மறையலாயின.!

தற்போது தக்கோலத்தில் நந்திமுக வாயில் நீர் பொழிவது நின்று விட்டாலும் ஆன்மீக ரீதியாக, சூக்குமமாக, கங்கைப் பிரவாகம் பூமியடியில் என்றும் எப்போதும் நிகழும் தலமிதுவே என்பதை உணர்ந்திடுக! மனித சமுதாயத்தின் பக்தியின்மை காரணமாக இவ்வாறு மறைந்துள்ள இறைவளத்தை, பக்திப் பூர்வமாகவே நடைமுறைக்குக் கொணர இயலும். இதற்குத் துணை புரிவதே “கங்கோத்பத்தி” போன்ற அற்புதப் புராதன பூஜை முறைகளாம்.

கங்கா சக்தித் துறைகள் இணைவதாக!

பிரபஞ்சத்தில் கங்கா ஜலத்வீப சக்திகள் நிறைந்த தலங்களுள் ஒன்றான தக்கோலம் ஸ்ரீகங்காதரேஸ்வரர் ஆலய மகத்துவத்தைப் பலரும் அறியாமையால், இந்த ஆலயமே காலப்போக்கில் தற்போது ஜீரணமாகி (பின்னமாகி) உள்ளது. பிரபஞ்சத்தில் முதன் முதலாக கங்கோத்பத்தி ஏற்பட்ட மிகவும் தொன்மையான ஆலங்களுள் இதுவும் ஒன்றாகும். இன்றைக்கும் இதன் பூமியடி கங்காதீய நீரோட்டத்தில் கங்கா சக்திகள் துரிதாதிக வடிவில் நிறைந்துள்ளன.

கங்கை காவிரி இணைப்புப் பற்றிப் பல செய்திகள் தற்போது வலம் வருகின்றன. எதிர்கால பாரத பூமியில், எங்கெல்லாம் பூமியடி, வான்வெளி ஆகாசகங்கா சக்திகள் நிறைந்திருக்கின்றனவோ அவ்விடத்தில் எல்லாம் கங்கா உபநதி நீரோட்டங்கள், காப்புகள், ஊற்றுகள் தாமாகவே உற்பவித்து, பாரதத்தில் உள்ள அனைத்து கங்கோத்பத்தித் தலங்களும் இறையருளால், சித்தர்களின், மகான்களின், ஆசியுடன், இயற்கையாகவே இணையும் அற்புதம் நிகழ உள்ளது.

வருடந்தோறும் கங்கோத்பத்தி பூஜையை, கங்கா சக்திகள் நிறைந்த ஆலயங்களில் முறையாக நடத்தி வருதலானது இந்த இறையற்புத நற்காரியத்திற்குப் பெருந்துணை புரியும் என்பதையும் நன்கு அறிந்து கொள்க!

நீர்வளம் பெருக உதவும் தக்கோலம் ஸ்ரீகங்காதரேஸ்வரர் ஆலய பூஜை!

இவ்விதமாக, பூரண கங்கா சக்தி, கங்காதர சக்திகள் நிலவும் அற்புதத் தலங்களுள் ஒன்றே தக்கோலம் கல்லாற்றங்கரையில் உள்ள ஸ்ரீகங்காதரேஸ்வரர் ஆலயமாகும்.!

ஜானவி மஹரிஷியின் காதில் தோன்றியவளே கங்கா தேவியாதலின், ஜானவி மஹரிஷி தினந்தோறும் சூக்கும, தூல வடிவில் வழிபடும் கங்காதர சக்தித் தலங்களுள் ஒன்றாகவும் தக்கோலம் ஸ்ரீகங்காதரேஸ்வரர் ஆலயம் பொலிகின்றது. தக்கோலம் பெரிய சிவாலய மதிலில் பரவெளியோக நிலையில் காணப் பெறும் உதீத மகரிஷியின் ஆத்மார்த்த சிஷ்யரே ஸ்ரீஜானவி மகரிஷி ஆதலால் மகரிஷிகளின் சூக்கும, தூலப் புனித நடமாட்டம் நிறைந்த புண்ணிய பூமியாகவும் தக்கோலம் விளங்குகின்றது என்பதும் புலனாகும்!

ஜலத்வீப மூர்த்திகளின் வளாகமே தக்கோலப் புண்ணியப் பூமி!

இப்பூவுலகிற்கு நீர் வளத்தை அருள்வல்ல அற்புத ஜலதேவ, ஜலத்வீப மூர்த்திகளும் தினந்தோறும் வழிபடும் புனித பூமியே தக்கோலம் ஆதலின், இங்கு பெரிய சிவாலயத்தில் (பாடல் பெற்ற ஸ்தலம்) ஸ்ரீஜலநாதீஸ்வரராக, சிவபெருமான் அருள்கின்றார். பூவுலகின் ஜலவிதியை நாதப் பூர்வமாக நிர்ணயம் செய்கின்ற ஸ்ரீஜலநாதீஸ்வர இறைமூர்த்தித் தலமெனில் தக்கோலத்தின் வளப்பமான பூமியடி நீரோட்டச் சக்திகளை என்னென்று உரைப்பது?

இப்பூவுலகம் முழுமைக்குமான கங்காதர சக்திகள் நிறைந்த நீர் வளத்தை அளிக்க வல்ல ஜலத்வீப சக்தியைக் கொண்ட தக்கோலம் கல்லாற்றங்கரை ஸ்ரீகங்காதரேஸ்வரர் ஆலயமானது, நன்முறைத் திருப்பணிகளால் சீரமைக்கப் பெற்று, தினசரி ஆறுகால பூஜைகளை முறையாக நிறைவேற்றிட, ஸ்ரீகங்காதரேஸ்வரரின் பரிபூரண அருளை இப்பூவுலகே பெறலாகும்.

ஆழ்ந்த நம்பிக்கையும், பக்தியும் கூடிய வழிபாடுகள் இங்கு கல்லாற்றில் பல ஆண்டுகளுக்கு முன் வரை காணப் பெற்ற நல்ல ஆற்று நீர்வளத்தை நிச்சயமாகப் பெற்றுத் தரும். மேலும் இதனால் இங்கு நந்திமுக கங்கை தீர்த்தம் மீண்டும் உற்பவிக்கும் இறையற்புதமும் ஏற்படும்.

தக்கோலத்தில் கங்கோத்பத்தி பூஜை நந்தி முக கங்கா தீர்த்தத்தை வரவழைக்கும்!

தக்கோலத்தில் கங்கோத்பத்தி நாளில், ஸ்ரீகங்காதீஸ்வரருக்குச் சந்தனக் காப்பு சார்த்தி, இங்கு 108 புதிய மண் பானைகளில் நன்னீர் கொணர்ந்து மஞ்சள், புனுகு, ஜவ்வாது, வில்வம், துளசி ஆகியவை கலந்து நந்தித் தொட்டியில் நிரப்பி, நந்தி முகத்தை அபிஷேகித்து வழிபட்டிட, இறையருளால் ஜானவி மகரிஷி, கங்காதர மகரிஷி, உதீத மகரிஷி, திரைலிங்கச் சித்தர் போன்ற கங்கா தேவ சக்திகள் நிறைந்த மகான்களின், யோகிகளின் பெருங்கருணையால் நீர்வளம் பெருக நல்வழிகள் பிறக்கும். 108 விதமான திரவியங்களால் இங்கு அபிஷேகம் செய்து பிறகு சந்தனக் காப்பிடுவது மிகவும் விசேஷமானதாகும்.

மகான்கள், சித்தர்கள், யோகியர்கள் இத்தலத்தில் வழிபட்டுப் பெற்றுத் தரும் நல்லாசிகள், நல்வரங்கள்தாம் தக்கோலப் புனித பூமியில் மறைந்துள்ள அதியற்புத நீர் வளத்தை மக்களின் நல்வாழ்விற்காக நிச்சயமாகா மேம்படச் செய்து, பல்லாண்டுகளாக நீர் வற்றி இருக்கும் கல்லாற்றில் நீர் வளம் பெருக்கவும் வல்லதாகும். எனவே நற்பெரியோர்களை மதிக்கும் ஆன்மீகப் பண்பாடு இனியேனும் மனித சமுதாயத்தில் நிலை பெற வேண்டும்.

சந்ததியைக் காக்கும் தக்கோலத்தின் கங்கோத்பத்தி பூஜை

தக்கோலம் போன்ற கங்கோத்பத்தி உள்ள திருத்தலங்கள் பல அரிய, அபூர்வமான தெய்வீக சக்திகளைப் பெற்றுள்ளன..! குறிப்பாக, இளவயது மரணம், மிருத்யு தோஷங்கள், விரோதக் கொலைகள், பகைமை அடிதடிச் சண்டைகள், சந்ததி ஒழுக்கு சாபங்கள் காரணமாகப் பல தலைமுறைகளில் பெருத்த இடைவெளி ஏற்படுதல், துர் மரணங்கள் நிகழ்தல், தத்து எடுத்துச் சந்ததியை வளர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாதல், சந்ததிக் குறைவு, பிள்ளைப் பேறின்மை, பல்லாண்டுகள் கழித்துச் சந்ததி உருவாதல், இயற்கையாகவே அடிக்கடி கரு கலைதல் போன்ற நிலைமைகள் நிலவும் குடும்பங்களில் நற்சந்ததி தழைத்திட சத்சங்கமாகப் பலரும் ஒன்று கூடி தக்கோலம் ஸ்ரீமோகனவல்லி சமேத ஸ்ரீகங்காதரேஸ்வரர் ஆலயத்தில் தொடர்ந்து ஆறு மணி நேரம் லிங்க மூர்த்தியே மனம் குளிர்ந்திடும்படி அபிஷேக, ஆராதனைகளை நடத்தி, சாம்பிராணி தூப தீபமும் இட்டு வழிபட வேண்டும்.

கங்கோத்பத்தி நாளில் 108 குட நீர் அபிஷேகம்

கங்கோத்பத்தி நாளில் குறைந்தது ஆறு மணி நேரம் பூமி நன்கு நனையும்படி பலவிதமான அபிஷேகங்களை மேற்கொண்டு, இங்கு ஆழ்ந்த நம்பிக்கையுடன் வழிபட்டிட, தற்போது அடைபட்டு மறைந்துள்ள கங்கா நந்தித் தீர்த்தம் இங்கு மீண்டும் உயிரோட்டம் பெற்று, நந்திமுகத் தீர்த்தப் பெருக்கு இறையருளால் தொடரலாகும்.. பூமா தேவியும், கங்காதேவியும் மனங் குளிர்ந்தால், கிட்டாத நன்னீரோட்டம் பூவுலகில் ஏதேனும் உண்டா என்ன?

தக்கோலம் ஸ்ரீகங்காதரேஸ்வரர் கோயில் போன்ற கங்காதரத் திருத்தலங்களில் குறைந்தது 108 புது மண் பானைகளில், சமுதாய சத்சங்க பூஜையாக, அடியார்கள் நீர் சுமந்து வந்து, 108 வகை திரவியங்களைக் கொண்டு அபிஷேக ஆராதனைகளைச் செய்து வழிபட்டு, பானைகளில் உணவுத் திரவியங்களை, புது வஸ்திரங்களை, காய்கறிகளை நிரப்பி ஏழைகளுக்குத் தானமளித்தலால் அவர்கள் மனமும் குளிர்ந்து, கங்கை நீரோட்டம் விருத்தியாகி நன்னீர் சுரப்பும் நன்கு விருத்தியாகும்.

பீடுடைய தக்கோலப் பிரம்மோற்சவமே கங்கோத்பத்தித் திருநாள்!

பல நூற்றாண்டுகளுக்கு முன் கங்கோத்பத்தி தினமே மகத்தான பிரம்மோற்சவமாகப் பொலிந்த சிவாலயமான தக்கோலம் ஸ்ரீகங்காதரேஸ்வரர் ஆலயத்தில், மிகவும் பீடுடைய கங்கோத்பத்தி உற்சவத்தை, சத்சங்கப் பணியாக, ஆழ்ந்த நம்பிக்கையுடன் மிகவும் பக்தியுடன், தியாக மனப்பான்மையுடன் மீண்டும் எடுத்து, ஏற்று நடத்துபவர்களுக்கு, பல நூறு ஆண்டுகளின் ஒட்டு மொத்த பூஜாபலன்கள் திரண்டு பல தலைமுறைகளுக்கான மலையளவு திரண்ட புண்யசக்தியை இறையருளால் பெற்றுத் தரும்.

கிணறு, ஏரி, பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள், தங்கள் கிணறுகளில் நன்கு நீர் ஊறிச் சுரக்க, நீர் வளம் பெருக, நல்ல நீருற்று அமைய, இவ்வாலயத்தில் கீழ்நோக்கு நட்சத்திர நாளில் (பரணி, திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது) பலவிதமான அபிஷேகங்களை நிகழ்த்தி இங்கு வழிபட்டு வருதல் வேண்டும்.

நீர் சம்பந்தமான துறைகளில், குறிப்பாக மினரல் வாட்டர் தயாரிப்பில் உள்ளோர், பணிபுரிவோர், இங்கு திங்கள், திருவாதிரை, செவ்வாய், சனிக்கிழமைகளில் வழிபட்டு வருவதுடன் ஸ்ரீகங்காதரேஸ்வரருக்கு (அரைத்த) சந்தனக் காப்பு, நீர்ச் சத்துள்ள மாதுளை, திராட்சைகளைப் பதித்துக் காப்பிட்டு வழிபட்டு வர, தத்தம் துறைகளில் நன்கு முன்னேற்றம் காண்பர்.

கை, கால்கள் வீங்குதல், ரத்த சோகை, மற்றும் தோல் வியாதிகளால் அவதியுறுவோர் தக்கோலம் ஸ்ரீகங்காதரேஸ்வரருக்கு செவ்வாய்க் கிழமை ராகு கால நேரத்தில் மாம்பழக் காப்பு இட்டு வழிபட்டு வர நல்ல நிவாரணம் பெறுவர். இவ்வாலயத்தில் கங்காதராஷ்டகம், மாணிக்க வாசகரின் “பிடித்த பத்து” பாடல்களை ஓதுதல் சிறப்புடையதாகும்..!

தற்போது தக்கோலம் கல்லாற்றில் நீரோட்டம் இல்லையெனினும் பண்டைய காலத்தில் அமாவாசைத் தர்ப்பணத் துறையாக இது பிரசித்தி பெற்றிருந்தது. நந்திமுகத் தீர்த்தத்தில்
எப்போதும் நீர் சுரந்து ஆற்றில் நந்தி கங்கா தீர்த்தம் கலந்தவாறு இருந்தமையால் கல்லாறு, கங்கை சக்திகளுடன் பொலிந்து மகத்தான பித்ரு பூஜைத் தலமாகவும் ஒரு காலத்தில் சிறப்புற்று இருந்தது.

தற்போது நீர் இங்கு சுத்தமாக வற்றி இருந்தாலும், அமாவாசை, கிரகணம், திதி நாட்களில் கையில் நீர் எடுத்துச் சென்று பலருக்கும் தர்ப்பண பூஜைகளை முறையாகச் செய்து வர பித்ருக்கள் மகிழ்ந்து ஆசி அளிப்பர். காசி போன்று தக்கோலமும் கங்கா சக்திகள் நிறைந்த தலமாதலால் அமாவாசை தோறும் பித்ருக்கள் பரமானந்தத்துடன் வழிபடும் மூர்த்தியே ஸ்ரீகங்காதரேஸ்வரர் ஆவார்.

பித்ருக்களுக்கும் முக்தி அளிக்கின்ற மூர்த்தி ஆதலின் தக்கோலம் ஸ்ரீகங்காதரேஸ்வரர் ஆலய ஆற்றுப் படித்துறையில் தர்ப்பணம் அளிப்பதால் எள் நீரால் பூமி குளிர்ந்து நீர் வளம் பெருக ஜலசமுத்திரங்கள் நிறைந்த “கல்பிதப்” பித்ருக்களின் ஆசி கிட்டும். நல்ல வீடு அமையவும் நல்பாக்யம் கிட்டும்.

தக்கோலத்தில் தாரா பாத்திர ஜலபூஜை தரணியில் நற்சந்ததி தழைக்க உதவும்!

தாரா பாத்திரம் எனப்படும் செப்புப் பாத்திரத்தை உறி போல் லிங்கத்தின் மேல் உயரே வைத்து, எப்போதும் நீர்த் திவலை அபிஷேகம் லிங்கத்தின் மேல் பெய்யும்படி அமைப்பதே தாராகங்கா ஜலபூஜைத் திருப்பணியாகும்.

மனஸ்தாபத்தால் பிரிந்துள்ள பெற்றோர் பிள்ளைகள் தாரா பாத்திர ஜலாபிஷேகத் திருப்பணியை தக்கோலம் ஆலயத்தில் அமைத்துத் தந்து, இதற்குத் தேவையான அளவு நீர் எப்போதும் கிட்டும்படி, நீர்த் தொட்டி, ஜலதாரைகளை அமைத்துத் தரும். இறைப்பணிகளை இங்கு நடத்திட பெற்றோர்கள் பிள்ளைகள் இடையே உள்ள மனவேறுபாடுகள் தீர்ந்து பரிபூரண ஒற்றுமை ஏற்படுவதை இறையருளால் கண்கூடாகக் காணலாம். நாட்டிற்கே. உலகிற்கே நன்னீர்வளம் தரவல்ல தக்கோலம் ஸ்ரீமோகனவல்லி சமேத ஸ்ரீகங்காதரேஸ்வரர் ஆலயத்தை நன்கு பராமரிக்க வேண்டியது பக்தர்களின் பெருங்கடமை அன்றோ!

சமுதாயத்தையே புனிதமாக்க வல்ல கங்கை நீர் அபிஷேகம்

மக்களிடையே உண்மையான தெய்வபக்தியும், பிற ஜீவன்களுக்குச் சேவை செய்யும் தியாக மனப்பான்மையும் மறைந்து வருவதால்தான் மனித சமுதாயத்தில் பகைமை, வன்முறை, முறையற்ற காமத் தீயொழுக்கங்கள், குரோதம் போன்ற பல தீய சக்திகள் உண்டாகின்றன. நீர்வளம், மழைவளம், தான்யவளம் போன்றவையும் மாசுபடுகின்றன.

கங்கோத்பத்தி நாளில் கும்பகோணம் மகாமகக் குளக் கரையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் ஒன்பது நதி தேவதா மூர்த்திகளின் சிலா ரூபங்களுக்கு அபிஷேக, ஆராதனைகளை நிகழ்த்துதலும், கங்கோத்பத்திப் பூஜா முறைகளுள் ஒன்றாகி, கங்கா சக்திப் பலாபலன்களை அளிப்பதாகும். இதனால் வங்கிக் கடன்கள், கோர்ட் வழக்குகளில் சிக்கியுள்ள நிலபுல சொத்துகள் நன்முறையில் மீளலாகும்.

கங்கா சக்தி நிறைந்த முக்கியத் தலங்களில் மற்றொன்றே புதுக்கோட்டை அருகே திருக்கோகர்ணத்தில் உள்ள சிவாலயமாகும். இங்கு சிறு குன்றின் மீதுள்ள அதியற்புத நீர்ச் சுனையானது சிவபெருமானின் சிரசினின்று பொழியும் ஆகாச கங்கையுடன் பிணைந்ததாகும். பொதுவாக, குடைவரைக் கோயில்களில் (குடுமியான் மலை, திருக்கோகர்ணம், திருப்பரங்குன்றம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி) உள்ள மூர்த்திகளுக்கு, கங்கோத்பத்தி நாளில் கங்கை நீரால் அபிஷேகம் செய்வதால் பாறைகளில் நீர் வளம் விருத்தியாகி , ஆகாச கங்கா சக்தி பெருகி சமுதாயத்தில் மழைவளம், நீர் வளம் விருத்தியாகும்.

இப்பூஜா பலன்களாக இருக்கின்ற ஒரே பெண், அல்லது ஆண் சந்ததியையும் பிரிந்தோ அல்லது இழந்தோ வாடுபவர்களுக்குத் வாழ்வில் தக்க துணையுடன் பாதுகாப்பும் கிட்டும்.

திருகோகர்ணம்

திருவக்கரை ஸ்ரீசந்திரசேகர லிங்கம் போல, மூல லிங்கத்தில் சிவமுக ரூபம் அமைந்திருக்கும் தலங்களும் கங்கா சக்திகளை உடையவையே! சுக்ல பட்ச (வளர்பிறை) சப்தமித் திதி நாளே இவ்வகைத் தலங்களில் கங்கோத்பத்தி ஏற்படும் நாளாகும். திருவனைக்காவல், திருச்செங்கோடு, கோமல் அருகே கங்காதரபுரம் போன்ற தலங்களிலும் கங்கை, காவிரி போன்ற 21புண்ய நதிகளின் சுரப்பானது, தூலமாகவும், சூக்குமமாகவும், எப்போதும் இருந்து கொண்டிருக்கும்! ஆற்றில் நீர் வளம் இல்லாவிடினும், இத்தலங்களில் சூக்கும ரீதியாக இங்கு கங்கை நீரோட்டம் எப்போதும் இருப்பதோடு, நாம் காணும் வகையில் கங்கை தூலமாக சுரக்கும் கங்கோத்பத்தி போன்ற விசேஷமான நாட்களும் உண்டு.

எந்த அளவிற்குக் கங்கா சக்தித் தலங்களில் முறையான பூஜைகளால் கங்கையைத் தோன்றச் செய்கின்றோமோ அந்த அளவிற்கு சமுதாயத்தில் பெருக்கெடுக்கும் பகைமையை, ஜாதி, இன, வேறுபாடுகளை, குரோதங்களை, வன்முறைகளை நிச்சயமாகக் களைந்து சாந்தத்தை நிலை நிறுத்த முடியும். ஏனெனில் எத்தகைய பாவ வினைகளையும் களையும் சக்தி கங்கைக்கு உண்டு அல்லவா!

ஆன்மப் பூர்வமாக உலகை இணைக்கும் உத்தம பூமியடி புனித நதி நீரோட்டங்கள்!

கங்கை என்றாலே வடஇந்தியாவின் புண்ணிய நதி என்றும், காவிரி என்றால் தென்னிந்தியப் புனித நதி என்று மட்டுமே பலரும் கருதுகின்றனர். உலகின் அனைத்து நாடுகளுக்கும், பிரபஞ்சத்திற்கும் அருள்வளம் தர வல்லவையே புண்ணியப் புனித நதிகளான கங்கையும் காவிரியும், இரண்டுமே சிவபெருமானின் ஆக்ஞையால் பூவுலகிற்கு வந்தமையால் இரண்டுமே உலகப் பொதுமறைப் புனித நதிகளாக விளங்குகின்றன.

மனிதர்களாகிய நாம்தாம் காவிரி, கங்கை, துங்கபத்ரா என்று நதி பேதமும், நதி உரிமையும் கொள்கின்றோமே தவிர, புண்ணிய நதி தேவதா மூர்த்திகளிடையே எவ்வித பேதமும் கிடையாது. அனைத்து லோக, அனைத்துலக நாட்டின் ஜீவன்களும் தேவர்கள் மனிதர்கள் முதல் புழு, புச்சி, தாவரங்கள், விலங்குகள் வரை அனைத்திற்கும், அனைவர்க்கும் அருள்பாலிப்பவையே புண்ணிய நதிகளாம்!

உலக சாந்தத்திற்கு ஆகாச கங்கை, பாதாள கங்கை, பிரத்யட்ச கங்கைப் பிரவாகம்!

பூமிக்கு அடியில் பல இடங்களில் கங்கை, காவிரி நீரோட்ட அம்சங்கள் இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.!

ஆகாச கங்கை, பாதாள கங்கை, பிரத்யட்ச கங்கை ஆகிய முக்கியமான மூன்று வகை கங்கை நதிகள் உண்டு. இவையாவும் உலக நாடுகளை ஜலயோக வழியில் இணைப்பவை, இவற்றில் தக்கோலம் போன்ற கங்காதர சக்தித் தலங்களில் பாதாள கங்கை நீரோட்டம் சிறக்கின்றது.

பிரத்யட்ச கங்கையே கங்கோத்ரி கோமுகத்தில் தோன்றி ரிஷிகேஷ், ஹரித்வார், வாரணாசி (காசி), பாட்னா, கல்கத்தா வழியே கடலைச் சென்று அடைவதாகும்.

சிவபெருமானின் சிரசிலிருந்து தோன்றும் கங்கை, பூமியை அடைகையில் கொள்கின்ற ஆகாச மார்க நீரோட்டங்களும் நிறைய உண்டு. இதுவே ஆகாச கங்கையாகும்! சாரோதாம் என்று அழைக்கப்படும் யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு தலப்புனித யாத்திரையில் பல இடங்களில் ஆகாச கங்கைப் பொழிவுகளை, சுனைகளாக, மலை நீர்வீழ்ச்சிகளாகக் காணலாம், காளஹஸ்தி, திருக்கண்டியூர், பழமுதிர்ச்சோலை, பாபநாசம், திருக்குற்றாலம், கொல்லிமலை போன்ற தலங்களும் ஆகாசகங்கைத் திருத்தலங்களாகும். இங்கு ஆகமப் பூர்வமாக ஆகாச கங்கையை, கமண்டலம், மூங்கில் குவளையில் பெறும் ஜலயோக மார்க முறைகளும் உண்டு.

திருஅண்ணாமலை “சிரஸ்புடகங்கா தரிசனம்”

திருஅண்ணாமலையில் “சிரஸ்புடகங்கா தரிசனத்தை” ஒட்டி கங்காதர தரிசனம் (கங்கை), கவேர மகாதரிசனம் (காவிரி), கிருஷ்ணபாட தரிசனம் (யமுனை) என்ற பல புண்ய நதி தரிசனங்கள் உண்டு. இப்பகுதியில் பல அபூர்வமான சுனைத் தீர்த்தங்கள் உள்ளன. இங்கு ஆற்றப்படும் தர்ப்பணங்களுக்கு, காசித் தலத் தர்ப்பண சக்திகளும், அந்தந்த நதித் தலப் புனித சக்திகளும் கிட்டுகின்றன.

இங்குதாம் ஆன்மப் பூர்வமாக உலகப் புனித நதிகளை நீரோட்டங்கள் மூலமாக இணைக்கும் ஜலயோகக்ரந்தி நிகழ்கின்றது..!

அன்ன ருத்ர கங்கை

காசியில் கங்கை நீராடல் செய்ய இயலாதோர்க்கு திருவிசநல்லூர் ருத்ர கங்கைக் கிணறு ஓர் அருட்பிரசாதமே! அன்னதான மகிமையால் அற்புதக் கிணற்றில் உதித்த அன்ன ருத்ர கங்கை!

கலியுக மாமுனியாம் ஸ்ரீதரஅய்யாவாள், அருணாசல கிரிவலம் வருகையில், இத்தரிசனப் பகுதியில்தான், பல மண்டலங்கள் கடுந்தவமிருந்தார். இதன் பயனாக, திருவிசநல்லூரில், அற்புதமான பூஜை வரங்களால் தன் வீட்டுக் கிணற்றில் கங்கையை வரவழைத்திட, அது பொங்கி வழிந்து தெருவில் ஓடலாயிற்று. தன் வீட்டில் நடக்க இருந்த திவசத்திற்காகத் தயாராகி இருந்த உணவினை ஏழைகளுக்கு ஸ்ரீதர அய்யாவாள் எடுத்து அளித்திடவே பித்ரு சாபம் வருமென அஞ்சியோர் திவசக் காரியங்களை அவருக்கு நடத்தித் தர மறுத்தனர். காசித் தல கங்கையில் நீராடினால் தான் திவச உணவைப் பிறருக்கு அளித்த குறையும், பித்ரு சாபமும் தீரும். இதன் பிறகே திவசத்தை நடத்தலாமெனப் பலரும் உறுதியாய்க் கூறிடவே, ஸ்ரீதர அய்யாவாள் குறித்த திதி நேரத்திற்குள் பித்ருக்களுக்குத் திவச பூஜை நடத்த இயலாததை எண்ணி வருந்தினார்.

“இறைவா! என்ன சோதனை இது? ஏழைகளுக்கு பசி ஆற உணவு இட்டமைக்காக அடியேனுக்கு ஏற்பட்ட சோதனையா!” என்று அவர் கடவுளிடம் இறைஞ்சிட, இறைவன் பெருங் கருணை கொண்டு அருள் புரிந்திட, அவர் வீட்டுக் கிணற்றில் குபுகுபு வென்று கங்கா ஜலம் பெருக்கெடுத்து கிராம வீதியில் ஓடலாயிற்று. ஏழைகளுக்கு இட்ட அன்னதான மகிமையால் பொங்கிய கங்கை ஆதலின் இதற்கு அன்ன ருத்ர கங்கை என்றும் பெயருண்டு!

திருவிசநல்லூரில் ருத்ர கங்கைக் கிணற்றைத் தரிசிப்பீர்!

“இது மாயச் சித்து வேலை!” என்று சிலர் முணுமுணுத்திடவே, காசி கங்கைப் பெருநதியில் உள்ள குடைகள், திரவியங்கள், ஆமைகள், முதலைகளும் அதில் தோன்றிடவே, அனைவரும் அவருடைய பக்தியை மெச்சி அவர்தம் திருவடிகளில் வீழ்ந்து மன்னிப்புக் கோரி, திவசத்தை நடத்தி வைத்தனர்.

இவ்வாறு கங்கா ஜலம் தோன்றிய ருத்ர கங்கைக் கிணறு கும்பகோணம் அருகே திருவிசநல்லூர் அக்ரஹாரத்தில் இன்றைக்கும் ஸ்ரீதர அய்யாவாள் வாழ்ந்த இல்லத்தில் தாம் தற்போது அடியார்களின் தரிசனத்திற்காகத் துலங்குகின்றது.

காசியில் கங்கை நீராடல் செய்ய இயலாதோர், திருவிசநல்லூர் சென்று இன்றும் என்றுமாய் கங்கா சக்தி நிறைந்ததாய் விளங்கும் ருத்ர கங்கைக் கிணற்றைத் தரிசித்து, தீர்த்தத்தைப் பிரசாதமாகப் பெற்று அருந்தி நற்பலன்களை அடைவார்களாக!

திருவிசநல்லூரில் ருத்ர கங்கைக் கங்காதரக் கிணற்றில் கங்கைப் பிரவாகம் நிகழ்ந்த வைபவத்தைக் கார்த்திகை அமாவாசை தோறும் கொண்டாடி வருகின்றார்கள்.!

அட்சய திருதியை

அட்சய திருதியை பூஜை

தொழில் வியாபாரம், வாழ்வில் நஷ்டங்களையும், கஷ்டங்களையும் காண்போர், தோஷங்கள் “களையப்” பெற்று நல்வளம் காண உதவும் அட்சய திரிதியை பூஜை!

ஹோட்டல், காய்கறிக் கடை, மளிகைக் கடை போன்ற துறையில் அறிந்தோ, அறியாமலோ பண்டங்களில் சேரும் கலப்புகளினால் விளையும் தோஷங்களை, பாவங்களை, சாபங்களை நிவர்த்திப் பரிகாரங்களைத் தரவல்ல பூஜை!

பெண் பிள்ளைகள், கணவன் வீட்டில் எவ்விதக் கஷ்டமும் இல்லாமல் நல்வாழ்வு பெற உதவும் பூஜை!

13ஆந் தேதியில் பிறந்தவர்கள், 13ம் நம்பர் இல்லத்தில் இருப்போர், பிறந்த எண், மாத வருடக் கூட்டுத் தொகை 13ஆக இருப்போர் யாவரும் அட்சய திருதியைப் பூஜையை முறையாக, ஆழ்ந்த நம்பிக்கையுடன் கொண்டாடிட, அபரிமிதமான வளங்களைப் பெற்றிடுவர்.

திதி மகத்துவங்கள் நிறைய உள்ளன. அமாவாசை, பௌர்ணமி திதியிலிருந்து மூன்றாவது திதியாக வருகின்ற திருதியைத் திதியானது, அனைத்துத் துறைகளிலும் நஷ்டங்களை நிவர்த்திக்கும் வழிமுறைகளைத் தந்து, நல்வளத்தை அருள்கின்ற அதியற்புத நாள்! திருதியைத் திதிகளுக்கெல்லாம் மூத்ததாக விளங்குவதே அட்சய திருதியை நாள்! வியாபாரம், தொழில் துறைகளில் நஷ்டத்தையே கண்டு வருபவர்கள் தம் வாழ்வில் நன்னிலை பெற உதவும் திதி தினமே அட்சய திருதியைப் பண்டிகை பூஜை!

அட்சயம் என்றால் வளர்தல், தான்யவளம், விருத்தி, மனவளம் என்றெல்லாம் பலவித நல்விருத்தி அட்சர அர்த்தங்கள் உண்டு. ஈஸ்வரப் பட்டம் பெறுவதற்காகப் பல தலங்களிலும், பல பூஜை முறைகளைக் கடைபிடித்து வந்த ஸ்ரீஆனந்த சனைச்சர மூர்த்தி, மகேஸ்வர தரிசனத்தைப் பெற்றிடத் தேவையான பல்வேறு தெய்வ அம்சங்களை அடைவதற்கு உதவியதே அட்சய திரிதியைப் பூஜையாகும்.

ஸ்ரீபரசுராமர் சிவாலயம் முழையூர்

அட்சய திருதியைப் பூஜை மூலம் நல்வளத்தை, நல்வரங்களைத் தருகின்ற அற்புதமான திருத்தலங்களுள் முக்கியமானவை கும்பகோணம் – கஞ்சனூர் இடையே உள்ள திருமாந்துறை ஸ்ரீஅட்சயநாதர் ஆலயம், பட்டுக்கோட்டை பேராவூரணி அருகே உள்ள விளங்குளம் ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர் கோயில், கும்பகோணம்  பட்டீஸ்வரம்ம அருகே உள்ள முழையூர் ஸ்ரீபரசுநாதர் சிவாலயமும் போன்றவையாம்.

இத்தலங்களில் இன்று சுவாமிக்கு சந்தனக் காப்பு சார்த்தி , சந்தனக் காப்பில் முந்திரி, குங்குமப்பூ, பாதாம் பருப்புகளைப் பதித்துப் பூஜிக்க வேண்டும். முழு முந்திரி, பாதாம் பருப்பு முத்துக்களால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபடுதல், அர்ச்சனா சக்திகளை அட்சய சக்திகளாகப் பன்மடங்காக்க வல்லதாம்.

அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், காய்கறிகள் போன்ற அட்சய திரவியப் பொருட்களை, ஒரு மஞ்சள் பையில் வைத்து, ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திற்கும், குறைந்தது ஒரு வாரத்திற்காவது வரும்படியாகத் திரவியங்களைத் தானமாக அளித்திட்டால், வியாபாரம், சொத்து போன்ற பல துறைகளிலும் சொல்லொணா நஷ்டங்களால் வாடுகின்றவர்களுக்கு நஷ்ட வழி சீரடைந்து நல்வளமும், நன்மையும் கூடுவதாக அமையும்.

“நாமே கஷ்டத்தில் வாடுகின்றோமே, தான, தர்மத்திற்கு எங்கே போவது?” என்று குறுகிய மனப்பான்மையுடன் எண்ணாதீர்கள்! நன்றாக இருக்கும் போதே ஓரளவேனும் தர்மம் செய்ய மனம் வராததினால்தான், (க)நஷ்டப்படும் போது காக்க வேண்டிய தர்ம சக்தி ஒரு சிறிதும் இல்லாமல் போய் விடுகின்றது. நம் கஷ்டத்திலும் பிறர் கஷ்டத்தைச் சிறிதளவேனும் தீர வழிவகுத்தால்தான் இதில் திகழும் தியாக அம்ச சக்தியால், அறசக்திகள் தாமாகவே பெருகி, தர்மமாய்த் தலைகாக்கும். மேலும் நம்மால் இயலாதெனில், இயன்றதை அளித்து, சத்சங்கமாய்ப் பலருடன் சேர்ந்து, நற்காரியங்களை, விரிந்த அளவில் நன்கு நடத்தலாமன்றோ!

விளங்குளம் ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர்

விளங்குளம் ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர் ஆலயத்தில், அட்சயத் திருதியை தோறும், ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி, பலவிதமான தூல, சூட்சும வடிவுகளில் சிவபெருமானை வழிபடுவதால், அட்சயத் திருதியை அன்று, விளங்குளம் மூலமூர்த்திச் சிவலிங்கத்திற்கு சந்தனக் காப்பில் மாதுளை முத்துக்களைப் பதித்து வழிபட வேண்டும். பிறகு ஸ்ரீசனீஸ்வர மூர்த்திக்கும் புனுகு கலந்த சந்தனக் காப்பிட்டு, சந்தனக் காப்பில் எள், அரிசி, கோதுமை, பருப்பு, பாதாம் பருப்பு, குங்குமப் பூ மற்றும் நவதானியங்களையும் பதித்து, சந்தன அட்சயக் காப்பாகவும் இட்டுப் பூஜிக்க வேண்டும். சந்ததிகள் உணவுப் பஞ்சம் இல்லாமல் நல்வாழ்வு பெறவும். பெண் பிள்ளைகள் புகுந்த வீட்டில் கஷ்டப்படாமல் நன்கு வாழவும் நல்வரங்களைத் தர வல்ல பூஜை இதுவே!

மேலும், முடிவு எடுக்க முடியாமல் திகைக்கின்ற விஷயங்களில், நல்ல தெளிவான முடிவும் கிடைக்க வழிவகை செய்யவும் அட்சய திருதியை பூஜை உதவுகின்றது. குழப்ப நிலையில் உள்ள வியாபாரக் கூட்டாளிகள் இப்பூஜா பலனாக, நல்ல சமாதான முடிவு காண்பர்.

ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர் சிவாலயம், விளங்குளம்

தான்ய தோஷ நிவர்த்தி பெற்றிட…

தான்ய தோஷம் என்றால் என்ன? மளிகைக் கடை, ஹோட்டல், காய்கறிக் கடை போன்றவற்றை நடத்துபவர்கள் தாம் அளிக்கின்ற உணவில் திரவியத்தில், அறிந்தோ அறியாமலோ மாசு, தூசு, புழு, பூச்சிகள் கலந்திருந்தால் தோஷங்களாக மாறி அவர்களையும், சந்ததிகளையும் பாதிக்காமல் காப்பாற்றிட, மேற்கண்ட வகையில் அட்சயத் திருதியை நாளில் விளங்குளம், முழையூர், திருமாந்துறை தலங்களில் அபிஷேக ஆராதனைகளுடன் வழிபடுதல் வேண்டும்.

“வார வரகுண தர்மம்” என்ற விசேஷமான தர்ம சக்திகள் மலரும் திருநாளே அட்சய திருதியைத் தினமாகும். நவகிரக வழிபாட்டுப் பலன்களில் இதுவும் ஒன்றாகும். ஏழைகளுக்கு, “வார வரகுண தர்மம்” என்ற வகையில், குறைந்தது ஒரு வாரத்திற்கு வரும்படியான உணவுப் பண்டங்களை தானமளித்தலால், வாரமாகிய ஏழு நாட்களும் நவகிரக ஆட்சியில் வருவதால், நவகிரகங்களின் அனுகிரக சக்திகளைப் பெருக்கிடும் பூஜையாகவும் விளங்குவது அட்சயத் திருதியையின் மிகவும் முக்கியமான அம்சமாகும். தனியாகச் செய்ய வசதி இல்லாவிடில், சத்சங்கமாக, பலரும் ஒன்று சேர்ந்து இதனை நிறைவேற்றிடலாம்.

உடல் ஊனமுற்றவர்கள், மிகவும் குண்டாக இருப்பவர்களுக்கு அருளும் விசேஷமான அட்சய திருதியை பூஜை! ஸ்ரீசனீஸ்வரர் மானுட ரூபத்தில் விளங்குளத்தில் அட்சய திருதியை அன்று பிட்சை ஏற்று, அன்னதானம் அளித்துத் தனக்கு ஏற்பட்ட ஊனக் குற்றங்களைப் போக்கிக் கொண்டார். எனவே உடல் ஊனமுற்றவர்கள், மிகவும் குண்டாக இருப்பவர்கள் திருதியைத் திதி நாட்களில் மேற்கண்ட அட்சயத் திரிதியைத் தலங்களில் மற்றும் ஸ்ரீசனீஸ்வரர் தனிச் சன்னதி கொண்டுள்ள இடங்களில் ஸ்ரீசனீஸ்வரருக்கு நவதானியங்களும், ஏனைய பருப்பு வகைகளும் பதித்த சந்தன அட்சயக் காப்பும் சார்த்தி, முழு முந்திரி, பாதாம் பருப்புகளால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டு வருதலால் உடல் வகைத் துன்பங்கள் தணியலாகும். வழிபாட்டிற்குப் பிறகு தான்யங்கள், முந்திரிகளை தானமாக ஏழைகளுக்கு அளித்திடுக!

நரம்பியல் சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிவோர், மருத்துவர்கள், பிஸியோ தெராபிஸ்ட் போன்றோர் இன்று அட்சய திருதியை நாளில் ஏழு படி அரிசியைத் தலையிலோ, தோளிலோ தாங்கி, ஆலயங்களில் நடைப் பிரதட்சிணம், அருணாசல கிரிவலம், மலைத்தல வலம் வந்து ஏழைகளுக்கு அளித்திட, இவர்கள் துறைகளில் சிறப்படைவர்.

நரம்பு சம்பந்தமான வலிகள், கோளாறுகளால் அவதியுறுவோர் இன்று “ஏழு படி” அரிசியுடன் அட்சய திருதியைத் தலங்களில் அடிப் பிரதட்சிணமும், மலைத் தலங்களில் கிரிவலமும் வந்து தான்ய தானமளித்தல் நரம்புக் கோளாறுகளுக்கு நல்ல நிவர்த்திகளைத் தரும்.

ஆத்ம விசாரம், யோகம் மற்றும் தியானத்தில் முன்னேற விரும்புவர்கள் அட்சயத் திருதியை நாளில் இரு கைகளிலும் நிறைய அரிசியைத் தாங்கி இதில் அகல் விளக்கு ஜோதியுடன் ஏழு முறை அடிப் பிரதட்சணம் செய்து, வேத ஞான சக்தி மிகுந்த முழு முந்திரிகளுடன் ஏழு படி அரிசியையும், தக்க பருப்பு, காய்கறி வகைகளுடன் தானமாக அளித்து வந்தால் யோகத்திலும், ஆத்ம விசாரத்திலும், தியானத்திலும் சிறந்து விளங்க நல்வழிகள் தக்கவர்கள் மூலமாகக் கிட்டும். இவ்வாறு பல துறை வளப் பண்டிகையாகப் பொலிவதே அட்சய திருதியைப் பண்டிகை தினமாகும்.!

அமாவாசை கரிநாள்

அமாவாசை கரிநாள் சேரும் அரிய திருநாள்!

வாழ்வில் அறிந்தோ அறியாமலோ கரிநாள் என அறியாது செய்த தோஷங்களுக்கு நிவர்த்தி தரும் நாளே அமாவசை கூடிய கரிநாள்! பிறந்த நாள், நட்சத்திரம் அறிந்தோர் இதுவரையில் தவற விட்ட நட்சத்திர பூஜைகளுக்குப் பிராயச்சித்தம் தருவதே கரிநாள் கூடிய அமாவாசைத் திருநாள்! இரவு, பகல் கால அம்சங்கள் தோன்றிய தினமே அமாவாசை கூடிய கரிநாள்! ,

மது, முறையற்ற காமக் குற்றங்கள், புகை போன்ற தீய வழக்கங்களில் இருந்து விடுபட, கரிநாள் கூடிய அமாவாசையில் அருணாசல கிரிவலம் வருதல் வேண்டும்.

சூரியனின் புதல்வரும், எம பகவானின் சகோதரருமான சனீஸ்வர பகவான் அவதாரம் கொண்ட திருநாளே கரிநாளும், அமாவாசையும் கூடி வருகின்ற பெருநாளாகும்.

சந்திரன், சனி, சூரியன் ஆகிய மூன்று கிரக வழிபாடுகளின் அபரிமிதமான பலன்களையும், நல்வரங்களையும் ஒரே நாளில் சேர்த்துத் தருகின்ற அருள்வளக் கோள நாளே கரிநாள் கூடிய அமாவாசை! பைரவ லோகத்தில் இரவுக் காலம் தோன்றியதும் கரி நாள் கூடிய அமாவாசையில் தான்!

சூரிய, சந்திர சங்கமத்தில் முகிழ்ப்பது தானே அமாவாசைத் திதி, எனவே ஸ்ரீசனீஸ்வரருக்கு உரித்தான கரிநாளும் இணைந்து வரும் அமாவாசைத் திதியில், முறையான வழிபாடுகளை மேற்கொள்வதால் முக்கோள முத்ரா சக்திகள் அபூர்வமாக உதிக்கின்ற திருநாளே இந்நன்னாள்!

மனிதனின் ஆயுள், கலியுகத்தில் காலத்தை ஒட்டியதாக அல்லவா அமைந்துள்ளது! எனவே கடவுள், மனிதனுடைய வாழ்வினிலே இரவு, பகல் கூடியதாக, காலத்தை இரு அம்சங்களைப் படைத்திருப்பதன் காரணமே, மனிதன் தன்னைப் பற்றியும், தன் உயிர் சார்ந்திருக்கும் காலத்தை பற்றியும், நன்கு தினமும் ஆத்ம விசாரம் கொள்ளவே!

மேலும், இருளில், உறக்க நிலையில்தானே பாதி மனித வாழ்வு கழிகின்றது. எனவே இருளும் ஜீவ வாழ்வில் முக்கியத்வத்தைப் பெறுகின்றது! மனிதனிடம் உள்ள ஒளி வழி மற்றும் இருள்வழி யோக குணங்களை விளக்குவதும் கரிநாள் கூடிய அமாவாசையாகும்.

உறக்க நிலையில்தான் மனிதன் தன்னையும் அறியாது ஒரு வகை “திலச்சுடர் யோகநிலையைக்” கொள்கின்றான். அதாவது “அசையாது அசைந்து வாழ்(ந்திரு)!” என்ற சித்தர்களின் பரிபாஷைப் பாடற் பொருளே இரவைக் குறிக்கும் திலச்சுடர் யோகநிலையாம்! ஆம், உறக்கம் என்பது ஒரு வகை யோக நிலையே! உறக்கம் ஒரு விதத்தில் மரணத்தின் ஒத்திகையே! இந்த இரவு யோக நிலையில் மனிதனுடைய குணப்பாடுகள், பகல் பொழுதை விடப் பெரிதும் மாறுபடும். மனித மனம், உள்ளம், உடலில் ஒளிக் குணம் எனப்படும் நல்ல அற குணங்களும், இருட்டு குணங்கள் எனப்படும் அசுர வகைத் தீய குணங்களும் நிரம்பி இருப்பதைச் சுட்டிக் காட்டி, ஒளிமயமான நற்குணங்களைப் பெறுதல் (பெருக்குதல்) வேண்டும் என்ற அனைவருடைய பிறவி லட்சியத்தை கர்மப் பூர்வமாக உணர்த்திடவே, அமாவாசை, பௌர்ணமித் திதிகளும், இரவு, பகல், கால அம்சங்களும் ஸ்ரீகாலபைரவரால் அளிக்கப்பட்டுள்ளன.!

காலத்தின் ரகசியமும், ஜீவன்களின் பிறப்பு, இறப்பின் இரகசியமும் பலவகைகளில் ஒத்த அம்சங்களைக் கொண்டவை! எந்தக் குழந்தையுமே தெய்வீகக் குழந்தைதான்! குழந்தை மனிதனாவது (கர்ம) மரு இலக்கணத்தால்! மனிதன் தெய்வமாவது குரு இலக்கணத்தால்!

ஒளிமயமான தாயின் வயிற்றுக்குள், கர்ப்பப் பையில் அமையும் கரு, மூலக் கருவறையில் ஒளி பொருந்திய குணங்களுடன் இருக்கின்ற கரு, நல்குணச் சுடராய் பொலியும் மனிதக் கரு, யோனி தத்துவமாகக் கருவறையை விட்டு வெளியே வந்து மனிதனாக உலகைச் சந்தித்து கர்மப் படலக் கால வாழ்விற்குச் சிறிது, சிறிதாக ஆட்படுகின்றது! இவ்வாறு மூலக் கருவறையில் இருந்து வெளியுலக, பூலோகக் கால அம்சங்களை மனிதனாகச் சந்திக்கின்ற நேரம் தான் பிறப்பு எனப்படுகின்றது. மனித உடலிலேயே காலத்தின் ரகசியங்களை உணர்ந்து அறிய வேண்டுமானால், யோகப் பூர்வ முறைகளே இதற்குச் சிறப்பானவையாம்.

அமாவாசையும் கரிநாளும் கூடிய தினத்தில் குளிகை நேரத்தில் தான் கால அம்சங்கள் பகுக்கப்பட்டு ஜீவன்களுக்குத் தரப்பட்டமையால் அமாவாசை கூடிய கரிநாளின் குளிகை நேரத்தில் ஸ்ரீகாலபைரவரை வழிபடுவது பல அரிய யோக நிலைகளை, மனத் தெளிவுகளைத் தருவதாகும். இந்நாளில் ஆற்றும் ஸ்ரீபைரவ பூஜை மரண பயத்தைப் போக்கும்.

சர்வ அமாவாசையும், கரிநாளும் கூடுகின்ற தினத்தில், சூரிய உதய நேரத்தை ஒட்டி அமைந்திடும் குளிகை நேரத்தில் (காலை 7½ மணி முதல் 9½ மணி வரை) ஸ்ரீகாலபைரவ வழிபாடு பவித்ரமான காலயோக சக்திகளைத் தருவதாகும். இந்நேரத்தில் ஸ்ரீபைரவருக்கு புனுகு, கஸ்தூரி, ஜவ்வாது, பச்சைக் கற்பூரம், கோரோசனை ஆகிய பஞ்ச காலயோகத் திரவியங்கள் கலந்த சந்தனக் காப்பிட்டு வழிபடுவதால் இருட்டு குணங்கள், இருட்டு தோஷங்கள், இருட்டு சாபங்கள், இருட்டுப் பாவங்கள், இருட்டு எண்ணங்கள் ஆகிய ஐந்து வகைப் பாவங்களையும் தீர்ப்பதற்கு கால யோகப்பூர்வமாக, இந்த ஆயுளிலேயே மனிதனுக்குத் தக்க பரிகாரங்கள் தக்க பெரியோர் மூலமாகக் கிட்டிடும். இந்த ஐந்து வகை இருட்டுப் புலத்தால்தான் மனிதன் மது, சூது, புகை, காமம், அதர்மம் ஆகிய ஐந்து தீய குணங்களில் சிக்கிக் கொள்கின்றான்!

கூந்தலூர்

எந்த மனிதனும் எப்போதும் நல்ல மனிதனாக இருப்பதில்லை, எப்போதும் கெட்ட மனிதனாகவும் இருப்பதில்லை! ஏதேனும் எண்ணங்கள் மனதில் அலைக் கழித்துக் கொண்டே இருப்பதால் மனதில் எழுகின்ற எண்ணங்களைப் பொறுத்து மனிதனுடைய குணாதிசயங்களும், குணங்களும், விநாடிக்கு விநாடி மாறுபட்டுக் கொண்டே இருக்கின்றன. இவை மாறி நன்னிலை பெறவே அமாவாசை கூடிய கரிநாளில் ஸ்ரீகாலபைரவ வழிபாடு அருள்கின்றது!

இருட்டு எண்ணங்கள் எனப்படும் தீய எண்ணங்களும், தீய சிந்தனைகளும் ஓரளவு கழிந்து, கோழம்பம் எனப்படும் நல்ல எண்ணங்களும் ஏற்படுவதுண்டு. ஸ்ரீபைரவ வழிபாட்டில் கோழம்ப சக்திகள் உருவாகும் விசேஷ தினமே அமாவாசை கூடிய கரிநாளாகும்.

நல்லதும், தீயதும் அல்லாது மிச்ர வகை எண்ணங்களும் ஏற்படுவதுண்டு. உதாரணமாக ஒரு மனிதன் நடந்து கொண்டிருந்த போது, யானை ஒன்று முன்னே வந்தால் அந்த யானையின் பிரம்மாண்டமான உருவம், அதனுடைய அங்க அசைவுகள் அவனுக்கு ஆச்சரிய எண்ணங்களை அளிப்பதால், இச்சமயத்தில் அவனிடம் நல்ல எண்ணங்களோ, தீய எண்ணங்களோ எழாது யானையைப் பற்றி மிச்ர எண்ணங்களே தோன்றும். ஆனால் பெரும்பாலும் தனக்கு சம்பந்தமில்லாத உலக லௌகீகச் சிந்தனைகளிலேயே மனிதன் தன் காலத்தைக் கரைத்துக் கொண்டிருக்கிறான்.

மனமானது அவனுக்குக் கட்டுப்பட்டு இருத்தல் வேண்டும். போவதும், வருவதுமாகத் தன்னிஷ்டப்படி மனமே, மனிதனை வாகனமாக அலைக்கழித்துக் கொண்டிருக்குமேயனால் மனிதன் மனிதனாக வாழ முடியாது! மனிதன் இறைப் பகுத்தறிவுடன், ஆறறிவு கூடியவனாக வாழ வேண்டும் என்பதற்காகவே விசேஷமான கரிநாள் கூடிய மேற்கண்ட அமாவாசைப் பூஜை முறைகள் அளிக்கப்பட்டுள்ளன!

கரிநாளுக்கு, தீயவற்றைப் பஸ்மம் செய்யும் அக்னி சக்திகள் உண்டு! இவ்வகை அக்னி சக்திகள் பூமியில் கரிநாளன்று மட்டும் எழுவதாம். இதில் சூரியனும், சந்திரனும் இணைகையில் இருகோள அக்னி சக்திகளும் கூடுவதால் இவை தீயவற்றை பஸ்மம் செய்யும் அரிய சக்தியைக் கொண்டவையாம். மேலும் தீயவை கழியக் கழிய, நற்குணக் கிரணங்களையும் மன, உடல், உள்ளத்தில் எளிதில் பதித்திடலாம்.

அமாவாசை என்பது பித்ருக்களுக்கு உரித்தான பூஜை நாள் என்று மட்டுமே எண்ணாதீர்கள். உங்களுடைய மனம், உள்ளத்தில் உள்ள இருட்டுப் பகுதியை ஒரு சிறு அகல் கொண்டு வெளிச்சமாக்கி விடலாம் அல்லவா! இந்த ஒளிப் பிரவாகம் மூலமாக உங்களுடைய இருட்டு மனத்தை ஒளி மயமாக்க வேண்டும் என்பதற்காகவே, இன்றைக்குச் செய்யப்படுகின்ற கால பைரவ பூஜைக்கு அபரிமிதமான பலன்கள் உண்டு.

ஸ்ரீசுவர்ணாகர்ஷன பைரவர்
ஆடுதுறை

ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி, கரிநாள் தோறும் உபவாசம் இருந்து பூலோகத்தில் உள்ள அனைத்து காலபைரவ மூர்த்திகளுக்கும் அபிஷேகம் ,ஆராதனைகலை நிகழ்த்தி, இதன் பலாபலன்களை உலக ஜீவன்களுக்கு அளிக்கின்ற அற்புத நாளாகவும் கரிநாள் கூடிய அமாவாசை விளங்குகின்றது.!

குறிப்பாக தீய எண்ணங்கள், தீய ஒழுக்கங்கள், வியாபாரத்தில் எதிர்பாராத நஷ்டங்கள், தொழில் முடக்கம் போன்ற பலவிதமான இருட்டுச் சூழல்களில் அல்லல்பட்டுக் கொண்டிருப்போர், அமாவாசையும், கரிநாளும் கூடுகின்ற இன்றைய தினத்தில் குறிப்பாக, இதிலும் குளிகை நேரத்தில் ஸ்ரீகால பைரவருக்கு சந்தனக் காப்பிட்டு பைரவ பூஜைகளை நிகழ்த்திட, கெட்ட சகுனங்களும், தீவினைகளும், தீய குணங்களும் அகல நல்வழி பிறக்கும்.

ஏற்கனவே, கடந்த பல ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழ்களில் நாம் விளக்கியுள்ளது போல, கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறையில் ஸ்ரீஅகஸ்தியர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் பூஜை, அம்மன்சத்திரம் எனப்படும் சக்குவாம்பாள்புர சிவாலய ஸ்ரீகாலபைரவர் வழிபாடு, ஸ்ரீசனீஸ்வரர் சிவலிங்கத்தைப் பூஜிக்கின்ற சோழபுரம் ஆலயத்தில் ஸ்ரீகாலபைரவர் வழிபாடு அகிய மூன்றையும் இன்று குளிகை நேரத்தில் கடைபிடித்தலால் உங்களுடைய இருட்டு மயமான வாழ்க்கைக்கு ஒளிப்ரகாசத்தையும், வாழ்வில் பிடிப்பின்றி வாழ்வோர்க்குப் பிரகாசமான நல்வழியையும் பெற்றுத் தருவதாகும்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆ.தெக்கூர் கிராமம் அருகே உள்ள ஒழுகமங்கலம் ஸ்ரீகாலபைரவ மூர்த்தியையும் இன்று ஸர்வ அமாவாசை கூடிய கரிநாளில் பூஜிப்பது, இருட்டு எண்ணங்களைத் தகர்த்திட விசேஷமான பலன்களைத் தருவதாகும். இருட்டு எண்ணங்கள் என்றால் நல்ல எண்ணங்களை வளர்க்காத, நல்ல சிந்தனைகளை ஊக்கிடாத, நற்காரியங்களைச் செய்யாத நேரம் முழுதுமே இருட்டுக் காலமாகத்தான் இருக்கும். இருள் என்றால் சூரியன் மறைந்திருக்கின்ற நேரம் என்று மட்டும் பொருள் கொள்ளாதீர்கள். நல்ல எண்ணங்கள் இல்லாத எந்த நேரமும் இருட்டு நேரமே!

இரவு நேரம் என்ற காலப் பாகுபாட்டை இறைவன் அளித்திருப்பதற்குக் காரணமே ஒளிமயமான உள்ளத்தின் மகிமையை உணர்த்திடவே! ஆனால் இராத்திரி காலம் என்பது வெறுப்பதற்கல்ல! மனதினுள் வெளியே சொல்லாது பல இருள்தனங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மனிதனுக்கு சிவராத்திரி, அர்த்தஜாம காலபைரவர் பூஜை, சிவபாத பூஜை, பள்ளியறை பூஜை போன்ற இரவு நேர பூஜைகளை அளித்து மனதுக்கு ஒளிப்பிரகாசம் தந்து மனிதனைப் பரிபூர்ண இறைப் பகுத்தறிவுள்ள மனிதனாக ஆக்குவதற்காகவே இரவு நேரம் படைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீகாலபைரவர்
ஒழுகமங்கலம்

பலரும் வெளியே சொல்ல இயலாத அளவில் பல வினைகளைப் புரிந்திருப்பர். அமாவாசையும் கரிநாளும் இணைகின்ற இன்று குளிகை நேரத்தில் ஸ்ரீகாலபைரவரை வழிபட்டு, மேற்கண்ட இரவு நேர பூஜைகளில் பங்கு கொண்டு, உங்களுடைய இருள் மயமான வாழ்விற்கு நல்ஒளி தேடிக் கொள்ளுங்கள். குறிப்பாக, எப்போதும் ஏதோ தேவையில்லாத இருட்டுச்சிந்தனையை வளர்த்துக் கொண்டு ஜடம் போல் வாழ்பவர்கள், வாழ்வில் எவ்விதப் பற்றும் இல்லாமல் ஏனோ தானோ என்று வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், எப்போதும் வாழ்க்கையில் நஷ்டங்களையும் துன்பங்களையும் சந்தித்து கொண்டிருப்பவர்கள் – இவர்கள் யாவரும் இன்று அமாவாசை கூடிய கரிநாளில் ஸ்ரீகாலபைரவரை வழிபடுவதும், திருஅண்ணாமலை ஆலயத்தில் சக்தி வாய்ந்த ஸ்ரீகாலபைரவர் சன்னிதியில் கிரிவலம் தொடங்கி ஸ்ரீகாலபைரவர் சன்னிதியிலேயே கிரிவலத்தை நிறைவு செய்வதும் இன்றைய அமாவாசை கூடிய கரிநாள் பூஜா பலன்களை நிரம்பப் பெற்றுத் தருவதாகும்.

கரிநாள் தோறும், ஸ்ரீசனீஸ்வர பகவான் ஸ்ரீபைரவரை வழிபடும் ஆலயங்களில் நாமும் வழிபடுதல் பூஜா பலன்களைப் பெருக்கும். கும்பகோணம் அருகே கூந்தலூரில் முருகப் பெருமானின் சன்னதி முன் அபூர்வமாக அமைந்துள்ள ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி, அமாவாசையுடன் கரிநாள் கூடிய நாளில்தான் உற்பவித்தார். மேலும் அமாவாசை கூடிய கரிநாளில் தான் இங்கு சீதாதேவி நீராடி, பெண்கள் இல்லற வாழ்வில் பெறும் ஏழு வகை இன்னல்கள் தீர தம் பூஜா பலன்களை அர்ப்பணித்தாள்!

தீய எண்ணங்களாலும் கணவனுடைய இருட்டுத்தனமாக தீய வழக்கங்களாலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நல்வாழ்வு தந்திட தம்முடைய பூஜா பலன்களை சீதாதேவி, பூமாதேவிக்கு அர்ப்பணித்தத் தலமாகும். எனவே இங்கு கூந்தலூரில் அமாவாசை கூடிய கரிநாளில் பெண்கள் அடிப்பிரதட்சணம் செய்து காலபைரவரையும், ஸ்ரீசனீஸ்வரரையும், முருகப் பெருமானையும் வழிபட்டு வர கணவனுடைய இருட்டுத்தனமான தீய ஒழுக்கங்களால் பாதிக்கப்பட்டவர்கள் நல்வாழ்வு பெறுவதற்கு ஸ்ரீசனீஸ்வர மூர்த்தியே, கால பைரவரிடம், முருகப் பெருமானிடம் தம் பூஜா பலன்களை அர்ப்பணித்து அளிக்கின்றார்.

பிள்ளைப் பேற்றைத் தந்திடும் கங்காதரச் சுயம்பு லிங்க பூஜை!

ஆகாச கங்கை நதியைப் பூமிக்கெனப் பெற்றிட, பகீரதன் பன்னெடுங் காலம் தவம் புரிந்த போது, (இதுவே பகீரதப் பிரயத்தனம் – விடாமுயற்சி) சிவனாரின் சடையில் இருந்து பொழிந்த கங்கைப் பிரவாகத்தை பகீரதனால் தாள இயலவில்லை.!

இத்தனைக்கும் சிவபெருமான் தன் ஜடாமுடியிலிருந்து ஒரு துளியிலும் ஓரணுவையே கங்கைப் பிரவாகமாக பூமிக்கு அளித்திட்டும், கங்கையின் வேகத்தைத் தாள இயலாது,  பகீரதன் தவித்த போது சிவபெருமானே, கங்காதீஸ்வர சுயம்புச் சிவலிங்க மூர்த்திகளைப் பல இடங்களில் உற்பவிக்கச் செய்து அதன் வேகத்தைப் பல சுயம்பு லிங்கங்களுக்கும், சுயம்பு லிங்க பூமியில் பூமியடி நீரோட்டங்களாகவும் நிலை பெற்று உறைய வைத்தார்.

இவ்வாறாகவே ஸ்ரீகங்காதரேஸ்வரர், ஸ்ரீகங்காதரர், ஸ்ரீகங்கை கொண்ட நாதர் போன்ற சுயம்புச் சிவலிங்கங்கள் சூக்கும கங்கை நீரோட்டத் தலங்களாயின! ஸ்ரீஜானவி மகரிஷி அதியற்புதத் தவம் பூண்ட தலங்களும் கங்கோத்பத்தித் தலங்கள் ஆகும்.

திருமழிசை சிவாலயம்

எனவே கங்கோத்பத்தி நாளில் திருவானைக்காவல் ஸ்ரீஜம்புகேஸ்வரர் சிவாலயம், வேலூர் ஸ்ரீஜலகண்டேஸ்வரர் ஆலயம், தக்கோலம் ஸ்ரீகங்காதரேஸ்வரர் ஆலயம் (பகீரதன் பூஜித்த கங்கைப் புண்ணியப் பூமிகளுள் ஒன்றிது). திருந்துதேவன்குடி ஸ்ரீஅருமருந்துநாயகி ஆலயம். புதுக்கோட்டை திருக்கோகர்ணம் சிவாலயம், திருச்சி – விராலிமலை மார்கத்தில் நீர்ப்பழனியில் உள்ள சிவாலயம், சென்னை திருமழிசை ஸ்ரீசீதளாம்பிகை சமேத ஸ்ரீஒத்தாண்டேஸ்வரர் ஆலயம், கும்பகோணம் அருகே வலங்கைமான் ஸ்ரீகுளிர்ந்த நாயகி அம்பிகை ஆலயம், கும்பகோணம் மகாமகக்கரை ஸ்ரீகாசிவிசுவநாதர் ஆலயம், திருவாரூர் அருகே முருகன் பூஜித்த நவலிங்க மூர்த்திகள் ஆலயங்கள் போன்ற இடங்களில் குறைந்தது ஆறு மணி நேரமேனும் 108 விதமான திரவியங்களால் அபிஷேகங்களை நிகழ்த்தி, ஆராதனைகள் செய்து வழிபடுவது நாட்டிற்கு நன்னீர் வளம் தருவதோடு சந்ததிகள் நன்கு தழைக்கவும். இறுதிக் காலம் சாந்தமாக அமையவும் நல்வரங்களையும் தந்திடுவதாகும்.

புத்திர பாக்கியத்திற்கு நல்லருள் புரியும் அற்புதப் பண்டிகையுமே கங்கோத்பத்தித் திருநாள்! பிள்ளைப் பேறின்றி வாழ்கின்ற வயதானோர், தம் இறுதிக் காலத்தில் தக்க பாதுகாப்பு, துணையைப் பெறவும் இப்பூஜைகள் உதவிடும்.

பௌர்ணமி நாள் : 15.5.2003 வியாழக் கிழமை மதியம் 12.52 முதல் 16.5.2003 வெள்ளிக்கிழமை காலை 9.6வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பௌர்ணமி திதி அமைகிறது! கிரிவல நாள் : 15.5.2003 வியாழக் கிழமை இரவு

மாத சிவராத்திரி நாள் : 29.4.2003 செவ்வாய்க் கிழமை காலை 12.41 மணி முதல் 30.4.2003 மாலை 3.9மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி ஏப்ரல் 2003 மாத சிவராத்திரி திதி அமைகின்றது. மாத சிவராத்திரி கிரிவல நாள் : 29.4.2003 செவ்வாய்க் கிழமை இரவு.

கடந்த சில இதழ்களில் மாளாபுரத்தில் மூன்று விநாயக மூர்த்திகள் ஒன்று சேர்ந்து மும்மூர்த்தி விநாயகர்களாக அருள்பாலிக்கின்ற மகத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்து வருகின்றோம்! மாளாபுரம் கிராமத்திற்கு திருநல்லூர், சுந்தரப் பெருமாள் கோயில், பாபநாசம் போன்றவை வழியே பல கிராமச் சாலைகள் உண்டு. புதிதாகச் செல்பவர்கள் பாபநாசத்திற்குச் சென்று அங்கிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள உத்தமதானபுரம் மாளாபுரம் என்று கேட்டுச் செல்ல வேண்டும். பாபநாசத்தில் இருந்து மாளாபுரத்திற்கு நேரடி பஸ் வசதி உள்ளது. தமிழ்த் தாத்தா, உ.வே. சுவோமிநாதய்யரின் ஊரான உத்தமதானபுரம் என்று விசாரித்தால் நன்கு தெரியும். கும்பகோணத்தில் இருந்து உத்தமதானபுரம் – மாளாபுரத்திற்கு எளிய பாதைகள் இருந்தாலும் பாபநாசம் சென்று செல்வது எளிதாக இருக்கும். உத்தமதானபுரம் எல்லையில் மாளாபுரம் ஆரம்பத்தில் உள்ள சிவாலயத்தில் மும்மூர்த்தி விநாயகர் அருள்பாலிக்கின்றார். சக்தி வாய்ந்த தொன்மையான ஆலயங்களைத் தேடிச் செல்வதில் சற்று சிரமம் ஏற்படத்தான் செய்யும். எனவே வாசகர்கள் பொறுமையுடன் நன்கு விசாரித்துச் சென்று சக்தி வாய்ந்த தலங்களான சக்குவாம்பாள்புரம், கீழமாத்தூர், குலசேகரபுரம், கீழ்சூரியமூலை, தீயத்தூர் போன்ற ஆயிரமாயிரம் வருடங்கள் பழமையான ஆலயங்களை, சிரமம் பாராது, தீர விசாரித்து அறிந்து தரிசித்து அரிய அனுகிரகங்களைப் பெற வேண்டுகிறோம்.

அமுததாரைகள்

சிவபெருமானின் சிரசிற் பொலியும் கங்கையே பூலோக கங்கை, பூம்ய கங்கை, பாதாள கங்கை, ஆகாச கங்கை, அர்த்த கங்கை, ருத்ர கங்கை, பகீரத கங்கை எனப் பல இடங்களில் பல வகை கங்கா நதிகளாக, நீரோட்டங்களாக, சுனைகளாக உற்பவித்திட, இவ்வாறாக கங்கை நதி நீர் பல நாமங்களில் பூலோகத்திற்கு வந்த புராண லீலைகளும் நிறையவே உண்டு! சற்குருமார்களே இத்தகைய தெய்வீக அனுபூதிகளை நன்கு அறிவர். ஆனால் கலியுகத்தில் மகான்களை, சற்குருமார்களை மதிக்கும் இறைப் பண்பு மங்கி வருவதால், இத்தகைய ஞானப் பரிணாமங்களையும், குருவாய்மொழி அருள் வழிகளையும் மனித சமுதாயம் இழந்து வருவது வேதனைக்குரியதே!

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஸ்ரீகங்காதீஸ்வரர் ஆலயம், கும்பகோணம் மகாமகக் குளத்தில், கங்கா தேவி உட்பட ஒன்பது நதி தேவியர் பூஜிக்கின்ற புனிதமான நேரத்தில் இத்திருக்குளத்தில் சூக்குமமாக கங்கை நீர் சுரப்பது நம் பாக்யமே! எனவேதான் மாதந்தோறும் மக நட்சத்திர நாளில் இங்கு குடந்தை மகாமகக் குளத்தில் நீராடுவது பல புண்ணிய நதிகளின் நீராடல் பலன்களையும், அரிய பல நல்வளங்களையும் அளிக்க வல்லதாம். குறிப்பாக, மகாமகத் தீர்த்த நீராடல் பலனாக, கல்வியில் சுமாராக இருக்கும் தன் பிள்ளைகளைப் பற்றிப் பெற்றோர்கள் அடையும் வேதனைகள் தணியும்.

கங்கை நதி என்பது நம் பாரத மக்களுக்கு மட்டுமே உரித்தானது என எண்ணாதீர்கள்! உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும், ஆல்ப்ஸ், ஆர்க்டிக் வளையம் போன்ற சித்தர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஆன்மீக சக்தி நிறைந்தத் தலங்களில் புனிதமான கங்காதர சக்திகள் நிறைந்த ஏரிகள், சுனைகள், நீர்வீழ்ச்சிகள் பல உள்ளன. இவ்வகையில், உலகில் கங்காதர சக்திகள் துலங்குகின்ற அனைத்து இடங்களிலும் கங்கோத்பத்தி நாளில் கங்கை நீரோட்டமானது. ஆகாச மார்கமாக, நிலத்தடி நீரோட்டங்களாக உற்பவித்துப் பல கோடி ஜீவன்களுக்கும் நல்லருளாகச் சென்றடைகின்றது! சற்குருமார்கள் அனைத்து நாடுகளிலும் நிறைந்துள்ளமையால், தெய்வீகத்தில் நாட்டம் உள்ளவர்களுக்கு ஆங்காங்கே சற்குருவின் அருள்வழிகள் கிட்டிடும்.

“தன் பெண் அழகாக இல்லையே, பார்ப்பதற்குச் சுமாராக இருக்கின்றாளே, எப்படித் திருமணம் கை கூடுமோ” என்று அஞ்சி மனசஞ்சலங்களுடன் வாழ்வோர் தன் பெண்ணும் தினமும் குறைந்தது ஐந்து முழத்திற்குப் பூக்களைத் தொடுத்து ஆலயத்தில், குறிப்பாக துர்க்கைக்குச் சார்த்தி வந்தால் தடங்கலின்றி, திருமணம் நன்கு அமையும்.

உத்தம ஆன்ம தத்துவ உத்தூர்வ யோகியே ஸ்ரீஅரவிந்த மாதா (ஸ்ரீஅன்னை)!

ஸ்ரீகைலாசநாதர் சோழபுரம்

நடப்புக் கலியுகத்தில் உத்தூர்வ யோக சக்திகள் நிரம்பத் தேவையாக உள்ளன. பல்லாயிரம் யோகிகளுள் ஒருவரே அபூர்வமான உத்தூர்வ யோகியாக மலர்கின்றார். நம்முடைய கலியுகப் பெரும் பேறாக ஸ்ரீஅரவிந்த மாதா (ஸ்ரீஅன்னை) இதனைக் கொண்டிருப்பது நாமடைந்த பாக்யமே! மன வேதனைகளால், குமுறல்களால், கொந்தளிப்புகளால் வாடும் ஜீவன்களின் மன ரணங்களை ஆற்றி, நன்முறையிலே உத்தம அறவழியில் மனத்தைப் பேணிப் பாதுகாக்கின்ற நற்சக்திகளை உத்தூர்வ யோக முறையில், தம் ஜீவாலயத்திலும், உத்தம நம்பிக்கை பூண்டோர்க்கு பரவெளி ஆன்ம மண்டலங்கள் மூலமாகவும் அளித்து அருட்தொண்டு ஆற்றி வருபவர்தான் ஸ்ரீஅரவிந்த மாதா (ஸ்ரீஅன்னை)!

பலரும் ஆலயத்தில் ஸ்ரீசண்டிகேஸ்வரியை முறையாக வழிபடுவதில்லை. ஸ்ரீசண்டிகேஸ்வரியின் மகத்துவத்தையும் உணராது இருக்கிண்றார்கள் ! மிகவும் முக்கியமான விஷயங்களில் தடங்கல் வரக் கூடாது. தடங்கல் வந்தால் நஷ்டங்களும் ஆபத்துகளும் வரும் என்று எண்ணுவோர் குடும்ப சகிதம் ஸ்ரீசண்டிகேஸ்வரிக்கு குறைந்தது 7 முழங்களுக்குப் பூத்தொடுத்து சார்த்தி குருஹோரை நேரத்தில் வழிபட்டு வருதல் வேண்டும்.

குலதெய்வம் போல் ஒவ்வொருவரும் இஷ்ட தெய்வம் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இனியேனும் தேர்ந்தெடுத்துத் தினமும் இல்லத்தில் பூஜித்து வாருங்கள். பிள்ளையார், முருகன், ராமர், தட்சிணாமூர்த்தி என்ற எம்மூர்த்தியையும் இஷ்ட தெய்வமாக ஆக்கிக் கொண்டிடலாம். தன் மனம் விரும்பி வயப்படுகின்ற மூர்த்தியே இஷ்ட மூர்த்தி – விருப்பக் கடவுள் என்று ஏற்றிடுக! பொதுவாக இஷ்ட தெய்வ வழிபட்டால் மிக எளிமையாகக் காரிய சித்திகள் கிட்டும்.

ஸ்ரீசண்டிகேஸ்வரி லால்குடி

கேட்டை, மூட்டை செவ்வாய் – ஆன்மீக விளக்கம்

கேட்டை, மூட்டை செவ்வாய் வெறும் வாய் என்று ஒரு வாக்கிய வழக்கு உண்டு. மக்கள் இதன் அர்த்தத்தைத் தவறாகக் கொண்டுள்ளனர். கேட்டை நாளும், செவ்வாய் நாளும் மூட்டை மூட்டையாக முட்டுக் கட்டைகளைத் தருகின்ற நாட்களாகத் தவறாகப் பொருள் கொள்கின்றனர். செவ்வாய் வெறும் வாயென்றால் செவ்வாய் ராகு கால துர்க்கா பூஜை அபரிமிதமான பலன்களைத் தருவதாயிற்றே! எனவே “செவ்வாய் (நிறைவள) வருவாயே” செவ்வாய் வெறும் வாய் எனத் தவறான வழக்குத் தொடர் ஆயிற்று!

கேட்டை மூட்டை செவ்வாய் என்பது கேட்டை நட்சத்திரம் கூடிய செவ்வாய் நாளில் உத்தம யோகியர், உத்தம இறைத்தூதர்களின் தரிசனத்தைப் பெறுதலானது (பொக்கிஷ) மூட்டை, மூட்டையாய் அனுகிரகத்தைப்ப் பெற்றுத் தருவதுடன் (அருள்வள) மூட்டையாய்ச் சந்ததிகளுக்கும் வருவாயாய் வந்தருளி, மூட்டை மூட்டையாய்ப் பெருகிக் குவிந்துள்ள கர்மவினைகளையும் கழிப்பதற்கும் துணைபுரியும் என்பதே இதனுடைய தாத்பர்யமாகும். எனவே கேட்டை, மூட்டை, செவ்வாய் என்ற வழக்குத் தொடரின் உண்மையான அர்த்தத்தை இனியேனும் புரிந்து கொள்ளுங்கள்! எந்த நட்சத்திரத்தையும் வெறுக்காதீர்கள்! ஒவ்வொரு நட்சத்திரமும் மனித வாழ்விற்குத் தேவையான விதவிதமான மகத்துவங்களை, பலாபலன்களைக் கொண்டுள்ளன!

கேட்டை மூட்டை செவ்வாய் கோட்டை வருவாய் என்பதே இந்த நல்வழக்குத் தொடரின் முழுமையாகும். அதாவது கேட்டை நட்சத்திரமும், செவ்வாய் நாளும் கூடுகின்ற நாளில், யோகியர்களுடைய, சித்தர்களுடைய, மகான்களுடைய (ஜீவாலய) தரிசனத்தைப் பெறுதலால் மூட்டை மூட்டையான கர்ம வினைகள் கழிவதுடன், (அற)மூட்டை மூட்டையாகப் புண்ய சக்திகள் கோட்டை போல் அரணாக நின்று, பொக்கிஷ மூட்டையாய்ச் சந்ததிகளுக்கும் நிரவி நம்மைப் பாதுகாக்கும் என்பதே இதன் பொருளாகும்.

பல இல்லறப் பெண்களும் சப்தத்தின் ஆன்ம சக்தியை உணராது இருக்கின்றார்கள். சமைக்கும் போதும் காரியங்களைச் செய்யும் போதும் இறைமய சங்கீதம். இறை மந்திரங்களை ஓதுதல், தமிழ் மறைகளை ஓதுதல் போன்றவாறு, இருந்தால் வீட்டிற்குள் நிலவும் பரவெளி சுத்தப்படும். மாறாக, கடமுடாவென்று பாத்திரங்களை உருட்டி, அசைத்து அபஸ்வர சப்தங்களை எழுப்பிக் கொண்டிருந்தால் வீட்டில் மன அமைதியும், சாந்தமும் குறைந்து விடும். ஒரு சிறு டம்ளர் கீழே விழுந்தால் கூட அது பல சகுனங்களைக் காட்டுவதாகும்., டம்ளர் கீழே விழுந்து உருண்டால் திடீரென்று சண்டை, சச்சரவுகள் ஏற்பட இருப்பதைக் குறிக்கின்றது. எனவே அநாவசியமாக பாத்திர சப்தங்கள் வீட்டில் எழுவதைத் தவிர்க்கவும். ஸ்ரீஅரவிந்த மாதா (அன்னை) தேவையில்லாத வகையில் பாத்திரங்களை அசைத்து உருட்டி சப்தப்படுத்துவது கூடாது என்று வலியுறுத்துவார். உண்மையில் பாத்திரங்கள் போன்ற ஜடப் பொருட்களும் ஆத்ம சக்தியைக் கொண்டவையே! பல பாத்திரங்களும் ஸ்ரீஅன்னையிடம் உரையாடி தங்களை மானுட சமுதாயம் முறையாக மதிப்பதில்லை என்று முறையிட்டு நிவாரணம் தேடியுள்ளன என்பது ஆன்மீக உலகில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஆத்ம போதனையாகும்.

சுந்தரராஜப் பெருமாள் என்ற நாமம் தாங்கி அருள்பாலிக்கும் பெருமாள் மூர்த்திக்கு, திருவோணம், சனிக்கிழமை, புதன் கிழமை, புனர்பூச நாட்களில் மருதாணித் தைலம், கரிசலாங்கண்ணித் தைலம், நீலபிருங்காதித் தைலம், செம்பருத்தித் தைலம், பொன்னாங்கண்ணித் தைலம் ஆகிய பஞ்சத் தைலக் காப்பு சார்த்தி அடர்த்தியாக சாம்பிராணி தூபம் இட்டு வணங்கி வந்திடில் சம்பந்திகளின் கொடுமையால் அவதியுறும் பெண் பிள்ளைகளுக்குச் சாந்தமான வாழ்வு கிட்டும். பொதுவாக தைல தோஷங்கள் ஏற்பட்டால் இது பெண் பிள்ளைகளைப் பாதிக்கும். தைல தோஷம் என்பது மாதந்தோறும் குறித்த அளவில் ஆலயங்களில் எண்ணெய் தீபங்களை ஏற்றாமையால் வருவதாகும்.

விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் பன்மடங்காய்ப் பெருகும் பலாபலன்கள்!

பல நூறு ஆண்டுகளாக மனித சமுதாயம் மறந்து விட்ட ஸ்ரீவிஷ்ணுபதிப் புண்ய காலத்தின் மகிமையை, கடந்த பல வருடங்களாக, நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள், ஸ்ரீஅகஸ்திய விஜயம், ஆன்மீக நூல்கள், தெய்வீக உரைகள், உபந்யாசங்கள் மூலமாகவும் எடுத்துரைத்து வருகின்றார்கள்.! பிரதோஷம், கும்பமேளா, மகாமகம், கிரகணம் போல இப்புனிதமான நேரத்தில் ஆற்றப்படும் ஹோம பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள், தர்ப்பணங்கள், தான தர்மங்களுக்குப் பன்மடங்குப் பலன்கள் உண்டு. பக்திக் குறைவால் கலியுக மனித சமுதாயம் இழந்துள்ள பல தொன்மையான, மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடுகளுக்கு இவ்வகையில்தாம் ஓரளவு ஈடு காண முடியும். கலியுகத்தில் நமக்கென இந்த எளிய நல்வழி முறையைத் தந்தருள்வதும் இறைப் பெருங் கருணைதானே! இதனையும் மனித சமுதாயம் பயன்படுத்தாது விட்டு விட்டால் கோடி கோடியாய்ப் பிறவிகளே மிஞ்சும்!

கணக்கு சப்ஜெக்ட் என்றாலே பலருக்கு வேப்பங்காயாய்க் கசக்கின்றது அல்லவா., இதற்கு ஆன்மீகத்தில் தான் தக்க தீர்வுகள் உண்டு. நவமி திதி, புதன், திருவோணம், புனர்பூசம், மகம், அவிட்ட நாட்களில் ஸ்ரீநாமகிரி அம்பாள், ஸ்ரீஞான சரஸ்வதி, ஸ்ரீஹயக்ரீவருக்கு அபிஷேக, ஆராதனைகளைச் செய்வதுடன் 21 என்ற எண்ணிக்கையில் பழங்கள் வெற்றிலை, பாக்கு, ரவிக்கை வஸ்திரங்களைத் தானமாக அளித்து வந்தால் கணக்கில் வரும் வெறுப்பு தணியும்.

சித்தர்களே அறிந்த “அமிர்த நேரம்”!

கருடாழ்வார் தாங்கிய அமிர்தக் கலசத்தில் இருந்து தெளித்து இவ்வாறு அமிர்தம் நிலைத்து உறையும் இடங்களே அமிர்தப் பெட்டகமாய் “அமிர்த எண்கலங்கள்” ஆயின! எண்கலம் என்பது தங்கம், செப்பு போன்ற எண்கலவைக் கலசமாகும். கால மாற்றங்களால் அழியாதது! இதில் வைக்கப்படும் எப்பொருளும் காலத்தால் கெடாது, வாடாது, மாளாது சிரஞ்சீவியாய் இருக்கும். எண்கலத்தில் எட்டுத் திக்கிலும் உள்ள எட்டு துவாரங்கள் (எண்கண்கள்) மூலமாக அமிர்த யோக நேரங்களில் அமிர்தம் சுரந்து பூமியிற் சேரும். எண் கலசக்தி நிறைந்த தலங்களுள் ஒன்றே எண்கண்!

உலகெங்கும் இத்தகைய எண்கலங்கள் பல இடங்களில் ஆன்ம ரீதியாகப் பதிந்துள்ளன! இவற்றில் அமிர்தம் சுரந்து வெளி வரும் நேரமே அமிர்த யோக நேரமாகும். திருமண சுபலக்னங்களில் சித்தர்கள் “அமிர்த நேரம்” என்ற “அமிர்தம் சுரக்கும் தேவ நேரம்” ஒன்றை அறிந்து குறிப்பார்கள்! இதில் சுபமங்கள சக்திகள் பல்கிப் பெருகும், சற்குருவின் மீது நம்பிக்கை கொண்டு குருவருள் திரண்டிடில்! சித்தர்களே அறிந்த தேவ ரகசியமிது! மற்றவர்கள் அறிந்தால் சுயநலமாகத் தவறாகப் பயன்படுத்தி விடுவார்கள் என்பதால் இந்த “அமிர்த நேரக் கலை” எப்போதும் சித்தர்களிடமே இருந்து விடுவார்கள் என்பதால் இந்த “அமிர்த நேரக் கலை” எப்போதும் சித்தர்களிடமே இருந்து வருகின்றது! ஸ்ரீகாலபைரவ லோகத்தைச் சார்ந்த தம்பிக்கலையான் சித்தர் அளித்த அற்புத அமிர்த யோக நேரக் கணித முறை இது! சென்னை திருவான்மியூர் ஸ்ரீமருந்தீஸ்வரர் ஆலயத்தில் உள்ள 108 லிங்கங்களில் ஒன்றில் தம்பிக் கலையான் சித்தர் ஐக்யமாகி உள்ளார்.

ஸ்ரீஅப்பருக்கு திருவடி தீட்சை
திருநல்லூர்

நீங்கள் அடிக்கடி பர்ஸ், வண்டிச் சாவி, பாங்க் பாஸ்புக் போன்று எதையேனும் எங்கேயோ வைத்து விட்டு ஞாபக மறதியால் அவதிப்படுகின்றீர்கள் என்றால் தந்தை வழியில் மூன்றாவது தலைமுறை மூதாதையர்களுக்கு முறையாகத் தர்ப்பணம் அளிக்கவில்லை என்பது பொருளாகும். புதன், சனிக்கிழமை தோறும் தர்ப்பணம் அளித்து, பித்ருக்களின் நாயகரான பெருமாள் ஆலயங்களில் அதிரசம் தானமளித்து வந்தால் சிறு பொருட்களைத் தொலைத்து மறதியால் அவதிப்படுகின்ற இன்னல்கள் தணியும்.

“சடாரி” சார்த்தப் பெறுதலே கலியுகத் திருவடி தீட்சை முறை! இறைவனின் திருவடி தீட்சை தரும் தலங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை! அப்பர் சுவாமிகளுக்கு, கும்பகோணம் அருகே திருநல்லூர்த் தலத்தில் ஈஸ்வரன் திருவடி தீட்சை (சிவபெருமான் தம் திருப்பாதங்களை அப்பர் சுவாமிகளின் சென்னியில் வைத்தருளிய அருட்புலம்) தந்து அருளியமையால் திருநல்லூர்ச் சிவாலயத்தில், பெருமாள் ஆலயம் போல் பக்தர்களுக்குச் “சடாரி” சார்த்துகின்ற முறை கடைபிடிக்கப்படுகின்றது !

சடாரி என்றால் இறைவனின் திருப்பாதங்கள் பொறிக்கப் பெற்ற மணிமா மகுடம் ஆகும். வாரம் மூன்று முறையேனும் அனைவரும் பெருமாள் ஆலயங்களில் தலையில் சடாரி சார்த்துதலான அருளைப் பெற வேண்டும். இதனால் கபால நாளங்கள் யோக சக்திகள் பெற்று தீர்கமான ஆயுள், நல்ல கண் பார்வை, திடமான ஆரோக்யம் கிட்டும்.

வாகன பூஜை

புது வாகன பூஜையின்போது பலரும் சுவாமிக்கு அணிவித்த மாலையை வாகனத்திற்குச் சார்த்தி, பூக்கள் சாலையேங்கும் சிதறி பலரும் மிதிக்கும் வண்ணம் வைத்து வண்டியை ஓட்டி வருகின்றார்கள். மேலும் “பலி” என்ற பெயரில் எலுமிச்சம் பழத்தை வாகனச் சக்கரத்தின் அடியில் வைத்து ஓட்டி நசுக்கி விடுகின்றார்கள். இரண்டும் தவறானதே!

சுவாமிக்கு அணிவித்த மாலையை வாகனத்திற்குச் சார்த்தி வண்டியை வலம் வந்து வணங்கி பிறகு மாலையை பத்திரமாக வண்டியினுள் எடுத்து வைத்திட வேண்டும். பூக்கள் சிதறி, பிறர் காலில் மிதிபடக் கூடாது! சித்தர்களால் “சிவக்கனி” எனப் போற்றப்படும் எலுமிச்சம் பழத்தை வண்டிச் சக்கரத்தின் கீழ் வைத்து நசுக்குதல் மிகவும் தவறான பழக்கமாகும். இது தோஷங்களையே பெருக்கும்.

சித்தர்கள் அளிக்கும் “ஸ்ரீராம வாக்பத விரதம்”

சித்தர்கள் போற்றுகின்ற “ஸ்ரீராம வாக்பத விரதம்” என்ற ஒன்றுண்டு. அதாவது இவ்விரதம் பூணுவோர் நவமி திதி, ஸ்ரீராமருக்குரிய புனர்பூச நட்சத்திர நாள், ஸ்ரீராம நவமி தினங்களில் “ராம், ராம்” என்ற தாரக நாம மந்திரச் சொல்லைத் தவிர வேறு எதையும் பேசிடார். இந்நாட்களில் ஸ்ரீராமபத வாக்பதவிரதத்தை மேற்கொண்டு “ராம்ராம்” என்ற ராமநாமம் அல்லாது வேறு எதனையும் பேசாது, உண்ணாது விரதமிருத்தல் வாழ்க்கையில் பெறுதற்கரிய பாக்கியமாகும். பானகம் அருந்தி திதி, நட்சத்திர முடிவில் விரதத்தை நிறைவு செய்திடுக!

ஸ்ரீராமபிரான்
கண்டிரமாணிக்கம்

கணவன் மனைவி மீது வெறுப்போ, பகைமையோ, சந்தேகமோ கொள்ளுதல், பெற்றோர்கள் பிள்ளைகள் இடையே மனஸ்தாபம், கூட்டு வியாபாரத்தில் ஒருவருக்கொருவர் பகைமை இத்தகைய சூழ்நிலைகள் பல குடும்பங்களில் நிலவுகின்றன. இவ்வகையில் பாதிக்கப்பட்டிருப்போர் வல்லம் ஸ்ரீகோதண்டராமர் ஆலயம். சென்னை – திருநின்றவூர் ஸ்ரீராமர், (கும்பகோணம் அருகே) கண்டிரமாணிக்கம் ஸ்ரீராமர் ஆலயங்களில் நவமி, புனர்பூசம், ஸ்ரீராம நவமி நாட்களில் ஸ்ரீராம வாக்பத விரதத்துடன் கடைபிடித்து, பானகம் அருந்தி, பானக தானம் செய்து விரதத்தைப் பூர்த்தி செய்திட பகைமையும், சந்தேகமும் நிவர்த்தியாகி, இல்லத்திலும், வியாபாரத்திலும் சாந்தமும், அமைதியும் ஏற்படும்.

வல்லம் பெருமாள் ஆலயம்

பலரும் காணாத வகையில், தக்கோலம் பெரிய சிவாலயத்தின் பின்புறம் அமைந்து சிதிலமடைந்து காணப்படும் ஸ்ரீமோகனவல்லி சமேத ஸ்ரீகங்காதரேஸ்வரர் ஆலயத்தைத் தக்க அனுமதியுடன் சீரமைத்து, முறையான பூஜைகளை நடத்தி, கங்கா ஜலத்தால் தினந்தோறும் அபிஷேக, ஆராதனைகள் நிகழ்வதற்கு வழிவகை செய்தலால், பண்டைய பக்திமிகு வேந்தர்களின் ஆட்சியில் நிலவியது போல், நிச்சயமாக, தமிழ்நாட்டில் நீர் வளம், மழைவளம் இறையருளால் பெருகும்.

தக்கோலம் ஸ்ரீகங்காதரேஸ்வரர் ஆலயத்தில் இப்போது நீர் வளமின்றி வறண்டிருப்பது போல் தோன்றிடினும், சூக்கும வடிவில் கங்கா ஜலத்வீப சக்தியுடன், பூமியடி கங்காதீய நீரோட்ட வளம் எப்போதும் நிறைந்த பகுதியே இவ்வாலய வளாகமாகும். குறித்த சில ஹோரை நேரங்களில் இங்கு தூல, சூக்கும வடிவுகளில் வந்து வழிபடும் பக்தியிற் சிறந்த மகான்களும், சற்குருமார்களும் இங்கு நந்தி முகவாயில் ஜலத் தொட்டியில் கைகளை அசைத்திட, “சலசலவென்று” ஜலப்ரவாக ஒலி கேட்டிடச் செய்யும் அற்புதத்தைப் பலரும் கண்டு உணர்ந்துள்ளமையால் இங்கு எப்போதும் சூக்கும கங்கா நீரோட்டம் நிலவுவதை நிரூபணமாக அறிந்து கொள்ளலாம்.

தொடரும் ஆனந்தம்...

ஒருமுறை கார்த்திகை தீபம் முடிந்த பின்னர் அடியார்கள் அனைவருக்கும் விடை கொடுத்து அனுப்பும் தருணம் வந்தபோது நம் சற்குரு திருச்சி தஞ்சை அடியார்களை அழைத்து சீக்கிரம் ஊருக்கு கிளம்புங்கள் என்று கூறி அவர்களை வழி அனுப்பி வைத்தார். சில நாட்களுக்குள் அவர்களுள் ஒரு இள வயது அடியார் இவ்வுலகை விட்டுச் சென்று விட்டார். நம் சற்குருவிடம் இந்த செய்தி தெரிவிக்கப்பட்டபோது, “அதைத்தான் சூசகமாக உங்களுக்கு விடை கொடுக்கும்போதே தெரிவித்தேனே, நீங்கள்தான் புரிந்து கொள்ளவில்லை,” என்றார். “சீக்கிரம் ...” என்ற வார்த்தைக்கு “அப்படி” ஒரு பொருள் இருக்கும் என்பதை அடியார்கள் அப்போதுதான் புரிந்து கொண்டார்கள். அனைவரும் வெகுநாட்கள் பூமியில் தங்கி வாழும்போது ஒரு இளவயது அடியார் மட்டும் “சீக்கிரம்” புறப்படுவது என்றால் அதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை அல்லவா ? ஆனால், அந்த அடியார் ஏகப்பட்ட குடும்ப கடன்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் அவரை தேவையில்லாத அந்தச் சுமையிலிருந்து விடுவிக்கவே சற்குருவின் இந்த ஏற்பாடு என்பதை அடியார்கள் புரிந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகி விட்டன என்பது என்னவோ உண்மைதான். தற்போது வளர்ந்து நல்ல பதவியில் உள்ள அவருடைய குழந்தையும் மனைவியும் மிகவும் சௌக்கியமாக இருக்கிறார்கள் என்பதே நமக்கு ஆதரவான செய்தியாகும். கண் மூடி வந்தவர் மண் மூடிப் போகார் என்பதாக குருவை நம்பியவரின் வாழ்க்கை செம்மை பெறும் என்பதற்கு சுமார் 30 ஆண்டுகள் கடந்த பின்னரும் நாம் அனுபவிக்கும் ஒரு சுவையான அடிமை கண்ட ஆனந்தம் இதுவாகும்.
இதே போல் மற்றோர் சந்தர்ப்பத்தில் பிரெஞ்சு அரசாங்கத்தில் உயர் பதவி வகித்து ஓய்வு பெற்ற ஒரு பாண்டிச்சேரி அடியார் ஒரு முறை நம் சற்குருவைக் காண வந்தபோது நம் சற்குரு அவரிடம் நேரிடையாகவே, “சார், அடியேனை குருவாக ஏற்கும் எவரும் மீண்டும் பிறப்பதில்லை. அவர்களுக்கு முக்தியை வாங்கித் தர வேண்டியது அடியேனுடைய பொறுப்பாகி விடுகிறது. ஆனால், நீங்கள் மட்டும் ஒரு exception (விதிவிலக்கு). நீங்கள் மீண்டும் பிறந்து உங்களுக்கு ஆறு வயது ஆகும்போது அடியேன் உங்களை ஆட்கொள்வேன்,” என்று உறுதி அளித்தார். சற்குரு பெரும்பாலும், “நாங்கள் பூமியை விட்டுக் கிளம்பி விட்டால் எங்கள் தூசைக் கூட உங்களால் தொட முடியாது, புகையைக் கூட பிடிக்க முடியாது. அதனால் அடியேன் இங்கு இருக்கும்போதே அடியேன் சொல்லும் நற்காரியங்களை முடிந்தவரை செயல்படுத்த முயற்சி செய்யுங்கள்,” என்று கூறுவார். இந்த இரண்டு கூற்றில் எது உண்மை ? இல்லை இரண்டும் உண்மையா ? எது எப்படியிருந்தாலும் ...


கடவுள் யாரையும்
தனியே விட மாட்டார்,
தவிக்கவும் விட மாட்டார் !

சற்குருவின் இந்த பொன் மொழி 29 எழுத்துக்களைக் கொண்டுள்ளதால் எண் கணிதப்படி அது சந்திரனுக்கு உரிய இரண்டைக் குறிக்கிறது, அதாவது தனியாகாத துணை தானே இரண்டு என்பது !

ஸ்ரீதட்சிணாமூர்த்தி தக்கோலம்

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam