எண்ண விஷமே தேளின் விஷத்தை விடவும் கொடியது !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வ ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய குருகுலவாச அனுபூதிகள்!

இமய மலையில் அன்னபூர்ணா சிரகத்தில் உள்ள தம்புல் தெய்வீக குகையில் நித்ய வாசம் செய்கின்ற நவநாத சித்தர்களின் நேரடியான அருள் மழைப் பொழிவில் பிலாகாச யோகத்தில் திளைக்கின்ற சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரிடம் கலியுகத்தில், அதிலும் பசுமையான பள்ளிப்பருவத்தில் நேரடியான குருகுல வாசம் பெறுவதென்றால் என்னே பெரும் பாக்கியம் அது! இவ்வாறாக சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரிடம் அவர்தம் ஆத்மார்த்த சிஷ்ய பாதமாக ஜ்வலிக்கின்ற குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய குருகுல வாச அனுபூதிகளை உய்த்து, உத்தம நிலைகளை அடைவீர்களாக!

அந்தச் சிறுவயதில்தான் எத்தனை அரிய பாடங்கள், எத்தனை அரிய யோக, தியான பிராணாயாம நிலைகள்! மானசரோவர் (திருக்கயிலாயம்), அமர்நாத், பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி போன்ற குளிர்மய இறைத் தலங்களில் பெரியவர் கோவணாண்டியாகவே அவர் திரிந்தது சிறுவனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. சிறுவனுக்கு மட்டும் தலைக் குல்லா, கை உறை, கால்களில் கம்பளி சாக்ஸ் என அளித்துப் பத்திரப்படுத்தினார். தானோ குளிரோ, பனியோ, பனி மழையோ எதுவாயினும் சரி, வெற்று மரப் பலகையிலோ, மர பெஞ்சிலோ, மரத்தடியிலோ படுத்திடுவார். சுற்றிலும் அடர்த்தியாக மரங்கள் இருக்க, சிறுவனுக்கு வழக்கம் போல, பூச்சி, பட்டை, வண்டு, பாம்பு, மிருகங்கள் பற்றிய பயம் உதித்துவிடும். இவரோ ஹாயாக மிகுந்த உற்சாகத்துடன் எங்கும் பயமின்றித் துணிவாக நடந்து சென்றிடுவார்!

ஸ்ரீமனோக்ஞநாத சுவாமி
திருநீலக்குடி

குருகுலத்தில் எத்தனையோ சம்பவங்கள் இறை அனுபூதிகள், இறை லீலைகள், குருகுலவாச நிகழ்ச்சிகள் நடந்தாலும் எல்லாவற்றிற்கும் அவர் விளக்கங்கள் அளிப்பதில்லை. ராமேஸ்வரத்தில் ஒரு முறை முப்பது, நாப்பது பஞ்ச வர்ணக் கிளிகளை (கூண்டில் அடைபட்டவை) வாங்கி, ராமநாதபுரம் அருகில் உள்ள ஸ்ரீஏகாந்த ராமர் ஆலய வளாகத்தில் பறக்க விட்டார். “ஏன் வாத்யாரே! அதுங்கள்ள சிலதுக்கு வெட்டின சிறகு கூடச் சரியா முளைக்கலையே, உடும்பு, பூனை, ஏதாச்சும் புடிச்சு அடிச்சுருச்சுன்னா என்ன பண்றது?” என்று அவன் கேட்டபோது அவர் பல மாதங்கள் பதிலே சொல்லாமல் மழுப்பினார்.

ஸ்ரீநந்தீஸ்வரர் திருநீலக்குடி

ஹிமாசலப் பிரதேசம், உத்திரப் பிரதேச மாநிலங்களில் பல மலைத் தலங்களில் கடுங்குளிரில் அவருடன் நடையாத்திரை சென்ற போது குலூ என்னும் மலை வாசத் தலத்தில் கிளிகளுக்கு ஆப்பிள் பறித்துக் கொடுத்த போதுதான் அவர் வாயைத் திறந்தார். “ஏண்டா நம்ப ராமேஸ்வரம் பக்கத்தில ஏகாந்த ராமர் கோயில்ல கொஞ்சம் கிளிகளை விட்டோமே, அதுங்க அப்பா, அம்மா ஆகி தாத்தா, பாட்டி ஆகி இங்க குலூ VRS வாங்கின்னு செட்டில் ஆயிடிச்சாம். அவங்க இங்க ஆத்துல (நதி) தர்ப்பணங் கொடுக்க வறச்ச நம்பளை அடையாளங் கண்டு கரெக்டா கூப்பிட்டுடுச்சு பாத்தியா? என்ன புத்திசாலியான கிளிங்க!”

சிறுவன் அந்த வயதான கிளிகளைப் பார்த்தான், எல்லாம் சரி என்பதாக அவை தலை ஆட்டின! ராமேஸ்வரத்தில் எழுந்த கேள்விக்குப் பதில் பல ஆண்டுகளுக்குப் பிறகு குலூவில் தான் கிட்டியது. இவ்வாறாகச் சிறுவனுக்குப் பெரியவருடைய சித்த குண பாவனைகள் கொஞ்சம் கொஞ்சமாகப் புரியலாயின.

MAGICAL LOGIC! பொதிய மலையில் கல்யாணி அருவிப் பகுதியில் செல்லும் போதுதான் சென்னையில் நடந்த மாஜிக் ஷோவில் அவனைத் திடீரென்று எழுந்துவரச் சொன்னதற்கான காரணங்கள் கிட்டின.

“ஒண்ணுமில்லைடா! கண்ணைக் கட்டிக் கிட்டு வண்டி ஓட்டறது. ரெண்டு மூணு தடவைக் கத்தியால வெட்டி உயிரோட வர்றது, நெறயப் பூட்டு போட்ட பெட்டிலேந்து பூட்டை உடைக்காம வெளில வர்றதுன்னு.... எத்தனையோ மாயா ஜால தந்திரத்துக்குன்னு குட்டி பூதங்கள், குட்டி தேவதைகள் நல்லா வேலை செய்யும். ஆனா அதுங்களுக்குத் தீனி போட்டு, வேலை குடுத்து மாளாது! கண்கட்டு வித்தையா எல்லாம் பண்ணித் தரும். மாஜிஷியன் ஒரு பெஞ்சு மேல நிப்பாரு, ஆனால் ஒரு குட்டி தேவதை அந்த பெஞ்சை நம்ப கண்ணுக்குத் தெரியாம மறைச்சிடும். அவரு அந்தரத்துல நிக்கற மாதிரி இருக்கும்! ஆனா இந்தக் கண்கட்டு வித்தையெல்லாம் கொஞ்ச காலத்துக்குத்தான் வேலை செய்யும். இந்த மந்திர, தந்திரத்துல எல்லாம் ரொம்ப ஜாத்திரதையா இருக்கணும்!”

ஏதேதோ நினைவுகள்
என்னைச் சுற்றி வருகுதே !

“ஒரு புனிதமான ஆத்மா வந்துடுச்சுன்னா அங்க, மாஜிக் ஷோவுல எந்த தேவதையும் சாந்தமா வேலை செய்ய முடியாது. அதுக்குத்தான் தெய்வீகத்துல, பெரியவங்க அந்தப் பக்கமே தலை வச்சுக் கூடப் பார்க்க மாட்டாங்க! ஏன்னா அவங்க அங்க போனா அந்த குட்டி தேவதைங்க அந்தப் புனிதமான ஆத்மாவைச் சுத்திச் சுத்தி வந்து பிரார்த்தனை பண்ணி அவங்க இந்த மாதிரி மந்திர தந்திரம் தெரிஞ்சவங்ககிட்ட அடிமையா மாட்டிக்கிட்டு வாழ்றதுலேந்து விடிவு கேப்பாங்க.. மாஜிக்கே நின்று போயிடும்!”

“நீ மாஜிக் ஷோவுக்குப் போனப்போ, அங்க பலரும் ஆட்டிப் படைக்கற குட்டி தேவதைங்க நிர்ச்சலனமாயிடுச்சு. அதனாலதான் மாஜிக்ல ரொம்ப, ரொம்ப ஜரூரா இருப்பாங்க, யார் வர்றாங்க, போறாங்கன்னு அவங்க கண் வச்சுக்கிட்டே இருப்பாங்க, நீ அங்க போனதுமே எல்லாம் Stand Still ஆயிடுச்சு!”

“.... அவரும் கரெக்டா அந்தப் புனிதமான ஆத்மா நீ தான்னு அடையாளந் தெரிஞ்சுக்கிட்டு நேரே உங்கிட்டயே வந்துட்டாரு!”

“ஏன் வாத்யாரே நீ என்னை ஏன் அங்க அனுப்பணும், மத்தவங்க பிழைப்புல நம்ப உள்ளே புகக் கூடாதுன்னு சொல்வியே...!”

“அதுதான் மாஜிக் ஷோவை விட்டு நீ உடனே புறப்படுன்னு குரல் கொடுத்துட்டேனே!”

“ஆங்.. அங்க ஏன் என்னை அனுப்புவானேன்? உடனே புறப்படுன்னு சொல்லுவானேன்?”

“ஒண்ணு புரிஞ்சுக்கடா ராஜா! ஏன், ஏதுக்குன்னு குருகிட்ட கேள்வி கேக்கறவரைக்கும் நம்பிக்கை சரியா வளராதுடா! சொன்னா, ஏன், எதுக்குன்னு கேட்காம கண்ணை மூடிக்கிட்டுச் செய்யணும். அப்பத்தான் நம்பிக்கை வளர்ந்து பக்தியும் வளரும். சரி, சரி அந்த மாஜிக்ல இருக்கிற குட்டி தேவதையோட பித்ருங்க நம்பளைக் காண்டாக்ட் பண்ணி, “நம்ப புள்ளையாண்டான் ஏதோ பூர்வ ஜென்ம மாயா, ஜால, தாந்த்ரீக விளையாட்டுகள்ல ஏடா கூடமாப் பண்ணிட்டு, மாட்டிக்கிட்டு இன்னிக்கு பூலோகத்துல திணறுது. அதுக்கு விடுதலை நேரம் வந்துடிச்சு., பூலோகத்துலேந்து அது ரிலீஸ் ஆறதுக்குக் கொஞ்சம் உதவணும்னு கேட்டாங்க....”

பித்ரு தேவ மூர்த்திகளுக்குச் சேவை பண்றதுக்குத் தாண்டா இறைவன் சுலபமா தெய்வீக லிங்க் கொடுக்கறாரு! அவங்க சொன்ன மாதிரியே உன்னை அங்க அனுப்பி, திருக்கச்சூர் கோயில்லேந்து அன்னிக்கு நீ கொண்டந்தியே அந்தப் புனிதமான மண்ணோட ஒரு சில துளிகள் உன்கிட்ட இருந்ததுனால அந்தப் புண்ய பூமியின் ஒரு சிறுமண் தரிசனமே அந்த குட்டி தேவதைக்கு பெரிய உத்தம தேவ நிலையை கொடுத்துடிச்சு! இதெல்லாம் கலியுகத்துல தெய்வீகத் திரையில் நடக்கிற இறை அற்புத ரகசியங்கள்! யாருக்குத் தெரியும் இதன் மஹிமை! இந்த அற்புதத்தை நடத்தத்தான் உன்னை அங்கே அனுப்பினோம்!”

திருநீலக்குடி

ஒருமுறை அங்காளி அம்மன் கோயிலில் பெரியவர் ஒரு எறும்புடன் மணிக் கணக்கில் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு திகைத்தான் சிறுவன். அந்த எறும்பும் இருந்த இடத்தைவிட்டு நகராமல் கை, கால்களை ஆட்டிக் கொண்டு குஷாலாகப் பேசிக் கொண்டிருந்தது! பெரியவர் பேசியது என்னமோ தமிழ்தான்! அது என்ன மொழியில் பேசிற்றோ? யாருக்குத் தெரியும்? சிறுவன் எத்தனையோ முறை வற்புறுத்தியும் அவனுக்கு கிளி மொழி, எறும்பு மொழி, பாம்பு மொழிகளைக் கற்றுத் தர மறுத்து விட்டார்.

சிறுவனுடைய தொந்திரவு பொறுக்க முடியாமல் ஒருநாள் பெரியவர் சற்று ஆக்ரோஷமாகவே கூறினார். “ஏண்டா, உனக்கு அறிவில்லையா? பறவைங்க பாஷை, மிருகங்க பாஷை எல்லாம் கத்துக் கிட்டுத்தான் வரும்னு இன்னுமா நெனச்சிக்கிட்டு இருக்க?  குரு அனுக்கிரஹம் இருந்தா எல்லாம் தானே வரும்!”

சிறுவனுக்கு நறுக்கென்று விழுந்த அறிவுக் கொட்டு! இது இன்றைக்கும் வலிக்கின்றது.

ஒரு நாள்... அங்காளி ஆலயத்தில் வழக்கம்போல் தூணில் சாய்ந்தவாறு பெரியவர் அமர்ந்து கொண்டு கண்களை மூடிக் கொண்டிருந்தார். சிறுவனும் அவரருகில் உட்கார்ந்து கொண்டு அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். அவர் தூங்குகிறாரோ, யோகத்தில் இருக்கின்றாரோ, ஏதேனும் யோசித்துக் கொண்டிருக்கின்றாரோ...!

கண் “கண்ட” தெய்வம்! சாதாரணமா அவர் எதையும் யோசித்து, நினைத்து, எண்ணி அவன் பார்த்ததில்லை, எப்போதும் சிவத்தின்பால் சித்தம் கொண்டு லயித்திருக்கும் சித்தருக்கு வேறு சிந்தனை ஏது??

யாரோ ஒருவர் வந்தார்...  “சாமீ.....!”  பெரியவர் கண்களைத் திறக்கவில்லை!

“என்ன உன்னோட பையன் விஷயமா.....?” 

“ஆமாம்..!”

நவகிரகங்கள் திருநீலக்குடி

“எத்தனை வருஷமா மூளை வளர்ச்சி இல்லாம இருக்கு?” 

“இப்ப அவனுக்கு பதினஞ்சு! பொறந்ததுலேந்து மூளை வளர்ச்சி இல்லாம இருக்கு, ஆனா உடம்பு வளர்ச்சி மட்டும் நல்லா இருக்கு!”

“அது சரி, இப்ப என்ன எதிர்பார்க்கிற, பையன் உடம்பு நல்லா ஆகணும்னா?...ம் சொல்லு., பையனுக்கு உடம்பு முழுசா குணம் ஆகணுமா?”

“பெரியவங்க, சொன்னா தப்பா எடுத்துக்கக் கூடாது. ஏதோ பூர்வ ஜென்ம கர்ம வினையால இப்படி ஆயிடிச்சு. அவன் முழுசா குணமாற அளவுக்கு நான் ஒண்ணும் பெருசா தெய்வப் புண்ய காரியம் பண்ணலை, அந்த மாதிரி எண்ணுறதும் பேராசைதான்! பையன் பொறக்கறதுக்கு முன்னாடி நெறையத் தப்புத் தண்டா பண்ணினேன்! இப்ப அத நெனைச்சுத் திருந்தி, என்னால பாதிக்கப் பட்டவங்களுக்கும், இந்த இருபது வருஷத்துல ஓரளவு நிவாரணம் பண்ணிட்டேன்!” ... வந்தவர் தொடர்ந்தார்....

“ஆனா... இவன் இப்படி பொறந்ததுலேந்து நாங்க மனசறிஞ்சு எந்தத் தப்புத் தண்டாவும் பண்ணாம, ஏதோ தெய்வீக நினைவோடு வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். பெரியவங்களைப் பத்தி நேத்திதான் கேள்விப்பட்டேன். நான் பையனைக் கூட கூட்டிக்கிட்டு வரலை, ஆனால் அவனுக்குக் குணமாகணும்னு கேட்கத் தோணலை, ஏதோ தாய், தந்தையரான எங்களோட பாவம், அந்த பையனோட பாவம் எல்லாம் ஒண்ணு சேர்ந்து பையனுக்கு இப்படி வந்துருக்கு! இதை இப்படியே இந்த வாழ்க்கையில அனுபவிச்சுட்டா எல்லாருக்கும் ஒரேயடியாக் கர்மா கழியும்! ஆனா நாங்களும் சாதாரண மனுஷங்கதானே..!”

பெரியவர் இடை மொழிந்தார்..! “சரி., சரி.... நீ என்ன சொல்ல வர்றேன்னு தெளிவாச் சொல்லு, உன்னைப் பத்தி நீ சொல்லித்தான் நான் தெரிஞ்சுக்கணுமா?”

தெய்வீகப் பாசறை, விரஜா தீர்த்தம், அங்காளி வளாகம்! பெரியவர் இன்னமும் கண்களைத் திறக்கவில்லை! சிறுவன் ‘சஸ்பென்சுடன்’ நடப்பதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தான்..! 

“அதுக்கு இல்லைங்க...”  ஏதோ சொல்ல வந்து நிறுத்தினார் வந்தவர்...!

ஸ்ரீசரஸ்வதிதேவி திருநீலக்குடி

“தைரியமாச் சொல்லுப்பா! இது அங்காளியோட ஹெட் ஆபீஸ்! தெய்வீகப் பாசறை இது! விரஜா தீர்த்தம் இருக்கற இடம்! இங்க பொய்க்கும் அதர்மத்துக்கும் வேலையில்லை! உண்மையான உள்ளத்தோட இங்க வந்து ஒப்பிச்சிட்டா, உண்மையான தெய்வீகத் தீர்வு கிடைக்கும்! நம்பிக்கையோட வந்தா எல்லாம் நடக்கும்!” – பெரியவர் தைரிய மூட்டிட...

சிறுவன் அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்! ஏனென்றால் ஒருவருக்காகப் பெரியவர் இவ்வளவு நேரம் செலவழிப்பது மிகமிக அபூர்வம்தானே!

வந்தவர் தயங்கித் தயங்கிப் பேசினார்! “நான் கேக்கறது ரைட்டா, தப்பான்னு உங்களுக்கும் அங்காளிக்கும்தான் தெரியும்.., ஆனா.....”

நல்ல நம்பிக்கை...! சொல்லு... சொல்லு...!”

“ஆனா.... நான் விரும்பறது, கேட்கறது நல்லதா, கெட்டதான்னு எனக்கே தெரியலை! என் பையன் குணமாகனும்னு கேட்டு நான் இங்க வரலை! ஏன்னா கர்மத்தைக் கழிச்சாகணும்னு நல்லாத் தெரியுது..!”

“அதனாலத்தான் நாங்க உன்னோட இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருக்கோம்!” பெரியவர் இன்னும் கண்களைத் திறக்கவில்லை!

“நாங்க எவ்வளவு பெரிய பாவிங்கன்னு, ஐயா கண்களைத் தெறந்து அடியேனைப் பார்க்காம பேசறதுலேந்தே தெரியுது..!”

பெரியவர் கல கல வென்று சிரித்தார்...! “ஒஹோ! கண்ணால் பாத்தாத்தான் தெரியுமா? அப்புறம்.... அப்புறம்....!”

“நேரடியாகச் சொல்லிடறேன் ஐயா! நான் போனதுக்கப்புறம் என் பையனை யார் கவனிப்பான்னு தெரியாது! இந்தக் கட்டை விழறதுக்குள் அவன் போய்ச் சேர்ந்துடணும்! நான் இருக்கற வரைக்கும் அவனை ராமா, கிருஷ்ணான்னு சொல்ல வச்சுக் காப்பாத்திடறேன்! இதுக்கு மட்டும் வழி பண்ணுங்க ஐயா!”

வந்தவர் குலுங்கக் குலுங்க அழுதார்! “இந்தப் பாவி இந்த மாதிரிப் பையன் முன்னாடி செத்துப் போகணும்னு தப்பாக் கேட்டு வந்திருக்கறதனால உங்களோட பாதங்களைத் தொட்டுக் கதறி அழறதுக்குக் கூட பயமா இருக்கு! தள்ளி நின்னு அழுகறேன்! அவ்வளவு பெரிய பாவி நான்..!” வந்தவர் தேம்பித் தேம்பி அழுதார், சிறுவனுக்கு கண்கள் கலங்கின!

ஆனால்.... பெரியவரோ இன்னமும்  கண்களைத் திறக்கவில்லை! குறைந்தது இருபது நிமிஷங்களாவது வந்தவர் கதறி கதறி அழுது கண்கள் வற்றின....!

“சரி.... நான் சொல்றதை நம்பிக்கையோட செய்வியா...?

ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி திருநீலக்குடி

வந்தவர் அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்தார்..! “நிச்சயமாச் செய்யறேன் சாமி! அதுக்குத் தானே வந்திருக்கேன்!”

“டேய், இவரைக் கூட்டிக் கிட்டு உள்ள போய் அங்காளியை 12 தடவை முட்டி இட்டு முட்டிக் கால் பிரதட்சிணம் செஞ்சு வரச் சொல்லு! நீயும் செய்...... போ..!”

பெரியவர் இன்னமும் கண்களைத் திறந்த பாடில்லை!

முட்டி தேயத் தேய, ரத்தக் காயங்களுடன் சிறுவனும் வந்தவரும் திரும்பி வந்தார்கள்!

வந்தால்....... ஆங்கே.... வழக்கமான தூணின் அடியில்... ..... பெரியவர் மண்டியிட்டு அங்காளியை நோக்கிக் கும்பிட்டுக் கொண்டிருந்தார், இன்னமும் கண்களைத் திறவாதபடி.!

“இந்த மாதிரி வீட்டுல தினமும் குறைஞ்சது நாலு மணி நேரம் மண்டி போட்டு அங்காளியைக் கும்பிடு! என் பையனுக்கு எது நல்லதோ அதைச் செய் அங்காளின்னு மட்டும் வேண்டிக்கோ அது போதும்! ஒண்ணுக்கு, வெளிக்குக் கூட எழுந்திரிச்சுப் போகாம நாலு மணி நேரம் தொடர்ந்து தினமும் மண்டி போட்டு இருக்கணும்! காலையோ, மாலையோ , ராத்திரியோ எந்த நேரமானாலும் சரி! வேற எந்த பிரார்த்தனையும் வேண்டாம்! ஒருநாள் கூடத் தவறக் கூடாது. காலையோ, மாலையோ, ராத்திரியோ தெனமும் நாலு மணி நேரம் இப்படி மண்டிபோட்டுப் பிரார்த்தனை செய்! சும்மா, சும்மா என்னை வந்து பார்க்க வேண்டாம்! நான் சொல்லும் போது வந்தால் போதும்!”

அவர் இன்னமும் கண்களைத் திறக்கவில்லை! ... சிறுவனை அழைத்தார்.., டேய் இவரு அழுது அழுது மண்டி போட்டு ரொம்ப டயர்டு ஆயிட்டாரு! கொஞ்சம் டிபன் வாங்கிக் கொடுத்து பஸ் ஏத்தி விட்டுடு!”

சிறுவன் தயக்கத்துடன் புறப்பட்டான்! மீண்டும் திரும்பி வந்து பார்த்தால் பெரியவரைக் காணோம்! மறு நாள்தான் பெரியவர் தரிசனம்!

“ஏன் வாத்யாரே! நேத்தி முழுக்கக் கண்ணைத் திறந்து என்னை ஒரு வாட்டி கூடப் பார்க்கலையே!” சிறுவன் ஆதங்கத்துடன் கேட்டான்..

“ஏண்டா! ரெண்டு கண்ணுக்கும் நடுவுல ஆக்ஞா சக்கரம் ஒண்ணு இருக்குடா! அங்க கூட ஒரு கண் உண்டு! அது மூலமா பாத்துக்கிட்டு இருந்தேனே! அதான் கண்ணைத் தெறக்காமல் இருந்தேன்!”

ஆனால் அதன் பிறகு பெரியவர் ஒரு பிரம்மாண்டமான விளக்கம் தந்தார்!

மூன்று வருடங்களுக்கு மேல் இருக்கும் இந்த சம்பவத்தையே சிறுவன் அடியோடு மறந்துவிட்டான். ஒருநாள்.......

அதுவரையில் சிறுவனுடன் கலகலவென்று பேசிக் கொண்டிருந்த பெரியவர் திடீரென்று கண்களை மூடிக்கொண்டு விட்டார்!

காலை ஏழு மணி இருக்கும், நீராடிய கோலத்தில் இடுப்பில் ஈர வேட்டியுடன் ஒரு ஆள் வந்தார்! பெரியவர் கேட்டார்.! ... ...“ஏம்பா, எல்லா முடிஞ்சுதா?

வந்தவர் கதறிக் கதறி அழுதார்!  

“பையன் புறப்பட்டுட்டானா...?”

“சாமி! நீங்க சொன்னபடி ஒருநாள் கூட விடாம தெனமும் மண்டி போட்டேன்.. நேத்தி திடீர்னு பையன் புறப்பட்டுட்டான்! சாகும் போது இதுவரையில் சரியாப் பேசாத பையன் கடைசி வார்த்தையாம் “அப்பா....! நாளைக்கு அங்காளி கோயில்ல....” அப்படீன்னு ஏதோ சொல்ல.... வந்து அப்படியே சாய்ஞ்சுட்டான்! நேத்தி சாய்ந்திரம் எரிச்சுட்டு இன்னிக்கு எலும்பைப் பால்ல கரைச்சுட்டு நேரே ஓடியாறேன் சாமீ!”

பெரியவர் கண்களைத் திறக்கவேயில்லை! .... “நேரே அங்காளி கிட்டே போய் நன்றி சொல்லிட்டு 12 தடவை முட்டிக் கால் பிரதட்சிணம் செஞ்சுடு!”

வந்தவரை அப்போதுதான் சிறுவன் அடையாளம் கண்டு கொண்டான்! வந்தவர் உள்ளே சென்றிட..... “டேய், அந்த ஆளு ஒழுங்கா முட்டிக் கால் போட்டு பிரதட்சிணம் போடறானான்னு இங்கேயிருந்து கவனி...!” மிகவும் பவ்யமாக பக்தியுடன் முட்டிக் காலில் பிரதட்சிணம் செய்து தட்டுத் தடுமாறி அங்கு வந்தவர், “தம்பி! அந்தப் பெரியவர் எங்கப்பா..?”

சிறுவன் பக்கத்தில் திரும்பிப் பார்த்தான் ... பெரியவரைக் காணோம்! பெரியவரைப் பற்றி எந்த முடிவிற்குத்தான் வர முடியும்? முடிவே இல்லாத தலைப்பு ஆயிற்றே அவர்!

கோடிக்கணக்கான உயிரினங்கள் இருப்பது ஏன்?

மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள் மட்டுமல்லாது கோடிக்கணக்கான நுண்ணிய கிருமிகள், புழுக்கள், வண்டுகள் உலகில் நிறைந்துள்ளன, இவ்வளவு உயிரினங்களுடைய ஜீவ வாழ்க்கை பூலோகத்திற்குத் தேவைதானா? மனிதனுடைய விஞ்ஞான அறிவுக்கு எட்டாத எத்தனையோ கோடானுகோடி உயிரினங்கள் உண்டு. இவை பூலோக வாழ்வில் எத்தகைய பங்கைக் கொண்டுள்ளன என்பதை விஞ்ஞானம் அறியாத போது இத்தகைய படைப்பு தேவைதானா? மனித அறிவிற்கு எட்டாத விஞ்ஞானத்தால் பகுக்கப்படாத வாழ்க்கையைப் பற்றி எந்த முடிவிற்கு வரமுடியும்?

உலகத்தில் எந்த அடைவிற்கும் காரணம் இறைவனுடைய இயக்கமேயாகும். நீங்கள் கண் இமைப்பது முதல் கை, கால் விரல்களை அசைப்பது வரை உண்டு., உடுத்து, உறங்குவது அனைத்திற்குமே காரணம் இறை இயக்கமாகும். இறைவனுடைய கருணை இன்றி எத்தகைய ஜீவ அசைவும் உலகில் ஏற்படாது. ஒரு புலி, மானை அடித்து வீழ்த்தி உண்பது கூட இறை இயக்கத்தின் காரணமாகத்தான்! மனித விஞ்ஞானத்தால் எதுவும் செய்ய முடியாத காரியங்களில் மனிதனுக்கு என்ன பங்கு இருக்கிறது? மனிதனுக்குப் பங்கே இல்லாத நிகழ்ச்சிகளில் அவன் எதற்கும் காரண காரியம் இல்லை என்ற முடிவிற்கு வருவது சரிதானா?

ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி திருநீலக்குடி

மூட்டைப் பூச்சி, கொசு, தேள் என ஒவ்வொரு உயிரினத்தின் படைப்பிற்குப் பின்னால் எத்தனையோ தெய்வீகப் பின்னணிகள் உண்டு. ஆனால் மனிதனைத் தவிர அனைத்துத் தாவரங்களும், விலங்கினங்களும், புழு, பூச்சி இனங்களுமே இப்பூவுலகின் நல்வாழ்க்கைக்காகத்தான் தியாகமய வாழ்வைக் கொண்டுள்ளன என்பது நீங்கள் அறியாத் தெய்வீக இரகசியமாகும். ஆனால் பகுத்தறிவு, ஆறு அறிவு கொண்ட மனிதன் தான் சுயநலப் பிண்டமாய் இப்பூவுலகில் வாழ்ந்து எவருக்கும் பயனற்ற வாழ்க்கையைக் கொண்டுள்ளான் என்பது மிகவும் வேதனைக்குரியதாகும். கொசுவானது தீவினைகள் நிறைந்த இரத்தத்தை அழித்து நம்மைச் சுத்திகரிக்கின்றது. அதர்வண வேத சக்தி நிறைந்ததே பூவரச இலைகளாகும். எங்கோ ஒரு மூலையில் இருக்கின்ற ஒரு பூவரச மரம் இப்பூவுலகில் முழுவதுமாக மறைந்து விட்ட அதர்வண வேதத்தை தம்முடைய இலைகள் மூலமாகப் பரப்புகின்றது என்றால் இறைவனுடைய படைப்பில் ஒவ்வொரு புல்லும், பூச்செடியும், கொடியும், முள் செடியும், மரமும், பூண்டும் விதவிதமான நற்காரியங்களைப் புரிந்து கொண்டு இருக்கின்றனதாமே!

ரோகிணி நட்சத்திரத்திற்குரிய ஊர்வன அம்சம் நாகம்  ஆகும். எனவே ரோகிணி நட்சத்திரக்காரகள் நாகப்புற்றிற்கு ரோகிணி நட்சத்திரம் தோறும் பால்வார்த்து அடிப் பிரதட்சிணம் செய்து வழிபடுதல் மிகவும் சிறப்புடையதாகும். மேலும் நாகநாதன், நாகம்மை போன்ற நாமத்தையுடைய ஆலயங்களிலும் ரோகிணி நட்சத்திரக்காரர்கள் வழிபடுதல் அவர்கள் நட்சத்திரத்திற்குரித்தான வழிபாடாக அமைகின்றது. இவ்வாறாக ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் தங்களுடைய நட்சத்திரத்திற்குரித்தான விருட்சம், பறவை, மிருகம் போன்றவற்றை அறிந்து கொண்டு அந்தந்த வழிபாடுகளை மேற்கொண்டால் இவையாவும் பரிபூர்ண நட்சத்திர தேவதா வழிபாட்டிற்கு வழிவகுக்கும்..

பொதுவாக சந்திராஷ்டம தினம் என்பது அவரவர் ராசியில் இருந்து எட்டாவது இடத்தில் சந்திர பகவான் பிரவேசிக்கும்போது அந்த இரண்டேகால் நாட்களிலும் மன பேதலிப்பு ஏற்படும். ஆதலால் மிகவும் கவனத்துடன் இருந்திடல் வேண்டும் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆனால் பொதுவாக சந்திராஷ்டம தினங்களைப் பலரும் சரியாகக் கவனியாது அந்நாட்களில் கடைப்பிடிக்க வேண்டிய ஸ்ரீசந்திர பகவானுக்குரித்தான வழிபாடுகளையும் பலரும் கைக்கொள்ளாமையால்தான் இந்த சந்திராஷ்டம தினதோஷங்கள் பல்கிப் பெருகிவிடுகின்றன. இதுவரையில் உங்கள் வாழ்நாளில் கடந்துள்ள சந்திராஷ்டம தினங்களில் நீங்கள் முறையான வழிபாடுகளை மேற்கொள்ளாமல் இருந்தால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து சந்திராஷ்டம விளைவுகள் யாவும் ஒன்று கூடி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். நாம்தான் சந்திராஷ்டம தினத்தை சரியாக கவனிப்பதில்லையே என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள்! மேலும் “எத்தனையோ சந்திராஷ்டம தினங்கள் நம் வாழ்நாளில் கடந்து விட்டனவே, அவற்றிற்கு நாம் பிராயச்சித்த பரிகார முறைகளையா கைக்கொண்டோம் என்றும் அலட்சியமாக இருந்து விடாதீர்கள். உங்கள் வாழ்நாளில் நீங்கள் கவனக் குறைவாக விட்ட சந்திராஷ்டம தினங்களின் விளைவுகள் ஒட்டு மொத்தமாகச் சேர்ந்து உங்களுக்குப் பல பெரும் துன்பங்களாக வந்து நிற்கும்! தர்மசாஸ்திரத்தில் சந்திராஷ்டம விளைவுகளைப் பற்றி சந்திர மண்டலத்தில் உள்ள சித்தர்கள் பலரும் அலசி ஆராய்ந்து எத்தனையோவித பரிகார முறைகளைத் தந்தருளியிருக்கின்றார்கள்..!

உதாரணமாக, சதய நட்சத்திர தேவி வழிபட்ட திருத்தலம் திருச்செங்கோடு ஆகும். மேலும் மார்க்கண்டேய மகரிஷி வழிபட்ட / பிரசன்னமாகி உள்ள திருத்தலங்களிலும் ஸ்ரீசதய தேவி வழிபட்டதனால் சதய நட்சத்திரக்காரர்கள் இத்தலங்களில் தங்கள் பிறந்த நாளிலோ மாதாந்திர நட்சத்திர (சதயம்) நாளிலோ வழிபடுதல், தான தர்மங்கள் மேற்கொள்ளுதல் அளப்பரிய பலன்களைப் பெற்றுத் தரும்.
அர்த்தமுள்ள நட்சத்திர வாழ்வை அமைத்துக் கொள்வீர்! கிருத்திகை நட்சத்திரத்தைச் சார்ந்தவர்களுக்கு உரித்தான பட்சியாக மயில் விளங்குவதால் கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் அவ்வப்போது மயிலுக்கு நவதானிய மணிகளை உணவாக அளித்து வந்தால் இதுவும் கிருத்திகா நட்சத்திர வழிபாடாக அமைகிறது. இவ்வாறாக ஒவ்வொருவரும் தங்களுடைய நட்சத்திர வழிபாட்டு முறைகளைத் தக்க சற்குரு மூலமாக அந்தந்த மிருகம், பட்சி, விருட்சம் போன்றவற்றிற்குரித்தான பூஜை முறைகளை அறிந்து கொண்டு தினந்தோறுமோ, வாரந்தோறுமோ, மாதந்தோறுமோ தங்களுடைய நட்சத்திர வழிபாடுகளை மேற்கொண்டு வந்தால்தான் தமக்குரித்தான நட்சத்திர தேவதைகளுடைய பரிபூர்ணமான அனுகிரகம் கிடைக்கும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரித்தான கோலங்களும் உண்டு. இவற்றை ஓவியமாகவோ, கோலமாகவோ வரைந்து தினந்தோறும் வழிபடுதல் வேண்டும். சென்னை திருவொற்றியூர் மற்றும் திருவிடைமருதூர் ஆலயங்களில் 27 நட்சத்திரங்களுக்கும் உரித்தான லிங்க மூர்த்திகள் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்கள்.

பொதுவாக 27 நட்சத்திர லிங்க மூர்த்திகளை வழிபட முடியவில்லையே என்று ஏங்குபவர்கள் தம் ஊரில் உள்ள ஆலயத்தில் ஸ்ரீசந்திர பகவான் தனிச் சந்நிதி கொண்டு எழுந்தருளி இருப்பின் அவரிடம் 27 நட்சத்திர தேவிமார்களும் ஐக்யமாகி இருப்பதால் ஸ்ரீசந்திர பகவானுக்கு 27விதமான அபிஷேக ஆராதனைகளை செய்து வழிபடுவது மிகச் சிறந்த நட்சத்திர வழிபாடாகும். குறிப்பாக சந்திர தரிசன நாளில் (மூன்றாம் பிறை) அதாவது அமாவாசையிலிருந்து மூன்றாம் நாள் சந்திரன் வானத்தில் சில நிமிடங்களே தோன்றுகின்ற போது ஸ்ரீசந்திர பகவானுக்கு 27விதமான அபிஷேக ஆராதனைகளை மேற்கொள்வது சிறப்பு உடையதாகும். சந்தனம், மஞ்சள், இளநீர், பால், தயிர், எலுமிச்சை ரசம் இவ்வாறாக 27 விதமான பொருட்களைக் கொண்டு வழிபடுதல் வேண்டும். சந்திர பகவான் தனித்து எழுந்தருளியிருக்கின்ற சந்நிதிகளில் இவ்வித அபிஷேகம் மிகவும் விசேஷமானதாகும். உங்களுடைய பிறந்த நாளில் சந்திரத் தலமான திங்களுரில் ஸ்ரீசந்திர பகவானுக்கு 27விதமான பண்டங்களைப் படைத்து ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்தால் சந்திராஷ்டம தின தோஷங்களுக்கு நல்ல நிவர்த்தி கிட்டும்.

தம்புல் குகை

தம்புல் குகையில் பிலாகாச யோகம் பூணும் என்றும் வாழும் ஏகாந்த ஜோதி! ஸ்ரீ-ல-ஸ்ரீசிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசர்!

பிரபஞ்சத்தின் உள்ளும் புறமுமாய், எல்லாமாய், இருந்ததுமாய், இல்லாததுமாய் இருக்கின்ற இறைப் பரம்பொருளோடு தோன்றித் தோன்றாமல், தோன்றாமல் தோன்றி என்றும் வாழும் ஏகாந்த ஜோதி ஆதிமூல சித்தர்களே நவநாத சித்தர்கள் ஆவர். நாதங்களில் பலவகைகள் உண்டெனினும் இறைவன் ஆதிநாதமாய் உணர்வித்த நவநாத பீஜாட்சரங்களிலிருந்து ஜோதி மயமாய் ஒளிர்கின்ற நவநாத சித்தர்கள் நம் புனித பாரதத்தின் அன்னபூர்ணா சிகரங்களின் நடுவில் நித்ய வாசம் செய்கின்றார்கள். நவநாத சித்தர்களுடைய மூன்றாம் நேத்திரச் சுடரொளியில் என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாய் அமர்ந்து இறைப் பொலிவு நிறைந்து ஒளிர்பவரே நம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈசர்!

ஸ்ரீ-ல-ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரின் ஆதிமூல சிஷ்ய கோடி ரூபமாய் கலியுக ஜீவன்களின் நல்வாழ்விற்காக சித்த மாமறைகளை ஓதி, உணர்வித்து, கடைபிடிக்கச் செய்யும் வண்ணம் குருவருள் ஆணையுடன் இன்று கலியுகத்தில் நம்மிடையே குருமங்கள கந்தர்வா என எளிமையுடன் பவனி வருபவரே திருக்கயிலாயப் பொதியமுனிப் பரம்பரை, 1001வது குருமகா சந்நிதானம், சக்தி ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அடிமை ஸ்ரீவெங்கடராமன் அவர்கள்.

சிவகுரு மங்கள கந்தர்வா என்று போற்றப்படும் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்தர் ஈசர், குருமங்கள கந்தர்வ லோகத்திலிருந்து உதிக்கின்ற மகத்தான சித்புருஷர்களுள் ஒருவராம்! சிவகுரு மங்கள கந்தர்வா என்னும் தெய்வீக அடைமொழி நவநாத சித்தர்களாலேயே பொழியப் பெற்றது என்பது இடியாப்ப ஈசருடைய இறை மேன்மையைக் குறிக்கின்றது. ராமாவதாரத்தின் போது ஸ்ரீராமரின் சாரண்யத்தில் திளைத்தவர். ராமாயணம் நடந்த திரேதா யுகத்தின் முந்தைய கிருத யுகத்தில் ஸ்ரீஅஸ்தீக சித்தரின் அருள்பிரவாகத்தில், ஸ்ரீஆயுர் தேவி உபாசனையில் உத்தம நிலைகள் பலகண்டு ஸ்ரீவித்தையில் தலைசிறந்தவராக என்றும் இலங்குபவர். பலகோடி யுகங்களைக் கண்ட பார்போற்றும் சித்தர்பிரானே ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசர் ஆவார்.

இப்பிரபஞ்சத்தில் எத்தனையோ கோடி அகஸ்தியர்களும், திருமூலர்களும் தோன்றித் தோன்றி, தோன்றிக் கொண்டே இருக்கின்றனர். மறைவு இல்லாப் பரம்பொருளின் அடிமைகளான சித்தர்களுக்கு மறைவு என்ற ஒன்று உண்டா என்ன? மறைபோல் மறையா, மறைத்திரு மேனியைப் பூண்டவர்களே சித்தர்கள்!

ஆத்ம வாசல்கள்! நவநாத சித்தர்கள்தாம் பரம்பொருளின் ஆதியும் அந்தமும் இல்லா இறைமைக்குச் சாட்சி பூதமாக எக்காலத்தும் சிரஞ்சீவியாக இருப்பவர்களே நவநாத சித்தர்கள், நவநாதங்கள் என்று குறிப்பிடுகையில் பரம்பொருளின் முதல் சிருஷ்டியில் உருவான ஒன்பது நாத விந்து பீஜாட்சரங்களையே குறிப்பிடுகின்றோம். மனிதனுக்கு நவதுவார ஆத்மசக்திகள் உண்டு. மனிதனுடைய உடலில் ஆத்மாவானது உயிர் இணைவுடன் வந்து செல்வதே பிறப்பு இறப்பாகக் குறிக்கப்படுகின்றது. அதாவது இந்த நவதுவாரம் தான் ஆத்மக் கோயில்களுக்கு நவதுவார வாசல்களாக, உயிர்ச் செறிவின் பக்தியாகத் திகழ்கின்றது.

திருநீலக்குடி

இதேபோன்று இப்பிரபஞ்சத்திற்கும் ஒன்பது வாயில்கள் உண்டு. நவஆத்ம வாசல்களான இவற்றுக்குக் காப்பாக, உறுதுணையாக இறை ஆணையால் பொலிபவர்களே நவநாத சித்தர்கள். இவற்றிற்குப் பில துவாரங்கள் என்று பெயர். இவற்றின் சில சாயைகளை (replica) பூலோகத்தின் பல இடங்களிலும் காணலாம். வலஞ்சுழி எனப்படும் ஓம்காரப் பிரணவத்திலிருந்து உருவானவையே இப்பிலதுவாரச் சக்திகளாகும். இதனால்தான் அம்பிகையும் இன்றைக்கும் பல திருத்தலங்களில் துவார சக்தி அம்பிகையாக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றாள். யோனித் தத்துவத்தை விளக்குவதே துவார சக்தி அம்பிகைப் பீடமாகும். சக்தி பீடங்களுள் ஒன்றான அஸ்ஸாமில் உள்ள காமாக்யா திருத்தலம் பில துவார சக்தியில் ஒன்றாக நவநாத சித்தர்களுடைய நித்ய வழிபாட்டுக் கோயில்களுள் ஒன்றாக விளங்குகிறது.

பிலதுவாரங்கள்! இதே போன்று கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் பிலதுவாரம் ஒன்றுண்டு. இதுவும் நவநாத சித்தர்களுடைய நவசித்தப் பீடங்களுள் ஒன்றாம். வடபாரதத்தில் ஹரித்வார் என்பது சிவத் திருமுடியில் உற்பவிக்கும் கங்கைப் பிரவாகம் அதாவது சிவகங்கை பூமியை அடைகின்ற துவாரமாகவும் சிவனார் சடையிலிருந்து தெறித்து அதி உன்னத வேகத்துடன் கிளம்பி வருகின்றது. இதன் வேகத்தைப் பூலோகத்திற்கு ஏற்ப மாற்றும் வண்ணம், கங்கை வரும் வழியில் ஹரியாகிய பெருமானே (ஹரி) துவாரத்தில் அமர்ந்து நதிப் பிரளய யோக சயனம் புரிவதால் ஹரித்துவார் என்ற பெயரைப் பெற்றது. இதுவும் நவபில துவாரங்களுள் ஒன்றாக நவநாத சித்தர்களுடைய நித்ய வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது.!

தம்புல் தெய்வீக குகை! மேலும் இமய மலையில் உள்ள அன்னபூர்ணா சிகரங்கள் மகத்தான தெய்வீகச் சக்திகளைக் கொண்டவையாம். பத்ரிநாத் அருகே விச்வமாரம் என்னும் இடத்திலிருந்து விடியற்காலையில் நாம் அன்னபூர்ணா சிகரத்தைத் தரிசித்தால் அவற்றில் பொன்மய ரேகைகள் ஓடிப் பரிமளிப்பதை நாம் இன்றும் கண்கூடாகக் காணலாம். எவ்வாறு நம் நாபியில் (தொப்புள்) இருந்து எழுகின்ற விண்ணிழை நாண் (Silver cord)  ஆத்ம ரூபத்தின் பரவெளி யாத்திரை இழைப் பாதைச் சுருளாக விளங்குகிறதோ, இதே போல நவநாத சித்தர்கள் பரஞ் ஜோதியிலிருந்து, பரபிரம்மத்திலிருந்து, சதாசிவத் திருமேனியிலிருந்து, சர்வேஸ்வரனிடமிருந்து வருகின்ற இறைப் பொன் இழைப் பாதையே இந்த சுவர்ண ரேகைகள் ஆகும்.

இந்த சுவர்ண ரேகைப் பாதைகள் மூலமாகத்தான் தம்புல் (TO BE PRONOUNCED AS DHAMBUL)  என்னும் தெய்வீகக் குகையை அடைந்திடலாம். இந்தத் தம்புல் குகையில்தாம் நவநாத சித்தர்கள் நித்ய வாசம் செய்கின்றார்கள். பலகோடி சூரிய மூர்த்திகள், சந்திர மூர்த்திகள், சிவலிங்க மூர்த்திகள், அம்பிகையரைத் தரிசித்தவர்களகவும், அவர்களுடைய இறையனுபூதிகளில், இறைலீலைகளில் அன்றும் இன்றும் என்றும் பங்கு கொள்பவர்களாகவும் நவநாத சித்தர்கள் இருப்பதால் முதலும் முடிவுமற்ற சித்புருஷர்களாக இவர்கள் விளங்குகின்றனர். நவநாத சித்தர்களுடைய யோக நிலைகளில் அவர்களுடைய ஞானப் பார்வையின் வண்ணத்தில் பிலாகாச யோகம் பூண்டவராய் அமர்ந்திருப்பவர்தாம் ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசர் ஆவார். நவநாத சித்தர்களுடைய பூலோக சித்த பூஷண ஆலயமாக விளங்குகின்ற தம்புல் குகையைப் பொதுவாக எவரும் அறிந்திட இயலாது. அண்ட சராசரத்திலேயே அனைத்துக் கோடி லோகங்களிலும் சென்று வரும் இறையருள் பெற்ற நவநாத சித்தர்கள் ஒன்பது பேருமே ஒன்று சேர்ந்து யோக பாவனை கொள்கின்ற தலமாக தம்புல் குகை விளங்குவதால் அன்னபூர்ணாச் சிகரமே இன்றைக்கும் எத்தனையோ கோடி தெய்வீக அற்புதங்களைக் கொண்டதாக விளங்குகிறது.

தம்புல் காட்டும் தெய்வீகத் தாத்பர்யங்கள்! பூலோகத்தில் உள்ள சுயம்பு லிங்க மூர்த்திகளின் ஜோதிப் பிரவாகம் திருஅண்ணாமலையிலிருந்து பெறப்பட்டாலும் அவை முதலில் வினாயகத் தொடக்கம் கொள்வது இந்த அன்னபூர்ணாச் சிகரத்தில்தாம்! பிரபஞ்சத்தில் பவனி வருகின்ற அனைத்துக் கோடி தேவாதி தேவ, தெய்வ மூர்த்திகளும் தங்களுடையக் கிருத்தியங்களைத் தொடர்வதும் இச்சிகரங்களின் திருமேனியில் கொண்டிடும் நடன பாவனைகள் மூலம்தான்!

பலா தலவிருட்சம் திருநீலக்குடி

காமாட்சி, கற்பகாம்பாள், மீனாட்சி, குங்குமசௌந்தரி என எந்த அம்பிகை அவதாரங்களும் அன்னபூர்ணாச் சிகரங்களிலிருந்துதான் ஆத்ம ஜோதிப் பரிபாலனங்களைக் கொள்கின்றனர். மயில், யானை, நந்தி போன்ற தேவ வாகனங்களையும் அம்பிகையர் இச்சிகரத்திலிருந்துதான் பெறுகின்றனர். ஏனென்றால் மயிலுக்குரிய துத்தநாக வண்ணம், மாதுளம் பழத்திற்கான செம்பவள முத்து போன்ற அனைத்திற்குமான கோடானு கோடி வண்ணங்களும் தம்புல் சித்தப் பீடத்திலிருந்துதான் தோன்றுகின்றன. தாமரைப் பூவில் பெண் குழந்தை வடிவிலும் மற்றும் பசு, நண்டு போன்ற பல வடிவங்களையும் அம்பிகையர் பெறுவது தம்புல் இறைத் தடாகத்தில் தான்! இறைவனே வலக்கண், இடக்கண், நெற்றிக் கண் ஆகிய முக்கண் ஜோதியிலிருந்து தோற்றுவித்த அன்னபூர்ணா சிகரத்தின் தெய்வீக மையமே தம்புல் குகைப் பீடமே!

அன்னபூர்ணாச் சிகரமும் தம்புல் பீட ஜோதியும் நவநாத சித்தர்களுடைய ஒளி நாடாப் பேழையாக, இறை அனுபூதிச் சுரங்கமாக விளங்குகிறது. அதாவது ஆதியும் அந்தமும் இல்லா ஆனந்தப் பரம்பொருளாகிய சிவனாரோடு எப்போதும் இறைத் தகைமை சான்ற நவநாத சித்புருஷர்கள் விளங்குவதால் அனைத்துத் தெய்வமூர்த்திகளுடைய இறை லீலைகளும், இறையனுபூதிகளும் நவநாத சித்தர்களுக்கு உணர்விக்கப் பெறுகின்றன. இதனால்தான் நவநாத சித்தர்கள் பிரபஞ்சத்தின் அனைத்துப் புராணங்களிலும் தக்க இறை சாட்சி அவதாரிகைகளைக் கொண்டவர்களாக விளங்குகின்றனர்.

இறையின் மறை நிழல் நவநாத சித்தர்! ராமாயணம், மகாபாரதம், கந்த புராணம், சிவபுராணம் போன்ற அனைத்துப் புராணங்களிலும் நவநாத சித்புருஷர்கள் சாட்சி பூதமாகக் கண்டிருந்தமையால், தெய்வ மூர்த்திகளே நவநாத சித்தர்களிடமிருந்துதான் புராண விளக்கங்களைப் பெறுகின்றனர். உதாரணமாக பீஷ்மருடைய பாத்திரம் பற்றித் தேவலோகங்களில் தெய்வீக உரையாடல்கள் நிகழ்வதுண்டு. அப்போதெல்லாம் நவநாத சித்தர்களே பீஷ்மாச்சாரியாரிடம் சென்று மீண்டும் மகாபாரதக் காட்சிகளை நேரடி வர்ணனையாக உணர்த்தும் தெய்வ வல்லமை கொண்டவர்களாம். இத்தகைய மகா வல்லமை பொருந்திய நவநாத சித்தர்களுடைய தம்புல் பீடத் தெய்வச் சமவெளியிலேயே ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசர் பிலாகாச யோக நிலை பூண்டுள்ளார் என்றால் நவநாத சித்தர்களுடைய அருமைச் சீடர்தாமே ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசர். கோடானு கோடி சதுர்யுகங்களாக பிலாகாச யோகத்திலேயே அமர்வதென்றால் எத்தகைய மகத்தான சித்புருஷர் அவர்!

அட்டைப் படத்தில் நீங்கள் காண்பது அன்னபூர்ணா சிகரத்தின் பலகோடித் தெய்வ ரகசியங்களின் ஒரு துளியின் கோடானு கோடி அணுச் சுடராகும். ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரின் வலப்புறம் உள்ள தம்புல் நீர்வீழ்ச்சிப் பிரவாகத்தின் வலப்புறச் சருக்கை வழிதாம் தம்புல் தெய்வீக குகைக்கான தேவ நடைபாதை வழியாகும். எவருக்கு 108 ஸ்வர்ண நிறங்கள் உடைய ஸ்வர்ண ரேகா எனப்படும் ஒளிப் பாதை தென்படுகின்றதோ அவர்கள்தாம் இந்த தம்புல் குகையை இறையருளால் அடைய முடியும். நாம் நீர்வீழ்ச்சியாகக் காண்பது தம்புல் தேவ நீரோட்டத்தில் தோன்றுகின்ற இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துக் கோடி புண்ணியத் தீர்த்தங்களின் பரந்த நீரோட்டமாகும். உண்மையில் தம்புல் நீர்ச்சுனைதான் பலகோடி தேவ லோகங்களுக்கும் தேவ ஆறுகளாகப் பாய்கின்றன. இவற்றை முறைப்படுத்துபவர்களே நவநாத சித்தர்களாவர்.

நவநாதங்கள் எனப்படுபவை ஒன்பது முக்கியமான ஆதிமூல பீஜாட்சரங்களாகும். இதன் நீரோட்டச் சமவெளியில் எத்தனையோ தெய்வீகப் புஷ்பங்கள் நிறைந்துள்ளன. தம்புல் புண்ணியத் தீர்த்தம் உருவாக்கும் தேவ தடாகங்களும் நிறைய உண்டு, இவைதாம் பூலோக ஆலயத் தீர்த்தங்களுக்கு மூலாதாரமாம். தம்புல் தேவ நீரோட்டத்திலிருந்து எழுகின்ற காற்றுதான் இந்தப் பிரபஞ்சத்தின் புனிதமான பிராணாயாமப் புண்ணியக் காற்றாம். இதையே நாம் ஓசோன் (OZONE) என்று அழைக்கின்றோம். இங்கு தம்புல் மகிமையைப் பற்றிச் சொல்வதா? நவநாத சித்தர்களைப் பற்றி உரைப்பதா? அல்லது தம்புல் தெய்வீகக் குகையில் நவநாத சித்தர்களின் நேரடி அருட்பார்வையில் பிலாகாச யோகம் கொண்டிருக்கும் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரின் மகிமையைப் பற்றி எடுத்துரைப்பதா? ஒவ்வொன்றிற்கும் கோடானு கோடி புராண காண்டங்கள் அல்லவோ தேவைப்படும்!

பிலாகாச யோகம் என்று நமக்குப் புரியும் வகையில் நிர்விகல்ப சமாதியின் உத்தம நிலைகளுள் ஒன்றைச் சொல்கின்றோமே தவிர, ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரின் ஒவ்வொரு தேவ ஒளி உடல் அணுவும் ஒவ்வொரு நிர்விகல்ப சமாதி நிலையைக் கொண்டுள்ளது. நமக்குப் புரிவதற்காக அவருடைய மானுட உடல் யோக நிலயைப் பூண்டது போல நமக்குத் தோன்றுகின்றதே தவிர தேவாதி தேவர்களுக்கு அவர்களுடைய உத்தம தவ நிலைகளுக்கேற்றவாறு அவர்தம் யோக பிம்பமானது கோடிப் பிரகாசச் சுடர் வடிவாய், ஒளிமயமான தேக ரூபத்தைக் காட்டும். எறும்புகளுக்கு அவர் புற்று மண்ணாலான சுயம்பு யோகியாகக் காட்சி தருவார். அவருடைய கரங்கள், பாதரேகைகள் யாவும் சிவலிங்க வடிவிலும், வண்ணத்திலும் பூரித்திருக்கும். நகங்கள் என்று நாம் அவரிடம் காண்பவை அனைத்தும் விதவிதமான பாணலிங்கங்களே., சுருள் சுருளாக அமைந்திருக்கும் கேசக் கற்றைகள் யாவும் நடராஜ சிவபெருமானின் ஓய்வில்லா நாட்டியத்திலிருந்து எப்போதும் பொழிந்து கொண்டிருக்கும் பீஜாட்சரக் குழல் வடிவங்களே!

இன்றைக்குப் பூலோகத்தில் நிலைத்திருப்பது இறைவன் அளித்த வேத மறைகளின் ஒரு மிகச் சிறிய நுண்ணியப் பகுதியிலும் பலகோடி மடங்கு பகுத்த ஒரு மிக நுண்ணிய பருப் பதமேயாகும். இந்தப் பிரபஞ்சத்தில் வழக்கிலிருந்து மறைந்துவிட்ட எத்தனையோ கோடி வேத மாமறைகளின் ஒளிக்கற்றைகளே ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரின் திருமேனியில் வேதக் குழல்களாகப் பொலிகின்றன. ஒருவித பிரபஞ்ச சிருஷ்டி விளக்கத்தில் பிரபஞ்சத்தை மேலே வேர்ப் பகுதியிருக்க, கீழே தொங்குகின்ற ஆலமரத் தண்டு உடலாகக் கூறுவார்கள். கல்லால மரத்தின் பிரபஞ்சத் தாத்பர்யங்களுள் இதுவும் ஒன்றே. அக்கல்லால மரத்தின் கீழ் ஞான வடிவம் கொண்டுள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தியிடம் நவநாத சித்தர்கள் பெற்ற கல்லால மர வேத வேர்ச் சுழல்கள்தாம், பீஜாட்சர மா மறைக் குழல்களாக, மறை வேர்ச் சுடர்களாக ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரின் திருமேனியில் பதிந்துள்ளன. ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரின் பின்னணியில் பிரபஞ்சத்தின் அனைத்து விதமான தேவ காட்சிகளையும் கண்டு பரமானந்தம் கொண்டிடலாம். ஒவ்வொரு மூலிகைச் செடியும் விதவிதமான வேதக் கதிர் ஒலிகளைப் பரப்புவையாம். ஒவ்வொரு புஷ்பமும், தம்புல் குகையில் புஷ்பிக்கும்போது பல்லாயிரம் கோடி மாமறைப் பீஜாட்சரங்களையும் மலர்வித்துப் பிரபஞ்சத்திற்கு அளிக்கின்றது.

தம்புல் கண்டார் சம்புநாத குருவே! இத்தகைய தெய்வீக மகத்துவங்கள் நிறைந்த ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரிடம் கலியுகத்தில் நேரடியாகவே குருகுலவாச பாக்கியத்தைக் கொண்டவரே இன்று நம்மிடையே ஸ்ரீஅகஸ்திய விஜயம் வாயிலாக, குருவாய் மொழிகளை ஒலித்து, சற்குருவாக ஒளிர்ந்திடும் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள், தம் சற்குருவினுடைய அனந்தகோடி சிஷ்யராகவும், ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரின் சிஷ்ய பாதமாகவும் அவருடைய கலியுக ஒளிப்பிரதி பிம்பமாகவும் ஒளிர்பவரே குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள். குருவின் உருவாய், உருவே குருவாய், குருவின் கருவாய், குருவின் தருவாய், குருவின் திருவாய், குருவின் திருவடியாய் நம்மிடையே திருக்கயிலாயப் பொதியமுனிப் பரம்பரை 1001வது குருமஹா சந்நிதானமாகப் பிரகாசிக்கின்ற குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களே தேவாதி தேவர்களுக்கும் பெறுதற்கரிதான நவநாத சித்தர்கள் நித்ய வாசம் செய்யும் தம்புல் தெய்வீகக் குகையைத் தரிசித்து அங்கு என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாகப் பிரகாசிக்கும் ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரின் கருணைக் கடாட்சத்தைப் பெற்றுத் தரும் சற்குருப் பீடமாய் மிளிர்கின்றார்.

சொர்க்கம் என்றால் சொர்க்கத்தைக் கண்டு அனுபவித்தவர்கள் எடுத்துரைத்தால்தானே நமக்குச் சொர்க்கத்தின் மகிமை புரியும். பல புண்ணிய நெறிகளின்படி வாழ்ந்தால் சொர்க்க வாசம் கூட எளிதில் கிட்டிவிடும். ஆனால் ஆதிமூலப் பரம்பொருளின் அனுபூதிச் சித்தர்களாக விளங்குகின்ற நவநாத சித்தர்கள் நித்ய வாசம் செய்யும் தம்புல் குகை மகிமையை அதனைத் தரிசித்தவர்தாமே உணர்த்திட முடியும்! நம் புண்ய பாரதத்தில் அன்னபூர்ணா சிகரங்கள் விளங்குவது நம்முடைய பெரும்பாக்கியமே.!

தம்புல் குகையில் (சிவ) தாண்டவப் பிரகாசம். தம்புல் குகையில் சூர்ய, சந்திர ஒளிவாசம் கூட நவநாத சித்தர்களால்தான் நிர்ணயிக்கப்படுகின்றது, அங்கு நிலவுகின்ற தட்பவெட்ப நிலையும் ஒளித்தோற்றமும் அட்டைப் படத்தின் மேற்புறத்தில் காணலாம். அதாவது பிரம்ம முகூர்த்த நேரத்தில் கிரக ஒளிகளின் தியானச் சுடர்கள் பரிணமிக்கும், தேவ ஒளி நிலையே, தம்புல் குகைவாசமாகும். இங்கு இரவு பகல் என்ற பேதம் கிடையாது. எப்போதும் பிரம்ம முகூர்த்த சோபனமே நிலவிடும். பிரம்ம முகூர்த்தம் என்றால் நாம் பூமியில் காண்கின்ற விடியற்காலை நேரப் பாங்கு என்று எண்ணிடாதீர்கள். நம் அறிவிற்கு எட்டியவரையில் ஓரளவு புரியும் வண்ணம் சொல்ல வேண்டுமென்றால் காலை இளஞ் சூரியக் கதிரொளிக் கீற்றுகள், மாலை அந்திச் சுடர்களின் பொன்மய வண்ண வடிவுகள் கூடுவதே இதன் வண்ணமாம் தம்புல் குகையின் சீதோஷ்ண நிலையானது பிராணாயாம யோக சஞ்சாரங்களுக்கு உத்தமமானதாக விளங்குகின்றது.

அட்டைப் படத்தில் காண்கின்றதைப் போலவே தம்புல் நீரோட்டம் அமைந்திருந்தாலும் இது இப்படித்தான் இருக்கும் என்று சொல்ல முடியா வண்ணம் தம்புல் குகையில் அளப்பரிய, அதியற்புதமான தெய்வாம்சங்கள் நிறைந்து விளங்குகின்றன. இங்கு நாம் அளிப்பவை எல்லாம் நம்முடைய கல்வி அறிவிற்கேற்ப பகுத்தளிக்கப்பட்டப் பாட விளக்கங்களே..! உண்மையில் நவநாத சித்தர்கள் எப்போதும் உறைவதாக விளங்குகின்ற தம்புல் குகை மனிதனுடைய ஆறறிவுக்கும், பகுத்தறிவிற்கும் அப்பாற்பட்ட பரந்த இறை நிலையாகும். இந்தப் பிரபஞ்சம் இயங்குவதற்காக இறைப் பரம்பொருளோடு இணை நிழலாக, அருட்துணை சாட்சியாக இருப்பவர்களே நவநாத சித்தர்கள் ஆவர். பூலோகமே தெய்வீகப் புனிதத்திற்கு ஏற்றது என்பதை உணர்விக்கும் வகையில் அவர்கள் தம்புல் குகையை அன்னபூர்ணா சிகரத்தில் பெற்றிருக்கின்றார்கள். அவர்கள் நினைத்திருந்தால் எத்தனையோ தேவலோகங்களில் தம்புல் குகை வாசத்தைப் பெற்றிருக்க முடியும். ஆனால் பூலோகத்தின் புனிதத் தன்மையை உணர்த்திடவே தங்களுக்குரித்தான தம்புல் குகை வாசத்தை இங்கு பெற்றார்கள்.!

தம்புல் இலையில் வேத தாண்டவம்! இங்குள்ள தடாகத்தின் தேவ இலைகள் யாவும் வேதச் சுடர்களைத் தாங்குபவையாகும். எவ்வாறு தாவரங்கள் பூமியில் உள்ள இயற்கைச் சத்துக்களை இலையாகவும், காய்கறிகளாகவும், கனிகளாகவும் நமக்கு மாற்றித் தருகின்றனவோ, அதே தாவரங்கள்தாம் சித்தர்கள், மகரிஷிகளுடைய தியான யோகப் பலன்களின் மூலம் வேத சக்திகளை ஜீவன்களுக்கான நல்வரச் சக்திகளாக மாற்றி அளிக்கின்றன.. தம்புல்குகை நீர்த் தடாகத்தில் மிதக்கின்ற தாவர இலைகள் யாவுமே வேத உணவாக, வேத பீஜாட்சரங்களை சித்தர்களுடைய யோக சக்திகளுடன் சமைத்துப் பரிமாறப்பட்ட மறை உணவாக நமக்கு அளிக்கின்றனர்.

எனவேதாம் இன்றைக்கும் வாழை இலை, மந்தார இலைச் சாப்பாடு பெறுதற்கரிய வேத சக்திகளைத் தருகின்றன. மந்தார இலைக்கு சாம வேத சக்திகள் நிறைய உண்டு. தாமரை இலைக்கு ஸ்ரீவித்யா சக்ர சக்திகள் மிகுதி. வாழை இலையில் நால்வேத சக்திகளும் குடி கொண்டுள்ளன. தென்னை இலையையும் சாப்பாட்டு இலையாகப் பின்னுவதுண்டு. தென்னை இலையில் ஞான பீஜாட்சர சக்திகள் அதிகம். பூவரச இலைக்கு அதர்வண வேத சக்திகள் நிறைய உண்டு. மொத்தத்தில் தம்புல் குகையானது நவநாத சித்தர்களுடைய பிரபஞ்ச  இறை ஆய்வுக் கூடமாக விளங்குகின்றது. இறை ஆய்வு என்றால் இறைமையை ஆய்வதல்ல! இறைமையைப் பிரபஞ்சத்தில் ஊட்டி உணர்த்துவதற்கான நல்வழிமுறைகளை ஆய்ந்து அளிப்பதாகும். எனவேதாம் தம்புல் குகையில் நீர்வீழ்ச்சி, நதி, நீரோட்டம், ஓடை, தாவரங்கள், கற்கள், பாறைகள், மலைகள் என அனைத்தின் இறை வடிவுகளையும் பரிபூரணமாகக் கண்டிடலாம்!

தம்புல், the divine server! இங்கு ஒரு தாமரைக் கொடிக்கு அளிக்கப்படுகின்ற வேத சக்திகள் இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துத் தாமரைக் குடும்பங்களுக்குச் சென்றடையும். இதற்குரிய DIVINE SERVER ஆக தம்புல் குகை விளங்குகின்றது. இங்குள்ள ஒரு சிறுபாறைக் கல் துகளுக்கும் நவநாத சித்தர்கள் அளிக்கின்ற யோக சக்தியானது இமயமலை, ஆல்ப்ஸ், பொதிய மலை, ஆஸ்திரேலியா மலை, ஜப்பான் மலைக் குன்றுகளுக்கும் உடனடியாகச் சென்றடைகின்றது. இவ்வாறாக, தம்புல் தெய்வீக மகத்துவத்தைப் பலகோடி புராணங்களாக விரித்திடலாம். எவ்வாறு இறைவனுடையக் கிருத்திய நிகழ்ச்சிகளுக்கு, அவதார வைபவங்களுக்கு, இறை மூர்த்தி வடிவ அனுபூதிகளுக்கு நவநாத சித்தர்கள் அருட்பெரும் சாட்சியாக (DIVINE WITNESS)  விளங்குகின்றார்களோ, இதே போல நவநாத சித்தர்களுடைய இறைப் பணிகளுக்கு, கடவுள் சித்தாந்தங்களுக்கு (சித்தோபநிஷத்), ஆண்டவத் திருக்காரியங்களுக்கு,  இறை சாட்சியாக மிளிர்பவரே ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசர் ஆவார். இவர் பல லோகங்களிலும் பல இறைநாமங்களைத் தாங்கி வருபவர். எவ்வாறு நவநாத சித்தர்கள் என்று பொதுப்படையாகக் குறிக்கின்றோமோ, ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரும் தமக்கெனத் தோன்றாப் பெயருடையவர்! மனித குல அறிவு அடையாளத்திற்காக இடியாப்பச் சுழல்கள் போல் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதியின் இறைச் சாட்சிப் புனலே ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசர்! அட்டைப் படத்தில் அவருடைய திருமுடிகள் இடியாப்பச் சுற்றுக்களைப் போல் இலங்குவதைக் காணலாம். இவ்வாறு சித்புருஷர்கள் பலவிதக் காரணப் பெயர்களை பூண்டே தம்மைப் புலப்படுத்திக் கொள்கின்றார்கள்.

சித்தர்கள் யோகத்தில் அமர்ந்தால் அவர்கள் எப்போதும் காண்பது இறைவனுடைய திருநடனக் காட்சியே! சிதம்பரப் பரம்பொருளான நடராஜப் பெருமான் என்றும் எந்நேரமும், எங்கும் திருநடனம் புரிந்து கொண்டிருப்பர்தாமே!  இந்தப் பரவெளிக் கோல நாட்டியத்தையே ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசர் கண்டு தரிசித்துப் பரமானந்தம் கொண்டிருக்கின்றார். இந்த இறை நடனக் காட்சியைக் காணும் பாக்கியத்தை நாம் பெறவில்லையாதலால், தம்புல் குகையில் அவருடைய திருமேனியிலிருந்து எழுகின்ற பிலாகாசக் கதிர்கள்தாம் நம் அறிவிற்கு எட்டியவகையில் ஒரு மானுட வடிவு கொண்டு குருமங்கள கந்தர்வா ஆக, கலியுகத்தில் தோற்றம் கொண்டுள்ளது. இவரே அவர்!! அவரே இவர்!!! திருவின் வடிவே சிவம்!!! சிவத்தின் வடிவே குரு!! குருவின் வடிவே குருசிஷ்ய பாதம்!

தம்புலின் பல கோள ஆகர்ஷண சக்தி! தம்புல் குகையைச் சென்றடைவதற்குத் தம்புல் நீரோட்டத்தின் கீழிருந்து மேலாக, தேவ நீரோட்டப் பாதையில் செல்ல வேண்டும். பூமியின் ஆகர்ஷ்ண சக்திக்கு மாறான தேவ ஆகர்ஷண சக்தியைப் பூண்டவர்கள்தாம் விண்வெளியில், மேலே, உயரே நடந்து செல்ல முடியும். பூமாதேவி தன்னுடைய பூமி இயக்கத்திற்கான கிருத்திய சக்தியைத் தம்புல் குகைவாயிலில் செந்நிறப் பூக்களாக (அட்டைப் படம் காண்க) நிலை நிறுத்திச் செல்கின்றாள். தண்டலப் புஷ்பம் எனப்படும் இவற்றை நாம் தரிசிக்க, தரிசிக்க நாம் எடை குறைந்தவர்களாய், பூமியின் ஆகர்ஷண விதிகளுக்கு, நியதிகளுக்கு அப்பாற்பட்டவர்கள் ஆகின்றோம். இந்நிலையில் நாம் நீரைக் கீழே ஊற்றி அர்க்யம் அளித்தால், நீர் அப்படியே பரவெளியில் நிற்கும்! கீழே விழாது! ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசனின் பின்னணியில் ஒளிர்கின்ற சூரிய வட்டப் புஷ்பங்கள்தாம் கோள்களின் சங்கமத்தில் ஏற்படுகின்ற கிரக த்வீப ஆகர்ஷணச் சக்தியைத் தருகின்றது. இவைதாம் நம்மை மேல் நோக்கிப் பூமியின் ஆகர்ஷணத்திற்கு மறுபுறமாக நடந்து செல்வதற்கான திலகப் பாதசக்திகளைத் தருகின்றன.

பொதுவாக நெற்றியில் நாம் நீளமாக இடும் சந்தனக் கீற்றுப் பாதைக்கு இந்த சூரிய வட்டப் புஷ்பச் சக்தி அதிகம். கபாலத்தை இருவடிவாகக் காட்டுவது போல் நெற்றியில் இடும் சந்தனக் கீற்றுதான் சூரியவடிவப் புஷ்ப சக்தியைத் தரும். ஒருவர் முப்பது வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்து தினந்தோறும் நீண்ட சந்தனப் பட்டையை நெற்றியில் இட்டு வந்தால் சூரிய வழிக் கபாலச் சக்திகளை எளிதில் பெற்றிடலாம், தக்க சற்குருவின் மூலம் குறித்த இறைப்பணிகளை ஆற்றி வந்தால்!

தம்புல் குகையில் உள்ள சந்தன மரங்கள் மகத்தான தெய்வீகச் சக்திகளைக் கொண்டவையாம்! இங்குள்ள தர்பை, வில்வம், துளசி போன்றவை நவநாத சித்தர்களால் பூஜிக்கப்படுபவையாதலால், ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரே இவற்றின் தெய்வீகக் கல்யாண நற்குணங்களைத் தம்முடைய செங்குழல் வடிக் கால்களால் சித்தர்களுடைய திருவாய் மொழிகளைக் கடைபிடிப்போர்க்கு நல்வரங்களாக அளித்திடுகின்றார். ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் வருகின்ற நித்ய கர்ம நிவாரண விதிகளை முறையாக, பக்தியுடன் கடைபிடிப்பவர்களுக்கு அவருடைய இடியாப்ப குழல் வடிவேத தரிசனம்தனை தக்க சற்குருவின் மூலம் பெற்றிடலாம்! நம்மிடையே குருமங்கள கந்தர்வாவாக பூலோக வாசம் பூண்டுள்ள ஸ்ரீவெங்கடராமன் அவர்கள், ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரின் குருநாதர் ஒளிப்பிரகாச சிவச் சுடர்களான நவநாத சித்தர்களைப் போற்றும் சிஷ்யபாதமாக இலங்குவதால் இவர்தம் வடிவில் அவர்தம் சற்குருவின் மூலச் சுடரைத் தரிசிப்போமாக!

அன்னபூர்ணா சிகரத்திற்கும் அண்ணாமலை ஜோதியே பிரதானம்! திருஅண்ணாமலைக்கும், அன்னபூர்ணா சிகரங்களுக்கும் வேத வேரோட்ட, தேவ நீரோட்ட, தெய்வீக இணைப்புகள் உண்டு. ஒவ்வொரு பௌர்ணமி தோறும் திருஅண்ணாமலையின் அருணாச்சல ஜோதிக் கிரணங்கள் அன்னபூர்ணா சிகரங்களுக்கும் தம்புல் குகைக்கும் பாய்கின்றன. திருஅண்ணாமலையாரின் பரிபூரண அனுகிரகங்களைப் பெற்றவர்களே, இங்கு பலகோடி முறை கிரிவலம் வந்து திருஅண்ணாமலையில் குறித்த நாளில், குறித்த நட்சத்திர ஹோரையில், குறித்த சுப ஹோரையில், குறித்த அமிர்த வாஸ்து நேரத்தில் திருஅண்ணாமலையில் சற்குருவின் நேரடிப் பார்வையில் அன்னபூர்ணா சிகரத் தரிசனங்களைப் பெறுபவர்களுக்குத்தான் தம்புல் தெய்வீக ஒளிப்பாதைப் புலப்படும். ஆனால் திருஅண்ணாமலையிலேயே பலகோடி யுகங்களுக்கு ஒருமுறைதான் ஸ்ரீஅன்னபூர்ணா தரிசனம் தென்படும். நாம் இன்றைக்குத் திருஅண்ணாமலையில் காண்பது சுமார் 14 கிலோமீட்டர் சுற்றளவு உள்ள மலைத் தரிசனமேயாகும். ஆனால் மணிக்கு தேவ நடையாகப் பல்லாயிரம் மைல்கள் விரிந்த துரித நடைவாகு கொண்ட ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தியே திருஅண்ணாமலையைத் தினந்தோறும் கிரிவலம் வருகின்றார் என்றால் அந்தத் தேவ கணக்கில் திருஅண்ணாமலையின் விஸ்தீரணம் கோடானுகோடி மைல்கள் கொண்டதாக இருக்கும் என்பதை உணர்ந்திடுங்கள்.

லம்ப காடகம் என்ற ஒரு லோகத்தில் உள்ள மனிதர்களுடைய உயரம் குறைந்தது 400 அடியிருக்கும். நம்முடைய மகாபாரத, ராமாயண சருக்கங்களில் மிகவும் உயரமானவர்களைப் பற்றிய குறிப்பு வருகின்றது அல்லவா? இந்த லம்ப காடக மனிதர்கள் நம் பூலோக திருஅண்ணாமலைக்குச் சூட்சும வடிவில் கிரிவலம் வருகின்றபோது அவர்களுடைய கண்களுக்கு திருஅண்ணாமலை எவ்வடிவு கொண்டிருக்கும் என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள். நத்தையும், ஆமையும், எறும்பும், மண்புழுவும் கண்களே இல்லாத ஜீவன்களும் கூட திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருகின்றன என்றால் அவர்களுடைய தேக அமைப்பு, பகுத்தறிவு, மூளையின் பாங்கிற்கேற்பத் திருஅண்ணாமலையின் வடிவு அமைந்திடும்தானே! எனவே “திருஅண்ணாமலை ஒன்றே!” அதைப் பகுத்தறியும் பாங்கில்தான் அதனுடைய விசேஷமான கல்யாண குணங்கள் புரியவரும். தாவரங்கள்கூட திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருகின்றன. தாவரங்கள்தாம் ஒரே இடத்தில் நிலைத்து நிற்பவைதாமே. அவை எவ்வாறு திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்திடும்? அனைத்திற்கும் நல்வழிகாட்டும் அருணாச்சலப் பரம்பொருள் தாவரங்களுக்குரித்தான கருணைக் கடாட்சத்தை அளிப்பான் அல்லவா? சற்றே பகுத்தறிவுடன் தாவரங்கள் எவ்வாறு கிரிவலம் வருகின்றன என்பதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்!  தம்புல் தெய்வீகக் குகை மகிமை அண்ணாமலை மகிமைக்கு இட்டுச் சென்றுவிடுகின்றது அல்லவா? அண்ணாமலையின்றி அணுவும் அசையாது என்பதைத்தானே இது குறிக்கின்றது?

மீனாட்சி திருக்கல்யாணம்

சித்திரை மாதம் உத்திர நட்சத்திரத்தில் மதுரையில் வருடந்தோறும் மீனாட்சி திருக்கல்யாண உற்சவத்தை நிகழ்த்துவதற்குக் காரணம், தற்காலத் திருமணங்களிலும், திருமண வாழ்க்கையிலும் நிறைந்துள்ள தோஷங்களையும், குற்றங்களையும் களைதற்கும், அறிந்தோ, அறியாமலோ புனிதமான திருமண வாழ்க்கைக்குப் பங்கம் விளைவிக்கின்ற வகையில் செய்த பெருந் தவறுகளுக்கும் தக்க பிராயச்சித்தங்களை இப்பூவுலக மானுடர்களுக்குப் பெற்றுத் தருவதற்காகவே ஸ்ரீமீனாட்சித் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. என்றும் இளமையுடன், வளமையுடன், இறைமையுடன், சிரஞ்சீவித்துவத்துடன் நிலைத்திருப்பது இறைப் பரம்பொருள்தானே! இந்த சர்வேஸ்வரப் பரம்பொருளே, பெருமாள், லட்சுமி, பிள்ளையார், முருகன் போன்றத் தெய்வ மூர்த்திகளாக உருக்கொண்டு என்றும் நிலையாக நமக்கு அருள்பாலிக்கின்றார்! நம் முன்னோர்கள் வணங்கிய அதே சிவலிங்கமும் மீனாட்சிதேவியும் தானே இன்றும் பொலிகின்றார்கள்! எனவே நித்தியக் கல்யாண குணங்கள் கொண்டவர்களே தெய்வ மூர்த்திகள்!

மீனாட்சித் திருக்கல்யாண உற்சவம் கலியுகத் திருமண உற்சவம் கலியுகத் திருமண தோஷங்களை நிவர்த்தி செய்கிறது! கல்யாணம் என்றால் மிகவும் உயர்ந்த தெய்வீக நற்குணம் என்ற பொருளும் உண்டு. எனவே மீனாட்சித் திருக்கல்யாண உற்சவம் என்பது நமக்கு அளப்பரிய தெய்வீகக் கல்யாண நற்குணங்களைப் பெற்றுத் தருவதுமாகும். ஒருமுறை மீனாட்சித் திருக்கல்யாண உற்சவத்தைக் கண்ணால் கண்டு தரிசித்தாலே போதும், சிவசக்திப் பரம்பொருளின் கல்யாண நற்குணத் தெய்வீக சக்தியை விரயம் செய்திடாது புனிதமாக வாழ்ந்திடல் வேண்டும்! இந்தக் கல்யாண நற்குணச் சக்திகளில் குறைவும், தளர்ச்சியும் ஏற்படும்போதுதான், பாரம்பரிய நோய்கள் (genetic diseases) உண்டாகின்றன. இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கண் நோய்கள், உடல் பருமன் போன்றவை ஏற்படுவதற்குக் காரணமும் பாரம்பரியக் கல்யாண நற்குணங்கள் முறையான அளவில் இரத்தத்தில் சேராததுதான்!

ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் கீழ்பெண்ணாத்தூர் திருஅண்ணாமலை

பலவிதமான குறைபாடுகளுடன் கலியுகத்தில் சுபமுகூர்த்த நேரங்கள் கணிக்கப்படுவதால்தான் திருமண நேரம் சரியாக அமையாது தோஷங்கள் நிறைந்ததாகி வாழ்க்கையில் எத்தனையோ துன்பங்கள் உண்டாகின்றன. இத்தகைய துன்பங்களுக்கும் கல்யாண சுப முகூர்த்த நேரத்தில் அறிந்தோ, அறியாமலோ சேர்ந்து விட்ட தோஷங்களுக்குப் பரிகாரமாகவும் சித்திரை உத்திர நாளில் மதுரை சிவாலயத்தில் ஸ்ரீமீனாட்சித் திருக்கல்யாண உற்சவத்தின்போது புதுமாங்கல்யச் சரடை அணிதலும், உற்சவத்தில் தக்க தான தர்மங்களைக் கடைபிடித்தலும் வேண்டும்!

மேலும் இறைவனுடைய திருநடனம், திருக்கல்யாணம், வேதம் ஓதுதல், திருவேள்விக் காப்பு, திருச்சுற்று, நித்திய கிரிவலம், திருக்கல்யாணம் போன்றவை தினந்தோறும், ஏன் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற தெய்வீக நிகழ்ச்சிகளாகும். நடராஜப் பெருமான் என்றும் எப்போதும், எந்நேரமும் இறைத்திரு நடனம் ஆடிக் கொண்டிருப்பதால் தான் இந்தப் பிரபஞ்சமே இயங்கிக் கொண்டிருக்கின்றது. சூரிய சந்திரக் கோளங்கள் ஒளி கூட்டுகின்றன. நட்சத்திரங்கள் வானில் மிளிர்கின்றன, பூலோக ஜீவன்கள் சுவாசம் செய்து கொண்டிருக்கின்றன. இவை போன்ற பிரபஞ்ச இயக்கங்கள் நிகழ்வதற்குக் காரணமே நடராஜப் பெருமானின் திருநடனக் களிக் கோலமேயாம்! அதிலும் திருஆலவாய் நகரான மதுரையில் சிவபெருமான் வலது காலை எழுப்பி எழுச்சுடர் கொண்டு ஆடுகின்ற நாட்டியத்தில் இறைவனுடைய கல்யாண தேவ குணங்கள் அபரிமிதமாகப் பெருகின்றன. நல்லவை நிகழ்வதற்குக் கல்யாண குணங்கள்தாம் நிரம்பத் தேவையாகும். எனவேதான் நல்ல காரியங்களில் தோன்றுகின்ற புண்யசக்தியும் ஒருவகையான தேவ கல்யாண குணமாகின்றது.

அம்மி அளிக்கும் ஆசிர்வாதம்! அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் என்பது இறைவனுடைய அம்மிக் குழல் நடன பாவனையைக் குறிக்கின்றது. அனைத்துப் பாறைக் கற்களுமே அம்மி ஆவது கிடையாது. இப்பூவுலகில் மஞ்சள் அரைத்தல், சமையல், மருந்து அரைத்தல், திருமணச் சடங்கு போன்ற மிக, மிக நல்முறையிலான காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்துகின்ற நற்பொருட்களில் அம்மியும் ஒன்று என்பதால் மிகவும் மங்களகரமான சக்திகளைப் பூண்ட கற்களே அம்மிகளாகின்றன. இறைவன் வலது காலை எழுப்பி நடனமாடுகையில் குறித்த சில நட்சத்திர ஒளிச்சுடர்கள் நடராஜப் பெருமானுடைய வலது உள்பாத நரம்புகளிலிருந்து பரஞ்சோதியாக வெளிப்படும்போது அதில் பொலியும் சாளக்ராமச் சுடர்கள் பூமியில் நட்சத்திரக் கால்களாய் நின்று அவர்தம் வலது பாதத்தைத் தாங்குகின்றன! இவைதாம் நாம் போற்றும் நட்சத்திரங்களாகின்றன! இவ்வாறுதாம் நட்சத்திரங்கள் தோன்றுகின்றன! உளியால் அம்மி பொளியப்படும்போது வினோதமான சப்தம் ஏற்படுவதைக் கேட்டிருப்பீர்கள்! வசிஷ்ட மாமுனியின் பத்னியாம் அருந்ததி அம்மையார் இறைவனுக்காக நாள்தோறும் அம்மியில் இழைக்கின்ற மஞ்சளில் எழுகின்ற மங்களக் கதிர்கள்தாம் பூலோக அம்மிகளுக்கு மகத்தான மங்களத்தைக் கொடுக்கின்றன.

எனவேதான் அருந்ததி என்ற பெயர் கொண்ட பக்தி நிறைந்த இல்லறப் பெண்மணியால் அரைக்கப்படுகின்ற மஞ்சளுக்கு மகத்தான தெய்வீக குணங்களும் நோய் தீர்க்கும் குணங்களும், சீதளம் தரும் குணங்களும் நிறைய உண்டு. உண்மையில் அருந்ததி தேவியார் தினந்தோறும் இறைவனுக்காக அரைக்கின்ற மஞ்சளிலிருந்து எழுகின்ற சீதள (குளுமை) வாசிஷ்ட, உச்சிஷ்ட சக்திகள்தாம் இப்பூவுலகில் புனிதமான சந்திர பாவன சாளக்ராமக் கற்களாகத் தோன்றுகின்றன!

திருக்கயிலாய கிரிவல பாக்யம்! நடராஜப் பெருமானுடைய வலது பாதத்தைப் பரவெளியில் தாங்கி நிற்கின்ற சாளக்ராமக் கற்கள் தேவ அம்மியாய்ப் பொலிந்து அருந்ததி தேவியின் மஞ்சற்கழல் பூஜையிலிருந்து இறைவனால் ஆசிர்வதிக்கப்படுகின்ற சாளக்ராமப் புனிதக் கற்களாகும். திருமாலின் திருமேனியிலிருந்து தோன்றுகின்ற கண்டகி மார்க சாளக்ராமக் கற்களும் உண்டு! எவருக்கெல்லாம் சாளக்ராம அனுகிரக சக்திகள் நிறைந்துள்ளனவோ, அவர்களுக்குத்தாம் திருக்கயிலாயத்தைக் கிரிவலம் வரும் பாக்யம் கிட்டும். கிரிவலம் வருகின்ற அடியார்களுடைய பாத ரேகைகளில் திருக்கயிலாயப் புனிதப் பாறைகளில் உள்ள சாளக்ராமச் சுடர்கள் கூடி உத்தமத் தெய்வீக அனுகிரகங்களைப் பெற்றுத் தருகின்றன அல்லவா! எப்போதும் திருக்கயிலாயத்தை நோக்கி அமர்ந்த வண்ணம் அருந்ததி பூஜித்திருப்பதால்தான், கல்யாணச் சடங்குகளின் போது மணப்பெண் அம்மி மிதிக்கின்றபோது திருக்கயிலாயத்தில் கிரிவலம் வருகின்ற இறை உணர்வை இச்சடங்கின் மாமந்திரச் சக்திகள் பெற்றுத் தருகின்றன!

அம்மியை மிதித்தல் என்றால் வேறு விதமாகப் பொருள் கொள்தல் கூடாது! அம்மி மிதித்தலை விட அம்மிச் சாரம் பெறுதல் என்பதே சரியானதாகும். அதாவது திருக்கயிலாயத்தை வலம் வருகின்ற பாவனையில் வானத்தில் நட்சத்திர தேவதையாகப் பிரகாசிக்கின்ற அருந்ததிதேவி எப்போதும் திருக்கயிலாயத்தை நோக்கிப் பூஜித்திருப்பதால் இந்த அருந்ததி நட்சத்திர தரிசனமே திருக்கயிலாயக் கிரிவலப் பாக்கியத்திற்கான நல்வழிகளைக் காட்டுவதாகும். இன்றைக்குப் பெரும்பாலானோர், திருமணச் சடங்கில் அம்மி மிதித்து அருந்ததி பார்க்கின்ற வைபவத்தைக் கடைபிடிக்காததினாலும், இதன் தாத்பர்யங்களை நன்கு உணராததினாலும்தான் அவர்களுக்குத் திருக்கயிலாய கிரிவல பாக்யம் கிட்டுவதில்லை. பூர்வ ஜென்மங்களில் முறையாக அம்மி மிதித்து அருந்ததி பார்க்கின்ற புனிதச் சடங்கை முறையாகக் கடைபிடித்தோர்க்குத்தான் தற்போதும் அல்லது எப்பிறவியிலும் திருக்கயிலாய கிரிவல பாக்யம் கிட்டிடும். வேறு பல குறித்த புண்ய காரியங்களும் இப்பாக்கியத்தைப் பெற்றுத் தந்திடும். மீனாட்சித் திருக்கல்யாணத்தின் போது சகல கோடிச் சிவகணங்களும், சிவபூதங்களும், சிவதேவதைகளும், சிவ துவார பாலகர்களும், சிவருத்ர மூர்த்திகளும் கூடுவதால், மீனாட்சித் திருக்கல்யாண வைபவமே திருக்கயிலாயத் தரிசனத்தின் சில மலை தரிசனப் பலன்களை உணர்விக்கின்றது!

வசிஷ்டரை மணப்பதற்குமுன், அருந்ததி தேவி நம் பெற்றோர்களுடன் திருமாங்கல்யத்தைச் சுமந்தவாறு திருக்கயிலாயத்தைப்  பன்முறை கிரிவலம் வந்தனள். வசிஷ்டரின் திருமணத்தின் போதும் ஸ்ரீஅகஸ்தியரே திருமண வேதியராதலின் அப்போது அருந்ததி வானில் கண்டது திருக்கயிலாயத்தின் திவ்யமான மாங்கல்யச் சுடரொளியாகும்! அதில்தான் அருந்ததி நட்சத்திர தாரகையாகத் தாம் பொலிவார் என்பதைச் சொல்லாமல் விளங்க வைத்தார்! மேலும் மீனாட்சித் திருக்கல்யாணத்தில் மீனாட்சி தேவிக்கு ஸ்ரீஅகஸ்தியப் பெருமானே அம்மி மிதித்து அருந்ததியைப் பார்க்கின்ற புனிதச் சடங்கினை நிகழ்த்தி வைக்கின்றார். மீனாட்சித் திருமண வைபவத்தைக் காண வந்திருந்து வசிஷ்டரும் அருந்ததியும் ஒன்று சேர்ந்து மீண்டும் வித்யாசமான இறைஅனுபவமாகக் காண்கின்றனர். மேலும் பிரபஞ்சத்தில் எவ்வித தோஷங்களுமில்லாது நிகழ்ந்த தேவாதி தேவ தெய்வங்களின் மானுட ரூபத் திருமணங்கள்  ஒரு சிலவே. ஸ்ரீராமர்-சீதா, ஸ்ரீசொக்கலிங்க-மீனாட்சி, ஸ்ரீமுருகன்-வள்ளி, ஸ்ரீஅகஸ்தியர்-லோபாமாதா, ஸ்ரீவசிஷ்டர்-அருந்ததி போன்றவாறாகக் குறித்த சில தெய்வ கிருத்தியங்களே தெய்வங்களின் மானுட வடிவக் கோலங்களில் கொண்ட தோஷங்களற்ற கல்யாணத் திருக்காட்சிகளும் மகரிஷிகளின் திருமண வைபவங்களும் ஆகும். இதனால் தான் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானை சமேத ஸ்ரீமுருகப் பெருமான், ஸ்ரீஅகஸ்திய மாமுனி பெற்ற பார்வதி பரமேஸ்வரத் திருமணக் காட்சிகளைக் கொண்ட திருத்தலங்கள் – திருநல்லூர், வேதாரண்யம், திருவீழிமிழலை, திருவேற்காடு, திருக்குற்றாலம், குத்தாலம், காஞ்சீபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் ஆலயம் – போன்ற இடங்களில் திருமணங்களை நடத்துவது பலவிதமான தோஷங்களை நீக்கும்.

பொதுவாக, பங்குனி உத்திரமானது, சிவபெருமான், பெருமாள், முருகப் பெருமானுடைய திருமண உற்சவங்களைக் குறித்தாலும், ஸ்ரீமீனாட்சி திருக்கல்யாணமானது சித்திரைத் திருவிழாவாகச் சித்திரை மாத உத்திர நட்சத்திரத்தில் விசேஷமான திருமண வைபவமாயிற்று! மதுரையில் சித்திரை மாத உத்திர நட்சத்திர மீனாட்சி திருக்கல்யாண உற்சவத்தில் நிகழ்கின்ற மகத்தான இறை அற்புதங்கள் இன்றும் நிறைய உண்டு. இந்நாளில் எந்தப் புனிதமான நேரத்தில் ஸ்ரீசொக்கலிங்க நாதர், ஸ்ரீமீனாட்சி அம்மைக்கு மாங்கல்யம் சூட்டுகின்றாரோ, அந்த மிகமிகப் புனிதமான நேரத்தில் பூலோக இல்லறப் பெண்மணிகள் யாவரும் புது மாங்கல்யச் சரடை அணிந்து கொள்தல் பலவிதமானத் திருமணத் தோஷங்களை நீக்குவதோடு, பெறுதற்கரியச் சுமங்கலித்துவத்தையும் தந்து கணவனுக்கு தீர்க்க ஆயுள், நல்லொழுக்கம், உத்தம பக்தி, நல்ஆரோக்கியம் போன்ற நற்குணங்களையும், நல்வளங்களையும், சௌபாக்கியத்தையும் பெற்றுத் தருகின்றது. இருதய நோய் புற்று நோய் போன்ற கடுமையான நோய்களால் வாடுகின்ற கணவன்மார்களின் நலத்தை எண்ணி எண்ணித் தினந்தோறும் அஞ்சி அஞ்சி வாழ்கின்ற பெண்மணிகள், சித்திரை உத்திர நட்சத்திரத்தில் மதுரை ஆலயத்திற்கு வந்திருந்து ஸ்ரீமீனாட்சித் திருக்கல்யாணத்தின் போது அதே சுபமுகூர்த்த நேரத்தில் புது மாங்கல்யத்தை அணிதலும், மாங்கல்யச் சரடுகளைத் தானமளித்தலும் சௌபாக்ய தேவதைகளின் அனுக்கிரகத்தைப் பெற்றுத் தருகின்றது.

ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் சாத்தமங்கலம் லால்குடி

ஸ்ரீஅகஸ்தியர், ஸ்ரீவசிஷ்டர், ஸ்ரீபோகர், ஸ்ரீபுலிப்பாணி சித்தர், ஸ்ரீஇடியாப்ப சித்தர், ஸ்ரீபெருமானந்த சித்தர்  போன்ற பல கோடிச் சித்தர் பிரான்களும், மகரிஷிகளும் இந்நாளில் இங்கு வந்து ஸ்ரீமீனாட்சித் திருக்கல்யாணத்தைத் தரிசித்துப் பேரானந்தம் கொள்வதால், இந்நேரத்தில் இங்கு மாங்கல்யச் சரடை மாற்றிக் கொள்கின்ற அனைத்துப் பெண்மணிகளுக்கும் ஆசீர்வாதம் கூடுகின்றது.

நல்ல சுபமுகூர்த்த நேரம் பார்த்துத்தானே திருமணம் செய்து கொண்டோம், நமக்கு ஏன் இவ்வளவு துன்பங்கள் மலைபோல் குவிந்து விட்டன என்று எண்ணிக் கவலைச் சுவடுகளுடன் வாழ்வோரும் உண்டு. ஆனால் தற்காலத்தில் சுபமுகூர்த்த நேரத்தைக் கணிக்கும் போது தேய்பிறையில் கூடத் திருமணத் தேதியை வைத்து விடுகின்றார்கள். அவரவர் ராசிக்குரிய விஷ, சூன்யத் திதிகள், திதி சூன்யங்கள் ஆகியவற்றைப் பார்ப்பதும் கிடையாது. ராகு காலம் எமகண்டத்துடன், அர்த்தப் பிரகரணன் என்ற நேரத்தையும் பார்த்துத்தான் சுபமுகூர்த்த நேரத்தைக் கணிக்க வேண்டும். மேலும் இரவு நேர எமகண்ட, ராகு கால நேரங்களும் உண்டு. குளிகை, மாந்தியில் செய்யப் படவேண்டிய காரியங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். மேலும் திருமண லக்னத்தைச் சுற்றியுள்ள இடங்கள் நல்ல பார்வையுடனும், சுத்தமாகவும், தோஷமின்றியும் இருக்க வேண்டும். சுபமுகூர்த்த நேரத்தைக் கணிப்பவர்கள் வார தியாஜ்யம், லக்னத் தியாஜ்யம் நட்சத்திர தியாஜ்யம் போன்றவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்வது கிடையாது. பொதுவாகத் தியாஜ்ய நேரங்களில் சுபமுகூர்த்த நேரம் அமைதல் கிடையாது.!

பலவித தோஷங்களை நீக்கும் சித்திரை உத்திர மீனாட்சித் திருக்கல்யாணம்! இன்றைக்கும் மதுரையில் சித்திரை உத்திரத் திருநாளில் பலரும் மதுரைச் சிவாலயத்தில் ஆங்காங்கே, எங்கெங்கோ அமர்ந்து, கெட்டி மேளச் சத்தம் கேட்டவுடன் சிவபெருமான் மீனாட்சிக்கு மாங்கல்யம் அணிவிக்கையில் பல்லாயிரக் கணக்கான பெண்மணிகளும் மிகுந்த பக்தியுடன் மாங்கல்யத்தை மாற்றிக் கொள்கின்ற அதியற்புதக் காட்சியைப் பெருமகிழ்ச்சியுடன் கண்டிடலாம். ஜாதி, மத, இன, குல பேதமின்றிப் பலரும் இத்திருநாளில் இங்கு மாங்கல்யம் அணிந்து கொள்கின்ற காட்சி உள்ளத்துக்குச் சாந்தியைத் தருவதாகும். பிற மதத்தினரும் இந்தப் புனித நேரத்தில் மாங்கல்யம் அணிந்து கொள்கின்ற அதியற்புதக் காட்சி உள்ளத்திற்கு நெகிழ்ச்சியையும் பக்திப் பரவசத்தையும் அளிப்பதாகும். இப்பிரபஞ்சத்தில் உள்ள ஜீவன்கள் அனைவருக்கும் அன்னை மீனாட்சி அம்பிகைதானே! உலக ஜீவன்கள் யாவரும் மீனாட்சியின் திருக்குழந்தைகள் தானே!

மாங்கல்ய தானம், மங்களப் பொருட்களின் தானம் சுமங்கலித்வ சக்தி தரும்! சித்திரை உத்திர மீனாட்சித் திருக்கல்யாண வைபவத்தின்போது ஏழைகளுக்குப் புது மாங்கல்யச் சரடு, பொன் மாங்கல்யம், வெள்ளி மாங்கல்யம், மண்தாலி, புடவை, இரவிக்கை, பெரிய கண்ணாடி, பெரிய சீப்பு, மருதாணி, கண் மை, போன்றவற்றை அளித்துச் சுபமங்களக் கிரணங்களைச் பரவெளியில் வளம் பெறச் செய்திடுங்கள்! இவையாவும் உங்களுக்கே மங்களகரமான நல்வரங்களைப் பெற்றுத் தரும். வசதியில்லாதோர் கூட 100, 200 என மாங்கல்யச் சரடுகளையாவது வாங்கி, வீட்டில் வைத்துப் பூஜித்து
“சர்வ மங்கள மாங்கல்யே, சிவே சர்வார்த்த சாதகே
சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணீ நமோஸ்துதே!
அல்லது
மீனாள் மீட்டும் சொக்கன் மலரடி
பாணான் பரம்பொருள் பாதச் சிலம்படி
தேனாள் துதிக்கும் திருமறைத் திருவடி
பூணாயோ சித்திரை உத்திரக் காப்படி
வானாய்ப் பொழிகவே மணச் சீர் வளப்படி!
என்ற மந்திரத்தை ஓதிப் பூஜித்து மதுரையில் இவற்றை ஏழைகளுக்குத் தானமாக அளித்திடுங்கள்! வசதியுள்ளோர் பொன், வெள்ளி மாங்கல்யங்களை அளித்திடலாம்! தற்காலத் திருமணங்களில் தாலி கட்டும் வைபவத்துக்கு முன்னரேயே மாப்பிள்ளை, பெண்ணை ஒன்றாக அமர வைத்து வரவேற்பு என்ற முறையில் திருமணத்தின் புனிதத்திற்குப் பங்கம் ஏற்படுத்தப்படுகின்றது. தாலி கட்டிய பின்தான் மங்களகரமான திருமண வாழ்வுத் தொடங்குகின்றது என்பதை உணர்ந்து கொள்க!

தமிழ் மற்றும் தேவமொழி முழக்கங்களும், இன்னிசை நாதங்களும்தான் திருமணத்திற்குப் புனிதம் கூட்டும். ஆபாசமான அர்த்தமற்ற, தண்டமான பாடல்களைத் தவிர்த்திடுங்கள். மேல்நாட்டு இசை என்ற வகையில் அர்த்தமற்ற வகையில் நரம்புத் தளர்ச்சியை உண்டு பண்ணும் கராமுரா சப்தத்தையும் தவிர்த்திடுங்கள். இவையெல்லாம் திருமணத்தில் தோஷங்களைத்தான் உண்டாக்கும். எனவே சித்திரை உத்திரத் திருநாளன்று மதுரைக்கு வர இயலாதோர், எங்கெல்லாம் மீனாட்சி சுந்தரேஸ்வரராக, சொக்கலிங்க நாதராக, மீனாட்சி அம்பிகையாக தெய்வ மூர்த்திகள் எழுந்தருயுள்ளனரோ அத்தலங்களில் இறைவன் இறைவிக்குத் திருமண உற்சவத்தை நடத்தி ஏழைகளுக்கு மாங்கல்ய தானம் அளித்து, தீர்க்க ஆயுளையும், சாந்தமான திருமண வாழ்வினையும் பெற்றிடுவீர்களாக! தவறான பாதையில் செல்கின்ற கணவன் நன்முறையில் திருந்தி வாழ, இந்தச் சித்திரை உத்திரத் திருமண உற்சவப் பலாபலன்கள் பெரிதும் உதவும்.

நம் திருஅண்ணாமலை ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தின் சார்பில் பல இடங்களிலும் சித்திரை உத்திரத் திருமண தான தர்ம நற்காரியங்கள் இறையருளால் நடைபெற உள்ளன!
4.5.2001 வெள்ளியன்று சித்திரை உத்திரம் ஸ்ரீமீனாட்சி திருக்கல்யாணம் அமைகின்றது.. (மதுரை ஸ்ரீமீனாட்சிசுந்தரேஸ்வரர் ஆலயத்தில் நாள், நேரம் அறிந்து கொள்ளவும்.)

காசிக்கு செல்கின்றீர்களா ?

உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி எனப்படும் காசித் திருத்தலத்திற்கும், பீகார் மாநிலத்தில் உள்ள கயா திருத்தலத்திற்கும் ஒவ்வொரு குடும்பத்தினரும் தன் வாழ்வில் ஒரு முறையேனும் கண்டிப்பாகச் சென்று தரிசித்து முறையான பித்ருத் தர்ப்பணப் பூஜை முறைகளைக் கடைபிடித்தாக வேண்டும். காசிக்குச் செல்லும் முன்னர் நிறைவேற்ற வேண்டிய வழிபாட்டு முறைகளும் உண்டு.

காசிக்குச் சென்று வருவதற்கு ஆயிரக் கணக்கில் செலவாகுமே என்று யோசிக்காதீர்கள்! ஒரு சில ஆயிரங்களைச் செலவழிப்பதினால் பல்லாயிரம் கோடிப் பிறப்புகளைக் கடக்க முடியும் என்றால் காசித் தல யாத்திரையும் பெறுதற்கரிய பாக்கியம் தானே! புகையிலை, சிகரெட், பாக்கு, காப்பிக்கும் டீக்கும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செலவழிக்கும் தொகையைக் கணக்கிட்டுப் பார்த்தால் காசித் தலயாத்திரைச் செலவுகள் ஒரு பொருட்டா என்ன? ஆனால் நிறைய ஏமாற்று யாத்திரா நிறுவனங்கள் (சர்வீஸ்கள்) இருப்பதால் ஏமாறாமல் நன்றாகத் தெரிந்தவர் மூலம் போய்வாருங்கள்.

உண்மையிலேயே வறுமை, உடற்பிணிகள், ஊனம், குருடு போன்ற பல உண்மையான காரணங்களால் காசிக்குச் செல்ல இயலாது இருப்போருக்கு உரித்தான தென் இந்தியத் திருத்தல வழிபாட்டுப் பிராயச்சித்தப் பரிகார முறைகள் நிச்சயமாக  உண்டு. தக்க சற்குருவை நாடி அறியவும்!

முக்தி நிலை அடைவதற்கு முன்னால் பித்ரு நிலை என்ற முக்கியமான தெய்வீக நிலை ஒன்று உண்டு. இந்த உத்தம நீத்தார் நிலையைப் பெறுவதற்குக் காசித் திருத்தல தரிசனம் மிகவும் இன்றியமையாததாகும். ஏனென்றால் காசித் திருத்தலத்தில் மரிப்போருடைய காதுகளில் சிவபெருமானே ராம நாமத்தை ஓதி அவர்களுக்கு உய்வு தருகின்றார் என்றால் இராம நாமத்தின் மகிமைதான் என்னே! காசித் திருத்தலத்தின் மகிமைதான் என்னே!

இந்த உலகத்தில் மட்டுமல்லாது இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அண்ட சராசர கோடானு கோடிக் கோள்களிலும் உள்ள எந்த ஜீவனுமே முக்தி நிலையை அடைவதற்கு முன்னால் நிச்சயமாக நம்முடைய பாரதத் திருநாட்டில் மானிடப் பிறவி எடுத்தாக வேண்டும். இதனுடைய ஆழ்ந்த உட்பொருள் என்னவென்றால் பாரதப் பிரஜைகளாகிய, குறிப்பாகத் தமிழ்நாட்டில் பிறக்கும் பெரும் பாக்கியம் பெற்ற நமக்கு இப்பிறவியிலேயே முக்தியைப் பெறுவதற்கான அதியற்புத இறைவாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம் என்பதேயாகும். இதனை நழுவ விடலாமா?

நம் பாரதத் திருமண்ணிலேயே கோடிக் கணக்கான சற்குருமார்கள் நிறைந்திருக்கின்றார்கள்.. ஆனால் எதையுமே விஞ்ஞானபூர்வமான நிரூபணம் என்ற தேவையற்ற அறிவை நாம் பெற்றுவிட்டதால் அனைத்துச் சற்குருமார்களுமே இலைமறை கனியாகவே மறைந்து சமுதாயத்தோடு சமுதாயமாக ஒன்றி நம்மைப் போலவே மிகவும் சாதாரணமாகவே வாழ்ந்து தம்மை அண்டி வருவோர்க்கும் நம்பிக்கை பூண்டோருக்கும் தக்க நல்வழிகளைக் காட்டி வருகின்றார்கள்! சற்குரு இல்லையே என்று ஏங்குபவர்களுக்காகவே ஸ்ரீஅகஸ்திய விஜயம் போன்ற முழுமையான, சற்குரு கடாட்சம் நிறைந்த தெய்வீக இதழ்கள் மூலமாகச் சற்குருவின் திருவாய்மொழிகள் அர்ப்பணிக்கப்படுகின்றன! இவற்றில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு நித்ய கர்ம நிவாரண நியதிகள் மற்றும் பரிகாரப் பிராயச்சித்த முறைகளை முறையாகக் கடைபிடித்து வருவோர்க்குச் சற்குருவே தாமாகவே வந்து அரவணைக்கின்ற தெய்வீகக் கடாட்சத்தைப் பெறுவார்கள்..!

நம்பிக்கையைத் தளர விடாது ஆழ்ந்த பக்தியுடன் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து கொண்டே இருங்கள், என்றேனும் ஒருநாள் சற்குரு உங்களை அரவணைப்பார், எறும்பு உருவத்திலோ, காக்கை உருவத்திலோ, பசு வடித்திலோ, மனித வடிவிலோ எந்த ரூபத்திலும் உங்களுக்குரிய சற்குரு காட்சி தந்திடலாம்.

நம் ஊர் ஆலயங்களில் ஸ்ரீகாசி விஸ்நாதர், காசி விசாலாட்சியின் தரிசனங்களைக் கண்டிருப்பீர்கள்! காசியில் குடிகொண்டிருக்கின்ற ஸ்ரீவிஸ்வநாதப் பெருமானும், ஸ்ரீவிசாலாட்சி தேவியும் இங்கும் அருள்பாலிப்பது ஏனோ? இறைவனுக்கு எல்லை ஏது?  காசிக்குச் செல்ல முடியவில்லையே என்று ஏங்குபவர்கள் யாவருமே உள்ளூர் ஆலயங்களில் ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதரைத் தரிசிக்கும்போது, “ஸ்வாமி! அடியேனுக்குத் தங்களுடைய மூலாதார ரூபத்தை வாரணாசியாகிய காசியில் அருள் தரிசனமாகப் பெற்றுத் தருவீர்களாக!” என்று வேண்டுதல் வேண்டும். குறிப்பாக, திங்கட் கிழமைகளில் சந்திர ஹோரை நேரத்திலும், திருவாதிரை, உத்திரம், சதயம் போன்ற நட்சத்திர நாட்களிலும், ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீவிஸ்வநாதப் பெருமானுக்குக் கங்கை நீரால் அபிஷேகம் செய்தும் கையால் நன்கு அரைக்கப்பட்ட சந்தனத்தால் சந்தனக் காப்பிட்டும் வழிபட்டு வந்தால் உங்களுக்கு காசி தரிசன பாக்யம் கைகூடுவதோடு அன்ன துவேஷம் என்ற நோய் உங்களை அண்டாமல் நன்முறையில் காக்கப்படுவீர்கள்..! அன்ன துவேஷம் என்ற நோயால் பீடிக்கப்பட்டுச் சோறு, நீர் உள்ளே இறங்காமல், டிரிப்ஸ் மூலமாக குளூக்கோஸ் ஏற்றப்படுகின்ற நிலைக்கு ஆளாகுதல் கூடாது தானே!

மேலும் நீங்கள் காசிக்குப் புறப்படும் முன்னர், உங்கள் ஊரில் உள்ள ஸ்ரீகாசி விஸ்வநாதருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டு, நிறைய லட்டுகளைத் தானமாக அளித்துப் புறப்பட வேண்டும். எந்த இடத்திலெல்லாம் ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீகாசி விஸ்வநாத சிவலிங்க மூர்த்தி அருள்பாலிக்கின்றாரோ, அவ்விடத்தின் நீரோட்டத்திற்கும் காசியில் உள்ள நீரோட்டத்திற்கும் தெய்வீகத் தொடர்பு உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.!

கங்கை நதி, வாரணாசியில் மட்டும் ஓடவில்லை! கங்கை நீரோட்டத்தின் வேர் ஓட்டங்கள் இப்பூவுலகில் பல்லாயிரக் கணக்கான இடங்களில் விழுது போல் தோன்றிப் படர்ந்துள்ளன! எங்கெல்லாம் கங்கையின் ஆழ்ந்த உள்நீரோட்டம் பொங்கிப் பூரிக்கின்றதோ அவ்விடத்தில்தான் ஸ்ரீகாசி விஸ்வநாத லிங்க மூர்த்தி எழுந்தருள்கின்றார் என்ற தெய்வீக இரகசியத்தை இனியேனும் உணர்ந்து கொள்ளுங்கள்.. நீங்கள் புதிதாக எந்த ஆலயத்தில் ஸ்ரீகாசி விஸ்வநாதப் பெருமாளைப் பிரதிஷ்டை செய்தாலும் அவ்விடத்தில் ஆழ் உள் கங்கை நீரோட்டம் இருப்பதால்தான் அவ்விடத்தில் ஸ்ரீகாசி விஸ்வநாதர் எழுந்தருள்கின்றார் என்பதை உணர்ந்திடுக! காசிக்குச் சென்று வந்தவர்களும், ஏதோ காசிக்குச் சென்றோம், வாழ்க்கையில் ஒருமுறை காசி வழிபாட்டு முறைகளை முடித்து விட்டோம் என்று அசட்டையாக இருந்து விடாது திங்கட்கிழமை தோறும், சந்திர ஹோரை நேரத்தில் (காலை 6-7, மதியம் 1-2, இரவு 8-9) ஸ்ரீகாசி விஸ்வநாத மூர்த்திக்கு கங்கை, காவிரி, கலந்த நீரால் அபிஷேகம் செய்து லட்டு தானம் செய்து வந்தால் மூட்டு, பாதம், காது சம்பந்தப் பட்ட நோய்களுக்குத் தக்க தீர்வு கிட்டும்.

லட்டு என்பது உருண்டை வடிவ லிங்கமாக சித்தர்களுடைய பரிபாஷையில் குறிப்பிடப்படுகின்றது. சர்க்கரை வியாதியினால் அவதிப்படுவோர் ஸ்ரீகாசி விஸ்வநாத மூர்த்திக்கு திங்கட் கிழமை தோறும் கங்கை நீரால் அபிஷேகம் செய்து லட்டுகளை நைவேத்தியமாகப் படைத்து ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்தால் சர்க்கரை நோயின் கடுமைகள் தணியும். ஆழ்ந்த நம்பிக்கையுடன் வழிபட்டால் நன்முறையில் தீர்வையும் பெற்றிடலாம்.
உண்மையிலேயே காசிக்குச் செல்ல இயலாதவர்களும் அல்லது காசிக்குச் சென்று நன்முறையில் திருப்திகரமாக தரிசனத்தைப் பெறமுடியவில்லை அல்லது காசியில் தொலைத்த பாவங்களை மீண்டும் பலதீவினைக் கர்மங்களால் நிறையப் பாவங்களைச் சேர்த்துக் கொண்டு விட்டோம், என்று எண்ணம் கொண்டிருப்பவர்களும் தமிழ்த் திருநாட்டில் காசிக்கு நிகராக விளங்குகின்ற வெற்றிக்கு வடிவழகு தரும் தென்காசித் திருத்தலத்தைத் தரிசிக்க வேண்டிய வழிபாட்டு முறைகளைப் பற்றி நாம் ஸ்ரீஅகஸ்திய விஜய இதழில் அளித்துள்ள விளக்கங்களை நன்கு படித்து அதன்படி முறையாகத் தென்காசி ஸ்ரீவிஸ்வநாதரை வழிபட்டு வருதல் வேண்டும்.

அருணையில் காசி முகத் தரிசனம் !! திருஅண்ணாமலையில் காசிமுகத் தரிசனம் என்ற ஓர் அற்புதத் தரிசன முறை ஒன்று உண்டு. தன் வாழ்நாளில் குறைந்தது 108 வசதியற்ற ஏழைகளுக்காவது காசித் திருத்தலத்தைத் தரிசிப்பதற்கான போக்குவரத்துச் செலவுகள், உணவு, ஆடைகள் அணிவித்து உதவி புரிவோருக்கு மட்டுமே இந்த காசிலிங்க தரிசன வழிபாடுகள் பற்றிய தெய்வீக ரகசியங்கள் புலப்படும். ஏனையவற்றைத் தக்க சற்குருமூலமாகப் பெற்றிடவும்..!

பூணூல் அணிவீரே

பூணூல் புகட்டும் புக்கொளிப் பாடங்கள்!

உலகத்தில் உள்ள எறும்புகள், அணில்கள், கிளிகள் முதல் மனிதர்கள் தேவர்கள் வரை அனைவருக்கும், அனைத்து ஜீவன்களுக்கும் உரித்தானதே ஸ்ரீகாயத்ரீ மந்திரமாகும். ஒவொருவரும் தினந்தோறும் 10000 முறை ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஓதியாக வேண்டும். அப்போது தான் தினசரிக் கர்ம விளைவுகள் ஓரளவேனும் நிவர்த்தியாகும். ஜாதி, மத, இன, குல, ஆண், பெண் மனிதன், தாவர பேதமின்றி அனைவருக்கும் உரித்தானதே ஸ்ரீகாயத்ரீ மந்திரமாம்! துறவிகளுக்கு, நிர்விகல்ப சமாதி பூண்டவர்களுக்கு, மகரிஷிகளுக்கு, சித்தர்களுக்கென விசேஷமான ஸ்ரீகாயத்ரீ மந்திர முறைகள் உண்டு.

தற்காலத்தில் வடமொழி, தமிழ்மொழி வேதங்களை ஓதுவது மிக மிக அரிதாகி விட்டது. முற்காலத்தில் தினந்தோறும் ஒலித்து வந்த வேத சப்தங்கள் தற்போது எங்கோ ஒரு மூலையில், அதுவும் பெரும்பாலும், ஆடியோ கேசட்டுகள் மூலமாகத்தான் ஒலிக்கப்படுகின்றன! வேதமறைகளை ஓதுவதற்காகத்தானே இறைவன் வாயைப் படைத்தான்! இறைவனைப் பற்றிய துதிகளை ஓதுவதற்காகத்தானே இறைவன் வாயைப் படைத்தான்! இறைவனைப் புகழைப் பாடுவதற்கோ மனிதன் வாயைப் பயன்படுத்தாமல், உணவை உண்டுத் தம்மை வளர்ப்பதற்கும் தீய வார்த்தைகளைப் பேசுவதற்கும் வாயைப் பயன்படுத்துகின்றானே! மறை ஒலி ஓதவே இறைவன் வாயைப் படைத்தான் உண்பது, உரையாடுவது இரண்டாம் பட்சமே!

ஸ்ரீவிசாலாட்சி காசிவிஸ்வநாதர்
திருநீலக்குடி

ஐந்து முகத்தான் பரப்பும் பஞ்சபூத சக்தி! ஐந்து முகத்தைக் கொண்டவளாக ஸ்ரீகாயத்ரீ தேவி விளங்குகின்றாள். மனிதனுடைய உடல் பஞ்சபூத சக்திகள் நிறைந்ததாக விளங்குவதால்தான் ஸ்ரீகாயத்ரீ தேவியானவள் கலியுகத்திற்கு ஏற்றவாறு ஐந்து முகத்தாளாக, பஞ்ச பூத சக்திகளை ஸ்ரீகாயத்ரீ மந்திர வடிவில் அருள்பவளாக விளங்குகின்றாள். மனிதன் பஞ்சபூத சக்திகளோடு புனிதமானவனாகத்தான் கருக் குழந்தையாய்த் தோன்றுகின்றான். ஆனால் காலப்போக்கில் கர்மவினைகளைப் பெருக்கிக் கொண்டு, உலகப் பரவெளிக்குத் தம்முடைய தீய எண்ணங்கள், தீய சக்திகள் மூலமாகக் கர்ம வினைகளைப் பரப்பித் தன்னையும் உலகப் பரவெளியையும் மாசுபடுத்திக் காலப்போக்கில் புனிதத்தை இழந்து விடுகின்றான்.!

அதாவது மனிதனுடைய தேகத்தில் பஞ்சபூத சக்திகள் குறையும் போது அவனுடைய புனிதத் தன்மையும் குறைந்து விடுகின்றது. இப்புனிதத் தன்மையை நிறைவு செய்வதற்கும், பஞ்ச பூத சக்தியை மேம்படுத்துவதற்குமாகத்தான் ஐந்து முகத்தாளாக ஸ்ரீகாயத்ரீ தேவி தோன்றி அருள்பாலிக்கின்றாள். ஸ்ரீகாயத்ரீ மந்திரத்திற்கு ஐந்து பதங்கள் உண்டு ஒவ்வொரு பதமும், ஒவ்வொரு பஞ்சபூத சக்தியின் மகிமையை உணர்த்துவதாகும். ஒரு கூட்டத்தில் உள்ள ஆயிரம் பேரையும் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஒலிக்கச் செய்தால் ஒவ்வொருவரும் ஓதுகின்ற ஸ்ரீகாயத்ரீ மந்திரத்திலும் நிறைய தொனி வித்யாசங்கள் இருக்கும். மந்திரம் ஒன்று என்றாலும் கூட குரலின் ஏற்ற இறக்கத் தொனிகளினால் மந்திய உச்சாடனம் மாறுபடுவதாகவே உங்களுக்குத் தோன்றும். உண்மை அதுவல்ல.!

ஒவ்வொருவரிடத்திலும் உள்ள பஞ்சபூத சக்திகள் மாறுபடும். அந்த பஞ்சபூத சக்திகளின் விகிதாசாரத்திற்கு ஏற்பவே அவரவருடைய ஸ்ரீகாயத்ரீ மந்திர ஒலி உச்சாடனம் ஏற்படும். ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் எழுத்துக்களை விட எழுத்துகளிலிருந்து கிளம்புகின்ற ஒலிக்கு மகத்துவம் அதிகம். எனவே ஸ்ரீகாயத்ரீ மந்திரம் எனும்போது ஸ்ரீகாயத்ரீ மந்திர சப்த ஒலியைத்தான் குறிப்பிடுகின்றோம். ஒலி வடிவானவளே ஸ்ரீகாயத்ரீ தேவியாவாள். ஏனென்றால் கிருதயுகம் போன்ற பண்டைய யுகங்களில்தான் இறைவனை ஒலி வடிவில் காண்கின்ற உத்தம பக்தி நிலைமை மேலோங்கி இருந்தது.

அக்காலத்தில் திருஅண்ணாமலையானது வைடூரிய மலையாகவும், பவள மலையாகவும், தங்க மலையாகவும், வெள்ளி மலையாகவும் ஜ்வலித்துப் பிரகாசித்தது. காரணம் என்ன? மக்களுடைய பக்தியும் ஒளிப் பிரகாசம் கொண்டிருந்ததுதான்..! ஆனால் கலியுகத்தில் கர்ம வினைகள் பெருகப் பெருக மனிதனுடைய அதர்மக் காம ஆசை, முறையற்ற விருப்பங்களும் பெருகிடவேதான் இறைவன் தன்னையே கல்மலையாக, மண் மலையாக, ஆக்கிக் கொண்டுள்ளான்! எனவே ஒலி வடிவில் இறைவனைக் கண்ட மனித குலம்தான் தீயொழுக்கத்தில் தன்னைத் தேய்த்துக் கொண்டு தன்னுடைய பக்தியையும் மாய்த்துக் கொண்டு வருகின்றது.. எனவேதான் கலியுகத்திற்கு ஏற்ற வகையிலே ஒளிவடிவ வழிபாடு மிகவும் கடினமானது என்பதால் ஒலி வடிவ வழிபாட்டை வேத மறைகளின் சப்தநாள வழிபாட்டை நமக்குப் பெரியோர்கள் அளித்துள்ளனர். அதனால்தான் வேதங்கள் மாமலைகள் போல் நீண்ட நெடியதாய்ப் பொலிகின்றன.!

ஸ்ரீபக்தாபீஷ்டதாயிணி திருநீலக்குடி

ஸ்ரீஅநூபமஸ்தனி அம்பாள்
திருநீலக்குடி

இன்றைக்குப் பூவுலகில் ஓதுப்படுகின்ற வேதங்களின் அளவுதான் என்னே! கடலில், பூவுலகத்தில் திரண்டு கிடக்கும் மண் துகள்களில் ஒரே ஒரு மண் துகளை எடுத்து அதனைப் பலகோடி மடங்காகப் பிரித்தால் மிஞ்சுவது என்னவோ அதுதான் நாம் காண்கின்ற பூலோகத்தில் நிரவியுள்ள வேதமாகும். இந்த வேத ஒலிகள்தாம் வடமொழியிலும், தமிழ் மொழியிலும் நிரவிக்கிடக்கின்றன. இவ்வாறு வேதவளம் கூடக் கலியுகத்திலே மறைந்துவிடும் என்பதால்தான் பஞ்சபூத சக்திகள் நிறைந்தவளாக ஸ்ரீகாயத்ரீ தேவியே தன்னுடைய இருவரி கூடிய ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தில் சகல வேத சக்திகளையும் பஞ்சபூத சக்திகளாக நிறைத்து அதற்கு ஸ்ரீகாயத்ரீ என்ற ஒலிவடிவத்தை அளித்துள்ளாள்.!

எவ்வாறு குறள் போன்று தமிழிலே பாடல்களை வகைப்படுத்துகின்றோமே, அதைப் போல இருவரிகளில் உள்ள சக்தி நிறைந்த பீஜாட்சரங்களாலான பாடல் வடிவத்தைத்தான் நாம் ஸ்ரீகாயத்ரீ என்று சொல்கின்றோம். இந்த ஸ்ரீகாயத்ரீ பா வடிவில் பஞ்சபூத சக்திகள் நிறைந்த ஒலி வடிவத்தைக் கொண்டவளாக விளங்குபவளே ஸ்ரீகாயத்ரீ தேவியாவாள்! எழுத்தைவிட ஒலிக்கு சக்தி அதிகம்.! கண்ணால் காண்பதை விட காதால் கேட்கின்ற ஒலிக்கு சக்தி அதிகம். எனவே ஒலிவடிவ வழிபாடுதான் கலியுகத்திற்கு ஏற்றது என சித்புருஷர்கள் அளிக்கின்றார்கள்.! நீங்கள் ஸ்ரீஅகஸ்திய விஜயத்தைப் படிக்கும்போது மௌனமாக உங்கள் மனதில் படிப்பது போலத் தோன்றினாலும் மனதிற்குள்ளும் அந்த ஒலிவடிவம் தோன்றத்தானே செய்கின்றது!

எனவே நீங்கள் வாயாலும், மனதாலும் வடிக்கின்ற ஒலிவடிவங்கள் தான் உங்கள் தேகத்திலுள்ள பஞ்சபூத சக்திகளின் விகிதாராசத்தைப் பெருகச் செய்கின்றன. பஞ்சபூதச் சக்திகளில் எந்த சக்தி குறைவுபடுகின்றதோ அந்த பாகத்தில்/காலத்தில் நோய்கள், மனக் கவலைகள், மரணங்கள் தோன்றும். பஞ்சபூத சக்தியை முழுவதுமாக இழக்கின்ற மனிதன்தான் மரணத்தைத் தழுவுகின்றான். எனவே மரணமில்லாப் பெருவாழ்வு என்பது பஞ்சபூத சக்தியை நீடித்து நிலைத்திருக்கச் செய்வதாகும். பொதுவாக, பஞ்சபூத சக்திகள் நிறைந்த பல பொருட்களை, தாவரங்களை விலங்குகளை நமக்கு இறைவன் நிறையப் படைத்திருக்கின்றான். பசு, ஆலயங்களில் உள்ள ஸ்தல விருட்சங்கள், அரசு, ஆல், வேம்பு, புரசு, வில்வம், துளசி போன்ற தாவரங்கள், நாகம், தங்கம், பவளம், வைரம், பூக்கள் போன்றவை பஞ்சபூத சக்திகள் நிறைந்தவையாகும். பூக்கள் வாடி வதங்குவது போல் தோன்றினாலும் அவற்றில் உள்ள பஞ்சபூத சக்திகள் வேறு வடிவைக் கொள்கின்றனவே தவிர பூக்கள் எப்போதுமே மங்களகரமாக, பஞ்சபூத சக்திகளோடு நிறைவு கொண்டிருப்பவைதாம்.

கலியுகத்தில் கூட ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஓதுவதும் மிகவும் மங்கிவிடும் என்பதற்காகத்தான் இறைவனே, பஞ்சபூத சங்கமமாகத் தங்கம், புஷ்பம், வெள்ளி போன்ற பஞ்சபூத சக்திகள் நிறைந்தவற்றை மனிதனுடைய புழக்கத்திலே நிலவ விட்டுள்ளான். இத்தகைய பொருட்களை நாம் கையாளும் போது, அல்லது அணிந்திருக்கும் போது அவற்றில் படிந்திருக்கின்ற ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் சக்தியை நாம் பெறுகின்றோம். எல்லாவற்றையும் விட ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஓதியவாறு சமைக்கப்படுகின்ற அன்னமும், அவ்வாறு ஸ்ரீகாயத்ரீ மந்திர ஒலி உரு ஏற்றப்பட்ட உணவை அன்னதானமாக அளிப்பதும் இப்பூவுலகில் ஸ்ரீகாயத்ரீ ஒலி சக்தியைப் பெருக்கிடும். இவ்வாறு பஞ்சபூத சக்திகள் நிறைந்த ஸ்ரீகாயத்ரீ மந்திர சக்தியை நம்முடைய உடலில் நிரவச் செய்தல் வேண்டுமல்லவா? எனவே ஸ்ரீகாயத்ரீ மந்திர சக்தியைத் தாங்குகின்ற, சேர்த்து வைக்கின்ற ஸ்ரீகாயத்ரீ ஒலிப் பேழையாக விளங்குவதே பூணூலாகும். மூன்று, ஆறு, ஒன்பது, பன்னிரண்டு பிரிவுகள் கொண்டதாகப் பூணூல் அணிய வேண்டிய சம்பிரதாய முறைகள் உண்டு. பிரம்மச்சாரியாக இருப்பவர் மூன்று பிரிகளையும், திருமணம் ஆனவர் ஆறு பிரிகளையும், திருமணமாகி தாய் அல்லது தந்தையை இழந்தவர் ஒன்பது பிரிகளையும், பெற்றோரை இழந்தவர்கள் பன்னிரண்டு பிரிகளையும் கொண்ட பூணூலை அணிதல் வேண்டும்.

புண்ணிய சக்தியைப் பெருக்குவீர்! மனிதன் தன்னுடைய வாழ்வை நடத்துவதுமல்லாமல் தன்னைச் சார்ந்த ஒவ்வொரு தலைமுறைக்கும் உரித்தான புண்ணிய சக்தியைச் சம்பாதித்துத் தர வேண்டிய பெருங் கடமையைப் பெற்றிருக்கின்றான். பணம் சம்பாதிப்பதற்காக மட்டும் மனிதப் பிறவி அளிக்கப்படவில்லை. நன்முறையிலே புண்ணிய சக்தியைப் பெற்று நிலை நிறுத்தி அவற்றை நல்முறையிலே குருவருளால் பெறுவதற்காகத்தான் மனித வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதன் இறக்கின்றபோது அவன் அணிந்துள்ள ஆபரணங்கள், உடைகள் எல்லாமே நீக்கப்படுகின்றன. ஆனால் அவன் அணிந்திருக்கின்ற பூணூல் மட்டும் உடலோடு, ஒலியாக, ஒளியாகப் புறப்பட்டுச் செல்கின்றது என்பது பலரும் அறியாத தெய்வீக இரகசியமாகும். ஏனென்றால் உடலோடு உடல் ஒட்டியதாக பூணூல் எப்போதும் ஒரு அங்கமாக விளங்குவதால் சித்தர்களுடைய பரிபாஷையின்படி ஒலி வடிவத்திலோ, ஒளி வடிவத்திலோ, உடல் உருக் கொள்வதற்கோ அந்தப் பூணூலில் நிறைந்துள்ள காயத்ரீ மந்திர சக்தி பெரிதும் துணைபுரிகின்றது என்பதே பூணூலின் தாத்பர்யமாகும்..
உண்மையில் நரகலோகமோ, சொர்க்க லோகமோ அல்லது தேவ லோகமோ எந்த உலகத்திற்கு அந்த ஒலி செல்லும்போது அப்பூணூலுடன் அது செல்லும் என்பதை இனியேனும் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். பூணூல் என்பது ஜாதி, மத, இன, குல, பேதமின்றி அனைவரும் அணிய வேண்டிய மிகவும் முக்கியமான தெய்வீகப் பொக்கிஷமாகும்! இது ஜாதியையோ, சமயத்தையோ, இனத்தையோ, குலத்தையோ குறிப்பது கிடையாது!

பெருமகளூர் ஸ்ரீசோமநாதர்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி – மீமிசல் பஸ் தடத்தில் பேராவூரணியிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளதே பெருமகளூர், மாயூரம் காரைக்குடி ரயில் தடத்தில் பேராவூரணி ரயில் நிலையம் உள்ளது. புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, தஞ்சாவூரில் இருந்தும் பேராவூரணி சென்றிடலாம்..!

தன்னுடைய வாழ்க்கையில் எத்தனையோ தவறுகளை இழைத்து விட்டு அதற்காக மனம் வருந்திப் பிராயச்சித்தம் இன்றிக் கலங்குவோரும் உண்டு. இளமை, அதிகாரம், ஆணவம், அகங்காரம், உடல் வலிமை, மன வலிமை, அரசியல், செல்வாக்கு போன்றவற்றின் காரணமாகப் பல தீய செயல்களில் ஈடுபட்டுப் பலருக்கும் துன்பங்களைத் தந்துவிட்டு அவை வியாதிகளாகவும், சந்ததி இழப்புகளாகவும். நஷ்டங்களாகவும் குவியும் போது வருந்துதலால் என்ன பயன்? எனினும் இறைவன் மனித வாழ்க்கை ஒன்றைப் பெரும் பேறாகத் தந்திருக்கின்ற போது எவரும், எந்நாளிலும், எந்த நேரத்திலும் தன்னுடைய தவறுகளுக்கு மனதார வருந்தி, தன்னால் துன்பம் இழைக்கப்பட்டவருக்கு உரித்தான உதவிகளைச் செய்வதற்காக இறைவன் நிச்சயமாக வாய்ப்பளிக்கின்றான். ஆனால் செய்த தவறுகளையே மீண்டும் மீண்டும் செய்தல் தகாது. பரிகாரம் என்பது வாழ்வில் ஒரு முறையே!

ஸ்ரீசோமநாதர் பெருமகளூர்

மதிமாயை நீக்கும் ஸ்ரீசோமநாதர்! ஆதலால் உண்மையிலேயே தங்களுடைய தவறுகளுக்கு மனதார வருந்திப் பிராயச்சித்தம் பெற விரும்புவோர் ஸ்ரீசோமநாதர் சிவாலயத்தில் சந்திரனுக்குரித்தான திங்கட்கிழமைகளிலும் மற்றும் ஏனைய நாட்களில் சந்திர ஹோரை நேரங்களிலும்  இறைவனுக்கு வெண் பொங்கல் படைத்து வழிபட்டு வந்திடில் நற்பலன்களைப் பெறுவர்! வெண் பொங்கலில் 1008 முழு முந்திரிப் பருப்புகள் சேர்த்து,

சோமநாத சோமநாத சோமநாத பாஹிமாம்!
சோமச் சந்திர சோமச் சந்திர சோமச் சந்திர ரக்ஷமாம்!!
என்று 1008 முறை ஓதி முழு முந்திரி சேர்த்த வெண்பொங்கலை ஏழைகளுக்குத் தானமாக அளித்து வருதல் வேண்டும்! தனித்துச் செய்ய வசதி இல்லாவிடில் பலரும் ஒன்று கூடிச் சத்சங்க பூஜையாக நிறைவேற்றிட வேண்டும்! குறைந்தது 100 கிலோ வெண் பொங்கலை அளித்திட வேண்டும். முந்திரிப் பருப்பு என்பது வேத அம்சங்களைக் கொண்டு இருப்பதாகும். இரவு, பகல் என இரண்டு காலங்களிலும் பரவெளியில் நிறைந்திருந்து அருள்பாலிப்பவையே! வேத பீஜாட்சர மந்திர சக்திகளாம். முந்திரி பருப்பின் இரண்டு அரைவட்டங்களுமே இரவு பகல் என்ற காலப் பிரிவுகளைக் குறிக்கின்றன. இதைத் தவிர முந்திரியில் மேலும் பல தேவாம்சங்கள் எத்தனையோ உண்டு.!

பரவெளிச் சேவை உள்மனத் தூய்மை! ஈஸ்வரனின் இரு கண்களாம் தேவமொழி, தமிழ் மறைகளை இப்பூவுலகில் போற்றிப் பாதுகாக்க மனித சமுதாயம் மறந்தமையால்தான் நாம் இன்றைக்குப் பலவிதமான துன்பங்களைத் தினசரி வாழ்வில் சந்தித்துக் கொண்டிருக்கின்றோம். ஏழைகளுக்குக் கிட்டாத வேத பீஜாட்சர மந்திர சக்திகளை பாமரர்களால் எண்ணிப் பார்க்க இயலாத வேத அம்சங்களை வேதாமிர்தமாக விளங்குகின்ற முழு முந்திரிப் பருப்புகளை வெண் பொங்கலோடு சேர்த்து அன்னதானமாக அளிக்கும் போது பல்லாயிரக் கணக்கான ஜீவன்களுக்கும் வேத மந்திர சக்திகளை அளித்திடலாமன்றோ! இத்தகைய வேத புண்ணிய சக்திகள் பரவெளியில் நிறைய நிறையத்தான் தீய சக்திகள் தணிந்து நற்காரியங்கள் பெருகிடும். எந்த அளவிற்குப் பரவெளியில் நற்கதிர்கள் பரவிடத் தொண்டாற்றுகின்றோமோ அந்த அளவிற்கு மனம் தூய்மை அடைந்து தீயொழுக்கங்களும் மறையும்! ஸ்ரீசோமநாதர்தாம் மனித மூளைகளில் உள்ள மதிச் செல்களைப் புனிதமாக்குகின்ற பரம்பொருள் மூர்த்தி!.

சந்திர பகவான் தன்னுடைய பதினாறு கலைகளையும் இழந்து வாடியபோது அவர் தன்னுடைய 27 நட்சத்திரத் தேவிமார்களுடன் இங்கு வந்து தாமரைத் தண்டாலாகிய இச்சுயம்பு லிங்க மூர்த்தியை அடிப்பிரதட்சிணம் செய்து பூஜித்து நன்னிலை பெற்றார்! இந்திரனும், சந்திரனும் இங்கு பெருந்தவம் புரிந்து தாமிழந்த செல்வங்களை நிரந்தரமாகப் பெற்றிட அருள் தந்த இங்குள்ள பெருந் தடாகமானது லக்ஷ்மி தீர்த்தமாக இன்றைக்கும் தேவலோகத்திலும், பூலோகத்திலும் போற்றப்படுகின்றது.

பெருமகளூர் திருக்குளம்

மதிகாரகனாகிய சந்திர பகவானுடைய அனுகிரஹம் பெற்றால்தான் எவருமே மனம் பேதலித்தோ, ஆசாபாசங்களில் நாட்டம் கொண்டோ தீவினைகளில் ஈடுபட மாட்டார்கள். எப்போது மது, முறையற்ற காமம் போன்ற தீச்செயல்களில் மனம் தன் நிலை இழக்கின்றதோ, அப்போதே தெரிந்து கொள்ளலாம். மதிக் குணப்பாடுகள் அம்மனிதனிடம் பலவீனமாகிக் கொண்டிருக்கின்றன என்று! எனவே மதியீனத்தால் தாம் இழைத்த பெருந்தவறுகளுக்கும், மதியிழந்ததால் இழந்த செல்வங்களுக்கும் பெருமகளூர் ஸ்ரீசோமநாதர் மூர்த்திதாம் தக்க பிராயச்சித்தங்களை அளிக்கவல்லார்! தாமரைப் பூக்கள் நிறைந்த இத்தடாகத்தில் மிகுந்த கவனத்துடன் நீராடி அல்லது நீரைத் தலையில் தெளித்துக் கொண்டு..
சோமசேகர, சோமசேகர, சோமசேகர பாஹிமாம்!
சோம சந்திர, சோம சந்திர, சோம சந்திர ரக்ஷமாம்!!
என்ற துதியினை ஓதியவாறு இறைவனுக்கு முழுமுந்திரிப் பருப்பு கலந்த வெண்பொங்கல் படைத்துத் தாமரை இலை, வாழை இலை, மந்தாரை இலை, பூவரசு இலை, ஆல இலை, தென்னங் கீற்று இலை போன்ற மூலிகா சக்தி நிறைந்த இலைகளில் உணவினை ஏழைகளுக்குத் தானமாக அளித்து வருவதுடன் தம்மால் துன்பம் இழைக்கப் பட்டவர்களுக்கும் தக்க நஷ்டஈடுகளை அளித்து பேருதவிகளைச் செய்து வந்தால் நன்முறையில் மனந்திருந்தி வாழ்ந்திட நிச்சயமாக சற்குரு மூலமாக இறைவன் நல்வழிகளைக் காட்டுவான்.! வறுமையையும், பணக் கஷ்டத்தையும் போக்கக் கூடிய தேவ சக்திகள் தாமரைத் தண்டிற்கு நிறைய உண்டு! இச்சிவலிங்கமானது வேறெங்கும் காண இயலாத வகையில் தாமரைத் தண்டிலான மிகமிக அபூர்வமான லிங்க மூர்த்தியாகும். கல்லால் ஆன வடிவமன்று! லக்ஷ்மி தீர்த்தங்கள் நிறைந்துள்ள தலங்களில் உள்ள தாமரைத் தண்டுகளில் திருமகளுக்குரித்தான திருப்பாற்கடல் சக்திகள் நிறைந்திருக்கும்.

சந்ததி நல்லொழுக்கம் பெற்றிட! தீய வழிகளில் சென்று தீய ஒழுக்கத்தில் சிக்கிக் கொண்டுள்ள பிள்ளைகள் நன்முறையில் திருந்திடவும் ஸ்ரீசோமநாதர் மூர்த்தியே பெரிதும் துணை புரிகின்றார்! எனவே பிள்ளைகள் நல்லொழுக்கத்துடன் திகழ்ந்திட, குடும்பத்தோடு இங்கு வந்து சந்திர ஹோரை நேரங்களில் தாமரைத் தண்டாலான பஞ்சுத் திரிகளை (நாட்டு மருந்துக் கடைகளில் கிட்டும்) தேங்காய் எண்ணெயில் இட்டு ஆலயமெங்கும் விளக்குகள் ஏற்றி, ஸ்ரீசோமநாதர் சிவமூர்த்தியை அடிப்பிரதட்சிணம் செய்து வழிபட்டு வெண் பொங்கலைத் தானமாக வருதலால் தீவினைகள் தணிந்து நன்னெறிகள் கைகூடும்..!

திருநீலக்குடி

திருநீலக்குடி ஸ்ரீமனோக்ஞநாத ஸ்வாமி

உங்கள் குழந்தைகள் கோழைகளாக இல்லாமல் திடகாத்திர மனதுடன் நல்ல இறை லட்சியத்துடன் நல்வாழ்வைப் பெற்றிட உதவும் மூர்த்தி! கடன், நஷ்டம், விரோதம், வேலையின்மை, நோய்கள் காரணமாக மனம் தளராது அனைத்தும் நம் கர்மவினையே, ஆண்டவன் நமக்குத் துணை புரிவான் என்ற ஆழ்ந்த நம்பிக்கையை ஊட்டி உணர்த்திடும் மூர்த்தி! நல்லதோர் இறை லட்சியத்தைக் கைக்கொண்டு அதற்காகவே வாழ்கின்ற உத்தம நிலையைத் தருகின்ற அற்புதச் சிவலிங்கமூர்த்தி! கும்பகோணம்-ஆடுதுறை அருகே தென்னலக்குடி எனப்படும் திருநீலக்குடி உள்ளது..!

இன்றைக்கு உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் இழைக்கப்படுகின்ற தீவினைகளுக்கும் தீய கர்மங்களுக்கும் பிராயச்சித்தத்தைப் பெற்றுத் தரவேண்டிய இறைப் பொறுப்பும், கடமை உணர்ச்சியும் ஒவ்வொரு பாரதப் பிரஜைக்கும் உண்டு.! இப்பூவுலகின் கர்ம பூமியாகிய இப்புனிதப் பாரதத்தில் அதிலும், தென்னாடுடைய சிவனாம் இறைப் பரம்பொருளுடன் இணைந்து ஒளிர்கின்ற தமிழ்நாட்டில் பாரத ஜீவனாகப் பிறப்பெடுப்பது மகா பாக்கியமாகும்.!

ஸ்ரீதட்சிணாமூர்த்தி திருநீலக்குடி

ஆனால் இப்புண்ணிய பாரதத்தில் பிறந்துவிட்டு வெறுமனே கடனே என்று வாழ்ந்துவிட்டால் நமக்கு இறைவன் அளித்த இறைப் பிரசாதத்தையே விட்டு எறிவது போலாகும். எனவே பிற நாடுகளில் யார் யாரோ எத்தனையோ தீய ஒழுக்கங்களில் ஈடுபட்டுப் பலத்த கர்மவினைகளைச் சேர்த்துக் கொண்டாலும், புண்ணிய பாரதப் பிரஜையாகிய நாம் நல்லொழுக்கத்திலும் பக்தியிலும் திளைத்து, இப்பூவுலகின் அனைத்து ஜீவன்களுக்கும் உரித்தான பிராயச்சித்தப் பரிகார வாழ்க்கையின் இறை லட்சியமாகக் கொண்டிட வேண்டும்.! இதுவே சுயநலமற்ற மகத்தான இறைச் சேவையாகும். இதற்குக் காரணம் சனாதன தர்ம பூமியாக உலகம் ஒரே நாடாக இருந்து நாம் ஒன்றாக வாழ்ந்து கர்மவினைகளின் பலன்களாக இன்று பலநாடுகளில் நம் சந்ததிகளாகவே பிரிந்து வாழ்வதால் தெய்வீகம் நன்கு தழைக்கும் நம் நாட்டுப் பிரஜைகளுக்கு இப்பெரும் பொறுப்பு உண்டு.!

நம்முடைய வாழ்க்கையை நடத்துவதற்கே நாம் திணறுகின்றோமே! பிறகு அனைத்து ஜீவன்களுடைய வாழ்க்கைக்கு நாம் எவ்வாறு நம்மை அர்ப்பணிக்க முடியும் என்று எண்ணிக் கலங்கிவிடாதீர்கள்! இன்றைக்கு உலகில் வேறு எங்கும் திகழாத அளவிற்குச் சுயம்பு மூர்த்திகள் திளைக்கின்ற இப்புண்ணிய பாரதத்தில் அதுவும் இந்தத் தெய்வத் தமிழ்த் திருநாட்டில் தினந்தோறும் மூன்று வேளையுமே ஆலயத்திற்குச் சென்று அடிப்பிரதட்சிணம் செய்து வழிபட்டு வருதலே மாபெரும் பாக்கியமாகும்.!

மனோதிடம் தரும் அருள்திரு மனோக்ஞநாத மூர்த்தி! இரு அம்பிகையர் உள்ள தலங்கள் அருள்வளம் நிறைந்தவையாம்! ஸ்ரீஅநூமஸ்தனி, ஸ்ரீபக்தாபீஷ்டதாயினி ஆகிய இரு அம்பிகையருடன் அருள்பாலிக்கும் திருநீலக்குடி ஸ்ரீமனோக்ஞநாத சிவலிங்க சுவாமியே மார்க்கண்டேய மஹரிஷிக்கும், எண்ணற்ற மகரிஷிகளுக்கும் இறை லட்சியச் சிரஞ்சீவித்வத்தையும் அளித்துள்ளார். ஆன்மம் என்றும் சிவப்பணி செய்து கிடப்பதே சிரஞ்சீவித்வம்! முதுமை இல்லாமை, பிறப்பு, இறப்பில்லா நிலை என்பன மட்டுமே சிர்ஞ்சீவித்வம் ஆகாது! இதன் குணப்பாடுகள் ஜீவ, தேவ நிலைகளுக்கேற்ப மாறுபடும்! பிரபஞ்சத்தின் அனைத்து ஜீவன்களுடைய நல்வாழ்விற்காக எப்போதும் அரும்பாடுபடுபவர்களாக மகரிஷிகளும், சித்புருஷர்களும், யோகிகளும் விளங்குவதால்தான் அவர்கள் அனைவருக்கும் எப்போதும் இறைப்பணி செய்து கிடப்பதான பாக்யத்தையே சிரஞ்சீவித்வமாக அளிப்பவரே திருநீலக்குடி ஸ்ரீமனோக்ஞநாத சிவலிங்க மூர்த்தியாவார்.!

இப்பெரும் பேற்றை நீங்களும் பெற வேண்டாமா? எனவே இவை லட்சியத்தோடு திளைத்து இறைப்பணிகளை ஆற்றியபடி வாழ்ந்திட, வைராக்ய அருட்குணமும், பக்தியும், மனோதிடமும் பெற்றிட ஸ்ரீமனோக்ஞ நாத மூர்த்தியை வேண்டிடுக! தென்னலக்குடி எனப்படும் திருநீலக்குடியில் உறையும் ஸ்ரீமனோக்ஞ நாத மூர்த்திக்கு சனிக்கிழமை தோறும் எள்ளும் வெல்லமும் கலந்த காப்பைச் சார்த்தி, காலை நேரத்தில் அங்குள்ள சிரஞ்சீவித் தீர்த்தத்தில் நம்முடைய மூதாதையர்களுக்கு மட்டுமல்லாது ஜாதி, மத, இன, குல பேதமின்றி யாவர்க்கும் எந்த உயிரினத்திற்கும் தாங்கள் விரும்பிய தலைவர்க்கோ, விரும்பி வளர்த்த பசு, நாய், போன்றவற்றிற்கும் கூடத் தர்ப்பணம் அளித்து “அப்பனே! ஸ்ரீமனோக்ஞநாத மூர்த்தியே! ஜீவ சௌபாக்யத்திற்காக என்னுடைய மனம், உடல், உள்ளத்தைத் தியாகமாக அர்ப்பணிக்க இத்தர்ப்பணப் புண்ணிய சக்தி அடியேனுக்கு இறையருளை ஊட்டட்டும்!” என்று வேண்டிச் சங்கல்பம் செய்து கொண்டு உயரே கூப்பிய கரங்களுடன் ஆலயத்தை அடிப்பிரதட்சிணமாக வலம் வந்து ஏழைச் சுமங்கலிகளுக்குக் கால் மெட்டிகள், கொலுசுகள்  மற்றும் காலணிகள், மருதாணி போன்ற பாதம் சம்பந்தப்பட்ட பொருட்களைத் தானமாக அளித்து வருதலால் தாங்கள் வகிக்கின்ற பொறுப்புகளின் மூலம் சுயநலமற்ற இறைப் பணிகளை ஆற்றி நிரந்தரமான புகழ், கீர்த்தியைப் பெற்றிடலாம்.

ஸ்ரீதிருமகள் திருநீலக்குடி

நட்சத்திரங்களிலே பாத சஞ்சார அம்சங்கள் நிறைய உண்டு சந்திர வட்டப் பாதையில் அமைகின்ற 27 நட்சத்திரங்கள் மட்டுமல்லாது விண்ணுலகில் கோடானு கோடி நட்சத்திரங்கள் பிரகாசிக்கின்றன அல்லவா, அவை யாவும் இறைவனுடைய கிருத்திய நடனங்களின் போது ஈஸ்வரனின் திருச்சலங்கைகளிலிருந்து தெறித்த ஒளிப் பிரகாசச் சிதறல்களாகும். எனவே ஈஸ்வர பாத சஞ்சார சக்தி நிறைந்த மூர்த்தியே ஸ்ரீமனோக்ஞ நாத மூர்த்தியாதலால், சபரி மலை, திருப்பதி, பழனி, மருதமலை போன்ற இடங்களுக்குப் பாதயாத்திரையாகச் செல்கின்ற பக்தர்கள் யாவரும் தங்களுடைய விரதத்தின் போது சுவாமியின் தரிசனத்திற்கு முன்னால் ஸ்ரீமனோக்ஞ நாதரைத் தரிசித்து ஈஸ்வர பாத சஞ்சார சக்திகளைப் பெற்றுத் தருமாறு வேண்டினால் அவர்களுடைய விரதபலாபலன்கள் யாவும் பன்மடங்காகப் பெருகி நல்ல காரிய சித்திகளைப் பெற்றுத் தரும்! பூர்வ ஜென்மங்களில் ஸ்ரீமனோக்ஞநாதரை அடிப்பிரதட்சிணமாக வழிபட்டவர்கள்தாம் இன்றைக்கும் பல மலைத் தலங்களில் பன்முறை கிரிவலம் வரும் பாக்யத்தையும் 18 ஆண்டுகளுக்கு மேல் முறையாக விரதம் பூண்டு சபரிமலை, திருப்பதி போன்ற இடங்களுக்குப் பாதயாத்திரை செல்லும் பாக்யத்தையும் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது,,!

ஆத்மவிசாரத் தேன் துளிகள்!

புழு, பூச்சிகள், வண்டுகள், பறவைகள், விலங்கினங்கள் போன்ற அனைத்து ஜீவன்களின் தோற்றத்திற்குமான காரண காரியங்களைப் பகுத்தறிகின்ற ஆறாம் அறிவு மனிதனுக்கு உண்டு. ஆனால் இதைச் சற்றும் பயன்படுத்தாமல்  மனிதன் மடிந்து விடுகின்றானே, என்னே பரிதாபம்! உலகில் வாழும் அனைத்து ஜீவன்களுடைய நல்வாழ்விற்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டிய, கடமைகளை ஆற்ற வேண்டிய வழிபாடுகளைக் கடைபிடிக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு ஒவ்வொரு பாரதக் குடிமகனுக்கும் உண்டு.!

பூகம்ப விளைவுகளில் ஆன்மப் பணியாக, சிறந்த சத்சங்க வழிபாடாவது எது என்று கேட்டு நமக்கு நூற்றுக்கணக்கான கடிதங்கள் வந்துள்ளன.! இவற்றிற்கான எத்தனையோ உத்தம இறை வழிபாடுகள், தான தர்ம முறைகள் இருந்தாலும் முதலில் நம் மனித உடலால் ஆற்ற வேண்டிய நிவாரணக் கடமைகளை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றித் தியாக உள்ளத்துடன் நிறைவேற்ற வேண்டும்! க்ஷீர கோடித் தர்ப்பணம் அதியற்புத ஜீவ சாந்தியைப் பெற்றுத் தருவதாகும்! பிறப்பு, இறப்பு என்பது ஜீவன்களுடைய கர்மவினைகளைப் பொறுத்து அமைகின்றது. இறப்பிலும் பல வகைகள் உண்டு. இயற்கை மரணம், கொடிய நோய்கள், பலவகையான விபத்துகள் இவ்வாறாக எந்த விதத்தில் இறப்பு ஏற்படும் என்பதை ஜீவன்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. தம்முடைய இறப்பைப் பற்றி அறிய முடியாத மனிதன்தான் ஆடு, மாடு, மீன் போன்ற பல வாயில்லா ஜீவன்களின் இறப்பிற்கும் காரணமாக இருக்கின்றான் என்பதை உணர்தல் வேண்டும்!

ஸ்ரீமார்கண்டேயர் வழிபட்ட லிங்கம்
திருநீலக்குடி

மூட்டைப் பூச்சி, கொசு, தேனீ, குளவி, எறும்பு இவை மனித சமுதாயத்திற்கு இடையூறாக இருப்பதுபோல் வெளிப்படையாகத் தோன்றினாலும், அந்த ஜீவன்களுடைய பிறப்பு இரகசியங்களை, காரண காரியங்களைப் பற்றி மனிதனுடைய பகுத்தறிவால் உணர முடியாமையால்தான், அவன் இத்தகைய ஜீவன்களை மனித குலத்திற்கு இடையூறு என்று எண்ணி அவற்றை அழிக்க முற்படுகின்றான். என்ன அழித்தாலும், எத்தகைய விஞ்ஞான நவீன மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், கொசு இனத்தை அழிக்க முடிகின்றதா? கரப்பான்களை என்ன செய்ய முடிகிறது?

கொசு, கரையான்கள், ஈக்கள், கரப்பான்கள், பயிர்ப்பூச்சிகளை அழிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள இரசாயன விளைவுகள் யாவும், இப்பூச்சிகளால் ஏற்படும் விளைவுகளை விட மனிதனுடைய உடலைத்தான் மிகவும் மோசமாகப் பாதிக்கின்றது என்பதே நாம் கண்கூடாகக் காண்கின்ற உண்மையாகும். பயிர் பூச்சிகளை அழிக்க ஏற்பட்ட விஷ மருந்துகள்  தான்யங்களின் நல சக்தியையே பாதிக்கின்றனவே! இன்றைக்கு மனித குலத்தின் வியாதிகள் பலவும் பூச்சி மருந்துகளின் பக்க விளைவுகளினால், சக்தி குறைந்த தான்யங்களினால் ஏற்பட்டவையாம்! சம்பா போன்று நெடிய காலப் பயிர்களும், இயற்கை உரங்களும்தாம் தான்யங்களுக்கு மிகுந்த ஆரோக்யம் பெருக்கும் சக்தியை அளிக்கும்! குறுகிய காலப் பயிர்களினால் (Short term hybrids) விளைச்சல் மிகுதியாவது போல் தோன்றினாலும் இவற்றின் தான்யங்களின் சக்தி வளம் பெரிதும் மாசுபடுகின்றன! நெடுநாள் நெல்லின் சுவையும், வளமும், ஜீவ சௌபாக்ய சக்தியும் குறுகிய கால நெல்லில் இருப்பதில்லை என்பது கண்கூடு!

சமீபத்தில் ஓர் இறை அடியாருடைய நற்காரியம் ஒன்று, மிகமிகப் பெரிய தேன்கூடு ஒன்று அவ்விடத்தில் கட்டப்பட்டுவிட்டதால் அந்த நற்காரியத்தை நடத்த முடியவில்லை. பல்லாயிரம் மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய அந்த தானதர்ம நற்காரியத்தை தொடர வேண்டுமானால், தேன்கூடு அகற்றப்பட்டாக வேண்டும். என்ன செய்வது? பல்லாயிரக்கணக்கான தேனீக்கள் நிறைந்திருந்த அந்த தேன் கூட்டை சாணப் புகை மூட்டம் இட்டோ, இரசாயனங்களைக் கொண்டோ மூன்றே நிமிடங்களில் அழித்துவிடலாம்! அழிக்கவா நாம் பிறந்தோம்?

ஆனால் தேனீக்களும் நம் குழந்தைகள் தாமே, நம்மை நம்முடைய இடங்களை அண்டி வாழ்பவைதாமே! ஆதலால் சற்குருவின் அருளாசியுடன் இதற்கான தக்க ஆன்மீகத் தீர்வு பெற அவர் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களை அறவழி வேண்டி நாடினார்! குருமகராஜ் அளித்த தர்ம நெறிகளின்படி மூன்று நாட்களிலும் சித்த, அமிர்த யோக நேரங்களில் காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் தேன் கூட்டின் முன் பூஜைகள் செய்யப்பட்டன! “இறை வளந்தரும் தேனீக்களே! தேனிமலை சித்தர்பிரானுடைய அருளாசியால் நாங்கள் இந்த தான தர்ம நற்காரியத்தைத் தொடர வேண்டியிருப்பதால், தாங்கள் (தேனீக்கள்) அனைவரும் இவ்விடத்தை விட்டுத் தாமாகவே நீங்கி, எங்களுடைய இறை நற்காரியத்திற்கு உதவி புரிந்திட வேண்டும்!” என்று வேண்டி மிகவும் மனம் உருகிப் பிரார்த்தனை செய்து கொண்டார்கள்.. அந்தத் தேனீக்களுக்காக அமிர்த பூஜா வழிபாடுகளும், ஸ்ரீஅமிர்தகடேஸ்வர ஹோம பூஜையும் நிகழ்த்தப்பட்டது மட்டுமல்லாமல், மூன்று வேளைகளிலும் மதுர கல்யாண மந்திரங்களும் ஓதப் பெற்று, தேனீக்களுக்கு உரிய தேவதைகளான மதுராமிர்த வாஹினி தேவதைகளுக்குப் படையலும், நைவேத்யமும் அளிக்கப்பட்டன! தேனீக்களுடைய மூதாதையர்களுக்குக் காருண்யத் தர்ப்பணமும் அளிக்கப்பட்டது! தேனீக்கள் மனித மொழிகளை நன்கு அறிந்தவையே! ஆனால் மனிதான் தான் தேனீக்களுடைய மொழிகளை அறிந்திடாது அவற்றை இம்சை செய்கின்றான்.!

இறை அடியார்களுடைய பவித்திரமான பிரார்த்தனை வழிபாடுகளால் மனம் உருகிய தேனீக்கள் மூன்றாம் நாள் இரவு தேனிக் கூட்டைக் காலி செய்து புறப்பட்டு விட்டன.. இது மட்டுமல்லாது தங்களுடைய தெய்வப் பரிசாக மூன்று லிட்டர் அமிர்தமய மதுரமான தேனையும் பிரசாதமாக அளித்துச் சென்றன.. அது இறை அபிஷேகத்திற்கும், பிரசாதத்திற்கும் படைக்கப்பட்டது!

தேன்கூட்டிற்கும் வாஸ்து சாஸ்திரம் உண்டு! தேனீக்களை தெய்வப் பிரார்த்தனை மூலம் நமக்குத் துணை புரிய வேண்டுவதுடன் அவை நல்லதோர் இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு தம்முடைய தேன் கூட்டைத் தொடர வேண்டும் என்பதற்காக, பச்சை மாக்கோலத்தினால், அந்த தேன் கூட்டின் கீழ் வாஸ்து சிவச் சக்கரங்கள் வரையப்பட்டு, அவற்றில் அற்புத பீஜாட்சரங்களையும், சற்குருவின் இறையருளால் இறை அடியார்கள் வடித்துப் பிரார்த்தனை செய்தார்கள். இவ்வாறாக, குருவருளால் இவ்வரிய யந்திர, மந்திர சக்திகளெல்லாம் தேனீக்களை அடைந்து அவையாவும் மிகவும் மகிழ்வுற்று அவ்விடத்தை விட்டுப் பரம சந்தோஷத்துடன் அகன்றன! இவ்வாறாக கொசுக்களோ, ஈக்களோ, விஷ ஜந்துக்களோ மனிதன் நிச்சயமாக அவற்றை அரவணைத்துக் கொண்டு, இறைவன் படைத்த இந்த இறைச் சமுதாயத்தைப் பவித்ரமாக நடத்திச் செல்ல முடியும்.! எனவே, உள்ளம் உவந்த பிரார்த்தனையால் எத்தகைய நற்காரியங்களையும் சாதிக்க முடியும், குருஅருள் கூடினால் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டாகும். நம்வாழ்வில் சற்குரு அமைந்தால் தான் இவ்வரிய தேவ அதிசயங்களைக் கண்கூடாகக் காண முடியும்!

திருநல்லூர் விஷ்ணுபதி

திருநல்லூரில் ஸ்ரீவிஷ்ணுபதி பூஜை! விஷ்ணுபதி புண்யகாலம்! (15.5.2001) செவ்வாய்க்கிழமை!

அரக்கனாம் இரண்யனை வதம்புரியத் திருமால் மூர்த்தியானவர் நரசிம்ம வடிவு வேண்டிப் பலதலங்களில் வழிபட்டு வருகையில் கும்பகோணம் அருகில் உள்ள திருநல்லூர் ஸ்ரீகல்யாணசுந்தரேஸ்வரரை (ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர்) வேண்டி நரசிம்ம அவதாரக் கிருத்தியங்களைப் பரிபூரணமாகப் பெற்றார்! நரசிம்ம அவதாரத்தில் ஏற்பட்ட பலவிதமான உக்ரங்கள் (உஷ்ணத் தாத்பர்யங்கள்) தணியப் பெற்றும், திருமாலுக்குரிய சுயவடிவு கிட்டப் பெறவில்லை! அனைத்து உக்ரகங்களும் பரிபூரணமாகத் தணிந்து, இராவணனை வதம் செய்த ஸ்ரீராமபிரான் அதனால் எழுந்த தோஷங்களுக்குப் பிராயச்சித்தம் தேடியது போல, நரசிம்மருக்கு, இரண்ய வத தோஷத்தால் எழுந்த சாபமும் நீங்கப் பெற்றால்தான் (நரசிம்மர் தோன்றிய) சுயம்புத் திருமால் வடிவம் மீளும் என்பதால், தன் சுயத்திருமேனியைப் பெற திருமாலுக்குத் திருநல்லூர்த் திருத்தலத்தில், ஈசன் அருள்புரிந்த பஞ்சவர்ணப் பிரகாச நேரமே விஷ்ணுபதிப் புண்ய காலமாம்! எனவே இவ்வாறக சைவ, வைணவ இறைமணங் கமழும் உத்தமத் திருத்தலமே திருநல்லூர்! நரசிம்ம அவதார மூர்த்தியின் அனைத்து விதமான உக்ரங்களும் (அதி உஷ்ணமான அம்சங்கள்) தணிந்து, அவர் தமக்குரிய மூலத் திருமால் வடிவைப் பெற்ற மிகமிகப் புனிதமான நேரமே விஷ்ணுபதிப் புண்யகாலமாகும்!

சர்வேஸ்வரனின் திருவருளால், இறைப் பரம்பொருளாம் பெருமாள் மூர்த்தி, எங்கு நரசிம்ம அவதாரம் பூணப் பரிபூரணம் பெற்றாரோ, அவரே இன்றைக்கும் அதே திருநல்லூர் சிவத்தலத்தின் மூலத்தானக் கருவறை விமானத்தின் மேல், மேற்குப்புறத்தில் ஸ்ரீநரசிம்ம மூர்த்தியாய் (பின் அட்டைப்படம்) அமர்ந்து அருள்பாலிக்கின்றார்! நரசிம்ம அவதாரம் கொண்ட ஆதிமூலப் பெருமாளுக்கு, சிவலோகநாதப் பெருமாள் எனும் நாமம், ஈசனால் சூட்டப் பெற்ற உத்தமப் புனிதக் காலமே விஷ்ணுபதிப் புண்யகாலமாகும்.!

ஸ்ரீநரசிம்ம மூர்த்தி திருநல்லூர்

எந்த மூலப் பெருமானிடமிருந்து நரசிம்ம அவதாரம் தோன்றியதோ, அம்மாமூர்த்தியே இன்றும் சிவலோகநாதப் பெருமாளாக, திருநல்லூர்ச் சிவாலயத்தின் மேற்கில் தோன்றித் தாம் கொண்ட நரசிம்ம அவதாரத்தையும் தரிசித்து, சிவபெருமானையும் வழிபட்டு ஆலயம் கொண்டுள்ளார். இவ்வற்புத வைபவம் நிகழ்ந்த காலமும் விஷ்ணுபதிப் புண்ய காலமே!  நரசிம்ம உள் ஜோதியாய் எழுந்த திருமாலின் திருமேனியை நரசிம்மரே, சிவலோக நாதப் பெருமாளாகத் தரிசிக்கும் கோலமும், சிவலோகநாதப் பெருமாளும் தன் உள்ளொளியாய் எழுந்து சமைந்த ஸ்ரீநரசிம்மரைத் தரிசிக்கும் கோலமும், இவ்விரண்டு ரூபங்களிலும் ஸ்ரீவிஷ்ணு மூர்த்தி, திருநல்லூர்ச் சிவலிங்க மூர்த்தியை வழிபட்ட நேரமும் விஷ்ணுபதிப் புண்ய காலமாம்! சித்தர்களும், மகரிஷிகளும் மகிழ்வுறும் வண்ணம் ஆதிமூலப் பெருமாளும், ஆதிசிவனும் நேருக்கு நேர் நின்று போற்றி வழிபட்ட புராணப் புனித வைபவ நேரமும் கூடியதே அதியற்புத விஷ்ணுபதிப் புண்ய காலமாம்!

இரணியன் அகங்காரத்தையும் ஆணவத்தையும் பெருக்கித் தேவ லோகங்களையே உலுக்கினான்! அவன் பெற்ற வரங்களோ அவனுக்கு அழிவே கிடையாது என்ற மாயையை உருவாக்கி விட்டனவே! தன் உடல் கீழே விழுந்து இறத்தலோ, பகலிலோ, இரவிலோ மாய்தல் கூடாது! வீடோ, போர் முனையோ உள்ளும், வெளியும் மாய்தல் கூடாது! மிருகத்தாலோ, மனிதனாலோ சாதல் கூடாது, ஆயுதங்களால் வதைபட்டு மரணம் தழுவுதல் கூடாது என மரணம் வரும் வழிகளையெல்லாம் அடைத்து இரணியன் தம் அருந்தவத்தால் பெருந்திரளான வரங்களைப் பெற்று விட்டதால் சங்கு, சக்கரம், சுதை, சார்ங்கம், பிரம்மாஸ்திரம், பாசுபதாஸ்திரம், காண்டீபம் போன்ற தெய்வீக ஆயுதங்களைக் கூட மும்மூர்த்திகளால் கைக்கொள்ள இயலாது போயிற்று! இதனால், எந்தத் தெய்வ மூர்த்தியாலும் தன்னை எதிர்க்க இயலாது என்ற ஆணவப் போராட்ட எண்ணம் கொண்ட இரணியன் பெருமகிழ்ச்சி கொண்டு, தானே இறைவன், தன்னையே யாவரும் இறைவனாக ஏற்று வழிபட வேண்டும் என்ற கொடூரச் சட்டம் இயற்றிச் செங்கோல் ஆட்சி பூண்டதை நாம் அறிவோம். அவனுடைய அக்கிரமங்கள் பெருகப் பெருக, அவனுடைய பெருத்த அரக்க உடலும் அதிஉஷ்ண சக்தியுடையதாகப் பொங்கியது. இதோடு அவனுடைய பாவங்களும் அளவுக்கு மீறிப் பெருகியமையால், பெருவரம் மிகுந்த வாசுகி நாகம் கூட அவனருகில் சென்று மேனி கருகித் திரும்பி வந்துவிட்டது. அவனுடைய மூச்சுக் காற்றைத் தாங்க இயலாததால் நொடிக்கு நொடிக் கோடிக் கணக்கான உயிரினங்கள் மடிந்தன. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை அவனுடைய மமதை ஏற்க மறுத்தது!

ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் திருநல்லூர்

இரணிய அரக்கன் கொடுமைகளினால், அவனுடைய கொடுங்கோல் ஆட்சியில் வாடிய கோடானு கோடி ஜீவன்களையும் காத்திடவும், இரணியன் பெற்ற இறைவரங்களுக்கு ஏற்ப அவற்றிற்கு பங்கம் வராவண்ணம் பேரவதாரம் பூண்டு பிரபஞ்சத்தைக் காத்திடவும் பெருமாள் விழைந்தார்! அதற்குரித்தான அதிவெப்பம் கூடிய இதுவரை பிரபஞ்சத்திலேயே எழுந்திரா அதி உன்னத உக்ரத்தைப் பெறுவதற்கும் ஸ்ரீவிஷ்ணுமூர்த்தியே பல திருத்தலங்களுக்குச் சென்று வழிபட்டார்!

இரண்யனுடைய அட்டகாசத்திற்கு முற்றுப் புள்ளி வைத்திடப் பெருமாள் பல அக்னித் திருத்தலங்களிலும் வழிபட்டுப் பலவிதமான உக்ர சக்திகளையும் பெற்றார். கும்பகோணம் அருகில் உள்ள திருநல்லூர் சிவத்தலச் சுயம்பு மூர்த்தி பல அரிய அக்னி சக்திகளைக் கொண்டவராவார்! எவ்வாறு? சூரிய, சந்திர, அக்னி லிங்க மூர்த்திகளே தினமும் வழிபடுகின்ற மூர்த்தி! சூரிய, சந்திர, அக்னி மூர்த்திகள், மற்றும் பஞ்ச நதிகளும் தினந்தோறும் பூஜித்து வழிபடுகின்ற தெய்வம்! ஸ்ரீஅகஸ்தியப் பெருமானுக்குப் பார்வதி பரமேஸ்வரத் திருமணக் காட்சி கிட்டிய தலம்! மூலச் சுயம்பு பாணலிங்கத்துடன் அகஸ்தியர் வைத்துப் பூஜித்த இரண்டாவது பாண லிங்கத்துடன் உலகிலேயே ஒரே ஆவுடையில் இரு பாண லிங்கங்களுடன் விளங்குகின்ற மிகவும் சக்தி வாய்ந்த சிவலிங்க மூர்த்தி! பிரபஞ்சத்தின் மகத்தான அக்னி சக்தியை உடையவரிவரே!

வரம் புறமின்றி நரசிம்மச் சரம்! ஒரு நாளுக்குரிய அறுபது நாழிகையில் அதாவது காலை சுமார் ஆறு மணிக்குத் துவங்கி பகலுக்கான முப்பது நாழிகை நேரத்தில் ஆறு நாழிகைக்கு (சுமார் 2½ மணி நேரம்) ஒரு முறை இம்மூலச் சிவலிங்கத்தின் நிறம் மாறுகின்றது. முக்தி நிலை பெற சற்குரு கிட்டுதற்கு, கொடிய நோய்கள் தீர்தற்கு, சந்ததி விருத்திக்கு, செல்வம் பெற இவ்வாறாகத் திருநல்லூர்ச் சிவலிங்கத்திற்கு எந்த வண்ணத்தில், எவ்விதப் பூஜைகளை, தரிசனங்களைச் செய்திடில் எத்தகைய பலாபலன்கள் கிட்டும் என்பதைத் தக்க சற்குரு மூலம் அறிந்து பயன் பெறுதல் வேண்டும்! திருநல்லூர் ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் திருவருளால் நரசிம்ம உக்ரங்களைப் பெற்றுத் திருமால் நரசிம்ம அவதாரம் கொண்டு இரண்யனை வதம் கொண்டு, அவன் பெற்ற வரநியதிகளுக்குள்ளாக,

1. காலையும், மாலையும் இல்லாமல் பிரதோஷ அந்தி நேரம்
2. ஆயுதமின்றிக் கை நகம்
3. உள்ளும் வெளியுமின்றி வாசற்படி
4. மனித விலங்கு வடிவின்றிச் சிங்க முகம், மனித உடல்
5. இரண்யனின் உடல் கீழே விழுதலின்றித் தம் திருமேனியில் கொள்தல்
-இவ்வாறாக இரணியன் பெற்ற வரங்களுக்குப் பங்கமின்றி இறை நியதிகளுக்கு உட்பட்ட வகையில் நரசிம்ம மூர்த்தி இரணியனை வென்று பிரபஞ்சத்தைக் காப்பாற்றினார்!

இரண்யவதம் முடிந்த பின்னர் நரசிம்ம மூர்த்தியின் உஷ்ணத் தன்மையைத் தாங்க இயலாது பூலோகத்தின் பல லோகங்களும் தவித்திடவே, நரசிம்ம மூர்த்தி தாமே பலவிதமான அக்னிக் காப்பு முறைகளைக் கைக்கொண்டார். முத்து நீராடல், பாற்கடல் சோபித்தல், பூமலர்ப் பாதயுறை, தங்கக் கவச மூட்டு, ஸ்ரீலட்சுமி நாராயணத் திருக்கோலம் புனைதல், சீதளக் காப்பு, பன்னீர்க் களிநடனம், திருமகள் திருநிழல் தங்கல், பனியுறைப் பதரி நாதக் களிப்பு, தண்மண்டல முத்திரை, கனலறக் கவினுறு நடனம் – இவ்வாறான பலவித இறை நடனங்களை, முத்திரைகளை, பாவனைகளைக் கைக்கொண்டு பலவிதமான உக்ரங்களைத் தணித்திட்டார்! எனினும் இரண்யனின் கொடும் உடலைத் தன் மேல் கொண்டமையால் சிலவகை உக்ரங்கள் தாளாமல் பொங்கிடவே, ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தி தோன்றி எவராலும் தாங்க இயலா அரிய நரசிம்ம அவதார உக்ரங்களைத் தன்னுள் ஏற்றிட்டார்! ஸ்ரீலட்சுமி நரசிம்ம மூர்த்தியாக உலா வந்த திருமால், தம்முடைய சுய ரூபந்தனைப் பெற்றிட, கண்டிட விழைந்தார்.

திருநல்லூர்

திருநல்லூர்ச் சிவ மூர்த்தியே திருமாலுக்கு நரசிம்ம அவதார கிருத்தியங்களை உணர்வித்தவராதலின் அவரே இரண்டு மூர்த்திகளையும் ஒரு சேர உணர்விக்கும் தன்மையுடைய இறைப் பரம்பொருளென அகத்தியமுனி உரைத்ததை உய்த்தார் நரசிம்ம மூர்த்தி! ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரரும் கசிந்து இசைந்திட... சித்தர்களும், மகரிஷிகளும் வேண்டிய வண்ணம் சிவரூபமும், விஷ்ணு ரூபமும் ஒன்றையொன்று வழிபடும் அற்புத, அருங்காட்சியைக் காணுந் தருணத்தை உய்விப்பதற்காகவும்..., ஆம்! அந்த யுகத்தின் வ்ருஷ வருட விஷ்ணுபதிப் புண்ய காலத்தில்.... எந்தப் பரம்பொருளாம் திருமால் மூர்த்தியிடமிருந்து நரசிம்ம அவதாரக் கிருத்தியங்கள் கூடி நரசிம்ம அவதாரம் உற்பவித்ததோ, அதே திருமால் மூர்த்தியின் அவதாரக் கிருத்தியங்கள் பரிபூரணமாக நிறைந்ததாக சிவலோக நாதப் பெருமாள் மீண்டும் தோன்றினார்! ஆம்.. நரசிம்ம அவதாரம் பூண்ட ஆதிமூலப் பெருமாள் மூர்த்தியே சிவலோக நாதப் பெருமாளாக, அந்த விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் திருநல்லூரில் ஸ்ரீபூதேவி , ஸ்ரீதேவி சமேதராகக் காட்சியளித்தார்!

சிவலிங்க மூலத்தானக் கருவறை விமானத்தில் ஸ்ரீவிஷ்ணுதரிசனம்! இவ்வாறு ஸ்ரீநரசிம்ம மூர்த்தியே தம் ஆத்ம ஸ்வரூபத்தை, பரம்பொருள் தத்துவத்தை, சர்வேஸ்வரக் கிருத்தியங்களைக் கொண்ட திருமாலின் சீரியதோர் அவதார வைபவத்தைத் தரிசித்த நேரமே அந்த யுக வ்ருஷ வருட விஷ்ணுபதி புண்ய காலமாகும்.! இதைப் பறைசாற்றும் பொருட்டுத்தான் பாடல் பெற்ற சிவத்தலமாகிய திருநல்லூர் ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வர ஆலய மூலச் சிவலிங்க மூர்த்தியின் கருவறையின் விமானத்தில், மேற்குப் பகுதியில் பத்தடிக்கும் மேலான, பெரிய சுதை ரூப மூர்த்தியாக ஸ்ரீநரசிம்ம மூர்த்தி இன்றும் வீற்றிருக்கின்றார்!

தம் ஆத்ம ஸ்வரூபத்தை அதாவது தாம் எந்தத் திருமால் கிருத்தியங்களிலிருந்து நரசிம்ம அவதாரம் கொண்டாரோ அந்த காரணப் பெருமாளாம் ஸ்ரீசிவலோகநாதப் பெருமாளின் தரிசனத்தை சிவாலயத்தின் மேற்கு திசையில் பெறுபவராக ஸ்ரீநரசிம்மர் கருவறை விமானத்தில் வீற்றிருந்து பொலிகின்றார்! கருவறை விமானத்தில் விண்ணளாவ நிற்கும் ஸ்ரீநரசிம்ம மூர்த்திக்குக் காட்சி தந்து, நரசிம்மருடைய ஆத்ம தெய்வ ரூபமாகவே, அவருக்கு எதிரே சிவாலயத்தின் பின்புறம், மேற்குப் பகுதியில், மேற்குக் கோபுரத்திற்கு எதிரே, இன்றும் ஒரு சிறிய ஒற்றை மண்டப ஆலயத்தில் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சமேதராக ஸ்ரீசிவலோக நாதப் பெருமாள் கவினுறச் சேவை சார்த்துகின்றார் அழகிய திருமேனி! அருள் பொங்கும் அருள்மேனி! தம்முள் எழுந்த, தகை சார்ந்த நரசிம்மரைத் தாமே காணும் ஆத்மஸ்வரூபக் கருணை மேனியர்!

சப்தசாகர தீர்த்தம் திருநல்லூர்

சிவபெருமானே ஆற்றும் ஆத்மலிங்க பூஜை! ஆம், திருவையாற்றில் அர்ச்சகர் வடிவில் வந்த சிவபெருமான் எவ்வாறு ஸ்படிக லிங்கத்தைப் பூஜித்து ஆத்ம பூஜையாகத் தம்மைத் தாமே பூஜித்துக் கொண்டு ஆத்ம ஸ்வரூப, விஸ்வரூபத்தை உலகிற்கு உணர்த்தினாரோ, அதே போலத் திருநல்லூரில் விஷ்ணுபதி புண்ய காலத்தில், சிவலோகநாதப் பெருமாள் தம்முடைய நரசிம்ம அவதாரத்தையே வணங்கிட, ஸ்ரீநரசிம்ம மூர்த்தியே, தாம் தோன்றிய சிவலோகநாதப் பெருமாளைப் பூஜித்திட, ஸ்ரீவிஷ்ணுவின் இவ்விரு அவதாரங்களுமே திருநல்லூர் ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரரும், ஸ்ரீசிவலோக நாதப் பெருமாளைப் போற்றிட, யாங்கணும், யாவுமாய் நிரவி நிற்கின்ற பரம்பொருள் தத்துவம் இந்த விஷ்ணுபதிப் புண்யகாலத்தின் மகிமை பிரபஞ்சத்திற்கு உணர்த்தப் பெற்றது..! எனவே பலரும் அறியாத, அற்புதமான, மிகச் சிறிய பெருமாள் ஆலயமிது! காண்பதற்கு ஒரு சிறிய மண்டபக் கோயில் போல் தோன்றிடினும் ஒரு யுகத்தில் பிரம்மாண்டமானதாக, மிகவும் பிரசித்தி பெற்று விளங்கிய பெருந் திருக்கோயிலாகும். மூர்த்தியைத் தாங்கும் கோயில் சிறிதாயினும் கீர்த்தி மிகவும் பெரிதாம்!

ஜாதி, மத, இன, குல பேதமின்றி அனைத்து பக்த கோடிகளும், திருமால் பக்தர்களும், வைணவப் பெரியோர்களும் நரசிம்ம அவதாரக் கிருத்தியங்களுக்குப் பாத்திரமான இச்சிறு பெருமாள் ஆலயத்தில் ஸ்ரீவிஷ்ணுபதிப் புண்ய காலத்தை மகத்தான முறையில் கொண்டாடி, பெறுதற்கரிய மும்மூர்த்திகளின் திருவருளைப் பெற்றிடுவார்களாக! கொடிய தீவினைகளையும் கெடுதலான தீய பழக்கவழக்கங்களையும், தீய சக்திகளையும் பஸ்மம் செய்யும் மகத்தான அக்னித் திருவருள் பூண்டதே நரசிம்மருடைய திருஉக்ரமாம்!

கலியுகத்திலும் அரக்கர்கள் நிச்சயமாக இருக்கின்றார்கள், ஏன், இரண்யனை விடக் கொடுமையான உள்ளம் கொண்டவர்களும் கலியுகத்தில் உண்டு. முறையற்றக் காமக் குற்றங்கள், பொய், பித்தலாட்டம், குரோதம், விரோதம், ஏமாற்றுதல், லஞ்சம், அதர்மம், அசத்தியம், முறையாக உழைக்காது சம்பளம் பெறுதல், நாணயம் இல்லாமை போன்றவை யாவுமே அரக்க சக்திகளைச் சேர்ந்தவையே, இவை போன்று அதர்மமோ, முறையற்ற சிறு காம எண்ணமோ, ஒரு சிறிதே உள்ளத்திலோ, மனதிலோ, உடலிலோ இருந்தாலும் அதுவும் அரக்க குணத்தையே சுட்டிக் காட்டுகின்றது.

குந்தி இறைவழிபாடு திருநல்லூர்

எனவே உள்ளத்தில் அறிந்தோ அறியாமலோ குடிகொண்டுள்ள தீவினைகளின் கர்மச் சுமைகள், தீய ஒழுக்கங்கள், தீய சக்திகள், தீய நட்புகள் இவையெல்லாம் நீங்கி பஸ்மமாகிட, மிகவும் அரிதாக வரும் விஷ்ணுபதிப் புண்ய காலத்தில்:- திருநல்லூர் ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் சிவாலயத்தின் பின்புறத்தில், மேற்குப் பகுதியில், மேற்குக் கோபுரம் எதிரே உள்ள ஒரு சிறு மண்டபக் கோயிலில், பிரபஞ்சத்திற்கே அருள்மழை பொழிவதான மகத்தான தெய்வ அவதாரமாக விளங்குகின்ற பரம்பொருளாம், சர்வேஸ்வரனாம் ஸ்ரீசிவலோக நாதப் பெருமாள் ஆலயத்தில் விஷ்ணுபதியைக் கொண்டாடி (15.5.2001) மகத்தான பலாபலன்களைப் பெற்றிடுங்கள்! வ்ருஷ வருடத்திற்கே உரித்தான விசேஷமான விஷ்ணுபதிப் பண்டிகை இது! முப்பத்து முக்கோடி தேவர்களும், சூட்சுமமாகவும், பல வடிவங்களிலும் ஒருங்கிணைந்து பூஜிக்கின்ற மகத்தான விஷ்ணுபதி பூஜை! ஸ்ரீசூர்ய பகவான், ஸ்ரீசந்திர பகவான், ஸ்ரீஅக்னி பகவான் மூவரும் ஒருங்கிணைந்து ஸ்ரீசிவலோகநாதப் பெருமாளைத் தினமும் வழிபடுகின்ற உத்தம ஆலயம்!

நரசிம்ம அவதார லீலைகளுடன் பிணைந்துள்ள இந்த விஷ்ணுபதி புண்யகாலத்தில் (15.5.2001) ஸ்ரீசிவலோகநாதப் பெருமாளுக்கு பானகம், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, பால் பாயசம் படைத்து, மஞ்சள் நிற ஆடைகளையும் பிறர்க்குத் தானமாக அளித்து சப்த சாகரத் தீர்த்தத்தில் (சிவாலயத் திருக்குளம்) தர்ப்பணப் பூஜைகளைக் கடைபிடித்து பலவகையான தானங்களைச் செய்வோர்களுக்கு, பிரதோஷ காலம் போலப் பலன்கள் பன்மடங்காகின்றன.!

பெருமாளுக்குப் பிரதோஷ காலபூஜை! ஆம்! நரசிம்மர் அவதரித்த நேரந் தானே பிரதோஷ காலம்! ஸ்ரீரங்கம் ஸ்ரீகாட்டு அழகிய சிங்க நரசிங்கப் பெருமாளுக்கு பிரதோஷ கால பூஜை மிகவும் சிறப்பாக நடைபெறுவது போல திருநல்லூர் ஸ்ரீசிவலோகநாதப் பெருமாள் ஆலயம், பிரதோஷ பூஜைக்கு உகந்த பெருமாள் தலம்! நரசிம்ம உபாசகர்களுக்கு மிகவும் கண் கண்ட க்ஷேத்திரமாகும். நரசிம்மர் அவதரித்த பிரதோஷ காலத்தில் ஸ்ரீசிவலோகநாதப் பெருமாளுக்கு பூஜை செய்து வழிபடுவது சிறப்புடையதாகும்! சிவன், நரசிம்மர், சிவலோகநாதப் பெருமாள் ஆகிய மும்மூர்த்திகளும் இறை லீலைகளைக் கொண்ட மிகவும் புனிதமான நேரமாதலின் இந்த விஷ்ணுபதி புண்ய காலம் மிகச் சிறப்பான பலா பலன்களை அள்ளித் தருவதாக இலங்குகின்றது.

தீய பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட வேண்டுவோர், விஷ்ணுபதிப் புண்ய காலத்திலும், பிரதோஷ நேரத்திலும் இங்கு நிறையத் துணிமணி வகைகளை ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்திடில் இறையருளால், நிச்சயமாகத் தீய பழக்க வழக்கங்களிலிருந்து விடுதலை பெறுவர். மேலும் புகை பிடித்தல், மது போன்ற கெட்ட பழக்கங்கள் விட்டகுறை, தொட்ட குறையாய் ஒட்டிக் கொண்டே வரும்! பிரதோஷ காலம், புதன், சனிக்கிழமைகளில் இப்பெருமாளை அடிப்பிரதட்சிணம், அங்கப் பிரதட்சிணம் செய்து வழிபட்டும் வருதலால் தீயபழக்கங்கள் அகலும். நரசிம்ம உக்ரகத்தின் மூலத் தோன்றலாக விளங்குகின்ற இப்புனிதத் திருக்கோயிலின் பூமியில் நரசிம்மரும், சரபேஸ்வரரும் தோன்றிய பிரதோஷ காலத்திலும், விஷ்ணுபதி புண்ய காலத்திலும் உடல் அங்கங்கள் நன்கு புரண்டால்தான் உடலால் செய்த பாவங்களுக்குத் தக்கப் பிராயச்சித்தம் கிட்டும்.! நரசிம்மம் தோன்றிய பெருமாள் வடிவமாதலின் இப்புனித பூமியில் ஸ்ரீசிவலோகநாதப் பெருமாள் ஆலயத்தில் எழுகின்ற வீர்யாக்னிப் பிரவேச சக்திக்கு பலவிதமான பாவங்களை பஸ்மமாக்கும் தேவசக்தி உண்டு. ஆனால் பிராயச்சித்தம் என்பது வாழ்வில் ஒரு முறையே!

ஸ்ரீதட்சிணாமூர்த்திகள் திருநல்லூர்

சீர்பெருக்கும் சியாமளனுக்குச் சிறிய மண்டபக் கோயில்தானா? எனவே சரியான பூஜைகளின்றி இருக்கும் ஸ்ரீசிவலோகநாதப் பெருமாள் அருள்பாலிக்கும் இச்சிறுமண்டப ஆலயத்திற்கு விஷ்ணுபதி புனித நாளுக்குப் பல நாட்கள் முன்னதாகவே இப்போதே முனைந்து வந்திருந்து, கோயிலைச் சுற்றி உழவாரத் திருப்பணிகள் செய்து, சுத்தப்படுத்தி, ஆலயத்தை விரிவு செய்து, பல்லாயிரக்கணக்கான மக்களும் ஸ்ரீவிஷ்ணுபதியைக் கொண்டாடும் வண்ணம் ஆவன செய்து, இறைப் பிரச்சாரமும் கூட்டித் தங்கள் வாழ்வில் பெறுதற்கரிய பாக்கியங்களைப் பெறுவார்களாக! நரசிம்ம மூர்த்தியே தோன்றிய அவதாரக் கிருத்தியங்கள் நிறைந்த மூர்த்தி எனில் ஸ்ரீசிவலோகநாதப் பெருமாள் மூர்த்தி பிரம்மாண்டமான ஆலய வளாகத்தோடு பிரகாசிக்க வேண்டுதானே! இதை நிறைவேற்றுவது மனித சமுதாயத்தின் அரும்பெரும் இறைக் கடமைகளில் ஒன்றாகும்! நரசிம்ம அவதாரந் தோன்றிய மூலப்பெருமாள் மூர்த்தி ஆதலின் இந்த ஆலயத்தில் பிரதோஷ பூஜை சிறப்புற நடைபெறும் வண்ணம் பக்த கோடிகள் ஆவன செய்ய வேண்டும்!

தம் கண்ணெதிரிலேயே தம் பிள்ளைகள் புகைபிடித்து, மது குடித்து, சீட்டாடி, ரேஸ்களிலும், காமத் தீயொழுக்கங்களிலும் ஈடுபட்டுக் கேவலமாக வாழ்வதைக் கண்டு துடிதுடிக்கின்ற பெற்றோர்கள் ஏராளம்! இவ்வாறு இருக்கின்ற பெற்றோரைக் கண்டு கண்ணீர் வடிக்கின்ற பிள்ளைகளும் உண்டு, இவர்கள் விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் இங்கு ஸ்ரீசிவலோகநாதப் பெருமாளைத் தரிசித்து குறைந்தது பத்தாயிரம் பேருக்காவது அன்னதானம் செய்திட வேண்டும். மலைக்காதீர்கள்! பலவிதமான பூர்வ ஜன்ம வினைகள் கழிந்தால்தான் தீவினைகள் முழுதுமாக பஸ்மமாகும். அன்னதானம், அதிலும் தான தர்ம சக்திகளைப் பன்மடங்காக்குகின்ற விஷ்ணுபதிப் புண்யகால அன்னதானமே பெருமாளின் கனிந்த கருணையைக் கூட்டித் தீவினைகளைப் பஸ்மமாக்கும்.!

பெண்கள், பிள்ளைகளால் நிராகரிக்கப்பட்டுத் தனித்து வாழ்கின்றோர், குடும்பப் பகைமை, சண்டை காரணமாக ஒதுங்கி வாழ்வோர், முதுமை நோய், தள்ளாமை காரணமாக நிராகரிக்கப்பட்டுத் தனித்தே வாழ்வோர், தனிமையில் வாடி வதங்குகின்றனர். இத்தனிமை நீங்கி, வாழ்வில் பசுமை நிறைந்திட, துண்டிக்கப்பட்ட உறவுகள் நன்கு தளர்ந்திட இந்த விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் இரட்டையாய் அல்லது கொத்தாய், பலவாய் கூடி இணைந்திருக்கும் பொருள்/உணவு வகைகளை (காலணி, வேஷ்டி துண்டு, புடவை ரவிக்கை, மூக்குக் கண்ணாடி, திராட்சை, கீரை, வாழைப் பூ, நிலக்கடலை, அத்திக்காய், முந்திரி, வாழைப் பழச் சீப்பு, கொடுக்காய்ப் புளி) நிறைய தானமாக அளித்து வருதல் வேண்டும்!

ஸ்ரீகல்யாணி சுந்தரி திருநல்லூர்

நரசிம்மப் பெருமாளுக்குரிய தினங்களான புதன், சனி, திருவோணம், புனர்பூசம், உத்திராடம், ரோகிணி, ஏகாதசி, அமாவாசை போன்ற நாட்களில் குறிப்பாகப் பிரதோஷ நாட்களில் இங்கு இரட்டை/கூட்டு வகைப் பொருட்களை மிகவும் தாராளமாக தானமாக அளித்து வந்தால் இறைவன் அவர்களுக்கு சத்சங்க வாழ்க்கையையும், கூட்டு இல்லற வாழ்க்கையையும் நன்முறையில் பெற்றுத் தருவார். தக்க பூஜை இன்றி வாடும் இந்த ஆலயத்திற்கு ஆறுகால பூஜை, பிரதோஷம், விஷ்ணுபதி பூஜை போன்றவற்றை முறையாக நடத்துவதற்கான அறவழிகளை ஏற்று ஆற்றுவோர்க்கு அதிஅற்புதப் பலன்கள் இறை நல்வரமாகப் பொழியும்! சந்ததி சந்ததியாக இந்நல்லறம் குடும்பத்தில் பூத்துக் குலுங்கும்!

தீயவழி சென்ற முன்னோர்க்கு ஆய நல்வழி காட்டுவீர்! பல குடும்பங்களிலும் தம்முடைய முன்னோர்களில் பலரும் முறையற்ற வாழ்க்கை வாழ்ந்து பல அநீதிகளையும், அக்கிரமங்களையும் புரிந்து இருந்தமையால் பலரும் வெறுப்புடன், அவர்களுக்குப் படையலோ, தர்ப்பணமோ அளிப்பது கிடையாது. சொத்தையும், குடும்பத்தையும் பாழ்படுத்தியோர்க்கு, பிறரை நோகடித்தவர்களுக்குத் தர்ப்பணம் ஏன் என்று பலரும் எண்ணுவர்..! முறையற்ற வகையில் பிறந்தோரும் தம்முடைய உண்மையான பெற்றோருக்குத் தர்ப்பணம் இடத் தயங்குவார்கள். மனம் வெதும்பி, படையல், திவசம் எதையும் செய்வது கிடையாது..! இருப்பினும் இறை நியதியாக பாரம்பரிய இரத்த சம்பந்தத்தால் தர்ப்பணம் அளிக்க வேண்டிய இறை நியதி இவர்களுக்கு உண்டு. ஏனென்றால் காருண்யத்தின் அடிப்படையில் இவர்கள் அளிக்கின்ற தர்ப்பணத்தின் சக்தி முன்னோர்களுக்கு நற்கதிக்கான நல்வழி காட்டும் அல்லவா! இதுவே பெரும் ஆசீர்வாதமாக இவர்களுக்கும் வந்து சேரும். எனவே இந்த விஷ்ணுபதித் தர்ப்பணமானது முன்னோர்களுக்கும் தக்க நல்வழியைத் தந்திடும்.

பொதுவாக, கணவனோ, பெற்றோர்களோ, பிள்ளைகளோ, நண்பர்களோ காணாமற் போயிருந்தால் அவர்கள் வாழ்கின்றார்களா, இல்லையா என்ற ஐயத்தோடு இருப்போரும் உண்டு. இந்த ஐயம் நன்முறையில் தெளிவு பெற இந்த விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் கண்ணுக்குத் தெரியாது சூட்சும வஸ்துக்களாக விளங்குகின்ற பொருட்களைத் தானமாக அளித்தல் வேண்டும்.. இளநீரோடு, தேங்காய், எள், எண்ணெய் போன்றவை கலந்த உணவுப் பொருளாகத் தயாராகின்ற உணவு வகைகளையும் (இட்லி, கொழுக்கட்டை, இடியாப்பம், ஆப்பம்) போன்றவற்றைத் தானமாக அளித்து வருதல் வேண்டும். இப்பெருமாள் ஆலயத்தில் பிரதோஷ பூஜைக்கான நல்லிறைக் காரியங்களை ஏற்று நடத்தி வந்தால் காணாமற் போனோர் கதிபற்றி நல்ல தெளிவைத் தந்திடும்! சிவபெருமான், அப்பர் ஸ்வாமிகளின் சிரசில் தம் திருப்பாதத்தை வைத்து திருவடி தீட்சை தந்த தலமாதலால், இப்புனித பூமியில் அடிப்பிரதட்சிணம், அங்கப் பிரதட்சிணம் செய்தல் மகத்தான பலன்களைத் தரும்..

வாழ்வின் ரகசியங்களுக்கு நன்முறையில் வழிவகை காண..! பலரும் தங்கள் வாழ்வில் வெளிச் சொல்ல முடியாத பல வாழ்க்கை இரகசியங்கள், அனுபவங்கள், உறவு முறைகள், சொத்து வகைகள், தஸ்தாவேஜுகள் போன்றவற்றுடன் வாழவேண்டிய நிலைகள் ஏற்படும்.. இதனால் மன உளைச்சலும், உள்ளக் கலக்கமும், உடல் வெப்பமும்தான் அதிகரிக்கும், இரகசியங்களைப் பரிமாறினாலும், வெளிச் சொல்லாவிட்டாலும் பெரும் விளைவுகள் காத்திருக்கும்..! இந்நிலையில் எத்தகைய முடிவு எடுப்பது என்பதைத் தீர்க்க தரிசனமாக, அவரவர் பித்ருக்கள் மூலமாக உணர்வதற்கு இந்த விஷ்ணுபதிப் புண்யகாலத்தில் குறைந்தது 1008 பேருக்காவது தர்ப்பண பூஜைகளையும், பித்ரு ஹோமங்களையும் நடத்தித் தந்து மகர லோக பித்ரு ஆசிகளைப் பெற்றிட வேண்டும்.! இப்பெருமாள் ஆலயத்தில் பிரதோஷ பூஜைகளையும் நடத்தி வருதல் வேண்டும்! நரசிம்மர் அவதரித்த நேரமே பிரதோஷ நேரமாதலாலும், நரசிம்மர் உதித்த சிவலோகநாதப் பெருமாள் மூர்த்தி இங்கு அருள் பாலிப்பதாலும் இங்கு பிரதோஷ பூஜை கொண்டாடுதலாகிய அரும்பெரும் பாக்யம் யாருக்குக் கிட்டுகின்றதோ? 

இவ்வாறாக வ்ருஷ வருட விஷ்ணுபதிப் புண்யகால மகிமைகள் எத்தனை, எத்தனை! விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் (15.5.2001) இவ்விடத்தில் மட்டுமல்லாது, குறிப்பிட்ட தான தர்ம, பூஜைகளை அனைத்து வைணவத் தலங்களிலும் கொண்டாடிட ஏற்பாடு செய்திடில் குறித்த எண்ணிக்கையை லகுவாக அடைந்திடலாம் அல்லவா! விஷ்ணுபதி புண்ய காலநேரம் விஷ்ணுபதி புண்ய காலபூஜை : 14.5.2001 நள்ளிரவு சுமார் 1.30மணி முதல் 15.5.2001 காலை 10.30 வரை அமைகின்றது!  திருநல்லூரில் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் ஆலயமும் உள்ளது., நாம் இங்கு விஷ்ணுபதிக்காகக் குறிப்பிடுவதும் திருநல்லூர் ஆலய மேற்கு கோபுரம் எதிரில் உள்ள ஸ்ரீசிவலோக நாதப் பெருமாள் ஆலயமாகும்!

அமாவாசை மகத்துவம்

சூரியனும், சந்திரனும் இணைகின்ற நாளே அமாவாசை என நாம் அறிவோம். இதுமட்டுமின்றி இறைவனின் வலது கண்ணாகிய சூரிய சக்தியும், இடது கண்ணாகிய சந்திர சக்தியும் சேர்ந்து இறைவனின் ஆக்ஞா நேத்ர சக்தி பல தீர்த்தங்களிலும், பித்ரு முக்தித் தலங்களிலும் பெருகுகின்ற நாளே அமாவாசையாம்! அமாவாசயன்று, சூரிய, சந்திர ஐக்ய மண்டலத்தில் தோன்றுகின்ற சோமபாஸ்கரச் சாயா தீர்த்தத்தில் பித்ருக்கள் நீராடித் தங்களுடைய பித்ருக்களுக்கும், சோம பாஸ்கரச் சாயாம்பரத் தீர்த்தத்தில் தர்ப்பண அர்க்யம் அளிக்கின்றனர். ஆம், பித்ருக்களுக்கும் தர்ப்பண பூஜை முறைகள் உண்டு! பித்ருக்களுக்கெல்லாம் நாயகராக விளங்குகின்ற ஸ்ரீமகாவிஷ்ணு, அமாவாசையன்று சூரிய சந்திர ஐக்ய மண்டலத்தில் எள், பிரண்டை, புடலங்காய், வாழைக்காய் போன்ற பித்ரு சக்திகள் கூடிய, தாவர மண்டலங்கள் நிறைந்த தேரில் பவனி வருகின்றார்.

ஸ்ரீதனுசு சுப்ரமண்யர் திருவையாறு

அமாவாசைச் சித்தர் என்னும் பெயர் கொண்ட சித்புருஷர்கள் பலர் உண்டு. எவ்வாறு எத்தனையோ அகஸ்திய மகரிஷிகள், திருமூலர்கள் போன்றோர் தோன்றி மறைந்து, தோன்றாச் சுடரொளிச் சித்தர் பிரானாக, என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாக விளங்குகின்றனரோ, இதே போல அமாவாசைச் சித்தர், திதிப் பிரவாளர் போன்ற கால காலாதீதச் சித்தர்கள் எத்தனையோ லோகங்களில் இன்றும் அருளாட்சி புரிகின்றனர்.. வேதாரண்யம், இராமேஸ்வரம், திலதைப்பதி (கோயில் பத்து), பட்டுக்கோட்டை அருகே இடும்பாவனம், பரிதி நியமம், திருவிடைமருதூர், எச்சூர், பெருமகளூர் போன்ற பித்ரு முக்தித் தலங்களில் மானுட வடிவிலும், சூட்சும ரூபங்களிலும் தர்ப்பண பூஜைகளை மேற்கொள்கின்றனர். இவர்களுள் அமாவாசைச் சித்தர்பிரான் இன்றைக்கும் பூவுலகில் அமாவாசைத் திதியன்று திருஅண்ணாமலையைச் சூட்சுமமாகக் கிரிவலம் வருகின்றார்.

காலங் கடந்தவர்களாகவும், மடி ஆசாரம் நியமங்களுக்கு அப்பாற்பட்டுப் பூஜை, புனஸ்காரங்களில் கரை கண்டவர்களாக, அடக்கத்துடன் அடங்கி அரும்பெரும் இறை வழிபாட்டு நிலைகளைக் கடந்தவர்களாகவும் பிரகாசிக்கின்ற சித்புருஷர்களே காருண்யத் தர்ப்பணப் பூஜையை மேற்கொள்கின்ற அவசியம்தான் என்னே! பூலோக மக்கள் சுகபோகத்தில் திளைத்து, சோம்பேறித்தனத்தாலும், மடைமையினாலும் கடைப்பிடிக்க மறந்த பூஜைகள்/ தர்ப்பண வழிபாட்டு முறைகள் நிறைய உண்டு! ஒவ்வொரு வினாடி நேரத்தையும் பூலோக ஜீவன்களின் நலன்களுக்காக அர்ப்பணிக்கும் சித்புருஷர்கள்தாம் இத்தகைய பூஜைகளைத் தாமே ஏற்று நடத்தித் தந்து அவற்றின் பலாபலன்களைப் பகுத்துப் பிரித்து வழங்குகின்றார்கள்! இதனால்தான் இறைவழிபாட்டு முறைகளைச் சரிவரக் கடைப்பிடிக்காதவர்களுக்கும் கூட வான் மழை பொழிகின்றது. நல்லிடம், நல்உணவு, நல்உடையுடன் நற்சந்ததியும் வாய்க்கின்றது!

திருநல்லூர்

பித்ரு முக்தித் தலங்கள் யாவுமே, உயர்ந்த உத்தம இறைநிலைகளைக் கொண்ட பித்ரு தேவர்களுக்கே உன்னத முக்தி நிலைகளைத் தரவல்லவை என்றால் இத்தலங்களின் மகிமையை என்னென்று சொல்வது? இத்தகைய பித்ரு முக்தித் தலங்களில்தாம், ஸ்ரீஅமாவாசைச் சித்தர், ஸ்ரீஅரிக்கேன்  விளக்குச் சித்தர், ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்தர் போன்ற மகத்தான சித்புருஷர்கள் பல சூட்சும வடிவங்களில் பித்ருத் தர்ப்பண வழிபாட்டு முறைகளை மேற்கொண்டு நல்வழி காட்டுகின்றார்கள்! எனவே அமாவாசையன்று மேற்குறித்த பித்ரு முக்தித் தலங்களில், நம் மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் அளிப்பதுடன் சித்புருஷர்களுக்கும்  மகரிஷிகளுக்கும் அர்க்யம் அளிப்பது மிகவும் சிறப்புடையதாகும். பித்ருக்கள்தாம் அமாவாசையன்று தர்ப்பண நீர் வார்த்தலை ஏற்பதற்குப் பூலோகத்திற்கு வந்து விடுகின்றார்களே, பின் எவ்வாறு அவர்கள் சூரிய சந்திர ஐக்ய மண்டலத்தில் கூடுவார்கள் என்ற ஐயம் உங்களுக்குத் தோன்றிடலாம்!

பித்ருக்கள், பித்ரு தேவதைகள், பித்ரு தேவர்கள், பித்ரு பத்னிக்கள், பித்ரு நாயகர்கள், பித்ரு சண்டேஸ்வரர்கள், பித்ரு அதிகார பூஷணர்கள், பித்ரு மூர்த்திகள், பித்ரு துவாரபாலகர்கள் என்று பித்ருக்களிலேயே எத்தனையோ உத்தம இறைநிலைகள், வகைகள் உண்டு.. இவர்களில் குறித்த சிலருக்குத்தான் அமாவாசயன்று சூரிய, சந்திர ஐக்கிய மண்டலத்தில் ஸ்ரீமஹாவிஷ்ணுவிற்குப் பாத பூஜை செய்து வழிபட்டுத் தேர் பவனிக் காட்சியைத் தரிசிக்கும் பெரும் பாக்கியம் கிட்டும்! தங்கத் தேர் போல தேவலோக வைடூரியங்கள், வைரங்கள், பவளங்களாலான தேரில் அங்கு ஸ்ரீமகாவிஷ்ணு பவனி வருகின்றார்!

ஸ்ரீஸ்வதா தேவியின் மகத்தான அறப் பணி! இங்கு பூலோகத்திற்கு வருகின்ற பித்ருக்கள் நாம் அளிக்கின்ற தர்ப்பண அர்க்யத்தை ஸ்ரீஅக்னி பகவானுடைய பத்னியாகிய ஸ்ரீஸ்வதா தேவியின் மூலம் பெறுகின்றனர். பித்ருக்கள் ஏன் தாமாகவே முன்வந்து தர்ப்பண அர்க்ய நீரைப் பெறலாகாது? பித்ரு நிலையே மிகவும் உன்னதமான உயர்ந்த இறைத் தன்மைகளைக் கொண்டமையால் பலவிதமான கர்மச் சுமைகளுடன் நாம் அளிக்கின்ற தர்ப்பண அர்க்யத்தை அவர்கள் பெற இயலாமற் போய் விடுகிறது! அசிரத்தையுடன் கடனுக்காக ஏனோதானோ என்று செய்கின்ற தர்ப்பணமானது பலவிதமான விருப்பு வெறுப்புகளைக் கொண்டதாகத்தானே இருக்கும்! எனவே ஸ்ரீஸ்வதா தேவி அக்னி ரூபமாதலாலும், பிரபஞ்சத்தின் சகல கோடி அக்னி ரூபங்களின் வடிவான ஸ்ரீஅக்னி பகவானின் பத்தினியாதலாலும், ஞானப் பேரொளி, சாணக் கனல், ஹோமச் சுடர் ஒளி, அடுப்புப் படரொளி, விண்மீன் திரு ஒளி, விளக்குப் பதி ஒளி, பத்னிக் கண்ணொளி போன்ற பலவிதமான ஒளிச்சுடர்களில் மூழ்கித் திளைக்கின்ற ஸ்ரீஸ்வதா தேவிதான் தர்ப்பண அர்க்யத்தோடு சேர்ந்து வருகின்ற கர்மச் சுமைகளை பஸ்மம் செய்து அறவழி காட்டுகின்றாள்!

எனவேதாம் ஸ்ரீஸ்வதாதேவி மூலம் பரிசுத்தம் அடைந்து வருகின்றத் தர்ப்பண நீரை அடைவதற்குப் பித்ருக்கள் விரும்புகின்றார்கள்.. நீராலாகிய தர்ப்பணம் ஏனோ? விருப்பு, வெறுப்பு நிலைகளைக் கடந்தவர்களாகப் பித்ருக்கள் விளங்கினாலும், அவர்களுக்கு உரித்தான ஒளிமயமான தேகத்தில் பரிவிக்கல் என்ற நிலை ஏற்படும். எவ்வாறு நீர் தாகத்தால் மனிதனுக்கு உடலில் நீர்ச் சத்துக் குறைந்து விக்கல் ஏற்படுகின்றதோ, இதேபோல் பித்ருக்களுக்கு பரிவிக்கல் என்ற ஏக்கம் ஏற்படும். அவரவருடைய சந்ததிகள் மூலம் அளிக்கப் படுகின்றத் தர்ப்பண நீர் தேவ சத்து குறைவுறும் போது அவர்கட்குப் பரிவிக்கல் ஏற்படும்! இதனால் அவர்களால் பலவிதமான பூஜைகளை நிறைவேற்ற முடியாமற் போய்விடும்! அவரவருடைய பூலோக சந்ததிகளின் தர்ப்பணத்தில் விளையும் தேவநீரோட்டச் சக்தியால் மட்டுமே இந்தப் பரிவிக்கலைத் தீர்க்க முடியும்! இந்தப் பரிவிக்கலினால் பித்ருக்களினால் குறித்த சிவபூஜைகளை நிறைவேற்ற முடியாமற் போகும்போது அவர்களால் பலவிதமான ஆசிகளையும் அளிக்க முடியாமல் போகிறது! இவற்றையே நாம் பித்ருசாபம் என்று மறைமுகமாகச் சொல்கின்றோம்!

ஸ்ரீஉச்சிஷ்ட கணபதி திருநல்லூர்

குறித்த ஒரு குடும்பத்தில் பல தலைமுறைகளாக ஒழுங்காகத் தர்ப்பணம் அளிக்கப்படாவிடில் அவர்களுடைய பித்ருமார்களுக்குப் பரிவிக்கல் ஏற்பட்டுப் பெருகி இவ்வகையில் அவர்களால் ஆசியளிக்கக் கூடிய நல்வரங்களைத் தர இயலாதிட, இதுவே சந்ததி விருத்திக்கான ஆசிகளையும் தடுத்து பித்ருசாபம் என்று நடைமுறை வழக்கில் புரியும் வகையில் சொல்லும்படி ஆகி விடுகின்றது! இப்பரிவிக்கல் தோஷத்தால் நீரில் மூழ்கி இறத்தல், நீர்க் கண்டங்கள், பாய்லர் கொதி கலன் போன்ற தீ சம்பந்தப்பட்ட விபத்துகள், பாதாளச் சாக்கடை, விஷ வாயு ஆபத்து போன்றவை, நீர் சம்பந்தப்பட்ட நோய்கள், நீர் சம்பந்தப்பட்ட விவசாயம் போன்ற தொழில்களில் பெருத்த இழப்பு ஏற்படுதல் போன்றவை ஏற்படும், இருப்பினும் பல சித்புருஷர்கள், மகரிஷிகள் அருட்பெருங்கருணையாகக் காருண்யப் பித்ருத் தர்ப்பணங்களை உலக ஜீவன்களின் நல்வாழ்விற்காக ஏற்று நடத்துவதினால்தான் பல குடும்பங்கள் பரிவிக்கலாகிய பித்ரு சாபங்களிலிருந்து ஓரளவு மீள்கின்றனர்!

எனவேதான் அமாவாசை, பௌர்ணமித் திதிகளில் பாண்டிச்சேரி அருகில் உள்ள ஸ்ரீபடே சாஹிப் சித்தர், ஸ்ரீகள்ளிப்பால் சித்தர், ஸ்ரீராம்பரதேசி ஸ்வாமிகள், காஞ்சீபுரம் ஸ்ரீபோடா சுவாமிகள், திருவாரூர் அருகே விடையபுரம் ஸ்ரீசட்டாம்பிள்ளை மகான் போன்ற சித்புருஷர்களுடைய ஜீவ சமாதிகளில் அபிஷேக ஆராதனைகள், தர்ப்பண பூஜைகள், அன்னதானம் போன்றவற்றை நிகத்துவதால் தர்ப்பணம் செய்யாமைக்கானப் பிராயச்சித்தத்தை ஓரளவேனும் பெற்றிடலாம். ஆனால் பிராயச்சித்தம்தனைப் பெற்ற பிறகேனும் தர்ப்பணப் பூஜையை முறையாகத் தொடர்தல் வேண்டும்!

செய்வீர் முறையான (தர்ப்பண) பூஜை இனியேனும்! இந்தப் பரிவிக்கல் தோஷத்தை நிவர்த்தி செய்யக் கூடிய பித்ரு முக்தித் தலங்கள் பித்ருக்களுடைய குறைகளையுந் திருத்தலங்கள் சில உண்டு! மயிலாடுதுறை அருகே திருமருகலை ஒட்டி கோயில் சீயாத்தமங்கை அல்லது சீயாத்தமங்கை என்னும் சிவத்தலத்தில் உள்ள ஆலய தீர்த்தத்தின் ஒருபாதி சூர்ய தீர்த்தமாகவும் மறுபாதி சந்திர தீர்த்தமாகவும் விளங்குகின்றது! சூரிய, சந்திர கிரக சங்கமம்தானே அமாவாசை! எனவே அமாவாசைதோறும் இத்தீர்த்தத்தில் எள்கொண்டு தர்ப்பணமிட்டுப் பித்ருக்களின் பரிவிக்கலைத் தீர்க்க வல்ல பிரண்டை, புடலங்காய், வாழைக்காய் கலந்த உணவினைத் தானமாக அளித்து வந்தால் பித்ரு சாபங்கள் தணிந்து சந்ததி விருத்தி ஏற்படும்! நல்ல வீடும், வரனும் அமையும்! பாரம்பர்ய  நோய்கள் தாக்குமோ என்ற அச்சந்தீரும்! ஆனால் தொடர்ந்து இத்தலத்தில் தர்ப்பணம் அளித்து வருதல் வேண்டும்!

அமுத தாரைகள்


1. சுமங்கலித்வம் நிலைத்திட :- கணவனுக்குக் கடும் நோய் எனும் போது மட்டும் தீவிர பூஜைகளை மேற்கொண்டிடாமல், இல்லறப் பெண்கள் நிறைய வாசனை மலர்களைக் கொண்டு பல பூஜைகளை, தான, தர்ம, வழிபாடுகளை வாழ்நாள் முழுதும் புரிந்து வந்தால்தான் அவர்கள் வாழ்க்கையிலே சுமங்கலித்துவம் நிறைந்திருக்கும். பூக்கள் ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே வாடாமல் புத்துணர்ச்சியுடன் விளங்குவதாக நம்முடைய கண்களுக்குத் தோன்றினாலும் அவை நிரவிச் செல்கின்ற ஆன்மீகச் செல்வங்கள் எப்போதும் சுமங்கலிச் சக்தியுடன் நிரந்தரமாகப் பூரித்து இருப்பவையாகும். பெண்களுடைய கைகளில் உள்ள ரேகைகளில் புஷ்பச் சந்திர கங்கண ரேகைகள், புஷ்ப காந்த ரேகைகள் என நிறைய உண்டு..! பூக்களைத் தொடுக்கத் தொடுக்கத்தான் இந்த ரேகைகளில் சுமங்கலித்வம் பெருகும்! ஆசியளிக்கும் சக்தியும் கூடும்!

திருநல்லூர்

எந்த அளவிற்கு பூக்களைப் பறித்து, தொடுத்து, இறைவனுக்குச் சூட்டிப் பூஜை செய்கின்றார்களோ, எவ்வளவு ஏழைச் சுமங்கலிகளுக்குப் பூக்களைத் தானமாக அளித்து வருகின்றார்களோ அந்த அளவிற்கு இந்த புஷ்பச் சந்திர ரேகைகளும், கங்கண வளையங்களும் சுமங்கலித்துவ சக்தியை தீர்க்கமாகப் பெறுகின்றன.. இவ்வாறு நிறைய பூ வழிபாடுகளைச் செய்பவர்கள்தாம் பூர்வ ஜென்ம புண்ய பலன்களை 70, 80 வயதுடன் பழுத்த சுமங்கலிகளாய் நாட்டிற்கு மாங்கல்ய வளமும் பலமும் சேர்க்கின்றனர்! பூக்களைத் தொடுக்கும் போது சுக்கிர விரலாகிய  கட்டை விரலும், குருவிரலாகிய ஆள்காட்டி விரலும் அதிகமாகப் பயன்படுவதை நீங்கள் காண்கின்றீர்கள்... இவ்விரண்டு விரல்களும் இணைந்தால் தான் சின்மய பாக்யத்தின் அம்சங்களாகச் சுமங்கலித்வ சக்திகள் பெருகும்.

தாமே தொடுத்த (குறைந்தது 30 முழம்) பூக்களைத் திருச்சி அருகே உள்ள பூவாளூர் ஸ்ரீகுங்குமசௌந்தரி அம்பிகைக்கு செவ்வாய், வெள்ளி தோறும் சார்த்தி, ஏழைச் சுமங்கலிகளுக்குப் புடவை, ரவிக்கை, பொன் மாங்கல்யம்தனை தானமாக அளித்து வந்தால் கடுமையான நோயால் வாடும் கணவன் சுகமாகித் தீர்க ஆயுள் பெற்றிடுவான்! ஆனால் இதன் பிறகு பூவாளூர் அம்பிகையின் திருவடிகளைச் சரணடைந்து தம் எஞ்சிய வாழ்வை எங்கிருந்தாலும் பூவாளூர் அம்பிகையின் துதி பாடிக் கழித்திடச் சங்கல்பம் பூண்டிட வேண்டும்!

2. தம் வாழ்நாளில் எப்போதாவது தேள், நட்டுவாக்கிளியால் கொட்டுப்பட்டவர்களும், பாம்பால் கடிக்கப் பெற்றவர்களும் தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் திருநீலக்குடியில் நீலம் பாய்ந்த நீலகண்டனின் இறைச் சீலம் பொங்கும் இச்சிவாலயத்தில் நீல நிற ஆடைகளை/உணவுப் பண்டங்களையும் பிரதோஷ நேரத்தில் தானமாக அளித்தலால் விஷம் தீண்டப்பட்டதற்குப் பாம்பாட்டிச் சித்தரின் குருவருளால் தக்கப் பிராயச்சித்தம் கிட்டும். விஷத் தன்மையுள்ள இரசாயனம் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், அருகில் வசிப்போர் அடிக்கடி இவ்வாலயத்தில் அடிப்பிரதட்சிணம் செய்து பித்ரு தேவ சக்திகள் நிறைந்த புடலங்காய், பிரண்டை உணவு வகைகளைத் தானமாக அளித்து வருதலால் விஷவாயு சம்பந்த நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

3. சிவ-விஷ்ணு சின்மய தரிசனம்! வ்ருஷ வருடத்தில் எத்துணையோ புராண லீலைகளும் அற்புத இறைக் காட்சிகளும், சித்புருஷர்கள், மகரிஷிகளின் பிரார்த்தனைகளுக்கேற்பவே நிகழ்ந்துள்ளன.. சிவபெருமானும், பெருமாளும், ஒருவருக்கொருவர் வழிபடும் உத்தம வைபவத்தைக் காண சித்புருஷர்களும், மகரிஷிகளும் ஒரு யுகத்தில் விரும்பி வேண்டிட்டனர்!  “பல கோடி யுகங்களில், பல கோடித் தீர்த்தங்களில் நீராடி, அவ்வைபவத்திற்கு, சிவ விஷ்ணு தரிசனத்திற்குத் தயாராகுவீர்களாக!” என்று இறைவனும் அருள்மொழிந்தார். இதற்கெனவே பல கோடிச் சித்தர்களும் ஒன்று திரண்டு, பிரபஞ்சமெங்கும் உள்ள சுயம்பு மூர்த்திகளை வணங்கி அனைத்துக் கோடித் தீர்த்தங்களிலும் நீராடிப் பேரருள் உய்த்து வந்தனர். சர்வேஸ்வரன் இவ்வாறு கோடானு கோடி தீர்த்த நீராடலை அறிவுறுத்தி அருளிடக் காரணமென்ன? அக்னிப் பிழம்புகளான இரு மூர்த்திகளின் கூட்டுத் தரிசனத்தில் எழுகின்ற அக்னிப் பிரவாகத்தை யாரால்தாம் தாங்கிக் கண்டிட முடியும்? இதற்குரித்தான சீதள ருத்ர ஷ்யாமள சக்தியை ஊட்டிடவேதான், அரவணைத்திடவேதான் இந்தக் கோடி தீர்த்தங்களின் நீராடல் அருட்பரிசாக, அருள் வரமாக அவர்களுக்கு அளிக்கப்பட்டது!

ஸ்ரீயக்ஞோபவீதேஸ்வரர் ஆலயம்
கும்பகோணம்

4. கருவளர்ச்சேரியில் கரு(வளர்ச்சியைக்) காக்கும் நாயகி! உலகின் ஆதிமூலக் கருகாக்கும் நாயகியாகப் பரிமளிக்கும்படி பராசக்தியை வழிபட்டு, ஜீவன்களின் கருவை ரட்சித்துக் காக்கும்படியாக கும்பகோணம் – மன்னார்குடி சாலையில் மருதாநல்லூர் அருகே கருவளர்ச்சேரியில் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரரின் சுயம்புத் திருமேனியைத் தாபித்துப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுத் திருநல்லூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஸ்ரீஅகஸ்திய மாமுனியை நாடிய ஸ்ரீநரசிம்ம மூர்த்தி, மாமுனியின்ன் திருவுரைப்படி தமக்கு நரசிம்ம அவதாரக கிருத்திய சக்திகளைத் தந்த திருநல்லூர்ச் சிவனே தமக்குச் சுயரூபந் தரவல்லார் என உய்த்தார்.. தம் நரசிம்ம ரூபத்திலேயே (நரசிம்ம அவதாரம் தோன்றியதற்கு முந்தையை) ஆதிமூல ஸ்ரீவிஷ்ணு ரூபத்தைக் காண, திருநல்லூர் ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரரைப் போற்றிப் பூஜித்தார்.

5. விநாயக மூர்த்திக்கு மூன்று பிரிகள் அல்லது ஆறு பிரிகள் உள்ள பூணூலைச் சார்த்த வேண்டுமா? சித்தி புத்தி விநாயகராக விளங்குவதால் பிள்ளையாரப்பனுக்கு ஆறுபிரிகள் சேர்ந்த பூணூலை அணிவித்து வழிபடுதல்தான் மிகவும் சிறப்புடையதாகும். மூன்று மாதத்திற்கு ஒருமுறையேனும் கும்பகோணத்திற்குச் சென்று  ஸ்ரீயக்ஞோப வீதேஸ்வரராகிய ஸ்ரீகௌதம லிங்க மூர்த்திக்கு நிறைய பூணூல்களைச் சார்த்தி அவற்றைப் பிரசாதமாக இல்லத்திற்கு எடுத்து வந்து நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதுடன் சாதி, மத, குல, இன பேதமின்றிப் பலரும் பூணூல் அணியும் வண்ணம் ஸ்ரீயக்ஞோபவீதேஸ்வரருக்கு அணிவிக்கப்பட்ட பூணூலைப் பலருக்கும் இலவசமாக அளிப்பது மகத்தான பூணூல் தானமாக விளங்குவதுடன் ஸ்ரீகாயத்ரீ மந்திர சக்தியைப் பூலோகமெங்கும் பரப்புவதற்கு மகத்தான இறைச் சமுதாய பூஜையாகவும் விளங்குகின்றது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனவே மறக்காமல் நினைவில் வைத்து கும்பகோணம் சென்று ஸ்ரீயக்ஞோபவீதேஸ்வரர் சந்நதியில் தக்க பெரியோர்களின் ஆசியுடன் பூணூலை அணிந்து, வாழ்நாள் முழுதும் நிரந்தரமான பூணூலை அணிந்து ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஓதி மகத்தான இறைச் சேவை புரிந்திடுங்கள்! பூணூல் சாதிச் சின்னமோ, மதச் சின்னமோ, குலச் சின்னமோ அன்று! அனைவருக்கும் உரித்தான குங்குமம், மஞ்சள், விபூதி போன்று பொதுவான இறைக் காரியம் செய்வதற்கு ஆதாரத் தகுதியைத் தரும் பொருளே பூணூல் ஆகும். பெண்களுக்கு மாங்கல்யம் போல ஆண்களுக்குப் பூணூல்!

நித்யகர்ம நிவாரணம்

1.5.2001 -  இன்று வக்கீல்கள் நியாயமற்ற புதிய வழக்குகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நலம். இன்று அவர்கள் ஏற்றுக் கொள்ளும் நியாயமற்ற வழக்குகள் தொடர்ந்த பிரச்சனைகளை அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும். கவனம் தேவை!
2.5.2001 – எமதர்ம ராஜா இருக்கின்ற கோயில்களில் நெய் தீபம் ஏற்றி அன்னதானம் செய்திடில் இளம் விதவைகளுக்கு (விருப்பம் இருந்தால்) நன்முறையில் மறுமணம் புரிய வாய்ப்பு வரும்.
3.5.2001 – கர்ப்பம் தாங்கி இருக்கும் இளம் பெண்ணின் கணவன் எதிர்பாராத விதமாக இறந்தால் அக்கருவை கலைக்கக் கூடாது. அக்கருவில் வளரும் சிசுவைக் காத்து வாழ வழி செய்பவர் திருக்கண்ணபுரம் பெருமாள். இன்று முதல் தொடர்ந்து இத்திருக்கோயிலில் வெண்பொங்கல், உளுந்து வடை அன்னதானம் செய்திடில் நல்வழி பிறக்கும்.
4.5.2001 – குடும்பத்தில் கலகம் புரியும் வயதான மாமியார், அம்மாக்கள் இன்று குடும்பத்தை விட்டுப் பிரிந்து ஏதாவது ஒரு ஆஸ்ரமத்தில் சேர்ந்து விடுவது நல்லது. இல்லையேல் குடும்பத்தில் அமைதி இழக்கும் நாளிது.

ஸ்ரீகுங்குமசௌந்தரி பூவாளூர்

5.5.2001 – சில குடும்பத்தில் இரண்டு, மூன்று பெண் குழந்தைகள் பிறந்து, பின் பெற்றோர்கள் பல தவங்கள் இயற்றி சுவாமியை மிகவும் வேண்டி அடுத்ததாக ஆண் குழந்தை பிறந்து இருக்கும். அப்படி பிறந்த குழந்தை எதிர்பார்ப்பிற்கு மாறாகத் தவறான வழிகளில் சென்று தாய் தந்தையருக்கு மிகுந்த வேதனையைத் தருவது உண்டு.. அத்தகைய ஆண் குழந்தைகளைத் தேசீய ராணுவ சேவையிலோ, குருகுல வாசம் அளிக்கும் பள்ளிகளிலோ சேர்த்து விடுவதற்கு இன்று உகந்த நாள். இதனால் பெற்றோர்களுக்கு மன அமைதியும், பெண் குழந்தைகள் எதிர்காலம் பாழாகாமலும், ஆண் குழந்தை தன் தவறை உணர்ந்து வாழ ஒரு சந்தர்ப்பமும் கிடைக்கும் ஒரு அபூர்வமான நாளிது.
6.5.2001 – வீட்டுக்குத் தெரியாமல் காதலித்து, எதிர் காலத்தைப் பற்றி யோசிக்காமல் இளம் பெண்கள் சொல்லாமல் கொள்ளாமல் தான் காதல் கொள்பவரோடு சென்று விடுகின்ற நாளிது.. ஆனால் இத்தவறைச் செய்யாமல் இருப்பது நல்லது.. செய்திடில் பல துன்பங்கள் வரும்.
7.5.2001 – செல்வத்தில் உழலும் பெண்கள் இன்று தவறான பாதைக்குச் செல்லும் நாளிது.. கோயிலுக்குச் சென்று நாள் முழுவதும் இறைவனை வணங்கி அன்னதானம் செய்திடில் தவறிலிருந்து தப்பிக்கலாம்.
8.5.2001 – அரசியல் தலைவர்களுக்கும் அதிருப்தி தொண்டர்களுக்கும் மனப்பூசல் ஏற்படும் நாளிது... தலைவர்கள் தக்காளி சாதம் அன்னதானம் செய்வது நலம்.
9.5.2001 – காமத்தால் ஆண்களும் பெண்களும் நிலை தடுமாறும் நாளிது, இன்று பூராவும் கோயில் திருப்பணியில் ஈடுபட்டு தயிர் சாதம் அன்னதானம் செய்திடில் தவறிலிருந்து தப்பிக்கலாம்.
10.5.2001 – மாஜிஸ்டிரேட்டுகளுக்கு மனக் குழப்பம் ஏற்படும் நாளிது... எந்தத் தீர்ப்பையும் வழங்காமல் பசுநெய் கலந்து அன்னதானம் செய்தல் நல்லது.
11.5.2001 – பெண் வக்கீல்கள் பிரச்னையில் மாட்டிக் கொள்ளும் நாளிது. சிக்கல் சிங்கார வேலனின் நினைவோடு முருகன் கோயிலில் தேன் கலந்த சர்க்கரைப் பொங்கல் அன்னதானம் செய்தல் நலம் தரும்.
12.5.2001 – அரசுத் துறையில் பணிபுரியும் பெண்கள் தங்கள் அழகால் விபரீதங்களைச் சந்திக்க நேரிடும்., கவனம் தேவை, இன்று விடுமுறை எடுத்து (மாங்காய் சாதம்) அன்னதானத்தில் ஈடுபடுவது நல்லது.
13.5.2001 – இடதுமேல் உதட்டின் மேல் மச்சம் பூண்டிருக்கும் பெண்களுக்குத் தேவையற்ற ஆசையால் பல துன்பங்கள் விளையும் நாளிது. அம்மன் கோயிலில் எள் கலந்த சாதம் அன்னதானம் செய்து அமைதியாக கழிப்பதற்கு வழி தேடிக் கொள்ளவும்.
14.5.2001 – பெருமாள் பெயரைப் பூண்டிருப்பவர்கள் இன்று முழுவதும் விஷ்ணு சகஸ்ரநாமம், திவ்ய பிரபந்தம், வேதாந்த தேசிகர் துதி ஓதி, திருமண் சாற்றி திவ்யமாய்க் கழிக்க வேண்டிய நாளிது.. வேறு காரியங்களில் ஈடுபடுதல் கூடாது.
15.5.2001 – காவல் துறையில் பணி புரிபவர்கள் கவனமாய் இருக்க வேண்டிய நாளிது., சட்ட வல்லுநர்களால் துன்பங்களைச் சந்திக்க நேரிடும்.

திருக்கண்ணபுரம்

16.5.2001 – காவல் துறையினர் உயர் அதிகாரிகளோடு மன பேதம் (misunderstanding) கொள்ளும் நாளிது.. இதனால் பணி நீக்கம் (Suspend) ஏற்படும் வாய்ப்பு உள்ளது.., கவனம் தேவை.
17.5.2001 – குடிநீர், கழிவுநீர், வடிகால் வசதித் துறை, வாரிய அதிகாரிகள் மேலிடத்து உத்தரவை கவனக் குறைவால் அலட்சியப்படுத்தியதால் துன்பமுறும் நாளிது... ஸ்ரீபிச்சாண்டார் சுவாமிக்கு நேர்த்தி வைத்து அன்னதானம், இளநீர் தானம் செய்திடில் மாற்றம் ஏற்படும்.
18.5.2001 – மின்சாரத் துறையில் பணிபுரிகின்றவர்கள் பெரிய மீசை வைத்திருக்கின்ற சக ஊழியர்களுடன் கவனமாய் இருத்தல் நலம்... தேவையில்லாமல் கோழி மூட்டுவதால் (போட்டுக் கொடுத்தல்) பலத்த விளைவுகள் ஏற்படும்!
19.5.2001 – குடிநீர் நலத் துறையை, வாரியத்தைச் சேர்ந்தவர்கள் இன்று வாய்ச்சண்டைக்கும், தாக்குதலுக்கும் ஆளாகும் நாளிது. கங்கை, காவிரி போன்ற தீர்த்தங்களை வணங்கி அன்னதானம், நீர்மோர், பானகம் தானம் செய்திடில் நலம் பெறுவர்.
20.5.2001 – பத்திரிகைப் புகைப் படக்காரர்கள் தாங்கள் வைத்திருக்கும் பொருளுக்கு ஆபத்து வரும் நாளிது. கருப்பு திராட்சை கலந்த தயிர்சாதம் அன்னதானம் செய்து ஆபத்தைச் சந்திக்காமல் தற்காத்துக் கொள்ளவும்.
21.5.2001 – ரிஷப ராசி அன்பர்கள் இன்று நிறைய பூஜைகள் செய்து நல்லோர்களுக்கு உதவி செய்யும் நாளிது.
22.5.2001 – கணினிப் பொறித் துறையில் (Computer)  வேலை செய்யும் பெண்கள் தன்னுடைய தாய் தந்தையரிடம் தன் காதல் பற்றிய உண்மையை வெளியிடும் நாளிது.. தாய் தந்தையருடைய விருப்பமே கடைசி முடிவாகும் நாளிது.
23.5.2001 – மாம்பழ வியாபாரிகள் இன்று கவனமாய் இருத்தல் நலம். அதிகம் லாபம் ஈட்டித் தருவதாக ஆசை காட்டி ஏமாற்றப்படுவார்கள்.
24.5.2001 – நீதிபதிகளுக்கு இடம் மாற்றங்களுக்கான கூட்ட ஆலோசனை நடைபெறும் நாளிது. விடுமுறை எடுக்காமல் அருகிலிருந்து கவனித்துக் கொள்ளவும்.
25.5.2001 – அரசியல் கட்சியில் உள்ள அடிமட்டத் தொண்டர்களின் மனக் கசப்பு நாளிது.. மேல் மட்டத் தலைவர்கள் தங்கள் தொண்டர்களுக்குத் தாராளமாக உதவி செய்ய வேண்டிய நாளிது.
26.5.2001 – பத்திரிகைத் துறையைச் சார்ந்தோருக்கும் தலைவர்களின் மெய்க் காப்புத் துறையினருக்கும் பகைமையால் கலகலப்பு ஏற்படும் நாளிது! தலைவர்கள் தங்கள் பெயரைக் காப்பாற்றிக்கொள்ள நல்லதொரு இறைவழியைத் தேடிக் கொள்ளவும்.
27.5.2001 – பத்திரிக்கை ஆசிரியர்களின் கவனக் குறைவால் தவறான செய்திகள் வெளிவர வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாவர். துருவித் துருவிப் பார்த்து கவனமாய்ச் செய்திகளைப் பிரசுரிக்கவும்.
28.5.2001 – தொகுதிப் பங்கீட்டில் திருப்தி அடையாதோர் தங்கள் காரிய சாதனைக்குப் பிறகு கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் நாளிது! தலைவர்கள் பாரபட்சமின்றிச் செயல்படுதலே சிறப்புடையது!
29.5.2001 – உயர் கல்வி தகுதிக்காக வேட்பு மனுக்களைச் சமர்ப்பித்த மாணவி, மாணவர்கள் இன்று முழுதும் ஸ்ரீஹயக்ரீவர் மந்திரங்களை ஓதி கல்கண்டு கலந்த பொங்கல் தானம் செய்திடில் நலம் பெறுவர்.
30.5.2001 – புதுமணத் தம்பதிகள் இன்று தேனிலவிற்குப் போகாமல் இருப்பது நல்லது.
31.5.2001 – கோயில் குருக்கள் , சிவாச்சாரியார்கள் மீது வீண் பழி விழும் நாளிது.. எந்தக் காரியத்திலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருப்பது நலம்.

பௌர்ணமி நாள்:  6.5.2001 ஞாயிறு இரவு 8.43மணி முதல் 7.5.2001 திங்கள் இரவு 7.23 மணிவரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பௌர்ணமி திதி அமைகிறது... கிரிவல நாள் : 6.5.2001 ஞாயிறு (இரவு).

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam