பிரிவு என்பது இணையவே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

யுகயுகமாய் ஒளிர்கின்ற குருபாத பூஜை! ஜகம் முழுதும் மிளிராதோ குருபாத சேவை! அகஸ்திய விஜயம் தான் அவர் காட்டும் பாதை ! நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களின் பால பருவ குருகுலவாச அனுபூதிகள்

கலியுகத்தின் மிகவும் அற்புதமான குருகுலவாசங்களுள் ஒன்ற்றைத்தான் பிரபஞ்சத்தின் மாபெரும் சித்புருஷர்களில் ஒருவரிடம் பெற்று வருகின்றோம் என்ற நினைப்பே சிறுவனுக்குச் சற்றும் தோன்றாத வண்ணம் பெரியவர் குருகுலவாசத்தை அடக்கமாய் அவனுக்கு அளித்து வந்தார். முந்தைய யுகங்கள் போல பர்ண சாலையில் மலர்ந்த குருகுலவாசமன்று அது! சென்னை கல்மண்டபம் ஸ்ரீஅங்காளி கோயில் வளாகத்திலும், திருஅண்ணாமலைக்கான நடை யாத்திரையிலும் எத்தனையோ ஆலயங்களிலும் பூரித்த குருகுலவாச அனுபூதிகளிவை! ஒரு முறை விசேஷம் காரணமாக.. கல்மண்டபத்தில் அங்காளி ஆலயத்தில்... அப்போதெல்லாம் கோயிலிருந்தே பீச்சு வரை நல்ல “view” தெரியும்., அன்று நிறைய பேர்கள் பெரியவரைப் பார்க்க வந்திருந்தார்கள். தட்டுத் தட்டாகப் பழங்கள், முந்திரி, திராட்சை! விடியற்காலையிலேயே அங்கு வந்துவிட்ட சிறுவனுக்கு நல்ல பசி... பகல் பன்னிரெண்டு மணி ஆனாலும் பெரியவரைப் பார்க்க வந்த கும்பல் குறையவில்லை! மீனவர்கள், குடிசைவாசிகள், ஹைகோர்ட் பணியாட்கள், துறைமுகத்தில் வேலை செய்பவர்கள் எனப் பெரியவரைப் பார்க்கும் ஸ்பெஷல் கூட்டமே அலாதியானது தான்!

பொருள் ஆனந்தம்
இடையே புலன் ஆனந்தம் !

ஆயிரம் பொய், புரட்டு, லஞ்சம் புரிந்து விட்டுப் பெரியவர் முன் மிகவும் “பவ்யமாக“ நெற்றி உடலெல்லாம் பட்டை பட்டையாய் விபூதி, குங்குமம் இட்டுக் கொண்டு வந்த ஒருவரைப் பெரியவர் அன்று சற்று “பச்சையாகவே“ பேசி ஒரு விளாசு விளாசித் துரத்தி அடித்து விரட்டினார்!  
“பண்றதெல்லாம் அயோக்யத்தனம், ஒனக்கு இந்த அங்காளி ஆத்தா கோயில் படிய மெதிக்கறதுக்கே யோக்யதை இல்ல, உனக்குப் பரிகாரம் எவன் கொடுப்பான்? போடா, போ, போ...!” பாவம், சமுதாயத்தில் ஓரளவு அந்தஸ்து உள்ளவராக வாழ்ந்தவர் போலிருக்கிறது. பலருடைய எதிரில் “மானம்“ போனதால் அவர் தலை வணங்கிச் சென்றார்!
“ஏன் வாத்யாரே, இப்படி பச்ச பச்சயாப் பத்துப் பேருக்கு முன்னாடி வச்சுத் திட்டறே, தனியாக் கூட்டிட்டுப் போய் சொல்லலாமில்ல..! ”
சிறுவனுக்குக் கேட்கவே பயமாக இருந்தது! இருந்தாலும் கேட்டு விட்டான்.. கேட்டதும் நல்லதாகப் போய் விட்டது... ஏனென்றால் இப்படிக் கேட்டதினால் தான் அவனுக்கு ஓர் அற்புதமான விளக்கம் கிடைத்தது!
 “இத பாருடா, நான் பச்சையாத் திட்டினேன், வாஸ்தவம் தான்! இல்லைன்னு சொல்லலை! ஆனா எல்லாரையுமா அப்படித் திட்டறேன். கொஞ்சம் யோசிச்சுப் பாரு, நீயே பாத்துருக்கியே! பத்தாயிரத்துல ஒத்தனுக்குத்தான் இப்படி நடக்கும்...” என்று சொல்லிட்டுப் பெரியவர் ஆழ்ந்த யோசனையில் இறங்கினார்.. “நாளைக்கி நீ என்ன பண்ற, நேரே காஞ்சிபுரம் போ, அங்க பரமாச்சார்யாள் தரிசனம் பண்ணிக்க, அப்புறம் நேரே ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குப் போ!  அங்க ஒரு சித்தர் இருப்பாரு, ஒரு மூணு நாளைக்கு அங்க அவர் பக்கத்துலேயே இருந்து பாரு. அவர் என்ன பண்றாருன்னு கவனிச்சுப் பாரு... போடா .. போடான்னு... வெரட்டுவாரு! அவரு போடான்னு திட்டினார்னா எத்தனையோ ஜன்ம கர்ம வினையெல்லா பொசுங்கிப் போகும்டா! சித்தர்கள் திட்டினா அதுல ஆயிரமாயிரம் அர்த்தம் இருக்கும்! போய் பாத்துட்டு வா..!”
சிறுவனுக்கு ஏதோ ஒரு பயம் வந்து விட்டது! “நாம் ஏதாவது தப்புத் தவறாகப் பேசி விட்டோமா!” 
பெரியவர் தொடர்ந்தார், “பரவாயில்லடா ராஜா, நீ நெனச்சதுலயோ கேட்டதுலயோ எந்தத் தப்புங்கெடயாதுடா.. .ஏன்னா இந்த மாதிரி உனக்கும் எனக்கும் ஊட நடக்கற சம்பாஷணை எல்லாம் ஒரு காலத்துல எழுதி நெறயப் பேருக்குத் தெரியற மாதிரி நீ செய்யணும்டா... ஏன்னா அம்பது வருஷத்துக்கு அப்புறம் என்ன நடக்கப் போகுதுன்னு இப்பவே நாங்க உனக்கு. “Hints” கொடுத்துடறோம்... இது நெறய பேர் வாழ்க்கய திருத்தும்.”

“Coming to the subject matter proper..  நாங்க யாரத் திட்டினோம், சொல்லு பாக்கலாம், அந்த ஆளையா திட்டினோம், எப்ப ஒருத்தன் வந்து இந்தப் பெரியவர் ஒரு பெரிய மஹான், சித்தர்னு நம்பி வந்துட்டானோ அப்பவே அவன் சொல்றதை எல்லாம் நம்பி எல்லாம் நல்லதுக்காகத்தானு ஒரு எண்ணம் வரணும்டா! அந்த ஆளு என் முன்னாடி நிக்கறப்போ அவனச் சுத்தி, ஒரே பில்லி சூன்ய, பிசாசுங்க தாண்டா நிக்குது, எவன் எவனுக்கோ ஏதேதோ பண்ணி அது இப்ப அவன் தலைல விடிஞ்சுருக்கு! ஆனா அவனோட பூர்வ ஜென்ம புண்யமோ, என்னவோ தெரியலை, ஏதோ நெறயத் தடவ அண்ணாமலைல கிரிவலம் போய்ட்டு வந்துருக்கான்! அதோட புண்யம் .... எங்க கண்ணுக்கு எதுத்தாப்பலேயே அந்த பில்லி, சூன்ய பிசாசுங்க எல்லாம் எங்கிட்ட மன்னிப்பும், பரிகாரமும் கேக்கறாங்க.... என்ன பண்றது சொல்லு பாக்கலாம்.”
“நீ இது வரைக்குக் என்னப் பத்தி என்ன நெனச்சுகிட்டு வந்துருக்க, பெரியவர்தானே மனுஷங்களுக்கு ஏதோ நல்லது சொல்றான், செய்யறான்னு மட்டுந்தானே நெனக்கறே, அப்படி இல்லடா, எங்க நாங்க போனாலும் குறுக்க வர்ற மயானம், காடு, பாழடஞ்ச பங்களா, வீடு... இப்படீன்னு அங்கங்க இருக்கற மயான சூன்ய தேவதைங்க, பில்லி, சூன்ய பிசாசுங்கன்னு எல்லாமே எங்களோட பேசும்..... துர்சக்தி தேவதைங்க கூட எங்களுக்கு விடிவு மோட்சம் கெடயாதான்னு கேள்வி கேட்கும்.. அவங்களுக்கும் நாங்க பிராயசித்தம் சொல்லி ஆகணும்.   ...... ஏன் அவ்வளவு தூரம் போகணும், இன்னிக்குக் காலைல நீ பல் தேச்சுட்டு மிஞ்சின சொம்புத் தண்ணிய வெளில கொட்டினியே, அது எறும்புப் புத்து மேல விழுந்து 1836 எறும்பு காலியாயிடிச்சு தெரியுமா?”

சிறுவன் தலையைக் குனிந்து கொண்டான்!

“அந்த எறும்புகளுக்கும் ஒரு “Chief” உண்டுடா’ ... அது எப்படி எங்கிட்ட பெரிய குரல் குடுக்குது தெரியுமா?
“என்னா பெரியவரே, உன்னோட சிஷ்யகோடின்னு சொல்ற, நாங்க செவனேன்னு ஓரத்துல புத்துக் கட்டிட்டு இருக்கோம், துபுதுபுன்னு ஒரு சொம்பு தண்ணிய எடுத்து ஊத்தி ஒரு ரெண்டாயிரம் பேரை குளோஸ் பண்ணிட்டானே, இன்ன என்ன பண்றதுனு right royal ஆ அந்த எறும்பு General-லே கேள்வி கேக்குதுடா.... என்ன பதில் சொல்றது?”

சிறுவனுக்குக் கண்ணீர் வந்து விட்டது, ஏதோ கொப்புளித்துத் துப்பினோம்., மிச்சத் தண்ணீரைக் கீழே ஊற்றினோம் என்ற ஒரு சர்வ சாதாரணமான செயலில் இவ்வளவு விஷயங்களா? இதை ஒருவர் உணர்ந்து, எறும்பு பாஷையை அறிந்து பரிகாரத்தைச் சொல்கின்றார் என்றால் அவர் எவ்வளவு பெரிய சித்தராக இருக்க வேண்டும்...

“எப்படி வாத்யாரே,, எறும்பைப் பத்தியெல்லாம் இவ்வளவு தெரிஞ்சுக் கிட்டீங்கன்னு கேட்கவா முடியும்....” இவ்வாறும் மனதினுள் சிறுவன் நினைத்திடவே, இதையெல்லாம் spiritual antenna போல் “receive” .. செய்வது பெரியவருக்குச் சிரமமா என்ன? 
“அது ரொம்ப சிம்பிள்டா! இத பாரு....!” என்று சொன்ன பெரியவர் சிறுவனுடைய முதுகைத் திருப்பி சட்டையின் காலரில் இருந்து ஒரு எறும்பைக் கையில் எடுத்து, “இதுதாண்டா அதூது எறும்புன்னு பேரு.., இதுதாண்டா voice modem ஆட்டம் மெஸேஜைத் தூக்கிக் கிட்டு வருது.... உன்னோட மட்டும் நான் பேசறேன்னு நெனச்சுக்கிட்டு இருக்கே.... ஆனா நான் இந்த எறும்போடேயும் பேசிக்கிட்டு இருக்கேன்னு ஒனக்குத் தெரியாதுடா! எங்களுக்கு இதச் சொல்லணும்னு அவசியம் கூடக் கெடயாது தெரிஞ்சுக்க! ஒரு எறும்பு நீ எங்க போகப் போறேன்னு தெரிஞ்சுகிட்டு உன்னோட காலர்ல தொத்திகிட்டு கோயிலுக்கு வருதுன்னா அதுக்கு எப்படியாப்பட்ட மூளை இருக்கும்னு புரிஞ்சுக்க!”

“இந்த மாதிரி அபூர்வமான interesting matter எல்லாம் ஏன், வாத்யார் நம்மிடம் சொல்ல மாட்டேன் என்கிறார்.... எதுவானாலும் கேட்டோ, மனதில் நினைத்து நினைத்துத்தானே அவரைத் தூண்டி விட்டுக் கேட்க வேண்டியதிருக்கிறது” என்று சிறுவன் நினைத்தானோ இல்லையோ... pat came the reply!

“ஏண்டாப்பா நீங்க எல்லாம் பெரிய பெரிய தொரைங்க, ஐயா என்ன கேப்பாருன்னு எங்க spiritual energyஐ வேஸ்ட் பண்ணித் தெரிஞ்சுக்கிட்டு அதுக்கு பதில் சொல்லணும்னு எங்களுக்கு எந்த கட்டாயமும் கெடயாதுடா? இந்த மாதிரிப் பண்றத விட எங்க புண்ய சக்திய வேற ஏதாச்சும் நல்லதுக்கு செலவானா பிரயோஜனமா இருக்கும்டா..”

“ஒண்ணு தெரிஞ்சுக்க, இந்த எறும்பு subject-யே எடுத்துகோயேன், நீ தண்ணீ ஊத்தி சாகடிச்ச 1836 எறும்புக்கு நாங்க என்ன பண்ணினோம், என்ன பண்ணப் போறோம்னு யாருக்கும் சொல்லணும்னு எங்களுக்கு எந்த அவசியமும் கெடயாது... ஆனா.... இப்ப இதை கொஞ்சம் உனக்கு எடுத்துச் சொல்றதுனால உடனேயே உன்னோட மனசுல எத்தனை கேள்வி உதயமாகுது பாத்தியா? கலியுகத்தில வெறும் கேள்விதாண்டா கேப்பாங்க!”
“இந்த எறும்பு எப்படி இங்க வந்துச்சு, எப்படித் திரும்பிப் போகும். இந்த எறும்பை இப்ப என்ன செய்யறது? இவ்வளவு விஷயம் தெரிஞ்சு இருக்கற எறும்பு இப்படி ரிஸ்க் எடுத்துக்கிட்டு ஏன் சட்டைல ஒட்டிக்கிட்டு வரணும், அங்கேருந்து சப்ஜெக்டை telepathyக்கா எனக்கு convey  பண்ணி சொல்லியிருக்கலாமே.... இந்த மாதிரி கோடிக்கணக்கா எறும்பு, புழு, பூச்சி, காக்கா, வண்டு, மனுஷங்க சப்ஜெக்ட் எல்லாம் நாங்க daily டீல் பண்ணி ஆகணும்டா! அதனாலத்தான் நாங்க தூங்கறதே கெடயாது.. தூங்கவும் முடியாது, ஏன்னா இங்கேயே படுத்துத் தூங்கறேன்னு வெச்சுக்கோ..... இங்க இருக்கற பூச்சி, புழு, பூரான், எலி, சுவரு, கல்லு, தூண் எல்லாமே தங்களோட சோகக் கதைய சொல்லி பிராயசித்தம் கேக்கும், எதச் சொல்றது, எத விடறது? நீயே சொல்லு பாக்கலாம்!”

சிறுவன் திகைத்து விட்டான்!

“அப்பப்பா! சித்தர்களோட சாம்ராஜ்யம் எவ்வளவு பெருசு! நம்பால நெனச்சுக் கூட பாக்க முடியாது போல இருக்கே..?”

“Too late…..” என்று சொல்லியவாறே சிரித்தார் பெரியவர்! அந்த எறும்பை உள்ளங்கையில் தாங்கி அங்காளில் கோயில் மதில்சுவர் ஓரம் மெதுவாக வெளிவிட்டார்.

“இதப்பாருப்பா உங்க chief –கிட்ட போய் ஏதாச்சும் கோழி மூட்டிடாதே, உனக்கு மரியாதை கொடுத்து பத்ரமா கொண்டு உட்டுட்டோம்..” பெரியவர் எறும்பிடம் ஏதோதோ,, பேசுவதைக் கண்டு சிறுவனுக்குச் சிரிப்பு வந்து விட்டது....  “வாத்யாரே ! இந்த எறும்பு சப்ஜக்ட்ல ஒரே ஒரு கேள்வி...” என்று சிறுவன் இழுத்திடவே..

பெரியவர் பெருஞ்சிரிப்புடன்.., “என்ன கேக்கப் போறே, அந்த எறும்போட இவ்வளவு பேசறியே, அந்த எறும்பு என்ன பதில் சொல்லிச்சு... அதுதானே...!”
சிறுவனும் “ஆமாம்” என்பது போல வெட்கத்துடன் எட்டாவது முறையாகத் தலை குனிந்தான்.

“என்ன சொல்லிச்சு தெரியுமா, இங்க பக்கத்துல வா காதுல சொல்றேன், அது என்ன பேசுது தெரியுமா, பெரியவரே ஏங்கிட்ட ஏன் இப்படியெல்லாம் பேசற, நான் என்ன உன்னோட சிஷ்யனாட்டம் மக்கு மன்னாரா என்ன அவன் மாதிரி நாங்க ஒண்ணும் மண்டூகம் கெடயாது, எதையுமே சொல்றதுக்கு முன்னாடியே புரிஞ்சுப்போம்!” சிறுவன் விழிகள் பிதுங்கிட அந்த எறும்பை நோக்கினான்.., அது “கலகலவென்று” கை கொட்டிச் சிரிப்பது போலிருந்தது... ஏதோ பெருஞ் சத்தங் கேட்டுச் சிறுவன் திரும்பிப் பார்த்திட, பெரியவர்தான் கை தட்டிக் கைதட்டிக் கோலகலமாகச் சிரித்துக் கொண்டிருந்தார்!

“அப்பப்பா சித்தர்கள்னாலே ரொம்பப் பொல்லாதவங்கப்பா..”  சிறுவன் அவருடைய தெய்வீகம் பூரிக்கும் சிரிப்பில் கலந்தான்! அன்றிலிருந்துதான் புழு, பூச்சி, எலி, பல்லி  என இப்பூவுலகின் எத்தனையோ கோடி ஜீவன்களையும் கரையேற்றவே பெரியவர் கோவணாண்டியாய் வலம் வருகிறார் என்பதைச் சிறுவன் உணர்ந்தான்..

பொதியமலை உச்சியிலே!

“ஆமாம்... பொதிய மலைல...! எதுல விட்டேன். மதுரைல வைகைல ஒரு முழுக்குப் போட்டு வர்றதுள்ள தேவ விமானத்தக் காணோம்டா.... எனக்கு பக்குனு ஆயிடுச்சு கைல காசு இல்ல,, எப்படித் திரும்பறது! அப்புறம் தாண்டா சொன்னாங்க எந்த புஷ்பவிமானம். தேவலோக விமானம் வந்தாலும் மதுரை கூடலழகர் பெருமாள் கோடில் விமானத்த பிரதட்சிணம் பண்ணியாகனும்னு ஒரு ஸ்பெஷல் divine rule  இருக்காம்.. அதுதாண்டா புஷ்ப விமானங்களுக்கெல்லாம் கண்ட்ரோலிங் செண்டரு...” பெரியவர் மிகவும் கடினமான தெய்வீகத் தாத்பர்யங்களையெல்லாம் எளிமையாக்கி இவ்வாறாகக் கொச்சை பாஷையில் எடுத்துச் சொல்வது மிகவும் வேடிக்கையாக இருக்கும்... (பின்னர் ஒரு முறை பெரியவருடன் மதுரை செல்லும் போது அந்த விசேஷமான கூடலழகர் ஆலய விமானத்தை தரிசிக்கும் பாக்யத்தைச் சிறுவன் பெற்றான்..)

“தரையோட தரையா வைகை ஆத்துலேயே வண்டிப்பாதை இருந்துச்சுடா.. ஜிலுஜிலுன்னு வைகைத் தண்ணி ஓடுது...” ... சுத்தி சுத்தி பாத்துத் திரும்பறதுக்குள்ளாற புஷ்ப விமானம் திரும்பி வந்துடிச்சு.... அங்கேந்து புஷ்ப விமான பிளைட்டுல நேரே குத்தாலம்... அங்கே ஸ்நானம், அப்புறம் இலஞ்சிலே கொஞ்சம் ஹால்ட்.... ஏன்னா ஐந்தருவில குளிச்சுட்டு இலஞ்சி சிவபெருமான, முருகன தரிசிக்கணும்னு சட்டம் ..(இப்போது இலஞ்சி முருகன் கோயில்).. அங்கேந்து பாபநாசத்துக்குக் குறுக்குப் பாதைல போனோம்.., அடர்த்தியா நல்ல காடு, (இப்போது நல்ல தார் ரோடு இருக்கிறது...)..

நேரே. பாபநாசத்துல எறக்கி விட்டாங்க... அங்கேந்து பொதிய மலைக்கு நடக்கணும்... நம்ப நடைக்கு எவண்டா வர்ற முடியும்... பின்னாடி தேவர்களெல்லாம் விசுக் விசுக்னு, நடந்து வர, கல்யாணி அருவியெல்லாம் தாண்டி நான் ரொம்ப தூரம் போய்ட்டேன். அங்கே சூட்சும மனுஷ எல்லை ஒண்ணு உண்டுடா.. அதுக்கு மேல மனுஷங்க போகக் கூடாது! போகணும்னா அதுக்குன்னு சில தெய்வ நியதி இருக்கு.... அதெல்லாம் செஞ்சாகணும்! அதெல்லாம் எனக்குத் தெரியாதே, எப்படிப் போறது!”

திருக்கலயநல்லூர்

தென்காசி மகாத்மியம் - திருக்கலையநல்லூர் ஸ்ரீஅமிர்தகலசநாதர்

தென்காசி மகாத்மியத் தொடர் – 7 ( வெற்றிக்கு வடிவழகு தரும் தென்காசி தேவா போற்றி! போற்றி!!)

வெற்றி என்றால் தொழிலில், விளையாட்டில் கல்வியில் பெறுவதை மட்டும் தானா வெற்றி என்கிறோம். நம் இல்லறத்தை, வாழ்க்கையை நன்முறையில் நடத்திச் செல்வதற்காக நாம் ஆற்ற வேண்டிய கடமைகளில் தர்மமான முறையில் வெற்றிவாகை சூடினால்தான் நம் வாழ்வில் கர்மவினைகள் சேராதவாறு பார்த்துக் கொள்ள முடியும். வியாபாரத்திலோ, தினசரி நடைமுறை வாழ்க்கையிலோ, அலுவலகப் பணியிலோ கர்மவினைகள் நிறைந்த அதர்மச் செயல்களைப் புரிந்து விட்டு எந்தெந்த வகையிலோ லாபமும், சொத்தும் சேரப் பெற்றால் அது தர்மமான வெற்றியாகாது. தார்மீக ரீதியாக, தெய்வீக வாழ்க்கையுடன் இணைந்த வெற்றிதான் நம்மை இறுதிவரை இறைமையில் நிலை நிறுத்திக் காப்பாற்றும்.

ஸ்ரீஅமிர்தகலசநாதர்
கலயநல்லூர் கும்பகோணம்

ஸ்ரீஅமிர்தவல்லி
கலயநல்லூர் கும்பகோணம்

ஆனால் வெற்றி என்பதோ எத்தனையோ சோதனைகளைக் கடக்கும் வழிமுறைகளில் பெறுவதுதானே! முதலீடு, இடவசதி, தொழிலாளர் அமைதி எனப் பலவகையில் தார்மீகமான வெற்றியைச் சூடியாக வேண்டும். வெற்றிக்குரித்தான படிகளில் இதற்கெல்லாம் அடுத்தபடியாகத் தேவைப்படுவது மனோதைர்யமாகும். எத்தனையோ விதமான துன்பங்களும் குழப்பங்களும் சூழ்ந்து வந்தாலும் மனதிற்குத் துணிவும், தைரியமும் கைகூடினால்தான் வெற்றியைச் சாதிக்க முடியும். விடாமுயற்சியும் தளராத உழைப்பும், மனோ தைர்யத்திலிருந்து உருவாவதுதான்..

வெற்றிக்குரித்தான குறிக்கோளிலிருந்து பாதையிலிருந்து சற்றும் நெறி பிறழாது செல்வதற்கு இந்த உடலும், உள்ளமும் மனமும் இணைந்து மனோதைர்யத்துடன் செயலாற்ற வேண்டுமல்லவா! இதனைப் பெற்றுத் தருவதாக விளங்குவதுதான் வேதசக்திகளாகும். வேதத்தை நாம் அறிந்துள்ளோமோ இல்லையோ, நீராடுதலால், நான்கு வேதங்களின் மகாசக்தியைத் தரவல்ல சதுர்வேத தீர்த்தங்கள் உள்ள தலங்கள் சில உண்டு. கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருக்கலயநல்லூரில் (தற்போதைய சாக்கோட்டை) அருள்பாலிக்கின்ற ஸ்ரீஅமிர்தவல்லி சமேத ஸ்ரீஅமிர்தகலசநாதர் மனோ தைரியத்தையும், மனத்துணிவையும் தந்து வெற்றிப் பாதையிலிருந்து சற்றும் பிசகாவண்ணம் தளரா மன சித்தத்துடன் தொடர்ந்து செல்வதற்கான திருவருளைப் பொழிகின்ற மூர்த்தியாகவும் விளங்குகின்றார். பிரளயத்தின் போது சுவாமி அனைத்து ஜீவ ஆன்ம அணுக்களையும் கலயத்தில் சேர்த்து ஜீவித மனோபாவ சக்தியைப் புகட்டிய தலமிது! இந்த சிருஷ்டிக் கலயத்தைச் சுற்றி மஹரிஷிகள் அமர்ந்து சதுர்வேத மந்திரங்களை ஓதி ஜீவ ஆன்ம அணுக்களுக்கு மனோபல சக்தியைக் கூட்டி உள்ளனர். எனவே வாழ்க்கையில் கோழையாய் இருப்பவர்களும், துன்பச் சுமைகளினால் சோகமயமான வாழ்வைப் பெற்றிருப்பவர்களும், மனத் துணிவும், மனோதைர்யமும் வேண்டியுள்ளவர்களும் பரிகாரம் பெற மிகவும் பழமையான இத்திருத்தலத்தில் தக்க இறைப்பணிகளைச் செய்து வருதல் வேண்டும். வியாழனன்று கும்பலக்ன நேரத்தில் குறிப்பாகப் பால் பொங்கல் நைவேத்யமும், அன்னதானமும் சிறப்புடையதாகும்.. இதனால் மனபீதிகள் தணியும்.

வெற்றிக்கு வடிவழகு தருகின்ற தென்காசியில் உறைகின்ற ஸ்ரீகாசி விசுவநாதரைத் தரிசிக்கும் முன்னர் நாம் கண்டு வழிபட வேண்டிய திருத்தலங்களில் ஏழாவதாக விளங்குகின்ற கும்பகோணம் அருகிலுள்ள திருக்கலயநல்லூர்ச் சுயம்பு மூர்த்தியான ஸ்ரீஅமிர்தகலசநாதரை தரிசித்து வாழ்வின் வெற்றிப் பாதைக்கு அத்யாவசியமான மனோதைர்யத்தையும், மனத்துணிவையும் பெற்றிடுங்கள்.!

நவாவர்ண ஊஞ்சல்

நவாவர்ண ஊஞ்சல் மகிமை

வர்ண யோகத்தில் திளைக்க வைப்பதே ஊஞ்சலாம்! நேத்ர சக்தியையும், ஆயுள் விருத்தியையும் தருவதே நவாவர்ண ஊஞ்சல்! ஆடினால் கூடிடும் நாடிச் சுடர்யோக நாளம்!

இறைவன் நமக்குக் கண் பார்வையை அளித்திருப்பது எதற்குத் தெரியுமா? அனைத்து ஜீவன்களின் உள்ளத்தில் உறைகின்ற இறைவன்தான் பிரபஞ்சம் எங்கும் விரிந்து பரந்து எதிலும் விளங்குகின்றான் என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்வதற்காகத்தான்! மனிதப் பிறவி என்பது மகத்தான பிறவி என்பதற்குக் காரணம் என்ன? இந்த மானிட உடலில் இறைவனுடைய பேரின்பப் பெருநிலையை உணர்வதுதான் மிகவும் சிறப்புடையது என மகரிஷிகளும், யோகியர்களும், சித்புருஷ்ர்களும் உறுதிபடக் கூறுகின்றனர்! என்னே மானிடப் பிறவியின் மஹிமை!  எனவேதான் அனைத்து மகரிஷிகளுமே பூலோகத்தில் மனித ரூபத்தில் இறைவனை வழிபட்டு, தரிசித்து கிரிவலம் வருவதற்கு மிகவும் விருப்பம் கொள்கின்றனர்! ஏன், உலக அன்னையாம் சர்வேஸ்வரி கூட மானிட ரூபத்தி சிவராத்திரி அன்றும், நவராத்திரியின் போதும் இறைவனை வழிபடுவதில் பேருவகை கொள்கின்றாள் தானே! இவ்வாறாகக் கண்ணால் இறைமையைக் கண்டு உணரவேதான் நாம் கண்களைப் பெற்றுள்ளோம்.

சந்திர பிரபையுடன் ஸ்ரீதட்சிணா மூர்த்தி
கலயநல்லூர் கும்பகோணம்

நாம் எத்தனையோ நிறங்களைப் பூலோகத்தில் காண்கின்றோம், பூமியில் நமக்குக் காணக்கிடைக்காத எத்தனையோ ஆயிரம் நிறங்களை தேவாதி தேவ லோகங்களில் என்றும் கண்டிடலாம்., RGB என்றும் CMYK என்றும் தற்காலத்தில் விஞ்ஞானத்தில் வகுத்துக் கூறப்படுகின்ற நீலம், இளஞ்சிவப்பு, மஞ்சள், கருப்பு போன்ற வண்ணங்கள் தாம் பலவிதமான வண்ணங்களை உருவாக்குவது போல் தோன்றினாலும் நம் அறிவிற்கு எட்டாத வகையில் உள்ள பல்வேறு நிறங்களை விண்ணுலக லோகங்களில் தான் காண முடியும். கண்கள் மூலமாக நிறங்களைப் பகுப்பதற்கான ஜ்வலந்திக் கதிர்கள் மற்றும் ஜ்வலந்திக் கிரணங்கள் நம் உடலில் மிகவும் நிறைந்துள்ளன. எந்த அளவிற்கு நாம் நல்ல காட்சிகளைக் காண்கின்றோமோ, நல்ல செய்கைகளைச் செய்கின்றோமோ, சூரிய, சந்திர, சந்தியா பூஜைகளை மேற்கொள்கின்றோமோ, விண்ணில் நட்சத்திர தரிசனங்களைப் பெறுகின்றோமோ, பெரியோர்களின் தரிசனத்தைக் காண்கின்றோமோ, அந்த அளவிற்கு இந்த ஜ்வலந்திக் கதிர்கள் நம் தேகத்தில் விருத்தி அடைகின்றன. இதுவே தீர்க தரிசன சக்தியாக அபிவிருத்தி அடைந்து முக்காலம் அறியும் தெய்வத்திறனும் கிட்டுகின்றது. இந்த ஜ்வலந்திக் கதிர்களின் சில அம்சப் பரிமாணங்களாகத்தான் நாம் ஒன்பது விதமான நிறங்களாகக் காண்கின்றோம். இவையே நவகிரஹக பிம்ப சக்திகளாக நமக்கு அருள்பாலிக்கின்றன. நம் உடலில் ஒன்பது விதமான துவாரங்கள் உள்ளன அல்லவா! நமக்கு இந்த பூத உடலில் கருவில் உயிர் சேர்வதும், மறைவில் உயிர் பிரிவதும் இந்த ஒன்பது துவாரங்களின் ஒன்றின் மூலமாகத்தான்! அவரவருக்கு உரித்தான ஆன்ம நிலைகளுக்கு ஏற்ப இந்த நவதுவாரங்களின் வழியேதான் கருத்தரிப்பு மூலமாக சிருஷ்டிக் கோலம் கொள்வதும், ஆன்மா உடலை விட்டுப் பிரிவதும் நிகழ்கின்றன. இவையெல்லாம் பிறப்பு, இறப்பு இரகசியங்களில் அடங்கும். நவாவர்ணங்களுக்கும், நம்முடைய ஆத்ம முன்னேற்றத்துக்கும் நிறையத் தொடர்புகள் உண்டு. தினந்தோறும் காலையில் உறக்கத்திலிருந்து எழும் முன்னரும் மாலை – அதாவது பகலும், இரவும் சேரும் சங்கமச் சாயை – நேரத்திலும் ஒன்பதுவிதமான நிறங்களை இயற்கை வழிபாடாக, இயற்கை தரிசனங்களை நிச்சயமாக தரிசித்து நாம் வணங்கிட வேண்டும். ஒவ்வொரு நிறத்திற்கும் உரித்தான வர்ண தேவதை உண்டு. நம்மால் இன்று அனைத்து வர்ணங்களையும் அறிந்து காணமுடிகின்றதென்றால் அதற்கு நவாவர்ண தேவதைகளின் அருட்கடாட்சத்தினால் தான்! இந்த வர்ண தேவதா மூர்த்திகள் யாவரும் அனைத்து ஆலய கோபுரங்களிலும் குடிகொண்டு இடைவிடாது தவம் புரிந்து வருகின்றார்கள், ஜீவன்களின் நலனுக்காக! ஒவ்வொரு வர்ண தேவதையின் சுழுமுனைச் சுவாசக் சுருதிலயங்களே அந்தந்த நிறமாக மாறுகின்றது என்பது தெய்வீக உண்மையாகும். எனவேதான் பூபாளம், தோடி போன்ற அனைத்து ராகங்களுக்கும் உரிய நிறத்தையும் கூடப் பகுத்திருக்கின்றார்கள். பாரத மண்ணிற்குப் பெருமை கூட்டும் கர்நாடக சங்கீத அடிப்படைப் பாடத்தில் கூட “வர்ணம்” என்ற பகுதி உண்டு. இந்த சக்திகளை எல்லாம் நமக்குப் பெற்றுத் தருவதே நவாவர்ண ஊஞ்சலின் ஆன்மீகத் தன்மையாகும். வாயு வர்ண தேவதைகளின் ஆசியைப் பெற நவாவர்ண ஊஞ்சலின் ஆட்டயோகம் முக்கியமானதாகும்.

இறைவன் ஆட்டுவித்தால் நாம் ஆடுகின்றோம்!
வர்ண தேவதைகளின் அருட்கடாட்சம் இருந்தால்தான் நமக்கு நல்ல கண்பார்வை சித்திக்கும், ஸ்ரீபச்சையம்மன் என்ற பெயரில் எங்கேனும் அம்பிகை எழுந்தருளியிருந்தால் அவ்விடத்தில் கோடானுகோடி பச்சை வர்ண தேவதைகளின் கருணைக் கடாட்சம் நிரம்பி இருக்கின்றது என்பது பொருளாகும். இத்தலங்களில் நாம் தர்ப்பைப் புல், கரும்புச் சட்டம், கோரைப் பாய், நாணல், தட்டைப்பாய் போன்ற வர்ண ஆசனத்தைப் பரப்பி, “பசுந் தாரணம்” என்ற ஒருவிதமான யோக சுவாச தாரணத்தைப் பயின்று வந்தால் நமக்கு தீட்சண்யமான கண்பார்வையும், ஆயுள் ஆரோக்கியமும் நன்கு கூடிடும். விபத்து, இருதய வலி போன்ற அபமிருத்யு தோஷங்களுக்கும் சுவாச நோய்களுக்கும் இது நிவர்த்தியைத் தருவதாகும்.

ஸ்ரீபச்சையம்மன் ஆலயம்
திருஅண்ணாமலை

இதே போன்று ஸ்ரீவெள்ளை மாரியம்மன், ஸ்ரீவெள்ளையம்மன், ஸ்ரீவெள்ளையப்பன், ஸ்ரீவெள்ளீஸ்வரன் என்ற பெயருடைய  தேவமூர்த்திகளும் உண்டு. இவ்விடத்தில் நாம் சுவேத யோக சுவாச தாரணத்தைப் பயில வேண்டும். இதனால் தீயபழக்கங்கள் நீங்கி நல்ஒழுக்கம் ஏற்படும். இவ்வாறாக ஒவ்வொரு வர்ணத்திற்கும் உரிய அம்பிகைகள் பல அருட்கடாட்ச மூர்த்திகளாகத் திகழ்வதோடு, ஒவ்வொரு வர்ண அம்பிகையின் அருளாட்சியின் கீழ் கோடானு கோடி வர்ண தேவதைகளும் நம்மைக் காத்து ரட்சிக்கக் காத்திருக்கின்றனர் என்பதே நாம் நவாவர்ண யோக முறையில் அறிய வேண்டியதாகும். அக்காலத்தில் காலையிலும், மாலையிலும் நவாவர்ண ஊஞ்சல் (ஒன்பது வர்ணங்கள் நிறைந்தது) அமைத்து அதிலே தினந்தோறும் குறைந்தது 3 மணி நேரமேனும் ஊஞ்சலாடி “சயன யோக“ சுவாச முறைகளைக் கடைபிடிப்பார்கள். நீங்கள் கால்களை உயர்த்திய நிலையில் காற்றில் ஆடுகின்ற போது ஏற்படுகின்ற காற்றுச் சலனங்களினால் உங்களுடைய நாடி, நரம்புகளில் நவவாயுக் கோச பூதப் பிரமாணங்கள் ஏற்படுகின்றன. சுவாச கலைகளும், ஆரோக்கியக் கோணங்களும் நல்வகையில் கூடி இருதய ஆகாசத்தை விரிவுபடுத்துகின்றன. மேலும் பூமியின் ஆகர்ஷண சக்திக்கு ஏற்ப ஊஞ்சல் ஆடுகின்ற போது ஏற்படுகின்ற பரம யோகக் கதிர்களினால் உங்களுடைய தசைகளும், எலும்புகளும் வலுப்பெறுகின்றன. தினந்தோறும் ஊஞ்சல் ஆடி பழகுவோர்க்கு மூட்டுவலி மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்கள் நிச்சயமாக ஏற்படாது. எனவேதான் அக்காலத்தில் நவாவர்ண ஊஞ்சலாக, ஒன்பது விதமான நிறங்களை ஊஞ்சலிலும், ஊஞ்சலுடைய சங்கிலியிலும், ஊஞ்சல் பலகைகளிலும், அமைத்து அதில் நீண்ட நேரம் அமர்ந்து நவாவர்ணங்களுடைய சக்திகளைத் தன்னுடைய உடலில் தேக்கிக் கொண்டார்கள் நம் மூதாதையர்கள், ஊஞ்சலைக் கூட ஒன்பது வர்ணங்கள் கொண்ட தூண்களை உடைய நடுமண்டபத்தில் அமைத்திருப்பார்கள். ஆனால் கலியுகத்தில் ஏற்பட்டுள்ள இடமாறுதல்கள் காரணமாக இல்லத்தின் அமைப்பும், பரப்பும் ஒரு 500 சதுர அடிக்குள்ளேயே ஒரு பெரிய குடும்ப்பமே அடங்கிக் கிடக்கின்ற கோலத்தைத்தான் நாம் இன்று காண்கின்றோம். இதனால்தான் ஆரோக்யம் சீர்குலைந்து எண்ணற்ற நோய்கள் உருவாகி விட்டன. குறிப்பாக மூச்சிறைப்பம் (wheezing), மூட்டுவலியும் சர்வ சாதாரணமாகி விட்டது.

ஸ்ரீஅர்த்தநாரீஸ்வர மூர்த்தி
கலயநல்லூர் கும்பகோணம்

எனவே, நவாவர்ண ஊஞ்சல் எனப்படும் ஒன்பது விதமான நிறங்கள் கூடிய பிரம்பு, மூங்கில் போன்ற யோகஸ்தம்பன சக்திகள் நிறைந்த தாவரங்கள் மூலமாகப் பின்னப்படுகின்ற ஊஞ்சலில் அமர்ந்து காற்றுச் சலனத்தோடு ஆடிப் பழகி வருவீர்களேயானால், உங்களுக்கு உடல் ஆரோக்யம் ஏற்படுவதோடு, சாந்தமான மனநிலையும் கைகூடும், பலவிதமான மனக்குழப்பங்களாலும், மனக் கசப்புகளாலும் வருத்தத்தில் தோய்ந்து கிடக்கின்ற தினசரி வாழ்க்கையில் நவாவர்ண ஊஞ்சலின் காற்றுச் சலன ஓட்டத்தால் நாடி, நரம்புகளுக்கு ஆதித்ய சுழுமுனை சுவாச சுத்தியும், ஊட்டமும் ஏற்பட்டு நன்முறையிலே நீங்கள் மன ஊக்கமும், உள்ள ஆக்கமும் பெறுவீர்கள். மேலும் ஒவ்வொரு வர்ணத்தையும் ஊஞ்சலில் பூசுகின்ற பொழுது அதற்கான மந்திரங்களையும், வர்ணதேவதைகளுக்குரித்தான பீஜாட்சரத் துதிகளையும் ஓதி வருவதால் அந்த நவாவர்ண ஊஞ்சலில் பல யோக சக்திகள் கூடுகின்றன. இத்தகைய தெய்வீக ரகசியங்களையெல்லாம் தக்க சற்குரு மூலமாக அறிந்து கடைபிடித்தல் சிறப்புடையதாம். நம் திருஅண்ணாமலை ஆசிரமத்தில் பூஜிக்கப்பட்ட நவாவர்ண ஊஞ்சலானது திருஅண்ணாமலையாரின் அருணாசல ஜோதிக் கதிர்கள் படிந்திடும்படி அருணாசல அருட்பார்வையிலே ஒரு மண்டலத்திற்கும், மேலாக வைக்கப்பட்டுத் தக்க பூஜை முறைகளோடு வழிபடப்பட்டவையாக விளங்குகின்றன. எந்த ஹோரை  நேரத்தில் எந்த வர்ணத்தை ஊஞ்சலில் பூசுதல் வேண்டும் என்ற சித்தர்களுக்கு உரித்தான வர்ண கால யோக முறைகளுக்கு ஏற்ப அமைக்கப்பட்டதாக இந்த நவாவர்ண ஊஞ்சல் அமைந்துள்ளது.

கலயநல்லூர் கும்பகோணம்

உதாரணமாக தினந்தோறும் குருஹோரை நேரத்திலும் குறிப்பாக வியாழனன்று குரு ஹோரையும் சித்தயோகமும் கூடிய நேரத்தில் நவாவர்ண ஊஞ்சலுக்கு மஞ்சள் நிறத்தைப் பூசுவதால் சுபமங்கள கிரணங்களின் படிவு கூடுகின்றது. இவ்வாறாக நம் ஆசிரமத்தில் கிட்டுகின்ற நவாவர்ண ஊஞ்சலில் அமைந்திருக்கும் ஒவ்வொரு வர்ணமும் பலவிதமான வேத, மந்திர, மூலிகா யந்திரச் சக்திகளுடன் கூடியவையாக விளங்குகின்றன. இதில் அசுவினி நட்சத்திர நேரத்தில் கிருஷ்ண பட்சத்தின் செவ்வாய் மற்றும் புதன் ஹோரை நேரத்தில் தடவப்பட்டிருக்கும் மூலிகைப் பூச்சானது உடலுக்கு நல்ஆரோக்கியத்தைத் தருவதாகும். இந்த நவாவர்ண ஊஞ்சலில் இறைத் திருஉருவ விக்கிரகங்களையோ, படங்களையோ வைத்துத் தினந்தோறும் மெதுவாக ஊஞ்சலை ஆட்டி இறைவனுக்கு ஊஞ்சல் ஆராதனை செய்து மகிழ்வதோடு கருடத்வஜ தேவ மூர்த்தியின் அனுகிரகத்தைப் பெற்றிடலாம். நாம் ஊஞ்சலில் ஆடுவதை விட இறைமூர்த்தியை வைத்து ஊஞ்சலில் ஆட்டுகின்றபோது ஏற்படுகின்ற மங்களக் காற்றுச் சலனத்தால் இல்லத்தில் தெய்வீகக் கிரணங்கள் அஷ்ட திக்கிலும் உற்பவிக்கப்பட்டு நமக்கு வாத்சல்ய சுவாச சக்தியைத் தந்தருள்கின்றன. இறை மூர்த்திக்கு ஒரு ஊஞ்சல், நமக்கு ஒரு ஊஞ்சல் என வைத்துக் கொண்டு தினந்தோறும் இறைவனுக்கு ஊஞ்சலாட்டும் ஆராதனை வழிபாட்டையும் மேற்கொண்டு நமக்குரித்தான நவாவர்ண ஊஞ்சலில் குறைந்தது மூன்று மணி நேரமேனும் அஷ்ட பந்தன வாயு யோக முறையில் ஊஞ்சலாடியும் வந்திடில் நம்முடைய ஆரோக்கியத்தையும், மனவளத்தையும் பக்தியையும் பெருக்கிக் கொள்ளலாம் அல்லவா? இவ்வாறாக இந்த நவாவர்ண ஊஞ்சலின் சிறப்பம்சங்கள் எத்தனையோ உண்டு! நம்முடைய சென்னை ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயத்திலும், திருஅண்ணாமலை ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்திலும் கிடைக்கும். இந்த நவாவர்ண ஊஞ்சலின் சிறப்பு அம்சங்களை உணர்ந்து பயன் பெறுவீர்களாக!

கரந்தையில் சூரிய பூஜை

கரந்தையில் படர்ந்திடும் கதிரவ ஒளி சிவபூஜை.

அருந்ததி நட்சத்திரத்தைத் திருமணத்தன்று காணாதோர்க்கெல்லாம் அரிய பரிகாரத்தைத் தருகின்ற அற்புத சூரிய பூஜை! பிரிந்த தம்பதியர் ஒன்று கூட உதவும் பாஸ்கர பூஜை!
தஞ்சாவூரில் உள்ள கரந்தை எனப்படும் கருந்தட்டாங்குடியில் அருள்பாலிக்கின்ற ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் சிவாலயத்தில் வரும் பங்குனி மாதம் 3,4,5ம் தேதிகளில் (2000 மார்ச் மாதம் 16,17,18) சுயம்புலிங்க மூர்த்தியான ஸ்ரீவசிஷ்டேஸ்வரரின் மேல் இளங்காலையில் சூரிய கிரணங்கள்படுகின்றன. இதுவே பாஸ்கர பூஜை என்று அழைக்கப்படுகின்றது. அதாவது, சூரிய பகவானே தம்முடைய அமிர்த கிரணங்களைப் பொழிந்து சிவலிங்க மேனியைத் தழுவி ஆற்றுகின்ற அற்புதமான சூரிய பூஜை! சூரிய கிரணங்கள் மூலமூர்த்திகளின் மேல் தோய்கின்ற அற்புதமான ஆலயங்கள் இந்தியா முழுவதும் பல உண்டு. வருடத்திற்கு ஓரிரு நாட்களே அமைகின்ற இந்த அற்புதமான சூரிய பூஜை நாட்களைத் தவற விடாதீர்கள். உங்கள் வாழ்க்கையில் பெறுதற்கரிய பூஜை நாட்களான இந்த பாஸ்கர பூஜை நாட்களில் இத்தகைய பாஸ்கர பூஜைத் தலங்களுக்குச் சென்று சுயம்பு லிங்கச் சிவமேனியில் பொழிகின்ற, ஒளிர்கின்ற சூரியக் கிரணங்களைக் கண்டு தரிசித்து பெறுதற்கரிய பலாபலன்களைப் பெற்றிடுங்கள்.

கரந்தை சிவாலயம்

ஸ்ரீசூரிய மூர்த்தி சுவாமி சுவர்ச்சலாம்பா தேவியை மணந்தபோது திருமணத்தின் தேவ சுப வைபவத்தில் தக்க தருணத்தில் ஸ்ரீஅருந்ததி நட்சத்திரத்தைத் தரிசிக்கும் நேரத்தைத் தவறவிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விட்டது. தேவாதி தேவ மூர்த்திகளுக்கும் இத் தவறுகள் நேருமா என்ன? ஸ்ரீஅருந்ததி தேவியின் மஹிமையை இப்பிரபஞ்சம் அறியும் பொருட்டும் பல மஹரிஷிகளின் மகத்துவத்தை, தபோ பலன்களை உலகிற்கு உணர்த்தும் பொருட்டும்தான் தேவாதிதேவ தெய்வ மூர்த்திகள் தங்களை இவ்வகையிலான பலவிதமான பிரபஞ்ச அனுபூதிகளுக்கு ஆட்படுத்திக் கொள்கின்றார்கள். சூரியனுடைய பாஸ்கர மண்டல அக்னிக் கோளப் பிரவாகத்தைத் தாங்க இயலாது சுவர்ச்சலாம்பா தேவியானவள் சூரிய மண்டலத்தை விட்டுப் பிரிய நேரிட்டது. தன்னுடைய தபோபலனால் சூரிய பகவானின் அக்னி சக்தியைத் தாங்குவதற்கான தக்க ஆதித்ய ருத்ராக்னி சக்தியைப் பெறுவதற்காக பூலோகத்தின் பல இடங்களிலும், சுவர்ச்சலாம்பா தேவி அக்னி யாகத்தை மேற்கொண்டு வழிபட்டுப் பூஜை செய்து வந்தாள். ஆனால் திருமணச் சடங்குகளில் அருந்ததி நட்சத்திரத்தை தரிசிக்காததினால் தான் சுவர்ச்சலாம்பா தேவியைப் பிரிய நேரிட்டது என்பதை உணர்ந்த ஸ்ரீசூரிய பகவான் ஸ்ரீசுவர்ச்சலாம்பா தேவிக்குத் தக்க அக்னி சக்தியைப் பெற்றுத் தருவதற்காகத் தானும் பல அக்னி தீர்த்தங்களில் நீராடி, அக்னி வேள்விகளை அவற்றிற்குரித்தான அக்னித் தலங்களில் மேற்கொள்ளலானார்.

ஸ்ரீவசிஷ்டர் அருந்ததி கரந்தை

இது மட்டுமின்றிப் பிரபஞ்சமெங்கும் எவ்வித வித்தியாசமுமின்றி யாவருக்கும் எதற்கும், எங்கும், எப்படியும், சூரிய கிரணங்களைப் பொழிவதால் நல்லவை, தீயவை என அனைத்தின் மேலும் தன்னுடைய கிரணங்கள் படிவதால் தமக்கு சில அசுத்தப் படிவுகள் ஏற்பட்டதைக் கண்டு கவலையுற்ற ஸ்ரீசூரிய பகவான் அதற்கும் தக்கப் பிராயச்சித்தம் தேடி பூலோகமெங்கும் தீர்த்த யாத்திரைகளை, திருத்தல தரிசனங்களை மேற்கொள்ளலானார். சூரிய குலத் தோன்றல்களான ஸ்ரீதசரத சக்கரவர்த்தி, ஸ்ரீராமச்சந்திர மகாபிரபு போன்றோர்க்கு குலகுருவாக விளங்குகின்ற ஸ்ரீவசிஷ்டரே சூரிய அக்னி அம்சத்தின் தாத்பர்யங்களை உணர்ந்தவர் என அறிந்து, சூரிய மூர்த்தி ஸ்ரீவசிஷ்டரின் ஆசி வேண்டி, அவருடைய பர்ணசாலைக்குச் சென்றார்.
என்ன காரணமோ தெரியவில்லை, ஸ்ரீசூரிய மூர்த்தி எத்துணையோ முறை பர்ண சாலைக்குச் சென்றாலும் ஸ்ரீவசிஷ்ட மாமுனியை, அருந்ததியுடன் தம்பதி சமேதராகக் காணும் வாய்ப்பு ஒரு போதும் அவருக்குக் கிட்டவில்லை. பலவித காரணங்களுக்காக ஸ்ரீஅருந்ததி சமேதராய் காணும் வாய்ப்பு ஒரு போதும் அவருக்குக் கிட்டவில்லை. பலவித காரணங்களுக்காக ஸ்ரீஅருந்ததி தேவி ஆங்காங்கு சென்றிடவே ஒரு போதும் சூரிய பகவானால் ஸ்ரீஅருந்ததி சமேதராய் ஸ்ரீவசிஷ்டரைப் பார்த்து ஆசியினைப் பெற சுப சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. “ஒருவேளை தம் திருமண வைபவத்தில் அருந்ததி நட்சத்திரத்தைத் தக்க தருணத்தில் தரிசிக்க இயலாமல் போனதால்தான், ஸ்ரீவசிஷ்ட மகரிஷியை தம்பதி சமேதராக தரிசிக்க முடியவில்லை”, எனத் தெளிந்த ஸ்ரீசூரியபகவான் அதற்கும் பிராயசித்தமாக ஸ்ரீவசிஷ்டரின் வழிகாட்டுதலை வேண்டினார். அவ்வமயம் வற்கடம் எனும் பஞ்சம் கோசல நாட்டிற்கு வரப்போவதை தீர்க தரிசனமாக உணர்ந்த ஸ்ரீவசிஷ்டர், ஸ்ரீதசரத சக்கரவர்த்திக்கு முன்னரேயே இதனை அறிவித்து அப்பஞ்சம் ஏற்படாது நாட்டைக் காப்பதற்கான தெய்வீக வழிமுறைகளை மேற்கொள்ளச் செய்தார். ராஜ குருவாக விளங்கியமையால் ஸ்ரீவசிஷ்டருக்கும் தன் நாட்டில் அப்பஞ்சம் நிகழாதிருக்கத் தக்க தபோபலனைப் பெறுவதற்காகக் குறித்த சில திருத்தலங்கட்குத் தம்பதி சகிதமாக சென்று வழிபாடுகளையும், அக்னி தீர்த்த வருண ஹோம யாகத்தையும் மேற்கொண்டார். ஸ்ரீஅருந்ததி, ஸ்ரீவசிஷ்டர் மஹரிஷி தம்பதியினர், அதிகாலை பூஜைதனை மேற்கொண்டு, காலை சந்தியா வந்தன வழிபாட்டிற்காகத் தீர்த்தக் கரைக்கு வந்த போது, அங்கே சூரிய உதயத்திற்கு முன்னான, செவ்விளவான தரிசனத்தைக் கண்டனர்.

தலவிருட்சம் வன்னி கரந்தை

“காணாமல், கோணாமல், கண்டு”, என்ற பரிபாஷையின்படி காலையில் சூரிய உதயத்திற்கு முன்னரேயே சந்தியா வந்தன வழிபாட்டை மேற்கொள்ள வேண்டுமல்லவா? இதனைத் திறம்பட முடித்த ஸ்ரீவசிஷ்ட மாமுனி, சூரியனின் தோற்றத்தில் சற்றே கருமை படிந்திருப்பதைக் கண்டு வருத்தமுற்றார். வைரம் போல் வெண்மையாகப் பிரகாசிக்க வேண்டிய சூரியக் கதிர்கள் கருமையுறக் காரணமென்ன என ஸ்ரீசூரியமூர்த்தியைக் கேட்டிட, பிரபஞ்சத்திற்கெல்லாம் நன்மை, தீமை எனப் பாகுபாடு கருதாது சூரிய ஒளி அளித்தமையால்தான் தமக்குக் கருமை வந்துள்ளதாகக் கூறிய சூரிய மூர்த்தி தம் கருமையை விடுவதற்குரித்தான பிராயசித்தத்தை அறிய ஸ்ரீவசிஷ்டரை நாடி வேண்டினார். பூலோகத்தில் சூரிய ஒளி நன்கு அப்போது ஏற்பட்டாலும் சாதாரண கண்ணுக்குத் தெரியாத வகையில் கருமையானது சற்று சூட்சுமமாய் சூரிய ஒளியில் படர்ந்து இருப்பதை அறிந்த வசிஷ்டர், ஒரெயோரு இடத்தில் மட்டும் அச்சூரிய ஒளி எவ்வித பாதிப்புமின்றி, சூரிய மண்டலத்தினின்று நேரே வந்துதித்தாற் போல் வெண்மைப் பரஞ்ஜோதியாய்ப் பிரகாசிப்பதைக் கண்ட வசிஷ்ட மாமுனிவர். அவ்விடத்திற்குச் சென்று தம்பதி சகிதமாக அக்குறிப்பிட்ட இடத்தை வலம் வந்தார். அங்கு சுயஞ்ஜோதிப் பிரகாசத்துடன் சுயம்பு லிங்க மூர்த்தி தோன்றினார்!

ஸ்ரீவசிஷ்டரும், அருந்ததி தேவியும் வலம் வர வலம் வர ஸ்ரீவசிஷ்டராலேயே வழிபாடு செய்யப்பட்ட அம்மூர்த்தியே ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் ஆனார். இது நிகழ்ந்த இடமே தஞ்சாவூர் கரந்தை சிவத்தலமாகும். அவர் திருமேனியில் பட்ட சூரியக் கதிர்களே எவ்விதக் களங்கமுமின்றி பரஞ்ஜோதி வெண்மையாய்ப் பரிமளித்தன. தம்முடைய கிரணங்கள் சுயம்பு மூர்த்திமேல் பட்டவுடனேயே தமக்குக் கருமை நீங்கித் தெளிவு ஏற்பட்டதை உணர்ந்த சூரிய பகவான், வசிஷ்ட மாமுனிவரின் அருகிலிருந்த அருந்ததி தேவியைக் கண்டு ஆனந்த முற்றார்...
ஆம்!  அப்போதுதான் அவருக்கு அருந்ததி தேவியின் தரிசன பாக்யம் முதன்முதலாகக் கிட்டியது. அதுவும் ஸ்ரீவசிஷ்டேஸ்வர லிங்கமூர்த்தி அருகில்! அவ்விடத்தில் அருந்ததியுடன் வசிஷ்ட மாமுனியைக் கண்ட சூரியபகவான். அவர்தம் திருவடிகளில் விழுந்து தம் கருமைக்குத் தக்க தீர்வு தந்தமைக்காகத் தம்முடைய பாஸ்கர சக்திகளை எல்லாம் ஸ்ரீவசிஷ்ட மாமுனியிடம் அர்ப்பணித்தார்.. இது நிகழ்ந்த இடமே தஞ்சாவூர் கரந்தை ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் ஆலயம். இந்த வைபவத்தைச் சுட்டிக் காட்டும் வண்ணம் தான் ஒவ்வொரு பங்குனி மூன்று முதல் ஐந்து தேதிகள் வரை ஸ்ரீசூரிய பகவான் ஸ்ரீவசிஷ்டேஸ்வரரின் மேல் தம் கிரணங்களைப் பொழிந்து வழிபடுகின்றார். எனவே சூரிய கிரணங்கள் லிங்கத்தின் மேல் படும் அருள்மிகு நாட்களிவை! பலவிதமான பிரச்னைகளால் பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேரவும் இப்பூஜை பெரிதும் உதவும்.

ஸ்ரீஅஷ்டபுஜ துர்கை கரந்தை

இவர்கள் இந்நாளில் பாஸ்கர பூஜையில் பங்குபெற வேண்டும். ஸ்ரீசூரிய பகவான் ஸ்ரீவசிஷ்டரை தரிசிக்குமுன் எத்துணையோ நீர்நிலைகள், சமுத்திரங்களில் நீராடித் தன் அக்னி சக்தியைத் தணித்துக் கொண்டு சுவர்ச்சலாம்பா தேவியே தாங்கும் அளவில் சீதள அக்னி சக்தியைப் பெற பல வழிபாடுகளை மேற்கொண்டார் அல்லவா! இதனால்தான் இங்கு பாஸ்கர பூஜையில் பங்கு பெறுவோருக்குக் குறிப்பாக, கப்பல் துறை, மராமத்துத் துறை, மாலுமிகள், கப்பல் தொழிலாளிகள், கப்பல் துறை நிர்வாகம், ஏற்றுமதி, இறக்குமதி செய்வோர், அக்னி சம்பந்தமான அணுசக்தித் துறையைச் சார்ந்தோர்க்கு உள்ள பலவிதமான துன்பங்களும், இடையூறுகளும் நீங்குகின்றன. Ultra Vilolet rays  என்று சொல்லப்படுகின்ற கதிர்கள் வாயு மண்டலத்தில் வடிக்கப்பட்டு எஞ்சியக் கிரணங்களே நமக்கு வந்து சேருவதானது விஞ்ஞான முறையான விளக்கமே தவிர உண்மையான, மாறுபடாத தெய்வீக விளக்கங்கள் யாவும் சித்புருஷர்களின் ஞானப்பத்திரங்களில் தான் நிறைந்து காணப்படுகின்றன.
ஸ்ரீசூரிய பகவானுக்கு இந்தச் சுயம்புலிங்க மூர்த்தியின் பெருமையை உணர்த்தியவர்தான் ஸ்ரீவசிஷ்டர், ஸ்ரீஅருந்ததி மகரிஷி தம்பதிகள் ஆவர். ஸ்ரீவசிஷ்ட மஹரிஷியே ஸ்ரீஅருந்ததி தேவியுடன் ஸ்ரீசூரிய பகவானை இத்திருத்தலத்திற்கு அழைத்து வந்து சுயம்புலிங்க மூர்த்திகளின் பெருமைகளை உணர்த்தி சூரிய பகவானின் கிரணங்கள் புனிதம் பெறும்படியான தக்க பாஸ்கர வழிபாட்டு முறைகளை உபதேசித்து ஆசிகளை வழங்கினார். திருமணச் சடங்குகளின் மந்திரங்களும், பிரயோகங்களும் மிகவும் சக்தி வாய்ந்தவை, நிறைந்த அர்த்தங்கள் பொதிந்தவை., திருமணத்தின் போது ஓதப்படும் மந்திரங்கள் யாவுமே நீண்ட நெடுங்கால வாழ்க்கைக்குத் தேவையான மனோவைராக்யம், நல்ல ஒழுக்கம், உத்தம பக்தி, நல்ல சந்ததி, லட்சுமி கடாட்சம், கல்விச் செல்வம் போன்ற அனைத்தையும் பெற்றுத் தருவதாகும்.
ஆனால் கலியுகத்தில் மந்திரங்கள் சரியாக ஓதப்படுவதும் இல்லை, காதல் என்ற பெயரில் தற்காலத்தில் அவசர கோலத்தில்தான் பல திருமணங்கள் நடைபெறுகின்றன. பாரம்பரியப்படித் திருமணங்கள் நடந்தாலும் கூட மந்திரங்கள் சரியான முறையில் ஓதப்படுவதில்லை. வேள்விகளிலும் குறிப்பிடப்படுகின்ற அரசு, ஆல், வேம்பு போன்ற சமித்துகளோடு சவுக்கு போன்ற தேவையற்ற மரக் குச்சிகளையும் மேலும் கலப்படம் உள்ள பசு நெய்யையும் சேர்த்து பலவிதமான தோஷங்களுடன்தான் திருமண வேள்விகள் நடைபெறுகின்றன. முக்கியமாக அருந்ததி நட்சத்திரத்தைக் காண்பிக்கின்ற அற்புத நட்சத்திரப் பூஜையைப் பலரும் மறந்து விட்டார்கள். திருமணத்தை நடத்தி வைக்கின்ற பெரியவர்கள் கூட அருந்ததி நட்சத்திரம் எங்கிருக்கின்றது என்று அறியார்!
அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் என்பது மிகவும் சக்தி வாய்ந்த அருந்ததி நட்சத்திர தரிசனத்தோடு அமைகின்றது. பெரும்பாலான திருமணங்களில் திருமணத்தை நடத்தி வைப்போர் தம்பதிகளுக்கு “அருந்ததி நட்சத்திரத்தைப் பார்”, என்று வானத்தைக் காண்பிக்கின்றார்கள், அவ்வுளவுதான். ஆனால் அக்காலத்தில் எவ்விதக் கட்டணமும் வசூலிக்காமல் திருமண மந்திரங்களில் நல்ல பெரியோரிடம் உபதேசமாகப் பெற்றுக் கற்றிடுவர்.

ஸ்ரீவீணாதர தட்சிணாமூர்த்தி கரந்தை

திருமணத்திற்குக் குறைந்தது ஒரு மண்டலத்திற்கு முன்னால் நன்முறையிலே பயிற்சி செய்து புனிதமான உபதேசமாகப் பெற்று சக்தி வாய்ந்த ஆலயங்களிலும், ஆற்றங்கரையிலும், தீர்த்தக் கரையிலும் ஓதித் திருமணச் சடங்குகளை நடத்தி வைத்தமையால்தான் அத்தகைய பெரியோர்களுக்குப் பகலிலேயே அருந்ததி நட்சத்திரத்தை வானத்தில் காண்கின்ற அற்புதமான தீர்க்க நேத்ர சக்தி நிரம்பியிருந்தது. எனவே அவரே சற்குருவாக மலர்ந்து தன்னால் பகலில் அருந்ததி நட்சத்திரத்தைக் காணுகின்ற காட்சியின் பலன்களை அர்க்யம் மூலமாகத் தம்பதிகளுக்கு வார்த்துத் தந்து தியாகமயமான வாழ்க்கையை வாழ்ந்து காட்டியுள்ளார்கள். ஆனால் தற்காலத்தில் திருமண நாளில் அருந்ததி நட்சத்திரத்தை எத்தனை பேர் பார்த்திருக்கின்றார்கள். உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் பார்க்கலாம்! இதற்குப் பிராயசித்தமாகத்தான் தஞ்சை கரந்தை ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் பாஸ்கர பூஜை நாட்களில் லிங்கத்தை வழிபட்டு அருந்ததியுடன் இங்கு ஆசி தரும் ஸ்ரீவசிஷ்ட மஹரிஷியுடன் வணங்கி சற்குருவருளால் தக்கப் பிராயச்சித்தங்களைப் பெறுவீர்களாக! 

திருமணமாகிக் குழந்தை இல்லாதவர்களும், பல குழந்தைகளைப் பெற்றவர்களும், திருமணத்தின் போது அருந்ததி நட்சத்திரத்தைத் தரிசிக்காதவர்களும், தினந்தோறும் குறிப்பாக உத்தராயணக் காலத்தில் (தை முதல் ஆனி வரை) தினமும் இரவில் பெரியோர்களின் வழிகாட்டுதலுடன் கண்டிப்பாக வானில் அருந்ததி நட்சத்திரத்தை தரிசிக்க வேண்டும். அருந்ததி நட்சத்திர தரிசனத்தின் போது கீழ்கண்ட சித்த ஞானபத்ர மந்திரத்தை 21 முறை ஓதிடுக!

மூவரைக் குழந்தையாக்கி முனிதேவ மூர்த்திக்கெல்லாம்
முதற்குழவி பாக்யந் தந்த அன்னை அருந்ததி வசிஷ்ட
தேவரைக் கண்டு பணிகின்றோம் நல்லருள் தந்திடுவீர்!
நலம் பெறச் செய்திடுவீரே!

ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் ஆலயத்திலும் இம்மந்திரதை 21 முறை ஓதி ஸ்ரீவசிஷ்ட அருந்ததி மஹரிஷி தம்பதியரை வணங்கி வர இல்லறத்தில் சாந்தம் உண்டாகும். ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் அருளும் ஆலயம் தற்போது கருணாசுவாமி என்று அழைக்கப்படுவதால் பக்தர்கள் இப்பெயரில் விசாரித்தால் எளிதில் ஆலயத்தை அடையலாம் என்பதை அறியவும்.

தங்கத் தேர் மகிமை

தங்கத்தேர் தரிசன மகிமை

கண் நோய்களுக்கான மருந்துகளின் மருத்துவ குணத்தை ஆக்கப்படுத்துவது தங்கத் தேர் தரிசனமே. கண் நோய்களுக்குத் தக்க தெய்வீக (கர்ம) நிவாரணத்தைத் தருவது தங்கத் தேர் தரிசனமாம்! கண்களுக்குத் தெய்வீகமான குளிர்ச்சியை தந்தருள்வது இறை மூர்த்திகளைத் தாங்கி வரும் தங்கத் தேர் தரிசனம் ஆகும். கண்களால் செய்கின்ற பாவங்களுக்கும் தக்க பிராயச்சித்ததைக் கொடுப்பதும் தங்கத் தேர் தரிசனமே!
ஆலயங்களில் நடைபெறுகின்ற உத்தமத் தங்க தேர் உற்சவத்தைக் கண்டுகளிப்பதால் விளைகின்ற நற்பலன்களைக் கடந்த சில இதழ்களாக விவரித்து வருகின்றோம் அல்லவா! பொன்னுக்குப் பல ஆன்மீக குணங்கள் உண்டு. வேத நல்மந்திரங்களை கிரகித்து, வேதப்ரவீணா கிரணங்களை எப்போதும் வெளிவிட்டுக் கொண்டிருப்பதும் தங்கத்தின் அற்புதமான குணங்களுள் ஒன்றாகும். அதனால் தான் நம் மூதாதையர்கள் பொன் மாங்கல்யத்தை அணிகின்ற திருமணச் சடங்குகளின் போது அளித்துள்ளார்கள். இம்மந்திரங்களெல்லாம் மிகவும் சக்தி வாய்ந்தவை., இவற்றை எல்லாம் பொன் தாலிதான் தன்னுள் ஈர்த்து வைத்து அந்த மங்களகரமான மணப் பெண்ணுக்கு நல்ல சுமங்கலித்வத்தையும், மாங்கல்ய சக்திகளையும் வாழ்நாள் முழுவதும் அள்ளித் தருகின்றது. ஆனால் தற்காலத்தில் ஏதேதோ தீயசெயல்கள் நிறைந்த சத்திரங்களிலும், ஹோட்டலங்களிலும் திருமணங்கள் நடைபெறுவதால் உத்தமத் திருமண வைபவத்திற்கான மந்திர வழிபாடுகளும், ஹோம வழிபாடுகளும் அறவே நின்று போய்விட்டன என்றுதான் சொல்ல வேண்டும். இதனால்தான் தற்காலத் திருமண வாழ்வில் எத்தனையோ இடையூறுகள் ஆரம்ப முதலேயே ஏற்படுகின்றன. அக்காலத்தில் திருமணங்கள் கோயில்களிலும் இல்லங்களிலும்தான் நடைபெற்றன. ஆண்டாண்டு காலங்களாக மூதாதையர்கள் பூஜித்து வந்த இல்லங்களாதலின் அவற்றில் சுபமங்கள கிரணங்கள் எப்போதும் ஒளிர்ந்து கொண்டிருக்கும். ஆனால் காலப்போக்கில் சத்திரங்களும், மண்டபங்களும் இடைச் செருகலாக ஏற்பட்டுத் திருமணத்தின் புனிதத்தைப் போற்றிப் பாதுகாக்க இயலாது போய்விட்டன.

ஸ்ரீகாலசம்ஹார மூர்த்தி ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர்
ஸ்ரீகங்காவிசர்ஜனர் ஸ்ரீபிட்சாடன மூர்த்திகள் கரந்தை சிவாலயம்

கோயிலைச் சார்ந்த சத்திரங்களில் அக்காலத்திலும் மாங்கல்ய தாரணம் எனப்படும் தாலி கட்டும் சுப வைபவமானது இறைத் திருச்சந்நதியில்தான் நிகழ்த்தப்பட்டது. எனவே இறைவனுடைய திருச்சந்நிதியில் தாலிகட்டும் வைபவம் நிகழ்வதுதான் மிகவும் உத்தமமானதாகும். திருமணங்களில் ஏற்படுகின்ற தோஷங்கள் எத்தனையோ உண்டு; பொறாமைக் கண்கள், மந்திரங்கள் சரிவர ஓதப் பெறாமை, ஹோம வழிபாடுகள் செய்யாமை, உறவினர்களின் பொறாமை, பகைமை போன்றவற்றிற்கான பிராயச்சித்தங்களை நல்கி நல்ல தோஷ நிவர்த்தியாக விளங்குவதே ஆலயங்களில் நடை பெறுகின்ற திருமண வைபவங்களின் பலாபலன்களாகும்.

யாவர்க்குமா பொன் ஆன்ம சக்தி!
அறிந்தோ, அறியாமலோ தக்க மந்திர பூஜா வழிபாடுகளுடன் திருமணத்தைச் செய்யாதவர்களும் அவசர கோலமாகத் திருமணத்தை நடத்திக் கொண்டவர்களும் பலவிதமான தோஷங்களுக்கு உள்ளாகித் திருமண வாழ்வில் எத்தனையோ துன்பங்களை இன்றும் அனுபவித்து வருகின்றார்கள். இதற்கெல்லாம் ஓரளவு பிரயச்சித்தத்தைத் தருவதாக அமைவதே தங்கத் தேர் தரிசனமாகும். தங்கத் தேர் தரிசனத்தை அடிக்கடி காண்பதால் பலவிதமான தோஷங்களுக்கான நிவர்த்திகள் தாமாகவே கிட்டுகின்றன ஏனென்றால் 5 கிலோ, 10 கிலோ, ஒரு தோலா என்ற வகையில் தங்க நகைகளை நம்மால் அணிந்து கொள்ள முடியுமா? இத்தகைய பெருமளவு தங்கத்தை நாம் நகைக் கடைகளிலும் கோடீஸ்வரர்களிடமும்தான் காண முடியும்.
தனிப்பட்டவர்களிடம் இருக்கின்ற பொன்னால் சுயநல அனுபோகத்தைத் தவிர யாருக்கு என்ன பயன்? மேலும் நன்முறையில் பெறப்பட்ட பொன்தான், தங்க நகைகள் தாம் ஆன்மீக குணங்களை நமக்கு அர்ப்பணிக்கும். ஆனால் இறைவனுக்குச் சொந்தமான, பொன்னாக தங்கத் தேரை நாம் காண்கின்ற பொழுது அது இந்த பிரபஞ்சத்திற்கே உரித்தான மாபெரும் சித்சுவர்ண சக்தியாக விளங்குகின்றது அல்லவா! பூலோகம், பிரபஞ்சமே யாவுமே இறைவனின் சொத்து தானே! இன்று ஆலயங்களில் நீங்கள் காணுகின்ற தெய்வ மூர்த்திகளுக்கு உரித்தான தங்க ஆபரணங்களும், கவசங்களும், விக்கிரகங்களும், தங்கத் தேரும் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவன்களுக்கும் ஜாதி மத, இன பேதமின்றி அனைத்து மக்களுக்கும், உயிரினங்கள் யாவைக்கும் தேவையான தெய்வீகச் சக்தியைப் பெற்றுத் தருவதற்கான பிரபஞ்ச இறைச் சொத்தாகும்.

தங்கத் தேர் மற்றும் தெய்வீகமான பஞ்சலோக விக்ரக தரிசனங்களையும், அவற்றின் பலாபலன்களையும் Universal Divine Property  என்று சொல்வதே மிகவும் பொருத்தமானதாகும். ஏனென்றால் அமெரிக்கரோ, ஆங்கிலேயரோ, செவ்விந்தியரோ எவர் எங்கு எந்தத் தங்கத் தேர் தரிசனத்தைப் பெற்றாலும் ஏன், ஒரு சிறு புழு, வண்டு, ஈ, கிளி கூட தங்கத் தேர் தரிசனத்தைப் பெற்றாலும் எவ்வித பேதமுமின்றி அனைவருக்கும் உரித்தான தெய்வீக சக்தியைப் பெற்றுத் தருவதே இந்த Universal Divine Propertyஇன் அற்புதமான ஆத்ம சக்தியாகும். நாம் தினந்தோறும் வயல், வெளி, தோட்டம் போன்று பசுமையான காட்சிகளையும், ஆலய கலச தரிசனங்களையும் , கோபுர தரிசனங்களையும், பசு, யானை தரிசனங்களையும், நல்ல பட்சிகளையும் நிறையக் காணுதல் வேண்டும். ஆனால் போக்குவரத்து நெரிசல்களும், உயரமான கட்டிடங்களிலும் சிக்கிக் கொண்டு வாழ்கின்ற நகரவாசிகளுக்கு எந்த நல்தரிசனத்தைத்தான் பெற முடிகின்றது? மாறாக ஆங்கே குப்பை கூளங்களையும், நாறிக் கிடக்கின்ற சாக்கடைகளையும் தான் காண்கின்றோம். இவையெல்லாம் எதிர்வினைகளின், துர்வினைகளின், தீய கர்ம வினைகளின் தொகுப்பாகத் தானே கிடக்கின்றன!

உயரக் கட்டிடம் ஒரு போதும் வேண்டாம்!
கோயில் கோபுரத்தை விட உயரமான கட்டிடங்களை கோயிலினருகில் எழுப்புதல் ஆகாது என்பது நம் மூதாதையர்கள் விதித்த விதியாகும். ஏனென்றால் எங்கிருந்து நோக்கினாலும் எவரும் கோபுர தரிசனத்தைக் காண வேண்டும். யார் எந்த நெருக்கடியில் எந்தத் துன்பச் சூழ்நிலையில் சிக்கினாலும் அங்கிருந்தவாறே கோபுர தரிசனத்தைக் கண்டு “இறைவா! எம்மைக் காப்பாற்றுவாயாக”, என்று வேண்டுவதற்கான நல்இறை கோபுர தரிசனத்தைப் பெற்றுத் தருவதற்காகத் தானே கோபுரங்களை உயரமாக அமைத்தார்கள். ஆனால் தற்போது ஐந்து மாடி, பத்து மாடி என உயரமான வியாபாரத் தலங்களையும், அடுக்குமாடி, பிளாட் கட்டிடங்களையும் எழுப்பி விட்டு கோபுர தரிசனத்தையே மறைத்து விட்டார்கள். இதற்கெல்லாம் கடும் சாபங்கள் உண்டு! இதற்கு யார் தார்மீகமாகப் பொறுப்பு ஏற்பது? அழகாக இருந்த வீடுகளையெல்லாம் நகரங்களில் இடித்துத் தள்ளிவிட்டு கோபுர தரிசனத்தை மறைத்தவாறு ஆங்காங்கே நான்கு மாடி கட்டிடங்கள் எழுவதெல்லாம் மதுரை, திருச்சி, ஸ்ரீரெங்கம் போன்ற ஆலயத் தலங்களில் மிகவும் சர்வ சாதாரணமாகி விட்டது. திருவரங்க ரெங்கநாதரின் திருக்கோயில் தரிசனத்தைப் பெற வேண்டுமென்றால் சுற்றி வளைத்து ஏதேனும் ஒரு மூலையில் நின்று கொண்டுதான் தரிசிக்க இயலும். இதுதானா நம் பாரதத்தின் இறைப் பண்பாடு?

இயற்கை தரும் இறை தரிசனக் கோலங்கள்!

ஆனால் அதிர்ஷ்டவசமாக இன்றைக்கும் நம் கிராமப்புறங்களில் நம் கண்களுக்குத் தேவையான தெய்வீக ஆத்மப் பயிற்சிகளுக்கான பசுமையான தெய்வீகக் காட்சிகள் இளங்காலையில், மாலையில் நிறையக் கிடைக்கின்றன. பசுமையான வயல் வெளிகளின் தரிசனம், சூரிய, சந்திர மூர்த்திகளின் முழுமையான வானதரிசனம், ஒரே சமயத்தில் இலட்சக் கணகான நட்சத்திரங்களைப் பார்ப்பதற்கான அகண்ட விண்பரவெளி, பலவிதமான பசுமை நிறைந்த மரங்களின், மூலிகைகளின் தரிசனங்கள், அகண்ட பரப்பளவில் உள்ள நீர் நிலைகளின் தோற்றம், ஓடுகின்ற புனிதமான ஆற்று தரிசனம், பசு, ஆடு போன்ற விலங்கினங்களைக் கூட்டம் கூட்டமாகக் காணுதல் போன்றவை உள்ளத்திற்கு இறை ஆக்கம் தருபவையே!
சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் கண்ட (60,70,80 வயது நிறைந்த) தம்பதிகளின் தரிசனமும், ஆசியும் சிறப்புடையது. நிறைய குழந்தைகளுடன் உள்ள நல்ல குடும்பங்களின் கண் நிறைந்த காட்சி, நெற்களஞ்சியம், பசுஞ்சாணி மற்றும் உரக்குவியல், கள்ளம், கபடம் அறியாத பரிசுத்தமான உள்ளத்துடன் கூடிய கிராமவாசிகளின் சத்சங்கக் கூட்டம் போன்றவை தேகத்திற்கு இறையுரத்தையும், புண்ய சக்தியையும் அளிப்பவை! நகரங்களில் மிதமிஞ்சிக் கிடக்கின்ற தீய நெறிகளுக்கு ஆட்படாது கிராமப்புறத்தில் அடிக்கடி காணப்படுகின்ற புனிதமான இறைக் காரியங்களான பொங்கல் வைத்தல், தலைமுடி பிரார்த்தனை, காவடிகள் போன்ற அற்புதமான இறைநெறி முறைகளுடன் இறைவனைத் துதிக்கின்ற கிராமவாசிகளின் தரிசனம் இவ்வாறாக கிராமத்தில் நமக்குக் கிடைக்கின்ற தெய்வீக இறை தரிசனச் சொத்துக்கள் தாம் எத்தனை எத்தனையோ!
ஆனால் நகரங்களில் மது, சீட்டு, போதை, ஆபாச நடனம் போன்ற தீயொழுக்க அமைப்புகள் பெருகிவிடும் என்பதை உணர்ந்துதான் அக்காலத்தில் நம் மூதாதையர்கள் கண்களாலான பாவங்களுக்குப் பரிகாரமாக தங்கத்தேர் உற்சவத்தை நமக்குப் பெற்றுத் தந்துள்ளார்கள். எந்த நல்தரிசனங்களை எல்லாம் நவீன நகர வாழ்க்கையின் மூலம் இழந்து வருகின்றோமோ அவற்றிற்கு ஓரளவு ஈடு செய்வது தான் தங்கத்தேர் உற்சவத்தின் தெய்வீக மகிமையாகும். பொன்னுக்கு கோடிக்கணக்கான நல்தரிசனக் கதிர்களை வெளிவிடுகின்ற, கிரணங்களாக பிரதிபலிக்கின்ற அற்புத சக்தி உண்டு. இவையாவும் உடல், உள்ளம், மனதிற்கு சுத்த ஆன்ம சக்தியைத் தருவதாம்.
இதனால் முறையற்ற காம உணர்வுகளும், உள்ளத் தீயொழுக்க அழுக்குகளும் தீர்கின்றன. மேலும் பொன்னிறைப் பிரவாக சக்திகளை மனித சமுதாயம் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளவே தங்கத்தேர் போன்ற இறை வழிபாட்டு முறை ஏற்படுத்தப் பட்டுள்ளது. இறைவனுக்கு உரித்தான தங்கம் என்றால் அதற்கு உரித்தான மகிமைதான் என்னே! இறைவனே வந்து அமர்கின்ற தங்கத் தேர் என்றால் எத்தகைய புனித சக்தியை அந்தத் தங்கம் பெற்றிருக்கும்! தங்கத் தேரின் ஒவ்வொரு அங்கமும், ஒவ்வொரு சக்கரமும், மரப் பட்டையும், பலகைகளும் மற்றும் ஆணிகளும் மிகமிகப் புனிதமான புண்ணிய சக்திகளைப் பெற்றவையாக விளங்குகின்றன. பல மகரிஷிகளே தங்கத் தேரின் அம்சங்களாக அமைகின்றவர்கள் என்பதே தெய்வீக உண்மையாகும்.

ஜடப் பொருட்களும் ஆன்ம நிலை பெற வேண்டுமே!

துருப்பிடித்த வண்டிகளின் ஓரங்களில் கிடக்கும் திருகாணிகளுக்கும் (Nut & Bolts) இறைவனுடைய திருமேனியை அலங்கரிக்கும் தங்கத் தேர்களில் உள்ள திருகாணிகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு அல்லவா! ஜடமாக இருக்கின்ற ஏனைய திட, திரவ, வாயுப் பொருட்களுக்கும் கூட கர்மவினைகளும், ஆன்ம உயிர் இலக்கணங்களும், அடைய வேண்டிய தெய்வீக நிலைகளும் நிறைய உண்டு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இதுவே தங்கத் தேர் அமைப்பில், சட்டங்களாக சக்கரங்களாக நடைபெறும் இறை விந்தைகள்!

தூணும், சுவரும் யார் யாரோ!
அலுவலகங்களில் எந்த ஒரு வேலையையும் செய்யாமல் சோம்பித் திரிபவர்கள் பொழுதைப் போக்குபவர்கள் பல ஜென்மங்களில் அதே நிறுவனங்களில், இடங்களில் தூண்களாகவும், மேஜை, நாற்காலிகளாகவும் வந்து சேர்ந்து தம்முடைய பூர்வ ஜென்ம கடன்களைத் தீர்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது நீங்கள் இதுவரை அறியாத அரிய ஆன்மீக விளக்கமாகும். எனவே உங்கள் இல்லத்திலும், அலுவலகத்திலும் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு ஆணிக்கும், சுவருக்கும், காகிதத்திற்கும் கூட பிறப்பு இரகசியங்கள் உண்டு. உங்களுடைய பூர்வ ஜென்மத் தொடர்பும் உண்டு. ஆனால் இவற்றை எல்லாம் விளக்கிச் சொல்வோமேயானால் பிறப்பின் விளக்கங்கள் என்பது நம் மூளைக்கு எட்டாத விஷயமாகி விடுகிறது. அவ்வளவு இருக்கின்றதா என்று மலைப்பும் தட்டுவதோடு ஒருவித அச்சமும் ஏற்பட்டுவிடும். தன்னுடைய மூளைக்கு எட்டாததை மூட நம்பிக்கை என்றும் கட்டுக் கதை என்றும் தள்ளி விடுகின்ற இயலாத் தன்மையையே விஞ்ஞானமாக இன்று நாம் காண்கின்றோம். இதனால் தான் தக்க சற்குருவை நாடி எந்த இறப்பு, பிறப்பு இரகசியங்களையும் பெறுதல் வேண்டும் என்று நம் மூதாதையர்கள் விதித்துள்ளனர் . ஏனென்றால் அந்த சற்குருவால் தான் நம்முடைய உடல், உள்ளம், மன, ஆன்ம நிலைகளுக்கு ஏற்ப, தேக சக்திகளுக்கு ஏற்ப பிறப்பு, இறப்பு இரகசியங்களை, ஆன்மீக விளக்கங்களைத் தக்க தருணத்தில் தக்க முறையில் எடுத்துரைக்க முடியும்.

எப்போதும் இறைப் பணி ஆற்றும் தங்கத் தேர்!
தங்கத்தேர் உற்சவங்கள் நிகழாத போது safe room இல் பாதுகாப்பு அறையில் இருக்கின்ற தங்கத் தேரானது சும்மாவேனும் இருப்பது கிடையாது. அப்பொழுதும் கூட அந்தத் தங்கத் தேர் பல இறைத் திருப்பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கும் என்பது நாமறியாத தெய்வ ரகசியம். இறைவனே வந்து அமர்கின்ற தங்கத் தேர் என்பதால் அதில் பதிந்து கிடக்கின்ற தெய்வீகப் பொன் கிரணங்கள்யாவும் மெதுவாக எப்போதும் பரவெளியில் கலந்து கொண்டிருக்கும். ஏனென்றால் இன்றைக்குப் பரவெளியில் தினமும் ஒவ்வொரு மனிதனும் சிகரெட், மது, பொய், பித்தலாட்டம், வன்முறை மற்றும் பல தீயொழுக்கங்களால் கூட்டுகின்ற தீய வினைகளும், தீய சக்திகளும்தான் எத்தனை எத்தனை!
சிகரெட், பீடி, புகையிலை, போன்ற போதை வஸ்துக்களைத் துப்பி/ஊதித் தள்ளுவது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும், வாயிலும், வினாடிக்கு வினாடி எழுகின்ற தீய வினைகள், கெட்ட வார்த்தைகள்தான் எத்தனை, எத்தனை! இவற்றையெல்லாம் பரவெளியில் கலந்து அதனை எப்போதும் மனிதன் இரவு, பகல் பாராது அசுத்தப்படுத்தி வருகின்றானே! ஆனால் இந்த தீய தீவினை மண்டலத்தை சுத்தி செய்து புனிதமாக்குவது யாருடைய பொறுப்பு? மகரிஷிகளும், சித்புருஷர்களும், யோகியர்களும், தங்கத்தேர் போன்ற அற்புதமான தெய்வீகப் பொருட்கள் மூலமாகத் தம் தபோபலன்களை சமுதாயத்திற்குத் தந்து தியாகமயமாகத் தம் இறைப் பணியை ஆற்றி வருகின்றார்கள். ஆலயக் கலசங்களில், இராஜ கோபுரங்களில் உள்ள தெய்வீக சக்திகள் மற்றும் கோவில்களில் எப்போதும் வலம் வந்து பூஜைகள் செய்து கொண்டிருக்கின்ற தேவாதி தேவ மூர்த்திகள், மகரிஷிகள், யோகியர்களும் விட்டுச் செல்கின்ற தெய்வீக சக்திகளைத் தங்கத் தேரானது தக்க தேவதைகளின் மூலமாக தம்முள் கிரஹித்து சனாதனமாக வெளிவிட்டுக் கொண்டிருக்கின்றது. Spiritual transmitters! இந்த பிரபஞ்சத்தில் நிறைந்திருக்கின்ற தீய சக்திகளை மஹரிஷியரும், யோகியரும், சித்புருஷர்களும்தான் தம் தபோ வலிமையால் பஸ்பம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

சும்மாயிருந்து (அருட்) சுகம் தரும் பொன் தேர்!

உற்சவம் நடக்காத போது தங்கத்தேர் சும்மா வெறுமனே இருப்பதாக தயவு செய்து எண்ணாதீர்கள். இதே போலத்தான் தெய்வத் திருவுருவப் படங்கள்  ஆலயத்திலோ, இல்லத்திலோ, வியாபாரத்திற்காக கடையிலோ, எங்கிருந்தாலும் அதிலிருந்தும் தெய்வீகக் கதிர்கள் எப்போதும் பிரகாசித்து ஒளிவிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஏனென்றால் ஒரு படத்தைப் பார்த்ததுமே இது முருகன். இது பெருமாள். இது இலட்சுமி என்று எப்போது உணர்ந்து சொல்லுகின்றோமோ அப்போதே நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும், அதில் புண்ணிய சக்தியுடன், தெய்வீக சக்தியும் சேர்ந்து மிளிர்வதால்தான் தெய்வத் திருமூர்த்தியை உணர்விப்பதற்கான  சக்தியை அந்தப் படம் பெற்றுள்ளது என்று!  எனவே எந்தத் தெய்வப் படம் நம் இல்லத்தில் இருந்தாலும் அதுலிருந்தும் எப்போதும் ஒளிக் கிரணங்கள் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. இது மட்டும் அல்லாமல் வானத்தில் உள்ள நட்சத்திரங்களும், நவகோள்களும், நாம் அறியாத எத்தனையோ கோளங்களும் தங்கத் தேர் மூலமாகப் பிரபஞ்சத்தை எப்போதும் தூய்மை செய்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் சமுதாயத்தைத் தூய்மைப் படுத்த வேண்டிய தார்மீகக் கடமைகளை கொண்ட மனிதனோ ஒவ்வொரு வினாடியும் ஏதேதோ கெட்ட எண்ணங்களில் உழன்று, பீடி, சிகரெட் மூலம் தீயதைத் தானே விண்வெளியில் செலுத்திப் பரவெளியை அசுத்தப் படுத்திக் கொண்டிருக்கிறான்.

எனவே தன்னுடைய தீய எண்ணங்களால், கெட்ட வார்த்தைகளால், கெட்ட பழக்க வழக்கங்களால் இப்பிரபஞ்சத்தை அசுத்தம் செய்து வருவதற்கான பிராயச்சித்தமாக மனிதனாவன் தங்கத் தேர்தனை தரிசனம் செய்கின்ற பொழுது அந்த பொன்மயமான கிரணங்கள் கண்களின் வழியே ஊடுருவிச் சென்று உள்ளத்தில் பாய்வதால் புனிதமான எண்ணங்கள் உள்ளே விருத்தியாவதற்கான நல்வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனால் மனிதன் இதனை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பொதுவாக பலவிதமான தீய பழக்கங்களுக்கு ஆட்பட்டோரும் அவற்றின் பிடியிலிருந்து வெளிவர இயலாமல் பரிதவிப்போரும் அஸ்வினி நட்சத்திர நாட்களிலும், மனதிற்கு அதிபதியான சந்திர பகவானுக்கு உரித்தான திங்கட்கிழமைகளிலும், ஆலயங்களில் தங்கத்தேர் உற்சவத்திற்கான கட்டளையை மேற்கொண்டு குறைந்தது 2, 3 மணி நேரங்களேனும் தங்கத்தேர் தரிசனம்தனைப் பெற்று வருவார்களேயானால் மனதில் புனிதமான எண்ணங்கள் சிறிது சிறிதாகச் சேர்ந்து, தீய வழக்கங்களிலிருந்து விடுபடுவதற்கான நல்வழிகள் கிட்டும். தங்கத்தேர் தரிசனத்திற்கான நேர்த்திக் கட்டளையை மேற்கொள்வதோடு பக்தர்களுக்கும் வல்லாரை, பொன்னாங்கண்ணி போன்ற கீரைகள், அத்திப் பழம், கேரட், முருங்கைக் காய் போன்ற நேத்ர சக்தி மிகுந்த பொருட்கள் கலந்த உணவை தானம் அளித்து வந்தால் தீய பழக்கங்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு நல்வழிகள் கிட்டும். ஆனால் பக்தி சிரத்தையுடனும், ஆழ்ந்த நம்பிக்கையுடனும் இதனைச் செய்து வருதல் வேண்டும்.

தோல் பொருட்கள்

தோல் பொருட்கள் தரும் தொலையாத வல்வினைகள்

வாழ்க்கையில் நாம் தினந்தோறும் பயன்படுத்துகின்ற பொருட்களில் தோலாலான பொருட்கள் பலவும் உண்டல்லவா? மணிபர்ஸ், கண்ணாடி உறை, இடுப்பு பெல்ட், பெண்களின் கைப்பை, சூட்கேஸ், கை கடிகார உறை, செருப்பு, ஷு என எத்தனை எத்தனை விதமான தோல் பொருட்களுடன் நாம் தினமும் உழல்கின்றோம். ஆனால் என்றேனும் எவ்வகையில் இத்தோல் பொருட்கள் உருவாகின்றன என்று இறைப் பகுத்துணர்வுடன் சற்றே சிந்தித்துப் பார்த்திருக்கின்றோமா? ஆடு, மாடு, எருமை கோடானு கோடி தேவதா மூர்த்திகள், தேவதைகள் உறைகின்ற புனிதமான பசு (நம் தாய்க்கு நிகரான கோமாதா) யானை, ஒட்டகம், போன்ற பல மிருகங்களை கதறக் கதறக் கொன்று உயிருடன் தோலை உரித்து வருகின்ற தோல் பொருட்களைத் தானே நீங்கள் ஆனந்தத்துடன் இன்று அனுபவித்துக் கொண்டுள்ளீர்கள்?
மிருக வதையில் பிறந்த மேற்கண்ட தோல் பொருட்களில் அவற்றின் வேதனைகளும், வாதனைகளும், துயரங்களும் தானே குடியிருக்கும். இவற்றின் துக்கச் சுமைகள் நிறைந்த காலணிகளையும், ஷுக்களையும், சூட்கேஸ்களையும், இடுப்பு பெல்ட்களையும், கைப்பைகளையும், சுமந்து/அணிந்து கொண்டு தானே உங்கள் தினசரி வாழ்வை நடத்தி வருகின்றீர்கள். துயரப்படிவுகள் நிறைந்த இத்தகைய தோல் காலணிகள் உங்கள் இல்லத்தில் இருக்கும் போது, அவற்றினின்று வெளிவரும் வருத்தம் தோய்ந்த கிரணங்கள் தானே எப்போதும் வெளிவந்து கொண்டிருக்கும். இவ்வகையில் உங்கள் இல்லங்களில் உட்பகுதியில் சூழ்ந்திருப்பது ஏக்கச் சுவடுகளும், மிருகங்களின் வேதனைப் படிவுகளும் தான்! பின் எப்படி ஐயா வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும்?
எந்த உயிரினத்தின் மேன்மைக்காக உழைத்து பக்தியுடன் வழிபட்டு வாழ்க்கையை நடத்த வேண்டுமோ அக்கடமையைக் கொண்டுள்ள ஆறறிவுள்ள மனிதனே மிருகங்களின் தோல் மேல் “வீதி உலா” வருகின்றான், தோல் காலணிகளுடன், என்னே கொடுமை இது! தாய்ப்பால் இன்றித் தவிக்கும் கோடானு கோடி குழந்தைகட்கு, ஊட்டச் சத்து இன்றிவாடும் ஏழை வீட்டுக் குழந்தைகளுக்கு கோமாதாவாகப் பசு தருகின்ற பாங்கான அமிர்தம் தானே பசும்பால்! அப்பசுவை உயிருடன் கொன்று உலர வைத்த தோலில் உருவாவதுதானே உங்கள் காலணி, கைக்கடிகாரப் பட்டை, மணிபர்ஸ்! தாய்க்கு இழைக்கும் துரோகத்திற்கு ஈடானது தானே பசுவின் தோல் காலணிகளுடன் பம்பரமாய் பூமியைச் சுற்றி வலம் வருவது? இவ்வாறாகத் தோல் பொருட்களைப் பயன்படுத்தி மனித குலம் சம்பாதித்துக் கொள்ளும் வல்வினைகள்தான் எத்தனை எத்தனை! இந்த துர்வினைகளே கடுமையான தோல் நோய்களாகவும், மூச்சிரைப்பு, பீனச நோய்களாகவும், நுரையீரல் பிணிகளாகவும் வாட்டுகின்றன.

பாவம் தீர்க்கும்
பாதரட்சை வழிபாடு

மாதா, பிதா செய்வது மக்களுக்கு என்ற நம் மூதாதையரின் தீர்க்க தரிசனமான வாக்கை நன்கு அறிவீர்கள்! ஆனால் தோல் பொருட்களை அணிந்து, சுமந்து உபயோகப் படுத்தி ஏற்படுகின்ற தீவினைகளையா நம் சந்ததிக்குப் பெற்றுத் தருவது? சற்றே ஆத்மவிசாரம் செய்து பாருங்கள். பூனையின் உடலினின்று ஒரு உரோமம் விழுந்தால் கூடப் பாவம் என்பதை நெஞ்சார உணர்ந்து, ஒரு சிற்றெறும்பிற்குக் கூட தீங்கிழைக்காத பாரத இறைப் பண்பாட்டில் வந்த நாம் மிருகங்களை வதைத்து அவற்றின் தோலால் ஆன பொருட்களையும் பயன்படுத்தும் இழிநிலைக்கு ஆளாகி விட்டோமே! இதற்குப் பிராயச் சித்தம் தான் என்னே! தக்க சற்குருவை நாடி இப்பிறவிக்குள் தக்க பரிகாரம் பெற்றிட முயல்வீர்களாக!
எனவே இனியேனும் தோலாலான பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது எனும் உத்தம மனோ வைராக்கியம் பூண வேண்டும். காலணிகள் அணிவதெனில் தோல் சம்பந்தமற்ற காலணியை மட்டுமே அணிதல் வேண்டும். (ரப்பர், ரெக்ஸின் போன்ற பொருட்களாலான பாதணிகளையும் உபயோகிக்கலாம்) மரத்தாலான பாதரட்சைகள் அணிவது மிகச் சிறப்பானது. ஆனால் தினமும் பழகினால்தான் மர பாதரட்சை நடை எளிதாகும். தோலால் செய்யப்படாத புதிய காலணிகளைப் பயன்படுத்துமுன் கடைபிடிக்க வேண்டிய வழிபாட்டு முறை உண்டு. சூரிய ஒளியிலும், சந்திர , நட்சத்திரங்களின் ஒளியிலும், சூரிய, சந்திர ஹோரை நேரங்களில் காலணிகளை இவ்வொளிப் பிரவாகத்தில் வைத்திருந்து குரு பாதுகா தோத்திரம், குரு திருவடி சரணத் துதிகளை ஓதி உங்களுடைய காலணிகளில் சேர்ந்துள்ள தோஷங்களைப் போக்கி இதன் பிறகே அணிதல் வேண்டும். புதிய காலணிகளை நன்கு கிழியும் வரை பயன்படுத்தாமல் நன்கு உபயோகிக்கும் நிலையிலேயே அவற்றை ஏழைகளுக்கு அளித்திட வேண்டும். புதுக் காலணிகள் தானம் மிகவும் விசேடமானதாகும். புதுக் காலணிகளை வாங்கியவுடன் முதன் முதலில் செம்மண் பரப்பில் நடப்பதே சிறப்புடையது. புதுக் காலணிகளைத் தானமாக அளித்தலால் தோல் சம்பந்தமான வியாதிக்குத் தக்க நிவாரணம் கிட்டும்.

நிலவொளியிலும், நித்திய சூரிய ஒளியிலும் வானில் நிரம்பி நிற்கின்ற நட்சத்திர ஒளிச் சுடரிலும், படிகாரக் கல்லின் உரசலிலும், குறைந்தது 18 மணி நேரம் வைக்கப்படுகின்ற காலணிகளையே பயன்படுத்த வேண்டும். வீதிகளிலுள்ள கழிப்புவினை தோஷங்கள் நம் உள்ளங்காலில் சேர விடாமல் தடுக்கின்ற காலணிகளின் ஜடப் பிறப்பில் கூட காரண காரியம் உண்டு. தோலற்ற காலணிகளின் மூலம் கூடுதலாக தீய கர்மவினைகளைச் சேர்க்காமலாவது இருந்திடலாம். மேலும் அமாவாசை, பரணி, திரிதியை, ஏகாதசி மாதப் பிறப்பு போன்ற பித்ருக்களுக்கான தினங்களில் காலணிகளை தானமாக வழங்குதலால் அபரிமிதமான புண்ய சக்தி கிடைக்கின்றது. இதற்காகத்தான் “காசிதானம், கல்யாண தானம்” என்ற வகையிலும் ஆடைகள், காலணிகள், குடை, விசிறி என செட்டாகத் தான மளித்து நம் பெரியோர்கள் நல்வகைப் புண்ய சக்தியைப் பெறும் வழிமுறைகளைத் தந்துள்ளார்கள். கருமாதி எனப்படும் இறப்பின் பத்தாம் நாள் திதிச் சடங்கு நாளிலும் காலணி தானம் பல புண்ய சக்திகளை இறந்தாரின் ஆத்ம நலனுக்குப் பெற்றுத் தருகின்றது.

தெய்வீக வாழ்வு

தெய்வீகமாக வாழ்வது எப்படி?

பலவிதமான தெய்வீக நிலைகளில் பிறப்பற்ற முக்தி மோட்ச நிலையைப் பெறுவதே மிகச் சிறந்த தெய்வீக நிலையாகும். வாயாற் சொல்லிடலாம். ஆனால் இது எளிதில் கைகூடுமா? சித்புருஷர்களும், மஹான்களும், யோகியரும் அளித்துள்ள எந்த யுகத்திலும் குறிப்பாக இல்லறத்தில் இருந்து கொண்டே தெய்வீகமாக வாழ்வது எப்படி என்பதான விளக்கங்களையே நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் இத்தொடரில் நமக்கு எடுத்துரைத்து வருகின்றார்கள் சித்தர்கள் என்றாலே சிவத்தை மட்டும் போற்றுபவர்கள், உருவ வழிபாட்டை ஒதுக்குபவர்கள் என்ற தவறான எண்ணம்தனையே பலரும் கொண்டுள்ளார்கள். சித்புருஷர்களுக்கெல்லாம் மூலவரான ஸ்ரீஅகஸ்திய மாமுனி ஸ்ரீராமருக்கே உபதேசம் செய்யும் பாக்யம் பெற்றவர். தென்திசைக்கு ஏகி பல இடங்களிலும் பரம்பொருட்சிவனின் திருக்கல்யாணக் கோலங்காணும் பாக்யம் பெற்றவர். ஸ்ரீஅகத்தியரின் அற்புதச் சீடராம் ஸ்ரீபோக சித்த மகா பிரபுவே பழனியில் நவபாஷாணத்தில் முருகப் பெருமானை வடித்தாரெனில், சித்தர்கள் உருவ வழிபாட்டின் மூலம் அருவ ரூப ஜோதி, ஸ்வரூப, ஏகப் பரப்பிரம்மமாகிய ஒன்றே ஒன்றாகிய இறைவனை உணர்விப்பவர்கள் என்பது புலனாகின்றதல்லவா!
தியான, யோக, வேத, மந்திர, தந்திர வழிபாடுகளில் உத்தம நிலையடைந்த சித்புருஷர்கள்தாம் பெறுதற்கரிய சக்தி வழிபாட்டை நன்முறையில் வகுத்துத் தந்து நிலைநாட்டியவர்கள். எத்துணையோ ஆலயங்களில் பலவித தெய்வ மூர்த்திகளை சித்புருஷர்களே பிரதிஷ்டை செய்துள்ளனர். கலியுக மக்களின் நன்மைக்காக, கடினமான பல வழிபாட்டு முறைகளை எல்லாம் அவற்றின் சத்சித்சக்தியானது சற்றும் பின்னப்படாமல் சித்புருஷர்களே அவற்றை எளிமைப்படுத்தி உள்ளனர். எனவே, உருவ வழிபாட்டின் மூலமே, ஆதியும் அந்தமும் இலா, உருவமும், அருவமும் இல்லா சதாசிவ இறை மூர்த்தியை உய்த்துணர முடியும் என்பதை சித்புருஷர்கள் அனுபவப் பூர்வமாய் உணர்த்தி வருகின்றார்கள் என்பதே உண்மையாகும். பக்தி சிரத்தையுடன் செய்ய வேண்டிய உருவ வழிபாட்டை அசிரத்தையாய்ப் பலரும் அலட்சியமாய்ச் செய்யும் பொழுது தான், “நட்ட கல்லும் பேசுமோ, நாதனுள்ளிருக்கையில்,” எனும் அதிஅர்த்தங்கள் உள்ள சித்த மொழி பிறந்தது, சிறு கல்லில் கூட பரிசுத்தமான அன்பு கொண்டு பரஞ்ஜோதியைக் கொணர முடியும் என்ற இப்பரிபாஷைப் பாசறை வடிவாக்கியம் மூலமாகவே எப்போதும், எங்கும் நிறைந்துள்ள பரம்பொருளின் தத்துவத்தை நமக்குச் சித்தர்கள் உணர்த்துகின்றனர்.

நாம் எளிதில் கடைபிடிக்க வேண்டிய இறைவழிபாடுகள் நிறைய உண்டு.

1. விடியற் காலையில் எழுந்து உடல் சுத்தி செய்து, இல்லமெங்கும் ஆலய கோமுக (அபிஷேக நீர்த்தாரையில் பெறுவது) நீர் தெளித்து, திருநீறு/நாமம் அணிந்து, காக்கைக்கு உணவிட்டு, பசுவை நீராட்டி, மஞ்சள் குங்குமமிட்டு வலம் வந்து வாழைப்பழம், புல், அளித்தலால் பல அரிய பலாபலன்களை எளிதில் பெற முடியும். காக்கை உண்ட பிறகே தான் உண்ணுதல் என்ற நல்வழக்கம் வரவேண்டும். இதனால் காரியத் தடங்கல்களும் எளிதில் தாமாகவே நீங்குகின்றன.

2. இதேபோல் நாம் அவசர, அவசரமாகக் கிளம்பும் போது செருப்பை மாற்றி அணிதலும், சட்டையைத் திருப்பிப் போட்டுக் கொள்வதாலும் காரியத் தடங்கலின் அறிகுறியாக அவற்றை நாம் அறிந்து அக்காரியத்தைத் தவிர்த்து, விட வேண்டும் அல்லது ஒத்திப் போட வேண்டும். அவ்வாறு மாற்றி அணிந்த காலணிகளை, சட்டைதனை உடனே தானமாக அளித்துவிட வேண்டும்.

3. ஊமத்தை, சங்கு, கருப்புக் கயிறு, படிகாரம், மிளகாய் போன்றவற்றை சுவர்களில் கட்டி நம் வீட்டினுள் பலவித திருஷ்டி தோஷங்கள் புகாவண்ணம் தற்காத்துக் கொள்ள வேண்டும். இவற்றில்தாம் தோஷ நிவாரண சக்திகள் மிகுந்துள்ளன. கதவுகளில் சட்டை, துணிகளை மாட்டுதலால் கடன்சுமை தான் சேரும். இல்லத்தில் சண்டை, சச்சரவுகள் வரும்.

4. வெளியில் சென்று இல்லறம் திரும்பும் போது வெளியிலேயே காலைக் கழுவி சுத்தம் செய்து வரவேண்டும். ஆனால் தற்போதுள்ள நீர்ப் பஞ்சம், flat system முறையில் இது சாத்தியமா என எண்ணலாம். வெளியில் சென்று திரும்புகையில் காலைக் கழுவாததாலும், எங்கெங்கோ சுற்றிய செருப்பை வீட்டினுள் வைப்பதாலும்தான் நம் பாதங்களிலும், செருப்புகளிலும் படிந்துள்ள பிணமிதி தோஷங்கள், நடுத்தெருவில் உள்ள திருஷ்டிக் கழிப்பு மிளகாய் தோஷங்கள் போன்றவை நம் இல்லத்தில் புகுந்து நம்மைப் பலவித இன்னல்களுக்கும், சோதனைகளுக்கும் ஆளாக்குகின்றன. எனவே, செருப்பின் மூலம் வரும் தோஷத்தை நீக்கிட செருப்பை வீட்டினுள் வைப்பதைத் தவிர்த்திடுக! 4 மாதத்திற்கு ஒரு முறையேனும் நல்ல முறையில் உள்ள செருப்பைத் தானமாகத் தந்துவிட வேண்டும். செவ்வாய்க் கிழமைகளில் சந்திர ஹோரையில் செருப்புகளை தானமாக அளித்தலால் செருப்பின் மூலம் வருகின்ற மேற்கண்ட தீவினைத் தோஷங்கள் நீங்கும். செருப்பு வைக்கும் இடத்தை அடிக்கடித் தூய்மை செய்து அங்கு சேரும் கழிப்பு மிதி தோஷங்களை நிவர்த்தி செய்யும் வழிவகையைக் காண வேண்டும்!

5. பஸ், இரயில் பிரயாணங்களில் ஒருவரின் காலைத் தவறுதலாக மிதித்தால் sorry என மன்னிப்புக் கேட்டவுடன் அந்த வலி போய்விடுமா? செருப்பு, ஷு அணிந்த கால்கள் கொண்டு மிதித்தலால் ஏற்படும் வலி நீங்கள் அறியாததா என்ன? எனவே பிறர் காலை அறிந்தோ, அறியாமலோ மிதித்தலும் பாவச் செயலேயாம்! இதற்கான பிராயச்சித்தத்திற்கு என்ன செய்வது? இவ்வாறு பாதணிகளால் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் தோஷங்கள் எத்தனை எத்தனையோ! இவையெல்லாம் பாதணி தானம் மூலமாகத் தான் நீங்கும்.

6. இயற்கையாக இறந்த பிராணிகளின் தோலால் செய்யப்பட்ட பொருள் என்று அறிந்தால்தான் எந்தத் தோல் பொருட்களையும் பயன்படுத்த வேண்டும். அவற்றை வெயிலில் நன்கு உலர வைத்து அவற்றிற் படிந்திருக்கும் தீய சிலாதர தோஷங்களைப் போக்கிடுக! சந்திர ஒளியிலும் காய வைத்து அதன் மூலமான தோஷக் கழிப்பிற்குப் பின் தோல் சம்பந்தமான நோய்களை நிவர்த்தி செய்யக் கூடிய  படிகாரக் கரைசலில் மூன்று நாட்கள் வைத்திடுக! இத்தனை இருந்தாலும் தோல் செருப்பினை இயன்றைவரை பெரும் பாலும் தவிர்த்தலே சிறப்புடையதாம். இத்தகைய தோல் பொருட்களால் ஏற்படும் தோஷ நிவர்த்திக்காக, நவமி திதி தோறும் குதிரைக்குக் கொள் அளித்தலும், தினந்தோறும் பசுவிற்கு உணவளித்தலும், வியாழன் தோறும் பச்சைக் கிளிகளுக்குப் பழமளித்தலும் சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளில் புறாவிற்கு உணவளித்தலும் தோல் சம்பந்தமான நோய்களுக்குப் பிராயச்சித்தமாகும். குதிரை நரம்புகளுக்கு சில விசேஷமான ஆன்மீக சக்திகள் உண்டு.

7. சாபமா, தோஷமா! எப்போது பார்த்தாலும், சாபம், தோஷம் என ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் எழுதி பயமுறுத்திக் கொண்டிருக்கிறீர்களே என்று சிலர் கடிதம் எழுதுகின்றனர், எத்தகைய தவறுகளுடனும், தோஷங்களுடனும், நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை உணர்த்துவதே அடிப்படைக் கடமையாம். “நான் நல்லவனாக வாழ்கிறேன், புனிதமானவனாக இருக்கிறேன்”,  என்று கூறிக் கொண்டிருப்பவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய தவறுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து திருந்தி வாழ வேண்டியதே இதன் நோக்கமாகும். தான் மட்டும் தன் குடும்பத்துடன் நல்லவனாக  வாழ்ந்து விட்டால், அது கூடச் சுயநல வாழ்வே! இந்த உடலால் பிறர் நலம் பெற எவ்வகையில் பாடுபட்டீர்கள் என்பதே மேலுலகத்தின் முதல் வினா?

8. உங்கள் நடைமுறை வாழ்க்கைக்காக, அலுவலகம் சென்று வேலை பார்த்தாலும், வியாபாரம் செய்ய வேண்டிய நிலையில் நீங்கள் இருந்தாலும், கூட இவற்றோடு நீங்கள் தெய்வீகத்திலும் மிளிர வேண்டும் என்பதைத்தான் இங்கு அறிவுறுத்த விரும்புகின்றோம். நீங்கள் பிறரிடம் பணத்தைக் கொடுக்கும் போதோ அல்லது வாங்கும் போதோ குறைந்தது பன்னிரெண்டு முறையேனும் ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஓதி நாணயத்தையோ, ரூபாய் நோட்டையோ வாங்கி/கொடுக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டீர்களெனில், நீங்கள் கொடுக்கும் பணத்தில் சேரும் ஸ்ரீகாயத்ரீ மந்திர சக்தியால் பிறருக்கு நல்வழியில் பணம் சேரும் அறவழிகளை உணர்த்திடலாம். நீங்கள் பெறுகின்ற பணத்தில் ஜபிக்கும் ஸ்ரீகாயத்ரீ ஜபத்தின் சக்தியால், அதிலுள்ள தோஷங்கள் நிவர்த்தியாகி அப்பணம் நன்முறையில் செலவழியும் வழிமுறையும் உங்களுக்கு வந்து சேரும். 

9. பொதுவாக ஹோம குண்டங்களில் நாணயத்தை அக்னியில் இடுவதைப் பார்த்திருப்பீர்கள். தங்கம், வெள்ளி நாணயம்தனை ஹோம குண்டத்தில் இடுதலே சிறப்புடையதாகும். இவ்வாறு ஹோம குண்டத்தில் இடப்பட்டு, பின் பிரசாதமாகப் பெற்ற நாணயங்களை பூஜையறையில் மஞ்சள் துணியில் முடிந்து வைத்து தினமும் மஞ்சள், சந்தனம், குங்குமமிட்டுத் தொட்டு பூஜிப்பீர்களேயானால் பணம் மூலம் வருகின்ற தோஷம் நீங்கும். முறையான பண வரவும் ஏற்படும். இதே போன்று ஹோம குண்டத்தில் வைக்கப்பட்ட செங்கற்களை உங்கள் வீடு, அலுவலகக் கட்டிடத்தில் பயன்படுத்துவீர்களேயானால் சந்ததி சநததியாக ஹோம குண்ட பூஜா சக்தி வந்து சேரும் என்பதை அறிந்திடுங்கள்.

10. பெண்கள் மாதவிலக்கின் போது பயன்படுத்தும் ஆடைகள், பாத்திரங்கள் பொருட்கள், அனைத்தையும், மாத விலக்கு முடிந்தவுடன் பூந்திக் கொட்டை எனப்படும் மூலிகை வித்தின் நீரில் ஊறவைத்து அதன் நுரையில் நன்கு சுத்தம் செய்து உலர வைத்துப் பின்னரே பயன்படுத்த வேண்டும் ஏனென்றால் மாதவிலக்கின் போது ஏற்படுகின்ற பலவித தோஷங்கள் எளிதில் நீங்குவது கிடையாது. இதற்குரிய ஓரளவு பிராயச்சித்தம்தனை அளிப்பதே பூந்திக் கொட்டையாகும்.

தினந்தோறும் காலையிலும், இரவிலும் சமையல் செய்யத் துவங்குமுன் அடுப்பினை (Gas அடுப்பு / விறகு அடுப்பு) நன்கு துடைத்து அரைத்த சந்தனம், மஞ்சள் குங்குமம் இட்டு விழுந்து நமஸ்கரித்து –

“ஓம் தத்புருஷாய வித்மஹே லாலீலாய தீமஹி
தந்நோ அக்னி ப்ரசோதயாத்”

என்ற ஸ்ரீஅக்னி காயத்ரீ மந்திரத்தையோ ,

“ஓம் தத்புருஷாய வித்மஹே ருத்ராக்னி தேவாய தீமஹி
தந்நோ அக்னி ப்ரசோதயாத்”

என்ற மற்றொரு அக்னி காயத்ரீ மந்திரத்தையோ ஓதி வழிபடுதல் வேண்டும். ஜாதி, மத, இன, குல பேதமின்றி யாவரும் இதனை ஓதிடலாம். ஏனென்றால் பெறுதற்கரிய இம்மானுட உடலில் உயிர் வாழ்வதற்குக் காரணமான உணவை நன்முறையில் படைத்துத் தருவது அக்னி மூர்த்தியே! காபி, டீ, பாயசம், அல்வா, இட்லி, பூரி, சாதம் என்று வகை வகையான உணவை உண்ணும் நாம் இவற்றிற்கெல்லாம் மூலகாரணமான ஸ்ரீஅக்னி பகவானைத் துதித்துள்ளோமா? இறைப் பகுத்துணர்வுடன் இனியேனும் உணர்ந்து செயல்படுங்கள். உங்கள் குழந்தைகட்கும் இந்த நல்லபழக்கத்தை ஏற்படுத்திக் கொடுங்கள்.

தமிழில் ஸ்ரீஅக்னி பகவானுக்குரிய காயத்ரீ மந்திரம்

முக்கண் பெருமானின் மூன்றாந் திருவிழியே!
மூல ஒளிப் பிழம்பின் முத்தார ரூபமே
எக்கணமும் காப்பாய் ஏகாந்த ஜோதியே!

யாவரும் இத்தமிழ்த் துதியையும் ஓதிடலாம்., விறகு அடுப்பைப் பயன்படுத்துபவர்கள் அன்றைய தினம் சமையல் முடிந்தபின் சிறிதளவு பச்சைப் பசும்பாலை எடுத்து,
சாந்தம் பெறுவாய், செஞ்சுடர் ஜோதியே!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

என மும்முறை ஓதி பச்சைப் பசும்பாலை அக்னியில் ஊற்றி அப்புகையைச் சிறிதளவு சுவாசித்து வீழ்ந்து வணங்கித் துதித்திட வேண்டும்.  தற்காலத்தில் பள்ளிக் குழந்தைகளை ஸ்கூட்டரில் அழைத்துச் செல்லும் போது காலடியில் புத்தகங்களை வைத்து, குழந்தைகளும், தாமும் மிதித்துக் கொண்டு செல்வதால்தான் பலவிதமான படிப்புப் பிரச்னைகள் குழ்ந்தைகளுக்கு ஏற்படுகின்றன. எந்தப் புத்தகப் படிப்பு குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தைத் தரவேண்டுமோ, எந்த உணவின் மூலம் குழந்தைகள் தெய்வீகத்தில் வளர வேண்டுமோ, பெற்றோர்கள் அதனைக் காலடியில் மிதித்துச் சென்றால் எவ்வாறு பக்தி நிலை ஏற்படும்? குழந்தைகளுக்கும், இந்த கெட்ட பழக்கத்தையா சொல்லித் தருவது?

எக்காரணங்கொண்டும் பள்ளிப் புத்தகங்களோ, உணவுப்பையோ, பேனாவோ, பென்சிலோ காலில் மிதிபடக் கூடாது. அவ்வாறு அறியாமல் பட்டால் அவற்றைத் தொட்டு வணங்கிட வேண்டும். இந்த நல்ல பழக்கத்தினை மூதாதையர்கள் நமக்குச் சொல்லித் தந்திருப்பதை மறந்து அதை ஏன் கீழே போட்டு மிதிக்கின்றீர்கள்!

பல சமயங்களில் உங்களுக்கு மனக்கிலேசங்களும், மனக் கவலைகளும், வியாபார அலுவலக சம்பந்தமாக மனத்துயரங்களும் பெருகிச் சோர்வடைந்தபடி காணப்படுவீர்கள். உங்கள் முகமும் வருத்தத்தில் தோய்ந்து போய்க் கிடக்கும். இதனால் உங்கள் குழந்தைகள் மீது தேவையற்று கடிந்து விழுவீர்கள். இதற்கான ஆன்மீக நிவாரணம் யாதெனில், இத்தகைய நேரங்களில், ஒரு வயதிற்குட்பட்ட குழந்தையின் முகத்தைப் பாருங்கள். கோபுர கலச தரிசனம் பெறுங்கள். செம்பருத்தி, நந்தியாவட்டை, மஞ்சள், அரளி, சாமந்தி, மலர்ச் செடிகளையும், வேப்பமரமும், அரசமரமும் இணைந்த ஆலயங்களில் விநாயகரை தரிசனம் செய்யுங்கள். காராம் பசு எனப்படும் விசேஷமான பசுவை அதன் கன்றுடன் வலம் வந்து தரிசனம் செய்யுங்கள். ஜாதி, இன, பேதமின்றி 80 வயது நிறைந்த பழுத்த சுமங்கலிகளை தம்பதி சகிதம் குடும்பத்தோடு அடிக்கடி கண்டு வணங்கி ஆசி பெறுங்கள்! இதன்பின் உங்கள் மனம் சாந்தமடைவதைக் காண்பீர்கள்., பிரச்சினைகளுக்குரித்தான நல்ல தீர்வை காணப் பெறுவீர்கள். இவையெல்லாம் தினசரி பெற வேண்டிய மங்களகரமான தரிசனங்களாகும்.

இத்தகைய மங்களகரமான தரிசனங்கள் உங்களுக்கு மனசாந்தியைத் தருகிறது எனில் நீங்களும் பிறருக்கு நன்றிக் கடனாக அதே மனசாந்தியைத் தருமளவில் பணியாற்ற வேண்டுமல்லவா? இதற்காக நீங்கள் என்ன செய்யவேண்டும்?
செவ்வாய், வெள்ளி தோறும் ஆலயங்களில் மஞ்சள்சரடு, பெரிய கண்ணாடி, சீப்பு, குங்குமம், வளையல், கண்மை போன்ற மங்கலப் பொருட்களை சுமங்கலிகளுக்குத் தானமளியுங்கள். ஏழைக் குழந்தைகளுக்கு கருப்பு நிற அரைஞாண் கயிற்றைத் தானமாக அளியுங்கள்.. எதற்கெடுத்தாலும் தான, தருமம் தானா என சலித்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு ஆயிரக் கணக்கில் பிரச்னைகள் இருக்கும் பொழுது லட்சக்கணக்கான ரூபாய்க்கான துன்பங்கள் பெருகும் போது ஒரு ஐம்பது அல்லது 10 ரூபாய்க்கு இந்த தானங்கள் செய்வதால் ஒன்றும் குறைய போவதில்லை. இதனால் மனநிம்மதி ஏற்படுகிறதா என்று செய்துதான் பாருங்களேன். தவறான வழியில் வந்த பணம் தகராறுகளைத் தான் தந்திடும்!

பொதுவாக நீங்கள் பயன்படுத்தும் பேனாவை ஒருவருக்கும் இரவலாக அளிக்காதீர்கள். ஏனெனில் அதன் மூலம் உங்களுக்குக் கர்மவினை வந்து சேரும். மேலும் பேனா வாங்குபவரோ, கொடுப்பவரோ நல்லெண்ணம் கொண்டவராயிருப்பின், அதுவும் உங்களை வந்து அமையும். ஆனால் யார் எத்தகைய நல்ல, தீய எண்ணங்களைக் கொண்டவர்கள் என அறிய இயலுமா என்ன! பேனாவை இரவலாகத் தராதீர்கள் எனில் இதுவும் ஒரு சுயநலம் போல் தோன்றுகின்றதல்லவா! பிறருக்கு உதவ  வேண்டும் எனும் எண்ணம் உங்களுக்கிருந்தால் உங்களுடைய தேவைக்கென ஒரு பேனாவும், பிறருக்கு அளிப்பதற்கு ஒரு பேனாவும் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இக்கலியுகத்தில் விரைவில் எவ்வித தீய சக்தியும் உங்களிடம் சேராவண்ணம் தற்காத்துக் கொள்ளவே இந்த அறிவுரை!

எப்போதும் positive thinking உடன் திகழ வேண்டும். அதாவது நல்லெண்ணங்களே, நல்லெண்ண சக்தியே உங்களைச் சூழ்ந்திருக்க வேண்டும். இதை எப்படி நடைமுறையில் கொண்டு வருவது? உதாரணமாக அலுவலகத்திற்கு ஸ்கூட்டரிலோ, காரிலோ செல்லும் போது, இயன்றவரை உங்கள் மனம் லயிக்கும்படியான இறைத்துதியை ஓதிச் செல்லுங்கள். அதன் பலாபலனை சாலையில் எதிர்ப்படும் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமாரியம்மன் போன்று ஏதேனும் ஒரு தெய்வ மூர்த்தியிடம் சமர்ப்பியுங்கள் அல்லது தொழு நோயாளியோ, கைகால் ஊனமுற்றவரோ, ஏழையோ உங்கள் எதிரில் தென்பட்டால் இறைவனை வேண்டி “நான் ஜபிக்கும் மந்திரப் பலன்கள் இவருக்குரித்தான விதிப்படி அமையும் பலாபலன்களைப் பெற உதவட்டும்”, என்று வேண்டிடுங்கள். இவ்வாறாக எளிமையான பல பூஜைகளுடன் உங்கள் நித்ய காரியங்களைச் செய்திடலாமே! மயான தோஷங்களும், பிரயாண வழியில் உள்ள கழிப்புத் தோஷங்களும் நம்மைத் தாக்காது இருக்க ஆங்காங்கே உள்ள ஸ்ரீமுனீஸ்வரர், ஸ்ரீஅய்யனார் போன்ற எல்லைத் தெய்வ மூர்த்திகளையும், சாலைப் பிரயாணத்தில் நம்மைக் காக்கும் காவல் தெய்வமூர்த்திகளையும் வணங்கிச் செல்ல வேண்டும்.

ஸ்ரீஐயப்ப விரதம்

நடப்பு முறையில் ஸ்ரீஐயப்ப விரத முறைகளில் காணப்படுகின்ற குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அவற்றை நிவர்த்தி செய்யும் முறைகளோடு சித்புருஷர்களால் அருளப்பட்டுள்ள ஸ்ரீஐயப்ப விரத முறைகளையும் கடந்த பல இதழ்களாக நாம் அளித்து வருகின்றோம் அல்லவா! 

இருமுடிக்குக் கூலியா அபச்சாரம்!
ஸ்ரீஐயப்ப விரதத்தில் மிகவும் முக்கியமானவற்றுள் ஒன்றாக இருப்பது இருமுடி கட்டுகின்ற வைபவம்தானே! பக்தியுடன் மிளிர்கின்ற தக்க குருசுவாமியின் திருக்கரங்களால் இருமுடியைக் கட்டிப் பெறுவது என்பது வாழ்க்கையில் பெறுதற்கரிய பெரும் பாக்கியம் ஆகும். ஆனால் இருமுடியைக் கட்டித் தருவதற்காக எவரும் எந்தவிதமானக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது. எந்த தட்சிணையையும் பெறுதலும் கூடாது என்பதுதான் மிக முக்கியமான இறை நியதியாகும். ஆனால் தற்காலத்தில் ஸ்ரீஐயப்ப விரத யாத்திரையில் ஆங்காங்கே அடியார்களின் இருமுடியைத் தலையில் ஏற்றுவதற்கும் மீண்டும் இறக்குவதற்கும் பலரும் பலவிதமாகக் கட்டணம் வசூலிக்கின்றார்கள். இது தவறானது மட்டுமல்லாமல் அவ்வாறு காசு வசூலிப்பவர்களைத் தீர்க்க முடியாத தெய்வக் குற்றத்திற்கும் ஆளாக்கும் என்ற இறை நியதியை வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம்.

ஆரியங்காவு திருத்தலம்

இருமுடி என்பது புனிதமான, பவித்ரமான நைவேத்தியப் பொருள். இதனை சிரசில் வைப்பதற்கும் வாடகைக் கட்டணம் வசூலிக்கின்றார்கள் என்றால் என்னே தெய்வீகக் கொடுமை இது! எந்தப் பரம்பொருளாம் ஸ்ரீமன் ஐயப்பப் பெருமானின் அருளால் ஒவ்வொரு விநாடியும் உயிர் வாழ்கின்றார்களோ அந்த ஐயப்பக் கடவுளின் சந்நிதானத்தை அடைகின்ற தெய்வீக இருமுடியை சிரசில் வைப்பதற்காக, பாதுகாப்பதற்காகவா கூலி வாங்குவது? தட்சணையாக எதனைப் பெற்றாலும் அதை ஐயப்பனின் சந்நிதியில் அர்ப்பணித்திட வேண்டும். இருமுடியைத் தலையில் ஏற்றியபின் இயற்கை ரீதியானக் காரணங்களுக்கும் ஓய்விற்காக சற்றே உறங்கும் நேரம் மட்டுமே இருமுடியானது சக ஐயப்ப அடியாரிடம் அளிக்கப்பட வேண்டும். மற்றபடி வேனிலோ, பஸ்ஸிலோ, ரயிலிலோ, நடந்தோ செல்லும் போது எப்போதுமே தலையில் இருமுடி இருந்தாக வேண்டும். தற்காலத்தில் வேனில் செல்லும் போது இருமுடியை எடுத்து மேலே Loft-ல் மூட்டையாகக் கட்டி வைத்து விடுகின்றார்கள்.
இது சரியல்ல! வேனில், இரயிலில் சென்றால் கூட தலையில் எப்போதும் இருமுடியைச் சுமந்தாக வேண்டும் என்ற நியதி ஐயப்ப பக்தர்களுக்கு உண்டு. இதனை குருசாமிமார்கள் வலியுறுத்திக் கூறுதல் வேண்டும். நடக்கும் போது மட்டுமே இருமுடியைச் சுமத்தல் வேண்டும் என்று எண்ணாதீர்கள். ஐயப்ப பகவான் தீவினைகளை சம்ஹாரம் செய்யும் சக்திவாய்ந்த மூர்த்தியாதலின், அவருடைய தெய்வானுக்ரஹம் மிகவும் அக்னிப்பிரவாக சக்தி வாய்ந்ததாக இருக்கும். இப்பேருண்மையின் மூலம் நாம் உணர்வதென்ன? சபரிமலை செல்ல விரதம் தேவையே!

ஸ்ரீஉய்ய வந்த அம்பிகை, ஸ்ரீதிருப்பதி வெங்கடாசலபதி சுவாமி போன்ற தெய்வ மூர்த்திகள் கலியுகத்தின் பிரத்யட்ச தெய்வமாக, நம்முடைய குறைகளை எல்லாம் தக்க சற்குரு மூலமாக மன்னித்து, தேவையான நல்வரங்களைப் பொழிந்து கொண்டிருக்கின்ற தேவாதி தேவ மூர்த்திகள் ஆவரன்றோ! ஆனால் தக்க விரத முறைகளைக் கடைபிடிக்கும் போது தான் ஸ்ரீஐயப்பன் அபரிமிதமாக தம்முடைய அருட்கிரணங்களை வாரிவழங்குகின்றார். அதனால்தான் விரத வேதபவநாயக வேதமூர்த்தியாகப் பெயர் பெற்றுள்ளார். அப்படியானால் நாம் சாதாரண முறையில் திருப்பதி பெருமாள் தரிசனம் போல விரதமின்றி ஸ்ரீஐயப்ப மூர்த்தியை வழிபடக் கூடாதா? வழிபட முடியாதா? இதுவே பலருக்கும் ஏற்படுகின்ற வினா ஆகும்.

சபரிமலைக்கு விரதம் பூண்டுதான் சென்று ஸ்ரீஐயப்பனைத் தரிசித்தாக வேண்டும் என்பது கட்டாயமான, காலம் காலமாக வகுக்கப்பட்டுள்ள இறை நியதி, வயது வரம்பும், தீட்டுத் தவிர்த்தலும் இதில் நிச்சயமாக உண்டு. குறைந்தது ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதம் பூண்டால்தான், ஸ்ரீசபரி சாஸ்தாவின் பரிபூரணமான அனுகிரகத்தைப் பெற முடியும். பல கோயில்களுக்கும் செல்வது போல, சாதாரணமாக ஏதோ சென்றோம், தரிசித்தோம், வந்தோம் என்பதை விட விரத மகாமூர்த்தியாக விளங்குகின்ற ஸ்ரீஐயப்பனை விரதம் பூண்டு தரிசிப்பதுதான் சாலச் சிறந்ததாகும். அத்தகைய அடர்ந்த காட்டின் ஊடே ஸ்ரீசபரி மூல ஐயப்பன் தன்னை வரித்துக் கொண்டுள்ளான் என்றால் அந்த விரத நிலை கொண்டு திருமால் ஜோதியை, ஹரிஹர சுத ஜோதியைத் தக்க பூஜா, விரத முறைகளுடன் தரிசித்தால் தானே ஐயப்ப தரிசன மேன்மையை உணர முடியும். ஸ்ரீசபரிமலை சாஸ்தா கோயிலுக்குத்தான் இந்த நியதியே தவிர, இல்லத்திலோ, (ஆலயத்திலோ, அலுவலகத்திலோ), ஸ்ரீஐயப்பன் படத்தையோ, விக்ரகத்தையோ தாராளமாக வைத்து முறைப்படி வழிபட்டிடலாம். இதில் எந்தவிதத் தவறும் கிடையாது. ஆனால் சபரிமலைக்குச் செல்பவர்கள் நிச்சயமாக விரதம் பூண்டுதான் செல்ல வேண்டும். சாதாரண தரிசன முறை கிடையாது! இதில் எவருக்கும் எவ்வித விதிவிலக்கும் கிடையாது.

பம்பை நதி

இருமுடிக்கான வஸ்திர நியதி

இருமுடிக் கட்டுவதற்கான வஸ்திரமும் நல்ல நீல நிறத்தில் இருத்தல் வேண்டும். இதனையும் ஒரு மண்டலத்திற்கு முன்னரே வாங்கி வைத்துத் தக்க முறையில் பூஜை செய்து, அந்த புனிதமான வஸ்திரமும் வழிபாட்டில் இருந்தாக வேண்டும். நாளைக்கு இருமுடி  கட்டுதல் என்றால், இன்று மாலையில் இருமுடிக்கான துணியை வாங்கி வருதல் சற்றும் ஏற்புடையது அல்ல! மேலும் பலரும் இங்கு விரதத்தை ஏற்றுக் கொண்டு, பம்பையில் சென்று அங்கு அடிவாரத்தில் விலைக்குக் கிடைக்கும் இருமுடியைத் தலையில் சுமந்து கொண்டு மேலே செல்கின்றார்கள். இருமுடியை கூடவா விலைக்கு விற்பார்கள்? கலியுகத்தில் இறைவனுக்கே இழைக்கும் அநீதியைப் பாருங்கள்! பலரும் தன்னுடைய குருசாமி யாரென்றே தெரியாது. ஆங்காங்கே குருசாமி என்று தன்னை அழைத்துக் கொள்பவர்களிடம் இருமுடியைப் பெற்றுக் கொள்கின்றார்கள். இதெல்லாம் விரத முறையாகுமா? நீங்களே சிந்தித்துப் பாருங்கள்! இருமுடி என்பது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட வேண்டிய மிகவும் புனிதமான நைவேத்ய பொருளன்றோ! ஆங்காங்கே ரெடிமேடாக இருமுடியை விற்பதோ, வாங்குவதோ தெய்வக் குற்றமாகும். ஐயப்ப விரத ஆடைக்காகவும், இருமுடித் துணிக்காகவும் தறியில் விசேஷமாகத் துணியை நெய்வது மிகமிகச் சிறப்பானது. இத்தகைய இறை நியதிகளுக்காகத்தான் ஒரு மண்டல (48 நாட்கள்) விரத நாட்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

பசுநெய் அபிஷேகம்தான் ஸ்ரீஐயப்பனுக்குப் ப்ரீதி என்று சொல்கின்றோமே, புனிதமான பசுநெய் தயாரிப்பதற்கான பொறுப்பும், இருமுடித் தறித் துணிப் பொறுப்பும், ஒவ்வொரு அடியாருக்கும் குறிப்பாக குருசாமிக்கும் வந்து சேருகின்றது. இருமுடிக்கான பசு நெய் மிகவும் சுத்தமான பசு நெய்யாகக் கண்டிப்பாக இருந்தாக வேண்டும். கடையில் விற்கின்ற பசு நெய்யெல்லாம் உண்மையான பசுநெய் கிடையாது. எருமை நெய்யோ, அல்லது பலநாள்பட்ட எத்தனையோ விதமான நெய்யோ கலப்படமாக இதில் சேர்ந்திருக்கக்கூடும். இதில் 99 சதவிகிதம் தற்போது தவறான முறையில்தான் நடக்கின்றது என்பதை நீங்களே அறிவீர்கள்!

எனவே இருமுடிக் கட்டித் தருகின்ற குருசாமியே, நன்முறையில் பசுநெய் தயாரிக்கின்ற புனிதமான முறைகளையும் கட்டாயமாகக் கடைபிடித்தாக வேண்டும். தன்னைச் சார்ந்துள்ள ஐயப்ப அடியார் விரத நெறிகளைச் சற்றும் பிசகாது கடைபிடிக்க வைக்கின்ற பொறுப்பு குருசாமிக்கு உண்டு. குருசாமி என்ற அருட்பதவியில் ஆயிரமாயிரம் இறைப் பொறுப்புகளைச் செவ்வனே ஏற்றாக வேண்டும். பசும்பாலில் பசுந்தயிர், மோர் கொண்டு தோய்த்து அதிலிருந்து எடுக்கப்படுகின்ற பசுநெய்தான் புனிதமான பசுநெய் ஆகிறதே தவிர, எருமை நெய் எல்லாம் சேர்ந்திருந்தால் அது சுத்தமான பசுநெய் ஆகாது. எனவே இருமுடியில் பசுநெய் தவிர வேறுவிதமான நெய் சேர்ந்திருந்தால் அதில் தோஷங்கள் தான் குடியேறும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! பசுநெய்யில் பல இடங்களில் வனஸ்பதி என்னும் டால்டாவைச் சேர்த்து விடுவார்கள்., வனஸ்பதியிலும் கலப்படமாக மாமிசக் கொழுப்பு சேர்ந்திருக்க வாய்ப்புண்டு.. இத்தகைய பெருங்குற்றங்களைத் தவிர்க்கவே., நாமே நம் இல்லத்தில் பசுநெய்யைத் தயாரிக்க வேண்டும்.

விரத யாத்திரையில் இருமுடியைத் தலையில் சுமப்பது ஏன்?

ஏன் இருமுடியைத் கட்டித் தலையில் சுமந்து செல்கின்ற விரதமுறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றால் மிகவும் சக்தி வாய்ந்த அனுக்கிரகத்தைத் தரவல்ல அக்னி ஜோதி மூர்த்தியாதலின், ஸ்ரீசாஸ்தாவின் ஜோதி சக்திகள் எல்லாம், நம்முடைய கபாலப் பகுதியிலிருந்து 72000 நாடி நரம்புகளுக்கும் செல்கின்றன. கபாலத்தில் உள்ள நாடி, நரம்புகள் எல்லாம் நன்முறையில் தெய்வீக ஆக்கம் கொண்டவையாக விளங்குவதற்காகத்தான் இருமுடியைத் தலையில் கட்டிச் சுமந்து செல்கின்றோம். கோடானு கோடி தேவதைகள் உறைகின்ற அனைத்து விதமான தேவமூர்த்திகள் – சிவன் முதல் நவக்ரஹ மூர்த்திகள் வரை  - உறைகின்ற பசுவின் உடலிலிருந்து பெறப்படுகின்ற புனிதமான பசு நெய் என்றால் அதில் தேவாதி தெய்வப் பெரும் ஆத்ம சக்திகள் நிறைந்திருக்கும் அல்லவா!
மேலும் ஸ்ரீபரசுராம மூர்த்திதான் தேவலோகத்திலிருந்து பூலோகத்திற்குத் தென்னைத் தாவரத்தைக் கொண்டு வந்து நாரிகேள பூஜா தந்திர விதிகளையும் நமக்குத் தந்துள்ளார். எனவே தேவலோகத்திலிருந்து பெற்ற தேங்காய்க்குத்தான் கோடானு கோடி தேவாதி தேவதைகளின் சக்தி பசுநெய்யின் கோகுல ஜீவசக்தியை தாங்கும் வல்லமை உள்ளது. எவ்வளவு நேரம் இருமுடியைச் சுமக்கின்றோமோ, அந்த அளவிற்குக் கபால சக்தியும் மேம்பட்டு, கபாலத்தில் உள்ள நாடி, நரம்புகளும் தெய்வீக ஆக்கம் பெறுகின்றன. எனவே, ஐயப்ப அடியார்கள் யாவருமே, தம்முடைய சிரசில் எப்போதும் இருமுடி இருக்கும்மாறு பார்த்துக் கொண்டால்தான்,  சாஸ்தா விரத கபால சக்தியை நம் தேகத்தில் பரிபூரணமாகப் பெற முடியும். எனவே, இயற்கை ரீதியான காரணங்களைத் தவிர, உறக்க நிலை நேரத்தைத் தவிர, எப்போதும் பிரயாணத்தின் போதும் தலையில் இருமுடியைச் சுமந்து இருக்குமாறு ஐயப்ப அடியார்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆரியங்காவு திருத்தலம்

எப்போதும் சிரசில் இருமுடி இருக்கட்டும்!
விரதமிருக்கின்ற 48 நாட்களில் சில மணி நேர உறக்கம் போக, மீதமுள்ள நேரக் காலக் கட்டத்தில் எப்போதும் தலையில் இருமுடியைச் சுமந்தால்தான் உங்களுக்குக் கபாலத்தில் ஹரிஹர சுத சக்தி நன்கு வந்து கூடும். இந்த ஹரிஹர சுத சக்தியை வேறு எந்த வழிபாட்டு முறையிலும் பெறமுடியாது. மஹாவிரத நாயகனான ஸ்ரீஐயப்பனுக்கு உரித்தான விரதமுறைகளால் தான் இந்தக் கபால சுத சக்தியை நாம் பெற முடியும். இந்தக் கபால சுத சக்தியானது நம் கர்மவினைகளைக் கழிப்பதற்கு மட்டுமல்லாது நம்முடைய துன்பங்களுக்கும் அவ்வப்போது தேவையான நிவர்த்தியையும் நல்ல கூர்மையான அறிவு சித்தத்தையும் தந்தருள்வதாகும். சித்தர்கள் அருளியபடி உண்மையான வழியில் விரத முறைகளைக் கடைபிடித்து, ஒரு முறை ஸ்ரீஐயப்ப யாத்திரையை நன்முறையில் முடித்து வந்தாலே போதும்., எத்தனையோ கோடி ஜன்மங்களில் மலை மலையாகச் சேர்ந்துள்ள கர்மவினைகளுக்கெல்லாம் தீர்வுகளைப் பெறுவது மட்டுமல்லாமல் பிறவியற்றப் பெருநிலைக்கும் இதுவே முக்கியமான தெய்வ அருளைக் கூட்டுகின்றது..

குருசாமியின் அருட்பணி!

 விரதமாலை எடுத்துக் கொடுப்பதும் இருமுடி கட்டுவதும் மட்டுமே குருசாமியின் இறைப்பணியாகாது! ஒவ்வொரு குருசாமியும் தன்னிடம் வருகின்ற ஐயப்ப அடியார்களுக்குத் தேவையான விரத ஆடை, பசுநெய், விரதத் தேங்காய் ஆகியவற்றைப் பெற்றுத் தருவதற்காக, குறைந்தது 3 மாதமேனும் கடுமையாக உழைத்து தெய்வீகப் பணிகளை ஆற்றி, விரதநெறிகளைக் கடைப்பிடித்தால் தான் நன்முறையில் ஐயப்ப அடியார்களை உருவாக்க முடியும். இப்படி பார்க்கின்ற போது, ஒவ்வொரு குருசாமியும் தன்னிடம் ஐந்து ஐயப்ப அடியார்களைத் தான் நல்லவிரத முறையிலே இட்டுச் செல்ல முடியும் என்பது புலனாகின்றது அல்லவா! ஆனால் தற்காலத்தில் எத்தனையோ பஸ்களில் வருகின்ற அத்தனை ஐயப்ப அடியார்களையும் தம்முன் அமர்த்திக் கொண்டு  அனைவர்க்கும் இருமுடியைக் கட்டித் தருவது என்பது அரைகுறையான தவறான போக்காக அமைந்து விடுகின்றது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்..

ஆனால் தற்காலத்திலும் மிகுந்த நியமநிஷ்டைகளுடன் விரதங்களைக் கடைபிடித்து வருகின்ற குருசாமிகள் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்கள் அடக்கமாக, பணிவாகத் தம்முடைய ஐயப்ப பக்தியைக் கூட வெளிக்காட்டாது மிகவும் எளிமையான முறையிலே வாழ்ந்து நன்முறையில் விரதங்களைக் கடைபிடித்து சென்று வந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களை நாமாகத்தான் அறிந்து புரிந்து கொண்டு அவர்களிடம் ஹரிஹர சுத விரதப் பாங்கினை நன்முறையிலே பெற்று, குருசாமியாக ஏற்று அவர்களை நாடிச் சரணடைய வேண்டும். சித்தர்கள் அருளியவகையிலே ஜாதி, மத, இன, குல பேதமின்றி ஸ்ரீஐயப்ப விரதத்தைக் கடைப் பிடிப்பவர்கள் தாம் மிகச் சிறந்த குருசாமிகளாக விளங்குகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே, இருமுடியானது எப்போதுமே சிரசில் தாங்கப்படவேண்டிய மிக முக்கியமான, பவித்ரமான ஹரிஹர சுத நைவேத்யப் பொருளாகும். மலஜலக் கழிப்பிற்காகவும், நீராடுதலுக்காகவும் செல்லும் போது மட்டும் இருமுடியைத் தக்க சக அடியாரிடம் தாங்கிச் செல்லுமாறு அளித்து விட்டு செல்லவேண்டும். எக்காலத்திலும் கீழே அல்லது மேலே எங்கும் வைத்திடக் கூடாது.

ஸ்ரீகருப்பண்ண சுவாமி
ஆரியங்காவு

தற்காலத்தில் இருமுடிகளை வைப்பதற்காகவே உயரமான பரண் அமைத்து அதற்கும் வாடகை வாங்குபவரும் நிறைய உண்டு. இவையெல்லாம் விரதத்திற்கு ஏற்புடையது அல்ல. உயரமான இடத்தில் வைப்பதால், இருமுடியானது நல்ல உத்தம முறையில் வைக்கப்படுவதாக எண்ணுதல் வேண்டாம். மேலும் இயன்ற வரையில் இருமுடியை எவரிடமும் அளித்திடாது தக்க குருசாமியின் துணையுடன் நீங்களே நேரில் சென்று இருமுடித் தலையில் சுமந்து சென்ற பசுநெய்யை ஸ்ரீஐயப்ப சந்நிதியில் அளித்திடுங்கள். அனைத்து இருமுடிகளையும் ஒன்றாகச் சேர்ந்து மொத்தமாக உடைத்து பசுநெய்யைப் பெருக்கி அதை எவரிடமோ ஒப்படைத்து அவர் சந்நிதானத்தில் அபிஷேகம் செய்து அது எவர் மூலமாகவோ திரும்பி வருவதை விட, அவரவர் தம் மனத்திருப்தியுடன் இந்த பசுநெய் அபிஷேகம் ஸ்ரீஐயப்பனின் திருவடியின் திருவருளைப் பலருக்கும் பெற்றுத் தருவதாக அமையட்டும் என்று வேண்டி சந்நிதானத்தில் நீங்களே சமர்ப்பித்து விடுங்கள்.

சமாராதனை முறை!

ஸ்ரீஐயப்ப விரதத்தின் போது சமாராதனை என்று சொல்லப்படுகின்ற அன்னதானத்தை, நன்முறையில் நடத்திடுங்கள்! உற்றம், சுற்றம், அலுவலக நண்பர்களைக் கூப்பிட்டு வசதி நிறைந்தவர்களுக்கே உணவு அளிப்பதை விட இயன்றமட்டும் வறியவர்களான சக ஏழை ஐயப்ப அடியார்களுக்கும் உண்மையிலே பசியால் வாடும் ஏழைகளுக்கும் அன்னம் பாலித்து  சமாராதனையின் திறத்தை உணர்ந்திடுங்கள். ஏனென்றால் ஏழைகளுக்கு உணவு அளித்திடும் போது, அவர்கள் அடைகின்ற பரிசுத்தமான மனதிருப்திதான் மகத்தான புண்ணிய சக்தியாகத் திரும்பிவரும். வசதி படைத்த சக அலுவலகர்களுக்கே அன்னத்தைப் படைத்து விட்டு, “சர்க்கரை வியாதி, கால்வலி, மூட்டுவலி என்று கூறுபவர்களுக்கும் இதை விலக்கிவிட்டேன், அதை விலக்கி விட்டேன், ஏதோ ஓரளவுக்குச்  சாப்பிட்டேன்”, என்று கூறுகின்றவர்களுக்கு உணவு படைத்து அதை அரைகுறையாக முடித்து விடாதீர்கள்.

ஆரியங்காவு திருத்தலம்

ஒரு பிடி தயிர் சாதமானாலும் நெய் வழிகின்ற அல்வாவாயினும், எதுவாயினும் ஏற்று மனதார வாழ்த்துகின்ற ஒரு ஏழைக்கு இடுகின்ற அன்னம்தான் உத்தம தெய்வ புண்ணிய சக்தியைத் தரும் என்பதை மறந்து விடாதீர்கள். அதே சமயத்தில் திருஅண்ணாமலை கிரிவலம், ஐயப்ப விரத யாத்திரையில் வருகின்றவர்கள் வசதி படைத்தவராய்  இருந்தாலும் கூடக் களைப்பாலும் உடல் அயர்வாலும் அசதியுறும் போது அச்சமயத்தில் அவர்களுக்கு அளிக்கப்படுகின்ற பிரசாதம் அன்னதான சக்தியை மேம்படுத்துகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். எத்தனை கோடீஸ்வரராக இருந்தாலும் கேதார்நாத், பத்ரிநாத் போன்ற இடங்களுக்குச் செல்லும்போது, குளிரினாலும் நெடுந்தூரப் பயணத்தாலும் களைப்புறும்போது அவர்களுக்கு இடுகின்ற அன்னம், அன்னதானம் மகத்தானச் சக்தியைப் பூண்டது என்பது காலவர்த்தமான தான தர்ம நியதிகளைக் குறிக்கின்றது.. ஐயப்ப சமாராதனை என்பது இல்லத்தில் அளிக்கப்படுகின்ற அன்னதானம் என்பதால் வறுமையில் வாடுகின்றவருக்கு அளிப்பதே சிறப்பானது.. அதே போல சுமங்கலிப் பிரார்த்தனை என்பதிலும் நன்கு வசதியுடன் வாழ்கின்ற அக்கா, தங்கை உறவினர்களுக்குப் புடவை மற்றும் தான, தருமங்களை அளித்திடாமல் ஜாதி, மத, இன பேதமின்றி உண்மையிலேயே பொருளாதார நிலையில் தாழ்ந்து வறுமையில் வாடுகின்ற ஏழைச் சுமங்கலிப் பெண்களுக்கு வஸ்திரங்களையும், உணவையும் மங்கலப் பொருட்களையும் அளித்து சுமங்கலிப் பிரார்த்தனையை சிறப்புடன் நிறைவேற்றுங்கள். இதுவே உடனடியாக பயனளிக்கும்!

பூஜை மாலைகளை என் செய்வது?

ஐயப்ப யாத்திரையின் போது வேனில் செல்பவர்கள் வேன் முழுதும் ஐயப்பனுக்கும், இருமுடிகளுக்கும் இட்ட மாலையைச் சுற்றி வளைத்துக் கட்டி, அவற்றைப் பலரும் மிதிக்கும் வண்ணம் சாலையில் இட்டுச் செல்கின்றார்கள்! இதுதானா தெய்வீகப் பூக்களை மதிக்கின்ற பண்பு? மேலும் ஐயப்பனின் திருவுருவப்படமானது தூசித் தும்புகள் படும்படி வேனின் கீழ்ப்பகுதியிலோ அல்லது பலவயர்களும் இடிக்குமாறு உச்சியிலோ இல்லாமல் நடுப்புறமாக, பலருடைய பார்வையில் படும்படி வைப்பதே சிறப்புடையது.. ஆனால் எக்காலத்திலும் இருமுடிக்கு உரித்தான பூக்களையோ, பூமாலையையோ வண்டி முழுதும் கட்டித் தொங்கவிடுதல் கூடாது. அவற்றை அழகாக ஒரு துணியிலோ, பாத்திரத்திலோ வைத்து கங்கை, காவிரி, பம்பையில் கரைத்திடுக., அல்லது புனிதமான நிலத்தடியில் எவருடைய கால்படாமல் சேர்த்து விடுதல் வேண்டும். ஆலயத்தில் அல்லது இல்லத்தில் பூஜை செய்யப்பட்ட நிர்மால்யப் பூக்களை நாம் எவ்வாறு எவர் காலிலும் படாமல் கடலில் கொண்டு சேர்க்கின்றோமோ அதே போலவே இருமுடிக்கும், ஸ்ரீஐயப்ப மூர்த்திக்கும் இட்ட பூமாலைகளை சாலையெங்கும் சிதறாவண்ணம் எடுத்துச் சென்று நன்முறையில் நல்ல இடங்களில், கரைத்திடுக! பிறருக்கும் இதை எடுத்துச் சொல்லுங்கள். அறியாமையால் பலர் இவ்வாறு செய்யக்கூடும். உணரவைத்தால் எவரும் திருந்தி நல்வழியைக் கடைபிடிப்பார்கள்.. என்பது திண்ணம்!

நோய் நிவாரணம்

நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்!

கலியுகத்தில் எத்தனையோ குடும்ப, பொருளாதார, அலுவலக, வியாபாரப் பிரச்னைகள் நிறைந்திருந்தாலும் மனிதனால் நோய்த் துன்பங்களைத்தான் சற்றும் தாளமுடியாமல், தவிக்கின்றான்.. பல சமயங்களில் நோய் நொடிகளை விட நிதி நிலைப் பிரச்னைகள் எளிதாகி விடுகின்றன போல் தோன்றும். சாதாரண ஜுரம், சளி பிடிப்பது முதல் புற்று நோய் வரையிலான பல்லாயிரக்கணக்கான நோய், நொடிகள் தாம் மனித சமுதாயத்திலே மனிதனுடைய வாழ்க்கையிலே பெரும் போராட்டத்திற்கான காரணங்களாக விளங்குகின்றன.. ஒவ்வொரு நோய்க்கும் எத்தனையோ விஞ்ஞானக் காரணங்களை மருத்துவக் கல்வி உணர்த்தினாலும் இவையெல்லாம் நம்முடைய மரபு வழிவந்த, சித்த ஆயுர்வேத முறைகளுள் பொறிக்கப்பட்டு இருப்பவை தாம். தெய்வீகத்தை ஒதுக்கி விஞ்ஞானப் பூர்வமாகவே எதையும் உணர்கின்ற கல்வித் திட்டம் வந்துவிட்டமையால் தான் மனிதன் வாழ்வின் அடிப்படை இலக்கணமான நல் ஒழுக்கத்தையே, நல்ல குணத்தையே, நன்னடத்தையையே ஒதுக்கி விட்டான்.

தெய்வீகம் புகட்டுவது என்ன? எந்த நோய்க்கும் காரணமே ஒருவனுடைய பூர்வஜென்ம கர்மவினைகள் தாம். இதுவே எக்காலத்திலும் சத்தியப் பூர்வமான வேதவாக்கு ஆகும். சற்று ஜலதோஷம் பிடித்தாலும், கீழே விழுந்து அடிபட்டுக் காயங்கள் ஏற்பட்டாலும், தலைவலி ஏற்பட்டாலும், டைபாய்டு, மலேரியா ஜுரம் என இருவாரங்கள் படுத்து எழுந்தாலும் எதுவுமே கர்மவினைகளின் விளைவுகள்தாம், இதில் சந்தேகம் வேண்டாம்! அப்படியானால் நோய்களை நிவர்த்தி செய்வதற்கான மருந்தை உட்கொள்ள வேண்டாமா? இறைநியதிப்படி ஒவ்வொரு மனிதனும் தான் நல்முறையில் வாழ்வதற்குத் தேவையான முறையான மனித முயற்சிகளையும் எடுத்தாக வேண்டும். ஜலதோஷம், இருமல், காய்ச்சல் இருந்தால் அதற்குரிய மருத்துவரை நாடி அதற்குரித்தான மருந்துளை உட்கொள்ளத் தான் வேண்டும். அப்படியானால் பூர்வ ஜென்ம கர்ம வினைகளின் தொகுப்புதான் நோய், நொடிகள் என்று சொல்வானேன்? நோய்களுக்குக் காரணம் கர்ம வினைகளே என்று மனதால் உணர்வது வேறு, உடலால் அனுபவிப்பது வேறு! இரண்டும் ஒன்றானால் அதுவே உயர்ந்த தெய்வீக நிலைகளுள் ஒன்றாம்.

திருக்கழிப்பாலை திருத்தலம்

எந்த நோய்க்கும் காரணம் பூர்வ ஜென்ம கர்மவினைகளாக இருந்தாலும் அதை முழுமையாக ஏற்றுக் கொள்கின்ற மனப்பக்குவத்தை, இறைப் பகுத்தறிவை நாம் இன்னமும் பெறவில்லை அதுவரையில் வெளிமருத்துவத்தை நாடியே ஆக வேண்டும். ஒரு மனிதன் தனக்கு வருகின்ற நோய்கள் தன்னுடைய கர்மவினைகளாகக் கொண்டு அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என்ற வைராக்யத்தைத் தீவிரமான உறுதியுடன் மேற்கொள்வானேயானால் மருந்தைத் தவிர்த்திட என்ன செய்ய வேண்டும்? அவன் தொடர்ந்து அவ்வுறுதிப்பாட்டில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் உடலில் ஜுரம் ஏறி தலை சுற்றி மயக்கம் வந்தால் போதும் தன்னால் தாக்குப் பிடிக்க முடியாது என்றவுடன் வேக வேகமாக டாக்டரிடம் ஓடிவிடுகின்றான். அப்போதே தெரிந்து விடும் அவனுடைய வைராக்யத்தின் (போலித்) தன்மை! உறுதியில்லாத மன உறுதி இதுதான்! இவ்வாறாக அரைகுறையான வேதாந்தியாக விளங்குவதை விட மருத்துவத்தை நாடி நோய்களைத் தீர்த்து ஆரோக்யமான உடலுடன் நல்ல வழிபாட்டு முறைகளை மேற்கொள்வதே மேல்! ஏனென்றால் நோய்கள் தீர்வதும் கூட நல்ல தர்மங்களின், புண்யசக்திகளின் பயன்களால் தான்!

எவன், ஒருவன் தன்னுடைய நோய்களுக்குக் காரணம் கர்மவினைகள் என்று உணர்கின்றானோ அவன் எதையும் வெளிக்காட்டாது தானே அனுபவிக்கின்றேன் என்று கூட வெளிச் சொல்லாமல் அமைதியாக, சாந்தமாக வாழ்ந்து காட்டுவான்! இதுவே புனிதமான துறவிகளின் நிலையும் கூட! ஆனால் கலியுகத்தில் மகான்களும், துறவிகளும் கூட மக்களை நல்வழிப்படுத்துவதற்காகத் தங்களுக்கு வருகின்ற நோய்களுக்காக தாமே மருத்துவ வழிகளை நாடித் தேடிக் கொண்டு நல்ல பாடங்களைப் புகட்டுகின்றார்கள்!

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் கண் நோய்களின் துன்பங்களை எல்லாம் தன் உடலில் தாங்கிய ஸ்ரீபரமாச்சார்ய சுவாமிகள் அவற்றைத் தம் கண்களிலே ஏற்று தாமே காடராக்ட் அறுவைச் சிகிச்சைக்கு ஆட்படுத்திக் கொண்டு தம் தேகத்தில் பல துன்பங்களை அனுபவித்தார் என்பது நாம் நன்கு அறிந்ததே.! சித்தர்களுக்கும், மகான்களுக்கும் நோய்கள் எல்லாம் ஒரு பொருட்டு இல்லை. இந்த உடலை அவர்கள் சட்டையைப் போலக் கருதி உடலுக்கும், ஆன்மாவிற்கும் உள்ள தொடர்பை அறிந்தும் அறியாதவர் போல நமக்காக, நம்மை நல்வழிப்படுத்துவதற்காக நம்மோடு நம்மைப் போலவே வாழ்ந்து காட்டி நல்வழிப்படுத்துகின்றார்கள்.. ஆனால் அவர்களுடைய மகிமையை நாம் சற்றும் உணர்வதில்லையே!

நோய் நாடி நோய் முதல் நாடுவீர்!

எனவே எந்த நோய் ஏற்பட்டாலும் அதற்கான தக்க மருத்துவ உதவிகளை நாடி உடலை ஆரோக்யமாக வைத்துக் கொண்டு இறைப் பணிகளைப் புரியவேண்டும். இந்த உடலைக் கொண்டுதான் பிறவிப் பிணியும் நீக்கப்பட வேண்டும். உடல் மெலிந்து, ஆரோக்யம் குறைந்து உடல் நலமே ஆடிவிட்டால், பிறகு எந்தத் திருப்பணிகளைச் செய்து கர்மவினைகளைக் கழிக்க முடியும்?

எந்த நோயானது கர்மவினையின் பலன்கள் என்று உணருகின்றார்களோ அந்த கர்மவினைகளைக் கழிப்பதற்கு நல்ல உடல் ஆரோக்யம் இருந்தாக வேண்டும் அல்லவா! வெறும் கர்மவினைக் கழிப்பு என்று வாய் வழியாகச் சொல்லிவிட்டு அந்த கர்மவினைக் கழிப்பிற்கான பிராயசித்த, பரிகாரங்களைச் செய்ய உடல் ஆரோக்யம் இல்லையென்றால், அதுவே பெரும் கர்ம்மாகச் சேர்ந்து பெரும் பிறவிகள்தானே கூடி வந்திடும். ஒரு நோய் வரும் போது அப்போது உங்களுக்கு உள்ள மனநிலை, ஏற்படுகின்ற சந்தர்ப்ப சூழ்நிலை, உங்களைச் சந்திக்கின்ற மனிதர்கள், உற்றம், சுற்றம் இவர்களுக்கு ஏற்படுகின்ற கஷ்ட, நஷ்ட விளைவுகள் போன்றவற்றை நீங்கள் நன்கு ஆத்மவிசாரம் செய்து பார்த்தீர்களேயானால் எந்தக் கர்மவினை மூலமாக இந்த நோய் வந்தது என்பதை நீங்களே நன்கு தெரிந்து கொள்ளலாம்.
முன் வி(தி)தைத்ததே பின் விளை(ன)யும்!
உதாரணமாக உங்களுக்குக் கடும் வயிற்றுவலி ஏற்பட்டு அதனால் அலுவலகத்திற்கும் வங்கிக்கும் செல்ல முடியாமல், மேலும் வியாபார நஷ்டமும், பண இழப்பும் ஏற்பட்டால் பிறருக்கு நீங்கள் சரிவர வாடகையோ, கூலியோ, கடன் தொகையோ தராமல் முன் ஜன்மத்திலோ இந்த ஜன்மத்திலோ ஏமாற்றி இருக்கின்றீர்கள் என்பதே கர்மவினைக் காரணங்களுள் ஒன்றாம்! இந்த வயிற்று வலி காரணமாக அலுவலகத்திற்குச் செல்ல முடியாமல் பதவி உயர்வு அடிபட்டாலோ அல்லது வியாபார ஒப்பந்தங்களுக்குக் கடைசித் தேதி தவறிச் சென்று விட்டாலோ ஏதோ ஒரு ஜென்மத்தில் பிறருடைய உயர் பதவிக்காக, அல்லது இந்த பிறவிலோ, பிறருடைய முன்னேற்றத்திற்காக நீங்கள் ஏற்படுத்திய தடைகள்தாம் வயிற்று வலியாக ஏற்பட்டு அந்தக் கர்மவினையின் விளைவுகளை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதே காரணமாம்.

மேலும் மருந்துகள் உட்கொள்ளும் போது நிகழ்வதென்ன? டாக்டர் கட்டணம், மருந்துச் செலவென பலருக்குமான/ உங்களுடைய பாக்கிக் கர்மவினைக் கழிப்பு நடைபெறுகின்றது என்பதை என்றேனும் உணர்ந்திருக்கின்றீர்களா? பூர்வ ஜென்மங்களில் யாருக்கு எவற்றைத் தரவேண்டுமோ, தராமல் கடனாக விட்டோமோ, அதுவே மருந்துச் செலவாக ஆஸ்பத்திரிக் கட்டணமாக/ டாக்டர் பீஸாகக் கழிகின்றது! அது மட்டுமா, லஞ்சம், ஏமாற்றுதல் காரணமாக முறையில்லாத வழியில் வந்த பணமும் இவ்வாறாகத்தானே போகும் என்பதை எல்லாம் நன்றாக உணர்ந்திடுங்கள்!

திருகழிப்பாலை மகிமை

திருக்கழிப்பாலையில் அருட்களிப்பு ஆலயம்

திருக்கழிப்பாலை என்பதற்கு அருந்தமிழில் எத்தனையோ அர்த்தங்கள் உண்டு. சித்புருஷர்களுடைய பரிபாஷையில் கூட இதற்கு நிறைய விளக்கங்கள் உண்டு. இறைவனே முன்வந்து நம்முடைய தீவினைகளைக் கழிக்கின்ற தெய்வீக இயந்திரத்தைத் தன்னுள் இங்கு கொண்டுள்ளான் என்பது ஒரு பரிபாஷையின் பொருளாகும்.. (வினைக் கழிப்பு ஆலை)

அவனே வந்து நம்மை ஆண்டு கொண்டால்தானே அனைத்தையும் நாம் பெற முடியும். நாம் சென்று வழிபட்டு இறைவன் நம்மை ஆட்கொள்கின்றான் என்ற தத்துவத்தைவிட அவனருளாலே அவன்தாள் வணங்குதல் என்பதுதான் உண்மையும் கூட. ஆண்டவனே முன்வந்து தீர்த்து வைக்கின்றான் என்றால் எத்தகைய அற்புதமான சிவத்தலம் இது! ஆனால் அதற்குரிய மனப்பக்குவத்தையும், ஆழ்ந்த நம்பிக்கையையும், இறைபக்தியையும், நாம் கொண்டிருக்க வேண்டுமே!  செய்த தவறுகளை மீண்டும் செய்யாது மனந்திருந்தி வாழ்கின்றோமோ? ஏதோ சென்றோம், தரிசித்தோம், வந்தோம் என்றிருந்தால் நாம் எப்படி வாழ்க்கையில் முன்னேற முடியும்?

எல்லாம் அவன் செயல்! சற்றே எண்ணிப் பார்!

முக்தி, மோட்சம் பெறுதல் என்பதெல்லாம் மிகப் பெரிய உத்தம வார்த்தைகளாகும். ஏன் பிறந்தோம்? எதற்காக நாம் வாழ்கின்றோம் என்பதை அறிந்து உணர்ந்தால்தான் இத்தகைய முக்தி, மோட்ச நிலைகளின் அடிப்படையே நமக்குப் புரியும். நாம் பிறப்பு எடுத்ததற்கான காரண, காரியங்கள் எத்தனையோ உண்டு என்ற ஒரு நம்பிக்கையைக் கொண்டிருந்தாலே போதும்., அதுவே பலவிதமான மனத்தெளிவை, நமக்குப் பெற்றுத் தந்துவிடும். தீதும் நன்றும் நமக்குப் பிறரால் வருவது கிடையாது, நாம் அனுபவிப்பது எல்லாம் நல்லதோ, கெட்டதோ அனைத்துமே நம்முடைய தீவினைகளை, கர்ம வினைகளைத் தொகுத்து வந்த பாங்கே என்பதை உணர்ந்தாக வேண்டும். மனைவியோ, கணவனோ, குழந்தைகளோ, வீடோ, வாசலோ, பதவியோ, ஏச்சோ, பேச்சோ, உண்பதோ, உணர்வதோ அனைத்துமே நம்முடைய பூர்வ ஜென்ம கர்மவினைகளின் பிரதிபலிப்புத்தான், இதில் எந்தவிதமான ஐயமும் கிடையாது.
தேவாரம் அருளிய மாதவச் செல்வர்கள் மூவருமே பாடிய அருட்திருத்தலமே திருக்கழிப்பாலை, ஸ்ரீசுந்தரப் பெருமான் பாடியதற்கேற்ப இறையடியார்கள் எங்கிருந்தாலும் திருக்கழிபாலை நாதராகிய ஸ்ரீபால்வண்ண நாதேஸ்வரரை நினைத்தால் அங்கெயல்லாம் வந்து அருள் செய்திடுவார். ஆனால் தீவினைகளை எல்லாம் இத்திருத்தலத்தில் இருந்து கொண்டு இங்கேயே பஸ்பம் செய்து அருள்பாலிப்பவனாக, இத்தலத்தின் பெருமையை உணர்த்திடவே சிவபெருமான் இங்கு சுயம்பு மூர்த்தியாய் விளங்குகின்றார். எனவே அடியார்கள் எங்கிருந்தாலும், அவர்களுடைய தீவினைகளைத் தீர்ப்பவராக, இத்திருத்தலத்தில் வாசம் செய்கின்றவராக தெய்வத்திருவுருக் கொண்டவர்தான் ஸ்ரீபால்வண்ண நாதேஸ்வரர். இத்தலத்தில் நம் தீவினை யாவையும் மாள்வது என்பது ஒரு பெரும் பாக்கியம்தானே. அதுவும் சிவபெருமானே வெண்மை நிற தேவ அக்னியில் நம் தீவினைகளை பஸ்பம் செய்கின்றார் என்றால் என்னே நம் பாக்கியம்!

ஸ்ரீஅதிகார நந்தீஸ்வர மூர்த்தி
திருக்கழிப்பாலை

ஸ்ரீஅதிகார நந்தீஸ்வர மூர்த்தி
திருக்கழிப்பாலை

அக்னியில் பலவகை!

அக்னியிலும் பலவித வண்ணங்கள் உண்டு. கலியுகத்தில் நாம் பெரிதும் காண்பது சற்றே சிவந்த நிற அக்னிதான்! நீங்கள் தீயிலும் பலவித வண்ணங்களைப் பார்த்திருப்பீர்கள். கற்பூரத் தீ, விறகுத் தீ, எண்ணெய்த் தீ, விளக்குத் தீ, சூரிய ஒளி, நட்சத்திர ஒளி என அக்னிக்குப் பலவித நிறங்களும், வகைகளும் உண்டு... திருக்கழிப்பாலை நாதராம் ஸ்ரீபால்வண்ண நாதேஸ்வரர் தம்முடைய நேத்திராக்னியிலிருந்து வெள்ளை நிற அக்னியை உருவாக்கியே இங்கு ஜீவன்களுடைய தீவினைகளை பஸ்பம் செய்கின்றார். ஏனென்றால் தீவினைக் காமத்தீயையும், அஃதோடு கூட தீய கர்மவினைகளையும் பொசுக்குகின்ற தெய்வத் திருஅருள்தன்மை வெண்மை நிற அக்னிக்குத்தான் உண்டு. ஸ்ரீஆதிமூல அக்னீஸ்வரநாதராக இத்தீயை உருவாக்குபவர்தான் ஸ்ரீபால்வண்ணநாதேஸ்வரர். ஆமாம் இத்திருத்தல மூர்த்திக்கு இத்தகைய அக்னி சக்தி உண்டு என்பதை நமக்கு உணர்வித்தவர் யார் தெரியுமா? அவள்தாம் இங்கு வேதநாயகியாகப் பரிமளிக்கின்ற இத்திருத்தல அம்பிகையாவாள் !

வேதநாயகி உலாவரும் புனித பூமி!

ஒரு யுகத்தின் பிரமாதி ஆண்டின் மகா சிவராத்திரியின் போது இத்திருத்தலத்தில் மானிட வடிவுடன் வடிவு கொண்டு அனைத்து விதமான வேத மந்திரங்களையும் ஓதி ஓதி வெண்மை நிற அக்னியை தரிசித்து, வெண்மை நிற அக்னியின் சாட்சியாக இறைவி இறைவனை மணந்து வேதநாயகியாக இங்கு அருள்பாலிக்கின்றாள். இன்றைக்கும் ஸ்ரீபால்வண்ண நாதேஸ்வரரின் மூலத்திருமேனியின் பின்னால் இறைவன், இறைவியின் திருஉருவங்களை தரிசித்து மகிழலாம். எனவே இங்கு வேதம் ஓதி வெண்மை நிற அக்னியைத் தரிசித்து இறைவனை கைப்பிடித்தமையால்தான், இங்கு வேதநாயகியாக அருள்பாலிக்கின்றாள். வெண்மை நிற அக்னியின் சிறப்பம்சங்களை உலகிற்கு எடுத்துரைத்து முக்கியமாக தீதுடைக் கர்மவினையைக் கழிக்கின்ற தெய்வத் தன்மை இந்த அக்னிக்கு உண்டு என உணர்த்தியவளே ஸ்ரீவேதநாயகி ஆவாள்.
எனவே நம்முடைய கர்மத் தீவினைகளை மாய்க்கின்ற திருத்தலம் என்றால் அங்கு சென்று நாம் வாழ முடியாவிடினும் ஆங்கே ஓடோடிச் சென்று இவ்விறை மூர்த்தியை வாழ்க்கையில் பலமுறையேனும் தரிசித்திட வேண்டும் அல்லவா! மேலும் திரேதாயுகத்திற்கும் முந்தைய காலந்தொட்டே காலத்தைக் கடந்தவராய் அருள்பாலிக்கின்ற ஸ்ரீபால்வண்ண நாதேஸ்வரருடைய வெண்மை நிற துர்காக்னித் தத்துவத்தை மேன்மேலும் உலகிற்கு உணர்த்தியவர்தான் ஸ்ரீவால்மீகி மகரிஷியாவார். எவ்வாறாகவோ தம் வாழ்க்கையைத் துவங்கி “மரா மரா” என்ற திருமந்திரத்தை ஓதி ராமநாமத்தை ஜெபித்து, இன்றைக்கு நித்திய சிரஞ்சீவியாக, என்றும் பசுமையாகப் பிரகாசிக்கும் ஸ்ரீஇராமாயணத்தைத் தந்தவராக விளங்குகின்றவரே ஸ்ரீவால்மீகி முனிவர். தம்முடைய வாழ்க்கையின் பூர்வஜென்ம கர்மவினைகளைக் கழிப்பதற்கு ஸ்ரீவால்மீகி மஹரிஷிக்கும் அருள்பாலித்த தலமே திருக்கழிப்பாலை என்றால் ஸ்ரீபால்வண்ண நாதரின் மகிமைதான் என்னே என்னே!

ஸ்ரீபால்வண்ணநாதர்
திருக்கழிப்பாலை

அருள்வண்ணங்கூட்டும் பால்வண்ணநாதர்

ஒவ்வொரு மகாசிவராத்திரியின் போதும் இந்த லிங்கத்தின் திருமேனியில் பல சூட்சுமமான வெண்மை வண்ணங்கள் உருவாகின்றன. ஸ்ரீபால்வண்ண நாதேஸ்வரர் என்ற பெயருக்கேற்ப வெண்மை நிறத்துடன் காணப்படுகின்ற இச்சுயம்பு லிங்கத் திருமேனியில் எத்தனையோ வண்ணங்கள் சூட்சமமாகக் காணக் கிடைக்கின்றன. தக்க சற்குருவின் அருளுடன் இவற்றை தரிசித்திடுவோம். மகாசிவராத்திரியின் போது, குறிப்பாக பிரமாதி ஆண்டின் மகாசிவராத்திரியின் போது இத்திருத்தலச் சிவலிங்கத் திருமேனியில் எழுகின்ற வெண்மையான “சுவேத சிவக் கிரணங்களின்“ மகிமையால் வாழ்க்கையில் நாம் அறிந்தோ, அறியாமலோ சேர்த்துள்ள தீவினை கர்மங்களின் கழிப்பிற்கான நல்ல அறவழிகள் காட்டப்படுகின்றன. ஸ்ரீவேதநாயகியாகப் பரிமளிக்கின்ற அம்பிகையே மானுட வடிவுடன் இங்கு வந்து பிரமாதி ஆண்டின் மகாசிவராத்திரியின் போது அனைத்து விதமான வேதமந்திரங்களையும் சூட்சுமமாக ஓதி வேத பூர்ண, பூர்ண சக்திகளை உற்பவித்து, இங்கு வழிபடுகின்ற பக்தர்களின் கர்மவினைகளைக் கழிப்பதற்காக சுவேத சிவக் கிரணங்களின் அனுக்கிரஹத்தைப் பெற்றுத் தருகின்றாள்..

ஸ்ரீவேதநாயகி அம்பிகையே மானுட வடிவெடுத்து வேதமாமந்திரங்களை சூட்சுமமாக ஓதி வேத சக்திகளைத் தினசரி நல்கும் அற்புதமாக அருள்பாலிக்கின்ற திருத்தலமாக இது விளங்குகின்றது. ஸ்ரீவேதநாயகியாக அம்பிகை ஓதுகின்ற வேத மந்திரங்கள் யாவும் ஸ்ரீபால்வண்ண நாதேஸ்வர சிவத்திருமேனியிலிருந்து எழுகின்ற பால்வண்ண சுவேத சிவக்கதிர்களுடன் இணைந்து இங்கு சிவராத்திரியின் போது வழிபடுகின்ற பக்த கோடிகளுக்கு கர்மவினைக் கழிப்புச் சக்திகளாகத் தேகத்தில் பரிமாணம் கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஸ்ரீவால்மீகி மாமுனிவர் மாதசிவராத்திரி மற்றும் மகாசிவராத்திரியின் போதும் வந்து பூஜித்துச் செல்கின்ற மிகச் சிறப்பான ஸ்தலம்.

ஸ்ரீ நந்தீஸ்வர மூர்த்தி
திருக்கழிப்பாலை

வேதமாக்குழி!

வேதத்திற்கு இருவிதமான சக்திகள் உண்டு. வேதத்தின் பிரமாணமாக இறைவடிவமாக விளங்குகின்ற ஓம்கார வடிவமானது வியட்டிப் பிரணவம், சமஷ்டிப் பிரணவம் என்ற இரு ஓம்கார வேதசக்திகளின் இணைப்பாக விளங்குகின்றது. அதே போல் இந்த ஸ்ரீபால்வண்ண நாதேஸ்வர சுயம்புத் திருமேனியானது வேதத்தின் மாபெரும் இரு இறைசக்திகளான அர்த்த மகா சக்தியும், நாரிபூரண சக்தியும் ஒன்று சேர்ந்த சுயம்புத் திருமேனியாக விளங்குகின்றது.

ஓர் உத்தம சிவனடியாருக்கு சிவனும், சக்தியும் சேர்ந்து காட்சியளித்தமையால் இச்சிவலிங்கத் திருமேனியிலிருந்து குறித்த சிவமகா சக்தியும், சக்தி பூர்வ வேதநாயகியும் ஒன்றாகச் சேர்ந்து அருள்பாலித்தமையால் இச்சிவலிங்கத்தின் மேல் பகுதியில் ஒரு சிறு குழியை இன்றும் கண்டிடலாம். இந்த வேதமாக் குழிப்பகுதிக்கு விசேஷமான தெய்வீக அக்னி சக்தி உண்டு. குழிப் பணியாரம், இட்லி போன்ற உணவு வகைகள் எந்த நோய் நொடியின் போதும் உடலுக்கு ஒத்துக் கொள்ளக்கூடிய மிகச் சிறந்த உணவாக விளங்குகின்றன. இட்லி என்பது பேதி, வயிற்றுவலி மற்றும் எந்நோய்க்கும் எந்த நேரத்திலும் எப்போதும் ஒத்துக் கொள்ளக் கூடிய, ஏன் உலகத்திலேயே மிகச் சிறந்த உணவாக விளங்குகின்றது என்பது நம்முடைய தமிழ் மண்ணுக்கு உரித்தான மகத்தானத் தெய்வீகப் பண்பாடாகும். இதற்குக் காரணம் குழிப்பகுதியில் எழுகின்ற விசேஷமான க்ஷீரப் பிரமாண அக்னியாகும். இவ்வாறாக, திருக்கழிப்பாலை சுயம்பு லிங்க மூர்த்தியான ஸ்ரீபால்வண்ண நாதேஸ்வரருடைய லிங்கத் திருமேனியின் மேல்புறம் காணப்படுகின்ற இந்த அரைக்கிண்ண வேதமாக் குழியில் அபிஷேகத்தின் போது பால் சற்றே இறைப் பிரசாதமாகத் தங்கும். இது மகா தெய்வப் பிரசாதமாகும். பாலாபிஷேகத்தின் போது இக்குழியில் ஏற்படுகின்ற சுவேத ருத்ராக்னியில் இப்பாலானது பல ருத்ராக்னி சக்திகளைப் பெற்று மிகச் சிறந்த இறைப் பிரசாதமாக நமக்கு அன்றும், இன்றும் அருள்பாலிக்கின்றது.
வேத பரிமள நாயகியாக, ஸ்ரீவேதநாயகியாக மலர்ந்து அருள்பாலிக்கின்ற அம்பிகையானவள் தம்முடைய வேத மந்திரங்களில் எழுகின்ற வேதாக்னி சக்தியை இக்குழியில் நிரப்பி அபிஷேகப் பிரசாதத்துடன் இணைத்திட ஸ்ரீபால்வண்ண நாதேஸ்வரருடைய அக்னி சக்தியும் சேர்ந்து நமக்கு மிகச் சிறந்த பிரசாதமாக அருள்பாலிக்கின்றது.

வேதமாக் குழியில் சேரும் பாலின் பிரசாத பலன்கள்

ஸ்ரீசதுராக்னி துர்கை
திருக்கழிப்பாலை

எனவே மாத சிவராத்திரி மற்றும் மகாசிவராத்திரியின் போது இக்குழியில் சேரும் பிரசாதத்தைப் பெற்று அருந்துவோருக்குப் பலவிதமான அனுக்கிரகங்கள் வரக் காத்துக் கிடக்கின்றன. அல்சர், குடல் அழற்சி, வயிற்றுப் புண், கல்லீரல், மண்ணீரல், குடல் பின்னல், குடல்புண், சுரப்பி நாளக் குறை, இவ்வாறாக வயிறு சம்பந்தமான நோய்களுக்கு நல்ல நிவாரணத்தைத் தருகின்றவர் ஸ்ரீபால்வண்ண நாதேஸ்வரர் ஆவார். மகாசிவராத்திரியின் போது சுத்தமான பசும்பாலால் சுவாமிக்கு இங்கு அபிஷேகம் செய்து இப்பால் பிரசாதத்தைக் குறைந்தது ஐம்பது பேருக்காவது வரும்படி பால் தானமளித்து வருதல் வேண்டும். அடிக்கடி குறிப்பாக மாத சிவராத்திரியின் போது அபிஷேக ஆராதனைகளுடன் இனிப்பு கலந்த பாலினை நைவேத்தியம் செய்வாகளேயானால் அவர்களுக்கு வயிற்றுப் பிணிகளுக்குத் தக்க நிவாரணம் கிட்டும். அவரவர் வசதிக்கேற்ப நன்கு தாராளமாக பால்தானம் செய்ய வேண்டும்.. அறுவை சிகிச்சை என்றால் ஐம்பதாயிரம் செலவழிக்க மனம் ஒப்புகிறது, அன்னதானம் என்றால் ஐம்பதாக, ஐநூறாகக் கை சுருக்(ங்)குவதேனோ?

நோய் நொடியிலும், பணக் கஷ்டத்திலும் எப்போதுமே வாடுகின்ற குடும்பங்கள் நிறைய உண்டு. எத்தனை பணவசதி இருந்தாலும் நல்லபதவி, நல்ல வீடு இருந்தாலும் ஏதேனும் துன்பங்கள் சங்கிலித் தொடராக வந்தவாறே இருக்கும், இதற்குக் காரண காரியங்கள் பல உண்டு. பித்ரு சாபங்கள், பிறருடைய குடும்பங்களின் ஒற்றுமையைக் குலைத்தது, தம்பதிகளைப் பிரித்தது இவ்வாறாக பலவிதமான கர்மவினைகள் ஒன்று சேர்ந்து சங்கிலித் தொடர் போன்ற துன்பங்களைத் தருகின்றன. மகா சிவராத்திரியின் போதும், மாத சிவராத்திரியின் போதும் திருக்கழிப்பாலை ஸ்ரீபால்வண்ண நாதேஸ்வர மூலவருக்குப் பாலாபிஷேகமும், தாமே அரைத்த சந்தனத்துடன் தேன்கலந்து ஆவுடைக்கு அபிஷேகக் காப்பும் இட்டு குழிப்பணியாரம். இட்லி போன்ற குழியில் உதயமாகும் உணவு வகைகளையும் படைத்து அன்னதானமாகச் செய்து வந்திடில் சங்கிலித் தொடர் போல் வருகின்ற வியாபார நஷ்டங்கள், குடும்பத் துன்பங்களுக்கு நல்ல தீர்வு ஏற்படும்.

ஸ்ரீநடராஜ மூர்த்தி திருக்கழிப்பாலை

கை, கால், கண், செவி போன்ற பகுதிகளில் பலவிதமான உடற்குறைவுகளால் அவதியுறுவோர் பலர் உண்டு. Infeority Complex  எனப்படும் பலவிதமான மனத் தாழ்வுகளால் இவர்கள் படாதபாடு படுகின்றார்கள். வெளி வாழ்க்கையிலும், அலுவலகத்திலும் இவர்களுக்கு ஏற்படுகின்ற இழிவுகளும் சொல்லி மாளாது! தம்முடைய பூர்வ ஜென்ம கர்மவினைகளினால் தமக்கு இத்தகைய உடல் குறைவு ஏற்பட்டாலும் சமுதாயத்தின் இழிவு நோக்கால் இவர்களுக்கு ஏற்படுகின்ற மனவேதனைகள் எத்தனை எத்தனையோ! எனவே உடல் ஊனமுற்றவர்களும், விபத்து காரணமாக அங்கச் சிதைவு ஏற்பட்டவர்களும் மகாசிவராத்திரியின் போது இத்திருத்தலத்திற்கு வந்து சுவாமிக்குப் பாலாபிஷேகம் செய்து எவ்வளவு பேருக்கு பால்தானம் அளிக்க முடியுமோ, தம் வசதிக் கேற்ப பால்தானம் அளித்து வந்தால் வாழ்க்கையில் தமக்கு ஏற்பட்டு வந்த மனச்சோர்வு அகன்று நல்ல மனோ தைரியமும், விடாமுயற்சியும் இறையருளால் கிட்டும்.
இவ்வகையில் உள்ளத்தின் இறை ஆக்கத்திற்கு வழிவகை செய்வதே ஸ்ரீவேதநாயகியின் வேத மகாசக்தியும் ஸ்ரீபால்வண்ண நாதேஸ்வரரின் பரஞ்சோதி வெண்மைச் சுடர்களின் சக்தியும் ஆகும். ஏனையோரும் மகாசிவராத்திரியின் போது ஏழை, எளியோர் மற்றும் ஊனமுற்றோர் இத்தலத்திற்கு வந்து செல்வதற்கான செலவுகளை ஏற்று அதியற்புத தரிசனப் பலன்களைப் பெற்றிடலாம்.. இது மிகச் சிறந்த மகத்தான இறைப்பணியாகும். இவ்வாறு பிரமாதி வருடத்தின் மகாசிவராத்திரிக்கு உரித்தான தலமாக விளங்குகின்ற சிதம்பரத்திற்கு அருகே திருநெல்வாயில் (சிவபுரி) என்னும் இடத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பாடல் பெற்ற சிவத்தலமான திருக்கழிப்பாலை ஸ்ரீவேதநாயகி உடனுறை ஸ்ரீபால்வண்ண நாதேஸ்வரருடைய திருத்தலத்தில் மகாசிவராத்திரியைக் கொண்டாடுவதால் எத்தனையோ தெய்வீக நல்வரங்கள் எளிதாகக் கிட்டுகின்றன.. கிடைத்தற்கரிய இந்த வாய்ப்பை நழுவ விடாது 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகின்ற பிரமாதி வருட மகாசிவராத்திரிக்கான விஷேசமான சிவத்தலமாக அம்பிகையே மானுட வடிவில் வந்து பூஜிக்கின்ற இம்மகாசிவராத்திரியைச் சிறப்பாக கொண்டாடி பலரும் நன்முறையில் நல்வரங்களைப் பெறும் வண்ணம் சிறப்பாக ஏற்று நடத்துமாறு பிரார்த்திக்கின்றோம்.

அமுத தாரைகள்

தொல்லைமிகு தோல் கருமங்களைத் தொலைத்திட!

பொன்னார் மேனியனேயென சுந்தரப் பெருமான் பாடிய திருமழபாடி (திருச்சி அருகே) சுயம்பு லிங்க மூர்த்திதான் தோலால் ஏற்படும் துர்வினைகளுக்குப் பிராயச்சித்தம் தரவல்லவர். இங்குள்ள திருக்குளத்தில் நீராடி, சுவாமிக்குச் சந்தன, தேன், பால் அபிஷேகம் செய்து இங்கு அபூர்வமாக அமைந்துள்ள நான்கு நந்திகளுக்கிடையிலுள்ள கோமுகத்தில் அபிஷேகத் தீர்த்தத்தைப் பிரசாதமாகப் பெற்று அருந்தி வந்தால், தோலால் வரும் தீவினைகளுக்கு நல்ல பிராயச்சித்தம் கிட்டும். ஆனால் ஆழ்ந்த நம்பிக்கையுடன் தொடர்ந்து செய்து வருதல் வேண்டும். தோலோடு நாம் உண்கின்ற பொருட்களான ஆப்பிள், தக்காளி, கொய்யா போன்ற பழவகைகள், வெண்டை, காரட் போன்றவை கலந்த உணவுப் பொருட்களை திருமழபாடி இறைவனுக்கு அர்ப்பணித்து, பழக்காப்பிட்டுத் தானமளித்தலால் தோல் சம்பந்தமான வியாதிகளுக்கும், தோல் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீய கர்மவினைகளுக்கும் நிவாரணம் கிட்டும்.

அட்சர திருஷ்டி தோஷ நிவாரண தூப தீப கண்டி

நம்முடைய துன்பங்களுக்கெல்லாம் மூல காரணமாக விளங்குவது நாமே நமக்கு ஏற்படுத்திக் கொள்கின்ற தீவினைகளாகும். அக்னிக்குத்தான் பலவிதமான தெய்வீக தோஷங்களைப் பஸ்மமாக்குகின்ற தெய்வீக சக்தி உண்டு.. கண்திருஷ்டி, பொறாமை திருஷ்டி, பண திருஷ்டி, வஸ்திர திருஷ்டி, ஆகார திருஷ்டி போன்ற பலவிதமான பொறாமை எண்ணங்களால் எழுகின்ற தோஷங்களுக்கு அக்னி (கண்டி விளக்கு) மூலமாகத்தான் பரிகாரங்கள் கிட்டுகின்றன. நம்முடைய ஸ்ரீ-ல-ஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தின் மூலமாக எடுத்துரைக்கப்படுகின்ற மிகவும் விசேஷமான வழிபாடுகளுள் ஒன்றே “அட்சர திருஷ்டி தோஷ நிவாரண தூப தீப கண்டி” வழிபாடாகும்.

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் எத்தனையோ கோடி யுகங்களுக்கு முன் சிறப்புடன் விளங்கிய இந்த திருஷ்டி தோஷ நிவாரண தீப வழிபாட்டை நடைமுறைக்குக் கொணர்ந்து இது மிகச் சிறந்த விளக்கு வழிபாடுகளுள் ஒன்றாக மீண்டும் விளங்க வேண்டும் என்பதற்காக அரும்பாடுபட்டு வருகின்றார்கள், பொன்னாலாகிய விளக்குகளை விட மண்ணாலான பிருத்வி தீபத்திற்கு மகத்தான சக்திகள் பல உண்டு. பூமியின் மண்ணிற்கு ஏன் இவ்வாறான மகத்துவம்? எத்தனையோ கோடி மூலிகைகள், நட்சத்திரங்கள், கோளங்களின் சக்தி வாய்ந்த ஒளிக் கற்றைகளைத் தன்னுள் தாங்கி நிற்பதால்தான் பூமி மண்ணிற்கு மகத்தான ஆன்மீக சக்திகள் உண்டு. மேலும் பூமாதேவியின் சுத்த பிருத்வி சக்தியாக விளங்குவதால் பூமி மண்ணிற்கு ஈடு இணையானது எதுவும் கிடையாது.
ஆயுர்வேத, சித்த வைத்திய முறைகளில் மண் வைத்தியம் என்ற ஒரு சிறப்பான பிரிவே உண்டு. குத சுத்தத்திற்குக் கூட அக்காலத்தில் ஆற்று மணலைப் பயன்படுத்தி வந்தார்கள் என்பது நாம் அறிந்த ஒன்றேயாகும். இன்றைக்கும் பல துறவிகள் தெய்வீக அணுகுமுறைகளாகக் குத சுத்திக்கு ஆற்று மணலைத்தான் பயன்படுத்தி வருகின்றார்கள். திருஷ்டிக் கழிப்பின் போதும் கூட வீதி மண்ணை, மிளகாய், உப்பு, நெருப்புடன் சேர்த்து பசுஞ்சாணி விறாட்டியில் வைப்பதைப் பார்த்திருப்பீர்கள். மேலும் திருமண நிச்சயத்தின் போது மாப்பிள்ளை வீட்டு நிலத்துச் செம்மண்ணைப் பெண் வீட்டிலும், பெண் வீட்டு நிலத்துச் செம்மண்ணை மாப்பிள்ளை வீட்டிலும் வைத்துப் பரிமாறுவது அக்காலத்தில் மிகச் சிறந்த திருமண ஒப்பந்தங்களில் ஒன்றாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பூமிக்கான பரிகார பூஜைகள் :- மேலும் பாலிகை முளை பூஜை என்ற ஒருவித வழிபாட்டிலே மண் அகல் சட்டியில் சிறிது மணலைப் பரப்பி நீருற்றித் தானியங்களைப் பாலிகையாக, முளைச் செடிகளாக வளர வைத்து பூஜை செய்வார்கள். அகல் சட்டியில் இவ்வகையில் தானிய முளைகளை விளைப்பித்து அவற்றிற்குப் பூஜை செய்து, உறவினர்கள் ஒவ்வொருவரும் தங்கள் இல்லத்திற்குள் பாலிகைகளைப் பரிமாறிக் கொள்வார்கள். திருமணம் மற்றும் (பூணூல்) உபநயனத்திற்கு வருகின்ற உறவினர்களும் தங்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று வைத்து வழிபட்டுப் பாலிகைகளைப் பராமரிப்பதும் உண்டு.. இவையெல்லாம் பிருத்வி சக்தியை, அதாவது பூமியின் மண் சக்தியை நாம் பெறுவதற்காக ஏற்படுத்துகின்ற வழிபாட்டு முறைகளாகும்.  இதே போன்று சிறுநீர், மற்றும் மலஜலக் கழிப்பினால் பூமிக்கு நாம் ஏற்படுத்துகின்ற அபச்சாரத்திற்குப் பிராயசித்தமாக ஓத வேண்டிய சோமசுந்தர பிருத்வி அக்னி பூஜா மந்திரங்களும் உண்டு. பூமியில் பசுஞ்சாணம் தெளித்தல், கோலமிடுதல், செங்காவி இடுதல், முளைப் பாலிகை பூஜை செய்தல், கால்களுக்கு மருதாணி இடுதல், பெரியவர்களுக்குப் பாத பூஜை செய்தல் போன்றவையெல்லாம் பூமிக்கு நாம் இழைக்கின்ற அநீதிகளுக்கும் அவச்செயல்களுக்குமான தக்க பரிகார பூஜைகளாகும். தினந்தோறும் ஆலய மதிற் சுவர்களின் ஓரம் எறும்புகளுக்காக சர்க்கரை, ரவை கலந்த மாவினை இடும்போது எறும்புகள் அவற்றை உண்டு இருகால்களை உயர்த்தி பாத யந்த்ர யோக நிலையில் தமக்கு அன்னமிட்டோருக்கு நன்றி செலுத்தும். இதுவே பூமா தேவிக்கு ப்ரீதியளித்து நாம் பூமிக்கு இழைக்கின்ற அநீதிகளுக்கும் தக்கப் பிராயச்சித்தத்தை ஆன்மரீதியாகப் பெற்றுத் தருகின்றது.

இவ்வாறாக, நம்முடைய வழிபாடுகள் மூலமாகத்தான் நம்முடைய பெரும்பாவங்களுக்கும், பிராயச்சித்தம் தேடமுடியும். நாம் பிறருக்குச் செய்கின்ற சேவையை இறைவனே தனக்குரித்தான பூஜையாக ஏற்று அருள்கின்றான் என்றால் நம் வழிபாட்டு முறைகள்யாவும் மிகச் சிறந்த சமுதாய இறைப்பணிகளாக விளங்குகின்றவை தானே!

பணச் செலவிற்கும் நியதிகள் உண்டே! “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்று சொல்லி விட்டு, பிறருடைய பொறாமை எண்ணங்களால் நமக்கு தோஷங்கள் ஏற்படுகின்றன என்றால் எப்படிப் பொருந்தும் என்று யோசிக்கின்றீர்கள் அல்லவா! நமக்கு வரவாக வருகின்ற ஒவ்வொரு ரூபாயையும் எவ்வாறு செலவழிக்க வேண்டும் என்று பணக் கழிப்பு நியதிகளும் உண்டு. இத்தகைய தெய்வீக இரகசியங்களைத் தக்க சற்குரு மூலமாகப் பெறுதல்தான் சிறப்பாகப் பயனுள்ள வாழ்விற்குப் பெரிதும் உதவுகின்றது. ஏதோ பணம் வந்தது, உப்பு, புளி , மிளகாய், அரிசி வாங்கினோம், ஆடைகள் வாங்கினோம், அடகு வைத்த நகைகளை மீட்டினோம் என்று அலட்சியமாகக் கருதி விடாதீர்கள். நம்முடைய வசதிக்கு மீறி ஆடம்பரமாக வாழும் போது நாமே சில வரம்பற்ற தோஷங்களை  உருவாக்கிக் கொள்கின்றோம். மேலும் நியாயமான முறையில் சம்பாதித்து வாங்கப்பட்ட பொருட்களில்தான் நல்ல தர்ம கிரணங்கள் பரிணமிக்கும். லஞ்சம், ஊழல், ஏமாற்றுதல், அலுவலகச் சொத்து / பிறருடைய சொத்தை, பொருளை அபகரித்தல் போன்றவை மூலமாக நமக்கு வருகின்ற பொருட்களில் தோய்கின்ற தோஷங்கள் கூட வினைப் பிரதிபலிப்பாக நமக்குப் பலவிதமான தீர்க்க முடியாத தோஷங்களைத் தந்து நம்மைக் குழப்பி விடும். இந்த அட்சர திருஷ்டி தோஷ நிவாரண கண்டியின் நவசாளர துவாரங்கள் மூலமாக நவயோக ஜோதியை தரிசிக்கின்ற போது கண்களின் மூலமாக ஊடுருவிச் செல்லக் கூடிய கதிர்களின் விசேஷமான தன்மையால், 72000 நாடி நரம்புகளிலும் பல ஆண்டுகளாக தேங்கியிருக்கின்ற பலவிதமான தோஷங்களுக்கும், தீய சக்திகளுக்கும் நிவர்த்திகள் கிட்டுகின்றன. எல்லாவிதமான தோஷங்களையும் மூலகாரணம் அறியாது ஒரேயடியாகப் போக்கி விட முடியாது. சில தோஷங்கள் சில மூலிகைகளாலும், சில மந்திரங்களாலும், சில பூஜைகளாலும்தான் தீரும். கண் திருஷ்டிகளால் ஏற்படுகின்ற தோஷங்களுக்கு நிவர்த்தியாக கண்களால் தரிசிக்கின்ற ஜோதிப் பிரவாகம் மூலமாகத் தான் யோகமுறையில் முழுமையான தீர்வுகளைப் பெறமுடியும். மேலும் நம் உடலில் ஒன்பது துவாரங்கள் உள்ளமையால் இவற்றின் மூலமாக வெளிச் செல்லமுடியாத கழுவினைகளுக்கும் தீர்வு அளிப்பதாக இந்த நவசாளர ஜோதி தரிசன முறை அமைக்கப்பட்டுள்ளது.. இதுவே இந்த விளக்கு வழிபாட்டின் மிகவும் விசேஷமான பலன்களாகும். சித்தர்களுடைய யோக ஜோதி வழிபாடுகளில்தான் இத்தகைய விளக்கங்களை, பலாபலன்களை நாம் பெற முடியும்.

ஜோதி தேவதைகள்!

தீப வழிபாட்டில் எந்த இடத்தில் விளக்கை ஏற்றினாலும் உடனே ஆங்கே ஆவாஹனம் ஆகின்ற ஜோதி தேவதைகள் நிறைய உண்டு. அந்தந்தக் காலத்திற்கேற்ப பவ கரண, நட்சத்திர கிழமைகளுக்கேற்ப இந்த ஜோதி தேவதைகளுடைய பிரசன்னமும் மாறுபாடும். ஜோதியில் ஆவாஹனம் ஆகின்ற அக்னி தேவதைகளும் விளக்கிலே குடியேறுகின்ற ப்ரத்யதி ஜோதி தேவதைகளும் உண்டு. விளக்கின் ஒளிப் பிரகாசத்தினைச் சுற்றியுள்ள aura எனப்படும் ஒளிவட்டத்தில் அமர்ந்து பூஜிக்கின்ற, அருள் தருகின்ற பிரகாச தேவதைகளும் உண்டு. எனவே நாம் மிகவும் சர்வ சாதாரணமாகக் கருதுகின்ற விளக்கேற்றும் தெய்வீக வைபவத்தில் நிகழ்கின்ற தேவதைகளின் அருளாட்சியைக் காண்பதற்கு ஆயிரம் கோடிக் கண்கள் வேண்டும். அந்த அளவிற்குத் தீப வழிபாடானது எத்தனையோ இறை ரகசியங்களைத் தன்னுள் கொண்டுள்ளது.
மாலை சந்தியா வேளையில் ஒரு சிறிய விளக்கை இரண்டு திரிகள் வைத்து இரு ஜோதிகளை ஏற்றினால் கூடப் போது, இதன் மூலம் நிகழ்கின்ற தெய்வீக விந்தைகள் ஏராளம் ஏராளம்! ஏதோ விளக்கை ஏற்றினோம். கீழே பூமியில் வீழ்ந்து கும்பிட்டோம் என்று நாம் எழுந்து வந்து விடுகின்றோமே! ஆனால் இந்தச் சிறு தீப வழிபாட்டில் கூட நிகழ்கின்ற தெய்வீக அற்புதங்கள் தாம் எத்தனை எத்தனை! ஏனென்றால் தெய்வ வழிபாட்டிற்காக எங்கு விளக்கை ஏற்றினாலும் அங்கே பிரசன்னமாக வேண்டிய தெய்வ நியதி, பல அக்னி, ஜோதி தேவதைகளுக்கு இருப்பதால், அவர்கள் சும்மாவா வந்து செல்வார்கள்.. தமக்கு பூலோகத்திற்கு வந்து விளக்கு ஜோதியில் ஆவாஹனம் ஆவதற்கும், அமர்வதற்கும் தங்கி வழிபடுவதற்கும் வாய்ப்பளித்த அந்த இல்லத்திற்கும், இல்லத்தில் உள்ளோருக்கும் நிறைய தீப அருளாசிகளை அள்ளி வழங்கிச் செல்கின்றார்கள்.. இதனால்தான் நாம் எத்தனையோ துன்பங்களுக்கு இடையேயும் இந்த பெறுதற்கரிய மனிதப் பிறவியில் ஒரு சிறு விளக்கு ஜோதி தரிசன பலன்களினால் நிம்மதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை மறந்து விடாதீர்கள்!
எனவே, இந்த திருஷ்டி தோஷ நிவாரண தீபவழிபாட்டின் மூலம் நமக்கு கிட்டுகின்ற தெய்வீக இரகசியங்கள் எத்தனையோ உண்டு. மேலும் இதனால் கிட்டுகின்ற தோஷ நிவாரண பலன்களோடு, நவசாளர, வித்யா ஜோதி வழிபாடும் பரிபூரணம் பெறுகின்றது என்பதே நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியதாகும். இந்த ஜோதி முன்னால் பத்து நிமிடமாவது அமர்ந்து கண் திறந்து ஜோதியை தரிசித்திடல் வேண்டும். இவையெல்லாம் ஸ்ரீவித்யா பூஜையிலும் கூட வருகின்ற தெய்வீக தீப இரகசியங்கள் ஆகும். ஆனால் கலியுகத்தில் அனைவராலுமா கடினமான ஸ்ரீவித்யா பூஜை நியதிகளைக் கடைபிடிக்க முடிகின்றது. சற்றே சிந்தித்துப் பாருங்கள்!

எனவே ஜாதி, மத, இன, குல பேதமின்றி அனைவருக்குமே ஸ்ரீவித்யா பூஜையின் ஜோதி பூர்வமான பலன்களைப் பெற்றுத் தருவதற்காகவே இத்தகைய எளிய ஆரம்ப தீப வழிபாட்டு முறை சித்புருஷர்களால் அளிக்கப்பட்டுள்ளது. கடினமான நியதிகளைக் கொண்டிருந்தாலும் ஸ்ரீவித்யா பூஜைகள்தாம் பெறுதற்கரிய, தெய்வ நிலைகளைத் தர வல்லவை என்பதை மறந்து விடாதீர்கள். தீபவழிபாடு பற்றிய மேலும் பல அரிய விளக்கங்களை எம் ஆஸ்ரமத்தின் “சுபமங்கள ஜோதி மஹிமை” என்று நூலில் காணலாம்.

ஷோடச நித்யா துளசி மாட மகிமை

நல்ல சகுனம் கூட்டும் ஷோடச நித்யா துளசி மாடம். ஷோடச நித்யா துளசி மாடம் நம் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்திலும், சென்னை ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்தராலயத்திலும் கிடைக்கும். மஹாவிஷ்ணு மூர்த்தியின் பரிபூரண தெய்வானுக்ரகத்தைக் கொண்ட தேவ மூலிகைகளுள் ஒன்றாக விளங்குகின்ற துளசி அதிஅற்புத ஆன்மீகக் குணங்களுடன் மகத்தான தெய்வீக மருத்துவ சக்தியையும் கொண்டதும் ஆகும். இறைவனுடைய திருமேனியை அலங்கரிப்பதால், இறைவனுடைய சுவாச தீபமாகவே அமைந்திருப்பதால் திருத்துழாய் என்னும் அற்புத நாமத்தைப் பெற்றதும் ஆகும். விடியற்காலையிலும், மாலையிலும் பெறுகின்ற துளசிச் செடி தரிசனமே எத்தனையோ கோடி தோஷங்களைத் தீர்க்கவல்லதாகும். நாம் ஒவ்வொரு முறையும் வெளியில் சென்று திரும்பும் போது பலவிதமான தீய தோஷ சக்திகளைக் காலணிகளிலும், ஆடைகளிலும், உடலிலும் சுமந்து வருகின்றோம், வெளியே செல்லும் போது துளசியைப் பிரதட்சிணம் செய்து தரிசித்து வணங்கிச் செல்லும் போது பலவிதமான தோஷங்கள் வெளியிலிருந்து நம்மை அண்டாதவாறு இந்த துளசி தரிசனப் பலன்களே ரட்சையாக நம் உடலில் அமைகின்றது.
மேலும் அறிந்தோ, அறியாமலோ நம்முடைய உடலில் நாம் தேக்கி வருகின்ற தோஷங்களையும் நிவர்த்தி செய்வதாக விளங்குவதே துளசிச் செடியின் தரிசன பலன்களாம். நகரத்தில் அமைந்துள்ள Flat System –மாகிய இல்ல அமைப்புகளைப் பார்க்கின்ற போது தோட்டத்தில் துளசியை வைத்து வளர்ப்பது இயலுமா என்றுதான் கேட்கத் தோன்றுகின்றது. இத்தகைய இட நெருக்கடிகள் கலியுகத்தில் ஏற்படும் என்பதை தீர்க தரிசனமாக அறிந்தேதான் துளசிமாட பூஜா நியதியை நமக்குப் பெரியோர்கள் பெற்றுத் தந்தார்கள். துளசிக்கும் நவாவர்ண சக்திகளுக்கும் நிறைய தொடர்புகள் உண்டு.

பூமாதேவிக்கும் ப்ரீதியான அர்ச்சனா பாத்திரமாக துளசி விளங்குவதால், நாம் துளசியைச் சுற்றி வலம் வரும்போது நம் பாதங்களின் ரேகைகளில் பூமத்ய ஆகர்ஷ்ண ஸ்பரிசத்தால் ஏற்படுகின்ற பூமந்திர சக்திகள் பாத ரேகைகள் மூலமாக உடலில் சேர்கின்றன. நம் இருதயத்தை பலப்படுத்தக் கூடிய தேவ நாள சக்தியைக் கொண்டதாக இந்த ஆகர்ஷ்ண சக்தி விளங்குகின்றது.. எனவேதான், இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டோரும், இருதயத்தில் கோளாறு உள்ளவர்களும், இருதய நோய் ஏற்படக்கூடாது என்று எண்ணுபவர்களும் அவரவர் உடல்வாகிக்கேற்ப துளசிச் செடியை அடிக்கடி அடிபிரதட்சிணம் செய்து வருவார்களேயானால் இப்பிரதட்சிணப் பலனானது இருதயத்திற்கு நல்ல வலுவைத் தருகின்றது . கால் பாத ரேகைகளில் உள்ள இருதயத்துடன் தொடர்புடைய ஹிருதயாகாச ரேகைகைன் சக்தி விருத்தியாகி நல்ஆரோக்யத்தைத் தருகின்றது.
பஞ்ச பாண்டவர்களில் மிகச் சிறந்தவராக மகத்தான  அறிவு பெற்றவனாக விளங்குகின்ற சகாதேவன், துளசி பூஜை, துளசி பிரதட்சிணம் மூலமாகத்தான் தன்னுடைய தெய்வீக அறிவை விருத்தி செய்து கொண்டது மட்டுமல்லாமல் பாண்டவர்களுக்கு எத்தகைய பேராபத்து வந்தாலும், மனங்கலங்காதவனாக நல்ல இருதய வலுப்பெற்றவனாக, பகைவர்க்கும் நல்லது செய்யும் பாங்கு உடையவனாகத் திகழ்ந்தான். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவே எடுத்துத் தந்த கிருஷ்ண துளசிச் செடியை பூஜித்துத்தான் ஸ்ரீசகாதேவன் தன்னுடைய  தெய்வத் திருவருளைப் பெருக்கிக் கொண்டு இன்றைக்கும் மாபெரும் தெய்வ சகாப்தம் படைத்தவனாய் விளங்குகின்றான். சகாதேவன் ஆயகலைகள் 64லும் சிறந்து விளங்குவதற்குக் காரணமாக இருந்தது இத்துளசி பூஜைதான். சகாதேவனுடைய மாதவ கோச சாங்கியப்படிதான் நம்முடைய ஆஸ்ரமத்திலும் ஷோடச நித்யா துளசிமாடம் நன்முறையில் பூஜிக்கப்பட்டு திருஅண்ணாமலையின் திருக்கிரணங்கள் படும்படி சூரிய சந்திர வெளிச்சங்களில் அந்தந்த ஹோரைகளில் வைக்கப் பெற்று அடியார்களுடைய பூஜைகளுக்காக அளிக்கப்படுகின்றது.
ஷோடச நித்யா துளசி மாடம் பற்றிய தக்க விளக்கங்களை சென்னை ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயத்திலும், திருஅண்ணாமலை ஆஸ்ரமத்திலும் பெற்று பக்தர்கள் துளசிமாட பூஜைகளை நன்முறையில் கடைபிடித்து பெறுதற்கரிய பலாபலன்களை அடையுமாறு கேட்டுக் கொள்கின்றோம். கலியுக மனிதனானவன் எத்தனையோ விதமான தீய ஒழுக்கங்களிலும், தீவினைகளிலும் தன்னைச் சிக்க வைத்துக் கொண்டு பலவிதமான சாபங்களுக்கும், பாவங்களுக்கும், ஆளாவதால்தான், துளசிமாட பிரதட்சிணம் போன்ற எத்தனையோ விதமான பரிகார முறைகளை நம் மூதாதையர்கள் எளிமைப்படுத்தி கலியுகத்திற்கெனவே தந்துள்ளார்கள். இவற்றை எடுத்துரைப்பதற்காகத்தான் மஹரிஷிகளும், சித்புருஷர்களும், யோகியர்களும், கலியுகத்தில் மனிதனோடு மனிதனாக, சற்குருவாக, மலர்ந்து நமக்கு அருளாசிகளை வழங்குகின்றார்கள்.

எனவே, ஸ்ரீவிஷ்ணுபதி புண்யகால பூஜை, ஷோடச நித்யா துளசி வழிபாடு, நவாவர்ண ஊஞ்சல் ஆராதனை போன்ற பலவிதமான எளிமையான வழிபாட்டு முறைகளை மேற்கொண்டு நம்முடைய கர்மவினைகளுக்குத் தக்க பிராயசித்தத்தைத் தேடிக் கொள்வோமாக!

ஸ்ரீஉத்தர கண்ட சித்தேஸ்வரர் :- பாற்கடலில் திரண்டு எழும் ஆலகால விடத்தை இறைவன் தன் திருக்கண்டத்தில் தாங்குவார் என்பதைப் பல கோடி யுகங்களுக்கு முன்னரேயே தீர்கதரிசனமாக உணர்ந்திருந்தார் ஸ்ரீஉத்தரகண்ட சித்தேஸ்வரர். ஆதிசிவனின் திருக்கண்டத்தில் ருத்ர ஞான யோகம் பூண்டு தங்கியிருந்து இறைவனுக்குச் சேவையாற்ற வேண்டும் என்பதற்காகக் கடுந்தவம் புரிந்தார். ஆலகாலவிடத்தை இறைவன் தாங்கிய போது அம்பிகை ஈஸ்வரனின் திருக்கழுத்தில் தம் கரங்களால் ஸ்பரிசித்து, விடம் மேற்செல்லவிடாமல் தடுத்திட்டாள்.. திருக்கண்டத்தில் ருத்ர ஞான யோகம் பூண்டு விடத்தின் அக்னியை ஓரளவு தன்னுள் தாங்கிய உத்தர கண்ட சித்தேஸ்வரர் ஈசுவர அம்பிகை ஸ்பரிச ஞானத்தால் பெறுதற்கரிய ருத்ர ஞான ஒளியைப் பெற்றார். தேவர்கள் தாம் பெற்ற அமிர்தத்தை அறியாமையால் இறைவனுக்குப் படைக்க மறந்து அசுரர்களுடன் அதைப் பகிர்வதற்கான யுத்தத்தில் ஈடுபட்டமையால் தேவலோகமே ஸ்தம்பித்து இருளில் ஆழ்ந்தது, தங்கள் அறியாமையை உணர்ந்து, இருமையில் மூழ்கிய தேவலோகத்தை மீட்டு தேவஒளிதனைப் பெற்றிட அவர்கள் திருக்கயிலாயம் ஏகினர்..
மோகினி அவதார வைபவத்தில் தோற்றம் கொண்ட ஹரிஹர சுதனான ஐயப்பனுக்குத் தம் திருக்கண்டத்தில் ஒளிர்ந்த ருத்ர ஜோதி மணியை சர்வேஸ்வரன் மணிகண்டனுக்கு அளித்திட்டார். அதிலிருந்து தோன்றிய ருத்ர ஞான ஒளியை உத்தர கண்ட சித்தேஸ்வரர் பெற்று தேவர்களுக்கு தேவஒளியாக உத்தராயண புண்ணிய காலத்தை அளித்தார். இதனால் அவர்களுக்கு தெய்வ ஒளி கூடிய பகல் காலமாக உத்தராயண புண்ணிய காலம் அமைந்தது. தினந்தோறும் குறிப்பாக உத்தராயண புண்ணிய காலத்தில் (தை முதல் ஆனி வரை) குருவருளுடன் காலையிலும், மாலையிலும் “ஸ்ரீஉத்தரகண்ட சித்தேஸ்வர மஹரிஷிம் தர்ப்பயாமி” என்று ஓதி சுண்டு விரல், மோதிர விரல், நடு விரல் வழியே நீரை வார்த்து அர்க்யம் அளித்து வந்தால் அறியாமை நீங்கி பிள்ளைகள் நன்முறையில் கல்வியில் மேன்மை பெறுவர். ஞானஒளியையும், உத்தராயண புண்ணியகால முக்தியையும் கூட்டும் வழிபாடிது!

திருக்கழிப்பாலைச் சதுராக்னி துர்க்கா தேவி!

கன்னிப் பெண்களின் திருமணத் தடங்கல்களைத் தீர்க்கும் உன்னத துர்க்கா தேவி! கணவனின் தீராப் பிணி தீர்க்கும் துர்க்கையம்மன்! கொந்தளிப்பில் அவதியுறுகின்ற குடும்பத்திற்கு நல்லமைதி தந்து வாழ்த்தும் துர்க்கை அம்பாள்!

பிரமாதி ஆண்டு மாசி சிவராத்திரி தினத்தன்று (4.3.2000) உலக அன்னையாம் மஹேஸ்வரி அம்பிகை தானே மானுட ரூபத்தில் வந்து பூஜித்து அருள்பாலிக்கின்ற திருக்கழிப்பாலைச் சிவத்தலத்தில் வெளிப்பிரகாரத்தில் நின்ற கோலத்தில் மகத்தான முறையில் அருள்புரிகின்ற அம்பிகையே ஸ்ரீசதுராக்னி துர்க்கா தேவியாவாள். இதனை பின்னமடைந்து விட்டது என்று கருதி புதிதாக ஸ்ரீமகா துர்க்கையைத் தற்போது பிரதிஷ்டை செய்திருந்தாலும் பழமையான இந்த ஸ்ரீதுர்க்கைக்குப் பூஜையின்றி இருப்பதை நாம் அறிந்து வருந்துகின்றோம். இன்று பார்ப்பதற்கு பின்னமுற்றது போல் தோன்றினாலும் அபரிமிதமான தெய்வீக சக்தியைத் தன்னுள் நிலைநிறுத்திக் கொண்டு அருள் பொழியும் அன்னையே ஸ்ரீசதுராக்னி துர்க்கையாவாள்.
அக்னியில் ஏழு வகைகள் உண்டு.. அக்னி பகவானின் திருமூலத்தினின்று எழுகின்ற மூன்று வித அக்னி நாக்குகள் எழுஞ் சுடர்களாய் மலர்ந்து ருக், யஜுர், சாமம், அதர்வணம் எனும் நான்கு வேதங்களின் சதுராக்னி அம்சங்களாகவும் கனிந்து தன்னைப் பலவகைகளில் பகுத்துக் கொள்கின்றது. ஸ்ரீபிட்சாடன மூர்த்தியாக இறைவன் உருக் கொண்டபோது அவர்தம் மேன்மையை அறியாது மாயையின் வசப்பட்ட மறை பொருளறிந்தோர் தாம் கற்ற வேதா மாமறைகளையே ஈசன் மீது ஏவினார்களன்றோ! இதனால், ருக், யஜுர், சாம, அதர்வண நான்கு மாமறை வேதமூர்த்திகளும் தாங்கள் ஈசனையே எதிர்த்தற்கானப் பிராயசித்தம்தனைத் தந்தருள்மாறு ஸ்ரீபிட்சாடனரையே வேண்டினர். நான்கு வேதங்களுக்கும் கருப்பொருளாக மூல வேதாக்னி என்ற ஒன்று உண்டு. இந்த மிகவும் புனிதமான, விசேஷமான அக்னியானது. பொதுவாக அரணைக் கட்டையில் தான் ஆவாஹனம் ஆகும் தெய்வீகப் பண்புடையது ஆகும்.. இதனால்தான் இன்றைக்கும் அரணைக் கட்டையைக் கடைந்து இயற்கையாகவே தீப்பொறியை உண்டாக்கி இப்புனித அக்னியில் வேள்வி/யாகம்/ஹோமம் ஆற்றுகின்றோர் சிலர் உண்டு.. நன்முறையில் வேதத்தை உச்சரித்து ஓதிப் பலரும் நலம்பெறும்படிப் பயன்படுத்தினால்தான் இந்த வேதாக்னியானது வேதமா சக்தியாக மாறிப் பலனளிக்கும்.

ஸ்ரீபிட்சாடண மூர்த்தியே பரிவு கொண்டு நான்கு வேத மூர்த்திகளிடமும் “எங்கு அம்பிகையே வேதமந்திரங்களையும், மாமறைத் துதிகளையும், பீஜாட்சரங்களையும், ஓதி எம் துணைவியாய் வேதவல்லியாக அவதாரம் புரிகின்றாளோ எந்த வேதமானது எம்மீது ஏவப்பட்டு பின்னப்பட்டதோ அப்பின்னங்களைக் களைகின்ற துர்க்கை தேவியாய் அங்கு நான்கு வேதமறைகளின் உண்மையான மூல வேதாக்னியிலிருந்து அம்பிகை தோன்றி சதுராக்னி துர்க்கா தேவியாய் உருவெடுத்து நிற்பாள். அங்கு சென்று பிராயச்சித்தம் பெறுவீர்”, என ஈஸ்வரன் அருளாணையிட்டார். இதனைச் சித்தர்களின் “துர்க்கா ஞானபத்ர சித்த கல்ப சூத்ரம்” தெரிவிக்கின்றது.. இங்குதான் வேதவல்லியின் திருச்சந்நதியில் ஸ்ரீசதுராக்னி துர்க்கை தேவியின் அருளால் வேதமூர்த்திகளின் பின்னங்கள் களையப் பெற்றன. இந்த துர்க்கை அம்பிகையே பூஜையின்றித் தற்போது வாடுகின்றாள் எனில் என்னே சோதனையிது!

எனவே திருக்கழிப்பாலையில் அருள்புரிகின்ற சதுராக்னித் துர்க்கை தேவியே இன்றைக்குச் சற்றே பின்னமுற்றாற் போல் காணப்படினும் நம் தூலக் கண்களுக்குத் தான் இவ்விதம் தோன்றுகின்றதே தவிர அனைத்து சதுர்வேத அக்னி சக்திகளையும் தன்னுள் கொண்டவளே சதுராக்னித் துர்க்கா தேவியாவாள். எனவே பின்னமுற்றவள் என இத் துர்க்கா தேவியை வழிபாட்டிலிருந்து மேலும் ஒதுக்கிட வேண்டாம்.. தாராளமாக வழிபட்டிடலாம்.. நிச்சயமாக வழிபட்டாக வேண்டும். நித்ய பூஜையையும் தொடர்ந்திட வேண்டும்.. தவறான முறைகளுடன் அறிந்தோ, அறியாதோ வேதமந்திரங்களைத் தவறாக உச்சரித்தமைக்கும், இதனாலான வேத பின்னங்களையும் முறையான பூஜைகளால் மன்னித்து நல்வரங்களை அருள்பவளே சதுராக்னி துர்க்கா தேவியாவாள்.

சிதம்பரத்திலிருந்து 20.கி.மீ தொலைவிலுள்ள திருநெல்வாயில் (சிவபுரி) அருகிலுள்ள பாடல் பெற்ற சிவத்தலமாகிய திருக்கழிப்பாலையில் ஸ்ரீவேதவல்லி சமேத பால்வண்ணநாதரின் ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் இன்றைக்கு பின்னமுற்றதாகக் காட்சி தரும் துர்க்கா தேவியே சொல்லிலடங்காப் பெருமைகளுக்குரிய சதுராக்னி துர்க்கா தேவியாவாள்.. ஞாயிறு, செவ்வாய் நாட்களில் ராகு கால நேரத்தில் ஸ்ரீசதுராக்னி துர்க்கா தேவிக்குச் சந்தனக் காப்பிட்டு மாதுளம்பழ முத்துக்களால் அலங்கரித்து ஸ்ரீதுர்கா ஸுக்தம், அபிராமி அந்தாதி, ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அந்தாதி, விளக்குத் துதிகள் போன்றவற்றை ஓதி, எலுமிச்சைக் கனித் தோலில் நல்லெண்ணெய்த் திரியுடன் ஜோதி கூட்டி வழிபடுவீர்களாக!

ஸ்ரீகாத்யாயனாய வித்மஹே கன்யகுமாரி தீமஹி
தந்நோ துர்கி ப்ரசோதயாத்

என்ற ஸ்ரீதுர்க்கா காயத்ரீ மந்திரத்தையும்

நால்வேத நற்றீயில் நாதனவன் நிழல் வேண்டி
பால்வண்ணன் பாதமுறை பரஞ்ஜோதி துர்க்கையவள்
சால்புடனே சதுராக்னி சக்தியுடன் காண்போமே!

என 1008 முறை ஓதி ஏழைகளுக்கு மஞ்சள் நிற உணவு, சிவப்பு நிற ஆடைகள், மங்களப் பொருட்களை அளித்து வந்திடில் பலவிதமான திருமணத் தோஷங்களால் அவதியுறும் கன்னிப் பெண்களுக்குத் திருமணத் தடங்கல்கள் நீங்கி நன்முறையில் திருமண வாழ்வு அமையும். எத்தனையோ நேர்த்திகள் வைத்தும் வைத்தியம் செய்தும் பிணி தீராது வாடுகின்ற கணவன்/மனைவியின் நோய்க்குத் தக்க தீர்வுகளை பெற்றிட தம்பதி சகிதம் இத்தலத்தில் சதுராக்னி துர்க்கைக்குப் பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, மருதாணி போன்ற மூலிகைத் தைலங்களால் (தேங்காய் எண்ணெயுடன்) தைலக் காப்பிட்டுக் கீரைகள், முந்திரி, திராட்சை போன்ற மூலிகைகள் நிறைந்த உணவு மற்றும் உலர்ந்த பழவகைகளைப் படைத்து ஏழைச் சிறுவர் சிறுமியர்க்கு தானமாக அளிக்க வேண்டும்.

தினசரி வாழ்க்கையையும், வியாபாரத்தையும், அலுவலகப் பணியையும் கொந்தளிப்புடன் கழிப்போர் உண்டு. இவர்கள் திங்கட்கிழமையன்று இராகுகால நேரத்தில் இத்தேவிக்கு ஸ்ரீசந்திர பகவானுக்குப் ப்ரீதியை அளிக்கும் வெண்மையான வெண்ணெய்க் காப்பிட்டு ஏழைகளுக்கு வெண்ணெயை தானம் அளித்தலால் குடும்பத்தின் கொந்தளிப்புகள் நீங்கி அமைதிப் பூங்காற்று வீசும்... சிதைந்த தெய்வச் சிலை எனக் கருதிடாது கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்ற திருக்கழிப்பாலை ஸ்ரீசதுராக்னி துர்க்கையம்மனுக்கு தக்க வழிபாட்டினை மேற்கொண்டு பெறுதற்கரிய பலன்களைப் பெறுவதுடன் துன்பங்களுக்கானத் தீர்வுகளுடன் நல்ல மன அமைதியும் பெறுவீர்களாக! இவ்வகையில் பின்னமுற்றது போல் காட்சியளித்து இன்றைக்கும் வழிபாட்டில் உள்ள தெய்வ மூர்த்திகள் இன்னும் எத்தனையோ உண்டு என்பதையும் நினைவூட்டுகின்றோம். சமுதாய நலன்களுக்காக வேதத்தைப் பயன்படுத்தாது, சுயநலத்திற்காகவும், பொருளீட்டும் நோக்கத்துடனும் வேதத்தைக் கையாள்வோர் தக்கப் பிராயச்சித்தம் பெற வேண்டி நாட வேண்டிய தேவியே ஸ்ரீசதுராக்னி துர்க்கா தேவியாவாள். ஸ்ரீதுர்க்கா மந்திரத்துடன் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தையும் கூட்டித் துறவு நிலையில் ஓதுகின்ற ஸ்ரீதுரீய காயத்ரீ மந்திரத்திற்கு ஏற்ற உபாசனை தேவியே ஸ்ரீசதுராக்னி தேவியாவாள்.

நித்ய கர்ம நிவாரணம்

நித்ய கர்ம நிவாரண சாந்தி

அந்தந்த நாளில் வலுவான ஆட்சியைப் பெற்றிருக்கும் தீர்க்கமான பார்வையை உடைய திதி, நட்சத்திரம், யோகம், கரணம் கிரகங்களின் தன்மைக்கேற்ப அந்நாளுக்குரிய விசேஷ பூஜை, வழிபாடு முறை அளிக்கப்பட்டுள்ளது . இதனை முறையாக ஆழ்ந்த நம்பிக்கையுடன் கடைபிடித்திடில், குருவருளால் ஒவ்வொரு நாளையும் தீய கர்ம வினைகளின் கழிப்போடு மேலும் எவ்விதமான புதிய தீவினைகளும் சேரா வண்ணந் தடுத்து சாந்தமான நித்ய வாழ்வைப் பெற்றிடலாம்.

1.3.2000 – இன்று பூராட நட்சத்திரக்காரர்கள் குபேர பூஜை செய்தல் நலம். 108/1008 போற்றிகள் ஜெபித்து ஸ்ரீகுபேர பகவானுக்கு மல்லிகைப் பூவால் அர்ச்சனையுடன் சர்க்கரைப் பொங்கலும் படைத்துத் தானம் செய்திடில் – செல்வச் செழிப்பு கூடும்.

2.3.2000 – தீயொழுக்கத்தில் வாழ்கின்ற பெண்கள் நல்ல முறையில் திருந்தி வாழ திருமணம் செய்து வைத்தல் சிறப்பான பணியாகும். இதன் புண்ணிய சக்தியால் திருமணம் செய்து வைப்பவரின் சந்ததி விருத்தியாகும்.

3.3.2000 – பெண் குழந்தையைப் பெற்றெடுத்த இளம் விதவைக்கு நன்முறையில் மறுமணம் செய்து வைத்தல் சிறப்பான திருப்பணி. இதனால் மனைவியைத் துன்புறுத்தி இறக்கச் செய்த பாவத்தின் பங்கு ஓரளவு தீரும்.

4.3.2000 – பிச்சை, குப்பை, குப்புச்சாமி, அமாவாசை, பாண்டு, கடப்பாறை, தோட்டி போன்ற காரணப் பெயர்களை உடையவர்களுக்கு வஸ்திரமும், அன்னதானமும் செய்திடில் – தீய நண்பர்களின் தொல்லையிலிருந்து தப்பலாம்.

5.3.2000 – எலுமிச்சம்பழத் தோட்டத்தில் வேலை செய்கின்றவர்களுக்கு உணவு உடை தானம் செய்திடில் – முதியோர்களின் உதவி கிடைக்கும்.

6.3.2000 – காலணிகளைத் தைக்கின்ற ஏழைத் தொழிலாளி/ கூலியாட்களுக்குப் புது செருப்பு வாங்கித் தந்து உணவு, உடை, அளித்திடில் – பேச்சுத் தும்பை எனும் திருஷ்டி தோஷம் விலகும்.

திருகோடிக்கா திருத்தலம்

7.3.2000 – உடலழகு கெட்டு விடுமே என்றுதான் பெற்ற குழந்தைக்கு தாய்ப்பால் தராத தாய்மார்களுக்கு களிமிளகு காப்பு என்ற திருஷ்டித் தோஷம் தாக்கும். இந்த தாக்குதலிலிருந்து விடுபடுவது மிகக் கடினம். இவர்கள் தாக ஏக்க சோதனை நோயால் பாதிக்கப்படுவர். அவர்கள் இன்று ஏழைக் குழந்தைகளுக்கு குறைந்தது 100 பேருக்குக் குறையாமல் தண்ணீர் கலக்காத பசும்பால் தானம் செய்திடல் வேண்டும்..

8.3.2000 – இன்று புருஷ ஸுக்தம், நாராயண ஸுக்தம , விஷ்ணு ஸுக்தம் உள்ள புத்தகங்களை / வேத பாராயண கேசட்டுகளை தானமாய் அளித்தல் – உயர் அதிகாரியின் சந்தேகத்திற்கு ஆளாகாமல் நலம் பெறுவர்..

9.3.2000 – முறையாக வேதம் ஓதுவோர்க்கு தர்ப்பைப் பாய்களை தானமாய் அளித்திடில் நண்பர்களால் வருகின்ற ஆபத்து விலகும்.

10.3.2000 – ஏழை, நடுத்தரக் குடும்பங்களுக்கு இருளில் ஒளிகாட்டும் Emergency Lamp தானமாய்த் தருதல் எதிரிகளின் திடீர் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க வழி செய்யும்.

11.3.2000 – முருகப் பெருமான் கோயில் கொண்டிருக்கும் குன்றுகளில் உருவாகும் சுனைத் தீர்த்தம் எடுத்து முருகனுக்கு அபிஷேகம் செய்திடில் பேய் போல் எதிர்த்திடும் பங்காளி அமைதி கொள்வான்.

12.3.2000 -  ஒன்றிலிருந்து மூன்று வயதிற்குள் இருக்கின்ற குழந்தைகளுக்கு தோல் சம்பந்தமற்ற Canvas shoe வாங்கித் தருதலால் பொறாமைக் கண்களின் தீமையிலிருந்து தப்பிக்கலாம்.

13.3.2000 – வெள்ளை ஆடை உடுத்தியிருப்போரிடம் இன்று மிகவும் கவனமாய் இருத்தல் நலம், பகைமை ஏற்பட வழியுண்டு.

14.3.2000 – ஜெயகுமார், ஜெயவேல், ஜெகத்ரட்சகன், ஜெகதீசன் என்ற “ஜெய” நாமப் பெயர் வைத்திருந்தாலும் உத்யோகத்திலிருக்கின்ற நண்பர்கள் அவர்களை ஜாம்பவான் என்று பெயரிட்டு அழைப்பது பலருக்கு தற்காலத்தில் இருக்கின்ற குறைபாடாகும். அவ்வாறு மேற்கண்ட பெயரை வைத்திருப்பவர்களுக்கு இவர்களே ஜாம்பவான் என்று பெயரிட்டு விடுவார்கள். எனவே இந்த பெயருடையவர்களை இன்று ஜாம்பவான் என்று அழைத்தால் அவ்வாறு அழைப்பவர்களிடம் கவனம் தேவை. எனவே உங்கள் பெயரையே சொல்லி அழைக்கச் சொல்லுங்கள். இன்று ஜாம்பவான் என்று அழைக்க இடம் தராதீர்கள்.

15.3.2000 – விளையாட்டுத் துறை ஆசிரியர்கள்/ அலுவலர்கள் இன்று பிரயாணத்தில் கவனம் செலுத்துதல் நலம்.

16.3.2000 – ஊதுவத்தித் தொழில் செய்யும் ஏழைகளுக்கு இலவசமாக ஊதுபத்தி உபகரணங்கள் வாங்கி அளித்திடில் புனிதமான ஆண்-பெண் அன்புப் பண்பு, பரிசுத்தமான காதலாக மேன்மை அடையும்.

17.3.2000 – சோமாசி குப்பம், சோமாஸ்பாடி, சோமபுரம் போன்ற சோமன் பெயருடைய கிராமத்தின் மக்கள் இன்று தங்கள் எல்லை தேவதைக்கு பால் பொங்கல் செய்து தானம் செய்திடில் கிராமத்திற்குக் காற்றினால் வருகின்ற துன்பம் விலகும்.

18.3.2000 – ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு எதிரே ஸ்ரீஎமதர்ம ராஜர் இருக்கின்ற கோயிலில் அன்னதானம் இன்று செய்திடில் வாகனத்தால் வரும் ஆபத்து தீரும். (கும்பகோணம் அருகே திருகோடிக்கா சிவாலயம்)

19.3.2000 – இன்றிலிருந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) தினமும் புத்திர காமேஷ்டி தீர்த்தத்தில் நீராடி அப்புனிதத் தீர்த்தத்தில் சர்க்கரைப் பொங்கல் செய்து சுவாமிக்கு நைவேத்யமாகப் படைத்து ஏழைக் குழந்தைகளுக்குத் தானமாய் அளித்திடில் சந்ததி விருத்தியடையும் (கும்பகோணம் அருகே திருஆலங்காடு சிவாலயம்.)

20.3.2000 – பஞ்சுத் தலையணை, பஞ்சுப் படுக்கை (bed) செய்கின்றவர்களுக்கு உணவு, வஸ்திரம் தானமாய் அளித்திடில் சுவாச சம்பந்தமான நோய்களிலிருந்து தீர்வு பெறலாம்.

21.3.2000 – பிரசவமான தாய்மார்களுக்கு Complan போன்ற வைட்டமின்கள் நிறைந்த உணவு அளித்திடில் மாதவிடாய் நோய்கள் விலகும்.

22.3.2000 – வியாபாரிகள் இன்று தம்முடைய ஒரு நாள் வருமானம் அனைத்தையும், தான, தருமங்களில் செலவிட்டால் கஜானாவில் எப்போதும் பணம் குறையாமல் இருக்கும்.

23.3.2000 – இன்று ரகசியமான வாழ்க்கைத் துணைகள் மூலம் பிரச்னைகள் வரக் கூடிய நாள் – கவனம் தேவை.

24.3.2000 – இரண்டாம் தாரத்துப் பிள்ளைகளால் பல துன்பங்கள் விளையும், ஆதலால் மூத்த தாரத்து பிள்ளைகள் இன்று கவனமாய் இருக்க வேண்டும்.

25.3.2000– தன்னைவிட 15 ஆண்டுகள் குறைந்த வயதுடைய மனைவியை உடையவர்கள் மனம் கலங்கும் நாள் – இன்று கவனம் தேவை.

26.3.2000 – இன்று கணவனிடம் பொய் கூறுதலைத் தவிர்க்கவும், இன்று சொல்கின்ற பொய் எதிர்காலத்தில் பெரிய பிரச்னையாய் முடியும் – கவனம் தேவை.

27.3.2000  - பெற்றோரிடம் பெண் பிள்ளைகள் பொய் பேசிடில் இது பல பிரச்னைகள் தரும் – கவனம் தேவை.

28.3.2000 – முறையற்ற ஆண் –பெண் உறவு பலரும் அறிய வெளிவந்திடும் – கவனம் தேவை.

29.3.2000 – இன்று குதிரைக்கு அவித்த கொள் தானம் – நல்ல ஞாபக சக்தியை அளிக்கும்.

30.3.2000 – வசதியுள்ள பெண்களின் மாயமான காதல் நாடகம் ஆபத்தில் முடியும் நாளிது – கவனம் தேவை.

31.3.2000 – வேதம் படித்த இளைஞர்கள் முறையற்ற காமத்தால் தவறு செய்யும் நாளிது – திருந்தி வாழ்தல் நலம்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam