கற்பனை செய்ய முடியாத அனுபவம் முக்தி என்பது !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலை

திருவாரூரிற் பிறந்தால் முக்தி
காஞ்சியை தரிசித்தால் முக்தி
காசியில் மரித்தால் முக்தி
அண்ணாமலையை நினைத்தாலே முக்தி

அற்புதமான சத்தியமான மறைவாக்கியங்களிவை! “நான்  இப்போதே அண்ணாமலையை நினைக்கின்றேன், உடனே எனக்கு முக்தியா ?”என்று  விதண்டாவாதமாகக் கேட்போர் உண்டு. முக்தி என்றால் என்ன, முக்தியடைந்த பின் பூலோக வாழ்வு  தொடருமா என்பதை உணராது அறியாமையினால் கேட்கப்படும் கேள்வியிது! உண்மையிலேயே ஆழ்ந்த  நம்பிக்கையுடன் திருஅண்ணாமலையை நினைத்து விட்டதால் தனக்கு முக்தி கிடைத்து விட்டது என்று பரிபூர்ணமாக நம்பி வாழ்வோர்க்கு நிச்சயமாக முக்தி நிலைதான்.! ஆனால் இதன் பிறகு எக்காரணம்  கொண்டும் இதில் எவ்வித சந்தேகமும் எப்போதும் எழக்கூடாது! அவ்வாறு சந்தேகம் வந்திடில்  'அண்ணாமலையை நினைத்தாலே முக்தி’ என்ற வேத வாக்கினை, சத்ய நிலையை, இறைப் பரம்பொருளையே சந்தேகித்ததாகிவிடும். மேலும் உளமாற நினைக்காது உதட்டளவில்  நினைக்கையில்தான் இத்தகைய குழப்பங்கள் ஏற்படும்!

முக்தி நிலையோ, மோட்ச நிலையோ கிடைத்தவுடன் பூலோக வாழ்க்கை மேலும் தொடருமா? நல்ல வினா!

முக்தி, மோட்சம் என்றால் இறப்பிற்குப் பிறகான, அதற்கு அப்பாற்பட்ட நிலை என்று பலரும் எண்ணுகின்றனர். ஸ்ரீவள்ளலார், ஸ்ரீ பட்டினத்தார், ஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகள், ஸ்ரீ ஒடுக்கத்தூர் சித்தர், ஸ்ரீ  பாம்பாட்டி சித்தர், ஸ்ரீ காஞ்சீபுரம் போடாசுவாமி (சிவசாமி) சித்தர் சுவாமிகள், ஸ்ரீ பரமாச்சார்யாள்  போன்றோர் முக்தி நிலையுடனேயே வாழ்ந்து நமக்கு முக்தி நிலையைக் காட்டுவதற்காக இறைவனால் அனுப்பப்பட்டு பூலோக வாழ்க்கையை மேற்கொண்டு கோடிக்கணக்கான ஜீவன்களுக்கு ஞானத்தைத் தந்தருளினர்.

முக்திக்கு வழிகாட்டும்
ஸ்ரீகாஞ்சி கனிந்தகனி

எனவே ஸ்ரீ ருத்ரத்தில் வருவது போல, வெள்ளரிப் பழமானது கொடியில் ஒட்டியும் ஒட்டாமலும் உள்ளதுபோல் வாழ்க்கையிலும் இருப்பதுதான், முக்தி நிலையோடு பூமியில் வாழ்ந்து பிறர்க்கு மோட்ச நிலையைப் புகட்டுவதாகும்!

முடிவில் “முதலோன்” ஒருவன் முக்தி நிலையைப் பெற்று விட்டானா என்பதற்கு எடுத்துக் காட்டு யாதெனில் அவன் இறக்குந் தருவாயில், “எனக்கு மூச்சு முட்டுகிறதே, மூச்சடைக்கின்றதே, நெஞ்சு வலிக்கின்றதே, பையன் வந்து விட்டானா, டாக்டர் எப்போது வருவார், நான் பிழைப்பேனா ?”என்ற எண்ணங்களெல்லாம் வராது “திருஅண்ணாமலை” மட்டுமே நினைவுக்கு வருதல் தான் முக்தி நிலையைக் குறிக்கும். ஆனால் இது சாத்யமாகுமா?

சின்ன தலைவலி அல்லது WHEEZING (மூச்சுத் திணறல் ) என்றாலே கடவுளை மறந்து மருந்தைத் தேடி, ஓடி எப்படியாவது தலைவலியை/Wheezingஐ விரட்டியடிப்பதில் தானே முழு நினைவும் செயல்படுகின்றது. நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள், இது உண்மைதானே! பின் எப்படி இறக்கும்போது “இறை நினைவு” வரும்?

இப்போதே எத்தனையோ கஷ்டங்களுக்கிடையிலும் உடல் உபாதைகளுக்கு நடுவிலும் இறை நாமத்தையோ ஜபிக்கப் பழகினால் தான் இறக்கும் போதாவது திருஅண்ணாமலை நினைவு வரும்!

பொதுவாக முக்தி நிலையடைதல் என்பது கோடிக்கணக்கான பிறவிகளில் குவிந்துள்ள கர்ம வினைகளை அனுபவித்துக் கழித்து குருவருளால், திருவருளின்படி இறப்பிறப்பற்ற நிலையை அடைதலே! அப்படியானால் மஹான்களின் பிறப்பையும், அவர்கள் உடலை உகுத்தலையும் எவ்வாறு குறிப்பிடுவது?

சித்தர்களும், யோகியர்களும் மஹான்களும் இறப்பையும் பிறப்பையும் கடந்தவர்களே! அதாவது நம் முடைய கர்மவினைகளின் மூலம் நம்முடைய பிறப்புகளை நாமே விதித்துக் கொள்கின்றோம், ஆனால் மஹான்களின் நிலையிலோ, இறைவனே கர்ம பந்தங்கள் இல்லாத ஆன்ம ஜீவ சக்தியை அளிக்கின்றான்.  எத்தனையோ மஹான்கள் மீண்டும் மீண்டும் பிறப்புக் கூடுகளை எடுத்து மக்கட் சேவையை மஹேசன் சேவையாக ஏற்று ஜீவன்களுக்கு இறைவழி காட்டுவதில் தான் பரமானந்தம் அடைகின்றனர். இவ்வாறு மீண்டும் மீண்டும் தோன்றுகின்றவர்களே மஹான்களாகிய சற்குருமார்கள்! நம்முடன் வாழ்ந்து அனைத்து இன்ப துன்பங்களையும் மாயையைப் போல் அனுபவித்து நம்முள் ஒருவராக இருந்து நமக்கு வழிகாட்டுபவரே சற்குரு!
கோடிக்கணக்கான ஜன்மங்களுக்குரிய கர்ம வினைகள் மாய்ந்தால் தான் முக்தி என்றால், நினைத்தாலே முக்தி தருகின்ற திருஅண்ணாமலைக்கு அத்தகைய கோடிக் கணக்கான ஜன்மங்களின் கர்மப் படிவுகளை பஸ்மமாக்கக் கூடிய அற்புதமான தெய்வீக அருட் சக்தி உண்டென்பது புலனாகிறது அல்லவா!

எனவேதான் பிரபஞ்சத்திலேயே, கோடானுகோடி நட்சத்திரங்கள், அண்டங்கள், கிரஹங்களில் இருந்தாலும் பூமியில் மட்டுமே நினைத்தாலே முக்தி தரும் புனிதத் தலமாக அருணாசலமாகிய திருஅண்ணாமலை விளங்குகின்றதென்றால் தமிழ் நாட்டில் அதை நாம் பெறுதற்கு என்னே பாக்யம் செய்தவர்களாகின்றோம்!

ஆனால் திருஅண்ணாமலையின் பெருமைகளை இதுவரையில் எத்தனையோ ஞானிகளும் சித்தர்களும் நம் மூதாதையர்களும் எடுத்துரைத்து வந்தபோதிலும், ஸ்ரீ அகஸ்திய விஜயம் இதழ் மூலமாக, ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகளின் குருவாய் மொழிகளாக, ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் அருளுரைகளாக எத்தனையோ விளக்கங்கள் அளித்துள்ள போதிலும் திருஅண்ணாமலையின் புனிதத்தில் ஒரு துளியையேனும் எந்த அளவிற்கு நம் வாழ்க்கையில் பயன்படுத்திக் கொண்டுள்ளோம் என்று சற்றே சிந்தித்துப் பாருங்கள்! கண்ணால் எத்தனையோ முறை பார்த்தும் திருஅண்ணாமலையை முழுமையாக நினைக்க முடியவில்லையே!

முக்தி தரும் கிரிவலம்

வேண்டுவன அனைத்தையும் தரும் திருஅருணை கிரிவலம் என்பது மட்டுமல்லாது வேண்டாமலேயே முக்தி நிலையையும் எளிதில் தரவல்லதுமாகும். எப்படி?

திரு அண்ணாமலையை நினைத்தால் முக்திதானே! இது முக்காலும் உண்மையே! ஆனால் எங்கு, எவ்வாறு. எப்படி நினைப்பது?

ஒவ்வொரு முறையும் திருஅண்ணாமலையை கிரிவலம் வருகையில் ஒவ்வொருவருக்கும் ஜாதி, மத, ஆண் பெண் வேறுபாடின்றி இறைவன் சில தெய்வானுபவங்களை நிச்சயமாகத் தருகின்றான். இதை அனைவரும் நன்கு உணரலாம் . நான்கு மணி நேரம் இறைத் திருமேனியாம் திரு அண்ணாமலையை வலம் வருவதென்றால் எத்தகைய தெய்வீக பாக்யமிது! நான்கு மணி நேரம் கிரிவலம் வந்தால் ஒரு விநாடியாவது உண்மையாக திரு அண்ணாமலையை நினைப்போமல்லவா! இதுவே ஒரு நிமிட முக்தி நிலை. மஹான்களோ 24 மணி நேரமும் முக்தி நிலையில்தான் இருக்கின்றார்கள்!

அதாவது திருஅண்ணாமலையை ஒரு விநாடிநேரம் நினைத்தால் அந்த ஒரு விநாடி நேரம் முழுதும் முக்தி நிலையில் தான் இருக்கிறோம். ஒரு விநாடி என்பதை ஒரு நிமிடம், 10 நிமிடங்கள், அரை மணி, ஒரு மணி நேரம் என்று திருஅண்ணாமலையானது நம் நினைவில் நிற்கும் நேரத்தை விரிவுபடுத்தி வருதல் வேண்டும்:

கர்மவினை தடுக்கிறது

ஆனால் இதனை இவ்வாறு உணர விடாமல் தடுப்பது நம்முடைய கர்ம வினைகளே! எதற்கெடுத்தாலும் கர்ம வினையே என்று சொல்வதன் காரணமென்ன? கர்மவினைகள் தாம் முக்தி நிலையைத் தடுக்கின்றன என்பதை எப்படி உணர்வது ? இதை மிக எளிதாக விளக்கிவிடலாம்!

நினைத்தால் முக்தி தருவது திருஅண்ணாமலை என்பதை நிச்சயமாக நம்புகிறோம் அல்லவா? ஆனால் திருஅண்ணாமலையையே நினைக்க முடியாமல் வேறுவகையான எண்ணச் சுழல்களில் தானே, இதர நினைவுகளில் தானே எப்போதும் நாம் சிக்குண்டுத் தவிக்கின்றோம்! இந்த இதர நினைவுகளே கர்மவினைச் சுழல்கள்! முக்தி தரும் இறைநிலையை உணர விடாது தடுக்கும் மூட வினைகளிவை!

ஆனால் “வேண்டத்தக்கது அறிவோய் நீ! வேண்ட முழுதுந் தருவோய் நீ!” என்று உணர்ந்து எவ்விதப் பிரார்த்தனையுமின்றி திருஅண்ணாமலையை வலம் வருவோர்க்கு முக்தியின் உத்தமநிலைகள் எளிதில் கூடி வரும், காரணம் பிரார்த்தனைகள் இல்லாத கிரிவலம் தான் “இறைவன் நம்முடைய கர்ம வினைகளுக்கேற்பவே இன்ப துன்பங்களை அளிக்கின்றான்”என்ற எண்ணத்தை, பிறவித் தத்துவ உண்மையை உருவாக்கும். இந்த உயர்ந்த எண்ணமே அண்ணாமலையின் நினைவாக மலரும்! இவ்வினிய கிரிவல முறையே “நினைத்தாலே முக்தி தரும் திருஅண்ணாமலையை” எப்போதும் நினைத்திட அருள்வழி காட்டும் முதற் பாடம். ஒரு சற்குரு மூலமாகத்தான் இன்று இவ்விதழில் இவற்றை அறிந்தோம், அவர் அருகிலிருந்தால் திருஅண்ணாமலையின் நினைவை எப்போதும் கூட்டி வைப்பாரல்லவா!  உத்தம் குருவை எப்போதும் நினை! அவரே அருணாசல நினைவைக் கூட்டிவைப்பார். சற்குருவைத் தரவல்லது அருணாசல கிரிவலமே!

படிக்கட்டு மகிமை

நம்முடைய திருஅண்ணாமலை ஆஸ்ரம் வாயிலில் 12 படிக்கட்டுகள் அமைக்கப் பட்டுள்ளன, பித்ரு தேவ மூர்த்திகளுக்குரிய சக்கரங்களும், நவகிரஹ யந்திரங்களும் சக்தி வாய்ந்த கற்களும் பதிக்கப்பட்டுள்ள தெய்வீகப் படிக்கட்டுகள்! இவை தவிர படிக்கட்டுகளின் இருபுறங்களிலும் நங்கநல்லூர் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலயத்தில் அமைந்துள்ளது போலான யோக, மந்திரச் சக்கரங்களும் எந்திரங்களும் விரைவில் அமைக்கப் பெற உள்ளன. எனவேதான் பெளர்ணமி அன்னதானத்தின்போது இப்படிகளில் ஏறுமுன் காலணிகளைக் கழற்றுமாறு வலியுறுத்துகின்றோம். 

நம் வீட்டின் தலைவாசற்படியின் அடியில் கூட ஸ்ரீ வாஸ்து சக்கர, எந்திரங்களும், (தலைவாசல் எந்த திசையை நோக்கியுள்ளதோ அதைப் பொறுத்தும் மற்றும் வாசற்படியின் மரவகை, வீட்டுச் சொந்தக்காரருடைய நட்சத்திர/ராசியைப் பொறுத்தும்) அதற்குரிய நவரத்தினக் கற்கள், தங்க, வெள்ளித் தகடுகளும் பதிக்கப்படுகின்றன. எனவேதான் தலைவாசற்படியை மிதியாது தொட்டு ''வணங்கித் தாண்டிச்'' செல்கின்ற நற்பழக்கத்தை நல்ல சகுனமாக, தினசரி வழிபாடாக நம் மூதாதையர்கள் மேற்கொண்டிருந்தனர்.

வெற்றி தரும் விஜய படிக்கட்டுகள்
ஸ்ரீபைரவர் கோயில் சோழபுரம்

இதேபோன்று சபரிமலையின்  18 திருப்படிகளின் மஹிமையைப் பற்றிச் சித்புருஷர்களின் கிரந்த நாடிகள் அதி அற்புதமான வகையில் விவரிக்கின்றன. முறையோடு விரதம் பூண்டு, உண்மையான பக்தியுடன் தெய்வீகம் ததும்பும் உள்ளத்துடன்  18 படிகளில் நடப்போரின் திருப்பாதங்களை 18 விதமான சபரி தேவதைகள் தாங்குகின்றனர். இறைவனின் அடியார்க்கு சேவை புரிவதில் பெருமகிழ்ச்சி கொண்டு உத்தம இறைப்பெருநிலைகளை அடைந்த நாயன்மார்களைப் பற்றி நாம் நன்கறிவோமே!

திருஅண்ணாமலையை கிரிவலம் வரும் அடியார்களின் பாதங்களைத் தொட்டு வணங்குகின்ற அடியார்க்கு அடியார்களும் இன்றும் உண்டே!

சில கோயில்களில் விசேஷமான படிக்கட்டுகள் உள்ளன. திருவெள்ளறை (திருச்சி அருகே பெருமாள் கோயிலின்), (காலை 5.30 to 6.30, மாலை 5 to 6.30) சந்தியா நேரங்களில் இப்படிக்கட்டுகளை நல்ல நீரால் கழுவித் தூய்மை செய்து பச்சரிசி கோலம் இட்டுக் கோயிலில் படிதாண்டாப் பத்னியாக அருள் பாலிக்கும் தாயாரை வழிபட்டு வர, குடும்பத்தில் மாமியார் - மருமகள், நாத்தனார் இடையே உள்ள பிணக்குகள் / பிரச்னைகள் சுமுகமாகத் தீரும்! இங்குள்ள திருக்குள நீர் மிகவும் சக்தி வாய்ந்தது! இதன் படிக்கட்டுத் துறைகளுக்கு மாமியார் - மருமகள் படித்துறைகள் என்று கூடப் பெயருண்டு!

மாவுப்பொருளில் ஆவுடைப் பரம்பொருள்

மாவுப்பொருளுக்கு சில அபூர்வமான தெய்வீக சக்தி உண்டு, ஹோமியோபதி மருத்துவத்தில், எந்த அளவிற்கு மிகக் குறைந்த அளவில் மருந்தை உட்கொள்கின்றோமோ, அதைப் பொறுத்து அம்மருந்தின் பயன்கள் மிக விரைவாகவும் பெருமளவிலும் வேலை செய்யும் என்ற அடிப்படை நெறி ஒன்று உண்டு.

இதேபோல் ஆன்மீக நெறியில் எந்த ஒரு பொருளும் எவ்வகையில் மிக மிக நுண்ணியதாய் அமைகின்றதோ அந்த அளவிற்கு அதன் ஆன்மீக சக்தியை பல்கிப் பெருகுமாறு விருத்தி அடையச் செய்ய இயலும்! இதுவே அபிஷேக திரவியங்களின் அடிப்படைத் தத்துவம்! 

இறைப்பரம் பொருள் ஒன்றிலிருந்து, ஒன்றாய், பலவாய் விரிந்து பெருகி வந்ததுதானே இந்தப் பிரபஞ்சம்!

அக்காலத்தில் அரிசி/தானியங்களை கல் இயந்திரத்தில், மந்திரங்கள், தோத்திரங்களை ஓதியவாறு மாவாக அரைத்திடுவர். இதனால் நன்மந்திர சாரமெல்லாம் மாவுப் பொருளில் நன்கு படியும், இதனால் தான் மாவிளக்கு வழிபாடானது நல்ல காரிய சித்தியைத் தரும் நல் வழிபாடாக இன்றளவும் விளங்குகிறது.மஞ்சள், சந்தனக் காப்பும் நுண் பொருட் காப்புமுறையில் இதைப் போன்றே மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடுகளாகும்.

கல்லில் வடிக்கப்பட்டுள்ள தெய்வ மூர்த்திகளின் சிலா ரூபங்களைப் புனிதமான முறையில் சுத்திகரிக்கும் போது அரிசி மாவாலான மாவுக் காப்பையே முதலில் இடுவர். இதன் பின் நவதானியக் காப்பு, எள்ளுக்காப்பு எனக் காப்பு முறைகள் பல உண்டு. 

சந்திராஷ்டம தின வழிபாட்டிற்கும், மாவுப்பொருளுக்கும் என்ன சம்பந்தம் ?
சந்திராஷ்டம தினங்கட்குரிய பிராயச்சித்த முறையில் உளுந்து வடையை ஸ்ரீ சந்திர பகவானுக்குப் படைத்து பசுவிற்கு வடைகளை நைவேத்யமாக அளித்தலும் ஒன்றாகும்.

சந்திர பகவானுக்குரிய தான்யம் அரிசி என்றும் சொல்வதுண்டு. அப்படியானால் உளுந்திற்கும், சந்திராஷ்டம தினத்திற்கும் என்ன பிணைப்போ?

உளுந்தின் பாலில் கூடுவதுதானே வடையின் மாவுப் பொருளாகிறது. ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி தொட்டில் குழந்தையாக இருந்தபோதே ஒரே எட்டில் பல கோடி சூரியர்களை எட்டிப் பிடித்தவர்! அவர்தம் பால பருவத்தில் நிகழ்ந்த லீலைகளையெல்லாம் கண்ட அஞ்சனாதேவி “இனி நாளொன்றுக்கு ஒரு வடையே தருவேன்” என்று ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஒரே ஒரு வடையை மட்டும் தினமும் அளித்து வந்தாள். இதனாலாவது அவருடைய பாலபருவ லீலைகள் குறையாதா என்ற எண்ணத்தில்! ஆனால், அந்த ஒரே உளுந்து வடையின் சக்தியே அவருக்கு நாளெல்லாம் போதுமானதாக இருந்தது!

நைஷ்டிக பிரம்மச்சாரியான ஸ்ரீ ஆஞ்சநேயர் அதி அற்புதமான மன அடக்கத்திற்குப் பெயர் பெற்றவர். உளுந்தின் பால் சக்தியே முறையாக மனதையடக்கும் ஆற்றலைத் தரவல்லதாகும். எனவேதான் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றப்படுகிறது! சந்திராஷ்டம் தினங்களில் மனம் பேதலிப்புகள் ஏற்படுவதால்தான் பலவித துன்பங்கள் ஏற்படுகின்றன என்று கண்டோமல்லவா? உளுந்து வடைதனை ஸ்ரீ சந்திர பகவானுக்குப் படைத்து சகல தேவதா மூர்த்திகளும், தேவதைகளும் அமர்ந்து அருள்பாலிக்கும் பசுவிற்கு அளிக்கையில் அது தேவ பிரசாதமாக மாறி அதனை சகல தேவாதி தேவர்களும் ஏற்று அருள்பாலிக்கின்றனர்.

எனவே அவரவர் ராசிக்குரிய சந்திராஷ்டம நாள், நேரத்தை அறிந்து கொண்டு இந்நாட்களில் ஸ்ரீ சந்திர பகவானுக்குரித்த வழிபாடுகளை மேற்கொண்டு நல் மனதைப் பெற்றுய்யும்படி வேண்டுகின்றோம்.

சந்திராஷ்டம தினங்கள்

சந்திராஷ்டம தினங்களில் பலவித மான இடையூறுகள் ஏற்பட்டவாறிருக்கும், மனிதனானவன் எப்போதும் சுகத்தை விரும்புபவனாக மாறி விடுவதால் அலுவலகம், இல்லம், வியாபாரம் என பல்வேறு வாழ்க்கைக் கோணங்களிலும் தினந்தோறும் எவ்விதத் துன்பமும் ஏற்படுவதையும் அவனால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.

கார் பங்க்ச்சராகுதல், மின் விளக்கு ஃபியூஸ் ஆதல், ஜலதோஷம் பிடித்தல், வியாபாரத்தில் சில்லரைத் தகராறுகள், வரி நோட்டீஸ்கள், ஊழியர்களிடம் சிறு மனஸ்தாபங்கள் - என ஏதோ இடையூறுகள் வரும்போதெல்லாம், மனிதன் பொறுமையையிழந்து தான் வேதனைப்படுவதோடு மட்டுமின்றி பிறரிடம் குறிப்பாக குடும்பத்தாரிடம் தேவையற்ற கோபங் கொள்கின்றான், இவை நிகழும்போதே தெரிந்து கொள்ளலாம், அன்றைய தினம் சந்திராஷ்டமம் இருக்கிறதென்று!

இவையெல்லாம் மூட நம்பிக்கைகளல்ல! மனிதன் நினைத்தவுடன் எதையெதையோ செய்து வாழ்க்கையை வீணே விரயமாகக் கழிக்காமல் எந்தக் காரியத்தையும் பன்முறை யோசித்து, பொறுமையுடன் நடந்து கொண்டு தீர்க்க தரிசனத்துடன் வாழ்ந்திட ஏற்படுத்தப்பட்டுள்ள இயற்கையான அர்த்தமுள்ள கட்டுக் கோப்புகளே இவை!

கிரஹ சஞ்சாரங்களே நம் வாழ்க்கையின் ஒவ்வொரு விநாடிக் காலத்தையும் நிர்ணயிக்கின்றன. அதாவது நம்முடைய பூர்வ ஜென்ம வினைகளுக்கேற்ப அதன் விளைவுகளே மீண்டும் இப்பிறவியில் திரும்பி வருகின்றன என்பதே உண்மையாகும், சந்திர பகவானே மனோ நிலைகளுக்குரிய அம்சங்களை நிர்ணயிப்பதால் எப்போதும் குறிப்பாக சந்திராஷ்டம தினங்கள் வருகையில் ஸ்ரீ சந்திர பூஜையை நன் முறையில் கடை பிடித்திட வேண்டும்.

கோயிலுக்குச் செல்கையில் முக மண்டபம் அருகிலேயே பொதுவாக இருபுறமும் அமைந்திருக்கும் சூரிய, சந்திர மூர்த்திகளை என்றேனும் கவனித்திருக்கின்றீர்களா ? இரட்டைப் பிள்ளையார் போல் இரட்டைச் சூரிய மூர்த்திகளும் (திருவிடைமருதூர்) உண்டு. சிவசூரிய மூர்த்தி என்ற பெயருடைய சூரிய பகவானுக்கு நிறைந்த மாதுளை முத்துக்களால் முழுக் காப்பிட்டு வழிபட்டு வந்தால் மாலைக்கண் நோய், இளவயதில் மங்கிவரும் பார்வை போன்ற கடுமையான கண் ரோகங்களுக்கு நிவர்த்தி கிட்டும். இரட்டைச் சூரிய மூர்த்திக்கு ஞாயிறு தோறும் சந்தனக் காப்பிட்டால் தந்தை, மகனுக்கிடையே உள்ள பிணக்குகள் தீரும், பிதாகாரகர் தானே சூர்ய பகவான்!

சந்திராஷ்டம தினங்களில் ஸ்ரீ சந்திர மெளளீஸ்வர சிவபெருமானின் தரிசனம் (திண்டிவனம் அருகில் திருவக்கரை) சந்திராஷ்டம விளைவுகளைத் தணிக்கும். இங்கு மூன்றாம் பிறைச் சந்திரனைத் தலையில் தாங்கி சிவபெருமானின் அழகிய வதனம் லிங்கத்தில் கூடி நின்றாற் போல் மிகவும் திவ்யமான தரிசனம்! வேறு எங்கும் காணக் கிடைக்காதது! பிரசித்தி பெற்ற ஸ்ரீ வக்ரகாளி அம்மன் சந்நிதி இத்திருக்கோயிலில்தான் உள்ளது!

பங்குனி உத்திரம்

பங்குனி உத்திரம் – பொங்கிடும் மங்களம்

பங்குனி உத்திரம் என்பது பல தெய்வ. மூர்த்திகளின் திருமண வைபவத்தைக் குறிக்கும் சிறப்பான நாளாகும், சிவன், முருகன், பெருமாளின் /பல அவதார மூர்த்திகளின் திருக்கல்யாண உற்சவ நாள்!

மனிதர்கள்தான்  Wedding day என்ற பெயரில் ஹோட்டலிலும், பீச்சிலும், சினிமாக் கொட்டகைகளிலும் கேளிக்கைகளிலும் ஆயிரக் கணக்கில் பணத்தைச் செலவழித்து நேரத்தையும் பொருளையும் வீணடிக்கின்றார்கள் அல்லவா? இதை உணர்த்திப் பாடம் புகட்டுவதே பங்குனி உத்திரமாம்!

தெய்வமூர்த்திகளுக்கு ஏன் திருமண உற்சவத்தைக் கொண்டாடிட வேண்டும் ? திருமணம் என்பது வெறும் காம உறவோ அல்லது ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதுமல்ல! மிகப் புனிதமான அன்பைப் பரிமாறும் தெய்வீக உறவு! உத்தம சந்ததிகளை உருவாக்கும் மகத்தான இறைச் சிருஷ்டி தத்துவத்தின் பேரம்சம்! கர்ம வினைகளை உணர வைத்துக் கவினுறக் கடவுள் தரிசனத்தைக் காட்டும் காலப் பேழை! எல்லாம் வல்ல இறைவனையே காண மேனிக்கு ஜீவ வடிவந்தரும் உன்னத இறைக் கரு!

இவ்வாறாக மனித வாழ்வின் மிக மிகப் புனிதமான அம்சமாக விளங்கும் திருமணமானது தற்காலத்தில் அவசரகோல நிகழ்ச்சியாக மாறி வருவது வேதனைக்குரியதாகும்!

அம்மி மிதிப்பதிலும் அருந்ததி பார்ப்பதிலும் ஆயிரமாயிரம் தெய்வீக ரகசியங்களுள்ளன! திருமணத்தில் ஓதப்படும் மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை! திருமணத்திற்குரித்தான ஹோம வழிபாடோ தீர்க சுமங்கலித்வத்தையும் கணவனுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்யத்தையும் தரவல்லது! ஆனால் இப்போது இதனை எவரும் சரிவரக் கடைபிடிப்பதில்லை! இதனால் தான் கலியுக வாழ்க்கையில் பிரச்னைகளே நிறைந்துள்ளன.

முறையற்ற காம உணர்வுகளைப் பகுத்து வடிகட்டி, முறையான காமத்தை ஆன்மீக ரீதியாக உணர்த்தி மிகவும் புனிதமான மனித நேயத்தை அன்பின் பரிபூர்ணத்தை இறைசாட்சியாக, அக்னி சாட்சியாக, வேத, ஹோம மந்திரங்களின் சாட்சியாக, பெரியோர்களின் சாட்சியாக ஆண், பெண் சிருஷ்டி தத்துவத்திற்கு இறைப் பரிமாணம் புகட்டுவதே திருமணச் சடங்குகள்! இத்தகைய அரிய, பண்பட்ட, ஆயிரங்காலத்துப் பயிராகச் செழித்து வந்துள்ள தெய்வீகம் நிறைந்துள்ள திருமண வைபவத்திற்கு முன், திருமண உறவு நன்கு தெய்வீக ரீதியாக அங்கீகரிக்கப்படுமுன், இருவரும் சேர்ந்து Receptionல் அமர்வது அறநெறிக்கும் நம் பண்பாட்டிற்கும் ஏற்புடையதா? மனசஞ்சலங்களுக்கு வழி வகுப்பதோடு இத்தகைய தவறானது திருமணத்தின் புனிதத்திற்கு இடையூறும் ஆகிறது!

ஜாதி, மதம் பாராது ஒருவரையொருவர் உண்மையான, தெய்வீக அன்புடன் நேசித்து நிகழும் திருமணத்திற்கும் இவ்வித நியதி பொருந்தும்! கல்யாண சத்திரங்களையும் ஹோட்டல்களையும் விட இறைச் சந்நிதியின் முன் நிகழும் மாங்கல்ய தாரணமே எல்லாவற்றிலும் சிறப்புடையதென ஸ்ரீ அகஸ்திய விஜயம் இதழில் வலியுறுத்தி வந்துள்ளோம். ஹோமக் குற்றங்கள், மந்திர உச்சாடனப் பிழைகள், அக்னிக் குற்றங்கள் போன்ற பல்விதமான மாபெருந் தவறுகளுக்கும் பரிஹாரமாக அமைவதே திருக்கோயிலில், இறைவனின் திருச்சந்நிதியில் நிகழும் திருமணங்கள்! இதிலும் கூட மாங்கல்ய தாரணத்திற்குப் பிறகே, அதாவது மங்களத் தாலி கட்டப் பெற்றுப் பெரியோர்களின் ஆசிகளைப் பெற்ற பின்னரே தம்பதி சகிதமாக அமரும் Receptionஐ நடத்திட வேண்டும்.
எனினும் பலருடைய பொறாமைக் கண்களால் ஏற்படும் திருஷ்டிகளைத்தவிர்த்திட Reception என்ற ஒன்றையே தவிர்ப்பது சாலச் சிறந்ததாகும்!
பங்குனி உத்திரத்தில் இறைவனுக்கு திருக்கல்யாண உற்சவம் ஏன் என்று கேட்டோமல்லவா?

பங்குனி உத்திரத்தன்று இறைவனுக்கு திருமண உற்சவத்தை நடத்தி வைத்து அதைத் தரிசிப்போர்க்கு 

1. திருமண வைபவங்களில் நிகழும் தோஷங்களுக்கு நிவர்த்தியும் 

2. ஹோமம், பூஜை. மந்திர உச்சாடனங்களில் ஏற்படும் பிழைகளுக்கு நிவர்த்தியும் 

3. பெரியோர்களின் சம்மதமின்றி நடைபெற்ற திருமணங்களில் அவர்களுடைய கோபமோ, சாபமோ, மன வருத்தமோ, வேதனைகளோ தம்பதியரின் மணவாழ்வை நிச்சயமாகப் பல கோணங்களில் பாதிக்கும். இதற்குரிய பரிஹார நிவர்த்தியையும் 

4. பூமிக் குற்றங்கள், நிழல் படிதல், எதிர்வினை இருள் சக்திகள், முறையற்ற சம்பவங்கள் நிகழ்தல் - இவையுள்ள கல்யாணச் சத்திரங்களில் திருமணம் நிகழ்தலால் இவையும் தம்பதியரையே பாதிக்கும். மேலும் சாந்தி முகூர்த்தம் எனப்படும் புனித வைபவம், அவரவர் சொந்த இல்லத்தில் நடப்பதுதான்! தூய்மையான இடத்தில் நிகழ்வது தான் தெய்வீகமானதாகும். இது தகாத இடங்களில் சத்திரங்களில் நடப்பதால் ஏற்படும் “வம்ச துரோக” தோஷங்களின் நிவர்த்தியையும் 

ஆக இத்தகைய அனைத்து தோஷ நிவர்த்திகளையும் தருவதாகவே இறைவனின் பங்குனி உத்திரத் திருக்கல்யாண வழிபாடு அமைந்திருப்பதால் இல்லறத்தோர் யாவரும் பங்குனி உத்தரக் காட்சியைக் கண்டு ஏழைகளுக்குப் பாலும் பழங்களையும் தானமாக அளித்து சிறப்பாகக் கொண்டாடிட வேண்டுகிறோம்.

ஸ்ரீசரபேஸ்வரர்

ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியின் புராணம் பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள்! சித்புருஷர்கள் அருள்கின்ற ஸ்ரீசரபேஸ்வர அவதார மஹிமையை மட்டும் நாம் விளக்குகின்றோம்! ஸ்ரீ சரபேஸ்வர அவதாரத்தைச் சுருங்கச் சொல்லிடில், ஹிரண்ய வதத்திற்குப் பிறகு, ஸ்ரீ நரசிம்மர், ஹிரண்யனுடைய உதிரத்தை அருந்தி தசை, எலும்புகளை மாலையாக அணிந்து கொண்டார். காரணம், அவ்வசுரனின் உடல் கூறில் ஓர் அணு கீழே விழுந்தால் கூட இப்பூமி தாளாது. அவனுடைய கொடிய குணங்கள் பரவி விடும் என்பதால் அவையனைத்தையும் தம் திருமேனியில் தாங்கினார். இதனால் ஸ்ரீ நரசிம்மரின் உக்ரம் மேலும் மிகுந்து அவர் “உக்ர தாண்டவம்” பெறவே அதன் வேகத்தைப் பலகோடி அண்டங்களாலும் தாள இயலவில்லை. எனவே ஸ்ரீ நரசிம்மர் பிரபஞ்சமெங்கும் உக்ர தாண்டவ நடனக் கோலத்தில் பவனி வந்தார். ஸ்வாமியின் உக்ரத்தைத் தாள இயலாது, தேவாதி தேவமூர்த்திகளும், தேவர்களும் சிவபெருமானை வேண்டிட, எந்த பிரதோஷ காலத்தில் அவதாரம் பெற்று, பிரதோஷ நேரத்தில் ஹிரண்யனை சம்ஹாரம் செய்து, பிரதோஷ நேரத்தில் ஸ்ரீ நரசிம்மருடைய உக்ர தவயோக சக்தி பல்கிப் பெருகியதோ அதே பிரதோஷ நேரத்தில் சிவபெருமானும் ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியாய் அவதாரங் கொண்டு ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியை ஆலிங்கனம் செய்து அவருடைய உக்ர தவயோக சக்தியை ஜீவ வழிபாட்டு நிலைக்குக் கொணர்ந்தார்.

ஸ்ரீ சரபேஸ்வரருடைய விநோதமான, அதிஅற்புதமான உருவத்திற்குப் பல விதமான விளக்கங்களை சித்புருஷர்கள் அருள்கின்றனர். பிரதோஷ நேரத்தில் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியையும் ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியையும் வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும்! குறிப்பாக, பல தாய்மார்கள் தங்கள் கணவன்மார்களுடைய மூர்கத்தனம், குடிப்பழக்கம், தகாத உறவுகள், சண்டித்தனம், முரட்டு குணங்கள் போன்ற அசுரத் தன்மைகளைக் கண்டு அஞ்சி, வருந்தி, மனவேதனையுற்று, அழுது. புலம்பி ரணகளமாய்த் தினசரி வாழ்க்கையை ஓட்ட வேண்டிய துர்பாக்ய நிலை ஏற்பட்டுள்ளதல்லவா! இதற்கான பரிஹாரத்தைத் தந்து தீய கர்ம வினைகளைத் தகர்த்து, அசுர குணங்களை மாய்த்து நற்குணத்தைத் தருவதே பிரதோஷ நேர ஸ்ரீ சரபேஸ்வர வழிபாடாகும். இதற்கு பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30 to 6) ஸ்ரீ சரபேஸ்வரருக்கு, அவர் சிலை வடிவமாக இருந்தால் முழு சந்தனக் காப்பும், தூணில் அவருடைய சிலாரூபம் அமைந்திருந்தால் தேங்காய் எண்ணெய்க் காப்பும் இட்டு வழிபடவேண்டும், எதிரெதிரே ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியும், ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியும் இருந்தால் முதலில் ஸ்ரீ நரசிம்மருக்கு நல்லெண்ணெயுடன், தைலக்காப்பு (கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி etc.) சேர்த்திட்டுப் பிறகு ஸ்ரீ சரபேஸ்வரருக்குத் தேங்காய் எண்ணெய்க் காப்பிட வேண்டும். 

பொதுவாக பிரதோஷ நேர ஸ்ரீ சரபேஸ்வர வழிபாட்டின் போது துதிக்க வேண்டிய தமிழ்/வடமொழி வேதமந்திரங்கள் பல உண்டு. கும்பகோணம் அருகே திருபுவனத்தில் ஸ்ரீ சரபேஸ்வரருக்குத் தனி சந்நதியே அமைந்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த மூர்த்தி! தீய குணங்களைத் தீய்க்கும் தீனதயாள மூர்த்தி! ராகு காலத்திற்கும் ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தி வழிபாட்டிற்கும் தொடர்புண்டு! என்ன அது?

பாஸ்கர பூஜை

லிங்கத்தின் மேல் படும் சூரிய ஒளி!

பல சுயம்புலிங்க மூர்த்திகளுடைய அதிஅற்புத தெய்வீக சக்தியை கிரஹிக்கின்ற அளவிற்கான புனிதமான உடலையோ மனதையோ நாம் பெறவில்லையாதலின், சூரிய பூஜையன்று, சூரிய பகவான் தன் தெய்வீகக் கிரணங்களால் சுயம்பு லிங்க மூர்த்தியை அபிஷேகம் செய்கிறாரல்லவா! அப்போது சுயம்பு லிங்க மூர்த்தியின் மிகவும் சக்திவாய்ந்த இறைப் பிரகாசத்தையும் சூரிய ஒளி தாங்கி அது நம் மீது படுகையில் அவற்றை நாம் எளிதில் பெறுகின்றோம். அதாவது சாதாரணமாக நம்மால் பெற முடியாத இறைசக்தியை சூரிய பூஜையன்று சூர்ய பகவானே நமக்குப் பெற்றுத் தருகின்றார்.

அதாவது சூரிய பகவான் தம் கிரணங்களை, தேவகதிர்களை, தெய்வீக ஒளிக் கிரணங்களை சுயம்பு லிங்க மூர்த்திகளின் மீது பெய்து, அபிஷேகித்து, இவ்வரிய வழிபாட்டின் பிரசாதமாக லிங்க மூர்த்தியிடமிருந்து பிரதிபலிக்கின்ற கதிர்களில் தாம் பெற்ற அரிய தெய்வீக சக்திகளைக் கூட்டி அன்று அங்கு சூர்ய பூஜையைத் தரிசனம் செய்ய வருபவர்களுக்கு அளிக்கின்றார். இது பெறுதற்கரிய பாக்யமல்லவா!

திருக்கருகாவூரில் சூரிய பகவானுடைய பூஜை 

கர்பப்பை கோளாறுகள் நீங்க, சுவாச/தோல் நோய்கள் நீங்கிட இவ்வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்கருகாவூர் ஸ்ரீ கர்பரட்சாம்பிகை அருள்பாலிக்கின்ற அருள்மிகு முல்லைவன நாதர் ஆலயத்தில் வரும் மாசி  23, 24, 25 (மார்ச் 7, 8, 9) தேதிகளில் மூலவராம் சுயம்புலிங்க மூர்த்தியின் மீது சூரிய கிரணங்கள் படுகின்றன. கல்லினால் அல்லாது புற்று மண்ணினால் ஆன புனிதமான லிங்கமாதலின் இதற்குப் பிருத்வி சக்தி அதிகமாகும். சுவாச நோய்களுக்கும், நுரையீரல் இருதயம் சம்பந்தப்பட்ட கடுமையான நோய்களுக்கும் அதி அற்புதமான முறையில் நிவாரணம் தரவல்ல பவித்ரமான லிங்க மூர்த்தியாகும். மேலும் பல பெண்களுக்கு கர்ப்பப்பை வலுவாக அமையாமையினால் அடிக்கடி கர்ப்பங்கள் நழுவி புத்ர பாக்கியம் இன்றிப் போய்விடுகின்றது. இதற்குப் பலவிதமான முன்வினைகள் காரணமாக இருப்பினும் அத்தகைய முன்வினைளைக் களைய வல்லதே மாசி 23, 24, 25 தேதிகளில் இங்கு நடைபெறுகின்ற சூரிய பகவானே முன்னிருந்து நடத்துகின்ற பாஸ்கர பூஜையாகும்.

அதாவது இந்நாட்களில் சூரியக்கதிர்கள் லிங்கத்தின் மேல் பட்டு பிரதிபலித்து வெளி வருகின்றதல்லவா! அச்சூட்சும் ஒளிக்கிரணங்கட்கு கர்ப்பபையை வலுப்படுத்தும் உன்னத சக்தி உண்டு. எனவே இந்நாட்களில், கர்பப்பை கோளாறுகளால் அவதியுறும் பெண்கள் மடி நிறைய குண்டு மஞ்சளைச் சுமந்து சூரிய பூஜையை தரிசிக்க வேண்டும். மூன்று நாட்களிலும் அதே மஞ்சளை மடியில் சுமந்து சூரியக் கதிர்கள் லிங்கத்தின் மேல் பட்டு மீண்டும் அவை பிரதிபலித்து வெளி வருவதை நன்கு தரிசிக்கவேண்டும். நித்துவ  ரிஷியானவர் தன்னுடைய மனைவி கருவுற்றிருக்கையில், கருவிற்கு ஏற்பட்ட ஆபத்து நீங்க அம்பிகையுடன் சேர்ந்து பாஸ்கர பூஜை முறையையே மேற்கொண்டார்: அவர்தம் காலத்தில் ஆயிரம் கோடி சூரியமூர்த்திகள் ஒரே சமயத்தில் கூடி இப்பாஸ்கர பூஜையை மேற்கொள்வதைக் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
இம்மூன்று நாட்களிலும் ஜாதிபேதமின்றி ஏழைச் சுமங்கலிகட்கு அவரவர் வசதிக்கேற்ப வெற்றிலை, பாக்கு, புடவை, ரவிக்கை, வளையல்கள், மெட்டிகள், சீப்பு, கண்ணாடியென சுபமங்களகரமான பொருட்களைத் தாராளமாகத் தானமளிக்க வேண்டும். இவற்றை எங்கு தானமளிக்க வேண்டும்? ஒவ்வொரு நாள் காலையிலும் “பாஸ்கர பூஜை” முடிந்தவுடன் மடியில் மஞ்சளுடன் கோயிலை அடிப்பிரதட்சிணம் செய்து கோயிலை ஒட்டியோ அல்லது வேறு பகுதிகளிலோ/ஊர்களிலோ அவரவர் மனம் விரும்புகின்றபடி இவற்றை எவருக்கும் தானமளித்திடலாம்.

மூன்று நாள் பூஜைக்குப் பிறகு, மூன்று நாட்களில் மடியிற் சுமந்த, தெய்வீக கிரணங்கள் ஊடுருவிய சக்தி வாய்ந்த மஞ்சளை என்ன செய்வது? தினந்தோறும் அடிவயிற்றிற் பூசி நீராடுதற்கு சில மஞ்சள்களையும், இல்லத்திற்கு அருகில் உள்ள அம்பிகைக்கு, அரசு, வேம்பு மரங்களுக்கு வெள்ளி, செவ்வாய் மற்றும் விசேஷ தினங்களில் மஞ்சள் அரைத்துப் பூசிட சிலவற்றையும் வைத்துக் கொண்டு ஏனையவற்றை பழுத்த (80 வயது நிறைந்த) சுமங்கலிகளுக்கும் ஏழை கர்பிணிகளுக்கும் தாம்பூலத்துடன் வைத்தளித்திட வேண்டும். 

கடும் தோல் நோய்களால் (படை, சொறி, சிரங்கு) பல வருடங்களாக அவதியுறுவோர் திருக்கருகாவூரில் மூன்று நாட்களிலும் பாஸ்கர பூஜையை தரிசித்து ஏழைகளுக்கு நல்ல புதிய கோரைப் பாய்களை, படுக்கையுடன் தானமளித்து வந்திடில் அடுத்த வருட சூரிய பூஜைக்குள் நல்ல முன்னேற்றங்களைக் கண்கூடாகக் காணலாம்.!

ஏனைய கோயில்களில் சூரிய கிரணங்கள் லிங்கத்தின் மேல் படிதல்

பஞ்சாங்க கணிதப்படி கீழ்க்கண்ட தினங்களில் சில கோயில்களில் மூலலிங்க மூர்த்தியின் மேல் சூரிய கிரணங்கள் படியும் சூரிய பூஜைகள் நிகழ்கின்றன. உயர்வான கட்டிடங்களமைப்பு, கோபுர/ சாலை அமைப்பு காரணமாக கீழ்க்கண்ட தேதிகளிலும் மாற்றம் இருக்கலாம். எனினும் தக்க பெரியோர்களிடம் முன்னரே கேட்டறிந்து கீழ்க்கண்ட ஆலயங்களில் நிகழ்கின்ற சூர்ய பூஜைகளைத் தரிசித்து அற்புதமான இறையருட்சக்தியைப் பெற்றுய்ய வேண்டுகிறோம்.

மாசி 1 முதல் 7 வரை - சேலம் அருகில் ஏத்தாப்பூர் ஸ்ரீ சாம்ப மூர்த்தி ஆலயம்
மாசி 13, 14, 15 தஞ்சை அருகே கண்டியூர் ஸ்ரீ சிரகண்டேஸ்வரர் ஆலயம்

(மாலையில்- மேற்கில்)
மாசி 17 முதல் 21 - சென்னை - குன்றத்தூர் சிவாலயம் (இங்கு சூரிய கிரணங்கள் தற்போது சரியாக விழுகின்றனவா என்பதை முன்னரே தீர விசாரித்துக் கொள்ளவும்)
மாசி 18 முதல் 24 திருவாரூர் அருகே திருநெல்லிக்கா சிவாலயம்

(மாலை - மேற்கில்)
மாசி 21 முதல் 25 - சென்னை - பூந்தமல்லி - ஸ்ரீ வைத்தீஸ்வரன் ஆலயம்
குறிப்பு : மேற்கண்ட தேதிகளில் பல யுகங்களாக, பஞ்சாங்க கணித நியதிப்படி சூரிய பூஜை ஆண்டாண்டு காலமாக நிகழ்ந்து வந்துள்ளன. கால வர்தமான மாறுபாடுகளினால் இவற்றில் சில மாற்றங்களிருக்க வாய்ப்புண்டு. எனவே அன்பர்கள் குறித்த கோயிற் பெரியோர்களிடமும் நன்கு விசாரித்து அறிந்து சூரிய பூஜையைச் சிறப்புடன் நடத்தி மக்கள் யாவரும் பயனுறும் வகையில் சிறந்த தொண்டாற்றிட வேண்டுகின்றோம்.

எங்களுடைய சிலநேரடியான அனுபவங்களின்படி வசதியற்ற பழங்காலக் கோயில்களில், முதல் பூஜையே 6, 7 மணிக்குத்தான் நடைபெறுவதால் சூரிய (உதய) பூஜையப் பற்றி எவருக்கும் அவ்விடத்தில் தெரியாமல் போய் விடுகிறது! அரும்பெரும் அவதார மூர்த்திகள் தோன்றிய இந்த ஈஸ்வர ஆண்டிலிருந்தேனும் மூல மூர்த்தியின் பேரில் சூரய கிரணங்கள் தோய்கின்றனவா என்று நன்கு கவனித்து மீண்டும் ''சூரிய பூஜை"' வைபவம் அந்தந்த ஊர்களில் நன்கு நடைபெற வேண்டுகிறோம்.

அடிமை கண்ட ஆனந்தம்

வெங்கடராமன் என்ற இளம் பள்ளிச் சிறுவனாய்த் தம் குருநாதர் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகளிடம், அச்சிறுவன் பெற்ற குருகுல வாச அனுபூதிகளோ எண்ணற்றவை! 'கலியுகத்தில் இப்படி, ஒரு குரு குலவாசமா' என்று சொல்லிப் பலரும் வியக்குமளவிற்குப் பல ஆண்டுகளுக்கு முன் சென்னை - ராயபுரம் ஸ்ரீ அங்காளி அம்மன் கோயில் முன் மண்டபத்தில் கோவணாண்டிச் சித்தராய், அவர் காட்டிய இறைநெறிகள் எத்தனையெத்தனை! ஊட்டிய குருவருட் பூர்ண சித்திகளோ அளப்பரியன! உள்ளிருந்து, உடனிருந்து பல திருத்தலங்களில் காட்டிய சித்புருஷர்களின், யோகியர் பெருமான்களின் தரிசனங்களை என்னவென்று வர்ணிப்பது! அரிய பல கோயில்களில் உழவாரத் திருப்பணிகளை நடத்தச் செய்து கோயில் தூண்களில் ஜோதியாய் மறைந்துள்ள எண்ணற்ற சித்புருஷர்களின் மஹிமைகளை உணர்த்தினாரன்றோ! ஹரித்வார், ரிஷிகேஷ், ராமேஸ்வரம், வேதாரண்யம் போன்ற திருத்தலங்களில் கிடைத்தற்கரிய இறையனுபூதிகள்! பொதிய மலை, கொல்லிமலை, இமாலய மலைப்பகுதிகளில் எடுத்துக் காட்டி உணர்த்திய மூலிகா பந்தனங்களோ கணக்கற்றவை!

இத்தகைய அற்புதமான குருகுலவாசத்தின் திரட்சியாய், சித்புருஷத் தத்துவத்தின் இலக்கணமாய் இன்று நம்மிடையே உலா வந்து, இல்லறமாம் நல்லறத்தை இனிதே ஏற்று நம்மை வழி நடத்திச் செல்லும் பெருந்தகையே ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள்! அவர்தம் குருகுல வாச அனுபூதிகள்தாம் அடிமைகண்ட ஆனந்தமாகப் பூத்து நமக்கு சற்குருவின் மஹிமையை எளிமையான நடையில் புகட்டுகின்றன!

சுத்தினால் முக்தி!!

நாளெல்லாம் பள்ளிக்குச் சென்று அயர்ந்த களைப்புடன் தினமும் மாலை சிறுவன் ராயபுரம் அங்காளி அம்மன் கோயிலுக்குச் செல்வான்.

ஒரு நாள்.....

“ஏண்டா, காலைல அங்காளியை 1008 சுத்து சுத்தினியா?”

“ஊங்...”

''1008 தானா, கொஞ்சம் கொறச்சுட்டியா?”

“ஒரு பத்து பதினஞ்சு எக்ஸ்ட்ராவா சுத்தினேனே வாத்யாரே!”

“ஓஹோ! அங்காளி அம்பாளுக்கு எக்ஸ்ட்ராவா நாலு சுத்தா! அடிசக்கை! ஏண்டா உனக்கு மண்டைல ஏதாச்சும் இருக்கா! கோடிக் கணக்கா சுத்த வேண்டிய பாக்கிய ஜன்ம ஜன்மமா வச்சுகிட்டு ஐயா அதிகமாக சுத்திட்டாராமே! இப்படிச் சொன்னதுக்குத் தண்டனையா, ரொம்ப கொறச்ச தண்டனையா நாளைக்குக் கூட ஒரு 108 சுத்து சுத்திடு!”.

சிறுவன் தளர்ந்து விட்டான்.

ஏற்கனவே பள்ளி சென்று வந்த களைப்பு வேறு!

“நேரா கோயிலுக்கு வந்திருடு ராஜா!” - என்று பெரியவர் சொன்னமையால் நேரே வந்து விட்டான். வந்ததும் வராததுமாய் அவன் “வாயைப் பிடுங்கி” ஏதேதோ சொல்ல வைத்து “ஏன் அப்படிச் சொன்னாய், இப்படிச் சொன்னாய்?” என்று ஏதேதோ தண்டனைகள் வேறு!

ஆனால் இப்போதெல்லாம் சிறுவனுக்கு இவை பழகிவிட்டமையால் அவன் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை! பெரியவர் எதைச் சொல்கிறாரோ அதை அப்படியே செய்வது என்று முடிவு செய்து வைத்திருந்தான்!

சிறுவன் வேதனையுடன் சீரியஸாக முகத்தை வைத்திருக்கவே, பெரியவரே எழுந்து வந்து, “என்னடா கண்ணு பசிக்குதா?”என்று பரிவுடன் விசாரித்துத் தன் இடுப்பிலிருந்து எதையோ எடுத்தார்.

“ஆஹா! ஏதாவது தின்னக் கிடைக்கும் போலிருக்கு! இல்லாட்டி இந்தக் காசுக்கு பரோட்டா வாங்கிவா என்று, சொல்வாரோ!” - சிறுவனுடைய முகம் மலரத் தொடங்கியது! அவனுக்குத்தான் பரோட்டா!” என்றாலே பத்தும் பறந்து போகுமே!

அடுத்த நிமிடத்தில்... சிறுவனுடைய முகம் எந்த அளவிற்கு மலர்ந்ததோ அந்த அளவிற்குச் சுருங்கியும் விட்டது, காரணம், பெரியவர் தன் இடுப்பிலிருந்து எடுத்தது ஒரு விபூதிப் பையைத்தான்!

சிறுவனுக்குச் சப்பென்றாகி விட்டது!

“ஏண்டா பயலே! இந்தக் கிழவன் இத்துனூண்டு விபூதியைத் தரமாட்டானான்னு எவ்வளவு பெரிய ஆளுங்க கியூ கட்டிக்கினு நிக்கறாங்க! ஐ.ஸி.எஸ், ஐ.எப்.எஸ், ஐ.பி.எஸ்னு, வெள்ளக்கார துரைங்க கூட இங்க வந்து நிக்கறதைப் பாத்திருக்கதானே! அதாண்டா கிட்ட இருந்தா எந்த அருமையும் புரியாது, தள்ளி நின்னாத்தாண்டா குருவோட சக்தி புரியும்!”

சிறுவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை! வாய் திறந்து பேசினாலும் மாட்டிக் கொள்கின்றோம்! எதை எண்ணினாலும் தப்பாகப் போய் விடு கின்றது! அதெப்படி எதையும் எண்ணாமலிருக்க முடியும்!

“எதையுமே நெனக்காம இருக்கறது கஷ்டம் ராஜா! ஆனா நல்லதையே நெனச்சுக்கிட்டு இருக்கலாந்தானே!”

இவ்வாறாகத் தான் சிறுவனுக்கு ''சும்மா'' இருக்கும் நிலையை அதாவது எந்தத் தீய நினைவுகளுமின்றி நல்ல மன ஓட்டங்களுடன் இருக்கின்ற சாத்வீக தியான நிலையை போதித்தார். இதன் பிறகுதான் சிறுவன் தினமும் இரவு படுக்கும் போது அன்னதானம் செய்தல், சிறுசிறு கோயில்களைக் கட்டுதல், பூஜை செய்தல் போன்ற நற்காரியங்களை மானசீகமாகச் செய்து வரலானான், இத்தகைய தியான நிலையே பல வருடங்களாகப் பயின்ற அரிய தீர்க தரிசனத்தையும், சிறந்த மனோதிடத்தையும், மனோசக்தியையும், ஆற்றலையும் குருவருள் கூடிய தெய்வ கடாட்சத்தையும் சிறுவனுக்குப் பெற்றுத் தந்தது.

“நேரே போய் கோயில் குளத்துல குளிச்சிட்டு இந்த விபூதிய உடம்பெல்லாம் பூசிக்கிட்டு வா! பைய  எங்கேயும் வச்சிடாதே, தேவலோகத்துப் பையிது! என்னோட சக்தியெல்லாம் இதுக்குள்ளாறத் தானிருக்கு!''

சிறுவன் சிரித்துக் கொண்டே தலையை யாட்டினான். “எப்போதும் இந்த திருநீற்றுப் பையைத் தராதவர் இன்று மட்டும் தருவதேன்! ஏதோ நமக்குச் சோதனைதான்”.

“வருவது வரட்டும்!” என்ற திடமான வைராக்யத்துடன் எழுந்து நின்று தன்னிடம் விபூதிப் பை இருக்கின்ற தைரியத்தில் சிறுவன் பீடுநடையுடன் குளத்திற்குச் சென்றான்.

சிறிது நேரங்கழித்து...

நெற்றி, உடலெங்கும் திருநீற்றுக் கீற்றுக்களுடன் ஜ்வலித்த சிறுவனைக் கண்டு அயர்ந்த பெரியவர், “அடடா என்ன ஷோக்கா இருக்கே நீ! நல்ல சிவனடியாராட்டம் இருக்குடா! ஆமாம், விபூதிப் பை எங்கே?!”

விபூதிப் பையை எடுத்து நீட்டினான். பெரியவர் விபூதிப் பையை நன்றாக உதறிவிட்டு, “அடடே! எல்லா விபூதியும் போச்சேடா, என் சக்தி யெல்லாம் தண்ணியாக் கரைச்சுட்டியே! இது ஃபுல்லா இருந்த விபூதி என்னாச்சு?”

இப்போது சிறுவன் மிகவும் உஷாராகிவிட்டான் அல்லவா, வாயை நன்றாக இறுக மூடியதுடன் மனதையும் நன்றாக டைட்டாக மூடிக்கொண்டான், ஒரு எண்ணமும் வரவிடாமல்!

“ஓஹோ! ஐயா ரொம்ப டெவலப் ஆயிட்டாரு போல இருக்கே!”
"அது சரி...'' என்று மிகவும் சீரியஸான நிலையில் பெரியவர் தன் பின்னாலிருந்து ஒரு நார்ப்பட்டுத் துண்டை எடுத்துச் சிறுவனுக்குக் கட்டிவிட்டு நிறைய ஸ்படிக மாலைகளையும் ருத்ராட்ச மாலைகளையும் எடுத்துச் சிறுவனுக்கு அணிவித்தார்.

“இவையெல் லாம் எங்கிருந்து வந்தன ?!” சிறுவன் அதிசயித்தான்!

JUDGMENT PASSED.....

“ஸ் ஸ் ஸ் ...... சொல்றதை நல்லாக் கேட்டுக்கோடா! இந்தப் பலகைல நல்லா பத்மாசனம் போட்டு உக்காந்துக்கோ! கொஞ்ச நேரத்துல ஒரு சாரியட்ல வெள்ளக்கார துரை வருவான்! ஏதோ அவங்க தாத்தா, பாட்டிங்க நம்ப நாட்டுல பொறந்து ஏதோ தானதர்மம் செஞ்சிருக்காங்க, அதனால் நம்ப அவனுக்கு ஏதாச்சும் பண்ணியாகணும்! நேத்தி நீ இல்லாதப்போ இங்க வந்து அவனோட பிரச்னையெல்லாம் சொன்னான், அதையெல்லாம் அப்புறம் நீ கேட்டுத் தெரிஞ்சுக்க!”

“இன்னிக்கு அந்த துரையை வரச் சொல்லியிருக்கேன். வரும்போது நெறய ப்ரட், ஜாம் கொண்டு வருவான். எல்லாத்தையும் இங்க தானம் பண்ணச் சொல்லு! எல்லாம் முடிஞ்சதுக்கப்புறம் உங்கிட்ட வருவான். நான் இங்க இல்லைன்னு சொல்லி சமாளிச்சுடு! இந்த விபூதிப் பையிலேந்து இத்துனூண்டு விபூதி எடுத்துக் கொடு! ஆனா அதுக்கு முன்னாடி... அவன் பையில ஒரு தங்கப் பேனா வச்சிருப்பான். அந்தப் பேனாவை இந்த வாழையிலை மேல வக்கச் சொல்லு! ஆனா நீ அந்தப் பேனாவைக் கையினால் கூடத் தொடக் கூடாது!”

“இதோ பாரு துரை! உன்னோட பிரச்னைக்குக் காரணமே இந்தப் பேனாதான்னு எங்க குரு உன் கிட்ட சொல்லச் சொன்னாருன்னு துரை கிட்ட சொல்லு! பெரிய ஜட்ஜுல்ல, அதனால் டக்குனு புரிஞ்சுப்பான். அதுக்கப்புறம் அங்காளியைச் சுத்தப் போய்டுவான். நீ இடத்தைக் காலி பண்ணிடு! மறந்துடாம பேனாவை வாழையிலைல சுத்திக்கோ, கையினால் தொட்டுடாதே!'' படபடவென்று பெரியவர் பேசி முடிப்பதற்கும் கோயிலின் வாசலில்“ஜல் ஜல்” என்று குதிரை சாரியட் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது!

நல்ல பழுத்த, வயதான, ஆனால் வாட்ட சாட்டமான, வெள்ளை வெளேரேன்று பறங்கிப்பழம் போல் ஒரு வெள்ளைக்கார துரை வந்திறங்கினார். சுற்றிலும் சேவகர்கள்! துரையின் கட்டு மஸ்தான உடலைக் கண்டு சற்றே மனம் கலங்கிய சிறுவன் சுற்றும் முற்றும் பார்த்தான், பெரியவரைக் காணவில்லை, அவர் சென்ற சுவடுந் தெரியவில்லை!

வெள்ளைக்கார ஜட்ஜ் (ரிடயர்டு!) நேரே சிறுவனிடம் வந்து மேலும் கீழும் பார்த்தார். “ஓ லவ்லி டிஸைபிள்!”

“ஜட்ஜூகிட்ட ரொம்பப் பேச்சு வச்சுக்காத” என்று பெரியவர் எச்சரித்தது நினைவிற்கு வரவே சிறுவன் ஜட்ஜிடம் அவருடைய சேவகர்கள் கொண்டு வந்த ப்ரெட்டை ஏழைச் சிறுவர்களுக்கு விநியோகிக்குமாறு சைகை காட்டிடவே “ஒ தட்ஸ் பைன்” என்று சொல்லியவாறு மளமளவென்று பிரெட்டைக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்.

அப்போதுதான் சிறுவன் ஒன்றைக் கவனித்தான்! ஜட்ஜின் கைகளிரண்டும் சரிவர இயங்காது நடுங்கிய நிலையில் அவர் மிகவும் கஷ்டப்படுவதைக் கண்டான் . அனைத்தையும் கொடுத்து முடித்த பிறகு ஜட்ஜ் சிறுவனிடம் வந்து மிகவும் பிரயத்தனப்பட்டு வலது கையை நீட்டினார், ஏதோ பிரசாதம் கேட்பது போல!
சிறுவன் உஷாரானான்!

“முதல்ல அந்த தங்கப் பேனாவை எடுத்து இந்த இலைமேல வச்சிடுங்க!”

ஜட்ஜூக்குத் தூக்கிவாரிப் போட்டது போலிருந்தது!

ஆனால் சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளை போல் நடுங்கும் விரல்களால் கோட் பையிலிருந்து தங்கப் பேனாவை வாழை இலையில் வைத்திட அடுத்த க்ஷணத்தில் அவருடைய கைகளின் நடுக்கம் நீங்கியது!
ஜட்ஜ் ஆனந்தத்தில் மேலும் கீழும் குதிக்கலானார்!

மருத்துவர்களுக்கான பூஜை

டாக்டர்கள் தெய்வீக சக்தியைப்பெறுவதற்கான தெய்வீகவழிமுறைகள்

தற்காலத்தில் நோய்கள் குணமடைவதற்காக நோயாளிகள்தான் எத்தனையோ பிரார்த்தனைகளை மேற்கொள்கிறார்கள்! மருத்துவர்களுக்குமுரிய விசேஷமான பூஜை முறைகளும் உண்டு என்பதை அனைவரும் உணர்ந்திட வேண் டும். இராகு காலம், எமகண்டம், கூடா நாட்கள் எனப்படும் பிரபலாரிஷ்ட யோக நாட்கள், சூன்ய திதிகள் போன்றவற்றை டாக்டர்கள் நன்கு தெரிந்து கொண்டு இந்நேரங்களைத் தவிர்த்து மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும். 

தற்காலத்தில் நோயாளியினுடைய நக்ஷத்திரம், பிறந்த நாள் ஆகியவற்றை அறிந்து டாக்டர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதே சிறப்புடையது! மருத்துவத் தொழிலை இறைவன் தமக்களித்த  தியாகப் பூர்வமானப் பணி என்று நன்கு அறிந்து செயல்படவேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்குரிய காப்பு மந்திரங்கள் பலவுண்டு. அதுவும் மருத்துவர் தொழிலில் தான், கர்ம வினைகளைக் கழிப்பதற்கான நிறைய தெய்வீக சந்தர்ப்பங்கள் கிட்டுகின்றன. ஆனால் இதனை நன்கு பயன்படுத்திக் கொண்டு, உத்தம தெய்வீக நிலையை அடையக் கூடிய தெய்வீக பாக்கியத்தை எவ்வளவு பேர் பெற்றிருக்கின்றார்கள்?

தக்க சத்குருவைப் பெற்றிருந்தால், அவரே நல்வழிகளைக் காட்டுவார் அன்றோ!

ஓம்கார தியானமே மருத்துவர்களுக்கு மிகவும் சிறப்புடையதாக அமைந்திருக்கிறது. சாதாரண காய்ச்சல் முதல் மிகப் பெரிய அளவில் உள்ள கடும் நோய் வரை எதுவானாலும் சரி முதலில் ஓம்கார தியானமே மருத்துவர்களுக்கு மிகவும் ஏற்புடையதாக சித்புருஷர்கள் அருள்கின்றனர். ஒரு மஞ்சள் துணியிலோ/வெள்ளி சந்தன கிண்ணத்திலோ, பசுவின் குளம்படி மண்ணை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலையில் நீராடியவுடன் இதனைக் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும். நெற்றிக்கு விபூதியோ, திருமண்ணோ குங்குமமோ இடுகையில் குலதெய்வத்தையும் இஷ்ட  தெய்வத்தையும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஓம்கார பிரகாரம்
உய்யக்கொண்டான்மலை சிவாலயம்

ஓம்கார தியானமெனில் காலை, மதியம், மாலை, இரவு ஆகிய 4 வேளைகளிலும் ஓம்கார தியானத்தை மேற்கொள்ள வேண்டும். மருத்துவர்களுக்குரிய ஓம்கார தியானம் வேறுபட்டதாகும். தூய வெள்ளை வேட்டியை பஞ்சகச்ச முறையில் அணிந்து மா, பலா, தேக்கு மரப் பலகையில் அமர்ந்து கண் களை மூடிக் கொண்டு ''ஓம் ஓம் ஓம்'' என்று மனதினுள் ஒலித்துக் கொண்டே ஓம்கார ஒலியை ஓம்கார ஒளி வடிவத்தில் காண முயற்சிக்க வேண்டும்.

கோயில்களில் நியான் (Neon) விளக்குகள் ஓம் வடிவத்தில் இருக்குமல்லவா, அதேபோல்தான்! இது சற்றுக் கடினமாகயிருப்பின் உங்களுக்கு பிடித்தமான கோயிலின் கோபுரத்தைக் கண்களுக்குள் நிறுத்தி அதன் மேல் ஓம்கார ஒளி ரூபத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் ஓம்காரத்தை ஒலித்தலை இடைவிடாது தொடர்ந்திட வேண்டும்.

குறைந்தது பதினைந்து நிமிடங்களேனும் ஒவ்வொரு வேளையிலும் இதனைப் பழகுதல் வேண்டும். திருவிடைமருதூரில் ஓம்காரப் பிரணவப் பிரதட்சிணம், திருச்சி உய்யக்கொண்டான் மலையிலுள்ள ஓம்கார பிரணவ சுற்றுப் பிரகாரம் போன்ற இடங்களில் ஸ்ரீ விநாயகருக்கு உரிய சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளிலும் தங்களுடைய பிறந்த நக்ஷத்திரங்களிலும் டாக்டர்கள் அடி பிரதக்ஷிணமோ, முட்டி பிரதக்ஷிணமோ (கால் முட்டிகளால் மண்டியிட்டு நடந்து வருதல்), செய்து வருதலால் ஓம்கார தியானம் மேன்மையடையும்.

ஸ்ரீ நாராயண பெருமாளின் அவதாரமான ஸ்ரீ தன்வந்த்ரீ மூர்த்தியே நோய் நிவாரணத்திற்கு மூல கர்த்தா  ஆவார். பூலோக ஜீவன்களுக்குள்ளது போல் சகல கோடி அண்டங்களிலுமுள்ள உடல், மன, உள்ள நோய்களுக்கு ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தியே பல்வகை ஒளஷதங்களின் மூலம் நிவாரணமளிக்கின்றார். எவ்வாறு சிவகுமாரனாக, முருகனாக, கந்தவேளாக, கார்த்திகேயனாக, சுப்பிரமணியனாக, ஆறுமுகனாக முருகப் பெருமான் அருள் புரிகின்றாரோ, இதே போல் “ஸ்ரீ சஹஸ்ர நேத்ர தன்வந்த்ரீ”, “ஸ்ரீ விஷ்ணு சக்ர தன்வந்த்ரீ”, “ஸ்ரீ சிபிவிஷ்டாய தன்வந்த்ரீ”, “ஸ்ரீபங்கஜ நேத்ர தன்வந்த்ரீ”, “ஸ்ரீ சுந்தர மூல தன்வந்த்ரீ”, “ஸ்ரீ வதன சம்ரக்ஷகாய தன்வந்த்ரீ”   போன்று பலவிதமான தன்வந்த்ரீ மூர்த்திகள் ஒவ்வொரு தலத்திற்கு மட்டுமல்லாமல், ஒவ்வொரு நோயையும் தீர்க்கின்ற தன்வந்த்ரீ மூர்த்தியும் உண்டு. இத்தகைய ஆன்மீக  ரகசியத்தையெல்லாம் தக்க சத்குரு மூலம் கேட்டுப் பெற்றுப் பரிபூரண பலன்களை அடையலாம்.

நம்முடைய ஸ்ரீ-ல-ஸ்ரீ-லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தின் சார்பில் திருச்சி, தஞ்சை, சென்னையைச் சுற்றியுள்ள வசதியற்ற கிராமங்களில் நடைபெறும் ஏழை எளியவர்கட்கான இலவச மருத்துவ முகாம்களின் போது அந்தந்த கிராமத் திற்குரிய ஸ்ரீ விஷ்ணுவின் அம்சமான ஸ்ரீ தன்வந்த்ரீ மூர்த்தியின் பெயரை மருந்துச் சீட்டிலும் (Prescription), மருந்து கவர் களிலும், அறிவிப்பு நோட்டீஸ்களிலும், மற்றும் கரும்பலகைகளிலும் அச்சடிக்கப்பட்டு/எழுதி பல்லாயிரக் கணக்கானோரும் இவ்வரிய இறை நாமத்தை ஒதுமாறு செய்து ஜாதி, மத, பேதமின்றி யாவருக்கும் ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தியின் திருவருள் கிடைக்குமாறு செய்து வருகின்றோம்.

சித்புருஷர்கள் எடுத்துரைக்கின்ற நோய் நிவாரண ஆன்மீக முறைகளில் இதுவும் ஒன்றாகும். டாக்டர்கள்  தங்களுக்குரிய சத்குருநாதரை அடைந்து விட்டால் மருத்துவத் துறையின் மூலம் மிக எளிதில் புனிதமான உத்தம இறைநிலைகளை அடைந்திடலாம் என்பது திண்ணம்.

ஸ்ரீ அகஸ்திய விஜயம் இதழில் அளிக்கப்பட்டு வரும் எளிய இறைவழி பாடுகளை இயன்றளவு  கடைபிடித்து வந்து திருஅண்ணாமலை கிரிவலம், மாதந்தோறும் மாசி மகத்தில் கும்பகோணம் மகாமகக்  குளத்தில் நீராடுதல் மற்றும் அன்னதானம், ஏழை மக்களுக்கு இலவசமாக நோய் நிவாரண மருந்துகள் மற்றும் டானிக்குகள் அளித்தல், இலவச மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு எவ்விதக் கட்டணமும் பெறாது அரிய மருத்துவ சேவை புரிதல், திருமழபாடி, ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோயில் போன்ற தலங்களில் ஸ்ரீ வைத்தீஸ்வரன் என்ற நாமத்தைத் தாங்கியிருக்கும் தெய்வ மூர்த்திகளை வழிபடுதல்  போன்றவற்றைத் தொடர்ந்து செய்து வருதல் வேண்டும்.

இதைப் படிக்கும்போது இவ்வளவு செய்ய வேண்டுமா, இதற்கு நேரமில்லையே என்று மலைப்பாகத்  தோன்றும்! ஆனால் பலவிதமான கிளப்புகளிலும் (recreation clubs), ஹோட்டல்களிலும், புகை பிடித்தல் மற்றும் மதுபானங்கள் அருந்துதல், கேளிக்கைகள், நண்பர்களுடன் அரட்டை அடித்தல் போன்றவற்றில் வீணாக்குகின்ற காலத்தை உண்மையான மனசாட்சியுடன் நினைத்துப் பார்த்தால், “நான் ரொம்ப பிஸி, எனக்கு நேரமில்லை”, என்று சொல்வது எத்தகைய அப்பட்டமான பொய் என்பதும், தெய்வீகமென்றாலே எவ்வளவு விலகி ஓடுகிறோம் என்பதும், பணத்திற்காகப் பேராசைப்பட்டு இருக்கின்ற தெய்வீகத்தையே இழக்கச் சித்தமாய் உள்ளோம் என்பதும் நன்கு புரியும்.

நெல்லுவாய்புர ஸ்ரீ அமிர்த தன்வந்த்ரீ

கேரளத்தில் திருச்சூர் அருகில் உள்ள நெல்லுவாய்புரத்தில் ஸ்ரீஅமிர்த தன்வந்த்ரீ மூர்த்தி மூலமூர்த்தியாய் அருள்பாலிக்கின்றார். பல பிரசித்தி பெற்ற கேரள கோட்டக்கல் வைத்தியர்கள். இக்கோயிலில் ஒரு மண்டலம் தங்கி (48 நாட்கள்) தங்கள் வைத்தியத்தின் தெய்வீக சக்தியைப் பெருக்கிக் கொள்கின்றனர்.

பெயருக்கேற்றாற்போல் பல வயல்களுக்கிடையே ரம்யமான இயற்கைத் தோற்றத்திற்கிடையே பரிமளிக்கும் அதி அற்புமான தலம்! எத்தகைய நோயையும் தீர்க்க வல்ல, மருத்துவர்களுடைய திறமையைப் பெருக்குகின்ற மிகவும் சக்தி வாய்ந்த ஸ்ரீ தன்வந்த்ரீ மூர்த்தி.

மூன்று மாதத்திற்கு ஒரு முறையேனும் தேய்பிறையில் ஆயில்ய, திருவோண நட்சத்திரங்களிலும், செவ்வாய், சனிக் கிழமைகளிலும் இம்மூர்த்திக்கு விரதமிருந்து அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி போன்ற மூலிகைக் கீரைகள் கலந்த உணவை அன்னதானமாக அளித்து வழிபட வேண்டும். இம்மூர்த்தியின் திருஉருவப் படத்தை இல்லத்திலும், மருத்துவமனைகளிலும் அனைத்து அறைகளிலும் இதற்குரிய தியான ஸ்லோகத்துடன், அனைவரும் கண்டு தரிசிக்குமாறு வைத்திட வேண்டும்.

ஸ்ரீ தன்வந்த்ரீக்குரிய ஹோமத்தை டாக்டர்கள் தங்கள் வீடுகளிலும் மருத்துவ மனைகளிலும் மாதம் ஒரு முறையேனும் கண்டிப்பாகச் செய்து வர வேண்டும். இதற்கென மருத்துவமனையில் தனி அறையை ஒதுக்கி நிரந்தரமாக ஹோம் குண்டத்தை அமைத்து, அதில் ஹோம பஸ்ம திருநீற்றுப் பிரசாதத்தை நோயாளிகள் பெறுமாறு ஆவன செய்திட வேண்டும்.

ஸ்ரீ தன்வந்த்ரீ மந்திரங்கள்

ஸ்ரீ தன்வந்த்ரீ மூர்த்திக்குரிய மூல, தியான, அஷ்டோத்திர ஸஹஸ்ரநாம, காயத்ரீ மந்திரங்கள் உண்டு. தம்பதியர் மருத்துவர்களாய் இருப்பின் இருவரும் சேர்ந்தோ அல்லது பல டாக்டர்கள் ஒன்று சேர்ந்தோ, சத்சங்கப் பூஜையாகச் செய்து வழிபட்டால் சிறந்த அனுகிரஹத்தைப் பெற்றிடலாம்.

பல மருத்துவர்கள் ஒன்று சேர்ந்து சுழல் முறையாக, ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஸ்ரீ தன்வந்த்ரீ ஹோமத்தை மிக எளிமையாக நடத்திடலாம். ரூபாய் 3000.. 5000 ஆகுமா? என்று எண்ணாதீர்கள். ஆத்மார்த்தமாகச் செய்திடில் ரூபாய் இருநூறு முதல் உங்களுடைய வசதிக்கேற்ப எளிதான முறையில் நீங்களே ஸ்ரீ தன்வந்த்ரீ ஹோமத்தை நடத்தும் முறையையே இத்தொடர் கட்டுரையில் அளிக்கயிருக்கின்றோம். இதைப் படித்துத் தெளிவு பெற்று மேலும் விளக்கங்கள் வேண்டுமாயின், எங்களிடம் கேட்டுப்பெற்று மருத்துவமனைகள் எங்கும், ஸ்ரீ தன்வந்த்ரீ ஹோம மந்திரங்களும், சக்தி வாய்ந்த ஹோமத்தின் தெய்வகடாட்சமும், ஜாதி, மத, பேத மின்றி அனைவருக்கும் சென்றடைந்து, ஆரோக்கியத்துடன் வாழ்ந்திட எல்லாம் வல்ல ஸ்ரீ தன்வந்த்ரீ மூர்த்தியைப் பிரார்த்தனை செய்கின்றோம்.

ஸ்ரீ தன்வந்த்ரீ மூர்த்திக்கான காயத்ரிமந்திரம்

சிவன், பிள்ளையார், முருகன், காயத்ரீ, பெருமாள் என அனைத்து தெய்வ மூர்த்திகளுக்கும், ஸ்ரீ காயத்ரீ மந்திரம் உண்டு. பொதுவாக காயத்ரீ என்பது இரண்டு வரிகளையுடைய இருபத்திநான்கு எழுத்துக்களையுடைய மந்திரமாகும். அஷ்டோத்திரம் மற்றும் சஹஸ்ரநாமம் 108, 1008 நாமங்களைக் கொண்டிருப்பதால் தியானத்திற்கும், ஹோமத்திற்கும், ஸ்ரீ தன்வந்த்ரீ காயத்ரீ மந்திரத்தையும், பூஜை அர்ச்சனைக்குப் போற்றித் துதிகளையும் ஓதி வழிபட்டிடுக!

ஓம் விஷ்ணுரூபாய வித்மஹே
அம்ருத தத்வாய தீமஹி
தந்நோ தன்வந்த்ரீ ப்ரசோதயாத்.

ஸ்ரீஆயுர்தேவி மகிமை

சித்புருஷர்கள் அருளிய ஸ்ரீ ஆயுர்தேவியின் உருவத்தைக் கலியுகத்திற்கு அளித்தவரே ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம ஸ்வாமிகள். 1992ம் ஆண்டு புரட்டாசி மாத நவராத்திரிப் பெருவிழாவில் சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ  வெள்ளீஸ்வரர் ஆலயத்தில் சித்புருஷர்களின் சில்ப கிரந்த நாடிகளிலிருந்து பெறப்பட்ட ஸ்ரீ ஆயுர்தேவியின் உருவத்தை கலியுகத்திற்கு முதன்முதலாக தம் குருவருளால் அர்ப்பணித்தவரே நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் ஆவார்.

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள்

1. கிருத யுகத்தில் தலைசிறந்து விளங்கிய ஸ்ரீஆயுர்தேவி வழிபாடானது காலப்போக்கில் மறைந்து ஸ்ரீ சாஸ்தா, ஸ்ரீ சந்தோஷிமாதா, பிரதோஷ, விஷ்ணுபதி பூஜைகள்/வழிபாடுகள் போன்று மீண்டும் தெய்வீக மறுமலர்ச்சி கொண்டு கலியுகத்தில் நடைமுறைக்கு வருவதற்கான தெய்வீக நியதிகளையும்.

2. வாக் தத்துவமாய் எழுதாக்கிளவியாய் படைக்கப்பட்டுள்ள சித்புருஷர்களுடைய சில்ப கிரந்தங்களிலிருந்து ஸ்ரீ ஆயுர் தேவியின் திருஉருவத் தோற்றத்தின் விளக்கங்ளையும்

3. இவ்வரிய கிரந்தநாடி சுலோகங்களின்படி வரையப்பெற்ற ஸ்ரீ ஆயுர்தேவியின் திருஉருவத்தை முதன் முதலாக சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் ஆலயத்தில் கலியுக மக்களுக்காக அர்ப்பணித்தும் ஸ்ரீ ஆயுர் தேவியின் ஒன்பது கரங்களில் உறையும் மஹான்களின், யோகியரின்/சித்புருஷரின் மஹிமைகளையும், விளக்கங்களையும்

4. ஸ்ரீ ஆயுர்தேவிக்குரிய காயத்ரீ மந்திரம், பூஜா மந்திரம், நைவேத்ய விளக்கங்களையும்

5. ஸ்ரீ ஆயுர்தேவி வழிபாட்டினால் கிட்டுகின்ற அற்புதமான, அளப்பரிய பலா பலன்களையும்
மிக எளிமையான முறையில் பத்து தினங்களுக்கு பிரம்மாண்டமான விளக்க உரைகளாகத் தந்தருளியுள்ளார்கள். ஸ்ரீ ஆயுர்தேவி தொடர் உபந்யாசத்தின் நிறைவாக முதன் முதலாக ஸ்ரீ ஆயுர்தேவியின் ஓவியத் திருஉருவமும் ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகளால் பக்தர்களின் தரிசனத்திற்காக அற்புதமான ஓவியப்படமாக வரையப் பெற்றுப் படைக்கப் பட்டது.

8. நவராத்திரி விழாவில் ஸ்ரீ ஆயுர்தேவி ஆன்மீகத் தொடரின் நிறைவு நாளன்று மயிலை குருஜி ஸ்ரீ-ல-ஸ்ரீ சுந்தரராம் ஸ்வாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசிகளை வழங்கினார்கள்.

ஸ்ரீஆயுர்தேவி

ஸ்ரீ ஆயுர்தேவிக்கான விசேஷ ஹோம வழிபாடு

கடந்த சில வருடங்களாக ஸ்ரீ ஆயுர்தேவிக்கு சிலைவடிப்பதற்காக ஆயிரக் கணக்கான பக்தர்கள் ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராமஸ்வாமிகளிடம் வற்புறுத்தி வருகின்றார்கள். தக்க தெய்வீகத் தருணமானது தெய்வவாக்காய்  இதற்காக இன்னமும் அமையவில்லை.

1. மேலும் பல பீஜாட்சர மந்திரங்களின் உச்சாடன சித்தி ஏற்பட வேண்டும் என்பதாலும் 

2. எந்த ஒரு தெய்வ மூர்த்தியின் சிலா ரூபமும் தான்ய வாசம், புஷ்ப வாசம், தைல வாசம் என்பது போல மந்திர கவச வாசம் என்ற தாந்த்ரீக முறைப்படி ஸ்ரீ ஆயுர்தேவியின் திரு உருவமானது குறித்த பலகோடி மந்திர ஜபங்களிலும் உச்சாடனம் செய்யப்பட வேண்டும் என்பதாலும்

3. மந்திர பூஜைக்கும் பிறகு ஸ்ரீ ஆயுர்தேவிக்குரித்தான புரஸ் சரண முறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும். இது முக்கியமாக குரு மூலமாகவே உபதேசம் பெறப் பெற்றே செய்யப்பட வேண்டும் என்பதாலும்
இறையருளால் ஸ்ரீ ஆயுர்தேவியின் திருஉருவம் நமக்குக் கிடைப்பதற்காக அரும்பாடுபட்ட ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம ஸ்வாமிகளே இதுகாறும் ஸ்ரீ ஆயுர்தேவியின் சிலா ரூபத்தை வடிப்பதற்கு முனைந்திடவில்லை, காரணம், இதற்குரிய சித்புருஷர்களின் தெய்வீக அனுமதி கிட்டிடவில்லை. மேலும் ஸ்ரீ ஆயுர்தேவிக்குரித்தான ஹோம முறைகளும் பிரத்யேகமாக உண்டு. ஆனால் ஸ்ரீஆயுர் தேவியின் கலியுகத் திரு உருவ வழிபாட்டிற்கு எவ்விதக் கட்டுப்பாட்டு நியதிகளும் கிடை யாது. ஸ்ரீஆயுர்தேவியின் பட வழிபாடு மிக அற்புதமான காரிய சித்திகளைத் தரவல்லதாகும்.

பொதுவான ஹோமங்களில் ஸ்ரீ ஆயுர்தேவி காயத்ரீயையும் சேர்த்து ஜபித்து ஆஹூதி இடுவதில் தவறில்லை. ஆனால் ஸ்ரீ ஆயுர்தேவிக்கென தனிப்பட்ட ஹோமகுண்டம் அமைக்கும்போது குரு மூலம் உபதேசம் பெற்றே அமைத்திட வேண்டும். ஸ்ரீ ஆயுர்தேவிக்குரிய ஹோம குண்ட பீஜாட்சரங்கள் நிறைந்த பிரத்யேக  சக்கர விளக்கங்களும் விரிவாக உள்ளன. எனவே ஸ்ரீ ஆயுர்தேவிக்குரிய சிலாரூபத்தை வடிக்க விரும்புவோரும் ஸ்ரீஆயுர்தேவிக்குரித்தான விசேஷமான ஹோமத்தை நடத்த விரும்புவோரும் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம ஸ்வாமிகளிடம் தக்க விளக்கங்களைப் பெற்று உய்யுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. ஸ்ரீ ஆயுர்தேவி பூஜைக்காகவோ ஹோமத்திற்காகவே எவ்வித வழிபாட்டுக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது.

2. ஜாதி, இன, குல பேதமின்றி அனைவருடைய நல் வாழ்விற்காகவும் சங்கல்பம் அமைந்திட வேண்டும்.

3. ஸ்ரீ ஆயுர் தேவிக்குரித்தான விசேஷமான ஹோமத்தை நடத்துவோர் தக்க குருவிடமிருந்து தக்க உபதேசம் பெற்றிருக்க வேண்டும். 

4. அங்குஷ்ட சித்தியெனும் முறையில் குறித்த விரல் ஜப எண்ணிக்கைகளையும் உபாம்சு சித்தி எனும்  முறையில் குறித்த எண்ணிக்கையில் மானசீக  மந்திர சித்தியையும் அர்க்யசித்தி எனும் முறையில் புண்ய  நதி தீரத்தில் குறித்த எண்ணிக்கையில் ஜல தியானமும், நிறைவேற்றியவர்களே குருமூலமாக ஸ்ரீ ஆயுர் தேவிக்குரிய விசேஷ ஹோமத்தை நிறைவேற்றும் தகுதியைப் பெற்றவர்களாவர்.

5. ஸ்ரீ ஆயுர் தேவிக்குரிய பீஜாட்சர மந்திரங்கள் நிறைந்த விசேஷ சக்கரமானது சித்புருஷர்களின் கிரந்தங்களில் வடிக்கப் பெற்றுள்ளன. மிகவும் சக்தி வாய்ந்த இப்பீஜாட்சரங்களின் தொகுப்பு முறை  நவவியாகரண சூத்திரத்தைத் தழுவிய நவகோணச் சக்கரமாகும். இதனையும் தக்க குரு மூலமாக உபதேசமாகப் பெறுவதே சிறப்புடையது.

6. இவ்விளக்கங்களின் மூலக் கருத்துரை யாதெனில் ஸ்ரீ ஆயுர்தேவியின் திருஉருவம் பட வழிபாடே அனைத்து இல்லங்களுக்கும் உரித்தான மிகமிக எளிதான வழிபாடாகும். ஸ்ரீ ஆயுர்தேவி ஹோமம், சக்கர/எந்திரப் பிரதிஷ்டை ஆகியவற்றை குருமுகமாகப் பெறுதல் தான் உத்தமமான முறையானதும் கூட!
ஸ்ரீ ஆயுர் தேவி திருஉருவ வழிபாடுகளை கலியுகத்திற்காக எளிமையாக ஜாதபேதமின்றி யாவரும் கடைபிடித்திடலாம்.

ஸ்ரீஐயப்ப விரதம்

சித்புருஷர்கள் அருள்கின்ற முறையில் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகளுடைய “ஸ்ரீ ஐயப்ப பிரபாவம்” என்னும் ஆன்மீகச் சொற்பொழிவில் ஸ்ரீ ஐயப்ப விரத முறைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. சென்ற இதழிலிருந்து (பிப்ரவரி 1998) இவ்வித நெறிமுறைகளின் விளக்கங்கள் தொடங்கியுள்ளன.

எல்லாம் வல்ல ஹரிஹர சுத ஐயப்பனின் திருவருளால் மிகச் சிறப்பாகப் பல்கிப் பெருகி வருகின்ற ஸ்ரீ ஐயப்ப பக்திமார்கம் பற்றி நாம் ஆனந்தமடைகையில், ஆங்காங்கே காணப்படுகின்ற விரத பங்கங்களைக்  களையும் வண்ணம் முறையான விரத நெறி முறைகளை சற்குரு ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்த ஸ்வாமிகளின் குருவாய் மொழிகளாகத் தொடர்ந்து அளிக்கின்றோம்.

வீர சாஸ்தா விரதம்

ஸ்ரீ ஐயப்ப விரதம் வேறு, ஸ்ரீ ஐயப்ப தரிசனம் வேறு ! எவ்வாறு சாந்த ரூபிணியாக ஈஸ்வரியாம் பார்வதி தேவியானவள் மங்களாம்பிகையாக, தையல் நாயகியாக, பெரியநாயகியாக, கற்பகாம்பிகையாக, அகிலாண்டேஸ்வரியாக அருள்பாலிக்கின்றாளோ அதே அம்பிகையே உக்ர வடிவில் பிரத்யங்கிரா காளியாகவும், (திருநாகேஸ்வரம் அருகே ஐயாவாடி -பஞ்சவடி) அஷ்டபுஜ மஹாகாளியாகவும் (திருவலஞ்சுழி) அஷ்டதச புஜ துர்க்கையாகவும் தரிசனம் தருகின்றாள்! அமைதியான ரூபத்திலும் அஞ்சும் வடிவத்திலும் ஒரே தேவியே!

ஸ்ரீ காளிக்கு ஏனிந்த வடிவம்?

நம்முடைய நியாயமான பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கும் சாத்வீக குணங்களைத் தருவதற்கும் சாதாரண வடிவில் ஈஸ்வரி காணப்படுகின்றாள் . ஆனால் சுபமங்களத் திருமணத்திற்கும் சந்தான பிராப்திக்கும் மற்றும் பல நற்காரியங்களுக்குத் தடையாக நிற்கும் கொடிய தீவினைகளை நசுக்கும் வகையில் அத்தீவினைகளே அஞ்சியோடும் வண்ணம் அம்பிகை காளிபோல் வடிவம் சொள்கின்றாள்.

ஆரியங்காவு திருத்தலம்

தாரகன், மகிஷாசுரன், பண்டாசுரன் போன்ற அசுரர்கள் இமயமலை போல் பருத்துப் பெருத்து விண்ணளவு மாயா ரூபங் கொண்டு பயமுறுத்துகையில் அவனைவிட அஞ்சும் உருவைக் கொண்டால் தானே அவனை வெல்ல முடியும்! மேலும் துவாபர, கலியுக நியதிகளாக, மனிதனும், தேவர்களும் அச்சம் காரணமாகவே தீவினைகளின் பக்கம் செல்லத் தயங்குவர் என்ற வரம்பின்படி இத்தகைய ரஜோமய உருவத்தை உலக அன்னை ஏற்கின்றான். புழுவாகவும், புல்லாகவும், யானையாகவும் தாவரங்களாகவும், விலங்குகளாகவும், மனிதர்களாகவும், தேவர்களாகவும் ஏன், இப்பிரபஞ்சத்தின் உள்ளும் புறமுமாகவும் விளங்கும் ஈஸ்வரிக்கு எவ்வித உருவமும் ஒரு பொருட்டல்லவே!

கலியுகத்தில் அசுரர்கள் இல்லையே என்று கேட்கத் தோன்றுகின்றதா? ஏனில்லை? லஞ்சம், திருட்டு, கொலை, கொள்ளை, முறையற்ற காமம், பொறாமை, துரோகம், பழிவாங்குதல், பகை, பொய், பொதுப் பணத்தைக் கையாடுதல், பிறரை வஞ்சித்தல் போன்ற தீவினைகளையே தம் வாழ்க்கையாகக் கொண்டுள்ள ஒவ்வொரு மனிதனும் ஒரு அரக்கனே ஆவான்.

எனவே தான் இம்மனித அசுரர்களை வதைத்துத் திருத்திடவே இறைவனே ஸ்ரீ துர்க்கையாகவும், அய்யனாராகவும், வீரபத்திரராகவும், கருப்பண்ணசாமியாகவும், காளியாகவும், முனீஸ்வரராகவும், வெவ்வேறு ரூபங்களில் தோற்றமளிக்கின்றார். எனவே ஸ்ரீ துர்கையை வணங்கிடுகையில் நம்மையும் அறியாமல் நம்மிடம் கிளைத்துள்ள அசுர சக்திகள் ஸம்ஹாரம் செய்யப்படுகின்றன.

விரத மஹா மூர்த்தி

இவ்வாறாக ஸ்ரீ ஐயப்பனை சித்புருஷர்கள் “விரத மஹா மூர்த்தி” என அழைக்கின்றனர். காரணம், முறையான விரதங்களின் மூலமாக பிரத்யட்சமாகப் பல அற்புதமான பரிபூர்ண பலன்களை அளிப்பவரே ஸ்ரீ ஐயப்ப மூர்த்தி ஆவார் . விரதங்களே ஸ்ரீ ஐயப்பனுக்கு மிகுந்த பிரீதியைத் தருவதாகும். விரதமில்லாமல்  சென்றால் என்ற என்ன வினா எழுகின்றதல்லவா? விரதமின்றிச் சென்றிடில் அது ஸ்ரீ ஐயப்ப தரிசனமாகும்.

பழனி முருகனை தரிசிக்கச் சென்றால் காவடி எடுத்தல். பாதயாத்திரை, விதவித மான அபிஷேகங்கள், அர்ச்சனை, ஸஹஸ்ர நாம அர்ச்சனை, சந்தனக் காப்பு, புஷ்ப அலங்காரம், தங்கத் தேர் பவனி - என்று விதவிதமான முறைகளில் வழிபடுகின்றோமல்லவா?

அந்தந்த நாள் திதி, நக்ஷத்திரத்திற்கேற்பவும் வழிபாடுகள் மாறுகின்றன. நட்சத்திரத்தைப் பொருத்தும் பரிபூர்ணப் பலன்களை பெறுவதற்கான வழிபாட்டு முறைகளும் உண்டு. இதேபோல் விரத மஹா மூர்த்தியாக விளங்குகின்ற ஸ்ரீ சபரிமலை ஐயப்பனை முறையான ஒரு மண்டல விரதத்தை அனுஷ்டித்து வழிபட்டால்தான் அது பரிபூர்ண ஐயப்ப வழிபாடாகும்.

பலரும் சுயநலத்தின் பொருட்டும், அவரவர் வசதிகளைக் கருத்தில் கொண்டும் ஒருவாரம், பதினொரு நாள், இருபத்தியொரு நாள் போன்று குறுகிய கால பரிபூர்ணமற்ற விரத நெறிகளைக் கடை  பிடிக்கின்றனர். நாற்பத்தி எட்டு நாட்களைக் கொண்ட ஒரு மண்டல முறையான விரதமே ஸ்ரீ ஐயப்ப விரதமாகும். காரணம், ஸ்ரீ ஐயப்பன் அமர்ந்துள்ள யோக பட்டை தவக் கோலத்தை சித்புருஷர்கள் விரத பூஷண மூர்த்தியின் அம்சங்களாகப் போற்றுகின்றனர். அதாவது ஸ்ரீ யோக சாஸ்தாவின் பரிபூர்ண அனுகிரஹத்தைப் பெற்றிட முறையான யோகமண்டல விரதங்களையே மேற்கொண்டிட வேண்டும்.

அறிந்தோ அறியாமலோ விரதக் குற்றங்கள் இருந்தால் என்ன செய்வது? அறிந்து செய்திடில் அதற்குரிய விளைவுகளை அனுபவித்தேயாக வேண்டும். அறியாமல் செய்திருப்பின் மனப்பூர்வமாக இறைவனைப் பிரார்த்தித்து, மன்றாடி, தக்க பிராயச் சித்தங்கள் வேண்டியும் இனி அத்தகைய தவறுகளை மீண்டும் செய்யாதிருக்கவும் உறுதியான வைராக்கியத்தைப் பூண்டிட வேண்டும்.

பதினெட்டு ஆண்டுகள் தொடர்ந்து முறையான விரதம் பூண்டு பதினெட்டு ஜோதி தரிசனங்களைக் கண்டவர்களே உத்தம குருஸ்வாமி ஆகின்றார் என்று கண்டோமல்லவா. இத்தகையோர் கிட்டாவிடில் எப்படி ஒருவர் விரதமாலையை அணிந்து கொள்வது? தந்தையும் தாயும்  முன்னறி தெய்வங்களாதலின் அவர்களுடைய திருக்கரங்களால் மாலையைப் பெற்று, அவர்களுடைய திருப்பாதங்களைச் சேவித்து மாலையை அணிந்திட வேண்டும்.

பம்பை தீர்த்தம்

இதன் பொருள் யாதெனில் பெற்றோர்கள், மனைவியின் முறையான அனுமதியைப் பெற்றே ஸ்ரீ ஐயப்ப விரதத்தை மேற் கொள்ள வேண்டும் என்பதே. தாயோ தந்தையோ இல்லாவிடில் ஸ்ரீஐயப்பன் திருஉருவத்திற்கு முன் மாலையை வைத்து குறித்த சில பூஜைகளுக்குப் பிறகு ஸ்ரீ ஐயப்பனை மெய்ஞ்ஞான சாட்சியாகக் கொண்டு தாமே மாலையை அணிந்திடலாம்.

விரத நாட்களில் பாயிலோ மெத்தையிலோ படுத்துறங்கலாகாது. கட்டாந்தரையில் பசுஞ்சாணம் கொண்டு நன்றாக மெழுகித் துடைத்து அவ்விடத்தில் துணியை விரித்துத் தலையணை இன்றியே படுத்துறங்க வேண்டும். இயன்ற வரை விரத நாட்கள் முழுதும் மனைவியின் முகத்தை நேருக்கு நேர் பார்த்திடாமல், குறைந்த அளவில் உரையாடுதலே விரதத்தை செம்மைப் படுத்தும். இந்நாட்களில் மனைவியுடன் சேர்ந்தமர்ந்து வண்டியில்/ஸ்கூட்டரில் பயணம் செய்வதைத் தவிர்த்திடுக.

இந்நியதிகள் மிகவும் கடினமானவை போலவும் நடைமுறைக்கு ஒவ்வாதவை போன்றும் தோன்றும். ஆனால் இவற்றை ஆழ்ந்த நம்பிக்கையுடன் கடைபிடிப்போர் தான் இத்தகைய விரதத்தின் பரிபூரண பக்குவத்தை உணர்வதோடு உடலுக்கு தேஜஸும் உள்ளத்திற்கு தெய்வீகத் தன்மை யும் தோன்றுவதை  நன்கு உணர்ந்திடலாம்.

ஆனால் கலியுகத்திலுள்ள ஒண்டுக் குடித்தனம், மிகச் சிறிய வீடு, ப்ளாட் (Flat) முறையிலான வாழ்க்கை முறைகளுக்கு இத்தகைய விரதம் கைகூடுமா?

இதற்காகவே அக்காலத்தில் மண்டல பாதயாத்திரை விரதத்தை மிகச் சிறந்ததென ஏற்றனர். அதாவது ஒருவர் எந்த நாளில் விரதமாலையை ஏற்கின்றாரோ அன்றிலிருந்தே சபரிமலையை நோக்கிப் பாதயாத்திரையைத் தொடர்ந்திடுவார். இடையில் தாமே சமைத்துண்டு கோயில் குளம், மடங்களில் தங்கி ஸ்ரீ ஐயப்ப மூர்த்தியின் ஏக சிந்தனையோடு அவருடைய விரதம் இறையருளால் பரிபூரணமாக அமையும், அதாவது ஒரு மண்டலத்தின் 48 நாட்களிலும் அவர்கள் பாத யாத்திரையிலேயே ஸ்ரீ ஐயப்ப நாமாவளிகளை ஓதியவாறே இறைச் சிந்தனையில் இலயித்து வாழ்வர். இத்தகைய உத்தம விரதமே “வீர சாஸ்தா விரதமாகும்”. கலியுகத்தில் இன்றைக்கும் மேற்கண்ட வீர சாஸ்தா முறையைக் கடைபிடிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஹோட்டல்களிலும் வெளி இடங்களிலும் உண்ணுதல் கூடாது. புனித ஆறுகளிலும் கோயில்  தீர்த்தங்களிலும் உள்ள நீரையே அருந்துதல் வேண்டும். மண்டல பூஜை யாத்திரையின் போது  இல்லத்திலோ உறவு முறையிலோ எத்தகைய அசுப காரியங்கள் நிகழ்ந்திடினும் “ஸ்ரீ ஐயப்ப விரதத்தை முழுமையாகக் கடைபிடித்த பிறகே இல்லறத்திற்குத் திரும்புவோம்”, என்றவாறான ஆழ்ந்த நம்பிக்கையுடன் கூடிய விரதமே ஸ்ரீ ஐயப்ப பக்தியைச் சீராக்கும்.

ஸ்ரீ ஐயப்ப சமாராதனை என்பது ஐயப்ப விரதம் பூண்டோர்கள் ஒன்று கூடி தாமே சமைத்து சாதி, மத, இன, பேதமின்றி அன்னதானம், அளிப்பதாகும். தற்காலத்தில் அறிந்தவர்களையும், நன்கு வசதியுள்ள நண்பர்களையும் சுற்றத்தார்களையும் அழைத்து உணவிடுவதாக சுயநல நோக்க முடையதாக இது மாறிவிட்டது.

மூன்று வேளையோ அல்லது குறைந்தது காலை, மாலை இரு வேளைகளிலும் நீராடி அவரவர் குடும்ப பாரம்பரியத்திற்கேற்ப நெற்றிக்கு விபூதி, திருமண், சந்தனம் இட்டிட வேண்டும்,

அலுவலகத்திற்கு மட்டும் பாண்ட், சட்டை அணிதல், பிறநேரங்களில் கருப்பு நீல நிற ஆடைகளை அணிதல் விரதமாகாது. அகங்காரத்தையும், ஆணவத்தையும், சுயநலத்தையும் மாய்ப்பதற்காகவே விரதத்திற்கு கருப்பு, நீல நிற ஆடைகள் அணியப்படுகின்றன. விரத ஆடை அணிதலில் தாமே சுய நியதிகளை அமைத்துக்கொண்டு அதனை அலுவலக வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் மாற்றக்கூடாது.
5 வயது முதல் 10 வயதிற்குட்பட்ட விரதமிருக்கும்சிறுவர்களே “மணிகண்டன்” என்று அழைக்கப்படுவர். பெயருக்கேற்ப கழுத்தில் மணியைக் கட்ட வேண்டுமே தவிர மணிக்கட்டு, தோள், கைகளில் மணியை அவரவர் இஷ்டத்திற்கு மணியைக் கட்டிடலாகாது. மணிகண்ட விரத முறையில் மேற்குறித்த வயது வரம்பை மீறலாகாது.

தற்காலத்தில் ஸ்ரீ ஐயப்ப விரதம் பூண்டுள்ள பெரும்பாலான அலுவலர்கள் (Office Goers) தங்கள் வாழ்க்கை வசதிக் கேற்ப சுயநல நோக்கங்களுடன் விரத நியதி முறைகளைத் தங்கள் இஷ்டத்திற்கு அமைத்துக் கொள்வதுமிகவும் வேதனைக்குரியதாகும். இவர்கள் 7, 11, 21 என்றவாறாகத் தங்கள் வசதிக்கேற்ப மிகக் குறைந்த நாட்களுக்கு மிகவும் எளிமையான முறையில் விரதத்தை அமைத்துக் கொண்டு சபரிமலை சென்று வருவது முறையான விரதமாகாது.

மேலும் அலுவலகத்திற்கு பாண்ட், சட்டை அணிந்து கொண்டு சென்று ஏனைய வேளைகளில் கருப்பு, நீல வண்ண ஆடைகளை அணிந்து கொள்வது முறையான விரதமாகுமா என்று மனசாட்சியைத் தொட்டுக் கேட்டுக் கொள்ளுங்கள். இத்தகைய விபரீதங்களைத் தாங்களே செய்து கொள்வது மட்டுமன்றி ஆயிரக்கணக்கான மக்களுக்கு (இத்தகைய தவறான பூஜைகளின் மூலம் வரும் சாபங்களைத் தரும் விரதபங்கத்திற்கு) முன்னோடியாக நிற்கலாமா? ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு மைல் நடந்து சென்று கோயில் தரிசனத்திற்குச் சென்று வந்தால்தான் பாதயாத்திரையின் மகிமையை நன்கு உணர முடியும்.

பெருவழிப் பாதையே சிறப்பானது. தினந்தோறும் குறைந்தது மூன்று மணி நேரம் ஸ்ரீ ஐயப்ப பஜனை, பூஜை. தியான முறைகளில் கண்டிப்பாக ஈடுபடுதல் வேண்டும். இரண்டு செட் உடைகளை மட்டும் வைத்துக் கொண்டு ஆடைகளை தினந்தோறும் துவைத்து உலரவைத்து அணிதல் வேண்டும்.

விரத நாட்களில் முடி வெட்டுதலோ, முகச் சவரமோ செய்தல் கூடாது. விரத முடிவிலும் குறித்த நாட்களில் தான் மழித்தலைச் செய்து கொள்ள வேண்டும்.

பொங்கலோ பொங்கல்

தெய்வ மூர்த்திகள் சாட்சியாகத் தைத்திருப் பொங்கல்  14.1.1998 அன்று நம்முடைய திருஅண்ணாமலை ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தின் சார்பில் மக்களின் நல் வாழ்க்கைக்காகப் பொதுவான சங்கல்பம் செய்து நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் அருகிலிருந்து தக்க நல்சற்குருவாய் வழிகாட்டிட சித்புருஷர்களுக்குரித்தான சங்கராந்திப் பண்டிகை (உத்தராயணத் தைப் பொங்கல்) முறையில் ஜாதிபேதமின்றி பல அடியார்கள் குடும்ப சகிதம், சத்சங்க முறையில், ஆஸ்ரமத் திருவாயிலில் பல பொங்கல் பானைகளை ஒரே சமயத்தில் வைத்திட, பொங்கல் திருவிழா தெய்வத்தன்மை நிறைந்ததாய் இனிதே கொண்டாடப்பட்டது.

முன்புறம், கிழக்கே, சூரிய பகவான் உதயஸ்தானத்திலிருந்து சிவ சூரியனாய் அருள் பாலித்திட, மேற்கே சந்திர பகவான் தம்முடைய அருட்கிரணங்களை வானில் வாரி வழங்கிட, வலப்புறம் - தென்திசையில் தென்னாடுடைய சிவனாக, திருஅண்ணாமலையார் வீற்றிருக்க, வட்புறம் சற்குருநாதர் ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள், ஈஸ்வர ஆண்டு தைப் பொங்கல் மகிமையை விளக்கி அருள்வழி காட்டிட, மத்தியில் பேரானந்தத்தில் திளைத்து, புளகாங்கிதம் அடைந்த நிலையில் பொங்கலை சமைத்துப் படைத்து அடியார்கள் அருட்பிரவாக மழையில் நனைந்து ஆனந்தித்தனர். எட்டுத் திக்கும் எழிலார்ந்த தெய்வ கடாட்சம்!

பொதுவாக, தைப்பொங்கலைப் படைக்கையில் சூரிய சந்திர கோலத்தை வரைவோமல்லவா? ஆனால் விண்ணில் ஸ்ரீ சூரிய நாராயண சுவாமியும், ஸ்ரீ சந்திர பகவானும் ஆர்த்தெழுந்து சாட்சிகளாய் நின்றிட, எதிரே சிவசக்தி ஐக்யஸ்வரூப் மூர்த்திகளாகத் திரு அண்ணாமலையாரும் ஈஸ்வரியும் பார்த்து நிற்க, சற்குருநாதரின் அருள்மிகு மேற்பார்வையில் பொங்கலைப் படைப்பதென்றால் எத்தனை கோடி ஜென்மம் எடுத்தாலும் கிடைக்காத பாக்கியமன்றோ! தெய்வமூர்த்திகளின் நேத்திரப் பார்வையில் இறைவனின் இரு நேத்திரங்களான வடமொழி, தமிழ் மறைகளை ஓதியவாறே படைக்கப்பட்ட பொங்கல்!

பொங்கலைப் படைத்தவுடன் அடியார்களா பொங்கலை உண்டார்கள்? இல்லை. இல்லை! அதே தெய்வமூர்த்திகளின் சாட்சியாக, இத்தகைய அரிய பாக்கியத்தைத் தந்தமைக்காக நன்றிக் கடனாக, இறைப் பிரசாதமான, சுடச்சுட ஆவி பறக்கும் இனிய பொங்கலானது அந்த இடத்திலேயே கிரிவலம் வருகின்ற உத்தம் அடியார்களுக்கும், ஏழை எளியோர்க்கும் அன்னதானமாக உடனே அளிக்கப்பட்டது! தை மகர சங்கராந்திப் பூஜையின் சங்கல்பமானது இவ்வகையில் அன்னதானத்துடன் தான் பரிபூர்ணமடையும். இதன் பிறகே அடியார்கள் எஞ்சிய பொங்கல் பிரசாதத்தை சிறிது உண்டு ஆனந்தமடைந்தனர்.

சிவசக்தி ஐக்கிய ஸ்வரூப தரிசனத்தின் முன்னிலையில் எழுந்த ஈஸ்வர ஆண்டு தைத்திருப் பொங்கலின் அனுபவத்தின் விசேஷ பூஜாபலன்களைத் திருஅண்ணாமலையாருக்கே அர்ப்பணிக்கின்றோம்.

உத்தராயணப் புண்ணிய காலத்தின் தொடக்க நாளாதலின், தாம்பூல தானம், யானைக்குக் கரும்பு அளித்தல், பொங்கல், மஞ்சள், பழங்கள், எலுமிச்சை அன்னம், பஜ்ஜி போன்ற தானங்களுடன் பொங்கல் தினம் நன்முறையில் அமைந்தது. அனைத்தும் சற்குருவின் திருவருளால்தான்!

நீதித் துறையினருக்குரிய இறை வழிபாடுகள்

உலகெங்கும் தற்போதைய நீதித் துறையில் சாட்சியங்களை வைத்துத் தான் நீதி வழங்கும் முறை நிலவுகின்றது. தெய்வத்திற்கு பயந்து நியாயமாக வாழ்கின்ற வாழ்க்கை மறைந்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.

பொதுவாக வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும் ஸ்படிகமணி தியான முறையே சிறப்புடையது என்று சென்ற இதழில் விளக்கியுள்ளோம் அல்லவா ? ஸ்படிகம் போன்ற மனம் என்று கூட புனிதமான மனதைச் சொல்வதுண்டு. நல்ல விஷயங்களையும், நல் மந்திரங்களையும், தெய்வீக சக்திகளையும் தன்னுள் கிரஹித்துக் கொள்ளக் கூடிய சக்தியை அதிகமாகப் பெற்றிருப்பதே ஸ்படிக மணிகளாதலின் இவர்கள் ஸ்படிக மாலையை அணிவது சிறப்புடையது. ஆனால் சட்டையையோ, ரிஸ்ட் வாட்ச்சையோ அணிவது போல டக்கென்று ஸ்படிக மாலையைப் போடுவதோ கழற்றுவதோ ஏற்புடையதல்ல.
.
ஒரு சந்தனப் பேழையிலோ மா, பலா தேக்கு போன்ற (சிறு) மரப் பெட்டியிலோ தாமரை, வாழை, இலைகளிலோதான் ஸ்படிகமாலையை வைத்திடல் வேண்டும். ஒழுக்கமான வாழ்க்கையைக் கடைபிடிப்போர்தான் எப்போதும் ஸ்படிக மாலையை அணிந்திடலாம்.

அந்தர்முக ஸ்படிக தியானம்

நீதிபதிகளுக்குரித்தான ஸ்படிக மணி தியான முறைகளுள் ஒன்றே அந்தர் முக ஸ்படிக தியானமாகும். உண்மையிலேயே சத்தியம் தவறாது நீதியை அளிக்க விரும்புகின்ற நீதிபதிகள் தக்க ஸ்படிக மணிகளுடன், எம்முடைய ஸ்ரீ அகஸ்திய விஜயம் அலுவலகத்தைத் தொடர்பு கொள்வார்களேயானால், சற்குரு அருளால், தக்க பெரியோர்களின் ஆசியுடன் அவரவர்க்குரிய ஸ்படிக மணி தியான, பூஜை முறைகளை தெய்வீக விளக்கங்களுடன் அளிக்கத் தயாராகவுள்ளோம். ஆனால் எக்காரணம் கொண்டும் எத்தகைய சோதனைகள் ஏற்படினும் சத்தியம் தவறாது. சிபிச் சக்கரவர்த்தியைப்போல், மனுநீதிச் சோழனைப்போல் நீதிவழுவா நெறிமுறைகளின்படி வாழ்தல் வேண்டும்.

அந்தர்முக ஸ்படிக தியான முறையில் காலையிலும், இரவிலும் குறித்த நேரத்தில் கிழக்கில் தலை வைத்து, கிழக்கு மேற்காக ஆகாயத்தை நோக்கியவாறு படுத்த நிலையில் மார்பின் இடப்புறம், இருதயத்தின் மேல் ஸ்படிக மணி மாலையை வட்ட ஆரமாகச் சுற்றி வைத்து, கண்களை மூடிய நிலையில், ஸ்படிக மாலையின் மேல் விநாயகர் அமர்ந்திருப்பதாக பாவனை செய்திடுக!

இத்திவ்யமான காட்சியைத் தன் கண்களுக்குள் நிலைநிறுத்தி தரிசித்து மகிழ வேண்டும். இது மன சுத்திக்கு வழிவகுப்பதோடு, எத்தகைய சிக்கல்கள் நிறைந்த வழக்குகள் ஆயினும் பண்பட்ட மனதுடன், சற்றும் கலங்கிடாது தகுந்த நீதியை நிச்சயமாக நிலைநிறுத்திட முடியும். இந்த அந்தர்முக ஸ்படிக தியான முறையை காலை, இரவு நேரங்களில் மட்டுமின்றி, எப்போதெல்லாம், சிக்கலான வழக்கு வருகின்றதோ அப்போதெல்லாம் இந்த தியான முறைகளைப் பயின்று, வழக்கு விஷயங்களில் மனதைச் செலுத்தினால் தெளிவு கிட்டும். குழப்பங்கள் தீரும்.

ஸ்பர்யந்த ப்ரதம தியானம்

உண்மையான நிரபராதியை அறிவதற்கான வழிமுறையாக இவ்வரிய தியான முறை சித்புருஷர்களால் அளிக்கப்பட்டுள்ளது. அஷ்டமிதிதியே இதற்கு மிகவும் சிறப்புடைய நாளாகும். இதற்கென குறித்த சில  பைரவ மந்திரங்கள் உண்டு. இதனைத் தக்க சற்குரு மூலமாகவோ பெரியோர்கள் மூலமாகவோ உபதேசம் பெற்று கடைபிடித்தல் மிகவும் உத்தமமானது ஆகும்.

அஷ்டமி திதியன்று சுக்ரஹோரை நேரத்தில் இப்பூஜையை செய்தல் மகத்தான பலன் களைத்தரும். இவ்வழிபாட்டிற்கு ஸ்பர்யந்த ப்ரதம தியானம் என்று பெயர் சூட்டப் பட்டிருப்பினும் குறைந்தது மூன்று மணி நேர மௌன விரதமோ அல்லது பூஜை முடியும் வரை மெளனத்தைக் கடைபிடிக்க வேண்டுமாதலின் இதுவும் தியான பூஜையாகின்றது.

தீர்த்த கண்டி பூஜை

கண்டீரோ தீர்த்த கண்டி!

கடந்த ஈஸ்வர ஆண்டு தீபாவளிக்குரித்தான பூஜை முறைகளில் ஒன்றாக தீர்த்த கண்டி பூஜை முறை அளிக்கப்பட்டதல்லவா?

இந்த தீர்த்த கண்டி என்பது பல யுகங்களுக்கு முன் தினசரி நடைமுறையில் இருந்து வந்த மிகச் சிறந்த பூஜையாகும். மிகவும் புனிதம் வாய்ந்த தீர்த்த பூஜை முறைகளில் இதுவும் ஒன்று. பல சதுர்யுகங்களுக்கு முன் பிரசித்தி பெற்று விளங்கிய இவ்வரிய பூஜையை, தற்போது தீர்த்த கண்டியை மீண்டும் அறிமுகப்  படுத்துவதின் மூலம் ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம் சுவாமிகள் நம்முடைய நல்வாழ்விற்காக, ஓர் அற்புதமான பூஜையாக நமக்கு அளித்துள்ளார்.

இவை எல்லாம் நம் மூதாதையர்கள் செய்து வந்ததே! இடைக் காலங்களில் அவ்வப்போது தோன்றி வந்த மகான்களால் வலியுறுத்தப்பட்டு வந்ததும் ஆகும். கடந்த தீபாவளிப் பண்டிகையின் போது கும்பகோணம் அருகில் உள்ள கபிஸ்தலத்தில் பெறப்பட்ட மிகவும் புனிதமான மண்ணால் ஆன நூற்றுக்கணக்கான தீர்த்த  கண்டிகள் சோழநாட்டின் பெருமதிப்பிற்குரிய குயவர் பெருமக்களின் அன்புக் கரங்களால் தஞ்சை மாவட்டத்தில் வடிக்கப்பெற்று ஸ்ரீ அகஸ்திய விஜய வாசகர்களுக்கும் நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கும்  எம்மால் அளிக்கப்பட்ட தல்லவா! தீர்த்த கண்டிப் பூஜையை ஜாதி வித்யாசமின்றிப் பலரும் கடைபிடிக்கும் பாக்யத்தை அளிப்பதற்கு ஒரு சிரு இறைக்கருவியாய் ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் பயன்பட்டதல்லவா!

மேற்கண்ட ஏழு துவாரங்களையுடைய தீர்த்த கண்டியை நீங்கள் உங்கள் ஊரிலேயே மண் பாண்டமாக  வடித்துக் கொள்ளலாம். அஷ்டமி திதியன்று சுக்கிர ஹோரை நேரத்தை அறிந்து கொண்டு, தீர்த்த கண்டியை சுத்தப்படுத்தி தாமே அரைத்த மஞ்சள், சந்தனம் இட்டு குங்குமம், புஷ்பம் வைத்து நன்றாக கண்டியை அலங்கரித்திட வேண்டும்.

ஒருவாழை இலையில் பச்சரிசியைப் பரப்பி அதில் பிள்ளையார் சுழியை இட்டு குல தெய்வம், இஷ்ட  தெய்வத்தை தியானித்து தீர்த்த கண்டியை பச்சரிசியின் மேல் வைத்திடவேண்டும். வாழையிலையின் நுனி கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்குமாறு வைத்திடுக! தீர்த்த கண்டியினுள் ஏழுவிதமான புண்யநதி/கோயில் தீர்த்தங்கள்/ இராமேஸ்வரம், திருவிடைமருதூர் போன்ற தலத் தீர்த்தங்களைப் பாதி கண்டிக்கு மேல் வருமாறு ஊற்றிடுக! இதனுள் மூன்று நீண்ட தர்ப்பைகளை வைத்து தீர்த்த கண்டியை நன்றாக மூடி தர்ப்பை வெளியில் தெரியுமாறு வைத்திடுக!

இப்போது குருமூலமாக உபதேசம் பெறப்பட்ட முக்கியமான சில பைரவ மந்திரங்களைக் குறைந்தது 1008 முறையேனும் ஓதிட வேண்டும், சுக்கிர ஹோரை முடிந்தவுடன் இயன்றால் பூஜையைத்  தொடர்ந்திடலாம் அல்லது சிறிது முந்திரிப் பருப்பைப் படைத்து, பூஜையை முடித்துக் கொண்டு, ஆறுமணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் வருகின்ற சுக்ர ஹோரை நேரத்தில் பூஜையைத் தொடர்ந்திடலாம்.

இவ்வாறாக அஷ்டமி திதி முழுதும் வருகின்ற சுக்ரஹோரை நேரங்களில் பைரவர் துதிகளைப் பாராயணம் செய்தல் வேண்டும். இயன்றால் பைரவ நாமாவளிகளை 1008 முறை ஓதி புஷ்பம் அல்லது வெள்ளி நாணயங்கள் கொண்டு அர்ச்சித்திடுக. (தீர்த்த கண்டியின் மேல் தட்டில் பசு நெய் தீபமும் சுற்றிலும் ஏழு அகல் தீபங்களும் ஏற்றுதல் மேலும் சிறப்புடையதாகும்.)

மறுநாள் பிரும்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து நீராடி, இக்கண்டியின் தீர்த்தத்தை முகத்தில் தெளித்துக் கொண்டு சிறிது பருகிட எத்தகைய சிவில் மற்றும் கிரிமினல் வழக்காக இருந்தாலும் உண்மையான நிரபராதி யாரென்று தெரியவரும். ஆனால் இதை மனதில் இரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் வெளிக்காட்டுதல் கூடாது.

இந்த பூஜை முறையானது உண்மை யான நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதற்கு மட்டுமே! சுயநலம், குறுகிய எண்ணம் கொண்டவர்களுக்கு இப்பூஜை எவ்வித பலனும் தராது. சத்யநெறி தவறாது, உள்ளம் நிறைந்த பக்தியுடன் வாழ விரும்புகின்ற நீதிபதிகளுக்குக் கலியுகத்தின் கண் கண்ட, ப்ரத்யட்சமான பூஜாபலன்களைத் தரக்கூடிய அற்புதமான “சப்த ஜலத்வீப தீப” பூஜையிது!

சத்யலோகத்தில் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சத்யநெறி பிறழ்ந்தமைக்காக சப்த ரிஷிகளும் பூலோகத்தில் பிறப்பெடுத்து திருக்கருகாவூரில் சுவாமிக்குத் தினமும் சந்தனம் அரைத்துத் தரும் இறைப் பணிதனை மேற்கொண்டு தாம் அரைத்த சந்தனக் குழம்பினால் 1008 தீர்த்த கண்டிகளை உருவாக்கிப் பல யுகங்களுக்குத் தீர்த்த கண்டி பூஜையைச் செய்து வந்தனர். அப்படியானால் எந்த அளவிற்கு எத்தனை ஆண்டுகளுக்கு இவ்வாறான அரிய தவத்தை அவர்கள் மேற்கொண்டிருப்பர் என்று சற்றே சிந்தித்துப் பாருங்கள்!

சப்தரிஷிகளுடைய இத்தகைய அரியதவத்தை மெச்சி சத்யகிரீஸ்வரராகக் காட்சியளித்த ஈஸ்வரன் “மாந்தர் பொய்யுரை புகல்கையில் மெய்யுரை காட்டும் ஆடி” என தீர்த்த கண்டியை விளித்து சப்தரிஷிகளுக்கு அருள் வழி காட்டினார்!

மலம் தரும் பாடம்

மலம் என்பது அனைத்து உயிரினங்களுக்கும் ஐட, திரவ பொருட்களுக்கும் உண்டு. நமக்கு மலமாக இருப்பது பன்றிக்கு உணவாகி, பூமிக்கு உரமாகி நமக்கு உணவாக மாறுவது அதிசயமே.

பூமாதேவியே பிரபஞ்சத்திலுள்ள அனைத்து மனத்து மலத் தன்மைகளையும் தன்னுள் ஏற்றுப் புனிதப்படுத்தும் மாபெரும் வரத்தைப் பெற்றுள்ளாள்

மலம் என்றால் மனிதனுடைய மலம் என்று மட்டும் பொருள் அல்ல. ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று வகை மலங்களைக் கழித்தால் தான் ஞானம் கூடும் என்பதை நாம் அறிவோம்.

நம் உடைகளில் சேருகின்ற அழுக்கு கூட மலமே, வியர்வையும், நம் உடல் அழுக்கும் கூட மலமே, தலை வாருகையில் சீப்பில் வரும் அழுக்கும் மலமே, பஜ்ஜி, போண்டா போன்றவற்றைச் சுட்டு எடுத்தபின் மிஞ்சும் சுட்ட எண்ணையும் ஒருவகை மலமே! நெல் போன்ற தானியங்கள், காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களில் உள்ள கசடுகள், தூசி தும்பை அனைத்தும் மலமே.

மலம் என்றால் ஒரு ஜீவனால் கழிக்கப்பட வேண்டியது அல்லது அழிக்கப்பட வேண்டியது அல்லது உணரப்படாதது/ஏற்கப்பட முடியாதது என்பது பொருளாகும். எனவே மலம் என்பது அருவருக்கத்தக்கது என்ற உணர்வு ஏற்பட்டிடினும் கர்ம வினைக் கழிப்பின் ஓர் அங்கமே மலமாகும்.

பொறுமையின் தெய்வமே ஸ்ரீ பூமா தேவியாவாள். ஸ்ரீ மன் நாராயண மூர்த்தி யோக நித்திரை கொண்டு ஸ்ரீ  ரெங்கநாதர், ஸ்ரீ அனந்தபத்மனாப ஸ்வாமி, ஸ்ரீ புஜங்க சயனர், ஸ்ரீ வைகுண்ட நாதர் போன்ற பல சயனக் கோல அவதாரங்களை மேற்கொண்டாரல்லவா? அப்போது ஸ்ரீ நாராயணி தேவியானவள் இத்தகைய அவதார மூர்த்திகளின் சமேத மூர்த்தியாக விளங்குவதற்காகப் பலவிதமான கடும் தவங்களை மேற்கொண்டாள்.

பரம்பொருளாம் திருமாலின் சயனக் கோலமென்றால் இறைவன் உறங்குகின்றான் என்பது பொருளல்ல!

எந்த மனிதனும் உறங்குவதில்லை! உறக்கமென்பது மனிதனுடைய ஒன்பது சரீரக் கூடுகளின் ஊடு மாற்றங்களேயாகும்.

ஸ்ரீ நாராயணிதேவி எத்தனையோ கோடி யுகங்கள் யோக தவமிருந்து பொறுமை என்னும் ஐஸ்வர்யத்தைப் பெற்றாள். இது பரம் பொருளுடைய யோக நித்திரையின் பேரம்சமாகும். இவ்வாறாகவே பொறுமையைப் பெற்றே ஸ்ரீ பூமாதேவி திருமாலின் சயனக் கோல சமேத தேவியானாள்.

ஆனால் எத்தனையோ கோடி புண்ய நதிகள், பலகோடி ஜீவன்களின் கர்ம வினைகளையும், பாவங்களையும் தம்முள் ஏற்பதால் அவை பூமிக்குப் பாரமாக அமைகின்றதல்லவா? மேலும் அனைத்து ஜீவன்களுடைய மலங்களும் அழுக்கு, தூசு, தும்பு, கழிவு நீரென அனைத்தையுமே பூமாதேவியே தாங்குவதால் ஸ்ரீ பூமாதேவியின் பொறுமைக்குக் கூட சோதனை ஏற்பட்டுவிட்டது போலும்!

எனவே திருமாலின் சயனக் கோல அவதாரத்தின் திருப்பாதத்தில் அமர்ந்த வண்ணம் ஆழ்ந்த யோகத்தில் அக்னி தவத்தைக் கூட்டி அனைத்து விதமான தீவினைகளும் கர்மவினைப் படிவுகளும், பாவங்களும் அடியேனின் மேனியில் படுவதால் ஏற்படும் கொடும் தீயிலிருந்து தன்னைக் காத்து ரட்சிக்கும்படி இறைவனை வேண்டினாள்.

நெடுந் திருமாலும் மகிழ்வு கொண்டு பூமாதேவியிடம், "யாம் வராஹ அவதாரம் கொண்டு பூமியைப் பிளந்து கொண்டு செல்ல வேண்டிய பல புராண வைபவங்கள் ஏற்படும். அப்போது எம்முடைய திருமேனி பட்ட திருமண்துகள் தனை நீ வழிபட்டு வந்திடில் பூமியே புனித மடைந்துவிடும்'', என்று வரமளித்தார்.

“மேலும் இறைவனுடைய அடிமுடி காணும் படலத்தில் யாம் வராஹ அவதாரத்தில் மீண்டும் பூமியினுள் சென்று யாமே பல சிவ லிங்கங்களை ஸ்தாபித்து பூமியினுள் செல்வோம். இவையே பிற்கால யுகங்களில் சுயம்பு மூர்த்தியாக வெளித் தோன்றும். அவற்றையும் நீ வழிபட்டு பிற ஜீவன்களினால் விளையும் கர்ம வினைப் படிவுகளிலிருந்து புனிதம் பெறுவாயாக!” என்றும் அருளினார்.

பலகோடி யுகங்களாக நித்திரையில் இருந்த ஸ்ரீ அனந்த சயனராகிய திருமால் யோகத்திலிருந்து விழித்தெழுகையில் ஏற்பட்ட ஜோதிப் பெருக்கிலிருந்து ஸ்ரீ சூரிய நாராயண ஸ்வாமி தோன்றினார். அவருடைய பாஸ்கர ஜோதி கிரணங்கள் ஸ்ரீ பூமாதேவியின் வலது கண்னை அடைந்தன.
பூமியின் நிலபுலன்களுக்குரிய கிரஹம் செவ்வாய்; செவ்வாய்க்குரிய ஸ்கந்த சக்திகளை பூமாதேவி தன்னுடைய இடக் கண்ணில் தாங்கி அருள்பாலிக்கின்றாள்.

ஸ்ரீரெங்கநாதப் பெருமாள் கபிஸ்தலம்

ஸ்ரீ வாஸ்து தேவதைகளில் பலவிதமான மூர்த்திகளுண்டு. களிமண், செம்மண் போன்ற பலவிதமான நில வகைகளுக்கேற்ப ஸ்ரீ வாஸ்து தேவதா வழிபாட்டுமுறைகள் மாறுபடுகின்றன. இவர்களுக்கெல்லாம் மூலாதாரமாக விளங்குபவரே ஸ்ரீ ஆதிமூலவாஸ்து புருஷ மூர்த்தியாவார்.  எனவே ஸ்ரீ வாஸ்து பூஜையை முறையாய்ச் செய்கின்றவர்களுக்கு, பூமியின் மீது அவர்கள் கழித்த மல மூத்ராதிகள் போன்றவற்றால் ஏற்பட்ட மல தோஷங்கள் நீங்கும். மேலும் ஸ்ரீ பூமாதேவியே, பூமியின் அடியில் எங்கும் பரபிரம்மம் போல் வியாபித்துள்ள ஸ்ரீ ஆதிமூல வாஸ்து புருஷமூர்த்தியை வழிபட்டு தம்முடைய தோஷங்களைப் போக்கிக் கொள்வதுடன் நம்முடைய பலவிதமான தீவினைக் கர்மங்களான மலங்களின் கழிப்பிற்கும் தக்க நல்வழிகாட்டியாய் அமைகின்றாள்.

எனவேதான் ஸ்ரீவாஸ்து பூஜையன்று ஸ்ரீ ரெங்கநாதர் போன்ற திருமாலின் சயனக்கோல மூர்த்திகளின் பாத தரிசனம் விசேஷமானதாக விளங்குகின்றது. காரணம் ஸ்ரீ ரெங்கனுக்கு எப்போதும் பாத பூஜை செய்து வருகின்ற தெய்வீக பாக்யத்தைப் பெற்றுள்ள ஸ்ரீ பூமாதேவியைப் பரம்பொருளின் பாதங்களுடன் சேர்த்து தரிசிப்பது பொறுமையையும், சாந்தமான தயாள குணத்தை அளிப்பதுடன் தீவினைகளான மலங்களையும் அழிக்க வல்லதாகும்.

இல்லறப் பெண்களும் இவ்வகையில் தங்கள் கணவன்மார்களுக்கு நன்முறையில் அடக்கத்துடனும் பொறுமையுடனும் பாத பூஜை செய்து வருவார்களேயானால், இல்லற தர்மம் சிறந்து விளங்குவதுடன் கணவனுடைய பலவிதமான தீவினைகளுக்கும் எளிதில் பரிஹாரத்தைப் பெற்றிட லாம்.

மூலிகைகள் தீர்க்கும் மும்மலம்

இயற்கையிலேயே புனிதம் பெற்று விளங்குபவை ஒரு சில பொருட்களே! பலவற்றைச் சுத்திகரித்தால்தான் அவை புனிதம் பெறுகின்றன. தங்க நகையானது உள்ளமைப்பில் எப்போதும் சுத்தமாக இருப்பதால் பலவிதமான வேத மந்திரங்களின், பூஜைகளின் சக்திகளை கிரஹித்து பல தோஷங்களின் நிவர்த்திக்கு அறவழி காட்டுகிறது.

இதேபோல் பசுஞ்சாணியானது பசுவின் மலமாக இருப்பினும் அது மிகவும் பவித்ரமானதாகி பஞ்சகவ்யம் எனப்படும் அற்புதமான மருந்தாகவும், கிருமி நாசினியாகவும், ஹோமத்திற்குப் பயன்படும் புனிதமான பசு விரட்டியாகவும் பயன்படுகின்றதல்லவா! இதற்குக் காரணம் அது உண்ணும் மூலிகைகளில் தெய்வீக சக்தியும், அதில் குடிகொண்டுள்ள கோடானு கோடிதேவதைகளின் ஆசிர்வாதமும் ஆகும். இதனால் பசுஞ்சாணத்திற்குப் பல விதமான கர்ம மலங்களைத் தீர்க்கும் அபூர்வ சக்தியுண்டு. மேலும் பசுஞ்சாணத்தால் தரையை மெழுகிடுகையில் பூமாதேவி மிகவும் குளிர்ந்திட அவ்விடத்தில் புனிதத்துவம் கூடுகின்றது.

எனவே பசுஞ்சாணம், பசுவின் கோமேயம், பசும்பால், பசுந்தயிர் மற்றும் பசு நெய் ஆகிய ஐந்தும் சேர்ந்த பஞ்சகவ்யம் எனப்படும் அற்புதமான மருந்தினை தினந்தோறும் சிறிது உண்டு வந்தால் மிகச் சிறந்த ஆரோக்கியம் பெறுவதோடு உடலும் உள்ளமும் தெய்வீக நிலையிலேயே நிலைத்து நிற்கும். இந்த பஞ்சகவ்ய மருந்தானது பல கோடி யுகங்களாகக் கடைபிடிக்கப்பட்டு இன்றைக்கும் ஆயுர் வேத மருத்துவத்தில் தலைசிறந்த இடத்தைப் பெற்று வெண்குஷ்டம் போன்ற தோல் நோய்களை நிவர்த்திக்கும் தெய்வீக மாமருந்தாக விளங்குவதோடு கர்மவினை மலங்களையும் கழிக்கின்றது.

கடுமையான காமக் குற்றங்களைப் புரிந்தோரும் கொடிய தீவினைகளைச் செய்தோறும் ஸ்ரீ தேனுபுரீஸ்வரராக  விளங்கும் சுயம்பு லிங்க மூர்த்திக்கு திங்கள், வியாழன் தோறும் பஞ்சகவ்யத்தால் அபிஷேகம் செய்து தன்னால் பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்து வந்திடில் காமக் கர்மவினை மலங்கள் தீர்ந்திட அறவழி கிட்டும்.

வாஸ்து பூஜை

ஸ்ரீ வாஸ்து நாள் பூஜை

கடந்த பல வருடங்களாகவே ஸ்ரீ வாஸ்து நாளின் மஹிமையைப் பற்றி ஸ்ரீ அகஸ்திய விஜயத்தில் நன்கு விளக்கி வந்துள்ளோம். வாஸ்து நாள் என்பது பூமி அஸ்திவார பூஜைக்கு மட்டுமன்று, வாடகை வீட்டிலிருப்போரும், சொந்த வீட்டில் இருப்போரும் நிலபுலன்கள், அலுவலகம் தொழிற்சாலைகள் வைத்திருப்போரும் வருடத்திற்கு 8 நாட்களே வருகின்ற இப்புனிதமான நாட்களில் எளிய முறையிலான ஸ்ரீ வாஸ்து பூஜைகளைச் செய்து வந்தால் தான், இல்லத்தில், அலுவலகத்தில், தொழிற் சாலைகளில் உள்ள பூமிக்குற்றங்கள் தணிந்து நன்மை ஏற்படும்.

பிறருடைய சமாதி உள்ள இடங்கள், சிலவகை மண் பூமி, தென்னை, வாழை, அரசு, ஆல், வேம்பு போன்ற ஹோம சமித்து மரங்களை வெட்டுவதால் ஏற்படும் தோஷங்கள், நல்ல பாம்பைக் கொன்று புற்றுகளை இடிப்பதால் ஏற்படும் நாக தோஷங்கள், மது வகைகள் விற்றல் / விபசாரம் போன்ற தீய காரியங்களால் ஏற்படும் கொடிய சாபங்கள், விலங்குகள் புதைக்கப்படுவதால் ஏற்படும் பிருத்வி தோஷங்கள், முச்சந்தி வீடுகள், மயான தோஷங்கள் - போன்ற பலவற்றால்தான் நமக்குக் கஷ்ட நஷ்டங்களும் நோய் நொடிகளும் உண்டாகின்றன. இவற்றிற்கான எளிய பரிஹார முறையே ஸ்ரீ வாஸ்து பூஜையாகும்.

அனைத்துத் தமிழ் வருடங்களிலும்

சித்திரை - 10 ஐப்பசி  - 11
வைகாசி - 21 கார்த்திகை - 8
ஆடி – 11 தை - 12
ஆவணி - 6 மாசி - 23

ஆகிய 8 நாட்களில் வாஸ்து தினங்கள் அமைவதால் இந்த விசேஷமான நாட்களில் கீழ்க்கண்ட முறையில் எளிய வாஸ்து பூஜையைக் கடைபிடித்து பூமி தோஷங்களை நிவர்த்தி செய்து யாவரும் நன்மைகளை அடைந்திடப் பிரார்த்திக் கின்றோம்!

1.    ஸ்ரீ வாஸ்து மூர்த்தி பூமியின் கீழ் யாங்கனும் வியாபித்துச் சயனித்திருப்பதால் இன்று வீடு, அலுவலகம், தொழிற்சாலைகளில் தரையைப் பசுஞ்சாணமிட்டு மெழுகுதலோ, பசுஞ்சாணங் கலந்த  நீரைத் தெளித்தும் நன்றாகக் கூட்டிப் பெருக்கிச் சுத்தஞ்செய்தல் வேண்டும்.

2. வாஸ்து நாளன்று கோயிலில் உழவாரத் திருப்பணியை மேற்கொள்தல் மிகவும் சிறப்புடையது!

3. இன்று எங்கும் பச்சரிசி மாவுக் கோலமிடுக, நம்முடைய பழங்கால கோலங்கள் அனைத்தும் விதவிதமான சக்கரங்களும் எந்திரங்களுமாகும். நடன தேவதைகள், எந்திரதேவதைகள், சக்கர  தேவதைகள், பலவித கோணச் சக்கர தேவதைகள், பீஜாட்சர தேவதைகள் போன்றவை கோலங்களில் ஆனந்த நடனமிடுவதால் இது இல்லத்திற்குப் ப்ரீதியைத் தரும்.

4. இன்று கோமேய நீரை எங்கும் தெளித்து சாம்பிராணித் தூபக் காப்பு இட்டிடப் பலவிதமான தோஷங்கள் நீங்குவதோடு துர்சக்திகளும் நீங்கி தெய்வீக சக்திகள் குடியேறுகின்றன

5. தலைவாசப்படி, நிலைவாசப் படிகளின் அடியில், பூமி பூஜையின் போது தங்கம், எந்திரங்கள், நவரத்தினக் கற்களை வைக்கும் நற்பழக்கம் நம் முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்தது. வாஸ்து நாளன்று தலைவாசல், நிலைவாசற்படிகட்டுகளில் காவியிட்டு, சந்தனம், மஞ்சள் பூசிக் குங்குமமிட வேண்டும். தயவு செய்து மஞ்சள், சிவப்பு போன்ற பெயிண்ட் வர்ணங்களை தலை, நிலை வாசல் படிகளுக்குப் பூசாதீர்கள்!

6. வாசற்படி இல்லாது எந்த அறையும் இருத்தல் கூடாது. மரத்தால் ஆன வாசல்படியே விசேஷமானது! நீர் விட்டுக் கழுவிச் சுத்தம் செய்ய ஏதுவாக இருக்குமென்று தற்காலத்தில் குறிப்பாக Flatகளில் நிலைவாசல் படிகள் வைப்பதில்லை, வாசல்படிகளே இல்லையென்றால் எங்குதான் தலைவாசல் /நிலைவாசல் தேவதைகள் தங்கும் ? உங்கள் வீட்டில் இவையில்லையென்றால் இன்றே அனைத்து அறைகளிலும் கீழே மரப்பலகை வைத்து நிலைவாசல்களை உடனடியாக அமைத்திடுங்கள்! இதற்கு வாஸ்து நாள் சிறந்த நாளாகும்.

7. மூலஸ்தானத்தில் ஸ்ரீ பூமா தேவி எழுந்தருளியுள்ள திருத்தலங்களுக்குச் சென்று வணங்கி கோமுக (அபிஷேக நீர் வெளிவரும் தாரை) நீரை எடுத்து வந்து வீடெங்கும் தெளித்துக் கதவு, வாசல், தலை, நிலை வாசல் படிகளுக்கும் பூசிடுக! இது வாஸ்து மூர்த்திக்குப் ப்ரீதியைத் தருவதாகும். தோட்டம், பாக்டரி, நிலங்களில் இப்புனித நீருடன் கோமேயம், கங்கை/காவேரி போன்ற புனித நீரையும் சேர்த்துத் தெளித்து வந்தால் பலவிதமான துன்பங்களுக்கும் நிவாரணம் கிட்டும்.

ஸ்ரீ வாஸ்து மூர்த்தியின் யோக நித்திரை

ஸ்ரீ வாஸ்து மூர்த்தியானவர் பரமபொருளாம் திருமாலின் அம்சங்களைப் பெற்று சர்வலோக ஜீவ ராசிகளின் நன்மைக்காக அஷ்டயோக வாசி கலைகளை மாற்றுகையில் நம்மை உய்விக்கின்றார். எட்டு விதமான அஷ்டாங்க, அஷ்டாக்ஷர பீஜயோக வாசிகலைகள் தோன்றும் அந்த கால நேரங்களே பஞ்சாங்கத்தில் ஸ்ரீ வாஸ்து மூர்த்தி நித்திரை விடும் கால நேரங்களாகக் குறிக்கப்பட்டுள்ளன. இதில் பலவிதமான தெய்வீகரகசியங்கள் உள்ளன.

ஸ்ரீ வாஸ்து மூர்த்தி யோக நித்திரை விடுகின்ற சயனக் கோலத்தைத் தரிசிக்கும் பாக்யம் பெற்றுள்ள பல சித்புருஷர்களும், யோகியரும், மஹரிஷிகளும், நாகதேவ மூர்த்திகளும் உள்ளனர். சில அரிய நல்ல பாம்புகள் இந்த தரிசனத்தைப் பெற்று ஸ்ரீ வாஸ்து மூர்த்தியின் யோக சுவாச கலைகளைத் தம்முள் உறிஞ்சி நாகப் புற்று வழியாக மேல் வந்து இன்று (வாஸ்து) நாள் முழுதும் பூமியில் எவ்வளவு தூரம் சஞ்சாரம் செய்ய முடியுமோ அவ்வளவு தூரம் ஊர்ந்து சென்று நிலத்திலும் பரவெளியிலும், தாவரங்களிலும் தம்முடைய நாக சுவாசத்தின் மூலம், தாம் இறையருளாகப் பெற்ற ஸ்ரீ வாஸ்துமூர்த்தியின் மிகுந்த தெய்வசக்தி வாய்ந்த யோக சுவாசக் கிரணங்களைப் பரப்புகின்றன, எந்த நல்ல பாம்பைக் கண்டு மனிதன் அஞ்சி ஓடுகின்றானே அந்த நல்ல பாம்பு மனித குல மேம்பாட்டிற்காகச் செய்கின்ற நற்காரியங்களை அவன் உணர்வதில்லை.

ஸ்ரீவாஸ்து பகவான்

எனவே ஸ்ரீவாஸ்து நாளன்று நாகப் புற்றிற்குப் பால் வார்த்தல் மிகவும் சிறப்புடையதாகும். நாகப் பாம்புகள் மிகுந்த தெய்வீக சக்தியுடையவை! சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவை! விதியிருந்தாலொழிய எவரையுந் தீண்டாது! உத்தமமான தெய்வீக நிலையில் மரண வகைகளைப் பற்றிய விளக்கங்களில் புனித நதிகளில் (இயற்கையாக) மூழ்குதல், நல்ல பாம்பு தீண்டுதல், இறைச் சந்நதிகளிலும் புனித யாத்திரைகளிலும் (இயற்கையாக) உயிர்பிரிதல் போன்றவை நல்மரண வகைகளாகப் பகுக்கப்படுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவற்றை நன்கு புரிந்து கொள்ள வேண்டுமாயின் உத்தம பக்தி வேண்டும். சாதாரண அறிவு கொண்டு இதனை ஆராய்தலால் ஒரு பயனுமில்லை.

திருஅண்ணாமலையில் கிரிவலப் பாதையில், பெங்களூர் (செங்கம்) சாலையிலிருந்து பிரிந்து உட்புறம் கிரிவலச் சாலை தொடர்கின்றதல்லவா! இங்கிருந்து சற்று தூரத்தில் காமக்காட்டுப்பகுதி தொடங்குகிறது. அதாவது வலப்புறம் அடர்த்தியான மரங்கள் அமைந்து மலையின் தரிசனமே மறைக்கப்பட்டு விடும். காமம் மிகுந்தால் கடவுள் தரிசனம் மறையும் என்பதைக் குறிப்பதால் இதற்குக் காமக்காடு எனப் பெயர் வந்தது. காமக்காட்டுப் பகுதிக்குச் சற்று முன்னர் இடப்புறம் உள்ளே ஐந்தடிக்கு மேலான அபூர்வமான நாகப் புற்றுகள் தென்படும். பாண்டவர்களில் வில்வீரனான அர்ஜுனன் இப்பகுதியிலிருந்துதான் நாகலோகத் திற்குச் செல்லும் பெரும் பாக்கியத்தைப் பெற்றான்.

நாம் வாழும் பூமியிலுள்ள சக்தி வாய்ந்த நாகப் புற்றுகளுள் பல திருஅண்ணாமலை, மேல்மருவத்தூர், நாகர்கோயில், தங்கால், காஞ்சீபுரம், திருவெண்காடு, திருநாகேஸ்வரம், திருக்கயிலாயம், திருவாடானை அருகே ஸ்ரீ பாதம்பிரியாள் போன்ற திருத்தலங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ வாஸ்து நாளன்று பூமியின் கீழ் விளையும் உருளைக் கிழங்கு, வெங்காயம், சேனை, சேப்பங்கிழங்கு போன்றவற்றைச் சேர்த்து அன்னதானம் செய்தல் சிறப்புடையதாகும்.

வாஸ்துநேரமான 90 நிமிடங்களிலும் தலைவாசல், நிலைவாசற்படிக்கு மஞ்சள், குங்குமம், சந்தனமிட்டு, தூபம், கற்பூரங் காட்டி வழிபடுதல், ஸ்ரீ வாஸ்து புருஷமூர்த்தி தியானம், ஸ்ரீ வாஸ்து காயத்ரீ தியானம், நாகப் புற்று பூஜை. கிழங்கு வகை அன்னதானம், ஸ்ரீ பூமாதேவி சமேத பெருமாள் தரிசனம், ஸ்ரீ வராஹ மூர்த்தி, ஸ்ரீ லிங்கோத்பவ மூர்த்தி வழிபாடு, பாதாள மூர்த்தி வழிபாடு ஸ்ரீ பாதாள லிங்கம் (திருஅண்ணாமலை), ஆழத்துப் பிள்ளையார் - விருத்தாசலம், பாதாள ஐயனார் - திருச்சி (மலைக் கோட்டை) போன்ற நிலத்தடி மூர்த்திகளை வழிபடுதல் போன்ற நல்ல இறைப் பணிகளில் புனிதமான, பெறற்கரிய வாஸ்து நேரத்தை நன்கு பயன்படுத்திடுக!

மேற்கண்ட நேரங்களில் பூமி அஸ்திவார பூஜைக்கு ஸ்ரீ வாஸ்து மூர்த்தியின் அன்னம் ஏற்கும் மற்றும் தாம்பூல நேரங்கள் மிகவும் சிறப்புடையவை!

கருத்தில் ஊறும் கருணை ஊற்று

மாதந்தோறும் ஸ்ரீ அகஸ்திய விஜயத்திற்கு ஆயிரக்கணக்கான கடிதங்கள் வருகின்றன. தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்னைகள், கோயில், தல, மூர்த்தி விளக்கங்கள், நம்முடன் வாழ்கின்ற துறவியர், மஹான்களைப் பற்றி விளக்கங் கோரும் கடிதங்கள் நம் ஆஸ்ரம இறைப்பணிகளில் பங்குகொள்ள விரும்புவோர், சீமந்தம், கல்யாண தேதி வைக்க வேண்டும் எனக் கடிதங்கள் எத்தனை வகைகள்!

அன்னதானம், ஸ்ரீ அகஸ்திய விஜயம் பணிகள், மாதாந்திர இலவச மருத்துவ முகாம், வாராந்திர உழவாரத்திருப்பணிகள், ஹோமம், பூஜைகள், பெரியோர்களுடன் சந்திப்பு, அடியார்களுடன் ஆன்மீகத் தலயாத்திரைகள் இவற்றிற்கிடையில் நம் குருமங்கள கந்தர்வா ஒவ்வொரு கடிதத்தையும், அது சந்தா பற்றிய கடிதமோ, எந்த பிரச்னையையும் குறித்த கடிதமோ, எதுவாயினும் சரி, தாமே, பரிவன்புடன், மஹான்களுக்குரிய பெருங்கருணையுடன், பிரித்துப் படித்து அறிவுரைகள் தருவார்!

தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்னைகளுக்குக் கடிதம் மூலமாக பதிலளிப்பது உசிதமாகாது! பலரைத் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் நேரில் சந்திப்பதும் உண்டு! எதிர்பாராதவிதமாக, பிராப்தம் இருப்பின் தம்மை அறிமுகம் செய்து கொண்டோ அல்லது அறிமுகமின்றி புதியவர் போன்றோ, பாண்ட், சட்டை சகிதமாகவோ, வேஷ்டி துண்டுடனோ எவ்விதத் தோற்றத்துடனும் நேரிலும் சென்று பரிவுரை அளிப்பதுண்டு, பிராப்தம் கைகூடுமாயின்!

ஸ்ரீஅன்னபூரணி தேவி
திருச்சோற்றுத்துறை

ஜடாமுடி, தாடி, கமண்டலம், ருத்ராட்சத்துடன்தான் கலியுகத்தில் மஹான்கள், சற்குருமார்கள் வருவார்கள்என்று எண்ணாதீர்கள்! துறவியரும் உண்டு! இல்லறம் பூண்டு நம்முள் ஒருவராய் வாழும் சித்புருஷர்களும்,மஹான்களும் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்! ஆழ்ந்த நம்பிக்கைதான் இறைவனைக் காட்டும்! அது ஒன்றே இறைவனைக் காட்ட வல்லோரையும் காட்டும்!

இத்தொடரில் பல அன்பர்களுடைய பொதுப் பிரச்னைகளுக்குரிய தீர்வுகளை அளிக்கின்றோம். ஏனென்றால் ஆயிரக்கணக்கான குடும்பங்களில் இத்தகைய துன்பங்கள் நிறைந்திருப்பதால் அனைவருக்கும் இப்பகுதி பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். வரவேற்பு இருக்குமாயின் இப்பகுதியைத் தொடர்வது/விரிவாக்குவது பற்றி முடிவெடுக்கப்படும்.

விடாதீர் தர்ப்பணத்தை!

தன் பெற்றோர்கள்/பிள்ளைகள்/சகோதரர்கள் சரிவரத் தர்ப்பணம் செய்வதில்லை, அமாவாசையன்று கூடத் தர்ப்பணம் கிடையாது, செவ்வாய், வெள்ளி போன்ற விசேஷ தினங்களில் மாமிசத்தை விலக்குவது கிடையாது, அவர்கள் சார்பில் தர்ப்பணத்தைப் பிறர் செய்யலாமா, என் செய்வது என்பது பலருடைய வினா?

எவருக்குப் பசிக்கின்றதோ அவர் புசித்தால் தான் பசியடங்கும், பிறர் புசித்தால்?

எனினும் தன் சொந்த உறவு, இரத்த சம்பந்த உறவென்பதால் அவர் சார்பில் ஆணோ/பெண்ணோ எந்த உறவில் எவரும் தர்ப்பணம் செய்வதில் தவறில்லை. விசேஷ தினங்களில் திருத்துறைப்பூண்டி அருகே திலதைப்பதி (கோயில்பத்து)த் தலத்திலும் (ஸ்ரீராமர் தர்ப்பணம் செய்த தலம்) திருவிடைமருதூர் திருக்குளத்திலும், கும்பகோணம் சக்கரப் படித்துறையிலும், தன் உறவினர் சார்பாகத் தொடர்ந்து தர்ப்பணமும் எள் சாத தானமும் செய்து வந்தால் உறவினரே மனம் மாறி நிச்சயமாக நல்வழி காட்டப்பெறுவர்.

தன் மகனை வஞ்சித்துச் சம்பந்திகள் பிரித்துச் சென்று விட்டனர் என்று புலம்பும் பெற்றோர்கள் குறிப்பாகத் தாய்மார்கள் ஏராளம்! ஆனால் முன் ஜென்மங்களில் தம்பதிகளைப் பிரித்த பாவம் தான் இப்போது கர்மவினையாகத் திரும்பி வந்துள்ளது என்பதை நன்கு உணர வேண்டும்! எத்தனையோ அநாதை இல்லங்களில் பல வயோதிகர்கள் இன்றும் வாழ்கின்றனர். வாரந்தோறும் அவர்களைச் சந்தித்து மன ஆறுதல் அளிக்கும் வகையில் தேவையான உதவிகளைச் செய்து வாருங்கள்!

வேம்பு, வில்வம் சேர்ந்துள்ள தலங்களில் மஞ்சள் பூசி அடிக்கடி அடிப்பிரதட்சிணம் செய்து ஜாதிபேதமின்றி ஏழைச் சுமங்கலிகளுக்குக் கால் மெட்டிகள், தாம்பூலம் அளித்து வந்திடில் அனைத்தும் மங்களகரமாக முடியும். பிரிந்தோர் கூடுவர்!
“எங்களுடைய மிகச் சிறிய கோயிலில் ஸ்ரீ கணபதி ஹோமம் நடத்த விரும்புகின்றோம் . ஆனால் ஒரு சிறு ஹோமம் என்றாலே மூவாயிரம், நாலாயிரம் கேட்கின்றார்கள், என் செய்வது” - என்ற கேட்டுப் பல கடிதங்கள் வந்துள்ளன. 

ஹோமம் என்பது இருபது ரூபாயிலிருந்து எத்தனை லட்ச ரூபாய்க்கும் ஹோமத்தை நிகழ்த்திடலாம். ஹோமத்தை நடத்துவோர் எத்தகைய கட்டணத்தையும் பெறலாகாது! ஹோமத்திற்குக் கட்டணம் வசூலிப்பதெனில் மந்திரங்களை விற்பது போலாகும்! இலவசமாக ஹோமத்தை நடத்தித் தருவதே உத்தமமான தெய்வீகத் தொண்டாகும். எம்முடைய ஆஸ்ரம வெளியீடான “எளிய ஹோம முறை” சில ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டுள்ளது. சாதி, இன பேதமின்றி அனைவரும் புனிதமான எளிய இறைநெறிகளைக் கடைபிடித்து யாவரும் ஹோமம் நடத்தும் முறையை இந்நூலில் விளக்கியுள்ளோம்.  இந்நூலைப் படித்தால் அவரவர் வசதிக்கேற்ப எளியமுறையில் ஹோமங்களை நடத்திடலாம்!

பலவித இறைப் பணிகளுக்கிடையில், புதிய தெய்வீக நூல்களை வெளியிட வேண்டிய நிலையில், “எளிய ஹோம முறை, பிரதோஷ மஹிமை, ஓங்கார மஹிமை” போன்ற நூல்களை மீண்டும் அச்சிட நிதி வசதி தேவையிருப்பதால் அருட் செல்வத்துடன் பொருட் செல்வம் கொண்டோரும் முன் வந்திடில் தமிழகமெங்கும் ஹோம யாகங்களை இல்லத்திற்கு இல்லம் இனிதே கடைபிடித்து நாட்டில் கர்மமும் சாந்தமும் நிலைபெற அருட்பணி ஆற்றிடலாமன்றோ!

தவிர்க்க முடியாத காரணங்களுக்காக ஹோட்டலில் சாப்பிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் என்ன செய்வது?

ஸ்ரீ அன்னபூரணியை வேண்டித் துதித்து உணவுண்டு குறைந்த பட்சம் இரண்டு இட்லிகளுடன் ஒரு உணவுப் பொட்டலத்தையேனும் தானமாக அளித்திடுக! யாரோ ஒருவர் இதனை ஏற்பதாகத் தோன்றினாலும் எவருக்கு உங்கள் கைகளால் அன்னம் பெறவேண்டும் என்று தலையில் எழுதப்பட்டுள்ளதோ அவரே வந்து பெறுவார் என்பதால் அவர் மூலமாக உங்கள் பித்ருக்களே வந்து உணவைப் பெற்று உணவு தோஷங்களைத் தாங்களே மனமுவந்து ஏற்பர். மேலும் இத்தகைய அன்னதானத்தின் போது தர்ம தேவதைகள் சாட்சியாக நிற்பதால் அவர்களும் அன்னக் குற்றங்களைத் தாமே ஏற்கின்றனர்.

நம்முடைய உணவுப் பழக்க முறையே மாறி விட்டது. பன், பிரெட், ஜாம், கூல்டிரிங்க்ஸ், மசாலா, குளோரின் கலந்த குடிநீர் என ரசாயனக் கலவைகளைத்தானே உண்கின்றோம். இதிலிருந்து விடிவு மோட்சமே இல்லையா?

துளஸி/வில்வம் மென்னுதல், வெட்டி வேர் ஊறிய நீர், ஒரு ஸ்பூன் மூலிகைப் பொடி (கரிசலாங் கண்ணி, பொன்னாங் கண்ணி etc.,)யைத் தேனில் /நீரில் குழைத்து உண்ணுதல், பச்சைக் காய் கறிகளை மென்னுதல், பழங்கள், கோமுக அபிஷேக நீரை அருந்துதல் - இவற்றைத் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் உணவில் உள்ள ரசாயனக் கலவையின் விளைவுகளைத் தணித்திடலாம்.

தினமும் கோயிலுக்குச் செல்ல முடியவில்லை, பூஜைக்கு நேரமில்லை - இது பலருடைய ஆதங்கம்! எவ்வளவு அப்பட்டமான பொய்!

டீவிக்கு முன்னால், எது எதற்கோ க்யூவில்... பீடி, புகை, சினிமா - அப்பப்பா எவ்வளவு நேரம் வீணாகிறது! அலுவலக மேஜை மேல் அந்தந்த நாளின் நவகிரஹ ஹோரை நேரங்களைப் பஞ்சாங்கத்தை/காலண்டரைப் பார்த்து எழுதி வைத்துக் கொண்டு ஒவ்வொரு மணி நேரத்திலும் “ஸ்ரீ சூரியனேபோற்றி, ஸ்ரீ சந்திரனே போற்றி'' என்று மனதினுள் துதித்து வாருங்கள்! இவ்வித நவகிரஹ வழிபாடு நன்கு சிறப்பாக நடக்கும்!

தினமும் இரண்டு வாழைப் பழங்களைப் பசுவிற்குக் கொடுக்க முடியாதா என்ன? தான தர்மங்கள் தாம் கலியுகத்தில் பூஜைகளின் பலனைப் பெற்றுத் தரவல்லவை. செருப்புகளைக் கிழியக் கிழிய தைத்துப் போட்டுக் கொள்கின்றீர்களே, என்றைக்கேனும் ஒரு ஜோடி ஹவாய் செருப்புகளைத் தானமாக அளித்திருக்கின்றீர்களா!

ஒரு பேனா, பென்ஸிலையாவது ஒரு ஏழைப் பையனுக்குத் தந்திருக்கின்றீர்களா! இத்தகைய தானதர்மங்களில் நீங்கள் செலவிடும் நேரமும் பூஜை நேரமே!

ஸ்ரீநடனகோபால நாயகி சுவாமிகள் ஜீவாலயம் மதுரை

எனக்கு இரண்டுமே/மூன்றுமே பெண் குழந்தைகள்! ஆண் வாரிசு பெற வேண்டுமா (மே!) ?

- எத்தனையோ இல்லத்தரசிகளின் ஏக்கமிது! நமக்கு எத்தகைய கணவன்/ மனைவி அமைய வேண்டும், குழந்தைகள் பிறக்க வேண்டும் என்பதையெல்லாம் அவரவரே நிர்ணயம் செய்தே பிறக்கின்றனர்! எனவே நீங்கள் பெற்றிருப்பதெல்லாம் நீங்கள் கேட்டவையே தவிர வேறல்ல! பின் ஏன் இந்த விருப்பு/ வெறுப்பு?

இடப்புறம் ஆவுடை உள்ள சிவலிங்கம், ஸ்ரீ துவாரசக்தி அம்பிகை (சென்னை - திருமுல்லைவாயில் ஸ்ரீ மாசில்லாமணீஸ்வரர்) ஸ்ரீ சுக்ர வார அம்மன், மதுரை - அரசரடி ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமி ஜீவ சமாதி, மதுரை - அழகர்கோயில் ஸ்ரீ நடனகோபால நாயகி சுவாமிகள் ஜீவசமாதி, முன்னும் பின்னும் அல்லாது முன்புறம் மட்டும் ஆறுமுகங்களை உடைய முருகன் போன்ற தெய்வ மூர்த்திகளை/ஜீவன் முக்தர்களை அடிக்கடி தரிசித்து வந்திடில் “பெண்களைப் பெற்று விட்டோமே!” என்ற அச்சம்/ஏக்கம் மறைந்து பெண்களுக்கு நன் முறையில் திருமண வாழ்வு அமைந்து எவ்வித மனக் குறையுமின்றி இனிய வாழ்வு அமையும்.

எனக்கு அடுக்கடுக்காக பிரச்னைகள் - கணவன் ஊதாரி, பிள்ளைகள் சரியில்லை, குறைந்த வருமானம், கடுமையான நோய்கள், உறவினர்களின் தொல்லைகள், மானப் பிரச்னைகள்

-இவ்வாறாக சங்கிலித் தொடராகதுன்பங்களின் சுமைகள் பெருக்கெடுத்தால் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய ஊழ் வினைகள் உறுத்து வந்து வாட்டுகின்றன என்பதை! ஆனால் எதற்கும் கவலைப்படாது திருஅண்ணாமலையைத் தொடர்ந்து கிரிவலம் வந்திடுக! சர்வலோகப் பிரச்னைகளுக்கும் சர்வ நிவாரணி திருஅண்ணாமலை கிரிவலமே!

“எத்தனையோ முறை கிரிவலம் வந்தேன், என் குறைகள் தீரவில்லை” - என்று எண்ணாதீர்கள்,

“பணமிருந்தும் வசதியிருந்தும் ஓரிருமுறை கூட கிரிவலம் வர முடியவில்லை, என்னுடைய தீவினைகள் தாம் கிரிவலம் வர முடியாமல் முட்டுக் கட்டை போடுகின்றன” - என்று சிலரும் எழுதியுள்ளனர்.
அப்படியானால் நீங்கள் எத்தனையோ முறை கிரிவலம் வந்துள்ளீர்கள் என்றால் கிரிவலத்திற்கு முட்டுக் கட்டைபோடும் அளவிற்கு உங்களுடைய தீவினைகள் கடுமையாக இல்லை என்றல்லவா அர்த்தமாகும். அருணாசல கிரிவலத்திற்கு ஈடு இணை எதுவுமில்லை!

சுற்றினால் கிட்டும் சுந்தரானந்தம்

அடிமை கண்ட ஆனந்தத்தைப் பெற்று ஆனந்தமடைவோர்க்கு மேலும் ஒரு தெய்வீக விருந்து!

இத்தொடரில் “ஸ்ரீ அகஸ்திய விஜயம்” மூலம், கோடானு கோடி அதிலும் பெருங்கோடிக் கோடி சித்புருஷர்களின் ஆதி மூல நாயக சித்புருஷராம் ஸ்ரீ அகஸ்திய மாமுனியின் தெய்வத் திருவாய் மொழிகளைக் கலியுகத்திற்கு அளித்து வரும் திருஅண்ணாமலை ஜோதி அலங்காரப் பீடாதிபதி ஸ்ரீ வெங்கடராம சுவாமிகளிடம் கடந்த பல ஆண்டுகளாக அவர் தம் அருமைச் சிஷ்யர்களும், அன்பர்களும் பெற்ற தெய்வீக அனுபவங்களை அளிக்க இருக்கின்றோம்!

எத்தனையோ ஆயிரம் மக்களுக்கு நேரிலும், கனவிலும், சூட்சும ரூபங்களிலுமாக அருட்பணியாற்றி வரும் ஸ்ரீ வெங்கடராம சுவாமிகளிடம் பலரும் பெற்றுள்ள அனுபூதிகளைத் தொகுத்தளிப்பதில் ஆனந்தம் அடைகின்றோம்.

இளைய (இறை) வீரர்கள்

சென்னை, திருச்சி, தஞ்சை, பாண்டிச்சேரி, கோவை என பல் வேறு பகுதிகளிலிருந்தும் வருகின்ற இளைஞர்களைச் சந்திப்பதென்றால் சுவாமிகளுக்கு அலாதியான இன்பம்தான்!

இவ்வாறாகத்தான் இன்று இவ்விடங்களில் மகத்தான இளைஞர் குழாம் மூலம் உழவாரத் திருப்பணிகள், இலவச மருத்துவ முகாம், தேவார பாராயணம், பாடல் பெற்ற தலங்களில் கிராம மக்களை ஈடுபடுத்தி ஹோமம் நடத்துதல், வறியோர்களுக்குத் திருமண உதவி - என எத்தனையோ சத்சங்கப்பணிகள் குருவருளால் நடக்கின்றன.

“எதிர் காலத்து தெய்வீகத் தூண்கள்” என்று இளைஞர்களை வர்ணிக்கும் சுவாமிகள் நடுநிசியிலும் கூட ஓய்வுறக்கம் பாராது இளைஞர்களோடு மகிழ்ச்சியுடன் அளவளாவி அவர்களுடைய உள்ளக் கிடக்கைகளை அறிந்து மனதிற்குத் தெளிவூட்டி, உற்சாகமளித்து, மன தைரியம் கூட்டி, துன்பங்களைத் துணிவுடன் எதிர்த்துப் போராட மனோசக்தியளித்து அவர்களுடைய இளமையையும் சக்தியையும் இறைப் பணிகளில் பயன்படுமாறு செய்திட இன்றும் அரும்பாடுபட்டு வருகின்றார்கள்,

ஸ்ரீதட்சிணா மூர்த்தி
ஓமாம்புலியூர்

“காமம் புகுமுன் காயத்ரீ புகவேண்டும்” என்பார்கள். இதைப்போல் என்றுமே கவலைப்பட வேண்டிய நிலை ஏற்படாது - இதுவே தன்னை நாடும் பெற்றோர்களுக்கு சுவாமிகள் தரும் அன்புப் பாடமாகும்!

“அடியேனுக்கு எந்த சித்தும் எதரியாது, அற்புதமும் (Miracles) பண்ணத்தெரியாது! ஆனால் அடியேனுடைய / சற்குருநாதர் எத்தனையோ சித்துக்களைக் கற்றுத் தந்து எதையுமே எக்காரணங் கொண்டும் பயன்படுத்தக் கூடாதுன்னு குரு ஆணையாகச் சொல்லிவிட்டார். அதனால் அடியேன் நினைச்சா கூட எந்த சித்தும் வேலை செய்யாது” - இது சுவாமிகள் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்! எங்களுக்கும் கேட்டுக் கேட்டுப் புளித்துவிட்டன!

இன்றைக்கும் எத்தனையோ குடும்பங்களுக்கு அருள்வழி காட்டி வரும் சுவாமிகள், “சித்து பண்றது ரொம்ப ஈஸி சார்! ஆனா அது செஞ்சதுக்கப்புறம் அதுக்கான விளைவுகளை அனுபவிக்கிறது இருக்கே அது தான் ரொம்பக் கஷ்டம்”, என்று தன்னைச் சந்திக்க வருகின்ற புது மனிதர்களுக்குச் சொல்வதையும் கேட்டிருக்கிறோம்!

“இவர்களெல்லாம் அடியேனை குருன்னு, சற்குருன்னு சொல்றாங்க! சிஷ்யர்களுக்குத்தான எல்லாத் தகுதிகளும் இருக்கு, ஆனால் இத்தகைய உத்தம சிஷ்யர்களுக்கு குரு ஆகறதுக்கான தகுதிகள் அடியேன்  கிட்ட இல்லை! ஏதோ அடியேனை நம்பி வந்துட்டாங்க! ஏதோ அந்த அண்ணாமலையான் தான் அடியேனுக்கு நல்ல புத்தியைக் கொடுத்து இந்த மாதிரி அற்புதமான சிஷ்யங்களுக்கு குரு ஆகிற தகுதியை, இவங்க நம்பிக்கை பொய்க்காம இருக்கறதுக்காக தந்தாகணும்'' - இதுவும் அவருடைய மொழிகளே! என் செய்வது ! இந்த மாதிரி அடியார்களிடம் அவர் புனைகின்ற தி(கு)ருவிளையாடல்கள் பலப்பல!

எங்கும் அவரே!

ஆஸ்ரம அடியார்களோடு இலவலச மருத்துவ முகாம்களில் கலந்து கொள்கையில் வெள்ளைபாண்ட், வெள்ளை ஷர்ட், டை, சகிதம் சுவாமிகள் வந்து சேவை செய்வார்கள், “ஏதோ அடியேனுக்குத் தெரிஞ்ச இங்க்லிபீஸ்ல (!) படிச்சுப் பாக்கறேம்பா”, என்று பதவிசாக அவர்கள் நோயாளிகளுடன் தன்னை யாரென்று காட்டிக் கொள்ளாது அளவளாவும் காட்சியே தனி! ஆங்காங்கே அமர்ந்து அனைத்து அடியார்களுடன் உற்சாகமாகப் பேசி அவர்களுடைய குடும்ப, அலுவலகப் பிரச்னைகளைத் தொட்டு உள்ளத்தையும் தொட்டிடுவார்! - கோயில் உழவாரத் திருப்பணிகளிலோ, அரை டிராயரும் சட்டையையும் மாட்டிக்கொண்டு அங்கும் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாது கூட நீர் சுமந்து, சுவர், தூண்களைக் கழுவும் முறையே அலாதியானதாகும்!

திருஅண்ணாமலை ஆஸ்ரமத்திலோ தலையில் தலைப்பாகையைக் கட்டிக் கொண்டு சுவற்றுக்குப் பெயிண்ட் அடித்து...

இடுப்பில் துண்டு கட்டி அனைவருக்கும் ஹோஸ் பைப்பில் நீரெடுத்துக் கொடுத்து...

பச்சை வேஷ்டி, பச்சைச் சட்டை - ஆஸ்ரமத்தின் யூனிபார்ம் உடையில் தரையைக் கழுவி சுத்தம் செய்து...

ஹோமத்தின் போது கச்சிதமாகப் பஞ்ச கச்சம், அங்கவஸ்திரத்துடன் ஸூக்தங்கள், ருத்ரம், தேவாரம் ஓதியவாறு... அனைத்தும் ஒரு சற்குருவின் வடிவங்களே!

சித்புருஷர்களுக்கும் மஹான்களுக்கும் கலியுகத்தில்தான் எத்தனை எத்தனை ரூபங்கள்! காணக் கண் கோடி வேண்டும்!

குருவென்றால்....குரு வெல்வார்!

“குரு குருன்னு சொல்றீங்க, ஆனா வியாழன், சனிக்கிழமை பூஜைக்கு அடியேன் வந்தா ஸீமந்தம், கல்யாணம், கிரஹ ப்ரவேசம்னு தேதி குறிக்கச் சொல்லி ஜோஸ்யராக்கிட்டீங்களே”, என்று சிரித்தவாறே சுட்டிக் காட்டி, மணிக்கணக்கில் கிரஹ சஞ்சாரங்களை அலசி ஆராய்ந்து அடியார்களுடைய இல்லத்திற்கு குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுதல், சீமந்தம், கிரஹப் பிரவேசத்திற்கு நாள் குறித்தல் எனப் பல்வகைகளில் தம்மை அண்டியுள்ள அடியார்களுக்குப் பரிவுடன் உதவுகின்றார்.

“இப்படியே எல்லாருக்கும் எது எதுக்கோ நாள் குறிக்க ஆரம்பிச்சேன்னா இதுவே அடியேனுடைய தொழிலாயிடும்! அடியேனுடைய சற்குருநாதர் கத்துக் கொடுத்த “அமிர்தகலை நேரத்தைக் குறிக்கும்” பொக்கிஷமான ஜோதிடக் கலையை நீங்க யாராச்சும் கத்துக்கிட்டா எனக்கு சுமை குறையும்தானே!”

ஆனால் நாள் குறிப்பதற்கும் பெயர் வைப்பதற்கும் ஒரு பைசா கூடப் பெறாமல் ஜோதிடத்தை வளர்த்தால் தான் வாக்சித்தியும் தீர்கதரிசனமும் கைகூடும் என்பது சுவாமிகளின் அருளுரை!
இன்றைக்கும் நாள்/பெயர் கேட்டு நூற்றுக் கணக்கான கடிதங்கள் வருகின்றன! என்ன செய்வது?

ஸ்ரீவாத்யார் வந்தார்!

பல ஆண்டுகளுக்கு முன்... சுவாமிகளை “சற்குரு” என்றோ “குருநாதர்'' என்றோ அழைக்கலாமா, கூடாதா என்று பலருக்கும் தயக்கம், குழப்பம்...

பட்டென்னு பதில் வந்தது! (pat came the reply) -
“நீங்க எல்லாரும் அதி அற்புதமான சிஷ்யர்கள்! ஒரு உத்தமமான சிஷ்யனுக்கு வேண்டிய எல்லாத் தகுதியும் உங்க கிட்ட நிறைய இருக்கு! ஆனா இந்த மாதிரி புனிதமான சிஷ்யங்களுக்கு குருவா இருக்கறதுக்கு - அடியேனுக்குத் தகுதியில்லையே...'' (பழைய பல்லவி!)

அடியேனுடைய சற்குருநாதரை “வாத்யார்” என்றுதான் அழைக்கச் சொன்னார். வாத்யார்னா, நல்ல  வழிகாட்டின்னு அர்த்தம். அடியேனுக்கு எங்க குரு காட்டின வழியை, நல்ல வழியை நிச்சயமாக  உங்களுக்குக் காட்ட முடியும். நீங்க வேணும்னா என்னை “ராமான்னோ, வெங்கடராமான்னோ, Just Friendனோ கூப்பிட்டுக் கொள்ளலாம். அது சங்கடமாயிருந்தா வெறும் வாத்யார்னு கூப்பிடலாமே!”

அன்று முதல் இன்றும் என்றும் அவர் எங்களுக்கு “ஸ்ரீ வாத்யார்” தான்! சிலருக்கு “ஸ்ரீ வாத்யார் சுவாமிகள்!''

வாழ்க்கைக் கல்விக்கு கலங்கரை விளக்கமான பெருமதிப்பிற்குரிய பள்ளி ஆசிரியர்களை இன்றும் தமிழக கிராமப்புறப் பகுதிகளில் "வாத்யார்'' என்று தானே இன்றும் அன்புடன் அழைக்கின்றார்கள்! மாதா, பிதா, வாத்யார், தெய்வம்!

“நீ உன்னோட வாழ்நாள் முழுதும் எவ்வளவு படி அரிசி, காய்கறி சாப்பிடறியோ அந்த அளவாச்சும் நீ அன்னதானம் செய்தாகணும். எவ்வளவு லிட்டர் தண்ணீர் குடிச்சியோ அந்த அளவுக்கு நீ நீர்தானமோ, நீர்மோர் தானமோ பண்ணியாகணும். இது செஞ்சாலே போதும் தேவகடன், ரிஷிகடன், பித்ருகடன் எல்லாம் தீர்ந்துடும்! இது மட்டுமே உன்னோட வாழ்க்கை லட்சியமாக வச்சுகிட்டு வாழ்ந்தாலே போதும், இறை தரிசனம் நிச்சயமாக கிடைக்கும்! நீ சுயமா சம்பாதிச்சு, நீனே உழைச்சு பண்ணனும்!”

அப்படீன்னா ஒரு கோடீஸ்வரன் ஒரே நாள்ல இந்த மாதிரி பண்ணிட்டா அவனுக்கு உடனே இறைதரிசனம் கிடைக்குமான்னு கேட்கத் தோணுதா?

பார்த்தாயா, ஒரு குரு ஒண்ணு சொன்னார்னு அதை உடனே மனசு ஏத்துக்காமா அவனுக்கு அது கிடைக்குமான்னு மத்தவனைப் பத்தி சந்தேகம் தானே முதல்ல வருது! குருமேல முழு நம்பிக்கை வராத வரைக்கும் இந்த மாதிரி அலைபாயும் மனசு தான் உன்னைப் படாதபாடு படுத்தும்!

கோடீஸ்வரனா இருந்தாக்கூட இதே சட்டம்தான்! ஆனா அதுக்கப்புறம் அவன் தனக்கு குரு சொன்னபடி  இறை தரிசனம் கெடச்சுடிச்சுங்கற - நம்பிக்கையோட வாழணும்! அதுல ஒரு பிட்டு கூட சந்தேகம் வரக் கூடாது. சந்தேகம் வந்தால் அது குரு துரோகத்துக்கு ஈடான தோஷமாகும்”. இவ்வாறு எத்தனையோ விளக்கங்களை நேருக்கு நேராகத் தந்து நம்மோடு ஒருவராய் நம்முள் ஒருவராய் உள்ளும் புறமும் உறைந்து அருள் வழிகாட்டுகின்றார் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள்!

நன்கு வேரூன்றிய குருநம்பிக்கை எதைத்தான் சாதிக்காது?

“காபி, டீ ஆன்மீகத்திற்குக் கெடுதலா? அவற்றை நிறுத்தித்தான் ஆக வேண்டுமா?”

“குரு என்றால் காபி, டீ குடிக்கலாமா என்று எதையும் கேட்டு வைக்கலாம் என்ற எண்ணம் பெருத்து விட்டது” (சிரிக்கிறார்).

அடியேன் என்ன சொன்னாலும் அதை நீ பரிபூரணமாகக் கடைபிடிக்கும் நிலையிலும் இல்லை! பின் இதில் ஏன் போலித்தனம்? காபி, டீ ஆசை அனைவர் உடலில் நன்றாக ஊறிவிட்டது! காமம் கூட வயதானால் கழன்று விடும்! ஆனால் பல் கழன்றாலும் இறுதி வரை காபி ஆசை விடப்போவதில்லை! “நிறுத்துகிறேன், நிறுத்துகிறேன் என்று சொல்லி அவ்வப்போது ஆசைக்காக, திருட்டுத்தனமாகக் காபி குடிப்பதை விட, ஓபனாக காபியைத் தொடர்வதே மேல்!”

“காபி, டீயை நிறுத்துகிறீர்களோ இல்லையோ, காலையில் சிறிது இஞ்சி, மதியம் சிறிது சுக்கு, மாலை சிறிது கடுக்காயைத் தொடர்ந்து உண்டு வந்தால் உடல் திடகாத்திரமாக இருப்பதோடு காபி ஆசையும் இயற்கையாய்த் தானாகவே மறையும்!”

தினமும் கருவேப்பிலை, வில்வம், துளஸி, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி என ஏதேனும் ஒரு மூலிகையையேனும், இலையாகவோ, பொடியாகவே உடலில் சேர்த்துவந்தால் காபி, டீ ஆசை தானாகவே மறையும்! காபி, டீயால் உடலில் பித்தம் கூடி மனக் குழப்பங்களே உண்டாகும்.

கொல்லி மலையில் சற்குருவுடன்...

சென்ற மே 1996ல் சுவாமிகளுடன் கொல்லிமலை செல்லும் பேறு அடியார்களுக்குக் கிட்டியது!
இது திருஅண்ணாமலையைப் போல் சதாசர்வ காலமும் சித்தர்கள் உலவும் பூமியாதலால் கால்களில் செருப்பின்றியே இப்புனித பூமியில் நடக்க வேண்டும் - சுவாமிகளின் அருளாணையிது!

தினமும் மூலிகை வாசனைகளிடையே எங்களுடைய வாசம், அதுவும் குருவின் வசம்!

சுவாமிகளுடன், மலை வழிகாட்டியின் துணையுடன், சுமார் 20 கி.மீ மலைப் பள்ளத்தாக்கில் அடர்ந்த காட்டினுள், கல், பாதை, முட்செடிகளிடையே, கால்களில் செருப்பின்றி மிகவும் சிரமப்பட்டு நடந்து சென்று “ஸ்ரீ கோரக்கர் மஹா சித்தர்” யோகத்தில் அமர்ந்த குகையைச் சென்றடைந்தோம்! 

ஊர்ந்து உட்சென்றோம். கும்மிருட்டு! சாதாரணமாக அடர்ந்த காட்டில், பெரிய பெரிய பாறைகளிடையே, அதுவும் குளுமையான குகையறையில் பாம்பு, பூச்சிகள் இருக்குமல்லவா! அவையில்லாவிட்டாலும் அவற்றைப் பற்றிய பயமாவது இருக்குமல்லவா! ஊர்ந்து படுத்துச் சென்று உள்ளே ஒரு சிறு அகல் விளக்கின் ஒளியில் அனைவரும் அமர்ந்தோம். குகையறையை நன்கு சுத்தம் செய்து ஊதுபத்தி, சாம்பிராணி தூபமிட்டு சித்தர்களின் பெருமையைப் பாடி ஒரு மணிநேரம் நாம சங்கீர்த்தனம்!

குகையுள்ளே சுற்றிலும் சிறு சிறு கற்கள்! எதனடியில் எது இருக்குமோ என்ற பயமே தோன்றாது மிகவும் சாந்தமான தெய்வீகச் சூழ்நிலையில் நேரம் போனதே தெரியவில்லை! சுவாமிகள் அங்கு இருந்தார், இல்லை இல்லை, சாட்சாத் கோரக்கரே அங்கு பிரசன்னமாயிருந்தாரே! சுவாமிகள் அருகில் இருந்தமையால் எந்த பயமும் எழவில்லை! சாதாரணமாக நரிகளும், ஓநாய்களும், சிலசமயங்களில் கரடிகளும் உலவும் இடமதுவாம்!

இன்றும் கோரக்கர் குகை அங்கிருக்கிறது. பாக்யம் உள்ளவர்களுக்கு இதன் தரிசனம் கிட்டும். அந்த  குகையினுள் தெய்வீக சாந்நித்யம் பொங்கி வழிவதைப் பரிபூர்ணமாக உணர முடிகிறது! சற்குரு அருகில் இருந்தமையால் உயிரைப் பற்றிய எண்ணமே எழாது அனைவரும் இனம் புரியாத தெய்வீகப் பரமானந்தத்தில் திளைத்தோம்!

ஸ்ரீ சற்குருவுடன் சுற்றினால் கிட்டும் சுந்தரானந்த விஜயத்தில் எதுதான் சாத்தியமில்லை!

அமிர்த தாரைகள்

இஷ்ட சித்திக்கு எளிய வழிபாடு!

12 தர்ப்பைகளை நீளவாக்கில் ஒன்றாய்ச் சேர்த்து அவைகளில் 21 முடிச்சுகளைப் போட்டு மாலையாகக் கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும்.

தர்ப்பை மாலையை அணிந்தவாறே இயன்ற அளவு (குறைந்தது 1008 முறை) ஸ்ரீ காயத்ரீ மந்திரத்தை தினமும் ஜபித்து வர வேண்டும். தமக்குப் பிடித்த இஷ்டதெய்வத்தின் காயத்ரீ மந்திரத்தை யும் ஜபித்து வழிபடலாம். தொடர்ந்து இவ்வெளிய வழிபாட்டைச் செய்து வர நமக்கு இஷ்டமான அனைத்து நல்காரிய சித்திகளையும், எளிதில் பெறலாம். எண்ணியதை எட்டிப்பிடிக்க எளிய வழிபாடு!

வீட்டிலிருக்கும் தீய சக்திகள் விலக...

புதிதாகக் கட்டும் வீடுகள். மட்டுமல்லாது அனைத்து வீடுகள், கட்டிடங்களுக்கும் பராமரிப்பு தெய்வமாக விளங்குபவர் ஸ்ரீ வாஸ்து பகவான். பூமியின் மீது எழுப்பப்படும் எல்லாவிதமான கட்டிடங்களுக்கும் அதிபதியாகத் திகழ்பவரே ஸ்ரீ வாஸ்து மூர்த்தி. ஸ்ரீ வாஸ்து மூர்த்தி துயில் விழித்தெழும் நாட்களில் அஷ்டத்திக்கு பாலகர்களின் காயத்ரீயை இயன்றவரை ஒதி வீட்டு நிலைகள், கதவுகள், ஜன்னல்கள் இவற்றைச் சுத்தம் செய்து தாமே அரைத்த மஞ்சள், சந்தனத்தைப் பூசி குங்குமப் பொட்டிட்டு உதிரிப் பூக்களை போட்டு எட்டுத் திசைகளிலும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.

வேண்டாம் விவாகப் பிரச்னைகள் !

தர்ம நெறிகளின்படி திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது சத்தியமே! எனவே இறையருளால் கூட்டுவிக்கப்பட்ட திருமண பந்தங்களை மனிதர்களாகிய நாம் கோர்ட், வழக்குகள் மூலம் பிரிக்க நினைப்பதை நம் தர்மம் அனுமதிப்பதில்லை. இருப்பினும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் விவாகரத்து வழக்குகளால் துன்பறுபவர்கள் 21 கணுக்களை உடைய அருகம்புல்லைக் கோர்த்து மாலை கட்டி வலஞ்சுழிப் பிள்ளையாருக்குத் தொடர்ந்து சாற்றி வழிபட்டு வந்தால் வழக்குகளில் நல்ல தீர்வைப் பெறலாம்.

வாழ்வில் மாற்றம் வேண்டுமா?

மனிதர்கள் விரதமிருப்பதைப் போலவே விலங்குகளும் உண்ணா நோன்பு என்னும் விரத பூஜையை மேற்கொள்கின்றன. உண்ணா நோன்பு ஏற்ற விலங்குகளுக்கு உணவிடுவதால் அளப்பரிய பலன்களைப் பெறலாம். விரதமிருக்கும் நாய்களுக்கு உணவளிப்பது ஒரு சிறந்த பூஜையாகும். உண்ணா நோன்பிருக்கும் நாய்கள் அன்று அருகம் புல்லை மட்டும் உண்ணும். இதைக் கொண்டே அவை விரதம் இருப்பதை ஊர்ஜிதம் செய்து கொள்ளலாம், உண்ணா நோன்பிற்கு மறுநாள் அந்த நாய்களுக்குப் பாலும் பிஸ்கட்டுகளும் உண்ணக் கொடுத்தால் அது மிகச் சிறந்த பூஜையாக அமையும். இதனால் நமது வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தையே உணரலாம். இது கிடைத்தற்கரிய பாக்யமாகும்.

ஏழைகளின் இனிய நண்பன்
கோர்ட் வழக்குகளுக்குப் பணம் செலவு செய்ய முடியாத ஏழ்மையில் பல வழக்குகளைச் சந்திக்க  வேண்டிய நிர்ப்பந்த நிலையில் பலவிதமான துன்பங்களை அனுபவித்து வருபவர்கள் பலர். இவர்களின் ஆபத்சகாயராக விளங்குகிறார் விருத்தாசலம் அருகிலுள்ள ஸ்ரீ கொளஞ்சியப்பர் சுவாமி. இவரை முறையாகப் பிரார்த்தித்து தங்கள் குறைகளைக் கூறி மன்றாடி கொத்துக் கடலைச் சுண்டல் தானம் செய்து வர முருகப் பெருமானே முன்னின்று அவர்கள் வழக்குகளைத் தீர்த்து வைப்பார்! நீதி தராத நியாயமான தீர்ப்பை இங்குள்ள முருகப் பெருமான் ஏழைகளுக்கு வழங்கி அருள் பாலிக்கின்றார்.

ஸ்ரீஜேஷ்டாதேவி பெருநகர்

இடையில் விரதத்தை நிறுத்தலாமா!

ஸ்ரீ ஐயப்பன், சந்தோஷி மாதா போன்ற தேவ விரதங்களில் எதிர்பாராத நோய், துக்கம் காரணமாக விரதத்தை இடையில் நிறுத்திடலாமா? உண்மையான விரதம், உத்தம பக்தி நெறிகளின்படி எதுவரினும் இறைச்செயலே என்று தாமரை இலைத் தண்ணீராக இடைச் செயல்களை ஏற்று விரதத்தைத் தொடர்தலே மிகவும் சிறப்புடையது! தாயின் மரணத்தைக் கூட அறியாது அற்புதமாக விரதத்தைச் சிறப்புடன் முடித்த பெருந்தகையோர் இருக்கின்ற திருப் பூமியிது! “என் மகன் இறைப் பணியைத் தொடரட்டும், ஏனையோர் என் காரியங்களை முடித்திடுக,” என உவப்புடன் மரணத்தைத் தழுவுகின்ற பல தாய்மார்கள் உறைகின்ற உத்தம பாரதநாடு இது! எனினும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் விரதத்தை இடையில் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படில் என் செய்வது? ஈசன் முன்னர் தன் நிலைகளைச் சமர்ப்பித்து மாலையைக் கழற்றி பத்திரப்படுத்தி, இடைப்பட்ட காரியங்களை நடத்தி முடித்துவிட்டு உடனே மீண்டும் முழு மண்டல விரதத்தையும் தொடங்க வேண்டும்! ஏற்கனவே இருவார விரதம் முடிந்து விட்டது, மிச்சத்தைத் தொடர்வோம் என்றில்லாது முழு விரதத்தையும் தொடர்ந்திட வேண்டும். இறப்புத் தீட்டு ஒருவருடத்திற்கு என்றெல்லாம் எண்ணாதீர்கள்! இறப்புத் தீட்டைச் சாக்காகக் கொண்டு, ஒரு வருடத்திற்குக் கோயிலுக்குச் செல்லாமலிருப்பது மாபெரும் தவறாகும். உத்தரக் கிரியைகளில் உள்ள  பலவித ஹோமங்களும் வடமொழி தமிழ் மறை வேத பாராயணங்களும், தானதர்மங்களும் தெய்வீக சம்பந்தப்பட்டவை தானே! எனவே உத்தரக் கிரியைகளை முறையாக நிறைவேற்றியவுடன் தலயாத்திரை, விரதம், கிரிவலம் போன்றவற்றைத் தொடர்தல் வேண்டும். இறப்பைச் சாக்காகக் கொண்டு ஒரு வருடத்திற்கு எந்த வித தெய்வ காரியத்தையும் செய்யாமல் தண்டமாக  வாழ்க்கையைக் கழித்துக் காலத்தை விரயம் செய்யாதீர்கள் ? கலியுக மனிதன் எத்தனையோ பயனுள்ள சம்பிரதாயங்களைக் கைவிட்டு, சோம்பேறித்தனமாக வாழ்வதற்கான யுத்திகளை மட்டும் மேற்கெண்டு எவருக்கும் பயனில்லாத வீணான வாழ்க்கையில்தான் நாட்டம் செலுத்துகிறான்! என்று மறையும் இந்த சோம்பல் குணம்!

ஸ்ரீ அன்னபூரணியை விலக்காதீர்கள்! விளக்குமாற்றை விலக்கிடுக!

இன்றைக்கு, பெரும்பாலான ஹோட்டல்களில், தோசைக் கல்லை விளக்குமாற்றால் துடைக்கின்ற வேதனையான காட்சியைக் காண்கின்றோம்.! ஸ்ரீ அன்னபூரணியை, உலக ஜீவன்களுக்கு அன்னம்பாலிக்கின்ற ஸ்ரீஅன்னபூரணியை நம்பி வாழ்கின்ற ஹோட்டல் அதிபர்களே! இன்று ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்காகக் கல்லா கொழிக்கக் காரணமாக இருக்கும் ஸ்ரீஅன்னபூரணியும் ஸ்ரீ அக்னி மூர்த்தியும் வசிக்கின்ற அடுப்பிலும், தோசைக் கல்லிலும் விளக்கு மாற்றைக் கொண்டா துடைத்தெடுப்பீர்கள்! சற்றே பகுத்தறிவுடன் செயல்பட்டு இந்த அருவருப்பான, தெய்வீகத்திற்கு ஒவ்வாத  செயலை உடனடியாக நிறுத்துவீர்களாக! இத்துணை ஆண்டுகள் இவ்வாறு செய்தமைக்கான பிராயச்சித்தமாக, ஸ்ரீ ஜேஷ்டாதேவி எழுந்தருளியுள்ள  தலங்களில் பாலபிஷேகம் செய்திடுக! பல ஆலயங்களிலும் கோமுக தாரைகள் சரியாகக் கவனிக்கப்படாமல் அசுத்தமாக இருக்கின்றன. இதனைத் தூய்மைப் படுத்துகின்ற எளிய இறைத்  திருப்பணியை மேற்கொண்டும் பரிஹாரம் கண்டிடுக!

காராம்பசு திருஅண்ணாமலை

பசுஞ்சாணத்தின் புனிதத் தன்மை

தன் உடலே தேவாதி தேவ மூர்த்திகளின் உறைவிடமாக விளங்கும் பாக்யத்தைப் பெற்றுள்ளதே பசுவாகும். பசுஞ்சாணமானது எந்த லோகத்திலும் பசுவின் மலமாகக் கருதப்படுவது கிடையாது. மாறாக கர்ம மலம் தீர்க்கும் மாமருந்தாகவே பசுஞ்சாணி விளங்குகின்றது. பசுஞ்சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் பஞ்சகவ்யத்தை வாரத்திற்கு ஒரு முறையேனும் ஒரு செம்பில் கங்கை, காவிரி போன்ற புனித நீருடன் கலந்து மாவிலைகளால் இல்லம் /அலுவலகம் முழுதும் தெளித்து வந்தால் மூலை முடுக்குகளில் குடி புகும் எதிர்வினைச் சக்திகளின் (Negative Forces) மலமும் தீர்வடைகின்றது. குறிப்பாக, ஒரு பசு இடும் சாணமானது அச்சாணம் கீழே விழும் முன்னர், அதனை இளஞ்சூட்டியிலேயே ஒரு தாமரை அல்லது வாழை இலையிலோ பிடிக்கப்பட்டு அதிலிருந்து தயாரிக்கப்படும் பஞ்ச கவ்யத்திற்கும் பசு விராட்டிக்கும் (Cow dung cakes) மகத்தான சக்தியுண்டு. இவ்வித பசுவிராட்டியினால் செய்யப்படும் ஹோமகுண்ட பூஜைகள் அளப்பரிய பலன்களைத் தருவதுடன் உடலிலும் உள்ளத்திலும் உள்ள மலங்களைத் தீர்க்கும் அற்புதமான இறை சக்தியைக் கொண்டனவாகும். இவ்வாறாக (கர்ம) மல விளக்கங்கள் எத்தனை எத்தனையோ? இவற்றை அறிந்து யாது பயன் என்று கேட்கின்றீர்களா? மலம் என்றால் எதை எதையோ எண்ணுகின்றீர்களே உங்களுடைய உள்ளும் புறமும் குடிகொண்டிருக்கும் கர்மவினை மலங்களைப் பற்றி எப்படித்தான் அறிந்து கொள்வது? இயந்திர ம(ல)யமாக வாழ்வதைவிட இயன்றவரை அறிந்து தெரிந்து உணர்ந்து திருத்திக் கொண்டு வாழ்வதே உத்தமமானதாகும்.

சுட்ட எண்ணெயை விட்டிடுவீர்!

நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், நெய் போன்ற எண்ணெய் வகைகளுக்குப் பலவகை கர்ம வினைகளை பஸ்மமாக்கும் சக்தியுண்டு. எனவே சுட்ட எண்ணெய் என்பது பல தீய எண்ணங்களின், தீவினைகளின் கசடாக, மலத் தொகுப்பாக ஆகிவிடுகிறது. எனவே சுட்ட எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்திடாமல் எண்ணெயின் தன்மை நிலைக்கும் வரை பயன்படுத்தி பிறகு சுட்ட எண்ணெய்யை பூமியில் சேர்த்திட வேண்டும். சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதோ அல்லது சுட்ட எண்ணெயில் வார்த்த பண்டங்களைச் உண்ணுதலோ கூடாது. தாவரங்களின் புனிதமான புண்ய சக்தியே எண்ணெய் வித்துக்களாக ஜீவ சக்தியுடன் திகழ்வதால் தாவர எண்ணெய்களுக்குப் பலவிதமான கர்மவினைகளை பஸ்மமாக்கும் சக்தியுண்டு. எனவேதான் பஜ்ஜி போன்றவற்றை தானமாக அளிக்கிறோம்.

இருமுடி தா(த)ங்குமிடம்!

இயற்கை உபாதை, நீராடல், உறக்க நேரங்களில் மட்டும் மற்றொரு ஐயப்ப அடியாரிடம் இருமுடியை அளித்திடலாம்/அல்லது சற்று உயர்வான இடத்தில் புதுத்துணியை விரித்து அதன் மேலுள்ள தர்பையால் ஆன பிரிமனைகளின் மேல் தான் இருமுடிகளை வைத்திட வேண்டும். இருமுடியைத் தரையில் வைத்தல் கூடாது . தர்பையானது பவித்ரமான தேவலோக மூலிகைத் தாவரமாதலின் அதுவே ஸ்ரீ ஐயப்பனின் சொத்தான இருமுடியின் புனிதத்தை நிலைநிறுத்தும்/தாங்கும் சக்தியை நன்கு பெற்றுள்ளது! மேலும் ஐயப்பனின் வாகனமான புலியானது தர்பைக் காடுகளில் தான் வாசம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எளிமையான எதிர்காலம் பெற

காஞ்சீபுரத்தில் ஸ்ரீதீபப்பிரகாசர் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் விளக்கொளிப் பெருமாள், படித்த இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதியாவார். பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் எல்லா சந்நிதிகளிலும் குறைந்தது 108 தீபங்களை சுத்தமான நல்லெண்ணெய், பசு நெய் அல்லது மற்ற மூலிகை எண்ணெய்களைக் கொண்டு ஏற்றி வருவதை ஒரு வைராக்கியமாகக் கொண்டு நிறைவேற்றி வருபவர்கள் எதிர்காலத்தில் சிறந்த எலக்ட்ரிக்கல் எஞ்சினீயர்களாக உருவாகிப் புகழ்பெற ஸ்ரீ விளக்கொளிப் பெருமாள் அருள் புரிவார். கன்னிப் பெண்கள் இவ்வைராக்கியத்தை முறையாக நிறைவேற்றிட தீர்க்க சுமங்கலிகளாய் விளங்கித் தங்கள் குலத்திற்கே ஓர் ஒளிவிளக்காய்த் திகழ்வர். முதியோர்கள் தங்களால் இயன்ற அளவு இந்த தீப வைராக்கியத்தை மேற்கொண்டிட, மரணம் இயற்கையாகவும் துன்பங்கள் இன்றியும் அமையும். மேலும் இறந்தபின் அவர்கள் ஆத்மா செல்லும் “ஒளிவழிப் பாதையில்” சூட்சும சரீரப் பயணம் இனிமையாக அமையும்.

தவீர்ப்பீர் முறையற்ற வரவேற்பை (Wedding Reception)
தற்போதைய வழக்கில் உள்ள திருமண முறையில் மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் சுப் மங்களகரமான மாங்கல்ய வைபவத்திற்கு முதல் நாளே மணமகன், மணமகளை ஒரு சேர உட்கார வைத்து அவசர கோலத்தில் 'Wedding Reception"ஐ நடத்துவதாகும் தேவையற்ற சிக்கனம், கல்யாண சத்திர வாடகை, அலுவலக நண்பர்களின் வசதி, சுயநலம், பண வரவு, பேராசை, (போலியான) அந்தஸ்து/கெளரவம் போன்ற பல காரணங்களுக்காக. ஆன்மீகத்திற்கு விரோதமான முறையில் நம் மூதாதையர்களின் பல சிறந்த நல்லொழுக்கப் பண்பாட்டு விதிகளை மீறி'திருமணத்திற்கு முன்னதாகவே ''வரவேற்பு'' நடக்கிறது! தயவு செய்து இத்தகைய தவறுகளினால் உங்களுடைய சந்ததிகளின் திருமண வாழ்க்கையில் பல துன்பங்களுக்கு வித்திடாதீர்கள் எனப் பெற்றோர்களின் தாள் பணிந்து வேண்டுகிறோம்.
Receptionஐ வேண்டாம் என்று சொல்லவில்லை. தெய்வீக ரீதியாக அக்னி/ மந்திரம் பெரியோர்களின் இறைவனின் சாட்சியாக மாங்கல்ய தாரணம் முடிந்து மங்கலத்தாலி மணப் பெண்ணின் கழுத்தில் சூட்டப்பட்டவுடன்தான் புனிதமான திருமண உறவு பரிபூர்ணம் பெறுகின்றது. இதற்குப் பின்னர் Reception அமைவது தான் சிறப்புடையது!

பெயிண்டுக் கோலம் போடாதீர்!

அரிசி மாக்கோலத்திற்குத்தான் அனைத்துவித தெய்வீக சக்திகளும் உண்டு. எறும்பு வடிவில் வருகின்ற தேவதைகளும் பிப்பல ரிஷிகளும் பிப்பலப் பித்ரு தேவர்களும் கோல மாவை உண்டு நம்மை ஆசிர்வதிக்கின்றனர், சிக்கனம் என்று எண்ணி மொக்கு மாவினால் (கல்பொடி) கோலம் போட்டால் சாபம்தான் மிஞ்சும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்! மேலும் தற்போது ஆலயங்களில் பெயிண்டினால் கோலம் போடுகின்ற தவறான வழக்கம் இருப்பது மிகவும் வேதனைக்குரியதாகும். இதனால் எவ்வித ஆன்மீகப் பயனும் கிடையாது! மாறாக நல்தேவதைகள் இவ்விடத்தை விலகிச் செல்கின்றனர், மேலும் தவறான வழக்கத்திற்கு இது முன்னோடியாகவும் அமைவதால் ஆலயங்களிளும் இல்லத்திலும், பக்த கோடிகள் பெயிண்டினால் கோலம் போடுவதைத் தவிர்க்க ஆவன செய்ய வேண்டும்!

நித்ய கர்ம நிவாரணம்

1.3.1998 – சூரிய பகவானுக்கு முக்கூட்டு எண்ணெய் விளக்கு ஏற்றுதல், கோதுமை உணவுதானம் – பிள்ளைகள் நன்கு படிப்பர்.

2.3.1998 – வெள்ளைக் குதிரைக்குக் கொள் தானம் – வேலையில் ஏற்படும் தடங்கல்கள் நிவர்த்தி

3.3.1998 – வேல் தாங்கிய முருகன் கோயிலில் பஞ்சாமிர்த அபிஷேகம், தானம் – கடன் நிவர்த்தி

4.3.1998 – கீரை அன்னம் தானம் – நல்ல செய்தி வரும்.

5.3.1998 – பெருமாள் கோயிலில் மிளகு வடை தானம் – எதிர்பாராத உதவி கிட்டும்.

6.3.1998 – வெள்ளை குதிரை கொள்ளு தானம் – படிப்பில் நல்ல முன்னேற்றம்

7.3.1998 – வாஸ்து பூஜை தலைவாசல் / நிலைவாசல்களில் மஞ்சள் பூசி குங்குமம் இட – வீட்டில் செல்வம் பெருகும்.

8.3.1998 – ஏகாதசி விரதம் – இறைநாமத்தை இரவெல்லாம் பூஜித்திடில் கணவன் மனம் திருந்தி வாழ்வான் – சர்க்கரைப் பொங்கல் தானம்.

9.3.1998 – நரசிம்ம மூர்த்திக்கு பானக நிவேதனம், தானம் – எதிரிகளால் வரும் துன்பம் குறையும்.

10.3.1998 – சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு பொரிதானம் – கடன் பளு குறையும்.

11.3.1998 – எமதர்மராஜர் கோயிலில் நல்லெண்ணெய் தீபம் எள்சாத அன்னதானம் – நெடுநாள் நோய் விலகும்.

12.3.1998 – கணபதிக்குப் பொரியுருண்டை நைவேத்யம், தானம் – வியாபார அபிவிருத்தி

13.3.1998 – திருஅண்ணாமலை கிரிவலம் – குழந்தைகள் நலம் பெறுவர்.

14.3.1998 – இன்று முறையாக நோன்பு கடைபிடித்திடுக  - கணவனுடைய ஆயுள் விருத்திக்கு ஏழைச் சுமங்கலிகட்குரிய தானம்

15.3.1998 – பசுக்களுக்குப் பழங்கள் அளித்தல் – புதிய வியாபார முயற்சியில் பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படும்.

16.3.1998 – விநாயகருக்கு அரிசிப் பொறி நிவேதனம் விநியோகம் – நல்ல செய்தி தேடிவரும்.

17.3.1998 – வலஞ்சுழி விநாயகரை முறையோடு வழிபட்டு சிகப்பு வஸ்திரங்களை தானம் செய்திடில் – நல்ல மனைவி அமைவாள்.

18.3.1998 – ரெங்கநாதரின் பாத தரிசனம் – நல்லதொரு வேலை மாற்றம் கிட்டும்.

19.3.1998 – ஸ்ரீபாலதண்டாயுதபாணிக்கு அபிஷேகம் ஏழைகளுக்குக் காலணிகள் தானம் – அலுவலகத்தில் எதிர்பாராது வரும் துன்பங்கள் விலகும்.

20.3.1998 – சனீஸ்வர பகவானுக்கு திராட்சை நிவேதனம் / தானம் – தொழிலில் முன்னேற்றம்

21.3.1998 – கோதுமை உணவு தானம் – கண் வியாதிகள் தீரும்.

22.3.1998 – சர்க்கரைப் பொங்கல் தானம் – ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் நலம் பெறுவர்.

23.3.1998 – படிக்கின்ற பிள்ளைகளுக்கு பேனா பென்சில் போன்ற உபகரணங்கள் தானம் – கல்வித் துறையில் உள்ளோர் நல்ல மாற்றம் பெறுவர்.

24.3.1998 – செவ்வாய்க்கிழமையும் ஏகாதசியும் சேருகின்றை இந்நாளில் பஞ்சமுக ஆஞ்சனேயருக்கு அபிஷேக ஆராதனைகள் வெண்ணெய் தானம் – வெளிநாட்டிலிருந்து நற்செய்தி வரும்.

25.3.1998 – பிரதோஷ காலத்தில் நரசிம்ஹ மூர்த்திக்கு அபிஷேக ஆராதனை – எலுமிச்சை அன்னம் தானம் செய்திடில் கோர்ட் விவகாரங்கள் நல்ல தீர்வு பெறும்.

26.3.1998 – வாகன ஓட்டுநர்கள் (Taxi, Car, Van, Drivers  etc…)  தங்கள் வாகனங்களை முறையாகக் கழுவி சுத்தம் செய்து ஆஞ்சநேய பூஜை செய்திடில் நல்ல வருமானம் கிட்டும்.

27.3.1998 – மூதாதையர்களுக்குப் பித்ரு தர்ப்பணங்கள் ஊனமுற்றோர்க்கு உணவு அளித்திடில் வாழ்க்கையில் நல்லதொரு மாற்றம் ஏற்படும்.

28.3.1998 – கண்ணாடிப் பொருட்கள் செய்பவர்களுக்கு (eg – படம் Frame  செய்வோர், கண்ணாடி பொருள்களை விற்கின்ற ஏழைகள்) வஸ்திர தானம் / அன்னதானம் செய்திடில் கண்/ முக நோய்கள் தீரும்.

29.3.1998 – ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு ஐந்து கூட்டு எண்ணெய் (தேங்காயெண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பெண்ணெய், வேப்பெண்ணெய்) தீபமேற்றி கருவேப்பிலை சாதம் நிவேதனம், தானம்  வாகனத்தால் வரும் துன்பங்கள் நீங்கும்.

30.3.1998 – கோயில் குளங்களில் உள்ள மீன்களுக்கு உணவு இடுதல் (பொரி etc..) பணத் தொல்லைகளிலிருந்து நிவர்த்தி.


ஸ்ரீகருட பகவான் பெருமாள்மலை

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam