எண் சாண் உடம்பிற்கு குருவே பிரதானம் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்

“அவன்” “இவனுள்” எழுப்பிய ஆத்ம விசாரம்!

கடந்த இதழில் கண்டது போல், சிறுவன் தன்னைப் போல், ஒரு சில உருவங்கள் வந்து செல்வதைப் பன்முறை பார்த்திருந்தாலும், ஒவ்வொரு முறையும் அவனுள் விதவிதமான அனுபவங்களும், அனுபூதிகளும் ஏற்பட்டன!

ஒரு வேளை பெரியவர், “இவன் மனதை அற்புதங்களின் பால் லயிக்கச் செய்கின்றாரோ?” என்று அவனைச் சோதனை செய்வதற்காகவே “தன்னைப் போல் ஒருவன்” வரும் நிகழ்ச்சிகளை அவனுள் உருவாக்கித் தருகின்றாரோ என்று கூட அவன் எண்ணியதுண்டு!

“அவன்”, “இவனுடைய” வாழ்க்கையில் பங்கு பெறும் சில சம்பவங்கள் பலவும் ஒரே மாதிரியாக அமைந்திட்டாலும், ஒவ்வொரு முறையும் அவன் பெற்ற பாடங்களோ வெவ்வேறு விதமாக இருந்தன! முதலில், “அவனை” அதிசயமாகப் பார்த்தவன் பிறகு அமைதியாக “அவனைப்” பார்க்கலானான்!

சூரிய பூஜை தலம் ஏத்தாப்புர்
(ஞாயிறு)

இருவரும் சேரும் “நேருக்கு நேர்” அனுபூதிகள் “உண்மையிலேயே நடந்தனவா அல்லது கனவா?” என்று அவன் குழம்பியதும் உண்டு. ஆனால் இதற்கான எந்த விளக்கங்களையும் நல்விடையாக இறுதி வரையில் பெரியவர் அளித்திடாமலேயே சென்று மறைந்தார். ஆங்காங்கே இந்த Subjectஐத் தொட்டுச் செல்வாரே தவிர, அவனுக்கு எவ்வித விளக்கங்களும் கடைசி மட்டும் கிட்டிடவில்லை.

மறைந்தும் மறைபோல விளக்கங்கள்!

ஆனால் பெரியவர் தன்னை முழுவதுமாக மறைத்துக் கொண்டு, பூலோகத்தில் மானுட வடிவில் வருவதையும் முழுமையாக நிறுத்திக் கொண்ட பின்னர்தான், அவனுக்குப் பல ஆன்மீக விஷயங்கள் தெளிவாயின!

சிறுவன் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொண்டான். ஒருவன் தன்னை முழுமையாகத் தெய்வீகத்திற்கு அர்ப்பணித்துக் கொண்டால், அவனுடைய வாழ்வில் அது அது தானாக நடப்பதை அவன் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கின்றான்!

ஆனால் எல்லாம் தானாக நடக்கும் என்று எம்முயற்சியும் எடுக்காது மந்தமாக இருந்தால் அதற்கான தண்டனையையும் “வருவதையும்” அனுபவித்தாக வேண்டியதுதான்!

ஆனால் இவ்வாறு தன்னைத் தியாக மயமாய் அர்ப்பணித்துக் கொள்பவன் எந்நிலையிலும் அவ்வாறு எண்ணுவதோ, சொல்லிக் கொள்வதோ கூடாது. இதுவே உண்மையான பக்திக்கு வழி வகுக்கும்.

ஆனால் இந்த அற்புத ஆன்மீகப் பாதையில் சந்திக்க வேண்டிய சோதனைகளோ அவனைப் பல விதங்களில் வருத்தினாலும், அவையாவும் ஸ்புடம் போட்ட பொன்னாக அவனுக்கு மெருகு கூட்டி, பல யுகங்களின் அனுபவங்களையும் ஒருங்கே, ஓரிடத்திலேயே அவனுக்குப் பெற்றுத் தந்த அற்புதத்தைச் சொன்னால் யார்தான் நம்புவார்கள்.?

இறைவனை நினைத்து
ஒரு சொட்டு கண்ணீர் !

அரவத்துடனா அரைமணி நேரப் பேச்சு!

ஒருமுறை திருஅண்ணாமலை கிரிவலத்தின்போது….

பௌர்ணமி நள்ளிரவில்… சாதாரண மண்பாதையாக கிரிவலச் சாலை இருந்த அக்காலத்தில்..

சாலை நடுவில் இருளிலும் ஒரு பெரிய பாம்பைக் கண்டு அலறி விட்டான் சிறுவன்.!

பெரியவரோ, சற்றும் அசராது, அங்கேயே நின்று, பாம்பிடம் ஏதேதோ உரையாட ஆரம்பித்து.. நேரம் போவதே தெரியவில்லை.

…”வந்திருப்பது ஏதோ மகரிஷியோ, நாகலோகத்து தேவதையோ போல் இருக்கிறதே! ஆனால், இவர்கள் ஏன் அச்சம் தரும் பாம்பு வடிவில் வருகின்றார்கள்? எவரேனும் தப்பித் தவறி மிதித்துவிட்டால் என்னாவது? சாபம் தானே வரும்?”

ஆனால் பெரியவரோ உபநிஷத் விளக்கங்கள் போல அவனுக்குப் புரியாத பல தெய்வீக விஷயங்களை அந்தப் பாம்பிடம் பேசிட…

திடீரென்று அது ஒளி ரூபத்தில் மாறி மறைந்து விட்டது! ஆனால் இறுதி வரையில் பெரியவர் அந்தப் “பாம்பு” பற்றி எதுவும் கூறிடவில்லை.!

சிறுவனாக ஒரு முடிவுக்கு வந்திட்டான்! “ஒருவேளை இதுவும் ஒரு குருகுலவாச டிரெயினிங் போலிருக்கிறது! குருவே தானாக உணர்விக்கும் வரை எதையும் “கண்டு மட்டும் இருப்பதே உன் கடன்!” என்பதாகத்தான் பெரியவர் உணர்த்துகின்றாரோ!

ஆனால் இன்னொரு சமயத்தில் எங்கேயோ சற்று தூரத்தில் ஒரு சிறு பாம்பைப் பார்த்த பெரியவர் பயத்தால் (!!!) “குய்யோ முறையோ” என்று கத்தி ஊரையே கிளப்பிக் கொண்டு வந்துவிட்டார்! இத்தனைக்கும் அது ஒரு அடி நீளமான தண்ணீர்ப் பாம்புதான்!

இவரை “எப்படித்தான் வைத்து எடை போடுவது?” சிறுவன் பதில் தெரியாது விழித்துக் குழம்பிய, பிறரைக் குழப்பிய நாட்களும் குருகுல வாசத்தில் நிறைய உண்டு! இப்படியாக எண்ணற்ற குருகுலவாச அனுபூதிகள்!

“சேரிடம் அறிந்து…!!!”

மற்றொரு முறை… பெரியவருடன் சிறுவன் செல்கையில்……

ஓரிரண்டு பஸ்களில் மாறி, மாறி ஏறியும், நெடுந்தூரம் கல், முள் குறுக்குப் பாதைகளிலும், இடைவிடாத பயணமாக, எங்கோ அழைத்துக் கொண்டு சென்றார். அந்த இடம் சென்னைக்கும் திருஅண்ணாமலைக்கும் இடையிலா, அல்லது வேறெங்குமா என்று கூடச் சிறுவனால் நினைவு கூட்ட இயலவில்லை! காரணம், சித்தன் போக்கு, சிவன் போக்காய், எங்கு போகின்றோம் எனச் சிறுவனுக்கே தெரியாதே!

மேலும் பெரும்பாலும் குறுக்குச் சாலைகளிலும், வயல் வெளிகளிலும் நடந்தே பெரியவர் கூட்டிச் சென்றமையால் எந்த ஊர், என்ன பெயர் எனப் பெயர்ப் பலகைகள், மூலமாகவும் படித்து அறிய முடியாமலேயே பல யாத்திரைகள் அமைந்து விட்டன! யாத்திரிகர்கள் போல் “diary” எழுதும் பழக்கத்தையும் வைத்துக் கொள்ளுமளவு சிறுவனுடைய அறிவு, முதிர்ச்சி பெறவில்லையே! அப்படியே இருந்தாலும், பெரியவர் அதை அனுமதித்ததும் கிடையாது!

“எல்லாத்தையும் மனசுல புடிடா!” என்பதுதானே அவருடைய வழக்கமான குருவாய் வாய்மொழி!

அன்று அவர்கள் சென்ற இடமோ ஏதோ ஒரு பழமையான ஆலயம் உள்ள ஊர்! ஊருணி, பழைய வகை கிராமத்து ஓட்டு வீடுகள், தோப்பு, துரவு எல்லாம் இருந்தன!

ஏனிந்த சப்தம் ஐயா?

ஸ்ரீபுரந்தான் அமர்ந்தநிலை
பெருமாள் (புதன்)

அவர்கள் நடந்து கொண்டே இருக்கும் போது, ஓரிடத்தில் … ஏதோ சப்தம் வந்தது!

உடனே பெரியவர், “என்னடா இது, திடீர்னு கொய்ங், கொய்ங்னு சப்தம் வருது?” என்று கேட்டிட, சிறுவன் திருதிருவென்று விழித்தான்! உண்மையில் அவர் சொன்ன பிறகுதான் சப்தம் வரும் உணர்வே அவனுள் பிறந்தது! இதை அவரிடம் சொல்லவா முடியும்?

“எங்கிருந்து சப்தம் வருகின்றது?” என்று எண்ணியவாறே சிறுவன் சுற்றிலும் அங்குமிங்கும் பார்த்தான், அவனுக்கு ஒன்றும் புலப்படாது போகவே,

“எங்கேந்து சப்தம் வருது வாத்தியாரே? எனக்கு ஒண்ணும் சரியாக் காதுக்குக் கேட்கலையே! ஆம்புலன்ஸ் தானே கொய்ங் கொய்ங்னு சப்தம் போட்டுக்கிட்டு வரும்!” என்றான்.

பெரியவர், “ஒண்ணு தெரிஞ்சுக்கடா! தெய்வீகத்துல இருக்கறவங்க எப்பவுமே ரொம்ப, ரொம்ப அலெர்ட்டா இருக்கணும்கறதுக்கு தெய்வம் வைக்கற சோதனை இது! ஏதாச்சும் இப்படி நடந்தா, அதுக்குக் காரணம் தெரியலைன்னா, உடனே ஆத்ம விசாரம் செஞ்சு பார்க்கணும்! அப்படியே விட்டுட்டா அப்புறம் உனக்கும், மத்தவங்களுக்கும் என்ன வித்யாசம்! இப்படி தத்தியா, மண்டுவா இருக்கறதுக்கா என் பின்னாடி சுத்தறே? சரி, சரி பேசாம என் பின்னாலேயே வா!” என்று கூறியவாறே, பெரியவர் எங்கோ விரைந்தார்!

அவர் செல்லும் வேகத்தைப் பார்த்தால் அவர் குறித்த ஒரு இடத்திற்கு, ஏற்கனவே இங்கு தான் செல்ல வேண்டும் என்ற திட்டமிட்ட உத்வேகத்துடன் சென்றதாகவே அவனுக்குத் தோன்றியது!

“எப்படி இவரால் தெரிந்தும் தெரியாதவராய் இருக்க முடிகிறத்?” என்று ஆயிரமாவது முறையாகச் சிறுவன் அதிசயித்து வியந்தான்!

ஸ்ரீதட்சிணாமூர்த்தி கடம்பர்கோயில்
(வியாழன்)

ஒலியில் ஒளிர்ந்தவராம்!

ஆங்கே…. ஒரு வயதான கிழவர் அமர்ந்திருந்தார். ஆனால் “அந்த” சப்தம் மட்டும் இன்னமும் அங்கும் வந்து கொண்டுதான் இருந்தது!

அவன் சுற்றும் முற்றும் பார்த்தான்! எந்த ஆம்புலன்ஸையும் காணோமே!

“ஓஹோ! ஒருவேளை இந்தக் கிழவருக்குத்தான் உடம்பு ஏதும் சரியில்லையோ! இங்குதானே ஏதோ மூச்சுத் திணறுவதுபோல் சப்தம் கேட்கிறதே!”

“வா நைனா! வா! உனக்காக நான் எவ்வளவு நேரமா காத்துக்கிட்டு இருக்கிறது?” என்று மூச்சுத் திணற அவர் பேச ஆரம்பிக்கவே சிறுவன் அசந்து விட்டான்!

ஆம், இந்தக் கிழவர்தான் மூச்சிறைக்க, மூச்சிறைக்க.. ஆம் அவரிடமிருந்து தான் அந்த சப்தம் வந்திருக்கிறது! சிறுவன் வாயடைத்துப் போனான்! இப்படியும் தெய்வீக அறிகுறிச் சப்தமா?

“கூப்பிட்ட குரலுக்கு…..”

உடனே பெரியவரும், “அதான் நீ குரல் கொடுத்ததும், நீ இருக்கற இடத்துக்கு நானே நேரே ஓடி வந்துட்டேனே! அப்புறம் ஏன் இப்படி படபடன்னு சிடுசிடுக்கறே!” என்று சப்தம் போட்டு வேகமாய்ப் பொரிந்தார். சிறுவனும் பயந்து விட்டான்!

“வாத்யார் ஏன் இப்படி சற்றும் இங்கிதம் இல்லாமல் பேசுகிறார்? சற்றுப் பணிவாய் இருந்தால்தான் என்னவாம்? இந்தக் கிழவனார் பெரிய மகரிஷியாய், சித்தராய் இருந்து அல்லது மந்திர, தந்திரம் தெரிந்தவராய் இருந்து எதையாவது ஏடாகூடமாய்ச் சபித்து விட்டால் நம் கதி என்னாவது? ஆனால் எப்போதும் உஷாராய் இருக்கிறவர் இன்று உரிமையுடன் இப்படிப் பேசுகின்றார் என்றால் ஏதோ முந்தைய சித்தலோக இணைப்பு நிச்சயமாக இருக்கும்!”

சிறுவனின் குருவி மூளை உடனே சுறுசுறுப்பாய் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது!

இரண்டு அம்பாள் தலம்
உய்யக்கொண்டான்மலை (வெள்ளி)

அவன் தனது வழக்கமான யோசனையில் ஆழ்ந்தான். ஆனால் பெரியவரோ விநோதமாகச் சில காரியங்களைச் செய்ய ஆரம்பித்ததுமே, அவன் மிகவும் உஷாரானான்!

“சென்று வா ஐயனே, சென்று வா!”

பெரியவர் அந்த வயோதிகரின் அருகில் அமர்ந்து…

தன் மடியில் அவர் தலையை வைத்துக் கொண்டிட…

கிழவனாரின் தலை தொங்கியது! உடல் ஜில்லென்று ஆயிற்று! ஆனால் மலர்ந்த முகம் மாறவில்லை! நல்ல தேஜஸான முகம்!

சாதாரண நிலையில் இருந்தால், “அவர் இறந்து விட்டதாகவே” சிறுவன் ஒரு முடிவிற்கு வந்திருப்பான்! ஆனால் அமைதியாக அவர் பெரியவரின் மடியில் படுத்து, கை கால் உதறாமல், சாந்தமாக இருந்த கோலம் அவனுக்கு ஒன்றை உணர்த்தியது!

“இவர் சாதாரணமானவர் அல்ல! ஏதோ Astral travel விஷயம் நடந்து கொண்டிருக்கிறது! இவர் வேறு உலகத்திற்கோ, பூலோகத்தில் வேறு எங்கேயோ Astral travel ஆகப் போய்க் கொண்டிருக்கிறார்! சித்தர் அல்லது மகரிஷி என்பதால் அவர் திரும்பி தன் உடலில் புகும்வரை பெரியவரைக் காவலுக்காக வைத்திருக்கிறார்! இல்லாவிடில் துர்சக்திகள் உள்ளே புகுந்து அவர் உடலில் அட்டகாசம் செய்திடும்!”

அவன் தான் இப்போதெல்லாம் நன்கு ஆத்ம விசாரம் செய்ய ஆரம்பித்து விட்டானே! எல்லா ஆன்மீக விஷயங்களும் அவனுக்குத் தாமாகவே புரியலாயின! இதைத் தானே பெரியவர் அவனிடம் நெடுங்காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்!

இப்போது மிகவும் தைரியமாக வயோதிகரின் காலடியில் சிறுவன் உட்கார்ந்தான்..!

தலைமாட்டில் பெரியவர்!

“புடிச்சாலும் புடிச்சே, புத்திசாலித்தனமா அர்ஜுனன் மாதிரி கால்மாட்டையே புடிச்சுட்டியே!” பெரியவர் சிரித்திட… அதில் சிறுவனும் கலந்து கொண்டான்! மேலும் உலகளவு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவன் வயோதிகரின் உடலைத் தொட்டுப் பார்த்தான். செஞ்சி மலை அனுபவங்கள் அவன் சிரசு முதல் பாதம் வரை நிறைந்துள்ளன அல்லவா! அவர் உடலானது மேலும் மேலும் ஜில்லாகியது! கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றில், இதைவிடப் பனிக்கட்டி மிதக்கும் ஜிலுஜிலுப்பை அவன்தான் நன்கு அனுபவித்து இருக்கின்றானே!

துர்தேவதை வந்ததே!

சிறுவன் ஆஸ்ட்ரல் பயணத்தில் பறந்த அவருடைய முகத்தையே பார்த்து அதிசயித்திருந்த அந்நிலையில்….

திடீரென்று ஒரு வெள்ளை உருவம் அவர்களுக்கு முன் இருபது அடி தொலைவில் பளிச்சென்று தோன்றியது!

அது ஒரு துர்தேவதை!

இப்போதெல்லாம் சிறுவனுக்கு (பெரியவர் எதுவும் சொல்லாமலேயே) பல பெரிய பெரிய advanced spritiual விஷயங்கள் புரியலாயின! மேலும் அவனுக்கு செஞ்சி சந்திரிகிரி மலையில், முன்பு ஒரு முறை, பெரியவர் ஒரு வாரத்திற்கு மேல் தன் “சரீரத்தை உகுத்து”, Astral travel சென்றிட்டபோது, அவருடைய இதேபோலான “ஜில்ஜில் சரீரத்தை” பத்திரமாகப் பாதுகாத்த சிறுவனுக்கு ஏற்பட்ட “முதுகுத் தண்டு சில்லிடும் அனுபவங்களும்” இப்போது அவனுக்குக் கை கூடித் துணை நின்றன!

திருக்கடவூர் (அமிர்தயோகம்)

அந்த துர்தேவதையும் “ஏய்! உனக்கு ஏனிந்த வேலை? இந்த உடம்பைக் கீழே போட்டு விட்டு உடனேயே இங்கேந்து ஓடிப் போய் விடு! இந்த உடம்புல நான் புகுந்துக்கணும்! இது என்னோட ஏரியா! இதுல உனக்கு என்ன வேலை?” என்று அதட்டித் திட்டிப் பொருமியது!

பெரியவர், “நீ ஏன் இந்த உடம்புக்குள்ளே புகணும்னு நினைக்கறே! இது உனக்குத் தேவையில்லா வேலை! நீ வசிக்கறதுக்கு ஒரு மனுஷ உடல் வேணும்னா நல்லா பூஜை பண்ணி கடவுளை வேண்டு! அதுக்கான பூஜை முறையைக் கேளு, சொல்லித் தரேன்! இதுக்காக இன்னோரு உடம்பை ஏன் திருடறே! முதல்ல இந்த இடத்தை விட்டு நீ போயிடு! இது positive souls area! ஏதோ இந்த மாதிரி உத்தமர்கள் பூமியில இருக்கறதுனாலத் தான் தினமும் சூரிய பகவான் உதிக்கிறார்! நல்ல காரியம் செய்யறவரைத் தடுக்காதே! போ! போ!” என்று கூறியும் அந்த துர்தேவதை பெரியவரிடம் மல்லுக் கட்டி நின்றிடவே

 … … பன்முறை அதற்கு விளக்கம் அளித்தும் அது அகலாமல் மேலும் நெருங்கி வர முற்பட்டதால், இப்போது பெரியவர் ஏதேதோ வேத மந்திரங்களை ஓத ஆரம்பித்தார். அந்த மந்திரங்களின் வேதசக்தியைத் தாங்க இயலாது, அடுத்த கணமே, அந்த துர்தேவதை அந்த இடத்தை விட்டு அகன்றது!

நடுக்கம் தந்த ஒடுக்கப் பாடம்!

சிறுவனோ, வெலவெலத்துப் போனான்! சூரியனை உதிக்கச் செய்கின்ற அளவிற்குத் தெய்வீக சக்திகள் படைத்த இந்த வயோதிகரை ஒரு சித்தர் என்று அவன் மனம் நன்கு உறுதி செய்து கொண்டாலும், அந்த துர்தேவதையின் அதட்டலான குரலும், அது சூடி இருந்த வெள்ளைக் கருப்பு வட்டத்தையும் கண்டதினால் சிறுவனின் உடல் நடுங்கிக் கொண்டு இருந்தது!

“ஏண்டா உன் உடம்பு இந்த நடுங்கு நடுங்குது? இதெல்லாம் ரொம்ப சாதாரணமான துர்தேவதைங்க! நல்ல தேவ மந்திரம்னாலே அதுங்களுக்கு அலர்ஜி! ஆனா துர்தேவதை, நல்ல தேவதை, ஏஞ்சல்னு தராதரம் பிரிக்கத் தெரியணுமே! சரி சரி இந்த மந்திரத்தை ஜபிச்சுக்கிட்டே வா! எல்லாம் தானாகவே புரிய வரும்!” என்று உரைத்து, பெரியவர் சில அரிய மந்திரங்களைச் சிறுவனுக்குச் சொல்லிக் கொடுத்தார்.

பெரியவர் கொடுத்த மந்திரத்தைத் தொடர்ந்து ஜபித்திட, ஜபித்திட… சிறிது நேரத்தில் உடல் நடுக்கம் நீங்கி, சாதாரண நிலையை அடைந்தான்!

“இது ஜுரஹரேஸ்வரருக்கான எளிமையான மந்திரமப்பா! ரொம்ப, ரொம்ப சக்தி வாய்ந்தது!”

அதன் பிறகு ஆஸ்ட்ரல் பயணம், ஆவிகளின் நிலை போன்ற பல முக்கியமான விளக்கங்களைப் பெரியவர் சிறுவனுக்குப் போதித்தார்.

சில மணி நேர காலம் இவ்வாறு சென்றது! … திடீரென்று வயோதிகர் கண் விழித்தார்!

காத்து ரட்சிப்பவர்!

“ரொம்ப சந்தோஷம், நைனா! கூப்பிட்ட குரலுக்கு உடனேயே வந்து உதவி செஞ்சதே இந்த பூமியில பெரிய உபகாரமப்பா! ஒண்ணுமில்லை, ரொம்ப காலமா சிவத் தொண்டு செஞ்சுக்கிட்டு வந்த ஒரு அடியாருக்கு, திடீர்னு பத்ரிநாத்துல பனிப்பாறை சரிஞ்சு, மேலே பனிக் கட்டிகள் மோதி… மூச்சுத் திணறல் ஜாஸ்தியாகி, ரொம்ப குளிர் காத்தும் அடிச்சு, உடம்பு விறைச்சு… அப்பப்பா.. அந்த அடியாருக்கு உடம்பே தப்பிக்குமா, பிழைக்குமான்னு ஆயிடுச்சு!”

“கூடவே நம்ப சத்குரு அகஸ்தியரும் அவருக்காகக் குரல் கொடுக்கவே… பூஜா பலன்களைக் கொஞ்சம் கொடுத்து அந்த அடியாரைக் காப்பாத்த வேண்டியதாச்சு! இனிமேல் அவன் நிம்மதியாய்ச் சிவத் தொண்டு செய்வான்.. ஒரு நல்ல சிவத் தொண்டு தடைப்படக் கூடாதுங்கற காரணத்துக்காகத்தான் நான் வெளியிலே போயிட்டு வந்தேன். நீ செஞ்ச இந்த உதவிக்கு என்னால என்னப்பா திருப்பித் தர முடியும்! இந்தா இந்தக் குச்சியை எடுத்து வைச்சுக்கோ! என்னிக்காவது பயன்படும்! இதை வச்சுத் தட்டினா சோறு வரும்!” என்று பேசிய அவர் ஒரு மரக் குச்சியை எடுத்துக் கொடுத்தார்.. பார்ப்பதற்கு மிகவும் சாதாரணமான குச்சிதான்!

திருவாவடுதுறை

தட்டினால் வரும் சட்டிப் பானைச் சோறு!

“தட்டினால் சாதம் வருமாமே!” சிறுவன் உடனே அதனைச் சோதனை செய்து பார்க்கத் துடித்தான்!

எவரிடமும் எதற்கும் மசியாத பெரியவர், உடனே இன்று மிகவும் பவ்யமாக அந்தக் குச்சியை வாங்கி, தன் கோவணத்தின் இடது பக்கம் செருகிக் கொண்டார்! “வந்திருப்பவர்” அவருடைய சித்தர் குலம் ஆயிற்றே! எதுவும் நடக்கும் இப்போது! அந்தக் கிழவனார் “குச்சியைக்” கொடுத்ததும் மாயமாய் மறைந்து விட்டார்.

சாப்பாட்டு ராமனாய் விளங்கும் சிறுவனின் மனமோ பரபரத்தது!

“வாத்யாரிடம் எது போனாலும் அது வெளியிலேயே வராதே! அப்படியே பரவெளிக்குப் போய் விடுமே! எடுக்கிறது ரொம்ப கஷ்டமாச்சே! இப்ப எப்படி அந்தக் குச்சியை எடுத்துப் பார்க்கறது?”

“நம்ப வந்த வேலை முடிஞ்சதுடா கண்ணு! வா போகலாம்!”

சிறு குச்சி தந்த பெருஞ்சோதனை!

பெரியவர் வெகு வேகமாக நடக்கலானார்! சிறுவனின் மூளை பரபரவென்று வேலை செய்ய ஆரம்பித்தது.. எப்பொழுதும் பெரியவரின் வலது பக்கம் நடந்து செல்லும் சிறுவன் இப்பொழுது இடது பக்கம் வர ஆரம்பித்தான். ஏனென்றால் குச்சிதான் இடது பக்க இடுப்புக் கயிற்றில் உள்ளதே! பெரியவரும் விடவில்லை!

“ஏண்டா டேய், எப்பவும் எனக்கு வலது புறம்தானே நடந்து வருவே? இப்போ என்ன புதுசா இடது பக்கம் வரீயே! எல்லாம் இந்த குச்சி படுத்தற பாடுதானே!” என்று சொல்லிக் குச்சியைத் தனது கோவணத்தின் இடது பக்கத்திலிருந்து எடுத்தார்.

பொருள் ஆனந்தம்
இடையே புலன் ஆனந்தம் !

“இப்போ இந்தக் குச்சியால ஒரு கல்லை தொட்டால் கூடப் போதும் அது சோற்று உருண்டையாக மாறுதான்னு உனக்குப் பார்க்கணும், அவ்வளவு தானேடா! நிச்சயமாக மாறும்! போய் ஒரு கல்லை எடுத்து வா!”

சிறுவன், இந்த அதிசயத்தைக் காண ஓடோடிப்போய் ஒரு கல்லை எடுத்து பெரியவரின் முன்னால் வைத்தான்! சகல ஆவலுடன் அவரைப் பார்த்தான்!

“ஏண்டா! அறிவு கெட்டவனே! ஒரு பெரியவரு  இது இப்படி நடக்கும்னு சொல்றாரு, அதுல உனக்கு நம்பிக்கை இல்லாம “செஞ்சு பார்க்கலாமேன்னு” தானே உனக்கு அவநம்பிக்கையான நினைப்பு வருது! அதுவே தப்பு தானே! அவரையே நம்பாத மாதிரி ஆகுதுதானே! தெய்வீகத்துக்கு பலத்த அஸ்திவாரமே நம்பிக்கை தானேடா! அதுலேயே கை வச்சுட்டேயே! போய் ஏதாச்சும் பிராயச்சித்தம் செஞ்சுட்டு வந்து என்னைப் பாரு!”

பெரியவர் டக்கென்று மறைந்து விட்டார்! சிறுவன் ஊர் பேர் தெரியாத இடத்தில் தன்னந் தனியனாய் நின்றான்!

குரு மேலான நம்பிக்கையை விருத்தி செய்ய குருகுல வாசத்தில் எவ்வளவு சோதனைகள்!

மனம் சுமந்தான் சித்தர்

திருஅண்ணாமலைச் சித்தர்கள்! தொடர்..!

ஜீவன்களுக்கு எப்போதும் நன்மை பயக்கும் இறைவழிகளைக் காட்டிட மானுட சரீரத்தில் திருஅண்ணாமலையில் தோன்றி, மறைந்து ஜீவாலயம், குருமூர்த்தம், ஜீவசமாதி பூண்ட பல்லாயிரக் கணக்கான சித்தர்களை இப்பூவுலகம் மறந்து விட்டது. அவர்களுடைய பொன்னான தெய்வீக காலத்திற்கு அருணாசல பக்தர்களை இட்டுச் செல்கின்றோம்!

1850ம் ஆண்டிற்கு முன்னர் திருஅண்ணாமலையில் வாழ்ந்த சிறந்த சித்தர்களைப் பற்றி எவருமே சுவடிகளிலோ, அச்செழுத்துக்களிலோ வடிக்காமல் விட்டு விட்டதால் சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருஅண்ணாமலைச் சித்தர்களின் மகிமையைப் பற்றி நம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகள் அருளியபடி, நம் குரு மங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய குருவாய் மொழிகளாய் அளித்து வருகின்றோம்.

இங்கு நாம் காண இருப்பது மனம் சுமந்தான் சித்தரின் மகத்துவம் ஆகும். ஏனைய சித்தர்களைப் போல் எப்போதும் எந்நேரமும் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்த அதிஅற்புதச் சித்தர் பெருமான்! எந்த இடத்தில், எப்போது இருப்பார் என்று சொல்ல இயலா வண்ணம் எப்போதும் கிரிவலம் வந்த உத்தமச் சித்தர் இவர்! தம்மை நாடிச் சரண் அடைபவர்களின் மனச் சுமையைத் தாமே சுமந்து காப்பாற்றுபவர்! இவரிடம் ஒரு முறை சில நிமிட நேரம் உரையாடினால் கூட போதும், மனபாரம் குறைந்து பேரானந்தம் கிட்டுவதை உணர்ந்திடலாம்..!

எப்போதும் மனோரஞ்சிதப் பூக்களைக் கைகளில் சுமந்து கொண்டு இருப்பார். இவர் அமரும் இடமோ மனோரஞ்சித மரத்தின் கீழேயாம். வேறெங்கும் இவர் அமர்ந்து எவரும் பார்த்ததில்லை! மனச் சுமையைத் தணித்து ரஞ்சிதமான சாந்தத்தை அளிக்க வல்லவர்.! இவர் காலத்தில் இருந்த மனோரஞ்சிதப் புஷ்ப மரங்கள் தற்போது மறைந்துள்ளன! இவர் கிரிவலம் வரும்போது மட்டும் அவை தோன்றும்!

மனச் சுமையைத் தாங்கிக் காக்கும் மகத்தான சித்தர் மாமுனி!

குறிப்பாக, மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு எண்ணற்ற பெற்றோர்கள் இவரிடம் வந்திட அவர்களிடம் தெய்வீக விஷயங்களை உரையாடிய வண்ணம், அவர்கள் கூடவே கிரிவலம் வந்து உரையாடலின் ஊடே, அவர்களுடைய மனச் சுமைகளைத் தன்னிடம் ஏற்றுத் தாங்கிடுவார். எனவேதாம் சித்தர்களுக்கே உரித்தான பாணியில் “மனம் சுமந்தான் சித்தர்” எனும் காரணப் பெயரைச் சூடினார்.

எப்போதும் கிரிவலம் வந்த வண்ணமே இருக்கும் “மனம் சுமந்தான் சித்தரின்” தரிசனம் காணுதற்கு அரியது என்றாலும் தினந்தோறும் சந்திர ஹோரை நேரத்தில் தாமே வெளிவந்து மக்கள் புழங்குகின்ற இடத்தில் உலா வருவார். சந்திர ஹோரை நேரத்தில் இவரை தரிசித்துத் தங்கள் மனக் குறைகளை எடுத்துச் சொல்வோருடைய மனச் சுமைகளை எல்லாம் சித்தர்பிரான் தன்னுள் ஏற்று அவர்களுக்கு மன நிம்மதியை அளித்திடுவார்.

மனமடங்க வழிகாட்டும் மாமுனிச் சித்தர்!

எவ்வளவு சோக நிகழ்ச்சிகளாக இருந்தாலும் மிகவும் சாந்தமாக, பொறுமையாக, நிதானமாகக் கேட்டு வந்தவருடைய கண்களுக்குள் ஊடுருவி நோக்கி, பின் மலையை நோக்கிக் கை தொழுது தரையில் வீழ்ந்து நமஸ்கரிப்பார். இது நிகழ்ந்த உடனேயே வந்த அடியார்களுடைய மனபாரம் இறங்கி, நிம்மதியும் சாந்தமும் ஏற்படுவதை உணர்வர்! இதன் பிறகு அவர் உருவம் மறைந்து வேறு பகுதியில் தென்படுவார்!

பல சைகைகளால் பலரையும் குறித்த பல மலை தரிசனப் பகுதிகளுக்கு, வரச் செய்வதும் உண்டு.. இவர்கள் அங்கு செல்லும் முன்னரேயே மனம் சுமந்தான் சித்தர் அங்கு மலை தரிசனத்தை வணங்கிக் கொண்டிருப்பார். நல்ல உரையாடல்களாலும், மௌன மொழியாலும் அளப்பரிய அனுகிரகங்களைப் பெற்றுத் தந்த சித்தர்.

இன்றும் திருஅண்ணாமலையில் சந்திர ஹோரை நேரத்தில் தூலமாகவும், சூட்சும வடிவிலும் கிரிவலம் வந்து சந்திர லிங்கப் பகுதி, சந்திர மகாலிங்க தரிசனப் பகுதி, சந்திர மௌலீஸ்வர தரிசனப் பகுதிகளில் பாக்யம் உள்ளோர்க்கு இன்றும் குறிப்பிட்ட மாத சிவராத்திரி மற்றும் பௌர்ணமி கிரிவலத்தில் இவருடைய தரிசனம் கிட்டும். பல வடிவங்களில் வரும் இவருடன், பேசும் வாய்ப்பு அல்லது அருகிற் செல்லும் பாக்யம் கிட்டினாலே போதும், மனச் சுமை கண்கூடாகத் தணிவதை உணரலாம்!

ஆத்ம விசாரம்

கலியுகத்தில் கண்களால் கண்ட காட்சிகளால், நினைவுகளால் இயக்கப் பெறுவதே உடலென மனிதன் ஆக்கிக் கொண்டு விட்டான்!

உடல் தூய்மைக்கு, மனக் கண்ணைத் தூய்மையாக்குவீர்!

நீங்கள் எப்போதாவது கண்களை நெடுநேரம் மூடி, உங்களுக்குள் படர்ந்துள்ள உள்உலகத்தை உள்மனக் கண்ணால் காண முயற்சித்தது உண்டா?

ஒவ்வொரு மனிதனுக்கும் ஐம்புலன்களைத் தவிர, மனம், புத்தி என்ற இரண்டு சூக்குமப் புலன்களும் உண்டு. இவ்விரண்டும் நன்முறையில் இணைந்து, ஐக்கியமாகி ஆக்கப் பணி செய்தால் தான் தெளிந்த அறிவும், ஞானமும் கிட்டும்.!

ஸ்ரீபடேசாகிப் சித்தர் ஜீவாலயம்
சின்னபாபு சமுத்திரம்

ஸ்ரீபடே சாகிப் சமாதியில் சந்தனம் அரைத்து சார்த்த ஓத வேண்டிய துதி
ஓம் மஜும் போட் துத்யாய வித்மஹே
மதிபூரண சந்தன சந்த்ராய தீமஹி
தந்நோ குரு பாத விருட்ச ப்ரசோதயாத்
மூன்றாம் பிறையாகி முக்கண் சுதமாகி
முச்சுடர் பரிமாணம் மூதையர் வழி தாங்கி
ஒன்றாய் புலன் சேர்ந்து ஓதிய சந்தனப் பூ மலர்
நன்றாய் நவின்றேன் நமசிவாய என மகிழம்பூ சாறல்
மறையொலியாய் மாதவனை அகிலம் புகழ் ஓங்கும் அரணே அரண் !

பஞ்சேந்திரியங்களான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்தின் மூலம் பெறலாகும் காட்சிகளே, உணர்வுகளே, அல்லது முன்பு பெற்ற அனுபவங்களின் நினைவுகளே தற்போதையக் கலியுகத் தினசரி வாழ்க்கையில், நம் உடலைப் பெருமளவில் இயக்குவதாக நிலை கொண்டு, கலியுக மனித வாழ்க்கை, இயந்திர கதியாகவே அமைந்து விட்டது.

இதற்கு மாமருந்தே ஆத்ம விசார சக்தியாகும். இதுவே மனம், புத்தியை முறைப்படுத்தும் எளிய அறவழி முறையாம். மனம், புத்தியை நற்பாதையில் செலுத்திட ஆன்மப் பூர்வமாக உதவுவதே ஆத்ம விசாரம் எனப்படும் உள்நோக்கிய ஆழ்நிலை விசார யோகமாகும். அனைவரும், குறிப்பாக, 40 வயதைக் கடந்தவர்கள் யாவரும் தினமும் ஆத்ம விசாரம் செய்து வருதல் வேண்டும்.

இது ஆழ்நிலை தியானமன்று! ஆழ்நிலை தியானம் மிகவும் கடினமானது. ஆனால் தியானத்திற்கு அடிப்படை ஆதாரமாக இருப்பதே ஆத்ம விசாரம்!

ஆழ்நிலை விசார யோகத்தில், பல அற்புதமான தெய்வீக ஆற்றல்கள் தோன்றுவதோடு, ஆன்மீக ரீதியாக, பல ஆத்ம சக்தி வியாபகங்களும் தாமாகவே நிகழ்ந்து, தக்க விளக்கங்கள் கிட்டுவதோடு, மனமும் தெளிவடைந்து பரவெளியையும், சமுதாயத்தையும், ஜீவன்களையும் புனிதப்படுத்துகின்றன.!

அனுபவம், நற்பாடத்தைத் தர வேண்டும், வெறும் நினைவுகளை மட்டுமல்ல!

உறங்கும் போது மட்டும்தான் கண்களையும், செவிகளையும் மூடி ஓரளவு அமைதியைத் தேடுவதென மனிதன் தன் வாழ்க்கை முறையை, சோம்பேறித்தனமானதாக, சுகபோகமாக, லட்சியமின்றி இயந்திர கதியானதாக வகுத்துக் கொண்டு விட்டான். இதிலும் உறக்கம் நன்கு வராது திணறுவோரும் உண்டு..! நீங்கள் நன்கு ஆத்ம விசாரம் செய்து பார்ப்பீர்களேயானால், மனிதன், பெரும்பாலும், தான் அனுபவித்த சுகத்தை, மன நினைவில் வைத்தே பெரும்பான்மையான தேவையற்ற அல்லது அதர்ம வகைக் காரியங்களில் இறங்கி, மேன்மேலும் தன்னைத் தீவினைப் படுகுழியில் தள்ளிக் கொள்கின்றான் என்பதும் புலப்பட வரும். எனினும் இவ்வகையில் நல்அனுபூதிகளின் நினைவால் நல்லனவும் நிகழ்வதுண்டு!

மனித உடலின் ஏனைய உறுப்புகள் யாவும், ஐந்து புலன்களும் எழுப்பும் உணர்ச்சிகளுக்கு ஆளாகி, பல வாழ்க்கைக் காரியங்கள் நடப்பதற்கு முதற் காரணமாகின்றன!

நீங்கள் எப்போதாவது கண்களைச் சற்றே மூடி மனக்கண்ணால் உங்களுக்குள் புலரும் உள்உலகத்தைச் சற்றே எட்டிப் பார்த்ததுதான் உண்டா? மனத்துக் கண் மாசிலன் ஆதல் – அதாவது மனதைப் புனிதப் படுத்துவதும் மனித வாழ்க்கையின் இறை லட்சியங்களுள் ஒன்றாகும்..!

எல்லாம் தத்வார்த்தமாக இருக்கிறதே, இதனை எவ்வாறு நடைமுறையில் கடைபிடிப்பது என்று கேட்கின்றீர்களா?

பிற யுகங்களில் நிலவிய கடுமையான இறை நியதிகளை எளிமையாக்கித் தரவே, கலியுகத்தில், பூலோகத்திற்கு சித்தர்கள் நிறைந்த அளவில், பல வடிவங்களில் வருகின்றனர்.

நிரந்தரமற்ற மகிழ்ச்சியை நாடும் கலியுக மனவழி அகலட்டும்!

உதாரணமாக, நீங்கள் டீவியில் பல கேளிக்கை நிகழ்ச்சிகளைக் கண்களால் பார்த்துப் பார்த்து, ஒரு (தற்காலிக) மகிழ்ச்சிக்கு ஆளாகிட,  இது மனதினுள் அனுபவமாகப் பதிகின்றது. உள் மனதில் இந்த (தற்காலிக) மகிழ்ச்சி ஓட்டங்கள் ஆழ்ந்து பதிந்து விட்டமையால், இந்த (உபயோகமற்ற, நிரந்தரமற்ற) மகிழ்ச்சியைத் தேடி, நாடி, மீண்டும் மீண்டும் (நிரந்தரமில்லாத, சில நிமிடங்களுக்கே நிலைக்கின்ற) நிழற்பட நிகழ்ச்சிகளை மனமும், உடலும் நாடி, டீ.வியை நோக்கித் தாவுகின்றது!

இதனை ஆத்ம விசார நோக்கில் கொண்டு, உட்புலனை அறிந்து, கண்ணால் காணும் நிகழ்ச்சிகளினால் உள்மன நினைவுகள் மூலம் நம் உடல் எவ்வாறு இயக்கப் பெறுகின்றது என்பதை அறிந்து திருத்திக் கொள்வது?

நீங்கள் டீ.வி.யில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஆத்ம விசாரம் செய்திடச் சங்கல்பம் கொண்டு, டீ.வி. பார்ப்பதைச் சற்றே நிறுத்தி விட்டு, நன்றாகக் கண்களை மூடிக் கோண்டு, சிறிது நேரம் இருந்து பாருங்கள். உரைகள், வசனங்கள் காது மூலமாகப் பாய்ந்து, உங்களைக் கண் திறந்து பார்க்கச் செய்யும். எனினும் சற்றே உறுதிப்பாடுடன் இருந்து, கண்களைத் திறக்காது, டீ.வி ஒலியைச் சிறிதாக்கி விட்டு, மனக் கண்ணால் நல்ல விஷயங்களை உங்கள் மனதிற்குள் திரைப்படம் போல் ஓட்டிப் பாருங்கள்!

உதாரணமாக, திருப்பதி, திருஅண்ணாமலை போன்ற திருத்தலங்களுக்கு நீங்கள் சென்று வந்த காட்சியை, நீங்கள் செய்த நல்இறைக் காரியங்களை, மனதினுள் நிழற்படம் போல் ஓட்டிப் பாருங்கள்.

மன ஆற்றல் உருவாகும் இறைவழிமுறை!

வெளியில் உபயோகமற்ற, சோகமய, நகைச்சுவையான, தீய உணர்வுகளைத் தூண்டக் கூடிய அல்லது ஏதேதோ நிகழ்ச்சிகள் டீ.வி.யில் ஓடிக் கொண்டிருக்க, உங்கள் மனக் கண்ணுள் நல்ல சத்விஷயக் காட்சிகள் நிகழுமாயின், உங்களையும் அறியாமல் நீங்கள் ஓர் அற்புதத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதே இங்கே உண்மையாக நிகழ்கின்றது!

விஞ்ஞானத்தால் கூட நம்ப இயலாத அற்புத நற்செயலது! என்ன அது? உங்கள் மனத்தினுள் நீங்கள் ஆன்மீக நினைவுகளுடன், இறைமை சம்பந்தப்பட்ட நல்ல எண்ணங்களை உற்பத்தி செய்திட, எவ்வாறு டீ.வி.க்கான ஒலி, ஒளிக் கதிர்கள் வான் மூலம் உங்கள் டீ.வி.யை அடைகின்றதோ, இதே வழியில் இத்தகைய நல்வள, இறைக் கதிர்கள், திருப்பழனச் சுடர்க் கதிர்களாக வான் மூலம் பரவெளியை அடைந்து, பரவெளியைத் தூய்மையாக்கி, அதே சமயத்தில் டீ.வி.யைப் பார்த்துக் கொண்டிருப்போருடைய உள்ளத்திலும் நல்எண்ணங்களுக்கு வித்திடும் அற்புத நிகழ்ச்சியும் நல்ல இறைஅனுபூதியாக நிகழ்கின்றது. இதனால், பலரும் நற்பாதையில் எழுச்சி கொண்டு, உடனடியாகவே, நல்ல நிகழ்ச்சி வரும் சானலுக்குத் தாவிடுவர் அல்லது நல்ல காரியங்களைச் செய்திடுவர். அவர்கள் உள்ளத்தில் நல்எண்ணெங்களுக்கும் வித்திடப்படும்.!

ஸ்ரீரமணர் இல்லம் திருச்சுழி

திருப்படல மனச்சுழி யோகம்!

இத்தகைய திருப்படல மனச்சுழி  (reflectory positive rays)  யோக மார்க்கத்தில், ஆத்ம விசார ரீதியாக, இவ்வகையில் நீங்கள்  உலகிற்கு அருமையாகத் தொண்டாற்றிட முடியும். மற்றோர் உதாரணமாக, டீ.வீ.யில் ஆலயத் தல விளக்கங்கள், இன்னிசைக் கச்சேரி, நன்னெறி புகட்டும் குடும்பப்பாங்கான நாடகம் போன்ற நல்ல நிகழச்சிகள் ஒளி பரப்பப்பட்டால், நீங்கள் உடனேயே ஸ்ரீகாயத்ரீ மந்திரம், சிவபுராணம் போன்ற இறைத் தோத்திரங்களை ஓதியவாறு அதனைப் பார்ப்பீர்களேயானால், இத்திருப்படலப் புதின யோக மார்க்கம் மூலமாக, ஸ்ரீகாயத்ரீ, சிவபுரான, சிவத் தோத்திர சக்திகள், டீ.வி, மூலமாகப் பரவெளியில் பாய்ந்து, தோத்திரப் பலன்களைப் பலருக்கும் அளிக்கவல்லதாகும். இவை யாவும் மனக் கண்ணின் யோகத் திறனைக் குறிக்கின்றதாகும். ஆனால் அனைவருக்கும் இந்த யோகத் திறன் இருந்தும் பலரும் இதனை அறிவதும் இல்லை, பலனடைவதும் இல்லை!

எனவே, உடல் அவயங்களை இயக்குவதில் கண்ணால் காணும் காட்சிகள் பெரும் பங்கு வகிப்பதால், மனக்கண்ணின் யோக சக்திகளை விருத்தி செய்யும் வகையில், காலையில் எழுந்ததும், கைரேகைகள் தரிசனம், தினமும் குறைந்தது 36 கோபுர தரிசனம், வேம்பு, அரசு, வன்னி போன்ற 32 விருட்சங்களின் தரிசனம், ஆழ்வாராதியர், நாயன்மார்கள், பெரியோர்களின் தரிசனம், மயில், பசு, யானை போன்ற தெய்வீகப் பிராணிகளின் தரிசனம், ஸ்ரீராமபாத தரிசனம், காஞ்சீபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன், சென்னை பூந்தமல்லி ஸ்ரீவைதீஸ்வரன் ஆலயத்தில் உள்ளது போன்ற சக்தி வாய்ந்த யந்திரங்களின் தரிசனம், ஆலயங்களில் அம்பிகைக்குக் கண் மை அளித்தல், ஏழைச் சுமங்கலிகளுக்குக் கண் மை போன்ற நற்காரியங்களை ஆற்றி வந்தால், ஆத்ம விசாரத்திற்கான அம்சங்கள் மனம், உள்ளம், உடலில் விருத்தியாகி, மனக்கண்ணும் நன்கு பிரகாசமாகும்.

திருச்சுழி

திருச்சுழியில் யோக வளம் பெறும் மனச்சுழி யோகம்!

இத்தகைய திருப்படல மனச்சுழி யோக சக்திகள் நிறைந்த தீர்த்தமானது, அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி பூமீஸ்வரர் ஆலயத்தில் உள்ளது. திருச்சுழியில் அவதரித்த ஸ்ரீரமண மகரிஷி “உள்ள, மனவள” யோகத்தில் (self realization) கரைகண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது! இளவயதிலேயே கோவணாண்டியாகத் திருஅண்ணாமலையில் ஆத்ம விசார யோகம் பூண்டு, தம் சரீரத்தை உதிர்க்கும் வரையில் அருணாசல பூமியைச் சற்றும் அகலாது, அருணாசல தரிசனங்களிலேயே அனைத்து ஆலய, தரிசன, தீர்த்த நீராடல் பலன்களைப் பெற்று, மாமுனிகட்கும், புனிதத் துறவியர்க்கும், பாமரர்க்கும் அவரவருடைய அறிவு நிலைக்கு ஏற்ப உத்தம முக்தி நிலைகளைப் புகட்டும் அரிய தெய்வீக நிலைகளை அடைந்த உத்தம ஞான யோகி!

தினமும் ஆலயத்திலோ, அல்லது இல்லத்திலோ, குறித்த நேரத்தில், குறித்த இடத்திலோ அமர்ந்து, குறைந்தது 21 நிமிடங்கள் கண்களை மூடி அமர்ந்து ஆத்ம விசார ரீதியாக, தியானித்தல் வேண்டும். தியானம் என்றால் கண்களை மூடிக் கோண்டு அமர்ந்த நிலை உறக்கமோ வேறு எதையாவது எண்ணுவதோ அல்ல! ஆத்ம விசாரமெனில் அன்றைய தினமோ, இதற்கு முன்னரோ, நீங்கள் கண்ட இறை தரிசனத்தை, செய்த நற்காரியத்தை, கண்ட நன்னிகழ்ச்சியை அனுபவப் பூர்வமாக மனதினுள் கொணர்தல் ஆகும். தியானத்தில் இறைதரிசனம் விரைவில் கை கூடாது. வேறு எண்ணங்களே குறுக்கிட்டு விடும்.. எனவே தல விருட்சங்களுக்கு அரைத்த சந்தனம் இடுதல், பசுவிற்கு, ஏழைகளுக்கு உணவு அளித்தல் என்ற வகையில் அன்றைய தினம் தேகப் பூர்வமாகச் செய்த ஒரு நற்செயலை எண்ணி இதனை ஒட்டி வரும் ஆத்ம விசார இறை தரிசனம் தான், பிற எண்ணங்களின் குறுக்கீடு இன்றி மனதினுள் எளிமையாக உருவகப்படும்.

பிரயாணம் செல்கையில், தொலைக்காட்சி பார்க்கும் போது ஆற்ற வேண்டிய ஆத்ம விசார இறைப் பணி!

டீ.வி.யும் திரைப்படமும்தான் மனிதனுக்குக் கலியுகக் கேளிக்கைகள், நேரத்தை விழுங்கும் மூலங்கள் என்று ஆகி விட்ட நிலையில், இனியேனும் டீ.வி.யைக் காணுகையில், மேலே குறித்த வகையிலான திருப்படல மனச்சுழி (reflectory positive rays) யோக மார்க்கத்தில், உதடால், மனதால் சில இறைத் துதிகளை ஓதியவாறு இருந்திட, பரவெளியில் இறைக் கிரணங்களைப் பரப்பி டீ.வி, காணும் நேரத்தையும் ஓரளவேனும் ஆன்மீக ரீதியாக இறைமணத்தைப் பரப்பலாமன்றோ!

மேலும் பஸ், ரயிலில் பயணம் செய்யும் போதும் இவ்வாறு தெய்வப் பூர்வமான நிகழ்ழ்சிகளை மனதினுள் கொணரக் கொணர, செல்லும் இடமெங்கும் ஆத்ம சக்தியை நிரவி, நல்மந்திர சக்திகளைப் பரப்பி, வழியெங்கும் உள்ள கிராம மக்கள், நற்கிரண சக்திகளை அளித்திடுகின்ற மகத்தான இறைப் பணியை ஆற்றிடலாம் அன்றோ!

நவநாத சித்தர்கள் மகிமை

திருஅண்ணாமலை மாத சிவராத்திரி கிரிவலம் (நவநாத சித்தர்கள் மகிமை -1)

கலியுகத்தில் மனித சமுதாயம் இழந்துள்ள அனைத்து விதமான யோக வளங்களை, மந்திர, ஞான சக்திகளை மீட்டுத் தர வல்ல ஸ்ரீகோரைக்கால் சித்தர் கிரிவலம் வரும் அற்புத மாதச் சிவராத்திரி

காலத்தைக் கடந்த திருஅண்ணாமலையில், நாமறியாத வகையில், மானுட சரீரத்தில் வாழ்ந்து சர்வ லோகங்களுக்கும் அருட்பணி ஆற்றிய சித்புருஷர்கள் ஏராளம், ஏராளம்! இவ்வரிய தொடர் மூலம், பல அற்புதமான சித்தர்களை நீங்கள் அறிந்திட, உங்களைப் பல நூற்றாண்டுக்கு முன்னான, சித்தர்களின் இறைப் பாசறையான அருணாசலப் புனித பூமிக்கு இட்டுச் செல்கின்றோம்!

தர்ப்பைகளில் மூலிகை தர்ப்பை, அவிசு தர்ப்பை, விஷ்ணு தர்ப்பை, சிவதர்ப்பை போன்று பல வகையுண்டு. இவற்றுள் ஹோம ஆஹுதியாகச் சிறப்பைப் பெறுவதும், மூலிகைக் கோரைக் கஞ்சிக்கென ஆவதுமான அவிசு தர்ப்பையானது, ஜீவன்களுக்கான ஆன்ம சக்திகளை, பல வகைகளில் எளிதில் அளிக்க வல்லதாகும்.

அவிசுக் கோரை மூலிகை தர்ப்பைகளை துளசி, வன்னி, வில்வம், அரசு, ஆல் போன்ற மூலிகைத் தள நீரில் தனித் தனியே மூன்று நாட்களுக்கு ஊற வைத்து, இவ்வாறு பல மூலிகா ஜலவாசம் கொண்ட அவிசுக் கோரைகளை இறுதியில் தேவதாரு மூலிகை நீரில் பக்குவப்படுத்தி, தம் சுக்கிர விரலான கால் கட்டை விரலில் வைத்து, மணிமாலை போல் திரித்து, மணிக் கட்டுக் கங்கணமாய், கழுத்து மணிமாலையாய், ஜடாமுடி வளையாய், இடுப்புச் சுற்றாய்ப் பலவிதங்களில் பூண்டவரே நவநாத சித்தர்களுள் ஒருவரான கோரைக்கால் சித்தராவார்.

“காலால் எழுப்பிக்” கருத்தறிவித்த சித்தர்!

புனிதமான பொருட்களில் கால் படக் கூடாது எனும் உலக இறைநியதி இருக்க, இச்சித்தர்பிரான் ஒற்றைக் கால் கட்டை விரலில் மட்டுமே நின்று துர்க்க யோகச் சார நிலை பூண்டு, மூன்று யுகங்கள் தொடர்ந்து அடர்ந்த அவிசு மூலிகைப் புதர்களிடையே தவம் புரிந்திட, சிவபெருமானே காட்சி தந்து, இந்த இறைநியதியில் இருந்து விலக்களித்து, இவர்தம் திருவடிபட்ட பொருட்கள் யாவுமே திருவருட்செல்வம் தரும்படியான அற்புதமான வரங்களைத் தந்தார்.

மூன்று சதுர் யுகங்கள் அவிசுக் கோரை மூலிகைப் புற்களினூடே அவிசுக் கனலை ஔவையார் உரைப்பதான “காலால் எழுப்பிக்” கடுயோகத் தவம் புரிந்ததால், சிவபெருமானே, கோரைக்கால் சித்தர் எனும் காரணப் பெயரையும் இவருக்கு ஈந்தார்.!

அவிசுக் கோரையில் உருவாகும் ஆத்ம சாதனங்கள்!

அவிசுக் கோரைப் புல்லானது, மந்திர உருக்களை எளிதில் கிரகிக்கும். உருவாக்கும் சக்தி கொண்டவை. காரிய சித்திகளைத் தருபவை, சகல தோஷங்களையும் போக்குபவை! எனவேதாம் அக்காலக் கூரை வீடுகளில் மேல்தளமாகக் கோரைகளைப் பரப்புவர்.

கோரைக்கால் சித்தரின் மாதவத்தை சித்தர்களே அன்றி வேறு எவரும் கலியுகத்தில் நிறைவேற்ற இயலாது அல்லவா! அவிசுக் கோரை மூலிகையைப் பல மூலிகைகளின் இலைகள் ஊறிய நீரில், தனித் தனியே மூன்று நாட்கள் ஊற வைத்து, தோஷ நிவர்த்திக்காக, இறுதியில் தேவதாரு மூலிகா ஜலத்தில் மூன்று தினங்கள் வைத்திருந்து, பிறகு இதனை முடிக்கயிறாக, மணிமங்கணாக, அரைஞாண் கயிறாகத் திரித்துக் கோரை மணிகங்கண் காப்பாகவும், இடுப்புக் கயிறாகவும், கழுத்து மாலையாகவும் அணிந்திடலாம்!

இவ்வாறு பல்வகை மூலிகைகளின் நீரிலும் அவிசுக் கோரை மூலிகையை வாசம் பெற வைத்து, மூலிகைத் திரிபுடத்தைத் திரித்து, உருட்டி மணிகங்கணக் காப்பு ஆக்கி, வலது கையில் அணிந்து, மாத சிவராத்திரி அன்று அருணாசல கிரிவலம் வருதலால், அளப்பரிய வேத, மந்திர, யந்திர சக்திகளைப் பெற்றிடலாம்.

கோரைச் சித்தரிடம் குபேரன் பெற்றுச் செல்லும் அவிசுக் கோரைமணிக் காப்பு!

இவ்வாறு அவிசுக் கோரையில் பதிந்துள்ள அருளை, மந்திர சக்திகளை ஜீவன்களுக்குப் பெற்றுத் தந்திடவே, கோரைக்கால் சித்தர்பிரான் பல லட்சம் ஆண்டுகள் தவம் புரிந்தார். அவர் பயன்படுத்திய அவிசுக் கோரையும் காலத்தால் மூத்ததும், மிகவும் பழமை வாய்ந்ததும் ஆகும்.

சங்கநிதி பதுமநிதி மூர்த்திகள்
திருப்பனந்தாள்

குபேர பகவானே ஒவ்வொரு அனுஷ நட்சத்திர நாள்தோறும் இன்றும் கோரைக்கால் சித்தரை நாடி, அவரிடமிருந்து அவிசுக் கோரை மூலிகை மணிகங்கணைப் பெற்றுச் சென்று, காப்பிட்டு, “ஸ்ரீசெல்வலிங்க” பூஜையை நிகழ்த்துகின்றார்.

மேலும் “பரகாயப் பிரவேசம்” எனும் அற்புத யோக முறையில் கூடுவிட்டுக் கூடு பாய்தல், ஒன்பது சரீரங்களில் எந்த சரீரத்திலும் எந்த லோகத்திற்கும் செல்லுதல் போன்ற ஆகாயப் பிரவேச மார்க்க யோக சாதனைகள் சித்திகளுக்கும் அவிசுக் கோரை மணிகங்கணம் உதவும். கோரைக்கால் சித்தர்பிரான் இதனை மணிக்கட்டில் கட்டிக் கொண்டு அனைத்து கிரகங்களுக்கும், நட்சத்திர மண்டலங்கட்கும் செல்வார்.

இவ்வாறு பல அற்புதப் பரகாயப் பிரவேச சித்துக்களை அவிசுக் கோரை மூலம் ஆக்கப்படுத்தியவரே கோரைக்கால் சித்தர் ஆவார். எத்தகைய காயகல்ப சித்திகளையும் அடக்கி, தேக்கி, உறைய வைக்கும் சக்தியுடையதே அவிசுக் கோரையாகும்.

குபேர மூர்த்திகளிலும் பலருண்டு. குபேரன் கொண்டுள்ள பல நிதிகளுக்கும் பல பெயர்களுண்டு. சங்க நிதி, பதும நிதி, ஸ்வர்ண நிதியென ஒவ்வொரு நிதிக் கலயத்திற்கும், கோரைக்கால் சித்தரிடமிருந்து பெற்ற அவிசுக்கோரைத் தண்டு மாலையைக் குபேரன் சார்த்தி வழிபடுவார். அனைத்து ஆலயங்களிலும் உள்ள துவாரபாலக மூர்த்திகளும், மாதந்தோறும் குறித்த நட்சத்திர யோகத்தில் கோரைக்கால் சித்தரிடமிருந்து இன்றும், எக்காலத்தும், அவிசுக் கோரைக் காப்பு மாலைகளைப் பெற்று அணிந்து கொள்கின்றனர்!

இந்திரனும் அணியும் அவிசுக் கோரைக் கங்கண்!

புது இந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டு நடைபெறும் இந்திர ராஜப் பட்டாபிஷேகப் பிரவேசத்தின்போது, இந்திரன் அமர்ந்து வருகின்ற பல்லக்கை, ஸ்ரீஅகஸ்தியர் உட்பட பல சித்தர்களும், மஹரிஷிகளும் சுமப்பர். அப்போது அனைத்து சித்தர்களும், மஹரிஷிகளுமே கோரைக்கால் சித்தரிடம் பெற்ற அவிசுக் கோரை மணிமாலை, கங்கண், காப்புக் கயிறு, இடுப்புக் கங்கண் போன்றவற்றைத் தாமும் அணிந்து, இந்திரனுக்கும் அணிவிக்கின்றனர்.

திருவீழிமிழலை

முப்பத்து முக்கோடி தேவர்களின் அதிபதியாக இந்திரன் விளங்குவதால் அப்பதவியின் இறைப்பெருமை காரணமாகத் தான் சித்தர்கள் இந்திரனின் பல்லக்கைத் தாங்குகின்றனர். தம்மைச் சித்தர்களும், மஹரிஷிகளும் சுமக்கின்றார்களே என எண்ணி எந்த இந்திரனேனும் சற்றே செருக்குற்றால், உடனேயே அவர் பதவியிழந்து ஏதேனும் ஒரு பிறவித் தளையுடன் பூமிக்குத் தள்ளப்படுவார்.

இறைத் திருமண உற்சவங்களில் கோரைக்கால் சித்தர் அளிக்கும் கோரை மணிக்காப்பு!

நவநாத சித்தர்கள் யாவருமே கோரைக்கால் சித்தர் அளிக்கும் அவிசுக் கோரைத் தண்டைகளை, மணிக்கட்டுக் காப்புகளையே அணிக்கின்றனர். மதுரை, திருவீழிமிழலை போன்ற திருக்கோயில்களில் பிரசித்தி பெற்றுள்ள இறைத் திருமண உற்சவத்தின் போது,  அக்காலத்தில் கோரைக்கால் சித்தர் ஒவ்வொரு முறையும் நேரில் வந்து அவிசுக் கோரைத் தண்டலம் அளித்துச் செல்வார். சித்தரளிக்கும் அவிசுக் கோரைக் காப்புகளை இறைமூர்த்திகளுக்கு அணிவித்தே இறைவனுக்குத் திருமண உற்சவம் நடைபெறும்.

பல ஆலயங்களிலும் பாவனையாக, தற்போது இக்காப்பு அம்பிகைக்குக் கட்டப்படினும், உண்மையில் கோரைக்கால் சித்தர்பிரானே அனைத்துத் திருமண உற்சவங்களிலும் சூக்குமமாகவும், தூல வடிவிலும் வந்து இறைமூர்த்திகளுக்கான காப்பு வளையை நேரடியாக அளிக்கின்றார்.

அண்ட சராசரம் முழுவதும் எப்போதும் உலா வந்த வண்ணம் இருக்கின்ற கோரைக்கால் சித்தர் அருணாசலத்தைக் கிரிவலம் வருகின்ற இம்மாத சிவராத்திரியில் நாமும் கிரிவலம் வருதல் வாழ்வில் பெறுதற்கரிய பாக்யமாகும். தர்ப்பைக் காப்பு அல்லது ஏதேனும் கோரை அல்லது மூலிகைப் புல்லால் மேற்கண்ட வகையில் காப்பு செய்து அல்லது மிருதுள மணிகங்கணை வலக் கையில் அணிந்தவாறு, மிகுந்த பக்தியுடன் அருணாசலத்தைக் கிரிவலம் வருதலால், வாழ்வில் பெறுதற்கரிய பாக்யமும், செல்வமும், நல்வரங்களும், மந்திர சக்திகளும் கிட்டும். குறிப்பாக, பதவி, மருத்துவம், வியாபாரம், அரசியல் காரணமாகவும், செல்வம் ஈட்டிடவும் பெற்றோர்கள், சகோதரர்கள் வெளிநாட்டில், அயல் மாநிலங்களில், வெளியூர்களில் இருந்திட்டால் அவர்களுக்குப் பாதுகாப்பும், முன்னேற்றமும் தந்திட இம்மாத கிரிவலம் உதவிடும்.

மாதசிவராத்திரி கிரிவல பலாபலன்கள்

மேலும் உறவினர்களிடம் சொத்து, நிலங்களை இழந்தவர்கள் தம் சொத்துக்களை நியாயமான முறையில் மீட்பதற்கும் இம்மாத சிவராத்திரி கிரிவலப் பலன்கள் துணை புரியும். நரம்புக் கோளாறு, கழுத்து வலி, இடுப்பு வலி, முதுகுத் தண்டு சம்பந்தமான நோய்களால் வாடுவோர் இன்று அவிசுக் கோரைக் காப்பு அல்லது தர்ப்பைக் காப்பு அணிந்து வலம் வருதலால் நன்முறையில் நிவாரணம் பெறுவர். கிரிவலத்திற்கு முன்போ, பிறகோ அல்லது தம் ஊர் திரும்பிய பின்னரோ, குறைந்தது 12 பசுக்களுக்கு வயிராற புல், தவிடு, புண்ணாக்கு, வைக்கோல் அளித்தல் மிகவும் சிறப்புடையதாகும்.

இது கிரிவல பலாபலன்களைத் துரிதமாக்கும். பல குடும்பங்களையும் வாட்டுகின்ற இளவயது மரணங்களுக்குக் காரணமான மிருத்யு தோஷம் நீங்கி, குடும்பம் நன்னிலை பெற இம்மாத அருணாசலப் பலாபலன்கள் உதவும்.!

நல்ல மந்திர சக்திகளைப் பெற, மணிமாலை, ருத்ராட்சம், ஸ்படிகம், வாஸ்து, ஜோதிட சாதனங்கள் போன்றவற்றிற்குக் கோரைக் காப்பு அணிவித்துத் தாமும் அணிந்து கிரிவலம் வந்திட வியத்தகு முறையில் தீர்க்க தரிசன சக்தி பெருகும். ஆனால் இதனால் கிட்டும் ஜோதிட, வாக்கு சக்திகளை, சித்திகளை நன்முறையில் சமுதாயச் சேவைக்குப் பயன்படுத்திட வேண்டும்.

ஸ்ரீவரநிதிப் பெருவாழ்வு சித்தர்

திருஅண்ணாமலை மாத சிவராத்திரி கிரிவலம்

கூர்ம, தந்திர யோகப் புலன்களில் வல்லமை பெற்ற ஸ்ரீவரநிதிப் பெருவாழ்வுச் சித்தர் கிரிவலம் வரும் அற்புத மாதசிவராத்திரி, வறுமையை நீக்க வல்ல வைகாசி மாத சிவராத்திரி கிரிவலம்!

ஆமை ஓட்டுச் சித்தர் எனக் காரணப் பெயர் பெற்ற ஸ்ரீவரநிதிப் பெருவாழ்வுச் சித்தர் பிரான், பல நூற்றாண்டுகளுக்கு முன் மானுட வடிவில், அருணாசல சிவபூமியில் உலா வந்த உத்தமச் சித்தர் ஆவார். திருஅண்ணாமலை அருகிலுள்ள கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் அற்புதத் தவம் புரிந்தவர்.

தலை மேல் ஒளிரும் கூர்ம யோகப் பிரகாசமாம்!

இவர் தன் தலையில் எப்போதும் ஓர் ஆமை ஓட்டை, அணிந்திருப்பார். தனக்காகத் தோன்றும் போது, ஆமை ஓட்டைத் தலையில் இருந்து எடுத்து நிலத்தில் வைப்பார். எவ்விடத்தில் அந்த ஆமை ஓடு வைக்கப்படுகின்றதோ, அங்கு சுயம்பு லிங்கம் தோன்றலாகும்; நீர்வளம் பெருகும், நில விளைச்சல் கொழிக்கும்! மொத்தத்தில் அங்கு ஐஸ்வர்ய கடாட்சம் பொங்கிடும். இவர் ஓய்வெடுக்கையில் ஒடுக்கத்தூர்ச் சித்தர் போல் ஒருக்களித்துச் சாய்ந்த நிலை கொண்டமையால், ஆமை ஓடு அவர் சிரசை விட்டு ஒருபோதும் அகன்றதாய் எவரும் கண்டதும் கிடையாது. அவ்வாறு கண்டவர், யோகத்தில் வல்லாராய்த் துலங்குவர். காரணம், சித்தரின் சிரசிற் பொலியும் ஜோதிப் பிரகாசத்தை ஓரணு அளவேனும் உய்த்தவர் ஆகின்றார் அன்றோ!

மேலும், மரத்தடியில் அவர் ஓய்வாகச் சாய்கையிலும் கூட, ஆமை ஓட்டின் ஒரு சிறு பகுதி கூட மரத்தில் உரசாது. அவ்வாறு உரசிடில், ஆமை ஓடானது, மரத்தில் பட்ட இடங்களில் எல்லாம் பொன்மய ஒளிப் பிரமாணம் உண்டாகி, இலைகள், கிளைகள் உடனேயே ஆங்கே தழைக்கலாகும். சித்தரின் சிரசு ஸ்பரிசத்தால் அம்மரமே முக்தி நிலையைப் பெற்று ஒளிர்ந்திட, அது மோட்ச நிலையுற்றுச் சிவநிலை கண்டிட, அம்மரத்தின் தேகத்தில் வேறு ஆத்ம ஜீவன் உறையலாகும்!

ஆமை ஓட்டின் யோகக் கலைகளான கூர்ம தந்திர தெய்வீக ரகசியங்களில் வல்லவரே ஆமை ஓட்டுச் சித்தரான வரநிதிப் பெருவாழ்வுச் சித்தராவார். (கூர்மம் – ஆமை). கூர்ம தந்திர சித்திகளின் அம்சங்கள் யாவும் கூர்ம யோக ஆற்றலின் வெளிப்பாடு ஆகும். உலகின், வானுலகங்களின் தட்ப வெப்ப நிலை, தாவர, விலங்கு ஜங்கமப் பரிமாணம், பூமியடி நீரோட்ட, கனி வள ரகசியங்கள், பூமி சாஸ்திரங்கள் போன்ற பல கூர்ம தந்திரத் துறைகளிலும் வல்லவரே வரநிதிப் பெருவாழ்வுச் சித்தர் ஆவார்.

சிரசில், நெற்றியில் ஆத்ம ஷோபன ஜோதிப் பிரகாசம்!

வரநிதிப் பெருவாழ்வுச் சித்தர், ஷிர்டி சாயிபாபா, வள்ளலார் சுவாமிகள் போன்ற கூர்ம தந்திர யோக சித்திகளைப் பூண்ட உத்தமச் சித்தர்களின் சிரசு, நெற்றி, ஆக்ஞா சக்கரம் போன்றவற்றில் உற்பவிக்கும் ஆத்ம ஷோபன ஜோதிப் பிரகாசம், அவர்தம் சிரிசிலும், பரந்த நெற்றியிலும் பரந்து பொங்கி நிரம்பிடும். சாதாரண மானுடக் கண்களால் இந்த ஜோதிப் பிரகாசத்தைத் தரிசிக்க இயலாது. எனவேதாம் வள்ளலார், ஷிர்டி சாயிபாபா, விவேகானந்தர் போன்ற மகான்களும், மகரிஷிகளும், சித்தர்களும், நெற்றியிலும், சிரசிலும் பவன பஞ்சபூத சக்திகள் நிறைந்த வஸ்திரத்தை சிரசிலோ, நெற்றியிலோ அணிந்திருப்பர். இவ்வாறு கூர்மாக்னி யோகமூல பரபிரம்ம ரிஷிகளுக்கு எல்லாம் மூத்தவராகத் துலங்கும் ஆமை ஓட்டுச் சித்தர் தம் யோகப் பிரகாசத்தை ஆமை ஓட்டிற்குள் ஒடுக்கி, உறைய வைத்து அதன் சக்திகளைப் பரவெளியில் நிதிப் பிரகாச வரசக்திகளாக அளித்திட்டார்.

இராமாவதாரம் நிகழ்ந்த திரேதா யுகத்திற்கு முந்தைய கிருத யுகத்தில் பிரசித்தி பெற்றிருந்த ஸ்ரீஆயுர்தேவியின் நவகர ஒளிப் பிரகாசத்தை யோகித்துத் தியானித்த கூர்மாவதார மகரிஷி, ஆமையின் வடிவாகவே மாறிப் பல கோடி யுகங்கள் தவம் புரிந்து, பாற்கடலில் ஸ்ரீமகாவிஷ்ணு, ஸ்ரீகூர்ம மூர்த்தியாய் அவதார லீலைகள் புரிந்த போது, பாற்கடலினுள், பெருமாள் அருகே உறைந்து தரிசிக்கும் பேற்றைப் பெற்றிட்டார்.

இதனால் திவ்யப் பிரகாச ஜோதி பூஷணராய், நித்ய சூரித் தேஜஸ்வியாய் கூர்மாவதார மகரிஷி மலர்ந்த போது, அவர்தம் யோக முதிர்ச்சியால், யோகக் கனிவினால் பெருமாளும் ஆனந்தித்து அதியற்புதக் கூர்ம நடனம் கொண்டிட, அப்போது பெருமாளின் திருமேனியில் இருந்து திவ்யப் பிரகாசமாய் எழுந்த ஆமை ஓட்டுப் படலச் சிகரமொன்று பெருமாளின் அருள் பிரசாதமாய் உற்பவித்து, பூமியில் கூர்ம யோக நித்ய சஞ்சாரியாகப் புலனடக்கம் பூண்ட வரநிதிப் பெருவாழ்வுச் சித்தரை அடைந்தது, ஆம், பாற்கடல் வைபவங்கள் யாவற்றையும் தாமிருந்த இடத்தில் இருந்தே காணும் பாக்யத்தைப் பெற்றவரே வரநிதிப் பெருவாழ்வுச் சித்தராவார்.

கடுமையான தலைவலி, கபால நோய்கள் போன்ற தலை, கபாலம், கழுத்து நரம்புகள் சம்பந்தமான வியாதிகளுடன் துன்பமுற்று வாடி வதங்கியோர் ஆமை ஓட்டுச் சித்தரை நாடுவதுண்டு. அருணாசல மலையின் கூர்ம நாத தரிசனப் பகுதியில் (ஸ்ரீபூதநாராயணர் சந்நிதி அருகே கிட்டுவது, தற்போது கட்டிடங்களால் மறைவுபட்டுள்ளது) அவர்களை கூர்ம யோகம் பயிலச் செய்து (ஆமை போல் ஆசன யோகத்தில் அமர்ந்து நாடி, நாளங்களை உள்அடக்குவது) அவர்கள் ஆழ்நிலை தியானத்தில் லயிக்கையில், சித்தர் பிரான் தம் சிரசில் இருக்கும் ஆமை ஓட்டினை மூலிகைச் சுரசங்களில் தோய்த்து அவர்களுக்கு நெற்றிப் பற்றாக இட்டு விட்டு மறைந்து விடுவார். அவர் காலத்தில் மனவளம் குன்றியோர் இவ்வகை ஆமை ஓட்டு மருத்துவத்தால் நன்கு தேறிய அற்புதங்களும் நிகழ்ந்தன.. உடல் உணர்வின்றி அரைகுறை ஆடைகளுடன் பைத்தியமாய் அலைந்தோர் குணமானதும் உண்டு. தீராத ஒற்றைத் தலைவலி நோய்களும் தீர்ந்தன. மூளையில் அடிபட்டுப் பல உணர்வுகளை இழந்தோர் அனைத்துப் புலன்களையும் திரும்பப் பெற்ற நிகழ்வுகளும் சித்தரின் திருவடிகளின் கீழ் நடந்தன.

வறுமையை நீக்க வல்ல வரநிதிப் பெருவாழ்வுச் சித்தர்!

ஸ்ரீபூதநாராயணப் பெருமாள் ஆலயம்
திருஅண்ணாமலை

பல அற்புதமான முறைகளிலே இச்சித்தர்பிரான் சமுதாயத்திற்கு அருந்தொண்டு ஆற்றினார். ஒருவேளை உணவு உண்ணக் கூட வழிவகை இன்றி இருப்போர், ஒரே ஒரு ஆடையுடன் வாழ்வோர், வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்போர் இவ்வாறாக வறட்டு வறுமையில் வேதனைகளுடன் வாழ்வோருக்கு பக்திப் பூர்வமாகச் செழுமையான செம்மை வளம் அளித்தவரே ஆமை ஓட்டுச் சித்தர்.

இதற்காகப் பணமுடிப்பையும் நவரத்தினங்களையும் சித்திகளாகப் பொழிந்திட்டார் என்பது பொருளல்ல! வாழும் நன்னெறி வகைகளை அவர்கட்கு உணர்வித்து, உழைப்பால், ஆழ்ந்த இறை நம்பிக்கையால், பக்தியால் நிதிப் பெருவளத்துடன் வாழும் அறமுறைகளை, கிரிவல தரிசனப் பலன்களாக சித்தர்பிரான் அளித்திட்டார். குறித்த நாளில், குறித்த வகையில் அருணாசல கிரிவலம் வந்து வழிபட்டு வறுமைக்குக் காரணமான கர்ம வினைகளைப் போக்கும் அறவழிமுறைகளைத் தந்து ஆசி வழங்கியவரே வரநிதிப் பெருவாழ்வுச் சித்தராவார்.

வரும் சித்திரை மாதச் சிவராத்திரி நாளே வரநிதிப் பெருவாழ்வுச் சித்தர் தூல, சூக்கும, காரண, காரிய வடிவுகளில் அருணாசலத்தைக் கிரிவலம் வரும் அற்புதத் திருநாள். இந்நாளில் பூசனி, பறங்கி, விளாம்பழம், மாம்பழம் போன்ற ஓடு வகைக் காய்கறிகள், பழங்கள், தான்ய வகைகளைச் சுமந்து அருணாசல கிரிவலம் வந்து தானமளித்தலால் பணக் கஷ்டங்கள் தீர நல்வழி பிறக்கும்.

இன்று திருஅண்ணாமலையில் ஸ்ரீபூதநாராயணன் சன்னதியில் பெருமாளை கூர்ம மூர்த்தியாக பாவித்து வணங்கி, கிரிவலத்தைத் தொடங்கி, ஸ்ரீபூதநாராயணன் சன்னதியிலேயே கிரிவலத்தை நிறைவு செய்தலால் தலை, கபாலம் சம்பந்தப்பட்ட நோய்ப் பிரச்சனைகளுக்குத் தக்கத் தீர்வுகள் கிடைக்கும்.

பௌர்ணமி போன்று மாத சிவராத்திரியிலும் மகத்தான அருணாசல கிரிவல பலன்கள் கிட்டுகின்றன.. மாத சிவராத்திரி என்பது அம்பிகை ஆதி சிவனை வழிபடும் பரிபூரண இரவுக் காலமாகும். அம்பிகையே தூல, துரீய வடிவுகளில் பூலோகம் வந்து பூஜிக்கும் புண்ணிய தினமெனில் மாத சிவராத்திரியின் மகிமைதான் என்னே!

கூர்ம, வராஹ தந்திரங்களில் வல்லவர்!

ஆமை ஓட்டுச் சித்தர் எப்போதும் வானை நோக்கி யோகித்து நட்சத்திர மண்டலங்களையும் கோளங்களையும் கண்டு, தரிசித்தவாறும் எதையெதையோ கணித்தவாறும் இருப்பார். கூர்ம யோக, மந்திர, தியான தந்திரங்களுள் தலை சிறந்தவராய் விளங்கிய ஆமை ஓட்டுச் சித்தர் இதன் பல அரிய அம்சங்களையும் தகுதியுள்ள பலருக்கும் புகட்டினார். வானிலை ஆராய்ச்சி, மழை அம்சங்கள், பூகம்பம், பஞ்சம், பயிர்வகை நிலைகள், காய்கறிகள், மூலிகைகள், மரங்கள் ஆகியவற்றின் தன்மைகள் மற்றும் வளர்ப்பு முறை, பூமிப் பொழிவு, எந்த பட்சி எந்த இடத்தில் வாழ்ந்து இனவிருத்தி கொள்ளும் என்பன போன்ற தாவர, விலங்கியல் வாழ்க்கை வழிவகை முறைகள், மண்புழு போன்ற பூமிவாழ் பிராணிகளின் நிலைகள், பூமியடி நீரோட்டங்கள், வாஸ்து அம்சப்படி நீர் ஊற்றுப் பெருக்கு, சிலை, சுதை அம்சங்கள் போன்ற அனைத்துக் கூர்ம தந்திரங்களிலும் சிறந்தவராக விளங்கியவரே ஆமை ஓட்டுச் சித்தர் ஆவார்.

வராஹ உபாசனையிலும் வல்லவரே ஸ்ரீவரநிதிப் பெருவாழ்வுச் சித்தர். உலகில் உள்ள உண்மையான வராஹ உபாசகர்கள் யாவரும், பூவுலகில், விண்ணுலகில் எங்கும் இருந்தாலும் அவர்கள் தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் வரநிதிப் பெருவாழ்வு சித்தரைத் தரிசிக்கின்ற பாக்யம் இறையருளால் அன்றும், இன்றும், என்றும் கைகூடும். வராஹ சித்திகளிற் சிறந்த ஸ்ரீபாலேந்த்ரர், ஆமை ஓட்டுச் சித்தரின் அருமை சிஷ்யரே ஆவார்.

உபதேச நல்குருவான உத்தமச் சித்தர்!

கூர்மாவதாரத்தில் ஸ்ரீமஹாவிஷ்ணு பாற்கடலின் அடியில் பல்லாயிரம் ஆண்டுகள் இருந்து கொண்டு மிகவும் சக்தி வாய்ந்த, வராஹ மந்திரங்களை உபதேசித்தபோது உபதேச குருமார்களில் ஒருவராய் இருந்து கூர்ம தந்திர அம்சங்களை பூலோகத்தில் இருந்தவாறே ஆகாச வாக்வேத சக்திகளாய்த் திருமாலிடம் இருந்து பெற்றவரே ஆமை ஓட்டுச் சித்தர் ஆவார்.

கூர்ம தந்திர ரகசியங்களுள் ஒன்றே வர வேண்டிய பணம், செல்வாக வேண்டிய பணம், செலவாகாத பணம், மீளாத பணம், விருத்தியாகின்ற பணம் என பணத்தின் போக்குவரத்துக் கர்ம அம்சங்கள், திருநிலைத் தாத்பர்யங்கள், வரவு செலவு முறைகளையும் பல நாட்டு அமைச்சர்களுக்கும், வேந்தர்களுக்கும் விளக்கி நிதி அம்ச இலக்கணங்களை ஆன்மப்பூர்வமாக உணர்த்தியவரே ஆமை ஓட்டு சித்தராவார். தன கர்ப்பச் சுருள், தனச்சுருள், ஹேரம்ப கணபதி வழிபாடு போன்றவற்றை நடைமுறையில் கொணர்ந்தவர்.

மகரிஷிகளுக்கும், மாமன்னர்களுக்கும் அருள்வழி காட்டியவர்!

கோடானு கோடி சித்தர்கள் நடமாடும் திருஅண்ணாமலையில் ஆமை ஓட்டுச் சித்தர் பலருக்கும் அபூர்வமான சித்தர்களின் தரிசனங்களைப் பெற்றுத் தந்து அவர்களுடைய பெருமைகளை எடுத்துரைத்தார். அக்காலத்தில் பல யோகியரும், ரிஷிகளும் அருணாசலத்தில் ஆஸ்ரமக் குடில் கொண்டு மானுட வடிவுகளில் வாழ்ந்தபோது ஆஸ்ரமங்களுக்குத் தேவையான பூஜைத் திரவியங்கள், சங்குகள், நீர், நிலவள, பயிர், மலர், மூலிகா வகைகளையும், இன்னோரன்ன சேவைகளையும் ஆற்றிய ஆமை ஓட்டுச் சித்தர், எத்துணையோ கோளங்கள், பூலோகங்கள், விண்வெளி லோகங்களில் உள்ள 33,000 கோடி வேந்தர்களைச் சந்தித்துள்ளார் என்பது பலரும் அறிய வேண்டிய அற்புதத் தெய்வீக இரகசியமாம்.

ஆமைக்கும் அருள்புரிவார்!

“பூமித் துடிப்பு” எனும் நிலைக்கலை இரகசியமானது ஆமை பற்றிய யோக விளக்கங்களைத் தருவதாகும். கடல் ஆமை, நில ஆமை, திருவாள ஆமை, நட்சத்திர ஆமை, ஐங்குறு, அறுகுறு ஆமைகள், மலை ஆமை போன்ற பல ஆமை வகை யோக இரகசியங்களில் வல்லவராம் ஆமை ஓட்டுச் சித்தர்பிரான் எத்துணையோ கோடி ஆமைகளுக்கும் திருஅண்ணாமலையில் முக்தி அளித்தவராவார்.

தம் வீடு, தோட்டம், நிலங்களில் புகுந்த ஆமைகளை எல்லாம் அக்காலத்தில் மக்கள் பத்திரமாக ஒரு கூடையில் வைத்து, திருஅண்ணாமலை வந்து ஆமை ஓட்டுச் சித்தரிடம் அளித்திடுவர். இவ்வாறு இவரிடம் வந்த ஆமைகள் எல்லாம் மிகவும் மகிழ்ச்சியடையும், காரணம், இவர்தம் திருக்கரங்கள் பட்டாலே போது அவை முக்தி, மோட்ச நிலைகளை அடையும் அல்லவா! நட்சத்திர ஆமைகளின் தேவ தாத்பர்யம் அறிந்தவரும் ஆமை ஓட்டுச் சித்தரே ஆவார்.

இவர் கிரிவலம் வரும் திருநாளே, வருகின்ற வைகாசி மாத சிவராத்திரி தினமாகும். இன்று அருணாசல கிரிவலம் வந்து ஓடு வகை தானியங்கள், காய்கறிகள், கனிகளைத் (சுரைக்காய், விளாம்பழம், நிலக்கடலை) தானமாக அளித்திட, வராஹ உபாசனை பூண்டோர், வாஸ்து சாஸ்திரம் மற்றும் கூர்ம தந்திர யோக முறைகளில் சிறக்க வல்ல ஜோதிடர்கள், Gemmologists, Numerologists நல்ல ஞானம் பெற உதவும் அற்புத மாத சிவராத்திரி, வறுமையையும், நஷ்டங்களையும், பணக் கஷ்டங்களையும் தீர்க்கும் நல்வழிமுறைகளை நல்வரங்களாகத் தரும் மாத சிவராத்திரி, வானியல், விண்வெளி இயல், புவியியல், ஜோதிட இயல், வாஸ்து இயல், பூலோக இயல் போன்ற பூமித் துறைகளில் சம்பந்தப்பட்டோர் இம்மாத சிவராத்திரியில் கிரிவலம் வந்திட, தத்தம் துறைகளில் சிறப்படைவர்.

29.5.2003 வியாழக் கிழமை விடியற்காலை 4.58 மணி முதல் 30.5.2003 வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வைகாசி மாத சிவராத்திரி திதி அமைகின்றது. மாத சிவராத்திரி கிரிவல நாள் : 29.5.2003 வியாழக் கிழமை இரவு.

13.6.2003 வெள்ளிக் கிழமை இரவு 8.5மணி முதல் 14.6.2003 சனிக்கிழமை மாலை 4.46 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி ஜூன் மாத பௌர்ணமி திதி அமைகின்றது. ஜூன் மாதப் பௌர்ணமி கிரிவல நாள் : 13.6.2003 வெள்ளிக்கிழமை இரவு

27.6.2003 வெள்ளிக் கிழமை இரவு 8.59 மணி முதல் 28.6.2003 சனிக்கிழமை இரவு 10.47 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கபடி ஆனி மாத சிவராத்திரி திதி அமைகின்றது. மாத சிவராத்திரி கிரிவல நாள்: 27.6.2003 வெள்ளிக் கிழமை இரவு.

சக்தி வாய்ந்த கிழமைகள்

ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு மகத்துவம் உண்டு. நாமறியா வகையில் தினமும் எத்தனையோ கிரக, ஆகர்ஷண சக்தி சங்கமங்கள் வானில் நிகழ்ந்து கொண்டுதாம் இருக்கின்றன. இவை நம் தேகத்தில், பூமியில், பல மாறுதல்களை, விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இவற்றை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தும் நல்வழிமுறைகளை அருள்பவர்களே சற்குருமார்கள் ஆவர்.

குறித்த சில பஞ்சாங்கங்களில் தினசரி கிரக சஞ்சார நிலைகளை ராசிச் சக்கரமாகப் போட்டிருக்கின்றார்கள். ஜோதிடர்கள் தினமும் அன்றைய கோள நிலைகளை மாக் கோலச் சக்கரமாக ஸ்ரீகாலபைரவர் முன்னும் இல்லத்திலும் இட்டு வழிபட்டு வந்தால் தீர்க தரிசன சக்திகள் அபரிமிதமாக விருத்தியாகும். ஆனால், இதனை நன்முறையில் சமுதாயத் தொண்டாக, மக்களுக்கு அர்ப்பணித்துப் பயன்படுத்த வேண்டும்.

காலத்தின் மகிமையை நன்கு உணராததால்தான், ஏதோ ஞாயிறு முதல் சனி வரை ஏழு கிழமைகளும் வெறுமனே இயந்திர கதியாகவே வாழ்வில் வந்து செல்வதாகவே நாம் மிகவும் தவறாக எண்ணுகின்றோம். ஒவ்வொரு நாளிலும் வரும் ஒவ்வொடு கிழமைக்கும் ஒரு விசேஷமான பெயருண்டு.

ஒவ்வொரு நாளுக்கும் ஒரு விசேஷமான பெயர்!

கானாவளி புதன், சகஸ் யக்ஞ குஜ செவ்வாய், ஸ்வந்த புதன், அந்தர்வதிதச் செவ்வாய், புரந்தர வெள்ளி என்று பல தாத்பர்யங்கள் கொண்ட விசேஷமான பெயர்கள் 365 நாட்களுக்கும் உண்டு! பொதுவாக ஸ்ரீகாலபைரவர் உபாசகர்களே இவற்றின் மகிமையையும், விளக்கங்களையும் நன்கறிந்தவர்களாவர்.

365 நாட்களின் விசேஷமான கிழமைப் பெயர்களையும் தெரிந்து கொள்வதால் என்ன சாதிக்கப் போகின்றோம்? நம் வாழ்வில் இத்தனை வருடங்களில் ஆயிரக்கணக்கான கிழமைகளின் பெயர்களையும், அறியாததினால் நாம் எதையும் பெரிதாக பொருளாகவோ, அருள் மார்கமாகவோ, அறிவுப் பூர்வமாகவோ இழந்து விடவில்லையே என்றும், இவற்றை எல்லாம் அறிந்து கொள்ளாமலேயே வாழ்ந்திடலாகாதா என்றும் கூடத் தவறாக அறியாமையால் எண்ணத் தோன்றும்.

ஆனால் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்! எத்தனையோ கர்மவினைகளுடன், கெட்ட பழக்கங்களுடன் வாழ்கின்ற மனிதன், இவற்றிலிருந்து மீள முயற்சித்தும் வெளி வர இயலாது தினந்தோறும் இவற்றில் சிக்கித் தவிக்கின்றான் தானே! ஆனால் கிழமையின் மகத்துவம் காரணமாக, “ஓம்காரப் பரவள வியாழன்” என்ற அபூர்வமான நாளில் மிகவும் எளிய சில பரிகாரங்களைச் செய்திட, எத்தகைய தீய வழக்கத்திலிருந்தும் மீண்டிட இக்குறித்த “ஓம்காரப் பரவள வியாழ தினம்” உதவும் அற்புதத்தைக் கண்டு மனித குலமே அதிசயிக்கின்றதே! என்னே கிழமையின் மகிமை! இதுவே கிழமையின் தெய்வீக மகத்துவத்தை மனித சமுதாயத்திற்கு நன்கு உணர்விக்கின்றது அன்றோ!

கிழமைகளின் விசேஷப் பெயர்கள்

ஒரு வருடத்தின் 365 கிழமைகளுக்கும் 365 விசேஷப் பெயர்களா? அப்பப்பா, இவற்றை யார் நினைவு வைத்துக் கொள்வது? இவற்றைத் தெரிந்து என்னதான் சாதிக்கப் போகின்றோம்?

ஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் மிகவும் முக்கியமான நாளே! ஞாயிறு, சுதந்திர தினம் போன்று விடுமுறை நாட்கள் என்றாலே படுத்துறங்கி, ஓய்வுடன், ஒரு வேலையும் செய்யாமல் இருக்க வேண்டிய நாள் என்ற எண்ணமே சமுதாயத்தில் பெருத்து விட்டது. மனத்தாலும், உடலாலும் உழைத்து வாழும் ஒப்பற்ற வாழ்க்கை முறையை மனித சமுதாயம் இழந்து வருகின்றது என்பதே உண்மை.

மனிதன் ‘வெறுமனே’ பயனற்ற வகையில் கழிக்கின்ற காலம் எல்லாமே காலக் கட்டுகளாக அப்படியே வானிலும், பூமியிலும் தேங்கி நிற்கும். எனவே தினமும் வருகின்ற கிழமையின் மகத்துவத்தை உணர்ந்து அதில் செய்ய வேண்டியதைச் செய்து வந்தால், உலகப் பரவெளியில் மிதந்து கிடக்கும் மனிதனால், குறிப்பாக நீங்கள் காலத்தை விரயமாக்கிப் படிய வைத்துள்ள ‘கால, ஏக்கத் தேக்க நிலைகள்’ நீங்கலாகும். இக்காலக் கட்டுத் தேக்கங்கள் நீங்கினால் தான் மனிதனால் பரவெளியில் உள்ள வேத, மந்திர, யோக இறைச் சக்திகளை ஈர்க்க முடியும். இல்லையெனில் தரையிலிருந்து இரண்டு, மூன்று அடி உயரத்திற்கு மேல் சராசரி மனிதனுடைய ஆன்ம சக்தி எழுவதற்குக் கூட இயலாது அப்படியே த(ம)ங்கிப் போய் விடும்.

வாரவர சக்திகளே தினசரி நல்வரந் தரும்!

இதனால் தான் கால யோக சக்திகளை, கிழமைச் சக்திகளை உணர இயலாதவனாய் மனிதன் வெறும் ஜடமாகவே வாழ்கின்றான். தியான, யோகம், பூஜை, சமுதாய சேவைகள் மூலமாகவே மனிதன் தன் ஆன்ம சக்தியைப் பெருக்கித் தன்னை தெய்வீகத்தில் உயர்த்திக் கொள்ள முடியும். இதற்கான உபகரணங்களை, சாதனங்களை, உதவிகளை அளிப்பவையே ஒவ்வொரு கிழமையும் ஆகும். ஞாயிறு முதல் சனி வரை ஏழு கிழமைகளும் மனித வாழ்வின் காலச் சக்கரத்தின் முக்கிய ஆரங்களாக விளங்குவதால் “வாரவர” சக்திகளின் மகத்துவத்தை உணர்ந்தால் தான் மனிதன் பகுத்தறிவு உடையவனாக வாழ முடியும். இதற்கு உதவுவதே கால பைரவ பூஜையாகும்.

ஒவ்வொரு நாளிலும், சூரிய உதய நேரத்தில் தமிழ்ப் பஞ்சாங்கப்படி, தோன்றுவதே அன்றைய கிழமைக் காலம் ஆதலால் “இன்றைய பொழுது நல்ல பொழுதாக விடிய வேண்டும்!” என்று நல்வரம் வேண்டுவோர், தினமும் சரியாக சூரிய உதய நேரத்தில் ஆலயத்தில் ஸ்ரீகால பைரவரின் முன் நின்று

“ஓம் காலகாலாய வித்மஹே
காலாதீதாய தீமஹி
தந்நோ காலபைரவ ப்ரசோதயாத்”

என்ற ஸ்ரீகாலபைரவ காயத்ரீ மந்திரத்தை 108 முறை ஓதியும்,

“கால கால சால தூர்வ கால தேவ மாளயம் கால சாம்ய காலவேத காலகலசத் தாண்டவம்” என்ற துதியையும் கண்களை மூடியவாறு ஓதி கண்ணுக்குள் ஸ்ரீகாலபைரவர் சூரிய பகவானை எழச் செய்கின்ற அற்புதக் கோலத்தைக் கண்ணாரக் கண்ணுள் கண்டு, பிறகு சூரிய பகவானையும் தரிசிக்க வேண்டும்.

இவ்வாறு தினந்தோறும் செய்து வந்தால் காலத்தை துவம்சம் செய்து, காலத்தை வீணாக்கிய தோஷங்கள் தீரும். தோஷங்கள், சாபங்கள் என்று பயமுறுத்துவதாக எண்ணாதீர்கள். மனிதன் மனதால், உடலால் தினந்தோறும் செய்கின்ற தவறுகள் ஆயிரமாயிரம்! ஆனால் இவற்றிலிருந்து மீண்டு மனிதன் தன்னைத் திருத்திக் கொள்ளவே பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும் ஆதலின் கலியுகத்தில் காலம் சம்பந்தப்பட்ட தேக்கங்களை, பூஜைகளால், பக்தியால் ஒட்டுமொத்தமாகப் பஸ்மம் செய்து எளிய தெய்வீக முறைகளில் புனிதம் அடையவே ஸ்ரீகாலபைரவ வழிபாடு உதவுகின்றது.

கிழமை வழிபாடு : அந்தந்தக் கிழமையின் பெயர் மற்றும் மகத்துவத்தை அறியும் வரை யாது செய்வது?

தினமும் சூரியோதயத்தில் ஸ்ரீகாலபைரவர், உச்சிப்பொழுதில் ஸ்ரீபிட்சாடனர், சூரியன் மறையும் வேளையில் ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் சன்னதி முன் நின்று அந்தந்தக் கிழமைக்கான அல்லது திதிக்கான தைலதூபம் அல்லது நட்சத்திர தூபம் ஏற்றி வழிபடுதலால் “இன்று என்ன துன்பம் வருமோ? இன்றையப் பிரச்னை எவ்வகையில் தீருமோ?” என்ற கொந்தளிப்புகள் யாவும் தணிந்து நல்ல தீர்வுகளும், அமைதியும் கிட்டும்.

கீழ்க்கண்ட வகையில், அந்தந்தக் கிழமைக்கான ஆலயங்களில், மூன்று வேளைகளிலும் வழிபடுதல் வாரவர சக்திகளைப் பெற்றுத் தருவதாகும். வாரம் ஒரு முறையே கோயிலுக்குச் செல்லும் நிலையும், ஒரு நாளைக்கு ஒரு வேளையே ஆலய வழிபாடு என்ற நிலையும் மாறி, தினமும் மூன்று வேளை ஆலய தரிசனம் என்ற உத்வேகம் ஏற்பட்டால்தாம் கிழமை சக்திகளைப் பெற முடியும்.

ஞாயிறு : சூரிய பகவான் (தனிச் சந்நதி கொண்டு அருள்தல் விசேஷமானது), சூரியனார் கோவில், சூரிய ஒளி மூலவர் மேல் படும் தலங்கள் (பூந்தமல்லி ஸ்ரீவைத்தீஸ்வரர் கோவில், திருக்கருகாவூர் ஸ்ரீகர்ப்பரட்சகாம்பிகை திருக்கோவில் போன்ற தலங்கள்.)

திங்கள் : சிவனுக்கு வலப்புறம் அம்பிகை உள்ள ஆலயம், (மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் திருக்கோவில்) மூலத்தானத்துள் மூலவருடன் அம்பிகை உள்ள தலங்கள்.

செவ்வாய் : அமர்ந்த நிலை துர்க்கை அல்லது அம்பிகை, (காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் திருக்கோவில்) செவ்வாய் பகவான் தனிச் சந்நதி கொண்டு அருளும் ஆலயங்கள் . வைதீஸ்வரன் திருக்கோவில், வடபழனி பழனியாண்டவர் திருக்கோவில்.

புதன் : அமர்ந்த கோலப் பெருமாள் ஆலயம், (திருமழிசை ஜெகந்நாதப் பெருமாள் திருக்கோவில்) தீர்த்தங்கள் நிறைந்த பெருமாள் கோயில்கள்.

வியாழன் : ஸ்ரீதட்சிணாமூர்த்தி தனிச் சந்நதி கொண்டு அருளும் ஆலயம் அல்லது மூலவருக்குப் பின்புறக் கோஷ்டத்தில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி அருளும் ஆலயம் (கோயம்பேடு, மயிலாப்பூர் ஸ்ரீவீரபத்ரர் ஆலயம் – மூலவர் வடக்கு நோக்கிய ஆலயங்கள், ஸ்ரீபிட்சாடனர்.

வெள்ளி : இரண்டு அம்பிகையர் உள்ள ஆலயம், (இன்னம்பூர்), சுக்கிர பகவான் தனிச் சந்நதி கொண்டு அருளும் ஆலயம்.

சனிக்கிழமை : குறைந்தது 5 பெருமாள் அவதாரங்கள் உள்ள ஆலயம், (மண்ணடி ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில்), சனீஸ்வரர் தனிச் சந்நதி கொண்டு அருளும் ஆலயங்கள் (திருநள்ளாறு, மயிலாப்பூர், வடபழனி சிவாலயங்கள்)

அமிர்த யோகம் : அமிர்தலிங்கம், அமிர்தவல்லி போன்ற அமிர்த நாமத்தலங்கள் (திருக்கடவூர் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர்), தேனிமலை, சந்திரத் தலங்கள்.!

சித்த யோகம் : சித்தர்களின் உருவங்கள் ஆலயமெங்கும் நிறைந்துள்ள தலங்கள் (காஞ்சீபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர், சென்னை பூந்தமல்லி அருகே சித்துக்காடு, ஸ்ரீஅகஸ்தியர் உள்ள தலங்கள் (பஞ்சவடி, திருவிடைமருதூர், கருவளர்ச்சேரி).

மரண யோகம் :- ஸ்ரீஎமபகவான் (திருக்கடவூர்), ராகு, கேதுத் தலங்கள் (திருநாகேஸ்வரம்), சந்தன மரம் உள்ள தலங்கள்.(திருவாவடுதுறை)

இவை பொதுவான கிழமை வழிபாட்டு வழிமுறைகளே! அந்தந்தக் கிழமைக்குரிய விசேஷ வழிபாடுகளைத் தக்க சற்குரு மூலமாக அறிதல் வேண்டும். உதாரணத்திற்காக பக்தர்கள் தரிசிக்கும் வண்ணம் இத்தகைய தலங்கள் படமாகவோ, வீடியோ படமாகவோ இங்கு அளிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீகாலபைரவர் அளிக்கும் வாரவர சக்திகள்!

காலசக்தியால் தாம் நாம் ஒவ்வொரு விநாடியும் வாழ்கின்றோம். எனவே கால உணர்வானது உறக்கத்திலும் கூட நம்மிடையே பதிந்திருக்க ஸ்ரீகாலபைரவ வழிபாடு உதவுகின்றது. ஸ்ரீகாலபைரவரின் திருக்காதுகளில் தோன்றுவதே கிழமை சக்திகளாகும். எனவே சூரியோதய நேரத்திலும், சூரிய அஸ்தமன (மறையும்) நேரத்திலும் ஸ்ரீகாலபைரவரை வழிபடுவதால் காலத்தை விரயமாக்கும் புத்தி மாறும்.

புகை, மது, கேளிக்கைகள், தேவையற்ற சினிமா, டிவி காட்சிகள், வெறுமனே கண்களை மூடிக்கொண்டு, அரட்டை அடித்துக் கொண்டிருத்தல், பொழுது போகவில்லையே எனச் சும்மாவேனும் எங்காவது நடந்து வருதல் இவ்வாறு வீணாகக் காலத்தைக் கழிப்பவர்கள் நிறைய உண்டு. இவ்வகையில் காலத்தை விரயமாக்கி வாழ்வதால் இறுதியில் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் தெய்வீகமாக இருந்து உண்மையாகவே வாழ்ந்த காலத்தைக் கணக்கிடில், ஒவ்வொருவரும் உண்மையாக வாழ்ந்த நேரம் மொத்த வாழ்நாளில் மூன்று நாட்கள் கூடத் தேறாது.

இந்த அவலநிலை இப்படியே தொடர்வதா? நன்கு சிந்தியுங்கள் 70, 80, 90 என நீண்ட கால வாழ்க்கையை இறைவன் அளித்திடக் காரணம் என்ன? எந்நாளேனும் மனிதன் திருந்திடானா என்ற பெரியோர்களின் நன்னம்பிக்கையே காரணமாகும். எனவே இனியேனும் காலத்தின் மகிமையை உணர்ந்து வாழ்வீர்களாக!

கிழமை சக்திகளைப் பெற்றிட, இதற்காக இன்றிலிருந்து நீங்கள் முதலில் செய்ய வேண்டியது யாதெனில்,

1.மேற்கண்ட வகையில் அந்தந்தக் கிழமைக்கான ஆலயங்களில் மூன்று வேளைகளிலும் வழிபடுதல், குறிப்பாக, சூரியோதய, குளிகை நேரங்களில் ஸ்ரீகால பைரவரைக் கண்டிப்பாகப் பூஜிக்க வேண்டும்.

2. எப்போதும் மனதில் ஸ்ரீகாயத்ரீ மந்திரம், ராம், ராம், சிவ, சிவ போன்ற இறை நாமங்களை ஓதிக் கொண்டே இருத்தல் – மனதினுள் இறைநாம ஓடை ஊற்றை விருத்தி செய்தல் காலத்தை விருத்தி செய்யும்.

3. காலத்தை விருத்தி ஆக்கும் இறைச் சமுதாய சேவைகளை (ஏழைகளுக்கான சரீர சேவை, அன்னதானம், ஆலய உழவாரத் திருப்பணிகள்) வாழ்நாள் முழுதும் ஆற்றுதல் வேண்டும். ஆலயத்தில் உள்ள சிறு சிறு குப்பைகளை அகற்றுகின்ற ஒரு சிறு நற்காரியத்தைச் செய்தால் கூட, காலம் நல்விருத்தி கொண்டு, வீணாக்கிய காலத்திற்குப் பரிகாரம் தந்திடும் என்பதை உணர்ந்திடுக! இவ்வாறு ஆலயங்கள் காட்டுகின்ற அற்புதங்கள் ஆயிரமாயிரம்!

4. வெறும் பிராயசித்த, பரிகாரங்களை நாடியே வாழ்க்கையை ஓட்டக் கூடாது. தவறுகள் இல்லாத புனிதமான வாழ்வை அடைய முயற்சித்து வாழ வேண்டும்.

ஸ்ரீபடேசாகிப் சித்தர் ஜீவசமாதி

சித்தர்களின் ஜீவசமாதி தரிசனம் காலசக்திகளைத் தரும்!

பாண்டிச்சேரி ஸ்ரீஅன்னை (ஞாயிறு), காஞ்சீபுரம் ஸ்ரீபோடா (சிவஸ்வாமி) சித்தர் (திங்கள்), ஸ்ரீபடேசாஹிப் (செவ்வாய்), மதுரை ஸ்ரீகுழந்தையானந்த சுவாமிகள் (புதன்), வில்லியனூர் ஸ்ரீராம்பரதேசி சுவாமிகள் (வியாழன்), நெரூர் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திர சுவாமிகள் (வெள்ளி), ஸ்ரீகசவனம்பட்டிச் சித்தர் (சனிக்கிழமை), போன்ற மகான்களின், சித்தர்களின் ஜீவாலய வழிபாடு காலத்தின் மகிமையை உணர்த்த வல்லதாகும்.

அந்தந்தக் கிழமைக்கான சித்தயோகம், அமிர்த யோக நேரங்களில் ஆலயங்களில் நடைப் பிரதட்சிணம் செய்து, தல விருட்சங்களுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு வழிபட்டு வருதலாலும் காலாமிர்த சக்தியை வாரவர சக்திகளை, கிழமைப் பூஜா பலன்களாகப் பெற்றிடலாம்.

அன்பு

தெய்வீகம் = அன்பு = பக்தி

இறைவனே புனிதமான அன்பின் பரிபூரணமான தூயவடிவு! அனைத்து ஜீவன்களும், பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருட்களும் அன்பில் தோன்றியவையே!

முக்தி, மோட்சம் என்பது அன்பின் முற்றிய நிலைகளே! நாயன்மார்களும், ஆழ்வார்களும், சமயக் குரவர்களும் அன்பின் உருவகங்களே! பக்தி என்பது அன்பைப் பரிபூரணமாக அனுபவிக்க வல்ல தெய்வ நிலை!

வழிபாடுகள், பூஜைகள் பக்தி வகைகயிலும், ஆலய தரிசனங்கள், தீர்த்த நீராடல்கள் கர்ம வினைக் கழிப்பு மூலமாகவும், தான, தர்மங்கள் புண்ணிய சக்தி வகையிலும், சமுதாயச் சேவைகள் மகத்தான தியாக உள்ளம் மூலமாகவும் அன்பை உருவாக்க வல்லவையாம்!

அன்பு, பக்தி, மனித நேயம் என்று பலவாறாக இறைமை வி(ளி)ளக்கப்படுகின்றது.

மனிதன் பரிபூரண அன்பு உடையவனாகவே பிறக்கின்றான். ஆனால் காலப் போக்கில், வாழ்க்கையில் கர்ம வினை அழுத்தத்தால் அன்பை மறந்து விடுகின்றான். மனிதன் பாசத்தையே அன்பெனக் குழப்பிக் கொண்டு, இருக்கின்ற அன்பைபுயும் இழந்து, பாசமும் காலகட்டத்தில் கரைந்து விடுகின்றது.

தற்காலத்தில் அன்பு என்பது நட்பு, பாசம், பரிவு என்றே எண்ணி, தூய அன்பினை உணராமலேயே மனிதர்கள் வாழ்கின்றனர். அன்பை உணர்த்தவல்ல இறைத் தூதுவர்களாய் சற்குருமார்கள் கலியுகத்தில் நிறைய இருந்திடினும் அவர்களை மனித குலம் மதிப்பதில்லை! எனவே சற்குருமார்களும் இலைமறை கனியாய் சமுதாயத்தில் உறைந்து, தம்மைப் பரிபூரணமாக நம்பிச் சரணடைவோருக்கே புனிதமான அன்பினைப் புகட்டுகின்றனர்.

குழந்தையிடம் பொலியும் தெய்வீக அன்பு!

தூய அன்பை எங்கேனும் காண முடியுமா? நிச்சயமாக! சற்குருவின் குருகுல வாசத்திலும், பச்சிளங் குழந்தையிடமும், மூலிகைச் செடிகளிடமும் தூய அன்பு வாசம் செய்கின்றது!

எங்கேனும் ஒரு கைக்குழந்தையைக் கண்டால் எவருக்கும் மனம் இளகி விடுகின்றது அல்லவா? காரணம் என்ன? குழந்தை செலுத்தும் அன்புக் கிரணங்கள் மனிதனை மறைக்கும் கர்ம அட்டையைக் களைந்து விடுகின்றதே!

கைக்குழந்தை, தெய்வ குணங்கள் பல நிரம்பியது! முக்காலத்தையும் தெள்ளத் தெளிவாக உணர்ந்தது! அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிந்தாலும் தெரிந்தும், தெரியாததாய் அவரவர் விதிக்கேற்ப நடந்து கொள்கின்றது!

அனைத்தும் அறிந்ததாய்க் காலத்தைக் கடக்க வல்ல யோகியே கைக்குழந்தை!

தன்னைக் காண்பவர்கள் அனைவரிடமும் குழந்தை புனிதமான அன்பைப் பொழிகின்றது. குழந்தை அழுதாலும், சிரித்தாலும், உம்மென்றிருந்தாலும் அனைத்தும் அன்பின் பாவனையே! ஆம், கைக்குழந்தைகள் முக்காலமும் அறிந்தவையே! ஆனால் மனித குலம் இதனை உணர்ந்தால் குழந்தைகளின் தெய்வீக குணங்களைச் சுயநலமாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்பதால்தான் இறைவன் கைக்குழந்தைக்கு வாக்சக்தியைச் சிறிது காலம் மறைத்து வைக்கின்றான். இல்லாவிடில் ஜோசியமும், அருள்வாக்கும் கேட்டு, கேட்டு மனிதர்கள் எல்லாம் அறிய வல்ல குழந்தைகளைத் தொந்திரவு செய்து கொண்டே இருப்பார்கள்.

ஒவ்வொரு கைக்குழந்தையும் தன்னைச் சுற்றி உள்ள தாவரங்கள், பறவைகள், பிராணிகள், அசையும் பொருட்கள், அசையாப் பொருட்களிடம் நன்கு உரையாடுகின்றன! தன்னைக் கடிக்கும் கொசுவிடம் கூட, கைக்குழந்தை விதிப் பூர்வமாக நன்கு பேசுகின்றது! ஆனால் மனிதன் தான் இதனைப் புரிந்து கொள்ளும் வகையில் ஆன்ம பலம் பெறவில்லை!

குழந்தையானது தொழுநோயாளி, சன்னியாசி, ஆண், பெண், நாய், மரம் எனப் பாகுபாடு கொள்ளாது திருவாய் மலர்ந்து பரிபூரண அன்பை அனைவரிடமும் செலுத்துகின்றது. நீங்கள் ஒரு குழந்தையைக் காண்கையில், அது பரப்பும் அன்புச் சுடரே, உங்களிடமும் அன்புக் கதிர்கள் தோன்றுகின்றன. எனவே அனைவரிடமும் அன்பைத் தோற்றுவிக்க வல்லமையால்தான் குழந்தையும், தெய்வமும் ஒன்றெனக் கொண்டாடுகின்றோம். எனவேதாம் நம் முதியோர்கள் அக்காலத்தில் நிறையக் குழந்தைகளுடன் வாழும் கூட்டுக் குடும்பத்தைக் கொண்டார்கள்.

சுயம்பு மூர்த்தியிடம் யுகயுகமாய்ப் பொலியும் தூய அன்பு!

ராமேஸ்வரம் ஸ்ரீராமநாத லிங்கம், ஸ்ரீராமரே நேரில் வந்து வழிபட்டுத் தேர் தந்து விழா நடத்திய மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் லிங்கம், ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் போன்ற காலம் கடந்த தொன்மையான மூர்த்திகளைத் தரிசிக்கையில், இச்சுயம்பு மூர்த்திகளிடம் எழுகின்ற அன்புக் கதிர்கள்,  உங்களை அடைந்து, உடலில், மூளையில் தேங்கிக் கிடக்கும் அன்பு நாளங்களை ஆக்கப்படுத்துகின்றன..!

ஆயிரமாயிரம் கவலைகள், வாழ்க்கைச் சூழ்நிலைகள், அலுவலகப் பிரச்னைகள், இல்லற பந்தங்களின் இடையிலும், ஒரு விநாடி காலமாவது இவற்றை மறந்தோ அல்லது இவை அனைத்தையும் தீர்க்க வல்ல சக்தி என்ற சிந்தனையுடனோ நீங்கள் இம்மூர்த்திகளின் முன் நிற்கும் போது உண்மையில் ஆங்கே அன்புப் பரிமாணம் அன்புக் கதிர்களாக, தெய்வீக முறையில் உங்கள் உடல் நாளங்களில் வியாபிக்கின்றன. எனவே ஆலயமே அன்பின் உறைவிடம்! நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இழந்த அன்பை ஆலயங்களில்தாம் பெற முடியும்!

காரணம் என்ன? கோடிக்கணக்கான மகரிஷிகளும், சித்தர்களும், தமக்காக இன்றி, தியாக உள்ளத்துடன் பிரபஞ்சத்தின் அனைத்து உயிர்களின் நலன்களுக்காக இறையருள் வேண்டி வழிபட்ட, இன்றும் வழிபடுகின்ற ஆலயத் திருச்சன்னதிகளில் உண்மையான அன்புப் பரிணமிப்பு நிலவுவதில் ஆச்சரியம் என்னவோ? அன்பின் ஒரு வகையே ஆலயத்தில் கிளைக்கும் பக்தி ஆகும்!

இவ்வாறாக, இறைவன் அளிக்கும் அன்பினை, இப்பூவுலகில் மட்டுமல்லாது யாங்கணும் பக்தி, மனிதநேயம், இறைப்பெருங்கருணையாக அன்பினை உணர்விக்க வல்லவர்களே நாயன்மார்களும், ஆழ்வார்களும், மகரிஷிகளும், சித்தர்களும் ஆவர்.

ஆமாம், ஆலயத்தில் அருள்சுரப்பாய்ப் பொங்கும் அன்பினை நம் தினசரி வாழ்வில் எப்படிக் கொணர்வது?

உள்ளம், மனம், உடலில் அன்பு தோய்தல் வேண்டும்!

அன்பு, பக்தி என்பதை முதலில் நம் ஆயுட் காலம் முழுவதுமாக நிலவிடும் தெய்வாம்சம் என முதலில் உணர்தல் வேண்டும். இரண்டாவதாக, உறக்க நிலை, கனவு நிலை, விழிப்பு நிலை ஆகிய மூன்று மனித வாழ்வுக் கால நிலைகளிலுமே அன்பு படர வேண்டும். அதாவது இம்மூன்று நிலைகளையும் ஆக்குகின்ற கால, நாள, தேக நாடிகளில் அன்பைப் பெருக்குதல் வேண்டும், எவ்வாறு இது சாத்யமாகின்றது?

ஒவ்வொருவருக்கும் பாத ரேகைகளிலும் கைரேகைகளிலும் இறைவன் அன்பைச் சுரக்கும் பல அற்புத அமிர்த ரேகைகளை அமைத்துள்ளான். மனித அவயங்களில் தேய்வு பெறாதவை கை மற்றும் கால் ரேகைகளாகும். எனவேதான் இரு கைகளையும் கூப்பிக் கோயிலில் வணங்கும்போது ரேகா ஸ்பரிசத்தால் ஒரு புனிதமான சாந்தம் ஆங்கே உருவாகிறது. அருணாசல கிரிவலம் வருகையில் கால் ரேகைகள் மூலமாக மூலிகா சக்திகள், சித்தர்கள், மகரிஷிகளின் திருப்பாத சக்திகளில் திரளும் தெய்வீக அன்பு நம் உடலில் சேர்ந்து ஆனந்தம் அளிக்கின்றது.

எனவே தினமும் ஆலயத்தில் கை கூப்பி வணங்கியவாறே ஆலயத்தை வலம் வரும் முறையைக் கைக் கொண்டிட, கை மற்றும் கால் ரேகைகளில் ஆன்ம சக்தி அன்பு நாளங்களாக உடலில் பரிணமிக்கத் தொடங்கும்.

பலரும் ஆலயங்களில், சந்நதி முன் கை கூப்பி வணங்கி விட்டுப் பிறகு சங்கோஜம், வெட்கம் கொண்டு அந்தந்த சன்னதி முன் மட்டுமே வணங்குவது, பிறகு கைகளைத் தொங்க விடுவது அல்லது கைகளை வெறுவமனே கட்டிக் கொள்வது என்று ஆகிவிடுகிறது. இறைவனைக் கை கூப்பி வணங்குகையில்தான் தெய்வ மூர்த்தங்களில் இறைவனிடம் பரிணமிக்கும் அன்புக் கிரணங்களை நம் கைரேகைகள் கிரகிக்கின்றன.!

கற்பூர ஆரத்தி, நெய்விளக்குத் தீபத்தைக் கையை ஒற்றித் தரிசிக்கையில் ரேகைகளில் படிந்துள்ள இறை அன்புக் கிரணங்கள் சகல நாடிகளுக்கும் செலுத்தப்படுகின்றன. ஆலயங்களை வலம் வருகையில் இறையருள் கிரணங்கள், பாதரேகைகள் மூலமாக உடலின் நாளங்களை அடைகின்றன. விபூதி, குங்குமம் பிரசாதத்தைக் கைகளில் வாங்குகையில் உடனடியாக கைரேகைகள் இறையன்பை ஈர்த்துக் கொள்கின்றன. எனவே உடலில் அன்பை நிரவுவதில் கைரேகைகள், பாத ரேகைகள் பெரும் பணி ஆற்றுகின்றன.!

சந்தனம் பரப்பும் தெய்வீக அன்பு மணம்!

அன்பை விருத்தி செய்யும் பல புனிதமான பொருட்களையும் ஆண்டவன் நமக்கு அளித்துள்ளான். சந்தன மரத்திற்கு அன்பை நிரவும் மகத்தான சக்திகள் உண்டு. எனவே சந்தனக் கல்லில் வைத்துச் சந்தனக் கட்டையால் சந்தனம் அரைக்கையில் கைகளில், அனைத்துக் கை ரேகைகளும் அதில் பதிவதால், அன்பு விருட்சமாகிய சந்தனத்தில் பதிந்துள்ள அன்புக் கிரணங்கள் உடலை அடைகின்றன. தினமும் ஆலயத்திற்குச் சந்தனம்  அரைத்துத் தருவதும் இல்லறத்தில், சமுதாயத்தில் அன்பை, பக்தியை பெருக்கச் செய்யும் நல்முறையாகும்.

நாம் ஜடப் பொருளாகக் கருதும் சந்தனமானது, அன்பை விருத்தி செய்யும் நற்கிரண சக்திகளைப் பெற்றுள்ளது. சந்தனக் கட்டையிலும் நிறைய ரேகைகள் உண்டு. நம் கை ரேகைகளை நன்கு பதித்துச் சந்தனத்தை அரைக்கும் போது பல தெய்வீக சக்திகள் ஆங்கே தோன்றுகின்றன. நாம் நறுமணம் என உணரும் சந்தன வாசனையானது நற்கதிர்களைப் (positive rays) பரப்பும் மகத்தான ஆன்மீக சாதனமாகும்.

ஆங்காங்கே பரவெளியில் உள்ள தீய சக்திகள், தீய எண்ணங்களைப் பஸ்மம் செய்து சந்தன தேவதா அன்பு சக்திகளை நறுமணமாக, பரவெளி வாயுத் தத்துவமாகப் பரப்பும் அதியற்புத ஆன்ம சாதனமே சந்தனமாகும்.

ஆலயத்தில் ஒருமுறை தெய்வ மூர்த்திக்குச் சந்தனக் காப்பு இட்டால் பல மைல் சுற்றளவைப் பரவெளியைச் சுத்திகரிக்கும் அற்புத சக்தி கொண்டதே சந்தனமாகும். எனவே உலகெங்கும் நற்சக்திகளைப் பரப்புவதும் அன்பின் ஆத்ம சக்தியாகும். எனவே தினமும் இல்லத்தில் சந்தனம் அரைத்து ஆலயத்தில் சுவாமிக்கு இட்டு வழிபட்டு வர, தூய அன்புப் பரிணாமம் ஏற்படும் என்பது திண்ணம்.

இவ்வாறு ஆலயங்கள், குழந்தைகள் மூலமாகப் பெற்றிடும் தெய்வீக அன்பினை நிலை நிறுத்தும் வல்லமையை நீங்கள் பெற வேண்டும். நம்மிடம் கூடப் படித்தவர்கள், வேலை செய்பவர்களிடம் தோன்றும் நட்புணர்வை, அன்பு என நாம் தவறாக அர்த்தம் செய்து கொள்கின்றோம். உண்மையான அன்பு, பாசம், நட்பு, பரிவு, இரக்கத்திற்கு அப்பாற்பட்டதாகும். அன்பை உணர இயலாததால் தான் அது பரிவு, பாசக் கதிர்களாக மாறி நிலையற்று விடுகின்றது.

இவை காலத்தை ஒட்டி மாறுபடக் கூடியவை! சொத்து, திருமணம், அவரவர் குடும்பம் என வந்து விட்டால் நட்பு, பாச நிலையும் மாறி விடுகின்றதே!

எனவே தூய அன்பு என்பது அமைதியாக, சாந்தமாக இருப்பட்து மட்டுமல்ல! இத்தகைய உணர்வுகளைக் கடந்ததாக, நிலையான சாந்தம், உண்மையான சாந்தத்தைத் தருவதாக, எல்லாவற்றையும் கடந்ததாக, காலத்தையும் கடந்ததாக இருப்பதே தெய்வீக அன்பு என்பதாகும். இதனை ஆன்மீகமே தர வல்லதாகும்.

எவ்வாறு அன்பு, காலத்தைக் கடந்ததாகும்? நம் பெற்றோர்கள், குழந்தைகள் மேல் கொள்வது அன்பு என்றால் அவர்கள் மறைந்தாலோ, திருமணமாகிச் சென்றாலோ மாறி, மறைந்து விடுகிறது அல்லவா! ஆனால் ராமேஸ்வரம் கோயிலிலோ, சென்னை மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் ஆலயத்திலோ ஸ்ரீரங்கம் ஆலயத்திலோ கடவுளை வணங்குகையில், வணங்குவோர் யாவரிடமும் சில விநாடிகளேனும் அன்பு பரிணமிக்கின்றது. காரணம், பல கோடி யுகங்களுக்கு முன் ஸ்ரீராமரால் அன்புடன், பக்தியுடன் வழிபடப்பட்டவையே இம்மூன்று மூர்த்திகள் அல்லவா! அவ்வன்பே தேயாமல், தெய்வப் பிரகாசத்துடன் சற்றும் குறையாமல் இன்றும் பிரகாசித்து அனைவர்க்கும் அருள்கின்றது!

ஸ்ரீராமரின் வம்சாவளியினர் கொண்ட பக்தி இம்மூர்த்திகளிடம் நிறைந்திருப்பதால், நாம் தரிசிக்கையில் இச்சுயம்பு மூர்த்திகளிடம் எழுகின்ற அன்புக் கதிர்கள் நம்முடைய அன்பு நாளங்களை ஆக்கப்படுத்துகின்றன. இந்த அன்புதான் பக்தி ஆகும்.

எனவே தினமும் இல்லத்தில் சந்தனம் அரைத்து சுவாமிக்கு இட்டு வழிபட்டு வர தூய அன்புப் பரிணாமம் ஏற்படும் என்பது திண்ணம். கணவன், மனைவி, குழந்தைகளிடையே புனிதமான அன்பு விருத்தியாகும் சந்தன மணமும் காற்றில் நிரவி சமுதாய அமைதிக்குத் துணைபுரியும். இதற்காகவே கடந்த சித்திரைச் சதய நாளில் தஞ்சாவூர் அருகே தாழமங்கைத் தலத்தில் நம் திருஅண்ணாமலை ஆஸ்ரமம் சார்பாகச் சமுதாய அன்பு வேண்டி, சந்தனக் காப்பு சார்த்தப்பட்டது.

தவசிமடை

தவசிமடை ஸ்ரீமகாலிங்க சுவாமி ஆலயம்

பரத்வாஜர், வசிஷ்டர் போன்ற மகரிஷிகளும், குப்பைச் சித்தர், அழுகணிச் சித்தர், கடுவெளிச் சித்தர் போன்ற சித்தர்களும், பர்ணசாலைகளும், சிவக் குடில்களும் கொண்ட தலம்! மக நட்சத்திரத்தவர்கள் வழிபட வேண்டிய ஆயுட் காலத் தலம்!

அருந் தபஸ்விகள் ஆயிரமாயிரம் உறைந்த சிவகுருத் தலம்! பரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் வழிபட வேண்டிய மகத்தான திருத்தலம்!

திண்டுக்கல்லில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ளதே தவசிமடை ஸ்ரீமகாலிங்க சுவாமி சிவன் கோயில் ஆகும். தவசிமடை என்ற பெயருக்கு ஏற்ப, தவக்கனலும், தவப் புனல்களும், தவப் பயன்களும், மடை திறந்த வெள்ளம் போல், ஒரு யுகத்தில் பொங்கிப் பொலிந்த அற்புதச் சிவத்தலமே தவசிமடை ஆகும். தற்போதும் இத்தவசக்திகள் இங்கு பூரித்துக் கிடப்பினும், இங்கு முறையாக ஆலய வழிபாடுகள் நடந்திட வழிவகைகள் செய்தால் தாமே இப்பலாபலன்களை மனித சமுதாயம் அடையலாகும்.

தற்போது முறையான ஆறுகால வழிபாடுகள் இன்றி, பக்தர்கள் அதிகம் வராமை காரணமாக, தவசிமடை ஆலயமும் சிதிலமடைந்து, தெய்வீக சக்திகள் மறைந்துள்ள புண்ணிய பூமியாக, இன்றைக்கும் பலரும் அறியாததாக இருப்பதே தவசிமடம் கிராமத் தலம் ஆகும். இதனைச் சீர்படுத்தி இதன் தொன்மையான சிறப்புகளை மீண்டும் கலியுகம் அடையுமாறு செய்வது பக்தர்களின் கடமையாகும்.

ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் தவசிமடை

கலியுகத்தில் தவசக்திகள் நிறைந்த தவசிமடை!

தவசி மடம், தபஸ் விராடம், தபஸ்விக் கூடம் என்றெல்லாம் பல புராதனப் பெயர்களைக் கொண்டு இங்கு பூரித்திருந்த பிரம்மாண்டமான சிவாலயமானது, தற்போது சிதிலமடைந்து ஓரிரு சிறு சன்னதிகளுடன், தக்க பூஜைகளின்றிக் கலியுகத்தில் மிகவும் ஜீரணமாகிக் காணப்படுவது மிகவும் வேதனை தருவதாகும்.

“மக நட்சத்திரத்தார் ஜகத்தை ஆள்வார்” என்ற ஆன்றோர் மொழி உண்டல்லவா! மக நட்சத்திரத்தில் பிறந்தோர், தக்க சற்குருவின் வழிகாட்டுதலுடன், தான, தர்மங்களையும் சிறப்பான தவங்களையும், பூஜைகளையும் மேற்கொண்டிடில், ஜனக மகாராஜா போல் அரசு, நிர்வாகம், இறைமுறை, உலகியல், இல்லறம் என அனைத்துத் துறைகளிலும் ஜகத்தில் (பூவுலகில்) பிரசித்தி ஆவதற்கான ஆன்ம சக்தியைப் பூண்டுள்ளனர் என்பதையே இந்த மூதுரை மொழி சுட்டிக் காட்டுகின்றது.

மேலும் கேது கிரக நட்சத்திரமாகவும் மகம் விளங்குவதால், மக நட்சத்திரத்தில் பிறந்தோர், கேதுவிற்கு ப்ரீதியான நாட்களில், இங்கு முறையாகப் பூஜித்து வந்தால், அபூர்வமான சக்திகள், தவப் பலன்கள், சித்திகள் கிட்டலாகும்.

தவசிமடை ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இரண்டு அம்பிகையர் அருள்பாலிக்கின்றனர். சன்னதியில் நேரடியாக அல்லாது பக்கவாட்டில் அமைந்து அம்பிகையர் அருள்பாலிப்பதால் இங்கு அம்பிகையரை நேரடியாகத் தரிசிக்க இயலாது.

பல ஆண்டுகளாக, பெண்கள் வெளியில் இருந்தே அம்பிகையரைத் தரிசிக்கும் வழக்கமும் இங்கு நிலவுகின்றது. ஆதி காலத்தில், இத்தலத்தில் பல்லாயிரக் கணக்கான மகரிஷிகளும், துறவிகளும் கடுமையான நிஷ்டையில் இருந்து தவம் பூண்டிருந்தமையால், பெண்கள் தங்களால் துறவிகளுக்கு இடையூறு வரலாகாது என்பதற்காகச் சற்றுத் தூர இருந்தே, நின்று தரிசித்துச் செல்லும் வழக்கமானது தற்போது இவ்வாறு மருவி உள்ளது.

மகத்தவ மகத் திருத்தலம்

தவமுறையில் மகத்தவம் என்ற ஒன்றுண்டு. அதாவது சற்குரு அளிக்கும் ஒரு இறைப்பணியைத் தொடர்ந்து ஆற்றுவதே மகத்தவம் ஆகும். இத்தகைய மகத்தவ சித்திகள் நிறைந்த தலமே தவசிமடை. உதாரணமாக ‘அருகம்புல் மாலையாக்கு!” என்று சற்குரு ஆணையிட்டால் அவரே ‘போதுமானது!’ என்று சொல்லும் வரை, தொடர்ந்து அருகம்புல் மாலையைக் கட்டுவதே மகத்தவம் ஆகும். இத்தகைய மகத்தவ மாமுனிகள் அருந்தவம் புரிந்த தலமே தவசிமடை!

இங்கு தவத்திரு நாட்களான மகம், பஞ்சமி, சஷ்டி, ஏகாதசி, துவாதசி, பிரதோஷம், மாத சிவராத்திரி போன்ற நாட்களில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வதுடன் மகரிஷிகளுக்கும், தபஸ்விகளுக்கும் மிகவும் பிடித்தமான அரிசிப் பொரியாலான பண்டங்களைப் (பொரி உருண்டை) படைத்துத் தானமாக அளித்து வருதலால், எப்போதும் கஷ்டத்தையே வாழ்க்கையில் சந்தித்து வருபவர்கள் நன்னிலை அடைவர்.

பரத்வாஜ மகரிஷி விஸ்தார மகயோகம் பூண்ட தலம்!

பரத்வாஜ கோத்திரத்தைச் சார்ந்தவர்கள் அடிக்கடி இங்கு வழிபட வேண்டும். ஏனெனில் பரத்வாஜ மாமுனி, தம்முடைய திருமேனியை இங்கு விஸ்தாரமாக்கி, விஸ்தார மகயோகம் பூண்ட தலமாதலால் இங்கு, பரத்வாஜ மாமுனி, தலை, பாதம் வைத்து விஸ்தார மகயோகம் பூண்டதை உணர்த்தும் வகையில், தலைமாட்டுக் கால்மாட்டுப் பகுதிகள் இருந்த நிலையைக் குறிக்கும் கற்களாலான மேடுகள் பதிக்கப்பட்டுள்ளன. பரத்வாஜ மாமுனி விஸ்தார சயன யோகம் பூண்ட இடத்தைப் பலரும் மிதித்துத் தாண்டிச் செல்வதால், இதனை அருந்தவக் கூடமாக ஆக்கிட, பக்த கோடிகள், குறிப்பாக மக நட்சத்திரத்தாரும், பரத்வாஜ கோத்திரத்தாரும் முன் வர வேண்டும்.

இவ்விடத்தில் தியானம், யோகம், ஆசனம் பூணுவதால், மகத்தான யோக சக்திகள் எளிதில் கிட்டுவதைக் கண்கூடாகக் காணலாம். இம்மண்ணின் மகிமையே இதற்குக் காரணமாகும். இப்போதும் பல சித்தர்கள், மகான்களின் ஜீவ சமாதிகளை இங்கு தரிசித்திடலாம். ஸ்ரீராமர், பரத்வாஜ ரிஷியை தரிசித்த தலங்களுள் இதுவும் ஒன்று.

மிகவும் பழமையான ஆலயம், எண்ணற்ற மகரிஷிகள், சித்தர்கள் இன்றும் பூஜிக்கின்ற தலம். இவ்வாலயத்தைச் சீரமைத்து பூஜைகள் நன்கு நிகழ ஆவன செய்வது தவம் நாடும் பக்தர்களின் பெருங் கடமையாகும்.

திருஅண்ணாமலையும் திருக்கயிலையும்

திபேத்தியர்கள் பெரிதும் போற்றுவதும், தற்போது சீனாவில் உள்ளதுமான திருக்கயிலாய மலை எனப்படும் Mount Kailashற்கும், பிரபஞ்சத்தின் ஆன்மீக மையமாம் அருணாசலமாகிய திருஅண்ணாமலைக்கும் உள்ள தெய்வீகப் பிணைப்பு நம் ஐம்புலன்களுக்கும், மானுடப் பகுத்தறிவிற்கும் அப்பாற்பட்ட, சற்குருவால் மட்டுமே உணர்த்தப் பெற வல்ல, பரிபூரண இறைமைப் பொருளாகும். திருக்கயிலாய மலையின் விஸ்தாரமும் வானளாவியதுதான்! ஆனால் நம் தூலக் கண்கள் காண வல்ல நிலைக்கு ஏற்ப, சிறிய அளவிலேயே இன்னமும் திருக்கயிலாயம் நம் கண்ணுக்குத் தெரிகின்றது.

அதிகப் பணச் செலவுகளுடன், பல பிரயாணக் கட்டுப்பாடு நியதிகள் நிறைந்துள்ள தற்காலத்தில், அனைவராலுமா திருக்கயிலாயப் பிரயாணம் செல்ல முடிகின்றது ?

திருக்கயிலாயத் தரிசனப் பலன்களைத் தரவல்ல அருணாசல தரிசனங்களும் சில உண்டு. குருவருள் மூலமாகவே அடைய வல்லவை இவையாவும்! பக்தி சிரத்தையுடன், ஆழ்ந்த நம்பிக்கையுடன், சற்குருவைச் சரணடைந்து உய்த்துணர வேண்டிய தெய்வானுபூதிகளில் இவை அடங்கும்.

ஆதிமுதல் பிரணவஜோதி, பிரணவஒலிச் சங்கமமே திருக்கயிலாயம்!

அருணாசல மகத்துவத்தைப் புலனாக்கும் மற்றொரு லிங்க வடிவமே திருக்கயிலாயம் ஆகும். அருணையின் கருணைச் சுயம்புப் பிரணவ சுயஜோதி வடிவே Mount Kailash எனப்படும் திருக்கயிலாய மலை!

ஜோதிகளுள் ஆதிமூல முதல் ஜோதியே (first sound of the universe) பிரணவ ஒலியேயாம். இந்த இரண்டு ஆதிமூலங்களும் அருணாசலத்தில் ஐக்யமாகி கொண்டு திருக்கயிலை வடிவாய் உற்பவித்தன! எனவே ஆதிசிவனே உறைந்திடும் பிரணவச் சுயம்பொலியோடு அருணாசலத்தில் ஐக்யமாகி, உற்பவித்துத் திருக்கயிலாயத் தோற்றம் பெற்றது.

இறைவனே, ஜீவன்கள் தம்மை உணரும் வகையில் தன்னைத்தானே ஆக்கிக் கொண்டதான, பரப்பிரம்மத்தின் சுயம்பு லிங்க வடிவந்தானே திருஅண்ணாமலை! இதில் ஆதிமுதலில் உற்பவித்த முதல் பிரணவ ஒளியொலிச் சங்கம ரூபமே திருக்கயிலை! அதாவது அருணாசலத்தின் ஆதிமுதல் பிரணவ ஜோதியின் ஒளியொலித் (merger of first light and first sound) தரிசன வடிவமே திருக்கயிலாயம்! வடிவற்று, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அரூவமான இறைவனை, நாம் உணரும் வகையில் பல தரிசன வடிவுகளில் காட்டுவதே அருணாசலமும், திருக்கயிலாயமும் ஆகும்.

கயிலையிலும் காண்பீர் அருணைமலை தரிசனம்!

கயிலை மலையின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு குறித்த தரிசனம் அருணாசல வடிவாகும். சிவப் பரம்பொருள் அகஸ்தியரை நோக்கி, “தென்திசை சென்று ஏகுவாய்!” என அருளிச் செப்பிய தரிசனப் பகுதி இதுவேயாம்! இங்கிருந்து தெற்கு நோக்கி நின்று, பக்தியுடன் வழிபட்டிட, பாக்யம் உள்ளோர்க்கு, அருணாசல தரிசனம் இங்கு நிச்சயமாகக் கிட்டும். ஆம், திருக்கயிலையிலும், திருஅண்ணாமலை வடிவு நிச்சயமாக உள்ளதே! சற்குருவின் திருவருளின்றி இதன் காரணப் பொருளை அறியலாகுமோ?

திருஅண்ணாமலை மலை தரிசனங்களிலும் கயிலாய தரிசனங்கள் நிறைய உண்டு. குறிப்பாக, பக்தி சிரத்தையுடன் திருக்கயிலாயத்திற்குச் சென்று வந்தவர்கள், அருணாசல கிரிவலம் வருகையில், திருக்கயிலாயத்தில் அவர்கள் கண்ட பல கயிலாய மலை தரிசனங்கள் அவர்களுக்கென்று விசேஷமாகத் திருஅண்ணாமலையிலும் கிட்டிட, இறைவன் மகத்தான அருள்புரிகின்றான். இதுவே திருக்கயிலாயம் சென்று வந்த பலன்களைப் பரிபூரணம் ஆக்குவதாகும். கூட இருப்பவர்களுக்குக் கூட அத்தரிசனங்கள் வேறுவிதமாகத் தோன்றும். உண்மையில் இவ்வாறு திருக்கயிலாயத் தரிசன பலன்கள் பரிபூரணம் அடைவது திருஅண்ணாமலையில் தான்!

ஏனென்றால் திருக்கயிலாய தரிசனங்கள் யாவும் உற்பவிக்கும் ஆதிமூல அருட்தலமே அருணாசலமன்றோ! பிரபஞ்சத்தின் தெய்வீக மையமாகவே அருணாசலம் பொலிவதால் அனைத்தும் இங்குதாமே தோற்றமும், முடிவும், ஐக்கியமும் கொள்கின்றன.

அருணை மலை தரிசனங்கள் காட்டும் ஆண்டவ தரிசனங்கள்

வடிவற்ற இறைவன் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தின் வடிவாகவும் காட்சி தருகின்றான். ஆனால் அனைத்திலுமா நம்மால் இறைவன் இருப்பதாக உணர முடிகிறது? எனவே கல், சுதை, பஞ்சலோகம் போன்ற வடிவுகளிலேயே நம்மால் இறைவடிவை ஏற்க முடிகிறது! எனவே கலியுக மனித மனோ நிலைகளுக்கு ஏற்ப, இறைவனுடைய துரீய, சூக்கும, காரண, காரிய வடிவுகளின் பரிபூரணமான திருஅண்ணாமலையை கிரிவலம் வரக் காரணமே எண்ணற்ற மலை தரிசனங்களின் மூலம் இறைவனை உய்த்திடவேயாம்!

ஆனால் தற்போது வேண்டுதல் நிமித்தமாகப் பலருக்கும் மிக, மிக லௌகீகமாகவே அருணாசல கிரிவலம் வந்திட்டாலும், கிட்ட வேண்டிய ஞானப் பலன்களும் தாமாகவே வந்தடையும். இதனை உணரவே தியானமும், யோகமும் உதவுகின்றன.

குணங்களற்ற இறைவனின் அரூப (வடிவற்ற) நிலையை நாம் உணரும் வண்ணம், ஜோதிமய, உருவவடிவுடை குணத்ததாக, அவரவர் ஞானம், அறிவு, தெளிவுடைமை, பூர்வஜன்ம பலாபலன்கள், பக்தி, நம்பிக்கைக்கு ஏற்ப, உணர்த்துபவையும் எண்ணற்ற அருணாசல மலை தரிசன பலாபலன்களாகும், அருணாசல கிரிவலத்தில், கிட்டும் பல மலைத் தரிசனங்களுக்கே இவ்வளவு தெய்வீக மகத்துவம் என்றால், அருணாசலத்தின் பரிபூரணத்தை என்றுதான், எப்படித்தான் உணர்வது? குருவருளின்றி அருணாசலத்தை ஒரு சிறிதும் உணர இயலாது என்பதை இனியேனும் உணர்க!

அனைத்து வகைகளிலும் முக்தி தரும் அருணாசல தரிசனங்கள்!

ஞான மார்க்கம், கர்ம யோகம், யோகப் பூர்வம், நாத யோகம், துறவறம், பக்தி மார்க்கம், இல்லறம் என்று பல வகைகளிலும் இறைவனை உணர்த்த வல்லதும், சகல லோக ஜீவன்களுக்கும் முக்தி, மோட்ச நிலகளை அளிக்க வல்லதும் அருணாசலமே என நாமறிவோம்! ஆனால் மனித சமுதாயமோ, வெறும் மனித (நல்) விருப்பங்களை நிறைவேற்ற வல்லதாகவே அருணாசல மகிமையை அறியாமையால் கருதுவது மனிதனின் பகுத்தறிவு மங்கி இருப்பதையே குறிக்கின்றது.

விளக்கில் ஏற்றப்படும் ஜோதியின் வடிவங்கள் பலவாக மாறிக் கொண்டே இருப்பினும், விளக்கு ஜோதி ஒன்றே ஒன்றாய்த் துலங்குவதுதானே! அனைத்து வகை ஜோதிகளும் அருணாசல ஜோதியில் உதித்தவையே! அனைத்து ஜீவன்களும், ஜடப் பொருட்களும் உணரும் வகையில் ஜோதி ஸ்வரூபத்தில், அழல் வடிவில் இங்கு இறைவன் பல கோடி யுகங்களிலும் தோன்றி உறைந்து, நம் கண்களால் காணும் வகையில் ரத்தினம், வைரம், வைடூரியம், முத்து, பொன், வெள்ளி, தாமிர மலைப் பருப்பொருள் வடிவுகளிலும் தோன்றி, கலியுகத்தில், நாம் நன்கு காணும் வகையில் கல் வடிவச் சுயம்பு லிங்கமாய் அமைந்திருப்பது மனித குலத்தின் பெரும் பாக்யமேயாம்.

அனைத்து இறைவடிவுகளும் ஆவது அருணை இறைவளாகத்திலேயே!

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து சிவலிங்கங்களையும், சுயம்பு மூர்த்திகளையும், அர்ச்சாவதாரங்களையும், ரிஷிப் பிரதிஷ்டை, அசுரப் பிரதிஷ்டை, கந்தர்வப் பிரதிஷ்டை, மானுடப் பிரதிஷ்டை, தானிய லிங்கம், வெண்ணெய் லிங்கம், மாவு லிங்கம் என அனைத்து இறைவடிவுகளையும், எல்லாம் வல்ல பரம்பொருள், தன்னுடைய சுயம்புத் திருமேனியாம் அருணாசலத்தில் இருந்து உற்பவிப்பவையே! இது நிகழ்வதும் இறைப் பெருங்கருணையால் தான்!

பூகோள ரீதியாக, நாம் நினைப்பது போல், அருணாசல மலை உயரம் வெறும் 2260 அடி உயரமானது மட்டுமல்ல! எந்த விண்மீன், கோள, நட்சத்திர மண்டலத்திற்குச் சென்றாலும்,  எங்கும் அருணாசல தரிசனம் கிட்டிடும் எனில் அடிமுடி காண இயலா அழலனே அருணாசலம் என்பது புலனாகின்றது அல்லவா! சந்திர மண்டலம், சூரிய மண்டலம் என அனைத்து கோள மண்டலங்களிலும் அண்ணாமலை நிரவியுள்ளது!

பனி உறைக் கயிலையில் பக்தியில் உறையும் லாமாக்களின் நமஸ்காரப் பிரதட்சிணம்!

உடலையே உறைய வைக்கும் பனிக்கட்டிப் பாதையில், தரையில் ஒவ்வொரு முறையும் வீழ்ந்து, வீழ்ந்து வணங்கி நமஸ்காரப் பிரதட்சிணமாக, மிகுந்த பக்தியுடன், குருவருளுடன் திருக்கயிலாய மலையைக் கிரிவலம் வரும் திபேத்திய லாமாக்களில் யோக ஒளியில் சித்தி பெற்றோர், இன்றைக்கும் தூல, சூக்கும நிலைகளில், ஒளிச் சரீர வடிவுகளில் அருணாசலம் ஏகி வந்து, அருணாசல கிரிவலம் வந்து, திருஅண்ணாமலையில் குறித்த பகுதியில் திருக்கயிலைத் தரிசனத்தைப் பெறுகின்றார்கள் என்பது பலரும் அறிந்திடாத தெய்வீக ரகசியமாகும். காலத்தை வெல்லும், கொண்ட உருவத்தைக் கடக்கும் காலாதீத யோகத்தில் வல்லவர்க்கே இறைவனால் அளிக்கப்படுகின்ற திக்கயிலைத் தரிசனப் பிரசாதமிது!

எனவே, இன்றும் குறித்த நாளில், குறித்த யோக, ஹோரையில் அருணாசலத்தைக் கிரிவலம் வருவோர்க்கு, மங்கோலியப் புனித பூமியில் உறைந்து பல நூற்றாண்டுகள் யோகக் கலைகளைப் பயிற்றுவித்த போகர் சித்தரே திருஅண்ணாமலையில் பக்தியுடனும், உடல் வருத்தம் பாராமலும் திருக்கயிலாய தரிசனம் பெற்ற இத்தகையோர்க்கு இறையுறை அண்ணாமலையிலேயே பல திருக்கயிலாய தரிசனங்களைக் காட்டி அருட் துணைபுரிகின்றார். திருக்கயிலாயத்திலும், அண்ணாமலையில் காணப் பெறும் ஒரே மாதிரியான பல தரிசனங்களைப் பெற்றோர் இன்றும் உண்டு.

அருணாசல “க்ஷேத்திர தீப சாகரம்” கிரிவல முறை!

திருக்கயிலாய தரிசனம் மட்டுமல்லாது, பாரதம் முழுவதும் உள்ள ஆலயங்களை, குறிப்பாக, தமிழகத்தில் அனைத்து ஆலயங்களையும் ஒருவர் தம் வாழ்நாளில் தரிசிக்க இயலுமா என்று எண்ணி ஏங்குவோர் நிறைய உண்டு. இவர்கள், சனிப் பிரதோஷ நாளில், சற்குரு காட்டும் அருள்வழி முறையில் விரதம் பூண்டு, சித்தர்கள் காட்டுகின்ற “க்ஷேத்திர தீப சாகரம்” என்ற வகையில், திருஅண்ணாமலையில் வடக்கு கோபுரத்திலிருந்து கிரிவலத்தைத் தொடங்கி, “சோம சூக்தப் பிரதட்சிண முறையில்” திருஅண்ணாமலையை கிரிவலம் வந்திடில், பூலோகத்தின் அனைத்து ஆலய தரிசனங்களையும், திருஅண்ணாமலையிலேயே கண்குளிரப் பெற்றிடலாம். ஆனால் குருவருளுடன் மிகுந்த தபோபலம் பூண்டோர்க்கே இது கிட்டும்.

எனவே திருக்கயிலாயம் என்பது திருஅண்ணாமலையில் உற்பவிக்கும் அருணாசல த்வீபத்தின் பரிபூரண பிரணவஜோதி அம்சமாகும். இத்தலம் உயர்ந்தது, அத்தலம் உத்தமமானது என்ற ஒப்பு நோக்குப் பார்வை இங்கு கூடாது.. காசியின் ஸ்ரீவிஸ்வநாத லிங்கமும், ராமேஸ்வரத்தின் ஸ்ரீராமநாத லிங்கமும் முக்தி, மோட்ச நிலைகளைத் தரவல்லவையே! அவரவர் கொண்டுள்ள பக்தி நிலைக்கேற்ப, கொண்டுள்ள கர்ம வினைப் பாங்கிற்கு ஏற்ப, சித்திக்கும் அருள்வழி முறைகள் மாறுபடும். என்வே இதை விட அது உயர்ந்தது, அதைவிட இது சிறந்தது என்றெல்லாம் தெய்வ மூர்த்திகளையும், புனிதத் தலங்களையும், புண்ணியத் தீர்த்தங்களையும் சாதாரண மனித அறிவால் எடை போடுதல் கூடாது.

உருவ வழிபாட்டுத் தாத்பர்யம்!

பூர்வ ஜன்மங்களில், குருவருளுடன் பல ஆலயங்களில் திருப்பணிகளைச் செய்து, பல ஆலயங்களைத் தரிசித்தவர்கள்தாம், இறைவனை அருவமாக, வடிவற்ற பாங்கில் அறிந்து, துய்த்துணரும் ஞானத்தைப் பெறுவர். ஆனால் கடும் உழைப்பை மறந்து, வேதங்களைப் போற்றாது, பக்தி குறைந்தமையால்தான் மனிதனுடைய பகுத்தறிவு காலப்போக்கில் மங்கத் தொடங்கியது. எனவே இறைவனும் பெருங்கருணை கொண்டு, மனிதர்களால் பகுத்தறிவு மங்கிடும் நிலையிலும், வடிவற்ற இறைமையை, மனித குலம் உணரும் வகையில் இறைவனின் பல வடிவங்களைக் காட்டும் (விளக்கு) ஜோதி வழிபாடு தோன்றியது. இகபர சுகங்களையே மனிதன் நாடி, நாடி வாழ்ந்திட, ஜோதி வடிவமும் நாளடைவில் கண்டு, தொட்டு, உணரும் தெய்வ மூர்த்தி வடிவ வழிபாட்டில் கூடிற்று.

இறைவனைத் தூய வடிவில் கண்டு துய்க்கும் பகுத்தறிவை மனிதன் துல்லியமாக இழந்தமையால், ஆலய வழிபாடுகள் விரிவடைந்து, ஆலயங்களையும் நாளடைவில் மனித விருப்பங்களை வேண்டிப் பெறுகின்ற பிரார்த்தனைத் தலங்களாகவே மனித சமுதாயம் ஆக்கிக் கொண்டு விட்டது,
.
ஆண்டவனும் கருணைப் பெருவெள்ளமாய், மனித குலத்தின் குறைகளைத் தீர்த்து, விரும்பிய பல வளங்களில் வேண்டியதைத் தக்க அளவில் தந்து, பிறகு அருள்வளம் காட்ட விழைகின்றான். எனவே வேண்டுதல் தருவானாயும் இறைவன் கலியுலகில் கனிந்து அருள்கின்றான். வேண்டுதல் வேண்டாமை கொள்வோர் அரிதிலும் அரிதாயிற்றே!

இவ்வாறு அருள்வளம் பரிபூரணமாகப் பொங்கும் அருணாசலத்தின் எழுந்த ஓங்கார வடிவுடைத் தூலச் சிவமாய் ஒளிர்வதே திருக்கயிலாய மலையாகும்.

நவநாதச் சித்தர்கள் உரைப்பது போல், “கைக்குள் ஒளிரும் கயிலாசலம் கையை விரித்தால் அருணாசலம்!” என்ற அரிய சித்தர்களின் பரிபாஷை வாக்கில், கோடானு கோடி அர்த்தங்களும், வேத மாமறைக் கதிர்களும் பொதிந்துள்ளன!

“கயிலைத் திருமண்ணும் அருணைத் திருநீறே!” எனக் கடுவெளிச் சித்தரும்

“கயிலைப் பருப்புனல் காட்டும் அருணைத் திருக்கனல் மூட்டம்” என்று குப்பைச் சித்தரும்

“கயிலைப் பித்தன் கருத்துடன் ஒருசேரும் அருணைப் பதம் சுட்டும் கருணைக் கருவே!” என்று அழுகணிச் சித்தரும் அருணாசலத்தின் மகத்துவத்தையும், திருக்கயிலாயத்தின் மகிமையையும் ஐக்யப்படுத்தி அருள்கின்றனர்.

அருணையில் கயிலை, கயிலையில் அருணை என்று சிவாசல மாமறைத் துதி ஓதி, திருவாதிரை கூடும் திங்கட்கிழமையன்று அருணாசல கிரிவலம், வந்திட, திருக்கயிலாய யாத்திரைக்கான நல்வாய்ப்புகள் கிட்டும். திருவையாற்றில் அப்பர் சுவாமிகள் பெற்ற திருக்கயிலை தரிசனம், அருணாசலத்தில் உற்பவித்ததே ஆகும்.

கயிலையே அருணை அருணையுள் கயிலை!

அட்சர நட்சத்திர வியாப்த பூஜை

நட்சத்திரம் அறியாதோர் தம் நட்சத்திரம் அறிய வேண்டிய வழிமுறை!

தம் குலமானிவரையும் (கோத்திராதிபதி) அறிய வல்ல நல்வழி முறை

பலருக்கும் தங்களுடைய பிறந்த நட்சத்திரம் என்ன என்பது கூடத் தெரியாது வாழ்கின்றனர். தவறான பிறந்த தேதியைக் குறித்து வைத்துக் கொண்டு குழம்புகின்றவர்களும் பலர் உண்டு. எங்களுடைய ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தின் சார்பில் திருஅண்ணாமலையில் மாதந்தோறும் ஆஸ்ரமத்தில் நடைபெறும் அருணாசலப் பிரசாத அன்னதானத்திலும் பலரும் மேற்கண்ட வகையில் நட்சத்திரம் அறியாதோர்க்கான நல்வழிமுறைகளை அளிக்குமாறு விண்ணப்பிக்கின்றனர்.

உங்களுடைய குலமாமுனிவரை (கோத்ராதிபதி) அறிவீரோ!

சித்தர்களுக்கு உரித்தான “நாமகரண கிரந்தங்களின்படி”, நட்சத்திரங்களை அறியும் ஆன்மீக நல்வழிமுறைகளும் உண்டு. மேலும் தங்களுடைய கோத்திரம் (எந்த மகரிஷியின் வம்சாவழி என அறிதல்) அறியாதோரும் பலர் உண்டு. உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் ஜாதி, இன, மத பேதமின்றி, ஆதியிலிருந்தே, ஒவ்வொரு மகரிஷியின் பாரம்பரியத்திலிருந்து வழிவழியாக வந்தவர்களே! இந்த ஆதிமூல ரிஷியே கோத்ராதிபதி (குலமாமுனிவர்) ஆவார். எனவே ஒவ்வொருவரும் தம் குலமகரிஷியை (குலமாமுனிவர்) முதலில் அறிந்து கொள்ள வேண்டும். எனவே முனிபுங்கவர்களின் வழியில் வந்தவர்களே நாம் அனைவரும்! இதில் எவ்வித ஜாதி, மத, இனப் பாகுபாடும் இல்லை. ஆனால் காலப்போக்கில் கோத்ராதிபதிகளைத் (குலமாமுனிவர்) துதிக்கும் வழக்கம் மறைந்தமையால், பலருக்கும் தங்கள் குடும்ப குலமாமுனிவரின் பெயரே மறந்து விட்டது.

நட்சத்திரம் அறியாதோரும் தமக்குரிய நட்சத்திரத்தைத் தெரிந்து பயன் பெறவும், அகஸ்தியர்  மகரிஷி, பரத்வாஜ மகரிஷி, சாண்டில்ய மகரிஷி, ஆத்ரேய மகரிஷி, கௌண்டின்ய மகரிஷி போன்று, தம் குடும்பத்திற்கான குலமாமுனிவரையும் அறிவதற்கும் உதவும் “அட்சர வியாப்த தியான முறைகள்” ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்களில் நன்கு விளக்கப்பட்டுள்ளன. தங்களுடைய நட்சத்திரத்தை அறிந்தோறும், கோத்ராதிபதியை அறிந்தோரும், கோத்ராதிபதியை அறிந்தோரும் கூட இவற்றைக் கடைபிடிப்பதால் நட்சத்திர சக்திகள் விருத்தி ஆவதுடன், இதுவரையில் கோத்ராதிபதிகளை முறையாக வணங்காமைக்கான பரிகார வழிகளும் கிட்டும்.

கோளிலித் தலங்கள் தீர்க்கும் தோஷங்கள்!

தங்களுடைய பிறந்த நட்சத்திரத்தை அறியாதோர் நட்சத்திரத்தையும், குலமாமுனிவரையும் அறியவும் அமாவாசை அன்றும் பௌர்ணமி நாட்களிலும் ஒரே ராசியில் கிரகச் சங்கமங்கள் ஏற்படும் நாட்களிலும், அனைத்து நவகிரக மூர்த்திகளும், ஒரே திசையை நோக்கும் குறித்த “கோளிலித்” தலங்களிலும் (வைதீஸ்வரன் கோயில், பந்தணைநல்லூர், திருக்குவளை), மதுரை அருகே கள்ளிக்குடியில் உள்ள ஸ்ரீகுலசேகரப் பெருமாள் ஆலயத்திலும் குறித்த பூஜைகளுடன் 108 திரவிய ஆஹூதிகளுடன் கூடிய “நவகிரக ஹோமம்” ஆற்றி வழிபட்டு வர வேண்டும்.

ஸ்ரீரங்கம்

இதனால் சிறப்பான பலன்களை அடைவதுடன், தமக்குரிய நட்சத்திரம், குலமாமுனிவரையும் பெறும் நல்வழிமுறைகளும் கிட்டிடும். நவகிரகங்களே கலியுகத்தில் ஜீவன்களின் கர்ம பரிபாலனத்தை மேற்கொள்வதால், நவகிரக வழிபாடு அவரவர் நட்சத்திர சக்தியையும், கோத்ராதிபதிகளின் ஆசியையும் பெற்றுத் தரும்.

“ஆகாச நவகோள சக்தித் தலங்கள்!”

பல திருத்தலங்களில் நவகிரகங்கள் அமையப் பெறவில்லை. (திருவான்மியூர் குணசீலம் ஸ்ரீதார்மீகநாதர் திருக்கோயில், தாழமங்கை). இத்தகைய தலங்களில், ஆலய கோபுரங்களில் உள்ள கும்பங்கள், கலசங்களில் “ஆகாச நவகோள சக்திகள்” மிகுந்திருப்பதால் இங்கு மூலவரையும், அம்பிகையையும் ஒன்பது வகை வாசனைப் புஷ்பங்களால் அர்ச்சித்து, பஞ்சமித் திதி, வைதிருதி யோக நாள், ஞாயிறு, சனிக் கிழமை, ரோகிணி, கார்த்திகை நாட்களில் அடிப் பிரதட்சிணம் செய்து வலம் வந்து வழிபட்டிட, நவக்கிரக வழிபாட்டிற்குரிய நட்சத்திர பலன்களை எளிதில் பெற்றிடலாம்.

பொதுவாக, ஒன்பதும் அதற்கும் மேற்பட்ட கும்ப கலசங்களுடன் கூடிய ஆலய கோபுர தரிசனம் மிகவும் விசேஷமானதாகும்.

நவகிரக மூர்த்திகளுக்குத் திருமண உற்சவ பூஜைகள்!

சந்திர, சூரிய கிரணங்கள் ஏற்படுகின்ற நாட்களும் பௌர்ணமியாகவும், அமாவாசையாகவும் அமைவதால், நவகிரகங்கள் தம்பதி சகிதம் அருளும் குறித்த சில தலங்களில் (கோயம்பேடு, சூரியனார் கோயில்), கிரகண நாட்களில் அபிஷேக ஆராதனைகளுடனும், நவகிரக மூர்த்திகளுக்கும் திருமண உற்சவ பூஜைகளை நிகழ்த்தியும் வழிபடுவதால் தம்பதியரிடையே நல்ல ஒற்றுமையான நல்வாழ்வு சிறக்கும். கோத்ராதிபதிகளின் பரிபூரண ஆசிகளும் கிட்டும்.

பாஸ்கர பூஜைத் தலங்கள்

திருமகேந்திரப்பள்ளி, திருக்கானூர், திருச்சி மலைக்கோட்டை, திருநெடுங்களம், திருப்பைஞ்ஞீலி, திருமீயச்சூர், திருநாகேஸ்வரர் கோயில் (கும்பகோணம்), சென்னை பூந்தமல்லி வைத்தீஸ்வரன் கோயில், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், திருஈங்கோய்மலை, திருவாட்போக்கி (அய்யர்மலை), திருக்கண்டியூர், செம்பொனார் கோயில், கரூர் போன்ற இடங்களில், குறித்த தமிழ் மாதத் தினங்களில், மூலமூர்த்தியின் மேல் சூரிய கிரகணங்கள் படுகின்றன. இதுவே சூரிய பூஜை அல்லது பாஸ்கர பூஜையாகும். இத்தகைய சூரிய பூஜைத் தலங்களிலும், லிங்கத்தின் மேல் குறித்த பௌர்ணமி அன்று சந்திர கிரகணங்கள் படியும் திங்களூர் (திருவையாறு அருகே) ஆகிய தலங்களிலும், சூரிய, சந்திர கிரகண நாட்களில் நவகிரக பூஜைகளைச் செய்வது அபரிமிதமான நட்சத்திர பலன்களைப் பெற்றுத் தரும்.

தானகூப பூஜை

நட்சத்திரம், கோத்ராதிபதி அறியாதோருக்கு சித்தர்களின் கிரந்த முறைப்படி தானகூப பூஜை என்ற முறையில் அறியும் முறை ஒன்று உண்டு. சென்னை அருகே கூவம் ஆலயம், திருச்சி திருஎறும்பூர் அருகே உள்ள “கூத்தைப்பார்” போன்ற சிவாலயங்களில் இப்பூஜையை ஆற்றிட வேண்டும். நன்றாக ஊறும் கிணற்று நீரால் திருமஞ்சனம், அபிஷேக, ஆராதனைகள், நைவேத்யம், பித்ருப் படையல் செய்து பூஜிக்க வேண்டிய முறையே தானகூப பூஜை முறையாகும். இது பற்றிய விளக்கங்களை தக்க சற்குருவை நாடி அறியவும்.

எனவே தம் நட்சத்திரம் மற்றும் குலமாமுனிவரையும் அறியாதோர், சற்குரு காட்டும் மேற்கண்ட வழிபாட்டு முறைகளைக் கடைபிடித்து, தெய்வீக நெறியில் நன்முறையில் நிலைத்திட நவகிரக அருள்பெற வேண்டுகிறோம்.

மேற்கண்ட வழிபாடுகளை நிகழ்த்திய உடனேயே நட்சத்திரம், கோத்திரம், அனைத்தும் தெரிந்தாக வேண்டும் என்று எண்ணாதீர்கள்! தொடர்ந்து இவ்வகையில் பூஜித்து வந்திட, நட்சத்திரம், குலமாமுனிவரை அறியும் நல்வழி முறைகள் கைகூடும். ஆழ்ந்த நம்பிக்கையும், பொறுமையுமே சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரவல்லவையாம்.!

நவகிரக மூர்த்திகள்

பூலோக ஜீவன்களாகிய நமக்கு நவகிரக வழிபாடே, நமக்குரிய கர்ம பரிபாலன பூஜைகளுள் ஒன்றாம். அயல் நாடுகளில் நவகிரக பூஜை இல்லையே என எண்ணாதீர்கள். பூலோகத்தின் தெய்வீக மயமாக பாரத நாடு துலங்குவதால் உலக மக்கள் அனைவருக்குமாக வழிபட வேண்டிய பொதுச் சமுதாயப் பூஜைக் கடமை பாரதக் குடிமகன்களாகிய நமக்கு உண்டு! எனவே, நமக்காக இல்லாவிட்டாலும் உலக ஜீவன்களின் நல்வாழ்விற்காக நாம் தினமும் ஆலய வழிபாடு ஆற்றுதல் வேண்டும்!

ஆதிமூல நவகிரக மூர்த்திகள் நிகழ்த்தும் ஆலய பூஜைகள்!

விஞ்ஞான விளக்கப்படி சந்திரனும், பூமியும் சூரியனை வலம் வருகின்றன. சூரியனே ஜீவ வாழ்க்கைக்கு ஆதாரமான அன்னசக்தியைத் தருவதால், நம்முடைய கர்மவினைகளைப் பரிபாலிக்கின்ற வகையில், சூரியனை முன் வைத்து, அனைத்துக் கோளங்களையும், குறிப்பாக, நவகிரகங்களை வழிபடுதலே நம் வாழ்க்கை நெறிகளில் ஒன்றாகின்றது!

ஓவ்வொரு ஆலயத்திலும் உள்ள சுயம்பு மூர்த்தியையும், அம்பிகையையும் தினந்தோறும் நவக்கிரக மூர்த்திகள் பூஜித்து வலம் வருகின்றனர். இது அனைத்து ஆலயங்களிலும் நடக்கின்ற நம் கண்ணுக்குத் தெரியாத சூட்சுமமான தினசரி தேவ வழிபாடாகும்.

நவகிரக ஆதிமூல மூர்த்திகள் வேறு, நாம் ஆலயத்தில் வழிபடும் காரண நவகிரக மூர்த்திகள் வேறு! தொடக்கத்தில் ஆதிமூல நவகிரக மூர்த்திகள் தோன்றிய போது “ஜீவபரிபாலன” அருட்பணி நவகிரக அருளம்சங்களில் இடம் பெறவில்லை! துவாபரயுக முடிவிலும், கலியுகக் காலம் முழுமைக்கும் நவகிரக அதிபதிகளே ஜீவ பரிபாலனத்தை ஏற்றுள்ளனர்.

ஆதி மூல நவக்கிரக மூர்த்திகள் அந்தந்த தரிசனத்திற்கு வருகையில் தங்களுடைய சூட்சுமமான தெய்வ ஒளி பொருந்திய சரீரங்களையோ, மூர்த்தங்களையோ, சக்திகளையோ அந்தந்த ஆலய (காரண) நவகிரக மூர்த்திகளின் பால் நிலை நிறுத்திச் செல்கின்றனர். இவர்கள் மனித வடிவிலோ வேறு வடிவம் கொண்டோ மூலவரைப் பூஜிக்கின்றனர்.

ஆலயங்களில் நவகிரக சக்திகள் நிறையும் பகுதிகள்

இவ்வாறாக ஒவ்வொரு நாளும் குறித்த ஆலயங்களில் ஆதிமூல நவக்கிரக மூர்த்திகளே வந்து பூஜித்துத் தம் பூஜா பலன்களை ஆலயத்தில் பிரதிஷ்டை ஆகியுள்ள (காரண) நவகிரக மூர்த்திகள், ஆலய கோபுரங்கள், கலசங்கள், தல விருட்சங்களில் தம் பூஜா சக்திகளை நிரவிச் செல்கின்றனர். ஆலயத் தல விருட்சங்களும் நவகிரக ஹோம சமித்து மூலிகையானால் (எருக்கு, அரசு போன்றவை) அத்தலத்தில் நவகிரக சக்திகள் அபரிமிதமாகப் பொழியும்! எனவே தினசரி நவகிரக வழிபாடு எண்ணற்ற பலன்களைத் தருவதாகிறது.

நவக்கிரகங்களை நாள்தோறும் காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் குறைந்தது ஒன்பது முறை வலம் வருதல் மூலம் அவ்வப்போது நவகிரக மூர்த்தங்களில் குடி கொள்ளும் ஆதி மூல நவகிரக தேவதா மூர்த்த சக்திகளின் அருளைப் பெறுதல் எளிதாகும். அந்தந்த நாளுக்கு உரிய ஹோரை நேரத்தில் நவகிரகங்களை வழிபடுதல் விசேஷமான பலன்களைத் தரும்.

நவகிரகங்கள் சூரியனைப் பார்க்கும்
உடையாளுர் திருத்தலம்

ஒவ்வொரு சுற்றுக்கும் ஆயிரமாயிரம் பலன்கள்!

நாம் விண்ணில் சுற்றிக் கொண்டிருக்கும் கோள்களையே நாமும் நவகிரக வழிபாடாகச் சுற்றுவதால் நம் தேகத்தில் பல அபூர்வமான ஆகர்ஷண கோளசக்திகள் தோன்றுகின்றன. எனவேதாம் நவகிரக பிரதட்சிண வழிபாடு மிகவும் முக்கியத்வம் பெறுகின்றது.

ஒரு தினத்தில் முதல் முறையாக நவக்கிரக வலம் வருகையில் ஒன்பது பிரதட்சணங்களுக்கும் ஒன்பது விதமான பெயர்கள் உண்டு.

ஆனால் பலரும் ஒன்பது பிரதட்சிணங்களையும் முறையோடு ஆற்றுவது கிடையாது. சிரத்தை இன்றியும், இயந்திர கதியாகவும், ஏதேனும் குறுக்கு எண்ணங்களுடனும் பிரதட்சிணம் வருவதால் முழுமையான பலன்கள் அமையாது. எந்தச் சுற்று ஓரளவு சிரத்தையுடன் அமைகின்றதோ அந்தச் சுற்றுப் பலன்கள் ஓரளவு கைகூடும்.

தினந்தோறும் மூன்று வேளைகளிலும் நவக்கிரகங்களை வலம் வருதலே சிறப்புடையது. இம்மூன்றில் முதல் சுற்றுக்கு மேற்கண்ட லௌகீகப் பலன்களும், இரண்டாவது சுற்றுக்கு சூட்சும பலன்களும், மூன்றாவது சுற்றுக்கு துரிதாதிகப் பலன்களும் கிட்டும்.

தீர்க்க பலாதிபலா பிரதட்சிணம்

உடனடியாக தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டுமாயின் 51 முறை நவக்கிரகங்களை வலம் வருதல் வேண்டும். இதற்கு தீர்க்க பலாதிபலா பிரதட்சிணம் என்று பெயர்.

ஏனைய ஆறும் ஐங்கூட்டு எண்ணெய்த் தீபப் பிரதட்சிணம் ஒன்பது அகல்களை ஒரு தட்டில் வைத்து நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், பசு நெய், விளக்கெண்ணெய், இலுப்பெண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய் கலந்த ஒன்பது அகல் விளக்குகளைத் தாம்பளத்தில் தாங்கியவாறு பிரதட்சிணம்.

பஞ்ச சூக்த தைல தீபப் பிரதட்சிணம்

மேற்கண்ட பஞ்ச சூக்த தைல தீபப் பிரதட்சிண முறையில் பாடல் பெற்ற தலங்களில் 51 முறை முறையாக நவகிரகப் பிரதட்சணம் செய்திடில் எந்த முறையான காரியங்களுக்கும் தீர்க்கமான முடிவு கிட்டும்.

பெண்கள் சம்பந்தமான வரன் பார்த்தல், உத்யோகம், வீடு, நிலபுலன், உறவு முறைகள் போன்ற பிரச்னைகளுக்கு நல்முடிவு பெற ஒரு தட்டில் தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், ஐந்து வகையான பூக்களுடன், அனைத்து மூர்த்திகளும் நடுவில் சூரியனை நோக்கி இருந்து அருளும் தலங்களில் 11 முறை அடிப்பிரதட்சிணமாக வலம் வந்திட, தார்மீகமான முடிவுகளைப் பெறலாம்.

நவகிரக வழிபாட்டில் விசேஷ கிரக சுற்றுகள்

சூரியன், செவ்வாய், சனீஸ்வர ப்ரீதி போன்று ஏதேனும் குறித்த ஒரு கிரக வழிபாட்டிற்காக நவகிரகங்களைப் பிரதட்சிணம் செய்திடில் ஒவ்வொரு கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில், அந்தந்த கிரக ஹோரை நேரத்தில் அடிப் பிரதட்சிணம் செய்து வழிபட வேண்டும். அதாவது முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கியபின் அந்தந்த கிரக அனுகிரகத்துக்காக மேலும் விசேஷமாகச் சுற்றி வந்து வழிபடுதல் வேண்டும்.

சூரியன் – 10 சுற்றுகள் | சுக்ரன் – 6 சுற்றுகள் | சந்திரன் – 11 சுற்றுகள் | சனி – 8 சுற்றுகள் | செவ்வாய் – 9 சுற்றுகள் | ராகு – 4 சுற்றுகள் – அடிப்பிரதட்சிணம் | புதன் – 5, 14, 23 சுற்றுகள் | கேது – 9 சுற்றுகள் | வியாழன் – 3, 12, 21 சுற்றுகள்

ஆகாய நவகோள்கள் லால்குடி

ஆகாச நவகோள் தலங்கள்

சில தலங்களில் நவகிரக பிரதிஷ்டை இல்லை எனப் பலரும் எண்ணுவர். இதற்குப் பல காரணங்கள் உண்டு. நவக்கிரக தெய்வ மூர்த்தியின் அருள் இல்லாத இடமென்று பிரபஞ்சத்திலேயே கிடையாது. ஸ்தூல ரூபத்தில் கல் விக்ரங்களாய்ப் பெரும்பான்மையான தலங்களில் அருள்பாலிக்கின்ற நவகிரக மூர்த்திகள், சில திருத்தலங்களில் மனிதர்களின் புறக்கண்களுக்குப் புலப்படா வண்ணம் சூட்சும ரூபத்தில் ஆலயக் கலசங்களிலும், மண்டபத் தூண்களிலும், புனிதமான மூலைகளிலும், மேற்புற ஆலயக் கூரையிலும் உறைந்து ஆகாச நவகிரக மூர்த்திகளாகவும் அருள்கின்றனர்.

இந்த சூட்சும ரகசியங்களைச் சித்புருஷர்களே அறிவார்கள். மேலும், பூலோகத்திலுள்ள சில இறைத்தலங்கள் தேவ, கந்தர்வ, யட்ச பூஜைகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. நமக்குரிய நவக்கிரக தேவதா மூர்த்திகள் தேவலோகத்திலும், கந்தர்வ லோகத்திலும் மற்றும் ஏனைய லோகங்களிலும் வெவ்வேறு விதமான நாமங்களில் உருவங்களில் வழிபடப்படுகின்றன. மலைக்கோயில், தாழக் கோயில்களில் நவக்கிரக மூர்த்திகள் சூட்சுமமாய் அமைந்திருப்பர்.

தசாவதார மூர்த்திகள் அமைக்கப்பட்டிருப்பின் அங்கும் நவகிரகங்கள் பொதுவாக இடம் பெறா. அங்கு ஆகாச மூர்த்திகளாக நவகிரக மூர்த்திகள் துலங்குவர். சில ஆலயங்களில் மேல் ஆலய உள்மேற் கூரையில் கிரக ராசி சுதை வண்ணம் இருக்கும். (பூந்தமல்லி ஸ்ரீவைதீஸ்வரன் கோயில், புதுக்கோட்டை ஸ்ரீகோகர்ணேஸ்வரர் ஆலயம், லால்குடி ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் ஆலயம்) மேலும் நவகிரகங்களுக்கான அரிய மூலிகைகளும் உண்டு. இவற்றின் வேர் சக்திகள் ஆலய பூமியில் படர்ந்திருப்பின் அத்தலங்களிலும் நவக்கிரகங்கள் அமையப் பெற மாட்டா !

நவகிரக மூர்த்திகள் தோற்றத்துக்கு முன்னான ஆதிமூலக் கோயில்கள்

நவகிரகங்கள் திருமழபாடி

நவகிரக வழிபாடுகள் பூலோகத்தில் ஏற்படுவதற்கு முன்னரேயே தோற்றுவிக்கப்பட்ட கோயில்களானால் ஆங்கேயும் நவகிரகங்கள் இரா. நவபாஷாணத்தினால் ஆன விசேஷ மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தலங்களிலும் சில இடங்களில் நவகிரக மூர்த்திகள் இருப்பதில்லை. நவகிரக மூர்த்திகள் இல்லை என்று சொல்கையில் அர்ச்சாவதார கல், உலோக மூர்த்திகளாக அமையப்பெறவில்லை என்பது பொருளே தவிர சூட்சும, தூல ரூபங்களில் நவக்கிரகங்கள் இல்லாத இடமே கிடையாது.

பலரும் திருத்தலங்கள் பிரளய கால பூமிப் புலன்களின் எழுச்சியினால், தற்போது இருக்கின்ற தலங்கள் பூமிக்குள் மறைவதும், பண்டைய தலங்கள் புதை ஆராய்ச்சி போல் வெளி வருவதும் உண்டு,

இவ்வாறு மேலெழும்பும் தலங்களில் பல மூர்த்திகள் பூமியின் அடியில் உள்ள லோகங்களுக்கு அருள்பாலித்திட ஏனைய மூர்த்திகளின் சந்நிதிகளே இறை ஆணையாக வெளிவரும். அப்போது பூமிக்குள் அழுந்தியிருக்கும் தெய்வ மூர்த்திகளின் படிவுகள் குழிகளாகவோ, கம்பங்களாகவோ, பாண லிங்கங்களாகவோ, புதைக் கூறுகளாகவோ வெளிவரும். இவ்வகையில் திருமழபாடியில் உள்ள மூன்று குழிகளும், திருப்பைஞ்ஞீலியில் உள்ள ஒன்பது குழிகளும் பூமிபாத நவக்கிரக சக்திகளை பெறுகின்றன.!

திருக்கயிலாயத்தில் ஆதிசிவனின் அருட்சந்நிதிக்குச் செல்லும் வழியில் கயிலாயப் பேறு பெற்றவர்களுடைய திருப்பாதங்களைத் தாங்கும் வண்ணம் பெரும் பேறு பெற்றவர்களே நவகிரக மூர்த்திகள். இதைக் காட்டும் வண்ணமாக சில கோயில்களில் நவகிரக படிகள் அமைவதும் உண்டு.

விண்ணுலக நவகிரகத் தலங்கள்

சில தலங்களில் சித்புருஷர்களே நவக்கிரகங்களை சூட்சும ரூபத்தில் பிரதிஷ்டை செய்துள்ளனர். தேவாதி தேவர்களுக்கும், விண்ணுலக அண்டங்களில் உள்ள உத்தம நிலைகளைப் பெற்றோருக்கும் ஏற்படும் துன்பங்களைக் களைய அவர்கள் சூட்சும நவக்கிரகத் தலங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். இத்தகைய சூட்சும நவக்கிரக மூர்த்திகள் அருளும் தலங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை! இவர்களை பக்தியில் உத்தமப் பெருநிலை அடைந்தவர்கள் தான் பூஜித்துப் பலன் பெற முடியும். சீர்காழி இவ்வகையைச் சார்ந்ததாகும்.!

நவகிரக படிகள் திருபைஞ்ஞீலி

எனினும் தக்க சமயத்தில் இத்தகைய தலங்களில் குறித்த சற்குருமார்களின் மூலம் நவக்கிரக மூர்த்திகள் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்படுவதுண்டு. ஆனால் இதற்கு காலம் கனிய வேண்டும். நவக்கிரகங்கள் அமைந்திரா இடங்களில் தக்க சற்குருவின் அருளாணையுடன் நவக்கிரக ஹோமங்கள் நிகழ்த்தப்படுமாயின் ஹோமத்தின் ஆஹுதிகளை சூட்சும ரூபத்திலேயே நவக்கிரக தேவதைகள் ஏற்று அபரிமிதமான பலன்களை அளிக்கின்றனர் என்பது ஓர் ஆன்மீக இரகசியமாகும்.

ஒன்பது வகையான தீர்த்தங்கள் வடிவிலும் சில தலங்களில் ஜலகல்ப நாயகர்களாக நவகிரக மூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர். ராமநாதபுரம் அருகே உள்ள நவபாஷாணம், ராமேஸ்வரம் இவ்வகையைச் சார்ந்த தலங்களாகும்.

பொதுவாக சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்களுடன் கூடிய தலங்களில் நவகிரகங்களின் சக்தி விசேஷமான பலன்களை அருள வல்லதாகும்.

காலம் என்பது என்ன…?

நிமிடம், மணியை ஒட்டியதாகவே, தற்போதைய கலியுக வாழ்க்கையை இயந்திர கதியாக மனிதன் அமைத்துக் கொண்டு விட்டான். காலையில் இருந்து மாலை வரை கடிகாரத்தைப் பார்த்த வண்ணம் ஓடுகின்ற வாழ்க்கையில், காலத்தின் மதிப்பு உணரப்படாது, மதிக்கப்படாது வாழ்க்கை ‘ஓட்டப்படுகின்றது’. இதையெல்லாம் ஒருவன் தன்னைத்தானே ஆத்ம விசாரம் செய்து தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

ஆத்ம விசாரம் என்பது உள்மனதால் ஆத்மத்தை நோக்கி உள்நோக்கி இயக்கப்படுவதால் வெளியுலக மணி நேரக் காலக் கணக்கு இதில் தோயாது. எனவே ஆத்ம விசாரமானது காலத்தின் உள்நோக்கிச் செல்லும் யோக முறையாகும். இதில் காலம் விரியும், விருத்தி அடையும், எனவே காலம் என்பது அதில் உறைபவரின் ஆன்ம சக்தியைப் பொறுத்ததாகும்.

மனித மனத்துக்கான கால நியதிகள் வேறு, உடலுக்கான கால நியதிகள் வேறு! உறக்கத்தில் நாம் காலத்தை மாற்றுகின்றோம். ஆனால், hours, minutes அல்லாது ‘விஸ்வ காலம்’ என்ற ஒரு வகைக் கால அளவிற்கு உறக்கத்தில் நாம் ஆட்படுகின்றோம். கைக்குழந்தை பூமியில் வாழ்ந்தாலும் எப்போதும் அது காலம் கடந்ததாக “விஸ்வ காலத்தில்தான்” வாழ்கிறது! இதே போல் தாவரங்களும், விலங்குகளும் தனித் தனி கால விதிகளைக் கொண்டுள்ளன! ஆமைகளுக்கென ‘கச்யபதம்’ என்ற வகையில் கோளஜல ப்ருத்வீகம் எனப்படும் விசேஷ கால முறை அளிக்கப்பட்டுள்ளது. ஆமைகளும், சில வகை மீன்கள் பகலிலும் நட்சத்திரங்களைக் காணும் யோக வன்மை கொண்டிருப்பதால் அவை காலத்தின் முன்னும் பின்னும் செல்லும் வல்லமை கொண்டவையாம்.

காலத்தின் தெய்வீகத் தன்மையையாவது மனித குலம் தற்காலத்தில் சற்றாவது உணர்ந்ததா என்றால் அதுவும் இல்லை! காலத்தை மாசுபடுத்துவதில், இழப்பதில், ஒன்றுமே செய்யாமல் வெறுமனே கழிப்பதில் தான் மனித சமுதாயம் விருப்பம் கொள்கின்றது. காலத்தை ஆன்ம சக்தியுடையதாய் ஆக்கித் தன்னை ஆத்ம வலிமை கொண்டதாக ஆக்க வல்ல கருப் பொருளே காலம் என உணர்ந்து ஆக்கப் பூர்வமான காரியங்களில் ஈடுபடுவதை விடுத்து மனிதன் காலப்போக்கில் போக மார்கத்தில் ஈடுபட்டு இழந்து வருகிறான். ராமேஸ்வரத் தீர்த்தம், ஒப்பிலியப்பன் கோயில் அகோராத்ரத் தீர்த்தம் போன்ற இரவிலும் நீராடும் நியதிகள் கொண்ட தீர்த்தங்களில் நீராடி வர, காலயோகத்தில் சிறந்து விளங்கிடலாம். இதனால் தீர்க தரிசன சக்தி பெருகும்.

பிரதமை திதியில் அருணாசல கிரிவலம் வருதலும் கிரிவலப் பகுதியில் பஞ்சலிங்கம் அருகே உள்ள இடுக்குப் பிள்ளையார் தலத்தில் ஒன்பது முறை உள்ளே சென்று வருதலாலும் இதில் பதிந்துள்ள அபூர்வமான யந்திர சக்திகளின் மகிமையால் கால சக்திகளை உணரும் பக்குவம் கிட்டும்.

அமுத தாரைகள்

தக்க சற்குருவின் வழிகாட்டுதல் இன்றிக் கலியுகத்தில் பரிபூரண தியானம் கைகூடுவது கடினமோ கடினம். எனவேதான் சித்தர்கள் எளிமையான வழியில் உங்களுக்குள் புலரும்  உள்உலகத்தைப் பார்க்கும் ஆத்ம விசாரம் போன்ற எளிய யோக முறைகளை அளித்துள்ளனர்.

ஒவ்வொரு முறையும் நீர் அருந்தும் போது கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி, துங்கபத்ரா, தாமிரபரணி, பிரம்மபுத்ரா, காயத்ரீ, பல்குனி ஆகிய 12 நதி தேவதைகளைப் பிரார்த்தித்து வழிபடும் முறையை மேற்கொண்டால் 70% நீர்மயமாக உள்ள நம் தேகம் ஆன்மபூர்வமாக சுத்திகரிக்கப்பட்டுப் புனிதமடையும். ஒரு நதியின் பெயரை அறிந்தோ அறியாமலோ உச்சரிக்கும் போது, அந்த நதி தேவதை நேரில் வந்து வாழ்த்த வேண்டும் என்பது நதி தேவதா மூர்த்திகளுக்கான இறைநியதி.

தற்போதும் கூட, மதுரை (சித்திரை உத்திரம்) போன்ற ஆலயங்களின் பிரசித்தி பெற்ற இறைத் திருமண உற்சவங்களில், கோரைக்கால் சித்தர் அளிக்கின்ற கோரைக் காப்பானது அம்பிகைக்குச் சூக்குமமாகச் சித்தர்பிரானால் தானாகவே சார்த்தப்படுகின்றது. சித்தர்களின் நல்லருள் பெற்றோர்க்கு இவை காட்சி தரும். இவ்வாறு அம்பிகையின் கோரைக் காப்புத் தரிசனத்தைப் பெறுவோரே பெரும் கோடீஸ்வரராகவும், தனவந்தராயும் ஆகின்றனர்.

வாரம் ஒரு முறையாவது இரவில் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயை அருந்திவர உடல் நாளங்கள் நன்கு சுத்திகரிக்கப்படும். விளக்கெண்ணெயை அருந்துகையில் “ஆத்ரேய குணசோபிதம்” என்று ஓதி ஸ்ரீஆத்ரேய மகரிஷியின் அருளாசியை வேண்டி கும்பகோணம் அருகில் கொட்டையூரில் இறைவனை வழிபட்டு லிங்கத்திற்கு முந்திரி மாலை சார்த்திவர எதிர்த்துப் பேசி அடங்காமல் இருக்கும் புத்திரர்கள், புத்திரிகள் திருந்துவர்.

தினமும் விடியற் காலையில் மூன்று மணியில் இருந்து ஐந்து மணிக்குள் சந்திர தரிசனம், வேம்பு, வன்னி, அரசு போன்ற விருட்ச தரிசனம், கோபுர தரிசனம், பசு தரிசனம் போன்ற பல சுப தரிசனங்களைப் பெறுவது என்று சங்கல்பம் செய்து ஒரு மண்டலமேனும் (48 நாட்கள்) நிறைவேற்றி வந்தால் நினைத்த நற்காரியம் சுபமாக நிறைவேறும்.

குபேரனுக்குப் பூஜைமுறைகளை அளித்த நல்வரச் சித்தர்!

குபேர பகவான், சங்க நிதி, பத்ம நிதிகளைப் பெற்றுப் பன்முறை அவற்றை இழந்தமைக்கு காரணமே வரநிதியின் மகத்துவத்தை உணராமையால்தாம். இதனால் பல இன்னல்களை அடைந்த குபேரருக்கு ஆமை ஓட்டுச் சித்தரே வரநிதித் தத்துவங்களைக் குபேர லோகத்தில் உபதேசித்து, குபேர பகவானை அருணாசல வடக்குத் திசை லிங்கத்தை அனுஷ நட்சத்திர நாளில் பூஜிக்கச் செய்து குபேரர் நவநிதியங்களை நிரந்தரமாக அடைந்து ஐஸ்வர்ய சிரஞ்சீவ நிலையைப் பெற உற்ற துணையானார். தஞ்சாவூர் ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீகுபேர மூர்த்தியை அனுஷம், வெள்ளிக் கிழமை, சுக்ர ஹோரையில் பூஜித்து வந்தால் நல்ல செல்வ வளம் உண்டாகும். இப்பகுதி ஆலயங்களில் உள்ள சித்தர்களின் வடிவுகளில் ஸ்ரீவரநிதிப் பெருவாழ்வுச் சித்தரின் வடிவமும் உள்ளது. தக்க சற்குருவை நாடி அறியவும்.

ஸ்ரீயானை வாகன முருகப் பெருமான்
பட்டீஸ்வரம்

தினமும் சுக்ர ஹோரை நேரத்தில் கன்றுடன் கூடிய பசுவிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு 12 முறை வலம் வந்து சாஷ்டாங்கமாக வீழ்ந்து நமஸ்கரித்து வந்தால் தன்னுடைய பெண்ணிற்குக் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள துன்பங்கள் தீர வழிபிறக்கும். பசுவின் உடலில் அனைத்து தெய்வ மூர்த்திகளும் உறைவதால் சகல துன்பங்களையும் நீக்க வல்ல நடமாடும் ஆலயமாகப் புனிதமான பசு துலங்குகின்றது.

தனக்கு தீங்கு செய்த ஒருவரைப் பற்றிய நினைவே அடிக்கடி வந்து கொண்டிருந்தால் குரோத, பகைமை மனப்பான்மையே வளர்ந்து உடல், மனம், உள்ளம், புத்தி, அறிவைப் பாதிக்கும். ஜென்மாந்திரப் பகையாகத் தொடரும். யானையை வாகனமாகக் கொண்ட மூர்த்தி தரிசனத்துடன், தினமும் மயிலுக்கு 5 வகைத் தானியங்களைச் சந்திர ஹோரை நேரத்தில் இட்டு வந்தால் இந்த குரோத நினைவுகள் தணிந்து மனம் அமைதி பெறும்.

எந்நாளிலாவது காக்கைகள் எவரையும் மோதினால் அல்லது தீண்டினால் எந்த நாளில், எந்த இடத்தில் காக்கை கொத்தியது அல்லது பட்டது என்பதைப் பொறுத்துப் பரிகாரங்கள் அமையும். எனினும் இவ்வாறு காக்கைகளால் தீண்டப்பட்டால், சலேச ஸ்நானம் என்ற வகையில் (காக்கை பட்ட போது) உடுத்திய உடையவுடன் நீராடி மாற்றுடை அணிந்து, ஈர உடையை ஈரத்தோடு தானம் செய்திட்டால் பலவிதமான தோஷங்களின் நிவர்த்திக்கான நல்வழி காண்பதுடன் பித்ரு சாபங்களும் பெரிதும் தணியும். தினமும் பித்ரு லோகங்களுக்குச் சென்று வரும் அற்புத சக்திகளைக் கொண்ட காக்கைகள் புகட்டும் சகுனங்கள், பித்ரு லோகச் செய்திகள், எதிர்கால சமிக்ஞைகள் நிறைய உண்டு.

படித்தும் நல்ல வேலை கிட்டவில்லையே என்று ஏங்குவோர், அருகில் உள்ள பாடல் பெற்ற தலங்களில், தக்க அனுமதியுடன், சற்றும் சங்கோஜம், வெட்கம் பாராது தினமும் குப்பைகள், தேங்காய் நார் போன்றவற்றை அகற்றி ஆலயத்தைச் சுத்திகரித்து, பழைய பூக்களைத் (நிர்மால்யப் புஷ்பம் எனப்படுவது) திரட்டிக் கடலில், ஆற்றில் இடுதல், அல்லது காலில் மிதிபடா வண்ணம் நிர்மால்யப் புஷ்பங்களை நந்தவனப் பூத்தாவரங்களின் வேர் மண்ணுடன் சேர்க்கின்ற இறைப் பணியை ஆழ்ந்த நம்பிக்கையுடன் செய்து வந்தால் நல்ல வேலை கிட்டும்.

இல்லறக் கடமையாற்றப் பாசம் தேவையே! ஆனால் பாசமே கடமை ஆற்றுவதைத் தடை செய்திடக் கூடாது. உண்மையான தெய்வீக அன்பே பக்தியைத் தரும். பகைமை, குரோதம், விரோதம், பகைமையைக் களையும், இறை நற்காரியங்களினால் உலகில் அன்பை எளிதில் விருத்தி செய்திடலாம். உலக அமைதிக்கு தெய்வீக ரீதியாக நல்வழி காணலாம்.

நர்தன விநாயகரைத் தினந்தோறும் சூரியோதய நேரத்தில் தரிசித்து செம்பருத்திப் பூ சார்த்தி வழிபட்டு வந்தால் மனைவியை இழந்து வாடுவோர்க்கு வேதனைகள் தணிந்து சாந்தமான வாழ்வு கிட்டும்.

அலுவலகப் பணி காரணமாக, கணவனோ, மனைவியோ வெளியூரில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், கணவனோ, மனைவியோ, பாண லிங்கத்திற்கு (ஆவுடை இல்லாத சுயம்பு லிங்கம்) அடர்த்தியாக வெண்ணெய்க் காப்பிட்டு வெண்ணெய், நெய்யைத் தானமாக அளித்து வந்தால் குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து வாழ்கின்ற நன்னிலை கிட்டும்.

பாணலிங்கம் திருமங்கலம்
லால்குடி

அருணை மலைத் தரிசனங்கள் காட்டும் ஆண்டவ தரிசனங்கள்

இறைவனுடைய துரீய, சூக்கும, காரண, காரிய வடிவுகளின் பரிபூரணமான திருஅண்ணாமலையை கிரிவலம் வரக் காரணமே எண்ணற்ற மலைத் தரிசனங்களின் மூலம் இறைவனை உய்த்திடவேயாம்! ஆனால் தற்போது வேண்டுதல் நிமித்தமாகப் பலருக்கும் கிரிவலம் அமைந்திட்டாலும், ஞானப் பலன்களும் தாமாகவே வந்தடையும்.

இறைவனின் அரூப (வடிவற்ற), ஜோதிமய, உருவவடி குணத்ததாக, அவரவர், ஞானம், அறிவு, தெளிவுடைமை, பூர்வ ஜன்ம பலாபலன்கள், பக்தி, நம்பிக்கைக்கு ஏற்ப, உனர்த்துபவையும் எண்ணற்ற அருணாசல மலைத் தரிசனங்களாகும். அருணாசல கிரிவலத்தில் கிட்டும். பல மலைத் தரிசனங்களுக்கே இவ்வளவு தெய்வீக மகத்துவம் என்றால், அருணாசலத்தின் பரிபூரணத்தை என்றுதான், எப்படித்தான் உணர்வது? குருவருளின்றி அருணாசலத்தை ஒரு சிறிதும் உணர இயலாது என்பதை இனியேனும் உணர்க!

மாதந்தோறும் உங்களுடைய பிறந்த நட்சத்திர நாளில் உங்களுடைய நட்சத்திரத்திற்கு உரிய விருட்சத்திற்கு (மரம்) கையால் அரைத்த சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம், சிந்தூரம் ஆகிய பஞ்சதிலகங்களை இட்டு எள் உருண்டைகளைத் தானமளித்து வந்தால் ஆயுள் சக்தி பெருகும்.

தொடரும் ஆனந்தம்...

நமது கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும் ஒரு நிகழ்ச்சியை மகான்களின் கண்ணோட்டத்தில் பார்க்க முடிந்தால் நமது வாழ்க்கையே ஒரு பூஞ்சோலை ஆகி விடுமே. நமது ஆஸ்ரமத்தில் சில பள்ளிப்பருவ சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அதைக் கவனித்துக் கொண்டிருந்த நம் சற்குரு அவர்களில் ஒருவரை அழைத்து, “இவ்வளவு சிரமப்பட்டு பேட்டை உயர்த்தி பந்தை அடிக்க வேண்டிய அவசியமே இல்லை. வரும் பந்திற்கு நேரே பேட்டை சற்றே சாய்வாக வைத்து அதன் திசையை மாற்றி விட்டால் போதும் உனக்குத் தேவையானது எல்லாம் கிடைத்து விடும், தொடர்ந்து இந்த முறையைக் கைக்கொள் ...” என்று சொல்லி அந்தச் சிறுவனை அனுப்பி விட்டார். ஆனால், அந்த இளவயதில் இமயமாய் உயர்ந்து நிற்கும் சற்குருவின் உபதேசத்தின் அருமை பெருமை தெரியுமா என்ன ? சற்குருவின் வார்த்தைகளை ஏனோதானோவென்று கேட்டு விட்டு உடனே விளையாடத் திரும்பிய அந்தச் சிறுவன் அடுத்து வேகமாக வந்த பந்தை அதைவிட வேகமாக அடிக்க முற்பட அருகிலிருந்த ஒரு அடியாரின் முகத்தில் பேட் பட்டு காயம் ஏற்பட்டதுதான் மிச்சம்.
“நாங்கள் போடும் விதையை உங்கள் மனதில் போடுவதில்லை, உங்கள் உள்ளத்தில் அல்லவா விதைக்கிறோம். என்றைக்கு இருந்தாலும் அந்த விதை உங்கள் உள்ளத்தில் வேரூன்றி முளைத்து கனி கொடுக்கும்...”, என்பது நம் சற்குரு அடிக்கடி அருளும் அருளுரை. இந்த “கிரிக்கெட்” விதை எப்படி முளைத்து கனி கொடுத்தது என்று பார்ப்போமா ? அந்த “சிறுவன்” இன்று வளர்ந்து இரு குழந்தைகளுக்கு தந்தையாய் மலர்ந்த பின்னரே சற்குருவின் உபதேசத்தின் பொருள் சிறிதே புரிய வந்தது எனலாம். மேற்கண்ட கிரிக்கெட் விளையாட்டில் சற்குரு அளித்த அறிவுரையின் விளக்கம் என்ன ? வாழ்க்கை என்பது ஒரு போராட்டமான விளையாட்டே. இதில் யார் ஜெயிக்கிறார்கள், யார் தோற்கிறார்கள் என்பது முக்கியமல்ல, எப்படி விளையாடி அனைவருக்குமே வெற்றியை சற்குருவின் சீடர்களாகிய நாம் பெற்றுத் தருகிறோம் என்பதே இந்த வாழ்க்கை என்னும் விளையாட்டில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். உதாரணமாக, குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சச்சரவுகள் தோன்றி பூதாகாரமாய் மாறி வெடிக்கும்போது இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் சூடான வார்த்தைகளை பரிமாறிக் கொள்வதால் (கிரிக்கெட் விளையாட்டைப் போல் வேகமான பந்துகளை வீசிக் கொள்வதால்) என்ன பிரயோசனம் ? அதே சமயத்தில் ஒருவர் அமைதியாக இருந்து விட்டு, சற்று நேரம் கழித்து பிரச்னையின் தன்மையை விளக்கிக் கூறினால் அங்கு அன்பு சோலை மலருமே. (இதுவே கிரிக்கெட் விளையாட்டில் பந்தை அடிக்காமல், திசை திருப்பி விடுவது). கிரிக்கெட் பந்தை ஒருவர் 60 மைல் வேகத்தில் வீசினால் அதை எதிர்கொள்பவர் எதிர்த்து அடித்தால் அதே வேகத்துடன் அந்த பந்து வேறு ஒரு திசைக்கு செல்ல 60+60=120 மேல் வேகத்தில் அல்லவா அந்தப் பந்தை அடிக்க வேண்டியிருக்கும் ? அதற்கு எந்த அளவிற்கு உடல் பலம், செயல் திறன் வேண்டியிருக்கும், ஒரு வேளை அந்த முயற்சி திசைமாறி அருகில் இருப்பவர் மேல் மேற்கூறியதுபோல் பேட் 120 மைல் வேகத்தில் பட்டால் அதன் விளைவு எந்த அளவிற்குக் கொடியதாக இருக்கும் ? இதுவே சற்குரு அளிக்கும் ”கிரிக்கெட் ஆனந்தம்”.

ஸ்ரீஅதுல்ய நாயகி லால்குடி அருகே நகர் திருத்தலம்

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam