எண்ண விஷமே தேளின் விஷத்தை விடவும் கொடியது !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வ ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய குருகுலவாச அனுபூதிகள்!

ஒருமுறை ....... தொடர்ந்து ஒரு வாரத்திற்குப் பெரியவரைக் காண முடியவில்லை! அங்காளி கோயில் – வீடு – கோயில் – பள்ளி – கோயில் – வீடு – என அவன் அலைந்தும் பெரியவரை எங்கும் காணோம்! சிறுவனும் உடலும், மனமும் தளர்ந்து, அசந்து போய் அங்காளி ஆலயத்தில் அவர் வழக்கம் போல் அமர்ந்திருக்கும் இடத்தைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு அங்கு சற்று நேரம் கண்களை மூடித் தியானத்தில் அமர்ந்தான்... கவலை தோய்ந்தவனாய், அவர் இருக்கும் இடத்தை மீண்டும் தொட்டுக் கும்பிட்டிட....

ஏதோ நெருடிடவே, அவன் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தான்... ஆம், பெரியவர்தான் அங்கு அமர்ந்திருந்தார்! ...

“என்ன துரை! தியானத்தில் பூந்துட்டாரு, ஏண்டா எதுத்தாப்புல குரு உட்கார்ந்து இருக்கிறது கூட தியானத்துல தெரியலைனா, அது தியானமில்லையடா! வெறும் தூக்கம்தான்! உட்கார்ந்துக் கிட்டே தூங்கறதுதான் கலியுகத்துத் தியானம்!”

காலம் தனலினைக் குளிர்விக்கும்
மார்க்கம் யாதோ !

ஒரு வார இடைவெளி ஆயிற்றே! சிறுவன் பெரியவரை நன்கு உற்று நோக்கினான்! அன்று அவருடைய கோவணாண்டித் திருமேனியில் சிரசு முதல் பாதம் வரை திருமால் திருமண் நாமங்கள் பளிச்சிட்டன! காண்பதற்கே மிகவும் திவ்யமாக இருந்தது!

“நம்ப அகஸ்தியரோட பந்ததியோட ஒரு வாரம் வைகுண்டம், கருட லோகம் போயிட்டு வந்தோம்டா! நம்ப போகரு ஸ்வாமிதான் ஆசையா இந்த நாமத்தைப் போட்டு விட்டாரு! தேவ லோகத்துத் திருமண் ஆச்சே! நல்லா கம கமன்னு பக்தி வாசனை வருதுல்ல?”

எப்போதும் முக்தி நிலையில் திளைக்கும் சித்தர்களுக்கும், மகரிஷிகளுக்கும் திருக்கயிலாயம், வைகுண்டம் சென்று வருவது கடினமா என்ன?

பெரியவர் பெரிதாகச் சிரித்தார்..!

யார் யாரைப் பார்த்து என்ன சொல்வது ? சிறுவனால் என்ன முயன்றும் இன்னமும் அவனால் சாதாரண நிலைக்கு வர முடியவில்லை! ஏன் என்றும் தெரியவில்லை! இதற்குக் காரணமும் இல்லாமல் இல்லை! வைகுண்டத்தில் இருந்து நேராக பூலோகத்திற்கு வந்த சற்குருவின் திருமேனியில் பெரியவர் சற்குருவாய் மொழியாமல், மொழியின்றி, மொழி கொண்டு, மொழியாத, (குருவாய்) மொழிகளே ஆகும். என்னே திவ்ய (பிரபந்த) உபதேசமது! மௌனமாய் நிகழ்ந்த குரு உபதேச சித்தோபநிஷத் ஞானமே அவனை அத்தகைய மொழியால் மொழிந்திடாப் பரவச நிலைக்கு ஆளாக்கியது!

“வைகுண்டத்துல நம்ப மார்க்கண்டேய மகரிஷிய தரிசனம் பண்ணினேன்! அப்பத்தான் அவரு சுதையாலான (த்ரைலோக்கி) திருமால் மூர்த்திக்குத் தைலக் காப்பு செஞ்சுட்டு வந்தாராம்! இந்தா பிடின்னு, தைலப் பிரசாதம்னு கொஞ்சம் கொடுத்தாரு! மெட்ராஸ்லதான் கோடை உஷ்ணம் ஜாஸ்தியாச்சே! கொஞ்சம் தலையில தேய்ச்சுக்கிறியா? உடம்பு ஜில்லுனு ஆயிடும்!”

என்னே பாந்தமாக ஓர் அற்புதமான தெய்வீகப் பரிசை, இறை பாக்யத்தை, பெறுதற்கரிய ஆண்டவனின் தைலப் பிரசாதத்தைச் சித்தர்களுக்கே உரித்தான முத்திரையோடு மிகவும் அடக்கமாக அவனுக்கு அளித்துப் பெரியவர் பரிமளித்ததோடு, அவன் பதிலுக்குக் கூடக் காத்திராமல் ஜில்லென்று சூடு பறக்க அவன் உச்சந் தலையிலே தைலத்தை வைத்து நன்கு தேய்த்து விட....

ஸ்ரீபடேசாகிப் சித்தர் ஜீவாலயம்
சின்னபாபு சமுத்திரம்

ஸ்ரீபடே சாகிப் சமாதியில் சந்தனம் அரைத்து சார்த்த ஓத வேண்டிய துதி
ஓம் மஜும் போட் துத்யாய வித்மஹே
மதிபூரண சந்தன சந்த்ராய தீமஹி
தந்நோ குரு பாத விருட்ச ப்ரசோதயாத்
மூன்றாம் பிறையாகி முக்கண் சுதமாகி
முச்சுடர் பரிமாணம் மூதையர் வழி தாங்கி
ஒன்றாய் புலன் சேர்ந்து ஓதிய சந்தனப் பூ மலர்
நன்றாய் நவின்றேன் நமசிவாய என மகிழம்பூ சாறல்
மறையொலியாய் மாதவனை அகிலம் புகழ் ஓங்கும் அரணே அரண் !

அது வெறும் எண்ணைய் தேய்த்தலா? இல்லை, இல்லை.. முப்பதாயிரம் கோடி மூளைச் செல்களுக்கும், கபால நாடிகளுக்கும் சற்குருவின் திருக்கரத்தில் உள்ள லாலாக்னி ரேகைகளிலிருந்து பா(தோ)ய்கின்ற ஞானத் தைலக் காப்பன்றோ? சிறுவன் மீண்டும் பரமானந்தப் பரவசப் பெருவெள்ளத்தில் திளைத்தான்! என்னே பெரும் பாக்யம் அது! வைகுண்டத்தில் ஞானப் பரவசத்தில் கிட்டும் ஞான யோக பாவனை, நிர்விகல்ப சமாதி நிலைகளை அவன் அறியா வண்ணம் அவனுள் ஊட்டி உணர்த்திடவேதான் பெரியவர் அவ்வாறு செய்தார்!

அப்போதுதான் (கும்பகோணம் – கஞ்சனூர் அருகே) த்ரைலோகித் திருத்தலத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீக்ஷீராப்தி சயனப் பெருமாளின் மகிமையை நன்கு விளக்கியதோடு தன் ஞானோபதேசத்தை, ஸ்பரிச தீட்சையை, லாலாக்னி கிரண அருட்பொழிவினை, ஹஸ்த ரேகா அட்சராப்யாசத்தை, கபால ஸ்பரிச உபதேசத்தை, கர்ண (காது) ஸ்பரிச தீட்சையை, தைலாகாச சக்திகளை, இன்னோரன்ன குருவேத வாக்கிய மகா சூத்திரங்களை, வேத வாக்கிய அருள் மொழிகளை ஒரு சாதாரண எண்ணெய் தேய்த்தல் மூலம் அளித்திட்டாரே! இவையனைத்தையும் எல்லாம் ஒரு சித்தரால் தாமே சாதிக்க முடியும்!

“என்னைப் பார்க்காத ஒருவார இடைவெளி தாண்டா! ஆனா குருகிட்ட கிடைக்கிறதோ ஒரு கோடி சதுர்யுகப் பரவெளி யோக பலன்கள்! நல்லாவே தெரிஞ்சுக்கோ, இனிமேல் அடிக்கடி மறைஞ்சிடுவேன்!”

பெறுதற்கரிய அந்தப் பரமானந்த அனுபூதி நிலையிலிருந்து சிறுவன் மீண்டிட, ஆங்கே ஒரு தைத்ரீயக் குருவியின் வருகை தேவைப்பட்டது! என்னவாம் அது?

ஆம்.... அப்போது அங்கு ஒரு குருவி வந்தது! பெரியவரைப் பார்க்க அடிக்கடி வரும் குருவியே அது! பெரியவர் அதனைத் தைத்ரீயக் குருவி என்பார்! தைத்ரீய மந்த்ரகோசம் உருவான காலத்தைச் சார்ந்த சிரஞ்சீவிக் குருவியாம்! ஆமாம் பட்சிகளிலும் சிரஞ்சீவிகள் உண்டு!

“அந்த வேமந்திரத்தை ஓது! இந்த வேதமந்திரம் ஓது!” என்று பெரியவர் அதனைக் கேட்டுக் கொண்டே இருப்பார். அதுவும் கீ,கீ என்று எத்தனையோ மந்திரங்களை வெகு அழகாக ஓதிக் கொண்டேயிருக்கும். பெரியவரும் எழுந்து நின்று கூப்பிய கரங்களுடன், பாஷ்பவாரி பரிபூரண லோசனனாக, ஆனந்தக் கண்ணீர் மல்கக் குருவியின் வேத நாதத்தை, மறை மொழிகளைக் கேட்டுக் கொண்டிருப்பார்!

“யாக்ஞ்வல்கியர் மஹரிஷி காலத்துக் குருவிடா இது! அந்தக் காலத்து வேத மந்திரம்! யாக்ஞவால்கியர் தன்னோட குருகிட்டேந்து கத்துக் கிட்டது! இப்பெல்லாம் இதை ஓதுறவங்க ஒண்ணு, ரெண்டு பேருதான் இருக்காங்க! பரமாச்சாரியார்தான் இதோட மதிப்பு தெரிஞ்சவர்! திருவலியதாயம் (சென்னை பாடி) தீர்த்தத்துக்குப் போற வழியில இந்தக் குருவி இங்கே வந்துட்டுப் போகுது!”

அந்தத் தைத்ரீயக் குருவிக்கு சகல மரியாதைகளையும் தந்து, தட்சினையும் வைத்து வணங்குவார் பெரியவர்! அதில் பத்துக்கு ஆறு அளவு வேஷ்டி, ஒன்பது கஜப் புடவை, மஞ்சள், ரவிக்கை என்றவாறாக சுப மங்களப் பொருட்கள் நிறைய இருக்கும்!

“சாதாரணக் குருவிதானே, இதுக்கு வேஷ்டி புடவை எதுக்கு? இதுங்கள வச்சு இது என்ன செய்யும்?” என்றெல்லாம் சிறுவன் எண்ணுவான்!

அவன் எண்ணுவதை அறிய அவருக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்? (Pat came the reply!)

“ஏண்டா மண்டு, சுக்ல யஜுர் வேதம் நல்லாத் தெரிஞ்சவங்களே ரொம்பக் குறைச்சல்டா, உன் கண்ணுக்குத் தாண்டா அது சாதரணக் குருவி! எங்களுக்கு அந்த தைத்ரீயக் குருவி ஒரு பெரிய வேதவிற்பன்னர்! பஞ்ச சாஸ்திர வித்வான்! உண்மையான பரிபூரணமான அந்தணர்!”

சிறுவன் திரும்பிப் பார்த்தான், வேஷ்டி, துண்டு, புடவை அனைத்தையும் காணோம்! அடுத்ததாக.. இன்னும் ஒரு குருவி அங்கே வந்தது..!

“இது நம்பள மாதிரி சோத்து மூட்டைக் குருவிடா!” இதைக் கேட்டுச் சிறுவனுக்கே சிரிப்புத் தாளவில்லை! நன்கு உரக்கச் சிரித்து விட்டான்! “உன்னையும் என்னையும் மாதிரி இந்தக் குருவி நல்லாத் திண்டி தின்னும்!” என்று அவர் அதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே கூறியதும் அக்குருவியே நாணித் தன்னைக் குறுக்கிக் கொண்டது!

என்ன அழகாக ஜீவன்களுடன் காருண்யம் பரிமாறுகின்றார்! சிறுவனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது! சகல ஜீவன்களிடமும் எவ்வித பேதமும் இன்றி ஆத்மார்த்தமாக இறைவனுடைய தரிசனத்தைப் பெறுபவர்களுக்குத் தாமே இது சாத்யமாகும்!

“இந்தக் குருவிக்கும் பசிக்கும்! நம்ம பிரிஞ்சி சாதம் பண்ணினோமே, என்ன அரிசி அது? Special ஆ ஒரு பேரு அதுக்கு இருக்குமே?” சிறுவன் விழித்தான்!

வந்த குருவியோ கீ, கீ என்றது...! “ஆங் .. ஆங்... பாசுமதி அரிசி....!”

பெரியவர் குருவியின் மொழியைப் புரிந்து கொண்டு சொன்னார்! .. “ஒரு குருவி சொல்லுதுடா பாசுமதி அரிசின்னு! உனக்கும் எனக்கும் தெரியலை!”

சிறுவன் அந்தக் குருவியைப் பார்த்தான், அது வாலையும், காலையும், தலையையும் ஆட்டி கெக் கெக்கே.. என்று சிறுவனைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தது! சிறுவன் தலையைக் குனிந்து கொண்டான்..!

நிரந்தர ஆனந்த மயமான இத்தகைய சகல ஜீவ அன்புப் பரிமாற்றம் நிறைந்த தெய்வீக அனுபவங்களை குருகுல வாசத்தில்தானே ஆத்மபூர்வமாகப் பெற்று ரசிக்க முடியும்!

“இந்தா ஒரு ரூபா, பாசுமதி அரிசி கொஞ்சம் வாங்கி வா! அந்தக் குருவிக்கு பிரிஞ்சி சாதம் பண்ணி, அதோட புருஷனுக்குப் பொங்கிப் போடணுமாம்! ஆமாண்டா, யார், யாரோ இங்க வந்து சாமி எனக்கு promotion வேணும், எனக்கு வீடு வாங்கணும்னு லௌகீகமாக் கேக்கறப்போ, ஒரு குருவி பிரிஞ்சி அரிசி யாசிக்கறதுல என்னடா தப்பு இருக்கு?”

சிறுவன் கடையிலிருந்து ஒரு சிறு பொட்டலத்தில் பாசுமதி அரிசி கைப்பிடி அளவு கொண்டு வந்து அவர்முன் வைத்துப் பிரித்தான்.. “இதுல எந்த அரிசி மணிகள் மேல இந்தக் குருவியின் பெயர் எழுதியிருக்கோ, அதுங்களை மட்டும் எடுத்து அதுகிட்ட கொடுத்துடு...!”

சிறுவன் அவரைக் கோபத்துடன் பார்த்தான்! .. .. Asking me to do the impossible? … என்று கேட்பது போல இருந்தது அவன் பார்வை! அரிசியில் என்ன எழுதியிருக்கிறது என்று அவனுக்கு எப்படித் தெரியும்?

பெரியவர் அவனைப் பார்த்துச் சிரித்தா! Asking you only to do the inevitable என்பது போல பதில் உரைத்தது அவர்தம் கேலிச் சிரிப்பு! ... “பொட்டலத்துல நல்லாக் கண்ணை விழிச்சுப் பாருடா...”

சிறுவன் அரை குறை மனதுடன் பொட்டலத்தைப் பார்த்தான்... “ஹையா ... ஆ....!” சிறுவன் விண்ணுக்கும், மண்ணுக்கும் குதித்தான்! அரிசியின் மேல் இருந்த எழுத்துக்கள் இப்போது அவனுக்கு மிகவும் நன்றாகத் தெளிவாகத் தெரியலாயின!

வைகுண்டத் திருமால் கடாட்ச நாம பாவனத்துட வந்த ஞானத் தைலம் பூசி, கைவல்ய ஞானபோதம் பெற்றதாலோ என்னவோ, அந்த அரிசி மணிகளில் வெவ்வேறு பெயர்கள் எழுதி இருப்பதை அவனால் நன்கு காண முடிந்தது!

சேவல், கோழி, பூமி, கருங் குருவி, சிகப்புக் கோழிக் குஞ்சு, என்றவாறாக எதன் எதன் வயிற்றுக்குள் எந்த அரிசி போக வேண்டும் என்பதான பிரம்ம நியதி அந்தந்த அரிசியில் தேவ விதியாக விதியாக அவரவர் பெயருடன் விதிக்கப்பட்டு எழுதி இருப்பது கண்டு சிறுவன் அதிசயித்தான்!

“நீ என்னைப் பார்க்காத ஒருவார இடைவெளி தாண்டா! ஆனா பலகோடி ஜன்மப் புண்ய வாழ்வுல கிடைக்கிற யோக சக்தியை, அற்புதமான தீர்க்க நேத்ர அட்சர சக்தியை, எந்த அரிசி யார் வயித்துக்குள்ள போகணும்கறதைத் தெரிஞ்சுக்கற சக்தியை ஒரே வாரத்துல அங்காளி உனக்குக் கொடுத்துட்டா பார்த்தியா?”

சிறுவன் மௌனித்தான்! ஆஹா! என்னே அடக்கம் அவனிடம்! ஆனால் எத்தனை நிமிஷத்திற்கோ? சிறுவன் யோசித்தான்! வெறும் குருவி என்று மட்டும் போட்டிருந்ததால், அவன் எந்தக் குருவிக்கு எந்த அரிசி மணி என்று பகுப்பது? வந்திருக்கும் சோத்து மூட்டைக் குருவிக்கு எதைக் கொடுக்க வேண்டும் என்று தெரியாமல் அவன் விழித்தான்!

“ஏம்மா, உன் பேரு என்னம்மா?” பெரியவர்தான் மிகவும் பரிவுடன் குருவியைக் கேட்டார், ஆமாம்.! அந்தக் குருவியோ குருவியிடம்தான் நேரடியாகத்தான்!

குருவியும் கிக் கிக்கீ என்றது! “டேய்... அது இன்னிக்கி விரதமாம், அதோட புருஷன்தான் சாப்பிடப் போகுதாம்! அதோட புருஷன் பெயர் அரிசி மேல் இருக்கான்னு பார்க்கச் செல்லுது!”

புன்சிரிப்புடன் அவன் குருவியைப் பார்த்துவிட்டு வேண்டுமென்றே அவனும் கிண்டலாக கீக்கி. ...கீக்கி.... என்றான்...

ஆனால் அது அவனை தகிக்கும் கனலாக ஒரே ஒரு பார்வையை வீசிய உடனேயே அவன் மிகவும் பயந்து விட்டான்! கோபத்தில் அதனிடம் இருந்து ஒரு நெருப்புப் பொறி சீறி வந்தது போல் இருந்தது! ஒரு வேளை சினத்தின் மிகுதியால் பறந்து வந்து தன் அலகால் அவன் கண்களில் குத்திவிட்டால் என்ன செய்வது? நியாயமான பயம்தான்!

“குருவைத் தேடி வர்ற குருவி கிட்ட ஏண்டா இந்த அநாவசியமான வம்பு? இவ்வளவுதாண்டா மனுஷ தைர்யம்! ஒரு கடுகு மாதிரியான குருவிக்குப் பயந்து வாழறது தாண்டா உன்னை மாதிரிக் கோழையான மனுஷனோட பிரம்மாண்டமான பகுத்தறிவு! அதை இன்னோர் ஆத்மான்னு பாக்காம வெறும் குருவிதானேன்னு நெனைக்கற வரைக்கும் இந்த முட்டாள்தனம் தான் வேலை செய்யும்!” பெரியவர் சிறுவனை நன்கு சாடினார்!

பிறகு குருவியிடம் கூறினார்.. “அவன் நம்மளோட apprenticeதான்! கிண்டல் பண்றானேன்னு கோவிச்சுக்காதே! ஏம்மா உன் புருஷன் பெயர் என்னன்னு சொன்னாத்தானேம்மா பையனால தேட முடியும்!” அந்த “மா” வில் பொங்கிய தெய்வீகமேம் பெரியவருடைய சித்தர்குல copyright!!

குருவி நாணத்துடன் தலையைக் கவிழ்த்துக் கொண்டது! “நம்ப புனிதமான பாரதத்துக் குருவிடா, அதுவும் நம்ப தெய்வத் திருத் தமிழ்நாட்டுக் குருவிடா, எப்படிடா புருஷன் பெயரைச் சொல்லும்?”   .... சரி... சரி..., கோவிந்தபுரம் குருவின்னு, பார்க்கட்டுமா? சரியாம்மா? உன் புருஷன் கோவிந்தபுரத்து ஆளுதானே?”

குருவி உலக சந்தோஷத்துடன் தலையை ஆட்டியது! சிறுவன் பிரமித்து விட்டான்! ஒரு சாதாரணக் குருவியிடம் கூட ஆன்ம சக்தி மிளிரும் அன்பொழுகப் பேசும் தெய்வீக குணங்கள் சித்தர்களுடைய சிவப் பாரம்பரியச் சொத்து ஆயிற்றே! குருவியின் விதியையும் காணும் குவலயச் சித்தரிடம் குருகுலவாசம் பெறுவது மகத்தான இறைபாக்யம் தானே!

(அரிசி)மணியான திருவிளையாடல்!

அப்பாடா! சிறுவனுக்குத்தான் எத்தகைய அதியற்புத இனிமையான இறை அனுபவங்கள்! இவற்றை அனுபவிக்கும் போது ஏற்பட்ட பரவசத்தை, ஈடு இணையில்லாப் பரமானந்தத்தை கலியுகத்தில் எடுத்துச் சொன்னாலும் எவரேனும் நம்புவார்களா என்ன? குருவின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டோருக்குத்தானே இத்தகைய பரமானந்த அனுபூதிகள் கிட்டும்! இதைப் படிக்கின்ற உங்களுக்கே இப்போது உள்ளூரத் தெய்வீகப் புத்துணர்ச்சியும், பரமானந்தப் பரல்களும் முகிழ்க்கின்றனதாமே! எல்லாம் உங்களுடைய பித்ருக்களின் ஆசிதான் என்று உணருங்கள்!

சிறுவன் அத்தைத்ரீயக் குருவிக்கான அரிசி மணிகளைப் பொறுக்கித் தனியே எடுத்து வைத்திட்ட போது... திடீரென்று அவன் கண்கள் அகல விரிந்தன.....! ஆம், அவற்றைக் கண்டு அவனால் நம்பவே முடியவில்லை! மீண்டும் மீண்டும் அந்த மூன்று அரிசி மணிகளையே பார்த்தான்! அவனால் இன்னமும் தன் கண்களையே நம்ப முடியவில்லை! 

அப்படி என்னதான் அங்கு இருந்தது? ..... ஆம்! அந்த மூன்று அரிசி மணிகளிலும் “இடியாப்ப மனுஷன்!” என்று தெள்ளத் தெளிவாக எழுதி இருந்தது....!

“டேய்.. அர்ஜண்டா, தேவ லோகத்துலேந்து emergency call வருது! இங்கே ஒரே கசாமுசான்னு சப்தமா இருக்கு! உள்ள போய் என்னன்னு கேட்டுட்டு வர்றேன்...” பெரியவர் பரக்கப் பரக்க உள்ளே ஓடினார்....!

என்னே கில்லாடி இவர்? முக்கியமான தருணத்தில் நைசாக நழுவி விடுகின்றாரே! ஆனால் இத்தகைய தேவலோக message வரும்போது அவர் தனித்து இருப்பதைத்தான் விரும்புவார் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும்!

ஏதோ தேவலோக மெஸேஜ் என்று கோயிலுக்குள் அவசர அவசரமாகப் பெரியவர் ஓடினாரல்லவா.. போன வேகத்தில் திரும்பி வந்து விட்டார்..! “டேய், அப்படியே அந்த அரிசி மணிகள்ல என்னோட பாக்கி ஏதாச்சும் இருக்கும்! எம்பேரு அதுல எழுதியிருந்தா அதைத் தனியா எடுத்து வை! மிச்சத்தைச் சேவல், கோழி, கறுப்புக் கோழிக் குஞ்சுன்னு.. தனித் தனியாய்ப் பிரிச்சு வை! மாத்தி வச்சுடாதே.. பெயரும், அரிசியும் மாறிப் போச்சுன்னா மேல பிரம்ம லோகத்துலேந்து நமக்கு punishment பெரிசாக் கொடுத்துடுவாங்க!” பெரியவர் மீண்டும் உள்ளே விரைந்தார்..!

சிறுவன் வியந்தான்.. தெரிந்தும் தெரியாதவராய், அறிந்தும் அறியாதவராய், புரிந்தும் புரியாதவராய் என்னமாய்த் தெய்வீக நாடகம் ஆடுகிறார் இவர்?

ஒளிந்தும் ஒளியாது ஒளிரும் குருஒளி!

பெரியவருடைய பெயர் இருந்த மூன்று அரிசி மணிகளைச் சிறுவன் தனியே எடுத்து வைத்தான்.. கூடவே ஒரு குயுக்தியும் அவனுக்கு வந்துவிட்டது..,! என்ன அது?

ஆமாம், அவருக்கென இருக்கும் மூன்று அரிசி மணிகளுள் ஒன்றை நாம் எடுத்து வைத்துக் கொண்டு விடுவோம், என்னதான் செய்கின்றார் என்று பார்ப்போமே..! இந்தக் கோணல் புத்தி வந்ததும் டக்கென்று ஒரு அரிசி மணியை எடுத்துத் தன் சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டு விட்டான்! இத்தகைய குருகுல வாச லீலை நடக்க வேண்டும் என்பதற்காகத்தானே பெரியவர் வேண்டுமென்றே தேவ லோக message வந்தது என்ற சாக்கில் உள்ளே போனார் போலும்!  

பெரியவர் டக்கென்று எதிரில் வந்து நின்றார்! அவன் பிரித்து வைத்த அரிசி மணிகளைப் பார்த்தார்! ஒன்றும் தெரியாதவர் போலச் சுற்றிச் சுற்றி வந்தார்! “வெள்ளைக் கோழி, கறுப்புக் கோழிக் குஞ்சு, போந்தாக் கோழி .... இப்படீன்னு அரிசி மேல பெயரெல்லாம் ஜம்முனு எழுதி இருக்கு! பார்த்தியாடா இறைவன் லீலையை! கருப்பை உயிருக்கும் சோறு போடுகின்ற இறைவன் ஒவ்வொரு அரிசி மணியாப் பார்த்து, பார்த்து யார் யார் வயித்துக்குப் போகணும்னு எழுதி வச்சுக் காப்பாத்தறார், நல்லாத் தெரிஞ்சுக்கோ!” பெரியவர் குருவியை அழைத்தார்!

“ஏ! கோவிந்தபுரம் மாட்டுப் பொண்ணு! உன்னோட பங்கு அரிசியை எடுத்துக்கிட்டுப் போ!” என்று அவருக்கே உரித்தான பாணியில் பெரியவர் பரிவு நிறைந்த தெய்வீக அன்புடன் கூப்பிட, குருவியும் நாணிக் கோணிக் கொண்டு வந்துத் தன் பங்கைக் கொத்தி எடுத்துச் சென்றது!”

இந்த மாதிரி மிகவும் பவித்ரமாக, பவ்யமாக உயிர்களோடு உயிர்களாய் ஐக்யமாகி எவ்விதப் பாகுபாடுமின்றி அனைத்துள்ளும் உய்கின்ற தெய்வீகத்தை தரிசிக்கின்ற அதிஅற்புத அறப்பண்பாடு சித்தர்களுக்கென்றே விசேஷமானதாக இறைவன் அளித்த தெய்வீக வரம் ஆயிற்றே! ஆனால் பெரியவர்தான் அவனை ஒரு நிமிடம் கூட ஆனந்தமாக இருக்க விடுவதில்லையே! ஏனென்றால் சிறுவனுக்கு அடுத்த பயம் உடனேயே வந்துவிட்டது! என்னவாம் அது?

வெள்ளைக் கோழி, கறுப்புச் சேவல் என்று அவர் ஒரு பெரிய list  படித்து விட்டால், இந்த மண்டை காயற வெயிலில், ஒவ்வொரு அரிசியாகப் பார்த்துப் பார்த்து மெட்ராஸ் எங்கும் அலைந்து அதனதற்கு உள்ள அரிசையைப் போடுவதற்குள், உஷ்ணத்தில் மூளையே வெடித்து விடுமே! போதாக் குறைக்கு மப்பேடு சிவன் கோயில் எறும்புக்கும் உரித்தான பல அரிசி மணிகள் அதில் இருந்தன! அம்மாடி, இந்த வேகாத வெய்யிலில் மப்பேடு நடந்து செல்வதென்றால்..... மெட்ராஸில் இருந்து 20 மைல் தூரம் வேறு.! இன்று நாம் தொலைந்தோம் என்ற முடிவிற்கு வந்து பயந்து பயந்து நடுங்கிக் கொண்டு இருந்தான் சிறுவன்! எப்போது எங்கே போகச் சொல்வாரோ? அவன் இவ்வாறு நினைத்ததுமே பெரியவர் அவனை விநோதமாகப் பார்த்தார்.. அவர் கண்கள் சிவந்திருந்தன! அவர் முகத்தில் கோபம் கொப்புளித்தது! சினத்தின் செம்மையான உச்சத்தைக் காட்டியது அது!

“ஏண்டா தெய்வீகத் திருப்பணின்னா உயிரைப் பணயம் வச்சுக்கிட்டு ஓடோடி வர வேண்டாமா? இந்தக் கிழவன் இதைச் செய்யச் சொல்வானோ, அதைச் செய்யச் சொல்வானோன்னு பயப்படற தெய்வீகத்துலேயே இருக்கற உனக்கும், மத்தவங்களுக்கும் என்னடா வித்தியாசம்? தன்னால்தான் முடியும், இந்தக் கிழவனுக்குத் தன்னை விட்டா வேற ஆளே கிடையாதுங்கற கர்வம், ஆணவம், அகங்காரம்தான்டா காரணம்! இதெல்லாம் தெய்வீகத்துல வரவே கூடாது! தேவை இல்லாத இந்த மூணும்தான் தெய்வ பக்திக்கே வைரி!”

“ஏண்டா நீ மட்டும்தானா என்னோட கர்ம பரிபாலனத்துலே இருக்கே? உலகம் புல்லா உன் வயசுல மட்டும் ஒன்பது கோடி அடியார்கள் அடியேன்கிட்ட இருக்காங்க! அப்ப மொத்தம் எவ்வளவு பேருக்காக பூலோகத்துக்கு அடியேன் வந்திருக்கேன்னு உன்னால கணக்குப் போட முடியுமா?”

“உன்னோட குருவி மூளைல இதெல்லாம் ஏறாதுன்னு காட்டறத்துக்குத்தாண்டா அங்காளி இந்த அரிசிமணி, குருவி நாடகத்தை நடத்திக் காட்டுறா.....” என்று கூறிய பெரியவர் படபடவென்று பொழி(ரி)ந்து தள்ளி விட்டார்!

“டேய்..! பஞ்சாபகேசா!” என்று யாரையோ அவர் கூப்பிட்டிட, ஒருவன் வேக வேகமாக ஓடி வந்து அவர் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்திட, அவனைத் தனியே அழைத்துச் சென்று அரிசிமணி வகைகளைக் கொடுத்தார் ! “இதை.... இதைக்... கறுப்புக் கோழிக்குக் கொடு.... இதை...” என்று சற்றுத் தொலைவில்..... பெரியவருடைய வார்த்தைகள் மங்கலாகச் சிறுவனின் காதில் .. விழுந்தன....

சிறுவன் கூனிக் குறுகினான்..! ...  பெரியவர் திரும்பி வந்தார்...!

“எந்த தெய்வீக சந்தர்ப்பமுமே சிங்காரிச்சுக் கிட்டு வராதுடா! வந்த தெய்வீகச் சான்ஸையும் யாரோ ஒரு பஞ்சாபகேசன் தட்டிக் கிட்டுப் போய்ட்டான்..! உன்னை மாதிரி சின்னப் பசங்க ஒன்பது கோடிப் பேரை அடியேனோட controlல கொடுத்திருங்காங்களே, அப்ப ஒவ்வொரு நிமிஷமும் அத்தனை கோடி பேர்களோடயும் நான் contact வச்சுக்கணும்தானே! இப்படித் தாண்டா ஒவ்வொரு நிமிஷத்துக்கும் ஆயிரக் கணக்கான மெஸேஜ் வந்துக் கிட்டே இருக்கும்! நாங்கதான் absolute divine server!!” சிறுவன் தலையைக் குனிந்து கொண்டான். பெரியவரோ அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் விளாசித் தள்ளி விட்டார்.. தன்னை விட்டால் பெரியவருக்கு வேறு ஆளில்லை என்ற மமதை அன்றோடு அவனை விட்டு ஒழிந்தது!

தெய்வம் சற்குரு ரூபேண.....! சற்குரு மானுஷ ரூபேண....!

அவன் அடுத்த திகில் கட்டங்களுக்குத் தயாராக வேண்டுமே! தான் ஒளித்து வைத்த அரிசி மணியை பேசாமல் ஏதேனும் சாக்கு போக்குடன் கீழே கிடந்தது என்று சொல்லி அவரிடமே கொடுத்து விட வேண்டியதுதான் என்ற அதிவேக முடிவிற்கும் அவன் வந்து விட்டான்..! ஆனால்..... சிறுவன் வெகு வேகமாகச் சட்டைப் பாக்கெட்டைப் பிதுக்கிய வேகத்தில் ஒளித்து வைத்த அந்த அரிசி மணியும் எங்கோ விழுந்து விட்டது! பெரியவர் எதிரில் அதனைத் தேடவா முடியும்?

“வாத்யாரே...” என்று ஏதோ சொல்ல வந்தவன் பயந்து பின் வாங்கி விட்டான்!

“ஏண்டா இந்த அரிசி மேல என்பெயர் என்னன்னு போட்டிருக்கு ?”

சிறுவனுக்கு பதில் சொல்லத் தைரியமில்லை! அவன் மிகவும் தயங்கினான்! அரிசியின் மேல் இடியாப்ப மனுஷன் என்று போட்டிருக்கின்றது என்ற உண்மையைத் தைரியமாக அவரிடமா எடுத்துச் சொல்ல முடியும்!

“நீ என்னைப் பத்தி என்னன்னு, எப்படின்னு நெனைக்கிறியோ அப்படித் தாண்டா அரிசியில எழுதியிருக்கும்!” 

சாட்டையால் அடித்தது போலிருந்தது சிறுவனுக்கு! மடேலென்று இருதயத்தில் சம்மட்டியால் அடித்தாற் போலும் இருந்ததே!

பெரியவர் continued his tirade! …. ஆமாண்டா..., நானென்ன மஹானா, சித்தனா, சாதாரண மனுஷன் தானே...! இந்தக் கிழட்டு வயசிலேயும் பிரிஞ்சி மசாலாச் சோத்துக்கு ஆசைப்படறதுனாலத்தானே அம்பாளே இதை மறைமுகமாகக் காட்டுற மாதிரி அந்த பாசுமதி அரிசி மணிகள் மேல இடியாப்ப மனுஷன்னு என் பெயரையும் எழுதி எனக்குப் பாடம் புகட்டுறா! இன்னமும் இந்த வயசுலேயும் கேவலமா பிரிஞ்சி சாதத்து மேல கொள்ளை ஆசை வைக்கலாமான்னு அம்பாள் இந்தக் குருவி மூலமா அடியேனுக்குப் பாடம் சொல்லித் தராடா!”

“எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்! இன்னமும் இடியாப்பம்னா கொள்ளை ஆசை வச்சுருக்கேனே, அதுக்கு நல்ல புத்தி புகட்டறத்துக்குத்தான் இடியாப்ப மனுஷன்னு அரிசி மேல எழுதி, அடியேனுக்கு ஒரு சின்னூண்டு குருவி மூலமாப் பெரிய பெரிய பாடம் கற்றுத் தராடா!” அக்குருவி நின்ற இடத்தைப் பக்திப் பரவசத்துடன் வணங்கிய பெரியவர்..!

“ஹே கோவிந்தபுரம் நாட்டுப் பெண் குருவியே! நீயே மகரிஷியாட்டம் வந்து அடியேனுக்குப் பாடம் புகட்டினாய்! உன்னுடைய அனுகிரகத்தால அடியேனுக்கு இந்த அரிசி மணிகள் மூலம் நிறையக் கர்மவினைகள் தீர்ப்பதற்கு நல்வழி காட்டினாய்..!” என்று பைந்தமிழ்ப் புலவராய்ப் பேசி அக்குருவி சென்ற திசை நோக்கித் தரையில் வீழ்ந்து வணங்கினார்! அவர் நமஸ்கரித்து எழுந்தபோது அவர் கண்கள் கலங்கியிருந்தன....!

“பார்த்தியாடா இந்தக் கிழவனுக்கு இடியாப்பம், பிரிஞ்சிச் சோறு மேல மோகம் ஜாஸ்தியாப் போயிடுச்சுன்னு அங்காளி குருவிக் கூத்து நடத்திப் பாடம் புகட்டறதைப் பார்த்தியா?”

சிறுவன் சிலையானான்! காலம், கோள், கர்மா என சகலத்தையும் கடந்த முக்காலமும் அறிந்த மாமுனிச் சித்தரான பெரியவர் இவ்வாறு நாடகம் ஆடுவதேனோ?

ஒருவேளை, தான் (சிறுவன்) செய்ய வேண்டியதைத் தான் செய்து காண்பிக்கின்றாரோ! சிறுவனுக்குத் தலை சுற்றியது! “சரி... சரி... எனக்குன்னு ஆகப்பட்ட அந்த அரிசி மணிகளை என் கையில வச்சு ஒண்ணு, ஒண்ணா உன் கையாலேயே என் வாயில போட்டுடு...! இப்படியாச்சும் என் கர்மம் தீரட்டும்..!”

அவர் அங்காளியை நோக்கி அமர்ந்தார்! கண்களை மூடிக் கொண்டார்! சிறுவன் தந்த இரண்டு அரிசி மணிகளையும் வலது உள்ளங் கையில் வைத்துக் மூடிக் கொண்டார்!

நடப்பது நாராயணன் செயல் என்ற முடிவிற்குச் சிறுவன் எப்போதோ வந்து விட்டான்! He Started countdown! ‘... ..ம்... ம்.... முதல்ல ஒரு அரிசி மணியைப் போடு.....!”

சிறுவன் நடுங்கிக் கொண்டே அவர் அருகில் சென்றான்! அவன் தன் பையில் பதுக்கி வைத்த ஒரே ஒரு அரிசி மணியும் எங்கோ மாட்டிக் கொண்டு விட்டது! உண்மையைத் தற்போது ஒப்புக் கொள்ளலாம் என்றால் சமய, சந்தர்ப்பங்களின் தட்ப, வெட்ப நிலை சரியில்லையே! எல்லாமே செவ்வாய் மண்டலம் போல் 10000 டிகிரியில் கொதிக்கின்றதே!

குருவாயில் குவலயம் கண்டேனே!

 “.... ம்...” போட்டுட்டியா, அடுத்ததைப் போடு.....” சிறுவன் இரண்டாவது அரிசி மணியை எடுத்தவுடன் பெரியவர் மீண்டும் கையை மூடிக் கொண்டார்...

Climax scene வந்து விட்டது! ...  “ரெண்டாவது அரிசியையும் போட்டுட்டியா?...”

“..ஊம்....” சிறுவன் தீன ஸ்வரத்தில் முனகினான்..!

“அடுத்த மூணாவது அரிசியையும் வாயில போட்டுட்டு ஒட்டு மொத்தமா என் கர்ம பாக்கியைத் தீர்த்திடு!”

சிறுவன் அதிர்ச்சி அடைந்தான்.! உண்மையைச் சொல்ல வேண்டியதுதான்! எப்போதோ சொல்லி இருக்க வேண்டியது! அவரைச் சோதிப்பதற்காக அவன் பையில் போட்டுக் கொண்ட மூன்றாவது அரிசிதான் தொலைந்து போய் விட்டதே! அதற்கு எங்கே போவது இப்போது?

பெரியவர் ஒரு அக்னிக் கோளம் என்று தெரிந்தும் அவரைச் சோதனை செய்தது விபரீதமாய்ப் போய்விடும் போல இருக்கிறதே! தருணம் வந்ததையா என்று உண்மையைச் சொல்லித் தடாலென்று அவர் காலில் விழுந்து விடலாமா....?

“வாத்யாரே.. இல்ல.... அது.... வந்து...”  சிறுவன் இழுத்துப் பார்த்தான்!

“என்னடா வந்து... போய்... மூணாவது அரிசியையும் எடுத்துப் போடுடா.....!”

அவருடைய உரத்த குரலில் பலத்த உஷ்ணம் பொங்கியது! செவ்வாய் மண்டலமே கீழே வந்து பொங்கி விட்டதா? இதுவரையில் அவன் கண்டிடாத அவர் குரலில் பாய்ந்த அதிஉஷ்ணத்தைத் தாங்க இயலாது சிறுவன் தவித்தான்! அவனால் அவர் குரலில் தகித்த பெருங் கனலை ஒரு சிறிதும் அவனால் தாள முடியவில்லை!

“இல்ல .. வாத்யாரே.... என்ன ஆச்சுன்னா...!” சிறுவன் mercy petitionக்குத் தயாரானான்!

ஆனால் தெய்வீகத்தில்தான் sorry factor எதுவுமே வேலை செய்யாதே! There is no such word such as sorry in the divine vocabulary! மிக மிகச் சிறிய தப்பு என்றாலும் அதற்கு உரித்தான தண்டனையை எவராயினும் சரி சித்தரானாலும், மகரிஷியானாலும் சரி அனுபவித்துத்தானே ஆக வேண்டும்!

“மத்தவங்க (கர்ம) பாக்கியைத் தீர்க்க நல்வழி காட்ட அடியேனை பூலோகத்துக்கு அனுப்பினாங்க..! ஆனா நானே பூலோகத்துல பாக்கியைச் சேர்த்துக்கிட்டு அதைக் கழிக்கறத்துக்காக அரிசி மணிப் பரிகாரம்னு ஒண்ணை அங்காளியே தந்து அதுலேயும் அந்தப் பரிகாரத்துக்கு உள்ளேயும் நீ குறுக்கே புகுந்து... அரிசியை மறைச்சுத் தொலைச்சிட்டு..”

“என்னடா இதெல்லாம்? தெய்வீகத்துலயா விளையாடறது? நீ ஏன் என் பாக்கியைப் பெரிய, பெரிய மலைமலையாச் சேர்த்துக்கற?! தெய்வீகப் பாசறைலேயிலேயே பாக்கியை மேலும் வட்டி சேர்த்து கூடுதல் பாக்கியாக்குற திமிரும், அகங்காரமும் ஏனப்பா, எப்படியப்பா உனக்கு வந்தது? ... ம்....ம்....”

பொங்கிப் புனலான பெரியவர் சற்றே மௌனத்தை வர்ஷித்தார்! வெய்யிலின் நடுவே சற்றுத் தூறல்கள் போல...! “சரி.., சரி.. அந்த மூணாவது அரிசியையும் எடுத்துப் போடு!”

சிறுவன் மாபெரும் பிரளயத்திற்குத் தயாராகி விட்டான்! He girded up his loins before the inconquerable loin–clothed Siddha! நடப்பதெல்லாம் நாராயணன் செயல் என்ற முடிவிற்கு அவன் ஆயிரமாவது முறை(!) வந்தாலும் இப்போது எதையும் பார்ப்பதற்குத் திராணியின்றி, துணிவின்றிக் கண்களைக் கைகளால் பொத்தி மூடிக் கொண்டான்.. ருத்ராட்சப் பூனையைப் போலவும், சிறு குழந்தையாட்டமும்...!

...ம்...ம்ம்... எடுத்துப் போடு...!” பெரியவர் ஆலயம் முழுதும் எதிரொலிக்கும்படிப் பெரிதாகச் சப்தம் போட்டு அதட்டிடவே , சிறுவன் தன்னையும் அறியாமல் அந்த பெருங் குரலின் அதிர்ச்சியில் கண்களைத் திறந்து விட்டான்! அங்கே......

பெரியவரின் உள்ளங் கையில் மூன்றாவது அரிசி மணி பளபளத்து அவனைப் பார்த்துப் பரிகசித்துக் கொண்டிருந்தது! இடியாப்ப சித்த ஈசர் என்றும் அதில் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது! ஒளித்து வைப்பதற்காகத் தன் பையில் போட்டுத் தொலைத்த அரிசி மணி எப்படி இங்கு வந்தது...? நடுங்கும் கரங்களுடன் அந்த அரிசியை எடுத்துப் பெரியவரின் வாயில் போட்டவுடன்....

மூட்டை மூட்டையாய் நாணயங்களைக் கொட்டியது போல், கலகலவென்று சிரித்துக் கொண்டே பெரியவர் எழுந்து அவனைக் கட்டி அரவணைத்துக் கொண்டார்..!

“ஏண்டா, ரொம்ப பயந்துட்டியா? ஒரு அரிசி மணியைக் காட்டி, வாயில புகட்டி, சித்தோபநிஷத் பாடத்தைச் சுட்டி, அகங்காரத்தைக் கட்டி, ஓராயிரம் கோடிக் கோடி ஜீவன்களுக்குப் பாடம் புகட்டிடுவாள் அங்காளின்னு இனிமேலாவது தெரிஞ்சுக்க! இந்த அரிசி மணியை வச்சு நீ குருவுக்கு வச்ச டெஸ்ட்ல ஜெயிச்சது யார் தெரியுமா?”

பெரியவர் கண்களை மூடிக் கொண்டிட,

சிறுவன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்!

சற்று நேர மௌனத்திற்குப் பிறகு பெரியவர் (குருவாய்) மொழிந்தார்!

“ஜெயிச்சது அங்காளிதான்டா!”

குருவும் தெய்வமும் ஒன்று என்பதை இவ்வாறு சொல்கின்றார்தானே!

திருப்பாலைத்துறை ஆலய மகிமை

வ்ருஷ வருடத்திற்கான முக்கிய தெய்வ மூர்த்தி! திருப்பாலைத்துறை ஸ்ரீதவள வெண்ணகையாள் சமேத ஸ்ரீபாலைவனேஸ்வரர்!

ஒவ்வொரு வருடத்திற்கும் உரித்தான தெய்வ மூர்த்திகளைத் தக்க சற்குரு மூலம் அறிந்து முக்கிய வழிபாடுகளைக் கடைபிடித்து அந்த ஆண்டிற்குரித்தான நற்காரியங்களை, நல்வழிபாடுகளையும் நிறைவேற்றிப் பலவிதமான பிரச்னைகட்கும் தக்க தீர்வுகளைப் பெற்றுத் தெய்வீகமாக வாழவேண்டும். ஏனென்றால் முக்கியமான துன்பங்கள் ஓரளவேனும் தீர்ந்தால் தானே மனம் ஓரளவேனும் தெய்வீகத்தில் ஈடுபடும்!

கடந்த விக்கிரம ஆண்டிற்கான வழிபாட்டு மூர்த்தியாகக் கும்பகோணம் அருகே திப்பிராஜபுரம் ஸ்ரீவிக்கிரா சோழீஸ்வர மூர்த்தி விளங்கினார் அல்லவா! விக்கிரம வருடமானது வ்ருஷ வருட ஆரம்பத்தோடு முடிவது கிடையாது. நாம் பன்முறை வலியுறுத்தி வந்துள்ள பல காரியங்களுடைய விளைவுகளும், தொடர்புகளும் வரும் ஆண்டுகளிலும் தொடரும்தானே!

நடப்பு வ்ருஷ வருடத்திற்கான முக்கிய தெய்வ மூர்த்தியாக சித்புருஷர்களின் ஞான பத்ரங்களில் அளிக்கப்படுகின்ற ஆலயமே தஞ்சாவூர் கும்பகோணம் தடத்தில் பாபநாசம் அருகிலுள்ள திருப்பாலைத்துறை ஸ்ரீதவள வெண்ணகையாள் சமேத ஸ்ரீபாலைவன நாதர் அருள்பாலிக்கும் திருக்கோயிலாம்! ஸ்ரீதவள நாயகியே வ்ருஷ ஆண்டிற்கான தெய்வ மூர்த்தியாக சித்புருஷர்கள் அருள்கின்றனர்!  மிகவும் சக்தி வாய்ந்த பாடல் பெற்றத் தலமாக இருந்தாலும் மனித சமுதாயத்தின் அசிரத்தையால் திருப்பாலைத்துறைச் சிவாலயம் இன்னும் நன்முறையில் சீரமைக்கப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளது.

அன்னசார நெற்களஞ்சியம்! இந்த ஆலயத்தில் உள்ள அற்புதமான அபூர்வமான நெற்களஞ்சியம் இன்றும் பல மகரிஷிகளால், சித்தர்களால் பூஜிக்கப்படுவதாக, அன்னசார சத்துக்கள் நிறைந்ததாக விளங்குகின்றது.. அக்காலத்தில் அன்னசாரம் மிகுந்த பல இடங்களில், குறிப்பாக, சில ஆலயங்களில் நெற்களஞ்சியங்களை அரசர்கள் நிறுவி இருந்தன.. ஒவ்வொரு நெற்களஞ்சியத்திலும் எத்தகைய மூலிகைப் பூச்சுக்கள் சேர்ந்திட வேண்டும்., எத்திசை, நோக்கி அதன் நெல்வாய் அமைய வேண்டும். அதன் வாய்ப்புறமானது... பிரமிட் வடிவிலோ, வட்ட வடிவிலோ.. எந்த வடிவில் அமைய வேண்டும் போன்ற களஞ்சிய வடிவுப் பரிமாணங்களை விஸ்வ ஸ்ம்ருதி சாஸ்திரம் கொண்டு நிர்ணயிப்பார்கள்..!

இதைத் தவிர எந்தத் தமிழ் ஆண்டில் அந்த நெற்களஞ்சியம் அமைக்கப்பட்டதோ, அம்மூர்த்திக்கான வழிபாடுகளை மேற்கொண்டு, பரிபூரண ஆசிகளைப் பெற்று நெற்களஞ்சிய சக்தியை விருத்தி செய்வார்கள்! உண்மையில் இத்தகைய அபூர்வ நெற்களஞ்சிய தரிசனமே நாட்டின் பசி, பிணியைப் போக்குவது மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் நிலவி வருகின்ற பஞ்சத்தைப் போக்குவதற்கான நல்வரங்களையும் பெற்று விளங்குகின்றது!

சாட்சாத் அன்னபூரணி அம்பிகையே தவள வெண்ணகையாளாக இந்த நெல் களஞ்சியத்தின் அன்ன சாரத் தன்மையைப் பரிபாலித்து வருகின்றாள்... மிகவும் பழமையான இதில் தற்போது தானியச் சேமிப்பு இல்லையெனினும் இதற்குள்ள தெய்வீக மகத்துவமே தனித்தன்மை கொண்டதாக, சிரஞ்சீவித்வம் கொண்டதாக விளங்குகின்றது! சரியான வாஸ்து சாஸ்திர நெறிகளின்படி நிர்ணயிக்க்கப்பட்டதாகவும், அன்னசார அம்சங்கள் பொங்கும் பிருத்வி சக்திகள் நிறைந்த பூமியில் நிறுவப்பட்டு இருப்பதாலும் அளப்பரிய சாகம்பர்ய இறைவரங்களைப் பெற்று இருப்பதாலும் மகத்தான பூரிப்பு வள அனுக்ரக சக்தி கொண்டதாகத் திருப்பாலைத்துறை ஆலய நெற்களஞ்சியம் விளங்குகின்றது!

நெற்களஞ்சியம் திருப்பாலைத்துறை

தம்முடைய தோட்ட, வயலின், நிலத்தின், பண்ணையின் முதல் அறுவடையை, காய், கனிகளை இங்கு படைத்து சமைத்து வடித்து அன்னதானமாக அளித்திடில் நல்ல விளைச்சல், தான்ய லட்சுமி கடாட்சம் உண்டாகும்! கலப்பை, கதிர் அறுவாள் போன்ற நிலக் கருவிகளையும் இந்நெற்களஞ்சியத்திற்கு முன் ஒரு கோலம் வரைந்து வைத்து ஆயுத பூஜை செய்து நிலத்தில் பயன்படுத்துதலால் நில தோஷங்கள் நீங்கி நன்முறையில் பயிர் அபிவிருத்தி ஏற்படும்! பிரபஞ்சத்திலேயே பெறுதற்கரிய சாகம்பர்ய அன்னசார சக்தி அம்சங்களைக் கொண்டதாகும்!

அம்பிகை தாவர சிருஷ்டிக்கான ஸ்ரீசாகம்பரி தேவியாக அவதாரிகையைப் பெறுவதற்காக அக்னியின்  மேல் அமர்ந்து கடுந்தவம் பூண்ட தலங்களில், புனித பூமியில் ஒன்றாக விளங்குவதாலும், ஸ்ரீசாகம்பரி தேவி தவம் பூண்ட இடத்திலேயே இந்நெற்களஞ்சியம் அமைந்திருப்பதாலும் இதன் மகத்வம் பெருகுகின்றது! பேரரசர்கள் நினைத்திருந்தால் ஒரு தனி இடத்தையே, பெரும் திடலையே அமைத்து அங்கு நெல்லைச் சேமித்திருக்க இயலும், ஆனால் திருப்பாலைத்துறைக் கோயிலை நிறுவிய மாமன்னன், இப்பூமியின் சாகம்பர்ய அன்னசார சக்தியை உணர்ந்து, ஏழுவித வர்ண தேவதைகளின் அனுகிரகத்தைப் பெறுவதற்காக சப்த ரிஷிகளைப் பிரார்த்தித்து அவர்களுடைய அருட்துணையுடன் ஏழுவகை மூலிகைப் பூச்சுகளுடன் குறித்த நேரத்தில் குறித்த புனிதமான வாஸ்து பூஜை நேரத்தில் இக்களஞ்சியத்தை நிறுவினான்.. எனவே இது நெற்களஞ்சிய வாஸ்து சாத்திர இறைப் பெட்டகமாகவும் விளங்குகிறது! இதன் தரிசனமே, வீட்டில் இருக்கின்ற பலவிதமான தோஷங்களை நீக்கக் கூடிய நேத்ர சக்தியைத் தருவதாகும்! இதன் அன்னசார சக்தியைப் பெற்றால் வீட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படாது! அன்ன துவேஷ நோய்களும் அண்டாது!

அன்னதோஷங்கள் நீங்கிட... அக்காலத்தில் இதனுள் வைக்கப்படும் தானியங்கள் எத்தகைய அன்ன துவேஷங்களையும் போக்கும் சக்தி நிறைந்ததாக விளங்கியது! தற்காலத்தில் இதன் தரிசனமே அன்னசம்பந்தமான பல குற்றங்களையும் போக்கி (சாப்பாட்டுத் தட்டை விட்டெறிதல், உணவை வீணாக்குதல் போன்றவை) கொடிய கர்ம வினைகளுக்கான (கோயில் குத்தகைப் படி தராது இறைவனை ஏமாற்றுதல் போன்றது) ஓரளவு பிராயச் சித்தங்களைப் பெற்றுத் தருகின்றது! அன்னதான இடத்தில் பிரசாதமாய் வாங்கிய உணவைத் தூக்கி எறிதல் போன்றவற்றிற்கு கடுமையான சாபங்கள் உண்டு என்பதை இனியேனும் அறியவும்!

அன்ன துவேஷம் என்றால் நாம் ஏற்கனவே விளக்கியுள்ளபடி நோய் நொடிக் காலங்களில் அன்னத்தை உண்ண இயலாது drips –glucose என்று திரவ உணவுகளை மட்டுமே அருந்திடும் நிலையாம்! ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் போன்றவற்றால் பலவித உணவுகளை உண்ண இயலாது இருத்தலும் அன்ன துவேஷமேயாம்! நோய் நொடியிலும் கூட மூன்று வேளையும் உணவு உண்ணும் நன்னிலை பெறுவதே இறைவளம் கூடிய ஆரோக்யமாகும்! எனவே அன்ன துவேஷம் என்பது வாழ்க்கையில் எந்தக் காலக் கட்டத்திலும் எங்கும் எவருக்கும் ஏற்படாதிருக்க இத்தகைய அன்னமாச் சுடர் கூடிய தரிசனங்களும், அன்ன சௌந்தர்ய வழிபாடுகளும் உதவும்!

ஸ்ரீதவளவெண்ணகையாள்
திருப்பாலைத்துறை

மேலும் இவ்வருடத்தில் உணவுப் பண்டங்களால் விரயம் ஏற்படும் என்பதை வ்ருஷ வருடத்திற்கான அம்சங்களுள் ஒன்றாக நாம் குறிப்பிட்டு உள்ளோம்.. ஸ்ரீதவள வெண்ணகையாளாக இங்கு அருள்பாலிக்கின்ற அம்பிகையே ஸ்ரீஅன்னபூரணி லோகத்தினின்று தோன்றிய சர்வேஸ்வரியாவாள்... காசியில் ஸ்ரீஅன்னபூரணி தேவி கையில் ஒரு அன்னக் கரண்டியைத் தாங்கியிருப்பதைக் காண்பீர்கள்! எத்தனையோ கோடி சித்புருஷர்களும், மஹரிஷிகளும் இத்தேவியின் திருக்கரங்களில் உறைகின்ற கரண்டியாக உருக் கொண்டிடப் பல கோடி யுகங்களாகப் பெருந்தவம் மேற்கொண்டு இத்திருக் கரண்டியாக உருப் பெற்றுள்ளனர்.  திருத்தனியில், பழனியில், திருப்பதியில் பக்தர்கள் மிதித்து ஏறி வரும் படியாகப் பிறவி வேண்டும்.., சபரிமலையில் புனிதமான 18 படிகளாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் கோடானு கோடி ஆண்டுகள் தவம் பூண்கின்ற மகரிஷிகளும் உண்டு! ஆலயங்களில் ஒரு சிறு செங்கல்லாக, சிறு சிறு மண் துகளாக, ஓடாக, படியாக, விளக்காக அமைதல் என்பதே பெறுதற்கரிய பாக்யமாகும்..!

கலியுகத்தில் அனைத்து நாடுகளிலுமே கம்ப்யூட்டர்தான் ஆக்ரமித்துக் கொள்ளும் என்பதைச் சித்புருஷர்கள் தீர்க தரிசனமாக நன்கு தெளிவுபடுத்தி உள்ளனர்... மின்சார கதியாக, இயந்திர கதியாக மாறி வரும் கலியுக மனித வாழ்க்கையில் ஒரு நாள் மின்சாரம் தடைபட்டு விட்டால் எத்தகைய இடையூறுகளுக்கு மனிதன் தன்னை ஆட்படுத்திக் கொள்கின்றான் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.. ஒரு மணி நேரம் மின்சாரம் நின்றுவிட்டால் மின்விசிறி இல்லாது அவன் தவிப்பதோடு கூட அவனுடைய அனைத்துக் காரியங்களும் ஸ்தம்பித்து விடுகின்றன அல்லவா.!

எப்போது மனிதன் செயற்கையான முறையில் இயந்திரங்களுக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டு விட்டானோ, அவனால் இயற்கையான வளம் கூடிய இறைச் சீர்மய வாழ்வை முழுவதுமாகப் பெற இயலாமற் போய்விடுகிறது.. நம்முடைய ஆலயங்கள் யாவும் பரிபூரண இயற்கைத் தன்மையுடனே உருவானவை ஆகும்.. இதனால்தான் எத்தனை கோடி யுகங்களானாலும், அதே சுயம்புலிங்க மூர்த்திதாம் இன்னமும் அருள்பாலித்துக் கொண்டுள்ளார். எத்தனையோ தெய்வாவதார மூர்த்திகளையும் உற்பவித்து, உத்தம சித்தர்களையும், மகரிஷிகளையும் உருவாக்கி, பல்லாயிரம் கோடி மனிதர்களையும், ஜீவன்களையும் கண்ட அதே சுயம்புலிங்க மூர்த்திதான் இன்றும் நமக்கு அருட்காட்சி தந்து கொண்டுள்ளார் என்றால் அவர்தம் இறை சக்தியை என்னென்று சொல்வது? அவர்தாமே என்றும் நிரந்தரம்! நாமெல்லாம் மறையும் நீர்க் குமிழிகள்தாமே!

கலியுகத்தில் அனைத்துமே கம்ப்யூட்டர் மயம் ஆகிவருகிறது என்பதால் நம்மீது பெருங்கருணை கொண்டு ஜீவன்களுக்கு இயற்கையுடன் இணைந்த வாழ்வை அளிப்பது சித்தர்களின் பெருங் கடமையாகின்றது. மெய்ஞானத்திற்கு உறுதுணையாக நிற்கும் விஞ்ஞானத்தையே சித்புருஷர்கள் விரும்புகின்றனர். வெடிகுண்டு, அணு ஆயுதம் என அழிக்கும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும், பக்க விளைவுகள் கூடியதும் தேவையற்றவை! எத்தகைய துன்பமும் இன்றி மனித சமுதாயத்திற்கு, பூலோகத்திற்கு, பிரபஞ்சத்திற்குப் பயன்படுவதே உண்மையான விஞ்ஞானம்!

ஸ்ரீகணபதி மூர்த்தி
திருப்பாலைத்துறை

ஸ்ரீகணபதி மூர்த்தி
திருப்பாலைத்துறை

ஆங்கில மருத்துவத் துறையில் எத்தனையோ உயிர் காக்கும் மருந்துகள் நடைமுறையில் இருந்தாலும் அவைகளால் உருவாகும் பக்க விளைவுகள் (side effects) வாழ்க்கையை உலுக்கி விடுகின்றனவே! இதற்குக் காரணம் எந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளிலும் இறை மற்றும் இயற்கை சக்தியை மறந்து விடுவதேயாகும்! சந்திர மண்டலத்திற்குச் செல்வது என்றால் முறையாக சந்திர வழிபாடு மேற்கொண்டால்தான் அந்த சந்திரப் பயணமானது பூலோகத்திற்குப் பயன்படுவதாக அமையும். இல்லாவிடில் நம்மால் முடியும் என்னும் அழிவுடை விஞ்ஞானமய அகங்காரத்தையும், ஆணவத்தையும் நஷ்டங்களையுமே அத்தேவையில்லாப் பயணம் கொடுக்கும்..!

இந்த விஞ்ஞானமய அகங்கார, ஆணவத்தைப் போக்குபவளாக விளங்குபவளே திருப்பாலைத் துறை ஸ்ரீபாலைவனேஸ்வர இறைத் துணைவியாம் ஸ்ரீதவள வெண்ணகையாள் ஆவாள்.. அற்புதமோ அற்புதம் என்று நாம் கொண்டாடும் நம் அற்பமான விஞ்ஞான விளைவுகளைக் கண்டு எப்போதும் நகைக்கும் வெண்ணகையாள் முப்பத்திரண்டு திருத்தந்த சக்திகளுடன் மகத்தான அன்னசக்திகளையும் தருபவளாய், தெய்வீக நல்வரங்களையே 32 அறங்களாய் அளிப்பவளே ஸ்ரீதவளாம்பிகை! 32 bits எனப்படுவதாக, கம்ப்யூட்டர் துறையில் மாதந்தோறும் பல புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன அல்லவா. இதற்குரிய மூளைச் செல்களான மாண்ட்ய ஜங்கம அணுக்களை அன்னசாரத்துடன் பரிபாலிப்பவளே ஸ்ரீதவளாம்பிகை!

நவீனம் மிகவும் பழமையானதே! கம்ப்யூட்டர் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை எவ்வாறு மனிதன் பெறுகிறான்? வெறும் விஞ்ஞான ஆராய்ச்சியாலா? நிச்சயமாக இல்லை! உதாரணமாக Linux என்ற O/S முறை உருவாக்கப்பட்டுள்ளது என்றால் அதை உருவாக்கியவரின் பித்ருக்கள் விண்ணுலகில் இருந்து கொண்டு தம் தீர்க்க தரிசனப் பலன்களை இக்கண்டுபிடிப்பாக அருள்கின்றனர் என்பதே உண்மையாகும்.. இதைக் கொணர்ந்தவர் இவ்விறைப் பேருண்மையை உணர்கின்றாரோ இல்லையோ நிச்சயமாக இதுவே சாசுவதமான தேவ சத்தியமாகும்.. ஏனெனில் பூலோகம் போல் எத்துணையோ பூமிகள் உண்டு. மற்றொரு பூமியில் பல ஆண்டுகளுக்கு முன்னரேயே Linuxல் திறமை கொண்டவர்கள்தாம் தற்போது இத்துறையின் காரண கர்த்தாவாக விளங்குகின்றனர்! அவர்தம் பித்ருக்கள் எந்த பூலோகமானது நம்மை விட கம்ப்யூட்டர் துறையில் அதிவேக முன்னேற்றம் பெற்றுள்ளதோ அவற்றிலிருந்து புண்ய சக்திகளைத் தம் ஆசிகளாகப் பெற்றுத் தருகின்றனர்! எத்தனையோ துறைகளில் நம்மை விடக் கோடி பங்கு முன்னேற்றம் கொண்ட அந்தப் பூமியிலிருந்து தான் Linux நவீனம் அவர்தம் பித்ருக்கள் மூலமாக நமக்குக் கிட்டியுள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.!

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
திருப்பாலைத்துறை

எனவே ஏதோ மனிதனின் விஞ்ஞானப் பூர்வ ஆராய்ச்சியால் கம்ப்யூட்டர் துறையில் கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன என ஒரு போதும் அறியாமையால் தயவுசெய்து எண்ணாதீர்கள். யார் ஒருவர் கம்ப்யூட்டர் துறையில் கண்டுபிடிப்புச் செய்தார்களோ, அவர்தம் பித்ருக்கள் மூலமாகவே குறித்த பல பூஜைகளாலேயே நம்மை விடப்பெரிதும் முன்னேற்றம் கொண்ட பூலோகங்களில் இருந்து இந்தப் புதுக் கண்டுபிடிப்புகள் பூமிக்கு வந்துள்ளன என்பதை இனியேனும் உணருங்கள்... மற்ற துறைகளை விட, கம்ப்யூட்டர் துறையில் அளப்பரிய பல கண்டுபிடிப்புகள் வரக் காரணமென்ன? மனிதனுடைய மனமானது பல விருப்பங்களுக்கும், ஆசைகளுக்கும் ஆட்பட்டு மாயைகளால் மாறிக் கொண்டிருப்பதுதான் முக்கியக் காரணம்! மனித விருப்ப வடிவகளுக்கு ஏற்ப, இதனால்தாம் இறைவனே தன்னைப் பல வடிவுகளில் தோற்றமளித்துப் பல தெய்வ மூர்த்திகளாக என்றும் அருள்பாலித்துக் கொண்டுள்ளான்..!

பல கோடி யுகங்களாக விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைக் கண்டு நகைப்பவளாய் அருள்கின்ற ஸ்ரீதவள வெண்ணகையாள் சமேத திருப்பாலை வனநாதர் இக்கலியுகத்திற்கு முன் எத்துணையோ கோடி கோடியாம் சதுர்கோடி யுகங்களைக் கண்டு களித்து மீண்டும், தற்போதும், எப்போதும் அருள்பாலிக்கின்றார்.! ஸ்ரீதிருப்பாலைவன நாதர் பல சதுர்கோடிக் கலியுகங்களில் எத்துணையோ அற்புத விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைக் கண்டவர்தாமே! அவருக்கு Pentium 4, Linux என்பவையெல்லாம் பல கோடி யுகப் பழமையானவையே! ஒன்றை அறிந்திடில் அதை சிருஷ்டித்தவர்க்கு அது பழமையுடையதுதானே!  எனவே நமக்கு எது புதுமையோ, அவருக்கு அது பழமையே! இத்தத்துவம் ஒன்றை உணர்ந்தால் போதும் கம்ப்யூட்டர் துறையில் நீங்கள் நன்கு பிரகாசிக்கலாம்.. இன்றும் ராமாயணம், மகாபாரதப் புராண நிகழ்ச்சிகள் பிற லோகங்களில் நடந்து கொண்டு இருக்கின்றன என்றால் நவீன கலியுகம் தாண்டிய அவற்றில் தற்போதைய கம்ப்யூட்டர் கண்டுபிடிப்புகள் எல்லாம் பழமையானவை தாமே!

கம்ப்யூட்டர் துறைக்கு மிகவும் முக்கியமான Processor  மற்றும் Mother Board ம் பலவித வடிவுகளில், மாதந்தோறும் புதியனவாகப் பலவிதமாக வருகின்றன அல்லவா! இதேபோலதான் விக்கிரம ஆண்டில் ஸ்ரீவிக்ரம சோழீஸ்வரர் அருள்பாலிக்கும் நிலையைப் பரிபாஷை சித்புருஷர்கள் கம்ப்யூட்டரின் Morher Board ஐச் சோழியப் பதம் என்று சொன்னார்கள்..! தற்போது வ்ருஷ வருடத்தில் கம்யூட்டரின் Mother Boardஐப் பாலைப் பதனம் என்று பரிபாஷையால் விளக்குகின்றார்கள்.. அடுத்த ஆண்டில் இதன் பெயர் அப்போது அறிவிக்கப் பெறும்! இவையெல்லாம் அதியற்புத பீஜாட்சரப் பதங்கள்! இதை வைத்து ஆராய்ச்சி செய்தாலே எத்தனையோ தெய்வீக அற்புதங்கள் புரிய வரும்...! ஏனென்றால் நாளுக்கு நாள் கம்ப்யூட்டர் துறையில் பல கண்டுபிடிப்புகள் ஏற்பட்டுக் கொண்டே இருப்பதால் இவையெல்லாம் எத்தனையோ பூமிகளில் ஸ்ரீதிருப்பாலைவன நாதராலும், ஸ்ரீதவள வெண்ணகையாளாலும் தோற்றுவிக்கப்பட்ட பழமைகளேயாகும்!

சுக்ரபீடம் திருப்பாலைத்துறை

எனவே இந்தப் பாலைப் பதனத்திற்குக் காரணமாகிய ஸ்ரீதவள வெண்ணகையாளை வணங்குதலே வ்ருஷ வருடத்திற்கான முக்கிய வழிபாடாக அமைகிறது.. எனவே இவ்வாண்டில் ஒரு முறையேனும் ஸ்ரீதிருப்பாலைவன நாதரை, ஸ்ரீதிருவெண்ணகையாள் சமேதராய்க் கண்டு வணங்கி வழிபடுங்கள்.. உண்மையில் தெய்வீகப் பூர்வமாகக் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளின் முன்னோடியை இவ்வாலயத்தில் கண்கூடாகக் காணலாம்... ஆலயத்தின் அமைப்பு, தூண்கள், சிற்பங்கள், நெற்களஞ்சிய அமைப்பு, லிங்க அமைப்பு, வெண்ணகையாளின் திருவுரு, தீர்த்தம், பிரகார அமைப்புகள் இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கின்ற மற்ற தெய்வ மூர்த்திகளின் தோற்றங்கள், கருவறை, கருவறை விமானம், கலசங்கள் ஆகிய அனைத்துமே இவ்வாண்டில் கம்ப்யூட்டர் துறையில் வரப்போகும் கண்டு பிடிப்புகளுடன் பெரும் தொடர்புடையன என சித்புருஷர்கள் தீர்க்க தரிசனமாக உரைத்துள்ளார்கள்..! இவ்வாண்டில் எத்தகைய கம்ப்யூட்டர்த் துறைக் கண்டுபிடிப்புகள் வரவேண்டும் என்பது ஏற்கெனவே இறைவனால் வரையறுக்கப்பட்டதாகும். மேலும் இக்கண்டுபிடிப்புகள் யாவும் இப்பூலோகம் போன்ற பலபூமிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவையும் ஆகும்..!

எனவே உண்மையான கம்ப்யூட்டர்த் துறை மெய்ஞான விஞ்ஞானிகள் சித்புருஷர்களே ஆவர்.. எனவே ஸ்ரீசுசரித சரஸ்வதி, ஸ்ரீஅனுராதா க்ரமண சரஸ்வதி, ஸ்ரீஅனுராதா க்ரமண வினாயகர் மூர்த்திகளின் லோகங்களினின்று வ்ருஷ வருடத்திற்கான கம்ப்யூட்டர் துறையில் வரவேண்டிய சிறப்புகளுடன் சம்பந்தப்பட்ட சித்புருஷர்கள் யாவருமே வ்ருஷ வருடம் முழுவதும் திருப்பாலைத் துறைத் திருக்கோயிலில் அரிய வழிபாடுகளை மேற்கொள்வார்கள்..!

இருசூரியன்களுக்கு இடையே
நடனமிடும் ஸ்ரீநர்த்தன விநாயகர்
திருப்பாலைத்துறை

உங்களுக்கும் கம்ப்யூட்டர் துறைக்கும் தொடர்பு இல்லை என எண்ணாது இவ்வாண்டு திருப்பாலைவன நாதரை தவள வெண்ணகையாளோடு கண்டு தரிசித்து “இறைவா! இவ்வாண்டின் கணினி கண்டுபிடிப்புகள் யாவும் பூலோகத்திற்கு நன்மை பயப்பதாய் அமையட்டும், அணு ஆராய்ச்சி, கிரக ஆராய்ச்சி என மனித சக்தி வீணாகாது, விரயமாகாது பூலோக ஜீவன்கட்கு நன்முறையில் பயன்படும்படி இயங்கட்டும்” என மனமார வேண்டி இங்கு கபால ஜீவ சக்திகள் நிறைந்த வெண்டைக்காய், முந்திரி, பாதம் கலந்த உணவைத் தானமளியுங்கள்! இவையெல்லாம் மூளையிலுள்ள செல்களை விருத்தி செய்வதால் இப்பூவுலகில் நல்வாழ்விற்கு மட்டும் கண்டுபிடிப்புகள் பயன்பட உங்கள் தான தரும சக்திகள் துணைபுரியும்... மேலும் கணினி சம்பந்தமாக உங்கள் வாழ்வில் எத்தகைய இழப்புகளும் ஏற்படாதிருக்கவும் இப்பூஜா பலன்கள் பெரிதும் உதவும்!

வாழ்க்கையில் எவ்விதத் தொடர்பும் உங்களுக்கும் கணினிக்கும் இல்லை என்றாலும் உங்களுக்கு வங்கிகளிலே ஏதேனும் வங்கிக் கணக்குகள் சேதம் பெற்று அழிந்து விடலாம் அல்லவா? உங்கள் வீட்டில் கம்ப்யூட்டர் இல்லை என்றாலும், கம்ப்யூட்டரின் ஆரம்பப் பாடம் உங்களுக்குப் புரியவில்லை என்றாலும், உங்கள் வாழ்வில் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட எத்துணையோ காரியங்களை நீங்கள் நிறைவேற்றத்தானே வேண்டியுள்ளது!

வங்கிக் கணக்குகள், பயண டிக்கெட்டுகள், மின்சாரக் கட்டணம், டெலிபோன் எனப் பலவிதத்தில் உங்களை அறியாமலேயே உங்கள் வாழ்க்கைக் காரியங்கள் கம்ப்யூட்டருடன் தொடர்பு கொண்டுள்ளன... உங்கள் சந்ததிகளும் கம்ப்யூட்டர் மயமாகத்தானே இருப்பர்! எனவே இதில் நமக்குச் சம்பந்தமில்லை என்று ஒதுங்காதீர்கள்! ஏன் நீங்கள் பயணம் செய்யும் விமானம், இரயில் கண்ட்ரோல் நிலையங்களில் கணினி பயன்படுத்தப்படுவதால் அவை தவறான சைகைகள் தருமானால் அதனால் பெரும் விபத்து நேருமே! அல்லது உங்கள் குழந்தைகள் உறவினர்கள், நண்பர்கள் அனைவருமே கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட துறையில் தானே எப்போதும் உள்ளனர். நீங்கள் பார்க்கின்ற தொலைக் காட்சி, கேட்கும் வானொலி அனைத்துமே கணினி தொடர்புடையவையே!

நீங்கள் இப்போது படித்துக் கொண்டுள்ள ஸ்ரீஅகஸ்திய விஜய தெய்வீக மலர் கூட கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட DTPயால் வந்ததுதான்! ஆதலால் பொது நலமாகச் சமுதாய இறைப் பணியாகக் கூட இவ்வாலய வழிபாடும் பிரார்த்தனையும் அமையட்டுமே! அனைவரும் இவ்வாண்டில் ஒரு முறையேனும் ஸ்ரீதவள வெண்ணகையாள் சமேத திருப்பாலைவனநாதரை வழிபட்டுக் கணினிக் கண்டுபிடிப்புகள் பூலோக ஜீவன்கட்குப் பயன்படும்படிப் பிரார்த்திப்பீர்களாக! இதுவும் பூலோகத்திற்கு நீங்கள் ஆற்றும் ஜாதி, இன, குல பேதமற்றப் பெரும் அறப்பணியாகும்!

எச்சூர் சந்தனக் காப்பு

எச்சூரில் சிறப்புற நடைபெற்ற சித்திரை சதய சந்தனக் காப்புத் திருநாள். சென்னை காஞ்சிபுரம் தடத்தில் சுங்குவார் சத்திரத்திலிருந்து 5 கிமீ  தொலைவிலுள்ள எச்சூர் ஸ்ரீமார்கண்டேஸ்வரர் சிவாலயத்தில் கடந்த சித்திரை மாதம் சதய திருநட்சத்திரத்தன்று (19.4.2001) திருஅண்ணாமலை ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆசிரமம் சார்பாக சிவபெருமானுக்குச் சந்தனக் காப்பு இடப்பட்டது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் அளிக்கப்பட்ட இச்சதயத் திருநாள் திருச்செய்திப்படி தாமே சந்தனக் கல், கட்டை கொண்டு அரைத்த பெருமளவு சந்தனத்தை அளித்திட, ஆவுடைக்கும், பாணலிங்கத்திற்குமாகச் சாற்றி நன்கு பரிபூரணமாக, முழுமையாகக் காப்பு இடப்பட்டது! இறைவன் அளித்த பெறுதற்கரிய இந்த மானுட உடல் கொண்டு சந்தனக் கல், கட்டை கொண்டு  நம் கரங்களால் சந்தனத்தை அரைத்தல்தான் சிறப்பானதாகும்.. ஏனெனில் சந்தனத்தை அரைக்கும் பொழுது, ஹஸ்த ரேகா ஜாதகச் சக்கரமான நம்முடைய உள்ளங்கையிலுள்ள ரேகைகளுக்கு, மகத்தான இறைசக்தி பெருகுகின்றது.. ஹஸ்த ரேகா கிரணங்கள் நன்முறையில் வலுப்பெறுவதோடு பெருந் திரளான ஆன்ம சக்தியையும் பெற்றிடலாம்... சந்தனக் கல், கட்டையை ஆலயத்திற்குக் கொண்டு வந்து, வசதியற்ற பலருக்கும், அறியாதோருக்கும் ஆலயத்திலேயே சந்தனம், அரைத்து இறைவனுக்கு சாற்றுவதற்கான அதியற்புத வாய்ப்பும் சேவையும் பலரும் தந்து இறைப்பணி புரிந்தனர்.!

சதய நட்சத்திரமும் யமபகவானுக்கு உரித்தானதாகையால் ஸ்ரீமார்கண்டேஸ்வரரை வணங்குகின்ற யமபகவானே நமக்கு அருள்புரியும் நாளாகச் சித்திரை சதயத் திருநாள் விளங்குவதாலும்.. இந்நாளில் சந்தனம் அரைத்துத் தந்தோர், சந்தனக் காப்பிற்கு உதவியோர், தரிசனம் செய்தோர் அனைவரும் இறையருள் ததும்பப் பெறுவர்.. மேலும் பழமை வாய்ந்த இவ்வாலயத்தின் இரு தீர்த்தங்களிலும் பலரும் தர்ப்பணம் அளித்து பித்ருசாந்தி அனுகிரகமும் பெற்றனர்... ஒவ்வொரு அமாவாசையன்றும், மாதப்பிறப்பிலும், சதய நட்சத்திரத்திலும் தர்ப்பணம் அளிக்க வேண்டிய மிக முக்கியமான பித்ரு முக்தித் தலங்களுள் ஒன்றாக எச்சூர் விளங்குகின்றது என்பதை இனியேனும் பக்த கோடிகள் உணர்ந்து இதனைக் கடைபிடிப்பார்களாக! ஆண்டு தோறும் இவ்வாலயத்தில் சித்திரை சதய நட்சத்திரத்தில் இறைவனுக்கு சந்தனக் காப்பு இடுகின்ற மகத்தான கைங்கர்யத்தை ஏற்று நடத்தி இறைவனின் பேரருள் பெறுமாறு திருஅண்ணாமலை ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் சார்பாகப் பணிவன்புடன் வேண்டுகிறோம்.. சந்தனம் அரைத்துத் தந்த அனைத்து பக்த கோடிகளுக்கும், சந்தனப் பிரசாதம் அனுப்பியுள்ளோம்.. இறைவன் திருமேனிதனைத் தழுவிய சந்தனக் காப்பு என்றால்., சிவலோகம், கைலாயம், நந்தி லோகம் போன்ற அனைத்து லோகங்கட்கும் அவற்றின் கிரண சக்திகள் பாய்ந்து மகத்தான இறையருளையும் திரட்டி வருவதால் இச்சந்தனப் பிரசாதத்திற்கு மகத்தான நோய் தீர்க்கும் குணங்களும், இறை நல்வரப் பண்புகளும் மிகுதியாகும்..!

காசு கீழே விழுதல்

ஒவ்வொரு விநாடியும் நாம் தெய்வீகமாக வாழ்ந்தாக வேண்டும். நடந்தது, நடக்கட்டும்! வீண் அரட்டைகளிலும், தீய பழக்க வழக்கங்களிலும், வெறுமனே காலாட்டிக் கொண்டிருப்பதிலும் பல வருடங்களை வீணாக்கி விட்டோமே! இனியேனும் நம் வாழ்வின் ஒவ்வொரு விநாடியையும் நன்முறையில் தெய்வீகமாகப் பயன்படுத்திடுதல் வேண்டும் என்ற தீவிர வைராக்யத்தை மேற்கொண்டிடுங்கள்! வாழ்க்கையில் நாம் தினந்தோறும் ஒவ்வொரு நிமிடத்திலும் சந்திக்கின்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் நமக்குப் பல இறைப் பாடங்களை உணர்த்துகின்றான்.. சாதாரணமாக, பையிலிருந்து காசு விழுவது கூடப் பல காரண காரியங்களுக்காகவே என்பதை உணருங்கள்.. பல சமயம் வெளியே சொல்ல முடியாத நிலையில் பையிலிருந்தோ, சட்டை, பேண்ட்டிலிருந்தோ காசு தவறி கீழேயோ, கழிப்பறைக் குழிக்குள்ளோ சேர்ந்துவிடும்.. இந்நிலையில் அக்காசை என்ன செய்வது?

கழிவறைக் குழியில்/ சாக்கடையில் விழுந்த பணத்தயோ, காசையோ எடுக்கலாமா? எடுத்து என்ன செய்யலாம்? இத்தகைய சிறு பிரச்னைக்குக் கூட ஆன்மீகத்தில் நிச்சயமாகத் தீர்வு உண்டு! இது என்ன பெரிய பிரச்னையா? ஒரு எட்டணாவோ, நாலணாவோ கழிவறைக் குழிக்குள் விழுந்தால் அதை அப்படியே விட்டுவிடுவது தானே! இதில் என்ன பெரிய பிரச்னைக்கு இடமுள்ளது என நீங்கள் கேட்கலாம்! கழிவறைக் குழிக்குள் காசு விழுந்தால் அதனை அலட்சியப் படுத்தக் கூடாது! காசு, நாணயம், பணம் என்பதை ஸ்ரீலட்சுமி கடாட்சமாக நாம் போற்றும்போது கழிப்பறைக்குல் ஒரு நாணயம் விழுந்தால் அதன் லட்சுமி கடாட்சத் தன்மை குறையுமா? கழிவறைக்குள் காசு தவறி விழுதல் என்பது உங்களிடம் அநாவசியமான முறையில், தேவையற்ற முறையில் வந்த பணம் உள்ளது என்பதையே குறிக்கின்றது!

வேலை செய்யாது வந்த பணம் கர்மவினை கூட்டி வரும்! நாம்தான் நல்ல விதமாகச் சம்பாதித்து வாழ்கின்றோமே! லஞ்ச லாவண்யப் பக்கமே தலைகாட்டுவது கிடையாதே! அப்படியிருக்க நம்மிடம் எப்படி அதர்மமாகப் பணம் வந்திருக்கும் என்று நீங்கள் எண்ணலாம். உண்மையில் உங்கள் மனசாட்சியைத் தொட்டுக் கேளுங்கள்.. அலுவலகத்தில் உங்களுக்குக் குறிப்பிட்ட 6, 8 மணி நேரம் ஒழுங்காகப் பணிபுரிகின்றீர்களா? உங்கள் உழைப்பிற்கேற்ற வேலை இல்லை என்றாலும் பிறர் பணியை எடுத்துச் செய்து ஆன்மீகமாக ஏதேனும் தீர்வு பெறலாமே! இப்போது நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்! உங்களிடம் அதர்மமான முறையில் முறையாக உழைக்காது வந்த பணம் நிச்சயமாக இருக்கின்றதா இல்லையா என்று?

மேலும் உங்களுடைய சம்பாத்யத்தில் ஒரு விகிதாசாரத்தை நீங்கள் கண்டிப்பாக தான, தருமங்களுக்காகச் செலவிட்டே ஆக வேண்டும்.. எனக்கு வரும் பணம் எனக்கே போதவில்லையே! எவ்வாறு நான் புண்ணிய காரியத்திற்குச் செலவழிக்க இயலும் என எண்ணாதீர்கள்! உங்களுடைய பூர்வஜென்மப் புண்யத்தாலும், உங்கள் பித்ருக்களின் ஆசியாலும் தான் இன்று திருமண வாழ்வுடன் நல்ல வேலையில் அமர்ந்துள்ளீர்கள்.. எனவே அவர்களுக்காக நன்றிக் கடனாக இறைக் காரியங்களுக்காக உங்கள் வருமானத்தில் ஒரு பங்கை நீங்கள் பயன்படுத்தித்தான் ஆக வேண்டும்.. உங்களுக்குச் சம்பளப் பணம் போதவில்லை என்பதற்காக நீங்கள் மூன்று வேளையும் உண்ணாமலா, காபி, டீ, புகையிலை, சிகரெட், சினிமா, டீவி இல்லாமலா இருக்கின்றீர்கள் என்று உங்களையே நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள்! எனவே கழிவறைக் குழியில் காசு விழுதல் என்பது உங்களிடத்தில் சரியான முறையில் வராத பணத்தைக் குறிப்பதால் குழிப்புள் கர்ம வினை எனும் தோஷத்திற்கு நீங்கள் ஆளாகியுள்ளீர்கள் என்பதை இது உணர்த்துகின்றது.. மேலும் கழிவறையில் விழுந்த காசை நீங்கள் கட்டாயம் எடுத்துத்தான் ஆக வேண்டும். அதனை அலட்சியம் செய்துவிட்டால் அக்குழிக் கர்மவினைகள் பெருகிப் பெரும் பெரும் துன்பங்களாக வந்து சேரும். உங்கள் தங்கச் சங்கிலி கழன்று கழிவறைக்குள் விழுந்தால் எடுக்காமலா விட்டு விடுவீர்கள்? எட்டணா, நாலணாதானே என்னும் அலட்சிய பாவனைதான் தரித்திர நிலையைச் சிறிது உருவாக்கி உங்களுக்குப் பெரும் துன்பமாய் வந்து சேரும். இவ்வாறு விழுந்த காசை எடுக்க முடியாமலே போய்விட்டால்..! இதற்கெனப் பரிகாரத்தைக் கேட்டுப் பெறுதல் வேண்டும்!

மேலும் லட்சுமி கடாட்சம் என்ற ஒன்று சிறிது சிறிதாக உங்களை வந்து அடையும் முன்னர், உங்களுக்குப் பலவித சோதனைகள் வந்து சேரும். அவற்றை நீங்கள் வென்று மீண்டால்தான் உங்களுக்கு ஐஸ்வர்ய கடாட்சம் விருத்தி ஆகும்! எட்டணாவோ, நாலணாவோ அதிலும் லட்சுமி கடாட்சம் நிறைந்துதான் உள்ளது.. எனவே கழிப்பறைக்குள் விழுந்த காசை எடுத்துக் கழுவி, புனிதப்படுத்தி அதனுடன் ரூபாய் 10, 50 அல்லது வசதி இல்லாவிடில் ஒரு ரூபாயையாவது சேர்த்து ஏதேனும் உணவுப் பொருளை வாங்கிச் சமைத்து ஏழைகளுக்குத் தானமளித்து விடுங்கள்.. இவ்வாறு தான இக்குழிப் புள் கர்மவினை ஓரளவேனும் தீர்வு பெறும்.

மேலும் கழிவறைக் குழிக்குள் விழுந்த காசைக் கொண்டு எவ்விதப் பொருட்களை, உணவுப் பொருளை வாங்கி அளிக்க வேண்டும் என்பதையும் சித்புருஷர்கள் அருளியுள்ளார்கள்... கழிப்பறைக் குழிக்குள்ளோ, குளியல் அறையிலோ காசு விழுந்தால் அதனை எடுத்து, அதனுடன் இந்த நாளில் உங்கள் வயதையும் உங்கள் மனைவியின் வயதையும் கூட்டி என்ன தொகை வருகிறதோ அந்த அளவு பணத்தைச் சேர்த்துக் குழிப் பணியாரம், இட்லி, வடை, ஆப்பம் போன்ற குழியாம்ச உணவு வகைகளையும் சேனைக் கிழங்கு, தக்காளி, பூசணி பறங்கி போன்ற காய்கறிகள் கலந்த உணவையும் தானமாக அளிக்க வேண்டும்.! இதனால் குழிப்புள் கர்மவினை பெருமளவில் தீர்வு பெறுவதோடு வேறு பல பிரச்னைகளுக்கும் தீர்வு கிட்டும். கழிவறையில் காசு விழுவதில் கூட ஒரு காரண காரியம் உண்டு என்பதை இனியேனும் உணருங்கள்..!

கொடியிலிருந்து ஆடைகள் விழுதல்! இதேபோல் ஆடைகள், குளியல் அறையில் கீழே விழுந்து நனைவதும் உண்டு... உண்மையில் கொடியில் இருந்து ஆடைகள் கீழே விழுவது கூட ஒருவகைக் கர்ம வினையால்தாம்! கழிவறையிலோ, குளியல் அறையிலோ ஆடைகள் கீழே விழுந்து நனையுமேயானால் நற்சக்திகளைத் தாங்கும் வல்லமையை அந்த ஆடை இழந்துவிட்டது என்பதை அறிந்து அந்த ஆடைகளை நன்கு தூய்மைப்படுத்தித் தானமளித்திட வேண்டும்.. வஸ்திர தானங்கள் மூலம் தீர்க்க வேண்டிய கர்மவினைகள் குவிந்துவிட்டன என்பதே இந்த ஆடை விழுதல் குறிக்கும் சகுன லட்சணமாகும். இவையெல்லாம் மூட நம்பிக்கைகள் அல்ல! இறை நியதிகளாக நமக்கு நாமே அறிய வேண்டிய அறநெறிப் பகுத்தறிவுப் பண்பாடுகளாகும்..! எனவே நாம் பன்முறை வலியுறுத்தி வருவது போல வஸ்திர தானம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் கடைபிடிக்க வேண்டிய மிகவும் முக்கியமான அம்சமாகும். நம்முடைய வருமானத்தில் நம் குடும்பத்தினருக்கே ஆடைகள் வாங்க முடியவில்லையே! நாம் எப்படி ஆடைகளைத் தானம் அளிக்க இயலும் என ஒரு போதும் எண்ணாதீர்கள். சம்பளம் போதுகின்றதோ, போதவில்லையோ தீய காம உணர்வுகள் மங்கவில்லையே! எந்த அளவு முறையற்ற காம எண்ணங்களுடன் கண்கள் பல காட்சிகளைத் தேவையற்ற வகையில் காண்கின்றனவோ அந்த அளவு மானம் காக்கும் ஆடைகளைத் தானமாக அளிக்க வேண்டும்.

காமப் பார்வை குவிக்கும் தீவினைகள்! உதாரணமாக இன்றைக்கு முறையற்ற காம உணர்வுகளினால் பலரையும் அதர்மமான முறையில் நோக்கி இருந்தால் அவர்களுடைய மானத்தைக் காக்கின்ற அளவிலான ஆடைகளைத் தானமாக அளித்தால்தான் இவ்வகையில் எழுந்த காமக் கர்ம வினைகள் தீரும்! சம்பளம் போதவில்லை என்போரால் முறையற்ற காம எண்ணங்களை அடக்க இயலவில்லை அல்லவா? எனவே எப்பொழுதெல்லாம் முறையற்ற காம எண்ணம் தோன்றுகிறதோ அந்நேரத்தில் எல்லாம் நீங்கள் வஸ்திர தானம் செய்தே தீர்க்க வேண்டிய அளவிற்குக் கர்மவினை பெருகுகிறது என்பதே பொருள்.. இவ்வாறுதான் நம் வாழ்வின் இறுதியில் எத்தனை லட்சம் கஜம் துணிகள் பாக்கியாகச் சேர்கின்றன என்பது புரியவரும்! இக்கர்ம பரிபாலன முறையை சற்குருவே அறிவார்! இதனை அவர் எடுத்து உரைக்கும்போது மனம் ஏற்காது! ஏற்றாலும் அந்த அளவிற்குப் பணம் இல்லையே என்று மனம் பொய் சொல்லும்! அவர் நம் வஸ்திர தான பாக்கியைக் குறித்துத் தந்தாலும் இத்தனை லட்சம் கஜத் துணியா நமக்கு வஸ்திர தானமாக பாக்கியுள்ளது என உங்களுக்குத் தோன்றும்.. ஆனால் அன்றாட வாழ்வில் உங்கள் கண்கள் நோக்கிய முறையற்ற காமப் பார்வைகளைக் கருத்தில் கொண்டு பார்த்தால் கர்மவினைக் கழிப்பாக லட்சோப லட்சம் கஜம் துணிகளாக வஸ்திரதான பாக்கிப் பல பிறவிகளில் இவ்வகையில் பெருகி விடுவது உண்மைதானே!

ஸ்ரீபூமிநாதர் ஆலயம் மண்ணச்சநல்லூர்
திருச்சி

பிள்ளைகளின் நல்லொழுக்கத்திற்கு வஸ்திரதானம் உதவும்! எனவே நம் வாழ்வை ஒவ்வொரு நொடியையும் இறைப் பூர்வமாக கழித்தால்தான் தேவையற்ற கர்மவினைகள் சேராது என்பதை இப்பொழுதேனும் அறிந்து கொள்ளுங்கள்.. நம் உடலால் எப்பாவமும் செய்யவில்லை..! கண்களால் மட்டும்தானே நோக்கினோம் என்று எண்ணாதீர்கள்... நீங்கள் கண்ணால் செய்யும் பாவத்திற்கும் நீங்களே பொறுப்பாளி! இது உங்களை மட்டுமின்றி உங்கள் குடும்பம், சந்ததி அனைத்தையும் பாதிக்கும்.. இதனால்தாம் கண் சம்பந்தப்பட்ட நோய்களும் ஏற்படுகின்றன! தம் பிள்ளைகள் தீயொழுக்கத்தில் வாடுகின்றார்களே என வருந்தும் பெற்றோர்கள் தம் ஆயுளில் எத்தகைய முறையற்ற காம நோக்குகளை அதர்மமான வகையில் பாய்ச்சி உள்ளார்கள் என்று ஆத்ம விசாரம் செய்து இனியேனும் தக்க பிராயச்சித்தம் பெற்றிட வஸ்திர தானத்தின் மகிமையை உணருங்கள்! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்! இதற்காகத்தான் திருஅண்ணாமலை, திருப்பதி போன்ற திருத்தலங்களில் குறிப்பிட்ட விசேஷ நாட்களில் செய்கின்ற வஸ்திர தானத்தால் அதன் புண்ணிய சக்தி பன்மடங்காகப் பெருகிப் பெருமளவில் காமக் கர்ம வினைகளைக் கழித்து விடுகின்றது!

நகைகள் நழுவி விழுதல்! சில சமயங்களில் குளியலறை, கழிவறைகளில் தோடு, மூக்முத்தி, ஆபரணங்கள் நழுவி விழுவதுண்டு. இதற்கும் பலகாரணங்கள் உண்டு எனினும் நம் உடலில் அவ்வணிகலன் ஆற்றவேண்டிய பணியை ஆற்றிவிட்டது.. அதனை மாற்றிக் கொள்ள வேண்டிய தருணம் வந்துள்ளது என்பதையே இது உணர்த்துகிறது... இரண்டாவதாக அவ்வாபரணங்களில் தீய சக்திகள் பெருகிவிட்டன... சுத்திகரித்து அணிய வேண்டும் என்பதையும் குறிக்கின்றது! மூன்றாவதாக, ஆபரணங்களைத் தானமாக அளிக்க வேண்டிய கர்மவினைகள் அதாவது வஸ்திர தானம் போல ஸ்வர்ண தானம் மூலமாகக் கழிய வேண்டிய கர்மவினைகள் இல்லத்தில் பெருகிவிட்டன. எனவே குறிப்பிட்ட ஆபரணங்களை ஆலயங்களுக்கோ, ஏழைகளுக்கோ அளித்து அதன்மூலம் கர்மவினைகளைக் கழிக்க வேண்டும் என்பதையும் இது புலப்படுத்துகின்றது..!

நான்காவதாக நாம் பூமாதேவிக்கு ஆற்றவேண்டிய பூஜை முறைகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் இது அறிவிக்கிறது. எங்கு இவ்வாறு அணிகலன்கள் விழுகின்றனவோ அந்நாளில் தலைவாயில், நிலைவாசல் படிக்கும் மஞ்சள், குங்குமம் இட்டுக் கோலமிட்டு இல்லங்களிலும், ஆலயங்களிலும் நீர் மாக்கோலமிட்டு பூமா தேவியைப் பிரார்த்திக்க வேண்டும்.. பூமாதேவிக்குப் ப்ரீதியான சிதறுகாய் உடைத்தல், கஜபூஜை செய்தல், யானைகளுக்கு உணவளித்தல், பசுக்களை நீராட்டி, மஞ்சள் குங்குமமிட்டு வணங்கி உணவளித்தல் போன்ற பூமாதேவி வழிபாட்டு முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆடைகள் நகை காசு விழுந்த நாட்களில் ஸ்ரீபூமிநாதேஸ்வரர், ஸ்ரீபூலோகநாதர், ஸ்ரீஜெகதீசர் போன்ற நாமங்களை கொண்ட மூர்த்திகளுக்கு இன்று பித்ரு பூஜை வழிபாட்டை அதாவது பஞ்சபூத சக்தி நிறைந்த பஞ்சாம்ருத வழிபாடு, பால், தேன், இளநீர், தயிர், எலுமிச்சை ரசம் ஆகிய ஐந்து வித அபிஷேகங்களுடன் வழிபடுவதை மேற்கொள்ள வேண்டும்..! இவ்வாறு வாழ்வில் ஒவ்வொரு விநாடியும் நடக்கின்ற நிகழ்ச்சிக்கு எத்துணையோ இறைக் காரண காரியங்கள் உண்டு. இவற்றைச் சற்குரு மூலம் அறிந்தால் தான் நம் வாழ்வு தெய்வீகத்துடன் மிளிரும். ஸ்ரீஅகஸ்திய சித்தர் குல ஜோதியாம், ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரின் சிஷ்யத் தோன்றலாக இன்று நம்மிடையே பரிமளிக்கும் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய குருவாய்மொழி மூலமாகவே நாம் இத்தகைய அரிய தெய்வீக விஷயங்களைப் பெறுகின்றோம் என்பதையும் உணர்ந்திடுக!

மண் தாலி மகிமை

மறந்திடாதீர் முன்னோர் செய்த விரத பூஜையை!,அக்காலத்தில் நம் மூதாதையர்கள் மண்ணால் ஆகிய தாலிகளையே அணிந்து வந்தார்கள், வெள்ளித் தாலி, பொன் தாலியை விடப் பிருத்வி சக்திகள் நிறைந்த நல்மண்ணால் ஆகிய மண் தாலிக்கு மிகுந்த மகத்துவம் உண்டு. அனைத்து அம்பிகையர்க்கும் மண் தாலி பூஜை மிகவும் சிறப்பாக ஒரு காலத்தில் நடைபெற்று வந்தது.!

மண் தாலி என்பது சட்டி, பானையைப் போல நல்மண்ணால் மாங்கல்ய வடிவில் தாலியைச் சூளையில் வடித்து, பருத்தி இழைகளால் ஆகிய சரடில் கோர்த்துக் கழுத்தில் அணிந்து கொள்வதாகும்.. பஞ்சபூதச் சக்திகள் நிறைந்ததே மண்தாலி, ஆதலால் மண்தாலி அணிவதால் மகத்தான சுமங்கலித்துவ சக்தி கிட்டுகின்றது.. நன்கு கணிக்கப் பெற்ற சுப முகூர்த்த நட்சத்திர நாட்களில் வேம்பு, அரசு, வன்னி போன்ற தல விருட்சங்களுக்கு மண்தாலி சார்த்தி வழிபடுதல் விசேஷமானதாகும். இதனால் கடுமையான நோய்கள் தணிவதோடு, கணவனுக்கு நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்யமும், நல்ல பழக்க வழக்கங்களும் நல்வரங்களாக வந்து சேர்ந்திடும்.!

ஸ்ரீகுங்கும சௌந்தரி பூவாளூர்

பொன்னிலும் சிறந்த மண்தாலி! தற்கால நடைமுறையில் மண் தாலி மகத்துவத்தைப் பற்றிப் பலரும் மறந்து விட்டார்கள்! எப்போது தங்கத்தின் மேல் மோகம் தோன்றிவிட்டதோ அப்போதிருந்தே அனைவரும் பொன் மாங்கல்யத்திற்குத்தான் மதிப்பு அளிக்கின்றார்களே தவிர பொன் மாங்கல்யத்தை விட மிகவும் தெய்வீக சக்திகள் நிறைந்த மண் தாலியை முற்றிலுமாகவே ஒதுக்கி விட்டார்கள்.. மண் தாலி என்றவுடன் பண்டைக் காலத்துக் கற்கால நாகரீகத்தைச் சார்ந்தவர்கள் அணிந்தது என்று தவறாக எண்ணி விடாதீர்கள்! 

மண் தாலிக்கு எப்போதும் எந்த லோகத்திலும் தெய்வீக மகத்துவம் நிச்சயமாக உண்டு. அக்காலத் திருமணச் சடங்குகளில் பொன் தாலியோடு மண்தாலியும் வைக்கப்பட்டிருக்கும். முதலில் சாஸ்திரத்தின்படி மண் தாலி அணிவிக்கப்பட்ட பின்னர்தான் பொன் தாலி அணிவர்! ஆதிப் பரம்பொருள் எம்பெருமான் ஈசன் பார்வதி தேவிக்கு முதலில் அணிவித்தது மண் தாலியே! எனவே முதல் மரியாதையும், முதல் மதிப்பும், முதல் வழிபாடும் மண் தாலிக்குத்தான் அமைந்திருந்தது, அமையவும் வேண்டும்!

புனித மண்ணிற் பிறக்கும், பூமா தேவி அருள்சுரக்கும் மண்தாலி! அனைத்து வகை மண்ணாலும், மண் தாலி செய்யப்படுவதில்லை. கருக மணிப் பாளம், பாளப் பவள நீரோட்டம், நீரோட்டச் சாந்து, சாந்து தீபக் குங்கும தீபிகை ஆகியவை போன்ற புனிதத் தன்மைகள் நிறைந்த அல்லது இப்புனிதங்கள் கூட்டப் பெற்ற நல்மண்தான் மண் தாலிக்கு ஏற்றதாகும். நன்முறையில் தக்க மந்திரங்களை ஓதி, மண் தாலியைச் சூளையில் வடித்து அதற்குரித்தான நிறங்கள், வண்ணங்களை அமைத்து மண் தாலியைத் தயார் செய்து அதற்குச் சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, குறைந்தது ஒரு மண்டலம் (48 நாட்கள்) வழிபட்ட பின்னர் பெரிய பழுத்த சுமங்கலிகளின் கரங்களால் பெற்று அணிந்து கொள்ள வேண்டும்!

தற்காலத்தில் மண் தாலி அணிவதை விநோதம் மற்றும் அநாகரீகமெனச் சிலர் நினைப்பதுண்டு. ஆனால் எத்தகைய வசதி படைத்தவராயிருந்தாலும் மண் தாலியை வைத்துப் பூஜிக்கின்ற உன்னத வழிபாடுகளை மேற்கொண்டு அதை அணிந்திட வேண்டும்.  திருமணத்திற்கு உகந்த சுபமுகூர்த்த நட்சத்திர நாட்களும் திதிகளும் உண்டு. இத்தகைய திருமண சுப நாட்களில், சுப ஹோரையில் மண் தாலியைச் சந்தனப் பேழையிலோ, சந்தனக் கல்லிலோ வைத்துப் பூஜித்து வருதல் வேண்டும்.

சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே
சரண்யே த்ரயம்பகே தேவீ நாராயணீ நமோஸ்துதே

முறையாகப் பூஜித்திடுதல் வேண்டும்... விதவிதமான வாசனைப் புஷ்பங்கள், மஞ்சள், குங்குமம், தங்க, வெள்ளி நாணயங்கள் போன்றவற்றால் மாங்கல்யத்தை அர்ச்சனை செய்து ஒரு மண்டலம் பூஜை செய்து, பிறகு ஸ்ரீமங்களாம்பிகை (கும்பகோணம் ஸ்ரீகும்பேஸ்வர), ஸ்ரீநித்ய கல்யாணி (அம்பாசமுத்திரம்), ஸ்ரீகுங்கும சௌந்தரி (லால்குடி பூவாளூர்), ஸ்ரீகுங்கும சுந்தரி (உமையாள்புரம்) போன்ற அம்பிகையரின் திருச்சன்னதிகளிலும், ஸ்ரீஅகஸ்தியப் பெருமான் இறைவனுடைய திருமணக் காட்சியைக் கண்ட திருத்தலங்களிலும் மண் தாலியை வைத்து பூஜித்து அணிந்து கொள்வது சிறப்புடையதாகும்.!

ஸ்ரீமங்களாம்பிகை மங்களக்குடி

மாங்கல்ய தீர்க சக்தி தரும் மங்கள தீர்த்தம்! பல கோடி யுகங்களுக்குப் பிறகு இந்த மண் தாலியை அணிகின்ற உத்தமமான வைபவத்தை நம் சித்புருஷர்கள் தற்போது எடுத்து விளக்குகின்றார்கள்..! இவையெல்லாம் நம் மூதாதையர்கள் கடைபிடித்த நம்மால் மறக்கப்பட்ட உத்தம மாங்கல்ய வழிபாடுகளேயாகும்.. கும்பகோணம் சூரியனார் கோவில் அருகே திருமங்கலக்குடியில் ஸ்ரீமங்களாம்பிகை சமேத பிராணநாதேஸ்வர மூர்த்தி அருள்பாலிக்கின்ற பழமையான சிவாலயம் உண்டு. இல்லறப் பெண்களுக்குத் தீர்க்க சுமங்கலித்துவத்தைத் தரக் கூடிய இந்த சிவத்தலத்தின் மகிமையைப் பலரும் அறியாது இருக்கின்றார்கள்.. இங்கு இருக்கின்ற மங்கள தீர்த்தம் மிகவும் சக்தி வாய்ந்த தீர்த்தமாகும். மங்களவார மூர்த்தியாகிய செவ்வாய் பகவானே நீராடி அருள் கூட்டுகின்ற மங்கள தீர்த்தம்!

எத்தகைய கடுமையான நோய்களுக்கும் தக்க நிவாரணத்தைத் தரவல்லதே மங்கள தீர்த்தமாகும்.. இச்சிவாலயத்தில் அம்பிகைக்கு மண்தாலி அணிவித்து வழிபடுவ்வதும் மாங்கல்யச் சரடு மாற்றிக் கொள்வதும் மிகவும் சிறப்புடையது! மிகவும் பண்டைய வழிபாடாதலின் நன்கு விசாரித்துக் கடைபிடித்திடவும்! மண்தாலியை நல் விருட்சங்களுக்கும் அணிவித்தும் வழிபட்டிடலாம்! ஸ்ரீமங்களாம்பிகை வழிபாடு கணவனுக்கு நீண்ட ஆயுள் பலத்தையும், பெண்களுக்கு சுமங்கலித்துவத்தையும் பெற்றுத் தரக் கூடிய, கலியுகத்தின் கண்கண்ட அதியற்புத பூஜையாம்! 

சுதை மூர்த்திகளுக்கும், சிலா ரூபங்களுக்கும் மண் தாலி சாற்றுவதும் மிகவும் அரிய வழிபாடே! எவ்வாறு பொன் மாங்கல்யத்தை ஸ்வர்ண மாங்கல்யமாகப் போற்றி அம்பிகைக்குச் சாற்றுகின்றோமோ இதைப் போள பிருத்வி மாங்கல்யம் எனப்படுகின்ற மண் தாலியை அம்பிகைக்குச் சார்த்தி வழிபடுவதும் சிறப்புடையதாம். மேலும் வேம்பு, அரசு, வன்னி போன்ற விருட்சங்களுக்கும், புதன், வெள்ளிக் கிழமைகளில் மண் தாலி சாற்றி வழிபடுவதால் இல்லத்தில் சாந்தமும் அமைதியும் நிலவும்.

மாங்கல்ய பிருத்வி பூஜை! நல்ல சுபமுகூர்த்த நாட்களில் ஒரு தட்டு நிறைய அவரவர் வசதிக்கேற்ப நிறைய மங்களப் பொருட்களைப் பரப்பிக் கொண்டு இதன் நடுவில் மண் தாலியை வைத்துப் பூஜித்திட வேண்டும்.. வெற்றிலை, பாக்கு, பழம், புஷ்பம், சுண்ணாம்பு, புடவை, ரவிக்கைத் துணி, மஞ்சள், குங்குமம், தாலிச் சரடு, முகம் பார்க்கும் கண்ணாடி, கண்ணாடி வளையல், கண் மை போன்று எந்த அளவுக்கு மங்களப் பொருட்களைத் தட்டில் வைத்து மண் தாலியோடு சேர்த்துப் பூஜிக்கின்றோமோ அந்த அளவிற்கு பிருத்வி சக்தியும், மாங்கல்ய சக்தியும் அதில் சேருகின்றன.. பொன் மாங்கல்யத்தோடு எப்போதும் மண் தாலியையும் அணிந்திடலாம்.. பெருகிடில் மாற்றியும் கொள்ளலாம்!

ஈரோடு பகுதிகளில் மண் சோறு என்ற ஒரு பிரார்த்தனா வைபவம் நிகழ்வது உண்டு. தட்டோ, இலையோ இல்லாமல் குறித்த ஆலய வளாகங்களில் வெறும் மண் தரையில் உணவைப் பரிமாறி உண்பதை ஒரு நல்பிரார்த்தனையாக மண் சோறு உண்ணுதல் என்ற சங்கல்பத்தைக் கைக்கொள்கின்றார்கள். எனவே பிருத்வியாகிய மண் சம்பந்தப்பட்ட எந்தப் பொருளுக்கும், எந்த வடிவத்திற்கும் நிறைய மகத்துவங்கள் உண்டு. மண் பானை நீருக்கு ஈடு இணை உண்டா?

தாலி செய்ய உபயோகப்படும் தங்கம் திருடப்பட்டதாகவோ அல்லது தவறான அக்னி வகைகளில் ஸ்புடம் செய்யப்பட்டதாகவோ அல்லது நல்ல நாட்கள் / நேரம் பாராது தாலி செய்யப்பட்டிருந்தாலோ, அப்பொன் தாலியில் தோஷங்கள் ஏற்படும். பொன் தாலியில் உள்ள தோஷங்களையும் நிவர்த்தி செய்து விடலாம்.. கருக மணிப் பாளம், பவள நீரோட்ட மண், நீரோட்டச் சாந்து மண், குங்கும தீபிகை மண் கலந்து முறைப்படி செய்த மண் தாலிகள் சென்னை ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயாவிலும், திருஅண்ணாமலை ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்திலும் கிடைக்கும். இவற்றைப் பெற்று தக்க விரதம் இருந்து மண் தாலி அணிவீர், சுகம் அடைவீர்.

பிலாகாச யோகம்

தம்புல் தெய்வீக குகை மகிமை! தம்புல் குகையில் பிலாகாச யோகம் பூணும் என்றும் வாழும் ஏகாந்த ஜோதி! சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஈசர்!

சென்ற இதழின் (ஸ்ரீஅகஸ்திய விஜயம் மே 2001) முகப்பு அட்டையில் இப்பிரபஞ்சத்தின் மகத்தான சித்புருஷர்களில் ஒருவரான ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப சித்த ஈசரின் பிலாகாச யோகத் திருக்கோலத்தை இந்த உலகத்திற்கே, ஏன் இப்பிரபஞ்சத்திற்கே அளித்திருந்தோம் அல்லவா? அவர் பிலாகாச யோகம் பூண்டு இருக்கின்ற நவநாத சித்தர்கள் நித்ய வாசம் பூணும் தம்புல் குகையின் மகிமையை எத்தனையோ கோடிப் புராணங்களாக விவரித்திடலாம். அந்த அளவிற்குத் தம்புல் குகையானது மகத்தான தெய்வீக சக்திகளைக் கொண்டு பிரபஞ்சமெங்கும் அனைத்துக் கோடி லோகங்களிலும் பிரசித்தி பெற்று அனைத்து மகரிஷிகளாலும், சித்தர்களாலும் வழிபடப் பெறுகின்ற திருத்தலமாகவும் விளங்குகின்றது!

சம்பு நாத கீதங்கள், சாம மூல வேத மந்திரங்கள், சித்தோபநிஷத் வாக்கியங்கள், சித்த குருவேத ஸுக்த மாமந்திரங்கள் இவ்வாறாகப் பிரபஞ்சத்தின் பல அரிய வேத மந்திர சக்திகள் தழைத்துக் கொண்டிருக்கும் திருத்தலமே இமயமலை அன்னபூர்ணா சிகரத்திலுள்ள தம்புல் தெய்வீக குகையாகும். மிகவும் உத்தம தெய்வீக நிலை அடைந்தவர்களுக்கே, சுயநலம் இன்றிப் பிரபஞ்சத்தின் அனைத்து ஜீவன்களின் நல்வாழ்விற்காகத் தம்மைத் தியாகமயமாக அர்ப்பணிப்பவர்களுக்குமே குருவருள் கூடிட தம்புலின் திருக்காட்சி புலப்படும்!

பிரபஞ்சத்தின் இத்தகைய தெய்வீக ரகசியங்கள் எத்தகைய சித்புருஷர்களால், மகரிஷிகளால் எச்சமயத்தில், எந்த யுகத்தில் வெளிவருதல் வேண்டுமோ அதனை அந்தந்தச் சித்புருஷர்கள் அருளிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். கலியுக ஜீவன்களாகிய நாம்தாம் இவற்றில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு அவர்கள் தருகின்ற தெய்வீக நல்வழிதனை முறையாகக் கடைபிடித்து பிறப்பு, இறப்பு அற்ற தெய்வீக முக்தி நிலைக்குத் தயாராகுதல் வேண்டும். இவை அனைத்தும் தக்க சற்குருவின் அருள் பரிபாலனத்தில்தான் பரிபூரணமாகக் கிட்டும் என்பதை நன்கு உணர்ந்து கொள்க!

தம்புல் தெய்வீக குகை மகாத்மியத்தைப் பற்றிப் படிப்பதும், அறிவதும், உணர்வதுமே நம் வாழ்க்கையில் நமக்கு கிட்டிய பெரும் பேறாகும். ஏனென்றால் எத்தனைக் கோடி ஜென்மங்கள் எடுத்தாலும், எந்த தேவ லோகத்திற்குச் சென்றாலும், உத்தம நிலைகளில் ஒவ்வொருவரும் தம்புல் குகை தரிசனத்தைக் கண்டிப்பாகப் பெற்றாக வேண்டும்! நவநாத சித்தர்கள் கலியுகத்தில் நித்யவாசம் கொள்கின்ற அருட்பெரும் தெய்வீகக் குகை என்றால் அதன் மகாத்மியம்தான் என்னே! புனிதமான பூவுலகில் கர்ம பூமியாக பாரதம் போற்றப்படுவதற்குக் காரணமே இறைவன் இப்புனிதமான பாரத நாட்டில்  திருஅண்ணாமலையாராகத் தன்னைத் தோற்றுவித்துக் கொண்டதும், இமய மலையின் அன்னபூர்ணா சிகரத்தில் தம்புல் தெய்வீகச் சாளரத்தை ஏற்படுத்தியதும் ஆகும்.

தம்புல், ஒரு தெய்வீகச் சாளரம்! ஆம்! இப்பிரபஞ்சத்திற்கே தெய்வீகச் சாளரமாக விளங்குவது தம்புல் குகைதானே! சாளரம் என்றால் என்ன? திருவேற்காடு, காஞ்சீபுரம் அருகே பெருநகர், திருஆனைக் கோயில் போன்ற திருத்தலங்களில் கருவறை தரிசனமானது நேரடியாக இல்லாது ஒரு சாளரம் மூலமாகத்தான் மூலவர் காட்சி தருவார். மூலவரை அருகே காணப் பக்கவாட்டில் சென்றுதான் தரிசித்தல் வேண்டும். எனவே சாளரம் எனப்படுவது இவ்வகையில் பரம்பொருளை நேர்நோக்கில் காண்பதற்கான ஜன்னல் என்று பொருளாகின்றது. எனவேதான் பிரபஞ்சத்தின் தெய்வீகச் சாளரமாக விளங்கும் இதனை தம்புல் தெய்வீக குகை எனச் சித்தர்கள் இதனை விளிக்கின்றனர்!

தம்புல் – சாட்சி நாத கான வானம்! குகை என்பது நாம் எளிதில் பொருள் அறிவதற்காக கூட்டப்பட்ட வார்த்தையே தவிர நவநாத சித்தர்கள் நித்திய வாசம் செய்கின்ற சித்த ஆலயமாக தம்புல் குகை விளங்குகின்றது என்று சொன்னால் மிகையாகாது. இறைவனுடைய காரண காரியங்களுக்குத் தெய்வீகச் சாட்சியாக எப்போதும் நிலைத்திருப்பவர்கள் நவநாத சித்தர்கள் தாமே! மகாபாரதம், பாகவதம் போன்ற இறைப் புராண நிகழ்ச்சிகள் அனைத்திலுமே நவநாத சித்தர்கள் பங்கு கொண்டுள்ளார்கள்.

ஸ்ரீபரசுராமர், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, ஸ்ரீராமர் மற்றும் எத்தனையோ தேவ, தெய்வ மூர்த்திகளுடைய அவதார வைபவங்களில் எல்லாம் நவநாத சித்தர்கள் இறைச் சாட்சியாகப் பங்கேற்றுக் கொண்டுள்ளார்கள் என்றால் இறைவனைப் போலவே எல்லா இடத்திலும் இறைவனாலேயே யாங்கணும் பிரசன்ன சாட்சி பூதமாக இருப்பதற்கான அனுகிரகங்களை நவநாத சித்தர்கள் பெற்று இருப்பதால்தானே அவர்களால் அனைத்துப் புராண வைபவங்களிலும் பங்கு கொள்ள முடிகின்றது!

உதாரணமாக, பஞ்ச பாண்டவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் மகாபாரதத்தில் வனத்தில் நடந்து கொண்டிருக்க, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இங்கும் அங்குமாக ஒரே சமயத்தில் எத்தனையோ தேவ லீலைகளில் பங்கு கொண்டார் அல்லவா? ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் அனுகிரகத்தால் மகாபாரதத்தின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஒரு வைபவத்தைக் கூட விடாது எல்லா இடங்களிலும் ஒரே சமயத்தில் தேவ சாட்சியாக இருந்து இவ்வாறாக இறைவனுடைய அனைத்துக் கிருத்தியங்களிலும் சிருஷ்டிக் காரண காரியங்களிலும் சாட்சி பூதமாக நிற்பவர்கள் நவநாத சித்தர்களே!

ஜோதி, ஜோதி, ஜோதி, ஜோதி, ஜோதி, ஜோதி ஜோதியே!

எக்காரண காரியங்களிலும் பங்கு பெறாது, இறை சாட்சியாக அவர்கள் நித்ய சிரஞ்சீவிகளாக என்றும் நிலைத்து நிற்பதால்தாம் எவ்விதக் கர்மங்களுக்கும் ஆட்படாது, பாவ புண்ணியங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்களாக மிக மிகப் புனிதமான பாரத மண்ணின் தம்புல் குகையில் நித்திய வாசம் கொண்டிருப்பவர்களாக இலங்குவது நம் பெரும் பாக்கியமாகும். இந்தப் பிரபஞ்சத்தின் தெய்வீக மையாக விளங்குகின்ற திருஅண்ணாமலைக்கும், தம்புல் தெய்வீக குகைக்கும் நெருங்கியப் பிணைப்புகள் உண்டு. முதலும் முடிவும் காண இயலாத அருட்பெரும் ஜோதியாக ஸ்ரீமகாவிஷ்ணுவிற்கும் ஸ்ரீபிரம்ம மூர்த்திக்குமே தோற்றம் கொண்ட அருணாசலப் பரம்பொருள் எப்போதும் தீபஜோதியாக திருஅண்ணாமலையில் ஒளிர்ந்து கொண்டுதானே இருக்கின்றார்! எனவே திருஅண்ணாமலையில் ஜோதி தரிசனம் இல்லாத நேரமே கிடையாது! மனிதக் கண்களுக்குத் தான் இங்கு கார்த்திகைத் திருநாளில் கொப்பறையில் எண்ணெய் ஊற்றித் திரி வைத்து, ஜோதி ஏற்றப்படுவதாகத் தோன்றுகின்றதே தவிர, தெய்வீக இயற்கை ஜோதி திருஅண்ணாமலையில் எப்போதும் பரிணமித்துக் கொண்டுதான் இருக்கின்றது! பக்தி பூர்வமான நிலையில் குருகடாட்சம் கொண்டவர்களுக்குத்தான் இங்கு எப்போதும் ஜோதி ஒளிர்வது புலப்படும். இறைவனின் திருமேனியாகவே திருஅண்ணாமலை இருக்கின்றபோது யாங்கணும் ஜோதி ஸ்வரூபமாகத்தானே திருஅண்ணாமலை இருக்க வேண்டும் என்ற அளவிலாவது பகுத்தறிவாலான தீர்க்கமான ஜோதி தரிசனத்தை மானசீகமாகக் கண்டிடலாம் அல்லவா!

பௌர்ணமியன்று மிகவும் விசேஷமான ஜோதி தரிசனத்தைச் சந்திர ஒளியின் கூட்டோடு திருஅண்ணாமலையில் அருணாசல சிவபெருமான் நமக்குப் பெற்றுத் தருகின்றார்.. உண்மையில் உலகெங்கும் பௌர்ணமியன்று ஏனைய இடங்களில் கிட்டும் சந்திர ஒளிக்கும் திருஅண்ணாமலையில் கிட்டும் சந்திர தரிசன ஒளிக்கும் நிறைய மாறுபாடுகள் உண்டு. அண்ணாமலையில் கூடும் பௌர்ணமி ஜோதிக் கிரணங்கள் யாவும் பிரபஞ்சம் எங்கும் பரவுகின்றன. குறிப்பாக, தம்புல் தெய்வீகக் குகையில் அருணாசல கிரணங்கள் எந்நேரமும் பூரணித்துக் கொண்டிருக்கின்றன..!

தம்புலில் பிலாகாச யோகம் பூண்டு இருக்கின்ற ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளுடைய திருப்பணிதான் என்னே? குருமங்கள கந்தர்வ லோகத்திலிருந்து உதித்த ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த சுவாமிகள் பிலாகாச யோகம் பூண்டு இருப்பது ஏன்? கோவணாண்டிப் பெரியவராக பூலோகத்திலே புண்ய பாரதத்திலே குருகுலவாசம் கொண்டு பலருக்கும் குருகுல வாசம் அளித்த ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகள் எப்போதும் தம்புல் குகையில் நவநாத சித்தர்களின் அருட்பார்வையில் யோக வாசம் பூணுவதோடு எத்தனையோ கோளங்களில் இன்றும் பல வடிவுகளில் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றார்.

ஒருவருக்கு ஓர் உடல் என்ற மாயை சாதாரண மானுடர்களாகிய நம்மை மறைத்து இருப்பதால்தான் ‘இவர் எப்படி இங்கும் இருக்க முடியும், அங்கேயும் தோன்ற முடியும்’ என்றவாறான அர்த்தமற்ற வினாக்கள் எழுகின்றன! எந்த உடலையும் பூணாது, பேணாது ஜோதி மயமாக இறைவனுடன் ஐக்யம் ஆகியிருக்கின்ற சித்தர்களால் எத்தனைக் கோடி உடல்களையும் இறைச் சங்கல்பத்தால் பெற்றிட முடியும், உடலின்றி உயிரின்றி ஜோதிப் பிரகாசத்துடனேயே திகழவும் முடியும்!

குருமங்கள மங்கள கந்தர்வ லோகம் என்றால் விண்ணில் நாம் காணும் குருவாகிய வியாழன் கிரகத்தின் ஒரு பகுதி என்று நாம் சற்றே புரிந்து கொண்டு இருந்தாலும், குருமங்கள கந்தர்வ லோகம் என்பது இறைவனுடைய மூன்றாம் நேத்திரத்திலிருந்து உருவாகின்ற, சற்குருமார்களுக்கு உரித்தான லோகங்களுள் ஒன்றாகும்.

சித்தர்கள் தெய்வ லோகங்களின் குருக்கள்! பூஜாரிகள்! பட்டாச்சார்யார்கள்! மகாபாரதத்தில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தன்னுடைய விஸ்வரூபத்தை அர்ச்சுனனுக்கு உணர்த்திய போது பிரபஞ்சம் எங்கும் ஸ்ரீகிருஷ்ணனின் திருவுடல் வியாபித்து இருப்பதை அர்ச்சுனன் உணர்ந்தான் அல்லவா! இதேபோல இப்பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து இருக்கின்ற சற்குருமார்களின் ஆதி மூல லோகமான குருமங்கள கந்தர்வ லோகமானது இறைவனுடைய மூன்றாம் நேத்திரத் திருப்பார்வையிலிருந்து தோன்றுவதால் இதற்கெனத் தனி மகத்துவம் உண்டு.. இறைவனுடைய மூன்றாம் நேத்திரப் பார்வை அனைத்து இடங்களிலும் பரிபூரணித்து இருக்கின்றது அல்லவா? சர்வேஸ்வரியாம் ஸ்ரீபார்வதி தேவியாலேயே இறைவனுடைய இரு கண் பார்வையின் அம்சங்களையே பார்க்க முடிந்தது என்றும் இறைவனுடைய மூன்றாம் நேத்திரப் பார்வையின் தரிசனங்களை எல்லாம் அம்பிகை பெறுவதற்குப் பல கோடி யுகங்கள் தவமிருந்து பல ஆலயங்களிலும் சிறப்பான யோகங்களையும், வழிபாட்டு முறைகளையும் கடைபிடித்ததாக நாம் காண்கின்றோம் அல்லவா!

இறைவனுடைய மூன்றாம் நேத்திர சக்திகளிலிருந்து உருவானவர்கள் ஆதலின் சித்தர்களுக்கு இறைவனுடைய கிருத்தியங்களை உணர்ந்து, தெளிந்து பல அரிய தரிசனங்களைப் பெற்றவர்களாகவும் அவற்றை உணர்த்தும் வல்லமை உடையவர்களாகவும் விளங்குகின்றார்கள்..! இதனால்தான் பல தேவாதி தெய்வ மூர்த்திகளும் மகரிஷிகளுடைய, சித்தர்களுடைய ஆலோசனைகளை நாடுவதை நாம் மகாபாரதத்திலும், இராமாயணத்திலும், பாகவத்திலும் காண்கின்றோம்!

தம்புலில் நித்தியப் பௌர்ணமியே! நவநாத சித்தர்கள் நித்ய வாசம் புரிகின்ற தம்புல் குகையில் அமாவாசையோ, பௌர்ணமியோ தோன்றுவது கிடையாது.. காரணம் அங்கு நித்ய சந்திரனாக, நித்யப் பௌர்ணமி தினமாக எப்போதும் 16கலைகளுடன் சந்திரன் காட்சி அளிக்கின்றான்.. ஆம், சந்திரனுடைய 16 கலைகள் தேய்ந்து தெரிவதான அமாவாசைப் புராண லீலைகள் நிறைவு பெறுவதற்கு முன்னரேயே எத்தனையோ கோடி யுகங்களாகத் தம்புல் குகை இறைவனுடைய பிரபஞ்சப் படைப்பிற்கு முன்னதாகவே விளங்குவதால் இங்கு கலைகள் தேய்ந்த சந்திர பகவான் மூர்த்தி அல்லாது பரிபூர்ணமான 16 கலைகளுடன் நித்யப் பௌர்ணமி சந்திரனாகப் பிரகாசிக்கின்ற பூர்ண கோகுல சந்திர மூர்த்தியே இங்கு விளங்குகின்றார்.

அப்படியானால் அமாவாசை என்ற காலதேவதா மூர்த்தி இங்கு அருள்வது கிடையாதா? இவை எல்லாம் அறியாமையால் நம் மனதில் எழுகின்ற வினாக்கள் ஆகும். சூரிய, சந்திர சங்கமம் என்பது தானே அமாவாசை, மகாபாரத்தில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் முன் சந்திரனும் சூரியனும் தோன்றியபோதே அதனையே அமாவாசையாக பாவித்து போதாயன அமாவாசை உருவானதல்லவா? இதைப்போலத்தான் சூரிய சந்திர சங்கமங்கள் தம்புல் குகையில் ஏற்படுவதால் நிறைய பல கிரக சங்கம அமாவாசைகள் ஏற்படுவது உண்டு.

பூலோகத்தைப் பொறுத்த வரையில் சூரியனும், சந்திரனும் சங்கமிப்பதால் மட்டும்தான் அமாவாசை உருவாகின்றது என்று எண்ணுகின்றோம் அல்லவா? சூரியனும், வியாழ கிரகமும், சந்திரனும் செவ்வாய் கிரகமும் இவ்வாறாக பல்வேறு கோளப் பிணைப்புகளில் ஏற்படுகின்ற எத்தனையோ பல கிரக சங்கம அமாவாசைகள் உண்டு. இத்தகைய பல கோள அமாவாசைக் கால அற்புதங்களை தம்புல் குகையில்தான் காண முடியும்.

15 நாட்களுக்கு ஒரு முறை அமாவாசை, பௌர்ணமி திதிகள் அமைவதாக நம்முடைய பூலோகக் கணக்கில் கூறுகின்றோம். ஆனால் தம்புல் குகைக்கும் உள்ளேயே பரந்த வானவெளி சஞ்சாரம் நிலவுகின்றது. இங்கே எப்போதும் கிரக மூர்த்திகள் வலம் வந்து கொண்டு இருப்பதால் இதன் உள்ளேயே தினந்தோறும் அமாவாசைகளும், பௌர்ணமிகளும் பல கோண கோளச் சங்கமங்களும் நிகழந்து கொண்டு இருப்பதால் இதன் உள்ளேயே தினந்தோறும் அமாவாசைகளும், பௌர்ணமிகளும் பலகோண கோளச் சங்கமங்களும் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன.. பூலோகக் கணக்கில் ஒரு விநாடி நேரத்தில் எத்தனையோ கிருத்தியங்கள் தம்புல் குகையில் நிகழ்ந்து விடுகின்றன. நமக்குக் கலியுகமானது ஐந்து லட்சம் வருடங்கள் நிறைந்த ஒரு மிகவும் பிரம்மாண்டமான காலப் பிரபாவமாக விளங்குகின்றது. ஆனால் தம்புல் குகையிலோ இந்த 5 லட்சம் ஆண்டுகள் கூடிய கலியுகமானது இமை நொடிக்கும் நேரத்திற்குள் முடிந்து அடுத்த கலியுகம் வந்து விடுகிறது என்றால் தம்புல் குகையின் காலயந்திர மகாத்மியத்தை என்னவென்று சொல்வது. இதனால் தான் இங்கு பிலாகாச யோகம் பூண்டுள்ள ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப சித்த ஈச சுவாமிகள் எத்தனையோ கோடிச் சதுர் யுகங்களைக் கடந்தவராய் விளங்குகின்றார்.

தன்னுடைய யோக நிலையிலேயே பல மானுட ரூபங்களில் இன்றைக்கும் இவர் எத்தனையோ இடங்களில், கோள்களில் குருகுல வாசத்தை நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கின்றார். சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப சித்த ஈசருடைய குருகுலவாச அநுபூதிகள் யாவுமே நம்முடைய அறிவிற்கும், பகுத்தறிவிற்கும் அப்பாற்பட்ட தத்துவங்கள் ஆகும். எத்தனையோ புராண நிகழ்ச்சிகளில் அன்றும், இன்றும், என்றும் பங்குகொள்கின்ற ஸ்ரீஅகஸ்தியப் பெருமான் போன்ற சித்புருஷர்கள் எல்லோரும் இறைச் சாட்சியாகத்தானே விளங்குகின்றார்கள். இதே போல சிவகுருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரும் எத்தனையோ நாமங்களைப் பூண்டு பல கோடி யுகங்களிலும், குருகுல வாசம் கொண்டு பிலாகாச யோகம் பூண்டும் இருப்பதே தம்புல் குகையாகும். ஓரிடத்தில் யோக வாசம், மற்றொரு இடத்தில் மானுட வாசம், பிறிதொரு இடத்தில் குருகுல வாசம், இன்னொரு லோகத்தில் புராண பாத்திர வாசம், மற்றொரு லோகத்தில் சித்தமா பீடாதிபதி வாசம் இவ்வாறாக பிலாகாச யோக நிலைகளிலும் கூட இறை ஆணையால் எத்தனையோ வடிவங்களை எடுத்துப் பிரபஞ்சம் எங்கும் அரிய இறைப் பணிகளை ஆற்றி வருபவரே ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப சித்த ஈசர்! அவருடைய திருவடிகளைப் பற்றி நன்முறையில் குருகுலவாசத்தைப் பெற்றுக் கடைத்தேறுவதற்கு இவருடைய திருஉருவப் படத்தை இல்லத்திலும் வைத்து நித்ய பூஜையோடு பௌர்ணமி அன்று குருபூஜை செய்து உய்வடையுங்கள்! ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈசருடன் இருந்து, வாழ்ந்து கொண்டு இருக்கும் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை ஸ்ரீ வெங்கடராமன் அவர்கள் அனுபவித்த “அடிமை கண்ட ஆனந்தம்” என்னும் தலைப்பில் வந்த அனுபூதிகள் அடங்கிய புத்தகங்கள் ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்திராலயாவிலும், ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்திலும் கிடைக்கும். பெற்றுப் படித்து உய்த்து சற்குருவின் புனிதம் உணர்வீர், புத்துணர்ச்சி பெறுவீர்!

ஸ்ரீமாத்ருபூத சனீஸ்வரர்

பொன்னமராவதியில் ஸ்ரீசூரியபகவானுடன் ஸ்ரீமாத்ருபூத சனீஸ்வர மூர்த்தி! சாயா தேவி சமேத ஸ்ரீசூரிய பகவானுடன் அவர்கள் பிள்ளையான சனீஸ்வர மூர்த்தியும் சேர்ந்து அருள்பாலிக்கின்ற அற்புதத்தைப் புதுக்கோட்டை அருகில் பொன்னமராவதி ஸ்ரீராஜராஜ சோழீஸ்வரர் சிவாலயத்தில் கண்டு தரிசித்து வழிபட்டுப் பெறுதற்கரிய பேறுகளைப் பெற்றிடலாம்! இறைவன் தான் தம்மை எத்துணையோ வடிவங்களில் பூலோகம் முழுதும் நிரவிக் கொண்டு மக்களுடைய ஒவ்வொரு துன்பத்துக்கும் எத்துணையோ தீர்வுகளைத் தருகின்றான்... உலகின் எந்த மூலையில் எந்த ஒரு பிரச்னை என்றாலும் இந்தியாவின் ஏதேனும் ஒரு ஆலயத்தில் அதற்குரிய தீர்வு நிச்சயமாகக் கிட்டும். இத்தகைய தெய்வீகத் தன்மைகளை உணர ஒரு தக்க சற்குரு தேவையே!

இன்றைக்கும் ஐரோப்பாவிலுள்ள யூகோஸ்லாவியாவின் இனக் கலவரங்களுக்கும் ஆப்பிரிக்கா நாடுகள் பலவற்றிலுமுள்ள தரித்திர நிலைக்கும் ஏன் இந்தியாவிலுள்ள பலவித சமுதாயப் பிரச்னைகளுக்குமான தீர்வுகளை இந்திய ஆலயங்கள் பலவற்றில் நாம் பக்தி பூர்வமாகப் பெற்றிடலாமே! உலகிற்கே, பிரபஞ்சத்தின் அனைத்துக் கோடி லோகங்களுக்குமே உத்தம வழிகளைத் தரவல்ல நம் பாரதத் திருநாட்டில் பூரித்துப் பொங்கும் இறைமையை நாமல்லவோ முதலில் நன்கு உணர வேண்டும்! கர்ம பூமியாக, உலகிற்கு முன்னோடியாகத் திகழும் பாரதத்தில் நிறைந்துள்ள இறைப் பொக்கிஷங்கள் எத்தனை, எத்தனை! இது மட்டுமா, நேபாளம், எகிப்து, இந்தோனேஷியா, அமேஸான் போன்ற உலகின் பல இடங்களிலும் இவற்றில் இன்னும் மனிதனால் கண்டுபிடிக்கப்படாத பல தெய்வீக இரகசியங்கள் எத்துணையோ நிறைந்துள்ளனவே! இவற்றை உணர்த்த வல்லதும் கர்ம பூமியான பாரதத்தின் தெய்வீக சக்திதானே!

கிரகங்கள் பகைப்பதில்லை! பகை வருவதைக் காட்டும்! கிரகங்களில், நட்பு, பகை, சம கிரகங்கள் என்றும் சுபகிரகங்கள் என்றும் பகுத்திருப்பார்கள். சுப முகூர்த்த நாட்கள் எனில் புதன், குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன் ஆகியவற்றையே நாம் கொள்ள வேண்டும், ஆனால் காலத்தின் புனிதத்தை உணரவே, நாம் புரிந்து கொள்வதற்காகவே நட்பு, பகை, சுபம், அசுபம் என்று அமைத்து இருக்கின்றார்களே தவிர எந்த கிரகமும் நமக்குப் பகையைத் தருவதில்லை!

ஸ்ரீதட்சிணாமூர்த்தி பொன்னமராவதி

தற்காலத்தில் பகை, அசுப கிரகங்கள் என்றாலோ அதன் தாத்பர்யங்களை உணராது அவற்றை முழுவதுமாக பயந்து ஒதுக்குகின்ற அரைகுறை ஜோதிட அறிவைத்தான் நாம் பல இடங்களில் காண்கின்றோம். பித்ருக்களின் ஆசியைப் பெற்றுத் தருபவராகவும், ஆயுள்காரகனாகவும் விளங்குகின்ற ஸ்ரீசனீஸ்வர பகவானின் கருணை இல்லாமல் ஒரு விநாடி கூட நம்மால் வாழ்க்கை நடத்த முடியாது! எனவே சனி, ஞாயிறு, இராகு, கேது ஆகியவற்றை நம் வாழ்வில் ஒதுக்கத்தான் கூடுமா? அதிலும் ஒரு நாளில் சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என்ற வகையில் அனைத்து கிரக நேரங்களும் மணிக்கு ஒரு முறை வரிசையாக வந்து கொண்டுதானே உள்ளனர்! இராகு காலமும், யம கண்டமும் தினமும் வந்து கொண்டு தானே இருக்கின்றன! கேது காலம் என்பதும் எதிர்காலத்தில் வர உள்ளது. பொதுவாக இராகு, சனி கிரகத்தை ஒட்டியும் கேது, செவ்வாய் கிரகத்தை ஒட்டியும் அமைகின்றன.

எனவே பகை, அசுப கிரகங்கள் என விளிக்காது நம்முடைய தீவினைகளைக் கழிப்பதற்கான பலவித வழி வகைகளையும், தன்மைகளையும் கிரகங்களின் சஞ்சாரங்களும், அமைப்புகளும் குறிப்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்

எவ்வாறு ஒரு IAS  அதிகாரியானவர் அலுவலகத்தில் அதிகாரங்கள் நிறைந்த பெரிய அதிகாரியாகவும், இல்லத்தில் ஒரு பொறுப்புள்ள தந்தையாகவும், நண்பர்களிடத்தில் இனிய நண்பராகவும், ஆலய வழிபாடுகளில் ஒரு இறை அடியாராகவும், பலவிதமான நிலைகளில் வாழ்கின்றாரோ அதே போலத்தான் கிரக மூர்த்திகளும் பொது வழிபாட்டிற்குரிய தெய்வ மூர்த்திகளாகவும் நவக்கிரக மூர்த்திகளாகவும் மற்ற கிரகங்களுடன் சில இடங்களில் சேர்ந்து அருள்பாலிக்கின்ற கூட்டு தெய்வ மூர்த்திகளாகவும், மூல மூர்த்திகளாகவும் அருள்பாலிக்கின்றனர். உதாரணமாக, சில இடங்களில் ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி தனிச் சன்னதி கொண்டு அருள்பாலிக்கின்றார்.. சிவபெருமானைப் போற்றித் துதிக்கும் வகையில் விசேஷமாகவும் குருபகவான் எழுந்தருளியிருப்பதும் உண்டு (த்ரைலோக்கி) சூரிய, சந்திர மூர்த்திகள் பெரும்பாலான சிவாலயங்களில் தனித்தனி மூர்த்திகளாகவும் அருள்பாலிக்கின்றனர்.

ஒரு ஆலயத்தில் நவக்கிரகங்களுடன் சூரிய, சந்திர மூர்த்திகள் அருள்பாலிக்கும் தன்மை வேறு, தனித்தனியே சூரிய, சந்திர மூர்த்திகளாக மூலவருக்கு எதிரே அருள்பாலிக்கும் தனி மூர்த்திகளின் தன்மை வேறு (உ..ம் ஸ்ரீசிவசூரியன் – பூவாளூர்). ஏனெனில் தெய்வ மூர்த்தியின் வலக்கண்ணாகச் சூரியனும், இடக் கண்ணாகச் சந்திரனும் விளங்குவதால் துவார பாலகர்கள் போன்று மூலத்தானத்திற்கு எதிரே வலது, இடது புறமுள்ள சூரிய, சந்திர மூர்த்திகளின் அருட்தன்மை பெரும்பாலும் நேத்திர சௌபாக்ய அருள்பொங்குவதாக இருக்கும்.

உதாரணமாக வலக்கண்ணில் Cataract  ஆபரேஷன் செய்து கொள்ள விரும்புவோர் இவ்வாறு மூலத்தானத்திற்கு எதிரே முதற் பிரகாரத்தில் மூலவரை எதிர்கொண்டு வணங்கும் அல்லது ஆலயத்தில் தனிச் சந்நிதி கொண்டுள்ள சூரியமூர்த்திக்குக் கையால் அரைத்த சந்தனக் காப்பு, தேன் காப்பு, இளநீர்க் காப்பு இட்டு வழிபட்டு நன்முறையில் குணமாகப் பிரார்த்தித்தல் வேண்டும்.. இளநீர் போன்று (பிறர்) கண் படா தீர்த்தங் கொண்டு அபிஷேகம் செய்து, கண்பட்டு வதைக்கும் தோஷ நோய்களைத் தீர்க்கும் முறையை சித்தோபநிஷத் வாக்கியங்கள் அளிக்கின்றன... தம் இஷ்ட தெய்வமூர்த்தியாம் சூரியனின் வகை வகையான அனைத்துக் கோடி ஸ்ரீசூரிய மூர்த்தங்களின் தரிசனம் பெற்ற ஒரே மஹரிஷியாக ஸ்ரீகண்வ மஹரிஷி விளங்குவதால் ஞாயிறு திருத்தலத்தில் ஸ்ரீகண்வ மகரிஷியின் சிலாரூபத்தை இன்றும் காணலாம்... Cataract  மற்றும் கண் புரைநோய் போன்ற கண் சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு காண சென்னை அருகிலுள்ள ஞாயிறு திருத்தலத்தில் ஸ்ரீகண்வ மஹரிஷியை வேண்டி இங்குள்ள விசேடமான சூரிய மூர்த்திக்கு, நிறைந்த அளவில் கையால் அரைத்த சந்தனக் காப்பிட்டு, குறிப்பாக முகத்திற்குச் சந்தனம், புனுகுக் காப்பிட்டு வழிபடுதலால் கண் நோய்களுக்குத் தக்க நிவர்த்தி கிட்டும். எனவே இவ்வாறாக நவக்கிரக மூர்த்திகளில் தனித்தனியே எழுந்தருளி அருள்பாலிக்கின்ற மூர்த்திகளின் அருட்தனித்தன்மை மிக மிக விசேஷமானது என்பதை இனியேனும் உணர்ந்திடுக!

பொன்னருள் பொழியும் ஸ்ரீசனைச்சரர்! புதுக்கோட்டையிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பொன்னமராவதி சிவாலயத்தில் பைரவ மூர்த்திக்கு நேராக ஸ்ரீசாயாதேவி சமேத ஸ்ரீசூரிய மூர்த்தியோடு, தம் தாய் தந்தையருக்கிடையே  ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி அருள்பாலிக்கின்ற தோற்றம் பெறுதற்கரிய இறை தரிசனமாகும். ஏதோ இவ்விடத்தில் இவ்வாறாகப் பிரதிஷ்டை செய்து விட்டனர் என்று எண்ணாதீர்கள்! ஏனெனில் எந்தத் தெய்வ மூர்த்தியும் ஓரிடத்தில் பிரதிஷ்டையாகி அந்தந்த வகையில் தரிசனம் ஆவதற்கு எத்துணையோ இறைக் காரண காரியங்கள் உண்டு. பைரவ சக்தி நிறைந்த இடங்களில்தான் பைரவ சன்னதி அமையும். சண்டிகேஸ்வரர் அருள் பரிணமிக்கும் இடங்களில் தான் சண்டிகேஸ்வரர் சன்னதி அமையும். சாயாதேவி சமேத சூரியபகவான் சனீஸ்வரமூர்த்தியுடன் தோன்றுகின்ற இடமெனில் அவ்விடத்தில் கிரக சஞ்சார சக்திகள் அதிகம் என உணர்தல் வேண்டும்.

பல்நோய்க்கு பரிவான நிவாரணம்! பலவித நோய்களின் ஒட்டு மொத்த விளைவுகளால் அல்லது இல்லத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வியாதியால் அவதியுறுவதும் உண்டு. சர்க்கரை நோய், உடல் பருமன், இரத்த அழுத்தம், இருதய நோய்கள் இவ்வாறாக ஒன்றன்பின் ஒன்றாகப் பலவித நோய்கள் சேர்ந்து விட்டால் எத்தகைய நரக வேதனைகள் நிறைந்த வாழ்க்கையாக ஒருவர் எண்ணுவார்? ‘நமக்கு நோய்கள் வந்து இவ்வளவு அவஸ்தைப்பட வேண்டியுள்ளதே’ என எண்ணுவதை விடப் பெருமளவிற்கு நாம் சொல்லொணாக் கர்மவினைகளைச் சேர்த்துக் கொண்டு விட்டதால்தான் அவற்றைக் கழிப்பதற்காக இறைவன் இத்தகைய வியாதிகளைத் தந்து அவற்றை அனுபவிக்கும்படி செய்துள்ளான் என்ற உண்மையை உணர்வதே நல்லதாம்! பிறருடைய மனமும், உள்ளமும் நோகும் வண்ணம் வேதனைகளைத் தந்தால், அவ்வேதனைகளும் நோயாக மாறிப் பிறருக்குத் தந்த வேதனைகள் தீரும் வரை தமக்குள் அந்நோய்களும் தொடரும்! வீட்டிற்கு அருகிலேயே கோயில் இருக்க, கோயில் பக்கமே தலை காட்டாமல் இருந்து, இறை நிறைவற்று வாழ்வோருக்கே பெரும்பாலும் முழங்கால் நோய்கள் ஏற்படும். இவ்வாறு ஒவ்வொரு வியாதிக்குமான காரணங்கள் நிறைய உண்டு. வயதானபின் நிறைய வியாதிகள் தோன்றுகின்றனவே, முதுமை காரணமாகத்தானே என்று எண்ணுவோரும் உண்டு.

ஸ்ரீகுந்திதேவி திருநல்லூர்

சப்தசாகர தீர்த்தம் திருநல்லூர்

சிறுவயதிலிருந்து முறையான யோக, பிராணாயாம இறை வழிபாடுகளை மேற்கொள்வோர்க்கு முதுமையால் தோன்றும் நோய்கள் நிச்சயமாக வாரா! அவ்வாறு ஏற்படினும் அவற்றைத் தன் தீவினையின் தன்மையாக ஏற்றுக் கொண்டு, ‘இறைவா! கர்மவினைகளைக் கழிக்க இந்நோயை இப்பிறவியில் தந்தமைக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். இவற்றை இப்பிறவியில் நான் அனுபவிக்காவிடில் மறுபிறவியில் அவை மலை போல் அல்லவா குவிந்துவிடும்! எனவே கஷ்டங்களிடையே உன் நினைவு மாறாது இருக்க அருள்பாலிப்பாயாக என்று குந்திதேவி போல் வேண்டுவதே சிறந்ததாம்!

ஆலயத் தீர்த்த நீராடல் ஆவன செய்யும்! வியாதிகள் காரணமாக உங்களுக்கு அவ்வப்போது வெறுப்பும், வாழ்வில் ஒரு பிடிப்பின்மையும் ஏற்பட்டால் திருநல்லூர் ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் ஆலயத்திலுள்ள ஏழு புனித கடல் தீர்த்தங்கள் கூடிய சப்த சாகரத் தீர்த்தத்தில் மருத்துவ சக்திகள் நிறைந்த அஸ்வினி,  ஆயில்யம் நட்சத்திர நாட்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் நீராடி வந்தால் குந்தி தேவி போல கஷ்டங்களுக்கிடையே இறை நினைவு மாறாத தெய்வீகத் தன்மையை இறைவனே அளித்து அருள்பாலிக்கிறான். நோய்களைத் தீர்த்து விடு என இறைவனிடம் வேண்டுவதைவிட ‘இறைவா! உன் அருளால் என் கர்ம வினைகளைத் தீர்க்க வந்த இந்நோய்க்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன்., இவற்றை நன்முறையில் அனுபவித்து உன் நினைவு மாறாமல் என்றும் வாழ நீ அருள்புரிய வேண்டும்’ என்று வேண்டுவதே உண்மையான சப்த சாகர சங்கல்ப தெய்வீக பிரார்த்தனையாகும்.!

இவ்வாறாகப் பல கஷ்டங்கள் ஒருமித்துச் சேரும்போது இறைவனே தன்னுடைய அவதாரத் தோற்றங்களைப் பல கூட்டமைப்புகளில் வைத்து நமக்கு அருள்பாலிக்கின்றான். இவ்வாறு தோன்றியதே பொன்னமராவதி சிவாலயத்தில் சாயாதேவி சமேத சூரியபகவான் ஸ்ரீசனீஸ்வர மூர்த்தியுடன் சேர்ந்து அருள்பாலிக்கும் கூட்டுத் தரிசனமாகும். ஈஸ்வரப் பட்டம் பெற்ற இறை மூர்த்திகள் ஒரு சிலரே! ஸ்ரீநந்தீஸ்வர மூர்த்தி, ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி போன்ற தெய்வ மூர்த்திகளும், இறைப் பரம்பொருளை வேண்டி யோகம் பயின்று, தான, தருமங்கள் புரிந்து பலவித அற்புதத் தலங்களில் கிரிவல யாத்திரைகளையும் மானுட வடிவில் மேற்கொண்டு ஈஸ்வரப் பட்டங்களைப் பெறுகின்றனர்! இவ்வாறு ஸ்ரீசனீஸ்வர பகவான் ஈஸ்வர பட்டம் பெற்ற திருத்தலமே திருஅண்ணாமலையாகும். இவ்விடத்தில் இன்றைக்கும் குறித்த இடத்தில் சனீஸ்வர சாங்க்ய யோக தரிசனம் என்ற ஓர் அற்புதத் தரிசனம் உண்டு.. ஸ்ரீசனீஸ்வர பகவானுடைய பெறுதற்கரிய அனுகிரகம் பெற்றுத் தரக்கூடிய தரிசனம்! இவ்விடத்தில் தான் சனிபகவான் ஈஸ்வர பட்டம் பெற்றார்! ஸ்ரீசனீஸ்வர உபாசனை கொண்டு சனிக் கிழமைகளில் சனி ஹோரைகளில் ஸ்ரீசனீஸ்வர பகவானை முறையோடு வழிபடுவோர்க்கும், குறித்த குருவருள் பெற்றோருக்கும் சனிக்கிழமை சனி ஹோரை நேரத்தில் இவ்வரிய தரிசனம் கிட்டும்.. ஸ்ரீசனீஸ்வரரின் அனுகிரகம் பெற்றால் எத்தகைய இன்னல்களையும் தாங்கும் பலத்தை இறைவனே அளித்து அருள்புரிகின்றான்.! மூலத்திருமூர்த்தியாக அருள்பாலிக்கும் சனீஸ்வர மூர்த்தி, ஈஸ்வர பட்டம் பெற்று அருள்பாலிக்கும் சனீஸ்வர மூர்த்தி, தாமே பலவித நல்வரங்களைப் பெற்றிட யோக, தவ நிலைகளில் உள்ள சனீஸ்வர மூர்த்தி இவ்வாறாக விசேஷமான சனீஸ்வரரின் அவதார அருள் முறைகள் உண்டு!

ஆசி பெறும் கோலத்தில் வாசி தீர்ப்பாரே! இவ்வாறாக, மிகவும் விசேஷமான கோலத்தில் பொன்னமராவதியில் தரிசனம் தருகின்ற சனீஸ்வரமூர்த்தியே ஸ்ரீமாத்ருபூதேஸ்வர சனீஸ்வர மூர்த்தி ஆவார். ஈஸ்வரப் பட்டம் பெற்ற ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி, அம்மையப்பரிடம் ஆசி பெற்று அருள்பாலிப்பதாக ஒரு சில இடங்களில் மட்டுமே தோற்றம் கொண்டுள்ளார்!.. அவற்றுள் ஒன்றே பொன்னமராவதி ஆலயத்தில் இருப்பதாம்! ஏற்கெனவே நாம் குறிப்பிட்டது போல எவ்விடத்தில் சூரியசக்திகளு, சூரிய சாயா சக்திகளும், சனீஸ்வர சக்திகளும் மிகுந்துள்ளனவோ அவ்விடத்தில் தான் இவ்வித கிரக சங்கம அம்சங்கள் தோன்றும்.. இன்றும் பல ஆலயங்களில் இடமின்மையாலும், பாதுகாப்பிற்காகவும் பல மூர்த்திகளின் சிலைகள் ஆங்காங்கே இருப்பதாக விளக்கம் கூறுவர்... ஆனால் எங்கு எந்த தெய்வீக சக்தி மிகுந்துள்ளதோ அங்கு வெறும் மானுட காரியமாகவோ, தெய்வச் செயலாகவோ அல்லது பெரியோரின் அனுகிரக சங்கல்பமாகவோ தோன்றிடும்.!

பெற்றோர் பிள்ளைகள் பிணக்கு நீங்கிட... தந்தை பிள்ளைகளிடையே எத்துணையோ குரோத, விரோத சம்பவங்களால் முறையான பேச்சு வார்த்தைகள் இராது, இவ்விடங்களில் தாயின் மனமோ படாத பாடுபடும்.. இருவரையும் பிணைத்து வைக்க என்னதான் முயற்சிகள் செய்தாலும், குரோத விரோத மற்றும் அகங்கார, ஆணவப் பிரச்னைகள் தலைதூக்கி நிற்கும். இத்தகைய பிரச்னைகள் கலியுகத்தில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்களில் ஏற்படும் என்பதைத் தீர்க்க தரிசனமாக உணர்ந்த ஸ்ரீசனீஸ்வர பகவானே இவற்றைத் தீர்வு செய்வதற்கான தக்க பிராயசித்த நல்வழிமுறைகளை சற்குரு மூலம் உணர்த்தவே பித்ருகாரகராகிய  சூரிய பகவானோடும் மாயைகளினின்று மீள அரும்பெரும் தவம் செய்த தன் தாயான சாயாதேவியோடும் சேர்ந்து இங்கு அவர் அருள்புரிகிறார்.

உஷா தேவி சூரிய பகவானை மணந்தபோது சூரிய மண்டலத்தில் அவர்தம் வெப்பத்தைத் தாங்காது அவரை விட்டுப்பிரியும் நிலை உஷா தேவிக்கு ஏற்பட்டது. எனவே உஷாதேவி தன் நிழலான சாயா தேவி என்னும் தோற்றத்தை ஸ்ரீசூரிய பகவானிடம் வைத்துவிட்டுப் பல கோடி யுகங்கள் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்திட்டாள்! பிரபஞ்சத்தின் அக்னிலிங்கமாக விளங்குகின்ற திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து அக்னிலிங்கப் பகுதியில் சாயாவன தரிசனம் என்ற ஒரு அரிய பெற்று அதன்மூலம் சூரிய மண்டலத்தில் சூரியபகவானுடன் இணைந்து வாழும் அரும்பெரும் அக்னி சக்திகளைப் பெற்றாள்..!

இன்றைக்கு உலகில் பீடி, சிகரெட் போன்ற கேவலமான கெட்ட பழக்கங்களுக்கு ஆளானோர் அக்னி பகவானுக்கு மிகவும் மனவேதனைகளை உண்டாக்குகின்றனர்.. இப்பிரபஞ்சத்தில் இறைவன் அக்னியைத் தோற்றுவித்ததற்குக் காரணம் பல உண்டு! அக்னியைக் கொண்டு இறைவனை வழிபடவும் (ஊதுபத்தி, தீபம், ஹோமம்) மனித உடலைப் பேணவும் (சமையல்) மற்றும் பல நற்காரியங்களுக்காகவும் உலகத்தில் இறைவன் அக்னியைப் படைத்தபோது பலவித மாயைகளுக்கு ஆட்பட்ட மனிதன் புகைபிடித்தல், அக்னியைக் காலால் மிதித்தல், தீ வைத்தல், டயர் போன்றவற்றைக் கொளுத்துதல் போன்று பலவிதங்களில் ஸ்ரீஅக்னி பகவானைக் கேவலம் செய்கின்றான்! மனிதன் தனக்குத் தானே அக்னி சம்பந்தப்பட்ட தீவினைக் கர்மங்களைப் பெருக்கிக் கொள்வதால்தான், தீ விபத்துகள், தீக்காயங்கள், மாரடைப்பு போன்ற பலவிதக் கர்ம வினைகளுக்கு ஆட்பட வேண்டியுள்ளது.!

அக்னிக் குற்றங்களைக் களையும் சாயாவன அருணை மலை தரிசனம்! சாயாவன தரிசனம் என்பது திருஅண்ணாமலை தேயு நந்தி கோணத்திலிருந்து ஸ்ரீஅண்ணாமலையாரைத் தரிசிப்பதாகும்.. புகைபிடித்தல் போன்ற அக்னிக் குற்றங்களுக்கு ஆட்பட்டோர் இப்பிறவியிலேயே கண்டிப்பாகப் பிராயச்சித்தம் பெற்றாக வேண்டும். இல்லையெனில் இப்பிறவியிலோ அல்லது எதிர்வரும் பிறவிகளிலோ, உருவமற்ற தீ(ய)ப் பிசாசுகளாக அலைய நேரும் அதாவது பெரிய அக்னிக் குண்டங்கள் வைக்கப்பட்டு அதிலேயே எப்போதும் வெந்து கொண்டிருக்க வேண்டிய பலத்த தண்டனைகள் ஏற்படும்.

பெரிய நெருப்புக் கோளங்கள் நிறைந்த கொப்பறையில் பல ஆயிரம் ஆண்டுகள் சாகாது வெந்து நொந்து முடங்கிக் கிடப்பதெனில் எத்தகைய பலத்த கொடுமை அது! இந்நரக தண்டனையை நினைத்தாவது இனியேனும் புகைபிடிப்போர் அக்னியை துஷ்பிரயோகம் செய்வோர் அப்பழக்கத்தைக் கைவிட வேண்டும். புகை பிடிப்பதிலிருந்து விடுபட இயலாதோர் சூரிய பகவானுக்குரித்த நாட்களான கார்த்திகை, பரணி, உத்திரம், சித்திரை போன்ற நாட்களிலும், செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரை நேரத்திலும் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து அக்னி லிங்கத்தருகே சாயாவன தரிசனம் பெற்று (தக்க சற்குரு மூலம் இதனை அறிவீர்களாக!) இதன்பிறகு பொன்னமராவதி வந்து சாயாதேவி, சூரிய மூர்த்தி, ஸ்ரீசனீஸ்வர பகவான் இணைந்து அருள்பாலிக்கும் இச்சிவத்தலத்தை வழிபட்டு ஒன்பது வகைத் தான தருமங்கள் செய்தலால் புகை பிடித்தலில் இருந்து மீண்டிடத் தக்க நல்வழிகள் கிட்டும்., இதனால் விரைவில் இத்தீய பழக்கத்திலிருந்து மீளலாம்.!

ஸ்ரீமாத்ருபூத சனீஸ்வர பகவான் வழிபாடு! திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்த கையோடு இக்கிரிவலத்தில் பெற்ற அக்னிச் சக்திகளை விரயம் செய்திடாது நேரே பொன்னமராவதி வந்து இச்சனீஸ்வர வழிபாட்டைக் கடைபிடித்தல் மிகவும் விசேஷானதாகும்! ஒன்பது வகைத் தான தர்மங்கள், பூஜைகள்யாவும் அக்னி சம்பந்தப்பட்டவையாகும். இவ்வாலயத்தில் தக்க அனுமதியுடன் அக்னி பகவானுக்கு ஹோமம் எழுப்பி அக்னி பகவானுக்குப் ப்ரீதியான பசு நெய், அரசு, ஆல், வேம்பு, புரசு போன்ற சமித்துகள், தேன், சிவப்பு, வஸ்திரங்கள், பவளம் போன்றவற்றை ஆஹுதிகளாக அளித்து அக்னி ஹோமங்கள் வளர்த்தல், கருநீல, சிவப்பு நிற ஆடைகள், கருப்பு, கருநீல உணவு வகைகளை (கறுப்பு திராட்சை) தானமளித்தல், எள் சம்பந்தப்பட்ட எள்ளோதரை, எள்ளுருண்டை, பாய்தானம், நன்முறையில் தயாரிக்கப்பட்ட கண்மை தானம் போன்ற ஒன்பது வகை தான தருமங்களைச் செய்தால், புகை பிடித்தலிலிருந்து விடுதலை பெறலாம். ஆனால் ஆழ்ந்த நம்பிக்கையுடன் தொடர்ந்து முறையாக இதனைச் செய்திட வேண்டும்.. கணவன் சார்பில் மனைவியும் செய்திடலாம்.!

தீய பழக்கங்கள் அகல.... அக்னி ஹோமங்களுக்கு நிறையச் செலவாகுமே என யோசிக்காதீர்கள்..! சிகரெட்டிற்கும், பீடி, சுருட்டிற்கும் ஒருவன் வாழ்வில் செலவழிக்கும் லட்சக்கணக்கான தொகையை நோக்குங்கால் இப்பரிகாரம் மிக மிகச் சிறிய எளிய பரிகாரமே! இத்தகைய பரிகாரங்களைக் கலியுகத்தில் பெறுதலும், இப்பரிகாரத்தைத் தருவதற்காக சாயாதேவி சமேத ஸ்ரீசூரியமூர்த்தியுடன் ஸ்ரீசனீஸ்வர பகவான் எழுந்தருளியிருப்பதும் பூலோகத்தில் நாம் பெற்ற பெரும் பேறாகும்..! புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதோரும் இத்தகைய பிராயச்சித்த முறையை நிறைவேற்ற வேண்டும்.. ஏனெனில் தங்களுடைய பிள்ளைகளோ, எதிர்காலச் சந்ததியோ மிகவும் கேவலமான புகைபிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகக் கூடாது. என்பதற்காக இப்பிராயச்சித்த முறையைக் காப்பாகச் செய்தலும், பரவெளியானது புகையால் பாதிக்கப் படாமலிருப்பதற்கும், சமுதாய இறை வழிபாடாகவும் செய்தல் சிறப்புடையதாம்!

தத்தெடுத்த தடுமாற்றம் தீர்ந்திடவே...! பிள்ளைப்பேறு இல்லாதோர் தத்து எடுக்கும் பழக்கம் பல குடும்பங்களில் நிலவி வருகிறது.. வம்சாவளியைப் பெருக்கவும், கொள்ளியிட வாரிசு வேண்டும் என்னும் எண்ணத்திலும் மட்டும் தத்தெடுத்தல் உண்மையான பலன்களைத் தராது! தத்து எடுக்கின்ற நடைமுறை வழக்கில் இருந்தாலும் இதிலும் பல சிக்கல்கள் எழுவதுண்டு.. ஒட்டுவதுதான் ஒட்டும் எனும் பழமொழி போலத் தத்து எடுத்தும் சுமுகமான சூழ்நிலைகள் ஏற்படாது ஏனோதானோ என்று பல குடும்பங்களில் வாழ்க்கை நடந்து வருகின்றது..!

இவையெல்லாம் நன்முறையில் சீரடைய சாயாதேவி சூரிய பகவானுடன் இணைந்த சனீஸ்வர வழிபாடு பெரிதும் உதவுகிறது... இத்தகைய சூழ்நிலையில் வாழ்கின்றவர்கள் புதன் மற்றும் சனிக் கிழமைகளில் புதன், சனி ஹோரை நேரங்களில் சாகம்பர்ய சக்திகள் நிறைந்த பொருட்களைத் தானமளித்து வருதல் வேண்டும்.. இந்நேரங்களில் சூரியபகவானுக்கு ஆரஞ்சு, வண்ண ஆடைகள் சார்த்தியும், சனீஸ்வர பகவானுக்கு கருப்பு மற்றும் கருநீல ஆடை சார்த்தியும் சாயாதேவிக்கு மஞ்சள் நிறப்பட்டாடை சார்த்தியும் வழிபடுதலோடு சாகம்பர்ய சக்தி நிறைந்த வாழைப்பூ, பலாச் சுளை, கொத்துத் திராட்சை, கீரை வகைகளைச் சமைத்தும் தானமளித்தலால் தக்க நிவர்த்தி கிட்டும்..!

பொதுவாகச் சனிக்கிழமையும், அமாவாசையும் சேர்ந்து வருகின்ற நாள், சனியும் பௌர்ணமியும் கூடும் நாள், சனீஸ்வரனுக்கு உரிய பூசம், அனுஷம், உத்ரட்டாதி நட்சத்திர நாட்களிலும், சனி ஹோரை நேரங்களில் சாகம்பர்ய சக்தி நிறைந்த உணவுப் பொருட்களைத் தானமளித்தலால் அதியற்புத முறையில் குடும்பத்தில் பிரிந்தோர் கூடி சாந்தி, மன நிம்மதி கிட்டும்.. இவற்றைப் பெற்றுத் தருபவரே சாயாதேவி சமேத சூரிய பகவானுக்கு இடையில் அருள்பாலிக்கும் சனீஸ்வர மூர்த்தியாவார்..!

ஸ்ரீமாத்ருபூத சனீஸ்வரர் எனும் நாமத்தைத் தாங்கும் சனீஸ்வர மூர்த்தி அதியற்புத சக்தி வாய்ந்தவர்.. சனிதசை, சனி புக்திகளால் துன்பம் ஏற்படுகிறது என எண்ணுவது தவறாகும்.. மாறாக இத் தசாபுக்திகள் ஏற்படுகின்ற நேரத்தில் அத்தகைய துன்பங்கள் வர இருப்பதைக் குறிப்பிடுவதே இந்த கிரக சஞ்சார அம்சங்கள் என உணர வேண்டும்.. சனி தசைக்குரித்தான பூசம், அனுஷம், உத்ரட்டாதி நட்சத்திர தினங்களில் தானமளித்து செய்யப்படுகின்ற சூரிய, சனீஸ்வர பூஜைகளும், சனிக்கிழமைகளில் சனிஹோரையிலும், புதஹோரையிலும் செய்யப்படுகின்ற பூஜைகள், சனீஸ்வர பகவானின் அனுக்கிரகத்தைப் பெற்றுத் தரும். மாத்ருபூத சனீஸ்வர பகவானுக்குரித்தான தினங்களாக விளங்கும் நட்சத்திர நாட்களே பூசம், அனுஷம், உத்ரட்டாதி நட்சத்திர தினங்களாகும்.. மிகவும் அபூர்வமான இந்த சனீஸ்வர பகவானின் தெய்வீக மேன்மைகள் இன்னும் பல இருக்கின்றன. அவற்றை விவரித்தால் பல புராணங்களாகப் பெருகும்.. எனவே ஏனைய ஆத்ம விஷயங்களைத் தக்க சற்குருமூலம் அறியவும்...!

வாகனப் பராமரிப்பு

கலியுகத்தில் வண்டிப் பிரயாணங்கள்

விஞ்ஞான மோகத்தாலும், சுக போகத்திற்கு அடிமையாகியும் மனிதர்கள், நல்ல நாட்களை அறிந்து காரியங்களை ஆற்றுகின்ற தன்மையை இழந்து அவசரகோல வாழ்வைக் கலியுகத்தில் ஏற்படுத்திக் கொண்டுவிட்டார்கள்! அக்காலத்தில் திருமணம் என்றால் ஒரு வருடத்திற்கு 3 அல்லது 4 சுபமுகூர்த்த தினங்கள் மட்டுமே அமையும்.. அந்த அளவிற்கு அனைத்து வித நாள், நட்சத்திர, யோக, கரண விஷயங்களைப் பார்த்து சுபநாட்களை அமைத்தமையால்தான் கால தேவதைகளின் ஆசிகளைப் பெற்று நம் முன்னோர்கள் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து நிறைய மக்கட் செல்வம் பெற்று சுமங்கலித்வம் கூடிய சாந்தமயமான வாழ்வைப் பெற்றிருந்தார்கள். ஆனால் தற்காலத்தில் கல்யாணச் சத்திரங்களைப் பதிவு செய்து விட்டுப்பின் அதற்கு ஏற்றவாறு சுபமுகூர்த்த நேரங்களை அமைக்கின்ற அவலமான நிலை வந்துவிட்டது..!

மேலும் பஞ்சாங்கத்தில் சுபமுகூர்த்த நாள் என்று போட்டிருந்தால் அந்த நாளை அப்படியே அனைவர்க்கும் உரித்தானதாக எடுத்துக் கொண்டு விடுகின்றார்கள். அந்தந்த மாப்பிள்ளை, பெண்ணின் நட்சத்திர ராசி அம்சங்களைப் பொறுத்தே சுபமுகூர்த்த நாளும் நேரமும் அமைக்கப்பட வேண்டும்! இத்தகைய தவறுகள்தாம் வாழ்க்கையைத் துன்பச் சுழல்களாக்கி விடுகின்றன! இதற்கெல்லாம் காரணம் நம்முடைய இயந்திரமய அவசரகோல வாழ்க்கையேயாம்!

ஒரு சுபமுகூர்த்த நாளைக் கணிப்பது என்றால் அந்நாளில் அடைகின்ற குடும்ப வாழ்க்கை முழுமைக்கும் அந்நாளைக் குறித்துத் தருபவரும் பெரும் பங்கு வகிக்கின்றார்.. அவ்வாழ்வில் அமைகின்ற நல்லது, கெட்டது அனைத்திலும் இவருக்கும் ஒரு பங்கு சேர்ந்து வரும் என்பதை உணர்ந்தால்தான் ஜோதிடர்களும் மற்றோரும் நல்ல நாள் குறித்துத் தருவதில் ஏனோதானோ என்றில்லாது மிகவும் கவனமாக இருப்பார்கள்! கலியுகத்தில் சமுதாயத்தின் அவசரக் கோல வாழ்வில் பெரும்பங்கு வகிப்பது வண்டிகளாகும்.. 9 மணிக்கு அலுவலக நேரம் என்றால் 8.55க்கு ஸ்கூட்டரை உதைத்துக் கொண்டு பறக்கும் நிலையையே நாம் இன்று காண்கின்றோம். இறைவன் உறைகின்ற இந்த உயிரைத் தாங்கிச் செல்கின்ற உடலை எவ்வளவு கவனமாகப் பாதுகாக்க வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும். எவ்வாறு இறைவனுக்குரித்தான வாகனமானது தேவமூர்த்தியின் தன்மையைப் பெற்றுள்ளதோ திருமூலர் காட்டிய ஊனுடம்புக் கோயிலாக, இறைவன் உறைகின்ற ஆத்ம ஸ்வரூபமான நம்முடைய மானுட உடலைத் தாங்கிச் செல்கின்ற வண்டிகளையும் நாம் முறையாகப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்..!

தினமும் வண்டியை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி எடுத்துச் செல்வதே முறையானதாகும்... ஏனெனில் வண்டி ஓட்டும் பொழுது ஏற்படும் ஒரு சிறு தவறு கூட எத்தனையோ கெட்ட விளைவுகளையும், பேராபத்துகளையும், அங்க ஹீனங்களையும் உடலுக்கு ஏற்படுத்தி விடுமல்லவா? எனவே ஒரு முறை வண்டியை எடுத்துக் கொண்டு நன்முறையாகத் திரும்பி வருவதிலேயே நம்முடைய பெரும்பாலான புண்ணிய சக்தியைச் செலவழித்து விடுகின்றோம்.!

இதனால்தான் அன்னதானம், காசி, திருப்பதி யாத்திரை, திருஅண்ணாமலை கிரிவலம் என்று பல புண்ணிய காரியங்கள் நிகழ்த்தினாலும் கூட அவற்றில் பெறுகின்ற பெருமளவிலான மகத்தான புண்ணிய சக்தியை நாம் வண்டியை அஜாக்கிரதையாக ஓட்டும்போதும், தவறான முறையில் கையாளும் போதும் செலவழித்து வருகின்றோம்..! எனவேதான் எந்தப் பிரார்த்தனை வழிபாட்டை மேற்கொள்கின்றோமோ அது நிறைவேறத் தேவையான புண்ய சக்தியை நாம் பூஜைகளில், ஆலய தரிசனங்களில் பெற்றாலும் வண்டி விபத்தின்றித் திரும்பி நன்முறையில் வந்து நாம் காப்பாற்றப்படுவதற்கும் தவறான செயல்களிலிருந்து காப்பதற்கும் பெரும்பாலும் செலவழிந்து விடுதலால் பிரார்த்தனை கைகூடத் தேவையான புண்யம் கூட மிச்சம் இல்லாமல் போய் விடுவதுண்டு.!

ஆனால் நாமோ “இந்தக் கோயிலுக்குப் போனோமே, இதைச் செய்தோமே, அதைச் செய்தோமே! என்று திருத்தலங்களையும் இறை மூர்த்திகளையும் ஏசுகின்றோம்.. இது சரிதானா என இனியேனும் சிந்தித்துப் பாருங்கள்.. பாத யாத்திரையில் பங்கங்கள் (Risks)  குறைவு என்பதனால் அதன் பலன்கள் பெருமளவில் திரளும்! ஆனால் கலியுகத்திலோ பிளாட்பாரத்தில் கூட நிம்மதியாக நடக்க முடிவதில்லையே!

பூர்வ ஜன்மத் தொடர்பே உங்கள் வண்டி! நம்மிடமுள்ள சைக்கிள், ஸ்கூட்டர், கார் அனைத்துமே நம்முடன் பூர்வ ஜென்மத் தொடர்பு கொண்டவையாகும். நீங்கள் எவருடைய வீட்டில் பூர்வ ஜென்மத்தில் உண்மையாக உழைத்தீர்களோ, அவர்களே இன்று வண்டிகளாகப் பிறப்பெடுத்து உங்களிடம் உண்மையாக உழைத்து வருகிறார்கள்..! இவ்வாறாக உங்களிடமுள்ள வண்டிகளுக்கும் உங்களுக்கும் நெருங்கிய ஜென்மத் தொடர்புகள் உண்டு என்பதை உணருங்கள்... “இந்த வண்டி ராசியானது..!” என்று உணர்வதற்கும் இதுவே காரணமாகும்..!

கார் டிரைவரையோ, வேலைக்காரரையோ வண்டியைத் துடைக்கச் செய்தலும் தவறானதே! வண்டியைத் துடைப்பது கேவலமான தொழில் என  எண்ணாதீர்கள்! நம்முடைய பூர்வ ஜென்ம உறவுகளே நமக்கு வண்டியாக வாய்த்துள்ளது என்றால் அதில் என்ன கேவலமுள்ளது? உங்களுடைய பூர்வ ஜென்மத் தாயோ, தந்தையோ, மனைவியோ உடன் பிறப்புகளோ, குழந்தைகளோ கூட வண்டியை இயக்கும் சக்தியாக வந்து வாய்த்திருக்கலாம் அல்லவா? இவ்வெண்ணம் வலுப்பெற்றால்தான் தாழ்வு மனப்பான்மை, உயர்வு மனப்பான்மை, அகங்காரம் அழியும்...!

உங்கள் வண்டி எண்கள் உங்களின் நட்சத்திர ராசிக்கு ஏற்பவையாக இருக்க வேண்டும் என்பது உண்மையே! நட்சத்திரங்களுக்கும் எண்களுக்கும் அபாரமான தெய்வீக சக்தி உண்டு. எவ்வாறு உங்களுடைய பிறந்த தேதியானது பள்ளி, கல்லூரி, வேலை கிடைப்பதற்கும், அலுவலகத்திலும் பெருந் தொடர்பு கொண்டுள்ளதோ அதுபோல உங்கள் வாகனங்களின் எண்களும், உங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவையாக இருந்தால்தான் உங்கள் வாழ்க்கை சிறப்பானதாக அமையும்.!

ஆயுத பூஜை அன்று மட்டுமல்லாது தினந்தோறும் வண்டியைத் துடைத்து நன்கு சுத்தப்படுத்தி அதற்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் இடுதல் வேண்டும்! ஸ்ரீசனீஸ்வர பகவானுக்குரித்தான ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஓதுதல் மற்றும் கற்பூரம் காட்டி வண்டியை வலம் வந்து வணங்குதலும் வண்டியின் புனிதத்தைப் பெருக்குகிறது.. வண்டிக்குப் புனிதம் பெருக்கிடும், நம் பூர்வ ஜென்மத் தொடர்புகளான வண்டிக்கும் கைராசியையும், காரிய சித்தியையும் அளித்திடும்! இத்தகைய வழிபாடுகளால் நம்முடைய ஆத்ம ஸ்வரூபத்தைத் தினந்தோறும் தாங்கிச் செல்கின்ற வாகனமே நம்முடைய வண்டி என்பதையும் நாளடைவில் நன்றாக உணரவும் முடியும்..!

மூன்று நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஒரு வண்டியை வைத்திராமல் அதை மாற்றிட வேண்டும்.! இயன்ற வரை விற்காமல் நல்ல ஒரு ஏழைக் குடும்பத்திற்கு நன்முறையில் பயன்படுத்த வண்டியைத் தானமாக அளித்தல் மிகவும் சிறப்பானதாகும்.. அக்காலத்தில் காளை மாடுகள், ஆடுகள் போன்றவற்றைத் தானமாக அளித்துக் காளை தானம், பசு தானங்களால் அளவிலாப் புண்ணிய சக்தியைப் பெற்றனர் நம் முன்னோர்! இக்காலத்திலோ வீடுகளில் பசுமாடு வளர்த்தலே பிரம்மப் பிரயத்தனம் ஆகிவிட்ட நிலையில் நாம் வைத்துள்ள வண்டிகளைத் தானமாக அளித்தலே ரிஷப (காளை) தானப் புண்ய பலா பலன்களை ஓரளவேனும் நமக்குப் பெற்றுத் தரும்... நல்லோர்களுக்கு தானமாக அளித்தல் மிக மிக முக்கியம்..!

சுவாமியைத் தோளில் சுமந்திடுக...! காலணிகள், உடைகள், பேனா, பென்சில் போன்றவற்றையும் அவ்வப்போது தானமாக அளித்திடுக! இவ்வகையில் புண்ய சக்தி சிறிது சிறிதாகச் சேர்ந்து நம்மை ஆபத்துகளிலிருந்து நன்கு காத்திடும்! மேலும் இறைவனுடைய உற்சவ மூர்த்திகளைத் தோளில் தாங்கி வருதல் பெறுதற்கரிய பலன்களைப் பெற்றுத் தரும்..! ஆனால் தான் மட்டுமே சுவாமியைச் சுமக்க வேண்டும் என்ற சுயநலப் பேராசையை விடுத்து புதிதாக வந்த மற்றவர்க்கும் சுவாமியைச் சுமக்க வழி வகை செய்ய வேண்டும்.. எனினும் தற்காலத்தில் பிரதோஷ பூஜை என்றாலே மோட்டார் இட்ட வண்டிகளில் ஸ்வாமி புறப்பாடாக ஏற்பாடு செய்து விடுகின்றார்கள்... மனித சக்தியால் மட்டுமே இழுத்து சுவாமியின் பல்லக்குகளையும், தேரையும் நிலைக்குக் கொணர்தலே சிறப்புடையது! காளை மாடுகளை வைத்தோ அல்லது மோட்டார் பொருத்தியோ, வாகனங்களிலோ அல்லது உயர் வண்டிகளிலோ உற்சவம் நடத்துதலில் சிறப்பு கிடையாது... அந்தந்த ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து ஸ்வாமி புறப்பாட்டிற்காக மனிதத் தோள் கொடுத்திட அனைத்து முயற்சிகளையும் எடுத்தல் வேண்டும்.. பிரதோஷ சுவாமி புறப்பாடு என்பது மனித சக்தியால் தோளில் சுமந்தே நடத்துதல்தான் உலக சமுதாயத்திற்கே நன்மை பயக்கும்! இறைவனைச் சுமப்பதற்காகத்தான் நமக்குப் பெறுதற்கரிய மானுடப் பிறவியை இறைவன் அளித்துள்ளான் என்பதை உணர வேண்டும்... தமக்கு வாகனத்தைத் தந்த இறைவனுக்குத் தம்மை வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக எவ்வளவோ மஹரிஷிகள், உத்தம அடியார்கள் ஆற்றிய தொண்டுகளை கோடானு கோடிப் புராண நிகழ்ச்சிகளாக நாம் அறிவோம்.!

ஒரு சிறு சைக்கிளானாலும், கார் என்றாலும் சரி நமக்கென ஒரு வாகனம் தந்த இறைவனுக்கு நாமே ஒரு வாகனமாகி நம் தோள்களில் இறைவனைச் சுமப்பதே நம் வாழ்வில் பெறுதற்கரிய பாக்கியமாகும். இதற்காகத்தான் ஒவ்வொரு ஊரிலும் ஆலயங்களில் இறைவன் எழுந்தருளி நமக்குப் பல அரிய தெய்வீகச் சந்தர்ப்பங்களை அளிக்கின்றான்.! ஆனால் இவற்றின் தாத்பர்யங்களை நாம் நன்முறையில் உணர்கின்றோமா? சரி நடந்தது போகட்டும்., இனியேனும் இறைவனுடைய உருவங்களைச் சுமக்கும் பெரும் பாக்கியத்தை நழுவ விடாது உங்கள் ஊரிலோ அல்லது உங்கள் வீட்டிற்கு அருகிலோ பிரதோஷ உற்சவம், விஷ்ணுபதிப் புண்ய காலம் மற்றும் பல முக்கியமான தினங்களிலும், ஏன் தினந்தோறுமே சுவாமி புறப்பாட்டிற்கான ஏற்பாட்டை மேற்கொள்ளுங்கள்!

அக்காலத்தில் தினந்தோறும் சுவாமி புறப்பாடானது ஒவ்வொரு ஊரிலும் அமைந்திருந்தது.. முடவர்கள், குருடர்கள், வயதானோர்கள், நோயுற்றோர் மற்றும் தாவரங்கள், விலங்கினங்களின் தரிசனத்திற்காகவே இறைவனின் புறப்பாட்டை ஒவ்வொரு நாளும் தினசரி உற்சவமாக முற்காலத்தில் வைத்திருந்தார்கள்.. ஆனால் தற்போதோ பிரம்மோற்சவம் மற்றும் ப்ரதோஷம் போன்ற நாட்களில் மட்டுமே சுவாமி புறப்பாடு இருக்கின்றது! அதுவும் ஆலயத்திற்குள்ளேயே நடக்கிறது! ஆலயத்தின் அனைத்து வீதிகளிலும், ஊர் முழுவதுமாக ஸ்வாமி புறப்பாடு நடத்துவதற்கு இனியேனும் முயற்சிகள் செய்து இதனை மகத்தான சமுதாயப் பூஜையாக, இறைப் பணியாகக் கொண்டு தக்க ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்.

நீர்ப் பஞ்சம் தீர சுவாமியின் தேரோட்டம்! நீர்ப் பஞ்சம் என்று நாம் தடுமாறுகின்றோமே, இறைவன் வீதிகளில் உலா வந்தால் தானே ஊரெங்கும் நீர்நிலை, நீர்வளம் பெருகும். வருண பகவானும் கருணை புரிந்து நமக்கு மழைப் பொழிவை அருள்வார்! உங்கள் ஊர் ஆலயங்களில் தினந்தோறும் சுவாமி புறப்பாட்டிற்காக ஏற்பாடு செய்யுங்கள்... தினந்தோறும் உற்சவம் என்றால் மஹரிஷிகளும் சித்புருஷர்களும் மிகவும் மகிழ்வர்.. தினசரி சுவாமி புறப்பாடு உற்சவங்களைக் கொண்டாடி மழைப் பொழிவு ஏற்படுவதைக் கண்ணாரத்தான் கண்டு களியுங்களேன்!

ஹோரை நேரம் பார்த்தே பிரயாணம்!- நீங்கள் வண்டியில் செல்லும் போதெல்லாம் அந்தந்த ஹோரை நேரமறிந்து அந்தந்த ஹோரை நேரத்திற்கான அதிபதிகளான சனீஸ்வரா போற்றி! சூரியா போற்றி! சந்திரா போற்றி! என்றவாறாகத் துதித்து வண்டிகளை எடுக்க வேண்டும் அல்லது பிரயாணம் செய்ய வேண்டும்.. ஏனெனில் நமக்கெல்லாம் ஜாதகம் என்ற ஒன்று இருப்பது போல ஒவ்வொரு வண்டிக்கும் ஜாதக அமைப்புகள் உண்டு... அந்தந்த வண்டிக்குரித்தான எண்களோடு, எண் ராசி சஞ்சாரங்கள் கொண்டதாக இவை இருக்கும்.. உதாரணமாக சூரியன் – 1, சந்திரன் -2, குரு -3, ராகு -4, புதன் -5, சுக்கிரன் -6, கேது -7, சனைச்சரர் -8, செவ்வாய் -9 எனும் வகையில் எண் ராசி ஜாதகங்கள் அந்தந்த வண்டிக்கு அமையும்.. எனவே ஹோரை நேரங்கள் என்பது காலதேவதா மூர்த்திகளின் அனுகிரகம் பெற்று அமைவதால், நவகிரக மூர்த்திகள் காலத்தோடு சம்பந்தப்பட்டு விளங்குவதலால் எந்த ஹோரையில் வண்டியை எடுத்துப் பிரயாணம் செய்கின்றீர்களோ, அந்த ஹோரை நேரத்திற்கான தேவதையை நீங்கள் துதித்தே வண்டியை ஓட்டுதல் அல்லது பிரயாணம் செய்தல் வேண்டும்...

புனிதமான இரவுப் பொழுதை அவமதிக்கும் மனித சமுதாயம்! உதாரணமாக, சென்னையிலிருந்து திருஅண்ணாமலைக்கு பேருந்தில் இரவு 8 மணிக்கு வண்டி ஏறினால் 8 மணிக்கு எந்த ஹோரையோ, அந்த ஹோரை நேரத்திற்குரிய அந்தந்த தெய்வ மூர்த்தியை வழிபட வேண்டும்! பஸ்ஸில் தூங்குதல் கூடாது. இயன்ற வரை இரவுப் பயணங்களை முழுமையாகத் தவிர்த்து விடுங்கள்.. இரவு நேரங்களில்தான் கலியுகத்தில் தீயசக்திகள் ஆக்கிரமிப்புச் செய்தலால் இரவு நேரப் பயணங்களைத் தவிர்த்தல் நலம்.. இரவு நேரத்தின் புனிதத்தை மதித்திடாது உலகெங்கும் முறையற்ற காமத் தீயொழுக்க அதர்மச் செயல்கள் நடக்கும் நேரமாக மனித சமுதாயம் இரவு நேரத்தைக் கேவலப்படுத்தி வருவதால் ராத்திரி தேவதைகளின் பெருத்த சாபங்களுக்கு இவ்வுலகம் ஆளாகி வருகிறது!

நம்முடைய முன்னோர்களின் காலத்தில் இரவு நேரங்களில் வண்டிப் பிரயாணமே இருக்காது.. ஆனால் தற்போது பெரும்பாலான இரயில் மற்றும் பேருந்துப் பயணங்கள் இரவில்தான் அமைகின்றன.. தற்காலச் சமுதாய சூழ்நிலையில் இதனைத் தவிர்க்க இயலாததாக நீங்கள் உணரலாம்.. ஆனால் இரவுப் பயணத்தைக் கண்டிப்பாக விலக்கியே ஆக வேண்டும்... இது இக்கால வாழ்விற்கு ஏற்றது இல்லை எனினும் நாம் சொல்ல வேண்டிய மாமறைச் சித்தோபநிஷத் உண்மையைச் சொல்லித்தான் ஆக வேண்டும்..!

கலியுகத்தில் பலவிதத் தீய பழக்க வழக்கங்களுக்கு மனித சமுதாயம் ஆட்பட்டு விட்டதால் இரவு நேரப் பிரயாணம் என்பது ஏதோ அவரவர் புண்ய சக்தியில்தான், பித்ருக்களின் ஆசியில் தான் நன்முறையில் நடக்கிறது... மேலும் செல்லுமிடத்தில் எல்லாம் இரவில் ஆக்கம் பெறும் பல தீய சக்திகளும், தீய தேவதைகளும், ஆவிகளும் ஆங்காங்கே தம் தீய செயல்பாட்டைக் காண்பிக்கத் துவங்கினால் மனித சமுதாயத்தால் தாங்க இயலாது.. மேலும் இரவுப் பயணம் செய்யும் ஒருவர், துர் தேவதைகளின் ஆக்கிரமிப்பால் தீவினைச் சக்திகளைத் தம் உடலில் கூட்டிக் கொண்டு வந்து விடுகின்றார்! இவற்றைக் களைவதற்கே பல மாதங்கள் ஆகிவிடும்!

இதற்காகத்தான் இரவுப் பயணங்கள் செய்யாதே என்று சொன்னால்கூட அதனை மேற்கொள்ளும் மனிதன் தக்க பிராயசித்த வழிபாடுகளையாவது மேற்கொண்டாலாவது இது சிறிதளவு புண்ணிய சக்தியைத் தந்து எதிர்வரும் தீவினைச் சக்திகளினின்று ஓரளவு காக்கும்.. இவ்வாறு இரவு நேரப் பிரயாணத்திற்கான பிராயச்சித்த ரகசியங்களை எடுத்துச் சொன்னால் கலியுக மனித வழக்கப்படி பிராயச்சித்தம் செய்துவிட்டு இரவுப் பயணம் கைக்கொள்ளும் வழக்கம்தான் தொடரும்!

இரவு தூங்குவதற்காக மட்டும் அல்ல! இரவு நேரம் என்பது மனிதனுக்கு, உறக்கம் மற்றும் இரவு நேரத்தில் அவனுடைய சூட்சும தேவ உடலில் ஏற்படும் ஒரு வாழ்க்கை மாற்ற காரியங்களுக்காக இறைவனால் வகுக்கப்பட்டுள்ளது... எனவே உடலின் ஓய்விற்காகத்தான் இரவு நேர உறக்கம் என்று எண்ணுகின்றோம்.. உண்மை இதுவல்ல! பகலில் இந்த மானுட உடலில், பூலோக வாழ்க்கையில் சஞ்சாரம் செய்யும் நாம், இரவில் மற்றொரு சூட்சும உடலில் எத்துணையோ லோகங்களில் நம் வாழ்வைத் தொடர்கின்றோம்.. இந்த சூட்சும சரீர வாழ்க்கை நிகழ்ச்சிகளே நமக்குக் கனவுகளாய் வருகின்றன.. எனவே பகல் வாழ்க்கையைப் போன்றே இரவில் மற்றோரு உடலில் சூட்சும சரீர வாழ்வைத் தொடர்கின்றோம்!

இவ்வகையில் இரவு நேர சூட்சும சரீர வாழ்க்கை அனைவருக்கும் அமைந்திருப்பதால் இந்த இரவு நேர வாழ்க்கையை முறையாகக் கடைபிடித்தால்தான் நம்முடைய வாழ்க்கை சாந்தமயமாகப் பரிபூரணமாக அமையும்.. கலியுகத்தில் தொழிற்சாலைகளிலும் இரவு நேர வேலை, மற்றும் இரவு நேர வண்டிப் பயணங்கள் போன்றவை தவிர்க்க முடியாததாக அமைந்து விட்டன என்றே தோன்றும்! இது நல்லதல்ல! இத்தகைய மாமறை உண்மைகள் மனித சமுதாயத்திற்குக் கசக்கும் என்றாலும் தெய்வ சத்தியத்தை உணர்த்துவது ஸ்ரீஅகஸ்திய விஜயத்தின் கடமையாகிறது.!

இதற்குத் தீர்வுதான் என்னே? பல இரவுகளை நாம் முறையாகக் கழிக்காமையால் அந்த இரவுகளில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய நல்வழிபாடுகளின் பலன்களை ஓரளவேனும் பெறுதற்கும், இவ்வுடலால் செய்த இரவு நேரப் பாவச் செயல்களுக்கு ஓரளவு பிராயச்சித்தத்தையும் பெறுவதற்காகத்தான் மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி, விஷ்ணுபதி, வைகுண்ட ஏகாதசி, பௌர்ணமி கிரிவலம் போன்ற சக்தி வாய்ந்த இரவு நேர வழிபாடுகளை நமக்கு இறைவன் அளித்துள்ளான். இல்லத்திலோ, ஆலயத்திலோ, சத்சங்கமாக அனைவரும் ஒன்று கூடி இத்தகைய கூட்டு வழிபாட்டை மேற்கொண்டால் தான் இரவு நேர வாழ்க்கையை விரயமாக்காமல் இப்பூலோக மனித உலகிற்குத் தக்கப் பிராயச்சித்தம் கிட்டும்!

நம் பாதங்களிலும் சில ரேகைகள் உண்டு. இவை செவ்வாய், மற்றும் சனீஸ்வர பகவானின் அனுகிரகங்களைப் பெறுவதற்கான லாலாக்னி சம்பந்தப்பட்ட கிரண சக்திகளை உடையவையாகும்.. இவற்றை நாம் நன்முறையில் பெறுதற்கே பாதயாத்திரை, அடிப் பிரதட்சிணம் போன்ற வழிபாடுகளை, மேற்கொள்கின்றோம்.. அர்க்யங்கள் வார்த்தல், தர்ப்பண நீர் அளித்தல், உண்ணா நோன்பு, தீர்த்த யாத்திரை செய்யும்போது இந்த லாலாக்னி ரேகைகள் பூமியின் அக்னி ரேகைகளைப் பெற்று நமக்குப் பல ஆத்மாக்னி சக்திகளை நல்வரங்களாகத் தருகின்றன.. ஆலயத் தீர்த்தங்கள் இவற்றைப் பெற்றுத் தர வல்லவை!

உள்ளங்கையின் ஹஸ்த பூஷண லாலாக்னி ரேகைகளுக்கும், உள்ளங் காலிலுள்ள பாதாம்புஜ லாலாக்னி ரேகைகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு..! இதற்காகத்தான் உள்ளங்கை, உள்ளங் கால்களில் மருதாணி இடுகின்றோம். இந்த இரண்டு ரேகைகளின் மூலமாக ஆன்மீக முறையில் குறிப்பிட்ட சில ஆத்மசக்தியை உடலுக்கு அளிப்பதே லாலாக்னி சக்தியாகும்..!

பெண்கள் அணிகின்ற மெட்டிகளும், கை வளையல்களும் அவர்களுக்கு இந்த லாலாக்னி சக்தியைப் பெற்றுத் தருகின்றன.. இந்த லாலாக்னி சக்தியால்தான் பெண்கள் சமையலறையில் கடும் வெப்பத்தையும் தாங்கி வேலை செய்யும் அற்புத உடற்பாங்கினைப் பெற்றிருக்கின்றார்கள்! லாலாக்னி தேவதையைப் பற்றிய ஸ்ரீகாயத்ரீ மந்திரத்துடன் அடுப்புப் பணிகளைத் தொடங்குதல் உத்தமமானது! திருஅண்ணாமலையில் நம் ஆஸ்ரமத்தில் லாலாக்னி தேவதா துதிகளுடன் தான் அக்னிப் பணிகள் தொடங்கப்படுகின்றன!

ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் முசிறி

ஸ்ரீஅக்னி காயத்ரீ மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே
லாலாக்னி தேவாய தீமஹி
தந்நோ அக்னி ப்ரசோதயாத்
(தமிழில்)
தீத்துணை தீரவே
தீத்துயர் மாயவே
தீவினை சோரவே
தீஞ்சுடர் சோதியான்
தீர்த்தமே திருவடி!

பால்குடம் போன்ற இறைநேர்த்தி செய்வோரும், தீமிதி போன்ற விரதம் மேற்கொள்வோரும் கைகளில், கங்கணம், காப்பு கட்டிக் கொள்வார்கள்! லாலாக்னி சக்தியைப் பெற்றவர்கள்தாம் தீமிதி உற்சவத்தை நன்முறையில் செய்ய இயலும்.. அமாவாசைக்கு மூன்றாம் திதியான சந்திர தரிசன நாளில் இந்த லாலாக்னி சக்தி ரேகைகள் உடலில் படிவதை நன்கு உணரலாம்! இதற்கு மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத்தோடு ஸ்ரீசந்த்ரமௌளீஸ்வர பூஜைகளையும் மேற்கொள்ள வேண்டும்!

கலியுக வண்டிகள் வெப்பம் சம்பந்தப்பட்டவை ஆதலாலும், செவ்வாய் மற்றும் ஆயுள்காரகராகிய சனீஸ்வர பகவானுடைய அனுகிரக சக்தி பிரயாணங்களுக்கு மிகவும் தேவையாதலாலும் இந்த லாலாக்னி சக்தி ரேகைகள் உள்ளோரே வண்டியை நன்முறையில் ஓட்ட அல்லது பிரயாணம் செய்ய முடியும்! இதுவரையில் நம் முன்னோர்கள் செய்த பூஜா பலன்களால் நம் (வாழ்க்கை) வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது என்று உணர்ந்திடுக!

நம் உள்ளங் கை, உள்ளங் கால்களில் ரேகைகளில் சனைச்சர ஆகர்ஷண சக்தி நன்முறையில் அமைந்தால்தானே நம்மால் நல்ல பயணங்களை மேற்கொள்ள இயலும்? நாம் வண்டியை ஓட்டாவிடினும், நாம் பிரயாணம் செய்யும் வண்டி ஒழுங்காகச் சென்றிட இந்த லாலாக்னி சக்தியைப் பெற்றிடவே தல யாத்திரைகளும், கிரிவல முறைகளும், ஆலய பிரதட்சிணங்களும் அமைந்துள்ளன!

அன்னதானத்தில் அக்னி சக்தி! அன்னம் அக்னி சம்பந்தப் பட்டதால் அன்னதானத்தில் பங்கு பெறுதலும் லாலாக்னி சக்தியைப் பெற்றுத் தரும்! நம் கை, கால் ரேகைகளில் செவ்வாய் மேட்டில் உள்ள சில ரேகைகளே லாலாக்னி ரேகைகளாகும்! இந்த லாலாக்னி ரேகைகளில் சேர்கின்ற அற்புத சக்திகள்தாம் நம்முடைய இரயில் மற்றும் விமான, பேருந்துப் பிரயாணங்களில் நமக்குப் பெரிதும் உதவுகின்றன என்பதை இனியேனும் உணருங்கள்! நாமோ அல்லது ஓட்டுனரோ வண்டியின் பிரேக்கைக் கையாலோ, காலாலோ பிடிக்கும் போது கை, கால் ரேகைகளில் உள்ள இந்த லாலாக்னிக் கிரண ரேகைகள்தாம் நமக்குப் பெரிதும் அருள்பாலிக்கின்றன என்பதை இனியேனும் உணருங்கள்!

முறையாகப் பெரியோருக்குப் பாத பூஜை செய்தலும், ஸ்ரீசனீஸ்வரன், ஸ்ரீஆஞ்சநேய மூர்த்திகளின் சன்னதிகளில் அடிப்பிரதட்சிணம் செய்தலாலும் இந்த சக்தியை நன்முறையில் பெறலாம்.. மற்றும் அடிக்கடி பிரயாணம் செய்ய வேண்டிய தொழிலில் அல்லது வியாபாரம் சம்பந்தப்பட்ட துறையில் இருப்போரும் செவ்வாய், சனிக் கிழமைகளிலும், செவ்வாய், சனி கிரகங்களுக்கு உரித்தான நாட்களிலும் மருதாணி இட்டுச் சிவந்த பாதங்களுடன் அடிப்பிரதட்சிணம் செய்திட வேண்டும்! இவ்வாறு நமக்கு அமைந்துள்ள வண்டிக்கு ஆற்ற வேண்டிய வழிபாட்டு முறைகள் எத்துணையோ உண்டு. தக்க சற்குரு மூலம் இவற்றையறிந்து வாகனப் பிராப்த சக்தியும் இரட்சா சக்தியும் பெற்று நன்முறையில் வாழ்வோமாக!

தீர்த்த நீராடல்

ஆலயத் தீர்த்த நீராடல்கள் மஹிமை

இன்றைக்கும் பாரதமெங்கும், குறிப்பாகத் தமிழ்மெங்கும் விரவியுள்ள ஆலயங்களில் மகத்தான, மிகுந்த தெய்வீக சக்திகள் நிறைந்த தீர்த்தங்கள் உள்ளன... நன்முறையில் பரமரிக்கப்படும் தீர்த்தங்களும் உண்டு.. நம் வாழ்நாளில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆலயத் தீர்த்தங்களிலும் நீராடுகின்ற வைராக்ய சங்கல்பம் செய்து கொண்டு செயலாற்றுதல் உத்தமமான பலன்களைத் தரும்! இதனால் உங்களையும் அறியாமல் பலவிதமான கர்மவினைகளுக்கும், நோய்களுக்கும் தாமாகவே தீர்வுகள் கிட்டும்.

இன்றைக்கும் அகஸ்தியர், வசிஷ்டர் போன்ற மகரிஷிகள், சித்தர்கள், சூட்சும ரூபத்தில் வந்து பூலோகத் தீர்த்தங்களில் நீராடுகின்றனர் என்றால் அவர்கள் முன் நாம் எம்மாத்திரம்? எவ்வித நோயானாலும் சரி அதைத் தீர்க்கும் ஆலயங்கள் நம் பாரதத்தில் தான் நிறைய உண்டு.. நாம்தாம் பஸ்ஸில்/ ரயிலில் சென்று வருகின்றோமே! நீராட நேரமில்லையே என எண்ணாதீர்கள்.. ஆலயத் தீர்த்த நீராடல் மூலமாக மட்டுமே கழிகின்ற கர்மவினைகளும், பாவங்களும் உண்டு! எத்துணை ஹோமங்கள், அபிஷேக ஆராதனைகளை மேற்கொண்டாலும், பலவிதமான முறையற்ற காமவினைப் பாவங்களைக் குறித்த நேர ஆலயத் தீர்த்த நீராடல்களால் மட்டுமே தீர்க்க முடியும்!

இவ்வாறு எத்தனையோ ஆலயத் தீர்த்தங்கள் மனித சமுதாயத்தின் அசிரத்தையால் தம் தெய்வீக சக்தியை மறைத்து வருகின்றன... பெறுதற்கரிய மனிதப் பிறவியை எடுத்து மனித முயற்சி என்ற ஒன்று இருந்தால் தானே எக்காரியத்திலும் நற்பலன்களைப் பெற முடியும்! ஆலயத் தீர்த்தம் என்ற ஓர் அற்புதப் பரிகாரச் செம்மையை இறைவன் அளித்திருக்கும் போது அதில் நீராடினால்தானே அத்தீர்த்த நீராடல் பலனை முழுமையாகப் பெறமுடியும்..

எய்ட்ஸ் எனப்படும் கொடும் நோய், தொழுநோய், புற்றுநோய், புரைநோய், உடல் ஊனம் போன்ற பலவிதமான நோய்களுக்கும் நிவாரணம் இன்றும் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கின்றன.. இவற்றின் விளக்கங்களைப் பல ஆலய இறைப் புராணங்களில் சித்புருஷர்களும், மகரிஷிகளும் நன்கு அளித்துள்ளார்கள்.. ஆனால் ஆழ்ந்த நம்பிக்கையுடன் இவற்றைக் கடைப்பிடித்தால் தானே தீர்வைப் பெற இயலும்!

கும்பகோணம், தஞ்சை, காஞ்சி, திருச்சி போன்ற ஆலயங்கள் நிறைந்த நகரங்களில் வாழும் பேறு பெற்றோர் தினந்தோறும் காவிரி மற்றும் புனிதத் தீர்த்த நீராடல்களால் பெறுதற்கரிய பேறுகளைப் பெறலாம்.. இவ்விடங்களில் தினசரி நீராடலையே நல்லதோர் தீர்த்த வழிபாடாக ஆக்கிக் கொள்ளுங்கள்... ஏனெனில் நீங்கள் பெறுகின்ற ஆலயத் தீர்த்த நீராடல்களின் பலன்களே ஆலயத் தீர்த்தங்களே இல்லாத இடத்தில் வசிப்போர்க்கும், ஆலயங்களைப்பற்றி அறியாத அயல்நாடுகளில் வாழும் மக்களுக்கும் மகத்தான பலன்களை அளிக்கும். எனவே ஆலயத் தீர்த்த நீராடல் என்பது நமக்கும் நம்முடைய குடும்பத்திற்கும் மட்டுமன்றி அனைத்துலக மக்களின் நல்வாழ்விற்காக நாம் கடைபிடிக்க வேண்டிய இறைவன் அளித்த எளிமையான பெரும் நல்வரமாகும்.!

பாரதப் பெருக்களாகப் பிறந்தமைக்காக நமக்கு இறைவன் இட்டுள்ள உலகச் சமுதாயப் பணிகளுள் ஒன்றே ஆலயத் தீர்த்த நீராடலாகும்.. ஆலயத் தீர்த்த நீராடலின் போது ஓத வேண்டிய மந்திரங்கள் நிறைய உண்டு.. குறிப்பாக இதற்குரித்தான அகமர்ஷண சூக்தம் என்பது பலரும் அறியாத ஒன்று... இதனை ஓதி எந்த ஆலயக் குளத்தில்ல் நீராடினாலும் அளப்பரிய பலன்கள் வந்து சேர்கின்றன.. உதாரணமாகத் திருப்பதி செல்வோர் பெரும்பாலோர் பெருமாள் தரிசனத்தோடு திரும்பி வந்து விடுகின்றனர்... ஆனால் திருப்பதியில் நீராட வேண்டிய தீர்த்தங்கள் நிறைய உண்டு. இவை பலவித நோய்களைப் போக்குவதோடு மட்டுமின்றி மனக் கஷ்டங்களையும், துன்பங்களையும் நிவர்த்தி செய்யும்.!

திருப்பதியில் தினந்தோறும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் கோயில் அருகில் உள்ள வராஹ தீர்த்தத்தில் எண்ணற்ற நதி தேவதா மூர்த்திகள் நீராடுகின்றனர் எனில் இதில் எத்தகைய அபூர்வ தெய்வீக சக்திகள் பதிந்திருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்! குறிப்பாக, கலியுகத்தில் மனக் கஷ்டங்களுக்கு நிவர்த்தியாக, சாந்தமான மன அமைதி பெறுதற்கும், இல்லத்தில் சாந்தம் நிலவிடவும் ஆலயத் தீர்த்த நீராடல்கள் பெரிதும் உதவுகின்றன...!

காசியிலுள்ள கங்கை நதிக்கு நம் அனைத்து விதப் பாவங்களையும் தீர்க்கக் கூடிய வல்லமை உண்டு... ஆனால் காசிக்குச் சென்று கங்கையில் நல்ல முறையில் புனிதமான நீராடல் மேற்கொண்டால்தானே பாவங்களுக்குப் பிராயச்சித்தம் பெற இயலும்? ஆனால் கங்கையில் நீராடிய பின் மீண்டும் தீயொழுக்கங்கள்... தீய எண்ணங்கள் தொடருமாயின் என்ன பயன்? இனி எவ்விதப் பாவத்தையும் அறிந்தும் அறியாமலும் செய்ய மாட்டேன் என்னும் சங்கல்பத்தில் நீராடி விட்டு மீண்டும் அதே பாவச் செயலைத் தொடர்ந்தால் பெருந் தண்டனையாக இரட்டிப்பு முறையில் பாவங்கள் பெருகும்! நதி தேவதைகளின் சாபமும் கூடுதலாக வந்து சேரும்! பல்லாயிரக்கணக்கான நதி தேவதைகள் மாதந்தோறும் மக நட்சத்திர நாளில் நீராடுகின்ற கும்பகோணம் மகாமக தீர்த்தத்தில் நீராடுதல் மகத்தான பலன்களைப் பெற்றுத் தருவதோடு நதி, தீர்த்த தேவதைகளின் சாபங்களிலிருந்து மீட்பும் தரும்! மாதந்தோறும் உங்களால் செல்ல முடியாவிட்டாலும் ஒவ்வொரு மக நட்சத்திரத்திலும் ஒரு ஏழைக் குடும்பத்தை கும்பகோண மகாமகத் தீர்த்த நீராடலுக்கு அனுப்பி அதற்கான செல்வுகளை ஏற்பதும் ஓர் அற்புத தான தர்ம வகைதானே!

இன்றைக்கு பல அபூர்வ ஆலயத் தீர்த்தங்கள் யாவும் மகத்தான தெய்வீக சக்தியை மறைத்துக் கொண்டு ஏதோ பாசம் பிடித்தாற்போல், அழுக்கடைந்தாற் போல் தெரிகின்றன.. இறை நம்பிக்கைக்கான சோதனை இது! ஆழ்ந்த பக்தியுடன் ஒரு சில துளிகளைத் தலையில் தெளித்துக் கொண்டால் கூட (ஸ்பரிசம்) அதற்கான மகத்தான பலன்கள் கிட்டத்தான் செய்யும். தொழுநோயையும் குணமாக்கக் கூடிய தீர்த்தங்கள் இன்றைக்கும் பல ஆலயங்களில் இருக்கத்தான் செய்கின்றன! ஆனால் ஆழ்ந்த நம்பிக்கையுடன் குறித்த நாள், நட்சத்திர, ஹோரையில் நீராடினால் நிச்சயமாகப் பரிபூரணமான பலன்களைப் பெற்றிடலாம்.! ஆனால் வலுத்த நம்பிக்கைதான் காரிய சித்தியைத் தரும்! கும்பகோணம் – உடையாளூர் சிவாலயத் தீர்த்தம் எத்தகைய கொடிய நோய்களையும் தீர்க்கும்..!

ஒலி பிரவாகம்

வாழ்க்கையில் நாம் கேட்கும் சப்தங்கள்

நாம் பிறந்தது முதல் இவ்வுலகத்தை விட்டுப் புறப்படும் வரை இடைவிடாது எத்தனையோ சப்தங்களைக் கேட்டுக் கொண்டே இருக்கின்றோம்.. இன்னிசை, கர்நாடக இசை, மேல் நாட்டு இசை, வண்டிகள், கார்களின் சப்தங்கள், பறவைகளின் ஒலி, பாத்திரச் சப்தம், மின் விசிறி, மிக்ஸி சப்தம் என நாம் எழுப்புகின்ற சப்தங்களும், தாமே எழும்புவதும், பிறரால் வருவதும், பிற இடங்களிலிருந்து எழுகின்ற சப்தங்களும் நிறைய உண்டுதானே!!

எவ்வாறு ஒரு மனிதன் நல்ல உணவை உண்டு தன் உடலை ஆரோக்யமாக வைத்திருக்க வேண்டுமோ அதே போலத்தான் தான் பேசுகின்ற வார்த்தைகளால் இந்தப் பரவெளிக்கு நன்மையைக் கூட்ட வேண்டிய மிகவும் முக்கியமான கடமை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு.. அதே போல் நீங்கள் ஒவ்வொரு முறை படிக்கும்போதும் அல்லது வார்த்தைகளைப் பேசும்போதும், மந்திரங்களை உச்சரிக்கும் போதும் உங்கள் உடலுக்கு சப்த நாள வலிமையை ஊட்டுகின்றீர்கள்.. பேசுவது நல்ல இறை வாக்கியங்களாக இருந்தால்! பிரயோஜனமற்ற வார்த்தைகளால் வாக்சத்திதான் பாதிக்கப்படும், உடல் ஆற்றலும் குறையும்..!

பேச்சைப் பெருக்காது சத்திய வாக்கு சக்தியைப் பெருக்குங்கள்!

எனவே நீங்கள் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் உங்கள் உடலுக்கும், மனத்திற்கும், உள்ளத்திற்கும், பரவெளிக்கும் நன்மை பயப்பதாக இருக்க வேண்டுமே தவிர அநாவசியமான வார்த்தைகளைக் கூட்டி, சப்த நாளங்களின் வலிமையையும், பரவெளியையும் பாதித்தல் கூடாது... மனவலிமை என்ற ஒன்றும் உண்டு! மனதால் பேசுவதும் நல்லதாகத் தான் இருக்க வேண்டும்! தீமையான மனப் பேச்சால், தீய எண்ணங்களால் பரவெளியைப் பாதித்து விடக் கூடாது! –உள்ளூரப் பிறரை ஏசுவது கூடப் பரவெளியின் புனிதத்தை மிகவும் பாதிக்கும்!

ஒரு நாளில் ஒரு மனிதன் 25,000 வார்த்தைகள் பேசுகின்றான் என்றால் அவற்றில் எவ்வளவு அநாவசியமான வார்த்தைகளைப் பேசுகின்றான் என்பதைக் கழித்து உண்மையாக, நன்மை பயக்கும் வார்த்தைகளைக் கணக்கிட வேண்டும்... அவ்வாறு நல்தன்மையானவையே எந்த அளவிற்கு அவன் பரவெளிக்கு, தன்னைச் சார்ந்த உலகிற்குப் பயன்படும் வகையில் வாழ்ந்து இருக்கின்றான் என்பதைக் காட்டும்! பேசுகின்ற வார்த்தைகளின் தன்மைக்கேற்ப ஆத்ம ஒளியின் தன்மையையும் (aura) ஜீவனின் யோக வண்ணமும் மாறும்!

இதற்காகத்தான் அக்காலத்தில் மௌன விரதம்தனைத் திங்கட்கிழமை தோறும் கடைபிடிப்பார்கள்... திங்கள் என்பது சந்திர பகவானுக்கு உரித்தான நாள் ஆகையால் திங்களன்று மௌன விரத்தை மேற்கொண்டால் உங்களுக்கு மனவலிமை அதிகமாகி நீங்கள் பேசுகின்ற வார்த்தைகளை அளந்து அல்லது தெய்வீக சக்திகளைக் கூட்டிப் பேசுகின்ற அளவிற்கு நல்வாக்கு சக்தியைப் பெறுவீர்கள்.. பேச்சு வன்மை என்றால் கடகட என்று அவரவர் மொழியிலேயே சரளமாகப் பேசுவது மட்டும் கிடையாது.. பேசுகின்ற வார்த்தைகளில் தெய்வீகம், பக்தி, இனிமை, கருணை, உண்மை, காருண்யம், நாணயம், நேர்மை பொதிந்திருக்க வேண்டும்..!

பிறருக்கு நன்மை தரும் இறைப் பணியை ஆற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு! இதுதான் நிரந்தரமான வாழ்க்கை லட்சியம்! இறைவன் வாயைப் படைத்திருப்பதற்குக் காரணம் உணவை உண்டு உடலை வெறுமனே பெருக்குவதற்காக அல்ல! “வாயால் உன் உடலுக்கு எந்த சப்த நாள சக்தியை பெற்றுத் தரப் போகின்றாய், வாயால் நீ இந்த உலகிற்கு, எத்தகைய நல்வாக்கு சக்திகளால் பயன்களை நல்கப் போகின்றாய்!” என்று தினசரி ஆத்ம விசாரம் செய்திட வேண்டும்! இதுவே மௌனமாகத் தொடங்கி தியானமாக மலரும்! இதுவே தியானத்தின் ஆரம்ப நிலை!

ஒலிக் கருவே, ஒளிச் சுடரே நம் வாழ்க்கை!

சப்தங்கள் எவ்வாறு உங்கள் வாழ்க்கையில் நல்ல விளைவுகளையோ, தீய விளைவுகளையோ ஏற்படுத்துகின்றன! ஏதேனும் ஓரிடத்தில் ஒரு மணி நேரம் மௌனமாக அமர்ந்து நீங்கள் கேட்கின்ற பல்வேறு ஒலிகளையும் கூர்ந்து கவனியுங்கள்.. கார், ஸ்கூட்டர் சப்தங்கள், பறவைகளின் ஒலிகள், டிவி, ரேடியோவில் ஏற்படுகின்ற சப்தங்கள், பக்கத்து வீட்டுக் குழந்தைகள், பெரியவர்கள் எழுப்புகின்ற சப்தங்கள் இவ்வாறாக ஒரு ஐந்து நிமிடத்திற்குள்ளேயே எத்தகைய சப்தங்கள் எல்லாம் இப்பரவெளியில் சேர்கின்றன என்பதை நீங்கள் நன்கு கவனித்திடலாம்.!

பரவெளி என்று நாம் சொல்வது நம்மைச் சுற்றிலும் மேலும் கீழும் இருக்கின்ற ஆகாயப் பரவெளியாகும்... நாம் எப்போதும் ஆகாயத்தில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.. ஏதோ நம் வீட்டிலும், அலுவலகத்திலும், தொழிற்சாலையிலும், நம்முடைய வாழ்க்கை நேரம் கழிவது போல் தோன்றினாலும், நாம் 24 மணி நேரமும் வாழ்ந்து கொண்டு இருப்பது இந்த ஆகாயப் பரவெளியில்தான்! எனவே இந்த ஆகாயப் பரவெளி சுத்தமானதாக இருந்தால்தான் நம்மால் புனிதமாக வாழ முடியும்...!

இந்த உலகத்தில் ஓரிடத்தில் ஒரு சிறு குற்றம் நடந்தால் கூட அந்தக் குற்றத்தின் விளைவுகள் பரவெளியில் உடனடியாகச் சேர்ந்து பரவெளியைக் கடுமையாகப் பாதிக்கின்றன. ஓரிடத்தில் முறையற்ற, அக்கிரமமான, அதர்மமான வகையில் காமக் குற்றங்கள் நிகழுமேயானால் அவ்விடத்தில் எழுகின்ற காம வெறி அலைகள் பரவெளியில் சேர்ந்து உலகெங்கும் பரவிப் பலருக்கும் அத்தகைய காம உணர்வுகளை எழுப்பி விடுகின்றன..

ஆனால் அதே சமயத்தில் ஓரிடத்தில் வேத மந்திரங்களும், பூஜா மணி ஒலிகளும், இறை வழிபாடுகளும் நடைபெற்று அவை பரவெளியில் கலந்தால் உலகெங்கும் அவை பரவி அனைவருக்கும் நன்மை பயக்கின்றன.. எனவே உங்கள் வீட்டில் ஒரு சிறு ஊதுபத்தியை ஏற்றினாலும் அது தன்னளவில் பரவெளியைச் சுத்தப்படுத்தி புனிதத்தைக் கூட்டும்! நம் புனிதமான பாரத நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் கேட்கின்ற பூஜை மணி ஒலிதாம், ஆலயங்களின் மணி ஒலிதாம் உலகிற்குப் புனிதம் சேர்க்கின்றன! இத்தகைய புண்ய கர்ம பூமியே நம் நாடு ஆகும்!

மறை ஒலி, இறை ஒளி பரப்புவீர்! எனவே நீங்கள் முதலில் உங்கள் குடும்ப அளவில் இப்பரவெளியில் எந்த அளவிற்கு நன்மை பயக்கும் தூய்மையான ஒலி நாளங்களைச் சேர்க்கின்றீர்கள் என்பது முக்கியமானதாகும்.. இதற்க்காகத்தான் அக்காலத்தில் காலை, மதியம், இரவு மூன்று வேளைகளிலும் விளக்கு ஏற்றிப் பூஜை செய்வதை நமக்குப் பெரும் இறைக் கடமையாக அளித்தார்கள். பூஜையின் போது ஏற்றுகின்ற விளக்கின் ஒளிச் சுடர்கள், மகத்தான தெய்வீகச் சக்திகளைக் கொண்டமையால் ஒரு அரை மணி நேரம் நீங்கள் ஏற்றுகின்ற விளக்கின் ஒளியானது இப்பரவெளியில் குறித்த சில நாட்களுக்கு நன்மை பயக்கும் கதிர்களை செலுத்திக் கொண்டு இருக்கின்றது என்பது நீங்கள் அறியாத தெய்வ ரகசியமாகும்.. அதேபோல தினமும் சிறிதளவு உணவுப் பண்டங்களையாவது இறைவனுக்குப் படைத்து நீங்கள் கண்டா மணி ஒலித்து, நைவேத்யம் செய்யும்போது அந்த ஒரு சில நிமிடங்களே ஒலிக்கின்ற கண்டா மணி சப்தமானது குறித்த சில நட்சத்திர நாட்களுக்கும் நன்மை பயக்கும் சக்திகளை நிறைத்துக் கொண்டு இருக்கின்றது..!

ஒவ்வொரு நிமிடத்திலும் நீங்கள் இந்தப் பரவெளியில் இனிமையான தெய்வீக ஒலிகளை எழுப்பும் வண்ணம் நீங்கள் உங்கள் தெய்வீக வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.. சங்கு, பூஜை, மணி, ஊதுபத்தி, விளக்கு, பிரம்ம தாளம், மேளம், மிருதங்கம், வயலின், நாதஸ்வரம் போன்ற யாவுமே இனிமையான தெய்வீக ஒலிகளை எழுப்புபவையாகும்.. இதற்காகத்தான் அக்காலத்தில் ஆலயத் திருவிழாக்களில் இன்னிசைக் கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்வார்கள்.. ஒரு மணி நேரம் நாதஸ்வரக் கச்சேரி நடக்குமேயானால் அந்த ஒலியின் சப்தமானது பரவெளியில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு இந்த உலகத்திற்குத் தேவையான நன்மையான தேவ ஒலிகளை விண்ணில் நிறைத்துச் செல்லும். ஆனால் தற்காலத்தில் கச்சேரி என்ற பெயரில் அநாகரீகமான, அர்த்தமற்ற, ஆபாசமான பாடல்களே இசைக்கப்படுகின்றன, இதனைக் கச்சேரி என்று சொல்வதே பாவம் ஆகும்... இனிமையான தெய்வீகப் பாடல்கள் நிறைந்திருப்பதுதான் இவ்வுலகிற்கு நன்மை கூட்டுவதாகும்.

ஹாரன் தேவ ஆரம் பூண்டு ஒலிக்கட்டும்! முதலில் நீங்கள் சில நாட்களுக்கு எந்த விதமான ஒலிகளை உங்கள் தேகத்தில் பெற்றுக் கொண்டு இருக்கின்றீர்கள் என்பதை உணர்ந்தால்தான் ஒலியின் மகத்துவம் புரியும்.. ஒரு சாலையில் நீங்கள் வண்டியில் சென்று கொண்டு இருக்கின்றபோது எத்தனை ஆயிரக்கணக்கான வாகனங்களிலிருந்து ஹாரன் (Horn) சப்தங்கள் ஒலிக்கின்றன,,! வாகனங்களில் செல்லும்போது அநாவசியமாக, தேவையற்ற ஒலியை எழுப்புதல் கூடாது. Horn என்பது கவனமாக இருக்க வேண்டும் என்ற ஒரு எழுச்சி உணர்ச்சி ஒலியே ஆகும்..! ஆனால் தற்காலத்தில் Horn சப்தத்தையே பலவிதமான, வெறுக்கத் தக்க ஒலிகளைக் கொண்டு அமைத்து விட்டார்கள்..!

காற்று சம்பந்தப்பட்ட ரப்பர் Horn-க்குத் தான் மகத்தான சக்தி உண்டு.. இதற்காகத்தான் அக்காலத்தில் ரப்பரைக் கொண்டு Horn  அமைத்தார்கள்... ஹாரன் அடிக்கும் போது ஓம் ஓம் என்று ஓதி இன்றும் horn ஒலிப்பவர்கள் உண்டு..  ஏனென்றால் ஹாரனில் எழுகின்ற காற்றுடன் இந்த ஓங்காரப் பிரணவ சக்திகள் சேர வேண்டும் என்பதற்காக ஓம் என்று ஓதுதல் சிறப்புடையது... ஜாதி, மத, இன, குல பேதமின்றி ஓம் கிருஷ்ணா, ஓம் முருகா என்று உங்களுக்குப் பிடித்தமான தெய்வீக வார்த்தைகளையோ, இனிமையான வார்த்தைகளையோ சொல்லி Hornஐ அழுத்துங்கள்.!

ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு நாளைக்கு மூன்று மணி நேரமாவது இறை வார்த்தைகளை நன்கு சப்தம் போட்டு ஒலித்திட வேண்டும்.. இதற்காகத்தான் தேவாரம், திருவாசகம், போன்ற தமிழ் மறைகள், புருஷ ஸுக்தம், விஷ்ணு ஸுக்தம் போன்ற தேவ மறைகளை எப்போதும் ஓதிக் கொண்டு இருக்கின்ற நற்பழக்கத்தை நம் பெரியோர்கள் ஏற்படுத்தித் தந்தார்கள்..! வண்டியில் செல்லும்போதும், அலுவலகத்தில் பணிபுரிகையிலும் உதடானது சில மந்திரங்களை ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும்! இவ்வாறு குறைந்தது 8 மணி நேரமாவது வேத ஒலிகளை, இறைத் துதிக்ளை ஒலிக்கும் நற்பழக்கம் நம் முன்னோர்களிடம் இருந்தமையால் தான் உலகம் சாந்தமாக இருந்தது.!

பாத்திர ஒலி உணர்ச்சிகள் அடிக்கடி பாத்திரங்களைக் கீழே தவற விடுதலால் ஏற்படும் ஒலிகள் யாவும் உலகிற்கு நன்மை பயக்காது. பாத்திரம் கீழே விழும் போது டங் என்று ஏதோ சப்தம் எழுவது போல் உங்களுக்குத் தோன்றும்.. உண்மையில் அது பாத்திரத்தில் உள்ள உயிர்களின் ஆத்ம வேதனைகளைக் குறிப்பதாகும்.. கவனமாகக் கையாளப்படாததால்... “நான் இந்த அளவுக்கு அடிபடுகின்றேன்...” என்று பாத்திரமே கொடுக்கின்ற வேதனைக் குரல் அது.! மேலும் பாத்திரங்கள் விழுவது என்பது அந்நாளில் ஏற்படக் கூடிய சில கெடுதலான நிகழ்ச்சிகளை முன் கூட்டியே தீர்க்க தரிசனமாகத் தெரிவிக்கும் சகுனமாகும்.. எந்தப் பாத்திரம் விழுந்ததோ அதில் அன்னம் சமைத்தோ நீர், மோர், ஊற்றியோ அந்நாளில் தானமாக அளிக்க வேண்டும்..!

தேவையில்லாமல் பேனாவையோ, குச்சியையோ கொண்டு, மேஜையில் தட்டுதல், சுவரில் தட்டுதல் போன்ற அநாவசிய ஒலிகளை எழுப்புதல் கூடாது. செட்டிகுளம், மதுரை, சுசீந்திரம்.. தாராசுரம், திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் ஆலயம் போன்ற தலங்களில் உள்ள இசைத் தூண்களில் கைகளால் வேடிக்கையாகத் தட்டுதல் கூடவே கூடாது...! இதற்கென மந்தாரக் குச்சி, புன்னைக் குச்சி என மெல்லிய இசைக் குச்சிகள் உண்டு! உங்கள் வீட்டில் எப்போதும் Fan சுற்றிக் கொண்டே இருந்தால் அதில் எழுகின்ற ஒலி கூட நன்மை பயப்பது கிடையாது.. உஷ்ண சம்பந்தப்பட்ட காற்றிலிருந்து எழுவதால் அதற்குத் தக்க குளுமை ஏற்பட்டால்தான் அதன் விளைவுகளைத் தணிக்க முடியும்...

24 மணி நேரமும் மின்சார விசிறியின் கீழ் அமர்வதால் உடல் உஷ்ணம், இல்லத்தின் உஷ்ணம் பெருகுவதுடன் தேவையில்லாத மின் கருவி சப்தங்களையும் நாம் பரவெளியில் பரப்பிக் கொண்டுள்ளோம்.. இயன்ற அளவு இயற்கைக் காற்றிலேயே இருக்கப் பழகிக் கொண்டால்தான் உங்கள் ஆரோக்யமும், பரவெளியின் புனிதமும் நன்முறையில் பேணப்படும்.

நீங்கள் சோபாவில் அமர்ந்து எழுந்திருக்கும்போது ஏற்படும் சப்தங்களுக்குக் கூடப் பல அர்த்தங்கள் உண்டு.. ஒரு ஸ்பிரிங் ஆக்ஷன் மூலமாக சப்தம் ஏற்படுவதாக நமக்கு வெளிப்படையாகத் தோன்றினாலும், இந்த சப்தங்களுக்கெல்லாம் நிறைய காரணங்கள் உள்ளன.. ஏன் இதை இவ்வளவு விளக்கங்களுடன் விஸ்தாரமாக வலியுறுத்திச் சொல்கின்றோம் என்றால் ஒவ்வொரு வினாடியும் மனிதன் தன்னைச் சுற்றியுள்ள பரவெளியில் நடக்கின்ற நிகழ்ச்சிகள், சப்தங்களை எல்லாம் கவனித்து இறை விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும்.. அப்போதுதான் பல கோடிக் கோள்களில் இருந்து வருகின்ற இறைக் கிரண நற்செய்திகளை உணரும் புனிதத் தன்மையைப் (telepathy) பெற முடியும்.! இதை வலியுறுத்துவதற்காகத் தான் சப்தங்கள் பற்றிய இந்த தெய்வீகப் பாடங்கள் புகட்டப்படுகின்றன...!

திருவாசி ஸ்ரீபேச்சியம்மன்!

பலரும் தொடர்ந்து ஏதாவது பேசிப் பேசிப் சப்த நாளத்தின் தன்மையைக் கேவலம் செய்கின்றார்கள்.. அவை அடக்கம் மற்றும் வார்த்தை அடக்கம் ஏற்பட வேண்டுமானால் சப்த வடிவில் உள்ள சப்த நாள சக்திகள் நிறைந்துள்ள தலங்களில் வழிபடுதல் வேண்டும்.... திங்கட் கிழமையும் ஏனை நாட்களில் சந்திர ஹோரை நேரமும் சப்த நாள வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமானதாகும்... திருச்சி அருகே திருவாசி சிவாலயத்திலுள்ள ஸ்ரீபேச்சி அம்மன் இதுவரையில் நாம் வாழ்க்கையில் அறிந்தோ அறியாமலோ பேசிய தவறான வார்த்தைகளுக்கான பிராயச்சித்தங்களைப் பெற்றுத் தருவதற்கான உத்தம அம்பிகை ஆவாள்.! ஸ்ரீபேச்சி அம்மனுக்கு திங்கட்கிழமை தோறும் கரும்புச் சாறு அபிஷேகம் செய்து பலரும் ஒன்று சேர்ந்து ஸ்ரீபேச்சிப் பதிகத்தை ஓதுவதால் வாய்மொழிக் குற்றங்கள் தீரும்..!

ஸ்ரீபேச்சியம்மன் பதிகம்
பேச்சிப் பரஞ்ஜோதி
ஆச்சாள் மொழித் தாளி
மொழி தாயேன் அம்மா
உன் மொழி தாயேன்!
இறை மொழி தாயேன்!
என்று திருஅண்ணாமலையானுக்கு அரோஹரா என்று குரல் எழுப்பி ஒலிப்பது போல இச்சிறு பேச்சிப் பதிகத்தை நன்முறையில் ஓதி வந்தால் ஊமைகளுக்கும், திக்குவாய் உள்ளவர்களுக்கும் நல்ல நிவாரணம் கிட்டும். ஊமையாய் இருப்பவர்களுக்கு இதனைக் கற்றுக் கொடுத்து மானசீகமாக ஒலிக்க வைத்திடில் நற்பலன்கள் கூட்டிடும்! இறப்பிற்குப் பின் மேலுலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அங்கத்தால் எவ்வித நற்பணிகளைப் புரிந்தீர்கள் என்று சித்ர குப்த லோகத்தில் கேள்விகள் கேட்கப்படும்.. மெய், வாய், கண், மூக்கு, செவி உள்ளிட்டு சிரசு முதல் பாதம் வரை அவரவர்கள் ஆற்றிய இறைப் பணிகளை ஒப்புவித்தல் வேண்டும்.. அப்போது உனக்கு வாக்சக்தி தந்ததற்கு என்ன இறை சாதனை புரிந்தாய் என்று கேட்கும்போது நம் வாழ்க்கையில் நம் வாயால் பேசிக் கொட்டித் தீர்த்த கெட்ட வார்த்தைகள் தாம் அப்போது கண்முன் வந்து நிற்கும். அதற்குரித்தான பிராயசித்தங்களை இப்போதே பெற்றுவிட்டால்... “நான் வாய் தவறி கொட்டிய தீய வார்த்தைகளுக்கு இறையருளால் பேச்சி அம்மன் துணையால் பிராயச்சித்தம் பெற்று விட்டேன். அதன் பிறகு இறை மொழிகளையே ஓதி இறைப் பேறு பெற்றேன்” என்று சொல்லலாம் அல்லவா!

திருகோகர்ணம் சப்தலிங்கம்

திருக்கோகர்ணம் ஸ்ரீசப்த லிங்க வழிபாடு!

புதுக்கோட்டையில் ஸ்ரீதிருகோகர்ணேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சப்த (ஏழு) லிங்கங்களை வழிபடுதல் வாய் மற்றும் மனக் கட்டுப்பாட்டிற்கும், இசை வளத்திற்கும் பெரிதும் உதவி புரிவதாகும்... இசைத் துறையில் நல்ல கீர்த்தி பெற விரும்புவோர் சப்தலிங்க வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்..! நிறைய மௌன விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும்! இங்குள்ள ஏழுவிதமான லிங்கங்கள், ஏழு ஸ்வரங்கள் கூடிய சப்த நாளங்களையும், ஏழு வர்ண ஒலிகளையும் மற்றும் பலவற்றையும் குறிக்கின்றன...
1. சர்ப்பாரண்ய லிங்கம்
2. ரிஷபாரூட லாவண்ய லிங்கம்
3. கமக லிங்கம்
4. மயூர பிரபஞ்ச லிங்கம்
5. பஞ்ச கீர்த்தி லிங்கம்
6. தம்பன லிங்கம்
7. நிர்ச் சலன யோக லிங்கம்
என்று ஏழு வகையான லிங்கங்களின் கூட்டு அமைப்பில் உள்ள இந்த சப்த ஸ்வர லிங்கங்களை முறையாக வழிபட்டு வந்தால் வாய்மொழிக் கட்டுப்பாடு ஏற்படுவதுடன், இசையில் பெரும் கீர்த்தியையும் பெற்றிடலாம்..!

இன்னிசை இறைக் கச்சேரி நல்வாக்கு சக்தி தரும்! ஆலயத் திருவிழாக்களில் நாதஸ்வரம், கடம், மிருதங்கம், வயலின், பிடில் மற்றும் இன்னிசைக் கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்து ஆபாசமான திரைப்படப் பாடல்கள் அல்லாது இறைவனைப் பற்றிய பாடல்களை மட்டும் இசைப்பதற்கும் தேவையான ஏற்பாடுகளைச் செய்து பல்லாயிரக் கணக்கான மக்கள் இறை மொழிகளைக் கேட்டு உய்கின்ற நற்காரியங்களைச் செய்து வந்தால் பரவெளியில் நல்கிரணங்கள் நிரவி வாயினால் செய்த பெரும் பிழைகளுக்குத் தக்க பரிகாரம் கிட்டும்..!

ஸ்ரீசப்தலிங்கங்கள் திருகோகர்ணம்

மேலும் புகை பிடித்தல், அக்னியை வாயால் ஊதுதல் போன்று வாயினால் செய்கின்ற பலவிதமான பாவங்களும் உண்டு.. பொதுவாக அரசியல் துறையில்தாம் வாய்மொழிக் குற்றங்கள் நிறைய ஏற்படும் வாய்ப்பு உள்ளமையால் இதனால் சந்ததிகளுக்கு வாய்மொழிக் குறைபாடுகளுடன் பலத்த கர்ம வினைகளும் கூடிடும்! திருக்கோகர்ணம் சப்த லிங்கம் மற்றும் திருவாசி சிவாலய ஸ்ரீபேச்சியம்மன் வழிபாடுகளுமே தக்கப் பிராயச்சித்தங்களுக்கான வழிவகை தரும்! மேலும் இவற்றிற்கான பல உன்னத மூர்த்திகளும் உண்டு! தக்க சற்குரு மூலமாக அறிந்திடவும்..! திருநல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயத்தின் முன்னால் உள்ள சப்த சாகர தீர்த்தமானது உடல் அங்கங்களால் செய்து பலவிதமான பாவங்களைப் போக்குவதாகும்.. குறிப்பாக ஏழு வகைப் பாவங்களுக்குத் தாம் மனித குலம் பெரிதும் ஆளாகின்றது! குந்தி தேவி தான் செய்த பிழைகளுக்குப் பிராயச்சித்தம் வேண்டிட இறைவனே புனிதமான ஏழு கடல்களை இத்தீர்த்தத்தில் சேர்த்து இந்த சப்த சாகர தீர்த்தத்தின் மகத்துவத்தைப் பெருக்கினார்!

எழு வகைக் கடலைக் காட்டி
எழு வகை சப்தங் கூட்டி
எழு வகைப் பாவம் போக்கும்
எழு கடல் அமிர்தம் உண்டான்
எழு வகை நாதச் சித்தன்
எழுஞ்சுடர் அகத்திய ஈசன்!
எழுவாய் எழுநீர்த் திரளில்
கழுவாய் தருவாய் குருவாய்!

என்பது இந்த திருநல்லூர் சப்த சாகரத் தீர்த்தத்தில் நீராடிப் பெருமை பெற்ற ஸ்ரீஅகஸ்திய பெருமானைப் பற்றிய ஞானபத்ர கிரந்த பரிபாஷைப் பதிகக் குறிப்பாகும்..! திங்கட்கிழமை தோறும் சந்திர ஹோரையில் இப்பதிகத்தை ஓதி இங்கு நீராடி வருதலால் வாய் மொழிகளால் ஏற்பட்ட விபரீதங்களுக்குத் தக்கப் பிராயச்சித்தம் கிடைக்கும்... பலரும் தங்களுடைய குடும்பங்களிலோ, உறவினர்களிடமோ, அலுவலகத்திலோ, தகாத வார்த்தைகளைப் பேசி பலவிதமான தண்டனைகளையும், துன்பங்களையும், வேலை நீக்கத்தையும் பெற்று அவதியுறுவார்கள்..! வாய்மொழி குற்றங்களுக்குத் தக்கப் பிராயச்சித்தம் பெற்றிடவும் இதனால் ஏற்பட்ட இழப்புகளுக்குத் தக்க நிவர்த்தியைப் பெறுவதற்கும் திருநல்லூர் சப்த சாகர தீர்த்த நீராடலும்.. இங்கு ஏழு வகையான காய்கறிகள் கூடிய உணவினை அன்னதானமாக அளித்தலும் சிறப்பானதாகும்!

திரு தேரையர்

பதினெண் சித்தர்களுள் ஒருவராக விளங்குகின்ற ஸ்ரீதேரையர் சித்தர் அதியற்புத தெய்வீக மகாத்மியங்களைக் கொண்டவர் ஆவார்... கிருத, திரேதா, துவாபர யுகங்களில் மக்களுடன் மக்களாய் தெய்வீகக் காரியங்களை நடத்தி பரமானந்தத்தில் திளைத்த சித்புருஷர்கள் எந்த அற்புதங்களையுமே கலியுக விஞ்ஞானம் அரை குறைக் கண்ணோட்டத்தில் ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தி சித்தோபநிஷத் மாமறை வாக்கியங்களையே வெறும் சோதனைக் கூட ஆராய்ச்சிப் பொருளாக ஆக்கிவிடும் என்பதால் கலியுக நியதிப்படி இன்றும் பூமியிலும் தம்மை உணர்விக்கா வண்ணம் சாதாரண வடிவில் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் உள்ளனர்!

இறைவனைப் போன்றே மஹரிஷிகள், சித்புருஷர்கள் போன்ற இறைத் தூதுவர்களும் ஆன்மப் பூர்வமாக அறிந்து உணர்ந்து தெளிய வேண்டிய இறைப் பரம்பொருள் கருவிகளாக விளங்குகிறார்கள்.. இவர்களுடைய அற்புதங்களை சோதனைக் கூடத்தில் சோதனைகட்கு ஆட்படுத்துதல் நியாயமாகுமா? எனவே இலை மறை கனிகளாகவே கலியுகத்தில் சித்புருஷர்கள் விளங்குகிறார்கள்! இடியாப்பம் போல் தன் தோற்றம் முடிவு எதையும் அழியாப் பொருளாக எங்கு தொடங்கி, எங்கு முடிவு என உணர்விக்கப்பட இயலாத சித்புருஷராகக் காரணப் பெயர் கொண்டு ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈசர் விளங்குகிறார்..! இதேபோல தேரையரும் ஒரு இறை லீலை காரணமாகவே, இக்காரணப் பெயர் பூண்டார்.. சிறுவயதில் நீர் அருந்தும் போது அதில் இருந்த தவளைக் குஞ்சினை (TADPOLE)ச் சேர்த்துப் பருகிய மன்னன் இதனால் தீராத தலை வலிக்கு ஆட்பட்டுப் பல ஆண்டுகள் பெருந் துன்பங்களை அனுபவித்து இறுதியில் தேரையரைத் தரிசித்தான்..!

அவரும் அவனுடைய கபாலத்தைப் பிளந்து அங்கே அத்தவளைக் குஞ்சானது பெருந்தேரையாக மாறியிருப்பதை உணர்ந்து, அத்தேரையைப் பிரித்துப் பகுத்தெடுத்துப் புண்ணிய நதியில் இட்டுக் கபாலத்தை மீண்டும் மூடிப் பெரும் இறை மருத்துவ அற்புதம் புரிந்தார்.. இதனால்தான் இவருக்குத் தேரையர் எனும் காரணப் பெயர் உண்டாயிற்று! ஆயில்யம், அஸ்வினி மருத்துவ தேவாதி தேவ, நட்சத்திர மூர்த்திகள் அனைவருமே தேரையரிடம் அரிய மருத்துவ இறைப் பாடங்களை உபதேசமாகப் பெறுகின்றனர்.. தேரையர், ஸ்ரீஅமிர்த தன்வந்த்ரீ மூர்த்தியின் சிறப்பான உபாசகர்களுள் ஒருவராவார். ஸ்ரீசாகம்பரி தேவி தாவர சிருஷ்டியின் போது பல மூலிகைகளை உற்பவிக்கச் சங்கல்பித்த போது பல தாவரங்களிலும் மூலிகை மருத்துவ குணங்களைக் கூட்டிடத் தேரையரே அம்பிகையின் திருவடிகளில் தம்முடைய கோடானு கோடி யுகங்களாய்க் கூட்டியிருந்த தபோபலன்களை அர்ப்பணித்தார்..!

ஸ்ரீவைத்யநாதர் ஆலயம் ஸ்ரீவில்லிபுத்தூர்

எலும்பு, நரம்பு, கபாலம், இருதயம், தசை நார்கள் போன்ற உறுப்புகளால் ஏற்படுகின்ற நோய்களைத் தீர்ப்பவரே ஸ்ரீதேரையர் சித்தராவார். தேரையர் சித்தரின் குழாத்துள் முதன்மையாகத் திகழ்பவரே பாண்டிச்சேரி சின்னபாவு சமுத்திரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீபடேசாகிப் சித்தர் ஆவார்..! தேரையர் கையாண்ட யோக பாவனைகளுள் ஒன்றே தேரை போல் ஆகாயத்தில் எழும்பி மாண்டவ்ய யோகத்தில் திளைப்பதாகும்..! பூமியின் ஆகர்ஷண சக்தியையும் பீறிட்டு அண்டத்தில், ஆகாசத்தில் மிதக்கும் அற்புத யோக நிலை கொண்டவர்களுக்கே பழஞ்சிகப்பு நிற தேக நாளங்கள் உருவாகிடும்! எப்போதும் மருத்துவ குணக் கதிர்கள் இவர்தம் சிகப்புத் திருமேனியில் இருந்து பிரகாசித்து ஒளிர்ந்து கொண்டிருக்கும்..! இதனால்தான் தேரையர் தரிசனத்தைப் பெற்றவர்களுக்கே பல அற்புத மருத்துவ குணப்பாடுகள் உடனடியாகத் தோன்றும்..!

ஸ்ரீதேரையர் சித்தர் எப்பாறையின் உள்ளே தேரை குடிகொண்டுள்ளதோ அதையே தம் தியானத்திற்குரிய பாறையாகத் தேர்ந்தெடுப்பார்.. மூலாதார யோக நிலைகளைப் பூண விடாது. பல முதுகெலும்பு நோய்களும் ஏற்படுவதுண்டு..! எனவே யோக பாவனைகட்கு இடையூறாக இருக்கின்ற பல நோய்களுக்குத் தீர்வுகளைப் பெற்றுத் தருபவரே ஸ்ரீதேரையர் சித்தர் ஆவார்.!

தேரையர் தேராய் தீர்வைத் தாராய்!
தேர்வும் தீர்வும் தேரையர் திருத்தேர்!
என்ற பரிபாஷையில் ஸ்ரீதேரையரின் மகிமை பற்றி சித்புருஷர்களின் ஞானப்பத்ரங்கள் விளக்குகின்றன..! மாண்ட்ய த்வீப யோக சக்திகள் நிறைந்த நெல்லிக்காய், உருண்டை வகைப் பழங்கள் (சாத்துக்குடி, ஆர்ஞ்சு, சப்போட்டா) போன்றவற்றை மருந்துகளை உட்கொள்ள வேண்டிய செவ்வாய்க் கிழமை, செவ்வாய் ஹோரை, சனிக்கிழமை, அசுவனி, ஆயில்யம் போன்ற நாட்களிலும் 3, 12, 30 போன்ற மூன்று எண்ணைக் கொண்ட நாட்களிலும் சம்பந்தர் பெருமானின் திருநீற்றுப் பதிகம், கோளறு பதிகம், இந்திராட்சி கவசம், சுப்ரமண்ய புஜங்கம் போன்றவற்றை ஓதி தானமாக அளித்து வந்தால் மன நோய்கள், கபால நோய்கள், மூளைச் செல்கள் செயலிழப்பதால் உடலின் ஒருபுறம் பாதிக்கப்பட்டிருத்தல், PARKINSON DISEASE எனப்படுகின்ற நடுக்க நோய்கள், தசை நார் இறுக்கம், உடலின் ஒருபுற பாதிப்பு போன்ற பல நோய்களுக்குத் தக்க தீர்வு பெறலாம்.! தேரையரின் நித்திய வழிபாட்டுத் திருத்தலங்கள் சில உண்டு..!

ஸ்ரீதன்வந்த்ரி மூர்த்தி எழுந்தருளியுள்ள குருவாயூர் அருகே நெல்லுவாய்புரம் திருத்தலம், மயிலாடுதுறை அருகில் ஸ்ரீவைத்தீஸ்வரன் கோயில், கும்பகோணம் அருகிலுள்ள தவள வெண்ணகையாள் சமேத திருப்பாலை நாதராக அருள்பாலிக்கும் திருப்பாலை, காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திற்குள் அமைந்துள்ள பலரும் இன்றும் அறியாத ஆலயத்திற்குள் ஆலயமாக விளங்குகின்ற கச்சிமயான சிவாலயம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைத்தியநாதர் ஆலயம், கும்பகோணம் உடையாளூர் சிவாலய சிவ தீர்த்தம், நவக்கிரகங்கள் அனைத்தும் ஒரே திசையை நோக்கி அமைந்துள்ள திருத்தலங்கள் (திருக்குவளை) போன்றவை தேரையரின் மாண்ட்ய த்வீப யோக சக்தி கொண்டவையாகும்.. இவ்வாலயங்களில் மேற்குறித்த நாட்களில் மேற்கண்டவற்றைத் தானமாக அளிப்பதோடு தவளைக் கண் பாயாசம் என்று சித்புருஷர்களால் போற்றப்படுகின்ற ஜவ்வரிசிப் பாயசத்தை தானமளித்தலால் பலவிதமான நோய்களுக்கும் தக்க நிவாரணம் பெறலாம்..! சித்தர்களின் தரிசனம் பெறவே ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் ஸ்ரீதேரையர் போன்ற அரிய சித்புருஷர்களின் திருவுருவை அளித்து வருகின்றோம்.!

அமுத தாரைகள்

1. தீர்த்தங்களில் மூலிகா பந்தன சக்தி! : நாம் சித்த வைத்திய முறைகளைக் கிட்டத்தட்டக் கைவிட்டு விட்டமையால் பலவித மூலிகை சக்திகளும் நம்முடலில் சேராது போகின்றன.. உரங்களாலும், பூச்சி மருந்துகளாலும், அரிசியும், கோதுமையும், பருப்பு வகைகளும், காய்கறிகளும் கூடத் தம் சுய சக்திகளை இழந்து விடுகின்றன.. முற்காலத்தில் சம்பா நெல் போன்ற ஆறு மாத விளைச்சலில் உருவான நெல் மகத்தான ஆரோக்ய சக்திகளை அளித்து வந்தது.! இவ்வாறு ஆறு மாதங்களுக்கு மேல் பூமியில் நிலை நின்று பிருத்விச் சக்திகள் நிறைந்து விளையும் நெல்லே நமக்கு ஆரோக்யமான நீண்ட ஆயுளைத் தருவதாகும்.! ஆறு மாத சாகுபடிக்குக் குறைந்த நெல்லைப் பயன்படுத்தினால் ஒரு நாளிலும் பல விநாடிகள் ஆயுளை இழக்கின்றோம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.! எனவே சித்புருஷர்களே நாம் பெற வேண்டிய மூலிகைகளை ஒன்று திரட்டி அனைத்து ஆலயத் தீர்த்தங்களிலும் குறித்த நல் ஹோரைகளில் மூலிகாச் சத்துக்களை தெளித்துச் செல்வதால் ஆலயத் தீர்த்த நீராடல் நமக்கு மகத்தான மூலிகைச் சக்திகளையும் பெற்றுத் தருகின்றது..! குடும்பப் பெண்கள் ஆலய நீராடல்களுக்காகவே தனியாக மஞ்சளை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்! இவ்வாறாக 300, 400 ஆலயத் தீர்த்தங்களைக் கண்ட மஞ்சளுக்குத் தனி மகத்துவம் உண்டு! இதன் தரிசனமே மனதுக்கு நல்ல சாந்தத்தைத் தரும்!

சகஸ்ர லிங்கம் பேரளம்

2. நவநாத சித்தர்கள் நித்யவாசம் செய்யும் தம்புல் குகையுள் பிலாகாச யோகம் பூண்டிருக்கும் ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசர் மூலம் அவர்தம் குருவாய் மொழியாக நாம் ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் அளிக்கும் அனைத்துமே பெறுதற்கரிய சித்தமா பொக்கிஷமாகும்.. பலரும் இதனை உணர்ந்து உன்னத ஆத்ம நிலை பெற்று உயர்வு அடைகின்றனர்.. ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் வருகின்ற நித்ய கர்ம நிவாரண நியதி மற்றும் பலவித விரதங்கள் வழிபாட்டு முறைகளையும் ஆழ்ந்த நம்பிக்கையோடு கடைபிடித்து வாருங்கள்.! ஏனெனில், எத்துணையோ விரதங்களையும், பண்டிகைகளையும், வழிபாட்டு முறைகளையும், அமாவாசை மற்றும் தர்ப்பண முறைகளையும் இம்மனித சமுதாயம் சரிவரச் செய்ய மறந்ததால் தான் கலியுகத்தில் எத்துணையோ பிரச்னைகள் ஏற்படுகின்றன.. தனிப்பட்ட முறையில் இதுவரை நாம் செய்ய மறந்த, செய்யாதிருக்கின்ற பலவித வழிபாடுகளுக்கும் ஸ்ரீஅகஸ்திய விஜய குருவாய் மொழிப் பரிகாரங்கள் மூலம் நீங்கள் எளிதில் பிராயச்சித்தம் பெறலாம்! உங்களுடைய நித்ய கர்ம வினைகளைக் களைய முறையான கர்ம நிவாரண வழிமுறைகளைக் கடைபிடித்திட உதவும் மூர்த்தியே கும்பகோணம் அருகே மாளாபுரம் சிவாலயத்தில் உள்ள மும்மூர்த்தி விநாயகர்..!
இங்கு சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளிலும், புதன்கிழமை சந்திர ஹோரை நேரத்திலும் மணிக் கொழுக்கட்டை படைத்து வழிபட்டுத் தானமளித்து வந்திடில் நித்ய கண்டம் பூரண ஆயுசு என்பதாகக் கடும் நோய்களுடன் போராடுபவர்களுக்கும், தினசரி வாழ்க்கைக்கே சிரமப்படுபவர்களுக்கும் தக்க நிவர்த்திகள் கிட்டும்..!

3. எட்டு பட்டு எண்ணே! : சனீஸ்வர பகவானுக்கு உரித்தான எண் எட்டுதனைத் தற்காலத்தில் வெறுப்புடன் ஒதுக்கி வருகின்றார்கள்.. ஜாதக ரீதியாகவும், எண் கணித முறைப்படியும் எட்டு பலருக்கும் உரித்தான எண்தான்.. எனவே 8 பற்றிய ஒரு துவேஷமோ அல்லது வெறுப்போ கொள்ள வேண்டாம்! உங்கள் வாழ்வில், அலுவலகத்தில் கணக்கில் எட்டு இல்லாமல் வாழ்ந்திட முடியுமா? எட்டை விட்டு விட்டுக் கணக்குப் போட முடியுமா? எனவே எட்டு பற்றிய அநாவசியமான அச்சமே தேவையில்லை!

4. ஆயிரம் தரும் பாயிர நாம பூஜா பலன்கள்! :- பஞ்சாங்கத்தில் காண்கின்ற அனைத்து விதப் பண்டிகைகளும் விரதங்களும் ஆலயத்தில் கடைபிடிக்கப்பட்டால் அதுவே ஒவ்வொரு குடும்பத்திலும் தனித்தனியே செய்ய இயலாமைக்கான தக்கப் பிராயச்சித்தமாக அமையும். ஆனால் நாம் தினந்தோறும் ஆலயம் சென்றால்தானே அப்பலாபலனைப் பெற இயலும்.. ரேடியோ கேட்டுக் கொண்டும், டிவி முன் மணிக் கணக்கிலும் நேரத்தை செலவிடத் தயாராக இருக்கும் மனிதன் ஆலயம் சென்று அரை மணி நேரம் கூட வழிபாடு, தியானம் செய்திடாது வாழ்நாளை வீணாக்குகின்றானே! எனவே ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் வருகின்ற பிராயச்சித்த வழிமுறைகள்யாவும் நாம் செய்ய மறந்த வழிபாடுகளுக்கு ஓரளவு பிராயச்சித்தம் பெற்றுத் தரும் என்பதை இனியேனும் உணர்ந்திடுங்கள்!

சித்தர்களும், மகரிஷிகளும் நமக்காகத் தினசரி பூஜைகளை நிகழ்த்துகின்ற தலங்களில் ஒன்றே (திருத்துறைப் பூண்டி அருகே) பேரளம் சிவாலயமாகும்! இப்பிரபஞ்சத்தின் அனைத்துக் கோடி இறைநாமங்களும் இச்சிவலிங்கத்தில் அடக்கம்! அனைத்து மகரிஷிகளும், சித்தர்களும் இங்கு தினசரி சகஸ்ர நாம அர்ச்சனை செய்து வழிபடுவதால் இங்கு சகஸ்ரநாம அர்ச்சனைக்குரிய திங்கள், வியாழன், திருவாதிரை, மக நட்சத்திரம் போன்ற நாட்களில் இவ்வாலயத்தில் சுக்கிர, புத ஹோரை நேரங்களில் 1008க்குக் குறையாமல் (மணமுள்ள) பூக்களைத் தாமே தொடுத்து சிவ லிங்கத்திற்குச் சாற்றுவதுடன் (1008) சகஸ்ரநாம அர்ச்சனையோடு ஸகஸ்ர திவ்ய அம்சங்கள் நிறைந்த பொருட்களை அதாவது எண்ணிக்கையில் தன்னுள் 1008 அம்சங்களுக்கு மேல் கொண்டவை (மாதுளை, வாழைப் பூ, அத்திப் பழம், பலாச் சுளை) இத்தலத்தில் தானமாக அளித்து வந்திடில் இல்லத்தில் பூஜா பலன்கள் பெருகிடவும். நித்ய கர்ம நிவாரண காரியங்களை நிறைவேற்றுவதற்கான நல்வாய்ப்புகளும் தாமே தேடி வரும்! சூன்யம் பிடித்தது போலிருக்கும் வீடுகளுக்கும், தொழில்களுக்கும் இந்த ஸகஸ்ர புஷ்ப பூஜையும் / ஸகஸ்ர திவ்ய தான தர்மங்களும் இத்தலத்தில் நல்ல நிவாரணத்தைப் பெற்றுத் தரும்! ஆனால் தேடி வரும் தெய்வீகச் சந்தர்ப்பங்களை ஏதேனும் சாக்கு போக்குச் சொல்லி நழுவ விட்டு விடக் கூடாது!

ஸ்ரீபஞ்சபைரவ மூர்த்திகள் ஆவூர்

5. பரிஹாரம் பெற இயலாத கூடா நாள் தோஷங்கள்!

ஞாயிறு – பரணி, திங்கள் – சித்திரை, செவ்வாய் – உத்திராடம், புதன் – அவிட்டம், வியாழன் – கேட்டை, வெள்ளி – பூராடம், சனி – ரேவதி ஆகிய நாள் நட்சத்திரச் சேர்க்கையை, மிகவும் தவிர்க்க வேண்டிய நாட்களாக, திதி சூன்ய நாட்களாக, கூடா நாட்கள் என்று சொல்லப்படுகின்ற (திதிசூன்ய) பிரபலாரிஷ்ட நாட்களாகப் பன்முறை ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் விளக்கியும் இவற்றைச் சுபமுகூர்த்த நாட்களாகப் பல பஞ்சாங்கங்களில் அளித்திருக்கின்றார்கள் என்பது வேதனைக்குரியதாகும்.!

தேய்பிறையில் திருமண சுபமுகூர்த்தம் அமைதல் கூடாது.. ஆனால் இவற்றையும் பஞ்சாங்கத்தில் முகூர்த்த நாட்களாகக் குறித்துள்ளார்கள்.. எனவே சுபமுகூர்த்த நாட்கள் என்று கணிக்கப்படுகின்ற நாட்களில் திருமணங்கள் நடந்தாலும் வாழ்க்கையில் பல துன்பங்கள் உருவாகக் காரணம் இத்தகைய நாட்களை சரியாகக் கணிக்காமையால் பலத்த திதி சூன்ய தோஷங்கள் சேர்ந்து விடுவதாலும் முறையாக நல்ல நேரத்தைக் கணிப்போர் மிகவும் அருகி வருதலும் ஆகும்! மேலும் நன்முறையில் கணிப்போரும் சம்பந்தப்பட்ட கல்யாண வீட்டைச் சேர்ந்தவரின் அவசர கோல புத்தியால் ஏதோ ஓரளவு நாளைப் பார்த்துக் கணித்து அளித்து விடுகிறார்கள்... இதுவும் கணிப்பவர்களுக்கும் பாவகரமானதே!

இவ்வாறு கூடா நாட்களில் திருமணம், கிரக பிரவேசம் போன்ற ஏதேனும் சுப நிகழ்ச்சிகள் நடந்திருப்பின் அதன் கடுமையான தோஷங்கள் ஆயுள் முழுதும், அதற்குப் பிறகும் கூடத் தோஷத் துன்பங்கள் தொடரும்! ஆதலால் இவற்றை நிவர்த்தி செய்யக் குறித்த பல கடுமையான பூஜைகளைச் செய்தாக வேண்டும்! இப்பூஜை முறைகளை அறிந்தோரும் ஒரு சிலரே! இவ்வகை தோஷங்களை நிவர்த்தி செய்வது  மிக மிகக் கடினம்! இவ்வாறு நடந்திருப்பின் ஆயுள் முழுதும் வரும் கூடா நாட்களிலும், மாதாந்திர சிவராத்திரி நாட்களிலும் (பௌர்ணமிக்குப் பிறகான தேய்பிறை சதுர்த்தசி திதி) பஞ்ச பைரவர்கள் (5 பைரவர்கள் சேர்ந்து அருள்பாலித்திருப்பது கும்பகோணம் அருகே ஆவூர், உடையாளூர்) உள்ள ஆலயங்களில் இந்நாட்களில் முழுமையாகவும் இருந்து தங்கி அபிஷேக, ஆராதனைகளையும், இடைவிடாத அன்னதானத்தோடு நடத்தி வந்தால்தாம் பிராயச்சித்தங்களைப் பெறுவதற்கான அறவழிகள் காட்டப்படும்! பிராயசித்தம் ஏதென்று அறியாது பிராயச்சித்தம் பெறும் வழிமுறைகளை அறிவற்கே இத்தகைய ஆயுள் கால நீண்ட பெரும் பூஜை என்றால் கூடா நாட்களின் கடுமையான தோஷங்களின் கடுமையையும் அவற்றிற்காக இதுவரை பெற இயலாத பரிகாரங்களைப் பற்றியும் சிந்தித்துப் பாருங்கள்!

ஜூன் பௌர்ணமி நாள் : 5.6.2001 செவ்வாய்க் கிழமை காலை 7.01 மணி முதல் 6.6.2001 புதன் கிழமை காலை 7.09 மணிவரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பௌர்ணமி திதி அமைகிறது..! கிரிவல நாள்:- 5.6.2001 செவ்வாய்க் கிழமை

தம் குருவின் பொற்பாதச் சுவடியாகக் கடந்த பல ஆண்டுகளாக, தம் குருநாதரின் சித்தோபநிஷத் வாக்கியங்களை இறைப் பேருரைகளாக, உபந்யசங்களாக ஆற்றிவரும் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய தெய்வீகச் சொற்பொழிவுகளின் முதல் தொகுப்பினை ஆடியோ காஸெட்டாக அளிக்கின்றோம்! “தனித் துணை சிவனே” என்ற தலைப்பில் எம் குருநாதர் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் ஆற்றிய இறைச் சொற்பொழிவுதனை இறை ஒலிப் பேழையாக (audio cassette) அளிக்கின்றோம்! குடும்ப சகிதம் கேட்டு ஆனந்தித்து, சித்தர்களின் இறை நல்வரங்களைப் பெறுவீர்..!

வாஸ்து நாள் வைகாசி 21 (4.6.2001) :- வாஸ்து நாட்களில் மட்டும் அல்லாது பூமி, நிலபுல பாக்யங்களைத் தரும் செவ்வாய் பகவானின் ஆதிக்கம் நிறைந்த செவ்வாய்க்கிழமை தோறும் ஸ்ரீவாஸ்து விநாயகச் சங்கு, ஸ்ரீபூமி அந்தர சுந்தர வாஸ்து சக்கரம் கொண்டு பூஜித்தால் நல்ல  வீடுகள், நிலபுலன்கள் அமையும்! இச்சங்கும் சக்கரமும் ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயாவில் கிடைக்கும்...

மிருத்யு தீட்சா ரூபம், ஹம்ஸ வர்தன பந்துக ரூபம் போன்ற ருத்திர தரிசன மகா பலன்களைப் பெற்றுத் தரவல்ல, தக்க ருத்ர மந்திரங்கள் ஓதி உரு ஏற்றப்பட்ட ருத்ராட்சங்கள் தீர்க சுமங்கலித்வம் தரும் மங்கள த்வீப நறுமணக் கிரணங்கள் நிறைந்த விஜய் அத்ரி ஊதுபத்தி, மூளைக்குப் புத்துணர்ச்சி தந்து மற்றும் அறிவு விருத்திக்கும் உதவும் மூல காயத்ரீ மந்திர சக்திகள் நிறைந்த விஜய் ஆத்ரேயா ஊதுபத்தியும், தீர்க்க தரிசனம், காரிய சித்திகளைத் தரும் காணாபத்ய வடிநாள சக்தி கூடிய விஜய் அகஸ்த்யா ஊதுபத்தியும் ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயங்களில் கிடைக்கும்...

நித்ய கர்ம நிவாரணம்

1.6.2001 – ஜீப் வாகனம் வைத்திருப்பவர்கள் இன்று எந்தக் காரணத்தைக் கொண்டும் அதிக வேகம் செல்லக் கூடாது.
2.6.2001 – பெருமாள் நாமம் பூண்டவர்கள் இன்று சுயநலக் காரியங்களில் ஈடுபடாமல் இருத்தல் நலம்..! தெய்வ காரியாத்தில் ஈடுபடலாம்.
3.6.2001 – A.C., Refrigerator, Cooler.. பெரிய தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்களில் (Water Processing Units) வேலை செய்கின்றவர்கள் கவனத்தோடு இருத்தல் நலம்.
4.6.2001 – லாரி ஓட்டுனர்கள், லாரி உரிமையாளர்கள் இன்று கவனமாய் இருத்தல் நலம்., பணச் சிக்கல்கள் ஏற்படும் நாளிது.
5.6.2001 – அரசு பணித் துறையில் சர்வேயராக வேலை செய்கின்றவர்களும், சங்கிலி போட்டு நில அளவை செய்பவர்களும் இன்று கவனமாய்ப் பார்த்துப் பணிபுரிதல் நலம்..
6.6.2001 – ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்கின்றவர்கள் சுங்கம் சம்பந்தமான துன்பங்களைச் சந்திக்கின்ற நாளிது... ஒரு வாரம் தள்ளிப் போட்டு வேலை செய்யுங்களேன்!
7.6.2001 – நெற்றிக்குத் திருமண் இடுகின்றவர்களுடன் இண்று எந்தவித வாக்குவாதமும் கூடாது.. வேலையில் பெருத்த துன்பத்தைத் தந்துவிடும்.
8.6.2001 – சார் பதிவாளர்கள் (Registrars)  இன்று தங்களுடைய உதவியாளர்களும், தங்கள் கீழ் வேலை செய்கின்றவர்களும் சொல்வதை நம்பாமல் இருந்தால் நலம் அடைவார்கள்.

ஸ்ரீஅன்னபூரணி திருசோற்றுத்துறை

9.6.2001 – நெடுஞ்சாலைத் துறை (Highways), பொதுப்பணித்துறையைச் சேர்ந்த எஞ்சினியர்கள், காண்ட்ராக்டர்கள் இன்று கவனமாய் இருத்தல் நலம்.
10.6.2001 – மகன், மகள், மருமகள் இவர்களைப் பகைத்துக் கொண்டு தனியாக இருக்கின்ற தாய்மார்களும், மாமியார்களும் தங்களுக்குத் தற்காலிகமாக உதவி செய்பவர்களால் ஏமாற்றப்படும் நாளிது.!
11.6.2001 – நீதிபதிகளுக்கும், வக்கீல்களுக்கும் மறதிக் குழப்பங்கள் ஏற்படும் நாளிது... எந்தக் காரணத்தைக் கொண்டும் அவசரப்பட்டுத் தீர்ப்பு வழங்கவோ, தேவையில்லாமல் வாய்தா வழங்கவோ வேண்டாம்..!
12.6.2001 – விளம்பர நிறுவனங்களில் (Advertising Agencies) வேலை செய்கின்றவர்கள் வீண் பழியைச் சுமக்க வேண்டிய நிர்பந்தங்களுக்கு ஆட்படுவர்... கேரட் கலந்த பிரிஞ்சி சாதம் தானம் செய்தல் நலம்..!
13.6.2001 – காவல் துறையினரோடு நிதானமாக நடந்துகொள்வது நல்லது.. முருகன் கோயிலில் வெண்பொங்கல், மெதுவடை அன்னதானம் செய்தல் விசேஷம்.
14.6.2001 – ஆட்டோ ஓட்டுனர்கள் வலுச் சண்டைக்காரர்களால் துன்புறும் நாளிது.. இரட்டைப் பிள்ளையார் கோயிலில் எலுமிச்சைச் சாதம் அன்னதானம் செய்து துன்பம் தவிர்த்து நலம் பெறலாம்..
15.6.2001 – தங்க நகை வியாபாரிகள், தங்க நகைக் கடைகளில் வேலை செய்வோர் குடுமபக் கவலைகளால் மறதி ஏற்பட்டுத் தவறு இழைக்கும் நாளிது.. சிவன் கோயிலில் சர்க்கரைப் பொங்கல் தானம் செய்வதால் துன்பத்திலிருந்து விடுதலை பெறலாம்.
16.6.2001 – கணினி பொறியியல் கல்விச் சாலைகளில் (Computer Education Centres, Institutions, etc…)  வேலைபுரியும் ஆசிரியர், பேராசிரியர்கள் (Professors, Lectures) சரியாக மாணவர்களுக்குப் பாடத்தைச் சொல்லித் தராமல் கழித்ததால் கடவுளால் தண்டிக்கப்படும் நாளிது. மனம் திருந்தி இன்றிலிருந்தாவது ஒழுங்காக பாடத்தை நடத்துவதால் வருகின்ற துன்பத்திலிருந்து விடிவு பெறலாம்.
17.6.2001 – சுற்றுலாத் துறையில் (Tourist Development Corporation)  வேலை செய்கின்றவர்கள், சுற்றுலாக்களுக்கு ஏற்பாடு செய்கின்றவர்கள் அரசாங்கத்து உயர் அதிகாரிகளிடம் நல்ல விதமாக நடக்க வேண்டிய நாளிது... கணபதி கோயில்களில் பால் பாயசம் அன்னதானம் சிறப்புடையது.!
18.6.2001 – வேளாண்மைத் துறையில் இருக்கின்றவர்கள் தங்களுடைய உயர் அதிகாரிகளிடத்தில் கவனமாய் இருத்தல் நலம்.. அன்னபூரணி அருள்புரியும் கோயில்களில் (மதுரை – திருப்பரங்குன்றம், திருச்சோற்றுத்துறை தஞ்சை அருகே) தயிர் சாதம் அன்னதானம் செய்தல் நலம்.
19.6.2001 – வனத் துறையில் வேலை செய்கின்றவர்கள், வனத் துறை அதிகாரிகள் குடிப் பழக்கத்தாலும், தீய பழக்கத்தாலும் துன்புறும் நாளிது... வன துர்கை கோயில்களில் அன்னதானம் செய்திடில் வரும் ஆபத்திலிருந்து தப்பிக்கலாம்.
20.6.2001 – குடிநீர் வடிகால் வாரியத்தில் (Water and Drainage Board) பணிபுரிபவர்கள் இன்று பணிக்குச் செல்லாமல் ஓய்வு எடுத்துக் கொண்டு பெருமாள் கோயிலில் அன்னதானம் செய்தலால் வரும் துன்பங்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.
21.6.2001 – கால்நடைப் பிராணிகளுக்கும், கால்நடை வைத்தியத் துறையில் இருக்கின்றவர்களுக்கும், காலில் பிரச்னை வருகின்ற நாளிது.. ஆகவே கன்றுடைய பசுமாடுகளுக்கு வயிறார உணவளித்தல் நலம் தரும்.
22.6.2001 – பெட்ரோல், இரசாயனத் தொழிற்சாலைகளில் (Petroleum, and Chemical Industries) பணிபுரிபவர்களுக்கு இரசாயனப் பொருட்களால் ஆபத்து வரும் நாளிது... ஸ்ரீநரசிம்மர் இருக்கும் கோயில்களில் பானகம் தானம் செய்தல் நலம் தரும்.
23.6.2001 – மகான்களின் ஜீவ சமாதிகளுக்குப் பன்னீர் அபிஷேகம் செய்து காலிபிளவர் கலந்த உணவு அன்னதானம் இடுதலால் அண்டைய நாட்டில் இருக்கும் உறவினர்களுக்கு வரும் ஆபத்து தீரும்.
24.6.2001 – கட்டிடத் தொழிலாளர்களும், காண்ட்ராக்டர்களும் முறையற்ற காமத் தொடர்புகளால் துன்புறும் நாளிது. கவனம் தேவை..!
25.6.2001 – பெண் வக்கீல்கள், பெண் நீதிபதிகள் சிக்கலான சூழ்நிலையைச் சந்திக்கும் நாளிது.. குடும்பத்தோடு இருந்து சிவன் கோயிலில் பல காய்கறிகள் கலந்த உணவு அன்னதானம் செய்தல் நலம் தரும்.
26.6.2001 – பொறியியல் துறையில் இருக்கின்ற பெண் எஞ்சினியர்கள் துன்புறும் நாளிது.. ஸ்ரீஜகதீஸ்வரர் என்ற பெயர் பூண்ட சிவனுக்குப் புது வஸ்திரம் சார்த்தி நிலக்கடலை கலந்த உணவு வகைகளை அன்னதானம் செய்ய வேண்டிய நாளிது..!
27.6.2001 – Textile Industries  உரிமையாளர்கள், துணி வியாபாரிகள் அவர்களுக்கு உதவுபவர்களால் (Assistants, பணியாளர்கள்) துன்புறும் நாளிது., பணிந்து தணிந்து போவதும் சுக்கிரன் கோயில்களில் அன்னதானம், பால்கோவா தானம் செய்தலும் நலம் பயக்கும்.
28.6.2001 – பங்குச் சந்தை தரகர்களால் பாதிப்பு ஏற்படும் நாளிது, பங்கு வியாபாரிகள் கவனமாய் லாபத்தில் ஒரு பங்கு இறைவனுக்கு அன்னதானமாய்ச் செலவிடுதலால் பெருத்த நஷ்டத்திலிருந்து விடிவு பெறலாம்.
29.6.2001 – சீட்டுக் கட்டும் (Chit fund) சில்லறை வியாபாரிகள் பலவித சோதனைக்கு ஆளாகும் நாளிது.. பிள்ளையார் கோயிலில் இட்லி அன்னதானம் செய்து கவனமாய் இருத்தல் நலம்.
30.6.2001 – இரு சக்கர வாகனங்களை வைத்திருப்பவர்கள் வேகமாய் ஓட்டுவதால் துன்பம் வரும் நாளிது... முடிந்த மட்டும் இன்று வாகனத்தை நீரால் சுத்தம் செய்து பூஜை செய்தபின் ஏழைகளுக்குக் கொத்துக் கடலை (வெள்ளை, கறுப்பு) சுண்டல் தானம் செய்தல் நலம் தரும்.

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam