அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய பாலபருவ குருகுலவாச அனுபூதிகள்
‘எனக்கு சற்குரு கிட்டவில்லையே!’ என்று ஏங்குவோர்க்கு சற்குருவை நாடுகின்ற ஆன்மீக வேட்கை போதாது, இன்னமும் இறைவனின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு பாடுபட வேண்டும்’ என்பதை நன்கு சுட்டிக்காட்டுவதோடு சற்குருவைப் பெறுதற்கான எளிய வழிமுறைகளை உணர்த்துவதே இத்தொடரில் நீங்கள் காண்கின்ற குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய குருகுலவாச அனுபூதிகளாம். ‘சுவாமிகள்’ என்ற அடைமொழிக்கான தெய்வீகத் தகுதிகளைத் தாம் பெறவில்லையாதலால் அந்த அடைமொழிப் பட்டத்தைத் தனக்கு எவரும் சூட்டுதல் வேண்டாமென்று வலியுறுத்தும் நம் குருமங்கள கந்தர்வா அவர்கள் தாம் என்றும் எங்கிருந்தும் இயங்குவதுமாகிய குருமங்கள கந்தர்வ லோகத்தையே பக்தியுடன் போற்றி வழிபடுவதால் தமக்கு சற்குரு அளித்த அதே நாமத்திலேயே (குருமங்கள கந்தர்வா) உறைய விழைகின்றர்..

திருவே என் இல்லம் வருவாயே !

ஆம், குருமங்கள கந்தர்வ லோகத்திலிருந்து சித்த மகாஜோதியாய் உதித்து என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாக மிளிரும் ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகளின் அருட்பெருஞ் சிஷ்யராக ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் (குருமங்கள கந்தர்வா) நம்மிடையே தோன்றி ஆன்மீக வழிகாட்டியாய் அருட்பணி ஆற்றுகின்றார். உண்மையான பூலோகப் பள்ளி என்பது சற்குருவின் அருட்பரிபாலனமே என்பதைத் தலையில் குட்டிச் சுட்டுவதே இந்த குருகுலவாச அனுபூதிகளாம்!
“தான் இரவு முழுதும் அஷ்டதிக்கு நாகத்தின் மடியிலா படுத்திருந்தோம்....!  நிச்சயமாக இருக்க முடியாது? இது ஒரு மாயைதான், கனவுதான்!” சிறுவன் தன் மனதைப் போட்டுக் குழப்பிக் கொண்டான்!
“அந்த பெரிய பாம்புதான் நாகலோகத்துப் போயிடுச்சேடா...” என்று சொல்லி நாகம் வந்து சென்றதாகப் பெரியவரே verdict கொடுத்துமா சிறுவனுக்கு இன்னமும் சந்தேகம்! சற்குரு அருகில் இருந்துமா அந்த சந்தேகம் தீரவில்லை! இதுதானையா கலியுகம்! இறைவனே அருகில் வந்தாலும் அருமை தெரியாது!
“இதுதாண்டா கலியுகம்! இந்த மாதிரி சந்தேகப் பிராணிங்க இருக்கறதுனாலதாண்டா மழை பெய்ய மாட்டேங்குது!..நாகங்கள் சத்யத்துக்குக் கட்டுப்பட்டதுடா.. நாகதேவதைகூட ஏடாகூடமா எப்பயாவது தப்பு செஞ்சிடும்...!  அப்ப அதுகளுக்கும் சாப விமோசனம் வேணுமே! என்ன செயறது? நாக தோஷத்துக்கு, நாக சாபத்துக்குன்னு நம்ப பூமிலதாண்டா நெறய சாப நிவர்த்தி வச்சுருக்காங்க. ஆனா மனுஷனாப் பொறந்தவங்களுக்கு இந்த தெய்வீக பூமியோட value  தெரியலை! நீ பாத்த நாகமிருக்கே, அதோட தலை உயரமே முப்பதடி! ஆனா... ரொம்ப சாது! நாக சந்நியாசின்னு கூட அதச் சொல்லலாம்! ஏன்னா தன்னோட குலப் பாம்புகள் செய்யற தப்புக்கெல்லாம் Group கர்ம பிராயசித்தமா அது இங்க வந்து சோறு தண்ணி இல்லாம ரொம்ப நாளா தபஸ் கெடந்ததுடா..! நாகங்களுக்குக்கூட விரதமெல்லாம் உண்டு! அண்ணாமலய கிரிவலம் வர்றவங்க கால் பட்டாத்தான் அதுக்கு சாப நிவர்த்தி! முப்பதடி உயர பாம்பை யார்றா தைரியமா மிதிக்க முடியும்! பாத்தாலே பயந்து ஓடிப் போய் ஆளக் கூட்டிக்கிட்டு வந்து Shoot பண்ணிடுவாங்களே! இப்பக்கூட அண்ணாமலைய கிரிவலம் வர்ற அடியார் திருப்பாதம் பட்டுச்சுன்னா, எந்த ஜீவனுக்கும் முக்திடா! அந்த மாதிரி திவ்யமான அருணாசல பூமிடா இது!”
பெரியவரின் கண்களில் ஆனந்த புஷ்பவாரியாகக் கண்ணீர் திரண்டோடியது. அருணாசல மஹிமை அல்லவா. பரமானந்த வெள்ளம் அல்லவோ அது!
“தன்னோட குலத்தைக் காப்பாத்தறுக்கு அந்த முப்பதடி நாக தேவதை தம் மேல கிரிவல அடியார் பாதம் படணும்னு வேண்டிச்சு! அதோட குலத்துல லட்சக்கணக்கான பாம்புகளுக்கு உடனே விமோசனம் கெடைக்குமே! ஆனா இதுக்காக அது கிரிவலப்பாதைல படுத்துக் கெடந்தா நம்ப ஜனங்க அதத் துண்டு போட்டுடுவாங்களே! என்ன பண்றது அதோட Chief ஆன அஸ்தீக சித்தரை Contact பண்ணினாங்க! நமக்கு சித்த லோகத்துலேந்து இந்த விஷயம் நேத்திக்கே Faxல வந்துடுச்சு (சிரிக்கிறார்) அப்பறமென்னடா மத்ததெல்லாம் நம்ப கூத்துதான்! இதுலேந்து என்ன தெரிஞ்சுண்ட...! நீ இங்க வந்தது, ராத்திரில பாம்பு மடில படுத்தது எல்லாம் அஸ்தீக சித்தரோட திருவிளையாடல், புரிஞ்சுதா? ஆனா, தெய்வீகம்னாலே நெறய பிரச்சனை வரும்டா! குரு பக்கத்துல இருந்தா அவருக்குத் தெரியாத risk எதுடா இருக்கு! ஏன்னா, சாதாரண மனுஷன்னா பரவாயில்லே ஒண்ணும் தெரியாதுன்னு விட்டுடலாம். ஆனா.. குருன்னு ஒருத்தர் வந்துட்டார்ன்னா... தெய்வீகத்துல Negative forcesஐ எதிர்த்து fight பண்ணிக்கிட்டே இருக்கணும்!.... இல்லாட்டி negative forceதான் உலகத்துல பெருத்துப் போயிடும்! இந்த மாதிரி தீய சக்திகளை எதிர்த்து fight பண்றதுதான் தியாகம். இதுலதாண்டா தெய்வீகமான ஆத்ம சந்தோஷம், ஆத்ம சுகம் கிடைக்கும். ஆனா.. ஆன்மீகத்துல 24 மணி நேரமும் ஜபம், தபஸ், யோகம்னு எப்பவும் செஞ்சுகிட்டு negative forceஐ fight பண்ணியாகனும், இப்படிப் பாத்தாக்க ஒவ்வொரு மகானும், யோகியும், ராணுவம் மாதிரி தீய சக்திகளை மாய்க்கற சாத்வீகமான divine generalலா வேலை செய்யறாங்க..! ”
பெரிதாகச் சிரிக்கின்றார்! What a paradox! சிறுவனுக்கு இது ஒரு புதுப் பாடமாக இருந்தது உங்களுக்கும் தானே!
“ஆனா ஒண்ணு புரிஞ்சுக்கட ராஜா.... எப்படி புலித்தோல் மேல உக்காந்து ஜபம் பண்ணினா யோக சக்தி பெருகிப் பெருகிக் கூடுதோ... அதமாதிரி நீ ராத்திரியெல்லாம் உன்னையும் அறியாம நாகத்துமேல படுத்து ககன யோகம் பண்ணி, அதுவும் புலித்தோல்ல உக்கார்ற மாதிரி, அந்தக் குடகு நாகத்து மேல சயனம் பண்ணினியே இதுக்கு தெய்வீகத்துல reward என்ன தெரியுமா?... ஆதிசேஷன் மேலே சயன யோகத்துல இருக்கற ஸ்ரீரங்க நாதரையே இஷ்ட மூர்த்தியா வச்சு பூஜை செய்யற பாக்யம் உனக்கு கெடச்சாலும் கெடைக்கும் , அப்படி கெடச்சா விட்டுடாதே.!” என்று சொல்லிப் பெரியவர் கண்களைச் சிமிட்டினார்.!
(பெரியவர் தீர்க்க தரிசனமாகச் சொன்னது போல பிற்காலத்தில் சிற்வனுக்கு அனந்த சயன யோக நிலையிலான ஸ்ரீரங்கநாதருடைய சிலாரூபம் கிடைக்கப் பெற்றுத் திருமால் வழிபாட்டில் செழித்து, அந்த ஸ்ரீரங்கநாதரே இன்றும் திருஅண்ணாமலை ஸ்ரீ-ல-ஸ்ரீ லோபா மாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தின் ராஜகோபுர மூலஸ்தானத்திலிருந்து அனந்த சயன யோக நிலையில் திருஅண்ணாமலையாரை எந்நேரமும் தரிசித்துப் பூஜித்துக் கொண்டிருக்கின்றார்!
இன்றைக்கு ஆஸ்ரமமும் எத்தனையோ கஷ்டங்களுக்கிடையில் ஓரளவு உருவாவதற்கு முன், அன்னதான உணவுப் பண்டங்கள், அரிசி மூட்டைகள், இலைகள், காய்கறிகள், விறகு, பாத்திரங்களுக்கு இடையில் இருக்க இடமின்றித் தூசி, தும்பை போன்றவைகளுக்கிடையில் சிரமங்களைப் பொறுத்து அருள்பாலித்த ஸ்ரீரங்கநாதருக்குத் தற்போதுதான் ஏகாந்தமான தனியிடம் கிட்டியிருக்கிறது, அதுவும் அண்ணாமலையாரின் நேத்திரப் பார்வையில்! )
“எல்லாருக்கும் இந்த பாக்யம் கெடச்சுடாதுடா... அதுக்கெல்லாம் அப்பப்ப... சற்குரு கூடவே இருந்து அனுக்கிரகம் பண்ணனும்..” அந்த குடகு நாக ஸ்பரிசத்தால் சிறுவனுக்குப் பெறுதற்கரிய யோக சக்திகள் கிட்டின அல்லது பெரியவர்தான் சற்குருவாய் பல அரிய அருளாசிகளைக் ஐஸ்வர்யமாகக் கொட்டினாரோ! குறிப்பாக ககன மார்க்க யாத்திரையில் (astral travel) விண்ணில் பல நாக லோகங்களைக் கடந்து செல்கையில் பல அற்புதமான நாக தேவதா தரிசனங்கள் கிட்டும் . இந்த தரிசன பலனகளெல்லாம் உத்தம நாக லோகங்களான ஆதிசேஷலோகம், வாசுகி லோகம் போன்றவற்றிற்குச் செல்வதற்கான visa entry மாதிரி. எந்த நாக லோகத்துக்கும் எவ்விதத் தடங்கலுமின்றிப் போய்வந்திடலாம்! எதற்கு! நாகலோகத்திலிருந்து அபூர்வமான வைத்ய சிகிச்சை முறைகளை ஆசியாகப் பெற்று ஜீவன்களுக்குச் சேவை புரிந்திடத்தான்.. சுயநலத்திற்காக அல்ல! ககன யோக யாத்திரை (astral travel) மற்றும் பலவிதமான யோக மார்க்கங்களில் சூட்சும சரீர அல்லது ஆத்ம பந்தன யாத்திரை சென்றிடுகையில் அஷ்டதிக்கு நாக லோகங்களின் வழியே சில சமயங்களில் செல்ல நேரிடும். ஆங்காங்கே உள்ள நாகதேவதைகள் தக்க அனுமதியும், நல்வரங்களும் அளித்தால்தான் அதற்கு மேலே செல்ல முடியும், இல்லையேல் திரும்பி வந்துவிட வேண்டியதுதான்.! சிறுவனுக்கு திருஅண்ணாமலை கிரிவலத்தில் அன்று பெரியவர் குடகு நாக தேவ மூர்த்தியின் தேவ தரிசனத்தைப் பெற்றுத் தந்ததோடு பெறுதற்கரிய நாக சயன யோக நிலைகளையும் பெற்றுத் தந்தார். ஏன், எப்படி?
இரவு முழுதும் நாகத்தின் மடியில் உறக்கம் கொண்டிருந்த சிறுவனின் உடல் ஐஸைப் போல சில்லென்றிருந்தது, அதனைச் சிறுவன் நெடுநேரம் கழித்தே உணர்ந்திட்டான். உலக மகா ஐஸ் ஜில் அது! அதுவும் பெரியவர் அவன் உடலைத் தொட்டு “என்னடா இது... ஒடம்பு இப்படியா சில்லுனா இருக்கும்... ஓஹோ!.... ஐயா ராத்திரி astralல்ல நாகலோகம் போய்ட்டு வந்துருக்காரு போல இருக்கு! அடேங்கப்பா... நாகலோகம் போய்ட்டு வரதுன்னா எவ்வளவு பெரிய விஷயம்! அதுவும் இந்த சின்ன வயசுல போய்ட்டு வரதுன்னா அண்ணாமலையார் எவ்வளவு அனுக்கிரகம் பண்ணியிருக்கணும், நெனசுப்பாரு...” என்று சொல்லியபோது தான்! குருவின் நேர் மேற்பார்வையில் அமைந்த இந்த சயன யோகப் பாடத்திற்குப் பிறகுதான் சிறுவனுக்குப் பல அற்புதக் காட்சிகள் தெளிவுபடலாயின. ஸ்ரீஅய்யர் மலையில் நவரத்ன நாகம், நாகர் கோயில் பைரவ நாகம், திருவொற்றியூர் வாசுகி நாகம், பரிதிநியமம், சாக்கோட்டை, திருநின்றவூர் (சென்னை) போன்ற திருத்தலங்களின் நிலவறைகளில் உள்ள அரிய காவல் தேவ நாகங்களின் தரிசனம் கிட்டியது. இவையெல்லாம் தீர்க்க தரிசனத்திற்கும், நவரத்ன ஜோதிட தீர்க்க நேத்ர லாவண்ய சக்திக்கும் பெரிதும் உதவுபவை. ஜோதிடக் கலையாக பணம் சம்பாதிப்பதற்கும் ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது என்ற சங்கல்பத்தையும் குருவின் திருவடிகளில் சிறுவன் மேற்கொண்டான். பாரதமெங்கும் பெரியவருடன் எத்தனையோ திருத்தலங்களுக்குக் கால்நடையாகவே சென்ற சிறுவன் ஆங்காங்கே பல இடங்களில் மரத்தடியில் பெரியவர் உறங்கும்போது அவருடைய உடல் சில்லிட்டிருப்பதைக் கண்டு முதன் முதலில் பயம் கொண்டான். ஆனால் பெரியவர் தன்னை என்றுமே சித்புருஷரென வெளிக் காட்டிக் கொண்டது கிடையாது. எப்போதாவதுதான் சூட்சுமமாக அதைப் பற்றிச் சொல்லுவார். ஆனால் போகப் போகத்தான் அவர் உடல் ‘ஜில்’லென்று இருக்கும் பொழுதெல்லாம் இந்த ‘உடலை‘ விட்டுக் கூடுவிட்டுக் கூடு பாயும் ‘ககன’ யோக மார்க்கமாக வெளிச் சென்று சூட்சும சரீரத்தில் பயணம் கொள்வதைத் தானாகவே உணர்ந்தான்.

“என்னடா பெரிய தூக்கம்!...... சாதாரணமா ஆறு, ஏழு மணி நேரம் தூங்கினாத்தான் ஒடம்புக்கு ரெஸ்ட், இல்லேன்னு சொல்லலை. ஆனா தெய்வீகத்துக்குன்னு ஒவ்வொரு செகண்டும் (second) நீ பாடுபட்டியானா கடவுளே அந்த ஏழுமணி நேர ரெஸ்டை ரெண்டு மணிநேர தூக்கத்துலேயே கொடுத்துருவார்டா! ஆனா.... உண்மை பக்தியோட தெய்வீகத்துக்கும் பாடுபடணும்...” A Sweeping divine Statement on Tweaking Sleep!

ஸ்ரீகருப்பண்ண சுவாமி
பழைய குற்றாலம்

பல ஆண்டுகளுக்கு முன் மானசரோவர் திருக்கயிலாயம் (Mount Kailash) யாத்திரையின் போது கூடப் பெரியவருடன் திருக்கயிலாயத்தையே கிரிவலம் வருகின்ற பாக்யத்தைச் சிறுவன் பெற்ற போது, எத்தனை அற்புதமான நாக தரிசனங்களைக் கண்டான். அவற்றின் அருகில் பெரியவர் சாந்தமாக அமர்ந்துகொண்டு அவற்றுடன் நாக பாஷையில் பேசிடுவார். அவற்றிற்கு விபூதி, குங்குமமும் இட்டிடுவார் பெரியவருடைய கருணையால் காஷ்மீரத்தில் ஸ்ரீவைஷ்ணவி தேவி ஆலயம், ஸ்ரீஆதிசங்கரர் அமர்ந்த சரஸ்வதி பீடம்., கேதார்நாத் ஆலயத்தின் பின்புறமாகப் பத்ரிநாத் செல்லும் கரடுமுரடான ரகசியமான மலைப் பாதையில்தான் பெரியவரோடு சிறுவன் பத்ரிநாத் சென்றான்.. பிறகு இப்பாதை மூடப்பட்டுவிட்டது., அப்பப்பா... சற்குருவோடு செல்லும் போதுதான் எத்தனை, எத்தனை இனிய அனுபவங்கள்! அங்குகிருந்து நேபாளம்... திருக்கயிலாயம், அக்காலத்தில் நேபாளம் திருக்கயிலாய யாத்திரைப் பகுதி மிகக் கடினமாக இருந்தது, ஆனால் இப்போது இருப்பது போல கெடுபிடிகள் அப்போது கிடையாது. யாத்திரிகர்களை மதித்த காலமது!
குற்றாலத்தில் பழைய அருவிக்குச் செல்லும் வழியில் மிகவும் சக்தி வாய்ந்த பழமையான ஸ்ரீசங்கிலி கறுப்பர் சந்நதி உண்டு. பெரியவரின் கருணையால் இங்கும் அழகர் கோயிலிலும் ஸ்ரீசங்கிலிக் கறுப்பர் மற்றும் பதினெட்டாம் படிக் கறுப்பர் மூர்த்திகளின் திவ்ய தரிசனங்களையும் சிறுவன் பெற்றான். அனைத்தும் பெரியவரின் அருட்பெருங்கருணையால் தான்! இதுமட்டுமா பெரியவருடைய சமுதாயப் பணிகளும் எத்தனையோ உண்டு. ஒரு முறை ராயபுரம் போகும் வழியில் விடியற்காலையில்.... ஒரு ஆஸ்பத்திரி குப்பைத் தொட்டியருகே வெளியில் குழந்தையை யாரோ போட்டு விட்டார்கள்.. “குவா.... குவா...” என்றலறிய அதனை லாவகமாகத் தூக்கிக் கொண்ட பெரியவர் விடுவிடு என்று நடந்தார்.. நடந்தார்..... நடந்து கொண்டே இருந்தார்.., சிறுவன் அவர் பின்னால் ஓடி ஓடிக் களைத்து விட்டான். மார்கழிப் பனிவேறு உடலை முள்ளாய்க் குத்தியது. “ஆமாண்டா.... சமுதாயப் பணின்னா இப்படித்தாண்டா ஓடி, ஓடி ஒழைக்கணும்!” வழியில் இரண்டு மூன்று இடங்களில் டீக்கடைகளில் சுத்தமாகக் காய்ச்சியப் பசும்பாலை வாங்கிக் குழந்தைக்கு மிகவும் லாவகமாக, பக்குவமாக புகட்டினார்..
‘இந்த கெழவருக்குத் தெரியாத வித்தையே கெடையாது!‘ சிறுவன் ஆச்சரியப்பட்டான்.
நடையோ நடையென்று உலகமெலாம் சுற்றியது போல் அவர்கள் திருவொற்றியூர் எல்லையைத் தாண்டினர். அங்கு ஒரு வீட்டருகே தெரு முனையில் குழந்தையை ஒரு வாழை இலையில் கிடத்தி சாலையோரத்தில் வைத்து விட்டார். அந்தக் காலை ஆறுமணி நேரத்தில் பெரியவருக்கு இந்த வாழை இலை எப்படி வந்தது? தஞ்சாவூர் தாட்டிலை போல் நன்றாகப் பெரிதாக இருந்தது! பெரியவர் சிரித்துக் கொண்டே வானத்தைக் காட்டினார்.. பிறகு சிறுவனை இழுத்துக் கொண்டு சற்றுத் தள்ளி நின்றார்.
“கொஞ்சம் இருடா, கொஞ்ச நேரத்துல இங்க ஒரு மாட்டு வண்டி வந்தவுடனே நகண்டுடலாம்!” சொல்லி வைத்தாற்போல் சற்று நேரத்தில், அங்கு மாட்டு வண்டியில் வந்த குடும்பம் ஒன்று, அக்குழந்தையைக் கண்டு ஆனந்தம் பொங்க எடுத்து அள்ளி அரவணைத்துக் கொண்டது!
“யார் பெத்த பிள்ளையோ! நமக்கு வடிவாம்பா கொடுத்துட்டா!” மாட்டு வண்டி நகன்றது!
“ எது எது எங்க எப்படி நடக்கணும்னு தெரிஞ்சு, அது நடக்கறதுக்கு ஒரு படைப்புச் சிறு இறைக் கருவியா இருக்கறதுதாண்டா சித்தர்களோட சாமுத்ரிகா லட்சணம்!” பெரியவர் அங்காளி கோயிலை நோக்கி நடக்கலானார். அப்பப்பா! இவரால் எப்படி இத்தகைய அற்புதங்களை எல்லாம் சாதித்துவிட்டுக் கோவணாண்டியாய் ஒன்றும் தெரியாதவர் போல் சாந்தமாக இருக்க முடிகிறது! சிறுவனின் மூளையில் எப்போதும் கு(கொ)தித்துக் கொண்டிருக்கும் விடையில்லாக் கேள்வி இது!

தென்காசி மகாத்மியம்

தென்காசி மகாத்மியத் தொடர் – திருநறையூர்
வெற்றிக்கு வடிவழகு தரும் தென்காசி தேவா போற்றி! போற்றி!!
எக்காரியத்திலும் வெற்றிக்கு வடிவழகு கூட்டுவதாக சுபகாரிய லட்சணங்கள் நிறைந்ததாக காரியசித்தி பலன்களை முழுமையாகத் தந்திடவே தென்காசியில் ஸ்ரீகாசிவிஸ்வநாத மூர்த்தி நமக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார். ஒவ்வொரு மனித உடலிலும் தச (பத்து) வாயுக்கள் பரிமாணமாகியுள்ளன. கருவில் கூடும் இந்த பத்துவாயுப் பரிமாணங்களையும் பிரம்ம தேவ வாயு மூர்த்திகள் குழந்தையின் உடலில் அவரவர் விதிக்கேற்ப நன்கு பொருத்தி அருள்கின்றனர். அதன்பின் இந்த தசவாயுக்களை நன்முறையில் நிலைநிறுத்துவதாகத் தான் அக்குழந்தையை சீராட்டி வளர்க்கின்ற பெற்றோர்களின் தொண்டாக அமைகின்றது. பிள்ளைப் பருவத்தில் பலவிதமான வழிபாட்டு முறைகள், யோகாசனங்கள் மூலமாக இந்த வாயுபந்தன முறைகள் நன்முறையில் கட்டிக்காக்கப்பட வேண்டும். எனவே வெற்றிக்கு வடிவழகு கூட்டுவது என்பது சிறுபிராயத்திலேயே துவங்க வேண்டிய தெய்வீக வாழ்க்கைப் பணியாகும்.

இளவயதில் விட்டதை ஈடு செய்யவே தசவாயுயோக பந்தனப் பலன்களாக பல ஆலய வழிபாடுகளைப் பெற்றுள்ளோம். நமக்குப் பத்து விரல்களைக் கைகளிலும் கால்களிலும் படைத்த இறைவன் இதனால் பத்துவிதமான சூட்சும வாயு யோக நிலைகளை நம்வாழ்வில் உணர்த்துகிறான். இதையே சித்புருஷர்கள் “பத்துச் சுவர் தாண்டி பரப்ரம்ம தீர்த்தம்” என்று பரிபாஷைப் பொருளாக உணர்த்துகின்றார்கள். அவர்கள்  குறிப்பிடுகின்ற பத்துச் சுவரும்தான் இந்த தசவாயு யோக பந்தனங்களாகும். ஒவ்வொரு நாளத்திலும் இவ்வாயு பந்தனங்கள் நிறைந்துள்ளன என்பது நீங்கள் அறியாத தெய்வீக ரகசியம். இவையெல்லாம் தக்க சற்குரு மூலமாக நேரடியாகப் பெற வேண்டியதாம். ஔவைப் பிராட்டியார் தம் விநாயகர் அகவலில் ஓதுகின்ற காலாலெழுப்பிக் கருத்தறிவித்தல் என்பதில் உள்ள வாயு பந்தன யோக சக்திகயைப் புலப்படுத்தவே ‘உச்சி’ மண்டையில் எண்ணெய் தேய்த்துக் கட்டைவிரலை அழுத்தி நடக்குமாறு நம் எண்ணெய் நீராட்டுப் படலமாக பெரியோர்கள் அறிவுறுத்துகின்றார்கள். தென்காசி திருத்தல தரிசனத்திற்கு முன் நாம் கண்டு வழிபட வேண்டிய பத்தாவது திருத்தலமே  கும்பகோணத்திலிருந்து நாச்சியார் கோயில் சாலையில் உள்ள திருநறையூர் (திருநறையூர் சித்தீஸ்வரம்) தலமாகும். சித்த நாதேஸ்வரராகவும், வேதீஸ்வரராகவும், சௌந்தர நாயகி அம்பிகையுடன் சிவன் அருள்பாலிக்கின்ற திருத்தலம்.  இங்குதான் பிரம்ம மூர்த்தி வழிபட்டுத் தம் சிருஷ்டிகளுக்குத் தேவையான தசவாயு பந்தன ரகசியங்களைப் பெற்றுச் சிருஷ்டியைத் துவங்கினார். ஒவ்வொரு மனிதனும் (நரனும்) நிச்சயமாக உலகில் வழிபடவேண்டிய திருத்தலம் ஒன்று உண்டு எனில் அது திருநறையூர் சித்தநாதேஸ்வர சிவாலயமாகும்.
பிரம்ம தரிசனப் புஷ்பம் என்ற ஒரு பூவை பற்றிக் கேள்விப்பட்டுள்ளீர்களா? பவள மல்லிக்குத்தான் இப்பெயர் சூட்டப் பெற்றுள்ளது. விடியற்காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மலரும் இப்புஷ்ப தரிசனமே நமக்குப் பலவிதமான யோக சக்திகளைப் பெற்றுத் தருகிறது.. தேவலோகத்திலிருந்து ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவினால் பூலோகத்திற்குக் கொண்டு வரப்பட்ட பவளமல்லிப் புஷ்பமே திருநறையூர் சிவத்தலத்தின் ஸ்தலவிருட்சம். குபேர மூர்த்தி சிவபெருமானிடமிருந்து பொன் வில்வ சாரத்தைப் பெறுவதற்காகப் பவளமல்லி கொண்டு இம்மூர்த்தியை அர்ச்சித்தார். சிவபெருமானின் ஐந்துவித முக்கிய மூர்த்தங்களாக ஸ்ரீஅர்த்த நாரீஸ்வரர், ஸ்ரீபிட்சாடனர், ஸ்ரீலிங்கோத்பவர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீவீரபைரவர் ரூப தரிசனங்களே மகத்தான பஞ்சபூத சக்திகளை அளிக்கின்றன, தசவாயு பந்தனங்களை நன்முறையில் சீரமைத்துத் தருகின்றதே  இச்சிவத்தலமாகும். நாம் எடுத்துச் செய்யும் நற்காரியத்தில் நமக்கு ஏற்படுகின்ற பலவிதமான ஆபத்துகள் பணக் கஷ்டங்கள், பொருட் கஷ்டங்களைத் தாங்கிட வாயு பந்தன யோக நிலைகளே பெரிதும் உதவும். இந்த யோக சக்தியைத் தற்போது பலரும் பெறாமையால் தான் high B.P , low BP  இருதயக் கோளாறுகள் போன்றவற்றிற்கு மனிதகுலம் ஆளாகிறது. எதிலும் முழுமையான வெற்றியைப் பெற முடியாமல் போகிறது. எனவே வெற்றிக்கு வடிவழகு பெறுவதற்கான வாயுச் சலன யோகக் கதிர்களை, தசவாயு சக்திகளைப் பெறுதற்காக தென்காசி ஸ்ரீகாசி விஸ்வநாதரை தரிசிக்கும் முன் பத்தாவது திருத்தலமாக கும்பகோணம் அருகிலுள்ள திருநறையூர் சிவநாதேஸ்வர மூர்த்தியைக் கண்டிப்பாக வழிபட்டாக வேண்டும் மனித வடிவில் இங்கு பூஜை செய்தற்கு அதியற்புத பூஜா பலன்கள் கிட்டும் என்பதற்காகத்தான் சித்புருஷர்கள் உட்பட முப்பத்து முக்கோடி தேவ மஹரிஷிகளும் நர (மனித) ரூபத்தில் வந்து தரிசிக்கின்றனர் என்றால் மானுடராகப் பிறந்த நாம் இச்சிவத்தலத்தை தரிசிக்க என்னே பெரும் பாக்கியம் பெற்றிருக்க வேண்டும்! வெற்றிக்கு வடிவழகு தரும் தென்காசி தேவ ரூப சித்தநாதேஸ்வர நாதனே போற்றி! போற்றி!! போற்றி!!!

சாத்தமங்கலம் மரகதலிங்கம்

சாத்தமங்கலம் மரகத லிங்க மகிமை – (வில்வ த்ரிராத்திரி விரத மஹாத்மியம்)
திருச்சியிலிருந்து லால்குடி வழியாக சாத்தமங்கலம் செல்லும் பேருந்தில் சென்று சாத்தமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால், சென்னி வாய்க்காலில் உள்ள ஸ்ரீசுந்தரேஸ்வரர் சிவாலயத்தை அடையலாம்.. குபேர பகவானின் திருப்புதல்வர்கள் கடைபிடித்து போல, திருஅண்ணாமலையைக் கிரிவலம் முடிந்தவுடனேயே, நேரே சாத்தமங்கலம் சென்று ஸ்ரீசுந்தரேஸ்வரரை வழிபட்டுத் தம் பணக்கஷ்டங்களுக்குத் தக்க தீர்வுகளைக் காணலாம். மேலும் நல்ல செல்வம் பெற்றிருந்தாலும் , மன நிம்மதியின்றி வாழ்வோர் ஏராளம். இதற்குக் காரணம் தமக்குப் பூர்வீகமாகச் சேர்ந்த சொத்து முறையாக சம்பாதிக்கப்படாது இருந்திருக்க கூடும் அல்லது பூர்வீகமாக வந்த (மூதாதையரின்) சொத்தில் குறிப்பிட்ட அளவை தான தர்மத்திற்குச் செலவிடாது, தம் சுயநலத்திற்காகப் பயன்படுத்தினாலும், பணக் கஷ்டம் இல்லாவிடினும், மனக் கஷ்டம் நிறைய வந்து சேரும். இத்தகைய தன தோஷங்களால் பிற்காலத்தில் மீளமுடியாப் பெரும் பணக் கஷ்டம் ஏற்படும்.

வில்வமரம் சென்னிவாய்க்கால் லால்குடி

அதர்மமாக வந்த பணத்தில் விளையும் தோஷங்கள்  வியாபாரம், தொழில், பதவி போன்றவற்றில் லஞ்சம் மூலமாகவும் அதர்ம முறையிலும், முறையற்ற வகையிலும் பணம் சம்பாதித்தோருக்குக் கடும் சாபங்கள் எதிர்நோக்கியுள்ளன. இவ்வாறு அதர்ம ரீதியில் பெற்ற பணமானது அவர்களிடம் இருக்கும்வரை அவர்களுக்கும், அவர்தம் சந்ததிகளுக்கும் நிச்சயம் துன்பங்களையே அளிக்கும். அதர்ம வழியில் சொத்துகளையும், செல்வத்தையும் சேர்த்தோர் இதற்குப் பிராயசித்தமாக சாத்தமங்கலம் ஸ்ரீசுந்தரேஸ்வரர் சிவ ஆலயத்திற்குத் தேவையான இறைத் திருப்பணிகளைப் பரிபூரண மனத்துடன் செய்து வந்தால், அவர்கள் சொத்தில் படிந்துள்ள அதர்ம அவலட்சணங்கள் நீங்கி நன்முறையில் வாழ அறவழிவகைகள் கிட்டும். லக்ஷ்மி கடாட்சம் பெறும்முன் ஸ்ரீகுபேர பகவானின் ஆசியை நிச்சயமாகப் பெற வேண்டுமென்பதை இதன் மூலம் அறிகின்றீர்களல்லவா? எனவே குபேர பகவானின் அருட்கடாட்சம் பெறுவதற்கு இத்திருத்தலம் பெரிதும் உதவுகின்றது. ஆரோக்கியமின்மை காரணமாக மூன்று நாள் த்ரிராத்ரி விரதமிருந்து இத்திருத்தலத்தை தரிசிக்க இயலாதோர் வில்வத்ரிராத்ரி தினத்தன்று மட்டுமாவது உபவாசமிருந்து வில்வம் ஊறிய நீரை அருந்தி (சென்னிவாய்க்கால்) சாத்தமங்கலம் ஸ்ரீசுந்தரரேஸ்வரரைத் தரிசித்து, பொன் வில்வ சாரமாக, குபேர சம்பத்தாக விளங்கும் வில்வதள ஸ்தல விருட்சத்திற்குத் தாமே அரைத்த மஞ்சள், குங்குமம் , சந்தனம் இட்டு அடிப்பிரதட்சணமாக 108 முறை பிரதட்சணம் செய்து, வழிபட்டு பச்சை நிறக் காய்கறிகளை நன்கு சமைத்துப் படைத்து அன்னதானமாக அளித்திட வேண்டும்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
சென்னிவாய்க்கால் லால்குடி

இங்கு பச்சை நிற ஆடை தானம் மிகவும் விசேஷமானதாகும். ஏனெனில் இத்தலத்தில் செய்யப்படும் தானங்களுக்கு மரகத சுயம்பு லிங்கத்தின் ஆகர்ஷண சக்தியே பணத்தில்/மனதில் உள்ள பல தோஷங்களை நிவர்த்தி செய்ய உதவும். மன/பண தோஷங்களை நிவர்த்தி செய்யவே மரகதக் கல் (பச்சை நிறக்கல்) மோதிரங்களை அணிகின்றோம்! நகை வியாபாரிகளுக்கு பச்சை நிறத்திற்கு உரித்தான புத பகவானின் நாளான புதனன்று வெண்டைக்காய், கோவைக்காய், கீரை வகைகள், பச்சைப் பயிறு, பச்சை நிறப் புடலங்காய், அவரை, பீன்ஸ் போன்ற பச்சை நிறக் காய்கறிகளை சமைத்து அன்னதானம் தொடர்ந்து செய்து வந்திடில் அதர்மமாகச் சம்பாதித்த பணத்தின் தோஷங்கள் சிறிது சிறிதாக விலகும். மேலும், தங்களுடைய பிறந்த நாளுக்கேற்ப பச்சை நிறத்திலான மோதிரம், தோடுகள், கடுக்கன்கள் அணிய விரும்புவோர், ஸ்ரீசுந்தரரேஸ்வரின் திருவடிகளில், சார்த்தி அவற்றை ஆபரணங்கள், கற்களில் உள்ள தோஷங்களுக்கு நிவர்த்தியைப் பெற்று நன்முறையில் குபேர நிதி கடாட்சத்தைப் பெற்றிடலாம். பொதுவாக, பொன், வெள்ளி நவரத்தின வியாபாரிகளுக்குரித்தானதாக விளங்கும் இத்தலம் இதுவரை பலரும் அறியாத அதியற்புதத் தலமாகும். கலியுகத்தில் இவ்வாறாகத்தான் சூட்சுமப் பொலிவுடன் விளங்கும் அருட்தலங்கள், சற்குருவின் அருள்வாய் மொழிகளாக அவ்வப்பொழுது எடுத்துரைக்கப்படுகின்றன.

சென்னிவாய்க்கால் லால்குடி

வில்வத் த்ரிராத்ரி விரத நாளன்று அன்று இங்கு ஸ்ரீசுந்தரரேஸ்வரரான மரகதலிங்கப் பச்சை மூர்த்திக்கு அரைத்த சந்தனத்தால் சந்தனக் காப்பு, சந்தன அபிஷேகம் (சந்தனத்தைப் பவுடராகக் கரைத்தல் கூடாது), பலவகைப் பழக்காப்புகள், குறிப்பாக மாதுளம் பழக் காப்புடன், தும்பை, கதம்பப் பூக்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும் (கனகாம்பரம் போன்ற வாசனையற்ற மலர்களைத் தவிர்க்கவும்..) இங்கு பட்டு வஸ்திரம் சாற்றி அவற்றை ஏழைகளுக்குத் தானமாக அளித்தலால், லிங்கோத்பவ மரகத சக்தியானது இதுவரை பட்டாடைகளை உடுத்தியதால் விளைந்துள்ள தோஷங்களுக்கு நிவர்த்தித் தரும்.. ஆனால், தொடர்ந்து செய்து வருதல் வேண்டும். பட்டாடை உடுத்திய தோஷத்திற்கு நிவர்த்தி வேண்டிய பின்னர் பட்டாடைகளை மீண்டும் வாழ்வில் பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால் பட்டு ஆடைகளை உடுத்துவதால் ஏற்படும் தோஷங்களுக்கு ஏதோ ஒருசில நிவர்த்திகளே உள்ளன! அவற்றையும் குருமூலமாகப் பெறுதல் வேண்டும். இத்தகைய அரிய நிவர்த்திகளுள் ஒன்றே வில்வ தள த்ரிராத்ரி விரத நாளாகும். எனவே தாங்கள் இதைப் படிப்பது மட்டுமல்லாமல், பலருக்கும் இதன் மஹிமையை உணர்த்தி, அனைவரும் இப்பலா பலன்களை அடைய நீங்கள் அருட்பணி ஆற்றிட வேண்டும். இதுவே பொன் வில்வசார அபிவிருத்தித் தலம், மரகதச் சிவலிங்கத்தலம் என்பதை ஸ்ரீகுபேர மூர்த்தியே அறியாதிருந்து, அவருடைய புதல்வர்கள் மூலமாகவே அறிந்தமையால், இன்றும் ஸ்ரீகுபேர கடாட்சம் சூட்சுமமாக நிறைந்து விளங்குகின்ற தலமாக இது விளங்குகிறது. இதன் சிறப்பான வழிபாடு கலியுகத்திற்கெனப் படைக்கப்பட்டு அந்தந்த யுக நியதிக்கேற்ப சற்குருமார்களால் அருளப்படும் விசேஷ தலங்களுள் இதுவும் ஒன்றாகும்.. எனவே பௌர்ணமி அன்று திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருவோர், உடலில் ஏற்படும் களைப்பு காரணமாக வில்வ திரிராத்ரி விரதத்தைப் பரிபூரணமாக கடைபிடிக்க முடியாமல் இருக்கக்கூடும். எப்போதுமே நீண்ட நெடும் தல யாத்திரைகளுக்குப் பலவித சலுகைகள் உண்டு. எனவே வில்வ விரதத்தில் த்ரிராத்ரி தினத்தன்று அன்று திருஅண்ணாமலையை கிரிவலம் வருவோர். கிரிவலம் முடிந்தவுடன் நேரே சாத்தமங்கலம் சென்று ஸ்ரீசுந்தரேஸ்வரரை தரிசிப்பார்களேயானால், இதுவே குபேர புத்திரர்கள் கொண்ட அருட்சிவத்தல யாத்திரையாக விளங்குவதால், பலவிதமான பண/மனக் கஷ்டங்களுக்கும் நிவர்த்தியாக அமைகிறது என்பதை உணர்வீர்களாக!

ஸ்ரீதுர்கை சாத்தமங்கலம்

பொன் வில்வ சார தரிசனம் என்பது தேவலோகத்தில் எவருக்கும் கிட்டாத சொர்ண மய வில்வ தளமாதலால், கலியுக மக்களும் இதன் பலாபலன்களையும் அடையும் பொருட்டு ஸ்ரீலக்ஷ்மி தேவியே பொன் வில்வ சாரத்தை, வில்வ தல விருட்சமாக, இவ்வாலயத்தில் படைத்திருக்கின்றாள். ஒவ்வொரு வில்வதளத்திலும், ஸ்ரீலக்ஷ்மி தேவி உறைவதால், லக்ஷ்மி கடாட்சம் பொங்கித் ததும்பும் அற்புதத்தலமாக இத்தலம் விளங்குகிறது. ஸ்ரீகுபேர மூர்த்திக்கும், சிவபெருமான் அளித்த பொன் வில்வச்சாரமே கோடானு கோடி மடங்காய்ப் பெருகி இங்கு வில்வ ஸ்தல விருட்சமாய்ப் பெருகி இங்கு வில்வ ஸ்தல விருட்சமாய் விளங்குகிறது. இந்த வில்வ மரத்தின் விஸ்வரூபத்தை தரிசிப்பதற்கு உரித்தான ஸ்ரீலக்ஷ்மி நேத்ர கடாட்சத்தை நீங்கள் பெறுவீர்களேயானால் இந்த வில்வ விருட்சமானது. கோடானு கோடி கிளைகளுடன், பல தேவ லோகங்களையும் கடந்ததாக ஸ்ரீலட்சுமி லோகம் எட்டுமளவு மிகமிக உயரமானதாக விஸ்வரூபம் கொண்டு விளங்குவது கண்டு ஆனந்தக் களிப்படைவீர்கள்! ஸ்ரீகுபேர பகவானுக்கே முதலில் கிட்டாத தரிசனம்! எனவே இவ்வில்வ விருட்ச தரிசனமே உங்களுக்கு குபேர சம்பத்தையும், லக்ஷ்மி கடாட்சத்தையும் நல்கும் என்பதை உணர்வீர்களாக! அனைவராலும் நிச்சயமாக வழிபட வேண்டிய திருத்தலம். பண, மனக் கஷ்டத்தால் வாடுவோர் இவ்வாலயத்தில் எறும்புகளுக்கு அரிசி, நெய், சர்க்கரை கலந்த ரவையைத் தொடர்ந்து இட்டு வருவார்களேயானால் அக்கஷ்டங்களின்றும் மீளலாம். இங்கு பாம்புகளின் நடமாட்டம் அதிகமாதலால் மிகவும் கவனமாக இருக்கவும்.

ஸ்ரீகுபேரலிங்கம் திருஆனைக்கா

குபேர நாக தேவதைகள்!  தங்க, வைடூரிய , நவரத்தின மேனிகளையுடைய குபேர நாகதேவதைகள் உண்டு. இவை பிரபஞ்சத்திலுள்ள பல ஆலயங்களைக் காக்கின்றன. அவை குபேர லோக ரட்ச நாகங்களாக சுயம்பு மூர்த்திகளைக் காக்கும் பாக்கியத்தைப் பெற்றுள்ளமையால், குபேர சந்த்ர நாகங்களின் நடமாட்டம் இத்திருத்தலத்திலுண்டு. ஆதலால் ஜாக்கிரதையாக இருந்திடுங்கள். குபேர நாக தரிசனம் பெறுதற்கரியது! கலியுகத்தில் பாம்பு எனில் படையும் அஞ்சுமாதலால் இங்கு பாம்புகளிடம் எச்சரிக்கையுடன் இருத்தல் நலம்! ஸ்ரீஅஸ்தீக சித்தரே பிரபஞ்சத்தின் அனைத்து கோடி நாகலோகங்களிலுமுள்ள நாகங்களுக்கும் அதிபதியாதலால், “ஸ்ரீஅஸ்தீக சித்தாய நம: ஸ்ரீஅஸ்தீக சித்தரே போற்றி!” என்று இச்சித்த பெருமானின் திருநாமத்தை ஓதுவீர்களானால், அதுவே உங்களுக்குப் பெரும் இரட்சையாக பூமியில் மட்டுமின்றி என்றும் எந்த லோகத்திலும் விளங்கும் ஸ்ரீஅஸ்தீக சித்தர் யோக ககன யாத்திரையில் வந்து செல்லும் நித்திய பூஜைத்தலங்களுள் இதுவும் முக்கியமானதாகும்.
பழம்பெரும் திருத்தலமான இத்திருத்தல பூஜை முறைகளை லால்குடி ஸ்ரீசப்த ரிஷீஸ்வரர் ஆலயத்தைச் சார்ந்த குருக்களே கவனித்துக் கொள்கின்றார். பக்தர்கள் இனியேனும். இத்தலத்தின் மஹிமையை உணர்ந்து, இவ்வாலயத்திற்கான பிரதோஷம், சிவராத்திரி போன்ற உற்சவங்களையும் ஏற்படுத்தி இறைத் திருப்பணிகளையும் மேற்கொண்டு, ஆறுவேளை பூஜையுடன் அதியற்புத கலியுக இறைத் தலமாக இதனைப் பிரகாசிக்கச் செய்வீர்களாக! இத்திருக்கோயில் பற்றிய விவரங்களை லால்குடி அன்பர் ஸ்ரீ M. சுப்ரமணி (போன் : 9994211737) அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளவும். ஆலய தரிசனத்திற்கு முன்னரேயே குருக்களிடம் தெரிவித்துச் சென்றால்தான். ஸ்ரீசுந்தரேஸ்வரரை தரிசிக்க இயலும். பக்தர்கள் பெருமுயற்சி கொண்டால் ஆறுகால பூஜைகளுடன் பொலியும் அதியற்புதத் தலமாக இதனை மாற்றிடலாமன்றோ!

வில்வ த்ரிராத்திரி விரதம்
துன்பம் தராத செல்வம் வேண்டுமா! செல்வ இன்பம் தரும் செல்வச் சிவனை வேண்டுங்கள், வில்வ த்ரிராத்திரி விரதப்படி!! ஒவ்வொருவரும் முறையான, நிலையான செல்வத்தைப் பெறவும், இருக்கின்ற சொத்து தீயநெறியில் கரைந்திடாமல் நன்முறையில் விருத்தி அடையவும், ஸ்ரீகுபேர மூர்த்தி வழிபாடு மிகவும் முக்கியமானதாகும். இன்றைக்கும் தினந்தோறும் ஸ்ரீவைகுண்டத்தில் ஸ்ரீமந்நாராயண மூர்த்தியையும், திருமகளின் ஸ்ரீலோகத்தில் ஸ்ரீஅஷ்டலக்ஷ்மியையும் தரிசித்துப் பூஜிக்கின்ற பேறு பெற்றவரே ஸ்ரீகுபேர மூர்த்தி ஆவார். பணம் ஈட்டுவது பெரிதல்ல. அது முறையான செல்வமாக இருந்தால் தான், தர்ம வழிப்படிச் சென்று நமக்கு எவ்விதத் தீய கர்ம வினைகளையும் சேர்த்துத் தராமல் இருக்கும். இதற்கு ஸ்ரீகுபேர மூர்த்தி வழிபாடு பெரிதும் உதவுகிறது.

ஸ்ரீசங்கபதுமநிதி மூர்த்திகள் திருப்பனந்தாள்

அபார தனம் தரும் ஸ்ரீகுபேரன்! நிரந்தரமான செல்வச் சிறப்பைத் தருகின்ற ஸ்ரீகுபேர பகவானைப் பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆனால் நடைமுறை வழக்கில் ஸ்ரீகுபேர மூர்த்திக்கு உரிய வழிபாட்டை நாம் முறையாகச் செய்வது கிடையாது. அதனால்தான், ஏதோ பணம் வருகிறது, போகிறது என்றளவில் தான் பரிபூரண மனத் திருப்தியின்றி வியாபாரமும், இல்லறமும் ஓடிக் கொண்டிருக்கிறது. மிகப் பெரிய செல்வந்தர்கள் கூடத் தாம் பெற்றிருக்கும் பணத்தை வைத்துக் கொண்டு தர்மமான முறையில் அது நிலைத்து நிற்க வேண்டுமே, தீவினைகளில் அது கரைந்திடக் கூடாதே என்று கூடக் கவலைப்படுவதும் பலவிதமான தீய காரியங்களுக்கு குறிப்பாக புகைபிடித்தல், மது, புகையிலை (பான்), முறையற்றக் காம தீய ஒழுக்கங்கள், தீய செயல்கள் போன்றவற்றிற்குப் பயன்படுகின்றதோ அப்போதே தெரிந்து கொள்ளலாம் முறையான வழியில் வந்த செல்வம்/சம்பளம் அல்ல என்று! என்னதான் ஒருவர் நேர்மையாக இருந்து, சம்பாதித்தாலும் பீடி, சிகரெட், மது என்ற தீய வகைகளில் செலவழிக்கையில் அது தன்னுடைய உடலையும், பிறருடைய உடலையும் பாதித்து தீயொழுக்கச் செயல்களில் சென்று கரைவதால், இவ்வாறு செலவழிக்கப்பட்ட பணம் உண்மையாக உழைத்துச் சம்பாதிக்கப்பட்ட பணம் இல்லை என்றும் தெரிந்து கொள்ளலாம். எனவே, நம்மிடத்தில் முறையான வழியில் செல்வம் சேர்ந்தால்தான், சம்பாதித்தால்தான் அது நன்கு நிலைத்து நிற்கும் இதற்கு அருள்பாலிப்பவர்தான் ஸ்ரீகுபேர மூர்த்தி ஆவார். ஏனென்றால் தினந்தோறும் ஸ்ரீவைகுண்டத்தில் பெருமாளைத் தரிசிக்கின்ற பாக்கியம் பெற்றவராகவும், நிதமும் திருமகள் லோகத்தில் ஸ்ரீஅஷ்டலக்ஷ்மியைப் பூஜிக்கும் பேறு பெற்றவராகவும் விளங்குகின்ற ஸ்ரீகுபேர மூர்த்தியே நமக்கு நிரந்தர செல்வத்தைப் பெற்றுத் தரக் கூடியவர். அவரிடத்தில் உள்ள சங்க நிதி, பதுமநிதி, மாணிக்க நிதி, பவள நிதி, சாஸ்வத நிதி என இன்னும் எத்தனையோ வகையான நிதி சங்கமங்கள், நிதிக் கூடங்கள் அவரிடம் குவிந்து கிடக்கின்றன. இவை அனைத்தையும் வைத்துக் கொண்டு ஸ்ரீகுபேர பகவான் என்ன செய்கின்றார்? திருமகளின் ஆணைப்படி ஸ்ரீலக்ஷ்மியை எவரெல்லாம் முறையாகப் பூஜிக்கின்றாரோ, எவரெல்லாம் தர்மமான முறையில் பணத்தை ஈட்டுகின்றனரோ அவர்களுடைய செல்வம் நன்முறையில் நிலைத்து நிற்பதற்கும், நற்காரியங்களுக்காகச் செலவழிப்பதற்குமாக தன்னுடைய சங்க, பதும புண்ய சக்திகளின் ஆசீர்வாதங்களை அவற்றில் கூட்டிவைத்துத் தருபவர்தான் ஸ்ரீகுபேர மூர்த்தியாவார்.. இறைவன் பலமுறை ஸ்ரீகுபேர மூர்த்தியைச் சோதித்த போதும், தனக்குக் கிட்டிய அனைத்துக் கோடி ஐஸ்வர்யங்களையும் இறைவனுக்காக அர்ப்பணித்த உத்தம இறைத் திருமூர்த்தயாக இன்றைக்கும் ஸ்ரீகுபேர மூர்த்தி விளங்குகின்றார். ஸ்ரீகுபேர மூர்த்தி பூஜித்த லிங்கங்கள் இன்றைக்கும் பல இடங்களில் ஸ்ரீகுபேர லிங்கங்களாக (திருஅண்ணாமலை, திருஆனைக்காவல்) போன்று பல திருத்தலங்களிலும் அருள் கூட்டுகின்றன.
சொத்தையில்ல சொத்தைப் பெற – பலருக்கும் மூதாதையர்களின் சொத்தானது சந்ததி வாரியாகவும், சொத்துப் பிரிவினை மூலமாகவும், நிலபுலன்கள், வீடு வாகனங்கள், நகைகள் போன்றவையாகவும் வந்து சேர்ந்திருக்கும். எப்போது தான் உழைத்து எதையும் சம்பாதிக்கவில்லையோ, எது பூர்வீக சொத்தாக உள்ளதோ, அதில் உள்ள தோஷங்களை நீக்கி அந்தச் சொத்தை நிலையாக, முறையாக நம்மிடம் நிலை பெறச் செய்வதற்காக அதை நன்முறையில் பயன்படுத்துவதற்கான அனைத்து விதமான அனுகிரகங்களைத் தருவதுதான் ஸ்ரீகுபேர மூர்த்தி வழிபாடு என்றால் மிகையாகாது.

செல்வத்திற்கான திருமகள் வழிபாடு பரிபூரணமாக இருக்கும்போது இடையில் ஸ்ரீகுபேர மூர்த்தி வழிபாடு ஏன்?
கலியுகத்தில் தற்காலத்தில் பெரும்பான்மையாக உடலை வருத்தி உழைப்பவரும், அலுவலகத்தில் பணிபுரிபவரும், முதலாளிகளும் எவராக இருந்தாலும் சரி  குறுகிய காலத்தில் உடல் வருத்தமின்றி, சிறிய உழைப்பிலேயே எப்படியாவது நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தானே இருக்கின்றார்கள் கலியுகம் ஆரம்பத்திலேயே இப்படியிருந்தால் எப்படி ஐயா லக்ஷ்மி கடாட்சம் ஏற்படும்?
கோடீஸ்வரர்களாக இருந்தால் அவர்களிடம் லக்ஷ்மி கடாட்சம் பொங்குகின்றது என்பது பொருளல்ல. ஏனென்றால் பணம் எப்படி வந்து சேர்கின்றது, எவ்வகையில் உபயோகப்படுத்தப்படுகின்றது போன்ற நியதிகளே லக்ஷ்மி கடாட்சத்திற்கான முக்கியமான இறை நியதிகளாகும். எனவே பணம் கொழிக்கின்ற வியாபாரத் தலங்களில் எல்லாம் லக்ஷ்மி கடாட்சம் பொங்குகின்றது என்பது பொருளல்ல, எங்கெல்லாம் தீய ஒழுக்கங்களில் பணம் விரயம் ஆகின்றதோ, அவ்விடத்தில் கண்டிப்பாகத் திருமகளின் கடாட்சம் இல்லை என்பதுதான் பொருளாகும். சேர்ந்திருக்கின்ற செல்வத்தை முறையாகத் தர்ம காரியத்தில் பயன்படுத்தி வந்தால் அதுவே தானாக லக்ஷ்மி கடாட்சத்திற்குச் சிறந்த முறையில் வழிவகுக்கும் என்பது பலரும் அறியாத தெய்வீக ரகசியமாகும்.  எவரொருவர் தன்னுடைய வாழ்நாளின் ஒவ்வொரு பைசா சம்பாத்யத்தையும், எவ்விதக் களங்கமும் இல்லாமல் நற்பணிகளில் செல்விடுகின்றாரோ அவருக்குத் தான் லக்ஷ்மி கடாட்சம் தாமாகப் பொங்கிக் கிட்டும். எனவே ஸ்ரீகுபேர மூர்த்தியின் அருளின்றித் திருமகளின் திருவருளையோ, லக்ஷ்மி கடாட்சத்தையோ எவரும் பெற்றிட இயலாது. மேலும் நம் சந்ததிக்காக விட்டு வைக்கின்ற நிலம், வீடு, பணம் போன்றவற்றில் தர்ம சக்திகள் நிரம்பிட வேண்டும். இல்லையெனில் சூதாட்டம், திருடு, ரேஸ் போன்ற தீயொழுக்கச் செயல்களில் சொத்து கரைந்து விடும். எனவே செல்வத்தில் திருப்பூரண சக்தி நிறைந்திடவே பரிபூர்ணமான லக்ஷ்மி கடாட்சத்தைப் பெற்ற தேவாதி தேவ மூர்த்தியாக விளங்குகின்ற ஸ்ரீகுபேர பகவானே நமக்கு உதவுகின்றார். இத்தகைய உயர்ந்த தெய்வ நிலையை அவர் பெறுவதற்குக் காரணமாக இருந்தது பலவகையான சிவ பூஜைகள்தாம். ஆதி சிவமூர்த்தியே ஸ்ரீகுபேர பகவானுக்காகப் பல அற்புதமான வழிபாடுகளையும், பீஜாட்சர மந்திரங்களையெல்லாம் உபதேசித்து, இன்றைக்குப் பிரபஞ்சங்களின் அனைத்துக் கோடி லோகங்களிலும் உள்ள நிதிச் செல்வத்தை அள்ளித் தருபவராக ஸ்ரீகுபேர பகவானை நமக்கு அவதார பாவனம் செய்து தந்திருக்கின்றார்.

ஸ்ரீகுபேர மூர்த்தியின் அபூர்வப் புதல்வர்கள் – ஸ்ரீகுபேர பகவானுக்கு நளகூபன், மணிக்ரீவன் என்ற இரு திருப்புதல்வர்கள் உண்டு. இவ்விருவருமே தன் தந்தையைப் போல் பிரபஞ்சத்திற்கு அரியதோர் இறைப்பணியை ஆற்ற வேண்டும் என்று வேண்டிப் பிரார்த்தித்துத் தன் தந்தையின் திருஆலோசனையை வேண்டினர். அப்போது ஸ்ரீகுபேர மூர்த்தி அடியேன் இப்போது பெற்றிருக்கின்ற பெறும் பேற்றிற்குக் காரணமே அடியேனுக்கு சிவபெருமான் உபதேசித்த பூஜைகளின் பலாபலன்களே ஆகும். எனவே நீங்களும் உங்களுடைய பெறும் முயற்சியாக உங்களுக்குரித்தான இறைப் பணியைத் தக்கதோர் தவம் மூலம், இறைவனிடமிருந்தே பெற்று ஆற்றிக் கொள்ள வேண்டும். பிரபஞ்சத்திலுள்ள ஜீவன்களின் நல்வாழ்விற்காக பூலோகம் எங்கும் உள்ள சுயம்பு மூர்த்திகளிடம் உங்களுடைய வழிபாடுகளைத் தொடர்ந்து நடத்தி வருவீர்களாக,” என்று அவர்களுக்கு ஆசி கூறி அனுப்பினார்... மேலும், “கலியுக ஜீவன்களின் நன்மைக்காக நீங்கள் அரும்பாடு படவேண்டும் ஏனென்றால் கலியுகத்தில்தான் தீவினைகள் பெருகி பணம், காமம், பொன் ஆகிய மூன்றுமே மக்களுடைய மனதை அலைக்கழித்து விடும். கலியுக ஜீவன்கள் பணம் என்னும் மாயையில் அகப்பட்டுத் துன்பச் சூழலில் சிக்காதிருக்கவும், தர்ம நிதியும், ஷிப்ர நிதியும் நன்முறையில் பெருகிடவும் அதற்குரித்தான வழிபாட்டு முறைகளை நீங்கள் மேற்கொண்டு அவற்றின் பலாபலன்களை கலியுக மக்களுக்கு அர்ப்பணிப்பீர்களாக,” என்று ஆசிகூறி, இருவருக்கும் த்ரிதள ஸ்வர்ண வில்வ சரத்தைப் பற்றிய விளக்கங்களை எடுத்துரைத்தார். இந்த பொன் வில்வச் சாரம் எனப்படும் அந்த வில்வ தளத்தில் பொன்னாலாகிய மூன்று வில்வ தளங்கள் (இலைகள்) மட்டும் இருக்கும். குறித்த சில தலங்களில் இந்த வில்வ சாரத்தால் ஒரே ஒரு முறை “ஓம் நமச்சிவாய“ என ஓதி ஒருமுறை அர்ச்சித்து அந்த சுயம்பு லிங்க மூர்த்தியை வழிபட்டால் கூடப் போதும், உடனே அது பன்மடங்காகப் பெருகி நிரந்தரமான செல்வத்தையும், சாசுவதமான நிதியைப் பெறுவதற்கான நல்வழிகளையும் தந்துவிடும். எந்த தேவ லோகத்திலும் காணக் கிடைக்காத அரும்பெரும் பொன் வில்வ தளமிது!
ஆனால் சிவபெருமானுடைய திருக்கரங்களிலிருந்து பெறப்பட்ட இந்த பொன் வில்வ தளத்தினை ஸ்ரீகுபேர மூர்த்தி தன்னுடைய புதல்வர்களுக்கு அளித்தது நியாயமாகுமா? ஸ்ரீகுபேர மூர்த்தியின் புதல்வர்கள் இருவருமே அபாரமான சிவசேவகர்கள், தந்தையைப் போல் மிகச் சிறந்த சிவபக்தர்கள்! குறிப்பாகச் சுயம்பு லிங்கப் பூஜையில் சிறப்பு பெற்றவர்கள். அவர்கள் அறியாத சுயம்பு லிங்க மூர்த்திகளே பிரபஞ்சத்தில் இல்லை என்று சொல்லும் அளவிற்கு மானசீக பூஜையிலும், ஆன்ம பூஜையிலும், தேக வழிபாட்டிலும் சிறப்பாக விளங்கினார்கள். குறித்த யோக, தவ, ஜப சக்திகளை பெற்றிருப்பவர்களைத் தவிர இந்த பொன்வில்வ சாரமானது எவர் கண்களுக்கும் தென்படாது, எவர் கரங்களிலும் தங்கிடாது அந்த பொன் வில்வ சாரமானது, எவருடைய கரங்களில் சென்றடைய வேண்டும் என்பதையே ஸ்ரீகுபேர மூர்த்தியே அறியாமலிருந்தார். இதுவே இறை லீலை.. தம் புதல்வர்களுக்கு இந்த பொன் வில்வ சாரத்தினைக் காண்கின்ற பாக்கியம் கிட்டி இருக்கின்றது. அது அவர்களுடைய கரங்களில் தங்கிடும் என்பதையும் உணராதவாரகவும் இருந்தார் இதுதான் சிவ லீலை இப்பொன் வில்வ சாரம் பற்றிய விளக்கங்களை அவர் தம் புதல்வர்களுக்கு எடுத்துரைத்திட, அது அவர்களின் கண்களுக்கு தென்பட்டு கரங்களில் நிலைத்து நிற்கக் கண்டு பெருமகிழ்ச்சி கொண்டார். இதற்கு காரணம் புதல்வர்களுடைய சுயம்பு லிங்க மூர்த்தி பூஜைகளாகும். இந்த ஸ்வர்ண வில்வ சாரத்தின் மஹிமையை அறிய பல கோடி யுகங்கள் கூடப் போதாது. அத்தகைய தெய்வீக மகத்துவம் வாய்ந்தது. இதனுடைய ஆதிமூல ஸ்வர்ண வில்வ தல சூட்சும வடிவில் சிதம்பரம் தலத்தில் ஒளிர்கின்றது. ஸ்ரீகுபேர புத்திரர்கள் பூலோகத்தில் சிவ, வைணவ பேதமின்றி ஒவ்வொரு சுயம்புத் திருமேனியையும், சாளகிராம வடிவங்களையும் தரிசித்து அதற்குரித்தான தைலாபிஷேகம், சந்தனம், மஞ்சள், குங்குமம், விபூதி போன்ற பலவித திரவியங்களால் அபிஷேக ஆராதனைகளை, ஹோம வழிபாடுகளை மேற்கொண்டனர். கலியுக மக்களுக்குத் தேவையான தர்ம நிதி மற்றும் ஷிப்ர நிதி செல்வத்திற்காகச் சங்கல்பம் செய்து கொண்டு பிரார்த்தனை செய்து வரலாயினர். மேலும் எங்கு எத்திருத்தலத்தில் ஸ்வர்ண வில்வ சாரத்தின் மஹாத்மியம் உணரப்படுகின்றது என்பதையும் அறிய ஆவல் கொண்டனர். பெரும்பான்மையான சுயம்பு மூர்த்தித் தலங்களில் அந்த ஸ்வர்ண வில்வ சாரம் சாதாரண வில்வ தளம் போலவே பசுமையாக காட்சி தந்தது. சில இடங்களில் தானாகவே மறைந்து விடும். எனவே அந்த ஸ்வர்ண வில்வ சாரமானது பொன் தளங்களாகக் காட்சி தரும் விசேஷத் தலத்தை தாம் இன்னமும் அறியவில்லை என்று அவர்கள் உணர்ந்தனர்... அந்த அற்புதமான சிவத்தலம் எதுவோ?

சொர்ண (பொன்) வில்வ சாரங்களைக் கையில் தாங்கியவர்களாய்ப் பல லோகங்களெங்கும் குறிப்பாக, பாரத நாட்டில் பல சுயம்பு மூர்த்திகளைத் தரிசித்து வழிபட்ட குபேரனின் திருப்புதல்வர்கள், அந்த பொன் வில்வ சாரமானது எத்தலத்தில் பல்கிப் பெருகும் தெய்வீகத் தன்மையைப் பெற்று விளங்குகின்றது என்ற தேவ இரகசியத்தை அறியாதவர்களாய்ப் பூலோகமெங்கும் பூஜித்து வந்தனர். இந்த பிரபஞ்ச யாத்திரையும் நமக்குக் கிடைத்துள்ள இறைப் பரிசே! இந்த பொன் வில்வ சாரத்தின் மகாத்மியத்தை அறிதலும் பெறுதற்கரிய இறைப் பணிதானே! இதனால்தானே நாம் பிரபஞ்சம் எங்குமுள்ள சுயம்பு மூர்த்திகளைப் பூஜிக்க முடிகிறது என்று எண்ணிப் பரமசந்தோஷம் அடைந்தவர்களாய்ப் பலகோடி யுகங்களாய்த் தம்முடைய அரும் பெரும் சுயம்பு லிங்க ஜோதி தரிசன தவத்தைத் தொடர்ந்தனர் இருவருமே.! முந்தைய யுகங்களில் திருஅண்ணாமலையானது வைடூரிய மலையாகவும், ரத்ன மலையாகவும், பொன் மலையாகவும், அந்தந்த யுக நியதியைப் பொறுத்துப் பிரகாசித்தது. ஆனால் கலியுகத்தில் இது பொன் மலையாக விளங்கினால்...! அதன் விளைவுகளை நீங்களே அறிவீர்கள்! எனவேதான் இன்று நம் கண்களுக்குக் கல் மலையாகக் கலியுகத்தில் அண்ணாமலை தோன்றுகிறது. ஆனால் அந்த யுகங்களில் நாம் நினைப்பது போல எவரும் உடனடியாக மானுட ரூபத்தில் நினைத்தவுடன் அங்கு சென்றிட இயலாத திருத்தலமாக விளங்கியது. திருஅண்ணாமலையிலே பிறந்து வாழும் பேறு பெற்றவர்கள் பித்ருக்களின் ஆசியுடன் நினைத்த பொழுதெல்லாம் கிரிவலம் வந்திட முடியும். ஆனால் தேவாதி தேவரானாலும் சரி, கைலாச சிவதேவ மூர்த்திகளின் அனுமதியுடன் தான் அந்தந்த யுகங்களில் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வர முடியும். பல கோடி யுக தலயாத்திரை பலன்களாக, கோடிக்கணக்கான சுயம்பு மூர்த்திகளைத் தரிசித்ததின் பலனாக ஸ்ரீகுபேரனின் புதல்வர்கள் இருவருமே திருஅருணாசலத்தை அடையும் பேறு பெற்றனர். பிரபஞ்சத்தின் தெய்வீக மையமாக அன்றும் இன்றும் என்றும் சத்திய ஜோதி ஸ்வரூபமாய் விளங்குகின்ற திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து பொன் வில்வசாரத்தின் மஹிமையை நன்கு உணர்த்துமாறு, ஸ்ரீஅருணாச்சல பெருமானை இருவரும் வேண்டினர்., திருஅண்ணாமலையாரே அசரீரியாக,
“தென்னிசைக் காவிரி இயல்சீர் சேர்
சென்னிச் சிவக் கயல் சுந்தரம் பார்!”
(கயல் – மீன்) என்றுரைத்திட இதனால் புளகாங்கிதம் அடைந்த இருவருமே தென்னாடுடைய சிவத் தமிழ் திருநாட்டின் தென்திசை நோக்கித் தம் புனித யாத்திரையைத் தொடங்கினர். தென்திசையில் காவிரி நதியின் பெருவளமுடைய திருத்தவத்துறையை (லால்குடி) அடைந்தனர். இங்குதான் வானின் சிவந்த மேனியதாய் லால்குடி சிவாலய ராஜகோபுரம் சிவந்த நிறத்தில் பொலிவது கண்டு மகிழ்ந்தனர். இவ்வாறு சிவந்த சிவனின் குடிலே லால்குடி (லால் – சிவப்பு) ஆயிற்று. லால்குடி என்பதற்குச் சித்தர்களின் பரிபாஷை விளக்கங்கள் பல உண்டு. லால்குடி ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் ஆலயத்தின் சிவகங்கைத் தீர்த்தத்தில் மூழ்கி நீராடி எழுந்த உடனேயே இருவருமே தாங்கள் பிறிதொரு ஆலயத்தில் இருப்பது கண்டு அதிசயித்தனர், ஆனால் அவர்கள் கரங்களில் இருந்த பொன் வில்வசாரத் தளங்களோ மறைந்துவிட்டன. பதறித்துடித்தனர் இருவருமே! “ஈஸ்வரா! பொன் வில்வ சாரங்களைக் காணவில்லையே! சிவன் சொத்தாயிற்றே, அதனைப் பெற எங்கு போவோம்?” சுற்றுப் புறத்தையே மறந்து அழுது கதறினர் இருவரும்! திருத்தவத்துறையில் (லால்குடி) சிவகங்கைத் தீர்த்தத்தில் தாங்கள் மூழ்கியதையும், இறைவன் தம்மை மற்றொரு சிவத்தலத்தில் சேர்த்ததையும் அப்போது தான் உணர்ந்தனர். எல்லாம் சிவன் செயலெனத் தெளிந்து நேரே மூலஸ்தானத்திற்கு விரைந்தனர்..!

மரகத மேனி சிவ மேனி! ஆங்கே கருவறையில் பச்சை மரகதச் சுயம்பு லிங்க மூர்த்தி ஜ்வலித்தது. மரகத லிங்கத் திருமேனியின் மேல் தாம் தேடிய பொன் வில்வசாரம் பரிமளிப்பது கண்டு பரமானந்தம் கொண்டனர். இறைவன் தாமே தனக்கென தனதை தனக்காக தன்னுடையதாய் அருளிக் கொண்டார் போலும்! “ஓம் நமசிவாய” என்று அவர்கள் பக்தியுடன் ஓங்கிய குரலில் சிவமறைகளை ஓதிட அப்பொன் வில்வசாரமானது பொங்கிப் பொங்கிப் பன்மடங்காய் பெருகி வானை நிறைத்தது. பாரெங்கும் தங்க வில்வ தளங்கள் பிரகாசித்தாற்போல் மஞ்சள் நிறம் பரவியது! அப்பச்சை மரகத லிங்கத்தின் திருமேனியெங்கும் பொன் வில்வச் சாரங்கள்தாம் நிறைந்து பொலிந்தன! ஆம்! அருணாசலப் பெருமான் உரைத்த சென்னிச் (சிவ) சுந்தரனே அங்கு (மீனாட்சி) சுந்தரேஸ்வரனாய்ப் பச்சை மரகதச் சுயம்புச் சிவலிங்க மூர்த்தியாய் உருக்கொண்டுள்ளார் என்பதை அவர்கள் உணர்ந்தனர்..ஆமாம்! இத்திருத்தலம் திருச்சி மாவட்டம் லால்குடியிலிருந்து, சாத்தமங்கலம் செல்லும் பேருந்தில் சாத்தமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால், உங்களை ஈர்ப்பது சாத்தமங்கலம் ஸ்ரீமீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் ஆலயமாகும்.. இங்குதான் குபேர மூர்த்தி தாம் சிவபெருமானிடமிருந்து பரிசாகப் பெற்ற பொன் வில்வ சாரதளங்கள் பல்கிப் பெருகி ஸ்தல வில்வவிருட்சமாய் வடிவு கொண்டுள்ளது. ஸ்ரீபிரம்மா ஐந்து திருமுகங்களைக் கொண்டிருந்த போது தம் ஐந்து சென்னிகளால் சிவனை வழிபட்டமையால் ஐஞ்சென்னி வாய்க்கால் (ஐந்து தலைகள்) என்பது சென்னி வாய்க்காலாயிற்று., இப்பச்சை மரகத வண்ணச் சுயம்பு மூர்த்தியே சிவனுக்குரித்தான ஐந்து முகங்களையும் ( சத்யோஜாதம், அகோரம், வாமனம், ஈசானம், தத்புருஷம்) காட்சி தர தம்முடைய ஐந்து சென்னிகளால் ஸ்ரீபிரம்மா பூஜித்தார். குபேர பகவானுக்கே முதலில் கிட்டாத இப்பச்சை வண்ண லிங்க தரிசனமானது அவர்தம் புதல்வர்களுக்குக் கிட்டியது ஒரு பெரும் பேறுதானே! ஸ்ரீகுபேர மூர்த்தியே இப்பொன் வில்வ சாரத்தின் பரிபூரணமான மஹிமையை அறியாது, அது பிரகாசிக்கக் கூடிய சிவத்தலத்தையும் அறியாது தம் புதல்வர்கள் மூலமாக இத்திருத்தலத்தின் மேன்மையை உணர்ந்து, இங்கு வந்து வழிபட்டு, பூலோக ஜீவன்கட்கு நிலையான லக்ஷ்மி கடாட்சத்தையும், தந்தருள்கின்ற வில்வ விருட்சமாக பூலோகத்திற்கு உணர்த்தினார். மூன்று வில்வ திரிராத்ரி நாட்களிலும் வில்வ தீர்த்தத்தை மட்டும் அருந்தி, உண்ணா நோன்பு நோற்று, மூன்றாம் நாளன்று (சாத்தமங்கலம்) மரகதத்தாலான ஸ்ரீசுந்தரேஸ்வரை தரிசித்து, இங்குள்ள பொன் வில்வ சாரமாக விளங்கும் வில்வ மரத்தையும், அடிப்பிரதட்சிணம் செய்து வணங்குவோர்க்கு லக்ஷ்மி கடாட்சம் பொழிவதற்கான குபேர பகவானின் பரிபூரண அனுக்ரஹம் கிட்டும்.. பணக்கஷ்டத்தால் வாடி வதங்குவோர்க்கு நல்வழி கூட்டும் தலம். மூன்று நாட்களிலும் விரதம் பூண்டு இங்கு தரிசனத்தைப் பெற முடியாதோர் தம் இல்லத்தில் இரண்டு நாட்கள் நோன்பு கொண்டு, மூன்றாம் நாளேனும் வெள்ளிக்கிழமை பௌர்ணமி திதியன்று சென்னிவாய்க்கால் ஸ்ரீசுந்தரேஸ்வரைத் தரிசித்து, இத்திருச் சன்னதியில் வில்வத்தைப் பிரசாதமாகப் பெற்று, தம் உண்ணாநோன்பை முடித்து வழிபட்டிட பணக் கஷ்டங்கள் நன்முறையில் நிவர்த்தியாகும். ஆனால் முறையாக சற்குருவின் வழியுடன் ஆழ்ந்த நம்பிக்கையுடன் இந்த உண்ணாநோன்பைக் கடைபிடித்தல் வேண்டும்.

திருமயேந்திரப்பள்ளி போதாயன அமாவாசை

திருமகேந்திரப்பள்ளி – அமாவாசைத் திருத்தலம்
சூரிய, சந்திர மூர்த்திகள் இணைந்து பூஜிக்கும் திருமகேந்திரப்பள்ளிச் சிவத்தலம் போதாயன அமாவாசை பூஜைக்கான திருத்தலம் ... வருடத்திற்கு ஒரு முறை வரும் போதாயன அமாவாசையின் பின்னணியில் எத்தனையோ ஆன்மீக ரகசியங்கள் உண்டு. சூரிய, சந்திர மூர்த்திகள் ஒன்றாகச் சேர்ந்து பூலோகத்திற்கு வந்து இறைவனை தரிசித்த தினமாக போதாயன அமாவாசை திதி விளங்குகின்றது. ஒவ்வொரு சூரிய/சந்திர கிரணத்திலும் ராகு, கேது கிரஹங்களினால் பீடிக்கப்படுகின்ற சூரிய, சந்திர மூர்த்திகள் இதனால் தாங்கள் இழக்கின்ற சக்தியை ஈடு செய்வதற்காக ஒன்றாகக் சேர்ந்து வழிபட்ட ஒரு சில தலங்களே போதாயன அமாவாசைக்குரித்தான விசேஷமான தர்ப்பணத் தலங்களாக விளங்குகின்றன. ராகு, கேது தசா/புத்திகளில் இருப்போர் தங்களுடைய துன்ப நிவாரணங்களுக்காக சூரிய, சந்திர மூர்த்திகள் ஒன்றாகச் சேர்ந்து தரிசித்த திருத்தலங்களில் போதாயன அமாவாசைத் தர்ப்பணம் இடுதலால் இவை கிரஹப் ப்ரீதி வழிபாடுகளாகச் சிறப்புற அமைகின்றன, போதாயன அமாவாசையன்று சூரிய, சந்திர மூர்த்திகளே பூலோகத்தில் மானிட வடிவம் தாங்கிப் பல திருத்தலங்களிலும் பூஜித்து, தேவாதி தேவ மூர்த்திகளுக்கெல்லாம் தர்ப்பண, அர்க்ய பூஜைகளைச் செய்து ஆனந்தமடைகின்றார்கள். போதாயன அமாவாசைத் தர்ப்பணத்திற்கு உரித்தான சிறப்பான திருத்தலங்களுள் ஒன்றே சிதம்பரம் அருகேயுள்ள கோயிலடிப்பாளையம் என்று அழைக்கப்படுகின்ற திருமகேந்திரப் பள்ளியாகும். தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களுள் இதுவும் ஒன்றாகும். சிதம்பரம் ஆச்சாள்புரம் வழியாக திருமகேந்திரப்பள்ளி, சிற்றுரை அடைந்திடலாம். மிக அழகிய சக்தி வாய்ந்த திருத்தலம் ஒரு காலத்தில் சூரிய, சந்திர வழிபாட்டிற்காகப் பிரசித்தி பெற்று அமாவாசைப் பூஜை தலமாக விளங்கியது., இக்கோயிலின் அருகே உள்ள திருக்குளம் இன்றைக்குச் சற்றே சீரற்று விளங்கினாலும் ஒரு காலத்தில் மகத்தான மகேந்திர தீர்த்தமாக பரிமளித்தது. இன்றைக்கும் சூட்சுமாக இதனுடைய கிரஹண தெய்வீக சக்திகள் தேவலோகங்களுக்கும் பரந்து விரிந்துள்ளன. ஆனால் இதனை பூலோகத்தில் உள்ளர்வர்கள்தான் நன்கு உணர்ந்தார் இல்லை. இக்கோயில் தீர்த்தக் குளக்கரையில் போதாயன அமாவாசை தினத்தன்று வாழை இலையிலோ அல்லது தாமரை இலையிலோ தர்பையினால் தர்ப்பணச் சட்டம் அமைத்து எள் கலந்த நீரை நம் மூதாதையர்க்கு தர்ப்பணமாக அளித்திடுதல் மிகவும் சிறப்பானதாகும். சூரிய, சந்திர மூர்த்திகள் போதாயன அமாவாசையன்று சூட்சும வடிவிலும் மானுட ரூபத்திலும் ஸ்ரீவடிவாம்பாள் சமேத திருமேனி அழகரை இங்கு தரிசித்துப் பூஜிக்கின்ற தலமாதலால் ராகு, கேது தசா/புக்திகள்/அந்தரங்களில் இருப்போர் போதாயன அமாவாசை அன்று தர்ப்பண பூஜைகளைச் செய்து சூரிய, சந்திர மூர்த்திகளுக்கு ப்ரீதியான கோதுமை மற்றும் அரிசியினால் ஆன உணவு அமாவாசை தர்ப்பணப் பூஜைகளை நிறைவு செய்தல் வேண்டும். இத்திருக்குள நீரானது காய்ந்தோ, வடிந்தோ பாசி பிடித்தது போல் காணப்பட்டாலும் இதனுடைய தெய்வீகத் தன்மை பலகோடி யுகங்களாக மங்காத சூட்சும மகேந்திர சக்தியுடன் என்றும் பரிமளிக்கிறது. திருக்குளத்தில் நன்னீர் இல்லையென எண்ணாதீர்கள்.. நீரில்லை எனினும் இதற்கு சூட்சும ஜலதீப சக்தி உண்டு.  வசதியுள்ளோர் இத்திருக்குளத்தைச் சீரமைத்து இதனுடைய புனிதத்தைப் பாதுகாப்பதற்குத் தக்க ஏற்பாடுகளைச் செய்தால் சூரிய, சந்திர மூர்த்திகளின் அனுக்ரஹத்தால் பித்ரு சாபங்களுக்கான தக்க நிவர்த்திகளைப் பெற்றிடலாம். உறவினர்களின் பகைமையும் நீங்கி ஒற்றுமை உண்டாகும். மேலும் போதாயன மஹரிஷிகள் என்று ஒரு வகையினர் உண்டு. இவர்கள் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவைக் குலதெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும் கொண்டு பரமாத்மப் பரம்பொருளை எப்போதும் ஸ்ரீகிருஷ்ணப் ஸ்மரணத்துடன் வழிபட்டு வருதலால் போதாயன மஹரிஷிகளுடைய ஆசீர்வாதங்கள் நிறைந்த ஜல தீப சக்தியை இத்தீர்த்தம் பெற்றுள்ளது..

பகைமை தீர்க்கும் போதாயனம்! – பகைமையை நீக்குகின்ற ஜலதீப சக்தி போதாயன அமாவாசைத் தர்ப்பண பூஜைக்கு நிறைய உண்டு., கலியுகத்தில் பெற்றோர்கள், பிள்ளைகளுக்கிடையே கூடப் பகைமை ஏற்பட்டு அவர்கள் பல வருடங்களாகப் பிரிந்து வாழ்தலும் உண்டு., இவ்வாறு பகையால் பிரிந்த உறவினர்கள். சுற்றத்தார்கள், கூட்டாளிகள் போதாயன அமாவாசையன்று திருமகேந்திரத் திருத்தலத்தில் உள்ள திருக்குளத்தில் தர்ப்பண பூஜைகளைச் செய்து கோதுமை மற்றும் அரிசியால் ஆன அன்னங்களை (வெண் பொங்கல், சப்பாத்தி, கோதுமை ரவை உப்புமா, பூரி etc ..) தானமாக அளித்து வழிபட்டு வருவார்களேயானால் பகைமை களையப்பட்டு நன்முறையிலே உறவு ஒன்றிடும்.. ஆனால் எக்காரணம் கொண்டும் இனிமேல் பகைமை கொள்வதில்லை என்ற சங்கல்பத்தை இங்கு ஸ்ரீதிருமேனி அழகரின் திருச்சன்னதியிலே சூரிய, சந்திர மூர்த்திகளின் சாட்சியாகச் செய்து கொள்ள வேண்டும்.., ஏனென்றால் நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் சாட்சியாக இருப்பவர்கள் சூரிய, சந்திர மூர்த்திகளே.., போதாயன அமாவாசை பற்றிய விளக்கங்களை, அறிந்து கொண்டு ஆண்டில் ஒரு முறையே வருகின்ற இந்த போதாயன அமாவாசைத் தர்ப்பணத்தைச் செய்கின்ற வழிமுறைகளை இனியேனும் அறிந்து கொள்வீர்களாக மாதாந்திர அமாவாசையைப் போலன்றி வருடத்திற்கு ஒரு முறையே வருகின்ற போதாயன அமாவாசை விசேஷமான சக்திகளையுடையதாம்., நம்முடைய வாழ்வின் எத்தனையோ கர்மவினைகளுக்கு எளிய முறையிலே பிராயசித்தமும் பெற்றுத் தருவதாகும்.
போதாயன அமாவாசைத் தர்ப்பண பலன் :- மனைவி மக்களுக்குக் கூடத் தெரியாமல் எத்தனையோ (தீய) காரியங்களைச் செய்தவர்கள் அவற்றின் விளைவுகளால் மன வேதனைகளால் துன்புற்று வாழ்வதும் உண்டு. எனவே சொல்ல முடியாத ரகசிய செயலைச் செய்தவர்கள் போதாயன அமாவாசையன்று திருமகேந்திரப் பள்ளித் திருக்குளத்தில் போதாயன அமாவாசைத் தர்ப்பணப் பூஜை செய்து சூரிய, சந்திர மூர்த்திகளின் சாட்சியாகத் தம்முடைய ரகசியமான குற்றங்களுக்கு மானசீகமாக வருந்தி தன்னுடைய பெரும் பாவங்களால் தன்னுடைய செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தக்க நிவாரண உதவி செய்து நம் மூதாதையர்களின் ஆசிகளைப் பெற்றுத் தருமாறு சூரிய சந்திர மூர்த்திகளை வேண்டிப் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இதனால் மனதில் மறைக்கப்பட்ட ரகசியங்களால் ஏற்படுகின்ற சொல்ல முடியாத வேதனைகளுக்குச் சாந்தமும் தக்க நிவாரணமும் கிட்டும். போதாயன அமாவாசைத் தர்ப்பணத் தினத்தன்று 8 முழ வேஷ்டியினை பஞ்சகச்சமாக அணிந்து அங்கவஸ்திரத்தை இடுப்பில் அணிந்து மரப்பலகையிலோ அல்லது தர்ப்பணப் பாயிலோ அமர்ந்து தர்ப்பணப் பூஜையை செய்து வேஷ்டியையும் அங்க வஸ்திரத்தையும், தர்ப்பை பாயையும் தானமாக அளிப்பதால் போதாயன அமாவாசைத் தர்ப்பணப் பலன்கள் பன்மடங்காகப் பெருகின்றன. “சந்திரன், கதிரவன், தகுபுகழ் மந்திர மறைவளர் மகேந்திரப் பள்ளியின்”, என்று திருஞான சம்பந்த பெருமான் உரைத்தது போல திருமகேந்திரப் பள்ளியில் போதாயன அமாவாசைப் பூஜையை மட்டுமின்றி மாதந்தோறும் ஒவ்வொரு அமாவாசை சிறப்புற நிகழ்த்தி வாழ்வில் பெறுதற்கரிய பாக்கியங்களைப் பெற்றிடுவீர்களாக.

போதாயன அமாவாசை என்பது மகாபாரதத்தில் கிருஷ்ண லீலையாக ஏற்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். போதாயனக்காரர்கள் மட்டும் இந்த போதாயன அமாவாசைத் தர்ப்பணத்தை அளித்திடல் வேண்டும் என்று பலரும் நினைக்கின்றார்கள். இது தவறு, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா நமக்கு அருளியுள்ள போதாயன அமாவாசை அன்று ஜாதி, இன, குல பேதமின்றி அனைவருமே தர்ப்பணம் அளித்திடல் வேண்டும். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா நமக்கு அருளியுள்ள போதாயன அமாவாசை அன்று ஜாதி, இன, குல பேதமின்றி அனைவருமே தர்ப்பணம் அளித்திடல் வேண்டும். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவே நமக்கென உத்பவிக்கச் செய்த அற்புத அமாவாசை தினமாதலால் போதாயன அமாவாசைத் தர்ப்பணத்திற்குப் பலவித தெய்வீக சக்திகள் உண்டு. சூரிய சந்திர தேவ மூர்த்திகள் ஒன்றாகச் சேர்ந்து ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை தரிசித்த தினமாக போதாயன அமாவாசைத் திதி விளங்குவதால் இந்நாளில் செய்யப்படுகின்ற தான தர்மங்களுக்கு அபரிமிதமான பலன்கள் உண்டு. குறித்த சில கர்ம வினைகளைத் தீர்ப்பதாக போதாயன அமாவாசை நாள் விளங்குகின்றது. வேறு எவ்விதத்திலும் இவற்றைப் போக்க முடியாது. போதாயன அமாவாசை என்றால் என்ன?
சற்றே மகாபாரத யுகத்திற்குச் செல்வோமா? அக்காலத்தில் நித்ய தர்ப்பண முறைகள் இருந்தன. அப்போதெல்லாம் அமாவாசை தினம் மட்டும்தான் தர்ப்பணம் என்பது கிடையாது. நம் மூதாதையர்கள் இவ்வாறாகச் செய்து வந்த நித்ய தர்ப்பண முறைதான் காலப் போக்கில் மறைந்து போய் மாதத்திற்கு ஒரு முறை என அமாவாசைத் தர்ப்பணப் பூஜையாக மாறிவிட்டது. நம்முடைய பித்ரு தேவர்களையும் நாம் தினந்தோறும் பூஜித்தாக வேண்டும். பெறுதற்கரிய மானிடப் பிறவியைப் பெறுவதற்கு வழிவகுத்த நம்முடைய மூதாதையர்களுக்கு நன்றிக் கடனாகப் பித்ரு வழிபாடுகளை நாம் தினந்தோறும் செய்துதான் ஆக வேண்டும்.
மஹாபாரத யுத்தத்திலே அன்றைய மாலைப் பொழுதுக்குள் ஜெயத்ரதனை வதம் செய்வதாக சங்கல்பம் எடுத்துக் கொண்ட அர்ச்சுனன், தான் அவ்வாறு செய்யாவிடில் தன்னை மாய்த்துக் கொள்வதாகவும் அறிவித்து விட்டான். மாலைப் பொழுதோ நெருங்கிக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட சூரியன் அஸ்தமனம் ஆகும் நேரமும் வந்துவிட்டது அந்த நேரத்திற்குள் அர்ச்சுனனால் ஜெயத்ரதனை வதம் செய்ய இயலாது என்று நினைத்து கௌரவர்கள் மகிழ்ந்தனர். இங்குதான் கிருஷ்ண லீலை தொடங்கியது. ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தன்னைத் தரிசிப்பதற்காக பலகோடி வருஷம் தவம் பூண்ட சூரிய சந்திர மூர்த்திகளை ஆங்கே அன்று ஒருங்கே அழைத்தார். சூரியனும், சந்திரனும் சேருவதுதானே அமாவாசை. ஸ்ரீகிருஷ்ண பகவான் தன்னுடைய லீலையால் வானத்தைக் கருமை நிறமாகச் செய்திட, சூரியன் மறைந்தாற்போல் மாயை ஏற்பட்டது. அர்ச்சுனன் தன்னுடைய பிரதிக்ஞையில் தவறிவிட்டான் என்று எண்ணி அதுகாறும் மறைந்திருந்த ஜெய்த்ரதன் வெளியில் வந்திடவே அர்ச்சுனன் அம்பை எய்தி ஜெய்தரதனுடைய தலையைக் கொய்து அதனை அவன் தந்தையாகிய விருதாட்சிரன் மடியில் விழுமாறு செய்திடவே அவரும் சாபத்தால் சிரசு வெடித்து மடிந்தார். இருள் வந்ததே, அமாவாசை கூடியதே என்று எண்ணிப் பலரும் தர்ப்பண பூஜைகளைச் செய்ய தொடங்கினார்கள். இவர்களே போதாயனக்காரர்கள் ஆகினர். அவர்கள் இதனைக் கிருஷ்ண லீலை என அறியார்.

சூரிய தீர்த்தம் பரிதிநியமம்

சந்திர தீர்த்தம் பரிதிநியமம்

இவ்வாறாக ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா சூரிய, சந்திர மூர்த்திகள் சங்கமத்தில் ஏற்படுத்திய அமாவாசைத் திதிதான் போதாயன அமாவாசையாகும். அதற்கு மறுநாள் சர்வ அமாவாசை வந்திடும். சூரிய, சந்திர மூர்த்திகள் ஒருங்கே சேர்ந்து போதாய நாளில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை தரிசித்தனர். அமாவாசை என்றால் சூரிய, சந்திர மூர்த்திகள் இவ்வாறு சேருவதுதானே! பூலோகத்தில் இருவரும் ஒன்று சேர்ந்து ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் முன் பிரசன்னமான விசேஷ தினமே போதாயன அமாவாசையாகும். மானுட ரூபத்தில் இவ்விரு மூர்த்திகளுமே தங்களுடைய திருப்பாதங்கள் பூமியில் படிய பூலோகத்தில் தோன்றிய திருநாளே போதாயன அமாவாசை ஆனால் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் லீலை ரகசியங்கள் என்றால் அதில் கோடானு கோடி தெய்வீக அம்சங்கள் தொக்கி நிற்குமல்லவா! ஜெயத்ரனின் வதத்திற்குத்தானா இந்த போதாயன அமாவாசை லீலை பிறந்தது? இல்லை இல்லை! பிறகு எதற்காக சூரிய சந்திர மூர்த்திகள் பூலோகத்திற்கு வரவழைக்கப்பட்டனர்? இதற்குப் பின்னால் எத்தனையோ தெய்வீக ரகசியங்கள் உண்டு. இவற்றையெல்லாம் சித்தர்களுடைய இருடிகள் மகாபாரதத்தில் தான் காணலாம். நவநாத சித்தர்கள் என்ற ஆதிமூலச் சித்தர் குழாம் ஒன்று (எ)இன்றும் உண்டு. இவர்கள் ஆதிமூல சிவ பரப்பிரம்மத்தில் இருந்து தோன்றியவர்கள் ஆதலின் பரம்பொருளோடு கூடிய பிரகாச ரூப சித்தர்களாய் அன்றும் இன்றும் என்றும் இலங்குகின்றார்கள். நவநாத சித்தர்கள் என்றாலே மேல் லோகங்களில் அனைவருக்குமே ஒரு கிலிதான். ஏனென்றால் அந்த அளவிற்கு பக்தி நிலையிலே உத்தம சிவச் சம்புநாதர்களாய் விளங்குகின்றார்கள். இவர்களே போதாயன அமாவாசைக்கான சித்புருஷர்களின் ஞான பத்ர விளக்கங்களை அளித்துள்ளனர். போதாயன அமாவாசை அன்று அளிக்கப்படுகின்ற தர்ப்பணங்களையும் தர்ப்பண பூஜைகளையும் பித்ரு க்ஷேம வழிபாடுகளையும் சூரிய, சந்திர மூர்த்திகளே நேரில் நின்று ஆசீர்வதித்துச் செல்கின்றார்கள் என்றால் எத்தகைய அற்புதமான தர்ப்பண நாள் இது. எனவே போதாயனகாரர்கள் மட்டுமே செய்ய வேண்டிய அமாவாசைத் தர்ப்பணம் என்று எண்ணி விடாதீர்கள்.
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அனைவர்க்கும் பரம்பொருள்தாமே! அதே போலத்தான் சூரிய சந்திர மூர்த்திகளும். எனவே மும்மூர்த்திகளும் நேரில் நின்று ஆசீர்வதிக்கும் தர்ப்பணத் திருநாள் என்றால் அனைவர்க்கும் பொதுவானது தானே! போதாயன அமாவாசைத் தர்ப்பண பூஜையைச் செய்ய வேண்டிய விசேஷமான திருத்தலங்கள் சில உண்டு. எங்கெல்லாம் சூரிய, சந்திர மூர்த்திகள் சேர்ந்து வந்து சிவலிங்க பூஜையையும் பெருமாள் பூஜையையும் நிகழ்த்துகின்றார்களோ அவையாவும் போதாயன அமாவாசைத் தர்ப்பணத்திற்கு உரித்தான திருத்தலங்களாக விளங்குகின்றன. பித்ரு மோட்சத் தலங்களும், புனிதமான பித்ரு தர்ப்பணத் தலங்களும், இறைத்தலத் தீர்த்தங்களும் போதாயன அமாவாசைத் தர்ப்பணத்திற்கு மிகவும் சிறப்பான இடங்களாகும். திருவிடைமருதூர், கும்பகோணம் சக்கரப் படித்துறை, இராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், மதுரை அருகே உள்ள திருப்பூவனூர் , தஞ்சாவூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகில் உள்ள திலைதப்பதி (செதலப்பதி – கோயில்பத்து) , தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் ஒரத்தநாடு அருகில் (உள்ளூர்) உள்ள பரிதிநியமம் (பரிதியப்பர்) ஆலயத்தின் திருக்குளம் போன்ற பல திருத்தலங்களும் போதாயன அமாவாசைக்குரித்தான தர்ப்பணத் தலங்களாக விளங்குகின்றன. போதாயன அமாவாசைக்குரித்தான மிகச் சிறப்பான தர்ப்பணத் தலங்களுள் ஒன்றே சிதம்பரம் அருகில் உள்ளது. ஸ்ரீசூரிய, சந்திர மூர்த்திகள் ஒன்றாக வழிபட்ட தலம்.

ஸ்ரீஐயப்ப மகிமை

ஸ்ரீபூரண புஷ்கலா சமேத ஸ்ரீஐயப்ப மூர்த்தி (முன்அட்டைபட விளக்கம்): இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று புருஷ தீப சக்தி, சாக்த (அம்பிகை) தீப சக்தி, பரப்பிரம்மம் ஆகிய மூன்றையும் உணர்த்துவதாகப் பல ஆத்ம பாடங்களை நம் பெரியோர்கள் அளித்துள்ளனர். உத்தம இறைநிலையில் புழு, பூச்சி, தேவர், முனிவர், ஆண், பெண் என்ற ஜீவ இனபேதமே கிடையாது என்பதை உய்த்துணர வைப்பது இச்சா சக்தியும், கிரியா சக்தியுமாகும்.. இவ்விரண்டையும்  முறையாகப் பெற்றால்தான் மூன்றாவதாகிய ஞானசக்தி கைகூடிடும். இல்லறம் என்பது இச்சா சக்தியும், கிரியா சக்தியும் இணைந்த இறைமையாம்! இறைவனைக் கல்லில் வடித்து வேதக் கருத்தினை பூஜைகள் மூலமாகத் தந்தாலே புரிந்து கொள்ள முடியாத மனிதன் இறைவனின் சூட்சும ரூபத்தையா எளிதில் தானே உணர்ந்து கொள்ளப் போகின்றான்! எனவேதான் இறைமூர்த்திகளே தம்மை இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தியாக மனிதனுக்குப் புரியும் பலவடிவுகளில் தோன்றுகின்றான். பூரண புஷ்கலா தேவியருடன் காட்சியளிக்கும் ஸ்ரீஐயப்ப மூர்த்தி இந்த ஜோதித் தத்துவத்தை விரத நாயக மூர்த்தியாக விளங்குகின்ற கலியுகத்தின் கண்கண்ட மூர்த்தியாவார். கலியுகத்தில் எப்பொழுதுமே ஜோதி வழிபாட்டிற்குத் தனிச் சிறப்புண்டு. மேலும் கலியுகத்தில் ஜோதி மூலமாகத்தான் இறைவனை எளிதில் உய்த்துணர முடியும் என்பதற்காகத்தான் திருஅண்ணாமலைக் கார்த்திகை தீபம், ஸ்ரீராமலிங்க சுவாமிகளின் அருட்பெருஞ் ஜோதித் தத்துவம், விளக்கு வழிபாடு, கற்பூர வழிபாடு போன்ற அக்னித் தத்வார்த்தங்கள் உணர்த்தப்பட்டுள்ளன. மனைவியின் அனுமதி பெற்றே ஒவ்வொருவரும் நன்முறையில் ஐயப்ப விரதம்தனை மேற்கொள்ள வேண்டும். இதற்கு மனைவியும் பரிபூரண ஒத்துழைப்புத் தருதல் வேண்டும். மகர ஜோதியாகிய ஞான சக்தியைக் கண்டு தரிசித்துப் பரிபூரண பலன்களைப் பெற்றிட விரதம் பூணுகின்ற கணவன், நல்விரதந்தரும் இச்சா சக்தியை கிரஹித்துக் கொண்டு நல் விரதத்திற்கு மனைவியளிக்கின்ற கிரியா சக்தி என்ற பரிபூரண பக்தியைக் கூட்டி மகர ஜோதியாம் ஞான சக்தியாம் நல்லிறை தரிசனம் பெறுகின்றான் என்பதை உணர்த்துவதே அட்டைப்பட விளக்கமாகும்.. இருமுடி தாங்கி சிவஜோதியைக் காணுவதென்பது பூரண இச்சா சக்தியுடன் புஷ்கல கிரியா சக்தியைக் கூட்டி மகர சாஸ்தா ஜோதியான ஞான சக்தியை அடைவதாகும்.

நாகலோக சட்ட திட்டங்கள்

நாக தோஷத்தை நீக்க நல்வழி காண்பீரே! பூலோகம் போல பிரபஞ்சத்தில் உள்ள நாகங்களுக்கெல்லாம் உரித்தான பல நாக லோகங்கள் உண்டு. ஸ்ரீஅஸ்தீக சித்தரையே நாகங்கள் அனைத்தும் தங்களுடைய தலைமையாக ஏற்றுக் கொண்டுள்ளன. நாகங்கள் அனைத்தும் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவையே, எவரைத் தீண்ட வேண்டும் என்று தலைவிதியாய் விதிக்கப்பட்டுள்ளதோ அவரைத்தான் எந்த நாகமும் தீண்டுமே தவிர சத்தியத்தை மீறி வேறு எவரையும் தீண்டாது. மிகவும் கட்டுக்கோப்பான சத்சங்க வாழ்க்கையைக் கொண்டுள்ளவையே நாகங்கள் ஆகும். முறையான வாமன தந்திரங்களை அறிந்திட்டால் நாகங்களின் துணையோடு அற்புதமான இறைச் சமுதாயத் திருப்பணிகளை மேற்கொண்டிடலாம். சற்குருமார்களுடைய பலவிதமான நற்காரியங்களுக்குத் துணைபுரிகின்ற நாகலோக தேவதைகள் இன்றும் பல உண்டு. நாகம் என்றால் அஞ்சத்தக்க வேண்டிய விஷமுள்ள ஜந்து என்றுதானே மனித குலமே நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் பூலோகம் போல எத்தனையோ நாகலோகங்கள் உள்ளன என்பதையும், இவற்றில் வாழும் நாகங்கள் அனைத்துமே சத்திய நெறிகளுக்கு ஆட்பட்டவை என்பதையும் பலரும் அறியார். நாகங்களுக்கு உரித்தான வாமன தந்திர மந்திர விதிகளைத் தக்க சற்குரு மூலம் முறையாகக் கைக்கொண்டால் பலவிதமான நாகங்களைக் கொண்டு அற்புதமான பல இறைச் சமுதாயத் திருப்பணிகளை நிகழ்த்திடலாம். உதாரணமாக அஷ்டதிக்கு நாக வகைகள் எந்த திக்கில் எந்நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது என்பதை தீர்க்க தரிசனமாக தெரிவிக்க வல்லவை. சில வகைப் பாம்புகளின் மூலமாக பூமிக்கு அடியில் உள்ள பலவகையான அற்புதமான மூலிகைக் கிழங்குகளை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மூல நோயைத் தீர்க்கும் வராகச் சுடர்க் கிழங்கு இவ்வகையைச் சேர்ந்தது. இன்றைக்கும் ஆந்திரம், கர்நாடகா, கேரளா போன்ற பல பகுதிகளில் சில இல்லங்களைக் காக்கக் கூடிய குடும்பக் காவல் நாகவகைகள் உண்டு. இவை வீட்டில் இருப்போருடன் சகஜமாகப் பழகி, ஜன்னல் கதவு, உத்தரம் போன்ற இடங்களில் எப்போதும் தங்கி, தொங்கிக் கொண்டிருக்கும். அந்த வீட்டுக்காரர்கள், குழந்தைகள் கூட இவற்றைக் கண்டு அஞ்சுவதும் கிடையாது. இவையெல்லாம் இல்லத்தைக் காக்கின்ற உத்தர காவல் நாகங்கள் ஆகும். லோக சம்ரட்சக நாகங்கள் என்றும் இவற்றை அழைக்கின்றார்கள்.

நாகதேவதைகள்
ஸ்ரீகச்சபேஸ்வரர் சிவாலயம்

விடம் நீக்கும் கசப்பு(டம்)! – முருங்கைக்காய், புடலங்காய் போன்றவற்றில் சில காய்கள் மிகவும் கசப்பாக இருக்கும். சில வெள்ளரிக் காய்கள் கூடக் கசந்து விடும். இவற்றை வாமன தந்திரத்தில் நாகம் ஏறிய காய்கள் என்று சொல்வார்கள். இவ்வாறு பாம்பு ஏறி, அமர்ந்த காய்கறிகளை வைத்து எவ்விதத்தில் அவற்றைச் சமுதாய நலன்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான சில பூஜை நியதிகளும் உண்டு. இத்தகைய பாம்பு ஏறிய கசப்புக் காய்கறிகளை நன்றாக நறுக்கி வெயிலில் உலர வைத்து நன்றாகச் சூடாக்கப் பட்ட மோருடன் (கொழுமோர்) சேர்த்துத் தோட்டங்களிலும், நிலங்களிலும் மண்ணோடு மண்ணாகக் கலந்து, இம்மண்ணில் விஷகடி நோய்களை/விஷத்தை நிவர்த்தி செய்கின்ற மூலிகைகளான அருகம்புல், கருஞ்செம்பை, கிளிமூக்கு கொன்றை போன்ற மூலிகைத் தாவரங்களை வளரச் செய்வார்கள் அல்லது இம்மூலிகைகளின் வேர் மண்ணோடு மேற்கண்ட கலவை சேர்க்கப்படும், இவ்வகையில் வளரும் மூலிகைகளுக்கு அபரிமிதமான விஷம் நீக்கும் சக்தி உண்டு. இதற்காகவே பாம்பு ஏறிய காய்கறிகளை வகைப்படுத்துவதற்காகவே இதில் நன்றாகத் தேர்ச்சி பெற்ற மலைவாழ் பெருங்குடி மக்களும் உண்டு. நாகப்புற்றுகளைக் காக்கின்ற நாகங்களும் உண்டு. இவற்றைக் குலநாகம் என்று அழைப்பார்கள். தரையினுள், கீழே எவ்வாறு நீரோட்டங்கள் இருக்கின்றனவோ, அதே போல நிலத்தடியில் பாம்பு வழிச் சாலைகளும் நிறைய உண்டு. ஆங்காங்கே உள்ள பல பாம்புப் புற்றுகளும் நிலத்தடித் தொடர்பு கொண்டவையாக இருக்கும். வெளியில் தெரியாதபடி பூமியினுள் நிலத்தடிப் பாதையாக இவை இருப்பதால் இவற்றில் பாம்புகள் மணிக்கு 80 மைலுக்கும் மேலான வேகத்தில் மிகவும் வேகமாக ஊர்ந்து சென்று பூலோகத்தின் பல்வேறு பாகங்களுக்கும் எளிதில் சென்று விடுகின்றன. நாகர்கோயில், பாதரக்குடி (திருவாடானை), திருவொற்றியூர், சமயபுரம், புற்றுநாக அம்மன், மருதமலை போன்ற நாகத்திற்கு தொடர்பான புனிதத் தலங்களில் நிலத்தடியில் நிறைய பாம்பு வழிச்சாலைகள் உண்டு. இவையெல்லாம் இன்றைக்கும் தெய்வ ரகசியங்களாகவே விளங்குகின்றன. இவ்வாறாக ஆங்காங்கே உள்ள பாம்புப் புற்றுகளைக் காக்கின்ற குலநாகங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை ஆகும்.

அபலைக்கு அபாயமில்லர் அபயம்! பல குடும்பங்களிலும், எண்ணற்ற துயரங்களால் வாடுகின்ற அபலைப் பெண்கள் உண்டு. எந்த துன்பத்தையும் வெளியில் சொல்ல முடியாதபடி இக்கட்டான சூழ்நிலைகளில் வாடிவதங்குகின்ற இத்தகைய அபலைப் பெண்களைக் காப்பாற்றுபவர்களாக விளங்குபவர்கள் தான் குலநாக தேவதா மூர்த்திகள் ஆவர். வீட்டை விட்டு வெளியில் நகர முடியாதபடியும், வெளியில் ஒரு கோயிலுக்கு கூடச்செல்ல முடியாத படியும் மிகவும் மோசமான சூழ்நிலைகளில் அல்லல்படுகின்ற பெண்கள் நாகம்மன், நாகாத்தாள், நாகம்மை போன்ற நாக தேவமூர்த்திகளுக்கு பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். திருச்சி மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஸ்ரீஅய்யர் மலை கிரிவலப் பாதையில் உள்ள சக்தி வாய்ந்த நாகப்புற்றை வழிபட்டு வருதலால் அபலைப் பெண்களுக்கு நல்வழி கிட்டும். இத்தகைய தூர எண்ணக் கதிர்களை (Telepathy) மானசீகமாக அறிந்து அவற்றை அந்தந்த நாகலோக தேவ மூர்த்திகளிடம் சேர்த்துத் தக்க நிவாரணத்தைப் பெற்றுத் தருகின்ற நல்வர நாகங்களுக்கு நீல ஸ்த்ரய நாகங்கள் என்று பெயர். இவை பெரும்பாலும் ஸ்ரீமுப்பாத்தம்மன் (சென்னை தி.நகர்), நாகர்கோயில் சிவாலயம், காஞ்சிபுரம் ஸ்ரீகச்சபேஸ்வரர் ஆலயம், சமயபுரம், ஸ்ரீஅய்யர்மலை போன்ற நாக தேவதா மூர்த்திகள் அருள்சுரக்கின்ற அற்புதமான திருத்தலங்களில் இந்த நீலஸ்த்ரய நாக தேவதா மூர்த்திகளின் சக்தி மிகுந்திருக்கும். அபலைப் பெண்களைக் காக்கின்ற அற்புத நாக தேவதா மூர்த்திகளிவை.

ஆஹா! நாகக் காவல்! முற்காலத்தில் பல ஆலயங்களிலும் அந்த ஆலயத்தின் விருத்திக்காக எத்தனையோ கோடி ஐஸ்வர்யங்களைப் பாதுகாத்து மீன், நாகச் சின்ன அடை மொழிகளை ஆலயத்தின் பல சுவர்ப் பகுதிகளில் வைத்திருப்பார்கள்.. இதனுடைய ரகசியங்கள் அறிந்தவர்கள் மன்னர்களும், ராஜகுருமார்களும் மூத்த ராஜதந்திரிகளும் ஆவர்! கோவில் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கென்ற தனிப்பட்ட தேவ நாகப் படைகள் உண்டு. “கருத்திரள்பூ” என்ற நாக வகையைச் சேர்ந்த இவையாவும் ஆலயச் சொத்துக்களைப் பல கோடி யுகங்களாக பத்திரமாகப் பாதுகாத்து வருபவையாகும். இவற்றின் ஆயுளோ ஆயிரமாயிரம் ஆண்டுகளாகும். தம் ஆயுளும் இறைப் பணியும் முடிந்த பின் அத்தலத்திற்கு வருகின்ற சித்தர்கள், மஹரிஷி, ராஜ குரு, யோகியரிடம் ஆலய திரவியத்தை ஆவை ஒப்படைத்து விடும்.

ஸ்ரீதனுசு சுப்ரமண்யர் திருவையாறு

கோயில் சொத்து குலநாசம் – ராஜ நாகங்களால் மனித குலத்திற்கு எவ்விதத் தீங்கும் கிடையாது என்றாலும், கோவில் சொத்துக்களை அபகரிக்க நினைப்போர்க்கு, எண்ணுவோர்க்கு, முயல்வோர்க்கு இந்த நாகப்படைகள் தாம் தக்க பதிலைத் தரும். ஒவ்வொரு கோவிலுக்கும் உரித்தான நீர், நிலம், சொத்துக்கள், கடைகள் போன்றவற்றை முறையற்ற வகையில் அனுபவிப்போர் இன்றும் பலர் உண்டு. கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை, இடங்களை, கடைகளை மிகவும் குறைந்த வாடகையில்/குத்தகையில் எடுத்துக் கொண்டுவிட்டு, அதைக்கூட முறைப்படி செலுத்தாதவர்களும் உண்டு. ஏன் மாதம் ரூபாய் 20 மட்டுமே மாதாந்திர வாடகையாகச் செலுத்திக் கோயில் கடைகளை வைத்திருப்போரும்/அதர்மமாக ஆக்கிரமித்திருப்போரும் ஏலத்தில் எடுப்போரும் உண்டு. இறைவனையே ஏமாற்றுவதாக எண்ணிக் கொள்வதா? பொதுவாக, ஆலய தேவதைகள் யாவும் மிகவும் பொறுமை கொண்டவையே! கோயில் சொத்துக்களை அபகரிப்போர் இப்போதைக்கு வேண்டுமானால் புத்திசாலித்தனமாக தப்பித்திடுவதாக எண்ணிடலாம், இந்த ஆலய தேவதைகள் என்றேனும் ஒரு நாள் நிச்சயமாக அவர்களுக்குத் தக்க பாடத்தைப் புகட்டிவிடும். எனவே கோயில் நிலத்தையும், கோயில் இடங்களையும் தவறான முறையில் பயன்படுத்துவோர்க்கும் மிகக் குறைந்த வாடகை செலுத்தி ஆலயச் சொத்தினை அதர்மமாகப் பயன்படுத்தி இறைவனையே ஏமாற்றி வருவோர்க்கும் நாக சாபங்கள் பெருத்துவிடும். நாக தோஷங்களால் ஏற்படும் துன்பங்களைப் பற்றி நாம் நன்கு அறிவோம். எனவே இன்றைக்கு இல்லாவிடினும் என்றைக்கேனும் ஒரு நாள் கோயில் சொத்துக்களை அபகரிப்போர்க்கும், குறைந்த வாடகையில் அனுபோகம் செய்வோர்க்கும் நாக சாபங்கள் நிறைந்து கடுமையாகத் தண்டிக்கக் காத்துக் கிடக்கின்றன. இவ்வாறாக ஆலயத்திற்கான நாகக் காப்பு தேவதைகளும் பல விசேஷமான நாக தேவதா மூர்த்திகளும் உண்டு. நாகப் புற்றுக்களை இடித்து, தரை மட்டம் செய்து, அவற்றின் மேல் கட்டடங்களை, வீடுகளை எழுப்புவோர்க்களும் பலவிதமான நாக தோஷங்களில் சிக்கிக் கொள்கின்றனர். நாகப்புற்று இருக்கும் இடங்களை அவ்வாறே விட்டு விடுவதுதான் சிறப்புடையது ஆகும்.

இவையெல்லாம் மூட நம்பிக்கைகள் அல்ல நமக்கு நம் மூதாதையர்களால் பெரியோர்களால் பகுத்துத் தரப்பட்டுள்ள, பகுத்தறிவுடைய ஆன்மீக நெறிமுறைகளாகும். இந்நற்பழக்கங்களை எல்லாம் நாம் கைவிட்டமையால்தான் இன்றைக்குத் துன்பங்கள் நிறைந்த தினசரி வாழ்வை நாம் கலியுகத்தில் பெற்றுள்ளோம்! இன்று கலியில் எங்கு பார்த்தாலும் தீயொழுக்கங்களும், வன்முறைகளும், சூதாட்டமும், மதுவும் குடியும் புகை பிடித்தலும், பெருகி வரக் காண்கின்றோம். மனித சமுதாயத்திற்கு அடிப்படையானதே நல்லொழுக்கம்தானே! இதையே காற்றில் பறக்கவிட்டால் பின் எவ்வாறு அமைதியான சாந்தமான சமுதாயத்தை நாம் பெறமுடியும்?! இவ்வாறாக ஒவ்வொருவருடைய நல்லொழுக்கக் கூட்டலே சமுதாயத்தை இறையமைதிப் பூங்காவாக்கும். இதற்கு சத்சங்கமாக சத்திய சட்ட திட்டங்களுடன் வாழ்கின்ற நாக வழிபாடே பெரிதும் உதவும். கணவனோ, பிள்ளைகளோ தீயொழுக்கத்தில் மிதந்து குடும்பமே ஸ்தம்பிக்கும் போது நாக வழிபாடுதான் அவர்களுக்கு நல்வழிகாட்டும். இன்னொரு வகையான நாகங்களுக்கு “கஞ்சுக சூரி” நாகங்கள் என்று பெயர். இவையும் ஆலயத்தில் இறைச் சொத்திற்குக் காப்பாக நிற்கின்றன. மேலும் தெய்வ வடிவுகளின் ஆவாஹன சக்தியை தீட்டுக்கள், சூன்ய மந்திரங்கள், வாமன அசூயைகள் மூலமாக முறிக்க முயல்வோரை விரட்டி அடிக்கும் நாகங்கள் இவை. ஒருவர் தகாத வழியில் கோயிலின் இடத்தை ஆக்கிரமித்து இருக்கின்றார் என்றால் இந்த நாகங்கள் ஏன் அவரின் மீது உடனடியாகச் சீறவில்லையே என்றுதான் உங்களுக்கு கேட்கத் தோன்றும்?

திருந்திட நல் அருள் மருந்து! இறை நீதி மன்றத்தில் ஒருவர் தங்களுடைய தவறுகளுக்காக வருந்தி மனதார திருந்திப் பிராயசித்தங்களை மேற்கொள்வதற்காக நிறைய சந்தர்ப்பங்கள் அளிக்கப்படுகின்றன. சாதாரணமாக நல்ல மனிதனாக வாழ்பவன் செய்கின்ற நற்காரியங்களை விடத் தீய ஒழுக்கத்திலிருந்து திருந்தி வந்து நன்னெறியை மேற்கொள்பவன், தன்னைப் போன்ற பலரும் இவ்வாறு தீயதிலிருந்து விலகி நல்வாழ்க்கை தனைப் பெற வேண்டும் என்பதற்காகத் துடிப்புடன், தீவிர வைராக்கியத்துடனும் வாழ்ந்து நம்பிக்கையுடன் பிறருக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற செயலாற்றக் கூடிய வகையில் வாய்ப்புகள் நிறைய இருப்பதால்தான் இறை நீதிமன்றத்தில் அதுவும் கலியுகத்தில் நிறைய சந்தர்ப்பங்கள் அளிக்கப்படுகின்றன. தவறு என்றால் அடுத்த வினாடி தண்டனை என்பது ஏனைய யுக நியதிகளாம்! ஆனால் அனைத்துவிதமான தவறுகளுக்கும் இவ்வாறான பிராயசித்தம் நிச்சயமாக அமையும் என்று சொல்ல முடியாது. சில தவறுகளைத் திருத்திக் கொள்வதற்காக வாழ்க்கையிலேயே, பிறவியிலேயே, ஒரே ஒருமுறைதான் ஒரே ஒரு சந்தர்ப்பமாக அளிக்கப்படுகிறது. சத்குருவின் அருள் பரிபாலனத்தில் கிட்டும் இந்த அரிய வாய்ப்பை விட்டு விட்டால் வேறெங்கும் தேவலோகங்களில் கூட எந்த விதமான பிராயசித்தங்களையும் பெற முடியாது. எனவே இத்தகைய நாக தோஷங்களிலிருந்து மீளுவதற்குத் தக்க சற்குருவை நாடியே பரிகாரங்களைப் பெற வேண்டும்.

யோகத்தில் நாகங்கள்! நாகங்கள் ஒன்றுக்கொன்று மனோரீதியாகத் (Telepathy) தொடர்பு கொள்ளக் கூடிய சக்தியுடையவை. பாம்புகளுக்கென்றே தனிமொழியும் உண்டு நம்முடைய காதுகளுக்கு எட்டாத மிக மெல்லிய சப்தத்தில் அவ்வை பரிபாஷை மாற்றத்தைச் செய்து கொள்கின்றன. மேலும் மனிதர்கள் மட்டுமே வாய் வழியாகத் தங்களுடைய கருத்துக்களைச் சொல்லியோ, எழுதியோ காட்ட வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றார்கள். மனிதனைத் தவிர கிட்டத்தட்ட அனைத்து பிராணிகளுமே மனோலயச் செய்திப் பரிமாற்றத்தில் (Telepathy) சிறந்து விளங்குகின்றன. திருஅண்ணாமலையில் இருக்கின்ற ஒரு நாகம் மதுரையில் ஒரு பாம்புப் புற்றில் இருக்கின்ற ஒரு நாகத்துடன் மிக எளிமையான முறையில் ஒரு சில வினாடிகளில் மனோலயத் தொடர்பு கொண்டுவிடும். இவ்வாறாக மனிதனைவிட நிறையத் தெய்வீக ஆற்றல் கொண்டதாகப் பல பிராணிகள் விளங்குகின்றமையால் மனித குலமானது அவற்றுடன் அன்போடு இருந்து எவ்வாறு அவற்றின் உதவியோடு சமுதாய இறைத் திருப்பணிகளை ஆற்ற முடியும் என்பதைப் பகுத்தறிந்து ஆராய்வதற்காகத்தான் மனித குலம் பெறுவதற்கரிய பகுத்தறிவைப் பெற்றுள்ளது. பொதுவாக ஓரிடத்தில் ஒன்பது துவாரங்களுடன் (திறவு வாய்) நாகப் புற்று இருப்பின் அது மிகவும் நாகயோக சக்தி வாய்ந்ததாக விளங்குகின்றது. நாம் சாதாரணமாக நினைப்பது போல் பாம்புகள், புற்றுகளில் வெறுமனே தங்குவதில்லை. “சர்ப சகட யோகம்”, “சம்பூர்ண வாயு சரண யோகம்” போன்ற பலவிதமான யோக முறைகளில் ஒரு நாகமானது தன்னைப் பல யோக முத்திரைகளில் புற்றினுள் பதித்துக் கொள்கிறது. புற்றுக்காக நாம் வைக்கின்ற பாலின் க்ஷீர சந்ரோதய சக்தியானது நாகத்தின் யோக அக்னி சக்தியை நமக்குத் தேவையான நல்வர சீதள யோக பலன்களாக மாற்றித் தருகின்றது. எனவே நாம் வைத்திட்ட பாலை நாகம் அருந்த வில்லையே, வேறு பிராணிகள்தாம் அருந்துகின்றனவே என்று ஒருபோதும் எண்ணாதீர்கள். ஆழ்ந்த யோக நிலையில் இருக்கின்ற ஒரு நாகத்தின் உடலானது ஐஸைக் காட்டிலும் மிக குளிர்ச்சியாக இருக்கும். சில நாகங்கள் சகடயோகபீட தியானத்தின் போது அளவுக்கு மீறிய எடை கொண்டதாகவும் அல்லது காற்றை விட எடை குறைந்ததாகவும் தன்னை ஆக்கிக் கொள்கின்ற அஷ்டமா சித்தி சக்திகளையும் பெற்றுள்ளன. இவ்வாறாக ஒரு சிறு நாகக் குட்டி கூட மனிதனால் பெற முடியாத பல அபூர்வமான பல சித்திகளைப் பெற்றிருக்கிறது. பறக்கும் வகையைச் சேர்ந்த சில வகை நாகங்கள் வாயுச் சலன யோகங்களில் சிறந்தவையாகும். இத்தகைய பறக்கும் நாக தரிசனங்களே பல நல்ல சகுனங்களாக நமக்கு அமைகின்றன. உண்மையில் இறைவன் நாகங்களை மட்டும் படைத்திருக்காவிட்டால், மனிதன் வனங்களையே அழித்துத் தன்னுடைய சொந்த வீடுகளாக ஆக்கிக் கட்டிக் கொண்டு இருப்பான். எனவே இறைவன் அளித்த இயற்கையின் பாதுகாப்பிற்கும். சிருஷ்டி பரிபாலனத்திற்கும், பிரம்ம ஜீவதாரணத்திற்கும் நாகங்கள் பெரிதும் உதவுகின்றன என்று சொன்னால் அது மிகையாகாது.

அசத்தியத்திற்கு அச்சம் தரும் அசாத்ய ஆஸ்ரித நாகங்கள்!

தன்னுடைய வாழ்க்கையிலே நிறைய பொய்களைப் பேசி, பொய்களிலே மிதந்து வாழ்பவர்கள் ஏராளம். நிதி நிறுவனங்களில் பணத்தை இழந்து மக்கள் ஏமாறுவதும் உண்டு. இதற்குப் பொறுப்பேற்கின்றவர்கள் தங்களுடைய பொய்மைக்கும், தீயொழுக்கத்திற்கும் ஏமாற்றியமைக்கும் மனம் வருந்தி நாகப் புற்று வழிபாட்டினை முறையாகச் செய்து வருதல் வேண்டும். இல்லாவிடில் சத்தியத்தை மீறியமைக்காக சிலவிதமான நாகதோஷங்களுக்கு ஆளாவர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தருவதே முதல் பரிகாரமாகும். சத்திய லோகங்களின் நாயகர்களாக விளங்குபவர்களே பல ஆஸ்ரித பானு நாகங்கள் ஆகும். எனவே வியாபாரத்தில், வாழ்க்கையில் சத்தியத்தைத் தம் வாழ்வில் கீழே போட்டு மிதித்து சத்தியத்தையே வஞ்சித்தமைக்காக வாழ்க்கையில் ஒரே முறையான பரிகாரமாகத் தக்க குருவின் அருள்வழி மொழிகளுடன் வடக்கு நோக்கிய  நாகப்புற்று வழிபாட்டினை முறையாக மேற்கொள்ள வேண்டும். உண்மையில் அனைத்துப் புற்றுகளிலும் நாகங்கள் நிச்சயமாக உறைகின்றன. ஆனால் சாதாரண மனிதன் என்ன எதிர்பார்க்கின்றான் என்றால் நாகப் புற்றிற்கான பூஜையில் தான் வைக்கின்ற கிண்ணத்தில் உள்ள பாலை, பாம்புப் புற்றிலிருந்து வெளிவந்து நாகங்கள் அருந்த வேண்டும் என்றுதான்! ஆனால் பாம்பு என்று ஒன்று புற்றிலிருந்து வருமேயானால் அந்தப் புற்றை சும்மாவா வைத்திருப்பார்கள். இடித்துத் தள்ளிவிட மாட்டார்களா! ஆலயத்திற்கு வருபவர்கள். சுற்றி இருப்பவர்கள் அஞ்சி, அலறி ஓடிவிட மாட்டார்களா என்ன....?! எனவேதான் பாம்புகள் தங்கள் இருப்பிடத்தை வெளிக் காட்டுவதில்லை பால் கிண்ணத்தின் அருகில் செல்லாமலேயே சூட்சுமமாக அந்தப் பாலை கிரகித்து அருந்தக்கூடிய அற்புத சக்திகளை உடைய தெய்வீக நாகங்களும் உண்டு.

அரவம் ஊறும் ஆண்டவன் திருமேனி  :- சில வகையான நாகங்கள் ஆலயங்களில் லிங்க மூர்த்திகளின் மீதும், தெய்வ மூர்த்திகளின் திருமேனியின் மீதும், சிரசிலோ, பாணத்திலோ , கிரீடத்திலோ, ஆவுடையிலோ, திருவாசியிலோ, பிரம்ம பீடத்திலோ இரவில் வந்து தங்கியிருக்கும். மனித சஞ்சாரம் ஏற்பட்ட உடன் அங்கிருந்து அகன்று விடும். இவையெல்லாம் நாகங்களுடைய பல தெய்வீக குணப்பாடுகளாய் குறிக்கின்றன. நம்மை விட இறைத் திருமேனியின் பவித்திரத் தன்மையை அவை நன்கு உணர்ந்திருக்கின்றன. ஆலயங்களுக்கு வர இயலாத சூழ்நிலையில் எத்தனையோ குடும்பங்களில் ஆண்களும், பெண்களும் குறிப்பாக விதவைகள், அனாதைகள், பெற்றோரை இழந்த அபலைப் பெண்கள் பலவிதமான கொடிய துன்பங்களில் வாடுகின்றனர் அல்லவா?! அவர்களுடைய பிரார்த்தனைகளை எல்லாம் இந்த தெய்வீக நாகங்கள் மனோலயமாக கிரகித்துக் கொண்டு, அவற்றை இறைவனுடைய திருமேனிகளில் சிரசுகளில், பாணங்களில், பீடங்களில் ஆவுடைகளில் சமர்ப்பணம் செய்கின்றன. இதற்கென்றே வரம் பெற்ற நாகங்கள் இவை. எனவே சமுதாயத்தின் தீய சக்திகளுக்கு அஞ்சி வாழ்கின்ற ஆதரவற்ற பெண்ணின் நல்வாழ்விற்கு நல்வரம் பெற்றுத் தரும் நாகங்களிவை. எனவே நமக்கு நல்ல வரங்களைத் தாமாகவே நமக்குப் பெற்றுத் தரும் நீலகண்ட நாகங்களும் உண்டு. லிங்கத்தின் இறைத்திரு மேனிகளின் மீதும், லிங்கத்தின் மேலும் தங்கும் சக்தியைப் பெற்றுள்ள இந்த நீலகண்ட நாகங்கள் வேறு எவ்விடத்திலும் தங்காது. அதே போல பிரம்ம பீடத்தில் ஒட்டித் தங்குகின்ற நாகங்கள், தம்முடைய சத்திய நெறியாக பிரம்ம பீடத்தைத் தவிர மீறி வேறெங்கும் தங்காது. இவ்வாறாக ஆலயத்தில் மட்டுமே தங்கவேண்டிய நாகங்களும் உண்டு. இவ்வகையில் நாக லோகங்களில் உள்ள நாகலோகச் சட்டங்கள் எத்தனையோ உண்டு. அங்கு எந்த ஒரு சிறு இறைநியதியும் ஒரு சிறு பாம்புக் குட்டியால் கூட மீறப்படுவது கிடையாது. ஆனால் மனித சமுதாயத்தில்தான் எத்துணை காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள்! சட்ட திட்டங்களை மீறுவதெல்லாம் நமது மனித சமுதாயத்தில் மட்டுமே காணலாம்.
நம் ஆஸ்ரம வெளியீடான ஸ்ரீஆயுர்தேவி மஹிமை என்ற நூலில் பலவகையான நாகப் புற்றுகளின் விளக்கங்களையும், அவற்றின் பூஜை முறைகளையும் கண்டிடலாம். காஞ்சீபுரம் ஸ்ரீகச்சபேஸ்வரர் ஆலயத்திலுள்ள நாக மூர்த்திகளும் மிகவும் சக்தி வாய்ந்தவை. இதுபோல நூற்றுக்கும் மேற்பட்ட நாக மூர்த்திகளை ஒன்றாக தரிசிப்பது பூலோகத்தில் காணுதற்கரியதாகும். பஞ்சமி திதியிலும் வெள்ளிக்கிழமைகளிலும் இங்கு நாக மூர்த்திகளை அடிப்பிரதட்சிணமாக வந்து வழிபட்டு ஏழைச் சுமங்கலிகளுக்கு மாங்கல்யச் சரடுகளாய் தானமாக அளித்து வந்தால் எத்தகைய திருமண தோஷங்களுக்கும் நிவர்த்தி கிட்டும். ஸ்ரீஅய்யர்மலை கிரிவலத்தில் உள்ள அபூர்வ நாகப்புற்றினை வழிபட்டு 108 முறையேனும் நாகப்புற்றினை பிரதட்சிணம் வந்திடில், குருவருளால் பல கொடிய நாக தோஷங்களுக்கும் தக்க பரிகார முறைகள் கிட்டும். குறிப்பாக அபலையாக வாழ்ந்து சமுதாயத்தில் பெறும் மனித இம்சைகளிலிருந்து விடுபட்டு சாந்தமயமான வாழ்வும் அமையும். சிலவிதமான நாக தோஷங்களால் சந்ததி பாதிப்பு, சொத்துக்களை இழத்தல், இடுப்புக்கு கீழ் உடல் அங்கஹீனம் ஆதல் அல்லது உடற்பகுதி பாதிக்கப்படுதல் என்று பலவிதமான உடற் சிதைவுகள்/கடும் நஷ்டங்கள் ஏற்பட்டிடும். இவ்வாறு பலவிதமான நாகதோஷங்களால் பாதிக்கப்பட்டோர் நல் வாழ்வைப் பெற வெள்ளி தோறும் ஸ்ரீஅய்யர் மலையில் கிரிவலம் வந்து/தம் சார்பில் சந்ததியினரை/ உடன் பிறந்தோரை வரச்செய்து கிரிவலப் பாதையில் நாகப் புற்றை வழிபட்டு, ஏழைகளுக்குப் பசும்பால் தானம் அளித்து வரவேண்டும்.

தெய்வீகமாக வாழ்வது எப்படி ?

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ R.V வெங்கடராமன் அவர்களுடன் பாரதத்தின் பல பகுதிகளுக்கும் செல்கின்ற பாக்கியத்தைப் பெற்றோர் பலர் உண்டு. சென்னையோ, திருஅண்ணாமலையோ, திருச்சியோ, கேதார்நாத்தோ, எந்த இடமாக இருந்தாலும் சரி ஆங்காங்கே அந்தந்த புனித இடங்களில், சித்தபுருஷருடைய ஞானப்பத்திர கிரந்தங்களிலிருந்து கலியுகத்தின் அன்றாட நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான தெய்வீகமாக வாழ்வதற்கான வழிமுறைகளை வான்வழி குருமொழிகளாக நமக்கு கிரகித்து எடுத்துரைக்கின்றார். நம்முடைய தினசரி வாழ்க்கையில் பூஜைக்காக யோகத்திற்காக, தியானத்திற்காக, எவ்வளவு நேரத்தைப் பயன்படுத்துகின்றோம் என்று ஒவ்வொருவரும் தங்களுடைய மனச்சாட்சியைத் தொட்டுக் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வியாகும். ஏனென்றால், தெய்வீகமாக வாழ்வது எப்படி என்ற இத்தொடரில் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் நம் இல்லறத்தோடு இணைந்த இறை வழிபாடுகளையும், யோக, தியான நெறிகளையும் எளிமையான முறையில் நமக்கு அளித்து வருகின்றார்கள். ஏதோ தெய்வீகம் என்றால் நியம நிஷ்டத்துடன் கூடியது ஓய்வு பெற்றபின், (retire) ஆனபின் செய்ய வேண்டிய துறையென்று பலரும் ஒதுக்கிவைத்து விடுகின்றார்கள். ஏதோ சிறுகீற்றாக நெற்றியில் விபூதியோ, குங்குமமோ, இட்டுக் கொண்டு நேரம் கிடைக்கும் போதுமட்டும் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து வந்தால் மட்டும் போதுமா இந்தக் கடவுள் நம்பிக்கை? இதெல்லாம் நீங்கள் உங்களுக்குள்ளேயே ஆத்மவிசாரம் செய்து கொண்டு, உங்களையே நீங்கள் எடைபோட்டுக் கொள்ள வேண்டிய வழிமுறைகளாகும். நம்மை நாமே சுயசோதனை செய்து கொள்வதைத்தான் , ஆத்மவிசாரம் என்று எடுத்துரைத்தார்கள்.
 இந்தக் கலியுக வாழ்வில் நாம் தினந்தோறும் எதிர்நோக்கின்ற துன்பங்கள் தான் எத்தனை எத்தனை! இதற்கெல்லாம் காரணம் நம்முடைய பூர்வஜென்ம வினைகள் என்றாலும் இவற்றைச் சமாளிப்பதற்கான மனோ தைரியத்தையும் துணிவையும் நல்ல வைராக்கிய மனப்பான்மையும் நாம் பெறவேண்டும் அல்லவா! எனவே நம் மூதாதையர்களும் நித்திய வழிபாடாக அந்தந்த நாளுக்கு, திதிக்கு, நட்சத்திரத்திற்கு உரித்தான பல எளிய வழிபாட்டு முறைகளையும் அளித்திருந்த போதிலும் அவற்றை நாம் உதாசீனப்படுத்தி விட்டதால்தான் சிறிய இன்னல்களையும், துன்பங்களையும் சமாளிப்பதற்கு கூட திராணியியில்லாமல் ஏனோதானோ வென்று வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். கடவுளின் அருளினால்தான் நாம் ஒவ்வொரு விநாடியும் வாழுகின்றோம் என்ற உறுதியான எண்ணம் நமக்கு நிச்சயமாக ஏற்பட்டு இருக்கின்றதா? நாம் கடவுளை மறந்து பயனற்று வாழுகின்ற நேரம் எவ்வளவு? நம்முடைய சம்பாதியத்திற்கான பணியிலும் காரியங்களிலும் பொழுது போக்கியும் தேவையற்ற உறக்கத்திலும் எவ்வளவு நேரத்தைச் செலவழிக்கின்றோம்? நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கான உறக்க நேரம் போக ஏனைய காலத்தில் இறை நினைவோடு நம்முடையக் காரியங்களை, நிறைவேற்றும் முறைகளை அளிப்பதே இந்த தெய்வீகமாக வாழ்வது எப்படி என்ற அற்புதமான ஆன்மீகத் தொடர் ஆகும்.

விதவிதமான வழிபாடுகளை நாம் மேற்கொள்ளும் போதுதான் நம்முடைய மனதிற்குப் புத்துணர்ச்சி பிறக்கின்றது. நம் உடலில் உள்ள 72000 நாடி நரம்புகளையும், நாளங்களையும் இறைத்துறையில் ஆக்கப்படுத்துதல் வேண்டும் நாம் ஏனோதானோவென்று உப்பு சப்பின்றி வாழ்க்கை நடத்துவதற்குக் காரணமே இந்த 72000 நாடி நரம்பு நாளங்களில் நிறைந்திருக்கும் இறைச் சாளர நாடிகளில் ஒன்றிரண்டை மட்டும்தான் நாம் பயன்படுத்துகின்றோம், ஏனைய இறைச்சாளர நாளங்கள் அப்படியே சும்மா கிடக்கின்றன. இதுமட்டுமல்லாமல் கோடிக்கணக்கான செல்கள் நிறைந்த நம் மூளையில், நாம் 30 அல்லது 40 செல்களுக்குமேல் பயன்படுத்துவதே கிடையாது. இதற்காகவா இறைவன் பகுத்தறிவுடைய மூளையை நமக்குப் படைத்திருக்கிறான்.  அனைத்து இறைச் சாளர நாளங்களையும் மூளையின் செல்களையும் ஆக்கப்படுத்த வேண்டுமானால் நாம் பலவிதமான பூஜை முறைகளை நிச்சயமாகக் கடைபிடிக்க வேண்டும். கோபுர தரிசனம், கலச தரிசனம், அடிப்பிரதட்சிணம், ஹோமம் போன்ற பலவிதமான அபிஷேக ஆராதனைகள், உண்ணா நோன்பு என்று எத்தனை விதமான வழிபாடுகளை நாம் கடைப்பிடிக்கின்றோமோ அந்த அளவிற்கு நம் உடலில் உள்ள நாடி நரம்புகள் மூளைச் செல்களும் ஆக்கப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக இன்று காலை நீங்கள் எழுந்தவுடன் மிகவும் கவலைகளுக்கு ஆட்பட்டவராக விளங்குவதாக வைத்துக் கொள்ளுங்கள். அதையே நினைத்துக் கொண்டால், நீங்கள் நிவாரணத்தைப் பெற்றுவிட முடியுமா அல்லது சமாளிக்கலாம் என்று ஒதுக்கி வைத்திடத்தான் முடியுமா? பலரும் இந்தத் துன்பச் சுமைகள் ஏற்படும்போது புகை பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றில் தற்காலிகமாகத் தங்கள் உணர்வை இழக்கும்படி செய்துவிடுகின்றார்கள். என்ன இருந்தாலும் என்ன இருந்தாலும் மீண்டும் அந்த துன்பங்களைத்தானே நீங்கள் (தானே) சந்திக்க வேண்டியுள்ளது.

நம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகள் அடிக்கடி சித்தர்களின் பரிபாஷையாக கூறுவது போல “உலகம் ஒரு ரவுண்டுதான்” அதாவது நாம் சுற்றிச் சுற்றி அதே நிலைக்கு நாம் வந்தாக வேண்டும். அந்த நிலையைக் கடந்தால் ஒழிய! இன்றைக்கு பல தவறுகளையும் செய்துவிட்டு தண்டனை பெறாது தப்பிப்போருக்கு ஒரு நாள் அதே நிலைமையைச் சந்தித்துதான் ஆகவேண்டும்.. இதனை ‘உலகம் ரவுண்டு‘ என்று அவர் சித்தர் பரிபாஷையாக அடிக்கடிக் குறிப்பிடுவார். இதே போலத்தான் நாம் பலவிதமான பெரும் பாவங்களை செய்துவிட்டு யாருக்குத் தெரியப் போகின்றது என்று தப்பிக்க நினைத்தாலும் இவற்றை இப்பிறவியிலோ அல்லது எதிர்வரும் பிறவியிலோ சந்தித்துத்தான் ஆகவேண்டும் என்பதை மனதில் நிலைநிறுத்திக் கொண்டால்தான் நம்மை நாமே ஆத்மவிசாரம் செய்துகொண்டு திருத்திக் கொள்ள முடியும்! நாம் வாழ்கின்ற கலியுகத்திற்கு ஏற்றதான எளிதான வழிபாட்டு முறைகள் நிறைய உண்டு. ராமர் வாழ்ந்த திரேதா யுகத்திலோ அதற்கு முந்தைய கிருத யுகத்திலோ ஒரு ஹோம வழிபாடு என்றால், கண்டிப்பான நியம நிஷ்டைகளுடன் அவற்றைக் கடைப்பிடித்தாக வேண்டும். ஒரு சிறுபிழை ஏற்பட்டாலும் கூட அங்கச் சிதைவுகள் தண்டனையாக ஏற்பட்டுவிடும். ஆனால் காலப்போக்கில் இது மாறுதலுக்கு உட்பட்டு கலியுகத்தில் அதர்மங்கள் தலைவிரித்தாடுவதால் இவற்றுக்கு ஊடே மனித சமுதாய நிலைகளுக்கு  ஏற்ப பல எளிய வழிபாடு முறைகளை, சித்தபுருஷர்களுடைய ஞானப்பத்ர கிரந்தங்களில் காணலாம். இவற்றைத் தக்க சற்குரு மூலமாகப் பெற்றுக் கடைபிடித்தால்தான் சிறப்புடையதாகும். கலியுகத்தில் மனிதனுடையத் துன்பங்களைக் களைவதற்கான மிகச் சிறப்பான எளிய பூஜைகளில் ஒன்றுதான் ‘பித்ரு (தேவ) படிக்கட்டுப் பூஜை‘ என்பதாகும். திருஅண்ணாமலையில் நம் ஆஸ்ரம முகப்பு வாயிலில் உள்ள 12 படிக்கட்டுகள் பித்ரு (தேவ) சக்கரங்களாலும், இயந்திரங்களாலும் ஆக்கப்பட்டு லட்சக்கணக்கான கிரிவல அடியாருடைய பாதங்களைத் தாங்கிவரும் பேறுபெற்றதாகும். அக்காலத்தில் காசி, இராமேஸ்வரம், கேதார், பத்ரிநாத், சபரிமலை போன்றத் திருத்தலங்களுக்குச் சென்று வந்தோருடைய பாதங்களைத் தொட்டு பூஜை செய்கின்ற நமஸ்கரிக்கின்ற தெய்வீகப் பண்பாடு, நிறைந்திருந்தது.. இக்காலத்திலும் கூட திருஅண்ணாமலையில் கிரிவலம் செய்து வருகின்றவர்கள் பாதங்களைத் தொட்டு வணங்குகின்ற நற்பழக்கத்தை இன்றைக்கும் சிலர் அபூர்வமாக கடைபிடித்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக பல லட்சக்கணக்கான கிரிவல அடியார்கள் இப்படிகளில் ஏறிவந்து அன்னதானத்தைப் பெற்றுச் சென்றமையால், அவர்களுடைய புனிதமான திருப்பாதங்களைத் தாங்கி பித்ரு சக்தி நிறைந்ததாகப் படிக்கட்டுகள் விளங்குகின்றன. அதெப்படி? பித்ருச் சக்ர சக்தி நிறைந்த புனிதமானப் படிக்கட்டுகளை மிதித்திடலாமா என்று தோன்றிடும். ஆனால், சபரிமலையில் மிகமிகப் புனிதமாக விளங்குகின்ற 18 படிக்கட்டுகளிலுமே கோடிக்கணக்கான தேவாதி தேவர்கள் உறைந்து அங்கு புனித விரதம் தாங்கி, வருகின்ற அடியார்களுடைய பாதங்களைத் தாங்கும் பாக்கியத்தைப் பெரும் பேறாகக் கருதி அப்படிக்கட்டுகளில் கோடிக்கணக்கான தேவர்களை, பித்ருக்களை தா(த)ங்குகின்றார்கள். அடியார்க்கு அடியாராக விளங்குவதைத்தானே இறைவன் விரும்புகின்றான். எனவே நன்முறையில் விரதம் ஏற்கின்ற அடியார்கள் யாவருமே, ஐயப்பனாகத்தானே கருதப்படுகின்றார்கள். இதே போலத்தான் நன்முறையில் திருஅண்ணாமலையில் கிரிவலம் வருகின்ற யாவருமே இறையம்சம் பூண்டவராய் விளங்குகின்றார்கள். எனவே இறைவனே மலைத் திருமேனியாகக் கொண்டுள்ள பிரபஞ்சத்தின் புனிதமான மலையைத் (திருமேனியை) வலம் வருகின்றவருடைய புனிதமான திருப்பாதங்களைத் தாங்குவதில்தான் பித்ரு தேவதைகள் பரமானந்தம் கொள்கின்றார்கள். எனவே, உங்களுடைய இல்லங்களில் இத்தகையப் படிக்கட்டுப் பூஜையை எவ்வாறு மேற்கொள்ள முடியும்?

சபரிமலையின் 18 படிக்கட்டுகளைப் போல உங்கள் இல்லங்களிலும் 12 படிக்கட்டுகளை மரப்பலகையால் அமைத்துக்கொள்ளுங்கள் மா, பலா, தேக்கு, அரசு, ஆல் போன்ற விருட்சங்களால் ஆனவையாக இருக்கவேண்டும். மரங்கள் பூச்சி அரித்தல் இல்லாமல் நன்முறையில் இருந்திட வேண்டும். மரக்கட்டைகளைச் செதுக்கும் போது அவற்றிற்குரித்தான விடுப்பு மந்திரங்களையெல்லாம் ஓதி அவற்றில் உள்ள தோஷங்களை நீங்கச் செய்து நன்முறையில் விரதம் இருந்து 12 படிக்கட்டுகளை அமைத்துக்கொள்ள வேண்டும். பௌர்ணமிதோறும், அமாவாசை தோறும் பித்ருக்களுக்கு உரித்தான திதிகளிலும் இந்தப் பித்ருப் படிக்கட்டுகள் ஒவ்வொன்றிலும் வில்வ தளத்தையோ, துளசி தளத்தையோ வைத்திடுதல் வேண்டும். முதல் பலகையில் சர்க்கரையும், இரண்டாவது பலகையில் சிறிது உப்பும், மூன்றாவது படிக்கட்டில் சிறிது புளியும், நான்காவது படியில் அரிசியும், ஏனையப் படிக்கட்டுகளில் நவதானியமும் பழவகைகளும் வைத்து வழிபடலாம். தினந்தோறும் 12 படிக்கட்டுகளுக்கும் சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம் இட்டு வருதல் சிறப்புடையதாகும். பித்ரு படிக்கட்டுகளுக்கு அர்ச்சனை செய்கின்றபோது எள் தானியத்தையும் பயன்படுத்திடலாம் அல்லது தும்பை, சம்பங்கி, பவளமல்லி, துளசி, வில்வதளம் போன்றவற்றைப் பயன்படுத்திடலாம். முதலில் நன்றாக ஒரு பலகையில் அமர்ந்துகொண்டு மூதாதையர்க்குத் தர்ப்பணம் அளித்துவிட்டு, பிறகு இந்த பூஜையை தொடங்குதல் வேண்டும். தர்ப்பணம் என்றால் அமாவாசைத் திதியில் மட்டும்தான் என்பதில்லை. தினந்தோறும் கூட தர்ப்பணம் அளித்திடலாம் அளித்தாக வேண்டும். அக்காலத்தில் பெரியோர்கள் நித்திய தர்ப்பணமாக, தினசரி நம் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டு வந்தார்கள். அமாவாசை தினங்களில் இந்த பித்ரு படிக்கட்டுகளை புதிய கறுப்பு வஸ்திரத்தைச் சார்த்தி நமஸ்கரித்து, பித்ருக்களுக்கு நம்முடைய மூதாதையர்களுக்கு ப்ரீதியான உணவுப் பண்டங்களைப் படைத்து வழிபட்டு வருதல் வேண்டும் அந்தந்த நாளுக்கு உரித்தான வண்ண நிற ஆடைகளைச் சார்த்தியும் வழிபடுவது சிறப்புடையதாகும். தினந்தோறும் இந்த பன்னிரெண்டுப் படிக்கட்டுகளையும் தொட்டு வணங்குதல் வேண்டும். கீழ்க்கண்ட நாமாவளிகளை ஓதி தினசரி அர்ச்சனை செய்து வழிபட்டு வாருங்கள்! மாதந்தோறும் மட்டும்தானே தர்ப்பண பூஜை செய்கின்றோம். அதையும் முறையாகச் செய்ய முடியவில்லையே என்று ஏங்குவோர்க்கு இந்த நித்திய பித்ருப் படிக்கட்டு பூஜை மிகச் சிறந்தப் பிராயச்சித்தமாக அமைந்து பித்ரு தோஷங்களையும் நிவர்த்தி செய்ய உதவுகின்றது. இந்த சிறிய எளிய பூஜைக்கு 10 நிமிடங்களுக்கு மேல் ஆகாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்! இதை நன்றாகப் புரிந்து கொண்டு, உங்களுடைய தினசரி பூஜைகளில் ஒன்றாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பித்ரு நாமாவளி துதிகள் :-

1. ஓம் ஆதித்ய பித்ரு தேவதா மூர்த்தியே போற்றி
2. ஓம் ருத்ர பித்ரு தேவதா மூர்த்தியே போற்றி
3. ஓம் வசு பித்ரு தேவதா மூர்த்தியே போற்றி
4. ஓம் பித்ரு பத்னிகளே போற்றி
5. ஓம் பித்ரு கணங்களே போற்றி
6. ஓம் பித்ரு தேவதா மூர்த்திகளே போற்றி
7. ஓம் பித்ரு தேவதைகளே போற்றி
8. ஓம் பித்ரு தேவகிரகங்களே போற்றி
9. ஓம் பித்ரு நட்சத்திர தேவதா மூர்த்திகளே போற்றி
10. ஓம் பித்ரு ஹோம தேவதா மூர்த்திகளே போற்றி
11. ஓன் பித்ரு யக்ஞ மூர்த்திகளே போற்றி
12. ஓம் பித்ரு தர்ப்பண தேவதா மூர்த்திகளே போற்றி

இவ்வாறு 12 நாமாவளிகளுடன் பித்ருப் படிக்கட்டுகளை பூஜைசெய்து தம்மைத் தாமே ஆத்ம பிரதட்சிணமாக 12 முறை சுற்றி வந்து 12 முறை வீழ்ந்து நமஸ்காரம் செய்தல் வேண்டும். இந்தப் பித்ரு படிக்கட்டினை வணங்கும்போது பித்ரு தேவதாமூர்த்திகளுக்கு உரித்தான ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஓதி வணங்குதல் வேண்டும்.

ஓம் ஜீவநாராயண ஸ்வரூப பித்ரு தேவாய வித்மஹே
வசுருத்ர ஆதித்ய தேவாய தீமஹி தன்னோ பித்ரு தேவ ப்ரசோதயாத்

சந்தன மரம், தேக்கு மரம், மா, பலா போன்ற ஜீவ விருட்சங்களில் வெள்ளி, தங்கம் போன்றவற்றினாலும் பித்ரு படிக்கட்டு அமைவது சிறப்புடையதாகும். நம்முடைய மூதாதையர்களுக்கு வசு பித்ருக்கள், ருத்ர பித்ருக்கள், ஆதித்ய பித்ருக்கள் போன்ற பலவிதமான தேவநிலைகள் உண்டு. ஒவ்வொரு தேவ நிலைக்கும் உரித்தான கிழமை, நட்சத்திர, திதி வழிபாடுகளும் உண்டு. இத்தகைய ஆன்மீக இரகசியங்களாய்த் தக்க சற்குருமார்களிடம் பெற்று கடைபிடித்து நல்வழிகளைப் பெற வேண்டுகிறோம் ஏனென்றால் பல குடும்பங்களிலும் விபத்துக்கள், தற்கொலை , கொலை போன்ற பலவிதமான துர்மரணங்களால் இறந்தவர்களுக்காகத் தகுந்த சிரார்த்தங்கள், திதி, திவசங்கள், தர்ப்பணா பூஜைகள் முறையாக அளிக்கப்படாமையால் எத்தனையோ குடும்பங்கள் பலவிதமான சாபங்களால் வாடுகின்றன. இவர்களுக்கெல்லாம் தக்க சற்குருவின் வழிகாட்டுதல் இருந்தால் போதும் மிக எளிமையான முறையில் பிராயச்சித்தங்களைக் கடைப்பிடித்து விட்டால் அவர்கள் பித்ரு சாபத்தினால், தோஷங்களினால் வருகின்ற துன்பங்களை மிக எளிதில் களைந்து வாழ்க்கையில் நல்ல முறையில் முன்னேற்றத்தைப் பெற்றிடலாம். அதற்கு உதவுவதாக அமைவதே இந்தப் பித்ரு படிக்கட்டு வழிபாடு ஆகும்.

அலுவலகச் சலுகைகள்

உங்கள் அலுவலகச் சலுகைகளிலுமா வினைப் படிமங்கள்? (The office – Perks Too Carry Horrendous Karmic jerks!)  - சில ஆன்மீக விளக்கங்கள்

வங்கி, தனியார் துறை, ரயில்வே துறை அரசுத் துறை, விமானத் துறை போன்ற பல இடங்களிலும் பணிபுரிபவர்களுக்குப் பலவிதமான சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. LFC என்றும் LTC என்றும் அரசு செலவிலோ பல இடங்களுக்கும் சென்று வருவதற்காகக் குடும்பத்தாருக்கும் சேர்த்துப் பல பிரயாணச் சலுகைகள் கிட்டுகின்றன. ஆனால் இவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்/பலா பலன்கள் யாவை? இதை நன்கு உணர்ந்தால் தான் கூடுதல் கர்ம வினையைச் சேர்க்காது நாம் வாழ முடியும். கலியுகத்தில் நிகழும் ஒவ்வொரு சம்பவத்திற்கும் காரண காரியங்கள் உண்டு. உதாரணமாக LFC என்ற வகையில் அவரவர் தம் குடும்பத்தாருடன் இந்தியா முழுதும் எங்கு வேண்டுமானாலும் 2 வருடத்திற்கு ஒரு முறையோ, 3 வருடத்திற்கு ஒரு முறையோ சென்று வந்திடலாம் என்ற ஒரு சலுகை தரப்படுகிறது. அதாவது ஊழியரின் குடும்பத்தினருக்கான பயணச் செலவுகளை அந்த வங்கியே ஏற்றுக் கொள்கின்றது. அந்த வங்கி தருகின்ற பயணக் கட்டணத்தை வைத்துக் கொண்டு கேதார்நாத், பத்ரிநாத், காசி, திருப்பதி, திருத்தணி, இராமேஸ்வரம் என்று பல இடங்களுக்கும் சென்று வந்தால் கிட்டும் புண்ணியச் சக்திகள் யாவை, இவை யாருக்குச் சென்றடையும் என்று எவரேனும், சிந்தித்துப் பார்த்திருக்கின்றீர்களா? நீங்கள் முறையாக உழைத்துச் சம்பாதித்த பணத்தைக் கொண்டு தலயாத்திரை மேற்கொண்டால்தான் அதனுடைய பலன்கள் புண்ய சக்திகள் ஓரளவேனும் உங்களுக்கு முறையாக வந்து சேரும். ஆனால் வங்கி கம்பெனி, பொதுச் சொத்தின் மூலம் நீங்கள் பெறுகின்ற LFC கட்டணச் சலுகைகளால் வருகின்ற இந்த யாத்ரா புண்ய சக்தியின் பெரும் பலன்கள் உங்கள் வங்கிக்குத்தான்/கம்பெனிக்குத்தான் சென்றடையும். இந்த புண்ய சக்தி மூலமாகத்தான் பல வங்கிகளுக்கும் லாபம் கிட்டுகின்றது. எத்தனையோ பிரச்சனைகளுக்கு இடையிலும் வங்கி தப்பித்துத் தழைக்கின்றது. இது உங்கள் வங்கி லாபம் பெறுவதற்கு உதவுகின்ற புண்ய காரியமாகக் கூட ஏற்றுக் கொள்ளலாம். அதிலும் கூட வங்கிக்கு உண்மையாக உழைத்தால் தான் இந்தப் புண்யப் பரிமாற்றம் ஏற்படும். இல்லையேல் வேறுவிதமான இதுவும் கர்மவினையாகச் சேரும். அதாவது எந்தக் கம்பெனியின் மூலம் புனித யாத்திரைக்கான LFC கட்டணச் சலுகையினைப் பெறுகின்றார்களோ அந்த கம்பெனிக்குத்தான் புனித யாத்திரையின் பெரும்பாலான பலன்கள் சென்றடையும். ஒருவிதத்தில் உங்கள் கம்பெனிக்கு/வங்கிக்கு நீங்கள் வேலை பார்க்கின்ற நிறுவனத்திற்கு நீங்கள் செய்கின்ற நன்றிமயத் தியாகப்பணி என்று வேண்டுமானால் இதை எடுத்துக் கொள்ளலாம். எனவே இதனுடைய உட்பொருள் என்ன வென்றால் எந்தத் திருத்தல யாத்திரைக்கும் உங்களுடைய சுய சம்பாத்தியத்திலிருந்து எவ்வளவு செலவு செய்கின்றீர்களோ அந்த அளவிற்கான புண்ய சக்திதான் உங்களுக்கு வந்து சேரும். இது மட்டுமல்லாமல் நீங்கள் கடனாகப் பணத்தைப் பெற்று அதனை புனித யாத்திரைக்குப் பயன்படுத்துவீர்களேயானால் அதனைத் திரும்பச் செலுத்தும் வரை அந்தப் புனித யாத்திரையின் புண்ய சக்தியின் ஒரு பகுதி உங்களுடைய புனித யாத்திரைக்கு பணத்தைக் கடனாகக் கொடுத்து உதவியவருக்கும் போய்ச் சேரும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இதற்காகத் தான் அக்காலத்தில் வீட்டில் திருப்பதி உணடியல், காசி உண்டியல், திருத்தணி உண்டியல் என்றவாறாக அதில் சேருகின்ற பணத்தை வைத்து நம் மூதாதையர்கள் புனித யாத்திரை சென்று வந்தார்கள்.

Wages of sin!  எனவே உங்களுடைய சம்பளச் சலுகைகள்/ LFC/LTC செலவு மூலமாக நீங்கள் செய்கின்ற நற்காரியங்கள்/தீய காரியங்களின் பலன்கள் பெரும்பாலும் உங்களுடைய நிறுவனத்திற்கே சென்று சேரும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இது மட்டுமல்லாது நீங்கள் உங்கள் ஆபிஸில் ஓஸியில் செய்கின்ற டெலிபோன் கால்கள், வீட்டிற்கு எனப் பயன்படுத்துகின்ற அலுவலகச் சிறுசிறு பென்சில், ரப்பர் போன்றவையாவும் சிறு கர்மவினைகளாக உங்களுக்கு வந்து சேருகின்றன. அலுவலகத்தின் சிறு பேனா ரீபிலைக் கூட உங்களுடைய சொந்தச் செயலுக்கு பயன்படுத்தினாலும் கூட ஏன், ஒரு சிறு கையெழுத்து இட்டாலும் அதுகூட சிறுகர்ம வினையாக வந்து சேரும். இவ்வாறாகக் கர்மவினை, கர்ம வினை என்று சொல்லி அச்சுறுத்துகிறோம் என்று எண்ணாதீர்கள். ஏனென்றால் கலியுகத்தில் அந்த அளவிற்கு மிகமிகச் சாதாரண செயலில் கூட கலியுக மனிதன் கர்மவினைகளைச் சேர்த்துக் கொள்ளத் துவங்கி விட்டான் என்பதையே சுட்டிக் காட்டுகின்றோம். அதனால்தான் சிறிய சிறிய கர்ம வினையைக் கூட அவனால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. ஜீரணிக்கவும் முடியவில்லை. அதன் விளைவுகளைப் பற்றி உணராதவனாகவும் இருக்கின்றான். கர்ம வினைகளைச் சிறுக சிறுகச் சேர்த்து பெரும் பிறப்புகளை அல்லவா சேர்த்துக் கொள்கிறான். அப்படியானால் நீங்கள் சாதாரண முறையில் கர்ம வினையின்றி வாழ முடியாதா? ஏன் முடியாது? நீங்களாக உழைத்து சுய சம்பாத்யத்தில் நல்வாழ்க்கை வாழுங்களேன். ஏன் பிறருடைய பொருளை அபகரித்து வாழவேண்டும் . “எவர் பொருளையும் நான் அடைய விரும்பவில்லை, நான் நல்லவனாகவே வாழ்கின்றேன்”, என்று சொல்பவர்கள் ஆபிஸில் ஓஸியில் டெலிபோன் செய்தும் ஆபிஸுக்கு உரித்தான பொருட்களைப் பயன்படுத்துதலும் பொதுச் சொத்தை அபகரித்தலுக்குச் சமமானதுதானே. இது ஒரு சாதாரண விஷயம் தானே என்று நமக்கு நாமே சமாதானம் செய்து கொள்ளக் கூடாது. எட்டு மணி நேரம் உழைத்த சம்பளத்தில் எவ்வித தீயக் கர்மங்களும் சேரக்கூடாது என்றால் நீங்கள் முழுமையாக அந்த எட்டுமணி நேரமும் உழைத்தாக வேண்டும். இரண்டு மணி நேரத்தை அரட்டையிலும், வெளியில் சுற்றுவதிலும் நீங்கள் பொழுதைப் போக்கினால் ஒரு நாளைக்கு இரண்டு, இரண்டு மணி நேரங்களாகப் பெருகி 30/40 வருட சர்வீஸில் எவ்வளவு நேரங்களாகப் பல்கிப் பெருகி உருவெடுக்கின்றன என்பதை நீங்கள் அறிந்து உணர்ந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு நீங்கள் உங்கள் அலுவலகத்தில் பார்க்கின்ற நாற்காலிகளும், மேசைகளும், தூண்களும், அலுவலகத்தில் அரட்டை அடித்ததால் உழைக்காத நேரங்களுக்குப் பலன்களாக இத்தனை மணி நேர/வருடங்களுக்கு நிலைத்து நிற்கும் பொருட்களாக ஆகிவிட்டார்கள். நீங்களும் இவ்வாறு ஒரு தூணாகவோ, மேஜையாகவோ, நாற்காலியாகவோ உங்கள் ஆபிஸில் பிறப்பு எடுக்க வேண்டுமா? பிறப்பு என்றால் புழு, பூச்சி மட்டுமே என்று எண்ணிவிடாதீர்கள். ஜடப் பொருளாகக் கூடப் பிறப்பு எடுப்பது உண்டு. எனவே நம்முடைய ஒவ்வொரு செயலுமே நன்முறையில் இருந்தாக வேண்டும் என்பதற்காகவே இந்த ஆன்மீக ரகசியங்களை எல்லாம் இங்கு எடுத்துரைக்கின்றோம்.

சலுகையை இறைமயமாக்குவீர்! அப்படியானால் கம்பெனியிலிருந்து கிடைக்கின்ற இவ்விதச் சலுகைகளை எவ்வாறு ஆன்மீக ரீதியில் பயன்படுத்த முடியும்? காசி, கேதார்நாத், பத்ரிநாத் போன்ற இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று வர உங்களுக்கு நிறைய செலவு ஆகும் என்பதால் தானே நீங்கள் கம்பெனியின் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்கின்றீர்கள். இவ்வாறு LTC/LFC என்ற பயணத் திட்டங்களை மேற்கொள்கின்ற போது ஊட்டி, கொடைக்கானல் என்று பயனற்ற பொழுது போக்குகளில் நேரத்தைச் செலவிடாது காசி, அலகாபாத், ராமேஸ்வரம், கன்யாகுமரி, பத்ரிநாத் போன்ற இறைத் திருத்தலங்களுக்குச் சென்று இறைவனின் பல ரூபங்களையும் வழிபடுங்கள். எந்தத் தொகையை நீங்கள் LFC சலுகையாகப் பெற்றீர்களோ அந்தத் தொகைக்கு ஈடான அளவில் துணிமணிகளையும், பாதணிகளையும், உணவுப் பொருட்களையும் தானமாக ஆங்காங்கே வழங்கி வருவீர்களேயானால், இத்திருத்தலங்களின் மஹாத்மியத்தின் பலனாக தான தருமங்களின் பலன்கள் பன்மடங்காகப் பெருகி உங்கள் கர்மவினைகளைத் தீர்ப்பதோடு மட்டுமல்லாமல் அபரிமிதமான புண்ணிய சக்திகளையும் பெற்றுத் தரும். உங்கள் கம்பெனி அனுமதித்தால் ஏழைகளையும் உங்களுடன் திருத்தல யாத்திரைக்கு அழைத்துச் சென்று அவர்கள் கனவிலும் கூட தரிசிக்க இயலாத பல திருத்தலங்களையும் வழிபாடு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்திடுக. இவ்வாறாகத்தான் நீங்கள் பெறுகின்ற ஒவ்வொரு சலுகையிலும் எவ்வித தீவினைக் கர்மமும் சேர்த்திடாமல் அதே சமயத்தில் அபரிமிதமான புண்ய சக்தியும் பெருகிடுவதற்கான நல்வழி முறைகளை சற்குரு மூலம் நீங்கள் அறிந்திட்டு நன் முறையில் உங்கள் வாழ்க்கையை நடத்திட வேண்டும்.. அதுசரி இவ்வாறு இதுவரையில் இருந்து விட்டோமே இதற்கு என்ன செய்வது? நீங்கள் உங்களுடைய கம்பெனியின் மூலமாக திருத்தலங்களுக்குச் சென்றதன் புண்ய சக்திகள் பயனாகத்தான் உங்கள் கம்பெனி நன்முறையில் செயல்படுகிறது நல்ல முறையில் (good management) இயக்கப்படுவதால் ஒரு கம்பெனி நன்முறையில் செயல்படுகிறது என்பதைவிட அதில் பணிபுரிபவர்கள் அக்கம்பெனியில் பெறும் வருமானத்தைக் கொண்டு செய்யக் கூடிய நற்காரியப் புண்ய சக்தியின் பலன்களாலும் கூட கம்பெனிக்கு நன்மை சேரும் என்பதை நீங்கள் இனியேனும் உணர்ந்திடுதல் வேண்டும். இவ்வாறாக சித்புருஷர்களின் மெய்ங்ஞான விளக்கங்கள் எத்தனை எத்தனை! என்றுதான் நாம் இவற்றைப் பரிபூர்ணமாக அறிந்துகொண்டு நம் வாழ்க்கையின் ஒவ்வொரு விநாடியையும் நன்முறையில் கழிக்கப் போகின்றோமோ, இறைவா! நீயே இதனை அறிவாய்! சற்குரு மூலமாக உணரச் செய்திடுவாய்!

ஸ்ரீபல்குனி ருத்ர சித்தர்

தாவரங்களுக்கும், விலங்கினங்களுக்கும் முக்தி நிலைகளைத் தரவல்ல சித்த மாமுனியே பல்குனி ருத்ர சித்தர்! உங்கள் வீட்டிலுள்ள பிராணிகளும், பூச்செடிகளும், மரங்களும் ஏன் பல்லி, பூச்சிகள் கூட உங்களுடன் பூர்வ ஜென்மத் தொடர்புடையவையே! தென்னிந்திய ‘கயா’வாக விளங்கும் பூவாளுர் திருத்தல மஹிமையை நமக்கு அளித்தவரே ஸ்ரீபல்குனி ருத்ர சித்தர்! மனித குலத்திற்கு மட்டுமின்றி விலங்கினங்களுக்கும் குறிப்பாக, கழுதை இனத்திற்கும் அருள்பாலிக்கின்ற தியாகப் பெருவாழ்வை மேற்கொண்டுள்ளவரே பல்குனி ருத்ர சித்தர் ஆவார். கழுதையை வாகனமாகக் கொண்டுள்ள தெய்வ மூர்த்திகளும் உண்டு. பித்ருக்களுடைய முக்தி நிலைக்கும் வழிவகுக்கின்ற பல்குனி புனித நதி தீரமானது எத்தனையோ பாவங்களுக்கும் தீவினைக் கர்மங்களுக்கும் நல்ல தீர்வை அளிப்பதாக விளங்குகின்றது. வட இந்தியாவில் பீகார் மாநிலத்தில் உள்ள கயா திருத்தலத்தைப் போல் தென் இந்திய கயாவாக விளங்குவது தான் திருச்சி-லால்குடி அருகேயுள்ள பூவாளுர் திருத்தல பல்குனி நதி தீரமாகும். பித்ரு மோட்சத் தலமாகவும், பித்ரு தர்ப்பண, ஹோம, சிரார்த்த வழிபாட்டிற்கும் மிகச் சிறந்த பல்குனி நதி தீரமாகவும் இலங்குவதே பூவாளுர்! கயாவிலும் பூவாளூரிலும் உள்ளதும் பல்குனி நதியே! கடந்த இதழில் பல்குனி நதி தீரத்தின் சிறப்பைப் பற்றியும் அனைத்து ஜீவன்களுக்கும், குறிப்பாக விலங்கினங்களுக்கும் முக்தி பெறும் வழிநிலைகளை ஊட்டி, உணர்த்துகின்ற உத்தம சித்புருஷராக விளங்குபவரான ஸ்ரீபல்குனி ருத்ர சித்தரின் மகிமையைப் பற்றி ஓரளவு எடுத்துரைத்துள்ளோம் அல்லவா. புழு, பூச்சி, முதல் அனைத்து ஜீவன்களின் நல்வாழ்விற்கும் தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ள சித்தர்களை சித்தர்களே அறிவார்கள். நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீ RV வெங்கடராமன் அவர்கள் தம் சற்குருவாம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடமிருந்து தம் குருகுல வாசத்தில் பெற்ற பல சித்த புருஷர்களைப் பற்றிய பல அற்புதமான தெயீக அனுபூதிகளாய் நமக்கு ஸ்ரீஅகஸ்திய விஜயம், ஆன்மீக உரையாடல்கள், தெய்வீக நூல்கள், உபந்நியாசங்கள், ஆன்மீகப் பேருரைகள் மூலமாகவும் நம் நல்வாழ்விற்காக அளித்தும் வருகின்றார்கள். மனிதனுக்கு மட்டுமில்லாமல் ஒவ்வொருவரும் தம்முடைய வாழ்நாளில் சற்குருவைப் பெற்றாக வேண்டும் என்ற இறை நியதியை வலியுறுத்திச் சற்குருவைப் பெறுவதற்கான நல்வழிமுறைகளையும் ஊட்டி உணர்த்துகின்றார்கள். புழு, பூச்சியென ஒவ்வொரு ஜீவனுக்கும் சற்குரு உண்டு. ஸ்ரீகசவனம்பட்டி சுவாமிகள், ஸ்ரீபுண்ணாக்கீசர், ஸ்ரீஉத்தர கண்ட சித்தர், ஸ்ரீபல்குனி ருத்ர சித்தர், ஸ்ரீவல்லப ஈசர், காஞ்சிபுரம் ஸ்ரீபோடா சித்தர், (ஸ்ரீசிவசாமி சுவாமிகள்), ஸ்ரீமகா அவதூது பாபா, ஸ்ரீதர்ப லிங்க சித்தர், ஸ்ரீதடிதூக்கி சித்த சுவாமிகள், ஸ்ரீகொடுக்குவால் குடுமி சித்தர்  போன்ற அற்புதமான சித்த புருஷர்களைப் பற்றிய அரிய விளக்கங்களை ஸ்ரீஅகஸ்திய விஜயம் மூலமாக நமக்கு குருமங்கள கந்தர்வா அவர்கள் அளித்துள்ளார்கள். என்றும் வாழும் ஏகாந்த ஜோதிகளான சித்த புருஷர்களின் அனுபூதிகளை மட்டுமின்றி அவை புகட்டும் பாடங்களை உணர்தலே வாழ்க்கையில் பெறுதற்கரிய பாக்கியமாகும். ஏனென்றால் இத்தகைய குருகுலவாச அனுபூதிகள்தாம் சற்குருவை நாம் பெற்றாக வேண்டும் என்ற நிரந்தரமான உத்வேகத்தை நம் மனதில் ஒளிர்விக்கின்றன. மனிதனாகப் பிறந்தாலும் கூட விலங்குகளின் குணங்களைப் கொண்டிருப்போர் ஏராளம். பிறரைக் கொடுமைப்படுத்துதல், கொடிய வார்த்தைகளால் சுடுதல், பொய் பேசுதல், குரோதம், விரோதம், பொறாமை, பகைமை, கோபம் என மனிதர்களிடம் உள்ள தீய குணங்கள்தாம் எத்தனை எத்தனை! விலங்குகளிடம் பல தெய்வீக குணங்கள் நிறைந்திருப்பதை நாம் சுட்டிக்காட்டி வருகின்றோம். எனவே எந்த ஜீவனும் எதற்கும் தாழ்வுடையது அல்ல! மனிதப் பிறவி என்பது ரஜோ குணம், சாத்வீக குணம், தாமச குணம் ஆகிய மூன்றின் தொகுப்புத்தானே. இதில் சாத்வீக குணங்களை நிரம்பக் கொண்டு இருப்பவர்தான் நல்ல மனிதன் ஆகின்றார். நூற்றுக்கு நூறு தேவ அமிர்த சாத்வீக குணங்களைக் கொண்டு இருப்பவர்கள்தாம் யோகியர், மகான்கள், சித்த புருஷர்கள், சாத்வீக குணங்களே தியாகமய வாழ்வைத் தந்து உத்தம பித்ருக்களின் நிலைக்கும் வழிவகுக்கும். சாத்வீகம் என்றால் வெறுமனே சாதுவாக இருத்தல் என்பது மட்டும் பொருளன்று. தெய்வீகத்தைப் பேணுதற்கும், தீய சக்திகளை, அழிப்பதற்கும், தீவினைகளே எதிர்த்துப் போராடுதற்கும் மனத்திண்மையும் வீரமும் தெய்வீகத்தில் தேவையே.

ஸ்ரீபல்குனி ருத்ர சித்தருடைய யோகத் திருப்பாதங்களை வருடிச் சென்றமையால் கயாவில் ஸ்ரீபல்குனி நதிக்கு மேலும் பல உத்தம தெய்வீக நிலைகள் கூடின. இன்றைக்கும் கயா திருத்தலத்தில் வருடந்தோறும் லட்சக் கணக்கான மக்கள் திரண்டு பித்ரு தர்ப்பண பூஜைகள், பித்ரு தர்ப்பண வழிபாடுகளையும், தான தர்மங்களையும் நிகழ்த்தி தங்களுடைய பலவிதமான தீய கர்ம வினைகளுக்குப் பிராயச்சித்தங்களைத் தேடிக்கொள்கின்றார்கள். ஆனால் அனைவராலுமா கயா திருத்தலத்திற்குச் செல்ல முடிகின்றது! உடல்  வளமும், வசதியும் உள்ளவர்கள் கண்டிப்பாக கயா திருத்தலத்திற்குச் சென்று பலவிதமான பாவங்களுக்குத் தீவினைக் கர்மவினைகளுக்குரித்தான பிராயசித்தங்களைப் பெற வேண்டும். ஏனென்றால் குறித்த சில பாவவினைகளைக் கயாவில்தான் கழிக்க முடியும். வேறு எங்கும் அவற்றிற்கான பிராயசித்தத்தை பெற முடியாது. ஆனால் கலியுகத்தில் போகப் போக வன்முறைகளும், தீயச்செயல்களும் நிகழ்கின்ற போது திருத்தல யாத்திரை என்பது துன்பங்கள் நிறைந்ததாக ஆகி விடுகின்றதுதானே!  ஜீவன்கள் புண்ணிய நதியில் நீராடுவதால் தமக்கு ஏற்படுகின்ற பாவச் சுமைகளை நீக்குவதற்கான அறவழி முறைகளைக் கேட்டு நதி தேவதைகள் ஸ்ரீபல்குனி ருத்தர சித்தரை நாடின என்று சென்ற இதழில் கண்டோமல்லவா. ஸ்ரீபல்குனி ருத்ர சித்தர் கூறலானார். “தென்னிந்தியாவில் மிகவும் புண்ணியமான காவிரி நதி தீரத்தில் பூவாளூர் என்னும் திருத்தலத்தில் ஓடுகின்ற பல்குனி நதி, கயா திருத்தலத்திற்கு ஈடானது. எனவே நீங்கள் அங்கு சென்று யாம் அளிக்கின்ற குறிப்பிட்ட திதியில், ஹோரையில், யோக, கரண நேரத்தில் நீராடி உங்களுடைய பாவச் சுமைகளுக்குரித்தான பிராயச்சித்தத்தைப் பெற்றிடுக,” என்று அவர் அறிவுறுத்தி, புண்ய நதி தேவதைகளுக்கு சுபஹோரை, திதி காலத்தைக் குறித்துத் தந்தார். இதனைக் கேட்டுப் பரமானந்தம் அடைந்த அனைத்து புண்ய நதி தேவதைகளும் தென்னாட்டில் பூவாளூரில் ஓடுகின்ற பல்குனி நதி ஆற்றில் அப்புனித நேரத்தில் நீராடி இறைவனின் பெரும் கருணையால் தங்களுடைய பாவச் சுமைகளின் பெரும் பாரத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டார்கள்.. ஸ்ரீபல்குனி ருத்ர சித்தர் கயா நதியிலேயே அவர்களைப் புனித நீராடல் மேற்கொள்ளச் செய்திருக்கலாமே, ஏன் தென்னிந்தியாவிற்கு அனுப்பிட வேண்டும்?

இன்றைக்குப் பூவாளூராக விளங்குகின்ற இச்சிவத்தலமானது பல யுகங்களுக்கு முன் பலவிதமான பெயர்களுடன் விளங்கியது. தட்சிணாலயா, பித்ரு மோட்சபுரி, பித்ரு புஷ்ப கூபம், பல்குனிபுரம் என எத்தனையோ திருப்பெயர்களைத் தாங்கி விளங்கியது. ஆம். பலகோடி யுகங்களுக்கு முன்னர் பூவாளூரானது பிரபஞ்சத்தின் மிகப்பெரும் மோட்சபுரித் தலங்களுள் ஒன்றாக விளங்கியது. இன்றைக்கும் அதன் முக்திக் குணப்பாடுகள் சற்றும் மங்கிடவில்லை. நாமறியா வகையில் இதன் தெய்வீகத் தன்மை மறைந்திருக்கின்றது. மிகவும் அற்புதமான ஸ்தல புராணங்களைக் கொண்ட திருத்தலமிது. ஆனால் சூட்சுமமாக நாமறியாத வகையில் இதன் மஹிமைகளை குரு மூலம் உணர்வதாகவே இன்றும் விளங்குகின்றது. அக்காலத்தில், கயாவைப் போல, கோடிக்கணக்கான மக்கள் வருடந்தோறும் இங்கு வந்து இப்புனித நதியில் நீராடித் தங்களுடைய பாவச்சுமைகளைப் போக்கிக் கொண்டார்கள். ஆனால் காலப்போக்கில் இப்பூவாளூரானது இன்றைக்கும் பலரும் அறியாத திருத்தலமாக சற்குருமார்களால் மட்டுமே ஊட்டி உணர்விக்கப் பெற்ற திருத்தலமாக இன்றும் விளங்குவதால் இனியேனும் இப்பூவுலகம் இதன் மஹிமையை உணரட்டும்.

ஸ்ரீகுங்கும சௌந்தரி அம்மன்
பூவாளூர்

வருடம் முழுவதும் பல்குனி நதியில் நீர் ஓடினால் தான் இங்கும் கயாவிலும் தெய்வ சக்தி நிறைந்திருக்கும் என்று எண்ணாதீர்கள். என்றும் மங்கா ஜோதித் தலங்கள் இவை. பொதுவாக என்றும் வற்றாத ஜீவ நதிகள் வட இந்தியாவில் தானே நிறைந்துள்ளன. தமிழ்நாட்டில் உள்ள ஜீவ நதிகள் ஒன்றிரண்டுதான் சிறு ஓடையாக வனங்களிலும், கொல்லி மலை போன்ற மலைத்தலங்களிலும் எங்கெங்கோ ஓடிக் கொண்டிருக்கின்றன. வானம் மும்மாரி பெய்த மழைவள நாடாக விளங்கியதுதான் நம் செந்தமிழ் நாடு. இதுவே நம் தமிழகத்தின் தெய்வீகச் சிறப்பு. இறைப் பாடல்களைப் பாடி மழையைத் தருவிக்கின்ற வருண பக்தி நிறைந்த தெய்வத் தமிழ் புலவர்கள் நிறைந்திருந்த தமிழகமிது! ஆகையால்தான் ஆண்டவன் இங்கு ஜீவ நதிகளைப் படைக்கவில்லை போலும்! ஆம், நாலே வரியில் ஒரு இறைத் திருப்பாடலை, கடவுளின் வாழ்த்து வெண்பாவைப் பக்தியுடன் பாடினால் அடுத்த விநாடியில் வானம் கறுத்துப் பெருமழை பொழியும். இதுதான் நம்முடைய தெய்வத் தமிழ்ப் புலவர்களின் தெய்வத் தமிழ் திருநாட்டின் சிறப்பாகும். எனவே பூவாளூரில் பித்ரு தேவ சஞ்சாரம் நிறைந்த பல்குனி நதி வருடம் முழுதும் நீர் நிறைந்து ஓடவில்லையே என்றும் சற்றும் எண்ணாதீர்கள். ஏனென்றால் சூட்சுமமாக எப்போதும் நீரோட்டத்துடன் ஓடிக் கொண்டிருக்கின்ற தெய்வீக நதிதான் பூவாளூர் பல்குனி நதியாகும். கோடையில் நம் கண்களுக்குப் பல புண்ய நதிகளில் நீர் இல்லாமல் இருப்பது போல் தோன்றினாலும், அவற்றில் நிச்சயமாக சூட்சுமமாக நீரோட்டம் இருக்கத்தான் செய்கிறது. எனவே ஆழ்ந்த நம்பிக்கைதான் எதையுமே எப்போதும் சாதிக்க வல்லதாகும். எனவே உலகெங்கும் உள்ள அரும்பெரும் புண்ய நதி தேவதா மூர்த்திகளும் தேடிவருகின்ற தீரம் என்றால் இதனுடைய மகத்தான தெய்வீக சக்திதான் என்னே! என்னே!

எனவே இங்கு ஆற்றில் நீரில்லை என ஏங்காது கீணற்று நீரைக் கொண்டு நதிக்கரையில் பித்ரு பூஜை செய்திடலாம். பூவாளூர் கிராமத்தில் பல்குனி நதித்தீரத்தில் அமாவாசை தோறும் பித்ருக்களுக்கான தர்ப்பண பூஜைகளையும், பித்ரு ஹோமங்களையும் நிகழ்த்தி பலகோடி யுகங்களுக்கு முன் எவ்வாறு தென்னிந்திய கயாத் தலமாக இத்திருத்தலம் விளங்கியதோ அதே போன்ற பெருமையும், கீர்த்தியும், தெய்வசக்தியும், ஜீவசக்தியும் நாமுணறும் வகையில் நிறைந்திருக்கும்படி இத்திருத்தலத்தை பலரும் அறியும்படி ஆக்குதல் பக்தர்களுடைய பெரும் பொறுப்பாகும். இதற்காகவே பெரும் தன்வந்தர்களும், பணக்காரர்களும், பல சத்திரங்களையும், தர்ப்பணச் சாலைகளையும் இங்கு அமைத்துத் தந்து இங்கு வரவிருக்கின்ற பக்த கோடிகளுக்குப் பித்ரு தர்ப்பணத்தை நிகழ்த்துவதற்கான தங்குதல், நீர், உணவு போன்ற அனைத்து வசதிகளையும் செய்து தரவேண்டும். சித்தர்களின் ஞான பத்ர வாக்கியத்தின்படி எதிர்காலத்தில் கயாவைப் போல பூவாளூரும் அதி அற்புத பித்ரு தர்ப்பணத் தலமாக மாற இருக்கிறது. அதற்கு நீங்கள் யாவரும் இறைக் கருவிகளாகத் திகழ வேண்டும். மீண்டும் வலியுறுத்துகின்றோம். கோடை காலத்தில் இந்நதியில் நீர் இல்லையே என்று வருத்தமடையாதீர்கள். இங்கு சூட்சுமமாக பல்குனிநதி நீரோட்டம் உள்ளது என்பதை ஆன்மபூர்வமாக உணர்ந்து கொள்ளுங்கள் வட இந்திய கயா தலத்தில் கூடத்தான் கோடையில் பல சமயங்களில் நீர் அற்றும், சிறு ஓடையாகவும் பல்குனி நதி ஓடுகின்றது. இதற்காக இத்திருத்தலத்திற்கு பக்தர்கள் வராமலா இருக்கின்றார்கள்? எனவே மிகவும் சிறிய ஊராக விளங்குகின்ற பூவாளூரானது பிரபஞ்சத்திலேயே மிகப் பெரிய பித்ரு மோட்சபுரித் தலங்களுள் ஒன்றாக மீண்டும் விளங்குவதற்கு பக்த் கோடிகள்தாம் வழிவகைகள் செய்தாக வேண்டும். எவர்தாம் இந்த தெய்வீக பாக்யத்தைத் தட்டிச் செல்லப் போகின்றார்களோ!
கயா, அலகாபாத், ராமேஸ்வரம், காசியைப் போல இங்கும் பக்தர்கள் தங்கி பித்ரு தர்ப்பண ஹோம, திவச வழிபாடுகளை மேற்கொள்வதற்கான இலவசச் சத்திரங்களும், மண்பாண்டங்களும், அன்னச் சாலைகளும், நீர்க் குண்டங்களும் ஏற்படுத்தப்பட வேண்டும். ஏனென்றால் இங்கு பூவாளூரில் முப்பத்து முக்கோடி தேவர்களும், தேவாதி தேவ மூர்த்திகளும் இத்திருத்தலத்தின் பெருமையை உணர்ந்து இன்றைக்கும் சூட்சும ரூபத்தில் வந்து சென்றவாறுதான் இருக்கின்றார்கள் என்பதை மனதில் கொண்டிடுக. வசதியுள்ளோர் ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் உள்ள இந்த பூவாளூர் ஸ்தல புராண சித்தஞான பத்ர குருவாய் மொழிகளைச் சிறுநூலாக, லட்சக்கணக்கான பிரதிகளை தமிழ், ஆங்கிலம் அனைத்து மொழிகளிலும் அச்சடித்துப் பாரெங்கும் விநியோகம் செய்தால் குறுகிய காலத்தில் இதனைப் பழம் பெருமை கொண்ட தென்னிந்திய கயாவாக மீண்டும் பொலியச் செய்திடலாம்.

சாவா வரந்தரும் பூவாளூர்
பூவாளூரானது ஸ்ரீபல்குனி ருத்ர சித்தர் அடிக்கடி வந்து யோகம் பயில்கின்ற அதிஅற்புதத் திருத்தலங்களில் ஒன்றாகும். கழுதை வடிவில் இங்கு வந்து செல்கின்ற தேவாதி தேவ மூர்த்திகளும் உண்டு. இத்திருத்தலத்தில் பெருமதிப்பிற்குரிய சலவைத் தொழிலாளர்களுக்கும், ஏழை வண்ணாரக் குடும்பங்களுக்கும் உரிய, தான தர்மங்கள், கழுதைகளை தானமாக அளிப்பதும், கழுதைகளைப் பேணி வளர்ப்பதற்கான பொருளுதவி வசதிகள் செய்து தருதல், ஏழைக் குடும்பங்களில் திருமணம், வேலைவாய்ப்பு போன்ற பல அம்சங்களுக்கும் உதவி புரிதல் மிகவும் சிறப்புடையதாகும். தென்னிந்திய கயா திருத்தலமாக அன்றும் இன்றும் என்றும் இது பொலிவதால் இத்திருத்தலத்தில் பித்ரு மூர்த்திகளுக்கு மிகவும் ப்ரீதியைத் தருகின்ற, எள்ளால் ஆன உணவு வகைகள் (எள்பொடி சாதம், எள்ளுருண்டை, எள்வடை), பிரண்டை, புடலங்காய், வாழைக்காய் கூடிய உணவு வகைகளை அன்னதானமாக அளிப்பது சிறப்புடையதாகும். ஏழைகளுக்கு ஆடைதானம், விளக்கு தானம், பாதணிகள் தானம், குடை தானம், ஆபரண தானம், மாங்கல்ய தானம், என ஒவ்வொரு தானத்திற்கும் உரித்தான பலன்கள் இத்திருத்தல மண் மஹிமையின் காரணமாகப் பல்கிப் பெருகின்றன. மூப்பு, பிணி, பசி, உறக்கம் இல்லா தேவநிலை, மற்றும் பித்ருக்களின் உத்தம நிலைகளைத் தரவல்லதே பூவாளூர் தல பித்ரு பூஜைகளின் பலாபலன்களாகும்.

பித்ரு சாபத்தால் குழந்தைகளின்றி வாடுவோர் இத்திருத்தலத்திற்கு வந்து அமாவாசை தோறும் தர்ப்பணப் பூஜைகளைச் செய்து வஸ்திர தானம், அன்ன தானம் மற்றும் தங்களுடைய வசதிகளுக்கு ஏற்ப பலவிதமான தானதர்மங்களைச் செய்து வந்தால் பித்ரு சாபங்கள் நிவர்த்தியாகி சந்ததி நன்கு தழைத்திடும். மனநோய், மனவளர்ச்சியின்மை போன்றவற்றால் குடும்பப் பாரம்பரியம் விருத்தியாகவில்லையே என்று ஏங்குவோர் மாதந்தோறும் தம்முடைய மூதாதையர்களின் திதி நாட்கள், அமாவாசை, பித்ருக்களின் திதிகளில், சனிக்கிழமைகளில் இத்தலத்தில் தர்ப்பண வழிபாடுகளை மேற்கொண்டு தங்களாலான பலவிதமான தானதர்மங்களை ஆற்றி வந்தால் தக்க நல்வழியைப் பெறுவீர். தேவநிலையில் உள்ள பித்ருக்கள் சாபம் இடுவார்களா? பித்ருக்கள் சாபம் என்றால் என்ன?

பித்ருக்கள், நிலை என்பது தேவாதி தேவர்களைப் போல பசி, பிணி, நோய், நொடியற்ற உத்தம தேவநிலை என்றாலும் பித்ருக்களுக்கு உரித்தான மேலும் பல மோட்ச, முக்தி நிலைகளும் உண்டு. பூலோகத்தில் சந்த்தியினர் செய்கின்ற தானதர்மங்கள், தர்ப்பண வழிபாடுகளின் ஒரு பங்குதான் பித்ருக்களுடைய மோட்ச நிலைக்கும், முக்தி நிலைக்கும் பெரிதும் உதவுகின்றது. அதாவது இறந்தவருடைய பெயரைச் சொல்லி உதாரணமாக கோவிந்தசாமி என்பது ஒருவருடைய பாட்டனார் பெயர் என்றால்,

“கோவிந்தசாமி ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி, கோவிந்தசாமி ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி, கோவிந்தசாமி ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி என்றோ அல்லது பைந்தமிழில்

“மண்ணிடை அருட் பெயர் கொண்ட மாதவ ...... (கோவிந்தசாமி) நாமத்தார் விண்ணிடைத் திருக்குரல் கொண்டு விமலராய் வினை தீர்ப்பீர்!” என்று மூன்று முறை உள்ளங்கையில் நீரை எடுத்து வலது ஆள்காட்டி விரலுக்கும், வலது கட்டைவிரலுக்கும் இடையே நீரைத் தாரையாக பூமியில் வார்த்து தர்ப்பணமாக அளித்தால் இந்நீரே தர்ப்பண சக்தி நிறைந்த தீர்த்தமாக மாறி பித்ருலோகத்தை அடைந்து பாட்டனாருடைய ஜீவ ஆத்மத்தின் நன்னிலைக்குப் பெரிதும் உதவுகின்றது. இதுவே பித்ருக்கள் மேலும் தேவ சக்திகளைப் பெற உதவுகின்றது.

அதீத சக்தியுள்ள பித்ரு தேவர்கள்
பித்ருக்களுடைய தேவ சக்தியை நம்மால் அளவிட முடியாது. உதாரணமாக வசு பித்ரு தேவ நிலையில் இருப்பவர் 1000 கோடி ஜீவன்களுக்கு உரித்தான புண்ய சக்தியை ஒரு வினாடியில் அளிக்க இயலும், என்றால் இதற்கு அடுத்த நிலையில் உள்ள ருத்ர பித்ரு மூர்த்தியானவர் பல்லாயிரம் கோடி ஜீவன்களுக்கு உரித்தான புண்ய சக்தியை அளிக்க வல்லவராவர். அதற்கு மேலான ஆதித்ய பித்ரு மூர்த்தியானவர் பல்லாயிரம் கோடி ஜீவன்களுக்குரித்தான ஆத்ம புண்யசக்தியை அளிக்க வல்லவராவர். எனவே உத்தம பித்ரு நிலைகளிலும் இவ்வாறாக எத்தனையோ வகைகள் உண்டு என்பதை உணர்வீர்களாக. ஒவ்வொரு அமாவாசை தோறுமாவது நாம் நம் மூதாதையர்களுக்குரித்தான வழிபாடாக தர்ப்பண அர்க்யத்தை அளிக்காமல் இருப்பதால்தான் பித்ருலோகத்தில் நீரின் தேவ சக்தி குறைந்து விடுகின்றது. ஏனென்றால் தேவ நீர்ச் சக்தி நிறைந்திருப்பதுதான் பித்ரு லோகமாகும். பூலோகத்தில் ஒரு நாட்டின் ஒரு பகுதியில் நீர்ப் பஞ்சம் ஏற்பட்டால் அரசும், அலுவலகர்களும், பொது மக்களும் அதற்கு எவ்வளவு பொறுப்பு ஏற்க வேண்டுமோ அதே போலத்தான் பித்ரு லோகத்தில் நீர்ச் சக்தி குறைவதற்கான பொறுப்பை அவர்களுடைய சந்ததியினர்கள் பூமியில் நிச்சயமாக ஏற்றாக வேண்டும். ஏன், ஒரு பித்ரு ஆனவர் ஆயிரம் கோடி ஜீவன்களுக்குரித்தான புண்ய சக்தி அளிப்பவர் என்றால் தம்முடைய பித்ரு லோகத்தின் நீர்வளத்தை அவரால் பெருக்க இயலதா என்று கேட்டிடலாம். நீர்ச் சத்து என்று நாம் இங்கு குறிப்பிடுவது நீர் நிறைந்திருப்பது மட்டுமல்ல, தர்ப்பண அர்க்யம் என்று சொல்லப்படுகின்ற தர்ப்பணத்தில் வார்க்கப்படுகின்ற நீருக்குக் கோடானுகோடி லோகங்களையும் கடந்து செல்கின்ற ஜலஜோதி சக்தி உண்டு. இவ்வாறு நாம் ஊற்றுகின்ற நீரானது அர்க்யமாக கீழே பூமியில் பட்டு பித்ருசக்தி, பூமியின் ஆகர்ஷண சக்தியை ஈர்த்து மேலே புறப்பட்டு கோடானுகோடி லோகங்களைக் கடந்து சென்று ஜலதீப சக்தியாக மாறுவதையே நாம் இங்கு பித்ரு லோக நீர் சத்து என்று கூறுகின்றோம். பூலோகத்தின் தர்ப்பண அர்க்கயத்திலிருந்து எழும் இந்த தீபச் சக்தியானது விண்ணின் பலகோடி அண்டங்களையும் கடந்து பித்ரு லோகத்திலுள்ள நீருடன் கலக்கும். பித்ரு வழிபாட்டில் தர்ப்பணமாக அளிக்கப்படுகின்ற நீர்த் தாரைக்கு மட்டும்தான் இத்தகைய ஜலதீப சக்தி என்ற அற்புதமான சக்தி உண்டு. இதனையே நீர்ச்சத்து என்று நாம் இங்கு குறிப்பிடுகின்றோம். இதற்கு ஜலபரமசக்தி என்று பெயரும் உண்டு. எனவே நாம் நம் பித்ருக்களுக்கு அளிக்க வேண்டிய தர்ப்பண வழிபாடுகளிலிருந்து தவறுகின்ற போது, அதுவே நமக்கு பித்ரு சாபமாக திரு(ம்)ப்பி வருகின்றே தவிர, பித்ருக்கள் நமக்கு ஒருபோதும் எவ்வித சாபத்தையும் அளிப்பது கிடையாது. நாம் நன்கு புரிந்து கொள்வதற்காக இதனைப் பித்ரு சாபம் என்று சொல்கின்றோம் அவ்வளவே!

சொத்தை சொத்தையாக்காதீர்!
நம்முடைய மூதாதையர்களுடைய பாரம்பரியச் சொத்தாக வீடு, ஆபரணங்கள், நிலபுலன்கள், மற்றும் நிறைந்த செல்வத்தைப் பெற்றுக் கொண்டு அவற்றை அதர்மமான முறையில் முறையற்ற காம, தீயச் செயல்கள், குரோத, வன்முறைச் செயல்களில் பயன்படுத்தும்போது அதனை ஈட்டிய மூதாதையர்கள் மேலுலகத்தில் நிச்சயமாக மனவருத்தம் அடைவார்கள் அல்லவா! எனவே, அப்போது அவர்கள் இடும் சாபமும் பித்ரு சாபமாக மாறும். ஏனென்றால் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து நம் மூதாதையர்கள் சம்பாதித்த செல்வத்தையும், சொத்துக்களையும் தீய ஒழுக்கங்களில் செலவழித்தால் அவர்களுக்கு சினம் ஏற்படாதா என்ன? இதனையும் பித்ரு சாபம் என்று குறிபிடுகின்றோம். பித்ரு லோகத்தில் வசிக்கும் நம் மூதாதையர்களுக்கு கோபம், பசி போன்றவை இல்லைதான்! ஆனால் அதர்மத்தை நீக்குவதும் அவர்களுடைய பித்ரு லோக அறப்பணிதானே! சற்றே சிந்தித்துப் பாருங்கள். தாத்தா, பாட்டி கஷ்டப்பட்டு சம்பாதித்ததை பேரன், பேத்தி அறிவார்களா? தான்தோன்றித் தனமாய் தான் சம்பாதிக்காத பணத்தைச் செலவழித்திடலாமா? ஆகவே பேரன், பேத்திக்கு எளிதில் பணத்தை உயில் மூலமாக அளிக்காதீர்கள். அவர்கள் உழைத்துச் சம்பாதித்து வாழட்டும். உங்கள் கண் முன்னேயே, தான தர்மங்களில் ஈடுபட்டுச் செல்வத்தை இறைவனுக்காக அர்ப்பணியுங்கள். இதன் பலாபலன்கள் உங்கள் சந்ததியினரை நன்கு காத்திடும். எனவே மூதாதையர்களுடைய சொத்துக்களைப் பெற்றுக் கொண்டு, அதனை அதர்மமான முறையில் செலவிட்டு எத்தனையோ தீயச் செயல்களையும், பாவங்களையும் செய்தவர்கள் இதற்குப் பிராயசித்தமாக பூவாளூர் வந்து தம்முடைய தவறுகளுக்கு வருந்தி, தம்மால் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு தக்க நிவாரண உதவிகளைச் செய்து, இனி அத்தவறுகளை செய்யாமலிருக்க உறுதி பூண்டு, இத்திருத்தலத்தில் தர்ப்பண பூஜைகளையும், ஹோமங்களையும் நிகழ்த்தி எந்த மூதாதையர்களின் சொத்துக்களைக் கொண்டு அதர்மச் செயல்களைப் புரிந்தார்களோ, அதில் பெரும் பகுதியினை இத்திருத்தலத்தில் தானதர்ம வழிகளில் செலவிட்டு வருவார்களேயானால், அவர்களுக்கு பித்ரு சாபநிவர்த்தி கிட்டுவதோடு தங்களுடைய பாவச் செயல்களுக்கு உரிய பிராயசித்தம் கிட்டும். இவற்றிற்கெல்லாம் சாட்சி பூதமாக நின்று பித்ரு சாபங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுபவர்தான் ஸ்ரீபல்குனி ருத்ர சித்த மாமுனி ஆவார். இவருடைய யோக ஜோதி இத்திருத்தலத்தில் எப்போதும் இருந்து கொண்டு, சாயா யோக ககன மார்க்கமாக நமக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார், உங்களுடைய மூதாதையர்களுக்கு உரித்தான திதிகளில் பூவாளூர் பல்குனி நதி தீரத்தில் தர்ப்பணங்கள், சிராத்த, ஹோம வழிபாடுகள் செய்து அன்னதானம், வஸ்திர தானம், திவச வழிபாடுகளையும் கடைபிடித்து அவற்றின் பலாபலன்களைப் பெருக்கிக் கொள்வீர்களாக, சாதாரண முறையில் கடனே என்று பக்தி சிரத்தையின்றி பலவிதமான தோஷங்களுடன் செய்யப்படுகின்ற திவச வழிபாடுகள், தர்ப்பணம், ஹோம வழிபாடுகளுக்குப் பிராயச்சித்தமாக கயா மற்றும் தென்னிந்திய கயா என இலங்கும் பூவாளூர் பல்குனி நதி தீரத்தில் இவற்றைச் செய்யும் போது அவற்றிலுள்ள தோஷங்களையெல்லாம் இங்குள்ள பித்ரு காவல் தேவ மூர்த்திகள் ஏற்று, தோஷ நிவர்த்திக்கு வழிவகை செய்வதால், பித்ரு வழிபாடுகளின் பரிபூர்ண பலன்களை வழங்குவதாக இன்றும் இத்திருத்தலம் திகழ்கின்றது.

மங்களம் தரும் ஸ்ரீ குங்கும சௌந்தரி
பூவாளூரில் பல்குனி நதி தீரத்திலுள்ள திருக்கோயிலில் ஸ்ரீகுங்கும சௌந்தரி என்ற அழகிய திருநாமத்துடன் அம்பிகை அருள்பாலிக்கின்றாள். முறைப்படி நன்கு தயாரித்த குங்குமத்தை இங்கு அம்மன் திருவடிகளில் அர்ச்சனை செய்து, பிறகு நீங்கள் நெற்றிக்கு இட்டு வருவீர்களேயானால் தீர்க்க சுமங்கலித்துவம் கிட்டுவதோடு, உங்களுக்கு கண்கண்ட தெய்வமாகத் திகழ்கின்ற கணவனுக்கு நல்ல ஆரோக்யத்தையும், நீண்ட ஆயுளையும் , நோய் நொடியற்ற வாழ்க்கையும் பெற்றுத் தரவல்லதாகவும் ஸ்ரீகுங்கும சௌந்தரி அம்பிகை வழிபாடு விளங்குகின்றது.

ஆலயங்களில் ஏற்படும் பங்கங்கள்

தினந்தோறும் நமக்கு விதவிதமான தெய்வ விளக்கங்களைக் கேட்டு எத்தனையோ கடிதங்கள் வருகின்றன. ஆலயங்களில் தீப்பிடித்துக் கொள்தல், ஹோம குண்டங்கள் சரிந்து விழுதல், திரைச்சீலை தீப்பற்றிக் கொள்தல், தெய்வ பீடங்களில் உள்ள அஷ்டபந்தன மருந்து தளர்தல், தெய்வச் சிலைகள், விக்கிரங்கள் ஆடுதல், கொடிக் கம்பங்களில் விரிசல் ஏற்படுதல், பலீபீடம் நகர்ந்து விழுதல், கொடி மரங்கள் சாய்தல், உண்டி திருட்டுப் போதல் அல்லது உடைதல் இவ்வாறாக ஆலயங்களில் ஏற்படுகின்ற பலவிதமான பங்கங்களைப் பற்றி நமக்குக் கடிதங்கள் எழுதி அவற்றுக்குத் தக்க விளக்கங்களைப் பெற்றுத் தருமாறு பல அன்பர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். சித்தர்களுடைய ஞான பத்ரங்களிலிருந்து குருவாய் மொழியாக, இத்தகைய பங்கங்களுக்கெல்லாம் காரண காரியங்களைச் சுட்டிக் காட்டி அவற்றுக்கு உரித்தான தக்க பரிகார முறைகளையும் அளித்தல் மிகவும் எளிதானதாகும். ஆனால் அக்காரணங்களை மனித மனம் ஏற்குமா? எனவே இவற்றுக்கு உரித்தான பரிகாரங்களைத் தக்க சற்குருவை நேரில் நாடி விளக்கங்களைப் பெறுதல்தான் சிறப்புடையதாகும். மேலும் இந்த பங்கங்களுக்கான காரண காரியங்களைப் பெரியவர்கள் சுட்டிக் காட்டினாலும் அவற்றை மனதார ஏற்றுத் திருத்திக் கொள்பவர்கள் யார்? இந்தக் காலத்தில் தாம் செய்த குற்றங்களை ஒத்துக் கொள்பவர்கள் மிகவும் குறைவு! அதற்குரித்தான பரிகார முறைகளைக் கடைபிடிப்பாரும் மிக மிகக் குறைவு! எனவே உண்மையான தெய்வீகக் காரண காரியங்களையும், அவற்றிற்கு உரித்தான பிராயச்சித்த முறைகளையும் எடுத்துரைத்தாலும் அவற்றை ஏற்பாரோ, கடைபிடிப்பாரோ இல்லாத நிலையில் இவற்றைச் சுட்டிக் காட்டுவதால் யாது பயன்! எனவேதான் மகான்களும், சித்தர்களும் கலியுகத்தில் தம்மை நாடிச் சரண்டைவோருக்கு மட்டுமே தக்க விளக்கங்களை எடுத்துரைக்கின்றார்கள். அறங்காவலராக கோயில் பணியாளர்களாக, அதிகாரிகளாக, ஆலயப்பணி கான்ட்ராக்டர்களாக, பூஜை செய்பவர்களாக  இவ்வாறாக ஆலயத்தைக் கட்டிக் காக்கின்ற அற்புதமான இறைப்பணிகளைப் பெரும் பாக்கியமாகத் தம் வாழ்வில் பெற்றிருப்போர், தம்முடைய பூர்வ ஜென்ம புண்ணிய சக்தியால் தான், தமக்கு இவ்வரிய தேவ வாய்ப்பு கிடைத்துள்ளது என்று உணர்ந்து, எவ்விதச் சுயநலமும் இன்றி வாழ்க்கையில் பெறுதற்கரிய பாக்கியமாக தெய்வீகத் திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆலயத் திருப்பணிகளில் எவ்வித லஞ்சம் கையாடல், வியாபாரப் பேராசை நோக்கம் எதுவுமே இருத்தல் கூடாது. ஆலயங்களுக்கு வாகனங்கள் செய்வது முதல் கொடிக் கம்பம் அமைப்பது, எண்ணெய், திரி அளிப்பது வரை சிறியதோ பெரியதோ அனைத்துக் காரியங்களிலும் சத்தியமும், நேர்மையும், நாணயமும் பளிச்சிட வேண்டும் அப்போதுதான் ஆலயத்தின் சாந்நித்யம் பாதுகாக்கப்படும். ஆலயத்தில் பணிபுரிகின்ற பெறுதற்கரிய தெய்வீக பாக்கியத்தைப் பெற்றிருப்பவர்கள் தங்களுக்குக் கிடைத்துள்ள அரிய தெய்வீகப் பணியின் மஹிமையை நன்கு உணர்ந்து புனிதமான, சத்தியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ள வேண்டும். இவர்களுக்குத் தங்களுடைய தீவினைகளை, கொடிய கர்மாக்களைக் கழிப்பதற்கான எளிய மார்க்கமாக எப்போதும் கோயில் வளாகத்தில் இருப்பதே ஒரு பெரும் பேறாகும். இறைவனே கதி என்று வந்த பிறகு அந்த இறைவன் குடியிக்கின்ற ஆலயத்தில் பணிபுரிகின்ற வாய்ப்பையும் பெற்றிருக்கின்ற போது, பிற மனிதர்களைப் போல் வேறு எதற்கும் ஏங்கக் கூடாது! ஏனென்றால் ஒவ்வொருவரும் கோயிலுக்குச் செல்ல முடியவில்லையே, நேரம் இல்லையே என்று ஏங்கிக் கொண்டிருக்கும்போது நாள் முழுதும், 24 மணி நேரமும், ஆலயத்தில் பணிபுரிகின்ற வாய்ப்பைப் பெற்றிருப்பது ஒரு மகத்தான இறையருள்தானே! “இறைவா, உன்னுடைய திருவடி தரிசனம் எப்போது கிடைக்க வேண்டும்”, என்று பூர்வ ஜென்மங்களில் மனமுருகித் தவம் புரிந்தவர்கள்தாம், இன்று ஆலயத்திலே பூஜை செய்பவர்களாகவும், பணிபுரிபவர்களாகவும், அறங்காவலர்களாகவும், விளங்குகின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்

ஆலயத்திற்கான பொதுவான நியதிகள்
இல்லறப் பெண்களுடைய மாதவிலக்குத் தீட்டின் போது அக்குடும்ப ஆண்களும் பவித்ரமாக இருத்தல் வேண்டும். மாதவிலக்குத் தீட்டுத் தீண்டுதலுடன் ஆலயத்திற்குப் பணிக்கு வருதல் கூடாது. மாதவிலக்குத் தீட்டு, சூன்யத் தீட்டு என்று எந்தவிதமான தீட்டுச் சம்பந்தங்களுடனும் ஆலயக் காரியங்களைத் தொடரக் கூடாது. தீட்டு என்றாலே தொடாமை என்பது பொருளல்ல! ஜாதி, சமய, இன, குல பேதமின்றி அனைவரின் இருதயத்திலும் இறைவன் வீற்றிருக்கின்றான். இறைவன் குடியிருக்கும் கோயிலே நம் உடல்! நம்முள் இருக்கின்ற இறைவனை நம்மால் காண முடியவில்லை. எனவே அனைவரிடமும் உள்ள, இறைவன் சக்தி ரூபமாக, வெளியில் ஆலயத்தில் உருவெடுத்தத்தை தரிசித்து ஆனந்தம் அடைகின்றோம். இதில் தீட்டு என்பது மனதில் உள்ள பொய்மை, அதர்மம், முறையற்ற காம எண்ணங்களையும் மற்றும் உடல் அசுத்தத்தையும் குறிக்கின்றது. இல்லறத்தில் மாதாந்திரத் தீட்டு என்றால் அந்த மூன்று நாட்களிலுமே, அந்தந்த குடும்ப ஆண்கள் ஆலயப்பணிகளில் ஈடுபடாது இருத்தல்தான் சிறப்புடையதாகும். முறையற்ற காமம், பீடி, சிகரெட் பிடித்தல், மது அருந்துதல் போன்ற பலவிதமானத் தீய வழக்கங்களுக்கு ஆட்பட்டோர் எந்தவிதமான ஆலயப் பணிகளுக்கும் ஏற்புடையவர்கள் அல்லர். இவர்கள் ஆலயப் பணிகளைவிட்டு ஒதுங்கிட வேண்டும். ஆனால் இதுவரையிலும் இத்தகையத் தீயப் பழக்கங்களுக்கு ஆட்பட்டு இப்பொழுது உண்மையாகவே திருந்தி வாழ விரும்புவோர் என்ன செய்வது? இறைவனைச் சரணடைந்து, “இறைவா, இதுகாறும் தவறுகளைச் செய்து விட்டேன். இனி எந்த தீய ஒழுக்கத்தையும் நாட மாட்டேன்”, என்ற சத்தியத்தை மேற்கொண்டு, அன்றிலிருந்து அனைத்துத் தீய பழக்கங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பார்களேயானால், மனந்திருந்தி வாழ்கின்ற மகத்தான மனிதனாக அவர்கள் பிரகாசிப்பதால், அதற்குப் பிறகு இறைப் பணிகளைத் தொடரலாம். ஆனால் வாழ்வில் பிராயச்சித்தம் என்பது ஒரு முறையே.

 எனவே ஜாதி, மத, இன , குல பேதமின்றி அனைவரும் வாழ்க்கையில் எந்நிலையிலும், எந்நேரத்திலும் திருந்திடவே ஆலய வழிபாடுகள் உள்ளன. செய்த தவறினை மீண்டும் செய்திடல் கூடாது. மேலும் இத்தகைய தீய வழக்கங்களுக்கு ஆட்பட்டோரைத் திருத்துகின்ற அற்புதமான சமுதாய இறைப் பணிகளிலும் திருந்தியோர் ஈடுபட வேண்டும். பலவிதத் தீய ஒழுக்கங்களுடன் பலரும் ஆலயப் பணிகளை மேற்கொள்வதால் தான் ஆலய நடைமுறைகளில் பல பங்கங்கள் ஏற்பட்டு இவைதாம் பல சரிவுகளாக, விரிசல்களாக மனிதக் குற்றங்களைச் சுட்டிக் காட்டுகின்றன. Sand blasting என்ற முறையில் தெய்வீகச் சக்தி நிறைந்த பிம்பங்கள் சிதைக்கப்படுவது குறித்து நாம் மிகவும் கண்டிப்புடன் எழுதி வருகின்றோம். இத்தகைய Sand blasting என்ற முறையில் தெய்வீகச் சக்தி நிறைந்த உருவங்கள் பின்னப் படுத்தப்படுவதும், ஆலயங்களில் ஏற்படுகின்ற பலவிதமான பங்கங்களுக்கும் காரணம் ஆகின்றன. ஆலயங்களில் ஒவ்வொரு தரிசனத்திற்கும் கட்டணம் வசூலித்தல் என்பது நடைமுறையில் வழக்கமாக ஏற்பட்டுவிட்டது. ஆனால் இது இறை இலக்கணத்திற்கு ஒப்புதல் இல்லாத ஒரு அம்சமாகும். நம்மைப் படைத்த இறைவனைத் தரிசிப்பதற்கா கட்டணம் கேட்பது? ஆலய நிர்வாகத்திற்காக, நிதி வசதியின் மேன்மைக்காக இவ்வாறு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டாலும், அர்ச்சனைக்கு, அபிஷேகத்திற்கு, ஆராதனைக்கு, தரிசனத்திற்கு என்று கட்டணம் வசூலிப்பதை கண்டிப்பாக நிறுத்தி ஆகவேண்டும். இறைவனுக்கே ஏற்பு இல்லாத ஒரு மனிதச் சட்ட நியதியை மனித சமுதாயம் தான் மாற்றியாக வேண்டும். உண்டியலே ஆலய நிர்வாக நிதி வசதிக்குத்தான்! பின் எதற்குத் தனியாக இறைச் சேவைக் கட்டணங்கள்! இறை மூர்த்திகளின் அருகில் நின்று கோடிக்கணக்கான மக்களுக்கான இறை வழிபாடுகளைச் செய்கின்ற அற்புத பாக்கியத்தைப் பெற்றோர், தங்களுக்கு உரித்தான நியம நிஷ்டங்களில் கண்டிப்புடன் இருத்தல் வேண்டும். மூன்று வேளை சந்தியாவந்தனம், ஆறுவேளை பூஜைகள், சிவ, வைணவச் சின்னங்களுடன் எப்போதும் ஸ்ரீகாயத்ரீ மந்திரப் பிரகாசத்துடன் ஒளிர்தல் போன்ற இறை நியதிகளை கண்டிப்பாக அனுஷ்டிக்க வேண்டும் தட்டுக்காக எனப்படும் பக்தர்களுடைய காணிக்கைகளை இறைவனுக்கே அர்ப்பணிக்கின்ற உத்தம மனப்பான்மையைப் பெற்றால்தான் உடல் பிரம்ம தேஜோ மயமாய் மிளிரும்.

குடுமியின் தெய்வீக ஆற்றல்!
பூஜை செய்வோர் கண்டிப்பாகப் பூணூல் தரித்து, கடுக்கண் அணிந்து, குடுமி வைத்தாக வேண்டும். இதில் எவ்வித விதிவிலக்கும் கிடையாது. தீட்சை/சிகை வைத்தல் என்று சொல்லப்படுகின்ற குடுமி வைக்கின்ற இறை நெறிமுறைக்கு எத்தனையோ தெய்வீகக் காரண காரியங்கள் உண்டு. குடுமி வைத்தவர்கள் மட்டுமே சிகைப்ரகாச நாளங்களின் உதவியால் தீர்க்க தரிசனத்தையும், விபூதி மற்றும் ஆலயப் பிரசாதங்களை அளிப்பதின் மூலம் பல அற்புத நிவர்த்தி முறைகளையும் மக்களுக்குத் தந்திட முடியும். சுயம்பு மூர்த்தியிடமிருந்து எழுகின்ற சுயஞ்ஜோதி கிரணங்களைக் குடுமி வைப்பதால்தான் கபால நாள கிரந்திகள் மூலமாக பெற முடியும். குடுமி வைத்தல் என்பது ஜாதி, இன பேதமின்றி அனைவருக்கும் உரித்தானதே! நம் கிராமங்களில் எவ்வித ஜாதி சமய பேதமின்றி பெரியோர்கள் கட்டு குடுமியுடன் தானே இன்றும் திகழ்கின்றார்கள். எவ்விதச் சுயநலமும் இன்றி எவ்விதக் கட்டணமும் பெறாது மக்களே மனமுவந்து அளிக்கின்ற காணிக்கைகளையும் கூட இறைவனுக்கே அர்ப்பணிக்கின்ற மகத்தான தியாக மனப்பான்மையுடன் பூஜை செய்பவர்கள் திகழ்ந்தால் தான் உத்தமமான இறைவழிபாடு செழித்து நாடும் சிறக்கும்.

எனவே தங்களுடைய பூர்வஜென்ம புண்ய வசத்தால் இறைவனைப் பூஜிக்கின்ற அரும்பெரும் பாக்கியத்தைப் பெற்றோர், ஏனையோரைப் போன்று காசு பணம் சேர்த்து பல சுகபோகங்களுக்கு ஆசைப்படாது, முன் குடுமி வைத்தவர்களாய், அணிதற்கரிய பூணூல் அணிந்தவராய், ஸ்ரீகாயத்ரீ மந்திர வித்தகராய் சுயநலம் இல்லாது, ஜாதி, மத, இன, குல பேதமின்றி யாவர்க்கும் இறையருளைப் பெற்றுத் தருபவராய் ஒளிர்கின்ற இறையருட் பிரகாசராய் விளங்குதல் வேண்டும். இறை அறத்தைக் காப்பவர்களே அறங்காவலர்கள் இறைவனையே அடிபணிந்து வாழ்பவருடைய வாழ்க்கை அம்சங்களையெல்லாம் இறைவனே ஏற்றுக் கொள்கின்றான் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு, அறத்தைக் காக்க வேண்டியவர்களாய் ஆலயப் பணிகளில் நேர்மை, நியாயம், நாணயம் மிக்கவராய் ஆலயச் சேவர்களும், அறங்காவலர்களும் விளங்க வேண்டும். இவற்றிலெல்லாம் குறைபாடுகள் ஏற்பட்டால் அதுவே ஆலயத்தில் ஓடு சரிதல், பலிபீடம் உடைதல், பல்லக்கு உடைதல், தேர் வடம் அறுதல் போன்றவை மூலமாகக் குறிப்பாகக் காட்டப்படும். எனவே ஆலயப்பணிகளில் சத்தியம், நேர்மை, நாணயம், பக்தி, நல்லொழுக்கம் நிறைந்திருக்க வேண்டும். இவற்றிலிருந்து வழுவினால் ஆலயப் பணிகளை விட்டு விலகிட வேண்டும்.

தண்ணீர் பஞ்சம் ஏற்படுவது ஏன்? – சில ஆன்மீக விளக்கங்கள்

சமீப காலங்களில் உலகெங்கும் நீரிப் பஞ்சம் பெருக்கெடுத்து விட்டதல்லவா? பூமியில் மூன்றில் இரண்டு பகுதிக்கு மேலாகக் கடல் நீர் இருந்தாலும் கூட இறைவன் அதனை உப்பு நீராகத்தானே படைத்திருக்கின்றான். இதற்கும் ஆயிரமாயிரம் தெய்வீகக் காரண காரியங்கள் உண்டு. உலகத்தில் உள்ள பெரும்பான்மையான நாடுகளிலும் உள்ள கழிவு நீரானது கடலில் தானே கலக்கின்றது. இயற்கையாகவே இறைவன் படைப்பாகக் கடல் நீரின் அபரிமித உப்புசமே கழிவு நீரின் நச்சுத் தன்மையையெல்லாம் தாங்கி சூரிய ஒளியில் சுத்திகரிக்கப்படுகின்றது. கடல் நீரிலுள்ள கோடானு கோடி உயிரினங்களும் இதற்கு உதவுகின்றன. அதாவது நாம் அறியாத வகையில் நமக்கு உதவும் கோடிக்கணக்கான உயிரினங்கள் கடலில் உள்ளன. இதுதான் இறைவனின் அற்புதப் படைப்பு! கடலிலிருந்து நீரை உறிஞ்சியே சூரியபகவான் வருண பகவானின் துணையுடன் புனிதமான, நற்சுவை நிறைந்த சுத்தமான மழை நீராக அளிக்கின்றார் என்றால் இந்த மெய்ங்ஞானம் பற்றி எவரால் தான் புரிந்து கொள்ள முடியும்? ஆயிரமாயிரம் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் இருந்தாலும் கடல் நீரை நன்னீராக்குகின்ற திட்டங்கள் யாவும் பெரும் செலவினங்களாகவும் செயற்கரிய செயலாகவும் தானே இன்றைக்கும் விளங்குகின்றன காரணமென்ன? கடல் நீரின் உப்புசம் தான் இன்றைய பூமியில் ஜீவ வாழ்வு நடந்திட முக்கியமாகி, இந்த உலக சிருஷ்டி நடந்திட முதன்மைக் காரணங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. இந்தப் பிரபஞ்சத்திற்கே தெய்வீக மையமாக விளங்குவது நம் பாரதத் திருநாடுதான், அதிலும் தென்னிந்தியாவில், தமிழ்நாடில் தான் பல்லாயிரக்கணக்கான சுயம்பு மூர்த்திகள் அன்றும் இன்றும் என்றும் இலங்கி இந்தப் பிரபஞ்சத்திற்கே இறைமையின் வித்தாக நம் தமிழகம் விளங்குகின்றது. ‘தென்னாடுடைய சிவனே போற்றி‘ என்றவாறாகப் பரம்பொருளே தம் ஆன்மக் குடிலாகக் கொண்டிருப்பது நம் தெய்வத் திருத்தமிழ் நாட்டைத்தான், இதன் தெய்வீகப் பொருள் என்னவென்றால், உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் உள்ள அனைத்து விதமான துன்பங்களுக்கும் நம் தமிழ்நாட்டின் திருக்கோயில்களின் மூலமாக எளிய, ஆன்மீக ரீதியான பிராயச் சித்தங்களையும், பரிகாரங்களையும் தக்க சற்குருவின் துணையுடன் நிச்சயமாகப் பெற்றிடலாம் என்பதேயாம். ஆம்! இவ்வுலகத்தின் பிரச்சனைகள் என்ன, இந்தப் பிரபஞ்சத்தின் எந்தக் கோளத்திலும், எந்த நட்சத்திர மண்டலத்திலும் உள்ள துன்பங்களுக்கும் தக்க தீர்வுகளைப் பெற்றுத் தரக் கூடிய வகையில் நம் தெய்வத் திருத்தமிழ்நாட்டில்தான் என்றும் இறைமை பரிபூரணமாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இந்த புனித பூமியில்தான் கடவுளைப் பரிபூரணமாகத் துய்த்து உணர முடியும் அளப்பரிய தெய்வீக சக்திகளையும், சித்திகளையும் பெறமுடியும்! இறைவனின் தூதுவர்களான, என்றும் வாழும் ஏகாந்த ஜோதிகளான சித்தர்களைப் பற்றியும் அறிந்து உணர்ந்து முக்தியினை பெற முடியும். ஏன், இங்கிருந்தவாறே இந்த உலகத்திற்கே தேவையான சமுதாய இறைப் பணிகளையும் குருவருளால் மிகவும் பிரமாதமான முறையில் ஆற்றிடவும் முடியும். பிரபஞ்சத்தின் எந்த லோகத்திற்கும் தேவையான தெய்வீக அருளைப் பெற்றுத் தரக்கூடிய அனைத்துத் திருத்தலங்களும், புண்ணிய தீர்த்தங்களும், புனித நதிகளும் நம் பாரதத் திருமண்ணில் அதுவும் நம் தெய்வத் தமிழ் நாட்டில்தான் நிறைந்திருக்கின்றன. ஆனால் என்றேனும் நாம் இவற்றின் பெருமையை உணர்ந்திருக்கின்றோமா? இவற்றை நன்கு உணர்ந்திடவே ஒரு சற்குரு தேவையென இனியேனும் உணர்க!

ஸ்ரீஅதிகார நந்தி மூர்த்தி
திருகோகர்ணம்

கர்மவினையைக் கழிக்கும் கவின்மிகு ஆலயமருகில் கழிப்பிடமா?

தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படுவதற்கான காரணங்களுள் ஒன்றாக ஆன்மீகம் பகர்வது நீரோட்ட தேவதைகளுக்கும் நாம் இழைக்கின்ற அநீதிகளாகும் எப்படி? இன்றைக்கும் பல திருக்கோயில் களைச் சுற்றிக் கழிப்பிடங்களை ஏற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள்! அந்தக் கழிவு நீரெல்லாம் பல குழாய் பின்னங்கள் மூலமாகக் கோயில் திருக்குளத்தையும் பலவிதமான அற்புதமான தீர்த்தங்களையும் சென்று அடையும் போது, இறைமைக்கே மாசு கற்பிக்கின்றோம் அல்லவா! இதனால்தான் நீரோட்ட தேவதைகள் சினம் கொள்கின்றன. இதனால் நீர்ப் பஞ்சம் ஏற்படுகின்றது. மேலும் ஜல தேவதைகளுக்குத் தேவையான பூஜைகளை நாம் முறையாக நடத்துவதும் கிடையாது. “ஜல பந்தன நந்தி மூர்த்திகள்” என்று பல அற்புதமான நந்தி மூர்த்திகள் உண்டு. கோயில் தரையடியில் / நிலத்தின் அடியில் நிலவறை மூர்த்தியாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் இந்த நந்தி மூர்த்திகளாய்ச் சுற்றி, நீர்வட்டம் கட்டி அரிய ஜலதேவ பூஜைகளைச் செய்கின்ற வழிபாட்டு முறைகளும் உண்டு. நீரோட்ட தேவதைகளைப் ப்ரீதி செய்யக்கூடிய ஜலஹோம நியதிகளும் உண்டு. பெண்ணாடம், புதுக்கோட்டை திருக்கோகர்ணம் போன்ற தலங்களில் உள்ள நந்தி மூர்த்திகள் இவ்வகையைச் சார்ந்தவர்கள் ஆவர். ஸ்ரீநந்தி மூர்த்திக்கும் மழை பெய்வதற்க்கும் என்ன சம்பந்தம்? இதுகாறும் நந்தி மூர்த்தியை இறைவனுடைய வாகன மூர்த்தி என்று மட்டும்தானே நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். இன்றைக்கும் ஸ்ரீநந்தீஸ்வரர் திருஅருணாசல கிரிவல மகிமையை எடுத்துரைக்க, அதனை ஸ்ரீஅகஸ்திய மாமுனி பலகோடி கிரந்தங்களாக எத்தனையோ கோடி சதுர்யுகங்களாகப் படைத்து வருகின்றார் என்றால், ஸ்ரீநந்தி எம்பெருமானுக்கு எத்தகைய இறைப் பணிகளையெல்லாம் இறைவன் அளித்துள்ளான் என்பது புலனாகின்றது அல்லவா? ஸ்ரீஅதிகார நந்தியாக ஸ்ரீசுயாம்பிகை தேவியுடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்ற தலங்கள் யாவும் தாம்பத்ய ஒற்றுமைக்கும் சாந்தமான குடும்ப வாழ்க்கைக்கும் அனுக்ரஹம் செய்கின்ற திருத்தலங்களாக இன்றைக்கும் விளங்கிக் கொண்டு இருக்கின்றனவே! எனவே அடிக்கடி இல்லத்தில் சண்டைகள் ஏற்பட்டு மன ஒற்றுமையின்றி வாழ்கின்ற தம்பதிகள் ஸ்ரீசுயாம்பிகை தேவியுடன் ஸ்ரீஅதிகார நந்தி எழுந்தருளியுள்ள தலங்களில் (திருமழபாடி, திருகோகர்ணம்) சுவாமிக்குச் சந்தனக் காப்பிட்டு பருப்புத் தேங்காய் பிடித்து நைவேத்யம் செய்து, ஏழைக் குடும்பங்களுக்கு, குறிப்பாக ஏழைக் கன்னிப் பெண்களுக்கும், ஏழைச் சுமங்கலிகளுக்கும் மாங்கல்யச் சரடுடன் தானமாக அளித்து வந்தால் தம்பதிகளுக்கு இடையே உள்ள மன வேற்றுமைகள் மறைந்து நல்லகுடும்ப ஒற்றுமை தழைக்கும் . ஸ்ரீவருண பகவான் ஸ்ரீசுயாம்பிகை சமேத ஸ்ரீஅதிகார நந்தி மூர்த்தியை வணங்கியே தமக்கு எந்நேரமும் மழை பொழிவிக்கின்ற வருண சக்தியைப் பெற்றார் மழை பொழிவதற்கான ஸ்ரீசுயாம்பிகை ஜப யோகமும் உண்டு. மாவுக் காப்பு, நவதானியக் காப்பு, மிளகுக் காப்பு ஆகிய முக்காப்பு இட்டு ஸ்ரீநந்தியை வழிபட நிச்சயமாக மழைப் பொழிவு ஏற்படும்.

கைலாயத்தில் அன்னச்சாலை

திருக்கயிலாயத்தில் அன்னச் சாலை

ஸ்ரீருத்ர கோடி சுப்ரமணீச சித்தரே சுப்ரமண்யாக்னி (கார்த்திகேய நட்சத்திர அக்னி) தீப அடுப்பு கொண்டு திருக்கயிலையில் இறைவனுக்கு அமுது சமைக்கின்ற திருக்கயிலைப் பரிசாரகர். திருக்கயிலாயத்தில் பரம்பொருளாம் ஸ்ரீபார்வதி சமேத ஸ்ரீபரமேஸ்வர மூர்த்திக்கு அன்னம் பாலிப்பவரே ஸ்ரீருத்ர கோடி சுப்ரமணீச மாமுனிச் சித்தராவார். ஆம் திருக்கயிலையிலும் அன்னச்சாலை உண்டு. பிரபஞ்சத்தின் சகலகோடி ஜீவன்களுக்கும் உணவளிப்பவர்தானே சர்வேஸ்வரன். கார்த்திகை நட்சத்திரத் தொகுதியான ஆறு நட்சத்திர ஜோதிகளிலிருந்து, திரள்வதே சுப்ரமணியாக்னியாகும். கார்த்திகேயனாம் ஆறுமுக சுப்ரமண்யப் பெருமானின் நேத்ராக்னியின் மூலமாகத் தோன்றியதே சுப்ரமண்யாக்னி! இதுவே திருக்கயிலாய அன்னச்சாலையின் முதல் அடுப்பில் எழுந்த அக்னி. திரௌபதிக்கு ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அளித்த அட்சய பாத்திரமே திருக்கயிலாய அன்னச்சாலையில் பிறந்தது தானே! பிரபஞ்சத்தில் எங்கெல்லாம் உணவுப் பொருட்கள் நைவேத்யமாகப் படைக்கப்படுகின்றனவோ அவையாவும் திருக்கயிலையைச் சூட்சுமமாகச் சென்றடைகின்றன. நீங்கள் படைக்கும் உணவுவகை அனைத்தையும் இறைவன் நிச்சயமாக ஏற்கின்றான். பின் ஏன் இறைவன் நாம் படைப்பதை உண்பதில்லை? இறைவன் உண்பான் எனில் அடுத்த வேளை நீங்கள் உணவைப் படைப்பீர்களா? இப்படி இறைவன் தத்ரூபமாக உண்டிடில் அனைவருமே உலகில் இறைவனுக்கு உணவு படைப்பதை நிறுத்திடுவர். உலகின் எந்த மூலையில் எந்த நாட்டில் இறைவனுக்கு உணவு படைக்கப்பட்டாலும் அது திருக்கயிலாய அன்னச்சாலையை அடைகின்றது. படைப்போரின் அன்பையும், பக்தியையும், உணவின் குணப்பாடுகளையும், தன்மையையும் பொறுத்து இறைவன் அவ்வுணவின் சக்தியை ஆகர்ஷித்துப் பின் அதே உணவில் தன் ஆசீர்வாதத்தைப் பிரசாத அமுதமாக மாற்றி நமக்கு அளிக்கின்றான். இவ்வகையில் ஒன்றே, ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் நமக்கு அளிக்கும் திருப்பதி லட்டு பிரசாதம். வசதி இல்லையெனில் ஒரேயொரு வாழைப்பழத்தை நிவேதனம் செய்தாலும் போதும், அதில் நிறைந்துள்ள பக்தி சிரத்தையைக் கண்டு இறைவனே அப்பழத்தை அமுதமாக ஏற்று அதே பழத்தில் தன் ஆசியைப் பிரசாதமாக அருள்கின்றான். எத்தகைய ஆழ்ந்த நம்பிக்கையுடன், பக்தி சிரத்தையுடன் நாம் பிரசாதம் படைக்கின்றோமோ அந்த அளவிற்கு இறை ஆசீர்வாதமும் நமக்கு நிறைந்து வரும்..

ஸ்ரீருத்ர கோடி சுப்ரமணீச சித்தரே திருக்கயிலையின் மடப்பள்ளி தலைமைச் (divine head chef) சமையல்காரராக வீற்றிருக்கின்றார் என்பது பலரும் அறியாத ஆன்மீக இரகசியம்! அதெப்படி, திருக்கயிலாயத்தில் அன்னச்சாலை உண்டா? இறைவனே உணவை ஏற்கின்றானா? ஏன் கிடையாது? கல்லினுள் இருக்கும் தேரைக்கும், கருப்பையில் உறையும் கருவிற்கும் கூட இறைவன் அளிக்கும் உணவு இத்திருக்கயிலாய அன்னச்சாலையில்தான் உருவாகின்றது. எப்போது, ஏன் இங்கு அன்னச்சாலை உருவானது? சிருஷ்டிக்கு முன்னால் அனைத்து ஜீவன்களுமே பஞ்சபூத சக்தியை கிரஹித்துக் கொண்டுதான் தேக ஆற்றல் பெற்றன. காலப்போக்கில் ஜீவன்களின் பஞ்சபூத சக்தி மங்கியபோது, வெளிசார்ந்த உணவினால், ஆரோக்கியத்தையும், உடலைப் பேணும் வழிமுறைகளையும் ஜீவன் பெற வேண்டியதாயிற்று. தவ யோகம் பூணுகையில் உண்ணாமல், உறங்காமல், பஞ்சபூத சக்திகளிடமிருந்து ஜீவ ஆற்றல் பெறப்படுகின்றது பெறுதற்கரிய இத்தெய்வீகப் பொறுப்பை ஸ்ரீருத்ர கோடி சுப்ரமணீச சீத்தர் எவ்வாறு பெற்றார்? சிருஷ்டியின்போது பலவிதமான தெய்வீகப் பொறுப்புகளைப் பலதேவாதி தேவமூர்த்திகளுக்கு இறைவன் பகிர்ந்து அளித்தபோது, ஸ்ரீஎமதர்ம ராஜாவிற்கு, அற்புத சேவையாக, ஜீவன்களின் ஆயுள் முடிந்ததும் அவற்றின் உயிரை மீட்கும் அறப்பணி கிட்டியது. உணவுப் பண்டங்களிலிருந்து எவ்வாறு ஒரு ஜீவனுக்கு ஜீவசக்தி கிடைக்கின்றது? எவ்வாறு அதனை மறைந்து ஜீவனுடைய உயிரை மீட்பது போன்ற பலவிதமான சந்தேகங்களுக்குத் தக்க அறவிளக்கங்களைத் தருமாறு எமதர்மர் சிவபெருமானை வேண்டினார். “எமதர்மா! இதுவரை எவரும் அறிந்திடாத தெய்வீக இரகசியம் இது. இவ்வரிய காரியத்தைச் செயற்படுத்துவது யார் தெரியுமா? எம்முடைய திருக்கயிலாய மடப்பள்ளியை நிர்வகிக்கும் ஒரு மகத்தான சித்புருஷரின் யோக சக்தியே இதனை ஆக்கப்படுத்துகின்றது. நீயே நேரில் சென்று பார்த்து உணர்வாயாக!” என்று இறைவன் அருள்பாலித்தார். ஆம்! திருக்கையிலையிலும் அன்னச்சாலை உண்டு. ஏதற்கு? பிரபஞ்சத்தின் காற்றிலுள்ள நுண்ணுயிர்கள் முதல், விலங்குகள், தாவரங்கள், மனிதர்கள், தேவாதி தேவ மூர்த்திகள்வரை அனைவருக்கும் உரித்தான அன்ன சக்தி அங்குதான் உருவாகிறது. அன்னம் என்றால் வெறும் சாதம் என்பது மட்டும் பொருளல்ல. ஒரு கடலில் வாழ்கின்ற சிறு மீனுக்குத் தேவையான ஆகாரம், வனங்களில் வாழும் புலி, சிங்கத்திற்குத் தேவையான உணவு, பச்சிளங் குழந்தைகக்கானத் தாய்ப்பால், பல்லில்லாப் பெரியோர்களுக்கான மாவு வகை உணவுகள் இவ்வாறாக அனைவர்க்கும் உணவளிப்பவன் இறைவன் தானே! நாம் பிரபஞ்சத்தின் அனைத்து நாடுகளின் அனைத்து வகை உணவுப் பண்டங்களையும் இங்கு காணலாம். இதையெல்லாம் நேரில் கண்டு ஸ்ரீஎமதர்மர் அதிசயித்தார். பிரபஞ்சத்தில் எவரெல்லாம் உணவு படைக்கின்றார்களோ அவையெல்லாம் திருக்கயிலை அன்னச்சாலையில் தோன்றுகின்றன. இதில் நிறைந்துள்ள அன்பு, பக்தி சிரத்தைக்கேற்ப அது பன்மடங்காகப் பெருகுவதுடன் அங்கு மடப்பளீஸ்வர சித்தயோக மகாத்மாவாக விளங்கும் ஸ்ரீருத்ர கோடி சுப்பரமணீச சித்தரின் மேற்பார்வையில் பூலோகமெங்கும் அண்டசராசரமெங்கும் கோடானுகோடி உயிரினங்களுக்கும் அவ்வுணவு அளிக்கப்படுகின்றது. ஆனால் இவ்வற்புதத்தை இன்று பூலோகத்தில் எடுத்துக் கூறினால் மனிதமனம் ஏற்காது. எனவேதான் இவையெல்லாம் சித்புருஷ ஞான பத்ர கிரந்தங்களிலிருந்து குருவாய் மொழியாக, குருகுல வாச அனுபூதிகளாக ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டோருக்கென அளிக்கப்படுகின்றன. மடப்பளீஸ்வர ஸ்ரீருத்ரகோடி சுப்ரமணீச மாமுனி எவ்வாறு இத்தகைய பெறுதற்கரிய அண்டசராசரத்திற்கும் அருட்பணியை ஆற்றுகின்ற சக்தியினைப் பெற்றார்?

சிவகுருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகள் அண்ட சராசரமெங்கும் உலாவரக் கூடிய அனுகிரஹம் பெற்றவர். அவர்தம் உத்தமச் சீடரான குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் குருகுலவாச அனுபூதிகளில் சற்குருவிடமிருந்து பெற்ற தெய்வீக விஷயங்களை ஸ்ரீஅகஸ்திய விஜயம் மூலமாக உலகமெங்கும் பரப்பி வருகின்றார். அவையெல்லாம் விஞ்ஞானத்தால் என்றும் புரிந்து கொள்ள முடியாத விளக்கமாகும். சற்குருவின் அருட்கடாட்சத்தால் மட்டுமே உணரக்கூடியதாகும். ஸ்ரீருத்ர கோடி சுப்ரமணீச சித்தர் என்ற பெயரை அவர் பெறக் காரணம் என்னவென்றால் அக்னி மண்டலம் மேல் அமர்ந்து ஸ்ரீருத்ர மந்திரத்தைப் பலகோடி தேவ ஆண்டுகட்கு மேலாக ஜபித்து நெடுந்தவம் பூண்டார். செந்நீ நாக்கு அவரைத் தீண்டவில்லை. ரோமச முனிவர் போல் பலகோடி தேவ ஆண்டுகளில் அவர் தம் ஜடாமுடியும், தாடி முடியும் விரிசடை கங்கையாய் அலைபாயும் கற்றைக் கற்றையாய்ப் பெருகிப் பொன் குழல்களாய் மாறின. ஒவ்வொரு ரோமக் குழியும் அக்னிக் கனலாய் ஒளிர்ந்தது! ஒவ்வொரு ரோமமும் தங்கக் கதிராய்ப் பரிணமித்தது! ஒவ்வொன்றிலிருந்தும் ருத்ர சக்தி வெளிப்பட்டமையால், பொன் கீற்றாய்ப் பலகோடி சூரியப் பிரகாசத்துடன் விளங்கியது. ருத்ர சக்தியை வெளிவிடும் பரிசுத்தமான அபரஞ்சித தங்கப் புனல்களாக அவை மாறின. ஏனெனில் ருத்ர ஜபங்களை அவர் கோடானு கோடி யுகங்களாக ஜபித்தமையால் அந்த ருத்ராக்னியின் பயனாக தேகமே பொற்சுடராய்ப் பிரகாசித்தது. எனவேதான் அவரது புனிதமான தாடிச் சடையையும் தாடைச் சுடர்ப் பொன் முடி எனச் சிறப்பித்தார்கள். ஒவ்வொரு தேவ ஆண்டிற்கும் ஒருமுறை அவர்தம் பொன் முடியில் ஒன்றேயொன்று பூமியில் ருத்ராக்னி ரூபமாய் விழும். பலகோடி சூரியப் பிரகாசத்துடன் விளங்கிய அந்த அபரஞ்சித சுவர்ண கீற்றைப் பலருத்ர கோடி தேவதைகள் தாங்கிப் போற்றி அதனுடைய வேத மந்திர ஜோதியை வழிபட்டன. ஏனென்றால் காணுதற்கரிய ருத்ர ஜோதி சுவர்ண ரேகைகள் தாமே அவை! இவ்வாறாக முதல் 50,000 தேவ ஆண்டுகளில் அவருடைய தேகமே ருத்ராக்னியுடன் பொலிந்து மானுட தேகம் மறைந்து சுவர்ண பிம்பமாக மாறிற்து. அடுத்த 50,000 தேவாண்டுகளில் ஒவ்வொரு சுவர்ணக் கீற்றாக அவை ஒன்றொன்றாக பூலோகத்தில் விழுந்திட அவற்றின் ஜோதியை 50,000 ருத்ர வடிவங்கள் தாங்கி பூஜித்து வந்தன.. ஸ்ரீருத்ர கோடி சுப்ரமணீச மாமுனிச் சித்தரின் தவத்திறத்தின் பக்தி வளமையைக் கண்டு மனமகிழ்ந்த சர்வேஸ்வரன் நேரில் தோன்றிட சித்புருஷரும் “ஸ்வாமி! வரும் யுகங்களில் பொன்னையும், பொருளையும் உறைவிடத்தையுமே ஜீவன்கள் நாடிடுவர். அவர்களுடைய பஞ்சபூத சக்திகள், குறைந்து பசிப்பணி பெருகி அவர்களுடைய ஜீவசக்தியே மங்கிடுமல்லவா? தாங்களோ சர்வலோக ரட்சகராய் அனைத்துலக ஜீவன்களுக்கும் அன்னம் பாலிக்கும் பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளீர்கள், அடியேனும் திருக்கயிலாயத்தில் அன்னச் சாலையில் ஒரு சமையல்காரனாக, சிறு இறைக் கருவியாகச் சேவை புரியும் பெரும் பேற்றை அருள வேண்டுகின்றேன்,” என வேண்டிப் பணிந்தார்! இறைவனும் மனம் மகிழ்ந்தான்.. “ருத்ர கோடி சுப்ரமணீசா! இதுவரை பஞ்சபூத சக்திகளிடமுள்ள ஜீவசக்தியைக் கொண்டே உயிர்கள் வாழ்ந்தன. இதனால் உணவு என்பதே ஜீவன்களுக்குத் தேவையில்லாதது ஆயிற்று. காலப் போக்கில் அன்னமய ஜீவ கோசமாக வாழ்க்கை மாறும் பொழுது ஜீவன்கள் உணவை நாடுகையில் திருக்கயிலாயத்தில் அன்னச்சாலை தேவைப்படும். அதற்காக இப்போதே ஏற்பாடுகளைச் செய்து வருவாயாக!”. என்றருளினார்,

இதுவரை யாரும் கேட்காத வரமாயிற்றே! சாகா வரமும், சிரஞ்சீவித்துவமும் கேட்பவர்க்கிடையே, திருக்கயிலையில் அன்னச்சாலையில் சமையற்காரராய் அன்னம் படைத்திட ஒருவர் விரும்புகிறார் என்றால் என்னே தியாக உள்ளமது! மேன் மேலும் இறைவன் திருவிளையாடல் புரிய விழைந்து, “ ருத்ர கோடி சுப்ரமணீசா! உன்னால் என் நாச்சுவைக்கேற்ப அன்னம் சமைக்க முடியுமா?“ எனா வினவ, ருத்ரகோடி சுப்ரமணீச சித்தரோ,
“சுவையின்றிச் சுவையாக
சுவையுடனே சுவைக்கின்ற
சுவைக்காத சுவையோடு
சுவை கூட்டும் சிவச் சுவையே!“
இறைவா!
தாங்கள் உண்ண உணவும் உண்டோ?
தாங்கள் உண்பதும் உண்டோ?
தாங்கள் உண்ணாத நேரமும் உண்டோ?
தாங்கள் உண்ண நேரமும் உண்டோ?
தாங்கள் உண்ணாத பொருளும் உண்டோ?
தாங்கள் உண்ணும் பொருளும் உண்டோ?
தாங்கள் உண்ணவும் வேண்டுமோ?
தாங்கள் உண்பது எதையும்தானோ?
தாங்கள் உண்ண வேண்டுவது எதுவோ?
தாங்கள் உண்ண வேண்டிடுவதும் உண்டோ?
தாங்கள் உண்டு களித்ததும் நேரமும் உண்டோ?
தாங்கள் உண்டு களிக்கவும் நேரமும் உண்டோ?
தாங்கள் உண்டிருக்கத்தான் வேண்டுமா?
தாங்கள் உண்ணாதிருத்தலும் உண்டோ?

என்று தமிழ் சுனைச் சித்த பரிபாஷையில் உவப்புடன் சித்த ஞானபத்ர திருப்பா ஓதி மகிழ்ந்தார்.. .. ஈசனும், “அப்பா..! ருத்ர கோடி சுப்ரமணீசா.... நீ எனக்கு சமைத்துத் தரும் அன்னமானது, அன்னத்தின் சாரமாக அண்டசராசத்தின் அனைத்து ஜீவன்களுக்கும் சென்றடைய வேண்டும். அந்த அளவிற்கு நீ அன்புடன் பக்தி சிரத்தையுடன் திருக்கயிலாயத்தில் சமைத்திட வேண்டும்“ என்று அருளினார்.

திருக்கயிலை அன்னச்சாலையின் முதல் அக்னி! 
“சர்வேஸ்வரா! .... தங்கள் சித்தமே அடியேனின் செயல்பாடு! தங்களுடைய திருக்கயிலை அன்னச்சாலைக்குரித்தான மூல அக்னியைத் தாங்களே பெற்றுத் தர வேண்டும்,”,
“ ருத்ர கோடி சுப்ரமணீசா! உன் நூறு கோடி தேவ ஆண்டு ருத்ர ஜபத்தின் பயனாக உன் தேகத்தினின்று எழுந்த ருத்ர சப்த நாளங்களே ஐம்பது ஆயிரத்திற்கும் மேலான ருத்ரான்ன தேவதைகளால் வழிபடப்பெற்று பூலோலகமெங்கும் நிரவியுள்ளன. அவற்றைத் திரட்டி உன் கரங்களில் யாம் அக்னிக் கோளமாய் அளிக்கின்றோம். அந்த ருத்ர சப்த நாளங்களை சகல ருத்ரகோடி தேவதைகளும் ஜப பிம்பங்களாய்ப் போற்றி வழிபட்டமையால் அந்த ருத்ர தேவதைகள் யாவும், சித்ரகுப்த தேவர்களாக உத்தம நிலையைப் பெற்றுள்ளனர். எனவே நீ கேட்ட நல்வரமானது, நீ கேட்கும் முன்னரேயே தீர்க்க தரிசனமாக செயலாக்கம் கொண்டுவிட்டது. அதுவே உன் சீரிய பக்தியைக் காட்டுகிறது. எண்ணும் முன் செய்வதே கண்ணிய இறைத் திருப்பணி! இந்த ருத்ர கோடி ஜபத்தினால் மேன்மைகொண்ட இந்த ஐம்பது ஆயிரம் சித்ர குப்தர்களுமே அண்ட சராசரத்திலுள்ள அனைத்து உயிர்களுக்கும் உரித்தான ஜீவ கர்மவினைக் கணக்குகளை வகுக்கவுள்ளனர். உணவு படைத்தது, படைக்காதது, எவருக்குக் கிட்டியது, எவருக்குக் கிட்டாதது, இவருக்குக் கிட்டியது ஏன்? கிட்டாதது ஏன் என்ற இந்த காரண காரியங்களை எல்லாம் விதி ஏட்டில் எழுதி உன் நல்வரத்தின் காரணமாக அவையெல்லாம் எமதர்ம மூர்த்திக்குச் சென்றடையும்! ஏனெனில் அவர்தம் ஜீவசக்திகளின் தன்மை பற்றி எம்மிடம் விளக்கம் கேட்டுள்ளார்,” என்று தெளிவுறுத்தினார்.

திருக்கயிலாய அன்னச்சாலையின் முதல் பிரசாதம்!
இவ்வாறாக மடப்பளீச தத்துவ வித்தகராய் ஸ்ரீருத்ர கோடி சுப்ரமணீச சித்தரே திருக்கயிலாய அன்னச்சாலையில் உத்தம மடப்பளீச சித்தபீடமாக இன்றும் விளங்குகின்றார். இவரே இன்றைக்கும் என்றைக்கும் இறைவனுக்கும், இறைவிக்கும் அமுது சமைத்துப் படைக்கும் அருட்சக்தியைப் பெற்றவர். திருக்கயிலாய அன்னச்சாலைக்கான முதல் அக்னியைப் பெற்றுத் தருவதற்காக சர்வேஸ்வரன் ருத்ரகோடி சுப்ரமணீஸ்வரருடைய அபரஞ்சித ஸ்வர்ணக் கிரணங்களை சித்ரகுப்த தேவர்களிடமிருந்து ஒன்று கூட்டிப் பெற்று சுப்ரமண்ய தீபச்சுடர் நிறை அக்னிக் கோளமாக ஆக்கிட்டார். அதனின்று உலகின் முதல் சுப்ரமண்ய அடுப்பு தீபம் தோன்றிற்று. அதுவே பிரபஞ்சத்தின் முதல் நெய் தீபமாகும். இதற்குப் பின்தான், அனைத்துவிதமான ஹோமத்திற்குரித்தான ஹோம அக்னி உருவானது. ஆனால் அது வேறுவித இறைத் திருப்புராணமாகும். அதனைப் பின்னர் காண்போம். இவையெல்லாம் சிவபெருமானின் நேத்ர தீட்சையினின்று உருவானவையே! இந்த சுப்ரமண்ய தீபமே அன்னச்சாலையின் முதல் தீபமாக (first fire light) ஆயிற்று. இறைவனுக்கு இந்த அடுப்பைக் கொண்டு முதற் பிரசாதமாக ருத்ர கோடி சுப்ரமணீச மாமுனீஸ்வரர் படைத்தது எது தெரியுமா? சுப்ரமண்ய தீபத்தில் உருகிய நெய்யிலிருந்து மஞ்சள் மாவைப் பிடித்துப் பிள்ளையார் செய்து வழிபட்டார். பிரபஞ்சத்தின் முதல் மஞ்சள் பிள்ளையார் இவரே! அன்றிலிருந்துதான் மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்து வைக்கும் அற்புத வழக்கம் நடைமுறைக்கு வந்தது. நூறுகோடி தேவ ஆண்டிற்கு மேலாக ருத்ர ஜபம் ஓதிய அவர்தம் திருக்கரங்களால் முதல் மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்தமையால் மஞ்சள் பிள்ளையார் வழிபாட்டிற்கு அற்புதச் சக்தியுண்டு. இதன் காணாபத்ய திரட்சியே இன்று உலகெங்கும் பல வினாயக சக்திகளாக அனைத்து ஆலயங்களிலும் விரவியுள்ளன. இந்த மஞ்சள் பிள்ளையார்தான் தம் ஆசியாக ருத்ரக் கோடி சுப்ரமணீசருக்கு திருக்கயிலைப் பிரசாதத்திற்கான முதல் மஞ்சள் தான்ய மணிகளை எடுத்தளித்தார். அவையே கடலைப் பருப்புகளாகின. ஸ்ரீபுவனேஸ்வரி அம்பிகையும் தம் பங்கிற்காக கரும்பை எடுத்து அளித்திடவே, கரும்புச் சாற்றினின்று கிட்டிய சர்க்கரையும், விநாயகப் பெருமானளித்த பொன்னிற மங்களகரமான கடலைப் பருப்பு மாவும் சேர்ந்திட சுப்ரமண்யாக்னி நெய் தீப ஒளியில் ருத்ர கோடி சுப்ரமணீஸ்வரர் முத்து முத்தாய்ப் பிசைந்து உருண்டைகளாய்த் திரட்டிட அவையே லட்டுகளாய் மலர்ந்தன.. அவையாவும் ஐம்பதாயிரம் சித்ரகுப்த தேவர்களின் அருட்சக்தி கொண்டதாய் விளங்கின. அன்னச் சாலையில் படைக்கப்பட்ட முதல் உணவுப் பண்டம் என்பதால் ஐம்பதாயிரம் சித்ரகுப்த தேவர்களும் லட்டுகளில் ஆவாஹனம் ஆயினர். இவ்வகையில் தான் பிரபஞ்சத்தில் முதல் லட்டு திருக்கயிலாய அன்னச்சாலையில் தோன்றியது. இத்திருநாளே அந்த யுகச் சித்திரை மாதச் சித்ரகுப்தப் பௌர்ணமியாகும். எனவே சித்ரகுப்தப் ப்ரீதியாக சித்ரா பௌர்ணமியின் பொழுது லட்டுகளைத் தானம் அளித்தலால் பெறுதற்கரிய ஜீவசக்திகளைப் பெற்றிடலாம். இதற்காகத்தான் கடந்த மாத சித்ராபௌர்ணமியின் போது திருஅண்ணாமலையில் நம் ஸ்ரீ-ல-ஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் சார்பாகப் பல அடியார்கள் திருச்சி, மதுரை, பாண்டிச்சேரி, கோயம்புத்தூர், சென்னை போன்ற பல இடங்களில் ஒன்றுசேர்ந்து சத்சங்க இறைப் பணியாக இரண்டு லட்சம் லட்டுகளுக்கு மேல் தயாரித்து அவற்றைச் சித்ரகுப்த நல்பிரசாதமாக கிரிவல அடியார்களுக்கு அளித்தனர்.. நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் கடந்த சித்ராபௌர்ணமியில் இந்த லட்டுகளை ஐம்பதாயிரம் சித்ர குப்த தேவ மூர்த்திகளுக்குரித்தான ருத்ர கோடி ஜபத்துடன் திருஅண்ணாமலையாருக்குப் பிரசாதமாகப் படைத்திட்டார். திருப்பதி லட்டைவிடப் பெரியதாக, ஒவ்வொரு லட்டும் ஒரு குடும்பம் முழுமைக்கும் வருவதாக இறைப் பெருங் கருணையால் வழங்கப்பட்டது. இவ்வாறாக ஐம்பதாயிரம் சித்ரகுப்த தேவர்களும் சூட்சும ரூபத்திலும் மற்றும் பல்வேறு வடிவுகளிலும் திருஅண்ணாமலையை வலம் வந்த நாளே விக்கிரம ஆண்டின் சித்ராபௌர்ணமி தினமாக விளங்கிற்று என்பது பலரும் அறியாத இறை ரகசியமாம். சற்குருவாம் ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப சித்தரிடம் குருகுலவாசம் கொண்டபொழுது அவர், தம் சீடனிடம், “இதபாருடா! விக்கிரம வருஷம் சித்ரா பௌர்ணமி அன்னிக்கு ருத்ர கோடி சுப்ரமணீச சித்தரோட, மகான்கள், யோகிகள் எல்லாம் அண்ணாமலையை கிரிவலம் வருவாங்க! முக்யமா அம்பதாயிரம் சித்ரகுப்த தேவமூர்த்திகள் கிரிவலம் வரும் விசேஷமான நாள்டா அது! எப்படி திருக்கயிலாயத்தில் சுப்ரமணீச சித்தர் லட்டு உண்டு பண்ணினாரோ அதேமாதிரி நீயும் பல அடியார்கள வெச்சு சத்சங்கமா நெறைலட்டு பிரசாதம் கொடுக்கணும், இதனால எல்லாருக்கும் அனுக்கிரகம் கெடைக்கும். ஜீவசக்தியும் நெறைய கிடைக்கும். ஜீவசக்தின்னா எல்லாமே அருணாசலப் பெருமானின் கருணைலதான் நடக்குதுங்கற எண்ணம் வரணும். அதாண்டா உண்மையான ஆத்ம ஜீவ சக்தி”, என்று குருவாய் மொழியாகத் தாம் பெற்ற உபதேசத்தைச் செயலாக்கிட லட்டுகளை தானமாகத் தருவதற்காக இறைச் சிறு கருவியாய்ப் பயன்பட்டவரே நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள்.

ஜுன் மாத பௌர்ணமி திதி – 15.6.2000 வியாழக்கிழமை நள்ளிரவு 1.42 முதல் 16-6-2000 வெள்ளிக்கிழமை பின்னிரவு 3.57 மணிவரை அமைகிறது. பௌர்ணமி கிரிவல நாள் – 16.6.2000 வெள்ளிக்கிழமை இரவு.

நித்ய கர்ம நிவாரணம்

நித்ய கர்ம நிவாரண சாந்தி – அந்தந்த நாளில் வலுவான ஆட்சியைப் பெற்றிருக்கும் தீர்க்கமான பார்வையை உடைய திதி, நட்சத்திரம், யோகம், கரணம், லக்னம், கிரகங்களின் தன்மைக்கேற்ப அந்நாளுக்குரிய விசேஷ பூஜை/ வழிபாடு முறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை முறையாக ஆழ்ந்த நம்பிக்கையுடன் கடைபிடித்திடில் குருவருளால் ஒவ்வொரு நாளையும் தீய கர்மவினைகளின் கழிப்போடு மேலும் எவ்விதமான புதிய தீவினைகளும் சேரா வண்ணம் தடுத்து சாந்தமான நித்ய வாழ்வைப் பெற்றிடலாம்.

1.6.2000 – டயர் பஞ்சர் சரி செய்கின்ற ஏழைகளுக்குத் தேவையான உணவு மற்றும் ஆடை தானம், முக்கியமான நேரங்களில் பணிகளில் தடங்கல்கள் வராது.

2.6.2000 – பசுவிற்குப் பூஜை செய்து பசுக்களுக்கு வயிராற உணவளித்தால் குடும்பத்திலுள்ள மன சஞ்சலங்கள் மாறும்.

3.6.2000 – தோட்டப் பயிர்கள், பூக்கள், சிறு செடிகள் விற்கின்ற வியாபாரிகளுக்கு உணவு, ஆடை தானம் அளித்தல் - இடுப்பு சம்பந்தமான நோய்களிலிருந்து / பாதிப்பிலிருந்து மீட்சி பெறலாம்.

4.6.2000 – முழுமையான தெய்வ பக்தியைப் பரப்பும் வண்ணம் நாட்டியத்தில் ஈடுபட்டு இருப்போர்க்கு, உணவு மற்றும் ஆடை தானம் அல்லது தேவையான நாட்டிய பொருட்களைத் தானமாக செய்திடல் – நல்ல பதவி மாற்றம் கிட்டும்.

5.6.2000  - கோயிலிலுள்ள துவஜஸ்தம்பங்களை – பித்தளை / வெள்ளி / தங்கக் கவசங்களைத் தூய்மை செய்து தர்ப்பைப் புல் சார்த்தி சேவை செய்திடில் .. கடுமையான புற்று நோய்களின் கடுமை தீர/நிவாரணம் பெற நல்வழிகள் கிட்டும். புற்று நோய் மருத்துவர்கள் கவனிக்க வேண்டிய அபூர்வமான நோய் நிவர்த்தி நாள்.

6.6.2000 - சுப்ரமணீசா என்ற மந்திரம் ஓதி குறைந்தது ஆறு பெரிய லட்டுகள் தானம் - நெருப்பில் வேலை செய்பவர்களுக்கு வரும் திடீர் ஆபத்துகள் விலகும்

7.6.2000 – இன்று அம்மன் கோயில்களுக்கு நடைப் பயணமாக பால் குடம், பஞ்சாமிர்தம், பன்னீர் எடுத்துச் சென்று அபிஷேகம் செய்து, அன்னதானம் செய்தால் குழந்தைகள் நன்கு படிப்பில் முன்னேற்றமடைவர்.

8.6.2000 – இன்று இயன்றவரை கம்ப்யூட்டர் துறையிலிருப்போர் அதில் அதிக நேரம் வேலை செய்யாமலிருந்தால் தலைவலி மற்றும் கபால சம்பந்தமான நோய்களைத் தவிர்க்கலாம்.

9.6.2000 – இன்று ஏழைகளுக்கு ஜமுக்காள தானம், நல்ல செய்தியைத் தரும்.

10.6.2000 – ஓட்டை விழுந்த குடிசைகளுக்கு ஓலைப்பாய் கூரை வேய தானம் செய்தால் தொத்து நோயின் கடுமையும், பக்க விளைவும், வேகமும் குறையும்.

11.6.2000 – இன்று ஏழைத் தையல்காரர்களுக்கு காலணி தானம் பழைய கடன் திரும்பிவரும்.

ஸ்ரீசண்டிகேஸ்வரி லால்குடி

12.6.2000 – இன்று உபவாசமிருந்து பெருமாள் கோயிலில் மாக்கோலமிட்டு, மா இலைத் தோரணம் கட்டி வணங்கி, ஏழைகட்கு சர்க்கரை பொங்கலும், ஆடைகளும் தானம் செய்தால் வெளியூர் சென்றிருப்போரிடமிருந்து நல்ல செய்தி வரும்.

13.6.2000 – 5 முதல் 15 மாடிவரையுள்ள கட்டடங்களில் வசிப்போர் இன்று நாள் முழுதும் அவ்விடம் விட்டு விலகி கோயிலில் நேரத்தைக் கழித்தால் தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையுடன் போகும்.

14.6.2000 – இன்று மலைக் கோயில்களில் பன்னீர் எடுத்துக் கொண்டு அபிஷேகம் செய்து இறைவனை ஆராதனைச் செய்தால் எதிர்பாராத கடன் தவிர்க்கப்படும்.

15.6.2000 – தாய் தந்தையருக்குத் தெரியாமல் காதலிப்பவர்கள் இன்று எக்காரணத்தாலும் தான், அன்பு கொண்டவரை சந்திப்பதை தவிர்த்தல் நலம், சந்தித்தால் துன்பத்தில் முடியும்.

16.6.2000 – இன்று முடிந்தவரை உபவாசம் இருந்து பாடல் பெற்ற விசேடமான சிவன் கோயில்களில் நாள் முழுதும் தங்கி தங்களால் இயன்ற அபிஷேக ஆராதனை செய்தால் வாழ்வில் புதிய திருப்பம் ஏற்படும்.

17.6.2000 – இன்று பவள மோதிரம் தானம் செய்தால் பகைவர்களின் தாக்குதல் வேகம் தணியும்.

18.6.2000 – இன்று ஏழு நாட்களுக்கு உரித்தான ஏழுவிதமான (வார) வண்ண ஆடைகளைத் தானம் செய்தலால், மனைவி மூலமாக வரும் துன்பம் குறையும்.

19.6.2000 – தான் பெற்ற குழந்தைக்கு ஒரு வயது ஆகும் முன்னரே மீண்டும் கருவுற்றுள்ள கர்ப்பிணிப் பெண்ணுக்குத் தேவையான உணவு, உடை உதவி செய்தலால் தாய் வழிச் சொத்தினால் வரும் துன்பம், வில்லங்கம் விலகும்.

20.6.2000 – காதலித்துத் திருமணம் செய்து கொள்ளாமல் கருவுற்று, பின் கருவைக் கலைத்த பெண்களுக்கு இன்று ஆறுதலாக உதவி செய்தலால் வேண்டாத பிரச்சினையிலிருந்து மீளலாம்.

21.6.2000 – ஸ்ரீசண்டிகேஸ்வரர், ஸ்ரீசண்டிகேஸ்வரிக்கு அபிஷேக, ஆராதனைகளுடன் ஆப்பம் படைத்து, ஏழைகளுக்கு ஆப்பம் தானம் செய்தலால் விற்காமல் இருந்த பொருள் விற்க நல்வழி பிறக்கும்.

22.6.2000 – பாதாளச் சாக்கடையில் வேலை செய்வோருக்கு அறுசுவை உணவும், ஆடைகளும் அளித்தால் அடிவயிற்றில் வரும் நோய் தீர வழி பிறக்கும்.

23.6.2000 – இன்று சிறிய பெண் குழந்தைகளுக்கு வெள்ளிக் கொலுசு தானம், கணவன், மனைவி இடையேயுள்ள பிணக்குத் தீரும்.

24.6.2000 – இன்று கிளிமூக்கு உடையவருக்கு அன்னதானம் செய்வதால் வீண் பழிகளிலிருந்து மீளலாம்.

25.6.2000 – கோயில் வீடுகளில் குடியிருப்போர், கோயில் மூலவருக்குக் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து குறைந்தது 100 பேருக்கு தானம் செய்தலால் குழப்பங்கள் உள்ள குடும்பத்தில் தெளிவு பிறக்கும்.

26.6.2000 – கயிறு திரிக்கும் தொழிலாளருக்கு அரிசி, முறுக்கு, தேன் குழல் போன்ற உணவு வகைகளை தானம் செய்வதால் கணவனால் துன்புறும் மனைவிக்கு விடிவு காலம் பிறக்கும்.

27.6.2000 – பங்காளிகள் ஒன்று சேர்ந்து இன்று அம்மன் கோயிலில் பசும்பால் தானம் செய்வதால், பங்கு பிரச்சனையால் துன்பம் வராது.

28.6.2000 – இன்று முதியோருக்குப் பாதம், முழங்கால் பிடித்துவிட்டு அவர்களுடன் அளவளாவி, சேவை புரிந்து, திருப்தி செய்வதால் அடிமையான தொழிலில் இருந்து விடுதலை பெறலாம்.

29.6.2000 – பிரம்ம தாளம் என்ற இசைக் (தாளக்) கருவி இல்லாத கோயில்களுக்கு அதனை வாங்கித் தருவதால் மன சஞ்சலம் நீங்கி சுமூகமாக வாழலாம்.

30.6.2000 – நான்கு சகோதரிகளில் ஒருவருக்கு மட்டுமே திருமணமாகியுள்ள குடும்பத்தில் மணமான சகோதரி ஏனைய சகோதரிகளுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் உணவு, உடை மற்றும் வேண்டியதை அளித்து ஆறுதலாக உரையாடிச் சேவை புரிய, குடும்பச் சோகங்கள் அகலும், சோகமயமான வாழ்வில் திருப்பம் ஏற்படும்.

 

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam