ஐந்தில் வளையாதது எண்பதில் வளையும் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

பைரவ வழிபாடு

நல்ல புத்தி கல்வியுடன் தைரியத்தையும் தரும் புதனும் அஷ்டமியும் சேரும் புதாஷ்டமியில் ஸ்ரீகாலபைரவ வழிபாடு. உலகத்தின் ஆன்மீக மையமாக நம் புனித பாரதம் விளங்குவதால் இன்றைக்கு உலக மனித சமுதாயத்தைப் பாதிக்கின்ற வன்முறைகள், தீவினைச் செயல்களிலிருந்து மனித சமுதாயத்தைக் காக்கத் தேவையான அனைத்து விதமான தேவ மூர்த்திகளின் வழிபாடுகளையும் கடைபிடிக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு பாரத நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு. குறிப்பாக, தென்னாடுடைய சிவனே போற்றுகின்ற தமிழகத்தின்தான் ஸ்ரீகால பைரவ மூர்த்திகள் பல்லாயிரக் கணக்கான ஆலயங்களில் எழுந்தருளி இருப்பதால் தமிழ்நாட்டுப் புனித பூமியைச் சார்ந்த நமக்கு, பாரத நாட்டுத் திருமக்களின் பெரும் கடமையாக தினமுமே, குறிப்பாக அஷ்டமித் திதிகளில், ஸ்ரீகால பைரவ பூஜைகளை நிகழ்த்த வேண்டிய பெரும் பொறுப்பு சார்ந்துள்ளது.

ஸ்ரீபரத்வாஜ லிங்கம் திருபுகலூர்

தம்மை மட்டும் தீய சக்திகளிடம் இருந்து தற்காத்துக் கொள்வதுடன் மட்டுமல்லாது, ஒவ்வொருவரும் சமுதாய இறைப் பணியாகவும் ஸ்ரீகாலபைரவ பூஜைகளை, புதனும் அஷ்டமியும் கூடும் மிகவும் சக்தி வாய்ந்த புதாஷ்டமித் திருநாளில் (கோவை வெள்ளலூர் அருகே) சிவபுரி ஸ்ரீஇடிகபாலந் தாங்கி சரகபால மாலா பைரவர், (சிவகங்கை மாவட்ட) திருப்பத்தூர் ஸ்ரீதளிநாதர் ஆலயம், இதனருகில் உள்ள வைரவன்பட்டி போன்ற பைரவ பூமித் தலங்களில் ஸ்ரீகால பைரவருக்கு புனுகு, கஸ்தூரி கலந்த சந்தனக் காப்பு இட்டு முந்திரி மாலை சார்த்தி இந்நாளில் சிவராத்திரி போல ஆறு அல்லது எட்டு கால வழிபாடுகளை நிகழ்த்திட வேண்டும். தனி விமானம், கலசங்களுடன் கூடிய ஸ்ரீபைரவர் சந்நிதியில் பூஜிப்பது மிகவும் சிறப்புடையதாம். ஸ்ரீபைரவ மகரிஷிதான் ஸ்ரீகாலபைரவ மூர்த்தி உபாசனைகளையும், வழிபாடுகளையும், நமக்கு எடுத்துரைத்த மகத்தான பைரவ லோக மகரிஷிப் பெருமான் ஆவார். ஸ்ரீபைரவ மகரிஷி பிரத்யட்சயமாகத் தூல வடிவிலும், சூட்சும வடிவிலும் புதாஷ்டமியாகிய இன்று அனைத்து பைரவத் தலங்களிலும் வழிபடுகின்றார்.

காலத்தால், பிரளயத்தால் அழிவுறா ஆய கலைகளைப் பெற வேண்டி ஸ்ரீசரஸ்வதி தேவி, ஸ்ரீகாலபைரவரை வணங்கி, ஸ்ரீஹயக்ரீவரிடம் குருகுலவாசம் பூண்ட புதனும் அஷ்டமியும் கூடும் புதாஷ்டமியில், அற்புதமான இந்நாளில் மேற்கண்ட "வித்யா பைரவ" சக்திகள் நிறைந்த தலங்களில் வழிபாடுகளை மேற்கொள்வதால் தினசரி வாழ்வில் ஏற்படுகின்ற பலவிதமான பயங்கள், அச்சங்கள் தெளிவதுடன் எதிர்காலத்தில் வன்முறைகள், தீவினை சக்திகளிலிருந்து நம்மையும், நம்முடைய சந்ததிகளையும், மனித சமுதாயத்தை காத்து ரட்சித்துக் கொள்வதற்கான அதியற்புத மகா வித்யா வேத பைரவ சக்திகள் கிட்டும். குறிப்பாக, பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லும் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை எண்ணி அச்சமுறும் பெற்றோர்களுக்குப் புதாஷ்டமி வழிபாடு அவர்களுக்கும் அவர்களுடைய பெண்களுக்கும் மிகவும் புனிதமான கற்புக் காப்பு சக்திகளைப் பெற்றுத் தரும்.

இத்தலங்களில் ஸ்ரீகாலபைரவரை அபிஷேக ஆராதனைகளுடன் வழிபட்டு, ஸ்ரீபைரவரின் திருவடிகளில் (கருப்புக்) காசிக் கயிறுகளை அர்ப்பணித்து ஆண், பெண் குழந்தைகளை கிழக்கு நோக்கி அமர வைத்து அவர்களுக்கு வலது மணிக்கட்டில் காசிக் (கருப்பு) ரட்சைக் கயிறுகளைக் கட்டி விட வேண்டும். கல்லூரி மாணவியர் நிச்சயமாக இன்று ஸ்ரீகாலபைரவரை வணங்கி புனிதமான நல்வரங்களைப் பெற வேண்டிய உத்தமமான பைரவ பூஜை நாள்!

அடிமை கண்ட ஆனந்தம்

(நம் குரு மங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்)

யுகம் யுகமாய், இறையாணையாகப் பல்லாயிரம் லோகங்களில் பல வடிவங்களில் சித்தராய், மகரிஷியாய், யோகியாய், முமூட்சுவாய், ஜீவன் முக்தராய், ஞானியாய், மாமுனியாய், சற்குருவாய்   மட்டுமன்றி இன்னோரன்ன வடிவுகளிலும் தோன்றித் தோன்றாமல் தோன்றி மறைந்தும் தோன்றுபவரே ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்தராம், ஸ்ரீஅகஸ்தியர் பொற்பாதத் திரட்டாய்ப் பொலியும் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்தரிடம், பல கோடி யுகங்களாய்த் தொடர்ந்து குருகுலவாசம் பூண்டு வரும் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள், நடப்புக் கலியுகத்தில், பள்ளிச் சிறுவனாய்ப் பெற்றடைந்த குருகுலவாச அனுபூதிகளே, இத்தொடரில், அடிமை கண்ட ஆனந்தமாய்ப் பரிமளிக்கின்றன. வெறுமனே படிப்பதை விட, உள்ளத்தில் வடிப்பதே சற்குருவின் மகிமையை உணர்விக்கும்!

ஸ்ரீஅகஸ்தியபிரான் திருபுகலூர்

உள்ளங்கை அளவே உலகம்!

கால் கடுக்க, கடுக்க, கனிந்த நல்குருவுடன், சிறுவன் பாரதப் புண்ய பூமியில் நடந்தே கடந்த நில, மலைப் பகுதிகள் ஏராளம், ஏராளம்! "குருவுடன் சேர்ந்து நடக்கும் ஒவ்வொரு பாத அடியும், பகவானை நோக்கியே" என்ற எளிய, ஆரம்ப குருகுல வாசப் பாடத்தை உணர்த்திடவே, பெரியவர் சிறுவனைப் பாரதமெங்கும், பாத யாத்திரையாக குமரி முதல் இமயம் வரை பெரும்பாலும் நடத்தியே பன்முறை அழைத்துச் சென்றார்.

மேலும் பல நாடுகளிலும், அந்தந்த நாட்டு மனித வடிவுகளில் பாண்ட், சர்ட், டை என அந்தந்த நாட்டு வழக்க ஆடைகளில், மொழிகளில் திபெத்திய பூமியின் லாமாச் சித்தர்கள், போகர் வழி வந்த மங்கோலிய பூமிச் சித்தர்கள், கம்பளி ஆடை பொங்கும் இமாலய பூமிச் சித்தர்கள் என வகை வகையாக பெரியவர் சிறுவனுக்கு எத்தனையோ சித்தர்களை, மகரிஷிகளைத் தரிசனம் செய்து வைத்திருக்கின்றார். எவ்வாறு?

நேரடியாக மட்டுமின்றி தன் உள்ளங்கையிலும் வீடியோ காட்சிகள் போலும் அவர்களை தரிசனம் காண வைத்துள்ளார்! ஆம், பல்லாண்டுகளுக்கு முன்....தொலைக்காட்சி முறை நடைமுறைக்கு வரும் முன்னரேயே.... கம்ப்யூட்டர் என்பதை எவரும் அறியாத காலத்திலேயே....பெரியவர் தன் உள்ளங்கையில் வீடியோக் காட்சி போல அற்புதக் காட்சிகளைச் சிறுவனுக்குக் காண்பித்து எதிர்காலத்துல Palm PCன்னு இதுக்கு பேர் வைப்பாங்கடா! காலங் கடந்தவங்களான சித்தர்களோட சத்திய வாக்கு இது!" எனத் தீர்கத் தரிசனமாகவும் மொழிந்தார்!  ராமாயணக் காலத்திற்கு முந்தைய கிருத யுகக் காட்சிகள் முதல் எதிர் காலத்தில் வர இருக்கின்ற எத்தனையோ விஞ்ஞானக் கருவிகள் வரை பலவற்றைச் சிறுவன் பெரியவருடைய உள்ளங்கையில் டிவி நிகழ்ச்சிகள் போலக் கண்டு ஆனந்தித்து இருக்கின்றான்.

மௌனமாய் உரைத்த உலகளவு அனுபூதிகள்!

ஒருமுறை....

பெரியவர் எங்கோ அவனை அழைத்துச் சென்ற போது.... பொதுவாக, எந்த இடத்திற்குப் போனாலும், பெரியவர் முன் கூட்டியே எதையும் சொல்வதில்லை! அந்தந்த இடம் வரும் போது ஊர்ப் பெயர்ப் பலகை, ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், கடைகளில் உள்ள பெயர்கள் மூலமாகச் சிறுவன் தானாக அறிந்து கொண்டால் தான் உண்டு!

"ஏன் வாத்யாரே, துவாரகா, பத்ரிநாத், பூரி, கங்கோத்ரி, பச்சை மலைன்னு ஊர் ஊராக் கூட்டிக் கிட்டுப் போய் எந்த ஊர்னு சொல்லாமலேயே இருந்தா, நானா எப்படித் தெரிஞ்சுக்கறது?"

சிறுவனுடைய குழந்தைத்தனமான இந்த கேள்வியைக் கேட்டு பெரியவர் வெகு விநோதமாக அவனுடைய கண்களுக்குள் ஊடுருவி நோக்கினார்! என்ன ஏதென்று வாயால் சொல்லாது அவர் மௌனமாய் வர்ஷித்த இறைப்பாடங்களும், அவற்றில் அவனுக்குக் கிட்டிய ஆனந்த சாகரங்களும் தான் அதிகமோ அதிகம்! எனவே அவருடைய மௌனம் என்றாலே அவனுள் 72000 நாடிகளும் மிகவும் உஷாராகி விடும்!

பொருள் ஆனந்தம்
இடையே புலன் ஆனந்தம் !

பெரியவருடன் பல மைல்கள் நடந்த களைப்பின் ஊடே...சிறுவன் ஆழ்ந்திருந்த ஆத்ம விசாரத்தில் இருந்து மீண்டு எதேச்சையாய்த் தலையைத் தூக்கிப் பார்த்திட ....சாலையில், சொல்லி வைத்தாற் போல "கொல்லி மலை 7 மைல்" என்று போர்டு போட்டிருந்தது! அதைப் படித்ததுமே சிறுவனுக்கு கனக குதூகலம் தான்! கொல்லி மலை என்றாலே அவனுக்கு உலக சந்தோஷம் தான்!  ஏனென்றால் அவனுடைய கொல்லி மலைப் புனிதப் பயணத்தில் தானே முதன் முதலாக, விறகு வெட்டியாக வந்த ஸ்ரீஅகஸ்தியரின் தரிசனம் அவனுக்குக் கிட்டிற்று, ஸ்ரீஅகஸ்தியர் பெருமானும் சிறுவனுடைய நாக்கில் சித்த ருத்ர மந்திர பீஜாட்சரங்களை எழுதி அவனை ஆட்கொண்டார்!

....திடீரென்று பெரியவர் வெகு வேகமாகப் பக்கவாட்டில் திரும்பி ....செங்குத்தான மலைச் சரிவில் விடு விடு என்று ஏறுவாரானார். மிகவும் கடினமான, சரிவான பாதையது! நல்ல அடர்த்தியான காடு இருபுறமும்!

.....எண்ணங்களுக்குள் அலை புரண்டவாறே...திடீரென்று சிறுவன் அவனுக்கு முன்னே பார்த்திட....சிறுவனுக்கு பகீரென்றது!  என்னவாம்?

திருப்புகலூர் சிவாலயம்

முன் சென்ற பெரியவரைக் காணோம்!  சிறுவனுக்குத் தலை முதல் கால் வரை பய நாளங்கள் கிளுவை முள்ளாய் ஆங்காங்கே தைத்தன! ஏதேதோ சிந்தனைகளில், எண்ண வயல்களில் மிதந்தமையால் முன்னால் சென்ற பெரியவரைக் காணாமல் சிறுவன் பரிதவித்தான்!  அந்த இடத்தில் ஐந்தாறு ஒற்றையடிப் பாதைகள் பிரிந்தமையாலும், இருபுறமும் 70, 80 அடி மரங்கள் விண்ணுக்கு உயர்ந்தமையாலும், மாலை ஆறு மணிக்கே வனத்தின் நடுவில் கும்மிருட்டும் வந்து குமைந்தமையாலும் சிறுவன் துடிதுடித்தான்!

"வாத்யாரே! வாத்யாரே!" என்று உரைத்த குரலில் கூப்பிட்டான் சிறுவன்! பழைய நினைவுகளாய் செஞ்சி மலை அனுபவங்கள் அவனை ஜில்லிட்டன! நல்ல வேளை, பெரியவர் இப்போது அவனைப் பெரிதும் சோதனை செய்யவில்லை!

ஸ்ரீநடராஜர் திருபுகலூர்

"ஏண்டா தேவையில்லாத எண்ணங்கள் எல்லாம் உனக்குள்ளாற கொட்டிக் கிட்டே இருக்கு! இருட்டோ, வெளிச்சமோ எல்லாம் குருவுக்கே வெளிச்சம்னு உறுதியா நம்பினா, எந்த எண்ணமும், பயமும் உள்ளே நுழையாதேடா ராஜா! எல்லாம் வெளிச்ச ரகசியம் புரிய வரும் போது நீயா எல்லாத்தையும் தெரிஞ்சுப்ப!"

"என்ன இது வெளிச்ச ரகசியம் எனப் புதிர் போடுகின்றார்?" சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை! இறைவனுக்கே வெளிச்சம்!

இருட்டில் வெலவெலத்துப் போன சிறுவனுடைய நடுங்கும் விரல்களைப் பெரியவர் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

"ஏண்டா கை, கால் எல்லாம் இப்படி வெட வெடன்னு நடுங்குது?"

சிறுவன் பதில் சொல்லவில்லை! "குருவைப் பிரிந்ததாக எண்ணிய ஒரு சில விநாடிகளிலேயே நாம் இப்படி ஆடிப் போய் விட்டோம் என்றால், கலியுகத்தில் குருவே இல்லாதவர்களின் கதி என்னாவது?" சிறுவனுக்குள் ஆத்ம விசாரக் கிளைகள் தழைக்கலாயின!

ஒரு வழியாய்.....இருட்டில் தட்டுத் தடுமாறி....இருவரும் காட்டின் நடுவில் ஏதோ ஒரு மேடான இடத்திற்கு வந்து சேர்ந்தனர்! சிறுவனும் ஆங்காங்கே தடவிப் பார்த்து மிகுந்த எச்சரிக்கையுடன், பெரியவரின் கைகளையும் விட்டு விடாது மேட்டில் அமர்ந்து கொண்டான்!

"இங்கேயே இருடா, எங்கேயும் போயிடாதே!" பெரியவர் டக்கென்று சிறுவனின் கைகளை விட்டு விட்டார். சிறுவனோ அலறியே விட்டான்!

கொல்லிப் பாவை அம்பாள் தரிசனம்!

"ஏண்டா சும்மா அலட்டுற!  இங்க பார்!  இது தான் கொல்லிப் பாவை அம்பாள்! நல்லா தரிசனம் பண்ணிக்கோ!"

திடீரென்று வானில் பளிச்சென்று நிலா, பரிபூரண பௌர்ணமிச் சந்திரனாய் ஜ்வலித்திட....நீலமும், அபூர்வமான ஆரஞ்சும் சேர்ந்த அந்த நிலவொளியில்.....மரங்களுக்கு நடுவே....பெரியவர் கை காட்டிய இடத்தில்.....ஒரு மேடையின் மேல் கொல்லிப் பாவை அம்பிகையின் சிலை காட்சி அளிப்பது கண்டு மெய் சிலிர்க்க வணங்கினான்!

"எப்படி இந்தத் தேய்பிறையில் வானில் இவ்வளவு பெரிய சந்திரன் வானில் வந்தது?  இதுவரையில் பார்த்திராத நீல, இளஞ்சிவப்பு வண்ண ஒளியில் கொல்லிப் பாவை அம்பாளின் சிலா வடிவ தரிசனம் நன்றாகக் கிட்டியதே!" சிறுவன் அதிசயித்தான்!

"மிகவும் சக்தி வாய்ந்த கொல்லிப் பாவை அம்பிகையப்பா! பௌர்ணமி, அமாவாசையில் நிறைய சித்தர்கள் இங்கே வந்து தரிசனம் பண்ணுவாங்க! தேய்பிறை பஞ்சமித் தான் அம்பாளோட அவதார நாள்!  ரொம்ப ரொம்ப விசேஷமான நாள்! தேய்பிறை பஞ்சமில சந்திர பகவானும், சூரிய பகவானும் சேர்ந்து வந்து பூஜை பண்ணுவாங்க!"

ஸ்ரீவாமதேவ லிங்கம் திருபுகலூர்

ஆண்டு கொண்டு வந்து தந்த அற்புத தரிசனம்!

ஏற்கனவே கொல்லிப் பாவை அம்பிகையின் மகத்துவத்தைப் பற்றிப் பெரியவர் நிறையச் சொல்லி இருந்தமையால் அம்பிகையின் திவ்யமான வடிவை நிலவொளியில் கண்டவுடன் சாஷ்டாங்கமாகக் கீழே வீழ்ந்து வணங்கினான் சிறுவன்! நல்ல தரிசனம் தரவே காரிருளிலும் கவின்மிகு நிலவொளியை அம்பிகை தந்தனளோ?

"தேய்பிறையும் நீலங் கலந்த இளஞ்சிவப்பு ஒளியைத் தான் கண்டது அன்றைய தேய்பிறைப் பஞ்சமியில் சூரிய, சந்திர மூர்த்திகளின் பூஜை நிகழ்ந்ததைக் குறிப்பிடத் தானோ!  இதற்காகத்தான் நம்மை இந்த முன் இரவில் கல், முள் பாராது விரட்டிக் கொண்டு வந்து இங்கு சேர்த்தாரோ?" ‍ உண்மை புரிய வந்ததும் அவன் பெருமிதத்தில் மிதந்தான்! அம்பாளின் தரிசனம் வாழ்வில் கிடைத்தற்கு அரிய பாக்கியமாயிற்றே!

கண்களை மூடியவாறு அவன் கொல்லிப் பாவை அம்மனை உள்ளத்துள் ஒளியாயும் தரிசித்து...கண்களைத் திறந்த சிறுவனுக்கு ....மீண்டும் பகீரென்றது!  ஏனென்றால் கும்மிருட்டு மீண்டும் கங்கணம் கட்டிக் கொண்டு அங்கே வந்து சூழ்ந்து விட்டது. வானிலும் சந்திர ஒளியைக் காணோம்!

பெரியவர் இருட்டில் தட்டுத் தடுமாறிச் சிறுவனின் கைகளை மீண்டும் பிடித்துக் கொண்டதால் சிறுவனிடம் அப்பளமாய்ப் பொரிந்த பயத்திவலைகள் பறந்தோடின!

ஸ்ரீஆயுர்தேவி காலத்தினளாம்!

"தெரிஞ்சுக்கோடா, கொல்லிப் பாவை அம்பாள் தரிசனம் அவ்வளவு ஈசியாக் கெடைச்சுடாது! கொல்லி மலையில் சில இடங்கள்ல ஏழெட்டு இடத்துல கொல்லிப் பாவையோட சுதை வடிவம் இருக்கும்! ஆனா இது தான் ஆதிமூலக் கொல்லிப் பாவை அம்பாள்! இந்த ஏரியாவுக்கு வர்ற அவ்வளவு கோடிச் சித்தர்களும், மகரிஷிகளும், தேவாதி தேவர்களும் முதல்ல இந்த கொல்லிப் பாவை அம்பாளைத் தரிசனம் பண்ணிட்டு அம்பாளோட அனுகிரகத்தோடத்தான் கொல்லி மலைக்குள் நுழைவாங்க! ரொம்ப ரொம்ப சக்தி வாய்ந்த அம்பாள்!  அபிராம பட்டருக்கும் இப்படித்தான் இந்த அம்பாள் தரிசனம் கெடச்சுது! பிரளயத்துக்கு முன்னாடி இருந்தே ஸ்ரீஆயுர் தேவி உற்பவிச்ச காலத்தை ஒட்டி, பல கோடி யுகம், யுகமா அம்பாள் இங்க இருக்கா! அடுத்த தடவை நாம எப்ப வர்றமோ தெரியாது! அப்படியே வந்தாலும் இந்த மாதிரி தேய்பிறை அஷ்டமி அவதாரத் திதியில அம்பாள் தரிசனம் நமக்குக் கிடைக்குமான்னு தெரியாது!"

ட வடிவ நவகிரகங்கள் திருபுகலூர்

"சரி, சரி கிளம்பு, நமக்கு வேற வேலை நிறைய இருக்கு!" பெரியவர் சிறுவனை விரட்டினார்.

சிறுவன் திடுக்கிட்டான்!  "இந்தக் கும்மிருட்டிலா கிளம்புவது? இரவில் தங்குவார் என்றல்லவோ நினைத்திருந்தோம்!"

"ஆமாண்டா, நீ நினைச்சபடியெல்லாம் நாங்க ஆடினா அதுக்கப்புறம் நாங்க எதுக்கு பூலோகத்துக்கு வரணும்?"

வழிகாட்டிக்கு ஒளி காட்டினாள்!

சிறுவன் மௌனச் சட்டையைப் பூண்டுப் பெரியவருடன் கிளம்ப ஆயத்தமானான்! பெரியவர் திடீரென்று அம்மனை நோக்கி கும்மிருட்டில் கீழே வீழ்ந்து, வீழ்ந்து கும்பிடலானார்!

"கொல்லி மலை ஆத்தா!  ஏதோ சின்னப் பையன் உன் பூமிக்கு வர்றான்! இருட்டுன்னு பயப்படறான்! உன் வேலையா ஒரு மூலிகையைத் தேடி அடியேனும் வந்திருக்கேன்! ஆத்தாதான் பெரிய மனசு பண்ணி வழிகாட்டணும்!"

பெரியவர் ஓவென்று பெருஞ் சப்தத்தில் கொல்லிப் பாவை அம்பிகையிடம் வேண்டிட....காடெங்கும் அவருடைய குரலே எதிரொலித்து, எதிரொலித்துச் சிறுவனுக்கு மேலும் மேலும் பீதியைக் கிளப்பியது! மீண்டும், மீண்டும் பெரியவர் கொல்லிப் பாவை அம்மனிடம் பெருங்குரலில் வேண்டிட்டார்!

"ஆத்தா, உன்னோட பசங்க வந்துருக்கோம்!  நீதான் எங்களுக்கு அடைக்கலம்!"

ஸ்ரீசரஸ்வதி அன்னபூரணி திருபுகலூர்

என்ன ஆச்சரியம்! திடீரென்று யாரோ டார்ச் அடித்தாற் போல் பெரியவருக்கு வழிகாட்டும் வகையில் அவர் செல்லும் பாதையில் நல்ல வெளிச்சம் வந்திட்டது. ஒற்றையடிப் பாதையில் அவர்கள் நடக்க நடக்க...அவர்கள் முன்னால் அந்தப் பெரும் வெளிச்சமும் நகர்ந்து கொண்டே சென்றது!  அது மட்டுமா, நாலைந்து ஒற்றையடிப் பாதைகள் கூடி இருந்தால் அந்த தேவ வெளிச்சமே அவர்கள் செல்ல வேண்டிய வழியை அடையாளம் காட்டிச் சென்றது! சோடியம் விளக்கைப் போட்டாற் போல் அவர்கள் செல்லும் இடம் மட்டுமல்லாது செல்ல வேண்டிய இடத்தையும் வழிகாட்டி வெளிச்சம் தந்தது!

வளியும் ஒளியும் வரம் பல நல்கும்!

"பார்த்தியாடா, கொல்லிப் பாவை அம்பாளை நம்பிட்டா போதும், ஜகத் ஜோதியா வந்து வழி காட்டுவா!"

நடந்தார்கள், நடந்தார்கள் அவர்கள் நடந்து கொண்டே இருந்தார்கள். அவர்கள் சென்ற இடமெல்லாம் வெளிச்சமும் முன் தொடர்ந்தது!

ஒரு வழியாய்....பெரியவர், தான் தேடி வந்த இடத்தை வந்து சேர்ந்த போது விடியற்காலை நான்கு மணி இருக்கும்! அந்நேரம் வரை அந்த ஒளிக் கனலும் துணை தந்ததுவே!

"ஆத்தா, உன்னை ரொம்ப சிரமப்படுத்திட்டோம்!  இதுதான் நம்ப புள்ளையாண்டான்! நிறைய தெய்வீகப் பொறுப்பை கொடுத்துருக்கேன், நீ தான் நல்லபடியா வழிகாட்டி, ஒளிகாட்டி அவன் பக்கத்துலேயே எப்பவும் துணையா இருக்கணும்!"

டக்கென்று வானில் நிலவு வந்து...ஒரு சில விநாடிகளுக்கு இருந்து பிறகு மறைந்தது. ஆம், கொல்லிப் பாவை அம்பாள் ஜோதிபூர்வமாய் ஆசியும் அளித்து விட்டாளே!

"பார்த்தியாடா கொல்லிப் பாவை அம்பாளே நமக்கு ஒளிவழிகாட்டி தங்கறதுக்கு இடமும் கொடுத்துக் கருணாகரவல்லி தெய்வமா இருக்கா!"

ஓ!  இது தான் வாத்யார் தீர்க தரிசனமாக முன்னரே சொன்ன "வெளிச்ச ரகசியமா?" சிறுவன் வியந்தான்!

திருபுகலூர்

அவர்கள் வந்து சேர்ந்த இடம் ஒரு பழமையான பெருமாள் ஆலயமாக (இன்றும் அடர்ந்த வனத்திடையே இக்கோயில் இருக்கின்றது!) இருக்கக் கண்டு சிறுவனுக்குப் பரம சந்தோஷமாக இருந்தது. காரணம் நன்கு பாதுகாப்பாய் அமர்ந்து ஓய்வெடுக்கலாமே!

நெடுந்தொலைவு மலையேறி வந்த களைப்பில், கொல்லிப் பாவை அம்பாளை, அம்பாள் தந்த ஒளியை தரிசித்த சந்தோஷத்தில் சிறுவன் ஆனந்த மயக்கங் கொண்டு பெரியவரிடம் கூட ஒன்றும் சொல்லாமல் சற்றே அயர்ந்து உட்கார்ந்த அடுத்த நிமிடத்திலேயே அங்கேயே உறங்கிப் போய் விட்டான்!

தனி ஆவர்தனமா?

காலையில் எழுந்து பார்த்தால்....ஏழு, ஏழரை மணி இருக்கும்!  நல்ல சூரிய வெளிச்சம்! பக்கத்திலோ பெரியவரைக் காணோம்! பதறிப் போனான் சிறுவன்!  முகம் வியர்க்க, வியர்க்கச் சுற்றிச் சுற்றி வந்து பார்த்தான்! பெரியவரின் காலடிச் சுவட்டையே காணோம்! வானமே தெரியவில்லையே! சுற்றிலும் பெரிய பெரிய காட்டு மரங்கள்! முன்பின் தெரியாத மலை தேசமாயிற்றே! அப்புறமென்ன, "இரவில் வெளிச்சம் தந்து வழி காட்டிக் காத்த கொல்லிப் பாவை அம்பாள் பகலில் வழி காட்ட மாட்டாளா என்ன?"  என்று எண்ணி ஒரு வழியாய் மனதைத் தேற்றிக் கொண்டு அம்பிகையை வேண்டிப் பயணத்தைத் தொடர்ந்தான்.

"இந்த ஏரியாவில் நமக்குச் சொல்லத் தெரிந்த ஒரே இடம் அறப்பளீஸ்வரர் சிவன் கோயில் தான்!  கேட்டுத் தான் பார்ப்போமே!" சிறுவன் உளமாரத் தயாராகி விட்டான்!

முனைந்து திரட்டிய தைரியத்துடன் ஆங்காங்கே முள், விறகு, கனிகளைத் திரட்டிக் கொண்டிருந்த ஜனங்களை அண்டிட, அவர்களும் அன்பைப் பொழிந்திட.....ஒரு வயதான மூதாட்டி ஓடோடி வந்து அவனுக்குப் பதநீர் தந்து, உண்பதற்குத் தேனும், தினை மாவும் கொடுத்து அரவணைத்தாள்! கொஞ்சம் கொஞ்சமாய் ஆங்காங்கே வழி கேட்டுக் கேட்டு....

குருவா விடுவார்?

புன்னை தலவிருட்சம் திருபுகலூர்

ஒரு வழியாய் கொல்லி மலை ஸ்ரீஅறப்பளீஸ்வரர் சிவாலயத்திற்கு அவன் வந்து சேர்ந்த பொது பகல் மணி ஒன்றாகி விட்டது!

ஆங்கே....கோயில் வாசலில் அமர்ந்து கொண்டிருந்த பெரியவர் காலாட்டி கொண்டு....மிகவும் சுகமாக கோயில் பிரசாதச் சுண்டலை நன்கு சுவைத்து மென்று தின்று கொண்டிருந்தார்!

"ஓஹோ குருவென்றால் இப்படியெல்லாம் நடுக்காட்டில் திராட்டில் விட்டு விட்டு வழிகாட்டுவார்களோ"? என்று அவரை மனதுள் வைது கொண்டு சிறுவன் கோபம் கொப்புளித்த முகத்தோடு, கனல் பொங்க அவரைப் பார்த்திட்டதுடன், பசி மிகுதியால் மிடுக்காக, சுண்டலுக்காக அவரிடம் கையை நீட்டிட,

"ஆமாண்டா கண்ணு!  இப்படியும் உட்கார்ந்த இடத்துலேந்து கூடச் சித்தர்கள் வழிகாட்டுவாங்க!" என்று பெரியவர் புன்முறுவலுடன் சொன்னதுடன், தன்னிடம் இருக்கின்ற மொத்தச் சுண்டலையும் ஒன்று திரட்டி ஒரேயடியாய்த் தன் வாயில் போட்டுக் குதப்பிக் கொண்டு, "ஏண்டாப்பா கொல்லிப் பாவை அம்பாள் கொடுத்த பதநீர், தேன், தினை மாவு போதலையோ?" என்று சிரித்துக் கொண்டே எங்கோ பார்த்தவாறு கேட்டிட, சிறுவன் மலைத்து நின்றான்!

காலாட்டிக் கொண்டு உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே குவலய அனுபூதிகளைக் காணும் அவர்தம் திறன் கண்டு தன் கோபக் கனலை இழந்து சிறுவனும் பெரிதாகச் சிரித்து விட்டான்!

அப்பப்பா குருகுலவாசத்தில் தாம் எத்தனை சோதனைகள்? முடிவில் தான் எத்தகைய, திகட்டாத, திவ்யமான அமிர்த ரசம்!

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா

கீர பாவன ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா! அட்டைப்பட விளக்கம்

கீரம் எனப்படும் கிளி உள்ளிட்ட அனைத்துக் கோடி ஜீவன்களிடமும் யமுனை நதி தீரத்தில் உரையாடிக் கொண்டிருக்கும் சர்வ ஜீவ சம்பாஷைணை நிலையில் ஸ்ரீகிருஷ்ணர், ஹஸ்த பூஷண யோக நிலை பூண்டு அமர்ந்துள்ளார்.

க்ரீகண்டு மகரிஷி கிளி வடிவம் எடுத்து சுவாமியின் விரல்களின் மீது அமர்ந்து இருக்கின்றார். ஸ்ரீஅஸ்தீக சித்தர் பாம்புகளுக்கு சற்குருவாய்ப் பரிமளிப்பது போல், கிளிக் குலத்திற்கு சற்குருவாய்ப் பிரகாசிப்பவரே க்ரீகண்டு மகரிஷி ஆவார்!  தினமும் குறித்த நேரத்தில் இன்றும் கோடானு கோடி ஜீவன்களுடன் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா ஒரே சமயத்தில் உரையாடுகின்றார்! ஆனால் மனிதனைப் போல் சொத்து, பணம், நகை எனப் பேராசைக் கணைகளால் பிற ஜீவன்கள் பரமாத்வைப் பிய்த்துப் பிடுங்குவது கிடையாது!

ஸ்ரீஅகத்தியர் சிவபுரம் வெள்ளலூர்

ஒரறிவு, ஈரறிவு, நாலறிவு எனப் பல ஜீவன்கள் மனிதனை விட அறிவாம்சம் குறைந்த நிலையில் இருந்தாலும் அவை யாவும் தம் முழு இறைப் பகுத்தறிவுடன் குருபக்தியோடு செயல்படுகின்றன!  மனிதனைப் போல், கோரியது கிட்டவில்லை என்றால் அவை குருவை வசை பாடி, மனம் மாறி, வேறொரு குருவைத் தேடித் தடம் புரள்வது கிடையாது!  ஓரறிவுப் புழு என்றால் ஓரறிவும் அதனுள் முழுமையாக, பரிபூரணமாக இயங்கும். ஆனால் பெறுதற்கரிய ஆறறிவு கூடிய பகுத்தறிவு கொண்ட மனிதனோ பொறாமை, பகைமை, சுயநலம், பேராசை, முறையற்ற காமம் இவற்றால் அறிவுப் பிளவுண்டு, புனிதம் தவறி இரண்டரை அறிவு, மூன்றே காலறிவு என அறிவுப் பஞ்சத்துடன், அரைகுறை அறிவுகளுடன் முழுமையின்றி அரை மனிதனாகவே வாழ்கின்றான்! தான் ஒவ்வொரு விநாடியும் வாழ்வது இறையருளால் என்று உணர்ந்தால் தானே ஆறாம் அறிவாம் இறைப் பகுத்தறிவு ஆக்கமுறும்.

த்ரிதர வம்ச முனிபுங்கவர் மயில் வடிவம் கொண்டு சுவாமி கிருஷ்ணரிடம் உரையாடுகின்றார். உத்தமத் தெய்வீக நிலையில் துய்க்கும் த்ரிதர வம்ச முனிபுங்கவரும், க்ரீகண்டு மகரிஷியுமே இன்றும் ஸ்ரீகிருஷ்ணனிடம் ஆத்ம விளக்கங்களைப் பெறுகின்றார்கள் என்றால் இறைஞானத்தின் எல்லையை என்னென்பது?

கங்காதர பசுபதி மாமுனி பசு வடிவு கொண்டு சுவாமியின் அளப்பிலா அன்பில் திளைத்து கோமுக்தி லோக ரகசியங்களை, ஸ்ரீகிருஷ்ணரிடம் இருந்து அறிந்து கொள்கின்றார்.

வந்தனா விளரி என்ற அரிய மான் வடிவம் கொண்டு ஸ்ரீசந்திர பகவான், ஸ்வாமி ஸ்ரீகிருஷ்ணரிட‌ம் கோள் மாற்று ரகசியங்களை அணுகித் தெரிந்து கொள்கின்றார். சூரிய, சந்திர கிரண சூட்சுமங்களை அவர் ஸ்ரீகிருஷ்ணரிடம் இருந்தே பெறுகின்றார்.

ஸ்ரீபாரி என்ற தேவ அன்ன பட்சியானது தேவ சாந்தம், இறைஅமைதித் தத்துவங்களைக் கண்ணபிரானிடம் இருந்து அறிந்து கொள்கின்றது.

இவ்வாறு தாவரங்கள், பட்சிகள், மிருகங்கள் வடிவில் பல மகரிஷிகள் கண்ணபிரானின் திருஅருளைப் பெறுகின்ற காட்சியே அட்டைப் படமாய் மிளிர்கின்றது. ஆமாம் இத்தகைய இறை ரகசியங்களை, ஞான விளக்கங்களைப் படித்த உடனேயே மறைந்து விடுமே, என் செய்வது?

தரிசனப் பலன்களைப் பரிபூரணமாகப் பெற சர்வாங்க தரிசனம் என்ற ஒன்றுண்டு! நமக்குப் புரிவதற்கென பிரபஞ்சத்தையே ஆடையாக்கிப் போர்த்தி மானுட வடிவம் கொள்ளும் ஈஸ்வரனை சிரசு முதல் பாதம் வரை, பாதம் முதல் சிரசு வரை கண் குளிர தரிசிப்பதே சர்வாலங்கார தரிசனமாம்! நம்முடைய சகல அங்கங்களால் செய்த வல்வினைகள், தீவினைகள் நீங்கிட, விநாடிதோறும் பயனற்ற, தீய எண்ணங்களைப் பெருக்கிப் பரவெளியில் அசுத்தத்தைக் கலந்ததற்குப் பரிகாரமும் காண இறைவனை ஏதேனும் ரூபத்தில் "தலை முதற்பாத" தரிசனமும், "பாத முதல் தலை தரிசனமும்" பெற வேண்டும். இந்த சர்வாலங்கார தரிசன பக்தி வழிபாட்டு முறையை விருத்தி செய்யும் "வண்ண வழிபாடாகவே" ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவே பல வடிவுகளில் ஜீவ சக்திகளைத் தன் திருமேனியில் பூக்களாக, திலகங்களாக, ஆடைகளாக, ஆபரணங்களாக, திருமுடிகளாக, பட்சிகளாக, விலங்கின வாகனங்களாக.....பூண்டு அருட்காட்சி தருகின்றார்!  அனைத்தும் நமக்காகவே! எனவே கீர பாவன ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா கோடானு கோடி சித்தர்களுடன், மகரிஷிகளுடன், உத்தம ஜீவன்களுடன் உரையாடுகின்ற அட்டைப் பட தரிசனம் ஓர் அரிய (இறைவனே நமக்காக இல்லம் தேடி வந்து அளிக்கின்ற காருண்ய) சர்வாலங்கார தரிசனமாகும்!

ஸ்ரீவாஸ்து பூஜை

ஸ்ரீவாஸ்து பூஜை மகாத்மியங்கள் ஆயுதன பூஜா வாஸ்து நாள்.

ஸ்ரீவாஸ்து பகவானின் எட்டு விஸ்வ ரூப தரிசன நாட்களே தமிழ் வருடத்தின் எட்டு வாஸ்து நாட்களாகும்.

வரும் ஆடி மாத வாஸ்து தினமே ஆயதன வாஸ்து பூஜை நாளாம். நில தோஷங்களால் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான நல்வரங்களை, நற்சக்திகளைப் பெற்றுத் தரும் அபூர்வமான நாள்.

ஸ்ரீபூமிநாதர் செவலூர்

நெடுங்காலமாகத் தேங்கிக் கிடக்கும் கட்டிட வேலைகளில் உள்ள நில தோஷங்கள், தகராறுகள் நீங்கி, கட்டிடப் பணிகள் மீண்டும் துவக்க உதவும் அபூர்வமான ஆயதன வாஸ்து பூஜை நாள்!

நல்ல வீடு, நல்ல வாடகை வீடு அமையவும் உதவும் சீரிய ஆயதன வாஸ்து பூஜை நாள்!

வாஸ்து நியதிகளே பூமி வாழ்க்கையின் இறை இலக்கணம்!

மனித குல வாழ்க்கையானது, ஆயுட்காலம் முழுதும் பூமியை ஒட்டித்தானே அமைந்துள்ளது. ஏனெனில் மனிதன் எழுந்து, நடந்து, படுத்து, உண்டு, கழித்து, உறங்குவது அனைத்தும் பூமியில்தானே!  எனவேதான் தான் வாழும் பூமியை நன்முறையில் இறைநன்றிப் பூர்வமாகப் பராமரிக்க வேண்டிய பொறுப்புணர்வு, கடமை ஒவ்வொரு மனிதனுக்கும் நிச்சயமாக உண்டு. எவ்வகையில் ஒரு மனிதன் பூமியைப் பேணி வாழ வேண்டுமோ, அந்த இறைநியதி முறைகளுக்குத்தான் வாஸ்து சாஸ்திர நியதிகள் அல்லது பூமிவாழ் இறை இலக்கணங்கள் என்று பெயர். இவற்றை நன்முறையில் கடைபிடித்து, பிறருக்கும் முன்னோடியாக நின்று, தாங்கள் வாழ்ந்த பூமியை நன்முறையில் பேணி, தார்மீகமாக வாழ்ந்து காட்டி வாஸ்து சாஸ்திரத்தில் தலைசிறந்தவர்களாகப் பொலிபவர்களே வாஸ்து மஹரிஷிகள், வாஸ்துச் சித்தர்கள் ஆவர். இவர்கள் தமக்கு இத்தகைய அரிய வாஸ்து சக்திகளைத் தந்திட்ட மூலாதார இறைப் பேரருளை ஸ்ரீவாஸ்து மூர்த்தியாக வழிபடுகின்றனர். பூமிநாதச் சித்தர், த்ரைலிங்கச் சித்தர், துருவ மஹரிஷி, சத்யபாஷாட மஹரிஷி, மூர்க்க மகரிஷி போன்றோர் வாஸ்து லோகச் சித்தர்கள், மஹரிஷிகள் ஆவர். இவர்கள் தாம் ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் விஸ்வரூப தரிசனங்களைப் பரிபூரணமாகப் பெற்றவர்கள்!

செவலூர்

இவ்வாறு வாஸ்துச் சித்தர்களும், வாஸ்து மகரிஷிகளும் பூமியின் எட்டுத் திக்குகளிலும் ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் விஸ்வரூப தரிசனம் பெற்ற நாட்களே இன்று தமிழ் வருடத்தின் எட்டு வாஸ்து நாட்களாக, பஞ்சாங்க ரீதியாக நமக்கு அளிக்கப்பட்டு உள்ளன. சில பஞ்சாங்கங்களில் இவற்றை ஏழாகக் குறித்திருப்பர். எட்டுத் திக்குகளிலும் சயன யோகம் பூண்டு ஸ்ரீவாஸ்து தேவ மூர்த்தி அருள்பாலிப்பதால் எட்டு வாஸ்து நாட்களையும் கொண்டாடுதலே சிறப்புடையதாம்!  இந்த எட்டு நாட்களிலும் வாஸ்து ஆலய உற்சவங்கள் வாஸ்து லோகத்திலும், ஏனைய பல பூமிகளிலும் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன.

சிங்கம் தரும் சிம்மேந்திர வர பலன்கள்!

தேள், நட்டுவாக்களி, பாம்பு, சிங்கம், புலி போன்றவை மனித இனத்திற்கு எதிரிகளாக நமக்குத் தோன்றுகின்றனவே தவிர ஆனால் இது உண்மை அல்ல!  அனைத்து மிருகங்களுமே நிச்சயமாக நாம் அறியா வகையில் மனிதனுடைய ஜீவ வாழ்க்கைக்குப் பல விதங்களில் துணைபுரிந்து கொண்டு தான் இருக்கின்றன.

உதாரணமாக, நாம் மிகவும் அஞ்சும் சிங்கமானது சூரிய ஒளியில் இருந்து சிம்மேந்திர உஷ்ண சக்திகளைக் கிரகித்து அவற்றைத் தம் பாதங்கள் மூலமாகப் பூமிக்குள் செலுத்துவதால் தான் இன்றைக்கு நல்ல நீரோட்டங்களைப் பல இடங்களில் நம் பெற்றுக் கொண்டு இருக்கின்றோம். வேடர்களும் இதனால் தான் சிங்கத்தின் சுவடுகளைக் கண்டு தொடர்ந்து சென்று நல் நீரோட்டம் காண்பர். இதுவும் வாஸ்து சாஸ்திர அங்கமே!

சிங்கங்கள் காட்டில் தானே வாழ்கின்றன, அவை எப்படி மனிதர்கள் வாழ்கின்ற நிலப்பகுதிக்கு நல்ல நீரோட்டத்தை தந்திட முடியும் என்று எண்ணாதீர்கள்!  சிங்கம் கிரகிக்கும் சிம்மேந்திர உஷ்ண சக்திக்குப் பூமியினுள் எவ்வளவு தூரத்திற்கும், எங்கும் நீரோட்டத்தைப் பரப்புகின்ற மகத்தான சக்தி உண்டு. எனவே தான் ஆங்காங்கே மனிதர்கள் வாழ்கின்ற பகுதிகளில் சிங்கத்தின் ஊடுருவல் நடமாட்டம் காணப்படுகின்ற நாளிலோ, அதை ஒட்டிய நாட்களிலோ பெரும் மழைப் பொழிவு ஏற்படுவதை இன்றும் நீங்கள் உணர்ந்திடலாம். வனங்களில் சுதந்திரமாகத் திரியும் சிங்கங்களுக்கே இந்த ஆன்ம சக்தி வெளிப்படும்.

ஆப்பிரிக்காவின் யாரும் புக முடியா உட்காடுகளில் தாம் அதிக அளவு மழைப் பொழிவும், அதிவேக நீர் சுரப்பு ஊற்றுகளும் விலங்கின நடமாட்டங்களின் பயன்களாக ஏற்படுகின்றன!  மேலும் ஆப்பிரிக்க வனங்களில் வாழ்கின்ற சிங்கங்கள் எழுப்புகின்ற சிம்மேந்திர உஷ்ண சக்திகள் ஆப்பிரிக்க நாடுகளன்றி வெகு தூரத்தில் எத்தகைய நாடுகளுக்கும் பூமியடி நல் நீரோட்டங்களைப் பாய வைத்திடும்!

மனிதனுக்குத் தான் தொலைத் தொடர்புக் கருவிகள் அவசியம்!  ஆனால் விலங்கினங்கள் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் ஒன்றுக் கொன்று மனோரீதியாக (telepathy) பேச வல்லவை!

எட்டுக் குழியே நிலவளக் கண்ணாடி!

அக்காலத்தில் நிலத்தை, வீட்டை வாங்குவதற்கு முன் எட்டுத் திக்குகளிலும், எட்டு இடங்களிலும் குழிகளைத் தோண்டி அங்கு கிடைக்கின்ற பொருட்கள், கல், சில் வகைகள், புழு பூச்சிகள், மண் புழு, வெள்ளைக் கறையான் போன்றவற்றைக் கொண்டு அந்த இடத்தின் தன்மைகளை, நில தோஷங்களை அறிந்து கொள்வர். வகை வகையான கறையான்கள் தோன்றுகின்ற இடத்தைக் கொண்டு அந்த பூமியின் நிலப்பரப்பின் குணாதிசயங்களை நாம் நன்கு அறிந்திடலாம். நிலத்திற்கு அஸ்திவாரம் போடுவதற்கு முன்னரேயே அதிலுள்ள நில தோஷங்களை, வாஸ்து சாஸ்திர மீறல்களை எல்லாம் கண்டு அவற்றை நிவர்த்தி செய்த பின்னரே கட்டடத்தை எழுப்புவார்கள். ஆனால் தற்காலத்திலோ நகரத்தின் நடுவில், பள்ளிக்குப் பக்கத்தில், அலுவலகத்திற்கு அருகில் உள்ளது என்ற வகையில் கண்ட இடங்களில் அவரவர்கள் flat, வீடுகளை வாங்கி விடுகின்றார்கள். இது நல்ல விலைக்குப் போகும் என்று நகரிலே கடுமையான பூமி தோஷங்கள் நிறைந்த இடத்தை வாங்கி அவஸ்தைப் படுவோரும் நிறைய உண்டு.

உலகின் உடலின் ஆரணமையம்
செவலூர் திருத்தலமே

கறையான்களில் மூவாயிரம் வகைகளுக்கு மேல் உண்டு. இவற்றில் பல மனித குலத்திற்குப் பெருமளவில் நன்மை பயப்பன ஆகும். கறையான்கள் பலவும் பலவிதமான நில தோஷங்களைச் சுட்டிக் காட்டியும், கழித்தும் மனித குலத்திற்குத் துணைபுரிகின்றன. கறையான்களால் மரங்கள், சுவர்கள், ஜன்னல்கள் போன்றவை அழிக்கப்பட்டுச் சொத்து சேதம் விளைவதாகத் தோன்றினாலும் அதர்மமான, முறையற்ற வகையில் வந்த பொருட்களையும் மரங்களையும் கறையான்கள் அரித்து அந்த தோஷங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுகின்றன என்பது உண்மையே. அனைத்தும் இறைவன் செயல் என உணரும்போது தான் மனித நிலைக்கு அப்பாற்பட்டு நிகழும் பலவற்றிற்கும் விளக்கங்கள் கிட்டும்.

நிலவளம் பெருக்கும் பண்டைய இயற்கைக் காய்தல் முறை!

கோயில் சொத்து, நிலங்களை அபகரித்தல், குறைந்த வாடகை, குத்தகை தருதல் போன்ற சொல்லொணா அக்கிரமச் செயல்களினாலும், தீங்குடைய வாழ்க்கை முறைகளினாலும், மது, கடுமையான அமிலங்கள், திரவங்கள், மல மூத்திராதிக் கழிவுகள் போன்றவற்றை நிலத்தில் சேர்த்தும் மனித குலமானது நிலத்தடி மண்ணின் ஆன்ம சக்தியை வெகுவாகப் பாதித்து வருகின்றது. அக்காலத்தில் நிலத்தில் குழி தோண்டி மலங்கழிக்கின்ற "இயற்கைக் காய்வு" முறை இருந்தமையால் ஒரு விதத்தில் கழிவுகளை முறையாக கழித்தும், மறுபுறத்தில் நிலத்திற்கு நல் உரம் ஊட்டியும் நாம் வாழ்கின்ற பூமியை நன்முறையில் பேணிக் காத்தார்கள். தற்காலத்திலோ பலவகை விஞ்ஞானப் பூர்வமான கழிவறை முறைகள் ஏற்பட்டுச் சாக்கடைகளையும், கழிவு நீரையும் பெருக்கிக் கடலில் சேர்த்து கடலையும், நிலத்தையும் பாழ்படுத்தி வருகின்றார்கள்.

இவ்வாறு நாம் வாழ்கின்ற பூமியின் நிலத்தடி மண்ணின் ஆன்ம சக்தி பாதிக்கப்படும் போது தான் கறையான்கள், வண்டுகள், பூச்சி, புழுக்கள் போன்றவை தோன்றி மேற்கண்ட கழிவுகளை, தம் உடலில் ஊறும், பூமியில் இயற்கையாக இருக்கும் சிலவித அக்னித் திரவங்களில் பஸ்மம் செய்து பூமியைக் கட்டிக் காக்கின்றன.

வெண்மை காக்கும் விரயம்
செவலூர் திருத்தலம்

மேலும் நிலங்களில் கழிவுபட வேண்டிய தோஷங்கள் மிகுதியாக இருந்தால் அவை கறையான்கள் போன்ற பூச்சிகள் மூலமாகவும் ஆன்மீக ரீதியாக மனித குலத்திற்கு எடுத்துக் காட்டப்படுகின்றன. தோஷங்கள் இருக்கின்ற என்பதை மனிதன் அறிந்தால்தானே தக்க பரிகாரங்களைத் தேட முடியும். இப்போது இருக்கிற நிலம், வீடு, அலுவலகம் போன்றவற்றில் பூமி தோஷங்கள் இல்லாது ஓரளவு நன்முறையில் இருந்தாலும், முன்னோர்கள் பலரும் பலவிதமான நில தோஷங்களுக்கு ஆட்பட்டிருந்தால் அவர்கள் நடத்தியிருக்க வேண்டிய நிவர்த்திகளை, பரிகாரங்களைச் செய்ய வேண்டிய கடமை, தற்போது இருக்கின்ற சந்ததிகளுக்கு நிச்சயமாக உண்டு. இதனையும் கறையான்களின் வசிப்பு நமக்கு உணர்த்துகின்றது.

ஸ்வேதபல பூமி வழிபாடு!

கறையான்கள் காட்டுகின்ற நில தோஷ விளைவுகளில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டிய ஆன்மீக ரீதியான வழிமுறைகளும் நிறைய உண்டு. வெள்ளை எள், வெள்ளை கோதுமை ரவை, வெள்ளை அரிசி ரவையுடன் வெள்ளை வெல்லம் அல்லது வெள்ளைச் சர்க்கரையைக் கலந்து ஆலய மதிற்சுவர்கள் ஓரம் தொடர்ந்து எறும்புகளுக்கு இட்டு வந்தால் கறையான்கள் காட்டுகின்ற நில தோஷங்களைத் தீர்க்கும் நல்வழிகளை ஓரளவு பெற்றிடலாம். கறையான், மூட்டைப் பூச்சி, கரப்பான் போன்றவற்றால் பலவிதமான துன்பங்கள் மனித குலத்திற்கு வருவதாகத் தோன்றக் காரணமே பலவிதமான முறைகளில் மனிதன் பலருக்கும் துன்பங்களைத் தருவது தான்! பிறர்க்கு செய்ததுதாமே நமக்குத் திரும்பி வரும்!

மனிதனுடைய விருப்பங்கள், ஆசைகள், தேவைகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. நாம் ஏன் பல கடவுள் மூர்த்திகளை வழிபடுகின்றோம்? மனித குலத்தின் விருப்பங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இவற்றில் ஒவ்வொரு மனிதனின் நியாயமான விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்காகப் பலவிதமான புண்ணிய சக்திகளை மனிதன் பெற வேண்டி உள்ளது. மனிதனுடைய வாழ்க்கை முறையும் இல்லம், நீர் வசதி, உடை, உணவு, பணம், வாகனம், சாலை வசதி, அலுவலகப் பணி என்ற பல வசதித் தேவைக் கோணங்களில் ஊர்ந்து செல்கின்றது. இவற்றிற்காக நிறையக் காரியங்களைச் செய்யும் போது மனித குலமானது காரிய விளைவுகளாகப் பாவங்களையும், புண்ணியங்களையும் சேர்த்துக் கொள்கின்றது.

ஞானத்தின் நிறம் என்னவோ ?
வேதாரண்யம்

புண்ணியம், பாவம் என்றால் என்ன? ஒரு காரியத்தைச் செய்யும் போது ஏற்படும் விளைவுகளில் கிட்டும் நற்கிரணங்கள், நற்சக்திகள் புண்ணியமாகும். ஒரு காரியத்தைச் செய்யும் போது அல்லது கடமைப்பூர்வமாகச் செய்ய வேண்டிய காரியத்தைச் செய்யாது இருக்கும் போது ஏற்படும் தீய விளைவுகள், தீய சக்திகள் பாவங்களாகும். கடவுள் வழிபாட்டுக் காரியங்களில் விளையும் சக்திகள் தேவ புண்ணிய சக்திகள் ஆகும். இவ்வாறு தேவ புண்ணிய சக்திகளைத் தரும் நற்பணிகள் பலவிதமான இறைசக்திகளையும் கூடுதலாகப் பெற்றுத் தருகின்றன. உதாரணமாக குறித்த ஞானத்தால், பகுத்தறிவால் சில நற்கிரணங்களை, தேவ சக்திகளை உருவாக்கித் தீயவழக்கங்களைத் தடுத்து அவற்றை பஸ்மம் செய்ய வேண்டும் என்றால் அதற்குரிய தேவ காரியங்கள், தேவ சக்திகளே வித்யா சக்தியாக, ஸ்ரீசரஸ்வதி வழிபாடாக ஆகின்றது.

இவ்வாறு ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய செயல்களால் விளைகின்ற விளைவுகளுக்கு அவனே பொறுப்பாளி ஆகின்றான். இந்த விளைவுகள் தாம் அவன் வாழ்க்கையைக் கர்ம வினையின் விளைவுகளாக நடத்திச் செல்கின்றன. எனவே கடவுள் வழிபாடு என்பது ஒரு மனிதனுடைய லட்சியத்தை, வாழ்க்கைக் காரியங்களை நன்முறையில் இறைவழியில் நெறிப்படுத்துவது ஆகும்.

நாம் வாழும் பூலோகத்தில் இன்னும் வர வேண்டிய கடவுள் மூர்த்திகளின் பல அற்புத ரூபங்கள் உண்டு. இவற்றுள் ஸ்ரீவாஸ்து மூர்த்தி, ஸ்ரீசதாசிவ மூர்த்தி, ஸ்ரீகல்கி மூர்த்தி, ஸ்ரீஉபேந்திரப் பெருமாள் மூர்த்தி, ஸ்ரீவாலை மனோன்மணி தேவி போன்ற மூர்த்திகளை நாம் இன்னமும் தரிசிக்கவில்லை. இத்தகைய தெய்வீக ரூபங்கள் தக்கத் தருணத்தில், தக்க சித்தர்கள், குருமார்கள் மூலமாகப் பூவுலகிற்கு உணர்த்தப்படும்.

பல கோடி ஆண்டுகளாகச் சூட்சும ரூபத்தில் வழிபடப்பட்டு வந்த ஸ்ரீஆயுர்தேவியின் வடிவத்தை நம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரின் குரு கடாட்சத்தால் அவர்தம் அருட்சீடர் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் மூலமாகக் கலியுகத்திற்கான ஸ்ரீஆயுர்தேவியின் தெய்வீகத் திரு உருவை இன்று நாம் நம் வழிபாட்டிற்காகப் பெற்றுள்ளோம். இதே போன்று கலியுகத்தின் எஞ்சியுள்ள நான்கு லட்சத்து தொண்ணூற்று ஐந்தாயிரம் ஆண்டுகளில், இதுகாறும் மறைந்துள்ள பல தெய்வீக வடிவுகளும், வழிபாட்டு முறைகளும் நம் வழிபாட்டிற்காகத் தக்கத் தருணத்தில் சற்குருமார்களால் வெளிப்படுத்தப்படும். இத்தகைய வழிபாட்டு முறைகளில் ஒன்று தான் தற்போது திருஅண்ணாமலையில் நாம் கண் குளிரக் கண்டு தரிசிக்கின்ற லட்சக் கணக்கான மக்கள் மாதந்தோறும் கடைபிடிக்கின்ற பௌர்ணமி கிரிவலம் வருவதாகும். சில ஆண்டுகளுக்கு முன் பௌர்ணமியின் போது சில நூறு அடியார்களே கிரிவலம் வந்த புனித பூமியில் தற்போது இத்தருணத்தில் பல சித்புருஷர்கள் இந்த அருணாசல கிரிவல பூஜை மகிமையைத் தக்க சற்குருமார்கள் மூலமாக உலகிற்கு உணர்த்தி அருணாசல கிரிவல வழிபாட்டை எளிமையான, மகத்தான அருட் சக்திகளைத் தரவல்ல அதிஅற்புதக் கலியுகப் பூஜையாக நமக்குப் பெற்றுத் தந்திருக்கின்றார்கள்.

ஆயதன வாஸ்து பூஜை

எனவே சித்தர்கள் காட்டுகின்றபடி நடப்புச் சித்ரபானு ஆண்டில் வரும் வாஸ்து நாளில் ஸ்ரீவாஸ்து பகவான், அவருடைய எட்டுவிதமான விஸ்வரூப தரிசனங்களில் ஒன்றான ஆயதன விஸ்வரூப தரிசனம் ஏற்பதால் ஆயதன பூஜைகளை இந்நாளில் நன்முறையில் நிகழ்த்தி ஸ்ரீவாஸ்து பகவானின் பரிபூரண அருளைப் பெற்றிட வேண்டும். ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் நாம் அடிக்கடி வலியுறுத்தி வருவது போல ஸ்ரீவாஸ்து பூஜை என்பது புதிதாக எழுப்பப்பட்டிருக்கும் கட்டிடத்திற்கு மட்டும் உரித்தானது அல்ல. சொந்த வீடு, வாடகை வீட்டில் இருப்போர் புதிய வீடு, பழைய வீடு கொண்டிருப்போர் என அனைவருமே வாஸ்து பூஜையை கடைபிடித்தால் தான், ஸ்ரீவாஸ்து பகவானின் திரண்ட அருளைப் பெறுவதோடு, நாம் வாழ்கின்ற பூமியை நாம் நன்முறையில் பேணாமைக்கானப் பிராயச்சித்தங்களையும் நாம் பெற முடியும்.

மேலும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலம், வீடு, அலுவலகத்தில் அறிந்தோ அறியாமலோ படிந்துள்ள வாஸ்து தோஷங்கள் நம்மைத் தாக்காத வண்ணம் தற்காத்துக் கொள்வதற்கும், எதிர்காலத்தில் நாம் கூடுதலாக வாஸ்து தோஷங்களைப் பெருக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கும், தற்போது இருக்கின்ற வாஸ்து தோஷங்கள் நீங்குவதற்கும் இப்பூஜைகள் பெரிதும் உதவும். நீங்கள் வேலை பார்க்கும் அலுவலகம், தொழிற்சாலைகளில் உள்ள நில தோஷங்கள் கூட உங்களைப் பாதிக்கும் என்பதை உணர்ந்திடுக! இவற்றிற்கு எல்லாம் பிராயச்சித்தம் பெறவே வாஸ்து நாளில் அனைத்து இல்லங்கள், அலுவலகங்களில் குறித்த முறையில் வாஸ்து பூஜைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஸ்ரீபூமிநாதர் மணச்சநல்லூர் திருச்சி

ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் விஸ்வ ரூப தரிசன நாளே வாஸ்து நாள்!

நமக்குப் புரிவதற்கான ஸ்ரீவாஸ்து புருஷ மூர்த்தி யோக நித்திரை விடும் நாட்களாக விளக்கி இந்த எட்டு நாட்களை வாஸ்து நாட்களாகக் குறிக்கின்றார்கள். நித்திரை, உறக்கம், போகம், யோகம், கழிவு என்பதெல்லாம் கர்ம வினைகளைக் கொண்டுள்ள ஜீவன்களுக்குத் தானே தவிர, சித்தர்கள், மஹரிஷிகள் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் ஆவார்கள். சித்தர்களையும், மகரிஷிகளையும் படைக்கின்ற ஸ்ரீவாஸ்து மூர்த்தி போன்ற மூர்த்தங்கள் ஜீவன்களைப் பரிபாலிப்பதற்காகச் சயன யோக நிலைகளைக் கொள்கின்றார்கள். இந்த சயன யோக நிலைகளிலிருந்து மீண்டு ஸ்ரீவாஸ்து மூர்த்தி தம் விஸ்வரூபத்தைப் பூலோகத்திற்கு தருகின்ற மேற்கண்ட எட்டு நாட்கள் தான் வாஸ்து நாட்களாக நமக்குத் தரப்பட்டுள்ளன!

வரும் ஆடி மாத வாஸ்து தினத்தில் ஆயதன வாஸ்து பூஜை நாளாகிய இன்று ஜகதீஸ்வரர், புவனேஸ்வர், பூலோகநாதர், பூமீஸ்வரர், பூமிநாதர், ஜகந்நாதர், ஜகத்ரட்சகர் போன்ற பிருத்வி நாமம் தாங்கி இறைவன் அருள்பாலிக்கும் வாஸ்து சக்திகள் நிறைந்த தலங்களில் சிவராத்திரி போல் ஐந்து கால அபிஷேக ஆராதனை நிகழ்த்தி வருதலால் பலவிதமான வாஸ்து தோஷங்களை நாம் எளிதில் களைந்திடலாம். நிலம், வீடு, தோட்டம், அலுவலகம் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள பலத்த சிக்கல்களுக்கும் பலவிதமான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் இந்த ஆயதன வாஸ்து விஸ்வரூப தரிசன பூஜா பலன்கள் பெரிதும் உதவும்.

பணத் தடங்கல்கள், தொழிலாளர் முதலாளி இடையேயான பிரச்னைகள், கோர்ட்டு தாவாக்கள், சொத்து பிரிப்புத் தகராறுகள், குடியிருப்போர் பிரச்னைகள் போன்றவை தீர்ந்து இல்ல, அலுவலகக் கட்டிடப் பணிகள், தொடர, நிறைவடைய இந்த வாஸ்து நாள் பூஜைகள் பெரிதும் உதவும்.

பூமி தானமும் வாஸ்து பூஜையே!

ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் பூமி தானம் என்ற ஒன்றைச் சிறிதளவிலேனும் நிச்சயம் செய்தே ஆக வேண்டும். நாம் வாழ்வதற்கே நூறு சதுர அடி வீடு கூட இல்லையே, நான் எவ்வாறு பூமிதானம் செய்வேன் என்று மலைக்காதீர்கள்! பலரும் சத்சங்கமாக ஒன்று சேர்ந்து ஒரு ஆலயத்திற்கு நந்தவனம் அளிப்பதும், ஆலயக் கிணறுக்கு நிலம் அளிப்பதும், ஒரு ஏழைக்குக் குடிசை போட்டுத் தருவதும், ஒரு ஏழைக்கு சிறிய அளவில் நிலத்தை வாங்கித் தருவதுமாக பூமி தானங்கள் பலவகையாகும்! எனவே சத்சங்க ரீதியாக பூமிதானம் என்பது உங்கள் வாழ்நாளில் நிச்சயமாக மலரக் கூடிய ஒன்று தான்!  மேலும் மற்றொன்றையும் நீங்கள் நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்!  இன்று உங்களுக்கெனச் சொந்தமாக ஒரு சிறு நிலம், வீடு flat இருந்தால் இதற்குக் காரணம், நீங்களும், உங்களுடைய மூதாதையர்களும் முந்தைய பிறவிகளில் நீங்கள் செய்த பூமிதானப் பலன்களே என உணர்க! மேலும் நன்முறையில் தெய்வீகமாக இயங்குகின்ற ஆஸ்ரமங்களுக்கு அன்னதான, அநாதைகள் மற்றும் முதியோர் பராமரிப்பு போன்ற நற்காரியங்களை நிகழ்த்திட நிலத்தை அளிப்பதற்கு, நிலம், கட்டிடங்கள் வாங்குவதற்கும் துணைபுரிவதும், உதவி செய்தலும் பூமிதான சக்திகளைப் பெற்றுத் தரும்.

எனவே வரும் ஸ்ரீவாஸ்து ஆயதன பூஜை நாளில் ஒரு ஏழைக்குக் குடிசை போட்டுத் தருதல், வீடு கட்டுவதற்கான பொருட்களை அளித்தல், வீடு வாங்கித் தருதல், ஆலயத்திற்கு நந்தவனம் அமைத்தல், ஆலயத்திற்கு பூமிதானம் செய்தல் போன்றவற்றை செய்தீர்களேயானால், இந்த ஆயதன வாஸ்து பூஜையின் அங்கமான பூமி தானமானது உங்கள் சந்ததிகளை மகத்தான முறையில் வழிவழியாகக் காத்திடும்.

ஸ்ரீவாஸ்து ஆயதன பூஜா அபிஷேக ஆராதனை முறைகள்

ஆடிமாதம் வருகின்ற ஆயதன விஸ்வரூப தரிசன நாளில் 90 நிமிடங்களுக்கு ஸ்ரீவாஸ்து மூர்த்தி ஆயதன விசுவரூப தரிசனம் அளிக்கின்றார். இந்த வாஸ்து நாளில் காலையில்,

மணி முதல்    மணி வரை        வாஸ்து யோகக் கோலங்கள்

6.46                          7.04                        தந்த சுத்தி
7.04                          7.22                        நீராடல்
7.22                          7.40                        பூஜை
7.40                          7.58                        பிரசாதம் ஏற்றல்
7.58                          8.16                        தாம்பூலம்

- ஆகிய ஐந்து வகை விஸ்வரூப தரிசன கோலங்களை ஸ்ரீவாஸ்து பகவான் ஆயதன மூல மார்கத்தில் அளிக்க இருக்கின்றார்.

காலை 6.46 முதல் 7.04 வரை வாஸ்து பகவானுடைய தந்த சுத்தி நேரமாகும். தந்த சுத்தி என்றால் நமக்குப் புரியும் வகையில் பல் துலக்குதல் என்று எளிய விளக்கம் தரப்படுகின்றது. ஆன்மீக ரீதியாக முப்பத்து இரண்டு பற்களும் முப்பத்து இரண்டு வகையான அறங்களைக் குறிப்பதாம். இவ்வறங்களை ஒரு யுகத்தில் ஓரளவேனும் முறையாகச் செய்திருந்தமையால் தான் இன்று பெறுதற்கரிய மனித வாழ்வை நாம் பெற்று இருக்கின்றோம் என்பதை புரிந்து கொண்டால் தான் இந்த அறங்களின் மூலம் மனிதப் பிறவியின் தெய்வீகத் தன்மைகளை உணர்ந்து கொள்ள முடியும்.

நள தீர்த்தம்
பரியா மருதுபட்டி

காஞ்சீபுரத்தில் இன்றைக்கும் முப்பத்து இரண்டு அறங்களைப் பேணுபவளாக ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மன் வீற்றிருக்கின்றாள். காஞ்சியில் இறைத் துணைவியாக மலர்வதற்கு இறைவன் ஈஸ்வரிக்கு இட்ட கட்டளை என்ன என்றால் பூலோகத்தில் மனித ரூபத்தில் முப்பத்து இரண்டு வகையான அறங்களை ஜீவன்களுக்குச் செய்திடல் வேண்டும் என்பதேயாகும். ஆம், இறைவனே பூலோகத்தில் தான, தர்மங்களை ஓர் அரிய பூஜையாகப் பராசக்திக்கு உபதேசித்துள்ளார்!

எனவே முப்பத்திரெண்டு வகையான அறங்களில் வாஸ்து பகவானின் தந்த சுத்தி நேரத்தில் ஏதேனும் ஒன்றையேனும் செய்வதற்கான சங்கல்பத்தை எடுத்துக் கொண்டு அந்நாளிலேயே நிறைவேற்ற வேண்டும். வாஸ்து பகவானுடைய ஆயதன விஸ்வரூப தரிசன சக்திகளைப் பெறுவதற்கு உதாரணமாக 108 ஏழைகளுக்குக் காலணிகள் தானமாக அளிப்பதாக சங்கல்பம் செய்து கொள்க!  அன்றே இதனை நிறைவு செய்க!

பரியா மருதுபட்டி திருத்தலத்தில் குறைந்தது 108 ஏழைகளுக்கு நெற்குப்பையால் உருவான பற்பொடிகளைத் தானம் அளிப்பதும் ஒரு அற்புத வாஸ்து பூஜையாக மலரும் என்பதில் சந்தேகமில்லை. பற்பொடிகளை வெள்ளி குங்குமச் சிமிழ்களில் அளிப்பதால் இது நிரந்தர சுமங்கலித்துவ சக்திகளையும் தம்பதிகளுக்கு ஆரோக்ய வாழ்வையும் அள்ளித் தரும் தானமாகவும் அமையும்.

இந்த தந்த சுத்தி நேரத்தில் சுவாமிக்கு வெண்ணிற பூக்கள், வெள்ளை நிற திரவியங்களால் அர்ச்சனை, அபிஷேக ஆராதனைகளைச் செய்திடல் வேண்டும். பச்சைக் கற்பூரம் கலந்த பலவிதமான தீர்த்தங்கள், தயிர், அன்னக்காப்பு, பால் போன்றவை வெள்ளை நிற அபிஷேக ஆராதனைப் பொருட்கள் ஆகும்.

ஸ்ரீதரஅய்யாவாள் அதிஷ்டானம்
திருவிசைநல்லூர்

வாஸ்துவின் நீராட்டல் கோலம்!

அடுத்தபடியாக 7.04 முதல் 7.22 வரையிலான வாஸ்து பகவானுடைய ஸ்நான நேரத்தில் அதாவது நீராட்டல் நேரத்தில், 21 வகை தீர்த்தங்களைக் கொண்டு அபிஷேக ஆராதனைகளைச் செய்தல் வேண்டும். 21 வகையான கோயில் குள, அக்னி தீர்த்தங்கள், கடல், கிணறு, நதித் தீர்த்தங்கள் சிறப்புடையவையாம். இவற்றுள் கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் ஸ்ரீதர அய்யாவாள் அதிஷ்டானத்தில் கங்கை பொங்கிய கிணற்று நீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்தல் மிக மிக விசேஷமானதாம். வாஸ்து பூஜை விஷயங்களில் தன்னிகரற்று விளங்கிய ஸ்ரீதர அய்யவாள் போன்றோர் வாஸ்து சக்திகள் நிறைந்த மஹரிஷிகளுள் ஒருவராக என்றைக்கும் துலங்குகின்றார்கள். பூமியில் கங்கை நீரோட்டம் பெருகுதற்குக் காரணமே வாஸ்து மஹரிஷிகள், சித்தர்கள் ஒன்று கூடி திருக்கயிலாயத்தில் பூஜித்து சிவபெருமானுடைய சிரத்திலிருந்து பொங்கி வரும் படி கடுந்தவம் பூண்டதேயாம். எனவே தான் வாஸ்து நாட்களில் கங்கையில் நீராடுதல் என்பது வாஸ்து சக்தி நிறைந்த சித்தர்களுடைய மஹரிஷிகளுடைய சக்திகளைப் பெற்றுத் தரும்.

7.22 முதல் 7.40 வரை வாஸ்து பகவானுடைய பூஜை நேரமாக அமைவதால் வாஸ்து பகவானுக்கு மந்த்ரபுஷ்ப மந்திரங்களை ஓதி பன்னிரெண்டு வகை வாசமுள்ள புஷ்பங்களால் அர்ச்சனை செய்தல் வேண்டும்.

7.40 முதல் 7.58 வரை வாஸ்து பகவானுடைய நைவேத்ய நேரமாக விளங்குகிறது. இந்நேரத்தில் கிழங்கு வகை உணவுகளை படைத்து ஏழைகளுக்குத் தானமாக அளித்தல் சிறப்புடையதாகு. இந்த நைவேத்ய நேரத்தில் சுவாமிக்கு வெட்டிவேர், நன்னாரி போன்ற வேர் வகைத் திரவியங்களால் அபிஷேகம் நிகழ்த்துதல் சிறப்புடையதாம்.

7.58 முதல் 8.16 வரை வாஸ்து பகவானுடைய தாம்பூல தாரண நேரம் அமைவதால் ஆயிரத்தெட்டு வெற்றிலைகளால் காப்பிட்டு, வெற்றிலைகளின் மேல் இளநீர் மற்றும் சந்தனக் குழம்பால் அபிஷேகம் செய்து 1008 வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்புத் தாம்பூலங்களை வைத்து ஆயதன வாஸ்து பகவான் பூஜையை நிறைவு செய்தல் வேண்டும். இந்நாளில் நூற்றியெட்டு ஏழைகளுக்கு அன்னதானம், 1008 தாம்பூல தானத்துடன் நிறைவு செய்தல் அபரிமிதமான வாஸ்து சக்திகளைப் பெற்றுத் தரும்.

குறிப்பு: இப்பூஜைகளை ஸ்ரீஜகதீஸ்வரர், ஜகன்னாதர், பூமிநாதர், பூமீஸ்வரர், பூலோகநாதர், புவனேஸ்வரர் போன்ற பூமி, பிருத்விப் பெயர்களை உடைய சிவலிங்கத்திற்கு, பெருமாளுக்கு நிகழ்த்திட வேண்டும். குழிபிறை வழியாக புதுக்கோட்டை பொன்னமராவதியில் உள்ள செவலூர் ஸ்ரீபூமீஸ்வரர் ஆலயமே அனைத்து வாஸ்து பூஜைகளுக்கும் ஏற்ற தலமாகும்.

ஸ்ரீநடராஜர் அபிஷேகம்

ஆனி உத்திரம் ஸ்ரீநடராஜர் அபிஷேக தின மகிமை

ஒரு கோடி மைலுக்கு சிவ சக்திகளைப் பரப்பும் கூகூர் கோஷ்ட மூர்த்தி ஸ்ரீமங்கள நடராஜர்! கும்பகோணம் நன்னிலம் மார்கத்தில் தற்போது கூரூர் என்று அழைக்கப்படும் கூகூர் உள்ளது

ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் ஆறு நாட்கள் மிகவும் விசேஷமான நடராஜர் அபிஷேக தினங்களாக அமைகின்றன. எப்போதும் ஸ்ரீநடராஜப் பெருமான் நாட்டியம் ஆடிக் கொண்டு இருப்பதால் தான் இந்தப் பிரபஞ்சத்தின் அனைத்து உலகங்களும், ஜீவன்களும், ஜடப்பொருள்களும் அசைந்தும், அசையாமலும் இயங்குகின்றன.

கோஷ்ட மூர்த்தியாக மிகவும் அபூர்வமாக அமையும் அதாவது மூலத்தானச் சுற்றுச் சுவரில் உள்ள சிலாக்கல் வடிவ நடராஜ மூர்த்தி ‍ மிக மிக சக்தி வாய்ந்த மூர்த்தி!

ஸ்ரீஆம்ரவனேஸ்வரர்
கூகூர்

மூலவரின் ருத்ர மகாசிவ சக்திகளை ஒரு கோடி மைல் சுற்றளவிற்குப் பரப்பும் உத்தமச் சிவ மூர்த்தியே கோஷ்ட பூர்வ நடராஜ மூர்த்தி!

கோஷ்ட மூர்த்தியாக அருள்பாலிக்கும் அதியற்புத நடராஜ மூர்த்திக்கு வருடத்தின் ஆறு நடராஜ அபிஷேக தினங்களில் அபிஷேக ஆராதனைகளை ஆழ்ந்த நம்பிக்கையுடன் செய்து வருதலால் கோடி மடங்கு பலாபலன்களைப் பெற்றிடலாம்.

ஆம், நாம் நடப்பதும், கண் இமைகள் அசைவதும், உடல் அவயங்கள் இயங்குவதும் அனைத்துமே ஸ்ரீநடராஜ நடன சக்திகளால் தாம், ஸ்ரீநடராஜ இயக்கப் பெருங் கருணையால்தாம்! தாவரங்கள் பூத்து, காய்த்து, கனிந்து, உலர்வதுமாக இவ்வாறாக உலகத்தில் ஒவ்வொரு விநாடியும் ஏற்படுகின்ற அனைத்து மானுட, தாவர, விலங்கின, ஜங்கம அசைவுகளுக்கும் ஸ்ரீநடராஜப் பெருமானின் நாட்டியமே காரணமாகும்.

அகிலத்தின் அசைவு ஆதி நடராஜ நாட்டிய இயக்கமே!

தாவரங்கள் ஒரே இடத்தில் வேரூன்றி நிலைத்து இருப்பது போல் தோன்றினாலும் அனைத்துத் தாவரங்களிலும் ஒவ்வொரு விநாடியிலும் நிறைய இயக்கங்கள் நடராஜ நடன சக்தியால் நிகழ்ந்து கொண்டு தாம் இருக்கின்றன. மரணம் என்பது மனித உறுப்புகளின் அசைவுகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பது அல்ல! உயிர் பிரிந்த உடனேயே ஜீவன்கள் பெரும்பாலும் மாயைச் சாயை என்ற மானுடக் கண்களறியாச் சரீரத்தைத் தரிப்பதால் அந்த மாயைச் சாயைச் சரீரத்திலும் பல அசைவுகள் இயங்கிக் கொண்டு தாம் இருக்கின்றன. மொத்தத்தில் உலகத்தின் ஒவ்வொரு விநாடியில் நிகழும் அனைத்து இயக்கங்களுக்கும் அசைவற்ற நிலைக்கும் காரணமே ஸ்ரீநடராஜப் பெருமானின் திருநடனமேயாம். அனைத்து லோகங்களிலும் படைப்பும், ஆக்கமும், மறைத்தலும், அழித்தலும் யாவும் நிகழ்வது ஸ்ரீநடராஜப் பெருமானின் இயக்கத்தால்தான்!

ஏன் இந்த ஆறு தினங்கள் மட்டும் ஸ்ரீநடராஜ அபிஷேக தினங்களாகின்றன? இந்நாட்களில் தெய்வீக ரீதியாக நிகழ்வதென்ன? காரைக்கால் அம்மையார், பதஞ்சலி மாமுனிவர், ஸ்ரீஅகஸ்தியர் பெருமான் போன்ற உத்தமர்கள் இறைவனின் நடனக் கோலத்தை யாங்கணும், எந்நேரமும் நேரடியாகவே தரிசிக்கின்ற தெய்வீக பாக்கியத்தைப் பெற்றுள்ளனர். பல கோடி யுகங்களிலும் ஸ்ரீநடராஜ பெருமானே 64 விதமான நடன தாண்டவங்களை மட்டுமல்லாது நாமறியா எத்தனையோ கோடி தாண்டவங்களையும் நடனமாக்கி, இவற்றின் பல அற்புத தரிசனங்களை சித்தர்களுக்காகவும், மகரிஷிகளுக்காகவும் தந்துள்ளார். பூவுலகில் நல்ல பக்தியுடையவர்களும், பாமரர்களும் இச்சிறப்பை உணரவே இறைவனுடைய மானுட ரூப நடன தரிசனக் காட்சிகளைத் தருவதாக அமைவதே ஆறு நடராஜ அபிஷேக தரிசனத் திருநாட்களாம். இந்நாட்களில் தாம் சித்புருஷர்களும், மகரிஷிகளும் கூட ஈசனுடைய நடனத் திருக்காட்சிகளை, இறைவனின் திவ்யமான மானுட வடிவில் தாம் ஏற்கும் மானுட சரீரத்திலேயே கண்டு களிக்கின்றார்கள். இந்த பரமானந்த நிலையைத் தரவல்லதால் தான் மனிதப் பிறவி பெறுதற்கரிய பிறவி ஆகின்றது!

ஸ்ரீநடராஜப் பெருமான் இன்னம்பூர்

நம் இருதயத் துடிப்பும் நடராஜ நடன நட்டுவாங்க தேவ த்வனிகளே!

நடராஜ நடனம் என்றால் நாட்டியம் ஆடுதல் என்று மட்டும் பொருள் கொள்ளாதீர்கள்! இறை நாட்டிய பாவனங்கள் யாவும் இறைவனின் திருவுளப் பிரதிபலிப்பின் அணுவிலும் ஓரணுச் சுடரேயாம். இதனை ஆக்கப்பூர்வமாக நாம் உய்த்திடும் வண்ணமாகவே, நம் உடலின் 72000 நாடி, நரம்புகளிலும் நாம் நிச்சயமாக உணர முடியும்! எவ்வாறு? நடராஜரின் ஆத்ம நடன வகையாகவே நடராஜப் பரம்பொருளின் நடனக் கோர்வைக்கான லப்டப் என்ற லகர, பகர, டகர நட்டு வாங்க பீஜாட்சர ஒலிகளுக்கு ஏற்ப நம் இதயத்துள்ளும் ஆத்ம நடன சலங்கை ஒலி ஏற்படுகின்றது. இதுவே இதயத் துடிப்பின் ஆன்மீக நாதமாதலின் ஆன்ம நாத ஒலியாக நம் ஜீவாத்ம(மா)க் களையை நாம் உணர்தல் வேண்டும். இதுவே சாகாக் கலையாக சித்தர்களால் உய்விக்கப் படுகின்றது.

நம்முள் ஏற்படுகின்ற இந்த ஆத்ம நாதத்தை நாம் தீப யோகப் பூர்வமாக உணர்கின்ற நாட்களாகவும் ஆறு நடராஜ அபிஷேக தினங்கள் பொலிகின்றன! அதாவது எங்கும் எந்நேரமும் பரந்து திருநடனத்தை ஆற்றிக் கொண்டு இருக்கின்ற ஸ்ரீநடராஜப் பெருமானின் திருநடனத்தை இருதயாலீஸ்வரராக ஆத்மார்த்த நடனமாக உணரும் போது தான் நம்முள் இறைவன் உய்வதை உணர்ந்திடலாம். இதுவே முக்தி, மோட்ச நிலைகளுக்கு வழி வகுக்கும். பலரும் இறப்பிற்குப் பின் அடைகின்ற நிலைகளாகவே முக்தி, மோட்சம் பற்றி மிகவும் தவறாக அர்த்தம் கொள்கின்றனர். இப்பூவுடலிலேயே இறைவனை உணர்தலே முக்தியும், மோட்சமுமாம். சாகா நிலை, அழியா நிலை, நிரந்தர நிலை, பிறப்பு இறப்பு அற்ற நிலை, பிறப்பில் இறையடியைச் செறியும் நிலை போன்றவை யாவுமே நடராஜரின் திருவடி நிழலில் தாம் முக்தி மோட்ச நிலைகளாக நிகழ்கின்றன!

கோடி மைலுக்கு இறையொளி கூட்டும் "கோட்ட" நடராச சிவம்!

அனைத்து ஆலயங்களிலுமே நடராஜர் சன்னதி தனித்து இருக்க, சில ஆலயங்களில் மட்டும் (கூகூர், இன்னம்பூர், தஞ்சை தஞ்சபுரீஸ்வரர்) கோஷ்ட மூர்த்தியாக அதாவது மூல மூர்த்தியைச் சுற்றியுள்ள வெளிப் பிரகாரச் சுவற்றில் (கோஷ்டத்தில்) கல்வடிவுச் சிலா மூர்த்தியாக ஸ்ரீநடராஜர் அருள்பாலிக்கின்ற தலங்கள் மிகவும் விசேஷமானதாகும். இத்தகைய கோஷ்ட மூர்த்தி நடராஜச் சிலா மூர்த்திகளுக்கு "நடனகோடிப் பளிசம்" என்று பெயர். கருவறை வெளிச் சுற்று (கோஷ்ட மூர்த்தி) "நடன கோடிப் பளிச்"  மூர்த்திகள் மூல மூர்த்தியின் திருவருளைக் கோடி மைல் விஸ்தீரணத்திற்குப் பரப்புகின்ற இறை மகிமையை சித்தர்களின் ஞான பத்ர கிரந்தங்கள் உவப்புடன் பகர்கின்றன!

ஸ்ரீமங்களநாயகி கூகூர்

எனவே எங்கெல்லாம் கோஷ்ட மூர்த்தியாக ஸ்ரீநடராஜப் பெருமான் அருள்பாலிக்கின்றாரோ, ஆங்கே மூல லிங்க அருட்சக்தியானது கோஷ்ட நடராஜ மூர்த்தியின் நாட்டிய பாவன சக்தி மகிமையால் விண்ணுக்கும், மண்ணுக்குமாகக் கோடி மைல், சுற்றளவுக்குப் பரந்து விரிந்து, பெருகி, வளம் பெறுகின்றது.

ஆனி உத்திரத்தில் ஆடியபாதத்தாருக்கு அரிய அபிஷேகம்!

விண்ணிலும், மண்ணிலும், உள்ளும், வெளியும், அகமும், புறமுமாக கோடி மைலுக்கு நிரவுகின்ற ஸ்ரீநடராஜப் பெருமானின் அருட்சக்தியைப் பெற்றிட வருகின்ற ஆனி மாத உத்திர நட்சத்திர நாளில் அமைகின்ற ஸ்ரீநடராஜர் அபிஷேக தினத்தில் கோஷ்ட மூர்த்தியாக விளங்குகின்ற ஸ்ரீநடராஜருக்கு 64 விதமான அபிஷேக ஆராதனைகளைச் செய்திட்டால் அளப்பரிய பலன்களைப் பெற்றிடலாம். பொதுவாக பஞ்ச லோகத்தில் உருவான ஸ்ரீநடராஜப் பெருமானையே பல கோயில்களிலும் நாம் தரிசிக்கின்றோம். திருச்சி அருகே ஊட்டத்தூரில் மிக அபூர்வமாக பஞ்சநதனக் கல் வடிவில் அருளும் ஸ்ரீநடராஜப் பெருமானைப் பற்றி ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் சில ஆண்டுகளுக்கு முன் விளக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் மகா சிவராத்திரி அன்று தரிசித்ததை நாம் மகிழ்வுடன் இங்கு நினைவு கூர்கின்றோம்.

கோஷ்ட மூர்த்தியாக மூலவருக்கு வெளிப்புறச் சுவரில் நர்த்தன விநாயகர், தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர் அல்லது அர்த்த நாரீஸ்வரர், பிரம்ம மூர்த்தி, துர்க்கை போன்ற வரிசையிலான கோஷ்ட மூர்த்திகளிடையே கல் விக்ரக வடிவில் ஸ்ரீநடராஜ மூர்த்தி வீற்றிருப்பது கலியுகத்தில் நமக்குப் பெரும் பாக்கியமேயாம்.

கூகூர் சிவாலயக் கோஷ்டத்தில் மங்கள நடராஜ மூர்த்தி!

கோஷ்ட மூர்த்தியாக ஸ்ரீநடராஜப் பெருமான் வீற்றிருக்கும் தலங்களில் ஒன்றாக ஒரு கோடி சதுர மைல் அளவிற்கு விண்ணிலும், மண்ணிலும், உள்ளும், வெளியிலும் சிவமகா ருத்ர சக்திகளைச் செலுத்தி அருள்பாலிக்கின்ற சிலாக்கல் கோஷ்ட மூர்த்தியாக கூகூர் சிவத்தலத்தில் ஸ்ரீநடராஜப் பெருமான் வீற்றிருக்கின்றார். இங்கு ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஆம்ரவனேஸ்வரராக சிவபெருமான் அருள்பாலித்திருக்க, கோஷ்ட மூர்த்தியாக சிலாக் கல் வடிவில் ஸ்ரீநடராஜப் பெருமான் வீற்றிருக்கிறார்.

ஸ்ரீமங்களநடராஜர் கூகூர்

இத்தலத்தில் கோஷ்ட மூர்த்தியாக ஸ்ரீநடராஜ மூர்த்தி வீற்றிருக்கக் காரணம் என்ன? எல்லா மனிதர்களும் வேண்டுவது சுபகரமான மங்களம்தானே!  மங்களம் என்பதற்கு பக்தி பூர்வமானது, நிரந்தரமான ஆனந்தம் நிறைந்தது, பரமானந்தம் கொண்டது, ஆன்ம சந்தோஷம் நிறைந்தது, பரிபூர்ணமான இறையருள், ஒளி பொருந்தியது, பிரகாச தீப சக்தி உடையது என்றெல்லாம் பலவிதமான மங்களகர அர்த்தங்கள் உண்டு. அனைத்து மங்களங்களையும் ஒருங்கிணைத்துத் தருபவர் தாம் மங்கள நடராஜ மூர்த்தி! ஆம், இங்கு கோஷ்ட மூர்த்தியாக வீற்றிருப்பவர் தான் ஸ்ரீமங்கள நடராஜ மூர்த்தியாவார். சிவ மங்கள லோகத்தில் உள்ள இந்த ஸ்ரீமங்கள நடராஜ மூர்த்தியைத் தொழுது, தவம் புரிந்தே, இங்கு ஸ்ரீஆம்ரவனேஸ்வரர்க்கு இறைவியாய் வந்து அமர்ந்திட்டார் மங்களாம்பிகையாம் பார்வதி தேவி!

அறுபத்து நாலு தரும் அரிய கோடி!

எனவே வரும் ஆனி உத்திர நட்சத்திர நாளில் வருகின்ற நடராஜர் அபிஷேக தினத்தில் கூகூர் கோஷ்ட மூர்த்தி நடராஜருக்கு 64 விதமான அபிஷேகங்களை நிகழ்த்துதல் மிகவும் விசேஷமானதாகும்.  அறுபத்து நான்கு வித அபிஷேகங்கள் என்றவுடன் நம்மால் இயலுமா என மலைத்திடாதீர்கள்! சத்சங்கமாகப் பல குடும்பங்களின் உற்றம், சுற்றம், நண்பர்கள், ஆன்மீக பக்தர்கள் பலரும் சத்சங்கமாக ஒன்று கூடி பால், தேன், பஞ்சாமிர்தம், மற்றும் விதவிதமான பழ வகைகள், பல வகை அன்னக் காப்புகள், மஞ்சள் (கைகளால் அரைத்த) சந்தனம், அத்தர், புனுகு, ஜவ்வாது போன்று 64 விதமான அபிஷேகங்களை எளிதில் நிறைவேற்றிடலாம், இறையருளால்! ஸ்ரீநடராஜருடைய பரிபூரண அனுகிரகத்தைப் பெற்று தரவல்ல அரிய பண்டிகை இது!

பல ஆலயங்களிலும் பல மன்னர்களால் எழுப்பப்பட்ட கோயில் என்று தல புராணங்களில் குறிப்பிடப்பட்டாலும் எந்த இடத்தில் சுயம்பு லிங்கம், ஆலயம் தோன்ற வேண்டும் என்று இறை நியதி உள்ளதோ அங்கு தான் தேவ பிரதிஷ்டையாக, மானுடப் பிரதிஷ்டையாக சிவமூர்த்திகள் தோன்றிடுவர்.

மாமரக் கோலில் தங்கிய மகத்தான சாமர வேத சக்தி!

சூத மகரிஷி என்பவர் மிகவும் பிரசித்தி பெற்ற வேத மாமுனிகளிலே ஒருவராவர். எப்போதும் பிரபஞ்சத்தில் இருந்து வேத சக்திகளைக் கிரகித்துப் பூவுலகிற்கு அளித்துக் கொண்டிருப்பவர். ஆனால் வேதத்தை மதிப்பவர்கள் இருந்தால்தானே பூமியில் நிரவுகின்ற வேதவளம் நிலைக்கும்! இல்லையெனில் மறைந்து விடுமே!

இன்றைக்கு வசிஷ்டர், பரத்வாஜர் போன்ற பல மஹரிஷிகளும் புராண அனுபூதிகளை சூத மகரிஷி உரைத்துக் கேட்பதில் தான் பரமானந்தம் கொள்கின்றார்கள். ஆதி மகரிஷியாக எப்போது தோன்றினார் என்று எவராலும் எடுத்துரைக்க இயல முடியாதபடி பண்டைய யுகத்திலே மகா சிருஷ்டிக்கு முன்னரே தோன்றியவர்தான் சூத மாமுனிவர் ஆவார். எப்போதும் கையில் மாமரக் குச்சியைத் தாங்கிக் கொண்டிருப்பவர். பெரும்பாலும் மாமரத்தின் அடியிலும், மாமரத் தோட்டத்திலும் தங்கி தவம் புரியும் சூத மாமுனிவர் அனைத்துப் புராணங்களிலுமே இறையருளால் நேருக்கு நேராக அகஸ்தியர், வால்மீகி ரிஷி போலப் புராணச் சம்பவங்களை காண்கின்ற சக்தியையும் பெற்று இருக்கின்றார். எனவே தான் இன்றைக்கும் ஏதேனும் புராண சம்பவங்களில் விளக்கம் தேவைப்பட்டால் தெய்வ மூர்த்திகளே நேரில் வந்து சூத மாமுனியிடம் விளக்கங்களைக் கேட்கும் அளவுக்கு மகத்தான சிறப்பினைப் பெற்றவர்.

ஸ்ரீமகாலட்சுமி ஸ்ரீஅர்ச்சுனர் கூகூர்

கூகூரில் பரிணமித்த மாமர வன வேதவளம்!

சூத மஹரிஷியின் பிரம்மாண்டமான பர்ணசாலை திகழ்ந்த இடங்களுள் ஒன்றே கூகூர் ஸ்ரீஆம்ரவனேஸ்வரர் திருத்தலமாகும். இங்கு தான் ஸ்ரீஆதிமூல ஆம்ரவனேஸ்வரராக ஆதிசிவன் அன்றும் இன்றும் அருள்பாலித்து கொண்டு இருக்கின்றார். அசுரர்களுடைய கொடுமையாலும், அரக்கர்களால் வேதங்கள் மறைக்கப்பட்டதாலும் வேத சக்திகள் பிரபஞ்சம் எங்கும் குறைந்து மங்கள சக்திகள் குன்றின. பல மஹரிஷிகள் அரும் தவம் பூண்டும் வேத மங்கள சக்தியை ஈடு செய்வதற்கான வழிமுறைகளை அவர்களால் முழுவதுமாக கைக்கொள்ள இயலவில்லை. அசுரர்கள் வேத சக்திகளை திரட்டிக் கொண்டு பல இடங்களில் மறைத்து வைத்தமையால் மஹரிஷிகள் மிகவும் கவலையுற்றனர். அனைவரும் அனைத்து புராண அனுபூதிகளுக்கும் முதன்மையாக விளங்குகின்ற சூத மாமுனியை வேண்டி இவ்வாறு வேதங்கள் மறைவுபடக் காரண விளக்கங்கள் கேட்டனர்.

சூத மாமுனிவரும் "அனைத்துமே இறைவனின் ஆணையே! வேதங்கள் பூலோகத்தில் கொழித்த போது தேவர்களும் மறையவர்களும் அவற்றை நன்முறையில் போற்றிப் பாதுகாக்கத் தவறினர். சுகபோகங்களில் திளைத்தமையால் தான் அவர்கள் வேத சக்தியை இழக்க நேரிட்டது. மேலும் வேதத்தை நன்கு அறிந்தோரே, சிவபெருமான் பிட்சாடன வடிவு கொண்ட போது வேத சக்திகளைத் தவறாகப் பயன்படுத்தி அவர் மேல் வேதங்களை ஆயுதமாகவும், பயங்கர மிருகங்களாகவும் ஏவிச் செலுத்தியமையால் அவர்களுக்கு சாபங்கள் ஏற்பட்டு மாபெரும் வேத சக்திகளை அவர்கள் இழந்து விட்டார்கள். எனவே வேதத்தைச் சரியான முறையில் போஷிக்காது இழிவுபடுத்தியமையால் இச்சாபம் ஏற்பட்டுள்ளது. எனினும் இதற்குரிய பரிகாரத்தை ஸ்ரீமன்நாராயண மூர்த்தியே வராஹ அவதாரம் மூலம் பெற்றுத் தருவார்!" என்று அருளியதுடன் "அதுவரையில் பிரபஞ்சக் காப்பிற்காக குறித்த சில வேத சக்திகளை மாமரத்தில் ஒரு சில இடங்களில் பதிய வைத்து ஸ்ரீவேதபுரீஸ்வரர் அடியேனுக்கு ஒரு மாமரக் குச்சியில் அந்த வேதங்களைப் பதித்து அந்த ரகசியங்களை அருளியுள்ளார்" என்றும் உரைத்திட்டார்.

"இனி மகரிஷிகள் யாவரும் வேத சக்திகள் நிறைந்த வேத சக்திகள் கிளைக்கும் பல வேத விருட்சக் குச்சிகளைத் தாங்கிய வண்ணம் பாதயாத்திரை மேற்கொண்டு ஜீவ பேதமின்றி யாவர்க்கும் வேத சக்திகளை அளித்து உலகெங்கும் இருக்கின்ற வேத சக்திகளைக் காத்து ரட்சித்துப் பரப்பி வருதல் வேண்டும். இறையவதாரம் தோன்றி வேதங்களை மீட்கும் வரை, எஞ்சியுள்ள வேத சக்திகளையாவது அனைவரும் நன்முறையில் கிரகித்துப் பெற்று பூலோக ஜீவன்கள் நன்முறையில் வாழ்ந்திட வேத சக்திகள் பதிந்துள்ள வேதக் கழிகள் துணை புரியட்டும்!" என்று உரைத்திட்டார்.

ஸ்ரீதுர்கை கூகூர்

அன்றிலிருந்து தான் பல சமயப் பீடாதிபதிகளும் உயரமான மா, பலாச‌, புரசை வேதக் கழிகளைத் தாங்கி நாடு, நகரம் எல்லாம் நடந்தே கடந்து சென்று வேத சக்திகளைப் பரப்புகின்ற அருமையான தர்ம கைங்கர்யங்களை மேற்கொண்டார்கள்.

திருப்பத்தூர், வைரவம்பட்டி, பொன்னமராவதி போன்ற பைரவ பூமிப் பகுதிகளில் ஸ்ரீபைரவ மூர்த்தி "மர தண்டம்"  தாங்கிக் காட்சி அளிப்பார். கலியுகத்தில் ஜீவன்கள் இழந்து வரும் வேத சக்திகளைப் பெற பைரவ தண்டங்களுக்குத் (மரக் கோல்கள்) சந்தனம், குங்குமம் இட்டு வழிபட்டு வர வேண்டும்.

நடந்து பரவும் நல்வேத சக்திகள்!

பரமாச்சார்யாள் காஞ்சி மாமுனி ஸ்ரீசந்திரசேகந்திர சுவாமிகள் இவ்வகையில் தான் பாரதம் முழுதும் வேதக் கழி தாங்கி எங்கும் நடந்தே சென்று ஜீவன்கள் யாவர்க்கும் வேத சக்திகளைப் பரப்பி பூலோகத்தை உய்வித்துள்ளார்கள். ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்தர் போன்ற சித்தர்கள் ஆலய உழவாரத் திருப்பணிகள், அன்னதானம் போன்ற தான, தர்மக் காரியங்கள் மூலமாக இத்தகைய வேத சக்திகளைப் பாரெங்கும் ஜீவ பேதமின்றிப் பரப்பி நிரவுகின்றார்கள். இத்தகைய சித்தர் பிரான்கள் நடந்து வைக்கும் பாத அடிகளினால் புவி நீரோட்டங்களுக்கு வேத சக்திகள் கிட்டுகின்றன.

வேதங்கள் மறைவு பட்ட அந்த குறித்த யுகத்தில் வற்கடம் என்னும் கடும் பஞ்சமும் பூமியின் பல பகுதிகளில் ஏற்பட்டுத் தான்யம், நீரின்றி மக்களும், பல ஜீவன்களும் பலத்த சங்கடங்களுக்கு உள்ளானார்கள். அப்போது வறுமையால் வாடிய மக்களுக்கு சூத மகரிஷியின் பர்ணசாலை தாம் தஞ்சம் அளித்தது. அனைவரையும் மாமரங்களின் ஊடே அமர வைத்து நல்போதனைகளைத் தெளிவித்து அவர்களுக்கு நல்ல ஒழுக்கம், நல்ல பக்தி, ஏற்படுவதற்கான பல புராண அனுபூதிகளை எல்லாம் சூத மாமுனிவர் எடுத்துரைத்ததோடு மட்டுமல்லாது வற்கடப் பஞ்சம் உருவான நேரத்திலே இறைவனே மேற்கொள்கின்ற ஓர் அற்புதமான தேவ காட்சியை அனைத்து ஜீவன்களுக்கும் பெற்றுத் தரும்படி சர்வேஸ்வரனை வேண்டினார்.

சாம வேத சக்திகள் பொழியும் ஆம்ர மரம்! (ஆம்ரம் - மாமரம்)

ஸ்ரீதுர்வாச மகரிஷி கூகூர்

சூத மாமுனியின் சமுதாயப் பணியைப் போற்றி இறைவன் அங்கு ஆம்ரவனேஸ்வரராகத் தோன்றியது மட்டுமல்லாது ஜீவன்கள் வேதத்தை ரட்சிக்க மறந்தமையால் வற்கடப் பஞ்சம் ஏற்பட்ட போதிலும் சுப மங்களத்தைப் பொழிகின்ற மங்கள நடராஜராக, மங்கள ஜோதியை மங்கள நாட்டியம் ஆடிய திருக்காட்சியினையும் அங்கே அளித்திட்டார். எனவே நாம் இங்கே காண்பது ஸ்ரீமங்கள நடராஜருடைய மங்கள நாட்டியமாகும். நடராஜர் முன்னிலையில் ஸ்ரீஆம்ரவனேஸ்வரரை மங்களாம்பிகையாகிய உமையவள் மணந்திட்டாள். இப்புராண அனுபூதி நிகழ்ந்த தலமே கூகூர் ஆகும்!

எனவே வேத சக்திகளை உணராது வாழ்ந்து கோடிக்கணக்கான துன்பங்களில் வாழும் நம் பூலோக ஜீவன்களைக் காத்திட வேத சக்திகளைப் பொழிவதான ஈஸ்வரனே சூத மாமுனிக்கு அளித்த வேத மாஞ்செடியான மாமரத்தைத் தல விருட்சமாக உடையதாகவும், வேத மங்களம் பொங்கிடும் தலமாகவும், மாமர வேத மங்கள சக்திகள் நிறைந்த தலமாகவும் விளங்குவதே ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீஆம்ரவனேஸ்வரர் அருளும் கூகூர் திருத்தலமாகும்.

மங்களாம்பிகை பெண்களுக்குத் தரும் சுபமங்கள வேத சக்திகள்!

இங்கு கோஷ்ட மூர்த்தியாக அருள்பாலிக்கின்ற நடராஜருடைய தரிசனம் அனைத்து இல்லறப் பெண்களுக்கும் மிகவும் முக்கியமானதாம். மாங்கல்ய சக்தி, சுமங்கலித்வ சக்தி, லக்ஷ்மி கடாட்சம், ஐஸ்வர்ய சக்தி போன்ற பலவகை மங்களங்களை எல்லாம் பெற்று தருகின்ற ஸ்ரீமங்கள நடராஜ மூர்த்தி!  கோஷ்ட மூர்த்தியாக அருள்புரிகின்ற ஸ்ரீமங்கள நடராஜ மூர்த்தி ஒரு கோடி சதுர மைல்களுக்கு மூலவரின் வேத மங்கள நாட்டிய சக்தியைப் பெருக்கி நிரவிடுகின்ற நடராஜ சிவம்!

கூகூரில் ஸ்ரீமங்களாம்பிகையாக அருள்பாலிக்கின்ற அம்மன் மகத்தான சுமங்கலித்வ சக்தியை அளிக்கின்ற உலக அன்னை! சக்தி வாய்ந்த அம்பிகை!  செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் ஸ்ரீமங்களாம்பிகையை வழிபட்டு குங்குமம், புடவை, ரவிக்கை, வளையல், கண் மை போன்ற குறைந்தது 12 வேத மங்களப் பொருட்களை ஏழைச் சுமங்கலிகளுக்குத் தானமாக அளித்து வந்தால் பலவிதமான வியாதிகளுடன் வாடுகின்ற கணவனுக்குத் தக்க நோய் நிவர்த்தி கிட்டுவதுடன் சுமங்கலித்வ சக்தி, மங்கள சக்தியும் இல்லத்தில் பெருகும். மங்களத்தை அள்ளித் தருகின்ற தலம்!

பலரும் அறியாத வேத சக்திகள் பொழிகின்ற, பூலோகத்தில் ஒரு சில இடங்களிலேயே காணக் கிடைக்கின்ற வேத சாந்தம் பொழிகின்ற மிக மிக அமைதியான தலம். நகரச் சந்தடிகள், வியாபார நெருக்கடிகள், அலுவலகப் புயல்களுக்கு இடையே உழல்வோர் சற்றேனும் வேத சாந்தத்தை ஆனந்தமாக அனுபவித்திட உதவும் உத்தமத் தலம்!  மிகவும் அடக்கமாகப் பலரும் அறியா வண்ணம், மிக மிக அமைதியான, ரம்யமான சூழ்நிலையில் அமைந்திருக்கின்ற திருத்தலம்!

தோஷங்களை நீக்கும் கூகூர் ஆம்ர (மாமர) வேத சக்திகள்!

பஞ்சாட்சர தூபம், சிவராத்திரி தூபம் போன்றவற்றை ஏற்றி அடிப் பிரதட்சிணம் செய்து எந்நாளிலும் இங்கு ஸ்ரீமங்கள நடராஜருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்திடுதலால் பணக்கஷ்டங்கள் நீங்கி சகலவிதமான மங்களங்களும் உண்டாகும். குறிப்பாக குடும்பங்களில் ஒன்று மாற்றி ஒன்றாக துர்மரணம், ம்ருத்யு (மரண) தோஷங்கள், விபத்து, தீ விபத்து, தற்கொலை, கொலை போன்ற பிரேத தோஷங்கள் இவற்றால் கடுமையான மனச் சஞ்சலங்களுடன் வாழ்வோர்க்கு இத்தல ஆம்ர (மாமர) வேத சக்திகளே மனச் சாந்தம் தந்து குழப்பங்களைத் தீர்க்கும். வியாபார நஷ்டங்களால் அவதியுறுவோர் தகுந்த வேலையின்றிக் குறைந்த சம்பளத்தால் குடும்பம் மற்றும் அலுவலக, வியாபார நிர்வாகத்தை நடத்த இயலாமல் தவிப்போர், நிறைய கடன் சுமைகளால் அவதிப் படுவோர்க்குத் தக்க மங்கள சக்திகளை அளித்து, கஷ்டங்களை நிவர்த்தி செய்யக் கூடிய மிக அற்புதமான ஸ்ரீமங்கள நடராஜர் கோஷ்ட மூர்த்தியாக வீற்றிருக்கின்ற திருத்தலம்!  இங்கு ஸ்ரீஅம்ரவனேஸ்வராக அருள்புரிகின்ற சிவமூர்த்தியே கலியுகத்தில் மறைந்து, புதைந்து இருக்கின்ற வேத சக்திகளை எல்லாம் பூலோகத்திற்கு நிரவுகின்ற ஸ்ரீலிங்கப்பிரான்!

வேதத்தை அறியாதோர், வேதங்களைக் கற்க வழிவகை இல்லாதோர், தமிழ் மறைகள், வேத மறைகளை ஓதுவதற்கு வழியில்லையே என்று ஏங்குபவர்கள் யாவருமே இங்கு ஸ்ரீஆம்ரவனேஸ்வரருக்கு மாம்பழச் சாறினால் திங்கள், பிரதோஷம், திருவாதிரை, பௌர்ணமி நாட்களில் அபிஷேகம் செய்து வந்தால் அளப்பரிய வேத சக்திகளைப் பெற்றிடலாம். வேதமோதும் நல்வாய்ப்புகளையும் பெற்றுத் தரும்.

ஸ்ரீமங்கள நடராஜ மூர்த்தியின் அபூர்வமான திருநடனத்தை அன்றும், இன்றும், என்றும் ஜீவன்களின் தரிசனத்திற்காக ஆக்கித் தருகின்ற திருத்தலம்!  வரும் ஆனி உத்திர நட்சத்திர நடராஜ அபிஷேக தினம் மட்டுமல்லாது ஏனைய ஐந்து அபிஷேக தினங்களிலும் கோடி மைலுக்கு ருத்ர மூல சக்திகளைப் பரப்பும் கூகூர் ஸ்ரீமங்கள நடராஜ மூர்த்திப் பெருமானை அபிஷேக ஆராதனைகளுடன் வழிபட்டு மகத்தான மங்களத் தலமாக இதனைப் பிரகாசிக்கச் செய்வது பக்த கோடிகளுடைய அருங்கடமையாகும்.

சதய நட்சத்திரம்

சதய நட்சத்திரத்தைக் கொண்டவர்களுக்கான ஆலயம்

இந்த அரிய நட்சத்திர ஆலயத் தொடரில் ஒவ்வொரு நட்சத்திரத்தார்க்கும் உரித்தான ஆயுட்கால வழிபாட்டுத் தலங்களை குருஅருளால் அளித்து வருகின்றோம்

திருப்புகலூர் ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயம்

ஒவ்வொரு நட்சத்திர தேவ மூர்த்தியும் வழிபட்ட ஆலயங்கள் பல உண்டு. எனவே ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் தம் ஆயுட்காலம் முழுவதும் தம் நட்சத்திர தேவ மூர்த்திக்கு மிகவும் ப்ரீதியான ஆலயங்களில் வழிபாடுகளை நிறைவேற்றி வருதல் மிகவும் சிறப்புடையதாகும்.

ஸ்ரீபவிஷ்யத்லிங்கம் திருப்புகலூர்

பிறந்த தினம், நட்சத்திர நாள், திருமண தினங்களில் அவரவர் நட்சத்திரத்திற்கு உரித்தான ஆலயங்களில் தேவையான இறைத் திருப்பணிகள், உழவாரத் திருப்பணிகள், அபிஷேக ஆராதனைகள், தான தருமங்களை மேற்கொண்டு அவரவர் நட்சத்திர மூர்த்தியின் பரிபூரணமான அனுகிரகத்தைப் பெற்றுச் சிறப்புடன் வாழ்வார்களாக!

சதய நட்சத்திரத்தைக் கொண்டவர்களுக்கான ஆலயம் யாதோ? தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள திருப்புகலூர்ச் சிவாலயமே சதய நட்சத்திரக்காரர்களுக்கு உரித்தான சிவத்தலம் ஆகும். ஒவ்வொரு நட்சத்திரத்தார்க்கும் உரிய சிவ, வைணவ, முருகன், பிள்ளையார் தலங்களும் நிறைய உண்டு. இவற்றை ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில், சித்தர்களின் கருணையால், எம்குருநாதர் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய குருவாய் மொழியாக அளித்து வருகின்றோம்.

நட்சத்திர மண்டலங்களில் வாகீச மண்டலத்தைச் சார்ந்தவர்களே சதய நட்சத்திரத்தைக் கொண்டவர்களாகப் பிறக்கின்றார்கள். எனவே சதய நட்சத்திரம் உடையோர் வாகீச சக்தி நிறைந்த தலங்களில் தம் வாழ்நாள் முழுவதும் வழிபட்டு வருதல் சிறப்புடையதாம்.

வாகீச சக்தி என்பது நடப்பு, கடப்பு, வடப்பு (வருவது) ஆகிய மூன்று காலங்களை உரைக்கும் தேவ சக்தியாகும். வாகீச சக்தி உடையவர்கள் தாம் ஜோதிடத் துறையில் தீர்க்க தரிசனமாகப் பிரகாசிக்க முடியும்.

சதய நட்சத்திரப் பொறிகள் திரள்கின்ற, வாகீச ஆகர்ஷணம் பெருகின்ற புனித பூமியாக விளங்குவதே திருப்புகலூர்ச் சிவாலய வளாகம் ஆகும். வாகீசப் பெருமானாக விளங்கியவரே அப்பர் ஸ்வாமிகள் ஆவார். மாதந்தோறும் சதய நட்சத்திர நாட்களில் சதய நட்சத்திரக்காரர்கள் திருப்புகலூர்த் தலத்தில் வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும். ஆயுள் விருத்தி, நல் ஆரோக்யம், நற்பண்புகளைத் தருவதாம்.

சதய நட்சத்திரத்திற்கு உரித்தான விண்வெளி வாகீச மண்டலத்தில் "த்ரயம்பக லிங்க வழிபாடு" அதாவது முக்கூட்டு லிங்க வழிபாடு மிகவும் பிரசித்தி உடையதாம். சதய வாகீச நட்சத்திர மண்டலத்தில் எங்கு பார்த்தாலும் முக்கூட்டு லிங்கங்களே பிரகாசிக்கின்றன. இரட்டைப் பிள்ளையார் மூன்று பிள்ளையார் இருப்பது போல, மூன்று லிங்கங்கள் சேர்ந்து இருப்பதே வாகீச லிங்க வழிபாடு ஆகும்.

ஒவ்வொரு நட்சத்திர மூர்த்தியும் விதவிதமான வடிவங்களில், வழிமுறைகளில் இறைவனை வழிபட்டு இன்றைக்கு நட்சத்திர மூர்த்திகளாக விண்ணில் பிரகாசிக்கின்றார்கள். இவற்றில் சதய நட்சத்திர மூர்த்தி இறைவனுடைய திருவடிகளைப் பூஜித்து நட்சத்திர தேவ மூர்த்தியாகப் பிரகாசிக்கின்றார். பாம்பு வடிவப் புஷ்பங்களையும், ரத்தச் சிவப்பு நிறப் புஷ்பங்களையும் கொண்டு ஸ்ரீசரணபுரீஸ்வரராகவும் விளங்குகின்ற திருப்புகலூர்ச் சிவபெருமானை சதய தேவி பூஜித்து சதய நட்சத்திரமாகும் வரத்தைப் பெற்றுப் பிரகாசிக்கின்றாள்.

ஸ்ரீபூதேஸ்வரலிங்கம் திருப்புகலூர்

சதய நட்சத்திர மண்டலத்தின் ஒளிப் பிரகாசமானது அக்னியைப் போல ஏழு விதமான வர்ணங்களைக் கொண்டதாகும். பரத்வாஜர் தம்முடைய சந்தியா வந்தன வழிபாடுகளுக்குப் பிறகு முதன்முதலாக சிவலிங்க வழிபாடு செய்கின்ற முதல் நட்சத்திர மண்டலமே சதய நட்சத்திர மண்டலம் ஆகும். இன்றைக்கும் பல மஹரிஷிகளும், சித்புருஷர்களும் தாங்கள் ஒன்று கூடி இறை விஷயங்களை ஆத்ம விசாரம் செய்து பூலோக ஜீவன்களுக்கு நன்னெறிகளாகப் போதிக்கின்ற திருத்தல பூமியாக, நட்சத்திர வளாகமாக சதய நட்சத்திர மண்டலம் பொலிகின்றது. சதய நட்சத்திர மூர்த்தி தினந்தோறும் பூலோகத்தில் அனைத்து அக்னித் தீர்த்தங்களிலும் நீராடி அதன் பலாபலன்களை சதய நட்சத்திரக்காரர்களுக்கு அருளுவதால் சதய நட்சத்திரக்காரர்கள் தங்கள் இல்லத்தில் எப்போதும் அக்னித் தீர்த்தத்தை வைத்து பூஜிப்பது மிகவும் சிறப்புடையதாகும். இராமேஸ்வரத்தில் உள்ள கடல் தீர்த்தம் அக்னி தீர்த்தமாகும்.

அபிஷேகம், ஆராதனை, சந்தனக் காப்பு போன்ற பலவிதமான வழிபாடுகளில் சதய நட்சத்திரக்காரர்களுக்கு ஹோம வழிபாடு பிரதானமாக விதிக்கப்பட்டுள்ளது. மனோன்மணி வாலை யோக சூத்திரம் என்பது பெறுதற்கரிய மிகவும் அரிய, அபூர்வமான தெய்வீக யோக சக்திகளைப் பெற்றுத் தருவதாகும். இந்த மனோன்மணி வாலை சூத்திரத்தில் பிரசித்திப் பெற்றவர்களே அனைத்து அக்னி யோக வகைச் சித்புருஷர்கள் ஆவார்கள். இந்த மனோன்மணி வாலை சூத்திரங்களில் சிறப்புடன் துலங்கும் சித்புருஷர்கள், மகரிஷிகளில் ஸ்ரீஆங்கிரஸர், ஸ்ரீகாரண மகரிஷி, ஸ்ரீசுபோதன மகரிஷியோடு ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈசரும் சிறப்புறுகின்றார்.

ஸ்ரீஅக்னிபுரீஸ்வரர் ஆலயமாகப் பொலிகின்ற திருப்புகலூர்ச் சிவாலயமே சதய நட்சத்திரக்காரர்களுக்கு ஏற்ற ஆலயமாக விளங்குவதால் சதய நட்சத்திரம் கொண்டவர்கள் தம் வாழ்நாளில் அடிக்கடி இங்கு வந்து வழிபடுதல் வேண்டும். முக்காலம் உணர்த்தும் லிங்க மூர்த்திகள் பொலிகின்றதும், அப்பர் ஸ்வாமிகளாகிய திருநாவுக்கரசர் இறைத் திருவடிகளை அடைந்து சர்வேஸ்வரனுடன் ஐக்கியமானதுமான இத்தலத்தில் சதய நட்சத்திரக்காரர்கள் தங்கள் நட்சத்திரத்திற்கு உரித்தான வழிபாடுகளையும் தான தருமங்களையும் முறையாகச் செய்து வருதல் வேண்டும்.

ஸ்ரீஅகஸ்தியர் ஆஸ்ரம வெளியீடான ஜெயந்தி தரும் ஜெயம் மற்றும் ஸ்ரீஆயுர்தேவி மகிமை நூலில் அந்தந்த நட்சத்திரத்திற்கு உரித்தான வழிபாட்டு முறைகள் அளிக்கப்பட்டுள்ளன.

எண்களின் மகத்துவம்

கலியுகத்தில் எண்களைச் சரிவரப் பயன்படுத்தாமையால் பல எண்களின் சிறப்பான தேவ சக்திகளை நாம் இழந்து வருகின்றோம்!

எண்கள் தாம் யோக பூர்வமாக எண்ணங்களைச் சீர்ப்படுத்தும். தினமும் ஆயிரக்கணக்கான உபயோகமில்லாத எண்ணங்களில் புரண்டு பல அரிய மனோ சக்திகளை நாம் இழந்து வருகின்றோம்! தேவையற்ற எண்ணங்களில் உடல் திறனும், மன சக்தியும் நிறையச் செலவாகின்றது!

வாழ்க்கையில் தோன்றும் பல கோடிக்கணக்கான எண்ணங்களைச் சீர்வள எண்கள் செம்மைப்படுத்திப் புனிதப்படுத்தும்.

காக்கை ஒரு தெய்வீகச் செய்தியாளர்

ஒவ்வொரு விநாடியும் உங்களுடன் எண்களின் அரிய, அபூர்வமான சக்திகள் வந்து கொண்டுதாமே இருக்கின்றன. ஆனால் இதனை மிகவும் சர்வ சாதாரணமாக எண்ணி விடுவதால் தான் எண்களின் மகத்துவம் நமக்குப் புலப்படாமல் போவதுடன் எண்களுடைய தெய்வீக சக்திகளையும் நம்மால் பெற முடியாமல் போகின்றது. உதாரணமாக காக்கை "கா கா கா" என்று கரையும் போது அது எத்தனை முறை கத்துகின்றது என்பதும் காக்கைகளுக்கு இடையே உள்ள பரிபாஷையாகும். இதனை நாம் உணர்ந்து விட்டால் நமக்கு வானொலியோ, செய்தித் தாளோ, டிவியோ எதுவுமே தேவை இல்லாமல் உலகின் பல இடங்களிலும் நடக்கும் நிகழ்ச்சிகளை நாமே காக்கைகள் மூலமாக நன்கு தெரிந்து கொண்டிடலாம். இன்றைக்கும் பல உலகச் செய்திகளை உலகம் முழுவதும் பரப்புவது புறாக்களும், காக்கைகளும்தான் என்பது உங்களுக்குத் தெரியாத ஆன்மீக ரகசியமாகும். ஆனால் அரசியம் செய்திகள் போல் அல்லாது ஆக்க பூர்வப் புனிதமான முறையில், பூலோகம் மட்டுமல்லாது பல லோகங்களின் செய்திகளை அளிப்பவையே காக்கைகளும், புறாக்களுமாம்.

காக்கை ஒரு அருங்கருஞ் ஜோதிடர்!

உதாரணமாக, உங்கள் ஊர் ஆலய வழிபாட்டிற்கு ஒரு சித்தரோ, அல்லது ஒரு மகானோ வருவது முதல் புயல், மழை வருவதையும் அறிவிப்பதுடன், உங்களுக்கு வர இருக்கின்ற நன்மை, தீமைகளையும் தெரிவிக்கின்ற அருங்கருஞ் ஜோதிடர்களாக காக்கைகள் சிறந்து விளங்குகின்றன என்பதும் நம் வாழ்க்கைக்கு இறைவன் அளித்துள்ள ஆன்மீக அற்புதமாம்.

ஒவ்வொரு காக்கையும், ஒவ்வொரு நாளும் குறித்த ஒரு பித்ரு லோகத்திற்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டு, பித்ரு ஆசிகளைப் பெற்று மீண்டு வருகின்றது. அந்தந்த பித்ரு லோகத்தில் இருந்து, அந்தந்த நாளுக்கு உரிய அந்தந்த ஜீவன்களுக்குப் பல அரிய செய்திகளையும் தாங்கி வருகின்றது. எனவே காக்கைக்குக் காலை வேளை மட்டுமே என்றில்லாது எப்போதும் குறிப்பாக ஒரு நாளில் வரும் ஆறு ஜாமங்களிலும் அன்னமிட்டு, இந்த அன்ன சக்தியால் பித்ரு ஆசிகளைப் பெறுவதுடன், காக்கை கரைந்து அளிக்கும் நற்செய்திகளையும் அறிய வேண்டும். ஒரு புத்திசாலிக் காக்கையின் செயல்பாட்டை இங்குள்ள வீடியோவில் கண்டு இரசிக்கலாம்.

காக்கைக் கரைமொழி பித்ரு லோக உரை மொழியே!

இவ்வாறு ஒவ்வொரு காக்கையும் தனக்குத் தெரிந்த விஷயத்தைத் தன் கரைமொழியாக எடுத்துரைக்க முற்படும் போது அதனை மனிதன் புரிந்து கொள்ளாவிட்டால், தான் அளிக்க வேண்டிய விஷயங்களை அந்த காக்கையானது ஆசிகளாகவோ, அல்லது வேறு சில தரிசனங்களாகவோ அளித்துச் சென்று விடுகின்றது. இவ்வாறாக, எண்ணில் ஆரம்பித்து, காக்கை பற்றிய ஆத்ம விசாரம் வரை பல தெய்வீக விஷயங்களைத் தருகின்ற தன்மையைக் காக்கைகளும், எண்கள் கொண்டுள்ளன என்றால் இனியேனும் இந்த விநாடி முதல் எண்களின் தெய்வீக மகத்துவத்தைப் பற்றி, பிற ஜீவன்களின் மூலமாகவும் நீங்கள் நிச்சயமாக அறிந்து கொள்ள முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் அல்லவா!

0, 1 என இரண்டு எண்களுக்குள் மட்டுமே ஜீவிக்கும் கம்ப்யூட்டர்!

எண்களை வரிசையாக உபயோகப்படுத்தினால் அவற்றின் சக்திகளை நாம் பரிபூரணமாக பெற முடியும். இறையருளால் எவ்வித விஞ்ஞானக் குறுக்கீடும் இன்றி 1 முதல் 31 மாதத் தேதிகள் வரை வரிசையாக இருப்பதால் தான் ஓரளவு கிழமை, நட்சத்திர, தேவதா மூர்த்திகளின் அனுகிரகத்தை நாம் கலியுகத்தில் பெற்றுக் கொண்டு வருகின்றோம். எதிர்காலத்தில் தேதியைக் கூட 5, 6, 7 எனப் பெரிய இலக்க எண்களாக (000001, 000002 என) தேதிகளை மாற்றி விட்டு, மகா குழப்பமான தசாம்ச முறை வரக் கூடும். இது உலக அளவில் எண் தோஷங்களையே பெருக்கும்! என்னதான் உலகளாவிய நவீனமய கம்ப்யூட்டர் என்றாலும் அதுவும் உள்ளுக்குள் மூலாதாரமாக 0, 1 என்ற எண்களுக்குள் தானே இயங்குகின்றது. பத்து, பதினைந்து இலக்கங்களை வைத்து இயங்கவில்லையே!

எனவே எண்களின் சக்தியைப் பெருக்குவதற்காகவே ஆன்ம எண் சக்தி இயக்கம் என்று ஒன்று துவக்கப்பட்டு நம்முடைய பெரியோர்கள் அளித்த ஆன்மீக ரீதியிலான எண் வர்க முறை வகைகளைப் பயன்படுத்த வேண்டும்.

நல்கணக்கிற்கு ஒரு நாமகிரியாள்!

பள்ளிகளில் மாணவர்களுக்கு 1 முதல் 21 வரை கணித வாய்ப்பாடுகள் நிச்சயமாகப் புகட்டப்பட வேண்டும். எண் கணிதத்திற்கு உரித்த தேவ மூர்த்தியாக விளங்குபவர்தான் நாமக்கல் ஸ்ரீநாமகிரி அம்பிகை ஆவாள். இன்றைக்குப் பிரபஞ்சத்தின் எண் கணிதத்தையே இயக்குகின்ற உத்தம தெய்வ மூர்த்தி! கணித மேதை ராமானுஜம் ஸ்ரீநாமகிரி அம்பாளை உபாசித்துத் தான் அபாரமான கணித ஆற்றலைப் பெற்றார்!  வரகணித குணநாமகிரிச் சித்தர்கள் நாமகிரித் தாயாரை உபாசனை செய்து வழிபடுகின்றார்கள்.

அணு விஞ்ஞானம் (atomic and nuclear sciences), கம்ப்யூட்டர், உயரியல் கணிதத் துறையினர் தம் திறமைகளை ஆக்கப் பூர்வமான இறைச் சமுதாயப் பணிகளுக்கு வழிபட வேண்டிய தெய்வம்!  அழிவை நாடும் அணுகுண்டு விஞ்ஞானத்திற்கு அல்ல!

ஆன்மீக நெறியில் கணிதமும், கணினியும்

உயர்ந்த உத்தம நிலையிலான சித்தர்களின் நவசித்தாந்த கணித முறை ஒன்று உண்டு. நாமகம் எனும் அக்னி சக்தியால் இயங்குவது! கமகம் என்பது ஒரு வகை ருத்ர மந்திர ஓதுதலாம். அதே சொல்லே மாற்றி திருப்பி ஓதும் போது அதன் பீஜாட்சர இயற்கை சக்தி பீறிட்டு எழும்பும்!  எனவே தேவ மொழி, தமிழ் மறை ஓதுதலும் வாய்மொழி வேத வழிபாடு ஆகிறது.

எதிர்காலத்தில் சித்தர்கள் அளிக்கின்ற இந்த நவசித்தாந்த ஆன்மீகக் கணித முறை நிச்சயமாக நடைமுறைக்கு வரும். அதில் சித்தர்கள் அளிக்கின்றபடி எண்கள் 1 முதல் 9 வரைதான் இருக்கும். ஒன்பதுக்குப் பிறகு 11 அடுத்த எண்ணாகும். பூஜ்யம் எனப்படும் 0 ஆனது இந்த வரிசையில் வராது! ஆனால் விசேஷமாகத் தனி முக்கியத்துவம் பெற்றிடும். ஆனால் நவீன உலகம் இப்போது இதனை ஏற்காவிட்டாலும், இவற்றை நவீன கணித உலகம் ஆராய்ந்து எண்களின் சக்தியை மனித உலகம் ஆன்மீக ரீதியாக எண்களின் சக்திகளைப் பெறும்படி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். எண்களை இன்றைய கம்ப்யூட்டர் துறைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்தல் என்பதை விட எண்களுடைய ஆன்மீக சக்திகளை மனித சமுதாயத்திற்கு பெற்று தரும் வகையில் கம்ப்யூட்டர் மற்றும் கணிதத் துறையும் தெய்வீக ரீதியாக இணைந்து செயல்படுவது தான் சிறப்புடையதாகும்.

எண் தோஷங்களை விலக்கும் எழிலார்ந்த பிள்ளையார் சுழி!

இரயில், விமான பயண டிக்கெட்டுகளில் ஒன்பது, பத்து இலக்கங்களுக்கு எண்களை (493789637 என்றவாறாகப் பெரிய இலக்கங்களில்) அச்சடித்து  வைத்திருப்பார்கள்.  இவ்வளவு பெரிய எண்ணைப் பயன்படுத்துவதானால் அதிலிருந்து எழுகின்ற ஆன்மீக சக்திகளை நெறிப்படுத்திப் பயன்படுத்தும் முறைகளையும் அறிந்திருக்க வேண்டும். இதற்காகவே எண் கணிதச் சக்கரங்களுள் ஒன்றான பிள்ளையார் சுழியும் (உ) அதற்கு அடியில் இரு கோடுகளையும் இட்டு எண்களின் புனிதத்தைப் பாதுகாக்கும் தேவ முறையும் உண்டு. இவ்வாறாக எண் சக்தி அம்சங்கள் பாதிக்கப்படாமல் கம்ப்யூட்டர் துறையை ஆன்மீக நியதிகளுக்குப் பங்கம் இன்றி ஆக்கப்பூர்வப்படுத்திட வேண்டும். கோடி மதிப்பு பெறுகின்ற வகைகளிலே பெரிய பெரிய இலக்கங்களை நம் இஷ்டத்திற்குப் பயன்படுத்துவதால் எண்களின் பயன்களை நாம் பெருமளவில் கலியுகத்தில் இழந்து விட்டோம். எண் தேவதைகளுடைய பலத்த சாபங்களுக்கும் ஆளாகி உள்ளோம். தேவையற்ற முறையில் பெரிய இலக்கங்களுடைய எண்களைப் பயன்படுத்தினால் எண் தோஷங்கள் உருவாகி அது கம்ப்யூட்டர் துறையை மிகவும் பாதிக்கின்றது. இன்றைக்குப் பல இடங்களிலும் கம்ப்யூட்டர் கோளாறுகள் வரக் காரணம் என்ன? மின் தடையோ அல்லது கம்ப்யூட்டர் மெஷினில் உள்ள தடங்கல்களோ கிடையாது. எண் சம்பந்தமான தோஷங்களே பல தடங்கல்களை உருவாக்குகின்றன!

எனவே Computer Hard Disk Formatting என்பதும் எண் தோஷங்களுக்கான ஒரு வகைப் பரிகாரமே, பிராயச்சித்தமே ஆகும். எண்களை தாறுமாறாகப் பயன்படுத்துவதால் ஏற்படுகின்ற தோஷங்கள் தாம் பலவிதமானக் கம்ப்யூட்டர் கோளாறுகளுக்குக் காரணம் என்று இனியேனும் விஞ்ஞானம் உணர வேண்டும்.

ஒவ்வொன்றாய் ஆகுகவே!

இவையெல்லாம் மகத்தான மெய்ஞான விளக்கங்களாகும். நல்ல இறை பக்தி உடைய கணித விஞ்ஞானி இதனுடைய தாத்பர்யங்களை நன்கு உணர்ந்து கொண்டால் கம்ப்யூட்டர் மூலமாக அவரால் மனித சமுதாயத்திற்கு எண்களுடைய மகத்துவமான சக்திகளைப் பெற்றுத் தரக் கூடிய மிகவும் திறம்பட்ட முறையிலே இறைச் சமுதாயப் பணிகளை ஆற்ற முடியும். இதற்காகத் தக்க சற்குருமார்களையும், ஆன்மீகப் பெரியோர்களையும் நாடி எண்களின் தாத்பர்யங்களைப் பெறுதல் வேண்டும்.

இல்லத்திலும், அலுவலகத்திலும் சொந்த முறையில் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள், மற்றவர்களைப் போல் அல்லாது, குறித்த சிறிய இலக்க எண்களையே முறையாக, வரிசையாகப் பயன்படுத்தி வருதல் வேண்டும். உதாரணமாக, வியாபாரம் தொடங்குபவர்கள் எடுத்த உடனேயே பலவிதமான குறிப்புகளுக்காக உடனடியாக எட்டு, ஒன்பது, பத்து என்று பெரிய இலக்க எண்களைப் பயன்படுத்துவதற்கு ஆயிரத்தெட்டு விஞ்ஞானரீதியான விளக்கங்கள் அளிக்கப்பட்டாலும், எண்களின் சக்தியைப் பயன்படுத்துவதற்கு அவை ஏட்டுச் சுரைக்காயாகத்தான் விளங்குமே தவிர இத்தகைய பெரிய இலக்கங்களைத் தேவையில்லாமல் பயன்படுத்துவதால் சமுதாயத்திற்கே எண் தோஷங்கள் ஏற்பட்டு மனித சமுதாயத்தையே பாதிக்கின்றது என்பதே உண்மையாகும்.

பல கம்பெனிகள் சரியாக நடக்காது திணறுவதற்குக் காரணமே எண் சக்திகளைச் சரியான முறையில் பயன்படுத்தாமையும் ஆகும். மேலும் பல துறைகளில் நயா பைசாவை round off செய்து அடுத்த சைபருக்கோ, 50, 100 என்றவாறாகவோ செய்து, இடை எண்களின் சக்திகள் கிட்டாது மேன்மேலும் எண் தோஷங்களை உருவாக்கிக் கொள்வார்கள். இது தவறானதாம்.

சுத்தி தரும் எண் 13!

மேல் நாடுகளில் 13 என்ற எண் துரதிஷ்டமானது என்ற மூட நம்பிக்கையைக் கொண்டு வீட்டு எண் மற்றும் பல இடங்களிலும் 13 என்ற எண்ணையே இல்லாமல் செய்து விடுவதால் அந்நாடுகளுக்கு, அந்நாட்டு மக்களுக்கு 13 என்ற எண்ணால் வர வேண்டிய நற்சக்திகளும், நல்வரங்களும் வராமல் போய்விட்டன!  உதாரணமாக 13 என்ற எண் மன சுத்தியையும், உடல் புனிதத்தையும், நல் ஒழுக்கத்தையும் பெற்றுத் தர வல்லதாகும். இறப்புச் சடங்குகளில் பதின்மூன்றாம் நாள் சடங்கு சுத்திகரிப்புச் சடங்காக விளங்குவது குறிப்பிடத் தக்கதாம்.

நம் புனிதமான பாரதத் திருநாட்டில், சில வருடங்களுக்கு முன் வரை ஒரு பைசா, இரண்டு பைசா, மூன்று பைசா, ஐந்து பைசா, பத்து பைசா நாணங்கள் புழக்கத்தில் இருந்ததை நீங்கள் நன்கு அறிவீர்கள். சிறு எண்களையும் மதித்தமையால் அப்போது நாடு சுபிட்சமாக இருந்தது! காரணம், இவ்வாறு வரிசையாக வருகின்ற ஒற்றைப்படை எண்களுக்கு மிகுந்த தெய்வீக சக்திகள் உண்டு. புழக்கத்தில் உள்ளதோ, இல்லையோ என எண்ணாது அனைத்துச் சிறு எண்களிலும் நாணயங்கள், பண நோட்டு, அக்கௌண்ட் நம்பர், வண்டி எண்கள் வருவதே சிறப்புடையதாம். இதனால் எந்த எண்ணின் ஆன்ம சக்தியையும் இழக்காது நாம் திறம்படச் செயல்பட முடியும், சமுதாயமும் நல்வளம் பெறும்.

பைசா, பைசாவாய்..... பொழியட்டும் எண்வளம்!

அக்காலத்தில் 1, 2, 3 என வரிசையாக நாணயங்கள் வந்தமையால் எண்களின் பரிபூரணமான சக்திகளும் தாமே சமுதாய நல்வளத்திற்கு வந்து கூடின! தற்போது எல்லாம் மாறி, குறைந்தது ஐம்பது பைசா, ஒரு ரூபாய் என்று அமைந்து விட்டதால் தான் ஒற்றைப் படை எண்களுடைய சக்தியை, இடைப்பட்ட பல எண்களின் சக்தியை, கூட்டு மதிப்பில் வராத எண்களின் தேவ சக்தியை நாம் வெகுவாக இழந்து இன்றைக்கு நாணயத்தின் மதிப்பே பலவிதங்களில் அலைக்கழிக்கப்படுகின்றது. இதற்குப் பொருளாதார ரீதியாக (economic reasons) பல விளக்கங்கள் அளிக்கப்பட்டாலும் எண் சக்திகளை இழந்ததுதான் நாணயத்தின் மதிப்பிழப்பிற்குப் பெரும் காரணம் என்பதை ஆன்மீக ரீதியாக இனிமேலாவது நாம் உணர்தல் வேண்டும். எவ்வாறு எண்களின் பரிபூரணமான சக்தியை நாம் பெற முடியும்? எண்களுக்கு உரித்தான தெய்வ மூர்த்தி யார்? இத்தகைய தெய்வீக விளக்கங்களையும் அறிந்து கடைபிடித்து வந்தால் தான் எண்களின் சக்தியை நாம் பரிபூரணமாகப் பெற முடியும்.

எண் சக்தி துலங்கும் எம் உள்ளங்கையில்!

நம்முடைய உள்ளங்கை விரல்களின் உள் பக்கம் உள்ள விரல் கணுக்களில் உள்ள ரேகைகள் தாம் எண் தேவதைகளுடைய இருப்பிடங்கள் ஆகும். இதற்காகத்தான் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபிக்கின்ற போது வலது கட்டைவிரலால் மோதிர விரலின் கீழ்ப்பகுதியில் உள்ள கணுவைத் தொட்டு ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபித்து எண்ணுகின்ற வழக்கம் ஒன்று நடைமுறையில் இருந்து வந்தது. தற்போது பலரும் இதனை மறந்து விட்டார்கள். இவ்வாறு வலது ஆள்காட்டி விரலால் கணுக்களைத் தொட்டு மந்திரங்களை ஜபித்திட, ஜபித்திடத்தான் எண்களின் சக்தியை நாம் பரிபூரணமாகப் பெற முடியும்.

அர்ச்சனையில் ஆகர்ஷணமாகும் எண் சக்தி!

இதற்காகத்தான் அர்ச்சனை முறைகளில் கூட படிப்படியாக ஒன்று முதல் 108 வரை போற்றித் துதிகளை, அஷ்டோத்திர நாமாவளிகளை ஓதினால் தான் ஒவ்வொரு எண்ணுடைய அட்சர சக்தியும் நம்மை வந்தடைவதாக அமைத்துத் தந்துள்ளனர். ஆலயத்திலே அர்ச்சனை செய்வது என்ற பழக்கம் எண்களின் ஆன்ம சக்திகளைப் பெற்றுத் தருவதற்காகவும் நடைமுறைக்கு வந்தது.

நம்முடைய வியாபார அலுவலகத் துறையிலே எண்களைத் தாறுமாறாகப் பயன்படுத்தினால் கூட தினந்தோறும் சுவாமிக்கு 108 போற்றிகளை வரிசையாகத் துதித்து அர்ச்சனை செய்கின்ற போது நாம் இழந்த எண் சக்திகளை எல்லாம் அர்ச்சனை மூலமாக ஓரளவு நாம் மீண்டும் பெறுகின்றோம். இதுவும் இறை அர்ச்சனையின் தாத்பர்யங்களில் ஒன்றாகும். எண் சக்திகளைப் பெற்றுத் தருவது அர்ச்சனை சக்தியின் முக்கியமான பலாபலன்களில் ஒன்றாகும்.

சிதறுகாயில் திரளும் எண் சக்தி!

சிதறுகாய்களை ஒன்றொன்றாக உடைப்பது எண்களின் சிறப்பை உணர்த்துவதாம். சிதறுகாய் உடைத்தல் மூலம் ஒன்று, இரண்டு, மூன்று என வரிசையாகக் குறித்த எண்ணிக்கையில் சங்கல்பம் செய்விக்கப்பட்ட சிதறு காய்களை உடைக்கின்ற போது எண் தோஷங்களுக்குப் பரிகாரமும் கிட்டுகின்றது!  எண் தோஷங்களை நீக்க வல்ல பிள்ளையார் சுழிச் சக்கரத்திற்கு (உ) மூலாதார மூர்த்தியான விநாயகப் பெருமான் தாமே எண் வகை தோஷங்களை நீக்கவல்லார்.

கண்படா தீர்த்தம், எண் சக்தி வார்க்கும்!

கண்படா தீர்த்தம், எண் சக்தி வார்க்கும் என்பது சித்தர்களுடைய பரிபாஷையாகும். அதாவது தேங்காய்க்குள், இளநீருக்குள் உள்ள எவருடைய கண்படாமல் துலங்கும் தீர்த்தமானது சிதறுகாய்த் தேங்காய்ச் சிதறலின் மூலம் வெளிப்பட்டு விநாயகரை சூட்சுமமாக அடையும் போது கண்படா தீர்த்தம், எண்படும் முகூர்த்தமாக, எண்களின் சக்திகள் அதில் கிரகிக்கப்பட்டு (விநாயக) மூர்த்தத்தை அடைந்து நமக்கு ஆசிகளாகத் திரும்பி வருகின்றன. இவ்வாறு எண் சக்திகளைப் பெருக்குவதற்கு உதவுவதே சிதறுகாய்ப் பிரார்த்தனையாகும்.

எண்ணிற்குக் கண்ணான ஸ்ரீநாமகிரித் தாயார்!

கணிதத் துறையைச் சார்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கணிதத் துறை வல்லுநர்கள் எண்களுக்கு உரித்தான ஸ்ரீநாமகிரி அம்பிகைக்கு செவ்வாய், சனிக்கிழமைகளில் ஏனைய நாட்களில் செவ்வாய், சனி ஹோரை நேரத்திலும் சிதறுகாயை நேர்த்தியாகச் சங்கல்பித்து சமர்ப்பித்து வந்தால் எண் துறையில் முன்னேற்றம் பெறுவதோடு சமுதாயத்திற்கும் எண் சக்திகளை எளிதில் முறையாகப் பெற்றுத் தந்திடலாம். இவ்வாறாக எண்களுடைய தாத்பர்யங்கள் எத்தனையோ உள்ளன. குருவருள் கூடிடில் அனைத்தும் விளக்கப் பெறும்.

கீழமாத்தூர்

கீழமாத்தூர் ஸ்ரீமணிகண்டேஸ்வரர் ஆலயம்

மதுரை - சோழவந்தான் மார்கத்தில் மதுரையில் இருந்து 12 கி.மீ. தொலைவில் கீழமாத்தூர் உள்ளது.

ஜெயமணி, மணியரசு, தமிழ்மணி, முத்துமணி, பாலசுப்ரமணியன், ராஜாமணி, ரமணி, மணிமலா, கிருஷ்ணமணி, ரங்கமணி, தங்கமணி, சிவமணி, வீரமணி, வேலுமணி, பாலாமணி, மணிகண்டன், மணி சேகர், மணிரத்னம், மணிவண்ணன், அன்புமணி, ராதாமணி, மணிசுந்தர், வெங்கடரமணி, மணிசங்கர், ரமாமணி, அம்மணி, மணிவாசகம், மணியன், சுப்ரமணியன், மணி போன்ற "மணி" சம்பந்தப்பட்ட பெயர்களை உடையோருக்கான ஆலயம்.

"மணி" வகைப் பெயரை உடையவர்கள் தம் வாழ்நாளில் வழிபட வேண்டிய ஆலயங்களுள் கீழமாத்தூர் ஸ்ரீமணிகண்டேஸ்வரர் ஆலயமும் ஒன்றாம். மணி என்றால் பிள்ளை, அம்சம், ஒளி பொருந்தியது, முதன்மையானது, நாதம், ஸ்வர பிதா என்று பல அர்த்தங்கள் உண்டு. அகரமும், இகரமும் தொக்கித் தழைக்கும் தன்மையையும் "மணி" என்ற சொல் கொண்டிருப்பதால் இவ்வகைப் பெயர் கொண்டோர் தம் சந்ததியில் ஒருவருக்கேனும் "மணி" என்னும் இணை/துணைப் பெயர், அழைப்புப் பெயராகவாவது வரும்படி அந்தந்த நட்சத்திரத்திற்கான அட்சரங்களுக்கு ஏற்ப முதல், இடை, கடை அட்சரமாக அமைத்தல் சிறப்பானதாம்.

மணி என்னும் வார்த்தையானது உலக மொழிகளில் பெரும்பாலானவற்றில் ஒரு வழக்குச் சொல்லாய்ப் பொலிவதால், மணி சம்பந்தப்பட்ட பெயரை உடையவர்கள் வாழ்க்கையில் ஒரு மொழியிலாவது நல்ல வளம் பெறுதல் மேன்மையானதாம். மணியான ஒரு இறை லட்சியத்தையேனும் இவர்கள் வாழ்நாள் முழுவதும் இறுதி வரை கடைபிடித்திட வேண்டும். "ஆலய மணி ஒலி கேளாது உண்ணேன்" என பக்தியுடைத் தமிழ் மன்னர்கள் போல் ஆலய மணி கேட்டு தினமும் உண்ணுதல் என்ற வைராக்யம் பூணுதலும் சிறப்புடைத்து! தினமும் ஒரு வேளையேனும் தம் கரங்களால் "மணி" அடித்துப் பூஜித்து நைவேத்யம் செய்து வர வேண்டும். இவர்கள் வாழ்வில் மணி அடியா நாளெல்லாம் (இறைப்) பணி அடையா (வீணே கழித்த) நாளாகி விடாது கவனமாக நித்ய பூஜை செய்து வாழ்தல் வேண்டும்.

மணிகண்டனாய்ப் பொலியும் சபரிமலை அய்யப்பனைக் காண முறையாக "விரதம்" பூண்டு ஆம், சித்தர்கள் காட்டிய வழியில் ஒரு மண்டலமேனும் "மணியான முறையில்" விரதம் இருந்து வாழ்வில் ஒரு முறையேனும் பரிபூரணமான விரத நெறிகளுடன் சபரிகிரீஸனைத் தரிசித்திட வேண்டும். மணிமுத்தாறு நதித் தீர்த்தத்தில் அடிக்கடி புனித நீராடி வருதல் வேண்டும்.

"வேதமணிகள்" என்று சித்தர்களால் போற்றப்படுகின்ற தேங்காய், பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, காராமணி போன்றவற்றை சுப்ரமணியக் கடவுளான முருகனுக்கு உரிய செவ்வாய், கார்த்திகை, விசாகம், பூசம், உத்திர நாட்களில் படைத்துத் தானமளித்தல், ஸ்ரீஅகஸ்தியரின்  நவரத்தின மாலைத் துதிகளை மனனம் செய்து தினமும் ஓதுதல், பறவைகளுக்கு, குறிப்பாக மணிப் புறாக்களுக்குத் தானிய மணிகளை அளித்தல், கீழமாத்தூர் சிவபெருமானை மாதந்தோறும் பிறந்த நட்சத்திர தினத்தில் வழிபடுதல் போன்றவை இவர்களுக்கு உரிய "மணியான" வாழ்க்கை வைராக்யக் கடமைகளாம்.

"மணி" என்று சொல்லிப் பாருங்கள்!  உதடுகள் மூடித் திறந்து நாதக் கோலான, ணகர மணியாகிய நாக்கைக் காட்டும். இதுவே ஆலய மணியின் "மணி நாக்கைச்" சுட்டிக் காட்டுகின்றது!  ஓங்காரப் பொருளானது ஆலய மணியில் ஸ்வரசயன யோகம் பூண்டிருக்கும். இவ்வாறு பிரணவ யோக நித்திரையில் ஆழ்ந்து இருக்கும் "கண்டா மணியில்", நடு (ஸ்வர) நாக்கானது, வெண்கல மணியின் உதடுகளை உரசி, உரசித் தானே ஓங்கார நாதத்தை ஆலய மணிச் சப்தமாக எழுப்புகின்றது!  எனவே பலராலும் அறியப்படாது எங்கோ குக்கிராமத்தில் இருக்கும் பழமையான கோயில்களில் "கண்டாமணி" ஒலித்துப் பூஜிக்கும் வண்ணம் இவர்கள், தம் வாழ்நாளில் பல ஆலயங்களுக்குப் "பெரிய கண்டா மணிகளைத்" தானமாக அளித்து வர வேண்டும். இவர்கள் ஆலய மணி சப்தத்தில் லயித்துத் தியானத்தை மேற்கொள்தல் சிறப்புடையதாம்.

அகண்ட மணிகாரத் தலமாகப் பொலியட்டும்!

கீழமாத்தூர் சிவாலயம் ஒரு யுகத்தில் தேவர்களே பல்லாயிரம் மணிகளை "அகண்ட மணிகாரமாக" ஒலித்துப் பூஜித்த விசேஷமான ஆலயமாம்!  இத்தலப் பரவெளியில் மிக அபூர்வமான சப்த நாளக் கதிர்கள் மிதக்கின்றன. சப்த ஸ்வரங்களுக்கு அப்பாற்பட்ட அபூர்வமான ஸ்வர நாதங்களை இங்கு குரு வழிகாட்டுதலுடன் ஸ்வரயோக நிலையிற் பெற்றிடலாம். பல மகரிஷிகள் கோடிக்கணக்கான வேத மந்திரங்களை கிரகித்துத் தருவதற்காக ஸ்வரதீர்க யோகம் பூண்ட தலங்களுள் இதுவும் ஒன்றாம். சப்த ஸ்வரங்களின் சக்திகள் பரிணமிக்கும் மிகவும் அபூர்வமான தலம்!

ஸ்ரீநந்திமூர்த்தி திருவேடகம்

அனல் வாதம், புனல் வாதத்திற்கான ஞானசம்பந்தப் பெருமான் திருவேடகம் விரைகையில், அகண்டகார மணியொலிகளாகப் பல்லாயிரக் கணக்கான மணிகள் இத்தலத்தில் விண்ணளாவ நாதமெழுப்பி சம்பந்தர் பெருமானை வியக்கச் செய்து, வாதங்களுக்கான "மணிகர்ணிகா பத்திரங்களை" சூக்குமமாக வடித்துத் தந்த அரும்பெரும் சிவத்தலம்! மேலும் புனல் வாதத்தில் ஆற்றை எதிர்த்துச் சென்ற சுவடிகள் கீழமாத்தூர் வைகைக் கரையில் சென்றிட்ட போது ஆலய மணிகள் தாமாகவே ஒலித்து மக்களை வர வழைத்து பக்தியுடன் சுவடிகளை வணங்கச் செய்தத் திருத்தலம். இன்றோ தகரக் கொட்டகையுடன் அஷ்டபந்தன மருந்துமின்றி மெலிந்து திருப்பணிகளுக்காக ஏங்குகின்றது!  மணி வகைப் பெயருடையோர் எடுத்துச் செய்திடலாமன்றோ!

பாற்கடலின்கண் தோன்றிய விடத்தை உண்டு, பிரபஞ்சத்தைக் காத்து, நீலகண்டனாகி, தான் கொண்ட விடத்தை நீலமணிகள் ஆக்கித் தம் திருமார்பில் அணிந்த ஈஸ்வரனே ஸ்ரீமணிகண்டேஸ்வரர்!  பல கோடி யுகங்கள் பாற்கடலினுள் கூர்ம மூர்த்தியாய் அமிழ்ந்து யோகம் பூண்ட திருமாலின் ஆயாசம் தீர்வதற்காக, ஸ்ரீமணிகண்டேஸ்வரர் திவ்யமான நீல ஸ்வரமணிகளால் நட்டுவாங்கம் எழுப்பி, நீல மணிமாலைகளைச் சூடியவராய் நடனமாடிக் கூர்ம மூர்த்தியின் களைப்பை மறைந்திடச் செய்திட....கூர்ம அவதார வடிவிலிருந்து சுந்தர (மணி) மாணிக்கப் பெருமாளும் உற்பவித்த மணியான திருத்தலமிது!  ம, ண என்ற இரண்டு மெல்லின அட்சரங்கள் இணைந்து வருதலால் மணி என்ற சொல் இசையுடன் பெரிதும் சம்பந்தப்பட்டதாம். நீலமணி சப்தத்தில் இருந்து எழுந்த ராகமே மணிரங்கு ராகமாகும்! இசைக் கலைஞர்கள் இத்தலத்தில் மணிரங்கு ராகப் பாடல்களைப் பாடுதல், இசைத்தல் இல்லத்திற்கும், நாட்டிற்கும், உலகிற்கும் பெரும் சாந்தத்தைத் தருவதாம்!

தட்சிணாயனம்

தட்சிணாயனப் புண்யகாலம்

சூரிய சாளர பூஜைகள்!

உத்தராயணம் பிறக்கும் தை மாதம் முதல் தேதியும், தட்சிணாயனம் உதிக்கும் ஆடி மாத முதல் தேதியும் மிக மிகப் புனிதமான பித்ரு பூஜைக் காலங்களாகவும் விளங்குகின்றன. இவ்விரண்டையும் சூரிய சாளரப் பூஜைகள் எனச் சித்தர்கள் சிறப்பாகப் போற்றுகின்றனர். பித்ரு மூர்த்திகளுடைய நல்லாசிகளைப் பெறுவதற்கு இந்த சூரிய சாளரப் பூஜைகள் தாம் பெரிதும் துணைபுரிகின்றன.

தட்சிணாயனம் மற்றும் உத்தராயண நாட்களை வடக்கு, தெற்கு அயன திசைகளில் சூரிய பாதைக்கேற்ப  சூரிய சாளரச் சக்கரங்கள், யந்திரங்கள் மாற்றி அமைக்கப்படுகின்ற நாட்களாகச் சித்தர்கள் விளக்குகின்றனர். ஆம், நமக்கு சூரிய ஒளிக் கிரணங்கள் கிட்டுவதும் சூரிய மண்டலத்தின் ஒரு சாளரப் பாதை மூலமாகவேயாம். இதில் ஒன்பது துவாரங்கள் இருக்கும். இந்த ஒன்பது துவார சாளரத்தில் ஏழு துவாரங்கள் வழியாகவே பூலோகத்திற்கு சூரியக் கிரணங்கள் பாய்கின்றன. மீதமிரண்டும் உத்தம பாஸ்கர யோக நிலைகள் மூலமாகப் பெறுவதாம்!  ஜீவ சக்தி, பிராண சக்தி, அக்னி சக்தி, பித்ரு சக்தி போன்ற ஏழு விதமான ஜீவ வாழ்விற்கான மிகவும் முக்கியமான சூரிய சக்திகளை இந்த சாளர துவாரங்கள் அளிக்க வல்லவையாம்!

மேலும் பூலோகம், தேவ லோகம், பித்ரு லோகம், நாரத லோகம், கந்தர்வ லோகம் போன்ற பல லோகங்களிலும் விதவிதமான சூரிய ஒளிக் கிரணங்கள் பல சூரியச் சாளரங்கள் மூலமாகப் பாய்கின்றன!  பல லோகச் சூரியக் கிரணங்களும், பலவிதமான வண்ணங்களைக் கொண்டவையாம். பூலோகத்தில் காணக் கிடைக்காத பல வண்ணங்களையும் தேவ லோக, பித்ரு லோகங்களில் கண்டிடலாம்.

ஒவ்வொரு அயனக் காலத்திலும், அதாவது ஒவ்வொரு தமிழ் ஆண்டின் உத்தராயண மற்றும் தட்சிணாயன நாட்களில் இந்த எழு சாளரங்களிலும், ஏழு மஹரிஷிகள் அமர்ந்து ஸ்ரீசப்தரிஷீஸ்வரரைப் பூஜித்து அந்தந்த லோகத்துக்கு உரிய சூரிய கிரணப் பாதையை நமக்கு நிர்ணயித்துத் தருகின்றார்கள்.

லால்குடி சிவாலயம்

சாளரக் கோயில்கள்!

திருச்சி அருகே லால்குடி (திருப்பெருந்துறை), துறையூர் அருகே சப்தநாளப்பட்டி, கும்பகோணம் அருகே அம்மாசத்திரம் இவ்வாறாக ஸ்ரீசப்தரிஷீஸ்வரராக அருள்பாலிக்கின்ற சிவலிங்க மூர்த்திகள் சப்தரிஷிகள் மூலமாக அந்தந்த உத்தராயண, தட்சிணாயனப் புண்ய காலத்திற்கான சூரிய சாளரச் சக்கரங்களை வடிவமைத்துப் பலாபலன்களைப் பகுத்துத் தருகின்றார்கள். இவ்வாறாக உத்தராயண, தட்சிணாயன வழிபாடுகளையும், பித்ரு பூஜைகளையும் நிகழ்த்த வேண்டிய ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் ஆலயம், பித்ரு முக்தித் தலங்கள், சாளரக் கோயில்களும் நிறைய உண்டு.

சூரியச் சாளரம் என்றால் என்ன?

சாளரக் கோயில் என்றால் மூலவருக்கு எதிரே ஆலயத்தில் மூலத்தான நுழைவாயில் இல்லாது, எதிரே சுவற்றில் சில பலகணித் துவாரங்களுடன் அமைக்கப்பட்டு பக்கவாட்டுக் கதவு வழியே உள்ள சென்று சுவாமியை வழிபடும்படி அமைந்திருக்கும். திருஆனைக்கோயில், காஞ்சீபுரம் அருகே பெருநகர் சிவாலயம், சென்னை திருவேற்காடு சிவன் கோயில், வியாசர்பாடி ஸ்ரீரவீஸ்வரர் ஆலயம் போன்றவை சாளரக் கோயில்களாம்.

இவை யாவும் சூரிய பகவான் உத்தராயண, தட்சிணாயனக் காலங்களில் தமக்குரிய வேத அயன சக்திகளைப் பெறுகின்ற திருத்தலங்கள் ஆகும். ஆம், இந்த சாளரக் கோயில்களில் உள்ள நவசாளரங்கள், சப்த சாளரங்கள் மூலமாகத்தான் சூரிய பகவான் தன்னுடைய உத்தராயண, தட்சிணாயனப் புனித நாட்களில் தனக்குரிய, அடுத்த அயனத்திற்குத் தேவையான சூரிய கிரண சக்திகளைப் பெற்று நமக்கு அளிக்கின்றார். அயன சக்திகள் மிகுந்துள்ள இச்சாளரத் தலங்களில் தட்சிணாயன, உத்தராயணப் புண்ய கால பூஜைகளையும், தர்ப்பணங்களையும் நிகழ்த்துவது மிகவும் சிறப்புடையதாகும்.

அயனப் படி பூஜைத் தலங்கள்!

சில பெருமாள் ஆலயங்களிலும் பெருமாளை தரிசிக்கச் செல்லும் திருப்படிகளாக ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனப் பாதைப் படிகளும், தையிலிருந்து ஆனி வரை உத்திராயணப் பாதைப் படிகளும் திறந்து இருக்கும். கும்பகோணம் சக்கரபாணி, சாரங்கபாணி கோயில்கள், திருச்சி அருகே திருவெள்ளறை ஆலயங்களில் இத்தகைய இரு அயனப்படி அமைப்பைக் காணலாம்! தக்க அனுமதியுடன் இத்தலங்களில் தட்சிணாயன புண்ய நாளில் படி பூஜை செய்திடுக!

சித்ரபானு ஆண்டின் தட்சிணாயனப் புண்ய காலம் பிறக்கின்ற ஆடி முதல் நாளிலே சாளரக் கோயில்கள், ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் தலங்கள், தட்சிணாயனப் படித் திறப்பு உள்ள ஆலயங்களில் ஏழு விதமான புஷ்பங்களை தங்கம், வெள்ளி, வெண்கலம், தாமிரம், உத்தராணி மரத் தாம்பளம் என அவரவர் வசதிகேற்ப வைத்துப் பூஜிக்க வேண்டும்.

சப்த புஷ்பத் தர்ப்பணம்!

தர்ப்பண பூஜைக்கு உரித்தான தாம்பாளத்தில் ஏழு விதமான புஷ்பங்களின் மேல் கோதுமை நிரப்பி இதன் மேல் தர்ப்பணம் அளித்தல் சித்ரபானு ஆண்டிற்கு உரித்தான தட்சிணாயனப் புண்ய காலத் தர்ப்பண பூஜையாகச் சித்புருஷர்கள் அருள்கின்றார்கள். பிறகு இந்த கோதுமை தானியத்தைப் பறவைகள், எறும்புகள், பசுக்களுக்கு உணவாக்கி அளித்தல் விசேஷமானதாம். இதனால் நெடுநாள் தர்ப்பணம் அளியாமைக்கான பித்ரு தோஷங்கள் ஓரளவு தணிய சூரிய லோகச் சித்தர்களும், மகரிஷிகளும் அரும்பாடுபடுவர். இதற்காகத் தம் தபோபலத்தின் புண்ணிய சக்திகளில் ஒரு பகுதியை சூரிய மண்டலத்தைச் சேர்ந்த யாக்ஞ்யவல்ய மஹரிஷி, ரைவத மஹரிஷி, பைரவ மஹரிஷி போன்றோர் இத்தகைய ஆலயங்களில் அர்ப்பணித்துத் துணை புரிகின்றார்கள். இந்நாளில் சூரிய பகவானுக்கு உரித்தான ஆரஞ்சு நிற ஆடைகளையும், கோதுமை வகை உணவுகளையும், பவளம் பதித்த நகைகளையும் ஏழைகளுக்குத் தானமாக அளித்தலால் சுவாசம், வயிறு சம்பந்தப்பட்ட நோய்களால் அவதியுறுவோர் தக்க நிவர்த்திகளைப் பெறுவார்கள்.

தெற்கும் வடக்கும் பார்த்த தென்னாடுடைய சிவன்!

தட்சிண அயனம் என்றால் தெற்கில் அமைகின்ற சூரிய பாதை என்று பொருள்தானே! எனவே தெற்கும் மற்றும் வடக்குப் பார்த்த சிவ சந்நிதிகள், பெருமாள் சந்நிதிகளில் இன்று தெற்கில் நோக்கி அமர்ந்து தட்சிணாயனப் புண்யகால பூஜைகளை, தர்ப்பணங்களை நிகழ்த்துவது மிகச் சிறந்ததாகும். பொதுவாக மூலவருக்குப் பின்கோஷ்ட மூர்த்தியாக ஸ்ரீதட்சிணாமூர்த்தி அமைந்தால் மூலவர் வடக்குப் பார்த்தவராக அமைவார் (சென்னை கோயம்பேடு சிவாலயம், மயிலாப்பூர் ஸ்ரீவீரபத்ர சுவாமி ஆலயம், குளித்தலை ஸ்ரீகடம்வனேஸ்வரர் ஆலயம்).

ஸ்ரீதட்சிணாமூர்த்தி குளித்தலை

இங்கு இன்று சுவாமிக்கு எள் காப்பு, நல்லெண்ணெய் காப்பு இட்டு எள் உருண்டை படைத்தல், பிரண்டை கலந்த உணவை நைவேத்யமாக அளித்தல், ஏழுவிதமான புஷ்பங்களால் அர்ச்சனை செய்தல், ஏழு வண்ண நிற ஆடைகளை சுவாமிக்கு அணிவித்தல் போன்ற வழிபாடுகளைக் கடைபிடித்துத் தட்சிணாயனப் புண்யகால பூஜா பலன்களைப் பெற வேண்டும்.

அனைத்துச் சாளர ஆலயங்களிலும் இவ்வரிய தட்சிணாயன, உத்தராயண சூரிய சாளர யந்திரப் பாதைகளுக்கு மூல யந்திர சக்தியை அளித்து வடிவமைத்துத் தந்தவர் தான் திருவலஞ்சுழியில் வீற்றிருக்கின்ற ஸ்ரீஸ்வேத விநாயகர் ஆவார். கடல் நுரையால் சுயம்புவாகத் தோற்றுவிக்கப் பெற்ற திருவலஞ்சுழி விநாயகர் ஆதலின் அபிஷேகம் கிடையாது! பச்சைக் கற்பூரமே சார்த்தப்படும். எனவே, திருவலஞ்சுழி விநாயகர் சந்நிதியும் சாளரக் கோயிலே!  இங்கு விநாயகர் முன்னாலும் அதியற்புதப் பலகணி அமைந்து சாளரக் கோயிலாக இருப்பது நமக்குப் பெரும் பாக்யமே!  இன்று இங்குள்ள தீர்த்தத்தில் தர்ப்பண வழிபாடுகளைச் செய்வதால் பலவிதமான மனக்கஷ்டங்களுடன், பணத் தடங்கல்களுடன், கடுமையான வியாதிகளுடன் இறந்த தந்தை வழி மூதாதையர்களுக்கு நற்கதி கிட்ட நல்வழி பிறக்கும்.

சாளரக் கோயில்களில் தட்சிணாயன வழிபாடு!

சாளரக் கோயில்களாக அமைந்துள்ள சிவாலயங்களில் சிகப்பு நிறப்பட்டு வஸ்திரம் சார்த்தி அல்லது சிவப்பு நிற மாதுளை, அல்வா போன்றவற்றால் காப்பிட்டுச் சிவனை வணங்கி அடிப் பிரதட்சிணம் செய்து வழிபாடு செய்தலால் வியாபாரம், வீடு, நிலம் போன்றவற்றில் முடங்கிக் கிடக்கின்ற பணம் நன்முறையில் மீண்டு வரும் அல்லது முதலீடு செய்யப்பட்ட தொழில் நல்ல அபிவிருத்தி அடைவதாகும். இந்த ஆலயங்களில் குறைந்தது 50 ஏழைகளுக்காவது தர்ப்பணத்தின் சிறப்புத் தன்மையை விளக்கி அவர்களும் தர்ப்பண வழிபாடுகளைக் கடைபிடிக்கும்படி துணை புரிவதால் பல்லாயிரம் ஆண்டுகளாக ஏதேதோ லோகங்களில் பல கடுமையான கர்ம வினைகளால் முடங்கிக் கிடக்கின்ற மூதாதையர்களுக்கு நல்வழி கிட்டும். எனவே இது சித்ரபானு ஆண்டின் மகத்தான தட்சிணாயனப் புண்ய கால பூஜையாக விளங்குகின்றது.

ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோயில்களில் இன்று இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், வேப்பெண்ணெய், செம்பருத்தித் தைலம், மருதாணித் தைலம் ஆகிய ஏழு வகைத் தைலங்களை ஒன்று சேர்த்துப் புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி, பச்சைக் கற்பூரத்துடன் சேர்த்து சுவாமிக்கு எண்ணெய்க் காப்பிட்டுக் குறைந்தது ஏழு மணி நேரமாவது தைலக் காப்பிட்ட தரிசனத்தைப் பலரும் தரிசனம் காணும்படி செய்தலால் சொத்து, முதலீடு, வியாபாரம் போன்றவைக் காரணமாக நெடுந்தொலைவு பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேருவதற்கு இந்த தட்சிணாயனப் புண்ய கால பூஜை பெரிதும் உதவும். மேலும் கடைசி காலத்தில் வெளியூரில், அயல் நாடுகளில் வாழ்ந்துள்ள மகன், மகளைப் பார்த்திட வேண்டும் என்று ஏங்குகின்ற பெற்றோர்கள் இப்பூஜைகளை நன்கு கடைபிடித்தால் நன்முறையிலே தம் பிள்ளைகள் தாய்நாடு திரும்பி வருகின்ற நல்வாய்ப்புகள் கிட்டும்.

தட்சிணாயனப் புண்யகால அருணாசல கிரிவலம்!

தட்சிணாயனப் புண்ய காலத்தில் திருஅண்ணாமலையில் கிரிவலம் வந்து குறைந்தது 12 இடங்களில் தர்ப்பணப் பூஜைகளை நிகழ்த்துவது சிறப்புடையதாகும். இதனால் தன்னுடைய வாழ்நாளில் கிரிவலம் வராமல் வாழ்நாளை முடித்தவர்கள் எதிர்வரும் பிறவிகளிலோ அல்லது அவர்களது சந்ததி மூலமாகவோ நன்முறையில் ஓரளவேனும் கிரிவல பலாபலன்களைப் பெறுவதற்கு சித்ரபானு ஆண்டின் தட்சிணாயனப் புண்ய கால கிரிவல பூஜை பெரிதும் துணை புரியும்.

திருஅண்ணாமலையில் இரண்டு சிங்கமுக தீர்த்தப் பகுதிகளிலும், எமலிங்கம், இந்திர தீர்த்தம், அபய மண்டபம் அருகேயுள்ள பித்ரு முக்தித் தீர்த்தம், குபேர லிங்கம் ஆகிய ஏழு இடங்களில் தர்ப்பணத்தை நிகழ்த்துதல் வேண்டும்.

இவ்வாறாக தட்சிணாயனப் புண்ய கால பூஜை, தர்ப்பணங்களால் மலை போல் திரண்டுள்ள பித்ரு தோஷங்களும், சாபங்களும் ஓரளவேனும் தீர்ந்து பித்ருக்களுடைய நல்லாசிகளைப் பெறுதற்குத் துணை புரியும்.

சப்த கந்த லிங்க அடியார்

திருஅண்ணாமலைச் சித்தர்கள் சப்த கந்த லிங்க அடியார்
மாத சிவராத்திரி கிரிவல மகிமை

பல நூற்றாண்டுகளுக்கு முன் திருஅண்ணாமலையில் மானுட ரூபத்தில் நடமாடி மக்களோடு மக்களாய் வாழ்ந்து, மறைந்து, ஜீவாலயம், ஜீவ சமாதி பூண்டு என்றும் வாழும் ஏகாந்த ஜோதிகளாகப் பரிமளிக்கும் எண்ணற்ற சித்தர்களைக் காண இத்தொடரின் மூலம் அனைவரையும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதான அருணாசலப் புனித பூமிக்கு இட்டுச் செல்கின்றோம்.

1850ம் வருடத்திற்குப் பிறகான திருஅண்ணாமலை வாழ் மாமுனிகளையே, மகரிஷிகளையே நாம் அறிந்துள்ளோம். இதற்குப் பல்லாயிரமாண்டுகள் முன்னர் திருஅண்ணாமலையில் வாழ்ந்து, உறைந்த எண்ணற்ற சித்தர்கள், யோகியர்கள், மகரிஷிகள் பலரையும் பற்றிய அரிய அனுபூதி விளக்கங்களை இவ்வரிய தொடரில் குருவருளால் அளிக்கின்றோம்.

சப்த கந்தங்கள் என்ற ஏழு கந்த சக்திகள் மனித வாழ்க்கையில் முக்யத்துவம் பெறுகின்றன. இவை ஏழும் முழுமையாக ஆக்கம் பெற்றால்தான் ஆறாம் அறிவாம் இறைப் பகுத்தறிவும் பரிபூரணமாக இயங்கும். மனிதனின் பல ஆற்றல்கள், சக்திகளையும் இந்த ஏழு கந்தங்கள் குறிப்பதோடு, இவற்றால் பல சமயங்களில் மனிதனிடம் ஏற்படும் பலவிதமான மாறுதல் நிலைகளையும் சுட்டிக் காட்டுகின்றன.

ஏழிற் சுரக்கும் இன்னமுதம்!

முள், நார், சக்கை, தழை, கொட்டை உள்ள பலாப் பழத்தைப் பக்குவமாகப் பிரித்து அமிர்தச் சுவை நிறைந்த பலாச் சுளையைத் தனித்தெடுத்துச் சுவைப்பது போல், சப்த கந்தங்களின் செயற்பாடுகளை உணர்ந்து ஆசைகள், நிராசைகளைத் தரம் பிரித்து வாழ்வைச் செம்மையாக்குவதே சப்த கந்த லிங்க சித்தர் அருளிய ஏழு கந்தக் கோட்பாடுகளாம்.

"ஏழு கந்தத்துள் இனிய சுளை நாதம்!" என்பது சித்தர்கள் சப்த கந்தங்களைப் பற்றி உணர்த்துகின்ற பரிபாஷை! நாக கந்தம், பிரவேஷ கந்தம், பூரித கந்தம், அந்தர் சுஷும்னா கந்தம், அபிலாட்ச சங்கம கந்தம், கிரக பதார்த்த கந்தம், அனலேஷு கந்த கந்தம் எனவாக ஏழு வகை கந்தங்களே இவையாம்.

இதில் முதலாவதான நாத கந்தமானது மனிதனை மனிதனாக ஆக்க வல்லதாம். இறைப் பகுத்தறிவு ஒன்றே மனிதன் பெற வேண்டிய பரிபூரணமான உத்தம நிலைகளைத் தரும். ஆனால் அளவுக்கு மீறிய பேராசைகள், முறையற்ற ஆசைகள், நிராசைகள் போன்றவை "துர்நாற்றப்" பிழைகளாக, பிணிகளாக மனிதனுக்குள் புகுந்து அவன் முழு மனிதனாக வாழ இயலாது அரைகுறை மனிதனாகவே அழுந்தி விடுகின்றான்.

இரண்டாவதான பிரவேஷ கந்தமானது ஐந்து அறிவு நிலை வரை, ஜீவன்களின் அறிவை விருத்தி செய்து, நுண்புல உணர்வுகளை மேம்படுத்திடும். மனித ஆற்றலால் செய்ய இயலாததைச் செய்து காட்டும் வல்லமை உடையது. மது, புகை, முறையற்ற காமம், பக்தியின்மை இவற்றில் உழலும் மனிதன் ஓரறிவு, இரண்டே கால் அறிவு எனக் குறைந்த அறிவு சக்திக்கு உள்ளேயே உழல்கின்றான். அறிவை அழிக்கும் துர்நாற்ற வினைகளை வென்று களைந்திடப் பிரவேஷ கந்த சக்திகள் துணை புரியும்.

கண்ணால் காண்பதை எல்லாம் அடைய வேண்டும் என்ற எண்ணங்கள் பலருக்கும் ஏற்படும் அல்லவா! இவற்றில் நியாயமான, முறையான விருப்பங்களைப் பூரித கந்த சக்திகளின் துணை கொண்டு அடைந்திடலாம்.

வற்றா நீரூற்றுப் போல் ஊறும் ஆசைகளை முதலில் சுத்திகரிக்க வேண்டும். அந்தர் சுஷுமனா கந்த தன்மைகள் உள்ளத்தில் எழும் ஆசைகளை முறைப்படுத்தி, நிலைப்படுத்தி, பதப்படுத்தித் தர வல்லவை.

அபிலாட்ச சங்கம கந்தமானது மனிதனுடைய அபிலாட்சைகளை (விருப்பங்களை) முறையாகச் சங்கமம் ஆக்கி காரிய சித்தியாக உதவும் Marketing, management and technology ஆகிய மூன்றையும் முறையாகச் சங்கமிக்கச் செய்து வெற்றியை ஆக்கித் தருவதே அபிலாட்சம சங்கம கந்தமாகும்.

கடும் உழைப்பு இருந்தாலும் ஊழ்வினை பாரத்தால் ஒரு மனிதன் வெற்றி இல்லாது செயல் இழந்திருப்பதைத் தக்க பரிகாரம், பிரயாசித்தம் மூலம் சீர்படுத்திக் காரிய சித்திக்குத் துணை புரிவதே கிரக பதார்த்த கந்தமாம்.

அனலேஷு கந்த கந்தமானது வாழ்வின் லட்சியமானது பகைமை, விரோதம், குரோதம், பொறாமை காரணமாகச் சீர்குலையாதுக் காத்திட்டு, சமய சந்தர்ப்ப சூழ்நிலைத் தன்மைகளுக்கு ஏற்பச் செயல்பட வைப்பதாம்.

இவ்வாறாக இந்த ஏழுவிதமான (சப்த) கந்தங்களின் பணிகளைக் கொண்டு  மனிதர்களின் வாழ்வைச் சீர்படுத்திட, சப்த கந்த லிங்க அடியார் எனும் சித்தர்பிரான் பல்லாண்டுகளாகத் தினமும் ஏழு முறை அருணாசலத்தை கிரிவலமாக வந்து அவற்றின் தபோபலன்களை சப்த கந்த பரிபாலனத்திற்காக அண்ணாமலை தரிசனங்களில் அர்ப்பணித்துள்ளார். இவ்வாறு சப்த கந்த பரிபாலன வைராக்யத்தை அவர் பூண்ட நாளே பிரம்ம முகூர்த்த சங்கர்ஷண மாத சிவராத்திரியாகும்!  இதுவே இவருடைய தியாக சீலத்தை ஒட்டிப் பின்னர் "சப்த கந்த லிங்க அடியார்" சிவராத்திரி ஆயிற்று!  மல மூத்ராதிக் கழிவுகளைக் கடந்த உத்தம நிலைகளை அடைந்த சித்தர்பிரான்! எனவே இவருடைய தேகத்தில் எப்போதும் இயற்கையாக நறுமணம் பொங்கிடும்.

பொன்னார் மேனியனுக்குப் பொன்னான கிரிவல பூஜை!

இவருடைய ஜடாமுடியில் இருந்த முடிகள் பொன்னை விட உயர்ந்த "பசும் பொன்னால்" ஆனவை! இவை தாமாக உதிர்வதில்லை!  இறைச் சங்கல்பமாகவே மாத சிவராத்திரி தோறும் பசும்பொன் ஏழு முடிகள் இவர் சிரசிலிருந்து உதிரும்!  பிறகு அடுத்த மாத சிவராத்திரி வரை ஒரு மாதம் உண்ணாநோன்பு!  இடையே தினமும் ஏழு கிரிவலங்கள் தொடரும்! ஒரு நாளில் ஏழு கிரிவலங்கள் நிறைவடைந்த பிறகு சப்த கந்த லிங்க அடியார் ஓரிடத்தில் அமர்ந்து ஆழ்ந்த தியானம் செய்வார்.

சப்த லிங்க பூஜைகள்!

மாத சிவராத்திரி அன்று முதல் முறை கிரிவலம் வந்ததும் அவருடைய சிரசிலிருந்து பசும் பொன் முடியொன்று உதிரும். அதனைத் தரையில் படா வண்ணம் பூம்ய தேவதைகள் வாழைப் பூவின் மடலில் தாங்கி பூமியில் வைத்திட அது உடனே பூமிக்குள் மறைந்திடும்! இவ்வாறு ஏழு கிரிவலங்களிலும் ஏழு பசும்பொன் முடிகள் உதிர, அவை ஏழு இடங்களில் பூமியின் அடியிற் புதைந்தன!  இவ்வாறு பல்லாண்டுகள் அவர் கிரிவலம் வந்த போது அருணாசல ஈசனே, "முதல் கந்தம் முற்றியது, இரண்டாம் கந்தம் முற்றியது!" என ஏழு கந்தங்களுக்கும் சீர்வளத் திரு உரை தந்தவுடன் அவருடைய திருச்சுடராக அந்த ஏழு இடங்களிலும் ஏழு சிவலிங்கங்கள் தோன்றின. இவை யாவும் சப்த கந்த லிங்கங்கள் ஆகும்.

மனித ஜீவ வாழ்க்கையில் ஏழு கந்தங்கள் ஒவ்வொன்றும் சீராக இயங்கி, மாயைகள், குறைகள், வினைகள் சீர்திருத்தப்பட்டு, கந்த குணப்பாடுகள் வாழ்வில் செறிந்திடத் தன் தபோ பலன்களை சப்த கந்த லிங்க அடியார் ஏழு லிங்கங்களின் பீடங்களில் அர்ப்பணித்தார்.

கிரிவலத்தின் ஏழு பகுதிகளில் தோன்றிய இவற்றை அபிஷேக ஆராதனைகளுடன் தன் பசும்பொன் முடிகளில் தோன்றிய பொன்மய நாகலிங்கப் புஷ்பங்களால் அர்ச்சித்துச் சித்தர்பிரான் வழிபடுகையில் இறைவன் அருணாசல ஈசனே "சப்த கந்த லிங்க அடியாரே" என விளித்து அவரைப் போற்றிட்டார்.

பல்லாண்டுகள் மானுட சரீரம் தாங்கிப் பூஜித்து வந்த சப்த கந்த லிங்க அடியார் ஒரு சிவராத்திரி தினத்தில் ஜீவ சமாதி பூண்டிட, அதே சமயத்தில் ஏழு கந்த லிங்கங்களில் தோன்றிய ஏழு சப்த சகஸ்ர ஜோதிகள் விண்ணை அடைந்தன.

இவ்வாறு சிறப்புற்ற சப்த கந்த லிங்க அடியார் தூல வடிவில் கிரிவலம் வருகின்ற நாளே வருகின்ற சித்ரபானு ஆனி மாத சிவராத்திரி நாளாகும். சப்த கந்த சக்திகளைப் பக்குவம் செய்து, பதப்படுத்தி, சீராக்கும் அரிய நாள்!  இன்று அருணாசலத்தை கிரிவலம் வந்து உங்களுக்கு மனதாரத் தோன்றுகின்ற ஏழு இடங்களில் அகல் விளக்குகளை ஏற்றி,

ஓம் சப்த நாதாய வித்மஹே சப்த வேதாய தீமஹி
தந்நோ சப்தகந்தலிங்க சித்புருஷ ப்ரசோதயாத்

- என ஓதியவாறு, சப்த கந்த லிங்க அடியாரைத் தியானித்துக் கிரிவலம் வந்திடுக!  பலவிதமான ஆசைகளால், விருப்பங்களால் அல்லல்பட்டு வாழ்வோர், "ஏன் தான் இந்தக் காரியத்தைத் தொடங்கினோமோ தெரியவில்லையே" என்று மனம் நொந்து வருத்தம் அடைவோர் தம் விருப்பங்களைச் சீராக்கிப் பெருந் தொல்லைகளில் இருந்து தீர்வு பெற உதவும் மாத சிவராத்திரி!

அளவுக்கு மீறிய செலவு, கழுத்தைப் பிடிக்குமளவு கடன், தன் சக்தி, தன்மைக்கு மீறிப் பல காரியங்களில் இறங்கித் திகைப்போர் தக்க தீர்வுகளைப் பெற இன்று ஆழ்ந்த நம்பிக்கையுடன் கிரிவலம் வந்திட வேண்டும்!

பௌர்ணமி நாள்: 23.7.2002 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.29 மணி முதல் 24.7.2002 புதன் பிற்பகல் 2.37 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பௌர்ணமி திதி அமைகிறது.

கிரிவல நாள்: 23.7.2002 செவ்வாய்க்கிழமை இரவு.

8.7.2002 திங்கள் மாலை 5.56 மணி முதல் 9.7.2002 செவ்வாய் மாலை 5.13 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி ஜூலை மாத சிவராத்திரித் திதி நேரம் அமைகின்றது.

ஜூலை மாத சிவராத்திரி கிரிவல நாள்: 8.7.2002 திங்கள் இரவு.

தட்சிணாயனப் புண்ய கால நாள்

சில பஞ்சாங்கங்களில் ஆனி மாதத்திற்கு 31 அல்லது 32 நாட்கள் வைப்பதால் ஆடி மாத முதல் தேதியானது ஜூலை 17 அல்லது ஒரு நாள் முன் பின்னாக இருக்கும். திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 16.7.2002 செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்குக் கடக ராசியில் சூரியன் பிரவேசிப்பதால் இந்நேரத்தில் தட்சிணாயனம் தொடங்கி விடுகின்றது. எனவே 17.7.2002 அன்று ஆடி முதல் தேதி ஆகும். ஆடி பிறக்கும் தட்சிணாயன நாள் பற்றி ஆலயங்களில் நன்கு விசாரித்து தட்சிணாயன பூஜை, அயனப் படிபூஜைகளை அறிந்து கடைபிடிக்கவும்.

அமுத தாரைகள்

மனித உடலில் மலரும் நவகிரக சக்திகள்

ஞாயிறு முதல் கேது வரையிலான ஒன்பது கிரகங்களும் மனித உடலில் குறித்த பகுதிகளில் அமைந்து அந்தந்த கிரக சக்திகளைப் பெற்றுப் பிரகாசிக்கின்றன. எனவே அனைத்து நவகிரக மண்டலங்களும் மனிதனுடைய உடலில் நிறைந்துள்ளன. ஒவ்வொருவர் உடலிலும் அவரவர் நட்சத்திரம், கர்ம வினைகளுக்கு ஏற்ப அவரவர் உடலில் நவகிரக சக்திகள் மாறுபடும். அனைவருள்ளும் ஆத்மமாய் இறைவன் உய்கின்றான், எல்லோரிடமும் நவகிரக சக்திகள் நிறைந்துள்ளன என்றாலும் இதை ஆக்கப் பூர்வமாக உணர்ந்தால் தானே பயன் பெற முடியும். இதற்கான வழிமுறைகளைச் சித்தர்கள் அருள்கின்றார்கள். ஒரு நாளின் கால உட்பிரிவுகளாக சூரியன், சுக்ரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என ஏழு கிரக ஹோரை நேரங்களும் மணிக்கு மணி நேரமாய்ச் சுழற்சியாக வந்து கொண்டு இருக்கின்றன. இந்த ஹோரை நேரங்களுக்கு உள்ளேயே மனிதனின் ஆயுள் காலம் சுழல்வதால் அவனுடைய உடலில் உள்ள கிரக சக்திகளுக்கும், விண்வெளியில் உள்ள கிரக சக்திகளுக்கும் இடையே இணைப்புகளும், வித்யாசங்களும், ஒற்றுமைகளும் மாறி, மாறி ஏற்படும். இதனால் தான், இதைப் பொறுத்துத்தான் ஒவ்வொருவருடைய தினசரி உடல், உள்ளத்தின், மனத்தின் நிலைகளும் அமைகின்றன. ஒரு மனிதனின் உள்ளிருக்கும் கிரக சக்திகளுக்கும், விண்வெளியில் உள்ள கிரக நிலைகளுக்கும் இடையே வித்தியாசம் ஏற்படும் போதுதான் அவனிடத்தில் குழப்பங்களும் நோய்களும், தீய, வன்முறை எண்ணங்கள், முறையற்ற காம உணர்வுகள் போன்றவை உண்டாகின்றன. இவற்றை நிவர்த்தி செய்ய பெறப்பட்டவை தான் பூஜை, தியான, யோக வழிகளும், சித்த ஆயுர்வேத மருத்துவ முறைகளாகும்.

சிம்மேந்திர மேகங்கள் தாம் பெரும் மழைப் பொழிவைத் தருவனவாம். மேலும் சிம்மேந்திர மண் வகை (சூரிய உதயச் சிகப்பு நிறம்), சிம்மாயனப் பாறை உள்ள இடங்களில் நல்ல ஊற்று நீர் உண்டாகும். சூரிய ஹோரை நேரத்தில் சிம்மேந்திர மத்யம ராகத்தில் இறைப் பாடல்களைத் தொடர்ந்து பாடி வந்தால் அவ்விடத்தில் நன்னீர் ஊற்று நன்கு பெருகிடும். அக்காலத்தில் ஆற்றில் முதல் நீர் வருகையில் சிம்மேந்திர மத்யம ராகத்தில் இறைப் பாடல்களைப் பாடி ஆரத்தி எடுப்பார்கள்!  கங்கா தீப பூஜையாக அகல் ஜோதிகளை கங்கையில் இடும் போது இந்த ராகப் பாடல்களே முக்யத்வம் பெறும்.

ஆறு நடராஜ அபிஷேக தினங்கள்

மகரிஷிகள், சித்தர்கள் எப்போதும், எங்கும், எந்நேரமும் ஸ்ரீநடராஜ நடன தரிசன இறைவளத்தைத் துய்ப்பது போல, பூலோகத்தில் நல்பக்தி உடையோருடன் பாமரரும் நடராஜ நடன சக்தியின் அணுவிலும், அணுவை உய்த்து உணரும்படியாகவே ஆலயங்களில், தமிழ் வருடத்தின் ஆறு நடராஜ அபிஷேக தினங்களாக, இறைவனே ஆக்கித் தந்துள்ளான். இந்த ஆறு அபிஷேக நாட்குறிப்பையும் ஸ்ரீநடேச அபிஷேக தின வெண்பாவாக நம் மூதாதையர்கள் தந்துள்ளனர்.

சித்திரையில் ஓணமுதற் சீரானி யுத்திரமாம்
சத்து தனுவாதிரையுஞ் சார்வாரும் பத்திவளர்
மாசியரி கன்னி மருவு சதுர்த்தசிமன்
ஈசரபிஷேகத் தினமாம்

விளக்கம்: சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், தனுவாதிரை- மார்கழி திருவாதிரை, ஆவணி, மாசி, புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகள் ஆக வருடத்திய நடராஜ அபிஷேக விசேஷ நாட்கள் ஆறு ஆகும். இப்பிரபஞ்சத்தை இயக்கும் நடராஜத் தத்துவத்தை விளக்கும் மகத்தான ஆலயப் பண்டிகைகளிவை!

கோஷ்ட மூர்த்திகளின் சிறப்பு

மூலத்தானக் கருவறையைச் சுற்றி அமைகின்ற கோஷ்டப் பகுதியில் அமைந்திருக்கும் அனைத்துக் கோஷ்ட மூர்த்திகளுக்கும் மகத்தான சக்திகள் உண்டு. காரணம், மூலத்தான கருவறை மற்றும் அர்த்த மண்டபத்தை ஒட்டி அமைந்திருப்பதால் மூலமூர்த்திகளிடம் இருந்து எழுகின்ற அதிஅற்புத தெய்வீகக் கிரணங்கள் யாவற்றையும் உடனடியாக கிரகித்து மகத்தான நல்வரங்களைத் தந்து கோஷ்ட மூர்த்திகள் அருள்பாலிக்கின்றார்கள். எனவே தாம் மூலத்தான சக்திகளை இயன்ற அளவு கிரகித்திடக் கருவறை வெளிச் சுவர்களில் தலையைப் பதித்து வைத்து வணங்குவர்.

திருஅண்ணாமலையில் நடராஜ அபிஷேக தின அற்புத ஜோதி மலை தரிசனங்கள்!

தமிழ் வருடத்தில் ஆறு நடராஜ அபிஷேக தினங்களில் செய்யப்படுகின்ற அபிஷேக ஆராதனைகள் யாவும் நடன சாம்பசிவ ஜோதி சக்திகளுடன் இழைந்து அபரிமிதமான நற்பலன்களையும், நல்வரங்களையும் ஜீவன்களுக்கு நல்குகின்றன. திருஅண்ணாமலையில் கிரிவல மலை தரிசனங்களில் "தில்லை தரிசனம், நடராஜ தரிசனம், பொன்னம்பல தரிசனம், தியாகேச தரிசனம், சிதம்பர தரிசனம், சிற்சபேச தரிசனம்" ஆகியவாறாக ஆறு நடராஜ அபிஷேக தினங்களில் கிட்டுகின்ற மகத்தான மலை தரிசனங்கள் உண்டு!  இவை ஜோதிப் பூர்வமாகவும், தூல நடன பாவனைகளிலும் கிட்டும். நடராஜர் அபிஷேக தினங்களில் திருஅண்ணாமலை ஆலயத்தில் நடராஜ தரிசனம் கண்டு அன்றே ஆழ்ந்த நம்பிக்கையுடன் கிரிவலம் வருவோர்க்கு நடராஜ ஜோதி தரிசனம் பல இடங்களிலும் கிட்டிடும்.

ஸ்ரீபைரவர் கூகூர்

கூகூர் என்று சொல்லிட அதில் சாம வேதம் ஒலிக்குதே!

வேதம் என்பது ஜாதி, மத, இன பேதமின்றி யாவருக்கும் உரித்தான இறை சக்தியாகும். வேத சக்தியைப் பெற பல வழிமுறைகள் உண்டு. யாவருக்கும் இத்தகைய வேத சக்திகளை அளித்திடவே, தாவரங்களுக்கும், விலங்கினங்களுக்கும் மட்டுமல்லாது ஈ, கொசு என அனைத்திற்கும் வேத சக்திகளை அளிப்பவராக கூகூரில் ஸ்ரீஆம்ரவனேஸ்வரர் பொலிகின்றார். கூ என்பது சாம வேத பீஜாட்சரமாகும்! எனவே கூகூ எனச் சொல்லும் போது சாம வேத பீஜாட்சரங்களை நீங்கள் ஓதியவர்கள் ஆகின்றீர்கள்! ஏனென்றால் சாம வேதம் சிவபெருமானின் உட்சுவாசத்தில் இருந்து வெளிவருவது! ஆம் என்றாலும் மாமரம் என்று பொருள்! கூகூ என்று சொல்லிப் பாருங்கள்!  தொண்டைக்குள் எழும் சப்தமாக, இருதயத்தில் இருந்து எழும் சுவாச ஒலியில் அது சாம வேத பீஜாட்சரமாக இழைவதை நீங்களே உணர்வீர்கள்! அதே போல ஆம் (மாமரம்) என்று சொல்லிட, ஆத்மத்தில் எழும் மகரத்துடன் பிணைந்து "ஆம்" ஆகின்றது! மா என்று சொல்லிட்டாலும் உள்ளிருந்து ஆத்ம வேத ஒலி எழுவதை உணர்ந்திடலாம். பசுவும் "மா" என்று ஒலிக்கும் போது சாதாரணமாகத் தோன்றினாலும் ஒவ்வொரு பசுவும் மா, மா என்று ஓதி சாம வேத கான சக்திகளை உலகிற்குப் பரப்புகின்ற அரிய இறைப் பணிகளைத் தன் பங்கிற்கு ஆற்றி வருகின்றது! ஆனால் மனித குலம் தான் வேதத்தை மதிப்பதில்லை.

பள்ளி, கல்லூரிகளில் குழுமும் வரகணித நாம குணகிரிச் சித்தர்கள்!

பள்ளி, கல்லூரிகளில் பிள்ளைகளைப் பெருங் கூட்டமாகக் காணும் போது ஸ்ரீகாயத்ரீ மந்திரம் மற்றும் அவரவர் அறிந்த துதிகளை ஓதி இவற்றின் பலாபலன்கள் அவர்களுக்குச் சென்றடைய வேண்டும் என்று சங்கல்பம் செய்திடுங்கள்!  வரகணித நாம குணகிரிச் சித்தர்கள் என்று ஒரு வகைச் சித்தர்கள் உண்டு. இவர்கள் நாமக்கல் நாமகிரித் தாயாரை உபாசிக்கின்ற உத்தமச் சித்புருஷர்கள்! ஆய கலைகள் அறுபத்து நான்கினிலும் வல்லவர்கள்! பள்ளி, கல்லூரி, விழா, தீர்த்த நீராடல் போன்ற இடங்களில் 1‍000, 2000, 3000 என்ற ஜனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்தந்த அளவிற்கு உரிய கணித பாவன குண தேவதைகள், வரகணித நாமகுணகிரிச் சித்தர்கள் ஏதேனும் வடிவில் வந்திடுவர். பள்ளிப் பிள்ளையர் கூட்டத்தில் பலரும் ஏதேதோ எண்ணங்களில் அச்சமயங்களில் மிதந்து கொண்டிருக்க நீங்கள் நல்ல இறைத் துதிகளை ஓதி அவற்றின் பலாபலன்களை அங்கு குழுமி இருப்போர்க்கு அளித்திட்டால் இதனை மகத்தான சமுதாய இறைப்பணியாகக் காணும் வரகணித நாம குணகிரிச் சித்தர்கள் நன்கு ஆசீர்வதிப்பார்கள். உங்கள் பிள்ளைகளை, குழந்தைகளை பள்ளிக்கு இடும்போதோ, பள்ளியில் இருந்து அழைத்து வரும் போது "ஜனபூஷண பூஜையாக" உங்களுக்குத் தெரிந்த இறை நாமங்களை ஓதி அவற்றின் பலாபலன்களை நீங்கள் பார்க்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் அப்பிள்ளையின் நல்வாழ்விற்காகவும் சங்கல்பத்துடன் அர்ப்பணம் செய்திடுங்கள். நீங்கள் இவ்வாறு சற்றே குறுகியச் சுயநலவட்டத்திலிருந்து வெளிவந்து பிறருக்காகப் பிரார்த்தனை செய்யும் அரிய இறைப்பணியில் ஈடுபட்டால்தான் உங்கள் குழந்தைகளும் பிறருடைய பூஜாபலன்களால் பல ஆபத்துகளில் இருந்து காப்பாற்றப்படுவார்கள்.

வாகீச சக்திகளைப் பெற விரும்புவோர் வாகீச சக்தி நிறைந்த தலங்களில் திங்கள், ஹஸ்தம், புதன் கூடிய புனர்பூசம், அவிட்டம், சதயம் நட்சத்திர நாட்களில் குறிப்பாக சந்திர ஹோரை நேரத்தில் வழிபட்டு வந்தால் ஜோதிடத் துறையில் பிரகாசிப்பார்கள்.

பஞ்சம் போக்கும் கூகூர் ஸ்ரீமங்கள நடராஜர் வழிபாடு!

கூகூர் கோஷ்ட மூர்த்தியாம் நடராஜருக்குச் செய்யப்படுகின்ற அபிஷேக ஆராதனைகள் யாவும் உலக நாடுகள் அனைத்துக்கும் மட்டுமல்லாது ஒரு கோடி மைல் சுற்றளவில் விண்ணுலகம், மண்ணுலுகம், பூலோகம், பாதாள லோகம் அனைத்திற்கும் ஸ்ரீஆம்ரவனேஸ்வரருடைய சக்தியையும், ஸ்ரீமங்களாம்பிகையின் மங்கள சக்திகளையும் பெற்றுத் தருவதால் அனைவரும் ஆனி உத்திர நடராஜ அபிஷேகத் திருநாளில் இங்கு ஸ்ரீமங்கள நடராஜருக்கு 64 விதமான அபிஷேக ஆராதனைகளை செய்து வற்கடப் பஞ்சம் போக்க வல்ல தருமங்களாக ஏழைகளுக்கான பாத்திரங்கள், துணிகள், சமையலுக்கான அடுப்புகள், விறகுகள், தான்யங்கள், காய்கறிகள், உணவு வகைகள், பிள்ளைகளுக்கான புத்தகங்கள், ஆடைகள், காலணிகள் போன்ற 64 விதமான தான தர்மங்களையும் ஏழை எளியோர்க்கு அளித்து இப்பூவுலகிற்கு வேத மங்கள சக்திகளைப் பெற்றுத் தருவார்களாக! தான தர்மங்களால், வேத பாராயணங்களால் விருத்தியுறும் வேத சக்திகளைக் கொண்ட சிவத்தலமிது!

விவசாய, வியாபாரத்தில் "தேங்கிய" நிலை நீங்கிட....

விவசாயம் மற்றும் வியாபாரத் துறையில் ஏற்படுகின்ற முக்கியமான பிரச்னைகளில் ஒன்றே உற்பத்தியான அல்லது முதலீடு செய்து வாங்கப்பட்ட பொருட்கள் விற்பனை ஆகாது தேங்கிக் கிடத்தல் ஆகும். இது உற்பத்தி மற்றும் தொழில் முடக்கத்திற்கே காரணமாகி, பெரும் நஷ்டங்களை உருவாக்கி, பலருடைய குடும்ப வாழ்க்கையைப் பெரிதும் பாதித்து விடும்.

பொருட்கள் விற்பனை ஆகாது தேங்குவதற்கு லௌகீகமான காரணங்கள் பல கூறப்பட்டாலும் இதற்கான தக்க ஆன்மீகக் காரணங்களை அறிந்து ஆன்மீக ரீதியாகப் பரிகாரங்களை மேற்கொள்தல் தான் உண்மையான தீர்வுகளைத் தந்திடும். இவ்வாறு பொருட்கள் தேங்கிப் பல துன்பங்களுக்கு ஆளானோர் தஞ்சாவூர் ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் சிவாலயத்தில் சிவலிங்கத்தை வழிபடும் கோலத்தில் உள்ள ஸ்ரீகுபேர பகவானுக்கு வெள்ளி, அனுஷம், சுவாதி, பௌர்ணமி தினங்களில் தங்கள் கைகளால் தாமே அரைத்தச் சந்தனக் காப்பிட்டு முழுத் தாமரை மலர்களைச் சார்த்தி வழிபட்டு வேத சக்திகள் நிறைந்த மந்தாரை இலை நிறைய வாழைப் பூ, பலாப் பழம், சீதாப் பழம், மாதுளை, அத்திப் பழம் போன்ற "பல்குண" சக்திகள் நிறைந்த கனிகள் மற்றும் இவற்றாலான உணவுப் பண்டங்களையும் நைவேத்யம் செய்து இவற்றைப் பெருமளவில் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர், காது கேளாதோர்க்கு தானமாகத் தொடர்ந்து ஆழ்ந்த நம்பிக்கையுடன் அளித்து வரத் தக்கத் தீர்வுகள் கிட்டும்.

காது சம்பந்தமான கோளாறுகளுக்குக் கனிந்த தீர்வு தரும் பரியா மருதீஸ்வரர்!

காது சம்பந்தமான பிரச்னைகளால் வாடுவோர் நிறைய உண்டு. இவர்கள் தினமும் தேவமொழி, தமிழ் மறைப் பாராயண நிகழ்ச்சிகளில் குறைந்தது மூன்று மணி நேரமேனும் அமர்ந்து "ஸ்ரீகோமுக்தீஸ்வராய நம" என்று ஓதி தியானித்து வேத ஒலிகளைக் கேட்டு வருதல் வேண்டும். வேத ஒலியினைக் கேட்க இயலாவிட்டாலும் வேதமொலிக்கும் இடத்தில் அமர்வதே பெரும் பாக்யமாகும்.

சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் - பொன்னமராதி - நெற்குப்பை அருகில் உள்ள பரியா மருதுபட்டி ஸ்ரீபரியாமருதீஸ்வரர் சிவாலயத்தில் உள்ள நந்தீஸ்வரருக்குச் சுத்தமான பசு நெய்யால் காப்பிட்டு, நந்தியாவட்டைப் புஷ்பங்களைக் கோர்த்துப் பூப்பந்தாக்கி நந்தியின் இரு காதுகளிலும் வைத்து நந்தியின் திருக்காதுகளில்

ஓம் தத்புருஷாய வித்மஹே ஜானவி ரிஷிபதாய தீமஹி
தந்நோ கோகர்ணேஸ்வர ப்ரசோதயாத்

- என்ற மந்திரத்தை 21 முறை ஓதி வருதல் வேண்டும். ஜானவி மஹரிஷியின் காதில் பிறந்தவளே கங்கா தேவி. ஆலயத்தை அடிப் பிரதட்சிணம் செய்து விளக்கெண்ணையில் புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோஜனை, பச்சைக் கற்பூரம் ஆகிய கோகர்ண சக்திகள் நிறைந்த பஞ்ச கர்ண சக்தித் திரவியங்களைக் கலந்து காப்பிட்டு அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபட்டு வருதல் வேண்டும். தாளவாத்யங்களை ஆலயங்களுக்குத் தானமாக அளித்தல் விசேஷமானதாகும். சப்த ஸ்வர சக்திகள் மற்றும் பித்ரு சக்திகள் நிறைந்ததுமான புடலங்காய்களை "டப்" என்ற சப்தம் கேட்குமாறு நன்கு உடைத்துச் சமைத்து இங்கு புழுங்கலரிசிச் சாதத்துடன் அன்னதானமாக இட்டு வந்தால் எத்தகைய காதுக் கோளாறுகளுக்கும் தக்க நிவர்த்தி கிட்டும்.

தீய கர்ம வினைகளைக் கழிக்கும் கடல் நீராடல்

கடல் மற்றும் நதி தேவதா மூர்த்திகள் தம்மிடம் ஜீவன்கள் கழித்த பெரும் கர்ம வினைகளுக்கு இரவில் பிராயச்சித்தம் தேடுவதால் கடலிலும் ஆறுகளிலும் இரவில் நீராடுதல் கூடாது. ஆனால் ஒப்பிலியப்பன் பெருமாள் ஆலயத்தில் உள்ள அகோராத்ரத் தீர்த்தத்திலும், ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தமாகப் போற்றப்படுகின்ற கடலிலும் எப்போதும், நாள் முழுவதும் எந்நேரமும் நீராடிடலாம் என்ற விதிவிலக்கு இறைப் பூர்வமாக அளிக்கப்பட்டுள்ளது. இரவு காலங்களில் செய்த காமத் தீவினைகள், அதர்மச் செயல்களுக்குப் பிராயச்சித்தங்கள் பெற இத்தீர்த்தங்களில் இரவில் முறையாக நீராடுதல் வேண்டும்.

கோடைக் கடுமையும் நன்மையே!

பாரதத்தில் கோடைக்காலம் மிகக் கடுமையான வெப்பத்துடன் இருப்பது போன்று தோன்றினாலும் லட்சக்கணக்கான ஏழை மக்கள் சாக்கடை, கழிவு நீர், தொழிற்சாலைக் கழிவுகள் இவற்றின் ஊடே வாழ்வதால், கதிரவனின் கடுமையான சூரிய வெப்பம் மூலமாக நாற்றம் புரளும் அபரிமிதமான கழிவுகளை நன்கு காய வைத்து நல்ல சுகாதாரச் சூழ்நிலைகளை உருவாக்குவதற்குத்தான் இறைவனே மிகக் கடுமையான வெப்பத்தை நமக்கு அளித்துள்ளான் என்று உணர்ந்தால் தான் ஆன்மீகக் கோணத்தில் எதையும் அணுகும் ஆத்ம விசாரத் தெளிவுகள் தாமாகவே நிறைய ஊறும்.

நில தோஷங்கள் வரக் காரணங்கள்!

கறையான்கள் மிகுந்திருப்பது ஒருவிதத்தில் பூம்யபல க்ஷீண தோஷங்கள் எனப்படும் சிலவகையான பலத்த நில தோஷங்களையும், நில, கட்டிட அமைப்பில் காணப்படும் குறித்த சில வாஸ்து சாஸ்திர மீறல்களையும் குறிப்பதாகும். பல்லாண்டுகளுக்கு முன் எருமை, பசு, நாய்கள் போன்றவற்றை அதர்மமான முறையில் நிலத்தில் புதைத்திருத்தல், இறைவன் யாவர்க்கும் தருமமெனப் படைத்த ஊற்று நீரை விலைக்கு விற்றல், தகாத முறையில் நீரைப் பயன்படுத்துதல், நன்னிலையில் இருக்கும் போதே கிணறுகள், ஆறுகள், ஏரிகளை மனித குல சுய நலத்திற்காகத் தூர்த்து விடுதல், நல்ல மரங்களைத் தம்முடைய சுயநல வாழ்க்கைக்காக வெட்டி விடுதல், மரங்களை அதர்மமான முறையில் வெட்டிச் சாய்த்தல் முறையற்ற காமத் தீவினைகள் மற்றும் விந்துக் குற்றங்கள் போன்ற யாவையும் இவை நடந்த இடங்களில் கடுமையான நில தோஷங்களுக்குக் காரணமாகி, இவற்றை உணர்த்திடவே கறையான்களும் ஆங்கே குடி கொள்கின்றன.

ஸ்ரீகால பைரவ வழிபாடே நம் சந்ததியைக் காக்கும்!

கலியுகத்தில் தீய சக்திகளின் பெருக்கம் அதிகரித்து வருவதால், சித்ரபானு ஆண்டிலிருந்து ஸ்ரீகால பைரவ வழிபாடு மனித சமுதாயத்திற்கு மிகவும் இன்றியமையாத பூஜையாக - கலியுக மனித குலத்திற்கான மிக முக்கியமான வழிபாடாக சித்தர்களால் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பிரகாசித்த துவாபர யுகம் முடிந்து கலியுகம் பிறந்த இந்த 5103 ஆண்டுகளுக்குள் மனித சமுதாயத்தை எத்தனையோ துர்வினைகளும், தீவினை சக்திகளும், தீச்செயல்களும் சூழ்ந்து கொண்டு இருக்கின்றன என்பதைக் கண்கூடாகக் காண்கின்றோம் அல்லவா!  ஒரு காலில் தர்ம தேவதை நிற்கும் கலியுகத்திற்கு உரிய 5 லட்சம் ஆண்டுகளில், இதுவரை கடந்த 5103 ஆண்டுகளிலேயே இந்நிலை எனில் எஞ்சிய 494897 வருடங்களில் எவ்விதச் சமுதாயச் சூழ்நிலையை நம் எதிர்காலச் சந்ததியினர் காண வேண்டுமோ என்ற மனக் கவலைகளே அனைவரையும் சூழ்ந்துள்ளன! இதற்கெல்லாம் தீர்வாக அமைவதே தினசரி ஆறு வேளை பைரவர் பூஜையாம். முற்காலத்தில் இம்முறை அமைந்து இரவில் ஸ்ரீகாலபைரவர் சந்நிதியில் ஆலயச் சாவிகளை ஒப்படைத்துப் பூஜைகள் நிறைவுறும். காலை பூஜை ஸ்ரீபைரவர் சந்நிதியிலேயே தொடங்கும். இதனால் தான் நம் மூதாதையர் காலத்தில் பெரிய குடும்பங்களுடன் அமைதியான சமுதாயம் கொழித்தது. எனவே அனைத்து ஆலயங்களிலும் இனியேனும் ஆறு வேளை பைரவர் பூஜைக் கிரமங்களை நடைமுறைப்படுத்துதலே மக்களுக்குக் காப்பு சக்திகளைத் தந்து வல்வினை மற்றும் தீய சக்திகளிடம் இருந்து இறைப் பெரும் ரட்சையாய்க் காத்திடும்.

கறையான்கள் காட்டும் நில தோஷங்கள்!

ஒரு விதத்தில் கறையான்கள் சமுதாயச் சொத்துகளுக்குச் சேதத்தை விளைவிப்பதாகத் தோன்றினாலும் சகல ஜீவன்களின் படைப்பிற்கும், அனைத்துச் செயல்களுக்கும் காரண காரியங்கள் ஆன்மீக ரீதியாக உண்டு என்பதை நாம் அறிவோம் அல்லவா! பிள்ளையார் எறும்புகள் திடீரென எங்கிருந்தோ வந்து வீட்டில் மண்டுவது, குடும்பத்தில் நேர்த்திகள் நெடுங்காலமாக நிறைவேற்றப்படாமல் இருப்பதை எடுத்துக் காட்டுவதைப் போல, நில தோஷங்கள் காலம் காலமாக நிவர்த்தி செய்யப்படாமல் பெருகி இருந்தாலும் நிலத்திலும், இல்லத்திலும் கறையான்கள் மற்றும் குறித்த சில வகைப் பூச்சிகள் மிகுந்து தோன்றி இவ்வாறு நில தோஷங்கள் பெருத்துக் கிடப்பதைக் காட்டுவதும் உண்டு.  எதிர்வரும் ஜென்மங்களில் நாமே கறையான்களாக பிறப்பு எடுக்கக்கூடும் அல்லவா!  கறையான்கள் உலகத்தில் படைக்கப்பட்டு இருப்பதற்கும் நிறையக் காரணங்கள் உண்டு. எனவே படைப்புகளின் ரகசியம் உணர்தலும் தெய்வீக வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதாகும்.

கறையான்கள் படைக்கப்பட்டதே மனித குலச் சொத்துக்களுக்குச் சேதங்களை விளைவிப்பதற்காகவா? நிச்சயமாக இல்லை! உலகில் எப்போதுமே பொருட்கள் தோன்றிக் கொண்டே இருந்தால், "பழையன கழிதல்" என்ற ஒன்று இல்லாவிடில் புனிதமான பூமாதேவியால் பூ பாரதத்தைத் தாங்க முடியுமா? எனவே ஏனைய பல காரணங்களோடு உலக எடையைச் சமன் செய்யும் பொருட்டும், கறையான்கள், வெள்ளம், சூறாவளி போன்றவை ஏற்படுகின்றன.

நம்மால் கழிக்கப்பட முடியாத பலவகையான நில, கர்ம வினை தோஷங்களை எல்லாம் தாமே கிரகித்து பஸ்மம் செய்து கறையான் குலம் நம்மை ஒரு விதத்தில் காக்கின்றது. இதற்காகக் கறையான்களை வளர்க்க வேண்டும் என்று பொருளல்ல! ஒவ்வொரு ஜீவனின் உயிர்ப் படைப்பிற்கான ஆன்மீகக் காரணங்களை முழுவதுமாக அறிந்தால் தான் இந்த உலகம் படைக்கப்பட்டதற்கான காரண‌ங்களையும் நம்மால் அறிந்து கொள்ள முடியும்!

நித்ய கர்ம நிவாரணி

1.7.2002 - நெசவுத் தொழில் செய்வோர்க்கு அன்னதானம், பொருள் உதவி தந்திட, சித்தி, சித்தப்பா மூலமாய் வர வேண்டிய பாக்கிகள் தீரும்.

2.7.2002 - செவ்வாய் பகவான் வழிபட்ட ஏழு கோயில்களில் ஸ்ரீம்ருத்யுஞ்ஜய தூபம் ஏற்றி அன்னதானம் செய்திடில் விவசாயத்தில் வந்த தடங்கல்கள் விலக வழி பிறக்கும்.

3.7.2002 - இன்று சிவன் கோயில்களில் பஞ்சாட்சர தூபம் ஏற்றி 10 பேருக்காவது அன்னதானமும், பாதணிகள் தானமும் செய்திடில் மணமகள், மணமகன் சம்மதம் தெரிவித்தும் தாய், தந்தை திருமணத்திற்கு அக்கறை காட்டமல் இருக்கும் கர்ப்ப நாசன தோஷம் தாய் தந்தையைத் தாக்காமல் விலகும்.

4.7.2002 - இன்று வீட்டை சுத்தப்படுத்தி நடு வீட்டில் பூஜை செய்து ஸ்ரீஅகஸ்திய தூபம் ஏற்றி ஸ்ரீஅகஸ்தியர் படம் வைத்து பூஜித்து அன்னதானம் செய்திடில் பட்டுப் புடவை அணிவதால் வரும் தோஷம் குறையும்.

5.7.2002 - இன்று வியாபாரிகள் தங்களுடைய குல தெய்வ நேர்த்தியையும், பிரார்த்தனையையும் அன்னதானத்துடன் நிறைவேற்றிடில் குடும்பக் குழப்பங்கள் தீரும்.

6.7.2002 - இன்று விரதம் இருந்து ஸ்ரீதன்வந்த்ரீ தூபம் ஏற்றி ஸ்ரீஅபராஜிதா தேவியை பன்னிரெண்டு மணி நேரம் பூஜித்திடில் வியாதியால் அவதியுறுவோர் நலம் பெறுவர்.

7.7.2002 - இன்று எட்டு நந்தீஸ்வர மூர்த்திகளுக்குப் பிரதோஷ தூபம் ஏற்றி காளைகளுக்கு காரட், அன்னதானம் அளித்திடில் பெண் அதிகாரிகளால் வரும் துன்ப நிலை மாறும்.

8.7.2002 - சிவராத்திரி, பஞ்சாட்சர தூபம் ஏற்றி படித் தலங்களிலும், மலைத் தலங்களிலும் அன்னதானம் செய்து கிரிவல தரிசனங்கள் செய்திடில் உதவி செய்கின்றேன் என்று சொன்னவர் வாக்குத் தவறாமல் உதவி செய்வார்.

9.7.2002 - இன்று பெண்கள் எண்ணெய் ஸ்நானம் செய்து, மஞ்சள், குங்குமம் இட்டு, மலர்கள் சூடி, இறைவனை வழிபட்டு சர்க்கரைப் பொங்கல், அகத்திக் கீரை தானம் செய்திடில் வாய்த் துடுக்கால் வந்த துன்பங்கள் குறைய வழியுண்டு.

10.7.2002 - சித்தர்களின் ஜீவ சமாதிகளில் அன்னதானம் செய்து அமாவாசைத் திதி தீபம் ஏற்றி வழிபட்டிடில் ஏற்கனவே திருமணம் ஆனவரிடம் திருமணம் ஆகாத பெண்கள் தன் மனதைப் பறி கொடுத்துக் காதலித்து ஏமாற மாட்டார்கள்.

11.7.2002 - மிருகசீரிஷ நட்சத்திரத் தூபம் ஏற்றி அன்னதானம் செய்திடில் பொய் வாக்குறுதிகள் தந்தவர்களிடம் இருந்து தப்பித்து விடலாம்.

12.7.2002 - இன்று சந்திரப் பிறையை மாலையிலேயே தரிசனம் செய்து, பால் நைவேத்தியம் வைத்து, பூஜித்து, தானம் செய்திடில் வெளி நாட்டில் வேலை செய்கின்றேன் என்று சொல்லி ஏமாற்றுபவர் பிடிபடுவர்.

13.7.2002 - உத்தராயண பூர்த்தி விரதம் இன்று இருக்க வேண்டும் எனில் 100 ஏழை குழந்தைகளுக்கு சுத்த தேங்காய் எண்ணெய் தானம், 100 பசு மாடுகளை நீராட்டி, மஞ்சள் குங்குமம் இட்டு, வயிறார உணவு அளித்தல், 100 பேருக்குக் குறையாமல் மருதாணி அரைத்துத் தானம், 100 குழந்தைகளுக்கு குங்குமப் பூ போட்ட பால் தானம், 200 கோயில், குளத்து மீன்களுக்குப் பொறி கடலை தானம், 51 மயில்களுக்கு உணவு தானம், 500 சுமங்கலிகளுக்கு அன்னதானம், விளக்கு தானம் செய்திடில் ஆண்களாய் இருப்பின் செல்வ சீமாட்டியை மணப்பர். பெண்களாய் இருப்பின் பெரும் செல்வந்தரை மணப்பர்.

14.7.2002 - இன்று கார் ஓட்டிகளுக்கு உணவு, ஆடை தானமும், எல்லை காவல் தெய்வங்களுக்குப் பொங்கல் படையலும் செய்திடில் உணவுத் துறையினர் நலம் பெறுவர்.

15.7.2002 - நடராஜர் பூஜை செய்து நடராஜர் தூபம் ஏற்றி வழிபட்டு அன்னதானம் செய்திடில் வெளிநாட்டு வியாபாரம் நலம் தரும்.

16.7.2002 - வீட்டில் இருக்கும் அண்ணிமார்கள் விரதம் இருந்து அன்னதானம் செய்து புகுந்த வீட்டின் குழந்தைகள், இளைஞர், பெண்கள், முதியோர் நலம் பெற வேண்டும் நாள் இது.

17.7.2002 - ஸ்ரீஹயக்ரீவர் தூபம் ஏற்றி ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஜபித்து ஞாபக சக்தியைப் பெருக்கும் நாளிது! விரதம் இருந்து, அன்னதானம் செய்திடில் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணலாம்.

18.7.2002 - மின்சாரத் துறையில் இருப்போர் சிக்கலான பிரச்னைகளைச் சந்திக்கும் நாளிது. அப்புத் தல சிவன் கோயில்களில் அன்னதானம் செய்திடில் நலம் பெறுவர்.

19.7.2002 - இன்று முருகன் கோயில்களில் அன்னதானம் செய்திடில் தபால், தந்தி இலாக்காவில் வேலை செய்வோர் நலம் பெறுவர்.

20.7.2002 - இன்று ஏகாதசி திதி எண்ணெய் தூபம் பெருமாள் கோயிலில் ஏற்றி அன்னதானம் செய்து விரதம் இருந்திடில் தூக்கம் வராமல் துன்புறுவோர் நலம் பெறுவர்.

21.7.2002 - குறைந்தது மூன்று நந்தீஸ்வரருக்குப் பிரதோஷ தூபம் ஏற்றி அன்னதானம் செய்திடில் பாட்டிகளால் குடும்பத்தில் வரும் சண்டை விலகும்.

22.7.2002 - இன்று சமையல் செய்வோர்க்கு வேறு நபர்கள் சமையல் செய்து வயிறார உணவிட்டு ஆடைதானம் செய்து மகிழ்வித்திடில் தினமும் சமையல் செய்து வெறுப்படைந்தோர் பிறர் கையால் சமைத்துச் சாப்பிட்டிடில் சிலாக்கினி தோஷம் தாக்காமல் நலம் பெறுவர்.

23.7.2002 - இன்று வலம்புரிச் சங்கில் நீர் பருகி விரதம் இருந்து வலம்புரிச் சங்கில் மோர் தானம், பால் தானம் செய்திடில் மன சஞ்சலங்கள் குறையும்.

24.7.2002 - இன்று மாம்பழ தானம் பள்ளி மாணவ மாணவிகளுக்குப் படிப்பில் புதிய முன்னேற்றத்தைத் தரும்.

25.7.2002 - இன்று வேப்பிலையால் மந்திரிப்போர் விரதம் இருந்து அன்னதானம் செய்திடில் மந்திர உரு சக்தியைப் பெறலாம்.

26.7.2002 - இன்று பெண்கள் எண்ணெய் ஸ்நானம் செய்து மஞ்சள் பூசி குங்குமம் இட்டு கோ பூஜை செய்து அன்னதானம் செய்திடில் குடும்பத்தில் சுபச் செய்தி வரும்.

27.7.2002 - வீட்டைச் சுத்தப்படுத்தி வாஸ்து பூஜை செய்து அன்னதானம் செய்திடில் வேலை கிடைக்காத அண்ணன், தம்பி, சகோதரிகளுக்கு நல்ல உத்தியோகம் அமையும்.

28.7.2002 - பழைய துணிகளையும், பழைய பாத்திரங்களையும் தானம் செய்யும் நாள்! இவ்வாறு செய்திடில் பழைய நண்பர்களின் உதவி கிடைக்கும்.

29.7.2002 - ஒன்று மூன்றாய் விரிவடையும் நாளிது! நல்லதையே செய்து பலர் பயனடையச் செய்வீர்!

30.7.2002 - காட்டில் இருக்கும் தேவதைகளுக்குப் பானைப் பொங்கல் படைத்து வைத்து விட்டு திரும்பிப் பார்க்காமல் வந்து விட வேண்டும். இவ்வாறு செய்திடில் வீட்டில் துஷ்டசக்திகளின் சேட்டை குறைந்து விடும்.

31.7.2002 - மாடு மேய்க்கும் ஏழைக்கு உணவு அளித்துக் காலணிகள் தானம் செய்திடில் மாதவிடாய்க் கோளாறுகள் குறைந்து படிப்படியாய் மறைந்து விடும்.

குறை ஒன்றுமில்லை கோவிந்தா !

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam