சங்கொலி பெருக்குமே சண்முக நாதம்தனை !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வ ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய குருகுலவாச அனுபூதிகள்!

ஏழை நடுத்தரக் குடும்பங்களுடன் பெரியவர் அன்புடன் பழகுகின்ற விதமே அலாதியானதாகும். மிகவும் பரிச்சயமானவர் போல் அவர்களிடம் சகல உரிமைகளையும் எடுத்துக் கொண்டு அவர்களை அதட்டுவதும், அட்வைஸ் பண்ணுவதும், பங்காளிகளிடையே பகைமை நீக்கி அன்பான உறவு பந்தத்தை விரிவாக்குவதும் அவருக்குக் கை வந்த கலையாகும்.. அவரிடம் பஞ்சாயத்துக் கேட்பதற்கென்றே எங்கெங்கிருந்தோ  தினமும் பல குடும்பங்கள் வந்து போய்க் கொண்டிருக்கும்!

வருகின்ற இளைஞர்களுக்கெல்லாம் அந்தந்த வீட்டுப் பெரியவர்களிடம் சொல்லிக் கல்யாணம் செய்து வைத்து விடுவார்! போதையுடன், கத்தி, கபடாவுடன் லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு கட்டு மஸ்தான உடலுடன் அச்சம் கூட்டி வரும் வஸ்தாதுகள் இவரைக் கண்டவுடன் பெட்டிப் பாம்பாய் அடங்கி விடுவார்கள்! தூய அன்பின் வசீகரம்!

ஒரு நாள்.... “என்னா சாமி! என் பொஞ்சாதியை எங்கிட்டேந்து பிரிச்சு அவளைத் தனியா குழந்தை குட்டிங்களோட குடும்பம் பாத்துக்க, ஒப்புக்குத்தான் இவன் புருஷன்..! பசங்க பொண்ணுங்க பெரியவங்க ஆயிட்டாங்களே! தனியா குடும்பம் நடத்திக்கன்னு சொன்னியாமே?”

ஒரு முரடன் வந்து கூவினான்... கசமுசாவென்று வாயில் வந்தபடி திட்டத் தொடங்கினான்.. அவனைப் பார்த்தாலே நமக்கு எலும்பெல்லாம் ஆடும்.! பெரியவரோ காலாட்டிச் சிரித்துக் கொண்டு வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்!  அவன் இடுப்பில் பளபளா பட்டாக் கத்தி வேறு பயமுறுத்திக் கொண்டிருந்தது!

“டேய், சும்மானாச்சுக்கும் கத்தாதேடா! இடுப்புல ஒரு வேஷ்டி கூட சரியாக் கட்டத் தெரியாதவன் எல்லாம் குடும்பம் நடத்தினா என்ன ஆறது? ஒனக்குத்தான வண்ணாரப் பேட்டைல, தண்டையார்ப் பேட்டைல, மூலக்கடையிலன்னு மூணு குடும்பம் இருக்குதுல்ல... அந்தப் புள்ளைங்கள... ஒழுங்காக் கரையேத்து போதும்! அவங்களுக்கு ஒழுங்கா கஞ்சி ஊத்தி உருப்படியா கவனி, அதுவே போதும் உனக்கு! இளவயசுல ஆடு ஆடுன்னு... ஆடியாச்சு, இப்ப பிராயச்சித்தம் தேடினா அது உடனே வந்து குதிச்சுடுமா..!

“சரி...சரி... உள்ள அம்பாள் சந்நதி வாசல்படில பச்சைப் பாவாடை.. ரோஸ் கலர் தாவணி வச்சிருக்கேன்..! அம்பாளக் கும்புட்டு எடுத்துக்க..! பெரிவளாயிட்ட உன்னோட மூணாவது பொண்ணு வள்ளிக்குக் கொடுத்துடு! மஞ்சள் நீராட்டையாவது ஒழுங்கா செஞ்சு முடி.. போ..போ..! அப்படியே உன்னோட பெரிய பொண்ணு பார்வதிக்குப் பக்கத்துத் தெரு சுந்தரம் பையனை ஒரு மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணி முடி! ஏதோ ஒரு பாசத்துல உன்னோட வந்தவாசி மாமன்... கல்யாணத்துக்கு உதவி செய்யக் காத்திருக்கான்..! பங்காளியாச்சே..! அவன் தான்.. செஞ்சாகணும்! வேற ஏதாவது வேணும்னா இந்தக் கிழவனை வந்து பாத்து தைரியமாக் கேளு போ போ...!”

தன் வண்டவாளம் தண்டவாளத்திற்கு வந்து விட்டமையால்...இப்போது அந்த முரடனின் உடம்பு ஆடிக் கொண்டிருந்தது. கண்கள் பனிக்க பனிக்க.., லுங்கி அவிழ்வது கூடத் தெரியாமல் பெரியவரைப் பார்க்கவே அஞ்சி அஞ்சிப் பின்புறமாய் அச்சத்துடன் நகர்ந்து கொண்டிருந்தான்..!

இவர் எப்படி உட்கார்ந்த இடத்திலிருந்தே அனைவருடைய கோத்திர வரலாறுகளையும் பிட்டு பிட்டு வைக்கிறார்!  சிறுவன் வழக்கம் போல விடையின்றி விழித்தான்..!

உண்மையான உள்ளத்துடன் ஜாதி, மதம், மனிதன், விலங்கு, தாவர பேதமின்றி அனைத்துள்ளும் உறையும் ஆத்மாவுடன் இறைத் தொடர்பு கொள்கின்ற சித்தர்களுக்கு அச்சம், மரண பயம், ஆண், பெண், விலங்கு, தாவர வித்யாசம் எதுவுமே கிடையாதே! இதனால்தான் அனைத்தும் தெரிந்தவர்களாக ஆகின்றார்கள்..!

ஹிருத்தாபநாசினி தீர்த்தமும்
விஜயகோடி விமானமும்
திருவள்ளூர்

வேண்டுதல் வேண்டாமை வேண்டிடில்...!

ஒரு மாதம் கழித்து அவன் மீண்டும் வந்தான், இப்போது லுங்கியைக் காணோம்! தலையில் தலைப்பாகை! இடுப்பில் பெரிய பெல்டுக்குள் பதுங்கிய ஒரு அழுக்கு வேஷ்டி! கூடவே ஆறிலிருந்து இருபத்தாறு வரையான பிள்ளை குட்டிகள்.!

“சாமீ! நீ சொன்ன மாதிரி பார்வதிக்குக் கல்யாணம் பண்ணி வச்சுட்டேன்! நல்லா நடந்துச்சு! நீ ஒரு பைசா கூடக் கொடுக்க வேணாம் அப்படீன்னு சொல்லி, வந்தவாசி மாமனே எல்லாத்தையும் பார்த்துக்கிட்டான்...! ஏதேதோ சொல்லி நீ தான் என்ன மயக்கி நல்ல வழிக்கு மாத்திட்டே!”

...ம்..ம்..ம்.. என்ன இருந்தாலும் என்னோட முதல் பொஞ்சாதியைப் பிரிச்சிட்டியே! இது நியாயமா? .. அதுவும் அங்காளி கோயில் சாமீ ஒரு வார்த்தை சொன்னாத்தான் திரும்பி வருவேன்னு சொல்லிடுச்சு! சரி,, சரி,,! உனக்கு என் மேல இன்னும் கோபம் தீரலையாக்கும்.! இந்தா, கல்யாணத்துல மிச்சம் புடிச்சு, வந்தவாசி மாமங்கிட்டேந்து கொஞ்சம் பணத்தைச் சுரண்டிக் கொண்டாந்திருக்கேன்..! உன்கிட்ட கொடுத்தா ஏதாச்சும் அன்னதானம்னு நல்ல காரியம் பண்ணுவே... இல்லாட்டி அங்காளி ஆத்தா. உண்டியில்ல போடட்டுமா? இந்தப் பணம் உனக்கா, அங்காளிக்கா?”

“அங்காளிக்கும் வேண்டாம், எனக்கு வேண்டவே வேண்டாம்.! நேர இதைக் கொண்டு போய்... நான் பிரிச்சு வச்சேன்னு சொன்னியே அவ கிட்ட இதைக் கொடுத்துட்டுத் திரும்பிப் பார்க்காம வந்துடு..! அவ இன்னும் மூணு பொண்ணுங்க., நாலு ஆம்பளைப் பசங்களைக் கரையேத்தணுமே! பிரிச்சேன்னு சொன்னியே, அவதாண்டா உன்னோட கடைசிக் காலத்துல கஞ்சி ஊத்தி காப்பாத்தப் போறா.. போ... போ.., அப்பத் தெரியும் இந்தக் கிழவன் யாருன்னு.!”

அடுத்த செகண்டில பெரியவரைக் காணோம்! கட்டைப் பஞ்சாயத்து முடிந்ததும் கச்சிதமாகக் கழன்று கொண்டு விட்டார்! ஆனால் அந்த ஆள் பெரியவரைப் பற்றி வேற ஏதாச்சும் கேட்பானோ என்று பயந்து போய் சிறுவன் வெளியே வந்தான்...!

அடுத்தது கேட்பின்...

“டேய், வேகமா வா, முக்கியமான வேலை  இருகக்கு...!”

ஆம், பெரியவர் தான் கோயில் வாசலில் நின்று சிறுவனை அழைத்துக் கொண்டிருந்தார். வழியில் இரண்டு பெரிய மூங்கில் கம்புகள், கொச்சைக் கயிறு, பச்சரிசி, அது.. இது... என்று ஏதேதோ வாங்கிக் கொண்டார்! சிறுவனோ வழக்கம் போல் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்! Impeccably perfect divine tutelage under the spiritual nourishment of one of the Greatest Siddhas!

துறைமுகம் ரயில் பாதை அருகே வந்ததும் “டேய்! அந்த ரயில் பாதை ஓரம் கொஞ்சம் கண்டங் கத்திரிக்காய் பறிச்சிட்டு வா..! அகஸ்தியர்தாண்டா மூலிகைக்கெல்லாம் காப்பு மகரிஷி! ஒரே ஒரு வாழை இலைன்னாக் கூட அவர் பெயரைச் சொல்லித் தாண்டா பறிக்கணும்! வெறுமனே பறிக்கக் கூடாது!”

சிறுவனுக்கு என்ன ஏதென்றே புரியவில்லை, கறுப்புக் கயிறு... கண்டங் கத்திரிக்காய், சிறிய சந்தனக் கட்டை... இதெல்லாம் எதற்கு? கேட்கவா முடியும்? அந்தக் காலத்து சிமெட்ரி ரோடைத் தாண்டி அங்கே உள்ள ஒரு பெரிய மருத்துவமனையருகே அப்போது அனாதைப் பிணங்களைச் சற்று நேரம் வெளியில் வைத்திருப்பார்கள்.! காருண்யம் மிக்கோரும், சேவை மனப்பான்மை கொண்டோரும் அனாதைப் பிணங்களைப் பெற்று மயானக் கிரியைகளை இலவசமாக நடத்துவார்கள்.. மிக மிக.. புண்ணியமான, புனிதமான காரியமல்லவா! ஆனால் தற்போது காலம்தான் மாறி விட்டதே!

ஓங்காரப் பிரகாரம்
உய்யக்கொண்டான்மலை

அநாதைக்கும் அருள் காட்டும் அற்புதச் சித்தர்!

பெரியவரும், சிறுவனும் அங்கு சென்றபோது வெளியில் இரண்டு மூன்று பிணங்களைக் கிடத்தியிருந்தார்கள்..! பெரியவர் சிறுவனை வைத்துக் கொண்டு கிடுகிடுவென்று தென்னங் கீற்றில் மூங்கிற் பாடை ஒன்று கட்டி, அதில் பிணத்தை ஏற்றி, ஒரு கையில் அக்னிச் சட்டியை ஏந்திக் கொள்ள...

பெரியவர் முன் பக்கத்தைப் பிடித்துக் கொள்ள சிறுவன் பின் பக்கம் கம்புகளைத் தோள்களில் ஏற்றிக் கொள்ள.... நேரே மயானத்திற்கு நடை.. . வழியில் அரிச்சந்திரன், முனீஸ்வரர் இருந்தா அங்கங்கே.... நிறுத்தி வணங்கிச் சென்றனர்.. ஒரு வழியாய் மயானம் வந்தது!

“இத பாருப்பா..... கண்ட கண்ட குச்சி, மரம், சிராத்தூள்,  மண்ணெண்ணையைப் போட்டு எரிக்கக் கூடாது.. இந்தா பணம் தர்றேன்! நல்ல பசு விராட்டியா வாங்கி வா! நல்ல மர விறகு இருந்தாலும் வாங்கி வா, போ...!” என்று சொல்லி வெட்டியானுக்கு மனம் குளிரும் வண்ணம் வயிறு நிறைய சாப்பாடு போட்டு நல்ல துணிமணிகளையும் கொடுத்து அனுப்பிட....!

ருத்ர பூமியில் புண்ய காரியம்.!

பெரியவர் பிணத்திற்கான மிகவும் முக்கியமன சடங்குகளைச் செய்யலானார்... அப்போதுதான் பிணம் ஆவி, பிசாசு, இறுதிப் பிரயாணம், சொர்க்கம், நரகம் போன்றவற்றிற்கான விளக்கங்களைச் சிறுவன் பெற்றான்.. அத்தி இலை கொண்டு ஏதேதோ மந்திரங்களை ஓதிப் பல சடங்குகளை நடத்தினார் பெரியவர்... அனைத்திற்கும் அழகான சாஸ்திர விளக்கங்களையும் தந்தார்... வெட்டியான் வந்ததும் அழகாகச் சிதை எழுப்பினார்! அவருக்குத் தெரியாதது உலகில் எதுதான் இருக்கிறது..?

கிடுகிடு .... என்று.. பெரியவர் சிதையில் விராட்டிகளையும் விறகுகளையும் அடுக்கிட அவரும் சிறுவனும் வாக்கரிசி இட்டனர்... அந்தச் சிறிய சந்தனக் கட்டையையும் பிரேதத்தின் நெஞ்சில் வைத்துப் பெரியவர் சிதைக்கு அக்னியை மூட்டினார்.! இறந்தவர் அனாதையாகவே உலகின் கண்களுக்குத் தெரிந்தாலும் பெரியவருடைய கரங்களால் இறுதிச் சடங்குகள் என்றால் இறந்தவருக்கு என்னே பெரும் பாக்யம்..!!

ஜாதி,  சமய, இன, குலபேதமின்றி அனாதைப் பிரேத சம்ஸ்கார காரியத்தை எடுத்து நடத்துதல் மிகவும் சிறப்பான புண்ணிய காரியமாகும்..! ஆனால் தற்கால சூழ்நிலைகளை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.!

“இது காருண்ய பிரேத காரியம்டா.! ஜாதி, மத, இன குல பேதமின்றி யாரும் யாருக்கும் செய்யலாம்... எதிர்காலத்துல எலக்ட்ரிக் கிரிமேஷன்னு சொல்லி மின்சார தகனம் எல்லாம் வரும்.. நம்ப பெரியவங்க... சொல்லிக் கொடுத்த வழியில சிதை மூட்டி அக்னியில பிரேதத்தைத் தகனம் செய்யறதுதான் பின்னப்படாது அமைதியாக இறந்தவருக்கு சித்தர்கள் காட்டுற அறவழி..! மின்சார தகனத்தைப் பித்ருக்களோ, சித்தர்களோ ஏற்பதில்லை!”

பெரியவருடன் சிறுவன் எத்தனையோ மயான பூஜைகளைக் கண்டிருக்கிறான்... ஏன், சரீரத்தை உகுத்த அருட்பெரும் சித்புருஷர் ஒருவருடைய கமலத் திருமேனியில் அமர்ந்து மயானத்தில் ருத்ர பூஜைகளைச் செய்யும் பாக்யத்தைப் பெற்றவனாயிற்றே!

“... புளிய விறகு, உதியன், முள்ளுக் கருவேலி போன்ற கண்ட கண்ட விறகுகளைப் போட்டு தகனம் பண்ணக் கூடாது..! இறைவன் கொடுத்த உடம்பு நல்ல முறையில் பஸ்மம் ஆகணும், உடம்பு எப்படி பஸ்மம் ஆயிருக்குன்னு பாத்து அவங்களோட கர்மாவைப் பத்தித் தெரிஞ்சுக்கலாம்! இதுக்குத்தாண்டா சஞ்சயம்னு மறுநாள் பால் ஊத்தி அஸ்தியைக் கரைக்கற சடங்கு! இது குடும்பத்தாரோட, சொந்தக்காரங்களோட முழுப் பொறுப்பு! இதுதான் உண்மையான உறவினர்களோட கடமை!”

சிறுவனாயிற்றே மயான பயம் இருக்குமே, இந்தச் சிறுவயதில் மயான புராணம் தேவையா? சிறுவனை வெறும் சிறுவனாக எண்ணும்வரை அறியாமையால் இந்த வகைக் கேள்விகள் தாம் வளரும்! என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாகிய ஒரு மகத்தான சித்புருஷரிடம் கோடானு கோடி யுகங்களாகத் தொடர்கின்ற குருகுல வாசப் பரல் இது என்ற சத்தியமான உத்தம எண்ணம் முகிழ்க்கும் போதுதான் பல கோடிப் பாமரர்கட்கு சற்குருமார்களின் மூலமாகப் பரந்தாமன் பரிந்தூட்டும் (இறைப்) பகுத்தறிவுப் பாடச் சுடரிது என்பது பரிணாமம் ஆகும்.

இவ்வாறாக ஜாதி, மத, இன, குல பேதமின்றி பெரியவரின் குருவருளால் எத்தனையோ அநாதைப் பிரேதங்களுக்கு உத்தமப் புண்ணியக் காரியமாக பிரேத சம்ஸ்காரக் காரியங்களை நிகழ்த்தும் பாக்கியத்தைப் பெற்றான் சிறுவன்!

இந்த மயானப் படலம் முடிந்த பின்னர் பெரியவர் திருப்பதிக்குப் புனிதமான நடை யாத்திரையைக் கொண்டார்.! நடையோ நடை என்று பெருநடை! முன்னிரவில் பிரம்ம முகூர்த்தத்தில் நடை! பகல் வெயிலில் நல்ல ஆற்றுப் பகுதி, மலைப் பகுதி, வனப் பகுதியைத் தேர்ந்தெடுத்து யோகம், ஆசனம், முத்திரைகளைக் கற்றுத் தருவார் பெரியவர்! புலித் தோலில் விதவிதமான ஆசனங்கள்!

“புலித் தோல் அமர்வு தியானம் ரொம்ப ரொம்ப உத்தமமானது.. ஆனா அடிச்சுக் கொன்ற புலியின் தோல் கூடாது... தானாக இயற்கையா இறந்த புலியின் தோலாக இருக்கணும்..! இயற்கையான மரணத்தை முன்னாடியே தெரிஞ்சுக்கும் சக்தி புலிக்கு உண்டு! அதனால அந்த நேரத்துக்கு அதுவே தானா வில்வமரம், சந்தன மரம், வேப்ப மரத்தைத் தேடி அது கீழே போய்ப் படுத்துக்கும், புலித் தோலை எடுக்கறதுக்குக் கட்டு மந்திரம், காப்பு மந்திரம் எல்லாம் உண்டு! இறந்த புலிக்குக் காருண்ய தர்ப்பணம், திசுக்கள், எலும்புகளுக்குக் ககன தகனம் பண்ணித்தான் தோலை எடுக்கணும்!”

“இதெல்லாம் முறையாச் செய்யாம புலியைக் கொன்னுட்டு எடுத்து வர தோலுக்குச் சாபம்தான் ஜாஸ்தி! இது குடும்ப சந்ததியையே நாசமாக்கிடும்!”

திருப்பதி அடிவாரத்தில் ஏதோ ஓரிடத்தில் இருவரும் ஒரு அறையில் தங்கினார்கள்.! பொதுவாக லாட்ஜ் என்றாலே ஒதுங்கிடும் பெரியவர் அன்று தங்குவதற்கு ஓர் அறையை எடுத்துக் கொண்டது சிறுவனுக்கு ஆச்சரியமோ ஆச்சரியமாக இருந்தது... சித்தன் போக்கு சிவன் போக்குத் தானே!

தெலுங்கில் அங்கு பிரமாதமாக மாட்லாடினார்.., “பெரியவர் தான் சகல மொழிகளிலும் கொழிப்பவராயிற்றே!

“திருவாசி சிவன் கோயில்ல பேச்சியம்மனுக்குப் பண்டாரமா ஆயிரமாயிரம் வருஷம் சேவை செய்யற பாக்யம் பூர்வ ஜன்மங்கள்ல கிடைச்சுதுடா இந்தா புடின்னு பேச்சியம்மா ஒரே ஒரு சோத்துப் பருக்கையைப் பிரசாதமா கொடுத்தா... அதப் பொறுக்கி எடுத்துப் பவித்ரமான பிரசாதமா....”

... இதைச் சொல்லும்போது பெரியவரின் கண்கள் பனித்தன. தன் உள்ளங்கையை விரித்துக் காட்டினார்... அதில் WAP SCREEN போல திருவாசி பேச்சியம்மனின் உருவம் அதில் பிரதிபலித்தது! சிறுவன் தரிசித்துக் கொண்டான்!

“அந்த ஒரு சோத்துப் பருக்கைப் பிரசாதம் மூலமா .... இந்த அம்பாள்தாண்டா.... அடியேனோட நாக்குல ஆங்கிலமா, தமிழா, தெலுங்கா., இலத்தீனா, பிரஞ்சு மொழியா, கிளி மொழியா, எறும்பு மொழியாப் புகுந்து விளையாடறா..!”

அவர் கண்களில் நீர் தாரை கோடி ஜன்மமானாலும் பேச்சியம்மனுக்குப் பண்டாரமா சேவை செய்யற பாக்யம் கிடைக்குமான்னு ஏங்கறேண்டா...!”

திருமலையில் வாழைப் பழ வண்டிக்காரரிடம் பண்டுலு, காசுலு என்று தெலுங்கில் அவர் புகுந்து விளையாடியபோது அதைப் பார்த்து அசந்து விட்ட சிறுவனிடம் பெரியவர் உதிர்த்த குருவாய் மொழிகள் இவை...!

தாள் திறந்ததால்!

அறையில் தூங்கிக் கொண்டிருந்த.., சிறுவனா, நள்ளிரவில் எழுப்பிய பெரியவர்..

“கொஞ்சம் வயித்த, உஷ்ணம் ஜாஸ்தி! கொஞ்சம் வெந்தயம், மோர் சாப்பிட்டு வர்றேன்!” என்று சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டார்..!  ...  சிறுவனுக்குப் பக்கென்றது! ..

நள்ளிரவிலாவது வெந்தயமாவது, மோராவது கிடைப்பதாவது! நன்றாகக் கதை விடுகின்றார்! குருவின் ஏதோ ஒரு திருவிளையாடலுக்கு நாம் தயாராக வேண்டும்! அதுதான் அந்த sageன் implied message!! இதுவே சிறுவனின் presage..!!

சிறுவன் உஷாரானான்! நள்ளிரவில் நட்டம் பயின்று ஆடும் நாதனைக் காண நட்டாற்றில் நம்மை விட்டுச் செல்கின்றாரே என்று புலம்பவும் செய்தான்!

“கதவை நல்லாத் தாழ்ப்பாள் போட்டுக்கோ..! காத்துல அதுவாத் திறந்தா கவலைப் படாதே..!”

ஏதேதோ சொல்லி விட்டுப் போனார் பெரியவர்.. அன்று அவர் நடையும், பாவனையும், நல் மொழியும் திடீரென்று மிக மிக அர்த்தம் பொதிந்தவையாக அவனுக்குப்பட்டது! பட்டால்தானே தெரியும் பள்ளிப் பயலுக்கு...!

அசந்து தூங்கிய சிறுவனைப் படபடவென்ற சப்தம் எழுப்பி விட்டது!

காத்தா? காற்றா? கருப்பா?

அவன் தாழ்ப்பாள் போட்ட கதவு தானாகத் திறந்து மீண்டும் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டது..! அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்த சிறுவன் கண்களைக் கசக்கிக் கொண்டு நன்கு பார்த்தான்.!

ஆமாம்! கதவுகள் தாமாகத் திறப்பதும், தாமாக மூடுவதும் நிகழலாயின.. அச்சத்தின் உச்சத்தில் தன் பையிலிருந்த படே சாஹிப் ஜீவ சமாதி விபூதிப் பிரசாதத்தை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டான்..!

யாரோ ஏதோ பேச முயல்வது போலவும் கதவுகள் திறந்து மூடுவதும் தொடர்ந்தன.. ஆவிகள் பற்றிப் பெரியவர் நிறையச் சொல்லியிருந்தாலும் அந்தந்த SITUATION வரும்போதுதான் மனிதனுக்கு மிகவும் தொன்மையான, ஆண்டாண்டாக ஆகி வருவதான பாம்பு பயமும், பேய், பிசாசு, ஆவி பயமும், எங்கிருந்தோ வந்து புகுந்து விடும்தானே!

பயத்தால் சிறுவனுடைய மனதினுள் காயத்ரீ மந்திர ஓடை மிக மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தது... ஆனால் என்ன ஆச்சரியம்! பலத்த குரல் எழுப்பி ஆட்களைக் கூப்பிட வேண்டும் என்ற எண்ணமோ, அந்த இடத்தை விட்டு ஓடிவிட வேண்டும் என்ற எண்ணமோ அவனுக்குத் துளியும் எழவில்லை!

அதுதான் பெரியவர் பூடக மந்திரமாக ஒன்றை உணர்த்தி விட்டாரே! அந்த வார்த்தைகள் அவனுக்கு மனோ தைர்யத்தைத் தந்தது!

கதவை நல்லாத் தாழ்ப்பாள் போட்டுக்கோ...! காத்துல அதுவாத் திறந்தாலும் கவலைப் படாதே!

பெரியவருடைய வாக்கியங்களுக்குச் சிறுவனே proof corrections போட்டுக் கொண்டான்! எப்படி?

“கதவை நல்லாத் தாழ்ப்பாள் போட்டுக்கோ...! காத்துக் கருப்புல அதுவாத் திறந்தா கவலைப் படாதே!”

சிறுவனுக்கே இந்த proof correction  போட்டதை மீண்டும் சொல்லிப் பார்த்திட அவனுக்கே பெரும் சிரிப்பு வந்தி விட்டது! ஒரு வேளை குறள் சொன்ன இடுக்கண் வருங்கால் நகைத்தல் இதுதானோ..!

அந்த ஏரியாவில் சிக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு ஆவி விடுதலை ஆகத் துடிக்கின்றது... அதற்கான தருணம் வந்துவிட்டது என்று அவன் உள்மனம் கூறிடவே அவன் சற்றே சாந்தமடைந்தான். சமீபத்தில்தான் பல பிரேத சம்ஸ்காரங்களைச் செய்து அவற்றின் புண்ணிய சக்திகளின் மகாத்மியத்தையும் பெரியவர் சொல்லக் கேட்டிருந்தான்...

“எப்படி பல பாவங்களைச் செய்த மனுஷன்களைத் தான தர்மம் மூலமா நாங்க பிராயசித்தம் தந்து கரையேத்தறோமோ, அதே போல தற்கொலை, கொலை, கருக் கலைப்புனு பயங்கரமான கர்மங்களைச் சேர்த்து ஆவியா மாறி அவஸ்தைப் படறவங்களுக்கு நல்ல கதி தர்றதுக்கு இந்த அநாதை பிரேத சம்ஸ்கார புண்ணிய சக்தி ரொம்ப ரொம்ப உதவி செய்யும்... இதெல்லாம் மனித குலத்தோட கடமை! தன்னைச் சார்ந்திருக்கின்ற தாவரங்கள், விலங்குகளுக்கு முக்தி, மோட்சம் தர்றது, அறிந்தோ அறியாமலோ கொலை, தற்கொலை பண்ணி ஆவியா சுத்தறவங்களுக்கு நல்வழி காட்டறதும், உத்தமரா, புனிதமா வாழறவங்களோட கடமை! இதெல்லாம் குருகுல வாசத்துலதான் உணர முடியும்! நீயாச்சும் எதிர்காலத்துல முடிஞ்ச வரைக்கும் இதப் பத்தி நெறய எடுத்துச் சொல்லு!”

சிறுவனுக்கு ஆவி பயம் போய், பெரியவர் மயானத்தில் பொழிந்த குருவாய் மொழிகள் ரீங்காரமிட்டன! ஆவிகளுக்கான பிணிகளும் உண்டே! தக்க உடல் இல்லாப் பிணிதானே அவற்றின் முதல் பெரு நோய்! பிணி தீர்க்கும் சித்தர்பெம்மான் தானே பாண்டிச்சேரி அருகில் சின்னபாபு சமுத்திரத்தில் ஜீவாலயம் கொண்டுள்ள ஸ்ரீபடே சாகிப் சித்தர்!

தடதடவென்று சூறாவளிச் சத்தம், கதவு, ஜன்னல்கள் படபடவென்று அடித்துக் கொண்டன. தைரியத்தை வரவழைத்துச் சங்கல்பம் செய்து கொண்டு தன்னிடமிருந்த படேசாஹிப் பிரசாத விபூதியை......பூ.. வென்று காற்றில் ஊதினான்!

உடனேயே பெரும் பேரமைதி குடி கொண்டது... அந்த அறையில்! Incredibly scintillating peace dawned and descended there amidst traumatic concussions..! களைப்பிலும், அச்சத்திலும் சிறுவன் தன்னையும் அறியாமலயே தூங்கி விட்டான்!

எழுந்து பார்த்த போது....  பெரியவருடன் திருப்பதி ஆலயம் அருகே உள்ள வராகப் புஷ்கரிணி தீர்த்தத்தின் நடுவே பெரியவருடன் நின்று கொண்டிருந்தான்!

“நான் எப்படி இங்கு வந்தேன்?”

சிறுவன் தன்னையே பலமுறை வியப்புடன் பார்த்துக் கொண்டான், நடந்ததெல்லாம், கனவா, கால்டிராயர் பைக்குள் படே சாஹிப் பிரசாத விபூதிப் பொட்டலத்தைக் காணவில்லை...!

அப்படியானால்..!! ...  சிறுவன் ஓரக் கண்ணால் பெரியவரைப் பார்த்தான்..! பெரியவர் சிரித்துக் கொண்டே புஷ்கரிணி தீர்த்த நீரினுள் சிறுவனுடைய கைகளைக் கோர்த்துப் பிடித்துக் கொண்டார்! “பலநூறு வருஷமா ஆவி உடம்புல அவஸ்தைப் பட்டுக்கிட்டிருந்த அந்த பெரிய ஆவிக்கு ஆன்ம விடுதலை வாங்கிக் கொடுத்த விசேஷமான கைகளாச்சே, எல்லாத்தையும் பெருமாளுக்கே அர்ப்பணம் பண்ணிடுடா ராஜா...!”

சிறுவனோடு சேர்ந்து பெரியவரும் வராக புஷ்கரிணியில் முழுகி நீராடினார்... இதுவே சித்தர்களின் உண்மையான ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்! தனக்கென்று எதையும் வைத்துக் கொள்வதில்லை!  வராக புஷ்கரிணியில் பெரியவருடன் மூழ்கிய சிறுவன்...

ஆடி ஓடி அடைவது அங்காளியையே!

எழுந்து பார்த்தால்.... அங்காளி ஆலயம்... வழக்கமான தூண்! பெரியவரோ யார், யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார்! சிறுவன் தன்னையே மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டான்.. கால் டிராயரும், சட்டையும் நனைந்திருந்தன!

உலக மகா வியப்புடன் பெரியவரைப் பார்த்தான்!

“இந்தப் பாரு ராமானுஜம்! உன் பையனுக்கு ஆபரேஷன், கீப்பரேஷன் எதுவும் வேணாம்! நேரே (பாண்டிச்சேரி அருகில்) சின்னபாபு சமுத்திரம் படே சாஹிப் ஜீவ சமாதியில ஒரு வாரத்துக்கு அன்னதானம் பண்ணு! ஒரு வாரம் தங்கி அங்க இருக்கின்ற மகிழ மரத்தை 1008 முறை சுத்தி வரச் சொல்லு போதும்!” வந்த குடும்பம் புறப்பட்டது!

“யேய்...! ராமானுஜம் கொஞ்சம் இரு!”

சிறுவனைப் பார்த்து, “ஏண்டா படே சாஹிப் பிரசாதம் இருக்கா?” என்று குறும்பு கொப்பளிக்கப் பெரியவர் கேட்டிட.....

சிறுவன் உதட்டைப் பிதுக்கியதுடன், தன்னையும் அறியாமல், ஈரத்தில் ஒட்டியிருந்த கால் டிராயர் பாக்கெட்டுக்குள் கைவிட்டான்...

அங்கே.... விபூதி பிரசாதப் பொட்டலம் நெருடியது! ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன் மெதுவாக அதனை எடுத்துப் பெரியவரிடம் நீட்டினான்... பெரியவரை ஏறிட்டுப் பார்க்க அவன் கண்களுக்குத் திராணியில்லை...!

வெட்கம், பயம், பக்தி, ஆச்சரியம், ஆனந்தம், வியப்பு அனைத்தும் அவன் கண்களில் கொப்பளித்தது..!

“இந்தா ராமானுஜம், உன் அதிர்ஷ்டம், நம்ப பிள்ளையாண்டான் படே சாஹிப் பிரசாதம் கொஞ்சம் வச்சுருக்கான்... உனக்குக் குல தெய்வம் திருப்பதி வெங்கடாஜலபதியாச்சே! திருப்பதி புஷ்கரிணி தீர்த்தமும் சேர்ந்த பிரசாதம்..!!

அவருடைய குறும்புச் சிரிப்பில் கோடி கோடி அர்த்தங்கள் பொதிந்திருந்தன... அதற்குமேல் பெரியவர் என்ன சொன்னார் என்பது அவன் காதில் விழவில்லை..!

சிறுவன் டக்கென்று கண்களை உயர்த்திப் பெரியவரைப் பார்த்தான்.. அதற்குள் அவர் திருப்பாதங்கள்தாம் தென்பட்டன..!

கோயில், மயானம், புனித யாத்திரை, திருமலை, திருப்பதி, குலதெய்வம் என்று பிரபஞ்சத்தில் எங்கு சுற்றினாலும் இறுதியில் அடைவது குருவின் திருவடிகளையே என்பதை உணர்த்துகின்றார்தாமே!

எழுவாய், கழுவாய், தருவாய் குருவே!

ஸ்ரீபோகர் சித்தர்

ஸ்ரீஅகஸ்தியரின் பொற்பாத அடிமைச் சீடராம் ஸ்ரீபோகர் சித்தர் . பொதியமலைதான் ஸ்ரீபோகர் சித்தருடைய நித்யவாச ஸ்தலமாகும்.. சித்தர் குல மூலநாயகராகவும், ஆதி சிவன் அருள் பெற்றவராம் என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாகவும் விளங்குகின்ற ஸ்ரீஅகஸ்தியர் சித்த மாமுனியின் தலையாய சிஷ்யர்களுள் ஸ்ரீபோகர், ஸ்ரீபுலிப்பாணி போன்றோர் பெருஞ்சிறப்புடையவர்கள் ஆவர்! நாம் அறியாத வகையில் ஸ்ரீஅகஸ்திய மாமுனிக்கு இன்னமும் எத்தனையோ கோடி சீடர்கள் உண்டு.. இன்றும் ஸ்ரீஅகஸ்தியரிடம் பலரும் குருகுல வாசம் பூண்டு கொண்டு இருக்கின்றார்கள்! நீங்களும் தக்க சற்குரு மூலமாக உத்தம இறை நிலைகளை அடைந்திடில் ஸ்ரீஅகஸ்தியரிடமே பாடங் கேட்கும் பாக்யத்தைப் பெற்றிடலாமே!

பொதிய மலையில் ஸ்கந்த ஈர்ப்புப் பள்ளம் என்ற தபோவனப் பகுதியானது ஜோதி விருட்சங்கள் நிறைந்த அருள்வனமாகும்! ஐம்பதாயிரம் வருடங்களுக்கு மேலாக இதே திருமேனியில், ஸ்ரீபோகர் சித்தர் இங்கு ஜோதி விருட்சத்தின் அடியில் நவநாத யோகத்தில் உறைந்து ஜீவன்களுக்கு இறையருளைப் பெற்றுத் தரும் அருட்கனியாய்க் கருணை வெள்ளத்தைச் சுரக்கின்றார்.!

ஓங்காரப் பிரகாரம் திருவிடைமருதூர்

தமக்கு இறைவன் அளித்த மானுடவடிவில் 50000 தேவ ஆண்டுகளுக்கும் மேலாக உறைந்து நவயோகப் பஞ்சாட்சர சக்தியில் திளைப்பவரே ஸ்ரீபோகர் சித்தர்! இந்த ஜோதி விருட்சத்தின் அடியில் மகிழம் பலகையில் நவயோக பஞ்சாட்சர தாரணையில் பொழியும் ஸ்ரீபோகர் பெருமானின் அருகில் சிவந்த நாசியை (மூக்கு) உடைய சிம்புறா என்னும் இரண்டு அரிய அபூர்வமான தெய்வீகப் புறாக்களும் ஸ்ரீபோகர் சித்தரின் யோக மா ஒளியில் ஆனந்தப் பரவசத்தில் திளைத்து அமர்ந்துள்ளன...!

இங்கிருந்து ஸ்ரீபோகரின் திருஆணைப்படி அனைத்துக் கோடி லோகங்களுக்கும் சென்று வரும் தெய்வீக வல்லமை பெற்றவையே சிம்புறாப் பட்சிகளாகும்.. ஸ்ரீபோகர் பெருமான் தம் நவயோக பஞ்சாட்சர யோகத் துழாயில் திளைக்கின்ற போது கிளைக்கின்ற பீஜாட்சர வாக் சக்திகளை, தெய்வீகச் செய்திகளை, சித்தமா மந்திர உருக்களை இப்புறாக்களே பல தேவ லோகங்களுக்கும் தாங்கி எடுத்துச் சென்று அளிக்கின்றன.! இன்றைக்குப் பரவெளி எங்கும் நிறைந்திருக்கின்ற பீஜாட்சர சக்திகளை ஸ்ரீபோகர் போன்ற சித்த மாமுனிகளே தம் நவயோக சஞ்சார சக்திகளினால் ஈர்க்கும் வல்லமை பெற்றவராவர்..

லலாட முன்புங்கவ தேவ ரகசியங்கள்..! பரவெளி மந்திரப் பரல்கள் சிலவகை அட்சரங்களாகவும், உருஎழுத்துக்களாகவும், ஒலி வடிவங்களாகவும், ஒளிச் சுடர் வாக்கியங்களாகவும் எண்ணற்ற வடிவுகளில் துலங்குகின்றன.. குறிப்பாக, லலாட முனிபுங்கவ தெய்வீக ரகசியங்களும், ஒளி வழிபாட்டு இலக்கண முறைகளும் யாவுமே ஒளி வடிவில்தாம் திகழ்கின்றன... அவை பலவிதமான ஒளிக்கிரணங்கள் மூலமாகப் பூலோகம் வந்தடையப் பல லட்சம் மைல்களைக் கடந்தாக வேண்டும்.. இதைத்தான் விஞ்ஞானத்தில் ஒளியின் வேகமாக light years என்று சொல்கின்றோம். எந்த யோகத்தில் எத்தனைக் கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள மந்திரங்களை ஈர்க்க முடியும் என்பதற்கான காலச் சக்கர நிகண்டு யோக இலக்கணங்களும் உண்டு..!

இத்தகைய லலாட முனிபுங்கவ தேவ ரகசியங்கள் யாவுமே ஒளி வடிவில்தான் பொறிக்கப்பட்டு இருக்கும். தற்போதைய நாடி ஜோதிடங்களில் எவ்வாறு மறைபொருளாகக் குறித்தோருக்கு மட்டுமே கர்ண வாக்கியங்கள் தோன்றுகின்றனவோ, இதே போல லலாட முன்புங்கவர்களாகிய ஜோதி விருட்ச சித்தர்களுக்குத்தான் இந்த ஒளி எழுத்துக்கள் சுடர் வடிவ அட்சர தரிசனங்களாகப் புலப்படும்... திருஅல்லிக்கேணி ஸ்ரீவேங்கட கிருஷ்ணப் பெருமாளும், ஸ்ரீஒப்பிலி அப்பனும் தம் அருட்பார்வையில் தாங்கி இருப்பவை தேவ பூபால ஜோதி விருட்ச அட்சரங்களே!

அக்னிப் பிழம்புகளாக ஜ்வலிக்கும் இந்த ஜ்வாலா அட்சரங்களுக்குப் த்ருதீய நேத்ரச் சக்கரம் எனப்படும் மூன்றாம் கண் பார்வையே முக்கியமானதாகும்... நாம் பொதுவாக நினைப்பது போல இறைவனுக்கு மட்டுமே மூன்றாம் நேத்திரம் என்பதல்ல, ஆதிசிவன் கொண்டிருக்கின்ற மூன்றாம் நேத்திரம் ஆதியும் அந்தமும் இல்லா அடிமுதல் காணாரூபத்தை உணர வைக்கும் அதிஅற்புத நேத்திரமாகும்..! ஆனால் எப்போதும் இறை நெறியில் துய்த்து இறை அடிமையாய் வாழ்ந்து மகானாகச் சிறந்திடவே அனைத்து உயிரினங்களுக்கும் இறைவன் மூன்றாம் நேத்திரத்தைப் படைத்துள்ளான்..! ஆம், நாம் அனைவரும் மூன்றாம் நேத்திரம் உடையவர்களே! ஆனால் இதை உணர்ந்திடப் பக்தி நிறைந்த இறைப் பகுத்தறிவு தேவையானதாகும்.. இறைப் படைப்புகளின் மூன்றாம் நேத்திரப் பாத்திரத்தைப் பரிபூரணமாக உய்த்து உணர்ந்த சித்புருஷர்களுள் ஸ்ரீபோகர் சித்தரும் ஒருவராவார்.. இப்பிரபஞ்சத்தின் ஜோதி விருட்சங்களைப் பராமரிக்கின்ற பரந்த இறைப் பொறுப்புகளும் ஸ்ரீபோகருக்கு உண்டு. ஸ்ரீபோகர் சிறப்புற்றுத் தழுவும் லலாட முனிபுங்கவ நேத்திர யோகத்தில் பீஜாட்சர ஒலிப் பொறிகள் யாவும் ஒளிப் பத்திரங்களாய் ஜீவ தேவக் களை கொண்டு வளர்ந்து, ஒளிர்ந்து பரிமளிக்கும். இவைதாம் தேவ கிரந்தங்கள் ஆகின்றன. இவற்றைத் தாம் அவர் அருகில் அமர்ந்திருக்கும் சிம்புறாக்கள் கிரகித்துப் பலகோடி தேவ லோகங்களுக்கும் எடுத்துச் செல்கின்றன.!

ஸ்ரீபோகர் சித்தர் பரவெளியிலிருந்து யோகச் சுடரில் கிரகிக்கும் பீஜாட்சர மந்திரப் பரல்களிலிருந்து பொறிக்கும் ஜோதி வாக்கியங்கள் யாவும் ஜோதி விருட்சங்களின் ஒளி பொருந்திய இலைகளில் அவர்தம் யோகத் திறத்தால் பிரகாசித்து ஒளி அட்சரங்களாகவே பரிமளிக்கும்.. இவற்றையே கர்ண பத்திரங்களாக ஸ்ரீபோகர் தம் திருக்கரங்களில் தாங்கிட அவற்றையே சிம்புறாக்கள் தம் சிவந்த நாசியில் தாங்கிச் செல்லும். இவைதாம் லலாடங்க பிரசன்ன கர்ணிகா பத்திரங்கள் எனச் சிறப்புப் பெயர் பூண்டு வேத கிரந்தங்களாகப் பல தேவ லோகங்களில் உருப்பெற்றுப் பிரபஞ்சத்தில் திகழ்கின்றன...!

சிம்புறாக்கள் எப்போதும் ஜோதி விருட்சங்களின் அடியில்தான் தங்கும். வேறு எங்கும் சற்றே அமர்வது கூடக் கிடையாது..! திருக்கயிலாயம், திருஅண்ணாமலை, ஓம்காரப் பிரணவப் பிரகாரங்கள் (திருவிடைமருதூர், திருச்சி உய்யக் கொண்டான் மலை) போன்றவற்றில் கிரிவலத் திருவுலா வருகின்ற இச்சிம்புறாக்கள் எங்கும் தங்காது பொதிய மலையின் ஸ்கந்த ஈர்ப்புப் பள்ளத்தில் செழிக்கும் ஜோதி விருட்சங்களை வந்து அடைந்துவிடும்..!

இவ்வாறாக ஸ்ரீபோகர் சித்தபிரான் ஒவ்வொரு வினாடி நேரமும் தம்முடைய லலாட முனிபுங்கவ யோகத் திறத்தினால் இப்பிரபஞ்ச வாழ்விற்கான, அரிய, ஒளி பொருந்திய மந்திரப் பத்திரச் சுடர்களை நமக்குப் பெற்றுத் தந்து கொண்டிருக்கின்றார்.! தினந்தோறும், குறிப்பாக, புத ஹோரை நேரத்தில், ஒரு தட்டில் பசுநெய் விளக்கேற்றி, தீப ஜோதிதனை ஜோதி விருட்சமாக பாவித்து மாவிலைகளைப் பரப்பி “ஸ்ரீபோகர் தர்ப்பயாமி” என்று 18 முறை ஐவிரல்களின் நுனியிலும் நீரை வார்த்து அர்க்யம் இடவேண்டும்!

இதனால் குருவருளால் யோக சக்திகளின் தன்மைகளை உணரும் பக்குவத்தையும், சக்தியையும் பெற்றிடலாம்., ஜோதி விருட்சத் தரிசனத்திற்கு ஸ்ரீபோகர் சித்த பிரானின் குரு கடாட்சம் மிகவும் முக்கியமானதாகும்!

சங்கு ஊதுதல்

சங்கு ஊதுதல் சுபமங்கள சுப சகுனமே!

இல்லத்தில் சங்கு ஊதி சங்கொலியை எழுப்பலாமா என்று பலரும் கேட்டிருக்கின்றனர். சங்கொலி புனிதமானச் சுப மங்கள ஓம்கார ஒலி ஆகையால், வீடுகளில் நிச்சயமாக, தாராளமாகச் சங்கை ஊதிடலாம்.. பூஜைகளுக்கு மட்டுமன்றி, பிராணாயாம யோகத்திற்காகவும், மூச்சுப் பயிற்சிக்காகவும் வீடுகளில் சங்குகளை ஊதிடலாம்.!

தினந்தோறும் நாம் காலை, மதியம், மாலை வேளைகளிலும் இரவு உறங்கும் முன்னரும் குறைந்தது 36 முறை பிராணாயாம யோக பந்தனத்தைப் பயில வேண்டும்.. ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஓதியவாறு மெதுவாக, நன்றாக மூச்சை வலது நாசியில் உள் இழுத்து (பூரகம்), இருதயத்தில் மூச்சைச் சற்றே நிறுத்தி (கும்பகம்), பிறகு மெதுவாக நன்றாக இடது நாசியின் வழியே மூச்சை வெளியில் விடுதலே (ரேசகம்) ஒரு பிராணாயாம யோக சுவாச பந்தனமாகின்றது..! இம்மூன்றிலும் ஸ்ரீகாயத்ரீ மந்திரம் மெல்லிய மந்திர நீரோடையாக மனதினுள் ஓடிக் கொண்டிருக்க வேண்டும்.. இதில் 2-3-2, 3-3-3 என்ற வகையில் மூன்று நிலைகளுக்குமான ஸ்ரீகாயத்ரீ மந்திர ஓதுதலின் எண்ணிக்கை விகிதாசாரங்களும் உண்டு..!

ஒருமுறை பிராணாயாம யோக சுவாச பந்தனத்தால் உடலின் 72,000 நாடிகளுக்கும் ஸ்ரீகாயத்ரீ மந்திர சக்தி நிரவுகின்றது.. இதை முறையாகச் செய்து வந்தால் எவ்விதத் தீயொழுக்கங்களையும் மனமும் உடலும் நாடாது.. பெட்ரோல் வண்டிகளின் மற்றும் ஆலைகளின் நச்சுப் புகை இருதயத்தைப் பாதிக்காவண்ணம் ரட்சையாகக் காக்கக் கூடியதும் பிராணாயாமம் ஆகும்..! ஆனால் இதனைத் தினந்தோறும் நாம் செய்து வருகின்றோமா? இதுகாறும் பிராணாயாமத்தை முறையாகப் பயிலாமையால் உடலின் காப்புச் சக்திகள் குறைந்துள்ளதுதானே. இதற்கு ஓரளவாவது நிவர்த்தியைக் காண வேண்டுமல்லவா! இதற்கு உதவுவதே பஞ்சபூத பிராணாயாம ஊது குழல் சங்காகும்..! வீடுகளில் பூஜையின் போது நிச்சயமாகச் சங்கு ஊதி ஒலிக்கப் படவேண்டும்.. தற்காலத்தில் சங்கு ஊதுதல் என்றாலே அஞ்சுகின்றார்கள்..!

நாதஸ்வரம், மேளம், கண்டா மணி போன்று சங்குகளை ஊதி ஒலித்து நம் மூதாதையர்கள் இல்லறப் பூஜைகளின் மேன்மையைப் பெருக்கினார்கள்.! பிரேத ஊர்வலத்தின் போது மட்டும் சங்கு ஊதுகின்ற தவறான பழக்கம் நடைமுறையில் வந்துவிட்டதால் பலருக்கும் இல்லத்தில் சங்கு ஊதுவது பற்றிய அச்சம் ஏற்படுகின்றது..! சவ ஊர்வலத்தில் சங்கு ஊதுதல் கூடாது..!

இல்லங்களிலும், ஆலயங்களிலும் எங்கு எப்போது பூஜைகள் நிகழ்ந்தாலும் எப்போதும் சங்கை ஊதி ஒலித்திடலாம்...! இதில் தவறேதும் கிடையாது..! பூஜைகளில் கண்டிப்பாகச் சங்கு ஊதி ஒலிக்கப்பட வேண்டும்..! நம் திருஅண்ணாமலையின் ஸ்ரீஅகஸ்தியர் ஆஸ்ரமத்தில் ஒவ்வொரு சிறு பூஜைக்கும் கூடபிரம்மதாளம் ஒலிக்கப் பெற்று சங்கு ஒலியும் எழுப்பப்படுகின்றது..! எனவே இல்லங்களில் சங்கினைத் தாராளமாக ஊதிடலாம்..! சங்கு ஒலி ஓம்கார சக்திகளைக் கொண்ட மிகவும் புனிதமான ஓம்கார சப்தம்! சங்கு ஒலியைக் கேட்பதால் உடல் நாளங்கள் ஆக்கம் பெறுகின்றன..! சங்கினால் அபிஷேகம் செய்வதை மனம் ஏற்கின்றபோது சங்கு ஊதுதலைக் கண்டு அஞ்சுதல் நியாயமாகுமா?

கடல் நீரில் லவண அம்சமாகிய உப்புச் சாரம் பரிபூரணித்து இருப்பதால் கடல் நீரில் விளைகின்ற சங்கு, சிப்பி, முத்து போன்ற அனைத்திற்குமே பஞ்சபூதச் சக்தி நிறைந்திருக்கும்! எனவே சங்கு என்பது பூஜையில் வைக்கப் படவேண்டிய புனிதமான பொருளாகும்.! இல்லத்தின் பூஜையின் போது இனியேனும் தாராளமாக சங்கு ஒலியை எழுப்பி பரவெளிக்கு பஞ்சபூத சக்திகளையும், ஓம்கார சப்த நாளங்களையும் சேர்த்து புனிதமடையச் செய்திடுங்கள்!

ஆலய பூஜைகள் அனைத்திலுமே சங்கு ஊதி வழிபடுதல் இன்றியமையாததாகும்..! திருஅண்ணாமலையில் இசக்கி சித்தர் என்பார் எப்போதும் சங்கை ஊதி ஒலித்தவண்ணம் கிரிவலம் வந்து கொண்டிருப்பார்.! நமக்கு முன்னால் செல்கின்ற இசக்கி சித்தர் திடீரென்று வெவ்வேறு இடங்களில் தோன்றிக் கிரிவலத்தைத் தொடருவார்.! நுரையீரல் மற்றும் சுவாச சம்பந்தமான நோய்களைத் தணிப்பதற்கு அடிக்கடி சங்குகளை ஊதி யோக பந்தனப் பயிற்சி முறைகளை மேற்கொள்ள வேண்டும்..! திருஅண்ணாமலை, தேனி மலை, திருப்பரங்குன்றம், பர்வத மலை போன்ற மலைத் தலங்களில் சங்கை ஊதியவாறே கிரிவலம் வருவதால் மகத்தான காரிய சித்திகள் மிகும்..! ஒவ்வொரு சப்தமித் திதியிலும், திங்கட்கிழமை தோறும் சங்கினை ஊதியவாறு திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருவதால் பலவிதமான மனக் குழப்பங்களுக்கும் நல்ல தெய்வீகமான விடை கிட்டும்..!

ஹோரை மூர்த்திக்கு ப்ரீதியான சங்கொலி! தினந்தோறும் பூஜைக்கான சங்கினைப் புண்யத் தீர்த்தங்களால் கழுவிச் சுத்தம் செய்து அரைத்த மஞ்சள், சந்தனம் மற்றும் குங்குமம் இட்டு ஒவ்வொரு ஹோரையும் துவங்கும் நேரத்தில் ஊதுவதால் அந்தந்த ஹோரைக்கான கிரக மூர்த்தியின் அனுக்ரகத்தைப் பெற்றிடலாம்..! சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என்ற வரிசையில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு ஹோரையாகத் தொடர்ந்து அமைகின்றது..! காலை 6 மணிக்கு அந்தந்த நாளிற்குரித்தான கிரகத்தின் ஹோரையே முதலில் ஆரம்பிக்கும்.! உதாரணமாக திங்கட்கிழமையில் சந்திர ஹோரை தொடங்கும்..! அந்தந்த ஹோரை மூர்த்தியை வழிபடுவது நவக்கிரக பூஜா பலன்களைப் பெற்றுத் தரும்..!

செவ்வாய் மற்றும் சனி ஹோரை நேரங்களையே கேது மற்றும் ராகு ஹோரை நேரங்களாகக் கொள்ள வேண்டும்..! திருஅண்ணாமலையைச் சங்கு ஊதிக் கிரிவலம் வருவதால் சங்கு ஊதிச் சித்தரின் அனுக்கிரகத்தையும் பெற்றிடலாம்! தினந்தோறும் அலுவலகத்தில், கடைகளில் என்ன கெடுதலான செய்தி வருமோ, எந்த விலை அமையுமோ, என்ன நஷ்டம் வருமோ, எந்த விலைச் சரிவு ஏற்படுமோ என்று மணிதோறும் அஞ்சி வாழ்வோர் திருஅண்ணாமலையில் சங்கு ஊதியவாறே கிரிவலம் வந்தால் மனக் கொந்தளிப்புகள்.! TENSIONகள் அகலும்..!

மிண்டுரங்கக் குவளை

மீண்டு வந்த மிண்டு... (ரங்கக் குவளை)

மூங்கில் குவளை நீர் உடலுக்கு ஆரோக்யம் தரும்..! மூங்கில் குவளையில் அரிசி, பருப்பு தானியங்களை அளந்து எடுத்திடில் ஐஸ்வர்யம் பெருகும்..! ச்யவனர் மகரிஷியின் புதல்வராகிய ஔர்வர் மகரிஷி தினந்தோறும் ஸ்ரீவைகுண்டத்திற்குச் சென்று ரங்கக் குவளை எனப் பெயர் கொண்ட மூங்கில் குவளையால் சுவாமிக்குத் திருமஞ்சனம் சாற்றுகின்ற இறைத் திருப்பணியைப் பெரும் பாக்யமாகப் பெற்றிருந்தார்..!

ஒரு நாள் நாராயணப் பரதேசி சித்தருடைய முக்கியமான சீடர் ஒருவர் வைகுண்டத்திற்கு வந்த போது, ஸ்ரீலக்ஷ்மி தேவி அவர் மேல் பரிவு கொண்டு, மானுட சரீரத்திலேயே, இந்தத் தள்ளாத 90 வயதில், பெருமாள் உறையும் ஸ்ரீவைகுண்டத்திலேயே ஸ்ரீமன்நாராயண மூர்த்தியின் திருவடி தரிசனத்திற்கு வந்த அவர் வேறு எதையும் கேட்டுப் பெற விரும்பாமையால், அவருடைய உண்மையான பக்திக்குத் தக்க நற்பரிசாக இருக்கட்டும் என்று கருதி ரங்கக் குவளை என்று பிரசித்தி பெற்ற அம்மூங்கில் குவளையை அவரிடம் தந்தருளினார்!

மறுநாள் தன்னுடைய பூஜைக்காக வந்த ஔர்வர் மகரிஷி ரங்கக் குவளை இருக்க வேண்டிய இடத்தில் பூஜைக்காக ஒரு புது தங்கக் குவளை இருப்பது கண்டு திகைப்படைந்தார்! பல்லாயிரம் யுகங்களாகப் பூஜித்து வந்த ரங்கக் குவளை ஆயிற்றே! இதை இழந்ததில் அவர் பெரும் வருத்தமுற்றார்! ஒரு கோடி மூங்கில்களுக்கு ஒரு மூங்கில்தானே இந்த விசேஷமான ரங்க மூங்கிலாக பூலோகத்தில் விளையும்! ஸ்ரீவைகுண்டத்திலேயே பெருமாளின் திருச் சன்னிதியிலிருந்தே இது எப்படி காணாமல் போகும் என்று அவர் வேதனை கொண்டார்.!

அடியாரின் மனவருத்தம் கண்டு கவலை கொண்டவராய் மாயை புரிந்த ஸ்ரீஅனந்த சயனப் பெருமாளும், ரங்கக் குவளையைத் தேடிக் கொணருமாறு ஆதிசேஷனையும், துவார பாலகர்களையும் பணித்தார்.! இருவரும் பூலோகமெல்லாம் சுற்றி வெறுமனே திரும்பி வந்தனர்..! இறைவனுடைய இத்தகைய லீலா வினோதங்களைக் கண்டு வியப்புற்ற ஸ்ரீமகாலட்சுமி, தாமே அதனைத் தெய்வப் பரிசாக ஒரு சித்தருடைய அடியாருக்கு அளித்ததாகக் கூறிட்டாள்! தம்மை அறியாது ஒரு பொருள் எவ்வாறு வெளிப் போந்தது? இப்போது அது இருக்கும் இடம் கூடத் தெரியவில்லையே என்று எண்ணி ஆதிசேஷனும், துவார பாலகரும் வெட்கம் அடைந்தனர்.! ஸ்ரீரங்க நாதரின் கட்டளைப்படி ஸ்ரீலட்சுமி தேவியே பூலோகத்திற்குப் புறப்பட்டுச் சென்று அந்த அடியார் இருக்கும் இடம் தேடி அலைந்து ரங்கக் குவளையை மீட்டு வந்தாள்.. இவ்வாறு ஸ்ரீவைகுண்டத்திற்கு மீண்டு வந்த மூங்கில் குவளையே வழக்கில் மிண்டு ரங்கக் குவளை ஆயிற்று..!

இதனால் விளைந்த மற்றொரு இறை லீலையாக ஸ்ரீமகாலட்சுமி தேவியே ஸ்ரீரங்கநாதரின் திருநாமங்களை ஓதியவாறு பூலோகத்தில் ரங்கக் குவளையைத் தேடிய இடங்களில் – அதுவரையில் அரிதிலும் அரிதாய், கோடிக்கு ஒன்றாய் விளங்கிய ரங்க மூங்கில் விருட்சமானது நன்கு விருத்தி அடைந்தது! இவ்வற்புதமான ரங்கக் குவளையே, மிண்டு ரங்கக் குவளையாக, மூங்கில் குவளையாகக் கலியுகத்திற்கு இப்போது இறை வழிபாட்டிற்காகச் சித்புருஷர்களால் கொணரப்படுகின்றது..!

கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பது போல மிண்டுக் குவளையின் மாட்சி விண்டுரைக்க இயலாத பல்காண்டப் பதிகங்களாகும்..! பயன்படுத்துவோரே பகுத்துணர முடியும்..! அரிசி, பருப்பு, நீர், சர்க்கரை போன்ற அனைத்திற்கும் இல்லத்தில் பயன்படுத்துவது மட்டுமல்லாது, தர்ப்பணம், அர்ச்சனை, அபிஷேக ஆராதனைகளுக்கும் மிண்டு ரங்கக் குவளையைப் பயன்படுத்திப் பெரும் நற்பலன்களையும், பெருமாளின் அனுகிரகங்களையும் பெற்றிடுங்கள்..! இம்மூங்கில் குவளை ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயங்களில் கிடைக்கும்..!

பிரசன்ன கர்ணிகா பத்ர மகிமை

பொதுவாக, புறாக்களின் படங்களை வரையும் போது அதன் அலகில் தானியக் கொத்து அல்லது கடிதத்தைத் தாங்கிச் செல்வது போல வரைவதைக் கண்டிருப்பீர்கள்..! அக்காலத்தில் கடிதப் போக்குவரத்திற்காகப் புறாக்களைப் பயன்படுத்தினார்கள் என்று நாம் சரித்திர வாயிலாகக் காண்கிறோம்.. காக்கை, குருவி, கழுகு போன்றவற்றைத் தொலைத் தகவலுக்குப் பயன்படுத்திடாமல் புறாக்களை மட்டும் முற்காலத்தில் தேர்ந்தெடுத்தது ஏன்? அப்படிப் புறாக்களுக்கு என்னதான் விசேஷமான சக்தி இருக்கிறது?

வேடந்தாங்கல் போன்ற வன நீரோட்டப் பகுதிகளுக்குப் பல நாடுகளில் இருந்து பல்லாயிரக் கணக்கான மைல்களைத் தாண்டிப் பறவைகள் வந்து செல்வதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம்..! மனிதனுக்குத் தான் நாடு, இன, மத வேறுபாடுகள்! பறவைகள் ஒன்றே பிரபஞ்சமாய் சனாதன தர்ம உலக சாம்ராஜ்யத்தைக் கொண்டவையே! திசை காட்டி இல்லாது, நடுவில் இளைப்பாறத் தாங்குவதற்கு ஒரு சிறு செடி, கொடி கூட இல்லாது, இடையில் பசிக்கு உணவின்றி, எங்கு பார்த்தாலும் கடல், கடல், கடல் எனப் பெருங் கடலின் மீது பறந்து வரும் பறவைகளினுடைய திடமான மன வைராக்கியத்திற்கு முன்னர் ஒரு சிறு துண்டு பீடி, சிகரெட், சிறு தம்ளர் மது, காபி, டீக்கு அடிமை ஆகும் மனிதன் பறவைகளின் கால் தூசு கூடப் பெற மாட்டான்..!

சந்திர மண்டலத்திற்குச் செல்வதாக எண்ணிக் கொண்டு, கோடிக்கணக்கான டாலர்களை விரயம் செய்து பரவெளியில் பிரபஞ்சமளவு நிரவியுள்ள ஓசோன் ஆகிய புனிதப் பிராணாயாம வாயுப் பகுதியை ஏவுகணைகளின் விஷப் புகையால் பாழ்படுத்துகின்ற விஞ்ஞானத்தால் என்ன சாதனை புரிய முடிந்தது? ஆனால் கருடன், புறாக்கள், காக்கைகள் போன்றவை எண்ணற்ற பித்ரு லோகங்களுக்கும், சூரிய, சந்திர லோகங்களுக்கும் நம் விஞ்ஞானத்தால் அறிய முடியாப் பல கோளங்களுக்கும் சென்று வருகின்ற விசேஷமான இறை நல்வரங்களைப் பெற்றிருந்தும் எத்தகைய பணிவுடனும், அடக்கத்துடனும் பட்சிகள் வாழ்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்..!

புறாவிற்கான வைராக்ய தானம்! இதற்காகத்தான் சித்தர்கள் நம்முடைய தினசரி இறைக் கடமைகளுள் ஒன்றாகப் புறாக்களுக்குத் தானிய மணிகள் அளிப்பதை நல்லதோர் தர்மக் கைங்கர்யமாக நமக்கு அளித்துள்ளார்கள்.! ஆனால் எவரேனும் இதனைக் கடைபிடிக்கின்றாரா? சதசங்க அமைப்பு என்ற ஒன்றை ஜாதி, மத, இன, குல பேதமின்றி நாம் அமைத்துக் கொண்டால்தான் பசுக்களுக்குத் தானிய மணிகள், திங்கள் தோறும் சந்திர பகவானுக்கு உளுந்துப் பண்டங்கள் படைத்துப் பசுக்களுக்கு அளித்து சந்திராஷ்டம தின விளைவுகளிலிருந்து தற்காத்துக் கொள்தல், நவமி திதி தோறும் வெள்ளைக் குதிரைகளுக்கு (அவித்த) கொள் அளித்தல், சதுர்த்தி மற்றும் சதுர்த்தசி திதிகளில் விநாயகர் ஹோமத்துடன் யானைகளுக்கு உணவளித்தல், ஏழைகளுக்கு தினசரி அன்னதானம் போன்ற நற்காரியங்களைத் தினந்தோறும் பலரும் ஒன்று கூடிச் செய்வதால் விதவிதமான புண்ய சக்திகளைப் பெற்றுப் பலவிதமான கர்ம வினைகளிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளலாம்.

தனிப்பட்ட முறையில் அனைத்தையும் செய்து பெரும் புண்ய சக்தியை ஈட்டுவது இயலாதது என்பதால் தான் சத்சங்க வழிபாடாக பொது இறைச் சமுதாய ஆலய வழிபாடுகளாக இறைவனே நமக்கு அளித்துள்ளான்.. இவ்வகையில் புறாக்கள் எத்தனையோ தெய்வீக நற்காரியங்களை, ஆறறிவு கூடிய நம் பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட வகையில் இன்றும் பல இறை அற்புதங்களை நிகழ்த்தி வருகின்றன..! ஒவ்வொரு புறாவும் வாரத்திற்கு ஒருமுறையேனும் ஒரு விண்வெளி லோகத்திற்குச் சென்றுப் பல அற்புத பீஜாட்சர மந்திரங்கள் பொறிக்கப்பட்ட, கண்ணுக்குத் தெரியாத சூட்சும ஸ்வர்ணச் சக்கரங்களைப் பெரும் மகரிஷிகளிடமிருந்து பெற்று வருகின்றது...! எதற்கு? மனிதன் பாழ்படுத்தி வரும் உலகின் புனிதத்தைப் பாதுகாத்திட பூமியில் ஸ்வர்ண பீஜாட்சரச் சக்கரங்களை ஆகர்ஷணம் செய்வதற்காக! சித்புருஷர்கள் பலவிதமான யந்திரச் சக்கரங்களை இவ்வகையில் தான் பெறுகின்றார்கள்..!

நாம் அனைவருமே ஒவ்வொரு மகரிஷியின் கோத்திரம் எனப்படும் பாரம்பரியத்தில் ஜனித்தவர்கள் தாம்! இப்பூவுலகமே ஒரு யுகத்தில் சனாதன தர்ம நாடாக, ஒரே தேசமாக ஒரு காலத்தில் இருந்ததுதானே! ஆனால் மனிதர்களுடைய கேவலமான, ஆசாபாசமான,  விருப்பு, வெறுப்பு, பேராசைகளினால்தான் நாடு, மத, இன, ஜாதி, மதப் பிரிவுகள் தோன்றின...! முறையற்ற காமம், பேராசை, பகைமை, விரோதம், குரோதம், தீயொழுக்கங்களுக்கு ஆட்பட்டு மனித சமுதாயம் தன்னைப் பாழ்படுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல் இந்தப் பரவெளியின் புனிதத்தையும் மாசு படுத்திவருவது மிகவும் வேதனைக்குரியதாகும்.. ஆனால் இதில் ஆனந்தம் தரக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் தாவரங்கள் தங்கள் இலைகளாலும், விலங்குகள் தங்களுடைய பாதங்களாலும், பறவைகள் தங்களுடைய இறக்கைகளாலும் பூமியிலும், பரவெளியிலும் எப்போதும் நல்தியான இறைக் கதிர்களைப் பரப்பி மனிதன் கூட்டிய அசுத்தங்களையெல்லாம் நீக்கி வருகின்றன..!

மண்புழு ஆற்றும் மகத்தான இறைப்பணி! : பூமியில் மண்ணுக்கு அடியில் குறித்த வெப்பத்தைத் தாங்கி வாழ்கின்ற மண் புழுக்கள் கூடத் தம் உடலில் சுரக்கும் மாலாங்க்ருதம் என்னும் நெய்வகைத் திரவியம் மூலமாக, பூமியினுள் பல்லாயிரம் மைல்களுக்குக் கீழாக ஆழ்நிலையில் பதிந்து கிடக்கின்ற சுயம்பு லிங்கங்களின் ஒளிப் பிரகாசத்தை ஈர்த்துப் பூமியைப் புனிதமாக்குகின்றன்..! எனவேதான் ஸ்ரீவாஸ்து சாஸ்திரத்தில் மண் புழுக்கள் நிறைந்த பூமியானது மகத்தான தேவ சக்தி உடையதாகிறது..! சிகப்பு, வெண்மை, காவி, பழுப்பு போன்ற பலவகை மண் புழுக்களின் வண்ணங்களைக் கொண்டு சிவபூமி, ருத்ர பூமி, பிரம்ம பூமி, சாஸ்தா பூமி என்று பலவகைகளாகப் பிரிக்கின்றார்கள்..! எந்த பூமியில் எந்த தெய்வத்தின் ஆலயம் எழ வேண்டும் என்பதற்கு மண்புழுவின் வண்ணமே ஸ்ரீவாஸ்து சாஸ்திரத்தில் பயன்படுகின்றது..!

இன்றைக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான சுயம்பு லிங்க மூர்த்திகளும், பூமிக்கு அடியில் நாம் அறியாத வகையில் கோடிக்கணக்கான சுயம்பு லிங்க மூர்த்திகளும், பூமிக்கு அடியில் நாம் அறியாத வகையில் உள்ளன... இது மட்டுமல்லாது நம்மைச் சுற்றிலும், மேலும், கீழும் உள்ள காற்று மண்டலத்தில் கூட எண்ணற்ற லிங்கங்கள் இருப்பதால்தான் இந்தப் பிரபஞ்சத்தின் தெய்வீக மையமாகத் திருஅண்ணாமலை விளங்குகின்றது..! இங்கு ஒரு மண் புழுவாய்ப் பிறப்பு வடிவு எடுப்பதற்குக் கூட ஒரு மகரிஷிக்கான புண்ய சக்திகள் நிறைந்திருக்க வேண்டும் எனில் எத்தகைய புனித பூமியிது..!

ருதுக் காலக் கர்ம வினைகளை உணரவல்ல புறாக்கள்!   புறாக்களில் சிம்புறாக்கள், வழுப் புறாக்கள்., கலைப் புறாக்கள், சடைப் புறாக்கள், குராப் புறாக்கள், மணிப் புறாக்கள், மாடப் புறாக்கள் என்று பல வகைகள் உண்டு.. கோயில்களின் ராஜ கோபுரங்களில் உள்ள மணிப் புறாக்கள் பல லட்சம் மைல்களுக்கு அப்பால் உள்ள பல லோகங்களுக்கும் சென்று வரும் சக்திகளைப் பெற்றவை...! அந்தந்த ருதுக் காலங்களில் (இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ருதுக்கள் மாறும்) ஏற்பட இருக்கின்ற சமுதாயக் கர்ம வினைகளின் விளைவுகளுக்கேற்ப அவற்றை நிவர்த்தி செய்வதற்கான பரிகாரப் பிராயச்சித்த பீஜாட்சர மந்திரக் கீற்றுக்களை, வழிபாட்டு முறைகளை மணிப்புறாக்கள் தாம் பல மகரிஷி லோகங்களிலிருந்து பிரசன்ன ஸ்வர்ண கர்ணிகா பத்ரம் எனப்படும் பீஜாட்சரங்கள் பொறிக்கப் பெற்ற நம் கண்ணுக்குத் தெரியாத ஸ்வர்ண சக்கர யந்திரங்களைத் தாங்கித் தம் தம் குல குருவான சீலப் புறாக்களிடம் அளிக்கும்! இந்த சூட்சும ஸ்வர்ணத் தகடுகள் தான்யக் கதிர்த் தண்டுகள் போல் இருக்கும்! புறாக்கள் தான்ய மணிகளைப் போல் தம் அலகில் சுமந்திருப்பது இதைத்தான் என்ற தேவரகசியத்தை இனியேனும் அறிந்திடுக! இவை தற்போதைய Wap Cell Phoneனில் உள்ள Sim Card போன்றதாகும்..! இதில் லட்சோப லட்ச மந்திரங்கள் பொறிக்கப் பட்டிருக்கும்..!

ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் திட்டை

சந்திர காந்தக் கல் – SPIRITUAL AIR-CONDITIONER !

மணிப் புறாக்கள் இவற்றை ராஜ கோபுரத்தில் பல சூட்சுமமான மூலைக் கோணங்களில் பதித்திடும்.! ஒவ்வொரு பிரசன்ன கர்ணிகாப் பத்ரமும் பல யுகங்களுக்கான பீஜாட்சர மந்திரக் கதிர்களைப் பரப்பும் சக்திகளைக் கொண்டவை.! இதனால்தான் ஆலயங்கள் சிரஞ்சீவித்வம் பெற்றவையாக விளங்குகின்றன..! கும்பகோணம் திருக்கருகாவூர் மார்க்கத்தில் உள்ள தென்குடித் திட்டை சிவாலயத்தில் மூலஸ்தான விமான மூலக்கல்லில் பதிக்கப்பட்டுள்ள சந்திர காந்தக் கல் பல தேவ கருடப் பறவைகளால் சோமச் சந்திர லோகத்திலிருந்து சூட்சுமமாகக் கொண்டு வரப் பெற்றதாகும்.! சந்திர காந்தக் கல் என்பது அக்காலத்து Air Conditioner ஆகும். அதாவது எட்டுத் திக்குகளிலும் எட்டு சந்திர காந்தக் கற்களை வாஸ்து சாஸ்திர முறைப்படிப் பதித்து விட்டால் சம சீதோஷண நிலையை எளிதில் கூட்டுவிக்கும். சந்திரக் காந்தக் கல்லின் தன்மை என்னவென்றால் கடும் குளிரின் போது குளுமையைத் தன்னுள் ஈர்த்து உஷ்ணத்தை வெளி விடுவதும், கடும் வெப்பத்தின் போது வெப்பத்தை ஈர்த்துக் குளுமைக் கதிர்களை வெளியிடுவதும் ஆகும்..! ஆனால் ஒரு சந்திர காந்தக் கல் நன்முறையில் செயல்பட வேண்டுமானால் அதனை ஒருபோதும் சுயநலத்திற்குப் பயன்படுத்தக் கூடாது. அதனை தெய்வீகத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்..! மீறிடில் மூளை பாதிக்கப்படும்! மனநோய் உண்டாகும்! மணிப் புறாக்களும் பலவிதமான யோகத் தவங்களை மேற்கொண்டுதான் பலவிதமான லோகங்களுக்கும் செல்கின்றன..! எவ்வாறு நாம் சபரிமலைக்குச் செல்லும்போது ஒரு மண்டல விரதம் பூண்டு, உடலையும், மனதையும் புனிதப் படுத்திச் செல்கின்றோமோ, இதே போல மணிப் புறாக்களும் தங்களுக்கென உரித்தான சீலப்புறா குருஆணையின் படி எந்த லோகத்திற்குச் செல்ல வேண்டுமோ அதற்குரித்தான விரதங்களைப் பூண்டுதான் செல்கின்றன!

கர்ம வினைகளின் கழிப்பே நாற்றம்!

வெறும் தானியங்களை மட்டும் உண்கின்ற புறாக்களின் புழுக்கைகள் கடும் நாற்றம் அடிப்பது ஏன்? புறாக்களுடைய தியாக சீலம் என்னவென்றால் அவற்றின் குருவான சீலப் புறாவானது, மனிதர்களுடைய எத்தகைய கர்மங்களைத் தீர்ப்பதற்கான பீஜாட்சர மந்திரங்களை ஒவ்வொரு புறாவும் எந்த லோகத்தில் இருந்து பெற்றுத் தாங்கி வந்து பூலோகத்தில் சேர்க்க வேண்டுமோ அதை நிர்ணயிக்கின்றது! அந்தக் கர்ம வினைகளின் ஒரு பகுதியை, அந்தந்தப் புறா குடல் நாற்றமாய் அனுபவிக்க வேண்டும் என்பதாகும்! எனவே அவை நமக்காகக் குடல் நோய்களால் வாடுகின்றன..! என்னே பெருந் தியாகம்! எனவே உலகில் உள்ள நாற்றங்கள்யாவும் மனித சமுதாயத் தீவினைகளின் கழிப்பு ஆகும்! உத்தம தெய்வீக விளக்கங்களில் மனித மலத்தையும், சிறு நீரையும் கர்ம வினைக் கழிப்பின் அடையாளமாக உணரலாம்!

மானுடப் பிறப்பு, மனித சமுதாய ஆன்மீக முன்னேற்றம்தான் பூவுலகையே தெய்வீகப்படுத்தும் என்பதையும் உணர்ந்து புறாக்கள் தாங்கள் சுகமாக வாழ்வதை விடுத்துத் தியாகமய வாழ்க்கைக்குத் தயாராகி தாங்களே தங்கள் குடல் வாதனைகளை அனுபவிக்கச் சித்தமாகிவிடுகின்றனர்..! எனவேதான் நாம் அறியா வண்ணம் நமக்குப் பிரசன்ன ஸ்வர்ண கர்ணிகா பத்திரம் மூலமாக நமக்கு பீஜாட்சர மந்திர சக்திகளை அளிக்கின்ற இறைத் தியாகச் செயலுக்காகத்தான் புறாக்களுக்குத் தினந்தோறும் அவற்றின் வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கான நவதானிய மணிகளை அளிக்கின்ற உத்தம தான தர்மங்களைச் செய்திடல் வேண்டும் என்ற நியதி நமக்கு உள்ளது.. இதைக் கடைபிடித்தால்தானே புறாக் குலத்திற்கான நன்றியைச் செய்வதவர்கள் ஆகின்றோம், ஆனால் செய்கின்றோமா?

பட்சிக்கென மச்சு வீடு தானம்!

நம்முடைய மூதாதையர்கள் தம்முடைய வீடுகளின் மாடி மச்சுகளில் பறவைகளுக்கென்றே ஒரு மாடத்தை ஒதுக்கி வைத்துப் பட்சிகளுக்கான இட தானத்தைச் செய்து பெரும் புண்ய சக்திகளைச் சேர்த்தமையால்தான் அவற்றின் பலாபலன்களாக நாம் இன்றைக்கு சொந்த நிலம், வீடுடன் ஜமாய்த்துக் கொண்டிருக்கின்றோம்.. நம்முடைய சந்ததிகளும் இல்ல(ற)ப் பிரச்சினைகள் இல்லாது சொந்த வீடு, நில பாக்கியம் பெற வேண்டுமானால் நாமும் பட்சிகளுக்கென மாடியில் ஒரு மாடத்தை ஒதுக்கித் தந்து பட்சிகளுக்கு இட தானம் செய்ய வேண்டுமல்லவா? அல்லது தினந்தோறும் காக்கைக்கு, உணவு, புறாக்களுக்கு தானிய மணிகள், கிளிகளுக்குப் பழங்கள் அளித்தல் போன்றவற்றையாவது செய்து வருதல் வேண்டுமல்லவா!

புறாக்கள் தாங்கி வரும் பிரசன்ன ஸ்வர்ணக் கர்ணிகா பத்ரங்கள்!

பத்ரம் என்றால் இலை, காகிதம், ஓலை, தகடு என்ற அர்த்தங்கள் உண்டுதாமே! புறாக்கள் தங்கள் அலகுகளில் தாங்கி வரும் பிரசன்ன ஸ்வர்ண கர்ணிகா பத்ரங்களே இன்றைய ராஜ கோபுரங்களில் சூட்சும மந்திர, யந்திர, தந்திர தெய்வீகச் சக்கரங்களாகப் பதிக்கப் பெற்று ராஜ கோபுரக் கலசங்கள் மூலமாக எண்ணற்ற தெய்வீக மந்திர பீஜாட்சர சக்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன! கர்ணம் என்றால் காது என்று பொருள். மகாபாரதத்தில் கர்ணன் காதில் மாட்டியிருந்த குண்டலங்கள் பலகோடி மந்திரப் பீஜாட்சர சக்திகளைக் கொண்டிருந்தன.. இவையனைத்தும் சூரிய மண்டல பீஜாட்சர சக்திகளாகும்... பிறக்கும் போதே இவற்றைப் பெற்றிருந்த கர்ணன் தான தர்மங்களுக்குப் பெயர் பெற்றவன்தானே!

தினமும் ஒரு லட்சம் புறாக்களுக்குத் தானியங்களை இட்ட பின்தான் தன் நித்திய வழிபாடுகளையே மேற்கொள்ளுவான். இதனால் கோடிக்கணக்கான புறாக்களுடைய பிரசன்ன ஸ்வர்ண கர்ணிகா பத்ரங்களின் சக்திகளை அவனுடைய காதுக் குண்டலங்கள் ஒருங்கே ஈர்த்துக் கொண்டு விட்டன.. இன்னும் சொல்லப்போனால் பல ராஜகோபுரச் சக்திகளை அவனுடைய குண்டலங்கள் ஒருங்கே ஈர்த்துக் கொண்டு விட்டன... இருப்பினும் அதர்மத்தின்பால் அவன் சென்றமையால், அத்தகைய அபூர்வப் புண்ய சக்திகளும் பீஜாட்சர சக்திகளும் விரயமாகி விடும் அல்லது யாருக்கும் பயன்படாது மறைந்து விடும் என்பதால் தான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவே அக்குண்டலங்களைத் தானமாகப் பெற்று அவற்றின் புண்ய சக்திகளைப் புறாக் குலத்திற்கே அளித்திட்டார்.!

எனவேதான் இன்றைக்கும் காது குத்தும் புனித வைபவ மந்திரங்களில் புறாக்களுக்கெனத் தனிக் குறிப்புகள் உண்டு. மேலும் புறா வடிவமே மன சாந்தியைத் தருவதாக, கர்ண சந்திர வடிவம் கொண்டதாகும்.! அதாவது இறைவனுடைய காது குண்டல அசைவு ஒலிப்பாடுகளிலிருந்து ஏற்பட்ட கீதக் கிரணங்களே புறாக்களாக உருப்பெற்றன! இதுவும் புறாக்களின் சிருஷ்டிக் காரணங்களில் ஒன்றாம்!

புறா தரிசனம் நற்சுப சகுனமே!  சுப சகுனப் புறா தரிசனம் என்ற ஒன்று உண்டு. அதாவது நிலப் பத்திரங்கள், தஸ்தாவேஜூகள், ஒப்பந்தங்கள் போன்றவற்றிற்காகப் புறப்படுகையில் வழியில் புறாக்கள் தென்படுவது மிகச் சிறந்த சகுனமாகும்.. இதனால் தான் அக்காலத்தில் எழுத்தாணிகளி, மைக் கூடுகள், மரப் பேனாக்கள் புறா வடிவு கொண்டிருக்கும்.  பத்திரப் பதிவு அலுவலகங்கள் கூட வாஸ்து சாஸ்திர ரீதியாகப் புறா மாடங்கள் உள்ள இடங்களில்தான் அமைப்பார்கள்..! அல்லது புறாக் கூடுகள், மாடங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் புறாவின் தரிசனம் கிட்டும் வண்ணம் உள்ள இடங்களில் ஒப்பந்தங்கள் நடைபெறும்.! புத்தகங்கள், ரெக்கார்டுகள், பத்திரங்கள் ஆகியவற்றிற்கான அட்டை label கூட சமாதானப் புறாக்களின் வடிவைக் கொண்டிருக்கும்... இவ்வாறு பிள்ளைகளுக்கான புத்தகங்களில், நோட்டுகளில் Label ஒட்டுகையில் புறா பற்றிய வேத மந்திரங்களை ஓதி ஒட்டிடில் கல்வி அறிவு விருத்தியாகும்.! பத்திரங்களின் ரகசியமும், பத்திரங்களும் பாதுகாக்கப்படும்., இன்றைக்கு நாம் பெற்றுள்ள தெய்வாதி தேவ ரூபங்களும், பல மகரிஷிகளுடைய, சித்தர்களுடைய வடிவுகளும், சிம்புறாக்கள் கொணர்ந்த சிலாக் கல்ப சூத்ர மந்திரங்களிலிருந்து பெறப்பட்டவை ஆகும்..! இவ்வாறாக புறாக்களால் நம் பூவுலகம் பெறுகின்ற தெய்வீகப் பலன்கள் ஏராளம்.. ஏராளம்..! எனவே புறாக்களுக்கு நன்றி செலுத்தும் வண்ணம் தினமும் தானிய மணிகளை நாம் அளிக்க வேண்டும்!

வீட்டில் விளக்கேற்றுதல்

இன்றைக்கு நம் தினசரி வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற பல மன வேதனைகள், சிறு சிறு பிரச்னைகள், அலுவலகத் தடங்கல்கள், பகைமை உணர்வுகள், ஏமாறுதல் போன்றவற்றை மிக எளிதில் நீக்கி நமக்கு மனச் சாந்தியைத் தருவதாக அமைவதே விளக்கு தீப வழிபாடாகும்..! பிரம்ம முகூர்த்த நேரமான காலை 3 மணிக்கு மேலும் 6.30 மணிக்குள்ளும், மதியம் அபிஜித் முகூர்த்தம் எனப்படும் உச்சி வேளையிலும் (12 மணி), மாலை சந்த்யா காலம் அல்லது நித்யப் பிரதோஷம் எனப்படும் 4.30 மணி முதல் 6.30 மணிக்குள்ளும் குறைந்தது இரண்டு திரிகளை உடைய தீபங்களை இல்லத்தில் ஏற்றி வழிபட வேண்டும்.. எப்போதும் இல்லத்தில் விளக்கொளி இருப்பது மிகவும் சிறப்புடையது. மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்..!

நல்லெணெய், வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பெண்ணெய், பசு நெய் (எருமைப் பால் நெய் கூடாது) ஆகியவையே தீபத்திற்கு ஏற்றவையாகும்.. சந்தனத் தைலம் போன்றவற்றையும் சேர்த்திடலாம்..! நறுமணம் என்பதற்காக Alcohol, Menthol போன்ற ரசாயனங்களைச் சேர்த்தால் சாபங்களே ஏற்படும்.! ஒவ்வொரு எண்ணெயும் விதவிதமானப் பலன்களைத் தரும்..! எப்படி? கலியுகத்தில் கேள்வி கேட்பது எளிது ஐயா? அனைத்திற்கும் விடைதரும் சற்குருவைச் சரணடைவது எப்போது?

விளக்கு தீபத்தில் விண்ணளாவ தேவதைகள்!

முதலில் விளக்கை ஏற்றுதல் என்றால் என்ன என்பதை நன்கு தெய்வீகமாக உணர்ந்து, புரிந்து கொள்ளுங்கள்..! அக்னி என்பது நீங்கள் ஊற்றுகின்ற எண்ணெயாலோ அல்லது திரியாலோ மட்டும் தோன்றுவது கிடையாது... விளக்கு, திரி, எண்ணெய் இவையெல்லாம் அக்னி தேவதைகள் தங்குவதற்கான உபகரணங்கள் ஆகும்... பஞ்சுத் திரியில் ஐந்து விதமான பஞ்ச பூத தேவதைகள் உண்டு. இவை அக்னிக் கிரணங்களில்தான் தங்கள் சக்திகளை வெளிப்படுத்தும், மேலும் அகல் விளக்கில் பிருத்வி தேவதைகளும், குத்து விளக்கில் பஞ்ச லோக தேவதைகளும் உண்டு... இவை அனைத்தும் ஒளி வடிவமானவை.. எனவே நீங்கள் விளக்கை ஏற்றும் போது சுடர் வடிவில் பல்லாயிரக்கணக்கான ஒளி வடிவமான தேவதைகளைத் தரிசிக்கின்றீர்கள்.. இவ்வாறாக வாழ்வில் 96 கோடி நாழிகைகள் தீபத்தினை தரிசிக்கின்றோர்க்குத் தர்ம தேவதைகளின் தரிசனம் பரிபூரணமாகக் கிட்டும்!

நல்லெண்ணெயால் தீபத்தை ஏற்றும் போது எள் மணிகளில் தில சௌந்தர்ய தேவதைகள் ஒளி வடிவில் நமக்குக் காட்சித் தருகின்றன. இவர்கள் பித்ரு பத்னீ கண வகைகளைச் சார்ந்த தேவதைகள்! எனவே பித்ரு லோகத்தில் எத்தகைய வடிவில், வண்ணத்தில் தீபங்கள் உள்ளனவோ, அதே வடிவான தீபக் காட்சியைத் தருகின்றன.. காற்று அசைவினால் தீப ஒளியின் வரிவடிவம் மாறிக் கொண்டிருக்கின்றது என்று நீங்கள் எண்ணுகின்றீர்கள். இதுவும் அறியாமையே!

நடராஜ நாட்டியச் சலனங்களே விளக்கு தீப அசைவுகள்! ஜோதி வடிவுகள் யாவும் நடராஜப் பெருமானின் நாட்டிய வடிவுகளே ஆகும்... மேலும் இறைவனின் நாட்டியக் கோலத்திலிருந்து உருவாவதே இந்தப் பிரபஞ்சமும், கோளங்களும், அவற்றின் பருப்பொருளும் ஆகும்.. எனவே நீங்கள் விளக்கின் தீப வடிவில் காண்பது, இறைவனுடைய எந்த நாட்டிய வடிவுக் கோலத்தில் அந்தந்த தேவதைகள் தோன்றியனவோ, அந்த மூலவடிவுதான் தீபத்தின் தோற்றம் ஆகின்றது... ஏனென்றால் அக்னியில் மட்டும்தான் ஒருவருடைய மூல உருவைக் காண முடியும்! உலகம் இயங்குவதே ஒளியால்தானே! விளக்கின் ஒளியில் எவ்வாறு திரியின் பஞ்சபூத தேவதைகளும், விளக்கின் பஞ்ச லோக தேவதைகளும் எண்ணெயின் மூல தேவதைகளும் ஒன்றாகச் சேர முடியும்? இங்கும் நம் அறியாமைதான் இந்தக் கேள்வி மூலமாக விளையாடுகின்றது...! ஒரு பஞ்சபூத தேவதையின் வடிவம் விண்ணுக்கும் மண்ணுக்குமாக எழுந்து விஸ்வரூபமாகிய பரந்த வடிவைக் கொண்டிருக்கும்.. ஆனால் இந்த வடிவம் நம் கண்களின் குறுகிய பார்வைக்குள் பொருந்தாது.. காரணம் அதை தரிசிப்பதற்கான ஆத்ம சக்தி நம்மிடம் இல்லை!

எனவேதான் அனைத்து அக்னி தேவதைகளுமே நம்மிடம் பரிவு, கருணை, அன்பு கொண்டு சிறிய வடிவில் சிறு ஜோதியாகக் காட்சி தருகின்றனர். எனவே விளக்கின் ஜோதியைப் பார்க்கின்ற போதெல்லாம் அக்னி தேவதைகளுடைய விஸ்வரூபம் பற்றிய ஆத்ம சிந்தனை எழுதல் வேண்டும். நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் விளக்கு எரியும் போது அந்த அக்னி தேவதைகள் நம் இல்லம் முழுவதும் வியாபித்துத்தான் இருக்கின்றார்கள்.. எனவே ஒரு சிறிய விளக்கு தீபம் கூட நம் இல்லத்தை நன்கு பரிசுத்தமாக்கி விடும்..!

தேங்காய் எண்ணெயில் ஈச்சநாரி தேவதைகள் குடிகொண்டிருக்கின்றன.. இவர்கள் விநாயகருடைய காணாபத்ய லோகத்திலிருந்து தோன்றுகின்றவர்கள்.. எனவே தேங்காய் எண்ணெய் ஜோதியில் ஓம்கார ஒலி நாதங்கள் எழும்... ஒளிக்கு ஒலி உண்டா? நிச்சயமாக உண்டு! ஹோமங்களில் இடப்படும் ஆஹூதிகள் பலவிதமான ஒலிகளை எழுப்புவதைக் கேட்டிருக்கின்றீர்கள்.. அக்னியில் குச்சிகள் அல்லது தானியங்கள் வெடிப்பதால் சப்தம் எழுகின்றது என எண்ணாதீர்கள்.., மனிதனுக்குக் கபால மோட்சம் போல ஹோமத்தில் இடப்படும் சமித்து மரக் குச்சிகள், நவதானியங்கள், பழங்கள் ஆகியவற்றிற்கும் அக்னி மோட்ச நிலைகள் கிட்டும்போது அதனதற்குரித்தான ஆத்ம அட்சரங்களே இவ்வாறு ஒலிக்கின்றன..!

மின்னலில் கூட நம் காதுக்கு எட்டாத வகையில் பல ஒலிகள் ஏற்படுவதுண்டு... கடலில் வாழ்கின்ற ஆமையானது மனிதனை விட ஆயிரம் மடங்கு ஒலியைக் கேட்கும் சக்தியைக் கொண்டதாகும். ஒரு சிறிய வெண்டைக்காயை நீங்கள் தரையிலிருந்து எடுக்கும் போது ஏற்படும் ஒலியை உங்களால் உணர முடியுமா? இதனையும் உணரவல்லதே கடல் ஆமையாகும்..!

விளக்கு ஏற்றுவது அக்னி தேவதைகளை அழைத்திடவே! நீங்கள் விளக்கை ஏற்றும் போது தாங்கள் பூலோகத்தில் சில நிமிடங்களேனும் அல்லது மணித் துளிகளேனும் (விளக்கு எரியும் நேரத்தைப் பொறுத்தது.) நிலை பெறுவதற்கு வாய்ப்பளித்தமைக்காக இந்த அக்னி தேவதைகள் விளக்கு ஏற்றப்பட்ட இல்லங்களுக்குத் தங்களுடைய ஆசீர்வாதக் கிரணங்களையும் மந்திரங்களையும் நன்றியாக அளிக்கின்றனர்..! விளக்கின் தீபம் கூட நல்வாக்கினை உரைக்க வல்லதாகும்... விளக்கின் ஒளியைப் பார்த்தே தீர்க்க தரிசனமாகக் கர்ம வினைகளுக்கானப் பரிகாரங்களை எடுத்துரைக்கின்ற அக்னி சாஸ்திரம் ஒன்றும் உண்டு.

கார்த்திகை தீபத்தின் போது திருஅண்ணாமலையில் பலரும் ஒன்று சேர்ந்து கூட்டு விளக்கு வழிபாடு நிகழ்த்தி பிறகு அந்த விளக்கினைக் கொண்டு இல்லத்தில் தொடர்ந்து தீபம் ஏற்றி வந்தால் அண்ணாமலை தீபத்தின் சக்தியில் குறித்த சிவ அம்ச தீப சாந்நியத்தினை அவரவர் நம்பிக்கை, பக்தி நிலைமைக்கு ஏற்றவாறு இல்லத்திற்கு அளித்துக் கொண்டிருக்கும்.!

ஜோதி ஜோதி அருணை ஜோதியே

ஆண்டாண்டு காலமாய்ப் பிரகாசித்து வரும் அக்னி தழைக்கட்டும்! அக்னி ஹோத்ரிகள் எனப்படுவோர் தினந்தோறும் ஹோமம் வளர்த்து வழிபட்டு அக்னியை அணைத்திடாது அதே அக்னியில் பூஜையை, ஹோமத்தை மறுநாளும் தொடர்வார்கள்.. இவ்வாறாக ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து அணையாது இருந்து பராமரிக்கப்பட்டு வருகின்ற அக்னிக்கு மகத்தான தேவ சக்திகள் உண்டு.. இதனை தரிசித்தலே வாழ்க்கையில் பெறுதற்கரிய பாக்யமாகும்..! காஞ்சீபுரத்தில் இத்தகைய பேரருள் பெற்ற ஓரிரு அக்னி ஹோத்ரிகள் உள்ளனர்.. நன்கு விசாரித்து இவர்களுடைய இல்லங்களில் ஐம்பது/ நூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து உள்ள அக்னியைத் (நெருப்புத் தணல்) தரிசித்து உங்களுடைய பலவிதமான கர்ம வினைகளைப் பஸ்மம் செய்து மகத்தான தேவ ஆசிகளை விருத்தி செய்து கொள்ளுங்கள்..!

மஹாராஷ்டிராவில் ஷிர்டி ஸ்ரீசாய்பாபாவின் ஜீவாலயத்தில் உள்ள ஊதி எனப்படும். அக்னியும், சென்னை மயிலாப்பூர் ஷிர்டி ஸ்ரீசாய்பாபா ஆலயத்தில், உள்ள அக்னியும் பல ஆண்டுகளாக போஷிக்கப்படுபவையே.! கேதார்நாத் செல்லும் வழியில் ஸோன் ப்ரயாக் அருகில் திரிபங்கி மலையில் சிவபெருமான், பார்வதி திருமணச் சடங்கில் இருந்து பல்லாயிரம் ஆண்டுகளாகப் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகின்ற அக்னிச் சுடர்களை தரிசிப்பதும் வாழ்க்கையில் பெறுதற்கரிய பாக்கியமாகும்.. கேதார்நாத் செல்லும் போது இதை தரிசிக்கத் தவறாதீர்கள்!

எனவே உங்கள் இல்லத்தில் காலையிலும், மாலையிலும் பத்து பதினைந்து நிமிடங்கள் மட்டுமே நீங்கள் ஏற்றுகின்ற தீபமானது மகத்தான பலாபலன்களை அள்ளித் தருகின்றது! சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் அனைத்துமே அக்னி, ஜோதி வெப்பக் கூடல்தாமே! திதி என்பது சூரிய, சந்திர கோளங்களுக்கு இடையே உள்ள தூரத்தைக் குறிப்பதாக வான சாஸ்திரம் கூறினாலும் இரண்டு கோளங்களின் வெப்ப அளவை ஆத்மார்த்தமாக உரைப்பதே திதியின் தாத்பர்யமாகும்..! எனவே அந்தந்த திதிக்குரித்தான ஒளிச் சக்தியை, அக்னித் தன்மையை, வெப்பச் சுடரை நீங்கள் உங்கள் இல்லத்தில் எழுப்புவீர்களேயானால் நாளும், கோளும் நமக்கு நல்வரங்களைத் தந்து இடர்களைக் களைந்திடும்.. அல்லவா!

எனவே அந்தந்தத் திதிக்குரிய வெப்பத்தையும், அக்னியையும் பெற்றுத் தருகின்ற விளக்கு தீபத்திற்கான தைலம் மற்றும் எண்ணெய் வகையை அறிந்து விளக்கேற்றி வந்தால் மகத்தான காரிய சித்திகளைப் பெற்றிடலாம்! குறிப்பாக, நவகிரக மூர்த்திகளுக்கு அந்தந்த கிரக, திதிக்கு உரிய எண்ணெயால் ஆலயங்களில் தீபம் ஏற்றி வந்தால் நல்ல பலன்களைப் பெற்றிடலாம்! பிரதமை முதல் அமாவாசை/பௌர்ணமி வரையான ஒவ்வொரு திதிக்கும் உரித்தான (விளக்கேற்றுவதற்கான) எண்ணெய் தைல வகைகள் ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயங்களில் கிடைக்கும்..! விளக்கங்களுடன் பெற்று அபரிமிதமான பலன்களைப் பெற்றிடவும்.!

திதி தீபக் கூட்டு எண்ணெயின் லட்ச தீபத்தில் முகிழ்த்த லட்சிய இறைப் பதிகம்! திருச்சி அருகே திருநெடுங்களத்தில் திருஞான சம்பந்தப் பெருமான் இடர்களையும் பதிகம் பாடிய போது ஆலயத்தில் நல்லெண்ணெயால் 1,00,008 தீபங்கள் ஏற்றப்பட்டு அவை பதிகம் முடியும் வரை அணையாமல் நல்லெண்ணெய் இட்டுப் போற்றிப் பாதுகாக்கப்பட்டன..! அக்னி சாட்சியாக எழுந்த அதியற்புதப் பதிகம்! பித்ருக்களுடைய ஆசிகளைப் பெற்றுத் தரவல்ல நல்லெண்ணெயில் எழுந்த ஒரு லட்சத்து எட்டு தீபங்களின் ஒளிக் கடலிற் புனைந்த பதிகமாதலின் பித்ரு கடனையும், கடன், பண சம்பந்தப்பட்ட பிரச்னைகளையும் தீர்த்துத் தரவல்ல அதியற்புதப் பதிகமே இடர்களையும் பதிகமாகும்!

சுண்ணாம்புக் காளவாயிலும் ஏற்படும் ஒருவிதச் சூடும் ஒருவகை அக்னியே! இது சிப்பிகளிலிருந்து பெறப்பட்டால் இதற்கு மகத்தான அக்னி சக்திகள் கூடிடும்.. ஏனென்றால் சூரியச் சந்திரக் கோள்களைவிடப் பலகோடி மடங்கு ஒளி மற்றும் உஷ்ணச் சக்திகளை உடைய நட்சத்திரங்களில் இருந்து எழுகின்ற அக்னி சக்தியைக் கடல் நீரில் உள்ள விசேஷமான லவண லாவாண்யப் பிரகாச நீரோட்டங்கள் மூலமாகப் பெற்றிடும் சிப்பிப் பூச்சிகளின் ஓடுகளிலிருந்து பெறப்படுகின்ற சுண்ணாம்பிற்கு ஜீவன்களுக்கு ஆரோக்கியத்தைத் தரும் சக்தியையும் சூரிய கிரணங்களை நல்வரங்களாக மாற்றித் தருகின்ற இறைச் சக்தியும் அதிகமாகும்..!
எனவேதான் சிப்பிச் சுண்ணாம்பு பூசப்படுகின்ற இல்லத்தில் கர்மவினைகள் கழிந்து புதிய தேவ சக்திகளை ஈர்க்கும் பாங்கினையும் அது பெற்றுத் தருகின்றது..! சுண்ணாம்புக் காளவாயில் அக்னியை ஏற்றும்போது கூடப் பசுநெய் தீபத்திலிருந்துதான் அக்னியை எடுத்து ஏற்றுவார்கள்! தற்காலத்தில் அக்னியை எழுப்பிடத் தீக்குச்சிகளைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது.. எனவே தீக்குச்சியில் இருந்து நேரடியாக அக்னியை ஏற்றுவதை விட முதலில் ஒரு சிறிய மரக் கரண்டியில் (மா, பலா தேக்கு மரக் கரண்டி) பசுநெய் தோய்த்த திரியை ஏற்றி, அதிலிருந்து வீட்டிலோ வேறு எங்குமோ விளக்கை ஏற்றுவது சிறப்புடையது!  எதிலிருந்து அக்னியைப் பெறுகின்றோம் என்பதும் அக்னியின் முழுப் பலாபலன்களைப் பெறுவதற்கு மிகவும் முக்யமானதாகும்,! வீட்டில் விளக்கை ஏற்றியவுடன் சில நிமிடங்களேனும் ஜோதியின் தீப வடிவத்தை தரிசித்து தியானித்திடுங்கள்..!

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குரு நாதராம் சிவகுருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளுடன் பதினைந்து திதி தேவதைகளும் பூஜித்த ஆலயங்களுக்குச் சென்று ஒவ்வொரு திதிக்கும் உரித்தான எண்ணெய்த் தைலம் உருவாக்கும் முறையையும் உபதேசமாகப் பெற்று அந்தந்தத் தலத்தில் அந்தந்தத் திதி தேவதா மூர்த்தி பயன்படுத்திய எண்ணெய்த் தைலங்களாலேயே ஒவ்வொரு ஆலயத்திலும் 1008 அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்டு அவற்றின் பலாபலன்களை ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமாகத் தைல தேவதைகளுக்கே அர்ப்பணித்திட்டார்..!

சிவகங்கை திருத்தவத்துறை

உதாரணமாக பிரதமைத் திதி தேவதா மூர்த்தி எண்ணெய்த் தைலம் ஏற்றி வழிபட்ட தலமே காஞ்சீபுரம் ஸ்ரீகாமாக்ஷி ஆலயக் காமத் தீர்த்தமாகும். இதே போன்று பஞ்சமி திதி தேவதா மூர்த்தி எண்ணெய்த் தைல விளக்கை ஏற்றி வழிபட்ட இடம் சப்த ரிஷிகள் நீராடிய லால்குடி (திருத்தவத் துறை) சிவகங்கைத் தீர்த்தமாகும்..! ரிஷி பஞ்சமி விசேஷ தினத்தன்று லால்குடியில் சிவகங்கைத் தீர்த்தத்தில் பஞ்சமி திதிக்குரிய எண்ணெய்த் தைலத்தால் விளக்கேற்றி சப்த ரிஷிகளுக்கும் அர்க்யம் அளித்து ஏழுவகை வஸ்திரங்கள், காய்கறிகள், உணவு வகைகள் போன்றவற்றை ஏழின் வகைகளாக ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்திடில் நல்ல சந்ததி கிட்டிட சப்தரிஷிகளின் ஆசி கிட்டிடும்.!

தீய ஒழுக்கங்களால் தறிகெட்டு வாழும் பிள்ளைகளும், பெண்களும் திருந்திட பஞ்சமித் திதியில் குறித்த எண்ணெய்த் தைல விளக்கேற்றி ஸ்ரீமதி அம்பிகையை வழிபட்டு ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் லிங்கத்தை அடிப்பிரதட்சிணம் செய்து வழிபடவேண்டும்.! துவிதியைத் திதி தேவதா மூர்த்தி வழிபட்ட இடமே, கும்பகோணம் அருகே கருவிலிச் சிவாலய எமத் தீர்த்தமாகும்..! இங்கு துவிதியை மற்றும் செவ்வாய்க் கிழமை அன்று செவ்வாய் ஹோரை நேரத்தில் துவிதியை திதிக்குரிய எண்ணெய்த் தைலத்தால் விளக்கேற்றி வழிபட்டு எருமைகளுக்கு அகத்திக் கீரை அளித்து வந்தால் கடுமையான நோய்கள் தீர்வதற்கு நல் பிராயச்சித்த வழிகள் கிட்டும்..! எமபயமும் அகலும்.

தட்சிணாயன புண்ய காலம்

வரும் 16.7.2001 திங்கட் கிழமையன்று சூரிய பகவான் கடக ராசியில், புனர்பூச நான்காவது நட்சத்திரக் காலில், பகல் 1.57க்கு பிரவேசம் செய்கின்ற மிகவும் புனிதமான நேரமே வ்ருஷ (விஷு) வருட தட்சிணாயனப் புண்ணிய காலம்! ரவி மூர்த்தி, பாஸ்கர மூர்த்தி, சூரிய நாராயண மூர்த்தி, ஆதித்யன் என்றெல்லாம் திருநாமங்களைப் பூண்டுள்ள ஸ்ரீசூரிய பகவான் தம்முடைய அயனகதி பேதங்களில் மாற்றங்களைக் கொள்கின்ற புனித காலமே உத்தராயணப் புண்ய காலம் (தை முதல் தேதி), தட்சிணாயனப் புண்ய காலமாகப் (ஆடி முதல் தேதி) பிரகாசிக்கின்றன..!

இவையெல்லாம் விஞ்ஞான, ஜோதிடக் கணித, வானியல் சாஸ்திரப் பூர்வமாகவும் நாம் அறிகின்ற விளக்கங்களாகும். இவற்றையெல்லாம் கடந்த உத்தம தெய்வீக நிலையில், நாம் உணர வேண்டிய உத்தராயண, தட்சிணாயன தெய்வீக விளக்கங்கள் பல உண்டு... இவற்றைக் குருவாய் மொழியாக சித்தர்களுடைய ஞான பத்ர கிரந்தங்களிலிருந்து பெறுதலே சிறப்புடையதாம்.!

சிவநாட்டியச் சலனமே! பிரபஞ்ச பரிபாலனம்!

இறைவனுடைய வலது, இடது கண்களாகத் திகழ்பவர்களே ஸ்ரீசூரிய பகவானும், ஸ்ரீசந்திர பகவானும்! சிற்றம்பல வாணனாகிய ஸ்ரீநடராஜப் பெருமான் எப்போதும் நாட்டியம் ஆடிக் கொண்டு பிரபஞ்சத்தை ஆட்(சி)டிப் படைப்பவர் தாமே! அவர்தம் வலது நேத்திர யோகப் பார்வைதனை அணுவினுஞ் சிறிதாய்ச் சற்றே அசைத்திடும் போது அவையே பிரபஞ்சத்தின் அயன கதி பேதங்களாகின்றன.. எத்தனையோ கோடி உத்தராயண, தட்சிணாயன காலங்கள் வந்து போயிருக்கின்றன என்றால், அத்தனை கோடி இறைவனின் வலது, நேத்திர யோக அசைவுகளைச் சிதம்பரப் பெருமான் படைத்துள்ளான் என்பதுதானே முக்கியப் பொருள்! எனவேதான் ஒரு தட்சிணாயனம் போல மற்றொரு தட்சிணாயனம் அமைவது கிடையாது.!

அடுத்து வருகின்ற ஆறு மாத அயன, ருது, மாதக் காலங்களில் ஏற்பட இருக்கின்ற கர்ம வினைகளின் தொகுப்பினை, பிரபஞ்ச நிகழ்ச்சிகளின் பகுப்பினை, கோடானு கோடி ஜீவன்களின் வாழ்க்கைப் புதுப்பினைச் சிவபெருமானுடைய ஒரு சிறு வலப் பார்வைச் சலனம் மூலமாக சூரிய பகவான் உணர்ந்து செயல்படுகின்றார் என்றால் ஆண்டவனின் ஒரு சிறு கரு விழியோட்டம் எத்தகைய பிரம்மாண்டமான பிரபஞ்ச த்வீபச் சுழல் என்பதை இனியேனும் இறைப் பகுத்தறிவால் உணர்ந்து கொள்ளுங்கள்!

அண்ணாமலை தரிசனங்கள் நடராஜர் நாட்டியக் கோலங்களே! :எப்போதும் தென்புல யோகத்தில் திளைத்திருக்கும் பித்ருக்களாகிய நம் மூதாதையர்கள் இறைவனுடைய யோக அசைவு தரிசனங்களுக்காகவே எந்நேரமும் காத்திருந்து வழிபட்டுக் கொண்டு மாதவம் பூண்டு இருக்கின்றார்கள்.. ஆனால் பித்ருக்கள் பெறுகின்ற தரிசனங்களும் ஒரு சிலவே! திருஅண்ணாமலையில் ஒவ்வொரு அங்குலக் கோண தரிசனமும் இறைவனின் வல, இடக் கண் நேத்திரச் சலன அசைவு தேவ ரகசியங்களை உணர்த்துவதாம்! எனவே சூட்சும ரீதியாக திருஅண்ணாமலையின் ஒவ்வொரு அங்குல தரிசனமும் இறைலீலா விநோதமாக மாறிக் கொண்டே இருப்பதாம்! இவற்றை நன்கு உணர்ந்தவர்களே வசு, ருத்ர, ஆதித்ய பித்ரு தேவ மூர்த்திகளாவர்! எனவேதான் பித்ருக்களின் ஆசியின்றி எவரும் திருஅண்ணாமலையின் எல்லையைக் கூட தரிசிக்க இயலாது!

இறைவனுடைய ஒரு சிறு கண் இமைச் சலனமே பல கோடி யோக பாவனைகளை உணர்த்துவதாகும்.. இதனால்தான் அம்பிகை இறைவனின் திருக்கண்களைப் பொத்தியபோது பிரபஞ்சமே ஸ்தம்பித்து விட்டது! இந்த இறையோக பாவன மாற்றங்களே வார நாட்களாகவும், மாதத் தேதிகளாகவும், நட்சத்திர நாட்களாகவும், யோக, கரண அம்சங்களாகவும் லக்னங்களாகவும் கால பத்திரமாகப் பஞ்சாங்கத்தில் உணரப் பெறுகின்றன!

ஒன்றானவன் வெவ்வேறாய் உணர்த்துகின்றான்! பித்ருக்களால் உணரப் பெறும் இறைவனுடைய நேத்ர யோகச் சாயைகளும், பாவனைகளும் தேவர்களாலும், தேவதைகளாலும், ஜீவன்களாலும் அவரவர் தெய்வீக உய்விற்கேற்ப பலவகைகளில் வேறுவிதமான நல்வரங்களாகக் கொள்ளப்படுகின்றன. உதாரணமாக, சிதம்பரம் அருகே உள்ள திருநல்லூர்ப் பெருமணம் எனப்படும்  ஆச்சாள்புரத்தில், திருஞான சம்பந்தப் பெருமானுடைய திருமணத்தின்போது நந்தி எம்பெருமானும், தேவ விமானமும், பரஞ் ஜோதிச் சுடரும் தோன்றிய போது அதனைப் பலரும் பல வகையாய் உணர்த்திட்டனர்! பலரும் வீழ்ந்து வணங்கிட, பெரும் பிரிவினர் அஞ்சி ஓடிட இவ்வாறாகப் பலரும் பலவகையான காரியங்களில் ஈடுபட்டனர்... உண்மைப் பொருளை உணர்ந்தவர்கள் ஒரு சிலரே!

எனவே தட்சிணாயனப் புண்யகாலம் என்பது அடுத்து வருகின்ற ஆறுமாத காலத்தில் நம் பிரபஞ்ச வாழ்வின் கர்ம பரிபாலன நியதி அம்சங்களைக் குறிப்பதாகும்! சூரிய கிரணங்கள்தாம் உயிரின வாழ்க்கைக்குப் பெரும் ஜீவித சக்தியை அளிக்கின்றன..! எனவே சூரிய பகவானே வரும் ஆறு மாத காலத்தில் ஏற்பட இருக்கின்ற கர்ம வினைகளின் சஞ்சாரத்தை உணர்ந்து அவற்றிற்கேற்ப தம் கிரணப் பரிமாணங்களை மாற்றிக் கொள்கின்றார்! இதுவும் தட்சிணாயனப் புண்ய கால அம்சங்களுள் ஒன்றாகும்!

தட்சிணாயனப் புண்ய காலத்தின் முதல் நாள் (ஆடி முதல் தேதி) மட்டும் வெறுமனே பூஜையோ, தர்ப்பணமோ அளித்து விட்டால் போதுமா? ஆறுமாத காலத்திற்கான முழுப் பாதுகாப்புதனை இது தந்திடுமா என்று கேட்டிடலாம். தட்சிணாயனப் புண்ய காலம் என்று நாம் குறிப்பிடுவது அந்நேரத்தின் புனிதமான அம்சத்தையேயாம்.. எவ்வாறு சுப முகூர்த்த நேரமானது சில நிமிடங்களுக்கு மட்டுமே புனிதத்தைச் சுமந்திருக்கின்றதோ இதே போல தட்சிணாயனப் புண்ய காலவிசேஷமான புனித அம்சங்கள் இந்நாளில் நிறைந்து குவிந்திருக்கும்.!

அயனம் வரும் முன்னர் ஆதித்யன் ஆற்றும் பூஜை! வரும் ஆறு மாத கால அயன காலப் பிரபஞ்ச பரிபாலனத்திற்காகச் சூரிய பகவானே பலவிதமான பூஜைகள், ஹோமங்கள், ஆலய தரிசனங்கள், தீர்த்த நீராடல்கள், புனித மலை கிரிவலங்கள் போன்றவற்றை இன்று மேற்கொள்வதால் இந்நாளில் நாம் செய்யும் பூஜைகள் யாவுமே கதிரவனின் கவின்மிகு பூஜைகளோடு சேர்ந்து பலாபலன்களும் பல்கிப் பன்மடங்காகின்றன என்பது அயன கால பூஜையின் விசேஷ மகத்துவமாகும்..!

எவ்வாறு பிரதோஷ நேர பூஜையானது பன்மடங்கு பூஜா பலன்களைத் திரட்டித் தருகின்றதோ, இதே போல தட்சிணாயனப் புண்ய காலப் பூஜைகள், தர்ப்பணங்கள், தான தர்மங்கள், தீர்த்த நீராடல்களும் அபரிமிதமான இறைத் திருவருளால் நல்வரங்களைத் திரட்டித் தருகின்றன.. சூரிய பகவானுடைய தேரோட்டச் சுழல் முறைகளும் இன்று மாறுபடுகின்றன. எனவே சூரிய பகவானே இன்று கிரிவலம் வருகின்ற, கிரண அக்னி சக்திகள் நிறைந்த திருஅன்ணாமலை, தேனி மலை, திருப்பரங்குன்றம், பழனி, பர்வத மலை, மதுரா (உத்தரப் பிரதேசம்) போன்ற இடங்களில் கிரிவலம் வருவதால் சூரிய பகவானின் சப்த சாகரத் தேரோட்டச் சுழல் வரங்களைப் பெற்றிடலாம்.. இதன் பலனாக வாய்மொழிக் குற்றங்களுக்கான தக்க பிராயச்சித்தங்கள் கிட்டும்!

மேலும் பித்ரு தேவர்களும், முப்பத்து முக்கோடித் தேவர்களும் சூரிய மண்டலத்தில் தர்ப்பண பூஜைகளையும், அர்க்யங்களையும் மேற்கொள்வதால் இன்று நாம் அளிக்கின்ற தேவ பூஜா அர்க்யங்களும், பித்ருத் தர்ப்பண நீர் வார்த்தல்களும் சூரிய நீரோட்டங்களை அடைந்து நம் மூதாதையர்களுக்கும், எதிர்வரும் சந்ததியினருக்கும் நல்வரங்களையும், நற்பலன்களையும் அளிக்கின்றன.

வேணீ ஜல பந்தனத் தர்ப்பணம் : வ்ருஷ (விஷு) வருடத்திற்கான தட்சிணாயனப் புண்ய காலத் தர்ப்பண வார்ப்பு முறையாக சித்புருஷர்கள் வேணீ ஜல பந்தனத் தர்ப்பண முறையை அளிக்கின்றனர்..! அதாவது இந்நாளில் (16.7.2001 தட்சிணாயனத் திருநாள்) சாகம்பர்ய தேவதா மூர்த்திகளின் திருச்சடையாக விளங்குகின்ற (வேணீ = சடை) மூங்கிலானது பல மகரிஷிகளின் அருந்தவ சக்தியாகவும் யோக வடிவாகவும் உருக்கொண்டு பல தலங்களில் இன்றும் தல விருட்சமாகவும் விளங்குகின்றது.!

மனித சமுதாயத்தின் பலவிதமான கர்மவினைகளைக் கழிக்கின்ற மகத்தான சக்திகள் மூங்கிலுக்கு உண்டு.. இதனால்தான் இன்றைக்கும் திரிவேணி (திரி வேணீ – மூன்று நதிச் சடைச் சங்கமம்) விளங்குகின்ற அலகாபாத் (பிரயாகை) கங்கை நதிக் கரையில் மூங்கில் மற்றும் மூங்கில் சம்பந்தப்பட்ட பொருட்களைத் தானமாக அளித்தல் மிகவும் சக்தி வாய்ந்த பலாபலன்களை அளிக்கின்றன! ஜீவன்களின் பெரும் பாவச் சுமைகள் கழிந்திட, மகரிஷிகள் தம் தபோ பலன்களை இத்தலங்களில் நிரவியுள்ளனர்.. மேலும் வானளாவ உயர்ந்து இருக்கின்ற மூங்கில் மரமானது எப்போதும் விசேஷமான வேணீப் பதிகங்களை ஓதியவாறு மனிதர்களுடைய கேவலமான எண்ணங்கள் பரவெளியில் பரவி அதன் புனிதத்தை நாசப்படுத்துவதையும் தடுத்து, பரவெளியைச் சுத்தப்படுத்துகின்றது!

மூங்கில் தாங்கும் முத்தான வேத சக்தி! : இறைவனுக்கான திருவிழாப் பந்தல்களும் மூங்கில்களால் அமைவது தான் இறைவனுக்கு உவகை தருவதாகும்... மேலும் மனித சமுதாயத் திருமண வைபவங்களுக்கு வருகின்றவர்களுடைய பொறாமை, பகைமைக் கதிர்களை உறிஞ்சி எண்ணற்ற திருமணத் தோஷங்களிலிருந்து தம்பதிகளைக் காப்பது திருமணப் பந்தல்களில் உள்ள மூங்கில்களே ஆகும்.. வேத மந்திரங்களைக் கிரகித்துத் தம்முள் தாங்குகின்ற மகத்தான தெய்வீக சக்தியைக் கொண்டவையே மூங்கில்கள் ஆதலின், ஆலயங்களில் கூட உற்சவ மூர்த்திகளின் புறப்பாட்டிகு மூங்கில் கம்புகளையே இறைவன் பெரிதும் விரும்புகின்றான்! 100 ஆண்டுகளுக்கு மேல் இறைவனைத் தாங்கி ஆலயங்களில் இன்றும் பரிமளிக்கின்ற மூங்கில் கம்புகளுக்குப் பூச்சுப் பூசி வர்ணமிட்டுத் தொட்டுக் கும்பிடுதல் மகத்தான இறைப் பணியாகும்..!

வ்ருஷ வருட தட்சிணாயனப் புண்யகாலத்தில் மூங்கில் குவளைகளில் தீர்த்தங்களை வைத்து இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதும், பித்ருக்களுக்குத் தர்ப்பணமும், தேவாதி, தேவ தெய்வ மூர்த்திகளுக்கு அர்க்யம் அளிப்பதும் மிகவும் புனிதமானதோடு மட்டுமன்றி மகத்தான பலன்களையும் பெற்றுத் தருவதாகும்.!

கோடியக்கரை

பித்ரு முக்தித் தலங்கள் : குறிப்பாக, சுவாசக் குழல், இருதய நோய்கள், உணவுக் குழாய், சிறுநீரகக் குழாய்கள், மலக்குடல் நோய்கள் போன்றவற்றால் அவதியுறுவோர் மூங்கில் தம்ளர்களில் கங்கை, காவிரி போன்ற புண்ய தீர்த்தங்களோடு வில்வம், துளசி சேர்த்து 48 தினங்களுக்கு (ஒரு மண்டலம்) நதி தீரங்கள், ஆலயத் தீர்த்தங்கள், ராமேஸ்வரம், வேதாரண்யம், கோடிக்கரை போன்ற புனித கடல் தீர்த்தக் கரைகள், திருமகேந்திரப்பள்ளி (சிதம்பரம் அருகே), பட்டுக்கோட்டை அருகே பரிதி நியமம்,  திருவுசாத்தானம், இடும்பாவனம், கும்பகோணம் சக்கரப் படித்துறை, திருவிடைமருதூர் தீர்த்தம், சென்னை திருவள்ளூர் தீர்த்தம்,கயா (பீஹார்), திரிவேணி சங்கமம் (அலகாபாத் – பிரயாகை), பிரபாசப் பட்டினம் என்னும் (குஜராத்) சோமேஸ்வரம், தென்னிந்திய கயாவாகிய திருச்சி அருகே உள்ள பூவாளூர் போன்ற இடங்களில் மூங்கில் குவளை கொண்டு தர்ப்பணம் அளிப்பது மிகச் சிறந்த பலாபலன்களை அளிக்கும்..! மேலும் இவ்வாண்டில் நீர் சம்பந்தமான நோய்வினைக் கர்மங்கள் பெருகிடும் ஆதலால் புனிதமான மூங்கில் குவளைத் தர்ப்பணம் நீர்வளத்தைப் பெருக்கி நீர்வினைக் கர்மங்களைத் தணித்து, நீர்ப் பாசனத்தையும் பெருக்கிடும்..!

மூங்கில் நீர் தேக நலம் காக்கும்! தினந்தோறும் மூங்கில் குவளையில் நீர் அருந்துவது உடல் ஆரோக்கியத்தைப் பெருக்கும், கர்மங்கள் எளிதில் சேராத பொருட்களுள் சந்தனக் கட்டை, சந்தனக் கல், போன்றவற்றோடு மூங்கில் பொருட்களும், குறிப்பாக மூங்கில் குவளை, புல்லாங்குழல் போன்றவை சிறப்பிடம் பெருகின்றன! இன்று, ஏழைகளுடைய குடிசைகள் திடம்பெற மூங்கில் பிளாச்சுகள், கம்புகள், புல்லாங்குழல் வித்வான்களுக்கு நல்ல புல்லாங்குழல்களை அளித்தலும் ஆலயங்களுக்கு நன்முறையில் பயன்படும்படியாக மூங்கில் பொருட்களை அளித்தலும் மூட்டு சம்பந்தமான நோய்களுக்கு நல்ல தீர்வினைக் கொடுக்கும்.! திருவடி தீட்சை பாதப் பலகை என்ற ஒன்று... இதன் ஒரு வகையினை சென்னை ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயங்களில் பெற்றிடலாம்! ஸ்ரீராம பாதுகா ஸ்தோத்திரம் மற்றும் தேவாரத் திருவடித் தீட்சை பாடல்கள் ஓதி பூஜை செய்யப்படுகின்ற ஸ்ரீராம பாதப் பலகைத் தட்டுகளில் மூங்கில் குவளைத் தீர்த்தம் கொண்டு இறைவடிவங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதும், தர்ப்பணம் அளிப்பதும் மகத்தான பலன்களைத் தரும்.. இவ்விரண்டும் ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயங்களில் கிடைக்கும்.

ஸ்ரீஹஜ்ரத் மொஹமத் அலி ஷா ஜீவாலயம்
அலாகாபாத் இரயில் நிலையம்

தர்ப்பண சக்தியைப் பெருக்கும் தாரண அறவழிகள்! : தர்ப்பணத்தின் பலாபலன்களைப் பெருக்கிடப் பல அறவழி முறைகளைக் கைக்கொள்ள வேண்டும்.. கழுத்தில் ருத்ராட்சம் அணிந்திடல், சிரசு முதல் பாதம் வரை 16 இடங்களில் திருமண் (நாமம்) தரித்தல், கை கால்களில் மருதாணி இட்டுக் கொள்தல், மணிக்கட்டில் மிருதுள மணி ஹாரம் (துளசி, தாமரை, ருத்ராட்ச மணி மாலை தரித்தல்), தர்பைப் பாயில் பத்மாசனம் கூட்டி அமர்தல், திருவடி தீட்சை மரத்தட்டுகளில் தர்ப்பணம் வார்த்தல், சாம்பிராணி தூபச் சுழலில் தர்ப்பணம் அளித்தல், பஞ்ச கச்சமாக வேட்டியை அணிதல், கடுக்கன் தரித்தல், குடுமியாகிய தீட்சை வைத்தல், மரக்குடுவை அல்லது மூங்கில் குவளைகளில் புண்ய தீர்த்தம் வைத்தல் போன்ற பலவிதமான இறை வழிபாட்டு முறைகளைக் கைக்கொண்டு தர்ப்பணம் அளித்தலால், பஞ்ச கச்சமாக வேட்டியை அணிதல், கடுக்கன் தரித்தல், குடுமியாகிய தீட்சை வைத்தல், மரக்குடுவை அல்லது மூங்கில் குவளைகளில் புண்ய தீர்த்தம் வைத்தல் போன்ற பலவிதமான இறை வழிபாட்டு முறைகளைக் கைக்கொண்டு தர்ப்பணம் அளித்தலால், இதுவரை முறையாக மந்திரம் ஓதாது தர்ப்பணங்களைக் கைவிட்டமைக்கு ஓரளவு பிராயச்சித்தம் கிட்டுவதோடு, மேற்கண்ட இறைவழிபாட்டு உபகரணங்களோடு தர்ப்பணம் இடுதல் பித்ருக்களுக்குப் பரமானந்தத்தைத் தந்திடும்..! வேணுகான லோலனாக விளங்குகின்ற ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அருள்பாலிக்கின்ற ஆலயங்களில் மூங்கில் குவளையால் தர்ப்பணம் அளித்தல் மிகவும் சிறப்புடையதாகும்..!

எனவே வருகின்ற ஆறுமாத கால கர்ம வினைகளைக் குறைக்கின்றதாகவும், நற்காரிய விருத்திகளையும், சித்திகளையும் தந்தருள்கின்றதாகவும் உள்ள மேற்கண்ட வழிபாடுகளைத் திறம்படக் கடைபிடித்து அபரிமிதமான பலன்களைப் பெறுவீர்களாக!

சந்திர கிரகண பூஜைகள்

கிரகண காலத்தைப் பீடைக் காலம் என்று பலர் அறியாமையால் சொல்வார்கள். உண்மையில் கிரஹணம் பீடு உடைய காலமே! அதாவது தான, தர்ம இறை வழிபாட்டுப் பலன்கள் பல்கிப் பெருகுகின்ற பீடு உடைய காலமே சந்திர, சூரிய கிரகண நேரங்களாகும்... உண்மையில் அனைத்துக் கோளங்களிலும் ஒன்றுக்கொன்றான கிரகண சங்கம காலமும் உண்டு.. ஆனால் வழக்கில் சூரிய, சந்திர கிரகணங்களை மட்டுமே கொண்டு உள்ளார்கள்.. குருவழி நடப்போர்தான் கோளங்களின் சங்கமங்களின் அனைத்துக் கிரகணங்களையும் உணரப் பெறுவர்.!

வரும் 5.7.2001 வியாழனன்று சந்திர கிரகணம் அமைகின்றது. இந்தியாவில் இரவு 7.05 மணிக்குத் தொடங்கி அதே இரவு 9.45 மணிக்கு நிறைவு பெறுகின்றது. சந்திர கிரகணத்தின் போது புனிதமான மலைத் தலங்களில் கிரிவலம் வருதல் மிகவும் சிறப்புடையது.. கர்ப்பிணிப் பெண்கள் மட்டும் சந்திர கிரகண நேரத்தில் வெளிவராது, இல்லத்திலேயே தொடர்ந்து சந்திர பகவானுக்குரித்தான பூஜைகளை நிகழ்த்திடுதல் வேண்டும்..!

வியாச பூஜை வேத சக்திகள் விளயும் சந்திர கிரகணம்!

வ்ருஷ வருடத்தில் வியாச பூஜையும் சந்திர கிரணத்தோடு சேர்ந்து வருவதால் வேத சக்திகள் நிறைந்ததாக இச்சந்திர கிரகணம் விளங்குகின்றது.. கலியுகத்தில் மனித சரீரத்தில் வேத அம்சங்கள் குறைந்து கொண்டே வருகின்றன.. ஜாதி, மத, குல, இன பேதமின்றி வேத மந்திரங்கள் யாவருக்கும் உரித்தானவையே.. தக்க பெரியோர்களின் துணையோடு ஒவ்வொருவரும் தினந்தோறும் தம் இல்லத்தில் வேதமந்திரங்களை ஓதி உடல் ஆரோக்யத்தைப் பெருக்கி பரவெளியைப் பரிசுத்தப்படுத்தி வருதல் மகத்தான சமுதாய இறைப்பணியாகும்.!

திருமந்திரம், திருப்புகழ், திருவாசகம், தேவாரம், திவ்வியப்பிரபந்தம், திருஅருட்பா போன்றவை யாவும் வேத மாமறை மந்திரத் திரட்சிகளேயாகும். உண்மையில் ஆதி காலத்தில் வேத மந்திர சக்திகள் ஒலி வடிவிலோ, எழுத்து வடிவிலோ ஆரம்ப யுகங்களில் அமையவில்லை, ஒளிப் பிரவாகங்களாகத்தான் அவை திகழ்ந்தன... உத்தம தெய்வீக நிலைகளில்தான் இவற்றை உய்த்துணர முடியும் ஆதலின் ஜீவபரிபாலன நியதிகளுக்கேற்ப அவை ஒலி வடிவாகவும், பின்னர் அட்சரங்களாகவும், ஜீவ சௌகரியத்திற்காகவும் வியாச பகவானால் உணர்த்தப் பெற்றது!

சகஸ்ரலிங்கம் திருகோகர்ணம்

மூங்கில் குவளையால் முத்தான தர்ப்பணம்! குறித்த சில புனித தினங்களில், குருவருளால் குறித்த சில பூஜைகளைக் கடைபிடித்திடில் பலவிதமான அரிய வேத சக்திகளைப் பெற்றிடலாம்.. உதாரணமாக 16.7.2001 அன்று அமைகின்ற தட்சிணாயனப் புண்ய காலத்தில் மூங்கில் குவளைகளில் தர்ப்பணம் அளித்தலும், மூங்கில் பொருட்களைத் தானமாக, அளித்தலும் ரிக் வேதத்தில் குறித்த ஒரு சாகையை ஓதுகின்ற பலாபலன்களை மிக எளிதில் பெற்றுத் தந்திடும்.. ஆனால் இந்த நல்வரங்களைப் பெறுவதற்கு தட்சிணாயனப் புண்ய காலத்தில் குறித்த ஹோரையில் பத்திரை கரணத்தில், விரிசடை ருத்ர சஞ்சார சக்திகள் நிறைந்த தலங்களில் (ஹரித்வார், புதுக்கோட்டை அருகே திருக்கோகர்ணம், பீகாரில் வைத்யநாத்) தர்ப்பண வழிபாடுகளையும், காய்ந்த மூங்கில் இலைச் சருகுகளில் பசு நெய் வார்த்து ஸ்ரீகங்காள நாதருக்கான ஹோமமும் செய்துவர வேண்டும்.!

இச்சந்திர கிரகண நாளில் (5.7.2001) தர்பை, பொரி, வலம்புரி, இடம்புரிச் சுருள்கள் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்..) முந்திரி, வெள்ளெருக்குச் சமித்து போன்றவற்றை ஆஹூதிகளாக அளித்துச் சந்திர கிரகண ஹோம வழிபாடுகள் செய்து, வெண்பட்டாடை தானமாக அளித்தலால் எலும்புகள் முறிவால் அங்க அசைவுகள் பாதிக்கப்பட்டோர் நல்ல தீர்வுகளைப் பெறுவர்.!

மலைவலம் பொழிந்திடும் சந்திர கிரகண சாளர சக்திகள்! சந்திர கிரகணத்தின் போது திருஅண்ணாமலை, தேனி மலை போன்ற மலைத் தலங்களில் வேத சக்திகள் நிறைந்த முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, மாம்பழம், வாழைக்காய் போன்றவற்றைத் தானமாக அளித்து வருதலால் தலை, கபாலம் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்குத் தக்க நிவாரணத்தைப் பெற்றிடலாம். சந்திர சக்திகள் நிறைந்த திங்கட்கிழமை, ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் நாட்களில் கிரிவலம் வந்து வெண்பொங்கல், பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட இனிப்பு வகைகளைத் தானமாக அளித்து வருதல் வேண்டும்.. புனித மலைத் தலங்களில் பிரதிபலித்து வருகின்ற சந்திர கிரண சக்திகள்தாம் இத்தகைய நோய்களைத் தீர்க்கவல்லதாம்... திருஅண்ணாமலை, குன்றக்குடி மற்றும் தேனி மலைப் பாறைகளுக்கு இந்த விசேஷ சக்திகள் உண்டு...!

தலையில் புஷ்பக் கூடைகள், பிரசாதங்கள், பால்குடம் போன்றவற்றைச் சுமந்து கிரிவலம் வந்து இறைவனுக்கு அர்ப்பணித்தலும் கிரிவலப் பலாபலன்களைப் பெருக்கித் தரும்.! இந்தக் கிரகண நாளில் பரணி நட்சத்திரக்காரர்கள் சுக்கிர பகவானுக்குரித்தான நீலநிற ஆடைகளை அணிந்து வெண்பட்டாடைகளைத் தானமாக அளித்தலால், அவர்களைச் சூழ்ந்திருக்கின்ற கர்ம வினைகள் அகல்வதோடு, மனச் சாந்தியும் கிட்டும்..!

பூரத்தார்க்கான புனித பூஜைகள்! பூரம் நட்சத்திரக்கார்கள் இன்று ஸ்ரீவியாக்ர பாத மாமுனிவர் வழிபட்ட இடங்களிலும் (சிதம்பரம் இளமையாக்கினார் கோவில், கடலூர் அருகே திருப்பாதிரிப்புலியூர், பெரும்புலியூர், ஓமாம்புலியூர், போன்ற இடங்கள்..) தாமே பூக்களைத் தொடுத்து, இறைவனுக்குச் சார்த்தி, ஜாதி, மத, இன குல பேதமின்றி குறைந்தது 108 சுமங்கலிகளுக்குப் பிரசாதமாக அளித்து, மஞ்சள் நிற ஆடைகளையும் தானமாக அளித்தலால் கொந்தளிப்பான குடும்பச் சூழ்நிலைகளில் குழப்பங்கள் தீர்ந்து மனச் சாந்தி கிட்டும்..!

பூராடத்தார்க்கான புனித பூஜைகள்! இன்று பூராட நட்சத்திரக்காரர்கள் குரங்குகளின் வாசம் நிறைந்த தலங்களில் (ஐயர்மலை, பழனி, குன்றக்குடி, விராலிமலை, திருப்பதி, சோளிங்கர்) இறைவனுக்கு 12 வகையான பழங்களைப் படைத்து வறியோர்க்குத் தானமாக அளித்திடில் கணவனுக்கு ஏற்பட்டுள்ள வியாதிகளின் கடுமைகள் தணியும்..!

உத்திராடத்தார்க்கான உத்தம பூஜைகள்! உத்திராட நட்சத்திரக்காரர்கள் பால் வறண்ட பசுக்களைப் பராமரிக்கும் கோ சாலைகளில்.. (திருச்சி, காஞ்சீபுரம், சென்னை மாம்பலம்) பசுக்களை நீராட்டி, மஞ்சள் குங்குமம் இட்டு, வைக்கோல், பிண்ணாக்கு, தவிடு, கஞ்சி, கரும்பு, புல், பழங்களை அளித்தலால் அடிக்கடி நோய்வாய்ப்படும் குழந்தைகள் மற்றும் அங்க உணர்வுக் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு நல்வழிகள் காட்டப் பெறுவர்..!

இச்சந்திர கிரகண நாளில் மூங்கில் குவளைகளால் தர்ப்பணம் அளித்தல் சிறப்புடையதாகும்.. எவ்விதக் கட்டணமும் பெறாது, வேதத்தை விற்காது, தாம் கற்ற வேதத்தை இறைப்பணியாக ஆற்றி வருகின்ற வேதம் கற்றோருக்கு உணவு, உடை, உறையுள் அளித்தலால் சந்ததி நன்கு தழைக்கும்.. இதில் தமிழ் மறைகளை வேதமாய் ஓதுவோரும் அடங்குவர்.! ரோகிணி, கிருத்திகா தேவியருடன் சந்திர பகவான் சேர்ந்து அருள்பாலிக்கின்ற இடங்களில் (மதுரை, அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி) இரட்டை வகை உணவுகளை (கடலை, முந்திரி). பொருட்களை (வேஷ்டி சட்டை, புடவை ரவிக்கை) தானமாக அளித்து வருவதால் மிகவும் பருத்த சரீரத்தை உடையோர், தாழ்வு மனப்பான்மையின்றி, நோய் நொடிகளால் அவதியுறாது நன்முறையில் வாழ்ந்திட தக்க இறையருள் கூடிடும். இவ்வழிபாட்டினைச் செவ்வாய்க் கிழமைதோறும், செவ்வாய் ஹோரை நேரத்தில் கடைபிடித்து வருதலால் பெறுதற்கரிய பலாபலன்களைப் பெற்றிடலாம்..!

கருவளர்ச்சேரி கருவளர்நாயகி

கருவளர்ச்சேரியில் கருவளர்ச்சியைக் காக்கும் கருவளர்நாயகி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி பிரபஞ்சத்தின் அனைத்து உயிர்களின் கருக்காப்புப் பெட்டகமாக விளங்கும் கருவளர்நாயகி! பிரபஞ்ச சிருஷ்டியின் போதே கருவைக் காப்பதற்காக இறைவியே எடுத்த அவதாரமே கருவளர் நாயகி! ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியாகிய கருவளர்நாயகி அருள்பாலிக்கும் கருவளர்ச்சேரி, கும்பகோணம் வலங்கைமான் சாலையில் மருதாநல்லூரில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவிலுள்ளது..! 

தென்புலம் தாழ்ந்தபோது சிவன் ஆணையாகத் தன் தவத்திறத்தால் தென், வட புல எடையைச் சமன் செய்யும் தெய்வீகத் திருப்பணி கொண்ட ஸ்ரீஅகஸ்தியப் பெருமானுக்காக இறைவன் தம் திருமணக் காட்சிகளைப் பல திருத்தலங்களில் தோற்றுவித்தான்.. இறைவனின் கல்யாணக் காட்சிப் பலன்களை எல்லாம் ஸ்ரீஅகஸ்திய மாமுனி அந்தந்தத் தலங்களில் ஈஸ்வரார்ப்பணமாக அர்ப்பணித்துப் பலவிதமான திருமணத் தோஷங்களை நீக்கும் மாமருந்தாக அவை பொலியட்டும் என்ற இறைப் பெருவரங்களையும் பெற்று நல்கிவிட்டார்!

குத்தாலம், குற்றாலம், வேதாரண்யம், திருநல்லூர், காஞ்சீபுரம் திருஏகம்பம், திருவேற்காடு, திருவீழிமிழலை போன்ற சில விசேஷமான இறைத் தலங்களில் இன்றைக்கும் கருவறை மூர்த்திக்குப் பின்புறத்தில் இறைவன் இறைவியரின் திருமணக் கோலக் காட்சியைக் கண்டு ஆனந்தித்திடலாம்... நித்ய கல்யாண குணங்களைக் கொண்டவர்தாமே பரம்பொருள்! நிரந்தர தீர்க்க சுமங்கலித்வம் கொண்டவள்தாமே அம்பிகை! சிவபெருமான் ஆயிரமாயிரம் அவதாரங்களைப் பூணுகையில், ஒவ்வொரு அவதாரத்திற்கும் உரிய இறைவியாகப் பரிணமித்திட்டாள்! இவ்வாறு, ஈஸ்வரன் தரவிருந்த மகத்தான திருமணக் கோலக் காட்சியைக் காண விரைந்து கொண்டிருந்த ஸ்ரீஅகஸ்தியப் பெருமான், இடையில் தம் பத்னியாம் ஸ்ரீலோபாமாதா தேவியுடன், ஸ்ரீமகாலட்சுமி சமேத நரசிம்மப் பெருமாளை, தரிசிக்கும் பெரும் பேற்றினைப் பெற்றார்.

நெய்க் கிண்ணத்தில் தாரை! : அப்போதுதான் இறைவன் இறைவியின் திருமணக் கோலத்தின் தரிசனக் காட்சியைப் பெற்ற ஸ்ரீஅகஸ்தியப் பெருமான் இந்த அரிய திருமணக் காட்சியின் பலன்களை எல்லாம் அம்பிகை தாங்கியிருந்த நெய்க் கிண்ணத்தில் தாரை வார்த்து அர்ப்பணித்திட்டார்..! ஸ்ரீஅகஸ்தியர் எந்த நல்வரம் வேண்டிச் சங்கல்பம் செய்து கொண்டு இறைவனின் கல்யாணக் கோல தரிசனங்களை அர்ப்பணித்திட்டார் தெரியுமா? ‘எப்போதும் சங்கல்ப நீர்த் தாரையை வார்த்து பூமியில்தானே அர்ப்பணிப்பார்கள்! இன்றோ நெய்க் கிண்ணத்தில் அர்ப்பணித்திட்டாயே, ஏனோ?” என்று அம்பாள் கேட்டிட, அப்போதுதான் அகத்தியர் ஒன்றைக் கவனித்திட்டார்.. நெய் விளக்கிற்கான பசுநெய் பொங்கிப் பொங்கி தலை வாசல்படி, நிலை வாசல்படி என எல்லா இடங்களிலும் பொங்கி வழிந்து, நிறைந்திட, அதில் ஜீவ அணுக்களின் ஒளிப் பிரகாசத்தையும் கண்டார். ஆம்! ஜீவ சிருஷ்டிக்கான ஒளிப்பிரகாசம் நிறைந்த புனித பூமியாக அது அமைந்திருப்பது கண்டு ஸ்ரீஅகஸ்திய சித்த மாமுனி உளம் பூரித்து,

“இறைவா! எம் அன்னையே! இப்புனித பூமியில் தாங்கள் பிரபஞ்சத்தின் ஜீவ அணுக்களை வளர்க்கும் ஒளிப் பிரகாச சக்தியைத் தந்து, கருவளர்ச்சியைக் காக்கும் நாயகியாக, கரு காக்கும் நாயகியாக அகிலத்தில் உள்ள அனைத்துக் கருக்களைப் பாதுகாத்து வளர்க்கும் நாயகியாக ஸ்ரீஅகிலண்டேஸ்வரியாகப் பரிமளிக்க வேண்டும்’‘ என்று வேண்டினார்.! இறைவனே முன்வந்து ‘அகிலாண்டேஸ்வரி! இனி நீ இங்கு கருவளர்க்கும் நாயகியாய் அருள் வளர்ப்பாய்!” என்று வரம் தந்திட, இறைவியும் நாணங் கொண்டு அவ்விடத்தில் நிலத்தினுள் மறைந்தனள்.

கரு வளர்க்கும் நாயகி!

அம்பிகை மறைந்த இடத்தில் இறைவியின் சுயம்புப் புற்று வடிவம் தோன்றியது! பின்னர் இறைவனே யாக வேள்விகள் நடத்திப் பனிக் குடக் கலிங்கம் என்ற அரிய தேவ வஸ்திரத்தைக் கொண்டு அம்பிகையின் சுயம்பு ரூபத்தை இட்டு மறைத்து, ‘இனி சிருஷ்டி என்பது உய்த்து உணர வேண்டிய மறைபொருளாகும்’ எனப் பகுத்து உரைத்து மறைந்தார்.! கலிங்கம் என்றால் ஆடை என்றும் பொருள் உண்டு! சொக்கலிங்க நாதனாய் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் அளித்த பனிக் குடக் கலிங்க வஸ்திர மறைப்பில் அம்பிகை புற்று நாயகியாக, சுயம்புவாக உருவெடுத்தனள்..! மாயூரம் அருகே நல்லூர் என்னும் திருத்தலத்தில் வஸ்திரபுரீஸ்வரராக அருள்பாலிக்கும் சர்வேஸ்வரனே இத்தலத்தில் அம்பிகையின் சுயம்புப் புற்று ரூபத்திகு வஸ்திரம் சார்த்திக் கருக்காப்பு சிருஷ்டி இலக்கணத்தை ஓதுவித்தார்!

வருடத்தின் மூன்று நாட்களில் ஜீவன்களுக்கான கருப்பொருள் உணரும் தத்துவத்தை அன்றுதான் இறைவன் ஸ்ரீஅகஸ்தியப் பெருமானுக்கு உணர்த்தினார்.. இம்மூன்று நாட்களே சீமந்தம், வளைகாப்பு, பிரசவ நாள் ஆயிற்று. எனவே இந்த ஆலயத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்குச் சீமந்தம், வளைகாப்புடன் ஏழைச் சுமங்கலிகள்/ கர்ப்பிணிகளுக்கான உதவிகள், அன்னதானம், மங்களப் பொருட்கள் அளித்தல் ஆகியவற்றை ஆழ்ந்த நம்பிக்கையுடன் செய்து வந்திடில் ஔர்வர் மகரிஷியின் ஆசியுடன் ஞானப் பிரகாசத்துடன் நற்சந்ததி தழைக்கும்!

ஆலயமெங்கும் பொங்கி வழிந்த நெய் கொண்டு ஜீவன்களின் நற்சந்ததி விருத்திக்காக அம்பிகையை வேண்டி ஸ்ரீஅகஸ்தியரின் பத்னியான ஸ்ரீலோபாமாதாவும், தேவர்களின் பத்னிகளும், பித்ரு பத்னிகளும் ஆலயக் கருவறைப் படிகளை மெழுகினர்.. இதுவே இன்றைக்கும் புனிதமான வைபவமாக இந்த ஆலயத்தில் திகழ்கின்றது..! இன்றைக்கும் இந்த ஆலயத்தில் கருவளர்நாயகியாகிய ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி ஒரு திரைக்குப் பின்னர்தான் காட்சி தருகின்றாள்.. அம்மனின் சிரசு மட்டும் கண்ணுக்குத் தரிசனமாகும்.. புற்று மண் ஆதலின் வஸ்திரம் சாற்ற இயலாது, திருமேனியில் ஒட்டும் என்னும் தற்போதைய காரணம் கூறப்பட்டாலும், மேற்கண்ட புராண லீலைகளே இதற்கு முக்கியக் காரணமாகும்! ஔர்வர் மகரிஷி தினந்தோறும் இத்தலத்திற்கு வந்து சூட்சும, ஸ்தூல வடிவத்தில் தரிசித்து வழிபடுகின்ற அற்புத அம்பிகை!

கருவளர்ச்சேரியில் கருத்தான பூஜைகள்! : கர்பப்பை என்பது அனைத்து மாத்ரு ரூப ஜீவன்களிலும் காணப்படும் ஆத்ம ஸ்வரூபம் குடிகொள்ளும் கோயில் ஆகும்! எனவே ஒரு குழந்தை  ஜனிப்பது என்பது மிகவும் பவித்ரமானதாகும்! ஏனென்றால் அந்த அளவிற்கு மானுடப் பிறப்பு என்பது புனிதத்துவம் கொண்டதாக, பெறுதற்கரியதாக விளங்குகிறது! ஆனால் தற்காலத்திலோ இதன் மகத்வம் புரியாது குழந்தைப் பிறப்புத் தடுப்பு, மக்கள் தொகைக் கட்டுப்பாடு என்றெல்லாம் பேசுவது வியப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது! இருக்கின்ற தெய்வீகத்தை, ஆலயங்கள் மூலமாகக் கட்டிக் காக்க இயலாது மாயையில், நிரந்தரமில்லா சுக போகத்தில் திளைக்க ஆசைப்படும் மனித சமுதாயத்தைக் கண்டு மனம் வருந்துகிறது! மகரிஷிகளையும், உண்மையான சற்குருமார்களையும் மதிக்கும் தெய்வீகப் பண்பாடு மறைந்து வருவது சரியல்ல! கர்பத் திருப்பைக் கோயிலில் ஆத்ம ரூபம் கொண்டு வளர்கின்ற கருவை வளர்க்கின்ற, பராமரிக்கின்ற, பரிபாலிக்கின்ற ஸ்ரீபார்வதி தேவியாக, ஸ்ரீகருவளர் நாயகி திகழ்வது மட்டுமல்லாது ஜீவ சிருஷ்டிக்கும் அருள்பாலிக்கின்றாள்.! பசுநெய்த் தீபங்களின் ஊடே ஸ்ரீஅகத்தியப் பெருமான் இங்கு இறைவனின் பரந்த கல்யாணக் கோலக் காட்சியைப் பெற்றமையால் அம்பிகையே நெய் மணக்கும் நிலத்தில், கருவளர்ச்சேரியில் கருவளர் நாயகியாக அவதாரம் கொண்டனள்.!

ஸ்ரீஔர்வ மஹரிஷியை கருவிலேயே காத்த அம்பிகை! : ஒருமுறை.... தற்போது கலியுகத்தில் கஷ்டம், கஷ்டம் என்று நாம் புலம்புகின்றோமே, தர்மம் தழைத்து நின்ற கிருத, திரேதா யுகங்களில் கூட மகரிஷிகள் அரக்கர்களின் பிடிகளில் சிக்குண்டு தவித்தனர்... சாதாரண மக்களால் அரக்கர்களை எதிர்கொள்ள இயலவில்லை ஆதலால் மகரிஷிகளே அவர்களை எதிர் கொண்டனர்.. அரக்கர்களும் தம் அரிய தவத்தால் தேடிப் பெற்ற நல்வரங்களைக் கொண்டு ஆனால் அதர்மமாகப் போரிட்டமையால் சமாளித்து அரக்கர்களின் தார்மீகமான வரங்களின் மகத்துவத்தைப் பாதுகாத்து அவற்றைத் தவறாகப் பயன்படுத்திய அரக்கர்களைத் தார்மீக ரீதியாகவே மிகவும் சிரமப்பட்டு வெல்ல வேண்டியதாயிற்று!

இவ்வகையில் ஸ்ரீவத்ஸ கோத்ராதிபதியாகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீச்யவநரின் பத்னி கர்ப்பமுற்ற போது, பிருகு மகரிஷியின் வம்சங்களை அழிப்பதற்காக விரோதத்தால் அரக்கர்கள் படை திரண்டனர்.. கண்ணில் கண்ட கர்ப்பிணிகளை வதைத்தனர்.., இதில் ச்யவனருடைய மனைவியும் சிக்கிடவே, இறையருளால் அவ்வம்மணி கடுந்தவம் பூண்டு தன் கர்ப்பத்தை வயிற்றிலிருந்து தொடைக்கு மாற்றிக் கொண்டாள். இது சாதாரண காரியமல்லவே! உத்தம தெய்வங்களின் அருள் மிகுந்து கூடினால்தானே பிரம்ம சிருஷ்டியை மீறிய இக்காரியத்தைச் சாதிக்க முடியும்! சிருஷ்டி கர்த்தாக்களை வேண்டி, கர்த்தம பிரஜாபதிகளிடம் கருணையை வேண்டி, உயிர்ப் பிச்சை கேட்டு, ஸ்ரீபிரம்ம மூர்த்தியின் அருளை வேண்டி, பரம்பொருளை திருவருளை நாடி, நூறு ஆண்டுகள் அரும்பெருந் தவமிருந்தும் அரக்கர்களின் அட்டகாசத்தைத் தாங்க இயலாது ச்யவநரின் மனைவி வனம் வனமாக வலம் வந்தாள்! ஸ்ரீஅகஸ்தியர் கருவளர்நாயகியாம் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியின் அருளாற்றலை எடுத்து உரைத்திட, அவரும் இங்கு பசு நெய் மெழுகி, அசுரர்களுக்கு அஞ்சித் தம் தொடையில் நூறு ஆண்டுகள் தாங்கி இருந்த கருவை ஸ்ரீஔர்வ மகரிஷியாகப் பெற்றெடுத்து உலகிற்கு அரிய ஞான மகரிஷியை அளித்தனள்!

எனவே குழந்தை பாக்யம் மற்றும் நன்முறையில் சந்ததி தழைக்க வேண்டுவோரும் கருவளர்ச்சேரியின் இச்சிறிய சிவாலயத்தில் கருவளர்நாயகியின் கருவறை அர்த்தமண்டபத்தின் தலைவாசல் படியினை சுத்தமான பசுநெய்யால் மெழுகுதல் மிகச் சிறந்த நேர்த்திப் பிரார்த்தனையாக, குழந்தை பாக்கியத்தைப் பெற்றுத் தருவதோடு நல்ஒழுக்கத்துடன், சந்ததி தழைத்திடவும் அருள் கூட்டுகின்றது..! மேலும் ஸ்ரீபிரம்மாவினுடைய சிருஷ்டி மண்டலத்தில், கருப்பொருள் கலயத் திரவியங்களுள் எலுமிச்சைக் கனி, பசு நெய், பெயர் சொல்லாப் பெரு மூலிகை, செந்தூரப் படிமம் போன்றவை விளங்குகின்றன... இவற்றில் ஒவ்வொன்றிற்கும் பெருஞ் சிறப்புடைய அந்தந்த அம்சங்கள் நிரவுகின்ற புனித பூமிகளும் உண்டு..! ஸ்ரீபிரம்மா தம்முடைய சிருஷ்டிக் கலயத்தை அந்தந்தத் திருத்தலங்களில் வைத்துப் பூஜித்துத்தான் ஜீவஅணுக்களை இறை இலக்கணப்படி ஜீவித சக்தி உடையதாக ஆக்குகின்றார்!

இவ்வகையில் பசுநெய் பாத்திரப் புனிதப் பெரும் பூமியாய் விளங்குகின்ற கருவளர்ச்சேரியில் ஸ்ரீஅகஸ்தியப் பெருமானுக்குப் பசுநெய்த் தீப அகல் ஜோதிகளிடையே இறைவன் திருமணக் கோலத்தை உய்வித்தமையால், மேலும் ஸ்ரீஅகஸ்தியப் பெருமான் தன் திருக்கல்யாணத் தரிசனப் பலன்கள் யாவையும் பசுநெய்க்குள் உறைவித்தமையால் இங்கு பசுநெய் மெழுகுதல் நேர்த்தி பிரபஞ்சத்தின் அதியற்புத வழிபாடுகளுள் ஒன்றாக விளங்குகின்றது..! பசுநெய் மெழுகிடுதல் சந்தான பாக்கியத்தைப் பெற்றுத் தரும் சக்தி மிகுந்த வழிபாடு! சந்ததி உள்ளோர்க்கும் ஔர்வர் மகரிஷி போல் நற்சந்ததி பெருக்க உதவும் பசுநெய் பூஜையிது! மேலும் ஸ்ரீஔர்வர் மகரிஷியின் தாய் நன்முறையில் தாம் தொடையில் தாங்கிய கருவைப் பிரசவித்திட சிவக்கனிகளாகிய எலுமிச்சைக் கனிகளைக் கொண்டு கருவளர்ச்சேரி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியைப் பக்தி பூர்வமாக வழிபட்டு வந்தமையால் நன்முறையில் சந்ததி விருத்தியடைவதற்கும் சிசேரியன் போன்ற ஆயுதமாற்று வழியின்றி இயற்கை முறையில் சுகப் பிரசவம் அடைவதற்கும் இங்கு அரிய எலுமிச்சைக் கனி பிரார்த்தனா வழிபாட்டு முறையும் உண்டு. நன்கு விசாரித்து அறிந்து கடைபிடிக்கவும்!

தாயின் புனிதமான கருவறைக்குள் ஜீவ ஒளிப் பிரகாசத்தில் வளர்கின்ற கருவானது சப்த வர்த்திப் பிரகாசம் என்னும் ஏழுவித ஜோதிப் பரிமாணங்களின் ஊடேதான் வளர்கின்றது.. நல்ல சந்தான பாக்கியத்திற்காக இவ்வாலயத்தில் ஏழு எலுமிச்சைக் கனிகளை பூஜிப்பதற்காக அளிப்பதும் உண்டு.. எனவே இங்கு நல்ல சந்ததிகளைப் பெறுதற்கு தக்க நேர்த்திப் பிரார்த்தனை வழிபாட்டு முறைகளைக் கைக்கொள்வீர்களாக!

பெற்றோர்களைத் தவிக்க விடாதீர்கள்!

தற்காலத்தில் புத்தி சுவாதீனம் இல்லாத குழந்தைகள் இருப்பதைக் கண்டு பெற்றோர்கள் பெரிதும் கவலைப்பட்டுத் தங்கள் வாழ்க்கையை ஓட்டுகின்றனர்... ‘இவ்வாறு மனநோயுடன், மன நலம் குன்றிய குழந்தைகள் பிறந்து விட்டனவே, இவற்றை வளர்த்து ஆளாக்க வேண்டுமே’, என்று பெருந் துயரப் படிமானங்களுடன்தான் அவர்கள் வாழ்க்கை ஓடுகின்றது... உறங்கி எழுந்த உடனேயே கவலைகள் ஒட்டிக் கொள்ளும்! தம்முடைய தீய கர்ம வினைகளும் பாவங்களுமே தாம் பல துன்பங்களாக எப்போதுமே தமக்குத் திரும்பி வருகின்றன.. என்பதை மனப்பூர்வமாக உணர்ந்தால்தான் எந்தத் துயரத்தையும் சகித்துக் கொண்டு அவற்றிற்கு உரிய நிவர்த்திக்கான பரிகாரங்களைக் கடைபிடித்து மன அமைதியுடன் வாழ முடியும்..! நிறைய பொருள்களைச் செலவழித்து எத்தனையோ வருடங்களாகப் பல வகையான இறைவழிபாடுகளை மேற்கொண்டும், குறைகள் குறைகளாகவே இருக்கின்றனவே, குறைகள் பெருங் குறைகளாகப் பெருகுகின்றனவே என்ற நிலை ஏற்பட்டால் என்ன செய்வது?

இந்நிலையில் தம்முடைய பலத்த ஊழ்வினையின் காரணமாகவே தமக்கு இவ்வாறு பல குறைகள் அமைந்திருக்கின்றன என்பதை உணர்தல் வேண்டும்... இளவயதிலேயே கணவனை, மனைவியை அல்லது குழந்தையை இழத்தல், பெருநோய்கள், குழந்தையின்மை, மனநோயுள்ள சந்ததிகள், அங்கக் குறைபாடுகள், திடீர் நஷ்டங்கள், பெரும் விபத்துகள் போன்றவை யாவும் தாம் செய்த கடுமையான ஊழ்வினையின் பிரதிபலிப்பேயாகும். இறையருளால் நல்ல உடல்நிலை உள்ளவர்கள் உடல் அல்லது குறையுள்ள ஆதரவற்றோர்க்கு அனைத்து உதவிகளையும் செய்திடல் வேண்டும்..! உண்மையில் உடல் ஊனம், மன நோய் உள்ளோர், அனாதைகளாக இருப்போர் இவ்வுலகில் இருப்பதால்தானே அவர்களுக்குத் தக்க சேவைகள் புரிவதன் மூலம் நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்களும் பெருத்த கர்ம வினைகளுக்கு நல்ல தீர்வுகளைப் பெற முடிகிறது! எனவே அவர்கள் அத்தகைய சக ஜீவன்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டுமல்லவா!

தற்காலத்தில் அயல் நாட்டுக் கல்வி, வெளிநாட்டு வேலை என்றாலே அனைவரும் ஆலாய்ப் பறப்பதைக் காண்கின்றோம்.. அயல்நாட்டில் லட்சம் லட்சமாக டாலர்களைச் சம்பாதித்து இங்கோ வயதான பெற்றோர்கள் உள்ளுக்கும் வெளியுமாக நான்கு சுவர்களைப் பார்த்துக் கொண்டு, காய்கறி, மளிகைச் சாமான்களுக்காகத் தனித்துச் செல்லப் போக்குவரத்து நெரிசல்களைக் கண்டு அஞ்சி அஞ்சி வாழ்ந்து வருதல் ஒரு வாழ்வா? இவர்கள் ஒரு காய்ச்சல் என்றாலே தாமே மருத்துவரிடம் சென்று வருதல் வேண்டும்..

தினமும் மணிக்கணக்காகத் தொலைபேசியில் உரையாடுவதாலோ, இன்டர்நெட்டில் ஒரு நிமிடத்தில் பெரிய பெரிய கடிதங்களைப் (e-mails) பரிமாறுவதாலோ அருகில் இருந்து சேவை செய்யும் பாங்கினைப் பெற முடியுமா? இவ்வாறாக அருந்தவம் பூண்டு பெற்ற புதல்வர்கள், புதல்விகள் தம் சுயநலத்தால் பெற்றோர்களைத் தவிக்க விட்டு அயலூர் அல்லது அயல்நாடு சென்று அல்லது என்னதான் செல்வத் திரட்சியைத் தந்திட்டாலும், தனிமையில் வாடவிடுவதால், இந்தப் பல வருட தனித்த ஏக்கமே எதிர்வரும் பிறவிகளில், தவிக்க விட்டவர்களே வரும் பிறப்புகளில் பெற்றோர்களாகி, இவ்வாறு தவித்த பெற்றோர்கள் மனநோயுடன் கூடிய (அவர்களுடைய) பிள்ளைகளாகி, எத்தனை வருடங்கள் தனித்த ஏக்கம் அமைந்ததோ, அத்தனை வருடங்கள் மனநோய் பாரித்த பிள்ளைகளைப் பரிபாலிக்க வேண்டிய பூர்வ ஜென்மக் கடன் ஊழ்வினையாக உறுத்து வந்து ஊட்டுவதை உணர்தல் வேண்டும்.! மன நோய்க்கான ஆன்மீகக் காரணங்களுள் இதுவும் ஒன்றாகும்.. அதாவது நம்முடைய ஊழ்வினைகளே நமக்குத் துன்பங்களாக வாய்க்கின்றன.. எனவே இனியேனும் செல்வம், பதவி, புகழுக்காக ஆசைப்பட்டு ஒருபோதும் பெற்றோர்களைப் பரிதவிக்க விடாதீர்கள்...!

அனாதை இல்லங்களிலும், மனநோய் விடுதிகளிலும் உள்ள மனநிலை குன்றியோர்க்கு நம்முடைய சரீரத்தால் ஜாதி, மத, இன, குல பேதமின்றித் தக்க இறைச் சமுதாயப் பணிகளை மாதந்தோறும் ஆற்றிவருதல் மகத்தான புண்ணிய காரியமாகும்... இதனால் சந்ததியும் எவ்வித ஆரோக்கியக் குறைபாடுமின்றி நன்முறையில் விருத்தியாகும்... வாழ்க்கை என்பது முற்பகல் செய்யின் பிற்பகல் விளைகின்ற காலப் பெட்டக வடிவு என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்!

உத்தமதானபுரம் மும்மூர்த்தி விநாயகர்

கும்பகோணம் பாபநாசம் அருகே 3 கி.மீ தொலைவில் உத்தமதானபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில் மூன்று விநாயக மூர்த்திகள் ஒன்று சேர்ந்து மும்மூர்த்தி விநாயகராக அருள் தரிசனம் தருகின்றார்கள். எங்கும் காணக் கிடைக்காத மூர்த்திகள்! இரட்டைப் பிள்ளையார் தரிசனம் பற்றி நன்கு அறிவீர்கள். துவிதியை, துவாதசி திதிகளில் இரட்டைப் பிள்ளையாருக்கு (இரண்டு பிள்ளையார் மூர்த்திகள் சேர்ந்து தரிசனம் தருவது) 2, 20, 200 போன்ற எண்ணிக்கையில் நன்றாகக் குனிந்து குத்துக் காலிட்டு தோப்புக்கரணம் இட்டு வந்திடில் மூச்சுத் திணறும் அளவிற்கு உள்ள நிதிப் பிரச்னைகளுக்குத் தக்க தீர்வு கிட்டும்.! (திருஅண்ணாமலை, சென்னை ராஜாஅண்ணாமலைபுரம், உய்யக்கொண்டான்மலை போன்ற இடங்களில் இரட்டைப் பிள்ளையார் சந்நதி உள்ளது,,!)

ஸ்ரீகாசி விஸ்வநாதர்
மாளாபுரம்

ஸ்ரீவிசாலாட்சி மாளாபுரம்

காசிச் சிவனோதும் ராம மந்திரத்திற்கு மூன்று விநாயகரே முதல் சாட்சி! இதே போல உத்தமதானபுரம் ஸ்ரீமும்மூர்த்தி விநாயக தரிசனமும் பெறுதற்கு மிகவும் அரியதாகும். காசியில் மரிப்போர்க்குச் சிவபெருமானே காதுகளில் ராம மந்திரம் ஓதி மோட்ச நிலை தருகின்ற அருட் தன்மையையும் நாம் நன்கு அறிவோம். ராம, ராம, ராம என்று காசியில் சிவபெருமான் மும்முறை ஓதுகின்றபோது ஒவ்வொரு நாமத்திற்கும் ஓம்கார சக்தியைக் கூட்டுபவரே மும்மூர்த்தி விநாயகர் ஆவார்.. எனவே வலம், இடம், உச்சி ஆகிய முந்நிலைகளிலும் ஸ்ரீவிநாயக மூர்த்தி அகர விநாயகர், உகர விநாயகர், மகர விநாயகராகச் சிவபெருமானுடன் கூடியிருக்க, காசியில் சிவபெருமானே மும்முறை ராம மந்திரத்தை ஓதி அருள்பாலிக்கின்றார்!

உண்மையில் காசியில் மரிப்போர்க்குத்தான் இந்த நேரிடைச் “சிவ ராம” உபதேசம் என்பதன்று.. தமக்குத் தாமே பரிபூர்ண ஆத்ம தர்ப்பணம் செய்து கொள்பவர்களுக்கும், இந்த நர உடலில் இப்பிறவியிலேயே ஆத்மத்தை உணர்பவர்களுக்கும் நிர்வ்விகல்ப சமாதி போன்று உத்தம யோக நிலைகளில் மனித சரீரத்துடன் இறைவனுடன் ஐக்கியமாகின்றவர்களுக்கும் இந்த சிவ-ராம உபதேசம் எப்போதும் நிச்சயமாக நிகழ்கின்றது! ஆத்ம தர்ப்பணம் என்றால் தாம் உயிருடன் இருக்கும் போதே தமக்குத் தாமே தர்ப்பணம் செய்து கொள்வது என்று மட்டுமே பலரும் எண்ணுகின்றனர்..! இது முற்றிலும் தவறானது, ஆத்ம தர்ப்பணத்திற்கு முன் ஆற்ற வேண்டிய முறையான இறை வழிபாடுகள் பல உண்டு.. இவைகளைக் கடைபிடிக்காது ஆத்ம தர்ப்பணம் நிறைவடையாது! இவற்றில் ஒன்றே அகர மூர்த்தி, உகர மூர்த்தி, மகர மூர்த்தியாக விளங்குகின்ற மும்மூர்த்தி விநாயக மூர்த்திகளை ஒரு சேரத் தரிசித்து ஆத்ம தர்ப்பண உத்தம வழிபாட்டு முறைகளைத் தக்க சற்குரு மூலம் உணர்ந்து அறிந்து மேற்கொள்வதாகும்!

ஸ்ரீநந்தீஸ்வரர் மாளாபுரம்

பித்ரு சாப தோஷ நிவர்த்தி! மேலும் தந்தை இறந்திட, தாயும் தன் பிள்ளைகள் கணவருக்குச் சரியாக தர்ப்பண, திவச நற்காரியங்களைச் செய்திடவில்லையே, இது சந்ததிகளைப் பாதிக்குமே என்று வருந்தி உள்ளூர அழுது ஏங்குவது உண்டு.. பல இல்லறப் பெண்மணிகளும் தங்கள் வீட்டுக்காரர்கள் அமாவாசைத் தர்ப்பணத்தின் மீது நம்பிக்கை கொள்ளாது, அசிரத்தையாக இருப்பது கண்டு மிகவும் வருத்தமடைகின்றனர்.. எவருடைய வீட்டில் தர்ப்பண, திவச வழிபாடுகள் முறையாக நடக்கவில்லையோ, இதனால் ஏற்படுகின்ற சந்ததி நஷ்டங்கள், விபத்துகள் போன்ற பித்ரு சாப விளைவுகளிலிருந்து தங்களையும் சந்ததிகளையும் தற்காத்துக் கொண்டிடத் தட்சிணாயனப் புண்ய காலம், சந்திர கிரகணம், அமாவாசை நாட்களில் மாளாபுரம் மும்மூர்த்தி விநாயகர் சந்நிதி வளாகத்தில் தர்ப்பண பூஜைகளை நிறைவேற்றி வலம்புரிச் சங்கினால் பால், தேன், கரும்புச் சாறு இவற்றால் அபிஷேகம் செய்து குறைந்தது 300 நரமணிக் கொழுக் கட்டைகளைப் படைத்து ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்தால் பித்ரு காரியங்கள் நன்முறையில் தொடர்ந்திட விநாயகர் அருள்புரிவார்.. பித்ரு சாப தோஷ நிவர்த்தித் தலமாக மாளாபுரம் விநாயக சந்நிதி விளங்குகிறது.!

பித்ரு தேவ மூர்த்திகளில் வசு பித்ரு மூர்த்தி, ருத்ர பித்ரு மூர்த்தி, ஆதித்ய பித்ரு மூர்த்தி ஆகிய மிக முக்கியமான மூன்று பித்ரு நாயக மூர்த்திகளும் மூன்று வகை அன்னப் பிண்டங்களில் ஆவாகனமாகி அருள்பாலிக்கும் தன்மை கொண்டவர்கள். இவர்களுடைய முதல் வழிபாட்டு மூர்த்திகளாக விளங்குகின்றவர்களே உத்தம மும்மூர்த்தி விநாயக மூர்த்திகளாவர்..! இதனால்தான் பித்ரு முக்தித் தலமாகிய காசியில் அருள்பாலிக்கும் ஸ்ரீகைலாசநாதரே எழுந்தருளி உள்ள உத்தமதானபுரத்தில் காணுதற்கரிய மும்மூர்த்தி விநாயகர் தரிசனந் தருகின்றார்! தேவ லோகங்களில் ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீருத்ர மூர்த்திகள் மூவரும் சேர்ந்து நடத்துகின்ற முக்கியமான பூஜைகள் நிறைய உண்டு.. இம்மூர்த்திகளின் வழிபாட்டின் முதல் வணக்க மூர்த்தியாக விளங்குபவர்களே மும்மூர்த்தி விநாயக மூர்த்திகளாகத் தோன்றுகின்றனர்.!

ஸ்ரீமும்மூர்த்தி விநாயகர் உத்தமதானபுரம்

ஜோதி விருட்ச தரிசனம்! ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்றாவது கண் உண்டு.. ஆறு யோகச் சக்கரங்களில் நன்முறையில் திளைப்போருக்குத்தான் இம்முக்கண்ணின் நேத்ர சக்தி உணர்த்தப் பெறும்.. மூன்றாவது நேத்திரத்தின் சக்தியை உணர்வதற்கு ஜோதி விருட்ச தரிசனம் இன்றியமையாததாகும்.. முக்கூட்டு எண்ணெய் எனப்படும் இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய் அல்லது நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பெண்ணெய், இம்முக்கூட்டுத் தைலத்தில் மூன்று அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி முக்கூட்டு ஜோதி தரிசன வழிபாட்டினை முறையாகச் செய்து மும்மூர்த்தி விநாயக பூஜைகளுடன் கைக்கொள்வோர்க்கே ஜோதி விருட்ச தரிசனம் குருவருளால் கிட்டும்.. உத்தமதானபுரம், திருநீடூர் போன்ற திருத்தலங்களில் மும்மூர்த்தி விநாயக தரிசனம் மற்றும் வழிபாடு இல்லாது ஜோதி விருட்ச தரிசனத்தை எவராலும் பெற இயலாது! ஸ்ரீபோகர் பெருமானின் நித்ய வழிபாட்டுத் தலங்களில் இவையும் அடங்கும் !

மூன்று குழந்தைகளை உடையவர்கள் திருநீடூர், உத்தமதானபுரம் மும்மூர்த்தி விநாயக மூர்த்திகள் சந்நிதிகளில் மா விளக்கில், பசுநெய் தீபம், இலுப்பெண்ணெய் அகல் தீபம், விளக்கெண்ணெயில் குத்து விளக்கு தீபம் இட்டு, அடிப் பிரதட்சிணம் செய்து  வந்திட, குழந்தைகள் நன்முறையில் கல்வி கற்று நல்ல திருமண வாழ்வினைப் பெறுவார்கள்.. தாம் மூன்றுவகைத் தீபங்களை ஏற்றுவது மட்டுமல்லாது பிற பக்தர்களும் இத்தகைய மூன்று தீபங்களை ஏற்றும் வண்ணம் மாவு, வெல்லம், எண்ணெய், திரி, அகல்களைத் தானமாக அளித்து வருதல் வேண்டும்..! அனைத்து வழிபாடுகளிலும் நரமணிக் கொழுக்கட்டை படைத்தல் மிகவும் முக்கியமானதாகும்..!

ஆடி அமாவாசை

அமாவாசை என்பது உடலின் வெப்ப நாடித் தன்மையை சூரிய, சந்திர உஷ்ணத்திற்கேற்ப அமைத்துக் கொள்வதற்கான கிர(க)ண பூஜையாகும்! ஆடி அமாவாசை, தை அமாவாசை இரண்டுமே தட்சிணாயன, உத்தராயணப் புண்ணிய காலத்தின் முதல் அமாவாசை தினங்களாக விசேஷமான முக்கியத்வத்தைப் பெறுகின்றன. அமாவாசை என்பது சூரிய, சந்திர கிரகங்களின் சங்கமம் தானே!  தட்சிணாயன, உத்தராயணப் புண்ய காலங்களில் சூரியக் கிரண வீச்சுகள், அடுத்து வரும் ஆறு மாதக் காலத்தில் ஜீவன்களின் கர்ம பரிபாலனத்திற்கு ஏற்ற வகையில் பல கோண மாறுதல்களைக் கொள்வதால் இவற்றின் சூட்சும ஆன்மப் பிரதிபலிப்பை அமாவாசையில் தான் நம்மால் நன்கு உணர முடியும்.!

சூரிய ஒளியைப் பெற்றே, சந்திர ஒளிப் பிரவாகம் உருவாவதாக விஞ்ஞானம் பறை சாற்றினாலும், சந்திரனுக்கு எனத் தனித்த ஒளி உண்டு., எண்ணற்ற பூமி, சூரிய, சந்திர கிரகங்கள் உண்டு என்பன போன்ற சத்தியமான மெய்ஞான விளக்கங்களோ மிக மிக அற்புதமானவையாகும்..! ஒவ்வொரு அமாவாசையிலும் நம்முடைய உடலில் உள்ள ஜீவ அணுக்களின் தன்மைகள் பல மாறுதல்களைக் கொள்கின்றன! அமாவாசை என்பது ஏதோ மற்றொரு திதி நாள் போலத் தோன்றினாலும், உண்மையில் அமாவாசையன்று நம்முடைய 72,000 உடல் நாடிகளிலும் பல சூட்சும சூரிய, சந்திர கிரண, பிராண வாயு மற்றும் நாடி மாற்றங்கள் நிறைய ஏற்படுகின்றன... குறிப்பாக, கபால நாடிகள் ஆக்கம் பெறும் நாளே அமாவாசையாகும்! ஏன் அமாவாசைக்கு மட்டும் இந்தத் தனிச் சிறப்பு?

பித்ரு கடன் தீர்க்கும், அமாவாசை வழிபாடு! : நம்முடைய தர்ப்பண சக்திகள் சூரிய ஒளி மூலமாகவே பித்ரு லோகத்தை அடைகின்றன!  பொதுவாக, அமாவாசையன்று, பித்ரு தேவ மூர்த்திகள் தர்ப்பணச் சக்தியைப் பெறுவதற்காகச் சூரிய பகவானிடமிருந்து சாளச் சந்திர கிரணங்களைக் கடனாகப் பெறுகின்றார்கள். இக்கடனைத் தீர்ப்பது அவரவர்களுடைய சந்ததிகளின் கடமையாகின்றது... இதனையே ஒருவகையில் நாமனைவரும் நம் வாழ்வில் தீர்க்க வேண்டியதான பித்ரு கடன் என்றும் சொல்லுகின்றோம்.. ஏனென்றால் நம்முடைய சூட்சும சரீர மாற்றங்களும், ஒன்பது வகையான தேக யாத்திரை வடிவுகளும் சூரிய கிரணத்தைப் பின்பற்றித்தான் பிரம்ம லோகம் வரையிலான தேவப் பிரயாணம் கொள்கின்றன..

கோளச் சக்கரம் அமாவாசை அக்னிச் சங்கமம்! : யோகம், பிராணாயாமம், ஆசனம், பூஜைகள், ஆலய தரிசனங்கள் போன்றவற்றில் கிட்டுகின்ற பலாபலன்கள் தட்சிணாயத்திலும், உத்தராயணப் புண்ய காலத்திலும் வெவ்வேறு விதமாக இருக்கும்.. இதற்குக் காரணம் இந்த ஆத்ம சாதனைகளின் பலன்கள் மூன்று முக்கியமான அக்னி அம்சங்களைப் பொறுத்துள்ளன.! பூஜையில், யோகத்தில், தானத்தில் தோன்றுகின்ற அக்னிப் பிரவாகம் (1) அந்தந்த நாளின் சூரியக் கிரண வெப்பம் (2) அந்தந்த நாளில் அவரவர் உடலில் உள்ள உஷ்ணம் (3) ஆகிய மூவகை அக்னிக் கூட்டு அம்சங்களைக் கொண்டுதான் அன்றைய உடல் நாடி நிலைமையும், காரிய விளைவுகளும், காரிய சித்திகளும் அமையும்! இவற்றையே பஞ்சாங்கக் கால கணிதம் மூலமாகவும் அவரவர் ராசி, நட்சத்திரத்திற்கு ஏற்ற வகையில் ஜாதகப் பலன்களாகக் கணித்து உணர்கின்றோம்!

மூன்று அக்னி சேரும் இவ்வக்னிக் கூட்டில் அமாவாசை அன்று சூரிய, சந்திரக் கூட்டொளியும் நான்காவதாக உடலில் சேர்வதால் இதன் பலா பலன்களை முழுமையாக அடைந்திட, பல கூடுதல் புண்ய சக்திகளைப் பெற்றாக வேண்டும். அதாவது கூடுதலாக நான்காவதாக வருகின்ற அமாவாசையின் சூர்ய சந்த்ராக்னி சக்தியைப் பெருமளவிற்குப் புண்ய சக்தியை மனிதன் பெறாவிடில் இந்த சக்தி விரயமாகும் அல்லது உடலின் நாடிச் சூடு பெருகி மன நிலைகளையும் பாதிக்கும்.!

அமாவாசை பலன்களைத் தரும் அக்னி வழிபாடுகள்! அமாவாசைத் தீர்த்த நீராடல்கள், தர்ப்பணப் புண்ய சக்தி, வாழைக்காய், அரிசி, பருப்பு போன்ற குறித்த சில தான தர்மங்கள், கிரிவலப் புண்ய ஆற்றல் போன்றவை இவ்வரிய புண்ய சக்தியைப் பெற்றுத் தரும்... ராமேஸ்வரத்தில் அக்னித் தீர்த்தம் எனப்படும் கடல் தீர்த்தம் விசேஷமான அக்னி சக்தியைப் பூண்டிருக்கக் காரணம் பித்ருக்களும், மகரிஷிகளும், சித்தர்களும் எந்நேரமும் இங்கு நீராடி விசேஷமான அஸ்யாக்னி சக்தியையும் மூலிகைச் சக்திகளையும் இதில் நிரவுவது ஆகும்!

எவ்வாறு மழை, வெயில், குளிர், பனி போன்றவற்றிற்கு ஏற்ப மனிதன் தன் உடலைத் தற்காத்துக் கொள்கின்றானோ, அவ்வாறே சூரிய வெப்பம், சந்திர வெப்பம், உடல் வெப்பம் ஆகிய மூன்றையும் நிலைச் சீர்ப்படுத்துகின்ற சக்திகளை மனிதன் தினசரி பெற்றால்தான் நன்முறையில் ஆரோக்யமாக வாழ இயலும்... அமாவாசயன்றுதான் இந்த அரிய ஆற்றலையும் பெற முடியும்! ஒவ்வொருவரும், ஒவ்வொரு நிமிடத்திலும் தம் உடலின் 72,000 நாடிகளிலும் இம்முக்கூட்டு வெப்ப சக்திகளை நன்முறையில் சீராக இணைத்திட வேண்டும்.. இவற்றிற்கான சாதனைகளே பிராணாயாம யோக சக்திகள் ஆகின்றன! பிராணாயாமம், யாகங்கள், வேள்விகள், யோகாசனங்கள், முத்திரைகள், அக்னி வழிபாடுகள் போன்றவை உடலில் நாடி ரூபத்தில் உள்ள அக்னிப் பிரவாகத்தைச் சீரமைக்கும் ஆரோக்கிய தேவ யோகக் கலைகளாகும். அமாவாசையின் விசேஷமான சூரிய சந்திர சங்கமம் தேவ ரீதியாக ஒரு நவீன யோகாக்னியை உற்பவிக்கின்றது! தேவ மார்க்கமாகவும் மேற்கண்ட வழிபாட்டுப் பலன்களையும் துரிதப் படுத்துகின்றது!

அமாவாசையில் எழும் அற்புத சோம சூர்யாக்னி! தை அமாவாசை, ஆடி அமாவாசைகளில் சூரியனின் அயன, கிரண மாறுதல்கள் சந்திர வெப்பத்தை ஒட்டி அமைவதோடு, சந்திராக்னியும் சூரிய கோள அக்னியுடன் கிர(க)ண பாணப் பரிமாற்றம் பெறுவதால் இவ்விரு கோளச் சங்கமக் காலத்தில் நடத்தப்பெறும் பூஜைகள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருக்கும்! இந்த அரிய பூஜா சக்திகள் பிரபஞ்சத்தின் சூரிய, சந்திரக் கிரண வீச்சுகளை புனிதப்படுத்தி ஜீவித வாழ்க்கைக்காகப் பரவெளியை மேன்மெலும் தூய்மைப் படுத்துகின்றன...!

நம்முடைய வலது கண்ணில் சூரிய சக்தியும், இடது கண்ணில் சந்திர சக்தியும் நிறைந்திருப்பதால் நம்முடைய வலது, இடது கண் சக்திகளின் கூட்டில், குவிப்பில் அற்புதமான சோம பாஸ்கரக் கிரணங்கள் (சோமன் = சந்திரன், பாஸ்கரன் = சூரியன்) உருவாகின்றன.. வலது கண், இடது கண் இணைப்பான ஆக்ஞா நேத்ர சக்கரமே இதன் யோக பீடமாகும்! நம் வலது நாசியில் சூரிய கலையும், இடது நாசியில் சந்திர கலையுமாகிய சுவாச பந்தனம் நிகழ்வதால் இரண்டும் இணையும் சுழுமுனை அக்னியில்தான் மன சாந்தியும், தீர்க தரிசனமும் உண்டாகும்! உண்மையில் அமாவாசையன்று ஏனைய நாட்களை விட, சூரிய சந்திரக் கிரணங்களிலும், நம்முடைய சுவாசத்திலும் பல பெரும் மாற்றங்கள் ஏற்படுவதைச் சற்று ஆழ்ந்து நோக்கிடில் நன்கு உணர்ந்திடலாம்.!

திருமால் தோற்றுவித்த எள்! மேலும் திருமாலின் திருமேனியிலிருந்து, பெருமாளின் சுழுமுனை யோக அக்னியில் தோன்றியதாக எள்மணிகள் விளங்குவதால் எள்கொண்டு அமாவாசையன்று தர்ப்பணம் இடுதலும் பெரிதும் முக்கியத்துவம் பெறுகின்றது.. எள் என்பது சித்த மருத்துவப்படி சூடு வகையைச் சார்ந்ததாகும். ஆனால் எள்ளை ஆட்டி எடுக்கும் நல்லெண்ணெய் குளிர்ச்சியைத் தருவதாம் . என்னே இறைவனின் மகத்தான லீலை? அக்னியும், சீதளமும் (குளிர்ச்சி) ஓரிடத்தில் பரிணமிப்பதானது, இறைவனால் மட்டுமே, மெய்ங்ஞான விஞ்ஞானத்தில் ஆக்கக் கூடிய இறைத் திருவிளையாடல் ஆகும்..

திருமாலாகிய பெருமாள் மூர்த்தி தம் இரு நோக்குக் கூட்டுப் பார்வையால் சூரிய சந்திர சங்கமத்தின் போது தம்முடைய இரு நேத்திர நெற்றிப் பொட்டில் இருந்து ஹரிதர ஆக்ஞா சக்கரத்தை உற்பவித்தார்.. சுதர்சன சக்கரத்திற்கு முன் தோன்றியது இது! அதாவது திருமாலுடைய வலது கண் சூரிய கோள சக்திகள், இடது கண் சந்திர கோள சக்திகள் சேர்ந்து இரு கண்களுக்கும் இடைப்பட்ட இடத்தில் நாசியின் மேல் பகுதியில் ஆக்ஞா சக்கரமாக அவதாரிகை கொண்டது... எனவேதான் பெருமாள் தலங்கள் அமாவாசை பூஜைக்கு உரியதாக விளங்குகின்றன ! திருமாலுடைய ஹரிதர ஆக்ஞா சக்கர யோக சக்தி நிலவுகின்ற தலமே சென்னை திருவள்ளூர் தீர்த்தமாகும்! இங்கு ஒவ்வொரு அமாவாசையும் சிறப்பான திருவிழாவாக இன்றும் கொண்டாடப்படுகின்றது! ஆக்ஞா சக்கர யோக நிலைகளை அமாவாசயன்று பயின்றால் பன்மடங்கு யோக சக்திகளாக அவை பெருகிப் பரிணமிக்கும்... திருமால் தம் ஹரிதர ஆக்ஞா சக்கரத்தை உற்பவித்து இரு கண் பாவையையும் இரு புருவ மத்தியில் ஜனித்து யோகம் புரிந்தார்! இச்சங்கமப் பார்வையில் தன் திருமேனியைத் தாமே ஆத்மச் சுடராக நோக்கிய போது அவர்தம் சுழுமுனைச் சுவாச அக்னியில் திருமாலின் திருமேனியில் தோன்றியதே எள் ஆகும். எனவேதான் சித்த மருத்துவத்தில் உஷ்ணம் கொண்டதாக எள் விளங்குகின்றது! எனவே தான் சூரிய சந்திராக்னியைப் பெற்றதாக, உஷ்ணச் சக்தியைப் பெற்றதாக எள் மணிகள் துலங்குகின்றன, எள்ளே நல்லெண்ணெயாக மாறும் போது குளிர்ச்சி பெறுவதேன்?

திருமாலின் எள் உற்பவிக்கும் அவதாரத் திருமேனியே ஸ்ரீசூரிய நாராயண மூர்த்தியாவார்! இந்த அவதார இறைத் துணைவியாய் ஆதற்கு ஸ்ரீலட்சுமி தேவி பெருந்தவம் பூண்டு ஸ்ரீசீதளா தேவியாக அவதாரம் கொண்டாள்.. திருமாலிடமிருந்தே  ஸ்ரீமகாலட்சுமி எள் தானிய மணிகளைப் பிரசாதமாகப் பெற்றிட, “கைக் குழித் திலத் தைலங் காண்!” – என்று கூறித் திருமால் அருளாசி தந்திட்டார்! தாயாராம் ஸ்ரீமகாலட்சுமியும் தம்முடைய வலக் கரத்தினுள் எள் தானிய மணிகளை வைத்து அடக்கமாக மூடிட, அங்கே ஏற்பட்ட பூர்வாக்னியில் “திருமகளின் திருக் கரப் பூங்குழியில்” ... எள்ளானது நல்லெண்ணெயாய்ப் பிரவாகம் எடுத்தது!

உடனே திருமகள் தாம் நிலை கொண்டிருந்த படர் தாமரையிலிருந்து தாமரைத் திரி கொண்டு முதன் முதலாக நல்லெணெய்த் தீபமேற்றித் திருமாலை வழிபட்டாள். இதனால்தான் நல்லெண்ணெய்க் குளியல் குளிர்ச்சியைத் தருவதாக, சீதளா தேவியின் அருளாசியைப் பெற்றுத் தருவதாக விளங்குகின்றது..! இந்த இறை லீலை நிகழ்ந்த தினமே ஆடி அமாவாசை தினமாகும். எனவே ஆடி அமாவாசையன்று எள்ளாலாகிய பண்டங்களையும் (எள் சாதம், எள் உருண்டை, எள் வடை, எள் பொடிசாதம், எள் போண்டா, நல்லெண்ணெய் போன்றவை..) தானமாக அளித்திடப் பணக் கஷ்டங்கள் தீர்வதற்கு நல்வழிகள் கிட்டும்.. இத்தானத்தை நிகழ்த்துதற்கான முக்கியமான தலங்களாக விளங்குபவை – இராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், வேதாரண்யம், கோடிக்கரை, திருவள்ளூர் போன்றவையாகும்! மேலும் சீதளா தேவியாக ஸ்ரீலட்சுமி எழுந்தருளியுள்ள தலங்களில் ஆடி அமாவாசைத் தீர்த்த நீராடல்கள், எள் பண்ட தான தர்மங்களை மேற்கொள்வதால் பணக் கஷ்டங்களுக்கு நிவாரணங்களைப் பெற்றிடலாம்.. பொதுவாக வடஇந்தியாவில் தான் ஸ்ரீசீதளாதேவி வழிபாடு மிகுந்துள்ளது..!

வேதாரண்யம்

பெண்களுக்கான வெள்ளை எள் பூஜை! : பிற்காலத்தில் சம்வர்தினி, கார்க்கி, மைத்ரேயி போன்ற பெண் மகரிஷிகளால் பெண்களுக்கான எள் சம்பந்தமான பூஜை முறைகள் வகுக்கப்பட்டன! வெள்ளை எள்ளானது கணவனை இழந்த பெண்கள் தம் கணவனுக்காகவும், குழந்தைப் பாக்கியம் இல்லாத பெண்கள் (இறந்த) தம் கணவன், பெற்றோர்களுக்காகவும் தர்ப்பணம் அளிப்பதற்காக நிர்ணயிக்கப் பெற்றன. ஆம், பெண்களும் வெள்ளை எள் கொண்டு தாராளமாகத் தர்ப்பணம் அளித்திடலாம்! உத்தராயணத்தில் வெள்ளை எள்ளும், தட்சிணாயத்தில் கறுப்பு எள்ளும் தோன்றின!  இவ்வாறாக கருப்பு, வெள்ளை எள் மணிகள் தோன்றிய காலமே அமாவாசைத் திதியாதலால் அனைத்து அமாவாசைத் திதிகளிலும் குறிப்பாக தை மற்றும் ஆடி அமாவாசையில் மூங்கில் குவளையில் எள்ளும், தீர்த்தமும் கொண்டு தர்ப்பணம் வார்த்தலும், எள் சம்பந்தப்பட்ட பண்டங்களைத் தானமாக அளித்தலும் தட்சிணாயன, உத்தராயணப் புண்ய காலத்திற்கான மகத்தான பித்ரு பூஜைகளாக மலர்ந்து குடும்பத்திற்கு சாந்தியை அளிக்கின்றன!

மரணம் சரீரச் சட்டை மாற்றுதலே! தட்சிணாயனக் காலத்தில் மரணமடைய இருக்கின்ற ஜீவன்களுடைய விண்ணுலக யாத்திரைக்கான விண் பாதைகளைச் சீரமைத்துத் தருதல் பித்ரு லோக தேவதைகளுடைய பெரும் கடமையாகும். மனித குலத்திற்குத் தான் மரணம் என்பது துக்ககரமான சம்பவமே தவிர, பித்ரு லோகத்தில் மரணமானது ஜீவன்களுடைய சரீரச் சட்டையை (உடலை) மாற்றுவதான சர்வ சாதாரணமான நிகழ்ச்சியாக ஆகின்றது! மேலும் நடக்க இருப்பதைப் பித்ருக்கள் தீர்க தரிசனமாக உணர்வதாலும், நடக்க இருப்பதை இறைநியதியாக அவர்கள் ஏற்பதாலும் மரணம் என்பதும் ஒரு ஜீவித சரீர மாறுபாடாகவே அவர்கள் உணர்கின்றனர்!

கடகத் தர்ப்பணம்! பித்ரு லோகங்களில் கடக தேவதைகள் என்ற ஒரு வகையினர் உண்டு.. இவர்கள் தாம் தட்சிணாயனப் புண்யகாலத்தில் இறக்கின்ற ஜீவன்களுடைய மேலுலக யாத்திரைகளை நிர்ணயிக்கின்றனர்! எனவே இந்நாளில் (ஆடி அமாவாசை 20.7.2001) மிகவும் முக்கியமானதாகக் கடக தேவதைகளுக்கு அர்க்யம் அளித்திடுதல் வேண்டும்... கடக தேவதா மூர்த்திம் தர்ப்பயாமி என்று விரல் நுனிகளில் நீர்த் தாரையை விட்டு நான்கு முறை அர்க்யம் அளிக்க வேண்டும்! கும்பகோணம் – மயிலாடுதுறை மார்க்கத்தில் திருவிசநல்லூரின்  உட்பகுதியில் அமைந்துள்ள தொன்மையான திருந்து தேவன்குடி ஆலயம் கடக தேவதைகளுக்குப் ப்ரீதி ஆனதால் இங்கு தர்ப்பணம் அளித்து பிரண்டைத் துவையலுடன் அன்னதானம் அளித்தலால் விபத்துக்களினால் இறந்தோர்க்குத் தக்க ஆன்ம சாந்தியும் கிட்டும்! விபத்துக்களைக் கண்டு மன பீதி அடைந்தோரும், மனக் கலக்கங் கொண்டோரும் தக்க மனசாந்திதனைப் பெறுவர்!

ஸ்ரீசந்திர பகவான்
திருந்துதேவன்குடி

விரல் கடைத் தீர்த்தவாரியே தர்ப்பணம்! பித்ருக்களுக்கு நாம் அளிப்பது தர்ப்பணம்! தெய்வாதியர்க்கும், தேவ மூர்த்திகளுக்கும், மகரிஷிகள், யோகிகள், சித்தர்களுக்கும் தேவாதி தேவர்களுக்கும், தேவதையர்களுக்கும் அளிப்பது அர்க்யம்! பொதுவாக வலது உள்ளங் கையில் கட்டை விரல் (சுக்கிர விரல்), ஆள்காட்டி விரல்களுக்கு (குரு விரல்) இடையே நீரை ஊற்றி வார்த்துத் தர்ப்பணம் அளிப்பதே பித்ருக்களுக்கு உரித்தானது ஆகும்! இதற்கு விரல் கடைத் தீர்த்தவாரி என்பது சித்தர்களுடைய பரிபாஷைப் பெயர்! ஏன் இந்த விரல் கடைத் தீர்த்தவாரி என்றால் சுட்டு விரலாகிய குருவிரலே தேவ குருவாகிய பிரகஸ்பதி! அசுர குருவாகிய சுக்கிராச்சாரியாரைக் குறிப்பதே சுக்கிர விரலாகிய கட்டை விரல்! மனிதனாவன் அவரவருடைய தாமச, ரஜஸ், சாத்வீக குணங்களுக்கேற்ப அந்தந்த குணப்பாடுகளுக்கான இறைவழி முறைகளைச் சற்குருவின் பரிபாலனமாக உணர்ந்து நன்னிலை அடைவதற்காகப் பித்ருக்களின் ஆசிகளைப் பெற்றுத் தருவதே இந்த பித்ருக்களுக்கான விரல் கடைத் தீர்த்தவாரி விரல் முத்திரை வழித் தர்ப்பணம் ஆகும்.!

தர்ப்பணத்தில் பூணூல் காட்டும் சுவாச பந்தனம்! பொதுவாக பித்ருக்கள் தர்ப்பணம் அளித்திடும் போது பூணூலை வலது இடமாக அணிந்து கொள்தல் (பிராசீனம்) வேண்டும். ஏனென்றால் பூணூல் கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் தெய்வீக சற்குணங்களில் ஒன்றே சுவாச நாடி பந்தனத்தை முறைப்படுத்துவது ஆகும்.. சாதாரண மானுட வாழ்க்கைக் காரியங்களுக்கு இடது வலமாக (சவ்ய முறை) பூணூல் அணிய வேண்டும்.. தேவ பூஜைகளுக்கு மாலையாக (நிவீதம்) அணிந்து கொள்ள வேண்டும்! தர்ப்பணம் என்பது மகத்தான பித்ரு பூஜை ஆதலால் பித்ருக்களுக்கு உரித்தான தர்ப்பண சக்தியைச் சூரிய கிரணங்கள் மூலமாகவே பெற்றாக வேண்டும்.. ஆதலால் சூரிய கலை சுவாச மேன்மையைப் பெருக்குவதற்காக வலது இடமாகப் பூணூலைத் தரிக்க வேண்டும்..!

உதாரணமாக உங்களுடைய வலது கையைத் தரையில் வலப்புறம் அழுத்தும் போது சுவாசம் இடது நாசி வழியாகத் தானாகவே மாறும்! இவ்வாறாக இடது கையை இடப்புறம் அழுத்தும் போதும், கைகளை மார்புக்கு நேராக நீட்டும் போதும், தலைக்கு நேராக உயர்த்தும் போதும் உங்களுடைய சுவாச ஓட்ட மாறுபாடுகளை உன்னித்துக் கவனியுங்கள்! இவ்வாறாக எந்த பூஜையை மேற்கொள்கின்றோமோ, அதற்கு உரித்தான சுவாச பந்தனத்தை அறிந்து செயல்படுதலால் பூஜா சக்திகளை விரயம் செய்திடாது அபரிமிதமான பலன்களையும் பெற்றிடலாம்..!

தர்ப்பண சக்தி பெருகும் வழிகள்! தர்பைப் பாய் அல்லது பலகையில் கால்கள் சற்றும் கீழே படாது முழுவதுமாக அமர்தல், வேஷ்டியைப் பஞ்ச கச்சமாக அணிதல், மின் விசிறி இல்லாது இயற்கைக் காற்றோட்டத்தில், தீர்த்தக் கரையில் குறித்த சில மரங்களின் அடியில் இவ்வாறாக பல அரிய இறைவழி முறைகளைக் கைக்கொண்டால்தான் தர்ப்பண சக்தி மிக எளிதில் பித்ருக்களை அடையும்புடிச் செய்திடலாம்.! மேலும் ஆடி அமாவாசை, தை அமாவாசையின் போது பித்ருக்களுக்கு அனைத்துக் கோடி லோகங்களுக்கும் செல்வதற்கான அதி சுதந்திரம் வழங்கப்படுவதுடன் தம்முடைய தபோபலன்களையும், நல்வரங்களையும் திரட்டிச் சென்று தார்மீகமான முறையில் அவற்றை ஈன்றிடத் தக்க இறை ஆணையையும் இந்நாட்களில் அவர்கள் பெறுகின்றார்கள்..!

எவ்வாறு விசேஷ தினங்களில் நாம் பலவிதமான தான தர்மங்களைக் கடைபிடித்துப் புண்ய சக்திகளைப் பெருக்கிக் கொள்கின்றோமோ, இதே போல புண்ய தானம், புஷ்பச் சந்திர தானம், காடக வேத கர்மிகா தானம் போன்ற பல அதியற்புதமான தான வழிவகை முறைகளைப் பித்ருக்கள் ஆடி அமாவாசையன்று கைக்கொள்கின்றனர்.. எனவேதாம், ஆடி அமாவாசையன்று பூலோகத்திற்கு வருகின்ற பித்ருக்களின் ஆசியை உடனடியாக நேரடியாக நாம் பெறுதற்கே, இதனை மகத்தான இறைச் சமுதாயத் தர்ப்பண பூஜையாகச் சிறப்புடன் எடுத்துரைக்கின்றனர்!

கடல் நீராடல் விதிகள்! தினந்தோறும் கடலில் நீராடுதல் கூடாது... தம் ஜீவனத்திற்காகக் கடலை நம்பி வாழ்கின்றோர்க்கு மட்டும் இதில் விதிவிலக்கு உண்டு.. அமாவாசை, கிரகண மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் கடலில் நீராடிடலாம். இதற்குக் காரணம் என்ன? தினந்தோறும் ஜீவன்களுடைய பலத்த கர்ம வினைகள், தீய எண்ணங்களைத் தாங்கி வருகின்ற நீர், மற்றும் கொடிய எண்ணங்களைச் சுமக்கின்ற பரவெளிக் காற்று, சூரியக் கிரணங்களால் சூரியாக்னியில் பஸ்மம், ஆக்கப்படுகின்ற கர்மவினைக் கழிப்புகள், புண்யத் தீர்த்தங்களில் நீராடுவோர் கழிக்கின்ற பெரும் பாவச் சுமைகள், கழிவுநீர் அனைத்தையுமே கடல் நீரே தன்னுள் உறிஞ்சிக் கொள்வதால் இவற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான புண்யக் கவசத்தை, புண்ய வலையை மனித சமுதாயம் பெற்றிருப்பதில்லை! எனவே சாதாரண நாட்களில் கடலில் நீராடக் கூடாது..!

ஆனால் ஆடி அமாவாசை மற்றும் சூரிய, சந்திர கிரகண நாட்களில் பித்ருக்கள் பூலோகத்திற்கு வந்து கடலில் நீராடி ஆசியளிப்பதன் காரணமாக, அந்நாளில் கடலில் நீராடலாம். அதாவது பித்ருக்களும், தேவர்களும் நீராடுகையில் நாமும் நீராடினால் அவர்களுடைய புனிதமான தேவ சக்தியானது கடலில் சேரும் கழிவு வினைகளில் இருந்து நம்மைக் காக்கின்றது! எந்நாளிலும் நீராடக் கூடிய புனிதக் கடற்கரைத் தீர்த்தங்களுள் ஒன்றே இராமேஸ்வரம் அக்னி தீர்த்தமாகும்! ஏனென்றால் இவ்விடங்களில் தேவர்களும், பித்ருக்களும் எப்போதுமே பிரசன்னமாகி நீராடுவதனால், அவர்களின் அருளாசியோடு நாம் தீர்த்த நீராடல்களின் பலன்களை எளிதில் பெற்றிடலாம்.. புண்ய நதி தீரங்களில் கூட இரவில் நதிகளிலோ, ஆறுகளிலோ, குளத்திலோ நீராடுதல் கூடாது! ஆனால் இராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்திலோ எப்போதும் பல கோடி தேவதா மூர்த்திகள் நீராடிக் கொண்டிருப்பதால் எப்போதும் நீராடிடலாம் என்ற இறை நியதியைத் தாங்கியதாக, பிரபஞ்சத்திலேயே மிகவும் சிறப்புடைய கடற்கரைத் தீர்த்தமாக இராமேஸ்வரத் தீர்த்தம் விளங்குகின்றது! மேலும் கோயிலுக்கு நேராக ஸ்ரீராமரும், ஸ்ரீசீதா பிராட்டியும் பூஜித்த லிங்கங்களின் அருட்கிரணங்கள் எப்போதும் அக்னித் தீர்த்தத்தில் கலந்து அருட்பொலிவைக் கூட்டுகின்றன.!

திரேதா யுகத்திலேயே, ஸ்ரீராமர் வழிபடும்போதே பித்ரு முக்தித் தலங்களுள் ஒன்றாக இராமேஸ்வரம் திகழ்ந்தது என்றால் இராமேஸ்வரத்தின் தொன்மையை, பழஞ்சிறப்பை, தர்ப்பண சக்தி மூலம் முக்தி தரும் மகத்துவத்தை என்னென்று உரைப்பது? உண்மையில் ஆடி அமாவாசையன்று இதனை அடுத்து வருகின்ற ஆறு மாதங்களுக்கும் உரித்தான ஜீவன்களுடைய கர்ம பரிபாலன நிவாரண முறைகள் யாவுமே பித்ரு தேவர்களாலும், சித்தர்களாலும், யோகியர்களாலும் இத்தீர்த்தத்தில் நிரவப்படுவதால் இராமேஸ்வரத்தில் ஆடி அமாவாசை நீராடல் எதிர்வருகின்ற துன்பங்களைத் தணிக்கும் தூய மாமணிப் புனிதப் பரலாக விளங்குவதை நன்கு உணர்த்துகின்றது அன்றோ? இவ்வாறாக ஆடி அமாவாசை மகிமை சொல்லவும் பெரிதாம்! வ்ருஷ வருட தட்சிணாயனப் புண்ய கால ஆடி அமாவாசையன்று பித்ரு முக்தித் தலங்களிலும், புண்ய ஆறு தீர்த்தங்களிலும், பசுக்களைப் பராமரிக்கும் கோ சாலைகளிலும், மிண்டு ரங்கக் குவளை எனப்படும் மூங்கில் குவளைத் தீர்தத்தால் தர்ப்பணம் இடத் தவறாதீர்கள்!

மண் தாலி மகிமை

தங்க மாங்கல்யத்தில் சேர்ந்திருக்கும் மாங்கல்ய தோஷங்களைத் தீர்க்கும் மண்தாலி பூஜை! ஒருவனுக்கு ஒருத்தி என்னும் திருஉரை சொன்னதால் உயர்மணமாம் திருமணம் என்னும் அருள்முறை பிறந்தது! திருமணங்களிலும், இல்லற வாழ்க்கைக்கும் தேவ சாட்சியாய அமைந்திருப்பது திருமாங்கல்யம் ஆகும். இதில் மாங்கல்ய தேவதைகள், சுமங்கலி தேவதைகள், சுப மங்கள தேவதைகள் எப்போதும் குடியிருக்கும்! இத்தகைய புனிதமான மாங்கல்யத்தை நமக்குப் பெற்றுத் தந்தவர்களே ஈஸ்வரனும், ஈஸ்வரியும் ஆவர்! திருமணப் பொருத்தங்களில் 1008 பொருத்தங்கள் உண்டு. ஸ்ரீராமர், ஸ்ரீசீதை ஜாதகங்கள் மட்டுமே அனைத்துப் பொருத்தங்களும் கொண்டவை! நட்சத்திர நாடிப் பொருத்தம் என்பதும் உண்டு..! ஒவ்வொரு மனிதனுக்கும் வாத, பித்த, சிலேத்தும, கப நாடிகள் என நான்கு வகை முக்கியமான தேக நாடிகளோடு பார்சுவ சுப நாடி, சுபமங்கள நாடி, கங்கண தீர்க நாடி, ம்ருத்யுஞ்ஜய நாடி என சுபமங்கள நாடிகளுள் பல வகைகளும் உண்டு! சுப மங்கள நாடிகளுக்குச் சாட்சி அடையாளமாக இருப்பது மாங்கல்யமாகும்.!

சித்தர்மலை போன்ற மலைகளில் வசிக்கும் மக்கள் திருமணத்தின் போது மணமக்களின் கைகளில் மஞ்சளால் கீறி ஓர் அடையாளம் ஏற்படுத்துவர்..! இறக்கும் வரை அந்த வடு மாறாததாகும்..! தம்பதிகளின் கைகளை இணைத்துத் திருமணம் புரிகின்றனர்.! இது போலவே வெளிநாட்டவர்கள் தாலிக்குப் பதில் மோதிரம் அணிந்து (மாற்றித்) திருமணம் புரிகின்றனர்.! சூரிய கிரண ரேகைகளுக்கும், தாலிக்கும் மிகுந்த ஆத்மத் தொடர்பு உண்டு. அதனால்தான் திருமண மோதிரங்களில் சூரியக் கதிர்கள் பிரதிபலிக்கும் வண்ணம் வைரம் போன்ற கற்களைப் பதித்துச் சூரிய சாட்சியாகப் பகல் நேரத்தில் திருமணம் புரிகின்றனர்.!

ஒரு முறை எம்பெருமான் ஈசனிடம் அன்னையாம் பார்வதி தேவி பூலோகத்தில் தம்பதிகளின் ஈருடல் ஓருயிர் என்ற நித்திய சத்தியமான பேருண்மைப் பேரன்பை உணர்த்திடும் ஒரு தேவ அடையாள முத்திரையைச் சின்னமாக அருளிட வேண்டினள்..! “என்னிற் பாதி நீயென, யாமே கதியெனச் சரணா கதி காணல் இல்லறத்தின் நல்தேவ முத்திரை!” என்று சிவபெருமான் இறைவன் உரைத்த போது, அன்னை பார்வதி தேவி “தாங்கள்தாம் இதற்கு தேவ சாட்சியாகப் பொலியும் பொருளைப் பிரபஞ்சத்திற்கு உணர்த்திக் கொடுக்க வேண்டும்”, என்று வேண்டி இறைவனின் தாள் பணிந்து வணங்கிட, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி அல்லவா, அம்பிகையின் அனந்த கோடி நமஸ்காரம் அகில உலகையே தழுவியது! இறைவனின் திருப்பாதங்களில் இருந்து சில மண் துகள்கள் அம்பிகையின் சிரசில் பரிணமித்திட அவற்றைத் திரட்டிய இறைவன், “என்னுள் நீ, உன்னுள் யாமென உணர்விக்கும் தேவ கருப் பொருள்களில் ஒன்றாக, ஆண் பெண் ஜீவ ஒளி பிணைப்பிற்காகத் தேவ சுபமங்கள சாட்சிப் பொருள் ஒன்றினை இப்பூவுலகிற்கு அளித்திடுகின்றேன்!” என்று அருளி...

1.கருகமணிப் பாளம்
2. பாளப் பவள நீரோட்டம்
3. நீரோட்டச் சாந்து
4. சாந்து குங்கும தீபிகை
ஆகிய அரிய நான்கு வகை பிருத்வி சக்திகளை அம்பிகையின் சிரசிற் பொலிந்த திருமண்ணில் இருந்து திரட்டி இதனை சுப காரண மூல மாங்கல்யமாக ஆக்கித் தருகின்றோம்! இதுவே திருமணத்திற்குத் தேவ சாட்சியாகும் என ஓதி அருள்பாலித்தார்! சிவபெருமானும் சுப மங்கள பிரம்ம தேவியரிடம் அம்பிகையரின் சிரசில் படிந்த நான்கு தேவ மண் வகைகளை அளித்துப் பிருத்வி மாங்கல்யம் எனப்படும் மண் தாலியை வடிவமைக்குமாறு அருட்கட்டளை இட்டார்!

1. கருக மணிப் பாள (பவள) மண்! பிரபஞ்சமெங்கும் நாடு மத, இன, குல, பேதமின்றி ஒரே நாடாக சனாதன தர்மம் நிலவிய யுகம் அது! அப்போது இறைவன் உலகின் சில இடங்களில் இருந்த கருகமணிப் பாளத்தைச் சுட்டிக் காட்டி ஆசி கூறினார்! தற்போது தாய்லாந்து அருகில் இந்த தெய்வீகத் திருமண் கிடைக்கின்றது.. இதை blackgarnet   என்று அழைக்கின்றார்கள்.. இந்தக் கருகமணிப் பாளத்தை உரலில் போட்டுக் கரிசலாங் கண்ணிச் சாறு விட்டு இடித்து, சிறு மணிகளாகச் குழிப் புடம் போட்டு, மூன்று கடிகை பாதரசம் சேர்க்க அது கெட்டியாகி விடும். இதுவே கருக மணிப் பாள மண்!

2. பாளப் பவள நீரோட்ட மண் : மாலத் தீவு, அந்தமான் தீவுகள் போல 300 தீவுகள் நம் பாரத நாட்டிற்கு அருகில் உள்ளன.. இவற்றில் ஜமைகா, சுலைக்கா, மலைக்கா ஆகிய தீவுகளில் வாழும் பழங்குடியினரிடம் பண்ட மாற்று முறையில் மட்டுமே இந்த அரிய திருமண்ணைப் பெற முடியும்.! இவர்களே இம்மண்ணின் தெய்வீக சக்திகளைத் தாங்கும் வல்லமை பெற்றவர்களும் ஆவர்! எண்ணெய், பால் சம்பந்தமான உணவுத் திடப்பொருள் (milk products) போன்று உள்ள இம்மண் மகத்தான மாங்கல்ய சக்தி நிறைந்தது! இங்கு உள்ள அதியற்புத நீரோட்டங்களில் தெளிந்த நீரில் கிடைப்பதே பாளப் பவள நீரோட்ட மண் ஆகும்! இதன் தற்போதைய மதிப்பு ஒரு கை பிடியளவு 50,000 ரூபாய்க்கு மேலாகும்.!

3. நீரோட்டச் சாந்து மண் : கண் காணாத நீர் என்ற ஒரு வகை நீர் இன்றளவும் உள்ளது.. இந்த நீர் இருப்பது கண்களுக்குத் தெரியாது.. சூரிய, சந்திர, நட்சத்திர ஒளிச் சுடர்கள் கூடப் படாத நீர்! ஆனால் எவ்வளவு முகந்தாலும் நீர் கிடைக்கும்.. இதன் ஒரு வகைச் சுனைத் தீர்த்தமே சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள முருகத் தலமான காஞ்சாற்று மலையில் உள்ளது! வெயில், சந்திர ஒளிபடா தீர்த்தம்! இது போன்ற நீர்ச் சுனைகளில் இருந்து குறித்த ஜல தேவதைகளின் உபாசனையுடன் பெறப்படுவதே நீரோட்டச் சாந்து மண் ஆகும்.

4. சாந்துக் குங்கும தீபிகை மண் : சாத்தூர் அருகில் சதுரகிரி மலையில் வசந்த காலத்தில், மூன்று மைல் தூரத்திற்கு வனங்களில் மல்லிகை பூத்திருக்கும்.! அங்கு கதிரவனின் ஒளியில் ஓர் ஆண்டு காய்ந்த யானையின் சாணத்தை எடுத்து அதில் ஒரு அடி நீளம் குழி செய்து, வெள்ளித் தட்டை அதன் அடிப்பாகமாக அமைத்து, வேறொரு யானையின் சாணத்தால் ஆப்படித்து, நிலம்புரண்டி, கருவான் சுரை மூலிகைகளால் காப்பு கட்டி, பிடிக்கு நீர் விட்டான் மூலிகைகளால் கவசம் போட்டு பாதரச ஸ்புடம் இட்டுக் கிடைப்பதே ஒரு துளியளவு சிகப்பு மண்.! இதுவே சாந்துக் குங்கும தீபிகை மண்.! மேற்குறித்த முறையில் நான்கு தேவ மண் வகைகளைப் பகுத்து எடுத்து 108 பசுக்களுக்கு மேல் உலா வந்த புனிதமான நிலத்தில் கிட்டும் களிமண்ணில் சேர்த்துப் பிசைந்து பசுவிராட்டித் தணலில் ஏழு முறை சுட்டால் கிடைப்பதே மண்தாலி ஆகும்.! இதைச் செய்வதற்குக் குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகும்..! அரியதோர் அருட்பணி அருளிய அரனை வணங்கி, ஸ்ரீபிரம்ம தேவர் இதை முறையாகச் செய்து விநாயகர், காமதேனு மற்று நந்தி தேவரிடம் அளித்து ஆசி பெற்றார்! சிவபெருமான் அதை ஒன்பது தத்துவங்கள் கூடியதாக ஒன்பது பிரிகள் கொண்ட மங்களத் தாலிச் சரட்டில் கோர்த்து, பங்குனி மாதம் உத்திர நட்சத்திர நாளில் அன்னை பார்வதி தேவியின் திருக்கழுத்தில் சூட்டி மணம் புரிந்தார்.!

இதுபோலவே சித்திரை உத்திர ஸ்ரீமீனாட்சி கல்யாணம், ஸ்ரீமுருகன், ஸ்ரீராமன், ஸ்ரீநித்ய கல்யாணப் பெருமாள் போன்ற இறைமூர்த்திகளின் பங்குனி உத்திர நட்சத்திரத் திருமண வைபவங்களிலும் மண் தாலியே அணிவிக்கப்பட்டது..! இதன் பிறகே பூலோகத் திருமணங்களில் மாங்கல்யம் சூட்டும் முறை ஏற்பட்டது... எனவே இறைவனே முதன் முதலில் சூட்டியதே மண்தாலி ஆகும்! ஆயிரம் தீபங்கள் இருந்தாலும் அகல் விளக்கிற்கு ஈடாகுமா? ஆயிரம் நீர் வகைகள், ஐஸ்க்ரீம் இருந்தாலும் மண் பானை நீருக்கு இணையாகுமா? பிருத்வி சக்தி நிறைந்த மண் என்றாலே அதன் மகத்துவமே தனிதான்! மண் தாலி மாங்கல்ய பூஜை என்பது கணவனின் ஆயுளை வளர்க்கும் அற்புத வழிபாடு! ஆகவே மனைவிமார்கள் கணவனுடைய நல்வாழ்விற்காக எப்போதும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.!

அமிர்த நேரம் சித்தர்களின் சிவசொத்து! சில நிமிட நேரங்கள் அமைகின்ற மிகவும் புனிதமான கல்யாண சுபமுகூர்த்த நேரத்திலும் ஒரு சில நொடிகள் அமைவதே சித்தர்கள் கணிக்கின்ற அமிர்த நேரம் ஆகும்.! தற்காலத்தில் இந்த அமிர்த நேரத்தைக் கணக்கிடுவோர் ஒரு சிலரே, தேவ ஜாதகாலங்கார வான சாஸ்திரச் சூத்திரங்கள் கொண்டு மனிதக் கணக்கில் 800 மைல் தொலைவு எழுதுகோல் வைத்து எழுதினால் தான் இந்த நேரத்தைக் கணக்கிட முடியும்! ஆனால் குருவருள் பூண்டோருக்கோ அவரே இதனை ஸ்ரீகால பைரவ லோகத்தில் இருந்தே நேரடியாகக் கிரகித்துத் தருகிறார் ஆழ்ந்த நம்பிக்கை  பூண்டிடில்! பொன் மாங்கல்யங்கள் முறையாகச் செய்யப்பட்டாலும் அறிந்தும் அறியாமலும் அதில் பலவிதமான தோஷங்கள் பெருமளவு சேர்ந்து விடுகின்றன!

1. ஜாதகத்தில் உள்ள கிரக சஞ்சார விளைவுகள், சுத்தமில்லா எட்டாமிடம் போன்றவையும் தோஷங்களைச் சேர்க்கும்! 2. மாங்கல்யம்தனை இலவசமாகவே செய்திட வேண்டும்! எவ்விதக் கூலியும் பெறுதல் கூடாது! கூலி பெறுவதால் ஏற்படும் தோஷங்கள், செய்பவருக்கும், விற்பவருக்கும் மாங்கல்யத்திற்கும் தோஷங்களைச் சேர்க்கும்! 3. குழந்தைப் பேறு இல்லாத ஏக்கங்களும் தோஷங்களைச் சேர்க்கும். மாங்கல்யத்தில் சேரும் தோஷங்களால் சந்தான பாக்யமும் பாதிக்கப்படுவதும் உண்டு! 4. திருமணமாகதவர்களின் ஏக்கங்களும் மாங்கல்யத்தில் படியும்! 5. உறவினர்கள், வெளியாட்களில் சொத்துத் தகராறுகளில் உண்டாகும் பகைமையும் அப்போது ஏற்படுகின்ற உதிரப்போக்கு தோஷங்களும் மாங்கல்யத்தில் சேரும்! 6. பெண்களின் உதிரப்போக்கு தீட்டு தோஷங்கள் போன்ற பலவிதமான தோஷங்களும் மாங்கல்யத்தில் சேர்கின்றன..!

இத்தகைய மாங்கல்ய தோஷங்களினால் ஏற்படுகின்ற விளைவுகள் ஏராளம்..! கலியுகத்தில் பெருகிடும் இத்தகைய மாங்கல்ய தோஷங்களைப் போக்கிடவே சித்தர்கள் மண் தாலி பூஜையின் மகத்துவத்தை நமக்கு அளிக்கின்றார்கள்..! முறையாகச் செய்யப்பட்ட மண் தாலியின் மகத்துவம் பற்றி சித்தர்களின் ஞான பத்ர வேத கிரந்தங்களில், ஸ்ரீஅகஸ்தியர், ஸ்ரீபுலிப்பாணி, ஸ்ரீபோகர், ஸ்ரீகுதம்பையார், ஸ்ரீஇடக்காடர், ஸ்ரீதேரையர், ஸ்ரீகோரக்கர் போன்ற சித்தர்கள் 6822 ஆயிரம் கோடிப் பாடல்களில் விவரிக்கின்றனர்..!

மண்தாலி பூஜை முறை! பெண்கள் மண் தாலியை முறையாக வழிபடுவதால் தோஷங்களைக் களைந்து, கணவன் நல்ல ஆரோக்யம், நற்குணங்களைப் பெற்றுப் புனிதமான கற்புடன், இறையருளுடன் தற்காப்புடன் வாழலாம்..! இந்த மண் தாலியைத் தாலிச் சரடில் கோர்த்திடலாம்! ஸ்வர்ண தனச் சுருள் கர்ப்பம் எனப்படும் உறை அல்லது சந்தனப் பெட்டியில் வைத்தும் பூஜிக்கலாம்..! தங்கம் அல்லது வெள்ளித் தட்டு அல்லது எளிமையின் தூய்மையான சந்தனக் கல்லின் மீதோ அல்லது மஞ்சள்/சிவப்பபு/பச்சை நிறங்களில் பார்டர் வைத்த 4”X 4”  அளவுள்ள சுத்தமான 5 புதுக் கதர்த் துணிகளை ஒன்றன் மீது ஒன்றாக இதன் மேல் மண் தாலியை வைத்து வழிபடலாம்..!

திருப்பைஞ்ஞீலி

“சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே
சரண்யே த்ரயம்பகே கௌரீ நாராயணி நமோஸ்துதே..!”

என்ற மந்திரத்தை ஜபித்து மண் தாலியில் உரு ஏற்ற வேண்டும்.. எவ்வளவு தடவை வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை ஜபிக்கலாம்! வாசனையுள்ள மலர்களால் மேற்குறித்த மந்திரத்தால் அர்ச்சித்து மண் தாலியை 21 நாட்கள் வழிபட வேண்டும்..! 21 நாட்கள் பூஜை முடிந்தவுடன் நிர்மால்யப் பூக்களைச் சேகரித்து ஓடும் நீரில் அல்லது நீர் வீழ்ச்சியில் விட்டு விட வேண்டும்.! இவ்வாறு 21 நாட்கள் பூஜை செய்த மண் தாலியை கணவன் கையால் அணிந்து கொண்டால் மாங்கல்ய தோஷங்களை மண் தாலி ஈர்த்துக் கொண்டு இல்லறப் பெண்களைக் காத்திடும்! 21 நாட்கள் இதை அணிந்தவாறே தினமும் மேற்குறித்த மந்திரத்தை நன்கு ஜபிக்க வேண்டும்.! படுக்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்! மாத விலக்கு முடிந்த பின் பூஜையை மேற்கொள்க! பூஜையின் நடுவில் மாத விலக்கு சேர்தல் கூடாது! அதாவது 21 பூஜை நாட்களில் பெண்களின் மாதவிலக்கு காலம் குறுக்கிடாதவாறு பூஜை காலத்தை அமைத்துக் கொள்க! பூஜைக் காலத்தில் மிகவும் பவித்ரமாக இருக்க வேண்டும்! தம்பதி சேர்க்கையும் கூடாது.. புனிதமாக இருத்தல் வேண்டும்...!

மண் தாலி அணிந்து 21 நாட்கள் பூஜை முடிந்தவுடன் ஓடுகின்ற நதி நீர், கங்கை, காவிரி, தாமிரபரணி போன்ற புண்ய ஆறுகள், நீர்வீழ்ச்சிகளிலும் மண் தாலியை விட வேண்டும்.. அல்லது ஊருக்கு வெளியே உள்ள, இல்லத்திலிருந்து குறைந்தது மூன்று மைல் தொலைவிற்கு மேல் உள்ள பால் விருட்சங்களிலும் மண் தாலியைக் கட்டிடலாம்! 21 நாட்கள் பூஜித்த மண் தாலியை நேர்த்தியாகத் திருச்சி அருகே திருப்பைஞ்ஞீலி சிவன் கோயிலில் உள்ளதல விருட்சமான வாழை மரத்திற்கும் கட்டிடலாம்.. வாழையின் சிகப்பு நிறத்திற்குத் தோஷங்களை ஈர்த்து பஸ்மம் செய்யும் சக்தி உண்டு!!

கன்னிப் பெண்களுக்கான திருமண தோஷம் தீர்க்கும் மாங்கல்ய பூஜை! கன்னிப் பெண்கள் 21 நாட்கள் பூஜித்து இதை பத்திரப்படுத்தி வைத்திட்டுத் திருமணம் ஆனபின் இதை அணிந்து வழிபடலாம்..! பெரும் மகிமை வாய்ந்த முறையான மண்தாலி வழிபாட்டினால் மூன்று ஆண்டுகள் மாங்கல்ய தோஷங்களே இல்லாது தற்காத்துக் கொள்ளலாம்! நமது முன்னோர்களால் பல்லாயிரம் வருடங்களுக்கு முன் கடைபிடிக்கப்பட்ட அதி அற்புத வழிபாடே இந்த மண்தாலி வழிபாடாகும்..! வளர்பிறையில் இதை அணிவது நன்று! இந்த பூஜை ஆரம்பிக்க உத்திர நட்சத்திரம் மிகவும் உகந்ததாகும்.. பெண்களின் நல்ல மன வைராக்கியத்திற்கு ஏற்றதே உத்திர நட்சத்திரம்! கணவன், மனைவியிடையே நல்ஒற்றுமை, தீர்க ஆயுள், நல்ல ஆரோக்யம் போன்ற செல்வங்களை வளர்க்கக் கூடியது மண்தாலி வழிபாடு..! ரோஹிணி, புனர்பூசம், பூசம், திருவாதிரை, திருவோணம் போன்ற நட்சத்திர நாட்களில் மண் தாலி பூஜை செய்வது (அல்லது) மண் தாலியை கணவன் கைகளால் அணிவது சிறப்பானதாம்..!

காலில் திருவெண்டயம் அணிந்த ஆண், மெட்டிகள் அணிந்த பெண் தம்பதியரின் ஆசியுடன் அவர்களிடம் இருந்து மண் தாலியைப் பெறுதல் மிகவும் சிறந்தது..! திருமணம் ஆகாதவர்களுக்கு வழங்கிட, 1008 முறைக்கும் குறையாமல் சிவயசிவ, சிவசிவ, நமசிவாய, சிவாயநம என்ற மந்திரத்தை மாங்கல்யத்தில் உரு ஏற்றி வழங்க வேண்டும்..! திருமணம் ஆனவர்களுக்கு 2008 முறைக்குக் குறையாமல் ‘சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே சரண்யே த்ரயம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே’ என்ற மந்திரத்தை உரு ஏற்றி மாங்கல்யத்தினைத் தம் ஆசியுடன் வழங்க வேண்டும்...! மண்தாலி ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயங்களில் கிடைக்கும்!

நடராஜ நாட்டிய மகிமை

மானுட ரூப லிங்கமே நடராஜ ரூபம்! நாம் உணரா நடராஜ நாட்டிய மகிமை..! உருவமற்ற அருவ மூர்த்தியாக, பாண லிங்கமாக, ஆவுடை லிங்கமாகக் காட்சியளிக்கும் சிவபெருமானே நம்மைப்போல் மானுட ரூபத்தில் நடராஜக் கோலத்தில் காட்சியளிக்கின்றார் என்றால் தம்முடைய பரம்பொருள் தன்மையை மனிதர்கள் சிற்றறிவால் அறியும் பொருட்டுத்தான் அரூவ லிங்க வடிவின்றி மானுடக் கோலம் பூண்டுள்ளார்.!

பதஞ்சலி முனி, அகஸ்தியர் பெருமான் போன்ற பல மகரிஷிகளும் சித்தர்களும் எப்போதும் கூடி தரிசிக்கும் வகையில் இப்பூவுலகில் சில நடராஜ நடன சபைக் கூடங்கள் உள்ளன! இவையன்றி நாமறியா வகையில் இன்னும் பல கோடி நடராஜ நாட்டிய சபைகள் உண்டு..! ஒவ்வொரு சபை நாட்டியத்தையும் காண்பதற்கு அதற்குரிய உத்தமத் தெய்வீக நிலைகளை அடைய வேண்டும் என்றால் உத்தம நிலைகளில் எத்தனை கோடிகள் உண்டு என்பதைக் கோடிட்டா காட்ட முடியும்? சித்தர்களின் பாரம்பரியத்திலே ஒரு பரிபாஷை வழக்கு ஒன்று உண்டு.. அதாவது யார் எத்தகைய தெய்வீக உத்தம நிலைகளை அடைந்தாலும் அதற்கு அடுத்த படிக்கட்டில் ஒரு சித்தர் அமர்ந்திருப்பார் என்பதேயாம் அது! ஆழ்ந்த தத்துவம் நிறைந்த பரிபாஷை பொக்கிஷமிது!

நடராஜர் திருமேனியில் எழுகின்றவைதான் கோடி கோடியாக எத்தனை வித நாட்டியங்கள்! ஒவ்வொரு நாட்டியத்திலும் எழுகின்ற சிருஷ்டிகள் தான் எத்துணை, எத்துணை! இவற்றிலிருந்து எத்தனையோ, தெய்வீக கிருத்தியங்கள் தோன்றிக் கொண்டிருக்க, எத்தனையோ பூலோகங்கள் ஒரு புறம் உருவாகிக் கொண்டிருக்க, மறுபுறம் மறைந்து மறைந்து மாயையால் மீண்டும் மீண்டும் பிரபஞ்சம் தோன்றிக் கொண்டிருக்கும் அற்புதத்தை எப்படித்தான் விவரிப்பது? நடராஜரின் திருநடன சின்னஞ் சிறுச் சலன அசைவில், ஒவ்வொரு விநாடியும் எத்துணையோ கோடி லோகங்கள், சிருஷ்டிகள் உருவாகின்றனவே!

அடுத்த முறை ஆலயத்திற்குச் செல்லும்போது சற்று நேரம் நடராஜர் முன் அமர்ந்து அவர்தம் ஒவ்வொரு அங்க அசைவையும் கூர்ந்து கவனித்துப் பாருங்கள்.. நீங்கள் பார்க்கின்ற சில நிமிட நேரங்களில் அவர்தம் திருநாட்டியத்தில் எழுகின்ற தெய்வாதி, தேவ மூர்த்திகள் எத்துணை எத்துணை! சிருஷ்டி என்பது ஜீவன்கட்கு மட்டுமல்ல, அவதார மூர்த்திகளுக்கு இவைக் கிருத்தியத் தோன்றல்கள் ஆகின்றன...! இன்று நாம் சரபேஸ்வர மூர்த்தி, தேனுபுரீஸ்வர மூர்த்தி, சந்தோஷி மாதா, ஐயப்ப மூர்த்தி, ஆயுர்  தேவி என்று பலதெய்வ மூர்த்திகளைத் தரிசனம் செய்கின்றோமே, இவர்களுடைய அவதாரக் கிருத்தியங்கள் முடிந்து விட்டதாக நாம் நினைப்பது தவறு! அவதாரக் கிருத்தியங்கள் நித்யத்வம் கொண்டவையே! ஒரு பூலோகத்தில் நரசிம்மரின் அவதாரம் நிகழ்ந்து கொண்டிருக்க, இன்னொரு பூலோகத்தில் இராமாயணம் தோன்றி உள்ளது! பிறிதொரு பூலோகத்தில் மகாபாரதம், பாகவதம் நிகழ்கின்றன. நம் பூலோகத்தில் இம்மூன்றும் நிறைவு பெற்றுத் தற்போது கலியுகம் நடக்கின்றது...!

எப்போதும் ஒரே மாதிரியாக நமக்குத் தோன்றுகின்ற நடராஜ மூர்த்தியே ஒவ்வொரு வினாடிக்கும் விதவிதமான சூட்சும ரூபங்களிலும் காட்சி தருகின்றார்! திருஅண்ணாமலை, திருக்கையிலாய மலைகளின் ஒவ்வொரு முகடும், வரிசையும், அமைப்பும், வடிவும், கோணமும் நடராஜரின் நடன அசைவுகளையே காட்டுகின்றன..! அதாவது இம்மலைகளின் ரூபங்களும் நடராஜரின் நடனச் சலனங்கள் போல ஒவ்வொரு வினாடியும் மாறிக் கொண்டிருக்கின்றன... இதனால் தான் நாம் எப்போதும் ஒரே மாதிரியாகக் காணும் ஒரே வடிவுடையார் போலான நடராஜரையே பல ஜீவன்களும் வெவ்வேறு வடிவுகளில் காண்கின்றனர்..!  அனைத்து உயிரினங்களும் இந்த ஜீவன்களும் சுவாமியை வழிபட்டுக் கொண்டுதான் உள்ளனர்.. ஆலயங்களில் காக்கை, குருவி, புறா, வௌவாலும், எலியும் இங்கும் அங்கும் ஓடுவதாகத் தோன்றினாலும் அவையும் தரிசனத்திற்காகவும் தான் வருகின்றன..! நல்ல தரிசனமும் பெறுகின்றன..!

நடராஜப் பெருமானின் பாத ரேகைகளிலிருந்து ஒளிர்கின்ற ஒளிக் கிரணங்கள் தாம் எத்துணை, எத்துணை! அவைதாமே இன்று வானம் முழுவதும் நட்சத்திரங்களாகப் பொழிகின்றன..! ஆம் நீங்கள் நடராஜப் பெருமானின் உள்ளங்கால் ரேகையைப் பார்க்க வேண்டுமானால் வானத்தைப் பாருங்கள்! நீங்கள் பார்க்கும் வானம் முழுவதுமே ஸ்ரீநடராஜப் பெருமானின் ரேகை அம்சங்கள் தாம்! ஆம், இவ்வளவு பரந்த கால்களை ஸ்ரீநடராசப் பெருமான் கொண்டுள்ளார் என்றால் நான்கடி, ஐந்தடி உயரத்தில் நீங்கள் காணும் நடராஜப் பெருமான் உங்கள் குறுகிய மனித அறிவிற்காக, சிறிய கண் பார்வைக்காக, இறைவனே தன் உடலைக் குறுக்கி வடித்துக் காட்டும் சிறிய வடிவமே ஸ்ரீநடராஜ வடிவம்தானே! இறைவனின் பாத வடிவே பிரபஞ்சமாக அமைந்துள்ளது எனில் நடராஜப் பெருமானின் உண்மை உருவை நாம் எங்கு தரிசிப்பது!? இந்நிலையை அடைந்தவர்தாம் காரைக்கால் அம்மையாராம்!

சிதம்பர ரகசியம்! உண்மையான நடராஜ தரிசனத்தையே சிதம்பர ரகசியம் என்று சொல்கின்றோம்... சிதம்பர ரகசியத்தில் மேற்கண்ட அடிப்படை விளக்கங்கள் யாவும் அடங்கி உள்ளன...! இறைவனுடைய பாத ரேகைகளே பிரபஞ்சத்தில் நட்சத்திரங்களாக விளங்குகின்றன என்பதும் சிதம்பர ரகசியமே! பிரபஞ்சத்திற்கும் அப்பாற்பட்ட ஒன்று இருந்தால் தானே இறைவனின் பிற வடிவுகளை நம்மால் ஓரளவேனும் துய்க்க இயலும்! இதுவும் சிதம்பர ரகசியத்தின் ஒரு பகுதியே! கண்களை மூடிக் கொண்டால் கூட நடராஜப் பெருமானின் உருவைக் காண விழைகின்றோம் அல்லவா? அப்படியெனில் பார்வையின்றி, மனதால் உள்ளத்தால் உணரப்பட வேண்டிய பரம்பொருளே ஸ்ரீநடராஜப் பெருமான் என்பதும் சிதம்பர ரகசியமே! மனம், உள்ளத்தால் அன்றி ஆத்மார்த்தமாக, நித்யத்வமாக உணரப் பட வேண்டியவர் என்பதும் சிதம்பர ரகசியமே!

நடராஜர் எப்போதும் நடனமாடிக் கொண்டிருப்பதால் இப்பிரபஞ்சத்தில் பல லோகங்கள் தோன்றிக் கொண்டேயிருக்கும்..! அதற்குப் பிரபஞ்சத்தில் இடமுண்டா? பிரபஞ்சத்தைப் படைப்பவனும் விரிப்பவனும், சுருக்குபவனும், தன் சடையையே பிரபஞ்சமாக கொண்டவனும் நடராஜப் பெருமான் என்றால் அவர்தம் எல்லையற்ற உருவத்தை எவ்வாறு வரைவது? இதை உணர்த்துவதும் சிதம்பர ரகசியமே! நீங்கள் இவ்வளவு படிக்கின்றீர்களே? என்ன உணர்ந்து கொண்டீர்கள்? அனைத்தும் அறிந்த சற்குருவே நடராஜப் பெருமானின் நடனக் கோலத்தை உணர்த்துபவர் என்பதும் சிதம்பர ரகசியமே.! இவற்றைப் படித்துக் கிட்டிய தெளிவுடன் ஒரு முறையேனும் சிதம்பரம் சென்று சிதம்பர ரகசியம்தனைக் கண்டு துய்த்திட முற்படுங்கள்! இதன் பின் ஒவ்வொரு முறையும் நீங்கள் நடராஜரைத் தரிசிக்கும் போது பலப் பல தெய்வீக உண்மைகளும், ரகசியங்களும் புலப்படும்..!

ஒன்றை மட்டும் இப்போது உணருங்கள்! நீங்கள் இவ்வுலகில் பிறந்திருப்பது நடராஜரின் திரு நடன சக்தியால் தான்! ஆம், என்னே பெரும் பாக்கியம்! நடராஜர் தம் நடன சக்தியால் நம்மைத் தோற்றுவித்தார் என்றால் அதை விடப் பெரும் பாக்கியம் நமக்கு என்ன வேண்டும்? உங்களுக்கு நடராஜர் பற்றிய சுலோகமோ, வழிபாடோ தெரியாது என்றால் ஸ்ரீஅகஸ்திய விஜயத்தின் இப்பக்கத்தை நடராஜர் முன் வைத்து மீண்டும் ஒருமுறை படியுங்கள்.. இதுவே நடராஜரின் மகிமையை உணர்த்த சற்குரு அளித்துள்ள சிதம்பர ரகசிய குருவாய் மொழியாகும்..!

அமுத தாரைகள்

1. ஜோதி விருட்ச பஞ்சவர்ணக் கிளிகள் : ஸ்ரீபோகர் நவநாத யோகம் பூண்டிருக்கின்ற ஜோதி விருட்சத்தின் கீழ்ப் பகுதியில் தேவ தூதுவர்களாக சிம்புறாக்கள் அமர்ந்திருக்கின்ற தாத்பர்யத்தை அறிவோமா? திருஅண்ணாமலையின் விசேஷமான ஒரு பாறையில் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஏன் பல யுகங்களுக்கு ஒரு முறையே, குறித்த யோக, ஹோரை நேரத்தில் கிரிவலம் வந்து தரிசிக்கின்ற பஞ்ச வர்ணக் கிளிகளே இவையாம்..! போகர் பெருமான் ஆழ்ந்த யோகம் பூண்டிடினும், ஸ்ரீபுலிப்பாணி சித்தர், ஸ்ரீஅகஸ்தியப் பெருமானின் ஆணைகளை நிறைவேற்றுதற்கும் இறையருளால் யோக சஞ்சாரங்களுக்கும் பரவெளி யாத்திரைகளைப் பூணும்போது இந்தப் பஞ்ச வர்ணக் கிளிகளே ஸ்ரீபோகர் உரைத்தவற்றைத் தம்முள் கிரகித்து அவரைத் தேடி, நாடி வருகின்ற சிஷ்ய குழாத்திற்கும், இறை அடியார்களுக்கும் ஸ்ரீபோகர் பெருமானின் குருவாய் மொழிகளை நன்கு அழகாக எடுத்துரைக்கின்றன.! ஸ்ரீபோகர் பெருமானே அதிமன் மகரிஷி, பருமன் மகரிஷி என்ற இவ்விரண்டு முதிய மகரிஷிகளைப் பல லோகங்களுக்கும் அனுப்பி சித்தோபநிஷத் வேத மாமறை வாக்கியங்களை எடுத்துரைக்கச் செய்வதுண்டு.

அதிமன் ரிஷி, பருமன் ரிஷியின் வழித்தோன்றல்கள் தாம் கீரபாவனம் எனப்படும் கிளி அம்சங்கள் நிறைந்த ஆலய ராஜகோபுரங்களில் அமர்ந்து இறையடியார்களுக்கு நல்லுபதேசங்களை அளித்தனர். காலப்போக்கில் இதுவே திரிபு பெற்று கிளி ஜோசியமாயிற்று. ஆம் அக்காலத்திலும் கிளி ஜோசியர்கள் இருந்தார்கள்.. ஆனால் கிளிகளை கூண்டுக்குள் அடைக்காது தம் தோள்களில் தாங்கி வருவார்கள்..! இந்த ஞானக் கிளிகள் தாமாகவே ஞான உரைகளைப் பொழியும்.. காசு கொடுத்தோ, அட்டை எடுத்தோ உரைக்க வேண்டிய அவசியம் கிடையாது... கிளிகளிலும் ஞானம் பெற்ற வகைகளும் உண்டு.!

2. கீர பூடக பீஜாட்சரக் கீற்று மந்திரங்கள்! ஸ்ரீபோகர் பெருமானின் அருகில் உள்ள கிளிகளின் மகிமை யாதோ? வியாச பகவானுடைய ஞான புத்திரராகிய ஸ்ரீசுக மகரிஷியிடம் ஞான வேதம் கற்றுக் கீரனூரில் (திருச்சி அருகில் உள்ளது) குறித்த நாளில், குறித்த ஹோரையில் இவ்விரு மகரிஷிக் கிளிகளும் சிவபெருமானை வழிபட்டு ஸ்ரீபோகர் பெருமானுடைய குருவாய் மொழிகளைப் பரவெளியில் நிரவிச் செல்கின்றன...! கீர பூடகம் என்ற மிகவும் கடினமான வேத பீஜாட்சர கிரந்தங்கள் உண்டு... கீர சார கிரந்தி எனப்படும் பல வேத முடிச்சுக்களைக் கொண்டவை இவை. ஒரு அனுவாகத்தில் உள்ள வேத கிரந்திகளைப் பிரயோகம், சாரீர பாவனம், இடிப்பரல் பூர்வம் போன்றவற்றால் வேத, வ்யூக மந்திரங்களை ஓதிக் கடினமான வேதக் கடல்களைக் கடந்து செல்வதே கீர பூடக மந்திரங்களாகும்..!

நல்ல தீர்க்க தரிசன சக்திகளைக் கொண்ட இவ்விரு ரிஷிக் கிளிகளும், எப்போதும் ஜோதி விருட்ச நிழற் கூடங்களில்தாம் உறைகின்றன.., இவற்றின் தரிசனமே மனதிற்கு சாந்தத்தையும், உள்ளத்தில் பக்திப் பெருக்கையும் உண்டாக்கும்.! அதிமன், பருமன் என்ற இரு மகரிஷிகளுமே கிளி வடிவங்களிலேயே சிரஞ்சீவத்துவ நிலையைப் பெற்றிட இறைவன் அருள்பாலித்துள்ளான் என்பது இக்கிளிகளின் மேன்மையை உணர்த்துகின்றது..! எனவே இக்கிளிகளின் தரிசனமே பல அரிய நல்வரங்களையும் மனசாந்தியையும் பெற்றுத் தருகின்றது.!

திருச்சோற்றுத்துறை

3. மழைப் பொழிற்கான உத்தம வழிபாடு : தஞ்சை மாவட்ட திருச்சோற்றுத் துறை ஸ்ரீஅன்னபூரணி சமேத ஸ்ரீசோற்றுத் துறை நாதர் சிவாலயத்தில் குறித்த வழிபாடுகளை பக்தி பூர்வமாக மேற்கொண்டால் நன்முறையில் நிச்சயமாக மழைப் பொழிவு கிட்டும்.. முதல் நாள் ஆலயத்தில் உழவாரத் திருப்பணியும் பின் சுவாமிக்கும், அம்பிகைக்கும் முதல் நாள் பச்சரிசி மாவுக் காப்பும், இரண்டாம் நாள் மிளகுக் காப்பும், மூன்றாம் நாள் சந்தனக் காப்பும் இட்டு வழிபட வேண்டும்.. கையால் அரைக்கப்பட்ட சந்தனத்தால் மட்டுமே சந்தனக் காப்பு இட வேண்டும்.. சந்தனப் பவுடரைக் குழைத்திடுதல் அறவே கூடாது! மூன்று நாட்களிலும் ஆலயத்தில் நன்முறையில் வருண ஹோமம், வருண ஜபம் நிகழ்த்த வேண்டும்.. மூலிகைகள் மற்றும் ஆல், அரசு, புரசு போன்ற சமித்துகள் மட்டுமே கண்டிப்பாக ஹோமத்தில் பயன்படுத்தப்பட வேண்டும். வேறு மரவகைகள் கூடவே கூடாது! சுத்தமான பசுநெய் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும். எருமை நெய்யோ, மற்ற கலப்பட நெய்யோ சற்றும் சேரக் கூடாது!

வாரம் முழுதும் ஆலயத்தில் ஜவ்வாது, புனுகு மற்றும் இயற்கை வாசனைத் திரவியங்கள், மூலிகைகள் கலந்த அடர்த்தியான சாம்பிராணித் தூபம் இட்டு வழிபட வேண்டும்! ஒரு காலத்தில் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டபோது ஒரே நாளில் நெல் விளைவித்து மக்களுக்கு அருள் புரிந்தவர் திருச்சோற்றுத்துறை நாதர், ஆனால் நெல் விளைந்தால் கூட அதை அறுத்து அரிசியாக்கி, விறகு கொண்டு அன்னம் சமைக்கும் வசதி கூட இல்லாது மக்கள் வாடியமையால் ஸ்ரீஅன்னபூரணி அம்பிகையே அரிசியைச் சாதமாகவே நெல் வயலில் விளைவித்துக் காட்டி அற்புதம் புரிந்த தலமாகிய திருச்சோற்றுத் துறையின் மகிமையை விளக்கினால் பலகோடிப் புராணங்களாக அமையும்.! திருநாவுக்கரசர் பெருமானால் உழவாரப் பணி செய்யப்பட்டமையாலும், இங்கு இறைச் சோதனையின் போது அவர் குப்பைகளின் ஊடே ரத்தினங்களைக் கண்டிட்டும். கல்லும், மண்ணும், கனக் கல்லும் (வைரம்) ஒன்றென் உறுதிப்பாட்டுடன் நின்று ஆசையை அறுத்த அருட்பெம்மானாய்ப் பொலிந்த திருத்தலம் ஆதலாலும் நாட்டின் அனைத்து வளம் பெருக்கும் தெய்வமாய்த் திகழும் இச்சிவனின் திருவருளை இனியும் பெறத் தவறுவது நம் குற்றம்தானே!

ஆஸ்ரமப் பொருட்கள்

1. சமயோஜித பிரசன்ன கர்ணிகா பத்ரம் எனப்படும் லேபிள்கள் (labels)  தெய்வ மூர்த்திகள், மஹரிஷிகள், சித்தர்களின் வடிவங்களுடன் பள்ளி மாணவர்களுடைய புத்தகங்கள், நோட்டுகளுக்கு முகப்பு லேபிள்களாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.. ஏழை மாணவர்களுக்குத் தானமாகவும் அளித்திடலாம்.. அக்கௌண்ட்ஸ் நோட்டுகள், பத்திரங்கள், ரெக்கார்டுகள் போன்றவற்றிற்கும் முகப்பு லேபிளாகப் பயன்படுத்திடில் ரகசியங்கள் பாதுகாக்கப்படும். சொத்து, வியாபார அபிவிருத்தி கிட்டும்.!

2. பஞ்சபூத பிராணாயாம ஊது குழல் சங்கு, கும்பகோணம் ஸ்ரீயக்ஞோப வீதேஸ்வரருக்கு சார்த்தப்பட்ட பூணூல், தர்ப்பணம் மற்றும் ஹோமத்திற்கான பூஜை, அபிஷேகம், தர்ப்பணத்திற்கான மரத் தாம்பாளம், தர்பை, மிண்டு ரங்க மூங்கில் குவளை,  தனக் கூட்டு சங்கமத் தட்டு என்பது புனிதமான உத்தரிணி விருட்சத்தில் செய்யப்படுகின்ற மரத் தாம்பாளம், தர்ப்பணம், பூஜை, அபிஷேகத்திற்குப் பயன்படுத்திடலாம்..

3. புத்ர பாக்ய நல்வரங்களுக்கான கேசவ ஜப சக்தி கூடிய துளசியின் வடக்கு வேரால் ஆன ஜப பரிபாலன சிகுரா மணி மாலை..!! புத்ர பாக்கியம், நல்வேலை, நற்காரிய சித்திக்கு கேசவப் பெருமாள் என்ற திருமால் பெயருடைய கோயில்களில் அமர்ந்து இம்மாலையால் ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே என்று விரல்களால் உருட்டித் தொடர்ந்து ஜபித்து வந்திட நற்காரியம் கைகூடும்.!

4. வயிற்றுச் சூடு, வயிற்று வலியைத் தீர்த்து குடல் சுத்தி, மல சுத்தி தரும் மூலிகைச் சாறு கூடிய ஷகிலா பரம் திராட்சை ஜூஸ், நுரையீரல் சம்பந்தமான பிணிகளைத் தணிக்கும் மூலிகைச் சாறு கூடிய ஹிமான்ஷுக்ருதம் என்னும் மாம்பழ ஜூஸ், மலச் சிக்கலைப் போக்கும் மூலிகைச் சாறு நிறைந்த மாத்ரு க்ஷீர ரசம் எனும் பைன் ஆப்பிள் ஜூஸ் ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயாவில் கிடைக்கும்..

5. ஒவ்வொரு திதிக்கும் உரித்தான பூலோக சீதோஷ்ண நிலையைக் காட்டுவதே அந்தந்தத் திதியின் தாத்பர்யமாகும். இதற்கேற்றவாறு விளக்கின் தீபத்திற்குத் தக்க ஆத்ம அக்னி அம்சங்களை அளிக்கின்ற 16 திதிகளுக்கான எண்ணெய்த் தைல வகைகள் ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயங்களில் கிடைக்கும்.

6. உங்கள் ராசிக்கான சந்திராஷ்டம நாட்களில் ரோஹிணி சந்திர சக்கரத்தைப் பூஜித்து, சந்திராஷ்டம நாளில் தோஷங்கள் மற்றும் காரியத் தடங்கல்களில் இருந்து தற்காத்துக் கொள்ளுங்கள். அலுவலகப் பணிகள், நிதி சம்பந்தமான முறையான நற்காரியங்கள், திட்டமிட்ட நற்பணிகளில் அவரவர் நட்சத்திர, ராசி சஞ்சார நிலைகள், அவரவர் உடல் வாகுகள், தேக உஷ்ண அம்சங்களுக்கும் ஏற்பவும், சூரிய, சந்திர, சுழுமுனை சுவாச முறைகள், வாத, பித்த, சிலேத்தும நாடிகளையும் முறைப்படுத்தி காரிய சித்திகள் பெற துளசி மணிகளால் ஆன –வலது கை மணிக்கட்டில் கட்டக் கூடிய “ம்ருதுள மணி கங்கண்” ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயங்களில் கிடைக்கும்.

பௌர்ணமி நாள் : 4.7.2001 புதன் கிழமை இரவு 7.07 மணி முதல் 5.7.2001 வியாழக் கிழமை இரவு 8.34 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பௌர்ணமி திதி அமைகிறது.. கிரிவல நாள் : 4.7.2001 புதன் கிழமை

நித்ய கர்ம நிவாரணம்

1.7.2001 – மண் தாலியை 21 நாட்களுக்குக் குறையாமல் பூஜித்து, 21 நாட்களுக்குக் குறையாமல் அணிவதாலும், மண் தாலி தானம் செய்வதாலும் ஜாதகப் பொருத்தத்தில் இருந்த தோஷம் விலகி கணவன் மனைவி அன்புடன் சேர்ந்து வாழ்வர்.. 21 நாட்கள் தாலியை அணிந்த பின் அதை பால் உள்ள விருட்சங்களுக்குக் கட்டி விடவும்..!
2.7.2001 – ஸ்ரீஜகதீஸ்வரர் என்னும் திருநாமம் பூண்ட சிவனுக்கு மூங்கில் குவளையில் கரும்புச் சாறால் அபிஷேகம் செய்திடில் கட்டிடத் தொழிலாளர்கள், CIVIL ENGINEERS, CIVIL CONTRACTORS-களுக்குப் புதிய கட்டிட வேலைகளுக்கான (new projects) சந்தர்ப்பம் கிடைக்கும்.!
3.7.2001 – கிராமத்திலுள்ள ஏழ்மை நிலையில் உள்ள முடிதிருத்தும் தொழிலாளர்களை 18 பேர்களுக்குக் குறையாமல் அழைத்து புதிய கத்தி, கத்திரிக்கோல், கண்ணாடி, ஷேவிங் பிரஷ், ஷேவிங் சோப் போன்றவற்றைத் தானமாகக் கொடுத்து வயிறார உணவிட்டு அனுப்புவதால் தலைக்கு வந்த துன்பம் தலைப் பாகையோடு போயிற்று என்பதாக மயிரிழையில் பாதுகாத்திடும்!
4.7.2001 – வெற்றிலைக் கொடி தோட்டத்தில் வேலை செய்கின்ற ஏழைகளுக்கு உணவிட்டு வஸ்திர தானம் செய்திடில் ஜவுளிக் கடை வியாபாரிகள் நலமடைவர்.
5.7.2001 – மூல நட்சத்திரக்காரர்கள் காட்டில் உள்ள முனீஸ்வரர் கோயில்களில் படையல் வைத்து மலைவாழ், காட்டுவாழ் மக்களுக்கு அன்னதானம் செய்திடில் வாஸ்து முறைகளில் கட்டாத வீடுகளில் ஏற்படுகின்ற வீட்டு தோஷம் விலகும்.!
6.7.2001 – தினசரி பூஜை செய்கின்றவர்களுக்கு இன்று தர்ப்பை பாய்களை தானம் செய்தலால் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரருடைய (திருநள்ளாறு) ஆசியைப் பெறலாம்.

ஸ்ரீசூரிய பகவான் கோயம்பேடு

7.7.2001 – குணசீலம் (திருச்சி), திருவிடைமருதூர், திருமுருகன் பூண்டி போன்ற திருத்தலங்களில் புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள் தங்கியிருக்கும் இடங்களை தண்ணீர், Dettol விட்டு அலம்பி தூய்மைப்படுத்துவதால் மனக் கிலேசம் விலகும்.
8.7.2001 – கொன்றை மலரால் இன்று சிவனுக்கு அர்ச்சனை சர்க்கரைப் பொங்கல் தானம்., அரசாங்க உத்தியோகத்தில் வருகின்ற துன்பங்கள் விலகும்.
9.7.2001 – பால் பேணி தானம், தாய் மாமன்களால் வருகின்ற துன்பம் தீரும்..
10.7.2001 – ஆம்புலன்ஸ் வைத்துத் தொழில் நடத்துவோர் சரீரச் சுமை தோஷங்கள் நிவர்த்தியாக ஸ்ரீவைத்தீஸ்வரனுக்கு இன்று தேங்காய் கலந்த சர்க்கரைப் புட்டு அன்னதானம் செய்திடில் நலம் பெறுவர்.
11.7.2001 – Tourist van, cabs வைத்திருப்பவர்கள் ஓட்டுனர்களால் பிரச்னைகள் வருகின்ற நாள் இது.. ஆகவே ஓட்டுனர்களிடம் கவனமாக இருக்கவும்.. செவ்வாய் பகவான் இருக்கும் கோயில்களில் அல்லது செவ்வாய் பகவானை வேண்டி நெய் தோசை, பெரிய வெங்காயம் கலந்த சட்னி அன்னதானம் செய்திடில் ஓட்டுனர்களால் வருகின்ற துன்பம் தீரும்.
12.7.2001 – இன்று தூங்குமூஞ்சி மரத்திற்கு மாலை சாற்றி சந்தி நேரத்தில் (ஐந்திலிருந்து ஆறு மணிக்குள்) அரைத்த சந்தனமிட்டு குங்குமப் பொட்டு வைத்து இரவு காயத்ரீ ஜபித்து வலம் வந்திடில் தூங்கு மூஞ்சி என்ற பெயரைப் பெறாமல் இருக்கலாம்... பொதுவாக ஞாயிறு, செவ்வாய், வியாழக் கிழமைகளில், காலை, மாலை வேளைகளில் இத்தகைய பூஜைகளைச் செய்வதால் அளவுக்கு மீறிய தூக்க வியாதியால் வரும் துன்பங்கள் விலகும்.
13.7.2001 – ஏழு குதிரைகள் பூட்டிய சூரியன் இருக்கின்ற கோயிலில் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் வைத்து வலம் வந்து வணங்கிடில் gas வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு வருகின்ற ஆபத்துகள் விலகும்.
14.7.2001 – வேப்ப மரத்திற்கு சனி ஹோரையில் மஞ்சள் பூசி, சந்தனப் பொட்டிட்டு , குங்குமம் வைத்து வலம் வந்து வணங்கிடில் இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்ற துன்பங்கள் விலகும்.
15.7.2001 – பரணி, பூமிநாதன், மண்ணாங்கட்டி என்ற பெயர் பூண்டவர்கள், அல்லது பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று எலுமிச்சை சாதம், ரசகுல்லா அன்னதானம் செய்திடில் அவர்களுக்கு நட்சத்திர பெயர் வைத்தாலும், இத்தகைய நாமங்களைச் சூட்டியதாலும் ஏற்படும் துன்பங்கள் விலகும்.
16.7.2001 – கூண்டுக்கிளி ஜோசியர்கள் கிளியை கூண்டில் அடைத்து வைத்துத் தங்களுடைய சுய தேவைகளுக்குப் பயன்படுத்தியதால் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும்..! அத்தகைய துன்பங்களிலிருந்து நிவாரணம் பெற வேண்டுமென்றால் பல கூண்டுக் கிளிகளை விடுதலை செய்து கிளி ஜோசியத் தொழிலை விட்டு விட்டு சாதாரண ஜோதிடம் கற்றுத் தொழில் நடத்துதல் நலம்.. அவ்வாறு தாங்கள் வைத்திருக்கும் கிளிகளை விடுதலை செய்வதற்கு ஏற்ற நாளிது.!
17.7.2001 – இன்று பன்றிக் கறி வியாபாரம் செய்தல் கூடாது. பன்றியை உணவிற்காக இன்று கட்டிப் போட்டுச் சித்திரவதை செய்தால் பெருந் துன்பத்தைச் சந்திக்க நேரிடும்.. எனவே இன்றிலிருந்து பன்றி வளர்ப்பை விட்டு விடுதல் நலம்.
18.7.2001 – கன்றுடன் கூடிய பசுவிற்கு இன்று பூராவும் வயிறார உணவு அளித்திடில் நல்லருள் பெறலாம்.
19.7.2001 – இன்று சிவன் கோயிலில் அபிஷேகம் செய்து பூரி மசால் அன்னதானம் செய்திடில் சித்தப்பா, பெரியப்பா பையன்களால் வருகின்ற துன்பங்கள் விலகும்.
20.7.2001 – ராமர் கோயிலில் ராமருக்கு அபிஷேகம் செய்து ஏழைகளுக்கு இடியாப்பம் அன்னதானம் செய்திடில் சிறு வருமானங்கள் தொடர்ந்து சேரும்.
21.7.2001 – மாட்டுக் கறி சாப்பிடுவதை இன்றிலிருந்து நிறுத்தி விடுவது நலம், இல்லையேல் அதனால் பெருந் துன்பம் வந்து சேரும்..
22.7.2001 – தடி ஊன்றி நடக்கும் பெரியோர்களுக்கு புதுத் தடி கொடுத்து தர்ப்பையையும் வெட்டி வேரையும் குப்பைமேனிச் செடியால் கட்டி பழைய தடியுடன் ஓடுகின்ற நீரில் விட்டு விடுவதால் தடியைச் சுமந்து வாழ்ந்தவருடைய மனக் கஷ்டம் நீங்கும்.
23.7.2001 – இன்று எருமைப் பசுக்களுக்கு அகத்திக் கீரை அளித்து கொம்புக்கு ஆரஞ்சு வண்ணம் பூசி, சூரிய காந்திப் பூவை கொம்புக்குச் சூட்டி வயிறார உணவு அளித்திடில் கைக்கு எட்டிய பணம் வீண் செலவுக்கு அல்லது விரயத்திற்குப் போகாமல் நல்லதிற்கே பயன்படும்.!
24.7.2001 – தினம் பழைய சோறு சாப்பிடுகின்ற கிராமத்து ஏழைகளுக்கு எலுமிச்சம் ஊறுகாய் தானம், உணவு சாப்பிடும் போது புரையேறித் துன்புறாமல் இருக்க வழி செய்யும்.
25.7.2001 – சுருள் கொம்புடைய கிடா ஆட்டைக் குளிப்பாட்டி, சந்தனம், குங்குமப் பொட்டிட்டு வலம் வந்து வணங்கிப் பூஜித்திடில் நல்ல நண்பர்களாய் இருந்து எதிரிகளாய் மாறியவர்களால் வருகின்ற துன்பம் விலகும்.
26.7.2001 – வளர்ப்பு நாய்களுக்கு (pet dogs) முடிகளை trim  செய்து அதற்கு இடுப்பாடை கழுத்துவரை அணிவித்து, வாலையும் காலையும் free-ஆக விட்டு கழுத்திற்கு Bow tie, தலைக்கு குட்டித் தொப்பி அணிவித்து சிறப்பித்து, beach, park போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று நல்ல பிஸ்கட்டுகள் வாங்கித் தருவதால் நன்றி உள்ள நண்பர்கள் சேர்வார்கள்.
27.7.2001 – 24 காரட் தங்கக் காசு (ஒரு கிராமிலிருந்து 10 கிராம் வரை) மிண்டு ரங்கக் குவளையில் வைத்து துளசி தீர்த்தம் விட்டு இரவு ஊற வைத்து மறுநாள் பருகுவதால் பெருத்த மாற்றங்கள் ஏற்படும்..! பிறகு அந்தத் தங்கத்தை பத்திரமாக எடுத்திட மறவாதீர்கள்..!
28.7.2001 – பாத்திரம் இல்லாமல் கையால் பிரசாதம் வாங்கி ஒரு நாளைக்கு இரண்டு வேளை உண்கின்ற சன்னியாசி கிடைத்திடில் அவருக்குப் பாதபூஜை செய்திடில் பெருத்த மனக் குழப்பங்களுக்கு விடிவு கிடைக்கும்.. ஆனால் அத்தகைய உத்தம சன்னியாசி கிடைப்பது மிக மிக அரிது.
29.7.2001 – முட்டையிடும் கோழிகளை வளர்க்கின்றவர்கள் அக்கோழி முட்டையிடுகின்ற காலம் முடிந்து விட்டால் மாமிச உணவாக உண்ணக் கூடாது.. மலைக் கோயிலில் இருக்கின்ற முருகனை வலம் வந்து அம்மலைக் கோயிலிலேயே அக்கோழியை விட்டுவிட வேண்டும்.
30.7.2001 – கோதண்டராமன், தண்டாயுதபாணி, மழுநாதர் போன்ற பெயர்களை உடையவர்கள் இன்று அன்னதானம் செய்திடில் தாய் மாமன்களால் வரும் துன்பம் விலகும்.
31.7.2001 – பந்தல் கட்டுகின்ற தொழிலைச் செய்கின்றவர்கள் ஏழைகளுக்கு இலவசக் கூரைகள் வேய்ந்து தந்தால் தீயினால் வருகின்ற துன்பங்கள் தீரும்.

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam