கடலையும் கரைத்து குடித்து விடலாம், குருவருளின்றி பிறவிக் கடலில் ஒரு அடி கூட நீந்த முடியாது !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குரு மங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்!

‘‘அந்தப் பழனிச்சாமி என்ன ஆனார்?” – சிறுவன் இதற்கான விடை காண்பதில்தான் மிகவும் சுறுசுறுப்பானான்!

ஆனால் அடுத்தது என்ன நடந்தது தெரியுமா? வெள்ளியங்கிரி மலையில் வெகு வேகமாக முன் நடந்து, பிறகு நிதானித்த பெரியவர், கம்பு, லாந்தர் விளக்கு எல்லாவற்றையும் கீழே வைத்து விட்டு, “அப்பாடி! கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்டா, கண்ணு! பாவம் நீயும் தான், எவ்வளோ தூரம் நடந்துக் கிட்டேதான் வருவே!” என்றிடவே,

ஸ்ரீசகஸ்ரலிங்கம்
உத்தமபாளையம்

“இதென்ன இது? திடீரென்று நம் மேல் இன்று, இவருக்கு இப்போது, இவ்வளவு கரிசனம் வந்தது!” – என்று எண்ணிய சிறுவன் பெரிதும் அதிசயித்து நின்றான்!

உறங்காமையில் உறக்கமா? உறக்கத்தில் உறங்காமையா?

பெரியவரோ, சட்டென்று சிறுவனின் மடியில் படுத்து, அடுத்த சில விநாடிகளிலேயே நன்கு அயர்ந்து தூங்கி விட்டார்! அவர் உலக மஹா அசதியுடன் உறங்குவதைப் பார்க்கப் பார்க்க, அவனுக்கே ரொம்பவும் பரிதாபமும், இரக்கமும் வந்து விட்டது!

“இவர் பார்க்காத அண்ணாமலையா, திருக்கயிலாயமா, வெள்ளியங்கிரியா, சதுரகிரியா என்ன? எல்லாம் எனக்காகத்தானே, நிறைய இறை தரிசனங்களைக் காட்ட வேண்டுமென்றுதானே, இந்த வயதில் என்னமாய் அலையோ அலையென்று, எத்தனையோ தலங்களுக்கு அலைகின்றார்?”

‘‘இவருடைய தெய்வீக மகத்துவம், அருமை தெரியாமல் “பசித்தால் பரோட்டா வாங்கித் தரும் பெரிய வாத்தியார்” என்றல்லவா எண்ணிக் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்!” என்று உள்மனதுடன் உரையாடிய சிறுவன், தன்னையே பெரிதும் நொந்து கொண்டான்!

‘ஆனால் இவர் அசந்து உறங்குகின்றாரே என்று சற்றே அசர முடியாது, காரணம் இவரை நம்பவும் முடியாதே! திடீரென்று எழுந்து உட்கார்ந்து கொண்டு சப்பாத்தி சுடுவாரே!’

சிறுவனுக்குப் பெரியவரைப் பற்றித் தான் சொன்னதை நினைத்துத் தனக்கே சிரிப்பு வந்திட... தன்னையும் அறியாமல் சற்றுப் பெரிதாகவே சிரித்தும் விட்டான்.. இதனால், அந்த அதிர்வில்... மடியில் படுத்திருந்த பெரியவரும், தூக்கத்திலேயே சிரிப்பது கண்டு, சற்று அதிர்ச்சியும் அடைந்தானே! என்ன இது, உறங்காமையில் உறக்கமா? அல்லது உறக்கத்தில் உறங்காமையா?

இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன்...

பழைய குருகுலவாச சம்பவம் ஒன்று அவனுள் அசை போட்டது!

.... சிறுவன் பெரியவரைச் சந்தித்த இராயபுரம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயிலில்...

ஸ்ரீஅதிகார நந்தீஸ்வரர்
உத்தமபாளையம்

“பிச்சை புரினும்....”

இக்கோயில் வாசலில் முன்பெல்லாம் விடுமுறைகளில் நிறையக் கூட்டமிருக்கும்., அதிலும் பிச்சைக்காரர்கள் கூட்டம் நிறையவே இருக்கும். பல தரப்பட்ட பிச்சைகாரர்கள், சளசளவென்று பேசிக் கொண்டும், ஆங்காங்கே உட்கார்ந்து கொண்டும், படுத்துக் கொண்டுமாய் இருப்பதை அரை டிராயர் சிறுவனாய், கோவணாண்டிப் பெரியவரைப் பார்க்க வரும் போதெல்லாம் அவன் நிறையப் பார்த்ததுண்டு.

பாதாரவிந்தங்கள்
பணிந்தோம் அம்மா !

“வாழ்க்கையைக் கோட்டை விட்டவன், வாழ்க்கையை விட்டே துரத்தப்பட்டவன், ஜாதகப்படிப் பிச்சைக்காரன் ஆனவன், பேராசையால் குடும்பஸ்தனாகி, நிராசையால் பிச்சைக்காரன் ஆனவன்! சோம்பேறித்தனத்துக்காகப் பிச்சைக்காரன் ஆனவன்!” என்றெல்லாம் பெரியவர் அவர்களில் சிலரை வகைப்படுத்துவார்!

ஒரு சிலரை, “டேய்! இதோட பிச்சை எடுக்கற புத்தியை விட்டுட்டு, ஒழுங்கா வந்தவாசியில இருக்கற உன்னோட குடும்பத்தோட போய்ச் சேர்! உன்னைப் பத்தியே யாருக்கும் தெரியாதுன்னு நெனைக்காதே!” என்று உரிமையாக அதட்டி, பஸ் செலவிற்குப் பணம் கொடுத்துப் பரிவுடன் அவரவர் ஊருக்கு அனுப்பியதும் உண்டு!

“நம்முடைய பூர்வ ஜன்மம், நடப்பு ஜன்மக் கதையெல்லாம் தெரிந்த பெரியவர்” என்று அவர்கள் எண்ணியமையால், அவர் அந்தப் பக்கம் வந்தாலேயே, பிச்சைக்காரர்களுக்குச் சப்த நாடியும், அடங்கி, ஒடுங்கியும் விடும்!”

“எம்மைத் திட்டுமையா!”

அவர்களுள் ஒரு சிலர், “தூர்வாசர்” போல் இவர் நம்மைத் திட்டி, இங்கிருந்து விரட்டி விட்டால், அதுவே பெரிய ஆசிர்வாதம் ஆகி, நமக்கும் நல்ல வாழ்க்கை அமையுமே!” என்றெண்ணி, இதற்காகவே வேண்டுமென்றே சிறுவனிடமே வந்து முறையிட்டதும் உண்டு!

ஆனால் பெரியவரோ, தனக்காகத் தோன்றினால் எதையும் செய்வாரே, சொல்வாரே தவிர, மற்றபடி... ஊஹும்.... எதற்கும் அசைந்து கொடுப்பதில்லை!

பெரியவரும், தன் கோவணத்தில் இருந்து, அவ்வப்போது ஒரு ரூபாய் அல்லது ஐந்து ரூபாயை (இரண்டு ரூபாய் நோட்டு அப்போது கிடையாது) உருவி எடுத்து, சிறுவனை விட்டு, ஏதாவது உணவுப் பொட்டலங்களை வாங்கி வரச் செய்து, அவர்களுக்குக் கொடுக்கச் சொல்வார்.

ஸ்ரீநடராஜப் பெருமான்
உத்தமபாளையம்

அன்னதானம் என்றால்தான் சிறுவனுக்குக் கொள்ளைப் பிரியமாயிற்றே! அவனும் ஆனந்தமாகப் பல இடங்களுக்கும் சென்று, விதவிதமான உணவு வகைகளை வாங்கி வந்து அவர்களுக்குத் தருவான்!

அப்படியென்ன அவருக்கு மட்டும்...!

சிறுவனுடைய குருகுல வாசத்தில், பெரியவர் “விமுக்தி” எனும் இனிப்பு வகையை வைத்து நிறைய அனுபூதிகளைத் தோற்றுவித்துப் பல பாடங்களைப் புகட்டினார். இந்த வெள்ளியங்கிரி மஹா அனுபூதியே விமுக்தியில் விளைந்ததுதானே ஐயா! விமுக்தி என்பது ஜாங்கிரி போல, சர்க்கரையிலான வட்ட வட்டமாக வெள்ளை நிறத்தில் உள்ள ஒரு வகை இனிப்பு!

அதில் ஒரு பிச்சைக்காரனுக்கு மட்டும் எப்போதுமே விமுக்தி ஸ்வீட்டை மட்டுமே பெரியவர் வாங்கித் தரச் சொல்வார். பெரியவர் ஏன் அப்படிச் செய்கின்றார் என்பது வெகுநாளாகச் சிறுவனுக்குப் புரியாத புதிராகவே இருந்து வந்தது! ஆனால் எதையும் அறிந்து கொள்வதற்கெனத் தகுந்த நேரம் வர வேண்டுமல்லவா! சில வாரங்களுக்குத் தொடர்ந்து தினந்தோறும் சிறுவனை விட்டே விமுக்தி இனிப்புக்களை வாங்கி வரச் செய்து, பெரியவர் அவற்றைத் தனக்கு முன்னால் வைக்கச் சொல்வார். சிறுவனும் அவ்வாறே செய்திட்டு, “தனக்குக் கொஞ்சம் விமுக்தி ஸ்வீட்டையாவது கையில் எடுத்துத் தர மாட்டாரா?” என்ற ஏக்கத்துடன் அதனைப் பார்த்தவாறே அமர்ந்திருப்பான்.

பெரியவரோ சிறுவனைக் கண்டு கொள்ளவே மாட்டார்! சற்று நேரம் கண்களை மூடியவாறு அமர்ந்து விட்டு,

(வி)முக்தி ஒருவருக்குத்தானா?

“டேய் சீக்கிரம் போய் இந்த விமுக்தி ஸ்வீட்டை அந்தப் பிச்சைக்காரனிடம் கொடுத்துட்டு வா!” என்று ஆணையிட்டு அவனை விரட்டுவார். சிறுவனோ வாயைத் திறந்து ஏதாவது கேட்கலாம் என்றால், அதற்குள் கண்களை மூடிக் கொண்டு, மீண்டும் (வேண்டுமென்றே) “தியானமயமாகி” விடுவார்!

இவர், தினமுமே தன்னைப் “பதம் பார்க்க” இவ்வாறு தினமுமே வேண்டுமென்றே செய்கின்றாரோ என அவன் பன்முறை சந்தேகப்படுவதும் உண்டு! ஆனால் யார், யாரிடம், எப்போது, எப்படிக் கேட்பது? கேட்பதற்கு என்னதான் உரிமை இருக்கிறது?

ஸ்ரீசோமாஸ்கந்தர்
உத்தமபாளையம்

பெரியவருடைய இந்த “விமுக்தி தான விளையாட்டு” லீலை ஒரு மாதத்திற்கு மேல் தொடர்ந்தது, ஒவ்வொரு நாளும் இதே கதைதான்! தினமும் சிறுவனும் விமுக்தி இனிப்புகளை வாங்கி வர வேண்டியது, அவரும் எடுத்துக் கொள்ளாது, சிறுவனுக்கும் கொடுக்காது, மீண்டும் அதே பிச்சைக்காரனின் வயிற்றுக்குள் அது செல்லும்! எவ்வளவு வாங்கினாலும் எல்லாமே அதே பிச்சைக்காரனுக்குத்தான்!

“டேய்! ஒரே ஆளுக்கே எப்பவும் அன்னதானம் பண்ணிப் பண்ணி, யாருமே பந்தத்தை வளர்த்துக்கக் கூடாதுடா!” என்று சொல்லும் பெரியவர், இதில் மட்டும் இவ்வாறு செய்வது ஏனோ?

“பொங்கி ‘எழுவாய்’! இனி ‘பயனிலை’!

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சிறுவன், ஒருநாள் பெரியவரிடம் கேட்டே விட்டான்.

“ஏன் வாத்யாரே, அந்த ஆளுக்கு மட்டும் தினமும் விமுக்தி வாங்கித் தர்றியே! மத்தப் பிச்சைக்காரங்களும் பாவம்தானே! ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தருக்குன்னு மாத்தி மாத்தித் தர்றதுதானே! அவனுக்கே திருப்பி, திருப்பிக் கொடுத்து என்ன பிரயோஜனம்?” என்று படபடவென்று பேசித் தீர்த்து விட்டான்!

மனதிற்குள் “வாத்யார் தனக்கு விமுக்தியைக் கொஞ்சம் கூடக் கொடுக்கவில்லையே!” என்ற ஆதங்கம் மிதந்தமையால், “வெடுக், வெடுக்கென்று” அவசரமாகப் பேசியும் விட்டான்.

“இனி என்ன செய்வது அவசரத்தில் பேசித் தீர்த்தாச்சு! வாத்யார் அடிக்கடி ஒன்று சொல்வாரே, “பேசாத வார்த்தைக்கு நீ எஜமானன்! பேசிய வார்த்தைக்கு அது எஜமானன்!” அது உண்மைதான் போலும்! இதனால்தான் ‘‘ஏண்டா இப்படிப் பேசினோம் என மனது அடித்துக் கொள்கிறதோ!”

இப்படிப் பேசிப் பேசி மனசும் ஒரு வழியாகக் காலியாகி விட்டதுதான்! ஆனால், என்ன இருந்தாலும் அரை டிராயர் சிறுவன்தானே, சற்று மன்னிக்கக் கூடாதா என்ன? அப்படி என்னதான் அவன் தனக்காகப் பேசி விட்டான்!

“பொங்கியது போதுமப்பா!”

அவன் இப்படி மனதுக்குள் வசனம் பேசி, மருகிக் கிடப்பதைக் கண்டு பெரியவர் வழக்கம் போல் சிரித்தார்.

“நீ யாருடா கண்ணு, இவன் பிச்சைக்காரன், அவன் தெருப் பொறுக்கின்னு சொல்லிப் பொங்கிக் கத்தறதுக்கு! போன ஜன்மத்துல நீ என்னவா இருந்தே சொல்லு பார்க்கலாம்?”

“அதனாலே, நீ யாருன்னு உன்னோட பூர்வ ஜன்மக் கதையை முதல்ல தெரிஞ்சுக்க, அப்புறம் மத்தவங்களை என்ன வேணுமானாலும் சொல்லு! நீயும், நானும் பூர்வ ஜன்மங்கள்ல பிச்சைக்காரனா இருந்திருந்தா..... என்ன செய்யறதாம்!”

ஸ்ரீநவவீரர்கள்
உத்தமபாளையம்

சிறுவனுக்கு அழுகை பீறிட்டிடவே, தலையைக் குனிந்து கொண்டான்!

நம்பிக்கையில் நம்பிக்கை கொண்டு நம்புவாய்!

“சரி, சரி கண்ணுல தண்ணி பக்கெட்டை ரெடியா வச்சுக்கிட்டுத் தேம்பாதேடா ராஜா! அது வேறு ஒண்ணுமில்லையடா கண்ணு! அந்த ஆளும் வேற எதையுமே விரும்பிச் சாப்பிட மாட்டான். பூர்வ ஜன்ம வாசனையால, விமுக்தி மட்டும்தான் சாப்பிடுவான்! அதனாலத்தான், இப்படி!”

ஆனால், சிறுவனால் பெரியவரின் இந்த ‘சால்ஜாப்பு’ வாக்கியத்தை ஒரு சிறிதும் நம்பவே முடியவில்லையே!

“அதெப்படி வெறும் விமுக்தி மட்டும் சாப்பிட்டுக் கொண்டு உயிர் வாழ்வதாம்? யாரிடம் காது குத்துகிறார்?”

ஆனால், “தான் நம்பவில்லை” என்பதைப் பெரியவரிடம் சொன்னால் “எரிமலையாய்க் குமுறுவாரோ!” என்ற பயத்தில் பேசாமல் இருந்து விட்டான்.

ஆனால், பெரியவர், “விமுக்தி விஷயத்தில் மட்டும் சரியாக விளக்கம் தராது, எதையெதையோ சொல்லிச் சமாளிக்கிறாரே! ஒரு வேளை இப்போது சொன்னால், தன் மண்டையில் ஏறாது என எண்ணுகிறாரோ, தெரியவில்லையே!” என்ற சந்தேகம் மட்டும் அவனுக்குள் எழுந்து, எழுந்து கொப்புளித்துக் கொண்டே இருந்தது. இருந்தாலும், நாட்கள் மாதங்கள் செல்லச் செல்ல, சிறுவனும் இதை அப்படியே மறந்தும் விட்டான்!

ஏனிங்கு வந்தாரையா?

ஒரு சில ஆண்டுகள் கழித்து....

சிறுவனும், கோவணாண்டிப் பெரியவருடன் பாரத யாத்திரை புரிந்து, பல திருத்தலங்கள், கோயில்களைத் தரிசித்தவாறே சென்று கொண்டிருந்தனர். கோயம்புத்தூர் செல்லும் வழியில் மேட்டுப்பாளையம் வந்தவுடன்...

பெரியவர் சற்று நிதானித்தார்.

“டேய்! ரொம்பவும் களைச்சுப் போச்சுடா! எங்கனாச்சும் இங்க கொஞ்சம் இளைப்பாறிட்டுப் போகலாம்!”

சிறுவன் சுற்றும் முற்றும் பார்த்தான், சற்று தூரத்தில், ஒரு பெரிய அரச மரம் தென்பட்டது. தீர்த்த யாத்திரையின் போது தங்குவதென்றால், எப்போதுமே நல்ல விருட்சங்களாகப் பார்த்துத்தான் தங்க வேண்டும் என்று பெரியவர் அடிக்கடி சொல்வாரன்றோ!

சிறுவன் குரல் கொடுத்தான்!

“அங்கே ஒரு அரச மரம் தெரியது வாத்தியாரே! நல்லா நிழல் இருக்குது! கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டுப் போகலாமா?”

சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்றுவது போல அவரும், “நீ சொன்னா சரிடா கண்ணு! அதுக்கு மேல அப்பீலே கிடையாதுடா! ஏன்னா நீ காட்டற இடம் (வி)முக்தி தர்ற இடமாத்தான் இருக்கும்!” எனக் குறும்புடன் சொல்லிச் சிரித்து, அவனை முன்னே தள்ளிக் கொண்டு, அந்த அரச மரத்தை நோக்கி நடந்தார்.

சிறுவனுக்கு “நீ காட்டற இடம் (வி)முக்தி தர்ற இடமாத்தான் இருக்கும்” என்ற பெரியவரின் “குட்டில்”, ஏதோ தொனிப்பது போல் இருந்தது! ஆனால் இதைப் பற்றி யாருக்குத் தெரியும், ‘‘சிவாபரமே!”

“இதுவரையில் பெரியவர்தானே தன்னைப் பல இடங்களிலும் “தாங்கி” வந்துள்ளார். இவர் “தங்கிட” நாமா இங்கு இடம் தேட முடியும்? என்னே அறியாமை?”

“படுத்தது கண்டான் அடுத்தது விண்டிலை காண்!”

அங்கே... அரச மரத்தடியில் யாத்ரீகர்கள் தங்குவதற்கென ஒரு சுமைதாங்கிக் கல் மூன்று அடுக்காக இருந்தது. மேலே சாமான்கள் வைக்க, நடுவில் படுக்க, மூன்றாவது உட்கார! அதில் ஒரு காவி வேட்டிக்காரர் படுத்திருந்தார்.

“பாருடா! யாரோ ஒரு புண்ணியவான் கட்டித் தந்த மேடை! காலம் காலமாப் புண்யம் கொழிக்கற காரியம்! சந்ததி, சந்ததியாப் புண்யம் கொட்டும்! இதெல்லாம் எவ்வுளவு பெரிய புண்ணிய காரியம் தெரியுமா? பரம்பரை பரம்பரைக்கெல்லாம் மட்டுமில்லாம முன்னாடி போன மூதாதையர்களுக்கும், பித்ருக்களுக்கும் புண்ணியத்தைச் சேர்த்துத் தர்ற தர்ம காரியம்! சரி சரி வா, வா! கொஞ்ச நேரம் இதுல படுத்துட்டுப் போகலாம்!”

பெரியவர் டபக்கென்று சிறு பிள்ளையைப் போல் சுமை தாங்கி மேடையில் ஏறிப் படுத்துக் கொண்டார். சிறுவனுக்குப் பயம் வந்து விட்டது. ஏனெனில், அவர் படுப்பதே அபூர்வம்! அப்படிப் படுத்தாலும், படுத்தவுடன் அவர் உறங்கி விட்டால், அடுத்த அனுபூதி ஏதோ உடனடியாகக் காத்துக் கொண்டிருக்கிறது என்பது பொருளாயிற்றே!

சிறுவன் விழித்தான். எப்போதுமே பெரியவர் உட்கார்ந்து கொண்டிருக்க, சிறுவன், அவர் மடியில் தலையை வைத்துப் படுப்பதுதானே வழக்கம்? அல்லது அவர், இவன் மடியில் படுக்க, இவன் விழித்திருக்க வேண்டும்! இன்றைக்கு என்ன ஆயிற்று பெரியவருக்கு! ஒன்றுமே சொல்லாமல் விருட்டென்று ஏறிப் படுத்துக் கொண்டு விட்டாரே!

யாரோ இருவர் புதிதாக வந்திருப்பதைப் பார்த்த அந்தக் காவியார், கண்ணை விழித்தபடி எழுந்து பார்த்தார், அவர் முகத்தைப் பார்த்த சிறுவனுக்கு, அவரை எங்கோ பார்த்தது போலத் தோன்றியது ஆனால் சட்டென்று ஞாபகம் வரவில்லை!

ஆனந்தம் தொடரும்...!

செல்போன்

செல்போனில் செழிக்கும் சமுதாய தீங்குகள்! – சென்ற இதழ தொடர்ச்சி

செல்போனால் பரவெளியில், வீட்டில், அலுவலகத்தில் நிரவும் நற்கதிர்கள் நச்சாகின்றன!

நல்வரக் கிரணங்களை நசிக்கும் செல்போன்!

செல்போன், நற்கதிர்களை செயல்படச் செய்ய இயலாது தடுக்கும் வகையில் அரக்கக் கிரணங்களைப் பாய்ச்சுகின்றது செல்போனை, மக்கள், தங்கள் இடது பாக்கெட்டில், தங்கள் இருதயத்திற்கு அருகே வைத்துக் கொள்வதால், இருதயக் குழாய்கள், நாளங்கள் மிகவும் பலவீனம் அடைகின்றன. அனைவருக்கும் இருதயத்திலிருந்து ஜீவாத்மப் பிரகாசம் எப்போதும் ஒளிர்ந்து கொண்டே இருக்கும். சாசுவதமான இந்த ஒளிப் பரல்களை மனிதன் உணர இயலா வண்ணம், செல்போனின் கதிர் வீச்சால் மனிதப் பகுத்தறிவு மங்கி விடுவதால், மனிதன் ஆக்கப் பூர்வமான அறிவு சக்திகளை இழந்து, செயற்கையான குணங்களுக்கு அடிமையாகின்றான்.

மொத்தத்தில், இறைவன் அளித்த ஆறறிவுப் பகுத்தறிவு உடையவனாக இருப்பினும், கலியுக மனிதன், மது, புகை, புகையிலை முறையற்ற காமக் கேளிக்கைகள் சூது போன்றவற்றிற்கு அடிமையாகி, இரண்டு அறிவு, மூன்றறிவு போன்றவற்றுடன்தான் உலகெங்கும் வாழத் தலைப்படுகின்றான். இந்நிலையில் செல்போன், கலியுக மனிதனின் மூளைக் கிரணங்களையும் மேலும் பாதித்து, கலியுக மனிதனிடம் மீதி மீந்து இருக்கின்ற அறிவு நிலையையும் மந்தமாக்கி, ஆக்கப் பூர்வமான சக்திகளையும் இழக்கச் செய்து விடுகின்றது.

இதனால், மனிதனுடைய இயற்கைக் குணங்கள் நாளடைவில் மறைந்து இயந்திரம் போலாகி விடுகின்றான். கவனம், அடக்கம், பணிவு, பொறுமை, புத்திசாலித்தனம், நினைவு சக்திகள் போன்ற பலவும் செல்போனால் மந்தகதியாகி, இருக்கின்ற நற்குணங்களையும் இழந்து, செயற்கை மனிதனாக ஆகி விடுகின்றான்.

செல்போன் ஒரு எதிரிணியே! (negative force)

சிலர், செல்போனைத் தங்கள் இடுப்பிலும், வைத்துக் கொள்கிறார்கள்., சிறுநீரகத்திற்கு அருகேயும், வயிற்றுப் பகுதிகளுக்கு நெருக்கமாகவும் இது இருப்பதால், அந்தந்த உறுப்புகள் காலப்போக்கில் பழுதடைகின்றன. இளமை, ஆர்வம், உடல் பலம், பணபலம் இருக்கும் போது இந்த பாதிப்புகள் தெரியாது. ஆனால் நடுத்தர வயதும், உடல் நோய்களும் வருகையில்தான் செல்போனின் அதிபயங்கர விளைவுகள் தெரியலாகும். அப்போது தெரிந்தும் எப்பயனும் இல்லை!

செல்போனின் இத்தகைய எதிரிணித் தீய குணங்களால் (negative forces),  எப்போதும் தகாத முறையில் சுகபோகங்களை நாடும் கெட்ட குணங்கள் மனிதர்களுக்கு அதிகரிக்கும்.

கையில் தாங்கினால் மெய்யைத் தாக்கும் செல்போன்

செல்போனைக் காதருகே வைத்துப் பேசும் போது, அது கண்ணருகே வந்து படிந்து தோய்ந்து, உறைவதால், கண், காது மற்றும், கன்னப் பகுதிகளுக்கும் தீமைக் கிரணங்களைப் பரப்பி, மென்மேலும் கெடுதல்களை விளைவித்து விடுக்கின்றது. மேலும், காது, மூக்கு, தொண்டை (ENT problems) வியாதிகள் ஏற்படவும் இது காரணமாகின்றது.

கண், காது, மூக்கு இந்த மூன்றையும் ஒருங்கிணைக்கும் “த்ரயம்பூசம்” என்ற முக்கோண ஆத்மக் கிரணங்களின் வழிப்பாதை, இதனால் பாதிக்கப் பெற்று, இம்மூன்று அவயங்களுக்கிடையே நாளடைவில் ஒருங்கிணைப்பின்மை ஏற்பட்டு விடும். இதனால், கோர்வை இல்லாமல் பேசி உளறுகின்ற மனப்பான்மை வந்திடுகின்றது.

செல்போனை நீண்ட காலமாகப் பயன்படுத்துவோர்க்கு மன இயல் நோய்கள் வருவதற்கும் வாய்ப்புகள் நிறைய உண்டு. இயற்கையான முறையில் வரும் தூக்கமும் இழப்பாகி விடும். இது செல்போனினால் விளையும் அதிபயங்கரமான தீமையாகும். மேலும் இது ஆயுளையே பாதிக்கும் அளவிற்கும் கொண்டு வைத்து கிடும்.

“நாளங்களைப்” பாதிக்கும் நலமற்ற செல்போன்!

கிரந்த நாடிகளில், கலியுக விஞ்ஞான சாதனங்களைப் பற்றிய விளக்கக் குறிப்புகள் நிறைய காணப்படுகின்றன. இதில், செல்போனை “நாளவெட்டி” என நாடிகளில் குறிப்பிடுகின்றனர்.

மனித சித்தவைத்யப் பூர்வமாக, உடலில் 72,000 வகை நாளங்கள் உண்டு என நாமறிவோம். இவற்றில் 32,000 நாளங்கள் செல்போனில் பேசும் போது பலவிதங்களில் பாதிக்கப்படுகின்றன. வருங்காலத்தில், அருவருக்கத் தக்க, நிவாரணம் காண முடியாத தோல் வியாதிகளுக்கும் காரணமாகவும் செல்போன் விளங்கும்.

சமுதாயத்தில் பலத்த கிரிமினல் குற்றங்களும் செல்போனின் மூலம் எதிர்காலத்தில் நிறைய நடைபெறும். எனவே, தயவு செய்து பிள்ளைகளிடம், பெண்களிடம் செல்போனைக் கொடுத்து விடாதீர்கள்! அவர்கள் அங்கமே அதில் போட்டோவாகப் பதிந்து பல சமுதாயக் குற்றங்களில் சிக்க வைக்கப்பட்டு மனவேதனைகளுக்கு ஆளாகிவிடுவர்.

ஆயிரங்காலத்துப் பயிராக விளங்க வேண்டிய பிள்ளைகளின் உடல் நாளங்கள், சிறு வயதிலேயே பலத்த பாதிப்புகளுக்கு ஆளானால் அவர்கள் ஆயுளுக்கும், எதிர்காலத்துக்கும் பங்கம் வந்து விடுமே!

(மன) “வலி”யை வலித்திழுக்கும் செல்போனுக்கா கலியில் பலியாவது!

ஆனால், செல்போனின் நுண் கதிர்கள் ஓங்கார ஒலியைக் கேட்கும் காதுகளின் அமைப்பையும், நாளங்களையும் நாளடைவில் சிதைத்து விடுகின்றன. சொல்வது ஒன்று, கேட்பது ஒன்று, செய்வது ஒன்று என்பதாக – மன, உள்ள, உடல் – கோப்பின்மையை வளர்த்து விடும். இதனால் தேவையில்லாத பீதிகள், மனபயங்கள், என்ன நடக்குமோ, ஏது  நடக்குமோ என்ற வகையிலான படபடப்பு, இனம் புரியாத வெறுப்பு, கோபம், உணர்ச்சிகளற்று இருத்தல், நரம்புகள் துடித்தல், தசைகளில் காரணமின்றிப் பொறுக்க முடியாத வலி ஏற்படுதல், காது கேட்கும் சக்தி மந்தமாதல் போன்றவை – செல்போனைப் பயன்படுத்துவோர்க்கு ஏற்படத் தொடங்கும்.

இவ்வாறு பல நாளங்களையும் செல்போன் பாதிக்கின்ற வகையில் “நாளவெட்டியாக” பல நாள, நாடி, நாத சக்திகளையும் பாதிக்கின்றது.

சில விதங்களில் நன்கு உதவுவது போல் தோன்றும் செல்போனின் தீய கதிர்களை, ஆன்மீக ரீதியாக ஓரளவேனும் மாற்ற இயலாதா?

ஆயிரம் தீமைகள் ஒரு (விஞ்ஞானக்) கருவியால் ஏற்படும் போது, அதனால் ஏற்படுவது போலிருக்கும் ஓரிரு நன்மைகளுக்காக – உடல், மனம், உள்ளத்தை, மனித குலத்தை, சமுதாயத்தையே மிகவும் பாதிக்கும் அதிபயங்கரமான ஆயுதம் போலான ஒன்றை, அதன் சிறு, சிறு பலன்களுக்காக, கலியில், சுகபோகத்திற்காக அடிமைப்பட்டு விட்ட மனித குலம் நாடலாகுமா?

சிகரெட், புகையிலை, பீடி, சுருட்டு, மது, சூதாட்டம், குதிரைப் பந்தயம், லாட்டரிச் சீட்டு போன்றவை உலகெங்கும் மனித குலத்தை அடிமையாக்கி விட்டதைப் போலத்தான் இதுவும்!

ஜெய சக்கர சாந்தி விநாயகர்

பொதுவாக, தெய்வ மூர்த்திகளின் பெயர்களை ஸ்ரீயுடன் சேர்த்து எழுதுவது, படிப்பது தெய்வீக மரபு. இவ்வாண்டு முதல் வணங்கிட வேண்டிய ஜெய சக்கர சாந்தி விநாயகர் யந்த்ர, சக்கரங்களின் “ஜெய” சக்திகளை, ஸ்ரீக்குப் பரிபதிலாக “முன்” வைத்துத் தாங்கிப் பொலிகின்றார்.

“ஸ்ரீ” என தெய்வ மூர்த்திகளுக்கு அடைமொழி இடுவது மனிதர்களுக்கு திரு, திருமதி இடுவது போலன்று. தற்காலத்தைய செய்தித் தாள்களிலும் மனிதப் பெயர்களுக்கு முன் திரு, திருமதி போன்ற அடைமொழிகள் இடுவதையும் கைவிட்டு வருகின்றனர்.

ஸ்ரீபாதாள லிங்கேஸ்வரர்
திருஅண்ணாமலை

“ஸ்ரீ” என்பதற்கு, சக்கர, யந்திர சக்திகள் நிறைந்த, லக்ஷ்மி கடாட்சம் நிறைந்த, அண்ட சராசரத்திற்கும் அருள்பாலிக்க வல்ல... என்று பலவிதமான அர்த்தங்கள் உண்டு. இவற்றை எல்லாம் பாமரரக்கும், எளிய ஜீவன்களுக்குமாக அளிக்கும் வண்ணமாய், “ஜெய” பீஜாட்சர சக்திகளை முன் தாங்கி, ஜெய சக்கர சாந்தி விநாயகர் அருள்கின்றார்..!

வாய் திறவாய்!

“ஸ்ரீ” என்ற எழுத்தை உச்சரிக்கையில் சுவாசம் சற்று வெளி வரும். மற்றைய எழுத்து ஒலிகளை ஓரளவு வாயை மூடிக் கொண்டு ஒலிக்க முடியும் என்றாலும், “ஸ்ரீ” என்று ஒலிக்கும் போது, மூடிய வாயைத் திறந்தாக வேண்டும். வாய்க்குள் ஒலிக்க முடியாது.

ஸ்ரீயப்பதியாரால் “ஸ்ரீயும்” தண்டமிழ் ஒலியே!

“ஸ்ரீயப்பதி” என்ற பெயரில் ஆழ்வார்களின் தேன் தமிழைச் சுவைத்தவராய்த் திருமாலப்பரே அருள்கின்றார். எனவே “ஸ்ரீ” என்பது பிற மொழிச் சொல் என்றெல்லாம் குழப்பிக் கொள்ளாதீர்கள். “ஸ்ரீ” என்பது தொன்மைத் தமிழ் அட்சர ஒலியே! இதன் வடிவே தமிழைச் சார்ந்ததாகப் புலப்படுத்துகின்றதே! தமிழில் எண் எழுத்துக்கள் மற்றும் பலவகையில் நிறைய எழுத்துகளும் இருந்து வழக்கில் மறைந்து போயுள்ளன.

கலைமகளின் அருட்குழந்தைகளே அனைத்து உலக மொழிகளும், அனைத்து அண்டங்களிலும், விண்ணுலகிலும், தேவ லோகங்களிலும் அன்னை ஸ்தானத்தில் வைத்துப் போற்றப் பெறும் புனிதமான தமிழே ஆதி முதலில் சிவனாரிடமிருந்து நேரடியாகத் தோன்றிய மொழி! எனவே “ஸ்ரீ” என்பதும் சுத்தமான தமிழ் ஒலியே!

“ஸ்ரீ” என வாயால் ஒலித்திட, வாயைத் திறக்க வேண்டி உள்ளது அல்லவா! விதானம் என்றால் மூடி என்று பொருள். இதனால்தான் வயிற்றுக்கு மூடியாக இருப்பதை “உதர விதானம்” என்று சொல்கின்றோம். தினமும் வில்வம், துளசி போன்ற மூலிகை தீர்த்தத்தை மூன்று துளிகள் அருந்தி.... இதனை அருந்தும் முன்பும், பின்னும் குறித்த சிலவிதமான உதர சக்தி மந்திரங்களை ஓதுவதால், வயிறு என்னும் பாத்திரத்திற்கு அடித்தளமும், மூடியும் போட்ட மாதிரி ஆகின்றது. இதுவே முழுமையான விரத நிலை! பசியா வரநிலைக்கு அடித்தளமாவது! இதனால்தான் இவற்றிற்கு “உதர சக்தி மந்திரங்கள்” என்று பெயர்.

புனிதம் தரும் “உதக சாந்தி மந்திரங்கள்” என்பவை (கும்ப) விதான சக்திகளைக் கொண்டவை! இவை இல்லறத்தின் வயிறு எனப்படும் வீட்டைச் சுத்திகரிக்க வல்லவை!

மந்திரமும் நாபியுடைத்து!

உண்மையில், உதரமாகிய வயிற்றின் கீழ் வாயே நாபி எனும் தொப்புள் ஆகும்! நாபியைத் (தொப்புள்) தொட்டு ஓத வேண்டிய “நாபிச் சூளாமணி” மந்திரங்களும் உண்டு. பெற்ற தாய்க்கு ஆற்ற வேண்டிய கடமைகள் பாக்கியாக இருந்தால், அவற்றை ஆற்றி நிறைவு செய்யவும், பெற்ற தாய்க்குள்ள நோய்த் துன்பங்கள் தீரவும், அறுவை சிகிச்சையின்றி நல்ல சுகப் பிரசவம் ஆகிடவும் “நாபிச் சூளாமணி” மந்திர சக்திகள் உதவும்.

ஸ்ரீபாதாள ஐயனார்
திருச்சி மலைக்கோட்டை

மேலும் “சந்தனச் சந்தானச் சூளாமணி” என்பதாக, வம்ச விருத்திக்கும் இந்த “நாபிச் சூளாமணி” மந்திர ஜப யோக சக்தி துணை புரியும். இதை ஒட்டித்தாம் விநாயக சதுர்த்தி உற்சவத்தில், களிமண்ணாலாகிய பிள்ளையாருக்கு, நாபியில் (தொப்புள்) காசு வைத்து வழிபடுவார்கள்.

களிமண் பிள்ளையாரை நீரில் கரைக்கும்போது, இந்தக் காசை எடுத்து, வீட்டில், வியாபாரத்தில் கஜானாவில், பணப் பெட்டியில் வைத்துத் தினமும் மல்லிகைப் பூக்கள் இட்டு பூஜித்து வர, தரித்திர நிலைகள் தணிந்து, தனபாக்யம் வர்ஷிக்கும்.

கலியுகத்தில் மனித சமுதாயம், வேத, மந்திர, யந்திர, தந்திர சக்திகளை பெரிதும் இழந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். தேவ மொழி மற்றும் தமிழ் மறை மந்திரங்கள் ஓதுவதைப் பல ஊர்களில், ஆலயங்களில், வீடுகளில் ஒரு நாளில், ஒரு சில நிமிடங்கள் கூட கேட்க முடியாத அளவிற்கு வேதமந்தம் இருந்து வருகின்றது. தினமுமே தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருமந்திரம், அருட்பா, நாலாயிர திவ்யப் பிரபந்தம் போன்ற தமிழ் மறைகளை அவரவர் இல்லத்தில் ஒரு மணி நேரமேனும் ஓதி வர வேண்டும். ஊரெங்கும் வேத முழக்கம் கேட்க வேண்டும்.

வேத மந்த்ர, யந்த்ர சக்திகள் மறைந்து விட்டமையால்தான், உலகில் வன்முறையும், பயங்கரவாதமும், பீதியும் பயமும், நிலையற்ற மனத் தன்மைகளும் பரவி வருகின்றன. இத்தீய சக்திகளிடமிருந்து மக்களை எவ்வாறு காப்பது? இவற்றிலிருந்து உலக மக்களை மீட்டு சாந்தப்படுத்திட, தினமும் (தமிழ்) மறைத் துதிகளை (அறிந்தால் தேவமொழி மறை) ஓதி வர வேண்டிய கடமை பாரத மக்கள் குறிப்பாகத் தமிழ் மக்கள் யாவருக்கும் உண்டு.

யந்திர சக்திக் கோயில்கள்

கலியுகத்தில் மந்த்ர, யந்த்ர சக்திக் குறைவை, மந்த்ர, யந்த்ர சக்திகளால்தான் நிறைவு செய்ய முடியும். இதற்காகத்தான் அபூர்வமாக சென்னை – பூந்தமல்லி ஸ்ரீவைத்யநாத சுவாமி கோயில் போன்ற சில சுயம்பு மூர்த்தி ஆலயங்களில் யோகியரால், ஞானிகளால், மஹான்களால், மஹரிஷிகளால், யந்திரங்கள், சக்கரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

பற்பல மகரிஷிகளும் தாமே பல்லாண்டு காலம் ஜபம், தவம், யோகம் புரிந்து தோற்றுவித்த, உருவாக்கிய, பொறித்த யந்திர சக்திச் சக்கரங்களே இவையாவும்.

மந்திர யந்திரங்கள், மந்திரச் சக்கரங்களை கலியுக மக்களுக்கென ஆதிமுதலில் வடித்துத் தந்தவரே ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதாள் ஆவார். யோகி, ஞானி, மகரிஷி போன்ற தெய்வீக உத்தம நிலைகள் அனைத்தையுமே பரிபூரணமாகப் பூண்டவர்.

ஸ்ரீபாதாள லிங்க மூர்த்தி
வாத்தலை

சென்னை பூந்தமல்லி ஸ்ரீவைத்தியநாத சுவாமி ஆலயத்தில், மூலவரைச் சுற்றி வரும் முதல் பிரகாரத்தில் உள்ள மூன்று சக்கரங்களும்தான் இப்பூவுலகின் ஆதிமூல த்ரயம்பகச் சக்கரங்கள் ஆகும். ஸ்ரீஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை. மிகவும் சக்தி வாய்ந்தவை!

நம் உலகின் அனைத்து நாட்டு அனைத்து மக்களுக்கும், சகல ஜீவன்களுக்கும் தேவையான அருள்வள நலக் கதிர்களை எப்போதும் பரிணமித்துக் கொண்டிருக்கும் அதியற்புதச் சக்கரங்கள் இவையாகும். நம் தமிழ் நாட்டு மக்கள், குறிப்பாக சென்னைவாசிகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகப் பூந்தமல்லி சிவாலயத்தில் பூரணித்து அருள்புரியும் இந்த மகா யந்திரச் சக்கரங்களின் மகிமையை இன்னமும் அறியாதிருப்பது வியப்பானதே!

இந்த மூன்று யந்திரங்களின் மகத்துவங்கள் அளப்பரியன. நேத்திர தரிசனப் பூர்வமாக, யந்திர, சக்கர மந்த்ர சக்திகளை அளிக்க வல்லவை. அதாவது இந்த மூன்று யந்திரங்களையுமே கண்களால் பார்த்துத் தரிசிப்பதால் பல ஆன்ம சக்திகள் உடலில் படிவதே பெரும் பாக்கியமாகும்.

வாரமொருமுறை நல்வரங் கோருங்கள்!

எனவே, வாரம் ஒரு முறையாவது, குடும்பத்தோடு அனைவரும் பூந்தமல்லி ஸ்ரீவைத்யநாத சுவாமி சிவாலயத்திற்குச் சென்று,

ஸ்ரீஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த இந்த மூன்று த்ரயம்பகச் சக்கரங்களையும் தரிசித்து,  கிழக்கு நோக்கி தனித்து நின்று அருளும் ஸ்ரீசனீஸ்வரரையும் பூஜித்து, தூணில் அற்புதமான வடிவில் அருளும் ஸ்ரீசரபேஸ்வரரையும் வீழ்ந்து நமஸ்கரித்து, அம்பாள் சன்னதிக்கு முன்பாக உள்ள ஒரு தூணில் ஜீவபீடம் கொண்டு,

பூவுலக மக்களின், ஜீவன்களின் அனைத்துவிதமான நோய்களுக்குமான நிவாரண சக்திகளை ஸ்ரீவைத்தியநாத சுவாமியின் அனுகிரகமாக பெற்றுத் தரும் ஸ்ரீஅவதூது ரோக நிவர்த்தீஸ்வரச் சித்தரையும் வணங்கி,

மயிலாடுதுறை அருகே உள்ள செவ்வாய்த் தலமான வைத்தீஸ்வரன் கோயிலை நிகர்த்த வைத்தியப் பூர்வமான சக்திகளை அருள்கின்ற பூந்தமல்லி சிவாலய மூலச் சுயம்பு மூர்த்தியாம் ஸ்ரீதையல்நாயகி சமேத ஸ்ரீவைத்தியநாத சுவாமியை வழிபட்டு வருதல்,

வாழ்வில் நலங்களைப் பல துறைகளிலும் பெறுதற்கு எளிதில் துணை புரியும் அரிய இறைமார்கமாகும்.

அனைத்துமே இங்கேயாம்!

பொதுவாக, அங்காரகத் தலங்களில் வழிபடுதல் ரோக நிவர்த்தி எனப்படும் நோய்களை நிவர்த்தி செய்யும் சக்திகளை அளிக்கும். இதிலும் யந்திர, சக்கர சக்திகளும் சேர்ந்து அமைதலும், ஸ்ரீவைத்தியநாத சுவாமி என்ற பெயருடனும், இதிலும் சுயம்பு மூர்த்தியாக அருள்வதும்,

அதிலும் சுயம்பு மூர்த்தியின்பால் சூரியகிரணங்கள் பட்டு, ஸ்பரிசித்து, சூரிய பூஜை நிகழ்வதும்,

ஆயுள்காரகராகிய சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனித்து அருள்வதும் – இவ்வாறு பல அபூர்வமான அற்புதமான தெய்வீக சக்திகள் நிறைந்த ஆலயம் ஆகும்.

மீண்டும் மீளும் யந்த்ர சக்திகள்

மேலும், வரும் பார்த்திப ஆண்டிலிருந்து, மக்கள் ஆர்வத்தோடு செயல்பட்டிடில், இப்பூவுலகில் மந்திர, தந்திர, வேத, யந்த்ர சக்திகள் மீண்டும் ஓரளவேனும் பரிணமிக்க உள்ளன. எனவே, 2005ஆம் ஆண்டிலிருந்தே யந்திர, சக்கரத் தலங்களில் அடிக்கடி வழிபட்டு வருதல் குடும்பத்திற்கு நன்மை பயக்கும். இதிலும் பூந்தமல்லி போன்று ஸ்ரீஆதிசங்கரர் யந்த்ர சக்கர பிரதிஷ்டை செய்த தலங்கள் ஒரு சிலவே ஆகும்.

ஆனால், பாமரர்களாலும் நடுத்தரக் குடும்பத்தினராலும், அனைவராலும் இத்தகைய தலங்களுக்கு அடிக்கடி சென்று வழிபட முடியுமா?

எனவேதான், இவ்வாண்டிலிருந்து பிள்ளையாரப்பரின் யந்திர, சக்கர சக்திகள் நிறைந்த சில குறித்த வடிவுகளைப் பூஜித்தல் மிகவும் விசேஷமானது. இவ்வாறு யந்திர, தந்திர சக்திகள் நிறைந்த பிள்ளையாருக்கு ஜெய சக்கர சாந்தி விநாயகர், யந்திர சாந்தி விநாயகர், பூப்ரஸ்த மந்திர கணபதி, ஏவங்குணச் சக்கர கணபதி என்று பல நாமங்கள் உண்டு. இவற்றுள் நாமிங்கு காண்பதே ஜெய சக்கர சாந்தி விநாயகர்!

சாளரக் கோயில் பற்றி நீங்கள் அறிவீர்கள். யோக, ஞான, யந்திர, தந்திர, மந்திர சக்திகள் நிறைந்த மூலவரை நேரிடையாக தரிசிப்பதற்கு அதியற்புத பக்தி பூண்டிருக்க வேண்டும் என்பதால், மூலவருக்கு முன், ஒன்பது துவாரங்கள் உள்ள சக்கரத்தை அமைத்து இருப்பார்கள்.

எனவே, சாளரம் வழியாகவோ, பக்கவாட்டிலோ செறு சுவாமியைத் தரிசிக்க வேண்டும். மூலவருக்கு முன் உள்ள யந்திரம், சக்கரம், நந்தீஸ்வரர், வட்டச் சக்கர சக்திக் கதவுகள், கொடி மரப் பிள்ளையார், நந்தி மூர்த்தி அருகே உள்ள சூரிய சக்கர தீபம் போன்றவை மூலவரின் அதீத யந்த்ர யோகாக்னி சக்திகளை ஈர்த்து, சாந்தக் கதிர்களாக நமக்கு அருள்வர்.

பரிவுடன் பக்கப் பார்வை!

இதைக் கருதியே மகத்தான மந்த்ர, யந்த்ர சக்கரச் சக்திகள் நிறைந்த “ஜெய சக்கர சாந்தி விநாயகர்” நேர்முக தரிசனம் அல்லாது சந்த்ர சூடப் பூர்வமாக, இடது புறமாய் திருமுகம் வைத்து அருள்கின்றார். யந்திர, தந்திர சக்திகள் அருள்கின்றார். யந்திர, தந்திர சக்திகள் மஹாமகத்துவம் வாய்ந்தவை என்பதால், பிள்ளையாரின் திரும்பிய வகையிலான சந்திர சூட பூர்வத் திருமுகத் தரிசனம் மிகவும் விசேஷமாக அருள்வதாகும்.

இதனை வீட்டில், கடையில், வைத்திருந்து 21 முறை அவ்வப்போது தினமும் தரிசித்தல் மிகவும் விசேஷமானது. யந்திர, மந்திர சக்கர சக்திகள் நிறைந்த ஏழு, ஒன்பது இதற்கு மேலான சுற்றுக்கள் உடைய முறுக்கு, தேன்குழல், சீப்புச் சீடை போன்றவற்றை அன்னத்துடன் படைத்துத் தானமளிகின்ற அரும்பணியானது, குடும்பத்தையும், சமுதாயத்தையும் உடல் நோய், மனப் பிணி, உள்ளப் பிணிகள், பகைமை விரோதத்திலிருந்து காத்து, சாந்தம் நிலவிடத் துணை புரியும்.

ஜெய சக்கர சாந்தி விநாயகரைத் தரிசிக்கும் போது, ஸ்ரீகணேச கவச மந்திரங்களையும், ஔவையாரின் “சீதக்களப” எனத் தொடங்கும் வேத, மந்த்ர, யந்த்ர, சக்கர சக்திகள் நிறைந்த “விநாயகர் அகவல்” துதிகளையும் தினமும் காலை, மதியம், மாலை வேளைகளில் மொத்தம் ஏழு முறையேனும் ஓதுதல் வேண்டும்.

குடும்பத்தையும், சமுதாயத்தைக் காக்கும் சக்தி வாய்ந்த ஜெய சக்கர சாந்தி விநாயகர் வழிபாடு! ஜெய சக்கர சாந்தி விநாயகருக்கென விசேஷமாக ஓத வேண்டிய துதிகள்:- தமிழில்

வேத மந்த்ர யந்த்ர சக்ர வேத வேத கணபதிம்
நாதநாள நாமசார நானிலத்து கணபதிம்
ஓத, ஓத வேதமான கீதமால்ய கணபதிம்
சாதனாதி சாந்தியாகி சக்ர ஜெயதி கணபதிம்

ஜெயதி ஜெயதி கணபதிம்
ஓம் ஜெயதி ஜெயதி க பதிம்
ஜெயதி ஜெயதி ஜெயதி ஜெயதி
ஜெயதி சக்ர கணபதிம்
ஜெயதி ஜெயதி ஜெயதி ஜெயதி
ஜெயதி சாந்தி கணபதிம்
ஜெயதி சக்ர ஜெயதி சாந்தி
ஜெயதி ஜெயதி கணபதிம்
ஜெயதி ஜெயதி கணபதிம்
ஓம் ஜெயதி ஜெயதி கணபதிம்

“த்ரிஸந்த்யம் ஜபதே யஸ்து வஜ்ரஸார தநுர்பவேத்
யாத்ராகாலே படேத் யஸ்து நிர்விக்நேந பலம் லபேத்”

மணமேல்குடி

ஸ்ரீஜெகத்ரட்சகி சமேத ஸ்ரீஜெகதீஸ்வரர் ஆலய மகிமை

அறந்தாங்கி – மீமிசல் சாலையில், அறந்தாங்கியிலிருந்து 35 கி.மீ தொலைவில், மணமேல்குடியில் ஸ்ரீஜெகத்ரட்சகி உடனுறை ஸ்ரீஜெகதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மகத்தான வாஸ்து சக்திகள் நிறைந்த இத்தலச் சிறப்பின் விளக்கங்களை, சென்ற இதழின் தொடர்ச்சியாக இங்கு அளிக்கின்றோம்.

வாஸ்துத் தீர்த்தக் குளத்திற்கு ஷோடசத் துறை காண்பீர்!

ஸ்ரீஜகதீஸ்வரர் மணமேல்குடி

பண்டைய காலத்தில், முதலில் பதினாறு துறைகளுடனும் கூடிய “ஜகதோ தாரண வாஸ்துத் தீர்த்தம்” பொலிந்த தலம் இது. இன்றும் பெரிய அளவில் துறைகள் ஓரளவு புலருமாறு காணப்படுகின்றது. பக்த கோடிகள் ஒன்று கூடி, இதற்குப் பதினாறு துறைகள் கட்டிச் சீரமைத்துத் திருப்பணிகளை ஆற்றிட, பாரத நாட்டின் மிகப் புனிதமான வாஸ்துத் தலமாகத் துலங்கிட வல்லது. இவ்வாலயத்திற்கான வழிபாட்டு முறைகளை சித்தர்களுடைய ஆலயப் பண்புறைக் கிரந்தங்களில் நிறைய அளித்துள்ளார்கள். இவை யாவும் தக்க சற்குருமார்கள் மூலமாக அறியப் பெற வேண்டியவை!

காரணமின்றிப் பெயர் மாற்றம் வேண்டாம்!

வாஸ்து சக்திகளுக்கும், எண் சக்திகளுக்கும் நிறையத் தெய்வீகப் பிணைப்புகள் உண்டு. தற்காலத்தில் எண் கணித சாஸ்திரம் என்றாலே பெயரை மாற்றுதல், அல்லது பெயருக்குரிய எழுத்துக்களைச் சற்றே மாற்றுதல் என்றே பொருள் கொள்கின்றனர். தயவு செய்து, இனியேனும் பெற்றோர்கள் அளித்துள்ள இறைநாமப் பெயர்களை மாற்றி அல்லது சுருக்கி (வெங்கடராகவன் – வெங்கட்) விடாதீர்கள்.

இதனால் எண் சக்திகள் வருமென அதன் அட்சர சக்திகளைச் சிதைத்து விடாதீர்கள்! ஜோதிடத்தின் ஒரு பகுதியே எண் சாஸ்திரம். பிற ஜோதிடப் பகுப்புகளை ஒட்டியே எண் சாஸ்திர நியதிகள் அமைய வேண்டும். எண் கணிதத்தைத் தனித்து வைத்துக் கணித்தல் தவறு. ஜோதிடத்திற்கு மாறாக, அல்லது ஜோதிடத்திற்குப் பதிலாக எண் கணிதத்தைப் பயன்படுத்தினால், கணிப்புகள் தவறாகும். மேலும் சாபங்களே வரும், பலத்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தி விடும்.

ஜோதிட ரீதியான எண் சக்திகளும், வாஸ்து சக்திகளும் இணைந்து பரிமளித்து அருளும் அரிய தலங்களுள் மணமேல்குடியும் ஒன்றாகும். எண் கணித நிபுணர்கள் அடிக்கடி வழிபட வேண்டிய தலம்.

ஸ்ரீசோமநாதேஸ்வரர்
நீடூர்

ஸ்ரீஅபய பிரதாம்பிகை
நீடூர்

சூரிய, சந்திர பூஜைத் தலம் அமாவாசைத் தர்ப்பணத் தலம்

ஒன்று, இரண்டு எண் சக்திகளுக்குரிய சூரிய, சந்திர மூர்த்திகள், இங்கு இறைவன் மற்றும் இறைவியின் மூன்றாம் நேத்திர சக்திகளைச் சதுர்த்தித் திதி நாளில் தரிசித்து, மறுநாள் பஞ்சமி விரத பூஜை ஆற்றிய தலமிது!

சூரிய, சந்திரன் இணைவதுதானே அமாவாசை! எனவே மகத்தான அமாவாசைத் தர்ப்பணத் தலமாகவும் விளங்குகின்றது. சூரியத் தேரை ஒட்டித் தினமும் வேத மந்திரங்களை ஓதியவாறு விரைந்து வரும், கட்டை விரல் வடிவுள்ள வாலகில்ய மஹரிஷிகள் பூவுலகில் கீழிறங்கி வழிபடும் தலங்களில் இதுவும் ஒன்றாகும்.

ஆதி எண்கள் ஒன்றிலிருந்து ஐந்தாய் அமைந்து, பிறகு விரிவு பெற்ற எண்வழித் தலமும் ஆகும். சிருஷ்டியின் போது மனிதனுடைய கரத்திற்கு ஐந்து விரல்கள் என, கரவீர சிருஷ்டி சக்திகள் நிறைவு பெற்ற தலமும் இதுவேயாம். தன் கையில் ஆறு விரல்களை உடையவர்கள், இங்கு சஷ்டித் தினங்களில் வழிபட்டு வருதல் வேண்டும்.

ஒற்றைப் படை நாளில் பிறந்தோர்க்கு...

பிறந்த நாள் 1, 3, 5, 7, 9 என்னும் தேதிகளிலோ அல்லது இந்த எண்களின் கூட்டுத் தொகையிலோ (உதாரணமாக 10, 21, 23, 16, 27) அமைந்து பிறந்தவர்கள். மணமேல்குடியில், முதலில் ஸ்ரீஜெகதீஸ்வரருக்கு சந்தனம், ஜவ்வாது, புனுகு, அத்தர், கோரோஜனை, கஸ்தூரி, கஸ்தூரி மஞ்சள் இணைந்த சந்தனக் காப்பு இட்டு முதலில் வழிபட்டு,

பிறகு ஸ்ரீஜெகத்ரட்சகி அம்பிகைக்கு வில்வம், துளசி, மரிக்கொழுந்து, தவனம் போன்ற வாசனை தளங்கள் கூடிய மாலை சார்த்தி வழிபட வேண்டும். தானே தொடுத்த மகிழம்பூ மாலைகளைச் சார்த்துதல் காரிய சித்தியைத் தரும். செவ்வாய் அம்ச சக்திகள் நன்கு விருத்தியாகவும், மேலும், வாஸ்து சக்திகளையும் நன்கு மேன்மையாக்கிக் கொண்டிடவும் நல்ழி பிறக்கும்.

நிலதோஷங்கள் தீர்ந்திட...

நிலபுலன், தோப்புத் துரவு, காய்கறித் தோட்டம், பண்ணை சம்பந்தமான இடங்களில் உள்ள கோர்ட் வழக்குகள், (சொத்துப்) பிரிவினை தாவாக்கள் போன்ற வாஸ்து தோஷங்கள் நீங்கிட, இத்தலத்தில் 1, 3, 5, 7, 9 அல்லது இந்த கூட்டுத் தொகையில் வரும் தேதிகளில் (10, 21, 23, 16, 18, 27 போன்றவை) இங்கு வழிபடுதல் வேண்டும். இதற்கான நல்ல பலாபலன்களைப் பெற,

முதலில் ஸ்ரீஜெகதீஸ்வரருக்கு நிறைய சாமந்தி மாலைகளைச் சார்த்தி (குறைந்தது ஒன்பது மாலைகள்) வணங்கிடுக! ஸ்ரீஜெகதீஸ்வரரை வணங்கிய பின், ஸ்ரீஜெகத்ரட்சகி அம்பிகைக்கு முந்திரி, திராட்சை, நிலக்கடலை, சங்கு, விளாம்பழம் ஆகிய ஐந்து திரவியங்களால் ஆன ஐந்து மாலைகளைச் சார்த்திப் பூஜித்திடுக!

இவ்விரண்டு வழிபாடுகளை அடுத்து, இங்குள்ள மகிழ மரத்திற்கு, அவரவருக்கு விருப்பமான மூன்று வண்ணப் பட்டு வஸ்திரங்களைச் சார்த்தி, ஒற்றைப் படை எண்ணிக்கையில் அடிப் பிரதட்சிணம் செய்திட வேண்டும்.

இம்மூன்று வழிபாடுகளுக்குப் பிறகு மேற்கண்ட பட்டு போன்ற அனைத்தையும், கிழங்கு வகை உணவு வகைகளோடு ஏழைகளுக்குத் தானமாக அளித்திடுக! இதற்கான வசதியற்றோர் எளிமையான முறையில் வழிபடுவதாயின், சுவாமி, அம்பிகைக்கு வெட்டிவேர் மாலை சார்த்தி, மகிழ மரத்திற்கு விபூதி, மஞ்சள், குங்குமம், சந்தனம், சிந்தூரம் இட்டு, அடிப்பிரதட்சிணமாய் வலம் வந்து வழிபட்டிட வேண்டும். இத்தலத்தில் வழிபடும் போது கைகள், விரல்கள், பாதங்கள், கால் விரல்களில் மருதாணி இட்டிருப்பது வாஸ்து சக்திகளை நன்கு விருத்தி செய்து தரும்.

இரட்டைப் படை நாளில் பிறந்தோர்க்கு...

2, 4, 6, 8, 10 அல்லது இந்த எண்களின் கூட்டுத் தொகைத் தேதிகளில் பிறந்தவர்கள் (11, 22, 15, 17 போன்று), முதலில் ஸ்ரீஜெகத்ரட்சகி அம்பிகையை மேற்கண்ட வகையில் வணங்கி, பிறகு, மூலவரான ஸ்ரீஜெகதீஸ்வரரையும்,  மகிழ மரத்தையும் மேற்கண்ட வகையில் பூஜித்து வலம் வந்து வணங்கிட வேண்டும்.

குலவிருத்தி, ஆயுள் விருத்தி, கணவனுக்கு ஆயுள் விருத்தி, குடும்ப ஒற்றுமைக்கு உதவும் சிறப்பான சிவத்தலம்.

குடும்ப ஒற்றுமையைப் பேண உதவும் தலம்

குடும்பப் பிளவு நிவர்த்தி, பங்காளிச் சண்டை நிவர்த்தி, குடும்பப் பகை நிவர்த்திக்கும் உதவும் ஈஸ்வரத் தலம். பகைமை, விரோதம், குரோதம் அகற்றி, குடும்ப ஒற்றுமை, வியாபாரக் கூட்டில் ஒற்றுமை ஏற்பட, இத்தலத்தில் 2, 4, 6, 8, 10 அல்லது இந்த கூட்டுத் தொகையில் வரும் இரட்டைப் படைத் தேதிகளில் இங்கு வழிபட வேண்டும்.

இதற்கும் முதலில் ஸ்ரீஜெகத்ரட்சகி அம்பிகையையும் அடுத்து, ஸ்ரீஜெகதீஸ்வரரையும் வணங்கி, பிறகு தலவிருட்சமாகிய மகிழ மரத்தை, இரட்டைப் படை எண்ணிக்கையில் சுற்றி வந்து அடிப்பிரதட்சிணம் செய்து வணங்கிட வேண்டும்.

“மஞ்சக் காணி பூமி” மங்களமாய் விருத்தி ஆகிட...

மேலும், “மஞ்சக் காணி பூமி” என்று சொல்லப்படும் தாய் வகைச் சொத்து சம்பந்தமான விஷயங்களில் பிரச்னைகள் குடும்பத்தில் ஒருபோதும் வரவே கூடாது. அப்படி வந்திடில், இது மூதாதையர்களையும் சந்ததிகளையும் மிகவும் பாதிக்கும். ஆகவே, இத்தகைய “மஞ்சக் காணி” நிலவகைச் சிக்கல்களை ஆரம்பத்திலேயே நன்கு களைந்து விட வேண்டும். மஞ்சக் காணி சொத்துப் பிரச்னைகள் வாராதிருக்கவும் வந்த பிரச்னைகள் தீரவும் ஸ்ரீஜெகத்ரட்சகி அன்னை வழிபாடு உதவுகிறது.

பரசுராமர் உதிரத் தர்ப்பணம் கொடுத்த தலங்களில் இதுவும் ஒன்று, எனவேதான், இது செக்கச் சிவந்த மணம் பூமியாய் முற்காலத்தில் விளங்கியது. ஆயுதத்தால் தான் பலரைக் கொன்றதால் ஏற்பட்ட சாபத்திற்குப் பரிகாரமாக, பரசுராமர் இங்கு உதிரத் தர்ப்பணம் அளித்தார். ஆனால், பொதுவாக உதிரத் தர்ப்பணம் ஏற்புடையது கிடையாது அன்றோ! அவரோ ஆவேசத்தில் உதிரத் தர்ப்பணத்தை அளித்து விட்டார்.

ஆனால், பூமாதேவி, பரசுராமர் அளித்த உதிரத் தர்ப்பண அர்க்யம் தன் மீது படிவதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே, அவர் ஒரு தர்ப்பைப் பாயை விரித்து, அதில் முழு அரிசி மணிகளை வைத்து தர்ப்பணம் அளித்து, தன்னால் மாய்ந்தவர்களுக்குப் பரிகாரம் செய்து நல்வழி அளித்தார். இதற்கு அருள் புரிந்தவளே ஸ்ரீசாமுண்டேஸ்வரி அன்னை ஆவாள். வருங்காலத்தில் ஸ்ரீசாமுண்டேஸ்வரியின் சிலா ரூபம் இங்கு தோன்றலாகும்.

குங்குமாதித் தர்ப்பணத் தலங்களுள் ஒன்றாகவும் இது விளங்குகின்றது. இங்கு நீரில் குங்குமம் கலந்து, குங்குமாதித் தர்ப்பணம் அளிப்பது, கோர விபத்துகளில் சிக்கி இறந்தோர் நன்னிலை பெற உதவும் விசேஷமான தர்ப்பண முறையாகும். பரசுராமரே எடுத்துரைத்த அதிவிசேஷமான தர்ப்பண முறை இது !

புத்தாண்டு

பகைமையைக் களைந்து உறவு முறிவைச் சீர்படுத்த உதவும் ஆண்டு! வாக்குக் குற்றங்களைக் களைய உதவும் ஆண்டு!

2005ம் ஆண்டிற்கு உரிய வழிபாட்டு மூர்த்தியே ஜெய சக்கர சாந்தி விநாயகர்.

ஞானகாரகராகிய கேது மூர்த்திக்கு உரித்தான எண் ஏழு ஆதலின், 2005ம் ஆண்டு, ஞான சக்திகள் பரிமளிக்கும் வருஷமாகவும் பிரகாசித்துத் துலங்குகின்றது.

2005ம் ஆண்டில் பகைமையைக் களைய வல்ல நல்சக்திகள் பூரிக்கின்றன. இதனை நன்கு பயன்படுத்திக் கொண்டு நட்பு, கூட்டு வியாபாரம், உற்றம், சுற்றம் நாடுகளிடையே உள்ள உறவுகளைச் சீர்படுத்திடத் தகுந்த வழிபாடுகளை மேற்கொண்டிட வேண்டும்.

ஸ்ரீஅகத்திய பெருமான்
வேதாரண்யம்

மறையான் மலரடி சரணம்

வேதாரண்யம் (மறையாரண்யம், திருமறைக்காடு) சிவாலயத்தில் உள்ள அற்புதமான தேவபூர்வ விளக்கின் தரிசனம் பெற்று, ஆலயத்தில், கீழே உதிர்ந்து பூமியில் கிடக்கும் வன்னி இலைகளைத் தலையில் வைத்துச் சிவப் பிரசாதமாகப் பக்திப் பூர்வத்துடன் ஏற்றும், (ஆலயத்தில் தல மர இலைகளைப் பறித்தல் கூடாது), அவ்வப்போது இந்த ஆலயத்தில் குறிப்பாக பிரதோஷம், மாத சிவராத்திரி நாட்களில், விநாயகருக்கு ஆனந்தம் தரும் தேங்காய் எண்ணெய், சனீஸ்வர ப்ரீதி தரும் நல்லெண்ணெய், சிவனுக்கு உவப்பான இலுப்பெண்ணெய் சகிதக் கூட்டு எண்ணெயில் விளக்குகளை ஏற்றியும், கைகளில், ஒரு தாம்பாளத்தில் தீபங்களைத் தாங்கி அடிப் பிரதட்சிண வலம் வந்தும்,

அமிர்த சக்திகள் நிறைந்த வெல்லம், சர்க்கரை, தேன், கனிகள், சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்றவற்றைத் தானமாக அளித்தும் வழிபட்டு வர, (அதர்மமான) முறையற்ற பேச்சால் விளைந்த உறவுப் பிளவு, நட்பு முறிவின், பகைமையான விளைவுகள் தணிய உதவும். வாய் வார்த்தைகளின் கடுமையால் பிளவு பட்டு முறிந்து போன உறவுகள், நல்ல நட்புகள் மீண்டும் மலர உதவும் ஆண்டு.

வாய்ச் சொல்லில் அடக்கம், பணிவு மலரவும், வாய் தவறி, அத்து மீறிப் பேசியதால் குடும்பத்தில் விளைந்த கொந்தளிப்புகள் அடங்கி, இல்லறத்தில் சாந்தம் கிளைக்கவும் அருளும் ஆலயங்களுள் ஒன்றே வேதாரண்யம் சிவாலயம் ஆகும்.

ஜோதியிடமிருந்து வந்தமையால் “ஜோதி”டமானது!

2005ம் ஆண்டானது, வாதூல நெறிமுறைகளின் படியான எண் கணிதச் சாத்திர முத்துச் சுடர்ப்படி, ஏழு எனும் (5+2 =7) கூட்டுத் தொகையில் அமைந்து, ஞான சக்திகளை மிகவும் எளிய முறையில் நிரவித் தருகின்றது. ஆனால் இத்தகைய நல்வரப் பலன்களை அடையும் முறைகளையும் கண்டறிந்து கடைபிடித்தால்தாமே மனிதப் பகுத்தறிவுக்கு அழகு!

எனவே இதனை வெறும் எண் கணித ஜோதிட அறிவிப்பு மட்டுமென எண்ணாது, ஆத்ம ஆக்கப் பூர்வமாக, உள்மன ஆய்வுடன், உள்ளொளி துலங்கும் வண்ணம் செயல்படுக!

ஜோதியிடமிருந்து வருவதே புனிதமான ஜோதிடம்! “கடந்தது, கடப்பது, கடக்கவுள்ளது” – ஆகிய கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய மூன்று காலங்களை மட்டுமே ‘ஜோதிடம்’ உள்ளடக்கியது என்றே பலரும் அறியாமையால் எண்ணுகின்றனர். மேலும் “நடக்க இருப்பதையும் ஜோதிடம் உணர்த்த வேண்டும்” – என்ற சுயநலமான ரீதியில்தாம் பலரும் புனிதமான ஜோதிடத்தையும் அணுகின்றனர்.

வீணையின் அருளும் ஸ்ரீஞானசரஸ்வதி
வேதாரண்யம்

ஜோதிடத்தின் மூலாதாரமே, ஆத்ம ஜோதி தரிசன வழிமுறைகளை அளிப்பதாகும். “இது நடக்குமா, அது கிடைக்குமா?” என்று வெறுமனே புடம் பார்ப்பதன்று!

இத்தகைய தவறான அணுகுமுறைகளால் தாம்,

(ஆத்ம விளக்கமே, ஜோதி விளக்காக இடம் கொண்டுள்ள) ஜோதிடத்தின் ஆத்ம ஜோதிப் பரல் தன்மையைப் பலராலும் உணர்ந்து, நன்கு பயன் பெற இயல்வதில்லை! இதுவும் கால மாயையால் வருவதே! கால மாயத்தைக் கடந்தார்க்கே “ஜோதியிடமிருந்து” வந்த ஜோதிடம் ஞான தீபம், கோபூஜா பலன்கள் போன்ற யாவும் புலப்படுத்தப் பெறும்! இதற்கு கேதுரீதி கௌள சக்திகள் பரிணமிக்கும் இந்த ஆண்டு ஞானப் பூர்வமாகவும் உதவும்.

இவ்வாண்டு “ரீதி கௌள” ராகத்தில் நிறையப் பாடல்களைப் பாடி, கேது மூர்த்தியைப் பூஜித்திடுதல் வேண்டும் இதனால் பரவெளியில் மிதக்கும் பகைமை எண்ணக் கிரணங்கள் மாறி, நற்சக்திகளாய் மலர அருள் பிறக்கும்.

பூரண பலன்களை அளிக்கும் “பூமியடி மூர்த்தி வழிபாடு”

“ஏழுப் புறத்தார் எழுப்பும் உரத் தாயம் கோழம்பச் சுரடாலே கீழ்த் துறை ஆவதனால்
ஆழத்துப் பிள்ளையான், ஆழத்தீசருடன் சூழ அருள் பொங்கும் வாழ வழி சொல்வார்!”

என்ற சித்த பரிபாஷைப் பரிபாடலின் படி, இவ்வாண்டில் “பூமியடி(யில்) உறைமூர்த்தி வழிபாடு” – அதாவது தரைக்குக் கீழ், ஆழமான பகுதியில், பாதாளத்தில், அமைந்தருளும் மூர்த்திகளின் வழிபாடு மிகவும் விசேஷமான அருளைப் பெற்றுத் தரும்.

(உதாரணம் – திருஅண்ணாமலை பாதாள லிங்கம், விருத்தாசலம் ஆழத்துப் பிள்ளையார், திருச்சி மலைக் கோட்டை பாதாள அய்யனார், திருச்சி அருகே வாத்தலை கிராமத்தில் உள்ள பாதாள ஈஸ்வரர் போன்ற மூர்த்திகள்!)

குளித்தலை ஸ்ரீகடம்பவனநாதர்

புத்தாண்டு நாளிலும், சப்தமித் திதி தோறும், இவ்வாண்டில், திருச்சி – கரூர் இடையில் உள்ள குளித்தலை ஸ்ரீகடம்பவனநாதர் ஆலயத்தில் வழிபடுதல் விசேஷமானது. மூலத்தானத்தில், மூலவருக்குப் பின்புறம் சப்த கன்னிகையர் தவம் பூணும் காட்சியுடன் உள்ள தலம். இங்கு மூலவருக்கும், சப்த கன்னிகையர்க்கும் சந்தனக் காப்பிட்டு,

சந்தனக் காப்பில் ஏழு வகை தானியங்கள், கனிகள், ஆபரணக் கற்கள் பதித்து வழிபடுதலால்,

கபாலத்தில் உள்ள சப்தரிஷி அட்சர தேவ வாக்கிய நாளங்கள் ஆக்கம் பெற உதவும். இவையே பொய்மையை, பொய்யால் வந்த வினைகளைக் களைய வல்லவை!

மேலும் இவ்வாண்டில், சத்தியப் பாறை, வட்டப் பாறை, சத்தியப் படிகள் உள்ள தலவழிபாடுகளும், தீயவை பேசியதால் வந்த வல்வினைகளைக் களைய மிகவும் உதவிடும். (உதாரணம் – விழுப்புரம் அருகே திருஆமாத்தூர், சென்னை – திருவொற்றியூர், சபரி மலை)

சக்திமிகு சாளரக் கோயில் வழிபாடு

மூலவருக்கு முன் பல துவாரச் சாளரம் உள்ள ஆலயங்களில் சாம்பிராணி தூபப் புகை இட்டு, சாளரம் வழியே தூபப் புகையைத் தரிசித்து, சுவாசித்தலால் மனதை அழுத்தும் மறைமுகக் குற்ற வினைகள் அகல வழி பிறக்கும். (சாளரக் கோயில்கள் – ஆந்திராவில் ராமகிரி, திருவலஞ்சுழிப் பிள்ளையார், காஞ்சீபுரம் அருகே பெருநகர், சென்னை அருகே வியாசர்பாடி, மப்பேடு, திருவேற்காடு போன்றவை!)

இத்தகைய சாளரக் கோயில்களில் தம் புதல்வியுடன் பெற்றோர்கள் ஒரு தாம்பாளத்தில் தீபமேந்தி அடிப் பிரதட்சிணமாக வலம் வந்து வணங்கிட, சுமுகமான முறையில் புதல்வி அடக்கத்துடன் நடந்து கொள்ள உதவும்.

ஞானம் பூரிக்கும் திரவியங்கள்

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
கடம்பவனம்

மிருத்யு தோஷங்கள் தீர உதவும் ஆண்டு இதுவுமே! ஞானகாரகராகிய கேது மூர்த்தி, ஞான வளர்ச்சிக்கானக் கூடுதல் சக்திகளை அளிக்கும் ஆண்டும் கூட! ஞானக் கனிகளாம், வஸ்துக்களாம் நெல்லி, மாம்பழம், முந்திரி போன்றவை கூடிய வழிபாட்டாலும், தேவமொழி மற்றும் தமிழ் மறைத் துதிகள் ஓதுதலாலும் உலக சமுதாயத்தில் மீண்டும் (இறைப்) பகுத்தறிவு நன்கு பிரகாசம் பெறும் ஆண்டு.

நெல்லி மரம் தலமரமாக உள்ள ஆலயங்களில் (கும்பகோணம் அருகே திருநெல்லிக்கா, சென்னை – பூந்தமல்லி அருகே திருமணம் – சித்துக்காடு ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் ஆலயம்) புதன் தோறும் வழிபட்டு நெல்லிக்காய்த் துவையல், நெல்லிப் பச்சடி, நெல்லி ஊறுகாயுடன் அன்னம் படைத்துத் தானமளித்தலால்,

குறைந்த ஆயுளுடன் குடும்பத்தில் இறந்தோருக்கு உள்ள மிருத்யு தோஷங்கள் அகன்று, குடும்பமும் மிருத்யு தோஷங்கள் அண்டாதவாறு பாதுகாக்கப்படவும் உதவும் ஆண்டு இதுவே!

மொழிப் புலம் புலரும் மோகன ஆண்டு!

மொழியில் உள்ள ஞான சக்திகள் வெளிப் புலனாகும் ஆண்டும் இதுவேயாம்! இறைவனின் இரு கண்களாக, அனைத்து உலக மொழிகளின் தாயும், தந்தையுமான தேவமொழியும், தமிழ் மொழியும் ஆன்மப் பூர்வமாக ஜீவ நலன்களுக்குப் பல வகைகளில் உதவிடும் நல்ஆண்டு.

ஆனால் எந்தப் பிற மொழி மீதும் துவேஷம் கொள்தல் கூடாது. மொழிப் பகை உள்மனப் பகையை வளர்க்கும். தன்னையே கொல்லும் சினத்தைச் சார்ந்ததே பிற மொழி மீது வெறுப்பு கொள்தலாகும்.

கலைமகளின் படைப்பே உலக மொழிகள் யாவும்! ஆதிமுதல் மொழியாம் தண்டமிழும், தொல்தேவ மொழியாம் (சமஸ்கிருதம்) அனைத்து மொழிகளின் தாயும், தந்தையுமாம்! அகஸ்தியர் பிரான் தென்னாடுடைய சிவனாருக்குரிய புனிதத் தமிழிலும், மறைமொழியாம் தேவ மொழியிலும் நிறைந்த புலமைதனை ஈஸ்வரனின் திரண்ட அருளாய் கும்பகோணம் இன்னம்பூர்ச் சிவத்தலத்தில் தாமே பெற்றார்!

தலவிருட்சம் வன்னி
வேதாரண்யம்

எனவே, இவ்வாண்டில் அகஸ்தியரின் மூல வடிவு உள்ள ஆலயங்களில் (திருவிடைமருதூர், சென்னை பஞ்சவடி,  கருவளர்ச்சேரி, திருவானைக் கோயில்), அகஸ்தியருக்கு மாதுளம் பழ மாலை சார்த்திப் பூஜித்து வர, பிள்ளைகள் நன்கு பேசிட உதவுவதுடன், வாழ்வில் இதுகாறும் கெட்ட வார்த்தைகளைப் பேசிய நாக்குக் குற்றங்கள் தீரவும், பரிகாரம் பெற வழி பிறக்கும்.

கெட்ட வார்த்தைகளைப் பேசுவதால் உண்டாகும் பலத்த நாக்கு தோஷங்கள்தாம் இறுதிக் காலத்தில் உடலையும், நாக்கையும் பிறட்டிப் புரட்டும் என்பதால், இவ்வாழ்விற்குள் வாக்கு தோஷங்கள், நாக்கு தோஷங்களை அகற்றிடத் தக்க வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.

ஏழிற் பிறந்து, எழிலான நல்ஞான சக்திகளை நல்கும் கேது மூர்த்திக்கு, பல வண்ண வஸ்திரம் சார்த்துதல் , பல நிற உணவுப் படைப்பு, பல்வண்ண வாண வேடிக்கைகள் (இதுவும் அக்னி வகை வழிபாடே) போன்ற வகையான பல்வண்ண வழிபாட்டு முறைகளைக் கொண்டு, ஆண்டு முழுதும் ஆராதித்து வர வேண்டும்.

கேது மூர்த்திக்கு மிகவும் ப்ரீதியான பல வண்ணங்களாலான பொருட்களையும், திரவியங்களையும் கொண்டு அபிஷேக, ஆராதனைகளை, பூஜைகளை ஆற்றி வந்திடுதலால், பிள்ளைகளின் கல்வி சம்பந்தமான பல குழப்பங்கள் தீரவும் உதவும் ஆண்டு இதுவே!

மேலும், ஞானானந்தமய ஸ்ரீஹயக்ரீவர், ஸ்ரீஞானசரஸ்வதி, ஸ்ரீஞானாம்பிகை, ஸ்ரீஞானேஸ்வரர் போன்ற ஞானசக்திகளைப் பொழியும் மூர்த்திகளுக்கான பூஜைகள், யாகம், ஹோமம், அபிஷேக, ஆராதனைகள், யோகம், தியானம், ஜபம், நாமசங்கீர்த்தனம் என்று பலவிதமான வழிபாடுகளை ஞானப் பூர்வமாக இவ்வருடத்தில் கடைபிடித்திடுதல் பிள்ளைகளுக்கு நல்அறிவை ஆக்கப் பூர்வமாக மேம்படுத்தும்.

திருஆமாத்தூர்

முந்திரி, சிறு திராட்சை (கிஸ்முஸ் பழம்), பாதாம் பருப்பு, பிரண்டை, கருவேப்பிலை, வெண்டைக்காய் போன்ற ஞானவகை உணவுப் பண்ட அன்னதானம், முதியோர்களுக்கான இலவச மருத்துவ உதவி, முதியோருக்கான சரீர சேவை போன்றவற்றிலும் பல்வகை ஞான சக்திகள் திரளும். இவ்வாண்டில் ஞானப் பூர்வமான வழிபாட்டு முறைகளைக் கடைபிடித்து, பலவிதமாக உடல், மனம், உள்ளம் அனைத்தும் ஒருங்கிணைந்த உடற்சேவை வழிபாடுகளையும், தனியாகவும் கூட்டாகவும் நிறைவேற்ற வேண்டும்.

ஞானம் கொழிக்கும் தர்பை மூலிகை!

தர்பை ஞானமயமானது எளிமையான முறையில் ஞான சக்திகள் பலவற்றைப் பெற்றுத் தருவது, இவ்வாண்டில், வாழ்வின் பல கட்டங்களிலும் தர்பைப் பாய், தர்பை மோதிரம் (பவித்திரம்), தியான அமர்வுப் பாய் என்று பல்வகைகளிலும் பயன்படுத்தி வர வேண்டும். ஒவ்வொரு பூஜையிலும் தர்பையை நன்கு ஆக்கப் பூர்வமாக பயன்படுத்திட வேண்டும்.

இறைவனுக்கு வெறுமனே வணக்கம் அல்லது வீழ்ந்து நமஸ்கரித்தல், மட்டுமல்லாது அனைத்து விதமான ஞானமார்க உபசாரங்களைச் செய்து பூஜித்து வரவேண்டும். உதாரணமாக, ஆசமனம், கரந்யாசம், கும்ப பூஜை, நைவேத்யம், தூபம், தீபம், அர்ச்சனை போன்ற பலவிதமான உபசாரங்களுடன் பூஜைகளை நிகழ்த்தி இறைவனை வழிபடுதல் வேண்டும்.

இவ்வகையில் உடல் அவயங்கள் ஞானரீதியாக ஒருமுகப்படுத்தப் பெறும், இவையாவும் புலஞானமார்கப் பிரயோக முறைகள் ஆகும். இவை இவ்வாண்டில் சிறப்பிடம் பெறுகின்றன.

ஞானமார்கம் என்பது பூர்வ ஜன்மப் புண்ய வசத்தால் அமைவது, மிகவும் கடினமானது, புலஞானமார்கம் என்பது எளிமையான முறையில் பாமரரும் ஞானசக்திகளை அடைய உதவுவதாகும்.

ஞானப்பழ விநாயகர் “ஜெய சக்கர சாந்தி விநாயகர்” – அட்டைப் பட விளக்கம்

இத்தகைய ஞானமார்கப் பூஜை முறையகளை அறியாதோரும் தக்க வகையில் ஞானம் பெற்றிடவே புலஞானமார்கத்தில் அமைந்த எளிமையான வழிபாட்டு முறைகளைச் சித்தர்கள் நமக்கு அளித்துள்ளார்கள்.

அதாவது கேதுகாரக சக்திகள் பரிமளிக்கும் திரவியங்கள், பொருட்களை வைத்துக் கொண்டு செய்யும் வழிபாடும் புலஞானமார்க வழிபாடாகும். கேது மூர்த்தி வழிபடும் “ஜெய சக்கர சாந்தி விநாயகர்” இப்பலாபலன்களை லகுவில் அளிக்கின்றார்.

ஞானப் பழம் என்று நாம் கேள்விப்பட்டுள்ளோம் அல்லவா! பகுத்தறிவு முதிர்ச்சியே ஞானம்! அறிவிலும், ஞானத்திலும் முதிர்ச்சி அடைந்தோரை ஞானப் பழம் என்று அழைக்கிறோம். இவ்வருடத்தில் பலவிதமான ஞானசக்திகள் நிறைந்த பழங்களை வைத்துக் கனி வகைப் பூஜைகளை ஆற்றுவது சிறப்பானதாகும்.

வருடத்தின் 365 நாட்களிலும் தினமும் ஜெய சக்கர சாந்தி பிள்ளையாருக்கு கனியைப் படைத்து வழிபடுதல் என்பதை இவ்வாண்டில் வைராக்கியமாக ஏற்றுச் செயல்படுத்திடுக! இது பிள்ளைகளை நல்வழிப்படுத்த உதவும். கனிகளை “ஓம்” என்ற வடிவிலோ, பிள்ளையார் சுழி வடிவிலோ வைத்துக் கனிகளையே ஞான ஓங்காரப் பூர்வமாக, ஞானப் பழமாக பாவனை செய்து பூஜிக்க செய்ய வேண்டும்.

ஸ்ரீஅகத்திய பெருமான்
பஞ்சேஷ்டி

உதாரணமாக, ஞாயிறு அன்று ஆரஞ்சு, திங்கள் அன்று வெள்ளரிப் பழம், செவ்வாயன்று ஆப்பிள், செவ்வாழை, புதன்கிழமையன்று பச்சை வண்ண திராட்சை, வாழைப் பழம், வியாழனன்று மஞ்சள் நிற வாழைப் பழம், வெள்ளியன்று பன்னீர் திராட்சை, தேங்காய், சனியன்று கருப்பு திராட்சை போன்ற அந்தந்த நாளுக்குரித்தான நவகிரக மூர்த்திகளைப் ப்ரீதி செய்யும் கனிகளை வைத்து ஞான ஓங்கார வழிபாடுகளை நிறைவேற்றிட வேண்டும்.

ஏமாறுதல் வேண்டாம்!

இந்த 2005ம் ஆண்டில், பேராசை பெருகும் ஆதலின், பிறரால் ஏமாற்றப் பெறும் சம்பவங்கள் நடப்பதற்கு அதிக வாய்ப்புகள் ஏற்படும். மிக, மிக கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, சிட்பண்ட் (chit fund) சம்பந்தமான நடவடிக்கைகளிலும், ரியல் எஸ்டேட் (Real Estate) கட்டிடத் தொழிலிலும் பலரும் மிகுந்த ஏமாற்றங்களை அடைய நேரிடும். பணத்தை வாங்கிக் கொண்டு கட்டிடத்தைக் கட்டாமல், காலம் தாழ்த்துதலால் ஏற்படும் இடையூறுகள், பலத்த வட்டி முதலிய நஷ்டங்களால் ஏற்பட இருக்கும் இன்னல்களைப் பற்றி ஆரம்பம் முதலே மிகவும் ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும்.

மீன் பிடிப்புத் தொழிலில் பல துன்பங்கள் இவ்வாண்டில் ஏற்படச் சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு, மணமேல்குடி ஸ்ரீஆதிகேசவப் பெருமாளை பூஜித்து இத்துறையினர் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்.

கடல் வளக் குறைவால் இவ்வாண்டு பலரும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, கடலோரம் வீற்றிருக்கும் பெருமாள் மூர்த்திகளை வழிபட்டு வர வேண்டும். முக்கியமாக, மணமேல்குடி ஸ்ரீஆதிகேசவப் பெருமாள், சென்னை மாமல்லபுரம் ஸ்ரீதலசயனப் பெருமாள், ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடம் ஏகாந்தப் பெருமாள், ராமேஸ்வரம் பெருமாளையும் வணங்கி வர வேண்டும்.

மீன் பிடிப்புத் தொழிலில் உள்ளோர் நலன்களுக்காக, வசதியற்ற ஏழை மீனவர்களை மணமேல்குடி ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்கு அழைத்துச் சென்று வழிபட வைப்பதும் இவ்வருடத்தின் சிறந்த இறைத் தொண்டுகளில் ஒன்றாகும்.

கடல் நீரைத் தவறான முறைகளில் பயன்படுத்துவதால் கடல் தேவதைகள் சினம் கொண்டு சாபங்களை அளிக்கின்றன. இதனால், இவ்வாண்டு கடல் வளம் மிகவும் குறையும், கடல் சம்பந்தப்பட்ட தொழில்களிலும் வளக் குறைவு ஏற்படும். உதாரணமாக, கப்பல்கள் மூலமாகச் செய்யும் ஏற்றுமதி, இறக்குமதி வாணிகம் பெரிதும் பாதிப்படையும். இதற்கும் மணமேல்குடி ஸ்ரீஆதிகேசவப் பெருமாளைப் பூஜித்துத் துன்பங்களை ஓரளவேனும் தணித்து நன்னிலை பெறுதல் வேண்டும்.

ஸ்ரீஞானாம்பாள் திருச்சேறை

கம்ப்யூட்டர் துறையில் மென்மேலும் சிறப்பான முன்னேற்ற வளம் ஏற்படும். ஆனால், இத்துறையின் முன்னேற்றக் கண்டுபிடிப்புகள் மிகவும் தவறான முறையில் பயன்படுத்தப்படும் ஆதலின் பெருத்த குழப்பங்கள் ஏற்படும். இத்துறையில் வேலைக்காக வெளிநாடு செல்பவர்கள் அடிமை போல நடத்தப்படுவார்கள். இவர்கள், தாங்கள் செல்லும் அயல் நாடுகளில் அதிபயங்கரமான விஷயங்களை, சம்பவங்களைச் சந்திக்க நேரிடும். தேனிமலையில் செவ்வாய் தோறும் கிரிவலம் வந்து முருகனை 24 விதமான அபிஷேக, ஆராதனைகளுடன் வழிபடுதலால் நன்முறையில் கம்ப்யூட்டர் துறையினர் மேன்மை பெறுவர்.

இவ்வாண்டில் வாகனங்கள் நிறையப் பெருகுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் “பழைய வாகனங்களை மாற்றிப் புதிதாக அளித்தல் என்ற திட்டம் மூலமாக, மக்கள் பெரும் நஷ்டத்திற்கே ஆளாவார்கள். வாகனங்கள் வாங்குதல், விற்றலில் பலத்த நஷ்டங்கள் ஏமாறுதல் ஏற்பட சந்தர்ப்பம் உண்டு.

பெண் குலத்திற்கு ஆடைகளால் நிறைய ஆபத்துகள் நேரிடும். உதாரணமாக வண்டியில் ஆடைகள் சிக்கிக் கொண்டோ அல்லது ஆடைகள் தீப்பிடித்தோ விபத்துகள் நேரிடலாம். இறுக்கமான ஆடைகளால் பல தோல் நோய்கள் ஏற்படும் சப்தமாதர்களுக்குச் செவ்வாய் தோறும் புத்தாடை சார்த்தி வழிபட்டு வருதல் வேண்டும்.

இவ்வருடத்தில் காம வகைக் குற்றங்கள் அதிகரிக்கும். பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கீழ்க்கண்ட மந்திரத்தை எப்போதும் ஓதி வந்து பெண்கள் ரட்சா சக்திகளை நன்கு விருத்தி செய்து கொள்ள வேண்டும்.

ஸவா ஏஷா மஹானஜ
ஆத்மாஜரோமரோ
அம்ருதோபயோ ப்ரம்மாபயம் வை
ப்ரம்மாபயம் ஹி
வை பிரம்ம பவதி ய ஏவம் வேத||

தமிழ் மந்திரம்

ஆத்மம் பெரிதே பெரிதே ஆத்மம்
பிறப்பும் மூப்பும் பெயர்ந்தறியாதே
அழிவும் இறப்பும் அலர்ந்தறியாதே
இல்லை பயமே பயமே இல்லை
பிரம்மம் முன் வர பயமே இல்லை
இல்லை இல்லை இல்லவே இல்லை
பயமொழி பரமே பரபரபிரம்மம்
பிரம்மம் பிரம்மம் எல்லாம் பிரம்மம்||

தர்பை திருமழபாடி

பலவிதங்களில் இவ்வாண்டில் ஏமாறுதல்களால் ஏற்படும் பெரும் நஷ்டங்களை ஓரளவேனும் குறைப்பதற்குச் சில எளிய அருள்வழிகளை சித்தர்கள் அருளியுள்ளார்கள். மிருதுள மணிகங்கண், தீனக் காப்பு பொன் மோதிரம், கழுத்தில் காஞ்சன மாலை, கடுக்கன், ஸ்திர கங்கண் போன்ற ரட்சா சக்தி சாதனங்களை எப்போதும் அணிந்து இருப்பதால் காப்புச் சக்திகள் பெருகி, எதிர்வரும் ஏமாற்றத் தீய சக்திகளிடமிருந்து நிவாரணம் கிடைக்கும்.

வாகனத்தினால் வரும் நஷ்டங்களிலிருந்து ஓரளவு நிவர்த்தி பெற இவ்வாண்டில் வாகனத்தோடு காட்சி தரும் மூர்த்திகளை வணங்க வேண்டும். (ஸ்ரீபைரவர், ஸ்ரீமுருகர்) மேலும், பைரவரின் வாகனமாகிய நாய், பைரவருக்கு இடது பக்கம் அமைந்திருக்கும் பைரவ மூர்த்திகளை வழிபடுவது இவ்வாண்டிற்காக சித்தர்கள் அருள்கின்ற வாகனக் காப்பு வழிபாடு ஆகும்.

அயல்நாடுகளில் விஷமாய்ப் பரவி வரும் சகபோக காமக் குற்றங்களில் சிக்காது நன்முறையில் வாழ்ந்திட, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஸ்ரீகாமகலாகாமேஸ்வரி அன்னையைப் பலவிதமான பூஜை முறைகளால் மனமுருகி, கண்ணீர் மல்கி, மன்றாடி வழிபட்டு வர வேண்டும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சம்பந்தமான துன்பங்களைக் களைய உதவும் ஆதிபராசக்தி அம்சம். ஸ்ரீலோபாமாதா சமேதராய் ஸ்ரீஅகஸ்தியர் வழிபட்ட பராசக்தி அம்சம்!

கம்ப்யூட்டர் துறையில் பணி ஆற்றுபவர்கள் தினமும் தலைக்கும், உடலுக்கும் எண்ணெய் தேய்த்து நீராட வேண்டும். இதில் அருகம்புல் தைலத்தைத் தேங்காய் எண்ணெயுடன் கலந்து உபயோகிப்பது மிகவும் சிறந்தது. நல்லெண்ணெயையும் பயன்படுத்தலாம்.

ஸ்ரீஏகாந்தராமர் தங்கச்சிமடம்

இவ்வருடம் ஆடை மூலம் தொற்றும் தோல் நோய்கள் அதிகரிக்கும். எனவே பருத்தி ஆடைகள், புடவை, தாவணி வகை ஆடைகளைப் பெண் குலத்தார் அணிதலே நன்று. இவை ஆன்மீக ரீதியாகவும் நன்மைகளைத் தந்து ரட்சா சக்திகளையும் அளிப்பதாகும். தோல் சம்பந்தமான வியாதிகளுக்கு நிவாரணம் பெற ஸ்ரீதிருமேனி நாதர், ஸ்ரீதிருமூலநாதர், ஸ்ரீகுங்குமாம்பிகை, ஸ்ரீகுங்குமவல்லி வழிபாடு விசேஷமானது. (பூவாளூர், உமையாள்புரம், காவேரிப்பாக்கம்)

இவ்வருடத்தில் அழகுக் கலைத் துறையில் (Cosmetics, Cosmetology) புதிதாக ஈடுபாடுகள் தோன்றும். ஆனால், இத்துறையில் உள்ளவர்கள் ஆன்மீகத்திற்கு விரோதமான காரியங்களில் ஈடுபடக் கூடாது. உதாரணமாக, புருவத்தைச் சிரைத்தல், பெண்களின் நெற்றி முன் முடியைக் கத்தரித்தல் போன்றவை மிகவும் பாவகரமானவையே. இவ்வாறு செய்தல் கணவனின் ஆயுளைக் குறைப்பதோடு, உடல் ஒழுக்கப் பிரச்னைகளையும் ஏற்படுத்தும். கணவனுக்குக் கபால சம்பந்தமான நோய்களையும் உண்டாக்கும்.

இந்த வருடத்தில் பிருத்வி (மண்) சம்பந்தமான வழிபாட்டு முறைகளை நிறைய மேற்கொண்டு, குடும்பத்தைப் பல தலைமுறைகளாகத் தொற்றி வரும் துன்பங்களுக்குத் தீர்வு கண்டிடலாம்.

இவ்வாண்டில், புற்று மண் லிங்க வழிபாடும் மிகவும் சிறப்புடையது. (உதாரணம் – சென்னை அருகே கூவம் ஸ்ரீதிரிபுராந்தக மூர்த்தி, திருச்சி – திருவெறும்பூர் ஸ்ரீஎறும்பீஸ்வரர், கும்பகோணம் ஸ்ரீகும்பேஸ்வரர், திருபுன்கூர் ஸ்ரீசிவலோகநாதர்)

இவ்வருடத்தில் மிருத்திகா (மண்) பூஜைகளையும் கடைபிடித்தலால் முன்னோர்கள் நன்னிலை பெற உதவும். பித்ரு சாபங்களில் இருந்து மீள உதவும். புண்ணியத் தலங்களிலிருந்தும், புண்ணியத் தீர்த்தங்களிலிருந்தும் சிறிதளவு மண்ணைக் கொண்டு வந்து பசுவின் குளம்படி மண்ணுடன் சேர்த்து வாழை இலையிலோ, தாமரை இலையிலோ, மந்தார இலையிலோ, புரச இலையிலோ, வெற்றிலையிலோ வைத்து, குழந்தைகளின் மோதிர விரலால் “ஓம்” என்று எழுதி இம்மண்ணைப் பூஜித்தலும் மிருத்திகா பூஜையே! மிகவும் எளிமையான பூஜை! குழந்தைகளுக்கு மூதாதையர்களின் ஆசிகளைப் பெற்றுத் தரும் எளிய பூஜை! வருட முடிவில் இந்த மணலை எல்லாம் சேர்த்து நல்ல ஆற்றில் சேர்த்து விட வேண்டும்.

ஸ்ரீகுங்கும சௌந்தரி அம்மன்
பூவாளூர்

இவ்வாறாக, 2005ம் ஆண்டிற்காக சித்தர்கள் வழங்கும் வழிபாட்டு முறைகளை நாம் அனைவரும் தீவிரமாகக் கடைபிடித்து, நல் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்பதே உத்தமப் பெரியோர்களின் ஆசியுரை ஆகும்.

சர்வ ஜீவநலம் பேணும் காருண்யத் தர்ப்பணம் அளிப்பீர்!

2004ஆம் ஆண்டிற்கான, “புத்தாண்டு” ஆன்மீக விளக்கங்களில், “ஜீவன்களின் கூட்டுக் கர்மமானது, ஜீவன்களை கூட்டாகத் துன்புறுதல் அல்லது மடிதல்” – போன்ற வகையான பலத்த கர்மவினை அழுத்தத்தை உலகச் சமுதாயத்தில் ஏற்படுத்துமென சித்தர்களின் ஆதி கிரந்தப் பூர்வமாக விளக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டில், கூட்டாக ஒன்று திரண்டு மடிந்தவர்களின் ஆன்ம நலத்திற்கெனவும், உலகச் சமுதாய நலவளத்திற்குமாக இவ்வாண்டு முதலேனும், ஜாதி, மத பேதமின்றி யாவர்க்கும் சென்றடையும் வண்ணம் காருண்யத் தர்ப்பணம் அளித்திடுக! தாய், தந்தை வர்கத்திற்கு மட்டுமன்றி, தியாகமயமாய்ப் பிறர் நலம் பேணி அளிப்பதே காருண்யத் தர்ப்பணமன்றோ!

இதற்காக, 2005ம் ஆண்டின் வியதீபாத யோக நாட்களில், தாமரை இலையில் தர்பைச் சட்டம் அமைத்துத் தர்ப்பண வழிபாடுகளை ஆற்றிடுக! தாமரை இலையில் யோக சக்திகள் திரண்டுள்ளன. 27 நட்சத்திரங்கள் போன்று அமைந்துள்ள 27 வகை யோகங்களுள் வியதீபாதமும், வைதிருதியும் 96 வகைத் தர்ப்பண நாள் வகைகளில் அமைகின்றன.

ஜாதி, மத பேதங் கருதாது, சகல உலக ஜீவன்களின் நலன்களுக்காக ஆற்றப் பெறும் உத்தம இறைப் பணிகளுள் ஒன்றாகவும், ஸ்ரீவரத தீர்கவளி வாரி சேவையாகவும், வியதீபாத யோக நாளிலமையும் இக்காருண்யத் தர்ப்பணம் அமைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ஒழுக்கம் பெற நீடூரப்பன் துணை!

மயிலாடுதுறை அருகே உள்ள நீடூர் ஸ்ரீஅபயப்ரதாம்பிகை சமேத ஸ்ரீசோமநாதேஸ்வரர் சிவாலயத்தில் தேய்பிறைச் சதுர்த்தி நாளாகிய சங்கடஹரச் சதுர்த்தி நாளில் ஸ்ரீசிவலோக கணபதி, ஸ்ரீசெல்வகணபதி, ஸ்ரீசிந்தாமணி கணபதி, ஸ்ரீசின்மயானந்த கணபதி ஆகிய நான்கு கணபதி மூர்த்த வழிபாடுகளையும் ஆற்றி வருவோர்க்கு, நன்முறையில் ஆன்மீக சாதனங்களைப் பயின்றிடவும்., தீய பழக்கங்களைக் கைவிடவும், மனம் திருந்தி நல்ஒழுக்கம் அடைந்து, இல்லறத்தோடு இணைந்த இறைவழியில் துய்க்கவும் உதவும். எனவே இங்கு காணப் பெறுவதை,

சர்வ லோக சர்வ ஜீவசக்திப் பரிபாலன வழிமுறையாகவும், சுத்த சித்தப் பூர்வ கர்ம பரிபாலன சேவா வாக்கியங்களெனவும் – நன்கு அறிந்து, உணர்ந்து தக்க வழிபாடுகளைக் கடைபிடித்திடுக! சமுதாயத்தில் பிறரும் நன்றாக வாழ்ந்தால்தான் நம் வாழ்வும் சிறக்கும் என்பதை உணர்ந்து, உலக ஜீவ நற்கர்ம பரிபாலனத்திற்கு ஏற்ற வகையில் செயல்படுக!

குருவாய்மொழி என அறிவீர்!

சாலங்க்ருத சாசுவத காலாட்சர சக்தி முறைகளின்படி சித்தர்களால் அளிக்கப் பெறும் குருமொழி வழிகாட்டு வாக்கியங்களே இவையாவும்! மிகவும் சக்தி வாய்ந்த ஜீவ கர்ம பரிபாலன நியதிகளின்படி, அனைத்து ஜீவன்களின் நலம் பேணும் சத்குருவின் மூல மொழிகளாகவும் அளிக்கப் பெறுவதாகும்.

பல ஆன்மீக அனுபூதிகளை நல்கும் இத்தகைய அரிய சந்தர்ப்பங்களை இனியேனும் வாழ்வில் விட்டு விடாது. இவ்வகையிலான குருவாய் மொழி ஆன்ம சாதனங்களை நன்கு பயன்படுத்திக் கொண்டிடுக! பிறருக்கும் உணர்த்திடுக!

நந்தனாருக்கருளிய நடேசன்!

உண்மையில் இவற்றை மறந்திடாது ஆழ்ந்த நம்பிக்கையுடன் குறித்த நாளில் விட்டு விடாது கடைபிடிக்கவும், பரியாலப் புண்ய சக்திகள் நிரம்பத் தேவையே! இதனைப் பெற்றிட, உள்ளம், மனம், உடலை ஊக்குவிக்க வல்லதான புண்ய சக்திகளைப் பெற்றிட, திருப்புன்கூர் ஸ்ரீசிவலோகநாதர் ஆலயத்தின் கணபதித் தீர்த்த சக்திகளும், சிவலிங்க வழிபாடும் இவ்வாண்டில் மிகவும் முக்கியமானதாகும்.

மாயூரம் – வைத்தீஸ்வரர் கோயில் அருகே உள்ள திருப்புன்கூரில்தாம் திருநாளைப் போவார் நாயனாராகிய நந்தனாருக்கென விசேஷமாகக் காட்சி தந்திட, ஈஸ்வரனே “சற்றே விலகி இரும் பிள்ளாய்!” என உரைத்து நந்தீஸ்வரரைச் சற்று நகர வைத்துத் தாமே தரிசனம் தந்த திருத்தலம் என அறிவீர்களன்றோ!

வாக்குக் குற்றங்கள் களையப்படுவதாக!

சித்தர்களின் சாங்கியப்படி, இவ்வாண்டில் வாக்குக் குற்றங்கள் மிகுதியாக வந்து சேருமாதலின், மக்கள் விழிப்புடன் இருந்து, தங்கள் வாய்ப் பேச்சை நன்கு கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இறை நாமங்களை, மறைத் துதிகளை ஓதுதல் வாய் வார்த்தைகளை, வாயால் இதுகாறும் உரைத்ததைத் தூய்மையாக்க உதவும் சாதனங்களாகும்.

வாக்குச் சாபங்கள், உண்மையை மதியாததால் வரும் தோஷங்கள், பொய்மையால் வரும் தீமைகள் 2005ம் ஆண்டில் பெருகலாகும் இவற்றைக் களைய வல்ல வழிபாடுகளுள் ஒன்றே வேதாரண்யம் (திருமறைக்காடு) ஸ்ரீயாழைப் பழித்த மொழியம்மை உடனுறை ஸ்ரீவேதாரண்யேஸ்வரர்.

ஸ்ரீயாழைப் பழித்த மொழியம்மை
வேதாரண்யம்

சுவாதி நட்சத்திர பூஜை

நல்ல கணவனை அடைய உதவும் மங்கள சக்தி பூஜை! கணவன் திருந்தி நற்பண்புகளுடன் சிறப்படைய உதவும் பூஜை! சுவாதி நட்சத்திர லிங்க பூஜை!

27 நட்சத்திரங்களில் பதினைந்தாவது நட்சத்திரமாகிய சுவாதி, அற்புதமான சுபமுகூர்த்த நட்சத்திரங்களுள் ஒன்றாகும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனைத்து வகை ஜாதகப் பொருத்தங்களைப் பார்ப்பதிலிருந்து, சில விதிவிலக்குகளை ஜாதக ரீதியாகவே ஜோதிட வழக்கில் அளித்துள்ளனர் என்பது இதன் சுபமங்கள சக்திகளை நன்கு உரைக்கின்றது.

கிரகப் பிரவேசம், திருமணம், சீமந்தம் போன்ற சுபகாரியங்களுக்கு அனுஷ நட்சத்திரத்தைப் போல் சுவாதியும் ஒரு மிகச் சிறந்த முகூர்த்த நட்சத்திரமாகும்.

நற்குடும்பம் அமைய வேண்டுவதும் உத்தமப் பிரார்த்தனையே!

ஒரு நல்ல கணவனை அடைய, கன்னிப் பெண்கள், பன்னிரண்டாவது வயதிலிருந்தே சக்தி வாய்ந்த பூஜை முறைகளைக் கடைபிடித்து, உத்தமமான ஆத்ம சிந்தனைகளை விருத்தி செய்திடப் பெற்றோர்கள் துணை புரிய வேண்டும். நல்ல கணவனைப் பெற வேண்டும் என்று வேண்டுதல் சுயநலமாகாதா எனக் கேட்டிடலாம்! தெய்வீக ரீதியான குடும்பத்தை அமைத்துத் தருவதும் சமுதாய வாழ்வை மேம்படுத்தும் தியாகமய இறைச் சமுதாயப் பணி என்பதால் தெய்வப் பக்தியுடன் கூடிய நற்கணவனை அடையவும் இறைவனை வேண்டுதல் நன்றே!

ஆனால், அயல்நாட்டில் பணி புரிபவர், உயர் பதவியில் உள்ளவர், பணக்காரக் குடும்பத்தவர் கணவராக வர வேண்டும் என்று எண்ணுவதே பேராசையாகும். இவ்வாறு வேண்டுவதை விட நல்ல தெய்வ பக்தி உள்ளவர் கணவனாக அமைதல் வேண்டும் என்று பிரார்த்திப்பதும் உத்தமப் பிரார்த்தனையே! கடவுள் நம்பிக்கை மட்டுமே பக்தி என்று எண்ணாதீர்கள்! கடவுள் நம்பிக்கை நன்கு விருத்தியாகி, விருத்தியாகிக் கனியும் நிலையே பக்தி ஆகும். கடவுள் பக்தி என்றாலே எங்கே துறவு நிலைக்குப் போய் விடுவாரோ என்று பலரும் அஞ்சுவர். தேவையற்ற அச்சமிது!

சித்துக்காடு

கலியுகத்தில் இல்லற தர்மமமே சிறப்பான பக்தி நிலையைத் தரும் என்பது சித்தர்கள், மஹரிஷிகளின் அருளுரை ஆகும். மேலும் நிறையக் குழந்தைகளுடன் குடும்பம் தழைக்க வேண்டும் என்பதே ஆன்மீக நெறி! செயற்கை ரீதியான குடும்பக் கட்டுப்பாட்டை ஆன்மீகம் ஏற்பதில்லை!

சுயநலமாக அன்றி நன்முறையில் பிரார்த்தனைகள் அமைந்திடவும். திருமண வாழ்வு நன்கு அமைவதற்கும் துளசி கல்யாண விரதம், மங்கள கௌரீ விரதம், கேதார கௌரீ விரதம், சுவாதி நட்சத்திர லிங்க பூஜை போன்றவற்றைப் பெரியோர்கள் தந்துள்ளனர். இவற்றை முறையாகக் கடைபிடித்து வர, பல வகையான தோஷங்களும் தாமாகவே களையப் பெற்று, நல்ல வரன் கிட்டி மிகச் சிறந்த திருமண வாழ்வு மங்களகரமாக அமையும்.

நன்கு வசதி உள்ள வரன் வேண்டும், பணக்காரச் சம்பந்தம் வேண்டும் என்று பேராசையுடன் நாடினால் அதற்கான விளைவுகளை அனுபவித்தே தீர வேண்டும். கலியுகப் பெண்களுக்கு இக்காலத்தில் பல குடும்பங்களில் எழுகின்ற பணக் கஷ்டங்கள், நோய்த் துன்பங்கள், ஆண்களுடைய தீய பழக்கங்கள் இவற்றைப் பார்த்துப் பார்த்துப் பல விருப்பங்களை தங்களுக்குள் கனாத் துறையாக வளர்த்துக் கொள்வது இயல்பே! பெற்றோர்களே இதனை நன்கு முறைப்படுத்துதல் வேண்டும். பெற்றோர்களே ராகு கால ஸ்ரீதுர்க்கை பூஜை போன்றவற்றைக் கடைபிடிக்காவிடில் என் செய்வது?

தற்காலத்தில் பிள்ளைகளே நிறைய பூஜைகளை ஆற்றி

– புகைபிடித்தல், புகையிலை, மது போன்ற தீயவழக்கங்களுக்கு ஆட்பட்டு – தர்ப்பணம், விரதங்களை மறந்து வாழும் தந்தையையும்

- பூஜைகளை ஆற்றாது நாவல் படித்தல், சங்கம், அழகுக் கலைப் பயிற்சி எனப் பயனற்ற துறைகளில் நேரத்தைக் கடத்தும் தாயையும்

காப்பதற்கு திருத்திட வேண்டிய கடமைக்கு ஆட்பட்டிருப்பது வேதனைக்குரியதே!

பெண்கள் தங்களுடைய திருமண வாழ்க்கையை நன்முறையில் அமைத்துக் கொள்வதற்கு, சிறு வயதில் இருந்தே சிறந்த பதிவிரதைகளின் புராணங்களைப் படித்து, கேட்டு அறிந்து, உத்தம மஹரிஷிகளின், மாதரசிகளின், பூஜை முறைகளை நடைமுறையில் கடைபிடித்து வந்தால் புனிதமான திருமண வாழ்க்கை அமையும்.

கணவனுக்கான லட்சணங்கள்

ஒரு யுகத்தில், ஒரு மாதரசி தன் சிறு வயதில், சுக்ருதி என்ற மகரிஷியைத் தன் பெற்றோர்களுடன் தரிசித்தாள். அவளுடைய பெற்றோர்கள் அவளுக்கு நல்லதொரு கணவன் அமைய வேண்டுமென்று மாமுனியிடம் நல்வரம் வேண்டினர். அம்மகரிஷியோ அச்சிறுமியிடமே, எந்த விதத்தில் அவளுடைய கணவன் அமைய வேண்டுமென்று கேட்டார். இதைக் கண்டு, அச்சிறுமியின் பெற்றோர்கள் முதலில் திகைத்த போது, அம்மாமுனி, “உங்கள் புதல்வி உத்தம தெய்வீக நிலைகளை அடைந்துள்ளாள்! பூர்வ ஜன்மங்களை நன்கறிந்த பக்குவம் பூண்டவள்!” என்று எடுத்துரைத்தார்.

எவ்வகைச் சொத்திற்கும் ஆசைப்படாதவராக, வாழ்வில் எந்தப் பழியையும் தாங்கிக் கொள்ளும் மனப்பான்மை உடையவராக, பேராசை அற்றவராக, கர்வம், அகங்காரம், ஆணவம் இவற்றின் மாயைப் பிடிக்கு ஆளாகதவராகத் –தன் கணவன் இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டாள்.

மேலும், சொத்து என்ற ஒன்று அவரை நம்பி அளிக்கப்பட்டால், அதை எப்போதும் திருப்பி அளிக்கச் சித்தமுள்ளவராகவும், அதனை உரியவரிடம், தார்மீக ரீதியாக ஒப்படைப்பவராகவும் தன் கண்வன் இருக்க வேண்டும் என்றும் அச்சிறுமி கேட்டுக் கொண்டாள்.

சுபமங்கள மணவாழ்வைத் தரும் சுலமாட்டு நட்சத்திர தரிசனம்!

சுக்ருதி மகரிஷி தன்னுடைய ஞானதீர்க தரிசனத்தால், வருங்காலத்தில் அவளுக்கு நடக்க இருப்பதை அறிந்து, “நீ என்னே தீர்க்க தரிசனம் நிறைந்தவள்!” என்று கூறி அதிசயித்தார். மேலும், அச்சிறு பெண் மகத்தான நட்சத்திர மந்திர உபதேசத்திற்கு உரியவள் என்று பூர்வ ஜன்மப் புண்ய பலனாக அறிந்து, அவளுக்கு “சுலமாட்டு நட்சத்திரம்” என்ற பெயருடைய அரிய நட்சத்திரத்தை வானிலே தரிசனம் செய்து காட்டி, அதைத் தினந்தோறும் தரிசித்து வருமாறு ஞான உரை தந்தார். சுலமாட்டு நட்சத்திர தரிசனத்திற்கு உரிய மந்திரத்தையும் உபதேசித்தார்.

மேலும், சுலமாட்டு தரிசனப் பலன்களைப் பூரணித்துத் தருவதற்காக, அச்சிறுமிக்குத் தினமும் சுவாதி நட்சத்திர லிங்க பூஜை செய்து வழிபட்டு வரவும் அருளாணை இட்டார். இதனால் தெய்வப் பண்புத் தன்மையானவனும், பேராசைப் படாதவனும், மூத்த சகோதரனையே தெய்வமாக வணங்குபவனுமாகிய உத்தமப் புருஷனே கணவனாய் அமைவான் என்றும் அருளினார்.

“சுலமாட்டு நட்சத்திரம்” என்பதானது அருந்ததி நட்சத்திரத்திற்கு வடக்குப் புறமாக உறைந்து, அருந்ததி நட்சத்திரத்திற்குக் காப்பாக எப்போதும் உறைந்து இருக்கும். அருந்ததி நட்சத்திரத்தை விண்ணில் தரிசிக்கையில், அறிந்தோ, அறியாமலோ இந்த நட்சத்திரத்தின் தரிசனம் பலருக்கும் கிட்டும்.

அகஸ்தியர்கள் பலப் பலர்

சித்தர்களின் கூற்றுப்படி, 2000 கோடி அகஸ்தியர்கள் தோன்றி, மறைந்து, தோன்றி உள்ளனர். இன்னமும், என்றுமாய்த் தோன்றி வருகின்றனர். எனவே ஸ்ரீஅகஸ்தியரின் மூலமே ஞானப் பூர்வமாகவும் அறிய இயலாததாகும். இத்தனை கோடி அகஸ்திய மாமுனிகளுக்கும் மூல ஆதி மாமுனியையே நாம் அகஸ்தியர் என்ற பொதுப் பெயரில் வணங்குகிறோம். இதே போல, பல்வகை சுவாதி நட்சத்திரங்கள் உண்டு.

சுவாதி நட்சத்திர லிங்க மூல அம்சங்களின் திரட்டே “சுலமாட்டு நட்சத்திரம்” ஆகும். அதாவது சுவாதி நட்சத்திரத்திற்கும் முன் தோன்றியதே சுலமாட்டு நட்சத்திரமாகும்.

இவ்வாறு சுக்ருதி மகரிஷி கூறிய வழிபாட்டு முறையை இச்சிறு பெண் நெடுங்காலம் ஆற்றி வந்தாள். இதன் பலனாக, அடுத்த பிறவியில் மாண்டவி என்ற கன்னிகையாய்ப் பிறந்து ஸ்ரீராமரின் இளவலாம் பரதனை மணக்கும் அனுகிரகம் அவளுக்குக் கிட்டியது. சுவாதி நட்சத்திர லிங்க பூஜை இத்தகைய உத்தம குணமுடையோரைக் கணவனாய்ப் பெற்றிடப் பெரிதும் துணை புரியும். திருமணமானவர்களும் சுவாதி நட்சத்திர லிங்கத்தைப் பூஜித்து வர, கணவனும் நன்முறையில் திருந்தி, வியக்கத் தக்க முறையில் நற்பண்புகளுடன் மிளிர்வான்.

மேலும், சுவாதி நட்சத்திர லிங்கப் பூஜை மகா உத்தமர்களை உருவாக்க வல்லதாகும். மகா உத்தமியை மணக்கவும், வேண்டிய வரங்களையும் தரும் உத்தமியாய் ஒரு பெண் பொலிய உதவும் பூஜை! இறைவன் எவ்வாறு சுந்தர மூர்த்தி நாயனாரைச் சுவாதி நட்சத்திர நாளில் தடுத்தாட் கொண்டு அருளினாரோ, அதே போல் நம்மையும் தடுத்தாட் கொண்டருள் புரிய சுவாதி நட்சத்திர லிங்கப் பூஜை பெருந்துணையாய் அருளும். இந்த சுவாதி நட்சத்திர லிங்க வழிபாட்டினால் பூஜிப்போர் நன்றி மிகுந்து வாழ்வர். நன்றி கெட்டவர்களால் வரும் துன்பங்களிலிருந்து காக்கப் பெறுவர். சிறு உதவி செய்திடினும் நன்றி மறத்தலாகாது, நன்றி கொல்தல் பெரும் பாவகரமானது.

சுவாதி நட்சத்திர லிங்கப் பூஜையை ஆற்றுபவர்களை நம்பி எந்தக் காரியத்தையும் ஒப்படைத்திடலாம். அதை அவர்கள் செவ்வனே செய்து முடித்துத் தரும் திறமையைப் பெற்றவர்களாய் இருப்பார்கள். எனவே திறமையை வளர்க்க உதவுவதும் சுவாதி நட்சத்திர லிங்க வழிபாடு ஆகும்.

இந்த சுவாதி நட்சத்திர லிங்கப் பூஜையை, ஆவணி மாத வளர்பிறை (சுக்ல பட்ச)ப் பஞ்சமியும், சுவாதி நட்சத்திரமும் சேரும் நாளில் விரதமாய்த் தொடங்கிட வேண்டும். சித்திரை நட்சத்திரம் முடிவதற்கு ஒரு நாழிகை (24 நிமிடம்) முன்னரேயே, சித்திரை நட்சத்திர நேரத்திலேயே, காரடையார் நோன்பு போல விரத சங்கல்பத்தைத் தொடங்கிட வேண்டும்.

“சுக்ருதி சுவாசினீய சுவாதியம் போதி” என்ற மந்திரத்தை அகண்டகார நாம ஜபமாக, நெடுநேரம் ஜபித்து, சுவாசத்தை நன்றாக உள்ளிழுத்துப் பிராணாயாமம் செய்து இவ்விரதத்தைச் சித்திரை நட்சத்திர நிறைவிலேயே தொடங்கிட வேண்டும்.

அணில் அப்புக் குட்டி சித்தர்

பௌர்ணமி கிரிவலத்தைப் போன்று மாத சிவராத்திரி அருணாசல கிரிவலமும் சிறப்புடையதே! அபரிமிதமான நல்வரங்களைப் பொழிவதே! திருஅண்ணாமலை மாத சிவராத்திரி கிரிவலம்! அணில் அப்புக் குட்டிச் சித்தர் அருணாசல கிரிவலம் வரும் மாத சிவராத்திரி மஹிமை!

காலத்தைக் கடந்த திருஅண்ணாமலையில், நாமறியாத வகையில், மானுட சரீரத்தில் வாழ்ந்து சர்வ லோகங்களுக்கும் அருட்பணி ஆற்றிய சித்புருஷர்கள் ஏராளம், ஏராளம்! இவ்வரிய தொடர் மூலம், பல அற்புதமான திருஅண்ணாமலை வாழ் சித்தர்களை நீங்கள் அறிந்திட, உங்களைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னான, சித்தர்களின் இறைப் பாசறையான அருணாசலப் புனித பூமிக்கு இட்டுச் செல்கின்றோம்!

தினமுமே எண்ணற்ற சித்தர்களும், மாமுனிகளும், யோகியரும் திருஅண்ணாமலையில் கிரிவலம் வருகின்றனர். மக்களும் அறியும் வகையில் சமுதாயத்தில் மக்களோடு மக்களாய் உறைந்து அருள்வோர் ஒரு சிலரே! கலியுக மக்கள் சமுதாயத்தில் சத்குருமார்களை மதித்துப் போற்றும் மாண்பு மங்கி, அதர்மமும், வன்முறையும், தீவினைகளும் பெருத்து வருவதால், மக்களால் அறியப் பெற்ற மஹான்களும் ஒவ்வொருவராக பூமியை விட்டுப் புறப்பட்டு விடுகின்ற நிலை ஏற்படுகின்றது. சத்குருவிடம் ஆழ்ந்த நம்பிக்கை பூண்டோர்க்கு அவர்கள் எங்கிருந்தாலும் தெய்வ நெறிமுறைகளை ஆசியாக அருளப் பெற்று, ஆன்மீகத்தில் நன்கு வழிகாட்டப் பெறுவர்.

இறைவனின் படைப்பில் அனைத்துமே பல காரணங்களையும், பயன்களையும், பலன்களையும் கொண்டுள்ளன. பலாப்பழ நாரிலிருந்து, நெல்லின் மெல்லிய உமி முதல், உரித்த வேர்க் கடலைத் தோல் வரை அனைத்திற்குமே உரித்தான காரண, காரியங்கள் உண்டு. எப்பொருளுமே பல காரணங்களுக்காகவே இப்பூவுலகில் தோன்றி இருந்து வருகின்றது.

ஆனால், உலக ஜீவன்களின், பொருட்களின், மூல இயல்பு குணங்களுள் ஒன்றே மாயை ஆகும். அதாவது எப்போதும், எதுவுமே உலகில் மாறிக் கொண்டிருப்பதும் ஜீவ குணமே! மாறாத இறைப் பொருளே சாசுவதமானதும் ஆகும். மாயைக் குணத்தால்தாம் உலகில் உள்ள அனைத்து ஜீவன்களும், ஜடமான, அசையும், அசையாப் பொருட்களுமே ஒவ்வொரு விநாடியும் மாற்றம் அடைந்து கொண்டிருக்கின்றன. ஏன் ஒவ்வொரு மனிதனும் கூடத்தான் உடலால், மனதால் ஒவ்வொரு விநாடியும் மாறிக் கொண்டே இருக்கின்றான்.

“பொழுது போகவில்லை, தூக்கம் வரவில்லை!” என்று பயனில்லாத கதை புத்தகம், டீ.வி, ரேடியோ, நியூஸ் பேப்பர், சினிமா என்று வீணே காலத்தை விரயமாக்குவோர் பலரும் இத்தகைய பலத்த மாயையினால்தாம் இவ்வாறு செய்கின்றனர். காலத்தை இவ்வாறு விரயம் செய்வது மகாத்தவறு.

இவ்வாறு பொழுதை வெறுமனே போக்குவதை விட, இவர்கள் மாயைத் தன்மை பற்றியும், ஒவ்வொரு பொருளின் படைப்புக் காரணங்களைப் பற்றியும், தினமுமே தக்க உத்தமர்களின் வழிகாட்டுதலுடன், நெஞ்சார ஆத்ம விசாரம் செய்திடில், இது நல்ல “விழிப்பு நிலை” தியான மார்கமாக அமையுமே! நேரம் பயனற்றுக் கழியாதே! நேரத்தை விரயம் செய்வதும் பாவ காரியமே!

ஆத்ம விசாரமெனில் கடவுளைப் பற்றிய சிந்தனை மட்டுமே என எண்ணாதீர்கள்! ஆத்ம விசாரம் வெறும் மன ஓட்டமன்று! உள்பூர்வமாக இருதயாகாச ஸ்பரிசமே ஆத்ம விசாரம், இதில் காலம் நன்கு விரியும், காலம் விருத்தியாகும். காலத்தை வீணே கழித்தமைக்கு ஆத்ம விசாரமும் ஒரு மாமருந்தே!

ஒரு தென்னை மரம் எவ்வாறு வெளி ஆதாரமின்றி உயர வளர்ந்து நிற்கின்றது?
ஓர் எறும்பின் நுண்ணிய மூளை எப்படி வேலை செய்கின்றது?
ஒரு தவளையால் நீரிலும், நிலத்திலும் எவ்வாறு வாழ முடிகின்றது?
பெரிய பெரிய மருத்துவர்களே ரத்த நாளத்தைத் தேடுகையில், ஒரு கொசுவால் கண்ணிமைக்கும் நேரத்தில் எவ்வாறு சரியாக ரத்த நாளத்தை உடனே கண்டுபிடிக்க முடிகின்றது?

இவற்றைப் படைத்த இறையருளின் கருணை என்னே, என்னே! என்ற வகையிலான ஆத்ம விசாரமும் மகத்தான தியான நிலையைத் தருமன்றோ! ஏனெனில் இவ்வினாக்கள் பிரம்ம சிருஷ்டி ரகசியத்தை ஒட்டி அமைவதால் இவை யாவும் அற்புத யோக, தியானப் பூர்வமான ஆத்மவிசாரப் பயிற்சிகளாகும்.

சலப்ரகாஷ்டப் புலம்

இறைவனுடைய அற்புதமான, சிறப்புப் படைப்புகளில் ஒன்றே அணில் ஆகும். மனித குலத்திற்கு வந்தமைந்திடாத எண்ணற்ற பல விசேஷமான சக்திகளைப் பூண்ட அணிலானது, ஒரு மரத்தில் உள்ள காய் பழமாகி விட்டதா, இல்லையா என்பதையும், ஒரு பழம் இனிக்குமா, இனிக்காதா என்பதையும் தூர இருந்தே அதனைப் பார்த்த மாத்திரத்திலேயே பகுத்தறியும் சக்திகளைப் பெற்றதாகும். மேலும் பல வகைகளில் செயலாற்றும் இத்தகைய விசேஷமான சக்திக்கு சலப்ரகாஷ்டப் புலம் என்று பெயர்.

ஒவ்வொரு அணிலும் கொறிக்கின்ற (பழக்) கொட்டையின் சிதறல்கள் பூமியில் படிந்து, அதன் மூலமாக இந்தக் சலப்ரகாஷ்டப் புலச் சக்தி மனிதனை அடைகின்றது. இதற்காகவே “அணிலேறி விளையாடி வா!” என அழைத்து, வீட்டில் பழ மரங்களை வளர்ப்பர். இது மிருக இன வளத்திற்காக மனித குலம் ஆற்ற வேண்டிய தர்மமாகும்.

மிருகங்களும் செடி, கொடி, மரங்களும் மனிதனை விடப் பல காரியங்களை ஆற்றும் தேவ வல்லமைகளைக் கொண்டவையாகும். உதாரணமாக, ஒரு 200 அடி கொம்பை நம்மால் உள்ளங்கையில் வைத்து ஆடாது, அசங்காது நிற்க வைப்பது மிகவும் கடினமானது, அனைவராலும் இயலாததென்றே கூறி விடலாம். ஆனால், ஒரு தென்னை மரம் மிக எளிதாக நேராக புவி ஈர்ப்பு சக்தியுடன் ஒருங்கிணைந்து வளர்ந்து விடுகின்றது. மனிதனுக்கு விஞ்ஞானப் பூர்வமாகக் கடினமாக உள்ள செயல்கள், தாவர குலத்திற்கு ஆன்மப் பூர்வமாக எளிதாக உள்ளது. விஞ்ஞானத்தில் புவி ஈர்ப்பு சக்திக்கு எதிராக சிலவற்றைக் கண்டுபிடித்து, வகுத்து, அமைத்துச் செய்வதால் இயற்கைக்கு முரணாகி எதிரிடை அம்சங்களுடனேயே (negative forces) அவை செயல்படுகின்றன.

இவ்வகையில் இயற்கைக்கு முரணாகக் கருவிகளை அமைப்பதால்தான், இயற்கை கதியை எதிர்த்து அமைவதால்தான், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளான இயந்திரங்கள் , கருவிகள் பழுதடைதல், உடைதல், ஆபத்து, நெருப்புப் பிடித்தல், விபத்துகள் போன்ற நஷ்ட, அழிவு மார்க வகை நிலைகள் ஏற்படுகின்றன.

ஆன்மீகப் படைப்பில் அனைத்துமே புவிஈர்ப்பு சக்தியுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாக, இயற்கையை அரவணைத்து அமைவதால் சித்சுத் சக்திக் கிரணங்களோடு (Positive thinking rays, positive forces) செயல்படுகின்றன.

இத்தகைய சித்சுத் சக்திக்குக் “கேதாரபலம்” என்று பெயர். பிராணாயாமம், யாமயோகம், பிருத்வி ஈர்ப்பு யோகம் ஆகியவையும் கூடி வருவதாகும். சிரசாசனம் பயில்பவர்களுக்கு இது கைகூடி நன்கு வருகின்றது. இவர்கள் எவ்வளவு உயரமான கொம்பையும் தாங்கி நின்றாலும் அது அவர்கள் கைகளில் அசைவின்றி நிற்கும். இதே போல், இயற்கையில் நாம் பெற்றுள்ள பற்பல சக்திகளை நன்கு பெற்று வளர்த்துக் கொள்ள ஆன்மீகத்தில் நிறைய வழியுண்டு.

அணிலுக்கு அதன் சுறுசுறுப்பே ஒரு மகத்தான ஆன்ம சக்தியாய் உள்ளது. ஒரு அணில் 300 அடி வரை முன்னே உள்ள முள், சிறுகொம்பு போன்றவற்றை, பார்த்த மாத்திரத்திலேயே, தான் வேகமாக ஓடும் கதியிலேயே, கண்ட ஒரு சில விநாடிகளுக்கு உள்ளேயே பாதையின் தன்மைகளை, சுற்றுப் புறச் சூழலுடன் உணர்ந்தறியும் திறமையான மூளை சக்திகளை உடையது. இவ்வாறான தீர்க தரிசன சக்திகள், அணிலுக்கு நிறைய உண்டு.

மூலாதாரத் த்ரயப் பரல்கள்

அணிலின் முதுகில் உள்ள மூன்று பட்டைகள் மகத்தான தெய்வீகத்வம் கொண்டவை! திரேதா யுகத்தில் ஸ்ரீராமர் அணிலுக்கு அளித்த மூன்று பட்டைகளின் மகாத்மியத்தை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள்! அரணீயம், பரணீதரம், பில்வதாரணீயம் என்று இம்மூன்று பட்டைகளுக்கும் பெயராகும். “வரதர(ணீ)யப்பா படைத்த நெடுவில் ராமனார் தோயப்படுத்தி வா அணிற் புறச் சாயம்!” என்பது சித்த கிரந்த பரிபாஷை வாக்படு தத்துவமாகும். இதில் அணில் படைப்பின் பிரம்ம ரகசியங்கள் பல கோடி பதிந்துள்ளன. ஆத்மவிசாரத்தில் இவை காலத்தால் விரிந்து விளக்கங் காணுவதாகும்.

சேதுப் பாலம் கட்டிட ஆற்றிய அருட்சேவைக்கான திருவுடைப் பரிசாக, ஸ்ரீராமர் தம் ஆத்மார்த்தமான அருளாசியாக, அணில் இனத்திற்கு இம்மூன்று பட்டைகளை, மூலாதாரத் த்ரயப் பரல்களாக அவற்றின் முதுகில் அளித்திட்டார். இதனால்தான் அணிலுக்கு ஆன்மப் பூர்வமான தனிச் சிறப்பிடம் தெய்வீகத்தில் ஒன்று உண்டு.

ஒரு அணிலானது தினந்தோறும் ஒரு வில்வ மரத்திலாவது ஏறி தியானித்து, இறங்க வேண்டும் என்ற தெய்வீக நியதியும், நித்தியக் கடமையும் உண்டு. ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள நித்தியப் பூஜைக் கடமைகள் போலவே, ஆன்மீகப் பூர்வமாக ஒவ்வொரு அணிலும் தினமுமே அந்தந்த நாள், திதிக்கேற்ப இத்தனை, எவ்வகை தெய்வீக விருட்சங்களில் ஏறி பிற ஜீவ நலன்களுக்காக, “அணிற்புழங்க யோகாசனம்” எனும் அரிய வகை யோகாசனங்களைப் பூண்டு தியானித்துப் பூஜிக்க வேண்டும் என்ற வரைமுறைகளும் உண்டு.

அணிலைப் பார்க்கும் போதெல்லாம் எவருக்கு “ராமநாம” நினைவு வருகின்றதோ, அவர் நல்ல தெய்வீகப் பாதையில் சென்று கொண்டிருக்கிறார் என்பது பொருளாகும். இதுவும் அணில் உணர்த்தும் ஆன்மீக நெறியே!

ஸ்ரீராமரின் தரிசனம் கிடைப்பது என்றால் அது சாதாரண பாக்கியம் அல்லவே! 96 கோடி முறை ராமநாம ஜபம் புரிந்த பிறகே சத்குரு தியாகராஜ சுவாமிகளுக்கு வில்லேந்தியப் பெருந்தகையாக ஸ்ரீராமர் தரிசனம் தந்திட்டார். பரம சாதுவான சத்குரு சுவாமிகளுக்கு ஸ்ரீராமர் வில்லேந்திக் காட்சி தந்தமைக்கும் கோடிக் காரணங்கள் உண்டு. இதைப் பற்றி தினமும் உங்கள் வாழ்வில் ஆத்மவிசாரம் செய்து வருக! பல ராமபக்தர்களும் இதனை ஆத்ம சிந்தனா பூஜையாக ஆற்றிட வேண்டும். இதுவும் ராமநாம ஜப, தியான, யோகத்தின்பால் அடங்கும்.

அணில் கண்டு அணிவீர் ராமநாம ஜபம்

அணில் குலத்தின் சார்பாக “வாசஸ்பதி” என்ற அணில், ஸ்ரீராமரின் தரிசனம் பெற்றுத் தன் குலத்திற்கே ஸ்ரீராமரின் திருக்கரங்களால் அனைத்துலக அணில்களுக்கும் முதுகில் மூன்று பட்டைகளைத் திருவருட் பூர்வமாகப் பெற்றுத் தந்தது அன்றோ!

பெருமாள் ஆலயங்களில் தலைக்கு சடாரி சாற்றுவது போல, ஸ்ரீராமரும் “வாசஸ்பதி” அணிலின் மூலாதாரத்தில் “த்ரயோகப் பதாரியை”, “ஜபதப யோகாபியை” இட்டார். இதனால் தான் அணிலைப் பார்க்கும் போதெல்லாம் உடனே ராமநாமத்தை ஜபிப்போர்க்கு அவரவர், ஆன்ம நிலைக்கேற்ப ஜபதபயோக சக்திகளை “வாசஸ்பதி” அணில் இன்றளவும், என்றுமாய் யுகயுகமாய் அளித்துக் கொண்டிருக்கிறது.

கடவுளைக் காண முதலில் கடவுளைக் கண்டவரைக் காண்பீர்!

ராமநாம ஜபம் ஆற்றுவோர்க்கு, செய்வோர்க்குக் கலியுகத்தில் ராம தரிசனப் பலன்களை அணில்களும் அளிக்க வல்லவையாம் என்பது சித்தர்களின் வாக்கு. மேலும், இறைவனைக் காணும் முன், இறைவனின் ஸ்பரிசம் பட்ட பொருளை வழிபடுதல் என்பது நமக்குப் பெரும் பேறாகும். இவ்வகையில்தாம் ஆழ்வார்களும், தேவாரம், திருவாசகம், திருப்புகழ், அருட்பா பாடிய தெய்வத் தூதுவர்கள் இறைதரிசனம் பெற்றுப் பாடியவை ஆதலின் இத்துதிகள் “இறைதரிசனப்” பலன்களை அளிக்க வல்லவையாக உத்தம நிலைகளுடன் சாசுவதமாய்த் துலங்குகின்றன.

இவ்வகையில் ஸ்ரீராமரைத் தரிசிக்கும் முன் ஸ்ரீராமரின் திருக்கர ஸ்பரிசம் பட்ட அணிலை வழிபடுவது சிறப்பானதன்றோ! இதனால்தான் சேரநாட்டு உத்தமச் சிவபாதர் ஒருவர், முற்காலத்தில் இறைவனுடைய ஸ்பரிசம் பட்ட பொருட்களை, பூஜைக்குரியதாகப் போற்றி வழிபட்டு வந்தார்.

ஒரு யுகத்தில் ஸ்ரீகாலபைரவ மூர்த்தி, சிவனடியார்கட்கு ஒரு தண்டத்தை அருட்பரிசாக அளித்திருந்தார். ஸ்ரீகாலபைரவரின் ஸ்பரிசம் பெற்ற அந்த தண்டத்தைத் தினமும் அச்சிவபாதர் பக்தியுடன் பூஜித்து வந்தார். தண்டத்திற்குப் படைத்தத் தானிய மணிகளை அவர் அணில்களுக்கு உணவாக இடுவார். மேலும், அணில் கூட்டத்துடன் உரையாடி, அவைகளுக்கு அருளுரையும் கொடுப்பார். மூத்த அணில்கள் அன்புடன் அளிக்கும் ஆசிகளையும் பெற்றுக் கொள்வார். தினமும் அணில் தரிசனமின்றி அவர் உணவேற்க மாட்டார். அணிலையே இறைவடிவாகப் பூஜிக்கும் அற்புத பக்தியைப் பூண்டிருந்தார்.

நாடெங்கும் பாதயாத்திரை புரிந்து பல தலங்களைத் தரிசித்து, திருஅண்ணாமலை திவ்யத் தலத்தை அவர் வந்தடைந்தார். இங்கு அவர் தன்னுடைய பூஜையைத் தொடர்ந்தாலும், முதலில் சில நாட்களுக்கு அணில்களின் தரிசனமே கிட்டவில்லை! இவரும் இதனை முன்னிட்டுப் பல நாட்கள் உணவேற்கவில்லை!

“இறைவா என்ன சோதனை இது? யாம் வழிபடும் அணிலாகிய இறைவடிவைக் காண இயலாது எவ்வாறு நித்தியப் பொழுது நிறையும்?” என அவர் வேதனையால் துடித்தார். இறையருளால், மறுநாளில் இருந்து அணில்களின் தரிசனம் அவருக்குக் கிட்டலாயிற்று! ஆனால் எந்த அணிலுமே அவரிட்ட உணவை ஏற்கவில்லை! இதுவும் அவருக்கு மிகுந்த மனக்கவலையைத் தந்தது. இவ்வாறாகப் பல நாட்கள் கடந்தன. அணில் உணவேற்றால்தானே அவர் பிரசாத உணவை உட்கொள்வார்!

வாசஸ்பதி தரிசனம்

ஒரு நாள்..... அருணாசல கிரிவலத்தில் பிருத்வி நந்திக்கு முன்... அருணாசல மலை வடிவானது அணிலின் முதுகுப் பகுதி போல் இருப்பது கண்டு அதிசயித்தார். பன்முறை அதனைத் தரிசித்திருந்தும் அணில் வடிவை இதுவரையில் அதில் அவர் கண்டாரில்லை! தற்போது மரங்களால் இந்த முக்கியமான தரிசனம் மறைவுபட்டுள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த “வாசஸ்பதி” தரிசனம் ஸ்ரீசேஷாத்ரி ஆஸ்ரமத்திலிருந்து பிருத்வி நந்தி வரை உள்ள பகுதியில் ஓரிடத்தில் இந்த தரிசனம் கிட்டும். இப்பகுதியில் “வாசஸ்பதி” ராகத்தில் இறைப் பாடல்களை பக்தியுடன் பாடி அடிப்பிரதட்சிணமாக மிகுந்த கவனத்துடன் கிரிவலம் வந்தால் தெய்வீக சக்திகள் நிறைந்த அணில்களின் தரிசனம் கிட்டும். போக்குவரத்து வாகனங்கள் நிறைந்த பகுதி. மிகுந்த கவனத்துடன் இங்கு கிரிவலம் வருதல் வேண்டும்.

இப்பகுதியில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து “வாசஸ்பதி” தரிசனத்தை வணங்கிய அவர், அண்ணாமலையாரை வேண்டி, அணில்களின் வரவை வேண்டினார். என்ன ஆச்சரியம், ஒரே ஒரு முதிய அணில் மட்டும் மிகவும் மெதுவாக நடந்து வந்து, பரமானந்தத்துடன் அவர் கையிலிருந்து உணவைத் தானே வாங்கி ஏற்றது. அவரும் புளங்காகிதம் அடைந்து பரமானந்தம் கொண்டார். அணிலையே சிவலிங்க வடிவாகக் கருதி வழிபடும் அவர், அந்த முதிய அணிலை சாஷ்டாங்கமாக வணங்கினார்.

கிட்டாதது கிட்டாததே!

உடனே அந்த அணில் அண்ணாமலையை நோக்கி நடக்க ஆரம்பித்து, அவரும் பின் தொடர்ந்தார். உள்ளூர அவர் மனமோ “இத்தனை நாள் அலைந்து, இன்று மட்டும் அருணாசல கிரிவலத்தில் அணில் தம்மிடம் உணவேற்ற இந்நாளின் விசேஷம்” பற்றி அறிய விழைந்தார். அன்றைய நாளின் விசேஷ அம்சங்களை மனதினுள் கணித்தவாறு அணிலைப் பின் தொடர்ந்தார்.

ஆம், அன்று தாம் மாத சிவராத்திரித் திருநாள், மறுநாள் அமாவாசை! அந்த முதிய அணிலும் அவரை மலையின் உட்பகுதியை நோக்கி இட்டுச் சென்றது, பிறகு ஓரிடத்தில் அது மலைக்குள் மறைந்து விட்டது இதனால் அவர் திகைப்புற்றார். இன்றையைப் பொழுதுக்குத் தனக்கு இதுவே சித்தமாயிற்று என அவர் தெளிந்தார்.

ஆம், அந்த அணில்தான் “வாசஸ்பதி” அணில்! ஆனால் இதுவே “வாசஸ்பதி” அணில் என அப்போது இறைப்பூர்வமாக அச்சிவபாதருக்கு உணர்விக்கப் பெறவில்லை! தற்போது நீங்களோ நன்கு அறிவீர்கள்! என்னே பாக்கியம் இது!

ஸ்ரீராமரிடமிருந்து ராமப் பிரசாதமாக முதுகில் மூன்று அருட்பட்டைகளைப் பெற்றதே அதே “வாசஸ்பதி” அணில்தான்! எனவேதான் “ராம்பிரசாத்” என்ற பெயரைத் தாங்கியவர்கள் தினமும் அணில்களுக்கு உணவிட்டுத் தினமும் ராமநாம ஜபயோகம் புரிந்து வருவதால் அற்புத நிலைகளை அடைவர். “வாசஸ்பதி” அணிலின் தரிசனத்தோடு “வாசஸ்பதி” அருணாசல தரிசனத்தையும் பெற்றமையால், அன்றிலிருந்து அவருக்கு, “அணில் அப்புக் குட்டிச் சித்தர்” என்ற காரணப் பெயர் ஏற்பட்டது.

அன்றிலிருந்து அவர் அண்ணாமலைத் திருக்கயிலாய மலை போல் நமஸ்காரப் பிரதட்சணம் மேற்கொண்டு, அனைத்து அணில்களுக்கும் நமஸ்காரம் செய்து கிரிவலம் வந்தார். இவ்வாறு அவர் தினமும் அணில்களின் தரிசனம் பெற்று வணங்கி அருணாசலத்தைத் தொடர்ந்து கிரிவலம் வந்து எண்ணற்ற மக்களுக்கு நல்வழி காட்டினார்.

கிட்டாதது கிட்டியது!

ஒரு மாத சிவராத்திரியன்று.... விடியற்காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில்.... “ஓடலையான் பாறை” என்ற இடத்தில் மீண்டும் அதே “வாசஸ்பதி” அணிலின் தரிசனம் கிட்டியது. அவரை அந்த அணில் மீண்டும் அருணாசல மலையின் உட்புறக் காட்டிற்குள் கூட்டிச் சென்றது. அந்தக் காலத்தில் அண்ணாமலையில் அடர்த்தியான காடுகள் நிறைய இருந்தன. நூற்றுக்கணக்கில் யானைகள் இருக்கும், வன விலங்குகளும் இருந்தன., ஆனால் அவை எவரையும் துன்புறுத்தாது ஒதுங்கி வழிவிடும்.

அந்த இடத்தில் ஆண், பெண் தம்பதியாகிய இரு அணில்கள் அவருக்குக் காட்சி கொடுத்து மலையில் மறைந்தன. இவ்விரு அணில்களுக்கும் அங்கம் முழுதும் முத்துக்கள் பிரகாசிப்பது போல் தோற்றம் இருந்தது. ஒவ்வொரு முத்திலிருந்தும் ஒரு லிங்க முகம் காட்சி தந்தது. இங்கு இன்றும் நூற்றுக் கணக்கில் அணில்கள் துள்ளி விளையாடும் காட்சிகளைக் காணலாம்.

இல்லற அமைதிக்கு உதவும் அங்க முத்துமுக லிங்கம்

எனவேதாம் இங்கிருந்து கிடைக்கும் தரிசனத்திற்கு “அங்க முத்து முக லிங்க தரிசனம்” என்று பெயர். அந்த அணில் கூட்டிச் சென்ற இடத்திலிருந்து கிடைக்கும் தரிசனத்திற்கு “அங்கமுத்து முக லிங்க தரிசனம்” என்று பெயர். “வாசஸ்பதி” தரிசனத்தை அடுத்து வருவது இது!

“ஓடலையான் பாறை” அருகே கிட்டும் “அங்கமுத்து முக லிங்க தரிசனம்” பெறுபவர்களுக்கு வாழ்க்கையில் நல்ல மனைவி அமைவாள்! திருமணம் ஆனவர்களுக்கு இத்தரிசனப் பலன்களாக, பரிபூரண நினைவாற்றலும் மலர வழி பிறக்கும்.

மேலும், குறிக்கோள் இல்லாமல் ஏனோ தானோ என்று வாழ்வோர்க்கு, நல்ல உத்தமர்கள் மூலம் நல்ல குறிக்கோள் வாழ்வில் கிட்டிட வழி பிறக்கும். குறிக்கோள் இல்லாது வாழ்ந்து கெட்டிடலாகாது.

இனிமேல் உத்தம வைராக்கியம் பூண்டு வாழ்வோர்க்கு பக்த விஜய அனுபூதிகளில் வருகின்ற மகான்களின் தரிசனத்தை வாழ்வில் பெற்றுத் தருவதற்கும் இது உதவும்.

உத்தமப்பாளையம்

பகைமையை அகற்றிட உதவும் உத்தமப்பாளையம் ஸ்ரீராகு, ஸ்ரீகேதுத் தல பூஜை (தேனி – கம்பம் இடையே உத்தமப்பாளையம் உள்ளது!)

பகைமை, விரோதம், குரோதமானது தற்காலத்தில் குடும்பம், அலுவலகம், அரசியல், வியாபாரத்தை, அலுவலகப் பணியை விட்டாலும் கூட, பகைமையானது இறுதி வரை தொடருமாயின், குடும்ப வாழ்வில் அனைவருக்குமே மனநிம்மதியே இல்லாது போய் விடுகின்றது. இதனால், தினசரி வாழ்வே அச்சம், பீதி, மனோபயத்துடன் கலந்ததாகி, எப்போது எது நடக்குமோ என்ற அச்சத்தில் பலருக்கும் வாழ்நாள் கழிவதுண்டு.

அரசியலில் இது பலத்த பக்க விளைவுகளை ஏற்படுத்திப் பெரிதும் பாதிக்கின்றது. அரசியலை, வியாபாரத்தை, அலுவலகப் பணியை விட்டாலும் கூட, பகைமையானது இறுதி வரை தொடருமாயின், குடும்ப வாழ்வில் அனைவருக்குமே மனநிம்மதியே இல்லாது போய் விடுகின்றது.

ஸ்ரீஞானாம்பிகை உத்தமபாளையம்

இதிலும், கடன் கொடுத்தலிலும், வாங்குதலிலும் உள்ள பகைமை, விரோதத்தைச் சொல்லி மாளாது. கூடப் பிறந்தவர்கள், பெற்றோர்கள், பல ஆண்டுகளாக நெருங்கிப் பழகியவர்களிடம் கூட, பகைமையானது வன்மையான, பலத்த மனமுறிவை ஏற்படுத்தி விடுகின்றது. இவை அனைத்திற்கும் காரணம், உண்மையான அன்பை விருத்தி செய்யும் அமுத சக்திகள் கலியுகத்தில் மங்கி வருவதேயாகும். அமிர்தத்தைப் பெற்றிட, தேவர்கள் – அசுரர்கள் இடையே பலத்த பகைமை ஏற்பட்டது போல, பூலோக மக்களிடையே பகைமை ஏற்படலாகாது என்பதற்காகவே ஸ்ரீராகு, ஸ்ரீகேது மூர்த்திகள், இதற்காகவே, தக்க நல்வரங்களைத் தம் தெய்வத் தபோ பலத்தால் நல்கிட, ஈஸ்வரனை வேண்டினர். ஈஸ்வரனும் அவர்களுடைய அற்புதத் தவநிலையைப் போற்றி, அவர்களை நவகிரக மூர்த்திகளாகத் தோற்றுவித்தார்.

இவ்வாறாகப் பகைமையை வளர்க்கும் தீயசக்திகள் நிவர்த்திக்கும் உத்தம மூர்த்திகளாகத் தோன்றி(ட), ஸ்ரீராகு, ஸ்ரீகேது மூர்த்திகள் தவம் புரிந்த தலங்களுள் ஒன்றே தேனி – கம்பம் மார்கத்தில் உள்ள உத்தமப்பாளையம் ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் ஆலயப் புண்ணிய பூமியின் முல்லையாற்றுத் தீர்த்த வளாகமாகும். இங்கு ஸ்ரீராகு, ஸ்ரீகேது மூர்த்திகள் தம் பத்னி மூர்த்திகளுடன் தனிச் சன்னதி கொண்டு அருள்கின்றனர்.

இங்கு ஞாயிறு மற்றும் ஸ்ரீராகு மூர்த்திக்கான திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய மூன்று நட்சத்திர நாட்களிலும், ஸ்ரீகேது மூர்த்திக்கான அசுவினி, மகம், மூலம் ஆகிய மூன்று நட்சத்திர நாட்களிலும், ஸ்ரீராகு மூர்த்தி, ஸ்ரீகேது மூர்த்திக்கான ஹோமங்கள் ஆற்றியும், காராம் பசு பாலைக் கறந்த உடனேயே, அதன் இயற்கையான இளஞ் சூடு ஆறும் முன், இளஞ்சூடோடு ஸ்ரீராகு மூர்த்திக்குப் பாலபிஷேகமும், ஸ்ரீகேது மூர்த்திக்கு, மலைத் தேன், குங்குமப்பூ, பனங்கற்கண்டு கலந்த பசும்பால் அபிஷேகமும் ஆற்றி வழிபடுவதுடன்,

பாலில் பனங்கற்கண்டு, முந்திரி, பாதாம் பருப்பு, குங்குமப் பூ, மலைத் தேன் ஆகிய பஞ்ச தவப்புல சக்தித் திரவியங்களையும் சேர்த்துப் படைத்துத் தானமளித்து வருவதால், பகைமை முற்றிலுமாக விலகிடவும், பகைமை அகன்று நல்ல பண்பான உறவு மலரவும், ஸ்ரீவாரிப்பாதப் பித்ருக்களின் மனமார்ந்த ஆசிகள் கிட்டும். வாழ்விலும் மனநிம்மதி கிட்டும்.

மேலும் திருமண தோஷங்கள், பாகப்பிரிவினை தோஷங்கள், நாக தோஷங்கள், கால சர்ப தோஷங்களை நிவர்த்தி செய்யவல்ல, பலரும் அறியாத தொன்மையான ராகு, கேதுத் தலமே உத்தமப் பாளையம் சிவத்தலமாகும். மதுரை ஆலயம் போன்று காணுதற்கரிய மிக,மிக பிரம்மாண்டமான ஆலயம்!

ஸ்ரீஆதிமூல வாஸ்து பகவான்

ஜுலை 2004 ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில், ஸ்ரீஆதிமூல வாஸ்து பகவானின் அஷ்ட திக்கு சயனயோகக் கோலத் தோற்ற வடிவானது, சித்தர்களுடைய ஆதிகிரந்த முறைகளின்படி, கலியுக மக்களின் வழிபாட்டிற்காக அளிக்கப்பட்டிருந்தது. இதோடு அஷ்ட வாஸ்துத் தலங்களின் அம்சப் பரல்களோடு, ஸ்ரீஆதிமூல வாஸ்து பகவானின் படமும் வீடு, கடை, வியாபாரத் தலங்கள், ஆலயங்கள் என அனைத்திலும் வழிபடுவதற்காக லேமினேடட் படமாகவும் தற்போது அளிக்கப்பட்டு உள்ளது.

நிலைப்படிகளில் அல்லது வாசற்படிகளில், நிலைப் படிக்கு அடியில் வாஸ்து யந்திரத்தோடு, நவரத்தினங்கள், நவதானியங்கள், நவலோகங்கள், நவவர்ண வஸ்திரங்கள், நவ மூலிகா திரவியங்கள் போன்றவற்றை வைத்து, வீட்டில் பூஜையில் ஸ்ரீஆதிமூல வாஸ்து பகவான் படத்தை வைத்து, தினமும் சந்தனமிட்டு புஷ்பம் வைத்து வழிபடுதல், வாஸ்து நல்வரப் பலாபலன்களை நன்கு விருத்தி செய்யும்.

தன்னை 16 முறை ஆத்மப் பிரதட்சணமாகச் சுற்றியும், ஸ்ரீஆதிமூல வாஸ்து பகவானை எட்டு முறை சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்குதலும் எளிமையான தினசரி வாஸ்து பூஜையாகும். ஸ்ரீஆதிமூல வாஸ்து பகவான், ஸ்ரீவாஸ்து தெய்வ மூர்த்தி எனப் புராணங்களில் போற்றப் பெறுவதாலும், வாஸ்து ஹோமம் என்ற அற்புத யாகமும் வழக்கில் தொன்று தொட்டு அமைந்திருப்பதாலும், ஆலயக் கும்பாபிஷேகங்களில், பிள்ளையார் பூஜையை அடுத்து, வாஸ்து பூஜை பிரதானமாக அமைவதாலும், வீடு, கடை, ஆலயம் அனைத்திலுமே நிச்சயமாக ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் படத்தை வைத்துத் தாராளமாக மனமகிழ்வுடன், பூரண மனத் திருப்தியுடன் பூஜித்திடலாம். இதற்கு சித்தர்களின், மகரிஷிகளின் பரிபூரண அனுகிரகமும், சம்மதமும், ஆசிகளும் நிறைந்துள்ளன.

ஆலயங்களில் மேற்கண்ட ஸ்ரீஆதிமூல வாஸ்து பகவான் படத்தை மாட்டி வைத்து, பக்தர்களையும் தரிசிக்க வைத்தலால், ஆலயத்திற்கும் பக்தர்களின் வரவும் நன்கு விருத்தியாகி ஆலய அமைப்பிற்கான வாஸ்து சக்திகளும், நெறிமுறைகளும் மேன்மை பெறும்.

விளக்கு ஏற்றுவதற்குக் கூட வசதி இல்லாமலும், பூஜை இல்லாமலும், ஒரே ஒரு வேளை பூஜை மட்டும் உள்ள ஆலயங்களும் தமிழ்நாட்டில் நிறைய உண்டு. ஒவ்வொரு ஊர் மக்களும் தங்கள் ஊரிலும், பக்கத்து ஊர்களிலும் உள்ள பழமையான ஆலயங்களில், மூன்று வேளைகளிலும் பூஜைகளை ஆற்றிட, சத்சங்கமாக, சாதி, மத, இன, குல பேதமின்றி ஒன்று கூடி இறைப்பணிகளை ஆற்றினால்தான் ஒவ்வொரு பாரத கிராமமும் வளம் பெறும்.

விளக்கேற்றவும், பூஜை செய்யவும் வசதியற்ற நிலைமையில் உள்ள ஆலயங்களில், ஸ்ரீஆதிமூல வாஸ்து பகவான் படத்தை வைத்து, செவ்வாய் ஹோரை, அமாவாசை, பௌர்ணமி நாட்களில், எட்டு விதமான வாசனை மலர்களைச் சார்த்தி, சுற்றி வணங்கி வந்தால், வாஸ்து லட்சண ரீதியாக வழிபாட்டு முறைகள் மேம்படவும், பக்தர்களின் வரவும் நன்கு விருத்தியாகவும் நல்வழி பிறக்கும். நகர்ப் புறங்களிலும் ஆயிரக் கணக்கில் சிறு சிறு ஆலயங்கள் அமைக்கப் பெற்று, பக்தர்கள் வருவதில்லை என்று ஏங்குகிறார்கள். வில்வம், வேம்பு, அரசு, ஆல், புரசு போன்ற ஹோம விருட்ச மரத்தை ஆலயத்தில் நட்டு மிகவும் கவனமாக, புனிதமாக நியமத்துடன் வளர்த்து, தினமும் விருட்ச பூஜைகள் நிகழ்த்தி, ஸ்ரீஆதிமூல வாஸ்து பகவான் படத்தைக் கோயிலில் வைத்து பலரும் தரிசிக்கும்படி செய்தால், நகரச் சிறு ஆலயங்களில் பக்தர்களின் தரிசன எண்ணிக்கை மேம்பட உதவும். இதற்கான ஜனாகர்ஷண சக்திகளைக் கொண்டதே ஸ்ரீஆதிமூல வாஸ்து மூர்த்தி படத்தில் உள்ள விருட்ச சக்திகளின் மகிமையாகும்.

தற்போது ஸ்ரீவாஸ்து புருஷ தேவ மூர்த்தியைப் பற்றியும், ஸ்ரீவாஸ்து இலக்கண முறைகள் பற்றியும் பலர் அறிய முயற்சிப்பதே கிடையாது. எதையும் பார்க்காது அவசரம், பண நெருக்கடி, கோர்ட் வழக்குகள், வங்கிக் கடன்கள் போன்ற சந்தர்ப்ப நிர்ப்பந்தங்கள் காரணமாக உடனடியாக வாங்க வேண்டிய நிலைகள் ஏற்படுவதுண்டு.

மேலும் பிதுரார்ஜித நிலபுல வீடுகள், பழைய வீடுகளை வாங்குகையில் வாஸ்து இலக்கணங்களைப் பார்த்து வாங்குதலும் கடினமே. நகரங்களிலோ யாருமே வாஸ்து இலக்கணப்படி வீடுகளைக் கட்டுவது கிடையாது. எந்த இடம் கிடைத்தாலும் உயரமான பல மாடிக் கட்டிடங்களைக் கட்டி விற்பதிலேயே அனைவரும் கருத்தாக உள்ளனர்.

அந்த இடம் மயான பூமியாகவோ அல்லது துர்தேவதைகள் வாசம் செய்யும் இடமாகவோ இருக்கக் கூடும். யானை, பசு, குதிரை, நாய் போன்ற உயிரினங்கள், விலங்குகளை அதர்மமான முறையில் கொன்று புதைத்த இடமாக இருக்கலாம். தென்னை, பலா, மா, பனை, வாழை, அரசு, ஆல், வேம்பு போன்ற நல்ல விருட்சங்கள் அநீதியான முறையில் வெட்டப்பட்டிருக்கலாம். நாகப்புற்றுக்கள் இருந்திருந்து அவற்றை தரைமட்டமாக்கி அந்த இடத்தில் கட்டிடம் கட்ட ஏற்பாடுகள் செய்திருக்கலாம்.

மேற்கண்ட, பல காரணங்களால் புது வீடுகள் மட்டுமன்றி தற்போது குடியிருக்கும் வீடுகள், கட்டிடங்கள், விளைச்சலில் உள்ள நிலங்கள் ஸ்ரீவாஸ்து இலக்கணப்படி, திசை நியதிகள்படி அமையாவிடில் பலவிதமான தோஷங்களும், சாபங்களும், துன்பங்களும், நஷ்டங்களும் ஏற்படுகின்றன.

ஜனவரி 2005 பௌர்ணமி நாள் : 24.1.2005 திங்கட்கிழமை மதியம் 1.36 மணி முதல் 25.1.2005 செவ்வாய்க் கிழமை மாலை 4 மணி 2 நிமிடம் வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படிப் பௌர்ணமித் திதி நேரம் அமைகின்றது. கிரிவல நாள்: 24.1.2005 திங்கட் கிழமை இரவு!

அமுத தாரைகள்

நம்முடைய காதுகளின் அமைப்பு ஓங்கார வடிவானதாகும். பல மந்திரங்களிலும், பரவெளியிலும், பட்சிகளின் ஒலிகளிலும் நிறைந்திருக்கும் ஓங்கார சக்திகளை நன்றாக ஈர்த்துக் கேட்டுப் பதிப்பதற்காகவே, படைப்புக் கடவுளாம் ஸ்ரீபிரம்ம மூர்த்தி, மனிதக் காதுகளைச் சிறப்பான வடிவான ஓங்கார வடிவில் படைத்துள்ளார்.

செல்போனிலிருந்து வரும் செயற்கை மின்னியல் கிரணங்கள், உடலுக்குப் பல துன்பங்களைக் கொடுத்து விடுகின்றன. மனிதனிடம் மிளிரும் “Aura” எனப்படும் ஒளிர்ந்த ஜீவப் பிரகாச நிலையும், பலத்த பாதிப்புகளுக்கு உள்ளாகி, மனநிலையும் பெரிதும் பாதிக்கப்படும்.

ஸ்ரீராகு, ஸ்ரீகேது மூர்த்திகளுக்கான ஹோமங்களில் வலம்புரி, இடம்புரி, ஜடமாஞ்சில், சீந்திலைக் கொடி, பிரண்டை, குவளைப் புஷ்பம், மாசிக்காய், வாதநாராயண இலைகள் ஆகிய எட்டு திரவியங்களைக் கண்டிப்பாகச் சேர்த்துச் சுத்தமான பசு நெய் மூலம் ஆஹூதிகளாக அளிக்க வேண்டும். ஹோமத்திற்கான பசு விராட்டி, புனிதமான அரசு, ஆல், வேம்பு, புரசு போன்ற சமித்து வகைக் குச்சிகளைத் தவிர, சிராத்தூள், சவுக்கு வகை போன்ற விறகு வகை மரக் குச்சிகளை ஒரு போதும் பயன்படுத்தவே கூடாது.

ஸ்ரீசப்தரிஷிகள் லால்குடி

புலனைந்தும் அடக்கப் புலருமாண்டு! – வாழ்க்கையில் நன்கு புலனாகாத எண்ணங்கள், செய்கைகள், சம்பவங்கள், அனுபூதிகள் பலவும் உண்டு. இவற்றுள் பலவும், குருவின் ஆசியுடன் நன்கு புலனாகும் ஆண்டு இதுவேயாம்! இதற்காக இவ்வாண்டில், புலஸ்தியர் மஹரிஷியின் உருவம் உள்ள தலங்களில் வழிபடுதலால், வெளியில் சொல்ல முடியாத பல வகைத் துன்பங்கள் தீர வழி பிறக்கும் ஆண்டு. ஞானத்திற்குப் பல அடிப்படைகள், திறந்த வெளிகள், அணுகுமுறைகள் உண்டு. இவை இவ்வாண்டில் பல்துறைகளிலும் நன்கு விருத்தி ஆகின்றன. ஆனால் இவற்றை மானுட சமுதாயம், சுயநலமின்றி, பிற ஜீவன்களின் மேன்மைக்காக நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே! இதற்கு உதவுவதே ஸ்ரீஞானாம்பிகை வழிபாடு.

திங்கட்கிழமை அன்று சூரிய ஹோரையில் ஸ்ரீவீரபத்திர மூர்த்திக்கு மட்டைத் தேங்காயை சார்த்திப் பூஜிப்பது பகைமையைக் களைய வல்ல மிகவும் சிறந்த வழிபாடாகும். இது பகைமையைத் தீர்ப்பதுடன், நல்ஒற்றுமையையும் வளர்ப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.

பிள்ளையாரப்பனுக்கு மட்டை உரித்த தேங்காயை – 12, 24, 36, 108 என்ற எண்ணிக்கையில் தேங்காய் மாலையாகச் சார்த்தி வழிபடுவது சாலச் சிறந்தது. குடும்பத்தினுள், சிறு, சிறு சச்சரவுகளால் ஏற்படும் ஒற்றுமையின்மையைத் தவிர்த்து, நல்அமைதி பெற உதவும் மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடு இது.

வெளிநாடு செல்வோர் நிச்சயமாக ஸ்ரீகாலபைரவருக்கு, குளிகை காலத்தில், முந்திரி மாலையை அணிவித்து மனமாற வழிபட்டுப் பின்னரே அயல்நாடு செல்ல வேண்டும். மேலும், அயல்நாட்டில் இருக்கும்போது தினமும் ஸ்ரீகாலபைரவ அஷ்டகத்தை விடாமல் ஓதி வருதல் வேண்டும். தினமும் நாய்களுக்கு உணவிடல் வேண்டும். வெளிநாடுகளில் உள்ள தீவினைகள் பற்றாதிருக்க பைரவ பூஜையே காத்து நிற்கும்.

கட்டிடத் தொழிலில் உள்ள ஏமாற்றங்களில் இருந்து மீண்டிட, இவ்வருடம் வாஸ்து பூஜைகளை வாஸ்து நாட்களிலும், வாஸ்து மூர்த்திக்கு உரிய செவ்வாய்க் கிழமைகளிலும், செவ்வாய் ஹோரை நேரத்திலும், ஸ்ரீபூமிநாதர், ஸ்ரீஜகன்னாதர், ஸ்ரீஜகதீஸ்வரர், ஸ்ரீபூமீஸ்வரர் பெயரை உடைய ஆலயங்களிலும் நிகழ்த்தி வர வேண்டும். குறிப்பாக, புதுக்கோட்டை – பொன்னமராவதி இடையில் உள்ள முக்கியமாக செவலூர் ஸ்ரீபூமீஸ்வரரைப் பலவிதமான அபிஷேக, ஆராதனைகளுடன் வழிபடுவது இவ்வருடத்திற்கு உரித்தான வாஸ்து பூஜையாகச் சித்தர்கள் காட்டும் வழிபாட்டு முறையாகும். வாஸ்து லோகச் சித்தர்கள் அடிக்கடி வந்து பூஜிக்கும் தொன்மையான சிவாலயம் இது!

ஸ்ரீபூமிநாதர் செவலூர்

பிள்ளைகள் கல்லூரிப் பருவத்திற்கு வந்து விட்டாலே வாழ்வில் பல சலுகைகளை எதிர்பார்ப்பார்கள். செல்லம், பாசம், எதிர்பார்ப்பு காரணமாக தாயும் பரிவுடன் பல சலுகைகளை வாரி வழங்கி விடுவதால் இது பிள்ளைகளின் எதிர் காலத்தை பாதிக்கலாகும். தினமும் ஆஞ்சநேயரை 108 முறை வலம் வரச் செய்தல் கல்லூரிப் பருவப் பிள்ளைக்கு, பெண்ணுக்கு ஜப, தப, யோக, யாக, சக்திகளை ஆஞ்சநேயர் அருளால் பெற்றுத் தரும். ஒரு வாரத்திற்கு 1008 சுற்றுகள் என்று சங்கல்பம் எடுத்துக் கொண்டு நிறைவேற்றச் செய்து வந்தால் பாசம் தூய அன்பாய்ப் பரிமளிக்க உதவும்.

எங்கு அணிலைக் கண்டாலும், எவருக்கு ராமநாமம் ஓதும் தன்மை, குணம், எண்ணம், பாங்கு உடனேயே வருகின்றதோ, அவருக்கு “வாசஸ்பதி” அணிலானது தான் திரேதா யுகத்தில் பெற்ற, ஸ்ரீராம தரிசனப் பலனைக் கொடுக்கும் சங்கல்பத்தை ஏற்றதுடன், இவ்வாறு தாரை வார்த்தளிக்கும் சக்திகளையும் இன்றும், என்றுமாய்ப் பெற்றுள்ளது.

பல குடும்பங்களிலும் வீடு, வாசல், பிள்ளைச் செல்வங்கள் இருப்பினும் பெற்றோர்களுக்குத் தம் இறுதிக் கால வாழ்வு எப்படி அமையுமோ என்ற திகிலும், பயமும், இருந்து கொண்டே இருக்கும். அயல்நாட்டு மோகம், குறுகிய காலத்தில் நிறையப் பணம் சம்பாதித்து கார், வீடு வாங்குதல், பணக்கார இடத்தில் மனைவி அமைதல் போன்ற பலத்த எதிர்பார்ப்புகள், ஆசைகளுடன் பிள்ளைகள் பெரும்பாலும் வளர்வதால், செயல்படுவதால்தான் பெற்றோர்களுக்கு இவ்வகையான நீண்ட காலத் தணியாத கவலையாக மனதில் ஒருபுறம் வீங்கிக் கொண்டே வரும். இதற்கு மூல முதல் காரணம் தேவாரம், திருவாசகம், ராமாயணம், மகாபாரதம், போன்ற தெய்வீகப் பாடங்கள் ஆரம்பப் பள்ளிக் கல்விப் புத்தகங்களில் இருந்து விடுபட்டுப் போனதும், மேலும் பெற்றோர்களும் பூஜை, புனஸ்கார, விரத நல்வழிமுறைகளைக் கைவிட்டு வருதலும் தான்.

கலியுகத்தில் பெற்றோர்கள் இறுதிக் காலத்தில் தக்க காப்பின்றித் தத்தளிப்பர் என்பதால்தான் அரிய வழிபாடுகள் கலியுகத்திற்கென விசேஷமாக, பெற்றோர்களின் மனக் கவலைகளுக்கு மாமருந்தாக சித்தர்களால் அளிக்கப்பட்டுள்ளன. இதற்காக வசிஷ்டரும், விஸ்வாமித்ரரும், ஒருங்கிணைந்து விஷ்கும்ப யோக நாளில் பூஜிக்கும் திருத்தலங்களில் ஒன்றே நான்கு முகங்களுடன் முருகன் அருளும் – திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளப்பட்டித் திருத்தலமாகும்.

பஞ்சாங்கம் மூலம் விஷ்கும்ப யோகம் அமையும் நாளை அறிந்து இந்நாளில் வசிஷ்டர், விஸ்வாமித்ரர் இருவருக்கும் பூர்ண கும்பம் வைத்து இத்தலத்தில் இரு கலச பூஜைகளுடன் முருகனை ஆராதிப்பதுடன் மண் பானையில் வெண் பொங்கல் படைத்து ஏழைக் குடும்பங்களுக்கு, பானை, பாத்திரங்கள்,  அரிசி, காய்கறிகள், தானியத்துடன் தானமளித்து வர, முருகன் கும்பக் கலசமாய் வந்து நின்று காத்திடுவார். சதுர்முக முருகனுக்கு ஒவ்வொரு முகத்திலும் விபூதி, குங்குமம், சிந்தூரம், சந்தனம் ஆகிய நால்வகைக் காப்பு இட்டு வழிபடுதல் பெற்றோர்களின் ஸ்திரமில்லா மனத் தன்மையைப் போக்கி, நல்ல காப்பு சக்திகளை அளித்திடும்.

விஷ்கும்ப யோகவள வில்லப்ப வேலன்
உட்குமிழி உதரமதில் உத்தான போதம்
எட்கரவர் எம்பாராய் வந்த குணசீலன்
புட்குழியின் சின்ஆள சிவகுமர நாதா!

தொடரும் ஆனந்தம்...

பாசம் மோசம் செய்யும்...
என்பது நம் சற்குரு தம் அடியார்களிடம் அடிக்கடி கூறும் ஒரு வாசகம். ஆனால், நம் அடியார்களோ இதைப் பற்றி பிறரிடம் தெளிவாக, அருமையாக விளக்கம் அளிக்கும் வல்லமை பெற்றிருந்தாலும் தங்கள் சொந்த விஷயத்தில் இதை கோட்டை விட்டு விட்டு அல்லல்படுவதையே பல சமயம் பார்த்திருக்கிறோம்...

பல்லாண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி ...
ஒரு அம்மா அப்பாவிற்கு ஒரே ஒரு செல்லக் குழந்தை. படிப்பில் படு சுட்டி. அவன் தொடக்கப்பள்ளி படிப்பு முடிந்து உயர்நிலைப் படிப்பு தொடரும் சமயத்தில் நம் சற்குருவிடம் வந்தனர். அவர்கள் நம் சற்குருவைப் பார்க்கும்போதெல்லாம் தங்கள் குழந்தையின் திறமையைப் பற்றி, அவன் கெட்டிக்காரத்தனத்தைப் பற்றி மணிக் கணக்கில் பேசுவார்கள். அதைத் தவிர வேறொன்றையும் அவர்கள் அறியார்கள்.

அவமாகம் அருளிய
அருள்நிறை மூன்றாம் பிறை

முதலில் அந்தக் குழந்தையின் தாய் தான் எப்படி எல்லாம் அவனுக்கு உணவு ஊட்டுகிறாள், அவன் ஆடைகளைத் துவைத்து வைக்கிறாள், அவனுக்கு குளிப்பாட்டி விட்டு அவன் பள்ளிக்குச் செல்ல ஆயத்தப்படுத்துகிறாள் என்பது பற்றி குறைந்தது இரண்டு மணி நேரம் விவரிப்பார். தாய் தன் ‘ட்யூட்டியை’ முடித்தவுடன் தந்தை எப்படியெல்லாம் சிரமப்பட்டு பல மைல்கள் தள்ளியிருக்கும் டியூசன் வாத்தியாரிடம் அவனைத் தினமும் சைக்கிளில் வைத்து கூட்டிச் செல்கின்றார், எப்படி அவன் ஆடைகளுக்கு அயன் செய்வதற்காக அயன் வண்டிக்காரனை தேடிச் செல்கிறார் என்பது போன்ற கதையை அடுத்த இரண்டு மணி நேரம் தொடர்வார்.

இந்தக் கதை ஒரு வருடம், இரண்டு வருடங்கள் என்று தொடர்ந்ததல்ல ... அந்த மாணவன் தன் உயர்நிலைப் படிப்பை முடிக்கும் வரை தொடர்ந்தது. அவனும் அனைவரும் எதிர்பார்த்ததுபோல் நன்றாக படித்து மாநிலத்திலேயே முதல் மாணவனாக அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தான். அந்த பெற்றோரின் உற்றம் சுற்றம் எல்லாம் இவ்வளவு அறிவுள்ள ஒரு மாணவனை நம் நாட்டில் படிக்க வைத்தால் சிறப்பாக இருக்காது அதனால் லண்டனில் உள்ள பெரிய கல்லூரியில் அவனை சேர்த்து படிக்க வைப்பதே முறை என்று சிபாரிசு செய்தனர்.

கொண்டராங்கி குணக்குன்று

பல வருடங்களாக நம் சற்குருநாதரிடம் வந்து போய் கொண்டிருக்கும் அந்தப் பெற்றோர்கள் இது சம்பந்தமாக நம் சற்குருவின் ஆலோசனையைக் கேட்டனர். நம் சற்குருவோ அனைவரின் எதிர்ப்பார்ப்புகளுக்கும் சற்றும் ஒத்துவராத வகையில், “ஏன் சார், பையன் நல்ல பையன், அருமையாக எல்லா பாடங்களையும் அற்புதமாக படிக்கிறான் என்பதில் சந்தேகமில்லை. இவ்வளவு அருமையான பையன் எங்கிருந்தாலும் நன்றாகக்தானே படிப்பான், அதனால் சீராட்டி செல்லமாக வளர்த்த ஒரே குழந்தையை எதற்காக வெளி நாட்டிற்கு, இவ்வளவு தொலைவான தூரத்திற்கு அனுப்புகிறீர்கள்..,” என்று கேட்டார்.

ஆனால், விதி வலியது அல்லவா...? உறவினர்களும் நண்பர்களும் அளித்த போதை தலைக்கேறவே அவர்கள் இத்தனை வருடங்கள் குஞ்சுகளைக் காப்பாற்றும் கோழியைப் போல் அந்த மூவரையும் காத்த நம் சற்குருவின் வார்த்தைகளை அலட்சியம் செய்து விட்டு அந்த மாணவனை லண்டனில் உள்ள ஒரு பெரிய கல்லூரியில் சேர்த்து விட்டனர்.

அந்த மாணவனும் மிகவும் நன்றாகப் படித்து அனைவரும் வியக்கும் வண்ணம் முதல் வருடம் அற்புத மதிப்பெண்களைப் பெற்று பல்கலைக் கழகத்திலேயே முதல் மாணவனாகத் திகழ்ந்தான். பெற்றோர்கள் மகிழ்ச்சிக் கடலில் குளித்தனர் என்பதை சொல்லவும் வேண்டுமோ?

சில மாதங்கள் கடந்தன...
“எங்கிருந்தோ அடிமை நாட்டிலிருந்து வந்த ஒரு மாணவன் லண்டனில் வெற்றிக் கொடியை பறக்க விடுவதா?” என்று அந்த மாணவனின் அபார திறமையைச் சகிக்க முடியாத சில மாணவர்கள் ஒன்று கூடி அந்த மாணவன் அருந்தும் காபியில் விஷத்தைக் கலந்து கொடுத்து அவன் கதையை முடித்து விட்டனர். இந்த கொடுமையான செய்தி அவன் பெற்றோர்களுக்கு தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டது. அவ்வளவுதான் அடுத்த விநாடி தாய், தந்தை இருவருமே மனநோயாளிகள் ஆகி விட்டனர்.

அவர்களுக்கு நெருங்கிய உறவினர்கள் என்று யாரும் இல்லாத காரணத்தால் சில நண்பர்கள் ஒன்று கூடி அவர்களை மனநோயாளிகள் காப்பகத்தில் சேர்த்து விட்டனர். இப்போது அவர்களுடைய ஒரே பொழுதுபோக்கு தொலைபேசிதான். ஏதோ வெளிநாட்டிலிருந்து போன் வந்ததாக கற்பனை செய்து கொண்டு தந்தை தன் மகனுடன்(?!) மணிக் கணக்கில் பேசுவார். அவர் பேசி முடித்துவுடன் தாய் தன் மகனுடன் தொடர்ந்து மணிக் கணிக்கில் பேசிக் கொண்டிருப்பார்...

ஓரிரு முறை நம் குழந்தைகளுக்கு அட்வைஸ் செய்து அதை அவர்கள் நிராகரித்து விட்டால் நாம் எரிமலையாயக் குமுறுகிறோம். ஆனால், அந்த மூவரும் தன் ஆலோசனையை நிச்சயம் சட்டை செய்ய மாட்டார்கள் என்பதை தெளிவாக அறிந்திருந்தும் ஒரு சாதாரண மனிதனைப் போல் அவர்களைக் காக்க தன் காக்கும் கரங்களை நீட்டிய நம் சற்குருவிற்கு இணை நம் சற்குரு ஒருவரே !

சென்னை அருகே சித்துக்காடு

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam