பட்டை லிங்கத்தின் ஒரு பட்டையைப் பற்றி புரிந்து கொள்ளவே ஒரு சதுர்யுகம் தேவைப்படும் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

வெற்றிலையின் தெய்வீக இரகசியங்கள்

* மனித ஜீவ சிருஷ்டிக்கு முன்னரேயே படைக்கப்பட்ட அபூர்வமான தெய்வீகப் பொருட்களில் ஒன்றே வெற்றிலையாம்!

* பிரம்மா, சிருஷ்டித் தத்துவத்தை உபதேசமாகப் பெற்ற போது, அவர் அருகில் அமர்ந்து தேவ சாட்சியாக இருக்கும் பாக்கியத்தைப் பெற்றதே வெற்றிலையாம்!

* ஜீவ சிருஷ்டித் தத்துவங்களை உணர்விக்கும் தேவ மந்திரங்களையே நரம்பு நாடிகளாகக் கொண்டிருப்பதும் வெற்றிலையே!

மஹா சிருஷ்டியின் போது பிரம்ம மூர்த்தி ஜீவப் படைப்பிற்கான உருவங்களை பஞ்ச பூத வடிவங்களாய் மண்ணிலும், நீரிலும், அக்னியிலும், வானத்திலும், காற்றிலும் வடித்திட்டார். மண்ணில் வடித்த போது அந்த ஜீவ வடிவங்களின் தோற்றங்கள் மாறலாயின, மறையலாயின!  பிரம்ம மூர்த்தியாலேயே அவற்றை க்ஷண நேரம் கூட நிதானித்துக் காண இயலவில்லை!

அவர் காற்றில் வரைந்த வடிவமோ கடிதிலும் கரைந்து போயிற்று. மேலும் ஒவ்வொரு லோகத்திலும் அவை விதவிதமான வடிவுகளைக் காட்டின! வானில் இட்ட வடிவமோ சூரிய, சந்திர நட்சத்திர ஒளிப் பிரகாசத்தைத் தாங்க இயலாது பிரதி பிம்பமாய் ஆங்காங்கே மறைந்தது. நீரில் இட்ட வடிவமோ ரங்கோலியாய் நிற்காது அதுவும் கரைந்ததே!  அக்னியில் பதித்த வடிவமோ பஸ்மமாகி முற்றிலும் பிரபஞ்சப் பார்வையிலிருந்தே மறைந்தும் விட்டது. இதைக் கண்டு பிரம்ம மூர்த்தியே என் செய்வதென்று திகைத்திட்டு சிருஷ்டி பூர்வத்திற்கான பரிபூரண அவதாரமான ஸ்ரீகிராத மூர்த்தியிடம் சரணடைந்தார்.

வெற்றிலை பிறந்தாள்!

முழையூர்

பிரம்மாவிற்கு உதவும் பொருட்டுச் சிவபெருமான் தம் கிராத அவதார சக்திகளின் சில அம்சங்களைத் தொகுத்துத் திரட்டினார்! அப்போது ஸ்ரீகிராத மூர்த்தியின் அவதாரத்திற்கு இறைவியாய் ஆகுதற்குத் தவம் பூண்டிருந்த பராசக்தியாம் கௌரீயிடம் தாம் திரட்டிய சாகம்பர்ய சக்திகளைச் சிவபெருமான் அளித்திடவே அச்சக்திகள் சிவ-கௌரி ஐக்கிய ஸ்வரூபத்தைப் பூண்டன! சிவ கௌரீ சக்தியின் இடகலை, பிங்களை, சுழுமுனையின் மும்முனை திரி நேத்ர சக்திகளாக அவை பின்னிப் பிணைந்து இவை யாவும் ஒரு மகத்தான தேவ சாகம்பர்ய தளமாக (இலை) பசுமை நிறத்தில் சங்கமமும் ஆகின.

அந்த பசுமையான இலையின் ஜோதிப் பிரகாசத்தைக் கண்டு வியந்த பிரம்ம மூர்த்தியிடம், "நான்முகா!  இந்த தளத்தை நீயே உன் பிரம்ம ஜோதியில் தாங்கி இந்த இலையில் நீ உன் மனதில் வடித்துச் சங்கல்பித்து உள்ள ஜீவ சிருஷ்டி வடிவங்களைப் பதித்துத் தருவாயாக! ஆனால் சிவ கௌரீ ஐக்கிய பீஜாட்சரங்களை இந்த தளம் (இலை) தாங்கி இருப்பதால் உமக்கும் உன்னுடைய பிரம்ம ஞானத்தைத் தாங்கவல்ல சிவகௌரீ அம்சமான ஸ்ரீசாகம்பரி அம்பிகையிடமும் தாரை வார்த்துத் தந்தால் தாம் நீ இந்த தளத்தைத் தாங்கும் சக்தியைப் பெறுவாய்! மேலும் சிருஷ்டி பற்றிய இந்த தேவ ரகசியத்தைப் பெறுகையில் இந்த இலையே தேவ சாட்சியாகப் பொலிந்தமையால் நீ வேறு பல பிரம்ம ஞானத்தைப் பெறும் போதெல்லாம் இந்த தளமானது (இலை) தேவ சாட்சியாக ஆங்கே பரிமளிக்கும்!" என்று ஸ்ரீகிராத மூர்த்தி அருளினார்.

எனவே மகா சிருஷ்டியின் போது பிரம்ம மூர்த்தியே தம் தபோ பலன்களைத் தாரை வார்க்கும் அளவிற்குத் தான, தர்ம புண்ய சக்திகள் எங்கும் எப்போதும் நிறைந்து பிரகாசிக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

வெற்றிலையில் வேத சக்திகள்

பிரம்ம மூர்த்தி தாரை வார்த்தளித்த தபோ பலன்களே அந்த மகாதேவ தளத்தின் (இலையின்) நரம்புகளாயின. இத்தருணத்தில் தாம் ஸ்ரீமகாலட்சுமியும் திருமாலின் திருமார்பில் எப்போதும் உறையும் பாக்யம் பெற்றமையால் திருமால்-திருமகளின் ஐக்கிய கோல தரிசன அருட்சாறும் "தள ரசமாக" அந்த தேவ சாகம்பர்ய தளத்தில் கூடியது. இவ்வாறாக மும்மூர்த்திகள் அருட்தாரையாய்ப் பெய்த சக்தித் தத்துவ சக்திகள் அந்த தளத்திற்கு சிரஞ்சீவித்வ, சுமங்கலித்வப் பேரொளியைக் கூட்டின. இவ்வாறு, யாதும் ஒன்றாய், பலவாய், வெற்றிடமாய், பூஜ்ய நாயகரின் சிவ-கௌரீ ஐக்கிய பாவனையில் உருவான அந்த மகாதேவ தளமே வெற்றிலை ஆயிற்று! இந்த அரிய தேவ சாகம்பர்ய தளம் தான் இன்று நாம் காணும் எங்கும் மங்களம் தரும் "வெற்றிலை" ஆகும்!

இந்த அரிய சிருஷ்டி ஞானத்தை ஸ்ரீபிரம்ம மூர்த்தி பெற்ற இடமெது தெரியுமா?  பிரம்மா கண்ட இந்த அரிய சிவ கௌரீ தரிசனத் தலமே கும்பகோணம் - பட்டீஸ்வரம் அருகில் முழையூர் ஸ்ரீபிரம்ம ஞானபுரீஸ்வரர் ஆலயமாக இன்றும் பரிணமிக்கின்றது! இங்கு பிரதோஷ நாளிலும், வெள்ளி, திருவாதிரை, மாத சிவராத்திரி நாட்களிலும் சுவாமிக்கும், அம்பிகைக்கும் 1008 வெற்றிலைகளைச் சந்நிதியிலேயே தம்பதிகள் தாமே தொடுத்து மாலையாக்கிச் சூட்டி வழிபட்டு வந்தால் நல்ல ஞானமுள்ள சந்ததியைப் பெற்றிடலாம்!  குழந்தை பாக்யம் தரும் உத்தமத் தலம்!

தம் பிள்ளைகள் படிப்பில் மண்டுவாக, அசடாக இருக்கின்றார்களே என்று ஏங்கும் பெற்றோர்கள் இங்கு முழையூர் சிவாலயத்தில் 1008 வெற்றிலைகளைச் சந்நிதியிலேயே தொடுத்து பிரதோஷ நேரத்தில் சிவபெருமானுக்குச் சாற்றி வந்தால் நல்ல தெய்வ ஞானம் பிரகாசிக்கும்!

சிவ-கௌரீ ஐக்கியமாம், வெற்றிடமாம், பூஜ்ய ஞானத்தில் இருந்து உதித்தமையால் வெற்றிலை ஆயிற்று. ஆம், இந்த வெற்றிலையில் தான் ஸ்ரீபிரம்ம மூர்த்தி தம்முடைய சிருஷ்டி வடிவங்களை வரைந்து மகாதேவப் பரம்பொருளிடம் அர்ப்பணித்தார். அன்றும், இன்றும், என்றும் பிரபஞ்சத்தின் அனைத்து ஜீவ சிருஷ்டி வடிவங்களும் இந்த வெற்றிலையில் தான் ஸ்ரீமகா கணபதி இடுகின்ற காணாஞ்சனம் என்னும் மையால் தான் வரையப்பட்டு இறைவனிடம் படைக்கப்படுகின்றது. உங்களுடைய ஆதி வடிவமும் பிரம்மாவால் வெற்றிலையில் காணாஞ்சன மையால் இட்டு வரையப் பெற்றதே!  இதனால் தான் பிறந்த குழந்தைக்கு கண் மை இடுகின்றோம்.

அடிமை கண்ட ஆனந்தம்

(நம் குருமங்கள கந்தர்வா வெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்)

குருகுல வாசம் என்பது சாசுவதமான சிரஞ்சீவித்வம் பெற்ற ஞான பூர்வமான குரு-சிஷ்ய இறைப் பிணைப்பாகும். எத்தனை கோடி யுகங்களானாலும் இது தெய்வீகத் தொடராகப் படர்ந்து, பரிமளித்துக் கொண்டே இருக்கும். இவ்வகையில் பள்ளிச் சிறுவனாய், ஸ்ரீவெங்கடராமன் (குரு மங்கள கந்தர்வா) பெற்ற கலியுக குருகுலவாசமானது, பல கோடி யுகப் பரிணமிப்புச் சுடராய் பொலிந்து, எத்தனையோ கோடி ஜீவன்களுக்குக் குருகுலவாச அனுபூதிகளைப் புகட்டி, இறை லட்சிய வாழ்க்கைக்கு நடைமுறைப் பாடங்களாகத் (practical divine lessons) துலங்குகின்றது

படித்து, உய்த்துத் துய்த்துப் பாருங்கள்! எல்லோருக்கும் ஒவ்வொரு இடத்தில் உத்தம பொக்கிஷம், நல்லதோர் பிராயச்சித்தம், உன்னதப் பரிகாரம், இறையுணர்வு பொங்குதல், பளிச்சென்று பீறிட்டும் பீஜாட்சர ஒலிப்பரல் இவ்வாறாக இன்னும் பலவும் தெய்வீகப் பரிசாய்ப் பதிந்து முகிழ்ப்பதை நீங்களே நிச்சயமாக உணர்வீர்கள்!

"நாளைக்குத் தனுர் மாசம் (மார்கழி) பொறக்குதுடா!  கிருஷ்ணனுக்கு ரொம்பப் பிரியமான மாதமாச்சே!  சாட்சாத் ஆண்டாளே நேரடியா பூலோகத்துக்கு வந்து பூஜை பண்ற மாதம்! சரி, சரி!  இன்னிக்கு சாயந்தரம் கோயிலுக்கு வந்துடு! ஒரு முக்கியமான இடத்துக்குப் போயாகணும்!"

பொருள் ஆனந்தம் இடையே புலன் ஆனந்தம் !

பாராது பவித்ரமானாய்!

ராயபுரம் அங்காளியம்மன் ஆலயத்தில் சற்று ஓய்விற்காக அமர்ந்த சிறுவனை எங்கிருந்தோ ஓடோடி வந்த பெரியவரின் குரல் கிளப்பியது! சிறுவனும் வாரிச் சுருட்டிக் கொண்டு சிந்தனைப் பாயிலிருந்து எழுந்தான்! தினமும் பெரியவரைப் பார்த்துப் பழகிப் போன அவனுக்குக் கடந்த சில மாதங்களாகவே "தேவையானால் தாமே நேரில் தோன்றும்" படலத்தைப் பெரியவர் நடைமுறைக்குக் கொண்டு வந்துவிட்டதால் அவன் yet to get attuned to the refurbished divine dictum and divinitized strictures....!

ஸ்ரீஅமர்நீதி நாயனார் முழையூர்

"இதுக்குத்தாண்டா எத்தனையோ வாட்டி சொல்லிக்கிட்டே வரேன், என்னை நல்லா உள்ளத்துல புடிச்சுக்கோ, எப்பவுமே நேரில பார்க்கணும்னு ஆசைப்படாதேன்னு!  நேரே கொஞ்ச நாள் பார்க்கலைன்னா இப்படியா புஸ்ஸுன்னு ஆயிடறது?"

பெரியவர் அவ்வப்போது இதனை வேத மொழியாய்ச் சொல்லி வந்தாலும் "இனி இங்கு அவர் தெரியார்" என்ற நிலையை அவனால் எளிதில் ஜீரணிக்க முடியவில்லை! எனினும் அவர் குரலை அசரீரியாகக் கேட்ட சிறுவன், அவர் பேசுவதை கட்டளை பிறப்பிப்பதை அவனால் ஆழ் உள் நிலையில் நன்கு கேட்டு உணர முடிந்ததே அரும்பெரும் பாக்யம்தாமே! அவர் அசரீரியாக இட்ட இறை ஆணைகள் பலவற்றையும் செவ்வனே செய்து முடித்தும் வந்தான் அவன்!

"ஏண்டா கண்ணு!  நான் நேரடியாச் சொல்லாமலேயே, வாயு பூர்வமாக telepathy ஆ நான் சொல்றதைக் கேட்டு அட்சரம் பிசகாம எல்லாத்தையும் நல்லபடியாக செஞ்சு முடிச்சுடறியே, அப்புறம் நான் எதுக்கு ராஜா நேரே வந்து பேசணும்னு ஏங்கறே, சொல்லு பார்க்கலாம்? ஏண்டா, உன்னோட சின்ன உருவத்துக்காக நான் எத்தனையோ கோடி மைலுக்கு அப்பாலேந்து, ஏதேதோ லோகத்துலேந்து இந்த வயசான உருவத்தைச் சுமந்து முட்டி தெறிக்க, உடம்பு வலிக்க மனுஷ உடம்புக்கான வயத்து வலி இத்யாதியோட நடந்து, பறந்து வரணுமா அப்பனே! என்னை ஏன் இப்படி நீ ரொம்ப, ரொம்ப இம்சைப்படுத்தறே....!"

ஏனிந்த தாகம், ஐயா?

சிறுவன் அவருடைய வார்த்தைகளின் உஷ்ணம் தாங்காது தகித்தான்! இருந்தாலும் நேருக்கு நேர் அவருடைய தெய்வீகமான கண்களுக்குள் தைரியமாய் ஊடுவியும் பார்த்தான். முன்னரெல்லாம் அக்கண்களின் ஜோதிப் பிரகாசத்தை அவனால் தாங்க முடியாது, தலையைத் தாழ்த்திக் கொள்வான்! இன்றோ துணிந்து அவர் ஒளிமயக் கண்களுக்குள் நுழைந்து, சித்த சாம்ராஜ்யத்தில் நீந்தித் திளைத்து மகிழ்ந்தான்!

ஆயினும் "என்னை ஏன் நீ இம்சைப்படுத்தறே?" என்ற வாக்கியம் அவனைப் பேரனலாய்ச் சுட்டது!  இதைச் சொன்ன பெரியவரின் கண்களும் வேதனையால் சற்றே கலங்கியது போலிருந்தது! சிறுவனின் கண்களிலும் நீர் திரண்டு அவன் தொடையில் விழுந்து நன்றாய்ப் பொசுக்கியது!

"பாவம்!  எத்தனையோ லோகங்களில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் வாத்யாரை எண்ணி, எண்ணி அவரை எண்ணத்தாலேயே தேவையில்லாமல் கட்டி பூமிக்கு இழுத்துக் கொண்டு வந்து..... இந்தக் கிழவர் வடிவில் அனைத்து உபாதைகளையும் தாங்கி பூமிக்கு வர வைப்பதற்கு யார் பொறுப்பேற்பது? நாம் தானே இதற்கெல்லாம் காரணமாகி விட்டோம்!"

சிறுவன் வருத்தமுற்றான்!

"ஏண்டா, இந்தக் கிழவன் வடிவம் ரொம்பக் கஷ்டமாக இருக்கேன்னு நானும் இளைஞனா சுறுசுறுப்போட ஒரு வடிவத்துல வந்தா நீ ஏத்துப்பியா? இல்லாட்டி இந்த உலகம் தான் ஏத்துக்குமா? இந்தக் கிழட்டு உடம்புல உனக்காக எத்தனை நாள்தான் நானும் அல்லாடறதுடா?"

அவருடைய கண் பார்வையும், மொ(பொ)ழியும் வார்த்தைகளும் அக்னியாய்ச் சுட்டாலும் சிறுவன் அவருடைய கண்களுக்குள் நிரவியிருந்த ஞானக் கடலினுள் நீந்திப் பரமானந்த இறைமுத்துக்களைத் திரட்டி.....!

"அப்பப்பா இந்த அக்னிப் பிரவேசத்திற்குள் தான் எவ்வளவு சீதளமான ஞானப் பிரவேசம்? இதற்குத் தான் எவ்வளவு தெய்வீக சக்தி?"

இருவரும் நெடுநேரம் பேசவில்லை! கண்ணோடு கண் நோக்கில் வாய்க்கு என்ன பயன்?

"தன்னை, சற்குருவாய் உணர" வைத்த பின் பெரியவருக்கும் அங்கு என்ன வேலை? வழக்கம் போல் அவர் மாயமாய் மறைந்தே விட்டார்!  சிறுவன் க்ஷண பொழுதில் நிறைய "உத்தம இறை நிலைகளை" குருவருளால் உய்த்து விட்டமையால்.......! அவனும் நன்கு தெளிவடைந்து சீரானான்!

மறையா மறை நதிப் பிரவாகம்!

ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் முழையூர்

அன்று மாலை.....பெரியவரின் கட்டளைப்படி சிறுவன் ஆலயத்திற்கு வந்து சேர்ந்தான்! அவன் வந்த விநாடியில் இருந்து நள்ளிரவுக்கு முன் வரை ஆலயங்களின் பூஜைகள், கும்பாபிஷேகம், பஞ்சாங்கத்தில் காணப்படும் விரத முறைகள், அரிய ஆலய ஹோமங்கள், அர்ச்சனை, அலங்கார முறைகள் பற்றிப் பெரியவர் விஸ்தாரமாக உரைத்திடவே........நேரம் போனதே தெரியவில்லை!  சற்குரு அன்று மூன்று மணி நேரத்தில் உணர்த்திய மூவாயிரங்கோடி யுக இறை விளக்கங்கள் தாம் இன்றும், என்றும் ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் விஷ்ணுபதி, தர்ப்பணம், அரிய விரத மகிமைகள், நித்ய கர்ம நிவாரண நியதிகள், அண்ணாமலை அற்புதங்கள் - போன்றவையாக குருவாய் அமுத மொழியாய், அமிர்த மழையாய்ப் perennial river   ஆகப் பொ(லி)ழிகின்றன.

இரவில் சென்னையைத் தாண்டி....எங்கோ சிறுவனை அழைத்துச் சென்ற பெரியவர்.......அங்கு ஒரு கோயிலை அடைந்ததும்......உள்ளே சென்று சில விநாடிகளில் அவர் வெளி வந்திட......கோவணாண்டிக் கோலம் மாறி......பெரிய சிவாச்சாரியார் போல் சீரிய சிவக் களையுடன் செறிந்து திகழ்ந்தார்!

கழுத்து நிறைய ருத்ராட்ச மாலைகள்! காணுதற்கரிய ஸ்படிக மணிகள்! கைகளில் ம்ருதுள மணிகங்கண்கள்! கால்களில் திருவெண்டயம்..! வீதி நெடுக "ஜல், ஜல்" ஒலியுடன் பரமானந்த நடையை அவர் கொண்டிட....ஜனங்கள் பவ்யமாகப் பணிந்திட.....பெரியவர் நேரே குருக்கள் வீட்டிற்குச் சென்றிட்டார்!  தள்ளாத வயதில் அந்த முதிய குருக்கள் எழுந்து வந்து வரவேற்று மிகவும் பரிச்சயமானவராய் அவருடன் அளவளாவிட....பெரியவரும் நன்கு குசலம் விசாரித்து.....உறவு முறைகளைப் புதுப்பித்து....

"நாளையிலேந்து மார்கழி ஒரு மாச பூஜைக்கு ஆள் வேணும்னு ரங்கன் மூலம் சொல்லி இருந்தியே!  இவன் தான் நம் பிள்ளையாண்டான்! நிறைய மந்திரம் சொல்லிக் கொடுத்திருக்கேன், ஒரு மாசம் நல்லபடியா ஆறு வேளையும் பூஜை பண்ணச் சொல்லி இருக்கேன்! அவனே கோயில் சுயம்பாகம் எல்லாம் பார்த்துப்பான்! ஒரு பைசா கூடச் சம்பளம் தர வேண்டாம்...எல்லாமே இறைச் சேவைத்தான்!"

பெரியவர் வரிசையாகச் சொல்லிக் கொண்டே எழுந்து எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு வழக்கம் போல் சிறுவனின் கண் காணாது மறைந்தும் விட்டார்!

சிறுவன் திகைத்து நின்றான்!

"நடந்து வந்த வழியில் ஏதாவது சொல்லியிருந்தாலாவது தேவலை!  ம்...ம்...ம் சித்தன் போக்குச் சிவன் போக்கு ஆயிற்றே!"

யாரோ, அவர் யாரோ?

முழையூர்

அடுத்த நாள் காலைக்கான தனுர் (மார்கழிப் பிறப்பு) பூஜைக்கு.....எண்ணி மூன்றே மணி நேரம் தான் இருந்தது!  நோய்வாய்ப்பட்டிருந்த குருக்களையும் பெரியவர் வில்வண்டியில் சிகிச்சைக்காகச் சென்னைக்கு அனுப்பச் சொல்லி விட்டார்! முன்பின் தெரியாத இடத்தில் துணைக்கு என்ன செய்வதென்று புரியாது ஏதோ ஒரு உத்வேகத்தில் மடமடவென்று கோயிலில் பணிகளை ஆரம்பித்தான் சிறுவன்! மார்கழி பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்குப் பம்பரமாய்ச் சுழன்றான்!

தோரணங்கள், நெய் விளக்குகள், விசேஷமான அபிஷேக, ஆராதனை திரவியங்கள், நறுமண தூப தீபம்....யார் யாரோ எல்லாவற்றையும் கொணர்ந்திட...காலை நான்கு மணிக்கெலாம் ஆலயத்தில் மார்கழி மாதப் பிறப்பு விழா களை கட்டியது!

சிறுவனுக்கோ ஒன்றுமே புரியவில்லை....யார் யாரோ....எங்கெங்கிருந்தோ ....பூலோகத்தில் சம்பந்தப்படாதவர்களெல்லாம் விண்ணுலகில் இருந்தே பூமிக்கு வந்து உதவியதாகவே அவனுக்குத் தோன்றியது!  ஏனென்றால் அந்த மாதிரிப் புஷ்பங்களை, ஊதுபத்தியை, நறுமண தூபத்தை இதுவரையில் அவன் பார்த்ததே இல்லை!

ஆலயத்தில் ஆறு வேளை பூஜைகளும் நல்மனம், நறுமணம் நிறைந்த நைவேத்யத்துடன் நன்கு நடைபெற்றன. மார்கழி மாத பூஜை அச்சிவாலயத்தில் மிகவும் பிரமாதமாக நடைபெறுவதான நற்செய்தி எங்கும் பரவிடவே, நூற்றுக் கணக்கானோர் தினமும் ஆங்கே திரள ஆரம்பித்தனர். சிறுவனே முன்னின்று அனைவருக்கும் நன்முறையில் நிறையப் பிரசாதம் வரும்படி "மடைப் பள்ளியையும்" நிர்வகித்தான்!

கையில் ஓரணா கூட இல்லாமல் எங்கெங்கோ திரவியங்களைத் திரட்டி....ஆறு கால பூஜைகளும் ஊரே மெச்சும் வகையில் மிகவும் பிரமாதமாய் நடந்தன!  அன்றன்று வருவதை இறைவனுக்கு அன்றைய தினமே படைத்து அனைத்தையும் அன்றே அன்னதானமும் செய்து விடுவான் சிறுவன்! அபிஷேக ஆராதனைகளில் நல்ல பயிற்சிகளையும் பெற்று, அரும்பெரும் அனுபூதிகளையும் உய்த்து, நிறைய தேவ தரிசனங்களையும் துய்த்து, பல அற்புதங்களையும் கண்டு, பெற்று ஆனந்தித்தான்! இப்படியாக.....வெகு விரைவாகவே ஒரு மாத காலமும் ஓடி விட்டது.

மீண்டு(ம்) வந்தார்!

அடுத்த நாள்.....உத்தராயணப் புண்ய காலப் பிறப்பு நாள் தை முதல் தேதியாக வந்து குதித்து விடுமே! மார்கழி மாத நேர முடிவில்... இரவு ஒரு மணி இருக்கும்...அர்த்த ஜாம பூஜை, பள்ளியறைப் பால் பிரசாதம், சிவ பாத பூஜை, பைரவர் பூஜை போன்றவற்றை முடித்த களைப்பில் அயர்ந்த சிறுவனை,

"ஏண்ட மார்கழி மாசம் முடிஞ்சுட்டா உடனே தூங்கிடறதா? "வருஷம் ஃபுல்லா பிரம்ம முகூர்த்த நேர பூஜை பண்ண வேண்டிய மனுஷன், மார்கழி மாசமாவது பண்ணட்டுமேன்னு கொஞ்சம் விதிவிலக்கு கொடுத்தா இப்படியா தூங்கி முப்பது நாள் புண்யத்தையும் வேகமாகவா கரைக்கறது?"

நெடுங்குடி

ஆம்! பெரியவர் தான் சங்கு, ஜெயங்கொண்டம் சகிதம் அனைத்தையும் ஒலித்தவாறு தம் குரலைக் கிளப்பி சிறுவனை எழுப்பிக் கொண்டு ஊர்க் கோடிக்கு அழைத்து வந்து விட்டார்.

"என்ன இது! யாரிடம் சொல்லிக் கொள்ள வேண்டாமா? அப்படியே கோயிலை விட்டுவிட முடியுமா?" என்று சிறுவன் யோசிப்பதற்குள்,

"உனக்கு ஏண்டா அந்தக் கவலை? கொண்டு வந்து விட்டவனுக்குப் பிரியா விடை கொடுத்துச் சொல்லிட்டு வரத் தெரியாதா என்ன? எல்லாரும் உன்னை ஆஹா, ஊஹுன்னு புகழ்ந்து தள்றாங்களே!" என்று சொல்லிப் பெரியவர் கண்ணைச் சிமிட்டினார். சிறுவனுக்குப் பெருமிதம் பொங்கிட, ஊர் எல்லையிலிருந்து ஆலயத்தைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்தான்!

வேறு யார் உளரோ?

"தான் ஒரு மாதமாக நன்றாகப் பூஜித்த கோயிலாயிற்றே! யார் இனி விடியற்காலை பிரம்ம முகூர்த்த பூஜையை எடுத்துச் செய்வார்கள்?" என்ற எண்ணம் அவனுள் துளிர் விட்டது!

"நறுக்" கென்று தலையில் குட்டினார் பெரியவர்!

"தெய்வீகத்துல இந்த அகங்காரமான எண்ணம் கொஞ்சம் கூட வரவே கூடாது நயினா! யார் யார் மூலமோ எல்லாத்தையும் இறைவனே நடத்திக்கறான் அப்படீங்கற எண்ணம்தான் இருக்கணும், புரியுதா? எதுக்கும் பிரயோஜனமில்லைன்னு சுவாமி நம்மைத் தூக்கிப் போட்டுடாம கடைசி வரை நம்மை ஒரு சிறு இறைக் கருவியாக (a small divine tool)   இறைவன் வைக்கற பாக்யத்தைத் தாண்டா பகவான்கிட்ட கேட்டுக்கிட்டே இருக்கணும்! இப்படி நெக்குருக வேண்டி ஒரு மாசம் நீ பூஜை செஞ்சிருந்தா இந்த மாதிரி எண்ணமே வந்திருக்காது அப்பனே!"

அவர் சொல்வதை "ஆம்" என்று ஆமோதிப்பதைப் போல ஆலய பூஜை மணி அடித்ததும்....கோயிலில் பூஜை தொடங்கி விட்டது! சிறுவன் மிகவும் ஆச்சரியப்பட்டு போனான். எது பிறரால் முடியாது என்று நினைத்தோமோ அதனை வேறு யாரையோ வைத்துக் கடவுள் நடத்துகின்றாரே!  ஒரு வேளை இதுவும் வாத்யாரின் லீலைதானோ? தன்னை விட்டால் அந்த ஒதுக்குப்புற கிராமக் கோயிலில் பிரம்ம முகூர்த்த பூஜையைச் சிறப்புடன் செய்வார் எவருமில்லை என்ற அகங்கார எண்ணம் உட்பட - தான் செய்தோம் என்ற எண்ணம் அதன் பிறகு அவனிடம் எங்கும், எதிலும், எப்போதும் தலை தூக்கவில்லை!

சிறுவனை வெகுவேகமாக அழைத்துக் கொண்டு வந்த பெரியவர் மெயின் ரோடு வந்ததும் சற்றே நிதானமானார்!

சிறுவன் சிரித்துக் கொண்டான்.

"ஏன் இந்த அர்த்த ராத்திரிப் பரபரப்போ தெரியவில்லையே!  ஒரு வேளை அந்தக் கோயில் சிவலிங்கத்திடம் கூட ஆசை வைக்கக் கூடாது என்று எண்ணி இழுத்து வந்து விட்டாரோ! வரும் போது சுவாமிக்கு வீழ்ந்து ஒரு நன்றி நமஸ்காரம் கூடச் செய்ய விடவில்லையே! சிவபெருமானே! உன்னைக் கூட முப்பது நாளில் கொஞ்சமாவது புரிந்து கொண்டேனே! ஆனால் இந்தக் கோவணாண்டி வாத்யாரைப் பற்றி ஒரு வரி கூடப் புரிந்து கொள்ளவே முடியவில்லையே!"

சிறுவன் வழக்கம் போல அங்கலாய்த்துக் கொண்டான்!

இருட்டில் பெரியவர் அண்டமே அதிரும்படிச் சிரித்தார்!

வேண்டுமா? வேண்டாமா?

வழியில் சிறு ஹோட்டல் வந்தது. ஹோட்டலைப் பார்த்ததுமே சிறுவனுக்குப் பசி வந்து விட்டது!  முப்பது நாளும் தனக்குப் பிரசாதம் இருக்கிறதா இல்லையா என்று கூடப் பார்க்காது பிறருக்கு அன்னதானம் அளிப்பதில் தீவிரமாக இருந்தமையால் சிறுவனுக்கு அனைத்து உணவு வகைகளுமே மறந்தும் விட்டன.

சிறுவனின் turn இப்போது! பெரியவரைத் தர தரவென்று இழுத்துக் கொண்டு உள்ளே சென்ற சிறுவன் அவருக்கும் சேர்த்து "பரோட்டா" ஆர்டர் செய்து வெற்றிப் புன்னகையை உடனேயே ஆங்கே கொட்டி மகிழ்ந்தான்! பெரியவரும் ஒன்றும் புரியாதவர் போல் சிரித்துக் கொண்டார்!

டேபிளில் பரோட்டாவை வைத்ததுமே, "யாருக்கு வேணும் இந்த காஞ்சு போன வறட்டி? பரோட்டாவா இது? ஆட்டுத் தோல் மாதிரி....பழைய மைதாவா, புதுசா?  எந்த எண்ணெய்? கடுகு எண்ணெயா, காந்தல் எண்ணெயா?" என்று சிடுசிடுவென்று சினத்துடன் பொரிந்து கூக்குரலிட்டுப் பெரிய சண்டை போட்டுக் கொண்டு வெறுமனே காசைக் கொடுத்து விட்டுப் பெரியவர் வெளியே வந்து விட்டார்!  சிறுவன் அதிர்ந்து போய் புலம்பிக் கொண்டே அவருடன் வெளியே ஓடி வர வேண்டியதாயிற்று!

"உர்ரென்று" முகத்தை வைத்துக் கொண்டு நெடு நேரம் பேசாமல் நடந்து வந்த பெரியவரின் மௌனத்தை ஒருவழியாய்ச் சிறுவனே முரட்டு அல்லது அசட்டு தைரியத்துடன் களைந்திட்டான்!

"பரோட்டா வாங்கித் தர இஷ்டமில்லைன்னா ஏன் உள்ளே போவானேன், ஏதோ சாக்குல சண்டை போட்டுக் கிட்டு வெளியே வருவானேன்?"

"ஏண்டா நானா உன்னை உள்ளே கூட்டிக்கிட்டுப் போனேன்? இல்லாட்டி என்னை நீ கேட்டுக்கிட்டா பரோட்டா ஆர்டர் பண்ணினே? அதாண்டா கலியுகத்துல என்னதான் விதி அறிஞ்சவன் பக்கத்துல இருந்தாலும் பகுத்தறிவு வேலை செய்யாதுடா! பரோட்டா புத்தி தான் வேலை செஞ்சு நல்லாவே மாட்டி விடும்!  என்னமோ எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி நீயே ஓட்டல் உள்ளாற போனாய், ஏதேதோ கேட்டாய், ஆனா அந்தக் கடை பரோட்டாவை நாம திங்கணும்னு நம்ப தலையில் எழுதலையே! அப்புறம் எப்படிடா நாம அங்கே சாப்பிட முடியும்?"

விதி அறிந்தவரிடம் விளையாட்டா?

சிறுவனுக்குச் சுரீரென்று உறைத்தது! "விதியறிந்த மதிகாரரிடம் மோதினால் நம் கதி என்னாவது?" பதுங்கி விட்டான் இருட்டில்!

அன்றிலிருந்து எங்கு சென்றாலும் அவரே "சாப்பிடு!" என்று சொல்லும் வரை சிறுவன் வாயையே திறப்பதில்லை, ஒரு தம்ளர் நீரைக் கூடக் குடிப்பதில்லை! அதன்பிறகு அடுத்த வந்த ஹோட்டலையும் விட்டு விட்ட பெரியவர், சிறுவனே தானே பசியையே மறந்த பிறகு திடீரென்று ஒரு நான்கு சக்கர வண்டியில் இருந்த சாலையோர "உணவு விடுதியில்" பரோட்டா வாங்கித் தந்து தானும் உண்டார்.

சித்துக்காடு

சிறுவன் அந்த அழுக்கேறிய நான்கு சக்கர வண்டிக் கடையைப் பார்த்தான்! ஒரே கறுப்புப் புகை மண்டலம், வயிற்றைக் குமட்டியது! சரி போய்த் துலையட்டும் என்று பரோட்டாவைப் பார்த்தான்..! அவனுக்குத் தலை சுற்றியது! ஆட்டுத் தோலாய் வறண்டு....காய்ந்து....பழைய மைதா மாவு....காந்தல் எண்ணெய் வாடை.....!

சிறுவன் கண்களை மூடிக் கொண்டு வேறு வழியின்றிப் பெரியவருக்கு பயந்து தின்றும் விட்டான்!  பெரியவரோ "மிகவும் பிரமாதம்!" என்று சொல்லி இரண்டுக்கு மூன்றாய்த் தின்றார்!

"என்னடா பண்றது, இதைத்தான் திங்கணும்னு நம்ப தலையில இன்னிக்கு எழுதியிருக்கே! என்ன செய்யறது?"

சிறுவனுக்கு கோபம் கோபமாய் வந்தது! எல்லாவற்றையும் விட "போயும் போயும் அந்தப் புகை மண்டும் நாற்ற இடத்திலா தின்ன வேண்டுமென்று தலைவிதியாக எழுதி வைப்பார்கள்?" சிறுவன் பொறுமித் தீர்த்து விட்டான்!

பெரியவர் சிரித்திட்டார்!

ஓமப் புகையில் உன்னத விருந்தாம்!

"உனக்குப் பரோட்டாவோட வெளித்தோற்றம் தாண்டா கண்ணுக்குத் தெரியுது! நாம சாப்பிட்ட இடம் எது தெரியுமா? 5000 வருஷத்துக்கு மேலா இருக்கற ஒரு மரத்துக்குக் கீழ் அந்த நாலு சக்கர வண்டிக் கடை இருக்குது!  துவாபர யுகத்துல ஸ்ரீகிருஷ்ணனையே தரிசனம் பண்ணின புனிதமான அரச மரம்! அதுக்குக் கீழே தான் நாம உட்கார்ந்து சாப்பிட்டோம்! நாளைக்கு உத்தராயணப் புண்ய காலமாச்சே!  தை மாதம் பொறக்குது!  தர்ப்பண நாளும் சேருதுதானே! அதனால் ஆயிரக்கணக்கான பித்ருக்கள் அந்த புனிதமான அரச மரத்துல தங்கி ஹோமம் வளர்த்து பூஜை பண்றாங்க! அவ்வளவு புனிதமான அரச மரம்! அவங்களோட ஹோம நெய் சிந்தி வந்துதாண்டா நாம அங்க தின்ன பரோட்டா! அந்த ஹோம புகை பட்டு வாசனை வந்தது தான் அந்த பரோட்டா எல்லாமே! இப்ப சொல்லு, இந்தக் கிழவன் செஞ்சது ரைட்டா, தப்பான்னு?"

சிறுவன் குற்ற மனப்பான்மையுடன் மன்னிப்புக் கோரும் பாவனையில் அவரை நோக்கி தலையை உய(ண)ர்த்தினான்! ஆனால் அவர் அங்கிருந்தால் தானே!  மாயக்கிருஷ்ணன் போலவே நொடியில் மறைந்து விட்டாரே!

அப்பப்பா, சித்தவேத யோகிகளான சித்தர்களை என்னவென்று தான் சொல்வது? ஏனென்றால் "சொன்னதை வேதமாக்கும் பன்னக வித்தர்களாயிற்றே!"

புத்தாண்டு 2002

கடந்த ஆண்டைப் போல, 2000 முதல் 2990 வரை அனைத்து ஆண்டுகளின் பூஜ்யத்தின் இடையிலும் 2000, 2001, 2002, 2990 என்றவாறாகக் குறுக்குக் கோடு இட வேண்டும்.  வாழ்க்கை, வியாபாரம், கல்வி, தொழில் ஆராய்ச்சி போன்றவற்றில் ஒரேயடியாய் முன்னேறத் துடித்து அகலக் காலை வைத்து (keeping too many irons in fire) கால வர்தமானச் சூழ்நிலைகள் சரியில்லாது இடையில் "தங்கி இடையுறுவோர்" நன்முறையில் balanced ஆக சமநிலையோடு "இரண்டிற்கிடையே இருசமக்கோளம்" (2002) என்ற பரிபாஷையின் படி சமநிலையின் படி வாழ உதவும் ஆண்டு. வயதானவர்கள் தம் பிள்ளை, பெண்களிடம் பாசங்களை மிகுதியாகப் பொழிந்து அவதியுறும் ஆண்டு. அவர்களோ வெளி நாட்டு மோகத்தில் பணத்திற்காகப் பறந்து சென்று இங்கு முதியவர்களைத் தவிக்க வைத்திடுவர்! எனவே முதியோர் இல்லங்களில் சேர்வோர் பெருகுவர்!  இள வயதிலேயே இறைத் திருப்பணிகள், இறை பூஜைகளைத் திறம்பட ஆற்றினால் முதுமையில் இக்கோலம் வராது!

* மரண பயம் 50 வயதிலிருந்தே தொடங்கிடும்! முறையாக வாழாதவரையும், இறைவனை முறையாக வணங்காதோரையும் மரண பயம் துரத்தும் ஆண்டு!  ஸ்ரீம்ருத்யுஞ்ஜய மூர்த்தியைத் திறம்பட வழிபட்டால் மரண பயம் அண்டாது.

* பெரியோர்களின் அனுமதியின்றித் திடீர்த் திருமணங்கள் கூடுகின்ற ஆண்டு!  தம் பிள்ளைகள், பெண்களுடன் புதுக்கோட்டை - அன்னவாசல் அருகே வேலஞ்சாரில் அருள்பாலிக்கும் ஸ்ரீதானமதீஸ்வரரை வணங்கி அனைத்து விதமான தருமங்களையும் செய்து வர, இச்சிவத்தல தான் சக்தி பிள்ளைகளுக்கு நல்வழி காட்டும்!  தீய நடத்தைகள் இல்லாது நல்ல ஒழுக்கத்திற்கு அருள்புரியும் அதி அற்புதச் சிவாலயம்!

ஸ்ரீதழுவக் குழைந்த நாயகன்
சத்திமுற்றம்

* சிறுவயதினர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கீழே விழுந்து அடிபடும் வாய்ப்புகள் அதிகம்!  பெரியோர்கள் வாக்குத் தவறுவதால் பிள்ளைகளுக்கு இவ்வாறு ஏற்படும். கும்பகோணம் - உடையாளூர் அருகே மாளாபுரம் மும்மூர்த்தி விநாயகருக்குக் கொழுக்கட்டை படைத்துத் தானமாக அளித்து வர இந்த தான சக்தி சிறுவர், சிறுமியரைக் காப்பாற்றும்.

* இள வயதினருக்கு மனம் போன போக்கில் காதல் கூடாது! கல்யாண வயதில் உள்ள தம் பிள்ளைகள் நன்முறையில் வாழ பெற்றோர்கள், முதியோர்கள் ஸ்ரீவல்லப கணபதிக்கான "ககாரத் துதிகளை" ("க" எழுத்தில் வரும் தோத்திரத் துதிகள்) ஓதி வர வேண்டும். இளைஞர்கள் தழுவக் குழைந்த நாதராய் இறைவன் அருள்பாலிக்கும் தலங்களில் பூஜித்து அடிப்பிரதட்சிணம் செய்து வர வேண்டும் (ஸ்ரீஅகஸ்திய விஜயம் டிசம்பர் 2001 இதழ் காண்க!)

* கல்லூரி மாணவர்கள் வழி தவறிச் செல்ல வாய்ப்புகள் நிறைய உண்டு. நெடுங்குடி, திருப்பரங்குன்றம், திருஅண்ணாமலை போன்ற கிரிவலத் தலங்களில் திங்களில் ஸ்ரீஅஷ்ட பைரவ ஊதுபத்திகள் தாங்கி கிரிவலமும் சனிக்கிழமை தாமரைப் புஷ்பம் தாங்கியும் ஆலயத்தை அடிப் பிரதட்சிணமும் செய்து வந்தால் தீய வழக்கங்கள் அண்டாது.

* பள்ளிக் குழந்தைகள் நீர் சம்பந்தமான நோய்க்கு அடிக்கடி ஆளாவர். சென்னை பூந்தமல்லி அருகே சித்துக்காடு சிவாலயத்தில் தக்க அனுமதியுடன் செவ்வாய், மூலம், ஆயில்யம், அசுவினி மற்றும் தம் பிறந்த நட்சத்திர நாளில் ஸ்ரீமிருத்யுஞ்ஜ ஹோமம் நிகழ்த்தி "கொட்டுவாய் கந்த சமூலம்" என்றும் அரிய சமூலத்தை வெற்றிலையில் வைத்து ஆஹூதி இட்டு வழிபட்டுக் கிழங்கு வகை உணவு வகைகளை தானமாக அளித்து வந்தால் குழந்தைகளுக்கு ஸ்ரீதாந்த்ரீஸ்வரர் அருளால் யோக சக்தி பெருகி நோய்க் காப்புத் தன்மையும் ஆயுள் விருத்தியும் உண்டாகும்.

* பொதுவாக ஸ்ரீபைரவர், ஸ்ரீமிருத்யுஞ்ஜய மூர்த்தி, ஸ்ரீசாகம்பரி தேவி பூஜைகளை இவ்வாண்டில் நிறையச் செய்திடல் வேண்டும், ஸ்ரீஅரசலீஸ்வரரை ஆராதனைகள், அன்னதானம் செய்து வழிபடுவோர்க்கு கம்ப்யூட்டர் துறையில் சாதனைகள் கிட்டும்.  இவ்வாண்டு கம்ப்யூட்டர் துறையின் மேன்மைக்காக அனைவரும் தரிசிக்க வேண்டிய மூர்த்தியே ஸ்ரீஅரசலீஸ்வரர் ஆவார்.

* மேலும் இரண்டு அம்பிகை உள்ள ஆலயங்களில் செவ்வாய், வெள்ளி தோறும் ஆலயத்திலேயே பூக்களைத் தொடுத்து அம்பிகையர்க்குச் சாற்றி வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்புடன் சுமங்கலிக்கு நிறைய மங்களப் பொருட்களைத் தானமளித்திடில் கணவன் நல்ல ஆரோக்யம் பெற்று, சமங்கலித்வ சக்தியும் நிறைந்திடும் (திருச்சி உய்யக் கொண்டான் திருமலை, திருப்பைஞ்ஞீலி, விருத்தாச்சலம், ஊட்டி)

* 2002ம் ஆண்டு இரட்டைப் பிள்ளையார் சந்நிதிக்குத் தேவையான இறைப்பணிகளை, அபிஷேக ஆராதனைகளை மும்முரமாக ஆற்றிட வேண்டும். தேங்கிப் போன வியாபாரம், கட்டிடம் இதனால் வளர்ச்சி பெறும்.

இரட்டைப் பிள்ளையார் (இரு விநாயகர்கள் சேர்ந்து அருள்பாலிப்பது) ஆலயங்களில் ஒரே நாளில் அதே இரண்டு ஹோரைகளில் பூஜித்தல் எத்தகைய காரியத் தடங்கல்களையும் அகற்றும். உதாரணமாக திங்களன்று காலை 6-7, பகல் 1-2,  இரவு 8-9 சந்திர ஹோரை அமைவதால் ஏதேனும் இரண்டு சந்திர ஹோரைகளிலும் இரட்டைப் பிள்ளையாரை (திருஅண்ணாமலை) துவிதீய திரவியங்களால் அபிஷேக ஆராதனை செய்தலால் எத்தகைய காரிய இன்னல்களையும் அகற்றிடலாம்.

துவிதீய திரவியங்கள் என்பன இரட்டைப் பொருளால் ஆனவையாம்!  நிலக்கடலை, முந்திரி, பருப்பு வகைகள் புடவை-ரவிக்கை, பாதணிகள், தோடுகள், மூக்குத்தி, வளையல்கள் போன்றவையாம்.

ராத்திரீ தேவித் துதி

இரா மறைப் பண்
(ராத்திரீ சூக்தத் துதி)

(இரவு நேர பூஜைக்கான தமிழ் மறைத் துதி)

தாரகைக் கண்கள் கொண்டு தரணியைக் காக்குந் தேவி
தானது அனைத்துமாகித் தாங்கிய பொருளுமானாள்
தாரக நாமம் ஓதித் தழுவிய கானம் பாடித்
தஞ்சமே அடைந்தேன் தாயே ராத்திரீ தேவி நின்னை!

காரிருள் கடியாதெனைக் காத்திடும் வான்மா மகளே!
பாரிருள் பகைமை நீக்கிப் படுதுயர் போகச் செய்து
வாராது வல்துயர் எதுவும் வருத்தமே களைந்து காத்து
மாரியும் மலர வைக்கும் மங்களா ராத்திரீ தேவி!

எல்லாமாய் ஆகி நின்று எழில்உஷை ஏற்று வந்து
இல்லாமை இல்லையாக ஈசனின் அருளை வென்று
பொல்லாத் துயர்கள் போக்கும் பூரண வல்லித் தாயே!
கல்லாத அடியேன் சரணம் ராத்திரீ தேவி மாதே!

உத்தராயணப் புண்ணிய காலம்

உத்தமத் தர்ப்பண நாள்

அனைத்துப் பித்ரு லோகங்களிலிருந்தும், அனைத்துவிதமான வசு, ருத்ர, ஆதித்ய பித்ரு தேவர்களும், பித்ரு தேவதைகளும், பித்ரு மூர்த்திகளும், ஜெய க்ஷீராஸ் பித்ரு மூர்த்திகளும், பித்ரு பத்னீகளும் பூலோகத்தில் பூஜை, மூர்த்தி தரிசனம், தீர்த்தமாடல் போன்றவற்றிற்காகக் குழுமுகின்ற விசேஷமான பண்டிகை தினமே உத்தராயணப் புண்ய காலமாகும். எவ்வாறு மாளய பட்ச அமாவாசையானது பித்ரு லோகங்களின் பிரம்மோற்சவமாக விளங்குகின்றதோ, அதே போல உத்தராயணப் புண்ய காலமும் பித்ரு லோகங்களுடைய மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக, புனிதமான, பூலோகத்தில் கொண்டாடப்பட வேண்டியதாக, விசேஷமானதாகவும் விளங்குகின்றது. சபரி மலை விரதம் போல் உத்தராயண மண்டலப் புனித விரதம் பூண்டு இன்று பித்ருக்கள் பூமிக்கு வருகின்றார்கள்.

பித்ரு முக்தித் தலங்கள்

நெடுங்குடி, திருப்பூவனம், சக்கரப்படித்துறை (கும்பகோணம்), பரிதிநியமம், இடும்பாவனம், ராமேஸ்வரம், திருவிடைமருதூர் போன்ற பித்ரு முக்தித் தலங்களில் - அதாவது பித்ருக்களுக்கும் முக்தி, மோட்ச, ஞான நிலைகளை அளிக்கவல்ல அரிய அற்புத பூலோகத் திருத்தலங்களில் - இன்று உத்தராயணப் புண்ணிய காலத்தில் (தை மாதப் பிறப்பு 14.1.2002) பித்ரு மூர்த்திகளே தர்ப்பண சக்திகளைப் பெற்று, அர்க்யங்களை வார்த்து, ஹோமங்களை நிகழ்த்தி, அபிஷேக ஆராதனைகள் செய்து சூட்சுமமாகவும், தூல வடிவிலும் நமக்குப் பூஜா பலன்களைத் தந்து ஆசியளிக்கின்றார்கள்.

உத்தராயணப் புண்ணியக் காலத்தில் தான் பித்ரு மூர்த்திகளுக்கென ஸ்ரீசூரிய நாராயண அவதாரக் காட்சிதனை பூலோகத்தின் சில தலங்களிலும் இறைவன் தந்தருள்கின்றார். எனவே இன்று (14.1.2002) பித்ருக்களுக்குத் தர்ப்பணம் அளிப்பதானது பித்ருக்கள் பெறுகின்ற இறை தரிசனப் பலன்களையும் கூட்டி அளிப்பதால் இதுவரையில் சரியான முறையில் பித்ருக்களுக்குத் தர்ப்பணங்கள் அளிக்காமல் தவற விட்டமைக்கு ஓரளவு பிராயச்சித்தம் தருவதாகவும் இந்நாளின் பித்ருத் தர்ப்பண சக்தி அமைகின்றது.

உத்தராயணப் புண்ணிய காலம் என்றால் என்ன?  விஞ்ஞான ரீதியாக, சூரிய பகவான் தன்னுடைய ஒளிப் பாதையைச் சற்றே மாற்றிக் கொள்கின்ற தினமாகவும் இதனைக் குறிக்கின்றார்கள். ஆனால் இதற்கான ஆன்மீக விளக்கங்களோ பரந்தவை, விரிவானவை, ஞானப் பூர்வமானவை! சூரிய கதிர்களைப் பற்றிய நிறைய தேவ ரகசியங்கள் உண்டு. பூலோகத்தில் நாம் பெறுகின்ற ஏழே எழு சூரிய கிரணங்களைத் தவிர, ஏனைய கோடிக்கணக்கான கிரகணங்களை நாம் இன்னும் பார்க்கவில்லை, தெரிந்து கொள்ளவில்லை, அனுபவித்து உணரவுமில்லை! ஆனால் இவற்றை உணர்த்தவல்ல, பெற்றுத் தரவல்ல, சூரிய நமஸ்கார மந்திரங்கள், சூரிய ஹோமங்கள், சூரியச் சக்கரங்கள், சூரிய யந்திரங்கள், பாஸ்கரத் தலங்கள் உண்டு. சென்னை-பூந்தமல்லி ஸ்ரீவைதீஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சக்கரங்களுள் ஒன்று இவ்வகையைச் சார்ந்ததாம்! இங்குள்ள ஆலயத் தீர்த்தத்திலும் இன்று தர்ப்பணம் அளித்து ஆதிசங்கரரின் பாஸ்கரச் சக்கர தரிசனம் பெறுவதால் கடுமையான நோய்களால் பல ஆண்டுகள் வாடி, வதங்கி இறந்தோர்க்குத் தக்க ஆன்ம சாந்தி இதனால் கிட்டும்.

சூரிய கிரணங்களைப் பற்றிய மகத்தான பிரம்ம ரகசியங்களை நன்கு துய்த்து உணர்ந்த பல மஹரிஷிகளும் சித்புருஷர்களும் உண்டு. ஸ்ரீயாக்ஞவல்கிய மஹரிஷி, கட்டை விரல் அளவே உள்ள வாலகில்லிய மஹரிஷி,  ஸ்ரீராமருக்கு ஆதித்ய ஹ்ருதயம் என்னும் அரிய மந்திரத்தை உபதேசித்த ஸ்ரீஅகஸ்தியர், கர்க மகரிஷி, தேரையர், ஹரதத்தர் போன்றோர் சூரிய மந்த்ர உற்பவ வைபவத்தில் அன்றும், இன்றும், என்றும் மகத்தான சுடராய்ப் பிரகாசிப்பவர்கள்!

ஸ்ரீஹரதத்தர் மங்களக்குடி

ஒரு நாளில், ஒரே ஊரில், ஒரே இடத்தில், அனைவருக்கும் அனைத்திற்குமாய் ஒரே மாதிரியாகச் சூரிய கிரணங்கள் பெய்வது போல நமக்குத் தோன்றினாலும், ஈ, எறும்பு, கொசு, பசு, எருமை முதல் தனித்தனி மனிதராக ஒவ்வொன்றும், ஒவ்வொருவரும் சூரிய வெப்பத்தை, கிரண சக்தியை வெவ்வேறு விதமாகத்தான் துய்க்கின்றார்கள். மேலும் அடுத்தடுத்து இருக்கின்ற மனிதர்கள் கூட ஒரே மாதிரியாக சூரிய உஷ்ணத்தை, சூரிய கிரணத்தை உணர்வதில்லை. இவ்வாறு சூரியானுபவமும் தாவரம், விலங்குகள், மனிதர்களிடையேயும் ஜீவனுக்கு ஜீவன் வேறுபடும்!

கதிரவனின் கர்ம பரிபாலன காவியம்!

இதிலிருந்து ஆன்மப் பூர்வமாக நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் அவரவர் கர்ம வினைகளின் விளைவுகளுக்கு ஏற்பச் சூரிய பகவான் சூரிய கிரணங்களை, சூரிய உஷ்ணத்தை அளிக்கின்றார் என்ற அரிய வேத உண்மையாம். இவ்வகையில் சற்குருமார்களுடைய ஜீவ கர்ம வினைப் பரிபாலனத்தில் சூரியக் கதிர்களும் பெரும் பங்கு வகிக்கின்றன!

தீய கர்ம வினைகளைச் சேர்த்துக் கொள்வதற்கு மனித குலத்திற்கு மூல காரணமாக இருப்பதே கண்களால் காணும் காட்சிகளைக் கண்டு மனிதன் தன்னுள் ஏற்படுத்திக் கொள்ளும் வெவ்வேறு விளைவுகளாகும். காட்சிகள் அமைவது உலக இயல்பே! ஆனால் இந்தக் காட்சிகளை உணர்கின்ற விதம் தான் முறையற்ற காமம், பகைமை, விரோதம் போன்ற தீவினை உணர்வுகளைத் தூண்டி விடுகின்றது. எனவே முறையற்ற காமச் செயல்கள், குற்றங்கள், பாவகரமான செயல்கள் நிகழ்வதற்குக் காரணமே கண்களால் காணும் காட்சிகளைக் கண்டு மனம் பேதலித்து மனதை உடலைத் தவறான வழிகளில் செலுத்துவதாகும்.

நட்சத்திர தரிசனம், கோபுர தரிசனம், சூரிய சந்திர தரிசனங்கள் போன்று கண்கள் மூலமாகப் பெறக் கூடிய மகத்தான தேவ நேத்ர யோக சக்தியானது எந்நேரமும் ஆயுள் முழுவதுமாகப் பெரிதும் உதவுகின்றது. ஸ்ரீகாயத்ரீ மந்திரம், ஸ்ரீஆதித்ய மந்திரத்தை இடைவிடாது எப்போதும் பக்திப் பூர்வமாக ஜபித்துக் கொண்டிருப்போர்க்குச் சூரிய கிரணங்களின் மகத்தான தெய்வீக யோக சக்திகள் தாமாகவே வந்தடையும்!

ஒருவர் ஒரு நாளில் 25,000 முறை ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை முறையாக பக்தியுடன் ஓதினால் அந்நாளில் அவர் மேல் பெய்கின்ற சூரிய கிரண வேதப் பிரகாச மகிமைதனை அவர் நிச்சயமாகத் தாமாகவே ஆன்மப் பூர்வமாக உணர்வார். அவருக்கு அந்நாளில் பகலோ, இரவோ எந்தக் கால பேதமும் தோன்றாது. இத்தகைய காலங்கடந்த யோகப் பாட்டினைத் தக்க குரு மூலமாகப் பெற்றிடலாம். அந்நாள் முழுதும் எப்போதும் தெய்வீகத்தில் திளைத்திருக்கவே அவர் மனமும், உடலும் நிச்சயமாக இறைப் பூர்வமாக ஏங்கும். இவ்வாறாகச் சூரிய கிரணங்கள் மூலம் நாம் பெறுகின்ற பல அரிய யோக நிலைகள், தியான சக்திகள் ஏராளம், ஏராளம்!

பாசாங்குலி முத்திரை என்று சந்தியா வந்தன வழிபாடுகளிலே நாம் காண்கின்ற சூரிய முத்திரை மூலமாக மிகவும் பாதுகாப்புடன் நாம் சூரியனையே உற்று நோக்கிடலாம். விஞ்ஞான ரீதியாகப் பலவகைக் கண்ணாடிகள் தரப் பட்டிருந்தாலும் நம்முடைய ஆன்றோர்கள் அளித்துள்ள இந்த அரிய பாசாங்குலி முத்திரையானது சூரிய கிரணங்களையே நாம் நன்முறையில் சூட்சுமமாகத் தரிசிக்கின்றவாறு அமைந்து வளமையான யோக சக்திகளைப் பெற்றுத் தருகின்றது.

அருணாசலத்தில் சூரியனின் கிரிவலம்!

உத்தராயணப் புண்ய காலம் என்று சொல்லப்படுகின்ற தை மாதம் முதல் நாள் நிகழ்வது என்ன?  இந்தப் பிரபஞ்சத்திற்கே பஞ்ச பூத லிங்க மூர்த்திகளுள் அக்னி லிங்கத் தலமாகப் பொலிவதே அண்ணாமலை என்பது நாம் நன்கு அறிந்ததே!  அதாவது இந்தப் பிரபஞ்சத்தில் அடங்கியுள்ள அனைத்துக் கோடி சூரிய கோளங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள் அனைத்திற்குமே ஒளிப் பிரவாகத்தைத் தந்தருளும் தலமே அருணாசலப் புனித பூமியாம்! உத்தராயணப் புண்ணிய காலத்தை ஒட்டி வருகின்ற ஆறு மாத காலத்திற்கான பாஸ்கராக்னி கிரணச் சக்திகளை சூரிய பகவான், திருஅண்ணாமலை லிங்க மூர்த்தியிடம் இருந்து பெற்றுக் கிரிவலம் வருகின்ற நன்னாளுமாக அமைவதும் உத்தராயணப் புண்ய காலமாம். எனவே தான் அதி அற்புதமாக இன்றைக்கும் சூரிய பகவான் திருஅண்ணாமலையை குறுக்கே கடப்பது கிடையாது, சுற்றியே வலம் வருவார்.

எவ்வாறு உத்தராயணப் புண்யகாலம் பித்ருக்களுக்கு உகந்த நாளாகவும், தர்ப்பண நாளாகவும் திகழ்கின்றது?

பித்ரு நாயகர்களுக்கும், பித்ரு மூர்த்திகளுக்கும் எல்லாம் அதிபதியாக விளங்குபவரான ஸ்ரீசூரிய நாராயண மூர்த்தியே உத்தராயணப் புண்ய காலத்தில் பிரபஞ்சம் எங்கும் உலா வந்து ஜீவ சக்தியை, ஜீவாம்ருத சக்திப் பிரசாதமாக அருணா (சூர்யா)க்னி ப்ரகாசத்தை நமக்குப் பெற்றுத் தருகின்றார். பாஸ்கர லோகங்களின் ஆதிக்கத்தின் கீழ்வரும் பித்ரு லோகங்களில் உள்ள அனைத்து பித்ரு மூர்த்திகளும் ஸ்ரீசூரிய நாராயண மூர்த்தியின் தரிசனத்திற்காக இன்று மாளய பட்சம் போலப் பூலோகத்திற்கு வருகின்றனர். இங்கு இந்நாளில் அவர்களுக்காக அளிக்கப்படுகின்ற தர்ப்பண அர்க்யங்களை ஏற்று மனமகிழ்வுடன் ஆசீர்வதிக்கின்றனர்.

தரணிக்கே உதவிடும் தர்ப்பண சக்தி!

தர்ப்பணமானது பல சீரிய பிருகத் சக்தி, பூம்ய சக்தி, ஔஷத சக்திகளைத் தாங்கிப் பொலிவதால் இவற்றின் மூலம் நல்வரங்களைப் பெற வேண்டிய நிலையில் உள்ள பித்ரு தேவதா மூர்த்திகளும் தம்முடைய பித்ரு முக்தி நிலைகளுக்காக ஸ்ரீசூரிய நாராயண மூர்த்தியை வேண்டி இத்தர்ப்பண சக்தியை பூலோகத்தாரிடம் இருந்து பெறுகின்றனர். எனவே தான் எக்குடும்பத்திலாவது ஒழுங்காகத் தர்ப்பணம் அளிக்காவிடில், உத்தம நிலை மற்றும் முக்தி நிலையை மேலும் அடைய இயலாது அக்குடும்பத்தின் மூதாதையர்கள், தரணி பந்துக்கள், பித்ருக்கள் விண்ணுலகில் மிகவும் தவிக்கின்றனர். தீராப் பெருந்தாகத்தாலும் அவர்கள் அவதியுறுவது உண்டு.

தம்முடைய சந்ததியினரே தமக்கு உரிய தர்ப்பணத்தை அளிக்கவில்லையே என்று ஏங்குகின்ற பித்ருக்கள், சினமடைந்து சாபத்தை அளிப்பதால் தான் வம்ச விருத்தி பாதிக்கப்படுகின்றது. மன நோய்களூம், ஏனைய நோய் நொடிகளும் ஏற்படுகின்றன.

பித்ரு தர்ப்பண சக்தி வகைகள்

எனவே உத்தராயணப் புண்ய காலத்திலே சிறப்பான முறையில் தர்ப்பணம், சிரார்த்தம், திவசம், படையல், அன்னதானம் ஆகியவற்றை இயன்ற அளவில் முறையாகச் செய்து இதுவரை தர்ப்பணம் அளிக்காமைக்கான தக்கப் பிராயச்சித்தங்களையும் பெற்றிடுங்கள். அன்னதானத்திலும் இயற்கையாகவே தர்ப்பண சக்தி பதிந்திருப்பதால், அன்னதானம் மூலமாகக் கலியுலகில் மிக மிக எளிதாகப் பல பரிகாரங்களை தக்க சற்குரு மூலமாகப் பெற்றிடலாம்!

தர்ப்பண சக்தி என்பது தர்ப்பண பூஜை, பித்ரு ஹோமம், தான தர்மம் மூலமாகக் கிட்டுவது மட்டுமல்லாது உத்தராயணப் புண்ய காலத்தன்று மலைத் தலங்களில் கிரிவலம் வருதலால் பல அரிய அயன பித்ரு சக்திகளையும் பெற்றிடலாம். உத்தராயணப் புண்ய காலத்தில் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருதலால் பாஸ்கராயனத் தர்ப்பண சக்தி கிட்டுகின்றது.

பித்ரு சக்தி வகைகளில் அயன பித்ரு சக்தி, அன்னம் பஹு பித்ரு சக்தி (பிரண்டை மூலிகையில் கிடைப்பது), பைரவ தூப பித்ரு சக்தி, (அஷ்ட பைரவ ஊதுபத்தித் தூபத்தை நுகர்கையில் பித்ருக்கள் பெற்று அளிப்பது), அஞ்சன பித்ரு சக்தி போன்றவை பெறுதற்கு அரியவை!  இவற்றைப் பெறவே உத்தராயண (தை மாதப் பிறப்பு), தட்சிணாயனப் (ஆடி மாதப்) புண்ய காலங்களில் பித்ருக்கள் பூமிக்கு வருகின்றனர். குறிப்பாக திருஅண்ணாமலையில் தான் உத்தராயணப் புண்ய காலத்தில் சூரிய பகவான் நம‌க்கு அயன கால சூரியப் பிரகாச சக்தியைப் பெற்றிடுவதால், இங்கு இன்று சூரிய பகவானே சூட்சும வடிவிலும், மானுட வடிவிலும் இங்கு இந்நாளில் கிரிவலம் வருதலாலும், பாக்யம் உள்ளோர்க்கு ஸ்ரீசூரிய பகவானின் தரிசனமும், நேரடி அனுக்ரகமும் எவ்வடிவிலாவது நிச்சயமாகக் கிட்டும்.

அருணாசலத்தில் உத்தராயணத் தர்ப்பண மகிமை!

திருஅண்ணாமலை கிரிவலப் பாதையிலும் தர்ப்பணம் அளிப்பதற்குச் சிறப்பான இடங்கள் உண்டு. உத்தராயணப் புண்ய கால விசேஷ தினமான இன்று இக்குறித்த இடங்களில் உங்களுடைய மூதாதையர்க்கு தர்ப்பணம் அளிப்பீர்களேயானால் பலவிதமான அருட்பலன்களை மிக எளிதில் பெற்றிடலாம்:

1. பித்ருக்களுக்கு ஆதிமூல நாயகராக விளங்குகின்ற ஸ்ரீசூரிய நாராயண சுவாமியே இப்பிரபஞ்சத்தின் மேன்மைக்காக அருணாசலத்தை வலம் வருவதால் அவருடைய ஸ்ரீகாயத்ரீப் பிரகாச அருள் கிரணங்கள் திருஅண்ணாமலையில் பட்டுப் பிரதிபலித்து கிரிவல அடியார்களை அடைந்து பித்ருக்களுடைய அரிய அனுக்ரகங்களை பெற்றுத் தருகின்றன. பித்ருக்களூக்கும் பல அரிய பலாதி பலா சக்திகளை அளிக்கின்றன!  அருணாசலத்தில் பித்ருக்களும் அர்க்யம் அளிப்பதற்கெனவே அர்க்ய மூல தரிசனப் பகுதியும் உண்டு.

2. தம்முடைய ஆதிமூல நாயகராகிய ஸ்ரீசூரிய நாராயண சுவாமியைத் தரிசிப்பதற்காகப் பூலோகத்திற்கு வருகின்ற பித்ரு மூர்த்திகள் யாவருமே இன்று தூல, சூட்சும வடிவில் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருதலால் அவர்களுடைய திருப்பாதங்கள் படிந்த புனிதப் பாதையில் நாமும் நடந்து செல்வதும் பெறுதற்கரிய பாக்கியம்தானே!  இன்று கிரிவலம் வந்து மகத்தான நம்பிக்கையுடன் தர்ப்பண அர்க்யம் அளித்திடுவோர்க்குப் பித்ரு மூர்த்திகளே நேரில் வந்து ஆசியளிக்கின்ற பாக்கியமும் நிச்சயமாகக் கிட்டும்.

3. பல ஆண்டுகளாகத் தவற விட்ட அமாவாசை தர்ப்பணங்களுக்கான தக்க பிராயச்சித்தங்களைப் பெற்றிட இன்றைய உத்தராயணப் புண்ய கால திருஅண்ணாமலை கிரிவலமும், தர்ப்பணமும் பெரிதும் துணை புரிகின்றன.

4. பித்ருக்களுக்குத் தர்ப்பணம் மட்டும் அளிப்பது அல்லாமல் அர்க்ய பூஜைக்கும் உகந்த நாளாக இது விளங்குகின்றது!  இன்று பலவிதமான ஸ்ரீகாயத்ரீ மந்திரங்களை ஓதியும், நன்கு நிமிர்ந்து நின்று குதிகாலை உயர்த்தி இரு கைகளாலும் நீரை ஏந்தியும் பூமியை நோக்கி அர்க்யம் வார்த்து நீங்கள் அறிந்த அனைத்து மகரிஷிகள், சித்புருஷர்கள், யோகிகள், ஞானியர், மும்மூட்சுக்கள், ஜெயக்ஷீராஸ் பித்ரு மூர்த்திகளுக்கு அளிக்கின்ற அர்க்ய பூஜையில் அபரிமிதமான அனுக்ரகமும், புண்ய சக்திகளும் பெருகும்.

நம் வாழ்வில் குறித்த அளவு அர்க்யப் புண்ய சக்தியைத் தினந்தோறும் பெற்றால் தான் பித்ரு சாபங்கள் நிவர்த்தி அடைந்து, சந்ததிகளும் நல்ல பக்தியோடு தழைக்கும். தீப பூஜை, கார்த்திகை தீப தரிசனம், வஸ்திர தானம், கோபுர தரிசனம், மாங்கல்ய தானம், புண்ய நதி நீராடல், ஆலய தரிசனம், கிரிவலம், அபிஷேக ஆராதனைகள் போன்ற பலவற்றின் மூலமாகப் பெறுகின்ற, திரள்கின்ற புண்ய சக்திகள் தாம் கர்மவினைகள் பலவற்றையும் தீர நல்வழி தந்து, துன்பங்களை நீக்கி, பல வளங்களைத் தந்து நம்மை நன்முறையில் வாழ வைக்கும். இவையனைத்தையும் சற்குரு பரிபாலனத்தில் நடைபெறுகின்ற அன்னதானம் மூலமாகப் பெற்றிடலாம்! இத்தகைய அரும் தெய்வ வளத்தைக் கொண்டதே கலியுக அன்னதானமாம்!

நம்முடைய மூதாதையர்கள் யாவருமே பித்ருக்களாகப் பரிமளிக்கின்றார்கள் என்று சொல்ல முடியுமா? பல தீவினைகளுக்கு ஆட்பட்டவர்கள், ஆங்காங்கே பல பிறவிகள் எடுக்க வேண்டி இருக்கலாம். கடுமையான பாவங்களைச் செய்தோர் எப்பிறவியும் கிட்டாது நரகத்தில் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கக் கூடும் அல்லது ஓரளவு நல்லவராக வாழ்ந்தவர்கள் நல்ல லோகங்களில் இருந்தாலும் தாங்கள் செய்த தீவினைகளுக்காக அவர்கள் வேறு எங்கேனும் பிறப்பு எடுக்க வேண்டியதிருக்கும். இன்றைய நாளில் (14.1.2002) நம் மூதாதையர்கள் அனைவருக்குமே திருஅண்ணாமலையை கிரிவலம் வருகின்ற நல்வாய்ப்பினை இறைவன் அளிப்பதால் உத்தராயணத் தர்ப்பணம் மிக மிக முக்கியமானதாகும்.

அண்ணாமலையில் இந்திரத் தீர்த்தத் தர்ப்பணம்!

எனவே நம்முடைய அனைத்து பித்ருக்களும், மூதாதையர்களுமே திருஅண்ணாமலையை கிரிவலம் வருகின்ற மகத்தான நாளாக இன்றைய உத்தராயணப் புண்ய கால விசேஷ தினம் (14.1.2002) விளங்குகின்றது. எனவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள அருணாசல கிரிவலப் பாதையில் உள்ள பித்ரு முக்தித் தரிசன பூமிகளில் முறையான வகையில் தர்ப்பண பூஜைகளை செய்திடுவீர்களாக:‍

அருணாசல சிவாலயத்தின் சிவகங்கை, பிரம்ம தீர்த்தங்களில் தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக் கொண்டு ஆலயத்தினுள் சூரிய பகவானைத் தரிசித்து கிரிவலத்தைத் துவக்கி, தெற்கு கோபுரம் மூலமாகத் திருமஞ்சன வீதி வழியே கிரிவலத்தைத் தொடர்ந்திடுக! தர்ப்பை, கங்கா, காவிரித் தீர்த்தம், உத்தராணி மரத் தாம்பாளம், எள், கூர்ச்சம், பவித்ரம் போன்ற தர்ப்பணத்திற்கான உபகரணங்களையும் கையோடு எடுத்துச் சென்றிடுக. செங்கம் முக்கூட்டு சாலையைத் தாண்டி வலப்புறம் திரும்பி அக்னி லிங்கத்திற்கு முன்பு உள்ள இந்திரத் தீர்த்தக் கரையில் இந்திர தீர்த்தம் கொண்டு தர்ப்பணம் அளிப்பது சிறப்புடையதாகும்.

இந்திர தீர்த்தம்
திருஅண்ணாமலை

ஒரு யுகத்தில் பிரம்மாண்டமானதாக மிகவும் பிரசித்தி பெற்று விளங்கிய இந்திரத் தீர்த்தமானது சரியான முறையில் இன்றைக்குப் பாதுகாக்கப்படாமையால் அழுக்கடைந்து காணப்படுகின்றது. ஆனால் இந்திரத் தீர்த்தத்தின் தெய்வீக சக்திகள் என்றும் மங்குவதில்லை. எப்போதும் சூட்சும ரீதியாகப் பிரகாசித்துக் கொண்டு தான் இருக்கும்.

நல்ல வசதியுள்ளோரும், இறைப்பணிகளில் ஆர்வம் கொண்டு உள்ளோரும் பலரும் ஒன்று சேர்ந்து இந்திர தீர்த்தத்தை நல்ல முறையில் பராமரிப்பதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டால் இது வாழ்வில் பெறுதற்கரிய அரிய இறைத் திருப்பணியாக மட்டுமல்லாது பல அமாவாசைத் தர்ப்பணங்களில் திரள்கின்ற தர்ப்பண சக்தியை ஒன்றாக திரட்டித் தருகின்ற மகத்தான இறைச் சேவையாகவும் விளங்குகின்றது.

இன்று இந்திரத் தீர்த்த கரையில் பசுக்களுக்குப் புல், வைக்கோல், பழம், அன்னம் அளித்து, மந்தாரை இலை, தாம்பாளம், உத்தராணி மரத்தட்டு ஆகிய ஏதேனும் ஒன்றில் நவதானியத்தின் மீது தர்ப்பைச் சட்டத்தைப் பரப்பித் தர்ப்பணம் அளித்திடுதல் வேண்டும். கிழக்கு முகமாக பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் சம்மணம் இட்டு அமர்ந்து தர்ப்பணம் இடுதல் விசேஷமானது! உங்களுடைய மூதாதையர்களின் பெயர் மற்றும் கோத்திரம் சொல்லி, உதாரணமாக‌

ஸ்ரீகோவிந்தன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
ஸ்ரீகோவிந்தன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
ஸ்ரீகோவிந்தன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

என்று மூன்று முறை ஓதி வலது ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரலிடையே, பித்ரு ரேகைப் பகுதி வழியாக நீரைத் தாரையாக ஊற்றித் தர்ப்பணம் அளித்திடுதல் வேண்டும். நவதானியம் குறைந்தது மூன்று உழக்காவது இருத்தல் வேண்டும். தர்ப்பணம் அளித்தபின் தர்ப்பைச் சட்டத்தைக் காலில் மிதிபடாமல் நீரிலோ அல்லது அரசு, ஆல் போன்ற சமித்து மரத்தினடியில் இட்டு சர்க்கரை ரவையுடன் நவதானியத்தைப் பறவைகளுக்கும், எறும்புகளுக்கும் (அன்ன) தானமாக கிரிவலப் பாதையெங்கும் இட்டிடுங்கள்.

கிரிவலப் பாதையில் பட்சித் தீர்த்தக் கலசம் படைத்திடுவீர்!

சிங்கமுகத் தீர்த்தம்
திருஅண்ணாமலை

வ்ருஷ (விஷு) வருடத்திற்கான உத்தராயணப் புண்ய விசேஷ தினத்தில் (14.1.2002) பித்ருக்கள் பெரும்பாலும் பட்சி ரூபத்தில் வருவதாக சித்புருஷர்களுடைய ஞான பத்ர கிரந்தங்கள் குறிப்பிடுகின்றன. எனவே,  இன்று புதிய மண் வட்டில்களை (பானை மூடிகள் போன்றவை) நிறைய எடுத்துச் சென்று ஆங்காங்கே உயரமான இடத்தில் பட்சிகளின் தாகம் தீர்ப்பதற்காக மண் வட்டில்களில் நீரை நிரப்பிப் பட்சி தீர்த்தக் கலசமாக வைத்திருங்கள். பட்சி தீர்த்தப் பரிபாலனம் மகத்தான தருமங்களில் ஒன்றாக விளங்குகின்றது! பின்னால் கிரிவலம் வருகின்றவர்கள் இவற்றில் நீரை நிரப்பி இந்த தர்ம காரியத்தைத் தொடர்ந்திட நல்லதோர் இறைக்கருவியாய்ச் செயல்படுக!

சிங்க முகத் தீர்த்தத் தர்ப்பணம்!

தர்ப்பணம் செய்ய வேண்டிய அடுத்த முக்கியமான இடம் ஸ்ரீரமணாஸ்ரமத்தை அடுத்து சிங்கத்தின் வடிவில் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ள மிகவும் சக்தி வாய்ந்த சிங்க முகத் தீர்த்தம். சிங்க முகச் சுதை அமைப்பில் பலவிதமான மிகவும் சக்தி வாய்ந்த வேத, மந்த்ர, யந்த்ர, தந்த்ரச் சக்கரங்கள் பொறிக்கப்பட்டிருப்பதால் இதன் ஊடே சென்று வருவதும் உடலுக்கு பல அரிய தேவ யோக, யந்த்ர சக்திகளைப் பெற்றுத் தருகின்றது.

ஏன் இதனைச் சிங்க முக வடிவத்தில் அமைந்தார்கள்?

கிருத யுகத்திற்கு முந்தைய சீர்ஷ யுகத்தில் திருஅண்ணாமலையில் சிங்கங்கள், யானைகள், புள்ளி மான்கள், கரடிகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று பண்புடன், பரிசுத்தமான புனிதமான அன்புடன் ஒன்றாய் உலாவின. இவ்வாறு தேவ சக்திகள் நிறைந்த சிங்கங்களுக்கு சிம்மேந்திரர் என்ற மஹரிஷி சற்குருவாகத் துலங்கினார். இந்த சிம்மேந்திர மஹரிஷிதான் இன்றைக்கும் சிம்மாயனம் என்று அழைக்கப்படுகின்ற சூரிய பகவான் சிம்ம ராசியில் பிரவேசிக்கின்ற நாளில் மானுட யோக வடிவம் பூண்டு கிரிவலம் வருவோர்க்குத் தக்க ஆசிகளைத் தருகின்றார்! எனவே பஞ்சாங்கம் மூலமாக சிம்மாயன நாளை அறிந்து கொண்டு அன்றும் கிரிவலம், தர்ப்பணாதிப் பூஜைகளைச் செய்து ஸ்ரீசிம்மேந்திர மகரிஷியின் தரிசனத்தையும், ஆசியையும் பெற்றிடுக!

சிம்மேந்திரர் மஹரிஷி தருகின்ற ஆசிகள் மிகவும் விசேஷமானவை!  பலவிதமான உறவுப் பகைமை, நட்புப் பகைமை, அடுத்த வீட்டு, அடுத்த கடைப் பகைமை ஆகியவற்றால் எப்போதும் பிரச்னைகளையே சந்தித்துக் கொண்டு ஒரு நிமிடம் கூட நிம்மதி, அமைதி, சந்தோஷம் இல்லாது அவஸ்தைப் பட்டுக் கொண்டிருப்பவர்கள் இத்தகைய சிங்க முகத் தீர்த்தக் கரையிலும், சிங்கமுக தீர்த்தத்தைக்கொண்டு மூதாதையர்க்கு எந்நாளிலும் தர்ப்பணம் அளிப்பதுடன் பித்ரு சக்திகள் நிறைந்த எள், புடலங்காய், பிரண்டை போன்றவை கலந்த உணவுப் பண்டங்களைத் தானமாக அளித்து வந்தால் பகைமை தீர்ந்து இல்லத்திலும், அலுவலகத்திலும் அமைதியும் சாந்தமும் உண்டாகும்.

தர்ப்பணத்தின் முடிவில் சிம்மேந்திரர் மஹரிஷிக்கு வடக்கு திசை நோக்கி நின்று அர்க்யம் அளித்திடுதல் வேண்டும். ஏனென்றால் தென்புலத்தார் என்று அழைக்கப்படுகின்ற பித்ரு மூர்த்திகள் தினமும் காலையில் பிரபஞ்சத்தின் பல சிங்கமுக தீர்த்தங்களில் கழுத்தளவு நீரில் நின்று கொண்டு எப்போதும் சூட்சுமமாக ருத்ர ஜபம் புரிந்து கொண்டிருக்கும் சிம்மேந்திர மஹரிஷியைத் தரிசித்துத் தான் தம்முடைய இறைப் பணிகளைத் துவக்குவர்.

எனவே சிம்மேந்திர மஹரிஷி போன்ற ருத்ராக்னி யோக ரிஷிகள் சூட்சுமமாக சிங்க முக தீர்த்தத்தில் எப்போதும் கழுத்தளவு நீரில் நின்று கொண்டு ருத்ர ஜபம், ருத்ர யோகம் புரிந்து கொண்டிருப்பதால் தான் இன்றைக்கு விண்வெளியிலும், ஏனைய பூமிகளிலும் மற்றும் பல லோகங்களிலும் ருத்ர சக்திகள் கிளைத்துத் தழைத்துக் கொண்டிருக்கின்றன. எந்த மனித குலமானது ருத்ர யாகம், ருத்ர யாமம், ருத்ர ஜபம், ருத்ர ஹோமம் புரிந்து பூவுலகில் ருத்ர சக்திகளைப் பெருக்கித் தீவினைகள் மற்றும் பகைமை சக்திகளைக் களைய வேண்டுமோ அந்த மனித குலமே இன்று பகைமையை உருவாக்கிக் கொண்டு, பல நாட்டுப் பிரிவுகளாகத் துன்பங்களைப் பெருக்கிக் கொண்டு போர் புரிந்து தன்னைத் தானே மாய்த்துக் கொண்டிருக்கின்றது.

சிம்மேந்திர மஹரிஷிக்கு சீரிய அர்க்ய பூஜை!

உள்நாட்டுப் பகைமையும், வெளிநாட்டு விரோத, குரோதங்களும் தீர வேண்டும் என்றால் இத்தகைய சிங்கமுகத் தீர்த்தக் கரையில் பெரிய தர்ப்பைப் பாயில் ஒன்றாக அமர்ந்து சத்சங்கமாகத் தம்முடைய மூதாதையருக்குத் தர்ப்பணம் அளிப்பதுடன் சிம்மேந்திர மஹரிஷிக்கும் அர்க்யம் அளித்திடுதல் வேண்டும். வடக்கு நோக்கி நின்று குதிகால்களை நன்கு உயர்த்தி வலது கட்டை விரலை, சுண்டுவிரலின் அடிப்பகுதியைத் தொட்டவாறு முத்திரை இட்டு சிங்க முகத் தீர்த்த நீரால் அர்க்யமாக அளித்திட வேண்டும். சிம்மேந்திர மஹரிஷிக்கு அக்ர்யம் அளிக்கும் போது ஓத வேண்டிய சக்தி வாய்ந்த அர்க்ய மந்திரமாவது:

சிம்மேந்திர சீரிஷ சிவபாதாய‌
சிவச்சந்த்ர ரேகாய சிவாத்மிகாய‌
சிவபுஷ்ப தீர்காய சிவார்ச்சிதாய‌

சிம்மாயன சிவபாத மகரிஷிம் தர்ப்பயாமி! தர்ப்பயாமி! தர்ப்பயாமி! என்றும் தண்டமிழில் மிகவும் எளிமையாக,

சீர்மிகு சிம்மாயன‌ சிவச்சுடர் மாமுனியே போற்றி! போற்றி!! போற்றி!!!

- என்று ஓதியும் சிம்மேந்திர மஹரிஷிக்கு அர்க்யம் அளித்து வருதலால் எத்தகைய பகைமையும் அகன்று இல்லறமும், அலுவலகமும், வியாபாரமும் அமைதியுடன் தழைக்கும். ஒரு யுக காலத்தில் பிரபஞ்சத்தில் ருத்ர யாம(ள) சக்தியை விருத்தி செய்திடவே, திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் இவ்வாறான நிறைய சிங்க முகத் தீர்த்தங்கள் இருந்தன. தற்போது கிரிவலப் பாதையில் ஒன்றிரண்டே உள்ளன!  ஸ்ரீகௌதம மஹரிஷி ஆஸ்ரமத்திற்கு அருகிலும் சிங்க முக தீர்த்தம் ஒன்று உண்டு!

அருணாசல கிரிவலப் பாதையில் சிங்க முகத் தீர்த்தத்தை அடுத்து எமலிங்கம் அருகே உள்ள எமதீர்த்தமும் பித்ரு தர்ப்பணத்துக்கு உகந்ததே! தற்போது எமதீர்த்தத்தைச் சுற்றிப் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டிருப்பதால் ஒற்றையடிப் பாதையை நன்கு அறிந்து இத்தீர்த்தத்தை சிரசில் தெளித்துக் கொண்டு இத்தீர்த்தத்தாலும் தர்ப்பணம் அளிக்க வேண்டும். எள் உருண்டைகளை இங்கு தானமாக அளித்தலால் மரண பயம் நீங்கும். சிங்கமுக தீர்த்தம் வேறு, சிவராஜ சிங்க தீர்த்தம் வேறு! சிவராஜ சிங்க தீர்த்தம் என்பது ஸ்ரீகிருஷ்ணன் கோயில் அருகே விநாயகர் சந்நிதி முன் நந்தியுடன் இருக்கின்ற தீர்த்தம் ஆகும். இந்த சிவராஜ சிங்க தீர்த்தமும் தர்ப்பணம் அளிக்க வேண்டிய தீர்த்தங்களுள் ஒன்றாம்.

அனைவருக்குமே 50, 55 வயது தாண்டியவுடனேயே மரண பயம் உள்ளத்தில் தோன்றி ஆழ ஊன்றி விடும். இளவயதிலேயே இறைத் திருப்பணிகளில் ஊறி இறை பக்தியுடன் திளைப்போர்க்குத்தான் மரண பயம் எப்போதும் அண்டாது!  ஏதோ வாழ்ந்தோம், சுகபோகமாக வாழ்வைக் கழித்தோம் என்று தண்டமாக வாழ்க்கையைக் கழிப்போர்க்கு மரண பயம் முன்னரேயே அண்டி விடும். இதனால் மனோதைர்யம், உடல் ஆக்கம், உடல் வலிவு ஆகிய அனைத்துமே தளர்ந்து விடும். நரக வேதனை போல தினசரி வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கும். என்னதான் வசதிகள் இருந்தாலும் மரண பயம் வந்துவிட்டால் வாழ்க்கையை நிம்மதியாகக் கழிக்க முடியாது.

எனவே வாழ்வில் மரண பயம் அண்டாதிருக்க அடிக்கடி மிருத்யுஞ்ஜய ஹோமம் செய்து வருவதோடு மிருத்யுஞ்ஜய மூர்த்தியையும் பூஜித்து வருதல் வேண்டும். மிக எளிமையான ருத்ர மிருத்யுஞ்ஜய மந்திரம் ஒன்று உண்டு. இதனை ஓதி எம தீர்த்தத்திலும், எமலிங்க சந்நிதியிலும் அர்க்யம் அளித்திட வேண்டும். எமலிங்கத் தீர்த்தத்தில் மார்க்கண்டேய மஹரிஷிக்குத் தர்ப்பணத்திற்குப் பின் அர்க்யம் அளிப்பது சிறப்பானதாம். பிறகு ஸ்ரீகௌதமர் ஆஸ்ரமம் அருகே உள்ள சிங்க முக தீர்த்தம், நிருதி தீர்த்தம், சூரிய லிங்கம், அடிஅண்ணாமலை ஸ்ரீதுர்க்கைக் கோயிலருகே மாணிக்கவாசகர் தீர்த்தம், அபய மண்டபம் அருகே பித்ரு மோட்சத் தீர்த்தம் (படம் பக்கம் 47ல்) போன்ற இடங்களில் தர்ப்பணமளித்து பித்ரு நாயகராம் ஸ்ரீபூதநாராயணன் சந்நிதியில் உத்தராயணப் புண்ய காலத் தர்ப்பண கிரிவலத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

இரவு நேர வழிபாடுகள்

சக்தி வாய்ந்த இரவு நேர வழிபாடுகள்

இரவு நேர எம கண்ட, குளிகன், ராகு கால பூஜைகள்

* பகல் நேர ராகு காலம், எம கண்டம் போல இரவு நேர ராகு காலம், எமகண்ட, குளிகன், அர்த்தப் பிரகணன், காலன் நேரங்களும் உண்டு.

* இரவு நேர ராகு கால, எம கண்ட நேரங்களில் பயணம், அறுவை சிகிச்சைகள், மருத்துவம், நிஷேகம் (தாம்பத்ய உறவு) போன்றவற்றை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இல்லாவிடில் விபத்துகள், சிகிச்சையில் பெரும் பிரச்னைகள், குறையுள்ள சந்ததிகள், சந்ததியின்மை போன்றவை ஏற்படும்.

* இரவு நேர பூஜைகளுக்கு அபரிமிதமானதும், மகத்தானதுமான பலன்கள் உண்டு! பல கடுமையான தோஷங்களுக்கும், பாவங்களுக்கும் நல்முறையில் தீர்வுகளைப் பெற்றிட இரவு நேர எம கண்ட, ராகு கால பூஜைகள் பெரிதும் துணை புரிகின்றன!

பகல் நேர ராகுகாலம், பகல் நேர எம கண்டம் பற்றித் தான் நீங்கள் கேள்விப் பட்டு இருப்பீர்கள். ஆனால் இரவு நேரத்திலும் உரித்தான ராகு காலமும், எம கண்டமும் உண்டு என்பதை நீங்கள் அறிவீர்களா? எவ்வாறு பகல் நேர ராகு காலமும், எம கண்டமும் நற்காரியங்களுக்குத் தவிர்க்கப்படுகின்றனவோ, இதே போல இரவு நேர எம கண்ட, இராகு காலத்தையும் நன்கு அறிந்திட்டு இரவு நேர சுப காரியங்கள், பயணம், சிகிச்சைகளுக்கு இவற்றைத் தவிர்த்திட்டு நல்ல நேரத்தைக் கணித்திட வேண்டும்.

இரவு நேரத்தில் சுப காரியங்களை நாம் அவ்வளவாக செய்வதில்லையே என்று எண்ணாதீர்கள். தமிழ் நாட்டில் தாம் பெரும்பான்மையாக முகூர்த்த நேரங்கள் பகல் நேரத்தில் நிர்ணயிக்கப்படுகின்றன. ஆனால் ஆந்திரா மற்றும் வட மாநிலங்களில் இரவு நேரத்திலும், பிரம்ம முகூர்த்த நேரத்திலும் முகூர்த்தங்கள் வைக்கப்படுவது இன்றும் நடைமுறையில் உண்டு. "பாட்டிமை" என்று சொல்லப்படுகின்ற பிரதமைத் திதியைத் தமிழ்நாட்டில் சுப காரியங்களுக்குத் தவிர்த்து விடுவர். ஆனால் ஆந்திரா மற்றும் வட இந்தியப் பகுதிகளில் பிரதமையும் மிகச் சிறந்த சுபமுகூர்த்த நாளாகப் போற்றப்படுகின்றது.

பூமித்ரய சக்திகளின் கால நிர்ணயம்!

எனவே அந்தந்த நிலப் பகுதிக்கான பூம்ய சக்தி, ப்ருஹத் சக்தி, பைரவ சக்தி, பூபாள சக்தி, வாஸ்து சக்தி ஆகிய ஐந்து விதமான "பஞ்ச கால க்ருத்ய" சக்திகளைக் கணக்கில் கொண்டு அந்தந்த நிலப் பரப்புக்கு ஏற்ற வகையில் முகூர்த்த நேரக் கணிப்பு முறைகள் மாறுபடும். இவற்றைத் தாம் அட்ச, தீர்க ரேகைகள் உணர்த்துகின்றன!

பிற யுகங்களை விடக் கலியுகத்தில் தாம் இரவு நேர எம கண்டமும், இராகு காலமும் பெரும் முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. காரணம் என்னவெனில் கிருத, திரேதா, துவாபர யுகங்களில் தற்போதைய சமுதாய வாழ்க்கை முறை போல போக்குவரத்து, பாக்டரி போன்ற இரவு நேரக் காரியங்கள் அவ்வளவு பெரும்பான்மையாகக் கிடையாது! அவ்வாறு இருந்திடினும் அந்த யுகங்களில் - இரவு நேர ஹோமங்கள், பூஜைகள் - போன்ற குறித்த சில இரவு நேரக் காரியங்களே, சற்குரு வகைப்படுத்தும் தெய்வீக நியதி முறைகளின்படி நடைபெறும்!

இரவு உறங்குவதற்கு மட்டுமல்ல!

கலியுகத்தில் இரவு நேரம் என்றாலே ஓய்வு, உறக்கத்திற்கு மட்டும் தான் என்ற எண்ணமே பெருகி உள்ளது. புனிதமான இரவு பூஜை முறைகளும், நல்யோக உணவு மற்றும் உறக்க முறைகளும் - கலியுகத்தில் கிட்டத்தட்ட அனைவராலும் மறக்கப்பட்டு விட்டன! கலியுகப் பிள்ளைகளும், குழந்தைகளும் இரவு என்றாலே உறங்குவதற்கான நேரம் மட்டுமே என்ற அறியாமையிலான அறிவிலேயே உழல்கின்றனர்!  பகல், இரவு என்றாலே சூரிய, சந்திர கிரகங்கள் மட்டுமே சம்பந்தப்பட்டவை, சூரியன் மறைவதால் இரவு எழுகின்றது, சூரியன் உதிப்பதால் பகல் தோன்றுகின்றது என்ற பொதுவான கருத்துக்களே பிரதானமாகி விட்டதால் இலை மறை கனியாக உள்ள இரவு நேரத்தின் எண்ணற்ற அரிய இறைத் தத்துவங்களை, தேவ ரகசியங்களை, இரவு நேர பூஜைகளின் மகாத்மியங்களைப் பற்றி எவரும் ஆத்மவிசாரம் செய்து உணர முயல்வதே கிடையாது. இவற்றைத் தாமாகவே உணர்த்தும் யோக, ஆசன, பிராணாயாமப் பயிற்சிகளையும் தினமும் கருத்துடன் உன்னிப்பாகச் செய்வோரும் மிகவும் அருகி விட்டனர்தாமே!  இவ்வாறாகவே பல அரிய யோக சக்திகளை மனித சமுதாயம் இழந்து வருகின்றது!

பகல், இரவு தோன்றுதலில் கோடிக்கணக்கான அரிய தெய்வீக விளக்கங்கள் உள்ளன. இரவு என்பது ஓய்வு, உறக்கத்திற்கு மட்டும் உரித்தான நேரம் மட்டுமன்று! கலியுகத்தில் இரவில் தான் மக்கள் மிக மிக கவனத்துடனும், ஜாக்கிரதையுடனும் செயல்பட வேண்டும். ஏனென்றால் கலியில் இரவு நேரத்தில் தான் தீய எண்ணங்கள், தீய செயல்கள், தீய காரியங்கள், தீய ஒழுக்கச் செயல்கள், தீவினைகள் மிகுந்து ஆக்கம் கொள்கின்றன. ஒரு நாளின் காலப் பாகுபாடுகளில் உச்சிக் காலம் பித்ருக்களுக்கும், இரவு நேரம் ராட்சசர்களுக்கும் உரியதாகின்றது!

அந்தந்த காலப் பாகுபாட்டிலும் ஏற்படும் தோஷங்களைக் களைவதற்கும், சந்தியா காலம், பிரம்ம முகூர்த்தம் போன்ற அந்தந்தக் காலத்தின் இறை சக்திகளை கிரகிப்பதற்கும், ஒவ்வொரு கால அங்கத்திலும் தேவ சக்திகள் நிறைந்து சமுதாயத்தில் சாந்தம் பொலிவதற்குமாகவே ஆலயங்களில் ஆறு கால வழிபாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன! ஆலயங்களில் ஒரு வேளை வழிபாடே ஒழுங்காக நடைபெறவில்லை என்றால் போதிய அளவு ரட்சா சக்திகள் இல்லாது மனித சமுதாயம் தானாகவே மது, பொய்மை, முறையற்ற காமம் போன்ற தீயொழுக்கங்களுக்கு எளிதில் ஆட்பட்டு விடும்தானே!

எனவே இரவில் ராட்சசக் குணப்பாடுகளே ஆக்கமும், பெருக்கமும் கொள்வதால் கலியுகத்தின் பெரும்பாலான குற்றச் செயல்கள், பாவகரமான காரியங்கள் யாவும் உலகெங்கும் இரவு நேரத்தில் தாம் நிகழ்கின்றன! இதற்காக இரவு நேரமே அஞ்சக் கூடியது என்று பொருள் கொள்ளாதீர்கள்!  இரவு நேரத்தின் தாத்பர்யம், இரவினை ஆன்மப் பூர்வமாகக் கழிக்கும் முறைகள், இரவு பூஜைகளின் மகாத்மியம் போன்று இரவு பற்றிய ஆன்ம விளக்கங்களை ஒவ்வொருவரும் நன்கு அறிந்து கொண்டால் இரவு பூஜைகளின் தேவ சக்தியைப் பெறுவதுடன் இரவில் தலை தூக்கும் தீய சக்திகளிடம் இருந்தும் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளையும் அறிந்தும் கொள்ளலாம் அல்லவா!

இரவு நேரத்தில் ஆக்கம் பெறுகின்ற தீய சக்திகளிடமிருந்து ஒருவன் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றால் இரவு நேர பூஜைகள் மிக மிக அவசியமானதாம். பலவிதமான பகல் நேர பூஜா சக்திகளை விடவும் குறித்த சில இரவு நேர பூஜைகளுக்கும் நிறைந்த தெய்வீக சக்திகள் உண்டு. இதற்காகத்தான் சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, விஷ்ணுபதி புண்யக் காலம், நவராத்திரி போன்ற இரவு நேர பூஜைகள் மிகவும் சக்தி வாய்ந்தவையாய் அம்பிகையாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டுப் பிரசித்தியும் பெற்றுள்ளன. பகலும், இரவும் இணைந்து சங்கமிக்கும் பிரதோஷ நேர பூஜையும் மிகவும் சக்தி வாய்ந்ததுதானே!

பகலின் படிவமே இரவாம்!

மேலும் இரவு நேரத்தில் எழுச்சி அடைகின்ற தீய சக்திகளை வெல்ல வேண்டும் என்றால் அதற்கு இரவு நேர பூஜைகளில் திரள்கின்ற பூஜா சக்திகள் தாம் பெரிதும் துணைபுரியும். பகல் மற்றும் இரவு நேரங்கள் தோன்றுவதற்கான ஆன்மீக விளக்கங்களை நாம் ஆத்மவிசாரம் செய்து உணர்ந்தால் தான் பூஜைகளின் இரவு கால தேவ தன்மைகளைப் பற்றியும் அறிந்து கொள்ள முடியும்!

வெறும் சூரிய சந்திர கிரக சஞ்சாரங்களால் மட்டுமா இரவு, பகல் ஏற்படுகின்றது? உலக ஜீவன்களுடைய அந்தந்தப் பகுதியின், நாளின், பகல் நேரக் காரியங்களின் படிவுகள், விளைவுகள், ஆற்றல்கள், சக்திகள் தாம் அந்தந்த நாளின் இரவு நேரத்தை நிர்ணயம் செய்கின்றன என்ற அரிய ஆன்மீக தெய்வீக விளக்கத்தையும் இனியேனும் நன்கு உணர்ந்து கொள்வீர்களாக!  ஆம், இவற்றின் ஒட்டு மொத்த விளைவாகத்தான் ஒவ்வொரு நாளின் இரவு நேரமே அமைகின்றது!

உறக்கத்தின் ஆன்மீகக் காரணங்கள்!

ஜீவ வாழ்வில் உறக்கம் என்ற ஒன்று இரவு நேரத்தில் அமைவதற்கான பல காரணங்களில் ஒன்றே இரவு நேரத்தில் எழுச்சியுறுகின்ற தீய சக்திகளின்பால் மனிதனுடைய உடல், மனம், உள்ளம் சிக்கலாகாது என்பதற்காகவும்தான்!  ஆனால் உறக்கத்தில் மனித உடல் ஒரே இடத்தில் அசைவற்று இருப்பது போல் தோன்றினாலும் உறக்கத்தின் ஆன்மீக ரகசியங்களை ஆராயப் புகுவோமேயானால், உறக்க நிலைகளில் ஒவ்வொரு மனிதனும் சூட்சும சரீரம் மூலமாக எத்தனையோ விண்ணுலக லோகங்களுக்குச் சென்று அரிய பல காரியங்களை அவரவர் கர்ம நியதிப்படி ஆற்றுவதை அறிந்திடலாம்!

ஆம், ஆறு மணி நேர உறக்கம் என்றால் இவ்வுறக்க நிலையில் - இந்த மானுட உடலானது - உறக்கத்தில் அசைவற்றுப் படுக்கையில் கிடப்பது போல் தோன்றுகின்றதே தவிர - மனிதனுடைய ஏனைய எட்டு சூட்சும சரீரங்களும் எத்தனையோ லோகங்களுக்கும் சென்று நிறைய காரியங்களை அவரவர் கர்ம நியதிப்படி ஆற்றுகின்றன. எனவே நீங்கள் எண்ணுவது போல உறக்கம் என்பது உங்களுடைய மனித உடலுக்கு ஓய்வு என்பது மட்டும் கிடையாது. உறக்கம் என்ற போர்வையில் உங்கள் உடலை விட்டு நீங்கள் அனைவருமே சூட்சும சரீரம் மூலமாக வெளிச் சென்று நிறைய காரியங்களை ஆற்றுகின்றீர்கள்!  தக்க இராஜயோகி, கர்ம யோகி, ஞான யோகியாக ஒருவர் ஆகிடில் தான் உறக்க நிலையிலே நிகழ்கின்ற அனைத்து விண்ணுலகச் செயல்களை, அற்புதங்களை ஞானப் பூர்வமாக, பரிபூரணமாக அறிந்து கொள்ள முடியும்!

இரவு நேரமானது சுமார் பன்னிரெண்டு மணி நேரங்களுக்கு இருந்தாலும் அதில் ஆறு மணி நேர உறக்கம் போக மீதி ஆறு மணி நேரத்தை உங்களுடைய உணர் நிலையிலேயே (conscious state) நன்முறையிலே இறைநெறிகளில் துய்த்துப் பயன்படுத்திடலாம் அல்லவா!  இதற்கு வெகுவாகத் துணை புரிபவைதாம் இரவு நேர பூஜைகளாம்.

இராத்திரி ஸூக்தம்

இரவு நேர மறைத் துதிப் பண்!

இராத்திரி ஸூக்தம் என்ற அற்புதமான தேவ மொழி வேத மந்திரப் பதிகம் ஒன்று உண்டு! இராத்திரி தேவதைகளைத் துதித்து நம்மை இரட்சிக்க வேண்டும் என்று வேண்டுகின்ற சிறப்பான பிரார்த்தனைத் துதி இது! தேவ மொழிச் சுடரான இதன் தமிழ் மறைப் பண்தனை இவ்விதழில் அளிக்கின்றோம். தினமும் முன்னிரவிலோ, பிரம்ம முகூர்த்த நேரத்திலோ குறைந்தது அரை மணி நேரமாவது வானில் நட்சத்திர தரிசனம், நட்சத்திர வழிபாடு செய்து, இந்த சக்தி வாய்ந்த இராப் பண் தனையும் ஓதி வந்திடில் எப்போதும் மனக் கவலைகளில், மனக்குழப்பங்களில் சஞ்சரித்துத் திரியும் மனதுக்கு அமைதி கிட்டும்! இல்லத்தில் சாந்தம் பெருகும்!

இந்த அரிய இராப் பண்ணின் தேவ வேத சக்திகளைப் பற்றி நன்கு உணர்ந்து தினமும் இராத்திரி சூக்தம் அல்லது இராக் கால மறைப் பண் ஓதி இதனையே முக்கியமான நித்திய இரவு வழிபாடாக மேற்கொண்டு பெறுதற்கரிய இரவு நேர வழிபாடாக மேற்கொண்டு பெறுதற்கரிய இரவு நேர பூஜா சக்திகளைப் பெற்றிடுக! தேவமொழி வேதங்களை ஓதத் தெரியாதே என்று எண்ணாதீர்கள்! தக்க பெரியோர்களைக் கொண்டு நீங்கள் சுலபமாக தேவமொழியின் இராத்திரி சூக்தத்தைக் கற்றுக் கொள்ளலாம். இதற்கு ஈடான தமிழ் மறைத் துதிகளும் நிறைய உண்டு.

ஸ்ரீபைரவமூர்ததி
கரிவலம்வந்தநல்லூர்

இரவு நேர எம கண்ட நேரத்தில் பிரயாணங்களைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஆனால் கலியுகத்தில் இரயில் மற்றும் பஸ், கார், கப்பல் விமானப் பிரயாணங்கள் யாவுமே பெரும்பாலும் இரவு நேரத்தில் தானே அமைகின்றன!  இரவில் பயணம் செய்வோரும், வண்டியில் ஏறி அமர்ந்து உறங்கி விட்டால் தூக்கத்திலேயே நேரத்தைக் கடத்தி விடலாம். விடியற்காலையில் கண் விழித்தால் ஊர் வந்து விடும் என்று தான் எண்ணுகின்றார்கள். இது மிகவும் தவறான, அறியாமை நிறைந்த எண்ணமாகும். பகலோ, இரவோ, எம கண்ட நேரத்தில் ஒருக்காலும் பிரயாணம் செய்யவே கூடாது!

பொதுவாக இரவுப் பயணமே கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். அதிலும் இரவில் பிரயாணத்தை மேற்கொண்டால் அந்நாளின் இரவு நேர ராகு கால, எம கண்ட நேரத்தை அறிந்து கொண்டு அந்த நேரத்தில் ஆலயத்திலோ அல்லது நன்கு அறிந்த நல்லவர்களின் இல்லம் போன்று நல்ல இடத்தில் தங்கி இரவு நேர பூஜைகளைக் கடைபிடித்திட வேண்டும்! செல்லும் இடமெங்கும் உள்ள காவல் தெய்வங்களைக் கண்டிப்பாகத் துதித்து வழிபட வேண்டும்!

தவிர்க்க முடியாத காரணங்களால் இரவு நேரப் பயணங்களை மேற்கொள்ள நேரிட்டால் பிரயாணத்திற்கு முன்பு, ஆலயத்தில் இரவு நேரத்தில் ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீபிரளயகாலேஸ்வரர், ஸ்ரீகருப்பண்ண சுவாமி, ஸ்ரீசங்கிலிக் கருப்பர் போன்ற முர்த்திகளுக்குப் பூஜை செய்து பகல்-இரவு நேரத்தைக் குறிக்கின்ற மகத்தான மூலிகைப் பொருளான முழு முந்திரிப் பருப்பினால் ஆன மாலையை ஸ்ரீகாலபைரவருக்குச் சார்த்தி வழிபட்டு, முந்திரிப் பருப்பு மற்றும் முந்திரி கலந்த உணவினைத் தானமாக அளித்துச் செல்லுங்கள். இரவு முழுதும் இராத்திரி சூக்தம், இரா மறைப் பண் ஓதிடல் வேண்டும். காலங்களைப் பகுத்துக் கால ஞானமளிக்கும் ஸ்ரீகால பைரவர் அருள் தாம் உங்களை இரவு நேரப் பிரயாணங்களில் ஏற்படும் துன்பங்களில் இருந்து நன்முறையில் உங்களைக் காப்பாற்றும். மிகவும் சக்தி வாய்ந்த ராத்திரி சூக்தம், கால சூக்தம் போன்ற அரிய வேத மந்திரங்களை ஓதியும் வழிபடுக!

அறிவீரே உங்களுடைய நட்சத்திர மண்டலத் தொடர்பை!

இரவு நேர பூஜைகளை எதற்காக நிகழ்த்த வேண்டும்? இரவு நேரத்தில் நாம் காண்கின்ற நட்சத்திரங்கள் லட்சக் கணக்கில் இருந்தாலும் அனைத்தையுமா நம்மால் பார்க்க முடிகின்றது? நம் கண்ணுக்குத் தெரியாத பார்க்க இயலாத கோடானு கோடி நட்சத்திரங்கள் உண்டே!  சூரியனைக் கூட நட்சத்திரம் என்றே விஞ்ஞானத்தில் சொல்வார்கள். ஆனால் சூரியனை விட, பன்மடங்கு பெரிதானவையே ஒவ்வொரு நட்சத்திரமும் ஆகும். நம்மால் அனைத்து நட்சத்திரங்களையும் தரிசிக்க இயலாவிட்டாலும், இரவு நேர பூஜைகளை முறையோடு நடத்துவோர்க்கு நட்சத்திர தேவதைகள் யாவும் பலாபலன்களை அள்ளித் தருகின்றனர்!

ஒவ்வொருவருக்கும் பிறந்த நட்சத்திரம் உண்டு அல்லவா! நட்சத்திரத்திற்கும் அவருக்கும் என்ன ஆன்மீகத் தொடர்பு?  மூல நட்சத்திரத்தைச் சேர்ந்த ஒருவர், மூல நட்சத்திர லோகத்திலிருந்து பிறப்பு எடுத்திருப்பார் அல்லது அவருடைய பிறவிகளுக்கும், குணங்களுக்கும் மூல நட்சத்திர லோகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும். இது மட்டுமல்லாது மூல நட்சத்திரத்திலிருந்து பொழியும் தேவ ரேகைகளும் அவருடைய உடல், மனம், உள்ளத்தோடு ஆத்ம சஞ்சாரம் பூண்டிருக்கும்!

ஒவ்வொருவருக்கும் இவ்வகையான நட்சத்திர ஆன்மப் பரிமாணம் உண்டு!  ஆனால் இவற்றை ஆத்மார்த்தமாக உணர்வோர் ஒரு சிலரே!

இதற்காகத்தான் ஒவ்வொருவரும் இரவு நேரத்தில் தினந்தோறும் 15 நிமிடங்களாவது நட்சத்திரங்களைத் தரிசித்து அரிய நேத்திர யோக சக்திகளைப் பெற்றிடல் வேண்டும்! நித்திய பிரதோஷ காலத்தை ஒட்டிய முன்னிரவில் அல்லது பிரம்ம முகூர்த்த நேரத்தில் (விடியற்காலை 3 மணி முதல் காலை 5-30 மணிக்குள்) நட்சத்திரங்களைத் தரிசிப்பது மிகவும் சிறப்புடையதாம். ஏனென்றால் இரவின் மத்திய நிலைகளில் சுமார் இரண்டு மணி வரை இரவில் தீய சக்திகளின் ஆதிக்கம் தான் பெருக்கெடுத்திடும். இதன் பிறகு பிரம்ம முகூர்த்த தேவ சக்திகள் வானில் நிறைகின்றன!  குறிப்பிட்ட இரவு நேர நல் உணவு முறையும், இரவு நேர பூஜைகளை நன்முறையில் நடத்திடப் பெரிதும் துணை புரியும்!

அருணாசலத்தில் அவரவர் நட்சத்திர தேவதா தரிசனம்!

திருஅண்ணாமலைப் பௌர்ணமி கிரிவலத்தின் போது ஒவ்வொருவரும் தம்மையும் அறியாமல் தம்முடைய நட்சத்திர அதிதேவதை, பிரத்யதி தேவதை, உப தேவதைகளின் தரிசனத்தையும், அனுகிரகத்தையும் பெறுகின்றார்கள்! அவரவருடைய நட்சத்திர மண்டலத்துடனான ஆன்மப் பிணைப்பை அருணாசல கிரிவல சக்தி மூலம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கிரிவலத்திலும் பெறுகின்றார்கள்! ஏனென்றால் பஞ்ச பூத லிங்கங்களில் அக்னி லிங்கத் தலமான திருஅண்ணாமலையின் ஒவ்வொரு முகட்டில் இருந்து தானே ஒவ்வொரு நட்சத்திரமும் தமக்குரிய அக்னி ஒளி சக்தியைப் பெறுகின்றது!

காஞ்சனா ஸ்படிகம் அணிந்து கிரிவலம் வாரீர்!

எனவே திருஅண்ணாமலையில் அனைத்துக் கோடி நட்சத்திரங்களின் பெயரிலும் தனித் தனி தரிசனப் பகுதிகளே நிச்சயமாக உண்டு!  இவ்வகையில் நட்சத்திர நாம தரிசனங்களே அருணாசல கிரிவலப் பகுதியில் கோடி கோடியாய் உள்ளன! பௌர்ணமி அன்று இவற்றில் அமிர்த ப்ரகாசம் பொங்கித் ததும்பும்! எனவே காஞ்சனா ஸ்படிகம் என்னும் அபூர்வமான ஸ்படிகத்தை அணிந்தும் அவரவர் நட்சத்திர ஸ்படிகச் சின்னத்தையும் தாங்கியும் திருஅண்ணாமலையில் பௌர்ணமி அன்று கிரிவலம் வருவோர் தாம் தாங்கி வரும் ஸ்படிகத்தில் பல அரிய நட்சத்திர ஒளிக் கிரங்களையும், ஜோதி தரிசனங்களையும் பெற்றிடலாம்

உணவும் உணவு அருந்தும் நேரமும் உன்னத யோக சக்தி தருவதாக!

நம்முடைய பெரியோர்களுடைய இரவு நேர யோக உணவு முறையை நீங்கள் கவனித்திடில் மகாத்மா காந்தி போன்ற சத்திய புருஷர்களும் மாலையில் சூரியன் மறைவதற்குள் (before sunset) தங்களுடைய இரவு ஆகாரத்தை முடித்துக் கொள்வார்கள். அவர்கள் அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து விடுவார்கள். இது நல் ஆரோக்யத்தையும் யோக சக்தியையும் பெருக்குவதாகும்.

இம்முறையால் இரவு உறங்கப் போகும் போது அவர்களுடைய இரவு நேர ஆகாரமானது வயிற்றில் நன்கு ஜீரணம் அடைந்திருக்கும். இவ்வாறு உணவு நன்கு ஜீரணமானபின் உறங்கச் செல்வது தான் நமக்குப் பல தேவலோக சக்திகளையும், சூட்சும லோகப் பயணங்களையும் மிகவும் எளிதில் பெற்றுத் தரும். ஏனென்றால் சூட்சும தேகப் பிரயாணமானது (astral travel)  நாபியில் தோன்றும் வெள்ளியிழை (silver cord) மூலமாகத் தானே நிகழ்கின்றது!

ஆனால் "சாப்பிட்டவுடன் படுப்பது" என்ற தவறான நடைமுறை இருப்பதால் உணவு ஜீரணமாகாது வயிற்றில் தங்கி இருக்கும் போதே நாம் உறங்கத் தொடங்கி விடுகின்றோம். இது மிக மிகத் தவறான வழக்கமாகும். நல் ஆரோக்யத்தையும், மன சாந்தத்தையும் முற்றிலுமாகக் கெடுக்கக் கூடியதாம்!  குறிப்பாக, கண்களுடைய "ருத்ர ஒளி சக்தியை" இது மாசு படுத்தும்!  கலியுகத்தில் இவ்வாறு தானே அனைவரும் வாழ வேண்டி உள்ளது என்று நீங்கள் சமாதானம் செய்து கொண்டாலும் முறையான இரவு நேர உணவினைத் தக்க நேரத்தில் உண்ணாததால் பல தேவ சக்திகளை தினந்தோறும் நாம் இழந்து வருகின்றோம் என்பதை இனியேனும் நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.

எனவே இனியேனும் சூரியன் மறைவதற்குள் இரவு நேர உணவினை முடித்து விடுவது சிறப்பானது! படுப்பதற்கு ஒரு மணி நேரம் முன்னால் பால் மற்றும் பழம் மட்டும் உண்டு உறங்கிடலாம்.

உறங்குகையில் நிகழும் உத்தம தேவ லோகப் பயணம் (astral travel)!

உறக்க நிலையிலும் நாம் விதவிதமான வாழ்க்கை நிலைகளைக் கொள்கின்றோம் பலரும் அறியாததாகும்! ஒவ்வொரு மனிதனும் உறங்கும் போது எத்தனையோ தேவ மற்றும் விண்வெளி லோகங்களுக்குச் (astral travel) சூட்சுமமாகச் செல்கின்றான். இவ்வாறு சூட்சுமப் பிரயாணம் செய்கின்ற உடற் பகுதிக்கு, சரீரக் களத்திற்கு "ஜெய கலம்" என்று பெயர்! ஜெய க்ஷீராஸ் பித்ருக்களும் இதற்கு ஆசியளிப்பர்! இந்த சூட்சுமப் பயணத்தின் போது உடலில் ஜீரணம் ஆகாத உணவுப் பொருட்கள் தங்கி இருந்தால் அது "மன உடலின்" (metal body) தேவலோக சூட்சுமப் பிரயாணத்தை மிகவும் பாதிக்கும்.

"ஜெய கல" சரீரப் பயணம்!

பல லோகங்களுக்கும் சூட்சும சரீரமாகச் செல்கின்ற "ஜெய கல" சரீரமானது, கீழே பூமியில் உறக்க நிலையில் கிடக்கும் உடலில் ஏதேனும் அசைவு ஏற்பட்டால் தேகத்திற்கு உடனடியாகத் திரும்பியாக வேண்டும். இதற்காகத்தான் உறங்குபவர்களைக் குலுக்கி எழுப்பக் கூடாது என்ற நியதியும் உண்டு!  ஏனென்றால் ஒரு வேளை உறங்குபவருடைய "ஜெயகல" நாளமானது (astral body fibre) பல தேவ லோகங்களுக்கும் சென்று இருந்தால் அவை நன்முறையில் திரும்பி வந்தால் தான் உறங்குபவர் தன் அனைத்து அங்க உணர்வுகளோடும் சுய நினைவோடு எழுந்திருக்க முடியும். வேகமாகக் குலுக்கி எழுப்பி விட்டால் தேவலோகத்தில் சஞ்சரித்து கொண்டு இருக்கின்ற அவருடைய ஜெய கல நாளமானது உடலில் தக்க நேரத்தில் வந்து சேரா விட்டால் அவருக்கு உடனே மனோ நிலை பாதிக்கப்பட்டுப் பைத்தியம் பிடித்து விடும். எனவே உறங்குபவரை எக்காலத்தும் அவசரக் கோலத்தில் எழுப்பக் கூடாது. இதோடு பயங்கர சப்தங்கள் எதுவும் இல்லாது அமைதியான சூழ்நிலையில் உறங்குவதே சிறப்புடையதாம்.

Air cooler, air-conditioner, fan, ரேடியோ, கார், பஸ், பாக்டரி மற்றும் TV சப்தம் போன்றவற்றோடு ஒருவர் தூங்கினால் அவ்வப்போது ஏற்படும் பெரும் சப்தங்களினால் அவருடைய உறக்கம் அடிக்கடி பாதிக்கப்படுவதால் சூட்சும சரீரம் மூலமாகச் சென்று கொண்டு இருக்கின்ற தேகப் பயணங்களும் தடைபட்டுப் பலத்த தலைவலி, நெஞ்சு வலி, கழுத்து வலி போன்றவை ஏற்பட்டு அந்தந்த நாளங்களும் வெகுவாக பாதிக்கப்படும்!  மேலும் மறைமா பொருளாய் கடைபிடிக்க வேண்டிய சூட்சுமப் பிரயாணங்களும் இவ்வகையில் தடைபட்டுக் கொண்டே இருந்தால் (நம்முடன் பூர்வ ஜன்மத் தொடர்புடைய) பிற லோகங்களில் கழிய வேண்டி கர்மங்களும் கழியாது தடைபட்டுப் பெருகுவதோடு கிட்ட வேண்டிய பெறுதற்கரிய தேவ சக்திகளும் தடைபட்டு வாழ்வும் சோகமயமாகி விடும்!  குறிப்பாக மது அருந்தும் பழக்கத்தால் சூட்சும தேவ பிரயாணங்கள் முற்றிலுமாகத் தடைபட்டுப் போகும்.

எனவே எவ்வகையில் உறங்க வேண்டும் என்பதற்கான யோக நிலைகளையும், திசை முறைகளையும் அறிந்து உறக்கத்தின் மூலம் பெறுதற்கரிய தேவ சக்திகளைப் பெற்றிடுங்கள்.

இரவு நேர ராகு காலம், எமகண்டம் எதற்காக உருவாக்கப்பட்டது? ராகு காலம் போல் கேது காலம் என்ற ஒன்று ஏன் நிர்ணயிக்கப்படவில்லை?  இவற்றையெல்லாம் நாம் விளக்கப் புகுந்தால் அவை பிரம்மாண்டமான கால புராணமாக விரிந்திடும். ஆனால் மிகவும் முக்கியமாக இவற்றிற்கு எல்லாம் ஆதாரமாக உள்ள மிக எளிய ஆன்மீக விளக்கங்களை மட்டும் நாம் இங்கு குறிப்பிடுகின்றோம்.

நாம் பெறுவது சூரியனின் ஏழே ஏழு கதிர்களைத்தாம்!

நாம் நினைப்பது போல முழுச் சூரிய கிரண ஒளியை நாம் பூமியில் பரிபூரணமாகப் பெறவில்லை! சூரிய பகவானுடைய ஏழே ஏழு கதிர்கள் தாம் பூமியை அடைகின்றன! அந்த ஏழின் பரிணாமமே அவ்வளவு பரந்ததாய் பூமிக்கு விளங்குகின்றது!  இவ்வகையில் சூரியனின் ஒரு கதிர் வீச்சே பூமியின் விஸ்தாரத்தை விஞ்சி விடுகின்றது!  ஏனைய கோடானு கோடி சூரியக் கதிர்கள், கிரணங்கள் யாவும் இன்னமும் பூமியை எட்டவில்லை! எனினும் முறையான பாசாங்குலி முத்திரை மூலம் சூரியனை தினந்தோறும் தரிசித்தலால் இந்த ஏழு தவிர ஏனைய பல அரிய பாஸ்கர கிரண சக்திகளையும் பெற்றிடலாம். தினந்தோறும் அந்தந்தக் கோளத்தின் ஆகர்ஷண சக்திகள், கோள சங்கம சக்திகள் போன்றவற்றைப் பொறுத்துச் சூரியனுடைய கிரண வீச்சுத் தன்மைகள் மாறுபடும்.

தினந்தோறும் மானுடர்கள் அளிக்கின்ற ஸ்ரீகாயத்ரீ அர்க்யத்தைப் பொறுத்தும் சூரியக் கிரண வீச்சுகளீன் தேவ குணப்பாடுகள் அமையும். இது மட்டுமல்லாது வெயிலின் போது அடுத்தடுத்து இருக்கின்ற இருவர் கூட ஒரே மாதிரியான சூரிய வெட்பக் கதிர்களை உணர்வதில்லை, பெறுவதும் இல்லை!  இவை எல்லாம் விஞ்ஞானத்தால் உணரப்பட இயலாத மெய்ஞான சத்திய வாக்கியங்கள் ஆகும்!

எனவே அவரவருடைய கர்ம வினைகளுக்கு ஏற்பத்தான் ஒவ்வொருவரும் சூரிய, சந்திர, நட்சத்திர கிரண சக்திகளை, ஒளியினைப் பெற்றுக் கொண்டு இருக்கின்றோம். மகரிஷிகள் மற்றும் சித்புருஷர்களால் வானில் உள்ள நட்சத்திரங்களைப் பகல் நேரத்திலேயே தரிசிக்க முடிகின்றது! காரணம், அவர்கள் பகல், இரவு, நாள், மாதம் போன்ற கால பேதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் ஆவர்!  அவர்களுடைய நேத்ர யோக சக்தியானது பல்லாயிர சூரிய கோளப் பிரகாசத்தைத் தாங்க வல்லதாம்! பூலோகத்தில் சூரிய நமஸ்காரம், ஸ்ரீகாயத்ரீ ஜபம் போன்றவையும் ஜீவன்களின் நேத்ர யோக சக்தியை விருத்தி செய்யக் கூடியவையாக இறைவன் அளித்துள்ளான். ஆனால் பயன்படுத்துவார் யார் உளர்?

ராகு காலத்தைத் தவிர்ப்பதேன்?

ராகு காலம் என்பது கலியுக நடைமுறையில் அச்சப் பட வேண்டிய நேரம் என்ற தவறான அர்த்தமுள்ளதாக மாறி விட்டது. ஸ்ரீராகு பகவானுக்கு உரித்தானது தானே ராகு காலம்! ராகு கிரகம் சக்தி வாய்ந்ததாக விளங்கும் உச்ச நேரமே ராகு கால நேரமாம்! ராகு பகவானின் அனுகிரகமின்றி நாம் ஒரு விநாடி கூட வாழ முடியாதன்றோ!  மேலும் ராகு தசையில் தாம் பொதுவாக வாழ்க்கையின் முக்கிய அம்சங்கள் நிகழும்!

நற்காரியங்களை ராகு காலத்தில் செய்தலைத் தவிர்ப்பதற்குக் காரணம் ராகு காலத்தில் தலை தூக்குகின்ற தீய சக்திகளை வெல்லும் பூஜா, புண்ய சக்திகளைப் பலரும் பெறவில்லை என்பதேயாம்!  எனவே தான் ராகு காலத்தில் பூஜைகளை செய்து தீய சக்திகளை வெல்லும் பூஜா சக்திகளை நன்கு பெருக்கிக் கொள்ள வேண்டும்!  எனவே ராகு காலம் என்பது தீய சக்திகளின் எழுச்சியின் உச்ச நிலையைக் குறிக்கின்றது. ஆனால் அதே சமயத்தில் தீய சக்திகளை எதிர்த்து வெல்வதற்கான உத்தம தேவ சக்திகள் அபரிமிதமாகத் தோன்றுகின்ற காலத்தையும் குறிக்கின்றது. எனவே தான் ராகு கால பூஜை அபரிமிதமான பலன்களைத் தர வல்லதாம்!  (ஏனைய அரிய ராகு கால விளக்கங்களை நம் ஆஸ்ரம வெளியீடான "ஸ்ரீராகு கால ஸ்ரீதுர்க்கா பூஜை மகிமை" என்ற நூலில் காணலாம்)

உத்தம கேது காலமும் வந்திடுமே!

ராகு கால நேரத்தில் ஆலயத்தில், வியாபாரத் தலங்களில், இல்லத்தில் பூஜைகளைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்!  இதனால் தாம் ராகு காலத்தில் எக்காரியங்களையும் ஆற்றாது பூஜை நேரமாக நம் பெரியோர்கள் நமக்கு ஆக்கித் தந்துள்ளனர்!  ஆனால் நடைமுறையிலோ ராகு காலத்தை முழுதுமாக ஒதுக்கி விட்டு வெறுமனே உட்கார்ந்து கொண்டு பொழுதைப் போக்கிக் கொண்டு இருக்கின்றார்கள். ராகு காலத்தில் சும்மா இருந்தாலும் கூட மனம் சும்மாவா இருக்கும்? மனத்தின் அலைக்கழிப்பால் தீயவற்றின்பால் வசப்பட நேரிடும் அல்லவா? ஏனென்றால் தீய சக்திகள் பெருகும் நேரமாகவும் இருப்பதும் தானே ராகு காலம்! ஒரு வகையில் தீயவை தலை தூக்கும் நேரமாக குறித்த காலத்தை ராகு காலமாக ஆன்மீகத்தில் பகுத்துத் தந்திருப்பதால் நாமும் தகுந்த பூஜா சக்திகளால் ஒட்டு மொத்தமாக ஒரேயடியாக அவற்றை எதிர் கொள்ள முடியும்!  தனித்தனியாக தீய சக்திகளை சமாளிப்பது நமக்கு சாத்தியமில்லையேதானே!

மேலும் தீய சக்திகள் என்றால் வெளியிலிருந்து மட்டும் புறப்பட்டு வந்து நம்மைத் தாக்குவதல்ல. நம்முடைய தீவினைகளின், பாவச் செயல்களின் கொத்தான விளைவுகளும்தாம் தீயவையாக மாறி நம்மைத் தாக்கும் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்! தீதும் நன்றும் பிறர் தர வாரா!  நாம் செய்தவற்றின் விளைவுகளே நமக்கு வரும்!

ராகு, கேது கிரகங்கள் உருவான புராணத்தை நீங்கள் நன்கு அறிவீர்கள்!  சிவ, விஷ்ணு சக்திகளின் இணைந்த அம்சமான மோகினி அவதாரத்தில் ஸ்ரீமகாவிஷ்ணுவால் அமிர்தக் கரண்டியால் தட்டப்பெற்று அரக்க சக்திகள் தேவ சக்திகளாகி மாறி சிரஞ்சீவித்வம் பெற்றுப் பிறகு நவகிரக சக்திகளாக மாறிய காலத்தையே ராகு காலமும், கேது காலமும் உணர்த்துகின்றன.

கேது காலம் இப்போது இல்லையே என்று எண்ணாதீர்கள். பொதுவாக தற்போதைக்கு செவ்வாய் ஹோரை நேரத்தையே கேது காலமாக சித்புருஷர்கள் அருள்கின்றார்கள். பிரதோஷ காலம், விஷ்ணுபதி புண்ய காலம் போன்றவை மீண்டும் இறைப் புத்துணர்ச்சி பெற்றபடியாக, எதிர்காலத்தில் இராகு காலம் போன்று மகத்தான கேது காலம் என்ற ஒன்றும் பூஜா சக்திகள் மிகுந்ததாக அமைந்திடும்.

சுபமுகூர்த்த நேரத்தைக் கணிக்கின்ற போது காலத்தின் பஞ்ச அங்கங்களாகிய நாள் (தேதி), கிழமை, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்தையும் மட்டுமல்லாது உண்மையில், இரவு நேர எம கண்டம், இரவு நேர ராகு காலம், அர்த்தப் பிரகரணன், காலன், விஷ சூன்ய ராசி, தியாஜ்யம், திதி போன்றவற்றையும் பார்த்து இவற்றையும் தவிர்த்துக் கணிக்க வேண்டும். இரவு நேர எம கண்டம், ராகு காலம் போன்றவற்றை நிஷேகம் எனப்பட்டும் தாம்பத்ய உறவிற்கு கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் இல்லாவிடில் புத்தி மந்தம், ஊனம், புத்தி சுவாதீனம் இன்மை போன்ற பல குறைபாடுகளுடன் உள்ள சந்ததிகளே ஏற்படும். மேலும் இரவு நேர ராகு காலம், எம கண்ட நேரங்களில் பிரயாணம் மற்றும் நற்காரியங்களைக் கண்டிப்பாக தவிர்த்தல் வேண்டும்.

ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர்
செவலூர்

குளிகை நேரக் குறிப்புகள்!

குளிகை நேரத்திற்கு உரித்தான நற்காரியங்களும் உண்டு. ஆயினும் அனைத்து நற்காரியங்களையும் குளிகையில் செய்வது கிடையாது என்பது உண்மையே!  குளிகையில் செய்யப்படக் கூடாத காரியங்களும் உண்டு! பகைமையை வெல்வதற்கான பூஜைகள், ஹோமம் மற்றும் பரிகாரப் பிராயச்சித்தங்களை நிகழ்த்திட உத்தமமான காலமே குளிகையாம்! உத்தம ஜோதிட கணித நேர நியதி முறைகளில் நற்காரியங்களுக்கு உரித்தான குளிகை நேரத்தைக் கூட சுப முகூர்த்த நேரத்திற்கு ஏற்றுக் கொள்வது கிடையாது. சவம் எடுத்தல், ஈமக் கிரியை, மயானக் காரியங்களைக் குளிகை நேரத்தில் கண்டிப்பாகச் செய்தல் கூடாது.

கர்ம வினைக் கழிப்பு, தோஷ நிவர்த்தி, பரிகார நிவர்த்திகளுக்கான வழிபாடுகளை குளிகை நேரத்தில் செய்வதால் பகைமையை எளிதில் வென்றிடலாம்!  குளிகை நேரத்தில் ஸ்ரீஸ்வர்ண பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்திடில் நிலபுலம், சொத்து வகையிலான மற்றும் கோர்ட் வரை சென்றுள்ள பகைமையிலான பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வுகளைப் பெறலாம்!

இரவு ராகு கால நேரத்தை அறிவிக்கும் சாங்கியங்களில் சில வகைகள் உண்டு. தக்க சற்குருவை நாடி இரவு நேர ராகு கால விளக்கங்களைப் பெறவும்!

எனவே ராகு காலம் என்பது தீய சக்திகள் உச்ச நிலை கொள்வதையும் உணர்த்துகின்றது! அதே சமயத்தில் எத்தகைய தீய சக்திகளையும் வெல்வதற்கான ஸ்ரீதுர்க்க பூஷண சக்திகள் நிறைந்ததாகவும் ராகு காலம் விளங்குகின்றது என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.

ராகு காலத்தின் அதிபதியான ஸ்ரீராகு பகவான் எப்போதும் ஸ்ரீதுர்க்கா தேவியைப் பூஜித்தவாறுதானே உள்ளார்!  எப்போதும் ஸ்ரீதுர்க்க ஸ்மரணையில் ஜ்வலிக்கும் ஸ்ரீராகு பகவான் அதிலும் தாம் உச்ச சக்தி கொள்கிற ராகு காலத்தில் ஸ்ரீதுர்க்கையை வழிபடுவோரிடம் பெருங்கருணை கொள்கின்றார்!  எனவேயும் ஸ்ரீராகு கால பூஜை காரிய சித்தியைத் தரும் மகத்தான பூஜைக் காலமாய் அருள் கூட்டி மலர்கின்றது!

ராகு காலத்தின் ஏன் சுப காரியங்களை வைப்பதில்லை? ராகு நேரத்தில் எழுகின்ற தீய சக்திகளைச் சமாளிப்பதற்கான தேவ சக்தி, புண்ய சக்தி, தர்ம சக்தி, தான சக்தி போன்றவற்றை நாம் ஒரு துளியும் பெற்று இருக்கவில்லை! எனவே தீய சக்திகளிடம் வசப்பட்டுத் திருமணம், க்ருஹப் பிரவேச நாட்களில் மேலும் துன்பங்களைப் பெருக்கிக் கொள்ளலாகாது என்பதற்காகத்தான் இராகு காலத்தைச் சுப காரியங்களுக்குப் பதிலாக சக்தி வாய்ந்த மகத்தான பூஜை நேரமாகக் கொள்கின்றோம்!

எனவே ராகு காலத்தில் நல்ல காரியங்களைச் செய்ய முடியாமல் போனதற்குக் காரணமே மனித குலத்தின் அசட்டைத் தனமே காரணமே தவிர, ராகு காலத்தை இதற்காகக் குறை சொல்லுதல் கூடாது. மேலும் ராகு கால நேரத்தில் எழுகின்ற உச்ச நிலையில் உள்ள தீய சக்திகளை அடக்குவதற்காக இறைவன் அதே ராகு கால நேரத்தில் தான் மகத்தான தேவ தன்மைகள், பூஜா பலன்கள் பல்கிப் பெருகுவதாகப் படைத்துள்ளான். என்னே இறை லீலை!

இவ்வாறாக இராகு காலத்தில் கடைபிடிக்கப்படுகின்ற பூஜைகளுக்குக் கடுமையான திருமண தோஷங்களையே தீர்க்கின்ற வல்லமை உண்டு என்றால் ராகு காலத்தில் ஏதேதோ காரியங்களைச் செய்து தடைகளைக் களையும் வகை அறியாது திகைத்திடாதீர்கள்! குறித்த பூஜைகளை முறையாகச் செய்து ராகு காலத்தை நன்முறையில் பயன்படுத்திக் கொள்வதுதானே பகுத்தறிவு கூடிய அறிவுடைமை!  ராகு கால பூஜைகளின் போது ஸ்ரீராகு பகவானுடன் அனைத்துத் தெய்வ மூர்த்திகளுமே இணைந்து அருட்துணை புரிகின்றனர் என்றால் என்னே ராகு கால பூஜை மகிமை!  ராகு கால நேரத்தில் ஸ்ரீராகு பகவான் (தேவ) உச்ச ஸ்தாயியில் இருக்கின்றமையால் அந்நேரத்தில் எந்த ஹோரை நேரம் நிகழ்ந்தாலும் ராகு பகவானுடைய ஆதிக்கம் தான் பிரமாதமானதாகவும் பிரதானமானதாகவும் இருக்கும்.

தெய்வ ப்ரீதி எனில்..........

எனவே ராகு பகவானை ப்ரீதி செய்யக் கூடிய பூஜைகளை ராகு காலத்தில் செயலாக்க வேண்டும். ப்ரீதி செய்தல் என்றால் நம்முடைய மனித குல வழக்கம் போல தெய்வ மூர்த்தியை மகிழ்ச்சிப்படுத்துவது என்று சர்வ சாதாரணமாகப் பொருள் கொள்ளாதீர்கள். எந்த தெய்வ மூர்த்தியுமே எப்போது மிகவும் மகிழ்வார் தெரியுமா?

ஒரு மனிதன் தன் சுயநலத்தை விடுத்துத் தியாக எண்ணங்களுடன் பிற ஜீவன்களுடைய நல்வாழ்விற்காகப் பாடுபடும் போது, பூஜிக்கும் போது, நற்காரியங்களைச் செய்யும் போது இறைப் பணிகளை ஆற்றும் போது தான் எந்த தெய்வ மூர்த்தியுமே ஆனந்தம் கொள்கின்றார்! எனவே தெய்வத்தைப் ப்ரீதி செய்வது என்றால் அந்தந்த தெய்வ மூர்த்திக்கு உரிய பூஜைகளை மேற்கொள்வதுடன் அந்த பூஜாபலன்களை பிறருடைய நல்வாழ்விற்காகச் சங்கல்பம் செய்து அர்ப்பணிப்பது, தக்க இறைப் பணிகளை ஆற்றுவது என்பதும் பொருளாகும்.

ஆனால் தற்போது இருக்கின்ற மனிதனுடைய குடும்பச் சூழ்நிலையிலே எவருமே தன் குடும்பத்திற்கே புண்ய பலம் போதாது என்ற நிலை இருக்கின்ற போது பிறருடைய, பிற ஜீவன்களின் நல்வாழ்விற்காக அவன் தன்னுடைய புண்ய சக்தியையா மனமுவந்து தியாகம் செய்யப் போகின்றான்? உதட்டளவிலே பிறருக்காகச் சங்கல்பம் செய்வதாகச் சொன்னாலும் கூட தமக்கு இது கிட்டவில்லையே, இது வேண்டும், அது வேண்டும் என்று உள்ளூர மனம் புழுங்கிக் கொண்டு இருப்பதால் தான் மானுட சங்கல்பம் என்றுமே கலியுகத்தில் உண்மையான சங்கல்பம் ஆவது கிடையாது என்று சித்தர்கள் ஆணித்தரமாக மொழிகின்றனர்!

மேலும் மனிதன் வேண்டுபவையெல்லாம் இறைவன் தருவதும் கிடையாது. ஏனென்றால் மனிதன் வேண்டிக் கொள்வதையெல்லாம் அவன் பெற்றால் பேராசைப் பெருநோய் பற்றி தன்னை மாயக் குழியில் வீழ்த்திக் கொள்வான் என்பதே காரணமாகும். எனவே இறைவனே பொறுத்திருந்து எந்த மனிதனுக்கு எது எப்போது தேவையோ அதை அப்போது தந்தருள்கின்றான் என்பதை அனைவரும் உணர்ந்து விட்டால் கலியுகத்திலும் உத்தமக் கிருதயுக தர்மம் பூத்திடுமே! இறைமையை விட மனிதனுடைய நல்முன்னேற்றத்தில் பங்கு கொள்கின்ற வேறு எந்த சத்தியமான, சாசுவதமான ஞானத்தையும் சக்தியையும் நாம் பிரபஞ்சத்தில் காண முடியாது!

இரவு நேரம் அமையும் விதம்!

உண்மையில் இரவு நேரம் என்பது எப்போது துவங்குகின்றது? இரவும், மாலை நேரமும் சந்திக்கும் உத்தமப் பொழுது தான் நித்யப் பிரதோஷம் எனப்படுகின்ற தினசரிப் பிரதோஷ நேரமாகும். எனவே பிரதோஷ நேரத்தை அடுத்து அமைவதே இரவாம்! மேலும் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே (பட்சப்) பிரதோஷம் வருகின்றது என்றும் நாம் வாழும் பூலோகமே ஆதி மூல பூமி என்றும் நினைத்துக் கொள்ளாதீர்கள். சித்தர்கள் வாக்கின்படி, நாம் வலியுறுத்தி வருவது போல, பூலோகங்கள் பல உண்டு. இன்றையத் திதியானது பிரதோஷ திதியாக நம் பூமியில் இல்லாவிட்டாலும், இதே நாள் எத்தனையோ பூலோகங்களில் பிரதோஷ திதியாக இருக்குமல்லவா!  எனவே நித்தியப் பிரதோஷ நேரமும் உண்டு!

ஆலயத்தில் பட்சப் பிரதோஷம் கொண்டாடி இல்லத்தில் நித்யப் பிரதோஷம் கொண்டாடிடுக! ஆலயங்களில் நாம் நித்யப் பிரதோஷம் தனைக் கொண்டாடாவிட்டாலும் இக்குறையை நிவர்த்தி செய்து கோயில்களில் மகரிஷிகளும், சித்தர்களும் சூட்சுமமாகப் பிரதோஷ காலத்தில், அதுவும் நித்யப் பிரதோஷ நேரத்தில் பல கோயில்களை வலம் வருகின்றனர்!

மேலும் இரவு நேரத்தில் தீய சக்திகள் பெருக்கெடுப்பதால், இவற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொண்டிட, தேவர்கள் தம் பங்கிற்கு ஆலயங்களில் இரவு நேர பூஜைகளை மேற்கொள்கின்றனர். இரவு நேரத்தில் கோயில்கள் சார்த்தப்படுவதாக நமக்குத் தோன்றினாலும் ஆலயங்களில் இரவில் தேவ பூஜைகள் நிகழ்ந்து பரவெளியானது தூய்மைப்படுத்தப்படுகின்றது!

நம்முடைய பூஜா பலன்களோடு தேவ மூர்த்திகளின் இரவு பூஜா பலன்களும் கூடுதலாக வந்து சேர்கின்றன என்றால் என்னே பெரும் பாக்கியம்!  ஆனால் கலியுகத்தில் பெரும்பாலும் எவரும் காலை எட்டு மணிக்குக் குறைந்தது எழுவதில்லையே!  இதனால் தான் நடுவயதிலேயே கண் பார்வை அவதியுறுகின்றது. உடல் நலம் கெடுகின்றது. காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து பூஜை செய்கின்ற பழக்கத்தைக் கைகொள்வோர்க்கு கண் ஒளிப் பிரகாசமாக இருக்கும். எதிர்காலமும் புண்ய சக்தியோடு பிரகாசிக்கும். விஞ்ஞானப் பூர்வமாகப் பார்க்கின்ற போது கூட ராகு, கேதுவை சூரிய, சந்திர சங்கமப் புள்ளியாகவே (nodal points) பாவிக்கின்றார்கள். ஆனால் உண்மையில் ஆன்மப் பூர்வமாக ராகு, கேது என்று தனித் தனிச் சாயா (நிழல்) கிரகங்களாகவே உள்ளன. இவற்றை விஞ்ஞானமும் நிரூபணப் பூர்வமாக உணர்கின்ற காலமும் எதிர்காலத்தில் வந்து சேரும். அப்போது நாம் இங்கு சித்தர்களின் வாக்காக அளிக்கின்ற கேது காலத்தையும் ஜோதிடப் பூர்வமாக அறிவுறுத்துவர்!

தீய சக்திகள், தீய எண்ணங்கள் என்று சொல்கின்றோமே இவையெல்லாம் ஏதோ வெளியிலிருந்து வந்து நம்மை பாதிப்பதாக மட்டுமே எண்ணாதீர்கள். ஒவ்வொரு விநாடியும், உங்களுடைய எண்ணத்தில் புனிதமான எண்ணங்கள் மட்டும் தாம் எழுகின்றனவா? எப்போதும் நீங்கள் புனிதமான எண்ணங்களைத் தான் சுமந்து கொண்டுதான் வாழ்கின்றீர்களா என்பதை நீங்களே சுயமாக, தார்மீக ரீதியாகச் சிந்தித்துப் பார்த்து உங்களுடைய புனிதத்தை, தெய்வீகத் தன்மையை, பக்தியை எடை போட்டுக் கொள்ளுங்கள்! தீயதையும் எண்ணாது, நல்லதையும் செய்யாது ஆபீஸ், வீடு, வியாபாரமென இன்றைக்கு இந்தப் பிரச்சனை, நாளைக்கு அந்தப் பிரச்னை என்று வாழ்க்கைத் துன்பங்களிலேயே மனதையும், உடலையும் சு(ழ)ற்றிக் கொண்டிருந்தால் அது கூட இறை நினைவு சற்றுமின்றிக் காலத்தை விரயமாக்கியப் பெருந்தீவினைக் கர்மமாக மாறி விடும்.

ராகு காலம் என்பது உலகம் முழுவதற்கும் பொதுமையானது தானே, ஆனால் உலகில் அனைவருமா ராகு காலத்தைப் பார்த்துக் கொண்டு காரியம் செய்கின்றார்கள். ராகு காலத்திலும் உலக நிகழ்ச்சிகள் தொடர்ந்து இயல்பாகவே நடந்து கொண்டு தாமே இருக்கின்றனவே என்று எண்ணத் தோன்றும். ஆனால் ராகு காலம், எம கண்டத்தைப் பாராது செய்கின்ற செயல்களால் தான் இன்றைக்கு பூலோகத்தில் அனைத்து நாடுகளிலும் பலவிதமான துன்பங்களால் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள் என்பதை யார் உணர்கின்றார்கள்?

அக்காலத்தில் வியாபாரத்திலும் ராகு காலத்தில் ஒரு பத்துப் பைசாவிற்கு உப்பைக் கூட ஜனங்கள் வாங்க மாட்டார்கள் என்பதால் வியாபாரிகள் கூட ராகு காலத்தை வியாபாரத் தலத்திலேயே பூஜை நேரமாக வைத்துக் கொண்டு இருந்தார்கள். ராகு காலத்தில் எப்பொருளையும் விற்கவும் மாட்டார்கள். ராகு காலத்தில் ராகு பகவானுக்கு உரித்தான பூஜா திரவியங்களைக் கொண்டு தூபம் இடுதல், ஹோமம், அர்ச்சனை போன்றவற்றை மேற்கொண்டார்கள்.

செவ்வாய் பிரம்ம முகூர்த்த நேர இரவு கால வழிபாடு!

ஸ்ரீதுர்க்கை தேவிக்கு செவ்வாய்க் கிழமையில் பகல் நேர வழிபாடுகளோடு இரவு நேர பிரம்ம முகூர்த்த நேர பூஜை (விடியற்காலை 3-4 1/2 மணி) செய்வதும் மிகவும் சிறப்புடையதாம். ஒரே நாளில் இரண்டாக பகல் ராகு கால, இரவு நேர ஸ்ரீதுர்க்கா பூஜைகள் எனும் போது அதன் பலாபலன்கள் பன்மடங்காகப் பெருகுகின்றது!

இரவு நேர ராகு கால பூஜை நியதிகள் பகல் நேர ராகு கால பூஜைக்கானதை விடச் சற்றே வித்தியாசப்படும். செவ்வாய்க் கிழமைக்கான பிரம்ம முகூர்த்த நேர பூஜையும் இரவு நேர பூஜையே!  செவ்வாய்க்கான பிரம்ம முகூர்த்த நேரம் எனும் போது தமிழ் நாள் துவங்கும் சூரிய உதய நேரக் கணக்கு முறையில்  புதன் கிழமையின் (ஆங்கில முறைப்படி) விடியற்காலை நேரமே செவ்வாய்க் கிழமையின் பிரம்ம முகூர்த்த நேரமாகின்றது!

உதாரணமாக 2.1.2002 புதன் கிழமை (Wednesday 3.00 to 4.30 hours) விடியற்காலை 3-4 1/2 மணி நேரமே 1.1.2002 செவ்வாய்க்கு உரித்தான பிரம்ம முகூர்த்த (Tuesday 27.00 to 31.30 hours) நேரமாகும்!  சில ஜோதிட வானியல் கணித சாங்கியங்களில் இந்த செவ்வாயின் பிரம்ம முகூர்த்த நேரத்தையே செவ்வாய்க் கிழமைக்கு உரித்தான இரவு நேர ராகு கால நேரமாகக் கொள்கின்றனர்.

குடத்துள தீப பூஜை, கலசாம்ருத தீப பூஜை, ஸ்படிக துர்க்க பூஜை, சிந்தூராம்பிகை பூஜை என இரவு நேர ராகு கால பூஜை முறைகளைப் பலவிதங்களில் அழைக்கின்றனர்! அதாவது வசதியுள்ளோர் மேற்கண்ட செவ்வாய்க் கிழமை பிரம்ம முகூர்த்த நேரத்தில் தங்கம் அல்லது வெள்ளிக் கிண்ணத்தினுள் எலுமிச்சைத் தோல் அகல் விளக்கை வைத்து செம்பருத்தித் தைலம், இலுப்பை எண்ணெய், மருதாணித் தைலம் ஆகிய மூன்றையும் கலந்து முக்கூட்டு துர்க்கை தீபமாக மூன்று திரிகள் இட்டு விளக்கேற்றி வழிபடுதல் வேண்டும். இந்நேரத்தில் ஆலயங்கள் திறந்திருக்க வேண்டுமே!  பக்தர்கள் உத்தம பக்தியுடன் வேண்டிடில் அனைத்தும் தாமாகவே அமையுமன்றோ!  விஷ்ணுபதி, சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்று பிரம்ம முகூர்த்த நேர, இரவு நேர ராகு கால பூஜைகளை ஆலயங்களில் பிரசித்தி பெறும்படி ஆக்கிடலாமன்றோ! மனமிருந்தால் மார்கமுண்டு!

நிலம்படா நீள ஜோதியே இரவு ஜோதியாம்!

தங்கம், வெள்ளிக்கு வசதியற்றோர் அல்லது நடுத்தர வர்க்கத்தினர் அகலமான புது மண் சட்டியினுள் மூன்று திரி எலுமிச்சைத் தோல் அகல் தீபத்தை வைத்து முக்கூட்டு எண்ணெயில் ஜோதியை ஏற்றித் துதித்திடலாம். பிரம்ம முகூர்த்தம் போன்ற இரவு நேர பூஜையில் அல்லது இரவு நேர இராகு கால வழிபாட்டில் எலுமிச்சையாலான அகல் விளக்கானது பூமியில் படாது தங்கம், வெள்ளி, வெண்கலம் மற்றும் பிருத்வி சக்திகள் நிறைந்த மண் அகலில் வைத்து இருத்தல் சிறப்பானதாம்.

அதாவது இரவு நேர பூஜைகளில் வானியல் பலிச் சக்திகள் சிதறாதிருக்கச் சாதாரணத் தரையில் எலுமிச்சைத் தோல் விளக்கை ஏற்றிடாது வெண்கலக் கிண்ணம், மண் வட்டில் போன்றவற்றில் வைத்து ஏற்ற வேண்டும். எலுமிச்சை விளக்கைத் தாங்கி இருக்கும் பாத்திரத்தைச் சுற்றிச் சாமந்திப் பூமாலையை வட்டமாக வைத்து அலங்கரித்திடுக!  கனகாம்பரம், செவ்வந்தி கூடாது.

ஸ்ரீதுர்க்கா தேவிக்கு சிகப்பு நிற வஸ்திரத்தைச் சார்த்திப் பாதங்களுக்குச் சந்தனக் காப்பு அல்லது மஞ்சள் காப்பு இட்டு வழிபட வேண்டும்.

இரவு நேர குளிகன், எம கண்ட நேரம்

கிழமைகள்     குளிகன்                 எமகண்டம்
                      முதல் வரை          முதல்   வரை
ஞாயிறு           9-10 1/2                        6-7 1/2
திங்கள்            7 1/2 - 9                       3-4 1/2
செவ்வாய்       6‍-7 1/2                         1 1/2-3
புதன்                3-4 1/2                        12-1 1/2
வியாழன்       1 1/2-3                         10 1/2-12
வெள்ளி          12‍-1 1/2                        9-10 1/2
சனி                 10 1/2-12                      7 1/2-9

குறிப்பு:  இரவு நேர இராகு கால நிர்ணயத்தில் சில வகை சாங்கியங்கள் உண்டு. தக்க சற்குருவை நாடி அறிந்திடவும்.

ஸ்ரீதுர்க்கைக்கு இடப்படுகின்ற திலகமானது சந்தனம், புனுகு கலந்த குங்குமமாக இருப்பது சிறப்பானது! இத்தகைய விசேஷமான திலகத்தை இடுதலால் தீய சக்திகள் எதிர்க்கின்ற ஸ்ரீதுர்க்கா பூஜை சக்தி அபரிதமாகப்  பெருகி பகைமை, முன்விரோதம், குரோதம், பொறாமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள கல்வி, வீடு அல்லது நிலம், அலுவலகம், வியாபாரம் போன்றவற்றில் பகைமை தீர்ந்து நல்வளர்ச்சி கிட்டும்.

மேலும் ஆண் சந்ததி இல்லாது வருத்தப்படுகின்ற குடும்பங்கள் இரவு நேர பிரம்ம முகூர்த்த அல்லது இரவு நேர இராகு கால பூஜைகளை மேற்கொண்டால் எதிர்காலம் பற்றிய பயம், மரண பயம் நீங்குவதற்கான தக்க இறை வழி முறைகளைப் பெறுவர். பொதுவாக வயதாகி மரண பயத்தால் அஞ்சி அஞ்சி வாழ்வோர் தம் மரண பயத்தைப் போக்கிட இந்த இரவு நேர பூஜையைக் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் ஸ்ரீதுர்க்கையை முழு முந்திரியால் அர்ச்சித்தல் சிறப்புடையதாகும். ஏனென்றால் இரவு பகலாகிய இரண்டு கால அம்சங்களைத் தோற்றுவித்து அவற்றின் அம்சமாகவே இறைவன் முந்திரியைப் படைத்துள்ளான். மேலும் அனைத்துப் பழங்களும் விதையை உள்ளே கொண்டிருக்க, முந்திரிப் பழம் மட்டும் விதையைத் தன்னுள்ளே அடக்காது வெளித் தோற்றமாகி உள்ளிருக்கும் (ஆத்ம) ஜோதியை வெளிக் கொணர்கின்ற இரவு-பகல் தத்துவத்தை உணர்த்துவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்!

எனவே அக்னி ஹோமங்களில் முந்திரி ஆகுதி மிகவும் விசேஷமானதாக விளங்குகின்றது. முந்திரிக்கு வேத சக்திகளும் நிறைய உண்டு. ஒரு முந்திரியானது ஜீரண விதிகளின் படி குறைந்தது நான்கு நாட்களுக்குத் தன்னுடைய பசுந்தன்மையை உண்பவரின் உடலில் கொள்கின்றது. எனவே தான் நான்கு வேதங்களுக்குச் சமமானதாக பெரியவர்கள் யாவருமே நான்கு முழு முந்திரிகளுக்கு மேல் ஒரு நாளில் ஏற்பது கிடையாது. மேலும் தினமுமா முந்திரி சாப்பிடுகின்றோம்? முந்திரியை உண்ணும் நாட்களில் தேவ மொழி, தமிழ் மறைகளை நிறைய ஓதுதல் வேண்டும்!  இவை எல்லாம் நம்முடைய முன்னோர்களுடைய அர்த்தமுள்ள பழங்கால நடைமுறை வேதத் தத்துவ உண்மைகள் ஆகும்.

முந்திரிப் பருப்பு நிறைந்த வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், பாயசம் போன்றவற்றை ஏழைகளுக்கு அன்னதானமாக அளிக்கின்றபோது அன்னதான சக்தி, வேத சக்திகளும் உணவில் நிறைந்து ஜாதி, மத, இன பேதமின்றி யாவர்க்குமாய்க் கிட்டுகின்றன. எனவே இரவு நேர கால ஸ்ரீதுர்க்கை பூஜையின் போது முழு முந்திரியால் அர்ச்சித்தல் மிகவும் விசேஷமானதாகும். துரித காரிய சித்தியைப் பெற்றுத் தருவதுமாகும். அர்ச்சிக்கப்பட்ட முந்திரிகளை பருப்பாகவோ அல்லது உணவில் சேர்த்தோ ஏழைகளுக்குத் தானமாக அளித்திட வேண்டும். இவ்வகையில் தான, தரும சக்திகள் மூலமாகவும் பல வகையான நல்வரங்கள் நம் வாழ்வில் கூடுகின்றன.

இரவு நேர ஸ்ரீதுர்க்கா பூஜா பலன்கள்!

பொதுவாக இரவு நேர ஸ்ரீதுர்க்கா பூஜைகளில் கீழ்கண்ட பலாபலன்கள் கிட்டுகின்றன.

1. உறவினர்கள், நண்பர்கள், சக அலுவலர்கள், அடுத்த வீட்டுக்காரர்கள் ஆகியோருடைய பகைமை, பொறாமை, குயுக்தி, தந்திரம், விஷமச் செயல்கள் காரணமாகப் பல திருமணங்கள், வியாபார நிலைகள் தடைபட்டு நிற்பதும் மந்தமாவதும் உண்டு. கூடப் பிறந்த சகோதர, சகோதரிகளின் இடைஞ்சல்களால் கூடப் பல திருமணங்களும் நடைபெறாமலேயே தள்ளிப் போய் விடுகின்றன.  இவ்வாறு பகைமைக் காரணங்களால் தடைபட்டுள்ள திருமணங்களில் உள்ள குறைகள், தோஷங்கள் நிவர்த்தியாகி திருமணங்கள் நன்முறையில் நடைபெற இந்த இரவு நேர பிரம்ம முகூர்த்த அல்லது ராகு கால ஸ்ரீதுர்க்கா பூஜை பெரிதும் துணை புரிகின்றது.

2. ஆணோ, பெண்ணோ கறுப்பாக இருப்பதால் திருமணங்கள் தடை பெறுவதும் உண்டு. தான் கறுப்பாக இருக்கின்றோமே என்று எண்ணிக் கலங்குகின்ற கன்னிப் பெண்கள், இளைஞர்கள் ஏராளம்!  இவர்கள் செவ்வாய் இரவு நேர பிரம்ம முகூர்த்த பூஜை அல்லது இரவு ராகு கால ஸ்ரீதுர்க்கா பூஜையை மேற்கொண்டால் அவர்களுடைய தாழ்வு மனப்பான்மை நீங்கி நன்முறையில் திருமண வாழ்வு அமைவதற்கு ஸ்ரீதுர்க்கை தேவி அருள் புரிகின்றாள்.

3. பல குடும்பங்களில் பலவித தோஷங்களால் திருமண சம்பந்தமான விபரீதமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஒரு பெண்ணுக்குத் திருமணம் நிச்சயமாகிக் குறித்த மாப்பிள்ளையானவன் அகால மரணமடைந்தால் அப்பெண்ணுக்கு அவப் பெயர் சூழ்கின்றது. மேலும் ஒரு பெண், தான் ஒருவரை மனமார வரித்திட, பெற்றோர்களோ வேறு ஒருவரை நிச்சயித்து இதனால் ஏற்படுகின்ற குடும்பக் குழப்பங்களாலும் பல திருமணங்கள் தடைபட்டு நிற்கின்றன. இத்தகைய குழப்பங்கள் நன்முறையில் தீர்வு பெறுவதற்கும், திருமணத்தில் குடும்ப ஒற்றுமை நிலவுவதற்கும் இரவு நேர ஸ்ரீதுர்க்கா பூஜை பெரிதும் உதவுகின்றது.

4. பல ஆண்டுகளாக நெருங்கிப் பழகியவர்களுடைய சகவாசத்தால் பலரும் தங்களுடைய புனிதத்தையும், செல்வத்தையும், வியாபாரத்தையும் தகாத முறையில் சந்தர்ப்ப வசத்தால் இழந்து விடுகின்றார்கள். இதனால் நடந்த சம்பவங்களின் நினைவுகள், மனதை உறுத்தும், எண்ணங்கள் இதயத்தில் சுருக்கென்று குத்திக் கொண்டே இருக்கும். நிம்மதியாகவும் வாழவும் முடியாது. நடந்த தவறுகளை மறைக்கவோ, சொல்லவோ, மறக்கவோ முடியாது. இந்த நிலையில் கடந்த வினைகளுக்கு ஒருவர் கட்டாயமாக அனுபவித்தாக வேண்டுமே என்றாலும் உண்மையிலேயே தன்னுடைய தவறுகளுக்காக மனம் வேதனைப்பட்டு எத்தகைய தண்டனைகளையும் ஏற்கச் சித்தமாய் இருப்பவர்கள் பரிபூரணமான உண்மையான மனதுடன் இறைவனை செவ்வாய் இரவு பிரம்ம முகூர்த்த கால பூஜைகளில் வேண்டினால் தக்கப் பிராயச்சித்த வழிகள் காட்டப் பெறுவர். இதற்கும் இராகு கால ஸ்ரீதுர்க்கா பூஜையே பெரிதும் உதவுகின்றது. காரணம் இரவில் தான் ஒரு மனிதன் ஒழுக்கக் கட்டுப்பாடுகளை மீறுகின்றான்!  எனவே இரவு நேர பூஜா சக்திகளின் பலாபலன்கள் தாம் மனிதனைக் காப்பாற்றப் பெரிதும் துணை புரியும். ஆனால் தவறுகளுக்குத் தக்க தண்டனைகள் ஏற்கின்ற மனப்பக்குவத்தை முதலில் கட்டாயம் பெற்றாக வேண்டும்.

5. பெண் குழந்தைகளைப் பெற்றிருப்போர் தமக்கு ஆண் வாரிசு இல்லையே என்ற குறையோடுதான் வாழ்க்கையை நடத்துகின்றார்கள். பல சமயங்களில் பெற்ற பிள்ளைகளை விடப் பெண்கள் தாம் தாய், தந்தையரை நன்கு மதித்து வாழ்க்கையில் பேணி உயர்த்துகின்றார்கள். எனவே பெண் குழந்தைகளைப் பெற்று விட்டோமே, நம் வாழ்க்கை எவ்வாறு அமையுமோ என்ற ஏக்கத்துடன் வாழ்பவர்கள் இரவு நேர (இராகு கால) ஸ்ரீதுர்க்கா பூஜையை முறையாக மேற்கொண்டால் அவர்களுடைய மன ஏக்கங்களைச் சாந்தப்படுத்தித் தக்க மன சாந்தியையும் அளித்திட ஸ்ரீதுர்க்கா தேவியே நற்கருணை புரிவாள்.

இவ்வாறாக இரவு நேர இராகு கால துர்க்க பூஜை மகிமைகள் எத்தனை எத்தனையோ!  இரவு ராகு கால நேரங்களைத் தக்க சற்குரு மூலமாக அறிந்து பலனடையுங்கள்!  ஒவ்வொரு நாளுக்கும் உரித்தான பூஜை முறைகளும் பலாபலன்கள், மகிமைகளும் நிறைய உண்டு. இவற்றையும் அறிந்து கடைபிடித்து நல்வரங்களையும் நற்பலன்களையும் பெற்றிடுவீர்களாக!

வெற்றிலை மகிமை

வேத, யாக, ஹோம சக்திகள் நிறைந்த மங்கள, சுமங்கலி சக்திகள் நிறைந்த அஞ்சன (மை) தேவ சக்திகள் நிறைந்த வெற்றிலை

ஸ்ரீமகா கணபதியே வெற்றிலையில் மிகவும் விசேஷமான தேவ மையான‌ "காணா(பத்யா)ஞ்சனத்தில்" ஸ்ரீஆஞ்சநேயருடைய ஆதி மூல வடிவத்தை வரைந்து தந்தமையால் அதே தோற்றம் பெற்றவராய் "அஞ்சன மைந்தரானார்" ஆஞ்சநேய மகாபிரபு! இறையருளால் வெற்றிலை தோன்றியவுடனேயே மந்தார இலை, தாமரை இலை, அரச இலை, புரச இலை போன்றவற்றின் தேவ மந்திர சக்திகளை அந்தந்த சமித்துத் தாவரத்திற்குரிய தேவ மூர்த்திகளும், அதனதற்கு உரித்தான மகரிஷிகளும் ஆசியாய், நல்வரங்களாய் மேலும் தேவ மெருகு கூட்டி வெற்றிலைக்கு அளித்திட்டனர்.

எனவே வெற்றிலையில் அனைத்து நல்தளங்களும், இலைகளும், மூலிகைகளும், சமூலக் கூட்டும் நிறைந்துள்ளன. வெற்றிலையை ஹோம ஆஹூதியாக இடுவதற்கான குறித்த தேவ வழிமுறைகளும் உண்டு. இவ்வரிய முறைகளைத் தக்க சற்குருவை, பெரியோர்களை நாடி அறியவும்! ஏனென்றால் முறைப்படி பூஜிக்கப்பட்ட பிரம்ம ஞான சக்தி கூடிய ஒரே ஒரு வெற்றிலையைத் தக்க முறையில் ஹோமத்தில் ஆஹூதியாக இட்டால் கூடப் போதும். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து தளங்களையும், குறித்த சில விசேஷமான சமூலங்களுடன் ஆஹூதியாக இட்ட பலாபலன்களை மிக எளிதில் பெற்றிடலாம்!

ஸ்ரீஆங்கிரஸ மகரிஷி இத்துறை ஹோம வழிபாட்டில் கரை கண்டவராவார்! இதனால் தான் அனைத்து ஹோமங்களிலும் ஸ்ரீஆங்கிரஸ மகரிஷிக்கு எனத் தனிப்பட்ட முறையில் விசேஷமாக ஆஹூதி அதுவும் வெற்றிலை மூலமாகக் குறிப்பிட்ட ஹோம சமூலத்திற்கு வைத்து அளிக்கப்படும்!  பூரண ஆஹூதியிலும் தக்க ஹோம சமூலத்தோடு அளித்திட்டால் பலாபலன்கள் பல்கிப் பெருகும். இவை யாவும் ஹோம வழிபாட்டின் பரம தேவ ரகசியங்களாம்!

பரம்பொருளின் பூஜ்ய ஹார இறைவளாகத்தில் இருந்து பெற்ற மந்திர சக்திகளும், பரசுராம தேவ மந்திரக் கணைகளும் பிரம்ம ஞானக் கலைக் கதிர்களும், மகரிஷிகளின் இறை இரகசிய மந்திரங்களும், சித்புருஷர்களுடைய ஞானபத்ர மாமறை வாக்கியங்களும் பொதிந்ததாகப் பிரகாசிப்பதே வெற்றிலையாம்.

எனவே, பிரம்ம சிருஷ்டியானது ஸ்ரீமகா கணபதி தரும் காணாஞ்சன சக்தி மூலமாகத்தான் நிறைவு பெறுவதால் அஞ்சனம் எனப்படும் தேவ மந்திர மை சக்திகள் நிறைந்ததாக வெற்றிலை துலங்குகின்றது. எந்த உணவையும் அமிர்த மயமாக்கும் சக்தியையும் கொண்டது. அனைத்து மாமந்திரச் சக்திகளையும் தன்னுள் ஈர்க்கும் வல்லமை பெற்றது. ஒரு வெற்றிலையில் பதிந்த அஞ்சன மை விரல் ரேகை பதிவு கொண்டே எந்த ஒரு ஜீவனின் இரகசியங்களையும், விளக்கங்களையும் எளிதில் உணர்ந்திடலாம்.

சக்தி வாய்ந்த தலைச் சுழி, கை, பாத ரேகைகள்!

ஸ்ரீபிரம்ம மூர்த்தியானவர் ஒவ்வொரு ஜீவனுக்குமான ஜீவ வடிவினை ஓர் ஆதி மூல வெற்றிலை தளத்தில் வரைந்து சிவபெருமானிடம் அளித்திட, இறைவனும் தம் வலது சூரிய (மோதிர) விரலின் நுனி மைய வளைவுக் கணையத்தால் அதனைத் தொட்டு அங்கீகரிக்கின்றார். இதுவே தலைச்சுழிப் பிரமாணம் எனப்படுகின்றது. நம் தலைச் சுழியில் இருக்கின்ற கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய ரேகைகளும், கைரேகை மற்றும் உள்பாத ரேகைகளும் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டவை. எனவே தான் தலைமுடி நேர்த்தியில் கர்ம வினைகளைத் தக்க வழிபாட்டின் மூலம் தீர்ப்பதாகத் தலைச்சுழிப் பகுதியைத் தூய்மையாக்கி, அதில் சூரிய வழிபாடு செய்வதாக இவ்வரிய பிரார்த்தனை விளங்குகின்றது.

இப்போதும் கூட மொட்டையடித்தவுடன் பலர் தங்களை அறியாமலே தனது வலது உள்ளங்கையால் ரேகைகளைச் சுழியுடன் தொடர்புப்படுத்தி தலைச்சுழிப் பகுதியைத் தடவிப் பார்ப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். இதனால் தலைச் சுழி ரேகைகளும், கைரேகைகளும் ரேக காந்த ஆகர்ஷண சக்தியால் ஈர்க்கப்பட்டுப் பல தேவ நன்மைக் கதிர்களைப் பொழிகின்றன. இதனால் தான் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது உச்சந் தலையில் எண்ணெய் வைத்துப் பெரியோர்கள் பன்முறை நன்கு அழுத்தித் தேய்ப்பர். இவையெல்லாம் தலைச் சுழியின் தாத்பர்யங்களை உணர்த்துகின்றன.

பல அரிய சூர்ணங்களையும், லேகியங்களையும் ஒரு நாள் முழுதும் வெற்றிலையின் மேல் வைத்திருந்து அதனை அப்படியே தலைச் சுழிமேல் கவிழ்த்து, சூரண சக்தியை உடலுக்கு உரமூட்டும் அரிய "வெற்றிலைக் கிழி" சித்த வைத்திய முறையும் உண்டு. தற்காலத்தில், வெற்றிலையானது திருமணம், வேதம் ஓதுதல், கோயில் திருவிழாக்கள் போன்ற நற்காரியங்களுக்கும் மற்றும் ஈமக் கிரியைச் சடங்குகள், பில்லி சூனியம் வைத்தல், பில்லி சூனியம் எடுத்தல், மை போட்டுப் பார்த்தல், மை போட்டுக் கெடுதல் செய்தல் போன்றும் சுப காரியங்கள் மற்றும் அசுப காரியங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா!  நல்லது, தீயது இதற்கெல்லாம் வெற்றிலை பயன்படக் காரணமென்ன, இதற்கெல்லாம் வெற்றிலை பொறுப்பாகுமா?

மந்திரங்கள் யாவர்க்கும், யாவைக்கும் பொதுவானவையே, ஆனால் முறைப்படி நல்லோரிடம் பணிவுடன் கற்றிட வேண்டும். ஆலயத்துக்கு வருகின்ற அனைவருமா நல்ல எண்ணங்களோடு, தூய நினைவுகளோடு, சுயநலமற்ற பிரார்த்தனைகளோடு வருகின்றனர்? தீய எண்ணங்கள், பேராசைகள், முறையற்ற காம எண்ணங்கள் போன்ற எண்ணற்ற துர்சக்தி வகைகளை மனதில் தாங்கி வருபவர்களின் எண்ணிக்கைதான் எத்தனை எத்தனை?

ஆனால் ஆலயத்தில் உள்ள இறைச் சக்தியானது அவரவர் சேர்த்து வைத்துள்ள புண்ணியச் சக்திக்கு ஏற்றவாறு வருபவர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றித் தருகின்றதே தவிர, எக்காரணத்தாலும் அந்த தெய்வீக சக்தியானது மாசுபடுவதில்லை. அதே போல, வெற்றிலையானது அதைப் பயன்படுத்துவோரின் எண்ணங்களுக்கும், செயல்களுக்கும் ஏற்றவாறு பலனைத் தருகின்றதே தவிர அதன் புனிதத் தன்மை எக்காலத்தும் மாறுபடுவதில்லை, மாசுபடுவதுமில்லை!  அனைத்துவிதமான மந்திரங்களையுமே வெற்றிலை தன்னுள் கிரகித்துக் கொள்வதால் அம்மந்திரச் சக்திகளை நன்முறையிலோ, தவறாகவோ பயன்படுத்துவது அவரவருடைய மனோ நிலையைப் பொறுத்ததாகும்.

ஆனால் அனைவருமா எப்போதும், எந்நேரமும் தெய்வீகமாகச் செயல்படுகின்றனர்? மிகவும் சுயநலத்துடன், தன்னுடைய தேவைகள் பூர்த்தியானால் சரி என்றும், பிறருடைய நல்வாழ்விற்குத் தீமை பயக்க வேண்டும் என்றும் வடிகட்டிய சுயநலத்தோடுதானே சதாசர்வ காலமும் பலரும் செயல்படுகின்றனர். எனவே, ஒரு வெற்றிலை மூலமாகவே இறைவன் எத்தனையோ கோடி லீலைகளை உணர்த்துகின்றானே!

ஆனால் ஒரே ஒரு முக்கியமான படைப்பு இரகசியத்தை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். பிறப்பு, இறப்பு அற்ற உத்தம தேவ நிலைகளை அடைந்தோர் வெற்றிலை வரை வடிவு சிருஷ்டிப் படலம்தனைத் தாண்டியவர்களாக ஆகின்றனர். எனவே தாம் கர்மவினைகளுக்கு அப்பாற்பட்டவர்களான புனிதமான துறவியர்கள் தாம்பூலம் தரிப்பதில்லை! ஆனால், எப்போது ஒருவருக்கு ஜீவ வடிவானது வெற்றிலையின் மேல் பிரம்ம லோகத்தில் அரங்கேற்றம் ஏறுகின்றதோ, அப்போதே தெரிந்து கொள்ளலாம் அவர் கழிக்க வேண்டிய கர்மவினைகள் நிறைய உண்டு என்று!

தெய்வ வடிவுடன் விளங்கும் பிறந்த குழந்தைக்குத் தேன் மருந்தை வெற்றிலையில் வைத்துக் கொடுப்பதற்கும் ஆன்மீக ரீதியான காரணங்கள் உண்டு. ஆதிமூல தேவ மகா தளமாக விளங்கும் மூலாதார வெற்றிலையின் வடிவில் இருந்து மாறுபட்டதாக தற்போதைய வெற்றிலை வடிவம் காணப்படுகின்றது.

தீயவற்றை ஈர்த்து, பஸ்மம் செய்து நம்மை ரட்சிக்கும் சித்த மூலிகையே சிறப்பான வெற்றிலையாம்!

வெற்றிலையின் நுனி தீய சக்திகளையும் குறிக்கின்றது. அதே போல, வெற்றிலையின் நடு நரம்பானது விஷ சக்திகளைக் காட்டுகின்றது. இக்காரணத்தால் தான் நாம் வெற்றிலையைத் தாம்பூலமாக ஏற்கும் போது கூட வெற்றிலையின் நுனிப்பகுதி மற்றும் நடு நரம்பை அப்புறப்படுத்தி விட்ட பின்னரே தாம்பூலந் தரிக்க வெற்றிலையைப் பயன்படுத்த வேண்டும். புனிதத்தின் பெட்டகமாய் விளங்கும் வெற்றிலையின் நுனியில் தீய சக்தி, நடு நரம்பில் விஷ சக்திகளும் கூடியிருப்பது போல் தோன்றுவது ஏன்?

உயிரை மாய்க்கின்ற விஷ சக்திகள் கூடிய ஈயத்தினை ஒரு பானை நிறைய நன்கு உருக்கிக் கொடுத்த போது, அந்த ஈயத்தை அருந்திய ஸ்ரீஆதிசங்கரின் திரு உடலில் அந்த விஷச் சக்தி நல்சக்தியாய் அடங்கிப் போயிற்று அல்லவா?  மனித சரீரத்தையே உருக்குகின்ற பெருத்த உஷ்ண சக்தியைக் கொண்ட சுண்ணாம்புக் காளவாயின் அதிவெப்பமானது திருநாவுக்கரசு சுவாமிகளிடம் அடங்கிக் குளுமை கொண்டது தானே!  சம்பந்தப் பெருமானின் வேத ஓலைக் கீற்றினை பலத்த அக்னி ஒரு கிஞ்சித்தளவும் தீண்டவில்லை அன்றோ!

எனவே, அக்னி மற்றும் விஷ சக்தியின் விளைவுகள் என்பது அவரவர் கர்ம வினைகளின்படி அமைவதாகும். தீண்டியவரைக் கொல்கின்ற நஞ்சைத் தாங்கியிருக்கும் பாம்போ, தேளோ, நட்டுவாக்களியோ, பூரானோ அதனதன் விஷத்தால் பாதிக்கப்படுவதில்லையே!  கொடுமையான நரம்பு நோய்களைத் தரும் நாயின் பல் விஷம் அதனை எதுவும் செய்வதில்லையே! எனவே, உத்தம இறைநிலைகளில் யாவையுமே ஒன்றாய்த்தான் பார்க்கின்றனர். கால்நடைகள் கூட விஷச் செடிகளை விலக்கிப் புல் மேயும் போது, அறியாமல் அவற்றை உண்ண நேர்ந்தாலும் இயற்கை ரணக் காப்பு மூலிகைகள் காக்கின்றன. எனவே, "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்பது போல அவரவருடைய கர்ம வினைகளே அவரவர்க்கு எதிர்மறை விளைவுகளாய் வந்து அமையும். மேலும் வெற்றிலையின் நுனியும், விஷ சக்திகளைக் கொண்ட நடு நரம்பும் எத்தனையோ விதங்களில் பிரபஞ்சத்துக்கு உதவுகின்றன. இன்று உலகில் வெற்றிலைக் கொடிகள் மட்டும் இல்லாவிடில் நம் பூலோகமே விஷ சக்திகளால் நச்சுக் கிரணங்களால் பாதிக்கப்பட்டிருக்கும். எனவே, வெற்றிலையின் முன், நடு, பின் நரம்புப் பகுதிகள் பரவெளியில் பரந்து கிடக்கும் தீய சக்திகளை ஈர்த்துப் பஸ்மமாக்கி, நல்வகையாக்கித் தம்முள் அடக்கி ஜீவன்களைப் பாதுகாக்கின்றன.

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மூன்றும் இணைவதே முப்பெரும் மங்கள சக்தி!

மிகப் புனிதமான வெற்றிலையின் பரிபூரணமான தேவ சக்திகளைப் பெறுவதற்கான புண்ய சக்திகளை நாம் பெறவில்லை ஆதலின் அதன் மூலிகை சக்திகளையாவது அடையும் வண்ணம் வெற்றிலையோடு பாக்கும், சுண்ணாம்பும் சேர்க்கின்றோம்!

சுண்ணாம்பு அற்புதமான பல பாஸ்கர தேவ சக்திகளைக் கொண்டது. இதனால் தான் கட்டிடங்களுக்கு சுண்ணாம்பு அடித்தலின் மூலம் சூரிய கிரணங்களில் பெய்கின்ற வாஸ்து சக்திகளைப் பெறுகின்றோம். பல லோகங்களில் இருந்து சித்தர்களும், மகரிஷிகளும் ஓதி நிரவுகின்ற ஸ்ரீகாயத்ரீ மந்திர சக்திகளையும் தன்னுள் சுண்ணாம்பு தாங்குகின்றது. தீவினைகளையும் பஸ்மம் செய்யும் சக்தியையும் கொண்டுள்ளது. இல்லற தர்ம பூமிக்குப் பலவிதமான தெய்வீக சக்திகளையும் அளிக்கவல்லது. எனவே பாக்கும், சுண்ணாம்பும் சேரும் போது தான், வெற்றிலையின் புனிதமான சக்திகளை நாம் பரிபூரணமாகப் பெற்றிட முடியும். செவ்வாய் கிரகத்தைச் சார்ந்த பாக்கு விருட்சமானது சமித்து விருட்சங்களுள் ஒன்றாய் மலர்ந்து விண்ணிலிருந்து மங்கள சக்தி, மாங்கல்ய சக்தி, சுமங்கலித்வ சக்தியைப் பூமிக்குப் பரப்புகின்றது.

நம் நாட்டில் தான் ஒரு நாளைக்கு 10, 15 முறை வெற்றிலை போடும் வழக்கம் இருக்கின்றதே, அவ்வளவு முறை வெற்றிலை உண்பதால் அனைவரும் வெற்றிலையின் புனிதமான சக்திகளை நிறையப் பெற்று அதிகமான ஆன்ம பலத்துடன் விளங்க முடியுமா?  ஒரு நாளைக்கு எவ்வளவு வெற்றிலைகள் போடலாம், எத்தனை முந்திரி பருப்புகளை உண்ணலாம், எத்தனை வெற்றிலைகளைத் தாம்பூலமாகத் தரித்திடலாம் என்ற வகையான ஆன்மீகக் கணக்கு முறைகளும் உண்டு.

மகத்தான் வேத மந்திரச் சக்திகளை முந்திரிப் பருப்பு தன்னுள் பூண்டு இருப்பதால் ஒருவர் ஒரு நாளிலேயே 200 முந்திரிப் பருப்புகளைச் சாப்பிட்டால் அதிக அளவு வேத சக்திகளை ஒருவர் உடனடியாகப் பெற்றிட முடியுமா? நிச்சயமாக இல்லை!  அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே!  எனவே ஒரு வேளைக்கு, ஒரு நாளைக்குத் தாம்பூலமாக, மாமருந்தாக, மூலிகையாக, பிரசாதமாக எவ்வளவு வெற்றிலைகளை ஏற்றிடலாம் என்ற ஆன்மீகக் கணக்கு முறைகளையும் நாம் அறிந்தாக வேண்டும்.

முந்திரிக்கும் வெற்றிலைக்கும் முக்கிய ஜீவக் கணக்குண்டு!

ஆன்மீக உணவு முறைப்படி ஒருவர் ஒரு நாளைக்கு நான்கு முந்திரிப் பருப்புகளை மட்டுமே அதுவும் பச்சையாக இன்றி உணவில் பக்குவப்படுத்தி உண்பதே சாலச் சிறந்ததாம்!  மேலும் முந்திரிப் பருப்பில் உள்ள அரிய மந்திரச் சக்திகளின் காரணமாக ஒரு முந்திரிப் பருப்பு முழுமையாக ஜீரணமாகி நாடி நாளங்களில் கலப்பதற்குக் குறைந்தது நான்கு நாட்களுக்கு மேலாகும்!  அதாவது, என்னதான் ஆன்மீக சக்திகள், மந்திரச் சக்திகள் நிறைந்த பொருட்களை உண்டாலும் அவற்றைத் தாங்கி உடலில் நிலை நிறுத்துவதற்கான ஆன்மக் கலயங்களை, ஆன்மச் செல்களை ஒருவர் கண்டிப்பாக விருத்தி செய்து கொள்ள வேண்டுமே!

ஆசனம், பிராணாயாமம், தியானம், தாரணை, சமாதி போன்ற யோகப் பயிற்சிகள் யாவும் உடலில் நிறைய ஆன்மக் கலய யோகச் செல்களை உருவாக்குபவையே!  ஆனால், இந்த விஞ்ஞானமய உலகில் இத்தகைய யோக இறைப் பயிற்சிகளையும், இவற்றுக்கு ஈடான பலாபலன்களையும் தரவல்ல நட்சத்திர தான தர்மங்களையும் எவர்தாம் முறையாகக் கடைபிடிக்கின்றனர்? எனவே, போதுமான ஆன்மக் கலயச் செல்களை நம் உடலில் ஏற்படுத்திக் கொள்ளாத போது வேதமா சக்திகள் நிறைந்த வெற்றிலை, முந்திரிப்பருப்பு, சிறு திராட்சை, குங்குமப்பூ, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு போன்றவற்றை எவ்வளவுதான் உண்டாலும் அவை பயனின்றி உடலில் இருந்து வெளியே கழிக்கப்படும்.

இதற்காகத்தான் அன்னதானத்தில் இவற்றை நிறையச் சேர்த்தால், தன் உடலில் பெற முடியா இவற்றின் ஆன்ம சக்திகளை அன்னதானப் புண்ய சக்தி மூலமாக எளிதில் பெற்றிடலாம் அல்லவா!  தெய்வீகத்தில் எல்லாவற்றிற்கும் மாற்று இறை வழிமுறைகள் பல உண்டு, இவற்றை அறிந்த சற்குருவை நாடிச் சரணடைய வேண்டும். ஒவ்வொருவரும் அவரவருடைய நட்சத்திரம், ராசி, லக்ன ரீதியாக எவ்வளவு வெற்றிலைகளை ஒரு நாளில் ஏற்றுக் கொள்ளலாம்.  எவ்வளவு வெற்றிலைகளை வைத்து பூஜிக்க வேண்டும், சகுன சாஸ்திரத்தில் ஒவ்வொருவருக்கும் உரித்தான வெற்றிலைகள் எவ்வளவு போன்ற தேவக் கணக்கு முறைகளும் வெற்றிலை சாஸ்திரத்தில் விளக்கப்படுகின்றன!  இவை அனைத்தையும் அறிந்த சற்குருவே அவரவர்க்கு உரிய வெற்றிலையின் ஆன்ம அம்சங்களை உணர்த்தும் வல்லமை வாய்ந்தவர்.

சற்குருவைப் பெறும் வரையில் "கருவந்தளை" என்ற முறையில் அவரவர் நட்சத்திரம், நாடிப் பாங்கிற்கான வெற்றிலை எண்ணிக்கைகளை அறிந்திடலாம்.

நச்சைப் பேணும் நலங்கெட்ட தீய குணம்!

புகையிலையோடு சேர்த்துத் தின்னப்படுகின்ற வெற்றிலை நச்சுடையதாக மாறி விடுகின்றது. புகையிலை என்னும் நச்சுப் பொருளால் வெற்றிலையில் உள்ள நல்தன்மை மறைக்கப்பட்டு மாசுபடுத்தப்படுகின்றது. ஓரழுகிய பழம் ஏனையவற்றை அழுகச் செய்வது போல!

புகையிலை நச்சுடையது என்றால், புகையிலை படைக்கப்பட்டது ஏன்?  ஒவ்வொரு மனிதனும் தனக்கு இறைவன் பரிசாகத் தந்துள்ள பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்தால் இவை போன்ற படைப்பு ரகசியங்களுக்கான ஆன்ம விளக்கங்களை அறிந்திடலாம். ஊமத்தை, அரளி விதை, வைரம், பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களும், மற்றும் விஷப் பொருட்களும் பிரபஞ்சத்தில் பரவி இருக்கின்ற தீய சக்திகளை, தீய எண்ணங்களை, தீவினைகளைத் தம்முள் ஈர்த்துக் கொள்வதால் தான் இவை நச்சுடையதாக விளங்குகின்றன.

அரளி விதையைச் சுற்றிப் பல வண்டுகள், பூச்சிகள், புழுக்கள், கிருமிகள் எவ்வித பாதிப்புமின்றி இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மேலும் கொடிய விஷம் உள்ள பாம்புகளை, கீரியும், அதை விடப் பெரிய பாம்புகளும், மீன்களும் தின்று உயிர் வாழ்கின்றன. தேள், நட்டுவாக்களி, பூரான், சிலந்தி போன்ற விஷமுள்ள ஜந்துக்களை கோழி, சேவல், பூனை போன்றவை உண்ணும் போது அந்த விஷச் சக்திகள் என்னவாயின?  எனவே, விஷ சக்தியானது ஆக்கப்படுதல் என்பது அவரவருடைய கர்மவினைப் பாங்கினைப் பொறுத்ததேயாம்.

உயர்ந்த இரத்த அழுத்தம் உடையோருக்கு நெய், வெண்ணெய், எண்ணெய்ப் பொருட்களே துன்பம் தருவதாகின்றன. இவ்விளைவுகளுக்கு அந்தந்தப் பொருட்கள் காரணம் அல்லவே!  எனவே, விஷம் கொண்டவையாக நாம் கருதும் பொருட்கள் யாவற்றின் படைப்புப் பணிகள் பிரம்ம ரகசியமாக, பகுத்தறிவால் உணரப் பட வேண்டியதாக விளங்குகின்றன!

அனைத்தையும் அப்படியே உண்பதாக உலகில் இறைவன் படைத்திருந்தால் ஒரு கல், மண்ணைக் கூட மனிதன் உலகில் விட்டு வைக்க மாட்டானே!

நாவிலா நச்சுக் கஷாயம்!

இன்றைக்கு நம் பூமியில் ஒவ்வொரு விநாடியும் எந்தெந்த நாடுகளில் இருந்தோ பலரும் கோடானுகோடியாக தீய, காமாந்திர, வன்முறை கெடுதலான சிந்தனைகள், எண்ணங்கள், காரியங்களை எண்ணிக் கொண்டும்,  நடத்திக் கொண்டும் பிரபஞ்சத்தின் பரவெளியையே பலரும் பாழாக்கி வருகின்றனர். ஒருவரால் நற்காரியம் செய்து பரவெளியைப் புனிதப்படுத்தத்தான் முடியவில்லை என்றாலும், புகை பிடித்தல், பொடி, புகையிலை, மது போன்ற விஷமான பொருட்களால் பரவெளியை மாசுபடுத்தி, பிற ஜீவன்களின் சுவாசத்தைக் கெடுத்துப் பெரும் பாவங்களைச் சேர்க்காமல் இருக்கலாம் அல்லவா?

ஒருவர் புகையிலை போடுவதால்

1. தன் ஆத்மத்திற்கு, தேகத்திற்கு விஷச் சூட்டைக் கிளப்பி வதைப்பதோடு மட்டுமல்லாது,

2. தானாக, இயற்கையாகவே அந்தப் புகையிலை தாவரமாக வெளியே இருந்திருக்குமேயானால் அது பல தீய சக்திகளை கிரகித்து பல கோடி ஜீவன்களையும், வானையும் சுத்திகரித்து இருக்கும் அல்லவா?  அதையும் செய்ய விடாமல் அந்தத் தாவரத்தையும் துன்புறுத்தி,

3. புகையிலைச் சாற்றினால் மரபு ஜீவ அணுக்களில் விஷச் சக்தியை ஏற்றி எதிர்வரும் சந்ததிகளையும் பாதிப்படையச் செய்து

இவ்வாறு பெரும் பாவங்களைத் தன் வாழ்க்கையில் மனிதன் நிரப்பிக் கொள்கின்றானே, என்னே பெரும் விதி? எவ்வாறு அரளி விதையும், ஊமத்தங்காயும் நச்சுப் பொருளாக விளங்குகின்றனவோ, அதை விட புகைப் பிடிக்கும் மனிதன் மகா நச்சுப் பொருளாகவே விண்ணுலகத்தாரால் கருதப்பட்டு அவ நிலைக்கு உள்ளாகின்றான்.

எனவே, இனியேனும் புனிதமான, பவித்ரமான வெற்றிலையை நல்ல முறையில் பயன்படுத்தும் அற வழிமுறைகளை மனித குலம் அறிந்து கொள்ள வேண்டும். கடவுள் அருளால் எளிதிலும், மிக மிக மலிவாகவும் நம் புனித பாரதத்தில் வெற்றிலை கிடைப்பது நமக்குப் பெரும் பாக்கியமே!

தாம்பூல மங்களத்தில் சுண்ணாம்பின் சீரிய பங்கு!

தற்காலத்தில் தாம்பூலத்தில் வெற்றிலையோடு வாசனைப் பாக்குப் பொட்டலத்தைக் கொடுக்கின்றனர். துகள் பாக்கை விட முழுமையான கொட்டைப் பாக்கே சிறந்தது, புனிதம் தருவது!  மேலும் சுண்ணாம்பு வைக்காமல் தாம்பூலம் நிறைவு பெறாது!  எவ்வாறு வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகிய மூன்றில் ஒன்று குறைந்தாலும் தாம்பூலம் தரிப்பது பரிபூரணமாகாதோ, அது போல பூஜைப் பொருட்களில் ஒன்றான மங்களகரமான தாம்பூலத்தில் கொட்டைப்பாக்குடன் சுண்ணாம்பை அவசியம் சேர்க்க வேண்டும். சுண்ணாம்பு சேர்த்தல் என்றால் சுண்ணாம்பு உள்ள டப்பியை அப்படியே வைத்தல் என்று பொருள் அல்ல. வெற்றிலையில் சுண்ணாம்பினைத் தோய்த்து மேலாக வைத்தால் தான் தாம்பூலம் முழுமையான மங்களத்துவம் பெறும்.

ஸ்ரீஅகஸ்தியருடைய "ஸ்ரீஅகஸ்திய சம்ஹிதா" என்ற ஓர் அற்புத வேத புராணப் பகுதி உண்டு!  இதில் த்ரிம்சோத்ராய ஸ்ரீராம பூஜா என்னும் ஒரு வகை பூஜை முறையை விளக்கும் பகுதியில் ஸுதீஷணருக்குப் பாஹ்ய பூஜை மகிமை பற்றி ஸ்ரீஅகஸ்தியர் அற்புதமான தேவ ரகசியங்களை, ஆத்ம ரகசியங்களை அளிக்கின்றார்!  இப்பகுதியில் தாம்பூலம் முறை பற்றிய ஒரு சுலோகத்தில்

"கர்ப்புர ஸகலைர் யுக்தம் நாகவல்லீ தளாந்விதம்
ஸுதாபிந்து ஸமாயுக்தம் பூகிபல ஸமந்விதம்
தாம்பூலம் ரகுநாதஸ்ய தத்வா காமாநவாப்னுயாத்"

- என்று ஸ்ரீஅகஸ்திய மஹரிஷியே மிகுந்த ஆனந்தத்துடன் தாம்பூல மகாத்மியத்தை விளக்குகின்றார்.

அதாவது "பச்சைக் கற்பூரத்துடன் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, நீர்த் துளியுடன் ஸ்ரீராமபிரானுக்குத் தாம்பூலம்தனை அளித்திட அனைத்து விதமான பிரார்த்தனைகளும் கனியும்!" என்று ஸ்ரீஅகஸ்திய மகாபிரபுவே அருள்கின்றார் என்றால் சுண்ணாம்பு சேர்ந்து தான் தாம்பூல மங்கள சக்தி பரிபூரணமடையும் என்பது ஸ்ரீஅகஸ்தியர் தம் திருவாக்கால் தெளிவாகின்றதன்றோ! இவ்வாறு முறையான தாம்பூல வரிசையால்தான் தாம்பூல தேவதைகளின் பரிபூரண ஆசிகளைப் பெற்றிடலாம்!  இத்துதியை ஓதியே வெற்றிலை போடுதல் வேண்டும், வெற்றிலையையும் பயன்படுத்தவும் வேண்டும்.

வெற்றிலையின் மகிமைகள் இன்னமும் நிறைய உள்ளன. தக்க சற்குருவை, பெரியோர்களை நாடி அனைத்தையும் அறிந்து நன்முறையில் கடைபிடித்து நற்பலன்களை அடைந்திடுக!

ஆஞ்சநேய அவதாரம்

ஆஞ்சநேயருக்கு ஸ்ரீமகாகணபதி அஞ்சனம் (கண் மை) இட்டு "ஞானப் பிரகாச ஒளி" அளித்தல்

அட்டைப் பட விளக்கம்

ஸ்ரீஅகஸ்திய விஜயத்தின் அட்டைப் படங்கள் யாவும் சித்தருடைய "ஞானப் பத்ர கிரந்த" வாக்கியங்களை ஒட்டியும், நவநாத சித்தர்களுடைய அபூர்வமான புராண விளக்கங்களுக்கு ஏற்பவும் நடைமுறை இறை லட்சிய அனுபூதிகளுக்கு ஏற்ற வகையில் அளிக்கப்படுகின்றன. ஸ்ரீஆஞ்சநேய அவதாரத்தில், ஸ்ரீமகா கணபதியே மாருதிபிரானுக்கு அஞ்சனம் (கண் மை) இட்டு "அவதார மூர்த்தி உற்பவிக்க மூலாதாரமாவார்" என்பதைத் தீர்க தரிசனமாக உணர்ந்திட்டே அனுமாரும் "அஞ்சனம்" மைந்தராய் உலகை ஆட்கொண்டார். அட்டைப் படத்தில் நிறைய தெய்வீக ரகசியங்கள் உண்டு. பூலோகத்தில் காணப்படாத சூரிய லோகம், சந்திர லோகம், பிரம்ம லோகம், குருமங்கள கந்தர்வ லோகம் போன்ற உத்தம விண்வெளி முக்தி, மோட்ச லோகங்களில் மட்டுமே காணக் கூடிய, அரும்பெரும் தவத்தால் பெறக் கூடிய தெய்வீகத் திரவியங்களை, பொருட்களை, தாவரங்களை, விலங்குகளை, ஜீவன்களை, இயற்கைக் காட்சிகளை நீங்கள் அட்டைப் படத்தில் தரிசித்துப் பெறும் பேறுகளை அடைகின்றீர்கள் என்பதை நன்றாக அறிந்து கொள்ளுங்கள்.

ஸ்ரீஅஞ்சனாட்சி அம்மன் கோடியக்கரை

"கோளினா ஞானச் சங்கிலி"

ஸ்ரீஆஞ்சநேயரின் ஊஞ்சலைத் தாங்கும் "கோளினா ஞானச் சங்கிலி" ஞானப் பூர்வமானதாம்! ஞானிகளும், ஞான யோகியர்களும், ஞான ராஜ பட்சிகளும் "கோளினா" ஞானச் சங்கிலியில் அமர்ந்து அபூர்வமான, பெறுதற்கரிய பிரம்ம மஹேஸ்வர ஞானத்தைப் பெறுகின்றனர். ஞான ராஜப் பறவை வகையைச் சேர்ந்த கிளிகளும் இதில் குறித்த காலத்தில் அமர்ந்து தமக்குரிய சகஸ்ர பாத ஞானத்தைப் பெறுகின்றன. சுக மஹரிஷியோ தன்னுடைய கிளி ரூபத்திலேயே கோளினா ஞானச் சங்கிலியில் அமர்ந்து பலவகை ஞான சக்திகளைப் பெற்றிட்டார்.

நீங்கள் தற்போது இந்த இதழின் அட்டைப் படத்தில் தரிசிப்பது தீர்த்த பரிபாலய சிவலய ப்ரபு என்ற ஞானக் கிளியாகும். இக்கிளிதாம் கோளினா தேவ சங்கிலியில் அமர்ந்து ஞான உபதேசத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. இக்கிளியின் எதிரே தான் தேவ சுக்ரிய கலா தரணி என்ற ஞான பட்சி ராணியும் அமர்ந்துள்ளது. இவை யாவும் அனுமத் ஜெயந்தி தினத்தில் பூலோகத்தில் வலம் வந்து குறிப்பாக, திருஅண்ணாமலையில் கிரிப் பிரதட்சிணம் செய்கின்றன. ஒவ்வொரு ஆண்டின் ஆஞ்சநேய ஜெயந்தியின் போதும் திருஅண்ணாமலை கிரிவலத்தில் இந்த இரு ஞானக் கிளி பட்சிகளையும் கண்டிடலாம். கீரம் என்ற பெயரைத் தாங்கியுள்ளத் திருத்தலங்களிலும் இவை வலம் வந்து பூஜிக்கின்றன.

திருச்சி அருகே கீரனுர் ஸ்ரீஉத்தமநாதர் சிவாலயத்தில் தினந்தோறும் இவ்விரு ஞானக் கிளிகளும் தினமும் சூட்சும ரீதியாகப் பூஜித்துத் தரிசனம் தருகின்றன. இக்கிளிகள்தாம் எப்போதும் இக்கோளினாச் சங்கிலியில் அமர்ந்து ஞான சக்திகளைப் பல தேவ லோகங்கள், பூமிகள், விண்வெளி லோகங்களுக்கும் பரப்பிக் கொண்டிருக்கின்றன. இவை தேவ மந்திரங்களை ஜபிக்க, ஜபிக்க ஸ்ரீமகாகணபதியானவர் அஞ்சனா சிவ ரகசியத்தை அஞ்சன மைந்தனாம் ஸ்ரீஆஞ்சநேய ஸ்வாமியின் புருவம், திருக்கண்களுக்கு மை தீட்டி திருஷ்டிப் பொட்டு வைத்து வேத மாமறைகளை, அரிய தெய்வீக வழிபாடுகளை ஸ்ரீஆஞ்சநேய ஸ்வாமி உய்த்து உணருமாறு அருள்கின்றார்.

இந்த திவ்ய திருக்கோலக் காட்சியைத் தான் நீங்கள் அட்டைப்படத்தில் காண்கின்றீர்கள். ஏனைய அஞ்சனா தேவ ரகசியங்களைத் தக்க சற்குரு மூலமாக அறிந்து கொள்ளவும்.

ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் கோடியக்கரை

எனவே நீங்கள் அகஸ்திய விஜயம் அட்டைப் படத்தில் காண்பதெல்லாம் பல மஹரிஷிகள், யோகிகள், ஞானியர்கள், சித்தர்களின் தீர்க்க தரிசனத் திருக்காட்சிகள் மட்டுமல்லாது பூலோகத்தில் காணப் பெறாத பல தேவ காட்சிகள், வர்ணங்களை எல்லாம் நீங்கள் கண்டு ஆனந்தம் அடைகின்றீர்கள். பூஜையறையில் வைத்துத் தினமும் இவ்வரிய தரிசனத்தைப் பெறுதலே உங்களுடைய நெற்றியில் உறைந்துள்ள மூன்றாம் நேத்திர ஞானக் கதிர்களை பிரதிபலிக்கச் செய்து பல அரிய ஞான சக்திகளைப் பெற்றுத் தருகின்றன.

மூன்றாம் நேத்ர ஞான சக்தி!

ஆம், ஒவ்வொரு ஜீவராசிக்கும் நெற்றியில் மூன்றாம் கண் நிச்சயமாக உண்டு. ஆக்ஞா சக்ரத்தை யோக ரீதியாக அறிய வல்லாரே இந்த மூன்றாம் நேத்ர ஞான சக்திகளைப் பெற முடியும். இதற்கு உதவுவதே அட்டைப் பட அஞ்சனாதி அஞ்சனத் திருக்கோலமாகும். இதனை வைத்துக் கொண்டு தினந்தோறும் குறிப்பாக மூல நட்சத்திர தினத்தன்று சந்திர ஹோரையிலும் தியானிப்போர்க்கு அரிய ஞானம் கிட்டும். கல்வியில் மந்த புத்தி விலகும், தீய வழக்கங்கள் உடனடியாக விலகும், நல்ல ஒழுக்கமும் கூடும். இதனை முறையாக வழிபட்டு வந்திடில் தெய்வ தரிசனமும் கிட்டும்.

ஸ்படிக மகிமை (காஞ்சனாதி ஸ்படிகம்)

ஸ்படிகம் என்பது இறைவனுடைய திருக்கண்களிலிருந்து பொழிகின்ற பரமானந்த இறைத் திவலைகளின் திரட்சியாம்! இவற்றைத் திரட்டி அளிப்பவர்களே குறிப்பிட்ட சித்தர்களும், மகரிஷிகளும் ஆவர். எனவே ஒவ்வொரு ஸ்படிகமும், ருத்ராட்சம், சாளக் கிராம இறைக் கல்லைப் போன்று இயற்கையிலேயே பரப்பிரம்ம ஞானப் பிரகாசத்தைக் கொண்டதாகும்.

* ஸ்படிக சஞ்சாரம், ஸ்படிகப் பார்வை, ஸ்படிக தரிசனம், ஸ்படிக ஸ்பரிசம், ஸ்படிக வீச்சு, ஸ்படிக நாடி போன்று பல ஸ்படிக அம்சங்கள் பல உண்டு. இவற்றைத் தக்க முறையில் பெற்றிட்டால் எத்தனையோ உத்தம இறை நிலைகளை அடைவதுடன், நடைமுறை வாழ்க்கையின் பல துன்பங்களுக்கும் தீர்வுகளை எளிய முறையில் பெற்றிடலாம்.

* பூணூல், மாங்கல்யம், மெட்டி, வளையல், தாலிச் சரடு, தோடு, கடுக்கன்கள், மூக்குத்தி, ருத்திராட்சம் போன்று உடலில் புனிதம் பெருகிட எப்போதும் தரித்திட வேண்டிய வழிபாட்டு இறைச் சின்னங்களுள் ஒன்றே ஸ்படிகம் ஆகும்.

* ஸ்படிகத்தை லிங்கம், பாதம் போன்ற இறைச் சின்னங்களாகவோ, நட்சத்திர உருப் பொறிகளாகவோ முறையாக அணிந்தும், பூஜையில் வைத்தும், கிரிவலத்தில் தாங்கியும் வழிபட்டு வந்தால் உடல் சுத்தத்தையும், மனப் புனிதத்தையும் விரைவில், எளிதில் பெற்று உத்தம தெய்வீக குணங்களை சாசுவதமாக நிலைநிறுத்திக் கொள்ளலாம்.  தோஷங்கள், பொறாமை, குரோத, விரோத எண்ணங்கள், பில்லி சூன்யத் தீவினைச் சக்திகள் அண்டாவண்ணம் தடுக்கும் சக்தியைப் பெற்றதும் ஸ்படிகம் ஆகும்.

* ஸ்படிகங்களில் பாத கிரண ஸ்படிகம், காஞ்சனாதி ஸ்படிகம், ஸ்கந்தாக்னி ஸ்படிகம், ருத்ர நாள ஸ்படிகம், ஸ்ரீகிருஷ்ண ஸ்படிகம், பிரம்ம ஸ்படிகம், சகஸ்ர ஸ்படிகம் என்று பலவகை உண்டு. தக்க சற்குருவை நாடினால் அவரவருடைய தேக நிலை, நாடி, பித்த நாளங்களுக்கு ஏற்ப ஸ்படிக வகைகளை அவரே அருளிடுவார்.

நடராஜப் பெருமான் இடைவிடாது நாட்டியமாடிக் கொண்டிருப்பதால் தான், இந்தப் பிரபஞ்சமே இயங்கிக் கொண்டிருக்கின்றது. இறைவனுடைய நாட்டிய பாவனைகள் கோடானு கோடியாம்!  இறை ஆனந்தப் பரல்களில் முகிழ்க்கின்ற ஆனந்தத் திவலைகளுள் ஓர் அம்சமே ஸ்படிகமாக பூலோகத்தில் படைத்து அளிக்கப்படுகின்றது. எத்தனையோ கோடி ஸ்படிக வகைகளுள் துவாபார யுகம், மற்றும் கலியுகத்திற்கு உரித்தானவற்றுள் ஒன்றாக விளங்குவதே காஞ்சனாதி ஸ்படிகமாகும்.

சற்குரு ஒரு ஸ்படிகத்தை ஆசீர்வதித்து மந்த்ர உபதேசம் மற்றும் தீட்சை அளிக்கும் போது அவர்தம் உள்ளங்கை ரேகைகளின் பரிபூரண ஸ்பரிசத்தைத் திரட்டித் தருகின்றனர். மாசு மருவற்றப் புனிதமான குருவின் கை மற்றும் பாதங்களானவை காஞ்சனாதி சக்திகளைத் தன்னுள் பூரித்துக் கொண்டிருப்பதால் காஞ்சனாதி ஸ்படிகம்தனை குரு மூலம் பெறுதல் சிறப்புடையதாம்.

இறையருள் பொழிவிக்கும் ஸ்படிகம்!

அனைத்துக் குரு மண்டலங்களிலும் காஞ்சனாதி ஸ்படிகம் பூரித்திருக்கும். சற்குருவினுடைய அனுகிரக சக்திகளை தொகுத்துத் திரட்டி அளிப்பதும் காஞ்சனாதி ஸ்படிகத்தின் முக்கியமான இறைத் திருப்பணி ஆகும். அப்பர் ஸ்வாமிகள், சம்பந்தப் பெருமான், சுந்தரர் சுவாமிகள், மாணிக்கவாசப் பெருமான் போன்ற இறைத் தூதுவர்கள் இறைவனுடைய தீட்சையைத் தம் சிரசிலும், தோளிலும் பெற்று உவந்த போது இறைவன் காஞ்சனாதி ஸ்படிகம் மூலமாகவே தம் இறையருளைப் பொழிந்திட்டார். காஞ்சனாதிப் பொன், காஞ்சனாதி வைரம், காஞ்சனாதி மாணிக்கம், காஞ்சனாதிப் பவளம் என அரிய இறைக் கிரண அம்சங்களைக் கொண்டு பல விசேஷமான பொக்கிஷங்கள் அமைந்திட்டாலும் காஞ்சனாதி ஸ்படிகம் தாம் காஞ்சனாதி வகை திரவியங்களுக்கும், ஐஸ்வர்யங்களுக்கும் தலைமைப் பீடமாக விளங்குகின்றது.

ஸ்ரீவித்யா உபாசனையில் உன்னதம் பெற்றவரான ஸ்ரீபாஸ்கராச்சாரியார், மிகவும் சக்தி வாய்ந்த ஸ்ரீசக்கர யந்திரத்தில் உள்ள 43 கோடி இயந்திரங்களின் வழி வகைகளைக் குறிப்பதற்கு விதவிதமான காஞ்சனாதி ஸ்படிகங்களையே வைத்துப் பூஜை முறைகளை விளக்கினார். எனவே தாம் காஞ்சனாதித் திரவியங்களுள், காஞ்சனாதி ஸ்படிகமே முதன்மை பெற்றுத் திகழ்கின்றது.

"காஞ்சனாதி" என்று நீங்கள் சொல்லி ஒலிக்கும் போது ஐந்து விதமான ஸ்படிக பீஜாட்சரங்களைத் தன்னுள் அடக்கிய பஞ்ச காஞ்சனாதி பீஜாட்சர ஒலிகளை நீங்கள் கேட்டு உணர்கின்றீர்கள். உணர்தல் என்றால் மனதார, மனமார அறிதல் மட்டுமன்று, 72000 உடல் நாளங்களிலும் தெய்வீகமாக உணரப் பெறுதலே காஞ்சனாதி ஞானம் ஆகும். இதற்காகத்தான் பெரிய பீடாதிபதிகள் தங்களுடைய வாரிசுத் துறவியை நியமிக்கும் போது காஞ்சனாதி ஸ்படிகத்தை சிரசு, தோள், உள்ளங்கை, நாபியில் வைத்து காஞ்சனாதி ஞானத்தைத் தாமாகவே உற்பவித்து உணரச் செய்வார்கள். இவ்வாறு உணர்பவர்களே இறைப் பூர்வமான துறவி வாரிசாகச் செறிவர்.

"நட்சத்திரப் பிரகாச ஞானம்!"

இந்த காஞ்சனாதி ஞானம் உதிக்கின்ற போது அங்கு வார்த்தைகள், மந்திரங்கள், உபதேசங்கள், சைகைகள், பிரயோகங்கள் எதுவுமே தேவையிராது. இதனை நடைமுறை வழக்கில் நாம் புரிந்து கொள்வதற்காகவே காஞ்சனாதி ஞானத்தை, நட்சத்திரப் பிரகாச ஞானம் என்றும் சொல்வார்கள். காரணம், ஒருவர்,  தாம் எந்த நட்சத்திர மண்டலத்திலிருந்து உதித்து அதன் குணங்களைப் பூண்டிருந்தாலும், அவற்றை உணராது தாம் இன்ன நட்சத்திரம் என்று மட்டும் அறிந்து வாழ்வதால் தாமே அறிந்தும் அறியாதவராய், புரிந்தும் புரியாதவராய், தெரிந்தும், தெரியாதவராய் நட்சத்திர ஞானமாகிய காஞ்சனாதி ஸ்படிக ஞானத்தை ஆழ்நிலையில் பெற்றுப் பொலிகின்றார்.

உண்மையில் உலக ஜீவன்கள் அனைத்துமே அனைவருமே, காஞ்சனாதி ஞானத்தைத் தாமாகவேப் பெற்றுள்ளனர். தாம் பெற்றுள்ளதை நன்கு உணரவும் இறைநெறியில் பயன்பட வைப்பதும் வாழ்க்கையின் உன்னத காஞ்சனாதி லட்சியமாம்.

நாம் நல்லவராகத்தானே வாழ்கின்றோம், பிறருக்கு எவ்விதக் கெடுதலும் இழைக்கவில்லையே, நமக்கு ஏன் இத்தகைய சொல்லொணாத் துன்பங்கள் அடுக்கடுக்காய் ஏற்படுகின்றன என்று எண்ணுவோர் பலரும் உண்டு. இவர்கள் காஞ்சனாதி ஸ்படிக வகையைச் சார்ந்த குரு பாத ஸ்படிகம், நட்சத்திரச் சின்ன ஸ்படிகம், அனுபூதிப் ஸ்படிகம் (கழுத்தில் ருத்திராட்சம் போல் அணிவது) போன்றவற்றை அணிந்து முறையாக தம் மாதாந்திரப் பிறந்த நட்சத்திர நாளில் அருணாசல கிரிவலம் வந்தால் தம்முடைய துன்பங்களுக்கான காரணங்களைத் தாமே அறிந்து உணரப் பெற்று எளிய பரிகாரங்களும் கிடைக்கப் பெறுவர்.

எனவே உணர வைத்து, உருக்கைத் தீர்த்து வாழ்வில் உயர வைக்கும் உத்தம இறைச் சின்னமே காஞ்சனாதி ஸ்படிகமாகும். ஆத்ம சித்தத்தைச் சுத்தி செய்து, ஆத்ம சப்தத்தை (ருத்ர பீஜாட்சர உணர்வு) ஒலிக்கச் செய்து இறைவனுடன் கூடிய நிரந்தரமான ஆத்ம பந்தத்தை முக்தியாய், மோட்சமாய், ஞானமாய்க் கூட்டித் தருவதே காஞ்சனாதி ஸ்படிகத் தத்துவமாகும்.

ஞாயிற்றுக் கிழமையன்று காஞ்சனாதி ஸ்படிகத்திற்குச் சிந்தூரப் பொட்டிட்டு, தன்னைத் தானே 12 முறை ஆத்ம பிரதட்சிணம் செய்து (ஆவுடை இல்லாத) பாண லிங்கத்தை 21 முறை வலம் வந்து வணங்குவோர்க்கு முறையற்ற காம எண்ணங்கள், பேராசைகள் தீர்ந்து புனிதம் பெறுவதற்கு ஸ்படிக சக்திகள் உதவும். சிவசூரியன் உள்ள தலங்களிலும் லிங்கத்தின் மேல் சூரிய கிரணங்கள் படுகின்ற தலங்களிலும், ஞாயிறு, சூரியனார் கோயில், கும்பகோணம் கஞ்சனூர், திரைலோக்கி அருகே உள்ள கீழ்ச் சூரிய மூலை போன்ற சூரியத் தலங்களிலும் காஞ்சனாதி ஸ்படிகத்தை அணிந்தவாறு ஆதித்ய ஹ்ருதயம், கோளறு பதிகம் போன்ற நவகிரகத் துதிகளை ஓதி வணங்குவோர்க்கு எத்தகைய கடுமையான தோல் நோய்களுக்கு நிவாரணம் கிட்டுவதோடு, பெற்றோர்-பிள்ளைகளுக்கு இடையே உள்ள உரசல்களும், பகைமையும் நிவர்த்தியாகி, சொத்து சம்பந்தமான பிணக்குகளும் தீரும்.

அமுத தாரைகள்

இரும்பொறையில் சக்தி வாய்ந்த போகர் யாக குண்டம்

மகரிஷிகள் சித்தர்கள் வேள்வி (ஹோமம்) வளர்த்த யாக குண்ட தரிசனமானது வாழ்வில் பெறுவதற்கு அரிய பாக்கியமாகும். மேட்டுப்பாளையம் அருகே இரும்பொறையில் உள்ள போகர் யாக குண்டம் முருகப் பெருமானாலேயே நேரில் ஆசீர்வதிக்கப் பெற்றதாகும். செவ்வாய்க்கிழமை, அஸ்வினி, ஆயில்ய நட்சத்திர நாட்களில் இத்தகைய பண்டைய யாக குண்டத்திற்கு அஷ்ட பைரவ ஊதுபத்தி தூபம் இட்டு வணங்குவோர்க்கு தீராப் பிணிகளும் தீர சித்தர்கள் அருள்புரிவர்.

ஸ்ரீபோகர் யாக குண்டம் இரும்பறை

கண் நோய்கள் தீர கருவலூர்த் தீர்த்தம்

அவிநாசி அருகே உள்ள கருவலூர் ஸ்ரீகங்காதர ஈஸ்வர ஆலயத்தின் பாஸ்கரத் தீர்த்தம் கண் நோய்களைத் தீர்க்கும் சக்தி வாய்ந்ததாம். ஆயிரமாயிரம் கண்களை உடைய கண்ணாயிர நேத்ர தேவதைகள் எப்போதும் சஞ்சரிக்கும் அற்புதத் தீர்த்தம்!  சூரியோதய நேரத்தில் இத்தீர்த்தமருகே ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஓதி அர்க்யம் அளித்து பாசாங்குலி முத்திரை இட்டு சூரிய பகவானை தரிசித்திட்டு ஆழ்ந்த நம்பிக்கையுடன் அம்பிகையை வணங்கி கீரை வகை உணவினை ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்தால் எத்தகைய கண் நோய்களுக்கும் தக்க நிவாரணம் பெறலாம்.

அரசலீஸ்வரர் அருளும் அற்புத ஞானம்

அரச மரம் என்பது மகத்தான தெய்வீக விருட்சமாகும். மானுடப் பிறவியைக் கூடப் பல பெரும் புண்ய சக்திகளின் திரட்சியால் பெற்றிடலாம்! ஆனால் நம் புனித பூமியில் ஓர் அரச மரமாக அமைவது பல ஞானப் பூர்வமான பிறவிகளின் தொகுப்பே ஆகும். பல சித்தர்களும், மஹரிஷிகளும், உத்தமர்களும் அரச மரங்களாகப் பிறப்பெடுத்து இன்றைக்கும் பூலோகத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஏதோ அரசமரம் தானே 50/60 வருடங்களாகப் பெரிதாகிக் கொண்டிருக்கின்றது என்று மிகச் சர்வ சாதாரணமாக எடைபோட்டு விடாதீர்கள். ஒவ்வொரு அரச இலையிலும் உள்ள நாடிகளும், நரம்புகளும் நம்முடைய கை மற்றும் பாத ரேகைகளைப் போல பல லட்சம் மடங்கு அதிக தெய்வீக சக்திகளைப் பெற்றவையாம்.

இறைவன் கலியுகத்தில் அரச மரத்தைப் படைத்ததற்கு காரணம் யாதோ?  துவாபர யுகத்திலிருந்தே மாமறை சக்திகளை மானுட உலகம் இழக்கத் துவங்கி விடும். வேத சக்திகளின் புனிதத்தை மனித குலம் புரிந்து கொள்ளாது, அவற்றை மக்கள் மறந்து இழந்து விடுவார்கள் என்பதால் தான் வேத மாமறைச் சக்திகளின் திரட்சியாக மாமறை நரம்புகளை ஒன்று கூட்டித் தொகுத்து அரச மரத்தைப் படைத்து இறைவன் வேத சக்திகளைப் பொழிந்திடுகின்றான்!  எனவே ஈஸ்வரனே சில தலங்களில் (திண்டிவனம் அருகே ஒழிந்தியாபட்டு, திருக்கழுக்குன்றம் அருகே சதராஸ், பேரூர் ஸ்ரீஅரசம்பலவாணர்) ஸ்ரீஅரசலீஸ்வரராக அருள்பாலிக்கின்றார்! பௌர்ணமி மற்றும் ஹஸ்த நட்சத்திர நாட்களில் ஸ்ரீஅரசலீஸ்வரரை தரிசித்து (ஜப வேத பாராயண) வஸ்திரங்களை, ஆடைகளை தானமாக அளிப்போர்க்கு வேத சக்திகள், வாக் சக்தி, தீர்க தரிசனம் பெருகும். ஜோதிடர்களுக்கு மிகவும் முக்கியமான வழிபாடு இது!

கோடியக்கரை

கோடி அமிர்தக் குழகர் அளிக்கும் அற்புதக் குழவி பாக்யம்!

குழந்தையில்லாக் குறைதான் இன்று மாபெரும் குறையாக பல குடும்பங்களில் நிலவி வருகின்றது. இதனால் சம்பந்தப்பட்ட தம்பதிகளுக்கு மட்டும் அல்லாது அவர்களுடைய பெற்றோர்களுக்கும் பெருத்த மனக் குறையாக எப்போதும் ஆயுள் முழுவதும் இருந்து அவர்களை மிகவும் வருத்துகின்றது. முற்பிறவிகளில் குழந்தைகளைச் சரிவரப் பராமரிக்காமையாலும், கருக்கலைப்புச் செய்தமையாலும், பிறருடைய குழந்தைகளை வதைத்தமையாலும், சரியாக ஊதியம் கொடுக்காது வேலைக்காரர்களை அவமதித்து வருத்தியமையாலும் இவ்விதமான பலவித கர்ம வினைகளினால் தான் குழந்தை பாக்கியம் இல்லாமல் போய் விடுகின்றது. குழந்தை பிறத்தல் என்பது பெரும் ஐஸ்வர்யமே!

ஸ்ரீமுருகப் பெருமான் கோடியக்கரை

இறைவனிடம் குழந்தை பாக்கியம் வேண்டி மனமுருகப் பிரார்த்தனை செய்வதிலும் தவறு கிடையாது. எத்தனையோ பிராயச்சித்தங்களைச் செய்தும், நாடிப் பரிகாரங்களை முடித்து விட்டும், இராமேஸ்வரம், திருக்கருகாவூர் போன்ற தலங்களில் எல்லாம் பிள்ளைப் பேற்றிற்கான வழிபாடுகளைச் செய்து விட்டோமே, இன்னமும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லையே என்று தம்பதிகள் நினைத்திடலாம். இவர்கள் செய்த பிரார்த்தனைகளும், வழிபாடுகளும் ஒரு போதும் வீணாகாது!  எத்தகைய கர்மவினைகளினால் குழந்தை பாக்கியம் தடைபட்டு இருக்கின்றதோ அவையெல்லாம் இத்தலங்களில் ஒன்றன் பின் ஒன்றாக நிவர்த்தி செய்யப்பட்டு வரும்.

வேதாரண்யத்தின் அருகில் உள்ள கோடிக்கரை - கோடி(ய)க்காடில் ஸ்ரீமைத்தடங்கண்ணி (அஞ்சனாட்சி) அம்பிகை சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் மிகவும் அபூர்வமான அமிர்தத் தீர்த்த கிணறு உள்ளது. இத்தீர்த்தத்தை பிரசாதமாகப் பெற்று வெள்ளியில் காசிச் செம்பு போல் வெண்கலச் செம்பில் இத்தீர்த்தத்தை நிரப்பிக் கொள்க! இங்கு அமிர்த கலசத்தைத் தாங்கியவாறாக அருள்பாலிக்கின்ற ஸ்ரீமுருகப் பெருமானை செவ்வாய்-கிருத்திகை, செவ்வாய்-விசாகம், செவ்வாய்-பௌர்ணமி கூடுகின்ற நாட்களிலும், ஏனைய தினங்களில் செவ்வாய் ஹோரையிலும் குறிப்பாக செவ்வாய்க் கிழமையில் செவ்வாய் ஹோரையிலும் தீர்த்தச் செம்புடன் வலம் வந்து தரிசித்துப் பிள்ளைப்பேற்றுக் காய் எனப்படும் முழு முந்திரிப் பழங்களை ஏழைகளுக்குத் தானமாக அளித்தலும், முழு முந்திரிப் பருப்பை வெண்ணிறப் பால் பாயசத்தில் இட்டு தானமாக அளித்து வருதலும் இறையருளால் நல்வழியைக் காட்டிடும்.

ஷஷ்டியும் அமாவாசையும் கூடும் நாளிலும் அமாவாசையில் அமிர்த யோகம் அல்லது சித்த யோகம் கூடுகின்ற சூரிய ஹோரை நேரத்திலும் கோடிக்கரை கடற்கரை தீர்த்தத்தில் நீராடிப் பசுவிற்கு அகத்திக் கீரையும், ஏழைகளுக்கு வேத சக்திகள் நிறைந்த மந்தாரை இலையில் அன்னதானமும் இட்டு வர அகத்தில் கருப்பையை நிறைக்கும். சஷ்டியில் சூரிய ஹோரையில் நீராடி மேற்கண்ட வழிபாட்டை செய்து வந்தால் குழந்தை நல்பாக்கியத்திற்கான தக்கத் தீர்வைப் பெறுவர். சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது அகப்பை எனப்படும் கருப்பை நிறைவைக் குறிப்பதாகும். பெண் குழந்தைகளைப் பெற்று ஆண் வாரிசு இல்லையே என்று ஏங்குபவர்களும் கோடிக் கரையில் தக்க வழிபாட்டை கடைபிடித்து வந்தால் இறையருளால் நல்வழி காட்டப் பெறுவர்.

குழந்தைகள் நன்கு படித்திட......

பல குடும்பங்களிலும் தங்கள் பிள்ளைகள் மக்காகவும், அடிமண்டாகவும் இருக்கின்றார்களே என்று புலம்புகின்ற பெற்றோர்கள் நிறைய உண்டு. எனவே 80, 90 என்று மார்க்குகள் வாங்காவிட்டாலும், 60 மார்க்குகளாவது வாங்கி மானத்தை காக்க வேண்டுமே என்று தினமும் அஞ்சியே வாழ்கின்ற பெற்றோர்கள் தாம் நிறைய இருக்கின்றார்கள். வருடக் கணக்கிலா ஆயுள் முழுவதும் இந்த அச்சத்தைச் சுமந்து வாழ்வது? இவ்வாறு தன் குழந்தையின் கல்வியைப் பற்றிய கவலையே எப்போதும் மனதைச் சூழ்ந்திருப்பதால் என்று தான் மனதாற இறை பூஜைகளைச் செய்வது? இறைவன் தன் பிள்ளைகளைப் பற்றிய கவலைகளை தணித்தால் தானே தாம் மனமாற இறை பூஜைகளை மேற்கொள்ள முடியும் என்று கூட இவர்கள் எண்ணுவது உண்டு. குழந்தைகளுக்குக் கல்வி அறிவு வேண்டும் என்பதை விட நல்ல இறை ஞானத்தை கொடு என்று வேண்டுவது தான் சிறப்புடையதாம். நிரந்தரமான ஆனந்தத்தை இந்த ஞானத்தை தரக் கூடியவளே ஸ்ரீஞானாம்பிகை ஆவாள். ஸ்ரீஞானாம்பிகையை வணங்கியே கலைமகளாம் ஸ்ரீசரஸ்வதி தேவியே தம்முடைய நித்திய பூஜைகளைத் தொடங்குகின்றாள்.

கும்பகோணம்-ஆடுதுறை அருகே கதிராமங்கலத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கின்ற ஸ்ரீஞானாம்பிகை தேவியே குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும், சிறுமியர்களுக்கும் நல்ல ஞானத்தைத் தருபவள் ஆவாள். ஸ்ரீசரஸ்வதி தேவிக்கு உரித்தான நவமித் திதியில் இங்கு ஸ்ரீஞானாம்பிகைக்கு தாமே அரைத்த சந்தனக் காப்பு இட்டு வேத ஞானத்தை உணர்விக்கின்ற முழு முந்திரி பருப்பினை சந்தனக் காப்பினில் பதித்து ஞான சக்திகள் நிறைந்த வெண்டைக்காய், பாதாம் பருப்பு, சிறு திராட்சை போன்றவை கலந்த, கலைவாணிக்கு மிகவும் ப்ரீதியான வெண் பொங்கலை ஏழைக் குழந்தைகளுக்கு தானமாக அளித்து வந்தால் குழந்தைகள் மக்காக இருக்கின்றார்களே என்ற மனக்கவலைகள் தீர்வதற்கான அருட்பொழிவை ஸ்ரீஞானாம்பிகையே மனமுவந்து தந்திடுவாள்.

ஸ்ரீஅரசம்பலவாணர் பேரூர் கோயம்புத்தூர்

ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு........!

ரேவதி என்ற பெயரை உடையவர்கள், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைவருமே தம் வாழ்நாளில் தரிசிக்க வேண்டிய முக்கியமான திருத்தலம் முசிறிக்கு அருகே உள்ள காரிக்குடி என்ற காருகுடி ஸ்ரீகருணாகரவல்லி சமேத கைலாயநாதர் ஆலயமாகும். ஸ்ரீசந்திர பகவான் 27 நட்சத்திர தேவிகளையும் மணந்த போது இறுதியில் ரேவதிக்குத் திருமாங்கல்யம் சூட்டி ஸ்ரீகைலாசப் பெருமானை தரிசிக்க விழைந்த போது அம்பிகையே கருணை பூண்டு கருணாகரவல்லியாய் இத்தலத்திற்கு சந்திரபகவானை தம்பதிகள் சகிதம் அழைத்து சந்திரனோடு 27 பத்தினியரையும் ஒரு சேர மூன்றாம் பிறைச் சந்திரனைச் சூடிய கைலாச பெருமானைச் சந்திர ஹோரை நேரத்திலேயே வணங்குவதற்குக் கருணை புரிந்த திருத்தலமாகும். எனவே ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தோரும், ரேவதி என்ற பெயர் உடையோரும் தம் வாழ்நாளில் ஒரு முறையேனும் காரிக்குடி சிவாலயத்தை தரிசனம் செய்து எப்பொருளாயினும் (27 மாங்கல்ய சரடு, 27 உணவுப் பொட்டலங்கள், 27 ரவிக்கைத் துணிகள்) 27 எண்ணில் ஸ்ரீகைலாச பெருமானிடம் சமர்ப்பித்து ஸ்ரீகருணாகரவல்லியின் திருச்சன்னதியில் ஸ்ரீஅகஸ்தியருடைய 27 நட்சத்திரங்களுக்கான ஸ்ரீநட்சத்திர வாக்கிய சகாயத் திரட்டினை ஓதி ஏழைகளுக்கு மனதாரத் தானமாக அளித்து வர சுமங்கலித்துவம் பெருகும். பொதுவாக ரேவதி நட்சத்திரக்காரர்களுக்குத் தம் பெண் குழந்தைகளைப் பற்றி கவலை மிகவும் அதிகமாக இருக்குமாதலால் அவர்கள் தம் குடும்பத்தாருடன் அவ்வப்போது காரிக்குடி ஸ்ரீகருணாகரவல்லி ஸமேத ஸ்ரீகைலாசநாதரைத் தரிசித்து வந்திடில் வாழ்வில் சாந்தம் பெருகிடும். ரேவதி நட்சத்திரம் உருவான மிகவும் அபூர்வமான தலமிது!

உத்திரங்குடியில் அதிமதுர சங்கர பீஜாட்சரம்!

ஒவ்வொரு நட்சத்திரத்தின் ஒவ்வொரு பாதத்தில் பிறந்தவரும் வழிபட வேண்டிய தனித் தனித் தலங்களும் உண்டு. எனவே அந்தந்த நட்சத்திரத்தார் அவரவருக்கு உரித்தான ஆலயத்திற்கு அடிக்கடி சென்று தரிசித்து வருவது சிறப்புடையதாகும். இத்தகைய தெய்வீக நட்சத்திர ரகசியங்களை எல்லாம் தக்க சற்குரு மூலமாக அறிவீர்களாக!  சங்கர நாராயணன், சங்கர சுப்பிரமணியன், சங்கர், சங்கவி, கோமதி சங்கர் என்று சங்கர நாமத்தை உடையவர்கள் தம் வாழ்நாளில் அடிக்கடி வழிபட வேண்டிய விசேஷமான ஆலயங்கள் சில உண்டு. இவ்வாறு சங்கர நாமத்தை உடையவர்கள் மயிலாடுதுறை-செம்பனார் கோயில் அருகே உத்திரங்குடி சங்கரன் பந்தல் என்ற சிவத்தலத்தில் அருள்பாலிக்கின்ற ஸ்ரீசங்கரநாதரைத் தரிசித்து வருதல் வேண்டும். தம்பதியினரில் ஒருவருக்கு சங்கர நாமத்தை ஒட்டிய எந்தப் பெயர் இருப்பினும் தம்பதி, குழந்தைகள் சகிதம் உத்திரங்குடி ஆலயத்திற்குச் சென்று மாத பிறந்த நட்சத்திரத்தன்று அபிஷேக ஆராதனைகளைச் செய்து வருதல் வேண்டும்.

சங்கர பீஜாட்சரம் நிறைந்த தலம். சங்கர நாமத்தை உடையவர்கள் இங்கு மாதந்தோறும் தம்முடைய பிறந்த நட்சத்திர நாளன்று சங்காபிஷேகம் செய்து வழிபடுவதோடு பாலில் முந்திரி, பாதாம்பருப்பு, குங்குமப்பூ இட்டு மசாலாப்பால் போன்று நல்ல சத்துள்ள பருப்பு வகைகளைச் சேர்த்து தானமளித்து வந்தால் சங்கர பீஜாட்சர சக்திகளைப் பெற்று நல்ல சந்ததிகளைப் பெற்றிட சங்கர நாம ஜபம் பெருந் துணைப் புரியும்!

நட்சத்திரப் பெயர் சூட்டல்

பிறந்த குழந்தைக்குப் பெயர் வைப்பதில் அந்தந்த நட்சத்திரத்திற்கு உரித்தான பீஜாட்சர எழுத்துக்களுடன் மிகவும் சக்தி வாய்ந்த அட்சரங்களைக் கொண்டு நம் பெரியோர்கள் பெயர் சூட்டி வந்தனர். தற்காலத்தில் நவீனம் என்ற பெயரில் ஏதேதோ பெயரைச் சூட்டுகின்றார்கள். சற்றும் சம்பந்தம் இல்லாத வகையில் குறுகிய பெயர்களைக் கொண்டு குழந்தைக்குப் பெயரிட்டு அதனுடைய ஆயுள் கால சக்திக்கே பங்கத்தை விளைவித்து விடுகின்றார்கள். புதுப் பெயர்களாய் இருந்தாலும் அந்தந்த குழந்தைக்கு உரித்தான நட்சத்திர அட்சர நான்கு பாத எழுத்துகளில் துவங்குவதே சிறப்புடையதாகும். உதாரணமாக அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முதல் பாதமானால் "சு" என்ற் எழுத்து, இரண்டாம் பாதம் "சே" என்ற எழுத்து, மூன்றாம் பாதம் "சோ" என்ற எழுத்து, நான்காம் பாதம் "ல" எழுத்தில் அட்சரத்தில் துவங்குமாறு பெயர் வைக்க வேண்டும்.

இருப்பத்தேழு நட்சத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் நான்கு பாதங்கள் உண்டு. இந்த 108 நட்சத்திர பாதங்களைத் தான் 12 ராசிகளிலும் ஒரு ராசிக்கு 9 நட்சத்திரக் கால்களாகப் பிரித்திருக்கிறார்கள். எனவே பெரியோர்களின் அறிவுரையைக் கொண்டு எந்த நட்சத்திரத்தில் குழந்தைப் பிறந்திருக்கின்றதோ அந்த நட்சத்திர அட்சரத்தில் பெயர் சூட்டுவது தான் சிறப்புடையதாகும். ஏனென்றால் ஆயுள் முழுவதும் ஒரு மனிதனுடன் ஒட்டி வருவது அவன் பிறந்த நட்சத்திரம், பிறந்த தேதி, பெயர் ஆகும். அதுவும் நவீன விஞ்ஞானமய உலகத்தில் எங்கு சென்றாலும் பெயர் என்ன, பிறந்த தேதி என்ன என்று தான் முதலில் எழுதச் சொல்கின்றார்கள். எனவே ஒரு மனிதனுடைய ஆயுளுடன் ஒட்டி வருகின்ற, ஏன் ஆயுளுக்குப் பிறகும் பல பத்திரங்களிலும் பெயர் தானே வருவதால் அவரவர் நட்சத்திர அட்சர பீஜாட்சரங்களுடன் பெயர் வைப்பது தான் சிறப்புடையதாகும். இப்போதே கூட மாற்றிக் கொள்ளலாம்!  குழந்தைக்கு நட்சத்திர அட்சரப்படி பெயர் வைப்பவர்களும் ஏனையோரும் கும்பகோணம் அருகே இன்னம்பூர்த் திருத்தலத்தில் மிகவும் அகண்ட மூலத்தானம் எதிரே முறத்தில் முழு நெல் மணிகளை இட்டு மூலவர் முன் நாமத்தை நெல்லில் எழுதுதல் விசேஷமானதாம்!  ஸ்ரீஅகஸ்தியர் ஸ்ரீஆதிசிவனிடம் அருந்தமிழ் கற்றத் தலம்.

தனக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான பங்கு, புகழ், பதவி, விருது, பரிசு, பதவி உயர்வு, பட்டம் போன்றவை முறையாகக் கிட்டவில்லையே என்று ஏங்குபவர்கள் கும்பகோணம் - அய்யம்பேட்டை அருகே உள்ள சூலமங்கலத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீகீர்த்திவாகீஸ்வரருக்குப் பிரதோஷ பூஜை நடத்தித் தமிழ் மற்றும் தேவ மொழி வேத பாராயணங்களுடன் நல்வாத்ய இன்னிசைகளைப் பலரும் கேட்கும் வண்ணம் நிகழ்த்தி வந்திடில் தத்தம் குறைகள் தார்மீக ரீதியாக தீர்க்கப் பெற்று உரியதை அடைவர்.

சனி ஹோரை நேரத்தில் ஆலயத்திலோ, இல்லத்திலோ ஸ்ரீசரபேஸ்வர மூர்த்திக்கு முழு வெற்றிலைகளால் 108 முறை அர்ச்சித்துக் குறைந்தது 12 சுமங்கலிகளுக்குப் பாக்கு, சுண்ணாம்பு, மஞ்சள், கனிகளுடன் நல்வரத் தாம்பூலமாக அளித்திட்டால் நெருங்கிய உறவுப் பகைமையால் பெரிதும் துன்பப்படுவோர் நல்ல நிவர்த்தியைப் பெறுவர்.

பௌர்ணமி நாள்: 28.1.2002 திங்கள் கிழமை காலை 7.26 மணி முதல் 29.1.2002 செவ்வாய்க்கிழமை விடியற்காலை 4.20 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பௌர்ணமி திதி அமைகிறது.

கிரிவல நாள்: 28.1.2002 திங்கள் கிழமை.

நித்ய கர்ம நிவாரணம்

1.1.2002 இன்று கௌபீன (கோவணம்) தானம் - தோல் நோய்கள் வராமல் தடுப்பதற்குப் பெருங்கருணை புரியும்.

2.1.2002 இன்று ஸ்படிக விநாயகருக்குப் பாலபிஷேகம், தயிர் அபிஷேகம், தேன் அபிஷேகம் செய்து பருகி, மற்றவர்களுக்கும் அளித்து அன்னதானம் செய்திடில் நீண்ட நாளாகத் தடைபட்டிருந்த காரியங்கள் படிப்படியாய் விடிவு பெறும்.

3.1.2002 இன்று திவ்ய பிரபந்தப் பாராயணத்தை 8 பேருக்குக் குறையாமல் கொண்டு செய்து அவர்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் செய்திடில், எழுத்து சம்பந்தமான தொழில்களில் வரும் துன்பங்கள் விலகும்.

4.1.2002 இன்று மயில்களுக்கு உணவளித்து, தோகை விரித்த தரிசனம் தந்திடில் பணத்தால் வருகின்ற துன்பங்கள் விலகும்.

5.1.2002 மேல் ரவிக்கை இன்றிப் புடவை மட்டும் அணிகின்ற வழக்கம் உடைய 60 வயது கடந்த சுமங்கலிப் பெரியோர்கள் ஆறு பேருக்குப் பாத பூஜை செய்து வணங்கி அன்னதானம் மற்றும் புடவை தானம் அளித்திடில், நில புலன்களால் வருகின்ற துன்பங்கள் விலகும்.

6.1.2002 அஷ்ட பைரவர் ஊதுபத்தி தூபம் ஏற்றி பைரவ மூர்த்திகளுக்குத் தேனால் அபிஷேகம் செய்து, ஸ்ரீஸ்வர்ண பைரவரை பூஜித்திடுக! நாய்களுக்குப் பொறை பிஸ்கட் அளித்திடுக! இன்று ஸ்ரீபைரவ பூஜை மகா விசேஷத்தையும் அனுகிரகத்தையும் தரும்.

7.1.2002 மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை வளர்க்கும் காப்பகங்களில் தங்கள் குழந்தைகளைப் பேணுவோரும் ஏனையோரும் அந்தக் காப்பகங்களுக்குத் தங்களால் இயன்ற உதவியைச் செய்திடில், பேச்சு வார்த்தையின்றிப் பகைமையாக இருக்கும் குடும்பங்கள் சீரடையும்.

8.1.2002 ஸ்ரீமன் வேதாந்த தேசிகர் கருடனைப் பற்றி ஓதியுள்ள பாடல்களைப் பாடி, இன்று கருட மந்திரங்களை ஜபித்து, வாகனங்களைத் தானமாக அளித்திடில் வாழ்க்கையில் பெருத்த நல்மாற்றங்கள் வரும்.

9.1.2002 கடலூர் அருகே ஸ்ரீமுஷ்ணத்தில் இருக்கின்ற ஸ்ரீபூவராக ஸ்வாமிக்கு இன்று கிழங்குகளால் ஆன நைவேத்யம் படைத்து, ஏழைகளுக்குத் தானம் செய்திடில் நில சம்பந்தமான தொழிலுடையோர் ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் மட்டுமல்லாது பொது மக்களுக்கும் தங்கள் project களில் / இல்லங்களில் வருகின்ற தோஷங்கள் நிவர்த்தியாக வழியுண்டு.


ஸ்ரீநரசிம்மர் தேவர்மலை

10.1.2002 புல்லாங்குழல் வாசிக்கின்றவர்களும், புல்லாங்குழல் வாசிக்கின்ற (ஸ்ரீகிருஷ்ண பரப்ரம்ம) இறைவனை வழிபடுகின்றவர்களும் அனுஷ்டிக்க வேண்டிய அனுஷப் பிரதோஷ நாள் (அனுஷ நட்சத்திரமும், பிரதோஷ தினமும் சேர்ந்து வரும் சிறப்பான நாள்.) இன்று புல்லாங்குழல் தானம் செய்தலால் காற்று சம்பந்தமான நோய்களால் அவதியுறுவோர் நிவாரணம் பெற நல்வழிகள் பிறக்கும்.

11.1.2002 இன்று சாமந்திப் பூக்களால் திண்டு மாலை செய்து பெருமாள் கோயிலுக்கு அளித்திடில், திருமணத்தில் வருகின்ற தடைகளெல்லாம் விலகும்.

12.1.2002 கரூர் அருகே தேவர்மலை என்ற இடத்தில் இருக்கின்ற ஸ்ரீநரசிம்ம மூர்த்திக்குத் திருமஞ்சனமும், அன்னதானமும் மூல நட்சத்திரக்காரர்கள் முதற்கொண்டு மற்றவர்களும் செய்து இறைவனை வேண்டிடில், கடைகள், தொழிற்சாலைகள், வியாபாரத் தலங்கள் மூட வேண்டிய நிலைக்கான கடுமையான துன்பங்கள் வராமல் தடுக்கலாம்.

13.1.2002 இன்று காம தகனேஸ்வர பூஜையைச் செய்து, ஸ்ரீகாம தகனேஸ்வரர் கோயிலில் (திருவல்லிக்கேணி, திரைலோக்கி) அன்னதானம் செய்திடில் காதல் தோல்வியடைந்தவர்களும், நினைத்தவர்களை அடைய முடியாமல் மாற்றுத் துணையை அடைந்தவர்களும் மன அமைதியைப் பெறுவர்.

14.1.2002 இன்று ஏழைகளுக்குப் புது ஆடைகள், அன்னதானம், அணிகலன்கள், உணவுப் பொருட்களை மனதார நிறைய அளிப்பதால் நீண்ட நாள் தேங்கியிருந்த பணம் வந்து சேரும். தான, தர்ம தேவதைகள் பூமியில் வழிபடும் விசேஷமான நாள்!

திரைலோக்கி சிவாலயம்

15.1.2002 நெற்றிப் புருவம் சிரைத்தல் கூடவே கூடாது. இது பாபகரமான செயலாகும். இன்றிலிருந்தாவது தம் செயல்களுக்கு வருந்தி ஸ்ரீஉய்யவந்த அம்பாளை வேண்டி இனியேனும் புருவம் சிரைக்காமல் இருந்திடில் கணவனுக்கு வருகின்ற துன்பங்கள் விலகும்.

16.1.2002 இன்று ஓங்காரப் பிரணவ ஒலியை (ஓம் ஓம் ஓம்) நாள் முழுவதும் ஒலித்து அப்பிரணவ ஒலியில் நன்முறையில் ஆழ்நிலை தியானம் பூண்டிடில் வாழ்நாளை நன்முறையில் நடத்த அற்புதமான தெளிவான இறைவழி முறைகள் கிடைக்கும். காரைக்குடி-மதுரை இடையில் உள்ள திருப்பத்தூர் ஸ்ரீதளிநாதர் ஆலய ஓங்காரக் கொன்றைத் தல விருட்ச தரிசனம் மிகவும் விசேஷமானதாம்! அரிய மன அமைதியைத் தர வல்லதாம்!

17.1.2002 சுடுதண்ணீர் வைப்பதற்கு பாத்திரங்களை ஏழைகளுக்குத் தானமாக அளித்தலால் அரைகுறைத் தவறுகளால் ஏற்படுகின்ற பேராபத்துகள் விலகும்.

18.1.2002 இன்று 18 பெருமாள் கோயில்களில் ஸ்ரீபூரட்டாதி நட்சத்திர எண்ணெய் தீபம் ஏற்றி வணங்கிடில் நல்முறையில் செல்வம் பெருக நல்வழி காணலாம்!

19.1.2002 இன்று 18ம் படிக் கருப்பர் சந்நதியில் நிறைந்த அளவில் அன்னதானம். பொருட்கள் திருடு போகாமல் காக்கும். திருடு போன பொருட்களும் நியாயமான முறையில் மீளும்.

20.1.2002 வசதியற்றோருக்குக் காது குத்திக் கொள்ள இயன்ற அளவில் தங்கம் இன்று தானம். முக்கியமான தருணங்களில் தவறு செய்யாமல் காக்கும்.

21.1.2002 பல்செட் போட்டிருப்பவர்களுக்கு இன்று புதிதாக மாற்றுப் பல்செட் அளித்திடில் வக்கீல் தொழிலில் இருப்போர் நன்முறையில் முன்னுக்கு வருவர்.

22.1.2002 இன்று சூரிய ஒளிக் கதிர்களால் இயங்குகின்ற விளக்குகளை (ஸோலார் லேம்ப்) தானம் அளித்திடில் தொழிற்சாலைகள், தொழிற்கூடங்கள் வைத்து நடத்துகின்றவர்கள் நல்ல மாற்றத்தைப் பெறுவர்.

23.1.2002 பாடல் பெற்ற முருகத் தலங்களுக்கு பூவுயர் வெண் வலம்புரிச் சங்குகளை அபிஷேகத்திற்காக தானம் அளித்திடில், வியாபாரத்தில் பெருத்த மாற்றங்களை ஏற்படுத்தும்.

24.1.2002 இன்று புதினா, கொத்து மல்லி, கருவேப்பிலை கலந்த அன்னதானம் உடல் ஆரோக்கியத்தை வளர்க்கும், அடிக்கடி நோய்வாய்ப்படுதல் தணியும்!

25.1.2002 ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கண்டா மணி ஒலித்து, இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, மாலையில் அன்னதானம் செய்திடில், முடிவெடுக்க முடியாமல் பேதலித்து இருக்கின்ற மனதுக்கு ஆறுதலான முடிவு கிடைக்கும்.

26.1.2002 ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு வலம்புரிச் சங்குகளால் அபிஷேகம் செய்து, அன்னதானம் செய்திடில் கூட்டு வியாபாரத்தில் உள்ளவர்களிடம் பிரிவு ஏற்படாது.

27.1.2002 இரட்டை கணபதிக்குத் தூய வெண் வலம்புரிச் சங்கால் தேனை நிரப்பி அபிஷேகம் செய்து, தேனால் ஆக்கப்பட்ட உணவுப் பண்டங்களைப் படைத்து அன்னதானம் செய்திடில், புதிய தொழில் தொடங்குவோர் நல்நிலைகளை அடைவர்.

28.1.2002 இன்று ஒவ்வொருவர் இல்லத்திலும் வலம்புரிச் சங்குகளை வைத்து அதில் தீர்த்தம் இட்டு, வில்வமோ, துளசியோ, வன்னியோ சேர்த்து அந்தச் சங்கை பூஜித்து, அந்த நீரை அருந்துதலால் குடும்பத்தில் வருகின்ற நிழல் தோஷங்கள், குழப்பங்கள் இவையெல்லாம் தீர வழியுண்டு. வெண்ணிற உணவு அன்னதானம்.

29.1.2002 இன்று, அந்தந்தத் திதிக்குரித்தான எண்ணெய் வகைகளால் முருகனுக்கு விளக்கேற்றி வைத்து வழிபட்டு அன்னதானமும் செய்திடில் அக்கா-தங்கை, அண்ணன்-தம்பி இவர்கள் உறவு நன்முறையில் நீடிக்கும்.

30.1.2002 இன்று காரடையான் கரட்டை என்கின்ற, தர்மராஜனுடைய வாகனமாகிய எருமைகளுக்கு அகத்திக் கீரை கொடுத்து வலம் வந்து வணங்கிடில் வாழ்நாளில் நல்ல திருப்பம் ஏற்படும்.

31.1.2002 இன்று நவஜோதி விநாயகர் விளக்கேற்றி வழிபட்டு அன்னதானம் செய்திடில், நடைப் பயணத்தில் ஏற்படுகின்ற துன்பங்கள் விலகும்.

நற்பவி என ஓதுவோம் நோய் நிவாரணம் பெறுவோம் !

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam