அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

சூரிய சக்கரக் கோலம்

சூரியச் சக்கரக் கோலம் – பொங்கலைப் படைக்கும் முறை
தைப் பொங்கலின் படையல் பூஜை முறை ஆம்! பிரமாதி ஆண்டின் தைப்பொங்கல் நாளும் வந்து விட்டது. “பொங்கலோ பொங்கல்” என்று ஆனந்தமாகக் குழந்தை குட்டிகளோடு கூடி பொங்கலைக் கொண்டாடி மகிழுங்கள். ஏழைகளும் இதனைக் கொண்டாடிடும் வண்ணம் பானை, அரிசி, வெல்லம் போன்றவற்றை தானமாக அளித்திடுங்கள்! ஆமாம், சர்க்கரைப் பொங்கலோ, பால் பொங்கலோ, வெண் பொங்கலோ, அவரவர் குடும்ப வழக்கத்திற்கு ஏற்ப தக்க அடுப்புப் பூஜையுடன் நிறைவேற்றி பொங்கலை ஆண்டவனுக்குப் படைப்பது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா!
வெட்ட வெளியில் (மேல் மாடியில்) அல்லது வீட்டு முற்றத்தில், வயல் வெளியில் சூரியச் சக்கரத்தை மாக்கோலமாக இட்டிடுக! சூரியச் சக்கரக் கோலம் பற்றி அறியாதோர் தாம் அறிந்த மாக்கோலத்தை இட்டு அதன் கீழ் சூரியனைப் படமாக வரைந்து கொள்ளுங்கள். சூரிய பகவானுக்கு உரித்தான நிறம்தான் ஆரஞ்சு நிறமாகும். அறிந்தோர் அழகாக சூரியச் சக்கர கோலமிட்டு கோலத்தின் கிழக்குப் பகுதியிலே மற்றும் ஒரு சூரியனை மாக்கோலப் படமாக இட்டு அதன் மீது சூரிய கிரஹத்திற்கு உரித்தான ஆரஞ்சு நிறப் பருத்தித் துணியை விரித்திடுக! இதன் மேல் சூரிய பகவானுக்குரித்தான கோதுமை தானியத்தை (குறைந்தது ஒரு படி) பரப்பி இதன் மேல் வாழை இலை போட்டு சர்க்கரைப் பொங்கலையும், வெண் பொங்கலையும் வைத்து வெட்ட வெளியில் சூரிய பகவானுக்கு காட்டிப் படைத்திடுங்கள்!
தூப, தீபம் காட்டிப் பரவெளியிலே சூரிய பூஜையை நன்றாக நிகழ்த்திட வேண்டும். பிறகு கிழக்கு நோக்கி இருபத்து ஓர் முறை (21) சூரிய நமஸ்காரம் செய்து பொங்கலை சூரிய நாராயண மூர்த்திக்குப் படைத்திடுதல் வேண்டும். பிறகு பொங்கலை இல்லத்திலுள்ள பூஜை அறையில் குலதெய்வம், இஷ்ட தெய்வத்திற்கும் படைத்து விடுங்கள். இந்த இரண்டு நைவேத்யம் முடிந்த பிறகு காக்கை, பசுக்களுக்குப் பொங்கலை அளித்த பின்னர் நீங்கள் உணவாக ஏற்றிடலாம். இன்று சூரிய கிரஹத்திற்குப் ப்ரீதி தரக்கூடிய ஆரஞ்சு நிறத் துணியைச் சட்டையாகவோ, ரவிக்கையாகவோ தைத்து ஏழைக்கு வஸ்திர தானமாக அளித்திடுக அல்லது ஆரஞ்சு நிறப் புடவையுடன் சேர்த்து இத்துணியையும் வஸ்திர தானமாக ஏழைகட்கு அளித்திடலாம். கோதுமையையும் தானியமாகவே பசுவிற்கு அளித்திட வேண்டும்.
இதுதான் மிகவும் எளிமையான முறையில் பொங்கலை நைவேத்யம் செய்கின்ற நன்முறையாம். பொதுவாக ரஜஸ், தமஸ், சாத்வீகம் ஆகிய முன்று குணங்கள் சேர்ந்ததே மனிதனுடைய குணப் பாடமாகும். தமஸ் குணம் ஓரளவிற்குத் தகுந்த அளவில் இருந்தால் தான் மனிதன் மனிதனாக வாழ்வான். இல்லையெனில் புனிதமான பரதேசிக் கோலம் பூண்டு துறவியாகி விடுவான். தெய்வீகத்தில் மிளிரவும் இறைப் பணிகளை ஆற்றவும் சமுதாயத்தில் நல்மனிதனாக வாழவும் ரஜஸ், சாத்வீக குணங்கள் குறித்த அளவில் இருந்தாக வேண்டும். இதைக் காட்டுவதே வெண்பொங்கலும், சர்க்கரைப் பொங்கலும் ஆகும். இவை சூரிய, சந்திர சக்திகளைக் குறிப்பதாகும். இம்மூர்த்திகள் தாமே இரவிலும், பகலிலும் ஜீவ சக்தியை நமக்கு அளிப்பவர்கள்!

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமனின் பால பருவ குருகுலவாச அனுபூதிகள்!
கோவணாண்டிப் பெரியவர் என்று பலர் விளித்திட, தமக்கு நல்வழி காட்டும் “வாத்யார்” மட்டுமே என்று சிறுவன் (அறியாமையால்) கருதிட, தம் கஷ்டங்களை நீக்கும் “பெரியவர்” என எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் ஆழ்ந்த நம்பிக்கையுடன் அணுகிப் பயன் பெற்றிட “A unique siddha with bounteous divinity” என்று படித்தவர்கள் கருதிட.... பெரியவர் தான் எவ்வகையில் எல்லாம் அவரவர் விருப்பம் போல் தம்மைக் காட்டிக் கொண்டு ஒன்றுமே அறியாத “கோவணாண்டியாய்” பூலோகத்தில் உலா வந்தார்...

பொருள் ஆனந்தம்
இடையே புலன் ஆனந்தம் !

சிறுவனுக்கு இதையெல்லாம் எண்ணிப் பார்க்க, பார்க்க ஒரே ஆச்சரியமாக இருக்கும்! விமானம் அவ்வளவாக இல்லாததால் மெட்ராஸ் ஹார்பரில் கப்பல் பயணங்கள் நிறைந்த காலமது! அவ்வப்போது பெரியவர் ஹார்பருக்குள் நுழைந்து பல வெளிநாட்டவர்களுடன் பேசிக் குசலம் விசாரித்து அவரவர் மொழியிலே பிரெஞ்ச், ஜெர்மன், லதீன், ஸ்பானிஷ் .. என்று பெரியவர் வெளுத்துக் கட்டுவதைக் கண்டு சிறுவனே அசந்திருக்கின்றான்! ஸ்ரீசரஸ்வதியின் கடாட்சத்தை, ஸ்ரீஹயக்ரீவரின் பேரருளைப் பெற்றவரே “பெரியவர்” என்று சிறுவன் அப்போது உணர்ந்தானில்லை! ஆனால் அவரே மாபெரும் சித்புருஷர் என உய்த்து உணர்ந்தபோதோ அருட்புலனாய் ஊனக் கண்களுக்குத் தெரியாமல் சூட்சுமமாய் மறைந்து விளையாட ஆரம்பித்தார். சிறுவன் புலம்பி அழுததுதான் மிச்சம், பின்பு ஒரு வழியாகத் தன்னை தேற்றிக் கொண்டு அவர் சொல்லிக் கொடுத்த சித்த குருவேத சூக்த மாமந்திரங்களையும், இறைப்பணிகளையும் செவ்வனே இன்றளவும் குருசொல் மந்திரமாக ஆற்றி இன்று “குருமங்கள கந்தர்வாவாக” நம்மிடையே பரிமளிக்கின்றார்!
“ஏன் வாத்யாரே! இந்த மாதிரி நெறய பாஷை பேசற சித்து வித்தையை எனக்குக் கொஞ்சம் சொல்லிக் கொடேன்”, என்றே சிறுவன் சற்றே முந்திரிக் கொட்டையாய் முனகிட, பெரியரிவரின் முகத்தில் கோபாக்னி வீசியது! அவர் இவ்வாறு முகத்தில் சிவப்பு முட்டுமளவில் கோபப்பட்டதைச் சிறுவன் பார்த்ததே கிடையாது! சித்தி என்றாலே அவருக்கும் பத்திக் கொண்டு வரும் என்பது அவன் அறிந்ததுதானே!
“பாத்தியாடா கொஞ்சம் வருஷத்துக்கு குருகிட்ட இருந்த உடனேயே புத்தி எப்படி ............ (edited!) போகுது பாத்தியா? எதுக்குடா உனக்கு சித்தி! அப்படி சித்தி கெடைக்கறதுக்கு நீ என்ன நூறு வருஷம் சோறு, தண்ணி இல்லாம பெரிய தபஸ்ஸுல முழுகிட்டியா? ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை பரோட்டா திங்கலாமா, மசால் வடை முழுங்கலாமான்னு உன் புத்தி மழுங்கிப் போச்சு! உனக்கு எதுக்குடா சித்தி எல்லாம்? ஏதோ ஒரு மந்திரம் சொல்லிக் கொடுத்தப்போ எப்படா டெஸ்ட் பண்ணலாம்னு உன் புத்தி போயிடிச்சி! அத நான்தான் பார்த்தேனே! ஒண்ணு ஞாபகம் வச்சுக்கடா! எந்த சித்தியுமே giftஆ வந்தாக் கூட எதையுமே யூஸ் பண்ணக் கூடாதுடா! அங்க தாண்டா மாயை புகுந்து வெளையாடும்! நெறய டெஸ்ட் கொடுக்கும்! Seventh planeல இருக்கறவங்களே சித்தில மாட்டிக்கிட்டு சோதனை செய்து பார்த்துப் பொத்து பொத்துனு பூமில விழுந்து பொறவி எடுக்கறாங்கன்னா நீயும் நானும் எந்த மூலைக்குடா..!”
அதன் பிறகுதான் திருஅண்ணாமலை கிரிவலத்தில் சிவராஜ சிங்க தீர்த்தக் கரையில் “எந்த சித்தியையும் பயன்படுத்துவதில்லை” என்ற சத்தியப் பிரமாணம்தனைச் சிறுவனிடம் பெற்ற பிறகுதான் கோடானு கோடிச் சித்த குரு வேத சூக்த மாமந்திரங்களை பிரயோக சாகசங்களை குருவருளாகப் பெரியவர் அள்ளித் தந்தார். சித்தர்கள் சித்திகளில் ஒருக்காலும் ஈடுபடுவதில்லை! அவர்கள் சொல்லும், செயலும் சிவமயமே! அன்று பெரியவர் சிறுவனைக் கடுமையாகவே சாடி விட்டார்.. மேலும் severe punishment வேறு! என்ன தெரியுமா?
“மூணு நாளைக்கு என்ன நீ பார்க்கக் கூடாது, மூணு நாளைக்கு நீ தூங்கக் கூடாது, ரெண்டு நாளைக்கு உனக்கு மல ஜலம் வராது, போ, போ!”
அந்த மூன்று நாட்களிலுமே சிறுவன் வாழ்நாளின் பெருத்த வேதனைகளை அனுபவித்து விட்டான். அதுவும் சிறுநீர் கழிக்க முடியாமல் இரண்டு நாட்களிலிருப்பது என்றால்... ஈவு இரக்கமில்லாமல் பெரியவர் சிறுவனை தண்டித்து விட்டாரோ! இல்லையில்லை! தெய்வீகத்தில் கண்டிப்பும், கறாரும் Internal discipline–னும் அதிகமோ அதிகம்! ஸ்ரீராமருக்கோ, ஸ்ரீஅனுமாருக்கே எத்தனை சோதனைகள்! பட்டினத்தார் பட்ட துன்பங்கள் எத்தனை, எத்தனை!
சிறுவனைப் பரம்பொருட் சித்த நெறியிலே திளைக்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு கடுமையான தண்டனைகளை அளித்துச் சீராட்டி அரவணைத்து அருளமுது ஊட்டினார் பெரியவர். பெரிய பெரிய ஜட்ஜுகளும், வக்கீல்களும், டாக்டர்களும், வியாபாரிகளும், தொழிலதிபர்களும் பெரியவரைப் பார்க்க வரும் போது சிறுவனைப் பக்கத்திலேயே வைத்திருப்பார்...  நல்லவனோ, கெட்டவனோ நம்பகிட்ட வந்தாக்க நம்பளை நம்பின வரைக்குமாவது அவங்களோட கர்மவினையைக் கொஞ்சமாவது தீர்க்கறதுக்கு வழி சொல்லணும்டா! அதுக்காக பெரிய தப்பு பண்ணினா, நாம ஈஸியா பிராயசித்தம் சொல்ல முடியாதுடா, தெரிஞ்சாலும் சொல்லிடவும் முடியாது”, என்று கூறிப் பக்குவமாக வினை தீர்க்கும் வேத இலக்கணங்களைப் புகட்டுவார்.. அவையெல்லாம் சற்கரு தொட்டுக் காட்டிய சித்தோபநிஷத் பாடங்களன்றோ! துல்லியமாக, தெள்ளத் தெளிவாக சிறுவனுக்கு அவையாவும் உள்ளத்தில் நன்கு கூடிற்று!
அருட்பெருஞ் சித்தரே அருகிலிருந்தால் அருட்பெருஞ் ஜோதி தானாகக் கூடுமன்றோ! “சித்தர்கள் இல்லாத இடமே பிரபஞ்சத்திலேயே கெடயாதுடா, என்னமோ இந்தியால மட்டும்தான் சித்தர்கள் இருக்காங்கன்னுதான் நெறய பேர் தப்பா நெனைக்கறாங்கடா! ஒண்னைத் think பண்ணிப்பாரு! ஆஸ்திரேலியால ஒரு சின்ன ஆமை pray பண்ணினாலும் சரி அரிசோனால (Arizona) செவ்விந்தியர்கள் பக்தியோட கூப்பிட்டாலும் சரி அவங்கவங்க Culture-ல் அவங்கவங்க பாஷைல பேசி அவங்கவங்க dress pattern-ல போய் தரிசனம் கொடுத்து அனுகிரகம் பண்ணணும்னு அகஸ்தியருக்குமே கூட சிவலோகச் சட்டம் ஒண்ணு உண்டு, தெரிஞ்சுக்க!”
அப்போதெல்லாம் பெரியவர் சிறுவனை பிரதோஷ நேரத்தில் ஏதேனும் ஒரு கோயிலுக்கு அனுப்பி விடுவார்! எதற்கு? சிறுவனை உபந்யாசக் கலையிலும்  (தெய்வீக பேரூரை) பரிச்சயமாக்கிடத்தான்! அந்தச் சிறுவயதில், சிறுவன் பல கோயில் வளாகங்களில், சாலைகளில் நின்று, ஓங்கிக் குரல் கொடுத்து “பிரதோஷம்” பற்றியும் ஏனைய தெய்வீக விஷயங்களையும் நன்கு பிரச்சாரம் செய்வான். பெரியவரும் ஒரு ஓரத்தில் நின்று கொண்டு அவற்றைக் கேட்டு அவ்வப்போது திருத்தங்கள் செய்வார்... “சபாஷும்” கொட்டுவார் ரொம்ப rare ஆக! அத்தனை வருட குருகுலவாசத்தில் சிறுவன் நான்கைந்து “சபாஷ்” வாங்கியிருந்தாலே ஜாஸ்திதான், பெரிய விஷயம் தான்!
பல லோகங்களுக்கும் பெரியவர் Astral பயணமாக சென்று வந்ததைப் பற்றிச் சிறுவனிடம் விலாவாரியாக அவர் விளக்கும் போது சிறுவனுக்கு மிகவும் விந்தையாகவும், வியப்புக்குரியதாகவும் இருக்கும்., முதலில் நமக்காக ஏதோ சொல்கிறார் என்று எண்ணிய சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் பெரியவர் அனைத்துக் கோடி லோகங்களுக்கும் சென்று வரும் தெய்வீகத் திரு உடல் பூண்ட சித்த மஹா புருஷர் என்பதை உணர்ந்தான். ஒரு முறை சென்னை ஹார்பருக்குள் நுழைந்த பெரியவர் பலமணி நேரம் அங்கு வெளிநாட்டுக் குழுவுடன் அவர்கள் மொழியில் பேசி விட்டு வெளிவரும் போது கையில் பை நிறைய மதுபாட்டில்கள், சென்ட் வகையறாக்களுடன் வந்தார். சிறுவன் அவரை இமை கொட்டாமல் ஆச்சரியத்துடன் பார்த்தான்! இதெல்லாம் இவருக்கு எதற்கு!
கை நிறைய மூட்டைகளுடன் சிறுவனையும் தரதரவென்று இழுத்துக் கொண்டு வியாசர்பாடி தாண்டி பரந்த ஏரியாவிற்கு அழைத்து சென்றார் பெரியவர். பழைய துணிகளை எடுத்துத் திரட்டி அதில் எல்லா மதுபாட்டில்களையும் உடைத்துக் கொட்டி நெருப்பு வைத்து விட்டார்!
“ஏன் வாத்யாரே, இதுக்குப் போய் இவ்வளவு தூரம் .. நடந்து ..... பெரிய மூட்டையத் தூக்க முடியாமல் தூக்கி.. ஹார்பர்லதானே கெடச்சுது.. அத அப்படியே கடல்ல உடைச்சுக் கொட்டிட வேண்டியது தானே! இல்லாட்டி அங்கேயே கடல் மண்ணுல கொட்டறதுதானே!”
 “ஷ்..... ஷ்..... ரொம்ப பேசாதேடா.. மொதல்ல  என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்க... இந்த ஒயின் பாட்டில் யார் கொடுத்தா, நீ தான் பக்கத்துல இருந்து பார்த்த இல்ல... அந்த சுருட்ட முடி வெள்ளக்காரன் இருக்கானே... அவன் யாரு... உன் கண்களுக்கு அவன் குடிக்கற வெள்ளக்காரன்டா.... எங்க கண்ல.. அவன் யாரு? ... அவன் பூர்வ ஜென்மம் என்ன?.... ஏன் இப்படிப் பொறந்தான் எல்லாம் எங்களுக்குத் தெரியும்டா....”
“போன ஜன்மத்துல நம்ப நாட்டுல பொறந்து ... சினிமால இருந்து ரொம்ப சம்பாதிச்சாண்டா... ஆபாசமா வசனம் பேசி, ஆடி நடிச்சவன் .. ஆனா அப்பப்ப அண்ணாமலைய கிரிவலம் வந்தான்.. எதுக்கு? ஆபாசமாக நடிச்சு ஜங்களோட மனசக் கெடுத்த பாவம் போறதுக்கு! எப்படி சினிமால ஜனங்களை மயக்கினானோ அதுக்காக இப்ப கர்மவினையா பிரான்ஸுல பொறந்து ஒயின் இண்டஸ்ட்ரி வச்சு அவனே அதுல மயங்கி.... குடிச்சு குடிச்சு இப்ப அவன் குடும்பமே நாசமாப் போச்சு... தன்வினை தன்னைச் சுடும்!  ..  ஆனா பூர்வ ஜன்ம அண்ணாமலை கிரிவலம் புண்யத்துல ... இங்க வந்து. நம்பள சந்திச்சான்.. நான் விடுவேனா? அவனோட பழய ஜன்மக் கதையெல்லாம் சொல்லி உனக்குப் பிராயசித்தம் வேணும்னா மொதல்ல பிரான்ஸுல இருக்கற உன்னோட ஒயின் இண்டஸ்ட்ரிய இழுத்து  மூடி அதில கெடக்கற பணத்துல இந்தியா, ஆப்பிரிக்கா, எத்தியோப்பியா, துருக்கி மாதிரி ஏழை நாட்டுல தான, தர்மம் பண்ணு. இனிமே மது வகையறாவையே தொடமாட்டேன்ணு சத்தியம் பண்ணி வாங்கினேன்டா! இந்தா பாட்டில்ல அவனோட கர்மவெனையெல்லாம் புகுந்திருக்கு . அவனே எல்லாத்தையும் எங்கிட்ட ஒப்பச்சிட்டு இனிமே திருந்தி நல்ல மனுஷனா இருப்பேன்னு சத்யம் பண்ணிருக்காண்டா!” 
“இவ்வளவு மோசமான கர்மா இந்த பாட்டில்ல சேந்திருக்கே, இந்த பாட்டில ஒடைச்சு பூமில ஊத்தினா, பூமாதேவிக்கு எவ்வளவு வேதனையா இருக்கும்! கடல்ல ஊத்தினா கோடி கோடியா மீனு, தவளை, ஆமைக்கெல்லாம் போய்ச் சேரும்டா! இதுக்கெல்லாம் ஒரே வழி  அக்னி பகவான வேண்டிக்கிட்டு, பஞ்சபூத சக்திகளை வேண்டிக்கிட்டு, துணில ஊத்தி கொளுத்திட வேண்டியதுதான்! மொத்தமா கர்மம் பஸ்பமாயிடும்.. ஆனா அந்த தெய்வ ரகசியம் எல்லாம் எங்களுக்குத்தான்டா தெரியும்!”
“இப்ப தெரிஞ்ச்சுக்கடா எங்கேயோ பிரான்ஸுல இருக்கவறவனுக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு அவனோட நல்லதுக்காக எல்லாத்தையும் இழுத்துப் போட்டுகிட்டு நல்லது பண்றோம். அப்படீன்னா ஈ, எறும்புலேந்து குப்புசாமி, கந்தசாமி, நரேஷ் குப்தா, ஜகத் கிஷோர்லேந்து, டீமாண்ட், டூப்ளே வரைக்கும் யார் எங்க எந்த நாட்டுல இருந்தாலும் எங்கள நம்பிட்டா அவங்களுக்கெல்லாம் கர்ம பரிபாலனம் செய்யறதுதாண்டா சித்தர்களோட வேலை”.
சிறுவன் ஆச்சரியத்துடன் பெரியவரைப் பார்த்தான்.. ஒரு கோவணாண்டியாக ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு உலகையே ஆளும் வல்லமை பெற்றவரென்றால்... உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் முக்தி அளிக்க வல்லவரென்றால்..... அவரை குருவாகப் பெறத்தான் என்னே பாக்யம் செய்திருக்க வேண்டும்... சிறுவனுக்குக் கண்களில் நீர் பனித்தது!
“....ம்....ம்...ம்..ம் சரி நம்ப subject-க்கு வருவோம்.. பொதிய மலைக்கு நான் போய்ட்டு வந்ததை முடிக்கலையேடா.... நம்ப குரு அகஸ்தியருக்கே டிரஸ் கொடுக்கற பாக்யம் கெடச்சதுன்னா... அப்பப்பா.... கடவுள் என்ன பெருங்கருணை பண்ணி அந்த divine job –க்கு என்ன அனுப்பிச்சாரு...”
இப்போது பெரியவருக்குக் கண்கள் பனித்தன! பெரியவர் கண்களில் பொங்கிய நீர் அவர் பாதங்களை நனைத்து பூமியில் அமிர்தத் திட்டாக நின்றது. பூமாதேவியே பேரானந்தம் கொண்டு அந்த உலக மகாசித்புருஷருடைய அமிர்த ஆனந்தக் கண்ணீர்த் துளிகளைத் தம், திருக்கரங்களில் பொன் கலயத்தில் தாங்கினாளோ! அதுவே பூமியில் உறிஞ்சப்படாமல் அமிர்தத் திட்டாய்த் தங்கியதோ! சித்தன் போக்கு சிவன் போக்குத்தான்! ஆழ்ந்த நம்பிக்கை என்று ஒன்றை மட்டும் வைத்து விட்டால்... அப்பப்பா சித்தர்கள் எவ்வளவு வேகமாக ஓடோடி வந்து நம்மை அரவணைத்து கட்டிக் காத்து ஆட்கொள்கின்றார்கள்! அந்த நம்பிக்கைக்குத் தான் என்னே தெய்வீக வலிமை!

ஐயர்மலை மகிமை

தென்காசி மகாத்மியத் தொடர் – அய்யர்மலை ஸ்ரீரத்னகிரீஸ்வரர்
வெற்றிக்கு வடிவழகு தரும் தென்காசி தேவா போற்றி! போற்றி!

காசி என்றாலே வாரணாசித் திருத்தலம் தான் நினைவுக்கு வந்திடும். ஏழை எளியவர்களாலும், முதியோர்களாலும் காசித் திருத்தலத்தைத் தரிசித்து தம் வினைகளுக்கெல்லாம் தீர்வைக் காண்கின்ற பாக்கியம்தனைப் பெற முடியுமா? இதற்காகத்தான் சிவப்பரம்பொருளே ஸ்ரீஅகஸ்திய மாமுனியின் மூலமாய்ப் பல இறை லீலைகளின் மூலம் தென்காசித் திருத்தலத்தைத் தோற்றுவித்து, சித்தர்கள் அருள்கின்ற வழிமுறையாகத் தென்காசியின் பரிபூரண அருளைப் பெறும் பொருட்டு, 12 முக்கியமான சிவத்தல வழிபாட்டு முறைகளையும் பெற்றுள்ளோம். அத்தலங்களின் சிறப்பு அம்சங்களை எல்லாம் சித்தர்களின் குருபாரம்பரியத் திருவாய்மொழிகளாக இத்தொடரில் இவ்வரிசையில் அளித்து வருகின்றோம்.. ஆறாவதாக நாம் இங்கு காண்பது திருச்சி குளித்தலை அருகே உள்ள அய்யர்மலையில் அருள்பாலிக்கின்ற ஸ்ரீரத்னகிரீஸ்வரர் ஆலயம் ஆகும்.

இச்சிவத்தலங்களை எல்லாம் குருஅருளால் முறையாக தரிசித்து இறுதியில் பரிபூரண இறைதரிசனமாகத் தென்காசி ஸ்ரீகாசி விசுவநாதரைத் தரிப்போருக்குப் பரிபூரணமான காசி தரிசனப் பலன்கள் இறைத் திருவருளாகத் தாமே குவிந்திடும்! வெற்றிக்கு வடிவழகு ஊட்டுவதற்காகத் தென்காசி நாத தரிசனத்திற்கு அருட்திருவடிவம் கூட்டுவதுதான் ஆறாவது தலமான ஸ்ரீஅய்யர்மலையின் ரத்னகிரீஸ்வரரின் பேரருட் பிரவாகமாகும். எந்த ஒரு நற்காரியத்தையும் பொறுப்புடன் உணர்ந்து கடமையைச் செவ்வனே செய்து வெற்றியுடன் நிறைவேற்றுவதற்குத் தக்க மன உறுதியும் வேகமும் தேவை அல்லவா! தோல்விகள் கூடினும் அவற்றை வென்று இறையருளால் வெற்றியைச் சூடிடுவோம் என்ற மனோதைரியத்தையும் அளவற்ற ஆர்வமும் பெற வேண்டியிருப்பது வெற்றிக்கும், நற்காரிய சித்திக்கும் மிகவும் முக்கியமானதல்லவா!
பொறுப்பை உணர்தலுக்கு ஸ்ரீஅய்யர்மலைப் படிக்கட்டில் தீப வழிபாடும் கடமையைச் செவ்வனே ஆற்றுவதற்கு ஸ்ரீஅய்யர்மலைப் படிக்கட்டுகளில் பச்சை அரிசி மாவுக் கோலமிட்டு, தீபமிட்டு வழிபடுதலும் தளராத மன உறுதியைப் பெறுவதற்கு ஸ்ரீரத்னகிரீஸ்வரர் உட்பிரகாரத்தில் அடிப்பிரதட்சிணம் செய்தலும், காரியத்தில் உத்வேகமும் காலத்தின் மகிமையை உணர்ந்து வேகமாக நற்காரியங்களை ஆற்றுதற்கான மனப் பொறுமையை, திண்மையைப் பெறுதற்கு அய்யர்மலையில் தீபம் ஏற்றிக் கிரிவலம் வருதலும் மற்றும் ஆவன இறைத் திருப்பணிகளை ஆற்றுதலும் இன்றியமையாததாகும். இது மட்டுமா, என்னதான் ஆள்பலம், பண வசதி, பதவி, அதிகாரம் போன்ற எத்தகைய வசதிகள் இருந்தாலும் தோல்விகள் சூழும்போது மனோதைரியமும், வேகமும் கடமை உணர்வும் அடிபட்டு விடும். காரணம், “இத்தனை இருந்தாலும் எதையும் உருப்படியாகவே சாதிக்க முடியவில்லையே, தோல்வியைத் தானே தழுவுகின்றோம்”, என்ற தளர்ச்சியுற்ற எண்ணம் வந்து விட்டால் அதுவே எதிர்வினை எண்ணங்களாக (Negative Thinking & Negative forces) ஆக மாறி தேகத்தையே பாதித்து விடும்.
ஏனென்றால் எதிர்வினை எண்ணங்களானவை முதலில் மிகவும் சக்தி வாய்ந்தவை போல் தோன்றினாலும், இறுதியாக இறையருள் கூடிய முயற்சியே Positive force ஆக வென்றிடும். நற்காரியங்களைத் தடை செய்வதற்கான சோதனைகளாகவே அவை பூதாகரமாக உருவெடுத்து நிற்பதால், அனைவருமே அதனைக் கண்டு எதிர்நோக்கி, அஞ்சி, நற்காரியப் பாதையிலிருந்து விலக முற்படுவர். இது உலக இயல்புதான். எத்தனை துயரங்களும், துன்பங்களும் நம்முடைய நற்காரியப் பாதையிலே குறுக்கிட்டாலும் அவற்றை விடாமுயற்சியுடனும் ஊக்கத்துடனும் மனச் சோர்வின்றிச் சமாளிப்பதற்கான மனோ தைரியத்தையும், ஆர்வத்தையும் தந்து அருள்பவர்தான் ஸ்ரீரத்னகிரீஸ்வரர் ஆவார்.

இச்சிவத்தலங்களை எல்லாம் குருஅருளால் முறையாக தரிசித்து இறுதியில் பரிபூரண இறைதரிசனமாகத் தென்காசி ஸ்ரீகாசி விசுவநாதரைத் தரிப்போருக்கு இத்தகைய ஆதார மூலங்களை அடிப்படைத் தகுதிகளாகப் பெற்றால்தான் நாம் எந்த நற்காரியத்திலும் வெற்றி வாகை சூடி வாழ்க்கையைச் செவ்வனே முடித்து இறைவனுடைய திருவடிகளை அடைந்திட முடியும். இதற்கான அடிப்படைத் தெய்வீக சக்திகளை, ஆற்றல்களை எல்லாம் திரட்டும் பொருட்டுத்தான் இத்தொடரில் கண்டுள்ளபடி 12 சிவத்தலங்களின் மகிமையைப் பற்றி, அறிந்து உணர்ந்து, தெளிந்து, தக்க தரிசன முறைகளையும் கைக் கொள்ள வேண்டும். அய்யர்மலையில் வான சக்தி கன்னி தேவமூர்த்திகளின் தரிசனம் உண்டு. மலை உச்சியில் உள்ள தெய்வீக ரகசியங்கள் நிறைந்த குகைகளில் இன்றைக்கும் பஞ்சலிங்க சித்தர்கள் எனப்படும் ஐவகைச் சித்தர்கள் பலகோடி யுகங்களாக சூட்சும வடிவில் நீண்ட நெடுந்தவத்தில் திளைக்கின்றார்கள். மிகவும் அற்புதமான பஞ்ச தீர்த்தச் சுணை ஒன்று இங்கு உள்ளது. கால்படாமல் இத்தீர்த்தத்தை ஏந்தி, சிரசில் தெளித்துக் கொண்டு சிறிதளவே அருந்தி பெறுதற்கரிய சித்த சக்திகளைப் பெற்றிடுக!
இவ்வகையில் வெற்றிக்கான காரிய சித்திக் கதிர்கள் ஆக்கம் பெறும். இச்சிவாலயத்தில் இரட்டை லிங்க தரிசனம் மிகவும் சிறப்பானதாகும். தினந்தோறும் காவேரி நீரால் மட்டுமே அபிஷேகத்தைப் பெற்று அருள்பாலிக்கின்ற மூர்த்தி! அடித்தளம் எங்கு செல்கின்றது என்று எவரும் சொல்ல இயலாதபடி நீண்ட நெடும் லிங்கமூர்த்தியாக ஆதியும், அந்தமும் முடிவும் முதலுமில்லா மூர்த்தியான ஸ்ரீரத்னகிரீஸ்வரரை தரிசித்து மகிழுங்கள். ஸ்ரீஅய்யர்மலையை கிரிவலம் வந்து அனைத்துவிதமான பலாபலன்களையும் பெற்றிடுங்கள். பௌர்ணமியன்று கிரிவலம் வருதல் மிகவும் சிறப்புடையதாகும். ஏனென்றால் இம்மலையில் பெறுதற்கரிய மூலிகைகளும், தீர்த்தங்களும், யோகியர்கள், ஞானியர்களின் தரிசனங்களும் காணக் கிடைக்கின்றன. பாக்கியம் உள்ளோருக்கு, குருஅருள் உள்ளோருக்கு இவை அனைத்தும் நிச்சயமாகக் கிட்டும். வெற்றிக்கு வடிவழகு ஊட்டுகின்ற தென்காசி தரிசனத்திற்கான முக்கியப் படிகளுள் ஒன்றாக ஸ்ரீரத்னகிரீஸ்வரரின் பேரருளைப் பெற்றிடுவீர்களாக!

ஸ்ரீஐயப்ப விரதம்

ஸ்ரீஐயப்ப விரதம்
விரத பங்கங்கள்/குறைகள் விரதத்தின் பலன்களையே இழக்கச் செய்து விடும். கடந்த பல இதழ்களாக, ஸ்ரீஐயப்ப விரத முறையில், தற்காலத்தில் நிறைந்திருக்கின்ற குறைபாடுகளை எடுத்துரைத்து அவற்றை நிவர்த்தி செய்யும் முறைகளை மட்டுமல்லாது சித்புருஷர்கள் அருள்கின்ற வழியிலே, ஸ்ரீஐயப்ப விரதத்தைப் பரிபூர்ணமாக நிறைந்திடச் செய்து பரபிரம்மமான ஸ்ரீஐயப்ப மூர்த்தியின் திருஅருளைப் பரிபூர்ணமாகப் பெறுகின்ற அறவழிகளையும் நாம் எடுத்துரைத்து வருகின்றோம் அல்லவா! தற்காலத்தில் அலுவலகத்திற்குச் செல்கின்றவர்களில் பெரும்பாலோர் ஸ்ரீஐயப்ப விரதத்தை மேற்கொண்டிருப்பதைக் கண்டு ஆனந்தம் அடைகின்றோம்.
ஏனென்றால் தெய்வீகம் என்றால் வயதான பின், ஓய்வு பெற்ற பின் நுழைய வேண்டிய துறை என்று பெரும்பாலோர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இல்லறத்தோடு இணைந்த தெய்வீகப் பணிகள் தாம் ஒருவருக்கு மனித வாழ்க்கையில் அறிந்தும் அறியாமலும் ஏற்படுகின்ற கால இழப்பையும் ஈடு செய்து, பூஜா சக்திகளையும் பெற்றுத் தரும் “இரையோடு இறையும் தேடு” என்ற முதுமொழியையும் இது நிரூபிக்கின்றதல்லவா! ஆனால், ஸ்ரீஐயப்ப விரதம் என்ற ஒன்றை மேற்கொண்டு விட்டு அலுவலக நேரங்களில் மட்டும் பேண்ட், சட்டை, செருப்பும் அணிந்து கொண்டு ஏனைய நேரங்களில் நீலம், கருப்பு நிற வேஷ்டியை, சட்டையை அணிந்து கொண்டால் இது தர்மம் தானா, விரதத்திற்கு முரண்பாடாகாதா என்பது உங்களையே நீங்கள் கேட்டுக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயமாகும்.
“எல்லாவற்றையும் ஸ்ரீஐயப்பன் பொறுத்துக் கொள்வார். நம்முடைய காலவார்த்தமான சூழ்நிலைகளுக்கான கட்டாயத்தில் தானே நாம் இவ்வாறு உடை மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்கின்றோம். உதட்டளவிலின்றி உண்மையாகவே நாம் ஸ்ரீஐயப்பனைப் பரிபூர்ணமாக நம்புகின்றோமே, வியாபார, அலுவலக நிர்பந்தத்தால் தானே இந்த உடைமாற்றம்! மற்ற விஷயங்களில் விரதத்தை மிகவும் கடுமையாக தானே கடைபிடிக்கின்றோம்”,– என்று எண்ணி உடைமாற்றத்தைப் பற்றி பலரும் தங்களைத் தானே சமாதானம் செய்து கொள்கின்றனர். இது எப்படி உண்மையான விரதமாகும்? அவரவருடைய வாழ்க்கை நிலைகளுக்குத் தகுந்தாற் போல் விரத நியதிகளை வளைத்துக் கடைபிடிக்கத் தொடங்கினால் பிறகு ஸ்ரீஐயப்ப விரத முறைக்கே பங்கம் வந்துவிடுமல்லவா! ஏனிந்த விபரீதமான முரண்பாடுகள்!
விரத நெறிமுறைகளை வளைக்காதீர்கள்!
எனவே எவராக இருந்தாலும், எத்தகைய Executive அல்லது Uniform அணிய வேண்டிய அலுவலகங்களில், தொழிற்சாலைகளில் பணிபுரிந்தாலும் சரி, ஸ்ரீஐயப்ப விரதம் என்றால் அதற்குரிய நீலநிற அல்லது கருப்பு நிற வேஷ்டி, சட்டை மட்டுமே விரத கால ஆடையாக எப்போதும் அணிந்து கொள்ள வேண்டுமே தவிர, செருப்பில்லாமல் தானே பேண்ட், சட்டை அணிந்து கொண்டேன் என்று அவரவர் இஷ்டப்படி உடைமாற்ற விரத நெறிகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. இவையனைத்தும் கடுமையான விரத பங்கங்களாகும். பலவிதமான சாபங்களுக்கு வழி கோலும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
ஏனென்றால் உங்களைப் பார்த்துப் பலரும் இவ்வாறு செய்ய ஆரம்பித்தால் நீங்கள் தானே இந்த அதர்மத்திற்கு மூல காரணம் ஆகின்றீர்கள்! காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அலுவலகத்தில் பேண்ட், சட்டை போட்டுக் கொண்டு ஏனைய நேரங்களில் நான் ஐயப்ப வேஷ்டியில் தான் பூஜை செய்கின்றேன் என்று சொல்லி உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டு பலருடைய விரத பங்கத்திற்கு நீங்களே மூலமாக ஆகி விடாதீர்கள். “ஏனென்றால் நல்ல மனிதரான இவரே ஸ்ரீஐயப்ப விரதத்தை இவ்வாறு உடை மாற்றத்துடன் தான் கடைபிடிக்கின்றார் என்றால் நாம் ஏன் இவ்வாறு செய்யக் கூடாது”, என்று ஆயிரக் கணக்கானோர் உங்களைப் பார்த்துச் செய்ய ஆரம்பித்தார்களேயானால் அந்த விரத பங்கத்திற்கான பாவம் யாவும் உங்களைத் தானே வந்து சேரும்.
வெறும் நல்லவராக வாழ்வதால் மட்டும் எந்த தெய்வீகத் தவறுகளையும் நியாயப்படுத்த முடியாது!  ஸ்ரீஐயப்ப விரதத்தில் மாலை, பூஜை மற்றும் உடை அம்சங்கள் மிகவும் இன்றியமையாதவையாகும். ஏனென்றால் நம் குடும்பத்தினரை விட நம்மோடு 24 மணி நேரமும், எப்போதும் இருப்பது நமது ஆடைகளும், ஆபரணங்களும் ஆகும்.. எனவே இவை இரண்டும் எப்போதும் புனிதமானதாகத்தான் விளங்க வேண்டும். அப்பொழுதுதான் உடலும், உள்ளமும் சுத்தமாகும்.

சுவாசத் துழாயில் சுழலை மாற்றும் குழாய் உடை (Pant)

தற்காலத்தில் அலுவலகத்தில் ஆங்கில முறையிலான பேண்ட் அணியும் முறையும் நிரந்தர நடைமுறைக்கே வந்து விட்டது. பேண்ட் அணியும் போது ஒருவருடைய மூச்சு சுவாசமானது தன் இஷ்டத்திற்குச் சுழித்து, வளைந்து செல்லத் தொடங்குகின்றது. அதாவது சுவாசத்தின் மேல் நமக்கு உள்ள பிடிப்பு போய் சுவாசத்தின்பால் அது செல்லும் இடமெல்லாம் நம் எண்ணங்களைச் செலுத்தி பலவிதமான எண்ண அலைகளின்பால் மாட்டிக் கொள்கின்றோம். எனவே பேண்ட் அணிந்து கொண்டால் எந்த யோகாசனமும், தியானமும், விரதமும் சரியான முறையில் பலன் அளிக்காது. சுவாசம் மாறினால் எண்ணங்கள் பேதலிக்கும்.
விரதத்தின் போது கண்டிப்பாக கருப்பு நிற இடுப்புக் கயிறு (அரைஞாண் கயிறு) அணிந்திருத்தல் வேண்டும். ஏனென்றால் விரத உணவுக் கட்டுப்பாட்டினால் உடலில் சக்தி சற்று குறையும். இதனால் மனமும் பலவீனமாகும். பூஜா சக்திகளே இவற்றை நிறைவு செய்யும். ஆனால் இக்காலத்தில் பலரும் முறையாக ஸ்ரீஐயப்பப் பூஜைகளைச் செய்வது கிடையாது.. இதனால் தீய சக்திகள் எளிதில் உட்புகுந்து விடும். விரத காலங்களில் தீய சக்திகளோ, பில்லி, சூன்ய சக்திகளோ நம்மை அணுகா வண்ணம் காத்துக் கொள்வதற்காகவே இந்தக் கருப்பு நிற இடுப்புக் கயிறுதான் திருஷ்டி தோஷ் நிவாரணியாகப் பெரிதும் உதவுகிறது.
ஸ்ரீஐயப்ப விரத யாத்திரையின் போது பல பாழடைந்த வீடுகளையும், மயானங்களையும் பல வகையான ஆவிகள் உலாவும் இடங்களையும் கடந்து செல்ல வேண்டியிருக்கும்.. இவற்றில் குடி கொண்டுள்ள தீவினைச் சக்திகள் மனதையோ, உடலையோ தாக்க முயற்சிக்கும் போது இத்தகைய கருப்புக் கயிறு தான் நம்மைக் காப்பாற்றி விரத பங்கங்களிலிருந்து நம்மை இரட்சை போல் காக்கிறது. ஸ்ரீஐயப்பன் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இருப்பினும் மனித முயற்சியாக அனைத்துப் பாதுகாப்பையும் மேற்கொண்டாக வேண்டும். ஏனென்றால் விரத காலம் என்று சொல்கின்றோமே தவிர, அப்போதும் கூட மனக்கிளர்ச்சிக்கும், முறையற்ற காம உணர்வுகளும் எழக் கூடும்.
எனவே உடலளவில் சுத்தமாக இருந்தாலும், மனத்தளவில் எவ்வகையில் சுத்தமாக இருக்கின்றோம் என்பதை அவரவர் மனசாட்சியைத் தொட்டுக் கேட்டுக் கொள்ள வேண்டும். எனவே, இத்தகைய முறையற்ற எண்ணங்கள் எழாமல் இருப்பதற்காகத்தான் விரத உடைமுறை, பூஜை முறை, ஆலய வழிபாடும் முறை, பிரதட்சிண முறை என்ற பலவிதமான விரத நியதிகளை பெரியோர்கள் நமக்கு அளித்துள்ளார்கள்.
ஐயப்ப விரதத்திற்கான ஆடைமுறையில், பலவிதமான தெய்வீக ரகசியங்கள் பொதிந்துள்ளன. மனிதனின் மானத்தைக் காக்கின்ற பொருள் ஆடையெனில் அதில் எத்தகைய பஞ்சபூத சக்திகள் நிறைந்திருக்கும். பொதுவாக, கருப்பு, நீல நிறப் பருத்தி ஆடைகளை மட்டும் தான் ஐயப்ப விரதத்திற்குப் பயன்படுத்த வேண்டும். காவி ஆடையை இல்லறத்தார் பயன்படுத்தக் கூடாது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம். இதனைப் பலராலும் ஏற்க முடியாவிட்டாலும், காவியின் புனிதத்தைப் பேணவும், இல்லறத்தார்கள் காவி ஆடை அணிவதால் ஏற்படுகின்ற சாபங்களிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்காகவும் இதனை மீண்டும் மீண்டும் ஆயிரம் தடவை ஆனாலும் நாம் எப்போதும் வலியுறுத்துகின்ற நிலையில் இருக்கின்றோம். ஏதோ, மூன்று, நான்கு ஆண்டுகள் தொடர்ந்து ஐயப்ப விரதத்தை மேற்கொண்டுவிட்டால் குருவாக மாறி காவி ஆடையை அணியத் தகுந்த குருமார்களாக ஆகிவிடுகின்றோம் என்ற அகங்கார எண்ணம் பலருக்கும் மனதில் தற்போது ஊறிவிட்டது.
இது ஓர் EGO பிரச்னையாகவும், அகங்கார, ஆணவ வெளிப்பாடாகவும் மாறி விட்டது. புனிதமான துறவிகள் மட்டுமே காவி ஆடையை அணிய வேண்டும். 18 ஆண்டுகள் மலைக்குச் சென்று வந்தவர்கள் கூட அவர்கள் இல்லறத்திலிருப்பின் காவி உடையைக் கண்டிப்பாக அணிதல் கூடாது. அவர்களும் கறுப்பு அல்லது நீல நிற ஆடைகளையே விரதத்தின் போது அணிய வேண்டும். இதில் எந்தவித விதிவிலக்கும் கிடையாது. பொதுவாக நீல நிற, கருப்பு நிறப் பருத்தி ஆடைகளைத்தான் விரதத்திற்குப் பயன்படுத்த வேண்டும் அல்லவா! இவ்விரண்டு நிறங்களுக்கும் தீய எண்ணங்களையும், தீய சக்திகளையும் வடிகட்டி நல்ல எண்ணங்களை விருத்தி செய்கின்ற தன்மை நிறைய உண்டு.
அதிலும் ஐயப்ப விரதத்தின் போது மனக் கட்டுப்பாட்டுடன் திகழ வேண்டுமாதலால், இந்த இரண்டு நிற ஆடைகளும் தான் தீய எண்ணங்களை வடிகட்டி உங்களுக்கு நல்ல மனதையும், உள்ளத்தையும் நிலை நிறுத்துவதாக இருக்கும். ஏனைய நிற ஆடைகளையோ, பேண்ட், சர்ட் அணிந்து கொண்டு சென்றாலோ, பழையபடிதான் பலவிதமான மன ஓட்டங்களுக்கு நீங்கள் ஆளாக வேண்டியாயிருக்கும். பொதுவாக நம் இல்லங்களில் சுபகாரியங்கள் மற்றும் பண்டிகைகளின் போதும் கருப்பு நிறத்தைத் தேர்ந்து எடுப்பதில்லை. உண்மையில் கருப்பு நிறமானது ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கும், ஸ்ரீஐயப்ப மூர்த்திக்கும் மிகவும் ப்ரீதியானதாகும்.
சனிக்கிழமையன்று நாம் அணிய வேண்டியதே கருப்பு / நீல நிற ஆடையாகும். வாரத்தின் ஒவ்வொரு நாளிலும் பயன்படுத்த வேண்டிய உடைகளுக்கு உரித்தான நிறமும் உண்டு! இதனை ஏற்கனவே ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் நன்கு விளக்கியுள்ளோம். இந்த ஜோதிட நிற கணித முறை காரிய சித்திக்கு நன்கு பயன்படும்! ஸ்ரீஐயப்ப விரதத்தின் போது நாம் பெற வேண்டிய மனசாந்திக்கும், மனக்கட்டுப்பாட்டிற்கும், அமைதியான உள்ளத்திற்கும், தீய சக்திகளை தடுத்து, நல்ல எண்ணங்களை மேம்படுத்துவதற்கும் நீல, கருப்பு நிற ஆடைகள் தக்க வஸ்திர சாத்திர சக்தியுடன் விளங்குவதால் விரதத்தின் போது இவ்வாடைகளையே அணிதல் வேண்டும்.
கண்டு பெருகும் வினைகள்!
மனிதனுடைய பெரும்பாலான தீய எண்ணங்களுக்கும், தீவினைகளுக்கும், தீய காரியங்களுக்கும் மூலகாரணமாக விளங்குவது கண்களால் பார்க்கும் காட்சிகளால் ஏற்படுகின்ற மனக் கிளர்ச்சிகளாகும். நல்லனவற்றையே பார்க்கின்ற மனோதிடத்தை, தீயனவற்றைக் கண்டாலும் அவற்றை ஒதுக்கி நல்ல எண்ணங்களையே வித்து இடுகின்ற நல்ல பழக்கத்தையும் கைக் கொள்வார்களேயானால், எவரும் பெரும்பான்மையான தீவினைக் கருமங்களிலிருந்து தப்பித்து விடலாம். ஆனால் கலியுகத்தில் இவ்வாறாகவா நிகழ்கின்றது? திரைப்படங்களும், டி.வி காட்சிகளும், பத்திரிக்கைகளும், மனதை தீய வழியில் செல்லும்படியான அருவறுப்புடைய காட்சிகளையே, படங்களையே தந்து விடுவதால் முறையற்ற எண்ணங்களின் ஊடேதான் மனம் எப்போதும் அலைபாயும். வெம்மையைத் தவிர்க்க விஞ்ஞான ரீதியாகவும் கருப்பு நிறக் கண்ணாடிகளை உபயோகிக்கின்ற வழக்கத்தை நாம் நடைமுறையில் காண்கின்றோம் அல்லவா!
நீல, கருமை நிற ஆடைகளை அணிகின்ற போது உள்ளத்தைத் தீயவழியில் செலுத்தக் கூடிய எண்ணத் தோன்றல்கள் கட்டுப்படுத்தப்பட்டு காணும் காட்சிகளின் தூண்டுதல்களினால் மனக்கிளர்ச்சிகளால் ஏற்படக் கூடிய பாவ வினைகளும் தடுக்கப்படுகின்றன. எனவே ஐயப்ப விரதத்தை மேற்கொள்பவர்கள் ஐம்புலன்களையும் நல்வழியில் செலுத்தி நல்ல எண்ணங்களிலேயே ஊறி, அறவழி முறைகளையே போஷிக்கின்ற மனப்பாங்கைப் பெறுவதற்காகத்தான் ஆடை சம்பந்தமான விரத நெறிமுறைகள் நம் பெரியோர்களால் தரப்பட்டுள்ளன. அவரவருடைய வாழ்க்கை அவசியங்களை, வசதிகளைப் பொறுத்து விரதநெறிமுறைகளை மாற்றி விரதத்திற்கே பங்கம் வருகின்ற வகையில் பல மாறுதலான விதிகளைக் கடைபிடிப்பார்களேயானால் ஸ்ரீஐயப்ப விரதத்திற்கே மாசு கற்பித்ததாகி விடுகின்றது.
அதிலும் படித்தவர்களே ஸ்ரீஐயப்ப விரத விதிகளை மீறிச் செல்கின்றார்கள் என்றால், எந்த விரதத்தின் மூலம் தீவினைகளைக் கழித்து முக்திக்கான ஸ்ரீஐயப்ப மகாபரபிரம்ம தரிசனத்தைப் பெற வேண்டுமோ அதை விடுத்து விரத பங்கங்களினால் புதிய பாவங்களையும், கர்ம வினைகளையும் சேர்த்து கொள்வார்களேயானால் கலியுகத்தின் போக்கை என்னென்று சொல்வது?

புது வருடம் 2000

பூஜ்யத்தில் சட்டமிடும் 2000

தமிழ் வருடமுறை, தெலுங்கு வருடமுறை எனப் பலவிதமான இந்தியப் பிராந்திய ஆண்டு முறைகள் இருந்தாலும் உலகம் முழுவதும் பொதுவாக ஆங்கில வருட முறையே கையாளப்படுவதால் “உலகுடன் ஒட்டி வாழ்” என்பதற்கிணங்க ஆங்கில வருட முறையும் எண் கணித ஜோதிடத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. பெரும் பாரம்பரியம் மிக்க நம் தமிழ் ஆண்டு ஜோதிட கணித முறையுடன் இதை இணைத்துக் கணித்தல் சிறப்புடையது. அந்தந்த யுக நியதிக்கேற்ப சமுதாயத்தில் நிலவுகின்ற வழக்கங்களையொட்டி சித்தர்கள் பல வாழ்க்கை நெறிமுறைகளை வழங்குகின்றார்கள். எனவேதான் கோடிக் கணக்கான லோகங்களில் எந்த லோகத்திற்கும், எந்த யுகத்திற்கும், எந்த காலத்திற்கும், எந்த நேரத்திற்கும் சிறப்புடையதாக சித்தர்களின் அருள்வழி முறைகள் விளங்குகின்றன. கலியுகச் சமுதாய வாழ்வுடன் உலகெங்கும் ஒட்டி விளங்குவதால் ஆங்கில வருட முறையும் எண் கணித இலக்கணத்திற்கு ஆட்பட்டதே!
சித்தர்கள் உலகின் எப்பகுதியில்தான் இல்லை, சொல்லுங்கள் பார்க்கலாம்! நமக்குத்தான் சமுதாய வாழ்வு முறையையொட்டி, ஜாதி, மத, குல, இன வேறுபாடுகள் கண்ணுக்குத் தெரிகின்றன. ஆனால் சித்தர்களுக்கோ தாவர, மனித, விலங்கின வேறுபாடோ அல்லது எவ்வித ஜாதி, மத, இன, ஆண், பெண் வேறுபாடும் கிடையாது. அமெரிக்கரையும், இந்தியரையும், சீனாக்காரரையும் வித்யாசம் பாராது அனைவரிடத்திலும் உறைகின்ற இறை ஆன்மத்தையொட்டியும் ஏன், ஆண், பெண், தாவரங்கள், விலங்குகள், புழு, பூச்சிகள் என்ற எவ்வித வேறுபாடுமின்றி உலகத்தில், பிரபஞ்சத்திலுள்ள அனைத்து உயிரினங்களின் தெய்வீக மேம்பாட்டிற்காகவும் ஓயாமல் உழைத்து தெய்வீகத்தில் உழன்று வருபவர்களே சித்புருஷர்கள் ஆவார்கள்.

ஆங்கில வருட முறையானது (ஜனவரி முதல் டிசம்பர் வரை) நம் அலுவலக, வியாபார, குடும்ப வாழ்க்கையில் பெரிதும் பயன்படுவதால் இதுவும் எண் கணிதத்திற்கு உட்பட்டதெனவும், எண் கணிதத்தின் ஜோதிட சக்தி நிறைந்ததாகவும் சித்புருஷர்கள் உரைக்கின்றனர். ஏனென்றால், கலைவாணியின் அருளாட்சிக்கு உட்பட்டது தானே தமிழ், வடமொழி, தேவமொழி, லதீன் , ஆங்கிலம் என உலகின் அனைத்து மொழிகளும்! கலைவாணியின் மொழி சாம்ராஜ்யத்தில் எந்த மொழி, இன, வேறுபாடும் கிடையாது. ஏன் கம்ப்யூட்டர் மொழி என்று சொல்லப்படும்  C, C++ , பாஸ்கல், Fortran  என அனைத்து கம்ப்யூட்டர் மொழிகளுக்கும் உரித்தான கலைவாணி அம்சம்தானே ஸ்ரீஅனுராதா க்ரமண சரஸ்வதி அம்பிகையாவாள்! இவ்வாறு அந்தந்த யுகத்திற்கேற்றபடி அமைகின்ற நவீன விஞ்ஞான அமைப்புகளும் குறிப்பாக கலியுகத்தின் கணிப்பொறி விஞ்ஞானம் பற்றிய ஆராய்ச்சிக் குறிப்புகளும் கூட சித்புருஷர்களின் கிரந்தங்களில் காணப்படுகின்றன. எனவே, சித்தர்களின் அருளாட்சியில் எதுவுமே புதுமையல்ல. அனைத்தும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதுதான் . விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானத்தின் பால் பட்டதுதான்!

வட்டத்திற்குள் சட்டமிடுங்கள்
ஆங்கிலப் புத்தாண்டு 2000 மாக வரும் 1.1.2000 நாள் அன்று மலர்கின்றது அல்லவா? இதனைப் பற்றி சித்புருஷர்களின் கிரந்தங்கள் கூறுவதென்ன? எழுதாக் கிளவியாக வாய் மொழி வேதமாக விளங்குகின்ற சித்புருஷர்களின் கிரந்தங்கள் குரு பாரம்பரிய திருவாய் மொழியாகத்தான் இன்றும் வெளிவருகின்றன அல்லவா! வட்டத்திற்குள், “சட்டமிடும் திட்டமிட்ட ஆண்டு” என கி.பி.2000 ஆம் வருடத்தை சித்புருஷர்கள் வர்ணிக்கின்றார்கள். இதன் விரிவான பொருள் என்னவோ? நீங்கள் கம்ப்யூட்டரில் எண்களைக் கீ போர்டில் தட்டும் போது, 0 என்பது வட்டத்திற்கு நடுவே ஒரு குறுக்குக் கோட்டுடன் தெரிவதைப் பார்த்திருப்பீர்கள். இவ்வாறாக 0க்குள் (பூஜ்யத்திற்குள்/சுழிக்குள்) ஒரு குறுக்குக் கோடு இட்டுத்தான் 2000 ஆண்டை எழுத வேண்டுமென சித்புருஷர்கள் அறிவுறுத்துகின்றார்கள்.
அதாவது 1.3.99, 2.5.97 என ஆண்டைச் சுருக்கி எழுதிப் பழகிய நாம் 2000 ஆண்டின் போது இவ்விதம் சுருக்கி எழுதக் கூடாது. உதாரணமாக 1.3.2000 என்பதை 1.3.00 எனச் சுருக்கக் கூடாது. அதாவது 2000 ஆம் ஆண்டின் 366 நாட்களையுமே 2000 என முழுமையாக எழுதியே பழக வேண்டும். அதிலும் 2000 என எழுதும் போது, அதில் வரும் மூன்று பூஜ்யங்களிலும் கண்டிப்பாக குறுக்கில் கோடு வேண்டும். இதனையே வட்டத்திற்குள் சட்டமிடும் திட்டமிட்ட ஆண்டு என சித்தர்களின் பரிபாஷை விளக்குகின்றது.
ஏன் 2000ஆம் ஆண்டின் பூஜ்யத்திற்குள் குறுக்குக் கோடிட வேண்டும்? நல்ல கேள்விதான்? கலியுகத்தில் கேள்வி கேட்டே பழகியவர்கள் நாம்! பெரியோர்களின் வார்த்தையில் நாம் வைத்துள்ள நம்பிக்கை குறைந்து வருவதால்தான் குருமேல் உள்ள நம்பிக்கையும் மங்கி வருதலால் தான் கலியுகத்தில் நாம் எண்ணற்ற பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றோம். ஒருபுறம் அருணாசல கிரிவலம், தர்ப்பண பூஜை போன்றவற்றைக் கடைபிடிப்போர் அபரிமிதமாகப் பெருகி வருவதைக் கண்டு நாம் மகிழ்ச்சி கொண்டாலும் என்று ஆழ்ந்த இறை நம்பிக்கை எனும் இறை இலக்கணத்திற்கு மதிப்பு குறைந்து விட்டதோ, அன்றே தொடங்கி விட்டன கலியுகத்தின் பூதாகாரப் பிரச்னைகள்!
பூஜ்யமே (இறைசாம்) ராஜ்யம்
0வின் மூலக் கண்டுபிடிப்பு பற்றி எதையெதையோ விஞ்ஞானம் கூறினாலும், உலகத்தின், ஏன் பிரபஞ்சத்தின் தெய்வீக மையமாக விளங்குகின்ற நம் பாரதத் திருநாட்டில் தோன்றியதே அனைத்து எண்களும், கிழமைகளும், தேதி வழி முறைகளும்! பூஜ்யச் சக்கர நியதி என்று சொல்லப்படுகின்ற சூன்ய விதிகள் கூட இந்தியாவில் தோன்றியனவே! 0 ஒரு ஞானப் பரதேச எண் என்பது சித்புருஷர்களின் பரிபாஷை! அதாவது சூன்ய நிலையில் திரிகின்றவனே பரதேசி! பரதேசி என்பது ஒரு இழிச் சொல் அல்ல! பரத்தை தேசியாகக் கொண்டவன். அதாவது பரம் என்றால் இப்பிரபஞ்சம், தேசி என்றால் வசிப்பவன், எனவே இப் பிரபஞ்சத்தில் எங்கு வேண்டுமானாலும் வசிக்கக்கூடிய தெய்வீகத் தகுதியை, தன்மையைப் பெற்றவரே பரதேசி, குப்பை, கூளம், மேடு, பள்ளம், நதி, கடல், மலை என எவ்வித வேறுபாடுமின்றி எங்கும் இறைவன் குடி கொண்டுள்ளான் என்ற ஆழ்ந்த ஞானம் தனைப் பெற்றவரே பரதேசியாக, ஞானப் பரதேசியாக பரந்த ஞானியாக, எங்கும் திரிகின்ற ஞானத் தன்மை பெற்றுப் பிரகாசிக்கின்றார்.
உத்தம சூன்யமே தத்துவ பூஜ்யம்!
எனவே 0 என்பது உத்தம சூன்ய நிலையைக் குறிக்கிறது. சூன்யம் என்றால் வெற்றிடம்தானே! பரத்தை (இறைமையை) தவிர ஒன்றும் இல்லாத இடம்! சூன்யம் என்பதும் இழிச் சொல் அல்ல. ஆனால் வழக்கில், பில்லி, சூன்யம், ஞான சூன்யம், என தவறான அர்த்தங்கள் வந்துவிட்டன! எனவே, பூஜ்யம் என்றால் இறைமை மட்டும் பூரணமாக, பரந்த ஞானமாக விளங்குமிடம் என்பதாகும்.
சூன்யமே ஞானம்! ஞானமே சித்தர்களின் வாழ்விடம்
எங்குமே இறைவன் உறைகின்றான். இறைவன் இல்லாத வெறுமையான இடம் எதுவும் கிடையாது. விருப்பு வெறுப்பற்ற இடமே சூன்யம் என்றெல்லாம் விளக்கிச் சொல்கிறோமே தவிர, இதையெல்லாம் அறிந்து உணரும் ஞானப் பக்குவத்தை நாம் பெறவில்லை, விருப்பு, வெறுப்பு, சூன்யத்தைக் கடந்தவர்களே சித்தர்கள்! குப்பைச் சித்தர், குப்பை மேல் மல்லிகை மணத்துடன் அன்றும், இன்றும், என்றும் அமர்ந்து அருள்பாலிக்கின்றார். மலப்புழுச் சித்தர், மலங்களில் புரண்டு, பூக்களின் நறுமணத்துடன் இன்றும் அருள்கூட்டி இறைமணம் கமழ்விக்கின்றார். அஷ்டவக்ர மாமுனி இன்றும் உடலில் எட்டுவிதக் கோணல்களுடன் அஷ்டபரம் எனும் வகையில் கூனிக் குறுகி, பலகோடி சூரியப் பிரகாசத்துடன் இன்றும் யாங்கணும் குறிப்பாக அண்ணாமலை கிரிவலப் பகுதியில் அஷ்டமி திதியன்று கிரிவலம் புரிந்து அருள்பாலிக்கின்றார்.
அரிக்கேன் விளக்கு சித்தரானவர் பகலிலும் பல கோடி சூரியப் பிரகாசம் போல் ஒளிரும் அரிய அரிக்கேன் விளக்கு வெளிச்சத்துடன் இன்றும் சூட்சுமமாக திருஅருணைக் கிரிவலத்தில் அருள்பாலிக்கின்றார். பாக்யம் உள்ளவருக்கே இவர்களுடைய தரிசனம் கிட்டும். சித்தர்களும், யோகியரும், மஹான்களுமே பூஜ்யஸ்ரீ என்று சொல்லப்படுகின்ற ஞானப் பரதேசிகளாக, ஞானிகளாக, சூன்ய மகா சித்தர்களாக விளங்குகிறார்கள். ஆனால் இந்த பூஜ்யஸ்ரீ பட்டத்தைப் பெறும் அளவிற்கு பூஜ்யத்தில் நிறைந்திருக்கின்ற இறைமையைப் பகுத்துணரும் அளவிற்கு, நாம் தெய்வீக ஆற்றலைப் பெறவில்லையே!
ஞானப் பரதேசி நிலையைப் பெற்றோர் பட்டினத்தார் போல் குடும்ப வாழ்க்கையில் இருப்பது கிடையாது. ஏனெனில் அவர்தம் ஞான வழியே இறைவன் காட்டும் வழியாகி விடுகின்றது அல்லவா! எனவே, பூஜ்யஸ்ரீ என்று சொல்லப்படுகின்ற, ஞானப் பரதேச நிலையைப் பெறும் யோக்யதாம்சங்களை இல்லறவாசிகளாகிய நாம் பெறவில்லையாதலின் பூஜ்யத்திற்கு நடுவே குறுக்குக் கோடு இடுகின்றோம். பூஜ்யம் என்பது ஒரு காலப் பரிமாணம் ஆகும். பூஜ்யத்தில் குறுக்குக் கோடு இட்டு நாம் அதை இரண்டாகப் பகுக்கும் போது, அதுவே உத்தராயண ஞானமாகவும், தட்சிணாயன ஞான மார்கமாகவும் வடிவு கொள்கின்றது. நாம் இவ்வாறு வட்டத்திற்குள் சட்டமிடும், ஞான நியதிகளுக்குப் பலவிதமான அர்த்தங்கள் உண்டு.
இங்கு நாம் குறிப்பிடுவது சித்தர்கள் அளிக்கின்ற அயன சூன்ய விளக்கமாகும். எவ்வாறு மனித இனத்தை ஆண், பெண் என உருவ வேறுபாடாக விளக்குகிறோமோ அதே போல் மனிதனின் ஆயுட்காலப் பரிமாணத்தையும், உத்தராயண காலப் பரிமாணம், தட்சிணாயன காலப் பரிமாணம் என்பதே அவ்விரு பிரிவுகளும்! தை முதல் ஆனி வரையுள்ள ஆறு தமிழ் மாதங்களும் உத்தராயண காலமாகவும் ஆடி முதல் மார்கழி வரையிலான ஆறுமாதங்கள் தட்சிணாயனமாகவும் வகைபடுத்தப்படுவதை நாம் நன்கு அறிவோம்தானே! மனிதனுடைய நித்ய வாழ்க்கையிலும் உத்தராயண, தட்சிணாயன காலப் பிரிவுகள் உண்டு. தினசரி பகல், இரவினைக் குறிப்பதை இவ்வகை!
கோலம் காட்டும் காலம்!
உண்மையில் நாம் இல்லத்தில் இடும் மாக்கோல வகையிலும் உத்தராயணக் கோலங்கள், தட்சிணாயனக் கோலங்கள் என இரு பிரிவுகள் உண்டு. புள்ளிக் கோலம் இடும் போது அதில் நிறைய வட்டங்கள் அமைவதை நீங்கள் கண்டிருக்கலாம். உத்தராயண காலத்தில் கோலம் இடும் போது, அந்த வட்டத்தின் மேற்பகுதியை அலங்கரிப்பார்கள்., தட்சிணாயனக் கால கோலங்களில் வட்டத்தின் கீழ்ப்பகுதியை அலங்கரிப்பார்கள். இவையெல்லாம் மனித சமுதாயத்தின் குணாதியசங்களின் சமுதாய வழிமாற்றத்தை தெய்வீக வழியில் ஜோதிடக் கலை அம்ச ரீதியாகப் புலப்படுத்துகின்றன.
பறங்கிப்பூக் கோலம் காட்டும் காலம்!
மார்கழி மாதத்தின் போது, வீட்டு வாசலில் இடும் கோலத்தில் பறங்கிப்பூ வைப்பார்கள் அல்லவா! அதனை தெய்வீகப் பிறவியான பசு மிதித்துச் செல்வதோ, அல்லது தின்றோ செல்வதுமுண்டு. அப்போது பசுவின் குளம்புப் பகுதியானது கோலத்தின் வட்டத்தின் எப்பகுதியில் படுகிறதோ அதை வைத்து அந்த இல்லத்தின் குடும்பத்தின் ஜோதிட கணித அம்சங்களைப் பகுத்துக் கூறும் அயன ஜோதிட முறையும் உண்டு. அக்காலத்தில் வீட்டு வாசலில் கோலம் இட்டுப் பின் பசுக் கூட்டம் அதன் வழியே செல்லும் போது, பசுவின் குளம்படிகள் கோலத்தில் படும் பாங்கை வைத்து, நல்லவை, தீயனவற்றை அறிகின்ற தீர்க்க தரிசனத்தை அறிகின்ற ஜோதிடர்கள் அக்காலத்தில் நிறைந்திருந்தார்கள். இன்றும் நல்ல பழுத்த ஜோதிடர்கள் தங்கள் இல்லத்தின் வாயிலில் சூரிய, சந்திர அயன அம்சக் கோலமிட்டு, அதனைக் குறைந்தது ஒரு மணி நேரம் நின்று கவனித்துத் தியானித்து ஜோதிடக் கலையைப் பிரகாசிக்கச் செய்கின்ற அயனாம்ச அற்புதத் தியானமுறை உண்டு. ஆனால் தற்போது இது மறைந்து விட்டது என்றே சொல்ல வேண்டும்., தக்க குருவை நாடி அறிந்திடுக!
2000 என எழுதிடுங்கள்!
வரும் ஆங்கிலப் புத்தாண்டில் நீங்கள் தேதியினை எழுதும் போது, முழுமையாக 2000 என எழுதுங்கள். அவ்வாறு எழுதும் போது 2000த்தின் மூன்று பூஜ்யங்களிலும் குறுக்கில் கோடிட மறவாதீர்கள். ஏனெனில் பூஜ்யம் இடும்போது அது ஞான மார்கமாக, ஞானத்தை உய்விக்கும் வட்டமாக விளங்குகின்றது. ஆனால் அந்த ஞானத்தை உணர்ந்து தெளியும் அளவிற்கு நம்முடைய உடலோ, மனமோ பரிசுத்த நிலையை அடையவில்லை ஆதலின் அந்நிலையைப் பெறும் வரை நாம் இல்லறத்தில் திகழ்ந்து இறைநிலையை மேன்மேலும் உணர வேண்டியிருப்பதால் 2000 என்ற எண்ணின்  மூன்று பூஜ்யங்களிலும் குறுக்கில் கோடிட்டு உத்தர, தட்சிண அயனங்களாகப் பகுத்து நம் வாழ்வுடன் ஒட்டிய உத்தமமான தெய்வீக பூஜ்ய நிலையைப் பெறுவோமாக!
ICHING திருச்சக்கர பூஜை
பூஜ்யத்தின் மற்றோரு வகையே (iching) ஐசிங் எனப்படும் முக்கியமான திருவட்டச் சக்கரமாகும். பல ஆலயத் தூண்களிலும் இக்குறியீட்டை நீங்கள் காணலாம். ஸ்ரீஅகஸ்தியரின் தலைமைச் சீடர்களுள் ஒருவராக விளங்கும் போகர் மாமுனிச் சித்தர், இந்த iching வட்டச் சக்கர வழிபாட்டை, தற்போதைய சீன, மங்கோலிய, ஜப்பான் பகுதிகளில் பெருக்கியவர் ஆவார். ஒரு வட்டத்திற்குள் இரண்டு மாம்பழங்களை வைத்தாற் போன்று வட்டத்தை இரண்டாகப் பிரிப்பது போல் ஐசிங் சக்கரம் அமைந்திருக்கும் திருமகளுக்குரித்தான வாகன அம்சம் நிறைந்தது இது. ICHING என்பதை மாப்புரி வட்டச் சக்கரமென சித்தர்களின் பரிபாஷை உணர்த்துகிறது, ஐசிங் எனப்படும் இந்த மாப்புரிச் சக்கர வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்தது. இதனைத் தக்க சற்குரு மூலமாக அறிந்து கடைபிடித்தால் வறுமையும், வியாபாரத் தேக்கமும், தரித்திரமும் தாமாகவே நீங்கும். திருமகளின் திருவருளும் நிறைந்திடும்.
பொதுவாக வாழ்க்கையில் பலவிதமான சொத்து இழப்புகளைச் சந்தித்து வருவோர் ICHING வழிபாட்டினை முறையாகச் செய்து வந்திடில் நல்ல முன்னேற்றமும், பரிகாரமும் ஆகும். உத்தராயண, தட்சிணாயன காலப் பாகுபாடானது, வருடத்தில் ஆறு மாதங்கட்கொரு முறையாக வருவதெனினும் மனிதனின் வாழ்வில் பகற்பொழுது உத்தராயணமாகவும், இரவுப் பொழுது தட்சிணாயனமாகவும் வாய்க்கின்ற நித்யகால நியதியும் உண்டு. இதனால் தான், அர்த்தஜாமப் இரவுப் பூஜை நேரத்தில் காலத்தைப் பகுக்கும் கால பைரவருக்கு புனுகு சார்த்தி, நித்திய காலத்தை முடிக்கும் வழிபாட்டை மேற்கொள்கின்றார்கள். ஆனால் பல ஆலயங்களிலும், பாதுகாப்பைக் கருதி இந்த அர்த்த ஜாம கால பைரவ வழிபாடு நிகழ்வது தடைபட்டு விட்டது மிகவும் வருந்துதற்குரியதாகும்.
இதனால் தான் பலவித இயற்கைச் சீற்றங்களையும் கால, பருவக் கோளாறுகளால் ஏற்படுகின்ற விபத்துகளையும் நாம் சந்திக்க வேண்டியுள்ளது. அனைத்து ஆலயங்களிலும், அர்த்த ஜாம காலபைரவ வழிபாடு முறையாக நடக்குமாயின் இயற்கை தேவதைகளின் கருணைக் கடாட்சம் மிளிர்ந்து, நமக்கு மழையும், வெயிலும், பனியும் தேவையான அளவு நிறைந்து சமுதாயம் சுபிட்சமாகும். அக்காலத்தில் இரவு நேரத்தில் அர்த்த ஜாமப் பூஜையில் ஸ்ரீபைரவருக்கு புனுகு, முந்திரிப் பருப்பு மாலை சார்த்தி ஆலயத் திறவுகோல்களை ஸ்ரீகாலபைரவரின் திருவடிகளில் சமர்ப்பித்து, மறுநாள் காலையில் காலபைரவரிடமே அவற்றைத் திரும்பப் பெற்று, பூஜையைத் தொடங்கும் அற்புதமான தர்மமிகு சமுதாயம் நிலவியதே தர்மமிகு பாரதப் புனித பூமியாகும். ஆனால் தற்போதைய நிலை நாம் அறிந்ததே!
என்றுதான் நாம் அந்த தார்மீக சமுதாய நிலையை, பல யுகங்களுக்கு முன் நிலவிய அற்புதமான தர்மமிகு பாரதத்தைக் காணப் போகின்றோமோ! எனவே புத்தாண்டு தினத்தன்று நீங்கள் இடும் கோலத்திலும், சக்கரங்களிலும் 2000 எனும் எண்ணை பச்சரிசி மாவினால கோலமிட்டு அதன் மூன்று பூஜ்யங்களிலும் குறுக்கில் கோடிட்டு வட்டத்திற்குள் சட்டமிடும், திட்டமிட்ட ஆண்டாக சித்தர்கள் அருளும் முறையில் கொண்டாடி மகிழுங்கள்.
2000 ஆம் ஆண்டில் கவனிக்க வேண்டியவை!
இந்த ஆண்டில் பொதுவாக ஞாபக மறதியால் பலவிதத் துன்பம் ஏற்படும். இது வெறும் புத்தாண்டு ஜோதிட கணிதம் அல்ல! சித்தர்கள் அருளிய சமுதாய வாழ்வின் இன்ப, துன்பங்களைத் தீர்க்க தரிசனமாக அலசி, ஆராய்ந்து நல்வழிப்படுத்தும், அருள்வழி முறையாக நாம் இவற்றை அளிப்பதால் இங்கு 2000 ஆம் ஆண்டில் துன்பங்களினின்று நம்மைத் தற்காத்துக் கொள்ளும் முறையை நாம் இங்கு காண்போம். தமக்கு அசாத்திய ஞாபக சக்தி உண்டு எனத் தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள் நிறைய உண்டு. விரல் அசைவிலிருந்து, கண் இமைத் துடிப்பினின்று, ஞாபக சக்தி வரை அனைத்தும் இறையருளால்தான் நடக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.
தம்முடைய கல்வித் தகுதி, உடலாற்றல், பணவசதி, அதிகாரம், பதவி, பொருளாதார நிலை கொண்டு எவ்வித அகம்பாவத்தையும், ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. இவையெல்லாம் நிரந்தரமல்ல! இன்று வரும், நாளை போகும். ஆனால் சாசுவதமானது, இறைச் சக்தி ஒன்றே! இறை நம்பிக்கையை நாள்தோறும் நாளுக்கு நாள் வினாடிக்கு வினாடி நாம் விருத்தி செய்தாக வேண்டும். இந்த ஆழ்ந்த நம்பிக்கையே எத்தகைய துன்பம் வந்தாலும், இன்பம் வந்தாலும் அனைத்தும் அவனால் நம் கர்ம வினைக்கேற்ப அளிக்கப்பட்டது என்பதை உணரக் கூடிய நல்வழியைத் தருவதாகும். 2000ஆம் ஆண்டில் ஞாபக மறதியால் விளையக் கூடிய துன்பங்கள் உங்கள் இல்லத்திலோ, அலுவலகத்திலோ RAM/ROM எனப்படும் கம்ப்யூட்டர் Memory பகுதியில் பலவிதப் பிரச்னைகள் தோன்றும். கவனம் கொள்க!

சூடக் கூடாத பூ வகைகள்

சூடக் கூடாத பூ வகைகள் நிறைய உண்டு. கனகாம்பரம், காட்டுமல்லி போன்ற வாசனையற்ற பூக்களை ஒரு போதும் பயன்படுத்தக் கூடாது. பூஜைக்கோ, தலையில் சூடுவதற்கோ மற்ற வைபவங்களுக்கோ கனகாம்பரம் போன்ற மணமற்ற பூக்களை எப்போதும் எதற்குமே பயன்படுத்தாதீர்கள்! கனகாம்பரம் ஏதேனும் பூக்கொத்தில் இருக்குமேயானால் அந்த பூச்சரத்தை ஒதுக்கி விடுங்கள். பூஜைக்கோ, தலையில் சேருவதற்கோ கனகாம்பரம் ஏற்ற புஷ்பம் கிடையாது. அப்படியானால் இறைவன் ஏன் கனகாம்பரப் புஷ்பத்தைப் படைக்க வேண்டும் என்ற கேள்வி எழுகின்றதல்லவா!
இறைவன் படைப்பில் ஒவ்வொன்றிற்கும் ஆயிரமாயிரம் காரண, காரியங்கள் உண்டு. கனகாம்பரத்திற்குத் தீவினைச் சக்திகளை ஈர்க்கின்ற சக்தி நிறைய உண்டு என்பதால் தான் கனகாம்பரத்தைப் பூஜைக்குப் பயன்படுத்தவோ, தலையில் சூடிக் கொள்ளவோ கூடாது என்ற நியதியைச் சித்புருஷர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். இதனைப் பயன்படுத்துவதன் மூலம் நமக்குத் தீய சக்திகளே வந்தடையும். கனகாம்பரம் என்ற பூத்தாவரம் இந்த உலகத்தில் படைக்கப்பட்டிருப்பதால் தான் அது பலவிதமான தீய சக்திகளைத் தன்னுள் ஈர்த்துக் கொள்வதால்தான் இயற்கையாகவே சமுதாயத்தில் பலவிதமானத் தீவினைச் சக்திகளுக்கான நிவாரணம் நமக்குக் கிட்டி விடுகின்றது.
இவ்வாறாகத் தீவினைச் சக்திகளைத் தன்னுள் ஈர்க்கின்ற வகையிலே இறைவன் பல தியாகப் பொருட்களைப் படைத்துள்ளான். இவைதாம் இன்றைக்குப் பரவெளியில் நிறைந்துள்ள பல தீய சக்திகளையும், மனிதர்களுடைய மனதில் எழுகின்ற தீவினை எண்ணங்களையும் தம்முள் ஈர்த்துக் கொள்வதால் தான் நாம் இத்தகைய தீயச் சக்திகளிடமிருந்து ஏதோ ஓரளவு தப்பித்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். கனகாம்பரத்தை ஏன் பயன்படுத்தக் கூடாது என்பதற்கு இன்னமும் பல காரணங்கள் உண்டு. இவற்றைத் தக்க சற்குருவை நாடி அறிந்திடுக!

பொன் தரும் அனுஷம்

மனுஷனுக்குப் பொன் தரும் அனுஷம்!
ஒவ்வொரு அனுஷ நட்சத்திர நாளும் பொன் ஆபரணங்களைச் சுத்தம் செய்வதற்கு உரித்தான சிறந்த நாளாகும். அனுஷ நட்சத்திர தினத்தில் திருஅண்ணாமலையினை கிரிவலம் வருபவர்க்கு முறையான வழியிலே பொன் ஆபரணங்கள் கிட்டும். உதாரணமாக, ஒருவருக்கு வைரத் தோடுகள் அணிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்குமேயானால் அவர் அனுஷ நட்சத்திரத்தன்று திருஅண்ணாமலையை முறையாக கிரிவலம் வந்தால் நல்ல வழியிலே அவருக்கு வைரத் தோடுகளைப் பெறுகின்ற பாக்கியத்தை இறைவனே நல்வரமாக அளிக்கின்றான். திருஷ்டி தோஷத்தை எழுப்புகின்ற தீய சக்திகளானவை, நம் தலைமுடியிலும், ஆடைகளிலும், ஆபரணங்களிலும் படிந்து நம் உடல், மனம், உள்ளம் மூன்றையும் பாதிக்கின்றன. இதற்காகத்தான் பொன் ஆபரணங்களைக் கூட அழுக்கெடுத்து, எண்ணெய் இறங்கிய கல்லைச் சுத்தம் செய்து அவ்வப்போது தோடுகள், கடுக்கன்கள், மூக்குத்திகள், வளையல்கள், மோதிரங்கள் ஆகியவற்றைத் துளசி அல்லது வில்வத் தீர்த்தத்தில் வைத்து சுத்தம் செய்து அணிதல் வேண்டும்.
சகலவிதமான திருஷ்டி தோஷங்களையும் நிவர்த்தி செய்கின்ற வழியிலே அமைந்துள்ள அட்சர திருஷ்டி தோஷ நிவாரண தூப தீப கண்டியானது நம் ஆஸ்ரமத்திலும், சென்னை, கோவை, திருச்சி கிளைகளிலும் கிடைக்கும். தினந்தோறும் இந்த திருஷ்டி தோஷ நிவாரண கண்டியை ஏற்றி வழிபட்டு வருவீர்களேயானால் அனைத்து விதமான திருஷ்டி தோஷங்களிலிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்வது மட்டுமல்லாமல் இல்லத்தில் குடியிருக்கும் தீய சக்திகளையும் பஸ்மம் செய்து விடலாம். குடும்பச் சண்டைகள் மற்றும் தம்பதிகளுக்குள் ஏற்படுகின்ற மனவேறுபாடுகளைக் களைந்து நன் முறையில் சாந்தமான வாழ்க்கையைப் பெற்றிடவும் இந்த திருஷ்டி தோஷ நிவாரண தீப பூஜை உதவுகிறது.
பூஜைகளே சமுதாயத்தைச் சீர்படுத்தும்!
பஞ்சாங்கத்தில் ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு பண்டிகை குறிக்கப்பட்டிருப்பதைக் காண்கின்றோம். பகுள பஞ்சமி, கால பைரவ அஷ்டமி, கோ பத்ம விராதம், கோ துவாதசி என விதவிதமான பெயர்களுடன் பலவிதமான பண்டிகைகளும் நம் பெரியோர்களால் பஞ்சாங்கத்தில் காட்டப்பட்டுள்ளன. அனைத்துப் பண்டிகைகளையும் இல்லற வாசிகளால் கொண்டாட முடியுமா. இதைக் கருத்தில் கொண்டு தான் அக்காலத்தில் ஆலயத்தில் தினந்தோறும் சமுதாய பூஜையாக மக்களின் நலனுக்காக அனைத்துப் பண்டிகைகளையும் கொண்டாடி வந்தார்கள். நன்கு வசதி உள்ளவர்கள் ஒவ்வொரு பண்டிகைகயையும் ஆலயத்தில் நடத்துவதற்கான மண்டகப்படி உதவிகளைச் செய்து பெரும் புண்யத்தைப் பெற்று சமுதாய பூஜையை நடத்தி வந்ததால்தான் அக்காலத்தில் தார்மீகமான சமுதாயம் நிலவி வந்தது.
மக்களும் அமைதியாக வாழ்ந்து தெய்வீகத்தைப் போற்றிப் பாதுகாத்து வந்தார்கள். தற்காலத்தில் மூதாதையர்களுக்கான திதி, திவசம், சிராத்தம் என்றாலே அவசர கோலமாக எல்லாவற்றையும் காலை எட்டு மணிக்குள்ளாக அரைகுறை மந்திரங்களுடன் வேக வேகமாக முடித்து விட்டு அவதி அவதியாக எதை எதையோ சாப்பிட்டு விட்டு ஒன்பது மணிக்குள் அலுவலகத்திற்கு ஓடுகின்ற இயந்திர கதியான வாழ்வைத் தான் நாம் இன்று காண்கின்றோம். இதுதானா வாழ்க்கை? என்னே போலித்தனமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் என்று சற்றே ஆத்ம விசாரம் செய்து பாருங்கள். பெறுதற்கரிய மானிடப் பிறவியை இப்படித்தானா வீணாகப் பாழ்படுத்துவது? முதலில் வாழ்க்கையின் தெய்வீகத் தத்துவத்தை உணர்ந்து எப்படி வாழ வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஏனோ, தானோ என்று வாழ்ந்து பொன்னான வாழ்க்கையை வீணடிக்காதீர்கள். பிறவிகளையும் பெருக்கிக் கொள்ளாதீர்கள்!
சமுதாய வாழ்க்கை என்பது என்ன? உற்றம், சுற்றம், நண்பர்கள் குழாம் மட்டுமல்லாமல், விலங்குகள், தாவரங்கள் என அனைத்தையும் ஒன்றாக பாவித்து நம்மோடு வளர்ந்து வாழ்ந்து தெய்வீகம் பூரிக்கச் செய்வதுதான் சமுதாய வாழ்க்கை, எனவே வெறும் மனித வாழ்க்கைகளின் கூட்டு சங்கமம் மட்டுமே சமுதாய வாழ்க்கை என்று ஒரு போதும் எண்ணாதீர்கள். தாவரங்கள், விலங்குகள், புழு பூச்சிகள், அனைத்துமே நம்மை அண்டியோ, நம்முடன் சேர்ந்தோ தான் வாழ்கின்றன. பாம்புகள் மட்டும் படைக்கப் படாவிடில் எத்தனையோ விஷப் பூச்சிகள், வண்டுகள், புழுக்கள், பிராணிகள் எல்லாம் மனித வாழ்க்கையையே சூறையாடிவிடும். எனவே, இறைவனுடைய ஒவ்வொரு படைப்பிற்கும் ஆயிரமாயிரம் காரண காரியங்கள் உண்டு.
நம்மைச் சார்ந்து வாழ்கின்ற உயிரினங்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்குத் தேவையான வழிபாடுகளையும் நிகழ்த்த வேண்டிய கடமையில் தான் பகுத்தறிவுடைய மனிதன் திகழ்கின்றான் என்பதை நீங்கள் முதலில் உணர வேண்டும். தர்ப்பண மந்திரத்தில் கூட அதன்  அர்த்தத்தை நீங்கள் படித்துப் பார்த்தீர்களேயானால் புழு, பூச்சி முதல் தாவரங்கள் உள்ளிட்ட அனைத்திற்குமான முக்தி நிலைக்காகக் காருண்யத் தர்ப்பணத்தை ஒருவன் நிச்சயமாகச் செய்திடுதல் வேண்டும் என்பதை அறிந்திடலாம். இதுவே மனிதனின் தார்மீகக் கடமையாகும்.
காய்கறிகளோ, தானியங்களோ இல்லாவிட்டால் ஒரு மனிதன் எவ்வாறு வாழ முடியும்? எனவே, மனிதன் தான் வாழ்வதற்காகத் தியாகம் செய்கின்ற அனைத்து அரிசி, கோதுமை, மல்லி, புளி போன்ற தாவரங்களுக்கும், காய்கறிகளுக்குமான தர்ப்பண வழிபாட்டைத் தான் மனிதன் ஒவ்வொரு அமாவாசை தோறும் செய்தாக வேண்டும். எனவே, தம்முடைய மூதாதையர்களுக்கு மட்டும் உரித்தான தர்ப்பணமே என்று சுயநலமாக எண்ணி விடாதீர்கள். நீங்கள் இன்று மனிதனாக வாழ்வதற்கு உதவி செய்கின்ற புழு, பூச்சி, மீன், ஆடு, தானியங்கள், காய்கறிகள் என அனைத்து உயிரினங்களுக்குமான நல்வாழ்விற்கான தர்ப்பணப் பூஜையாகத்தான் அமாவாசைத் தர்ப்பணம் அமைந்துள்ளது என்பதை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

மாட்டுப் பொங்கல்

மிருத்திகா (மண்) பூஜையும், கோ தூளி (பசுவின் குளம்படி மண்) வழிபாடும் ... மிருத்திகா பூஜை, கோதூளி பூஜை, ரிஷப பூஜை மூன்றையும் ஜாதி, மத, இன, குல பேதமின்றி யாவரும் செய்திடலாம். முதல் நாள் போகிப் பொங்கல் பண்டிகை தினம் மன, உள்ள அழுக்கைப் போக்கும் நாள்! மறுநாள் மகர சங்கராந்தியான தைப் பொங்கல் தினம் நமக்கு ஆத்ம சக்தி அளிக்கும் சூரியனாம் ஆதித்யனைப் போற்றும் நாள். உயிரினங்களுக்கு ஆன்ம ஜீவ சக்தி அளிக்கின்ற ஸ்ரீமன் சூரிய நாராயண மூர்த்திக்கான நன்றிக் கடன் வழிபாடு. மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல் எனப்படும் காருண்ய பூஜை தினமாக மலர்கின்றது. இன்று மிருத்திகா (ப்ருத்வி மண்) பூஜையும், ரிஷப (காளை) பூஜையும் செய்தாக வேண்டும்.
மிருத்திகா பூஜை
கோடானு கோடி தேவாதி தேவ தெய்வ மூர்த்திகள் நிறைந்ததாக விளங்குவது தானே ஒரு புனிதமான பசுப் பிறவி, நம்முடைய ஒவ்வொரு அங்கத்திலும், ரோமத்திலும், தசை நாரிலும், நரம்பிலும் இறைமை மிளிர்கின்றது. மனிதனுடைய உடல் அசுத்தத்தை மலம் என்றும், மனித மனதின் அசுத்தத்தை தீய சக்திகள் என ஒதுக்கி விடுகின்றோம். எவ்வளவு பகுத்தாலும் அவ்வளவு எளிதில் மன மலத்தைப் போக்க முடியாமல் மனித உள்ளமே நாற்றம் அடிக்கின்றதே! ஆனால் பசுவினுடைய மூத்திரமும், பசுஞ்சாணமும் இன்றைக்கும் புனிதமானதாக, பல ஹோமங்களிலும், வழிபாடுகளிலும் பயன்படுத்தப் படுவதாக நம்முடைய ஆரோக்கியத்திற்கு உரித்தான சித்த ஆயுர்வேத மருந்துகளில் முக்கியப் பங்கு பெறுவதாக இறைவன் படைத்துள்ளான் அல்லவா!
பசுவின் மலம் நம் மனமலத்தை நீக்க வல்லதென்றால் பசு எத்தகைய அபூர்வமான தெய்வீகப் பிறவி என்பதை அறிந்து கொள்ளுங்கள்! மாட்டுப் பொங்கல் தினத்தன்று அவரவர் குலதர்மத்திற்கேற்ப பொங்கல் படைத்து கோமாதாவிற்கு அர்ப்பணித்து, கால் நடைகளுக்குத் தானமாக அளித்திடுதல் வேண்டும். மிருத்திகை என்றால் மண்! கங்கை, காவிரி போன்ற புனிதமான ஆற்று மண்ணைக் காணிக்கை செலுத்தி அசுவினி நட்சத்திர தினத்தில் செவ்வாய் ஹோரை நேரத்தில் எடுத்து வந்து சிறிய சந்தனப் பேழையில் வைத்து தினமும் மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம் இட்டு பூஜித்து வந்தால் வயதான காலத்தில் தவிக்காமல் நல்ல முறையில் முதிய வாழ்க்கை சாந்தமாக அமையும்.

காயத்ரீ ஜபிக்கும் நந்திமூர்த்தி
கரிவலம்வந்தநல்லூர்

பசுவின் கால் குளம்படி பட்ட மண்ணிற்கு மகத்துவம் அதிகம். முற்காலத்தில் மகரிஷிகள் யாத்திரை செல்கின்ற பொழுது பசுவின் கால் குளம்படி பட்ட மண்ணை எடுத்து பூஜித்து பத்திரமாக வைத்துக் கொண்டு தினந்தோறும் நெற்றியில் இட்டுக் கொண்டு தம்முடைய யாத்திரையைத் தொடர்வார்கள். இது போன்ற மாட்டுப் பொங்கல் தினமான இன்று பசுமாடு நடக்கும்போது அதனுடைய குளம்பிலிருந்து தெரி(ளி)க்கின்ற மண் துகளை (கோ தூளி) சேகரித்து, அரசு, ஆல், பலா, வேம்பு போன்ற மூலிகா விருட்சங்களால் ஆன சிறு மரப் பெட்டியில் சேமித்து வைத்து அதற்கு பூஜை செய்து தினந்தோறும் இம்மண் துகளை நெற்றியில் இட்டு வந்தால் இது காரிய சித்திக்கு பெரிதும் உதவும். குறிப்பாக வக்கீல்களும், நீதிபதிகளும், கோ தூளி பூஜை எனப்படும் இந்த பசுவின் கால் குளம்படி பட்ட மண்ணை அரசு, ஆல், பலா, வேம்பு போன்ற மூலிகா விருட்சப் பெட்டிகளில் வைத்து பூஜித்து தினந்தோறும் கோர்ட்டுக்கு செல்லுமுன் நெற்றியில் இட்டுச் செல்வார்களேயானால் தர்மம் அவர்கள் பக்கம் தழைப்பதோடு எக்காரணம் கொண்டும் அநீதியும், அதர்மமும் மற்றும் ஊழல், அரசியில் அநீதிகள் அவர்களை அணுகாவண்ணம் இது இரட்சை போல் பாதுகாக்கும்.
கோ தூளி பூஜை
கோமாதாவின் குளம்பு மண் திரவியத்தை நெற்றியில் இட்டுச் சென்றால் நல்ல காரியங்களுக்கு எளிதில் காரிய சித்தி கிட்டும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்திருந்து தினந்தோறும் இப்புனிதமான பெட்டிக்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு பூஜித்து வாருங்கள். முன் யுகங்களில் பசுக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்லும் போது மக்கள் வீதி ஓரமாய் வீழ்ந்து வணங்குவார்கள். அப்போதாவது பசுவின் குளம்படி மண் சிறிதேனும் தம்மீது பட்டு தமக்கு மன சுத்தி கிட்டாதா என்று ஏங்கி அவர்கள் தவம் இருப்பார்கள். இதனால்தான் அக்காலத்தில் ஒரு பசுவின் மதிப்பானது பொன் சவரனை விடப் பலகோடி மடங்கு மதிப்புடையதாக விளங்கி வந்தது. ஆனால் காலப் போக்கில் கோமாதாவின் அருமையை இக்கலியுகம் உணராமல் போய்விட்டது. அதிலும் கலியில் பசுவின் மாமிசத்தையே உண்கின்றார்கள். பசுவின் தோலில் கைப்பை, மணிபர்ஸ், காலணி என்று உபயோகிக்கின்றார்கள் என்றால் என்னே கொடுமையிது! எனவே ஒரு போதும் தோலாலான காலணிகளை அணியாதீர்கள். பசுவின் மாமிசத்தை உண்டு கொடும் பாவத்தைச் சம்பாதித்துக் கொள்ளாதீர்கள்!
ரிஷப பூஜை
இன்று காளை மாட்டிற்குக் குறிப்பாக பாலியம் கழியா மாட்டிற்கு (non – castrated) பருத்திக் கொட்டை, வைக்கோல், புண்ணாக்கு, வாழைப்பழம், புல் அளிப்பது மிகவும் சிறப்புடைய தானமாகும். இந்த ரிஷப பூஜையின் பலாபலன்களில் ஒன்றாக முறையற்ற காம உணர்ச்சிகளை அறவே நீக்குவதற்கும் பிறன்மனை நாடுதல், பிரம்மசர்ய சக்தியிலிருந்து நழுவுதல் போன்ற பெரும் பாவத்திலிருந்து விடுபடவும் இந்த பூஜையானது தக்க பிராயசித்தத்தைக் குரு அருளால் பெற்றுத் தருவதாகும். ஆனால் செய்த தவற்றை மீண்டும் செய்தலாகாது என்ற மன உறுதியைப் பூண்டால்தான் எந்தப் பிராயசித்த வழிமுறையும் பரிபூர்ணமான பலன்களைத் தரும் என்பதை மீண்டும் உணர்த்துகின்றோம்.
நந்தி தந்திடும் நற்பரிகாரங்கள் மாட்டுப் பொங்கல் தினமான இன்று கோயிலில் நந்தியெம் பெருமானுக்கு வழிபாடு செய்திடல் வேண்டும். முதலில் நந்தி அமர்ந்துள்ள இடத்தை நன்கு சுத்தம் செய்யுங்கள். அழுக்கு, எண்ணெய்ப் பிசுக்கு, நாற்றம் எதுவும் இல்லாமல் சுத்தி செய்யும் போது நந்தியெம் பெருமானின் உடலில் எந்த ஆயுதம் கொண்டும் கீறிடாமல் நன்முறையிலே நந்தியெம்பெருமான் சந்நிதியை சுத்தம் செய்தல் வேண்டும். பிறகு தக்க அனுமதியுடன் நந்தியெம்பெருமானுக்கு நல்லெண்ணெய் / தேங்காய் எண்ணெய்க் காப்பிட்டு மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு 108 முறை வலம் வந்து நந்தி பூஜையைச் செய்திடல் வேண்டும்.
பலவிதமான துர் எண்ணங்களாலும், தீய கனவுகளாலும் அவதியுறுவோர், இன்று நந்தியெம் பெருமானின் திருக்காதுகளில் தாம் கண்ட தீய கனவுகளைச் சொல்லியும் வாழ்க்கை ரகசியங்களை எடுத்துரைத்தும் தக்கப் பரிகாரத்தைத் தருமாறு வேண்டுதல் சிறப்புடையதாகும். தாம் கண்ட கனவு நல்லதோ, கெட்டதோ அதனை அப்பட்டமாக நந்தியெம்பெருமானிடம் உரைக்கின்ற நல்ல பழக்கம் அக்காலத்தில் நிலவி வந்தது. நித்ய கர்ம நிவாரணி முறையாக நந்தி பூஜை போன்று அன்றைய கர்ம வினைகளுக்கு அன்றே நிவர்த்தியைத் தேடும் நற்பழக்கம் நம் பெரியோர்களுக்கு இருந்தமையால் தான் அவர்கள் எவ்விதக் கர்ம வினைகளும் இன்றி இன்றைக்குப் பிதுர் தேவர்களாகப் பரிமளிக்கின்றார்கள்.
எனவே தினசரி கர்ம நிவாரணத்திற்கெனவே தினந்தோறும் நந்தியை வலம் வந்து பூஜிப்பது மிகச் சிறப்புடையதாகும். பலவிதமான ரகசியங்களை வாழ்க்கையில் சுமந்து யாரிடம் எதைச் சொன்னால் எது எப்படி மாறுமோ, சங்கடங்கள் வந்து விடுமோ, வாழ்வு பாழாகி விடுமோ என்று அஞ்சி அஞ்சி வாழ்பவர்கள் மாட்டுப் பொங்கலான இன்று நந்தியெம் பெருமானிடம் தங்களுடைய வாழ்க்கை ரகசியங்களை ஓதி அதற்குரிய பிராய சித்தத்தையும் பெற்றுத் தருமாறு வேண்டிடுக! ஸ்ரீநந்தீஸ்வரர் ரிஷப இனத்தின் பாதுகாவலருமன்றோ! நம்மைச் சார்ந்துள்ள உயிரினங்களும் கூட நம்முடைய கர்மவினைகளின் நிவாரணத்திற்கு எவ்வாறு தியாக சீலர்களாக விளங்குகின்றன என்பதை உணர்வதற்காகத்தான் மாட்டுப் பொங்கல் என்ற ஓர் அரிய பண்டிகையை நம் பெரியோர்கள் நமக்குத் தந்து ரிஷப பூஜை, கோ பூஜை, சகல உயிரினங்களுக்கும் காருண்யத் தர்ப்பணம் என்று பல்வகை வழிபாடுகளை மனித குலக் கடமையென அளித்துள்ளார்கள். ஆனால் இவற்றைக் கடைபிடித்தால் தானே பலன்கள் கிட்டும். படித்தால் மட்டும் போதுமா!

ஒன்பது கலச கோபுரம்
திருவையாறு

மாட்டுப் பொங்கல் தினத்தையே பலரும் காணும் பொங்கல் தினம் என்று கொண்டாடுவாதும் உண்டு. தனித்தும் பலர் கொண்டாடுவர். காணும் பொங்கல் என்றால் அதற்குப் பலவிதமான அர்த்தங்கள் உண்டு. மகான்களைக் காணும் பொங்கல், ஆத்ம விசாரம் செய்து செய்து ஆத்மாவைக் காணும் பொங்கல், உடலில் ஒன்பது வாயிலின் மூலமாக நடைபெறுகின்ற கர்மவினைகளின் கர்ம பரிபாலனத்தை உணர்ந்து ஒன்பது கலசங்கள் நிறைந்த ஆலய விமானத்தைக் காணும் பொங்கல், ஆயிரத்தெட்டு பசுக்களைக் (தரிசித்து) காணுகின்ற பொங்கல் என்று ஒவ்வொரு ஆண்டிற்கும் உரித்தான காணும் பொங்கல் மகிமையை சித்புருஷர்கள் விளக்குகின்றார்கள்.

(மகான்களைக்) காணும் பொங்கல்
காணும் பொங்கலாகிய இன்று மகான்களை தரிசிக்கின்ற வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மகான்களைத் தரிசித்தல் என்றால் வேஷ்டி, துண்டை அணிந்து கொண்டு, கை கூப்பி வணங்கி வருதல் மட்டும் போதாது. ஒவ்வொரு மகானும் விரும்புவது என்னவென்றால் தம்மைக் கண்டு வெறுமனே வணங்குவது என்பது அல்ல, தன்னால் இந்த சமுதாயத்திற்கு எந்த வகையிலே பயன்பட முடியும் என்று ஒவ்வொருவரும் ஆத்ம விசாரம் செய்து அன்னதானம், வஸ்திர தானம், காலணி தானம், பழ தானம், கோயில் உழவாரத் திருப்பணி என்ற வகையிலே தம்முடைய சரீரத்தால் சமுதாயத்திற்கு எவ்வகையிலே பயன்பட முடியும் என்று வாழ்ந்து காட்டுவதைத்தான் எந்த மகானும் விரும்புகின்றார்.
இவ்வாறு பலவிதமான சமுதாய இறைப் பணிகளை ஆற்றுவதற்கான ஆசீர்வாதத்தினையே எந்த மஹானும் இன்று அளிக்க விரும்புகின்றார், வெறுமனே பழம், பாக்கு, தேங்காய், பூ வைத்து வணங்குவதை மட்டும் அல்ல. சும்மா சென்று வீழ்ந்து நமஸ்கரித்து வருதலையும் அவர்கள் விரும்புவதில்லை. தன்னை நாடி வருபவர் தம்மால் சமுதாயத்திற்குப் பயன்படும் வகையில் வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதைத்தான் ஒவ்வொரு மகானும் விரும்புகின்றனர். இதனால்தான் கலியில் இறைவனும் தம்முடைய இறைத் தூதர்களாக எத்தனையோ மகான்களையும், யோகியர்களையும், சித்புருஷர்களையும் உலகிற்கு அனுப்புகின்றான். ஆனால் மனித சமுதாயம் அவர்களை அவமதித்து, நிந்தித்து, அவநம்பிக்கையோடு அல்லவா நடத்துகிறது! இவ்வாறு மனவருத்தத்துடன் திரும்பிச் செல்கின்ற மகான்கள் எத்தனையோ எத்தனையோ! ஸ்ரீவள்ளலார் சுவாமிகள் யாது சொன்னார்? “கடை விரித்தேன், வாருவாரில்லை!”
மஹான்களை மதிக்கத் தவறும் காலமிது! இறையருளால் பல அற்புதங்கள் நிகழ்ந்தால் கூட விஞ்ஞானக் கண் கொண்டு அவற்றை சோதிக்கும் மனப்பான்மைதானே பெருகி பக்தியை மாசுபடுத்துகிறது. இன்றைக்கும் கலியுகத்தில் உலகத்தின் பல்வேறு பகுதிகளிலும், நாடுகளிலும், குறிப்பாக இந்தியாவில், அதிலும் குறிப்பாகத் தமிழ் நாட்டில் மகான்களும், சித்தர்களும் கோடிக் கணக்கில் உலவத்தான் செய்கின்றார்கள். ஆனால் எதையும் விஞ்ஞானக் கண் கொண்டு பார்ப்பதால், அவர்கள் இலைமறை காயாகவே நம்மிடையே சமுதாயத்தில் வாழ்கின்றார்கள். ஆழ்ந்த குரு நம்பிக்கையுடன் தம்மை நாடுவோர்க்குத்தான் அவர்கள் தம்மை உணர்வித்துக் கொள்கின்றார்கள். மகான்கள் என்றும் மகான்களே! சித்தர்கள் என்றும் சித்தர்களே!
ஆனால் மகான் என்றும் சித்தர் என்றும் தெளிதல் அவரவர் தாமே உணர வேண்டியதாகும். எனவே, எந்த மகானையும் சித்புருஷரையும் நாமே கண்டறிந்து, ஆத்ம விசாரம் செய்து ஆழ்ந்த நம்பிக்கையுடன் தக்க ஆன்மீக வழிகாட்டியின் துணையுடன் வாழ்வதுதான் சிறப்புடையதாகும். எனவே, சற்குருவைக் காண்கின்ற கடமை உலகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இதை உணர்ந்தால் தான் அவனுடைய பிறவிப் பிணி தீரும். இல்லையேல், அவநம்பிக்கையோடு, சந்தேகத்தோடு அரைகுறை இறை பக்தியோடு வாழ்ந்து ஜன்மங்களைப் பெருக்கத்தான் தலைவிதி அமையும். இனியேனும் தெளிந்து செயல்படுங்கள்!

ஸ்ரீகசவனம்பட்டி சுவாமிகள்
ஜீவசமாதி

எத்தனை எத்தனை மகான்கள்!
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. சற்குருவை அடைய வேண்டும் என்று தீவிரமான வைராக்கியத்துடன் நீங்கள் திருஅண்ணாமலையை கிரிவலம் வருவீர்களேயானால் உங்களுக்குரித்தான சற்குருவை இறைவனே உங்களிடம் அனுப்பி வைப்பான். குரு இல்லாத வாழ்க்கை குருட்டு வாழ்க்கையே! ஸ்ரீவள்ளலார் சுவாமிகள், ஸ்ரீபாடகச்சேரி சுவாமிகள், காஞ்சீபுரம் ஸ்ரீபோடா சுவாமிகள் (ஸ்ரீசிவசாமி சுவாமிகள்), ஸ்ரீபூண்டி சித்தபிரான், ஸ்ரீபரமாச்சார்யாள், மதுரை ஸ்ரீகுழந்தையானந்த சுவாமிகள், திருவாரூர் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி சுவாமிகள், பாண்டிச்சேரி அருகே சின்னபாபு சமுத்திரத்தில் ஜீவசமாதி பூண்டிருக்கும் ஸ்ரீபடேஸாஹிப், பாண்டிச்சேரி ஸ்ரீஅன்னை எனக் கலியுகத்தில் நம்மிடையே  வாழ்ந்து என்றும் வாழும் ஏகாந்த ஜோதிகளாய் விளங்கும் மகான்களும், சித்தர்களும் எத்தனை எத்தனையோ!
காணும் பொங்கல் தினமாகிய இன்று இவர்களுடைய ஜீவ சமாதிக்குச் சென்று தரிசித்து உங்களுடைய சரீரத்தால் இந்த சமுதாயத்துக்குப் பயன்படும் வகையில் வாழ்வதற்கு தக்க குரு அருளையும் நிறைந்த சற்குருவையும் பெற்றுத் தருமாறு வேண்டுங்கள். குருவாய் உருவாய் வாழ்ந்து, அருவமாய் இன்றைக்கும் ஆசீர்வதிப்பதே இந்த மகான்கள் குழாம் எல்லாம்! இவர்களுடைய பரிபூரண ஆசியால், உங்களுக்குரித்தான சற்குரு நிச்சயமாகக் கிட்டுவார்! இது திண்ணம்! இதனை சத்திய வேதவாக்காகக் கொண்டு தீவிர மனோ வைராக்யத்துடன் ஆழ்ந்த நம்பிக்கையுடன் செயல்படத் தொடங்குங்கள் (மகான்களைக்) காணும் பொங்கலாம் இத்திருநன்னாளில்!

பஞ்சவர்ணப் பாறை

பிரமாதி தை மாதப் பௌர்ணமி அண்ணாமலை கிரிவல மஹிமை
இன்றைக்கு உலகத்தில் காணப்படுகின்ற அனைத்து சுயம்பு லிங்க மூர்த்திகளும் திருஅண்ணாமலை ஆதாரப் பீடத்திலிருந்து தோன்றியவையே! உலகின் தெய்வீக மையமே திருஅண்ணாமலை! பிரபஞ்சத்தின் ஆன்மீகத் தலைமை அகமே திருஅண்ணாமலை! சுயம்பு லிங்க மூர்த்திகள் அந்தந்த யுகநியதிகளுக்கு ஏற்பவே பூமியிலிருந்து தோன்றும்! மீண்டும் உட்சென்று விடும். அனைத்தும் எழுவதும், மறைவதும் அருணாசலத் திருபூமியில்தான்! எவ்வாறு திருக்கயிலாய மலையில் உலகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களின் விமானங்களின் பிரதிபிம்பங்களைக் காண்கின்றோமோ அதே போல உலகத்தில் வழிபடப் பெறும் அனைத்து லிங்க மூர்த்திகளையும் திருஅண்ணாமலைக் கிரிவலத்தில் நீங்கள் கண்கூடாக மலை தரிசன வடிவங்களில் காணலாம். திருஅண்ணாமலையில் நீங்கள் காண்கின்ற ஒவ்வொரு சிறு மண்ணும், சிறுகல்லும், பாறையும், குன்றும் ஒவ்வொன்றும் ஜோதிப் பிரகாசம் நிறைந்த சுயம்பு லிங்க மூர்த்தியே! சுயம்பு லிங்கங்களுக்கெல்லாம் சுயம்பு மூர்த்தியாக, சுயம்பு மூர்த்திக்கெல்லாம் ஆதாரமாய், அனைத்திற்கும் ஆதியும், அந்தமும் ஆகி ஆனால் ஆதியும் அந்தமுமில்லாப் பரம்பொருளாய் பரஞ்ஜோதியாய் ஆனந்த சக்தியாய் ஜோதி ப்ரகாசமாய், அக்னிப் பிழம்பாய், சச்சிதானந்தப் பரம் ப்ரம்மமாய் விளங்குவதே திருஅண்ணாமலை ஆகும். திருஅண்ணாமலையை என்று கிரிவலம் வருதல் வேண்டும்?
பலரும் கேட்கின்ற கேள்வி இது! எந்த நாளிலும் வரலாம், எந்த நேரத்திலும் திருஅண்ணாமலை கிரிவலம் சிறப்பானதே, ஏனென்றால் கோடானு கோடி தேவ மூர்த்திகளும் சித்புருஷர்களும், திருஅண்ணாமலையை கிரிவலம் வராத நேரமே இல்லை. நாளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஒவ்வொரு விநாடியிலும், நம்மால் கண்டறிய முடியாதபடி ஒவ்வொரு விநாடிக்குள்ளும், பகுத்து உணர இயலாத கால நொடிப் பொழுதுக்குள்ளும், எந்நேரத்திலும் தேவாதி தேவ மூர்த்திகளே திருஅண்ணாமலையை கிரிவலம் வந்த வண்ணம் தான் இருக்கிறார்கள்!
எனவே இன்று நீங்கள் கிரிவலம் வருவது தேவாதி தேவ மூர்த்திகளின் திருப்பாதங்கள் பதிந்த திருச்சாலையே ஆகும். சுயம்புலிங்க மூர்த்தி என்றால் நம் கண்ணுக்குத் தெரிகின்ற வகையில் வெறும் கல் உருவம் மட்டுமல்ல. கண்ணுக்குத் தெரியாமல் அல்லது ஸ்படிகலிங்க சூட்சுமம் போல பரவெளியில் தான் கோடானு கோடி லிங்கங்கள்தான் திருஅண்ணாமலையைச் சுற்றி நிறைந்துள்ளன. நீங்கள் சாய்ந்து உரசிச் செல்வதும் சுயம்பு லிங்க மூர்த்திகளின் திருமேனிகளைத் தழுவிய வண்ணம்தான்! எனவேதான், திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் எங்கும், என்றும் நீக்கமர சூட்சும, லிங்க வடிவுகள் நிறைந்து இருப்பதால் தான், காலணிகளை அணிந்து கிரிவலம் செல்லுதல் கூடாது என்ற நியதியும் வந்துள்ளது. ஆமாம் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவும், ஸ்ரீமகா விஷ்ணுவும், ஏன் ருத்ர மூர்த்தியுமே ஆத்ம உலா வருகின்ற திருச்சாலை என்றால், திருஅண்ணாமலை கிரிவலப் பாதையின் மகிமைதான் என்னே! என்னே!
அரனை, அரியை அறியார்!
நீங்கள் இன்றைக்கும் கிரிவலம் வருகின்ற போது, உங்களுக்கு முன்னாலும், பின்னாலும் பக்கவாட்டிலும், எத்தனை கோடி தெய்வ மூர்த்திகளும், மஹரிஷிகளும், சித்தர்களும் சூட்சும வடிவில் உங்களுடன் சேர்ந்து கிரிவலம் வருகின்றார்கள் என்பதை உங்களால் உணர முடியவில்லையே! எனவே இதனை நீங்கள் உள்ளூர உணர்ந்து ஆழ்ந்து அனுபவித்துச் செல்லும் போதுதான் கிரிவலத்தின் மஹாத்மியம் புரியும்! ஏதோ நாம் மட்டும் செல்கின்றோம் அல்லது ஆயிரக்கணக்கான மக்களுடன் கிரிவலச் சாலையில் ஊர்ந்து செல்கின்றோம் என்று ஒரு போதும் எண்ணாதீர்கள்.
நீங்கள் உங்கள் பக்கத்தில் காண்பது மனித உருவில் உள்ள மஹரிஷியாகக் கூட இருக்கக்கூடும். சிரஞ்சீவியாய் விளங்கும் எந்த மஹரிஷியும் கலியுகத்தில் தம்மை எளிதில் வெளிக்காட்டிக் கொள்வது கிடையாது. ஏனென்றால் ஸ்ரீவசிஷ்ட மஹரிஷி திருஅண்ணாமலையில் இன்று கிரிவலம் வருகின்றார் என்று அறிவித்து விட்டால், அதனை விஞ்ஞானக் கண்ணோடு எப்படி வருகிறார். ஏன் வருகிறார் என்று சோதிப்பதற்குதானே இந்தக் கலியுகம் காத்துக் கிடக்கின்றது. ஆனால் அக்காலத்திலோ, ஸ்ரீவசிஷ்ட மாமுனி விஜயம் என்றால் அவரின் மேன்மையும் பெருந்தன்மையும் புரிந்து, அவர் காலடியில் வீழ்ந்து ஆசி பெறக் காத்துக் கிடந்தார்கள் கோடிக்கணக்கான மக்கள்!
என்றைக்கு விஞ்ஞானக் கண் புகுந்து அறியாமையைப் புகுத்தி விட்டதோ, அங்கு விளைந்தது விபரீதம்! இதனால்தான் மஹரிஷிகளும், சித்புருஷர்களும் கூட, தங்களுடைய உருவத்தை வெளிக்காட்டாது மக்களோடு மக்களாய் வேஷ்டி, சட்டை அணிந்தவர்களாய், பேண்டும், சட்டை அணிந்தவர்களாய் நம்மோடு நம்மவராய் வலம் வருகின்றார்கள், ஆனால் இதை பகுத்தறிவோடு உணர்கின்ற ஆழ்ந்த தெய்வீகச் சிந்தனையை நாம் பெற்றிடவில்லை, அவ்வளவே! என்னே மடமையிது! இவ்வாறாக ஒவ்வொரு ஆண்டிலும் ஒவ்வொரு மாதப் பௌர்ணமி தோறும் திருஅண்ணாமலையில் நிகழ்கின்ற விந்தைகள் தான் எத்தனை! எத்தனை!
ஏன், தினந்தோறும் திருஅண்ணாமலையில் ஒவ்வொரு வினாடி நேரத்திலும் நிகழ்கின்ற தெய்வீக அற்புதங்கள் தான் எத்தனை! எத்தனை! இதனை இன்றைக்கும் ஸ்ரீஅகத்தியப் பெருமான் அருணாசல மகிமையைப் பலகோடி கிரந்தங்களாய்ப் படைத்து வருகின்றார் என்றால், எத்தனை கோடி மகாபாரதங்களாய், இராமாயணங்களாய் அது விரிந்து கிடக்கும் என்றும் சற்றே சிந்தித்துப் பாருங்கள்! அந்தக் கிரந்தங்களிலிருந்து குருவாய் மொழியாக, எழுதாக் கிளவியாகப் பெற்றவைதாம் இன்றைக்குக் குரு அருள்மொழிகளாக ஸ்ரீஅகஸ்திய விஜய ஆரமாக உங்கள் கரங்களை அலங்கரிக்கின்றது. கண்ணிற் பொலியும் இறைமொழி ஆரமிது!
பிரமாதி தைப் பௌர்ணமி
இனி பிரமாதி ஆண்டின் வரும் தை மாத உத்தராயணப் பௌர்ணமிக்கு உரித்தான விசேஷ அம்சங்கள் என்னவென்று சற்றே நாம் அறிவோமா! தாவரங்களும், விலங்கினங்களும் ஒரே சமயத்தில் படைக்கப்பட்டபொழுது தாவர வகையில் முதலில் நெல் (அரிசி) தானியமும், பறவை இனங்களில் பராசக்தியின் திருமுடியில் சொரிந்த புஷ்பத்திலிருந்து செரிந்தவையே பஞ்சவர்ணக் கிளிகளும்! ஆதிமூலப் பஞ்சவர்ணக் கிளியானது முதலில் அம்பிகையின் தோளில் அமர்ந்து பஞ்ச வேதங்களையும் கிரகித்து, அனைத்துக் கோடி மந்திரங்களையும், வேத மொழிகளையும் கலைவாணியின் அருளால் உய்த்துணர்ந்து தம்முடைய முதல் வேதப் பரிமொழியை உரைத்த தலமே திருஅண்ணாமலையில் திகழும் பஞ்சவர்ண லிங்கப் பாறையாகும். திருஅண்ணாமலையின் மலைத் திருமேனியில் கோடிக்கணக்கான பாறைகள் உள்ளன.
ஒவ்வொன்றிற்கும் ஒரு திருப்பெயரும், தனி மகிமையும் உண்டு. எத்தனையோ கோடி மஹரிஷிகள் தரிசித்த, தவமிருந்த யோக மண்டலம் பூண்ட தலமன்றோ! எந்த யுகத்தில் எந்தத் திருக்கோயிலில் எந்த சுயம்புப் பாறைகளில் எந்த சுயம்பு லிங்கம் தோன்ற வேண்டும் என்ற நியதியும் உண்டு. இதனை ஸ்ரீவிஸ்வகர்மா உள்ளிட்ட அனைத்து தேவாதி தேவ மூர்த்திகளும் நிர்ணயித்து அதன்படி மூலஸ்தான மூர்த்திகளை எழுந்தருளச் செய்கின்றார்கள். இவ்வாறு பஞ்சவர்ண லிங்கப் பாறை தோன்றுகின்ற நாளாக விளங்குவதே பிரமாதி ஆண்டின் தை மாதப் பௌர்ணமி தினமாகும். எத்தனையோ கோடி யுகங்களுக்கு முன் முதன் முதலாக பஞ்சவர்ணக் கிளி படைக்கப்பட்ட போது அது தன்னுடைய முதல் செங்கால்களை ஊன்றிய தலமும், முதல் ஓங்கார வேதப் பரிமொழியினை ஓதிய இடமும் பஞ்சவர்ண லிங்கப் பாறையாகும்.
கலியுகத்தில் தேவரகசியமெனில் எது எங்கு இருக்கின்றது என்பது தானே முதலில் அனைவருக்கும் எழுகின்ற கேள்வி, தெரிந்து  என்ன தான் செய்யப் போகின்றீர்கள்? அதையும் உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். இந்த ஆதி மூல பஞ்சவர்ண சுயம்பு லிங்க தேவ மூர்த்தியே அனைத்தையும் தரவல்லவர். அளப்பரிய சக்தி வாய்ந்தவர்! உள்ளூர் ஆலயத்தில் சுயம்பு லிங்கத்தைத் தரிசித்தால் கூட மனம் அமைதி பெறாது, எங்கெங்கோ மனம் அலைகின்ற வகையில் அரை குறை பக்தி தானே நம்மிடம் நிலவுகின்றது. பின் தேவ ரகசியமறிந்து என்ன செய்யப் போகிறோம்!
சாட்சாத் பரம்பொருளே அண்ணாமலையாக வீற்றிருக்கின்றார் என்று நம் உள் உணர்வு சொன்னாலும், பலரும் எடுத்துரைத்தாலும், பெரியோர்களே விளக்கிச் சொன்னாலும் கூட திருஅண்ணாமலையைப் பரம்பொருளின் அம்சமாகக் கருதுகின்ற அளவிற்கு உன்னத பக்தி நம்மிடம் இருக்கின்றதா என்ன? உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். உள்ளூரில் எழுந்தருளியுள்ள சுயம்பு லிங்க மூர்த்தியே உங்களுக்கு அனைத்துவிதமான முக்தி, மோட்ச நிலைகளைத் தரவல்லவர் என்றாலும் அந்த நம்பிக்கையை நீங்கள் உங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றீர்களா?
ஏதோ கொஞ்சம் இறை நம்பிக்கை இருக்கின்றது. இறைவனை நம்புகின்றோம், சென்றோம், வந்தோம், வழிபட்டோம் என்று தானே வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். ஆதிமூலப் பரம்பொருளே நீங்கள் வாழும் ஊரில் சுயம்பு லிங்க மூர்த்தியாக சிறிய வடிவில் எழுந்தருளியிருக்கின்றார் என்றால் எந்த அளவு கருணை கொண்டு நாமிருக்கும் இடத்தில் அந்தப் பரம்பொருள் குடி கொண்டிருக்கிறார் என்பதை என்றேனும் உணர்ந்திருக்கின்றீர்களா! அது போலத்தான் பஞ்சவர்ண லிங்கப் பாறை திருஅண்ணாமலையில் எங்கு இருக்கின்றது என்பதை அறிந்திடினும் கூட அதை உய்த்து உணர்வதற்கு ஆன இறைப் பகுத்தறிவை நாம் பெறவில்லையே, என்ன செய்வது?
பார்த்தும் உணர்ந்தோமா பரந்தாமனை!
சாளக்கிராம மூர்த்தியாக பத்ரிநாத்தில் ஸ்ரீபத்ரிநாத ஸ்வாமி அருள்பாலிக்கின்றார் என்று மஹரிஷிகளும், சித்தர்களும் பெருமாளின் மஹிமையை எடுத்துச் சொன்னாலும் கூட ஏதோ கேதார்நாத், பத்ரிநாத் சென்றோம், வணங்கினோம், வந்தோம் என்ற எண்ணம் தான் ஏற்பட்டு இருக்கின்றதே தவிர பத்ரிநாத், கேதார்நாத்திற்குச் சென்று வந்த பின்னர் வாழ்க்கையில் எந்தவிதமான உன்னத உத்தம மாற்றமாவது ஏற்பட்டு இருக்கின்றதா என்று உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள்.. எனவேதான் இறைப் பரம்பொருளை எந்த வடிவத்தில் எடுத்துக் காட்டினாலும், அதனைப் பரிபூர்ணமான முழுமையுடன் மதிப்பதற்கான, உணர்வதற்கான பக்தி நிலையை நாம் பெறவில்லை என்பதை நமக்கு உணர்விப்பதும், பஞ்சவர்ண லிங்கப் பாறை மகத்துவத்தின் ஓர் அம்சமாகும். எனவே நம்மிடம் இருக்கின்ற இறை நம்பிக்கை போதாது, அது மேலும் விருத்தி பெற வேண்டும், ஆழ்ந்து வேர் ஊன்ற வேண்டும், பக்தி நிலை மேம்பட வேண்டும் என்பதை எல்லாம் குறிப்பிட்டுச் சுட்டிக் காட்டுவதற்காகத்தான் பலவிதமான விளக்கங்களை அளிக்கின்றோம்.
திருஅண்ணாமலை பஞ்சவர்ண லிங்கப் பாறை
பிரமாதி வருட தை மாதப் பௌர்ணமியின் போது பல கோடி சூரியப் பிரகாசத்துடன் ஒளிர இருக்கின்ற பஞ்ச வர்ணப் பாறையின் தரிசனத்தைப் பெற கோடானு கோடி மஹரிஷிகளும், சித்புருஷர்களும், யோகியர்களும், ஞானிகளும், முமூட்சுக்களும், பிதுர் தேவ மூர்த்திகளும், தேவாதி தேவ கணங்களும் பஞ்சவர்ணக் கிளி ரூபத்தில் தான் திருஅண்ணாமலைத் திருத்தலத்திற்கு வந்து பஞ்சவர்ண லிங்கப் பாறையின் தரிசனத்தைப் பெற்று அதன் அனுகிரக சக்திகளை நல்வரங்களாக கிரிவலம் வரும் அடியார்களுக்கு அள்ளித் தரக் காத்திருக்கின்றார்கள் இவர்கள் அனைவருமே பஞ்சவர்ணக் கிளி வடிவில் தான் இந்த யுகநியதிக்கு ஏற்ப திருஅண்ணாமலையை கிரிவலம் வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதுவரையில் சித்தர்களுடைய பரிபாஷையில் பலவிதமான தரிசனங்களைப் பற்றி விளக்கியிருந்தாலும், இந்தப் பஞ்ச வர்ணப் பாறையின் தரிசனத்தைப் பற்றிப் பக்த கோடிகளுக்குப் புரியும் வகையிலே எவ்வகையிலே பஞ்சவர்ணக் கிளிகள் காட்சி தரும் எப்படிப்பட்ட அற்புதமான தரிசனத்தைப் பஞ்சவர்ண லிங்கப் பாறை தரக் காத்திருக்கின்றது என்பதை உணர்விக்கும் முகமாகத்தான், கோடிட்டுக் காட்டும் வகையில் இவ்விதழின் அட்டைப் பட விளக்கம் அமைகின்றது. இதைத்தான் வாரண தீபிகையாக வண்டிக்கார சித்தர் என்னும் அற்புத சித்புருஷரின் கருணையால் காட்டுப்பாதையில் சென்று கிட்டிய பஞ்சவர்ண லிங்கப் பாறை தரிசனத்தையே, இவ்விதழின் அட்டை வர்ணப் படமாய் ஒளிர்ந்திட பெரியோர்கள் பெருங்கருணை புரிந்துள்ளனர்.
பிரபஞ்சத்தில் பறவையினங்கள் படைக்கப்பட்ட போது முதன்முதலாக பசுங்கிளியாகத் தோன்றி பராசக்தியின் வலது தோளில் அமர்ந்து பஞ்சபூத சக்திகளின் கிரணங்களை உய்த்து உணரும் பாக்யத்தைப் பெற்றது. இப்பசுங்கிளியே பஞ்ச வேதங்களின் வேத, தேவ சப்த ஒளிகளைக் கிரஹித்து சிருஷ்டிக்கான பீஜாட்சர மந்திரங்களின் சாகித்யத்தையும் தாங்கி கும்பவர்ண முறையில் கிராத மூர்த்தியாய் சிவபெருமான் சிருஷ்டியைத் தொடங்கிய பொழுது பஞ்சவர்ணக் கிளியாய் வடிவெடுத்து ஓம்காரப் பரிமொழி வேத ஒலியுடன் பூமியில் வந்து இறங்கியது. அது அவ்வாறு தன்னுடைய செங்கால்களை ஊன்றிய முதல் திருத்தலமே திருஅண்ணாமலையிலுள்ள பஞ்சவர்ண லிங்கப் பாறையாகும்.
இந்த இறை லீலைதனை மீண்டும் பஞ்சவர்ண லிங்கப் பாறை தரிசனப் பெரும் உற்சவமாகக் கொண்டாடும் வண்ணம் இந்தப் பிரமாதி ஆண்டு தைப் பௌர்ணமி அன்று பஞ்சவர்ணக் கிளிகளாய் மஹிரிஷிகளும், சித்தர்களும், தேவாதி தேவர்களும் வடிவு கொண்டு சுயம்பு லிங்க மூர்த்திகளுக்கெல்லாம் ஆதிமூல சுயம்பு மூர்த்தியாய் விளங்குகின்ற பஞ்சவர்ண லிங்கப் பாறையின் தரிசனத்தைப் பெற்று பூஜித்து அதன் பலாபலன்களை நமக்கு அனுகிரஹ சக்திகளாகப் பெற்றுத் தருகின்றார்கள். எனவே பிரமாதி வருட தைப் பௌர்ணமி அன்று திருஅண்ணாமலையை கிரிவலம் வருவது வாழ்க்கையில் பெறுதற்கரிய பாக்கியம் ஆகும்.
பஞ்சவர்ண லிங்கப் பாறை எப்படி இருக்கும்? அதில் பஞ்ச வர்ணக் கிளி ரூபத்தில் எவ்வாறு மஹரிஷிகள், சித்தர்கள் எப்படி வடிவெடுக்கின்றார்கள் என்பதை உணர்விக்கும் முகமாகவும்., இதனை மனப்பூர்வமாக நீங்கள் ஆத்ம விசாரம் புரியும் பொருட்டுந்தான் பஞ்சர்வர்ண லிங்கப் பாறையின் வடியை உள்மனதில் கிரிவலத்தின் போது வழிபடத்தான் அட்டைப்படத்தில் வாரண தீப வடிவு வர்ணப் படமாகக் காட்டியுள்ளோம்., ஏனென்றால் எது எப்படியிருக்கும் என்பதைக் கோடிட்டுக் காட்டினால் தான் நம் மனம் அதை எளிதாகப் பற்றி ஆத்ம விசாரம் செய்து அதன் நிதர்சனமான தரிசனத்தைப் பெறத் துணை புரியும்.
திருஅண்ணாமலையில் வராஹ சித்திக் கோட்டம்
திருஅண்ணாமலையில் கிரிவல புனித பூமியில் வராஹ சித்திக் கோட்டம் என்று அழைக்கப்படும் “பன்றிப் பள்ளம்” என்ற அற்புதமான பகுதி உண்டு. இதிலிருந்து மேற்கே செல்வோமாயின் சங்குவல சிலா வடிவு காணப்படும். இதில் எப்போதுமே மழைத்துளிகள் அமிர்தத் திட்டாய்த் துலங்கும். இவைதாம் அமிர்த மழைத் துளிக் கற்றைகளாம். இந்த அமிர்த வாருணத் துளிகளைச் சுவாசிக்கின்ற விசேஷமான பிரம்ம தாண்டவ சூரிய, சந்திர கிரணங்கள் அனைத்துமே இவற்றை ஸ்வீகரித்து ஒரு மித்தாகக் குவிக்கின்றது, எதன்மேல்? இவையாவும் பல கோடி சூரியப் ப்ரகாசத்துடன் பொலிந்திடும் பஞ்சவர்ண லிங்கப் பாறை என்றழைக்கப்படும் பஞ்சவர்ணப் பரஞ்ஜோதி சிலா வடிவின் மேல்பட்டுப் பிரதிபலிக்கின்றன.
இந்தத் திருநிகழ்ச்சி கூடுகின்ற தினம்தான் பிரமாதி வருட தை மாதப் பௌர்ணமியாகும். எப்போதுமே பஞ்சர்வர்ண லிங்கப் பாறை திருஅண்ணாமலையில் பொலிந்திட்டாலும் உத்தம பக்தியுடையோர்க்கும், குருஅருள் பூண்டோர்க்கும் இந்த சுயம்பு ஜோதிப் பாறை கண் கூடாய்த் தெரிகின்ற காலம்தான் பிரமாதி வருடத் தை மாதப் பௌர்ணமி தினம் ஆகும். இந்தப் பஞ்சவர்ண பாறையில்தான் (பஞ்சவர்ணப் பரஞ்ஜோதி சிலா வடி) இங்கு குழுமுகின்ற கோடிக்கணக்கான சித்புருஷர்கள், மஹரிஷிகள், யோகியர்கள், முமூட்சுக்கள், பித்ரு தேவர்கள், தேவாதி தேவ மூர்த்திகள் யாவருமே பஞ்சவர்ணக் கிளி வடிவில் பஞ்சவர்ண லிங்கப் பாறை முன் அமர்ந்து, தியானித்து, பூஜித்து பஞ்ச வர்ண சுயம்புலிங்க மூர்த்தியின் அனுகிரஹத்தைப் பெறுகின்றார்கள். ஏனைய தினங்களில் எல்லாம் பஞ்சவர்ண ஜோதி லிங்க சிலா வடிவமானது மலையோடு மலையாய்ப் பதிந்திருக்கும். இந்த அற்புதமான தினத்தில் தான் 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகின்ற இத்தருணத்தில் தான் மிகுந்த பிரகாசத்துடன் பஞ்சவர்ண லிங்கப் பாறையாக ஜோதிப் பிரகாசத்துடன் ஒளிர்கின்றது.
இந்த சங்கு வலத் திட்டில் திரண்டிருக்கும் அமிர்தத் துளிகள் யாவும் அமிர்தப் பொழிவுகளெனக் கண்டோமல்லவா! இந்த அமிர்த மழைத் திரட்டின் தெய்வீக சக்தி காரணமாகப் பிரபஞ்சத்தில் மலர்கின்ற அனைத்துக் கோடி சூரிய, சந்திர கிரஹங்களின் ஒளிப்பிரகாசத்தை ஈர்த்து ஒளிக்கற்றையாய்ப் பிரதிபலித்துக் குவித்து இந்நாளில் பஞ்சவர்ண லிங்கப் பாறையின் மேல் செலுத்தி அதனை சுயம்புலிங்க தரிசன மூர்த்தியாகக் காண வைப்பதே இந்த சங்குவல சிலாக்கல்லின் தெய்வீக தன்மையாகும். இது பரிபூரணமாக நிறைவு பெறுகின்ற நாளே புனிதமான பிரமாதி வருட தை மாதப் பௌர்ணமி தினமேயாகும்.
நம்பிக்கையே நல்வரங் கூட்டும்!
பொதுவாக ஒருவருடைய வாழ்நாளில் ஒரே ஒரு முறை கிட்டுகின்ற இந்த பிரமாதி ஆண்டு வைபவமானது நிச்சயமாக மானிடப் பிறவியில் பெறுதற்கரிய நாளாகும். இவ்வரிய “பஞ்சவர்ண சிலாக்கல்லின் தரிசனம் நமக்கு கிட்டுமா, அதற்குரிய உத்தம பக்தி நிலையை நாம் பெற்றுள்ளோமா”, என்றெல்லாம் எண்ணிக் கூடுகின்ற போது இதனை குருஅருளால் தாமாகவே பெற்று விடுவோம். அதுவரையில் இம் மொழிகளை, குருவாய் அருள் மொழித் திரட்டை நம்பிக்கையுடன் ஏற்று திருஅண்ணாமலையை கிரிவலம் வருவோர்க்கு பஞ்சவர்ண பரஞ்ஜோதி சிலாவடிவின் தெய்வீகக் கிரணங்கள் யாவும் அவரவருடைய பிராரப்த, சஞ்சித கர்ம பலன்களாக, காரிய சித்திக் கதிர்களாக, முறையான நல்ல பிரார்த்தனைகளை நிறைவேற்றுகின்ற மந்திரக் காரிய கூட்டுக் கிரணங்களாக அடியார்களின் உடலிலும், உள்ளத்திலும் சேர்கின்றன. உறுதியான ஆழ்ந்த இறை நம்பிக்கையுடன் இன்று அருணாசலக் கிரிவலத்தைக் கடைபிடிப்போர்க்கு பஞ்சவர்ண லிங்கப் பாறையின் தரிசன பலா பலன்கள் அவரவர் நம்பிக்கையின் விகிதாச்சாரத்தைப் பொறுத்து நிச்சயமாகக் கிட்டிடும்.
கிடைத்தற்கரிய பிரமாதி வருட தை மாத பௌர்ணமி திருஅண்ணாமலை கிரிவலப் பலன்கள்
திருஅண்ணாமலையை எந்நேரத்திலும், எந்நாளிலும், எப்போதும், எவ்வகையிலும் கிரிவலம் வந்திடலாம் என்பதைத் தெளிவுடன் இப்போது நீங்களே மற்றவர்களுக்கும் எடுத்துரைக்கக் கடமைப்பட்டு விட்டீர்கள் அல்லவா! பல்லாயிரக் கணக்கான மகான்களும், மஹரிஷிகளும், சித்புருஷர்களும் எப்போதும் எந்நேரமும் வலம் வந்து கொண்டு இருக்கின்ற புனித பூமி இது என்று இப்போது நீங்களே நன்றாக உணர்கின்றீர்கள்! எனவே, எந்த ஹோரையிலும், எந்தக் கிழமையிலும், எந்த யோக, கரண நேரத்திலும் கிரிவலம் வந்தாலும், எவ்விதமான பலன்கள் கிட்டுகின்றன என்பதை அகஸ்திய கிரந்தங்கள் அரும்பெரும் புராணங்களாக, இதிகாசங்களாக நமக்கு எடுத்து உரைக்கின்றன. குறிப்பாக பிரமாதி வருட தைமாதப் பௌர்ணமி கிரிவலப் பலன்களாக பஞ்சவர்ண லிங்க பாறையின் தரிசனமும், இதன் ஆன்மப் பரிமாணமாக பஞ்சவர்ண பரஞ்ஜோதி சிலா வடிமூர்த்தியின் தெய்வீக சக்திகளும், பலவிதமான காரிய சித்திகளாக, பிரார்த்தனா பலித சக்திகளாக கிரிவல அடியார்களுக்குக் கிட்டுகின்றன.
1. குறிப்பாக, தம்முடைய குழந்தைகள் மந்த புத்தி உடையவர்களாக இருக்கின்றார்களே, அவர்கள் எவ்வகையில் வாழ்ந்து நல்வாழ்வைப் பெறப் போகின்றார்களோ என்று ஏங்கி எண்ணித் தவித்துத் தம் பிள்ளைகளைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கும் தாய், தந்தையர்கள், பிரமாதி வருட தைமாதப் பௌர்ணமியன்று தம் குழந்தைகளோடு திருஅண்ணாமலையை கிரிவலம் வருவார்களேயானால், அவர்களுடைய குழந்தைகள் நல்லொழுக்கத்துடன் மிளிர்ந்து நன்முறையிலே கல்விச் செல்வம் பெற்று நல்வாழ்க்கையைப் பெறுவதற்கு இப்பௌர்ணமி கிரிவலம் பெரிதும் உதவுகின்றது.
2. தம்முடைய பெண் பிள்ளைகளின் நல்வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படும் தாய்மார்களும் ஏராளம், ஏராளம்! “இது எப்படிப் படிக்கப் போகின்றதோ, எங்கே, எந்த வேலை கிடைக்கப் போகின்றதோ, எத்தகைய மணமகன் வரப்போகின்றானோ”, என்று வருந்திப் புலம்பி நாள்தோறும் வேதனையுடன் வாழ்ந்து வருகின்ற பெற்றோர்கள் இன்று ஆழ்ந்த நம்பிக்கையுடன் ஸ்ரீஅருணாசலப் பெருமானாம் திருஅண்ணாமலையாரின் பேரருளை வேண்டி, உள்ளம் கதறி, அழுது, உன்னத பக்தி நிலையுடன் உண்மையான உள்ளத்துடன் கிரிவலம் வருவார்களேயானால் அவர்களுடைய பெண் பிள்ளைகளுக்கான நல்வாழ்வு அமைந்திட இறைவன் பேரருள் புரிவான். இது நிச்சயம்!
3. எத்தனையோ குடும்பங்களில் காணாமல் போன் பிள்ளைகளும் சகோதர, சகோதரிகள், பெரியோர்களும் உண்டு. தேர்வில் தோல்வியுறுவது முதல், வேலை கிடைக்காதது, வீட்டில் பெற்றோர்கள் திட்டுவார்கள், வறுமை, இல்லத்தார் கொடுமை என்று எத்தனையோ காரணங்களினா வீட்டை விட்டுப் பிரிந்தவர்கள் எங்கோ தட்டுத் தடுமாறி வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருப்பார்கள். எத்தனை வருடங்கள் ஆனாலும் அவர்களுக்கு என்ன ஆயிற்று, ஏது ஆயிற்று என்று தெரியாது மனம் வெந்து புலம்புகின்ற, குடும்பத்தவரையும் நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம் அல்லவா! இத்தகையை பிரிவுத் துன்பங்களில் வாடுவோர் இந்தப் பிரமாதி தை மாதப் பௌர்ணமியன்று திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து கீரை வடையை அன்னதானமாக திருஅண்ணாமலையிலோ, தங்கள் சொந்த ஊரிலோ, தொடர்ந்து அளித்து வருவார்களேயானால், தொலைந்து போனவர்களைப் பற்றிய நற்செய்திகள் தாமாகவே தேடிவரும். இவர்கள் புதன்கிழமை தோறும் ஸ்ரீஹயக்ரீவரை வழிபட்டுக் கொள்ளு தானியத்தால் ஆன வடையையோ, வேகவைத்த கொள்ளையோ சுவாமிக்குப் படைத்து வெள்ளை நிற ஆண் குதிரைக்கு அளித்து வர வேண்டும்.
4. தீய ஒழுக்கத்துடன் வாழ்ந்து குடும்பத்தைப் படாதபாடு படுத்துகின்ற ஆண்களைக் கண்டு அஞ்சி, அஞ்சியே வாழ்கின்ற இல்லறப் பெண்மணிகளும், அன்னைமார்களும் உண்டல்லவா! வளர்ந்து வரும் ஆண், பெண் குழந்தைகள் ஒரு புறம், மறுபுறம் பொறுப்பற்ற முறையில் திரிகின்ற கணவனின் தீய ஒழுக்கத்தைக் கண்டு துடித்து வாழ்கின்ற இல்லறப் பெண்மணிகளும் உண்டே! இவர்கள் இன்று பரிபூரணமான நம்பிக்கையுடன் பிரமாதி தைப் பௌர்ணமியன்று திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து பிரண்டைத் துவையல் கலந்த சாதத்தை அன்னதானமாகத் தொடர்ந்து அளித்து வருவார்களேயானால் இறைவன் அவர்களுக்கு தக்க நல்வழியைக் காட்டுவான். குடும்பத்தில் எந்தத் துன்பங்கள் ஏற்பட்டாலும் அவை தம்முடைய பூர்வ கர்ம வினைகளின் பிரதிபலிப்பே என்பதை முதலில் உணர வேண்டும். “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பது போல நாம் செய்த கர்மவினைகளே நமக்குப் பலவிதமான உறவு முறைகளின் மூலம் துன்பங்களாக வந்து சேர்க்கின்றன என்பதை உணர்வதுதான் எந்த துன்பத்திற்கும் பரிகாரம் காண்பதற்கான முதல் தெளிவுரையாகும். இந்த உணர்வுதான் தக்க பரிஹாரத்தைத் தரும்! துரிதமான தீர்விற்கும் வழிகோலும்!
இவ்வாறாக வருகின்ற பிரமாதி தை மாதப் பௌர்ணமியன்று திருஅண்ணாமலையில் பஞ்சவர்ண லிங்கப் பரஞ்ஜோதி மூர்த்தியின் அனுக்கிரகத்தைப் பெற இன்று ஆழ்ந்த நம்பிக்கையுடன் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து சொல்லிற்கும், பொருளுக்கும் அப்பாற்பட்ட பலாபலன்களைப் பெற்று நல்வாழ்க்கையை அடைவீர்களாக! அண்ணாமலை கிரிவலம் ஒன்றே பிரபஞ்சத்தில் அனைத்துத் துன்பங்களுக்குமான தீர்வைத் தரும் அற்புதமான சிவத்தலமாகும்!

அமுத தாரைகள்

1. தோல் நோய்கள் நீங்கிட
எத்தனையோ வருடங்களாகத் தோல் நோய்களால் வாடுவோர் பலர் உண்டு. பத்தியம் என்று உணவையும் சரியாக உண்ணாது உடல் வாதனைகளுடன் தோல் நோயால் அவதியுறுவோர் சீர்காழி மேலையூர் அருகே உள்ள திருவலம்புரம் சிவாலயத்தில் மூலவராய் அருள்பாலிக்கும் பிருத்வி லிங்க மூர்த்திக்கு (ஸ்ரீவலம்புர நாதர்) புனுகு சட்டம் அணிவித்து சாம்பிராணி தைலம் சார்த்தி செவ்வாய்க் கிழமை அன்று செவ்வாய் ஹோரை நேரத்தில் வழிபட்டு அடிப்பிரதட்சிணமும் செய்து கீரை சாதம்தனை தானமாக அளித்து வந்தால் தோல் நோய்களின் கடுமை படிப்படியாய்த் தணியும். ஸ்ரீஇந்திராக்ஷீ கவச மந்திரத்தையும் முறையாக ஓதி வரவேண்டும். சற்றுக் கடினமாக இருப்பினும் இயன்றவரை மந்திரங்களை முழுமையாக ஓதிடுக! ஆழ்ந்த நம்பிக்கையுடன் இதனைக் கடைப்பிடிப்போர்க்கு நோயின் கடுமை தணிவது கண்கூடாகத் தெரிய வரும்.

2. நின்று அருளும் முறையான செல்வத்தைப் பெற்றிட
பணத்தை அடைவது ஒரு பெரிய விஷயமல்ல! ஏனென்றால் தற்காலத்தில் பலரையும் ஏமாற்றி எளிதில் பணத்தை அடைந்து விடுகின்றார்கள், உண்மையில் இதனை செல்வமென்று கூறுவதே தவறு! செல்வதெல்லாம் செல்வம் கிடையாது. செலவழிப்பதெல்லாம் செல்வமும் ஆகாது. நன்கு நிலைத்து நின்று முறையாக அடைவதே செல்வமாகும். ஸ்ரீகுபேர பகவான் தம்முடைய சங்க நிதி, பதும நிதியினைத் தவறவிட்டு மீண்டும் பெறுவதற்குப் பல பிராயசித்த பூஜைகளை மேற்கொண்டார். அவற்றுள் ஒன்றே ஸ்ரீசெல்வ கணபதி பூஜை. எனவே, வறுமை நீங்குவதற்கும், எதிர்பாராத வியாபார நஷ்டங்கள் தீர்வதற்கும் ஸ்ரீமகாலட்சுமி பூஜையை மேற்கொள்ளுமுன் மூல முதல்வரான ஸ்ரீசெல்வ விநாயகரைப் பூஜித்தாக வேண்டும். சென்னை அருகே திருநின்றவூர் உண்டு. சீர்காழி அருகேயும் திருநின்றியூர் உண்டு. இரண்டுமே முறையான செல்வத்தைத் தரவல்ல ஆலயங்களைக் கொண்டுள்ளன. சீர்காழி அருகில் உள்ள திருநின்றியூரில் அனுஷ நட்சத்திர நாட்களில் சுக்ர ஹோரை நேரத்தில் ஸ்ரீசெல்வ விநாயகருக்கு முதலில் பூஜை செய்து வணங்கி பின்னர் ஸ்ரீமகாலட்சுமிக்கு முழுத் தாமரை மலர்களால் அஷ்டோத்திர (108) பூஜை செய்து சர்க்கரைப் பொங்கல் படைத்து ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்தால் முறையான வழியில் செல்வம் வரும், வறுமையும் அகலும்!

3. அடுப்பில் பொலியும் அக்னி தேவதைகள்!
நம் இல்லத்தில் காலையில் அடுப்பைச் சுத்தம் செய்து, மஞ்சள், குங்குமம் இட்டுத் தொட்டு வணங்கி, (கேஸ் அடுப்போ அல்லது எந்த அடுப்பானாலும் சரி) இரவு சமையல் முடிந்தபின் அடுப்பை மீண்டும் தொட்டு வணங்குதல் வேண்டும். வணங்குதல் என்றால் நன்றாகத் தரையில் வீழ்ந்து நமஸ்கரித்தல் வேண்டும். அதிலும் கண்டிப்பாகப் போகிப் பண்டிகையன்று 21 முறை அடுப்பை வணங்கியாக வேண்டும். சென்னையருகே பாடியநல்லூர் என்னும் திருத்தலத்தில் திருநீற்று ஈஸ்வரர் அருள்பாலிக்கின்றார். போகிப் பொங்கல் பண்டிகையான இன்று திருநீற்று ஈஸ்வரருக்கு விபூதி அபிஷேகம் செய்து, வெண் பொங்கலும், சர்க்கரைப் பொங்கலும் படைத்து, ஏழைகளுக்குத் தானமாக அளித்து, விபூதியைப் பிரசாதமாகப் பெற்றுத் தினந்தோறும் அடுப்பிற்கு விபூதியும் குங்குமம் இட்டு, அடுப்பினைத் தொட்டு வணங்கி வருதல் வேண்டும். இவ்வாறு செய்வதால் அக்னியை முறையாகக் கையாளாமையால் ஏற்படுகின்ற பலவித அக்னி தோஷங்களுக்கு நிவர்த்தி ஏற்படுவதோடு உணவுப் பொருட்களில் கல், மண் கலப்பதால் ஏற்படுகின்ற பெரும் பாவ தோஷங்களிலிருந்து நம்மைக் காப்பதற்கும் இந்த திருநீற்று பூஜை பெரிதும் உதவுகின்றது. மிகவும் சக்தி வாய்ந்த ஈஸ்வர மூர்த்தி. அக்னி சம்பந்தமான தோஷங்களிலிருந்து நம்மைக் காப்பவர். பாய்லர், கேஸ் வியாபாரம், விறகு, சமையல் அடுப்பு ஸ்டவ் விற்போரும், கொதிகலன் போன்ற அக்னி சம்பந்தமான இடங்களில், தொழிற்சாலைகளில் வேலை செய்வோரும், அடிக்கடி திருநீற்று ஈஸ்வரரை வணங்கி இங்கு அன்னதானம் செய்து வந்தால் பலவிதமான அக்னி தோஷங்களிலிருந்து மீள்வதுடன் தக்கப் பிராயச்சித்தங்களையும் பெறுவார்கள். பல குடும்பங்களிலும் அக்னி தோஷங்களினால் ஸ்டவ் வெடித்தல், தீப்பிடித்து இறத்தல், சேலை, திரை தீப்பிடித்தல் போன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருக்கும். இவ்வாறு அக்னி சம்பந்தப்பட்டு இறந்தவருடைய திதியில் பாடியநல்லூர் ஆலயத்தில் அன்னதானம் செய்து இவ்வாலயத்தில் தர்ப்பணம் அளித்து வந்தால் அக்னி சம்பந்தமாக விபத்தில் இறந்தவருக்குத் தக்க நற்கதி கிடைக்கும்.

4. திருஅண்ணாமலையில் பஞ்சவர்ண பரஞ்ஜோதி லிங்கம்
பஞ்சவர்ண லிங்கப் பாறை என்றும், பஞ்சவர்ண பரஞ்ஜோதி சிலா என்றும் போற்றப்படுகின்ற ஆதிமூல சுயம்பு சிலா வடிவானது பிரமாதி தை மாதப் பௌர்ணமியன்று ஜோதிப் பிரகாசமாய் ஒளிர்ந்து மஹரிஷிகளுக்கும், சித்புருஷர்களுக்கும் தரிசனம் தருவதோடு, குருவருளால் உயர்ந்த பக்தி நிலை உடையவர்க்கும் கண்ணுக்குத் தென்படும்! இதனுடைய இருப்பிடத்தைக் கூட பரிபாஷை மூலம் உணர்த்துகின்றார்கள் சித்புருஷர்கள்! திருஅண்ணாமலையில் மலைமுகடுகளில் எத்தனையோ தெய்வீக இரகசியங்கள் உள்ளன. எந்த திசை நோக்கினாலும் அபூர்வ மூலிகைகள், அற்புதமான ஒளி வீசும் கற்கள், அபரிதமான மருத்துவ குண சக்தியுடைய மூலிகைகள், எப்போதும் ஜோதியில் பரிணமிக்கும் சுயம்புக் கற்கள் என எத்தனையோ தெய்வீக அற்புதங்கள் நிகழ்கின்ற தலமாக திருஅண்ணாமலை விளங்குகின்றது. இதை என்றுதான் நாம் புரிந்து கொள்ளப் போகின்றோமோ? இறைவனே அறிவான்! இறைவனே உணர்விப்பான், அருளையும், அருள் காட்டும் வழியையும் அருள் கூட்டும் குருவையும் அவனல்லவோ (நம்மை) ஆண்டு தருதல் வேண்டும்.

5. திருஅண்ணாமலைதான் சரியானது! திருவண்ணாமலை அல்ல!
சித்புருஷர்கள் கிரந்தங்களிலே திருஅண்ணாமலை என்று தான் எழுதிட வேண்டும் என்ற நியதி விதிக்கப்பட்டுள்ளது. செந்தமிழுக்கு இலக்கணம் படைத்த ஸ்ரீஅகஸ்திய மாமுனியே திருஅண்ணாமலை என்றே செப்பி, எழுதி, உரைத்து வருகின்றார் என்றால் கலைவாணியின் திருவருள் கூடிய அகஸ்தியப் பெருமானுக்கு முன் நாம் எம்மாத்திரம்? திருஅண்ணாமலை என்றே கடிதங்களிலும், குறிப்புகளிலும், அலுவலக ரிக்கார்டுகளிலும், நூல்களிலும் எழுதிடுக! திருஅண்ணாமலை என்று எழுதுகின்ற பொழுது அண்ணாமலையாரின் நாமத்தைத் தானே எழுதிக் கொண்டு இருக்கின்றீர்கள். ஸ்ரீராமஜெயம் எழுதுவது போல்! திருஅண்ணாமலை என்று எழுதி எழுதி உங்கள் கைகளையும், நாடி, நரம்புகளையும், அருணாசல குண நாடியாய்ப் புனிதப்படுத்திக் கொள்ளுங்கள். அனைவரையும் திருஅண்ணாமலை என்றே எழுதிடச் செய்யுங்கள். அண்ணாமலையார் இல்லாத இடம் பிரபஞ்சத்தில்தான் உளதோ? அனைத்தும் அண்ணாமலையாரே! அனைத்தும் அவர் ரூபமே! அனைத்திலும் அவர் ஒளிர்கின்றார்! எனவே திருவண்ணாமலை  என்று எழுதாது திருஅண்ணாமலை என்று எழுதி, சொல்லி, உரைத்துப் புனிதத்தைத் தேடிக் கொள்வீர்களாக! பிறருக்கும் எடுத்துரைத்துப் புனிதத்தைப் பெற்றுத் தருவீர்களாக! எங்கும், எதிலும் திருஅண்ணாமலை எனப் பொலியட்டும், ஒளிரட்டும், மிளிரட்டும்! திருஅண்ணாமலையானுக்கு அரோஹரா!
6. கரும்பில் அரும்பும் ஹரநந்தன்
பித்ரு சாபங்கள் நீங்கிட ... கும்பகோணத்தில் ஸ்ரீகரும்பாயிர வினாயகர் அருள்பாலிக்கின்றார். மிகுந்த வரசக்திகளைக் கொண்டவர்! கலியுகத்தின் பிரத்யட்ச மூர்த்தி! நல்வரங்களைக் கேட்காமலேயே தருகின்ற ஸ்ரீகரும்பாயிர மூர்த்தி! போகிப் பொங்கல், சங்கராந்திப் பொங்கல், மாட்டுப் பொங்கல் ஆகிய மூன்று தினங்களிலும் இக்கரும்பாயிர மூர்த்திக்கு கரும்பாலான மாலையைச் சாற்றி ஏழைகளுக்கு கரும்புச் சாற்றைத் தானமாக அளித்து வந்தால், மூதாதையர்களான பித்ரு தேவ மூர்த்திகள் ஆனந்தம் அடைகின்றார்கள். பித்ரு தேவர்களுக்கு மிகவும் ப்ரீதியானது கரும்புச் சாறு ஆகும். பலரும் தம்முடைய மூதாதையர்களுக்கு உரித்தான அமாவாசை தர்ப்பணத்தையோ, திவசத்தையோ முறையாகச் செய்வது கிடையாது. அப்படியே செய்தாலும், அரைகுறை மந்திரங்களுடன் தான் செய்கின்றார்கள். மிகவும் சிரத்தையாகச் செய்வதும் கிடையாது. இதனால் ஏற்படுகின்ற பித்ரு சாபங்களினால்தான் ஒவ்வொரு குடும்பத்திலும் பலவிதமான நோய்கள், பணக் கஷ்டங்கள், தகுந்த வேலை கிட்டாமை, வேலை இழப்பு, வியாபார நஷ்டங்கள் போன்றவை தொடர்ந்து வந்து வருத்திக் கொண்டு இருக்கின்றன. கஷ்டங்களும், சங்கிலித் தொடர் போல் ஒன்று மாற்றி ஒன்று வந்து கொண்டிருக்கும். இதற்குப் பரிகாரமாக பிதுர் ப்ரீதியாக மகர சங்கராந்தி என்று போற்றப்படும் பொங்கலின் மூன்று தினங்களிலும் ஸ்ரீகரும்பாயிர விநாயகருக்குக் கரும்பினால் ஆன மாலைகளை அணிவித்து ஏழைகளுக்குக் கரும்புச் சாற்றை நிறைந்த அளவில் அளித்து வந்தால் நீங்களே பித்ரு தேவ ப்ரீதியை நன்கு உணர்வீர்கள்!
7. ஸ்ரீஆயுர் தேவி
ஸ்ரீராமருடைய திரேதாயுகத்திற்கு முந்தைய கிருத யுகத்திலிருந்தே ஸ்ரீஆயுர்தேவி அம்பாளின் வழிபாடு சிறப்புடன் விளங்கி வந்துள்ளது. அம்பிகை உபாசனையில் சித்தர்களுக்கு ஈடு இணை எவருமில்லை. ஸ்ரீஹயக்ரீவப் பெருமாளின் ஆக்ஞையால் ஸ்ரீஅகஸ்திய மஹரிஷியின் பத்னியாம் ஸ்ரீலோபாமாதா தேவிக்கு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம மந்திரங்கள் உபதேசிக்கப் பட்டதென்றால் சித்தர்களின் அம்பிகை வழிபாடு எத்தகைய சிறப்புடையது? அதி அற்புதத் தவசீலர்களான சித்புருஷர்களைத் தம் கர பீடங்களில் தாங்கியுள்ள ஸ்ரீஆயுர்தேவியை தினந்தோறும் குறிப்பாக செவ்வாய், வெள்ளி தோறும் வழிபடுதலால் பல அற்புதமான பலன்களைப் பெற்றிடலாம். பணக் கஷ்டங்கள் நீங்குவதற்கும், கொந்தளிக்கும் குடும்பத்தில் நல்ல அமைதி நிலவுவதற்கும் ஸ்ரீஆயுர்தேவி வழிபாடு சிறப்புடையதாகும். ஸ்ரீஆயுர்தேவி அம்பிகையின் திருவுருவப் படமும், ஸ்ரீஆயுர்தேவி மகிமை என்ற பூஜை விளக்கப் புத்தகமும் நம் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்திலும், சென்னை, கோவை, திருச்சி கிளைகளிலும் கிடைக்கும்.
8. ஹோரை விதிகளை அறிந்து கொள்ளுங்கள்!
சில எளிமையான ஜோதிட விதிகளை அறிந்து அதற்குரிய மிகவும் எளிதான பூஜைகளையும் நீங்கள் கடைபிடித்தால் பல கர்மவினைகளை எளிதில் கழித்து விடலாம்! எதிர்வரும் துன்பங்களையும் நன்கு சமாளித்து உங்களைக் காத்துக் கொள்ளலாம். இதற்கான எளிய வழிபாடுகளில் ஒன்றுதான் ஹோரை வழிபாடாகும். அதாவது தினந்தோறும் சூரிய உதய நேரத்திலிருந்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சூரிய ஹோரை, சுக்ர ஹோரை, புத ஹோரை, சந்திர ஹோரை, சனி ஹோரை, குரு ஹோரை, செவ்வாய் ஹோரை ஆகிய ஏழு ஹோரைகளும் வரிசையாக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அமைந்திடும். எந்த கிழமையோ அந்த கிழமைக்குரிய ஹோரையே சூரிய உதயத்திலிருந்து ஆரம்பிக்கும், உதாரணமாக ஞாயிற்றுக் கிழமையன்று 6-7 சூரிய ஹோரை, 7-8 சுக்ர ஹோரை, 8-9 புத ஹோரை, 9-10 சந்திர ஹோரை, 10-11 சனி ஹோரை , 11-12 குரு ஹோரை, 12-1 செவ்வாய் ஹோரை என்ற வரிசையில் ஹோரைகள் அமைந்து மீண்டும் சூரிய ஹோரை பகல் 1 மணியிலிருந்து தொடங்கும். எனவே உங்கள் மேஜையின் மேல் இந்த ஹோரை நேரங்களை எழுதி வைத்துக் கொண்டு அந்தந்த ஹோரை நேரத்தில் ஸ்ரீசூரிய பகவானே போற்றி , ஸ்ரீசுக்ர பகவானே போற்றி என்று அந்தந்த ஹோரைக்குரிய கிரக மூர்த்தியைத் துதித்து வந்தால் இதுவே மிகச் சிறந்த நவக்கிரக வழிபாடாக மலர்ந்து உங்களுக்கு நவக்கிரக தெய்வ மூர்த்திகளின் அபரிமிதமான அனுகிரகத்தைப் பெற்றுத் தருகின்றது.

அச்சுப் பிரண்டை மூலிகை

அச்சுப் பிரண்டை மூலிகையின் அற்புதம்!
மன அழுக்கை நீக்கும் மகத்தான தெய்வீக மாமருந்து

அடியார் :- குருதேவா! மன அழுக்கை நீக்குவதற்கு உரித்தான விசேஷ தினமாகப் போகிப் பொங்கல் பண்டிகை விளங்குவது குறித்து மகிழ்ச்சி அடைகின்றோம், மன அழுக்கை எவ்வாறு போக்குவது?

குருமங்கள கந்தர்வா : மன அழுக்கை நீக்குவது என்பது நல்ல எண்ணம் தானே! ஆனால் நீங்கள் நினைப்பது போல அது அவ்வளவு எளிதல்லவே! இருந்தாலும் நம்பிக்கையைக் கைவிடாது மன அழுக்கை நீக்கிவிட வேண்டும் என்ற பரிபூர்ணமான மன வைராக்கியத்துடன் நீங்கள் செயல்பட ஆயத்தமாவீர்களேயானால் சித்தர்கள் அளிக்கின்ற வழிமுறை ஒன்றைச் சொல்கின்றோம். கேட்டவுடன் கடினமாயிற்றே, கடைபிடிக்க முடியுமா என்ற அதைரியம் ஒருக்காலும் வரக் கூடாது. ஆனால் தக்க ஆன்மீக வழிகாட்டியின்றி, சற்குருவின் அருளின்றி மன அழுக்கினை நீக்க இயலாது என்பதே நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முதல் பாடம்! எனவே குருஅருளால் அடியேனுக்கு எம் குருநாதர் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சுவாமிகள் உணர்த்தியதை அப்படியே ஊட்டி விடுகின்றோம்.
பொதுவாக போகிப் பொங்கல் பண்டிகைதான் இறையருளால் மனஅழுக்கை நீக்குவதற்கான வைராக்கியத்தை மேற்கொள்ள மிகச் சிறந்த நாட்களுள் ஒன்றாம். மன அழுக்கு என்று சொல்கின்ற போது பலவிதமான முறையற்ற காம உணர்ச்சிகள், தீய எண்ணங்கள், பொறாமை குணங்கள் போன்றவையும் அடங்கும் அல்லவா! ஒருமுறை செய்த பிழைக்கு இந்நாளில் பிராயச்சித்தம் பெற்று விட்டால் அந்தத் தவறை மீண்டும் செய்தல் கூடாது. ஆனால் இது கலியுக வாழ்க்கையில் முடியுமா! கை கூடுமா! இயலுமா! இதுதான் அனைவருடைய தலையாய சந்தேகம்!
பிராயசித்தம் என்று ஒன்றைக் கேட்டுவிட்டு அதையும் செய்துவிட்டு அதே பிழைகளை வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் செய்வதானால் பிராயச்சித்தத்திற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும். இது மட்டும் அலலாமல் பிராயச்சித்தத்தை கேட்டுப் பெற்று அதை மீறியதற்கான சாபமும் வந்து சேரும். ஏனென்றால் பிராயசித்தம் என்பது வாழ்க்கையில் ஒருமுறை தான்! மீண்டும் அதே தவறு நிகழுமாயின் அந்த பிராயசித்தப் பூஜையின் பலன்களும் மறைந்து விடும். இதை உணர்ந்து கொண்டு அடியேன் சொல்வதை நன்றாகக் கேட்டு கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள்.. அச்சுப் பிரண்டை என்ற ஓர் அற்புதமான மூலிகை உண்டு. மன அழுக்கை நீக்கி உத்தம பக்தி நிலைக்கு இட்டுச் செல்வதற்கான முக்கியமான மூலிகா சக்திகளுள் ஒன்றாக அச்சுப் ப்ரண்டை மூலிகைக் கிழா நெய் விளங்குகின்றது.
பொதுவாக சற்குருவுடன் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து ஆழ்ந்த நம்பிக்கையுடன் அவர் மனங்கோணாது இறைப்பணிகளை ஆற்றி வருவோர்க்குத்தான் சற்குருவானவர் அச்சுப் பிரண்டையை அடைகின்ற வழி ஒன்றைச் சுட்டிக்காட்டுவார். இதிலும் பல வழிகள் உண்டு. அடியேன் நன்றாகச் சுட்டிக் காட்ட விரும்புவது என்னவென்றால் அச்சுப் பிரண்டை மூலிகையை பெறும் வழிமுறைகளை சற்குரு சுட்டிக் காட்டுவாரே தவிர அதனைக் கையில் எடுத்துத் தந்து விடுவதில்லை. ஏனென்றால் அந்த நிலையிலும் கூட இறைவன் பல சோதனைகளை வைத்து சீடருடைய குருபக்தியின் தன்மையைச் சோதித்து ஆழ்ந்த பக்தி நிலைக்கு சீடனை இட்டுச் செல்கின்றார். இத்தகைய இறைச் சோதனைகளை ஆழ்ந்த இறை நம்பிக்கையுடன் வென்றாக வேண்டும்.
குறித்த நாளில், குறித்த நேரத்தில் செல்லுமாறு சற்குரு பணித்திட அவருடைய சீடன் ஆனவர் அச்சுப் பிரண்டை மூலிகையைப் பெறுவதற்காக இந்தக் குறித்த திக்கில் சென்றாக வேண்டும் குருவருளால் மூலிகையைக் கண்ணுற்றதும் அதற்குரித்தான பிராண பிரதிஷ்டை முறைகளைக் கையாண்டு, கட்டு மந்திரங்களையும், விடுப்பு மந்திரங்களையும் முறையாக ஓதி அதற்குரித்தான மூலிகைத் தேவதைகளை வணங்கித் துதித்து அச்சுப் பிரண்டை மூலிகையைப் பெற்று வந்து குறித்த ஹோரை நேரத்தில் “கிழா பந்தனம்” செய்து அதிலிருந்து அச்சுப் பிரண்டை நெய்யைத் தருவித்து ஒருமுறை உண்டாலே போதும், மன அழுக்கு நீங்கி விடும். இதுதான் அச்சுப் பிரண்டையின் அற்புதமாகும்.. இது இன்றும் திருஅண்ணாமலை, கொல்லி மலை, பர்வத மலை, பார்வதி மலை, வெள்ளியங்கிரி மலை, பொதிய மலை, மேருமலை, ஆல்பஸ் மலை, இமயம் மலை போன்ற இடங்களில் காணப்படுகின்றது. ஆனால் இதனை சற்குருவின் அருளுடன் பெற்றுப் பயன்படுத்துதல் தான் உத்தமமானதாகும். பொதுவாக அச்சுப் பிரண்டையைப் பெறுவதற்கான நல்வழி முறையை உபதேசமாகப் பெறும் நாளாகவும், போகிப் பொங்கல் பண்டிகை விளங்குகின்றது என்பதை மறந்து விடாதீர்கள்!
கிராமங்களில் மோர்க் குழம்பில் மின்னிலை என்ற மூலிகை இலையினை சேர்ப்பதை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். மின்னிலை என்பது ஒரு வகையான மூலிகையாகும். இதை மோர்க் குழம்பில் சேர்க்கும் பொழுது அதனுடைய ஆன்மீக சக்தி பொங்கி நிறைந்து உடலில் சேர்கின்றது. எனவே போகிப் பொங்கல் பண்டிகையன்று மோர்க்குழம்பு செய்து மின்னிலையைச் சேர்த்து அன்னதானமாக அளித்து வந்தால் அச்சுப் பிரண்டையைப் பெறுகின்ற குருவாய் அறவழிமுறைகள் கிடைக்கப் பெறுவர். இது திண்ணம்! பாருங்கள், ஒரு மூலிகையைப் பெறுவதற்காக இன்னொரு மூலிகையைத் தானமாக அளிப்பது என்றால் மூலிகைக்குள் மூலிகையாக எத்தகைய ஆன்மீகப் பிணைப்பு, தெய்வீகச் சங்கிலித் தொடர்பு போல் விளங்குகின்றது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
மன அழுக்கை நீக்கும் மாசற்ற ஜோதி மூலிகையே அச்சுப் பிரண்டை! தெய்வீகத்தில் எந்த ஒரு அற வழி முறையையும் கடைபிடிக்க முடிக்கின்றதோ இல்லையோ அந்த அறவழியை அறிந்து அதனைப் பற்றி நன்கு ஆத்ம விசாரம் செய்து கடும் முயற்சியுடன் தீவிர வைராக்யத்துடன் செயல்பட்டால் இறைவனே அந்த அறவழியின் பின் நின்று சற்குருவாய் ஊக்குவிக்கின்றார்! பின் என்ன? பலன்கள் தாமாகவே அருவி போல் கொட்டிடும்!

உள்ள(த்தின்) அழுக்கைத் தள்ளும் விதம்!
போகிப் பொங்கல் பண்டிகை மஹிமை
உள்ளத்தில் பாறையாய் இறுகியிருக்கும் அழுக்கை எளிதில் நீக்க முடியுமா? எவ்வளவு தான் நீக்கினாலும் திரும்ப திரும்பத் தீய சக்திகள் தானே குடிகொள்கின்றன. கலியுகத்தில் அதர்மமான காம உணர்ச்சிகளும், எண்ணங்களும் தாமே பெருகி வருகின்றன. ஏனென்றால் இறைபக்தியை ஊட்டக்கூடிய கல்விப் பாடத் திட்டம் மறைந்து போய் உபயோகமற்ற விஷயங்கள்தாம் கல்வித் திட்டமாகி விட்டது. நல்ஒழுக்கத்தைப் பேணாத உபயோகமற்ற விஷயங்கள் தாம் கல்வித் திட்டமாகி விட்டது. நல் ஒழுக்கத்தைப் பேணாத கல்வி முறை பள்ளிக் கூடங்களில், கல்லூரிகளில் வந்து விட்டது.
அக்காலத்தில் பக்கத்திற்குப் பக்கம் இறைபக்தியை ஊட்டுகின்ற இறை இலக்கியங்கள் தாம் கல்வித் திட்டத்தில் மிகுந்து இருந்தன. ஆனால் இப்போதைய கல்வித் திட்டம் அடியோடு மாறுபட்டு நவீன கல்வி முறை என்ற முறையில் நல்ஒழுக்கத்தைப் புகட்டாத பாடங்களே உள்ளன. எனவே தான் கலியுகத்தில் பள்ளிப் பருவத்திலேயே போதை மருந்துகள் புகுந்து விட்டன. நல்ல ஒழுக்கமும், நல்ல மனமும், நல்ல எண்ணமும் தானே மனிதனுக்கு அணிகலன்கள், தகுதிகள்! இறைபக்தியைப் பெருக்குகின்ற பாடத் திட்டங்கள் இருந்தால் தானே சமுதாயத்தில் நல்லொழுக்கம் மேம்பட்டு அதுவே சமுதாய இறைத் தொண்டாக மலரும்.
எனவே, உள்ளத்தில் அழுந்தியிருக்கும் அழுக்கை நீக்குவதற்கு முதல் அடிப்படை முறையே இறைபக்தியைப் பெருக்குகின்ற வகையில் கல்வித் திட்டங்களை அமைத்திடுதல் ஆகும். இது சாதாரண மனிதனால் முடியுமா? எனவே நம்மால் இயன்ற அளவில் போகிப் பொங்கல் பண்டிகையான இன்று ஏழை மாணவர்களுக்கு நல்லொழுக்கம் கூடிய, இறைபக்தியைப் பெருக்க வல்ல இறை நூல்களையும் (தேவாரம், திருவாசகம், பகவத் கீதை, அபிராமி அந்தாதி, திருக்குறள், திவ்ய பிரபந்தம் போன்றவை) சமுதாயத்திற்கு நல்லொழுக்கத்தை ஊட்டும் வகையில் ஸ்ரீஅகஸ்திய விஜயம் போன்ற ஆன்மீக இதழ்களையும் தானமாக அளித்தால் உள்ளத்தின் உள்ளே ஒளிந்திருக்கும் அழுக்கைப் போக்கும் உயர்ந்த ஒரு வித்யா தானமாக அமைகின்றது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
போகிப் பொங்கல் பண்டிகைக்கு மட்டும் உள்ளத்தில் ஒட்டியிருக்கும் அழுக்கைப் போக்கும் சிறப்பான உயர்ந்த தெய்வீக சக்தி கூட்டப்பட்டிருப்பதின் காரணம் என்ன? மார்கழி மாதம் என்பது முப்பது முக்கோடி தேவர்களுக்கு உரித்தான பிரம்ம முகூர்த்த காலம்தானே! அனைத்து தேவாதி தேவ மூர்த்திகளும் தங்களுடைய பிரம்ம முகூர்த்த கால பூஜையை நிறைவு செய்யும் நாளாகப் போகிப் பண்டிகை விளங்குகின்றது. அதாவது தேவாதி தேவமூர்த்திகளின் பிரம்ம முகூர்த்த தேவபூஜை பரிபூர்ணமாகும் நாளாக போகிப் பண்டிகை நேரம் இருப்பதால் அவர்கள் தங்களுடைய பிரம்ம முகூர்த்த பூஜையின் நிறைவாக வீழ்ந்து நமஸ்கரிக்கின்ற போது அவர்களுடைய தேவ மேனிகளில் ஒளிர்கின்ற தேவ ஒளிச் சுடரானது பூலோகத்தில் பரவுகின்ற நேரமாகவும் போகிப் பண்டிகை நேரம் விளங்குவதால் இந்த தினத்திற்கு உள்ளத்தின் அழுக்கை பஸ்பம் செய்யக்கூடிய அபரிமிதமான சக்தி உண்டு என்று சித்தர்கள் பகர்கின்றார்கள்.
அந்த தேவச் சுடரில் தீய சக்திகள் பஸ்பம் ஆகி நல்ல ஒளி, நல்சக்தி, நல்லெண்ணம், நல்பக்தியைப் பரப்ப வேண்டும் என்பதற்காகத் தான் போகிப் பண்டிகையன்று குப்பை கூளங்களை அக்னிக்கு ஆஹுதியாக அளிக்கின்ற நல்வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.. ஆனால் தற்காலத்தில் நடுவீதியில் போகியன்று குப்பைக் கூளங்களைத் தீயிட்டு விட்டு ஏதோ சொக்கப்பானைகளைக் கொளுத்துவது போல் இந்த நல்ல பண்டிகையைக் கேவலப்படுத்தி வருகின்றார்கள். இது தவறானதாகும்.  மக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி ஊருக்கு வெளியே ஓரத்தில் குப்பை கூளங்களை நிரப்பி அக்னியில் பஸ்பம் செய்வதுதான் முறையானதாகும்.
தெய்வீக ரகசியங்கள் நிறைந்த திருஅண்ணாமலை!
திருஅண்ணாமலையின் தேவ ரகசியங்களை உணர்விக்க சற்குருவால் தான் இயலும், அதுவரையில் அது கல்மலையாகவே கண்ணுக்குத் தோன்றும். திருஅண்ணாமலை தான் உலகத்திலேயே மிகப் பெரிய சுயம்பு லிங்கமூர்த்தி அல்லவா! சர்வேஸ்வரனின் திருமேனியாக விளங்குகின்ற திருஅண்ணாமலையில் தோன்றுகின்ற கோடிக்கணக்கான தெய்வீக வடிவங்களே, பிரதி பிம்பங்களாக, சுயம்பு லிங்கப் பாறைகளாகவும், உருவங்களாகவும், படிகளாகவும், ராஜகோபுரங்களாகவும், விமானங்களாகவும் இன்றைக்கும் பல்லாயிரக்கணக்கான கோயில்களில் உலகெங்கும் பரிமளிக்கின்றன.
பஞ்சவர்ண லிங்கப் பாறை என்று இதுகாறும் நமக்குப் புரியும் அளவில் இதனைப் பாறை என்று விளக்குகின்றோமே தவிர, ஆன்மீக மொழி வழக்கில் இதனைப் பாறை என்று சொல்வது தவறு., எத்தனையோ சுயம்பு லிங்க மூர்த்திகளின் ஆதாரப் பீடமாய் விளங்குகின்ற, சுயம்புத் திருமேனியையா பஞ்சவர்ணப் பாறை என்று சொல்வது? இதனை “பஞ்சர்வண பரஞ்ஜோதி சிலா” என்று சித்தர்களின் பரிபாஷை கூறுகின்றது. இதனைப் “பஞ்சவர்ண லிங்க சிலா” என்றும் அழைப்பர்! “மஹாப்பிரளயம்” என்று சொல்லுகின்றோம் அல்லவா! பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து லோகங்களும், குறிப்பாக அனைத்து பூமிகளும் (ஆம், பூலோகம் ஒன்றிற்கு மேல் நிறைய உண்டு) மஹா பிரளய ஜலப்ரவாகத்தில் மூழ்கித் திளைத்திட அப்போது பூமியில் இருக்கின்ற சுயம்பு லிங்க மூர்த்திகள் அமிழ்ந்து உள்ளே படிந்து வெவ்வேறு வகையான சுயம்பு மூர்த்திகள் அந்தந்த யுக நியதிகளுக்கு ஏற்றாற் போல் வெளித் தோன்றுகின்றன. ஆனால் இருக்கின்ற சுயம்பு லிங்க மூர்த்திகள் அமிழ்வதும், என்றும் ஒளிரும் ஏகாந்த ஜோதி சிலா வடிவங்களாம் சுயம்பு மூர்த்திகள் தோன்றுவதும் ஆதார பீடமான திருஅண்ணாமலையின் பஞ்சவர்ண பரஞ்ஜோதி சிலாவிலிருந்து தான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்!
இவ்வகையில் பஞ்சவர்ண லிங்கப் பாறை பரிணமிக்கும் தினமாக அமைவதுதான் ஒவ்வொரு யுகத்திலும் பிரமாதி வருடத்தின் தை மாதப் பௌர்ணமி தினமாகும். இந்தப் பஞ்சவர்ண பரஞ்ஜோதி சிலா என்றுமே திருஅண்ணாமலையில் பொலிந்து இருப்பது தான். ஆனால் அதனுடைய பரஞ்ஜோதி ஸ்வரூபமானது மஹரிஷிகளுக்கும், சித்தர்களுக்கும் மட்டுமல்லாது, உத்தம பக்தி நிலையுடைவர்க்கும் பஞ்சவர்ண லிங்கப் பாறையாகப் பூரணமாகத் தெரிகின்ற நாளே பிரமாதி வருட தை மாதப் பௌர்ணமி ஆகும்.
இவ்வாறாக, ஒவ்வொரு பௌர்ணமிக்கும் உரித்தான பல விசேடமான அம்சங்கள் திருஅண்ணாமலையில் இருந்தும் இவையனைத்தும் தெய்வீக இரகசியங்களாகவே இன்று விளங்குகின்றன. காரணம் இவற்றையெல்லாம் எடுத்துச் சொன்னால் இதனைத் திருவாக்கியமாக ஆழ்ந்த நம்பிக்கையுடன் போற்றிப் புனிதத்துடன் கடைபிடிக்கின்ற உத்தம பகதி நிலையைப் பெற்றோர் ஒரு சிலரே! ஏதோ சொல்கின்றார்களே, நாமும் செய்து பார்ப்போம் என்ற அரைகுறை எண்ணம்தான் இறை நம்பிக்கை கூடியவர்களுக்கும் கூட தோன்றுகின்றது! ஆழ்ந்த இறை நம்பிக்கை கைகூடவில்லை இன்னமும் இறைநம்பிக்கை பெருக வேண்டும் என்பதே நாம் பெரும் பாடமாகும்.
சத்குருவின் வார்த்தையின் மீது அபரிமிதமான நம்பிக்கை கொண்டு வேதவாக்காய் அவற்றை நடைமுறை வழக்கில் கடைப்பிடிப்போருக்குத்தான் சத்குருவின் அருளால் பல தரிசனங்களும் கிட்டும், இது இப்படி இருக்க முடியுமா என்று கேட்டு ஒரு போதும் சத்குருவின் வார்த்தையை எடை போட்டு விடாதீர்கள்! அவர் வாக்கில் என்றுமே சத்தியம் பரிணமிக்கும், உண்மையில், சத்தியத்தின் மொத்த உருவாய் சத்குரு விளங்குவதால் தான், அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் பூலோகத்தில் மட்டுமல்லாது, பல கோடி லோகங்களிலும் இறை நியதியாக, இறை விதியாக இறைச் சட்டமாகப் பரிணமிக்கின்றது.
இத்தகைய தெய்வீக இரகசியங்களை எல்லாம் எடுத்துச் சொன்னால், விஞ்ஞானக் கண் கொண்டு பகுத்துப் பரிசோதனை செய்கின்ற அவலநிலை ஏற்பட்டு இருப்பதால் தான், அனைத்துமே தற்போது பூடகமாக, பரிபாஷைகளாக, சத்குருவின் மூலமாகவே உணர்வதாகவே இக்கலியுகத்தில் விதிக்கப்பட்டுள்ளன. ஆழ்ந்த நம்பிக்கையுடன், உண்மையான பக்தியுடன், திருஅண்ணாமலையை கிரிவலம் வருவோர்க்குத்தான் இவையெல்லாம் தெரியவரும் புரிபடும், தெளிவுறுத்தப்படும்!  இருப்பினும் சத்குரு இல்லையே என்று ஏங்காது, இவையனைத்தையும் சத்குருவின் வார்த்தைகளான சத்திய வேத வாக்குகளே என்று உளமார்ந்த நம்பிக்கையுடன் கிரிவலம் வருபவர்க்கும் இத்தகைய தெய்வீகக் காட்சிகள் எவ்வகையிலேனும் உணர்த்தப் பெறும், இல்லையோ, அவற்றின் பலாபலன்கள் நிச்சயமாகக் கூடிடும். ஆழ்ந்த இறை நம்பிக்கை எதையும் சாதித்திடும் அன்றோ!

தீப கண்டி மகிமை

அட்சர திருஷ்டி தோஷ நிவாரண தூப தீப கண்டி மஹிமை

திருஷ்டி தோஷ நிவாரண தீப விளக்கு
திருஷ்டி தோஷ நிவாரண தீபம் நம் ஆஸ்ரமத்தில் கிடைக்கும்... கடந்த பல இதழ்களாக திருஷ்டி தோஷங்களை நிவர்த்தி செய்வதற்கான சித்புருஷர்கள் அருள்கின்ற வழிமுறைகளைப் பற்றி நாம் விளக்கி வருகின்றோம் அல்லவா? மண்ணாலாகிய பிருத்வீ தீபம், அகல் விளக்கு, சக்தி விளக்கு போன்றவற்றிற்குப் பஞ்ச தீப, பஞ்ச வர்ண, பஞ்ச பூத சக்திகள் மிகுந்திருப்பதால் இவற்றிற்குத் திருஷ்டி தோஷங்களை நிவர்த்தி செய்கின்ற அதி அற்புத சக்திகள் அபரிமிதமாக உண்டு என்பதை நாம் நன்கு அறிந்ததுதானே!
எத்தனை உலோக விளக்குகளை ஏற்றினாலும் மண்ணாலாகிய (அகல்) தீபத்திற்கான மகத்தான சக்தி ஈடு இணையற்றதுதான்! அதிலும் கார்த்திகை மாதத்தில் தான் ஒரு யுகத்தில் இப்பூலோகம் படைக்கப் பெற்றமையால் கார்த்திகை மாதம் முழுவதும் தின்ந்தோறும் எந்த அளவிற்கு விளக்குகளை இல்லத்தில் ஏற்றி வைத்து வழிபடுகின்றோமோ அந்த அளவிற்கு எண்ணற்ற தோஷங்களை எளிதில் நீக்கிவிடலாம். கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்டாலோ இதனால் கிட்டுகின்ற புண்ணிய சக்தியோ சொல்லிலும், பொருளிலும் வடிக்க இயலாததாம்.
நான்கு விதமான திருஷ்டி தோஷ நிவாரண தீப கண்டிகைகளுமுன்டு. இவற்றை வீட்டில் முறையோடு ஏற்றி வழிபட்டு வந்தால் கண் திருஷ்டி தோஷங்களுக்கு மட்டுமல்லாமல், ஏனைய பலவிதமான தோஷங்களுக்கும் நல்ல நிவர்த்தியையும், பரிகாரத்தையும் பெற்றிடலாம். குறிப்பாக பகைமை, சக வியாபாரிகளின் பொறாமை போன்றவற்றால் வியாபாரத்தில் எதிர்பாராத விதத்தில் பலவிதமான இழப்புகளையும், நஷ்டங்களையும் பெற்று அவதியுறுவோரும், திருஷ்டி தோஷங்களிலிருந்து தம்முடைய வியாபாரத் தன்மையைக் காத்துக் கொள்வதற்கும் இந்த தீப சக்தியானது ரட்சையாகக் காத்து நின்று எதிர்வரும் தோஷ வினைகளிலிருந்து காப்பது மட்டுமல்லாமல் ஏற்கனவே பெருகியுள்ள தோஷங்களுக்கும் தக்க நிவர்த்தியைத் தருகின்றது.
தோஷம் எப்பை ஏற்படுகின்றது?
இந்த திருஷ்டி தோஷ நிவாரண தீப கண்டிகையுடன் இணைக்கப்பட்டிருக்கும் சிறு புத்தகம் அல்லது விளக்கவுரைக் குறிப்பில் தோஷங்கள் ஏற்படுகின்ற வகை முறைகளையும் அதனால் ஏற்படுகின்ற விளைகளையும் அவற்றிலிருந்து நிவர்த்தியைப் பெறுவதற்கான தக்க திருஷ்டி தோஷ நிவாரண தீப வழிபாட்டு முறைகளையும் காணலாம். முதலில் தோஷங்கள் எவ்வகையில், எவ்வாறு வருகின்றன என்று உணர்ந்து கொண்டால்தான் நமக்கு ஏற்படுகின்ற துன்பங்களுக்கான பல மூல காரணங்களையும் நீக்கும் முறைகளையும் நாம் அறிந்து கொள்ள முடியும். மூலத்தை அறிந்தால்தானே முடிவை அறியலாம். ஆனால் மூலமும், முடிவுமில்லாப் பரஞ்சோதியே பரம்பொருள்!
ஏனைய அனைத்தும் தோஷங்கள் கொண்டவையே! கெட்ட எண்ணங்களிலிருந்துதான் தோஷங்கள் மூலக் கருவாக வெளிப்படுகின்றன. உதாரணமாக கணவன்/மனைவியை இழந்தவர்கள் அல்லது திருமணம் கை கூடாதோர் பிறருடைய குடும்ப வாழ்க்கையைப் பற்றி எண்ணி ஏங்கி இவர்களுக்கு நல்ல வாழ்வு அமைந்து விட்டதே என்று சற்றே எண்ணினாலும் கூட அதுவே திருஷ்டி தோஷமாக மாறிப் பிறரை பாதிக்கும். அதே போல குழந்தை இல்லாதவர்கள், பிறரைப் பார்த்து, “யார் யாருக்கு ஏன், இத்தகைய கொடியவர்களுக்கும், அதிலும் பிச்சைக்காரர்களுக்கும் கூட இறைவன் குழந்தைச் செல்வத்தை அளித்திருக்கின்றானே, நமக்கு அது கூடவில்லையே”, என்று எண்ணினாலும் கூட, அதுவும் கூட கெட்ட எண்ணமாக உருவெடுத்து தோஷமாக மாறிவிடும்., ஆனால் கணவன்/ மனைவியை இழந்தவர்களுக்கோ, குழந்தை இல்லாதவர்களுக்கோ அவர்களுடைய உள்ளத்திலே, இத்தகைய எண்ணம் சாதாரணமாகக் கூட எழத்தானேச் செய்யும், இது சர்வ சாதாரணமானது தானே, இயல்பானது தானே என்று மேலெழுந்த வாரியாக நமக்குத் தோன்றும்.
ஆம் உண்மையே! எவ்வளவுதான் மனதைத் தேற்றிக் கொண்டாலும் கட்டுப்படுத்திக் கொண்டாலும் கூட ஒரு சிறு உள்ளுணர்வு இவ்வகையில் எழத்தான் செய்யும். ஆனால் நாம் அறிய வேண்டியது என்னவெனில் இந்த சிறிய ஏக்கப் பெருமூச்சு கூட பெருத்த தோஷமாக மாறி நம்மைப் பாதிக்கும் என்பதைத்தான்! எனவே எத்தகைய சிறு தீய எண்ணமும், தோஷமில்லாத எண்ணமும், கூடி வந்தால் தானே உத்தம பக்தி நிலை கைகூடும். இவ்வாறு மாசற்றவர்களாய் தெய்வீகமாக வாழ்கின்றவர்களே மஹானாகவும், யோகியவர்களாகவும் ஆகின்றனர் இறையருளால், இதற்கு அடிப்படை நல்லதோர் தெய்வீக வழிகாட்டியே, அவரே சற்குரு!
தீய எண்ணமே தோஷமாகி விடும்
எந்த ஒரு மனிதனும், “இந்த விதமான குறை நமக்கு இருக்கின்றதே, அந்தக் குறை கூட இல்லாமல் பிறர் வாழ்கின்றார்களே”, என்று சற்றே எண்ணினால் கூட அது திருஷ்டி தோஷமாக மாறிப் பிறரை பாதிக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு காரோ, ஸ்கூட்டரோ, சொந்த வீடோ இல்லாத போது அத்தகைய வசதிகளுடன் வாழ்கின்ற உங்களுடைய உற்றம், சுற்றம், நண்பர்கள், சக அலுவலர்கள் பற்றிச் சற்றே பொறாமையாகவோ, சாதாரணமாகவோ, பொருமலுடன் எண்ணினாலும் கூட நீங்களும் திருஷ்டி உருவாவதற்கான மூலக் கருவியாக, துரதிருஷ்டமாக அமைந்து விட்டீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
எனவே பிறரைக் குறை சொல்வதை விட நம்மிடத்தில் எத்தகைய குறைகள் பாசியாய்ப் படிந்து கிடக்கின்றன என்பதை உணர்ந்து கொண்டால்தான் நீங்களும் திருஷ்டி தோஷ நிவாரணத்திற்கான அடிப்படை முறைகளை மேற்கொள்ள முடியும். இவ்வாறு உங்களுடைய எண்ணங்களில் தீயசக்திகள் புகாமலிருப்பதற்காகவும் தோஷம் ஏற்படாமலிருக்கவும் திருஷ்டி தோஷ நிவாரண கண்டி தீப பூஜை உதவுகின்றது. எனவே இந்த திருஷ்டி தோஷ நிவாரண வழிபாட்டின் மூலம் உங்களுடைய திருஷ்டி தோஷங்கள் நிவாரணம் அடைவது மட்டுமல்லாமல் பிறருடைய வாழ்க்கை வசதிகளைப் பார்த்து நீங்களும் பொறாமை கொண்டு திருஷ்டி தோஷத்துக்குக் காரணமாகாது உங்கள் மனதைத் தீய வழியிலிருந்து தடுத்து நன்முறையில் வழிகாட்டுவதற்கும் இந்த திருஷ்டி தோஷ நிவாரண கண்டி உதவுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், இந்த திருஷ்டி தோஷ நிவாரண தீபமானது உங்களுடைய மனதிற்குச் சாந்தத்தையும், நல்அமைதியையும் தந்து உங்களையும் அறியாது உங்கள் உள்ளத்தில் ஒட்டிக் கிடக்கும் தோஷ காரணத் தீய சக்திகளை விரட்டியடித்து உங்கள் மனதைத் தூய்மைப்படுத்துகின்றது. எல்லா நன்மையும் இந்த தீபத்தில் கூடும் அக்னி தேவதைகளின் அருட்கடாட்சமே!
திருஷ்டி தோஷம் ஒட்டும் விதம்
1. பலரும் வீதிகளில் பூசனிக்காய், (பசு) விறட்டி, மிளகாய் போன்றவற்றைப் போட்டு வைத்து திருஷ்டியைக் கழித்திருப்பார்கள். அதனை நீங்கள் மிதித்து வரும் போது, அதில் அரையும் குறையுமாக பஸ்மமாகிக் கிடக்கும் திருஷ்டி தோஷங்கள் உங்களிடம் ஒட்டிக் கொண்டு அது வேறுவித திருஷ்டி தோஷமாக உங்கள் குடும்பத்தைப் பாதிக்கும். திடீரென்று நோய் நொடிகள் வரும். குழந்தைகள் வயிற்று வலி, நெறி கட்டுதல் எனத் துடிப்பார்கள்!
2. இதே போன்று காலணிகளை அணிந்து பல இடங்களுக்கும் சென்று நீங்கள் திரும்புகின்ற போது, காலணிகளில் ஒட்டிக் கிடக்கும் மணல் மூலமாகவும் உங்களுக்குத் திருஷ்டி தோஷங்கள் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. அதனால்தான் வெளியிலிருந்து வந்தவுடன் , கை கால்களைச் சுத்திகரித்து, குறிப்பாக பின் குதிகால் பகுதியினைச் சுத்தமாக நீர் விட்டுக் கழுவ வேண்டும். குதிகால் தோஷங்கள் நிறைய உண்டு. இவற்றை நீக்கும் முறையாகத்தான் நன்கு குதிகாலைத் தூக்கி நாம் தோப்புக் கரணமிடுகின்றோம். தோப்புக் கரண ரகசியங்களுள் இதுவும் ஒன்றாகும். மேலும் இதற்காகத்தான் அக்காலத்தில் தென்னை நார் போன்று, தாவர நாரால் ஆன மிதியடியை இல்லத்தில் முன் வைத்திருப்பார்கள். நாருக்கு தோஷத்தை நிவர்த்தி செய்யும் சக்தி உண்டு. அதிலும் தேங்காய் நாருக்குத்தான் திருஷ்டியைத் தடுக்கும் சக்தி அதிகம். எவ்வாறு ஒரு தேங்காயானது சிதறுகாய் மூலமாக திருஷ்டியைப் போக்குகின்றதோ அதே போல் தென்னை நாருக்குத் தான் திருஷ்டியைக் கழிக்கின்ற தோஷ நிவாரண சக்தியும் மிதியடி நார் மூலமாக நமக்குப் பயன்படுகிறது. யானை இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது போல காய்ந்த தேங்காய் நாரும் தியாகச் செம்மலாய் திருஷ்டி தோஷ நிவாரணியாய் சமுதாயத்திற்குப் பயன்படுகின்றதென்றால் பகுத்தறிவுடைய நாம் எத்தகைய சமுதாய இறைப் பணிகளைப் புரிய வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்!
3. நீங்கள் தம்பதி சமேதராக குழந்தைகளுடன் புத்தாடை அணிந்து ஸ்கூட்டரில் வெளிச் செல்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். கணவன்/மனைவியை இழந்தோர் அல்லது குழந்தை இல்லாதவர்களோ /வாகன வசதி இல்லாதவர்களோ உங்களை விட வாழ்க்கை வசதிகள் சற்றோ குறைந்தவர்களோ நீங்கள் இவ்வாறு செல்வதைப் பார்த்தால், “இவனும் இவ்வாறு செல்கின்றானே”, என்று சற்றே நினைத்தால் கூட போதும் அதுவே திருஷ்டி தோஷமாக உங்கள் மீதும், உங்கள் குழந்தைகள் மீதும் மட்டும் படிவதும் அல்லாமல் உங்களுடைய ஆடைகள், தோடுகள், தலைமுடி, மோதிரம், ஸ்கூட்டர், காலணிகள் என இவை அனைத்திலும் இந்த தீவினை தோஷ சக்திகள் படிந்து விடுகின்றன. இதனால்தான் வண்டி பஞ்சர் ஆவதோ, ரிப்பேர் ஆவதோ அல்லது எதிலேனும் இடித்து வாகன விபத்துகளோ ஏற்படுவதும் உண்டு. ஏழு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தெய்வீகத் தன்மை நிறைந்திருப்பதோடு அவற்றின் எண்ணங்களும், அங்கங்களும் மென்மையாக இருப்பதால் திருஷ்யின் தீவினை சக்திகள் உடனடியாக உள் இழுக்கப்படுதலோ, இவ்வாறாக பல துன்பங்களும் குழந்தைகளுக்கு வந்து விடும்.
இவ்வாறாக ஆடைகள், வாகனம் மூலமாகவும் தான் திருஷ்டி தோஷங்கள் உங்கள் இல்லத்தை அடைகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இதற்காகத்தான், பொதுவாகப் பருத்தி ஆடைகளை அணிந்திருந்தால், அவ்வளவாக திருஷ்டி தோஷங்கள் உங்களைத் தாக்காது, மேலும் பருத்தி ஆடைகளைத் துவைத்து உலர்த்தும் போது அதிலுள்ள தீவினைச் சக்திகளும் நீங்கி விடுகின்றன. அந்த அளவிற்குப் பஞ்சபூதச் சக்தி நிறைந்திருப்பதால் பருத்தித் துணிகளில் அவ்வளவாகக் கர்மவினைகள் சேர்வது கிடையாது. நைலான், நைலக்ஸ், டெரிகாட்டன், பாலியெஸ்டர் துணிகளில் நிறைய தோஷங்கள் ஒட்டிக் கொள்ளும், எளிதிலும் போகாது! காரணம் அவற்றில் இயற்கையான பஞ்சபூத சக்திகள் கிடையாது!
முடியில் முடிவிலா கவனம் தேவை!
காலை, மாலை, சந்தியா நேரங்களில் இல்லத்திற்குள்ளோ, இல்லத்தின் வெளியிலோ தலையை வாரி, உதிரும் முடியை அப்படியே சுருட்டி விட்டெறிவதாலும், இந்த முடி மூலமாகவும் திருஷ்டி தோஷங்கள் நம்மைத் தாக்குகின்றன. எனவே சந்தியா நேரங்களில் குறிப்பாக மாலை சந்தியா நேரங்களில் தலைவாருவது கூடாது என்ற நியதியை நம் பெரியோர்கள் விதித்துள்ளனர் என்பதை நீங்கள் அறிந்ததுதானே. தலையை வாரியவுடன் உதிர்கின்ற முடியை நன்றாகச் சுருட்டி வைத்து ஒரு மரப் பெட்டியில் வைத்து, பூமியில் புதைத்து விட வேண்டும் அல்லது கழிவு நீர்த் தாரையிலோ சேர்த்து விட வேண்டும். ஒருவர் முடியை மற்ற எவரும், குடும்பத்தவரும் மிதித்தலும் கூடாது. குறிப்பாக பில்லி, சூன்யம், ஏவல் மந்திரங்களை ஏவுவோர் இத்தகைய முடியை வைத்துத்தான் தங்களுடைய தீவினைகளை ஆற்றிக் கொள்கின்றார்கள் என்பது நீங்கள் தெரிந்து கொண்டு கவனமாக இருக்க வேண்டிய முக்கியமான விஷயமாகும்.
மாதவிலக்கின் போது பெண்கள் அணிகின்ற ஆடைகள், அச்சமயங்களில் தலை வாருவதால் உதிர்கின்ற முடி ஆகியவை மூலமாகவும் நிறைய திருஷ்டி தோஷங்கள் வந்து சேருகின்றன. எனவேதான், மாதவிலக்கு முடிந்தவுடன், மாதவிலக்கின் போது அணிந்த ஆடைகளை பூந்திக் கொட்டை என்னும் மூலிகைத் தாவரக் காய் ஊறிய நீரில் நன்றாகத் துவைத்து வெயிலில் உலர வைத்திட வேண்டும். பூந்திக் கொட்டை வித்திற்குப் பலவிதமான தோஷங்களை நிவர்த்தி செய்யக் கூடிய சக்தி உண்டு. மாதவிலக்கின் போது பருத்தி ஆடைகளையே அணிதல் வேண்டும். துவைத்துக் காய்ந்த ஆடைகளுக்குச் சாம்பிராணி தூபமிட்டுக் காட்டியவுடன் தான் அணிதல் வேண்டும்.. மேலும் மாதவிலக்கின் போது நெற்றியில் குங்குமம் நிச்சயமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதில் தவறு ஏதும் கிடையாது. ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மாதவிலக்கின் போது, குங்குமத்தைத் தனியாக ஒரு குப்பில் எடுத்து வைத்து அணிந்து, மாதவிலக்கு முடிந்தவுடன் மீந்திருக்கும் குங்குமத்தைக் கடலில் சேர்த்து விட வேண்டும். கடல் பகுதி அருகில் இல்லாதோர் மாதவிலக்கின் போது அணிந்து மீந்த குங்குமத்தைத் தனியே எடுத்து வைத்து கூடிய விரைவில் எவர் மூலமாகவேனும் அதனை கடலில் சேர்த்து விட்டு நீராடி வருதல் வேண்டும். மாதவிலக்கின் போது மூன்று நாட்களும் வேப்பிலை ஊறிய நீரில் கண்டிப்பாக இரு முறையும் நீராடுதலால் தோஷங்கள் உடலில் சேருவதை எளிதில் தடுத்து விடலாம்.
போகிப் பொங்கல் பண்டிகை
உள்ள அழுக்கை நீக்குவதற்கான வழிபாடுகள் கூடியதே போகிப் பொங்கல் பண்டிகையாகும். நல்லவிதமான சிறுசிறு ஆசைகளைக் கூட பலவிதமான எளிய பிரார்த்தனைகள் மூலமாக நிறைவேற்ற வல்லதே போகிப் பொங்கல் பண்டிகையின் மகத்துவங்களில் ஒன்றாம். தீயசக்திகளை எல்லாம் ஒட்டு மொத்தமாக வென்று அவற்றை பஸ்மம் செய்வதற்கான (கூட்டருள் சக்தியைப்) Positive Energies–ஐ பெறுகின்ற திருஅருள் நாளே போகிப் பண்டிகை தினமாம்.  
புனிதமான உத்தராயண புண்யகாலம் பிறக்கின்ற தை மாதம் முதல் தேதியானது தர்ப்பணத்திற்குரித்தான மிகச் சிறப்பான நாள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதே போன்று 12 இராசிக் கட்டங்களில் முதலாவதான மேஷ ராசியில் சூரிய பகவான் பிரவேசம் செய்கின்ற நாளான மகர சங்கராந்தி என்று போற்றப்படும் தைப் பொங்கலுக்கு முதல் நாளாகிய போகிப் பொங்கல் பண்டிகையின் மகத்துவத்தைப் பலரும் இன்று அறிந்தாரில்லை. போகிப் பொங்கல் பண்டிகை என்பது பல அற்புதமான பூஜை முறைகளைத் தன்னுள் கொண்டு மிகவும் சிறந்த தெய்வத் திருநாளாக விளங்குகின்றது. போகிப் பண்டிகை என்றால் குப்பை கூளங்களைத் திரட்டி அக்னியை எழுப்பி பஸ்பம் செய்யும் நாள் என்று மட்டுமே நீங்கள் இதுகாறும் அறிந்திருப்பீர்கள்.  இது மட்டுமல்ல! உள்ளத்தில் பாசி போல் படிந்திருக்கு உள்ள/மன அழுக்கையும் போக்கக் கூடிய தெய்வீகச் சக்தி நிறைந்த நாளாகவும் போகிப் பண்டிகை விளங்குகின்றது என்பது நீங்கள் இதுவரை அறியாத ஒன்று அல்லவா!
உள்ள அழுக்கே தீய ஒழுக்கத்தின் மூலம்
உள்ளத்தில் பாறையாக உள்ள அழுக்கினை அவ்வளவு எளிதில் நீக்க முடியுமா? குறைந்த பட்சம் உள்ளத்தில் இருள் கூட்டும் அழுக்கை நீக்குகின்ற வழிமுறையாவது தெரிந்து கொண்டால்தானே, அதை கடைபிடிப்பதற்கான நல்வழி முறையில் நாம் இறங்க முடியும். ஆமாம், உள்ளத்தில் கறையாய்ப் படிந்திருக்கும் அழுக்கு என்பது என்ன? பிறன் மனை நாடுதல், முறையற்ற காம உணர்ச்சிகள், அதர்மமான எண்ணங்கள், தவறான மனக் கிளர்ச்சிகள், பகைமை, குரோத எண்ணங்கள், பொறாமைத் தீ, வஞ்சம், பழி, பகைமை பிறருடைய வாழ்க்கையுடன் தம்மை ஒப்பிட்டுப் பார்த்து இறைவன் தனக்கு இவற்றையெல்லாம் அளிக்கவில்லையே என்று பொருமுதல் இவ்வாறாக உள்ள அழுக்கைச் சார்ந்த தீய சக்திகள் தான் எத்தனை! எத்தனை!
ஒரு மனிதன் உடலளவில் மூன்று வேளையும் நீராடி, தலைக்கு எண்ணெய் தடவி, தலைவாரி, பவுடர், சென்ட் நறுமணத்துடன் விளங்கினாலும் உள்ளத்தில் நாற்றம் பெருக்கெடுத்து ஓடுகின்ற அளவிற்கு முறையற்ற காம உணர்ச்சிகளும், தீய எண்ணங்களும், தவறான அணுகு முறைகளும் பொங்கினால் அவன் வாழ்ந்து பெருக்குவது பிறவிப் பிணிகளைத்தானே!
கலியுகத்தில் மனிதனிடம் தவறான எண்ணங்கள் எழுவது மிகவும் சர்வ சகஜமாகி விட்டது. மிகவும் சக்தி வாய்ந்த ஆலயங்களின் மூலஸ்தானத்தில் இறைவன் முன் நின்றால் கூட மனிதன் தீய எண்ணங்களுடன் திரிகின்றான். ஏனிப்படியோ? அதெப்படி அவ்வளவு சக்தி வாய்ந்த மூலமூர்த்தியின் முன்னால் இந்த எண்ணங்கள் எழ முடியும் என்று கேட்கத் தோன்றுகின்றதல்லவா! எவன் ஒருவன் சுயம்புலிங்க மூர்த்தியை இறைவனாகப் பார்க்கின்றானோ அவனுக்குத் தான் புனித எண்ணங்கள் தோன்றும். தீய எண்ணங்கள் தாமாகவே அழியும்! என்னதான் இறைநம்பிக்கை இருந்தாலும் சுயம்பு மூர்த்தியின் முன்னால் நின்றாலும் கூட, தீய எண்ணங்கள் தோன்றினால் அவனுக்கு பக்தி நிலை, ஆழ்ந்த இறைநம்பிக்கை கைகூடவில்லை என்பதே உண்மை! இதுவே உங்களுடைய கடவுள் பக்தியைச் சோதிப்பதற்கான ஆத்ம பரிசோதனை (Litmus Test) ஆகும்.
எனவே ஒவ்வொருவரும் தன்னைத்தானே அறிந்து பகுத்தறிவுடன் ஆத்ம விசாரம் செய்து கொள்ள வேண்டிய இறைப் பரிசோதனைக் கூடமாகவும் ஆலயங்கள் விளங்குகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். ஒரு நாளின் ஆறு முக்கிய வேளைகளிலும் உங்கள் மனப் போக்கை அறிவதற்காகத்தான் ஆலயத்தின் ஆறு கால பூஜைகளும், இறைவன் முன் நின்று பாருங்கள். அப்போது தெரியும் உங்களுடைய இறை நம்பிக்கை நிலையும், ஆழமும்!
போகிப் பொங்கல் பண்டிகையான இன்று வெவ்வேறு சுவை கொண்ட வெண்பொங்கலையும், சர்க்கரைப் பொங்கலையும் சூரிய சந்திர மூர்த்திகளுக்குப் படைத்து, ஏழைகளுக்குத் தானமாக அளித்த பின்னர், ஆலயங்களுக்குச் சென்று குறைந்தது 1008 முறையேனும் அடிப்பிரதட்சிணம் செய்து வருதல் வேண்டும். இதுவே உள்ளத்தில் ஒட்டியிருக்கும் அழுக்கை நீக்குவதற்கான முதற்படி ஆகும். கோடானு கோடி மகான்களும், சித்புருஷர்களும் இன்றும் என்றும் உலவுகின்ற ஆலயங்களில் அவர்கள் திருவடிகள் பட்ட கோயில் பிரகாரங்களில் எவ்வளவு நேரத்திற்கு உங்களுடைய உள்ளங்கால் ரேகைகள் மூலமாக ஆத்ம ரேகை கிரணங்கள் அங்கங்களில் பாய்ந்து அங்கங்கள் ஒவ்வொன்றாக சுத்திகரிக்கப்படுகின்றது.
எனவே நீங்கள் அடிப்பிரதட்சிணம் செய்யும் போது, உங்கள் உடலினுள், உள்ளத்தினுள், மனத்தினுள் பாயும் எண்ண ஓட்டங்கள் நன்கு சுத்தம் செய்யப்பட்டு மாசு படிந்த கேவலமான எண்ணங்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, தணிக்கப்பட்டு, வெளியேற்றப்பட்டு புதிய ஆன்ம கிரணங்கள் பதிக்கப்படுகின்றன. Perhaps a mental scandisk and defrag!  அதிலும் குறிப்பாக, அரசமரம், ஆலமரம், வில்வமரம், வேப்பமரம், வன்னி மரம், தென்னை மரம், வாழை மரம் போன்ற சமித்து விருட்சங்கள் நிறைந்த ஆலயங்களிலும் நந்தியாவட்டை, செம்பருத்தி, மல்லிகை போன்ற புனிதமான புஷ்பங்களும் நிறைந்த ஆலயப்பகுதிகளில் நீங்கள் அடிப்பிரதட்சிணம் செய்து வருகையில் உள்ளத்தில் ஊறிடும் அழுக்கினை சுத்தம் செய்யும் ஆன்மீக வழிமுறையானது மேம்பட்டு துரிதப்படுத்தப்படுகின்றது. எனவே போகிப் பண்டிகை தினத்தில் பால்விருட்சம் உள்ள கோயில்களில் அடிப்பிரதட்சிணம் செய்வது மிகவும் சிறப்புடையதாகும். ஏனென்றால் சமயக் குரவர்கள் நால்வர்களுடன் மட்டுமின்றி, கோடானு கோடி மஹரிஷிகளும், சித்புருஷர்களும் விஜயம் செய்கின்ற திருத்தலமாக விளங்குகின்ற அல்லவா நம்முடைய புனிதமிகு ஆலயங்கள்!
தைப் பொங்கலுக்கு முதல் நாளான போகிப் பண்டிகையன்று அடுப்பை நன்றாகச் சுத்தம் செய்து மாக்கோலமிட்டு அடுப்பிற்கான பூஜைகளைச் செய்திடல் வேண்டும். சமையலறையில் தினமும் அடுபினைத் தொட்டு வணங்குகின்ற புனிதப் பாங்கினை பலரும் மறந்துவிட்டார்கள். அக்னி பகவானின் அருள் இருந்தால் தானே நமக்கு உணவு கிட்டும் என்ற எண்ணம் பலருக்கும் மனதில் இன்னமும் ஆழப்பதியவில்லை. இன்றைக்கும் நம் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில், எதையும் சமைக்கும் முன்னர், ஏன் வெந்நீரை வைத்தால் கூட அந்த அடுப்பிற்கு வீழ்ந்து நமஸ்காரம் செய்து சமையல் முடிந்தவுடன் அக்னி பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் வணங்கி எழுகின்ற தெய்வீக மனப்பாங்கினை அடியார்களின் உள்ளத்தில் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் நன்கு பதிய வைத்துள்ளார்கள். கடந்த கார்த்திகைத் தீபப் பெருவிழாவில் நடந்த அன்னதானத்தின் போது ஆஸ்ரமத்தில் தினமும் காலையில் அக்னி பூஜையும், அன்னதான சமையல் முடிந்தவுடன் நன்றி தெரிவிக்கும் வகையில் மீண்டும் அடுப்பு பூஜையும் நடைபெற்றன.
ஒவ்வொரு பௌர்ணமியிலும் நம் ஆஸ்ரமத்தில் இவ்வகையிலான அக்னிபூஜை கடைபிடிக்கப்படுகின்றது. ஆஸ்ரமத்தில் தினந்தோறும் கோட்டை அடுப்பில் பொலிந்து நமக்கு அனுக்ரஹம் செய்த அக்னி தேவதைகளுக்கும் சாந்தம் செய்யும் முகத்தான் பசும்பாலை நெருப்பினில் தெளித்து சாந்த பரிபாலன அக்னி சாந்தி பூஜையும் இன்றளவும் நடைபெறுகிறது.
போகி (அக்னி)யில் பொசுங்கும் மனக் குழப்பங்கள்
போகிப் பொங்கல் பண்டிகை அன்று இரு அடுப்புகளிலும் சர்க்கரைப் பொங்கலையும், வெண் பொங்கலையும் ஒரே சமயத்தில் சமைத்து இறைவனுக்குப் படைத்து ஏழைகட்கு அன்னதானம் அளித்து வருவதாலும் சம்பங்கி உதிரிப் பூக்களைத் தம்முடைய கரங்களாலேயே தொடுத்து இறைவனுக்குச் சார்த்தி, ஏழைச் சுமங்கலிகளுக்கு அளித்து வருதலாலும் நல்ல மனசுத்தி கிடைக்கும். பலவிதமான மன குழப்பங்களாலும், மன உளைச்சல்களாலும், குடும்பப் பிரச்சினைகளாலும் வாடுவோர்கள் போகிப் பொங்கல் பண்டிகை அன்று சம்பங்கிப் பூக்களைத் தாமே தொடுத்து இறைவனுக்குச் சார்த்தி ஏழைச் சுமங்கலிக்கு அளித்து வந்தால் மனக் குழப்பங்கள் நீங்கும்.. மன அழுக்குகளும் மறையும்.!

தங்கத் தேர் உற்சவம்

சுவாமிக்குத் தங்கத் தேர் உற்சவம்  மிகவும் சிறப்புடையதாம்! தங்கத்  தேரில் சுவாமி பவனி வந்தால் அதைத் தரிசிக்கின்ற வாய்ப்பை விட்டு விடாதீர்கள்! கண்களால் செய்கின்ற பாவங்களுக்கும் கண்களால் கிளர்ச்சியூட்டப்படும் தீய செயல்களுக்கும் தக்க பரிகார வழிகளைத் தருவதே தங்கத் தேர் தரிசனம். நல்லவற்றைக் காணவே இறைவன் கண்களைப் படைத்தான். நல்ல தேஜஸைப் பெற நல்லவற்றையே கண்டு பழக வேண்டும். தங்கத் தேர் தரிசனம் கண்களுக்கு நல் இறைக் கதிர்களை ஊட்டும். முறையற்ற வழிகளில்/பணத்தால் தங்கத்தை ஒருவர் பெற்றால் கனத்த சாபங்களே கனக ரோக தோஷமாகக் குடி கொண்டு விடும். இவற்றை நிவர்த்தி செய்தல் மிக மிகக் கடினம்!
பல ஆலயங்களிலும் சுவாமிக்குத் தங்கத் தேர் அமைத்துத் தங்கத் தேர் ரத உற்சவம் நடைபெறுவது கண்டு மிகவும் ஆனந்தம் அடைகின்றோம். பல லட்ச ரூபாய்களைச் செலவழித்து சுவாமிக்கு தங்கத் தேர் உற்சவம் ஏன் கொண்டாட வேண்டும் என்று பலருக்கும் கேட்கத் தோன்றும். இறை நம்பிக்கை உள்ளவர்களுக்குக் கூட இவ்வினா எழும்பி விட்டால் அவர் பரிபூரணமான கடவுள் நம்பிக்கை கொண்டவரல்லர்! இதற்கெல்லாம் தகுந்த விடையை ஒவ்வொருவரும் தாமே நன்கு ஆத்மவிசாரம் செய்து கொண்டு நல்ல தெளிவைப் பெற்றிடலாம். ஆனால் கலியுகத்தில் இயந்திர கதியாக வாழ்கின்ற நிலையில் ஒருவருக்குச் சாந்தமாக அமர்ந்து தியானித்து இத்தகைய தெய்வீக வினாக்களுக்கான தக்க விடையைப் பெறுவதற்கு எங்கே நேரம் இருக்கின்றது?
நேரமில்லை என்று சொல்லி தண்டமாகப் பல உபயோகமற்ற வேலைகளில் சினிமா, டி.வி, ஹோட்டல் என நேரத்தை விரயம் செய்வோர்தான் அதிகம்! உலகத்திலுள்ள அனைத்து வினாக்களுக்கும் இறைவன் அருள்வழியிலான விடைகளைப் பரவெளியில், ஆகாயத்தில் பதித்து வைத்துள்ளான். ஆனால் அதை கிரகித்து உணர்வதற்கான தியான நிலையைப் பலரும் பெற இயலவில்லை. என் செய்வது? அறிந்தோரோ அமைதியாக வாழ்க்கையை நடத்துகின்றார்கள். ஏனென்றால் அவர்கள் தாம் கண்ட அனுபவத்தைப் பிறருக்கு உணர்த்தினாலும் நம்பிக்கையுடன் ஏற்பாருமில்லை! இதுவே கலியுகக் காலத்தின் கோலம்!
தங்கமோ தங்கமான குணப்பாடுகள்!
உலோகங்களில் பொன்தான் புனிதத் தன்மையில் முதன்மையான இடம் வகிக்கின்றது. காரணம் மிகவும் பரிசுத்தமாக அது விளங்குவதாம்! எத்தகைய மாசையும் தன்னுள் ஏற்பதில்லை! ஆனால் மேற்படிவுகள் அமைவதுண்டு! வேத மந்திரங்களை நல்ல முறையில் கிரஹிக்கக் கூடிய சக்தி வாய்ந்தது! மங்களத்தைத் தரக்கூடியது! மாங்கல்ய பாக்கியத்தை நன்முறையில் விருத்தி செய்து தரவல்லது! மிகுந்த தெய்வீக சக்தியைக் கொண்டு, கோபுர விமானங்களில் கலசமாக அமைந்து கோடானு, கோடி தேவாதி தேவ மூர்த்திகளுடைய புனிதமான தேக சாந்தியையும், ஒளிமயமான தேஜோ சக்தியையும், கோடிக்கணக்கான சூரியப் பிரகாச ஆற்றலையும் தன்னுள் தேக்கி நிலை நிற்க வைத்துக் காத்து ஆலத்திற்கு வரும் பக்தர்களுக்கு அளிக்கவல்லது! கோடானு கோடி வேத மந்திரங்களின் சக்தியைத் தன்னுள் கிரஹித்து ஆட்கொண்டு தக்க முறையில் பக்தர்களுக்குப் பிரார்த்தனா பலன்களாக வழங்கும் வல்லமையைக் கொண்டது.
சஷ்டி அப்த பூர்த்தி, சதாபிஷேகம் என்ற வகையில் 60 அல்லது 80 வயது நிரம்பிய பெரியவர்களுக்குக் கனகாபிஷேகம் எனும் தங்க நாணயங்களை அபிஷேகம் செய்யும் போது அவர்களுக்கு ஆயுள் விருத்தியைத் தரக்கூடியது. தங்க சக்தியானது தங்க பஸ்பமாக சிறிது சிறிதாக உடலில் சேரும் போது உடலுக்கு தேக சாந்தியையும், நல்ல ஆரோக்யத்தையும், நீண்ட ஆயுளையும் தரக் கூடியதுதானே! மகத்தான பூஜா சக்திகளைத் தன்னுள் தாங்குவதுடன் இறைவனே ஆவாஹனம் ஆகின்ற பஞ்சலோக விக்ரகங்களில் அந்த ஆவாஹனச் சக்தியைப் பெருமளவிற்குத் தன்னுள் தாங்கும் பரிபூரணமான தெய்வீகத் தன்மை நிறைந்தது.
சித்த ஆயுர்வேத முறைகளின் அற்புதமான சுவர்ண பாஷ்ய மருத்துவ குணத்தைப் பூண்டுள்ளது. பரம்பொருளாம் இறைவனுடைய சலங்கை நாதத்திலிருந்து பிறந்தமையால் தங்கத்தாலான ஒலிக் கருவிகள் அற்புதமான இசையைக் கூட்டுவதோடு தெய்வீக கிரணங்கள் நிறைந்த சப்த வர்ஷித இசைக் கிரணங்களை வழங்குவதாகத் தங்கம் விளங்குகின்றது. இவைதாம் தெய்வீக சக்திகளைத் தாங்கி மின் அலைக் கதிர்கள் போல் வாயுமூலமாய் அனைவர்க்கும் அருள் கூட்டுகின்றன. இவ்வாறாகத் தங்கத்தின் தெய்வீக மகிமையை விவரித்துக் கொண்டே செல்லலாம். ஏன் தங்கத்தின் மகிமையை இவ்வளவு விளக்கமாக எடுத்துரைக்கின்றோம் என்றால் ஆலயத்திலே சுவாமி அமர்ந்து வலம் வருதற்காகத் தங்கத் தேரை அமைக்கின்ற போது விளைகின்ற அபரிமிதமான அற்புதமான சமுதாய இறைப் பலன்களை நாம் இங்கு காண இருப்பதால் இதற்கு முன்னோடியாக தங்கத்தின் மகிமையை நாம் நன்கு அறிந்திடுதல் வேண்டும் அல்லவா!
கனக தாரையில் அமிர்த (நல்வரத்) தாரைகள்!
கோயில்கள் யாவுமே கோடானுகோடி தேவர்களும், மகரிஷிகளும், யோகியர்களும், சித்புருஷர்களும், எப்போதும், எந்நேரமும் வலம் வருகின்ற புனிதம் நிரம்பிய தெய்வீக வளாகங்கள் அல்லவா! இறைத் தூதுவர்களான மகான்களும், மஹரிஷிகளும், சித்புருஷர்களும், யோகியர்களும், ஏன் தேவாதி தேவ மூர்த்திகளுமே ஆலயங்களுக்கு வந்து பூஜித்துத் தம்முடைய தெய்வீக சக்திகளை, ஆசீர்வாதங்களை, அனுக்கிரகங்களை, ஆலயத்தில் பக்தர்கள் பெறும்படி நிறைத்துச் செல்கின்றார்கள். தங்கத்தின் மூலாதார குணப்பாடுகளுடன் அதன் அபரிமிதமான தெய்வீக சக்தியுடன் தங்கத் தேரானது ஆலயத்தை வலம் வருகையில் அங்கு பிரசன்னமாகும் தேவாதி தேவ மூர்த்திகளுடைய, சித்புருஷர்களுடைய, மகான்களுடைய அனுகிரக தேவமயக் கதிர்களையும், தெய்வீக சப்தங்களையும், புண்ய சக்திகளையும் நல்வர காரண சித்தி கிரணங்களையும் தம்முள் ஈர்த்து தங்கத் தேரானது அடியார்களுக்கு நல்ல ஆசீர்வாதமாகப் பெற்றுத் தருகின்றது.
மேலும் தேவாதி தேவ மூர்த்திகள் கோடானு கோடி சூரியப் பிரகாசமுடைய திருமேனி உடையவர்களாதலின் அவர்கள் தங்கள் சூட்சுமத் திருமேனியை ஆலய கோபுரக் கலசங்கள் மூலமாக கோபுரத்தில் தங்க வைத்து இறங்கி சுவாமியை தரிசித்துப் பிறகு தங்கள் சூட்சும தேகத்தை மீண்டும் பெற்றுக் கொண்டு தங்கள் லோகங்களுக்குத் திரும்புகின்றார்கள். அப்போது அவர்கள் இறைப் பரிசாக ஆலயக் கோபுரத் தங்கக் கலசங்களில் இட்டுச் செல்கின்ற தேவ சக்திகளைத் தங்கத் தேரானது தம்முள் ஈர்த்து அதனையும் ஆசிக் கிரணங்களாக பக்தர்களுக்கு அள்ளித் தருகின்றது.
அதாவது மஹரிஷிகளின் திருப்பணிகளுள் ஒன்றை தங்கத் தேரே ஆற்றி விடுகின்றது என்றால் என்னே அதன் மகிமை! கோடானு கோடி யுகங்களாக இருந்து வந்து எத்தனையோ கோடி மஹரிஷிகளுடைய சித்புருஷர்களுடைய வேத மந்திர, யந்திர, தந்திர பூஜா சக்திகள் ஆலயத்தில் நிறைந்திருக்கும் அல்லவா! எத்தனையோ சதுர்யுகங்களாக ஆலய வளாகத்தில் இவ்வகையில் பதிந்திருக்கின்ற தேவாதி தேவ சக்திகளையெல்லாம் தங்கத் தேரானது ஈர்த்து அதை தரிசிப்போர்க்கெல்லாம் நேத்ர தரிசன சக்தியாக அளிக்கின்ற தன்மையைப் பெற்று இருக்கின்றது. இதற்கான ஸ்வர்ண கடாட்ச தேவதைகளும் ஸ்வர்ண வர்ஷ தேவதைகளும் உண்டு.
யாவர்க்குமாம் (தங்கத்) திருவருள்!
எனவேதான், ஒரு முறை தங்கத் தேரானது ஆலயத்தை வலம் வருகின்றது என்றால் அதனை தரிசிக்கின்ற ஆயிரமாயிரம் மக்களுக்கு மட்டுமல்லாது, பறவைகள், பூச்சிகள், புழுக்கள் என எந்தெந்த உயிரினங்கள் எல்லாம் இந்த தங்கத்தேர் தரிசனத்தைப் பெறுகின்றதோ அல்லது அந்த இடத்தினருகில் வசிக்கின்றனவோ, அவற்றிற்கெல்லாம் நேத்திர சக்தி கிரணங்களாக இந்த தேவ சக்திகள் அவைகளுடைய உடலில் சேர்கின்றன. இது மட்டுமல்லாது தங்கத் தேருக்குத் தன்னைச் சுற்றிலுமுள்ள நல்ல சக்திகளையும் நல்ல எண்ணங்களையும், புனிதமான கிரணங்களையும் கிரஹித்துக் கொள்ளக் கூடிய சக்தி நிறைய உண்டு. இவ்வகையில் பார்த்தீர்களேயானால் கோயில் தங்கத் தேரில் உள்ள ஒரு சவரன் தங்கமானது கோடானு கோடி மடங்கு புண்ய சக்திகளை ஈர்த்து, கிரகித்துத் தன்னுள் நிலைத்து நிற்க வைக்கக் கூடிய சக்தியைப் பெற்றுள்ளது என்றால் பொன்னின் மகத்தான சக்தியைச் சொல்லத்தான் இயலுமோ!
நட்சத்திர சக்தி தரும் தங்கத் தேர்!
பொதுவாக தங்கத் தேர் உற்சவத்தினை சந்தி நேரங்களில் நிகழ்த்துவதை நீங்கள் கண்ணுற்று இருப்பீர்கள்! வானவெளியிலே திகழ்கின்ற கோடானு கோடி நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் மகத்தான ஜோதி ப்ரவாகத்தைக் கொண்டுள்ளது. உதாரணமாக அசுவினி நட்சத்திரமானது பல சிறப்பான ஆஸ்ருத கல்ப மருத்துவ குணக் கதிர்களைப் பெற்றிருக்கின்றது! கோடானு கோடி மைல்களுக்கு அப்பால் வானத்தில் பிரகாசிக்கின்ற இந்த அசுவினி நட்சத்திரத்தின் மருத்துவ சக்தியை நாம் எவ்வாறு பெற முடியும்? தங்க ரதமே இவற்றை வானத்திலிருந்து ஈர்த்து சந்திக் கால ரத உற்சவத்தின் போது நமக்கு ஆலய தரிசன பலன்களாக நமக்கு அளிக்கின்றது!
அக்காலத்தில் தவமுனிகளும், புனிதத் துறவிகளும்,  மகரிஷிகளும் சமுதாயத்தில் உலா வந்தமையால் அவர்கள் தங்கள் தபோ வலிமையைக் கொண்டு பிரபஞ்சத்தில் நிறைந்திருக்கும் பலவிதமான தெய்வீக சக்திகளைத் தம்முள் ஈர்த்து அவற்றை ஆசிகளாக குங்குமம், விபூதி, தீர்த்தப் பிரசாதமாக நமக்கு அளித்து தம் பெருந்தவப் பயனை தியாகம் செய்து அருட்பெரும் சமுதாய இறைச் சேவை புரிந்தார்கள். ஆனால் தவமுனிகளையும் புனிதத் துறவிகளையும், மகான்களையும் மதிக்கத் தெரியாத கலியுகம் இது! சிலர் போலித்தனமான துறவு வாழ்க்கையைக் கொண்டு சமுதாயத்தை  ஏமாற்றுவதால் இதனால் உண்மையான புனிதமான சந்நியாசிகளும் கூட தம் அருட்தன்மையை வெளிக்காட்டாது பாதுகாப்பிற்காக இலை மறை கனியாய் சமுதாயத்தில் மக்களோடு மக்களாய் வாழ்ந்து சரணாகதியுடன் ஆழ்ந்த நம்பிக்கையுடன் தம்மை அண்டி வருபவர்களுக்குத் தக்க தெய்வீக வழிகாட்டியாக விளங்குகின்றனர்.
அஸ்வினி மருத்துவ தேவர்கள் எப்போதும் பூஜித்து உலா வருகின்ற புனித லோகமாக அஸ்வினி நட்சத்திர லோகம் விளங்குகின்றது. பகலிலும், இரவிலும் எப்போதும் ஒளிர்ந்து இருக்ககூடிய கோடானு கோடி நட்சத்திரங்களின் தெய்வீக சக்திகளை எவ்வாறு நாம் பெற்று மானுட சமுதாயத்திற்கு அளிக்க முடியும்? இதனைப் பெற்றுத் தருவதுதான் தங்கத் தேரில் பொலிந்து இருக்கும் பரிஸ்ருத நட்சத்திரக் கற்றைகளாகும்! தங்கத்தை வடித்தெடுத்து இறைவன் உலா வருகின்ற தேராக மாற்றுகின்ற போது இதில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்ற உற்சவ மூர்த்திகள் இந்தத் தங்கத்திற்கு விசேஷமான பவித்ர சக்தியைக் கூட்டித் தருகின்றார்கள். இந்த பவித்ர சக்திகள் மூலமாகப் பகலிலும், இரவிலும், எந்நேரத்திலும் பிரகாசிக்கின்ற கோடிக்கணக்கான நட்சத்திரங்களின் பத்ம கோசக் கிரணங்களை தங்கத் தகடுகளானவை தம்முள் ஈர்த்து அதனை தரிசிப்போர்க்கெல்லாம் சுவாசக் காற்று மூலமாகவும், கண்களுடைய நேத்ர சக்தி மூலமாகவும் அபரிமிதமான நல்வரங்களாகப் பொழிந்து தருகின்றது.
தங்கத் தேரிலிருந்தும், தங்கத் தேர் அமைப்பதற்காக பக்தர்கள் அளிக்கும் அணிகலன்கள், மூக்குத்தி, மோதிரம், கடுக்கன், வளையல், கட்டித் தங்கம், நாணயம் போன்றவற்றில் நிறைந்திருக்கும் தங்கத்தை அபகரித்தாலோ, திருடினாலோ, சுரண்டினாலோ கிட்டுகின்ற சாபங்களுக்கு அளவே கிடையாது. தங்கத்தை அதர்மமான முறையில் சேர்த்ததற்கான தீவினைக் கர்ம துன்பங்களின் விளைவுகளையும் தக்க சற்குரு மூலமாக அறிந்திடுக!

நித்ய கர்ம நிவாரண சாந்தி

அந்தந்த நாளில் வலுவான ஆட்சியைப் பெற்றிருக்கும் தீர்க்கமான பார்வையை உடைய திதி, நட்சத்திரம், யோகம், கரணம், லக்னம், கிரகங்களின் தன்மைக்கேற்ப அந்நாளுக்குரிய விசேஷ பூஜை / வழிபாடு முறை அளிக்கப்பட்டுள்ளது . இதனை முறையாக ஆழ்ந்த நம்பிக்கையுடன் கடைபிடித்திடில் குருவருளால் ஒவ்வொரு நாளையும் தீய கர்ம வினைகளின் கழிப்போடு மேலும் எவ்விதமான புதிய தீவினைகளும் சேரா வண்ணந் தடுத்து சாந்தமான நித்ய வாழ்வைப் பெற்றிடலாம்!

1.1.2000 - சனீஸ்வர பகவான் மகிழ்ச்சி அடையும் தோத்திரத்தையும், சனீஸ்வர பகவான் கணபதியைத் துதித்த துதியையும் 21 முறைக்குக் குறையாமல் ஓதி நீல புஷ்பத்தால் சிவனுக்கு அர்ச்சனை செய்து நீல வஸ்திரத்தையும் சர்க்கரைப் பொங்கலோடு தானம் செய்திடில் அடுத்து வரும் நாட்கள் நலம் தரும்.

ஸ்ரீஸ்ரீமதி அம்மன் லால்குடி

2.1.2000 - காம, குரோத, மத மார்ச்சர்யத்தால் பிறர் அழிய வேண்டும் என்று பலரும் எண்ணுவார்கள். எதிரிக்கும் துன்பம் தராமல் திருந்தி வாழ லால்குடி ஸ்ரீமதி அம்பிகை வழிகாட்டி அருள்பாலிப்பதால் ஸ்ரீமதி அம்மனுக்குப் பாலால் செய்த பால்கோவா, பாசந்தி, திரட்டுப்பால் நைவேத்யங்களை வைத்து தானம் செய்திடில் தீய நினைவுகளை நல்ல நினைவுகளாய் மாற்றி அம்பிகை அருள்பாலிப்பாள்.

3.1.2000 - படிப்பிற்காக வெளியூர் / வெளிநாடு செல்ல விரும்புவோர் இன்று திருஅண்ணாமலையில் கிரிவலம் வந்து ஏழை மாணவர்கள் படிப்பிற்காக உதவி செய்திடில் நல்ல பலன் கிட்டும்.

4.1.2000 - இரும்பு, நெருப்பு சம்பந்தமான தொழில் உடையோர் அருணகிரிநாதர் பாடிய முருகன் தலத்தில் முருகனுக்கு செண்பகப் பூக்களால் அலங்கரித்து தக்களி சாதம் தானம் செய்திடில் நலம் பெறுவர்.

5.1.2000 - இறவாப்புளியைத் தலவிருட்சமாய்க் கொண்ட கோயிலில் இறைவனுக்கு பூ அலங்காரம் செய்து புளிய மரத்திற்குத் தம் கையால் நூற்ற நூலில் 80 வயது சுமங்கலிகளின் புனிதமான கரங்களால் மஞ்சள் தடவி அந்த விருட்சத்தைச் சுற்றி நூல் புரியிட்டு வணங்கி புளியோதரை சாதம் தானம் செய்திடில் – மனக் கசப்புகள் நீங்கி வாழ்வு புனிதம் பெறும்.
6.1.2000 - குபேரன் பூஜித்த சிவலிங்கத்திற்கு அபிஷேக ஆராதனையுடன் சர்க்கரைப் பொங்கல் செய்து தானம் அளித்திடில் – பணத் தடங்கல்கள் விலகும்.

7.1.2000 - வானத்தின் நீல நிறத்தில் புதிய துணிகளை வஸ்திர தானமாய் இன்று அண்ணன் தம்பிகளுக்குள் அளித்துக் கொள்வதால் புதிய மனஸ்தாபங்கள் வராது.

அருணகிரி நாதர் பாடிய
ஸ்ரீமுருகப் பெருமான் லால்குடி

8.1.2000 - பசுபதி, பன்னீர்ச் செல்வன், பங்கஜம், பழனியப்பன், பாலு, என்ற “ப” நாம எழுத்துக்களை உடையவர்கள் மூத்தவராய் இருந்திடில் பாதபூஜை செய்திடுக, இளையவராய் இருந்திடில் வஸ்திர தானம் அளித்திடில் மேம்பாலம் கட்டும் துறையில் பணிபுரிபவர்களுக்கு வருகின்ற ஆபத்துகள் குறையும்.

9.1.2000 - பழைய குடிசையில் வாழ்கின்ற மக்களுக்குப் புது குடிசை போட புது ஓலைகளைத் தானமாய்த் தந்திடில் Neuro Surgeons  தங்கள் தொழிலில் முன்னேற்றம் காணலாம்.

10.1.2000 - ஸ்டேஷனரி வியாபாரம் செய்பவர்கள் இன்று ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்களை தர்மம் செய்திடில் காலில் வருகின்ற நோய்கள் விலகும்.

11.1.2000 - ‘க’ , ‘ச’ , ‘த‘ , ‘ட‘ , என்ற எழுத்துக்களை தங்கள் பெயரில் பூண்டவர்கள் அதே நாம் எழுத்துக்களை உடையவர்களுக்கு இன்று நாமக் கத்திரிக்காய் கொண்ட சாம்பார் தானம் செய்திடில் – குடும்பத்தில் ஏற்படும் சலசலப்புகள் தீரும்.

12.1.2000 - எவ்வளவு விரோதங்கள் இருந்தாலும் மனஸ்தாபங்கள் இருந்தாலும் இன்று மாமியாருக்கும், மாமனாருக்கும் மருமகள் பாத பூஜை செய்து உணவிட்டு வணங்கிடில் “பட்டமடை” என்ற தோஷம் தாக்காமல் வாழ்நாளைக் கழிக்கலாம்.

13.1.2000 - வெளியூரில் வசிக்கின்ற பிள்ளைகளுக்காகவும் பெண் குழந்தைகளுக்காகவும் ஏற்படுகின்ற ஆபத்துகளிலிருந்து காக்க அவர்களுடைய உறவினர்கள் இன்று குறைந்தது 1000 பேருக்காவது அன்னதானம் செய்து வணங்கிடல் வேண்டும். அன்னதானத்துக்கான சிறப்பான நாட்களுள் இதுவும் ஒன்று.

14.1.2000 - அரிசி ஆலைகள் (Rice Mill) வைத்திருப்போர் இன்று ராகு, கேது அல்லது நாகேஸ்வரர் நாமம் உடைய சிவலிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து 1000 பேருக்காவது அன்னமிட்டு வணங்கிடில் நாகம் தவழ்ந்த (ஊர்ந்த) நெல்லால் வருகின்ற சாபத்தின் வேகம் குறையும்.
15.1.2000 - ‘க’, ‘கோ‘ , ‘ந‘ என்ற நாம எழுத்துக்களை உடையவர்கள் கோயில் நந்தவனங்களுக்கு நல்ல மணமுள்ள பூக்களைத் தரும் செடிகளை தானமாய் அளித்துப் பாதுகாத்து வர ஏற்பாடு செய்திடில் வியாபாரத்தில் வருகின்ற நஷ்டங்கள் குறையும்.

16.12000 - பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் செய்த தவறுகளுக்கு பிராயசித்தமாய் பூமிநாதர், பூலோகநாதர், திரிவிக்ரமர் மூர்த்திகள் அருள்பாலிக்கும் தலங்களில் 5000 பேருக்குக் குறையாமல் அன்னதானம், தர்மம் செய்திடில் ஓரளவு பிராயசித்தம் பெறலாம்.

17.1.2000 - Gas  கம்பெனிகள் வைத்திருப்பவர்கள் தாங்கள் செய்த தவறுகளுக்குப் பிராயசித்தமாக எல்லைக் காவல் தெய்வங்களுக்கு வண்ணப் பூச்சுகள் அளித்து சித்திரான்னங்கள்  (பொங்கல், எலுமிச்சை சாதம், புளியோதரை, தயிர், etc.. ) தானம் செய்திடில் ஓரளவு பிராயசித்தம் பெறலாம்.

18.1.2000 - கணவன் இருக்கும் போதே பிற ஆடவர்களை எண்ணுவோர் இன்றோடு திருந்தி தங்கள் மனதை மாற்றிக் கணவனையே சரணடைய வேண்டும். இனியேனும் வேறொருவரையும் மனதால் நினைத்தல் கூடாது. தம் பாவத்திற்குப் பரிகாரமாய் இன்று கால பைரவ மூர்த்திக்கு மாலை சாற்றி அன்னதானம் செய்திடில் தக்க பிராயசித்தம் நல்வழி கிட்டும்..பல ஆண்டுகளுக்கு ஒரு முறையே வரும் “மனமாற்ற முனி நாள்” இது.

19.1.2000 - பஞ்சு அடிக்கும் தொழிலாளிகளின் ஆரோக்கியத்திற்காக டாக்டர்கள் இன்று இலவச வைத்யம் செய்து மருந்தளிக்க வேண்டும். மற்றவர்கள் மருத்துவர்த்திற்குரித்தான செலவை ஏற்றல் வேண்டும். இந்த உதவியைச் செய்வோர்க்கு சுவாச நோய்கள் தணியும்.

20.1.2000 - இன்று இறைவனின் தங்கத் தேருக்கு தங்கதானம் செய்திடில் – வியாபாரத்தில் நலம் பெறுவர்.

21.1.2000 - சந்திரன், சசிதரன், ராமச்சந்திரன் போன்ற சந்திரனின் நாமம் பூண்டவருக்குப் பால் தானம் செய்வதால் கிரஹண தோஷம் நீங்கி சாந்தி கிட்டும்.

22.1.2000 - இன்று தூர்வாரி குளங்கள், கிணறுகளை சுத்தம் செய்து மீன்களைக் குளத்தில் விடுவதால், கோடிக்கணக்கில் பணம் திரும்பித் தரவேண்டியவர் நலம் பெறுவர்.

23.1.2000 - நன்கு படிக்கும் மாணவருக்கு கை கடிகாரம் பரிசு – மூதாதையர் பிரச்னை தீரும்.

24.1.2000 - இன்று ஷோடச கணபதி மூர்த்திகளை (16 மூர்த்திகள்) மனதார வணங்குதலால் மன சஞ்சலம் தீரும்.

25.1.2000 - இன்று ஏழை வித்வான்கட்கு உதவி செய்வதால் வேதநாயகன் மகிழ்வுற்று ஆசி பொழிவார்.

26.1.2000 - Cell Phone சம்பந்த வியாபாரிகள் தர்ம சேவை செய்யும் நிறுவனங்கட்கு இலவசமாக Cell-Phone தானம் செய்தால், அதனால் வரும் உள்வழிப் பிரச்னைகள் தீரும்.

27.1.2000 - உண்மையான துறவிகட்கு பாதபூஜை, வஸ்திர தானத்துடன் கௌபீனம் தானமளித்தலால் நாத்தனார், மாமியார் கொடுமை தீரும்.

28.1.2000 - தேங்காய்த் துருவலுடன் சர்க்கரை சேர்த்து விநாயகர் கோயிலில் எறும்புக்கு உணவிடுதலால் நற்காரியங்கள் உடன் நிறைவேறும்.

29.1.2000 – இன்று கரும்பழுப்பில் (Dark Brown) வெள்ளை நாமமிட்ட குதிரைக்கு உணவிடுதலால் அக்கம் பக்கத்து வீட்டார்களால் வரும் துன்பம் தீரும்.

30.1.2000 - இன்று தனிக்குடித்தனம் செய்வோர் தாய், தந்தையரின் ஆசி பெற்றால் வேலையில் வரும் பிரச்னை தீரும்.

31.1.2000   - இன்று Orchestra , இசைக்கருவி வித்வான்கள் தம் கருவிகளுக்கு பூஜை செய்து அன்னதானம் செய்வதால் புது ஒப்பந்தம் ஏற்பட வழி பிறக்கும்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam