சொற்கள் தூய்மையே பற்கள் தூய்மை !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய பாலபருவ குருகுலவாச அனுபூதிகள்!

சிறுவதிலேயே அதிலும் பள்ளி பருவத்திலேயே குருகுலவாசம் பெறுவதென்றால் அச்சிறுவன் என்னே பாக்யம் செய்திருக்க வேண்டும்? அதிலும் அண்ட சராசரமே போற்றிடும் ஸ்ரீஅஸ்தீக சித்தரின் வழித் தோன்றலாக அமைந்திருக்கும் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகளிடமே நேரிடையான கலியுக குருகுலவாசமென்றால் சித்தர் குல ஜோதி மண்டலமாகிய குருமங்கள கந்தர்வ லோகத்திலிருந்து இறையாணையாக நேரடியாக ஜனித்து வந்தருக்குத்தானே அந்த இறைப் பெரும் பாக்யம் கிட்டும்!

அவர்தாம் என்றும் அங்காளியின் அடிமையாய் ஜ்வலித்திட, சித்த சைதன்யப் பேரொளியாம் சிவ குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த சுவாமிகளிடம் குருகுல அமிர்தத்தைப் பருகி இன்று குருமங்கள கந்தர்வாவாக ஸ்ரீவெங்கடராமனாக, நம்மிடையே இல்லறமாம் நல்லறம் பூண்டு அருள்வழி காட்டி வருகின்றார். அவர்தம் குருகுலவாச அனுபூதிகள்தாம் நம்முடைய கலியுகத் துன்பங்களுக்கு துயரங்களைத் துடைக்கும் தூய நல்லிறைச் சூர்ணமாய்ப் பரிணமிக்கின்றன.

எல்லாம் நாடகம்தான் !

கலியுகத்திலும் குருகுலவாசம் நிச்சயமாக உண்டு. ஆழ்ந்த நம்பிக்கை கொண்டோருக்கு சற்குருவின் அரும்பெரும் அரவணைப்புக் கிட்டிடும் என்பதைப் புலனாக்கும் இறைப் பகுத்தறிவுச் சின்மய அனுபூதிகளே அடிமை கண்ட ஆனந்த குரு-சிஷ்ய தெய்வானுபவ சங்கமங்களாம்! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாக்கியத்திலும் அவரவருடைய சற்குருவின் பீஜாட்சர சக்திகளின் சூட்சும உபதேசங்கள் பொதி(லி)ந்திருப்பதை அவரவரே உணர்ந்திடலாம்.

“Divine Head Office!   திருஅண்ணாமலைதான் இந்த உலகத்துக்குகே தெய்வீக ஹெட் ஆபீஸ்! அண்ட சராசரத்துக்கும், ஆயிரமாயிரங் கோடி நட்சத்திரங்களுக்கும், கோடி, கோடியாய் இருக்கின்ற கிரகங்களுக்கும் ஒட்டு மொத்தமாவே பிரபஞ்சத்துக்கான Spiritual Head Quarters! ஜாஸ்தியா இருக்கும்!”

“எப்படி மனுஷங்க எத்தனையோ பிரார்த்தனைங்களோட திருஅண்ணாமலையை கிரிவலம் வர்றாங்களோ, அதே மாதிரி தேவர்களும், தேவாதி தேவ மூர்த்திகளும், பிள்ளையாரும், முருகனும், பிரம்மாவும், விஷ்ணுவும், சரபேஸ்வரரும், திருப்பதி வெங்கடாஜலபதிப் பெருமாளும், ஆஞ்சநேய மூர்த்தியும்.... எல்லா தெய்வங்களுமே கிரிவலம் வர்ற ஒரே ஸ்தலம் திருஅண்ணாமலைன்னா இதோட மஹிமையை என்னன்னு எடுத்துச் சொல்றது?” இதைச் சொல்லும் போது பெரியவரின் கண்கள் பனித்தன!

கண்ணீர் காணாதவரைக் காண்!

“இந்த உலகத்துல பிறந்ததுலேந்து எப்பவுமே சிரிச்சுக்கிட்டு இருக்கிற ஒரு செகண்ட கூட அழுது புலம்பாத ஒரு மனுஷனை நீ வாழ்க்கையில தரிசனம் பண்ணியிருக்கியா?” பெரியவரின் அந்த அனுபவப் பூர்வமான கேள்வியைக் கேட்டுச் சிறுவன் அசந்துவிட்டான்! தன் குருவி மூளையைக் கசக்கிப் பிழிந்தும் இத்தகைய எப்போதும் அழுதிடாத ஒரு மனுஷனைப் பார்த்ததாக அவனுக்கு நினைவில்லை, சொல்லியும் கேள்விப் பட்டதில்லை! “இது என்ன அதிசயம் வாத்யாரே! நல்லாப் பணம் கொழிக்கற குடும்பத்துல வசதியாப் பொறந்துட்டா ஏன் அழுகணும்?”

சிறுவன் அப்பாவித் தனமாகக் கேட்டு விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டான். லட்சாதிபதியாக இருந்து கொண்டு ஒரு துளி உப்பு போட்டு மோர் கூடக் குடிக்க முடியாத நிலையில் வியாதியால் அவஸ்தைப்படுகின்ற கொழுத்த பணக்காரர்களை அவனுக்குப் பெரியவர் காண்பித்திருக்கிறாரே!

“வா .... வா.... அந்த மாதிரி வாழ்க்கையில ஒரு முறை கூட அழுகாத ஒரு அற்புத மனுஷனை நீ கட்டாயமாப் பார்த்து ஆகணும்டா,” என்று சொல்லி விட்டுப் பெரியவர் சென்னைப் புற நகரில் நெடுந்தூரம் நடந்து சென்று ஒரு நடுத்தரக் குடும்பத்துக்காரரை அறிமுகப்படுத்தினார்.. அவர் தன்னுடைய குடும்பத்தை ஓரளவு நன்றாக நடத்தி வந்தாலும், கஷ்டங்கள் இல்லாமல் இல்லை! எப்போதும் அவர்  சிரித்த முகத்துடன் லாவண்யத்துடன், நாணயத்துடன் தெய்வீகம் ததும்பப் பேசுவது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.! பெரியவரிடம் இருந்த குருகுலவாசத்தில் வாழ்க்கையில் ஒரு போதும் அழுதிடாத நான்கு பேரை மட்டுமே அவன் சந்தித்திருக்கிறான்.. “இவங்க எல்லாம் பூர்வ ஜென்மத்துல அப்பர் சுவாமிக்கும், திருஞான சம்பந்த மூர்த்திக்கும் முத்துப் பல்லக்கு சுமக்கற பாக்யம் பெற்றவங்கடா!”

“அப்படீன்னா, அவங்களுக்கு மோட்சமே கெடச்சிருக்குமே வாத்யாரே!”

விழியுள் விஸ்வ நேத்ர பூஜை!

பெரியவர் அவனைக் குறுகுறுவென்று ஆழ்ந்த கண்களுடன் நோக்கினார். முன்பெல்லாம் இந்த penetrative lookன் divine powersஐ தாங்க இயலாது சிறுவன் தலையைக் குனிந்து கொள்வான். ஆனால் தற்போதெல்லாம் இவையெல்லாம் பெரியவருடைய நேத்ர தீட்சையின் (தெய்வீகப் பார்வையால் உபதேசித்தல்) தாத்பர்யங்களை ஓரளவு உணரத் தொடங்கி விட்டதால் அவனும் அவருடைய தெய்வீக விழிகளுக்குள் ஆத்மார்த்தமாக ஊடுருவினான்! இன்றும் பல ஆலயங்களில் நிகழ்கின்ற பாஸ்கர பூஜையில் சூரிய பகவானே தன் கிரணப் பூக்களால் சுயம்பு லிங்க மூர்த்திகளைப் பூஜை செய்வது போல, சிறுவன் தன் விழிக் கிரணங்களால் தன் சற்குருவின் நேத்ர லிங்கத்திற்குப் பூஜை செய்கின்றானோ! சிறுவனுடைய குருகுலவாசத்தில் நான்கைந்து முறைகளே இவ்வற்புத நேத்ர தீட்சைகள் நிகழ்ந்தன! குரு சிஷ்ய குருகுலவாச அனுபூதிகள் எல்லாம் பரப்பிரம்ம லோகத்தில் தானே Get Configured!

அன்பை அழிக்கும் அன்பளிப்பு!

புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் என வரும்போதெல்லாம் பெரியவருக்கு ஸ்வீட், gift box, பேனா, டயரி என்று எதேதோ வரும்.. சிறுவனுக்கு அவற்றையெல்லாம் பார்க்க, பார்க்க ஆசையாக இருக்கும்! “இதுக்கெல்லாம் ஆசைப் படாதேடா! இதெல்லாம் எடுத்து யூஸ் பண்ணினா கர்மம் தாண்டா ஒட்டிக்கும்.. உழைச்சு சம்பாதிச்சாத்தாண்டா உடம்பில் ஒட்டும். இதெல்லாம் கொள்ளையடிச்சது, திருடியது, லஞ்சம் வாங்கினது, ஏமாத்தி வந்த பணம்... இப்படி நிறைய variety சேர்ந்து இருக்குடா! இந்தக் Karmic calculation இருக்கே, போட்டுப் பார்த்தா பைத்தியமே புடிச்சுடும்! ஏதோ இந்தக் கிழவன் சாமியாராட்டம் இருக்கான், மகான் மாதிரியும் தோணுது, சித்தர் மாதிரியும் இருக்கு.. இவனுக்கு ஏதாச்சும் கொடுத்தா நமக்கு நிறையப் புண்ணியம் கிடைக்கும், நம்முடைய ஆசைகள் நிறைவேறும்னு நெனச்சுப் பலரும் இதக் கொடுக்கிறாங்க. ஆனா நாங்க இதுலதான் ரொம்ப உஷாரா இருப்போம்! இதையெல்லாம் ரொம்ப ஜாக்கிரதையாக handle பண்ணனும்! ..” என்று விளக்கிப் பலவற்றை ஏழை எளியோர்க்குத் தகுதியுடையோர்க்கு மீந்ததைத் தானமாகக் கொடுத்திடுவார்..!

“இது ரொம்பக் கர்மம் சேர்ந்தது! லஞ்ச லாவண்யப் பணத்துல வாங்கினது! யார்கிட்ட கொடுத்தாலும் அவங்களுக்குப் பாவம் தான் சேரும்! பேசாம கடல்ல கொண்டு போய்ப் போட்டுட்டு சமுத்திர தேவதைகளுக்கு அர்ப்பணம் பண்ணிடு!” என்று சொல்லிடுவார். இவ்வாறு சிறுவன் கடலில் கொட்டிய tainted objects ஏராளம், ஏராளம்! அதில் புதிய நகைகள், பணம், பாத்திர பண்டங்களும் அடங்கும்!

“ஏன் வாத்யாரே! இவ்வளவு வருதே, இதுல உண்மையான அன்போட கொடுக்கறவங்களே இல்லையா?”

பெரியவர் சிரித்துக் கொண்டே தன் எதிரிலிருந்த ஒரு ஜோடி வளையலைக் காண்பித்தார்.

அன்பு விளையும் வளையல்!!!

“இங்க வந்துச்சே அந்த ஏழைக் குடும்பத்துப் பாட்டி அது கூறு கட்டி மீன், காய்கறி வித்து ஆசையா நாலு ஜோடி வளையல் வாங்கி, இந்தா சாமி வெச்சுக்கோன்னு  ஒரு ஜோடி வளையலைக் கொடுத்துட்டுப் போயிடுச்சுடா! வேற ஒண்ணும் எதிர்பார்க்கலை. இது கொஞ்ச நேரத்துல அங்காளி அம்மா கைக்குப் போய்ச் சேர்ந்திடும், இதுதாண்டா உண்மையான அன்பு. எனக்கு வேணுமா, வேண்டாமான்னு யோசிக்காம, எதையும் எதிர்பார்க்காம ரெண்டே நிமிஷத்துல வந்து கொடுத்துட்டுப் போயிடுச்சு. இத இப்பயே என் கையிலுல மாட்டுன்னு அங்காளி அம்பாள் கேக்கறான்னா இதுல பதிஞ்சு இருக்கற தெய்வீக அன்பை, பக்திய என்னன்னு சொல்லுவே!”

பெரியவர் பயபக்தியுடன் அவ்வளையல்களைக் கைகளில் எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டு அங்காளில் சந்நதியில் நுழைந்தார்..!

“ஒண்ணு தெரிஞ்சுக்கோடா, எனக்கு அன்னதானம் செஞ்சா ரொம்பப் பிரியம்னு பலருக்கும் தெரியும்.! அதனால் பெரியவரே, நீ சொன்ன மாதிரி, என்னோட வசதிக்குத் தகுந்த மாதிரி இன்னிக்குத் திருப்தியா நாலு பேருக்குச் சாப்பாடு போட்டு அன்னதானம் பண்ணினேன்னு சொல்லிட்டுப் போறவங்களும் இருக்காங்க, செஞ்சிட்டுச் சொல்லாம பணிவா இருக்கிறவங்களும் உண்டு.. அதுவும் உண்மையான, புனிதமான அன்புதான்! இதுக்குத்தாண்டா தெய்வீகமான லவ்வுன்னு பேரு! சினிமால காமிக்கிற மாதிரி ஓடி ஆடிறது லவ்வு கிடையாதுடா!”

அன்றைக்குத் தீபாவளியாதலால் பக்தர்கள், அன்பர்கள், அடியார்கள் கொடுத்த அன்பளிப்புக்களைக் கண்டு வழக்கம் போல் முகம் சுளித்தார் பெரியவர்!  “ஏண்டா இதுல ஒண்ணுல கூட உண்மையான அன்பு இல்லையேடா! உருப்படியா சம்பாதிச்சு வாங்கலையேடா! All Gifts Packed with Unwanted Prayers! ஒவ்வொண்ணுலேயும் எக்கச்சக்கமா ஆசைகளையும் அள்ளிக் கொட்டிட்டுப் போயிருக்காங்க..! பிரமோஷன் கிடைக்கணும், குழந்தை பொறக்கணும், என் பையன் நிறைய மார்க் வாங்கணும், என் பெண்ணுக்கு உடனேயே கல்யாணம் நடக்கணும், வியாதி தீரணும், ஆபீஸ்ல பண்ணின தப்பு தண்டாவுல மாட்டிக்காம தப்பிக்கணும்... இப்படிப் பல பிராத்தனையோட இங்க கொண்டு வந்து தள்ளிட்டா, நான் என்னடா பண்ணறது? இந்த மண்டு கிழவனை நம்பறதுக்குக் கண் கண்ட தெய்வம் அங்காளியை நம்பித் தினமும் ஆயிரம் சுத்து சுத்தினா அவளே எல்லாத்தையும் செஞ்சு கொடுத்திடுவாளே!” பெரியவர் பேச்சை மாற்றினார்!

“ ...... ஆமாம், இன்னைக்குத் தீபாவளியாச்சே, நீ ஒண்ணும் புது டிரஸ் போட்டுக்கலையா?”

சிறுவன் மௌனமாக இருந்தான்.. புதுத் துணிக்கு அவனிடம் காசு ஏது? முதல் நாள்தான் பெரியவருடன் காசி, ராமேஸ்வரம் சென்று திரும்பியிருந்தான், வீட்டிற்குச் சென்றால் உதைதான் விழும், மேலும் அவன் புது டிரஸ் போட்டுக் கொண்டால்... “கலர் சரியில்லை, டிசைன் இப்படி இருக்கக் கூடாது”, என்று ஏதாவது சொல்லிப் பெரியவர் தட்டிக் கழித்து விடுவாரே!

“சரி... சரி... இந்தா துட்டு! போய் புது டிரஸ் வாங்கிப் போட்டுக் கிட்டு வா... போ... ஆனால் பழைய டிரஸ்ஸைக் கழட்டி எங்கிட்ட கொடுத்திடணும்!”

சிறுவன் சிட்டாய்ப் பறந்தான்., அடுத்த அரைமணி நேரத்தில் புது டிரஸ்ஸை மாட்டிக் கொண்டு வந்து நின்றான்.. மிகவும் பவ்யமாக பழைய டிரஸ்யை மடித்துப் பெரியவரிடம் கொடுத்தான். பெரியவரும் அதைவிட மிகவும் பவ்யமாக வாங்கிக் கொண்டு...!

“இது பெரிய சிவனடியாரோட வஸ்திரம்டா! பார்த்தாலே நிறைய புண்ய சக்தியோட ஜொலிக்குதே! ஏன்னா, குருவோட அருள் நிறைஞ்சு கூடியிருக்குதானே!” பெரியவர் கிண்டலாகச் சொல்கிறாரா அல்லது சீரியஸாகச் சொல்கிறாரா என்பதை அவனால் உணர முடியவில்லை! ஆனால் மிகவும் பவ்யத்துடன் அவர் பேசியதைப் பார்த்தால் he really meant it என்பது போல்தான் சிறுவனுக்குத் தோன்றியது!

தன்னை மேலும் கீழும் பார்த்த பெரியவரை சிறுவன் வினோதமாகப் பார்த்தான். அழுக்கேறிய உடைகளில் அப்படி என்னதான் கொட்டிக் கிடக்கிறது? பழைய ஆடைகள் என்பதால் ஒரு வேளை கிழிந்திருக்கிறதா, பட்டன்கள் எல்லாம் ஒழுங்காக இருக்குறதா என்று பார்க்கிறாரா? ஏனென்றால் பழைய ஆடைகள் தானமாக அளிக்கப்பட்டால் அவன் நன்றாகத் துவைக்கப்பட்டு பட்டன்கள் நன்கு தைக்கப்பட்டிருக்க வேண்டும், என்பதில் அவர் மிகவும் கண்டிப்பாக இருப்பார்.

பெரிய பாவாடை சைஸில் தான் சிறுவனுடைய அரை டிராயர் இருக்கும் முழங்காலுக்கு மேலும் தொங்கும்! அதிலும் ஓட்டைப் பாக்கெட்டுகள்! ஏனென்றால் காசோ, தின்பண்டங்களோ சேர்க்க வேண்டும் என்ற சிறிய புத்தி அவனுக்கு வராமலிருப்பதற்காக!

சிறுவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பெரியவர் விறுவிறுவென்று அந்தக் கால் சட்டை டிராயரைப் பிரித்து அவரே அணிந்து கொண்டும் அழகு பார்த்தார்.. சிறுவன் இதை எதிர்பார்க்கவில்லை. அரைடிராயரில் அவரைப் பார்க்கையில்  வினோதமாகவும், வேடிக்கையாகவும் இருந்தது, டிராயரை அணிந்து கொண்டு புன்சிரிப்புடன் சிறுவனைப் பார்த்துச் சிரித்த பெரியவர் அடுத்த நிமிடம் அரை டிராயருடன் அங்காளியை வலம் வந்து சாஷ்டாங்கமாக வீழ்ந்து நமஸ்கரித்தார்!

“என்ன இருந்தாலும் ஒரு பெரிய சிவனடியாரோட ஆடைகளாச்சே! ரொம்பப் பவித்திரமானது, அதுக்குரித்தான மதிப்பு கொடுத்தாகணுமே!” சிறுவன் ஆடிப் போய்விட்டான்! பெரியவருடைய நடவடிக்கைகள் எல்லாம் அவனுக்கு அன்று விநோதமாகவே இருந்தன.. அடுத்த நிமிடத்தில் டிராயரைக் களைந்து கோவணாண்டியாய் நின்றார்! மீண்டும் மிகவும் பவ்யமாக அதை நன்கு மடித்து வைத்துக் கொண்டார்..! திடீரென்று சிறுவனுக்கு மனதினுள் ஒரு எண்ணம் குறுகுறுத்தது.. “புது டிரஸ் போட்டுக் கொண்டு ஜடமாட்டம் வந்து நிற்கின்றோமே, வாத்யார் இதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே! நாமும் அங்காளியை வலம் வந்து அம்பாளையும் வாத்யாரையும் வணங்கியிருக்க வேண்டுமல்லவா! இதைத்தான் குறிப்பால் உணர்த்துகிறாரோ?”

“பாயும் சிங்கம், உறுமும் புலி டிசைன் கூடாது, நிறைய புஷ்பங்கள் போட்டிருக்கணும்”, என்றவாறாக “நல்லாடை”டிசைனுக்கான தெய்வீக இலக்கணங்களை அடுக்குவாரே! இப்போது ஒன்றுமே சொல்லவில்லையே! பெரியவரோ எதையும் கண்டு கொள்ளாது அங்கு அன்பர்கள் அளித்துக் குவித்திருந்த பொருட்களை எல்லாம் சுட்டியவாறு, “ஏண்டா தீபாவளியன்னிக்கு சற்குருவோட ஆசீர்வாதம் எப்படிக் கிடைக்கும்னு சொல்லு பார்க்கலாம்?” என்று கேட்டிட,

சிறுவன் பளிச்சென்று., “குரு தொட்டு ஆசீர்வாதம் பண்ணிக் கொடுத்தார்னா, அதை விடப் பெரிய ஆசீர்வாதம் வேற என்ன உலகத்துல இருக்கு வாத்யாரே!? அதுதான் சாசுவதம், நிரந்தரம் வாத்யாரே!“ என்று கூறிட...

“அப்படியா?“ என்று சொல்லிக் குறும்பான புன்னகையுடன் சிறுவனை நோக்கிய பெரியவர்..,

“இந்தா புடி“ – என்று சொன்னவுடன் சிறுவன் அவர் நீட்டிய பழைய ஆடைகளை வாங்கிக் கொண்டு”

“இதை எங்கே தானமாகக் கொடுக்கணும் வாத்யாரே”, என்று வழக்கம் போல் அப்பாவித்தனமாகக் கேட்டான்...

“இந்த பழைய டிரஸை மாட்டுக் கிட்டு புது டிரஸைக் கழட்டித் தானம் பண்ணிட்டுச் சாயந்திரம் என்னை வந்து பார்!” என்று கோபமாகவும், வேகமாகவும் சொல்லிக் கொண்டே கோயிலின் பின்புறம் சென்றார் பெரியவர், அதுதான் அவர் மறையுமிடம்! எப்போ வருவாரோ! சிறுவனுக்குக் கண்களில் நீர் முட்டியது!

“புது டிரஸ் போட்டுக் கால் மணி நேரம் கூட ஆகவில்லையே, அதற்குள் சந்தோஷம் போய்விட்டதே”, என்றுதான் முதலில் உங்களைப் போலவே சிறுவன் எண்ணினான்.. ஆனால் சற்றே ஆத்ம விசாரம் செய்த பிறகுதான் அவனுக்குப் பல ஆன்மீக இரகசியங்கள் புலனாயின.!

ஆடை தந்த ஆத்ம விசாரம்!

1. முதலாவதாக, அவன் போட்டுக் கொண்டு வந்து புது டிரஸ் அவனுடைய மன ஏக்கத்திற்காக வந்து சேர்ந்ததே தவிர பெரியவருக்கு அதில் சற்றும் உடன்பாடில்லை!

2. ஒரு கால் மணி நேரம் கூடச் சந்தோஷம் தராத அந்த டிரஸ் அவனுக்கு ஒத்து வராதது தானே! எந்தப் பொருளையும் வாங்கும் முன்னர் ஒன்றுக்கு மூன்று தடவையாக வழிமுறை கேட்கும் சிறுவன், தான்தோன்றித்தனமாக எதையோ வாங்கிக் கொண்டு வந்துவிட்டான்

3. மூன்றாவதாக “பழைய டிரஸைக் கொண்டு வந்து கொடு” என்று பெரியவர் சூசகமாகச் சொல்லிய போது புது டிரஸை அவரிடமே கொடுத்து ஆசி பெற்று அணிந்து பழையதை சிறுவனே தானே முன்வந்து அவரிடம் அளித்திருக்க வேண்டும்.

4. நான்காவதாக, கடைசி வரைப் பெரியவர் புது ஆடைகளாய் ஏறெடுத்தும் பார்க்கவில்லை, தொட்டும் பார்க்கவில்லை! எதுவும் சொல்லவுமில்லை! இதையும் அவனே தானே உணர்ந்திருக்க வேண்டுமல்லவா!

5. ஐந்தாவதாக, “குரு தொட்டு ஆசீர்வாதம் பண்ணிக் கொடுக்கறதுதான் சாசுவதம்”, என்பதை உணர்விப்பதற்காகவே அவனுடைய பழைய ஆடைகளை நெடுநேரம் தொட்டுத் தடவி, நீவியதுடன், மட்டுமல்லாது, தானே அபூர்வமாக அணிந்தும் காட்டினார் என்றால் புதுசு சாசுவதமா, பழசு சாசுவதமா என்பதை அவர் தெள்ளத் தெளிவாகக் காட்டியதையும் அவன் உணர்ந்திருக்க வேண்டும் தானே!

ஐம்பது, அறுபது ஆண்டுக் காலத்தில் உணரக் கூடிய இறையனுபவத்தை ஒரு கால்மணி நேரத்திலேயே ஒரு பழைய ஆடையை வைத்து ஒரு இறைப் பெருங் கூத்தை நடத்தி உணர்த்தி விட்டாரே! இதுதானே குருகுலவாசத்தின் அருமையும், பெருமையும், மஹிமையும்!

“ஒரு சொல் குரு சொல்லே!“

திருமண சம்பந்தமான பரிகார வழிபாட்டிற்காகத் தம் பள்ளிக்கூட ஆசிரியரின் குடும்பத்தை, வடபழனி ஆலயத்துக்கு அழைத்துச் சென்று சிறுவன் திரும்பி வரும் வழியில், அங்காளி ஆலயத்தில் அவர்களை அமரச் செய்து பெரியவர் பார்த்து வைத்திருக்கின்ற திருமண சம்பந்தம் பற்றி அவர்களிடம் சொன்னதுமே,

“இந்த பாரு தம்பி, உன்னோட குரு பெரிய சித்தர்னு சொல்லுவாங்க! அவருக்கு மிஞ்சின வார்த்தை இல்லை, உடனே சரின்னு சொல்லிடு!” என்று சம்மதம் சொல்லி சந்தோஷமாகக் கிளம்பியதைக் கண்டு சிறுவனுக்கு ஆச்சரியமும், ஆனந்தமும், கூடவே சந்தேகமும் வந்து விட்டது!

“நம்ம வாத்யார் கல்யாணத்தைப் பற்றி ரொம்ப விவரமாகச் சொன்னாரே, அதையெல்லாம் உட்கார்ந்து ரொம்ப நேரம் பேசி, நம்ப கோயில் திருப்பணி, அன்னதானம் பத்தியெல்லாம் சொல்லி convince பண்ணுவோம்னு பெரிய பெரிய பிளான்லாம் போட்டிருந்தோமே, எல்லாம் ஒரே நிமிஷத்தில் சம்மதம்னு வார்த்தை வந்துடிச்சே...” என்று சிறுவன் மனக் கணக்குப் போட்டுக் கொண்டிருந்த போது டங் என்ற உச்சந்தலையில் வலிக்க வலிக்க ஒரு குட்டு விழுந்தது! ஆம் பெரியவர்தான்! இவர் எப்படி திடீரென்று இங்கு வந்தார்?

“ஏண்டா இத்தனை வருஷம் நீ என்னோட இருந்தும் உனக்கு முழு நம்பிக்கை வரலையே! யாரோ, எங்கேயோ இருக்கிற குடும்பம் குருன்னு ஒரு வார்த்தையைக் கேட்டதுமே பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கச் சம்மதம் கொடுத்தாங்கன்னா.”

“நான் யாரு, எப்படி இருப்பேன்னு கூடத் தெரியாம குருன்னு ரெண்டு எழுத்து திருமந்திரத்தைப் பரிபூரணமா நம்பி கல்யாண சம்பந்தத்தை ஏத்துக்கறாங்கன்னா உனக்கு நம்பிக்கை ஜாஸ்தியா? அவங்களுக்கு நம்பிக்கை ஜாஸ்தியா! தினம் தினம் நீ என்னைப் பார்க்கறதுனால தாண்டா கண்ணால பார்த்தாத்தான் நம்பறதுங்கற பழக்கத்துக்கு நீ அடிமையாயிட்டே.....”

அன்று பெரியவர் விளாசு, விளாசு என்று வாக்குச் சவுக்கால் விளாசித் தீர்த்து விட்டார்.

“சரி .. சரி.... இந்தா கல்யாணச் சத்திர அட்ரஸ்...! வர்ற வெள்ளிக் கிழமை கல்யாணம்.. பத்திரிக்கை, தாம்பூலம் எல்லாம் வந்து சேரும்னு போய்ச் சொல்லிடு, போ! போ!....”

தானிருந்தால்தான் முடியும், தானின்றிப் பெரியவரால் முடியாது, தன்னால் தான் முடியும், தன்னால் தான் சம்பந்தம் முடிந்தது என்று எண்ணிய சிறுவனுக்குச் சாட்டையடி, சவுக்கடி போல் திருமணக் காரியங்கள் மளமளவென்று விறுவிறுவென்று நடந்தன!

அவ்வவ்போது ஆசிரியர் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம்,  “இப்பத்தாம்பா அந்தப் பெரியவர் குடும்ப சகிதம் வந்து அழகா ஒருமணி நேரம் உட்கார்ந்து பேசி விருந்து சாப்பிட்டு, பாத்திரம், பண்டம், நகை நட்டு, டிரஸ் எல்லாம் கொடுத்துட்டுப் போறாரு, தெரு முனைல அவர் வந்து போறதை நீ பார்த்திருக்கணுமே!” என்று அவர்கள் கூறிடவேதான், வியப்பால் விரிந்த சிறுவனுக்குக் கர்வம் (ego) தணியத் தொடங்கியது!

“நல்லா ஜம்முனு குடுமி வச்சு, பஞ்சகச்சம் கட்டி தஞ்சாவூர்க்காரராட்டம் இருக்காரே, அவர்தான் குருவா? பையனுக்கு மாமா முறைன்னு சொன்னாரே, ரொம்பவும் நல்ல மனுஷன், மகா புண்யவான், அவர் இந்த வீட்டுக்கு வந்து போனதுலேந்து ஒரே சுபிட்சம்தான்!”

இவ்வாறு ஆரிசியர்க் குடும்பம் சொல்லச் சொல்லத்தான் சிறுவன் பெரியவரின் மஹிமையை உணரலானான், திருமணத்தன்று பெரியவர் அங்குமிங்குமாகப் பம்பரமாகச் சுழன்று பணியாற்றுவதைக் கண்டு சிறுவன் அசந்து விட்டான்., ஆனால் பெரியவரோ “அதை வாங்கி வா, இதை வாங்கி வா, இங்கு போ”, என்று சிறுவனை tight ஆக வெளியில் engage பண்ணிக் கொண்டார்!  ஏனென்றால் சிறுவனின் கண்களுக்கு வழக்கம் போல் கோவணாண்டியாகத் தெரிந்த பெரியவர் ஏனைய அனைவருடைய கண்களுக்கும் கட்டுக் குடுமி, பஞ்சகச்ச வேட்டி அணிந்திருந்தவராகத் தெரிந்த இறைலீலையில் சிறுவன் லயித்து விடலாகாது, தன் மஹிமையை அவன் உணர்தல் கூடாது என்பதற்காகவே இவ்வாறான இறை அனுபூதிகளைப் புகட்டுவதற்காகவே தம் குருகுலவாசத்தில் இந்தக் கல்யாண வைபவ காண்டம் புகுந்தது இல்லையில்லை.! பெரியவரால் புகுத்தப்பட்டது  என்பதாகவும் அவன் உணர்ந்தான்! என்னே அற்புத குருகுல வாசம்!

திருமாந்துறை சிவராத்திரி

வறுமையைப் போக்கும் அட்சயநாத லிங்கேஸ்வரர் திருமாந்துறை !

சாப்பாட்டுக் கஷ்டம், வறுமை, விவசாய நஷ்டம் போக்கும் ஸ்ரீஅட்சய நாத லிங்கேஸ்வரர்! அற்புத மழைப் பொழிவும், தன தான்ய விருத்தியும் தரும் திருமாந்துறை ஸ்ரீஅட்சய நாதலிங்க வழிபாடு!

மாதந்தோறும் தேய்பிறையில் வருகின்ற சதுர்த்தி திதிக்கு மாத சிவராத்திரி என்று பெயர். மாசி மாதத்தில் வருகின்ற மகா சிவராத்திரி விசேஷப் பண்டிகையே மகா சிவராத்திரியாக மலர்ந்து எண்ணற்ற இறையனுபூதிகளைக் கொண்டுள்ளது பல திருத்தலங்களிலும் அம்பிகை இறைவனுடன் இணைந்து இடப்பாகம் பெற்ற திருநாளாகவும், பிரம்மா, விஷ்ணு, மூர்த்திகளுக்கு ஜோதி ரூபமாக இறைவன் தரிசனம் கொடுத்த திருநாளாகவும், பிரபஞ்சத்திலுள்ள ஜீவன்களின் நல்வாழ்விற்காக இறைவியே இரவு முழுவதும் பூஜை செய்கின்ற அற்புதத் திருநாளாகவும்  இவ்வாறு எண்ணற்ற இறைலீலைகளை மகாசிவராத்திரிப் பண்டிகை தன்னுள் கொண்டுள்ளது!

பிறிதொரு யுகத்தில் தேவர்கள் தம்முடைய அகங்காரத்தால் வேத மந்திரங்களையே மறந்து சுகபோகத்தில் திளைத்தபோது அவர்களுக்கு இந்த சாபத்திலிருந்து மீட்டுத் தருவதற்காக இரவு நேர வழிபாடு ஒன்று தேவ நியதியாக விதிக்கப்பட்டது.. ஆனால் தேவர்களுக்கு ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை ஆறு மாதங்களும் ஒரு இரவுப் பொழுதாகவும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை பகல் பொழுதாகவும் விளங்குகின்றதுதானே! உத்தராயணப் புண்ணிய காலத்தில் (தேவர்களின் பகற் பொழுதில்) தேவர்கள் தமக்கு ஏற்பட்ட சாபத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்கு இரவு நேர பூஜையை மேற்கொள்ள வேண்டுமென்றால் அதற்கு ஆறு மாதம் பொறுத்துக் கொள்ள வேண்டுமே என்ன செய்வது? எனவே அவர்கள் உமை அம்மையின் திருஅருளை நாடிட தேவியே பூலோகத்திற்கு வந்து மாசி மாத சிவராத்திரியன்று இரவு நேர பூஜைகளைச் செய்து அவற்றின் பலாபலன்களை தேவர்களுக்கு அர்ப்பணித்து அவர்களைப் பெரும் சாபத்திலிருந்து மீட்டு அருளினாள். இதற்கு நன்றி பூஜையாக இன்றைக்கும் முப்பத்து முக்கோடி தேவர்களும் பூலோகத்திற்கு வந்து அம்பிகையுடன் மகா சிவராத்திரியன்று இரவு நேர பூஜைகளை மேற்கொண்டு இதன் பலாபலன்களை பூலோக ஜீவன்களுக்காக அர்பணித்துச் செல்கின்றார்கள்.

இத்தகைய தேவ பூஜா அற்புதத் தலங்களில் ஒன்றுதான் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருமாந்துறை திருத்தலமாகும்.. திருச்சி மாவட்டத்தில் லால்குடி செல்லும் வழியில் திருமாந்துறை என்ற வேறொரு பாடல் பெற்ற தலம் உள்ளது. ஆனால் நாம் இங்கு குறிப்பிடுவது கும்பகோணத்திற்கு அப்பால் சூரியனார் கோயிலிருந்து கஞ்சனூர் செல்கின்ற வழியில் இடையில் உள்ள திருமாந்துறை திருத்தலமாகும்.. இங்கு சுவாமி ஸ்ரீஅட்சய நாத லிங்கேஸ்வரராகவும், அம்பிகை ஸ்ரீயோக நாயதியாகவும் அருள்பாலிக்கின்றனர். முப்பத்து முக்கோடி தேவர்கள், தேவாதி, தேவ மூர்த்திகள், அம்பிகையருடன் அனைத்து மகரிஷிகளும், சித்தர்களும் மகா சிவராத்திரி சிவ பூஜையை மேற்கொள்கின்ற அற்புதமான தலமே திருமாந்துறையாம்!

நீர்ப் பஞ்சம் அகல!

அட்சய தீர்த்தம் என்றும் அட்சய கோடி தீர்த்தம் என்றும் போற்றப்படுகின்ற அற்புதத் தேவ தீர்த்தங்களுள் ஒன்று ஆலயத்திற்குள் விளங்குகின்றது. தேவலோகத்திலேயே பஞ்சம் ஏற்பட்டபோது அதனை நிவர்த்தி செய்வதற்காக தேவேந்திரனாகிய இந்திரன், வருணனுடன் பூஜித்த விசேஷமான தலமிது! எனவே விலைவாசி உயர்வு, பண்டக் குறைவு, உணவுப் பிரச்சனைகள் மற்றும் மழைக் குறைவு, நீர்ப் பற்றாக் குறையால் அவதியுறுகின்ற காலத்தில் குருவருளுடன் இங்கு ஸ்ரீஅட்சநாத லிங்கேஸ்வரருக்குப் பல புண்ய நதி தீர்த்தங்கள் சேர்ந்த அன்னத்தால் அன்னாபிஷேகம் செய்து மிகுந்த பக்தியுடன் வழிபட்டால் நீர்ப் பஞ்சம் தீரும்! எந்த ஊரானது நீர்ப் பற்றாக்குறையால் குளங்களும், ஏரிகளும் வற்றிப் பாசனமில்லாது அவதியுறுகின்றதோ, அவ்வூர் மக்கள் இங்கு ஸ்ரீஅட்சய நாத லிங்கேஸ்வர மூர்த்திக்கு அன்னாபிஷேகம் செய்து தொடர்ந்து பூஜித்தால் நிச்சயமாக அவரவர் ஊரில் நன்மழை பெய்யும்! இதற்காக இந்திர பகவானே வந்து போற்றுகின்ற திருத்தலமே ஸ்ரீஅட்சயநாத லிங்கேஸ்வர மூர்த்தி உறையும் திருமாந்துறைத் திருத்தலமாகும்.

நீர்ப் பஞ்சம் தீர்வதற்காக இங்கு ஸ்ரீவருண தோத்திரத் துதிகளை ஓதி வருதலும் அமிர்த வர்ஷிணி ராகத்தில் கீதங்களை இசைத்தலும் சிறப்பானதாம்! எனவே எவ்வூரில் மழைப் பொழிவில்லையோ அவூரில் மழை பெய்ய வேண்டி நேத்தி செய்துகொண்டு இசை வித்வான்களும், பாடகர்களும் இச்சிவாலயத்தில் திங்கட்கிழமைகளிலும், சதய நட்சத்திர நாளிலும் அமிர்தவர்ஷிணி ராகத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுடன் கீர்த்தனைகளையும், தேவாரப் பண்களையும் இசைத்து அன்னாபிஷேகம் செய்து வந்தால் நிச்சயமாக நீர்வளம் பெருகும்!

தானிய நாசம் தீர! நெல் கருகுதல் மற்றும் பூச்சி அரிப்பு காரணமாகக் குறுவை, சம்பா சாகுபடியில் பேரிழப்பு அடைந்தோர் இவற்றிலிருந்து மீளவும், தற்காத்துக் கொள்ளவும் இங்கு ஸ்ரீஅட்சய நாத லிங்கேஸ்வரருக்குத் தானிய நாட்களை புதன், வியாழன், சனிக்கிழமை, பரணி, ரோகினி, திருவாதிரை, மகம், ஹஸ்தம், விசாகம், திருவோணம், நட்சத்திர நாட்களிலும், ரிஷபம், கடகம், சிம்மம், விருச்சிகம், கும்பம் லக்னங்களிலும், குளிகை நேரங்களிலும் சுவாமிக்கு, அன்னாபிஷேகம் செய்து அன்னதானம் செய்து வருதல் வேண்டும்..! அன்னாபிஷேகத்தில் தூய பசு நெய் சேர்ப்பதால் தான்ய விருத்தி பெருகும்.

விவசாயம் பெருகிட! மேலும் பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ள கீழ் நோக்கு நாட்களிலும், வாஸ்து நாட்களிலும், கலப்பைச் சக்கரம் பிடிக்க வேண்டிய நாட்களிலும் சுவாமி முன் கலப்பைக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், இட்டுக் கலப்பையுடன் சுவாமியை அடிப் பிரதட்சிணம் செய்து வலம் வந்து விவசாயத்தை தொடங்கினால் நன்முறையில் விவசாயம் பெருகும்.

ஓட்டல் சமையல் தோஷங்கள் தீர!  ஹோட்டல் துறையைச் சார்ந்தவர்கள் உணவைச் சார்ந்து வாழ வேண்டி இருப்பதால் உணவில் ஏற்படுகின்ற  அழுகல் மண், கல், பூச்சி, தூசி போன்ற பலவிதமான தோஷங்களுக்கும் பெரும் பொறுப்பையும், பெரும் பாவத்தையும் இவர்கள் ஏற்க வேண்டியதாய் இருக்கின்றது., எனவே இவற்றிற்குரித்தான பரிகாரமாக இங்கு ஹோட்டல் மற்றும் டீக்கடை உரிமையாளர்களும், தொழிலாளர்களும் மாதந்தோறும் அன்னதானத்திற்குச் சிறந்த நாட்களான கார்த்திகை, அஸ்வினி, அனுஷம், மூலம் போன்ற நட்சத்திர நாட்களிலும், சூரிய பகவானுக்குரித்தான் ஞாயிற்றுக் கிழமை தோறும் ஸ்ரீஅட்சய நாத லிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேகமும், ஏழைகளுக்கு அன்னதானமும் செய்து வந்தால் ஹோட்டல் துறையாளர்கள் உணவு தோஷங்கள் நீங்கித் தம் தொழிலில் சிறப்பைப் பெறுவர். நஷ்டங்கள் தீரும்!

தீ, எலி, பெருச்சாளி போன்றவற்றாலும் இயற்கைச் சீற்றத்தாலும் தானியங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதால் இவற்றிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு ஸ்ரீஅட்சய நாதலிங்கேஸ்வரருக்குத் திங்கட்கிழமை தோறும் சந்திர ஹோரையில் அன்னாபிஷேகம் செய்து அன்னதானம் செய்து வந்தால் இயற்கைச் சீற்றங்கள், ஜந்துக்களால் ஏற்படும் தான்ய நஷ்டங்கள் தீரும்!

பஞ்சம் (நீங்கிட), ஏற்படாதிருக்க! இராஜ்ய காப்பாளர்களாக விளங்குகின்ற ஆட்சியில் இருப்பவர்கள் அவ்வப்போது குறிப்பாக வளர்பிறை சதுர்த்தி/சதுர்த்தசி திதியிலும், தேய்பிறைச் சதுர்த்தி/ சதுர்த்தசி திதியிலும், சனிக்கிழமையன்றும் ஸ்ரீஅட்சய நாத லிங்கேஸ்வர மூர்த்திக்கு அன்னாபிஷேகம் செய்து பிரம்மாண்டமான அளவில் அன்னதானம் செய்துவந்தால்தான் ஆட்சியில் ஏற்படுகின்ற பலவிதமான தவறுகளுக்கும் தக்கப் பிராயசித்தம் பெற முடியும். ஆட்சிக் காலத்தில் பஞ்சம் ஏற்படுவதும் தவிர்க்கப்படும். பொதுவாக, பஞ்ச காலத்தில் ஸ்ரீஅட்சய நாத லிங்கேஸ்வர மூர்த்தியை வேண்டி வழிபடுவதால் தானிய விருத்தி ஏற்படும், சிவராத்திரி பூஜைகளில் ஆறுகால பூஜைகளில் ஒருகால பூஜையாக அன்னாபிஷேகம் நடைபெறுதல் வேண்டும். இத்தகைய மாத சிவராத்திரி அன்னாபிஷேகக் கைங்கர்யத்தை இங்கு ஏற்று நடத்துபவர்க்கு நல்ல சந்ததி விருத்தியும் கிட்டும்.

ஸ்ரீஉச்சிஷ்ட கணபதி பூஜை!

ஸ்ரீஉச்சிஷ்ட கணபதி உபாசனை என்பது மிகவும் கடினமானதாகும். இச்சிவாலாயத்தில் ஸ்ரீஉச்சிஷ்டகணபதி மூர்த்தியானவர் ஸ்ரீபுத்தி தேவியுடன் அபூர்வமாக எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றார். ஸ்ரீஉச்சிஷ்ட கணபதி உபாசனையை மேற்கொண்டிருப்போர் இவ்வாலயத்தில் ஸ்ரீஉச்சிஷ்ட கணபதியை முறையாகத் தொழுது அன்னாபிஷேகம் செய்து வந்தால் உபாசனை முறைகள் தக்க பெரியோர்களால் எளிதாக்கப்படும்.

மந்த புத்தி அகல! மந்தப் படிப்பாலும், அறிவு வளர்ச்சியின்மையாலும், மனச் சோர்வுகளாலும் பல பிள்ளைகள் அவதியுறுகின்றனர். குழந்தைகள் நன்முறையில் படிப்பதற்கு ஸ்ரீஉச்சிஷ்ட கணபதி உபாசனை சிறப்புடையதாகும். குழந்தைகளை ஆலயத்தை அடிப்பிரதட்சிணமாக வலம் வரச் செய்து இங்கு ஸ்ரீஉச்சிஷ்ட கணபதிக்கு அன்னாபிஷேகம் செய்து ஏழை மாணவர்களுக்கு உரித்தான புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்களை வழங்கி வந்தால் படிப்பில் ஏற்படும் புத்தித் தேக்கம் நிவர்த்தியாகி அறிவு வளர்ச்சி விருத்தியாகும்.

வம்ச வழி நோய்கள் தீர :- ஒரு காலத்தில் மகத்தான அன்னதானத் தீர்த்தமாக விளங்கிய இவ்வாலயத்தின் அட்சய தீர்த்தக் குளத்திற்கான துப்புரவுப் பணிகளையும், வழிபாட்டையும் தக்கதோர் இறைப்பணியாக ஏற்று நடத்துவோர்க்கு என்றும் உணவுப் பஞ்சம் ஏற்படாது., மேலும் சர்க்கரை நோய், குடல் அழற்சி நோய் போன்ற உணவு சம்பந்தப்பட்ட நோய்களும் அண்டாது. அவர்தம் சந்ததிகளும் இத்தகைய நோய்நொடிகள் இன்றிச் சிறப்புடன் வாழ்வர்., வம்சவழி நோய்களும் ஏற்படாது!

வேலை இல்லாக் கணவனின் சோம்பல் நீங்கிட...

மனைவியின் சம்பாத்யத்தில் சோம்பேறித் தனமாக வாழ்கின்ற ஆண்கள் ஏராளம்., ஏராளம்.! இவர்கள் சோம்பித் திரிவதால் தீய பழக்கங்களும் சேர்ந்து குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து, சண்டைகள் பெருகும். எனவே மனைவியைச் சார்ந்து வாழ்கின்றோர் இவ்வாலயத்தில் தம்பதி சகிதமாக மாத சிவராத்திரி தோறும் அடிப்பிரதட்சிணம் செய்து  ஸ்ரீஅட்சய லிங்க நாதேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் செய்து வந்தால் கணவனுடைய சோம்பேறித்தனம் விலக நல்வழி பெறுவர். மேலும் விவாகரத்து வழக்குகள், மன வேற்றுமை போன்ற பல்வேறு காரணங்களால் பிரிந்து வாழும் கணவன், மனைவியர் அடிக்கடி இங்கு வந்து அன்னாபிஷேகம் செய்து ஸ்ரீபோக நாயகி சமேத ஸ்ரீஅட்சய நாதேஸ்வரரை வேண்டி வந்தால் ஒன்று சேர்ந்து இல்லறம் சிறக்கும்!

கணவன் மனைவி ஒற்றுமை பெருகிட...!

இங்கு ஸ்ரீபோக நாயகியாக அருள்பாலிக்கின்ற அம்பிகை திருமணக் கோலத்தில் காட்சி அளிப்பதால் கணவன் மனைவி ஒற்றுமை பெருகுவதற்கும் ஸ்ரீபோக நாயகி சமேத ஸ்ரீஅட்சயநாத லிங்கேஸ்வர மூர்த்தி வழிபாடு பெரிதும் உதவுகின்றது. திங்கள் மற்றும் மாத சிவராத்திரி தோறும் அபிஷேக ஆராதனை செய்து வந்தால் பிரிவுபட்ட குடும்பங்கள் ஒன்று சேரும். மேலும் விவாகரத்து என்ற முடிவிற்கு வந்துள்ள கணவன் மனைவியர் இறுதி முயற்சியாய் இறையருளால் இங்கு ஒன்றாகத் தக்க பெரியவர்கள் துணையுடன், ஆசியுடன் அடிப்பிரதட்சணம் செய்து அன்னாபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால் அவர்கள் மீண்டும் இணைந்து ஒற்றுமையுடன் சாந்தமாக வாழ்வதற்கு இறையருள் கிட்டும். ஆனால் ஆழ்ந்த நம்பிக்கையுடன் மாத சிவராத்திரி தோறும், திங்கட் கிழமை தோறும் இந்த வழிபாட்டைச் செய்து வருதல் வேண்டும். பிறருடைய நல்வாழ்விற்காகத் தம்முடைய திருமண வாழ்வைத் தியாகம் செய்து வாழ்கின்ற மூத்த சகோதரிகள் ஏராளம்.. இவர்கள் நன்முறையில் சாந்தமான வாழ்க்கையைப் பெறுவதற்கும், இறைநிலையில் நிலைத்து நிற்பதற்கும், நன்முறையில் திருமண வாழ்வைப் பெறுவதற்கும் ஸ்ரீஅட்சய நாத லிங்கேஸ்வர வழிபாடு பெரிதும் உதவுகின்றது.. இங்கு மாமரமே தல விருட்சமாகும்..! இந்திரன் தன்னுடைய வஜ்ராயுத சக்தியையும், சூரிய பகவான் தன்னுடைய பாஸ்கர சக்தியையும், புத்தி தேவி சமேத பிள்ளையாரப்பன் தன்னுடைய காணாபத்யாம்ருத சக்தியையும் பதித்துத் தல விருட்சத்தை உருவாக்கியிருப்பதால் இந்த தலவிருட்ச தரிசனமே மனதிற்கு நிம்மதியும், சாந்தியும் தருவதாகும். எதிர்களால் வரும் துன்பங்களைத் தணிக்கும்.

ராமரே சிவம்

சிவாம்சம் பூண்டவரே ஸ்ரீராம! ஸ்ரீராமராய் அவதரித்த சிவன்! ஸ்ரீருத்ராம்சத்தை உணர்த்துவதே ஸ்ரீராமாவதாரம்! ஸ்ரீராமன் நாமகரணத்தின் அரிய ஆன்மீக விளக்கம்!

ஸ்ரீராமருக்குத் தசரதச் சக்ரவத்தியும் வசிஷ்ட மாமுனியும் இராமச்சந்திரன் என்ற பெயரைச் சூட்டும் போது பரமானந்தம் அடைந்தார்கள். அக்காலத்தில் புண்யாவசனம் என்று அழைக்கப்படுகின்ற குழந்தைக்கு நாமம் சூட்டு விழாவில் நெல்லிலும், அரிசியிலும் புதுப் பெயரை எழுதுவார்கள். வசிஷ்ட மாமுனி தசரதரின் வலது மோதிர விரலைத் தாங்கி நெல்லில் ஸ்ரீஇராமச்சந்திரன் என்ற நாமத்தை எழுதியபோது அதிலிருந்த நெல் மணிகள் பசுமையாய் முளைக்களாயின! அரிசி மணியில் எழுதியபோது அது சாதமாக மாறிப் பூத்தது! சர்க்கரைச் சுவைப் பாலில் எழுதிய போது பால் பொங்கிற்று! இத்தகைய தெய்வ மகிமைகளுக்குத்தானே ஸ்ரீராமன் என்ற பெயர் ஒளிப் பிரகாசமாகச் சூட்டப் பெற்றது!

ஸ்ரீதசரதர் பெற்ற சிவப் பரிசு!

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து அறநெறியுடன் செங்கோலாச்சிய தசரதருடைய அவை ஆலோசகர்கள் ஆயிரக்கணக்கான பெயர்களை முன்மொழிய, வசிஷ்ட மகரிஷியோ நவ வியாகரணங்களையும் கலந்து, கணித்துச் சக்கரவர்த்தி மைந்தனுக்கு ஸ்ரீராமன் என்னும் திருப்பெயரைச் சூட்டினார். அதியற்புத சிவ பூஜைகளைச் செய்த தசரதர் சிவப் பரிசாகவே ஸ்ரீராமனைப் பெற்றார்.! அனைத்து நவகிரகங்களும், தேவாதி தேவ மூர்த்திகளும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியைத் தினமும் வழிபடுகின்றனர். தேவலோகத்தில் தேவாதி தேவர்கள் அசுரர்களின் கொடுமையைத் தாங்க இயலாது சிவபெருமானைச் சரணடைந்த போது, “யாமே பேரரச குலத்தில் அவதரித்து, வனவாசங்களை அனுபவித்து மக்களுடைய இன்னல்களைத் தீர்க்க ஸ்ரீஇராமச்சந்திர மூர்த்தியாகத் தோன்றுவோம்!” என்று ஈஸ்வரனே அருள்பாலித்தமையால் பரம்பொருளின் திருஅருளால் சிவ ஜோதியாக ஸ்ரீஇராமச்சந்திர மூர்த்தி அவதரித்தார்.

ஸ்ரீராம நாம மகிமை!

காசித் தலத்தில் மரணம் அடைவோருடைய காதுகளில் சிவபெருமானே ஸ்ரீராம மந்திரத்தை ஓதுகின்றார். எத்தனையோ சிவநாமங்கள் இருந்திட ஸ்ரீஇராமச்சந்திர மூர்த்தி என்ற நாமத்தையே சிவபெருமான் ராம்ராம் என்று ஓதுகிறார் என்றால் என்னே ஸ்ரீராம நாமத்தின் மகிமை! இதுதானே என்னே ஸ்ரீராம நாமத்தின் மகிமை! இதுதானே மிகவும் பவித்ரமான சிவநாமம்!

ராம நாமத்தில் உள்ள “ரா” என்ற பீஜாட்சரமானது திருக்கயிலாயத்தில் நிறைந்திருக்கின்ற சிவச்சுடர் ஜோதிகளின் பரிமாணமாகும்.. “ம” என்னும் பீஜாட்சரமோ, திருக்கயிலாயத்தில் எழும் மங்கள ஜோதியின் சக்திகளைத் தாங்கிப் பொலியும் ஈஸ்வரனின் நேத்திர அங்கத்திலிருந்து ருத்ர தீபாக்னி சக்தியைப் பெற்றதாகும். இரண்டும் சேர்ந்தால் தான் பிரபஞ்சத்தில் திருமந்திராக்னிப் பிரகாசம் உண்டாகிறது. அக்னி சக்தியின்றி உலகம் இயங்காதன்றோ! எனவே ராம நாமமே ஈஸ்வர அம்சமாக அவதாரம் கொண்டிட, ராம நாமம் பிறக்கவே ராமாவதாரமும் ஏற்பட்டது! இவ்வாறாகவே ராம நாமமே தாரக மந்திரமாகிறது! வருகின்ற யுகங்களில் பெறுதற்கரிய மானிடப் பிறவியின் மகிமையை வெளிப்படுத்துவதற்காகவும், பெருகி வரும் தீவினைகளை மாய்க்கவும் இறைவனே ஸ்ரீராமர், ஸ்ரீஐயப்பன் போன்ற மானுட ரூபத்தில் அவதாரம் கொண்டான்.

தன்னைத் தானே உணர்ந்திட..!

இறைவனுடைய பரிபூரணமான அவதார குணங்கள் நிறைந்த முழுமானிட தெய்வீகப் பிறவியே ஸ்ரீஇராமனின் அவதாரமாகும். ஒரு மனிதனுடைய பிறவி இரகசியங்களையே நம்மால் உணர முடியவில்லை, பின் எவ்வாறு இறைவனுடைய அவதாரங்களைப் பற்றிய பரிபூரணமான தெளிவைப் பெற முடியும்? ஸ்ரீஇராமச்சந்திர மூர்த்தி பரம்பொருளின் ஆத்ம லிங்க ருத்ர அம்சமாவார்! ஸ்ரீஇராமரே எத்தனையோ சிவலிங்கங்களைப் பூலோகமெங்கும் பிரதிஷ்டை செய்து பூஜித்துள்ளார் அன்றோ! காரணம் என்ன?

ஒருவர் தன்னைத்தானே சுற்றி வருவதற்கு ஆத்ம பிரதட்சிணம் என்று பெயர். சிவபெருமான் தன்னைத்தானே அர்ச்சகர் வடிவில் வழிபடுகின்ற ஆத்ம ஸ்படிக லிங்க பூஜை உற்சவம் இன்றைக்கும் திருவையாற்றில் பிரசித்தி பெற்றதாம். இதன் தாத்பர்யத்தை மானுட உலகிற்கு உணர்த்திடவே சிவபெருமான் தன்னை மானுட ரூபத்தில் ஸ்தாபித்துக் கொண்டு ஸ்ரீராமனாய் அவதாரம் கொண்டார். சிவஅம்சமான ஸ்ரீராமர், சிவலிங்கங்களைப் பூஜித்தாரெனில் அவர் ருத்ர அம்ச ஆத்ம லிங்க அவதாரம்தானே! எனவே ராம் என்ற தெய்வீக நாமமே ஈஸ்வராம்சம் நிறைந்ததாகும். ஆத்ம லிங்கத்தின் மூல நாமமே ராமநாமம் என்பதாம்! 96 கோடி முறை ராம நாமம் ஓதி சத்குரு ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள் ஸ்ரீராம லட்சுமண தரிசனம் பெறக் காரணம் என்ன? திருவையாற்றில் சிவபெருமானே நேரில் அர்ச்சகராக வந்து பூஜித்து தன்னைத்தானே பூஜித்துத் கொண்ட (ஆத்ம) ஸ்படிக லிங்க பூஜையை அவர் தினமும் தரிசித்ததன் பரிபூரணப் பலன்களால்தாம்! ஆத்ம லிங்க அவதாரமே ஸ்ரீராமர்! எனவேதாம் பல லிங்கங்களை ஸ்தாபித்துத் தம்மைத் தாமே பூஜித்துக் கொண்டு ஈஸ்வராவதாரமாய் நமக்கு அருள்பாலிக்கின்றார்.!

பீஷ்ம தர்ப்பணம்

பிரம்மச்சர்யம் என்பது உடலாலும் மனதாலும் உள்ளத்தாலும் பரிபூரணமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டிய புனிதமான கடமையாகும். திருமணமானவர்கள் கூடத் தன் மனைவியையன்றி வேறு எந்தப் பெண்ணையும் மனதால் கூட நினைக்காத அளவிற்கு மிக மிகப் புனிதமாக வாழ்தல் கூட ஒருவகை பிரம்மச்சர்யமாக, உத்தம ஆன்மீக நிலைகளில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது,!

தெய்வமூர்த்திகளும் மானுட வடிவங்களில் வந்து ஸ்ரீஇராமர் போல் ஏக பத்தினி விரத மகிமையையும், ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி போன்று நைஷ்டிக பிரம்மச்சர்ய தேஜஸின் மகிமையையும் உணர்த்தியுள்ளனர். பாரதப் பண்பாட்டின் ஆன்மீகச் சிகரமே பிரம்மச்சர்ய தாத்பர்யங்கள் நிறைந்த இல்லற ஒழுக்கமேயாம்! ஆனால் இப்புவுலகில் கர்ம பூமியாகிய நம் நாட்டில் அப்பழுக்கற்ற புனிதமான நல்லொழுக்கம் சிதைந்து வருவதற்குக் காரணமே ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தைப் பலரும் தினசரி துதிக்காது கைவிட்டு வருவதாகும்.

ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜபம் நல்லொழுக்கம் தரும்!

உங்கள் குழந்தைகளைத் தினந்தோறும் குறைந்தது ஆயிரம் முறையாவது ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை உச்சரித்து, ஜபித்து, துதிக்கச் செய்து வந்தால்  அவர்கள் நிச்சயமாகக் குடத்தில் இட்ட விளக்கு போல் வாழ்க்கையில் நல்லொழுக்கத்தில் பிரகாசிப்பர். தற்போதைய நவீனக் கல்வித் திட்டத்தில், திவ்ய பிரபந்தம், தேவாரம், திருவாசகம், இராமாயணம், மகாபாரதம் போன்ற இறைநெறிக் கல்வி நிறைவு கொள்ளாமையால்தான் கலியுகத்தில் காமத் தீயொழுக்கம் வெகுவேகமாய்ப் பரவி வருகின்றது!  மகரிஷிகளும் நமக்காகத் தம்முடைய மானுட வாழ்க்கையில் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை முறையாக ஓதியும் கசடில்லாத உத்தம பிரம்மச்சர்ய வாழ்க்கையைக் கடைபிடித்தும் இல்லற தர்மத்தைக் கைக்கொண்டும் நமக்கு நல்வழி காட்டி வருகின்றனர்.!

தன்னலம் கருதா பிதாமகர் பீஷ்மாச்சாரியார்!

பிதாமகராகிய பீஷ்மாச்சாரியார் மானுட உடலை உதிர்த்த போது பீஷ்மரின் பிரம்ம தேஜஸானது பல கோடி மடங்குகள் விரிந்து பெருகி அண்டசராசரமெங்கும் உள்ள லோகங்களில் பிரம்ம தேஜஸாய் மகாப் பேரொளியாய்ப் பிரகாசித்தது! காரணமென்ன? தம்முடைய ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜப தபோ பலன்களையும், அதன்பலனாக உண்டான பிரம்மச்சர்ய ஜோதி புண்ய சக்தியையும் எதிர்வரும் யுகங்களில், யோக மார்கமாக பிரம்மச்சர்யத்தைக் கடைபிடிப்போர்க்கு அருள் ஆசிகளாகத் தியாகம் செய்து பீஷ்மர் அர்ப்பணித்தமையே! இதனால் முப்பத்து முக்கோடி தேவர்களும் அவரைப் போற்றி பீஷ்ம பிதாமகரை உத்தம மகரிஷியாகக் கொண்டு அவருக்கு அர்க்யம் அளித்துப் போற்ற வேண்டிய தர்ப்பண அர்க்ய முறைகளை அளித்துள்ளனர்.

எனவே பீஷ்ம தர்ப்பண நாளில் மூன்று முறை கங்கை நீரை உள்ளங்கையில் தாங்கி, கையைப் பூமியை நோக்கி வைத்து விரல்கள் வழியாக பீஷ்ம மகரிஷிம் தர்ப்பயாமி என்று மூன்று முறை அர்க்யமளித்தல் விசேஷமானதாகும். இதனால் நீங்களே எதிர்பாராத வகையில் பல அற்புதமான பலா பலன்களைப் பெற்றிடலாம். இன்று மட்டுமல்லாது தினந்தோறும் பீஷ்மருக்கு அர்க்யம் அளித்துவந்தால் உங்கள் பிள்ளைகள் சீர்திருந்தி நல்லொழுக்கத்தில் பிரகாசிப்பர்!

நற்சந்ததி வாய்த்திட... தீயொழுக்கம் மாய்ந்திட...!

விந்து நாசம் என்பது கலியுகத்தில் பெரும் வியாதியாகப் பரவி வருகின்றது.. குறிப்பாக உலகெங்கும் இளைஞர்களிடம் கூடுகின்ற தீயபழக்கம் விந்து நாசமாகும். இல்லறத்தாரும் சில நட்சத்திர நாட்களில் மட்டும்தான் தார்மீக ரீதியாகப் புணர்ச்சியைக் கொள்ளலாம். கூடா நாட்கள், குருட்டு நட்சத்திர நாட்கள், இரவு நேர ராகு கால, எம கண்ட நேரம், ஒற்றைக் கண்/குருடு நட்சத்திர நாட்கள், உடலற்ற, தலையற்ற நாட்கள் போன்ற தகாத நாட்களில் / நேரங்களில் புணர்ந்தால் அங்கக் குறைவுள்ள சந்ததிகளே வாய்க்கும். எனவே இல்லற வாழ்க்கையில் நாள், நட்சத்திர விதிகளை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். தகாத வழிகளில் விந்தை இழக்கக் கூடாது, விந்தை விரயம் செய்தலும் கூடாது. விந்து என்பது மனித உடலில் உள்ள புண்ய சக்திகளின் கூட்டான தேவ அருளின் திரட்சியே. ஒருதுளி விந்தானது பல கோடி ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜப தபோ பலாபலன்களாலும், பூஜா சக்தியாலும் ஏற்படுத்துவதாகும்! ஜீவ விருத்திக்கு மட்டுமல்லாது யோக சக்தியைப் பெறவும் விந்து உதவுகிறது.

ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை அறியாவிடினும்!

ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை அறியாதோரும் ஸ்ரீகாயத்ரீ மந்திர சக்தியைப் பெறுதல் வேண்டும் என்பதற்காகவே நம் திருஅண்ணாமலை ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தில் பிரசாதம் சமைக்கப்படுபோதே ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஜபிக்கப்பட்டு அதன் சக்தியின் திரட்சியாகப் பிரசாதம் அளிக்கப்படுவதால் அந்தப் பிரசாதத்தை ஏற்போரும் ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜப சக்தியைப் பெறுகின்றார்கள்! இதுவரை அறிந்தோ அறியாமலோ செய்த விந்து விரயக் குற்றங்களுக்குப் பரிபூரணப் பிராயச்சித்தம் பெறுதல் கடினம் என்றாலும் ஓரளவேனும் தம் வாழ்நாளினுள் இத்தவறுகளுக்குப் பிராயச்சித்தம் பெற பீஷ்ம தர்ப்பண நாளில் செய்ய வேண்டியவை:-

1. பீஷ்மருடைய தாயாகிய கங்கை அன்னையின் ஆசியை வேண்டி கங்கை நீரில் நீராடி மூதாதையருக்குத் தர்ப்பணமிடுவதும், கங்கை நீரால் பீஷ்மருக்கு அர்க்யம் அளித்தலும் மன அழுக்கை நீக்கிப் புனிதப்படுத்தும் நல்வழிமுறைகளைக் காட்டும், விந்துக் குற்றங்களையும், விந்து நாசனப் பாவங்களையும், முறையற்ற காம உணர்வுகளையும் போக்க இவை உதவும்.

2. முறையற்ற காமத் தீயொழுக்கத்திற்கு ஆட்பட்ட இளைஞர்களுக்கான நல்வாழ்விற்காக உரிய இறைப்பணியை ஏற்று அவர்களைச் சீர்திருத்த இன்று முதற்கொண்டாவது பாடுபடவேண்டும். ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை அவர்களுக்கு விளக்குதல் நல்ல ஒழுக்கத்தை அளிக்கும். ஜாதி, மத, இன பேதமின்றி யாவரும் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை தினசரி முறையாக ஓதி வந்தால்தான் உலகில் மனிதச் சமுதாயம் சீர்படும்.

3. இன்று மகான்கள், சித்தர்களுடைய சமாதிகளில், ஜீவாலயங்களில் முந்திரிப் பருப்பு மாலை சாற்றி, ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்தால் விந்துக் குற்றங்களுக்கு ஓரளவு பிராயச்சித்தமாக இது அமையும். முந்திரியானது வேத சக்தி நிறைந்ததாகும்!

நவநாத சித்தர்கள் கண்ணாரக் காணும் புராண நிகழ்ச்சிகள்! (Divine Video Episodes)

பரிபூரணமான உத்தம தெய்வநிலைகளைக் கொண்ட நவநாத சித்தர்கள் ஸ்ரீபீஷ்மருடைய பிரம்மச்சர்ய மேன்மையைத் தங்களுடைய தேவ விளக்கங்களாக ஸ்ரீஞானபத்ரம் மூலமாகத் தந்திருக்கின்றார்கள். நவநாத சித்தர்களுடைய சித்த லோகத்தில் தேவ வித்வத்சபையில் பல புராண நிகழ்ச்சிகளுடைய இறை விவாதங்கள் (Divine explorations) நிகழ்கின்றன.. இவர்களுடைய உன்னத பக்தி, உத்தம தெய்வீக நிலை காரணமாக தேவாதி தேவ தெய்வ மூர்த்திகளே அவர்களுடைய தெய்வீக அன்பிற்குக் கட்டுப்பட்டு நேரில் தரிசனம் தருகின்றனர். உதாரணமாக, இராமாயணத்தில் சுந்தர காண்டத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கான சில விளக்கங்களை ஸ்ரீராமர் உறையும் ஸ்ரீராமச்சந்திர லோகத்திலிருந்தே ஜீவன்களின் நல்வாழ்விற்காகப் பெறுகின்ற தேவ வரங்களைக் கொண்டவர்களே நவநாத சித்தர்கள்! இவ்வற்புத சித்தர்பிரான்களுடைய புனிதமான அன்பிற்கும், பக்திக்கும் கட்டுப்பட்டு அந்தந்த தேவமூர்த்திகளே தாம் ஏற்ற அதே புராண பாத்திரங்களாக அவர்கள் முன் தோன்றி விளக்கம் தருவர்.!

அவர்களுக்குத் தகுந்த இறை விளக்கங்கள் அளிப்பதற்காகப் புராண மூர்த்திகளும் தங்களுடைய பாத்திரங்களில் எந்தப் புராண காண்டம் வேண்டுமோ அந்த காண்டத்தையே மீண்டும் மீண்டும் நடத்திக் காண்பிப்பர். இது இன்றைக்கும் நவநாத தேவலோகத்தில் நிகழ்ந்து வருகின்ற அதியற்புத ஆன்மீக விந்தையாகும.! நவநாத சித்தர்கள் தேவ சக்திகளை வகைப்படுத்தி ஓங்கார சக்திகளை நெறிப்படுத்தி, சகஸ்ராரத்தில் சதாசர்வ காலத்திலும் இறைபக்தியை நிலை நிறுத்தி ஓங்கார நாத ஒலியைக் கேட்கின்றவர்கள். இத்தகைய உத்தம தெய்வீக நிலைகளைக் கொண்டவர்கள் என்றால் தெய்வ மூர்த்திகளுக்கு நவநாத சித்தர்கள் என்றாலே மகாப்பிரியம் தானே!

நவநாத சித்தர்கள் தரும் அறிவூப் பூர்வ ஆன்மப் புராண விளக்கங்கள்!

உதாரணமாக ஒரு புராண சம்பவத்தைக் காண்போம்! மகாபாரதத்தில் துச்சாதனன் துகில் உரிகையில் பீஷ்மரும், விதுரரும் மௌனம் சாதித்தது ஏன் என்பதற்கு நாம் மகாபாரதத்தில் பல விளக்கங்களைக் கண்டாலும் பீஷ்மரிடமே நேரிடையாக நம்மால் இன்று விளக்கங்களைப் பெற முடியுமா? நிச்சயமாக முடியும். எப்படி? நவநாத சித்தர்கள் மூலமாகத்தான்!

பீஷ்மர் ஏற்ற பாத்திரத்தின் கதைதான் முடிந்து விட்டதே. இது எவ்வாறு சாத்தியம் என்று நீங்கள் எண்ணக் காரணம் அறியாமையே! சித்தர்களுடைய இருடிகள் மகாபாரதத்தில் உண்மையாக நிகழந்த ஆனால் நமக்கு அளிக்கப்பட்டுள்ள புராணங்களில் அமைந்திடாத எத்தனையோ புராண நிகழ்ச்சிகள் உண்டு. உதாரணமாகப் பட்டுக்கோட்டை அருகே திருவுசாத்தானம் சிவத்தலம், பூந்தோட்டம் அருகே திலதைப்பதி (கோயில்பத்து)  போன்ற தலங்களில் ஸ்ரீராமர் நிகழ்த்திய தர்ப்பண பூஜாவிளக்கங்களை நாம் வால்மீகி ராமாயணத்திலோ, கம்ப ராமாயணத்திலோ கூடக் காண இயலாது. ஏனென்றல், ஸ்ரீராமர் ஒவ்வொரு வினாடி நேரத்திலும் இறை தியானத்திலேயே திளைத்து எப்போதும் மகத்தான இறைப்பணிகளிலேயே நிலைத்து இருந்தார்! அப்படியானால் அவரது பதினான்கு வருட வனவாச இறை லீலைகளை மட்டும் விளக்கினால் அந்த ஆரண்ய காண்டப் பகுதி மட்டுமே பல்லாயிரம் தொகுதிகளாய் விரிந்திடும்தானே!

எனவே இடம், பொருள், காலம் கருதி நமக்குச் சுருக்கி அளிக்கப்பட்டுள்ள பல புராணங்களில் இதுவரை வெளிவராத இறை அனுபூதிகளைத்தாம் நவநாத சித்தர்கள் இருடிகள் இராமாயணம், இருடிகள் மகாபாரதம் மூலமாக சற்குருமார்களின் குருவாய் மொழிகளாக நமக்கு அளிக்கின்றார்கள். நவநாத சித்தர்களுடைய புராண, இதிகாச விளக்கங்கள் என்றால் ஓலைச் சுவடிகளாகவோ, காவியங்களாகவோ, வடிக்கப்பட்டவை அல்ல! இவையாவும் உத்தம யோக, தவ நிலைகளில் பிரபஞ்சத்திலிருந்து குருமகா புருஷர்களால் கிரகிக்கப்படுகின்ற நேரில் காணப்படுகின்ற இறை அனுபூதிகளாகும். இவ்வகையில்தான் ஒவ்வொரு ஆலயத்தின் தல புராணத்திலும் காணப்படுகின்ற தெய்வ மூர்த்திகள், மகரிஷிகள், சித்தர்களின் இறை அனுபவங்கள் பெறப்படுகின்றன..கும்பகோணம் ஸ்ரீகும்பேஸ்வரர் ஆலயம், காஞ்சீபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் ஆலயம், ஸ்ரீகாமாட்சி அம்மன் திருக்கோயில் போன்றவற்றின் தலபுராணங்களில் ஸ்ரீபிரம்மா, ஸ்ரீசூரியமூர்த்தி, ஸ்ரீசந்திர பகவான், ஸ்ரீநாரதர், ஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீதுர்வாசரின் தெய்வ அனுபவங்களை இறை லீலைகளாகக் கண்டிடலாம். இவைதாம் அந்தந்த தல புராணங்களாகின்றன.

பக்தி நிலை கொழிக்கும் நவநாத சித்த லோகங்கள்!

நவநாதசித்தர்களுடைய விசேஷ தெய்வீக அம்சம் என்னவென்றால் இவர்கள் பிரபஞ்சத்தின் அண்ட சராசரத்தில் எங்கு, எப்போதும் எந்த லோகத்திற்கும், நட்சத்திர மண்டலங்களுக்கும் வேண்டுமானாலும் செல்லக்கூடிய இறை அருளைப் பெற்றிருக்கின்றனர். எப்போதும் ஓங்காரப் பிரணவத்தில் திளைத்து இருப்பதால் இவர்களைப் பிரணவமயத்தார் என்றே கூறிடலாம். நம்முடைய பூலோகம் மட்டுமல்லாது, எத்தனையோ கோடி லோகங்களில் இராமாயணம் மற்றும் மகாபாரதம் பற்றிய விளக்கங்கள் தேவைப்படும்போதோ, அல்லது சந்தேகங்கள் எழும்போதோ அந்தந்த லோகங்களில் உள்ள சற்குருமார்கள் மூலமாக நவநாத சித்தர்களுக்கு இச்செய்தி கிட்டுகின்றது.

பிரபஞ்சத்தின் அனைத்து லோகங்களிலும் நடைமுறையில் இருக்கின்ற புராண, இதிகாசங்களில் கரைகண்டவர்களாக நவநாத சித்தர்கள் விளங்குவதுடன் அவர்களுக்கும் தெளிவுரை தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட புராண மூர்த்திகளிடமே நேரில் சென்று ஞானத் தெளிவைப் பெறக் கூடிய சக்தியை நல்வரமாக ஈஸ்வரன் அளித்திருக்கின்றான் என்றால் அவர்களுடைய உன்னத பக்தியின் மகிமை என்னே!

நாமறியா பீஷ்மர் தந்த விளக்கம்

இவ்வகையில் மகாபாரதத்தில் துச்சாதனன், திரௌபதி சம்பந்தப்பட்ட துகில் உரியும் புராண நிகழ்ச்சியில் கௌரவர்களின் அக்கிரமச் செயலை பீஷ்மர் தடுக்காதது ஏன் என்பது பற்றிய தேவ விவாதங்கள் ஏற்பட்டன. உத்தம மகரிஷிகளுக்கும் இது பற்றி தெளிவான விளக்கங்கள் தேவைப்படவே அவர்கள் நவநாத சித்தர்களையே நாடினர். இந்தப் புராணச் சம்பவமானது மிகவும் நுண்ணியத் தெய்வீக நுணுக்கங்களைக் கொண்டிருந்தமையால், நவநாதர்கள் பீஷ்மாச்சாரியாரையே நேரில் கண்டு விளக்கம் பெறவிழைந்தனர். ஏனெனில் இவ்வாறாகப் புராண பாத்திரங்களையே நேரில் அணுகும் சக்தியை நவநாத சித்தர்கள்தாமே பெற்றுள்ளனர்!

மரணப் படுக்கையில் கிடந்து தன் ஜீவ உடலை உகுத்த பீஷ்மர் எவ்வாறு எழுந்து வர முடியும் என்று பூலோக அறிவு கொண்டு எண்ணாதீர்கள்! பிதமகராகிய பீஷ்மாச்சாரியார் என்றுமே பிரகாசிக்கின்ற பிரம்மச்சர்ய ஜோதியாவார்.

புராண சம்பவம் நடந்த போது பீஷ்மரால் எத்தனையோ விஷயங்களைத் துரியோதனனிடமோ, பாண்டவர்களிடமோ, பிறரிடமோ எடுத்துக் கூற இயலாது போயிற்று. பலவற்றைப் பலரிடமும் எடுத்துக் கூற வேண்டிய அவசியமும் அவருக்குக் கிடையாது.. பீஷ்மரிடம் நவநாத சித்தர்கள் இது பற்றிய விளக்கம் கேட்டபோது அவர் மிகவும் ஆனந்தப்பட்டார். ஏனென்றால், அந்தப் புராணம் நிகழ்ந்த போது அவரால் எடுத்துக் கூற முடியாத சில தேவ விளக்கங்களை எடுத்துரைப்பதற்கான இறைத் தருணமானது நவநாத சித்தர்கள் மூலம் கிட்டியது கண்டு அவர் பேரானந்தம் பூண்டார்!

அப்புராண காலத்தில் எவரிடமும் எடுத்துரைக்க இயலாது மனதிலேயே சுமந்து எவரிடமும் விளக்க முடியா தேவ ரகசியங்களை நவநாத லோக சித்தர்களிடம் எடுத்துரைத்தார். இப்போது இதனைப் புராணத்தின் ஓர் அங்கமாகச் சேர்க்க முடியுமா? நிச்சயமாக முடியும்! புராணம்தான் நிறைவு பெற்றுவிட்டதே.. பின் எப்படி முடியும் என்று கேட்கின்றீர்களா?

நாம் பன்முறை விளக்கியுள்ளது போல இன்றைக்கும் பல்வேறு பூலோகங்களில் இறைப் பரம்பொருள், ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர் போன்ற இறை அவதாரங்களாக அந்தந்த லோக ஜீவன்களின் நல்வாழ்விற்கென மீண்டும் மீண்டும் அவதரித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அப்போதெல்லாம் இந்தப் புராண நிகழ்ச்சிகள் பற்றிய விளக்கங்கள் வெவ்வேறு லோக ஜீவன்களின் மனப் பக்குவத்திற்கேற்ப மகரிஷிகளாலும், சற்குருமார்களாலும் வெளியிடப்படுகின்றன! எனவே தற்போது ஏதோ ஒரு லோகத்தில் நடைபெறும் மகாபாரத சம்பவங்களில் இவ்வரிய இறையனுபூதிகள் இணைக்கப்படுகின்றன! எனவே நாம் பெற்றுள்ள மகாபாரதம், இராமாயணம் போன்றவை சுருக்கமானவையே, முழுமையானவை அல்ல. அவற்றில் எடுத்துரைக்கப்படாத பல்வேறு இறைலீலைகளைத்தாம் நவநாத சித்தர்களுடைய இருடிகள் இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றில் காணலாம். இதற்கு சற்குருமார்களின் அருள்  இன்றியமையாததாகும்.

துச்சாதனனுடைய அதர்மச் செயலின் போது பீஷ்மர் மௌனமாக இருந்ததன் காரணத்தை நவநாத சித்தர்கள் வினவியபோது பீஷ்மர் பல அரிய விளக்கங்களைக் தந்தார். இவையாவும் பீஷ்மோபநிஷத்தாக, பல அரிய தெய்வீக விளக்கங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. நைஷ்டிக பிரம்மச்சாரியான பீஷ்மருக்கு முக்காலமும் உணர்கின்ற தீர்க்க தரிசனம் உண்டு. எனினும் எக்காரணம் கொண்டும் எதிர்காலத்தை உரைத்தலாகாது என்ற நியதிக்கு அவர் ஆட்பட வேண்டியதாயிற்று. எனவே ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அழிவிலா ஆடை தந்து திரௌபதியின் மானத்தைக் காத்திடுவார் என்பதை உணர்ந்த அவர் மௌனம் சாதித்தார். மேலும் துரியோதனனுடைய தவறான ஆட்சிமுறையில் வதங்கிய பலகோடி மக்களுக்கு நல்வாழ்வையும், நல்வார்த்தைகளையும் சொல்லி ஆறுதல் அளிக்க வேண்டியது பீஷ்மருடைய பெருங்கடமையாயிற்று. அனைத்தையும் விடத் தன் தாயான கங்காதேவி ஏழு குழந்தைகளையும் பூமிக்கு அர்ப்பணித்த போது, அதற்கான தர்ப்பணக் கடனானது கங்கைக் குலத்திற்கும், சந்தனுவின் குலத்திற்கும் பெரும் பாரமாகத் தங்கிவிட்டது, இதனை நிவர்த்தி செய்வதும் கங்கா புத்திரனாகிய பீஷ்மரின் பிறவிப் பெருங்கடமை ஆயிற்று. இக்காரணங்களுக்காகத்தான், பீஷ்மர் கௌரவர்களுடைய அக்கிரமச் செயலைப் பொறுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இவற்றால்தான் பீஷ்மரும் மௌனம் பூண்டார்! ஆனால் உள்ளத்தளவில் பக்திப் பூர்வமாக அவர் ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாம யாகம் புரிந்து கொண்டிருந்தார்.!

அனைவர்க்குமாம் கங்கை!

பூலோகத்தில் பாரதநாட்டிற்கு மட்டுமே கங்கை நதி உரித்தானது என்று நாம் எண்ணுகிறோம், கங்கா ஜடாதரனாகிய சிவபெருமானின் சிரசினின்று பொங்கி வழிகின்ற கங்கை நதி அனைத்துக் கோடிலோகங்களிலும் உண்டு. எனவே, பலரும் நீராடுவதால் படியும் பாவச் சுமைகள் இல்லாத கங்கைப் பிரவாகத்தை அனைத்து லோகங்களுக்கும் பெற்றுத் தருவதற்கும், கங்கையின் புனிதத்துவத்தைக் காப்பாற்றுவதற்கும், சந்தனுவின் குலமானது பித்ரு சாபங்கள் நீங்கித் தழைப்பதற்கும் பீஷ்மர் விசேஷமான தர்ப்பண பூஜை முறைகளைக் கையாண்டு அத்தர்ப்பண சக்தியையெல்லாம் கங்கா ஜலம் மூலமாய்த் தாரை வார்த்து இவ்வுலகிற்கே அர்ப்பணித்தார். இவ்வாறு அவர்தம் மரணமில்லா மாயாதீத மரணப் படுக்கையில் ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் உதிப்பதற்கு அவர் மாபெருந் தெய்வீகக் கருவியாய் இறை ஆணையாய் விளங்கிப் பிரகாசித்தார்!

இக்காரணங்களுக்காகத்தான், பீஷ்மர் கௌரவர்களுடைய அதர்மத்தைப் பொறுத்துக் கொண்டு, மௌனமாய் இருந்தார்! அவர் அம்புப்படுக்கையில் இருந்தபோது அங்கு தோன்றிய கங்காதேவி பீஷ்மர் ஓதிய ஸ்ரீவிஷ்ணுசஹஸ்ர நாமத் துதியைக் கேட்டு மகிழ்ந்து இவ்வரிய மந்திர ஓதற் பலன்களையும் பிரபஞ்சத்துக்கே அர்ப்பணித்தாள். மேலும் அவர்தம் குலத்திற்கு அளித்த தர்ப்பணத்தில் கிட்டிய தர்ப்பண சக்தி மூலம் பீஷ்மரையும் வாழ்த்தி அவருடைய தர்ப்பண பூஜை பலன்களையெல்லாம் உத்தமப் பித்ரு லோகங்களுக்கு அர்ப்பணித்து ஆனந்தம் கொண்டாள்!

இவ்வரிய விளக்கங்களால் சந்தோஷமடைந்த நவநாத சித்தர்கள் பீஷ்ம தர்ப்பணம் என்ற ஐந்துநாள் பூஜையை பீஷ்மரின் நினைவாக பூலோகத்துக்கு அளித்தனர். இதனைக் கடைபிடித்தால் நவநாத சித்தர்களே முன்வந்து ஆசி தருகின்றனர். இந்த தெய்வீக பாக்யத்தை விட்டுவிடலாகுமா? இறைப் பகுத்தறிவுடன் சிந்தியுங்கள்! செயல்படுங்கள்!

நவாவர்ண ஊஞ்சல் மகிமை

ஊஞ்சல் ஆடுதலும் பூமத்ய புனர்வேத யோகத்தில் அடங்குகின்றது. கிடைத்தற்கரிய யோக சக்தி இது! பூமியினுடைய ஆகர்ஷண சக்தியிலிருந்து சற்றே எழும்பிய நிலையில் அமர்ந்து யோகம் புரிவது மிகச் சிறப்புடையதாகும். இதற்காகவே ஊஞ்சல் ஆடுதலை நம் பெரியோர்கள் நமக்கு அற்புத ராஜித யோக முறையாகத் தந்துள்ளனர். ஊஞ்சலில் தியானம் புரிதல், மனம் அடங்குவதற்கு உரித்தான மிகச் சிறப்பான எளிய யோகமாகும். மனமடங்கக் காட யோகம் ஆடலூஞ்சல் என்பது சித்தர்களுடைய பரிபாஷை!

தினமும் ஊஞ்சலாடு! அனுதினம் யோகம் கூடு! ஊஞ்சல் ஆடுதல் என்பது ஒரு இனிமையான அனுபவமாக மட்டும்தானே என்று நாம் உணர்கின்றோம். இந்த ஆனந்தத்தின் ஊடே பூமத்யப் புனர்வேத யோக முறை ஒன்றை நமக்குப் பெரியோர்கள் தந்துள்ளார்கள். மாம்பலகை, பலாப் பலகை, தேக்குப் பலகை போன்ற முக்கியமான பலகைகளில் ஊஞ்சலை அமைத்துத் தினமும் குறிப்பிட்ட சுப ஹோரை நேரங்களில் ஊஞ்சல் ஆடுதலால் மன அடக்கத்தை எளிதில் பெற்றிடலாம். ஊஞ்சல் ஆடுகின்றபோது கண்களை மூடிய நிலையில் குறிப்பிட்ட கோணத்தில், திசையில் ஆடுதலாலும் உடலில் உள்ள சில தசைநாளங்கள் பூமத்ய புனர்வேத ஊட்டம் பெற்று யோக நாளங்கள் முடுக்கி விடப்படுகின்றன.

ஓடியாடி விளையாடுகின்ற போது ஆக்கம் பெறாத பல முக்கியமான யோக நாளங்கள் பூமியின் ஆகர்ஷண சக்திக்கு நிகராக ஊஞ்சலில் ஆடுகின்றபோது எழுகின்ற அர்க்ய யோக சக்தியின் மூலம் உடலில் ஆக்கம் பெறுகின்றன! இதற்காகத்தான் அக்காலத்தில் ஊஞ்சல் ஆடுகின்ற இடத்திலிருந்து கன்னி மூலையிலோ அல்லது அக்னி மூலையிலோ முக்கியமான யோகச் சக்கரங்களை உத்திரத்தில் பொருத்தி இருப்பார்கள். மீன் வடிவிலோ, சக்கர நாளங்களாகவோ இந்த யோகச் சக்கரங்கள் உத்திரத்தில் மூலையில், சுவர்ப் பிறைகளில் (ceiling)  பதிக்கப்பட்டு இருப்பதால் பெரியோர்கள் ஊஞ்சல் ஆடுகின்றபோது இவற்றைப் பார்த்தவாறே மனதை ஒருமுகப்படுத்துவார்கள். வாஸ்து சாஸ்திரங்களில் யோகப் பிறை அமைப்புகளும் உண்டு.

காலை சூரிய உதய நேரத்திலும், மாலை சந்தியா வந்தன நேரத்திலும் ஊஞ்சல் ஆடுதல் மன அடக்கத்திற்குப் பெரிதும் துணை புரியும். மேலும் ஊஞ்சல் ஆடும்போது இசைக்க வேண்டிய குறித்த இராகப் பாடல்களும் நிறைய உண்டு. இதற்காகத் திருமணச் சடங்குகளில் குறித்த ராகப் பாடல்களுடன் மாப்பிள்ளை, பெண் ஊஞ்சலாடுவதை ஒரு முக்கியமான யோகச் சடங்காக நம் பெரியோர்கள் நிர்ணயித்திருந்தார்கள் தற்காலத்தில் Single bedroom flatம் ஒண்டுக் குடித்தனமும் என்பதுதான் நடுத்தர வர்க்கத்தினருடைய அதிகபட்ச வசதியாக இருக்கின்றபோது ஊஞ்சலுக்கான இடத்திற்கு எங்கே வோவது?

இதற்காகத் தான் கலியுகத்தில் மூங்கில், பிரம்பு போன்றவற்றால் பின்னப்பட்டுள்ள நவாவர்ண ஊஞ்சலானது நமக்கு ஊஞ்சலின் மூலம் கிட்டும் யோக சக்திகளை நிரவித் தருகின்றது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். மூங்கிலைத் தல விருட்சமாகக் கொண்டு திருத்தலங்கள் நிறைய உண்டு. இவையெல்லாம் ஊஞ்சலாடுதலால் கிட்டுகின்ற யோக சக்திகளை நல்வர தரிசனப் பலன்களாக நமக்குப் பெற்றுத் தருகின்றன.. மிக உயர்ந்து வளர்கின்ற தென்னை, மூங்கில், பனை போன்றவற்றிற்கு விண்ணிலிருந்து பல அபூர்வ மந்திர சக்திகளைக் கிரகிக்கின்ற சக்திகள் நிறைய உண்டு. எவ்வாறு ஊஞ்சலானது பூமியினுடைய ஆகர்ஷண் சக்திக்கு நேராக சில அபூர்வமான யோக சக்திகளைப் பெற்றுத் தருகின்றதோ, அதே போல பூமியினுடைய ஆகர்ஷண சக்திக்கு எதிராக உயர்ந்து வான் நோக்கி வளர்கின்ற தென்னை, பனை, மூங்கில் போன்றவற்றிற்கும் பூமத்ய புனர்வேத யோக சக்திகள் உண்டு.. இந்த யோக சக்திகளில் சிறப்புடையோரே அமாவாசைச் சித்தர் ஆவார். ஹட யோகத்தின்பால் வருகின்ற இந்த யோக சக்திகள் யாவும் விண்ணுலகில் எந்த லோகத்திற்கும் எந்த விநாடியும் செல்லக் கூடிய அபரிமிதமான தெய்வீக ஆற்றலைப் பெற்றுத் தருவதாகும்.

யோகபாட்டையே ஊஞ்சலாட்டம்!

நவாவர்ண ஊஞ்சல் யோகம் என்பது ஒவ்வொருவரும் தினந்தோறும் பெற வேண்டிய பாந்தவ யோக சக்திகளில் ஒன்றாகும். இது பிளட்பிரஷர், இருதய நோய், மூல நோய், சர்க்கரை வியாதிகளை அண்டவிடாமல் தடுக்கும். பிரம்பு அல்லது மூங்கிலால் பின்னப்பட்ட இந்த ஊஞ்சலில் சற்றே அசைந்து ஆடியும் அல்லது இதில் அசைவுற்று அமர்ந்தும் சில மந்திரங்களைத் துதித்தவாறு யோகநிலை பூணுதல் மிகவும் சிறப்புடையதாகும். பூமியில் தர்ப்பைப் பாயிலோ, கம்பளியின் மேல் அமர்ந்தோ ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபிக்கும்போது கிட்டுகின்ற யோக சக்திகள் வேறு, பூமியிலிருந்து 2 அல்லது 3 அடி உயரத்தில் நவாவர்ண ஊஞ்சலின் மேல் அமர்ந்து ஜபிக்கின்ற போது கிட்டுகின்ற புனர்வேத யோக மார்க சக்திகள் வேறு.

ஒவ்வொரு யோக சக்தியும் விதவிதமான கர்ம வினைகளைத் தீர்ப்பதற்கும், தோஷங்களை நீக்கும் ரக்ஷா பந்தன சக்திகளைப் பெறுதற்கும் பலவகைகளில் பெரிதும் உதவுகின்றது. மன அடக்கம் அல்லது மனஒடுக்கம் என்பது கலியுகத்தில் எளிதில் பெற முடியாத யோக நிலைகளுள் ஒன்றாகும். குறிப்பாக கேளிக்கைகள், மது, முறையற்ற காமம், ஆபாச சினிமா போன்றவற்றில் பெரும்பாலோருடைய மனம் இலயித்து விடுவதால் சிறிது நேரம் மனம் அடங்குதல் என்பது பெறுதற்கரிய ஆன்ம நிலையாக கலியுகத்தில் ஆகிவருகின்றது. கலியுகத்தில் மன அலைகளின்  ஓட்டமின்றி ஒரு நிமிடம் கூடப் பெரும்பாலான மனிதர்களால் அமர்ந்து யோகம் பூண முடிவதில்லையே, என்னே பரிதாபம் இது?

நவாவர்ண ஊஞ்சல் என்பது ஒன்பது விதமான நிறங்களைக் கொண்ட மூங்கில் அல்லது பிரம்பாலான ஊஞ்சல் ஆகும். இது சென்னை ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயாவில் கிடைக்கின்றது. திருஅண்ணாமலையில் வேதசாஸ்திரப்படி பலவிதமான மூலிகைப் பூச்சுகளால் ஆக்கப்பட்டு, வாயு மந்திரத் துதிகளால் பூஜிக்கப்பட்டு தற்போது ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயாவில் தருவிக்கப்பட்டுள்ளது.. நவாவர்ண ஊஞ்சலில் அமர்ந்து, கண்களை மூடிய நிலையில் துதிக்க வேண்டிய இறைத் துதிகளும் உள்ளன! மந்திரங்களை அறியாதோர் பார்த்து, படித்து, ஓத வேண்டிய துதிகளும் நிறைய உண்டு. அந்தந்தக் கிழமைக்கு ஏற்றவாறான நவாவர்ண ஊஞ்சலின் யோகத் துதி முறைகளும் உண்டு! இந்த நவாவர்ண ஊஞ்சலில் அமர்ந்தவாறு குறித்த சில யோக முத்திரைகளைக் கைக்கொண்டால் பலன்கள் அபரிமிதமாகப் பெருகுகின்றன.

உள்ளங்கையிலுள்ள பலவிதமான் ரேகைகள் பூமியின் ஆகர்ஷ்ண சக்தியைக் கிரகித்து பூமியின் ஆகர்ஷண சக்தியைக் கிரகித்து உடலிலுள்ள 72 ஆயிரம் நாடிகளுக்கும் செலுத்துகின்றன.. இதற்காகத்தான் ஆலயங்களில் மருதாணி இட்ட பாதங்களுடன் செய்கின்ற அடிப்பிரதட்சிணத்தை மிகச் சிறந்த நடைப் பிரதட்சிண யோக முறைகளில் ஒன்றாக நமக்குப் பெரியோர்கள் தந்துள்ளார்கள். கைவிரல்கலில் உள்ளது போலவே கால் உட்பாதங்களில் உள்ள ரேகைகள் யாவும் அடிப்பிரதட்சிணத்தின் போது கோடிக்கணக்கான மகரிஷிகளும், சித்தர்களும் வலம் வருகின்ற பிரகாரத்தில் நிறைந்துள்ள அவர்களுடைய திருவடிப் புனிதத் துகள்களின் யோக சக்திகளை பாதங்கள் மூலமாக நம் உடலுக்குச் செலுத்துகின்றன.. எனவே கைரேகைகள், உள்ளங்கால் ரேகைகள் யோக, தியான சக்திகளை ஈர்க்கும் யோக நாளக் கம்பிகளாக (divine cables)  விளங்குகின்றன.. மூங்கிலுக்கும் யோக சக்தியைப் பெருக்கக் கூடிய சக்தி அபரிமிதமாக உண்டு. பிரம்பும் இவ்வகையைச் சார்ந்ததாகும். எனவேதான் அக்காலத்தில் பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு காலை, மாலை வேளைகளில் நம் பெரியோர்கள் அமர்ந்த நிலை யோகத்தைப் பூண்டார்கள்.

தினந்தோறும் சிலவகை லலாட யோக சக்திகளைப் பெறவேண்டுமென்றால் மூங்கில் தம்ளர்களில் நீர் அருந்துவது மிகவும் விசேஷமானதாகும். இன்றைக்கும் மலைவாழ்ப் பழங்குடி மக்களிடையே மூங்கில் தம்ளர்களில் அருகம்புல் போன்ற மூலிகைகளைக் கலந்து சுனை நீர் அருந்தும் நல்வழக்கத்தைக் காணலாம். இதே போன்று மண்பானையில் நீரைச் சேர்த்து மூங்கில் குவளையில் தம்ளர்களில் நீர் அருந்துவது சிலவகை பிருத்வி யோக சக்திகளை பெருக்குவதாகும். இவ்வாறே பிரம்புக் கூடையில் துணிகளை வைத்திப்பதால் சில குறித்த வஸ்திர சாங்க்ய யோக சக்திகள் துணிகளுக்கு உண்டாகின்றன.. இதனால்தான் மலைவாழ்ப் பழங்குடி மக்கள் இன்றைக்கும் முதுகில் தங்கள் குழந்தைகளைப் பிரம்புக் கூடையில் பருத்தி தூளியாகவும் அமைத்துச் சுமந்து செல்வார்கள். அக்காலத்தில் போர் வீரர்கள் பிரம்புக் கூடையில் தான் அம்பு, வில் ஆகியவற்றைச் செருகி வைத்திருப்பார்கள்.. இதனால் அந்த ஆயுதங்களுக்கு யோகசக்தி மேம்படுவது மட்டுமல்லாமல் நல்வரமாகப் பெற்ற அந்த ஆயுதங்களிலுள்ள இறைசக்தியும் இரட்சையாகப் பாதுகாக்கப்படும். எனவே பிரம்பில் ஆன நவாவர்ண ஊஞ்சலில் அமர்ந்து யோகம் பயிலத் தொடங்குங்கள்! இதனால் சில பழைய கர்ம வினைகளும் கழிகின்றன! அரிய தியான, யோக நிலைகளும் கூடுகின்றன.

தேனிமலையில் ரதசப்தமி

தேனிமலை மகிமை! புதுக்கோட்டை – பொன்னமராவதி மார்கத்தில் தேனிமலை உள்ளது.

சூரிய பகவான் தினந்தோறும் பவனி வருகின்ற ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் ஸ்ரீகாயத்ரீ மந்திர சக்தியும் நிறைந்துள்ளது. சூரிய உதய/ அஸ்தமன நேரத்தில் செய்கின்ற பூஜைகளுக்கு / சூரிய நமஸ்கார வழிபாடுகளுக்கும் ஸ்ரீகாயத்ரீ மந்திர சக்திப் பலாபலன்கள் அதிகமாகும்.

சூரிய பகவான் தன்னுடைய ஸ்ரீகாயத்ரீ மந்திர அனுக்ரகத்திற்கான “நித்ய கிரண” வழிமுறையை அதாவது அயன கதியை மாற்றிக் கொள்கின்ற திருநாட்களே தை முதல் நாளும், அடி முதல் நாளும் ஆகும்.

ஆலயங்களிலுள்ள ஸ்ரீசூரிய மூர்த்தியை வழிபடுவதற்கான பல அரிய சின் முத்திரை வழிபாட்டு முறைகள் உண்டு. இவற்றைக் கடைபிடித்தால் நன்முறையில் கண்பார்வை விருத்தியாகும். உடல் அங்கங்களில் எவ்விதக் குறைபாடும் இல்லாத நல்ல சந்ததி விருத்தி ஏற்படும்.

சூரியன் தன்னுடைய அயன கதியை உத்தராயணப் புண்ய காலமாக மாற்றிக் கொள்கின்ற திருநாளே தை முதல் நாளாகும். எவ்வாறு நாம் ஒரு வண்டியை அடிக்கடி சர்வீஸ் செய்து அதனுடைய லட்சணங்களைப் புதுப்பித்துக் கொள்கின்றோமோ இதே போல சூரிய பகவான் ஒவ்வொரு உத்தராயண / தட்சிணாயன புண்ய காலத்திலும் தன்னுடைய ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தின் லட்சணங்களை எதிர்வரும் ஆறுமாத காலத்தில் ஏற்பட இருக்கின்ற கர்ம பரிபாலனத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்கின்றார். இந்த கர்ம பரிபாலன இறை இயக்கத்திற்கு அருள்பாலிப்பவரே ஸ்ரீலட்சண விநாயகர் ஆவார்.

திருஅண்ணாமலைத் திருக்கோயிலின் கிழக்குக் கோபுர வாயிற்படி மாடத்தில் இடதுபக்கம் எழுந்தருளியிருக்கின்ற ஸ்ரீலட்சண விநாயகரை வழிப்பட்ட பின்னரே ஸ்ரீசூரிய பகவான் தன்னுடைய உத்தராயணப் பாதையை மாற்றிக் கொள்கின்றார். இது யாரும்மறியாத தேவ ரகசியாகும். எனவே தை முதல் நாளன்றும் ரதசப்தமித் திருநாளன்றும் ஸ்ரீலட்சண விநாயகர் அருள்பாலிக்கின்ற இடத்திலிருந்து திருஅண்ணாமலையைத் தரிசித்தல் மிகவும் விசேஷமான பலன்களைத் தருவதாகும்.

ரதசப்தமி என்பதின் பொருள் என்ன? பிரதமையிலிருந்து ஏழாவது திதியாக அமைகின்ற சப்தமித் திருநாளில்தான் சூரியபகவான் தன்னுடைய ஏழு குதிரைகளையும் கொண்ட ஜாதவேத பூஷணத் தேரினை இறைப்பரிசாக சிவபெருமானிடமிருந்து பெற்றார். இவையே ஒரு வாரத்திற்குரித்தான ஏழு வார  கால தேவதைகளின் அங்கங்களாகும். இந்த ரதத்தை ஓட்டி வருபவர் தான் கருட பகவானுடைய சகோதர பாவத்தில் இருக்கின்ற அருண மகாப் பிரவு ஆவார். அருணனுக்கு உடலின் கீழ் அங்கங்கள் கிடையாது. உடலின் மேல் அங்கங்களுடன் மட்டும் வைரோஜன யோகத்தில் ரதத்தைச் செலுத்தி ஸ்ரீசூரிய பகவானுக்கு உறுதுணையாக இருப்பவரே அருணன் ஆவார். சப்தமித் தேரின் சாரதியாம் அருணன் வேறு, ஆதித்யனாகிய சூரியன் வேறு! ஆனால் சூரியனுடைய எண்ணற்ற நாமங்களில் அருணனும் ஒன்றேயாம்!

உங்களை நீங்களே அறிந்தால்....

ரதசப்தமி பண்டிகையில் சூரிய அருணோதய தீர்த்தத்தில் வழிபடுபவர்கள் எவ்வித அங்கக் குறைவில்லாத சந்ததியைப் பெறுவர். பெரும்பாலும் உலகெங்கும் உள்ள ஊனமுற்றோர் ஒருவிதத் தாழ்வு மனப்பான்மையுடனும், மனக்குறையுடனும் பல நாடுகளில் வாழ்கின்றனர். இக்குறைபாடுகளை நீக்கி வாழ்வின் இலட்சியமே இறையடிகளை நாடுவது தான் என்று உணர்ந்து தெளிந்திடுக! இவையாவும் பூர்வ ஜென்மக் கர்மவினைகளின் விளைவு என்பதை மனப்பூர்வமாக உணர்ந்து, எப்படியிருந்தாலும் மானிடப் பிறவியை எடுத்தது பெறுதற்கரிய பாக்கியமாகும், என்று உய்த்தறிந்து நல்லொழுக்கத்துடன் , நல்ல இறைநெறிகளுடன் வாழ்வதற்கு அருணனே சப்தமித் தேரை மந்திர சங்கல்பங்களுடன் ஓட்டி அருள்புரிகின்றார்.

அருணோதய காலம் என்பது சூரியனுக்குரித்தான விசேஷமான வழிபாட்டுக் காலமாகும். அருணோதய காலம் எனப்படும் விடியற்காலை சூரிய உதயவேளையில் தான் அருணன் அனைத்து தெய்வ வழிபாடுகளையும் நொடிப் பொழுதில் மேற்கொண்டு அவற்றின் பலாபலன்களை ஏழு குதிரைகளின் காலடிக் குளம்பின் கதிபால வீர்ய சக்திகள் மூலமாக உலக மக்களுக்கு அளித்து அருள்பாலிக்கின்றார்.

ஏழு குதிரைகளும் ஏழு நாட்களைக் குறிப்பதோடு மட்டுமல்லாமல் பூலோகத்திற்குரித்தான ஏழுவிதமான சரிகமபதநி என்று முக்கியமான தெய்வீக இசை ஸ்வர சப்தங்களையும், ஏழு வர்ணங்களையும் குறிக்கின்றன. இந்த ஏழு சப்தங்கள் மட்டும் விண்வெளியில் பரவியிராவிட்டால் இவ்வுலகத்தில் மொழிகளே ஏற்பட்டு இருக்காது. பேச்சே இருந்திருக்காது., எனவே வாக்கு சக்தி ஏற்படுவதற்குக் காரணமே தினந்தோறும் சூரியத் தேர்ச் சாரதியாம் அருணன் நிகழ்த்துகின்ற அருணோதய வழிபாடும், சூரியபகவான் ஏழு குதிரைகள் மீது அமர்ந்து பிரபஞ்சத்தை பவனி வருவதும் ஆகும்.!

வார்த்தை காத்தல்!

ஸ்ரீவாலகில்ய மகரிஷிகள் எனப்படுகின்ற கட்டை விரல் அளவே உள்ள மகரிஷிகள் சூரியனுடைய ரதத்தில் அமர்ந்து நாமறிந்த நான்கு வேதங்கள் மட்டுமல்லாது இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து வேதங்களையும் ஓதி அவற்றின் சக்திகளை சூரிய ரதம் மூலமாகவும் ஏழு இன்னிசைக் குதிரைகளின் குளம்புச் சத்தம் மூலமாகவும் இப்பூவுலகிலும், பிரபஞ்சத்திலும் நிரவிச் செல்கின்றார்கள். எனவேதன் இவ்வுலகத்தில் இத்தனை ஆயிரமாயிரம் மொழிகள் நிலவுகின்றன.

எனவே நம்முடைய ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தம் பொதிந்ததாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக்த்தான் இந்த தட்சிணாயன / உத்தராயணப் புனித தினங்கள் அமைகின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.. ஆனால் ஏதோ நம்மால் பேச முடிகின்றது என்பதற்காக எத்தனை உபயோமற்ற வார்த்தைகளைப் பேசுகின்றோம்? நம்முடைய ஒவ்வொரு வார்த்தையும் பிறருக்கு நலம் பயக்கும் வகையில் நாம் அமைத்துக் கொள்ள வேண்டுமானால் அதற்குரிய வாக்குசக்தியை நாம் பெறுதல் வேண்டும். இதனை நமக்குப் பெற்றுத் தருவதே அருணோதய விடியற்காலை வழிபாடு.

தேனிமலையில் அருணோதயப் பாறை!

அருணோதய வழிபாட்டிற்கு உரித்தான மிகச் சிறந்த தலங்களுள் ஒன்றாக விளங்குவதே தேனிமலை ஆகும். இங்குக் குறிப்பிட்ட சில அருணோதயப் பாறைகள் உண்டு. இவற்றில்தான் ஸ்ரீபெருமானந்த சித்த சுவாமிகள் அமர்ந்து பல அரிய அருணோதய வழிபாடுகளை மேற்கொண்டு எத்தனையோ பேர்களுடைய கண் நோய்களுக்கு அருணோதய காலத்தில் மலர்கின்ற மூலிகைகள் மூலமாகத் தக்க நிவர்த்திகளைப் பெற்றுத் தந்துள்ளார். இந்த சித்தர் பெருமானுடைய கண்களில் பொங்குகின்ற தேஜோமய ஒளிக்கு அருணோதயப் பிரகாசம் என்று பெயர். குறித்த சில சூரிய நமஸ்கார வழிபாடுகளை மேற்கொள்பவருக்குத் தான் இந்த ஜோதிப் பிரகாசம் கிட்டும். தேனிமலையிலுள்ள பாறைகளில் அமர்ந்து அமர்ந்து சூரிய யோக முறைகளை சூரிய கலை சுவாச நாளத்தில் (வலது நாசி) மேற்கொள்தல் மிகவும் சிறப்பானதாகும்.

ஸ்ரீபெருமானந்த சித்தர்

சூரிய பாசாங்குலி முத்திரை

குறிப்பாக பாசாங்குலி முத்திரை என்று சொல்லப்படுகின்ற காலை, மதியம், மாலை வேலைகளில் சந்தியாவந்தன மந்திர வழிபாட்டின் வேலைகளில் சந்தியாவந்தன மந்திர வழிபாட்டின் போது சூரிய பகவானைத் தரிசிப்பதற்குரித்தான அரிய முத்திரை என்ற ஒன்றுண்டு. இதன் வழிமுறைகளைத் தக்க பெரியோர்கள் உதவியுடன் பயின்று சூரியனைத் தினந்தோறும் தரிசித்து வருவதால் அபரிமிதமான கண்ணொளி பெருவதோடு உடல் ஆரோக்கியமும் நன்முறையில் விருத்தியாகும். முகத்தில் தேஜஸ் பெருகும், ஜோதிட தீர்க தரிசனம் விருத்தியாகும்! சூரிய ஒளியை நேரடியாக தரிசித்திடாது தக்க முத்திரைகள் மூலமாகவே சூரிய ஒளியைக் காண வேண்டும். இத்தகைய எளிய யோக வழிபாட்டு முறையை ஸ்ரீபெருமானந்த சித்தர் பெருமான் பலருக்கும் உபதேசித்துள்ளார். எனவே தான் அருணோதய சித்தர்களுள் ஒருவராக அன்றும், இன்றும், என்றும் ஸ்ரீபெருமானந்த சித்தர் பெருமான் திளைக்கின்றார்.

தேனி மலையில் ரத சப்தமி

ரதசப்தமி தினத்தைத் தேனிமலையில் கொண்டாடுவது மிகவும் சிறப்பானதாகும், அதாவது அருணோதய நேரத்தில் (சூரியன் உதயமாகும் நேரத்தில்..) இங்கு தேனிமலையில் கிரிவலம் வந்து ஸ்ரீமுருகப் பெருமானைத் தரிசித்து மலைப் பாறைகளில் அமர்ந்து குறித்த சில சூரிய மந்திரத் துதிகளை ஓதி, கண்ணை மூடித் தியானித்தல் அபரிமிதமான யோக சக்திகளைப் பெற்றுத் தரும். ஏனென்றால் சூரியனுக்கு சாரதியாக ஏழு குதிரைகள் எனப்படுகின்ற இன்னிசை ஸ்வரங்களை, ஏழு வாரங்களை நியதி செய்கின்ற அருணனே இங்கு பாறைகளில் இன்றும் சூட்சுமமாக அமர்ந்து தியானம் புரிகின்றார் என்றால் தேனிமலையின் மகிமையை என்னவென்று சொல்வது?

ரதசப்தமி தினத்தன்று எருக்கம் இலைகளை வைத்து வழிபடுகின்ற சக்தி வாய்ந்த பூஜை முறை உண்டு. இதைப்பற்றி ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் பன்முறை விளக்கியுள்ளோம்.,(ஸ்ரீஅகஸ்திய விஜயம் பிப்ரவரி 1995), தேனிமலையில் எத்தனையோ சுனை தீர்த்தங்கள் இருந்தாலும் நம் கண்ணுக்குத் தெரிகின்ற அளவில் மூன்று முக்கியமான சுனைகள் உண்டு. இவற்றை சரவணப் பொய்கை, சத்திய தீர்த்தம், ஸ்கந்த தீர்த்தம் என்றும் எத்தனையோ பெயர்களில் அழைத்தாலும், படியில் ஏறுகின்றபோது படியின் முதலில் இடது புறம் இருக்கின்ற தீர்த்தம் அருண தீர்த்தம் என்றும் அதற்கு மேல் வலப்புறம் அமைந்துள்ள தீர்த்தம் சரவண தீர்த்தம் என்றும், அதற்குமேல் கோயில் அபிஷேகத்திற்காக பயன்படுகின்ற தீர்த்தம் பாஸ்கர தீர்த்தம் என்றும் சித்தர்களால் குறிப்பிடப்படுகின்றன. இதில் மக்களுடைய நீராடுதலுக்காகப் பயன்படுகின்ற சரவண தீர்த்தத்திலிருந்து நீரை எடுத்து சூரியனுக்கு ஸ்ரீகாயத்ரீ அர்க்யம் அளித்து அருண தீர்த்தத்தில் ரதசப்தமியைக் கொண்டாடுவது சிறப்புடையதாகும். மிகவும் ஆழமான சுனையாதலால் மிகவும் கவனத்துடன் இருத்தல் வேண்டும். எவ்விதத் தீட்டுகளும் அண்டுதல் கூடாது.. மனப் புனிதத்தையும், உடல் புனிதத்தையும் அளிக்கின்ற மிகவும் அற்புதமான தீர்த்தம், தேவலோக தீர்த்தமாதலின் சுனைத் தீர்த்த நீரை வீணாக்குதலும் கூடாது.

தேனிமலை கிரிவல மஹிமை!

ஸ்ரீபெருமானந்த சித்த சுவாமிகள் போன்ற மகான்களும், மகரிஷிகளும் எப்போதும் சூட்சுமமாக இச்சுனையில் நீராடி, கங்கை, காவிரி, துங்கபத்திரா போன்ற கோடானு கோடி புண்ய தீர்த்தங்களின் புண்ய சக்தியைப் பெற்றுத் தருகின்ற தீர்த்தமே தேனிமலைத் தீர்த்தமாகும்.. இத்தீர்த்தத்தை முறையோடு பூஜித்துத் தினந்தோறும் மூன்று துளிகளை மட்டும் அருந்தி வந்தால் எத்தனையோ தீராத நோய்களுக்கும் தக்க தீர்வைப் பெற்றிடலாம். ஆனால் ஒரு ஆழாக்குத் தீர்த்தத்திற்கு மேல் எடுத்துச் செல்தலைத் தவிர்க்கவும். தேவேந்திர தீர்த்தமாதலாலும், இதனை பவித்திரமாக வைத்து பூஜிக்க வேண்டுமென்பதாலும் நன்முறையில் கிரிவலம் வந்து முருகப் பெருமானைத் தரிசித்து ஸ்ரீபெருமானந்த சித்த சுவாமியின் ஆசிகளுடன் இத்தீர்த்தத்தை இவ்விடத்திலேயே அருந்தி வருதலே மிகவும் விசேஷமானதாகும்.

ஸ்ரீமுருகப் பெருமான்
தேனிமலை

மயில் வாகனம்
தேனிமலை

நோய் தீர்க்கும் நாட்களான செவ்வாய்க் கிழமை, சனிக் கிழமை, அஸ்வினி, பரணி, ஆயில்ய நட்சத்திர நாட்களில் செவ்வாய் ஹோரை நேரத்தில் இங்கு நீராடிடுக!

“ஓம் தத்புருஷாய வித்மஹே ஸ்கந்தாக்னி தேவாய தீமஹி
தந்நஸ்கந்த ப்ரசோதயாத்!”

“ஓம் தத்புருஷாய வித்மஹே ஔஷத ரூபாய தீமஹி
தந்நோ தன்வந்த்ரீ ப்ரசோதயாத்!“

“ஓம் தத்புருஷாய வித்மஹே ஜலதீபாக்னி ரூபாய தீமஹி
தந்நோ வைத்தீஸ்வர ப்ரசோதயாத்!“

என்ற நோய் நிவாரணம் தரும் ஸ்ரீகாயத்ரீ மந்திரங்கள் மூன்றையும் ஒவ்வொன்றையும் 108 முறை ஓதி தீர்த்தத்தைப் பிரசாதமாக அருந்தி வந்தால் பலவிதமான தீராத நோய்களுக்கும் தீர்வைப் பெற்றிடலாம்! ரதசப்தமி தினத்தன்று இங்கு கிரிவலம் வருதல் விசேஷமானதாகும். இயன்றால் இன்று ஏழு முறை கிரிவலம் வருதல் அதிஅற்புதப் பலன்களைத் தரும்.. இங்கு ஏழு முறை கிரிவலம் வருதல் நியதிமுறைகளோ மேற்கொள்தல் வேண்டுமே என்று அஞ்சுதல் வேண்டாம். நன்றாக உண்டு, நீர் அருந்திப் பொறுமையாக இன்று ஏழு முறை கிரிவலம் வந்திடுதலால் கிரிவலப் பலன்களாக அரிய காரிய சித்திகளைப் பெற்றிடலாம்.

கிரிவலம், பாத யாத்திரை போன்ற கடுமையான விரதங்களில் உண்ணாநோன்பு நியதிகள் தளர்த்தப் படுகின்றன.. ஏனென்றால் மனிதன் அங்கங்கள் மூலமாகவே பல பாவச் செயல்களைப் புரிவதால் அனைத்து அங்கங்களும் இயங்கும்படியான யோக பாவனங்கள் நிறைந்த கிரிவலம் போன்ற நடை யாத்திரை முறைகளில் உடலுக்கு அரிய புண்ய சக்தி ஏற்பட்டுக் களைப்பின்றி நன்முறையில் அங்கங்கள் இயங்க உண்ணாநோன்பு விதிகள் கிரிவலத்தில் தளர்த்தப்படுகின்றன எனினும் விரதத்துடன் கிரிவலம் வந்தால் அதற்கான விசேஷ பலன்களும் நிச்சயமாகவே உண்டு என்பதையும் உணர்ந்திடுக! காலில் செருப்பின்றி ஆண்கள் மேல் சட்டையின்றி வேஷ்டியும் இடுப்பில் துண்டும் அணிந்தும், பெண்கள் மடிசார் முறையில் புடவை அணிந்தும் நெற்றி முன் வகிடுகளில் குங்குமத் திலகமிடும் கிரிவலம் வருதல் வேண்டும்! கைகளை வீசி நடக்காது, கூப்பிய கரங்களுடன் வணங்கிய நிலையில் இறைத் துதிகளை ஓதியவாறு சிலவகையான சின்மய முத்திரைகளுடன் கிரிவலம் வருதல் சிறப்புடையதாகும்.. மௌன கிரிவலமும் உத்தமமானதே!

திருஅண்ணாமலையப் போலவே தேனிமலையைச் சுற்றிலும் பல ஆயிரக்கணக்கான மலை தரிசனங்கள் காணக் கிடைக்கின்றன.. ஒவ்வொரு தரிசனத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு.. இன்றைக்கும் பல இடங்களில் நீங்கள் மலையைக் காண முடியாதவாறு இயற்கையாகவே தரிசனங்கள் எல்லாம் மிகமிக சக்தி வாய்ந்தவையாகும். தரிசித்த உடனேயே பலன்களைத் தரக் கூடிய அதிஅற்புத தரிசனங்கள் ஆதலால் இறை நியதியாகவே கலியுகத்திற்கு இவை மறைக்கப்பட்டுள்ளன.. தக்க சற்குரு கூடவே வந்தால்தான் இவை புலப்படும்..!

சூரிய யாகப் பலன்களைப் பெற்றிடுவீரே!

ரதசப்தமியின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால் இன்றைக்கு மலைத்தலங்களில் கிரிவலம் வரும்போது வாரத்தின் ஏழு நாட்களில் கிரிவலம் வருதலால் கிட்டக் கூடிய பலாபலன்களில் ஒரு பகுதியை ஸ்ரீசூரிய பகவானே நமக்குப் பெற்றுத் தருகின்றார். அதாவது ஸ்ரீசூரிய பகவானே திருஅண்ணாமலை, தேனிமலை, திருப்பரங்குன்றம், பழனி போன்ற இடங்களில் தினசரி கிரிவலம் வருதலால் தம்முடைய ஏழு நாட்களுடைய கிரிவலப் பலன்களை ரதசப்தமி தினத்தன்று பக்தியுடன் மலைத் தலங்களை கிரிவலம் வருபவர்க்கு அளித்து யாகமும் தியாகமும் புரிகின்றார்.

ஏழு குழந்தைகளைப் பெற்றோர் ரதசப்தமி தினத்தன்று தேனிமலை, திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருதலால் தம்முடைய குழந்தைகள் நல்ல ஒழுக்கத்துடன் வாழ்வதற்கும் நல்ல முறையில் குடும்ப வாழ்வைப் பெறுவதற்கும் இது அருள் புரியும். ஏழாம் எண்ணில் பிறந்தோரும், பிறந்த தேதி, மாதம், வருடம் மூன்றையும் கூட்டினால் ஏழாம் எண் வருபவரும்.. இன்று ரதசப்தமி தினத்தன்று மலைத் தலங்களைக் கிரிவலம் வருதல் விசேஷமானதாகும்..!

ஆண்களாயின் நெற்றி, இரண்டு கரங்களில் இரண்டு இடங்களில், முழங்கால் ஆகிய ஏழு இடங்களில் மூன்று பட்டையில் விபூதி (சிவச்சின்னம்) தரித்து கிரிவலம் வருதலால் அங்கங்களால் செய்த பாவத்திற்குத் தக்க பிராயச்சித்தத்தைப் பெறுவதற்கான நல்வழியும், குருவருளும் கிடைத்திடும். ஆனால் ஆழ்ந்த நம்பிக்கையுடனும், பரிபூரண பக்தியுடனும் கிரிவலம் வருதல் வேண்டும்.

இன்றைக்கு ஏழுவிதமான காய்கறிகள் கலந்த உணவினை அன்னதானமாக அளித்தலால் மனக் கலக்கங்களிலிருந்து தெளிவு பெறலாம். ஏழுவிதமான நிறங்களில் உள்ள ஆடைகளை இன்று தானமாக அளித்தலால் அறிந்தோ, அறியாமலோ, முறையற்ற  காம எண்ணங்களினால் செய்த தவறுகளுக்குத் தக்க பிராயச்சித்தங்கள் கிட்டுவதற்கான வழிமுறைகளைப் பெற்றிடலாம்! சொத்துப் பிரிவினையில் தம்மால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தலால்  இதனால் ஏற்பட்டுள்ள தீவினைக் கர்மங்கள் தணியும்.

+10 , -9, -10 .. என்ற வகையிலான பெரிய கண்ணாடி லென்ஸ் அணிய வேண்டிய நிலை ஏற்பட்டுக் கடுமையான பார்வைகளினால் பாதிக்கப்பட்டுள்ளோர் திருஅண்ணாமலை, தேனிமலை போன்ற இடங்களில் ரத சப்தமியன்று ஏழு முறை கிரிவலம் வருதலால் இறையருளால் தாழ்வு மனப்பான்மை நீங்கிக் கண் நோய் தீர்க்கும் அறவழி முறைகள் கிடைக்கப் பெறுவர். இவற்றை முறையாக ஞாயிறு தோறும் தொடர்ந்து கடைபிடித்து வருதல் வேண்டும். நம்பிக்கை உடையோர் கைவிடப்படார்.

கிரிவலத்தில் சப்தரிஷிகளின் ஆசிகள்.!

ரதசப்தமியில் தேனிமலை, திருஅண்ணாமலை போன்ற இடங்களில் உடல் ஊனமுற்றோர்க்குத் தேவையான உதவிகளை செய்து வருதலால் சப்தரிஷிகளுடைய அனுக்ரகம் கிட்டும். ஏனென்றால் இத்திருநாளில் சப்தரிஷிகள் எனப்படும் ஏழு மகரிஷிகள் அனைத்து மலைத் தலங்களிலும் கிரிவலம் வந்து உடல் ஊனத்தால் அவதியுறுகின்ற மக்களுக்கு நல்லருள் ஆசிகளை அளித்துச் செல்கின்றனர்!

ரதசப்தமியில் சப்த மாதாக்கள், சப்த கன்னிகள் உள்ள தலங்களில் (ஐயர்மலை, சென்னை திருநின்றவூர்) சப்த மாதர்களுக்குச் சித்தாடை சார்த்தி வழிபடுதல் விசேஷமானதாகும். இதனால் தோல் சம்பந்தமான வியாதிகள் நீங்கிடும். பொதுவாக சப்த மாதாக்களும், சப்த கன்னிகளும்  வான்வெளி மூர்த்திகளாக மேல் விமானம் / கூரையின்றி இருப்பார்கள். இம்மூர்த்திகளுக்குச் சித்தாடை அணிவித்தால் எவராவது திருடிச் சென்று விடுவார்களோ என்று அஞ்சாதீர்கள். சித்தாடை சார்த்தி வழிபடுவதோடு உங்களுடைய தெய்வீகக் கடமை முடிந்து விடுகிறது.. அதன் பிறகு இறைச் சித்தம் போல் எல்லாம் நடக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

அங்கப் பிரதட்சணத்திற்கு மிகச் சிறந்த தலங்களுள் ஒன்றாக விளங்குவது தேனிமலையாகும். ரதசப்தமி தினத்தன்று இயன்றால் ஏழுமுறை தேனிமலை உச்சியில் உள்ள ஸ்ரீமுருகப் பெருமானை அங்கப் பிரதட்சணம் செய்திடுங்கள்.. மிகச் சிறிய பிரகாரம் ஆதலால் எளிதில் நீங்கள் அங்கப் பிரதட்சணத்தை முடித்து விடலாம். ஆழ்ந்த நம்பிக்கையுடன், பக்தி சிரத்தையுடன் இன்று ஏழு முறை கிரிவலம் செய்வோர்க்குத் திருமுருகன் கலியுகத்தின் நோய் தீர்க்கும் கண்கண்ட தெய்வமூர்த்தியாக இங்கு தேனிமலையில் சிவஜோதியாய்ப் பிரகாசிக்கின்றான் என்பதை உணர்ந்திடுங்கள்.

ஸ்ரீபெருமானந்த சித்த சுவாமிகள் இவ்விடத்தில் எத்தனையோ முறை அங்கப்பிரதட்சணம் செய்து அதனுடைய பலாபலன்களை சூட்சுமமாக இன்றும் தருகின்றார்! மலைத் தலங்களில் , சூரிய யோகத்தில் திளைத்து தேனிமலை பாறையில் அமர்ந்து அஷ்டமா சித்திகளும் கைரவப் பெற்றவராய் கோடானுகோடி அரிய சக்திகளையும் கைக்கொண்ட ஸ்ரீபெருமானந்த சித்த சுவாமிகள் தம் சித்திகளை ஒரு சிறிதும் வெளிக்காட்டிடாது பணிவுடனும், அடக்கத்துடனும், எளிமையான சித்தராய் வாழ்ந்தவர்! இன்றும் தேனிமலையில் ஜீவாலயம் பூண்டு அருள் மழை பொழிபவர்! இங்கு ஆழ்ந்த நம்பிக்கையுடன் ஏழுமுறை அடிப் பிரதட்சிணமாக வணங்கி வலம் வருதலால் குரு கடாட்சம் கிட்டும்.

தெய்வீகத்தில் கிட்டுகின்ற பலாபலன்கள் யாவும் இறை நம்பிக்கையின் தன்மையைப் பொறுத்துள்ளது என்பதும் உணரப்பட வேண்டியதே! “ஏழு முறை திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்தேன், பத்து முறை தேனிமலையைக் கிரிவலம் வந்தேன், ஒன்றும் நடக்கவில்லை”, என்று சொல்வது நம்பிக்கைக் குறைவைக் காட்டுகின்றது. நம்முடைய நம்பிக்கையை வளர்ப்பதற்காகவும், இறை சக்தியைப் பெருக்குவதற்காகவும்தான் இறைவன் பலா பலன்களைக் காட்டாது நம்மை மேலும் மேலும் கிரிவலம் வரச் செய்கின்றான்.

“பலாபலன்கள் கைகூடுகின்ற வகையிலே நம்முடைய கர்மவினைகள் இன்னும் தீரவில்லை. மீண்டும் மீண்டும் கிரிவலம் வந்து புண்ணிய சக்தியைப் பெருக்கி நம்முடைய கர்ம வினைகளைப் போக்கிக் கொள்வோமாக!” என்ற எண்ணம்தான் வளர்தல் வேண்டும்.. இதற்கு ரத சப்தமித் திருநாள் பெரிதும் உதவுகின்றது.. பெறுதற்கரிய விசேஷமான திருநாள்! வருடத்திற்கு ஒரு முறையே வருவது! தேனிமலையில் ரதசப்தமியைக் கொண்டாடி அனைத்துவிதமான பலாபலன்களையும் பெறுவீர்களாக!

புதுக்கோட்டை மாவட்டம் தேனிமலையில், திருக்கார்த்திகை தீபத்தின் ஜோதி தரிசனம் முருகப் பெருமானின், திருவருளாலும், ஸ்ரீபெருமானந்த சுவாமியின் குருவருட் கடாட்சத்தாலும் பல்லாயிரக் கணக்கான மக்களுக்குக் கிட்டியது.. வஸ்திரதானம், அன்னதானம் போல, பல்லாயிரம் மக்களும் மலை தீபத்தைத் தரிசிக்கும் வண்ணம் தீபமேற்றும் உற்சவத்தை நடத்தித் தருதல் நம்முடைய வாழ்வில் பெறுதற்கரிய பாக்யமாகும். தேனிமலை மற்றும் சுற்றுப்புற கிராமப்புற மக்களின் அன்பார்ந்த பெரும் ஒத்துழைப்புடனும், கோயில் நிர்வாகத்தின் அதியற்புத உடதியுடனும் சிவநெறிச் செம்மல்களாம் நகரத்தார்களின் பேராதரவுடனும் திருஅண்ணாமலைத் திருக்கார்த்திகை தீப உற்சவம் போன்று 9.12.2000 மாலை 6 மணிக்குப் புனிதமான நேரத்தில் தேனிமலை உச்சியில் திருக்கார்த்திகை தீபஜோதி ஏற்றித் தருகின்ற வைபவத்தைப் பெறுகின்ற பாக்கியம் திருஅண்ணாமலை நம் ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்திற்குக் கிட்டியது, குருவருட் கடாட்சத்தால்! பல்லாயிரக் கணக்கான மக்கள், நூற்றுக்கணக்கான கிராமங்களிலிருந்து தேனிமலையின் உச்சியில் தோன்றிய திருக்கார்த்திகை ஜோதி தீப தரிசனத்தைக் கண்டு பரவசமடைந்தனர்.. 7.12.2000 முதல் 10.12.2000 வரை 4 தினங்களிலும் தேனிமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் நன்முறையில் அன்னதானம் செய்யும் கைங்கர்யத்தையும் குருவருட்கடாட்சத்தால் நம் ஆஸ்ரமம் பெற்றது. மக்கள் மிகுந்த ஆனந்தத்துடன் லட்டு, மைசூர் பாகு, கேசரி, பாயசம், சர்க்கரைப் பொங்கல், பிரிஞ்சி சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், புளியோதரை, சாம்பார் சாதம், தேங்காய் சாதம், தக்காளித் தொக்கு, கலப்புக் காய்கறிக் கூட்டு போன்ற பல உணவு வகைகளை அன்னதானமாகப் பெற்றுக் களிப்படைந்தனர். அனைத்தையும் தேனிமலை அடிவாரத்தில் ஜீவாலயம் பூண்டுள்ள ஸ்ரீபெருமானந்த சித்த சுவாமிகளின் குருவடிக்கு அர்ப்பணிக்கின்றோம்.

வாஸ்து பூஜை

வாஸ்து பூஜை என்பது புது கட்டடங்களுக்கு மட்டும் உரித்தானது என எண்ணாதீர்கள். வாடகை வீடு, பழைய வீடு, கடை, தோட்டம் , நிலபுலன்கள், flat system  அனைத்திற்கும் வாஸ்து பூஜை மிகவும் முக்கியமானதே. வருடத்திற்கு எட்டு முறை மட்டுமே வருகின்ற வாஸ்து பூஜை நாட்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாஸ்து பூஜை செய்து நில தோஷங்களினின்று உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு வருகின்ற நஷ்டங்கள், துன்பங்கள், நோய் நொடிகள், எதிர்பாராத விபத்துக்கள் போன்றவற்றிற்கும் முக்கிய காரணமாக இருப்பது உங்களுடைய நிலத்தில், வீட்டிலுள்ள சிலவித பூமி தோஷங்களாகும். இவற்றை நிவர்த்தி செய்வதற்காகவே வாஸ்து நாட்கள் இறைவனால் அளிக்கபட்டுள்ளன! இப்பிரபஞ்சத்தில் எத்தனையோ பூமிகள் உண்டு எனச் சித்தர்களின் ஞானப் பத்ரம் பகர்கின்றது. இவ்வுண்மையை இப்போது விஞ்ஞானம் ஏற்காவிடினும், பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் கலிலியோவின் ஆராய்ச்சி ஏற்கப்பட்டது போல் சித்தர்களின் ஞானப் பத்ர வேதவாக்கு விஞ்ஞான உலகில் ஏற்கப்பட்டும். இந்த ஸ்ரீஅகஸ்திய விஜய ஞானப் பத்ர பொக்கிஷத்தைப் பத்திரப்படுத்தி சித்தர்களின் தீர்க்க தரிசனத்தை எதிர்காலத்திற்கு நிரூபியுங்கள்.

வீடு, நிலம், தொழிற்சாலை, கடை என அனைத்திற்கும் வாஸ்து சாஸ்திர நியதிகள் உண்டு. இடிக்காமல், உடைக்காமல், அசைக்காமல் நில தோஷங்களை நீக்கலாம் என்பது சற்றும் பொருந்தாது. சிலவித திருஷ்டி தோஷங்களை நீக்குவதற்கான சாளக் கிராம பூஜைப் பொருட்கள், சங்கு வகைகள், பிரமிடுகள், சக்கரங்கள் உண்டு.. இவற்றைப் பூஜித்து எத்திசையில் வைக்க வேண்டுமோ அத்திசையில் வைப்பதால் அத்திசை மூலம் வருக்கின்ற சில வகை திருஷ்டி தோஷங்களை நீக்க முடியும் என்பது உண்மையே. ஆனால் நில சம்பந்தப்பட்ட தோஷங்களை முழுவதுமாக நீக்க வேண்டுமானால் வாஸ்து சாஸ்திர நியதிகளைக் கண்டிப்பாகக் குருவருள் கூடிக் கடைபிடிக்கப்பட வேண்டும்.

முதலில் ஸ்ரீவாஸ்து மூர்த்தியைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.. எவ்வாறு சமீப காலங்களில் ஸ்ரீசாஸ்தா பூஜை, பிரதோஷ பூஜை, ஸ்ரீசந்தோஷி மாதா பூஜைகள் பிரசித்தி பெற்று வருகின்றனவோ இதேபோல அந்தந்த யுக நியதிக் கர்ம பரிபாலன முறைப்படி அவ்வப்போது சில மூர்த்திகளின் வழிபாடு மீண்டும் மகிமை பெறத் தொடங்கும். இன்னும் சொல்லப்போனால் சித்தர்களின் ஞானபத்திர வாக்கியங்களின்படி எதிர்காலத்தில் வர இருக்கின்ற நோய்களில் ஒன்றாக, Aids நோயை விட மிக அதிகமாகக் கொடுமையான கண்ணாடி போல உடலில் உள்ள அங்கங்கள் வெளியே தெரியும்படியான –அதிபயங்கரக் கொடிய வியாதிகள் தோன்றயிருக்கின்றன என்பதை உணர்ந்து கொண்டு, அக்காலத்தில் எல்லாம் நாம் பிறப்பெடுக்காமல் இருப்பதற்காக இப்போதே தகுந்த இறைவழிபாடுகளை மேற்கொண்டு குருகடாட்சத்தைப் பெற்றுப் பிறவித் தளையிலிருந்து விடுதலை பெறுவதற்கான ஆன்மீக வழிப் பாதையில் இன்றே உங்களைச் செலுத்திக் கொள்ளுங்கள்.

ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் அவதாரம்

மகாபிரளயம் என்பது இந்தப் பிரபஞ்சத்தில் ஜீவவாழ்க்கையின் முடிவைக் குறிக்கின்றது. இந்நிலையில் ஜீவ அணுக்களின் சக்தி யாவையும் அடுத்த சிருஷ்டிக்காக ஒரு கும்பத்தில் சேர்க்கப்பட்டு மேருமலையில் பிரம்ம மூர்த்தியால் பாதுகாத்து வைக்கப்படும். இந்த மகா பிரளயத்திற்குப் பின் சர்வேஸ்வரனாகிய இறைப் பரம்பொருள் பிரளய பஞ்ஜன யோகத்தில் ஆழ்கின்றார். அடுத்த சிருஷ்டிக்கான அனைத்து பிம்பங்களையும் வடிப்பதற்காக அவர் யோகத்தில் ஒடுங்குகின்றார். யோகத்தில் ஆழ்ந்து ஒடுங்கி எழு முன்னர் ஈஸ்வரனின் மூல சுவாசமானது பஞ்ச பூத நியதிகளின்படி வெளிவரும். இந்த பரம்பொருட் சுழுமுனை சுவாசத்திலிருந்து பல அவதார மூர்த்திகள் தோன்றுகின்றனர். அவ்வாறு பிருத்வி பூதத்தில் அவருடைய யோக நாசியில் எழுகின்ற முதல் ஈஸாதி சுவாசக் கீற்றில் அவதாரம் கொள்பவரே ஸ்ரீவாஸ்து மூர்த்தியாவார்.. அதன் பின்னர்தான் கோடானு கோடி பூலோகங்களும், ஏனைய அண்டங்களும், அண்டகோளங்களும் நட்சத்திரங்களும் வடிக்கப்படுகின்றன. அனைத்துக் கோடி பூமிகளின் அடியில் யோக சயனம் பூண்டு சலன நாளங்களை நிலை நிறுத்துபவர்தாம் ஸ்ரீவாஸ்து மூர்த்தி ஆவார். இறைவனுடைய ஒடுக்க யோகத்திலிருந்து எழுந்த பிருத்வி பூத யோகசுவாசத்தில் திளைத்து வந்தவராகையால் இவரும் வாஸ்து சுழுமுனை யோக சயன நிலையைப் பூணுகின்றார். இதுவே வாஸ்து சயன நிலையாகும்!

ஸ்ரீவாஸ்து மூர்த்தி விழிக்கின்ற நிலைநாட்கள் எட்டு என்று பகுக்கின்ற பொழுது, அவர் இந்நாட்களில் தாம் உறக்கத்திலிருந்து எழுகின்றார் என்பது பொருளல்ல. மற்ற நாட்கள் வாஸ்து மூர்த்தி உறங்குகின்ற நேரம் என்பதும் பொருளல்ல. வாஸ்து மூர்த்தி உறங்குகின்ற நேரமும் கிடையாது. வாஸ்து மூர்த்தி விழித்திருக்காத காலமும் கிடையாது.. ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் சக்தியினால்தான் அந்தரத்தில் நிலை கொண்டுள்ள பூமியானது உருண்டு கொண்டு ஜீவ சக்தியை நிலை நிறுத்திக் கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்திடுக!

இப்படியும் பல நில தோஷங்கள் சேரும்!

எந்தப் பொருட்கள் எல்லாம் பூமியிலிருந்து உண்டாகின்றனவோ இரும்பு, நிலக்கரி, காய்கறிகள், கனிகள், மரச் சாமான்கள் போன்றவை யாவுமே பூமிதோஷங்கள் இல்லாதவையாக இருக்க வேண்டும். உங்கள் இல்லத்திலுள்ள பூமி தோஷங்களினாலும் பல வியாதிகள் ஏற்படுகின்றன என்பதும் உண்மையே! ஒருவருக்கு உரிமையில்லாத, திருடப்பட்ட, அபகரிக்கப்பட்ட , ஏமாற்றிப் பெறப்பட்ட நிலமாகவோ, தோட்டமாகவோ இருந்தால் அவற்றிலிருந்து வரும் பொருட்கள் யாவுமே வாஸ்து பூமி தோஷங்கள் நிறைந்ததாக இருக்கும்.. சாலைகள், குளங்கள், கிணறுகள், அஸ்திவாரங்களை அமைக்கும்போது கோயில்களை இடித்தல், நாகப் பாம்புப் புற்றுக்களை அழித்தல், வேம்பு, அரசு, ஆல் போன்ற சமித்து விருட்சங்களை வெட்டுதல் போன்றவையும் பூமி தோஷங்களை உருவாக்கும். வீட்டுச் சொந்தக்காரர்கள் மட்டுமின்றி வாடகை வீட்டில், தொழிற்சாலைகளில், கடைகளில் இருப்போர்க்கும் தோஷங்கள் ஏற்படுவதுண்டு.

எனவே வருடத்திற்கு எட்டு முறை வருகின்ற வாஸ்து விசேஷ பண்டிகை தினங்களை அறிந்து குறித்த சில வாஸ்து பூஜைகளை மேற்கொண்டு நிவர்த்தியைப் பெற்றிடுங்கள். பன்றிகளை வளர்க்கின்ற ஏழைகளுக்கு சனிக்கிழமை தோறும் உணவு, உடை வகைகளை அளித்து வருதல் நம்மை அறியாமலேயே சேர்ந்துள்ள பூமி தோஷங்களுக்குத் தக்க நிவர்த்தியைத் தருவதாகும். வீடு, கடைகளில் உள்ள பீடை தோஷங்களை நீக்கும்! படிதாண்டாப் பத்தினியாக அம்பிகை அருள்பாலிக்கின்ற தலங்களில் பச்சரிசி மாக்கோலம் மற்றும் செங்காவியுடன் நீர்க்கோலம் இட்டு வருதலால், பத்திரங்களில் உள்ள பிழைகளால் நிலபுலன்களில் எவ்விதப் பாதிப்பும் இல்லாமல் தற்காத்துக் கொள்ளலாம். பத்திர சம்மந்தமான கோர்ட்டு வழக்குகள் தீர்வு பெறும், வாஸ்து நாட்களில் கிழங்கு வகைகளை அன்னதானமாக இடுதல் சிறப்பானதாகும்.. ஸ்ரீவாஸ்து பூஜைக்கான விசேஷமான சங்குகள் சென்னை, கோவை, திருச்சி, திருஅண்ணாமலை ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயாவில் கிடைக்கும்.

பணச் செலவு

பணத்தைச் செலவழிப்பதற்கான நல்வழிமுறைகள்

நினைத்தால் கடன் வாங்குவது, பணம் வரும்போது நினைத்த நாளில் கடனைத் திருப்பிக் கொடுப்பது என்றில்லாமல், பணத்தைக் கடன் வாங்குவதற்கான நாட்கள், கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கான நாட்களை அறிந்து செயல்படுங்கள்!

பணத்தைக் கடனாக வாங்கிய உடனேயே செலவழித்தல் கூடாது. அதற்குரித்தான பூஜை முறைகளைச் செய்து செலவழித்தால்தான் கடன் பெருகாது. திருப்பிச் செலுத்தும் நல்லொழுக்கமும் வளரும். இதேபோல கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கான பணத்திற்கும் சில பூஜைகளைச் செய்து தான் திருப்பி அளித்தல் வேண்டும். இதனால் கடன் பெருகுவதைத் தவிர்த்திடலாம்.

பாத்திரமறிந்து பிச்சையிடு!

தற்காலத்தில் இயந்திர கதியிலேயே சமுதாய வாழ்க்கை ஓடுவதால் கடன் வாங்குவதோ, கடன் கொடுப்பதோ ஒரு சாதாரண நடைமுறை வாழ்க்கை நிகழ்ச்சியாகி விட்டது. நற்காரியங்களை நிறைவேற்றுவதற்காகப் பணத்தைக் கடனாக பெறுவதில் தவறில்லை. ஆனால் ஆடம்பரத்திற்காகவோ அல்லது பாவ வினைகளைச் சேர்க்கின்ற வகையிலே, முறையற்ற காமச் செயல்கள், மது அருந்துதல், புகைபிடித்தல் போன்ற தீயகாரியங்களுக்காகப் பணத்தைக் கடனாகக் கொடுப்போரும் இத்தகைய பாவச் செயலில் பங்கு பெறுகின்றார்கள் என்பது பலரும் அறியாத தேவ ரகசியமாகும்.

இதன் தேவரகசியத் தாத்பர்யம் என்னவென்றால், தாம் கடனாக கொடுக்கின்ற பணம் எந்த விதத்தில் பயன்படப் போகின்றது என்பதை ஒருவர் உணர்ந்துதான் கடனாக அளிக்க வேண்டும் என்ற தர்ம நெறியை இது வலியுறுத்துகின்றது. இதெல்லாம் நடைமுறையில் சாத்யமா? இவற்றைக் கடைபிடிக்காமையால் தான் கடன் பெருகி, மனக் கவலைகள் கூடி வாழ்க்கையே நரகம் போல் தோன்றுகின்றது. ஏதோ நற்காரியத்திற்காக என்று ஒருவர் கடன் வாங்கி அதனை அவர் தீய வழியில் செலவழித்தால் நாம் எப்படிப் பொறுப்பேற்க முடியும்?

இடம், பொருள், மனித குண நலன்கள் போன்றவற்றை ஆராய்ந்துதான் கடனை அளிக்க வேண்டும் என்ற அறநெறியைப் புகட்டுவதற்காகத்தான் இத்தகைய கால நியதிச் செயல்பாட்டு அறவழிகளை விதிமுறைகளை நம் பெரியோர்கள் நமக்கு அளித்துள்ளனர். நீங்கள் ஒரு ஐந்து ரூபாயைக் கடனாக  வாங்கினாலும் சரி கடன் பெறுவதற்கான சில குறித்த நாட்களை, முறைகளை அறிந்துதான் வாங்க வேண்டும்.

எம் கடன் பணி செய்வதே!

கடன் என்பதற்கு நிறைய அர்த்தங்கள் உண்டு, நம்முடைய தீராத அல்லது தீர்க்க வேண்டிய கர்மவினைகளைக் கூட கடன் என்றே சொல்கின்றார்கள். பித்ரு கடன் என்பதும் உண்மையே! “எம் கடன் பணி செய்து கிடப்பதே!” என்ற தேவார வாக்கியத்தில் எத்தனையோ ஆன்ம, ஆத்ம, ஆகம ஆத்மார்த்த அர்த்தங்கள் பொதிந்துள்ளன. நாம் பூலோகத்தில் தோன்றியதற்கான காரண காரியங்களை முறையாக முடிக்காவிட்டால் அது கூட கடனாகப் பெருகி பிறவிப் பெருங்கடலைப் பெருக்கி விடும்.. எனவே எம் கடன் தீர்க்க வல்லார் சற்குரு ஒருவரே என்று உணர்ந்து செயல்படுங்கள்.

கடனில் க(கி)டக்கும் ஆத்ம விசாரம்!

கடனாகப் பணத்தைப் பெறலாமா? அல்லது கடனாகச் சில பொருட்களை இரவலாக வாங்கலாமா? கடையில் சாமான்களை வாங்கும் போது பணம் கொடுத்துப் பண்ட மாற்று செய்வதால் ஏற்படும் வினைகளின் விளைவுகள் என்ன? இவையெல்லாம் நாம் தினந்தோறும் ஆத்மவிசாரம் செய்து உணர வேண்டியவை.

பூர்வ ஜென்மத் தொடர்புக் கடன்!  பள்ளியோ, அலுவலகமோ, கூட்டமோ நாம் காணும் அனைத்து மனிதர்களுமே நம்முடைய பூர்வ ஜென்ம வினையில் நாம் கண்டு உரையாடிய பாத்திரங்கள் தாம். நம் வாழ்க்கையில் அரைமணி நேரமோ ஒரு மணி நேரமோ நம்மோடு பிரயாணம் செய்ய வேண்டிய அல்லது ஒருவருக்கொருவர் பார்க்க வேண்டிய பாக்கி இருந்தால் அது பிரயாணத்தில் உரையாடலாக இவ்வாறுதான் கழியும்,

நீங்கள் கேதார்நாத், பத்ரிநாத், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் என்றெல்லாம் செல்லும்போது ஆங்காங்கே நீங்கள் காண்கின்ற நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான ஜனங்கள் கூட உங்களுடன் பூர்வ ஜென்மத் தொடர்பு கொண்டவர்கள்தாம்.. பூர்வ ஜென்மங்களில் எறும்பாகவோ, புழுவாகவோ, கரையானாகவோ, மனிதர்களாகவோ நீங்கள் அவர்களோடு இருந்தமையால் தான் அந்த பாக்கி இவ்வகையிலே தீர்கிறது என்று புரிந்து கொள்ளுங்கள்! ஆனால் இவையெல்லாம் நம் மனிதப் பகுத்தறிவுக்கு எட்டாத தேவ ரகசியங்கள் ஆகும். நம் மனமும் அவ்வளவு எளிதில் ஏற்காது! எதைத் தெரிந்து கொண்டால் வேறு எதையும் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லையோ எதை அறிந்து கொண்டால் வேறு எதற்கும் பொருள் தேவையில்லையோ அந்தப் புனித ஆத்மமே சற்குரு ஆவார்.! இதைப் பரிபூரணமாகப் பெறுகின்ற வரையில்  இறைப் பரம்பொருளை முழுமையாக உணர்கின்ற வரையில் எவ்வளவு பாக்கிகள், கர்மவினைகளைப் பற்றி எடுத்துரைத்தாலும் மனிதப் பகுத்தறிவிற்கு இவையெல்லாம் எட்டாத உயரத்தில்தான் இருக்கும்.

எப்போது பணம் வாங்கினாலும் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி நின்று வாங்கிடுங்கள். பணத்தை கொடுக்கும் போதும் இதே திசைகளிலே தான் நின்று கொடுத்தல் வேண்டும். கொடுத்து வாங்குதலும் வேண்டும். குபேர திக்கு ஆதலால் வடக்கு திசையானது பணப் பரிமாற்றத்திற்கு மிகவும் விசேஷமானதாகும்.. தேவாதி தேவர்களுடைய செல்வங்களுக்குத் தலைவனாக விளங்குகின்ற இந்திரனுக்கு உரித்தான திசை ஆதலால் கிழக்கு திசையும் சிறப்புடையதே.

தோல் சம்பந்தப்பட்ட பர்ஸ், கைப்பை போன்றவற்றை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள். இதில் பணத்தை வைத்தலும் கூடாது. அக்காலத்துப் பாட்டிமார்களின் சுருக்குப் பை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். சுத்தமான பருத்தியால் ஆன சுருக்குப் பை தான் பணம் வைப்பதற்குச் சிறப்பான இடம் ஆகும். அல்லது காகிதத்தினால் ஆன கவராக இருந்திடலாம்., பொதுவாக மஞ்சள், வெள்ளை, கருநீல வண்ணங்களில் உள்ள (தோலால் ஆகாத மணிபர்ஸ்) துணிப் பை, சந்தனப் பேழை இவையெல்லாம் பணத்தில் படிந்துள்ள தீவினைக் கர்மங்கள் நம்மைத் தாக்காதவாறு ரட்சிக்கக் கூடிய வர்ண தேவமுறைகளாகும்.

நீங்கள் பெரும் தொகையைக் கடனாக வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அதற்குரித்தான முக்கியமான பத்திரங்களை (Demand Promissory Note) கடன் வாங்குவதற்கான அத்தாட்சிப் பத்திரம் / கடிதம் முதலியவற்றைத் தாங்கித் திருஅண்ணாமலையில் கிரிவலம் வந்து குபேர லிங்க மூர்த்தியிடம் சமர்ப்பித்து ஆசி பெற்றுப் பிறகு கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ளுங்கள்! இதனால் நாணய சக்தி ஏற்படுவதோடு ஐஸ்வர்ய கடாட்சமும் பெருகும். திருமகள் தவம்புரிந்த அல்லது லக்ஷ்மி கடாட்சம் நிறைந்த லக்ஷ்மி வாசத் தலங்கள் நிறைய உண்டு. சீர்காழி அருகே திருநின்றியூர், சென்னை அருகே உள்ள திருநின்றவூர், திருலோக்கி போன்ற லக்ஷ்மி தீர்த்தங்கள் / குபேர சக்தி நிறைந்த தலங்கள், வடக்கு நோக்கிப் பாய்கின்ற ஆற்றுத் தலங்கள் (திருவலஞ்சுழி, திருமழபாடி, வாரணாசி, கதிராமங்கலம்) போன்ற இடங்களில் பணத்திற்குரித்தான பத்திரங்களைப் பூஜையில் வைத்து அடிப்பிரதட்சிணம் செய்து பணக் காரியங்களில் இறங்கிடுங்கள்.! இவையெல்லாம் நாணயத் தன்மையைப் பெருக்குவதோடு பண நஷ்டங்கள் உண்டாவதையும் தடுத்து நிறுத்தி ஐஸ்வர்ய கடாட்சத்திற்கு வழிவகுப்பதாகும்.

லட்சுமி தீர்த்த மஹிமை!

திரைலோக்கிப் பெருமாள் ஆலயம் மற்றும் திருச்சி அருகே திருமழபாடியில் உள்ள லக்ஷ்மி தீர்த்தம் மிகவும் சக்தி வாய்ந்ததாம். இத்தீர்த்தத்தை மஞ்சள்நிறப் பணப்பை மேல் தெளித்துப் பயன்படுத்தினால் நன்முறையில் வியாபாரமோ காரியங்களோ விருத்தி அடையும்., வாங்குகின்ற வங்கிக் கடனோ, பிறர் மூலம் வருகின்ற முதலீட்டுக் கடனோ, சம்பளப் பணமோ முதல் செலவானது தர்ம காரியத்திற்காக இருத்தல் மிகவும் சிறப்புடையது, பால் புஷ்பம் போன்ற பொங்கும் பொருட்களில் உங்கள் முதல் பணத்தைச் செலவழித்திடுங்கள்., சம்பளப் பணம் கூட இவ்வாறாகவே முதல் செலவாக மங்களகரமாக இருக்கட்டும்., சந்தன மரப்பெட்டியில் பணத்தை வைத்தல் மிகவும் சிறப்புடையதாகும். எப்போதும் மல்லிகைப் பூக்கள் நிறைந்த இடத்தில்தான் பணத்தை வைத்தல் வேண்டும்.

கடன் வாங்கிட நல்ல நேரம்!

செவ்வாய்க்கிழமை, வெள்ளிக் கிழமை, பௌர்ணமி, அமாவாசை திதிகள், பிரதமை, பரணி, கிருத்திகை, ஆயில்யம், மூலம், விசாகம், சித்திரை, பூரம், பூராடம், பூரட்டாதி நட்சத்திர நாட்கள் கடனைப் பெறுவதற்கான சிறப்பான நாட்களாகும். ராகு காலம், எமகண்டம், சூன்ய திதி, பிரபலாரிஷ்ட யோகம், மரண யோகம் போன்றவற்றைத் தவிர்த்து அமிர்தயோகம், சித்த யோகம் நேரத்தில் கடனைப் பெற்றிடுங்கள்..!

நற்கடன் தீர்க்கும் நல்ல நேரம்!

இதே போன்று வங்கியில் வாங்கிய தவணைத் தொகையை செலுத்தும் போது கூட சில குறித்த நாள் நட்சத்திர காலத்தில் கடனைத் தீர்த்தல் சிறப்புடையதாகும். அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திர நாட்களும், வியதீபாத யோக நாளும், வியாழக் கிழமை மற்றும் சனிக் கிழமைகளும் சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி திதி நாட்களும் வாங்கிய கடனைத் திருப்பித் தரச் சிறப்பான நாட்களாகும். பகற்பொழுதில் மகர, கும்ப லக்ன நேரத்தில் கடனைத் திருப்பிக் கொடுத்தல் மிக மிக விசேஷமானதாகும். எனவே கடனை திருப்பிக் கொடுப்பதற்குக் கூட இத்தகைய கால கணித முறைகளை நீங்கள் ஆழ்ந்த நம்பிக்கையுடன் கடைபிடிப்பீர்களேயானால், நம்பிக்கை, நாணயம் கைராசி மிகுந்து, நல்லொழுக்கத்தில் திளைத்து, குபேர கடாட்சமும், லக்ஷ்மி கடாட்சமும், ஐஸ்வர்ய கடாட்சமும் மூன்றும் சிறந்து பெருகிட உங்களுக்குத் திருமகள் அருள்பாலிப்பாள். ஒரு சிறு தொகையைக் கடனாக வாங்கினாலும் கூட அல்லது திருப்பிக் கொடுத்தாலும் அப்பணத்தைத் தாங்கியவாறே கிரிவலம் வந்து பணக் காரியத்தை நிறைவேற்றுதல் சிறப்பானதாகும். ஆனால் பத்திரமாக, ஜாக்கிரதையாக, ரகசியமாக, பாதுகாப்புடன் கிரிவலம் வந்திடுங்கள் அல்லது நல்ல நேரத்தில் பணத்தை வங்கியிலிட்டு வங்கிப் பாஸ் புத்தகத்துடன், தக்க உரிமங்களுடன் கிரிவலம் வந்திடுக!

அங்காரக சதுர்த்தி

செவ்வாய்க்கிழமையும் சதுர்த்தி திதியும் சேர்ந்து வருகின்ற விசேஷ நாளில் செய்யப்படுகின்ற பூஜைகளால் நமக்குப் பல அரிய நல்வரங்கள் கிட்டுகின்றன. பெறுதற்கரிய இத்திருநாளான அங்காரக சதுர்த்தி காரிய சித்திகளையும், மற்றும் எண்ணற்ற பலாபலன்களாகப் பொழிகின்றது. பல கடுமையான வியாதிகளால் அவதியுறுவோர் அங்காரக சதுர்த்தியில் குறித்த சில தீர்த்த நீராடல்களையும், அபிஷேக ஆராதனைகளையும் மேற்கொண்டால் நன்கு குணமடைவர். அங்காரக சதுர்த்தியைக் கொண்டாடுவதற்கான பலவிசேஷமான தலங்களும் உண்டு., இவற்றை நன்கு அறிந்து இங்கு கடைபிடிக்க வேண்டிய பூஜை முறைகளையும் மேற்கொண்டால் பல குடும்பக் கொந்தளிப்புகளுக்கு நிவர்த்திகளைப் பெற்றிடலாம். திருமண தோஷங்களுக்கும் தக்க தீர்வையும் தந்திடும்.

செவ்வாய்க் கிழமையும் சதுர்த்தி திதியும் இணைந்து வருகின்ற நாளே அங்காரக சதுர்த்தியாகும். அங்காரகன் எனப்படும் செவ்வாய் பகவான் சதுர்த்தி திதியன்று சகல கோடி லோகங்களிலும் ஸ்ரீவிநாயக மூர்த்திக்கு விசேஷமான பூஜைகளை மேற்கொள்வதால் இவற்றின் பலாபலன்கள் பூமண்டலத்தின் செவ்வாய் மேடு எனப்படும் பல பகுதிகளில் நிரவுகின்றன. எனவே பூமத்திய மண்டலத்தில் செவ்வாய் மேட்டு சக்திகள் நிறைந்துள்ள தலங்களை நாம் அறிந்தோமேயானால் அங்காரக சதுர்த்தியான செவ்வாய்க் கிழமையும் சதுர்த்தி திதியும் சேருகின்ற நாட்களில் இத்தகைய செவ்வாய் மேட்டுத் தலங்களில் நாம் குறித்த சில வழிபாடுகளை மேற்கொண்டு எத்தகைய கடுமையான நோய்களுக்கும் இல்லறத் துன்பங்களுக்கும் தக்க நிவர்த்தியைப் பெற்றிடலாம்.. செவ்வாய் பகவானுடைய பூஜா பலன்களும் கிட்டும். கொங்கண சித்தர் பெருமான் இந்த அங்காரக சதுர்த்தி வழிபாட்டு விரதத்தைக் கைக்கொண்டு இதன் பலா பலன்களையெல்லாம் சித்தர்களுடைய ஞான பத்ர வாக்கியங்கள் மூலமாக நமக்கு அருள்கின்றார்.

அக்னியின் விந்தைமிகு அரிய வண்ணங்கள்!

மிகவும் உஷ்ணமான கோளங்களுள் ஒன்றே செவ்வாய் கிரகமாகும். இங்கு விதவிதமான அக்னி வகைகளைக் கண்டிடலாம். பூலோகத்தில் பெரும்பாலும் மஞ்சள், சிகப்பு அல்லது இவை இரண்டும் கலந்த வண்ணங்களில்தான் நாம் அக்னியைக் காண்கின்றோம். ஆனால் செவ்வாய் மண்டலமோ நாம் இதுவரை பூலோகத்திடாத நிறங்களில் எத்தனையோ வகையான நெருப்பு வகைகளைக் கொண்டுள்ளது. எவ்வாறு கேதார்நாத், பத்ரிநாத்தில் வென்னீர் ஊற்றுக்களில் சுடுநீரானது சுரந்து கொட்டிக் கொண்டு இருக்கின்றதோ இதேபோல அனல் கக்கும் அக்னிப் பிழம்புகள், நீரோடை போல அக்னி ஊற்றுகளாய்ப் பொங்கி வழிகின்ற இடங்களும் செவ்வாய் மண்டலத்தில் நிறைய உண்டு. இவற்றுடன் தொடர்பு கொண்ட பல பூலோகத் தலங்கள் இன்றும் இருக்கின்றன.. எவ்வாறு? இரு பொருட்களுக்கிடையே உள்ள இணைப்பு என்றால் நம்முடைய விஞ்ஞானக் கண்களுக்கு அது ஒரு குழாய் மூலமாகவோ அல்லது பௌதிக, ரசாயன ஓட்டம் / நீரோட்டம் மூலமாகத்தான் நிகழ வேண்டும் என்று நினைக்கின்றார்கள். இது முற்றிலும் தவறானதாகும். தெய்வீகத்தில் நட்சத்திரங்கள் மூலமாக பூலோகத்திற்கு சூட்சுமத் தொடர்புகள் நிறைய உண்டு!

செவ்வாய் மேட்டுச் சக்தி நிறைந்த தலங்களுக்கிடையேயும் செவ்வாய் கிரகத்துடனும் அக்னித் தொடர்புகள் வடிக சூட்சும நாளங்கள் மூலமாக நிலவுகின்றன. அதாவது, செவ்வாய் மண்டலத்திலுள்ள அக்னியின் சக்தியை பூலோகத்தின் சில செவ்வாய் மேட்டுத் தலங்களில் நாம் வழிபாட்டுப் பலன்களாகப் பெற்றிடலாம். செவ்வாய் மேட்டுத் தலங்களில் நாம் செவ்வாய் பகவானுக்குரித்தான ஹோம பூஜைகளையும் விறகு நெருப்பில் உருவாகின்ற உணவைக் கொண்டு அன்னதானமும் செய்து வந்தால் செவ்வாய் மண்டல அக்னி சக்தியை நாம் இங்கு எளிதில் பெற்றிடலாம்.. பல வியாதிகளை இவை குணப்படுத்தும்!

உண்மையில் சற்றே நீங்கள் ஆழ்ந்து யோசித்துப் பார்த்தீர்களேயானால் அனைத்துவிதமான மருந்துகளுமே பூவுலகில் சிலவிதமான உஷ்ணத் தன்மையைக் கொண்டுதான் நோய்களை நிவர்த்தி செய்கின்றன என்று உணர்வீர்கள்! நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கூட சில வகைக் காய்கறிகளையும் மளிகைச் சாமான்களையும் சூடுவகையைச் சார்ந்தது என்று வகைப்படுத்தி விடுகின்றோம் அல்லவா? உதாரணமாக மாகாளிக் கிழங்கு, உருளைக் கிழங்கு, மாம்பழம், பப்பாளி, பைனாப்பிள், கோதுமை போன்றவற்றை சூடுவகை என்றுதானே குறிப்பிடுகின்றோம்! இதற்குக் காரணம் இவையாவும் செவ்வாய் மண்டலத்தின் உஷ்ணத்தை சூட்சுமமாக மட்டும் வளர்ப்பவை அல்ல! ஆனால் விஞ்ஞான பூர்வமாக நாம் நினைத்துக் கொண்டு இருப்பதோ அனைத்து விதமான தாவரங்களும் சூரிய ஒளியை மட்டுமே கிரகித்து ஜீவிக்கின்றன என்பதே. குறித்த சில தாவரங்கள் சூரிய கிரணங்கள் மட்டுமின்றி செவ்வாய், புதன், குரு கிரகங்களிலிருந்து உஷ்ணத் தன்மையையும், சீதளத் தன்மையையும், ஜீவித சக்தியையும் பெற்று வாழ்கின்றன என்பதை இனியேனும் உணருங்கள். உதாரணமாக பிரண்டைக் கொடியானது பித்ரு லோகத்திலுள்ள நீர்ச் சத்தை பூமியிலிருந்தவாறே உறிஞ்சி வளர்கின்றது என்பது ஆன்மீகத்தின் அற்புதங்களில் ஒன்றாகும். இதே போலப் புடலங்காயும் பித்ரு மண்டலங்களில் உள்ள ஜீவ அணுக்களை, ஜீவ அணுசக்தியை உறிஞ்சி வளர்கின்றது என்பது நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய தெய்வீக ரகசியமாகும். எனவே அங்காரக சதுர்த்தி என்பது செவ்வாய் மண்டலத்தினுடைய கிரணங்கள், சதுர்த்தி திதி, அம்சங்களுடன் கூடி பூமியில் நிரவி இருக்கின்ற விசேஷமான நாளாகும். அதாவது செவ்வாய் கிரகத்தினுடைய உஷ்ண அம்சங்களை பூலோக ஜீவன்கள் நன்முறையில் பெறுமாறு நிலவுகின்ற நாளே அங்காரக சதுர்த்தியாகும். திதி என்பது என்ன? சூரிய, சந்திர கிரகங்களுக்கு இடையே உள்ள தூரத்தையே நாம் திதி என்று சொல்கின்றோம். இதில் விநாயகருக்கு உரித்தான சதுர்த்தி திதி என்பது மிகவும் விசேஷமானதாகும்.. செவ்வாய் கிரக சக்தியை கிரகிக்கின்ற விசேஷ சக்தி கொண்ட திதியே சதுர்த்தி திதியாகும்..!

ஸ்ரீதன்வந்த்ரீ சித்தர் 18 சித்தர்களுள் ஒருவராவார். பூலோகத்தில் மட்டுமல்லாது செவ்வாய் மண்டலத்திலேயே அதிஉஷ்ணக் குழிகளில், மலைகளில் அமர்ந்து பல அரிய யோக நிலைகளைப் பூணும் அற்புத ஆற்றலைப் பெற்றவர். பூலோகத்தின் மூலிகைகளால் தீர்க்க முடியாத பல கடுமையான வியாதிகளுக்கு செவ்வாய் கிரகத்தின் உஷ்ண சக்தியால் பூலோகத்தில் கிடைத்தற்கரிய அரிய மூலிகைகளைப் பயிரிட்டு அதே உஷ்ண நிலையில் வளரச் செய்து அவற்றைப் பூலோகமெங்கும் நிரவிய அதிஅற்புத மருத்துவ சித்தர்களுள் ஒருவரே ஸ்ரீதன்வந்த்ரீ சித்தர், ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தியின் அற்புத உபாசகர்களில் ஸ்ரீதன்வந்த்ரீ சித்தரும் சிறப்பிடம் பெறுகின்றார்! இவர் தாம் பூலோகம் எங்கும் செவ்வாய் மேடுகள் எனப்படும் செவ்வாய் சக்திகள் நிறைந்த தலங்களில் ஸ்ரீமுருகப் பெருமானை ஆராதித்துக் கடுமையான வியாதிகளுக்கும் நோய் நிவாரண சக்திகளை அளிக்கக் கூடிய பூஜா பலன்களை ஜீவன்களுக்கென அர்ப்பணித்துள்ளார். இவற்றுள் மிகச் சிறந்த தலங்களாக விளங்குபவை ஸ்ரீவைத்தீஸ்வரன் கோயில், திருஅண்ணாமலை, தேனிமலை, வெள்ளியங்கிரி, வடபழனி முருகன் திருக்கோயில் போன்றவையாகும். அங்காரக சதுர்த்தியான இந்நாளில் செவ்வாய் பகவானே வினாயகப் பெருமானை வலம் வந்து வழிபடுவதால் இன்று பிரதமை, துவிதியை, திரிதியை, சதுர்த்தி ஆகிய நான்கு திதிகளுக்கும் உரித்தான திதி விநாயக மூர்த்திகளை வணங்கி வலம் வருதல் வேண்டும்.

சதுர்த்திக்கான ஸ்ரீவீர கணபதி!

அங்காரக சதுர்த்தியன்று குறைந்தது ஐந்து அடிக்குமேல் உயரமான பிள்ளையாரை வணங்குதல் சிறப்புடையதாகும்.. இவைதாம் செவ்வாய் கிரக நன்மை தரும் உஷ்ணக் கதிர்களை கிரகித்து அங்காரக சதுர்மண்டல கிரணங்களாக மாற்றி நமக்கு நோய் நிவாரண சக்தியாக மாற்றி அருள் தருகின்றன. இராவணன் அனைத்து நவகிரக மூர்த்திகளையும் தன் அரியணையின் படிகளாக்கி அவற்றைத் தினமும் மிதித்துச் சென்று அவமதித்துக் கொடூர அரச வாழ்க்கை நடத்தியபோது அங்காரக பகவான் வருத்தமுற்று நவக்கிரக மூர்த்திகளின் சார்பாக விநாயகப் பெருமானை மனம் உருக வேண்டிய் வழிபட்டார். இராவணனோ இவருடைய விநாயகப் பூஜைக்குத் தடையாக தன்னுடைய யோக சக்தியைத் தவறாகப் பயன்படுத்தி செவ்வாய் பகவானுக்குத் தெரிகின்ற சூட்சும விநாயக தரிசனத்தை மறைக்கும் வண்ணம் வானளாவி மாயையால் உயர்ந்து நின்றான். ஆனால் செவ்வாய் பகவானோ மனம் தளராது தம்முடைய சதுர்த்தி விரத வழிபாட்டை மேம்படுத்திடவே இதனால் மனம் மகிழ்ந்த விநாயகப் பெருமானும் இராவணனுடைய வானளாவிய மாயா உருவத்தையும் தாண்டி ஸ்ரீவீர கணபதி மூர்த்தியாய்க் காட்சி தந்தார். எனவே சதுர்த்தியும், செவ்வாய்க் கிழமையும் சேர்ந்த அங்காரக நாளில் செவ்வாய் பகவான் ஸ்ரீவீர கணபதி மூர்த்தியினுடைய தரிசனத்தைப் பெற்றமையால் இதுவே அங்காரக சதுர்த்தி ஆயிற்று.

ஸ்ரீவீர கணபதியே சதுர்த்தி திதிக்கான கணபதி! இன்று அருகம்புல் கலந்த தீர்த்தம் மட்டும் அருந்தி மௌன விரதமிருந்து தூர்வா ஸூக்தம் ஓதி வழிபட்டால் கோர்ட்டு வழக்குகளால், பணப் பற்றாக்குறையால் நின்றுபோன கட்டிட வேலைகள் நன்முறையில் தொடர செவ்வாய் பகவான் கருணை புரிகின்றார்!  இராவணனிடம் அனைத்து நவகிரக தேவதா மூர்த்திகளும் அவனுடைய தபோ பலன்களுக்கு அடிபணிந்து இருந்தபோது, ஒவ்வொரு நவக்கிரக மூர்த்தியும் சில விசேஷமான தேவதாமூர்த்தி வழிபாடுகளை மேற்கொண்டு பிரபஞ்சத்தில் தங்களால் ஆக வேண்டிய நவகிரக அருளாட்சியைத் தொடர்ந்தனர். பிரபஞ்சத்தையே ஆட்டவல்ல நவகிரக தேவதா மூர்த்திகளை எவ்வாறு இராவணன் வெல்ல இயலும் எனக் கேள்வி எழும். மற்ற வேந்தர்களை எல்லாம் போரில் ஆயுதத்தால் வென்ற இரவணன் நவகிரக தேவதா மூர்த்திகளை மட்டும் தன் வேதமந்திர அறிவால், தபோ பலனால், யோக சக்தியால் கட்டுப்படுத்தினான்! அதாவது அவனுடைய வேத மந்திர சக்திக்கு நவகிரக மூர்த்திகளே தங்களை ஆட்படுத்திக் கொண்டனர் என்பதே உண்மை நிலையாகும்.

நவகிரக மூர்த்திகளுக்கும் தினசரி பூஜை உண்டு!

இவ்வகையில் செவ்வாய் பகவான், நவகிரக மூர்த்திகள் இராவணனிடமிருந்து விடுதலை பெறுவதற்காக காணாபத்ய வழிபாட்டை மேற்கொண்டார். எனவே நவகிரக மூர்த்திகளும் கூட தினந்தோறும் தங்களுடைய நித்ய பூஜைகளைக் கடைபிடிக்கின்றனர் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டியதாம்! ஸ்ரீராமரும் இன்றைக்கும் தன் நித்ய கர்மங்களுள் ஒன்றாக சிவலிங்க பூஜையை மேற்கொள்கின்றார் என்பதை நாம் உணர வேண்டும். இவற்றை நாம் தெள்ளத் தெளிவாக உணர்ந்தால்தான் பூஜை வழிபாடுகள், கோயில் தரிசனங்களை, தான தர்மங்களை மேற்கொள்ளாமல் எத்தகைய பயனற்ற வாழ்வு நாம் மேற்கொண்டு, எண்ணற்ற பிறவிகளை நாம் பெருக்கிக் கொள்கிறோம் என்பது தெரியவரும்.

நவக்கிரக மூர்த்திகள் தம் நித்ய வழிபாட்டைச் செய்யவிடாமல் மிகவும் கவனமுடன் இருந்தான் இராவணன்! ஏனென்றால் தம்முடைய தபோபலன்களால், பிறருடைய பூஜாபலன்களை, தேவ சக்தியை மறைத்து விடலாம் என்று இராவணன் எண்ணினான்! ஆகையால் அவனுக்கு அடிமைப்பட்டவர்கள் அனைவரும் எவ்வித பூஜை, யோக முறைகளையும் மேற்கொள்ளக் கூடாது என்பதில் மிகவும் கவனம் காட்டி வந்தான். எனினும், பிரபஞ்சத்திலுள்ள ஜீவ வாழ்க்கையே ஸ்தம்பித்து விடக் கூடாது என்பதற்காக, ஒவ்வொரு நவக்கிரக மூர்த்திக்கும் வாரம் ஒரு முறையேனும் அவர்களுடைய வாகனங்களையும் ஆயுதங்களையும் பறித்துக் கொண்டு அவரவர் லோகத்திற்குச் சென்று வருவதற்கான அனுமதியையும் அளித்திருந்தான்.

மூத்தவர் வழிபாடு முக்தி வழி!

இவ்வாறாகச் செவ்வாய் பகவான் செவ்வாய்க்கிழமை தோறும் தன் லோகத்திற்குச் சென்று அந்தர, புத்தி, தசா, சஞ்சாரங்களை எல்லாம் கவனித்து வந்தார். அப்போது தம்முடைய கிரகத்திற்கு அதிபதியான ஸ்ரீசுப்ரமண்ய சுவாமியையும் வைத்தீஸ்வரன் கோயில் போன்ற இடங்களில் விசேஷமாகப் பிரார்த்தித்து வழிபடவே அவரும், “எம்மூத்தோரை நினைந்து நால் நாளில் பயன் பெறுவாய்!” என்று நல்வரம் அளிக்கவே, முதல் திதியிலிருந்து நான்காம் திதியாகிய  (நால்நாள்) சதுர்த்தியில் செவ்வாய் பகவான் ஸ்ரீவிநாயக வழிபாட்டை மேற்கொள்ளலானார். செவ்வாய் பகவானே, ஸ்ரீவிநாயகரை செவ்வாய்க் கிழமைகளில் பூஜித்த தலங்கள்தாம் இன்றைக்கு அங்காரக சதுர்த்தித் தலங்களாக தேவாதி தேவர்களால் பெரிதும் போற்றப்பட்டு வருகின்றன. ஆனால் நாளடைவில் கலியுகத்தில் பக்தித் தன்மையும், ஆழ்ந்த இறை நம்பிக்கையும் மங்கி வருவதால் அங்காரக சதுர்த்திப் பண்டிகையின் பெருமையை பலரும் உணராமல் இருந்து விட்டனர்.

ஸ்ரீபிரம்ம மூர்த்தி கண்டியூர்

அங்காரக சதுர்த்தித் தலங்கள்

அங்காரக சதுர்த்தித் திதியன்று மலைத் தலங்களில் குறைந்தது நான்கு முறையேனும் வலம் வருதல் மிகவும் சிறப்பானதாகும் அல்லது ஆலயங்களையாவது நான்குமுறை அடிப்பிரதட்சிணம் செய்து வலம் வர வேண்டும். நான்கு முக கணபதி, நான்கு முக பிரம்மன் எங்கு எழுந்தருளியுள்ளனரோ அத்தலங்களில் எல்லாம் அங்காரக சதுர்த்தி பூஜைதனை மேற்கொள்வது மிகவும் சிறப்புடையது. மன்னார்குடி திருத்துறைப்பூண்டி அருகே திருமக்கோட்டையிலுள்ள ஷோடச கணபதித் தலமானது (பதினாறு கணபதி) அங்காரக சதுர்த்தி வழிபாட்டிற்கு உரித்தான சக்தி வாய்ந்த தலமாகும்.! தஞ்சை அருகேயுள்ள கண்டியூர் பிரம்ம சிரகண்டேஸ்வரர் ஆலயத்திலுள்ள பிரம்ம மூர்த்தியும், அங்காரக சதுர்த்தியன்று ஸ்ரீவிநாயகரை வழிபட்டுத் தாம் இழந்த ஐந்தாம் சிரசிற்குப் பிராயச்சித்தம் பெற்றத் தலங்களுள் ஒன்றாம். இத்தலமும் அங்காரக சதுர்த்தி வழிபாட்டிற்கு மிகவும் சிறப்பான தலமாக விளங்குகிறது.

மாயையை மறைத்த மாயை! இராவணன் தன் பத்துத் தலைகளுடன் பூமியிலிருந்து கம்பீரமாக அடர்ந்து எழுந்தவனாகத் தோற்றம் கொண்டதால் அவனுடைய பத்து தலைகளும் எட்டுத் திக்கிலும் நோக்கிய வண்ணம் இருந்தமையால், அனைத்துத் திக்கிலும் பார்க்கும் வடிவம் பெற்ற இராவணன் தன் கர்வத்தின் காரணமாக வானத்தை நோக்கிப் பார்க்கும் பார்வையைப் பெறவில்லை. எனவேதான் விநாயக மூர்த்தி இராவணனை விட மிகவும் உயரமாக செவ்வாய் கிரகம் அருகே ஸ்ரீவீரகணபதியாக விண்ணில் பிரகாசித்ததால் இராவணனால், செவ்வாய் பகவான் வழிபட்ட ஸ்ரீவீர கணபதி தரிசனம்தனைக் காண இயலாமல் போயிற்று. இவ்வாறாக செவ்வாய் பகவான் அனுஷ்டித்த ஸ்ரீவீரகணபதி பூஜையை இராவணன் அறியவில்லை. வீரகணபதி வழிபாட்டால்தான் நவக்கிரக மூர்த்திகள் அடிமைத்தளை நீங்கி விடுபட்டுத் தாங்கள் இழந்த கிரக நிலைகளைப் பெற்றனர்.

நிலையான வருமானம், தொழில் பெற்றிட...

எனவே இழந்த பதவிகளை நன்முறையில் மீண்டும் பெறவும், பொதுவாக 20, 30 ஆண்டுகளாக ஒரு தொழிலிலோ, ஒரு கம்பெனியிலோ அல்லது குத்தகை போன்ற தொழிலிலோ பணி புரிந்து வெளிவர இயலாமல் தவிப்போரும் அங்காரக சதுர்த்தியான செவ்வாய்க்கிழமையும், சதுர்த்தித் திதியும் அமையும் நாட்களில் திருஅண்ணாமலை, தேனிமலை, பர்வதமலை போன்ற இடங்களில் இயன்றால் நான்கு முறைகிரிவலம் வருதலும் சிறப்பானதாகும். அல்லது இவ்விடங்களில் கிரிவலம் வந்து மூன்று முறையேனும் ஆலயங்களையும் அடிப்பிரதட்சணம் செய்தலால் தாங்கள் அடிமைப்பட்டிருக்கின்ற காரணத்தால் அல்லது விசுவாசம், கடன், கடமை காரணமாக ஒரே இடத்தில் முடங்கியிருப்போர் நல்வாழ்வு வாழ இந்த அங்காரக வழிபாடு பெரிதும் உதவுகிறது.

சிகப்பு நிறங்களில் பலவகை உண்டு. இவற்றில் நான்கு வகையான சிகப்பு நிறங்களிலுள்ள ஆடைகளை செவ்வாய் பகவானுக்குச் சார்த்தி தானமாக அளிப்பதால் தொழிலிலும், பணிகளிலும் தக்க மாறுதல் கிட்டும். வெளிர் சிகப்பு,  கருஞ் சிகப்பு மஜந்தா (ரோஜா நிறம்) போன்ற பல சிகப்பு நிறங்கள், நான்கு வகைக் கனிகள் (ஆப்பிள், Plum, சிகப்பு நிற மாங்கனி, தக்காளி போன்றவை) இவ்வாறாக நான்கு வகைச் சிகப்பு நிற உணவு வகைகள், ஆடைகள், பூக்கள் (செம்பருத்தி, ரோஜா) போன்றவை சிறப்பானவை! இவற்றால் ஸ்ரீவிநாயக மூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகளுடன், ஏழைகளுக்கும் தானமாக ஆராதனைகளுடன், ஏழைகளுக்கும் தானமாக அளித்தலால் அங்காரக சதுர்த்தி வழிபாடு நன்கு பலனளிக்கும். இன்று செய்கின்ற அங்கப் பிரதட்சணம், கிரிவலம் போன்றவற்றால் பூமியின் மகர சக்திகள் உடலில் கூடுகின்றன.. ஏனெனில் அங்காரக சதுர்த்தி தினத்தில் தான் செவ்வாய் பகவானே நேரில் மானுட ரூபத்தில் பூலோகத்திற்கு வந்து பல தலங்களில் வழிபாடுகளை மேற்கொள்கின்றார்.

நோய்களுக்குப் பரிகாரம் அளிக்கவல்ல சக்தியைப் பெற்றிட செவ்வாய் பகவானே இன்று பூமியிலுள்ள பல்வேறு ஆலயங்களில் மானுடரூபத்தில் கிரிவலம் மற்றும், அடிப்பிரதட்சிணம் மேற்கொண்டு வலம் வருதலால் செவ்வாய் கிரஹத்தின் மிக முக்கியமான அக்னி அம்சங்கள் யாவும், செவ்வாய் மேட்டுத் தலங்களில் விரவி நிற்கும். இந்தத் தலங்களில் நாம் குறித்த சில வழிபாடுகளை மேற்கொள்வதால், பலவகையான கடுமையான நோய்களும் நிவாரணமாகும். மேலும், நிலையற்ற தொழிலில் நீண்ட நாட்களாக இருந்து பயனின்றி வாழ்ந்த வாழ்க்கைக்கு முடிவு ஏற்பட்டு நிலையான வாழ்வு ஏற்படவும் இந்த அங்காரக சதுர்த்தி வழிபாடு பெரிதும் உதவுகிறது.

தேனிமலையில் அங்காரக சக்திப் பாறைகள்!

தேனிமலையிலுள்ள பல பாறைகளும் செவ்வாய் கிரகத்தின் அம்சம் கொண்டது மட்டுமின்றி, இங்குள்ள பல சுயம்புப் பாறைகள்  செவ்வாய்க் கிரகத்திலிருந்து தோன்றியவையே! பெரும்பாலும் சித்தர்கள் யோக பூர்வமாக நோய் நிவாரண சக்தியையும், சித்தியையும் பெறுவதற்கு செவ்வாய் மேட்டு சக்தியுள்ள மலைகளிலும் குறிப்பாக அங்காரக சதுர்த்தித் தினங்களிலும் யோகம் பயின்று செவ்வாய் பகவானின் அனுக்கிரகம்தனைப் பெறுகின்றனர். இவர்கள் இத்தகைய தபோ பலன்கள் யாவற்றையும் தேனிமலை, திருஅண்ணாமலை போன்ற திருத்தலங்களில் பதித்துச் சென்று அங்காரக சதுர்த்தி,  செவ்வாய் மற்றும் செவ்வாய் ஹோரை நேரங்களில் கிரிவலம் வருவோர்க்கு இப்பலாபலன்கள் கிட்டுமாறு தக்க மருத்துவ தேவதைகளை நியமித்துச் செல்கின்றனர்.

இவர்கள் பதிக்கின்ற நோய் நிவாரண சக்தியாவும் உஷ்ண சம்பந்தப்பட்டதாகையால் நாம் கிரிவலத்தில் நடக்கும்போது உள்ளங்காலில் ஏற்படும் உஷ்ண சக்தியால் இச்செவ்வாய் கிரக சக்தி நம் பாதங்கள் மூலம் உடலில் சென்று நோய்க்குத் தக்க நிவாரணம் உண்டாகும். ஜோதிட நியதிகளின்படி கட்டை விரலின் கீழ்ப் பகுதி செவ்வாய் மேடு எனப்படும் . உள்ளங்காலிலும் செவ்வாய் மேடுகள் உண்டு! இவற்றின் மூலமாகவே அங்காரக சதுர்த்தியன்று கிரிவலம், அடிப் பிரதட்சிணம், மலை ஏறுதல், திருத்தல பாத யாத்திரையில் நாம் நோய்நிவாரண சக்தியைப் பெறுகின்றோம்.. மேலும் தேனிமலை போன்ற மலைகளில் கிரிவலம் வரும்போது ஏற்படும் ஒரு வித உஷ்ணநிலையில் தான் செவ்வாய் கிரக அக்னிசக்தி சேர்ந்து உடலுக்குத் தெம்பையும் நோய் நிவாரண சக்தியையும் அளிக்கின்றது. எனவே அங்காரக சதுர்த்தியாகிய இத்திருநாளில் தேனிமலையைக் கிரிவலம் வந்து குறிப்பாக செவ்வாய் ஹோரையான காலை 6-7, மதியம் 1-2, இரவு 8-9 நேரத்தில் கிரிவலம் வருதலால் எத்தகைய கடுமையான நோய்க்கும் நிவாரணம் பெறலாம். நான்கு வகையான சிகப்பு நிற உணவுகள், ஆடைகளை தானமாக அளிக்கத் தவறதீர்கள்! கிரிவல பலாபலன்கள் இவ்வகை அன்னதானம் மேம்படுத்தும்.

தான தர்மம் என்றாலே ஓடிவிடாதீர்கள்!

தானம் என்றால் நம்முடைய வசதிக்கு மிஞ்சியதாயிற்றே, எவ்வாறு செய்ய இயலும் என எண்ணாதீர்கள். சிகப்பு நிறத்தில் ஒரு சிறு கைக்குட்டையையோ அல்லது பிள்ளையார் வஸ்திரமோ தானமாக அளித்தால் கூட மிகவும் சிறப்பான தானமாகத்தான் ஏற்கப்படுகிறது. மேலும் அங்காரக சதுர்த்தியான இன்று அரசமரப் பிள்ளையார், ஆலமரப் பிள்ளையார் என எத்தனை விநாயக மூர்த்திகளுக்கு பிள்ளையார் வஸ்திரம் சாற்ற இயலுமோ அவற்றை இயன்றளவு செவ்வாய் பகவானுக்குரிய வஸ்திரம் சார்த்துவதால் உங்கள் குழந்தைகளுக்கு உள்ள பலவித நோய்களுக்கும் தக்க நிவாரணம் கிட்டும். உங்கள் குழந்தைகளைக் கொண்டே இன்று ஆங்காங்கு உள்ள விநாயக பெருமானுக்குச் சார்த்துங்கள். தனித்துள்ள பிள்ளையார் ஆயிற்றே, நாம் சார்த்தும் வஸ்திரத்தை எவரும் எடுத்துச் சென்று விடுவார்களோ என ஒரு போதும் எண்ணாதீர்கள். வஸ்திரம் சார்த்துவதோடு நம் கடமை முடிவுபெறும். அதன்பிறகு அந்த வஸ்திரம் யாரை அடைய வேண்டும் என்பதை அப்பிள்ளையாரே நிர்ணயிப்பார். செவ்வாய் பகவானின் அனுகிரகமின்றி, நில, புலன், தோட்டம், வீடு, தொழிற்சாலைகள் பாக்யம் அமையாது. அதேபோல செவ்வாய் பகவானின் அனுகிரகமின்றி எந்த நோய்க்கும் நிவாரணம் பெற இயலாது. இதையுணர்ந்து அங்காரக சதுர்த்தி விரதம் பூண்டு பயன் பெறுவீர்களாக! பிறருக்கும் இதன் அற்புத பலாபலன்களை எடுத்துச் சொல்வது மிகவும் சிறப்பான இறைப்பணியாகும். 

அங்காரக சதுர்த்தியன்று ஜபிக்க வேண்டிய, ஸ்ரீதுர்வாச மாமுனி உபதேசித்த ஸ்ரீதூர்வா ஸூக்தம்

ஸஹஸ்ர பரமா தேவீ
சதமூலா சதாங்குரா|
ஸ்ர்வ(கு)ம் ஹரதுமே பாபம்
தூர்வா துஸ் ஸ்வப்ன நாசினீ|
காண்டாத் காண்டாத் ப்ரரோஹந்தீ
பருஷ: பருஷ: பரி||
ஏவா நோ தூர்வே ப்ரதனு
ஸஹஸ்ரேண சதேன ச|
யாசதேன ப்ரதனோஷி
ஸஹஸ்ரேண விரோஹஸி
தஸ்யாஸ்தே தேவீஷ்டகே
விதேம ஹவிஷா வயம் ||

அங்காரக சதுர்த்தி அன்று ஒரு கிண்ணத்தில் பசும்பாலை வைத்து நம்முடைய விரல்களால் அருகம்புல்லைப் பிடித்துக் கொண்டு அருகம்புல்லின் நுனி பசும்பாலைத் தொடுமாறு வைத்து மேற்சொன்ன மந்திரத்தை 108 முறை ஓதி வருதலால் தடைபட்ட நற்காரியங்கள் நிறைவேறும்.

பூமியின் வடிவம் என்ன?

பூமியின் வடுவம் நிச்சயம் உருண்டையானதல்ல. இதுபற்றி சித்தர்களின் ஞானப்பத்ர வேத வாக்கியங்களை அறிந்து கொள்ளுங்கள். இன்று இல்லையேனும் ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் இந்த வேத உண்மையை இந்த விஞ்ஞான உலகம் நிச்சயமாக ஏற்கும். எந்த ஒரு விஞ்ஞானியும், எந்த ஒரு மனிதனும் பூமியின் முழு உருவைக் கண்களால் காண இயலாது. விஞ்ஞான  உலகம் கண்டுபிடித்த கருவிகளால்தான் பூமியைக் காண முடிகிறது. ஆனால் கொங்கணர் போன்ற இறைபக்தி நிறைந்த மெய்ங்ஞான விஞ்ஞானிகளும், மஹரிஷிகளும் சித்தர்களும் சூட்சுமக் கண்களால் பூமியின் வடிவத்தோடு அனைத்துக் கோடி அண்டங்களையும் காண்கின்ற சக்தி பெற்றுவர்களாதலின் ஞானபத்ர வாக்கியங்களே பூமியின் வடிவு பற்றிய உண்மையைத் தெரிவிக்கின்றன.!

பூமியின் வடிவமானது உருண்டையான நிலையில் 23° சாய்ந்த நிலையில் சுழன்று கொண்டு சூரியனை பூமி சுற்றுகிறது இவ்வாறாக பூகோள விஞ்ஞானம் அறிவிக்கும் செய்திகளை நீங்கள் அறிவீர்கள். ஆனால் இதுபற்றி ஞானபத்ரம் தெரிவிப்பதை இவ்வான்மீகத் தொகுப்பில் காண்க!

பூமி உருண்டை என்று சொன்னதற்காக விஞ்ஞானி கலிலியோ பட்ட பாட்டை நீங்கள் அறிவீர்கள். பூமியின் வடிவம் என்ன என்பதை சித்தர்களின் ஞானபத்ரங்கள் தெளிவாக விளங்குகின்றன. ஆனால் இப்போது ஒரு சித்தர் பெருமானே நேரில் வந்து பூமியின் வடிவத்தை கூறினால் இந்த தெய்வீக இரகசியங்களை விஞ்ஞான உலகம் ஏற்குமா?

நம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகள் பிரபஞ்சத்தின் உன்னத சித்புருஷர்களில் ஒருவராக எதையும் எல்லாவற்றையும் அறிந்தவராக அணு முதல் அனைத்துப் பிரபஞ்சத் துகள்களின் தோற்ற, மறைவை, அறிந்தவராக அன்றும், இன்றும், என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாகப் பிரகாசிக்கின்றார். இவர்தம் சிஷ்யர் குலத் தோன்றலாம் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் பூமியின் வடிவம் பற்றிய பல அற்புத தேவ இரகசியங்களை யெல்லாம் தம் சற்குருநாதரிடம் அறிந்து அவற்றை ஸ்ரீஅகஸ்திய விஜயம் மற்றும் ஆன்மீகச் சொற்பொழிவுகள் மூலம் உலகிற்கு அறிவித்து வருகின்றார். இவையெல்லாம் பூலோக விஞ்ஞானக் கண்களுக்கு அப்பற்பட்ட மனிதனின் பகுத்தறிவிற்கு எட்டாத ஆறறிவிற்கும் அகப்படாத அதியற்புத இறை இரகசியமாகும். இந்த உண்மைகளையெல்லாம் ஏற்க இந்த விஞ்ஞான உலகிற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் ஆகும். அதுவரையில் இந்த ஸ்ரீஅகஸ்திய விஜயத்தைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து இதன் நித்தியத்துவத்தை, சத்திய வேதவாக்கை இனியேனும் உணரச் செய்திடுங்கள்!

இன்றைக்கு சித்தர்கள் சொல்வதையெல்லாம் இவ்வுலகம் உடனடியாக அடுத்த விநாடியே ஏற்குமெனில் சித்தர்கள் அனைத்து இறை உண்மைகளையும், தேவாதி தேவ சிருஷ்டி ரகசியங்களை எல்லாம் தக்க சற்குரு மூலம் உடனேயே அளித்திடுவார்கள். ஆனால் கலியுக விஞ்ஞானமோ எதையும் சோதனைக் குழாயிலும், ஆராய்ச்சி சாலையிலும் போட்டுப் புரட்டிய பிறகுதானே ஒரு முடிவுக்கு வருகிறது! மேலும் அதில் எடுக்கும் முடிவுகளும் தவறாகவும் வருகின்றனவே, காரணமென்ன? எதையும் இறைப் படைப்பு என்று உணராது எதையும் தம் அறிவு பூர்வ விஞ்ஞானத்தால் பகுத்தறிவோம் என்ற அகங்காரமும் மாய அறிவும்தானே! விஞ்ஞானமும் இறைவன் படைத்த மாயையே! எங்கு உலக விஞ்ஞான ஆராய்ச்சி முடிகிறதோ அதுதான் மெய்ங்ஞான விஞ்ஞானத்தின் ஆரம்பப் பாடமாம்! எனவே எதுவும் இறைப் படைப்பு என்ற மூலதார உணர்வுடன்தான் எதையும் இறைப்பகுத்தறிவுடன், இறையருளுடன் ஆராய வேண்டும்.

இன்று கண்டுபிடிக்கப்படும் ஒரு ஆங்கில மருந்தானது அடுத்த மாதத்திற்குள் மாறிப் பல பக்க விளைவு அளிப்பதால் தானே விஞ்ஞானத்தில் இன்னொரு மருந்து உருவாகுகிறது! உண்மையே மாறும் என்று தவறாகச் சொல்லும் அளவிற்குத்தானே விஞ்ஞானம் தவறான பாதையில் செல்கிறது. ஆனால், நமக்கு பெரியோர் அளித்துள்ள சீரகம், மிளகும், மஞ்சள் போன்ற மூலிகை மருந்துகள்யாவும் நிரந்தரமாகக் கோடானு கோடி யுகங்களானாலும் நிலை பெற்றுள்ளனவே!

எனவே மெய்ஞான விஞ்ஞானமே நிரந்தரமானது என உணருங்கள்! மனிதனுக்குப் பயனாகும் எந்த விஞ்ஞானக் காரியங்களும் கண்டுபிடிப்புகளும் ஏற்புடையதே! இதற்காகவே இறைவன் விஞ்ஞானத்தை அளித்தான். அணுகுண்டும், வெடிகுண்டும், துப்பாக்கியையும் கண்டுபிடித்து பலவற்றையும் அழிப்பதற்காக விஞ்ஞானம் பயன்பட்டால் அத்தகைய விஞ்ஞானமும் ஒதுக்கப்பட வேண்டியதே!

சித்தர் மொழியே சத்திய மொழி!

உருளும் உலக்கையே உலகம் என்ற உலகின் வடிவு பற்றிய சித்தர்களின் பரிபாஷை வேத வாக்கைப் பற்றி மேலும் தீவிரமாக ஆத்ம விசாரம் செய்யுங்கள். இதுதான் பூமியின் வடிவம் என்றால் இதற்குள் எத்தனை அரிய அர்த்தங்கள் பொதிந்திருக்கும் என்று சிந்தியுங்கள். ஏனெனில் பூமியின் வடிவம் உருண்டை என்று சொல்வதற்காகவே விஞ்ஞானம் பல ஆயிரம் ஆண்டுகளை எடுத்துக் கொண்டது. பூமியின் வடிவம் உருண்டை இல்லை. எனவே உருளும் உலக்கையே உலக வடிவு என்ற சித்த வேதவாக்கியத்தின் உண்மையைப் புரிந்து கொள்ளுவதற்கு விஞ்ஞானம் இன்னும் எத்துணை ஆயிரம் ஆண்டுகள் எடுத்துக் கொள்ளுமோ நமக்குத் தெரியாது. ஏனெனில் சித்தர்கள் அறிவிக்க வேண்டிய தேவ தெய்வீக ரகசியத்தை இப்போது  நாம் தெரிவித்துவிட்டோம். இது பற்றி உணர்ந்து கொள்ள வேண்டியது மனித சமுதாயத்தின் கைகளில் தானுள்ளது.

அக்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்குமாக இருந்த சற்குருவின் மேல் ஆழ்ந்த நம்பிக்கை இருந்தமையால் அவர் சொல்வதைச் சற்றும் பிசகாமல் எவ்வித சந்தேகமுமின்றி குருவாய் மொழியைத் திருவாய் மொழியாக ஏற்று நடந்த உத்தம சமுதாயமானது இன்று இறைப் பகுத்தறிவு இல்லாது ஆராய்ச்சிப் பூர்வமாக எதையும் ஏற்கத் துடிப்பதால் தான் உருளும் உலக்கையே உலகம் என்ற வேதவாக்கை ஒரு பரிபாஷையினாலான வேத வாக்கியமாக பூமியின் வடிவை சித்புருஷர்கள் நமக்கு அளித்துள்ளார்கள். எனவே எவர் வேண்டுமாயினும் இதுபற்றி எந்த ஆராய்ச்சியையும் மேற்கொள்ளலாம். ஏனெனில் இன்று இல்லையேனும் பல்லாயிரம் ஆண்டிற்குப் பிறகாவது இதன் தெய்வீகத் தாத்பர்யத்தை, இந்த சத்திய வாக்கை இவ்வுலகம் உணரும். எனவே பூமியின் வடிவம் என்ன? உருளும் உலக்கை வடிவே இவ்வுலகின் பெருவடிவு என்பதே சித்தர் வாக்கு! இறைமயமாகச் சிந்தித்தால் இதன் உண்மைப் புலப்படும்.

திரைலோக்கி விஷ்ணுபதி

ஸ்ரீவிஷ்ணுபதி புண்யகாலம்!

கணவன் மனைவி ஒருமித்து வாழ உதவும் விஷ்ணுபதி பூஜை! பணக் கஷ்டங்களை நிவர்த்தி செய்யும் ஸ்ரீமகாலட்சுமி தீர்த்தம்! திருமகள் திருமாலின் இடமார்பில் இணைந்த த்ரைலோக்கித் திருத்தலம்! பிரதோஷம், சூர்ய, சந்திர கிரகணங்களை, மகா சிவராத்திரி போன்று பல கோடி மடங்கு பூஜா பலன்களை அளிக்கவல்ல முக்கியமான, புனிதமான பண்டிகைகளுள் ஒன்றே ஸ்ரீவிஷ்ணுபதி புண்யகாலமாகும். மூன்று மாதத்திற்கு ஒரு முறையாக பெரும்பாலும் தமிழ் மாதப் பிறப்பை ஒட்டியவாறு வருகின்ற விஷ்ணுபதி புண்ணிய காலமானது பிரம்ம முகூர்த்த நேரத்தையொட்டி விடியற்காலை 1.30 மணி முதல் முற்பகல் 10.30 மணிவரை மலர்கின்றது.. இந்த மகா புனித நேரத்தில் செய்யப்படுகின்ற பூஜைகள், வழிபாடுகள், அர்ச்சனைகள், ஆராதனைகள், தான, தர்மங்கள், ஹோம பூஜைகள், தர்ப்பணங்கள் அனைத்திற்குமே பன்மடங்கு பலாபலன் அருட்பிரவாகமாய்ப் பொழிகின்றன. பல யுகங்களுக்கு முன்னால் தீபாவளி, பொங்கல் போன்று பிரசித்தி பெற்ற இந்த விஷ்ணுபதி புண்ய காலமானது காலப்போக்கில் சமுதாய மாற்றங்களினால், பக்திக் குறைவினால் மனித சமுதாயத்தினால் மறக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீஐயப்ப வழிபாடு போன்று விஷ்ணுபதி பூஜையும் சித்புருஷர்களால் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படுகின்றது. சமுதாயத்தால் மறக்கப்பட்டு விட்ட ஸ்ரீவிஷ்ணுபதி புண்யகாலத்தின் மகிமையை  ஜாதி, மத, இன குல பேதமின்றி அனைவரும் மீண்டும் அறிந்து, உய்த்து, உணர்ந்து, கடைபிடித்து ஸ்ரீவிஷ்ணுபதி புண்ய கால பூஜையானது அனைத்து வைணவத் தலங்களிலும் பிள்ளையார் சதுர்த்தி, கோகுலாஷ்டமி போன்ற மிகவும் சிறப்புடன் நடைபெற வேண்டும் என்பதற்காக நம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த சுவாமிகளின் குருவருளுடன் அவர்தம் சிஷ்யத் தோன்றலாம் இன்று நம்மிடையே கலியுக சற்குருமார்களில் ஒருவராக பூரித்து நிற்கும் நம் குருமங்கள் கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் இறைப் பிரசாரங்கள், ஆன்மீகப் புத்தகங்கள் மூலமாகவும் ஸ்ரீவிஷ்ணுபதி மகிமையைப் பரப்பி வருகின்றார்கள்.

திருமகள் தேடிய திருவருள்!

எத்தனையோ இறைலீலைகள் நிகழ்ந்த புனிதகாலமே ஸ்ரீவிஷ்ணுபதி புண்ய காலப் பண்டிகையாகும்.  ஒரு முறை தாம் அடிக்கடி திருமாலை விட்டுப் பிரியவேண்டிய நிலைகள் ஏற்படுவதைக் கண்டு ஸ்ரீமகாலட்சுமி வருத்தமுற்றாள். இந்நிலை மீண்டும் ஏற்படாதிருக்க, திருமாலின் திருநெஞ்சில் திருக்குடில் கொள்ள திருமகள் பிரார்த்தித்த போது பெருமாளும், “திருமகளே! மூன்று லோகத்திலும் வாழ்கின்ற முப்பத்து முக்கோடி தேவர்களும் கோடானு கோடி தெய்வ மூர்த்திகளும், தேவாதி தேவர்களும் எப்போதும் சத்சங்கமாகக் கூடி பூஜை செய்கின்ற அற்புதத் தலமான திருலோக்கிப் புண்யத் தலத்திற்குச் சென்று தவத்தை இயற்றுவாயாக! அங்குதாம் சர்வேஸ்வரனாம் சிவபெருமான் எப்போதும் தெய்வீகப் பிணைப்பில் தம்பதிகள் ஒருமித்திருப்பதற்கான அரிய நல்வரத்தைத் தந்தருள்கின்றார். த்ரைலோக்கி சென்று இருள் நீக்கி, அருள் நோக்கி வழிபடுவாயாக!” என்று அருளிடவே த்ரைலோக்கிப் புண்யத் தலத்தைத் தேடி திருமகள் பூலோகத்திற்கு வந்து ஸ்ரீஅகஸ்தியப் பெருமானின் உதவியை நாடினாள், ஸ்ரீஅகஸ்தியரின் அறிவுரையின்படி க்ஷீராப்தி நாதனின் பாற்கடல் சயனக் கோலத்தைப் பூமியில் பெற வேண்டினாள். இறைப் பரம்பொருளாம் பரந்தாமனே, க்ஷீராப்தி நாதனே, ஸ்ரீரங்கநாதப் பெருமாளே, ஸ்ரீமகாவிஷ்ணு  பெருமாளே குறிப்பிட்ட திருலோக்கிதான்  த்ரைலோக்கியாக, திருலோக்கியாக இன்றைக்குத் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகே சூரியனார் கோயிலில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உறைகின்றது!

இந்த விஷ்ணுபதி புண்யகாலத்தில் அன்று இப்பெருமாள் ஆலயத்தில் கொண்டாடி, இதன் மகிமையை உணர்ந்து, முக்கோடி, தேவர்களும் எப்போதும் வழிபடுகின்ற ஸ்ரீக்ஷீர சாகர நாராயணப் பெருமாள் மூர்த்தியை வணங்கி, தம்பதிகள் இங்குள்ள ஸ்ரீலக்ஷ்மி தீர்த்தத்தின் மகிமையை உணர்ந்து, பணக் கஷ்டங்களுக்கும் நிவர்த்தியைத் தேடி, பரஸ்பர ஒற்றுமையுடன் வாழ்ந்து பக்தியில் திளைத்து, இறைப்பெருந் திருவடிகளை அடைவார்களாக!

நிரந்திரசெல்வம் பெற வேண்டுமா? திரைலோக்கியில் கொண்டாடுங்கள் விஷ்ணுபதி பூஜையை! நம்முடைய பண்டிகை வழிபாடுகள் யாவும் நம் மூதாதையர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்த அதியற்புத விசேஷ தினங்களே என்பதை உணர்ந்திடுங்கள். விஷ்ணுபதி புண்யகாலமென்பது இறைவனுடைய பல அவதார லீலைகள் நிகழ்ந்த, மகரிஷிகளும், சித்புருஷர்களும் ஜீவன்களின் நல்வாழ்விற்காக, எத்தனையோ அவதார மூர்த்திகள் தோன்றிய புனிதநேரமும் விஷ்ணுபதி புண்ய காலமே! பித்ருக்கள் தம்முடைய பிரம்மோற்சவமாகக் கொண்டாடுவது மாளயபட்ச அமாவாசையாகும். இந்நாளில் அருளாசி வழங்குவதற்கான விசேஷ நல்வரங்களுக்காகத் தம்முடைய நாயகரான ஸ்ரீமகாவிஷ்ணுவைப் பித்ருக்கள் ஆராதிக்கின்ற மிக மிகப் புனிதமான நேரமே ஸ்ரீவிஷ்ணுபதி புண்யகாலமாகும். ஸ்ரீமகாவிஷ்ணுவின் தேவியாம் ஸ்ரீமகாலட்சுமி எப்போதும் இறைவனுடைய மார்பில் உறைவதற்காக, ஸ்ரீவிஷ்ணுவை ஆராதித்துத் திருலோக்கித் திருத்தலத்தில் தவங்கனிந்த திருநாளும் ஸ்ரீவிஷ்ணுபதி புண்யகாலமாகும்.

இந்த விஷ்ணுபதி புண்ய காலத்திற்கு உடையவர் ஆழித் திரள் என்ற விசேஷமான பெயரும் உண்டு. இத்திருநாளில் திருலோக்கித் தலத்தில் நிகழந்த தெய்வீக வைபவம் என்ன என்பதைக் கன்டிடலாமா? இரண்டு சிவாலயங்கள், ஒரு பெருமாள் ஆலயத்துடன் த்ரைலோக்கியாக, மூன்று லோகங்களிலிருந்து முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களும், தேவமூர்த்திகளும் வந்து வழிபடுகின்ற தலமாக எப்போதும் தேவர்கள், சித்புருஷர்கள், மகரிஷிகளின் நடமாட்டம் நிறைந்த புனிதத் தலமாக இன்று திரைலோக்கி கிராமம் விளங்குகின்றது. தான் திருமாலை விட்டு எந்நேரமும் பிரிதலாகாது என்ற நல்வரத்தைப் பெறுதற்காக ஸ்ரீமகாலக்ஷ்மி, ஸ்ரீமார்கண்டேய மகரிஷியிடமிருந்து இத்திருத்தலத்தின் மகிமையை உணர்ந்து, இங்கு தவம் புரிந்திட்டாள்.

“யாம் பாற்கடலில் உள்ளது போல எவ்விடத்தில் ஸ்ரீக்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாளாகக் காட்சி தருகின்றோமோ அவ்விடத்தில் நீ எம்மை விட்டு அகலாது எம் நெஞ்சில் இடம் பெறுவதற்கான தெய்வாவதார சக்தியைப் பெற்றிடுவாய்!” என்று பரந்தாமன் அளித்த திருவாக்கியங்களை எண்ணி ஆனந்தித்து யோகத்தில் ஆழ்ந்தாள் ஸ்ரீலக்ஷ்மி தேவி. அரக்கர்களால் பலவிதமான இன்னல்களுக்கு ஆளான தேவர்கள், தங்களுடைய அபிஷேக ஆராதனைகளும் பூஜா சக்திகளும் குறைந்தமையால்தான் அரக்கர்களுடைய தீவினை சக்தி மேலோங்குகின்றது என்பதை உணர்ந்து, பூலோகத்தில் தாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பூஜிக்கக் கூடிய சத்சங்க சக்தி நிறைந்த திருத்தலங்களைத் தேடி வந்தனர்! திரைலோக்கியான இவ்விடத்தில்தான் முப்பத்து முக்கோடி தேவர்களும் அமர்ந்து தவம்புரிகின்ற அளவிற்கு இறைவன் பஞ்சபூத சக்திகளைத் திரட்டிப் புனித பூமியாக்கி த்ரைலோக்ய சுந்தரனாக, கல்யாண சுந்தரனாக அமர்ந்து அருள்பாலிக்கின்றார். முப்பத்து முக்கோடி தேவர்களும் ஒருசேர வந்து அமர்ந்து யோகத்தில் ஆழ்கின்றார்கள் என்றால் இவ்விடத்தில் திரள்கின்ற அக்னிசக்தியை, இத்தலத்தின் மகிமையை சிந்தித்துப் பாருங்கள். அனைத்துக் கோடி தேவ மூர்த்திகளும் ஒன்றாக அமர்ந்து பூஜிக்க வல்ல திருத்தலம் என்றால் த்ரைலோக்கியின் மகிமைதான் என்னே! முதன்முதலாகப் ப்ரதோஷ வழிபாடு ஏற்பட்டபோது, ரிஷப வாகனத்தில் பார்வதி சமேதராக அனைவர்க்கும் இறைவன் ப்ரதோஷ வேளையில் காட்சி தந்த முதல் திருத்தலமே த்ரைலோக்கியாகும்.

நந்தியின் மேல் சிவ பார்வதி! அனைவருடைய தவ சக்தி, யோக சக்தி, புண்யசக்தியைத் தாங்க வல்ல அதியற்புத புனித பூமியாக இருந்தால்தானே இவ்விடத்தில் ரிஷபாரூடராக இறைவன் காட்சி தரமுடியும்! எனவே இறைவன் ப்ரதோஷ கால பூஜா பலன்களைப் பரிபூரணமாகத் தரவல்ல தலமே த்ரைலோக்கி என்பதால்தான் இவ்விடத்தில் இன்றைக்கும் அனைத்து கோடி தேவ மூர்த்திகளும் ஒன்றாக அமர்ந்து குறித்த தினங்களில் தேவ பூஜைகளை நடத்துகின்றார்கள். பரந்தாமனே இறைவனுடைய ரிஷபாரூடக் காட்சியைப் பெறுகின்ற தலமென்றால் த்ரைலோக்கியின் மகிமையை என்னென்று விரித்துரைக்க முடியும்?

த்ரைலோக்கியில் உள்ள பெருமாள் ஆலயத்தில் உள்ள தல விருட்சமே வில்வ மரமாகும்! ஆம், வில்வத்தின் ஒவ்வொரு தளத்திலும் ஸ்ரீலக்ஷ்மி தேவி அமர்ந்திருந்து ஸ்ரீவிஷ்ணுவை, சிவ மூர்த்தியை ஆராதிக்கின்றாள். ஏனென்றால் ஸ்ரீமகாவிஷ்ணுவின் திருநெஞ்சில் உறைவதற்காக ஸ்ரீமன்நாராயண மூர்த்தியை நெஞ்சில் நிலைநிறுத்தி வழிபட்டு மூன்று இலைகள் கூடிய வில்வ தளங்கள் பூலோகத்தில் தோன்றிய முதல் இடமே திரைலோக்கியாகும். மூன்று தளங்களை உடைய வில்வம் இன்றைக்கும் பூலோகத்திலும் தேவ லோகத்திலும் காணப்படுகின்றது. இறைவன் வில்வ விருட்சத்தை முதன்முதலாகப் படைத்த போது அதனை த்ரிதளமாக (மூன்று இலைகள்) பூலோகம், புவர் லோகம், சுவர் லோகம் ஆகிய மூன்று லோகங்களுக்கு உடையதாக மூன்று இலைகள் கூடியதாகப் படைத்தான். இவ்வாறு திருமகள் மூன்று கோடி ஆண்டுகள் தவம் புரிந்து மூன்று லோகங்களுக்காக இத்தலத்தில் தோன்றியதுதான் மூன்று தள வில்வ மரமாகும். இந்த வில்வ மரமே இன்றைக்கும் பெருமாள் கோயிலின் தலவிருட்சமாக விளங்குகின்றது.

தலமரம் மஹரிஷி வடிவமே! இன்றைக்குப் பல தலங்களில் தல விருட்சம் இல்லாமல் இருப்பது போல் தோன்றினாலும், தல விருட்சங்கள் என்றும் மறைவதில்லை. தல விருட்சங்கள் பட்டுப்போனது போல் தோன்றினாலும், என்றும் சூட்சுமமாக அவை வளர்ந்து மலர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. எனவே தலவிருட்சங்கள் பட்டு உதிர்ந்தது போல் இருந்தால் நன்முறையில் பூஜை செய்து நல்ல ஆலயங்களில் வளர்க்கப்பட்ட தக்க பூஜைகளோடு புது விருட்சத்தை வைப்பதில் எவ்விதத் தவறுமில்லை. எனவே எந்தத் தல விருட்சமும் மறைவதும் கிடையாது. ஏனென்றால் தல விருட்சமாகத் தோன்றுவது ஒரு சாதாரண செடியோ, மரமோ அல்ல! எத்தனையோ கோடி மகரிஷிகளும், சித்த புருஷர்களும் தவமிருந்து தாம் தல விருட்சமாக ஆகுதல் வேண்டும் என்ற நல்வரத்தைப் பெற்றே ஆலயத் தலவிருட்சமாக மாறுகின்ற்னர். ஒவ்வொரு ஆலயத்தின் தலவிருட்சத்தில் உள்ள ஒவ்வொரு இலையும், இலை நரம்பும், பூவும், தண்டும், கிளையும் பல கோடி மகரிஷிகளின், யோகியரின், சித்புருஷர்களின் தபோ வடிவ ரூபங்களே என்பதை உணர்ந்திடுங்கள்! வில்வ தளமானது ஸ்ரீலட்சுமி கடாட்சம் நிறைந்ததாகவும், ஸ்ரீமகாலட்சுமி உறைவதாகவும் இருத்தல் வேண்டும் என்ற இறைப் பரம்பொருளின் ஆணையை நிறைவேற்றுவதற்காகத்தான் இந்த மகாலட்சுமியின் தவப்படலம் இறைவனால் இங்கு விஷ்ணுபதி புண்ய காலத்தில் நிகழ்வதாக இறைச் சங்கல்பமானது! திருலோக்கித் திருத்தலத்தில் திருமகள் அமர்ந்து யோக தவம் புரிந்த இடகலை, பிங்களை, சுழுமுனை ஆகிய மூன்று சுவாச நாள யோகங்களில் எழுந்த தெய்வீக சக்திகள் மூன்று தளங்கள் நிறைந்த த்ரி தள வில்வ இலையாக விரிந்து பூலோகமெங்கும் திரிதள வில்வ மரங்கள் தோன்றின. எனவே மூன்று தள ஆதி வில்வ தளம் தோன்றிய இடமே இன்றைக்கு த்ரைலோக்கியில் பெருமாள் கோவில் எதிரே உள்ள லட்சுமி தீர்த்தமாகும். க்ஷீர தீர்த்தம், பாற்கடல் தீர்த்தம் லட்சுமி தீர்த்தம் என்று பலகோடி யுகங்களிலும் பல திருநாமங்களைக் கொண்டு இது விளங்குகின்றது!

அருள்நோக்கும் திருலோக்கி! ரிஷபாரூட சர்வேஸ்வரனைத் தரிசிப்பதற்காக ஸ்ரீக்ஷீராப்தி சயனப் பெருமாளும் பூலோகத்திற்கு வந்து வில்வ தள பீட யோக நிலையில் ஆழ்ந்திருந்த லட்சுமி தேவிக்கு அருள்பாலித்திட திருமாலிடம் நிலைகொண்டான் ஸ்ரீமகாலட்சுமி! எனவே திருலோக்கிப் பெருமாள் ஆலயத்திற்கு இவ்வகையில் எத்தனையோ விசேஷ அம்சங்கள் உண்டு, இப்பூலோகத்திற்கு முதன்முதலாக மூன்று தள வில்வத்தைக் கொணர்ந்த திருத்தலம்! திருமகள் ஆழ்நிலை தியானத்தில் அமர்ந்து வில்வ தளத்தைப் பரிசாகப் பெற்று இறைவனுடைய திருமார்பில் உறைந்த தலம்! க்ஷீராப்தி சயனனாக ஆதிமூலப் பெருமானாக இறைவன் காட்சி அளித்த தலம்! முப்பத்து முக்கோடி தேவர்களும், அனந்த கோடி தேவாதி தேவ மூர்த்திகளும் ரிஷபாரூட பார்வதி சமேத சர்வேஸ்வரனையும் ஸ்ரீக்ஷீரதேவி உறை ஸ்ரீக்ஷீராப்தி சயனப் பெருமாளையும் தரிசித்த திருத்தலம்! திருப்பாற்கடலில் ஸ்ரீமன்நாராயண மூர்த்தியை எவ்வாறு நாம் தரிசிக்க முடியுமோ, அதே கோலத்தில் சுதை ரூப மூர்த்தியாக இறைவன் காட்சி அளிக்கின்ற தலம்! இத்தகைய விஷ்ணுபதி லீலைகளும், தெய்வீக இறை லீலைகளும் நிகழ்ந்த நேரமே விஷ்ணுபதி புண்ய காலமாகும். மகத்தான விஷ்ணுபதி புண்ய நேரங்களுள் இதுவும் ஒன்றாம். ஏனென்றால் இந்த ஒரே இறைத் திருவிளையாடலில் எத்தனையோ மகத்தான இறை லீலைகள் சம்பவங்கள் நிறைந்துள்ளனவே!

சுதை மூர்த்தி ஆதி மூர்த்தியே! சுதை மூர்த்தி என்றாலே கல் விக்ரகத்தை விடப் பல கோடி மடங்கு அருட்சக்தி நிறைந்ததாகும். சுதை என்பது பலகோடி நதிப் பிரவாகத்தில் திரள்கின்ற கோதுளி எனப்படும் பசுவின் புனிதக் காலடித் துகள் சேர்ந்த திருநதிகளின் மண்ணைத் திரட்டி ஜவ்வாது, புனுகு, சாம்பிராணி மற்றும் மூன்று கோடி மூலிகைகளின் சாராம்சத்தைக் கொண்டு திரட்டப்படுகின்ற பொருளே சுதையாகும். எனவே சுதை ரூபக்கோலம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. அனைத்துக் கோடி லோகங்களிலும் உள்ள பலகோடி நதிகளின் திரட்சியும் இப்பிரபஞ்சத்தின் மூலையில் உள்ள அனைத்துக் கோடி மூலிகைகளின் சாராம்சத்தையும் கொண்டதாக சுதாரூப மூர்த்தி விளங்குவதால் இதற்குப் பன்மடங்கு சக்தி உண்டு. இன்றைக்குத் திருலோக்கியில் ஸ்ரீக்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் ஆலயத்தில் நீங்கள் காண்பது பெருமாளுடைய ஆதிமூல சுதா மூர்த்தி ரூபமாகும்.!

கணவன் மனைவி ஒன்று சேர்ந்திட..  கணவன் மனைவி இருவருமே நல்ல ஒற்றுமையுடன் மனச் சாந்தியுடன் அமைதியான வாழ்வைப் பெறுவதற்கு உதவுவது இந்த விஷ்ணுபதி புண்யகாலப் பூஜையாகும்.. கணவன் மனைவியர் பிரிந்திருந்தாலும், கோர்ட்டிலும் வழக்குகள் இருந்தாலும் கூட, அவர்கள் தனித் தனியே வாழ்ந்தாலும், இருவருமே இந்த விஷ்ணுபதிப் புண்யகாலத்தில் பெருமாளைத் தரிசித்து, அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால் மகத்தான சாந்தி நிறைந்த குடும்பப் வாழ்வினைப் பெற்றிடலாம். சுதை மூர்த்தி என்பதால் க்ஷீராப்தி சயனப் பெருமாளுக்கு அபிஷேகம் கிடையாது. சாம்பிராணித் தைலம் மட்டுமே சார்த்தப்படும். ஆனால் இத்தகைய சக்தி வாய்ந்த பெருமாளோ இன்றைக்குப் பலமரக் கம்புகளை நிலை நிறுத்தித் தாங்க வைத்து ஸ்திரமில்லாத ஆலயக் கட்டிடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கின்றார். விஷ்ணுபதிப் புண்ய காலத்திற்கு முன்னரேயே இத்தலத்தைக் கண்டு பெருமாளைத் தரிசித்து ஆலயத்தை ஸ்திரப்படுத்துவதற்கான இறைத் திருப்பணிகளை மேற்கொண்டு விஷ்ணுபதி புண்யகாலத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் அமர்ந்து வழிபடுவதற்கான நல்ல இறைத் திருப்பணிகளை மேற்கொள்வது வாழ்வில் பெறுதற்கரிய பாக்யமாகும்!

மாங்கல்ய பாக்யம் கிட்டிட! எனவே விஷ்ணுபதி புண்யகாலத்தில் இங்கு பெருமாளுக்கு நிறைய சாம்பிராணி தூபமிட்டு க்ஷீராப்தி சயனர் என்பதால் (க்ஷீரம் – பால்) பலவகைப் பால் பண்டங்களை பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல், தேங்காய்ப் பால், திரட்டுப் பால் போன்ற பால் சம்பந்தமான உணவுப் பண்டங்களைப் படைத்து ஏழைகளுக்குத் தானமாக அளித்தால் உங்களுடைய திருமண வாழ்வு ஸ்திரமாக அமைந்து மாங்கல்ய பாக்கியமும், சுமங்கலித்வமும் கிட்டும். மேலும் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் பலருக்கும் பணம் நிலைத்து நிற்பது கிடையாது,  ஒழுங்காக உழைத்து நேர்மையுடன் சம்பாதிக்கப் பட்ட பணம் தான் நிம்மதியாக நிலைத்து நிற்கும். எனவே ஸ்திரமான சொத்து நிலபுலன்களுடன் ஆஸ்தியைப் பெறுவதற்கு விஷ்ணுபதி புண்யகாலத்தில் இங்கு ஸ்ரீக்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாளைத் தரிசித்திடுங்கள். ஸ்ரீக்ஷீர நாயகியாக அருள்பாலிக்கும் திருமகளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து குறிப்பாக ஜவ்வாது, கஸ்தூரி, மஞ்சள், புனுகு ஆகியவை கலந்த பாலாபிஷேகம் செய்து ஏழைகளுக்குப் பால் சம்பந்தப்பட்ட உணவுப் பண்டங்களை தாராளமாக தான, தர்மம் செய்திடுங்கள். வெள்ளை நிறப் பூக்கள், பலவித வண்ணப்  பூக்கள் சேர்ந்த ஆடைகளைத் தானமாக அளித்தல் சிறந்ததாகும். பொதுவாக வெள்ளை நிற உடையைப் பலரும் அணிவதில்லை. ஆனால் வெள்ளை நிறத்தில் முழுவதுமாக வண்ணப் பூக்கள் நிறைந்ததாக ஆடைகளைப் பயன்படுத்துதல் மிகவும் சிறப்புடையதாகும்.. இது மனத்தூய்மையைத் தரும். முறையற்ற காமாந்திர எண்ணங்கள் விலகும்.

குரு நிந்தனைக்கு விமோசனம் குரு தந்தால்தான் உண்டு!

மகான்கள், யோகியர்களை, சித்தர்களைப் பழித்தவர்கள், அவதூறு பேசியவர்கள் நிறைய உண்டு. கலியுதத்தில் இத்தகைய அவமரியாதைகள் நடத்தப்படுவதால்தான் இன்றைக்கும் சற்குருமார்களாக, இறைத் தூதுவர்களாக பூலோகத்திற்கு வந்துள்ள மகரிஷிகளும், சித்புருஷர்களும் தங்களை வெளிக்காட்டாது சாதாரணக் குடிமகன் போல வாழ்ந்து பலருக்கும் சத்சங்க வாழ்வை அளித்து உத்தம இறை நிலைகளைப் பெற்றுத் தருகின்றார்கள். எனவே நாம் அறிந்தோ அறியாமலோ மகான்களுக்குத் துரோகம் செய்து அவர்களை ஏமாற்றி, அவதூறு பேசியவர்கள் தக்க பிராயச்சித்த முறைகளைப் பெறுவதற்கான, நல்வழி முறைகளை சற்குருவிடமே பெற வேண்டுமானால், விஷ்ணுபதிப் புண்யகாலத்தில் இத்தலத்தில் ஸ்ரீக்ஷீராப்தி சயனப் பெருமாளை வழிபட்டிட வேண்டும். ஏனென்றால் அரக்கர்கள் பலம் மேலோங்கிய போது அவதியுற்ற பல தேவர்கள் இறைவனையே நிந்தித்து மேலும் பல சாபங்களைப் பெற்றுச் சாப நிவர்த்திக்காக இங்கு வந்து வில்வ தளங்களால் ஸ்ரீக்ஷீராப்தி சயனப் பெருமாளை அர்ச்சித்து ஆலயத்தை அடிப்பிரதட்சிணமாக வலம் வந்து ஸ்ரீமார்க்கண்டேய மகரிஷியிடம் குரு துரோகத்திற்காகவும், குருவையும், மகான்களையும், யோகியரையும் நிந்தித்ததற்காகவும் தக்கபிராயச்சித்தம் தரும் நிவர்த்தி முறைகளைப் பெற்றார்கள்.. குரு நிந்தனை, குருதுரோகம் மிகவும் பாபகரமான செயல்! நாத்திகர்களாக இறைவனை வசை பாடியோர் தங்கள் இமாலயத் தவறுகளுக்கு மனதார வருந்தி மன்னிப்பைப் பெற வேண்டிய விஷ்ணுபதிப் புண்ய காலமிது! முப்பத்து முக்கோடி தேவர்களும் ஒரு சேர நின்று இங்கு பெருமாளிடம் பிரார்த்தனை செய்ததால்தான் 60 ஆண்டுகளுக்கு ஒரு முறையே வரக்கூடிய விக்ரம ஆண்டு விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் மட்டும்தான் இறைவனை வசைபாடியதற்கு ஒரு துளியேனும் அதுவும் குறித்த சற்குருவின் மனம் சாந்தமுற்றால்தான் பிராயச்சித்தம் பெறலாம்! அதுவும் இறைவன் மனம் கனிந்தால், குருவருள் கூடினால்தான்!

தழைக்கட்டும் நல் இறைச் சந்ததி! நல்ல சந்ததி தழைப்பதுதான் சிறப்புடையது. இல்லறக் குடும்ப வாழ்க்கையின் அடிப்படை இலக்கணமே நன்முறையில் சந்ததி விருத்தியாவதாகும். குடும்பக் கட்டுப்பாடு என்ற முறையில் சந்ததியைத் தடுப்பதை நம் பெரியோர்கள் ஏற்கவில்லை! நவீன விஞ்ஞான உலகம் குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தினாலும், ஒரு நல்ல ஆத்மா இல(ய)ங்குமேயானால் பத்து லட்சம் தீவினை சக்திகளை எதிர்த்துப் போராடுகின்ற அளவிற்கு தேவ சக்திகளைப் பெற்றிட முடியும் என்பதால்தான் நம் மூதாதையர்கள் பெரும் குடும்பத்துடன் சிறப்பான வாழ்வைப் பெற்றனர். அறிந்தோ அறியாமலோ, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டோரும் அவரவர் பித்ருக்கள் மனம் கனிந்தால்தான் இதற்குத் தக்க பிராயச்சித்தம் பெற உதவும் விஷ்ணுபதிப் புண்ய காலமிது! இங்கு தர்ப்பண பூஜை விசேஷமானதாம்!

த்ரயம்பகேஸ்வர சித்தர்! த்ரயம்கேஸ்வர சித்தர் (த்ரைலோக்ய சித்தர்) பூலோகம், புவர் லோகம், சுவர் லோகம் ஆகிய மூன்று லோகங்களிலும் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். சித்தர்களும் மகரிஷிகளும் மட்டுமே சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் உட்பட அனைத்துக் கோடி லோகங்களுக்கும் சென்று வரக் கூடிய தெய்வீக அனுமதியையும் தெய்வீக ஆணையையும் பெற்றுள்ளனர். ஒவ்வொரு சித்தரும் தம்முடைய கோடானு கோடி தவ, யோக, தபோ பலாபலன்களையும் பிற ஜீவன்களுடைய நல்வாழ்விற்காக அர்ப்பண செய்து விதவிதமான தியாக வாழ்க்கையை மேற்கொண்டு இறைத் தூதர்களாக என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாகப் பிரகாசிக்கின்றனர். த்ரயம்பகேஸ்வர சித்தர் எனும் த்ரைலோக்ய சித்தரானவர் இவ்விதத்தில் எத்தகைய தியாகக் கோட்பாட்டை, இறைலட்சியத்தை, மேற்கொண்டிருந்தார், ஏன் தெரியுமா!

 இப்பிரபஞ்சத்தில் குறிப்பாக இப்பூவுலகில் கல்வி, செல்வம், வீரம், புகழ், ஆரோக்கியம், பணம் போன்றவை நிலைத்திருக்கின்ற தலம் எது என அறியும் பொருட்டு மூன்று லோகங்களிலும் உள்ள இறைத் தலங்களை தரிசித்துச் சஞ்சாரம் செய்து வந்தார். ஆம் தேவ லோகத்திலும் கோயில்கள் உண்டு! பிரஞ்சத்திலுள்ள அனைத்து இறைத் தலங்களுக்கும், வனங்களுக்கும், ஆஸ்ரமங்களுக்கும், பர்ண சாலைகளுக்கும் சென்று வருகின்ற பாக்கியத்தைப் பெற்ற அவர் பஞ்ச பூத சக்திகளான பூமி, நீர், அக்னி, ஆகாயம், காற்று ஆகிய ஐந்து சக்திகளும் தனித்தனியாகவும், சேர்ந்தும் நிலைத்திருக்கின்ற தலங்களை அறியும் பொருட்டும் நித்ய யோக சஞ்சாரம் புரிந்து வந்தார். யோகத்திலும் பலவித நிலைகள் உண்டு.. ஓரிடத்திலேயே கோடானு கோடி யுகங்களாக அமர்ந்து யோகம் புரிவதைப் போல, ஓரிடத்திலும் அமராது, ஒரு வினாடி கூடத் தங்காது யோக மார்கத்தில் எப்போதும் சஞ்சரித்துக் கொண்டிருப்பதும் ஒரு வகை யோக நிலையேயாகும் இதிலும் நாரதீய யோகம், நாரதீத யோகம், மாருதீத யோகம் என்ற பல முறைகள் உண்டு. த்ரயம்பகேஸ்வர சித்தரானவர்., காலாதீத யோகத்தில் தலை சிறந்தவராய், ஞானப் பிரகாச சித்தராய்ப் பூலோகத்தில் எத்தனையோ கோடி சுயம்பு மூர்த்திகளைத் தரிசித்து வணங்கும் பாக்யத்தைப் பெரும் பேறாகப் பெற்றார்.

இறையுடன் மறை உரை! “த்ரயம்பகேஸ்வரா! எம்முடைய மகிமைகளை இப்பூவுலகிற்கு உணர்த்தும் பொருட்டு இன்னொரு இறைத் தூதன் வர இருக்கின்றான். நீ உன்னுடைய இறை மார்க்கத்தில் தொடர்ந்து செல்வாயாக,” என்ற இறையாணையைக் கேட்டு அவர் அடுத்த தலத்திற்குச் செல்வார். இவ்வாறு பிரபஞ்சத்தின் அனைத்துத் தலங்களிலும் இத்தகைய இறையாணைகளைக் கேட்டதும் த்ரயம்பகேஸ்வர சித்தரே மனம் கலங்கினார்.. தம்முடைய பூத உடலில் சஞ்சாரம் முடிவு பெறுவதற்கு முன்னர் தாம் எடுத்த இறை லட்சியக் கோட்பாடு நிறைவேறுமா? அதற்குள் தம் இறைப் பணி முடிந்திடுதல் வேண்டுமே என்று மனம் பதறினார்!

த்ரயம்பக மந்திரத்தைச் சிரசு முதல் பாதம் வரை 72000 நாடி நரம்புகளிலும் துதித்துச் செல்கின்ற அருள் சக்தியைப் பெற்றவராதலால் அவருடைய திருவடிகள் பட்ட இடங்களில் எல்லாம் த்ரயம்பக சக்திகள் மலர்ந்தன. வாடிய பயிர்கள் கூட நீரோட்டம் பெற்றாற்போல் பசுமை கொண்டன.. த்ரயம்பகேஸ்வேர சித்புருஷர் அடக்கம் காரணமாக தம்முடைய லட்சியம் நிறைவேறவில்லையே என்று எண்ணினால் கூட இறைவன் அவரையும் அறியாமலேயே அவருடைய லட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டுதான் இருந்தான் என்பது தேவலோகத்திலேயே, சித்த லோகத்திலேயே பலரும் அறிந்திராத பெரும் இறை ரகசியமாக விளங்கிற்று. ஏனென்றால் அவர் மூலம் பிரபஞ்சத்தில் த்ரயம்பக சக்தியைப் பரப்பிடுதல் வேண்டும் என்பதும் இறைச் சங்கல்பம் தானே!

அவர்தம் இறைலட்சியப் பணியை நாமறிவோம் தானே! எந்த இடத்தில் சாசுவதமான, நிலையான செல்வத்தையோ, கல்வியையோ, வீரத்தையோ பெற்றிட முடியும் என்று உணர்தல் தானே? இதுவே லௌகீகமாக பூலோக ஜீவன்களுடைய நல்வாழ்விற்காக அவர் மேற்கொண்ட தியாக இறை லட்சிய வாழ்க்கையாகும். ஆனால் ஓர் இறை ரகசியத்தை அறிய வேண்டுமென்றால் அதற்கு உரித்தான ஜப, தப, யோக பலாபலன்களையும் சகல ஜீவன்களுக்கும் அர்ப்பணித்தாக வேண்டும். ஒவ்வொரு வினாடியும் நாம் உயிர் வாழ்வது ஏதோ ஒரு புண்ய சக்தியால் தான்! புண்ய சக்திகள் குறையக் குறையத்தான் நம்முடைய மனக் கவலைகள், நோய்கள், சந்ததியிழப்பு, திருட்டு, நஷ்டம், விபத்து, ஏமாறுதல் போன்ற அனைத்துவிதமான துன்பங்களும் ஏற்படுகின்றன! சித்புருஷர்களோ தமக்கென்று ஒன்றையும் வைத்திராது அனைத்தையும் ஜீவன்களுடைய நல்வாழ்விற்காக அர்ப்பணிப்பதால் ஜீவன்களுடைய கஷ்டங்களைத் தாமே ஏற்று அவர்கள் பலவிதமான துன்பங்களை இப்பூவுலகில் தாங்கி அனுபவிக்க வேண்டியதாகின்றது.. ஸ்ரீஇடியாப்ப ஈச சித்த சுவாமிகள், ஸ்ரீபரமாச்சாரியார், ஸ்ரீவள்ளலார் சுவாமிகள், ஸ்ரீபட்டினத்தார் சுவாமிகள், ஸ்ரீஅருணகிரிநாதர், ஸ்ரீபூண்டி மகான், ஸ்ரீவிட்டோபா சுவாமிகள் போன்ற சித்புருஷர்களும், மகான்களும் பலவிதமான துன்பங்களையும், கொடியவர்களுடைய தாக்குதல்களையும் தாங்க வேண்டியதாயிற்று!

த்ரயம்பகேஸ்வர சித்புருஷரால் பிரபஞ்சத்தில் அனைத்து சுயம்பு மூர்த்திகளையும் தரிசிக்க முடிந்தது சுயம்பு லிங்க மூர்த்திகளிடம் உரையாட முடிந்ததென்றால் அவருடைய தபோ பலன்கள் தாம் என்னே! இதுவும் எவருக்கும் கிட்டாத பெறுதற்கரிய பாக்யமாகும். ‘த்ரயம்பகேஸ்வரா, எம்மை அறியும் இறைப் பணியை இன்னொருவருக்குத்தான் அளித்துள்ளோம், நீ உன் யோக மார்க்கத்தில் தொடர்வாயாக என்று உரைத்துச் சுயம்பு மூர்த்திகளே மனமுவந்து அருள்வழியைக் காட்டுகின்ற பாக்யத்தைப் பெற்றவரென்றால் த்ரயம்பகேஸ்வர சித்புருஷரின் யோக, தவத் திறன்களை எவரால்தான் வடித்திடத்தான் இயலும்?

ஜீவாலயத் தோற்றம்! இவ்வாறு பிரபஞ்சமெங்கும் சஞ்சரித்து இறுதியில் த்ரைலோக்கித் தலத்தை வந்தடைந்தார் த்ரயம்பகேஸ்வர சித்தர் பெருமான்! மகரிஷிகளுக்கும், சித்புருஷர்களுக்கும், ஜீவன் முக்தர்களுக்கும் ஆயுள் முடிவு என்ற ஒன்று கிடையாது.. ஏனென்றால் அவர்களு எங்கும் (என்றும்) வாழும் ஏகாந்த ஜோதியாக சிரஞ்சீவி இறைத் தூதுவர்களாகப் பிரகாசிப்பவர்கள். ஆனால் அவர்கள் இறை ஆணையாக எடுக்கின்ற பூத உடலுக்கு சட்டையை உரிப்பது போல இந்த பூத உடல் சஞ்சாரத்திற்கான ஒரு முடிவை இறையருளால் பெறுகின்றார்கள். அவர்கள் எந்த பூத உடலைத் தரித்து யோக அடக்கம் பெற்று ஜோதிப் பிரகாசமாகின்றார்களோ அந்த பூத உடல் பஞ்ச பூதங்களுடன் ஐக்கியமாகின்ற இடத்திற்குத்தான் ஜீவசமாதி, ஜீவாலயம் என்று பெயர். இவ்வகையில் தோன்றியவைதாம் பூண்டி ஸ்ரீ ஆற்று மகான் சமாதி, காஞ்சீபுரம் ஸ்ரீபோடா சித்த (சிவ சுவாமி) ஜீவ சமாதி, தேனி மலை ஸ்ரீபெருமானந்த சித்தர் சுவாமிகளின் ஜீவாலயங்களாகும்.

அற்புத ஹடவாக்னி யோகம்! இவ்வகையில் த்ரையம்பகேஸ்வர சித்தர் பெருமான் தம்முடைய பூத உடலை உகுக்கத் தக்க நேரம் வந்ததை உணர்ந்து ஸ்ரீபுர ஹடவாக்னி யோக முறையில் திருலோக்கியில் வந்தமர்ந்தார். எப்போதும் ஒரு வினாடி நேரம் கூட ஓரிடத்தில் அவருடல் தங்காமையால் ஸ்ரீபுர ஹடவாக்னி யோக முறையில் இங்கு அவர் தம் யோகம்பாரி(லி)க்கும் உடலை அமர்விக்க வேண்டியதாயிற்று. ஏனென்றால் பல்லாயிரம் பூமிக் கோளங்களை நிறுத்தி வைத்தால் என்ன எடை இருக்குமோ அந்த எடையைக் கொண்டவராய் அவருடைய பூத உடல் ஆயிற்று. எத்தனையோ கோடி யுக சஞ்சாரத்திற்குப் பின் ஓரிடத்தில் ஸ்ரீபுரஹட வாக்னி யோக முறையில் அமர்ந்தால் அந்த பூத உடலின் மகிமையையோ, எடையையோ என்னவென்று சொல்ல முடியும்? பூமாதேவியாலேயே அவருடைய எடையைத் தாங்க முடியாமற் போயிற்று.. ஸ்ரீலக்ஷ்மி கடாட்சம் நிறைந்த தலமாகையால் ஸ்ரீபுரம் என்பதாக, திருமகளே சாசுவதமாகத் திருமாலுடன் உறைகின்ற தலமாதலின் இதுவே பிரபஞ்சத்தில் அவர் தேடிய மகத்தான இடம் என்பதை உணர்ந்தார்! எவ்விடத்திலு கிட்டாத இத்தகைய உத்தம அக்னி யோக நிலைகள் மற்றும் ஆகர்ஷண யோக மாற்றங்கள் த்ரைலோக்கியில் ஏற்படுவதை உணர்ந்து அதிசயித்த த்ரயம்பகேஸ்வர சித்தர் பெருமான் தாம் தேடி வந்ததற்கான தெய்வீக விடை இத்தலத்தில் கிட்டியது கண்டு பரமானந்தம் கொண்டார்! எப்போது இந்த தேவ உண்மையை, அவர் உணர்ந்தாரோ அதே வினாடி அவருடைய பூத உடல் ஜோதி மயமானது! இவ்வாறாக ஸ்ரீமகள் திருமாலின் நெஞ்சில் உறைந்ததும், த்ரயம்பகேஸ்வர சித்தர் பெருமான் பரமானந்த நிலை கொண்டதும் விஷ்ணுபதி காலத்தில் தான்! சாசுவதமான பல உத்தம நிலைகளையும், லௌகீகமாக நல்வரங்களையும், நற்பொருட்களையும் தருகின்ற திருத்தலமே த்ரைலோக்கி என்பதே உலகிற்கு இவ்வாறாக உணர்வித்தவரே ஸ்ரீத்ரயம்பகேஸ்வர சித்தர் பெருமானாவார். அவர் என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாய் அருட் ஜோதி மழை பொழிகின்ற இடத்தில்தான் தேவாதி தேவர்களும் தாங்கள் இழந்த பல தேவ நிலைகளுக்கும் பரிகார, பிராயச்சித்த முறைகளைச் செய்து சாசுவதமான நிலைகளைப் பெற்றனர். எனவே த்ரையம்பகேஸ்வரரை ஜோதி பூர்வமாக இங்க் அமர்வித்துத்தான் ஸ்ரீசர்வேஸ்வரன் பல சாசுவதமான  நிலைகளைத் தரக் கூடிய அதியற்புதமான ஷேத்திரமே திருலோக்கி எனப்படும் த்ரைலோக்கி என்பதைப் பிரபஞ்சத்திற்கே உணர்த்திட்டான்!

திருமாலே ஸ்ரீக்ஷீராப்தி சயனப் பெருமாளாகத் திருமகளுகுக் காட்சி அளித்து, “லட்சுமி! நீ பெற்ற சாசுவத நிலை என்றென்றும் நிலைத்திட இங்கு நீ ஸ்ரீக்ஷீரநாயகியாகக் கோலங்கொண்டு ஆற்ற வேண்டிய யோக நிலைகளை எம் அடியான் த்ரயம்பகேஸ்வரன் உரைத்திடுவான்”, என்று கூறிடவே இத்னால் த்ரயம்பகேஸ்வர சித்தருடைய பெருமை பிரபஞ்சமெங்கும் பரவியது! சித்தர் பெருமான் ஜோதி மயமாய் ஹடவாக்னி யோகம் பூண்ட திருலோக்கி வந்து த்ரயம்பகேஸ்வர சித்தர் உரைத்த ஸ்ரீமார்க்க யோகம் பூண்டு ஸ்ரீக்ஷீராப்தி நாதனை பூஜிக்கத் தொடங்கினாள். லட்சுமி வேண்டிய வரம் யாதோ! தாம் சாசுவதமாக, நிரந்தரமாக இறைவனுடைய திருமார்பில் உறைந்திட வேண்டு மென்பதுதானே! எனவே சாசுவத நிலைகளைப் பெற்றுத் தருவது திருலோக்கித் தலம் தானே!

விஷ்ணுபதி பூஜா பலன்கள் : 12.2.2001 நள்ளிரவு 1.30 மணி முதல் 13.2.2001 காலை 10.30 மணி வரை அமைகின்ற இந்த விஷ்ணுபதி புண்ய காலத்தில் சுதை மூர்த்தியாக விளங்குகின்ற திருலோக்கி ஸ்ரீக்ஷீரசாகர நாராயணப் பெருமாளுக்கு சாம்பிராணி தைலம் சார்த்தி, புஷ்பங்களால் அலங்கரித்து, நிறைந்த அடர்த்தியான சாம்பிராணி தூபமிட்டு, சர்க்கரைப்  பொங்கல், புளியோதரை மற்றும் பால் சம்பந்தப்பட்ட உணவு பண்டங்களை படைத்து, இங்கு ஹோமம், தர்ப்பண வழிபாடுகளைச் செய்து ஏழைகளுக்கு அன்னதானம் அளித்து வருதலால் கீழ்க்கண்ட பலா பலன்களையும் பெற்றிடலாம்.

1. பல ஆண்டுகளாக ஒரே வியாபாரத்தில் இருந்தும் எத்தகைய முன்னேற்றத்தையும் பெறாதோர், நன்முறையிலே வியாபார அபிவிருத்திக்கு தக்க நல்வழி காட்டப்படுவர்.

2. முப்பத்து முக்கோடி தேவர்களும், பித்ருக்களும் எப்போதும் வழிபடுகின்ற தலமாதலால், இதுவரை வாழ்க்கையிலே முறையாகத் தர்ப்பணத்தைச் செய்யாதவர்கள், லக்ஷ்மி தீர்த்தக் கரையிலே நன்முறையாகத் தர்ப்பணம் இட்டுவந்தால், இதுவரை செய்யாத தர்ப்பணங்களுக்கு ஓரளவு பிராயச்சித்தம் கிட்டும். பித்ரு சாபங்கள் தணிந்து சந்ததி விருத்தியாகும்..

3. திருமகள் நிலைநின்ற இடமாதலால், பணம், சொத்து, வியாபாரத்தை இழந்தவர்கள் நன்முறையிலே மீட்பதற்கு விஷ்ணுபதி வழிபாடு உதவுகின்றது.

4. உறக்கம் என்பது மனிதனுக்கு மிகவும் இன்றியமையாதது, ஆனால் பலவிதமான மன வருத்தங்களாலும், கஷ்டங்களாலும், உறக்கமின்றி அவஸ்தைப் படுவோரும், உறங்கினால் விபரீதக் கனவுகள் ஏற்பட்டு உறக்கத்தில் கூட மனநிம்மதியை இழந்திருப்போரும், இவ்வாலயத்திற்கு அடிக்கடி வந்து அடிப்பிரதட்சிணம் செய்து வந்தால், நன்முறையிலான உறக்கத்தைப் பெற்று, நல் ஆரோக்கியத்தையும் பெறுவர்.

5. கைக் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுதல் என்பது ஒவ்வொரு தாய்க்கும் அமைகிற மகத்தான தெய்வீகக் கடமையாகும். ஆனால் தற்காலத்தில் அழகு, நாகரீகம் காரணமாக செயற்கையாகவே தாய்ப்பாலை மரக்கடிக்கச் செய்கின்றார்கள் இது மிகவும் பாவகரமான செயலாகும்.. இதற்குப் பிராயச்சித்தமாக விஷ்ணுபதிப் புண்யகாலத்தில் க்ஷீரம் எனப்படும் பாலுக்கு உகந்த நாளாகிய வெள்ளை நிறத்திற்கு உரித்தான சந்திர பகவானுக்குக்கான திங்கள் கிழமை தோறும், பால் தானம் செய்து வருதலும், சந்ததிகள் ஆரோக்யம் பெற வழிகோலும், பிரசவமான ஏழைப் பெண்மணிகளுக்கு தாய்ப் பால் சுரப்பதற்கான நல்ல ஆரோக்கியமான, சத்துள்ள பால் பழங்கள், தானியங்கள், உணவுப் பண்டங்களை தானமாக அளித்தலானது குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் வளர்வதற்கு விஷ்ணுபதி பூஜா பலன்கள் மிகவும் உதவுகின்றன.

இவ்வாறாக விஷ்ணுபதி பூஜாபலன்கள் நம் வாழ்க்கையில் ஏற்படுகின்ற பலவிதமான துன்பங்களுக்கு எளிமையான முறையிலே தீர்வைப் பெற்றுத் தருவதால் இந்த விஷ்ணுபதி புண்ய காலத்தை அனைத்து வைணவத் தலங்களிலும் சிறப்புடன் கொண்டாடிட பக்த கோடிகள் முன்வருதல் வேண்டும்.

அமுத தாரைகள்

1. அட்சய தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீகிருஷ்ணன் பெற்றதே அட்சய பாத்திரம்!

மகாபாரதத்தில் திரௌபதிக்கு ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அளித்த எடுக்க எடுக்க அன்னம் குறையாத அட்சய பாத்திரத்தை ஸ்ரீகிருஷ்ணன் பெற்ற இடமே (கும்பகோணம் அருகே உள்ள) திருமாந்துறை அட்சய தீர்த்தமாகும்! ஈஸ்வரி பசுவாகவும், ஸ்ரீகிருஷ்ணன் ஸ்ரீராஜ(வேணு) கோபாலனாக ஆநிரைக் காவற் கடவுளாக பூலோகம் வந்த போது திருமாந்துறை  அட்சய தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீஅட்சய லிங்கேஸ்வர மூர்த்தியிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்றார். கோமல் திருத்தலத்தில் ஸ்ரீஅன்னபூரணியாய் ஸ்ரீபார்வதி தேவி இதில் அன்னம்பாலித்திடவே அன்றிலிருந்து இதில் அன்னம் பொங்குவதாயிற்று! தம் பணியானவுடன் அட்சய பாத்திரம் இத்தீர்த்தத்தில் வந்து சேர்ந்திடும்! இவ்வாலயத்தில் சிவராத்திரியன்று ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணனை வழிபடுதலால் அன்ன துவேஷங்கள் நீங்கிடும்.!

ஸ்ரீகுங்கும சௌந்தரி அம்மன் பூவாளூர்

2. பால மும்மூர்த்திகளும், அனுசூயா தேவியும் – அட்டைப் பட விளக்கம்

அத்ரி மகரிஷியின் பத்னி தேவியான அனுசூயா தேவி உத்தம மகரிஷிகளின் தவ யோகங்களில் சிறப்புடையவர்.. மும்மூர்த்திகளேத் தம் இல்லம் தேடி வந்த இறைப் பெருமையைக் கொண்டிருந்தாலும் அடக்கத்துடன் இறை லீலையாக ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீசிவமூர்த்திகளைக் குழந்தைகளின் வடிவில் பரிபாலிக்கும் அற்புத பாக்கியத்தைப் பெற்றவர். குழந்தைகளைப் பேணி வளர்த்தல் என்பது வாழ்க்கையில் பெறுதற்கரிய பாக்கியமாம். இதனை பால சோபித யாகம் என்றும், பால சீருஷ யோகம் என்றும், பாலாங்க்ருத தவம் என்றும் சித்புருஷர்கள் குறிப்பிடுகின்றனர். ஒவ்வொரு இல்லறப் பெண்மணியும் இந்த மூன்றுவித யாக, யோக, தவ சீலங்களைப் பெற்றால்தான் கற்பில் சிறந்து உத்தம, புனித தேவ நிலைகளைப் பெற முடியும். இதற்கு பால மூர்த்திகளைப் பரிபாலிக்கும் ஆசிகளை ஒவ்வொரு இல்லறப் பெண்மணியும் பெற்றிடவே முன் வகிடு, நெற்றி, மாங்கல்யம் மூன்றிலும் ஸ்ரீஅனுசூயா தேவியைப் பிரார்த்தனை செய்து பூவாளுர் ஸ்ரீகுங்கும சௌந்தரியை வணங்கி இட்டிட வேண்டும்.

3. கடன் தொல்லை நீங்கிட .. கொடுத்த கடனைத் திரும்பப் பெற்றிட...

பலரும் கடன் சுமைகளால் கஷ்டப்படுகிறேன் நிதி நிறுவனங்களில் போட்டு ஏமாந்து விட்டேன் என்று சொல்கின்றார்கள். இதற்குக் காரணம் என்ன? பூர்வ ஜென்மங்களில் பிறரிடம் வாங்கிய கடன் தொகையை நாணயமாகத் திருப்பிச் செலுத்தாது ஏமாற்றியவர்கள் தாம் இந்த ஜென்மத்திலே கடனுக்கு ஆளாகி வேதனைகளுக்கு உள்ளாகின்றார்கள். மேலும் தனக்கு உரிமையில்லாத பணத்தைத் தன்னுடைய சுகபோகங்களுக்காகப் பயன்படுத்தும் போது இவையே கடன் சுமைகளாக அடுத்த ஜென்மத்தில் வந்து சேருகின்றன.. எனவே அளவுகு மீறிய கடன் சுமைகளால் வருந்துவோர் இவையாவும் தம்முடைய பூர்வ ஜென்மக் கர்மவினைகளே என்று உணர்ந்து தெளிந்து இவற்றிற்கு உரித்தான பரிகார முறைகளைச் செய்தாக வேண்டும்..

இறைவன் ஆயிரமாயிரம் சுயம்பு மூர்த்திகளாகப் பாரதம் எங்கும் விரிந்து, பரந்து, நிறைந்து, அருள்பாலித்துக் கொண்டு இருக்கின்றானே, எதற்கு? கலியுகத்தில் மனித சமுதாயத்தில் ஆயிரக்கணக்கான துன்பங்கள் சூழும், பக்தியும், ஆழ்ந்த நம்பிக்கையும் குறைவதல் வாழ்வில் மனக் கொந்தளிப்புகள் கூடும் என்பதை உணர்ந்து தெளிந்தே மகரிஷிகளும், சித்தர்களும் துயர் துடைப்பு, மனச் சாந்தி, அறவழிகளுக்காக சுயம்பு லிங்க மூர்த்திகளை ஜோதிப் பிரகாசம் போல் வெளி கொணர்ந்து நமது வழிபாட்டிற்காக ஆலயங்களில் அமைத்துத் தந்திருக்கின்றார்கள்.!  இவ்வகையில் மிகுந்த கடன் சுமையால் வருந்துவோரும், கொடுத்த கடன் திரும்பி வராமல் வேதனைக்குள்ளாவோரும் தம்முடைய சொத்துக்களையெல்லாம் பறிகொடுத்துப் பரிதவிப்போரும் எவ்வாறு தீர்வு பெறுவது? திருச்சியருகே உள்ள திருநெடுங்கள நாதருக்கும், காரைக்குடி கொப்புடை நாயகிக்கும் நேர்த்தி  செய்து, இங்கு சிவலிங்கத்திற்கு மாதுளம்பழ முத்துக்களால் முழுமையான காப்பு சார்த்தி அன்னதானம் செய்து வந்தால் நன்முறையில் கடன் சுமைகள் தீர்க்கப் பெறுவர், நன்முறையில் கடனும் வசூலாகும். இழந்தச் சொத்துக்களையும் மீண்டும் முறையாகப் பெறுவர். இவர்கள் ஆழ்ந்த நம்பிக்கையுடன் திருஞானசம்பந்தர் அருளிய இடர்களையும் திருநெடுங்களப் பதிகத்தை முறையாகக் காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் தொடர்ந்து மனமுருகி ஓதி வருதல் வேண்டும். எத்தகைய துன்பங்களையும் களைவதற்காகத் திருஞானசம்பந்தர் கலியுகக் கடன் நிவாரண சஞ்சீவி மருந்தாக இந்தப் பதிகத்தை நமக்குத் தந்துள்ளார். எனவே இனியேனும் கடன் கொடுத்தலிலும் வாங்குதலிலும் அவற்றிற்கு உரித்தான சரியான நாட்களை கணித்துப் பயன்படுத்தி நன்மை அடைந்திடுங்கள்..!

சீர்காழி அருகே உள்ள திருநின்றியூரில் ஸ்ரீலக்ஷ்மிபுரீஸ்வரராக அருள்பாலிக்கும் சிவலிங்க மூர்த்திக்கு வெள்ளி தோறும் மாதுளம்பழக் காப்பு சார்த்தி அன்னதானம் செய்து வந்தால் கொடுத்த கடன்கள் நன்முறையில் திரும்பி வரும். நிதி நிறுவனங்களில் சிக்குண்ட முறையான பணமும் திரும்பி வர நல்வழிகள் கிட்டும். தொடர்ந்து நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள்.!

4. நீரில் நனையும் பணமா? சில சமயங்களில் மறதியாலும் கவனக் குறைவாலும், சட்டை, பேண்ட், பையில் பணம் வைத்திருந்து அதோடு துணியை நனைத்துத் தோய்த்து விடுவார்கள். பிறகு நனைத்த நோட்டைப் பிரித்துக் காய வைத்துப் பயன்படுத்துவார்கள். இதிலும் கூடச் சில தாத்பர்யங்கள் உண்டு. எந்தப் பணத்திற்கு நீரோட்ட சக்தி குறைந்து விட்டதோ அந்தப் பணத்திற்குத்தான் இந்த நீரோட்ட விளைவுப் பாதம் நடைபெறும். நீரில் பணம் நனையும் வினை எந்தக் குடும்பத்தில் நிகழ்கின்றதோ அவர்கள் நீர் சம்பந்தப் பரலாகிய கர்ம வினைகளைப் பெற்றிருக்கின்றார்கள் என்பது இதன் பொருள்.. அதனை அதாவது நீர் சம்பந்த வினைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதாகும்.. எவ்வாறு பிள்ளையார் எறும்பு வீட்டினுள் கூடினால் உடனே மோதகம், கொழுக்கட்டை செய்து நைவேத்யம் செய்து இது குறித்துக் காட்டும் கர்மவினைக்கு நிவர்த்தி பெறுகின்றார்களோ அதே போல கவனக் குறைவாலோ மறதியாலோ நீரால் பணம் நனைக்கப்பட்டால் எந்த அளவிற்குப் பணமானது நனைக்கப்படுகின்றதோ உதாரணமாக ரூ100, ரூ50 ,  நோட்டுகள் நனைந்தால் அந்த அளவிற்கு நீர்மோர், பழரசம் போன்ற நீர் வகைகளைத் தானமாக செய்திடல் வேண்டும். மேலும் அவ்விடத்தில் நீரோட்டக் கர்ம வினைகள் நிறைந்திருப்பதால் உடனடியாக கும்பத்தில் புனித நீர் வைத்து வாஸ்து பூஜைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும்.. ஹோமம் நிகழ்த்தி மாவிலைகளால் கும்ப தீர்த்தத்தை இல்லம் முழுதும் தெளித்தல் வேண்டும்!

5. கர்ம வினை பாக்கி! தீர்க்க வேண்டிய அல்லது தீர வேண்டிய கர்ம வினைகளைப் பாக்கி என்றும் சொல்வதுண்டு. நம் சிவகுருமங்கள கந்தர்வா  ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப சித்த ஈச சுவாமிகள் கூட “பாக்கி இருந்தாத் தாண்டா யாரும் யாரோடயும் பேச முடியும், அக்கம்பக்கத்தில் குடியிருக்க முடியும், பஸ், ரெயிலில் அருகில்/எதிரில் உட்கார்ந்து  பேச முடியும்!“ என்று அடிக்கடி குறிப்பிடுவார். அதாவது நீங்கள் பஸ்ஸிலோ, ரெயிலிலோ பயணம் செய்யும் போது அருகில் அமரக் கூடிய பயணிகள் கூட ஏதோ பூர்வ ஜென்ம பாக்கி இருப்பதால்தான் அருகில் வந்து அமர்ந்து பேசி ஒரு மணி நேரமோ அல்லது ஐந்து மணி நேரமோ அந்தப் பிரயாண நேரத்தில் பேசி பாக்கியைத் தீர்த்துக் கொண்டு செல்கின்றார்கள் என்று உணர்ந்திடுக! அலுவலகத்திலிருந்து ஒரு சிறு குண்டூசியை எடுத்து வந்தால் கூட அதுவும் தீராத பாக்கியாகி விடும்! ஓசியில் பிறர் வண்டியில் தொற்றிக் கொண்டு சென்றால் கூட அதுவும் கர்ம வினை பாக்கியே! எனவே cosmic consciousness ஏற்படுவர்தற்கு முன் karmic consciousness அதாவது கர்மம் சேரா வகையில் (இதுவே பாக்கி) எனப்படுவது மிகுந்த கவனத்துடன் வாழ வேண்டும்.

6. நீர்க் கடன் தீர்க்கும் எளிய தினசரி வாஸ்து பூஜை! எந்தக் குடும்பத்தில் நீர்க்குடம்/தவலை /வாளி தவறி விழுந்தும் பைப் உடைந்து ஒழுகி நீர் வீணாகின்றதோ அங்கு ஜலம் சம்பந்தப்பட்ட தோஷ விளைவுகள், நீர்க் கடனாகவும், தர்ப்பணம் முறையாக அளிக்காமையால் பித்ரு சாபங்களாகவும் சேர்ந்து விட்டன என்று புரிந்து கொள்ளுங்கள்! எனவே நீர் வீணாகி நீர்க் குற்றம் பெற்றோர் அன்றிலிருந்து குறைந்தது ஒரு மண்டலத்திற்காவது (48 நாட்கள்) தலைவாசற்படி, நிலை வாசற் கதவுகளுக்குக் காலையிலும், மாலையிலும் தினந்தோறும் செங்காவி, மஞ்சளிட்டு, கோலமிட்டு வாசற்படியைத் தொட்டு வணங்கி வாஸ்து பூஜையைக் கடைபிடிக்க வேண்டும். வாஸ்து பூஜை நாட்களில் மட்டும்தான் ஸ்ரீவாஸ்து பூஜையை மேற்கொள்ள வேண்டும் என்பது கிடையாது. வாஸ்து பகவான் எப்போதுமே யோக சயனத்தில் திளைத்திருப்பதால் தினசரி வாஸ்து பூஜையாகத் தலைவாசல், நிலை வாசற்படிகளுக்குச் சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு வழிபடுதல் வேண்டும்., நீரோட்ட சக்தி நிறைந்துள்ள தலங்களில் (திருஆனைக் கோயில், தென்குடித் திட்டை, திருச்செங்கோடு) நல்ல இறைத் திருப்பணிகளாக ஆலயத்தை நீர் விட்டுக் கழுவி, செங்காவி, கோலமிட்டு நீர்க் கொழுக்கட்டை தானமாக அளித்திட இல்லத்தில் ஏற்பட்டுள்ள பலவிதமான பணம் மற்றும் நீர் தோஷங்களுக்கும் நிவர்த்தியைப் பெற்றுத் தரும். ஏதோ கவனக் குறைவு, மறதி என்று நாம் நினைக்கின்ற சிலகாரியங்கள் கூட எவ்வகையிலே நமக்கு கர்ம தோஷ நிவாரணத்திற்கு நல்வழி காட்டுகின்றன என்பதை உணர்ந்திடுங்கள்! நீர்க் கடன் தீர்ந்தால்தான் பல நிலைக் கடன்கள் தீரும்! பணக் கடனும் ஒரு வகை ருண பாக்கியே!

7. பணத்தில் படியும் கர்மப் படிமங்கள்! நீங்கள் ஒருவரிடம் 100 ரூபாயோ 1000 ரூபாயோ கைமாற்றாகப் பெறுகின்றீர்கள் என்றால் அதனை நீங்கள் நன்முறையில் பயன்படுத்துவதாக இருக்க வேண்டும். உங்களுடைய முறையான உடனடித் தேவைகளைத் தீர்ப்பதற்குக் கடன் வாங்குவதில் தவறில்லை. உங்களிடம் வருகின்ற ஒவ்வொரு ஐந்து ரூபாய், பத்து ரூபாய், நூறு ரூபாய் நோட்டும் அதனுடன் எக்கச்சக்கமான கர்ம வினைப் படிமங்களைத் தாங்கி வருகின்றது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்! மது அருந்துவதற்காக வாங்கப்பட்ட பணம், முறையற்ற காமத் தீயச் செயல்களுக்காக ஆகி வந்த பணம், நன்முறையிலே பூ, கற்பூரம், தேங்காய், பழம், குங்குமம் வாங்குவதற்காக வந்த பணம் என்று ஒரு பண நோட்டில் அனைத்துவிதமான கர்மப் படிமங்களும் புண்ய சக்தியும் நிறைந்து இருப்பதால்தான் எதையும் வாங்குவதற்கு முன்னால் குறைந்தது பன்னிரெண்டு முறையாவது ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஓதிப் பணத்தை பெறுதல் வேண்டும்.. இது பணத்தின் நல்ல சக்திகளை கிரகிக்க உதவும், தீயவற்றை ஒதுக்க நல்வழி காட்டும்.

8. பணத்தில் தன தான்ய ரேகைகள் படியட்டும்!

பணத்தை வாங்கியவுடன் சில்லறையாகவோ / சம்பளமாகவோ, வங்கி செக்காகவோ எப்படி வாங்கினாலும் சரி டக்கென்று வாங்கி பையிலோ பர்ஸிலோ செருகி விடாதீர்கள். கையில் வைத்துக் கொண்டு, உள்ளங்கையில் உள்ள தன தான்ய ரேகைகள் அதில் படுமாறு நன்கு அழுத்திக் குறிப்பிட்ட சில மந்திரத் துதிகளையோ ஸ்ரீலட்சுமித் துதிகளையோ ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தையோ ஓதிப் பிறகு வைத்துக் கொள்ளுங்கள் அல்லது பயன்படுத்துங்கள். ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஓதிப் பணத்தை வாங்குதலும் கொடுத்தலும் மிகவும் விசேஷமானதாகும். ஸ்ரீகாயத்ரீ மந்திர சக்தியானது பணத்தில் உள்ள தீய கர்மவினைப் படிமங்கள் நம் உடலில் சேராதவாறு ரட்சையாகக் காக்கின்றது. அதே சமயத்தில் அந்தப் பணத்தில் நிறைந்திருக்கின்ற நல்வினைக் கர்மங்கள் நன்முறையில் ஆக்கம் செய்யப்பட்டு நல்ல வழியிலே அப்பணம் செல்வழிவதற்கான காரிய சித்தியும் அதில் கூடும். ஆனால் பணத்தின் கர்மவினைப் படிவைப் பொறுத்து இந்த கார்ய சித்தி முறை அமையும், பணம் வரும். திசை, கொடுப்பவரின் தன்மை / மனோ நிலை போன்றவற்றைப் பொறுத்துச் செலவு நிர்ணயம் அமைந்திருக்கின்றது!

9.  பூமியின் வடிவு என்ன? உருளும் உலக்கையே உலகம்!

பூமியின் வடிவு என்ன ? இதுபற்றி சித்புருஷர்கள் என்ன சொல்கிறார்கள்? உருளும் உலக்கையே உலகம் என்பது சித்தர்களின் பரிபாஷைப் பாடல்! இதனுடைய உட்பொருளாக நீங்கள் ஆயிரம் தெய்வீகத் தாத்பர்யங்களை உணரலாம். இந்த மூன்று வாத்தைகளைக் கொண்டு நீங்கள் யோக பூர்வமாக, தியானபூர்வமாக, மெய்ங்ஞான, விஞ்ஞானப் பூர்வமாக ஆராய்ந்திடுக. பூமியானது உருண்டை வடிவு இல்லை என அறிவீர்! உருளும் உலக்கை வடிவென உணர்வீர்! சித்தர்கள் ஏன் இதனைப் புரியாத பரிபாஷையில் நமக்கு அளிக்கிறார்கள்? பூமியின் வடிவு எது என ஏன் மனிதனுக்கு தெளிவாகச் சொல்லக் கூடாது? மனிதனுக்கு பகுத்தறிவு என ஒன்றை ஏன் இறைவன் படைத்தான்? இத்தகைய தேவ இரகசியங்களைப் பகுத்து உணரத் தானே!

10. “நாலென்ன நாளோ!”

  “நாளே சதுரம்
நாளில் சதுரம்
நாளும் சதுரம்“
- என்ற சித்தர்களுடைய மூன்று வரி பரிபாஷை வாஸ்து விதிகளின் படி நான்கு மூலைகளை உடைய பொருட்களை வாங்குவதற்கு சிறந்த நாள் அங்காரக சதுர்த்தி நாளாகும். நான்கு மூலைகளை உடைய வீடுகளைக் கட்ட சிறந்த நாளாக சதுர்த்தி திதி அமைகின்றது.. உதாரணமாக வீடு கட்டுவதற்கானக் கற்களைத் தேர்ந்தெடுக்கும் போது எத்தனை சதுரத்திற்கு எத்தனைக் கற்கள் என்று சதுரக் கணக்கிடுவதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.. எனவே சதுரத்திற்கும், நில, புல, வீடு அம்சங்களுக்கும் நிறையத் தொடர்புண்டு..! மேலும் செவ்வாய் பகவான் தான் ஒருவருடைய வீட்டு நிலபுல அம்சங்களுக்கு உரித்தான நல்வரங்களைத் தருபவர், ஆதலால் சதுரத்திற்கும், சதுர்த்தி திதிக்கும், செவ்வாய் மண்டலத்திற்கும் உள்ள தெய்வீகப் பிணைப்பை இதன் மூலம் இனியேனும் உணர்ந்திடுங்கள்.

பௌர்ணமி – 7.2.2001 புதன் மாலை 4.30 மணி முதல் 8.2.2001 வியாழன் பகல் 12.42 மணி வரை திருக்கணித பஞ்சாங்கப்படி பௌர்ணமி திதி அமைகிறது. கிரிவல நாள் – 7.2.2001

நித்ய கர்ம நிவாரணம்

1.2.2001 – மஞ்சள் நிற மலர்களால் சிவனை அர்ச்சித்தல் – மனக் குழப்பங்களை நிவர்த்தி செய்யும்.

2.2.2001 – வேடுவர்களுக்கு வஸ்திர தானம் – நீண்ட நாள் எதிர்பார்த்த காரியங்களில் வெற்றி பெற வாய்ப்புண்டு.

3.2.2001 – 21 பிள்ளையார் மூர்த்திகளுக்கு கீழ்த் துண்டும், மேல் துண்டும் சாற்றுதலால், தேடிப் போன பொருள் வீடு தேடி வரும்.

4.2.2001 – இன்று சுமங்கலிகளுக்கு மஞ்சள், பச்சை, நீல நிறங்களில் வஸ்திர தானம் – தங்கள் குழந்தைகள் விழிப்புடன் கல்வியில், தேர்வில் செயல்பட இந்த வஸ்திரதானப் புண்ய சக்தி உந்தி விடும்.

ஸ்ரீசாமவேதீஸ்வரர் திருமங்கலம்

5.2.2001 – சாமவேதம் ஓதுவோர்க்கு வஸ்திர தானம் – சிவபெருமான் சாமவேதீஸ்வரராக அருள்பாலிக்கும் இறை மூர்த்திக்குப் பாலாபிஷேகம் – வெள்ளை நிற ரசகுல்லா தானம் – உத்தியோகத்தின் துன்ப மாற்றம் இன்ப மாற்றமாய் மாறு.. (திருச்சி அருகே திருமங்கலம் ஆலயம்.)

6.2.2001 – பூமிநாதர், பூலோகநாதர், உலகநாதர் – அருள்பாலிக்கும் சிவன் கோயில்களில் பிரதோஷ விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி சுவாமி புறப்பாடு செய்து அன்னதானம் செய்திடில் வியாபாரத்தில் நல்ல மாற்றம் தெரியும்.

7.2.2001 – இன்று முன்னால் மூன்று முகமும், பின்னால் மூன்று முகமும் உள்ள ஆறுமுக முருகன் கோயிலில் அன்னதானமும், பால் தானமும், பழ தானமும், செய்திடில் கணவன் மனைவியின் ஒற்றுமை உறுதிபடும். சண்டை சச்சரவுகள் தீரும்.

8.2.2001 – இன்று வெங்காயம், சேனை போன்ற கிழங்கு வகை உணவுகளுடன் அன்னதானம் செய்தலால் அன்பு நிறைந்தவர்களால் தொழில் உதவி பெறலாம்.

9.2.2001 – முருகன் கோயிலில் திரைச்சீலையில் வேலோ, மயிலோ முருகன் படமிட்டு முருகனை மட்டும் ஆராதனை செய்யும் கோயில்களில் மாற்றுத் திரைச் சீலை அளித்தலால் அபாரமான அறிவாற்றல் ஏற்பட்டு வாழ்வில் முன்னேற உதவும்.

10.2.2001 – இன்று குடை தானம் – பணக் கஷ்ட நிவர்த்திக்கான நல்முயற்சிகள் மிகுந்த பலன்களைத் தேடித் தரும்.

11.2.2001 – இன்று ஐந்து விநாயகருக்குக் குறையாமல், மேல், கீழ் வஸ்திரங்கள் சார்த்தி கொழுக்கட்டை நைவேத்யம் தானமளித்தலால் பதுங்கியிருந்து தாக்குபவர்களிடமிருந்து விடுதலை பெறலாம்.

12.2.2001 – இன்று ராம பாணத்திற்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து புடலங்காய், முருங்கை கூடிய உணவினை அன்னதானம் செய்வதால், கோர்ட் வழக்குகள் நன்மையாய் முடியும்.

13.2.2001 – இன்று முருகன் கோயிலில் வேலுக்குத் தனியாக அபிஷேகம் செய்து  வேல் விருத்தம் படித்து அன்னதானம் செய்வதால் பங்காளிகளால் வரும் துன்பம் குறையும்.

14.2.2001 – ஓடுகின்ற நீரிலிருந்தோ, நீர்வீழ்ச்சியிலிருந்தோ 51 முதல் 101 குடம் வரை நீர் சுமந்து சிவனுக்கு அபிஷேகம் செய்வதால் எதிர்பாராத சம்பவம் நன்மையாக அமையும்.

ஸ்ரீபூலோகநாதர் திருச்சி

15.2.2001 – இன்று விளக்கில்லாக் கோயில்களில் மின்சார சம்பந்த Wiring, Pipeline, உதவியுடன் சுவாமிக்கு மின்விளக்கு அமைத்தலால் ஓடிப் போனவர்களால் ஏற்படும் துன்பம் உங்களைத் தாக்காது.

16.2.2001 – யாருக்காகவும் எக்காரணங் கொண்டும் Gurantor ஆகக் கையொப்பம் இடக் கூடாது.

17.2.2001 – வளர்ப்புப் பிராணிகளிடம் (pets) இன்று மிகமிக கவனமாக இருக்க வேண்டும்.

18.2.2001 – 75 வயதுக்குக் குறையாத பழைய சிலம்பாட்டக்காரர்கள் ஆரோக்கியமாக இருந்திட இவர்கட்கு வஸ்திர தானம், அன்னதானம் செய்தலால் வாழ்வில் வரும் பெரும் பிரச்சனைகள் எளிதாகும்.

19.2.2001 – இன்று கடம் வித்வான்களுக்குப் (புதியதாகப் பயிற்சிக்கு) புதிய கடம் இலவசமாக அளித்தலால் வீட்டில் ஏற்படும் பணத் தட்டுப்பாடு அகலும்.

20.2.2001 – இன்று தோல் கருவி வாங்கி இளம் கலைஞர்களுக்கு அளித்தலால் வெளியூர்ப் பயணம் நன்மையாய் முடியும்.

21.2.2001 – எங்கெல்லாம் வெட்டவெளியில் சிவலிங்கங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் அவர்தம் கைகளால் அபிஷேக, ஆராதனை நைவேத்யம் செய்து சிவசகஸ்ர நாமாவளி ஜபிப்போர்க்கு முக்கியப் பொருட்கள் வந்து சேரும்.

22.2.2001 – இன்று அம்மன்களுக்குப் பல வண்ணச் சித்தாடை சார்த்தி அன்னதானம் செய்தலால் எதிர்பாராத இடத்திலிருந்து திருமண வாய்ப்பு ஏற்படும்.

23.2.2001 – இன்று புறாக்களுக்கு கேழ்வரகு, கோதுமை அளித்தலால் நல்ல செய்திகள் இல்லம் தேடி வரும்.

24.2.2001 – இன்று அன்னதானம் செய்வோர்க்கு சவுக்கு விறகு தானமளித்தலால் தொழில் அபிவிருத்தி அடையும்.

25.2.2001 – தாடி உள்ள ஆட்டைத் தேர்ந்தெடுத்து மஞ்சள், குங்குமம், மாலை இட்டு பூஜித்து உணவு இட்டு வணங்கிடில், மெய்க்காவலர்கள் தமக்கு வரும் ஆபத்தினின்று விடுபடுவர்.

26.2.2001 – இன்று சண்டைக் கோழிகளை சண்டைக்கு விடாமல் இல்லத்தில் வைத்திருந்தால், பெருத்த பண நஷ்டத்திலிருந்து விடுபடலாம்.

27.2.2001 – இன்று காதலர்களுக்குள் அபிப்ராய பேதம் உருவாகும் நாள். ஆகவே மௌனமாய் இருத்தல் நலம் தரும்.

28.2.2001 – இன்று சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், வஸ்திர தானம், அன்னதானமிட்டு வணங்கிடில் மாங்கல்ய பலம் பெறுவர்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam