வாக்கில் தீயாக உறைபவரே ஸ்ரீவாத்யார் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

சித்தர்கள் தரும் மனத் தெளிவு

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களிடம் அடியார்கள் கேட்டுப் பெற்ற ஆத்ம விசாரத் தெளிவுகள்

சாதகர்:  குருதேவா! எல்லோருக்கும் சற்குரு உண்டா?

குரு: நிச்சயமாக உண்டு! புழு, பூச்சி, எறும்பு முதல் முதலை, யானை, மனிதன், தேவர் வரை எவ்வித வேறுபாடும் இன்றி யாவர்க்கும், யாவைக்குமாய் எல்லோருக்கும், சற்குரு உண்டு. ஆனால் மனிதன்தான் கலியுகத்தில் சற்குருவை முழு நம்பிக்கையுடன் நாடுவதில்லை! தேனீ, ஆடுகள், மாமரம் போன்ற ஏனைய தாவர, விலங்கின ஜீவன்கள் யாவும் குருகுல வாசத்தை நன்கு அறிந்து தம் வாழ்வில் கடைபிடிக்கின்றன!

சாதகர்: தங்களைப் போன்ற உத்தம தெய்வீக நிலையில் இருப்போர், ஒருவருக்கு இவர்தான் குரு என்று எடுத்துச் சொன்னால் போதுமே, பலரும் அவரை நாடி நல்ல உத்தம இறைநிலைகளை அடைந்திடலாமே!

குரு: அடியேன் மிக மிகச் சாதாரணமானவன்! சித்தர்களின் பாரம்பரியத்தில் உதித்த ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சற்குருவின் அருளுடன், என்றும் இறைவனின் அடிமையாக இருக்கப் பாடுபடும் எளிமையான ஒரு சாதகன்! சற்குருவின் மகிமையைப் பரப்பும் ஓர் எளிய ஆன்மீக‌ வழிகாட்டி! அடியேனுடைய சற்குரு உரைத்தவற்றைப் பலருக்கும் உய்த்துரைத்து வரும் எளியேன்! முதலில் இதைப் புரிந்து கொள்ளுங்கள்!

இந்தக் கலியுகத்தில் இவர்தான் உன் சற்குரு என்றால் நம்பிக்கையுடன் ஏற்பார் யார்? அப்படியே ஏற்றாலும், குறுகிய காலத்திலேயே அது வேண்டும், இது வேண்டும் என்று பிய்த்துப் பிடுங்கி விடுவார்கள்! உத்தம தெய்வீக நிலைகளைத் தர வல்ல சற்குருவை வெறும் வரம் தரும் மரமாக்கி, உலுக்கி எடுத்துத் துன்புறுத்தி, தங்களுடைய பிரச்னைகள் தீரவில்லை என்றால் அவரை வசை பாடி, உடனேயே அவரை விட்டு விட்டு வேறு எவரையாவது நாடிப் போவார்கள்! இதுதானப்பா கலியுகக் கோலம்! இதனால்தாம் துவாபர யுகம் வரை மக்களோடு மக்களாய் உலாவிய ஸ்ரீஅகஸ்தியர், ஸ்ரீவசிஷ்டர் போன்ற சித்தர்களும், மகரிஷிகளும், சற்குருமார்களும் கலியுலகில் வெளி வருவது கிடையாது. அவ்வாறு வந்திடினும் தம்மை வெளிக் காட்டிக் கொள்வது கிடையாது.

செல்வம் சேர வேண்டும், தங்களுடைய நோய்கள், கர்ம வினைகள், பாவங்கள், பணக் கஷ்டங்கள், தோஷங்கள் தீர வேண்டும் ‍இதுதானே பலரும் கலியுகத்தில் சற்குருவிடம் இருந்து எதிர்பார்ப்பது! தாம் செய்த பாவங்களுக்கு, கர்ம வினைகளுக்கு உரிய தண்டனைகளை மனப்பூர்வமாக‌ ஏற்று, பிராயச்சித்தங்களை முறையாகக் கடைபிடித்து இனியேனும் நல்வழியில் திருந்தி நடக்க உண்மையாக‌ முன் வருவோருக்குத்தாம் தெய்வீகக் கலங்கரை விளக்கே சற்குரு என்ற உண்மை புலப்படும்! இவ்வாறு சற்குருவை உணர்வோர் எத்தனை பேர்?

"இவர் தான் உன் குரு!" என்று சுட்டிக் காட்டினால்,

"அப்படியா! சற்குருவே நமஸ்காரம்! நன்கு ஆசீர்வாதம் செய்யுங்கள்!”' என்று பேசி ஒரு சின்னச் சல்யூட்டைச் செய்து சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கிச் செல்வது மட்டும் குரு - சிஷ்யர் பிணைப்பு ஆகாது!

"இவர்தாம் நம் மனித வாழ்வில் நம்மைக் கடைத்தேற்ற வந்திருப்பவர், இறை தரிசனத்தைப் பெற்றுத் தர வல்லவர், இவரை விட்டால் நம்முடைய பிறவிக் கடலைக் கடக்க உதவுவார் வேறு எவரும் இல்லை! எனவே நம் வாழ்விற்கு இவரே உத்தம வழிகாட்டி" என்ற எண்ணம் பரிபூரணம் ஆகும் போதுதான் சற்குருவானவர், சற்குருவாகக் கண்ணுக்குப் புலப்படுவார். அதுவரையில் சற்குரு தன்னை நாடி வருவோர்க்கு, மிகவும் சாதாரணமான ஆன்மீக நல்வழி காட்டியாகவே தன்னைக் காட்டிக் கொள்வார்!

சாதகர்: சற்குருவிற்கும், ஆன்மீக வழிகாட்டிக்கும் உள்ள வித்யாசங்கள்......

குரு:- சற்குருவே தன்னை குருவாக உணர்த்தும் காலம் வரும் வரை, தன்னை குருவாகப் பரிபூரணமாக எவரும் உணரும் வரை. தம் இறைச் சக்திகளை ஒருபோதும் வெளிக்காட்டாது, அவர் தம்மை எளிய ஆன்மீக வழிகாட்டியாகவே காட்டிக் கொள்வார். சிலருக்கு, ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு ஆன்மீக வழிகாட்டி ஏற்பட்டு, இறுதியில் அவருக்கு உரிய தக்க குருவை அடைந்திடும்படியும் இறைநியதி அமைந்திடலாம்.

வழிகாட்டி என்றால் கைகாட்டி மரம் போல், இந்தத் திசை இங்கு செல்லும் என்று அறிவிப்பதாகும்! கைகாட்டி காட்டும் வழியில் செல்வதும், செல்லாததும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது ஆகி விடுகின்றது அல்லவா! ஆனால் ஆழ்ந்த நம்பிக்கையை விருத்தி செய்து, குரு-சிஷ்ய உத்தம பந்த நிலை வந்து விட்டால், அந்நிலையில் குரு, செல் என்று சொன்னால் செல், நில் என்றால் நில், அவ்வளவுதான்! அங்கு எந்த option க்கும் குருகுலத்தில் வாய்ப்பில்லை, தேவையும் இல்லை! இதுவே முழு சரணாகதி! இதில்தான் சற்குருவின் தெய்வீகத் தன்மையைப் பரிபூரணமாக உணர முடியும்! எனவே சற்குருவை அடைந்த பின்னும் நாளுக்கு நாள் நம்பிக்கை கனிந்து கொண்டே வருதல் வேண்டும்.

அடிமை கண்ட ஆனந்தம்

(நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்)

ஒரு முறை .... திருஅண்ணாமலைக்கு நடையாத்திரையாகப் பெரியவருடன் சென்றான் சிறுவன்! நடைப் பயணம் என்றாலே கடுமையான வெயில் நேரம், நள்ளிரவு நேரம் தவிர மற்ற நேரங்களில்' முழுவதுமாக நடைதான்! எத்தனையோ புராணங்கள், சித்தர்கள், மகரிஷிகளைப் பெரியவர் தரிசித்த அனுபூதிப் படலங்கள்... பெரியவர் பரமானந்தத்துடன் விவரிக்க, விவரிக்க ... சிறுவனுக்கு நேரம் போவதே தெரியவில்லை... களைப்பும்: அண்டவில்லை! ஆனால் பெரியவர் மெளனமாகி விட்டால் அசதியும், களைப்பும், பசியும் மீண்டும் வந்து அண்டி விடும்!

பொருள் ஆனந்தம் இடையே புலன் ஆனந்தம் !

நடு இரவுப் பயணம் வேண்டாம்!

“நடுராத்திரி தாண்டா தீய சக்திகள் தலை தூக்கற நேரம்! அதுங்க கிட்ட சிக்கினா மீள்றது ரொம்ப ரொம்பக் கஷ்டம்! இதனாலத்தான் நடுராத்திரிப் பயணமே வச்சுக்கக் கூடாதுன்னு பெரியவங்க சொல்றதுண்டு! இது உண்மையே! வீடு தவிர வெளியில ராத்திரியில தங்கற இடத்தைப் பத்தியும் ரொம்பவும் ஜாக்கிரதையா இருக்கணும்! ஆனா வரப் போற காலத்துல ராத்திரி நேரத்துலதான் நிறைய பஸ், டிரெயின் எல்லாம் ஓடும்! பஸ்ஸோ, டிரெயினோ உள்ளே ஏறி உட்கார்ந்த உடனேயே தூங்கிக் கிட்டே பிரயாணம் பண்ற பழக்கம் நிறைய வந்துடும்! இது ரொம்பத் தப்பு! பயணம் செய்யறப்போ தூங்கவே கூடாது! அப்படித் தூங்கினா பக்கத்துல நல்லாத் தெரிஞ்சவங்க விழிச்சுக்கிட்டே இருந்து இறைநாமம் ஐபிச்சுக் கிட்டே வரணும்!”

“பிரயாணம் பண்றப்போ பகலோ, இரவோ முழுக்க முழுக்க நல்லா விழிச்சுக் கிட்டே மனசால பூஜை பண்ணிக் கிட்டே இருக்கணும்! ஏன்னா நடுராத்திரியில பயணம்னா தீய ஆவிகள், துர் சக்திகள் மூலமா, நிறையப் பிரச்னைகள் வரும்! மனசு, உடம்பு ரொம்ப வீக்கா இருக்கறவங்க இப்படி நடுராத்திரியில பயணம் பண்ணினா ரொம்ப சீக்கிரமா துர்சக்திகள்னால பாதிக்கப்படுவாங்க! ராத்திரிப் பயணம்னாலே தீய சக்திகள் ஆதிக்கம் நிறைய இருந்து தாக்கறதுனால ஒட்டு மொத்தமா இது சமுதாயத்தைத்தானே பாதிக்கும், என்ன பண்றது? மக்கள் புரிஞ்சுக்கணுமே!"

பாத யாத்திரையில் இரவில் .... ஒன்பது அல்லது பத்து மணி வாக்கில் ... பெரியவர் தேர்ந்தெடுக்கும் மண்டபத்தில் இருவரும் தங்குவார்கள்! சிறுவன் உறங்க, பெரியவர் விழித்திருக்க .... பெரியவர் உறங்க ... சிறுவன் விழித்திருக்க வேண்டும்! “விழிப்பு” நிலையில்தான் எவரும் பிரார்த்தனை, பூஜைகள் மூலம் தீய சக்திகள் அண்டாது காத்துக் கொள்ள முடியும் என்பதைப் புரிய வைக்கத்தான் பெரியவர் இவ்வாறு செய்து காட்டினார்!

மாலை மறைவில் மறைப் பாமாலை!

செஞ்சி வந்ததும் ... மாலை மறையும் நேரம்... பெரியவர் சற்றே நிதானித்தார். அக்காலத்தில் செஞ்சி ஆற்றில் நல் நீரோட்டம் இருந்தது. நல்ல குளிரில் சிறுவனை நீராட வைத்த பெரியவர் அவனுக்குப் பல அரிய மந்திரங்களைப் போதித்தார். ஆனால் மந்திரங்களை ஓதிட ஓதிட... சிறுவனுக்கு நன்கு பசி எடுக்க ஆரம்பித்தது!

“ஆமாண்டா வேதமும், தேவாரப் பாட்டும், மந்திரமும் சொல்லச் சொல்ல உடம்புல வேதாக்னி பெருகப் பெருக தானாவே பசி வந்துடும்! இந்த அக்னி ப்ரவாகம் முதுகுத் தண்டு வழியா கபாலத்துல போய்ச் சேரச் சேரத்தான் பிரகாசமான ஒளி வட்டம் (aura) பெருகும்! நல்ல தேஜஸ் வரும்! எதிர் காலத்தை அறியும் தீர்க தரிசனமும் கிட்டும்”

பேசிக் கொண்டே நடந்து வந்த பெரியவர் செஞ்சி - மேல் மலையனூர் சாலைச் சந்திப்பில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீமுனீஸ்வரர் சன்னதிக்குச் சிறுவனை அழைத்துச் சென்று வழிபடச் செய்தார்.

“இது வழியாப் போற எல்லா வாகனமும் இங்கே இறங்கி கும்பிட்டுப் போறது ரொம்ப நல்லதுடா கண்ணு! திருமயம் கோட்டை பைரவர், செங்கல்பட்டு ஸ்ரீசித்தி (பட்டு) விநாயகர் மாதிரி ரொம்பவும் சக்தி வாய்ந்த மூர்த்தி! முக்கியமா ராத்திரிப் பயணங்கள்ல நம்மைக் காப்பாத்தற ரொம்பவும் சக்தி வாய்ந்த ஆபத்சகாய மூர்த்தி!”

ஸ்ரீமுனீஸ்வரர் அருகில் ... அப்போது அங்கிருந்த ஒரு மண்டபத்தில் அமர்ந்த பெரியவர் சற்றும் களைப்புக் கொள்ளாது .செஞ்சி மலையின் தெய்வீகத் தன்மைகளை உடனேயே விவரிக்கத் தொடங்கினார். ஆனால் சிறுவனுக்கோ உலகப் பசி! மதியம் சாப்பிட்டது தானே! ஆனால் பெரியவரோ சற்றும் இதனைக் கண்டு கொள்ளவில்லை! அவர் சந்திர கிரி போன்ற செஞ்சி மலைகளின் தெய்வீக சக்திகளைப் பற்றிப் பொழியத் தொடங்கினார்.

தட்டினால் பிறக்கும் தாண்டவ மலை!

'சிவபெருமான் பிரபஞ்சத்தைப் படைக்கறதுக்கு முன்னாடி .... பிரபஞ்ச உற்பத்திக்குன்னு ஆகம சிருஷ்டிக் கணுக்களைப் படைக்க ஆரம்பிச்சார்! இதுக்குப் பசுபதி யோகம்னு பெயர்! பசுபதி யோக லீலை நடந்த இடம் அண்ணாமலையோட பசுபதி மலை தரிசனப் பகுதி! அருணாசல ஜோதி ஸ்வயம்பிரகாச தரிசனத்தையே ஆத்ம பூஜையா வச்சுக் கிட்டார் பசுபதி சுவாமி! இந்த ஜோதியைக் கண்ட பசுபதி அவதார சிவபெருமான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி எழுந்து உள்ளங்கையில் ஒட்டிய மண்துகளைத் தட்டினார்.

“எஞ்சிய தெதுவு மில்லா
துஞ்சாத் துரீய மாகி
பிஞ்சிலப் புஷ்பம் பூக்கும்
செஞ்சித மலைதான் பாரேன்!"

- அப்படீன்னு நம்ப அகஸ்தியர் அண்ணாமலைப் புராணத்துல பாடற மாதிரி

சர்வேஸ்வரன் சங்கல்பம் செஞ்சுத் தன்னோட திருக்கரங்களைத் தட்டினார். இறைவனின் உள்ளங்கை ரேகைகளை ஸ்பரிசித்த அந்தத் திருமண் துளிகளே இந்த மாதிரி அற்புத செஞ்சி மலைகளாச்சு! உருண்டை உருண்டையாய்ச் சுயம்புக் கற்களோட ரொம்பவும் ரம்யமான மலை! இறைவனோட உள்ளங்கை ஸ்பரிசம் பட்டதுனால தீர்க தரிசனம் நிறைஞ்ச மலை! ஜோதிடர்கள் எல்லாரும் ஒவ்வொரு புதன் கிழமையும் குருவருளோட செஞ்சி மலையைச் சுத்தி வந்தா எதிர்காலம் அறியும் தீர்க தரிசன சக்தி கிடைக்கும். ஆனா இந்த சக்தியை வியாபாரமாகவோ, மாந்த்ரீகமாகவோ தவறாப் பயன்படுத்தக் கூடாது!”

மறுநாள்.... இரவில் பெரியவர் அயர்ந்திட, சிறுவன் இரவு முழுதும் கண் விழித்து, ஜபித்து, பூஜித்து.... காலையில்தான் பெரியவர் எழுந்திடச் சிறுவன் சற்று அயர்ந்தான்! ஆனால் சற்று நேரத்திற்குப் பிறகு அவனை உடனேயே எழுப்பி விட்டார்! அசதியில் தான் எங்கு உறங்குகின்றோம் என்று கூட அறியாது களைப்பால் மீண்டும் அயர்ந்து கிடந்த சிறுவனை மீண்டும் தட்டி எழுப்பிய பெரியவர்.... வெகுவேகமாக நடக்கலானார்.

செஞ்சிமலை

ஐந்து கிரக சங்கம பூஜை!

பெரியவர் தந்த அச்சிறிய நேரத்திற்குள் வாரிச் சுருட்டி எழுந்து சுறு சுறுப்பானான் சிறுவன்... முதலில் வெகு வேகமாக விரைந்த பெரியவர் திடீரென்று மிகவும் அமைதியாக நடக்கலானார்!

“ஏண்டா நேத்தி ராத்திரி உபவாசம் இருந்தாச்சு, அதுவே பெரிய விரதம்! ஏன்னா நேத்தி சாயந்திரம் ஒரே ராசியில அஞ்சு கிரகங்கள் சங்கமம் ஆச்சு! இந்த அற்புத நேரத்துல ஆத்துல குளிச்சுட்டு, பூஜை பண்ணி, விரதம் இருந்தா எல்லா கிரகங்களையும் தரிசனம் பண்ணின பெரிய பெரிய சித்தர்களோ, மகரிஷிகளோட தரிசனம் கிடைக்கற அற்புத நாள்டா இது! அதுக்குத்தான் நேத்தி சாயந்திரம் அந்தி வேளையில, நட்சத்திர தரிசனம் தெரியறப்போ நடுங்குற குளிர்ல ஒரு குளியலோட ஏதோ. அண்ணாமலையார் கருணையில கொஞ்சம் பூஜை பண்ணினோம்! நான்தான் தூங்கு மூஞ்சி, நேத்து ராத்திரி தூங்கிப் போய்ட்டேன், நீதான் ராத்திரி புல்லா கொட்ட கொட்ட முழிச்சிக் கிட்டு ஏதோ இறைநாமம் சொல்லிக் கிட்டு விரதம் இருந்தது, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா!” இவ்வாறு சொல்லி விட்டு.... வெகுவேகமாக முன்னால் விரைந்து நடந்து சென்று திரும்பிப் பார்த்தார் பெரியவர்!

சிறுவன் அவரை இப்போது நன்கு உற்று நோக்கினான்! ஆச்சரியத்துடன் அவருடைய கண்களுக்குள் நன்றாக ஊடுருவிப் பார்த்தான்! ஏனென்றால் அவனைப் பற்றி முதன்முதலாக “ரொம்ப சந்தோஷமா இருந்தது” என்று அவர் சொல்வதை அவன் முதன் முதலாகத் தன் வாழ்நாளில் அவர் சொல்லக் கேட்கின்ற அபூர்வமான நாளல்லவா! வைரத்தால் பதிக்க வேண்டிய முத்து நாள்!

“ஏதேது அத்தி பூத்தாற் போல் வாத்யார் திருவாய் மலர்கின்றாரே! இன்றைக்கு ஏதேனும் விசேஷமாக நடக்கப் போகிறதா, என்ன?”

பாறையுள் பவித்ரமான சித்தயோகிகள்!

பல கோடிக் கணக்கான குண்டுக் கற்களை அழகாகக் குவித்து வைத்தாற் போல் நிற்கும் செஞ்சி மலைக் குன்றினைக் கண்டு.... நிறைய மந்திரங்களை ஒதி செஞ்சி மலையைச் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கினார்.

பிறகு பக்கவாட்டில் சற்றே மேல் ஏறி... ஒவ்வொரு பாறைக் கல்லாய்த் தொட்டுக் கும்பிட்டு... ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு என எண்ணிக் கொண்டே வந்தார்.... 108 என்று வந்ததும், சிறுவனை மெதுவான குரலில், அழைத்தார்...

“உஷ் .... சப்தம் போடாமல் இங்கே வா! தேவலோகத்துல கூடக் கிடைக்காத காட்சி! தேவர்களுக்கும் கிட்டாத அதிசயக் காட்சி!"

ஒரு சிறு பாறையை... சற்றே நகர்த்திட்டார் பெரியவர்... சிறுவன் மெதுவாக உள்ளே எட்டிப் பார்த்தான்! உள்ளே பார்த்ததும் ... அதிசயித்துப்போனான் சிறுவன்! அவனால் எதையும் நம்ப முடியவில்லை!

“என்ன இது மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றதே!”

... ஆம் பாறையின் அடியில்...

பல ட்யூப் லைட்கள் போட்டாற் போல் உள்ளே நல்ல வெளிச்சம்...! உள்ளே நிறையச் சித்தர்கள் யோகத்தில் பூரித்து... கண்களை முடியவாறு வரிசையாக அமர்ந்திருந்தார்கள். ஒரு இம்மி கூட அவர்கள் உடலில் அசைவு தெரியவில்லை! சுவாசிப்பதாகவும் தோன்றவில்லை! யோக பந்தனமா?

கும்மிருட்டுப் பாறையினுள் எப்படி இவ்வளவு வெளிச்சம் வந்தது? உள்ளே இச்சித்தர்களுக்கெனத் தனிச் சூரியன் உதிக்கின்றதா? தேஜோமயமான அவர்கள் திருமேனியில் இருந்து ஒளிப் பிரகாசம் பீறிட்டுப் பாறை வழியே வெளி வந்து கொண்டிருந்தது! அனைத்தும் உலக ஜீவன்களின் நலன்களுக்காகவே!

குட்டினாற் கிட்டும் குபேரானந்தம்!

சிறுவனுக்கு அவர்களைப் பார்க்க... பார்க்க “ரொம்ப சந்தோஷமாக” இருந்தது. இதைத்தான் பெரியவா “ரொம்ப சந்தோஷமென்று'' குறிப்பிட்டாரோ! என்னே அவன் பாக்யம்! முறையாக ஒரு சிறு விரதம் இருந்ததற்கே இவ்வளவு பெரிய பாக்யம் கிட்டினால் இன்னும் பல விரதங்களைக் கடைபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஆனால் இந்த மாதிரி சற்குரு அருகில் அமைய வேண்டுமே! அதுவே இமாலய பாக்யம் ஆயிற்றே! 

பெரியவர் டக்கென்று தலையில் குட்டிட...

சிறுவன் தன் நிலைக்கு வந்தான். சற்குருவின் திருக்கரங்களில் ஆர்த்தெழுந்து உற்பவிக்கின்ற அந்த (மோதிரக்) “குட்டுதான்" கபாலத்தின் திருக்கதவுகளைத் திறந்து தெய்வ தரிசனங்களை, தெய்வீக லீலைகளைத் திறந்து காட்டும் திறவு கோலோ (divine key)?

பெரியவர் சப்தமில்லாமல் சிறு பாறையை நகர்த்தி மூடி விட்டுக் கீழே வீழ்ந்து வணங்கி எழுந்த போது ... பாஷ்பவாரி பரிபூரண லோசனனாக அவருடைய கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கித் திரண்டு வந்தது!

“ரொம்ப சந்தோஷமா இருக்குடா! இந்த உலகம் ஜீவிக்கறதுக்காக உணவு, உடை, காற்று இல்லாம யுகக் கணக்காக தபஸ் இருக்காங்களே இந்த சித்தர்களைப் பத்தி எப்படித்தான், என்னதான் எழுத முடியும், சொல்ல முடியும்?”

பெரியவருக்கோ கண்களில் நீர் பொல பொலத்துக் கொண்டிருக்க ... சிறுவனுக்கு ஒரு துளி நீர் கூடத் தோன்றவில்லை! ஏனிப்படி?

“உனக்கு எப்படிடா ஆனந்தக் கண்ணீர் வரும்? இந்த மாதிரி அற்புத சித்தர்களோட தரிசனம் கிடைச்சும் ஆனந்தக் கண்ணீர் பெருகலைன்னா அதுவே பெரிய உத்தம நிலையப்பா?”

சிறுவன் வழக்கம்போல் ஒன்றும் புரியாது விழித்தான்.

மாளாபுரம் ஸ்ரீமும்மூர்த்தி விநாயகர்

கும்பகோணம் - சாக்கோட்டை - திருநல்லூர் அருகே மாளாபுரம் உள்ளது.

விநாயகம், கணேசன், கணபதி கணபதிராம். கணபதி சுப்ரமண்யம், கணேஷ், விக்னேஷ்வர், விநாயக்ராஜ், விநாயக மூர்த்தி சம்பந்தமான பெயர்களைக் கொண்டவர்களுக்கான ஆயுட்கால வழிபாட்டுத் தலம்

அனைத்துத் தெய்வ மூர்த்திகளும் வணங்கி வழிபடும் மூல முழுமுதற் கடவுளான ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசக்கர விநாயகர், ஸ்ரீஆதிவிநாயகர், ஸ்ரீசிந்தாமணி விநாயகர், ஸ்ரீகைலாச விநாயகர் போன்ற ஆயிரக்கணக்கான நாமங்களைத் தாங்கி அருளக் காரணம், மனிதனுடைய ஆயிரக்கணக்கான நல்அபிலாட்சைகளை, நல்விருப்பங்களைப் பூர்த்தி செய்திடவேயாம்!

துர்வாச மகரிஷி தனக்கு அடிக்கடி ஏற்படும் கோபத்தால் பல நன்மைகள் விளையும் எனச் சிவபெருமானிடம் வரம் பெற்றிருந்தாலும் தம் சினத்தினால் எவ்வுயிர்க்கும், எதற்கும் ஓர் எறும்புக்குக் கூட ஒரு தீங்கும் ஏற்படலாகாது என்ற நல்வரமும் வேண்டி ஸ்ரீஅகஸ்தியர் உரைத்தவாறு ஒரு வேளை அருகம்புல் மட்டுமே உண்டு ஸ்ரீமங்கள விநாயகரை வேண்டிக் கடும் விரதம் பூண்டார்.

தினமும் பத்தாயிரம் சிஷ்யர்களுடன் பல மைல்கள் தூரம் பாதயாத்திரை செல்லும் ஸ்ரீதூர்வாச மாமுனி அருகம்புல் மட்டும் உண்டு நடப்பதெனில் சிரமம்தானே! (தூர் - அருகம்புல்)

மிகவும் உத்தமமான விநாயக உபாசகர் ஆதலால் அருகம்புல் நாயகராம் பிள்ளையாரப்பனின் அனுகிரகம் ஸ்ரீதுர்வாசரிடம் அபரிமிதமாய் விளைந்து, கனிந்து அவரிடம் பொங்கும் சினமெல்லாம் மூன்று வகை நற்குணக் காரியங்களை ஆக்கிடும் வகையில் உலகிற்குப் பயன்படட்டும் என்று ஆசீர்வதித்தார் ஸ்ரீமங்கள கணபதி! துர்வாசரும் ஜீவன்களுக்கு, குறிப்பாக. கலியுக மனிதர்களுக்கு மாளாத் துயர்களில் இருந்து மீளும் வகையில் அருள்பாலித்திட ஸ்ரீமங்கள கணபதியை வேண்டினார்.

துர்வாசர் வேண்டியபடி ஸ்ரீமங்கள கணபதியிடம் உற்பவித்த பிரம்ம லோகத்தில் உள்ள ஆக்ஞா கணபதி, விஷ்ணு லோகத்தில் உள்ள ஆகம கணபதி, சிவலோகத்தில் உள்ள ககார கணபதி மூன்று கணபதி மூர்த்திகளும் மாளாபுரத்தில் தோன்றி மும்மூர்த்தி கணபதி கடவுள்களாகக் துர்வாசருக்குக் காட்சி தந்து முக்கனிகளைப் பிரசாதமாக அளித்து விரதத்தை நிறைவு செய்து ஆட்கொண்டனர். எனவே எத்தகைய விரதங்களையும் பூர்த்தி செய்து மாளாத் துயர்களை நீக்கிடும் காணாபத்ய விநாயக பூமியே மாளாபுரம் ஆயிற்று.

கணேசன் சம்பந்தப்பட்ட விநாயகப் பெயரை உடையவர்கள் தம் ஆயுட்காலத்தில் வழிபட வேண்டிய மிகவும் முக்கியமான தலமே மாளாபுரம் ஸ்ரீகாசி விஸ்வநாத் ஆலயத்தில் உள்ள மூன்று கணபதி மூர்த்திகள் சேர்ந்து உள்ள மும்மூர்த்தி விநாயகர் சன்னதியாகும். மேற்கண்ட வகையில் பிள்ளையார் பெயரை உடையவர்கள் க்லீம், ஹ்ரீம், ஷ்ரீம் போன்று மூன்று வகை கணபதி மந்திரப் பீஜாட்சரங்களைத் தக்க பெரியோர்களிடம் இருந்து உபதேசமாகப் பெற்று துர்வாசர் ஆசியுடன் ஜபித்து வருதல் வேண்டும். தினமும் ஒரு விநாயக மூர்த்தியை தரிசிக்க வேண்டும்.

சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளிலும் தம் பிறந்த நாள், பிறந்த தேதி, திருமண் நாள் போன்ற விசேஷமான நாட்களிலும் கணபதி சம்பந்தப்பட்ட பெயருடையவர்கள் மாளாபுரம் மும்மூர்த்தி விநாயக மூர்த்திகளைத் தரிசித்து வருதல் மிகவும் சிறப்புடையதாம்.

ஸ்ரீமுத்து வடுகநாத சித்தர்

வாத்தியார் ஐயா எனப் பிரசித்தி பெற்ற‌ஸ்ரீமுத்து வடுகநாத சித்தர் மகிமை

ஸ்ரீவராகி உபாசனையிற் கரை கண்டவராய் ஜீவன்களுக்கு என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாய் அருளும் சித்தர்பிரானே "வாத்தியார் ஐயா" என்றழக்கப்படும் ஸ்ரீமுத்து வடுகநாத சித்தர் ஆவார்!

கலியுகத்தில் சித்தர்களின் ஜீவாலய தரிசனமானது குருவ‌ருளைத் துரிதமாகப் பெற்றுத் தர வல்ல ஓர் அரிய தெய்வீக சாதனமாகும்!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள சிங்கம்புணரியில் “வாத்தியார் ஐயா” என மக்கள் சமுதாயத்தால் அன்புடன் அழைக்கப் பெறும் ஸ்ரீமுத்து வடுகநாத சித்தரின் சக்தி வாய்ந்த ஜீவாலயம் (ஜீவசமாதி) அமைந்துள்ளது. மதுரை, புதுக்கோட்டை, பொன்னமராவதியில் இருந்தும் சிங்கம்புணரிக்கு பஸ் வசதிகள் உண்டு.

ஸ்ரீவாத்யார்ஐயா ஜீவசமாதி
சிங்கம்புணரி

இன்றைக்கும், என்றைக்குமாக, லட்சக்கணக்கான கலியுக ஜீவன்களுக்கு அருள்பாலித்து வருகின்ற அதியற்புத ஜீவாலய குருமூர்த்தமே (சிங்கம்புணரி) ஸ்ரீமுத்து வடுக நாத சித்தரின் ஜீவசமாதிப் பீடாலயம்! ஸ்ரீவராகி உபாசனையில் பல உன்னத நிலைகளை அடைந்தவராய் பூலோக ஜீவன்களுக்கு மட்டுமன்றி தேவர்கள், தேவதைகளுக்கும் அருள்கின்ற சித்தர்பிரான்!

பிரபஞ்சத்தின் அருட்பெரும் சித்தர்களில் ஒருவரான ஸ்ரீமுத்து வடுகநாத சித்தர்பிரான், வாத்தியார் ஐயா எனக் காரணப் பெயர் கொண்டு எண்ணற்ற ஜீவன்களுக்கு அருள்வழி காட்டி அன்றும், இன்றும், என்றும் ஒளிர்கின்ற ஏகாந்த ஜோதியாக, சிங்கம்புணரியில் குருமூர்த்தம் எனப்படும் ஜீவசமாதி பூண்டு அருள்பாலிக்கின்றார்.

வராஹி மந்திரச் சித்தர்!

மந்திர, யந்திர, தந்திர, யோகீந்திரத் தாத்பர்யங்களிலும், தத்துவங்களிலும் தலை சிறந்தவரான சித்தர்பிரானாகிய ஸ்ரீமுத்து வடுகநாத சித்தர், சித்தர்களுடைய குரு மண்டலங்களுள் ஒன்றான, வராஹி குரு மண்டலத்தில், வடுக கண்டத்தில் தோன்றியவர் ஆவார். ஸ்ரீபைரவ உபாசனை போல் ஸ்ரீவராஹி உபாசனை என்பதும் மிக மிகக் கடினமானதாகும். நிர்விகல்ப சமாதி யோக நிலையில் திளைப்பவர்கள் தாம் ஸ்ரீவராஹி உபாசனையை முறையாக நன்கு மேற்கொள்ள முடியும். எனவேதான் உத்தம தெய்வீக நிலைகளில் ஸ்ரீவராஹி உபாசனை மிகவும் பெரிதாகப் போற்றப்படுகின்றது. சப்த மாதர்களில் ஒருவராக நாம் போற்றி வழிபடும் ஸ்ரீவராஹி தேவி, ஸ்ரீஆதி வராஹி தேவியின் பல அம்சங்களைப் பூண்ட தேவியே! ஸ்ரீஆதி வராஹி தேவியின் பல அம்சங்களைப் பெற்று சப்த மாதர்களில் ஒருவராக அருள் பாலிக்கின்ற மூர்த்தியே ஸ்ரீவராஹி தேவி ஆவார். தஞ்சாவூர் ஸ்ரீபிரஹதீஸ்வரர் ஆலயம், சுவாமிமலை ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஆலயங்களில் ஸ்ரீஆதி மூல வராஹி தேவி மிகவும் முக்கியமான தெய்வ மூர்த்தியாக அருள்பாலிக்கின்றாள். ஸ்ரீஆதிலட்சுமி தேவியிடம் உற்பவித்த ஏனைய பல திருமகள் அவதாரங்கள் போல், பல இடங்களில் ஸ்ரீஆதி வராஹி தேவியின் அவதார அம்சங்களைக் கொண்டவளாய், சப்த மாதர்க‌ளில் ஒருவராகவும் ஸ்ரீவராஹி தேவி அருள்கின்றாள்.

துஷாப்ரிய நாக தேவ மூர்த்திகள்!

ஸ்ரீவராஹி லோகத்தில், வடுக கண்டம் என்ற ஓர் அற்புதமான லோகம் உண்டு. இங்கு தான் துஷாப்ரியா எனும் விசேஷ நாக தேவ மூர்த்திகள் அதியற்புத முறைகளில், பிரபஞ்ச நன்மைக்காக, ஸ்ரீஆதி வராஹி தேவியை எப்போதும் பூஜித்து வருகின்றார்கள். துஷாப்ரியா நாகங்கள் பல தெய்வீக அம்சங்களை நல்வரங்களாகப் பெற்று ஸ்ரீவராஹி உபசாகர்களுக்குப் பல வடிவங்களில் அருள்பாலிக்கின்றனர். பொதுவாக நாக தேவதா மூர்த்திகள் மானுட வடிவிலிருந்து, தேவ வடிவு ஈறாக அனைத்து வடிவங்களையும் எடுக்கும் தேவ வல்லமை பெற்றவர்கள். நல்லவர்களுக்கு நல்ல விதங்களில், நல்ல நேரத்தில் உதவி செய்கின்ற வகையில்தாம் இப்பூவுலகில் பல நாகப் புற்றுக்களை துஷாப்ரியா தேவ நாக மூர்த்திகள் ஏற்படுத்தியுள்ளனர்.

ஸ்ரீமுத்து வடுகநாத சித்தருடைய திவ்யமான பூவுலக சரீரத்தில் நிகழ்ந்த பல தெய்வீக சம்பவங்களில் ஒரு சிலவே இன்றைக்குப் புத்தக வடிவுகளிலும், வழிவழியாய் வந்த அனுபூதிகளாகவும் திகழ்கின்றன. பலரும் அறியாத அவருடைய தெய்வத் திருவாழ்க்கையில் நிகழ்ந்த எண்ணற்ற தெய்வீக அனுபூதிகள் குறித்து சித்த சற்குருமார்களால் அவ்வப்போது பூவுலகிற்கு அளிக்கப்பட்டு வருகின்றன. ஸ்ரீமுத்து வடுகநாத சித்தர் தினந்தோறும் சூட்சும ரீதியாக வராஹி மண்டலம், பிரஹதீஸ்வர மண்டலம், வரதராஜ மண்டலம், ஆதிசேஷ மண்டலம், துஷாப்ரியா மண்டலம், வடுக கண்டம் போன்ற அற்புதமான லோகங்களுக்கு அடிக்கடி சென்று வரக் கூடிய தெய்வீக சக்திகளைப் பெற்றிருந்தார். சகல கலா மந்திரங்களிலும், தேர்ச்சி பெற்றவரே ஸ்ரீமுத்து வடுகநாத சித்தர் ஆவார்! மந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்தி சமுதாயத்தில் மக்களுக்கு இன்னல்களை விளைவிக்கின்ற தீய மந்திரவாதிகளிடமிருந்து சமுதாயத்தைக் காத்து இன்றும், என்றுமாக மக்கள் சமுதாயத்தை இரட்சிப்பவரும் ஆவார்

துர் மந்திர சக்திகளை மாய்க்கும் துரீய கால யோகச் சித்தர்பிரான்!

பில்லி,  சூன்யம்,. ஏவல் போன்ற மந்திரங்களால் அல்லல்படுகின்ற குடும்பத்தினர் ஸ்ரீமுத்து வடுகநாதருடைய ஜீவசமாதிக்கு வந்து சித்தர் பெருமானுடைய சிலா ரூபத்திற்குத் தேன், பால், இளநீர், பஞ்சாமிர்தம் போன்ற 12 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்து ஆழ்ந்த நம்பிக்கையுடன் வழிபட்டு அவருடைய ஜீவாலயத்தில், பிரண்டை கலந்த உணவு வகைகளை ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்தால் தீய மந்திர சக்திகளிடமிருந்து துரிதமாக நிவாரணம் பெறுவர்.

இது மட்டுமல்லாது, பலவிதமான மந்திர உபாசனைகளை பலரிடமிருந்து பெற்றிருப்போர் மந்திர பாவனையில் நன்முறையில் தேர்ச்சி பெற, இச்சித்தர் பெருமானுடைய ஜீவாலயத்திற்கு வந்து 21 முறை அங்கப் பிரதட்சணம் செய்து தம்முடைய மந்திர உபாசனைகளை சமுதாயத்தில் நல்விதமாகப் பயன்படுத்துவதற்காக வைராக்யம் பூண்டு வழிபட்டு வருவார்களேயானால் அவரவர் பெற்ற உபதேச மந்திரங்கள் நன்முறையில் சித்தியாகும். ஆனால் மந்திர சக்திகளை ஒருபோதும் தவறாகப் பயன்படுத்துதல் கூடாது.

வன்முறைச் சக்திகளை மாய்க்கும் வடுக நாத சித்சக்தி!

கலியுகத்தில் மக்கள் சமுதாயத்திற்கு ஏற்படுகின்ற மிகவும் முக்கியமான, இன்னல்களுள் வன்முறை, கொலை, கொள்ளை, திருடு, வழிப்பறி போன்ற தீய செயல்களும் அடங்கும். இரவு நேரத்தில் நிம்மதியாக நடமாட இயலாத வகையில் தீய சக்திகள் பெருக்கெடுத்துள்ளன. இரவில் இல்லத்தில் இருந்தாலும், ஒருவிதமான பீதியும் ஏற்படுகின்றது. இவற்றிலிருந்து உலக மக்கட் சமுதாயத்தைக் காக்க வேண்டுமானால் ஸ்ரீமுத்து வடுகநாதர் போன்ற வராஹி உபாசனா சித்தர்களை வழிபட்டு அவர்களுடைய பேரருளைப் பெறுதல் வேண்டும். இச்சித்தர்பிரானின் குருவருளே வன்முறை, தீவிரவாதக் கொடூரச் செயல்கள் போன்ற தீய சக்திகளிடம் இருந்து உலகைக் காக்க‌ வல்லதாகும்.

பகைமை, அரசியல் காழ்ப்புணர்ச்சி, குரோதம், விரோதம் காரணமாகப் பலவிதமான பீதிகள், அச்சங்கள், பயமுறுத்தல்களால் அஞ்சி வாழ்கின்றவர்கள் ஸ்ரீமுத்து வடுகநாத சித்தருடைய ஜீவாலயத்தில் வியாழக் கிழமையன்று ராகு கால நேரத்தில் செந்தூரம் கலந்த வெண்ணெய்க் காப்பு சார்த்தி வழிபட்டு லட்டு, ரவாலாடு, போண்டா போன்ற உருண்டை வகையான உணவுப் பண்டங்களை ஏழைகளுக்குத் தானமாக அளித்து வருதல் வேண்டும்.

வந்தித ப்ரகாச யோகத்தில் திளைக்கும் வடுக நாத சித்தர்!

ஸ்ரீவடுக நாத சித்தர் இன்றும், இங்கு தம் பூவுடலில், மானுட தேகத்தில், ஆழ்பூமி சாகரத்தில் வந்தித ப்ரகாச யோகத்தில் அருள்புரிகின்ற மிகவும் திவ்யமான குருமூர்த்த ஜீவாலயமே பூலோகத்திற்கான பெரும்பாக்யமாக சிங்கம்புணரியில் அமைந்திருப்பதால், கலியுகத்தில் பெறுதற்கரிய சித்தர் ஜீவாலய வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாக இது துலங்குகின்றது. இன்னமும் பலராலும் அறியப்படாத மிகவும் சக்தி வாய்ந்த சித்தர் ஜீவாலயம்! திருவாரூர் ஸ்ரீதட்சிணா மூர்த்தி சுவாமிகள் ஜீவாலயம், பாண்டிச்சேரி அருகே சின்னபாபு சமுத்திரத்தில் உள்ள ஸ்ரீபடேசாஹிப் சித்தர் ஜீவசமாதி, காஞ்சீபுரம் ஸ்ரீபோடா ஸ்வாமி சித்தர் (சிவசாமி சித்தர்) குருமூர்த்தம், பூண்டி ஆற்று சுவாமிகள் ஜீவாலயம் போன்று கலியுகத்தில் அனைவ‌ரும் வழிபட வேண்டிய மிகவும் முக்கியமான சித்தர் குருமூர்த்த ஆலயங்களுள் இதுவும் ஒன்றாகும்.

தன் வினை விளைவுகளே தனக்கு வரும்!

மேலும் தற்காலத்தில் எத்தகைய நேர்மையுடன் வாழ்ந்தாலும் பிற அபவாதங்களால் பலவிதமான துன்பங்கள் ஏற்படுமேயானால், பூர்வ ஜென்மத்தில், இவ்வாறாக, பொய்மை, அபவாதங்களால் பிறருக்குத் தான் ஏற்படுத்திய துன்பங்களே, தற்போது அபவாதங்களாக வந்து சேர்ந்து தனக்கு துன்பங்களைத் தருகின்றன என்ற வேத சத்திய வாக்கை உணர்ந்தவாறு இங்கு சித்தர் பெருமானை வழிபடுதல் வேண்டும்.

தூயத்திற் செறியும் தூரீயம்!

ஸ்ரீ முத்து வடுகநாத சித்தருடைய ஜீவாலயத்தின் முக்கியமான சிறப்பு அம்சங்களுள் ஒன்றாக, கலியுகத்தில் நடைமுறை வழக்கில் தினந்தோறும் மக்கள் சந்திக்கின்ற மிக மிகச் சாதாரணமான இன்னல்கள், வாழ்க்கையையே பாதிக்கின்ற சூது, வாது, முறையற்ற காமச் செயல்கள் போன்ற பெரும் துன்பங்களிலிருந்தும் ஜீவன்களைக் காக்க வல்ல சித்தர்பிரானாக ஸ்ரீமுத்து வடுகநாதர் இங்கு ஜீவாலயம் கொண்டிருப்பதாகும். இப்புனித பூமியில் தன்னுடைய தூய மானுட சரீரத்தின் மீது, துரீய சரீரத்தை வார்த்து, இன்றைக்கும், என்றைக்கும் என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாகப் பரிமளிக்கின்ற சித்தர் பிரானே ஸ்ரீமுத்து வடுகநாத சித்தர் ஆவார். இவர் தன்னுடைய சூட்சும, தூல வடிவுகளில் தினந்தோறும் வான்வெளிப் பயணம் சென்று வழிபட்ட தலங்கள் பல உள. அவற்றுள் மிக முக்கியமானவையே திருஅண்ணாமலை கிரிவல மலைப் பகுதியில் குருபக்தி பூண்டவர்க்கே புலனாகின்ற ஸ்ரீவராஹி தீர்த்தம், தஞ்சாவூர் ஸ்ரீபிரஹதீஸ்வரர் ஆலயத்திலுள்ள ஸ்ரீவராஹி அம்மன் சன்னதி, கும்பகோணம் அருகே சுவாமி மலையிலுள்ள ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஆலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீவராஹி அம்மன் சன்னதி போன்றவையாகும்.

இன்றைக்கும் அருணாசலத்திலும், இவ்விரு சன்னதிகளிலும் குறிப்பிட்ட நாட்களில், திதிகளில் சூக்கும, தூல, துரீய வடிவுகளில் ஸ்ரீமுத்து வடுகநாதர், ஸ்ரீஆதிவராஹி தேவியை வழிபட்டு வருகின்றார். ஸ்ரீவராஹி உபாசனையில் உன்னதம் பெற்ற சித்தர்பிரான் கலியுகத்திலும் ஸ்ரீவராஹி வழிபாட்டைத் தொடர்வது ஏனோ?

பூஜைகளை மறந்ததால் இன்னல்கள் பெருகினவே!

கலியுகத்தில், தற்காலத்தில், குறிப்பாக பாரதத்தில், அதிலும் குறிப்பாக லட்சக் கணக்கான ஆலயங்கள் உள்ள தமிழகத்தில், மக்கள் சமுதாயம் பலவிதமான பண்டிகைகளை, விரதங்களை யோக, தியான சாதகங்களை மறந்து விட்டது. எனவே மக்களால் மறக்கப்பட்ட பலவிதமான விரத, பண்டிகை, பூஜா சக்திகளை மக்கள் சமுதாயத்தால் பெற இயலாமையால் போய்விட்டதால் தான் இன்றைக்கும் பல நோய்களுக்கு, வன்முறை, வறுமை போன்ற துன்பங்களுக்கு நவீன விஞ்ஞானத்தால், அரசாங்கத் துறைகளால் குணம் காண முடியவில்லை. வன்முறைகள் மற்றும் பல தீய சக்திகளையும் அழிக்க இயலாது அவை பெருகிக் கொண்டே செல்கின்றன.

எனவே இன்றைய உலகில் தீய சக்திகள் பெருக்கெடுத்திட மூல காரணமே இவற்றை நிவர்த்தி செய்ய வல்ல பண்டிகைகளை, விரதங்களை, ஆலய பூஜைகளை, தெய்வ மூர்த்தி வழிபாடுகளை மனித சமுதாயம் முற்றிலும் மறந்ததேயாகும் என்பதை ஒவ்வொரு மனிதனும் உணர்தல் வேண்டும்.

மறைந்த வழிபாடுகள் மீண்டிட...

உதாரணமாக பைரவ வழிபாடு, சப்த மாதர்கள் வழிபாடு, சித்தர்களின் ஜீவாலய வழிபாடு போன்றவற்றைக் கலியுக மக்கள் கடைபிடிக்காது மறந்ததும், அசிரத்தையாகவும் இருந்தும் வருவதால் தான் இவற்றால் நீக்கப்படக் கூடிய, பல துன்பங்கள், நோய்கள் நிவர்த்திச் செய்யப்படாமலேயே பெருகிக் கொண்டே இருக்கின்றன. எய்ட்ஸ், இரத்தப் புற்று நோய் போன்று விஞ்ஞானத்தால் தீர்க்க முடியாத வியாதிகளை நீக்க வல்லதே ஸ்ரீவராஹி அம்மன் பூஜை பலன்களாகும்.

எனவே, ஸ்ரீவராஹி உபாசனையில் மேன்மை பெற்றவரான சிங்கம்புணரி ஸ்ரீமுத்து வடுகநாத சித்தர் ஜீவாலயத்தில் செவ்வாய்க் கிழமை தோறும் செவ்வாய் ஹோரை நேரத்தில், உலக சமுதாயப் பொது வழிபாடாக, சித்தர் பிரானுக்கு குறித்த முறையில் ஆக்கப்படும் "செருப்பட்டை மூலிகை'' வடாகத்தில் தேன், புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி, மஞ்சள் ஆகிய ஐந்தையும் கலந்த "பஞ்சவடி சித்தாமிர்த" அபிஷேக ஆராதனைகள் செய்து இவ்வபிஷேக நீரை அருந்தியும், உணவில் சேர்த்து உண்டும். பூமியில், ம‌ருத்துவமனைகளில் தெளித்தும் வந்தால் எய்ட்ஸ், மற்றும் புற்று நோய்களுக்கு மிக துரிதமாக, நன்முறையில் தீர்வுகளைப் பெற்றிடலாம்.

(சித்தர்) நடந்தால் சிறப்பாகப் பொழியும் நல்வரங்கள்!

ஸ்ரீமுத்து வடுகநாதர் நடக்கின்ற போது அவருடைய தெய்வீக சரீரத்தின் 72,000 நாளங்களிலும் எழுகின்ற ஸ்ரீவராஹி விஸ்வாமிர்தக் கதிர்களின் பரிமாணத்தால், பல துர்தேவதைகளும், துர்சக்திகளும் மாய்க்கப் பெற்றன. சமுதாயத்தில் தீய சக்திகள் மறைந்தன. ஸ்ரீமுத்து வடுகநாத சித்தர் ஓர் இடத்திற்கு விஜயம் செய்கின்றார் என்றால் அவ்விடத்தில் பல சதுர மைல்கள்‌ அளவிற்கு, விண்ணிற்கும் பூமிக்குமாக, வான வெளி முழுவதும் அவருடைய வராஹ மந்த்ர தவயோக மந்திர சக்தியால் தூய்மைப் படுத்தப்பட்டு புனிதம் பெற்றது.

இன்றும் இங்கு சித்தரின் குருமூர்த்தத்தில் இருந்து எழும் ஜீவப்ரகாசக் கதிர்கள் பரவெளியைச் சுத்திகரித்துக் கொண்டுதான் வருகின்றன. ஆனால் பெரும்பான்மையான மக்கள் வழிபட, வழிபடத்தான் இதன் பலாபலனகளை உலக சமுதாயத்திற்கு அபரிமிதமாக, நன்முறையில், நடைமுறையில் பெற்றுத் தர முடியும்.

அருணாசலத்தில் ஸ்ரீவராஹி தீர்த்தம்!

மேலும் திருஅண்ணாமலையில் கிரிவல மலைப் பகுதியில், பகுதிக் கோட்டான் புலி என்ற வராஹி லோகப் பகுதி ஒன்று உண்டு. இங்கு சொக்கட்டான் தம்பிச் சிலை என்னும் அற்புத நாக வளாகத்தில் உள்ள உன்னத ஜோதிப்ரகாசம் கொண்ட துஷாப்ரிய நாகங்கள் வராஹி தீர்த்தத்தைக் காவல் காத்து வருகின்றன. மிகவும் சக்தி வாய்ந்த தீர்த்தமிது! இதில் ஒரு துளி நீரின் ஓரணுவை ஸ்பரிசித்தால் கூடப் போதும், திவ்யமான ஜோதிப் பிரகாசத்தையும் அரிய பல உத்தம தேவ நிலைகளையும் ஒருவர் எளிதில் பெற்றிடலாம்! மகா தேவ, நல்வர சக்திகள் நிறைந்த தீர்த்தமிது! இந்த வராஹி தீர்த்தத்தில் அடிக்கடி நீராடும் பாக்கியத்தைத் தூல வடிவில் தெய்வீக ரீதியாகப். பெற்றவரே, தம் பூவுடற் சரீர வாழ்வில் பலவிதமான ஆதிவராஹி மண்டல பூஜைகளை நியம, நிஷ்டங்களுடன் முறையாகக் கடைபிடித்திட்ட ஸ்ரீமுத்து வடுகநாத சித்தர் ஆவார்.

48 தினங்கள் கூடிய ஆதிவராஹி கால மண்டலத்தில் கடைபிடிக்க வேண்டிய ஆக்கப் பூர்வமான ஸ்ரீவராஹி விரத பூஜைகளை மிகவும் ஆழ்ந்த பக்தி சிரத்தையுடன் மேற்கொண்ட சித்தர் பெருமான், இவற்றின் முடிவில் திருஅண்ணாமலைக்கு சூக்கும, துரீய‌ யோக ரீதியாக வந்து, கிரிவலம் வந்திட்டு, ஸ்ரீவராஹி தீர்த்தத்தில் நீராடி, தீர்த்தப் பிரசாத நல்வரங்களை, புண்ய சக்திகளை, தேவக் கதிர்களை, தாம் எங்கு நடந்து சென்றாலும், தன் பாதங்கள் மூலமாக, உலகத்தின் பல இடங்களுக்கும் நிரவுகின்ற யோக சக்தியைக் கொண்டிருந்தார். எனவே இன்றைக்கும் ஸ்ரீமுத்து வடுகநாத சித்தர் திருஅண்ணாமலையை கிரிவலம் வருகின்ற குறிப்பிட்ட சில உத்தமமான நாட்களும் உண்டு. இவற்றைத் தக்க சற்குரு மூலமாக அறிந்து பயன் பெறுவீர்களாக!

அடுக்கடுக்காய் வரும்‌ துன்பங்களை அடக்கும் அதியற்புத ஜீவாலயம்!

கலியுக மக்களுடைய பெரும்பாலான துன்பங்களைத் தக்க வழிபாடுகள், தான தர்மங்கள் மூலமாகத் தீர்த்து விடலாம். ஆனால் அசூன்ய சயன விரதம், அங்காரக சதுர்த்தி போன்ற விரதங்களை, பண்டிகைகளை முறையாகக் கடைபிடித்திட்டால்தானே இவற்றால் தீரக் கூடிய கர்ம வினைகளையும், நோய்களையும் தீர்த்திட முடியும்.

இள வயதிலேயே கணவனை இழந்ததால், சொத்துக்களை இழந்து பாதிக்கப்படுதல், மனநிலை சரியில்லாது இருத்தல், வம்சா வழிகளில் பல குறைகள் ஏற்படுதல், ஒரே சமயத்தில் பலவிதமான நோய்களால் பாதிக்கப்பட்டு அவதியுறுதல் இவ்வாறாகப் பலவிதமான பெரும் துன்பங்களால் அவதியுறுவோர் சிங்கம்புணரி ஸ்ரீமுத்து வடுகநாதர் சித்தர் பெருமானின் ஜீவாலயத்திற்கு வந்து செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் செவ்வாய்க் கிழமை செவ்வாய் ஹோரை, வியாழன் ‍ குரு ஹோரை, சனிக்கிழமை சனி ஹோரைகளில், சித்தரின் சிலா ரூபத்திற்கு (தம் கையால் அரைத்த) சந்தனம், புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி கலந்த காப்பு இட்டு வழிபட்டு வர, நன்முறையில் துரிதமாக நிவாரணங்களைப் பெற்றிடலாம்.

ஆனால் தனக்கு ஏற்பட்ட துன்பங்கள் எல்லாம் பிறரால் ஏற்படுத்தப்பட்டவை என்று எண்ணாது, தன் துன்பங்கள் யாவும் தன்னுடைய பூர்வ ஜென்ம வினைகளால் ஏற்பட்டவை என்று உணர்தல் மிக மிக முக்கியமானதாம்.

புத்திக் கூர்மை பெற...

புத்திக் கூர்மைக்கு மிகவும் முக்கியமானது ஸ்ரீவராஹி அனுகிரக சக்தியாகும். புத்தி என்பது, மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்தாலும் ஒருமித்துச் சீராக்கப்பட வேண்டியதாம். ஏனென்றால், ஒரு மனிதன் இந்த ஐம்புலன்களின் நல்ல தன்மைகளை இழக்கும் போதுதான் கேவலமான தீய செயல்களில், முறையற்ற காமச் செயல்களில், மது, புகை போன்ற தீய பழக்கங்களில் ஈடுபடுகின்றான். மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்தும் புத்தியைச் சீராக்கும் வழியில் செயல்படுமேயானால் அதுவே உத்தமமான இறை வழியிற் செலுத்திடும். எனவே தீய பழக்கங்களில் இருந்து விடுபட்டு ஐம்புலன்களைக் கொண்டு புத்தியைச் சீராக்குதற்கு ஸ்ரீமுத்து வடுகநாத சித்தருடைய ஜீவாலய வழிபாடு பெரிதும் துணை புரிகின்றது.

தம் பிள்ளைகள், சரியாகப் படிக்க வில்லையே, புத்தி மந்தமாக இருக்கின்றார்களே, புத்திக் கூர்மை இல்லையே என்று எண்ணுவோரும், நன்றாகப் படிக்கின்ற தம் பிள்ளைகள் கல்வியில் மிகச் சிறந்து விளங்கி உயர் கல்வி, உயர் பதவிகளை அடைய வேண்டுவோரும், சிங்கம்புணரியில் ஸ்ரீமுத்து வடுகநாதருடைய ஜீவசமாதியில் வியாழக் கிழமையன்று இராகு கால நேரத்தில் நல்ல பெரிய எலுமிச்சை கனிகளாலான மாலையைச் சித்தரின் சிலா ரூபத்திற்குச் சார்த்தி, எலுமிச்சை அன்னத்தை ஏழைகளுக்குத் தானமாக அளித்து வருதல் வேண்டும். எலுமிச்சை ஓட்டில் விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து தீபம் ஏற்றி, தீபம் சாந்தமாகும் வரை அவரவர் அறிந்த சற்குருத் துதிகள் மற்றும் சிவத் தோத்திரப் பாடல்களை ஓதி வருதல் நற்காரிய சித்திகளைப் பெற்றுத் தரும்.

ஸ்ரீகொன்றையடி விநாயகர்

கலியுகத்தின் வரப்ரசாத மூர்த்தியே அரண்மனைப்பட்டி ஸ்ரீகொன்றையடி விநாயகர் ஆவார். சித்தர்களின் தேவ நடமாட்டம் நிறைந்த புண்ணிய பூமியே கொன்றையடி விநாயக மூர்த்த பூமியாம்.

புதுக்கோட்டை - திருமயம்- காரைக்குடி பஸ் தடத்தில், புதுக்கோட்டையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள நேமத்தான்பட்டியில் இறங்கி, 2 கி.மீ. வலப்புறம் உட்சென்று அரண்மனைப்பட்டியை அடைந்திடலாம்.

குருந்தை, சரக் கொன்றை, வேல மரம், மாப்பிள்ளைக் கொன்றை, அருகம்புல், இரட்டைப் பனை எனப் பல மூலிகா விருட்சங்கள் ஒரே இடத்தில் இருக்கும் வண்ணம் மூலிகா கேந்த்ரச் சக்கரச் சக்திகள் நிறைந்ததே அரண்மனைப் பட்டி கொன்றையடி விநாயகர் தலமாம். இங்கு குருந்தை விருட்சம் அருகே கொன்றையும், வேலமும் இருப்பதால் இதில் பெருகும் கூட்டு மூலிகா சக்திகள் அபரிமிதமானவையாம்.

கொன்றை நிழலில் பாணலிங்க மூர்த்தி

ஒரே பார்வையில் பார்க்கும் வண்ணம் இவ்வகை மூலிகைகள் அருகருகே இருவிழிப் பார்வைக்குள் அமைவதே அரும்பெரும் நேத்ர சக்தி அனுகிரகங்களைத் தருவதாகும். இவ்வாறு துலங்கும் அரிய பித்ரு முக்தித் தலத்துள் ஒன்றே அரண்மனைப் பட்டி கொன்றையடி விநாயகர் தலமாம்!

அமாவாசை, சதுர்த்தி, சதுர்த்தசி, பெளர்ணமி வழிபாட்டிற்கான அதியற்புதத் தலமும், தர்ப்பணத் தலமுமே அரண்மனைப் பட்டி கொன்றையடி விநாயகர் தலம்! இங்கு குருந்தை மரத்தடித் தர்ப்பணத்தில் எழும் அருட்சக்தி சேஷமபல சூர்யப்ரகாச சக்தி வாய்ந்ததாம்! பித்ருக்களுக்கே முக்தி தருகின்ற அரிய சாமஷ்யாம வேத சக்திகள் நிறைந்ததாம்.

ஸ்ரீவியாக்ரபாத மகரிஷியால் வழிபடப் பெற்ற வளர்ந்து கொண்டே வரும் அற்புதச் சுயம்புப் பாண லிங்கமே இங்குள்ள ஸ்ரீவியாக்ரபாத லிங்கம்! கை, கால், கபாலம் சம்பந்தப் பட்ட நோய்கள் தீர, இங்கு ஸ்ரீவியாக்ரபாத லிங்கத்தைச் சுற்றி அடிப் பிரதட்சிணம் செய்து வர வேண்டும்.

ஸ்ரீகொன்றையடி விநாயக வழிபாட்டு முறைகளில் வார (கிழமை) பூஜை, திதி பூஜை, நட்சத்திர பூஜை எனப் பூஜை முறைகளும், அவற்றின் பலா பலன்களும் பல வகைப்படும்.

ஞாயிற்றுக் கிழமை வழிபாடு

ஞாயிறு தோறும் சூரிய ஹோரை நேரத்தில், சூரிய உதய காலத்தில், சூரிய ஒளிக் கிரணங்கள் ஸ்ரீகொன்றையடி விநாயகர் மேல் தோய்வதைத் தரிசித்து, ஸ்ரீகொன்றையடி விநாயகர், சுவாமியின் இருபுறமும் உள்ள கொன்றை மரங்கள், குருந்தை மரத்தையும் சேர்த்துப் பன்னிரெண்டு முறை அடிப் பிரதட்சிணமாக விளக்கெண்ணெய் தீபத்தை ஏற்றியவாறு வலம் வருவோர்க்கு, கண் சம்பந்தமான ரோகங்கள் தீர்வதற்கும், தோல், கபாலம், தலை சம்பந்தமான பலவிதமான உடல் நோய்களால் வாடுவோர் நன்னிலை பெறுவதற்கும், குருந்தை மரத்தில் தோன்றும் ரோக நிவர்த்திப் பரணி ஜோதிக் கிரணங்கள் பெரிதும் துணை புரிகின்றன. சித்ரபானு ஆண்டின் வருஷ தேவதையான அரோக தேவதா மூர்த்திக்கு உரிய விருட்சம் குருந்தை என்பது குறிப்பிடத் தக்கது. எனவே குருந்த மரத்தடியில் கோலமிடுதல், தர்ப்பணம், அடிப் பிரதட்சிணம், அங்கப் பிரதட்சிணம் செய்தல் பலவிதமான நோய்களுக்கு நல்ல நிவாரணம் தரும்.

ஜோதி விருட்சமான குருந்தை மரத்தைச் சுற்றிலும் எப்போதும் பலவிதமான ஒளிக் கிரணங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. இவற்றில் மிகவும் அபூர்வமான மருத்துவ நேத்ர மருத்துவ ஜோதிக் கதிர்களும், மருத்துவ மிருதுள ஜோதிக் கிரணங்களும் சூரிய பகவானுக்கு உரித்தான ஞாயிறன்று சூரிய ஹோரை நேரத்தில் அபரிமிதமாக வெளிப்படுவதால், இவை நேத்திர ரோகங்கள் (கண் நோய்கள்) மற்றும் தலை, தோல் பகுதி உடற் பிணிகளைத் தீர்த்திடப் பெரிதும் துணை புரியும். கண் மருத்துவர்கள் சாக்ஷூஷோபநிஷத் எனும் அரிய மந்திரங்களை இங்கு ஓதி வழிபட்டு வர, நல்ல கைராசியும், நோய் நிவாரண சக்திகளையும் பெறுவர்.

திங்கட்கிழமை வழிபாடு

திங்கள் கிழமையன்று காலையில் சூரியோதய நேரத்தில் அமைகின்ற சந்திர ஹோரையில் ஸ்ரீகொன்றையடி விநாயகரின் இருபுறமும் உள்ள இரு கொன்றை மரங்கள், ஸ்ரீவிநாயகருக்கு முன்னே இரு புறமும் உள்ள கொன்றை மரத்தையும் சேர்த்து வலம் வருவோர்க்கு திருமண பாக்கியம் கை கூடி, நல்ல கணவன், மனைவி அமைவர். கணவன் அல்லது மனைவி மேல் சந்தேகம் கொண்டு வாழ்வோர்க்கும் சந்தேகம் நிவர்த்தியாகி தம்பதிகள் ஒற்றுமையாக வாழ உதவும் பூஜை இது!

இரட்டைப் பனையின் எழில்
தோற்றம் அரண்மனைப்பட்டி

மயில்கள் உலாவும் புண்ணிய பூமி ஆதலால் ஸ்ரீமயூர சாந்த வேத சக்திகள் பொழியும் அபூர்வத் தலமிது! தாம்பத்ய சாந்த சக்தித் தழைத்திட்டு, கணவன் மனைவி இடையே நல்ஒற்றுமை பெருகுதற்கு, ஸ்ரீகொன்றையடி விநாயகருடைய வமிபாடு பெரிதும் உதவும்.

பல விதமான உடற்கூறுகளால், உடற் கோளாறுகளால் குழந்தைகளைப் பெற இயலாதோர் இங்கு வழிபட வேண்டிய நாளிது. பிரசவத் துறைப் பெண் மருத்துவர்கள் (Gynaecologists and Obstetricians) தங்கள் தொழிலில் கைராசியுடன் சிறப்புறவும் பூஜிக்க வேண்டிய நாளிது.

இங்கு குருந்த மரத்தடியில் தர்ப்பணம் அளித்தலால் இதில் எழும் ஜோதிப் பிரவாக சக்திகள், தர்ப்பண சக்திகளை ஜெயமாங்கல்யப் பித்ருக்களுக்கு இட்டுச் செல்லும். இவர்களே சுமங்கலித்வ நல்வரத்தை அருள வல்ல பித்ருதேவ மூர்த்திகள் ஆவர்.

செவ்வாய்க் கிழமை வழிபாடு

செவ்வாய்க் கிழமை காலையில் ஸ்ரீகொன்றையடி விநாயகரையும், இரட்டைப் பனை மரங்களையும் சேர்த்து வலம் வருவோர்க்கு உறவு, வியாபாரப் பகைமைத் துன்பங்கள் தீரும். எதிரியுடன் பழக வேண்டிய நிலையில் இருப்போர், மற்றும் எதிரிகளுடன் அலுவலகத்திலோ, வியாபாரத்திலோ கட்டாயமாகக் கலந்து வாழ வேண்டிய நிலையில் இருப்போர்க்குப் பகைமையால் எவ்விதத் துன்பமும் ஏற்படாமல் காத்து ரட்சிப்பதற்கு, செவ்வாய்க் கிழமையிலான ஸ்ரீகொன்றையடி விநாயக வழிபாடு தரிசனம் உதவுகின்றது.

எலும்பு, கால் சம்பந்தமான வியாதிகளுக்குத் தீர்வு தர வல்ல நாள். எலும்பு சிகிச்சை மருத்துவர்கள் வழிபட வேண்டிய நாள்.

புதன் கிழமை வழிபாடு

படிப்பு சம்பந்தமான பிரச்னைகள் தீர்வதற்கான வழிபாட்டு நாள். பெரிய படிப்பைப் பெற்றும் வேலை கிட்டாதோர்க்கு, அவரவருடைய துன்பங்கள் நீங்கிடவும் உதவும் பூஜை நாள். இன்று ஸ்ரீகொன்றையடி விநாயகரின் வலப் புறம் உள்ள இரட்டைப் பனைகளின் அடியில் விருத்தி அடைந்துள்ள அருகம் புல்லிற்குப் புனிதமான நதித் தீர்த்தங்களைத் (கங்கை, காவிரி போன்றவை) தெளித்து, "தூர்வா சூக்தம்" அல்லது சம்பந்தரின் "திருநீற்றுப் பதிகம்" ஓதி வணங்கி ஸ்ரீகொன்றையடி விநாயகரோடு சேர்த்து இரட்டைப் பனைகளையும் அடிப் பிரதட்சிணம் செய்து வலம் வந்தால் நன்முறையிலேயே கல்வி அறிவு விருத்தியாகும். நல்ல வேலையும் கிட்டிடும்.

மூளை நோய்களால் அவதியுறுவோர் பூஜிக்க வேண்டிய நாள்! நரம்பு, மூளைத் துறை வைத்தியர்கள் வழிபட வேண்டிய நாள்!

வியாழக் கிழமை வழிபாடு

வியாழக் கிழமையன்று கொன்றையடி விநாயகரை வழிபடுவதானது பணம், வியாபாரப் பொருள் சம்பந்தமான பிரச்னைகளைத் தீர்ப்பதற்குப் பெரிதும் அருள் புரியும். அதாவது போக்குவரத்தில் பொருள் திருடு போகாது பாதுகாத்தல், தயாரிப்பில் பெரும் மூலப் பொருள் சேதமாவதில் இருந்து தற்காத்துக் கொள்தல், பாக்டரி, அலுவலகங்களில் அடிக்கடி திருட்டுப் போகாமல் தடுத்தல், வீட்டிலும் அலுவலகத்திலும், பொருள் இழப்பினால் நஷ்டங்கள் ஏற்படாமல் தற்காத்துக் கொள்தல் போன்றவற்றிற்காக, வியாழக் கிழமையன்று ஸ்ரீகொன்றையடி விநாயகரை வழிபட்டு வர வேண்டும்.

குருந்தமர நிழலில்
ஸ்ரீகோடி விநாயகர் அரண்மனைப்பட்டி

மார்பு, இருதயம், நுரையீரல் நோய்களால் துன்பப்படுவோர் பூஜிக்க வேண்டிய நாள். இத்துறை மருத்துவர்கள் இன்று இங்கு பூஜைகள், ஹோமம், தர்ப்பணம் செய்த‌ பின் உணவேற்றலால் மருத்துவ தேவதைகளின் அனுகிரகத்தைப் பெறுவர்.

இங்கு அனைத்து ஜீவன்களுக்கும், விருட்சங்களுக்கும் குருமூர்த்தங் கொண்டு விளங்குகின்றவரே ஸ்ரீகொன்றையடி விநாயகர்! இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியவற்றின் தூலவடிச் சீடத்திற்கு ஞானப் பூர்வம் அளித்து அவர்களைக் குருந்த மர வடிவில் சீடராக்கியவர்களே ஸ்ரீகொன்றையடி விநாயகரின் இருபுறமும் உள்ள சிவ சக்தி ஐக்ய குரு மூர்த்தக் கொன்றை மரங்கள். எனவே குரு பகவானுக்கு உரிய‌ வியாழனன்று, மூன்று மரங்களையும் விநாயகரோடு சேர்த்து வலம் வருவோர்க்கு, குருவருள் கூடுவதற்கும், தக்க சற்குரு கிட்டுவதற்கும் நல்வழிகள் கிட்டும்.

ஆனால் கிட்டிய குருவை எக்காரணம் கொண்டும் கைவிடல் ஆகாது. ஏனென்றால் சற்குருவை அடையும்போது நிறைய சோதனைகள் ஏற்படும். நமக்கு வருகின்ற நன்மைகளும், தீமைகளும் நம்முடைய நல்வினைகளாலும், வல்வினைகளாலும் ஏற்படுகின்றன என்பதை உணர்த்துவதற்காகவே குருவின் வழிகாட்டுதலில் வருவோர்க்கும் வாழ்க்கையில் பலவிதமான சோதனைகள் ஆங்காங்கே தரப்படுகின்றன. ஸ்ரீராமானுஜர் தன் குருவை ஸ்ரீரங்கத்தில் தரிசித்திட காஞ்சீபுரத்தில் இருந்து ஸ்ரீரங்கத்திற்கு 18 முறைகள் அக்காலத்தில் நடந்து செல்ல வேண்டி இருந்தது என்பதை எண்ணிப் பார்த்திடுக!

எனவே எத்துன்பங்கள் வந்தாலும், "நம் கர்ம வினைகளைக் கழிக்கும் முகமாகத்தான் துன்பங்கள் வருகின்றன. இவற்றைக் குருவருளால் நீந்திக் கடந்தால்தான் நமக்குத் திருவருள் கூடி வரும்" என்று தெளிதல் வேண்டும். மாறாக, குருவே அனைத்தையும் தீர்த்துத் தர வேண்டும் என்று எண்ணுதல் பேராசையே! எனவே அடைந்த குருவைச் சரணடைந்து, திருவருள் பெறுவோம் என்ற எண்ணத்தைப் பரிபூரணமாகக் கடைபிடிப்பதற்கு, வியாழனன்று ஸ்ரீகொன்றையடி விநாயகர் வழிபாடு அருள் புரிகின்றது.

வெள்ளிக் கிழமை வழிபாடு

வெள்ளிக் கிழமை மங்களகரமான காரியங்கள் நடைபெறத் துணை புரியும் மகத்தான நாளாகும். சீமந்தம், வளைகாப்பு, கிரகப் பிரவேசம், புது வியாபாரம், முதன் முதலாக வீட்டிற்கு நாட்டுப் பெண்ணை அழைத்து வருதல், மாப்பிள்ளை வீட்டிற்குப் பெண்ணை அனுப்புதல் போன்ற சுபநற்காரியங்கள் மங்களகரமாக நடைபெறுவதற்கு வெள்ளிக் கிழமையன்று ஸ்ரீகொன்றையடி விநாயகருக்கு மஞ்சள்நிற (வாசனைப்) பூக்களைச் சார்த்தி, வேல மரத்தையும் சேர்த்து வலம் வந்து வழிபடுதல் வேண்டும். நாகப் புற்றிற்குப் பகலில் மஞ்சள், குங்குமம் தெளித்து நாகத் தோத்திரங்கள் ஓதி வெள்ளிக் கிழமையன்று வழிபட்டு வர நாகதோஷங்கள் தீர்வடையும்.

சனிக்கிழமை வழிபாடு

குருந்தம் பாறையில்
“கோடி பாணம்”

வியாபாரிகள் நல்ல வருமானத்துடன் வியாபாரத்தில் செழித்திட உதவுகின்ற நாளாக சனிக்கிழமையிலான ஸ்ரீகொன்றையடி விநாயகர் வழிபாடு திகழ்கின்றது. இன்று நான்கு கொன்றைகள், வேல மரம், குருந்தை மரம் என அனைத்து மூலிகா விருட்சங்களையும் அடிப் பிரதட்சணமாக 12 முறை வலம் வந்து ஸ்ரீகொன்றையடி விநாயகரை வழிபடுதல் வேண்டும். இன்று ஸ்ரீகொன்றையடி விநாயகருக்கும், ஸ்ரீகொன்றையடி விநாயகரின் வாகனமான மூஷிக வாகனத்திற்கும் புனுகு கூடிய சந்தனக் காப்பு இட்டு வழிபடுவதுடன், ஆயுள் சக்தியும், தன விருத்தி தரும் சக்தியும் கூடிய எள்ளால் ஆன பண்டங்களை (எள்ளுருண்டை, எள் கலந்த முறுக்கு, எள்ளோதரை - எள்சாதம்) தானமாக அளித்து வந்தால் எந்த நற்காரியமும், நல்திரவியமும் நன்கு விருத்தியடையக் கூடிய அனுகிரகத்தை எளிதில் பெற்றிடலாம்.

விருட்சங்களிலே அனைத்து விருட்சங்களுக்கும் வேத குருவாகப் பொலிவது கொன்றை மரம்தானே! இதில் அனைத்து வகையான வேதக் கொன்றை வகைகளுக்கும் குருவாகப் பொலிவதே ஸ்ரீகொன்றையடி விநாயகர் அமர்ந்துள்ள வேதஜோதிக் கமலக் கொன்றை மரங்களாகும். இதில் கொன்றை மரங்கள் அர்த்தநாரீஸ்வர தத்வார்த்தமாய் இருமருங்கிலும் சேர்ந்து சிவசக்தி ஐக்ய குரு விருட்சங்களாகவும், குருந்த மரம் அவற்றின் சிஷ்யராகவும் ஆகின்றனர்.

இங்கு இருக்கின்ற. இரட்டைப் பனைகளின் அடியில் அருகம்புல் படர்ந்து இருப்பதும் இதனுடைய தெய்வீக மகத்துவத்தை மேன்மையாக்குகின்றது.  பனைகளில் ஆண் பனை, அரசம்பனை, ராஜப்பனை, மருதப்பனை, வன்னிப்பனை, ஆலப்பனை, அரும்புப்பனை, புளியம்பனை, தூங்குமூஞ்சி அடிப்பனை என்று அந்தந்த மரத்தடியில் தோன்றுகின்ற அருகம் புல்லுக்குப் பல அரிய தெய்வீக சக்திகள் உண்டு.

உதாரணமாக அரசம் பனை அரும்பிற்கு ராஜ வஸ்யமும், ஆல மரத்தடி அருகுக்கு தேவதா வஸ்யமும், வன்னி மரத்தடி அருகுக்கு வாத்சல்ய வஸ்யமும், புளியமர அருகுக்கு மிருகவஸ்யமும், மருத மரத்தடி அருகுக்கு மந்திர பந்த சக்திகளும், கடம்ப மர அருகுக்கு செப்பிடு வித்தை ரகசிய வஸ்யங்களும், சரக் கொன்றை அருகுக்கு வாக் வஸ்ய சக்திகளும் நிறைய உண்டு.

இவ்வகையில் பனை மரத்தடியில் அதிலும் இரட்டைப் பனை மரங்களுக்கு அடியில் வளர்கின்ற அருகம்புல்லுக்குத், "தான் தோன்றிப் பிரபு தத்துவ சக்திகள்" உண்டு. அதாவது கருவில் பிறவாத, தானாகத் தோன்றுகின்ற சித்தர்கள், ஞானிகள், யோகியர்கள், மகான்கள், மும்மூட்சுக்கள் அவதரித்த தலங்களில்தான் இரட்டைப் பனையும் அதனடியில் அருகம்புல் அம்சங்களும் தோன்றிடும். இரட்டைப் பனை அடியில் அருகம்புல் விருத்தி ஆவதால் சந்ததி தழைக்கவும், தம் தொழில் சந்ததி ரீதியாக நன்கு தொடரவும், சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளில் இங்கு வழிபட்டு ஸ்ரீகொன்றையடி விநாயகரையும், இரட்டைப் பனை மரங்களையும் தசரதர் இயற்றிய ஸ்ரீசனீஸ்வரர் துதிகளை ஓதி வலம் வர வேண்டும்.

தலைமுடியின் ஆன்ம குணங்கள்

தலைமுடியில் ஆன்ம சக்தி நிரவி இருப்பதால் அடிக்கடி தலைமுடியை வெட்டி ஆன்ம சக்தி சக்தியை இழக்காதீர்கள்! பெண்கள் ஆயுள் முழுவதும் முடியைப் பேணுவதால் தாம் அவர்கள் ஆண்களை விட ஏழு மடங்கு மனோதிறனைப் பெறுகின்றார்கள்.

சாதி, இன பேதமின்றி நம் பண்டைய பெரியோர்கள், அரசர்கள், வீரர்கள், மாமுனிகள் குடுமி வகைத் தலைச் சிகையை வைத்திருந்தது முடியின் முடிவிலா ஆன்ம குணத்தைப் புலப்படுத்துகின்றது. எனவே குடுமி வைத்தல் என்பது சமயச் சின்னமன்று! ஓர் அற்புத ஆன்மீகச் சாதனமே குடுமியாகிய தீட்சையாகும்.

தலைக் கேசத்தில் திரளும் சம்பக சக்திகள்!

ப‌ரவெளிக் காற்று மண்டலத்தில் உள்ள சம்பகம் எனும் அரிய கேசவ மண்டல சக்திகள் உடலுக்கும், உள்ளத்திற்கும் மனதுக்கும் நிறைய தேவ சக்திகளை அளிக்கின்றன. கேசவபுல சக்திகள் நிறைந்த மூலிகைகளுள் நெல்லிக்காய், செம்பருத்திப் பூ, செம்பகத் தழை போன்றவை மிகச் சிறந்தவையாம். இச்சம்பக சக்திகள் ரோமங்கள், தலைமுடி, குறித்த சில தைல, எண்ணெய்கள், மூலிகா திரவிய வகைகள், மருதாணி போன்றவை மூலமாக உடலில் உள்ள 72000 தேக நாடி, நாளங்களை அடைகின்றன.

இச்சம்பகச் சக்திகள் பூரிக்கின்ற திருத்தலங்களுள் முக்கியமானவையே கும்பகோணம் அருகே கூந்தலூரில் உள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீசம்பகாரண்யேஸ்வரர் அருள்பாலிக்கும் சிவத்தலமும், புதுக்கோட்டை குடுமியான்மலை ஸ்ரீகுடுமிநாதர் சிவாலயமும், ஸ்ரீகேசவப் பெருமாள் என்ற திருநாமத்துடன் பெருமாள் அருளும் வைணவக் த‌லங்களும் அகும். சம்பக யோகம், சம்பக தியானத்தில் தலைசிறந்தவராய்ப் பொலியும் ஸ்ரீரோமச முனிவர் கூந்தலூர் சிவாலயத்தில் அருள்கின்றார்.

ஸ்ரீரோமச மகரிஷி திருக்காட்டுப்பள்ளி

சுமங்கலித்வ சக்திகள் கேசம், விரல்கள், பாதங்கள், நெற்றி, கழுத்து போன்ற அவயவங்களில் மிகவும் அதிக அளவில் சிறந்து பிரகாசிப்பதால்தான் இவற்றில் சுமங்கலித்வ சக்தியை விருத்தியும், நிறைவும் செய்யும் வகையில் பூக்கள், மெட்டி, மருதாணி, குங்குமம், மாங்கல்யம், மஞ்சள் போன்றவை அணியப் பெறுகின்றன.

ஸ்ரீரோமச மகரிஷி!

கூந்தலூரில் இன்றும் என்றுமாக ரோமச முனிவர் மானுட வடிவிலோ, ஏனைய ரூபங்களிலோ இச்சிவலிங்கத்தில், ஆதிசிவனின் ஜடாமுடி தரித்த கோலத்தைத் தினமும் தரிசித்துப் பூஜிக்கின்ற பாக்யத்தைப் பெற்றுள்ளார். திரேதா யுகத்தில், வனவாசத்தில் ஸ்ரீரோமச முனிவருடைய பர்ண சாலையில் ஸ்ரீராமர் அதிதியாக உபசாரம் பெற்றுள்ளார். இத்தகைய பழம் பெருமை வாய்ந்த இம்மாமுனிவரின் திருமேனியில் உள்ள ரோமங்கள் யாவும் அபராஜிதப் பொன்மயமானதாம். தபோ பலனில் விளைந்த தவச்சுடர் முடிகளாதலின், ரோமச மாமுனிவர் தினசரி ஆறு முறை சாஸ்த்ரோக்தமாக நீராடி வழிபட்டிடினும் முடி ஒன்று கூடத் தன் போக்கில் உதிராது அவர்தம் திருமேனியிலேயே நிலைத்திடும் தேவ தன்மை கொண்டதாம்.

முடிச் சுடர் முத்து நேரம்!

பல்லாயிரம் ஆண்டுகட்கு ஒரு முறை மட்டுமே நிகழ்வதான தாது வருடம், ஆவணி, திங்கள், பெளர்ணமி, திருவாதிரை, சந்திர ஹோரை, அமிர்த யோகம், மேஷத்தில் மூன்று சுபகிரகங்களின் சேர்க்கை, கன்னி ராசியில் சந்திரன், தேய்பிறை போன்ற 108 ரோமாகர்ஷண கால பந்தன நியதிகளும், நிமித்தங்களும் ஜோதிட ரீதியாக மிக அபூர்வமாகக் கூடுகையில் ரோமச மகரிஷியின் சிரசில் இருந்து ஒரே ஒரு ரோமம் மட்டும் உதிர்ந்து விண்வெளியில் பறந்து வந்திட, அதனைத் தாங்கி, ரோமாலய யந்தரச் சக்கரமாக ஆக்கிப் பூஜித்திட எத்தனையோ ஆயிரம் மகரிஷிகள் காத்திருப்பர். இந்த அளவிற்கு மகா சம்பக ஜடாசக்தியை உடையதே ரோமச மாமுனியின் ஸ்வர்ண முடியாம்! எனவே மானுட முடி போல் இதன் தன்மையை உணராது மகரிஷிகளை இறைத் தூதுவரென உணர்ந்தால்தான் மானுட தேக உணர்வுகள் அகன்று ஜோதிப் பிழம்பாய்ப் பொலியும் அவர்களுடைய திருமேனியை அறிய இயலும். யோக ஜடா சிகா சக்திகள் பூண்டு இன்றும், என்றுமாய் வசிஷ்டர், நாரதர், ஆத்ரேயர் போன்ற மாமுனிகள் தேஜசுடன் பிரகாசிக்கின்றனர் என்றால் இவர்களுடைய திருமுடிப் பாங்கை என்னென்று சொல்வது?

மிகவும் பழமையான யுகக் காலத்தை ஒட்டியவராக, மூன்றாம் பிறைச் சந்திரன், முக்தி தரும் கங்கை தேவியுடன்‌ சிவபெருமானுடைய ஜடா முடியில் கண் இமைக்கும் நேரம் மட்டுமே உறைந்து வழிபடும் பாக்யத்தைப் பெற்றவரே ரோமச மகரிஷி, சர்வேஸ்வரனின் சிகாஸ்பரிசம் பெற்றவராதலின் ஸ்வர்ண ரோம சக்திகளைத் தபோ பல நல்வரங்களாகப் பெற்றிட்டார்.

கூந்தலூர்

திருவருளின் திருமுடி தீட்சை

பசி, உறக்கம் அண்டாததும், கண் இமைப்பதும், பாதங்கள் தரையில் படிகின்ற இயல்புகளும் தேவர்களுக்குக் கிடையாது. மேலும் பூலோகத்தின் ஆறு மாத காலம் அவர்களுக்குப் பகற் பொழுதாக அமைகின்றது. இது தவிர தேவ லோகத்தின் கடி, விநாடி, மணிக் கணக்குகளும் மாறுபடும். தேவ கணக்கில், கண் இமைக்கும் நேரம் என்பது பல சதுர் யுகங்களைக் குறிப்பதாகும். சிவபெருமானுடைய திருவடி தீட்சை (அதாவது ஈஸ்வரனின் பொற்பாதங்களைத் தம் தலையில் தாங்குதல்) பெறும் பேற்றை முதன் முதலாகப் பெற்றவரே ரோமச மகரிஷி ஆவார். ஆதிசிவனின் திருப்பாதங்களில் செறிந்திருக்கும் கோடானு கோடி பாத ரேகைகளில், சங்கர ஜாத வேதஸ ரேகையானது அவர் திருமேனியில் படிந்திடவே, இதன் பலன்களாக புண்ணியமான மகா சிவராத்திரித் திரு நாளில் ஆதி சிவனின் திருமுடியில் கண் இமைப் பொழுது வசிக்கும் பாக்கியத்தை ஸ்ரீரோமச முனிவர்பிரான் பெற்றார்.

கேசவ சக்தியைப் பேணுவீர்!

எனவே கபால நோய்கள், தலைமுடி நோய்கள், பேன் தொல்லைகள், இள வழுக்கை, பெண்களுக்கு இள வயதிலேயே த‌லையில் சொட்டை விழுதல் போன்ற குறைகளுக்கு நிவர்த்தியைப் பெறவும், இவற்றால் மங்கும் ஆயுள் சக்திகள், சுமங்கலித்வ சக்திகள் நன்கு விருத்தி ஆகவும் இதுகாறும் தலைமுடிகளின் தேவ சக்திகளை உணராது இருப்போரும் இங்கு ஆலயப் பணிகளை ஆற்றிட வேண்டும். எண்ணெய் நீராடல், தலைமுடிக்குச் சாம்பிராணி தூபம் இடுதல் போன்ற தைல தேவதைகள், ரோம தேவதைகள், குங்கிலிய தேவதைகளுக்கான எந்த வழிபாடுகளும் செய்யாது வாழ்வோரும் பரிகாரம் பெற்றிட கூந்தலூர் சிவாலயத்தின் தரையை நன்கு பெருக்கி, நீர் விட்டுக் கழுவி, உழவாரத் திருப்பணிகள் ஆற்றி எட்டுப் புள்ளிப் பச்சை மாக்கோலங்கள் அல்லது நீர்க் கோலமிட்டு இவ்வாலயத்தில் உரிய திருப்பணிகளை ஆற்றி வருதல் வேண்டும்.

ஸ்ரீரோமச மகரிஷி கூந்தலூர்

இளநரை, வழுக்கை, முடி அடர்த்தி இன்மை, குட்டை முடி, அழகற்ற தலை வடிவு இவற்றால் வேதனை கொண்டும், வாழ்க்கை பாதிக்கப்பட்டும், திருமணம் ஆகாதும் இருப்போர் இங்கு கூந்தலூரில் ரோமச முனிவரின் திருமேனிக்கு மருதாணித் தைலம் சார்த்தி, சுவாமிக்கும் வெண்ணெய்க் காப்பு சார்த்தி வழிபட்டு வந்திடத் தக்கத் தீர்வுகள் கிட்டும். மேலும் மூலவராம் ஸ்ரீஜம்பகாரண்யேஸ்வரருக்கு நார் வகை உணவு, திரவியங்களைப் படைத்துத் தானமாக‌ அளித்து வந்தால் மேற்கண்ட குறைகளுக்குப் பிராயச்சித்தங்களையும், நிவர்த்தியையும் நன்முறையில் பெற்றிடலாம்.

இங்கு படைக்க வேண்டிய பனம்பழம், தேங்காய் சாதம், தேங்காய் இனிப்பு வகைகள், மாம்பழம், நன்னாரிப் பழ ரசம் போன்ற உணவு மற்றும் நார் வகை திரவியங்களை இங்கு தானமாக அளித்து வந்தால் தலை முடி, கபாலம் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்குத் தக்க நிவாரணங்களைப் பெற்றிடலாம்.

தலைமுடி காட்டும் விதி நிர்ணயம்!

தலைமுடியைச் சீப்பால் வாரும்போது ஏற்படும் சிக்குகள், உதிரும் முடியின் நீளம், தன்மை, உதிரும் முடியின் நிறம், நீளம், பளபளப்பைக் கொண்டே நமக்கு உடலில் உள்ள நோய்களையோ அல்லது வர இருக்கின்ற பிரச்னைகளையோ எளிதில் அறிந்து விடலாம். பில்லி, சூன்ய மந்திரங்களில் தலைமுடியை வைத்து ஏவல் செய்வதும் உண்டு. எனவே தலைமுடியை எவர் கையிலும் சிக்காது பூமியில் மறைத்திட வேண்டும். எனவே உதிர்ந்த முடிக்கும், முடி உதிர்ந்தவருக்கும் உள்ள தேகத் தொடர்பானது, முடி உதிர்வதோடு நில்லாது குறித்த ரோமாருணக் கடன்கள் தீரும் வரை நெடுங்காலம் தெரடரும் என்பதை இனியேனும் உணர்ந்து தெளிந்திடுக!

உதிரும் முடியைப் பேணும் முறை

உதிர்கின்ற முடிகளைப் பத்திரமாக ஒரு மரப் பெட்டியில் வைத்து, மாதந்தோறும் பெளர்ணமி, அஸ்வினி, கிருத்திகை, ஆயில்யம் போன்ற நாட்களில் பூமிக்கு அடியிலோ, நீரோட்டத்திலோ, நீர்த் தாரைகளிலோ, அல்லது கடலிலோ இடுதல் வேண்டும். ஆனால் தற்காலத்தில் சலூன் முறை நடப்புக்கு வந்து விட்டமையால் விழுகின்ற ரோமங்களை நன்முறையில் விசர்ஜனம் செய்ய இயலாமற் போய் விடுகின்றது. இதனால் தாம் வழுக்கை, இளநரை, கபால நோய்கள், தலையில் அடிபடுதல் போன்றவை ரோம தோஷ விளைவுகளாக ஏற்படுகின்றன. அக்காலத்தில் இல்லங்களிலேயே தலைமுடி வெட்டிக் கொள்ளும் பழக்கம் இருந்தமையால் முடியைத் திரட்டித் தக்க முறையில் பெரியோர்கள் அதனை விசர்ஜனம் செய்து விடுவார்கள். இன்றைக்கும் கூட, பண்டைய குடும்ப வழக்கமாக, உதிர்கின்ற தலைமுடியைக் கால் கட்டை விரலில் சுருட்டி வைத்துக் கொண்டு அதை ஒரு மரக் குச்சியில் சுற்றி வைத்தோ அல்லது ஒரு மர டப்பாவில் போட்டு வைத்துப் பிறகு குறித்த நாளில் விசர்ஜனம் செய்து விடுவார்கள். எனவே தலைமுடியின் தாத்பர்யங்களை உணராது நாம் தினந்தோறும் பல அரிய தெய்வீக சக்திகளை இழந்து வருகின்றோம் என்பதை நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

ஸ்ரீதுர்கையம்மன் கூந்தலூர்

உண்மையில் தலைமுடி தேவ ரகசியங்களை நன்கு உணர்ந்தவையே பேன்களேயாகும். பேன்களை மிகவும் கேவலமான ஜந்துக்களாக மனித குலம் எடை போடுகின்றது. ஆனால் தலையில் இருக்கும் பேன் வகைகளைக் கொண்டு உடலில் உள்ள நோய்கள், ரத்த வகை, கர்ம வினை வகைகளை எளிதில் அறிந்திடலாம் என்பது சித்த மருத்துவக் கூறுகளில் வருகின்ற விளக்கமாகும்.

பிறந்த குழந்தையின் பச்சை முடித் தத்துவம்

பச்சிளங் குழந்தையின் தலையில் நிறைந்திருக்கும் ரோமங்கள் மகத்தான தெய்வீக சக்திகளைப் பெற்றவை. ஏனென்றால் குழந்தையின் ஆயுள் காலத்திற்கான karmic package (விதியறியும் பெட்டகம்) ஆக சிசுவின் தலைமுடி துலங்குகின்றது. அதாவது பிறந்த குழந்தையின் தலைமுடியில்தான் ஜன்மப் பிறப்புகளின் கர்மச் சுவடி (ஏ)ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளன. தலைமுடிகள் மூலமாகவே அச்சிசுவின் 72000 நாளங்களுக்கும் அவை கொஞ்சம் கொஞ்சமாகக் கிரகிக்கப்பட்டுப் பரப்பப்படுகின்றன. இவ்வளவு பவித்ரமான குழந்தையின் முதல் முடியைத்தான் இறைவனுக்குக் காணிக்கையாக்கி ஆலயங்களில் முதல் மொட்டை அடிக்கின்ற நல்ல தெய்வீக காரியம் இன்றளவும் நடைபெறுகின்றது. எனவே குழந்தையின் முதல் முடி இறக்குதலை வெளியில், வீட்டில், கடையில் வைத்துக் கொள்ளாது ஆலயங்களில், அதிலும் குல தெய்வ ஆலயத்தில் வைத்துக் கொள்வதுதான் சிறப்புடையதாகும்.

மலைத் தல முடியிறக்கும் மகிமை!

குறிப்பாக, குன்றக்குடி, பழனி, திருச்சி மலைக்கோட்டை போன்ற மலைத் தலங்களில் முடி இறக்குதல் மிகவும் உத்தமமான பலன்களைத் தரும். உலகில் நிலவுகின்ற மலைத் தலங்கள் அனைத்திலும் ஈஸ்வரனுடைய நடராசத் திருமுடிச் சலனக் காற்றசைவு உருவாவதுடன் இவை யாவும் ஸ்ரீநடராஜப் பெருமானுடைய ஸ்திர பகுள நாட்டியத்தில் உருவானவையும் ஆகும்.

கபாலத்தில் உச்சந் தலையில் அமிர்தக் கிரணங்கள் சுரப்பதற்கான எண்ணற்ற அமிர்தக் கொப்பறைகள் உண்டு. இவை சுழி எனும் கபாலவடி விதானத்தால் மூடப் பெற்றிருக்கின்றன. சிலருக்கு இரண்டு, மூன்று சுழிகள் இருப்பதும் உண்டு. தலையில் உள்ள ஒவ்வொரு சுழியும் பிரம்ம லோக தேவ (ராஜி) முத்திரை போன்றதாகும். எனவே தலைமுடி என்பது நாம் நினைப்பது போல மிகவும் சாதாரணமானதல்ல!

பிறக்கும் போது தோன்றும் தலைமுடியை இறுதி மூச்சு வரை பத்திரமாகக் காப்பாற்றுவதே சிறப்பானதாகும். தலைமுடியை, இறைவனுக்கு நேர்த்திக் காணிக்கையாக அளிப்பது படைத்தவனுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாக அமைகின்றது. நேர்த்திக் காலந் தவிர முடியை நன்கு வளர்த்துக் குடுமி வைக்கும் பழக்கமும் தொன்று தொட்டுக் கடைபிடிக்கப்பட்டு வரும் மிகவும் ஆரோக்கியமான நற்பழக்கமாகும். நல்ஒழுக்கத்தைத் தந்து பக்தியைப் பேண குடுமி உதவுகின்றது. இதை அனைவருக்கும் உணர்த்தும் பொருட்டே அனைத்துத் தெய்வ மூர்த்திகளும் தலைமுடியை முடிக் கொண்டையாகக் கொண்ட தீட்சை (குடுமிக்) கோலத்தில் காட்சி தருகின்றனர்.

குடுமி வைத்தலின் சிறப்பு!

தீட்சை என்று போற்றப்படும் குடுமியின் பலன்களைப் பல புராணங்களாக வி(வ)ரித்திடலாம். தலைமுடியை வெட்டுவது என்பது நம் உடலின் அங்க வளத்தைக் குறைப்பதற்குச் சமமாகும். எனவே தொடர்ந்து முடி வெட்டுவதால் நமது ஜீவ சக்தி குறைந்து கொண்டே வந்து இதனால் உடல் ஆரோக்யம், மன வளர்ச்சி, ஆன்மீக முன்னேற்றம் பெரிதும் பாதிக்கப்படும். பரவெளி மந்திரங்களை கிரகிக்கத் தலைமுடி உதவுகின்றது.

ஸ்ரீவிநாயகர் கூந்தலூர்

பரவெளியில் நாம் அறிந்த நான்கு வேதங்கள் மட்டுமல்லாது எண்ணிறந்த வேத ஒலிகளும், மந்திர பீஜாட்சர சக்திகளும் பரவியுள்ளன. ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தைப் பரவெளியில் இருந்து நமக்குப் பெற்றுத் தந்த ஸ்ரீவிஸ்வாமித்திர மகரிஷி போன்று இத்தகைய மந்திரங்களை நேரிடையாக கிரகிக்கும் சக்தியைச் சாதாரண மனிதர்கள் பெறவில்லையாதலால் குடுமி வைத்து சிகை வளர்த்தலானது பரவெளி மந்திர சக்திகளை ஈர்ப்பதற்கு உறுதுணை ஆகின்றது. இதனால்தாம் பிறப்பில் இருந்து நீள்முடி பேணும்-பெண்டிர் ஆண்களை விட ஏழு மடங்கு மனோசக்தியுடன் துலங்குகின்றனர்.

குடுமி ஓர் ஆன்ம சாதனமே!

எனவே குடுமி வகை சிகையானது ஒரு தேவ ஆகர்ஷண சாதனமாக (divine antenna) செயல்பட்டுப் பரவெளியில் பரவியுள்ள மந்திர பீஜாட்சர சக்திகளையும் நல்லெண்ணக் கதிர்களையும் ஈர்த்துத் தேகத்திற்கு அளிக்கின்றது.

ஒவ்வொரு மனிதனும் தன் கபாலத்தினுள் பல லட்சக் கணக்கான மூளைச் செல்களைக் கொண்டிருக்கின்றான். ஆனால் இவற்றுள் ஒரு சராசரி மனிதன் தன் வாழ்நாளில் பயன்படுத்துவதோ இருபது, முப்பது மூளைச் செல்களையே! குடுமி வைத்து, அதை முறையாக தைலமிட்டுச் சீவிப் பராமரித்து சந்தியா வந்தன, சூரிய வழிபாடுகளைக் காலந் தவறாது கடைபிடித்து வந்திடில் மூளையின் பல்லாயிரக் கணக்கான செல்கள் ஆக்கம் பெறுகின்றன, புத்தி கூர்மை பெறும், அறிவுப் பிரகாசம் உண்டாகும்.

மனிதனின் கபாலத்தைச் சுற்றியுள்ள ஒளி வட்டம் எந்த அளவுக்குப் பிரகாசம் பெறுகின்றதோ அந்த அளவிற்கு அவன் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைகின்றான். சற்குருமார்கள். இந்த ஒளி வட்டத்தைக் கொண்டே ஒவ்வொரு சீடனின் முன்னேற்றத்தையும், அவனுக்கு அடுத்து இட வேண்டிய ஆன்மீகப் பணிகளையும் முடிவு செய்வதும் உண்டு. இந்த ஒளி வட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்வதற்காகவே ஆலயங்களில் இறைமூர்த்திகளின் தலைப் பகுதியை அலங்கரிக்கும் வகையில் திருவாசியை வைத்து வழிபடுகின்றோம்.

எனவே குடுமியானது ஓர் அற்புதமான ஆன்ம சாதனமாகி, தூய்மையான இறைச் கதிர்களை ஈர்த்துக் கபாலத்தில் செலுத்தி, ஒவ்வொருவரின் மேல் தலை மேல் விளங்கும் மறையொளி வட்டத்தை மேன்மேலும் பிரகாசம் அடையச் செய்கின்றது. எனவே இதுவரையிலும் குடுமியை வைக்காமல் காலத்தை வீணாக்கி இருந்தாலும், இனியேனும் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, சிகையை வளர்த்து, தீட்சையாகிய குடுமி வைத்து, இறைவழியில் நல்ல உத்தம நிலைகளைப் பெற்றிடுங்கள்.

குடுமியை ஒரு ஜாதி, சமயச் சின்னமாகக் கருதாமல், ஆரோக்ய சக்தி அளிக்கும் சாதனமாக, தேவசக்திகளைத் தந்திடும் கலசமாக நம் ராஜகுருமார்கள், முன்னோர்கள், மூவேந்தர்கள், படைத் தளபதிகள், அமைச்சர்கள், பக்தியுடைய நடிகர்கள், நாட்டியக் கலைஞர்கள் அனைவரும் ஜாதி, மத, பேதமின்றி, கட்டுக் குடுமியாக வைத்திருந்ததை நினைந்(த்)து, குடுமி வைத்து இதனை ஆரோக்யம், மன வளம், யோக சக்திகளைத் தரும் யோகசிகா முறையாகப் பேணிடுங்கள்.

ஆத்மவிசாரம்

ஸ்ரீவெங்கடராமன் அவர்களிடம் அடியார்கள் கேட்டுப் பெற்ற ஆத்ம விசாரத் தெளிவுகள்

சாதகர்: ஒவ்வொருவருக்கும் குரு உண்டு என்றாலும் எதனால் பலராலும் கலியுகத்தில் தமக்கு உரிய சற்குருவை அடைய முடியாமல் போகின்றது?

குரு: பிற ஜீவன்களுக்கு உதவும் தியாக மனப்பான்மை இல்லாததும் ஒரு முக்கிய காரணமே! முயற்சி, நம்பிக்கை போதிய அளவு இல்லாததும் ஒரு காரணமே! சுயநலமாக, தான், தன் குடும்பம், தன் வசதிகள் எனக் குறுகிய வட்டத்தில் வாழ்க்கையை ஓட்டுவதும், தேவையற்ற ஆசைகள், தீயஎண்ணங்களைப் பெருக்கிக் கொள்வதும் ஒரு காரணமே! இவை எல்லாம் சற்குருவை உணர இயலாதபடி செய்யும் தடைக் கற்கள்!

சாதகர்: கடவுள் வழிபாட்டிற்கும், குருவை அடைதற்கு என்ன வித்யாசம்?

குரு: இதிலொன்றும் வித்யாசமே இல்லையே! எனவே இல்லாத வித்யாசம் ஒன்றை இருப்பதாக எண்ணி ஏன் வீணாகக் கற்பனை செய்து கொள்வானேன்? கடவுளை அடைய, கூடவே இருந்து, தெய்வீக வழிகாட்டியாக அரவணைத்துச் செல்பவரே குரு என்பதே சத்திய வாக்கு! சற்குருவின்றிக் கடவுளை அடையவே முடியாது! குருவின்றிக் கடவுள் தரிசனமும் ஒருபோதும் நிச்சயமாகக் கிட்டாது!

சாதகர்: குரு இல்லாத பலருக்கும் பல சித்திகளும், அற்புத ஆற்றல்களும், தெய்வ தரிசனங்களும் தாமாகவே கிட்டுகின்றனவே!

குரு:- பலரும் தம்முடைய தீவிர பூஜா பலன்களாக, பல சமயங்களிலும் நல்தேவதைகள், பித்ரு மூர்த்திகளின் தேவ தரிசனங்களைக் கண்டு விட்டு, "இதுவே முற்றிய இறைநிலை! இதற்கு மேல் வேண்டியது ஒன்றும் இல்லை!'' என்று எண்ணி அந்நிலைகளிலேயே தங்கி விடுகின்றார்கள். முறையற்ற வகையில் செலுத்தப்படும் சித்திகள் அகங்காரத்தையே வளர்க்கும். மேலும் அதுவரையில் பெற்ற தெய்வீக நிலைகளையும் இழக்கச் செய்து விடும்.

தெய்வ மூர்த்திகளின் உபாசகர்கள் பலருக்கும், தக்க சற்குருவின் வழிகாட்டுதல் இல்லாமையால், தெய்வீகத்தில் இத்தகைய தேக்க நிலைகள் ஆங்காங்கே ஏற்பட்டு விடுகின்றன. பொங்கி வரும் தேவதா தரிசனங்கள், சித்திகளையும் கடந்து, ஒரு முக ஏக இறைச் சிந்தனையில் திளைப்போர்க்கே சற்குரு மூலமாக தெய்வ தரிசன மகிமை புலப்பட வரும்.

சாதகர்: கலியுகத்தில் குருவை அடைவது எளிதா? குருவைப் பெற கலியுகத்தில் என்ன செய்ய வேண்டும்? மிக மிக எளிமையான பதிலை வேண்டுகின்றோம்!

குரு: கலியுகத்தில் சொத்து, சுகம், செல்வம் அனைத்தையும் சுலபமாக அடைய எண்ணியே உலகெங்கும் மனிதர்கள் வாழ்க்கையில், தம் அரிய ஆன்ம சக்தியை வீணாக்குகின்றார்கள். இதனால்தான், தெய்வீகத்தில் கூட எதையும் உடம்பு நோகாமல் எளிதில், எளிமையாக அடைய வேண்டும் என்ற எண்ணமும் ஒட்டிக் கொண்டு விடுகின்றது. ஆனால் விலங்குகள், தாவரங்கள் இவ்வாறு சோம்பேறித் தனமாக வாழ்வதில்லை! ஆம் ஒரே இடத்தில் இருப்பது போல் தாவரங்கள் தோன்றினாலும், மதுரையில் உள்ள ஒரு காக்கையோ, மாமரமோ, ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு காக்கையிடமோ, மாமரத்திடமோ நன்கு உரையாடும். மனிதனை விடப் பல அரிய ஆன்ம சக்திகளைக் கொண்டவையே தாவரங்களும் விலங்கினங்களும்! ஆனால் அவைதாம் குருகுல வாசத்தைச் செம்மையாகக் கைக் கொள்கின்றன.

எனவே தன்னைச் சுற்றியுள்ள கோடிக் கணக்கான தாவரங்கள், விலங்குகள், நட்சத்திரங்களிடம் இருந்தே ஒவ்வொரு மனிதனும் பல அடிப்படைத் தெய்வீகப் பாடங்களை அறிந்து கொண்டிடலாம்!

கலியுலகில் நிச்சயமாக ஒவ்வொருவரும் மிகவும் எளிய முறையில் குருவை அடையலாம்! முதலில் தனக்கு ஒரு சற்குரு உண்டு என்று ஒவ்வொருவரும் அசைக்க முடியாத, சீரான நம்பிக்கை கொள்ள வேண்டும்! ஆழ்ந்த நம்பிக்கை என்றால் எப்போதும், எந்நேரமும் மாறாதது! ஆயுள் முழுதும், சீராக விருத்தி அடைவது! நடுவில் விட்டு விட்டுச் சென்று வருவதல்ல! எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அவற்றைத் தாங்கி நின்று, அவந‌ம்பிக்கை கொள்ளாது, குருவைச் சார்ந்து நிற்க வேண்டும்!

அடுத்ததாக “எனக்குரிய சற்குருவை அடைந்தே ஆக வேண்டும்!” என்று ஆழ்ந்த வைராக்யம் நிறைந்த பரிபூரண நம்பிக்கை கொண்டு, தக்க குருவை அடையும் வரை, தனக்கு மிகவும் பிடித்த மகானை, சித்தரை, யோகியை, ஞானியை நேரடியாகவோ அல்லது அவர்கள் யோக சமாதி பூண்ட ஜீவாலயங்களில், குருமூர்த்தங்களில், பிருந்தாவனங்களிலோ ஆழ்ந்த நம்பிக்கையுடன் வழிபட்டு வர வேண்டும்! கலியுகத்தில் சித்தர்களின் ஜீவ சமாதி தரிசனமும், வழிபாடும் சற்குருவை மிக‌ எளிதில் அடைய வைக்கின்ற, வைராக்யச் சித்த நம்பிக்கையைத் தர வல்ல இறையோகச் சாதனங்களாகும்!

மூன்றாவதாக “கடவுளே! அடியேனுக்கு உரிய சற்குருவைப் பெற்றுத் தா!” என்ற ஒரே ஒரு பிரார்த்தனையோடு ஆலய வழிபாடு, பூஜைகளை, விரதங்களை, இறைப் பணிகளைக் கடைபிடித்து வர வேண்டும். எந்நிலையிலும், எத்தகைய இன்ப, துன்ப நிலைகளிலும் இந்தப் பிரார்த்தனையானது வேறு விதமாக லெளகீகமானதாக, அதாவது சுயநலப் பிரார்த்தனையாக மாறி விடக் கூடாது.

சாதகர்: பூஜைகள், விரதங்கள், இவைகளுக்கும் கடவுள், குருவுக்கும் என்ன இணைப்பு?

குரு: கேள்விகள் கேட்பது எளிது! கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருப்பது மிகவும் எளிது! கேள்விகளைக் கேட்டுக் கொண்டே பதில்களைப் பெற்று விட்டு கலியுகத்தில் வெறுமனே தலையாட்டி விட்டுச் செல்வது அதை விட எளிது!

ஆன்மீகத்தில் தெளிவு பெற வினாக்கள் தேவைதாம்! ஆனால் தக்க குருவிடம் இருந்து பெறுகின்ற விளக்கங்களில் நன்கு தெளிவடைதலும், அதை விட மிகவும் முக்கியமானதாக அவற்றைக் கடைபிடித்தலும் தான் கேள்வி கேட்டதன் காரண, காரியத்தை நிறைவு செய்வதாகும்.

கடவுளை எளிதில் அடைய வைப்பவையே ஆலயங்கள்! கடவுளை உணரும் வழிமுறைகளே விரதங்கள், பூஜைகள், தான தர்மங்கள் யாவும்! உறுதியான வைராக்யம், திடகாத்திரமான மனம் இல்லாது காமம், குரோதம், பொறாமை, பகைமை போன்றவற்றிற்கு கலியுகத்தில் மனிதன் அடிக்கடி ஆட்பட்டு விடுவதால், எவராலும் தன்னந் தனியனாய் இறைவழியில் செல்ல இயலாததாகிறது. தக்க சற்குரு ஒருவரே அருகில் இருந்து நன்கு வழிகாட்டி, இறைவனை உணரச் செய்வதற்கான பரிபூரணமான, புனிதமான, ஆன்மீக சாதன, சாதக இறைத் தூதுவராகப் பிரகாசிக்கின்றார்!

அக்காலத்தில் நிகழ்ந்தது போல, உறுதியான வைராக்யத்துடன் வனவாசம் புகுந்து யோகம், தவம், தியானம் புரிந்தால், அவைகளே பூஜைகளுக்கு, விரதங்களுக்கு நிகரான பலன்களை அளித்திடும்!

ஆனால் கலியுகத்தில் துறவறத்தைக் கடைபிடிப்பது மிக மிகக் கடினம், துறவறத்திலும் கூட ஒருவர் கண்டிப்பாகத் தக்க சற்குருவைப் பெற்று, அவருடைய குருகுல வாசக் கண்காணிப்பில் எப்போதும் நிச்சயமாக இருந்தாக வேண்டும். பிரிந்தால் கடும் சாபங்கள் உண்டாகும்.

இவ்வாறு கலியுகத் துறவறம் மிக மிகக் கடினமானதாக அமைந்திருப்பதால் தான், தற்போதைய கலியுகத்தில் இல்லற தர்மமே இறைவனைக் காட்டுகின்ற மிகவும் எளிமையான வழியாகச் சித்தர்கள் அருள்கின்றனர். எனவே இல்லறத்தார்க்கு வழிகாட்டிட, சற்குருவே கலியுகத்தில் இல்லறம் பூண்டு அருள்வழி காட்டுகின்றார்.

சாதகர்: குரு இருக்கும்போது விரதங்கள், பூஜைகள் எதற்கு?

குரு: சற்குருவை அடைவதற்கும், தானடைந்த சற்குருவின் மீது தளராத நம்பிக்கை கொண்டு இறைவழியில் நன்கு நிலை நின்று இறைமையை நன்கு உய்த்திடவும், உடல், மன, உள்ளப் பூர்வமாக சற்குருவை நன்முறையில் சரணடையவும் பூஜைகள், விரதங்கள் உதவுகின்றன. உண்மையில், இறைவழிபாட்டில் கிட்டும் மிகவும் உயர்ந்த உத்தம தெய்வீக நிலைகளுள் ஒன்றே சற்குருவை அடைவதாகும்.

சற்குருவை அடைந்த பின்னரும் பூஜைகள், விரதங்கள் எதற்கு என்றால், அறியாமையால், கர்ம வினைகளின் அழுத்தத்தால் அவதியுறுகின்ற பிற ஜீவன்களுக்கும் இறையருளைப் பெற்றுத் தர மகத்தான சமுதாய சேவையாக இவை யாவும் பெரிதும் உதவுகின்றன.

சாதகர்: சற்குருவை அடைந்த பிறகு ஒருவருக்கு கர்ம வினைகளின் தன்மை எப்படி அமையும்?

குரு: தனக்குரிய சற்குருவை அடைந்த பின்னும் கடக்க வேண்டிய நிலைகள் நிறைய உண்டு! ஏனென்றால் ஸ்புடம் போட்ட புனிதமான சீடராக ஆகுதற்கு நிறைய நிலைகளை, சோதனைகளைக் கடந்தாக வேண்டும். சற்குருவின் பரிபாலனத்தில் வந்த பிறகும், அவரவர் தம் கர்ம வினைகளைக் களைந்தால்தான் முக்தி நிலைகளைப் பெற முடியும்! இதற்கு சற்குரு பெருந்துணை புரிவார்! முக்தி என்றால் இறப்பிற்குப் பின் அடைகின்ற உத்தம நிலை எனப் பலரும் தவறாக அர்த்தம் கொள்கின்றனர். இந்த உடலில் உயிர் பொலியும் போதே குருவின் துணையுடன், இறையொளியைக் காண்கின்ற முக்தி, மோட்ச நிலைகளும் உண்டு.

எனவே சற்குருவின் அருட் பார்வையில், குருகுலத்தில் கடைபிடிக்கப்படும் பூஜைகள், ஆலய தரிசனங்கள், தான தர்மங்கள் யாவும் மிகவும் துரிதமாகக் கர்ம வினைகளைக் களைந்து, இறைவழியில் சீர்மை பெற உதவுகின்றன.

சாதகர்: விரதங்கள், தான தர்மங்கள், இறைப் பணிகள் இவையல்லாது வெறும் யோகத்தால், தியானத்தால் இறைவனை அடைய முடியாதா?

குரு: நிச்சயமாக முடியும்! ஆனால் புகைபிடித்தல், டீ.வி, சினிமா, மது, புகையிலை, செய்தித் தாள், அரசியல், சோம்பேறித் தனமாய் வெறுமனே கேளிக்கைகளில் பொழுதைக் கழித்தல் எனப் பலவற்றிற்கும் அடிமையாகி இவற்றில் இருந்து ஒரு பத்து நிமிடம் கூட மீள முடியாமல் திகைக்கும் கலியுக மனிதனுக்கு மனம் அமைதியாகும் யோகம், தியானம் கை கூடுவது மிக மிகக் கடினமே.

அமைதியாக பத்மாசன நிலையில் அமர்ந்து ஒரு ஐந்து நிமிடமாவது மனச் சலனங்கள், மன ஓட்டங்களின்றி எவராலும் இருக்க முடிகின்றதா? சும்மா இருப்பதே சுகம் என்பது மனம் அலை பாயாது நிர்ச்சலனமாக இருக்கும் போது கிட்டும் பேரானந்தத்தையே குறிக்கின்றது. மேலும் பூஜைகள், விரதங்கள், ஆலய பூஜைகளையும் பலரும் சிரத்தையாகக் கடைபிடிப்புதில்லை! எனவேதான் சுயநலமற்ற இறைப் பணிகளும், ஆலய உழவாரப் பணிகளும், தியாக மயமான சமுதாய இறைச் சேவைகளும், தர்ம காரியங்களும், அன்னதானம், மாங்கல்ய தானம், வஸ்திர தானம் போன்ற பலவிதமான தான தர்மங்களும் மகத்தான விரதங்களின், பூஜைகளின் பலன்களைத் தர வல்லவையாகக் கலியுகத்தில் சித்தர்களால், மகரிஷிகளால் அருளப்பட்டுள்ளன! ஆனால் இவற்றிலும் இறையருளாலேயே அனைத்தும் கை கூடிச் செயல்படுகின்றது என்ற எண்ணம் பதிந்தால்தான் உத்தம நிலைகளை, பலன்களை அடைய முடியும். இல்லாவிடில் இவற்றிலும் அகங்காரம், ஆணவம், மாயை பெருகி விடும். புண்ய சக்தியையும் கையாளும் திறனையும் குரு மூலமாக அறிதல் வேண்டும். இல்லையேல் பெரும் புண்ய சக்தியால் உயர் பதவிகள், செல்வம், சொத்து கிட்டி மீண்டும் மாயைச் சுழல் வளையம் போல் உடல், மன, உள்ளக் கொந்தளிப்புகளே உண்டாகும்!

எனவே சற்குருவே எவ்வித பேதமின்றி பூவுலகில் அனைவரையும் அரவணைத்து அவரவருக்கு உரிய மார்கத்தை, நல்வழிகளைக் காட்டிட வல்ல உத்தம இறைத்தூதுவர் ஆவார்.

மும்முத்து வடுகம்

மும்முத்து வடுக தீபநடை வழிபாடு!

"மும்முத்து வடுகம்" என்ற ஒரு வகையான மிகவும் முக்கியமான ஜோதி வழிபாடு வகை ஒன்று ஸ்ரீமுத்து வடுகநாத சித்தருடைய ஜீவாலயத்திற்கு அர்ப்பணிக்கப்படுகின்றது. வராஹி பீஜாட்சர வேதாக்னி ஒளிரும் இந்த சித்த ஜீவாலயத்தையும், பரஞ்ஜோதி பூமியான அருணாசலத்தையும் இணைக்கின்ற சிவசித்தஜோதி வழிபாடு இதுவே! இதன்படி இவ்வழிபாட்டின் முதல் அங்கமாக சிங்கம்புணரி ஸ்ரீமுத்து வடுக நாதர் ஜீவாலயத்தில் நன்கு பெரிய, தூய மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம், செந்தூரம் இடப்பட்ட 12 அகல் விளக்குகளை சித்தரின் பீடத்தில் அர்ப்பணித்து மூன்று முறை அங்கப் பிரதட்சிணம் செய்திடல் வேண்டும். அங்கப் பிரதட்சிணம் செய்ய இயலாதோர் 12 அகல் விளக்குகளைக் கைகளில் தாங்கியவாறு தாமறிந்த குரு துதிகள், ஸ்ரீமுத்துவடுக கமட பீஜத்துதி, ஸ்ரீஅப்பர் சுவாமிகளின் அங்கமாலைத் துதி, கேசாதி பாத, பாதாதி கேசத் துதிகளை ஓதியவாறு முத்து வடுக நாத சித்தருடைய ஜீவாலயத்தை 21 முறை அடிப் பிரதட்சணம் செய்து ஆழ்ந்த நம்பிக்கையுடன், பக்தியுடன் வழிபட வேண்டும்.

அங்கப் பிரதட்சிணம், அடிப் பிரதட்சிணம் இரண்டையும் செய்தல் மிகவும் விசேஷமானதாம். 12 விளக்குகளில் நான்கு விளக்குகளை, நான்கு திசைகளிலும் திரிகள் வருமாறு பதினாறு திரிகளை வைத்து, இங்கு ஜீவாலயத்தில் விளக்கெண்ணெய்த் தீபமாக ஏற்றி வழிபட வேண்டும்! இந்நாளில் அபிஷேக ஆராதனைகளுடன் சித்ரான்னம் எனப்படும் சர்க்கரைப் பொங்கல், தேங்காய் சாதம், புளியோதரை, எலுமிச்சை அன்னம், தயிர் சாதம் ஆகிய ஐந்து வகை அன்னங்களை அவரவர் வசதிக்கேற்ப அன்னதானமாக அளித்தல் சிறப்புடையதாகும்.

ஸ்ரீவராகியம்மன் ஆலயம்
உத்தரகோசமங்கை

இந்த ஜோதி வழிபாட்டின் இரண்டாவது அங்கமாக, இங்கு பூஜிக்கப்பட்ட எட்டு அகல் விளக்குகளுடன் திருஅண்ணாமலைக்குச் சென்று, எட்டு விளக்குகளையும் தாங்கியவாறு கிரிவலம் வந்து, இங்கு "வராஹி வரதீய பூமி" என்று அழைக்கப்படுகின்ற இப்போது அரசு கலைக் க‌ல்லூரி எதிரேயுள்ள மிகவும் பழமையான ஸ்ரீதிரௌபதி ஆலயப் பகுதியில் நான்கு தீபங்களை வேப்பெண்ணெய்த் தீபமாக ஏற்றி வணங்கிக் கிரிவலம் வந்திடல் வேண்டும். இங்கு, அருணாசலப் புனித பூமியில் சிகப்பு நிற ஆடைகளைத் தானமாக அளித்தல் பூஜா பலன்களை விருத்தி செய்யும்.

மூன்றாவது அங்கமாக எஞ்சிய நான்கு விளக்குகளுடன் மீண்டும் சிங்கம்புணரி வந்து ஸ்ரீமுத்து வடுகநாதருடைய ஜீவாலயத்தில் மீண்டும் 21 முறை அடிப் பிரதட்சிணம் அல்லது மூன்று முறை அங்கப் பிரதட்சிணம் வந்து நான்கு விளக்குகளிலும் இலுப்பெண்ணெய் தீபமாக ஏற்றி வழிபடுதல் வேண்டும். இலுப்பெண்ணெய் வெண்ணெய் போல் உறையுமாதலால் சிறிது நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.

விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பெண்ணெய் ஆகிய மூன்றும் (எண்ணெய்) முத்து வித்துக்களால் வருவதாதலின் இதனை மும்முத்து வடுகம் என்று சித்தர்கள் அழைக்கின்றார்கள். இம்மூன்றும் கலந்த தீபம் ஸ்ரீவராஹி தேவிக்கு மிகவும் ப்ரீதியானதாகும். ஒரே நாளில் இந்த வழிபாட்டினை நிறைவேற்றுதல் மிகவும் விசேஷமானதாகும். ஆனால் பயண நேரம், பயணக் களைப்பு, உடல் ஆரோக்யத்தைப் பொறுத்து இம்மும்முத்து வடுக தீப பூஜையை மூன்று நாட்களுக்குள் நிறைவேற்றிடலாம்.

வடுக ஜோதி வர்ஷிக்கும் வளமான நல்வரங்கள்!

இதற்கான 12 அகல் விளக்குகளும் நன்கு பெரிதாக அமைதல் தனிச் சிறப்புடையதாகும். இந்த பன்னிரெண்டு (அகல்) ஜோதிகளிலும் உற்பவிக்கின்ற வடுக ஜோதியானது ஸ்ரீமுத்து வடுக நாத சித்தர்பிரானின் குருமூர்த்தத்தில் இருந்து ஈர்த்தெழுந்து, திருஅண்ணாமலை வடுகப் பாறையை அடைந்து, ஸ்ரீவராஹி தீர்த்த அக்னி சக்தியில் யோகத் திரட்சி பெற்று, மீண்டும் ஸ்ரீமுத்து வடுக நாத சித்தருடைய ஜீவாலயத்தை அடைதலே மும்முத்து வடுக ஜோதி பூஜையாகும்.

ஸ்ரீதிரௌபதியம்மன் ஆலயம்
திருஅண்ணாமலை

இந்த அக்னி சக்தியானது வராஹி உபாசனையில் மட்டுமே தோன்றுகின்ற மகத்தான சக்தியாகும். இச்சக்தியை இப்பூவுலகிற்கு அளிக்க வல்ல மிக அரிதான சித்தர்களுள் ஒருவரே ஸ்ரீமுத்து வடுகநாத சித்தர் ஆவார்.

ஸ்ரீமுத்து வடுக நாத சித்தருக்கு மிகவும் பிரியமானது கிழங்கு வகை உணவுகளால் ஸ்ரீவராஹிக்கு அன்னாபிஷேகம் செய்து ஆராதித்தல் ஆகும். அதாவது உருளைக்கிழங்கு, முள்ளங்கி போன்ற கிழங்கு உணவு வகைகளைச் சமைத்து, அன்னத்துடன் சேர்த்து இவற்றைக் கொண்டு ஸ்ரீமுத்து வடுகநாத சித்தரின் திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்து இத்திருக் காட்சியைக் குறைந்தது கால் மணி நேரம் உற்று நோக்கி, கீழ்க் கண்ட “முத்து வடுக கமக பீஜத் துதியை” ஓதி தியானித்து வழிபட வேண்டும்.

மும்முத்து வடுக பூஜையின் அகல் ஜோதிகளிலும் எழுகின்ற வடுக ஜோதியானது சித்தரின் ஜீவாலயத்தில் எழுந்து திருஅண்ணாமலை வடுகப் பாறையை அடைந்து வராஹ தீர்த்த அக்னி சக்தியில் திரட்சி பெற்று மீண்டும் ஸ்ரீவடுக நாத சித்தருடைய ஜீவாலயத்தை அடைதலே மும்முத்து வடுகமாகும். இந்த அக்னி சக்தியானது வராஹ உபாசனையில் கிட்டுகின்ற மகத்தான சக்தியாகும். இச்சக்தியை இப்பூவுலகிற்கு அளிக்க வல்ல மிக அரிதான சித்தர்களுள் ஒருவரே ஸ்ரீமுத்து வடுகநாத சித்தர் ஆவார்.

வராஹி நீறு போஷிக்கும் நல்வரங்கள்!

முத்து வடுகநாத சித்தருடைய ஜீவாலயத்தில் தியானிக்கின்ற முறை தனிச் சிறப்புக் கொண்டதாகும். பொதுவாக இடது உள்ளங்கையில் தான் ஆதி வராஹி சக்திகள் யோக, தியான சாதனைகளில் முதலில் நன்கு பரிமாணமாகும். எனவே தான் "வராஹி உபாசனையில்" ஈடுபடுவோர் மஞ்சளுடன் வெண்ணெய் கலந்து தனது இடது உள்ளங்கையில் வராஹி நீறாய்ப் பூசி, சூரிய விரலாகிய தன்னுடைய வலது கை மோதிர விரலால் இந்த மஞ்சள் / வெண்ணெய் நீற்றுப் பதிகத்தில் ஸ்ரீவராஹி தேவிக்கான அரிய பீஜ மந்திரங்களை பதித்துப் பூஜிப்பர். இவ்வாறு உள்ளங்கைக் கீற்றுப் பதிகத்தை நன்முறையில் ஓதி ஸ்ரீவராகியை வடுகநாத சித்தருடைய ஜீவாலயத்தில் தியானிக்கின்ற முறை தனிச் சிறப்புக் கொண்டதாகும். இவ்வாறு வழிபட்டு வருவோர்க்குக் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்கால நிகழ்ச்சிகள் டீவி, வீடியோ காட்சி போல நன்கு புலப்படும். ஆனால் இதனை ஒரு போதும் தவறாகப் பயன்படுத்துதல் கூடாது. ஸ்ரீவராஹ உபாசனையில் கரணம் தவறிடினும் பெருங் குற்றமே!

எனவே மிதவும் கடினமான ஸ்ரீவராஹி உபாசனையை முறையாகத் தக்க சற்குரு மூலமாகக் கற்று இதன் சக்திப் பூரிப்பில் தன்னலமின்றித் திளைப்பவர்க்குத்தாம் இந்த உள்ளங்கை கீற்றுப் பதிக சித்திகள் தாமாகவே கனியும். ஸ்ரீமுத்து வடுகநாத சித்தர் எவ்விதமான சித்திகளிலும் ஈடுபாடு கொண்டதில்லை. ஆனால் மிக மிகப் புனிதமான வராஹி பூஜித சக்தி நிறைந்த சித்தர்பிரான் என்பதால் ஸ்ரீமுத்து வடுக நாத சித்தர் எங்கு சென்றாலும், சித்திகள் தானாகவே விளையும், கனியும், பொழியும்!

வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் மிகவும் சிறந்த முறையில் அருள்பாலிக்கின்ற மிகவும் சக்தி வாய்ந்த சித்த ஜீவாலயம் இதுவே! இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயது உடையவர்கட்கு நன்முறையில் பல வராஹி உபாசனை முறைகளை துரிய ரீதியாக, துரிதமாக அளிக்கின்ற நற்சித்தபிரானே ஸ்ரீமுத்து வடுகநாத சித்தர் ஆவார்.

முத்து வடுக கமட பீஜத் துதி

முத்து வடுகம்
சக்தி வடிதம்
மத்து கடிகம்
வித்து பிடிதம்
சத்து ஸ்படிகம்
பத்து படிதம்
முத்துச் சிவசித்து புதிதம், மதிதம், வடுதம்

மிகவும் சக்தி வாய்ந்த சித்த வடுக பரிபாஷைத் துதி இது! முத்து வடுக நாத காண்டத்தில் வராஹி தீப ஜோதி ஒலிப்பறையில் காணப்படும் சித்த பரிபாஷைத் துதி இதுவே! தக்க சற்குரு மூலமாகவே கலியுகத்திற்கு உணர்த்தப் பெறுவது! இதனை ஓதியவாறு குருவருளுடன் ஜீவாலயத்தை வலம் வருவதாலும், திருஅண்ணாமலையை கிரிவலம் வருதலாலும் மலையளவு துன்பங்களும் கடுகளவாய்த் தணிந்து மறையும், குருவருள் கூடிடில்!

ஆன்மீகச் சாதனங்கள்

போக்குவரத்து ஆபத்துகளைத் தணித்திட க‌வசமாகிடும் ஆன்மீகச் சாதனங்கள்!

எங்கு பார்த்தாலும் சாலை விபத்துக்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. சாலை ஓரம் நடந்து செல்வது கூட ஆபத்தாக உள்ளது என்று மற்றவர்கள் போல நீங்களும் சொல்லிக் கொண்டு இருக்காமல், ஆ(வி)பத்துகளைத் தவிர்த்திட ஆன்மீக ரீதியாக, மகத்தான சமுதாய இறைப்பணியாக உங்களால் என்ன செய்திட முடியும் என்று தக்க சற்குரு மூலமாகக் கேட்டறிந்து செயல்படுங்கள்! விபத்துகளுக்கான ஆன்மீகக் காரணங்களை ஓரளவேனும் தெரிந்து கொள்ளுங்கள். மனித உடலில் நவகிரக சக்திகள் பல நாளங்களிலும் நிரவி உள்ளன. இவற்றில் எந்த இடத்தில் நவகிரக சக்திகள் குறைகின்றனவோ அவ்விடத்தில் நோய்கள் உண்டாகும் அல்லது அடிபட்டுக் காயங்கள், ரணங்கள் ஏற்படும்.

பொதுவாக செவ்வாய் மற்றும் சனி கிரக அம்சங்கள்தாம் சாலைகள், வண்டிகள், நடை, ஓட்டம் போன்ற அம்சங்களைச் சார்ந்துள்ளன. ஒருவருக்கு சனி, செவ்வாய், தசா, புக்தி, அந்தரங்கள் நடக்கும்போது கர்ம வினைகளின் அழுத்தம் அதிகமாக இருந்தால் விபத்துக்கள், வண்டிகள் சம்பந்தமான பிரச்னைகள், வாகனம் திருடு போதல், வாகனங்கள் பழுது ஆதல் போன்றவை உண்டாகும்.

பரவெளியிலும் நவ சக்தி அம்சங்கள் நிறைய உண்டு. ஓரிடத்தில் சனி கிரக, செவ்வாய் கிரக அம்சங்கள் பரவெளியில் குறையும்போது விபத்துக்களுக்கான வாய்ப்புகள் அங்கே நிறைய ஏற்படுகின்றன. எனவே சனி கிரக, செவ்வாய் கிரக அனுகிரக சக்திகள் மூலமாகவே விபத்துக்களிலிருந்து தற்காத்துக் கொள்வதுடன், விபத்துகளையும் அண்டாது தடுத்திடலாம். இதற்காக பைரவ, சனி, செவ்வாய் மூர்த்திகளுக்கான வழிபாடுகளை அந்தந்த கிரக சக்திகள் பரிணமிக்கும் நாட்களில், நேரங்களில் கடைபிடிப்பதோடு பைரவ, சனி, செவ்வாய் கிரக சக்திகள் நிறைந்த கருப்புக் கயிறு, சங்கு, படிகாரம், ஆலய கோமுக தீர்த்தம் போன்ற திரவியங்களை, பொருட்களை ஆன்மீக சாதனங்களாகப் முறையாகப் பயன்படுத்தியும் வருதல் வேண்டும்.

மரம் வெட்டிடில் கிட்டிடும் விபத்து

சாலையோரங்களில் மாமரம், அரசு, ஆல், வேம்பு, போன்ற ஹோம விருட்சங்கள் அமைத்தல் ரட்சா (காப்பு) சக்திகளை அளிக்கும், சாலையோர மரங்களை ஒரு போதும் வெட்டுதல் கூடாது. வெட்டிடில் நிறைய விருட்ச தோஷங்கள் ஏற்பட்டு அப்பகுதியில் விபத்துக்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். வெட்ட. வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் அதற்குரிய விருட்ச சாந்த பூஜைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆவி சேஷ்டைகள் நடு நிசியில் ஏற்பட நிறைய வாய்ப்புண்டு. எனவே வண்டி ஓட்டுபவர்கள் அனைவரும் காசிக் கயிறு எனப்படும் கருப்புக் கயிற்றை அஷ்டமித் திதி பூஜையில் ஸ்ரீகால பைரவரின் திருவடிகளில் வைத்து வலது மணிக் கட்டில் கட்டிட வேண்டும். இடுப்பிலும் அரைஞாண் கயிறாக அணிந்திட வேண்டும். வாகனங்களுக்கும் கருப்புக் கயிறு சார்த்திட வேண்டும்.

சாலை விபத்துகளைத் தவிர்த்திட எல்லை தெய்வ வழிபாடு மிக மிக முக்கியமானதாகும். ஆங்காங்கே இருக்கும் ஸ்ரீமுனீஸ்வரர், ஸ்ரீஅய்யனார், ஸ்ரீமருத்தி போன்ற தெய்வ மூர்த்திகளுக்குக் கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபட்டுச் செல்லுங்கள்! ராகு காலம், எமகண்டத்தில் புறப்படுவதை, பயணம் செய்வதை அறவே தவிர்த்திடுங்கள். எல்லை தெய்வ வழிபாடுகள் குறைந்ததும் விபத்துக்கள் பெருகுவதற்கான பெரும் காரணமாகும். சைக்கிள், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், லாரி, கார் வைத்திருப்பவர்கள் செவ்வாய், சனி, அஷ்டமி போன்ற நாட்களில் கண்டிப்பாக ஸ்ரீமுனீஸ்வரர், ஸ்ரீஅய்யனார், ஸ்ரீமருத்தி, ஸ்ரீபைரவர், ஸ்ரீசனீஸ்வரர், செவ்வாய் மூர்த்திகளை வழிபடுதல் வேண்டும்.

புதன், சனிக்கிழமைகளில், கருட பகவானுக்கும், திங்கள் கிழமைகளில் நந்தி மூர்த்திக்கும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அம்பிகைகளின் வாகனங்களுக்கும் எண்ணெய் காப்பிட்டு வழிபடவேண்டும்.

ஒருவர் நன்றாக சாலை விதிகளை ஒட்டி நடந்தாலும், வண்டியில் நன்முறையில் சென்றாலும், பிறருடைய தவறுகள்தாமே பெரும்பாலான விபத்துக்கள் நடக்கின்றன. எனவே பிறருடைய தவறுகளும் நம்மை பாதிக்காமல் இருக்க, போதிய ரட்சா சக்திகளை நாம் பெற்றிருக்க வேண்டும். பொதுவாக ஆயில்ய நட்சத்திர, தசமி திதி தினங்கள் தெய்வ மூர்த்திகளின் வாகன வழிபாட்டிற்கும் வாகன பூஜைகளுக்கும் உரிய நாட்களாகும்.

எனவே பைரவ, எல்லை தெய்வ, சனீஸ்வர, செவ்வாய் மூர்த்தி வழிபாடுகள்தாம் பரவெளியில் நவகிரக சக்திகளை விருத்தி செய்து விபத்துக்கள் ஏற்பட்டாலும் தற்காக்கும்.

மாத சிவராத்திரி

கொள்ளார் கோபுரம் காத்தான் சித்தர் சிவராத்திரி

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

கோயில் கோபுரத்தின் ஒவ்வொரு அம்சமும், கோணமும் பல தெய்வீக ரகசியங்களை உணாத்துவதாம். இவற்றுள் கோபுர மாட இறைத் தாத்பர்யங்கள், கோபுர க‌லச ரகசியங்கள் நிறைய உண்டு.

ஆலய கோபுரங்களில் நிறைய மாடங்களைப் பார்த்திருப்பீர்கள். ஒவ்வொரு மாடமும் ஒரு உத்தம நிலைத் தாத்பர்யத்தைக் கொண்டது. கோபுர மாடம் உயர, உயர இதன் தெய்வீக சக்திகள் மிகுந்து கொண்டே வரும். தூரீய நிலையில் சித்தர்களும், மகரிஷிகளும் யோகவடி வழிபாடுகளை அமைத்துக் கொள்ளும் புனிதப் பிறைகளாகவும் கோபுர மாடங்கள் திகழ்கின்றன! அந்தந்த நாளில் பூவுலகிற்குத் தேவையான. தேவ சக்திகளை அளிக்கும் வகையில் அந்தந்த மாடத்திலும், கலசத்தையும் சித்தர்கள் வழிபடுவர்.

மூன்று மாடங்கள் உள்ள கோபுர தரிசனம் ஆணவம், கன்மம், மாயைகளை அழித்து இறைவனை அடையும் தத்துவத்தை விளக்குவதாகும். ஐந்து மாடக் கோபுரங்கள் பஞ்ச பூதங்களின், ஈர்ப்பு சக்தியை உணர்த்திடும் வகையில் அமைக்கப்படுவதாம். ஏழு மாடக் கோபுரங்கள் மனிதனுக்கு வாக்கு சித்தியை அளித்து நித்தியக் காரியங்களை முறையாகச் செய்ய வைக்கின்றது. ஒன்பது மாடக் கோபுரங்கள் மனிதனுக்கு சர்வ சக்தியையும் தந்து மனிதனை மஹானாக மாற்றும் உத்தம தெய்வீக நிலைகளை அளிப்பதாம்.

ஆகவே, ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எப்படியெல்லாம் முன்னுக்கு வந்து, தியாக மனப்பான்மையைப் பெற்று தெய்வீகத்தில் உயர் நிலைகளை அடையலாம் என்பதற்கான ஆகம, வேதீய, மறைவழி, தத்வார்த்த, துரீய பூஜை முறைகளை நடைமுறையில் சித்தி செய்து, திருஅண்ணாமலையில் கிரிவலம் வந்து கோபுரம் சுமந்தான் சித்தர் என்ற பட்டத்தை ஈசன் அருளால் பெற்றவர்தாம் கொள்ளார் கோபுரம் காத்தான் சித்தர் ஆவார்.

கோபுரங்களில் உள்ள கலசங்களில் பிரம்ம முடி, விஷ்ணு கதிர், நித்யா வட்டம், ருத்ர முடிச்சு, பூர்ண கும்பம் போன்ற பல அம்சங்கள் உண்டு. ருத்ராகம விதிப்படி, க்ரீம்கார சக்கரம் அமைத்து, மஜ்ஜினத் தோடுவேர் என்னும் மூலிகை ரசத்தால் முறையாக சுருக்குக் கொடுத்து சித்தர்கள் முறைப்படி குறிப்பிட்ட சில வேர்களை பந்தனம் செய்து, மனிதர்களுடைய பிரார்த்தனைகளுக்கு நற்காரிய சித்தியை அளிக்க வல்ல மஞ்சப்புறை என்ற தந்திர முறைப்படி உரு ஏற்றி, குட்ப கலசத்தைக் கும்பாபிஷேகத்தில் ஸ்தாபிதம் செய்வர் நம் பெரியோர்கள். இக்கலையில், ஆகம நியதிகளில் வல்லவரான கொள்ளார் கோபுரம் காத்தான் சித்தர் சுவாமிகளை பாரதமெங்கும் பல ஆலயங்களைச் சார்ந்தோரும் நாடி வந்து தக்க விளக்கங்களைப் பெற்று ஆனந்தித்துச் செல்வர்!

இவ்வகையில் முறையாகப் பூஜிக்கப் பட்ட கோபுரக் கலசத்தைத் தரிசிப்போருக்கு, "சதாஸ்து" எனப்படும் நல்வர தேவதைகள் நன்முறையில் அனுகிரகம் புரிவர். இவ்வகைக் கோபுர மாட, கலச வழிபாடு, தரிசனங்கள் மூலமாக தேவ அனுகிரகமானது அனைவரையும் சென்றடையும். இதில் இன்னும் பல தெய்வீக ரகசியங்கள் உண்டு.

மண், நீர், நெருப்பு, காற்று போன்ற இயற்கை சக்திகள் நல்லவர், தீயவர் என்று வித்தியாசம் பாராமல் அனைவருக்கும் உதவி செய்கின்றன அல்லவா! ஆனால் இதே வகையில் தீயவர்களும், கொடியவர்களும் கோபுர கலச தீர்க அனுக்கிரகத்தை பெற்று மேலும் வல்லமை பெற்றிட்டால் சமுதாயம் பெரிதும் பாதிக்கப்படும் அல்லவா! எனவே தீயோர்கள் ஆலயக் கோபுரக் கலச சக்திகளைப் பெற்று மேலும் தீமைகள் செய்யாதிருக்க வேண்டுமல்லவா! கோபுரக் கலச தரிசனப் பலன்கள் தீயவர்களை அடையாதிருக்க, கபால ரகசிய தந்திரத்தின்படி கலச சக்திகளை ஈர்த்து வைத்து, நல்லோர்களுக்கு மட்டும் கோபுர கலச அனுகிரகம் கிடைக்கும்படி செய்தற்காக, கொள்ளார் கோபுரம் காத்தான் சித்தர் சுவாமிகள் ஒவ்வொரு சிவராத்திரி அன்றும் அருணாசலத்தைக் கிரிவலம் வந்து, தூங்கா வில்வ இலைகளால் ஈசனை அர்ச்சித்து வழிபட்டு வந்தார். உண்மையிலேயே மனம் திருந்தி. வாழ வைராக்யம் பூண்டு தன்னால பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான நிவாரணங்கள் அளித்து நன்முறையில் வாழ விரும்புவோர் மாத சிவராத்திரி, திங்கள் கிழமை, மிருக சீரிஷ நாட்களில் அருணாசலத்தைக் கிரிவலம் வருதல் வேண்டும்.

இவ்வாறு பல ஆண்டுகளாக இடைவிடாது மாத சிவராத்திரியில் கிரிவலம் வந்து தம் தபோ பலன்களை அருணாசல மலை தரிசனங்களில் பதித்து கோபுரக் கலச தரிசனப் பலாபலன்களை நல்லோர் பெற வழி செய்தவரே கொள்ளார் கோபுரம் காத்தான் சித்தர் சுவாமிகள். அருணாசலப் பெருமானின் திருவருளால் ஒவ்வொரு கோயில் கோபுரத்தையும் காக்கும் பணியை ஈசன் இச்சித்தர்பிரானுக்கு அளித்து, கொள்ளார் கோபுரம் காத்தான் சித்தர் என்ற‌ காரணப் பெயரையும் சூட்டினார்.

இத்தகைய சிவானுகிரகம் நிறைந்த கொள்ளார் கோபுரம் காத்தான் சித்தர் தூல, சூக்கும, துரீய வடிவுகளில் திருஅண்ணாமலையில் கிரிவலம் வரும் உத்தம மாத சிவராத்திரித் திருநாளே நடப்புச் சித்ரபானு ஆண்டின் கார்த்திகை மாதச் சிவராத்திரித் திருநாளாகும்.

மது, சூது, வாது, புகை, முறையற்ற காமச் செயல்களுக்கு ஆளானோர் இவற்றிலிருந்து மீளவும்,

தம் பழைய வாழ்க்கையில் இவற்றைக் கொண்டிருந்தோர் பழைய வினைகளின் கடுமையைத் தணித்து நற்பரிகாரங்கள் பெறவும்,

தம் பிள்ளைகள் நல்ஒழுக்கத்துடன் வாழ வேண்டுவோரும்,

பிறருடைய செய்கைகளால் பாதிக்கப்பட்டு வாழ்வோர் நன்னிலை பெறவும்,

பல காலமாக நின்று போயிருக்கும் ஆலயத் திருப்பணிகள் தொடர்ந்து நன்கு நடைபெறவும்,

மாத சிவராத்திரி நாளில் திருஅண்ணாமலையில் கிரிவலம் வந்து வழிபட வேண்டும்.

முதலில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் ஆலய கிழக்கு கோபுர வாசலில் கிரிவலத்தைத் தொடங்கி கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, மீண்டும் கிழக்கு கோபுர மாட, கலச‌ தரிசனங்களைப் பெற்று கிரிவலம் வந்து மீண்டும் கிழக்கு கோபுர தரிசனத்துடன் மாத சிவராத்திரி கிரிவலத்தை நிறைவு செய்தல் வேண்டும். அருணாசல கிரிவலத்தில் நாம் காணும் பல்லாயிரக் கணக்கான மலை தரிசனங்களில் உலகெங்கும் உள்ள கோயில் கோபுரங்களின் வடிவுகள் பதிந்திருப்பதால் உலகத்தின் அனைத்து ஆலய கோபுரங்களின் வடிவுகள் இங்குதாம் சூக்குமமாகத் தோற்றம் பெறுகின்றன என்ற உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்.

திருத்துறைப்பூண்டி

நட்சத்திர ஆலயத் தொடர் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தோர்க்கான ஆயுட் கால வழிபாட்டுத் தலம் திருத்துறைப்பூண்டி ஸ்ரீபவ ஔஷதீஸ்வரர் ஆலயம்

இந்த நட்சத்திர ஆலயத் தொடரில் சித்தர்களின் ஞான பத்ர தேவ வாக்கியங்களில் உள்ளபடி, அந்தந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் தம் வாழ்நாளில் வழிபட வேண்டிய ஆலயங்கள் பற்றி சித்தர்கள் அருள்கின்ற அபூர்வமான, அற்புதமான விளக்கங்களை அளிக்கின்றோம். இதுவரையில் பரணி, கார்த்திகை, ரோஹிணி, திருவாதிரை, ஆயில்யம், அனுஷம், உத்திரம், சித்திரை, உத்திராடம், ரேவதி , அவிட்டம் ஆகிய 11 நட்சத்திர ஆலய விளக்கங்கள் வெளி வந்துள்ளன.

ஸ்ரீஅகஸ்தியருக்கு மணக்கோலம்
திருத்துறைப்பூண்டி

அஸ்வினி நட்சத்திரத்தார் தம் ஆயுட்காலத்தில் அடிக்கடி வழிபட வேண்டிய மிகவும் முக்கியமான தலங்களில் திருத்துறைப்பூண்டி ஸ்ரீபவ ஒளஷதீஸ்வரா் ஆலயமும் ஒன்றாகும். மருத்துவ சக்திகள் நிறைந்தவையே அஸ்வினி நட்சத்திரக் கிரண ஒளிக் கீற்றுக்களாம்! பல கோடி நட்சத்திரங்களிடம் இருந்து பலவகையான ஒளி சக்திகளையும் சூரிய பகவான் பெற்று, பூமியில் அந்தந்த நட்சத்திரத்தார்க்குத் தேவையான பூர்வ நட்சத்திர ரேகைக் கிரணங்களாக, பூலோக வாழ்நிலைகளுக்கு ஏற்ப அவரவருக்கு அளிக்கின்றார். எனவே நாம் பொதுவாக நினைப்பது போல அனைவருக்கும் ஒரே மாதிரியான சூரிய வெப்பம் அமைவதில்லை! ஒவ்வொருவரும் பெறும் சூரிய கிரண வெப்பமும், தன்மைகளும் வெவ்வேறு விதமாக இருக்கும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் தம் வாழ்வில் வழிபட வேண்டிய மிகவும் முக்கியமான தெய்வ மூர்த்தியே திருத்துறைப்பூண்டி ஸ்ரீபவஒளஷதீஸ்வரர் ஆவார்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தோர் மருத்துவத் துறையில் இல்லாது வேறு தொழில் செய்திட்டாலும், இவர்களுடைய பூஜா பலன்கள் உலகில் நோய்களை நிவர்த்திக்கும் நற்குண சக்திகளைப் பெருக்கிடப் பெரிதும் துணை புரியும் என்பதை உணர்தல் வேண்டும். அஸ்வினி நட்சத்திரத்திற்கான வேத பீஜாட்சரங்கள் "சு, சே, சோ, ல" ஆகியவை ஆகும். இவை ஒலிக்கின்ற மருத்துவ பீஜாட்சர த்வனிகள் தனிச் சிறப்புடையவையாக விசேஷமான நோய் நிவாரணத் தன்மைகளைக் கொண்டவை! மேலும் அஸ்வினி நட்சத்திர மற்றும் ஸ்ரீபவ ஒளஷத தேவதா மூர்த்திகள் தினமும் பூஜிப்பதான, நோய் நிவாரண சக்திகள் பரிபூரணிக்கின்ற தலங்களுள் ஒன்றே திருத்துறைப் பூண்டி ஸ்ரீஒளஷதீஸ்வரர் ஆலயமாகும். ஆயில்ய நட்சத்திர தேவதா மூர்த்திக்கு மருத்துவ திரவியங்களுக்கு நோய் குண சக்திகளை அளிக்கின்ற விசேஷத் தன்மைகள் உண்டு! அஸ்வினி நட்சத்திர சக்திகள் மருத்துவா்களுக்கு, மருத்துவ திரவியங்களை அளிப்போர்க்கு, தயாரிப்போர்க்கு மகத்தான நோய் நிவாரண சக்திகளை அளிப்பதாகும். மருந்து பாதி, மந்திரம் பாதி என்பது போல மருந்துப் பொருட்களில் நிரவி உள்ள மருத்துவ சக்திகளை ஆக்கப்படுத்திட, செயல்படுத்திடத் தக்க மந்திரங்களுடன் கூடிய வழிபாடுகளைக் கடைபிடித்திட வேண்டும்.

ஒரே மருந்தைப் பலரும் உட்கொண்டாலும் பலருக்கும் பலவிதங்களில், பல நாட்களில் குணம் கிட்டுகின்ற பாங்கானது எதைக் குறிக்கின்றது? மருந்தின் குணத்தை விட, மருத்துவ குணத்தை மேம்படுவதற்கான பூஜா சக்திகளும், நோய் நிவாரணத்திற்காக அவரவர் கொண்டுள்ள புண்ய சக்திகளும் மிக முக்கியமானவை என்பதையே குறிக்கின்றது. பூஜைகள், ஸ்ரீதன்வந்த்ரீ ஹோமங்கள், செவ்வாய் பகவான் வழிபாடு, ஸ்ரீசனீஸ்வரருக்கான யாகங்கள், ஏழைகளுக்கு நற்பணி ஆற்றுதல், பிறருக்குத் தன்னலமற்ற சேவை புரிதல் போன்ற சமுதாய நற்காரியங்கள் மருத்துவ குண சக்திகளைப் பெருக்கும்.

மருத்துவ சக்திகளைப் பொழியும் லிங்க மூர்த்திகளிலும் ஒளஷதீஸ்வரர் (ஒளஷதம் - மருந்து), பவ ஒளஷதீஸ்வரர், மருந்தீஸ்வரர், ரோகநிவர்தீஸ்வரர், ஐுரஹரேஸ்வரர் என்று பல வகையான விசேஷ மூர்த்திகள் உண்டு. இவற்றில் ஸ்ரீபவ ஒளஷதீஸ்வரர் சித்புருஷர்களால் தூல, சூக்கும, காரண வடிவுகளில் பூஜிக்கப்படுபவர் ஆவார். ஸ்ரீதன்வந்த்ரீ சித்தர், ஸ்ரீபடேசாஹிப் சித்தர், ஸ்ரீஅலவந்திச் சித்தர், ஸ்ரீகருவூர்ச் சித்தர் போன்ற மருத்துவச் சித்தர்கள் ஸ்ரீபவஒளஷதீஸ்வரரையும், ஸ்ரீமருந்தீஸ்வர லிங்க மூர்த்தியையும் பூஜிப்பதுடன், "பரிபூரண மூலிகா" பூஜைகளையும் கடைபிடிக்கின்றனர்.

அதாவது பால், நெய், சந்தனம், மஞ்சள் போன்ற நறுமண, நல்திரவிய சக்திகளை உடைய, 64 விதமான மூலிகா ரேகை பந்தன சமூலங்களால் அபிஷேக, ஆராதனை மேற்கொண்டு அரிய மூலிகா சக்திகளை அந்த லிங்கத்தின் மத்ய ரேகை நீரோட்டங்களில் சேர்ப்பதால் அந்த ஆலயத்தைச் சுற்றிக் குறித்த பரப்பளவில் உள்ள அனைத்து நீரோட்டங்கள், ஆறு, குளங்கள், ஏரிகள், மரஞ், செடி, கொடிகளில் பாறைகளில் மருத்துவ குணங்கள் கூடுகின்றன. மூலத்தானத்தின் கோமுகம் வழியாக வரும் அபிஷேக தீர்த்தம் நிரவும் இடங்களில் எல்லாம் மருத்துவ குண சக்திகளும் பெருகும். எனவேதான் அக்காலத்தில் ஆலய கோமுக நீரானது நந்தவனத்திலும், ஆலயத் தீர்த்தக் குளத்திலும் சேருமாறு அமைத்திருப்பார்கள். இதனால் தீர்த்தத்தில் நீராடுவோர்க்கு மூலவரின் மருத்துவ கணக் கிரண சக்திகள் சேர்ந்து நோய்கள் நிவர்த்தியாகும்.

ஸ்ரீபவ ஒளஷதீஸ்வரராக ஆதிசிவன் அருள்பாலிக்கும் திருத்துறைப் பூண்டி ஆலய பூமியானது தன்வந்த்ர மருத்துவ சக்திகளைக் கொண்டதாகும். பவஒளஷதம் என்பது மருந்து சக்தியுடன் வேதபூம்யம், பலத்வீபம் போன்ற ஐந்து விதமான சக்திகளும் கூடுவதாகும். இங்கு செவ்வாய், சனி, ஆயில்யம், அஸ்வினி நட்சத்திர நாட்களில், வழிபடுவதால் நோய்களுக்குத் தக்க நிவாரணங்கள் கிட்டும்.

பெளர்ணமி நாள்: 18.12.2002 புதன் கிழமை இரவு 11.46 மணி முதல் 19.12.2002 வியாழக்கிழமை இரவு 12.40 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பெளர்ணமி திதி அமைகிறது.
கிரிவல நாட்கள்: 18.12.2002 புதன் மற்றும் 19.12.2002 வியாழன் இரு தினங்களும்.

2.12.2002 திங்கள் இரவு 7.02 மணி முதல் 3.12.2002 செவ்வாய் மாலை 3.57 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி டிசம்பர் மாத சிவராத்திரித் திதி நேரம் அமைகின்றது.
டிசம்பர் 2002 மாத சிவராத்திரி கிரிவல நாள்: 2.12.2002 திங்கள் இரவு.

ஸ்ரீவராஹி அம்மன் வழிபாடு

பெண்களுக்கு மகத்தான வேத சக்திகளைப் பெற்றுத் தரும் ஸ்ரீமுத்து வடுகநாத சித்தர் அளிக்கும் கலியுகப் பெண்களின் தினசரி வாழ்க்கை அச்சத்தைத் தீர்த்து எங்கும் ரட்சையாய்க் காத்திடும்! தீய சக்திகளும், வன்முறைகளும் பெருத்து வருகின்ற கலியுகத்தில் ஸ்ரீவராஹி அம்மன் வழிபாடானது, கலியுகத்துப் பெண்களுக்கு மகத்தான வேத சக்திகளைப் பெற்றுத் தந்து, அச்சம் களைந்து, தற்காப்பு சக்தியையும் அளித்து எங்கும், எக்கணமும் காப்பதாகும். ஸ்ரீஆதிவராஹி அம்மன் தனித்த சன்னதி உள்ள ஆலயம் அருகில் இல்லாவிடில் சப்த மாதர்களுள் ஒருவராக விளங்கும் ஸ்ரீவராஹி தேவியை வணங்கிடுக! பெருமாளுக்கு உரிய புதன், சனி, ஏகாதசி, திரயோதசி, திருவோண நாட்களில் ஸ்ரீவராஹி அம்மனை வழிபடுதலானது கலியுகத்தில் பீதிகளால், பயத்தால் ஏற்படுகின்ற பலவிதமான மனச் சுமைகளைத் தணித்திட உதவுகின்றது! இரண்யாட்சன் கவர்ந்து சென்ற வேதத்தை மீட்டிட, ஸ்ரீவராக மூர்த்தி பாதாளத்தைத் தோண்டிச் சென்ற போது நிகழ்த்திய அவதார இறைலீலைகளைப் பரிபூரணமாகத் தரிசிக்கும் பாக்யத்தை ஸ்ரீஆதிவராஹி அம்மன் பெற்றமையால், ஸ்ரீவராஹி அம்மனுக்கு அபரிமிதமான வேத சக்திகளை நல்கும் அவதார சக்திகள் பரிபூரணித்தன!

ஸ்ரீவராஹி அம்மன் ஆலயம்
உத்தரகோசமங்கை

கலியுகத்தில், பெண்களுக்கு வேத மந்திரங்களை ஓதும் வாய்ப்பு அரிது என்பதாலும், வேத சக்திகளின் மகிமையை உணர்ந்த கணவன்மார்களைப் பெறுதல் கடினம் என்பதாலும், ஸ்ரீவராஹி அம்மன் வழிபாடே பெண்களுக்கு வேதங்கள் மூலமாகக் கிட்டும் காப்பு சக்திகள் பலவற்றையும் பெற்றுத் தருவதாகும். இறைப் பரம்பொருளிடம் இருந்தே வேதம் தோன்றியமையால் பாதாளம் வரை சென்று போரிட்டுத்தான் அரக்கர்கள் வசப்பட்ட வேதத்தைப் பரம்பொருளாம் திருமால் மீட்டுத் தர வேண்டுமா? பகவான் கண்ணசைத்திடில் மகா வேதங்கள் அவர்தம் திருவடிகளை வந்து சேர்ந்திடாதா என்ன? பெருமாளால் நினைத்த தருணத்திலேயே அரக்கர் வசப்பட்ட வேதங்களை, வேதசக்தியை மீட்டுத் தந்திட முடியுமே? இவ்வாறு நிகழக் காரணமென்ன? பிரபஞ்ச ஜீவன்களுக்கு அறவழிகளைப் புரிய வைக்கும் வகையிலும், பல நற்காரியங்களின் தன்மையை உணர்த்தும் வகையிலும் இறைவனே மானுட அவதாரமோ அல்லது ஜீவன்கட்கு நன்மை புரியும் வகையில் பல அவதாரத் தோற்றங்களோ பூண்டு பல நற்காரியங்களை இறைப்பூர்வமாக, உணர்த்துகின்றான். அதிகார நந்தி மூர்த்தி ரிஷப முகமும், ஸ்ரீஹயக்ரீவப் பெருமாள் குதிரை முகமும் பூண்டவர்! ஸ்ரீவராஹ மூர்த்தியின் திவ்யமான, பரிபூரண பல தேவாவதாரங்களைப் பூண்ட வராஹி அம்மன் பன்றி முகம் கொண்டவள்! இவ்வாறாக, அனைத்து உயிர்களுக்கும், பல வடிவங்களில் அந்தந்த ஜீவன்களுக்கான, சற்குருமார்களை இறைவன் படைத்துள்ளான். கொசுவிற்கான சற்குரு கொசு வடிவிலும், தேனீக்களுக்கான சற்குரு தேனீ வடிவிலும், காக்கைகளுக்கான சற்குரு அண்டங் காக்கை வடிவிலும் இவ்வாறாக அந்தந்த ஜீவன்களைக் கரையேற்றும் பொருட்டு பொதுவாக, அதே இனவடிவிலும், பிற வடிவுகளிலுமாகப் பலவிதங்களில் சற்குரு பரிபாலனங்களை இறைவன் அனைத்து ஜீவன்களுக்குமாகப் படைத்துள்ளான்.

ஸ்ரீவராஹி அம்மன்
சுவாமிமலை பெருமாள் ஆலயம்

பயத்தை நீக்கும் ரட்சா சக்திகளுக்கென ஸ்ரீவராஹி தேவி!
பூவியின் அடியின்கண் வாழும் ஜீவன்கள் நிறைய உண்டு. பூமியின் மேலுள்ள ஜீவன்களை விட, பூமியின் அடியில் வாழும் உயிரினங்கள்தாம் பலகோடி மடங்கு எண்ணிக்கையில் மிகுந்து நிறைந்துள்ளன. எவ்வாறு பாம்புக் குலங்களுக்கு சற்குருவாக ஸ்ரீஅஸ்தீக சித்தர் உள்ளாரோ, இதே போல பூமிவாழ் அனைத்து ஜீவன்கட்கும் ரட்சா சக்திகளை அளிக்கின்ற அன்னையாய் ஸ்ரீவராஹி தேவி விளங்குகின்றாள். அனைத்து ஜீவன்களும் குறிப்பாகத் தாவரங்களும், விலங்கினங்களும், மனிதர்களும், பூமியில் வாழ்வதற்கான மிகவும் முக்கியமான ஜீவசக்தியை பூமியின் வேர்ப் பகுதியிலிருந்துதாமே பெறுகின்றனர். ஜீவன்கள் வாழத் தேவையான நீரும், கீழிருந்து மேலாக ஊற்றாய் வருவதுதானே! பூமிக்கு அடியில் வாழும் எறும்புகள், கறையான் வகைகள் நிறைய உண்டு, எனவே பூமியின் மேல் வாழும் ஜீவன்களை விட, பூமியின் அடியில் வாழும் ஜீவன்களே அதிக எண்ணிக்கையில் இருப்பதால், அவர்களை உய்வித்திடவும் ஸ்ரீவராஹி தோன்றினாள். இவ்வாறு ஸ்ரீவராஹி அவதாரம் பல அரிய தெய்வீகத் தாத்பர்யங்களைக் கொண்டதாம்.

யோகப்ராண சக்திகள் நிறைந்த பன்றியின் மூக்கு!
பன்றியின் (வராஹம்) நாசியானது, பகைமையை வெல்லவல்ல எதிர்ப்பு சக்தி நிறைந்ததாம்! பன்றியின் மூக்குப் பகுதி மிகவும் வலிமையானது! பல அரிய நாளங்களையும், பல்கோண வேத சக்திகளையும் கொண்டது. பன்றியானது யானையைப் போல மிகவும் வலுவான தசை நார்களால் கூடிய நாசியைக் கொண்டதாகும். நாம் பன்றி முகம் எனக் கேலியாக அறியாமையாற் சொன்னாலும், சித்தர்கள் தம்முடைய ஜீவத்வ பரிபாலன கிரந்தங்களில் இதனை வரகுண நாசி என்றே இந்த வராக நாசி (பன்றி மூக்கு) வகையைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்கள். ஏனென்றால், பன்றியின் நாசித் தசை நார்கள் பெறுதற்கு அரிய ‘வரகமண சார’ யோக சக்திகளைக் கொண்டதாகும். அதாவது, பன்றியின் சுவாசமானது, பல யோகத் தத்துவங்களைக் கொண்டதாகும். பன்றி பூமியைக் கிண்டும் போது தன் மூச்சை அடக்கிக் கொண்டு தோண்டும். இத்தகைய கும்ப யோக நிலையில், இதிலும் நாசியை உள் நிறுத்தி யோகம் பூண்ட நிலையில் பூமியை அகழ்கையில், இதன் நாசியினின்று எழும் ஒரு வகையான உஷ்ணமானது பூமியின் அடிப்பகுதியில் எழும் உஷ்ணத்துடன் சங்கமமாகி, மகத்தான வராகபந்தன தேவசக்திகள் உருவாகின்றன. பூமியில் இருந்து பன்றி தோண்டி எடுக்கும் மூலிகைக் கிழங்குகளுள் ஒருவகையே மூலிகா தளிக் கிழங்காகும். பன்றியின் நாசியானது வ(ஷ)ட் கோணத்தில் அமைந்துள்ளது. பன்றியின் வ(ஷ)ட்கோண, வரகுண நாசியில் எழும் சுவாச சக்தி, யானையின் சுவாச சக்தியைப் போல் பல தெய்வீக ஆற்றல்களைக் கொண்டது. பன்றியின் சுவாச சக்திக்கு “வரபுரிப் பிராணாயாம தேவசக்தி” என்று பெயர். இது பூமியின் அடியில் இருந்து பன்றி தன் மூக்கால் தோண்டி எடுக்கும் மூலிகா தளிக் கிழங்கின் பூம்ய சக்தியுடன் சேர்ந்து பரவெளியைத் தூய்மைப் படுத்துகின்றது.

ஸ்ரீவராஹ அவதாரம்
நாச்சியார்கோவில்

பன்றியின் பூமித் தோண்டலில் புனரும் அபூர்வமான வேதாக்னி சக்திகள்! பல இடங்களிலும், கிழங்கிற்காக மட்டுமன்றி, பன்றியானது நம்மால் அறிய இயலாப் பல காரண காரியங்களுக்காகவும் பூமியைத் தோண்டுவதை நாம் பார்த்திருக்கின்றோம். பன்றி வேறு வேலையின்றி பூமியைத் தோண்டுவதாக நமக்குத் தோன்றினாலும் இறைப் படைப்பின் செயல்களில் எதுவுமே காரண, காரியமின்றி அமையாது! சூரியனால் பூமிக்குக் கிட்டும் உஷ்ணத்தோடு, பூமிக்கென இயற்கையான சுயவேத வெப்பமும் உண்டு. ஓரிடத்தில் மண் வெட்டியால் குழி தோண்டி, உள்ளே கைகளை வைத்துப் பார்த்தால் பூமியின் கீழ் உள்ள இயற்கையான உஷ்ணத்தை நாம் ஓரளவு உணரலாம். இது பூமியினின்று இயற்கையாகத் தோன்றும் வேதசார உஷ்ண வகையாகும். இதுவே வர்ஷ ருத்ராக்னி ஆகும். இந்த உஷ்ணமானது இடத்திற்கு இடம் வேறுபடும். அனைத்து இடங்களிலும் பன்றி குழிகளைத் தோண்டுவது இல்லை. ஆன்மீக ரீதியாக எந்த இடத்தில் மனிதர்கள் பெருக்கிய தீவினைக் கர்ம சக்திகள் மிகுதியாய் உள்ளனவோ, அங்கு குழி தோண்டி, தம் வரகுண நாசியில் எழும் ருத்ராக்னியில், பிராணாயம அக்னியைச் சேர்த்து உருவாக்கி, கர்மக் கழிவுகளை பஸ்மம் செய்து அந்த இடத்தைச் சுத்திகரிக்கின்றது. எனவே அசிங்கமான கழிவுத் தாரைகளிலும், கழிப்பிடங்களிலும், துர்நாற்றத்திலும், சாக்கடைகளிலும் வாழும் பன்றிகளே உண்மையிலேயே பரவெளியைச் சுத்திகரிப்பதற்கான மகத்தான இறைப் பணிகளை ஆற்றுகின்றன என்பதை யாவரும் அறிதல் வேண்டும்.

கலியுகத்தில் பொய்மை, புரளி, வீண் பேச்சு, தீய பேச்சுக்களால் பாதிக்கப்படுகின்ற குடும்பங்கள் ஏராளம், ஏராளம்! பொய் சாட்சி, அபவாதங்கள் பொய் வாதங்கள் போன்றவற்றால் பலரும் பலவிதமான சொத்துக்களை இழந்து அல்லல்பட்டு வாடுகின்றார்கள். இவ்வாறு பிறருடைய பொய்மைப் பிரசாரத்தால் பாதிக்கப்பட்டோர் சிங்கம்புணரி ஸ்ரீமுத்து வடுகநாத சித்தருடைய ஜீவாலயத்தில் ஞாயிற்றுக் கிழமை, சூரிய ஹோரை நேரத்தில் சித்தர் பிரானுக்கு ஆரஞ்சு நிற ஆடைகளை அணிவித்து, ஏழைகளுக்கு ஆரஞ்சு வண்ண ஆடைகளைத் தானமாக அளித்து வந்தால், பலவிதமான பொய்மைகளால், அபவாதங்களால் வாடுவோர் துரிதமாக நிவாரணம் பெறுவர். பிராணிகளை வதைக்கும் ஆராய்ச்சி சமுதாயத்திற்குக் கேடு தரும்! எனவே பன்றிகளை வெறுக்காதீர்கள்! எல்லா ஜீவன்களும் மனிதனைப் போல் காரண, காரியங்களுடன்தான் பிறக்கின்றன. அந்தந்த ஜீவன் அதனதற்கு உரித்தான இறைப் பணிகளைச் செவ்வனே செய்யும்போது, மனிதன் மட்டுமே தேவையற்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, உண்மைகளற்ற நிரூபணங்களைக் கொணர்ந்து, தான் எடுத்த பிறவியில் பணிகளைச் செய்யாமல் விட்டு விடுகின்றான்.

ஸ்ரீசப்தமாதர்கள்
சுவாமிமலை பெருமாள் ஆலயம்

இவ்வாறு தேவையற்ற வேலைகளில் தன் உடல் சக்தியையும், உயிர் ஆற்றலையும் ஜீவ ஒளி சக்தியையும் இழக்கும் மனிதன் என்றுதான் தன்னைத் தானே உணரப் போகின்றானோ? வாயற்ற ஜீவன்கள் கூட தமக்கென இறைவன் வகுத்த நியதிப்படித் தம் இறைப் பணிகளைச் செவ்வனே செய்வதைப் பார்த்து மனிதன் தானாய்த் திருந்த வேண்டுமே தவிர, மனிதன் விஞ்ஞான ஆராய்ச்சி என்ற பெயரில் எலி, பூனை எனச் சோதனைக் கூட ஆராய்ச்சியாகப் பிற ஜீவன்களின் வாழ்வில் தேவையற்றுத் தலையீடு செய்தல் கூடாது. தற்காலத்தில் கோளாறுகள், கூன், குருடு, ஊனம் எனக் குறைகள் ஏற்படக் காரணங்களுள் ஒன்றே ஜீவ இம்சையும், பிற ஜீவன்களின் வாழ்வில் “ஆராய்ச்சி” என்ற பெயரில் மனித குலம் அதிபயங்கரமாக விளையாடுவதுதாம்!

எலிகளின் உடலில் கொடுமையான நோய்க் கிருமிகளைப் பாய்ச்சி அவைகட்கு மூளைக் கோளாறுகள், வயிற்று வலி என உருவாக்கிப் பார்த்தல் எல்லாம் ஒரு ஆக்கப் பூர்வமான சோதனையா? என்னே கேவலம் இது? எந்த விஞ்ஞானியாவது தன் குடும்பத்தார் மேல் இவ்வாறு விபரீதமான சோதனைகளைச் செய்து பார்க்கத் துணிவாரா? மனித குலம் சிந்தித்துப் பார்க்கட்டும்!

ஸ்ரீமுத்து வடுகநாத சித்தர் துரீயமாக என்றும் வழிபடும் சக்தி வாய்ந்த சுவாமிமலை ஸ்ரீஆதிவராஹி தேவி! விஷ்ணுபதித் தலங்களுள் ஒன்றான சுவாமிமலைப் பெருமாள் ஆலயத்தில், மூத்தவராக, மூல முதல்வராம் ஸ்ரீமத்துவரதரின் ஆலயத்தில்தாம், ஸ்ரீஆதிவராஹி தேவி கடும் தவம் புரிந்தனள். எதற்கு? வேத சக்திகளைக் கலியுக ஜீவன்களுக்கு மீட்டுத் தருவது மட்டுமின்றி எதிர்வரும் யுகங்களில் மனித குலம் தேவையற்ற எண்ணங்களையும், தீயசக்திகளையும் பரவெளியிலும், பூமியிலும் பரப்பி மாசுபடுத்தும் என்பதால்தான் பரவெளியைச் சுத்திகரிப்பதற்காகவே ருத்ராக்னி, ஹரிஹராக்னி போன்ற சக்தி வாய்ந்த அக்னி மூலங்கள் பூமியில் என்றும் நிலை பெற வேண்டும் என ஸ்ரீவராஹ மூர்த்தி சங்கல்பித்து உற்பவித்தார். இதற்காகவே அபூர்வமான ஹரித்ராக்னி யோக சக்தி நிறைந்தவராக அபூர்வமான வராஹப் பெருமான் பூமியைக் குடைந்து சென்றார். இதனால் கிடைத்தற்கரிய வராஹ வேத சக்தி பூமியெங்கும் நிரவியது.

ஸ்ரீவரதராஜ பெருமாள் சுவாமிமலை

கலியுகத்திலும் நமக்கு இத்தகைய அரிய ஸ்ரீவராஹி வேத சக்திகளைப் பெற்றுத் தரவே ஸ்ரீவராஹி தேவியின் தலைமையில் பல சித்தர்களும், மகரிஷிகளும் ஒன்றுகூடித் திருமாலை வேண்டிப் பிரார்த்தித்தனர். இன்றைக்கும் வராஹ லோகத்து நித்ய சூரிகளும், இறையடியார்களும், ஜீவன்முக்தர்களும் வராஹ (பன்றி) முகம் உடையவர்களாகவே இறைவனைப் பூஜித்துப் பிரபஞ்சத்திற்குப் பெறுதற்கரிய பிரபஞ்ச சக்திகளை அளித்து வருகின்றனர். எனவே பன்றிகளைக் கேவலமாக எண்ணாதீர்கள்!

பாண்டவர்கள் வணங்கிய ஸ்ரீஆதிவராஹி தேவி! துவாபர யுகத்தில்…. வனவாசம் பூண்ட பாண்டவர்கள், ஸ்ரீபிப்பிலிய மகரிஷி அறிவுறுத்தியபடி தங்களுடைய வேதனைகளுக்கு, அச்சங்களுக்குத் தீர்வுகளை நாடி, திருவேரகத்தில் (சுவாமிமலை) ஸ்ரீவரதராஜ மூர்த்தி, ஸ்ரீஆதிவராஹி தேவியைத் தரிசித்துப் பரிகாரங்கள் செய்திட விரைந்தனர். “ஸ்ரீவரதராஜரைத் தரிசித்து ஸ்ரீஆதிவராஹி தேவியின் அருளைப் பெறுவது எளிதல்ல! அவர்தம் திருச் சந்நிதியில் பல்லாயிரக்கணக்கானோர் தரிசிக்க நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்துக் கிடப்பர். பஞ்ச பாண்டவர்கள் என்று உங்களை அறிமுகம் செய்து கொள்ளாது மிகவும் சாதாரணப் பிரஜைகளாய்ச் சென்று வணங்கிடில்தான் திருவேரக வராஹியாளின் மகிமை புலப்பட வரும்! அங்கு ஸ்ரீமத்துவரதரைப் பூஜித்து ஸ்ரீவராஹியின் பரிபூரண அருளைப் பெற்றிடுக!” –என்று பிப்பிலிய மஹரிஷி அறிவுறுத்திய வண்ணம், பாண்டவர்கள் சுவாமிமலை வந்திட, அவர்களே அதிசயிக்கும் வகையில் ஆங்கே ஸ்ரீமத்து வரதராஜர் திருச்சன்னதி முன், துறவியர்கள், பக்தர்கள், இறையடியார்கள், மானுடர்கள் மட்டுமல்லாது பல்லாயிரக்கணக்கான பசுக்கள், எறும்புகள், பூச்சிகள் நீண்ட வரிசையில் பெருமாளின் தரிசனத்திற்குக் காத்துக் கிடப்பதைக் கண்ட பாண்டவர்கள் அதிசயித்து அவர்கள் பின் நின்று கொண்டு நெடுநாட்கள் ஸ்ரீவரதராஜ, ஸ்ரீவராஹி தரிசனத்திற்காக ஏங்கிக் காத்திருந்து பிறகு பெற்றனரெனில் சுவாமிமலை ஸ்ரீமத்து வரதர் ஆலய ஸ்ரீவராஹியின் மஹிமைதான் என்னே! எப்போதும் முப்பத்து முக்கோடி தேவர்கள், கோடிக் கணக்கான சித்தர்கள், மகரிஷிகளின் சூக்கும, தூல நடமாட்டம் உள்ள சுவாமிமலை ஸ்ரீவராஹி தேவியின் மகிமையை எவ்வாறு எழுத்தில் முழுமையாக இயம்ப இயலும்? சற்குரு மூலம் உணரப்பட வேண்டிய பெரும் பொக்கிஷமல்லவா ஸ்ரீவராஹி தேவி மகிமை? ஸ்ரீதனலக்ஷ்மி தோன்றியபோது முதன்முதலில், முப்பத்து முக்கோடி தேவர்கள், மானுடர்கள் தரிசிக்கும் முன் பிப்பிலிய மகரிஷியும், மூவாயிரம் கோடி எறும்புகளும் ஸ்ரீதனலக்ஷ்மியைத் தரிசித்தமையால் ஆலயங்களில் எறும்புகளுக்கு சர்க்கரை கலந்த தான்யங்கள், ரவை இட்டு வருதலால் வறுமை, பணக்கஷ்டங்கள் தீரும்.

அமுத தாரைகள்

பல் தேவதைகளின் அருளைப் பெறுவீர்!

32 பல் தேவதைகளுடைய அருள் இல்லையென்றால் எந்த உணவையும் உங்களால் நன்கு சுவைத்து உண்ண முடியாது பொக்கை வாய் வந்து விட்டால் என்ன செய்வது? சிந்தித்துப் பார்த்து இளமையிலேயே 32 பற்களையும் தினந்தோறும் துதித்துப் போற்றி வருகின்ற நற்பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தந்த (பல்) தேவதைகளே! தாங்கள் அடியேனுடைய திருவாயில் அமர்ந்து உடலுக்கு ஜீவித சக்தியை அளித்து அனைத்து இறைப் பணிகளையும் ஆற்றிக் கொண்டிருக்கிறீர்கள். இதற்கு நன்றிக் கடனாக பல ஏழை மக்களும் நன்முறையில் உணவை நன்கு கடித்து உண்ணும் வண்ணம் அன்னதானம், உணவு திரவியங்களைத் தானம் செய்வதற்கு அடியேனுக்கு நல்லருளைத் தந்திடுக என்று வேண்டிடுக! கரும்பு, முறுக்கு போன்ற, பற்களால் நன்கு மென்று கடித்துத் தின்னக் கூடிய பொருட்களை நீங்கள் ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்தால் பல் சம்பந்தமான எந்த வியாதியும் தோன்றிடாது.

சென்னை அருகே ஞாயிறுத் தலத்தில் உள்ள சிவபெருமான், சூரிய மூர்த்தி, கண்வ மஹ‌ஷியைத் தரிசித்து வர பல் சம்பந்தமான வியாதிகள் தீரும்.

ஸ்ரீகண்வ மகரிஷி அவளிவநல்லூர்

"வாத்யார்" எனும் குருஅம்சத் திருவார்த்தை

"வாத்தியார்" என்பது உத்தமமான, உன்னதமான, புனிதமான, தெய்வீகமான, குரு பூர்ணமயச் சொல்லாகும். இறைவழியில் நல்வழிகாட்டியாகப் பிரகாசிப்பவரே வாத்தியார் ஆவார். சிறுவர்களை, மாணவர்களை, இளைஞர்களை, நல்வழிப்படுத்துகின்ற ஆசிரியர்களும் வாத்தியார் என்று தானே போற்றப்படுகின்றார்கள்! எனவே வாத்தியார் என்ற பவித்ரமான இறைச் சொல்லானது இறைத் தூதுவராகிய சற்குருவின் அம்சங்களைக் குறிக்கின்றது. மிக மிகப் புனிதமான இறைச் சொல்லான வாத்தியார் என்பது மகத்தான தெய்வீகத் தன்மைகள் பதியப் பெற்றதாம். வேத விற்பன்னர்களையும், ஆகம சாஸ்திர வல்லுனர்களையும் வாத்தியார் என்று குறிப்பிடுவதிலிருந்தே வாத்தியார் என்ற சொல்லின் இறைப் பிரகாசப் பண்புகளை நன்கு உணர்ந்து கொள்ளலாம். ஆனால் நடை வழக்கில் வாத்தியார் எனும் தெய்வீகச் சொல்லை மிகவும் கேலியாகப் பயன்படுத்துவது வேதனை தருவதாம். உண்மையில் பல அரிய பீஜாட்சர சப்தங்களைக் கொண்டதே "வாத்யார்" என்ற திருச்சொல்லாம்!

கலியுகத்தில் பொய்மை, புரளி, வீண் பேச்சு, தீய பேச்சுக்களால் பாதிக்கப்படுகின்ற குடும்பங்கள் ஏராளம், ஏராளம்! பொய் சாட்சி, அபவாதங்கள், பொய் வாதங்கள் போன்றவற்றால் பலரும் பலவிதமான சொத்துக்களை இழந்து, அல்லல் பட்டு வாடுகின்றார்கள். இவ்வாறு பிறருடைய பொய்மைப் பிரசாரத்தால் பாதிக்கப்பட்டோர் சிங்கம்புணரி ஸ்ரீமுத்து வடுகநாத சித்தருடைய ஜீவாலயத்தில் ஞாயிற்றுக் கிழமை, சூரிய ஹோரை நேரத்தில் சித்தர்பிரானுக்கு ஆரஞ்சு நிற ஆடைகளை அணிவித்து, ஏழைகளுக்கு ஆரஞ்சு வண்ண ஆடைகளைத் தானமாக அளித்து வந்தால், பலவிதமான பொய்மைகளால், அபவாதங்களால் வாடுவோர் துரிதமாக நிவாரணம் பெறுவர்.

எல்லையிலா தெய்வீக உத்தம நிலைகள்!

உத்தம இறை நிலை என்பது ஒரு குறிப்பிட்ட தெய்வீக நிலை மட்டுமல்ல, தெய்வீகத்தில் எந்த உத்தம நிலையை அடைந்தாலும் அதற்கு அடுத்த படியில் ஓர் உத்தம சித்தர் அமர்ந்து இருப்பார் என்பது நம் சிவ குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்தருடைய அருள்வாக்கு ஆகும். வசிஷ்டர், அகஸ்தியர், பரத்வாஜர் போன்ற மகரிஷிகளும், சித்தர்களும் தினந்தோறும் மூன்று வேளை சந்தியா வந்தன வழிபாடுகள், ஆறு வேளை ஆலய வழிபாடுகளை இடைவிடாது தொடர்ந்து கடைபிடித்து இவற்றின் பலாபலன்களை உலக சமுதாய நலன்களுக்காகவும் பலரும் தெய்வீகத்தில் உத்தம நிலைமைகளை அடையவும் அர்ப்பணிக்கின்றார்கள்.

குருவார குரு ஹோரையில் வர்ஷிக்கும் கோடி கோடி பலன்கள்!

பொதுவாக, இரத்த அழுத்தம், இரத்தப் புற்றுநோய், ரத்தக் கசிவு, ரத்தம் உறையாமை போன்ற இரத்த சம்பந்தமான கடுமையான நோய்களால் வாடுவோர் சிங்கம்புணரி ஸ்ரீமுத்து வடுகநாதருடைய ஜீவ சமாதியில், வியாழக் கிழமையன்று குரு ஹோரை நேரத்தில் குங்குமம், பச்சரிசி கலந்த பசும்பாலாகிய செம்பாலால் அபிஷேகம் செய்து ஏழைகளுக்குக் கேரட், தக்காளி, பீட்ரூட் போன்ற சிவப்பு நிற உணவு வகைளைத் தானமாக அளித்து வந்தால் இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்குத் தக்க நிவர்த்திகள் கிட்டிடும்.

"பன்றி" என எவரையும் வசைபாடுதலும் சாபங்களையே பெற்றுத் தரும். இவ்வாறாக இறைவனின் ஒவ்வொரு அவதாரத்தில் நாமறியா வகையில் எண்ணற்றத் தாத்பர்யங்கள் எவ்வளவோ அடங்கியுள்ளன. இவற்றை தக்க சற்குரு மூலமாகவே புரிந்து கொள்ள முடியும்! இந்த பரந்த ஞானத்தை உணர்த்துகின்ற இறைவழி முறைகளில் ஒன்றே ஸ்ரீவராஹி வழிபாடு. ஸ்ரீவராஹி உபாசகராய் இன்றும் தூல, சூக்கும வடிவுகளில் ஸ்ரீமுத்து வடுகநாத சித்தர் வழிபடும் புண்ணிய வராஹ பூமியே சுவாமிமலை ஸ்ரீமத்து வரதர் ஆலய ஸ்ரீஆதி வராஹி தேவி திருச்சன்னதியாகும்.

கர்மங்களைக் கழிப்பதும் மனித வாழ்வின் அங்கமே!

சமுதாயத்தின் ஒட்டு மொத்தத் தீவினைகளையே "குப்பை" குறிக்கின்றது! ஒவ்வொரு நாளும் சேர்கின்ற குப்பையைக் கொண்டு அன்று சமுதாயத்தில் எத்தகைய தீவினைகள் (தீய காமம், கொலை, கொள்ளை உணர்ச்சிகள், லஞ்சம், அதர்மம், பொய்மை போன்றவை) சேர்ந்துள்ளன என்பது தெரிய வரும்!

மலப்புழுச் சித்தர் என்பார் எப்போதும். மலத்தில் உள்ள புழுக்களையும் உண்டு பல சின்னஞ் சிறு ஜீவன்களுக்கும் அன்றும் இன்றும் என்றும் உய்வு தந்து சித்தமா ஜோதியாய் உறைகின்றார்! சிறுநீர், மலம் மூலமாகக் கழிய வேண்டிய தீவினைக் கர்மங்கள் தீர்வதற்கு மலப் புழுச் சித்தரின் அருள் தேவையானதாம்! குப்பைச் சித்தர் குப்பைகளின் ஊடே அமர்ந்து மகத்தான கர்ம பரிபாலனம் செய்து வருகின்றார்!

பசுக்கள் குப்பையைக் கிண்டி தனக்கான உணவை உண்பது போல் வெளிப்படையாகத் தோன்றினாலும் பல கோடி தேவதா சக்தி நிறைந்துள்ளமையால் பசுக்கள் தேவ பூர்வமாகக் குப்பையை சுத்திகரித்துப் பல கொடிய தீவினைகளை பஸ்மமாக்கி சமுதாயத்தைக் காப்பாற்றுகின்றன என்பது தேவ ரகசியமே!

நித்ய கர்ம நிவாரணி

1.12.2002 - குறைந்தது ஏழு சித்தர்களின் ஜீவ சமாதிகளில் சித்திரை நட்சத்திர தூபம் ஏற்றி அன்னதானம் செய்திடில் ஆசிரியர்களின் மனப் போராட்டம், மனக் குழப்பம் ஓரளவு குறைய வழியுண்டு.

2.12.2002 - 12 கோயில்களில் சிவராத்திரி தூபம், பிரதோஷ தூபம் ஏற்றி அன்னதானம் செய்திடில், பல் வைத்தியர்கள் நன்மை பெறுவர். பல் சம்பந்தமான நோய்களுக்கும் விடிவு பெற வழி பிறக்கும்.

3.12.2002 - ஸ்ரீகிருஷ்ணாங்காரக விரதம் இருந்து, கிருஷ்ணன் கோயில்களில் விசாக நட்சத்திர தூபம் ஏற்றி அன்னதானம் செய்திடில், அயல் நாட்டு வங்கிகளில் வேலை செய்பவருக்கு வரும் திடீர் இடமாற்றங்கள் நலமாய் அமையும்.

4.12.2002 - பகல் 12 மணிக்குள் 500 காக்கைகளுக்கு உணவிட்டு அமாவாசைத் திதி எண்ணெய்த் தீபம் ஏற்றி, ஊனமுற்றோர்களுக்கு உதவி செய்திடில், கிரிமினல் (Criminal) வக்கீல்களுக்கும். இன்சூரன்ஸ் (Insurance) துறையில் வேலை செய்பவர்களுக்கும் தொழிலில் நல்ல மாற்றம் பெறலாம்.

5.12.2002 - இன்று 21 அனுமார் கோயில்களில் மூல நட்சத்திர தூபம் ஏற்றி, ஸ்வாமிக்கு வெண்ணெய்க் காப்பு, வடை மாலை சாற்றி, அன்னதானம் செய்திடில், விமானப் பயணத்தில் ஏற்படும் பயம் நீங்கும்.

6.12.2002 - இன்று குபேரன் சன்னதியில் பூராட நட்சத்திர தூபத்தை ஏற்றி, கோயில் திருக்குளத்து மீன்களுக்கு உணவிட்டிடில், அகங்காரம் உடைய பெண் அதிகாரிகளால் சக ஊழியர்களால், வரும் துன்பங்கள் குறையும்.

7.12.2002 - இடம்புரி விநாயகர் கோயிலில் சதுர்த்தி எண்ணெய் தீபம் ஏற்றி அன்னதானம் செய்திடில், வெளியூர் சென்ற கணவன் நினைவாய் இருக்கின்ற பெண்கள் நலம் பெறுவர்.

8.12.2002 - நாக பஞ்சமியில், மேக நிற கிருஷ்ண சாளகிராமத்தைக் கறுப்புக் கயிற்றில் கோர்த்து அணிந்து, விரதம் இருந்து, விஷ்ணு சகஸ்ரநாம, விஷ்ணு போற்றித் துதிகளை ஓதி அன்னதானம் செய்திடில் மங்கியிருந்த தொழில் நன்முறையில் விருத்திக்கு வரும்.

9.12.2002 - ஆறுமுக ஸ்வாமி கோயில்களில் கிருத்திகை நட்சத்திர தூபம் ஏற்றி, அன்னதானம் செய்திடில், ரயில் துறைத் தொழில்களில் ஈடுபட்டிருப்போர் நலம் பெறுவர்.

10.12.2002 - சிங்கார வேலன், செந்தில்நாதன், ஷண்முகம், ஷண்முகவேல் போன்ற பெயருடையோர், மலைமேல் உள்ள முருகன் கோயில்களில் சதய நட்சத்திர தூபம் ஏற்றி, அன்னதானம் செய்திடில், உயர் அதிகாரிகளால் வருகின்ற துன்பங்கள் விலகும்.

11.12.2002 - 51 பெருமாள் கோயில்களில் பூரட்டாதி நட்சத்திர தூபம் ஏற்றி, அன்னதானம் செய்திடில், வைத்தியத் துறையில் உள்ளோர் நல்ல மாற்றம் காண்பர்.

12.12.2002 - இன்று பெருமாள் கோயில்களில் ஹயக்ரீவர் தூபம் ஏற்றி, அன்னதானம் செய்து, ஏழை மாணவர்களுக்கு, கல்வி நிதி உதவி செய்திடில், வெளியூரில் படிக்கும், மாணவர்களுக்கு வரும், உடல் உபாதைகள் குறையும்.

13.12.2002 - ஸ்ரீபிரளய காளேஸ்வரர் சன்னதிகளில் அஷ்ட பைரவர் தூபம் ஏற்றி அன்னதானம் செய்திடில், ஏலத்தில் எடுக்கும் பொருளால் வரும் ஆபத்து விலகும்.

14.12.2002 - ஸ்ரீஎமதர்மராஜர் கோயில்களில் தசமி திதி எண்ணெய் தீபம் ஏற்றி, ரேவதி நட்சத்திரக்காரர்கள், இன்று மாலை அன்னதானம் செய்திடில், Contractors, Buildersகளுக்கு வரும் மனக் குழப்பங்கள் விலகும்.

15.12.2002 - பெருமாள் கோயில்களில் 101 நாராயண தூபங்கள் ஏற்றி அன்னதானம் செய்திடில் கடல் வாணிபம், புது இல்லம், அமைய வழிபிறக்கும்.

16.12.2002 - 21 மலைக் கோயில்களில் பரணி நட்சத்திர தூபம் ஏற்றி அன்னதானம் செய்திடில், புகழும் பணமும் சேர வழியுண்டு,

17.12.2002 - கிருத்திகை நட்சத்திரக்காரர்களும், ஆறு, பன்னிரெண்டு, பதினெட்டு, இருபத்தி நான்கு என்ற பிறப்புத் தேதி எண்ணுடையோரும் கிருத்திகை நட்சத்திர தூபத்தை முருகன் கோயில்களில் ஏற்றி அன்னதானம் செய்திடில், ஆதரவு வேண்டியவர்கள் உதவி செய்வர்.

18.12.2002 - பெருமாள் கோயிலில் சுதர்சன தூபம் ஏற்றி அன்னதானம் செய்திடில் வாகன உதிரி பாகங்கள் வியாபாரம் செய்வோர் நலம் பெறுவர்.

19.12.2002 - மிருகசீரிஷ நட்சத்திர தூபம் ஏற்றி, திருஅண்ணாமலையை கிரிவலம் வந்திட மளிகைக் கடை வியாபாரிகள் நலம் பெறுவர்.

20.12.2002 - நடராஜ தூபம் ஏற்றி, நடராஜருக்கு அபிஷேகம் செய்து அன்னதானம் செய்திடில், நர்தன, நடனக் கலையில் உள்ளோர் நலம் பெறுவர்.

21.12.2002 - பிரம்மச்சரிய விரதம் இருந்து திருவாதிரை தூபம் ஏற்றி சிவன் கோயிலில் அன்னதானம் செய்திடில், உணவு விடுதிகள், ஓட்டல். வியாபாரம், மெஸ் நடத்துவோர் நலம் பெறுவர்.

22.12.2002 - பூச நட்சத்திரக்காரர்கள் பூரணக் கொழுக்கட்டை செய்து, கணபதிக்கு நிவேதனம் செய்து, கொழுக்கட்டை தானம் செய்திடில், கர்ப்ப சம்பந்தமான நோய்கள் தீரும்.

23.12.2002 - இன்று விநாயகருக்கு ஷோடச கணபதி தூபம் ஏற்றி, கருப்புப் பட்டுத் துணியில் வெண்பட்டு பார்டர் (Border) அமைந்த ஆடை அணிவித்து, "பிடிக் கொழுக்கட்டை" தானம் அளித்திடில் நல்ல வீடு அமையும்.

24.12.2002 - பஞ்சமி திதி எண்ணெய் தீபம் ஏற்றி, ஸ்ரீகாளிகா தேவிக்கு சிகப்பு வஸ்திரம் அணிவித்து, தக்காளி சாதம், மக நட்சத்திரத் தூபத்துடன் அன்னதானம் செய்திடில், ரயில், விமான வாகன விபத்துக்கள் தவிர்க்கப்படும்.

25.12.2002 - பணப் புழக்கம் உள்ள இடங்களில் வேலை செய்பவர்கள், அம்மன் கோயில்களில் உளுந்து போண்டா தானம் செய்திடில், வீண் பழியால் தாக்கப்படாமல் தப்பிக்கலாம்.

26.12.2002 - பொதுப் பணித் துறையில் வேலை செய்வோர், இன்று புதுக் காரியங்களில் ஈடுபட வேண்டாம். ஈடுபட்டால் புதுக் காரியங்களால் பலவித சிக்கல்கள் வரும்.

27.12.2002 - எட்டு சிவன் கோயில்களில் பஞ்சாட்சர‌த் தூபம் ஏற்றி, தேங்காய் சாத அன்னதானம் செய்திடில், வருமான வரித் துறையில் இருப்போருக்கு வருகின்ற துன்பங்கள் விலகும்.

28.12.2002 - சித்திரை நட்சத்திர தூபம் ஏற்றி, ஜுரஹரேஸ்வரருக்கு எண்ணெய்க் காப்பிட்டு, மிளகு ரசம் நைவேத்யமாக வைத்து ஏழைகளுக்குத் தானம் செய்திடில், எண்ணெய், வெண்ணெய் வியாபாரிகள், வியாபாரத்தில் மாற்றம் காண்பர்.

29.12.2002 - அனைத்து முனீஸ்வரர்களுக்கும், சுவாதி நட்சத்திர தூபம் ஏற்றி வைத்து அன்னதானம் செய்திடில், சகோதரிகளால் வருகின்ற இன்னல்கள் நிவர்த்தி ஆகும்.

30.12.2002 - குல தேவதைகளுக்குப் பொங்கல் வைத்து, அன்னதானம் செய்திடில், பெரிய மீசை வைத்திருப்பவா்கள் மூலமாக வருகின்ற துன்பங்கள் விலகும்.

31.12.2002 - 10 சிவன் கோவிலில் பிரதோஷ தூபம் ஏற்றி அன்னதானம் செய்திடில், பற்று, வரவுக் கணக்கு சிறப்பாக அமையும்.

பேதமில்லாததே பிரம்மம் !

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam