ரோகம் இனியில்லை என்று உரைப்பதே ரோகிணி !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

(நம் குரு மங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்!)

வெள்ளிப் பனித் தலையரான சிவபெருமானே விரும்பிப் போற்றுகின்ற வெள்ளியங்கிரி மலை யாத்திரையைப் பற்றிச் சிறுவன் எத்தனையோ கனவுகளைக் கண்டிருந்தான். ஆனால், “இதோ போகலாம், இதோ போகலாம்” என்று பெரியவர் சொல்லிச் சொல்லியே சில வருடங்கள் ஓடி விட்டனவே!

இறைத் தூதுவராம் சற்குரு காட்டும் அருள்வழி!

“ஒவ்வொருத்தரும், எப்படி எப்படியோ அவங்களுக்குத் தெரிஞ்ச வழிமுறையில அண்ணாமலையில் கிரிவலம் வராங்கடா கண்ணு! சபரிமலைக்கும் விரதம் இருந்து போகறாங்க ராஜா! ஆனா, சற்குரு காட்டற வழியிலே, அண்ணாமலையில கிரிவலம் வர்றதையும், சற்குரு சொல்லித் தர்ற முறையில, அவர் காட்டற வழியில சபரிமலைக்குப் போறதையும் பகவானே எவ்வளவு விசேஷமா எடுத்துக்கறாரு தெரியுமா! சற்குரு சொல்லிச் செஞ்ச நற்காரியம், பூஜைன்னாலே, வானுலகத்துல மெத்தையில (Upper divine worlds),   ஒரு தனி தெய்வீக முத்திரை பதிச்சுடுவாங்க தெரியுமா! அதுக்குன்னு விசேஷமான தேவபுண்ய சக்தி கிடைக்கும்!”

பெரியவர் நிறைய தெய்வீக விஷயங்களை அருவி போலக் கொட்டிக் கொண்டே வந்தார். நடுவில் ஒரு பெரிய தேள் வேக  வேகமாகக் குறுக்கே வந்தது. பெரியவர் சரேலென்று சிறுவனையும் பின்னுக்குத் தள்ளி, சற்று விலகி நின்று, அந்தப் பெருந் தேளுக்கு வழிவிட்டார். அப்போது ஒரு பெரிய காட்டுப் பூனை வேகமாகக் குறுக்கே பாய்ந்து வந்தது.

தேளும், பூனை, தெள்ளிய பாடமாம்!

பெரியவர், சிறுவனை, “உஷ்“ காட்டி அருகில், ஓரத்தில், ஒரு கல்லில் அமர வைத்தார்.

குறுக்கே வந்த காட்டுப் பூனை தேளைச் சீண்டி, விளையாடி, பாதத்தால் நசுக்கி, வாயில் கௌவிக் கொண்டு ஓடிப் போயிற்று!

“ஏன் வாத்யாரே! இந்த மாதிரி நடந்தா தெய்வீகத்துக்குன்னு பாடுபடறவங்க ஆன்மீகமா என்ன செய்யணும்? இதைப் பார்த்துட்டு ஒரு சாதாரண மனுஷன் என்ன செய்யணும்? இப்ப அந்தத் தேளைக் காப்பாத்தறதா, வேண்டாமா? காட்டுப் பசியோடு வர்ற பூனைக்கு வழி விடறதா!”

“ஒரு சாதாரண மனுஷன் கேக்கற மாதிரி கேட்டுட்டியே! இப்ப நான் சாதாரணமா பதில் சொல்லட்டுமா, இல்லாட்டி எளிமையா தெய்வீக ரீதியா பதில் வேணுமா?”

சிறுவன் காஷ்ட மௌனியானான். அவனுக்குத்தான் இப்போது, “தான் எந்த பதிலைச் சொன்னாலும் உதைக்கும்!” என்ற தத்துவம் நன்கு பிடிபட்டுப் புலனாகி விட்டதே!

“ஒண்ணுமே புரியலே, இந்த உலகத்துலே, வாத்யாரே!”

சிறுவனின் பதிலைக் கேட்டுக் கலகலவென்ரு சிரித்த பெரியவருடன் சிறுவனும் சேர்ந்து “மஹா தைரியமாய்ச்” சிரித்தான்!

உன்னை நான் மறந்த போதும்
என்னில் நீ இருக்க வேண்டும் !

குருகுலவாசத்தில், ‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை’!

“அப்பாடி, இப்படிக் கலகலவென்று சிரித்து எவ்வளவு காலமாயிற்று?” சிறுவன் பரமானந்தம் கொண்டான். ஆனால், உள்ளூர அவனுக்கு ஒருவித பயம்தான், டபக்கென்று பெரியவர் moodஐ மாற்றிக் கொண்டு விட்டால்...

“அது ஏண்டா, என்னைப் பத்தி மூடு, கீடுன்னு அப்படித் திகிலாவே நெனச்சுக்கற! நானென்ன அப்படியே கடிச்சு முழுங்கறவனா?”

பெரியவர் பட்டவர்தனமாய் திடீரென்று கேட்டதும், சிறுவன் சற்றே அதிர்ந்தவனாய், “ஏன் வாத்யாரே! நீதான் மனசுல உள்ளதை எல்லாம் காமிராவாட்டம் அப்படியே புடிச்சு, புடிச்சு சொல்றியே! அப்புறம் ஒங்கிட்ட  எதுக்குத்தான், என்னத்தைத்தான் நான் பேசறது. பேசறதுக்கே வேலை இல்லையே! ஏதாச்சும் சொல்றதுக்கும் ரொம்ப பயமாயிருக்கே!”

சிறுவனுக்குத்தான் தற்போது “உலக தைரியம்” வந்து விட்டதே!

பெரியவர் சிறுவனை முதுகில் நன்கு தட்டிக் கொடுத்தார்.

“சித்தர்களோட குருவாசம்னாலே கொஞ்சம் திகில், கொஞ்சம் பயம், கொஞ்சம் உதைப்போட... நெறைய பக்தி, நெறைய பூஜை, நெறைய குருவருளும் எல்லாமே நல்லாவே கொழிக்கும்டா கண்ணு!... இப்படி, குருகுலவாசம்னா எல்லாம் நல்லதுக்காகவே கலந்துதாண்டா இருக்கும்!”

மீண்டும் இருவரும் கலகலவென்று சிரித்தார்கள்.

பிடித்த பிடி பெரிய படியாகட்டும்!

ஆனால் பெரியவர் திடீரென்று சீரியஸ் ஆனார்!

“உங்கிட்ட நிறைய தெய்வீக விஷயங்களைக் கத்துத் தரச் சொல்லி, எங்களுக்கு மெத்தைலயிருந்து (Upper divine worlds)  ஆர்டர் வந்திருக்குடா. ஆனா உன் குருவி மூளையிலே ஒண்ணத்தையும் நெறைய வச்சுத் திணிக்க முடியலையே! நீனா கொஞ்சமாச்சும் கப்புன்னு புடிச்சுக்கிட்டு , என்னோட பளுவைக் குறைக்கலாம் தானே!”

பெரியவர் எதையோ சொல்லச் சொல்ல... சிறுவனுக்கோ... திடீரென்று பூனை, தேள் சம்பவத்திற்கு விடை காண வேண்டும் என்று (ஞாபகத்) துடிப்பு வந்துவிட்டது.

“அதுதானே பார்த்தேன் ... என்னடா பையன் ரொம்ப, ரொம்ப முக்கியமான சப்ஜெக்டைக் புடிச்சுக்கப் போறான்னு நெனைச்சேன்! டக்குன்னு வந்த நல்ல சப்ஜெக்டைக் கோட்டை விட்டுட்டியே! உனக்குத்தான் அடிக்கடி ஒண்ணு சொல்வேனேடா!”

“அடுத்தது என்ன நடக்கப் போகுதுன்னு தெரிஞ்சுக்கிட்டா, அதுக்கப்புறம் எதுவுமே பிரச்னையாவே ஆகாதே!”

“அடுத்தது என்ன நடக்கப் போகுதுன்னு தெரிஞ்சும், அதுல கை வைக்காம, விதியில கை வைக்காத உத்தம நிலை, வந்தாத் தாண்டா இது புரிய வரும்!”

அறிந்தும் அறியாதிருத்தலே அற்புத சித்தோபநிஷத்தாம்!

“இப்ப, இந்தப் பூனை வாயில, இந்தத் தேள் மாட்டிக்கிட்டுச் சாகணும்கறது விதி! இந்த விதி தெரிஞ்ச நாங்க, இந்தச் சம்பவத்துல குறுக்கே புகுர்றதே கிடையாது. ஆனா, இதை வெளியில் சொல்லவும் கூடாது. இந்த சம்பவம் மனுஷங்க வேற யாரையும் பாதிக்காததுனாலே யாரும் இதைப் பெரிசா எடுத்துக்க மாட்டாங்க!”

“ஆனா, ஒரு மலைப் பாதையில போற பஸ்ஸு கவுந்து சில பேர் சாகணும்கற விதி இருக்குன்னு வச்சுக்க, அப்ப இதை முன்னாலேயே தெரிஞ்சு வெளியில சொன்னா, கலியுகத்துல என்னாகும்? பஸ்ஸைக் கவுக்க இவன் திட்டம் போட்டான்னு சொல்லுவாங்க! இதனாலத்தாண்டா அடுத்தது என்ன நடக்கப் போகுதுன்னு விதி தெரிஞ்ச உத்தமர்கள் எல்லாருமே, கலியுகத்துல எல்லா நாட்டுலேயும் இருந்தாக் கூட, அவங்க எதையும் வெளியிலே காட்டிக்கிறதே கிடையாது. காட்டவும் கூடாதுங்கறது தெய்வ தர்மச் சட்டம்!”

சிறுவன் சற்றுத் தெளிந்தான்.

“விதியைத் தெரிஞ்சுக் கிட்டா இவ்வளவு கஷ்டம்னா வாத்யாரே, விதியைத் தெரியாம வாழற ஒரு சராசரி மனுஷனா வாழ்ந்துட்டு போறதே ரொம்ப ஈஸியாக இருக்கும் போல இருக்கே வாத்யாரே!”

சிறுவன் இவ்வாறு எண்ணி முடிப்பதற்கு முன், பெரியவர் திரும்பினார்!

“அது என்னடா மெஷின் மாதிரி வாழ்க்கை அது! தண்டமான சுயநலமான வாழ்க்கை! வாழ்ந்தால் பிறருக்குப் பயன்படற மாதிரி வாழணும்! தெய்வீகமா இவ்வளவும் தெரிஞ்சு ஒரு தெய்வீகமான நற்காரியம் செய்யறப்போ கெடைக்கற பரமார்த்த சந்தோஷம், வேற எதுலேயும் ஒரு துளிக் கூடக் கெடைக்காதுடா அப்பனே!”

“சரி, சரி .. அதோ பாரு...!”

வானின்று இவ்வுலகம் வந்ததால்...

பெரியவர் சற்று தூரத்தில் கையைச் சுட்டிக் காட்டி அங்கு நடப்பதைக் காண்பித்தார்.

ஆங்கே... ஏதோ ஒரு விண்ணுலக தேவதை போல் இருந்தது... பெரிய சிறகுகளுடன், விண்ணிலிருந்து பூமியில் இறங்கியவுடன்.,

அது ஒரு பெண்ணாய் மாறிட...

அப்பெண் வெகு வேகமாய்.. அருகில் இருந்த ஒரு சிறு மண் குடிசை வீட்டிற்குள் புகுந்தாள்..

சிறுவன் கொட்டக் கொட்ட விழித்துப் பார்த்தான்.. வான்தேவதை வந்து தரையில் இறங்கிய காட்சி எல்லாம் அவனுக்கு நன்றாகவே தெரிந்தது. நல்ல அழகிய பொன் வண்ணச் சிறகுகள்.. தரையில் இறங்கியவுடன் அதன் சிறகுகள் எல்லாம் மறைந்தன.. ஓர் அழகிய பெண் உருவம் தோன்றியது.

இப்போது அந்தப் பெண் அந்த மண் குடிசைக்குள் சென்றிட...

குடிசையிலிருந்து பெரும் சப்தம் கேட்டது. வாசலில் ஒரு துணி போட்டு மறைத்து இருந்தது. சிறிது நேரத்தில் அந்தக் குடிசையிலிருந்து அந்தப் பெண் வெளி வந்திட...

மீண்டும் பொன் வண்ணச் சிறகுகள் தோன்றிட... பெண் மீண்டும் தேவதையானாள். அங்கிருந்தவாறே அந்த வான தேவதை பெரியவரை வணங்கிட, பெரியவரும் இங்கிருந்தவாறே சாஷ்டாங்கமாக கீழே விழுந்து வணங்கிட...

குடிசைக்குள் “குவா குவா” என்று குழந்தை அழும் சப்தம் கேட்டது!

சிறுவன் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றான்!

ஸ்ரீஆகாச விநாயகர்

கும்பகோணத்திலிருந்து சிவபுரம் செல்லும் சாலையில் மழையப்பநல்லூரில் சிவபுரத்திற்கு 2 கி.மீ முன்பாக, சாலைச் சந்திப்பில் பெரிய ஆலமரப் பொந்தினுள் ஸ்ரீஆகாச விநாயக மூர்த்தி குடி கொண்டு அருள்கின்றார்!

வாஸ்து நாட்கள் வருடத்திற்கு எட்டாக அமைந்து, ஒவ்வொரு வாஸ்து நாளிலும் ஒவ்வொரு திசையிலும் ஸ்ரீவாஸ்து பகவான் விஸ்வ பிரகாச பிரவேச தரிசனம் அளிக்கின்றார். ஸ்ரீவாஸ்து பகவான் இந்த எட்டுவிதமான விஸ்வ ப்ரகாசப் பிரவேச தரிசனங்களோடு அளிக்கின்ற ஆகாச விஸ்வ ப்ரகாசப் பிரவேசம், பாதாள விஸ்வ ப்ரகாசப் பிரவேசம் என்ற இரண்டும் கூடுதலாக, விண்ணுலகங்கள் மற்றும் தேவலோகங்களுக்கு மட்டும் உரித்தானவை.

ஸ்ரீஆகாச விநாயகர்
மழையப்பநல்லூர் கும்பகோணம்

கும்பகோணத்திலிருந்து சிவபுரம் செல்லும் மார்கத்தில் உள்ள ஸ்ரீஆகாச விநாயகர், துவாபர யுகத்திற்கும் முன்னிருந்தே ஆல மரத்தடியில் அருளும் அற்புத விநாயகர், தற்போது கோட்டை பைரவர் (திருமயம்), இரணியம்மன் (சென்னை), சித்தி விநாயகர் (செங்கல்பட்டு) போன்ற (சாலைத் துறைகளில்) அருளும் மூர்த்திகளை வாகனங்களில் செல்வோர் – லட்சாதிபதிகளும் சரி, ஏழையாயினும் சரி – அனைவரும் வாகங்களை நிறுத்தி இறங்கி வந்து வழிபடுவது போல, ஆகாச மார்கமாகச் செல்லும் தேவாதி தேவ தெய்வ மூர்த்திகள், கந்தர்வர்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், கிம்புருடர்கள், கோடிக்கணக்கான தேவதைகள் யாவரும் தங்கள் தேவ விமானங்களை விண்ணில் நிறுத்தி வழிபட்டுச் செல்கின்ற விநாயக மூர்த்தியே ஸ்ரீஆகாச விநாயக மூர்த்தி ஆவார்.

பொதுவாக, நாமறிந்த எண் திசைகளைத் தவிர ஆதிகாலத்தில் வாஸ்து மூர்த்திகளின் தரிசன வகைகளிலும் 8, 16, 18, 24 திசைகளும் உண்டு. ஒவ்வொரு மூர்த்தியும் ஆகாச வாஸ்து, அந்தர வாஸ்து, சுந்தர வாஸ்து, பஸ்சிம வாஸ்து என்று பலவிதமான நாமங்களைப் பூண்டு அருள்கின்றார்கள்.

ஆகாச வாஸ்துத் தலமான திருவையாறு அருகில் உள்ள கடுவெளி ஸ்ரீஆகாசபுரீஸ்வரரை வழிபடும் முன்னர், இங்கு ஸ்ரீஆகாச விநாயகரை வழிபட்டுச் செல்தல், அதியற்புதமான ஆகாச வாஸ்து பூஜை முறையாக அமைந்து, எண்ணற்ற வாஸ்து தோஷங்களைத் தீர்ப்பதற்கு மிகவும் உதவுகின்றது.

திருஅண்ணாமலையில் காராம்பசு

பூஜைக்கான மேல்நோக்கு நாட்கள்

குறிப்பாக, Skyscrapper  எனப்படும் மிகவும் உயரமான பிளாட்டுகள், கட்டிடங்களைக் கட்டுவோர், முதலில் ஸ்ரீஆகாச விநாயகரை வணங்கியே துவங்குதல் வேண்டும். முதல் மாடி, இரண்டு மாடிகளும் அதற்கு மேலும் உள்ள வீடுகளில், வாழ்வோர், குடியிருப்போர் ஸ்ரீஆகாச விநாயகர், ஸ்ரீஆகாச வாஸ்து மூர்த்திகளை அடிக்கடி வணங்குதல் வேண்டும். ஆகாச தேவாதி தேவதைகளின் உத்தரவின்றி முதல் மாடியைக் கூடக் கட்டக் கூடாது.

எனவே, முதல் மாடியிலிருந்து எத்தனையோ அடுக்கு மாடிக் கட்டிடங்களைக் கட்டுவோர், வாங்கியோர், வசிப்போர் யாவரும் ஸ்ரீஆகாச விநாயகரையும் நிச்சயமாக வணங்குதல் வேண்டும். குறிப்பாக மேல்நோக்கு நாட்கள் எனப்படும் ரோஹிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திர நாட்களில், இங்கு அபிஷேக, ஆராதனைகளை நிகழ்த்திடுதல் நன்று.

குழந்தைப் பேறின்றி வருந்திய நிருக மஹாராஜா, மஹரிஷிகளின் ஆலோசனையின் பேரில், புத்ர காமேஷ்டி யாகம் ஆற்றி, ஒரு கார்த்திகை மாதம் முழுதும், தினந்தோறும் 1008 காராம் பசுக்களைத் தானமளித்து வந்தார். அக்காலத்தில் ஒருவருடைய செல்வச் செழிப்பு அவர் வைத்திருக்கும் பசுக்களை, காராம் பசுக்களை வைத்து மதிக்கப் பெற்றது. காராம் பசுவின் மதிப்பு அக்காலத்திலேயே பல லட்சங்கள் பெறும்.

மாமன்னரிடமிருந்து காராம் பசுவைத் தானமாகப் பெற்ற சோமதேவ சர்மா எனும் உத்தமர், இங்கிருந்து கடுவெளிக்கு ஸ்ரீஆகாசபுரீஸ்வரரைத் தரிசிக்கச் செல்லும் வழியில், தானமாக வந்த காராம் பசு, தறி அவிழ்த்து, கட்டுப் பிரிந்து, இரவில் வழி தவறி, மீண்டும் மன்னனின் யாகசாலை கோசாலைக்கே வந்து விட்டது.

மறுநாள், நடந்ததை அறியாத மன்னர் அதே பசுவை ஜைமினி மகரிஷிக்கு அளித்திட்டார். பசு, தன் கட்டுப்பாட்டை மீறியமையால், சோமதேவ சர்மாவும் பசுவிற்கு “நின்னைத் தானமாகப் பெறுபவர், பிள்ளையை விட்டு நெடுங்காலம் பிரிந்து வாழும் நிலை ஏற்படுவதாக!”  என்றுரைத்துச் சாபமிட்டு விட்டார்.

அலவந்திபுரம்

இந்த விஷயங்களை அறியாது ஜைமினி மகரிஷி அதே காராம் பசுவைத் தானமாகப் பெறுகையில், ஆங்கே பசுவைத் தேடி வந்த சோமதேவ சர்மா நடந்ததை உரைத்தார். தானம் செய்ததையே மீண்டும் தானமானதை அறிந்து “என்ன சாபம் விளையுமோ!” என அஞ்சி, மன்னன் திகைத்து நிற்கவே, ஜைமினி மஹரிஷியும், உத்தமர்களின் சாபம், நன்மையை பயக்கும், நீ தானம் கொடுத்த பசு, காமதேனுவின் நான்கு புத்திரிகளான விமலை, பட்டி, சபளீ, நந்தினி ஆகிய நால்வராலும் இந்த பூமியில் புனிதமாக போஷித்து வளர்க்கப் பெற்றது. எனவே அதற்கு இந்த பூமியை விட்டுப் பிரிய மனமில்லை. இனியேனும் கோ சூக்தம் ஓதி, பசுக்களின் மனநிலை அறிந்து பசுக்களைத் தானம் அளிப்பது தானத்தின் மேன்மையை விருத்தி செய்யும். இந்தப் பசுவை யாமளிக்கும் தானமாக நீயே வைத்துக் கொள். ஏனென்றால், சோமதேவ சர்மாவின் சாபப்படி, இந்தப் பசு உன்னிடம் இருப்பதால் பிள்ளையைச் சாபம் பலித்திடுமாறு உனக்குப் பிள்ளை பாக்யம் உண்டாகும் அல்லவா! எனவே உத்தமர்களின் சாபம், சாபமன்று! விதியை முன்னரேயே உணர்த்தும் நல்லுரைகளே அவை! நீ பிள்ளையை விட்டுப் பிரிந்து இருக்க வேண்டிய நிலை வருகையில் அச்சமயத்தில் அடியேன் சில பரிகாரங்களை அளிக்கின்றேன்!” என்றார்.

ஆமநாசனம்

கார்த்திகை மாதப் புண்ய தானதர்ம காரியப் புண்யத்தால் நிருகன் ஒரு பிள்ளையைப் பெற்றார். பெற்ற பிள்ளையுடன் பாதயாத்திரை புரியும் நேர்த்தியைக் கனிய வைத்திட, மன்னன் தன் மனைவியுடன் புனித யாத்திரை தொடங்கி, ஓரிடத்தில் ஆமநாசனத் தீர்த்தத்தை அடைந்தான். இதில் கோதானம் செய்த பிறகே நீராட வேண்டும் என்பது நியதி. இதை அறியாது மன்னன் அதில் நீராடிட, ஆமநாசனம் எனில் கர்ம வினைகளை நசிக்கும் தீர்த்தம் என்பது பொருளானாலும், தான நியதியை அறியாது நீராடியதால், புத்திரப் பேற்றைத் தடுத்த சந்தான தோஷங்கள் அகன்றாலும், நியதியை மீறியதால் அரசர் ஆமையாகினார்.

பூர்வ ஜன்மத்தில் யோக நிலையில் மருத்துவப் பூர்வமாக ஆமை பஸ்மத்தை உண்டான். ஆனால் அந்த பஸ்மமானது, சினையாக இருந்த மீனை உண்ட ஆமையின் உடல் ஓட்டில் இருந்து பரிபக்குவம் ஆனதால், சந்ததி சாபம் ஏற்பட்டுத் தற்போது ஆமையானான்.

தன் மனைவியைப் பாத யாத்திரையை நிறைவு செய்திட்டு, நாட்டிற்குத் திரும்பச் செய்து, பிள்ளையைப் பிரியும் சாபத்தையும் நிவர்த்தி செய்து, ஆமை வடிவில் கடுந்தவம் புரிந்து ஆமநாசனம் செய்தமையால் பல புண்ய நதி, கடல் தீர்த்தங்களில் ஆமை வடிவில் நீராடி, நதி, கடல் மூலமாகத் துவாரகையை அடைந்தான். துவாரகை வெள்ளத்தில் ஸ்ரீகிருஷ்ணனின் மாளிகைக்குள் புகுந்து ஆங்கே, தவப்புண்யத்தால் ஸ்ரீகிருஷ்ண தரிசனம் பெற்றார். கர்மங்களை நசித்து யோகஜோதி சக்திகளைப் பெற்றமையால் ஸ்ரீகிருஷ்ணரும் தாம் எப்போதும் இடுப்பில் சூடியிருக்கும் ஆலமரச் சமித்தாலும், தம் திருக்கரங்களாலும் ஆமையை ஸ்பரிசித்திட, மன்னன் உத்தம நிலைகளை அடைந்தார்.

“கலியில் சொச்ச வினைகளை அனுபவித்து எம்மை அடைவாய்!” என ஸ்ரீகிருஷ்ணன் உரைத்து தாம் விஷ்ணுபதிப் புண்யகால பூஜைக்காக (கும்பகோணம் அருகே) அலவந்திபுரம் செல்வதாகக் கூறி ஆமையையும் தேவ விமானத்தில் ஏற்றிக் கொண்டு அந்த விஷ்ணுபதிப் புண்யகாலத்தில் ஆகாசமார்கமாகத் தம் இடுப்பில் இருந்த ஆலமரச் சமித்துக் குச்சியால் பூமியில் ஒரு தீர்த்தத்தை உருவாக்கி மன்னனை ஆமை வடிவில் இறக்கிய இடமே இன்றைய ஸ்ரீஆகாசவிநாயகர் பொதிந்தருளும் ஆலமரமாகும், மிகவும் பழமையான மரம்.

ஆமை வடிவில் மன்னனும், துவாபர சக்திகளும், கலியுக நற்சக்திகளும் நிறைந்த இந்த ஆலமரத்தின் அருகே அக்காலத்தில் பொதிந்த ஆமநாசனத் தீர்த்தத்தில் உறைந்து, இங்கு நிதமும் ஸ்ரீஆகாச விநாயகரைத் துதித்து வந்தார். அபூர்வமாக இங்கு நில ஆமைகள் வருவதுண்டு.

எங்குமே ஆமைகளை ஒரு போதும் அடித்துத் துன்புறுத்தக் கூடாது. அவற்றைப் பத்திரமாக அவரவர் ஊர் அருகில் உள்ள கிணறு, குளம், ஏரி, ஆறு நீர் நிலைகளில் சேர்ப்பதும் ஓர் உத்தம அறப்பணி! இது நல்ல ஆண் சந்ததிகளைத் தரவல்ல அறப்பணி! சந்ததியும் நன்கு தழைக்கும்.

தக்க ஆண் சந்ததி வேண்டுவோர், ஜாதகப் பூர்வமாக புத்ரபாவனம் கூடிட, இவ்வாறு ஆமைகளைப் பிறர் இம்சை செய்யாது நீர் நிலைகளில் சேர்த்து வருதல் வேண்டும். 32 விதமான அறங்களில், பிராணி ஜீவபல தர்மங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு ஸ்ரீஆகாச விநாயகர் ஆலமர அடிப்பகுதியில் ஆலமரப் பொந்தையே கர்பகிரகமாகக் கொண்டு அருள்கின்றார்.

அம்பிகை சிவனின் கண்களைத் தம் கரங்களால் சற்றே மூடிட, பிரபஞ்சமே கண்ணிமைக்கும் நேரம் இருளில் ஸ்தம்பித்த போது, பூமி சுழன்று கொண்டிருப்பதால், எது ஆகாயம், பூமிக்குக் கீழ், பூமிக்கு மேல் என்று தம் விநாயக பூஜையில் எவ்வாறு சங்கல்பித்துச் சொல்வதென ஸ்ரீநாரத மஹரிஷி திகைத்திட்டார். அப்போது, ஸ்ரீஆகாச விநாயகரே ஏற்றிய பசுநெய் தீபத்தின் அட்சய வட தீபப் பேரொளியால் நல்விளக்கங்களை சூக்குமமாக ஸ்ரீநாரத மஹரிஷிக்குத் தெளிவுரைத்தவரே மழையப்பநல்லூர் ஸ்ரீஆகாசவிநாயகர், அனுஷ நட்சத்திரம் தோறும் ஸ்ரீநாரதர் வழிபடும் மிகவும் எளிமையான பிள்ளையார் தலம். ஆகாச மண்டலங்களில் வருண மூர்த்தி மண்டலம் அமைவதற்கு, வாஸ்து சாஸ்திர நியதிகளை ஸ்ரீவருண மூர்த்திக்கு நல்வரமாக ஜலயோக சித்திகளை உபதேசித்து, அளித்து மழையப்பராயும் ஆனவரே ஸ்ரீஆகாச விநாயகர்.

சித்தயோகம், அமிர்தயோகம் இரண்டும் சங்கமம் ஆகும் (கூடும்) ஆகாசவேத கடிகாமிர்த நேரத்தில், இங்கு வருண ஜபம் ஆற்றி வழிபடுவதுடன், புதுப் பானைகளில் அன்னம் வடித்து, முழு முந்திரி, திராட்சை கலந்த தேங்காய் சாதத்துடன் குறைந்தது எட்டு வகைக் காய்கறிக் கூட்டுக் குழம்புடன் படைத்து, இங்கு ஆலமரத்தடியில் வாழை இலைச் சாப்பாடாக, ஏழைகளுக்குத் தானமாக அளித்து வர, மழை வரம் பொழியத் துணை புரிகின்றார் ஸ்ரீஆகாச விநாயகர், வட விருட்சம், கல்லால மரம், வடலால விருட்சம் என்றெல்லாம் போற்றப் பெறும் மூல அட்சயவட கோத்ர மூல வகையைச் சார்ந்ததே இங்கிருக்கும் ஆலமரமாகும். துவாரகைத் தலத்தில் உள்ள ஆலமரத்துடன் சூக்கும ரீதியாகத் தொடர்புடையது.

ஸ்ரீபூமி வாஸ்து மூர்த்தி, ஸ்ரீஅந்தர வாஸ்து மூர்த்தி, ஸ்ரீசுந்தர வாஸ்து மூர்த்தி ஆகிய மூவருமே, ஸ்ரீஆதிவாஸ்து பகவானின் மும்மூர்த்தித் தெய்வ அம்சங்களாகும். அஷ்டதிக்குப் பாலகர்களும், ஸ்ரீஆதிவாஸ்து பகவானின் அருளாணைக்கு இயங்கியே செயல்படுகின்றனர். ஸ்ரீஆதி வாஸ்து பகவான், ஜாதவேத விஸ்வப் ப்ரகாச தரிசனம் அளிக்கும் மேல், பூம்யம், கீழ் ஆகிய மூன்று ஆகமத் திசாம்சங்கள் மற்றும் எட்டுத் திக்குகளிலும், ஒவ்வொரு விநாயக மூர்த்தியை ஆவஹனித்து வணங்குகின்றார். ஸ்ரீசுந்தர விநாயகர், ஸ்ரீபிருத்வி விநாயகர், ஸ்ரீஆகாச விநாயகர் ஆகிய விநாயக மூர்த்தங்களை முறையே, ஸ்ரீசுந்தர வாஸ்து மூர்த்தி, ஸ்ரீபூமி வாஸ்து மூர்த்தி, ஸ்ரீஅந்தர வாஸ்து மூர்த்திகள் பூஜிக்கின்றனர். இவ்வகையில் ஸ்ரீஆதி வாஸ்து பகவான் வழிபடும் மூர்த்தியே ஸ்ரீஆகாச விநாயகர்.

ரோகிணி நட்சத்திரம்

இவ்வரிய தொடரில், இயன்ற வரையில், அசுவினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திர லிங்க மூர்த்திகளின் வடிவுகளையும், பூஜை முறைகளையும் இறையருளால், சித்தர்களின் ஆதிபத்ர கிரந்த யோக வகுப்புப்படி அளிக்க இருக்கின்றோம், அனைத்தும் கடவுள் சித்தம்!

நட்சத்திர வரப்ரசாதி லிங்கம்!

இவ்விதழில், அட்டைப் படத்தில் நாம் தரிசிப்பது ரோஹிணி நட்சத்திர லிங்க மூர்த்தி ஆகும். மிகவும் சக்தி வாய்ந்த நட்சத்திர வரப்ரசாதி லிங்கம்! ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், அனைத்து நட்சத்திர மூர்த்திகளின் அனுகிரகத்தையும் பெற்றால்தான் வாழ்வு நன்கு சிறக்கும். பக்தி நிலை, தெய்வீகத்தில் நிரந்தரமான, சாசுவதமான நாட்டம், குருவருள், உத்தம நல்லொழுக்கம், மன அடக்கம், மன சாந்தி, உடல் ஆரோக்யம், மனவளம், நிறைந்த செல்வம், சாந்தமான வாழ்க்கை போன்ற பலவற்றிற்கும், அனைத்து நட்சத்திர மூர்த்திகளின் அனுகிரக சக்திகளும் நிறைந்திடல் வேண்டும்.

ஒவ்வொரு நட்சத்திர தேவியும், அம்பிகையைப் போல், சர்வேஸ்வரனைப் பூஜிப்பதற்காக, பசுவாகவும், விருட்சங்களாகவும், தீர்த்தங்களாகவும், மானுடர் மற்றும் ஏனைய வடிவுகளிலும் தவம் புரிந்து, பூவுலகில், பல வடிவங்களில் எண்ணற்றத் திருத்தலங்களில் வழிபட்டு, நட்சத்திர தேவியராகும் பெருவரத்தை, இறைவனிடமிருந்து நேரடியாகவே பெற்றனர்.

ஒவ்வொரு தேவியும், நட்சத்திர தேவியாக, பல யுகங்களில் உற்பவித்த திருத்தலங்களே மப்பேடு (மூலம்), தீயத்தூர் (உத்திரட்டாதி) போன்று அந்தந்த நட்சத்திரத் தலங்களாயின, எந்த நட்சத்திர தேவி, தம் ஆக்கப் பூர்வமான, பக்தி சீர்வளத் தவத்தால் எவ்வகையில் ஈஸ்வர லிங்க தரிசனம் பெற்றாரோ, அந்த லிங்க ரூபமே அந்தந்த நட்சத்திர லிங்க வடிவாகவும் தோற்றம் பெற்றது. மேலும், பல இடங்களிலும், ஒவ்வொரு நட்சத்திர தேவியும் பல்வகையான லிங்க வடிவ தரிசனங்களைப் பெற்றனர். இவ்வாறு அமைந்தனவே நட்சத்திர வழிபாட்டுத் தலங்கள்!

ஒவ்வொரு நட்சத்திர லிங்கமும் பல கோடி லிங்கங்களின் கூட்டு அமைப்பாகும். உதாரணமாக, ரோஹிணி நட்சத்திர லிங்கம்தனை விண்ணில் உள்ள அனைத்துக் கோடி நட்சத்திர மூர்த்திகளும், மானசீகமாகவும் தூல, சூக்கும, துரீய வடிவங்களிலும் வழிபடுகின்றமையால், ஒவ்வொரு ரோஹிணி நட்சத்திர லிங்கமும், கோடிக்கணக்கான லிங்க அமைப்புகளின் கூட்டு வடிவாக, சஹஸ்ர லிங்கம் போல் அமைகின்றது.

கும்பகோணம் அருகே கொட்டையூர், திருக்கழுக்குன்றம், திருக்கோடிக்காவல் போன்ற தலங்களின் கோடீஸ்வர மூர்த்திகளின் ஆலயங்களில், ஒவ்வொரு நட்சத்திர மூர்த்தியும் காரண, காரிய தத்துவப் புல முறைகளின்படி, நட்சத்திர தேவிகள் பூஜித்துள்ளனர். இவ்வகையான கோடி சக்தி லிங்கப் பூஜைகளின், சுயம்புப் பரல் ரூபமே ஒவ்வொரு நட்சத்திர லிங்கமுமாகும்.

நோய் நிவர்த்திக்கான ஸ்ரீரோஹிணி நட்சத்திர லிங்க பூஜை!

ஜகன்மாதா ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் மேற்பார்வையில், சப்த மாதாவான பிராம்மி தேவி, மங்கள சுத வழிபாட்டு முறைகளோடு, ஸ்ரீரோஹிணி நட்சத்திர லிங்கத்தைப் பூஜித்தார். இது புஷ்ய லிங்கப் பூஜா சூத்திர வகைகளில் அடங்கும். இந்த இதழின் அட்டைப் படத்தில் நாம் தரிசிக்கின்ற ஸ்ரீரோஹிணி நட்சத்திர லிங்கத்தில் காணப் பெறும் லிங்கத்தின் அடித்தளம், “புஷ்ய மூலப் பீடம்” என்பதாகும்.

உயிரைத் தாங்கி இருக்கும் வடிவிற்கு உடல்தான் மூலப் பீடம் அல்லவா! உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயமன்றோ! ஆலய உடலில் உறைந்த “சிவம்” மறைகையில், உடலில் இருந்து உயிர் பிரிந்து, அதுவரை உயிர்த்து ஜீவித்த உடற்பாங்கும் “சவம்” ஆகின்றது.

‘ச’ எழுத்தைச் ‘சி’ ஆக்கும் வலஞ்சுழியே ஆத்ம போத சக்தியாகும்! உயிரானது, ஜீவசக்தியுடன், உடலில் தழைக்க, நல்ஆரோக்யம்தான் மூலப் பீடம், எனவே ரோஹிணி நட்சத்திரப் புஷ்ய மூலப் பீட தரிசனமே, அரிய பல நோய் நிவர்த்தி சக்திகளைத் தருவதாகும்.

விண்ணில், அனைத்து நட்சத்திர மண்டலங்களிலும் நட்சத்திர லிங்க வழிபாடுகள், ஆலயங்கள் நிறையவே உண்டு. இத்தகைய சுயம்பு லிங்க ரூப லாவண்யங்களை, மந்திரப் பூர்வமாக கிரகித்து, பூலோகத்தில் அந்தந்த நட்சத்திர லிங்கமாகச் சித்தர்களும், மகரிஷிகளும் உருவகித்து மனித குல வழிபாட்டிற்குமாக அளிக்கின்றனர். இவ்வாறு சுயம்பாய்த் தோன்றிய ஸ்ரீரோஹிணி நட்சத்திர லிங்கத்தின் புஷ்ய மூல அடிப் பீடமானது, பற்பல நோய்களுக்கான நிவர்த்திகளோடு, நோய்களுக்குக் காரணமான தீவினைகளுக்கும் பிராயசித்தப் பரிகாரங்களையும் பெற்றுத் தருவதாகும்.

ஸ்ரீரோஹிணி நட்சத்திர லிங்கப் புஷ்ய மூலப் பீடத்திற்கு, தினந்தோறும் சங்குப் புஷ்பத்தால் அர்ச்சித்து, 21 முதல் 108 முறை தரையில் வீழ்ந்து வணங்குதல் சிறப்பானது. ஒரே சமயத்தில் இதனை செயலாற்றிட இயலாதோர் சிறிது சிறிதாக ஒரு நாளுக்குள் கடைபிடித்திடலாம்.

வருங்காலத்தில் கலியுலகில், எய்ட்ஸ் நோயை விட மிகவும் கொடிய நோய்கள் பரவ இருப்பதால், ரோக நிவர்த்திக்கான ஸ்ரீரோஹிணி லிங்க வழிபாடாக இது மிகவும் சிறப்படைய உள்ளது. மூன்றாம் பிறைச் சந்திர நாளிலும் பௌர்ணமியிலும் ரோஹிணி லிங்க வழிபாடு நல்ல மனசாந்தியைத் தருவதாகும். குடும்ப ஒற்றுமைக்கும் மிகவும் நன்மை பயப்பதாகும்.

பர்த்தா சௌக்ய சௌபாக்ய ரோஹிணி புஷ்யப் பீடம்

பெண்களுக்கென அமைந்துள்ள மிகவும் விசேஷமானதான பஞ்ச அங்க நமஸ்கார முறையில் தினமும் ஸ்ரீரோஹிணி நட்சத்திர லிங்கத்தை வணங்கி, 25 ஆண்டுகள் முறையாக வழிபட்டு வரும் இல்லறப் பெண்மணிகளுக்கு நிச்சயமாகத் தீர்க சுமங்கலித்வ பாக்யம் கிட்டும். எனவேதான், இதனையே ஸ்ரீஅகஸ்திய மாமுனியும், “பர்த்தார் சௌக்ய சௌபாக்ய புஷ்யப் பீடம்” என்று போற்றித் துதிக்கின்றார்.

இவ்வாறாக 27 நட்சத்திர லிங்க மூர்த்தங்கள், சென்னை திருவொற்றியூர் ஸ்ரீபடம்பக்க நாதர் சிவாலயத்திலும், திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் ஆலயத்திலும் அமைந்துள்ளன. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையார் கோயிலில், 27 நட்சத்திரங்களுக்குமான புஷ்ப லிங்க சிலா வரைவு வடிவுகள் உள்ளன. நட்சத்திர தேவியர் பக்தி சீர்வளத்தால் பெற்ற ஈஸ்வர லிங்க தரிசனங்களே மேற்கண்டவை யாவுமாம்!

திருவிடைமருதூரில் ஆலயப் பிரகார வண்ணக் கலைக் காப்பினைக் கருதி, உள்பிரகாரத்தில் தனித்துள்ள 27 நட்சத்திர லிங்க வழிபாட்டினை, பக்தர்களின் நலன் கருதி மீண்டும் சிறப்புறச் செய்யப் பணிவுடன் வேண்டுகின்றோம்.

புஷ்ப லிங்கக் குந்தள வடிவுகள்

திருஅண்ணாமலை கிரிவலத்தில், 27 நட்சத்திரங்களுக்குமான பூர்ண தாரா தரிசன முகடுகள் உண்டு. இவை தக்க சற்குரு மூலமாக, தக்க தருணத்தில் பூவுலகிற்கு உணர்விக்கப் பெறும், பொதுவாக, பௌர்ணமி மற்றும் மாத சிவராத்திரி தினங்களில், அருணாசலமாம் திருஅண்ணாமலையில் இரவில் கிரிவலம் வருவோர்க்கு, 27 நட்சத்திர முகடுகளின் தரிசனம் ஆங்காங்கே கிட்டும். எந்த நட்சத்திரம், எவ்வகையில் விண்ணில் ஒளிப் பிரகாசமாய்த் துலங்குகின்றது என்பதை உணர்விக்கும் புஷ்ப லிங்க குந்தள வடிவுகள், ஆவுடையார் கோயில் போன்ற சில ஆலயங்களில் மிகவும் அபூர்வமாகக் காணப்படுகின்றன. இவை நட்சத்திர லிங்கத்தின் தூல வடிவாகும். அட்டைப் படத்தில், 12 பீஜாட்சர ருத்ர சுதங்களுடன், தாரக மாலை போன்று, ஸ்ரீரோஹிணி நட்சத்திரப் புஷ்ப குந்தளம் எனப் பெறும் ஸ்ரீரோஹிணி நட்சத்திரத்தின் சுயம்புத் தூல வடிவும் அளிக்கப்பட்டுள்ளது., இவ்விதழ் அட்டைப் படத்தில் நாம் காண்பது, ஸ்ரீரோஹிணி நட்சத்திர லிங்க தரிசனமும் ஆகும்.

காஞ்சீபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திற்குத் தென்மேற்குப் பகுதியில், ஆலயத்தின் முன் செல்லும் சாலையில், சற்று தூரத்தில் உள்ள ஸ்ரீபாண்டவ தூதப் பெருமாள் ஆலயம் (திருப்பாடகம்), ரோஹிணி நட்சத்திரத் தலங்களுள் ஒன்றாகும்.

ஸ்ரீஆனந்தவல்லி அம்மன்
மானாமதுரை

ஸ்ரீசோமநாதர் மானாமதுரை

ரோஹிணி நட்சத்திரத்திற்கு மற்றொரு தலமாகச் சித்தர்கள் அருள்வது மானாமதுரை ஸ்ரீஆனந்தவல்லி சமேத ஸ்ரீசோமநாதர் ஆலயமும் ஆகும்.

குடும்பத்தில் தம்பதியர்களிடையே ஒற்றுமை நிலவிட, ஸ்ரீரோஹிணி நட்சத்திர லிங்க வழிபாடு மிகவும் துணை புரியும். இந்த ரோஹிணி நட்சத்திர லிங்க வடிவைப் படமாக வைத்தும் பூஜித்திடலாம். தக்க சற்குருவின் அருள்வழி முறைகளுடன், தக்க ஸ்தபதிகளைக் கொண்டு ஒரு மாத முதல் ரோஹிணி நட்சத்திர நாள் முதல் அடுத்ததற்கு அடுத்ததாக வருகின்ற மூன்றாவது ரோஹிணி நட்சத்திர நாள்வரை, குறைந்தது ஒரு மண்டலம் விரதமிருந்து, சந்திர பகவான் ரோஹிணி நட்சத்திர தேவியுடன் எழுந்தருளும் தலங்களிலும் (மானாமதுரை, மதுரை போன்றவை) ரோஹிணி நட்சத்திர லிங்கத்தை ஆகமப் பூர்வமாகத் தாபித்தும் வழிபட்டு வருதல், கலியுலக மக்களுக்கு மிகவும் நன்று.

ரோஹிணி நட்சத்திரப் புஷ்ப குந்தளமும் இப்படத்தில் அமைவது பெறுதற்கரிய பாக்யமாகும். (படத்தில் ஆவுடை மேல் காணப்படுவது).

ரோஹிணி என்பது 12 முக்கியமான நட்சத்திர நாள் ஜோதிப் புஷ்பாகாரங்களால் ஆவதாகும். தினமும் இந்த 12 ரோஹிணிப் புஷ்ப குந்தளச் சரங்களுக்கும், செந்தூரம், குங்குமம், சந்தனம், மஞ்சள் ஆகிய நான்கையும் இட்டு வழிபட்டு வருதல் வேண்டும்.

12 ரோஹிணிப் புஷ்ப குந்தளச் சரங்களுக்குமான நட்சத்திர வேதப் புஷ்பத் துதிகள் உண்டு.,

கணபதி வாரண வந்துளம் போற்றி
சந்திர தவமணித் துரீயே போற்றி
மாளவக் கனகண மாமணி போற்றி
பூமணி மாதவப் புனிதம் போற்றி
சேரணி செறுவும் செம்மல் போற்றி
கூரப் பரலில் குந்தளம் போற்றி
வேர்க்கல் வளிச் சுடர் வாகே போற்றி
கிருஷ்ணப் படித்தாள் கீதம் போற்றி
இசையுக ஈசன் எம்பரி போற்றி
ருத்திரப் பகளா ரீதம் போற்றி
அம்பாளமுதம் அகிலாள் போற்றி
தாரா மங்கள ரோஹிணி போற்றி
(தாரா – நட்சத்திரம்)

நோய் தீர்ப்பீர்

நோய் தீர்க்கும் ரோஹிணி லிங்க பூஜை

“கணிகாபத்ரம்” என்பது ஸ்ரீலலிதா பரமேஸ்வரி அணிந்திருக்கும் ஒரு வகை முத்து மாலையாகும். ரோஹிணி நட்சத்திர நாளில் அம்பிகை இதனை அணிந்து, புவியில் வலம் வருகையில் எழும் நறுமணம் பற்பல நோய்களைத் தீர்க்க வல்லதாம்! இவைதாம் இன்றும் பல ஆலயங்களிலும் திடீரென்று உருவாகும் நறுமணமாய்க் கமழ்கின்றது.

இதனால்தான் முத்து பஸ்பம் எனும் சித்த, ஆயுர்வேத மருந்தைத் தயாரிப்பதற்கு, ரோஹிணி நாளில் நல்முத்தைச் சந்தனக் கல்லில் தோய்த்து, தேய்த்து அரைப்பர். ரோஹிணி நட்சத்திர நாளில் முழுமையாக விரதம் பூணுதல் நல்ல நோய் நிவாரண சக்திகளைத் தரும், வசதி உள்ளோர், ரோஹிணி நட்சத்திர நாளில், ரோஹிணி நட்சத்திர லிங்கத்திற்கு முத்து மாலைகளை அணிவித்து, பால் பேணி, பால் பணியாரம், மசாலாப் பால், பால் கோவா போன்றவற்றை நைவேத்யம் செய்து, தானமும் அளித்து வருதல், பல நோய்களுக்கும் நல்ல நிவாரணங்களைப் பெற்றுத் தரும்.

அபாரமான வலஞ்சுழி சக்திகளை உடையது, ஒலித் துறையைச் சார்ந்தவர்கள் இந்த லிங்க பத்ரமாலிகத்திற்கு வெண்ணெய், செந்தூரம், சார்த்தி வழிபடுவதுடன், ஏழைகளுக்கு வெண்ணெய் தடவிய உணவு வகைகளைத் தானமாக அளித்து வரவேண்டும். கூட இருந்து பணிபுரிந்து ஏமாற்றி, துரோகம் செய்தவர்களால் ஏற்பட்ட பேரிழப்பு, நஷ்டங்கள் தணியவும், இவற்றிலிருந்து மீளவும் இந்த வழிபாட்டால் நல்வழி பிறக்கும்.

ரோஹிணி நட்சத்திர லிங்க பாணத்திற்கு குஞ்சதளபத்மம் என்று பெயர், மந்திரிகள், பெரிய அரசு உயரதிகாரிகள் போன்ற ராஜ்ய பரிபாலனத்தில் உள்ளவர்கள் குஞ்சதளபத்ம பாணத்திற்குச் சந்தனக் காப்பு இட்டு, வெண்பட்டு ஆடைகள் சார்த்தி,  வழிபட்டு வருதலால், ராஜ்ய மேன்மையும், நல்ல உயரறிவும், நல்ல திறமைக்கான பட்டயங்களும், விருதுகளும் கிட்டும்.

IAS, IPS, ICS, IES, IRS, MD, CEO, GM போன்ற உயர்நிலை அதிகாரிகள், அரசியல் அழுத்தத்தால், கூட இருந்து குழி பறிப்பவர்களால் பாதிக்கப்படாமல் இருக்கவும், கௌரவம், அந்தஸ்து, நாணயம் நேர்மையுடன் செயல்படவும் ஸ்ரீரோஹிணி நட்சத்திர பாண லிங்க பூஜை ஆற்றி வர வேண்டும்.

விஷ்ணுபதி நத்தம்

நத்தம் ஸ்ரீஆதிலட்சுமி ஸ்ரீஆதிமூலப் பெருமாள்

ஸ்ரீவிஷ்ணுபதிப் புண்ய கால பூஜைத் தலம் – நத்தம் ஸ்ரீஆதிலட்சுமித் தாயார் சமேத ஸ்ரீஆதிமூலப் பெருமாள் ஆலயம்!

அனைத்து தேவ மூர்த்திகளின் துவார பாலக, துவார பாலகி மூர்த்திகள் தோற்றுவிக்கப் பெறும் உத்தமத் திருமால் தலங்களுள் ஒன்று.!

வசு, ருத்ர, ஆதித்யப் பித்ரு மூர்த்திகளுக்கும் மோட்சம் அளிக்கும் அருட்பெருந்தலம்!

அனைத்து மிருகங்களும் பிறவிப் பெரு நிலைகளை அடைய உதவும் மித்திரப் புனல் தலம்!

சயனக் கோலப் பெருமாளின் நேத்திரப் பார்வை கொழிக்கும் அமாவாசைத் தீர்த்தத் தலம்!

சுடரொளிக்கான திவ்ய இலக்கணங்கள்!

வரும் விஷ்ணுபதிப் புண்ய காலத் தலமாகச் சித்தர்கள் அருள்கின்ற நத்தம் திருத்தலம், சுடராழித் திருத்தலமாகப் பெரிதும் போற்றப்படுகின்றது. அதாவது நட்சத்திரச் சுடரொளிச் சக்திகள் பொழிகின்ற சக்தி வாய்ந்த தலம், தான் பிறந்த நட்சத்திரம் என்ன என்று அறியாது இருப்போர், இத்தலத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுடன் வழிபட்டு வர, நட்சத்திரம் அறியும் மார்கம் புலப்படும்.

நத்தம் திருத்தலம்

ஒரு விளக்கில் ஏற்றப்படும் தீபமானது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான ஆன்மச் சுடர் வன்மையை, தேவ வலிமையை, ஆத்ம ஜோதிப் பிரவாகத்தைப் பெற்றிருக்கும். இதற்குக் காரணம், வெறும், திரி, நெய், எண்ணெய் நெருப்பால் மட்டும் சுடர் தோன்றுவது கிடையாது. விஞ்ஞான ரீதியாக, சுடர் ஏற்பட ஆக்ஸிஜன் வாயு தேவை என்று கூறிட்டாலும், பிராண கூட்டு சக்தியால்தான் உஷ்ணம், நெருப்பு தோன்றுகின்றன என்பதே உண்மை! ஒவ்வொருவரிடத்திலும் பலவிதமான பிராண சக்திகள் உண்டு. அவரவரிடத்தில் உள்ள பிராண சக்திகளைப் பொறுத்துத்தான் அவரவர் ஏற்றும் தீபத்தின் தன்மைகள் அமையும்.

ஒரு குடும்பத்தில், காலையிலும் மாலையிலும் சுவாமிக்கு விளக்கேற்றும்போது, குடும்பத்தில் உள்ள அனைவருடைய ஒட்டுமொத்தப் பிராண சக்திகளைப் பொறுத்து அந்த இல்லத்தின் தீபத்தின் தன்மைகள் அமையும். எனவே, ஒருவருடைய இல்லத்தில் ஏற்றப்படும் விளக்கில் தோன்றும் தீபத்தின் வடிவம், வண்ணம், உஷ்ணம், சுடரின் உள்அமைப்பு போன்றவற்றைக் கொண்டு, அந்தக் குடும்பத்தினர்களின் பிராண சக்திகளையும், இல்லத்தில் நிலவும் பிராண சக்தித் தன்மைகளையும் உரைக்கின்ற ப்ரச்ன ஜோதிட ஆரூட முறைக்குத் தீபகாணவம் என்று பெயர். இம்முறையில்தாம், நம் திருஅண்ணாமலை ஸ்ரீஅகஸ்தியர் ஆஸ்ரமத்தில், கார்த்திகை தீபத்தை ஒட்டிய பச்சரிசி மாக்கோல ஜோதிகளில், ஒவ்வொருவரும் ஏற்றுகின்ற விளக்கு தீபத்தின் தன்மைகளைக் கொண்டு, அவரவருடைய கர்ம வினைகள் பகுக்கப்பட்டு, நல்வரங்களும் கிட்டுகின்றன.

தீபத்திற்குப் பூரண சக்திகள் தரும் தலம்

நத்தத்தில் ஏற்றப்படும் ஒவ்வொரு ஜோதியிலும், தீபாகர்ஷணப் பூரண சக்திகள் நிறையத் தோன்றுகின்றன. இங்கு எந்த நாளிலும், எந்த நேரத்திலும் எந்த தீபத்தை ஏற்றினாலும், அதில் நிச்சயமாகப் பல்வகைப் பூரண சக்திகள் நிறைந்திருக்கும்., பூரண தீபம், காரண தீபம், சாரண தீபம் – ஆகிய மூன்று வகை நட்சத்திரச் சுடர்கள் நத்தம் திருத்தலத்தில் பொழிகின்றன.

பிற இடங்களை விட, வானசாஸ்திர ரீதியாக நத்தம் திருத்தலத்திற்கு மேலே, வானில் தெரிகின்ற நட்சத்திரங்கள் அபரிமிதமான ஒளியைப் பொழிபவையாகும். சில அபூர்வமான நட்சத்திர தரிசனங்களும் இங்குதான் நன்கு பெறவல்லவை! வராஹமிஹிரர், ஆர்யபட்டர் போன்ற விண்வெளி, வானவெளி சாத்திர ஞானிகள் வழிபட்டத் தலம்!

கர்த்தமப் பிரஜாபதியான தட்சன், இத்தலத்தில் பரிபூரண விரதம் பூண்டமையால்தான், ஒளி பொருந்திய 27 நட்சத்திர தேவியரைத் தவப் புதல்வியர்களாகப் பெற்றிட்டார்.

பிரார்த்தனை வைப்பு முறை

இறைவனிடம் நேர்த்திகள், வேண்டுதல்கள், பிரார்த்தனைகளை மக்கள் கொள்வதுண்டு. இம்மூன்றும் வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டவை. ஆலயங்களில் மூல ஸ்தானத்திற்கும், அர்த்த மண்டபத்திற்கு முன் இருபுறமும் அமையும் துவார பாலகர்கள், இறைவனைத் தரிசிக்க வருகின்றவர்களுடைய வேண்டுதல்களைப் பெற்று, மூல ஸ்தான இறைமூர்த்தியிடம் சமர்ப்பிக்கின்றார்கள்.

நத்தம் திருத்தலம்

மனித உடலுக்கு வெளித் துவாரங்கள் ஒன்பது இருந்தாலும் உள்உடலின் துவாரமாக மனம் அமைகின்றது. மனத்திலிருந்து எழுபவைதாமே வேண்டுதல்கள்.

எனவே சுயநலமாக இல்லாமல் தியாகப் பூர்வமாக, சகல ஜீவன்களின் மேன்மைக்காக வேண்டுபவர்கள் மட்டுமே தங்கள் வேண்டுதல்களை, நந்தி மூர்த்தியின் அருகில் நின்றோ அல்லது கருவறைக்கு முந்தைய அர்த்த மண்டபத்திலோ ஒப்புவித்திடலாம். லௌகீகமான, சுயநலமான வேண்டுதல்களைக் கொண்டிருப்போர், துவார பாலகர்களிடமே தங்கள் வேண்டுதல்களைச் சமர்ப்பிப்பது உத்தமமானது.

இவ்வாறு துவார பாலக மூர்த்திகளிடம் சமர்ப்பித்த பின், உள்ளே சென்று நிர்மலமான மனதுடன் இறைவனைத் தரிசிக்க வேண்டும். இதுவே நிதர்சனமான தரிசன முறையாகும். ஆனால், நடைமுறையில் இது சாத்தியமாகுமா?

தினந்தோறும் எண்ணற்ற பிரச்னைகளுடன் வாழ்க்கையைக் கழிக்கின்ற மனிதனுக்கு, சுயநலமில்லாது வேண்டுகின்ற உத்தம நிலை அவ்வளவு எளிதில் வந்திடுமா? இத்தகைய உத்தம நிலையை வர வைக்க உதவுவது தான் நத்தம் திருத்தலமாகும்.

சுயநலமற்று, தியாகப் பூர்வமாக இறைவனிடம் வேண்டுவதே உண்மையான பிரார்த்தனை! பிரார்த்தனை என்பதற்கு இது ஒன்றே பரிபூரணமான அர்த்தமாகும். ஏனையவை யாவும் வேண்டுதல்களும், நேர்த்திகளுமாகும்.

தீர்த்தப் புலச்சுடர்த் தலம்

கர்ம வினைகளைப் போக்க வல்ல புனிதமான தலங்களின் இதுவும் ஒன்று. இங்குள்ள தீர்த்தம், இந்திரத் தீர்த்தம், கஜேந்திர மோட்ச தீர்த்தம், அகோராத்ரத் தீர்த்தம், பஞ்ச பூஷணத் தீர்த்தம் என பல யுகங்களிலும் பல நாமங்களைத் தாங்கிப் பொலிகின்றது. பொதுவாக, ஆறுகளில், குளங்களில் இரவில் நீராடலாகாது என்பது நியதி. ஆனால், ஒப்பிலியப்பன் கோயில், அகோராத்ரத் தீர்த்தம், ராமேஸ்வரம் அக்னித் தீர்த்தம் (கடல்), பத்ரிநாத் பிரம்ம கபால தீர்த்தம் போன்ற அபூர்வமான தீர்த்தங்களில் இரவு, பகல் எப்போதும் நீராடிடலாம் என்ற தீர்த்தச் சக்தி சிறப்பைப் பெற்றுள்ளன.

இவ்வகையில் நட்சத்திர ஒளிப் பிரமாணம் அதிசிறப்புடன் துலங்குகின்ற நத்தம் ஆலயத் திருக்குளமானது, இரவு, பகல் எந்நேரத்திலும் நீராடக் கூடிய அகோராத்ரத் தீர்த்தமாகச் சித்தர்களால், மகரிஷிகளால் போற்றப்படுகின்றது. இந்த தெய்வீகமான சிறப்பு அனைத்து நதிகளுக்கும், தீர்த்தங்களுக்கும் அமைவது கிடையாது என்பதை நன்கு அறிந்து கொள்ளவும்.

ஸ்ரீஆதிலட்சுமி தாயார் சமேத ஸ்ரீஆதிமூலப் பெருமாள் நத்தம்

இப்பூவுலகில் ஒவ்வொரு மனிதருக்கும் வசு, ருத்ர, ஆதித்யர் ஆகிய முக்கியமான மூன்று வகைப் பித்ருக்கள் உண்டு. பித்ரு மூர்த்திகள், பித்ரு பத்னிகள், பித்ரு கணங்கள், பித்ரு தேவதைகள், பித்ரு ரிஷிகள், பித்ரு பாதங்கள் என்று பல்வகைப் பித்ரு மண்டல மூர்த்திகளும் உண்டு. இவர்களுள், “பிரசன்ன பாதர்கள்” எனப்படும் பிதா வகைப் பித்ரு மூர்த்திகள் அமாவாசைத் திதி தோறும் தூல, சூக்கும வடிவுகளில் இங்கு நத்தம் கஜேந்திர மோட்சத் தீர்த்தத்தில் நீராடிப் பெருமாளைச் சேவித்துச் செல்கின்ற பித்ரு முக்தித் தலமும் இதுவேயாம்.

பெருமாளின் வாமன அவதார யுகத்தில் வாமன மூர்த்தியின் சிரசு, பாதங்கள், கரங்களில் இருந்து மூன்று வகைத் தீர்த்தங்கள் தோன்றின. இதை வைத்துத்தான் நீரின் தெய்வீகக் குணங்கள்..,

1.சிரபுஞ்சனம் (தலை நீர்)
2. பாத முகம் (பாத நீர்)
3. சுரகரப்ரபஞ்சம் (கர நீர்)

தொலைந்து போன பொருட்கள், காணாமற் போனவர்கள் மீட்சி பெற உதவும் கார்த்தவீர்யாஜுன மந்திரம் உற்பவித்தத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். மேற்கண்ட மூன்று வகைத் தெய்வீக நீர் அம்சங்களில், பாத முகத் தீர்த்த சக்தி பொலியும் திருத்தலங்களில் இதுவும் ஒன்றாகும்.

புனிதம் என்பது ஜடப் பொருட்களுக்கும், உயிர் வகைகளுக்கும் வெவ்வேறு வகைப்படுவதாகும். ஒரு பசுவைச் சுத்தப்படுத்துவதற்கும், ஒரு குடத்தைச் சுத்தப்படுத்துவதற்கும் வித்யாசங்கள் உண்டு அல்லவா! இவ்வகையில் ஜடப் பொருட்களுக்கு அத்தம், உத்தம், இதிதம் ஆகிய புனித சக்திகள் அமைவது போல் உயிரினங்களுக்குச் சுத்தம், துத்தம், நத்தம் என்ற மூன்று வகை உயர்நிலைப் புனித அம்சங்கள் உண்டு.

எனவே நத்தம் என்ற பெயருடைய தலங்கள் யாவுமே சுத்த சித் சக்திகளைக் கொண்டவை. மனம், உடல், உள்ள சுத்திக்குத் துணைபுரியும் தலங்களில் நத்தம் பெருமாள் ஆலயமும் ஒன்றாகும்.

பிரார்த்தனைகளைச் செம்மையாக்கும் பரபிரும்மத் திருத்தலம்! கஷ்டப்படுவோருக்கு அப்பனாய்ப் பெருமாளப்பர் வந்துதவும் திருத்தலம்! பித்ரு மூர்த்திகள் தீர்த்தவாரி உற்சவம் நிகழ்த்தும் நத்தம் திருத்தலம்!

நத்தம் ஸ்ரீஆதிலக்ஷ்மித் தாயார் சமேத ஸ்ரீஆதிமூலப் பெருமாள் கோயில் - ஸ்ரீவிஷ்ணுபதிப் புண்ணிய கால பூஜைத் தலம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து, லால்குடி வழியாக, நத்தமாங்குடி, ஆலங்குடி மகாஜனம் செல்லும் நகரப் பேருந்துகள் மூலம் நத்தம் திருத்தலத்தை அடையலாம்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறையாகத் தமிழ்த் திருஆண்டில் நான்கு ஸ்ரீவிஷ்ணுபதி உற்சவாதிகள் நிகழ்கின்றன. பூவுலகில் மட்டுமல்லாது வைகுண்டம், திருக்கயிலாயம், சர்வேஸ்வர லோகம், கஜமண்டலம், நட்சத்திர மண்டலம், சூரிய லோகம், கோள மண்டலங்கள் என அனைத்திலும் ஸ்ரீவிஷ்ணுபதிப் புண்ணிய கால பூஜை மகத்தான முறையில் கொண்டாடப்படுகின்றது.

வைணவப் பீடாதிபதிகள், வைணவச் சான்றோர்கள், வைணவக் கலைஞர்கள், திருமால் அடியார்கள், பெருமாள் நெறி போற்றுபவர்கள். ஆழ்வார் அடியார்கள், பக்த கோடிகள் யாவரும் முன் வந்து ஆவன செய்து, ஆதரவு தந்து, அனைத்துப் பெருமாள் தலங்களிலும், ஸ்ரீவிஷ்ணுபதிப் புண்ணிய காலப் பூஜையை பவித்ரமாகக் கொண்டாடிடப் பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

ஓம் நமோ நாராயணாய ஸ்ரீமத்ராமானுஜாய நம:
திருமால் நெறி வாழி!  திருத்தொண்டர் செயல் வாழி!

ஆயிரத்தெட்டு ஹரிபூஜனப் புலம் கண்டார்!

ஆயிரம் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம் பெற்றவர்களுக்கு, “ஆயிரம் பிறை கண்டார்” என 80 வயது சதாபிஷேகத் திருநாளாகக் கொண்டாடுகின்றோம் அல்லவா! இவ்வாறு 108 விஷ்ணுபதிப் புண்ணிய காலப் பூஜைகளைத் தொடர்ந்து ஆற்றுவோர்க்கு, “சகஸ்ராஷ்ட ஹரிசுதப் பூஜிதர்கள் (ஆயிரத்தெட்டு ஹரிபூஜனப் புலம் கண்டார்)” என்ற பரிவட்டத்துடன் விசேஷமான பெருமாள் அனுகிரகம் குவியக் காத்திருக்கும்.

வரும் விஷ்ணுபதிப் புண்ணிய காலத் தலமாக சித்தர்கள் உரைப்பது திருச்சி லால்குடி அருகே உள்ள நத்தம் எனும் திருத்தலமாகும். கரும்பு வயல்களின் ஊடே, கவினுறப் பெருமாள் பெருமையை விளக்கும் அற்புதத் திருத்தலம். ஸ்ரீஆதிமூலப்பெருமாள் யானைக்கு முக்தி தந்தருளிய அருட்தலம். இதனை உணர்த்துவதாக, இங்கு கருவறையில், யானையின் தலை மேல், ஸ்ரீஆதிமூலப் பெருமாள், ஸ்ரீரங்கநாதர் போல் சயனக் கோலம் பூண்டு, தன் வலது கையை வைத்து அருளும் தெய்வ தரிசனம் துலங்கும் அதியற்புதத் தலம்.

பிரார்த்தனைகளில் பல உத்தம நிலைகள் உண்டு. மகரிஷிகளுக்கும், மகான்களுக்கும் ஜீவகாருண்யப் பிரார்த்தனைகள் நிறைந்திருக்கும். சித்தர்களும், மகரிஷிகளும், மகான்களும் தங்களுடைய தபோ பலன்களைப் பூலோக ஜீவன்களின் நல்வாழ்விற்காகத் தியாகமயமாக அர்ப்பணித்தால், இறைவனே முன் வந்து அவர்களைத் தடுத்தாட் கொள்கின்றார். இவ்வாறு இறைவனே, அருட்பெருஞ்சுடராய், காருண்ய மூர்த்தியாய் முன் வந்து அருளும் தலங்களில் நத்தமும் ஒன்றாகும்.

வேண்டுதல்கள், பிரார்த்தனைகள், நேர்த்திகள்

தங்களுடைய வேண்டுதல்கள், பிரார்த்தனைகள் இறைப் பூர்வமாக அமைதல் வேண்டும் என்பதற்காகவே, சகல மகரிஷிகளும், நத்தம் திருத்தலத்திற்கு வந்து “வேண்டுதல் வேண்டாமை” ஆகிய உத்தம நிலையைப் பெறுகின்றனர். ஆனால், பூலோக மக்கள், இதிலும், கலியுக மனித சமுதாயத்தில், ஆலயம் என்பது தம்முடைய விருப்பங்களை இறைவனிடம் ஒப்புவிப்பதற்கான தளம் மட்டுமே என்றாகி வருவது அழகன்று. கோயில் என்பது முக்தி தரும் முத்துடை பூமி என்பதை மறந்து, வெறும் விருப்பு, வெறுப்புகளைக் கொட்டும் வளாகமாகவும் மாறி வருவதும் நன்றா? ஆனால் மஹாகாருண்யராய் இறைவன் இவற்றை எல்லாம் மன்னித்து அருள்புரிகின்றார் எனில், நாம் வாழும் ஒவ்வொரு விநாடியும் இறைவனை எண்ணி, எண்ணி அன்றோ பயனுற வாழ்தல் வேண்டும்! இவ்வாறு உண்மையாகவே செய்கின்றீர்களா என்று மனசாட்சியுடன் நினைந்து பாருங்கள்!

தம்முடைய சுயநல, குடும்பச் சார்பு விருப்பங்களை, குடும்ப நலன்களை, உற்ற, சுற்ற நன்மைகளுக்கான காரிய சித்திகளை நிறைவேற்றும் வகையில் இறைவனிடம் கேட்பதே வேண்டுதல்கள் ஆகும்.

இறைவனிடம் குறித்த பொருள் அல்லது காரிய நிவர்த்தி கேட்டு, இதற்காக முடி இறக்குதல், பிரார்த்தனை உண்டியல், துலாபாரம் மூலம் பொருட்களை ஈடாக அளித்தல் போன்றவை நேர்த்திகளாகும்.

ஆனால், இறைவனே மனம் உவந்து தானே முன் வந்து நல்வரம் அளிக்கின்ற தன்மையுடன், ஆண்டவனிடம் தன்னை ஒப்படைக்கும் பாங்கே புனிதமான பிரார்த்தனை ஆகும். இவ்வாறு பிரார்த்தனையைச் செழுமையாக்கி செம்மைப்படுத்தி தருவதே நத்தம் புண்ணிய பூமியின் மகத்துவம் ஆகும்.

கவினுற நிகழ்ந்த கஜேந்திர மோட்ச அனுபூதிகள்

முதலை வாய்ப்பட்ட யானை, பெருமாளை வேண்டி உத்தம நிலை அடைந்த புராண அனுபூதிகளை நாம் அறிவோம். தாய்ப் பசு, தன் மடிப் பாலைத் தானே சொரிந்து எழும்பிய பலவகைச் சுயம்பு லிங்க மூர்த்திகள் பல இடங்களில் உற்பவித்து அருள்வது போல், கபிஸ்தலம், திருநெல்வேலி, லக்ஷ்மணபுரி (லக்னோ) அருகே நைமிசாரண்யம் போன்ற சில தலங்களிலும் புராண கஜேந்திர மோட்ச அனுபூதிகள் பலவும் நிகழ்ந்துள்ளன.

பூவுலகில் கிருத யுகம், துவாபுர யுகம், திரேதா யுகம், கலியுகம் ஆகிய நான்கும் சுழற்சியாய் வந்து செல்கின்றன. பலவிதமான சாப வினைகளால், பல யுகங்களில் முதலையாய் ஆனவர்களுக்கு நற்கதி அளிப்பதற்கு இந்த கஜேந்திர மோட்ச லீலைகள் சில தலங்களில் ஆற்றப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும் பல தெய்வீக அனுபூதி நெறிகள், வேதாகமப் பாடங்கள் தக்க சற்குரு மூலம் உணரப் பெறுவதாகச் செறிந்திருக்கும்.

விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் நத்தமாளயக் கஜேந்திர மோட்சம்

இவ்வகையில் நத்தம் தலத்தில் பஞ்சானன் என்ற யானை முக்தி பெற்ற அனுபூதி, வீரவாண யுகத்தில் விஷ்ணுபதிப் புண்யகால அனுபூதியாக இங்கு நிகழ்ந்துள்ளது.

கும்பகோணம் அருகே கபிஸ்தலத்தில் வர்ண ஓவியமாகவே கஜேந்திர மோட்ச அனுபூதி குறிக்கப்படுகின்றது. ஆனால், பரம்பொருளாம் திருமாலே, யானையின் மேல் தன் திருக்கரங்களை வைத்து அருள்கின்ற தரிசனக் காட்சியே நத்தம் பெருமாள் ஆலய மூலத் திருமேனியாய் அமைந்துள்ளது நாம் பெற்ற பாக்யமாகும்.

ஐம்புலனடக்கும் நத்தமாளயப் புண்ணியத் தலம்

நத்தமாங்குடி, நத்தமாலயம், நத்தமாளயம் போன்ற பல அரிய புராதனமான பெயர்களைக் கொண்டதே இன்றைய நத்தம் பெருமாள் ஆலயத் தலமாகும். ஐம்புலன்களை அடக்கும் பிருத்வி சக்திகளைக் கொண்ட தலம். ஐம்புலன்களை ஆட்டுவிக்கும் நாளங்களைச் சுத்திகரிக்கும் பூஜா பலன்களைத் தரவல்ல தலம்.

தூய பிரார்த்தனையின் மஹிமை யாதெனில், ஐம்புலன்களையும் அடக்கி வரும் பிரார்த்தனைகளைக் கடவுள் நிறைவேற்றியே ஆக வேண்டும். இதுவே ஸ்படிகப் பிரார்த்தனா சக்தி எனப்படுவதாகும். கண்ணாடி போன்ற தூய உள்ளத்தில் இருந்து எழுவதே இது!

ஐம்புலன்களை அடக்குவதற்கான பஞ்சபூத சக்திகள் நிறைந்த ஐந்து தலங்கள் நத்தத்தைச் சுற்றிப் பண்டைய காலத்தில் துலங்கின. இவை பஞ்ச சுத்தித் தலங்கள் (ஐம்புல சக்தித் தலங்கள்) என துவாபர யுகத்தில் போற்றப் பெற்றன.

உண்மையில், தம் வாழ்க்கை முழுதும் தெய்வீகத்தில் நல்ல நாட்டம் பெற்று, இறைத் திருப்பணிகளை ஆற்ற விரும்புவோர், மகான்கள், சித்தர்கள், சான்றோர்களின் ஆசிகளைப் பெற விழைவோர், நத்தத்தைச் சார்ந்த ஐம்புல சக்தித் தலங்களில் வழிபட்டு வர வேண்டும்.

“மனம் அடங்கவில்லையே! ஆபாசமான, அருவருப்பான, அதர்மமான, பொய்மையான எண்ணங்கள் அலை அலையாய் மனதில் வந்து கொண்டே இருக்கின்றனவே!” என்று வெளியில் சொல்ல இயலாது, உள்ளுக்குள் புலம்பி வருந்துவோர், உள்ளம் சுத்தி பெற மாதம் ஒரு முறையேனும் சத்சங்கமாகப் பலருடன் ஒன்று கூடி, நத்தம் ஆலயத்தை சுத்தம் செய்து, இயன்ற திருப்பணிகளை ஆற்றி வர வேண்டும்.

கலியுகத்தில், உழைப்பற்ற சுகபோக நாட்டமே பெரிதும் பெருகி வருவதால், ஐம்புலன்களை அடக்குவது மிகவும் கடினம். எனவே, கண், காது, மூக்கு, செவி, வாய் என்ற ஐம்புலன்களில் ஏதேனும் ஒன்றையேனும் முதலில் முறையாக அடக்கப் பயின்று வர வேண்டும். இதற்கு உதவுவதே நத்தம் ஆலயத்தில் ஆற்றும் உடலுழைப்புத் திருப்பணி! வயதானோர் இங்கு தங்களால் இயன்ற பணிகளை, துதிகள் ஓதுதலை ஆற்றி வர வேண்டும்.

ஒரு யுகத்தில், நாரத மகரிஷி, கடுந்தவம் புரிந்த போது, தமக்கு ஐம்புலன்களை அடக்கும் சக்தி உள்ளதா என்று அறிய வழிபட்ட தலமும் இதுவேயாம்!

யானை, பசு இரண்டிலுமே நிறைய தேவதா மூர்த்திகள் உறைந்து அருள்கின்ற பாங்கு உண்டு. ஸ்ரீஆதிமூலப் பெருமாள், இங்கு யானையின் சிரசின் மேல் வைத்திருக்கின்ற கஜேந்திரக் கபாலப் பகுதிக்கு நத்தோடு என்று பெயர். சிருஷ்டியின் போது, யானைக்கான கபால சக்திகள் பிறந்த இடமே செய்யாறு – சேத்துப்பட்டு அருகில் உள்ள “நமத்தோடு” என்றாகி உள்ளது. இங்கு புராதன காலத்தில் அரிய கஜபூஜைகள் நிகழ்ந்தன.

கபால ஓடக சக்தித் தலம்

நத்தம் + ஓடகம் என்பது ந(ம)த்தோடு ஆயிற்று. ஓடகம் என்பதும் நீரும் நிலமும் சேர்ந்த பரப்பு ஆகும். விண்வெளிப் பறவைப் பார்வையில் (bird’s eye view) கபாலமாகிய தலை என்பதும் நிலமே! மேலும் கபாலத்தில் நிலமாகிய பிருத்வி சக்திகளும், நீராகிய ஜலசக்திகளும் உடலின் பிற பகுதிகளை விட அதிக அளவில் இருக்கின்றன. எனவே தலைக்கு நத்தம் என்ற பெயரும் உண்டு.

நீர், நிலத்தில் வாழும் ஓடக சுவாச சக்தி ஜீவன்கள்

கபால ஓடக சக்திகள் நிறைந்த தலமாக இருப்பதாக நத்தம் விளங்குவதால், கபால நோய்கள், ஒற்றைத் தலைவலி, கபாலத்தில் அடிபட்டுச் செயல் இழத்தல் போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்க வல்ல தலம். ஓடக (சுவாச) சக்திகள் நிறைந்தவனவாய், நீரிலும், நிலத்திலும் வாழ்கின்ற தன்மைகளைக் கொண்டவையே ஆமைகளும், தவளைகளும் ஆகும். இரண்டுமே பிராணாயாம யோகத்தில் வல்லவை. விடியற் காலையில் சூரிய உதய நேரத்தை ஒட்டிய நேரத்தில் இவ்விரண்டையும் தரிசிப்பது சுபமங்கள தரிசனமாகும். யோகக் கட்டு சுவாசத்தால் ஆயிரம் ஆண்டுகள் வாழ வல்ல ஆமை தரிசனமும் சுப (யோக) தரிசனமே! எனவேதான் ஆமையைக் காண்கையில் “கச்சபீ” என ஆறு மாத்திரை ஒலியில் சாமவேத சப்தவாக்கியத்தை ஒலிக்கும் சுபசகுன முறையும் புராதன காலத்தில் பொலிந்தது!

புலனடக்கத்திற்கொரு புல்/புல வள யானை!

நல்ல புலனடக்கத்தைப் பெற, புலனடக்கம் பூரிக்கும் இடத்தில் தவம் புரிய வேண்டும். ஐம்புலன் அடக்கத்திற்கு ஓர் எடுத்துக் காட்டாக விளங்குவது யானையாகும். இதனால்தான் யானையின் ஓடகத்தில் (கபால நெற்றியில்) நாமம், திருநீறிட்டு வணங்குகின்றோம். மேலும், பூர்ண சரணாகதிக்கு யானையைத்தான் உவமையாகச் சொல்வார்கள்.

பல யுகங்களிலும், தேவேந்திர மூர்த்தியாம் இந்திரரும் இங்கு, நத்தத்தில் தன்னுடைய 1008 தேவ யானைகளுடன் வந்து வழிபட்டுள்ளார். விஷ்ணுபதிப் புண்ணிய காலத்தின் போது, 32 அறங்களைக் குறிக்கும் 32 விதமான திரவியங்களால் இங்குப் பூர்ணாஹூதி அளித்து கஜயோக சக்தி ஹோமம் செய்வது விசேஷமானது.

சகல ஆலய லட்சுமி மூர்த்தங்களுக்கெல்லாம் மூல மூர்த்தியாகத் திருமகள் தேவி, ஆதிலட்சுமியாக அருள்பாலிக்கின்ற உத்தம தன சக்தித் தலம். செல்வ சக்தியை அளிக்க வல்ல தனாகர்ஷண யந்திரங்களை வைத்துப் பூஜிக்க வேண்டிய லட்சுமி கடாட்சத் திருத்தலம். அனைத்து விதமான தனாகர்ஷண மூலிகைகளுக்கும், லட்சுமி கடாட்ச சக்திகளைப் பெற்றுத் தரும் ஆதிலட்சுமி அருளும் அற்புதத் தலம்.

வருகின்ற விஷ்ணுபதிப் புண்ணிய காலத் திருத்தலமாகச் சித்தர்கள் போற்றி அருள்வது, திருச்சி லால்குடி அருகே நத்தம் கிராமத்தில் உள்ள ஸ்ரீஆதிலட்சுமி தாயார் சமேத ஸ்ரீஆதிமூலப் பெருமாள் ஆலயமாகும்.

போதும் என்ற மனம்தனை அளிக்கும் பொன்னான தலம். போதுமென்ற மனம் இருந்தாலே போதும், கலியுகத்தில் எத்தனையோ துன்பங்களை மிக மிக எளிதில் வென்று விடலாம்தானே! ஆனால் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்தில், ஒவ்வொரு புலனிலுமே போதும் என்ற மனத் திருப்தி ஏற்படுவதே உண்மையான போதும் என்ற மனமாகும். இதனை அளிக்க வல்லதே நத்தம் பெருமாள் வழிபாடாகும்.

“நத்த பூமியில் பூரணம் பூத்த தீபம்!” என்பது நத்தம் எனும் திருத்தலங்களில் ஏற்றப்படும் தீபத்தின் தெய்வீக சக்திகளை உரைக்கின்ற சித்தவழி முறையாகும். அக்காலத்தில் சுபகாரியங்களுக்குச் செல்வோர், இத்தலத்தில் பெருமாளுக்குப் பசு நெய் தீபங்கள் ஏற்றி, நிச்சயதார்த்தம், திருமணம் போன்ற சுப வைபவங்களுக்குச் செல்வார்கள்.

நத்தம் திருக்குளம்

சுயநலமற்று, தியாகப் பூர்வமாக இறைவனிடம் வேண்டுவதே உண்மையான பிரார்த்தனை! பிரார்த்தனை என்பதற்கு இது ஒன்றே பரிபூரணமான அர்த்தமாகும். ஏனையவை யாவும் வேண்டுதல்களும், நேர்த்திகளுமாகும்.

இவ்வாறு ஐம்புலன்களும் அடங்கி, ஒடுங்கி அமைகின்ற பிரார்த்தனை சக்திகளைத் தரவல்லதே நத்தம் ஸ்ரீஆதிலட்சுமி சமேத ஸ்ரீஆதிமூலப் பெருமாள் ஆலய வழிபாடாகும். ஐம்புலன்கள் அடங்கும் தலம் இது! ஐம்புலன்களை அடக்க வல்ல தலமும் கூட! எந்தச் சித்தரும் , மகரிஷியுமே உத்தம நிலைகளை அடையும் முன், நத்தம் பெருமாளைத் தரிசித்தே ஐம்புலன்களை அடக்கும் ஆற்றலைப் பெறுகின்றனர்.

விஷ்ணுபதி விசேஷப் பூஜைகள்!

எனவே, வரும் விஷ்ணுபதிப் புண்ணிய காலத்தில்,

1. இத்தீர்த்தக் கரையில் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் அளித்தல்,
2. ஆலயம் முழுதும் விளக்குகள் ஏற்றி வழிபடுதல்,
3. சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வெண் பொங்கல், திண்டு தோசை, தயிரன்னம், லட்டு, ஜாங்கிரி போன்ற உணவு வகைகளைப் படைத்து ஏழைகளுக்குத் தானமாக அளித்தல் ,
4 பானக தானம்
5 குறைந்தது மூன்று ஏழைகளின் வீட்டிலாவது ஒட்டடை அடித்து சுத்திகரித்து, பசுஞ்சாணித் தீர்த்தத்தால் தரையை மெழுகி, நீர்க் கோலமிட்டு விளக்கேற்றிப் பூஜை ஆற்றுவித்தல்,

இத்தகைய பூஜை வழிமுறைகள் – நத்தப் புலச் சித்தம் – என்பதாக மன சுத்தி, உள்ள சுத்திக்கு உதவும் தலமாக, நத்தம் கிராமம் சித்தர்களால் போற்றப்படுகிறது.

அறிவு வளர்ச்சி குறைந்த பிள்ளைகளின் பெற்றோர்கள், இங்கு நத்தப் புலச் சித்தத் திருப்பணிகளை ஆற்றி வருவதால் அழுத்தமான சஞ்சித கர்ம வினைகள் தீர்வதற்கு இங்கு ஆலய வாசலில் கோ பூஜை செய்து வழிபடுதல் மிகவும் விசேஷமானது.

இன்று விஷ்ணுபதி நாளில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சார்ந்தவர்களுடைய மாட்டு வண்டி, சைக்கிள்கள் போன்ற வாகனங்களைச் சீர்படுத்தித் தருதல் நல்ல தான தர்மச் செயலாகும். சந்ததி இல்லையே என்று வருந்துவோர்க்கு, இதனால் தக்க சமயத்தில் தக்க உதவிகளும், துணைகளும் கிட்டிட நல்வழி பிறக்கும்.

நீராரை விசிறிச் சித்தர்

திருஅண்ணாமலை மாத சிவராத்திரி கிரிவலம்! பௌர்ணமி கிரிவலத்தைப் போன்று மாத சிவராத்திரி கிரிவலமும் சிறப்புடையதே! அபரிமிதமான நல்வரங்களைப் பொழிவதே!

சர்க்கரை நோய்க் கடுமைகள் தணிய நல்பூஜா பலன்களை அளிக்கும் மாத சிவராத்திரி கிரிவலம்! சர்க்கரை நோய்த் துறை மருத்துவர்கள் சிறப்பான மருத்துவ குணசக்தி பெற உதவும் கிரிவலம்! சர்க்கரை நோய் வராது தற்காத்துக் கொள்ள உதவும் கிரிவலம்!

காலத்தைக் கடந்த திருஅண்ணாமலையில், நாமறியாத வகையில், மானுட சரீரத்தில் வாழ்ந்து சர்வ லோகங்களுக்கும் அருட்பணி ஆற்றிய சித்புருஷர்கள் ஏராளம், ஏராளம்! இவ்வரிய தொடர் மூலம், பல அற்புதமான திருஅண்ணாமலை வாழ் சித்தர்களை நீங்கள் அறிந்திட, உங்களைப் பல நூற்றாண்டுக்கு முன்னான, சித்தர்களின் இறைப் பாசறையான அருணாசலப் புனித பூமிக்கு இட்டுச் செல்கின்றோம்!

இத்தொடரில், கடந்த இதழ்களில் நாம் குறிப்பிட்டுள்ள, ஸ்ரீகாரைக்கால் சித்தர், ஸ்ரீஞாயிற்றம்பலச் சித்தர், ஸ்ரீகாளான் குடை சித்தர்கள் மற்றும் இங்கு நாம் காணும் நீர் ஆரை விசிறிச் சித்தரும், சூரிய மண்டலத்தில் உள்ள ஸ்ரீவாலகில்லிய மகரிஷிகள் போன்று ஒரு சராசரி மனிதனுடைய கட்டை விரல் அளவே உள்ளவர்கள் ஆவர்.

ஏனைய சித்தர்களைப் போலவே, நீர் ஆரை விசிறிச் சித்தரும், தெய்வீகமான காரணப் பெயரையே பூண்டுள்ளார். இம்மாத சிவராத்திரி நாளில் அருணாசலமாம் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருகின்ற நீர் ஆரை விசிறிச் சித்தர், நீர் ஆரைக் கீரையின் ஒரு இலையைப் பனை விசிறி போல விசிறிக் கொண்டே கிரிவலம் வந்திடுவார். குருவருள் திரளும் பாக்யம் உள்ளோர்க்கு இவருடைய மகத்தான தரிசனம் கிட்டிடும்.

ஆராக் கீரை என்பது மிகச் சிறிய அளவில் தாமரை இலை போல் விசிறி வடிவில் படர்ந்திருக்கும். ஒரு சிறு காம்பில் இரு புறமும் தாமரை இலைகள் போல் இலை வடிவு நன்கு செறிந்திருக்கும். சர்க்கரை நோய்க்கு நல்ல நிவாரணம் தரக் கூடிய நல்ல அற்புதமான மூலிகைக் கீரையே ஆராக் கீரை!

நீராரை

எவ்வாறு ஒரு வட்டமானச் சக்கரம் நிலைத்து நிற்க உள் ஆரங்கள் பலம் தருகின்றனவோ, இதே போல நீர் ஆரைக் கீரையில் இருந்து வெளி வரும் ஆராம் புடக் கதிர்கள், பூமியின் சுழற்சிக்கு மிகவும் முக்கியமான மத்திய ஈர்ப்புக் கோள் சக்திகளை வெளிப்படுத்த வல்லவையாகும். அதாவது ஆகர்ஷண சக்திகள் நிறைந்ததே ஆராக் கீரை!

அமிர்தமாய் மாமருந்து!

நீரில் மிதக்கின்ற வகையைச் சேர்ந்த ஆராக் கீரையின் மேல் பட்டு வரும் காற்றானது அமிர்த பிந்து சக்திகளைத் தாங்கி வருகின்றது. இது திகட்டாத அமிர்தச் சுரப்பாகும். உண்மையில் சித்த வைத்ய மூலிகை வாடகத்தின்படி, எந்த திரவியமானது மூலிகைப் பூர்வமான, இயற்கையான, திகட்டாத அமிர்தமய இனிப்பைப் பெற்றுள்ளதோ, அதுவே சர்க்கரை வியாதிக்கு மாமருந்தாகத் துலங்க வேண்டும் என்பது மருத்துவ நியதி.

சிறு வயதிலிருந்தே மலைத் தேன், பனங்கற்கண்டு, கருப்பட்டி வகை போன்ற இயற்கை வகை இனிப்புகளைச் சேர்த்து வந்தால், ஒரு போதும் வாழ்வில் சர்ககரை வியாதி அண்டாது தற்காத்துக் கொள்ளலாம்.

கட்டை விரல் அளவே உள்ள நீர் ஆரை விசிறிச் சித்தர், பனை விசிறி போல் ஆராக் கீரை இலையை விசிறிக் கொண்டே அருணாசலத்தைக் கிரிவலம் வருகையில், இச்சித்தர்பிரான் மேலும், ஆரை இலை விசிறி மீதும் பட்டு வரும் அமிர்த ஆரைக் காற்றிற்கு, மதுமேக (சர்க்கரை மற்றும் மது வகை) நோய்களுக்கு நல்ல நிவாரணம் தரும் சக்தி உண்டு. இவ்வகை நீராரைக் கீரை இன்றும் கிராமப்புறப் பகுதிகளில் நன்கு வளர்ந்து, எளிதில் கிட்டக் கூடிய மூலிகையாகும்.

“சாமி, கொஞ்சம் கீரை இலைப் பிரசாதம் கொடுங்க!” என்று கிரிவலம் வருவோர் கேட்கும் போது, உடனே தன் கையில் இருக்கும் பனை விசிறி போன்ற நீராரைக் கீரையை எடுத்துத் தந்திடுவார். உடனே அடுத்த இலை அவர் கையில் தோன்றும்.

அக்காலத்தில் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அதிகமாக இல்லை என்றாலும், பிற மாநிலங்கள், பிற நாடுகளிலிருந்து இவரைத் தேடி வந்தவர்கள் நிறைய உண்டு. இது மட்டுமல்லாது நீரிழிவு நோய், கண் சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோரும் இவரை நாடி வருவதுண்டு. ஆனால், அனைவருக்குமா இவருடைய தரிசனம் கிட்டும்? பாக்யம் உள்ளோருக்கே இவர் தென்படுவார். இதிலும் பார்ப்பவர்கள் அனைவருக்குமே இலைப் பிரசாதம் கிட்டாது. நீர் ஆரை இலைப் பிரசாதம் கிட்ட, பலாதி பல பாக்யம் பெற்றிருக்க வேண்டும்.

இம்மாத கிரிவலத்தில் நீராரைக் கீரையை ஒரு மஞ்சள் துணியில் சுமந்து,

நீராரை நிலவாரை
நல்லோர் பெம்மான்
அருளாரை ஆருரான் ஆரை
அரனாகி உறைவாரைப்
புரை தீர்க்கும் பேரூராரை
பெம்மான் சிலையாரைப்
பேரண்ட அண்ணாமலையாரை
வலம்போக்கி வான்ஜோதி மறையாரை
உரையோதிச் சிறந்தாரே தேரையாரே!

-என்ற சித்தர் துதிகளுடன், திருஞானசம்பந்தரின் திருநீற்றுப் பதிகத்தையும் ஓதி, அருணாசலமாம் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்திடுதலால், எத்தகைய நோய்களுக்கும் நிவாரண வழி கிட்டும். பிரபஞ்சமெங்கும் உத்தம சித்த வைத்தியச் சித்தரெனப் பிரசித்தி பெற்ற தேரையர் சித்தர் ஆராக் கீரை உண்டே ஜீவ பரிபாலனம் புரிந்தார்.

எனவே, பல கடுமையான நோய்களைத் தீர்க்கும் அரிய மருத்துவ சக்திகளையும் அளிக்கும் அற்புத மாத சிவராத்திரி கிரிவலம் இது! கிரிவலம் முடிந்த பின்னர் நீராரைக் கீரையை சித்தரின் பிரசாதமாக இல்லத்திற்கு எடுத்துச் சென்று சமைத்துத் தானும் உண்டு. ஏழைகளுக்கு அன்னத்துடன் தானமாக அளிக்க வேண்டும்.

மண் அடுப்பு, கரி அடுப்பு, விறகு அடுப்பு கொண்டு சமைக்கின்ற ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினருக்குத் தேவையான அடுப்பு வகைச் சாமான்களை இன்று வாங்கித் தருதல் மிகவும் விசேஷமானது.

பொதுவாக, அக்காலத்தில் திடீரென்று மழை வளம் குறைந்து விட்டால், மாதசிவராத்திரி நாளில் உண்ணா நோன்பு பூண்டு, நட்சத்திரப் பிரகாசத்தில் கிரிவலம் வந்து, மறுநாள் காலை சிறிது நெல்லிப் பச்சடியுடன் ஆராக் கீரையை சமைத்து உண்டு விரதத்தைப் பூர்த்தி செய்வர். காரணம் நீராரைக் கீரை வருண ப்ரீதி உடையதாகும்.

வில்வம் போல ஆராக் கீரையும் ஸ்வர்ண லட்சுமி கடாட்சம் நிறைந்ததாகும். இன்று, மாத சிவராத்திரி அருணாசலக் கிரிவலம் நிறைவு பெற்ற பின், இல்லத்தில், ஆராக் கீரையை கைகளால் சந்தனம் போல் அரைத்து, மஞ்சள் பிள்ளையார் போலப் பிடித்து வைத்துப் பூஜித்தலால், பன்னெடுங்காலமாகத் தீராத பிரச்னைகளால் ஏற்பட்டுள்ள துன்பங்கள் தீர வழி பிறக்கும். பிறகு இதனைச் சிறு உருண்டைகளாக்கிக் காய வைத்து, மாமருந்தாய்த் தினமும் சிறிது உண்டு வருதல் மிகவும் விசேஷமான பலன்களைத் தரும்.

ஸ்ரீவாமனப் பிள்ளையார்

பிள்ளைகளுக்கெனக் கனிந்தருளும் காருண்ய கடாட்ச மூர்த்தி! பெரியோர்கள் தம் வாழ்வில் செய்த தவறுகளை உணர்வித்துப் பிராயச்சித்தம் பெறும் தன்மைகளை உணர்த்தும் மூர்த்தி! அலைக்கழிக்கும் மனதை அரவணைத்து நல்வழிப்படுத்த உதவிடும் மூர்த்தி!

அவதார மூர்த்திகளும் வணங்கும் ஆனந்த வாமனப் பிள்ளையார் மஹிமை!

விநாயகருக்குப் பல வடிவங்கள் உண்டு. ஓங்காரத்தை, உருவாக்கியவரும், ஆதி முதலில் ஓங்காரத்திலிருந்து தோன்றியவரும் ஸ்ரீமஹாகணபதியே! அனைத்துத் தெய்வ மூர்த்திகளும் தம்முடைய அனைத்துப் புராண அனுபூதிகளிலும் முதலில் கணபதியைத் தாம் தொழுகின்றனர். ஸ்ரீகபாலீஸ்வர அவதாரத் தோற்றத்திற்காகவும் ஈஸ்வரன் வழிபட்ட மூர்த்தியே ஸ்ரீஉச்சிஷ்ட கணபதி!

இவ்வகையில் ஸ்ரீமஹாவிஷ்ணு, திருவிக்ரமர், ஸ்ரீகிருஷ்ணர் போன்ற பற்பல அவதாரங்களை ஏற்றிட்ட போது, முதலில் முழு முதற்கடவுளாம் கணேச மூர்த்தியைத் தொழுதே, அவதாரிகளைத் தோற்றுவிக்கின்றார்.

ஸ்ரீவாமன மூர்த்தியே சிறு பிள்ளையாய், குடையுடன், கையில் கமண்டலம் தாங்கிய வடிவைப் பெறுவதற்கு முன், பிள்ளையாரைத் தொழுத போது, விநாயகப் பெருமானே, பரமானந்தத்துடன் தோற்றுவித்து அருளிய மஹாபாரத வடிவே, இங்கு நாம் தரிசிக்கும் ஸ்ரீவாமனப் பிள்ளையார் தோற்றமாகும். இதே போன்றே சிவனாரும், ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரராகத் தோன்றிட, விநாயகரை வழிபடுகையில், சர்வேஸ்வரனுக்கு ஸ்ரீகல்யாண கணபதியாகவும், மாப்பிள்ளை விநாயகராகவும், ஓங்கார மூர்த்தியாம் விக்னேஸ்வரன் காட்சி தந்தார்.

தும்பிக்கையை நேரே தூக்கி ஆசீர்வதிக்கும் திருமயந்தத் துதிக்கைபிரான்!

நாமிங்கு காணும் ஸ்ரீவாமன கணபதித் தோற்றமானது - (சென்னை திருநீர் மலையில் கிட்டும் நான்கு அதியற்புதத் தரிசனங்களான) – நின்று, இருந்து, கிடந்து, நடந்த – ஆகிய நான்கு திருமால் கோலங்களில், நடந்த கோலப் பெருமாளான ஸ்ரீவாமனப் பெருமாளை அனுகிரகித்து, ஆசீர்வதிக்கும் தோற்றமான வாமனப் பிள்ளையாராகும். நம்மை நோக்கி நீண்டு ஆசீர்வதிக்கும் இவர்தம் துதிக்கை திருமயந்தத் தும்பிக்கை எனப்படுவதாகும். சுழுமுனை யோக வகைகளுள் திருமயந்த யோகமுறையும் ஒன்று.

பிள்ளையார் வழிபாட்டில் உள்ள சிறப்பு யாதெனில், எளிமையுடனும், உரிமையுடனும் சிறு குழந்தை முதல் வயதான பெரியோர்கள் வரை, யாவரும் நேருக்கு நேர் நின்று பிள்ளையாரப்பனிடம் மனதார உரையாடுவதாகும். மானுடர்கள், விலங்குகள், தாவரங்கள் என யாவரும், யாவையும், அனைவரும் அன்புடனும், உரிமையுடனும் நேருக்கு நேர் உரையாடிப் பேசுகின்ற பக்தி நிலையைத் தாமே முன்வந்து அளித்து அருள்பவரே ஆனந்தப் பிரகாசத் தோற்றம் கொண்ட ஸ்ரீவாமனப் பிள்ளையார்.

இவ்வாறு அற்புதமான திருமயந்தத் துதிக்கையுடன் – அதாவது நம்மை நோக்கி ஆசீர்வதிக்கும் துதிக்கைப் பாங்குடன் – அருளும் ஸ்ரீவாமனப் பிள்ளையாரை, திங்கட் கிழமை தோறும் பன்னீர் திராட்சைகளால் அர்ச்சித்து வழிபட்டு வர – உடல் உறுப்புக் குறைகள், அழகின்மை காரணமாக ஏற்படும் தாழ்வு மனப்பான்மை மற்றும் படிப்பின்மை, பிறரைச் சந்தித்துப் பேசக் கூசுதல், மந்தமாக இருத்தல் போன்றவை நீங்க வழி பிறக்கும்.

“வாமன நளினம்,
கோமள சௌபாக்யம்
கணபதிம் நமஸ்துப்யம், நமோ நம:”

-என்று 21 முறை ஓதித் துதித்து, தினமும் (கைகளால் அரைத்த) சந்தனத்தால் திருமயந்தத் துதிக்கைக்குச் சந்தனப் பொட்டு இட்டு வணங்கி வருதல் வேண்டும்.

வலது பக்கம் குடையைத் தாங்கி அருளும் ஸ்ரீவாமனப் பிள்ளையார், குடைத் தத்துவமாய் அருள்வது என்ன?

குடையில் கூடும் குடக யோகத் தத்துவம்

வெயில், மழை, காற்றில் இருந்து நம்மைக் காப்பதற்காக மட்டுமே நாம் குடையைப் பயன்படுத்துகின்றோம். குடை, கைத்தடி போன்றவை ஆயுளை விருத்தி செய்யும் பொருட்களாகும். ஸ்ரீவாமனப் பிள்ளையார் (16 வகை ஆரப் பரல்களுடனான) ஷோடச கமக முத்துப் பீஜாட்சரங்களாலான குடையைத் தாங்கும் போது, பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துக் கோடி நட்சத்திரப் பிரகாசங்களும் அதில் பிரதிபலித்து, அருள்வரப் பிரசாதமாக நம் கபாலத்திலும், உடலிலும், நட்சத்திர நல்வரக் கதிர்களாய் இல்லத்திலும், அலுவலகத்திலும் நிரவுகின்றன.

வெளிச்சம் அல்லது ஒளி இருந்தால் நிழல் ஏற்படும் என்பது ஜீவன்களுக்கு மட்டும் தான். நிழல் படியா வடிவை “கமநீயழல்” என்று உரைப்பார்கள். ஸ்ரீவாமனப் பிள்ளையார் (கமக பீஜாட்சர முத்துக்) கமநீயழற் பாங்காய் குடையைத் தம் சுக்கிரன் மற்றும் குரு விரல்களால் (கட்டை விரல், ஆள்காட்டி விரல்) தாங்குகையில், அனைத்துக் கோளங்கள் மற்றும் நட்சத்திரங்களின் ஒளிப் பிரகாசக் கிரணங்கள், குடை மூலமாகவும் குடையைத் தாண்டியும் உள்ளும், புறமுமாய்க் குவிகின்றன.

கண் நோயும் வாராது காண்!

குரு விரலாகிய ஆள்காட்டி விரலின் நுனியில், விரித்த குடையை நிற்க வைக்கும் யோகச் சம நிலைக்கு “கௌமாரக் குடயம்” என்று பெயர். சுக்கிர விரலாகிய கட்டை விரலின் நுனியில், விரித்த குடையை நிற்க வைக்கும் யோகச் சம நிலைக்கு “கௌமாரப் புஷ்யம்” என்று பெயர். இப்பயிற்சிகளால் காடராக்ட் நோயும் இதர கண் நோய்களும் வராது தற்காத்துக் கொள்ளலாம்.

பிரம்மச்சரிய நிலையிலேயே, சிறு வயதிலேயே பயில வேண்டிய யோகங்களில் இவை அடங்கும். வலது உள்ளங்கையில் விரித்த குடையை நிற்க வைத்து, யோகபாலனம் (balancing) செய்து வருவோர்க்கு, பிரம்மச்சரிய சித்திகள் நன்கு கை கூடி விருத்தியாகும். பிள்ளைகள் பள்ளி, கல்லூரிப் பருவங்களில் நல்லொழுக்கத்துடன் சிறந்து விளங்குவதற்கும், ஸ்ரீவாமனப் பிள்ளையாரின் முன், தினமும் காலையும், மாலையும் 108 முறை, கால்களைக் குறுக்கே மாற்றி, மாற்றி வைத்துத் தோப்புக் கரணம் இட்டு வழிபடுதல் வேண்டும்.

ஸ்ரீவாமனப் பிள்ளையார் (யோகமார்கக்) குடை (தாங்கி)ப் பிள்ளையார் ஆதலின், எட்டுத் திக்குகளுக்கும், ஒவ்வொரு திக்கையும் நோக்கி, 13 தோப்புக் கரணங்களும், பிறகு வானை நோக்கியும், பூமியை நோக்கியும் மேலும், கீழுமாக இரண்டு, இரண்டுமாக, மொத்தம் 108 தோப்புக் கரணங்களும் இட்டுச் சிறுவயதினர் ஸ்ரீவாமனப் பிள்ளையாரை வழிபட்டு வர, வாழ்வில் நல்லொழுக்கம் மிகும். எக்காலத்தும் புகை பிடித்தல், புகையிலை, மதுப் பழக்கங்கள் அண்டாமல் ஆன்மீக ரீதியாகத் தற்காத்துக் கொள்ள யோகக் குடையாய்க் காப்பதும் ஸ்ரீவாமன கணபதி வழிபாடாகும். தீய வழக்கங்களுக்கு ஆளானோரும் இவற்றிலிருந்து மீண்டு நல்வழிப்பட உதவும் நல்யோகமார்கப் பூஜை இது! “வாமன கணேசா! யோகபலம் தா! வந்தித சரணம்!” என்று ஓதித் தினமும் தோப்புக் கரணம் இட்டு வர, கெட்ட  செய்கைகளிலிருந்து மனம் விடுபட உதவும், நற்பழக்கங்கள் தேடி வரும்.

கண்டியம்பதிக் கணபதி

ஸ்ரீவாமனப் பிள்ளையார், இடது கையில் தாங்கி இருப்பது தீர்த்தக் கண்டி, க்ஷீர கண்டி (பால்), மதுர கண்டி (தேன்), அமிர்த கண்டி, தைலகண்டி ஆகிய ஐந்து வகைக் கண்டித் தத்துவங்களைக் குறிப்பதாகும். ஒரு வருடத்தில், குறைந்தது ஐந்து சதுர்த்தித் திதிகளிலாவது, கீழ்க்கண்ட ஐந்து வகைகளில் உண்ணாநோன்பு இருந்து,

1. துளசி, வில்வம் கலந்த தீர்த்தம் மட்டும் அருந்தியும்,
2. பால் மட்டும் சிறிது அருந்தியும்,
3. தேன் மட்டும் சிறிது அருந்தியும்,
4. விடியற் காலையில் பிள்ளையாருக்குப் பஞ்சாமிர்தம் படைத்து, பஞ்சாமிர்தம் ஒரு சிறு உருண்டை மட்டும் உண்டும்,
5. மோர் மட்டும் அருந்தியும் – இவ்வகையில் உண்ணா நோன்பு இருந்து, சதுர்த்தி விரத நாளில் ஸ்ரீவாமனப் பிள்ளையாருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபடுவதால், வெளியூரில் அல்லது வெளிநாட்டில் உள்ள கணவன், பிள்ளைகள், பெண்கள் நலமுடன் வாழ இப்பூஜா பலன்கள் மிகவும் உதவும்.

முக்தீசம், என்பது நமது உடலில் நாம் தினமும் ஏற்படுத்தும் 21000 சுவாச முத்துக்களில் தோன்றும் ஜோதிகனகம்  ஆகும். இடது காலை முன் வைத்து நிற்கும் தெய்வ மூர்த்திகள், “முக்தீச முதபோத மூர்த்திகள்” என்று அழைக்கப்படுவர். அதாவது முக்தி நிலைகளைத் தடுக்கும் இன்னல்களைக் களைந்து நல்லருள் புரியும் தெய்வீக சக்திகளை அருளும் மூர்த்திகள்!

பலரும் தரையில் நிற்கும் போது, சரியாக நிமிர்ந்து நிற்பதில்லை! அமரும்போதோ, நிற்கும் போதோ, சாயாமல் நிமிர்ந்து நிற்றலே நல்ல யோக முறையாகும். சிறு வயதில் இது நடைமுறையில் வருதலால் பல நோய்களை எளிதில் தடுத்திடலாம். நிமிர்ந்து நிற்காது சாய்ந்து இருப்பது மனதில் பல குறைகள் தொக்கி நிற்கின்றன என்று பொருளாகும். ஒரு சிறு பிரச்னையைக் கூட தாங்க இயலாது தவிக்கின்ற மனோபாவத்தை இவர்கள் கொண்டிருப்பார்கள்.

மனக் கவலைகள் தேங்கிக் கிடக்காது மனம் ஓரளவேனும் சுத்தமடைய, இடது காலை முன் வைத்து நிற்கும் இறை மூர்த்திக்கு, தினமும் சந்தனத்தில் ஜவ்வாது, குங்குமப் பூ, கஸ்தூரி ஆகிய மூன்றும் கலந்து அரைத்துப் பாதத்திற்கு இட்டு,

“வாமன கணேசா!
வருந்துயர் போக்கும் ஆமனநாசா,
ஆகமநாதா! சரணம், சரணம், சரணம் ப்ரபோ!”

- என்று ஓதி, நன்றாக நிமிர்ந்து நின்று வணங்கி வருதல் வேண்டும்.

ஸ்ரீவாமனப் பிள்ளையார் முன், இடது காலைச் சற்று முன் வைத்து, முக்தீசத் தோப்புக் கரணம் இட்டு வழிபட்டு வருவதால், மனதில் ஏற்படும் தேவையில்லாத சஞ்சலங்கள் அகல வழி பிறக்கும்.

ஸ்ரீவாமனப் பிள்ளையாருக்கு அமைந்திருக்கும் நெற்றிக் கண், முப்பத்து முக்கோடி மூன்று லட்ச யோக, யாகச் சக்கரங்களைக் கொண்டதாகும். தினந்தோறும், புத ஹோரை நேரத்தில் ஸ்ரீவாமனப் பிள்ளையாரின் நெற்றிக் கண்ணுக்கு மேல் சந்தனமும், குங்குமமும் இட்டு வழிபட்டு வருவது பெறுதற்கரிய யோக, யாகச் சக்கர வழிபாடாக ஆகின்றது.

“வாமன ஸ்ரீசக்கர வாதாபி கணேசா!
ஆகம யோகப்புல யாகப் பரிபாலா!
நமஸ்துப்யம், நமஸ்துப்யம், நமஸ்துப்யம்!”

- என்று ஓதி, குரு ஹோரை நேரத்தில் வழிபட்டு வருதலால், குரு அனுகிரகம் தொடர்ந்து கிட்டிட நல்வழி பிறக்கும்.

ஸ்ரீவாமனப் பிள்ளையாருக்குத் துதிக்கை நடுவிலும், தூப்புல் சக்கரம் என்ற ஓர் அற்புதச் சக்கரம் உண்டு. தினமும் சுக்கிர ஹோரையில் தூப்புல் சக்கரத்தின் கீழ் கோரோஜனை அத்தர், புனுகு கலந்து அரைத்த சந்தனப் பொட்டு இட்டு வர, “வாழ்க்கை சரியாக நிறைவு பெறவில்லை” என்று ஏங்கி வேதனையுறும் பெண்கள், நல்வாழ்வு பெற உதவும்.

இவ்வாறு ஸ்ரீவாமனப் பிள்ளையார் வழிபாட்டில் கிட்டும் அபரிமிதமான பயன்களை நன்கு பயன்படுத்திக் கொள்வீர்களாக!

ஆலயத்தில் பூஜிப்போர்

ஆலயத்தில் பூஜிப்போர்க்கான பூரணத் தர்மச் சட்டம்

பூர்வ ஜன்மப் புண்ய பலாபலன்கள் காரணமாக அமைவதே இப்பிறவியில் ஆலயங்களில் பூஜிப்பதாகும். பொது ஜன சமுதாயம் சார்பாக, அற்புதமான இறைச் சமுதாயப் பணியாக, சுவாமியை அபிஷேகித்துப் பூஜிக்கின்றதே மாபெரும் பாக்யமாகும். இறையருளாலேயே இவ்வாறு பூஜிக்கும் கடமையைப் பெற்றமையால், உலக நலன்களுக்காகக் குறித்த அளவு தினந்தோறும் ஜபம், தியானம், ஹோமம் போன்ற வழிபாடுகளைத் தியாகமயமாக, ஆற்ற வேண்டிய தெய்வீகக் கடமை குருக்கள், அர்ச்சகர்கள், பீடாதிபதிகள், பண்டாக்கள், பண்டாரகர்கள், சிவாச்சாரியார்கள், பூசாரிகள், பட்டாச்சாரியார்கள் என பூஜிப்போர் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக உண்டு.

ஒவ்வொரு ஊரிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்காகச் சுயநலமின்றித் தியாக மனப்பான்மையுடன் பூஜிக்க வேண்டிய வலுத்த கடமையைச் சுமந்திருப்பதால், பூஜகர்கள் நல்பக்தி, பணிவு, எளிமை, அடக்கம், நல்வாக்கு, நல்எண்ணம், புனிதமான வாழ்வு இவற்றைக் கண்டிப்பாகப் பூண்டிருக்க வேண்டும். பொடி போடுதல், புகையிலை, பீடி, சிகரெட் போன்ற லாகிரி வஸ்துக்கள், மது அருந்துதல் போன்ற எத்தகைய தீயவழக்கமும் ஒரு சிறிதும் இருத்தல் கூடாது. பிறருக்கு எடுத்துக் காட்டாக, எத்தகைய துன்பங்கள் வந்திடினும் உத்தம நிலையில், நல்ஒழுக்கத்தில் இருந்து சற்றும் வழுவாது வாழ்தல் வேண்டும். பரிபூரண பிரம்மச்சர்யம் என்பது – கரணம் தவறினால் மடு – என்பதாகக் கலியுகத்தில் மிகவும் கடுமையானதாதலின், பூஜகர்கள் இல்லற தர்மத்தைப் பூணுதலே நன்று.

ஒட்டு மொத்தப் பொறுப்புடையார்!

மேலும் நாட்டுத் தலைவர்கள், நாட்டை ஆளும் அரசியல் துறையினர், உயர்நிலை அதிகாரிகள், அரசை ஆள்பவர்கள், நிர்வகிப்பவர்கள் செய்கின்ற பாவச் செயல்கள், தீவினைகள் அனைத்தும் பூஜிப்பவரையே வந்து சாரும் ஆதலின், பூஜகர்கள் தினமும் 10,000 முறைக்குக் குறையாது ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஆத்மப் பூர்வமாக ஓதி, நன்கு ரட்சா சக்திகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

“மக்கள் வினைகள் மன்னன் தலையில் மன்னன் வினைகள் மறையோர் தலையில்!”

-என்பது தர்ம சத்திய மொழி, மறையோர்  எனில் அந்தணர், வேதம் ஓதுபவர் என்று மட்டும் பொருளல்ல. ராஜகுரு, பீடாதிபதிகள், குருக்கள் அர்ச்சகர்கள், பண்டாக்கள், பண்டாரகர்கள், சிவாச்சாரியார்கள், பூசாரிகள், பட்டாச்சாரியார்கள், ஆஸ்தான ஜோதிடர்கள் என அனைவரும் இதில் அடக்கம் ஆதலின் தூய்மையான, புனிதமான, பக்தி நிறைந்த வாழ்க்கையை ஆலயப் பூஜகர்கள் கடைபிடித்தாக வேண்டும். இல்லையேல் இவர்கள் தம் வாழ்வில் கடும் விளைவுகளைச் சந்தித்தாக வேண்டும்.

ஆலயத்தில் இறைவனைப் பூஜிக்கின்ற பாக்யம் பெற்ற சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், அர்ச்சகர்கள், குருக்கள், ஓதுவார்கள், பூசாரிகள், பண்டாக்கள், பண்டாரகர்கள், போத்திகள், நடைசந்திகள், பரிசாரகர்கள், சுயம்பாயிகள் போன்றோர் சமுதாயத்தின் ஒவ்வொரு துறையிலும் தூய்மையான வாழ்க்கை, புனிதமான எண்ணங்களைப் பூண்டு நேர்மை, நாணயத்துடன் வாழ்தல் வேண்டும்.

பூஜிப்பதே பூர்வ ஜன்ம புண்ய வசத்தால் தான்!

சுயநலமாக, தன் விருப்பங்களுக்காகப் பூஜிப்பதென்றால் வீட்டில் இருந்து பூஜை செய்கின்ற சாதாரண வாழ்க்கைதானே மற்றவர்களைப் போல் அமையும் என உணர்தல் வேண்டும். பக்தி சிரத்தையுடன் பொது மக்களுக்குச் சேவை ஆற்றுவதற்காகவே, பூர்வ ஜன்மப் புண்ய பலாபலன்களாக ஆலயங்களில் இறைவனைப் பூஜிக்கும் மகத்தான பாக்கியத்தைப் பெற்றிருக்கின்றார்கள் என்பதை ஒவ்வொரு விநாடியும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, தெய்வீகமாக வாழ வேண்டிய கடமைகளுடன் தான், பூஜகர்கள் சமுதாயத்தில் உறையும் அனைத்து ஜீவன்களுக்காக, ஆலயத்தில் இறைவனைப் பூஜிக்கும் மகத்தான பேற்றைப் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.!

எனவே, கோயில்களில் பூஜிப்பவர்கள் நல்ல இறை பக்தியுடன், நல்ல சமுதாயச் சேவை மனப்பான்மையுடன் பணிபுரிந்தால் தான் மக்களை ஆள்கின்றவர்களும், ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களும் இறையருளை நாடி ஆலயங்களுக்கு வருவர். ஆனால், எத்தகைய இடர்கள், துன்பங்கள் வந்தாலும், சற்றும் அசராது இத்தகையோர் ஆலயப் பணியில் சற்றும் களங்கம் இல்லாமல் நல்ல இறைப் பணிகளை, பக்திப் பூர்வமாக ஆற்றிட வேண்டும். மக்கள் சமுதாயம் தங்களிடம் நிறைய இறைப் பாங்கினை எதிர்பார்த்து உள்ளது என்பதை உணர்தலும் மிகவும் முக்கியமானது.

ஐம்புலச் சுருக்கம்

தினமும் இவர்கள் ஆற்ற வேண்டிய தெய்வீகக் கடமைகள் நிறையவே உண்டு. ஆலயப் பூஜகர்கள் தம் இல்லங்களிலும். பூஜை நேரம் முழுதும், ஆலயத்தில் சேவார்த்திகளுக்குத் தரிசனம் செய்து வைக்கும் நேரம், பூஜிக்கும் நேரம் என எப்போதுமே, பஞ்சகச்சம் எனப்படும் தமிழ்நாட்டு “ஐம்புலச் சுருக்கம்” என்ற வகையில் வேட்டியை அணிதல் வேண்டும்.

இதில் வேட்டியின் நுனிகள் தரையில் படாது, முதுகுத் தண்டைச் சுற்றி வேட்டியின் விளிம்புகள் அமைவதால், வட்டப்பாறை மார்கமாக, இடுப்பு, தொடை, பாதங்களில் வேட்டிச் சுற்றுகள் ஆன்மீக இலக்கண ரீதியாக அமையும். அதியற்புதமான வகையில் மந்திர சக்திகளைப் பெற்றுத் தரும் பஞ்சச் சருக்கம் எனும் இவ்வகை வேட்டி அமைப்புதான், தமிழ் நாட்டிலிருந்து பிற இடங்களுக்குப் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் தெய்வீகமான ஆடையணி வகை அமைப்பு இது. நடப்பதற்கும் எளிமையானது. விண்ணுக்கும், பூமிக்கும் ஆன்ம இணைப்பைத் தருவது. ஆனால், தற்காலத்தில் ஆலயத்தில் பூஜிப்பவர்கள் பெரும்பாலோர் அரையும் குறையுமாய்ப் பஞ்சகச்சத்தை அணிந்து மேலே ஒரு பிள்ளையார் துண்டைச் சுற்றிக் கொண்டு வந்து விடுகின்றார்கள். இது நல்லதன்று.

பூஜிப்பவர்களுக்கு ஒரு தெய்வீகமான கம்பீரத்தைப் பெற பஞ்சகச்ச வேட்டி முறை மிகவும் அத்தியாவசியமானது. தமிழ்நாடு, ஆந்திரப் பகுதியிலும், மலைவாழ் மக்களும், கிராமத்து ஜனங்களும் இவ்வகையில் தினமும் எப்போதும் பஞ்சகச்ச முறையில் வேட்டி அணிந்திருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதும் போற்றத் தக்கதுமாகும்.

பிரம்மச்சாரி பூஜகர்கள் நான்கு முழ வேட்டியைப் பாதம் வரை அணிந்திருக்க வேண்டும். இல்லறத்தார் ஒரு போதும் காவி அணிதல் கூடாது. தற்போது பல சமையற் கலைஞர்களும், ஆலயப் பணியாளர்களும் காவி உடை அணிகின்றார்கள். காரணம் விசாரித்தால் அழுக்கு வெளியில் தெரியாது என்று பதில் வருகின்றது. மன அழுக்கையும், உள்ள அழுக்கையும் போக்க வல்ல காவியைப் புனிதமான துறவிகளே அணிதல் வேண்டும். இல்லறவாசிகள் ஒரு போதும் சபரிமலை விரதத்தில் கூட காவியை அணிதல் கூடாது.

பூஜகர்களும், தெய்வீக இலக்கணமும்!

பூஜிப்பவர்கள் வெள்ளை, பச்சை, சிகப்பு, நீலம், மஞ்சள் வண்ண எட்டு முழ வேட்டியினைப் பஞ்சகச்ச முறையில் அணிந்திடலாம்.

1. தினமும் காலையும், மாலையும் சூரிய நமஸ்காரம்!
2. ஆறு, குளம், கிணற்றுக் கரைகளில் குறைந்தது ஒரு மணி நேர (கண் மூடித்) தியானம்
3. காலை, மதியம், மாலை முறையான நேரம் தவறாத சந்தியா வந்தன வழிபாடுகள்.
4. குறைந்தது 10,000 முறை ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜபம்
5. புகையிலை, பீடி, சிகரெட், போதை மருந்துகள், மது போன்று எந்தவிதமான லாகிரி வஸ்துக்களையும் வாழ்வில் ஒரு போதும் தீண்டாதிருத்தல்
6. பத்மாசனம் போன்று யோகாதிகளைத் தினமும் பயின்று பூஜித்தல்
7. நல் ஒழுக்கம் பூரிக்கும் நல்வாழ்க்கை

இவற்றைத் தினமும் நிச்சயமாகக் கடைபிடித்தலே பூஜகர்களுக்கான தெய்வீக இலக்கணமாகும்.

தற்போது சில பூஜகர்களும் மது மற்றும் சிகரெட், பீடி, புகையிலைப் பழக்கத்திற்கு ஆளாகி உள்ளனர் என்பது வேதனை தருவதாகும். இவர்கள் இதனைத் தொடர்ந்தால் பூஜிப்பதை விட்டாக வேண்டும். இல்லையேல் கடும் சாபங்களே வந்து சேரும். சந்ததி, சந்ததியாக இப்பாவ வினைகள் தொடரும்.

எப்போதும் புனிதமாக எண்ணுதல்
நற்காரியங்களை ஆற்றுதல்
ஏழைப் பிள்ளைகளுக்கு இலவசமாக தெய்வீகப் பாடங்கள், குறித்த வேத மந்திரங்களைப் போதித்தல்

இவை போன்ற பூஜிப்பவர்களுக்கான ஆன்மீகத் தினசரி இலக்கணங்கள் உண்டு. இனியேனும் பண்டைய காலம் போல, பூஜிப்பவர்கள் சமுதாயத்தில் பலரும் போற்றும்படி சீரான ஒழுக்கத்துடன், வளமையான பக்தியுடன் வாழ்ந்து சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டாக விளங்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

ஸ்ரீவாஸ்து பூஜை

ஸ்ரீவாஸ்து பூஜை மகாத்மியம்

வாஸ்து நாட்களின் மகிமைகளைப் பற்றி, ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழ்களிலும், “பூமி அந்தர வாஸ்து சுந்தர வாஸ்து ரகசியங்கள்” என்ற இரு நூல் தொகுதிகளிலும், அக்னிசிக்ஷா வெப்சைட் வழியாகவும், சித்தர்கள், சற்குரு மூலமாக அளிக்கின்ற தெய்வீக பொக்கிஷமான, அரிய விஷயங்களை நாம் இதுகாறும் நிறைய இறையருளால் அளித்து வந்துள்ளோம்.

இதில் “நிறைய” என்று சொல்வதில் கூட, நிறைய கர்வம் ஏற்பட்டு விடுகின்றது. ஏனென்றால், ஸ்ரீவாஸ்து பகவானின் மகிமைகள் கோடானு கோடியாய்ச் சித்தர்களின் கிரந்தங்களில் விவரிக்கப்பட்டுள்ள போது, இதில் ஒரு அணுத் துளியைக் கூட நாம் பெற்றிடவில்லை என்பதே நாம் இதிலிருந்து அறிந்து கொள்ள வேண்டிய பாடமாகும்.

சதுர்சோபன வாஸ்து நாள்

ஒவ்வொரு தமிழ் ஆண்டிலும் சித்திரை 10, வைகாசி 21, ஆடி 11, ஆவணி 6, ஐப்பசி 11, கார்த்திகை 8, தை 12, மாசி 23 – ஆகிய எட்டு வாஸ்து நாட்களிலும், ஸ்ரீவாஸ்து மூர்த்தி யோக சயனத்தில் இருந்து மீண்டு, ஜீவ தரிசனத்திற்கான விஸ்வரூப வடிவை அளிக்கின்றார்.

எனவே இவையாவும் அஷ்ட பூர்வ வாஸ்து நாட்கள் ஆகின்றன. தாரண ஆண்டின், வரும் ஆவணி 6ம் தேதி அமையும் வாஸ்து தினம் சதுர்சோபன வாஸ்து நாளாகும், இன்றைய வாஸ்து வைபவத்தை முன்னின்று நிகழ்த்துபவர் ஸ்ரீஆதிசூரிய மூர்த்தி ஆவார்.

ஸ்ரீபூமி ஆதிவாஸ்து சுந்தர மூர்த்தியின் திருவுருவத்தைச் சித்தர்கள் வடித்துத் தந்துள்ளவாறு, ஸ்ரீவாஸ்து பால பருவ மூர்த்தியின் விஸ்வ ப்ரகாச தரிசனத்தை, வரை படமாக, ஜூலை 2004 ஸ்ரீஅகஸ்திய விஜய அட்டைப் படத்திலும், இதன் பிறகு பூஜையில் வைத்து வழிபடும் வண்ணம் விஸ்வப் பிரகாச தரிசன பூஜைப் படமாகவும் (laminated pictures) அளித்துள்ளோம். இதனை ஆலயம், இல்லம், கடை, தொழிற்சாலை, அலுவலகத்திலும் என அனைத்து இடங்களிலும் தாராளமாக வைத்து வழிபட்டிடலாம். இதற்கு எவ்விதக் கட்டுப்பாடும், நியம நிஷ்டைகளும் கிடையாது. ஸ்ரீவாஸ்து பகவான் மஹா காருண்ய மூர்த்தி!

இந்த விஸ்வப் பிரகாச ஸ்ரீவாஸ்து மூர்த்தி தரிசனப் படத்தில், 24 பித்ரு படிக்கட்டுகளும், அஷ்ட வாஸ்துபுல ஸ்தூபிகளும் (கொடிமரம்), வாஸ்து சக்திகள் நிறைந்த பல்வேறு ஆலயப் பதிமூலப் படங்களும் பொதிந்துள்ளன. மேலும் இந்த ஸ்ரீவாஸ்து பகவான் பூஜைப் படத்தில், அஷ்ட திக்கு அனந்தப் பிரகாச ஆலய வாயில்கள் நிறுவப் பெற்றுள்ளமையால், இல்லம், ஆலயம், அலுவலகம், கடை, தொழிற்சாலை என அனைத்து இடங்களிலும் எட்டுத் திக்குகளிலும் இருந்தும் தீப வழிபாடு ஆற்றிடலாம். தினமும் அரைத்த சந்தனம் சார்த்தி,

“ஓம் விஸ்வ ப்ரகாசாய வித்மஹே
அஷ்ட ப்ரதீப தீபாய தீமஹி
தந்நோ ஆதிவாஸ்து பிரம்மஸ்ரீ ப்ரசோதயாத்”

மேற்கண்ட ஸ்ரீவிஸ்வ ப்ரகாச ஆதிவாஸ்து காயத்ரீ மந்திரத்தை 108 முறை ஓதி, ஆறு முழு நீள வாழை இலைகளை கங்கை, காவிரி போன்ற புனித நீரில் தோய்த்து, மஞ்சள் பூசிடவும். முதலில் இரண்டு வாழை இலைகளை ஒன்றன் மேல் ஒன்றாகக் குறுக்காக வைத்திட, நான்கு திசைகள் வரும். பிறகு பெருக்கல் சின்னம் போல், இவற்றின் மேல் இரண்டு வாழை இலைகளை மீண்டும் குறுக்காக வைத்திட, மொத்தம் எட்டுத் திக்குகள் வரும்.

இதன் எட்டு நுனிகளும் அஷ்ட வாஸ்துபுலத் திக்குகள் ஆகும். இதன் எட்டு நுனிகளிலும் எட்டு அகல் தீபங்கள் ஏற்றியும், நடுவில் நவதானியங்களை வட்டமாகப் பரப்பி நடுவில் நான்கு தீபங்கள் (அல்லது ஒரு குத்து விளக்கில் நான்கு திரிகள்) ஏற்றியும், வழிபடுதல் மிகவும் விசேஷமானது.

தினமும் செவ்வாய் ஹோரை நேரத்தில் ஏற்றி வழிபடுதல் நன்று. விண்ணுலக மண்டலங்களில் எட்டு வாஸ்து நாட்களிலும் அருணசிவாத்மிக உற்சவம், ஹரிதவாஸ்தோத்சவம், பிரம்மோற்சவம் போன்ற எட்டு வகை உற்சவங்களாக ஆனந்த மகத்துவத்துடன் கொண்டாடப்படுகின்றன. தேவாதி தேவ மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும்  இவ்வாறு எட்டு நாட்களிலும் கொண்டாடுகின்ற வாஸ்து உற்சவத்தின் அருட் பிரகாசக் கிரணங்கள் பூமியை அடையும் நாட்களே, நாம் வாஸ்து நாளாகக் கொண்டாடும் அஷ்டபுல வாஸ்து நாட்கள் ஆகின்றன.

ஸ்ரீவாஸ்து மூர்த்தி தூங்கும் கோலத்தவர் என்று கூறுவது தவறு! ஸ்ரீரங்கநாதர் போல் சயனக் கோலம் பூண்டு அருள்கின்ற காருண்யச் சாந்த மூர்த்தியே ஸ்ரீஆதிவாஸ்து பகவான்! ஜீவன்களாகிய நமக்கு அருள்வதற்காகவே, ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தி யோக சயனத்திலிருந்து எட்டு வாஸ்து நாட்களில் திவ்யப் பிரகாச தரிசனம் தந்தருள்கின்றார். பிள்ளையார் போல் அனைத்து வீடுகளிலும், அலுவலகங்களிலும், கடைகளிலும் இருந்து வழிபட வேண்டிய மூர்த்தி! சித்தர்களின் அருள்மொழிப்படி,  தக்க சற்குருவின் குருவருட் கருணையுடன், அளிக்கப்பட்டுள்ள ஸ்ரீஆதிவாஸ்து பகவானின் திருஉருவப்படத்தை மிக எளிமையாக தினமுமே பூஜித்திடலாம். தினமும் ஸ்ரீஆதிவாஸ்து பகவான் படத்திற்கு அரைத்த சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, எட்டுத் திக்குகளிலும் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்குதல் எளிய (லகு வாஸ்து) பூஜையாகும்.

செவ்வாய் ஹோரை நேரம், செவ்வாய்க் கிழமை, எட்டு வாஸ்து நாட்களில் விஸ்தாரமாக, எட்டு வாழை இலைகளை மேற்கண்ட விளக்கங்களின்படி வைத்து அஷ்டவாதூல வாழைபத்ர தீபம் ஏற்றி, ஸ்ரீவாஸ்து அஷ்டோத்திரம் ஓதிப் பூஜித்தலும் சற்று விஸ்தாரமான எளிய பூஜையே!

வீட்டு தோஷங்கள், சகல பூமி தோஷங்கள், நிலச் சொத்து சம்பந்தமான கோர்ட் வழக்குகள் போன்று அனைத்து நிலபுலத் தடங்கல்களையும் தீர்க்க வல்ல பூஜை! நல்ல வீட்டுச் செல்வத்தையும் பெற்றுத் தருகின்ற பூஜை!

பலாதிபலப் பிரபஞ்சம்

“மூடித் திறக்கின் முகவேத வேத முகம்!” – என்று முழு முந்திரி பருப்பு பற்றிச் சித்தர்கள் அளிக்கின்ற வேததேவத் தவமொழி ஆகும். ஒவ்வொரு முழு முந்திரியையும் பிரிக்கும் போது ஓத வேண்டிய வேதபாவன மந்திரமும் உண்டு.

யஜுர் வாத்பவம்,
ருத்பாத பங்கஜம்,
சாம மங்கள சுதம்,
அதர்வணாதித்ய மாஸ்ரயம்

-என்று நான்கு வேதத் துதிகளை ஓதியவாறே, நான்காக  ஒரு முழு முந்திரியைப் பிரித்தல் விசேஷமானது, ஏனென்றால் நான்கு வேத சக்திகள் கூடியதே முந்திரியாகும்.

பொதுவாக “பலாதிபலப் பிரபஞ்சம்” என்பதாக, நம்முடைய பிரபஞ்சத்தை, அதாவது அண்ட சராசர நட்சத்திரங்கள், கோள்கள் அனைத்தும் அடங்கிய இப்பேருலகை “ஒரு பழம்” என ஆன்றோர்கள் போற்றுகின்றனர். எவ்வாறு ஒரு பழமானது தன்னுள் விதைகள், சதை, நரம்புகள், நீர்சத்து, பழச்சாறு, உள்தோல் வெளிச் சிதறாது வட்டமாக உள்ளுக்குள் தாங்கி, ஆயுள் சக்தி, வயிற்று பல சக்தி, கபால வள சக்தி போன்ற நவஜீவ சக்திகள் அனைத்தையும் தாங்கி இருப்பதால், ஒவ்வொரு பழமும் பிரபஞ்ச வடிவே ஆகும்.

முதல் நாள் பூத்த பூவை கால தோஷம் என்பதால் மறுநாள் பயன்படுத்துவதில்லை. எனவே, எந்தக் கனியும் எத்தனை நாட்களானாலும் கால தோஷங்களுக்கு ஆளாவதில்லை. பழங்களிலும் பல தெய்வீக வகைகள் உண்டு. தேங்காய் கூட ஒரு வகைப் பழமே. “முக்கண் முத்துக் கனி” என்று இதற்குப் பெயர். இவ்வகையில் முந்திரிப் பழம் என்பதும் பிரபஞ்சத்தைக் குறிப்பதுதான். பிரபஞ்சத்தையே படைத்து, பிரபஞ்சத்திற்கு உள்ளும், புறமுமாய் இருப்பவை பரிபூரணமான வேத சக்திகளே!

பூஜ்யத்தின் ஆத்ம பூஜ்ய ஜோதி

நான்கு வேதங்களாக, ஸ்ரீவியாசர் ஆக்கித் தரும் முன்னர், வேதத்தை ஆத்ம வேத சக்தி, ஜீவ வேத சக்தி என்ற இரண்டாகப் பகுத்திருந்தார்கள். உத்தம தெய்வீக நிலைகளில் ஓதப் பெறுவது வேதாத்மம், உத்தம தெய்வீக நிலையை அடைவதற்காக பாடுபடும் ஒவ்வொரு ஜீவனும் அறிந்தோ அறியாமலோ ஓதி வேதசக்திகளை நோக்கி வாழ்வது வேத ஜீவம்! இரண்டும் ஐக்கியமடைவது அத்வைதம்! இதுவே பரிபூரணமாகிய பூஜ்யமாகும்.

பூஜ்யத்தில் ஒன்றும் இல்லை போல் தோன்றினாலும், இதனுள்ளும், வெளியிலும் சூக்குமமாக ஒளிர்வது ஆத்ம பூஜ்ய ஜோதி. இந்த ஆத்ம பூஜ்ய ஜோதியை நோக்கி யாத்திரை கொள்பவை தாம் ஆத்ம வேதமும், ஜீவ வேதமும் என்பதாக அமைந்திருக்கின்றன. இந்த யாத்திரையின் பூலோக ஓரம்சமே வாழ்க்கை!

இறைவன் வேதங்களில் இருந்து நேரிடையாகவே சில அபூர்வமான பொருட்களைப் படைத்தார். கொன்றை மரம், மாங்கனி, தர்பை, முந்திரி ஆகியவை இறைவனால் வேதங்களில் இருந்து நேரடியாகப் படைக்கப் பெற்றவை.

ஆதிகாலப் படைப்பே முந்திரி

ஸ்ரீமகா விஷ்ணு தன் நாபியில், இருந்து பிரம்மாவை உற்பவிக்கும் முன்னர், தன் நாபியின் மேல் தன் கட்டை விரலின் உள் நுனி ரேகைகளை அழுத்தி, பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து வேத மந்திரங்களையும் போதித்தார். அவ்விடத்தில் சகல வேதங்களின் திரட்சித் திரவியமாக ஒரு முந்திரி தோன்றியது. எனவே ஸ்ரீபிரம்மாவிற்கும் முந்தைய ஆதிகாலப் படைப்பே முந்திரி ஆகும்.

சகல வேதங்களின் தொகுப்பான முழுமுந்திரியை வைத்துப் பூஜித்து ஆத்ம வேதமாகச் சித்தர்களும், மகரிஷிகளும், ஞானிகளுமான உத்தம நிலைகளை அடைந்தவர்களாகப் பெற்றனர். ஜீவ சக்திப் பகுதியானது இரு பகுதி முந்திரிப் பருப்பாக ஜீவன்களை வந்தடைந்தது.

வேத சக்தியானது பிரபஞ்சத்திற்கு அப்பாலும், இறைவனோடு இருந்தும் ஜோதியைப் பொழிவதாலும், ஸ்ரீமகாவிஷ்ணுவே தன் நாபியில் வைத்து வேதப் பூர்ணமாய் பிரம்மாவை உற்பவித்தமையாலும் பிரபஞ்சத்தின் உருவகமாய் விளங்குவதே முந்திரிப் பழம்! முந்திரிக் கனியின் வெளியே இன்றும் முந்திரி விதையாக முழு முந்திரிக் கொட்டை தோன்றுகின்றது அல்லவா! உண்மையில், முந்திரிக் கொட்டையுடன் கூடிய முந்திரிப் பழத் தரிசனம் மிக சிறந்த வேத தரிசனங்களுள் ஒன்றாகச் சித்தர்களால் போற்றப்படுகின்றது.

எனவே, இன்றைய வாஸ்து நாளில் முழு முந்திரிகளுடன் கூடிய முந்திரிப் பழங்களை எட்டுத் திசைகளிலும் வைத்து ஸ்ரீவாஸ்து துதிகளை ஓதிப் பூஜித்திட வேண்டும். இதனால் நிலத்திலோ, வீட்டிலோ, தொழிற்சாலைகளிலோ சம பூமி, தரை, பூமிக்கு அடிப்பகுதி, கிணறு, அஸ்திவாரம், தோட்டங்கள் போன்றவற்றில் எழுந்துள்ள பலவிதமான பிரச்னைகள் தீர உதவும். இதற்காகவே இன்றைய வாஸ்து நாளும் சம நோக்கு நாளாக அமைகின்றது. இன்று ஆலயம், தோட்டங்கள், மரங்கள் அடியில் குறைந்தது 108 கோலங்கள் இட்டு ஸ்ரீவாஸ்து மூர்த்தியை ப்ரீதி செய்திடல் வேண்டும்.

பெண்கள் கவனத்திற்கு

கலியுகப் பெண்கள் இழைக்கும் தவறுகள்!

கலியுக இல்லறப் பெண்கள் கணவனுக்கு ஆயுள் சக்திகளைத் தருவதோடு, தங்களை யாங்கனும் காக்க வல்ல குங்குமத்தை நெற்றியில் இடுவதில்லை! நல்ல குங்குமம் கிடைக்கவில்லை, நெற்றி புண்ணாகும் என்பதும் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

நெற்றிக்குச் சிறிது அரைத்த சந்தனத்தை இட்டு, அதன் மேல் நல்ல குங்குமம் இடுதல் நெற்றியைக் காக்கும், நல்ல குங்குமம் எங்கும் கிடைக்கவில்லையே, கிடைக்கவில்லையே என்று சொல்லிக் கொண்டிருப்பதை விட, பல இல்லறப் பெண்கள் ஒன்று சேர்ந்து, பக்திப் பெருக்குடன், குறித்த நாள், நேரத்தில் குங்குமம் தயாரித்து, ஆலயங்களுக்குக் குங்குமத் தானமாக அளித்து வருதலால் மகத்தான புண்ய சக்திகளைப் பெற்றிடலாம் அல்லவா!

ஸ்ரீசண்டிகேஸ்வரி லால்குடி

இப்போது நமக்கு அவ்வளவாக வசதி இல்லையே, நம்மால் எவ்வாறு குங்கும தானம் மற்றும் இதர தான தர்ம காரியங்களைச் செய்து புண்ய சக்தியைப் பெற முடியும் என்று எண்ணிடாதீர்கள்! பலரும் சத்சங்கமாக ஒன்று சேர்ந்து ஆத்மார்த்தமாகச் குங்குமம் தயாரித்து ஆலயங்களுக்கும், ஏழைகளுக்கும் தானமாக அளித்தலால் மிக, மிக எளிய முறையில் நல்ல புண்ய சக்திகளையும், நல்வரங்களையும், இறையருளையும் பெற்றிடலாம் அல்லவா!

அடுத்தபடியாக, கலியுகப் பெண்கள் செய்யும் மிக மிகத் தவறான, பாபகரமான காரியம் புருவத்தைச் சிரைத்தல் ஆகும். கூந்தல் என்பது மிகவும் மங்களகரமானது என்பதால்தான் பெண்கள் சிறு வயதில் இருந்தே கூந்தலைக் கத்தரிப்பதில்லை. செவ்வாய், வெள்ளி தோறும் தலைக்கு நீராடி மங்களகரமாகப் பூஜிக்கும் பெண்களுக்குத் தலைக் கூந்தலில் சுமங்கலித்வ சக்திகள், சுபகரமான மங்கள சக்திகள், புண்ய சக்திகள் பலவும் நன்கு சேர்கின்றன. ஒவ்வொரு கூந்தலின் ரோமமும் உடல் நாள இணைப்பைக் கொண்டதே !

பெண்களோ, ஆண்களோ இருபாலாருமே ஒரு போதும் கண் புருவத்தைச் சிரைத்தல் கூடவே கூடாது. கண் என்பது எவ்வளவு முக்கியமான உறுப்பு என்பதை நாம் நன்கறிந்ததே. கண், கூந்தலுடன் தொடர்பு உடையது என்பதாலும் உள்ளங்கை ரேகைகள் போல பிறவியிலேயிருந்தே மாசுபடாது துலங்குகின்றது. என்பதாலும் புருவ ரோமப் பகுதியை ஒருபோதும் அகற்றுதலோ, சீர்திருத்தலோ கூடாது.

உண்மையில் புருவத்தைச் சித்தர்கள், “உளிபடா நேத்ராழி” என்று குறிப்பிடுகின்றார்கள். சிற்பிகளால் செதுக்கப்படாது தானே சுயம்பாய் உருவாகும் தெய்வ மூர்த்தியை “உளிபடா ஒளி மூர்த்தி” என்று சிற்ப்பாக உரைப்பார்கள் அல்லவா! இதே போல் பிறக்கும் போது முதல் உயிர் பிரியும் வரை, கண்புருவம் உளி, கத்தி, ரேஸர், பிளேடு படாத புனிதமான அங்கமாகத் துலங்க வேண்டும்.

புருவத்தை “உளிபடா ரோமச் செல்வம்” எனவும் சித்தர்கள் இதனை உரைக்கின்றனர். பழுத்த சுமங்கலிகள், இல்லறப் பெண்களை ஆசிர்வதிக்கையில் மோதிர விரலில் குங்குமம் எடுத்து, ஆள்காட்டி விரல், சுண்டு விரலால், வலது இடது புருவங்களை ஸ்பரிசித்து, நெற்றிக் குங்குமம் இட்டு ஆசிர்வதிக்கும் இறை மாண்பும் உண்டு. இதனால் புருவங்கள் மூலம், நல் ஆசிகள் நிரவுகின்றன. எனவே மானுடர் எவருமே புருவத்தைச் சிரைத்தல் கூடவே கூடாது. மீறிச் சிரைத்தால் வீட்டில் தரித்திர நிலை, நோய்கள் வந்து மோதுதல், அடிக்கடி நாய்களால் கடிக்கப் பெறுதல், இளவயதிலேயே கணவனை இழக்கின்ற துர்பாக்ய நிலை, பெண்கள், பிள்ளைகள் தறிகெட்டு வாழ்தல் போன்றவை ஏற்படும்.

வெற்றுக் கைகளுடன் இருத்தல் கலியுகப் பெண்களின் அடுத்த தவறாகும். பெண்கள், இரண்டும் கைகளிலும் (கண்ணாடி) வளையல்கள், காசிக் கயிறு, மணி கங்கண் போன்றவற்றை எப்போதும் அணிந்து இருந்தால் தான் நல்ல தற்காப்பு சக்திகள் கிட்டும்.

தினமுமே பெண்கள் காலையில் எழுந்தவுடன் கணவனின் பாதங்களைத் தொட்டு வணங்குதல் நன்று. இதனால் கணவனுக்கு எத்தகைய தீய வழக்கங்களும் அண்டாது தற்காத்து கொள்ள முடியும், கணவனின் ஆயுள் விருத்தியாகும்.

வாரம் ஒருமுறை, பெண்கள் பசு பூஜை, ஆலயங்களில் நந்தி பூஜை, சப்தமித் திதி தோறும் சப்த மாதர்கள் வழிபாடு, பூரட்டாதி நட்சத்திர நாளில் ஸ்ரீசண்டிகேஸ்வரி தேவிக்கு அபிஷேக ஆராதனைகளை நிகழ்த்தி வழிபடுதல் நன்று. இது தெய்வீக சக்திகளை நிரப்பிக் கற்பைக் காத்து நிற்கும்.

ஸ்ரீதுவார கணபதி
கீழவாளாடி லால்குடி

வீட்டு வாசற்படி வெறுமனே இருத்தல் அடுத்த தவறாகும். பிளாட் சிஸ்டமாக இருந்தாலும், பசுஞ் சாணத்தால் வாயிற்படி முன் மெழுகித் தினமும் கோலம் போட்டு வருதல் வேண்டும். பொதுவாக, வெளியே சென்று வருகையில் பிணப்பூ, திருஷ்டிப் பூசணி, திருஷ்டி மிளகாய் போன்றவற்றை மிதித்து வருதலால், வீட்டிற்குள் நிறைய தீய சக்திகள் வந்து சேர்கின்றன. பசுஞ்சாணங் கொண்டு மெழுகுதல் நல்ல தோஷ நிவாரணியாகத் துணை புரிகின்றது.

கூந்தல் குங்குமம்

பெண்களின் கூந்தல், குங்குமத்தில் நிரவும் தெய்வீக சக்திகள்

பெண்களாய்ப் பிறந்ததற்கு மாதவம் புரிதல் வேண்டும் என்பது மகா சத்தியமான வாக்கே! தங்களுடைய இயற்கையான தவ, ஜப, யோக குணங்களால் கணவருக்கு நீண்ட ஆயுளுடன் அமைதியான, சாந்தமான வாழ்க்கையைத் தர வல்லவர்களே பெண்டிர்கள் ஆதலின், மாதவம் புரிந்தால்தான் நிச்சயமாகப் பெண் பிறவி பாக்கியம் கிட்டலாகும். ஆனால் ஒவ்வொரு பெண்மணியும் இத்தகைய இயற்கையாகவே அமைந்த ஆன்ம சக்திகளை நன்கு பயன்படுத்தினால்தானே, வாழ்வில் நற்செல்வ சக்திகளைக் கண்ணாரக் காண முடியும்.

காக்கும் காப்பு சக்திகள்

கலியுகத்தில், பெண்கள் தினந்தோறும் செய்கின்ற பலவிதமான தவறுகளால், பல தீவினைகளைப் பெருமளவில் சேர்த்துக் கொள்கின்றனர். நம்முடைய தெய்வீக வழக்கங்கள் எல்லாம் மூட நம்பிக்கைகள் அல்ல! மூட நம்பிக்கை என்று கூக்குரலிடுவோர், துன்பங்கள் வரும் போது துணை நிற்க மாட்டார்கள்! பெற்ற தாயும், பேணி வளர்த்த நல்ஒழுக்கக் கட்டுப்பாடுகளுமே, இறையருளால் எப்போதும் துணை நிற்கும், நம் பாரதக் குடும்பப் பழக்க, வழக்கங்கள் யாவும் மாசற்ற பொன் போன்று என்றும் வாழையடி வாழையடியாய்த் தொடர்ந்து வந்து காப்பவையே!

கலியுகத்தில் பெண் பிறப்பு என்பதைப் பல நாடுகளிலும், ஒரு பாரமாக (liability) எண்ணுவது மிகவும் வேதனை தருவதாகும்.

புனிதமான தாயின்றி, நாம் இப்புவியில் பெறுதற்கரிய மானுடப் பிறவியைப் பெற்றிருக்க முடியுமா என்று ஒவ்வொருவரும் தன்னைத் தானே கேட்டுக் கொள்ள வேண்டும். அப்போது தான் பெண் பிறவியின் புனிதத்துவத்தை நன்கு உணரலாகும்!

பெண்ணாய்ப் பிறத்தலால் துன்பங்கள் நிறைந்த வாழ்வே அமையும் என்ற மிக மிகத் தவறான எண்ணம் பூவுலகில் ஏற்பட, மூல முதல் காரணமே, கலியுகப் பெண்டிர்கள் பலரும் தம்முடைய தினசரி வாழ்க்கை நடைமுறைகளில் பல தவறான வழக்கங்களைக் கையாள்வதின் விளைவுகளே ஆகும்.

அமிர்த வர்ம நாளங்கள்

“பின்னலில் பெரிதாய் யோகம் முப்பிரிப் பொருளாய் ஆமே!” என்ற யோக வாக்கியப்படி பெண்களுக்கு உரித்தான கூந்தலில் மூன்று பிரிகள் இட்டுப் பின்னுதலே சிறந்த யோக சக்திகளைத் தருவதாகும்.

ஆண்களை விடப் பெண்கள், ஏழு மடங்கு அதிகமான மனோசக்தியைப் பெற்றவர்கள் ஆவர். அதாவது, கணவனும், மனைவியும் சேர்ந்து ஆலய தரிசனம் செய்தாலோ, பூஜித்தாலோ, ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஜபித்தாலோ அனைத்திலுமே, கணவனை விட, மனைவி ஏழு மடங்கு அதிகமான புண்ய சக்திகளைப் பெறுகின்றாள், இதற்குக் காரணம், பெண்களின் உடலில் ஏழு இடங்களில் அமிர்த வர்ம நாளங்களில் ஆண்களை விடக் கூடுதல் அமிர்தச் சுரப்பு ஏற்படுகின்றது.

மானுடர்களின் உடலில் உள்ள, சித்த வைத்தியப் பூர்வமாக, 72000 நாளங்களிலும், 72000 அமிர்தவர்மக் கிரந்திகள் உண்டு. இதை அகஸ்தியர், போகர், புலிப்பாணிச் சித்தர்களின் மருத்துவ கிரந்தங்களில் விளக்கி உள்ளனர். இவற்றை அமிர்த வர்ம மருத்துவ முறை மூலமே நன்கு அறிந்து ஆக்கப்படுத்துதல் கூடும்.

ஸ்ரீநவநந்தி
கீழவாளாடி லால்குடி

கோலம் போடுதல், துணிகளைத் துவைத்தல், கிணற்றில் இரு கைகளாலும் சமமாக நீர் இறைத்தல், நீர்க் குடம் சுமத்தல், பசுவின் பால் கறத்தல், விளக்கேற்றுதல், வீட்டை மெழுகுதல், தோப்புக் கரணம் இடுதல், பஞ்ச அங்க நமஸ்காரம் போன்ற பல பெண்களுக்கு உரிய யோக மயமான காரியங்களில் உடலின் பல பகுதிகளிலும் அமிர்த வர்மச் சுரப்பிகள் ஆக்கம் பெறுகின்றன.

ஆனால் ஆக்கம் பெறுகின்ற அமிர்தச் சுரப்பிகளை அடைக்கும் வகையில் கலியுகப் பெண்கள் பலவிதமான தவறான வழக்கங்களைக் கையாள்வதால் அவர்களுடைய உடல், உள்ள, மன ஆரோக்யம் சீர் கெடுகின்றது.

கூந்தலில் பொலியும் ஆன்ம சக்திகள்

பெண்கள் செய்கின்ற முக்கியமான தவறு தலைமுடியைக் கத்தரித்தல், முன்முடியை கத்தரித்தல் அல்லது கூந்தல் அடி நுனியை முடியாது விரித்துப் போடுதல் ஆகும். ஆண்கள் போல் அல்லாது அவர்கள் சிறு குழந்தைப் பருவத்தில் இருந்தே முடியை வெட்டாது இருந்தே முடியை வெட்டாது நீண்டு வளர வைப்பதால், பெண்களின் கூந்தலில் நிறைய ஆன்மீக சக்திகள் நிறைய கூடி ஆயுள் முழுதும் காக்கும். உலகெங்கும் பெண்கள் கூந்தலை சிறுபிராயத்தில் இருந்தே, ஆண்களைப் போல் அவ்வப்போது வெட்டிடாது, வளர விடுகின்றனர். (அ)நாகரீகம் முற்றியுள்ள சில மேலைநாடுகளிலும், பல ஆண்டுகள் முன் வரை, நீண்ட கூந்தலே நடைமுறையில் இருந்து வந்துள்ளது. பாரத நாட்டில், ஆண்கள் கூட முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்வரை, அடர்த்தியான கட்டுக் குடுமியுடன் அனைத்துக் குடும்பங்களிலும் இருந்ததை நாமறிவோம்! எனவே கூந்தல் என்பது ஆன்ம சக்திகளின் உறைவிடமாகும்.

பெண்கள் தங்கள் கூந்தலின் நுனியை வாழைநார், ரிப்பன் கொண்டு முடிந்திடுதல் அல்லது விசேஷமாக மூன்று பிரிப் பின்னலை இடுதல் வேண்டும். இதற்கு முப்பிரி யோகப் பின்னல் என்று பெயர். இதில் கிட்டும் ஆகர்ஷண சக்திகள் கபால நாளங்களில் அமிர்த வர்ம சக்திகளை ஆக்கப்படுத்தும், கூந்தல் நுனியை முடியாது, விரித்திட்டால் யோகமய சக்திகள் விரயமாகும். மனக் கொந்தளிப்புகள் அதிகமாகும்.

கூந்தலூர்

இதுகாறும் கூந்தலைக் கத்தரித்தோ, கூந்தலை விரித்திட்டோ இத்தகைய தவறுகளைச் செய்திருப்பின், இதற்குப் பரிகாரம் நாடும் பொருட்டு கும்பகோணம் அருகே கூந்தலூர் ஸ்ரீஜம்புகேஸ்வரர் சிவாலயத்தில் அம்பிகை, ஸ்ரீமுருகனுக்கு முன் அருளும் ஸ்ரீசனீஸ்வரர், ஆலய முகப்பில் இறைவனை நோக்கி யோகித்த நிலையில் தவம் புரியும் ரோமரிஷிக்குத் தைலக் காப்பிட்டும், சந்நதிகளில் மாக்கோலம் இட்டும் அபிஷேக, ஆராதனைகளுடனும் வழிபட்டு வர வேண்டும். தலைமுடி பொசுங்குதல், அறுவை சிகிச்சைக்காக முடியை வெட்டுதல், பல்வகை முடிகளால் ஆன டோப்பாவை அணிதல், மிருகக் கொழுப்புகள், எலும்புகள் கலந்த சிகைத் தைலம் மற்றும் ஷாம்பு போன்றவற்றால் நீராடுதல் ஆகியவற்றில் தொற்றிடும் கூந்தல் வகை தோஷங்களைக் களைய வல்ல தலம். இவையாவும் பெண் பிள்ளைகளைப் பாதிக்கும் கூந்தல் தோஷங்களாகும்.

பெண்களுக்கு உரிய தார்மீகச் சிறப்பு என்னவெனில் அவர்களுக்குத் “த்ரயம்பக அமிர்தக் கிரந்திகள்” அமைந்திருப்பதாகும். அதாவது நெற்றி, முன் வகிடு, மாங்கல்யம் ஆகிய மூன்று இடங்களிலும் குங்குமம் வைக்கும் தெய்வீக வழக்கத்தால் அதியற்புத ஆன்ம சக்திகள் கிட்டுகின்றன. த்ரயம்பக அமிர்தக் கிரந்திகள் புனிதமான கற்பைப் பேணி பெண்களை எக்காலத்தும், எங்கும் காக்க வல்ல சுமங்கலித்வ சக்திகளை அளிப்பதாகும். கணவனைக் காத்து, நல்ஒழுக்கத்தில், நீண்ட ஆயுளுடன், நல்ஆரோக்யத்துடன் திகழ வைக்கவும் உதவுகின்றது.

ஸ்ரீதட்சிண துர்கை

தெற்கு நோக்கி அருளும் வாளாடி ஸ்ரீதட்சிண விஷ்ணு துர்க்கை மஹிமை

திருச்சி – லால்குடி இடையில், திருச்சியிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள கீழவாளாடியில், ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீவிஸ்வநாதர் ஆலயத்தில், தெற்கு நோக்கி அருளும் நிலையில், ஸ்ரீதட்சிண துர்க்கை, விஷ்ணு துர்க்கையாக அருள்கின்றாள்.)

ஸ்ரீதட்சிண துர்கை
கீழவாளாடி லால்குடி

சகல வல்வினைகளை மாய்க்கும் சற்குண ஸ்ரீவிஷ்ணு துர்க்கை

தெற்கில் விழி நோக்கும்
தென்புலத்தார் அருள் நோக்கும்
கற்கடத்தலத் துறையாள்
கலிநோய்கள் கரைத்தாங்கே
வற்கடமாம் வருதுயர்கள்
வல்வினைகள் வாவினைகள்
பொற்சங்குச் சக்கரத்தால்
போக்கியருள் வாளடியாள்!

-என்று துர்க்கா மண்டலச் சித்தர்கள் போற்றும் வண்ணம், வற்கடப் பஞ்ச வினைகள், வருவினைகள், வந்த வினைகள், நின்ற வினைகள், சந்ததி, சந்ததியாக வந்து தாக்கிப் பாதிக்கும் நீள் வினைகள், வல்வினைகள், பெருங் குற்றங்கள், சிறு பிழைகள் என அனைத்தையும் தம் தெற்கு நோக்கிய கோலவிழிப் பரிமாணத்தால் தீர்ப்பவளே, வாளாடியில் ஸ்ரீவிசாலாட்சி சமேத, ஸ்ரீவிஸ்வநாதர் ஆலயத்தில் தெற்கு நோக்கி, தனிச் சந்நிதி கொண்டருளும் ஸ்ரீதட்சிண விஷ்ணு துர்க்கை அம்பாள்!

தென்புலத்தாராகிய பித்ரு மூர்த்திகள் வழிபடுகின்ற துர்க்கையே ஸ்ரீதட்சிண விஷ்ணு துர்க்கை, திருக்கயிலாயத்திலிருந்து சிவன் ஆணையால் பசுவாய்ப் பிறந்த ஈஸ்வரிக்கு, கையில் கோலேந்திப் பசுக்களை மேய்ப்பவராய், ஸ்ரீகோபால கிருஷ்ணனும், பரமேஸ்வரிக்குத் துணையாய், கூட வந்து அருளியமையால், அம்பிகையும், “அண்ணா! அடியேன் பெற்ற சாபம் தீர, அடியேனுக்கு அருட்துணையாக வந்த தங்களுக்கு என்னே கைமாறு ஆற்றுவேன்? தாங்கள் யுகாதி யுகங்களில் அசுரர்களுடன் போரிடுகையில், அடியேன் தாங்கள் அருளும் சங்குச் சக்கரம்  தாங்கி, தீவினைகளை மாய்த்திடத் தங்களுக்குத் துணையாய் நின்று ஜீவன்களைக் காத்திடும் பாக்யம் பெற்றிட, ஈஸ்வர அருளும், தங்கள் அனுகிரகமும் வேண்டிச் சங்கல்பித்துத் தவம் பூணலாகின்றேன்!” என்று பணிவுடன் உரைத்தனள்.

ஸ்ரீவிஸ்வநாதர்
கீழவாளாடி லால்குடி

இவ்வாறு அம்பிகை சங்கல்பித்தத் திருத்தலங்களுள் ஒன்றே வாளாடி ஆகும். ஸ்ரீகாயத்ரீ மந்த்ர சக்திகள் நதி வடிவாய், ஸ்ரீகாயத்ரீ நதியாக உருவாகிய தலமும் வாளாடியே ஆகும். திருமாந்துறை, பச்சாம்பேட்டை போன்றவை லகு காயத்ரீ நதிப் புனல் திருத்தலங்களாய், ஈஸ்வரனின் திருமண வைபவக் கோலத் தலங்களாய்ப் பண்டைய யுகங்களில் பொலிந்தன. அதாவது ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபிக்க இயலாதோர்க்கு, ஜல சக்திப் பூர்வமாக, நீர் வழியாக, யாவரும் ஸ்ரீகாயத்ரீ மந்திர சக்திகளைப் பெறும் பொருட்டு, மும்மூர்த்திகளும் இப்பகுதியில் ஸ்ரீகாயத்ரீ நதியை உற்பவித்தனர்.

சங்குச் சக்கரதாரியாக ஸ்ரீதுர்க்கை தேவி, பல தலங்களில் தோன்றிடக் காரணம் என்ன?

“காசிக்கு வீசம் பெரிதெனக்” கவினுறுந் தலங்களாமே!

பித்ரு முக்தித் தலமான காசியாகிய வாரணாசியம்பதியில் மரிப்போர் காதுகளில், சிவபெருமானே தாரக நாம மந்திரமான ராமராம மந்திரத்தை ஓதுகின்றார் என்பது, புராண ரீதியாக நாம் நன்கு அறிந்ததே! உண்மையாகவே, இன்றும், என்றுமாய்க் காசியம்பதியில் நடைபெறுகின்ற அனுபூதியே இது!

ஆனால் பூவுலகில் உள்ள அனைவருமா, தம் ஆயுள் காலத்தில் காசித் தலத்தைத் தரிசிக்க, சென்றடைய முடிகின்றது?

பல யுகங்களில், குறிப்பாகக் கலியுகத்தில் ஏழை ஜனங்களுக்கு, நோயுற்றோர்க்கு, ஊனமுற்றோர்க்கு, முதியோர்க்கு, பெற்றோர்கள், கணவன், பிள்ளைகளை இழந்தோர்க்கு, அவரவர் பூர்வ ஜன்ம நிலைப் பூர்வமாக, காசியைக் காணா நிலை பலவிதமான காரணங்களால் ஏற்படலாகும் என உணர்ந்தாள் ஸ்ரீவிசாலாட்சி அம்பிகை!

எனவே சர்வேஸ்வரனிடம், காசிக்கு வர இயலாத ஜீவன்களும், தக்க முறையில் காசியம்பதிக்குரிய சிவவாக்ய ராமநாம பூஷண சக்திகளைப் பெற்றுத் தர வேண்டித் தவம் புரிந்தாள்!

இறைவனும், “பார்வதி! காசியின் சக்திகளை கிரகித்துப் பல தலங்களில் நிரவுதல் வேண்டும் என்பது உன் விருப்பமன்றோ! காசி என்றுமே காசிதான்! வாரணாசிப் புனித பூமியில் உற்பவிக்கும் சுயம்பு லிங்க ரூபங்களை, கீழே சற்றும் வைத்திடாது, பலரும் தலையில் சுமந்து சென்று பிரதிட்டை செய்யும் தலங்களில், யாம் காசி விஸ்வநாதராகவும் அருள்வோம். மேலும், வரும் யுகங்களில், தட்சிண பாரதத்தில் காசிக்கு வீசம் பெரிதெனப் போற்றும் வகையில் சில அற்புதத் தலங்கள் தோன்றலாகும். மேலும் “மயான அஸ்தியானது மலராய்ப் பூக்கும் கும்பகோணம், திருப்பூவணம், பூவாளூர் போன்ற ருத்ர பூமித் தலங்கள் பரிணமிக்கின்ற” அற்புதப் புராண லீலைகளும், அனுபூதிகளும் வருங்காலத்தில் நிகழ்ந்து காசிக்கு நிகரான தலங்களும், காசியை விட வீசம் பெரிதான தலங்களும் தோன்றிடும், உணர்விக்கவும் பெறும்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
கீழவாளாடி லால்குடி

காசியிற் செய்த பாவம் களைந்திடும் மாசிலாத் தலம்

சகல பாவங்களையும் தீர்க்கும் காசியிலே கலித் தீவினையால், புனிதத்தை அவமதிக்கும் பாவவினைகள் இத்தலத்தேயும் நிகழலாகும். காசியில் செய்வித்த தீவினைகளையும், பாவங்களையும் தீர்க்க வல்லதாக, கும்பகோணம், திருவிடைமருதூர்ர் போன்ற தலங்கள் சிறப்புறும். இவை, காலத்தால் காசிக்கு முற்பட்ட அற்புதச் சிவத்தலங்களாகும். எனவே காசியை அடைய இயலாதோர்க்கு, காசித் தலப் புண்யத்தை அடைய வல்ல, பல அறவழி முறைகள் தோன்றலாகும்!” என ஈஸ்வரன் உரைத்து, அருளினார். இவ்வாறு காசியில் இருந்து பலரும் தலையிற் சுமந்து வந்து ஆக்கிய காசி லிங்கப் பிரதிஷ்டைத் தலங்களில் ஸ்ரீகாசி விஸ்வநாதர் சன்னிதிகள் தோன்றின. ஸ்ரீகாசி விஸ்வநாதர் சுயம்பாய்த் தோன்றிய தலங்களும் உண்டு.

சர்வம் யோகமயம்

திருக்கயிலாயத்தில், உமையவளான அம்பிகை, சர்வேஸ்வரனுக்கு நித்ய பூஜை ஆற்றி, உணவை நைவேத்யமாக வைத்து, தீபாராதனை ஆற்றி, இறைவன் பிரசாதம் ஏற்ற பின், பூலோக ஜீவன்களுக்குப் படியளக்கின்றாள். ஈஸ்வரனும் எப்போதும் கண்களை மூடியவாறு யோகத்தில் இருந்தாலும், பூஜையின் போது சில சமயங்களில் கண்களைத் திறந்து, பிரசாதத்தை ஏற்று, மீண்டும் யோக நிலையைத் தொடர்வர்.

ஒரு முறை, கண்களைச் சற்றும் திறவாது, யோகப் பூர்வமாகப் பிரசாதத்தை மட்டும் ஏற்று, வெகு நாட்களாகியும் ஈஸ்வரன் கண்களைத் திறந்து பார்க்காமையால், அம்பிகை மிகவும் கவலை கொண்டாள். நாற்பத்து மூன்று கோடிச் சித்தர்கள், யோகியர்கள், மகரிஷிகளிடம் இதற்கான காரண விளக்கங்களை அம்பிகை கேட்டனள். அவர்கள் தரும் ஆயிரமாயிரம் அற்புத விளக்கங்களை அம்பிகையால் ஞானப் பூர்வமாக, முழுமையாக உணர இயலாதவளாய் மேலும் வருத்தம் அடைந்தாள்.

அப்போது ஆங்கே வந்த நாரதரும், “தாயே! பராசக்தி! அடியேனுக்கு வைகுண்டத்திலும், திருக்கயிலாயத்திலும் புரியாத பல தெய்வீக ரகசியங்கள் பூவுலக ஆலயங்களில்தாம் மிக எளிதில் புரிந்தன! சர்வேஸ்வரனின் ஒவ்வொரு செய்கைக்கும் கோடிக் கணக்கான காரணங்கள் இருக்கும். எனவே கோடி மஹரிஷிகளும் அளித்த விளக்கங்கள் உணரப் பெறாவிடில், தாங்கள் நன்கு தெளிவு பெற, மானுட வடிவில் பூலோகம் சென்று வழிபடுங்கள்!” என உரைத்தார்.

அறிவீரோ, அறிவீரோகாள்?

பூவுலகிற்குச் சாதாரண மானுடப் பெண்ணாய் வடிவு கொண்டு வந்திடினும், அம்பிகையின் தேஜஸை மாற்ற முடியவில்லை. சகல கோடி அண்டங்களிலும் நிறைந்த ஜகன்மாதாவாகிய அம்பிகையின் தேஜஸை என்னவென்றுதான் விளக்குவது?

அம்பிகையும், ஒவ்வொரு இல்லமாக கேள்வி கேட்டு விடை நாடி நின்ற போது, அம்பிகையின் தேஜஸைக் கண்டு ஒவ்வொருவரும் தங்கள் வீட்டிற்கு வந்து உணவு உண்ணவும்,  தாம்பூலம், மஞ்சள், குங்குமம் பெற்றுக் கொள்ளவும் அழைத்தனர். ஆனால் அம்பிகையோ, “தன்னுடைய கேள்விக்குச் சரியான விடையளிப்பவர்கள் வீட்டிற்கே முதலில் வருவேன்!” என்று கூறினாள். ஆனால் எவராலும் அம்பிகையின் கேள்விக்குச் சரியான பதிலைக் கூற இயலவில்லை.

ஸ்ரீஅம்பாள் நந்தி
கீழவாளாடி லால்குடி

ஒளி(லி) படைத்த கண்ணினாய் வா, வா, வா!

இப்படி ஒவ்வொரு இடமாக அம்பிகை பாத யாத்திரை பூண்டு வந்த போது, ஓரிடத்தில், ஒன்பது வயதுச் சிறுமியானவள் அம்பிகையின் வருத்தமான முகத்தைக் கண்டு காரணத்தை வினவினாள். அம்பிகையும் நடந்தவற்றைக் கூறினாள். இதைக் கேட்ட அச்சிறுமி, “அடியேன் பதில் கூறலாமா?” எனறு கேட்டிட, அம்பிகையும், “ஞானம், எங்கும், எதிலும் இந்தப் புண்ணிய பூமியில் பூக்குமம்மா! நீ சிறுமியானாலும் தாராளமாகப் பதில் அளிக்கலாமே!” எனக் கூறினாள்.

“பதில் வேண்டுமா? பதில் கிட்டும் பூலோக அருட்தலம் வேண்டுமா?” என்று சிறுமி கேட்டவுடன், அம்பிகை திகைத்தாள்! அப்போது அம்பிகையாலேயே பதில் சொல்ல முடியவில்லை!

சிறுமியோ புன்சிரிப்புடன், “என்னுடைய சங்கு ஒலியைக் கேட்டவாறு பின்னால் நடந்து வாருங்கள்! சங்கொலி நிற்கும் இடத்தில் பதிலும், பதிலளிக்கும் தலமும் கிட்டும்!” என நடக்கலானாள்!

முன்னே சிறுமி சங்கு ஊதி வர, அம்பிகை தொடர்ந்திட, வெறும் சங்கொலி அல்ல அது! சங்கொலி கேட்கக் கேட்க, அத்தனை கோடி மஹரிஷிகளும் அளித்த விளக்கங்களும் ஒவ்வொன்றாய் அம்பிகைக்குப் புரியலாயின!

ஞான விளக்கம், ஆனது பொருளே!

ஓரிடத்தில் சங்கொலி நின்றிட... சிறுமி மறைந்தாள்! அந்த இடத்தில் தெற்கு நோக்கி அருளும் கோலத்தில் ஸ்ரீதுர்க்கை வீற்றிருந்தாள்! இதைக் கண்டு மகாப்பரவசம் அடைந்த அம்பிகை, ஸ்ரீதுர்க்கையை வேண்டிட, “சங்கொலி பீஜத்தால், மஹரிஷிகளும், சித்தர்களும் அளித்த ஞான விளக்கங்களை நன்கு அறிந்திட்டாலும், ஞான விளக்கங்கள் செயல்பாட்டை அடைய வேண்டும் தானே! சர்வேஸ்வரன் ஞானயோக சயனம் பூண்டிருப்பதால், ஜீவ பரிபாலன சக்திகளை அவரிடமிருந்து பெற்றிட வெள்ளைக் கொத்துக் கடலை, வெள்ளைப் பயிறு மாலை சார்த்தி, ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு செவ்வாய், வியாழன் தோறும் சார்த்தி வழிபட்டு வந்தால், சுவாமியின் யோக சயன நிலை அருட்பிரவாகமாக மாறி, கண்களைத் திறந்து அருள்பாலிப்பார்!” என்று கூறி அருளினாள்!

பாஸ்கர பூஜையில்
பவனி வரும் ஸ்ரீகாலபைரவர்
கீழவாளாடி லால்குடி

இவ்வாறு அம்பிகையே வெள்ளைக் கொத்துக் கடலை மாலை சார்த்தி, ஸ்ரீதட்சிணா மூர்த்தியை வழிபட்டுத் தனக்கு வழிகாட்டிய, தெற்கு நோக்கி அருளும் துர்க்கை அம்மன் மூர்த்திகளைப் பல தலங்களிலும் தரிசித்து வழிபட்டாள்!

வல்வினை போக்கும் வாளாடி ஸ்ரீவிஷ்ணு துர்க்கை!

இவ்வாறு அம்பிகை வழிபட்ட தெற்கு நோக்கு துர்க்கை சந்நிதித் தலங்களில் ஒன்றே வாளாடிச் சிவத் தலமாகும்.

அச்சிறுமியாக வந்த மூர்த்தியே திருமகளாம் இலக்குமி தேவி! இங்கு ஸ்ரீதட்சிணா மூர்த்திக்கு வெள்ளைக் கொத்துக் கடலை மாலை சார்த்தி வழிபட்டு, ஸ்ரீதட்சிண விஷ்ணு துர்க்கை அம்பிகையையும் வழிபட்டு வர, ‘வாழ்க்கையில் தீர்வு காண முடியாதோ’ என்று அஞ்சி வாழும் குடும்பத்தாரின் நெடுங்காலத் துன்பங்களுக்கும் தீர்வளிப்பவளே வாளாடி ஸ்ரீதட்சிண விஷ்ணு துர்க்கை அம்பிகை.

மனிதர்களுக்குத்தான் ஆசை என்று கிடையாது. ஸ்கந்த லோகத்தைச் சேர்ந்த நவவீரர்களுக்கும் ஒரு முறை ஒரு ஆசை முளைத்தது. என்னவோ அது ? விஸ்வநாதர் அதாவது உலகத்திற்கே தலைவனான இறைவனின் திருவடி தரிசனத்தைப் பெற வேண்டும் என்பதே அது. தங்கள் விருப்பத்தை நவவீரர்களின் தலைவரான ஸ்ரீவீரபாகு தேவரிடம் தெரிவிக்கவே, ஸ்ரீவீரபாகுவும் ஸ்ரீமுருகப் பெருமானிடம் நவவீரர்களின் விருப்பத்தைத் தெரிவித்தார். ஸ்ரீமுருகப் பெருமானும் நவவீரர்களின் நியாயமான விருப்பத்தை நிறைவேற்ற தக்க திருத்தலத்தை நாடி பல திருத்தலங்களுக்கும் விஜயம் செய்தார். சுவாமியின் மயில் வாகனமானது கீழவாளாடி திருத்தலத்தில் இறங்கியபோதுதான் தான் அத்தனை காலம் தேடி வந்த இறைவனின் திருவடி தரிசனம் நவவீரர்களின் விருப்பத்தால் தனக்கும் நிறைவேறுவது கண்டு பேருவகை எய்தினார். ஸ்ரீமுருகப் பெருமான், நவவீரர்கள், வீரபாகு இவர்கள் பெற்ற அந்த அபூர்வ ஸ்ரீவிஸ்வநாதரின் திருவடி தரிசனத்தையே நாம் கீழவாளாடி திருத்தலத்தில் பெறுகின்றோம் என்பதே நவவீரர்களின் தியாகத்தின் பின்னணியில் பூலோக மக்களுக்கு கனிந்த அனுகிரகமாகும். ஒன்பது என்பது எண்களின் எல்லையைக் F

கீழவாளாடி என்பது மேலோட்டமாகப் பார்த்தால் இரண்டு வாளாடிகளில் கிழக்கு திசையில் அமைந்த வாளாடி என்று பொருள் கொண்டாலும் இறைவன் ஸ்ரீவிஸ்வநாதரின் மேற்கு திசையை நோக்கிய தரிசனத்தை நாம் நவதுவாரங்கள் வழியாக பெறும் சிவத்தலம் என்ற சிறந்த பொருளும் உண்டு.

ஸ்ரீகுபேர லிங்க மூர்த்தி
கீழவாளாடி லால்குடி

ஸ்ரீமுருகப் பெருமானே, நந்தி மூர்த்தி நவதுவாரங்கள் வழியாக இயற்றும் பாதபூஜையில் பங்கு கொள்கிறார் என்றால் பூலோக மக்களின் செயல்பாட்டைப் பற்றி நாம் கூற வேண்டுமா என்ன ? இத்தலத்தில் முதலில் இறைவன் ஸ்ரீவிஸ்வநாரின் முன் உள்ள நந்தீஸ்வரரை தரிசனம் செய்து, பின்னர் ஸ்ரீமுருகப் பெருமானை தரிசனம் செய்து, பின்னர் நவதுவாரங்கள் வழியாக இறை தரிசனம் பெறுவதே முறையாகும். அபூர்வமாக தெற்கு நோக்கி அருளும் ஸ்ரீதட்சிண துர்கையும் இந்த நவதுவார பூஜையில் பங்கேற்று பக்தர்களுக்கு அருளை வாரி வழங்குகிறாள் என்பதும் ஒரு கனிந்த அனுகிரகமே.

அபூர்வமாக வலது பக்கம் ஆவூடை உடைய சிவலிங்க மூர்த்திகளுக்கு சிறப்பான அனுகிரக சக்திகள் உண்டு. லால்குடி ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் திருத்தலம், லால்குடி கீழவாளாடி திருத்தலத்தில் இத்தகைய மூர்த்திகள் அருகருகே அமைந்திருப்பது நம் பூலோக மக்கள் பெற்ற பெரும் பேறே. ஞாயிற்றுக் கிழமை, செவ்வாய், வியாழக் கிழமைகளில் இத்தகைய மூர்த்திகளின் தரிசனம் பெற்று குறைந்தது 108 இளநீர் அபிஷேகம் நிறைவேற்றுவதால் குடும்பத்தில் தோன்றும் எத்தகைய ego (நீயா, நானா) பிரச்னையும் சுமுகமாக தீர்வு பெறும். எத்துறையிலும் முதன்மை பெற, முன்னிலை நிற்கும் தகுதியை வளர்த்துக் கொள்ள விரும்புவோர் இத்தகைய மூர்த்திகளின் அனுகிரகம் பெறுதல் நலமே. இவ்வாறு வடக்கில் குபேர திக்கை நோக்கி ஆவுடை அமைந்த லிங்க மூர்த்திகளை குபேர மூர்த்திகள் என்றும் அழைப்பதுண்டு. ஒன்பது என்பது எண்களின் எல்லையைக் குறிப்பது. கீழவாளாடி திருத்தலத்தில் நவதுவாரங்கள் என்ற ஒன்பது துவாரங்கள் வழியாக நாம் ஸ்ரீவிஸ்வநாதரின் திருவடி தரிசனத்தைப் பெறும்போது அது இத்தல மூர்த்திகள் அனைவரின் அனுகிரகத்தையுமே ஒன்பதின் ஒன்பது மடங்காய்ப் பெருக்கித் தரும் என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் சித்த இரகசியமாகும்.

அமுத தாரைகள்

ஸ்ரீரங்கநாதர் போல ஸ்ரீஆதிவாஸ்து பகவானும் யோக சயனம் பூண்ட காருண்ய மூர்த்தியே! எனவே ஸ்ரீபூமி அந்தர ஸ்ரீஆதிவாஸ்து சுந்தர மூர்த்தியின் திருஉருவப் படத்தை ஆலயம், வீடு, கடை, அலுவலகம், தொழிற்சாலை என அனைத்து இடங்களிலும் வைத்து, தினமும் சந்தனம், குங்குமம் வைத்து மிக எளிமையாக யாவரும் வழிபட்டிடலாம். ஸ்ரீஆதிவாஸ்து பகவான் படம் ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்தராலயங்களில் கிடைக்கும்.

 ஒரு மனுஷன் தானா நல்ல காரியம் பண்ணும் போது கிடைக்கற புண்யம் எப்படி வேணுமானாலும் கரையும், செல்வாகும். ஆனா, சற்குரு சொல்லிக் கொடுத்துச் செய்யற நல்ல காரியத்துல, பூஜையில, கிரிவலத்துல கெடைக்கற புண்யம், சந்ததி, சந்ததியா வளர்ந்து, நல்ல விதமாத்தான் விருத்தியாகும்! – “ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்தர்!”

பலரும் தற்காலத்தில் நல்ல குங்குமம் கிட்டவில்லை என்று காரணம் காட்டி, பிளாஸ்டிக்கினால் ஒட்டுப் பொட்டு வைக்கின்றனர். இது பாவகரமானது, தோஷங்களைப் பெருக்கக் கூடியது. இவ்வாறு செய்த பாவங்களைப் போக்கவல்ல பரிகாரங்களைப் பெற்றிட சென்னை – வேலூர் மார்கத்தில் உள்ள காவேரிப்பாக்கம் ஸ்ரீகுங்குமவல்லி சமேத ஸ்ரீகொங்கணீஸ்வரர் ஆலயத்தில் லிங்கத்திற்கும், அம்பிகையின் பாதங்களுக்கும் குங்குமக் காப்பு இட்டு வழிபட்டு வருதல் வேண்டும்.

வருங்காலத்தில் கலியுலகில், எய்ட்ஸ் நோயை விட மிகவும் கொடிய நோய்கள் பரவ இருப்பதால், ரோக நிவர்த்திக்கான ஸ்ரீரோஹிணி லிங்க வழிபாடாக இது மிகவும் சிறப்படைய உள்ளது. மூன்றாம் பிறைச் சந்திர நாளிலும் பௌர்ணமியிலும் ரோஹிணி லிங்க வழிபாடு நல்ல மனசாந்தியைத் தருவதாகும். குடும்ப ஒற்றுமைக்கும் மிகவும் நன்மை பயப்பதாகும். ( வழிபாட்டு விளக்கங்களை இவ்விதழின் ரோஹிணி நட்சத்திர லிங்க மஹிமை தலைப்பில் காண்க!)

மணமேல்குடி

பூமி தோஷங்கள் நீங்கிட

கட்டிய வீடு, பாக்டரி, தொழிற்சாலைகள் என்று ஒன்று மாற்றி ஒன்றாகப் பிரச்னைகள் வந்து கொண்டு கட்டிட வேலைகள் முடியாமலோ, வீட்டில் நன்கு அமைதியாக வாழ முடியாமலோ, தொழிலில் நஷ்டங்கள் வந்தாலோ, ஆங்கே பூமி தோஷங்கள் வலுத்துள்ளன எனப் பொருள். இவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து 30 கி.மீ தொலைவில் மீமிசல் அருகில் உள்ள மணமேல்குடி (பொன்னகரம்) ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் ஆலயத்தில் அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபடுவதுடன், இங்கு அரசு, ஆல், வேம்பு மூன்றும் சேர்ந்துள்ள அபூர்வமான விருட்ச தேவதா வாஸ்து சக்திகளை 12 முறை வலம் வந்து வணங்குதல் வேண்டும். முற்காலத்தில் எட்டுத் துறைகளுடன் பொலிந்த இந்த வாஸ்துத் தீர்த்தப் படித்துறையில் தர்ப்பணம் அளிப்பதும், மூன்று விருட்சங்களின் அடியில் வாழை இலை இட்டு ஏழைகளுக்கு உணவளிப்பதும் பூமி தோஷங்களைப் போக்கிட உதவும்.

லால்குடி அருகில் உள்ள நத்தம் திருத்தலம் ஆயுத வகைகளால் (போர், அறுவை சிகிச்சை, விபத்து) இறந்தோர் ஆவி வடிவிலிருந்து விடுபட்டு ஜன்ம சக்தி பெற உதவும் தலமாகும். மேலும் பித்ரு பூஜைகளைச் சரியாக ஆற்றாமையால் விளைகின்ற பணக் கடன்களை நிவர்த்தி செய்ய உதவும் தலம்.

உத்தம யோக நிலைகளில் குடையைப் பிரபஞ்சமாக உருவகிக்கின்றனர். யோகப் பயிற்சிகளில் வலது அல்லது இடது நாசியில் சுவாச நிலையை நன்முறையில் மாற்றுவதற்காக ஒரு சிறு குடையை உள்ளங்கையில் தாங்கி மாற்றி, மாற்றித் தூக்கிப் பிடிப்பார்கள். இன்றும் திபேத்தில் மதிப்பிற்குரிய பௌத்த குருமார்கள் சில அபூர்வமான யோக முறைகளுக்கு, சந்தன மரக் குடையைப் பயன்படுத்துகின்றனர்.

ஸ்ரீவாமனப் பிள்ளையார், தம் சுக்கிர, குரு விரல்களுக்குள் (பரசுயோகக்) குடையைத் தாங்கிய யோக விதமே ஹஸ்த துலாசுதம் என்பதாகும். ஹஸ்த நட்சத்திரம் என்பது பிள்ளை பேற்றைப் பெற்றுத் தரக் கூடிய பூஜா பலன்களைத் தரவல்ல அற்புத நட்சத்திரம். ஹஸ்த நட்சத்திர நாளில், கைகளுக்கு மருதாணி இட்டுக் கொண்டு, ஸ்ரீவாமனப் பிள்ளையாரைத் துதித்து, இயன்ற அளவில் குடை, கைத்தடி போன்றவற்றை முதியவர்களுக்குத் தானமாக அளித்துவர, பித்ரு தோஷங்கள் தணிய உதவும். கண்ணாடி, சீப்பு போன்ற மங்களப் பொருட்களையும், இரு கைகளால் தூக்க முடிந்த அளவிற்கேனும் அரிசி, தானியங்களை ஏழைச் சுமங்கலிகளுக்கும் தானமாக அளித்து வருபவர்களுக்கு குடும்பத்தில் வரும் வாய்ச் சண்டைகள், சொத்துத் தகராறுகள் தீர்ந்திட நல்வழி பிறக்கும்.

அத்ரி மகரிஷி, பத்ரிநாதச் சித்தர், திருத்துழாய்ச் சித்தர், பரத்வாஜ மகரிஷி போன்ற சித்தர்களும், மகரிஷிகளும், இங்கு நத்தம் தலத்தில் தம் தவப்புலன்களைப் பதித்து, நத்தம் திருத்தலத்தைப் பூலோக மக்களின் வேண்டுதல்களைச் செம்மையாக்கும் பிரார்த்தனை இலக்கணத் தலமாக, பரிபூரணமான, புனிதமான பிரார்த்தனைகள் பூரிப்பதாக நிர்ணயித்துத் தந்துள்ளனர். நத்தம் என வழங்கும் தலங்கள் யாவும் புனிதம் பூரிக்கும் பூமிகளே!

பெற்றோர்க்குச் சேவை ஆற்றாதப் பெரும் பாவம் போக்கும் தலம்!

தம் பெற்றோர்களுக்கு முறையாகக் கடமைகளை ஆற்றாதோர் பல பாவ வினைகளைச் சந்திக்க நேரிடும். இதற்குப் பரிகாரமாக இங்கு, நத்தத்திற்குத் தம் பெற்றோர்களை அழைத்து வந்து வழிபடச் செய்திடல் வேண்டும். பெற்றோர்கள் இல்லையெனில் தாத்தா, பாட்டியுடன் வாழும் மூன்று ஏழைக் குடும்பங்களை அழைத்து வந்து வழிபட உதவி செய்து, ஆறு முழுக் கரும்புகளால் தர்பைச் சட்டம் அமைத்து, இதன் மேல் எள்ளும் நீரும் வார்த்து தர்ப்பணம் அளித்திடல் வேண்டும்.

வாழ்க்கையில் ஒருவர் தம்மை அறியாமல் பசு, நாய், மயில் போன்ற பலவற்றிற்கும் ஜீவ இம்சை நிகழ்த்தி இருக்கக் கூடும். இது பிள்ளைகளின் ஒழுக்கத்தைப் பாதிக்கும். இத்தகையோர் இங்கு ஜீவகாருண்ய தர்ப்பணமாக நீண்ட வாழை இலைமேல், 12 முழுக் கரும்புகளால் தர்பைச் சட்டம் அமைத்துத் தர்ப்பணம் அளித்திடல் வேண்டும்.

ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர்
மகிமாலை

வீடு பாக்யம் அமைய

பல குடும்பங்களில் உள்ள தலையாய பிரச்னைகளுள் ஒன்று சொந்தமாக வீடு/பிளாட் வாங்காமல் இருந்து, வாடகை வீட்டிலேயே வாழ்வதாகும் செவ்வாயன்று முருகப் பெருமானுக்குச் செவ்வரளி மாலைகள் சார்த்தி குறைந்தது ஒன்பது உணவுப் பொட்டலங்களையாவது அன்னதானமாக அளித்து வருவதோடு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் – சிவகங்கை இடையில் உள்ள கடியாபட்டி ஸ்ரீபூமீஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீபூமீஸ்வரருக்குச் செவ்வாய்க் கிழமை, வாஸ்து நாட்களில், செவ்வாய் ஹோரை நேரத்தில் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டு வருதல் வேண்டும்.

திங்கள் கிழமை சந்திர மூர்த்திக்கு உரிய தினமாதலின் இந்நாளில் மனசுத்தி காரகராகிய சந்திர மூர்த்தியைப் பூஜிப்பதும், மௌன விரதம் பூண்டிருப்பதும் மன சாந்திக்கான நன்னெறிகளை எளிதில் பெற்றுத் தரும். ஒவ்வொருவரும் வருடத்தில் குறைந்தது ஆறு முறை, 24 மணி நேர – 60 நாழிகை மௌன விரதம் பூணுதல் வேண்டும். ஒரு திங்கட்கிழமையில் பரிபூரண மௌனவிரதம் இருப்பதால் விளையும் அதியற்புத, அபூர்வமான மனோசக்தியைக் கொண்டு ஒரு பட்சத்தில் (15 நாட்கள்) ஏற்படும் மனத் துன்பங்களின் வேகத்தைத் தணித்திடலாம். மூன்றாம் பிறைச் சந்திர தரிசன நாளில் தஞ்சாவூர் அருகே மகிமாலை ஸ்ரீசந்திர மௌலீஸ்வரர் ஆலயத்தில் பால் தானம் செய்து மூன்றாம் பிறை தரிசனம் பெறுவதால் வீட்டில் நல்ல ஒற்றுமை பெருக நல்வழி ஏற்படும்.

மேல்நோக்கு நாட்களான ரோஹிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி மற்றும் எட்டு வாஸ்து நாட்களிலும், செவ்வாய்க் கிழமைகளிலும் வழிபடுதலுடன், ரோஹிணி நட்சத்திர நாளில் ஆகாச விநாயகருக்கு 12 விதமான நறுமணப் புஷ்பமாலைகள் சார்த்தி, அபிஷேக, ஆராதனைகளுடன் பூஜித்திட, ஆமநாசனம் அதாவது கர்ம வினைகளை நசித்து, வளம் பெருக்க உதவும், நில தோஷங்களுக்குப் பரிகாரமும் கிட்டும். உதாரணமாக :- மழையப்பநல்லூர் ஸ்ரீஆகாச விநாயகர்!

தெற்கு நோக்கிய கோலத்தில் ஸ்ரீதுர்க்கை அருளும் தலங்களில் முதலில் ஸ்ரீதட்சிணா மூர்த்திக்கு வெள்ளைக் கொத்துக் கடலை, வெள்ளைப் பயிறு மாலை சார்த்தி, வழிபட்டு, துன்பங்களுக்குக் காரணமான பூர்வ ஜன்ம வினைகளுக்கான ஞான விளக்கங்களை அறியும் மனவல்லமையும் மனோசக்தியும் பெற்று, பிறகு தெற்கு நோக்கி அருளும் ஸ்ரீதுர்க்கையம்மனை வழிபட்டால் சகலவிதமான துன்பங்களும் களையப் பெற்று, நல்ல சௌபாக்யங்களும் கிட்டிட ஸ்ரீதுர்க்கை அருள்புரிவாள், தீர்க்க முடியாத பலத்த, நெடுங்காலப் பிரச்னைகளுக்கும் நல்ல தீர்வுகளை அளிப்பவளே தெற்கு நோக்கிய ஸ்ரீதுர்க்கை!

தொடரும் ஆனந்தம்...

குசா வழங்கும் குதூகலம் ...
நம் சற்குருவின் சீடர்களில் ஒருவரின் பெயர் ரமணி, இது ஒரு கற்பனைப் பெயரே. நம் சற்குரு ஒரு நாள் பல அடியார்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது, “விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் அடியேன் நல்லவர்களைச் சந்தித்திருக்கிறேன். அந்த நல்லவர்களில் ரமணியும் ஒருவர்,” என்று கூறினார். ரமணிக்கு எப்படி இருக்கும் என்று நீங்களே ஊகித்துக் கொள்ளலாம். நம் சற்குருவிடமிருந்து ஒரு சிறந்த பட்டத்தைப் பெறுவது என்றால் உச்சி வெயில் நேரத்தில் தலையில் ஒரு டன் ஐஸ் வைத்ததுபோல் அல்லவா இருக்கும் ?

அந்த கிளுகிளுப்பிலேயே மிதந்து ஒரு நாள், ஒரு வருடம் என்று அல்ல, பல வருடங்களை ஓட்டி விட்டார் அந்த அடியார். இதற்கிடையே நம் சற்குருவும் தன் சொந்த லோகத்திற்குச் சென்று விட்டார். திடீரென்று ஒரு நாள் மின்னல் கீற்று போல் நம் சற்குருவின் அனுபவ மொழிகளின் பொன்னான அர்த்தம் அந்த அடியாரின் மனதில் பளிச்சிட்டு அவர் உடல் உள்ளத்தில் எல்லாம் நிறைந்து தித்தித்தது என்று கூறி தன்னுடைய சுவையான அனுபவத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார்.

ரமணி பெற்ற அனுபவம் என்னவோ ?

நல்லதல்ல கெட்டதல்ல நடுவில் நிற்பது ஒன்றுதான் ... என்பதே ஆசானின் அனுபவ மொழி. அவ்வாறிருக்க அடியேன் “நல்லவர்களைச்” சந்தித்திருக்கிறேன் என்று நம் சற்குரு கூறுவதன் பொருள் என்ன ? இதுவே குசா தத்துவம் வழங்கும் சுவை. ஒரு மனிதன் விரல் விட்டு எத்தனைப் பொருட்களை எண்ண முடியும், அதிகபட்சமாக, பத்து பொருட்கள் அல்லவா ? இந்தப் பத்துப் பொருட்களை எண்ணும்போது ஒன்று, இரண்டு, மூன்று ... என்று கூறி எண்ணி வருகையில் பத்தாவது பொருளை பத்து என்று எண்ணாது குசம் என்று கூறி எண்ணுவதால் அந்தப் பத்தாவது பொருள் குசா சக்தியைப் பெறும், அதன் பலனாய் மற்ற ஒன்பது பொருட்களும் குசா சக்தியுடன் துலங்கும் என்பதே குசா தத்துவமாகும். ராமன், கிருஷ்ணன், கோவிந்தன் ... என்று சீடர்களை எண்ணும்போது ரமணியைக் குசம் என்று கூறி எண்ணினால் ரமணி நல்லவராக மாறுகிறார் என்பது மட்டுமல்ல மற்ற ஒன்பது சீடர்களுடம் குசா சக்தியால் நல்லவர்களாகத் துலங்குவார்கள் என்பதே குசா வழங்கும் குதூகலம்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam