வாய் மூலம் வந்த காற்று கீதமாய் மட்டும் அல்ல கீதையாயும் ஒலித்ததே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

திருவேட்களம்

திருவேட்களம் மூங்கில் தல விருட்சம், மூங்கிலின் வேத மூல சக்திகள்
வேதம் என்பது என்ன? நாம் நினைப்பது போல தமிழ் மற்றும் வடமொழியில் உள்ள வேத வாக்கியங்கள் மட்டுமே வேதமாகாது. இவை யாவும் வேதத்தின் சில அம்சங்களும் வடிவுமாகும். பரிபூரணமான இறைமையில்தாம் அளவில்லா, எல்லையில்லா வேதமும் பரிபூரணமடைகின்றது! வேதம் என்பது இறைமையின் புனிதமான சப்த வடிவாம். விண்ணும் மண்ணும் பகவானின் திட வடிவ அம்சங்களில் ஒரணுத் துளியாம், அருணாசல ஜோதி என்பது கடவுளின் ஒளி ரூபம். எனவே பிரபஞ்சத்திற்கு உள்ளும் புறமுமாக விளங்குகின்ற ஆண்டவனை நாம் உணர்வதற்காக இறைவனே வடித்துத் தந்தருளும் இறை இலக்கண வடிவே வேதம் ஆகும்.

வேதத்தின் முழு வடிவை இறைவனின் பரிபூரணமான அருளின்றி நிச்சயமாக அறிய முடியாததாம்! எனினும் நாம் வேதத்தை ஓரளவேனும் உணரும் வண்ணமே, இறைவன் நம் ஐம்பொறிகளின் தன்மைகளுக்கேற்ப, வேதத்தை, மலை வடிவமாகவும் (திருக்கழுக்குன்றம்), விருட்ச வடிவாகவும் (கொன்றை-திருப்பத்தூர்), தீர்த்த வடிவாகவும் (ராமேஸ்வரம், வேதாரண்யம்), மந்திர வடிவாகவும் (ஸ்ரீகாயத்ரீ மந்திரம்), லிங்க வடிவாகவும் (ஸ்ரீ வேதபுரீஸ்வரர்), சக்தி வடிவாகவும் (ஸ்ரீவேதவல்லி), நட்சத்திர வடிவிலும் (கனோபஸ், வேத வடிவு அகத்திய நட்சத்திரம்) அளித்து நமக்கு நிறைய வேத சக்திகளைப் பொழிந்து வருகின்றார்.

வேத கொன்றை
திருப்பத்தூர்

புனிதமான சற்குருவே இறைவனே உருவகித்த வேதத்தின் மொத்த வடிவமாகும். எனவே நாம் வேதம் கற்கவில்லையே என்று ஏங்கிடாது ஒரு புறம் வடமொழி, தமிழ் மறைகளை இயன்ற அளவு ஓதி வந்தாலும் மறுபுறம் மேற்கண்ட பல வகை வேத வடிவிலான சக்திகள் நிறைந்த அலயங்களில் பூஜைகளையும், அரிய திருப்பணிகளையும், தான தர்ம  காரியங்களையும் சற்குருவின் அருட் கட்டளைக்கு இணங்கி ஆற்றி வருதல் வேண்டும்.

வேத சக்திகளில் முக்கியமாக, கலியுகத்திற்குத் தேவையான வேத மூல சக்தி, மூல வேத சக்தி என்ற இரண்டு வகை வேத சக்திகள் உணடு. கொன்றை, சரக் கொன்றை, தாமரை, சந்தனம் போன்றவை மூல வேத சக்தி வகைகளாகும். மூங்கிலில் நிறைந்திருக்கும் வேத சக்தியே வேத மூல சக்தி வகையைச் சார்ந்ததாம். பல மலர்களும், தாவரங்களும் இறைவனின் திருமேனியைத் தீண்டும் பாக்யத்தைப் பெற்றிருக்க, மூங்கில் மட்டுமே இறைவனுடைய திருவாயை ஸ்பரிசிக்கும் பெரும் பாக்யத்தையப் பெற்றதாம். ஆம், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா புல்லாங்குழலினை ஊதித்தாமே, புனிதமான அன்பினை வேத சக்திகளாகப் பூலோகத்தில் நிரவுகின்றார்! மூங்கில் கிண்ணத்தில் தம் திருஉதட்டைப் பதித்து அமுதத்தை அருந்தி சிவபெருமான் மூங்கிலுக்கு மகத்தான வேத சக்திகளை அளித்தார்! எனவேதாம் இன்றும், என்றும் எவ்வித தோஷங்கள் தீண்டா திவ்யமான தேவ வஸ்துக்களில் ஒன்றாய் மூங்கிலும் பொலிகின்றது!

இறைவனுடைய ஸ்ரீவேதகிரீஸ்வர அவதாரத்தில் அவருடைய திருவாயிலிருந்து உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையும் வேதமேயாம்! ஒவ்வொரு சுவாசமும் வேத யோகமாம்! இவ்வாறாக ஈஸ்வரனின், கிருஷ்ண பரமாத்மாவின் திருஉதடுகளைத் த‌ழுவிய மூங்கில், அதியற்புத வேத மூல சக்திகளைக் கொண்டதாம். எனவேதாம் தினமும் மூங்கில் தம்ளரில் நீர் அருந்துவதானது, நம்மால் பெற இயலாத, ஓத இயலாத‌ பல அரிய வேத சக்திகளைப் பெற்றுத் தருகின்றது. மூங்கில் குவளையால் இறைவனுக்கு அபிஷேகிப்பதும், பூஜிப்பதும், தர்ப்பணம் இடுவதும் அளப்பரிய வேத சக்திகளைத் தருவதாம்.

திருக்கயிலாயத்தின் மற்றும் வைகுண்டத்தின் நந்தவனங்களில் “வேட்களம்” என்ற பகுதி உண்டு. இங்கு வேத மூல மூங்கில்கள் விளைந்து, வளைந்து, பிணைந்து கொழிக்கும். ஆங்கே, இறைவனுடைய உற்சவ மூர்த்திகளைச் சுமந்து பவனி வருவதற்கான பல்லக்குக் கம்புகள் யாவும் இம்மூங்கில் கழிகளில் ஆவதேயாம். திருக்கயிலாய வேட்களப் புனித பூமியில் எப்போதும் தவம் புரிந்து கொண்டிருக்கும் த்ரிவேணீச் சித்தர், தாமிருந்த இடத்தில் இருந்தே சிவ லோகம், வைகுண்ட லோகம், பிரம்ம லோகம் ஆகிய மூன்றையும் தரிசிக்கும் வேத சக்திகளைப் பெற்றார்.

இவர் மூங்கிலினுள் இருக்கும் மூங்கில் சோற்றை மட்டுமே உண்பவர்! இன்றைக்கும் த்ரிவேணி சங்கமமாக மூன்று நதிகள், மூன்று கடல்கள், மூன்று மலைகள் சந்திக்கும் இடங்களில் சூட்சுமமாகத் தவம் புரிபவர்! வட இந்தியாவில் பிரயாக் எனப்படும் அலாகாபாத் திரிவேணி சங்கமத்தின் (௧ங்கை, யமுனை, சரஸ்வதி சேருமிடம்) நீருக்கடியில் தவம் பூண்டிருப்பவர். திருச்சி மாவட்டம் லால்குடி-அன்பில் அருகே உள்ள - காவிரி, காயத்ரீ, சரஸ்வதி நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்திலும் தவம் புரிபவர்! இந்த அன்பில் தலம் அருகே உள்ள தெய்வீகத் "தென்னகத் திரிவேணி சங்கம" ரகசியத்தை இனியேனும் அறிந்து அளப்பரிய பலாபலன்களை அடைவீர்! திருஅண்ணாமலையில், உண்ணாமுலை மண்டபத்தை அடுத்து மூன்று மலை முகடுகளாகத் தெரியும் ஸ்ரீகாயத்ரீ தரிசனப் பகுதியிலும் தவம் புரிபவர்! மூன்று கடல்கள் சங்கமிக்கும் தனுஷ்கோடியிலும் பெருந் தவம் பூண்டிருப்பவா்!

இவரே இறைவனின் ஆணைப்படி வேத மூல சக்திகளைக் கலியுகத்தில் பூமியில் நிரவும் பொருட்டு சிதம்பரம் அருகே உள்ள திருவேட்களம் சிவாலயத்தில் தல விருட்ச மூங்கிலாய் வடிவு கொண்டு வேத சக்திகளைப் பரவெளியில் பரப்புகின்றார். மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் வேத சக்திகளைப் பெற்றிட இத்தல விருட்ச தரிசனம் முக்கியமானதாகும்.

ஊமையாய் இருப்போர், திக்குவாயாக இருப்போர், தமக்கு மேடைப் பேச்சு வரவில்லையே என்று ஏங்குவோர், வியாதிகளின் கடுமையால் வாய்ப்பேச்சு பாதிக்கப்பட்டோர், பொய், புரட்டு, வம்பு, வீண்பழி பேசிப் பிற குடும்பங்களைக் கெடுத்தோர், வாக்கு சுத்தம், வாக்கு நாணயம் இல்லாதோர், வக்கீல்கள் மற்றும் நீதிபதிகளாக இருந்து வாக்கு சுத்தியைத் தவற விட்டோர் போன்றோருக்கு வாக்கு தோஷங்கள், குற்றங்களை நீக்கி, வாக்கினால் விளைவித்த தீவினைகளுக்குப் பரிகாரம் தந்து நல்ல வாக் சக்திகளைத் தரும் வேத மூல சக்திகள் நிறைந்த தல விருட்சம் இது! இங்கு புலலாங்குழல் வித்வான்களை அழைத்து வந்து இறைக் கச்சேரிகளை நிகழ்த்துதலால் (இறைப் பாடல்கள் மட்டுமே) பிள்ளைகளுக்கு வாக் சக்தி பெருகி நன்கு படிப்பர், ஜோதிடர்களுக்கும் வாக் சக்தியும் பெருகும்.

எல்லாவற்றையும்விட வாக்கினால், பேசும் பேச்சினால் வரும் பகைமையைத் தீர்க்க உதவும் அருட்தலமிது! பிரபஞ்சத்திலேயே பெறுதற்கரிய வில் சக்தி பெற்ற அர்ஜுனனுக்கு கிருஷ்ண பரமாத்மாவின் வாக் சக்தியை உணர வைத்த தலம்! இதன் பின்னரே அர்ஜுனனுக்கு கிருஷ்ண பரமாத்மா ஓதிய பகவத் கீதையை நேரடியாகவே கேட்கும் பாக்யம் கிட்டியது.

அடிமை கண்ட ஆனந்தம்

(நம் குரு மங்கள் கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்)

ஓவ்வொரு யுகத்திலும் அந்தந்த யுகச் சமுதாய நிலைகளுக்கேற்ப, தக்க வடிவுகளில் தக்க குணப்பாடுகளுடன் சிரஞ்சீவிகளான சற்குருமார்கள், இறைத் தூதுவர்களாய்த் தோன்றுகின்றனர். சற்குரு என்றால் புராணமய ஜடாமுடி சகிதம் வந்துதிப்பார் என்று எண்ணுதல் வேண்டாம். கிருத, திரேதா, துவாபர, கலியுகங்களில் மற்றும் நாமறியாப் பல யுகங்களிலும், கலியுகமே இறைவனை அடைவதற்கான எளிய நல்வழி முறைகளைக் கொண்டுள்ளதால் கலியுகத்தில் மனிதப் பிறப்பு எடுப்பது மகத்தான இறைருளால் கிட்டுகின்ற மாபெரும் பாக்யமாகும்.

பொருள் ஆனந்தம்
இடையே புலன் ஆனந்தம் !

பறவைகளாய், எறும்புகளாய், பசுக்களாய் வடிவு கொண்டும் நாம் எண்ணிப் பார்க்க இயலாத வகைகளிலும், மனித வடிவும் கொண்டும் சற்குருமார்களின் தெய்வீகப் பரிபாலனம் நாம் வாழும் இக்கலியுகத்தில் மிகச் சிறந்து விளங்குகின்றது என்பதை உணர்விப்பதே நீங்கள் இத்தொடரில் கண்டு ஆனந்தித்து மகிழும் அனுபூதிகளாம்!

மொழி, ஜோதிடம், கல்வி, பூஜை முறைகள், சாஸ்திரம் என சகல கலைகளிலும் superb supreme master ஆகப் பெரியவர் பரிணமிப்பதைக் கண்டு சிறுவன் ஆனந்தித்தாலும் தனக்கு எதையும் உருப்படியாக, முழுமையாகக் கற்றுத் தரவில்லையே என்ற ஆதங்கம் அவனுள் இருந்து கொண்டே வந்தது. பறவைகள், விலங்குகளின் மொழிகள், பிரெஞ்ச், லத்தீன், ஸ்பானிஷ் போன்ற பிற மொழிகள், யோகம், ஆசனம், நடனம், இசை மற்றும் அத்தர், சென்ட், புனுகு போன்றவற்றைத் தெய்வீக ரீதியாகத் தயாரிக்கும் முறைகள் இவ்வாறாகச் சகல கலா வல்லுனராக, ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விப்பாராய்ப் பரிமளித்த அவர் தனக்கு எதையும் “ஊட்டி” உணர்த்தவில்லையே என்றே ஏங்கி வந்தான் சிறுவன்!

“தெய்வீகத்துல எதையும் கேட்கறதுக்கு முன்னாடி, அதைக் கேட்டு வாங்கிக்கிற தகுதி இருக்கான்னு ரொம்ப ரொம்ப யோகிச்சுக் கேட்கணும்டா! கண்ண பரமாத்மாவோட விஸ்வ ரூபம் பார்க்கணும்னு அர்ஜுனன் ஆசைப்பட்டான்! கடைசியில என்ன ஆச்சு? விஸ்வரூபம் தரிசனம் கிடைச்சவுடன் அப்பனே, ஸ்ரீ கிருஷ்ணா! இந்த ரூபத்தைப் பார்க்க முடியாமல் தவிக்கின்றேனே! அப்படீன்னு அர்ஜுனன் மாதிரி அலறினா என்ன பிரயோஜனம்?”

பெரியவருடன் எத்தனையோ முறை திருஅண்ணாமலைக்கு நடந்தே செல்லும் பாக்யம் கிட்டிய போதெல்லாம் மணிக்கணக்காக ஆன்மீக விஷயங்களை எல்லாம் அவர் கொட்டோ கொட்டென்று தெய்வீக மழையாய் வா்ஷித்துப் பொழிந்து விட்டார்! அவர் கொட்டியதை எல்லாம் அள்ளி அச்சிட்டால் பல்லாயிரம் தொகுதிகளாகப் பல்கிப் பெருகி விரிந்திடும்!

ஒரு முறை..
.
பஸ்ஸில் ஏறி எங்கெங்கோ சிறுவனைக் கூட்டிச் சென்று..... நான்கைந்து நாட்கள் கழித்து... வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தை அடைந்தார் பெரியவர்.

No (Karmic) balance please!

பெரியவருடன் சிறுவன் பன்முறை பஸ்ஸில் பிரயாணம் செய்ததும் உண்டு! ஒரு விநாடிகூட இடைவெளி விடாது பூஜித்துக் கொண்டே வருவார். பஸ்ஸில் பக்கத்து சீட்டுக்காரரிடம் “தொண தொணவென்று” ஏதேனும் பேசிக் கொண்டே வருவதும் உண்டு! ஆனால் உரைப்பது அனைத்தும் மிக மிக எளிமையான தெய்வீக வழிமுறை விளக்கங்கள்தாம்! டிக்கட்டிற்காகக் கண்டக்டர் வரும்போது பின்னால் எங்கிருந்தோ செருகி எடுப்பவர் போல் துல்லியமாகப் பைசா கணக்குடன் காசுகள் வரும்! கோவணாண்டியாய்த் திரிந்த அவரிடம் உள்ள ஒரே இருப்பு கோவணம் ஒன்றே! இதைத் தவிர வேறு எதையும் கொள்ளாதவரிடம் காசுகள் முளைப்பதே அவனுக்கு வேடிக்கையாக, அற்புதமாக இருக்கும்! எவரிடமும் எக்ஸ்ட்ரா ஒரு பைசா தரமாட்டார், பாக்கியும் வைக்க மாட்டார்!

“முடிஞ்ச வரைக்கும் கரெக்டா காசைக் கொடுத்துடணும்டா! மிச்சச் சில்லறைன்னு எந்த டென்ஷனும் வச்சு‌க்க கூடாது! நமக்கு மிச்சம் வர்ற காசுல எந்த மாதிரிக் கர்மா சேர்ந்திருக்கோ யாருக்குத் தெரியும்? காமந்தரத்துல புழங்கின காசு, திருடின காசு, உடம்புல ஒட்டாம சம்பாதிச்ச காசு, லஞ்சமா வந்த காசு, பிறருடைய உடல் உழைப்புல வந்த காசு..  இப்படின்னு நமக்கு வர்ற காசுல, ஆயிரமாயிரமா கர்மா சேர்ந்திருக்கும்! அதே சமயத்தல நல்லவங்க கையிலந்து வர்ற காசுல நல்ல புண்ய சக்தியும் சேர்ந்திருக்கும், அதுவும் உண்மைதான்....!”

வெள்ளியங்கிரியில் ஞான வெள்ளம்

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஜம்மென்று நீராடிய பெரியவர் மூன்று சாதப் பொட்டல‌ங்களை வாங்கிக் கொண்டார்! எலுமிச்சை, புளியோதரை, தயிர் என மூன்றுமே கமகம வென்று வாசனை மிக்கவை! அக்காலத்து நாட்டு உரம் இட்டு விளைந்த (வயல்) அரிசி ஆதலால் பழைய சோறு நிலை வரை அரிசியின் மணமும், ருசியும் சற்றும் குன்றாது குறையாது இருக்குமே!

சிறுவனுக்கு நல்ல பசி என்றாலும் பெரியவர் “வெள்ளியங்கிரி” மகிமையைப் பற்றி ஏராளமாகச் சொல்லி வந்ததால் பசியை மறந்து மிகவும் உற்சாகத்துடன் அதனைக் கேட்டவாறு நடந்தான்!

“கயிலாய மலையை கிரிவலம் வந்தாக்க, அங்கே தென் மேற்குப் பகுதியில ஒரு தரிசனம் அசல் வெள்ளியங்கிரி மலை தரிசனமாவே இருக்கும்! அதை அப்படியே இந்த இடத்துல சுயம்புவாப் பிடிச்சு வச்சுருக்காரு சுவாமி! அகஸ்தியரைத் “தென்புலம் சென்று சேர்னு” கட்டளை இட்டப்போ, இது வழியாத்தான் அகஸ்தியர் சுவாமி நடந்து போனாரு! சிவபெருமான் வாக்கு தந்தபடி திருக்கயிலாயக் கல்யாணக் காட்சி எல்லாம் அவருக்கு ஒண்ணு ஒண்ணாத் தெரிய ஆரம்பிச்சுது! எப்போதும் சித்தர்கள் நிறைய நடமாடிக்கிட்டு இருக்கிற அற்புதமான ஸ்தலம் இந்த வெள்ளியங்கிரி! மலைக்கு உள்ளாறவே ஒவ்வொரு பாறையிலும் அற்புதமான உள்நீரோடை ஓடுது! ஆமாம்! உள் நீரோடைன்னா பாறைகளுக்கு நடுவுல மெல்லிசா வெள்ளிக் கம்பியாட்டம் நீரோடை இருக்கும். இது திருக்கயிலாயம் வரைக்கும் உள்ளாற ஓடிக் கிட்டு இருக்கு! ”

வண்டி வண்டியாய் வெள்ளியங்கிரி மலை ரகசியங்களைப் பெரியவர் கொட்டி கொண்டிருக்க... சிறுவனுடைய குருவி மூளையால் அள்ளத்தான் முடியவில்லை!

சென்ற இடங்களில் எல்லாம் அவர் மொ(பொ)ழிவதைக் குறித்திட பென்சிலும் கையுமாகத் திரிந்த சிறுவன் நோட் புக்கைக் கையில் எடுத்தால் உடனே அவர் கையை நீட்டித் தடுத்து விடுவார்!

“அடியேன் சொல்றதை மனசுலே புடிடா! டேப்புல ரெகார்ட் பண்ற வசதி எல்லாம் எதிர்காலத்துல வரும்! ஆனா விஞ்ஞானம் முன்னேற, முன்னேற, மனுஷனோட ஞாபக சக்தி மறைஞ்சு போயிடும்! நோட் புக்குல எழுதி, எழுதிப் பழகிட்டா மூளையில ஞாபக செல்கள் ஒழுங்கா வேலை செய்யாது நைனா! ஆனா ஒண்ணு தெரிஞ்சுக்க, நான் சொன்னதை எல்லாம் இந்த உலகத்துக்கு எடுத்துச் சொல்லணுங்கற தெய்வீக எண்ணம் இருந்தா நான் சொன்னது எல்லாமே உன் மனசுக்குள்ள தானாவே ஊறி மேலே வரும்! பேனாவும் வேண்டாம், பென்சிலும் வேண்டாம்!

Appeasing (divine) பசி!

பெரும் சிரமப்பட்டு நடந்து மலை உச்சிக்கு வந்து சேர்ந்தார்கள் இருவரும்! இப்போது அவர்களிடம் இருந்த‌து ஒரே ஒரு ஆஸ்தி, அந்த மூன்று சாப்பாட்டுப் பொட்டலங்கள்தாம்! சிறுவனுக்கோ பசியோ பசி! அந்தப் பசியோ அவன் வயிற்றையே தின்ன ஆரம்பித்து விட்டது! அவ்வளவு பசி! பெரியவரோ அப்போதுதான் சந்நிதி சந்திதியாய் வீழ்ந்து வீழ்ந்து நமஸ்கரித்துக் கொண்டிருந்தார்! கிழவரான பெரியவரே பூமியில் படிந்து நமஸ்கரிக்கும் போது சிறுவனால் சும்மா இருக்க முடியுமா? வயிற்றில் பசிக் கிளைகள் தொங்கத் தொங்க அவனும் வீழ்ந்து வீழ்ந்து எழ வேண்டியதாயிற்று! ஆனால் அவன் கண் பார்வை எல்லாம் பொட்டலத்தின் மேல்தான்!

“சிந்தனையோ பொட்டலத்தினுள்! மனமோ சாப்பாட்டில்! சாப்பாட்டு ராமனுடைய தியானமாகி விட்டதே!” இப்படித்தான் பல லௌகீக விஷயங்களை அவனுள் முடுக்கி விட்டுப் பெரியவர் தன்னை அருட் பெருஞ்சித்தராகச் சிறுவனால் உணர முடியாதவராகச் செய்துவிட்டார்! தப்பித் தவறி if he had glimpses of his glowing divinity டக்கென்று பேச்சை மாற்றி மறைத்து விட்டு மறைந்தும் விடுவார்! எனவே “பசித்தால் கோலி மிட்டாயும், பரோட்டாவும் வாங்கித் தரும் வெறும் கிழவரென அவரை மதிப்பதே மேல்”, என அவன் எண்ணலானான்!
ஏனோ?

அவருடைய சித்த ஸ்வய ரூபத்தை அவன் உணரத் தொடங்கினாலோ... அவர் திடீர் திடீரென்று காணாமற் போய் விடுகின்றார்! நடுவில் பல நாட்கள் பார்க்க முடியாமல் அவஸ்தைப் பட வேண்டியதாகிறதே! எனவே “வெறும் filtered அசடாகப் பிரகாசித்தாலாவது, அவருடன் ஒட்டி இருந்தே வாழ்க்கையை ஓட்டிடலாமே!” என்றெல்லாம் சிறுவன் வழக்கம் போல (தப்புக்) கணக்குப் போட்டு எண்ணலானான்! ஆனால் நாளாக, நாளாக, பெரியவர் தம் குருகுலவாசத்தில் “நம்பிக்கையை மனதில் பிடி, குருவை நெஞ்சில் பிடி, கடவுளின் தூதரான சற்குருவை உள்ளத்தில் பிடி!” என்று பிடிமொழி தந்திட்டதுடன் சிறுவன் கண் பார்வையிலிருந்து அடிக்கடி மறையலும் ஆனார். சிக்கெனப் பிடித்து சற்குருவுடன் ஆழ்ந்த நம்பிக்கையைப் பெருக்கிடத்தாமே இந்த சற்குரு லீலைகள் யாவும் என்பதை அவன் முதலில் உணரவில்லை!

அடிக்கடி அவர் மறைந்ததால் தனித்து விடப்பட்ட சிறுவன் அவர் சொன்னதைத் தனக்குத் தானே மீண்டும் உரைத்துக் கொண்டு மனம் தேறினாலும் ஒவ்வொரு முறையும் அவருடைய வாக்கியங்களை மனக் கேணியின் மேற்கொணர்ந்தால் புதுப் புது அர்த்தங்கள் பொலிவதைக் கண்டு பரமானந்தம் கொண்டான்!

எனவே “குரலை மட்டுமே வெளியே வைத்தேன்! உருவை உள் ஒளித்தேனே!” என்ற பாணியில் பெரியவர் இறைப் பாடங்களைத் தற்போது நடத்தலானார். ஆனால் எல்லாவற்றிற்கும் சேர்த்து வைத்தாற்போல் அவரை “விட்ட” தருணங்களுக் கெல்லாம் ஒன்று சேர்த்து வைத்து திருஅண்ணாமலை, திருக்கழுக்குன்றம், வெள்ளியங்கிரி, ராமேஸ்வரம், காசி, கயா, கேதார்நாத், பத்ரிநாத் போன்ற இடங்களுக்குச் செல்கையில் பெரியவருடன நெடுநேரம், நெடுநாள், நெடுவாரம் சேர்ந்திருந்து compensate செய்து கொண்டான் சிறுவன்! Perhaps his Master only delivered such divine compensation!

வெள்ளியங்கிரி மலையில்........

சிறுவனுக்கு வயிறு முதல் தலை, காலெல்லாம் பசி பரவிட.... அப்போதுதான் பெரியவர் மிகவும் சீரியசாக அடிப் பிரதட்சிணம் செய்யலானார்!

எப்போதும் “ஆத்மாவைப் பசி போடாதே, இளவயசுல நிறைய சாப்பிடு, நல்லா, நிறைய இறைத் திருப்பணி பண்ணியாகணும், அதுக்கு உடம்புல நல்ல சக்தி வேணும்!” என்றெல்லாம் உரைக்கும் பெரியவர் அவ்வப்போது, இப்படித் தன்னைக் “காய வைப்பது” ஏனோ என்றுதான் சிறுவனுக்குப் புரியவில்லை! ஆனால் “காய்ந்ததுக்கு” வட்டியும் முதலுமாக ஒட்டு மொத்தமாய் அவர்தம் குருவாய்மொழி வயலில் ஆய்ந்த நல்திருவமுது அறுவடையும் கண்டமையால் வயிற்றுப் பசியை விட அடுத்து வர இருக்கும் ஆன்மீக விருந்தை எண்ணிப் பொறுத்திருந்தான் சிறுவன்.

என்னதான் பசியாக இருந்தாலும், சிறுவன் பெரியவர் செய்கின்ற வழிபாட்டு முறைகளைக் கடைபிடிக்கத் தவறுவதில்லை! ஏனென்றால் ஒரு சில முறை அவர் சொன்னதை, செய்வதை அவன் கோட்டை விட்டு விட்டு நன்றாக “வாங்கிக் கட்டிக் கொண்டதுடன்” மீண்டும் அத்தகைய அரிய தெய்வீக வாய்ப்புகள் பல கோடி யுகங்களுக்குப் பின்னர்தான் கிட்டும் என்பதையும் நன்கு உணர்ந்துள்ளான் அல்லவா!

ஆகாச கங்கை வந்தாள்!

“ரஜத ஜலப் பாளம்னு ஒரு ஆகாச கங்கை இங்க இருக்குடா! ஆகாச கங்கை, பாதாளகங்கை இரண்டையும் இணைக்கற “ஜலப் பாளம்” அது! கலியுகத்துல ஒரு சில தடவைதான் இந்த ஊத்து மேல் பூமி நிலைக்கு ஊறும்! நம்ப அதிர்ஷ்டம், இன்னிக்கு இந்த வெள்ளிக்கிழமையில, சுக்ர ஹோரையில, இந்த ரஜத ஜலப் பாளத்துலேர்ந்து அமிர்த நீர் சுரந்து இந்தக் கோயில் பிரகாரம் புல்லா நனையுது! அதிர்ஷ்டம் இருந்தா அங்கப் பிரதட்சணம், அடிப் பிரதட்சுணம் பண்ணி 72000 நாடி நரம்புகளுக்கு இந்த அமுத பானத்தைச் சேர்த்திடலாம்! ஒண்ணும் சாப்பிடாம விரதத்தோட இந்த நாள்ல இங்க இதைச் செய்யறவங்களுக்குப் பஞ்ச பூத சக்திகள் அபரிமிதமாச் சேரும்!” என்று சொல்லிக் கண்ணைச் சிமிட்டினார் பெரியவர்!

சிறுவனுக்குப் புல்லரித்தது! இந்தத் தெய்வீக ஐஸ்வர்யத்தைப் பொழியவே அவனைப் பட்டினி கிடக்கச் செய்து அரிய விரதமாக்கினாரோ!

“இப்படி மகரிஷிகளே யுக யுகமாய்த் தவம் புரிந்து பெற்ற இறை சக்திகளை ஒரு சில விநாடிகளில் அள்ளித் தருகின்ற சற்குருவையா, பெரியவரையா நாம் திட்டினோம்!”

“ஆனா கலியுகத்துல இவ்வளவு ஆன்மீக பொக்கிஷத்தை அள்ளிக் கொடுத்தாக் கூட இதோட அருமையை யாரும் புரிஞ்சிக்கலையே ராஜா! சற்குரு பின்னாடி சுத்தற உனக்கே பரோட்டா புத்தி தானே அப்பப்ப வேலை செய்யுது!”

சிறுவன் வெட்கத்துடன் தலையைக் குனிந்து கொண்டான்!

வந்தார்கள், தின்றார்கள், (ஆசி) தந்தார்கள்!

ஒருவழியாய் மெதுவாக நடந்து நடந்து இருவரும் ஒரு வேப்ப மரத்தடியை அடைந்தார்கள். வேம்பு, அரசு, ஆல், வில்வம், வன்னி மரம் அருகருகே இருந்த அற்புதமான, புனிதமான காட்சியை அவன் முதலில் பார்க்கவில்லை!

பொட்டலத்தைப் பிரித்து இலையை வேக வேகமாகப் போட்டு,

அன்ன பூர்ணே சதாபூர்ணே சங்கர ப்ராண வல்லபே
ஞான வைராக்ய சித்யர்த்தம் பிட்சாந் தேஹி ச பார்வதீ
மாதா ச பார்வதீ தேவி, பிதா தேவோ மஹேஸ்வர:
பாந்தவாம் சிவ பக்தாஸ் ச ஸ்வதேஸோ புவனத்ரயம்
பிட்சாந் தேஹீ பிட்சாந் தேஹீ பிட்சாந் தேஹி க்ருபா வலம்பனகரி
மாதா அன்னபூர்ணேஸ்வரீ

என்ற ஆதிசங்கரரின் சுலோகம் ஓதி...(சாப்பிடும் முன் ஓத வேண்டிய ஆதி சங்கரரின் பதிகம்)

சாதத்தின் மேல் அவன் கை வை.....

“ஓம் நமசிவாய!”

சிவநாம ஒலி கேட்டுச் சிறுவன் தலையை உயர்த்தினான். கரிய உருவமாக மூன்று பேர் அங்கே நின்று கொண்டிருந்தார்கள்.

பெரியவர் சிறுவனைப் பார்த்தார்!

“அவங்களுக்குப் பசிக்குதா, சாப்பாடு வேணுமான்னு நல்லா கேட்டுக்க!”

அவன் கேட்பதற்குள் அவர்கள் இலையருகே வந்து அமர்ந்து விட்டார்கள்!

“ஆஹா! அதிதிகள் அதுவும் இந்த வெள்ளியங்கிரி மலையில் வந்திருக்கறது நமக்கு ரொம்ப ரொம்ப பாக்யம்! அவங்களுக்கு முதல்ல இலையை போட்டுப் பிரசாதம் வை கண்ணா!”

மூன்றாவது இலையையும் வைத்து இரு பொட்டலச் சாதத்தை ஏதேதோ கணக்குப் போட்டு மூன்று இலைகளிலும் நிரவி மிச்சத்தை மிகுந்த தயக்கத்துடன் எடுத்து வைத்துக் கொண்டான்.

பசிக்கு அன்னம் ஏற்கும் வகையில் (இதுவே அதிதி போஜனம் அக்காலத்தில் இதற்காகவே வீட்டுக்கு வெளியில் திண்ணை கட்டி வைத்திருப்பார்கள்) வந்த அவர்களைக் கண்டு பெரியவரோ மகிழ்ச்சியின் உச்சத்திற்குச் சென்றுவிட்டார். சிறுவனுக்கோ ஒரு கிராம் மகிழ்ச்சி கூட எழவில்லை! ஏனென்றால் அவன் பசிக்கு வேட்டு வைத்தவர்கள் போல் சரியாக மூவர் வந்துவிட்டார்களே! இதே போன்று ஜடாமுடியுடன் காவி கட்டிய பல சாமியார்களை அவன் பார்த்து வந்துள்ளமையால் அவனுக்கு “அதிதி” போஜனம் என்ற conceptஐ அப்போது மனதால் தொட்டுக் கூடப் பார்க்க முடியவில்லை!

“எவரும் எந்த ரூபத்திலும் வந்திடலாம், நாய் ரூபத்தில்தான் பைரவ மகரிஷி அடிக்கடி காட்சி கொடுப்பார்! நந்திச் சித்தர் காளை வடிவத்தில் வருவார்! பித்ருக்கள் காக்கைகளின் ரூபத்தில் வருவார்கள்! எனவே எதையாவது கணக்குப் போட்டுத் தவறான முடிவுக்கு வராதே! ஆனால் அதே சமயத்தில் எவரிடத்திலும் ஏமாந்து விடாதே! இது கலியுகம்! காவி கட்டி ஏமாற்றுகின்ற ஆஷாட பூதிகளும் நிறைய உலா வருவதுண்டு!" என்று பெரியவர் சொல்லி வந்துள்ளமையால் “எவர் புனிதமானவர், உண்மையானவர்” என்று புரியாதவாறு சிறுவன் குழம்பித் திகைத்து நின்று “எது நிஜம், எது மாயை, எது பொய், எது நடிப்பு, எது சத்தியம்னு எப்படி கண்டுபிடிக்கிறது?” என்று கேட்டிட, பெரியவர்,

“தெய்வீகத்துல நீ ஆழ்ந்த நம்பிக்கையோட, நல்ல குருபக்தியோட ஸ்ட்ராங்கா நிலைச்சு நின்னா, அது அது எது எதுன்னு தானாப் புரியுமே!” என்று அருமருந்தாய்க் கூறி எல்லா முடிவுகளையும் அவன் தலையில் கட்டி விடுவார். குருவி மூளை ஆயிற்றே, சிறுவனால் அனைத்தையும் தாங்கிப் புரிந்து கொள்ள முடியுமா?

“அவனவன் குரு கிடைக்கலையே, குரு கிடைக்கலையேன்னு அலையோ, அலைன்னு அலைஞ்சு லட்சோப, லட்சம் பிறவியாகக் கோயில், குளத்தைச் சுத்திச் சுத்தி வர்றான்! ஒரு கோடிப் பேர்ல ஒண்ணு, ரெண்டு பேர்தான் குரு கிட்ட வர்றாங்க! உனக்குன்னு நான் இங்க பூமியில் குருவாட்டம் உலாத்திக் கிட்டு இருக்கேனே; குரு கிடைச்ச பாக்யத்தை வசசுக்கிட்டே கிடுகிடுன்னு தெய்வீகத்துல முன்னேற வேண்டியதுதானே, இதைவிட உனக்கு .......... வேறென்ன வேலை?” பெரியவா சற்றுக் கார சாரமாகவே அதட்டுவார்!

பழைய சோறாய்ப் பழ நினைவுகள் சுவை தந்தாலும்... இப்போதைக்கு மூன்று பேர்கள் குறுக்கே புகுந்து நம் “சாப்பாட்டுப்” பங்கைத் தட்டி செல்கின்றார்களே என்றே குமைந்தான் சிறுவன்!

மூவரும் ஜம்மென்று உட்கார்ந்திட, சிறிதளவே உணவைப் பரிமாறிய உடனேயே அவர்கள் “போதும் போதும்,” என்று சொல்லிட, சிறுவனுக்குப் பரம சந்தோஷம்! மிச்ச உணவை உலக மகா ஆனந்தத்துடன் எடுத்து வைத்ததும் இல்லாமல் பெரியவரையும் ஓரக் கண்ணால் பார்த்து நமுட்டுச் சிரிப்பையும் அதில் பொரித்து வைத்தானே!

பெரியவரோ கலகலவென்று மலையெங்கும் எதிரொலிக்கும் வண்ணம் சிரித்திட, சிறுவன் கோபத்துடன் அவர் சிரித்த திசையை நோக்கிட.... அவனுக்கு அழுகையே வந்து விட்டது.

ஆம்! இன்னும் இருவர் வெகு வேகமாக வந்து கொண்டிருந்தார்கள்!

சிறுவனுக்கு வெல வெலத்துவிட்டது, மயக்கம் வராத குறைதான்!

“வாங்கோ, வாங்கோ, சீக்கிரமா வாங்கோ!”

ஆம்! பெரியவர்தான் குதூகலத்துடன் அவ்விருவரையும் அழைத்திட,

Penta Divine Bliss @ Pentium Speed!

அவர்கள் வந்தவுடன் பெரியவரே அவர்களுக்கு மிச்சம் இருந்த உணவையும் பகிர்ந்தளித்தார். மிகுந்த சந்தோஷத்துடன் உணவு உண்டு ஐவரும் ஒரு சேர எழுந்து நிற்க, பெரியவர் தடாலென்று அவாகளுடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். சற்றே யோசித்த சிறுவன், “அப்போதைக்கு இப்போதே காலில் விழுந்து வைப்போம்!" என்று எண்ணியவாரே அவர்கள் காலில் வீழ்ந்து நமஸ்கரித்து எழுந்து பார்த்திட...

ஐவரையும் காணோம், காற்றோடு அறுவரானோம் என்பது போலப் பஞ்சாய்க் கரைந்து விட்டார்களோ!

ஆமாண்டா, பஞ்ச ருத்ர சித்தர்கள்னு பேரு! அதனாலத்தான் பஞ்ச பூதங்களையும் பிரிச்சுப் பரவெளியில பஞ்சாய்க் கரைஞ்சு அப்பப்ப ஐக்கியமாய்டுவாங்க! அய்யர்மலை மேல, தடாகத்துப் பக்கத்துல ஒரு குகையில பஞ்ச ருத்ர சித்தர்கள் யோகத்துல இருக்காங்கன்னு உனக்குச் சொல்லி இருக்கேனே! அவங்க பூலோகத்துக்கு வர்றது அபூர்வமோ அபூர்வம்! பல கோடி சதுர் யுகத்துக்கு ஒரு முறைதான் பூமிக்கு வருவாங்க!”

சிறுவர் இப்போது அவர்கள் அமர்ந்த இடத்தை மிகுந்த புனிதத்துடன் பார்த்தான்! அங்கு சிந்தியிருந்த ஒரே ஒரு உணவுப் பருக்கையை.... பெரியவர் மிகவும் பயபக்தியுடன் எடுத்திட,

சிறுவன் ஆவென்று வாயைக் காட்டிட...

“டொக்” கென்று பருக்கையை வாயில் போட்டார் பெரியவர்!

ஆம் தன் வாயில்தான்! சிறுவனின் வாயில் அல்ல..... !

“உனக்கு எதுக்குடா பிரசாதம்? உனக்குத்தான நம்பிக்கையில்லையே! எங்க நம்ப பங்குக்கு வந்துட்டாங்களேன்னுதானே நினைச்சவனாச்சே! நீயே மனசாற அவங்களுக்குப் பிரசாதம் போட்டிருந்தா அவங்க பிரசாதம் உனக்குத் தானா கிடைச்சுட்டிருக்குமே!”

ஆனால்..... ஆங்கே பெரியவர் பருக்கையை விழுங்கிய உடன்… இங்கே சிறுவனுக்கு அறுசுவை உண்டியை நன்கு “சாப்பிட்டாற் போல்” வயிறு, கமகமவென்று நறுமணத்துடன், ருசியுடன் நிறைந்தது! பாயசம், வடை, அப்பளம் சகிதம் எக்கச்சக்கமாக உண்டாற் போல் உடல், மன, உள்ள நிறைவு அவனுள் பரிமளித்தது!

சிறுவன் (வழக்கம் போல்) தலையைக் குனிந்து கொண்டான். பெரியவரிடம் மன்னிப்புக் கோரலாமென்று அவன் தலையைத் தூக்கிட......!

அதற்குள் அவரோ…

விடுவிடுவென்று மலையிலிருந்து கீழிறங்கி எங்கோ போய்க் கொண்டிருந்தார்!

சித்தன் போக்கு சிவன் போக்கு தானே!

பைரவ வாகனம்

அனலாட்டுத் தூண்டியான் பைரவ வாகன மூர்த்தி
ஆக்நேய வரமால்ய பைரவ வாகன மூர்த்தி

அட்டைப் படத்தில் இருப்பது ஏதோ வெளிநாட்டு நாய் வகை என்ற சாதாரணமாகக் கருதாதீர்கள்! அனைத்து உயிரினங்களுக்கும் தாயகம் நம் புனிதமான பாரத பூமியே! இங்கிருந்தே, உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஜீவன்கள் நிரவினர்! ஏனெனில் படைப்பின் போது ஒரே நாடு, ஒரே குலம் என பரிபூரண ஜீவத்வம் பொலிந்த ஆன்மீகத் தலைநாடு இது! இன்றைக்கும் நம் பாரத நாட்டில் தெய்வீக சக்திகள் பரந்து, விரிந்து, நிறைந்து உள்ளன! ஆனால் இவற்றை எடுத்துரைக்க வல்ல இறைத் தூதுவராம் சற்குருவை நம்பிக்கையுடன் நாடுதல் வேண்டுமே! நம்பிக்கைப் பஞ்சம்தானே நாட்டில் பெருத்து வருகிறது!

ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் வெளிவரும் ஒவ்வொரு அட்டைப் படத்திற்கும் ஆயிரமாயிரம் தெய்வீக விளக்கங்கள் உண்டு! இவை வெறும் ஓவியமாகவோ, கம்பயூட்டர் வரை படமாகவோ (Digital graphics) மட்டும் உங்களுக்குத் தோன்றிடலாம். ஆனால் ஒவ்வொரு படத்தின் அமைப்பும், வடிவும் சற்குருவின் அருட்பார்வையில் உருவாவதும், பலவிதமான பூஜைகளுக்குப் பிறகு இறைப் பெருங்கருணையால் அச்சு வடிவம் பெறுவதுமாகும் என நன்றாக உணர்தல் வேண்டும்.

நேத்ரப் புண்ய சக்தியின்றி நீங்கள் அட்டைப் படச் சிவப்பினையோ, அதன் வடிவுப் படிவுகளையோ உங்களால் காண இயலாது. எனவே நாம் ஒவ்வொரு விநாடியும் பார்த்து, கேட்டு, எண்ணி, உணர்ந்து, ஆக்கத்துடன் வாழ்வது பித்ருக்களின் கருணை, பூர்வ ஜன்ம புண்ய சக்தி, பெரியோர்களின் ஆசியால்தாம் என்று உணர்க!

ஸ்ரீமுருகப் பெருமான் வயலூர்

நாய்களுக்கு எம பகவானையும், யம தூதவர்களையும் காணும் சக்தி உண்டென நாம் நன்கு அறிவோம். நாய் வகைகள் ஒவ்வொன்றும் மனித குலத்திற்குப் பலவிதமான ஆத்ம போதனைகளைத் தருகின்றன. மனிதனை விடப் பல்லாயிரம் மடங்கு நுகர் வானை சக்தியைக் கொண்டவையே நாய்கள்! மனிதனால் கண்டுபிடிக்க முடியாத திருடனின் தடம், வெடிகுண்டு, மருந்து, போதைப் பொருட்கள் ஆகியவறறை நாய்கள், தம் நாசி சக்தியால் அறிகின்றன என்றால் மனிதனை விட பலவிதங்களில் அபாரமான யோக சக்திகளைக் கொண்டதுதானே நாய்க் குலம்!

தாவரங்கள், விலங்குகள், புல், பூண்டு, பூச்சிகள், வண்டுகள் என லட்சக் கணக்கான ஜீவன்களைப் படைத்து, பகுத்தறிவை மட்டும் இறைவன் மனித குலத்திற்கு அளித்தது ஏனெனில் ஒவ்வொரு ஜீவ ராசியிலும் பொதிந்திருக்கும் ஆத்ம மகத்துவத்தை உய்த்து உணர்ந்து ஏனையோர்க்கும் உணர்த்திடவே! ஆனால் நாய்க் குலத்திடம் நயந்த பல தெய்வீக மகத்துவங்கள் நிறைந்திருக்க, மனித குலமோ வெறும் காவலுக்காகவும், திருடனைப் பிடிப்பதற்கும், உளவு பார்ப்பதற்கும், பயங்கரமான வெடி குண்டுகள் மற்றும் உடலைக் குட்டிச் சுவராக்கும் போதை மருந்துகளை நுகர வைப்பதற்குமாகத் தவறாகவும், கேவலமாகவும் நாய்க் குலத்தைப் பயன்படுத்தி இழிவுபடுத்துகின்றதே, என் செய்வது?

பிரபஞ்ச ஜீவ மையம் தென்னாடுடைய பாரதமே!

அனைத்து ஜீவன்களுக்குமான ஜீவ சக்தி அணுக்கள் நிறைந்திருக்கும் சிருஷ்டி ஜோதிக் கும்பம் பொலிவது நம் பாரதத் திருமண்ணில், அதுவும் தென்னாடுடைய சிவநாட்டில், நம் தமிழகத்தின் கும்பகோணத்தில்தாமே! எனவே அனைத்து சிருஷ்டிப் படைப்புகளுக்கும் மூலாதாரமாகத் துலங்குவது நம் பாரத பூமியே! ஆதி கால சனாதன தர்ம நாட்டில் ஜாதி, மத, இன, குலம் , நாடு என வேறுபாடுகள் நிலவியது கிடையாது! மக்கள் உன்னத தெய்வ பக்தியுடன் சத்ய நெறியுடன் வாழ்ந்தனர். இத்தார்மீக சனாதன தர்ம நிலை தற்போது மக்கள் குலத்தைவிட, மாக்கள் மற்றும் தாவர குலத்தில்தாம் நன்கு துலங்குகின்றது. விலங்கினங்களையும் மனித குலம் அடிமைப் படுத்தி, கொடுமைகளைத் தந்து, இம்சைகளைக் கூட்டிக் கூண்டில் அடைத்து, அவதிப்படுத்துவதால் அவற்றுள் சில மனிதர்களைச் சபித்து விரக்தி கொள்ளும் நிலைக்கு ஆளாகின்றன. விலங்குகளை அடைத்து வேடிக்கைப் பார்த்தலும் கலியுகத்திற்கு வேதனைக் கர்மங்களைக் கூட்டும் செயலே ஆகும். உலகெங்கும் உள்ள இந்நிலையைக் களைந்திட வேண்டும்!

எனவே வெளிநாட்டு நாய்கள், உள்நாட்டு நாய்கள் என்ற பேதமும் எப்போதும் கிடையாது! அவ்வாறு இருப்பின் அது மனித குலத்தின் மிருக இனப் பகுப்பேயாம்!

சனாதன தர்ம நாட்டின் தெய்வீக மையமாகத் துலங்கிய இப்புனிதமான பாரத பூமியில் இருந்துதாம் ஆன்மீகக் கதிர்கள் பிரபஞ்சமெங்கும் நிரவுவதே பிரபஞ்சத்தின் தெய்வீக மையமாம் நம் பாரதத் திருநாட்டின் பெருஞ் சிறப்பாம்!

இவ்விதழின் அட்டைப் படத்தில் நாம் காண்பது அனலாட்டுத் தூண்டியான் (ஆக்நேயவரமால்ய பைரவ வாகன மூர்த்தி) என்ற வகையிலான பைரவ வாகன மூர்த்தியாம்! இவ்வகை யாவும் அக்னி பைரவ லோகத்தில் இருந்து வடிவு, பிறப்பு, ஜீவ அம்சம் கொள்பவை! மிகவும் அறிவுக் கூர்மை உடையன! எத்தகைய பணிகளிலும் ஆழ்ந்த கவனம், நிதானத்தோடு செயல்பட்டு அன்பைப் பெருக்கும் சக்தி கொண்டவை! ஆடு, வாத்து மந்தைகளை அன்போடு அடக்கிக் மேய்த்துக் காக்கும் பண்புடையவை! பிற ஜீவன்களுக்குத் துன்பம் வராது காக்கும் நற்பண்புகளைக் கொண்டவை.  அக்னி அம்சம் பூண்டவை ஆதலின் செவ்வாய் கிரக மூர்த்தியைப் பூஜித்து அரிய சித்திகளைப் பூண்டவை.

மனித குலத்தை நாசப்படுத்தும் கொடிய சக்திகளுள் அகங்காரமும் ஒன்றாகும். இதில் நபுநங்கு எனும் ஒரு வகை அகங்காரமே கலியுகத்தில் கொடிய அரக்கத் தனம் கொண்டதாம். நல்லவர்களும்கூட சில சமயங்களில் “நபுநங்கு” அகங்காரத்தில் சிக்கித் தவிப்பா். இந்த அகங்காரத்தை நிவா்த்தி செய்யும் வல்லமை அனலாட்டுத் தூண்டியான் (ஆக்நேயவரமால்ய பைரவ வாகன மூர்த்தி) என்ற பைரவ வாகன மூர்த்திகளுக்கே உண்டு.

வியர்வையை நாக்கால் சொட்டி நாய்கள் களைப்பாறுவதைப் பார்த்திருப்பீர்கள்! வெறும் வியர்வை மட்டும் அல்ல அது! நாய் வடிக்கும் “நாய்ச் சுர நீருக்குப்” பல தத்வார்த்தங்கள் உண்டு. இந்த வகை நாய்களின் நாக்கிலிருந்து சுரக்கும் திரவம் “மெந்தால்” தன்மைபோல காற்றில் சட்டென்று கரையும் வாயுச் சுடர் சக்தியைக் கொண்டது! சிலந்தியின் எச்சிலில் உருவாகும் கூடு பல மருத்துவ சக்திகளைக் கொண்டது என நாம் அறிவோம்! யானையின் சுவாசக் குழாய் திரவம் பல ஆன்ம (சுழு முனை) சக்திகளைக் கொண்டது என்பதால்தாம் நம் தலையில் யானையின் ஆசியைப் பெறுதல் புனிதத்தைத் தருகிறது.

நபுநங்கு எனும் அகங்காரமானது சொத்து, பதவி, வீடு, பூமி சம்பந்தப்பட்டதால் இவை சுரக்கும் திரவம், யோக நாசிச் சுவாசம் அனலாட்டு சக்தியைத் தருவித்துப் பூமியை நனைத்துப் புனிதம் கூட்டி அகங்காரத் துன்பங்களை நீக்குகின்றது. காசியில் ஆதி சங்கரருக்கு அரிய தெய்வீக சக்திகளை உணர்வித்திட இறைவனே நாய்களுடன்தானே நேரில் வந்தார். தமிழகத்தில் “மாகாளம்” புராணத்தில் (சோமாசி நாயனார் சரிதம்) இறைவன் நாய்களுடன்தானே பூமியில் பவனி வந்தார்.

"நபுநங்கு" அகங்காரம் நசியட்டும்!

ஸ்ரீஅக்னீஸ்வரர் திருக்காட்டுப்பள்ளி

“நபுநங்கு” அகங்காரத்தால் ஆட்டம் போடுவோர் “தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளி விடும்” சண்டை மூட்டிகள் ஆவர். நன்றாக அன்போடு பழகி இருப்பவர்களோடு சண்டை மூட்டி இழிந்த இன்பம் காண்பார்கள். சமாதானம் செய்கிறேன் என்ற பாணியில் இருபுறமும் ஆதாயம் தேடும் தீவினையாளர்கள் இவர்களே! உயரதிகாரிகள் மென்மை மனம் படைத்தவர்களாய், அதிலும் குறிப்பாக, பெண்களாய் இருப்பின் அவர்கள் குறிப்பறிந்து, குறைபாடுகளை அறிந்து இச்சந்தர்ப்பவாதிகள் திறமையாக ஆஷாடபூதி போல் பொய்மையாக நாடகமாடி அவர்களைத் தம் சொற்படி நடக்க வழிவகை செய்து கொள்வார்கள்.

எனவே அனைத்து உயரதிகாரிகளும், குறிப்பாகப் பெண் அதிகாரிகளும், தொழிற்சாலை அதிபர்களும் தங்கள் தலைமைக்கோ, பதவிக்கோ, துன்பம் வராமல் காத்திட அனலாட்டுத் தூண்டியான் பைரவ வாகன மூர்த்தியை வாகனமாகக் கொண்ட தேயு (அக்னி) அம்சங்கள் நிறைந்த ஸ்ரீபைரவ மூர்த்திக்கு ஸ்ரீஅஷ்ட பைரவ தூபம் ஏற்றி, தூபம் சாந்தமடையும் வரை, ஆலயத்தை வலம் வந்து துதிக்க வேண்டும். முழு முந்திரிகளுக்கு இடையே திராட்சை (காய்ந்த கிஸ்மிஸ் வகை) 51, 102, 1002 என்ற எண்ணிக்கையில் வைத்துக் கோர்த்து மாலைகளாக்கிச் சார்த்தி வணங்கி வருதல் வேண்டும். இத்தகைய பைரவ மூர்த்திகளை, தேயு (அக்னி)த் தலங்களில் தரித்திடலாம்.

அக்னீஸ்வரத் தல பைரவரே அகங்காரம் களைவார்!

பஞ்ச லிங்கத் தலங்களில் தேயுத் தலமான திருஅண்ணாமலை மற்றும் வயலூர், கஞ்சனூர், திருக்காட்டுப்பள்ளி போன்று “அக்னீஸ்வரராக” ஈஸ்வரன் அருள்பாலிக்கும் தலங்களில் உள்ள பைரவருடைய வாகன மூர்த்திகள் யாவரும் அனலாட்டுத் தூண்டியான் பைரவ வாகன மூர்த்தி (ஆக்நேய வரமால்ய பைரவ வாகன மூர்த்தி) ஆவார்.

வசந்த ருதுக் காலத்தில் (சித்திரை, வைகாசி) இவ்வகை நாய்களுக்கு பைரவ சக்தி அபரிமிதமாகப் பொங்கிடும். எனவே சித்திரை, வைகாசி மாதங்களில் அஷ்டமி, எட்டாந் தேதி, கரி நாட்கள், மற்றும் அமாவாசை தினங்களிலும், தினந்தோறும் செவ்வாய் ஹோரை நேரங்களிலும் மேற்கண்ட தலங்களில் அபிஷேக ஆராதனைகளுடன் ஸ்ரீபைரவரை வழிபடுவது நபுநங்கு வகை அகங்காரத்தைத் தீர்ப்பதுடன் இவ்வகை அகங்கார அரக்கர்களிடமிருந்து நம்மை ரட்சிக்கும். அலுவலகத்தில், வியாபாரத்தில் நிலவும் குரோத, விரோதக் கொடுமைகளைத் தீர்க்க வல்ல இந்நாட்களில் நாய்களுக்கு ரஸ்க், பொறை, பிஸ்கட், முந்திரி வகை உணவுகள் (பக்கோடா) போன்றவற்றை அளித்து வர பைரவ ப்ரீதி கிட்டும்.

தன்னை “அபலை, அநாதை, ஆதரவற்ற ஜன்மம்” என்று எண்ணி எண்ணி வேதனையுடன் வாழ்வோர் தக்க நிவர்த்திகளைப் பெற தேயுத் தல பைரவ மூர்த்தியின் அனுகிரகத்தைப் பெற வேண்டும். இப்பூஜா பலன்களாக நபுநங்கு வகை அகங்காரம் உடையோரும் திருந்தி இத்தீய சக்தியிலிருந்து விடுபடுவர்.

தேவாரப் பதிகம்

ஸ்ரீசுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரப் பதிகம்
திருப்பாண்டிக் கொடுமுடிப் பதிகம்

நமனை அஞ்சாது தெய்வப் பற்றுடன் வாழத் துணை புரியும் பதிகம்

எப்போதும், எந்நேரமும் ஓதிடலாம்

சடலச் சடங்குகள், தகனக் கிரியைகள், ஈமச் சடங்குகளின்போது சத்சங்கமாகப் பலரும் கூடி ஒன்று சேர்ந்து ஓதிடில் காலமானோர்க்குத் தக்க ஆன்ம சாந்தி கிட்டும்.

மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப்பாத மேமனம் பாவித்தேன்
பெற்ற லும்பிறந் தேன்இனிப்பிறவாத தன்மைவந் தெய்தினேன்
கற்றவர் தொழு தேத்துஞ் சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்றவா உனை நான்ம றக்கினும் சொல்லும் நாநமச்சி வாயவே.   1

ஸ்ரீஆதிநாதர் வயலூர்

இட்ட னும்மடி ஏத்து வார்இகழ்ந்திட்ட நாள்மறந் திட்டநாள்
கெட்டநாள்இவை என்ற லாற்கருதேன்கி ளர்புனற் காவிரி
வட்ட வாசிகை கொண்டடிதொழுதேத்து பாண்டிக் கொடுமுடி
நட்ட வாஉனை நான்ம றக்கினும் சொல்லும் நாநமச்சி வாயவே.   2

ஓவு நாள்உணர் வழியும் நாள்உயிர் போகும் நாள்உயர் பாடைமேல்
காவு நாள்இவை என்ற லாற்கரு தேன்கி ளர்புனற் காவிரிப்
பாவு தண்புனல் வந்தி ழிபரஞ்சோதி பாண்டிக் கொடுமுடி
நாவ லாஉனை நான்ம றக்கினும் சொல்லும் நாநமச்சி வாயவே.   3

எல்லை யில்புகழ் எம்பி ரான் எந்தை தம்பி ரான்என்பொன் மாமணி
கல்லை உந்தி வளம்பொ ழிந்திழி காவிரி யதன் வாய்க்கரை
நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி
வல்ல வாஉனை நான்ம றக்கினும் சொல்லும் நாநமச்சி வாயவே.   4

அஞ்சி னார்க்கரண் ஆதி என்றடி யேனும் நான்மிக அஞ்சினேன்
அஞ்சல் என்றடித் தொண்ட னேற்கருள் நல்கி னாய்க்கழி கின்றதென்
பஞ்சின் மெல்லடிப் பாவை மார்குடைந் தாடு பாண்டிக் கொடுமுடி
நஞ்ச ணிகண்ட நான்ம றக்கினும் சொல்லும் நாநமச்சி வாயவே.   5

ஸ்ரீஆதிநாயகி வயலூர்

ஏடு வான்இளந் திங்கள் சூடினை என்பின் கொல்புலித் தோலின்மேல்
ஆடு பாம்பத ரைக்க சைத்த அழக னேஅந்தண் காவிரிப்
பாடு தண்புனல் வந்தி ழிபரஞ் சோதி பாண்டிக் கொடுமுடிச்
சேட னேஉனை நான்மறக்கினும் சொல்லும் நாநமச்சி வாயவே.   6

விரும்பி நின்மலர்ப் பாத மேநினைந் தேன்வி னைகளும் விண்டனன்
நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெ ழில்பெற நின்ற காவிரிக் கோட்டிடைக்
குரும்பை மென்முலைக் கோதை மார்குடைந் தாடு பாண்டிக் கொடுமுடி
விரும்பனே உனை நான்ம றக்கினும் சொல்லும் நாநமச்சி வாயவே.   7

செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரம் தீயெ ழச்சிலை கோலினாய்
வம்பு லாங்குழ லாளைப் பாகம் அமர்ந்து காவிரிக் கோட்டிடைக்
கொம்பின் மேற்குயில் கூவ மாமயில் ஆடு பாண்டிக் கொடுமுடி
நம்ப னேஉனை நான்ம றக்கினும் சொல்லும் நாநமச்சி வாயவே.   8

சார ணன்தந்தை எம்பி ரான் எந்தை தம்பி ரான்எம்பொன் மாமணியென்று
பேரெ ணாயிர கோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார்
நார ணன்பிர மன்தொ ழுங்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடிக்
கார ணாஉனை நான்ம றக்கினும் சொல்லும் நாநமச்சி வாயவே.   9

கோணி யபிறை சூடி யைக்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி
பேணி யபெரு மானைப் பிஞ்ஞகப் பித்த னைப்பிறப் பில்லியைப்
பாணு லாவரி வண்ட றைகொன்றைத் தார னைப்படப் பாம்பரை
நாண னைத்தொண்டன் ஊரன் சொல்இவை சொல்லு வார்க்கில்லைத் துன்பமே.   10

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

சித்ரபானுவில் ஸ்ரீபைரவ வழிபாடு

பைரவ வழிபாடு என்பது கலியுகத்திற் மிகமிக முக்கியமானதாம். பூமியின் எட்டுத் திக்குகளையும் அஷ்ட திக்கு பாலகர்கள் நின்று காத்திட, ஆதிசேஷனும் பூமாதேவியும் பூமியைத் தாங்கிட இவ்விதமான நாம் அறியாத வகையில் நடக்கும் பல தெய்வீக நிகழ்ச்சிகளுக்கு இடையேதாம் நாம் மனித வாழ்க்கையை மேற்கொண்டு இருக்கின்றோம். ஆனால் தெய்வீக உணர்வு மனதில் பரிணமித்துக்கொண்டே இருந்தால்தானே முழுமையான தெய்வீக வாழ்க்கையை நாம் பெற முடியும். இல்லாவிடில் “பகல் வருகிறது, இரவு போகிறது” என்று “ஒரே மாதிரியாக” இயந்திர கதியாகவே வாழ்க்கை போய்க் கொண்டிருக்கும்.

தினந்தோறும் காலையும் மாலையும் தர்பைப் பாயில் அமர்ந்து சற்று நேரம் ஆத்ம விசாரமும், தியானமும் செய்தால்தானே ஒவ்வொருவருக்கும் “நாம் தெய்வீகத்தில் எங்கு, எந்நிலையில் இருக்கிறோம்” என்று புரிய வரும்? “காலத்தின்” மகிமை தெரிய வந்தால்தானே “காலத்தை” விரயமாக்காது பெறுதற்கரிய மானுட வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் தெய்வச் சிந்தனையில் செலுத்திட முடியும்? நம்முடைய கர்மவினைக்கு ஏற்பவே இன்ப, துன்பங்களை நாம் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றோம் என்பதை அறிய வைத்திடவும், நம் வாழ்க்கைக்கான இறை இலட்சியத்தை உணரவைத்து அடைந்திடவும் ஸ்ரீபைரவ வழிபாடு இன்றியமையாததாம்.

ரேகைகள் சங்கல்ப பாவனைகளே!

ஒவ்வொருவரும் இந்தப் பிறவியில் இன்ன நற்காரியங்களை முடித்திட வேண்டும் என்ற சங்கல்பங்களுடன்தான் பிறவி எடுக்கின்றார். இவைதாம் தலைச் சுழியிலும், கைகளின், பாதங்களின் ரேகைளில் பதித்துப் பிறவிச் சங்கல்பங்களாக முத்திரைகளாகப் பதித்து உடலோடு உறைவதாய் அனுப்பப்படுகின்றன! காலை எழுந்தவுடன் கை ரேகைகளைத் தரிசித்தல், கோயில்களில் அடிப் பிரதட்சிணம் செய்து பாத ரேகைகளுக்கு ஆன்மப் புத்துணர்வு அளித்தல். ஆண்கள் புதன், சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும் எண்ணெய் நீராடல் போன்றவை நம் பெரியோர்களால் அளிக்கப்பட்டுள்ள “முச்சுடர் ரேகை ஆக்க” பூஜைகள் ஆகும். இந்நாட்களில் குறித்த ஹோரைகளில் ஸ்ரீபைரவரைப் பூஜித்தல் விசேஷமானதாம்.

புதன்               -  புத ஹோரை நேரம் (காலை 6-7 மணி, பகல் 1-2 மணி)
சனி                  -  சனி ஹோரை நேரம் (காலை 6-7 மணி, பகல் 1-2 மணி)
செவ்வாய்    -  செவ்வாய் ஹோரை நேரம் (காலை 6-7 மணி, பகல் 1-2 மணி)
வெள்ளி          -  சுக்ர ஹோரை நேரம் (காலை 6-7 மணி, பகல் 1-2 மணி)

ஆகியவை சங்கல்பச் சுடர்கள் பரிணமிக்கும் நேரமாம். அதாவது இந்த ஹோரை நேரங்களில் பைரவ மூர்த்தியே அவரவருடைய பிறவிச் சங்கல்பத்தை நினைவுறுத்துகின்றார். இவை சங்கல்ப தைல சாங்க்ய காலமாகப் போற்றப்படுகின்றன. இந்த நான்கு நாட்களில் மேற்குறித்த ஹோரைகளில் ஸ்ரீகாலபைரவ வழிபாடு மிகவும் சிறப்புடையதாம். கடுமையான நோய்களால் மனக் கொந்தளிப்புடன் வாழ்வோர்க்கு சாந்தத்தைத் தர வல்லதாம்.

சித்ரபானு தமிழ் புத்தாண்டு மகத்வம்

பானு என்றால் சூரியன்! எனவேதான் ஆதித்யனாகிய சூரியன் தினமும் பாஸ்கரக் கதிர்களை, ரவீந்த்ர கிரணங்களைப் பெய்து, நம்மை வாழ்விக்கும் முகத்தான், வாரத்தின் முகமாக விளங்கும், ஞாயிறாகிய சூரியனுக்கு உரித்தான தினமாக பானு வாரமாகிய ஞாயிறு அமைந்தது. “ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்”, என்று ஸ்ரீசூரிய நாராயண சுவாமியைப் போற்றியே நம் தினப் பொழுதைத் தொடங்க வேண்டும். பன்முறை ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் படம் போட்டு விளக்கி வந்துள்ள “பாசாங்குலி முத்திரை" இட்டுக் காலை, மதியம் (அபிஜித் முகூர்த்த நேரம்) மாலைப் பொழுதுகளில் சூரியக் கதிர்களைத் தக்க முத்திரைப் பாதுகாப்புடன் தரிசித்து வணங்கி வருதல் வேணடும். இதனை முறையாகக் கடைபிடித்து வந்தால் “காட்ராக்ட்” நோய் வராது தடுப்பதுடன் இதர கண்வகை நோய்களுக்கும் நல்ல தீர்வுகளைப் பெறலாம்.

சூரியப் பகழிச் சித்தர்

ஒரு யுகத்தில் சூரிய மண்டலத்தின் உஷ்ணத்தைத் தாங்கியவராய், சூரிய ரதத்தின் ஈடு இணையற்ற வேகத்திற்கு ஈடு கொடுத்தவராய், சூரிய பகவானின் ஆதித்ய லோகத்திற்கே சென்று அரிதற்கு அரிய வேதங்களைக் கற்ற ஞானமுனியாய் எப்போதும் பிரகாசிக்கும் ஸ்ரீயாக்ஞவல்கிய மகரிஷியே, பல பாஸ்கர லோக யோகிகள், மகரிஷிகளின் பெருந் துணையுடன், ஓர் அரும் படைப்பாக இப்பாசாங்குலி முத்திரையை சூரியப் பகழிச் சித்தரிடமிருந்து நமக்குப் பெற்றுத் தந்துள்ளார். இதை நாம் பெற்ற ஆண்டே ஒரு யுகத்தின் சித்ரபானு ஆண்டுப் பிறப்பாகும். எனவேதான் அனைத்துக் கோடி விண் கோள்கள், நட்சத்திர மண்டலங்களுக்கும் இமைப் பொழுதில் சென்று வர வல்ல, சூரிய சக்திகள் நிறைந்த “சூரியப் பகழிச்” சித்தரும்

“சித்திரை முத்திரை எத்திரை பத்திரை
நித்திரை புத்திரை மித்திரை வித்திரா!”

என்று பரிபாஷை ஞான சூரிய சூத்திரப் பாடலாக அளிக்கின்றார். தினமும் சூரிய நமஸ்காரம் மற்றும் சந்தியாவந்தன வழிபாடுகளை முறையாக அறியாதோர், அறிந்தும் செய்யாதோர், சித்ரபானு வருடத்திலிருந்தாவது தக்க யோக முத்திரையான பாசாங்குலி முத்திரையிட்டு “சூரியப் பகழி” தமிழ் வேத மந்திரத்தை ஓதி வருதல் வேண்டும்.

கைரேகைகள், உள் விரல் பகுதியில் உள்ள வளையங்கள் யாவும் ஒவ்வொரு வழிபாடு, யோகம், ஹோமம் போன்ற விதவிதமான நெறி முறைகளில் பங்கேற்கின்றன. பாசாங்குலி முத்திரையில் வலது கை ரேகைகள், விரல் உள் வளையங்கள் சூரியனை நோக்கியும், இடது கை ரேகைகள், விரல் உள் வளையங்கள் சூரியக் கலயமான கண்களை ஒட்டியும் அமைந்து “ஆடிப் பகழியாய்” அமைகின்றன.

சூரியப் பகழி சுலோக விளக்கம்

“சித்திரை முத்திரை எத்திரை பத்திரை
நித்திரை புத்திரை மித்திரை வித்திரா!”

சித்திரை முத்திரை எத்திரை - எந்த சித்திரை முத்திரையானது எந்தத் திரையில் பத்திரையாக (பத்து விரல்கள் வாயிலாக வாயுக்களின் தசபந்தன மூடியாக) உள்ளதோ, அந்த முத்திரா யோகம் மூலம்

நித்திரை - (ஆன்மமாய்) அந்த மாய மயக்கத்தில் இருந்து விடுபட்டு

புத்திரை - வழிவழியாய்

மித்திரை - எத்தகைய விருப்பு அல்லது சத்துரு (பகைமை) பங்கங்கள் இன்றி மித்திரமாய்

வித்திரா - உயிர் வித்தாக ஜீவன்களுக்கு அமையும் கிரணங்களை அளிக்கும் சூரியக் கடவுளைப் போற்றுவோம்!

சித்திரங்களில் பலவகை உண்டு! கண் ஒளி கொண்டு வரையப் பெற்ற சித்திரங்களைப் (கண்களால்) பார்ப்பதால்தான் சித்திரம் புலப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டிலும் ஒவ்வொரு வகையில் இறைச் சக்திகள் எளிதில் பரிணாமம் பெறும். சித்திரபானு ஆண்டில் சித்திரக் கிரணங்களின் வடிவில் இறைச் சக்திகள் நன்கு பரிணாமம் பெறுவதால் இதற்குரிய இறைச் சாதனங்களை இவ்வாண்டில் அறிந்து கடைபிடித்து நாம் பயன் பெறுதல் வேண்டும்.

சித்திரை வந்தாள்!

ஒரு யுகத்தில் சித்திரா தேவி கடும் தவம் பூண்டு, சூரிய மண்டலம் அருகே “பாசாங்குலி” முத்திரையிட்டுச் சூரிய பகவானை வேண்டி, சந்திர பகவானின் பத்னியாகும் தெய்வீக அனுகிரகத்தைப் பெற்றார். சித்திரை தேவி இட்ட பாசாங்குலி முத்திரையில் இருந்து ஒளிர்ந்த கிரணங்கள் பல வண்ணங்களைப் பூண்டு பூமியை அடைந்தன. பூமியை அடையும் சூரிய, சந்திர, ஏனைய கோள்களின், நட்சத்திர ஒளியில் பூத்திருக்கும் வண்ணங்களில் ஏழு வகைகளைத் தாம் நம்மால் காண முடிகின்றது. நம் கண்களால் பகுத்தறிய இயலா எண்ணற்ற வண்ணங்களைக் காணும் சக்தியைப் பெற்றுத் தரும் இறைச் சாதனங்களுள் ஒன்றே பாசாங்குலி முத்திரையாம்! எனவே இதனைச் சித்தர்கள் “சித்ரபானு முத்திரை” என்றும் அழைக்கின்றனர்.

சித்திரை மாதம் பிறக்கும் நேரத்தில் அதாவது 14-4-2002 அன்று சூரிய பகவான் மேஷ ராசியில் நுழையும் புனிதமான நேரத்தில பாசாங்குலி முத்திரை இட்டவாறு ஸ்ரீகாயத்ரீ மந்திரம், சூரியப் பகழி ஸ்லோகம் ஓதியவாறு,
1.சூரியன் வழிபட்ட இடங்களில் மூல லிங்கத்தைத் தரிசிப்பதும்
2. சூரிய நாராயண மூர்த்தியாக இறைவன் அருளும் தலங்களில் தல மூர்த்தியைத் தரிசிப்பதும்
3. சூரியனை (முத்திரையுடன்) தரிசிப்பதும் முக்கியமானதாகும்.

ஸ்ரீகீழ்சூரியமூலை

இறைச் சக்தி கூட்டும் சாதனங்கள்

இந்நாளில், இந்நேரத்தில் (மேஷத்தில் சூரிய பகவான் படரும் காலத்தில்) 60 ஆண்டுகளுக்கு ஒரு முறையே எழுகின்ற அற்புதமான சித்ரபானுக் கிரணங்களின் அரிய தெய்வீக சக்திகளைப் பெற்றிடலாம்.

1. மருதாணி இட்ட கரங்கள்
2. தங்க, வைர, நவரத்தின மோதிரங்கள் அணிதல்
3. மிருதுள மணி கங்கண் (மணிக்கட்டுக் காப்பு) அணிந்திருத்தல்
4. மோதிர விரலில் தர்பையாலான பவித்ரம் அணிந்திருத்தல்
5. பஞ்ச கச்சம், மடிசார் முறையில் உடை தரித்தல்
6. குடும்பத்துடனும், சத்சங்கமாகவும் பலரும் ஒன்றாகக் கூடி முத்திரை  இட்டு சூரியத் துதிகளை ஓதித் தரிசித்தல்

போன்றவை யாவும் முத்திரா தரிசன‌ப் பலன்களை மேம்படுத்தும்.

1.கும்பகோணம் - கஞ்சனூர் - துகிலி - திரைலோக்கி அருகில் உள்ள கீழ் சூரிய மூலை ஸ்ரீகோடி சூர்யப் பிரகாசர் ஆலயம்
2.கும்பகோணம் வலங்கைமான் அருகில் உள்ள தெற்குப் பட்டம் ஸ்ரீருத்ரகோட்டீஸ்வரர் ஆலயம்
3.சென்னை அருகே ஞாயிறு சிவத்தலம்
4.தஞ்சாவூர் அருகே உள்ள கடகடப்பை ஸ்ரீவைத்யராஜேஸ்வரர் ஆலயம்

போன்ற சூரியத் தலங்களில், சூரிய பகவான் மேஷ ராசியில் இறங்கும் புனிதமான நேரத்தில் வழிபடுவது மிகவும சிறப்புடையதாகும்.

சித்ரபானு தமிழப் புத்தாண்டு தின சந்திர தரிசனம்

சித்ரபானு தமிழ்ப் புத்தாண்டு தினமானது (14-4-2002) சந்திர தரிசன நாளாகவும் அமைவதால் இன்று மூன்றாம்பிறைச் சந்திர தரிசனத்தைக் கண்டு தரிசிக்கத் தவறாதீர்கள், மாலை சுமார் 6-53 மணி வாக்கில் சந்திரப் பிறை தோன்றக் கூடும் ஆதலின் தக்க தருணத்தில் மாடியிலோ, தோட்டத்திலோ ஆலய வளாகத்திலோ பலரும் சத்சங்கமாக ஒன்று கூடிக் காய்ச்சிய பசும் பாலைக் கையில் ஏந்தியவாறு

முக்கண் பெருமானின் முத்தாகி முன்சிரசின்
மூல அரைவளை சிவமுகமதியே வா! மதியமுதம் தா!

என்று கூட்டாக ஓதித் தரிசித்த சந்திர அமுதக் கிரணங்கள் நிறைந்த பசும்பாலில் தேன், முந்திரி, திராட்சை சேர்த்துத் தானமாக அளித்திட்டால் மந்த புத்தி, சரியாகப் படிக்காமை, படிப்பில் கவனம் இன்மை, குறைந்த மார்க்குகள் பெறுதல், புத்தகங்களைப் படிக்காது விளையாட்டுப் புத்தியாய் இருத்தல் போன்றவை நிவர்த்தியாகிப் பிள்ளைகள் நன்கு படிப்பர். கொந்தளிப்பாக இருக்கும் மனமும், சஞ்சலங்களுடன் வருந்தும் மனமும் தீர்வடைந்து குடும்பத்தில் சாந்தம் உண்டாகும்.

பழையாறை

சந்திர தரிசனத்தைப் பெறவேண்டிய ஆலயங்கள் முசிறி சிவாலயம், கும்பகோணம் அருகே பழையாறை, விழுப்புரம் அருகே திருவக்கரை போன்றவையாம். பட்டுக்கோட்டை பேராவூரணி அருகே உள்ள பெருமகளூர் சோமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அற்புதமான தாமரைத் தண்டு லிங்கத்தைத் தரிசித்து, இந்த ஆலயத்திலிருந்து சந்திர தரிசனம் பெறுவதால் சந்தேகம் ஏமாற்றம், சொத்துப் பிரிவினை ஏக்கங்கள் போன்ற பல காரணங்களால் பிரிந்த தம்பதிகள், பங்காளிகள், நட்பு, வியாபாரக் கூட்டாளிகள் இடையே உள்ள சிறு பகைமை தீர்ந்து மனக் குழப்பங்கள் அகன்று இல்லத்திலும், அலுவலகத்திலும், வியாபாரத்திலும், சாந்தமும் நல்வளர்ச்சியும் உண்டாகும். மிகவும் சக்தி வாய்ந்த கோயில்! பலராலும் அறியப்படாதது. மதிகாரராகிய சந்திர பகவானுடைய சக்தி நிறைந்த ஆலயம் ஆதலால் தீய வழிச் செல்லும் கணவன், பிள்ளைகள் திருந்திட இங்கு திங்கள் தோறும் விளக்கெண்ணெய் தீபமும், ரோகிணி, கார்த்திகை நட்சத்திர தூபங்கள் ஏற்றி அடிப் பிரதட்சிணமிட்டு வழிபடுதல் வேண்டும்.

மூன்றாம் பிறை தரிசன நாளைப் பஞ்சாங்கம் மூலம் அறிந்து தரிசனத்திற்குச் செல்வோர்களின் கவனத்திற்கு மூன்றாம் பிறைத் தரிசனம் சில நிமிடங்களே வானில் இருக்கும். “இவ்வளவு தூரம் வந்தோமே. மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம் கிட்டவில்லையே, என்ன பாவம் செய்தோம்” என்று விரக்தி அடையாதீர்கள். மூன்றாம் பிறைத் தரிசனத்திற்கு எடுக்கும் முயற்சிகளுக்கு உரிய சந்திரகாந்த யோகப் பலன்கள் உங்களுக்குக் கிட்டும். உங்களுக்குச் சந்திர தரிசனம் தெரியாவிட்டாலும் நம்மிடம் சூட்சுமமாகப் பதிந்துள்ள மூன்றாம் நேத்திரம் அதனைத் தரிசித்து நமக்குரிய பலாபலன்களைத் தந்திடும்.

பிரபலாரிஷ்ட யோக நாளில் (கூடா நாளில்) கூடும் சித்ரபானு வருடப் பிறப்பு

“ஸ்ரீஅகஸ்திய விஜயம்” இதழில், சித்தர்கள் அருள்கின்றபடி அனைத்துக் காலதேவதா மூர்த்திகளை வழிபடுவதான விசேஷமான புத்தாண்டு பூஜையை வருடந் தோறும் அளித்து வருகின்றோம் அல்லவா!

சித்திரபானு வருடம் பிரபலாரிஷ்ட யோகம் எனும் “கூடா நாளோடு” (ஞாயிறு + பரணி) கூடி வருவதால், பல கடும் சோதனைகளை இப்பூவுலகின் மனிதச் சமுதாயம் சந்திக்க நேரிடும். இது ஜோதிட ரீதியான கணிப்பு என்று எண்ணாதீர்கள். ஏனெனில் ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் சித்தர்கள் அருளிய வண்ணம் பூவுலகக் கர்ம பரிபாலன ரீதியாகவே நல்விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. இவற்றை தீர்க தரிசனமாக எடுத்துரைக்க வல்ல எத்துணையோ சித்தர்கள், மகரிஷிகள், யோகிகள், ஞானிகள், சற்குருமார்கள் அனைத்து நாடுகளிலும் தற்போது (நாம் வாழும் கலியுகத்தில்) பிரசன்னமாகி இருக்கின்றார்கள். ஆழ்ந்த நம்பிக்கை கொண்டால் அவர்களை அறிந்திடலாம்.

கூடா நாள் தூன்பங்கள்!

முதலில் ஓரளவு நம்பிக்கையுடன் அவர்களை அடைந்து, பின் தனக்குரிய லெளகீக விருப்பங்கள் நிறைவேறாவிடில், அவர்கள் அளிக்கின்ற யோக, தியான, தான, தர்ம, பூஜா முறைகளைக் கடைபிடிக்க இயலாதபோது “இவ்வழி நமக்குச் சரிப்பட்டு வராது” என்று ஒதுங்கிப் பிரிந்து வருகின்ற மனப்பான்மைதான் உலகில் நிரவுவதால் பலராலும் சற்குருவை அடைய முடிவதில்லை என்பதை உணர்ந்திடுக! தனித்து வழிபடுவதைவிட ஜாதி, மத, இன. பேதமின்றிப் பலரும் சத்சங்கமாக ஒன்றுகூடி வழிபடுவதே அளப்பரிய, நிரந்தரமான பலன்களைத் தரும்.

கூடா நாட்கள் என்று அழைக்கப்படும் பிரபலாரிஷ்ட யோக நாட்களில் சுபகாரியங்கள் மட்டுமல்லாது அனைத்து வகையான புதிய செயல்களையும் தவிர்த்திட வேண்டும் என்பதை நாம் நன்கு அறிவோம். ஞாயிறு-பரணி, திங்கள்-சித்திரை, செவ்வாய்-உத்திராடம், புதன்-அவிட்டம், வியாழன்-கேட்டை, வெள்ளி-பூராடம், சனி-ரேவதி என்றவாறாக அந்தந்த நாள் நட்சத்திரச் சேர்க்கைதானே கூடா நாளாக, பிரபலாரிஷ்ட நாளாக, பஞ்சாங்க ரீதியாக அமைகின்றது. அரசாங்கச் செயல்கள், அலுவலக, வியாபாரக் காரியங்கள், இல்லறக் காரியங்கள் போன்ற யாவையுமே கூடா நாளில் தவிர்த்திட்டு ராகு கால பூஜை நேரம் போல வழிபாடுகளில்தாம் இந்நேரம் அமைந்திடுதல் வேணடும். நம் கர்ம வினைகளை நட்சத்திர மூர்த்திகள் சுமந்து, தரம் பிரித்து வடிகட்டி நம்மிடம் மீண்டும் தருகின்ற நாட்களாக இவை அமைவதால் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும்.

வரும் சித்ரபானு ஆண்டானது ஞாயிறு-பரணி கூடும் பிரபலாரிஷ்ட (கூடா) நாளில் முழுவதாக அமைவதால் பெரும் துன்பங்கள், கடுமையான இன்னல்கள், பலத்த நஷ்டங்கள், வன்முறைகள், போர் நிகழ்ச்சிகள் போன்ற சமுதாயத்தை, உலகத்தைப் பாதிக்கும் தீய காரியங்கள் நிகழவிருப்பதை இது சுட்டிக் காட்டுகின்றது.

சூரிய ஒளியை மாசுபடுத்துவது, சூரியனை நிந்தித்தல், பகலில் அக்கிரமங்கள், ஆபாசங்கள், அதா்மங்கள் நிகழ்தல் போன்றவற்றால் சூரிய பகவான், சூரிய தேவதைகள், ஒளி மூர்த்திகளின் சினத்திற்கு பூமி உள்ளாதலால் இவ்வாண்டில் சூரியப் ப்ரீதிக்காகவும், ரட்சைக்காகவும் சூரியத் தலங்களில் விசேஷமாகப் பூஜித்தலும் ஸ்ரீம்ருத்யுஞ்ஜயர், ஸ்ரீசரபேஸ்வரர், ஸ்ரீபைரவர் வழிபாடும் முக்கியமானதாக விதிக்கப்படுகின்றது. அக்னி சக்தி மிகுந்த பரணியும், சூரியனுக்கு உரிய ஞாயிறும் சேர்வதால் சூரியத் தலங்களில் உள்ள சரபேஸ்வரர், ம்ருத்யுஞ்ஜயர், பைரவருக்கான வழிபாடுகளைச் சிறப்புற நடைபெற வைத்து, கூடா நாளின் தீய குணங்களை ஓரளவு தணித்திட முடியும். சற்குருவின் பரிபூரண அருளின்றி கூடா நாளின் தீமைகளை அடியோடு மாற்றுவது கடினம். அதன் விளைவுகளில் இருந்து நம்மைத் காத்துக் கொள்ளவே இவ்வாண்டில் பிரசித்தி பெற இருக்கும் ஸ்ரீம்ருத்யுஞ்ஜயர், ஸ்ரீபைரவர், ஸ்ரீசரபேஸ்வரர் வழிபாடுகள் பெரிதும் துணை புரியும்.

காக்கை உணர்த்தும் பாடம்

காக்கைகள் சில சமயங்களில் ஒன்றாக அமர்ந்து கொண்டு ஏதேதோ பேசிக் கொண்டு இருக்கின்ற பாவனையைப் பார்த்திருப்பீர்கள்! ஒன்றுக்கொன்று அன்புடன், அன்யோன்யமாகச் சிறகுகளைச் சுத்திகரிப்பதும், உடலில் உள்ள தூசு, தும்பைகளைக் கொத்தி எடுப்பதும் அன்பு பொங்குவதான பரிவுடைய காட்சிதானே! அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாள்!

தினமுமா இவ்வரிய காட்சி தென்படுகின்றது? எனவே இத்தகைய சம்பவங்களைச் சாதாரணமானதென தயவு செய்து ஒதுக்கி விடாதீர்கள்! நன்கு ஆத்ம விசாரம் செய்து பாருங்கள்! இக்காட்சிக்கும், இந்நாளில் நடைபெற்ற, நடைபெற இருக்கின்ற உங்கள் வாழ்க்கை நிகழ்ச்சிகளுக்கும் நிறைய ஆன்மீகத் தொடர்புகள் உண்டு! தெய்வீகச் சிந்தனையுடன் இதனை அணுகுங்கள்! உலகில் காரண காரியமின்றி எதுவும் நடைபெறுவது கிடையாது என்பதை உணர்த்துவதே இது! நன்கு நினைவில் இருத்திடுங்கள்!

உங்கள் வாழ்க்கையில் இத்தகைய காட்சிகள் பல, மாதங்களுக்கு ஒரு முறைதான் கண்களில் தென்படுகின்றது என்பதால், இக்காட்சி மூலமாக நீங்கள் பெறும் பாடங்களை எவ்வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையும் கற்றுத் தெளிந்திடவே இந்த ஆன்மீக உண(ர்)வு இங்கு தரப்படுகின்றது!

இவ்வாறாகக் காக்கைகள் குடும்பமாக சேர்ந்து அன்யோன்யக் காட்சியைத் தருகையில், அக்காட்சியைக் கலைத்திடாது சற்றுத் தொலைவில் நின்று அவற்றைக் கவனித்து, அக்காக்கைகளுடன் மனதோடு மனதாக (mental dialogue leading to elemental telepathy) உரையாட முற்படுங்கள்! மனிதனுக்கு இல்லாத ஆன்ம குணங்கள் தாவரங்கள், பறவைகள், விலங்குகளிடத்தில் நிறைய உண்டு.

வாயில்லா ஜீவன்களின் அற்புத மன உரையாடல்!

மனிதனைப் போல் “சள சளவென்று” பேசிடாது, வாய்மொழி உரைகளை விட, மனம் ஒன்றிய உரையாடல்கள் (exchange of thoughts through mind i.e. telepathic features) அவற்றிடம் நிறைந்து உள்ளன! உதாரணமாக, மாட்டு வண்டியில் பாரத்தை இழுத்துச் செல்லும் இரு காளை மாடுகளும் ஒன்றுக்கொன்று உரையாடியவாறு, கடவுளிடம் பிரார்த்தனை செய்தவாறுதான் செல்லும். இதனை நாம்தான் சரியாக உணர்வதில்லை! வாயில்லா ஜீவன்கள் என்று மட்டமாக எண்ணக் கூடாது. இறைவனின் படைப்பில் அனைத்தும் ஒன்றே! ஆனால், ஒவ்வொருவரிடத்திலும், ஒவ்வொன்றிலும் மறைந்துள்ள, ஆன்மப் பூர்வமாகப் பிரதிபலிக்கின்ற, ஆக்கப் பூர்வமாக வெளித் தோன்றி இருக்கும் இறைத் தன்மையில்தாம் வித்யாசங்கள் உள்ளன!

காக்கைகளுடன் மற்றும் இதர ஜீவன்களுடன் மன உரையாடல் என்பது முதலில் சற்றுக் கடினமாகத்தான் தோன்றும். இப்படி ஒரு வித்யாசமான, சத்யப் பூர்வமான “பார்க்கும் கோணமும், ஆன்மீகச் சிந்தனா வழிமுறையும் உள்ளதா” என அறிய ஆச்சரியமாகவும் இருக்கும்! வெறும் வேடிக்கையான காட்சியாகத் தொடங்கி, ஜீவ காருண்ய அன்பு பரிமளிப்பதாக நிறைந்து, பின், உங்களுக்கும் ஆன்ம போதனை அளிப்பதாக, உங்களுக்கும் காக்கைகளுக்கும் இடையே, நிறைய (மன) உரையாடல்கள் நிகழ்வதை இந்த ஆத்ம விசாரத்தால் நீங்களே உணர்வீர்கள்! இவ்வகையில் உங்களைச் சுற்றி இருக்கும் பல்லாயிரக் கணக்கான உயிரினங்களும் நிறைய தெய்வீக விஷயங்களைப் போதித்துக் கொண்டுதாம் இருக்கின்றன! இது வெறும் கற்பனை அல்ல! சத்தியமான ஒரு வகை வாழ்க்கை அனுபூதியே! செய்து பாருங்கள், உணர்வீர்கள்!

மனிதனன்றி மாக்கள் யாவும் பன்மொழிப் புலவர்களே!

இவ்வகையில் நீங்கள் ஓர் அரிசி அளவே உள்ள எறும்புடன், அதை விடச் சிறிதான அரிசி வண்டுடன்கூட நன்கு மனமார உரையாடிடலாம்! எந்த மொழியில்? அவரவர் அறிந்த மொழியில்தாம்! மனிதனைத் தவிர அனைத்து ஜீவன்களும் எம்மொழியிலும், எவரிடத்திலும், எந்த ஜீவன்களோடும் உரையாட வல்லதாம்! எந்த இடத்தில் இருந்தும் ஒரு நாய், குரங்கு, யானை, கரப்பான் பூச்சி, தரையான், கொசுவினை உலகின் எந்த நாட்டில் கொண்டுவிட்டாலும் அடுத்த நொடியில் அவை ஆங்கே சகஜமாகிவிடும்! ஆறறிவுப் பகுத்தறிவு கொண்ட மனிதனுக்குத்தான் மொழி, உடை. உணவு, விசா, பாஸ்போர்ட் என அனைத்துத் தடங்கல்களும்! காரணம் புனிதமான இறைமை கூடிய மனித நேயம் இல்லாமையே!

திடீரென்று காக்கைகளின் இத்தகைய அன்யோன்யக் காட்சி கிட்டினால் என்ன பொருள்? கணவன், மனைவி, பிள்ளைகள் இடையே சரியான அன்புப் பரிமாற்றம் இல்லை, அன்பு கலந்த இல்லற வழிமுறைகளை மேன்மேலும் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் இது குறிக்கின்றது. உங்களுடைய குடும்ப நல்வாழ்விற்காக நீங்கள் காண்கின்ற காக்கை ஜோடிகளும், நட்புக் காக்கைகளும் பிரார்த்தித்துப் பித்ரு லோக ஆசிகளைப் பெற்றுத் தருகின்றன. ஏனென்றால் சில வகைக் காக்கைகள் எண்ணற்ற பித்ரு லோகங்களுக்குச் சென்று வரும் அற்புதமான தெய்வீக வரங்களைக் கொண்டவை. இதனால்தான் திவசம், படையல், சிரார்த்தங்களில் முதல் உணவு காக்கைகளுக்கு அளிக்கப்படுகின்றது! திவசப் படையலின் நைவேத்ய உணவைக் காக்கையானது எந்தத் திசையில் இருந்து, எந்த உணவை முதலில் எடுக்கின்றது என்பதாகப் பல பாவனைகளைப் பொறுத்து மூதாதையர்களின் ஆன்ம நிலை, பித்ரு ஆசியின் த‌ன்மை போன்றவற்றை எளிதில் அறிந்திடலாம்.

காக்கை உணர்த்தும் யாக்கை எச்சங்கள்!

பொதுவாக, காக்கைகள் காய்கறிகளை உண்ணாது என அறிவீர்கள்! ஆனால் திவசப் படையலில் முதலில் ஏதேனும் காய்கறித் துண்டை எடுத்திட்டால் “பித்ருக்களுக்கு நிறையத் தாப்பண சக்தி தேவையாக இருக்கிறது” என்பது பொருளாகும். எனவே மாதாந்திர அமாவாசைத் தர்ப்பணத்தோடு மூதாதையரின் மாதாந்திரத் திதி நாட்களிலும் திருஅண்ணாமலையின் பித்ரு முக்தித் தீர்த்தம் மற்றும் தரிசனம், நெடுங்குடி, திருவிடைமருதூர், பரிதிநியமம், இடும்பாவனம், திலதைப்பதி (கோயில்பத்து) போன்ற பித்ரு முக்தித் தலங்களிலும் கூடுதல் தர்ப்பணங்களைச் செய்திடல் வேண்டும்.

ஒரு காக்கை முதலில் வந்து, இன்னொரு காக்கைக்காகக் காத்திருந்து, இரண்டாவது காக்கை உணவெடுத்தவுடன் முதல் காக்கை உண்டால் “சுமங்கலித்வ சக்திக்கான பூஜைகளை நிறைவேற்றிட வாய்ப்புகள் நிறைய வரும், அவற்றைப் பயன்படுத்தி சுமங்கலி தேவதைகளின் ஆசிகளைப் பெற்றிட வேண்டும்” என்பது பொருளாகும். குடும்பத்தில் சுமங்கலியாக இறந்தவர்க்குத் தக்க முறையில் திவசமும், சுமங்கலிப் பிரார்த்தனையும் நடத்திட வேண்டும்.

ப‌ட்சி தீர்த்தம் எச்சம் தீர்க்கும்!

மேலும் திருஅண்ணாமலை, நெடுங்குடி, தேனிமலை போன்ற தலங்களில் கிரிவலம் வருகையில் பெரிய “வட்டை”, அல்லது பெரிய அகல்களில் (மண் பாத்திரம்) ஆங்காங்கே நீர் நிரப்பி பட்சி தீர்த்தப் பகழியாக வைத்துப் புண்ய சக்தியைப் பெற்றிடுங்கள்! கிரிவலம் வருபவர்கள் இதில் நீர் நிரப்பி நீர் தான தா்மத்தைத் தொடர்வார்கள்! பட்சி தர்மத்தில் இது அடங்கும்! இது பித்ருக்களுக்கு மிகவும் ப்ரீதி அளிப்பதாகும்! மிகவும் உயரமான கட்டடங்களில், ப்ளாட்டுகளில் வசிப்போர்கூட பட்சி தீர்த்தத்திற்காக மாடியில் தனித் தூண் கட்டுதல் சிறப்பானதாம்! நல்ல தர்மமிகு காரியமிது!

சற்குருதாம் பிறப்பு, இறப்பு இடையிலான வாழ்க்கை மற்றும் அதற்கு அப்பாற்பட்டதற்குமான பிற லோக வாழ்வுத் தன்மையின் ஒவ்வொரு விநாடிக் கால ஆன்ம காரணங்களையும் உணர்த்த வல்லவர்! எனவே எதுவுமே காரண, காரியமின்றி நிகழ்வதில்லை, சற்குருவே அனைத்தும் அறிந்த ஞானியாவார் என்பதையும் உணர்க!

சரீர சடங்குகள்

மரணம் என்பது சரீரச் சட்டை மாற்றுதலே!

ஸ்ரீம்ருத்யுஞ்ஜய வழிபாட்டால் மரண பயத்தை வென்றிடுக!

சடலத்திற்கான சடங்குக் கிரியை முறைகள்

சடலத்திற்குச் செய்ய வேண்டிய சடங்குகள், கிரியைகளின் விளக்கங்களின் முன்னுரையைக் கடந்த இதழில் அளித்திருந்தோம். பலரும் இது பற்றி நிறைய விளக்கங்களைக் கேட்டுள்ளார்கள். சடலத்தை அக்னியில் எரிப்பதே உத்தமமானது. இறந்தவரின் மூத்த மகனே சிதைக்குத் தீயிடுதல் முக்கியமானதாகும். மூத்த மகனால் வர இயலவில்லை என்றால்தான் அடுத்த புதல்வர்களுக்குத் தம் தந்தையின் சிதைக்கு எரியூட்டும் வாய்ப்பு வரும். ஆனால், குறித்த மகனோ, மருமகனோ அல்லது வேறு எவரோதான் தன் சடலத்திற்கு எரியூட்ட வேண்டும் என்று இறந்தவர் விரும்பி, பலரிடம் அவ்வாறே ஆணையிட்டு இருந்தால் அவ்வாறு குறித்தவரே ஈமக் கிரியைகளை நடத்துதலே சிறப்பானது. இறந்தவரின் விருப்பத்திற்கு மாறாகச் செயல்பட்டால் சடலம் சரியாகத் தகனமாகிடாது அவருடைய மாயைச் சாயைச் சரீரமும் பலத்த வேதனைகளுக்கு ஆளாக நேரிடும்.

பல சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் மூத்த மகன் வர இயலவில்லை எனப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் ஈமக் கிரியையில் பங்கு பெற முடியாதது ஒரு தோஷமாக ஆகி, மூத்த மகனாரின் குடும்பத்தை நிச்சயமாக வாட்டிடும்! துன்பங்களும் பெருகும். த‌லைப் பிள்ளையானோர் சில க‌டமைகளைக் கட்டாயம் செய்தே ஆக வேண்டும். செய்ய இயலாமற் போனால் அதற்குரிய பிராயச்சித்தங்களைக் கண்டிப்பாகச் செய்தால்தான் சந்ததி நன்கு தழைக்கும்.

ஒரு பட்சமான பதினைந்து நாள் சடங்குக் காரியங்களிலும் தினமும் “நடுகல் பூஜை. பித்ரு ஹோமம்” நடத்தியாக வேண்டும். பலரும் 1, 3, 8, 13 எனச் சடங்கு தினங்களைக் குறித்து அந்நாட்களில் மட்டும் சடங்குகளைச் செய்வார்கள். ஏனைய நாட்களில் வெறுமனே இருந்து விடுவார்கள். இது தவறானது. இந்த 15 நாட்களிலும், மாயைச் சாயை என்னும் சரீரத்தை இறந்த உயிர் தரிப்பதால் தினமுமே நித்யவ(வி)தி என்ற வகையில் காரிய‌ங்களை நடத்தியாக வேண்டும். ஆனால் இதனைக் கலியுகத்தில் பலரும் முறையாகச் செய்வது கிடையாது, எனவேதாம் 15 நாட்களிலும் தினந்தோறும் முறையாக அன்னதானம் செய்து வந்தால் இதுவே செய்யாமல் விட்ட சடங்குகளுக்கான பரிகாரங்களைப் பெற்றுத் தர உதவும்.

பலரும் ஒரு வருடத்திற்குப் பிறகு தர்ப்பணத்தைத் தொடங்குவார்கள், இதுவும் தவறானதே! சிதைக்குத் தீயூட்டிய மறுநாள் பாலில் எலும்புகளைக் கரைத்தலாகிய சஞ்சயனம் எனப்படும் காரியமும் மிகவும் முக்கியமானதாகும். கண்டங் கத்திரிக்காயை மோதிரம், பவித்ரம்போல் அணிந்து செய்கின்ற காரியமிது. இந்நாளில் இருந்தே தினமும் ஒரு பட்சத்திற்கு நித்யச் சடங்குக் காரியங்களும், தர்ப்பணமும் கண்டிப்பாகச் செய்திடல் வேண்டும்.

முற்காலத்தில் தினசரி சந்தியா வந்தன வழிபாடு போல இருந்த தினசரித் தர்ப்பண முறையே தற்போது அமாவாசைக்கு -அமாவாசைத் தர்ப்பணமாக மாதாந்திரத் தர்ப்பணமாக மாறிவிட்டது என்பது வேதனைக்கு உரியது. இதனால்தான் கலியுலகில் அனைத்து நாடுகளிலும் நாளுக்கு நாள் துன்பங்கள் பெருகுகின்றன! உலகில் வேறு எவரும் இவ்வாறு தர்ப்பணம் அளிக்கின்றார்களா என்று எண்ணாதீர்கள்! உலகின் பல இடங்களிலும் நீத்தார் நினைவு வழிபாடானது, பல வழிமுறைகளாக, குறிப்பாக மெக்ஸிகோ, ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் ஆதிவாசிகளிடம், காட்டுவாசிகளிடம் இன்றும் நல்லதோர் பழக்கமாக இருக்கின்றது. தர்ப்பண முறையானது ஆதியில் உலகளாவி நிலவி தற்போது மறைந்து விட்டதை இதுவும் உறுதிப்படுத்துகின்றது அல்லவா!

மேலும் தர்ப்பணம் என்பது ஜாதி, மத‌, இன, குல பேதமின்றி ஆண் பெண், மனிதன் ஏனைய ஜீவன்கள் என்ற பாகுபாடுமின்றி பூவுடல் பூத்து மறைந்தோர் மற்றும் அனைவருக்கும் அளிப்பதாம்! ந‌ம் முன்னோர் இங்கும், எங்கும், வேறு நாடுகளிலும், மனிதர்களாகவோ, ஏனைய ஜீவன்களாகவோ பிறப்புக் கொண்டிருக்கலாம் அல்லவா! தர்ப்பணத்தின் பலன்கள் இறந்தவர்கள் எங்கு, எந்நாட்டில் எப்படிப் பிறந்து இருந்தாலும் ஆவிகளாக இருந்தாலும் அவர்களுடைய நலன்களுக்காகப் போய்ச் சேரும்! எனவேதாம் மகத்தான உலக சமுதாய பூஜையாகத் தர்ப்பணம் மலர்கின்றது!

ஆனால் சனாதன பூமியாகிய நம் புனிதமான பாரதத்திலேயே தர்ப்பணத்தை ஈடு இணையற்ற பூலோக சமுதாய பூஜையாகப் பலரும் உணரவில்லை என்பது வேதனை தருவதாகும். வெறும் அமாவாசைத் தர்ப்பணம்தானே என்று ஓரங் கட்டி இருப்பதால்தான், தர்ப்பண சக்திகள் மங்கி, பித்ரு சாபங்களுக்கு ஆளாகி, தீயொழுக்கங்கள் பெருகிக் குடும்பத்தை வாட்டுகின்றன.

இறந்தவருக்கு மிகவும் பிடித்தமான உணவுப் பண்டங்களை, பழங்களை, திரவியங்களை, பொருட்களை, புதிய ஆடைகளை 15 நாட்கள் காரியங்கள் முடியும் வரை தினமும் தானமாக அளித்து வர வேண்டும். சில குடும்பங்களில் சடங்குகள் 13 நாட்களுக்கு இருக்கும். அனைத்துச் சடங்குகளுமே இறந்தவர் எடுத்துள்ள “மாயைச் சாயை” ஆவி உடலானது நன்முறையில் ஆன்ம சாந்தியைப் பெறவும், தன் விண்ணுலக யாத்திரையைத் தொடர வேண்டும் என்பதற்காகவும், அவர்தம் சந்ததிகள் இறந்தவர் செய்த தீவினைக் காரிய வினைகளினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும், அவர்தம் நற்காரியப் பலன்கள் விரயமாகாது அவர்தம் குடும்பத்திற்கு நன்கு பயனாவதற்கும் ஆகும்.

புகை பிடித்த‌ல் நரகமே தரும்!

புகை பிடித்தல், மது போன்ற கொடிய பாவச் செயல்களுக்கு ஆளானோர் பல கொடிய வினைகளுக்குத் தம்மைத் தாமே ஆட்படுத்திக் கொள்கின்றனர். அவற்றை நன்கு தெரிந்து கொண்டாவது இனியேனும் தானும் திருந்தி, பலரையும் திருத்தப் பாடுபட வேண்டும்! இங்குள்ள ஆன்மீக ரீதியான விளக்கங்களைப் பலரும் அறியும்படி சிறு நூலாய் வடித்துப் பரப்புவதும் உத்தமத் தெய்வீக சேவையேயாம்!

* நல்ஆரோக்யம், நல்உணவு, நல்காற்று போன்றவற்றிற்குக் காரணமாகி, நம்மை பூமியில் ஜீவிக்க வைக்கும் நெருப்பை அவமதித்து (சிகரெட், பீடி, சுருட்டு ஆகியவற்றை) வாயால் ஊதி, எச்சிற்படுத்தி, இழிவு படுத்தி நெருப்பைத் தகாத செயல்களுக்குப் பயன்படுத்திய கடுமையான பாவ வினைகள்

* ஆத்மா உறைகின்ற, மற்றும் சுத்தமான வாயு நிறைய வேண்டிய இருதயத்தை (சிகரெட், பீடி போன்ற) நச்சுப் புகையால் வாட்டிய தீவினைகள்

* தன் ஆத்ம உறையைச் “சுட்ட” கொடு வினைகள்

* விஷப் புகையைத் தன்னுள்ளேயே பாய்ச்சித் தன் உயிரையே (தற்கொலைக்கு ஈடாக) வதைத்த கொடிய பாவச் செயல்

* விஷப் புகையைப் பரவெளியில் பாய்ச்சிப் பரவெளியின் தூய்மையைக் கெடுத்தலான வல்வினைகள்

* விஷப் புகையை வெளியில் ஊதி மனிதர்கள், தாவரங்கள், நுண்ணிய ஜீவன்கள் என கோடிக் கணக்கான சகல ஜீவன்களின் மூச்சில் "விஷத்தைக்" கலந்த உயிர் வதைக் கொடிய பாவம்

* புனிதமான அக்னியை அவமதித்து வாயில் வைத்து ஊதி அக்னி தோஷங்களைப் பெருக்கிக் கொண்ட சொல்லொணாத் தீய, பாவ வினைகள்

இவ்வாறாக புகை பிடித்தல் என்ற தீய பழக்கத்தால் விளைகின்ற கொடிய பாவங்களுக்கான பல தண்டனைகள், நடப்பு வாழ்வில் கிட்டுவதுடன் இறந்த உடன் “மாயைச் சாயை” என்ற ஆவி உடலானது பல அக்னிக் கொப்பறைகளில் போடப்பட்டு அதில் வதையுறும். தம் நாளில் ஊதிய அவ்வளவு பீடி, சிகரட், சுருட்டு அனைத்தையும் ஒன்று திரட்டிப் பொசுக்கினால் எவ்வளவு நெருப்பு, அதிஉஷ்ணம் கிளம்புமோ. அதோடு புகை பிடித்து எழுப்பிய விஷ சக்திகளும் ஒன்று சேர்ந்து, அந்த அக்னிக் கொப்பறையில் விஷஅக்னிக் குமிழ்களாகி “மாயைச் சாயை” ஆவியுடல் அவதியுறும். எனவே இவ்வகையிலான நரகங்கள் நிறைய உண்டு.

உயிர் பிரியாது அங்கங்கள் மட்டும் சிதைந்து சிதைந்து தீயில் கருகினால் ஒரு மனித உடல் எவ்வளவு கொடுமையான நிலைகளை அனுபவிக்குமோ அதே நிலையே புகை பிடித்து உலகின் புனிதக் காற்றுப் பரவெளியை மாசுபடுத்தியோர்க்கு இறப்பிற்குப் பின்னும் தொடரும். பீடி, சிகரெட் விற்பவர்கள், இவை சம்பந்தப்பட்ட இடங்களில் பணி புரிவோருக்கும் இப்பாவங்களில் பங்கு உண்டு. எனவேதான் புகை பிடித்தல் மிகவும் கொடிய பாவத்தைத் தரும் தீச்செயலாகும். தற்கொலை என்பதும் எந்தத் துன்பத்திற்கும் முடிவு ஆகாது. பெறுதற்கு அரிய மானுட உடலைப் பெற்று, அதனைத் தற்கொலை மூலமாகவும் அழித்த பாவமும் கூடுதலாகச் சேர்ந்து கொடுந் தண்டனையாய் ஆவியாக அலைந்து கொடூரமான ஆவிகளின் பிடியில் சிக்கி ஒவ்வொரு விநாடியும் வதைபட நேரிடும். தற்கொலை செய்து இறந்தோருடைய ஆவி பலத்த நரக வேதனைகளில் சிக்கித் திணறும் ஆதலால் அவர்களுக்கு உரிய விசேஷமான தர்ப்பண முறைகளைத் தக்க சற்குருவை நாடி அறிக!

மேலும் மரணத்திற்கான அறிவிப்பு ஒரு வாரத்திற்கு முன்னரேயே சூட்சும ரீதியாக ஒவ்வொருவருக்கும் அறிவிக்கப்படுவதால் இறைவன் பெருங் கருணை கொண்டு இறப்பிற்கு முன்கூட எத்தகையோர்க்கும் நல்வாய்ப்பு அளிக்கின்றான் என்பதை உணர்தல் வேண்டும்.

பொதுவாக, கலியுகத்தில் நடப்பில், பலவிதமான நோய்களால் இறப்பு ஏற்படுவதால், இறக்கும் நிலையில் வாயும், வயிறும் காய்ந்து ஆசைப்பட்ட உணவை உண்ண முடியாத நிலையாலும், இருதய நோய்கள், இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்றவற்றால் விரும்பிய உணவு வகைகளை உண்ண இயலாதும் ஏக்கத்துடன்தான் இறப்பர். இறைச் சிந்தனையுடன் இறக்க வேண்டிய மனித குலம், நினைவிழந்த நிலையில், சற்றே நினைவு வரும்போது “பையன் வந்து விட்டானா, பாங்க் அக்கெளண்ட் சரியா இருக்கா? நாக்குக்கு ருசியா போளியும், அடையும் பண்ணிக் கொடு” என்று மிகவும் லெளகீகமாக உரையாடினால் என்ன பயன்? தின்று தீர்த்தும், நீண்ட நெடும் ஆயுளை உண்டு தீர்த்தும் கழித்து, 80, 90 வயது வரையிலும் போளி, அடை, அல்வா என்று சாப்பிட்டு life innings தொடர்ந்தால் என்றுதான் “பற்றற்ற” வாழ்க்கையை taste செய்வது?

 “அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்” என்பது போல சிறு வயதிலிருந்தே “பிள்ளையாரப்பா, சிவ சிவா, ராம ராமா, கிருஷ்ண கிருஷ்ணா, முருகா!” என்று சொல்லி வந்தால்தானே இறுதியில் வாய் குழறி, நினைவு இல்லாவிடிலும் “இறைநாமம்” இதுகாறும் சொல்லி வந்தோம் என்ற மனத் திருப்தியாவது கிட்டும்.

 “மாயைச் சாயை” உடலில் திரியும் ஆவி ரூபம் வெகு சீக்கிரத்தில் தனக்கு உரிய destined celestial pathற்கான கோள‌க் கோண யாத்திரையில் நன்முறையில் செல்தற்காக 15 நாட்களிலும் தினமும் கரும்புச் சாறு தானம் அளித்தல் வேண்டும். கரும்புச் சாறு சக்தியானது உடனடியாக ரத்தத்தில் சேர்ந்து உடலுக்கு சக்தியைத் தந்திடும் வல்லமை கொண்டது. இதே போல் குறித்த நாளில், குறித்த நேரத்தில் செய்திட்டால் துரித கதியில் பயனளிப்பதான சில தான தர்ம சக்திகளை உடனடியாகக் கலியுகத்தில் பலன் தருவதாக தர்ம தேவதைகள் நியதித்துள்ளன. இவற்றுள், ஈமக் கிரியை நாட்களில் தினமும் கரும்புச் சாறு தானமும், மற்றும் இறந்தவர்கள் மிகவும் விரும்பிய உணவுப் பொருட்களை (அல்வா. பர்பி, போண்டா போன்றவை) நிறைய அளவில், தாராளமாகத் தானமாக அளித்து வருவதும் அடங்கும்! இது இறந்தவர்களின் ஆன்ம சாந்திக்குப் பெரிதும் உதவும்.

இந்தப் புண்ய சக்தி எவ்வாறு உதவும் என்றால், எந்த உணவுப் பொருளைத் தின்ன முடியாமல் சர்க்கரை வியாதி, பிளட் பிரஷர் போன்ற நோய்க் காரணங்களால் உண்ண இயலாது ஏங்கினார்களோ அவற்றையே தானமாக அளிக்கும்போது, அதை உண்கின்ற ஏழைகளின் ஆத்ம சந்தோஷமானது இறந்தவர்களுடைய ஆன்ம சாந்திக்குத் தக்க புண்ய சக்திகளாக மாறித் துணை புரியும். இந்த தான சக்திகளின் வேகம், ஈமச் சடங்குகள் நடக்கும் 15 நாட்களிலும் அதிதுரிதமாக இருக்கும்.

இதனால்தான் நம் பண்டைய முறைகளில் ஈமச் சடங்குகளில் கோ (பசு) தானம், பொன் தானம், பாத்திர தானம், எண்ணெய் தானம், ஆடை தானம், அன்னதானம் என்ற பலவகை தான தர்மங்களை ஏழைகளுக்கு வழங்குவதாக வேத யோக சக்தியுடன் கூடுவதாக வேத மந்திரப் பிரயோகங்களுடன் அமைத்திருக்கின்றார்கள்.

சடலத்தைத் தென்னங் கீற்று, மூங்கில் பாடையில்தான் சுமக்க வேண்டும், பிளாஸ்டிக், இரும்பு, சணல், கயிறு, கம்பிகளைப் போட்டுக் கட்டிச் சடலத்தை வதைக்கக் கூடாது. மனிதச் சடலமோ, ஈயோ, எறும்போ எதுவாயினும் புனிதமான ஆத்மா உறைந்த ஆலயமே எந்த ஜீவனின் உடல் கூடும் ஆகும். எனவே அதற்கு உரித்தான இறுதி மரியாதையை அளித்தலே உத்தமமானதாம். எவ்வளவு கேவலமாக, அருவருக்கத் த‌க்க முறையில் ஒருவர் வாழ்க்கையை நடத்தினாலும் பரிசுத்தமான ஆத்மா அவர் உடலில் குடி கொண்டிருக்கின்றது என்பதை உணர்க!

சடங்கு மந்திரங்களை முறையாக எவரும் ஓதா விட்டால், ஓத வாய்ப்பு இல்லாவிடிலும், தேவாரப் பண்களையாவது ஓதுதல் வேண்டும். ருத்ர பூமியாகிய மயானத்தில் யோகம் புரிந்து அருள்பாலிக்கும் ருத்ரபூதிச் சித்தர்பிரான் அளிக்கும் கீழ்க்கண்ட “ஊனுடம்பு அற்றல் பண்” என்றும் அரிய பதிகத்தை அனைவரும் தகனத்தின்போது கூட்டாக ஓதிடலாம்.

“ஊனுடம்பு அற்றல் பண்"

ஆத்மம் செறிந்த அபரா வடிவேதி
அத்தன் பதம்சேர் அரு உருகல் ஆமாகி
காத்துப் பரிணாமக் கட்டவிழ்தல் தாமாகி

கனக மணி வழி காட்டிக் கழல் வழியே சேரட்டும்!
கனக மணி ஒலி காட்டிக் கழல் வழியே சேரட்டும்!
கனக மணி ஒளி காட்டிக் கழல் வழியே சேரட்டும்!

ஊத்துப் பரிநீர் உண்ணும் சதைப் பிண்டம்
உத்தரியாய் தீப்பாதம் உய்யட்டும் உடலமதில்!
ஏத்துப் பிழை காட்டி எச்சம் வருத்தாது
எத்தகைய தீவினையும் எரியட்டும் என்போடு

கீத்துப் படலத்தில் கிஞ்சித்தும் சோராது
கிளையான கர்ம இலை கீற்றாகிப் போமேயாம்!
கூத்துப் பரிணாமம் கூடாது ஒழிந்திடவே
கூற்ற வினை யாவும் குறுசாம்பல் ஆகட்டும்!
சாத்து முறையாலே சப்தவடிச் சாத்திரமாய்

முத்தான தர்ம வழி முகரட்டும் மனிதவடி!
சத்தான தர்ம வழி சாரட்டும் சடலவடி!
பத்தான தர்ம வழி படரட்டும் பூதவடி!
வித்தான ஜீவ ஒளி விரவட்டும் வேதவடி!

மந்திரம் அறியாதோர், மந்திரம் அறிந்திட்டும் அரைகுறையாகச் சடங்குகளைச் செய்வோர், ஈமச் சடங்குகள் நடந்தும் அவற்றில் திருப்தி கொள்ளாதோர், மற்றும் யாவரும் ஈமக் கிரியை நேரத்தில் இறப்பு நேரத்திலிருந்து சடலம் சிதையில் அக்னிக்கு இரையாகும் வரை முதலில் தேவார, திருவாசக, திவ்யப் பிரபந்த, திருப்புகழ் பாடல்களை ஓதுதல் சிறப்பானதாம். அவற்றை அறியாதோர் இந்த அரிய“ஊனுடம்பு அற்றல் பண்ணை உற்றம், சுற்றம் யாவரும் ஒதிக் கொண்டிருக்கும்படி செய்ய வேண்டும்.

சடலத்திற்குப் ப‌ஞ்ச பூத நிவாரணம்

சஞ்சயனம் என்பது சிதைக்கு அக்னிக்கு ஊட்டப்பட்ட மறுநாள் காலை அமையும் "என்புப் பெரு எழுச்சிச் சடங்கு” ஆகும். அதாவது அக்னியில் பங்கமான எலும்பு வடிவுகளை எடுத்துப் பாலில் கரைத்தலே சஞ்சயனமாம். இதில் எலும்பு முக்யத்துவம் பெறுவது ஏன்? மரணத்திற்குப் பின் தசை, நரம்பு, நார், ரத்தம் போன்ற அனைத்தும் அழுகி விடும், எலும்பு மட்டும் தொக்கி நிற்கும். போகமாய் ஆன அனைத்தும் பஸ்மமாகிப் போக, எஞ்சும் எலும்புகளில் ஒட்டு மொத்தமாய்க் கூடிடும் காமக் குழலானது, பசும் பாலில் கரைந்து, மறைந்த சடலத்திற்குப் பஞ்ச பூத நிவாரணம் தருகின்றது.

சிவன், பார்வதி , விஷ்ணு, பிரம்மா என அனைத்துத் தெய்வ மூர்த்திகளின் உறைவிடமாயும், மகரிஷிகளும், சித்தர்களும், சேதுபதா மூர்த்திகளும் பசுவிடம் உறைந்துள்ளதாலும், பஞ்ச  பூத சக்திகள் பரிபூரணமாய் நிறைந்துள்ளதாலும் பசும்பாலுக்கு எத்தனையோ தெய்வீக மகத்துவங்கள் உண்டு.

வலது கையில் கட்டை விரல் (சுக்கிர விரல்), ஆள்காட்டி விரல் (குரு விரல்), ந‌டுவிரல் (சனி விரல்) ஆகிய மூன்றிலும் கண்டங் கத்தரிக்காய்களை மோதிரம், பவித்ரம் போல் அணிந்து கொண்டு, ஒரு சுதைப் பானையில், மண் சட்டியில் (பச்சைப்) பசும்பாலை ஊற்றி, சிதையிலிருந்து எலும்புகளைச் சேகரித்து,

“என்போடு ஆவமுதம் எரிச் சட்டி ஏகிட்டு
அன்போடு அதிசாந்தம் ஆகுகவே ஆகுகவே!”

(என்பு - எலும்பு; ஆவமுதம் - ஆ பசு, அமுதம் - பசுவின் பால்)

என்று ஓதி பசும் பால் உள்ள பானையில் பாலோடு சேர்த்திட வேண்டும். உண்மையில் சரியாக வேகாத அனைத்து எலும்புகளையும் எடுப்பதே சரியான முறையாம்.

சாம்பல் விஸர்ஜனம்

 “பிறவிப் பெரும் காயம் பித்த வடி ஆனதனால்
அறவிக் கனலும் ஆமதுரம் கூடியதாய்
நிரவிக் கடலுள்ளே நெடுங்குடியாய் ஆவதுவே!”

(அறவிக் கனல் - சாம்பலில் பொதிந்திருக்கும் உட்கனல்; நெடுங்குடி - நீண்ட, தேவமய சிரஞ்சீவத் தன்மை)

என்று ஒதியவாறே மண் குடத்தில் சேகரித்த எலும்புகளைப் புண்ய நதி, கடலில் விஸர்ஜனம் செய்திட வேண்டும். அன்றைய தினமே ஒரு பகுதியையாவது புண்ணிய ஆறு. கடலில் சேர்த்தல் உத்தமமானது.

காசி, அலகாபாத், ராமேஸ்வரம், மற்றும் புண்ய நதிகளில் சேர்த்திட எலும்புச் சாம்பலை ஒரு மஞ்சள் துணியில் கட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இல்லத்திலோ அல்லது தோட்டத்தில் உள்ள வேம்பு, புரசு, ஆல், அரசு போன்ற மரங்களிலும், பால் மரங்களிலும் கட்டி வைத்திட்டுப் புனித யாத்திரை செல்லும் போது எடுத்துச் சென்று ஆங்காங்கே கரைத்திடுங்கள்.

சாம்பலை வீட்டில் வைக்கக் கூடாது என்பது தவறான கருத்து. புனிதமான அக்னியின் கரங்கள் படுவதாலும், தோஷப் பிணி நீக்கும் கண்டங் கத்தரி மூலிகைச் சமூலத்தை ஸ்பரிசித்தமையாலும் எலும்புச் சாம்பலுக்குத் தோஷம் கிடையாது. மஞ்சள் துணியில், மரப் பெட்டியில் சாம்பலைத் தாராளமாக வீட்டில் வைத்துக் கொள்ளலாம். எனவே எலும்புச் சாம்பல் இல்லத்தில் இருப்பதில் தவறில்லை! பலரும் அச்சத்தாலும் மயானத்திலேயே சாம்பலை டெபாஸிட் செய்து விடுகின்றார்கள். இது ஏற்புடையது அல்ல.

வெகு விரைவில் சாம்பலைப் புனித நீரில் விஸர்ஜனம் செய்தலும் இறந்தவரின் ஆன்ம சாந்திக்கு வழி வகுக்கும். கும்பகோணம் சக்கரப் படித்துறையும் சாம்பல் விஸர்ஜனத்திற்குச் சிறப்பானது. இங்கு ருத்ர பூமியில் பித்ருக்களின் நாயகராகிய ஸ்ரீவிஷ்ணு அருள்பாலிக்கின்றார்.

கரிநாள் மகிமை

(கும்பகோணம் அருகே உள்ள சோழபுர ஸ்ரீசனீஸ்வரர் மஹிமை)

* சிவலிங்கத்தைப் பூஜிக்கும் திவ்யமான வடிவில் சோழபுரம் ஸ்ரீசனீஸ்வரர்!

* ஒரு யுகத்தில் திருநள்ளாறு போல் பிரசித்தி பெற்ற ஸ்ரீசனீஸ்வரர் அருள்நிறை ஆலயம்!

* அமாவாசை, கரிநாளில் வழிபட வேண்டிய ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி!

* அமாவாசை, கரிநாள் சேர்ந்து வரும் அபூர்வமான நாளில் வழிபட வேண்டிய ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி!

கரிநாளுக்கும் விசேஷமான மகத்துவம் உண்டா? நிச்சயமாக உண்டு! சுப காரியங்களுக்கு உரித்தானது இல்லை என்று பலராலும் ஒதுக்கப்படும் ராகு காலமானது, ஸ்ரீதுர்க்கை பூஜைக்கு விசேஷமான நேரமாவது போல, கரிநாளுக்கும் உரிய ஆன்மீகத் தாத்பர்யங்களும், பூஜை விளக்கங்களும், தெய்வீக மகத்வமும் நிறைய உண்டு. ஸ்ரீசனீஸ்வர பூஜைக்கும், ௧ஜ (யானை) பூஜைக்கும் உரித்தானதே க‌ரிநாளாகும்! ஆஸ்த்மா போன்ற சுவாச நோய்களால் அவதியுறுவோர் கரிநாள், சதுர்த்தி, சதுர்த்தசி நாட்களில் கஜ பூஜை செய்து, யானையின் வயிறு நிரம்பும் வண்ணம் உணவு வகைகளை அளித்து வந்தால் வியக்கத்தக்க அளவில் குணம் காணலாம்!

(சித்தர்கள் அருளியுள்ள ராகு காலம் பற்றிய அரிய விளக்கங்களை நம் ஆஸ்ரம வெளியீடான ராகு கால துர்க்கா பூஜை மகிமை என்னும் நூலில் காணலாம்)

ஸ்ரீகரியமாலீசன் கரூர்

ராகு காலம், நவமி போல சுபகாரியங்களுக்குக் கரிநாளும் ஏற்றதல்ல என்று தவறாகவே பலரும் கரிநாளைப் பற்றி அறிந்துள்ளனர். கரி என்றால் யானை என்று பொருள்தானே! கரி நாளில் மருத்துவ சக்திகள் நிறைந்த செவ்வாய் ஹோரை நேரத்தில் யானைகளுக்கான கஜ‌ பூஜையை, ஏழைகளுக்கும், யானைக்குமான தக்க அன்னதானத்துடன் கரிநாளில் ஆழ்ந்த பக்தியுடன் குறித்தத் தலங்களில் நிறைவேற்றி வந்திட சிறுநீரகக் கோளாறுகள், நரம்பு நோய்கள் போன்ற கடுமையான வியாதிகளால் வாடி, அடிக்கடி மருத்துவ மனையில் படுத்த படுக்கையாய்க் கிடக்க வேண்டி இருப்போரும் யானையின் பலம் பெற்று எழுவர்! எவ்வாறு பலராலும் ஒதுக்கப்படும் ராகு காலமானது, ராகு கால நேர பூஜையாக மலர்ந்து பன்மடங்கு பலாபலன்களைத் தருவதாக அமைகின்றதோ, இதே போல கரிநாளுக்கு உரிய சித்தர்கள் அருள்கின்ற கரிநாள் மகாத்மியங்கள், மஹிமைகள், பூஜா பலன்கள் நிறைய உண்டு. இவற்றை இனியேனும் பலரும் உணரட்டும்!

கோளம்ப‌க் கரிநாள்!

ஸ்ரீதுர்க்கா பூஜை, ஸ்ரீசரபேஸ்வர பூஜைக்கான சிறப்பான நேரமாக ராகு காலம் விளங்குவது போல, ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு மிகவும் ப்ரீதியான நாளாக விளங்குவதே கரிநாளாகும். நவகிரக மூர்த்திகளிடம் அடிக்கடி போரிட்டுத் துன்புறுத்தி அவமதித்த ராவணனிடம் இருந்து மீண்டிட நவகிரக   மூர்த்திகள் தக்கதோர் கோளம்பு நாளில் (கரிநாளில்) ஸ்ரீகரியமாலீஸ்வரரை வேண்டினர். தற்போதைய கரிநாள் அந்த யுகத்தில் கோளம்பம் என்ற பெயரைப் பஞ்சாங்க ரீதியாகப் பெற்று இருந்தது. வேழ முகத்தாராகிய ஸ்ரீ கணபதியையும். ஸ்ரீகரியமாலீஸ்வரப் பெருமானையும் சனீஸ்வரர் வழிபட்டு ராவணனால் தமக்கும், நவகிரக மூர்த்திகளுக்கும் ஏற்பட்ட இம்சைகளைப் போக்கிட வழிபட்ட நாளே கரிநாளாம்! விஷ்ணுபதியும், கரிநாளும் கூடிய நாளில்தாம் ஸ்ரீசனீஸ்வரருக்குப் பல அரிய அனுகிரகங்கள் கிட்டின! இவ்வாறு கரிநாளில் மகத்தான அருளைப் பொழியும் ஸ்ரீகரியமாலீஸ்வரருக்கு உரித்தான நாளிலும் ஸ்ரீசனீஸ்வரரும் தம் கிரகத்தின் நல்வரங்களைப் பொழிகின்றார்.  ஸ்ரீகரியமாலீஸ்வரராக இறைவன் அருள்பாலிக்கும் தலங்களுள் ஒன்றே கரூர் ஸ்ரீபசுபதீஸ்வரர் ஆலயமாம்!

ஸ்ரீகைலாசநாதர் சோழபுரம்

ஸ்ரீஆதிமூல சனீஸ்வர பகவானே முழு முதல் சனைச்சர மூர்த்தி! இவருடைய அம்சங்களோடு உற்பவித்தவரே இன்று ஆலயங்களில் நாம் காணும் நவகிரக சனீஸ்வர மூர்த்தி! என்றும் எந்நேரமும் சனீஸ்வர லோகத்தில் யோக பூர்வமாக ஹரிஹர பூஜையில் ஆழ்ந்திருப்பவா்! இவருடைய அருட்பரிபாலன பாவனத்தில் நவகிரக சனீஸ்வரர், கால சனீஸ்வரர், தசா சனீஸ்வரர், புக்தி சனீஸ்வரர் என்று நிறைய மூர்த்திகள் தோன்றுகின்றனர்! ராவணனிடம் வந்த சனைச்சரரும் ஆதி மூல சனீஸ்வர மூல மூர்த்தியின் அம்சங்கள் பலவற்றைப் பூண்டவர்!

எவ்வாறு முருகப் பெருமான் சூரபதுமனை எதிர்கொள்ள வீரபாகு, வீரபத்ரர் போன்றோரை முதலில் அனுப்பினாரோ அதோ போல நவகிரக மூர்த்திகள் பூலோக பரிபாலனத்திற்காகப் பலவிதமான சாயா ஸ்வரூபங்களில் தோன்றுவர். எனவே சனீஸ்வரரை "ஒருமையில்" பேசி ஏசாதீர்கள்!  ஜோதிடர்கள் பலரும் சனீஸ்வரரை "எட்டாமிடத்தில் சனி இருக்கின்றான், கஷ்டத்தையே கொடுப்பான்" என்று ஒருமையில் அலட்சியமாகப் பேசுவது வேதனை தருவதாகும்! இவ்வாறு தகாது பேசுதல் சாபத்தையே கூட்டித் தரும். வாக் சக்தியை இழக்கச் செய்து விடும்.

ராவணன் தம் வேத சக்திகளைத் தவறாகப் பயன்படுத்தி அவற்றை ஆயுத வர்கமாக மாற்றி நவகிரக மூர்த்திகளை எதிர்த்தமையால் நவகிரக சாய ரூபங்கள் அவ்வேத சக்திகளுக்குக் கட்டுப்பட்டு அடிபணிந்தன! எனவே நவகிரக மூர்த்திகள் ராவணனுக்கு அடிமை ஆயினர் என எண்ணுதல் கூடாது! ஜோதிட ரீதியாகவும் பெரும் பேறுடைய ராஜ (கம்பீர) தசை கொண்டவனாக ராவணன் விளங்கியமையால், "அனைவரையும் வென்று சிம்ம சக்தியுடன் திகழ்வான்" என்ற கோள் ரீதியான பலன்களுக்கும் நவகிரக மூர்த்திகள் செவி சாய்த்து அவனுக்கு முடியாசன பாக்யத்தை, கர்ம பரிபாலன ரீதியாக அளிக்க வேண்டியதாயிற்று!

மாந்தி கிரகத்தின் காந்த உதயம்!

மேலும் விஷ்ணுபதி கூடிய அதியற்புதக் கரிநாளில் மாந்தி கிரகம் உருவாதல் வேண்டும் என்ற தேவ சங்கல்ப நியதிக்காகவும் நவகிரக மூர்த்திகள் பொறுமையுடன் காத்திருந்தனர். கிரக மூர்த்திகளுள் ஒன்றாக ஸ்ரீமாந்தி மூர்த்தி கிரகம் உருவாக வேண்டிய பூமி சேதுகாரக நிலப் பகுதி (முந்தைய கோடி யுகங்களில் நவபாஷாணம், ரரமேஸ்வரம், தனுஷ்கோடி, லெமூரியாவின் ஒரு பகுதி, இலங்கை உள்ளிட்டது) ஆதலாலும், மாந்திச் சந்தி என்னும் அற்புத காலத்தில் அனைத்துக் கோள் மூர்த்திகளின் நேத்ர கணத்தில் ஸ்ரீசனீஸ்வரரின் புத்திரராக மாந்தி உருவாகுதல் வேண்டும் என்பதாலும் நவகிரக மூர்த்திகளின் அற்புதக் கோள்களின் சங்கமம் அந்த யுகப் பேரிலங்கையில் ராமாயண அங்க அரங்கேற்றமாக, இறைலீலையாக ஏற்பட்டது!

உண்மையில் ஆலயங்களில் ஒன்பது கோள்களும் கூடிய நவகிரக வழிபாடு ஏற்படுவதற்குக் காரணமே கரிநாள் மகிமையே ஆகும். ஆம், அதுவரையில் நவகிரக மூர்த்திகள் தனித்த மூர்த்திகளாய் அருள் புரிந்து வந்தனர். ஒரு கோளம்ப நாளில் (கரிநாள்) ராவணன் நவகோள்களைப் பணிய வைத்துத் தன் அரண்மனைக்குக் கூட்டி வந்தான்! “வேதங்களை அறிந்த ராவணன் சிவபூஜை என்றால் மயங்கிடுவான், ஆனால் தான் மிகவும் கடுந்தவத்துடன் பெற்ற சிவபூஜா பலன்களை எளிதில் விரயம் செய்திடுவான்!" என்பதை அனைவரும் அறிவர்.

தனித் தனியாக நவகிரக மூர்த்திகளை ராவணன் ஆட்படுத்தி வந்த போது, அவர்கள் ராவணனிடம், நாங்கள் யாவரும் சிவபூஜையைச் செய்ய விழைகின்றோம், சற்று அவகாசம் கொடு, பிறகு எங்களை அடக்கிச் செல்” என்று கூறினர். அவர்களை ஒன்றாக அடக்க எண்ணி அவர்களை ஒருமித்துச் சிவபூஜை செய்ய வைத்தான் ராவணன்! நிலத்தில் இருந்தால் அவர்கள் மீண்டும் சக்தி பெற்றுத் தம்மை எதிர்ப்பார்கள் என்பதால் அவர்களை நீரில் அமிழ்த்தி வழிபாட்டிற்கு அனுமதித்தான் ராவணன். இவ்வாறு ஜலத்துள் அமிழ்ந்து சிவனையும், விஷ்ணுவையும் ஒருமித்துப் பூஜித்த கோள்களே இன்று நாம் நவபாஷாணத்தில் காணும் நவகிரக மூர்த்திகளாம்! இதுதாமே இறைலீலை!

நவகிரக வாழியாட்டின் உதயம்

எனவே ஒன்பது கிரகங்களும் ஒன்று கூடிய காட்சி அக்காலத்திய சேதுகார பூமியில்தான் நிகழ்ந்தது.  அப்போது தோன்றியதுதாம் பிரபஞ்சத்தின் முதன்முதலான நவகோள் இணைய வழிபாடான நவகிரக வழிபாடு! ஆம் இராமநாதபுரம் அருகே தேவிபட்டினத்தில் கடலுக்குள் இன்று நாம் காணும் நவகிரகங்கள் அப்போது தோன்றியவைதாம்! முக்கியமாக, கரிநாளில் அனைவரும் வழிபட வேண்டிய நவகிரக மூர்த்திகள்! அந்நாள் கோளம்ப நாளாதலால் அன்று ராவணன் அவர்களை எதிர்த்தமையால் கோளம்பக் கரிதோஷம் அவனைப் பற்றி, ஸ்ரீஆஞ்சனேயர் மூலம் அக்னிக் கரி அவன் நாட்டைப் பற்றியது!

பித்ருக்கள் தினந்தோறும் சனி ஹோரையில் சனைச்சர லோகத்திற்குச் சென்று ஸ்ரீசனீஸ்வரரை வழிபடுகின்றனர். ஒவ்வொரு கரிநாளிலும் பித்ரு லோகத்தில் ஸ்ரீசனீஸ்வரர் பிரசன்னமாகின்றார். ஒவ்வொரு காக்கையும் தினமும் ஸ்ரீசனீஸ்வரரை வழிபடுகின்றது. சனிப் பரணிச் சித்தர் என்பார் சனீஸ்வர லோகத்தைச் சார்ந்தவர். நாகங்களுக்குச் சற்குரு பீடமாய் விளங்கும் ஸ்ரீஅஸ்தீக சித்தர் போல காக்கை இனத்திற்கான சற்குரு பீடமே சனிப் பரணி சித்தரின் பர்ணசாலையாம்! ஓவ்வொரு கரிநாளிலும் அனைத்து சனீஸ்வர சந்நிதிகளிலும் பூஜிக்கின்ற‌ சித்தர்பிரான்! குள்ளமாய்க் கருப்பு நிறம் கொண்டவர்! சனிப் பரணிச் சித்தர் நடமாட்டம் என்றாலே காக்கைகள் கூடிப் பறந்து, ஆர்ப்பரித்து, ஆரவாரமிட்டு இவருடைய வருகையைக் கொண்டாடுவதில் இருந்து இவர்தம் பூலோக விஜயத்தை உணரலாம்!

ஸ்ரீதட்சிணாமூர்த்தி சோழபுரம்

கரிநாள் பூஜையில் கனியும் காரிய சித்திகள்!

நவகிரக மூர்த்திகளில் ஈஸ்வரப் பட்டம் பெற்றவராக விளங்கும் ஸ்ரீசனீஸ்வரர், தாம் ஈஸ்வரப் பட்டம் பெற்றிடப் பல கோடிச் சதுர்யுகங்களாகத் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்திட்டுப் பலவிதமான யோக, தவ முறைகளைக் கைக் கொண்டார். ஈஸ்வரப் பட்டத்தை அவர் பெற்ற நாளும் கரிநாளில்தான்!

எனவே எவ்வாறு ராகு காலத்தில் அனைத்துக் காரியங்களையும் ஒதுக்கி ராகு பகவானையும், ராகு பகவான் துதிக்கும் ஸ்ரீதுர்க்கா தேவியையும் பூஜிக்கின்ற விசேஷமாகப் போற்றுகின்றோமோ அதேபோல் கரிநாளானது ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு உரித்தான விசேஷ பூஜை செய்ய வேண்டிய நாளாகின்றது! குறிப்பாக, பொங்கு சனி, மங்கு சனி, தங்கு சனி உள்ளோரும் சனி தசை, சனி புக்தி, சனி அந்தரங்களில் ஜாதக ரீதியாக இருப்போர் அனைத்துக் கரிநாட்களிலும், சனிக்கிழமைகளிலும் ஸ்ரீசனீஸ்வர பூஜைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஸ்ரீசனீஸ்வரர் தாம் ஈஸ்வரப் பட்டம் பெறுதற்காகக் கடுமையான தவங்களை, யோகங்களை மேற்கொண்ட போதுதாம் ராவணன் போன்ற அரக்கர்களின் தொல்லைகளும் சூழ்ந்தன! தம் தவத்தின் ஒரு பாங்காக, சிவயோக தரிசனத்திற்காக சனீஸ்வரர் திருக்கயிலாய வாயிலில் காத்துக் கிடந்தார். அதிகார நந்தியோ சிவபெருமான் யோக நிலை பூண்டிருப்பதால் சற்றுப் பொறுத்திருக்குமாறு ஸ்ரீசனீஸ்வரரை வேண்டினார்.

வண்டுமுனி கண்டு விண்ட அருணை தரிசனம்!

அப்போது வண்டு வடிவில் சிவதரிசனம் செய்து வெளி வந்த பிருங்கி மாமுனிவர், ஸ்ரீசனீஸ்வரிடம், “முதலில் பராசக்தி தரிசனம் பெற்றிட்டால்தான், பரம்பொருளின் தரிசனம் எளிதில் கிட்டும்!” எனக் கூறி, தான் சிவனை மட்டும் வழிபட்டமையால் பெறுதற்கரிய தவசக்திகளை இழந்து அவதியுற்றதை எடுத்துக் காட்டினார். மேலும் பிருங்கி முனிவரே, ஸ்ரீசனீஸ்வரரை அருணாசலத்தில் கிரிவலம் செய்ய வைத்திட்டு ஆங்கே தான் பராசக்தி தரிசனம் பெற்ற இடத்தில் ஸ்ரீசனீஸ்வரரைத் தவம் புரியுமாறு செய்திட்டார்.

பிருங்கி மஹரிஷி பராசக்தியைத் தரிசித்த இடம் தற்போது எமலிங்க சந்நிதிக்கு முன்னர் உள்ள ஸ்ரீநந்தீஸ்வரர் வீற்றிருக்கும் ‍ மலையெதிரில்  உள்ளது. ஸ்ரீபராசக்தி, ஸ்ரீவித்யா உபாசகர்கள் கண்டிப்பாக வழிபட்டு அருணாசல மலை தரிசனம் பெற வேண்டிய இடமிது! ஸ்ரீசனீ்ஸ்வரர் பல யுகங்கள் இங்கு தவம் புரிந்திட, அம்பிகையும் மனம் கனிந்து,

வண்டு முனி ஒளி கண்ட இடம்
கண்ட ஒளி பிறர் விண்ட தில்லை
பண்டு இடம் பிறிதே அறிவாய்!
மிண்டுச் சோழபுரங்கண் காண்!

- என்று உரைக்திட்டார்.

இதன் பொருளாவது: பிருங்கி மாமுனி ஆதிபராசக்தியைத் தரிசித்த ஒளியானது அவர் தவத்திற்கு மட்டும் உரித்தானதாம்! இவ்வகையில் இதனைப் பிறர் காண இயலாது! இங்கு மலை தரிசனம் செய்து தவம் புரிவது ஆதிபராசக்தி தரிசனத்தைப் பெறுவதற்கான பாக்யங்களைத் தரும் என்று பிருங்கி முனி பகர்ந்தது உண்மையே! எனவே (கும்பகோணம் அருகே) சோழபுரத்தில் சிவபூஜை செய்து உன் தவத்திற்கு உரிய தரிசனம் பெறுக!

நெற்றிக்கண் உற்ற லிங்கம்!

ஸ்ரீசனீஸ்வரரும் சோழபுரம் தலத்தை அடைந்திட, அந்நாளே அமாவாசையும், கோளம்பமும் (கரிநாளும்) கூடிய தினம்! அங்கு சிவபூஜை செய்யும் கோலத்தினளாய், கறுப்புச் சாந்துத் திலகத்துடன், சிவபூஷணியாய் அம்பிகை காட்சி தந்திட்டாள்!

அம்பிகையும் சிவபெருமானின் நெற்றிக் கண்ணை ஒட்டிய சாந்துப் பொட்டினை லிங்கமாக்கி ஸ்ரீசனீஸ்வரருக்கு எடுத்தளித்து, "சனைச்சரா! யோகத்தில் திளைக்கும் ஈஸ்வரனின் நெற்றித் திலகமே லிங்கமாய்த் திரண்டுள்ளது உன் பாக்யமே! மகேஸ்வரனின் நெற்றிக் கண் தரிசனம் பெறுதல் அரிதிலும் அரிதாம்! அதைவிட அரிதாம் சர்வேஸ்வரனின் மூன்றாம் நேத்திரத்தை ஸ்பரிசிக்கும் கறுப்புச் சாந்துத் திலக லிங்கம்! இப்பூஜையானது உனக்கு ஈஸ்வரப் பட்டம் பெறப் பெருந் துணை புரியும். கரிநாளிலும், அமாவாசையிலும் மனம் உருக இதைப் பூசிப்போர்க்கு இந்த த்ரயம்பக நேத்ர லிங்க (ஸ்ரீமுக்கண்மாலீஸ்வரர்) தரிசனம் கிடைக்கும் இதனை வழிபட்டு உனக்குரிய நெற்றிக் கண்ணைப் பெற்று ஈஸ்வரப் பட்டம் அடைதற்கான தகுதிகளை அடைவாயாக!” என்று கூறி அன்னை ஆசிர்வதித்தாள்.

தம் பூஜைக்காகத் "த்ரயம்பக நேத்ர லிங்கத்தைப்" பெற்றுத் தந்த அம்பிகையின் திருவாசலில் என்றும் சிவயோகத்தில் பூரித்திருக்க வேண்டும் என்ற வரம் வேண்டி அன்றிலிருந்து ஸ்ரீசனீஸ்வரர், சோழபுரம் ஸ்ரீகைலாச நாதப் பெருமான் ஆலயத்தில், அம்பிகையின் திருசந்நிதியின் முன், த்ரயம்பக நேத்ர லிங்கத்தைப் (இவரே ஸ்ரீமுக்கண்மாலீஸ்வரர்) பூஜித்த வண்ணம் காட்சி தருகின்றார்.

சிவலிங்கத்தைப் பூஜிக்கும் இச்சனீஸ்வர மூர்த்தியின் தரிசனம் பெறுதற்கு அரியதாகும். கரிநாளிலும். அமாவாசை அன்றும் மிகவும் முக்கியமாக வழிபட வேண்டிய மூர்த்தி.

அறிந்தோ அறியாமலோ வாழ்நாளில் கீழ்க் கண்ட வகையில், கரி தோஷம் பற்றக் கூடிய காரியங்கள் நடந்திருக்கக் கூடும்! எதிர்காலத்திலும் கரி தோஷம் பற்றக் கூடும் அல்லவா!

கரி தோஷங்கள் பலவகை!
1. அடிக்கடி இல்லத்தில், ஆலயங்களில் தீப்பிடித்தல்
2.மின்சார இணைப்பில் துண்டிப்பு, விபத்து ஏற்பட்டு உடல் பாதிப்பு, பொருள் இழப்பு, நஷ்டம் அடைதல்
3. தீராத தீக்காயங்கள், ரணங்களால் அவதியுறுதல்
4. தான் மிகவும் கருப்பாக இருக்கின்றோமே என்று தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்தல்
5. வாழ்வில் செய்த ஒரு சிறிய அல்லது பெரிய தவறுக்காக, உறவு, சுற்றத்தால் நிராகரிக்கப்பட்டு அபலைகளாக, அநாதைகளாக வேதனைகளுடன் வாழ்தல்.
6.நாள், நட்சத்திரம், நேரம் பாராது பல காரியங்களை நிகழ்த்தி கால தோஷங்களால் முன்னேற்றமின்மை, வளர்ச்சியின்மை, அடிக்கடி நஷ்டங்கள் ஏற்படுதல், இடப் பிரச்னைகள் ஏற்படுதல், அலுவலகத்தில், வியாபாரத்தில் ச௧ அலுவலர்கள், கூட்டாளிகளால் ஏமாற்றப்படுதல்.
7.தந்தம் எடுப்பதற்காகக் கொல்லப்பட்ட யானையின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட தந்தத்தினால் ஆன பொருட்களைப் பயன்படுத்துதல் (தந்தத்தினால் ஆன key chain, காரம்போர்டு striker, குங்குமச் சிமிழ்)
8. புகை பிடித்தல் தொழிற்சாலை, பாக்டரிகளில் நச்சுப் புகையைக் காற்றில் கலக்கக் காரணமாதல்
போன்றவை கரி தோஷங்களில் சிலவாம்.

கருப்பாக‌ இருப்பதால் திருமணம் தடைபடுவதாக எண்ணி தினமும் வேதனைகளில் உருகும் பெண்கள் நிறைய உண்டு! ஆண்களும் உண்டு! இவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை நீங்கித் திருமணம் நன்முறையில் கை கூடவும் சோழபுரத்தில் அமாவாசை, கரிநாள் வழிபாடுகள் துணை புரியும்.

கரிநாளில் சோழபுரம் ஸ்ரீசனிஸ்வர் வழிபாடு!

மேற்கண்ட துன்பங்கள் யாவைக்கும் நல்ல தீர்வளிப்பதாக, கரிநாளன்றும், அமாவாசையன்றும் சோழபுரம் சிவாலயத்தில் சிவபூஷண அம்பிகையின் சந்நிதி முன் உள்ள லிங்கத்தை வழிபடும்ஸ்ரீசனீஸ்வரருக்கும், ஸ்ரீசனீஸ்வரர் வழிபடும் "த்ரயம்பக லிங்கத்திற்கும்" அபிஷேக ஆராதனைகள் செய்து ஆழ்ந்த நம்பிக்கையுடன் வழிபட வேண்டும்! எள் காப்பு (எள் பொடி + புனுகு + ஜவ்வாது) சார்த்தி, சந்தனம், திருநீறு குங்குமமிட்டு லிங்கத்தின் மூன்றாம் நேத்திரப் பகுதிக்கு மேல் கருப்புச் சாந்துப் பொட்டு இட்டு வழிபட வேண்டும்.

ஸ்ரீசிவபூஷணி சோழபுரம்

கருப்பு மற்றும் கருநீல நிற ஆடைகள், எள் சாதம். கருவேப்பிலைப் பொடி சாத‌ம், கருப்பு திராட்சை போன்ற ஸ்ரீசனீஸ்வரருக்குப் ப்ரீதியான கருப்பு, கருநீல நிற உணவுகள், திரவியங்களையும் படைத்து ஏழைகளுக்குத் தானமாக அளித்தலால் கிட்டும் தான தர்ம பலன்களுடன், பூஜா பலன்களும் சோந்துதாம் மேற்கண்ட குறைகளுக்குத் தக்க நிவர்த்திகளைப் பெற்றுத் தரும்!

அம்பிகையின் அருளால் ஸ்ரீசனீஸ்வரருக்குக் கிட்டிய லிங்கம் ஆதலால் ஸ்ரீமுக்கண்மாலீஸ்வரருக்கு 8, 17 ,26, 35 என்ற வகையில் ஸ்ரீசனீஸ்வாருக்கு உரிய எட்டு கூட்டெண் வருமாறு (எண்ணிக்கையில்) மஞ்சள் கிழங்குகளை வைத்து வழிபட்டு ஏழைச் சுமங்கலிகளுக்கு அளித்து வர, கணவனுக்கு ஏற்பட்டுள்ள வியாதிகளின் கடுமை தணியும்! மேலும் தன் வண்டி நம்பர்க் கூட்டெண் எட்டாக வந்து விட்டதே என வருந்துவோர் தன் வண்டியுடன் சனிக்கிழமை, அமாவாசை, கரிநாட்களில் இங்கு வந்து வழிபட வேண்டும்! எட்டு என்ற எண் அமைவதில் தவறில்லை! அவரவர் நட்சத்திரம், பிறந்த தேதிப்படி எண் அமைவது உத்தமமானது!

ஒரு யுகத்தில் திருநள்ளாறு போல சனீஸ்வரத் தலமாக, மாபெரும் உற்சவாதிகளுடன் பிரசித்தி பெற்று விளங்கிய சோழபுரம் ஸ்ரீசிவபூஷணி சமேத ஸ்ரீகைலாசநாதர் ஆலயம் தற்போது பலராலும் அறியப்படாது உள்ளது! இனியேனும் பக்த கோடிகள் இதன் மகிமையை உணாந்து அமாவாசை, கரிநாட்களில் அற்புதமான முறையில் அபிஷேக, ஆராதனைகளை நிகழ்த்தி இதனை மிகவும் முக்கியமான சனீஸ்வரத் தலங்களுள் ஒன்றாக முன்பு போலப் பிரசித்தி பெறச் செய்ய வேண்டும்!

இங்கு அம்பாள் சந்நிதி முன் சிவலிங்க பூஜையில் திளைத்திருக்கும் சனீஸ்வர தரிசனம் காணுதற்கு அரிய காட்சியாகும்!

ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி, ஸ்ரீமுக்கண்மாலிஸ்வர், ஸ்ரீதிருக்கண்மாலீஸ்வரர், ஸ்ரீகரியமாலீஸ்வரர், ஸ்ரீகரிகிருஷ்ணர் போன்ற மூர்த்திகளுக்கு அமாவாசை, கரிநாளில் வழிபாடுகளை நிகழத்துதலால் சனி தசை, சனி புக்தி, சனி அந்தரங்களில் உள்ளோர்க்கு கர்ம வினைகளின் வேகம் தணிவுறும்! இத்தலங்களில் ஸ்ரீசனீஸ்வரருக்கு நல்லெண்ணெய்க் காப்பிட்டு, அபிஷேக ஆராதனைகளுடன் வழிபட்டு கருமை அல்லது கருநீல வஸ்திரம் சார்த்தி வழிபடவேணடும்.

சனிக் கிழமை, மற்ற நாட்களில் சனி ஹோரை நேரம், கரிநாள், அமாவாசை ஆகிய தினங்களில் இப்பூஜைகளை நிறைவேற்றி வருதல் மிகவும் சிறப்புடையதாம்.

கரிநாளில் வரும் அமாவாசை நாட்களில் இம்முறையில் வழிபடுவது, குறிப்பிட்ட தான தர்மங்களை நிறைவேற்றுவது உன்னதமான பலன்களைத் தரும்.

பேனாவைப் பேணுவீர்

பேனாவை ஆன்மிக ரீதியாகப் பேணுவீர்!
நீதிபதிகளுக்கான விசேஷமான பேனா

நீங்கள் பயன்படுத்தும் பேனாக்களில் நல்லதும் சேரும், தீயதும் சேரும் எனவே உங்களுடைய பேனாவை மிகவும் புனித‌மாகவே வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். பேனாவைப்   பிறருக்கு இரவல் கொடுப்பதோ எவரிடமிருந்தேனும் இரவல் வாங்குவதோ முற்றிலும் தவிர்க்கப்பட்டால்   வாழ்க்கையில் கணிசமான அளவில் தீவினைகள் சேர்ப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்து விடலாம்.

உங்களுடைய. குழந்தைகளுடைய பேனாக்கள் எப்போதும் பூஜை அறையில், சுவாமியிடம் இருக்கட்டும். அதில் அநாவசியமான படிவுகளைச் சேர விடாதீர்கள்!

மதுபானக் கடை. சிகரெட்டுக் கடை. லாட்டரிச் சீட்டுக் கடை போன்ற சூது, பேராசை. எண்ண, உள்ள மயக்கத் தீவினைகள் நிரம்பிய இடங்களில் பயன்படுத்தப்படும் பேனாக்களில் மாயத் தீவினைகள் சூழ்ந்திருக்கும். எனவே எல்லா இடங்களிலும் பேனாவை இரவல் வாங்கி விடாதீர்கள்!

மது, புகை, சிகரெட் மற்றும் முறையற்ற காம உணாச்சிகள் புழங்கும் இடங்களில் பணி புரிவோர் இறைவனிடம் “ஆண்டவா! இனியேனும் இல்லத்தையும், குடும்பத்தையும், மனித உயிரையும் பாதிக்கும் தீவினைக் கர்மங்கள் சேரும் இடங்களில் அடியேன் பணிபுரிதல் வேண்டாம்! எனக்கு நல்ல வழி காண்பிப்பாயாக!” என்று நெஞ்சுருக வேண்டி, மேலும் மேலும் வினைகளைப் பெருக்க நாம் கருவியாக இருக்கக் கூடாது என்ற மனத் துணிவுடன் வெளி வந்திட்டால் இறையருளால் நல்வகையான மாற்றுத் துறைகள் கிட்டும்.

பேனாக்களைக் குறித்த சில சங்கு உறைகளில் வைத்துப் பழகினால் அவற்றில் சேரும் தீவினை சக்திகளை எளிதில் தணித்திடலாம். பேனாவைப் பயன்படுத்துபவரின் ஆன்ம நிலையைப் பொறுத்துப் பேனாவில் நல்ல சக்திகளும், தீய சக்திகளும் படியும்.

எப்போதும் ஓங்காரம் உள்மறையாக, உள்ளொலியாக ஒலித்துக் கொண்டிருக்கும் பிரணவத் திரவியங்களான ருத்ராட்சம், ஸ்படிகங்கள், கொன்றை மரச்‌ சமித்து, புல்லாங் குழல், நாதஸ்வரம் போன்றவற்றோடு ‌சங்கும் அடங்குவதால் குறித்த சிலவகைச் சங்குகளில் எப்போதும் பேனாக்களை வைத்துப் (CONCH PEN STAND) பிரணவ சக்தியைப் பெருக்கித் தீய சக்திகளை நீக்கிப் பேனாவில் புனிதம் நிறைந்திடச் செய்யுங்கள்.

பேனாவைப் புண்ணியத் தீர்த்தத்தால் ஸ்பரிசித்தல் மூலமும் ஆலயப் பிரகாரங்களில், கிரிவலப் பாதையில் பேனாவை பூமியில் உருட்டியும், விபூதி, மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டும் பேனாவிற்குப் புனிதம் சேருங்கள்.

நீதிபதிகளுக்கான நல்லறப் பேனா!

ஆச்சா மரம், புங்க மரம், கருங்காலி, தேக்கு, சந்தன மரம் போன்ற மரப் பேனாக்களைப் பயன்படுத்தி நீதிபதிகள் தீர்ப்பு எழுதும் பேனாக்களைப் புனிதம் பெறச் செய்ய வேண்டும். நெல், கோதுமை போன்ற அந்தந்த நாளுக்குரிய நவதானியங்களில் பேனாவை வைத்திருப்பது நீதிபதிகளுக்குப் பேனா மூலம், எழுத்து மூலம்; தீர்ப்பு மூலம் தோஷங்கள் வராது தடுக்கும். இவர்கள் பேனாவை எப்போதும் சங்கு உறைகளுக்குள் வைப்பதால் பலருடைய எதிர் எண்ணங்களில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும். நீர்மயப் பொருளுக்குத்தான் தோஷங்களை நிவர்த்தி செய்யும் தன்மை அதிகம். ஆதலின் பால் பாயிண்ட் பேனாவைவிட இங்க் பேனாவிற்கு நற்சக்திகளை கிரகிக்கும் சக்தி நிறைய உண்டு.

வேறு வகைப் பேனாக்களை நீதிபதிகள் பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் நேரிட்டால் ஒரு தீர்ப்பு முடிந்தவுடன் அதனைக் கடலில் விஸர்ஜனம் செய்திட வேண்டும். இவையெல்லாம்   உணர்த்துவது யாதெனில் ஒவ்வொரு விநாடி வாழ்க்கையிலும், ஒவ்வொரு   பொருளையும் ஆன்மீக ரீதியாகப் பயன்படுத்திட வேண்டும் என்பதேயாகும்.

கொட்டையூர் ஸ்ரீஅஷ்டபுஜ துர்கை

முரட்டுத்தனம்‌ நீக்கி நற்குணம்‌ தரும்‌கொட்டையூர் ஸ்ரீ அஷ்டபுஜ துர்க்கை

பொதுவாக, நிறையக் குடும்பங்களில்‌ உள்ள பலத்த பிரச்சனை என்னவென்றால்‌ கணவன்‌, மனைவி. வளர்ந்த   பெண்கள், பிள்ளைகள்‌ பெற்றோரை எதிர்த்துப்‌ பேசுவதும்‌ கட்டுக்‌ கடங்காமல்‌ இருப்பதும்தான்‌! சிறு வயதிலேயே பூஜைகளைச் செய்ய வைத்துத்‌ தினசரி ஆலய வழிபாடுகளைக்‌ கடைபிடிக்கச்‌ செய்தால்‌ இந்நிலை வரவே வராது! பிள்ளைகளின்‌ மனோ நிலைகளைப்‌ பெற்றோர்கள்‌ புரிந்து கொள்ளாமைதான்‌ இதற்கு மூல காரணமாகும்‌.

ஸ்ரீஅஷ்டபுஜ துர்கை கொட்டையூர்

கணவன்‌ மற்றும்‌ குழந்தைகள்‌ நன்கு ஒழுக்கக்‌ கட்டுப்பாட்டுடன்‌ விளங்கிட கும்பகோணம்‌ அருகே கொட்டையூரில்‌ உள்ள அஷ்டபுஜ தூர்க்கைக்கு (எட்டு கரங்கள் உடைய துர்க்கை சென்ற இதழ்‌ மார்ச்‌ 2002 பின்‌ பக்க அட்டைப்‌ படம்‌) மதிகாரகராகிய சந்திர பகவானுக்கு உரிய திங்கள்‌ கிழமையன்று ராகு கால நேரத்தில்‌ (காலை 7.30 முதல 9.00 வரை) வெண்ணெய்க்‌ காப்பிட்டு, மாதுளை முத்துக்கள்‌ பதித்து அலங்கரித்து வழிபட்டு வருவதால்‌ துர்சக்திகள்‌ மனதில்‌ புகாது, பிள்ளைகள்‌ நல்ல கட்டுப்பாட்டுடன்‌ வளர்வர்‌. புகை பிடித்தல்‌ போன்ற தீய வழக்கங்களில்‌ இருந்து விடுபடுவர். பெற்றோரும்‌ இப்பூஜையைக்‌ கடைபிடிக்க வேண்டும்‌.

சங்கல்பம்‌ செய்து ஒரு வாரம்‌ முழுதும்‌ தினந்தோறும்‌ ஸ்ரீதுர்க்கைக்கு வெண்ணெய்க்‌ காப்பு இட்டு அதில்‌ மாதுளை முத்துக்களைப்‌ பதித்து ஆலயத்தை அடிப்‌ பிரதட்சிணம்‌ செய்து வழிபட்டு வந்திடில்‌ பிள்ளைகள்‌, பெண்கள்‌ நல்ஒழுக்கத்துடன்‌ அடக்கமாக இருப்பர்‌. இங்கு தொடர்ந்து ஒருவாரம்‌ வழிபட இயலாவிடில்‌ முதலில்‌ கொட்டையூர்‌ துர்க்கையை வழிபட்டுப்‌ பின்னர்‌ தங்கள்‌ ஊரில்‌ உள்ள ஸ்ரீதுர்க்கைக்கு ஒரு வாரம்‌ தொடர்ந்து வெண்ணெய்க்‌ காப்பிட்டு வழிபடுக! பிறகு ஒவ்வொரு வாரமும்‌ புதன்தோறும்‌ சத்சங்கப்‌ பூஜையாகப்‌ பலரும்‌ இந்த வெண்ணெய்‌ மாதுளைக்‌ காப்பு வழிபாட்டைத்‌ தொடர்தல்‌ சிறப்பானதாம்‌. ஏனென்றால்‌ அனைவரும்‌ ஒழுக்கத்துடன்‌ திகழ்ந்தால்தானே சமுதாயத்தில்‌ சாந்தம்‌ பூத்துக்‌ குலுங்கும்‌!

கண்களால்‌ பலவற்றையும்‌ கண்டு தகாத உணர்ச்சிகள்‌ எழுவதால்தான்‌ தீய எண்ணங்கள்‌ தோன்றி, தீயொழுக்கம்‌ பற்றிக்‌ கொள்கின்றது. எனவே கண்‌ நிறைந்த ஸ்ரீதுர்க்கைக்கான அபிஷேக, ஆராதனைக்‌ காட்சிகளே தீய எண்ணங்களைத்‌ தடுத்து தெய்வீக எண்ணங்களைப்‌ பரிமளிக்கச்‌ செய்யும்‌! மாதுளைக்‌ காப்பிட்ட கொட்டையூர்‌ ஸ்ரீதூக்கையின்‌ தரிசனத்தைக்‌ குடும்பத்தோடு கண்‌ நிறைவுடன்‌ கண்டு ஆனந்தித்துத்‌ தரிசித்திடுக! மிகவும்‌ சக்தி வாய்ந்த துர்க்கை! காஸ்யப மஹரிஷியின்‌ பத்னி திதி தேவி சில குழந்தைகளைப்‌ பெற்று விதி வசத்தால்‌ அவர்கள்‌ பல அரக்க குணங்களைப்‌ பெற்று அரக்கர்கள்‌ ஆகிட, அவர்களில்‌ பலரையும்‌ திருத்தி அரக்கர்களுக்கே நற்புத்தி அளித்த அற்புத சக்தி வாய்ந்த ஸ்ரீஅஷ்டபுஜ துர்க்கையே கொட்டையூரில்‌ கலியுகத்தில்‌ உள்ளத்தில்‌ அசுர குணங்களைச்‌ சுமந்து வாழும்‌ கலியுக மனிதர்களைத்‌ திருத்தும்‌ வண்ணம்‌ இன்றும்‌ என்றும்‌ எட்டுக்‌ கரங்களுடன்‌ அருள்பாலிக்கின்றாள்‌!

அலைபாயும் மனம் அடங்குவது எப்படி ?

என்றேனும் நீங்கள், உங்களுக்கு உள்ளேயே “அலை பாயும் மனமே, சற்றே சும்மா இரு!” என்று சொல்லி இருக்கின்றீர்களா? அப்படிச் செய்யத்தான், சொல்லத்தான் முடியுமா? உங்களையும் மீறி உங்கள் மனம் செயல்படுகின்றது என்றால் கட்டுக்கடங்கா மனமோடு வாழ்ந்தால் தீமைகள்தாமே பெருகும்! சரி, கட்டுக்கு மீறிச் செல்லும் மனதை எப்படி வகைப்படுத்துவது? கவலைப்படாதீர்கள்! அனைத்து நாடுகளிலும் உலகில் உள்ள எந்தப் பிரசசினைக்கும் ஆன்மீகத்தில்தான் தீர்வுகள் உண்டு. ஆழந்த நம்பிக்கையுடன் கடைபிடித்தால்!

உங்கள் இல்லத்திலேயே, நீங்களே குறிக்கும் அமைதியான இடத்தில், குறித்த நேரத்தில் தினமும சில மானசீகமான (மனத்தளவிலான) பூஜைகளை முறையாக இடைவிடாது செய்து வந்தால் மனதைப் பண்படுத்தி விடலாம்! இதற்கு முன் உங்கள் மனதைச் சுத்திகரிப்பதற்கான ஆன்ம சாதனங்களையும், சில வகை “மனோ ஐக்ய” சக்திகளையும் பெற்றிட. வேண்டும். இத்தகைய ஆத்ம சாதனங்களை எங்கு, எவ்வாறு பெறலாம்?

ஸ்ரீஞானசரஸ்வதி மங்களக்குடி

* பல ஆலயங்களிலும் வீணை ஏந்திய சரஸ்வதியை பிரம்ம பத்னியாய்க் கண்டு தரிசித்திருப்பீர்கள். வீணையில்லாத ஞானக் கோலத்தில் அருள் புரியும் கலைவாணியான ஸ்ரீஞான சரஸ்வதியைத் தரிசித்து இருக்கின்றீர்களா? ஸ்ரீஞான சரஸ்வதி மனோ வீணையை மீட்டி மனோ ஞானத்தைப் பொழிபவள்! ஸ்ரீபிரம்ம மூர்த்தியே தம் நான்கு சிரசுகளின் நெற்றிக் கண்களை ஒருமித்து நோக்கிடில்தான் அவர்தம் கண்களுக்கு ஸ்ரீஞான சரஸ்வதி புலனாவாள் என்றால் ஸ்ரீஞானசரஸ்வதியின் மகிமையை சொல்லவும் பெரிதன்றோ!

* மன்மதனை இழந்து ரதி கதி கலங்கிய போது நாரதரின் அறிவுரையின்படி ரதி தேவி ஸ்ரீஞானசரஸ்வதியை வணங்கி வந்தமையால் தன் கண்களுக்கு மட்டும் மன்மதன் தெரியும் படியான நல்வரத்தைப் பெற முடிந்தது!

* அரிச்சந்திரனின் மனைவியாம் சந்திரமதியும் வசிஷ்டரின் அறிவுரையின்படி ஸ்ரீஞான சரஸ்வதியைப் பூஜித்து வந்தமையால்தான் அவள் கழுத்தில் இருந்த திருமாங்கல்யம் தன் பர்த்தாவான அரிச்சந்திரனுக்கு மட்டுமே புலப்படும்படியான நல்வரத்தைப் பெற்று அரிச்சந்திரனுக்கு நேரிட்ட ம்ருத்யு தோஷங்களைப் போக்கிக் கற்புக்கரசியாய்த் தக்க சமயத்தில் தன் கணவனைக் காத்தாள்.

சென்னை கோயம்பேடு ஸ்ரீகுறுங்காளீஸ்வரர், மங்களக்குடி, கும்பகோணம் அருகே சோழவரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலயங்களில் தன்னிடத்தே வீணை இல்லாத தோற்றத்தோடு ஸ்ரீஞான சரஸ்வதி அருள்பாலிக்கின்றாள். கலைவாணியின், (சரஸ்வதியின்) ஞானகுருவாம் ஸ்ரீஹயக்ரீவருக்கு உரித்தான புனர்பூசம், ஞானம் பூக்கும் புனித நேரமாகிய புதன்கிழமை அல்லது ஹஸ்த நட்சத்திர நாளில், வளர்பிறைச் சந்திர ஹோரை நோத்தில் ஸ்ரீஞான சரஸ்வதிக்கு மஞ்சள் நிறச் சித்தாடை அல்லது மஞ்சள் வஸ்திரம் சார்த்தி நிறைய செவ்வந்திப் பூக்களைத் (ஜவ்வந்தி அல்ல) திண்டு மாலையாகச் சார்த்தி வழிபட்டிடுக! அம்பிகையின் முன் தர்பைப் பாயில் அமர்ந்து துதியை 108 முறை ஓதி தியானிக்க வேண்டும்!

ஞானச் சர ரச நைவேத்யம்

இந்நாட்களில் ஸ்ரீஞான சரஸ்வதி அருளும் ஆலயங்களில் “ஞானச் சர ரசம்” என்று சித்தர்களால் போற்றப்படும் தேன், பாதாம் பருப்பு, திராட்சை, முந்திரி ஆகியவற்றைத் தேங்காய்ப் பாலுடன் நிறையச் சேர்த்துப் படைத்து ஏழைகளுக்குத் தானமாக அளித்து வருதல் வேண்டும். பிறகு இந்தத் தர்ப்பைப் பாயை இல்லத்திற்கு எடுத்து வந்து பூஜை அறையிலோ, குறித்த இடத்திலோ தினமும் அதே நேரத்தில் அமர்ந்து கண்களை மூடி ஸ்ரீஞான சரஸ்வதியின் திருஉருவத்தை மனக்கண் முன் கொண்டு வருதல் வேண்டும். இது முதலில் சற்றுக் கடினமாக இருக்கும் ஆனால் நீங்கள் ஸ்ரீஞான சரஸ்வதியை த‌ரிசித்தது, வஸ்திரம்‌ சார்த்தியது, தர்ப்பைப்‌ பாயில் அமர்ந்து தியானித்தது, தேங்காய்ப்‌ பாலைப்‌ படைத்துத்‌ தானம்‌ செய்த‌து ஆகிய புனிதமான நல்‌அற நிகழ்ச்சிகளை மனக்‌ கண்முன்‌ புனிதமான “திரைப்‌ படம்" போல்‌ கொணர்ந்தால்‌ “ஓடி ஓடிப்‌ பழகிய” மனதிற்கு இந்த இறைத்‌ திரை ஓட்டம்‌ நன்கு கனிந்து சற்றே கொஞ்சம்‌, கொஞ்சமாக மனம்‌ அடங்கத்‌ தொடங்கும்‌.

உங்களை பிட்டுப்‌ பிய்த்துக்‌ கொண்டிருக்கும்‌ மனதை. ஸ்ரீஞான சரஸ்வதி தரிசன நிகழ்ச்சியை வீடியோ போல மனக்‌ கண்ணால்‌ பார்க்க வைத்துத்‌ தியானிப்பதும் மனமடங்கும்‌ யோக வகைதான்‌! சும்மா இரு மனமே என்றால் ஆடாமல்‌, அசையாமல் இருப்பதல்ல! பிற வழிகளில்‌ புகும்‌ மனதை அடக்கி இறைவழியில்‌ செலுத்துவதும்‌ சும்மா இருக்கும்‌ அறவழியில்‌ மனதைப்‌ பெறுதலேயாம்!

திமிங்கலம் தரும் பாடம்

காரண, காரியங்களுடன் தான்‌ உலகில்‌ அனைத்தும்‌ படைக்கப்பட்டுள்ள‌ன. பெறுதற்கரிய பகுத்தறிவை மனிதன்‌ பெறக்‌ காரணமும்‌ இறைமையை இவ்வாறு காரண காரியத்துவமாகப்‌ பகுத்தறிந்து உணர்தற்கே!

உங்கள்‌ மூதாதையர்களும்‌ மீன்களாக, நண்டுகளாக, திமிங்கலங்களாக, கடல்வாழ்‌ உயிரினங்களாகப்‌ பிறப்பு எடுத்திருக்கலாம்‌ அல்லவா! ஏன்‌ உங்கள்‌ பூர்வ ஜன்மங்களில்‌ ஒன்று அவ்வாறு அமைந்திருக்கலாமே! நீங்கள்‌ அறியா வகையில்‌ மனித இனத்தைவிட பல கோடி கோடி மடங்கு மீன்கள்‌ கடல்களில்‌, நீர் நிலைகளில்‌ வாழ்கின்றன. கோடானு கோடியான ஒவ்வொரு மீனின்‌ பிறப்பிற்கும்‌, கர்ம வினைப்‌ பரிபாலனத்திற்கும்‌ இறை நியதிகள்‌ உண்டு என்றால்‌ இறைவனை ஒரு சிறிதேனும்‌ உணர்தல்‌ என்பது ஆன்மீக ரீதியாகப்‌ பகுத்து அறிந்தால்தானே முடியும்‌! அற்காகத்தானே இம்மனித வாழ்வு!

பூமியில்‌ அட்டகாசம்‌ செய்து, கொடிய தீவினைகளைப்‌ புரிந்து அரக்கர்கள்‌ கடலிற்‌ பதுங்கியபோது, திருமால்‌ மச்சாவதாரம்‌ பூண்டு கடல்வாழ்‌ அரக்கர்களை சம்கரித்துப்‌ பிரபஞ்ச ஜீவ வாழ்க்கையைக்‌ காத்தாரன்றோ!

திமிங்கலத்தின்‌ படைப்புக்குக்‌ காரணம்‌ என்ன?

ஒரு நாளைக்குப்‌ பல்லாயிரம்‌ மீன்களை உண்டு பசியாறும்‌ திமிங்கலமானது, அரிய மச்ச, சக்திகளை உடையது! எனவே பூமியில்‌ நிறைந்துள்ளவை போலவே கடலிலும்‌, வானிலும்‌, ஆழ்பூமியிலும்‌ இறைமை பூக்கும் திரவியங்கள, சுயம்பு மூர்த்திகள், மூலிகைகள்‌ உண்டு! சைவமாகவும்‌, கடல்விளைக்‌ கனிகளை உண்டும்‌, ஒன்றும் உண்ணாதும்‌ துறவியாக வாழ்கின்ற கடல்வாழ்‌ விலங்குகளும் உண்டே!

திமிங்கலம்‌ என்பது ரஜோ, தமஸ், சத்வ குணங்களின்‌ மும்முகத்‌ தொகுப்பாகும்‌. மனித நாகரீகத்தின்‌ கழிவுகள்‌  சாக்கடைகளாகக் கடலில்தாமே சேர்கின்றன! இவற்றைத்‌ தம்‌ யோக சக்தியால்‌ தூய்மைப்படுத்துவதே திமிங்கலங்களாம்‌.

மனித குலத்தால்‌ வெளியிடப்பட்டு வானவெளியில்‌ மிதந்து கொண்டு இருக்கும்‌ தீய சக்திகளையும், தீய எண்ணங்களையும்‌ திமிங்கலங்கள்‌ தம்‌ யோக மூச்சுக்‌ காற்றால்‌ உள்‌ இழுத்துத்‌ தூய்மைப்‌ படுத்துகின்றன. கடலுக்கு என அரிதான உஷ்ண சக்திகளை இறைவன்‌ அளித்துள்ளான்‌. இவற்றில்தாம்‌ திமிங்கலங்கள்‌ அத்தகைய தீய சக்திகளைத்‌ தமக்குரிய “லவண குண" சக்தியால்‌ ஜல ஹோம குண்ட பூஜைகளை நிறைவேற்றிப்‌ பஸ்மம்‌ செய்து சுத்திகரிக்கின்றன.

எதுவும் தோன்றுவதில்லை!
எதுவும்‌ அழிவதில்லை!
இதுவே நான்கு மறைத்‌ தீர்ப்பு!

ஸ்ரீவெண்ணீற்று உமையம்மை ஆச்சாள்புரம்

ஸ்ரீவேதஆஞ்சநேயர் ஆச்சாள்புரம்

உண்மையில்‌ ஆறுகள்‌, வாய்க்கால்கள்‌ மூலமாகக்‌ கடலை அடையும்‌ கழிவுகளை மீன்கள்‌ உள்ளிழுத்து பஸ்மம்‌ செய்து சுத்திகரித்திட, திமிங்கலங்கள்‌ அம்மீன்களைத்‌ தன்‌ வயிற்றினுள்‌ ஏற்றுத்‌ தன் தன் உடலில்‌ உள்ள அபூர்வமான ஜல குணா அக்னியில்‌ சுத்திகரித்து வெளியிடுகின்றது. எனவே திமிங்கலத்தின்‌ வயிற்றினுள்‌ செல்லும்‌ மீன்கள்‌ தங்கள்‌ உயிர்களை இழப்பதாக வெளிப்படையாகத்‌ தோன்றினாலும்‌ அவை வேறு உருவங்களாகின்றன என்பதே தெய்வீக பூர்வமான உண்மையாகும்‌! அவற்றினுள்‌ ஜீவ அணுக்கள்‌ வெவ்வேறு வடிவுகளில்‌ உருவாகிட கடவுள்‌ ஆற்றும் இறைலீலையே இதுவாகும்.

இப்பிரபஞ்சத்தில் எதுவும் உருவாவதில்லை, எதுவும் அழிவதில்லை! வடிவுகளில் மட்டுமே மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை ௨ணர்த்துவதே திமிங்கலப் பிறப்பின் ரகசியமாகும். ஒரு திமிங்கலத்தின் முன் எவரும் எதுவும் நின்றால் உடனே அது விழுங்கிடாது! எவர், எது திமிங்கலத்தின் உள்ளே புக வேண்டுமோ அதுதான் உள்ளே செல்லும். இதற்காகப் பரீட்சித்துப் பார்க்காதீர்கள்!

எனவே நாய், திமிங்கலம், தேள் என எதையும் பகைமையால் வெறுக்காதீர்கள். அவற்றுள் ஒன்றிரண்டுடன் நீங்கள் பகைமை கொள்ளக் காரணம் உங்களோடு இருந்த பகைமையால் இறந்த நெருங்கிய உறவினராக அவை இருக்கக் கூடும் அல்லவா! இவ்வகை ஆத்ம விசாரத்திற்கு உதவுவதே, திமிங்கலமாகும், உதாரணமாக இதைப் படித்தவுடன் எங்கேயும் நீங்கள் திமிங்கலத்தைக் காண நேரிட்டால் உங்களுடைய ஆன்மீக அணுகு முறையில் சற்றே மாற்றம் ஏற்படுவதை உணர்வீர்கள்! எனவே அபூர்வமாக எங்கேனும் திமிங்கலம் இறந்து கிடப்பதை நேரிலோ, செய்தித் தாளிலோ, டிவியிலோ கண்டிட்டால் உடனே அத‌ற்கு ஏதேனும் பெயர் சூட்டி அந்நாளிலேயே அப்பெயரில் தர்ப்பணம் அளித்திடுங்கள். இதுவே உண்மையான இறைப் பகுத்தறிவு! இதைக் கடைபிடித்துப் பார்த்தால் அபூர்வமான ஞானம், தீர்க தரிசனம், தேஜஸ் உங்களிடம் தோன்றுவதைப் பிறரும் அறிவர், நீங்களும் உணர்வீர்கள்! இறைவனுடைய ஓர் அற்புதமான பெரிய படைப்பைக் காணும் போது அதில் விரவி இருக்கும் ஜீவ சக்தி உங்களுடன் பேசும்!

ஆச்சாள்புரம்

* காரியத் தடங்கல்களை நீக்கும் ஸ்ரீவேத ஆஞ்சநேயர்
* அம்பிகையே திருநீறு அளித்த அற்புதத் தலம்!
* அதிமதுர அமிர்த சக்திகள் கூடிய அமாவாசைத் தர்ப்பணத் தீர்த்தம் கொண்ட தலம்!

மாத சிவராத்திரிக்கு அடுத்த நாளான அமாவாசையன்று இடப்படும் தர்ப்பணம் மிகவும் சக்தி வாய்ந்த பலன்களை அளிக்கின்றது. இப்பலன்கள் நிரவி உள்ள தீர்த்தத்தைக் கொண்ட தலங்களுள் ஒன்றே சிதம்பரம் அருகே உள்ள ஆச்சாள்புரம் ஆகும். ஆலயத்திற்கு எதிரே உள்ள இத்தீர்த்தத்தில் குறித்த திதி, அமாவாசையில் தாப்பணம், படையல் அளிப்பதால் "நாம் பிறருக்கு எவ்விதத் தீங்கும் இழைக்காமல் நல்முறையில் வாழ்ந்தாலும், நம் வாழ்வில் இவ்வளவு சோதனைகளும், வேதனைகளும் ஏற்படுகின்றனவே” என்று வருந்துவோர்க்கு பித்ருக்களே முன் வந்து துன்பங்களைத் துடைத்து ஆசி அருளும் தலம்!

சம்பந்தப் பெருமானின் திருமணத்தின் போது தேவ விமானங்களும், சிவஜோதியும் பரிணமித்து நின்ற இடமென்றால் அந்த யுகத்தில் பிரம்மாண்டமாகத் திகழ்ந்த எத்தகைய உத்தமத் திருத்தலமிது! திருமணத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் அம்பிகையே தம் திருக்கரங்களால் நேரடியாகவே திருநீறு வழங்கிச் சிறப்பித்த தலம்! இதனால் இன்றைக்கும் அம்பிகையின் சந்நிதியில் திருநீறு வழங்கப்படுகின்றது! சிவாக்னியில் பூரிக்கும் திருநீறு ஆதலின் நோய் நொடிக் கர்ம வினைகளை பஸ்மம் செய்து, சுமங்கலித்வத்தை போஷிக்கும் அரிய திருநீறு!

வல்வினை தீர்க்கும் ஸ்ரீவேத ஆஞ்சநேயர்!

இவ்வாலயத் தூணில் வேத ஆஞ்சனேயருடைய அதியற்புத வடிவினைக் காணலாம்! தாமாகவே வேதங்களை இவ்வாலயத்தில் ஞானபூர்வமாகப் பெற்றவர் ஆதலின் ஆஞ்சநேயருக்கு வேத சக்திகளையே அருள்வரமாக அளிக்கும் அவதார சக்திகள் நிறைய உண்டு. வெண்ணெய், குங்குமப் பூ நிரவி ஆச்சாள்புரம் ஸ்ரீவேத ஆஞ்சநேயருக்கு மூல நட்சத்திரம், திருவோணம் நாட்களிலும், சனிக்கிழமைகளிலும் வெண்ணெய்க் காப்பு இட்டு வழிபட்டு வந்தால் வீடு கட்டுதல், வாங்குதலில் உள்ள தடங்கல்கள், கோர்ட் தாவாக்கள் நன்முறையில் தீரும். கால தாமதத்தால் பாதிக்கப்பட்ட காரியங்கள் மீண்டும் நன்முறையில் நடைபெறும். மிகச் சிறிய சாதாரணப் பிழைகளால் பெரும் பெரும் காரியங்களும் தடைபட்டு அவதியுறுவோர் பலரும் உண்டு. இதற்குக் காரணம் பூர்வப் பிறவிகளிலும், தற்போதைய வாழ்க்கையிலும் தக்க நல்ல நேரத்தில் பூஜைகளை நிகழ்த்தாததும், ராகுகாலம், எம கண்டம் போன்றவற்றைக் கணிக்காது, நல்ல நேரங்களில் காரியங்களைச் செயல்படுத்தாததும் ஆகும். இத்தகைய கர்ம வினைகளுக்குத் தீர்வு காணவே ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி, தீர்த்த சக்திகள் நிறைந்த இத்தலத்தில் நிறைய ஹோமங்களை நிகழ்த்திப் பல அரிய சமூல சக்திகளை இவ்வாலயத்தில் நிறைத்துள்ளார்.

எனவே திருமணம், கிருகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு முன் அரிய பல சமூலங்களைக் கொண்டு இவ்வாலயத்தில் ஹோம வழிபாடுகளை நிகழ்த்தினால், காரியத் தடங்கல்கள் மற்றும் இன்னல்களில் இருந்து தற்காக்துக் கொள்ளலாம்.

தீர்த்தங்களை எட்டுத் திக்குகளிலும் கொண்டுள்ள தலமாகையால் நம் வாழ்க்கையில் எட்டுத் திக்குகளிலும் இருந்து எழுகின்ற காரியத் தடங்கல்களை, இன்னல்களைத் தீர்க்கும் சக்தி வாய்ந்த தலமாகவும், தர்ப்பணத் தலமாகவும் இருப்பதை ஞானபூர்வமாக உணர்ந்த ஸ்ரீவேத ஆஞ்சநேய மூர்த்தி இங்கு இறைவனை வழிபட்டு ஆங்கீரஸ மஹரிஷியின் துணையுடன் பரஞ்ஜ்யோதி ஹோமம் வளர்த்து அதன் பலாபலன்களை பூலோகத்திற்கு அர்ப்பணித்தார். இவ்வரிய சக்திகளைக் குறித்த சில சமூலங்களை ஆஹூதியாக இடுவதின் மூலமாகவே பெற முடியும். (இவற்றுள் சிலவற்றை நம் சென்னைக் கேந்த்ராலயாவிலும் பெறலாம்).

மேலும் காரியத் தடங்கல்களுக்கான பல கர்ம வினைகளை அக்னி மூலமாகவே பஸ்மம் செய்திட முடியும். கோடிக் கணக்கான ஹோமங்களை நிகழ்த்தி அக்னேந்த்ரியராக விளங்கும் ஆச்சாள்புரம் ஸ்ரீஆஞ்சநேயருக்குக் குளுமையான வெண்ணெய் சார்த்தும்போது வெண்ணெய் உருகலில் ஏற்படும் அதீத உஷ்ணமே கார்ய சித்திகளான வேதாமக மந்திர சக்திகளை நல்குகின்றது.

தமிழ் புத்தாண்டு பூஜை

ஆலயங்களில் பஞ்சாங்க படனம் என்ற முறையில் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் அந்தந்த வருடம் பற்றிய ஆன்ம விளக்கங்களைத் தக்க பெரியோர்கள் வாசித்திட, பக்தர்கள் காதால் கேட்டு மனம் ஒருமித்துக் கால மூர்த்திகளை வழிபடுவர். சித்ரபானு வருடத்தின் சிறப்பம்சமாக, இவ்வருடம் ஸ்ரீகாலபைரவர் சந்நிதி முன் அமர்ந்து பஞ்சாங்க படனம் நடத்துதல் சிறப்புடையது.

கலியுகாதி 5104ம் ஆண்டு, திருக்கணித முறைப்படி 13-4-2002 பின்னிரவு, 14-4-2002 விடியற்காலை 5-46 மணிக்கு, மேஷத்தில் சூரிய பகவான் பிரவேசிக்க, சித்ரபானு புது வருடம் பிறக்கின்றது. எனவே 14-4-2002 அன்று பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து நீராடி, பச்சரிசி மாக்கோலமிட்டு, விசேஷமாக சூரியச் சக்கரக் கோலங்கள் இட்டு வருட ராசிச் சக்கரம் வரைந்து கோளங்களை ஆங்காங்கே கோசார ரீதியாக அமைத்து வழிபட வேண்டும்.

சித்ரபானு வருடப் பிறப்புச் சக்கரம்

14.4.2002 விடியற்காலை 5.46 மணி மேஷத்தில் சூரியப் பிரவேசம்             
கிரக சஞ்சார நிலை

சூரியன் - மேஷம்
புதன் - மேஷம்
சுக்கிரன் - மேஷம்
சந்திரன் - மேஷம்
செவ்வாய் - ரிஷபம்
சனி - ரிஷபம்
ராகு - ரிஷபம்
குரு - மிதுனம்
ப்ளூட்டோ - விருச்சிகம்
கேது - விருச்சிகம்
யுரேனஸ் - மகரம்
நெப்ட்யூன்   - மகரம்

உத்தராயணம் – வசந்த ருது – சனி / ஞாயிறு – துவிதியை திதி – ப்ரீதி யோகம் – பாலவ கரணம் – சித்த யோகம் / பிரபலாரிஷ்ட யோகம்

தமிழ்த் திருக்கணித பஞ்சாங்க முறைப்படி சனிக்கிழமை (13-4-2002) பின்னிரவு தாண்டி 5-46 மணி முதல் 6-01 வரை சித்த யோகம் அமைகின்றது. ஞாயிறன்று 6-02 மணி சூரியோதய நேரமாக ஆவதால், பரணியுடன் ஞாயிற்றுக் கிழமை கூடிட, ஞாயிறு காலை 6-02 மணியிலிருந்து ஞாயிறு முழுவதுமாகவும் மறுநாள் திங்கள் காலை 6-01 வரையிலும் பிரபலாரிஷ்ட யோகம் (கூடா நாள்) அமைகின்றது. எனவே சித்ரபானு வருடம் பிறந்து 15 நிமிடங்களே சித்த யோகம் அமைந்திருக்கிறது. இதற்குமேல் பிரபலாரிஷ்ட யோகத்திறகான பூஜைகளையும் சேர்த்துக் கடைபிடிக்க வேண்டும்.

சித்ரபானு ஆண்டு பஞ்சாங்க படனம் - காலமூர்த்தி வாழிபாடு

பஞ்சாங்க படன பூஜை என்ற வகையில் புதுப் பஞ்சாங்கத்திற்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் இட்டுப் பூஜையில் வைத்திடுக!

“கால பைரவரின் ஆக்ஞையாய்த்தான் ஒவ்வொரு விநாடிக் காலமும் உருவாகி, மலர்ந்து, மறைவதால், ஸ்ரீகால பைரவரின் காலப் பெட்டகக் கால(லா)டிச் சிமிழாகிய இப்பஞ்சாங்க கிரந்தங்கள் பூமிக்கு நல்வரங்களைத் தருவதாக!” என்று வேண்டிடுக!

60 தமிழ் வருடப் பெயர்கள், 6 ருதுக்கள், 12 மாதங்கள், ஏழு கிழமைகள், 27 நட்சத்திரங்கள், அமாவாசை, பெளர்ணமி உள்ளிட்ட, பிரதமை முதலான 16 திதிகள், 11 கரணங்கள், 27 யோகங்கள், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகள், 12 லக்னங்கள், சூரியன், சந்திரன் முதல் ராகு, கேது, யூரேனஸ், நெப்டியூன், ப்ளூட்டோ ஆகிய 12 கிரகங்கள், ராகு கால, எமகண்ட, அர்த்தப்ரகரண, மாந்தி, காலன், குளிகன் தேவதைகள், கிரஹங்களுக்கான தசா, புக்தி, அந்தரங்கள், 31 எண் (தேதி) தேவதைகள் என்றவாறாக அனைத்துக் கால தேவதைகளின் நாமங்களை ஒதி புஷ்பம், நல்ல தூய அட்சதைகள், தங்க, வெள்ளி, பஞ்ச லோக நாணயங்களால் அர்ச்சித்து வழிபடுக!

சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து பூஜித்தல் விசேஷமானதாகும். வசதி இல்லாதோர் மல்லிகை, கதம்பம், செவ்வந்தி போன்று எளிமையான நறுமண மலர்களால் வழிபட்டிலாம்.

ஸ்ரீசரபேஸ்வரர், ஸ்ரீமிருத்யுஞ்ஜயர், ஸ்ரீபைரவர் ஆகிய மூன்று மூர்த்திகளையும் புத்தாண்டில் பூஜிக்க வேண்டும். கோயிலில், சித்ரபானு ஆண்டின் பூஜையை ஸ்ரீகால பைரவர், ஸ்ரீமிருத்யுஞ்ஜயர், ஸ்ரீசரபேஸ்வரர் சந்நிதிகளில் சத்சங்க சமுதாய பூஜையாக நடத்துவது மிகவும் சிறப்புடையதாகும். ஸ்ரீம்ருத்யுஞ்ஜய விக்ரகங்கள் ஹரித்வாரிலும், வட இந்தியப் பகுதிகளிலும் நிரவி உள்ளன. காஞ்சீபுரத்தில் ஸ்ரீம்ருத்யுஞ்ஜயர் ஆலயம் "இறவாத்தானம்" என்ற சிவாலயமாக. உள்ளது. தென்னாட்டில் ஸ்ரீம்ருத்யஞ்ஜயர் வழிபாடு உருவமாகவும், பட வழிபாடாகவும் லிங்க பூர்வமாகவும் சிறப்புறும்.

அனைத்து மூர்த்திகளின் நாமங்களைச் சொல்லி வழிபடவும்!  அகஸ்தியர், ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்தர், வசிஷ்டர், மனம் சுமந்தான் மகரிஷி, ஹரிக்கேன் விளக்கு சித்தர் போன்ற சித்தர்கள், மகரிஷிகள், யோகியர்கள், ஞானிகள், முமூட்சுக்களுக்கு அர்க்யம் அளித்தல் விசேஷமானது. கையில் நீர் ஏந்தி குதிகாலை உயர்த்தி நிமிர்ந்து நின்று ஸ்ரீகாயத்ரீ அரக்யம் போல் விரல்களின் நுனி வழியே நீரை பூமியில் வார்த்து அர்க்யம் அளிக்க வேண்டும். பூஜையின் முத்தாய்ப்பாக சற்குருவை வணங்கி சூரிய பகவானுக்கு தேன், பால் கலந்து அபிஷேகம், நிவேதனத்துடன் பூஜையை நிறைவு செய்திடுக!

சித்ரபானு வருடத்திற்கான விசேஷ முஜைகள்

பைரவ வழிபாடு, மிருத்யுஞ்ஜயர் பூஜை. சரபேஸ்வரர் வழிபாடு மூன்றும் விரிவாக நடைபெற வேண்டிய ஆண்டாக சித்ரபானு வருடம் விளங்குகிறது. உள் பகைமை, வெளிப் பகைமையால் வீடு, அலுவலகம், நாடுகளுக்கிடையே சண்டை சச்சரவுகள், குரோதச் செயல்கள், வன்முறைச் செயல்கள், போர் பெருகுகின்ற ஆண்டாக இருப்பதால் பகைமையைத் தணிக்க ஸ்ரீசரபேஸ்வர வழிபாடும், பகைமையினால் துரித மரணம் சம்பவிக்கும் ம்ருத்யு தோஷங்களை நீக்க ஸ்ரீம்ருத்யுஞ்ஜயர் வழிபாடும், காலத்தின் தெய்வீக அருமையை உணராது ராகு காலம், எமகண்டம், பிரபலாரிஷ்டம் (கூடா நாள்) போன்ற நேரங்களில் காரியங்களை ஆற்றுவதால் ஏற்படும் கடுமையான துன்பங்களை நீக்கிட ஸ்ரீகால பைரவர் வழிபாடும் மிகவும் முக்கியமானதாகும். கூடா நாள் எனப்படும் பிரபலாரிஷ்ட நாளில் புத்தாண்டு பிறப்பதால் அதிக அளவு பூஜைகள் மேற்கொண்டுதான் கூடா நாள் விளைவுகளைத் தணிக்க இயலும்.

அவிட்டம்

ஒவ்வொரு ஜீவனுக்கும் பிரம்ம முடிச்சு என்ற "பிரம்ம க்ரந்தி" உண்டு. இதுவே ஜீவனையும் ஆத்மாவையும் சேர்த்து ஜீவ வடிவு தருவதாம்.

“பிரம்ம முடிச்சை அவிழ்த்திட்டால் பிரம்மமாகலாமே” என்ற சொல் வழக்கிற்கு ஏற்ப, பிரம்ம முடிச்சின் வகைகளே பூணூல், நம் தலைச் சுழி, கை, பாத, மணிக்கட்டு ரேகைகள், வளையங்கள் ஜாதகக் கோணங்கள் போன்றவை ஆகும். மகான்கள், யோகியர், சித்தர்கள் கைகளை உயர்த்தி கை ரேகைகளைக் காண்பித்து ஆசி அளித்தலும் “பிரம்ம க்ரந்தி” சாதனைகளுள் ஒன்றாம். அவர்களுடைய கைரேகைகளில் இருந்து பொழிகின்ற ஆசிர்வாதக் கிரணங்கள்தாம் "பிரம்ம முடிச்சு" ஆகிய ஜீவபந்தத் தளையை விடுத்து ஆத்மானந்த அனுபூதிகள் தருவதாம்.

திருக்கொருக்கை

பிரம்ம ஞானத்தால் இந்த முடிச்சை “அவிழ்த்தலே" முக்தி அல்லது மோட்சம் அடைதலாம். "அவிழ்த்தல்” என்றால் ஞானம் அடைதல், கர்மவினை இலக்கணத்தைப் பரிபூரணமாக உணர்ந்து, கர்ம வினைகளைக் கழித்துப் புனிதமாதல் என்று பொருளாகும். அவிட்ட நட்சத்திரத்திற்கும் ஞானக் கலைக்கும் ஆத்மீகத் தொடர்புகள் உண்டு. எனவேதான் "ஆவணி அவிட்டமாக, ஆவணி மாத அவிட்ட நட்சத்திர தினத்தில் ஜாதி, இன பேதமின்றி யாவரும் பூணூல் அணிந்திடலாம்" என்ற நியதியை பெரியோர்கள் ஏற்படுத்தி உள்ளனர். பெண்களுக்கு மாங்கல்யமே பிரம்ம முடிச்சு ஆகும்.

ஸ்ரீபிரம்ம மூர்த்தியே ஞானம் பெற்ற தலமொன்று உண்டு. ஆவணி மாதம் அவிட்ட நட்சத்திரத்தன்று பிரம்மபுரீஸ்வரராக, பிரம்ம ஞானபுரீஸ்வரராக ஈஸ்வரன் பிரம்ம மூர்த்திக்கு ஞானம் தந்த தலமாகிய கொருக்கையில் உள்ள ஸ்ரீபிரம்ம ஞானபுரீஸ்வரர் ஆலயமே அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்குரிய வழிபாட்டுத் தலமாகும். கும்பகோணம்- பட்டிஸ்வரம் - முழையூர் அருகே உள்ள, கொருக்கையில் மிகவும் பழமையான சிவாலயமிது. கொருக்கை என்று பல ஊர்கள் உண்டு. நன்கு விசாரித்து கும்பகோணம் -பட்டீஸ்வரம்-முழையூர் அருகே உள்ள இத்தலத்தை அடைந்து ஸ்ரீபிரம்ம ஞானபுரீஸ்வரராக அருள்பாலிக்கும் சிவத் தலத்தில் அவிட்ட நட்சத்திரக்காரர்கள் அடிக்கடி வழிபட்டு வருதல் சிறப்பானது. தம் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் முக்கியமான நாட்களிலும் புதிய நற்காரியங்கள், வியாபாரம், புதுப் பதவி, இட மாற்றம் போன்ற சமயங்களில் ஸ்ரீபிரம்ம ஞானபுரீஸ்வரரை அபிஷேக ஆராதனைகளுடன் தொழுது வழிபட்டுக் காரிய சித்திகளைப் பெற்றிடுக!

அவிட்ட நட்சத்திர மூர்த்தி ஞானம் பெற்றத் தலம் ஆதலால் இங்கு பிரதோஷ வழிபாடு நடத்தி வழிபட்டிடில் பிள்ளைகள் நன்கு படிப்பர். ஸ்ரீபிரம்ம மூர்த்திக்கு அவிட்ட நட்சத்திர நாளில் சிவபெருமான் பிரம்ம ஞானம் அளித்த தலமாகும். எனவே அவிட்ட நட்சத்திரக்காரர்கள் தம் வாழ்நாளில் அடிக்கடி வழிபட வேண்டிய தலம் குறிப்பாக அவிட்ட நட்சத்திர நாட்களிலும், பிரதோஷ காலங்களிலும் வழிபட்டு, தான தர்மங்கள் செய்து வந்தால் கோசார ரீதியாக நல்ல பலன்களைப் பெற்றிடலாம்.

இவ்வாலயத்தில் அடிப் பிரதட்சிணம் செய்வதால் கைரேகைகள் போல் கால்களில் உள்ள ரேகைகளும் ஞான சக்தி பெறும். ஞானிகள் யாவரும் இத்தலத்தில் அடிப் பிரதட்சிணம் செய்து சிவதரிசனம் பெற்றே ஞானிகள் ஆகின்றனர். தம் பிள்ளைகள் படிப்பில் மந்தமாக இருக்கிறார்கள் என்று வருந்துவோர் இங்கு பிரதோஷ நேரத்தில் வழிபட்டு வருதலால் பிள்ளைகளுக்கு நல்ல ஞானம் உண்டாகும். புதுப் பூணூல் மாற்றுதல், உபநயனம் போன்ற பூணூல் அணி விழாவினை இங்கு நடத்தி லிங்கத்திற்குப் பூணூல் சார்த்தி அதனை எடுத்து அணிவித்தலால் நல்ல ஞானம் உண்டாகும்.

சித்ரபானுவில் பானு பூஜை

சித்ரபானு வருடத்தில் தினந்தோறும் குறிப்பாக, சூரியனுக்கு உரிய ஞாயிறு, சப்தமி திதியிலும், சூரிய நட்சத்திரங்களான கிருத்திகை, உத்திரம், உத்திராடம் நாட்களிலும் கோதுமை, அத்திப் பழம், காரட், பொன்னாங் கண்ணிக் கீரை போன்ற சூரிய அக்னி சக்திகள் நிறைந்த உணவைப் படைத்தல் மிகவும் சிறப்புடையது. இதனால் பரவெளியில் பாஸ்கர சக்திகள் நிரவுவதுடன் குழந்தைகளுக்கு ஆரோக்ய சக்தியும் பெருகும்.  சூரியனுக்கு உரிய ஞாயிறு, செவ்வாய், சப்தமி நாட்களில் தஞ்சாவூர் அருகே உள்ள கடகடப்பை சிவன் ஆலயத்தில் சூரிய பகவான் என்றும் நின்று வழிபடுகின்ற ஸ்ரீவைத்திய ராஜேஸ்வரர் (தற்போது ஸ்ரீ ராஜராஜேஸ்வரர்) ஆலயத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுடன் வழிபட்டு, தேனில் ஊறிய அத்திப் பழ அபிஷேகம் செய்து, தேனூறும் (சர்வ நேத்ர சக்திகள் நிறைந்த) அத்திப் பழங்களை ஜாதி, மத, இன, குல பேதமின்றி ஏழை, எளியோர்க்கு, இயன்ற அளவில் தானம் செய்து வந்திடில் கண் நோய்களால் நெடுங்காலம் அவதியுறுவோர் வியக்கத் தக்க முறையில் குணம் காண்பர்.

கண் நோய்கள் நிவர்த்திக்கு மற்றொரு தலமும் உண்டு. சித்ரபானு ஆண்டு முழுதும் ஒவ்வொரு ஞாயிறு மற்றும் சப்தமி திதியிலும், சூரியத் தலங்களில், குறிப்பாக கும்பகோணம் கஞ்சனூர் திரைலோக்கி அருகே உள்ள கீழ் சூரிய மூலையில் ஸ்ரீசூர்யகோடீஸ்வராக அருள்பாலிக்கும் சிவ லிங்க மூர்த்திக்கு பாஸ்கர சக்திகள் நிறைந்த குங்குமப்பூ, ஜவ்வாது, புனுகு, கஸ்தூரி, பச்சைக் கற்பூரம், ஏலக்காய் கலந்த சந்தனக் காப்பு இட்டு அடிப் பிரதட்சிணம் வந்து வழிபடுதல் வேண்டும். இங்கு ஏழு வகைச் சித்ரான்னங்கள் (சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், எலுமிச்சை அன்னம், புளியோதரை, தயிர் சாதம், சாம்பார் சாதம், பருப்புப் பொடி அன்னம் போன்றவை) ஏழுவகைப் பழங்கள், ஏழு வகைக் காய்கறிகள் கலந்த உணவு, ஏழுநிற ஆடைகள் தானமாக அளித்தலால் கண் சம்பந்தமான நோய்களுக்குத் தக்க தீர்வுகள் கிட்டும். மேலும் குடும்பத்தில் பலரும் அடிக்கடி நோய்வாய்ப்படுகின்ற துயர நிலைகள் மறையும். கீழ் சூரிய முலை ஸ்ரீசூரிய கோடீஸ்வரருக்கு நேர்த்தி வைத்துத் தரிசித்து வழிபட்டு கண் நோய்களுக்கு அறுவை சிகிச்சையின்றி அதிஅற்புத முறையில் பலரும் குணம் பெற்றுள்ளனர்.

கண் திருத்தலம்

கண்ணன், கண்ணாயிரம், ராஜாக் கண்ணு, கண்ணப்பன், செந்தாமரைக் கண்ணன், செல்லக்கண்ணு, கண்ணபிரான், கமலக் கண்ணன், அங்கயற்கண்ணி, கண்ணாம்பாள், கண்ணாத்தாள், மலர்விழி, கயல்விழி, கண்ணம்மை, நேத்ரா போன்ற "கண்" பெயர் உடையவர்களுக்கான திருத்தலம்.

எவ்வாறு ஈஸ்வரன் அனைத்து உ யிர்களுக்கும் படியளக்கின்றான், என்ற ஞானத்தைப் பெற விரும்பியவளாய் சர்வேஸ்வரி, இறைவனுடைய திருக்கண்களைச் சற்றே பொத்திட, பிரபஞ்சமே இருளில் ஆழ்ந்திட, பிரபஞ்சம் சர்வேஸ்வரனின் நெற்றிக் கண் ஒளியால் அப்போது பரிபாலனம் செய்யப்பட்டது. ஆனால் நெற்றிக் கண் ஒளி அனைவருக்கும் தரிசனமாவது இல்லையே! அம்பிகை, அகஸ்தியர் போன்றோர்தாம் நேத்ர ஒளியைத் தரிசிக்க வல்லவர்கள்! எனவே இத்திருவிளையாடல் மூலமாகவே மூன்றாம் நேத்திரத்தின் பரிபாலன சக்தியை ஈஸ்வரி இவ்வாறு உணர்ந்தாள்.

சித்தலவாய்

இதன் பிறகு உமையவள் அகத்தியர் கூற்றின்படி மூங்கில் பாத்திரத்தைத் தம் கரங்களில் ஏற்றி இறைவனின் திருக்கண்களுக்கு தேனால் அபிஷேகம் செய்வித்து யோக சாந்தம் புரியச் செய்திட்டாள். இவ்வாறு சர்வேஸ்வரியே மூங்கில் பாத்திரத்தால் தேனாபிஷேகம் புரிந்த த்ரி நேத்திரதாரியே, சுயம்பு மூர்த்தியாய் திருக்கண் மாலீஸ்வரராய்த் தோன்றிப் பொலிந்தார், இத்திருவிளையாடலின் போதுதான் இறைவனுடைய திருக்கண்களில் இருந்து நிறைய "நேத்ர பீஜாட்சரங்கள்" அமிர்த அருட்பிரவாகமாய்ச் சொரிந்தன. அவை யாவும் கண்ணன், கண்ணபிரான் போன்ற "கண்" சம்பந்தப்பட்ட நாமங்கள் ஆயின.

இறைவனுடைய திருக்கண்களைப் பொத்திப் பரிசோதித்ததற்குப் பரிகாரமாக இறைவியே இங்கு "ககார" மந்திரங்களை (க வகை நாமங்கள் - "க"வில் தொடங்கும் 1008 போற்றிகள்) ஓதி விநாயகரையும் பூஜித்தனள்.

எனவே கண்ணன், கண்ணப்பன் செல்லக் கண்ணு, செந்தாமரைக் கண்ணன் போன்ற “கண்” வகைப் பெயருடையோர் திருச்சி-குளித்தலை-கரூர் மார்கத்தில் சித்தலவாய் என்னும் கிருஷ்ணராயபுரம் கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீதிருக்கண்மாலீஸ்வரரைத் தம் வாழ்நாளில் வழிபட்டு வருதல் வேண்டும்.

"கண்” வகைப் பெயருடையோர் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் முக்கியமான நாட்களிலும் இயன்றால் அடிக்கடி சென்றும் சித்தலவாய் ஸ்ரீதிருக்கண்மாலீஸ்வரரைத் தொழுதுவர வேண்டும். இவர்கள் எந்த நற்காரியத்தைத் தொடங்கினாலும் இங்கு வந்து குலதெய்வ பூஜை போல் நடத்தி அவரவருடைய “நாம தேவதா சக்திகளின்” ஆசிகளைப் பெறுதல் வேண்டும். காளிங்க நடனப் படலத்தில் நாகத்தின் கொடிய விஷ சக்தியால் கருமை நிறமுற்ற கண்ணபிரானாகிய ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, இங்கு கரிநாள் பூஜையின் மூலம் தம் கரிய நிறத்தைப் போக்கிக் கொண்டார்.

 “கண்” வகைப் பெயர்கள் கொண்டோர் மட்டுமின்றி ஏனையோரும் கரிநாளில் இங்கு ஸ்ரீதிருக்கண்மாலீஸ்வரருக்கு எள் காப்பு சார்த்தி வழிபட்டு வந்திட அறிந்தோ அறியாமலோ கரிநாளில் ஒட்டிய கரி தோஷங்கள் நீங்கும். அஸ்வினி, பரணி, கார்த்திகை, சுவாதி, ஆயில்யம், செவ்வாய் போன்ற நேத்ர அக்னி மருத்துவ சக்தி நிறைந்த நாட்களில் மூங்கில் பாத்திரத்தில் அமுது பெய்து (தேன், பால் ஊற்றி) அபிஷேகித்து வருதலானது அவர்களுக்கு நல்வரங்களைத் தருவதாகும்.

கற்பு, நாணயம், நேர்மை, சத்தியத்துடன் வாழ்வோர்க்கு ஒரு சிறு சம்பவம் கூடப் பல இழுக்குகளை ஏற்படுத்தி மானப் பிரச்னை, இன்க்ரிமெண்ட் குறைப்பு, பண இழப்பு, salary / pension recovery, பதவிக் குறைப்பு, தம்பதியரிடையே கசப்பு உணர்வு போன்றவற்றை ஏற்படுத்தி விடும். இங்கு கரிநாள் மற்றும் சனிக் கிழமை தோறும் ஸ்ரீதிருக்கண்மாலீஸ்வரருக்கு எள்காப்பு இட்டு, திராட்சை, மங்குஸ்தான், எள் சாதம், கருவேப்பிலைப் பொடி சாதம் போன்றவற்றைப் படைத்து தானமாக அளித்து வர மேற்கண்ட கரி தோஷங்களான அபவாதக் குற்றங்கள் நீங்கும்.

கண தங்கணான் சித்தர்

பல நூற்றாண்டுகளுக்கு முன் திருஅண்ணாமலையில் மானுட ரூபத்தில் நடமாடி வாழ்ந்து மறைந்து அன்றும், இன்றும், என்றும் இறைவழி காட்டும் ஏகாந்த ஜோதி சித்தர்கள்.
இத்தொடரின் மூலம் இறைடியார்களைச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னதான ௮ருணாசலப் புனித பூமிக்கு இட்டுச் செல்கின்றோம்.

கடந்த இதழில் ம்ருத்யுஞ்ஜய பூஷண மகாசிவராத்திரி மகிமையைப் பற்றி அறிந்தீர்கள் அல்லவா! திருஅண்ணாமலை வாழ்ச் சித்தர்களுள் ஒருவரான கண தங்கணான் சித்தர் என்பார்தாம் மாத சிவராத்திரி கிரிவல மஹிமையை இப்பூவுலகிற்கு உணர்த்தியவர். ஸ்ரீம்ருதயுஞ்ஜயர் உபாசனையில் கரை கண்டவரான கண தங்கணான் சித்தர், இன்றும் மாத சிவராத்திரி நாளில் தூலமாகவும், சூட்சுமமாகவும் அண்ணாமலையை கிரிவலம் வந்து கொண்டுதான் இருக்கின்றார்.

"வ்ருஷ ஆண்டில் வரும் ஸ்ரீம்ருத்யுஞ்ஜய பூஷண மஹாசிவராத்திரியைப் பற்றி உலகிற்கு எடுத்துரைத்த பின்னரே இவர்தம் மகத்வம் உணரலாகும்". என்ற இறை நியதிக்கேற்ப தற்போது சித்புருஷர்களுடைய “ஞானபத்ர கிரந்தங்களில்” இருந்து கண தங்கணான் சித்தரின் மஹிமை எடுத்துரைக்கப்படுகின்றது.

மூன்று கால்களை உடைய அரிய வடிவுச் சித்தர் இவர். சிவபெருமானுடைய ஊர்த்வ தாண்டவக் கோலம் போல் மூன்றாவது கால் கழுத்தை ஒட்டி மேல் நோக்கி இருக்கும்! எப்போதும் இதே நிலையில் திருஅண்ணாமலையில் கிரிவலம் வந்து கொண்டிருப்பார். எங்கு தங்குகின்றார், எங்கிருந்து வருகின்றார் என்பதை எவரும் அறிந்திலர்! ஆனால், "எங்கேனும் அமர்ந்தார், அயர்ந்தார் உண்டார், உறைந்தார், உறங்கினார்" என்ற நிலையில் எவரும் அவரைக் கண்டதும் கிடையாது. எவர் எங்கு இவரைக் காண்கினும், கிரிவலம் புரிந்து கொண்டிருக்கின்ற தோற்றத்திலேயே அனைவரும் காண்பர், இவ்வாறு நாமறியா திருஅண்ணாமலைச் சித்தர்களுள் ஒருவராகப் பொலிபவரே கண தங்கணான் சித்தர்!

காலத்தைக் கடந்து சிவசித்தத்தில் வாழும் சித்தர்களுக்கு ஆயுட்கால வரையறை இல்லை எனினும் ஸ்ரீபூண்டி மகான், ஸ்ரீகசவனம்பட்டிச் சித்தர், கண தங்கணான் சித்தர் போன்றோர் பூமியில் நமக்கென பல மானுட வடிவுகளில் தோன்றி மக்களோடு மக்களாய் வாழ்ந்து நமக்கு அருள் புரிகின்றனர். பிறகு மானுட சரீரத்தை உகுத்து, ஜீவாலயம், ஜீவ சமாதி, குருமூர்த்தம் பூண்டு என்றும் வாழும் சிரஞ்சீவிகளாய் அருள்கின்றனர்.

கண தங்கணான் சித்தர் இவ்வகையில், நமக்குப் புரியும் காலக் கணக்கு வகையில் சொல்வதாயின், இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருஅண்ணாமலை வாழ்ச் சித்தர் பெருமான் அப்போது கிரிவலப் பாதையானது மலையை விட்டு நல்ல தொலைவில் விஸ்தாரமாக அமைந்து பெரும் யாத்திரா மண்டலமாக, சுற்றளவும் 25 மைல்களுக்கு மேலாக இருந்தது! பல்லாயிரம் மரங்களைக் கொண்ட அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்ததே அக்கால அருணாசலப் புனித பூமி! தற்போது எடுத்துச் சொன்னாலும் எவராலும் நம்ப முடிகின்றதா?

இதே போல கண தங்கணான் சித்தர் பூமியில் உறைந்த போது அண்ணாமலை மிகவும் அடர்ந்த வனமாக, யானை, புலி, சிங்கம், சிறுத்தை போன்ற பலவும் உலவியதாக, சபரி மலைப் பகுதி போல் இருந்தது! ஆனால் அனைத்து மிருகங்களும் சாத்வீகமானவை, சாந்தமானவை! சிங்கம், புலி போன்ற யாவும் ஏனைய ஜீவன்களான ஆடு, மாடு, பசு எவற்றையும் அடித்து உண்ணாது, சாகம்பர்ய நெறிப்படி, ஜீவ காருணயத்வத்தில் செறிந்தன என்றால் அருணாசல கிரிவல வனப் புனிதத்தை, மகிமையை எவ்வாறு சொல்லாலும், பொருளாலும் எடுத்துரைக்க முடியும்?

பலருக்கும் கண தங்கணான் சித்தருடைய தரிசனம் கிட்டிடினும், கிட்டச் சென்றால் அவர் சற்று தூரத்தில் கிரிவலம் சென்று கொண்டிருப்பதாகவே தோன்றும். எவ்வளவு வேகமாக அருகில் விரைந்தாலும், ஓடினாலும் அவர், நமக்குச் சற்று முன்னால் கிரிவலம் சென்று கொண்டிருப்பதாகவே காட்சி அமையும். அவருடைய தரிசன மகிமையை உணர்ந்தோர் அவருடைய ஹோரை விதிமுறையை ஒட்டிய கிரிவல மலை தரிசன முறைகளை அறிந்து பலஅரிய ரகசியங்களை உணர்ந்தனர். ஆனால் இன்ன கிழமை, ஹோரை நேரத்தில் இன்ன மலை தரிசனத்தில் அவர் இருப்பார் என்ற அவருடைய ஒரே ஒரு கிரிவல அணுகுமுறையை நன்கு அறிந்திடவே அவரைத் தேடித் தொடர்ந்து கிரிவலம் வந்தால்தான் அறியலாகும்.

இவ்வாறு முப்பது வருடங்களுக்கு மேல் தொடர்ந்து அவரைத் தரிசித்தவர்கள்தாம், ஒரு தமிழ் வருடத்தில் வரும் அனைத்து நடராஜ அபிஷேக தினங்களிலும், ஊர்த்வமுக நட்சத்திரநாட்களிலும் அவர் தம்முடைய ஊர்த்வ பாத யோக நிலையில் குறித்த சில தரிசனப் பகுதிகளில் அசைவற்று நாள் முழுதும் நின்று யோகம் பயின்று திருஅண்ணாமலையைத் தரிசிக்கின்ற அற்புதத்தைக் கண்டு வியந்தனர்.

அவரைத் தரிசனம் செய்தோர் ஆயிரக் கணக்கில் இருந்தாலும் பலருமே அவரை ஒரு சில நிமிடங்களுக்கு மேல் தரிசித்ததில்லை, அவர் கிரிவலம் வருகின்ற விரைவு அப்படி இருந்தது என்று பலரும் எண்ணினார்கள். உண்மை அதுவல்ல! அவரை விநோதமாக, வேடிக்கை பார்க்கும் மனப்பான்மையுடன், "மூன்று கால்களை உடைய அதிசய சித்தர், ஏதோ, சித்தர் என்று சொல்கின்றார்களே, எதற்கும் தரிசித்து வைப்போமே" போன்று எண்ணி வந்தோர்க்குக் கிட்டியதோ ஒரு சில நிமிட தரிசனமே!

“ஜோதிக்கு முன் (ஆதி) ஜோதி தரிசனம்”!

“இவர்தாம் நம்மைக் கரையேற்ற வல்ல சித்தர் பிரான்” என்று ஆழ்ந்த நம்பிக்கையுடன் வந்தோர்க்கோ திவ்யமான நெடுநேர தரிசனம் கிட்டும்! இவ்வாறாக அவரவா் நம்பிக்கையைப் பொறுத்துக் கண தங்கணான் சித்தரின் தரிசனம் அமைந்தது. மேலும் தன்னைக் காண வருவதை விட, திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து பல மலை தரிசனங்களின் மூலம் பலாபலன்களை அடைதல் வேண்டும் என்பதையே அவர் வலியுறுத்தினார்.

“ஜோதிக்கு முன் (ஆதி) ஜோதி தரிசனம்” என்ற புனித வாக்கிற்கு ஏற்ப, அக்காலத்தில் திருஅண்ணாமலை ஜோதி தரிசனம் கண்டே சபரி மலைக்குச் செல்வர்! இங்கு சித்தரைக் கண்டவர்கள் சபரி மலையிலும் இதே வடிவில் அவர் நடந்து செல்வது கண்டு ஆனந்தம் அடைவர்! ௧ண தங்கணான் சித்தரின் இரண்டு பாதங்கள் கிரிவல யாத்திரையைப் புரிந்திட, மூன்றாவது கால் கழுத்தைத் தொட்டிருக்க, அவருடைய இத்தகைய ஊர்த்வ தாண்டவ யோக தரிசனத்தையே முதலில் வேடிக்கை பார்க்கும் நோக்கத்துடன் வந்த பலரும் அவருடைய தேஜஸ் நிறை வடிவைப் பார்த்து வியந்து மகிழ்ந்து பின்னர் அவருடைய இறைச் சேவைகளில் பங்கு கொண்டனர்! அவர் ஆற்றியது எத்தகைய அரிய இறைப்பணி என்று அறிவோமா? அக்காலத்தில் மணல் பாதையாக, மாட்டு வண்டிப் பாதையாக, பல இடங்களில் ஒற்றையடிப் பாதையாகவே அருணாசல கிரிவலப் பாதை இருந்தது. தற்போது ஸ்ரீதுர்வாசர் சந்நிதியை அடுத்து வலப்புறம் வரும் மலையை மறைக்கும் அடர்ந்த மாயக் காமக் காட்டுப் பகுதியைப்போல் பன்மடங்கு அடர்த்தியாகப் பெருமரங்கள் நிறைந்த வனமாய் அக்காலத்தில் திருஅண்ணாமலை திகழ்ந்தது.

வந்திர முடிச்சுப் பாதை சித்தரின் ஞானப் பாதை

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் கூடப் பெரும் பர்ணசாலைகள் திருஅண்ணாமலையைச் சுற்றி மலர்ந்திருந்தன. இந்த அடர்ந்த மரங்களிடையே பலவிதமான நெளிவு, சுளிவுகளுடன் கூடிய ஒற்றையடிப் பாதைகளுடன் சுமார் 25 மைல்களுக்கு மேல் சுற்றளவுடன் இருந்த கிரிவலப் பாதையில் கண தங்கணான் சித்தரைத் தேடி, நாடிச் சரணடைதல் என்றால் எளிதா என்ன? ஒற்றையடிப் பாதை ஒவ்வொன்றும் “வந்திர முடிச்சு” ஆகும். தற்போதைய கிரிவலப் பாதை போல் அப்போது நேர்ச் சாலை கிடையாது. காட்டினிடையே பல பாதைகள் வளைந்து வளைந்து செல்லும்.

1008 வந்திர முடிச்சுகள் கொண்டு அமைந்ததாக அருணாசல கிரிவலப் பாதை பற்றி கிரிவல விளக்கச் சுவடிகள் குறிக்கும். ஆங்காங்கே பல ஒற்றையடிப் பாதைகள் அக்காலத்தில் நிறைந்திருந்த ஆஸ்ரமங்களின் வழியே செல்லும். மனித வடிவில், நாம் கண்களால் பார்க்கின்ற வகையில் மகரிஷிகளும், சித்தர்களும் உலாவிய கலியுகக் காலமது! இப்போதும் உண்டு! ஆனால் சூட்சும ரீதியாக சித்தர்களின், மகரிஷிகளின் வடிவம் அமைகின்றது. ௧ண தங்கணான் சித்தரைத் தரிசிப்பதற்கென்றே இமயமலை, தற்கால காஷ்மீர், ஒரிஸ்ஸா போன்ற இடங்களிலிருந்து பலரும் வந்திடுவர். கண தங்கணான் சித்தர் ஒவ்வொரு நாழிகைக்கும் வெவ்வேறு “வந்திர கிரந்தி” எனப்படும் ஒற்றையடிப் பாதையில் கிரிவலம் வந்தமையால் அவர் தரிசனமே காணுதற்கரிய ஒன்றாகியது. எந்த “வந்திர கிரந்தி” ஒற்றையடிப் பாதையில், எந்நேரத்தில் எவ்வாறு கிரிவலம் வருகின்றார் என்பதை எவரும் அறியார்! ஒற்றையடிப் பாதை என்பதால் சுருக்கு வழியும் அல்ல, நெடு வழியே அது! ஒவ்வொரு பாதையிலும் பல கிராமங்களில், பல வழிகளில் இருந்தும் பலரும் கிரிவலம் வந்தவாறு இருப்பர்! எவருக்கு எந்த மகரிஷியின், சித்தரின் தரிசன‌ம் கிட்டும் என்பதும் பிரம்ம ரகசியமாகும்.

கண தங்கணான் சித்தரைத் தொலை தூரத்தில் தரிசித்துக் கிரிவலம் வருவோர்க்குத் திடீரென்று மரங்களுக்கு இடையே கிட்டும் அரிய மலை தரிசனத்தைக் காட்டி விட்டு வேறு பாதையில் சட்டென்று மறைந்து விடுவார். அப்போதுதான் அவருடன் கூட வந்தவர்கள் தம் மன பாரம், மனக் கஷ்டங்கள் தணிந்து மறைந்து, பரமானந்தம் கூடிடுவதை உணர்வர்.

கபால நோய் தீர்க்கும் அபாரச் சித்தர்!

ஒருமுறை…..

“சிலந்தித் தலைவலி” என்ற கொடிய தலைவலியால் பல்லாண்டுகள் அவதியுற்ற நல்லார் ஒருவர் அண்ணாமலைக்கு வந்தார். சிலந்தி வலை போல் கபாலமெங்கும் தலைவலி சில நொடிகளில் பரவி அவர் துடித்து வருந்துவார். திருஅண்ணாமலையில் உலவும் கண தங்கணான் சித்தரின் மகிமையைப் பற்றிக் கேள்விப்பட்டு இங்கு வந்து கிரிவலம் வரலானார்.

சோறு உண்ணாது, நீரும் அருந்தாது, முழு விரதத்தோடு ஒரு வாரம் கிரிவலம் வந்து கிரிவலப் பாதை எங்கும் தேடியும் அவரால் சித்தரைத் தரிசிக்க முடியவில்லை. பெரிதும் களைப்புற்று, அவர் தரையில் வீழ்ந்திட....

எங்கிருந்தோ திடீரென்று அங்கு வந்த சித்தர் பெருமான் தம் பாதத்தை அவர் சிரசில் திருவடி தீட்சை தருவது போல் வைத்திட அடுத்த விநாடியில் "சிலந்தித் தலைவலி" இருக்கும் இடம் தெரியாது மறைந்ததே அந்நாள்தான் ஊர்த்வ நோக்கு நட்சத்திர நாள்! எனவே இன்றும் ஊர்த்வமுக நட்சத்திர நாட்களில் (ரோஹிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி) இங்கு கிரிவலம் வருவோர்க்குக் கபாலம் சம்பந்தப்பட்ட நோய்கள், மைக்ரெய்ன் (migraine) போன்ற சிலந்தித் தலைவலி வகைகள் தீரவும். தலையைப் பிய்த்துக் கொள்ளும்படியான குடும்ப, அலுவலக, வியாபாரப் பிரச்னைகளால் வருந்துவோர் இன்னல்கள் தீர்ந்து நலம் பெறவும் இச்சித்தர்பிரான் துணை புரிகின்றார்!

அக்காலத்தில் அடர்ந்த வனத்தினூடே கிரிவலப் பாதை அமைந்ததால் கிரிவலப் பாதை எங்கும் உள்ள முட்கள், கற்களை அகற்றி கிரிவலப் பாதையைச் சுத்தம் செய்வதே இவருடைய முக்கியமான. ஓய்விலா அருணாசல இறைத் திருப்பணி ஆயிற்று!

ஒரு நாள் மிகப் பெரிய நாகம் ஒன்று கிரிவலப் பாதையில் படுத்துக் கிடக்க உடலெங்கும் முட்கள் நூற்றுக் கணக்கில் தைத்திருந்தன! கோபத்திலும், உஷ்ணத்திலும் அது சீறிக் கொண்டிருந்தது! அதைத் தாண்டி எவரும் செல்ல இயலா நிலை! அருகில் சென்றால் என்ன ஆகுமோ என்ற அச்சம் வேறு! பாம்பை மீறிச் செல்ல இயலாது என்பதால் நூற்றுக் கணக்கானோர் அங்கே பல மணி நேரம் நின்று விட்டனர். அப்போது அங்கு வந்து சேர்ந்தார் கண தங்கணான் சித்தர்! அவர் என்ன செய்திருப்பார்? அடுத்த மாதம் விடை வரும் வரை நன்முறையில் ஆத்ம விசாரம் செய்து பாருங்கள்! ஆத்மார்த்தமாக முயல்வோர்க்குச் சித்தர்பிரானே மனத் துணை புரிவார்!

அமுத தாரைகள்

உறங்கி எழுந்தவுடன் முதற் காரியம் நற்காரியமாகட்டும்!

தூங்கி எழுந்த உடன் விளக்கு, மின்விசிறி, ஏர் கண்டிஷனரை அணைத்தல், டீவி பார்த்தல், தினசரிக் காலண்டரில் தேதியை “டர்”ரென்று கிழித்தல், வன்முறைச் சம்பவங்கள் நிறைந்த செய்தித் தாளைப் படித்தல் போன்று அபசகுன காரியங்களில் வெகு வேகமாக இறங்கி விடாதீர்கள்! உறங்கி எழுந்தவுடன் கை ரேகைகளின் தரிசனம், இறை தரிசனம், கோயில் கோபுர தரிசனம், குங்குமம் நிறைந்த மனைவி முக தரிசனம், பசு தரிசனம், வேம்பு, பலா போன்ற நல்விருட்ச தரிசனம் போன்றவற்றைப் பெற்றிடுக! இதனால் உறக்கத்தில் நீங்கள் சென்று வந்த பல விண்வெளி லோகங்களின் புண்ய சக்திகள் விரயமாகாது பாதுகாக்கப்படும்.

காலண்டரில் தேதியைக் கிழிக்கும்போது....

காலண்டரில் தேதியைக் கிழிக்கும் போது “டர் டர்”ரென்று கிழித்துத் தூக்கிப் போட்டுக் கால தேவதையை அலட்சியப் படுத்தாதீர்கள்! ஒவ்வொரு விநாடியும் நாம் வாழ்வதற்குக் காரணமாக இருக்கும் ஸ்ரீகால பைரவ லோகத்தைச் சார்ந்த கால தேவதைகளையா இவ்வாறு அவமதிப்பது! கிழித்த தேதியின் நட்சத்திர, திதி, கிழமை, யோக, கரண அம்சங்களை உங்களால்தான் மீண்டும் கொண்டு வர முடியுமா? வாழ்வில் எதிலும் அலட்சியம் சேர வேண்டாம்.

"புனிதம் நிறைந்த இக்கால வடிவப் பத்திரத்தை ஜல ப்ரளயத்தில் கரைக்கின்றோம்" என்று சங்கல்பித்துக் காலண்டர் தேதிப் பேப்பரை ஒரு மரப் பெட்டியில் பத்திரப்படுத்தி ஆற்றிலோ, கடலிலோ (நிர்மால்யப் பூக்களைப் போலச்) சேர்த்திடுங்கள். நீரில் இடும் வரையில் பழங்கால முறைக் கடிதங்கள் போல வெள்ளிக் கம்பியிலும் கோர்த்தும் வைத்திடலாம். பிறகு ஆற்றில், கடலில் விஸர்ஜனம் செய்திடலாம்.

திருமாந்துறை

உடல், உள்ளம், மனம் தூய்மை பெற்றிடத் தினசரி இறைப் பயிற்சிகள்

ஒரு நாளைக்கு 12 பசுக்களையாவது தொட்டு வணங்குதல், அரசு, ஆல், வேம்பு, புரசு, துளசி, வில்வம் போன்ற 12 புனித விருட்சங்களையாவது சுற்றி வந்து துதித்தல், (ஜாதி, மத, இன, குல பேதமின்றி) எண்பது வயது நிறைந்த மூன்று பழுத்த தம்பதிகளின் கால்களில் வீழ்ந்து வணங்கி ஆசி பெறுதல், விபூதி, குங்குமம், சந்தனம் போன்ற இறைச் சின்னங்களை தினமும் மூன்று முறையேனும் இடுதல், மிகவும் முக்கியமானதாக எப்போதும் இந்த இறைச் சின்னங்களுடன் துலங்குதல், தர்பைப் பாயில் குறைந்தது அரைமணி நேரம் அமர்ந்து தியானித்தல், குறைந்தது 21 கோபுரங்களை, கோபுரக் கலசங்களைத் தரிசித்தல், பால் மற்றும் அரிசி பொங்கும் சுபசகுன தரிசனம் காண்தல் (குக்கரில் சமைப்பதால் வருடத்திற்கு ஒரு முறையே பொங்கலின்போது மட்டுமே அரிசி பொங்குவதைக் காணும் வருடாந்திர தரிசனமாகி, கலியுக விதியாகி விட்டது!), ஹோம அக்னி, ஹோம குண்டம் தரிசனம், பச்சிளங் குழந்தையின் தெய்வீக முக தரிசனம், கன்றோடு பசு தரிசனம், நிறைய மணமுள்ள பூக்கள், காய்கறிகள், பசுமையான மரங்கள், வயல்வெளிகள் தரிசனம், கூட்டாகப் பசுக்கள், ஆடுகள், வாத்துகள், (நீரில்) மீன்கள் தரிசனம் (மிருகக் காட்சி சாலையில் அல்ல!), பறவைகள் கூடிப் பறத்தல், கூடி உணவு உண்கின்ற தரிசனம் போன்றவையாம்.

சாலையில் செல்லும்போது பசு கன்று, தம்பதிகள், பெற்றோர்கள் குழந்தைகளின் குறுக்கே புகுந்து, பிரித்துச் செல்தலைத் தவிரத்திடுக!

குறிப்பு: எலும்பும் தோலுமாய்க் கூண்டடைபட்டுச் சோகத்திலிருக்கும் விலங்குகள் பறவைகள், பாம்புகளைச் சுயநலச் சந்தோஷமாக காண்பதைத் தவிர்த்திடுக! வெறுமனே கண்காட்சிப் பொருளாகப் பார்த்து சாபங்களைப் பெருக்குவதைவிடத் தக்க அனுமதியுடன் அவைகளுக்கு உணவளித்து பட்சி பரிபாலன புண்ய சக்தியையாவது பெற்றிடுக!

அனைத்துச் செயல்களுக்கும் ஆன்ம காரணங்கள் உண்டு....

இறைவனுடைய சாம்ராஜ்யத்தில், ஒரு கொசுவோ, ஈயோ இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் பறப்பதற்குக்கூட நிறையக் காரணங்கள் உண்டு. பூர்வ ஜன்மத் தொடர்பு இன்றி எவரையும் எந்தக் கொசுவும் கடிக்காது என்பதையும் அறிந்திடுக! நிறையப் பேர்களிடம் சில்லறைக் கடன்கள் வாங்கி அவற்றைக் கொடுக்காமல் இறந்தால் அவர்களே மூட்டைப் பூச்சி, கொசுக்களாகப் பிறப்பு கொண்டு அவ்வாறு கடன் வாங்கியவர்களைக் கடிப்பர், எனவே ஒவ்வொரு கொசுக் கடிக்கும் ஆன்மக் காரணங்கள் உண்டு!

பிறரை வதைத்து வேலை வாங்குதல், பிராணிகளை வதைத்த‌ல். பிறர் மனம் புண்ப‌டும்படி பேசுதல், எறும்புகளை நசுக்குதல், தன் வீட்டு அசுத்தங்களை நைஸாகப் பிறர் இடத்தில் கொட்டுத‌ல் இவ்வாறான பூர்வ, நடப்பு ஜன்மக் கர்ம வினைகளும் கொசுக் கடிக்குக் காரணமாகும்! எனவே அனைத்துக் கொசுக்களும், வியாதிக்குக் காரணமாவது இல்லை! "கொசுவினால் வியாதி வர வேண்டும்" என்ற விதி இருந்தால்தான் அவ்வாறு உண்டாகும். அனைத்துக் கொசுக்களாலும் வியாதிகளே வரும் என்றால் மனிதனைவிடப் பல கோடி கோடி எண்ணிக்கை உடைய கொசுக்களால் உலகில் வியாதிகள் நிரம்பி வழிந்து மனித குலமே அழிந்திருக்கும்! வியாதியே கர்ம வினையின் பலன் ஆகையால் எவரால் எவருக்கு எந்த வினை இழைக்கப்பட்டதோ அவ்வாறு பாதிக்கப்பட்டோரே கொசு ரூபமாக வந்து, கொசுக் கடி வியாதிக்குக் காரணமாகவும் ஆகிடுவார் என்பதும் கர்ம வினைக் காரிய விளைவு நியதிகளில் ஒன்றாம்.

ஸ்ரீநடராசர் திருமாந்துறை

கணவன், பிள்ளைகளின் முரட்டுத்தனம் அகல...

கணவனோ, பிள்ளைகளோ முரட்டுத்தனமாக நடந்து கொள்வதால் குடும்பத்தில் ஏற்படும் விபரீதங்கள் ஏராளம். பெரும்பாலும் அக்னி தோஷங்கள் நிறைந்த குடும்பங்களிலேயே இத்தகைய கஷ்டங்கள் ஏற்படும். இத்தகைய மிருகதச தோஷங்களை நிவர்த்தி செய்யவே மிருகண்டு முனிவர் பல இடங்களில் வழிபட்டு அவற்றின் புண்ய சக்தியைத் திரட்டி “ஆம்ர சக்தியாக” திருச்சி லால்குடி இடையில் உள்ள திருமாந்துறை சிவ பூமியில் பதித்துள்ளார். இவ்வாலயத்தில் திங்கள், புதன் கிழமைகளில் கன்றுடன் கூடிய பசுவைக் கொண்டு ஆலயத்தில் பசு பூஜை செய்து, அப்பசு இடும் கோமேயம், சாணத்தைக் காவிரி போன்ற புனித தீர்த்தங்களில் கலந்து மாவிலைகளால் இல்லம் முழுவதும் தெளித்து வந்தால் முரட்டுத்தன்மை உள்ள கணவன், பிள்ளைகள் திருந்துவர்.

இறப்பிற்குப் பின் உள்ள ஒரு பட்சத்தில் (15 நாட்கள்) அவரவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப "மாயைச் சாயை" உடலில் மாற்றங்களும், பல கோள யாத்திரைகளும் (நல்மண்டலம், நரகமண்டலம், நாற்ற மண்டலம், அழுகல் மண்டலம்) நிர்ணயமாகும். எனவே இந்த நாட்களில் செய்யப்படும் வழிபாடுகள், தான தர்மங்கள், வேதக் கிரியைகளின் பலன்களும் இறப்பிற்குப் பின்னுறை வாழ்விற்குப் பெரிதும் துணை புரியும். ஆதலால் முறையான ஈமச் சடங்குகள், பத்துக் காரியங்களை நன்முறையில் ஆழ்ந்த நம்பிக்கையுடன் நிறைவேற்றிட வேண்டும்.

எவர் எங்கு, எந்நாட்டில், எம்மாநிலத்தில் இறந்திருந்தாலும் திருச்சி (லால்குடி) அருகே பூவாளூர், (பீகாரின்) கயா, காசி, ராமேஸ்வரம், நெடுங்குடி போன்ற தலங்களில் சடங்குகளை நிறைவேற்றுதல் சிறப்புடையதாகும். வசதி உள்ளோர் பூவாளூரில் ஏழைகள், நடுத்தர மக்கள் நன்முறையில் தம் மூதாதையர்களுக்கு ஈமச் சடங்குகளை நிகழ்த்துவதற்கான சத்திரம், மண்டபம் கட்டி, தர்ப்பணம் நடத்துவதற்கான வசதிகளைச் செய்து தந்து இலவசமாகவோ, குறைந்த வாடகைக்கோ அளித்தல் மக‌த்தான‌ புண்ய காரியமாகும். சந்ததிகளுக்கும் பெரும் பலன்களை அளிப்பதாகும். சந்ததிகளுக்கு வீடு, வாசல், சொத்தை அளிப்பதை விட இப்புண்ய காரியப் பலன்களே சந்ததிகளை நன்முறையில் பேணிடும்.

அபலைகளுக்கு ஆதரவு அளிக்கும் தலம்
வலம் வந்தால் [மன] பலம் தரும் வலிவல நாதர்!

பல பெண்களுக்குத் திருமணமாகியும் கணவனை இழந்தோ, கணவனால் நிராகரிக்கப்பட்டோ, கணவன் படுத்த படுக்கையாய் நோயில் விழுந்தோ, அபலைகளாகத் தனித்தோ, குழந்தைகளுடனோ வாழ வேண்டிய நிலைகள் ஏற்படுவதுண்டு. என்னதான் "தெய்வமே கதி" என்று எண்ணி வாழ்ந்தாலும் அவ்வப்போது விரக்தி ஏற்பட்டு விடும். இதற்குக் காரணங்கள் பல உண்டு. தெய்வமே கதி என்ற‌, ஆழ்ந்த‌ நம்பிக்கையில் சற்றே சலசலப்பும் ஆட்டமும் பட்டுவிட்டதையே “விரக்தி” நிலை குறிக்கின்றது. தங்களுக்கு இத்தகைய வேதனைகள் சூழ்ந்த வாழ்க்கை நிலை அமையக் காரணங்களை உணர்ந்தால் "முன் செய்தது பின் விளைந்துள்ளது" என உணர்த‌ல் சுலபமே.

இவ்வாறு அபலைகளாக. ஆதரவின்றி வாழ்வோரும் வசதிகள், வேலை இருந்தும் சுற்றம், உற்றத்தின் பழிக் கண்களுக்கு ஆளாவோரும் இதற்கான காரணங்களை அறிந்து பரிகாரம் பெற, காரண மாமுனி என்னும் அற்புத தியாக மகரிஷி தம் தபோபலன்களை ஓர் சிவாலயத்தில் அர்ப்பணித்து வைத்துள்ளார். திருவாரூருக்கு அருகே உள்ள வலிவலம் என்றப் பாடல் பெற்ற சிவாலயமே இதுவாகும். காரண முனிவர் இன்றும் என்றும் சூட்சுமமாக, தூலமாகத் தவம் புரிந்து திக்கற்றோருக்கு மனத் துணை அளித்துத் துணை புரிகின்ற தலம். ஆதரவற்று வாடும் ஆண்களுக்கும் அருளும் தலம். மனத்துணை நாதராக அருள்புரியும் சிவலிங்கத்தைப் பூஜிக்கின்ற உத்தம‌ மகரிஷி! இங்குள்ள காரண கங்கை தீர்த்தமானது ஆகாச கங்கையின் விரஜா சக்திகளைக் கொண்டு தக்க காரணங்களைக் காட்டிப் பரிகார நல்வழிகளை உணர்த்தும் தலம். கையில் மூன்று அகல் விளக்குகளில் தீபமேற்றி இங்கு வலம் வந்து நல்வரங்களையும் வேண்டிப் பிரார்த்தித்து திங்கள் கிழமை, சப்தமி திதி, அனுஷம், சுவாதி நட்சத்திர நாட்களில் நவதான்யம். சர்க்கரை கலந்த ரவையை எறும்புகளுக்கு ஆலய மதிலோரம் இட்டு வந்தால் இறையருளால் நல்வழிகாட்டப் பெறுவர். பிர‌தட்சிண சக்திகள் நிறைந்த "வலச் சக்திகள்" நிறைந்த தலமாதலால் வலம்புரிச் சங்கினால் ஈஸ்வரருக்கு கரும்புச் சாறு அபிஷேகம் செய்தால் பித்ருக்கள் சாந்தி அடைந்து ஆதரவற்று வாழ்வோருக்கும் நல்வழி காட்டுவர்.

சிதையில் பசுஞ்சாண விரட்டி, நல்ல விறகுகளைத்தான் வைத்துச் சடலத்திற்கு எரியூட்ட வேண்டும். மின்சார தகனம் ஏற்புடையதன்று. ரப்பர் டயர், மண்ணெண்ணெய், பெட்ரோல் ஒரு போதும் கூடாது! சடலத்தின் மேல் செங்கல் பாரத்தை வைக்கக் கூடாது. சிதையில் சிரசு முதல் பாதம் வரை சந்தனக் கட்டைகளை வைத்துத் தகனம் செய்வதென்பது உத்தமர்களாகிய ஞானிகள், முமூட்சுக்கள் போன்றோர் உகுக்கும் மானிட உடலுக்கே கடைபிடிக்கப்படல் வேண்டும். எனினும் ஏனையோர்க்கு ஒரே ஒரு சிறு சந்தனத் துண்டுக் கட்டையை மட்டும் மார்புப் பகுதியில் வைத்தல் நல்லது!

ராமாயணத்தோடு ராவண அரக்கன் ஒழிந்தான் என்று எண்ணாதீர்கள்! இன்றும் உள்ளத்தால், மனத்தால் பிறன் மனை நாடும் காமுக எண்ணம் படைத்தோர் நிறையவே உண்டு. காமத் தீக்கொழுந்து மனதில் தோன்றாதிருக்கவும், முறையற்ற காமத் தீயொழுக்கங்களில் இருந்து மீண்டு கரையேறிடவும், கரிநாளில் ஸ்ரீசனீஸ்வர பகவானைப் பூஜித்தல் வேண்டும்.  மேலும் பித்ரு சாபங்களைத் தீர்ப்பதற்குக் காகத்திற்கு, தினமும் குறிப்பாக, கரிநாளில் நிச்சயமாக எள் கலந்த அன்னமிடல் வேண்டும்.  ஏனெனில் இன்றும் எத்தனையோ பித்ரு லோகங்களுக்குச் சென்று வரும் தேவ சக்திகள் படைத்தவையே காகம் ஆகும். எவ்வாறு எமபகவான் மற்றும் எம தூதர்களின் தரிசனம் நாய்களுக்குக் கிட்டுகின்றதோ, இதே போல பித்ருதேவ மூர்த்திகளின் தரிசனம் காக்கைகளுக்குக் கிட்டுகின்றது. எனவேதான் திவசப் படையல்களில் பித்ரு தூதுவராக காக்கைக்கு முதலில் அன்னம் இடப்படுகிறது.

பெற்றோர்களே எவ்வித வழிபாடுகளையும் செய்யாது, தூக்கம், டீ.வி, அரட்டை, கேளிக்கைப் பயணம் என்றவாறாக சோம்பித் திரிந்தால் பிள்ளைகளுக்கு எவ்வாறு நல்லொழுக்கம் ஏற்படும்? நெற்றி நிறைய விபூதி, சந்தனத்துடன் தந்தையும், மாங்கல்யம், நெற்றி, முன் வகிட்டில் நற்குங்குமத்துடன் தாயும் எப்போதும் துலங்கினால் இல்லத்தில் எப்போதும் துலங்கும் இந்த தெய்வீகக் காட்சியே பிள்ளைகளுக்கு நற்புத்தியைத் தரும்.

விடியலில் கண் விழிக்கும் போதிலிருந்து வீட்டில் புழங்கும்போது போக வர, ஒரு ஆயிரம் முறையாவது திருநீறு துலங்கும் நெற்றியை, நல்ல மஞ்சள், குங்குமம் துலங்கும் முகத்தைக் கண்டால் பிள்ளைகளுக்குத் தாமாகவே தெய்வீக உணர்வு ஏற்பட்டிடும்! மூலிகைச் சக்திகள் நிறைந்த ஊதுபத்தி எப்போதும் நறுமணத்துடன் ஒளிர்தலால் சுகந்த தெய்வீகக் கதிர்கள் பரிமளிக்கும். காலை, மாலை மட்டுமே ஊதுபத்தி ஏற்ற வேண்டும் என்பதில்லை! மனம் சஞ்சலம் அடையும் போதெல்லாம் நல்ல ஊதுபத்திகளை ஏற்றி, தீய எண்ணக் சுழல்களை அகற்றிப் பரவெளியைச் சுத்திகரித்து மனக் குழப்பத்தை அகற்றுங்கள்.

திருமண நாளன்று இவ்வாலயத்தில் சிவஜோதி தரிசனம் பெறும் பாக்கியம் பெற்ற சம்பந்தரின் பத்தினியாம் அன்றும், இன்றும், என்றும் நித்ய சுமங்கலியாக பொலியும் – பூரணத் தோத்ராம்பிகையை மாத சிவராத்திரியன்றும், வெள்ளி தோறும் இல்லறப் பெண்கள் ஆச்சாள்புரம் சிவத்திருத்தலத்தில் சம்பந்தப் பெருமானுடன் ஒரு சேரத் தரிசித்து மாங்கல்யச் சரடு, சந்தனம், குங்குமம், மஞ்சள், கண் மை ஆகிய ஐந்தையும் தாம்பூலத்தோடு தானமளித்தலால் கணவனின் நோய்கள் நீங்கிப் பூரண சுமங்கலித்துவ பாக்யங்களைப் பெற்றிடலாம்!

ஸ்ரீஞான சரஸ்வதி சந்நிதியில் ஓதிட வேண்டிய ஸ்ரீஹயக்ரீவ சுலோகம்

ஜ்ஞாநா நந்தமயம் தேவம் நிர்மலம் ஸ்படிகா க்ருதிம் |
ஆதாரம் சர்வ வித்யாநாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே ||

ஞானம், ஆனந்தம் ஆகியவற்றின் வடிவான புனிதமான ஸ்படிகத் திருமேனியரான அனைத்துக் கலைகளுக்கும் ஆதாரமாக விளங்குகின்ற குதிரை முகத்தை உடையவரும் ஸ்ரீசரஸ்வதியின் சற்குருவுமாகிய ஸ்ரீஹயக்ரீவ பெருமாளை ஆராதிக்கின்றோம்.

(பிள்ளைகள் நன்கு படிக்க இதனை தினந்தோறும் ஜபித்து வர வேண்டும்)

பௌர்ணமி திதி நேரம்: 26.4.2002 வெள்ளிக் கிழமை மதியம் 11.56 மணி முதல் 27.4.2002 சனிக் கிழமை காலை 8.30 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பௌர்ணமி திதி அமைகிறது.

பௌர்ணமி கிரிவல நாள்: 26.4.2002 வெள்ளிக் கிழமை

மாத சிவராத்திரி கிரிவல நாள்

10.4.2002 புதன் கிழமை இரவு 8.13 மணி முதல் 11.4.2002 வியாழக் கிழமை இரவு 10.36 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி மாத சிவராத்திரி திதி அமைகின்றது.

ஏப்ரல் மாத சிவராத்திரி கிரிவல நாள்: 10.4.2002 புதன் கிழமை

நித்ய கர்ம நிவாரணம்

1.4.2002 - இன்று ரெங்கநாதர் சயனக் கோலம் கொண்டிருக்கும் கோயில்களில் அன்னதானத்துடன், பஞ்ச கூட்டு எண்ணை தீபம் ஏற்றி வழிபட்டிடில் உத்தியோகத்திற்குச் செல்கின்ற தம்பதிகள் இடையே ஏற்படுகின்ற வேற்றுமை தீரும்.

2.4.2002 - கேட்டை நட்சத்திர தூபம் காமாட்சி அம்மன் கோவில்களில் இட்டு அன்னதானம் செய்திடில சதை பிசகல், சதைப் பிடிப்பு போன்ற துன்பங்களிலிருந்து விடுதலை பெற வழியுண்டு.

3.4.2002 - இன்று முருகன் கோவில்களில் சஷ்டி திதி எண்ணெய் தீபம் ஏற்றி அன்னதானம் செய்திடில் ஆசிரியர் ஆசிரியைகளால் ஏற்படும் துன்பங்களிலிருந்து விடுபட்டு மாணவர்கள், மாணவிகள் நிம்மதி அடையலாம்.

4.4.2002 - இன்று நின்ற கோலத்தில் உள்ள பெருமாள் கோயிலில் அடிப் பிரதட்சிணத்தோடு அன்னதானம் செய்திடில் நல்ல மாப்பிள்ளை அல்லது மணப்பெண் கிட்டிடுவர். நல்ல உத்தியோகத்தில் நல்ல மாற்றமும் எதிர்பார்க்கலாம்.

5.4.2002 - இன்று பெருமாளுக்கு சங்கு, சக்கரம் போட்ட பீதாம்பரம் வாங்கி அணிவித்து அன்னதானம் செய்திடில் நெருங்கி பழகியவர்களால் வருகின்ற ஆபத்து விலகும்.

6.4.2002 - இன்று 9 பெருமாள் கோயில்களில் திருவோண நட்சத்திர தூபம் இட்டு அன்னதானம் செய்திடில் கர்பம் தரித்தோர்க்கும் கர்பச் சிதைவு ஏற்பட்டோர்க்கும் நல்ல பலன்கள் கிடைக்க வழியுண்டு.

7.4.2002 - தசரதன், தயாளு, தர்மராஜன், பாஸ்கரன், சுதாகரன், தினகரன் போன்ற பெயருடையோர்கள் இன்று சிவன் கோயில்களில் அன்னதானம் செய்திடில் பணப் பிரச்னைகள் அதிகமாக துன்புறுத்தாது.

8.4.2002 - இன்று பிரயோக சக்கரம் தாங்கிய நிலையில் உள்ள பெருமாள் கோயிலில் அவிட்ட நட்சத்திர தூபம் இட்டு, ஏகாதசி திதி எண்ணெயால் விளக்கேற்றி அன்னதானம் செய்திடில் பங்காளிகளால் ஏற்படும் சொத்து தகராறுகளில் வருகின்ற ஆபத்துக்கள் விலகும்.

9.4.2002 - இன்று 18 பெருமாள் கோயில்களில் சதய நட்சத்திர தூபம் இட்டு, 51 பசுக்கள், 21 குதிரைகள், 9 யானைகள், 15 காக்கைகள், 100 புறாக்கள், 51 நாய்களுக்கு குறையாமல் உணவளித்து, பலருக்கும் அன்னதானத்தோடு, பெருமாளை வழிபட்டிடில் இத்தகைய பர்பரிகன் பூஜையால் பெருமாள் உண்மையான பாசம் உள்ளவர்களோடு நம்மை தொடர்பும், நேசமும் கொள்ளச் செய்வார்.

10.4.2002 - இன்று 30 முருகன் கோயில்களில் பூரட்டாதி நட்சத்திர தூபம் இட்டு அன்னதானம் செய்திடில் சொல் வாக்கு நற்பலன் அளிக்கும்.

11.4.2002 - இன்று சதுர்த்தசி திதி தீபம் ஏற்றி ஸ்ரீகருப்பண்ண சுவாமியை வணங்கி, அன்னதானம் செய்திடில் வாகன வியாபாரிகள், வாடகை வாகனங்கள் விடுகின்றவர்கள் (Taxi, Tourist Car, Call taxi) நலம் பெறுவர்.

12.4.2002 - இன்று 12 பெருமாள் கோயில்களில், மச்சாவதார மூர்த்திக்கு ரேவதி நட்சத்திர தூபம் காட்டி வழிபட்டு, அன்னதானம் செய்திடில் மரைன் (கடல் சம்பந்தமான) என்ஜீனீரிங், மரைன் ப்ராடக்ட்ஸ், ஏற்றுமதி இறக்குமதி கப்பல் வாணிபம் செய்கின்றவர்கள், புது (தொழில்) வாடிக்கையாளர்கள் மூலமாக வருமானத்தை அடைய வழியுண்டு.

13.4.2002 - இன்று 5 நரசிம்ம ஸ்வாமி கோயில்களில் அஸ்வினி நட்சத்திர தூபம் இட்டு அன்னதானம் செய்திடில் சத்ய நாராயணன், அச்சுதன், மாதவன், கேசவன், நரசிம்மன் போன்ற பெருமாள் பெயர் கொண்டவர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

14.4.2002 - இன்று ஜெகதீசர், புவனேஸ்வரர், பூமிநாதர் போன்ற பெயர்களுடன் மூல மூர்த்திகள் அருள்பாலிக்கும் 51 சிவன் கோயில்களில் பரணி நட்சத்திர தூபம் இட்டு அன்னதானம் செய்திடில் பெட்டிப் பணம் குட்டி போட்டு தார்மீக ரீதியாகப் பெருகும்.

15.4.2002 - முருகனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் இருக்கின்ற கோயில்களில் கிருத்திகை நட்சத்திர தூபம் இட்டு அன்னதானம் செய்திடில் வெளி நாட்டிலிருந்து தாய் நாட்டிற்குத் திரும்பிவர உண்மையாக முயற்சிக்கின்றவர்களுக்கு ஏற்படுகின்ற அரசியல் தடங்கல்கள் விலக வழியுண்டு.

16.4.2002 - இன்று மூன்று பிள்ளையார் கோயில்களில் சதுர்த்தி எண்ணெய் தீபம் ஏற்றி ரோகிணி நட்சத்திர தூபம் இட்டு அன்னதானம் செய்திடில் வெளி நாட்டில் இருக்கும் கணவரோடு தாய் நாட்டிலிருக்கும் (பிரிந்திருக்கும்) மனைவி சேருவதற்கு வழியுண்டு.

17.4.2002 - மிருக சீரிஷ நட்சத்திரக்காரர்கள் ஒரு மாதத்திற்குள் 120 நந்தீஸ்வர மூர்த்திகளுக்கு மிருக சீரிஷ நட்சத்திர தூபம் இட்டு அன்னதானம் செய்திடில் சரக்கு தடங்களில் பணிபுரிவோர் (Customs), வாகன உதிரி பாகங்கள் விற்பனையாளர்கள். வாகன விற்பனையாளர்கள் நல்ல மாற்றத்தைப் பெறுவர்.

18.4.2002 - இன்று சஷ்டி திதியில் ஸ்ரீஅஷ்ட லக்ஷ்மி விரதம் ஆரம்பித்து திரயோதசி திதியில் முடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 8 பெருமாள் கோயில்களில் ஸ்ரீஅஷ்ட லக்ஷ்மி தூபம் இட்டு அன்னதானம் செய்து தூபம் முடியும்வரை ஸ்ரீலக்ஷ்மி சகஸ்ரநாமம் படித்திடில், வராது என்று நினைத்திருந்த பணம் கட்டுத் தறிகளை அறுத்து எதிர்பாராத வகையில் திரும்பி வர வழியுண்டு.

19.4.2002 - இன்று சுக்கிரன் வழிபட்ட ஆறு சிவன் கோயில்களில் திருவாதிரை நட்சத்திர தூபம் ஏற்றி அன்னதானம் செய்திடில் மனைவி வெளி நாட்டில் இருந்து, கணவன் தாய் நாட்டிலிருக்க இருவரும் சேர முடியாமல் உண்மையாய் துடித்திருந்தால் மனைவியோடு சேர வழியுண்டு.

20.4.2002 - இன்று புனர்பூச நட்சத்திர தூபம் இட்டு ஸ்ரீராமர் கோயில்களில் அன்னதானம் செய்திடில் வக்கீல்களுக்கு வாக்கு வன்மை பெருகும்.

21.4.2002 - புனர்பூசம் நட்சத்திர தூபம் இட்டும், நவமி திதி எண்ணெய் தீபமும் ராமர் கோயிலில் ஏற்றியும் அன்னதானமும் செய்திடில் ஜெயராமன், ஜெயசீலன், விஜயராமன், விஜயராகவன், விஜயகுமார், ஜெயராஜ், ஜான‌கிராமன் போன்ற பெயருடையோர் வாழ்க்கையில் நல்ல திருப்பங்களைக் காண்பர்.

22.4.2002 - இன்று ஆயில்ய நட்சத்திர தூபத்தை எமதர்மராஜ‌ர் இருக்கின்ற கோயில்களில் இட்டு அன்னதானம் செய்திடில் ஆயுள் விருத்தி அடைவர்.

23.4.2002 - இன்று குறைந்தது 21 கருடாழ்வார் சந்நிதிகளில் மக நட்சத்திர தூபம் இட்டு ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் படித்து அன்னதானம் செய்திடில் தங்கள் உடைமைகளுக்கு ஆபத்து வராமல் காத்திடலாம். 

24.4.2002 - இன்று பெருமாள் கோயில்களில் காலை சூரிய உதயத்தில் ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் படித்து அன்னதானம்  செய்திடில் உணவுச் சாலை, பாஸ்ட் புட் வைத்திருப்போர், உணவு சம்பந்தமான தொழிற்சாலையில் வேலையில் இருப்போர்  நலம் பெற வழியுண்டு. 

25.4.2002 - ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் இன்று குறைந்தது ஐந்து சிவன் கோயில்களில் ஹஸ்த நட்சத்திர தூபம் இட்டு சக்தி துதிகள், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம், ஸ்ரீசெளந்தாய லஹரி போன்ற துதிகளைப் பாராயணம் செய்து அன்னதானம் செய்திடில் மாங்கல்ய பலம் பெருகும்.

26.4.2002 - இன்று 12 ஜீவ சமாதிகளில் சித்திரை நட்சத்திர தூபம் இட்டு அன்னதானம் செய்திடில் தந்தை, தாய் சம்பந்தம் இல்லாமல் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட தம்பதியர்க்கு வருகின்ற துன்பங்கள் விலகும்...

27.4.2002 - இன்று பெளர்ணமி திதி எண்ணெய் தீபம் கோயிலில் ஏற்றி அன்னதானமும், மாங்கல்ய தானமும் ஏழைகளுக்குச் செய்திடில் நல்லதொரு வாடகை வீடு அமையும்.

28.4.2002 - முருகன் பிரதிஷ்டை செய்த சிவன் கோயிலில் உள்ள அம்பிகையர்க்கு விசாக நட்சத்திரத் தூபம் இட்டு சித்ரான்னங்கள் நிவேதித்துப் பிறகு அன்னதானம் செய்திடில் போக்குவரத்துத் துறையில் இருக்கின்ற உயர் அதிகாரி முதல் சாதாரண தொழிலாளி வரை ஏற்படுகின்ற பணச் சிக்கல்கள் தீரும்.

29.4.2002 - இன்று வீடு கட்டுவோரும் கட்டட பணியாளர்கள், சித்தாள்கள், மொசைக் ப்ளோர் போடுகின்றவர்கள், பில்டர்ஸ் ஆகியோர் திரயோதசி திதி எண்ணெய் தீபம் ஏற்றி சிவன் கோயிலில் அன்னதானம் செய்திடில் தடுக்கி உயரத்திலிருந்து விழுகின்ற ஆபத்துக்களிலிருந்து இறைவன் அருளால் தப்பிக்கலாம்.

30.4.2002 - இன்று 21 விநாயகர் கோயில்களில் கேட்டை நட்சத்திர தூபம் ஏற்றி சதுர்த்தி திதி எண்ணெய் தீபம் ஏற்றி கொழுக்கட்டைப் பிரசாதம் அன்னதானமாக அளித்திடில் "விடிந்தால் என்ன துன்பம் வருமோ" என்று தினமும் பயப்படுகின்றவர்களுக்கு அமைதிக் காலம் பிறக்கும்.

மனிதன் மனிதனாக இல்லாவிட்டாலும் இரக்கமுடையவனாக இருக்கலாமே !

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam